text
stringlengths
377
161k
அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் உள்ள குரோஜர் சூப்பர் மார்க்கெட்டில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியது. வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள கெண்டகி மாகாணத்தின் லூயிஸ்வில்லே பகுதியில் அமைந்துள்ளது குராகர் சூப்பர் மார்க்கெட். நேற்று மதியம் 3 மணியளவில் இந்த சூப்பர் மார்க்கெட்டில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையானதை வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் சூப்பர் மார்க்கெட்டில் திடீரென நுழைந்தான். கையில் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டு தாக்குதல் நடத்தினான். இந்த திடீர் தாக்குதலில் அங்கிருந்த 2 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பட்டப்பகலில் தனியார் சூப்பர் மார்க்கெட்டில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
பொழிப்பு (மு வரதராசன்): தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால் அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து அறம் அல்லாதவற்றைச் செய்யாதிருத்தல் நல்லது. மணக்குடவர் உரை: தகுதியல்லாதவற்றைத் தனக்குப் பிறர்செய்தாராயினும் அவற்றைத் தானுஞ் செய்தால் அவர்க்கு உளதாம் நோவுக்கு நொந்து அறமல்லாதவற்றைச் செய்யாமை நன்று. பரிமேலழகர் உரை: திறன் அல்ல தன் பிறர் செய்யினும் - செய்யத்தகாத கொடியவற்றைத் தன்கண் பிறர் செய்தாராயினும்; நோநொந்து அறன் அல்ல செய்யாமை நன்று - அவர்க்கு அதனால் வரும்துன்பத்திற்கு நொந்து, தான் அறனல்லாத செயல்களைச் செய்யாதிருத்தல் ஒருவனுக்கு நன்று. [உம்மை: சிறப்பு உம்மை. துன்பத்திற்கு நோதலாவது "உம்மை - எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல்" (நாலடி. 58) என்று பரிதல்.] இரா சாரங்கபாணி உரை: செய்யத்தகாத தீங்குகளைத் தனக்குப் பிறர் செய்தாலும் அத்தீங்குகளை மனத்துட்கொண்டு நொந்து அறமல்லாத செயல்களை அவருக்குச் செய்யாதிருத்தல் நல்லது. பொருள்கோள் வரிஅமைப்பு: திறன்அல்ல தன்பிறர் செய்யினும் நோநொந்து அறன்அல்ல செய்யாமை நன்று. பதவுரை: திறன்அல்ல--செய்யத்தகாதவைகளை, முறையல்லாதவை; தன்பிறர்-தன்கண் மற்றவர், தமக்குப் பிறர்; செய்யினும்-செய்தாலும்; நோ-துன்பம்; நொந்து-வருந்தி; அறன்அல்ல--அறமல்லாதவற்றை, நற்செயல் அல்லாதவைகளை; செய்யாமை-செய்யாதிருத்தல்; நன்று-நல்லது, நன்மையுடையது. திறன்அல்ல தன்பிறர் செய்யினும்: இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: தகுதியல்லாதவற்றைத் தனக்குப் பிறர்செய்தாராயினும்; பரிப்பெருமாள்: தகுதியல்லாதவற்றைத் தனக்குப் பிறர்செய்தாராயினும்; பரிதி: தமக்குப் புகழல்லாத காரியத்தைத் தனக்கு உண்டானது செய்தாலும்; காலிங்கர்: பொறையின் திறம் இதுவாகலால் செயப்படும் திறப்பாடல்லனவற்றைத் தன்னைக் குறித்துப் பிறர் செய்தாராகிலும்; [பொறையின் திறம் - பொறுத்தலின் தன்மை] பரிமேலழகர்: செய்யத்தகாத கொடியவற்றைத் தன்கண் பிறர் செய்தாராயினும்; பரிமேலழகர் குறிப்புரை: உம்மை: சிறப்பு உம்மை. 'தகுதியல்லாதவற்றை/புகழல்லாத காரியத்தை/திறப்பாடல்லனவற்றை/செய்யத்தகாத கொடியவற்றைத் தனக்குப் பிறர்செய்தாராயினும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். இன்றைய ஆசிரியர்கள் 'பிறர் முறையல்லவற்றைச் செய்தாலும்', 'மன்னிக்க முடியாத குற்றத்தைத் தனக்குப் பிறன் செய்து உடனே தண்டித்துவிட்டாலும் குற்றமில்லை', 'செய்யத்தகாதவற்றைத் தனக்குப் பிறர் செய்தார் ஆயினும்', 'செய்யத்தகாத கொடிய செயல்களைத் தனக்குப் பிறர் செய்தாலும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர். முறையல்லவற்றைத் தனக்குப் பிறர் செய்தாராயினும் என்பது இப்பகுதியின் பொருள். நோநொந்து அறன்அல்ல செய்யாமை நன்று: இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: அவற்றைத் தானுஞ் செய்தால் அவர்க்கு உளதாம் நோவுக்கு நொந்து அறமல்லாதவற்றைச் செய்யாமை நன்று. பரிப்பெருமாள்:['நோய் நொந்து'-பாடம்] அவற்றைத் தானுஞ் செய்தால் அவர்க்கு உளதாம் நோவுக்கு நொந்து அறமல்லாதவற்றைச் செய்யாமை நன்று. பரிதி: செய்தவனைக் கோபித்துத் தன்மம் அல்லாத காரியம் செய்வான் அல்லன் என்றவாறு. காலிங்கர்: தான் அதற்கு எதிராக நெஞ்சம் நொந்து அறம் அல்லனவற்றைச் செய்யாமை சால நன்று என்றவாறு. [நொந்து-வருந்தி] பரிமேலழகர்: அவர்க்கு அதனால் வரும்துன்பத்திற்கு நொந்து, தான் அறனல்லாத செயல்களைச் செய்யாதிருத்தல் ஒருவனுக்கு நன்று. பரிமேலழகர் குறிப்புரை: துன்பத்திற்கு நோதலாவது "உம்மை - எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல்" (நாலடி. 58) என்று பரிதல். [பரிதல் -இரங்குதல்] 'தான் அறனல்லாத செயல்களைச் செய்யாதிருத்தல் ஒருவனுக்கு நன்று' என்று அனைவரும் உரை கூறினர். நோ நொந்து என்பதற்கு மணக்குடவர்/பரிப்பெருமாள் 'துன்பத்தைத் தானும் செய்தால் பிறர்க்கு உண்டாகும் நோவுக்கு நொந்து' என்றும் 'செய்தவனைக் கோபித்து' என்று பரிதியும் 'அதற்கு எதிராக நெஞ்சம் நொந்து' என்று காலிங்கரும் 'அதனால் வரும் துன்பத்திற்கு நொந்து' என்று பரிமேலழகரும் இப்பகுதிக்கு உரை கூறினர். இன்றைய ஆசிரியர்கள் 'வருந்தி நீ அறமல்லவற்றைச் செய்யாதே', 'ஆனால் உடனே திருப்பித் தண்டிக்க தைரியமில்லாமல் சும்மா இருந்து விட்டுஅதை மனத்தில் வைத்து நொந்துகொண்டே இருந்து அவன் ஏமாந்த சமயத்தில் அதர்மமான முறையில் பழி வாங்காமல் இருப்பது நல்லது', 'அவருக்கு அதனால் வருந்துன்பத்திற்கு இரங்கித் தான் அறமல்லாத செயல்களை அவர்பால் செய்யாதிருத்தல் சிறந்தது', 'அத்தீமையைச் செய்ததனால் அவர்க்கு வரும் துன்பத்திற்கு வருந்தி, அல்லாத செயல்களைச் செய்யாதிருத்தல் நன்மை பயப்பதாகும் ' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர். துன்பத்தை நினைத்து நினைத்து வருந்தி அறம் அல்லனவற்றைச் செய்யாமை நல்லது என்பது இப்பகுதியின் பொருள். நிறையுரை: முறையல்லவற்றைத் தனக்குப் பிறர் செய்தாராயினும் துன்பத்தை நினைத்து நினைத்து வருந்தி அறம் அல்லனவற்றைச் செய்யாமை நல்லது என்பது பாடலின் பொருள். 'நோநொந்து' குறிப்பது என்ன? பழி தீர்த்தே ஆகவேண்டுமா? அதற்கு அறநெறி தவறாத வழிகளும் உண்டு. செய்யத் தகாத கொடுமைகளைத் தனக்கு பிறர் செய்தாலும் அத்துன்பங்களை நினைந்து வருந்தி, சினம்கொண்டு அறமற்ற செயல்களை நாமும் செய்யாமல் இருத்தல் நல்லது. இக்குறளிலுள்ள 'திறனல்ல செய்தல்' என்பது 'தீமையைச் செய்யக்கூடாத வழியிலும் செய்தல்' என்ற கொடுமையின் அளவு மிகுதியை உணர்த்திற்று என்பர். வேறு சிலர் இத்தொடர்க்குத் 'திறனல்லாதவனாக - உடற் குறை செய்து அதாவது கை, கால், கண்களைக் கெடுத்து - தன்னைச் செய்யினும்' எனவும் 'மன்னிக்கும் திறனில்லாததைத் தன்னிடம் பிறர் செய்துவிட்டாலும்' எனவும் பொருள் கூறினர். இத்தொடர்க்குச் செய்யத்தகாத கொடியவற்றைத் தன்கண் பிறர் செய்தாராயினும் என்பது பொருள். எவ்வகையான தீமையையும் தனக்குப் பிறர் செய்யினும், மனம் வருத்தத்தால் தூண்டப்பட்டு அறன் அல்லாததைச் செய்யாமல் இருத்தல் நன்று என்பது இக்குறள் தரும் செய்தி. எதிர்ச் செயல்பாடு, எந்த வகையிலும், அறம் மீறியதாக இருக்கக் கூடாது என்பது வள்ளுவரின் உளப்பாடு. செல்வமும் செல்வாக்கும் கொண்டவன் எளியவன் ஒருவனுக்குத் அவன் உள்ளம் நோகும் அளவு ஒருவன் தீங்கு செய்துவிட்டான். உள்ளம் நைந்து வருந்தும் எளியன் வலியவனுக்கு நேருக்குநேர் வஞ்சம் தீர்க்க முடியாத நிலை. தீங்கை மன்னித்துவிட மனமில்லாமலும் ஒறுப்பதற்கு வலியில்லாமலும் கையறு நிலையில் உள்ளான். அவன் என்ன செய்யவேண்டும்? தீமை செய்த இடத்து அதற்கு ஏதாவது பதில் தீங்கு செய்தே ஆக வேண்டும் என்ற உள்ளக் குமுறலில் தீங்கிழைக்கப்பட்டவன் அறமல்லாத பிற செயல்களை வஞ்சம் தீர்ப்பதற்காகச் செய்யாமல் இருப்பது நல்லது என்கிறது இப்பாடல். தீமை செய்தவர்கண்ணோ, அல்லது வேறு யாரிடமோ, அல்லது வேறு எவற்றின் மீதோ அறமல்லாத செயல் புரிந்து தனது துன்பத்தை வெளிப்படுத்த வேண்டாம். ஒருவர் தமக்கு இழைத்த தீங்கிற்கு, அவரையோ அவரது சுற்றத்தையோ துன்பத்துக்குள்ளாவதும், ஊருக்குக் கெடுதல் செய்வதும், பொய்யுரை பரப்புவதும், மனிதர்களுக்குள் பிளவையும், வெறுப்பையும் ஏற்படுத்துவதும் போன்றவை அறனல்லாதவற்றைக் குறிக்கும். அறமற்றவை செய்வது அறிவுப் பிழையாய் ஆகி பெருந்தீமையாய் முடிந்துவிடும். அறனல்ல செய்யாது பொறுமை காக்க என்பது வலியுறுத்தப்படுகிறது. வ உ சிதம்பரம் பிள்ளை 'அறனல்ல தற்பிறர் செய்யினும் நொந்து திறனல்ல செய்யாமை நன்று' எனக் குறளமைப்பை மாற்றி 'பிறர் செய்த தீங்குகளைப் பொறுத்தல் திறனுடைய செயலாம்' என விளக்கினார். 'நோநொந்து' குறிப்பது என்ன? 'நோநொந்து' என்றதற்கு அவர்க்கு உளதாம் நோவுக்கு நொந்து, செய்தவனைக் கோபித்து, தான் அதற்கு எதிராக நெஞ்சம் நொந்து, அவர்க்கு அதனால் வரும்துன்பத்திற்கு நொந்து, அவர் அடையும் அந்நோவுக்குத் தாம் நொந்து, வருந்தி, அத்தீங்குகளை மனத்துட்கொண்டு நொந்து, அந்த வேதனையை மனதில் வைத்துக் கொண்டிருந்து, அதற்காக மிக வருந்தி, அவருக்கு அதனால் வருந்துன்பத்திற்கு இரங்கி, அத்தீமையைச் செய்ததனால் அவர்க்கு வரும் துன்பத்திற்கு வருந்தி, அதனால் அவருக்குத் தீங்கு நேருமே என்று வருந்தி, செய்தவனது அறியாமைக்கு நொந்தும் தனக்குற்ற தீமைக்கு வருந்தாதும் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர். நோ-நோய்-துன்பம். 'நோநொந்து' என்ற தொடர்க்கு நோவுக்கு நொந்து என்பது பொருள். அதாவது துன்பத்திற்கு வருந்தி எனப் பொருள்படும். யார் உறும் துன்பம் பேசப்படுகிறது? பெரும்பான்மையர் 'அவர்க்கு அதனால் வரும்துன்பத்திற்கு நொந்து' என்பதற்குத் 'தீமை செய்தவனுக்கு அதற்கான துன்பம் உண்டாகுமே அது' என்று விளக்கினர். பரிமேலழகர் தீங்கிழைத்தவனுக்கு உண்டாகும் மறுமைத் துன்பத்தைக் குறிக்கிறார். இக்கருத்துக்கு நாலடியார் பாடல் ஒன்று துணை செய்யும் என்றார் பரிமேலழகர். அப்பாடல்: தம்மை இகழ்ந்தமை தாம் பொறுப்பது அன்றி, 'மற்று எம்மை இகழ்ந்த வினைப் பயத்தான், உம்மை எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல்!என்று பரிவதூஉம், சான்றோர் கடன். (நாலடியார் 58: பொருள்: காரணமின்றித் தம்மைப் பிறர் இகழ்ந்தமையைத் தாம் பொறுத்துக் கொள்வதல்லாமல் எம் போல்வாரை இங்ஙனம் இகழ்ந்த தீவினையின் பயனால், மறுமையில், ஒரு கால் அழலிடமான நரகத்தில் அவர் வீழ்வரோ என்று இரங்குவதும் தவம் நிறைந்தவரது கடமையாகும்). மற்றவர்கள் மறுமைத் துன்பம் எனச் சொல்லாமல் செய்த தீங்கிற்காக வேறுவகையில் துன்பம் எய்துவானே என்ற பொருளில் உரை செய்தனர். இவர்கள் அனைவரும் தீங்கு செய்தவர்க்கு ஏதோ ஒருவகையில் துன்பம் நேருமே என்று வருந்தி அறனல்லாதவற்றைச் செய்யாதிருத்தலே நல்லது என்றனர். இவை அனைத்தும் இயல்பாக இல்லை, இக்குறள் ஒருவன் தனக்குச் செய்யப்பட்ட தீங்கிற்கு வருந்தி, அறமல்லாத வழிகளில், தீமை செய்தவனுக்கு எதிர்வினை ஆற்ற வேண்டாம் என்பதைச் சொல்ல வந்தது. அங்ஙனம் செய்யாதிருப்பதும் பொறுமை காத்தலின் பாற்படும் என்பதால் பொறையுடைமையில் கூறப்பட்டது. 'நோநொந்து' என்பதற்கு துன்பத்தை நொந்துகொண்டு அதாவது துன்பத்தை மனத்திற் கொண்டு வருந்தி என்பது பொருள். முறையல்லவற்றைத் தனக்குப் பிறர் செய்தாராயினும் துன்பத்தை நினைத்து நினைத்து வருந்தி அறம் அல்லனவற்றைச் செய்யாமை நல்லது என்பது இக்குறட்கருத்து.
இணையத்தைப் பயன்படுத்தும் போது, ​​நீங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி அவ்வப்போது “சேவையகம் கிடைக்கவில்லை” பிழையைக் காண்பீர்கள். வலைப்பக்கத்திலுள்ள சிக்கல்கள், சேவையக பக்கத்திலுள்ள சிக்கல்கள் அல்லது உங்கள் இணைய சேவை வழங்குநரின் சிக்கல்கள் ஆகியவற்றால் பிழை ஏற்படலாம், உங்கள் சொந்த கணினி இந்த சிக்கலுக்கு காரணமாக இருக்கலாம். உலாவி சிக்கல்கள் பயர்பாக்ஸில் சேவையகம் கிடைக்கவில்லை எனில், சிக்கல் பயர்பாக்ஸுடன் தனிமைப்படுத்தப்பட்டதா என்பதைக் கண்டறியவும். விண்டோஸ் கணினியில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரைத் திறக்கவும் அல்லது மேக்கில் சஃபாரி திறக்கவும், அந்த உலாவிகள் இதே போன்ற பிழைகளை அனுபவிக்கிறதா என்று பாருங்கள். ஃபயர்பாக்ஸில் சிக்கல் தனிமைப்படுத்தப்பட்டால், அது ஒரு அமைப்புகளின் சிக்கலாக இருக்கலாம். பயர்பாக்ஸ் பொத்தானைக் கிளிக் செய்து, "மேம்பட்ட" பேனலைக் கிளிக் செய்து, "நெட்வொர்க்" தாவலைத் தேர்ந்தெடுத்து "அமைப்புகள்" என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் பிணைய அமைப்புகளைச் சரிபார்க்கவும். ப்ராக்ஸி அமைப்புகளின் கீழ் “இல்லை ப்ராக்ஸி” தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்க. சில தளங்கள் ஏற்ற வேண்டாம் சில தளங்களைப் பார்வையிடும்போது பிழை தோன்றினால், இரண்டு சிக்கல்கள் உள்ளன. இணைப்பு சிக்கல்களை சந்திக்கும் போது உங்கள் உலாவி தற்காலிக சேமிப்பு பக்கத்தின் பதிப்பை சேமித்து வைத்திருக்கலாம், இது ஆஃப்லைனில் இருப்பது போல் தோன்றும். பயர்பாக்ஸ் பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் தற்காலிக சேமிப்பை அழிக்கவும்; பின்னர், "வரலாறு" மெனுவின் கீழ், "சமீபத்திய வரலாற்றை அழி" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். வலைத்தளம் கீழே உள்ளது என்று கூட இருக்கலாம். சிக்கல் நீடிக்கிறதா என்பதைப் பார்க்க சில நிமிடங்களில் தளத்தைப் பார்வையிட முயற்சிக்கவும். தளங்கள் ஏற்றப்படவில்லை உங்கள் சிக்கல் ஃபயர்பாக்ஸுடன் தனிமைப்படுத்தப்படாவிட்டால் மற்றும் இணையத்துடன் இணைக்கப்பட்ட எல்லா பயன்பாடுகளும் (அஞ்சல், உடனடி செய்தி, பதிவிறக்கங்கள்) இயலாது என்றால், உங்கள் இணைய இணைப்பு தோல்வியடைந்திருக்கலாம். உங்கள் மோடம் மற்றும் திசைவி செயல்படுவதை உறுதிசெய்து, மோடம் இணையத்துடன் ஒரு இணைப்பைக் கொண்டுள்ளது. உங்கள் வைரஸ் தடுப்பு மென்பொருள் மற்றும் ஃபயர்வால் வலை போக்குவரத்தைத் தடுக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தவும். இறுதியாக, உங்கள் இணைய சேவை வழங்குநரைத் தொடர்புகொண்டு, அது பிணைய செயலிழப்பை சந்திக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தவும். வைரஸ் எதிர்ப்பு இயக்கவும் சில தீம்பொருள் உங்கள் கணினியுடன் இணைப்பு சிக்கல்களை ஏற்படுத்தும். உங்கள் வைரஸ் தடுப்பு மென்பொருள் புதுப்பித்த நிலையில் இருப்பதை உறுதிசெய்து ஸ்கேன் இயக்கவும். மென்பொருள் ஏதேனும் சிக்கல்களைக் கண்டறிந்தால், அந்த சிக்கல்களைச் சுத்தப்படுத்தி உங்கள் கணினியை மறுதொடக்கம் செய்யட்டும். தீம்பொருள் தாக்குதலைத் தொடர்ந்து உங்கள் இணைய இணைப்பை சரிசெய்ய கூடுதல் படிகள் தேவைப்படலாம்; அவ்வாறு செய்வதற்கான உதவிக்குறிப்புகளை மொஸில்லா தனது இணையதளத்தில் வழங்கியுள்ளது (வளங்களில் இணைப்பு).
டெல்லி: சர்வதேச போலீஸான இன்டர்போலின் தேடப்படுவோர் பட்டியலில் 650க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். இதுவரை இந்தப் பட்டியலில் 656 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு எதிராக ரெட் அலர்ட் நோட்டீஸ்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள். பலர் இந்தியாவில் பிறந்து வெளிநாடுகளில் வசிப்பவர்கள். கடந்த ஐந்து வருடங்களாக இவர்கள் தேடப்பட்டு வருகின்ரனர். இவர்களில் பலரும் இந்தியாவில் அல்லாமல் வெளிநாடுகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள். இவர்களைப் பிடிக்க இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்டர்போல் அமைப்பு உலகின் மிகப் பெரிய சர்வதேச போலீஸ் அமைப்பாகும். இதில் 188 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. சிறு குற்றம் முதல் தீவிரவாத குற்றச்சாட்டு வரை பல்வேறு தரப்பிலான குற்றங்களைச் செய்து விட்டு தலைமறைவானோர் இன்டர்போல் மூலம் தேடப்படுகிறார்கள். ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள 656 பேரில், கடந்த ஆண்டு மட்டும் 150 பேருக்கு ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டது. 2006ல் 119 பேருக்கு எதிராகவும், 2007ல் 133 பேருக்கு எதிராகவும் பிறப்பிக்கப்பட்டது. இவர்களில் பலரும் சவூதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், அமெரிக்கா , ஹாங்காங், ரஷ்யா, பெலாரஸ், எகிப்து,ஆஸ்திரேலியா , பெல்ஜியம் ஆகிய நாடுகளில் குற்றம் இழைத்தவர்கள் ஆவர். பண மோசடி, வரி ஏய்ப்பு, பாலியல் பலாத்காரம், ரயில்வே போக்குவரத்துக்கு இடையூறு செய்தது, இமெயில் மோசடி, வரதட்சணைக் கொடுமை என பல தரப்பட்ட குற்றங்களைச் செய்தவர்கள் இவர்கள். இவர்களில் 25 சதவீதம் பேர் அதிக வேகமாக கார்ஓட்டியது, சாலை விபத்துக்களை ஏற்படுத்தியது ஆகிய குற்றங்களில் சிக்கியவர்கள் ஆவர்.
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads By Category: எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம் சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும் August 2022 Issue தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அனுபவம் | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | சமயம் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | அலமாரி எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | Events Calendar | பொது | வாசகர் கடிதம் Tamil Unicode / English Search மேலோர் வாழ்வில் < Prev | Index | Next > குகை நமசிவாயர் - பா.சு. ரமணன் | ஆகஸ்டு 2022 | Share: மானுடர்களின் உள்ளங்களைத் தூய்மைப்படுத்தி, அவர்களது எண்ணங்களை இறைவன்பால் செலுத்தி உய்விக்கவென மகான்கள் அவதரிக்கின்றனர். தம்மை நாடிவரும் மக்களின் பரிபக்குவத்திற்கேற்ப பக்தி மார்க்கம், யோக மார்க்கம், ஞான மார்க்கம் எனப் பல வழிமுறைகளை அவர்கள் உபதேசிக்கின்றனர். அவர்கள் போதிக்கும் வழிபாட்டு முறைகளில் பல்வேறு வகைகளுண்டு. இம்முறையில் லிங்கத்தையே முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுபவர்கள் 'லிங்காயத்' என அழைக்கப்பட்டனர். 'வீரசைவர்' என்றும் இவர்களுக்கு மற்றொரு பெயருண்டு. அந்த வீரசைவ மரபில், கர்நாடகாவில் உள்ள மல்லிகார்ஜுனம் என்ற பகுதியில் வாழ்ந்து வந்த சிவத்தொண்டர் குடும்பத்தில் தோன்றியவர் நமசிவாயர். குருதீட்சை நமசிவாயர் இளவயதிலேயே பக்தி மிக்கவராகத் திகழ்ந்தார். பின் இறைநாட்டம் அதிகரிக்கவே ஸ்ரீசைலத்தில் வசித்து வந்த தவயோகி சிவானந்த தேசிகர் என்பவரைச் சரணடைந்து, அவருக்குச் சேவை செய்து வந்தார். சிவானந்த தேசிகர் ஒரு வீரசைவர். எனவே வீரசைவ வழிமுறைகளைத் தனது சீடனுக்கு போதித்தார். சிவயோகப் பயிற்சி எனப்படும் அம்முறை தாராணை, தியானம், பாவலிங்க வழிபாட்டு முறைகளைக் கடந்து, மனோலிங்கத்தைச் சமாதி நிலையில் நிறுத்தி வழிபடுவதாகும். அதாவது லிங்கம் என்பது தம் இதயத்துள் எழுந்தளியிருக்கும் சிவபெருமானே என்கிறது இந்தக் கோட்பாடு. குருதீட்சை பெற்ற நமசிவாயர், இம்முறைப்படியே இறைவனைத் தியானித்தார். அண்ணாமலை பயணம் ஒருநாள் கனவில் அண்ணாமலைக்கு எழுந்தருளுமாறு நமசிவாயருக்கு இறைக்கட்டளை வந்தது. குருவிடம் அதனைத் தெரிவித்து, அவரது ஆசியுடன் அண்ணாமலைக்குப் புறப்பட்டார். வழியில் ஒருநாள் 'பூந்தண்மலி' (இன்றைய பூந்தமல்லி எனப்படும் பூவிருந்தவல்லி) என்ற ஊரை அடைந்தார். அங்கு ஆலய நந்தவனத்தில் அழகான மலர்கள் பூத்துக் குலுங்கின. அவற்றில் சிலவற்றைப் பறித்து தம் இதயத்துள் எழுந்தருளியுள்ள மனோலிங்கத்திற்குப் பூஜை செய்தார். ஆனால் அவர் தனக்குத் தானே பூஜை செய்து கொள்வதாய் நினைத்த அவ்வூர் மக்கள் அப்பகுதியை ஆண்ட குறுநில மன்னனிடம் அதுபற்றிப் புகார் அளித்தனர். வெகுண்ட மன்னன், அவரை அழைத்துவரச் செய்து விசாரணை நடத்தினான். அவர் அவ்வாறு நடந்து கொண்டதற்குரிய காரணத்தைக் கேட்டான். உண்மையில் தாம் சிவனுக்கே பூஜை செய்ததாகவும், தாம் பூஜித்த மலர்கள் சிவனுக்கே அர்ப்பணமாகி ஆலய இறைவன் கழுத்தில் மாலையாகியிருப்பதை மன்னன் சென்று பார்த்துக் கொள்ளலாம் என்றும் நமசிவாயர் பதில் கூறினர். மன்னன் அவர் சொன்னதை ஏற்கவில்லை. "நீங்கள் சொல்வது உண்மையானால், அந்த மாலையானது அனைவரும் காணும்படி, இன்னும் ஒரு நாழிகைப் பொழுதில் இங்கே உங்கள் கைக்கு வரவேண்டும். அப்போதுதான் தான் நம்புவேன்" என்றான். நமசிவாயரும் அதற்கு உடன்பட்டு, வேறு மறுமொழி எதுவும் பேசாது தியானிக்க ஆரம்பித்தார். இதனை அறிந்த மன்னருக்கு வேண்டிய அர்ச்சகர்கள், ஆலயத்தில் இறைவனுக்குச் சூட்டப்பட்ட மாலையை ஒரு கயிற்றால் கட்டி, சிறுவன் ஒருவனை அந்தச் சிவலிங்கத்தின் பின்னால் அமரச்செய்து, அக்கயிற்றை விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கும்படி ஏற்பாடு செய்தனர். ஆனால், நமசிவாயரின் பக்தி அங்கே வென்றது. சிறுவன் பிடித்துக் கொண்டிருந்த அந்தக் கயிறு திடீரென அறுந்து, மாலை பறந்துவந்து நமச்சிவாயரின் கழுத்தில் மாலையாக விழுந்தது. இந்த அதிசயத்தைக் கண்ட மன்னன் பதறிப் போனான். நமசிவாயர் மிகப்பெரிய மகான் என்பதை உணர்ந்து அவரைப் பணிந்து, தன் செயலை மன்னிக்குமாறு வேண்டினான். அவரைப் பழி சொன்ன மக்களும், அர்ச்சகர்களும் அவரை வணங்கித் தங்களை மன்னிக்குமாறு வேண்டினர். அனைவரையும் மன்னித்து ஆசி கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். திருவண்ணாமலையை அடைந்தவர், மலைமேல் உள்ள ஒரு மண்டபத்தில் வசிக்கத் தொடங்கினார். அண்ணாமலையில் தவ வாழ்க்கை நமசிவாயர் காலையில் எழுவார். காலைக் கடன்களை முடிப்பார். நீண்ட நேரம் தியானம் செய்வார். பின் தன் குரு தீட்சை அளித்த முறைப்படி இறை வழிபாடு செய்வார். பசித்தபோது கீழிறங்கிச் செல்வார். வீடுகளுக்குச் சென்று யாசிப்பார். யாரேனும் உணவளித்தால் உண்பார். இல்லாவிட்டால் அன்று முழுவதும் பட்டினியாகவே இருப்பார். இவ்வாறு அவரது வாழ்நாட்கள் கழிந்தன. தினமும் கீழிறங்கி வரும்போது, அண்ணாமலையார் ஆலயத்தின் முன் சென்று சைகையால் வணங்குவார் நமசிவாயர். அவர் வீரசைவர் ஆகையால் அவர் குரு போதித்த முறைப்படி கோயில் உள் செல்லாது ராஜ கோபுரத்தின் முன்னின்றபடியே வணங்குவார். அதை தினம்தோறும் கவனித்து வந்தார் சிவாக்ரக யோகி என்னும் மற்றொரு மகான். 'இவர் இறைவனை அவமானப்படுத்துகிறார்' என எண்ணி, ஒருநாள் தன் கையில் உள்ள பிரம்பால் நமசிவாயரின் முதுகில் நையப் புடைத்தார். நமசிவாயரோ அவரை எதிர்த்து ஏதும் கூறாமல், தன்னுடைய தீய மனோபாவங்களை விலக்கவே இறைவன் தன்னை தடியால் அடித்திருக்கின்றார் எனப் பொருள்படும்படி தமிழில் ஒரு வெண்பா பாடினார். பின் எல்லாம் இறைவன் செயல் என எண்ணி அமைதியாக அவ்விடம் விட்டு நகர்ந்தார். உண்மையான ஒரு துறவியை அடித்து விட்டோமே என்று எண்ணி சிவாக்ரக யோகி உள்ளம் வருந்தினார். நமசிவாயரின் வழிபாடோ இதேபோன்று அண்ணாமலையில் தொடர்ந்து நடந்து வந்தது. சதா பிரம்மத்தில் லயித்த பார்வை. உடல், உடை என்ற உணர்வுகளின்றித் தன்னை மறந்த தவம் என்று, திருவண்ணாமலையில் அவர் வாழ்க்கை தொடர்ந்தது. சிவ தரிசனம் ஒருநாள்... குகை நமசிவாயர், அண்ணாமலையார் ஆலயம் அருகே வந்து கொண்டிருந்தபோது குருவான சிவானந்த தேசிகர் எதிரே சில சீடர்களுடன் வந்து கொண்டிருந்தார். அதுகண்டு மகிழ்ந்த நமசிவாயர் குருவை வணங்கித் துதித்தார். சீடருடன் அன்போடு பேசிய குரு, ஆலயத்துள் நுழைந்தார். சீடர் நமசிவாயமும் அவரைப் பின் தொடர்ந்தார். இருவரும் அண்ணாமலையார் திருவுருமுன் சென்று நின்றனர். உள்ளம் உருக, கண்களில் நீர் சொரிய கண்மூடி இறைவன் மீது பாடல்களைப் பாடித் தொழுதார் நமசிவாயர். அவர் மீண்டும் கண் விழித்துப் பார்த்தபோது குரு அங்கே இல்லை. அவர் மறைந்து விட்டிருந்தார். சிவலிங்கத்தை நோக்க அங்கே குருவின் உருவம் தெரிந்து மறைந்தது. இறைவனே தம்மைத் தடுத்தாட்கொள்ள அங்கு குருவாக வந்திருக்கிறார் என்பதை உணர்ந்தார் நமசிவாயர். இறைவனின் கருணயை எண்ணி வியந்தார். அழுதார். தொழுதார். பக்தி மேலீட்டால் பரவசத்துடன் பல பாடல்களைப் புனைந்தார். அதுமுதல் தினந்தோறும் அருணாசலேஸ்வரர் ஆலயத்திற்கு வருவதும், பூமாலையோடு பாமாலை சாற்றுவதும் நமசிவாயரின் வழக்கமானது. ஒருநாள் நமசிவாயரின் கனவில் தோன்றிய இறைவன், ''எம் ஆலயத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள குகைக்குச் சென்று தவம் செய்து எம்மை அடைவாயாக'' என்று ஆணையிட்டார். அவ்வாறே நமசிவாயரும் மலைமேல் உள்ள சிறு குகைக்குச் சென்று தங்கி, அங்கேயே தவம் புரிந்தார். அதனால் அவருக்கு ''குகை நமசிவாயர்'' என்ற பெயர் ஏற்பட்டது. ★★★★★ நமசிவாயர் செய்த அற்புதங்கள் தவ வாழ்க்கை நடத்தி வந்த நமசிவாயரை ஆட்டிடையன் ஒருவன் ஒருநாள் அணுகினான். சினையாடான தனது ஆடுகளில் ஒன்று இறந்து விட்டது என்றும், அதன் குட்டிகளையாவது அவர் காப்பாற்றித் தரவேண்டும் என்றும் வேண்டித் தொழுதான். இறந்த சினையாட்டை அங்கேயே விட்டு விட்டு மறுநாள் வந்து தன்னைக் காணுமாறு சொன்னார் குகை நமசிவாயர். அவன் மறுநாள் காலை வந்து பார்த்தபோது, குட்டிகள் இரண்டு விளையாடிக் கொண்டிருந்ததுடன், அந்தத் தாய் ஆடும் உயிர் பிழைத்திருந்தது. தனது தவ ஆற்றலால் குகை நமசிவாயர் அதனை உயிர்ப்பித்திருந்தார். மகிழ்ச்சியுடன் அவரை வணங்கி விடைபெற்ற ஆட்டிடையன், ஊருக்குச் சென்று நடந்த விவரங்களைக் கூறினான். அதை நம்பாததோடு பொறாமையும் கொண்ட சில மூடர்கள், ஒரு வாலிபனை நோயாளிபோல் கட்டிலில் படுக்கச் செய்து பொய்யாக குகை நமசிவாயரிடம் கூட்டி வந்தனர். "இவன் இறந்து விட்டான். நீங்கள்தான் எழுப்பித் தரவேண்டும்" என்று வேண்டிக் கொண்டனர். தன் தவ ஆற்றலால் நடந்ததை உணர்ந்த குகை நமசிவாயர், "போனவன் போனவன்தான். இனி உயிர் பிழையான்" என்றார். அது கண்டு கொக்கரித்த அக்கும்பல், "நீங்கள் ஒரு போலித்துறவி. இவன் இறக்கவில்லை. நாங்கள் அப்படி நடிக்கச் செய்தோம். இதோ பாருங்கள், இவன் எழுந்திருப்பான்" எனக் கூறி எழுப்ப முயற்சித்தனர். ஆனால் பயனில்லை. உண்மையாகவே அவன் இறந்து போயிருந்தான். மூடர்கள் அவமானப்பட்டு அவ்விடம் விட்டு அகன்றனர். நமசிவாயரும் அது கண்டு வருந்தினார். அவரது துயரம் ஒரு வசையாக வெளிப்பட்டது. "கோளர் இருக்குமூர்,கொன்றாலும் கேளாவூர்" என்று தொடங்கிப் பாடியவர், இறுதி வரியாக, "அழியும் ஊர் அண்ணாமலை" என்று பாட வாயெடுக்கு முன் இறைவன் அசரீரியாய், "அடேய், நான் ஒருவன் இங்கிருக்கிறேனடா!" எனக் குரல் கொடுக்க, குகை நமசிவாயர் சினம் தணிந்து, வரியை மாற்றி, 'அழியா ஊர் அண்ணாமலை' என்று பாடி முடித்தார். கோளர் இருக்குமூர் கொன்றாலும் கேளாவூர் காளையரே நின்று கதறுமூர் - நாளும் பழியே சுமக்குமூர் பாதகரே வாழுமூர் அழியா ஊர் அண்ணாமலை - என்பது அந்தப் பாடல். சீடர் நமசிவாயர் இவ்வாறு பல ஆண்டுகாலம் தவம் செய்துவந்த குகை நமசிவாயரைத் தேடி ஒருவர் வந்தார். அவர் பெயரும் நமசிவாயம்தான். அவர் ஒரு நல்ல குருவைத் தேடிக் கொண்டிருந்தார். வேண்டுதல், வேண்டாமை அற்ற தன்மை, எப்போதும் பிரம்மத்தில் லயித்த பார்வை என்று இருந்த குகை நமசிவாயரே தனக்கேற்ற குரு என முடிவுசெய்த நமசிவாயம், அவரைச் சரணடைந்தார். அவர் போகுமிடமெல்லாம் கூடவே செல்வார். குருவுக்குக் கை, கால் பிடித்து விடுவது, அவர் தம் துணியைத் துவைத்து சுத்தம் செய்து தருவது போன்ற பணிவிடைகளைச் செய்து கொண்டிருந்தார். குகை நமசிவாயரும் அவரைப் பல்வேறு வகைகளில் சோதித்துச் சீடராக ஏற்றுக் கொண்டார். நாளடைவில் சீடர் ஆன்மஞானத்தின் மிக உயர்ந்த நிலையில் இருப்பவர் என்பதைக் கண்டு கொண்டார். அதனால் தம் சீடரிடம், ‘‘அப்பா, நீ இனிமேல் சீடன் நமசிவாயம் அல்ல. குரு நமசிவாயம்! ஆன்ம ஞானத்தில் நீ மிகமிக உயர்நிலையை அடைந்து விட்டாய். ஆகவே இனி நீ இங்கே என்னுடன் இருப்பதைவிட, சிதம்பரம் சென்று அங்கேயே தங்கி சேவை செய்து வருவாயாக!" என்று கூறி ஆசிர்வதித்தார். குருவின் சொல்லைச் சிரமேற்கொண்டு குரு நமசிவாயரும் சிதம்பரத்திற்குச் சென்றார். அங்கு தம்மைக் காண வந்தோர் அளித்த பொன்னையும், பொருளையும் கோயிலுக்கே அளித்து அதனைச் சீர் செய்தார். பல்வேறு திருப்பணிகளை மேற்கொண்டார். நீடித்த தவ வாழ்வு வாழ்ந்த குரு நமசிவாயர், இறுதியில் திருப்பாற்கடல் குளக்கரை அருகே ஓரிடத்தில் மகா சமாதி ஆனார். திருவண்ணாமலையின் புகழ் பரப்பும் முக்கியப் பாடல்களை, குறிப்பாக அண்ணாமலையின் பெருமைகளை தாம் இயற்றிய ‘அண்ணாமலை வெண்பா' என்னும் நூலில் மிக அழகாகப் பாடியிருக்கிறார் குரு நமசிவாயர். குகை நமசிவாயர் மகா சமாதி நூறாண்டுகளுக்கும் மேல் வாழ்ந்து பல்வேறு அருட்செயல்களை, அற்புதங்களைச் செய்த குகை நமசிவாயர், ஒரு புனிதநாளில் சீடர்களால் எழுப்பப்பட்ட சமாதிக் குழியில் அமர்ந்து, இறைவனை தியானித்து ஜீவசமாதி ஆனார். இவரது ஜீவசமாதி திருவண்ணாமலையில், ஸ்கந்தாசிரமம், விருபாக்ஷி குகை செல்லும் வழியில் அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் வளர்பிறை சதுர்த்தி திதி பூராட நட்சத்திரம் கூடிய தினத்தில் கும்ப லக்னத்தில் இவரது குருபூஜை நடந்து வருகிறது. குகை நமசிவாயர் இயற்றிய நூல்கள் குகை நமசிவாயர் இயற்றிய பாடல்கள் 'அருணகிரி அந்தாதி' என்னும் அற்புத நூலாய் விளங்குகிறது. 'திருவருணை வெண்பா', 'சாரப் பிரபந்தம்', ‘சோணகிரி வெண்பா' போன்ற நூல்களையும் இவர் இயற்றியிருக்கிறார்!
நம்மிடம் உள்ள சிறிய தொகையை கொண்டு தேவையறிந்து தொழில் செய்ய ஏராளமான தொழில் வாய்ப்புகள் உள்ளன. அதனை பயன்படுத்த நாம் தவறக்கூடாது. மத்திய அரசும் மாநில அரசும் போட்டிபோட்டுக்கொண்டு தொழில் முனைவோருக்கு மானியம் வழங்குகின்றன. மின் மற்றும் மின்னணு பொருட்கள், தோல் சம்பந்தமான பொருட்கள், வாகன உதிரிபாகங்கள், மருந்துப் பொருட்கள், சூரியசக்தி உபகரணங்கள், ஏற்றுமதி ஆபரணங்கள், மாசுகட்டுப்பாடு உபகரணங்கள், விளையாட்டுப் பொருட்கள், சிக்கன கட்டுமான பொருட்கள், ஆயத்த ஆடைகள் உள்ளிட்டவற்றின் உற்பத்திக்கு மத்திய மாநில அரசுகள் மானியம் வழங்கி அத்தொழில்களை ஊக்குவித்து வருகின்றன. அரசால் இத்தொழில் களுக்கு 15 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. 36 மாதங்களுக்கு 20 சதவீதம் குறைந்த மின் அழுத்த மின்சாரம் வழங்கப்படுகிறது. சிறிய தொழில்களுக்கு உற்பத்தித் தொடங்கி, முதல் ஆறு ஆண்டுகளில் செலுத்தப்படும் மதிப்புக்கூட்டு வரிக்கு ஈடான தொகை, மானியமாக மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படுகிறது. வேலை வாய்ப்பினைப் பெருக்குவதற்காக உற்பத்தி தொடங்கிய மூன்று ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை குறைந்த பட்சம் 25 வேலையாட்களை பணியில் ஈடுபடுத்த, நிறுவனங்களுக்கு கூடுதலாக ஐந்து லட்சம் ரூபாய் வரை அரசு, மானியம் வழங்குகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் தொடங்கி சலுகைகள் பெற பின்தங்கிய வட்டங்கள் எவை என அறிவிக்கப்பட்டுள்ளன. 1971ம் ஆண்டு சிப்காட் என்ற சிறு தொழில் மையம் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை 12 மாவட்டங்களில் 19 தொழில் மையங்கள் நிறுவப்பட்டு 1803 தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவைகள் எவை என மாவட்ட தொழில் மையங்கள் மூலம் அறிந்து தொழில் தொடங்கலாம். தொழில் தொடங்க அரசு வங்கிகள் தாராளமாக கடனுதவி செய்கின்றன. அதனைப் பெறுவது எப்படி? என்று சிலர் கேட்பது உண்டு. ஒரு தொழில் முனைவோர், தான் செய்யப்போகும் தொழில், மொத்த முதலீடு எவ்வளவு, யார்-யார் பங்குதாரர், ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முதலீடு, செய்யப்போகும் தொழிலின் மார்க்கெட் நிலவரம், வருமானம் எப்படி, வங்கிக்கடனை எந்த வழியில் திருப்பிச் செலுத்துவது, கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய உத்திரவாதம்(சூரிட்டி) போன்ற விபரங்களை மனுவுடன் இணைக்க வேணடும். அதனை வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். கடன் வாங்கிய பிறகு அதை மூன்று வருடத்திலிருந்து பத்து வருடத்திற்குள் செலுத்தினால் 13 சதவீதத்திலிருந்து 16 சதவீதம் வரை வட்டியுடன் அசல் தொகையும் வசூலிக்கப்படும். கடன் தொகையினை ஒழுங்காக செலுத்தினால் கூடுதலாக கடன் பெறலாம். தொழில் தொடங்கி உற்பத்தி செய்யும் போது அந்த உற்பத்திப் பொருட்களை ஈடாக வைத்தும் கடன் பெறலாம். தொழிற்சாலை, கட்டிடம், எந்திரம், கச்சாப்பொருட்கள் என்று தனித்தனியாக கடன் பெறலாம். முன்பெல்லாம் தொழில் தொடங்க ஒவ்வொரு அலுவலமாக அலைந்து அனுமதி வாங்க வேண்டியதிருந்தது. ஆனால் தற்போது அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே இடத்தில் அனுமதி கிடைக்கும் வகையில் எளிதாக்கப்பட்டுள்ளது. கீழ்கண்ட மையத்தில் மனு செய்தாலே உங்களுக்குத் தேவையான அனுமதி கிடைக்கும்: தொழில் தொடங்கிய உடனே வெற்றியடைய முடியாது. திட்டமிட்டு சரியாக தொழிலை நடத்தினால் வெற்றி பெற முடியும். உங்கள் தொழில் நிறுவன உற்பத்திப் பொருள்கள் போட்டி நிறுவனங்களை விட தரமானது என்று மற்றவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். தொழிலில் சுமூகமான அணுகு முறையே வெற்றிக்கு வழிவகுக்கும்.
தேவையான பொருட்கள்:- முட்டை- 5, தக்காளி- 2, வெங்காயம்- 1, பச்சை மிளகாய் - 4, செத்தல் மிளகாய் - 2, உள்ளிப்பல் - 5, மஞ்சள் தூள் - சிறிதளவு, மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி, சோம்பு - 1 1/2 தேக்கரண்டி, எண்ணெய் - 3 தேக்கரண்டி, எலுமிச்சைச்சாறு - 2 தேக்கரண்டி, கல் உப்பு - தேவையான அளவு. செய்முறை முட்டையை வேகவைத்து இரண்டாக வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள். ப.மிளகாய், உள்ளிப்பல் ,வெங்காயம் இரண்டையும் சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள். தேங்காய்ப்பால் 1 கப் அளவு தயார் செய்து கொள்ளுங்கள். பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடுங்கள். கொதிக்கும் நீரில் வெட்டிய ப.மிளகாய் ,வெங்காயம்,கல் உப்பு மற்றும் உள்ளிப்பல் சேர்த்து 1 நிமிடம் மூடி போட்டு அவிய விடுங்கள். பின் மூடியை திறந்து சிறிதளவு மஞ்சள்த்தூள், 2 தேக்கரண்டி மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். மஞ்சள் தூளின் மணம் போக 1 நிமிடம் கொதிக்க விடுங்கள்.அதனுடன் 2 தக்காளி மற்றும் 1 கப் தேங்காய்ப்பால் சேர்த்து அதனுடன் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து மூடி போடாமல் ஒரு கொதி வந்ததும் கலந்துவிட்டு இரண்டாக வெட்டியை முட்டையை சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். தாளிக்க அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் செத்தல் மிளகாய், சோம்பு மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கி நாம் தயார் செய்த சொதியில் சேர்த்தால் பாரம்பரிய முட்டை மிளகு சொதி தயார்.
நம் தமிழகத்தை பொறுத்த வரையில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே ஆந்திர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல் கீழடுக்கு சுழற்சி காரணமா நீலகிரி, கடலூர், திருவண்ணாமலை, கோவை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மற்றும் ராணி பேட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. மாணவர்களே உஷார்!! விடுமுறை நாட்களில் இங்கு செல்ல கூடாது..!! அதே போல் நாளைய தினத்தில் மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நாளைய தினத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இதனை தொடர்ந்து திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. அதிமுக பொதுக்குழு விவகாரம்… உத்தரவாதம் அளித்த இபிஎஸ்..!! சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
சரஸ்வதி நாகரீகத்துக்கு சொந்தக்காரரென்றும், லெமூரியா எனப்படும் குமரிக்கண்டத்தின் பாரம்பரியம் என்றும் பெருமைப் படுவதில் உங்களுக்கு என்ன சுணக்கம்? குப்தர்களின் காலம் பொற்காலம், அசோகரின் காலம் பொற்காலம், சோழர்கள் காலம் பொற்காலம் என்பதெல்லாம் வெற்றுப் பேச்சா? மதம், கடவுள், இல்லாத தேசம் ஒன்று உருவாகுமா? அப்படி ஒரு பொன்னுலகம் என்றைக்கேனும் பூக்குமென நம்புகிறீர்களா? மக்கள் மனம் விசாலமாகி கம்யூனிச சமுதாயத்தை ஏற்கும் காலமும் கனியுமோ? சொல்லுங்கள்! தொடர்ந்து பேசப்பேச நிறையவே கேள்விகள் வருகின்றன. வந்துள்ள கேள்விகளில் புதியவை இவை. தொடர்ந்து விவாதிப்பதற்கு மனதைத் திறந்துவைத்திருப்பதே முக்கியம். சரஸ்வதி நாகரீகத்துக்கு சொந்தக்காரரென்றும், லெமூரியா எனப்படும் குமரிக்கண்டத்தின் பாரம்பரியம் என்றும் பெருமைப் படுவதில் உங்களுக்கு என்ன சுணக்கம்? குப்தர்களின் காலம் பொற்காலம், அசோகரின் காலம் பொற்காலம், சோழர்கள் காலம் பொற்காலம் என்பதெல்லாம் வெற்றுப் பேச்சா? அவசியம் பதில் சொல்ல வேண்டிய பெருங்கேள்வி. இதற்காக தனி நூலே எழுதத்தக்க அளவு விவரங்கள் குவிந்து கிடக்கின்றன. ஆயினும் ஒரிரு வரிகளில் சொல்லவேண்டியுள்ளது.சிந்து சமவெளி நாகரிகம் என்று சொல்லப்படுகிற மொஹஞ்சோதாரா, ஹராப்பா நாகரீகம் ஆரியர் இந்த பூமிக்குள் நுழையும் முன்பே நின்று நிலைத்த நகர நாகரீகம். இம்மண்ணின் தொல்குடிகளான திராவிடருக்கு உரியது அது என்றே இதுவரை கிடைத்த அனைத்து சான்றாதாரங்களும் நிறுவுகின்றன. தொல்குடிகளை திராவிடர் எனச் சுட்டுவதில் மாறுபடுவோரும் உண்டு ; ஆனால் அது ஆரிய நாகரிகம் என்பதற்கு எந்தத் தடயமும் கிடையாது, இந்துத்துவம் பேசும் சங்பரிவார் இதனை மறுத்து சரஸ்வதி நதி நாகரீகம் என சொந்தம் கொண்டாடுகின்றனர். இதற்காக அவர்கள் புனைந்த அனைத்துக் கட்டுக்கதைகளையும் அறிவியலாளர்கள் நிராகரித்து ; அவை அனைத்தையும் பொய்யென நிறுவிவிட்டனர். அது சிந்து சமவெளி நாகரீகமே. மொஹஞ்சதோரா - ஹராப்பா நாகரீகமே . லெமூரியாக் கண்டம் எனும் குமரிக் கண்டம் குறித்து தமிழ்ச் சமூகத்தில் அதிகம் பேசப்படுகிறது. அண்மையில் வந்த சுனாமி போல் பெரும் ஆழிப்பேரலையாலோ கடற்கோள்களாலோ இப்பெரும் நிலப்பரப்பைக் கடல் கொண்டிருக்கும் எனக்கூறுகின்றனர்.1965ல் தனுஷ்கோடி மூழ்கியதும் 2004 சுனாமியில் ஏற்பட்ட பேரழிவும் ஏன் இது போல் பெரும் பரப்பை கடல் கொண்டிருக்கக் கூடாது என கேள்வி எழுகிறது. சௌராஷ்டிரம் அருகே கடலுக்கடியில் ஒரு பழைய துறைமுகம் கண்டுபிடிக்கப்பட்டதும், பூம்புகாரில் நடத்திய ஆய்வுகளில் கடலடியில் சிதைந்த கட்டிடங்கள் காணப்படுவதும் லெமூரியா கண்ட கற்பிதத்துக்கு உயிர் கொடுத்ததுபோல் தோன்றும். இவற்றை எல்லாம் ஒப்புக்கொள்ளும் சு.கி. ஜெயகரன் எழுதிய நூலொன்று லெமூரியா கண்டமொன்று இருந்திருக்க வாய்ப்பில்லை என புவியில் அறிவியல் துணையோடு வாதிடுகிறது . ஆரம்பத்தில் புவியியலாளர்கள் மத்தியில் இக்கண்டம் குறித்த நம்பிக்கை வெளிப்பட்ட போதிலும் ஆய்வு வலுவானபின் இது குறித்த சந்தேகமே வலுத்துவருகிறது. இன்னும் உறுதியான அறிவியல் ரீதியான நிரூபனங்கள் தேவைப்படுகின்றன. அதுவரை தமிழ் சமூகத்தின் பொதுப் புத்தியில் லெமூரியா கற்பிதம் தொடரவே செய்யும். சோழர் காலமோ, குப்தர் காலமோ, அசோகர் காலமோ பொற்காலம் என்பதெல்லாம் மிகைக் கூற்றே. ஒவ்வொரு ஆட்சிக் காலத்திலும் சில சிறப்புகள் இருக்கும்; அது போல் பெரும் அவலங்களும் இருக்கும். முன் கேள்வி ஒன்றில் நாம் குறிப்பிட்டது போல சோஷலிசத்துக்கு முந்தைய எல்லா ஆட்சிகளும் சாராம்சத்தில் சுரண்டும் வர்க்க ஆட்சியே. மன்னராட்சி என்பது நிலப்பிரபுத்துவ அமைப்பைப் பேணிக்காக்கும் அரசமைப்பே. இந்த ஆட்சிகள் நிலப்பிரபுக்களின் நலனை பாதுகாத்தன.குடியானவர்களை வஞ்சித்தது. அடக்கி ஒடுக்கியது. சாதியம் ஏதோ ஒருவகையில் பாதுக்காக்கப் பட்டது. கோடிக்கணக்கான மக்கள்“ஆடையின்றி வாடையில்மெலிந்துகையதுகொண்டு மெய்யது பொத்திகாலது கொண்டுமேலதுதழீ இப்பேழையில் இருக்கும்பாம் பெனஉயிர்க்கும்ஏழையாளனைக் கண்டனம்எனுமே”-எனும்படியாகத்தான் வாழ்ந்தனர். “இரந்தும் உயிர்வாழ்தல்வேண்டின்பரந்துகெடுகஉலகியற்றியான்”-என இறைவனையே சபிக்கும் படியாகத்தான் உயிர் வாழ்ந்தனர். உழைக்கும் மக்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் இந்த ஆட்சிகள் ஒரு போதும் பொற்கால ஆட்சியல்ல. இப்போது நாம் இங்கு காண்கிற ஆட்சி எதுவும் பொற்கால ஆட்சி அல்ல. பொற்கால ஆட்சி நேற்றும் இல்லை; இன்றும் இல்லை; இனிதான் பூக்க வேண்டும். இதனைச் சொல்வதால் பழம் பெருமைகளை முற்றாக நிராகரிப்பதாகாது; மாறாக முந்தைய நியாயமான பெருமைகளைச் சொல்வது வேறு; பொற்காலமென விமர்சனமின்றி போற்றிப் புகழ்வது வேறு.மன்னராட்சியா? குடியாட்சியா? அந்நிய ஆட்சியா? மண்ணின் ஆட்சியா? ஆளுவது அவரா? இவரா? எதுவாக இருப்பினும் ; கொடியும் கோஷமும் மாறினும், சுரண்டல் ஆதிக்கம் மட்டும் தொடரவே செய்யுமெனில், அடக்குமுறை நீடிக்குமெனில், உழைப்போர் நலன் உதாசீனப்படுத்தப்படும் எனில் -அது எப்படி பொற்கால ஆட்சியாகும்? நாம் முன் கேள்விக்கான பதிலில் சுட்டிக்காட்டியவாறு சோஷலிச கட்டத்தையும் தாண்டி வர்க்கப் பகைமையும் மோதலும் இல்லாத - அரசும் அடக்குமுறையும் இல்லாத - “ உற்பத்தி சக்திகள் வளர்ந்து கூட்டு உழைப்பு எனும் ஊற்றிலிருந்து செல்வம் அளவின்றி பெருகி ஓடுகிற” கம்யூனிஸ சமுதாயமே பொற்காலமாகும். நம் கவிஞர்கள் கனவு கண்ட‘எல்லோரும் இன்புற்றிருக்கும் பொன்யுகம்’ இனிதான் பூக்க வேண்டும். அதற்காக உழைக்கும் மக்களை அணிதிரட்ட கடந்தகால பொற்கால மயக்கங்களை தோலுரிக்க வேண்டிய வரலாற்றுக் கடமை நமக்கு உண்டு. செய்வோம். மதம், கடவுள், இல்லாத தேசம் ஒன்று உருவாகுமா? அப்படி ஒரு பொன்னுலகம் என்றைக்கேனும் பூக்குமென நம்புகிறீர்களா? மக்கள் மனம் விசாலமாகி கம்யூனிச சமுதாயத்தை ஏற்கும் காலமும் கனியுமோ? சொல்லுங்கள்! நூறு கேள்விகளோடு முடிக்கிறேன் என ஏற்கெனவே சொல்லிவிட்டதாலும், இதுவே நூறாவது கேள்வி என்பதாலும் கிடுக்கிப் பிடி கேள்வியை வீசி இருக்கிறார் நண்பர். பதில் சொல்ல பல பக்கங்கள் தேவை. ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை. ஆகவே இதுவரை சொன்ன பதில்களை மீண்டும் அசை போட்டபடியே இப்பதிலை வாசிக்க வேண்டுகிறேன் . மதமும் கடவுளும் இல்லாத தேசமும் ஒரு பொன்னாளும் கேடகவே மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்நாளை உங்களைப் போலவே நானும் ஆவலொடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். ஆனால் அதற்கு முன் வறுமையும், வேலையின்மையும், அடக்குமுறையும் இல்லாத ஒரு வாழ்வு நமக்கு வேண்டும். அச்சத்திலிருந்தும் பசியிலிருந்தும் அறியாமையிலிருந்தும் விடுதலை வேண்டும். இல்லையா ? “எல்லா ஒடுக்கும் வர்க்கங்களுக்கும் நம் வர்க்க ஆட்சியை நிலைபேறுடையதாக ஆக்கிக் கொள்வதற்காக இரு சேவைகள் தேவைப்படுகின்றன; ஒன்று, தூக்கிலிடுபவன் சேவை [ hungman’s function] , இரண்டு, பூசாரிகள் சேவை [priestly function ] - இரண்டும் அவர்களுக்குத் தேவை. ஏனெனில் , சுரண்டுவோருக்கு எதிராக சுரண்டப்படுவோர் மத்தியில் எழும் எதிர்ப்பை, போராட்டத்தை அடக்கி ஒடுக்க தூக்குமரமும் தூக்கிலிடுவோனும் தேவை. மறுபுறம் சுரண்டப்படுவோனுக்கு ஆறுதல் மொழிகள் சொல்லி, ‘துன்பங்களை கஷ்டங்களை சகித்துக்கொண்டு கீழ்ப்படிந்து தியாகம் செய்தால் உனக்கு இன்பம் கொழிக்கும் சொர்க்கம் கிடைக்கும்’ என்று சொல்லி - அது வெறும் சரடு நடை முறை சாத்தியமற்றது எனினும் - மயங்கச் செய்ய பூசாரி தேவை. வர்க்க ஆட்சியை உறுதி செய்து - அதற்கு அவர்களை அடிபணியச் செய்து - புரட்சிகர செயல்பாட்டிலிருந்து ஒதுக்கி - புரட்சிகர மனவெழுச்சி ஏற்படாமல் முனை மழுங்கச் செய்து புரட்சிகர உறுதியைக் குலைக்க பூசாரிகள் தேவை,” என்றார் தோழர் லெனின். ஆக, ஆளும் வர்க்கம் அவ்வளவு சுலபமாக தன் ஆதிக்கக் கருத்தோட்டத்தை விட்டுக்கொடுத்துவிடாது. அதனால்தான் முதலாளித்துவ சமுதாயம் உள்ளிட்டு இதுவரையிலான எல்லா சமூக அமைப்புகளும் மதத்தையும் கடவுளையும் விடாமல் கெட்டியாய் பிடித்துக் கொண்டிருக்கின்றன. இன்றைக்கு அறிவியல் உண்மைகள் மதம், கடவுள் இவற்றை கேள்விக்குள்ளாக்கினும் தன் சுய நலத்துக்காக இவற்றை நீடிக்கச் செய்வதில் முதலாளித்துவம் வெற்றி பெற்றுள்ளது. நவீன அறிவியல் தொழில் நுட்ப சாதனங்கள் இதற்கே சேவை செய்கின்றன. அதிலும் உலகமயம் சகல நல்ல விழுமியங்களையும் அடித்து உடைத்துவிட்டு வெறும் நுகர்வு இயந்திரமாக, பணவெறி மிக்க மிருகமாக, சுயநலக் கிருமியாக மனிதனை மாற்றிக்கொண்டிருக்கிறது. இதனால் அவனுக்கு/அவளுக்கு ஏற்படும் மன உழைச்சலுக்கு ஆன்மீக மருந்து தடவுவதாய்க் கூறி மேலும் மேலும் மதத்திடமும் கடவுளிடமும் சரண்டையச் செய்கிறது .இச்சூழலில் சமூக உளவியலை வென்றெடுக்கும் சவாலான பணிநம்முன் உள்ளது . ஆனால் முதலாளித்துவம் உற்பத்தி செய்யும் வேலையின்மை , கடன் நெருக்கடி , வாழ்வைப்பற்றிய அச்சம் என எல்லா நெருக்கடியும் வேறுவழியின்றி மனிதனை வேறு பாதையை தேடவே நிர்பந்திக்கும். முதலாளித்துவம் தன் சவக்குழியைத் தானே வெட்டிக்கொள்ளும். அச்சூழலில் சமூக அமைப்பை மாற்றுவதற்கான போரட்டமும் பகுத்தறிவுக்கான விழிப்புணர்வும் ஒரு சேர முன்னெடுக்க இயலும். செய்ய வேண்டும் . “மனிதர்களை இயங்கச் செய்யும் ஒவ்வொன்றும் அவர்களுடைய மனத்தினூடே சென்று தீர வேண்டும். அது என்ன வடிவம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது பெரிதும் சூழ்நிலைகளையே பொருத்திருக்கும்,” என்று எங்கெல்ஸ் கூறினார். “ வரலாற்று வளர்ச்சியில் ஆன்மீகத்தின் இயங்கு பாத்திரத்தை புரிந்து கொள்ள இக்கூற்று உதவிடும். சமூக உறவுகள், தேவைகள் மற்றும் நலன்கள் சித்தாந்த மதிப்புகளின் வடிவத்தில், அதாவது கருத்துகள், இலட்சியங்கள், கோட்பாடுகள், நோக்கங்கள் என்ற முறையில் ஈடேற்றமடைகின்றன. பெருந்திரளான மக்கள் புரட்சிகர சித்தாந்தத்தைத் தன் வயப்படுத்திக்கொள்ளும் பொழுது அது பொருளாயத சக்தியாகிறது,” என்றனர் ரஷ்ய தத்துவ ஆசிரியர்கள் . முன்னொரு கேள்விக்கான பதிலில் சுட்டியதுபோல, இப்போது கூட உலகில் வெறுமே 30 நாடுகள் மட்டுமே ஏதோ ஒரு வகையில் மதத்தோடு அரசைப் பிணைத்துக் கொண்டிருக்கிறது. 166க்கும் மேற்பட்ட நாடுகளில் ஏதோ ஒருவகையில் மதம் அரசிடமிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. உலக மக்கள் தொகையில் 22 விழுக்காடு மக்கள் ஏதோ ஒரு வகையில் நாத்திகத்தை நெருங்கியுள்ளனர். 11 விழுக்காட்டினர் நாத்திகராகவே அடையாளப்படுத்துகின்றனர் . எனவே நம்பிக்கை வலுக்கிறது .காலந்தோறும் சில கருத்துகள் அழிகின்றன; சில மாறுகின்றன; சில புதியனவாகத் தோன்றுகின்றன. வரலாற்றுப் பொருள் முதல்வாத நிலையிலிருந்து நோக்கும்பொழுது கருத்துகள் பிறத்தலும் மாறுதலும் அழிதலும் பொருளுற்பத்தி நிலைமைகளிலும் உறவுகளிலும் எழும் மாற்றங்களையொட்டியே நிகழ்கின்றன .எடுத்துக்காட்டாக , முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கட்ட நிலையில்தான் ஜனநாயகக் கருத்துகளும் சோஷலிசக் கருத்துகளும் மிகத் தெளிவாகப் பிறந்தன. புதிய பௌதீக நிலைமைகளின் ஆதாரத்தில்தான் புதிய கருத்துகள் பிறக்க முடியும் . பழைய கருத்துகள் சிலவும் கூட தொடர்ந்து ஒரு பங்கை வகிக்கும். மாறாதது எதுவும் இல்லை . “ கம்யூனிசம் ஒரு நம்பிக்கை சார்ந்த கோட்பாடல்ல ;மாறாக அது ஒரு இயக்கம். அது கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டதில்லை; மாறாக நடப்பு உண்மைகளை அடிப்படையாகக் கொண்டது,” என்பார் எங்கெல்ஸ். ஆம். நடப்பு உண்மைகளில் காலூன்றி சமூக மாறுதலுக்காக அர்ப்பணிக்கும் ஒரு பேரியக்கமாக கம்யூனிசம் வலுப்படும் சூழலில், மக்களை வென்றெடுக்க முடியும். கம்யூனிசக் கனவு கைக்கூடும். “ உலகத் தொழிலளர்களே! ஒன்றுபடுங்கள்! இழக்கப் போவது விலங்குகளே! எதிரே தெரியுது பொன்னுலகம்.” -கம்யூனிஸ்ட் அறிக்கையின் இந்த அறைகூவல் காலம் கடந்தும் எங்கும் உயிர்த்துடிப்புடன் ஒலிக்கிறது. நூறு கேள்வி பதிலுடன் உரையாடலை நிறைவு செய்கிறேன்.இதன் பொருள் உரையாடலும் விவாதமும் முடிவுக்கு வந்துவிட்டது என்பதல்ல; இங்கு இவ்வளவுதான் சாத்தியம் . அவ்வளவே. உரையாடலை, விவாதத்தை வேறுவேறு தளங்களில் நாம் தொடர்ந்துகொண்டே இருப்போம். ஆம் “அறிவைத் தேடிக்கொண்டே இருப்போம்!” “அநீதியை எதிர்த்துக் கொண்டே இருப்போம்!” நன்றி : வண்ணக்கதிர் , தீக்கதிர் , 17-04-2016 0 comments நாத்திகம் வேர்பிடிக்கவில்லையா ? Posted by அகத்தீ Labels: விவாத மேடை நாத்திகம் இங்கே வேர் பிடிக்கவில்லையா? சு.பொ.அகத்தியலிங்கம். சோஷலிசம், கம்யூனிசம் என்றெல்லாம் புரியாத வார்த்தைகளைப் பேசுவதைவிட சமதர்மம் என்ற சொல்லையோ, பொதுவுடைமை என்ற சொல்லையோ பயன்படுத்தலாகாதா?அந்நியத் தத்துவம் என்பதால் அந்நியச் சொல்லால்தான் விளிக்க வேண்டுமோ? இந்தியாவின் - தமிழகத்தின் தத்துவ மரபாக உலகே வியந்து பார்ப்பது நமது ஆன்மீகச் செல்வத்தைத்தானே? சார்வாகன் முதல் பெரியார் வரை போராடியும் இம்மண்ணில் நாத்திகம் வேர்பிடிக்கவில்லையே ஏன் ? மாற்றுக் கருத்துகள் கூறுவோரைப் பார்க்க மாட்டேன் என்று கண்களையும், மாற்றுக் கருத்துகளைக் கேட்க மாட்டேன் என்று காதுகளையும், மாற்றுக் கருத்துகள் பற்றிப் பேச மாட்டேன் என்று வாயையும் மூடிக்கொள்வோரை விட, இப்படி விவாதிக்க வருவோர் சிந்தனைகள் வளம் பெற உதவுகிறவர்களே. ஆகவே, அவர்களிடமிருந்து ஒரே விதமான கேள்விகள் வரினும் விளக்கமளிப்பது மார்க்சியர்களின் கடமையே. சோஷலிசம் , கம்யூனிசம் என்றெல்லாம் புரியாத வார்த்தைகளைப் பேசுவதைவிட சமதர்மம் என்ற சொல்லையோ, பொதுவுடைமை என்ற சொல்லையோ பயன்படுத்தலாகாதா?அந்நியத் தத்துவம் என்பதால் அந்நியச் சொல்லால்தான் விளிக்க வேண்டுமோ? சுற்றிச் சுற்றி இது ஒரு அந்நிய தத்துவம் என்று கோடு போட்டு, இந்த மண்ணில் இது முளைக்காது எனச் சொல்வது இந்தத் தத்துவத்தின் எதிரிகளுடைய ஒரு உத்தி. அது இருக்கட்டும், நம் தமிழ் நாட்டில் புரட்சி, அம்மா, மாற்றம், வளர்ச்சி உள்ளிட்ட பல சொற்கள் படும்பாட்டைப் பார்த்தபின்னும் இப்படி ஒரு கேள்வியா ? கம்ப்யூட்டர், லேப் டாப் என எண்ணற்ற கருவிகளின் பெயர் எந்த மொழியில் என்பது மட்டுமா பிரச்சனை ? பெயர்ச் சொல்களை அப்படியே பயன்படுத்தலில் பிழை என்ன? எந்தச் சொல்லால் விளிப்பது என்பதற்கு முன்னால் அவற்றின் உட்பொருளை அறிவது அவசியமல்லவா ? முதலாளித்துவம் மூர்க்க லாபெவெறியோடு நிலம் தொழிற்சாலைகள், சுரங்கங்கள் போன்றவற்றை சிலரிடம் குவித்து ஏகபோகமாக்குகிறது. அவர்களின் சொத்தைப் பாதுகாக்க அரசு இயந்திரம் முழுதாய் முடுக்கி விடப்படுகிறது . உழைப்பாளி மக்கள் மேல் ஒடுக்கு முறை ஏவப்படுகிறது . இதற்கு துணையான கருத்தோட்டமும் ஒழுக்க விதிகளும் சமூகச் சட்ட மாக்கப்படுகிறது. கேள்வி கேட்போரும் எதிர்ப்போரும் குற்றவாளிகளாக சித்தரிக்கப்படுகின்றனர். விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரிடம் சமூகத்தின் மொத்த செல்வத்தின் பெரும் பகுதி குவிய; பெரும்பாலான மக்கள் வறுமைப் படுகுழியில் தள்ளப்படுகின்றனர். இருப்பவர் இல்லாதவர் இடைவெளி பெருகுகிறது. வறுமையும் வேலையின்மையும் வாட்டி வறுக்கிறது. போரும் மோதலும் தொடர்கிறது . இந்த முதலாளித்துவ சமுதாயத்துக்கு மாற்றாக சோஷலிசம் முன் வைக்கப்படுகிறது. இங்கு உற்பத்திக் கருவிகளான தொழிற்சாலை சுரங்கம் முதலியன அரசுக்குரியதாகிறது. லாபவெறிக்கு கடிவாளம் போடப்படுகிறது. நிலக் குவியல் உடைக்கப்பட்டு பரவலாக்கப் படுகிறது. உணவும் உறைவிடமும் வேலையும் கல்வியும் சுகாதாரமும் அனைவருக்கும் உத்திரவாதப்படுத்தப்படுகிறது.ஏழை பணக்காரன் இடைவெளி ஒழிக்கப்படுகிறது; மாறாக சக்திக்கேற்ற உழைப்பு; உழைப்புக்கேற்ற ஊதியம் நடைமுறைக்கு வருகிறது. இங்கு அரசு என்ற அடக்குமுறைக் கருவி தொடரும்; ஆனால் முன்பு முதலாளிகள் நலன் காக்க உழைப்பாளிகளை ஒடுக்கியதற்கு மாறாக உழைப்பாளிகள் நலன் பேண முதலாளிகளை அடக்கும். உலகப் போருக்கு அல்ல உலக சமாதானத்துக்கே முன்னுரிமை. இன்னும் சொல்லலாம். இடம் கருதி இதோடு நிறுத்துகிறோம். இவைவெல்லாம் ஈயடிச்சான் காப்பியாக எல்லா நாட்டிலும் ஒரே மாதிரியாக அமையாது. அமைக்கவும் இயலாது. அந்தந்த மண்ணிற்கேற்ப ஆங்காங்குள்ள சமூகச் சூழல், சமூகத் தேவை, உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சி, அக, புற சூழல் இவையொட்டி நாட்டுக்கு நாடு கூடுதலாகவோ குறைவாகவோ அமலாகும். இதனைக் குறிக்கும் சரியான சொல் சோஷலிசம் என்பதே. இதே உணர்வோடு சமதர்மம் என்ற சொல்லைச் சொன்னாலும் அட்டியில்லை. மாறாக கம்யூனிசம் என்பது இதனினும் உயர்ந்த கட்டம். இன்னும் எங்கும் சோதிக்கப்படவில்லை. கம்யூனிச சமுதாயத்தில் தனிநபர் சொத்துரிமை முற்றாக ஒழிக்கப்பட்டிருக்கும். எல்லோருக்கும் எல்லாம் பொதுவாக இருக்கும். தன் சக்திக்கு ஏற்ப ஒவ்வொருவரும் உழைப்பர். அவரவர் தேவைக்கு ஏற்ப எடுத்துக்கொள்வர். இங்கே அடிமையும் கிடையாது எஜமானனும் கிடையாது. சுரண்டுபவரும் இருக்கமாட்டார். சுரண்டப்படு வோரும் இருக்கமாட்டார். ஒடுக்குவோரும் இருக்கமாட்டார் ஒடுக்கப்பட்டோரும் இருக்கமாட்டார். உடையோரும் இல்லாதோரும் இல்லாத - ஒவ்வொருவர் சுதந்திரத்தையும் ஒவ்வொருவரும் மதிக்கிற =- அரசு என்கிற அடக்குமுறை கருவியே உலர்ந்து உதிர்ந்து போகிற ஒரு பொன்னுலகம் அது. அந்த லட்சிய யுகத்துக்கு கம்யூனிஸம் என்று பெயர். இதனை பொதுவுடைமை என விளிக்க விரும்பினும் இதே உணர்வோடு விளிப்பின் நமக்கென்ன கசக்கவா செய்யும்? “தனிநபராட்சி, அரசியல் சட்டரீதியான மன்னராட்சி, குடியாட்சி ஆகியவை வர்க்கப் போராட்டத்தின் பல்வேறு வடிவங்களே; இந்த வடிவங்களில் ஒவ்வொன்றும் அதன் வர்க்க உள்ளடக்கத்தின் வேறுபட்ட வளர்ச்சிக் கட்டங்கள் ஊடே கடந்து செல்கிறது என்று வரலாற்றின் இயக்கவியலில் உள்ளது.ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்திற்கான இடை மாற்றம் தன்னளவில், புதிய புறத்தோற்றத்தின் கீழ் உள்ள முந்தைய சுரண்டும் வர்க்கத்தை ஒழிப்பதில்லை,” என்பார் லெனின். ஆம். உண்மை அதுவே. வரலாற்றில் முதல் முறையாக சுரண்டும் வர்க்கத்தைக் கீழே தள்ளி உழைக்கும் வர்க்கத்தை ஆட்சிக் கட்டிலில் உடகார வைத்தது சோஷலிசப் புரட்சியே. இதுதான் அதன் உள்ளடக்கத்திலேயே மிக முக்கியமானது. வர்க்க வேறுபாட்டை சோஷலிசம் முற்றாக ஒழித்துவிடாது, ஆயின் உழைக்கும் வர்க்க மேலாண்மையை நிறுவும். சோஷலிச சமுதாயத்தின் முக்கிய மரபணு இதுவே. இதனால்தான் ஆயிரம் ஆண்டுகளாய் அடக்கியும் சுரண்டியும் ஆளும் வர்க்கமாய் இருந்த சுரண்டும் வர்க்கம் தன் வீழ்ச்சியை இழப்பை தாங்கமுடியாமல் வஞ்சகம், சதி, கலகம் இவற்றின் மூலம் சோஷலிச சமூகத்தை அழித்தொழிக்க முயல்கிறது. சோவியயூனியன் உள்ளிட்ட சில இடங்களில் வெற்றியும் கண்டிருக்கிறது. எனினும் சோஷலிசத்தின் மீதான அவதூறுகளையும் தாக்குதலையும் முதலாளித்துவம் தொடரவே செய்கிறது. கம்யூனிச சமுதாயமோ வர்க்க பகைமையே இல்லாத - வர்க்கங்களையே இல்லாமல் செய்துவிடும் புதிய சமூகம். அனைவரும் அனைத்திலும் எல்லாவிதத்திலும் சமம். வறுமையைப் பங்கு போடும் சமூகம் அல்ல. உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சி - நவீன தொழில் நுட்ப வளர்ச்சி இவற்றால் பெருகும் வளத்தினை எல்லொரும் தேவைக்கு ஏற்ப துய்க்கவும் - அதற்காக தன் சக்திக் கேற்ப உழைப்பை நல்கவுமான ஒரு புதுயுகம் . “எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பது அல்லாமல் வேறொன்றறியேன்” என்கிற கனவு அப்போதே மெய்ப்படும். அந்தப் பொன்னுலகம் நம் கனவாகவும் லட்சியமாகவும் மட்டுமே இருப்பினும், எதிர்காலச் சந்ததியினர் வசப்படச் செய்வர் என்கிற சமூக அறிவியல் நம்பிக்கையைப் பிரகடனப்படுத்துவோம்! மேலும் அறிய , ஆர். பார்த்தசாரதி எழுதிய “மார்க்சியம்- எதிர்காலம்” உட்பட ஏராளமான நூல்கள் நம்முன் குவிந்து கிடக்கின்றன.சரி! இப்போது சோசலிசம், கம்யூனிசம் எனும் வார்த்தைகளை நீங்கள் ஏற்பதும் மாற்றுவதும் உங்கள் கையில். அதே சமயம் மார்க்சியம் ஒரு மண்ணுக்கோ, ஒரு இனத்துக்கோ உரிய தத்துவம் அல்ல; உலகம் முழுமைக்குமான சமூக விஞ்ஞானம். மின்சாரமும் மார்க்சியமும் இன்றி உலகில் மெய்யான விடியல் கிடையவே கிடையாது . இந்தியாவின் - தமிழகத்தின் தத்துவ மரபாக உலகே வியந்து பார்ப்பது நமது ஆன்மீகச் செல்வத்தைத்தானே? சார்வாகன் முதல் பெரியார் வரை போராடியும் இம்மண்ணில் நாத்திகம் வேர்பிடிக்கவில்லையே ஏன் ? ஒரு நாட்டைப் பற்றிய சித்திரம் அந்நாட்டு ஆளும் வர்க்கத்தால்தான் உருவாக்கப்படும் . இங்குள்ள ஆளும் வர்க்கமும் இங்குள்ள பார்ப்பனிய ஆதிக்க சக்திகளும் உருவாக்கிய மாயைகள் பல. இந்தியர்கள் எல்லோருமே புலால் மறுப்பாளர்கள், மரக்கறி உணவுப் பழக்கம் மட்டுமே உள்ளவர்கள் என்றே வெளிநாட்டுக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. உண்மை என்ன? இங்கு மிகச் சிறுசதவீதத்தினரே புலால் மறுப்பாளர். பெரும்பகுதியினர் புலால் உண்போரே. அது போல் கர்நாடக சங்கீதமும் பரதநாட்டியமுமே இந்தியக் கலை என சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அந்த இரண்டையும் விரும்புவோர் இங்கு மிகச் சொற்பமே. பெரும்பாலோர் பல்வேறு நாட்டார் கலைகளையே விரும்புகின்றனர். இதுபோல் இந்தியாவைப் பற்றி ஆளும் வர்க்கம் கட்டமைத்திருக்கும் பொய்மைகள் அநேகம். அதில் ஒன்றுதான் இந்தியா ஆன்மீக நாடென்பதும். இந்தியாவை உலகமே ஆன்மீக பூமியாகப் பார்க்கிறது எனத் தொடர்ந்து நம் காதில் பூ சுற்றப்படுகிறது. இந்தியா மிகவும் பின் தங்கிய நாடு. குறைந்த கூலிக்கு கொள்ளையடிக்கலாம். கனி வளங்கள் ஏராளம். விருப்பம் போல் வேட்டையாடலாம். இங்கு மூட நம்பிக்கைகள் அர்த்தமற்ற சடங்குகள் அதிகம்... இப்படித்தான் உலகம் நம்மை புரிந்து வைத்திருக்கிறது. இதனை மாற்றுவதே முற்போக்காளர் கடமை. தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, நா. வானமாமலை, அருணன், தேவ. பேரின்பன் உள்ளிட்ட பலர் எழுதிய நூல்கள் விரிவாக நம் தத்துவ வேர் ஏதோ ஒரு வகையில் கடவுள் மறுப்பு சிந்தனை என்பதை அடையாளம் காட்டுகின்றன. ஆழமாக நிறுவுகின்றன.நா. வானமாமலை இப்படித் தொகுத்துக் கூறுவார்: 1. இந்தியத் தத்துவங்கள் அனைத்துமே கடவுள் நம்பிக்கையைப் போதிக்கவில்லை. மாறாக, மிகப் பெரும்பான்மையானவை கடவுளை மறுக்கின்றன. 2. நமது பண்டைய நாத்திகவாதிகளின் பலவீனங்களை, மார்க்சியம்தான் நிவர்த்தி செய்து அவர்களது நாத்திக வாதத்தை தருக்க நிலையில் இருந்து , கீழே கொணர்ந்து வாழ்க்கை நிலையோடுள்ள தொடர்வைச் சுட்டிக் காட்டுகிறது. 3. இன்று, மார்க்சியம் உலகெங்கும் பரவியுள்ள நிலையிலும் கூட, நமது பண்டைய நாத்திகவாதிகளின் கடவுள் மறுப்பு வாதங்கள், பயனுள்ள தர்க்கவாதங்களாகவே உள்ளன. அவற்றை முற்போக்காளர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் . “ இந்திய நாத்திகவாதிகள் மிகப்பழங்காலத்தில் வாழ்ந்தவர்கள். மனிதன் இயற்கையை அறிந்து அதனை மாற்றும் அறிவியல் முயற்சிகள் துவக்க நிலையிலேதான் இருந்தன. எனவே அறிவியலின் இயற்கை விதிகளைப் பயன்படுத்தித் தங்கள் நாத்திகவாதங்களை உருவாக்க இயலவில்லை. பிற்கால பிரெஞ்சு நாத்திகவாதிகளுக்கு அறிவியல் அறிவு கைகொடுத்தது. அவர்களுடைய வாதங்கள் செல் அமைப்பு , டார்வினது பரிணாமக் கோட்பாடு , புதிய அணுக்கொள்கை , வேதியல் மாறுதல்கள் குறித்த அறிவு இவற்றையெல்லாம் சான்றுகளாகக் கொண்டிருந்தன. ஆயினும் விஞ்ஞான சோஷலிசக் கொள்கையின் மூலவர்களுக்கு , பிற்கால நாத்திகர்களின் நிலை கூட திருப்தி அளிக்கவில்லை .அவர்கள் இயக்க இயல் பொருள்முதல்வாதம் , வரலாற்றியல் பொருள்முதல்வாதம் ஆகிய முரணற்ற தத்துவச் சிந்தனையை உருவாக்கி பொருள் இயக்கம் பற்றியும், சமூக இயக்கம் பற்றியும் முழுமையான விளக்கம் கொடுத்த பின்னர்தான், நாத்திகம் சிந்தனைப் போக்கில் அதற்குரிய ஸ்தானத்தில் அமர்த்தப்பட்டது.” மார்க்சிய தத்துவம் குறித்து இக்கேள்வி பதில் தொடரில் முன்பே தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.பெரியார் சாதி மறுப்பில் தொடங்கி - சாதியைக் காப்பாற்றும் மதம் - மதத்தை போதிக்கும் புராணாங்கள் சடங்குகள் - இவற்றின் அடிப்படையான கடவுள் மறுப்புக்கு வந்து சேர்ந்தார். பின் பிசிறில்லாமல் கடவுள் மறுப்பில், மத மறுப்பில் உறுதி காட்டினார். சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரோ அறிவியல் துணை கொண்டும், மார்க்சிய அணுகுமுறையோடும் பகுத்தறிவுப் பிரச்சாரத்தை மேற்கொண்டார். கருத்து மோதல்கள் இருப்பினும் தன் ‘குடியரசு’ ஏட்டில் சிங்காரவேலர் தொடர்ந்து எழுத பெரியார் இடம் கொடுத்தார்.சார்வாகர் தொடங்கி சிங்காரவேலர், பெரியார் எனத் தொடரும் இந்திய - தமிழக பகுத்தறிவாளர் படை இன்னும் வீரியமாகவே இருக்கிறது . பெரியார் என்கிற பெயரே இந்துத்துவ வெறியர்களுக்கு அலர்ஜியாக - ஒவ்வாமையாக இருப்பது இதனால்தான். இப்படை தோற்காது, மேலும் மேலும் முன்னேறவே செய்யும். (அடுத்த இதழில் இத்தொடர் நிறைவடையும்) வண்ணக்கதிர் , தீக்கதிர் , 07 – 04-2016 0 comments உங்கள் பரப்புரையை கூர்மையாக்கிட ....... Posted by அகத்தீ Labels: நூல் மதிப்புரை உங்கள் பரப்புரையை கூர்மையாக்கிட... சு.பொ.அகத்தியலிங்கம் . “பாட்டுத் தொழிலிலே மனதை வையடா / தீயைப் பிசைந்து கவிதை செய்யடா!” என தன் கவிதையில் சொன்னவன் மட்டுமல்ல ; அப்படியே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு உயிர்த்துடிப்புள்ள பாட்டாளி ஆம் பாட்டாளி பக்கம் நின்று பாடல் யாத்திடும் பாட்டாளி நவகவி .“முறையாக எழுதத் தொடங்கி முப்பத் தேழு ஆண்டுகளாக நான் விட்ட உயிர் மூச்சுகளுக் கிடையில் இந்த கவிமூச்சுகளும் கலந்துள்ளன”என தொகையறாவில் நவகவி சொல்வது மிகையல்ல . “இந்த முன்னுரையை எழுதுவதற்காக அவரு டைய தொகுப்புகளை ஒரு சேர வாசித்த போது மலைப்பு ஏற்பட்டது .கடந்த நாற்பது ஆண்டுகளாக இந்த பூமியில் ,இந்த நாட்டில் ,இந்த தமிழ் மண்ணில் பொதுவெளியில் நடந்த எல்லாவற்றுக்கும் ஒவ் வொன்றுக்கும் முகம் கொடுத்துப் பாடியிருக்கும் தமிழின் ஒரே கவி நவகவிதான் என்கிற மலைப்பும்வியப்பும் …… ரூப்கன்வரிலிருந்து இடுவாய் ரத்தினசாமி கொலைவரை, பாபர் மசூதி இடிப்பிலிருந்து தொழிற்சங்கங்களின் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் வரை, சே குவாராவைப் பாடிய பாடலிலிருந்து கட்சிக்கு மாதமாதம் லெவி தர வற்புறுத்தும் பாடல்வரை என அவர் பாடிக்கொண்டே இருப்பதை சக படைப்பாளிக்குள்ள பொறாமையுடன் பார்த்தேன்.” என முன்னுரையில் ச.தமிழ்ச்செல்வன் சொல்லியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை. உண்மையைத் தவிர வேறில்லை . “நவகவி எனும் வேப்பமரத்தின் கிளைகளில் உட்கார்ந்து பழந்தின்று வளர்ந்த காக்கை நான்.” என்பதில் பெருமை கொள்ளும் ஏகாதசி 27 தலைப்புகளில் இந்த ஆயிரம் பாடல்களைத் தொகுத்திருப்பது தமிழுக்கும் இடதுசாரி இயக்கத்துக்கும் செய்துள்ள அருஞ்சேவை . “ மதுர மீனாட்சிக்கும் காஞ்சி காமாட்சிக்கும்/ வருஷம் ஓர் கல்யாணமாம் – தெருமேலே/ மாப்பிள்ளை ஊர்கோலமாம் –எங்க / எதுத்த வீட்டுப் பொண்ணு வயசாகி நாளாச்சி / எப்பதான் கல்யாணமாம் – அவ கண்ணில் / எப்பவும் நீர் கோலமாம்!” – கரிசல் கிருஷ்ணசாமி குரலில் இப்பாடல் வரிகள் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் ஒலிக்கக் கேட்டிருக்கிறோம். “ இலைகள் அழுத ஒரு மழை இரவு” இந்தப்பாடலுக்கு உருகாதார் யார் ? இன்றும் மாறாத சமூகச் சித்திரமன்றோ அது . “ அழகைப் பாட ஆயிரம் கவியுண்டு / எங்க ஊர் / அழுக்கைப் பாட ஏடெடுத்தேன் நெஞ்சில் / ஆசைமிகக் கொண்டு” என பிரகடனம் செய்த நவகவி அப்படியே வாழ்ந்து காட்டுவதன் சாட்சி இந்நூல் . இவன் பாடல்கள் வெற்று கோஷமோ வெறும் கண்ணீரோ அல்ல ; அதையும் மீறி ஒரு கண்ணீரின் சீற்றம் .கலையின் புதிய பரிணாமம் . “ திரும்பிய பக்கமெல்லாம் தேசத்தின் காயங்கள் / திருடரின் கைகுலுக்கும் நீதிகள் நியாயங்கள்” என்ற தொகையறாவுடன் தொடங்கும் ‘’முறையீடு’ பாடல் இன்றைய குரூர யதார்த்தத்தை படம்பிடித்துவிட்டு கவித்துவமாய் – நாட்டார் மரபுபோல் கற்பனையில் நீளும் ; இந்த சோகத்தைக் கேட்டால் ‘ பூக்களும் அரும்புகளும் இடம்பெயரும்’ .’ ‘ மலை குலுங்கி அழும்’ ‘ மேகமாய் மாறி கடல் வான்போகும்’ . “இந்தப் பக்கம் அடுப்பு; /அந்தப் பக்கம் படுக்க/ ஏதுமில்ல தடுப்பு /எப்படி முத்தம் கொடுக்க’ – யோசிச்சுப் பாருங்க நெஞ்சை சுருக்கென்று தைக்கும் . ‘ எருமைப்பட்டியும் எங்க வீடும்’ என்கிற இந்தப் பாடலில் கடைசியில் சொல்லுவார் “இப்படி வீடு கட்ட – நீ / எதுக்கு திட்டமிட்ட? / மானங்கெட்ட மரக்கட்டயா / எங்கள நினைச்சிப்புட்ட” . கருணாநிதியை ஒரு முறை நள்ளிரவில் கைது செய்த போது படுக்கையறையில் நுழையலாமா என சூப்பர் ஸ்டார் ரஜினி முதல் அத்துணை பேரும் அறிக்கை விட்டனர். மனித உரிமை பற்றி வகுப்பெடுத்தனர். படுக்கையறை, சமையலறை என்று எல்லாமே ஒற்றை அறையாய் இருக்கும் ஏழையைப் பற்றி அவர்கள் யோசித்ததில்லை . நவகவி யோசித்தார்.பாடினார். அண்மையில் சென்னை வெள்ளத்தின் போது கூவம் கரையோர மக்களை கூண்டோடு பெயர்த்து பெரும்பாக்கத்தில் கொட்டடியில் அடைத்தஜெயலலிதாவின் கருணையை பாராட்டியவர்கள் அந்த எட்டடி குச்சின் அங்கலட்சணத்தை சொன் னாரா ? இந்தப்பாடல் தீர்க்க தரிசனமாய் ஒலிக்கிறது. சென்னையிலும் எருமைப்பட்டி நிலைதான். “ உலகம் பிறந்த கதை தெரிந்தவரே / உழவன் பிறந்த கதை தெரியுமா ? / கதையில் உயர்ந்த கதை என்பதனால் / கவிதையில் பாடவந்தேன் விவரமா” என்கிற நவகவி “ அவனே எனது கதாநாயகன்” என்கிறார். உழவின் மேன்மையை உழவரின் வலியை பல பாடல்களில் சொல்லி அறச்சீற்றம் கொள்கிறார் . “ மாடு தீண்டலாம் உங்களை ஆடு தீண்டலாம் நாங்க / மனுஷன் மட்டும் தீண்டக் கூடாதா ?” என எரிஈட்டி வீசும் கவிஞரிவர் . “ வேத கால பிராமணர் வீட்டுக்கறி / ரிஷிபத்தினி சமைச்ச மாட்டுக்கறி /சாப்பிடக் கூடாதாம் எப்படிச் சரி / சனாதனிகள் மூஞ்சியில பார் அடுப்புக்கரி” இப்படி இவர் பாடாத பொருள் ஏது ? “ மனிதன் இருக்கும் இடமே அழகின் வாழிடம்! / மனிதன் இல்லா இடமோ வெறுமை பாழிடம்! ” என்பது கவிஞரின் முடிபு ; பாடல் நெடுக அதன் புன்னகை விரிப்பு . காதலையும் உழைப்பையும் போற்றுவதே மார்க்சியம் . மார்க்சியத்தில் தோய்ந்த நவகவி போற் றாமல் இருப்பாரோ ? காதலைப் பாடும் கவிஞரின் வார்த்தைகளில் மண்ணின் வாசமும் மனசின் நேசமும் ஒட்டிக்கிடக்கிறது . “கரிசக் காட்டுச் செழுமையாட்டம் / கன்னம் தெரிந்தது – அவள் / விதைத்த சோளம் சிரிப்பில் வந்து / விந்தை புரிந்தது / அது – நாணல் போல குனிந்து குழையாத காதல் / மூங்கில் போல நிமிர்ந்து வளர்கின்ற காதல்.” அடடா ! இதைவிடவா இலக்கிய நயம் சொட்டணும் . நீங்கள் சந்திக்கிற – பேசுகிற – எழுதுகிற ஒவ்வொரு பிரச்சனையைப் பற்றியும் நெக்குருகி பாடியிருக்கிறார் நவகவி . நீங்கள் அதனை உங்கள் பேச்சில் எழுத்தில் கலந்து தந்தால் மக்கள் இதயத்தை ஊடுருவுமே ! ஏன் செய்யக் கூடாது ? ; இவரது இலக்கியம் புத்தக அலமாரியில் அழகு பார்க்க அல்ல ; உங்கள் பரப்புரைக்கு அழகும் ஆழமும் சேர்க்க என்பதை உணர்ந்தால் மட்டும் போதாது :தொடர்ந்து விடாது பயன்படுத்தினாலே படைப்பின் நோக்கம் நிறைவேறும். சிறுகதை எழுத்தாளர்களே ! குட்டிக் கதை சொல்லிகளே ! வாழ்வின் நாட்டின் நீள அகலங்களை ஆழங்களை காயங்களை படைப்பாக்குங்கள்! நவகவி 1000 போல் அவையும் எம் கைவாளகும் ! இதைவிட பெருவிருது உமக்கு வேறேது ? நவகவி 1000 பாடல்கள்,ஆசிரியர் : கவிஞர் நவகவி,தொகுப்பு : ஏகாதசி,வெளியீடு : பாரதி புத்தகாலயம்,7,இளங்கோ தெரு , தேனாம்பேட்டை,சென்னை- 600 018.பக் :1072 , விலை : ரூ .745. நன்றி : தீக்கதிர் . புத்தகமேசை , 07-2016. 0 comments மதத்துக்கு மரணமில்லை என்று சொல்லலாமா ? Posted by அகத்தீ Labels: விவாத மேடை மதத்துக்கு மரணமில்லை என்று சொல்லலாமா? சு.பொ. அகத்தியலிங்கம் தங்களை நாத்திக நாடுகளாக அறிவித்த சில சோசலிச நாடுகள் கூட தங்களை மாற்றிக்கொண்டதே! ஆகவே மதத்துக்கு மரணமில்லை எனச் சொல்லலாம் அல்லவா? சோசலிசம் ஏன் நீடிக்க முடியவில்லை? முதலாளித்துவமே இறுதியானது என்பது சரிதானே? “எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே” என்பதை உணர்ந்தால் இங்கே கலகம் ஏது? கவலை ஏது ? தங்களை நாத்திக நாடுகளாக அறிவித்த சில சோசலிச நாடுகள் கூட தங்களை மாற்றிக் கொண்டனவே! ஆகவே மதத்துக்கு மரணமில்லை எனச் சொல்லலாம் அல்லவா ? அல்பேனியா, கியூபா போன்ற நாடுகளில் செங்கொடி பறக்கத் துவங்கியபோது அவை நாத்திக நாடுகளாகவே தம்மைப் பிரகடனப் படுத்திக் கொண்டன. ஆனால் சோவியத் யூனியன் தகர்விற்குப் பின்னால் அந்த நாடுகளின் அரசுகள் தங்கள் நாடுகளிலும் மக்களின் மதநம்பிக்கை மற்றும் வழிப்பாட்டு உரிமையை அங்கீகரித்துவிட்டன. சோவியத் யூனியன் பிறந்த போது லெனின் அதனை நாத்திக நாடாக அறிவிக்கவில்லை; ஆயினும் தீவிர பிரச்சாரம் மூலமு, சில கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலமும் , கல்வி பாடத்திட்டத்தில் மாணவர்களுக்கு மார்க்சிய தத்துவத்தைத் தொடர்ச்சியாகப் போதிப்பதன் மூலமும் ஒரு பகுத்தறிவுப் பேரொளி சுடர்விடச் செய்தார். மக்கள் சீனமும் ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்தது .ஆனால் கலாச்சாரப் புரட்சி இதனை மாற்றிப் போட்டது. ஒரு பத்திரிகையாளர் தூதுகுழுவில் ஒருவனாக நான் சீனம் சென்றிருந்தபோது ஒரு புத்தவிகாரைப் பார்வையிட வாய்ப்புக் கிடைத்தது. அந்த புத்தவிகார் கலாச்சாரப் புரட்சியின்போது ஒரு தொழிற்சாலையாக மாற்றப்பட்டதாகவும், பின்னர் கலாச்சாரப் புரட்சி விலக்கிக்கொள்ளப்பட்டபோது மீண்டும் அது பழையபடி புத்தவிகாராக மாற்றப்பட்டதும் அங்கு பொறிக்கப்பட்டிருந்தது; அதற்கான தடயங்களும் இருந்தன. ஆக , இப்போது எந்த நாடும் தன்னை நாத்திக நாடென அறிவித்துக்கொள்ளவில்லை. எனினும் அங்கீகரிக்கப்பட்ட 196 நாடுகளில் 166 நாடுகள் மதச்சார்பின்மையே அரசின் கோட்பாடாக, அணுகுமுறையாகக் கொண்டுள்ளன. மீதமுள்ள இஸ்ரேல், ஈரான், இராக், பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 30 நாடுகளில் மட்டுமே மதம் அரசமைப்போடு நேரடியாக ஏதோ ஒரு வகையில் ஆதிக்கம் செய்கிறது. வங்கதேசம் உருவான போது மதச்சார்ப்ன்மையே அதன் அரசியல் முகமாக இருந்தது . இடையில் முஸ்லீம் நாடாக தன்னைப் பிரகடனம் செய்தது . தற்போது மீண்டும் மதச்சார்பற்ற நாடாக அறிவிக்க மாணவர்களும் இளைஞர்களும் போராடுகின்றனர் .கானா, னைஜீரியா,அர்மேனியா, பிஜி, மெசிடோனியா, ஈராக், கென்யா, பெரு, பிரேசில் ,உள்ளிட்ட சில நாடுகளில் பெரும்பான்மையோர் மதநம்பிக்கையாளராக உள்ளனர் . அதே சமயம் சீனா, ஜப்பான், செக்குடியரசு, அல்பேனியா, பிரான்ஸ்,தெகொரியா, நெதர்லாந்து, ஜெர்மனி, ஆஸ்ட்டிரியா, ஆஸ்திரேலியா, ஐஸ்லாண்டு ரஷ்யா,வியட்நாம், ஸ்பெயின், உக்ரெயின், இத்தாலி,ஸ்வீடன் , பெல்ஜியம் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் மத நம்பிக்கையற்றோர் மிகுதியாக உள்ளனர் . மதமில்லா நிலையானது - இயற்கைச் சமயவாதம், உலோகாயதம், உறுதியிலாவாதம், மத மறுப்பு, ஐயுறல்வாதம், ஏதோவொன்றெனும் சிந்தாந்தம், மதமில்லா ஆன்மிகம், சுதந்திரச் சிந்தனையியல், இறைமறுப்பியல், கடவுள் பற்றிய கவலையிலாவாதம், நம்பிக்கையின்மை, இறை சாரா பேரண்டவாதம், சமயச்சார்பிலா மானுடம், மதமில்லா இறைமை, பேரண்டமே கடவுளெனும் தத்துவம், படைத்தபின் பேரண்டமாய் மாறிவிட்ட கடவுள்வாதம் என - உலகெங்கும் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. 2014ல் மேற்கொள்ளப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில் உலக மக்களில் 33 சதவீதத்தினர் நாத்திகர்கள் அல்லது மதம் சாராதவர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் 11 சதவீதத்தினர் நாத்திகர்கள், 22 சதவீதத்தினர் மதம் சாராதவர்கள். [Irreligion, which may include deism, agnosticism, ignosticism, antireligion, atheism, skepticism, ietsism,spiritual but not religious, freethought, antitheism, apatheism, non-belief, pandeism, secular humanism, non-religious theism, pantheism and panentheism, varies in the different countries around the world. In a 2014 poll 33% of the world population were estimated to be atheist or not religious, splitting into 11% atheists and 22% not religious. ] ஆக, மதம் இன்னும் சாகவில்லை எனினும் மதமறுப்பாளர் எண்ணிக்கை நாளும் பெருகிக்கொண்டே போகிறது என்பதே கண்கண்ட உண்மை . சோசலிசம் ஏன் நீடிக்க முடியவில்லை? முதலாளித்துவமே இறுதியானது என்பது சரிதானே? சோவியத் யூனியன் தகர்வுக்குப் பின் – கிழக்கு ஐரோப்பிய சோஷலிச நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாய் தடம் மாறிய பின்னணியில், இனி சோஷலிசத்திற்கு எதிர்காலம் இல்லை, முதலாளித்துவமே இறுதியானது என்றனர் சில அறிஞர்கள். அப்போது சென்னையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் பேசிய முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் பசவபுன்னையா ஒரு சவால் விடுத்தார். வறுமையை, வேலையின்மையை, ஏற்றத்தாழ்வை முதலாளித்துவத்தால் ஒழிக்க முடியுமா என்பதே அவரின் கேள்வி. முடியாது என்பதே உறுதியான பதில். அப்படியானால் சோஷலிசத்தின் தேவை முடியவில்லை. மீண்டெழும் என்பதே பதில் . ஒரு சதவீத பெரும் பணக்காரர்களுக்கு எதிராக 99 சதவீத மக்கள் என்ற முழக்கத்துடன் அமெரிக்காவின் செல்வ மையமான வால் ஸ்ட்ரீட் போராட்டம் அதனை உறுதி செய்தது . முந்தைய வேறெந்த சமூக அமைப்போடு ஒப்பிடினும் முதலாளித்துவம் முற்போக்கானதே. எனினும் அது அடிப்படையில் முதலாளி தொழிலாளி என இரு பெரும் முகாம்களாய் உலகைப் பிரித்துவிட்டது. உற்பத்திக் கருவிகளும் , பெரும் செல்வமும் தம் கையிலே கொண்ட முதலாளிவர்க்கம் மக்கள் தொகையில் மிகச் சொற்பம் ஆனால் அதிகாரமும், செல்வமும் அவர்கள் கையில்தான். மறுபுறம் மக்கள் தொகையில் பெரும்பாலாக உள்ள உழைக்கும் வர்க்கத்தின் கையில் செல்வமும் இல்லை . உற்பத்திக் கருவிகளும் இல்லை. வறுமையும் . துன்பதுயரமுமே மிச்சம். இந்த ஏற்றதாழ்வு சமூகத்தின் பெருங்கேடு. இதனை வீழத்தி சமத்துவமான புதுயுகம் மலர்வது தவிர்க்க இயலாத வரலாற்றுத் தேவை. ஆனால் , அது அவ்வளவு எளிதல்ல . “ வர்க்கங்கள் மற்றும் வர்க்கப் பகைமைகளுடனான பழைய முதலாளித்துவ சமுதாயம் இருந்த இடத்தில் ஒவ்வொருவரின் சுதந்திரமான வளர்ச்சியானது அனைவரது சுதந்திரமான வளர்ச்சிக்கு முன்நிபந்தனையாக இருக்கக்கூடிய ஒரு கூட்டமைப்பை நாம் பெறுவோம்” என 1948ல் கம்யூனிஸ்ட் அறிக்கையில் மார்க்ஸ், எங்கெல்ஸ் தெளிவாகச் செய்த பிரகடனமே இன்னும் உலகச் சிந்தனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கான நெடிய போராட்டம் தொடர்கிறது. இதனை மடைமாற்றவே மத அடிப்படைவாதமும் , சாதி , இனப் பகைமையும் கொம்பு சீபப்படுகின்றன. விழிப்பாக இருக்க வேண்டியுள்ளது.முந்நூறாண்டுக்கு பேல் பல நெருக்கடிகளை யுத்தங்களைத் தாண்டித்தான் இன்றைய முதலாளித்துவம் பெரும் மூச்சுத்திணறலோடு இருந்துகொண்டிருக்கிறது. இவற்றோடு ஒப்பிடும் போது சோஷலிசத்தின் வயது மிகக்குறைவு; தனிமனிதன் நூறாண்டு வாழ்வு என்பது மிகப்பெரிது. ஆனால் வரலாற்றில் நூறாண்டு என்பது மிகக்குறைவு. முதலாளித்துவமும் தட்டுத்தடங்கலின்றி முந்நூறு ஆண்டுகளைக் கடக்கவில்லை. யுத்தம், பிறநாடுகளை அடிமைப்படுத்தியது; – கொள்ளையடித்தது; இவை மூலமே முதலாளித்துவம் தன்னைத் தக்க வைத்துக்கொண்டது. ஆனால் யுத்தங்களில் சோஷலிச நாடுகள் பேரழிவைச் சந்தித்தன. அதன் சுமையை சுமக்க வேண்டியதாயிற்று. முன்மாதிரி இல்லாத ஒன்றில் சறுக்கல்களும் தடுமாற்றங்களும் இயல்புதானே! முதலாளித்துவ நாடுகளின் சூழ்ச்சியும் ஆட்சியாளர் செய்த தவறுகளும் சோஷலிசத்துக்கு பெரும் பின்னடைவை உருவாக்கிவிட்டது. எனினும் இதிலிருந்து பாடங்கற்று சோஷலிச சக்திகள் மீண்டெழும். மின் விபத்து ஏற்பட்டதால் மின்சாரமே பிழையானது என்பரோ? மின்சாரமும், மார்க்சியமும் இல்லாமல் இனி உலகம் உய்ய முடியாது. தாமதமாகலாம். தவிர்க்க முடியாது.முதலாளித்துவம் வீழ்த்தப்படுமா? மதம் , கடவுள் , சாதி இல்லாத சமுதாயம் உருவாகுமா? சமத்துவம் பூக்குமா? அரசும் அடக்குமுறையும் இல்லாத சமூகம் மலருமா? பசியிலிருந்தும் அச்சத்திலிருந்தும் நிரந்தர விடுதலை எப்போது? இறுதிப்பகுதியில் பேசுவோம். “எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே” என்பதை உணர்ந்தால் இங்கே கலகம் ஏது? கவலை ஏது ? “ எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே / அல்லாமல் வேறு ஒன்று அறியேன் பராபரமே” என்றார் தாயுமானவர். எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பது மிகவும் உன்னதமானது. மிகவும் பரந்த உள்ளம். “பராபரமே” என கடவுளை நோக்கிச் சொன்னதாலேயே நமக்குப் பிடிக்காமல் போகாது . “எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் இல்லாமை இல்லாத நிலை வேண்டும்” என்கிற பெருங்கனவோடு நமக்கும் உடன்பாடு உண்டு. “நாமார்க்கும் குடியல்லொம் நமனையஞ்சோம்” “மற்றுள குழுவையெல்லாம் மானுடம் வென்றதம்மா” இப்படியான மனதைக் கவ்வும் வரிகளும் ; அது சொல்லும் பொதுமை நலமும் எக்காலத்தும் மனிதர்களின் மனதை விசாலப்படுத்தும். ஆன்மிகம் சார்ந்த சான்றோர் சொல்லினும் அதில் உள்ள பொதுமைக் கருத்துக்காக இது போன்றவற்றை மீண்டும் மீண்டும் அசை போடுவதில் பிழையே இல்லை. “ சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே / சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே / ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர் / அலைந்து அலைந்து வீணே நீர் அழிதல் அழகலவே” என வள்ளலார் சொன்னதையும் கூடவே அசை போடவேண்டும். அதுதான் முக்கியம். “சதுர்வேதம் ஆறுவகை சாத்திரம் பல / தந்திரம் புராணங்களை சாற்றும் ஆகமம் / விதவித மானவான வேறுநூல்களும் / வீணான நூல்களே என்று ஆடு பாம்பே!” எனப் பாம்ப்பாட்டிச் சித்தரின் சீற்றம் இன்றும் தேவைப்படுகிறதே ! “பிறப்பிலே சாதி மதத்திலே சாதி / பேசிடும் மொழியிலே சாதி /நிறத்திலே சாதி நாட்டிலே சாதி / நீதியில் நிறையில் சாதி / அறத்திலே சாதி ஆலயச் சாதி / அழுகிய பிணத்திலும் சாதி / புறத்தகஞ் சாதி நாற்றமும் சாதி எங்கும் / புங்கவ அழித்தல் நிற்கெளிதோ” என நெஞ்சுடைந்து தமிழ்த் தென்றல் திரு.வி.க. வேதனைப்பட்ட நிலை மாறிவிட்டதோ இன்று ?இப்படி நிறையவே தொகுக்கலாம் இடம் போதாது . ‘மநு தர்மத்திற்கு எதிரான முற்போக்கு மரபு’ எனும் நூலில் இளங்கோவன் சொல்லுவதை இங்கு நினைவு கூர்தல் சாலப்பொருந்தும்: “காலந்தோறும் தமிழ்ச்சமூகம் வைதீகத்திற்கு எதிரான வேலைத் திட்டத்தை தனக்கானபாதையாக வகுத்துக்கொண்டு போராடி வந்துள்ள நிலையில் இன்று அதனை மிகப் பெரிய இயக்கமாக முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது . இதற்கு முற்போக்கு தமிழ் மரபுகளை நினைவு படுத்துவதும் மக்களிடையே பரப்புரை செய்வதும் அவசியமாகிறது.” அதே நேரம் நினைவில் நிறுத்த வேண்டிய ஒரு செய்தி உண்டு. நல்லெண்ணத்தால் மட்டுமே நல்லது விளையாது; மாறாக எது நல்லது அதற்கு எது தடை , ஏன் தடை என்பன போன்ற கேள்விகளை எழுப்பி உள்ளே நுழையும் போதுதான் திரை அகலும் . தெளிவு பிறக்கும் .“உணர்வு வாழ்க்கையைத் தீர்மானிப்பதில்லை; வாழ்க்கைதான் உணர்வைத் தீர்மானிக்கிறது” என்றார் காரல் மார்க்ஸ். இந்த வாழ்க்கை அவலங்களுக்கான காரணத்தைத் தேடுவதும்; அதற்கு எதிராக போராடுவதுமே நாம் நினைப்பது போல் “எல்லோரும் இன்புற்றிருக்க” வழியாகும் . வெறும் வார்த்தைகளாலோ, இறைவனிடம் மண்டியிடுவதாலோ எதுவும் மாறாது என்பதே வாழ்க்கை அனுபவம் நேற்றும் , இன்றும் .
காதல், டூயட் எனும் வழக்கமான ஃபார்முலாக்களை ஒரு மாஸ் ஹீரோ தவிர்த்து வருவது பொதுவான சினிமா ரசிகர்களுக்கு நல்ல ஆரம்பம்! மங்காத்தாவிற்கு பிறகு தவுசன்ட் வாலாவாக வெடிப்பதால் அஜித் ரசிகர்களுக்கு 'தல' தீபாவளி ஆரம்பம்! மங்காத்தா சாயலில் ரஃப் அண்ட் டஃப் ஆக முதல் பாதி முழுக்க அஜித் பின்னியெடுக்கிறார். இரண்டாம் பாதியில் கிளீன் ஷேவ் உடன் கிளீன் ஆபிசராக வரும்பொழுதும் தனது கரீஷ்மாவினால் கவர்ந்திழுக்கிறார். ஆர்யாவின் கதாபாத்திரம் படத்திற்கு நல்ல பலம். அஜித்திடம் மாட்டிக் கொண்டு அவஸ்தைப்படும் முதல் பாதி முழுக்க மனிதர் ரசிக்க வைக்கிறார். நயன், டாப்ஸி இருவரும் மற்ற படங்களைப் போல் லூஸு கதாநாயகியாகவோ, வெறும் மானாட மயிலாட கன்டஸ்டன்டாகவோ பயன்படுத்தப்படாமல் படத்தின் கன்டன்ட்டிற்கு பயன்படுத்தப்பட்டிருப்பது மிகப்பெரிய ஆறுதல்.ராணா, அதுல் குல்கர்னி, கிஷோர் என காஸ்டிங் கதைக்கேற்றவாறு வெகு நேர்த்தியாக இருக்கிறது. ஸ்பாய்லர் : கதையென்று பார்த்தால் அதேதான். ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி, உயிரை விடும் நண்பன், வெகுண்டெழுந்து பழி வாங்கும் ஹீரோ. ஆனால் சொல்லப்பட்டிருக்கும் விதம், மேக்கிங் எல்லாமே ரொம்பவும் புதுசு. நிச்சயம் ஒருமுறை பார்க்கலாம் எனும் வகைப்படம். எங்கும் போர் அடிக்கவில்லை, எங்கும் தொய்வில்லை. விருந்து சாப்பிட்ட திருப்தி. ஆர்யா, நயன், கிஷோர், டாப்ஸி என அஜித்தின் நேரத்தை மற்ற பல பேர் எடுத்துக் கொள்வதால் விருந்து சாப்பிட்டாலும் 'தல'வாழை மட்டும் இல்லாதது போன்ற சிறிய குறை. பாடல்கள் கேட்பதற்கு சுமார்தான் என்றாலும் அதனை ஈடுகட்டுகிறது படமாக்கப்பட்ட விதம். ஓப்பனிங் சாங்கில் அஜித் முடிந்தவரை டான்ஸ் ஆடுகிறார். சில ஸ்டெப்களில் உடல் வலியை அவரது முகமொழி பிரதிபலித்தாலும் பொருட்படுத்தாமல் ஆடுகிறார். என் புயூஸ் போச்சு, மெல்ல வெடிக்குது ஆகிய இரண்டும் கவனத்தை கவர்கின்ற பாடல்கள். காதல் வயப்பட்டதும் ஆர்யாவுக்கு முளைக்கும் பறவைச் சிறகு, டாப்ஸிக்கு முடிவில் முளைக்கும் பட்டாம்பூச்சி சிறகு என லவ்லி கிரியேட்டிவ் ஐடியா. மொத்தப் பாடலின் பின்னணிக் காட்சிகளும் அவ்வகையே. அடுத்ததாக மெல்ல வெடிக்குது பாடல் கண்களுக்கு நல்ல விருந்து. ஹோலி வண்ணங்களில் விளையாடி இருக்கிறார்கள். அஜித், விஷ்ணுவர்த்தன் என்னும் இரண்டு ஆளுமைகள் படத்தை தூக்கி நிறுத்துகின்றன. பாடல்களில் கோட்டை விட்ட யுவன், பின்னணி இசைக்கு முகம் கழுவி காபி சாப்பிட்டுவிட்டு மியூசிக் போட்டிருக்கிறார். சுபாவின் டச், அந்த ஷார்ப்னெஸ் மட்டும் படத்தில் மிஸ்ஸிங்.
நமக்கு காஸ்டிங் டைரக்டர் பழக்கம் எல்லாம் இன்னும் வந்து படியவில்லை. அலுவலகத்தில் ஆர்டிஸ்டுகளை அழைக்கிற விஷயத்தில் யார் வேண்டுமானாலும் போன் போடுவார்கள். நல்லவேளையாக மிதுன் குமாரின் புகைப்படம் என்னுடைய கண்ணில் பட்டு, நான்தான் அவரிடம் பேசினேன். நான்கு வரி உள்ள வசனத்தை வெகுநேரம் பார்த்துக்கொண்டு நின்றிருந்தார். சொல்லச்சொல்லி கேட்டபோது அவரின் குரலில் அவ்வளவு தடிமனை எதிர்பார்க்கவில்லை. அது அவ்வளவு ஆழம் போயிற்று. நான் பிரம்மிக்கிறேன் என்று கண்டுகொண்டதும் ஒருவகையாக எனக்குள் ஒண்டிக் கொண்டார் என்று சொல்லலாம். அவருக்குத் தெரியும். யாரையாவது கெட்டியாகப் பற்றிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் எங்கிருந்தாவது ஒருவன் தோன்றி வந்து காரியத்தைக் கெடுப்பான். சினிமா இல்லையா சினிமா? சென்னையில் இருந்து இங்கே வந்த அன்று நாலுமணி வாக்கில் மழை. படபிடிப்பு நின்றது. இயக்குனர் உட்பட குழுவினர் மொத்தமும் மைதானத்தில் இருந்து கல்லூரிக்குள் ஓடினோம். குன்றின் மீதிருந்து மழையைப் பார்ப்பது ஜிலுஜிலுப்பாக இருந்தது. சிகரெட் கையிருப்பில்லை. டைரக்ஷன் டிப்பார்ட்மெண்டை சேர்ந்த ஒருத்தனையும் காணோம். மழை நனைத்து விடாத கூரைகளுக்கு கீழே நகர்ந்து முன்னேறி அவர்களைத் தேடியவாறு கல்லூரியின் பக்கவாட்டுப் பகுதிக்கு வந்தபோது அங்கே மிதுன் புகைத்துக் கொண்டு நின்றார். என்னைப் பார்த்ததும் மறைக்க முயன்றார். நான் ஒன்றைக் கேட்டதும் சற்றே வெட்கப்பட்டுக் கொண்டு ஒன்றை நீட்டினார். பற்ற வைத்துக் கொடுத்தார். மழை சீறியது. உடம்பின் பல பகுதிகளும் நனையத்தான் செய்தன. ஆனால் புகை நெஞ்சுக்கு தங்கும் கணங்கள் சரியான சிக்சாக். இருவரும் உற்சாகத்துடன் சிரித்துக் கொண்டோம். மழை விட்ட பிறகு நான்கு ஷாட்டுகள் எடுக்க முடிந்தது. அதில் மிதுனுக்கு இருந்தது சில துண்டுகள் தான். நாளைய படபிடிப்பு சம்மந்தப்பட்ட ஆலோசனைகள் முடிந்ததும் நான் தண்ணியடிக்கப் புறப்பட்டேன். எப்போதாவது அமருதல் இருந்தாலும், பையன்களுடன் உட்காருவது உசிதமல்ல. கல்யாண் ஒரு பெக்கு போட்டதும் எனது மாரைப் பார்க்க ஆரம்பித்து விடுவான். அதை எல்லோரும் செய்வதில்லை என்றாலும், அவர்கள் சுதந்திரமாக வளைய வராமல், எனக்காக அமுக்குவார்கள். நான் உங்களுடைய கழுதைக் கதைகளைப் பொருட்படுத்த மாட்டேன், ஐ டோன்ட் கேர் என்று எவ்வளவு சொன்னாலும் அவர்களுக்கு முகம் தெளியாது. மேலும் ஏதாவது ஏடாகூடம் நடந்து விடுமோ என்கிற பிரமை இருந்தவாறிருப்பதை நான் விரும்பவில்லை. அப்புறம் கேரளாவில் நுழையும் போதே நான் ஷீயிடம் சொல்லி விட்டேன். அவள் என் தோழி. முடிந்தவரை தினமும் சியர்ஸ் பண்ணிக் கொள்வதாக பேச்சு. குன்று இறங்கும்போது, எதிரே வந்த மிதுனைப் பார்த்ததும் ஒரு ஐடியா. தனியாகப் போக வேண்டாமே? “மிதுன், சரக்கு அடிப்பீங்களா?” “வீட்ல இருக்கும்போது அடிக்க முடியாது. பெரிய பொண்ணு திட்டும். இப்டி வெளியூருக்கு வந்தா லைட்டா போடுவேன்.” “போட்டீங்களா?” “மேனேஜர் இன்னும் பேட்டா குடுக்கல!” ஷீ சொன்ன பார் வடகரை என்கிற ஜங்கஷனில் இருந்தது. அதாவது பெண்கள் வந்து அமர்ந்துகொள்ளக் கூடிய அந்தஸ்து அதற்கு உண்டு. ஆரம்ப அறிமுகங்களுக்குப் பின்னர் மிதுனை நல்ல நடிகர் என்பதாக ஷீயிடம் சொன்னது அவருக்கு மிகவும் பிடித்தது. இல்லையென்பது போல தோள்களைக் குலுக்கினார். பெண்களை அவ்வளவாக ஏறிட்டுப் பார்க்கிற ஆர்வம் அவரிடமில்லை என்பதை கவனித்தேன். ஒரு குடும்பஸ்தன் அப்படி இருக்க வேண்டி வருவதால் பல ஆண் தன்மைகளை இழக்கிறான் என்பது எனக்குத் தெரியும். உதாரணம், என் அப்பாவே தான். அவருக்கே கேட்காமல் அவ்வளவு கண்ணியமாக பேசுவார். “சத்தமா பேசுங்கப்பா”. ஒரு புன்னகை, அவ்வளவு தான். ஒருவேளை நானே கூட மிதுனிடம் ஒட்டிக்கொண்டது இந்த அப்பா டிசைன் அவரிடம் கரை தொடுவதாலா? திரும்பி வரும்போது டாக்சியில் நாள் ஆட்டம் இங்கே பாடிக்கொண்டு வந்ததை அசட்டுச் சிரிப்புடன் சகித்துக்கொண்ட வந்தார். அவர் தன்னைச் செய்து காட்டிய அந்த நாள் வந்தது. கோபமும் சமூக அக்கறையும் உள்ள ஒரு பெரு நெருப்பு உதயா. அவன் ஒரு பெண்ணைப் பார்த்து அவளைக் காதலித்து, ஒரு பாட்டெல்லாம் முடிந்த பிறகு அவன் கொள்ள வேண்டிய அந்தச் சமூக அக்கறை தொடங்கும். அவன் பல்வேறு அநீதியாளர்களைக் கண்டடைந்து அவர்களுக்கு நீதி புகட்டத் தலைப்படுகையில் தான் மிதுனைச் சந்திக்கிறார். மன்னிக்க வேண்டும், அந்தக் கதாபாத்திரத்தின் பெயர் வேலுசாமி. அநீதியாளர்களின் பேராசையில் விற்கப்பட்ட மருந்தைச் சாப்பிட்டு வேல்சாமியின் குழந்தை இறந்துவிட்டிருக்கிறது. அதைக் கண்ணீர் உகுத்து கதறியவாறு அவர் உதயாவிடம் சொல்ல வேண்டும். அதற்கு அப்புறம் உதயா ஆவேசம் கொள்ள வேண்டியிருக்கிறது. இயக்குனர் அதை முடிந்தவரை ஒரு விறைப்பில் இருந்து விளக்கி முடித்தார். வேலுசாமி கண்களில் கிளிசரின் போடும்படி கல்யாண் உத்தரவும் போட்டாயிற்று. மிதுன் இயக்குனரிடம் விவரித்துச் சொல்ல முடியாத பணிவுடன் ஒரு விஷயம் என்றார். இயக்குனர் சரியென்று தலையசைத்தார். ‘டையலாக் நல்லா தெரியும் சார்!’ “சரி?” “சொல்லிகிட்டே வரேன். அழ வேண்டி வருதுல்ல, அங்க அழுதுடறேன்!” இயக்குனர் பார்க்கிறார். “கிளிசரின் எல்லாம் போட வேணா!” “ஓ, கமலகாசன் மாதிரியா?” இயக்குனர் சொன்னது ஜோக் போல பட்டதால் கொஞ்சம் பேர் சிரித்தார்கள். சம்பிரதாயங்கள் நடந்து கொண்டிருக்கும்போது மிதுன் வழக்கம் போல சிந்தனை வசப்பட்டு தான் நின்று கொண்டிருந்தார். பின்னர் அவர் தனது குழந்தையைப் பற்றி சொன்னார். அன்றாடம் அது கள்ளம் கபடமில்லாமல் சுற்றி வந்து விளையாடும் அழகைப் பார்த்திருப்பதில் தான்னுடைய கவலைகள் பஞ்சாக பறப்பதைச் சொன்னார். கடுமையான அமைதி நிலவியது. நான் அவருடைய கண்களைத்தான் பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். அதில் ஒரு துளி கண்ணீர் இல்லை. பதட்டமாக இருந்தது. மருந்து கொடுத்து அக்குழந்தையைத் தூங்கவைக்கும் போது தோன்றின நிம்மதியைச் சொன்னார். சிறிது நேரத்தில் ஒரு சந்தேகம் தோன்றி, தட்டிப் பார்த்தபோது அது செத்து விட்டதையும் சொன்னார். அவர் இப்போது மெளனமாக நின்றபோது எனக்கு ஒரு நடுக்கமேற்பட்டது. ஒருநாள் ஒழைக்கலேன்னா எங்களுக்கு சோறு கெடையாது. இந்த ஒலகத்தில் நாங்கள் கண்கொண்டு பார்க்கிற எந்த சுகங்களும் கிடையாது. வேறு என்ன எங்களுக்கு இருந்தது? பொக்கிஷம் போல வைத்துப் பார்த்த குழந்தையை சிதைத்துப் போட்டு விட்டார்களே, எங்களுக்கு உயிர் பிழைத்துப் போகவும் உரிமையில்லையா? நான் மறைவாகச் சென்று அழுதேன். நான் அவ்வளவு உணர்ச்சி வசப்பட்டதற்கு அவைகள் நான் எழுதிக் கொடுத்த வசனம் என்பதாலும் இருக்கலாம். இல்லை, அப்படியில்லை. நான் அங்கே அசலான ஒரு தகப்பனையல்லவா பார்த்தேன்? என் அப்பாவே கூட அழுதது மாதிரி தான் இருந்தது. அன்று ஷீ வரவில்லை என்ற போதும் நாங்கள் போனோம். நான் நிறையக் குடித்தது பார்த்து அவரும் செமத்தியாக போட்டார். ஓசியில் கிடைக்கும்போது அதிகமாகக் குடிப்பதுண்டு என்கிற ரகசியத்தையும் சொன்னார். நான் வேண்டுமா வேண்டாமா என்று அலைபாய்ந்து அவருடைய குடும்பம் பற்றி கேட்டபோது பல கஷ்டங்களைச் சொன்னார். அவைகளைக் கடந்தது பற்றியும் சொன்னார். உருப்படியான ஒரு வேலையை, தொழிலைச் செய்யாமல் சினிமா பின்னால் சுற்றுகிற புருஷனுடன் அவரது மனைவி சண்டை போட்டுக் கொண்டே இருந்திருக்கிறாள். ஆனால் அது ஒருநாள் நின்று விட்டிருக்கிறது. அதற்குப் பிறகு அவருடைய மனைவி அவரைக் காயப்படுத்துவதில்லை. என்னென்னவோ வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றுகிறாள் என்றார். சினிமாவைப் பொறுத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டாள். நானுமே கிடைக்கிற பணத்தை ஒரு காசு எடுக்காமல் அவளிடம் கொடுத்து விடுவேன் என்றார். அன்றைய நாள், அது ஒரு திங்கள் கிழமை. யாரோ ஒரு பெண்மணி வட்டிக்குத் தருவதாக சொல்லியிருந்த பணத்தை வாங்குவதற்கு அவருடைய மனைவி செங்கல்பட்டு போயிருக்கிறாள். என்ன சொல்லுவது? அது நடக்கவில்லை. பணம் இல்லாமல் திரும்பிப் போகவே முடியாது. அவ்வளவு அவமானம். இடிந்து போனவளாக ஒரு பாலத்தில் உட்கார்ந்து கொண்டு மிதுனுக்கு போன் செய்திருக்கிறாள். எப்போதோ படப்பிடிப்பு முடிந்து விட்ட ஒரு படத்தின் பாக்கியை கிடைக்குமா என்று பார்க்க ஒரு கம்பனியின் வாயிலில் காத்திருந்த மிதுன் தனது நிலையைச் சொல்லும்போது அவளுக்கு எதுவும் கேட்கவில்லை. அழுதுகொண்டே சினிமாவிற்கு சாபம் கொடுக்க ஆரம்பித்தாள். போகப்போக ஆவேசம் கூடி அது வெறியாக மாறியது. நான் சாகத்தான் வேண்டும் என்றார் அவர். நீ எதற்கு சாகாமல் இருக்கிறாய் என்றாள் அவள். அவர் தன்னையறியாமல் விதும்பி விட, நீ சாக வேண்டாம், நான் பாலத்தில் தான் உட்கார்ந்திருக்கிறேன், குதித்து விடுகிறேன் என்று செல்லை அணைத்து விட்டிருக்கிறாள். மிதுன் மூர்ச்சையடைந்து விட்டார். மயக்கம் தெளிவிக்கப்பட்டவுடன் அவருடைய பகுதியில் புழங்கிய ஒரு எஜெண்டைப் பார்த்து அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு செல்ல, அங்கே குழந்தைகளை அணைத்துக் கொண்டு தூங்கியவாறு இருந்திருக்கிறாள் மனைவி. பணத்தை வீசிவிட்டு அந்த ஆஸ்பிட்டலுக்கு சென்று அட்மிட் ஆகியிருக்கிறார். சில நிமிடங்கள் என்னையறியாமல் கிட்னி விற்ற ஆபரேஷன் தடத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்தப் படம் முடிந்த பிறகு நான் எனது திரைக்கதையை எழுத ஆரம்பித்தேன். பெரிய புரட்சி எல்லாம் செய்ய முடியாது என்ற போதிலும் நியாயமான ஒரு பெண் தரப்பு கதை அது. எனக்கு உதவி செய்வதாக வந்த கல்யாண் அவ்வப்போது முத்தம் கேட்பதும், சத்தம் போடுவதும், மாரை வெறிப்பதும் செய்வான். மிதுனின் மனைவி பையன்கள் இருக்கிற பகுதியில் தண்ணீர் எடுத்துக் கொடுப்பாள் என்றும், மலிவான ஒரு தொகையைக் கொடுத்து விட்டு பையன்கள் என்னென்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா என்றும் அவன் ஒருமுறை கேட்டிருக்கிறான். நான் அதைக் கேட்க விரும்பவில்லை. இறுதியாக எனக்கு அவனைக் காதலிக்க முடியாது என்று பட்டது. சொன்னதும் கோபித்துக் கொண்டு ஓடிவிட்டான். என் கதையைக் கேட்டு பலரும் தலை சொறிந்தாலும், இறுதியில் ஒரு கம்பனி ஓகே என்பதாக தலையை ஆட்டியது. உங்களுக்கு நான் சொல்ல வருவது என்ன என்று புரிகிறது அல்லவா? ஆமாம், நான் என்னுடைய மிதுனைத் தேடி அடைந்தேன். மிதுனுடைய மனைவி இஞ்சி டீ கொடுத்தாள். ஒரு சத்துணவு பள்ளியில் இருந்து அரசு சம்பளம் வாங்குவதாகச் சந்தோஷப்பட்டாள். கதை சொன்னேன். “செம்ம கதம்மா. நீ எல்லாம் தான் இத செய்ய முடியும். ஆமா, அந்த கமிஷனர் வேஷத்துல யார் நடிக்கப் போறா? அமிதாப் பக்சனா? “ “அதுக்கு நான் மும்பைக்கு இல்லப் போவணும்? எதுக்கு இங்க வந்தேன்?” அவர் பெரிய அதிர்ச்சி எல்லாம் கொள்ளவில்லை. நான் ஏதாவது செய்வேன் என்று எதிர்பார்த்தே இருந்தாராம். படப்பிடிப்பு முடிந்து படம் வெளியானதும் உத்தேசப்படியே அவர் மீது வெளிச்சம் விழுந்தது. ஒன்றின் மீது ஒருவேளை யாராவது தடுக்கி விழுந்தாலும் கூட, அதைப் பின்தொடர்ந்து மொத்த ஜனமும் சென்று விழுவதாயிற்றே இண்டஸ்டரி மரபு. சினிமா அல்லவா சினிமா? மிதுன் தனது பெயரை மாற்றிக்கொண்டு விட்டார். தமிழ் நட்சத்திரமோ, தென்னிந்திய நட்சத்திரமோ என்று பகுத்து சொல்லுவதும் இனிமேல் முடியாது. இந்திய நட்சத்திரமாகத் தெளிந்து கொண்டு வருகிறார். நீங்கள் அவரைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள். மணி எம் கே மணி இதுவரை இவரது மூன்று சிறுகதைத் தொகுப்புகள், ஐந்து கட்டுரைத் தொகுப்புகள் உள்ளிட்ட நூல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் வெளியான சிறுகதைத் தொகுப்பு “டிவைன் ஹார்ட் டிஸ்கோ ஹோட்டல்” மின்னஞ்சல்: [email protected]
சமீபத்தில் தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் ஒத்த செருப்பு படத்திற்காக ஸ்பெஷல் ஜூரி விருதை பெற்ற பார்த்திபனுக்கு தற்போது சிறப்பு அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் தங்க விசா பெறும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை நடிகரும் திரைப்பட இயக்குநருமான ஆர் பார்த்திபன் பெற்றுள்ளார். சினிமா துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்த கவுரவம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற திரைப்பட ஆளுமையான பார்த்திபனுக்கு துபாயின் அடையாள மற்றும் குடியுரிமைக்கான ஆணையத்தின் (ICA) அதிகாரிகள் விசாவை வழங்கினர். தனக்கு தங்க விசா வழங்கிய துபாய் அரசுக்கு பார்த்திபன் நன்றி தெரிவித்துள்ளார். துபாயில் இருந்து பேசிய அவர், “எனக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டதற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். துபாய் அரசாங்கத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள். இந்த சிறப்புரிமைக்கு தகுதியானவன் என்று என்னை கருதியதற்காக துபாய் அரசுக்கு அன்பும் நன்றியும்,” என்று கூறினார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கோல்டன் விசா என்பது நீண்ட கால குடியிருப்பு விசா முறையாகும், இது ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படுகிறது, மேலும் தானாகவே புதுப்பிக்கப்படும் வசதியையும் கொண்டதாகும். பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்கள், தொழில் வல்லுநர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் அரிய திறன்களைக் கொண்டவர்களுக்கு இது வழங்கப்படுகிறது.
என்ற வாக்கியத்தால் காசிக்குச் சமானமாகக் கூறப்படும் ஸ்தலங்கள் ஆறு என்பதைத் தெரிந்து கொள்கிறோம். இவை, திருவெண்காடு, திருவையாறு,மயிலாடுதுறை, திருவிடைமருதூர் , சாயாவனம் என்கிற திருச்சாய்க்காடு ,திருவாஞ்சியம் என்பன ஆகும். இத்தலங்களைக் காசியோடு சம்பந்தப்படுத்திப் பேசுவானேன் என்றால், இவை யாவும் காசியைப்போல் முக்தியைத் தரவல்லவை என்பதால்தான். இவற்றிலும், மாயூரத்தில் காசி விஸ்வநாதர் ஆலயங்களும் , காசியைப் போலவே டுண்டி கணபதி மற்றும் கால பைரவர் சன்னதிகளும் உள்ளன. மேலே சொல்லப்பட்ட ஸ்தலவரிசை ஆறில், முதலாவதாகச் சொல்லப்பட்டு இருப்பது, ஸ்வேதாரண்யம் எனப்படும் திருவெண்காடு ஆகும். வால்மீகி ராமாயணத்தில் ஸ்வேதாரண்யம் குறிப்பிடப்பட்டுள்ளது.இங்கு சிவ சன்னதிகள் மூன்று: ஸ்வேதாரண்யேச்வரர் (மூலஸ்தானம்), நடராஜ மூர்த்தி, அகோர மூர்த்தி. மூலவரை தேவேந்திரன், ஐராவதம் என்கிற வெள்ளை யானை, மஹாவிஷ்ணு, சூரியன், சந்திரன்,அக்னி , ச்வேத கேது, சுவேதன் ஆகியோர் பூஜித்துள்ளனர். தேவார மூவரும் சுவாமியின் மீது பதிகங்கள் பாடியிருக்கிறார்கள். திருவாசகத்திலும்திருக்கோவையாரிலும் இத் தலம் மாணிக்கவாசகரால் குறிப்பிடப்பட்டுள்ளது. உத்தாலக முனிவரின் எட்டு வயது குமாரனான ச்வேதகேதுவின் உயிரைப் பறிக்கவேண்டி யமன் பாசக் கயிற்றை வீசியபோது சுவாமி வெளிப்பட்டுக் கால- சம்ஹாரம் செய்ததாக ஸ்தலபுராணம் சொல்கிறது. ஆதி சிதம்பரம் என்று இந்த ஊர் குறிப்பிடப்படுகிறது. சபை அமைப்பும் சிதம்பரத்தைப் போலவே இருக்கிறது. அருகில் ச்வேதவனப் பெருமாள் சன்னதியும் இருக்கிறது. நவ தாண்டவங்களை ( ஆனந்த தாண்டவம், காளி ந்ருத்தம், கௌரீ தாண்டவம், முனி ந்ருத்தம், சந்தியா தாண்டவம், திரிபுர தாண்டவம் , புஜங்க லலிதம், சம்ஹார தாண்டவம், பைஷாடனம்)நடராஜ மூர்த்தி இங்கு ஆடினாராம். சிதம்பரத்தில் சகுணமாக ஆடி முக்தியைத் தரும் மூர்த்தி, இங்கு நிற்குணமாக ஆடி இம்மைக்கும் மறுமைக்கும் பலன்களை அளிக்கிறார்.இவரது காலில் பதினான்கு சலங்கைகள் உள்ள காப்பு காணப்படுகிறது. பதினான்கு புவனங்களும் அவர் அசைந்தால் மட்டுமே அசையும் என்பதை இது காட்டுகிறது. இடுப்பில் அணிந்துள்ள 81 வளையங்கள் உள்ள அரை ஞாண், பிரணவம் முதலான 81 பத மந்திரங்களை உணர்த்தும். 28 எலும்பு மணிகளை அணிந்திருப்பது, 28 சதுர் யுகங்கள் முடிந்திருப்பதைக் காட்டுகிறது.கூர்ம- வராக அவதாரங்களை அடக்கி அவற்றின் அடையாளமாக ஆமையின் ஓட்டையும், பன்றிக் கொம்பையும் மார்பில் அணிந்திருக்கிறார். ஜடாமுடி பதினாறு கலைகளை உணர்த்துவதாக உள்ளது. அதில் 15 சடைகள் பின்னால் தொங்குகின்றன. ஒன்றுமட்டும் கட்டப்பட்டுள்ளது. திரு முடியில் மயில் பீலியும், கங்கையும்,இளம் பிறைச் சந்திரனும், ஊமத்தம் பூவும், வெள்ளெருக்கும் இருக்கின்றன. நெற்றிக்கண் அழகாகத் தெரிகிறது. சிதம்பரத்தைப் போலவே, ரஹஸ்யமும், ஸ்படிகலிங்க பூஜையும் நடைபெறுகின்றன. தேவர்களைத் துன்புறுத்திவந்த மருத்துவாசுரனை அடக்குவதற்கு சுவாமியின் கோபத்திலிருந்து வெளிப்பட்ட அகோர மூர்த்தியின் சன்னதி பிரபலமானது. அசுரன் மீது போருக்குச் சென்ற ரிஷப தேவர் , காயப்பட்டதால் கோபமடைந்த பரமேச்வரன், அகோர மூர்த்தியாக, சூலம் ஏந்தி வருவதைக்கண்ட அசுரன் , சரணாகதி அடைந்து தோத்திரம் செய்தான். இவர் இடது காலை முன்வைத்து, வலது கால் கட்டை விரலையும்,அதற்கு அடுத்த விரலையும் ஊன்றி, நடக்கும் கோலத்தில்எட்டுக் கரங்களுடன் காட்சி அளிக்கிறார். கைகளில் வேதாளம்,கத்தி,உடுக்கை, கபாலம் ,கேடயம், மணி, திரிசூலம் ஆகியவற்றைத் தாங்கியவராக, ஜ்வாலாகேசத்துடன் , நெற்றிக் கண்ணுடனும்,கோரைப் பற்களுடனும், 14 பாம்புகளைப் பூண்டவராய் ,கம்பீரமாகக் காட்சி அளிக்கிறார். மாசி மாதம், கிருஷ்ணபக்ஷ பிரதமை, ஞாயிற்றுக் கிழமை, பூர நக்ஷத்திரம் கூடிய நாளன்று அகோர மூர்த்தி தோன்றியதாகக் கூறப்படுகிறது. பிரதி ஞாயிறுகளிலும்- குறிப்பாக கார்த்திகை ஞாயிறுகளில் அகோர பூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது.மாசி மாத பிரமோத்ஸசவத்தில் , பூர நக்ஷத்திரத்தில் அகோர மூர்த்திக்கு விசேஷ அபிஷேகமும், வீதி உலாவும் நடைபெறுகிறது. வெளிப்ராகாரத்தில் வடமேற்கு மூலையில், தனி உள் ப்ராகாரத்துடன் பிரம்மவித்யாம்பிகையின் சன்னதி கிழக்கு நோக்கு அமைந்துள்ளது. பிரமனுக்கு வித்தையை உபதேசித்ததால் இப்பெயர் வந்தது. திருநாங்கூரில் மதங்க முனிவரின் புதல்வியாகத் தோன்றிய அம்பிகை, தவம் செய்து. ஈச்வரனைத் திருவெண்காட்டில் மணந்து கொண்டதாகப் பாத்ம புராணம் கூறுகிறது. பின் இரு கரங்களில் தாமரையும், அக்ஷ மாலையும் ஏந்தி, முன்னிருகரங்கள் அபய- வரதமாகக் அருட்- காட்சி வழங்குகிறாள் அம்பிகை. நவக்ரகங்களுள் ஒருவரும், வித்யாகாரகன்,மாதூலகாரகன், என்றெல்லாம் வழங்கப்படும் புதனுக்குத் தனி சன்னதி, அம்பாள் சன்னதிக்கு வெளியில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கல்வி,புத்திர பாக்கியம் வேண்டுவோர், இங்கு சாந்தி செய்து கொள்கிறார்கள். கோயிலுக்கு உள்ளேயே, மிகப்பழமையான மூன்று திருக்குளங்கள் உள்ளன.அக்னி தீர்த்தம், கொடிமரத்தின் அருகில் உள்ளது. இதன் கரையில், சைவ சித்தாந்த நூலான "சிவ ஞான போத"த்தை அருளிய மெய்கண்டாருக்கு சன்னதி உள்ளது. இவரது தந்தை அச்சுத களப்பாளர் என்பவர், நெடுங்காலமாகக் குழந்தைப்பேறு இல்லாததால், திருமுறையில் கயிறு சார்த்திப் பார்த்தபோது, இத்தலத்தின்மீது திருஞான சம்பந்தர் பாடிய, "கண்காட்டு நுதலானும்" என்ற பதிகம் வந்தது. அதில் இரண்டாவது பாடலில், இங்குள்ள முக்குளங்களில் நீராடிப் பெருமானை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் , இதில் சந்தேகப்பட வேண்டாம் என்று இருந்ததால் , அதன்படியே அவரும் இங்கு வந்து முக்குளத்தில் நீராடி, நியமத்தோடு இறைவனை வழிபட்டதால், மெய்கண்டார் என்ற சிவஞானக் குழந்தையை மகவாகப் பெற்றார். இன்றும் இப்பதிகத்தை பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது அனுபவத்தால் கண்ட உண்மை. அக்னி தீர்த்தத்திற்கு அப்பால் வெளிப் பிராகாரத்தில் சூரிய தீர்த்தமும், அம்பாள் சன்னதிக்கு எதிரில் சந்திர தீர்த்தமும் உள்ளன. மூன்று தீர்த்தங்களைப் போல மூன்று வ்ருக்ஷங்கள் - ஆல், கொன்றை, வில்வம் ஆகியவை உள்ளன. இவற்றுள், ஆல வ்ருக்ஷத்தின் அடியில் ருத்ர பாதம் இருக்கிறது. இது பித்ருக் கடன் செய்ய உத்தமமான இடம். வில்வ வ்ருக்ஷத்தின் அடியில் பிரம்ம சமாதி உள்ளது. மேற்கு ராஜ கோபுரத்தின் அருகில் நூற்றுக்கால் மண்டபமும் அதனுள் சண்முகர் சன்னதியும் உள்ளன. சுவாமியின் உள் பிராகாரத்தில் வடக்கு நோக்கிய பத்ரகாளியும், மேற்கு நோக்கிய துர்கையும் பெரிய மூர்த்தங்கள். இதைத்தவிர, சோமாஸ்கந்தர் சன்னதி, அறுபத்துமூவர்,பெரிய வாரணப் பிள்ளையார்,பால சுப்பிரமணியர் , அகோரமூர்த்தி (உத்சவர்) ஆகிய சன்னதிகளைக் காணலாம். பிற செய்திகள்: சம்பந்தர் இங்கு வந்தபோது, ஊரெல்லாம் சிவலிங்கங்களாகக் காட்சி அளித்ததால், அம்பாள் அவரைத் தன் இடுப்பில் தாங்கிவந்து சுவாமி தரிசனம் செய்வித்தாள் என்பது செவிவழிச் செய்தி. அதே கோலத்தில் "பிள்ளை இடுக்கி அம்மன்" என்ற பெயரில் அம்பாள் பிரகாரத்தில் நமக்குத் தரிசனம் தருகிறாள் அன்னை. அருகிலுள்ள கிராமங்களில் தொற்று நோய் பரவும் போது , யாராவது ஒருவர் மேல் அகோரமூர்த்தி ஆவேசமாக வந்து, விபூதி கொடுத்தவுடன் அந்நோய் மறைந்துவிடுமாம். சிறுத்தொண்ட நாயனாரின் மனைவி திருவெண்காட்டு நங்கையும், அவரது தோழி சந்தன நங்கையும் இவ்வூரைச் சேர்ந்தவர்கள். ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதிகளாக இருந்த ஸ்ரீ பரமசிவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அதிஷ்டானம் இங்கு மணிகர்ணிகா கட்டத்தில் இருக்கிறது. திருவாவடுதுறை ஆதீன எட்டாவது குரு மகா சந்நிதானமாக விளங்கிய மாசிலாமணி தேசிக மூர்த்திகளின் சமாதி , மேல வீதியில் உள்ளது. பட்டினத்தடிகள் சிவ தீக்ஷை பெற்ற தலம். கணபதிவழிபாடாகிய காணாபத்யம் பற்றிய நூல்கள் மறைந்தபோது, க்ஷேத்ரபாலபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீ சாம்பசிவ சாஸ்திரிகளுக்கு மீண்டும் அவற்றை அகோர மூர்த்தியே உபதேசித்து, வெளிக்கொனர்ந்ததால், காணாபத்தியர்களின் குரு அகோரமூர்த்தியே ஆவார். இக்கோயிலில் சோழ,பாண்டிய,விஜய நகர அரசர்களின் கல்வெட்டுக்கள் நிரம்ப உள்ளன.சோழ அரசர்களோடு,அரசியர்களும் இக்கோயிலுக்கு நிவந்தங்களை அளித்துள்ளனர்.தெய்வத் திருமேனிகள் செய்து வைக்கப்பட்டதோடு விளக்கெரிக்கவும், திருவிழாக்கள் நடைபெறவும், நந்தவனம் அமைக்கவும் ,இசைக்கருவிகள் வாசிப்போருக்கும், வேதம் ஒதுவோருக்கும் நிலங்கள் அளிக்கப்பட்டன. கோயில் நிலங்களை வைத்திருந்தோர் மூவர் , சிவத்ரோகிகளாக மாறியதால், அந்நிலங்கள் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன. தேவாரப்பாடல் பெற்ற தலங்களான கீழைத் திருக்காட்டுப்பள்ளி,சாயாவனம், பல்லவனீச்வரம், திருவலம்புரம்,கலிக்காமூர், தலைச்சங்காடு ஆகியவை அதன் அருகில் உள்ளன. மணிக்ராமம் என்ற வைப்புத் தலமும் அருகாமையில் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து மங்கைமடம் செல்லும் பேருந்துகளில் வந்தால் கீழ சன்னதியில் இறங்கலாம். சீர்காழியிலிருந்து சுமார் 18 கி. மீ. தொலைவிலுள்ள இத் தலத்தை பூம்புகார் செல்லும் பேருந்துகள் மூலமாகவும் அடையலாம். "வெண்காடே வெண்காடே என்பீராகில் வீடாத வல்வினை நோய் வீட்டலாமே" என்று அப்பர் ஸ்வாமிகள் பாடியிருக்கிறபடியால், இத் தலத்தின் பெயரைச் சொன்ன மாத்திரத்திலேயே தீராத பாவங்களும் தீரும் , வேண்டியது யாவும் சித்திக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக பிறவிப் பிணி தீர்ந்து முக்தி வரம் கிட்டும். மனிதப்பிறவிக்கு இதற்கு மேலும் வேண்டுவது யாது? திரும்பத் திரும்பத் தரிசிக்கவேண்டிய இந்தத் தலத்தை வாழ்நாளில் ஒருமுறையாவது அவசியம் தரிசிக்க வேண்டும். அந்த பாக்கியத்தை அனைவருக்கும் அளிக்கும் வரம் தரும்படி, பிரம்மவித்யாம்பிகா சமேத ஸ்வேதாரண்யேச்வர பரசிவத்தைப் பிரார்த்திப்போமாக.
புதுடெல்லி: வரும் 2020 ஜூனில் தொடங்கப்படும் ‘ஒரு நாடு ஒரு ரேஷன்கார்டு’ திட்டம், இந்தியாவின் 45 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எங்கிருந்தாலும் மானிய விலையில் உணவு வழங்குவதை நோக்கமாக கொண்டது. இதை சரிசெய்ய, சில அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யப்பட வேண்டும். அதாவது மாநிலங்களில் புலம்பெயர்ந்தோர் குறித்த துல்லிய எண்ணிக்கை இருக்க வேண்டும்; அது, தற்போது இல்லை. பயனாளியின் பயோமெட்ரிக் அடையாளத்தை சோதிக்க, நியாய விலைக்கடைகளில் பாயிண்ட் ஆப் சேல் (PoS) கருவிகள் தேவைப்படும் என நிபுணர்கள் தெரிவித்தனர். நகர்ப்புறங்களில் குடியேறிய ஏழை புலம்பெயர்ந்தவர்கள், மற்றவர்களை விட ஊட்டச்சத்து குறைபாடு கொண்டுள்ளனர். அவர்கள் வேலைக்காக புலம் பெயரும்போது மானிய விலையில் உணவு சலுகைகளை அணுக முடியவில்லை. வரவிருக்கும் புதிய திட்டம், பொது விநியோக முறை மூலம், எல்லா இடங்களிலும் அவர்களுக்கு உணவு ரேஷன்கள் கிடைக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கடந்த 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள்தொகையில் சுமார் 37% பேர், மாநிலங்களுக்கு இடையே மற்றும் மாநிலங்களுக்குள் புலம் பெயர்ந்தவர்கள். ஆனால் மாநிலம் வாரியாக புலம்பெயர்ந்தோருக்கான துல்லி எண்ணிக்கை அரசுகளிம் இல்லை. நியாய விலைக்கடைகளில் கால் பகுதிக்கு மேல் (28%) பாயிண்ட் ஆப் சேல் (PoS) கருவி இல்லை என மக்களவையில் அளிக்கப்பட்ட தரவு காட்டுகிறது. தற்போது மத்திய அரசு, தேசிய உணவு பாதுகாப்புச்சட்டம் -2013 இன் கீழ், மானிய விலையில் உள்ள உணவு தானியங்களை ஒரு கிலோ ரூ .1-3 என்ற விலையில், 80 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு 5,00,000 ‘ரேஷன்’ கடைகள் மூலம் வழங்குகிறது. ஒவ்வொரு குடும்பத்திற்குமான ஒதுக்கீடு, உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தது. இது, குடும்பத்தலைவரின் ரேஷன் கார்டில் குறிக்கப்பட்டுள்ளது. இந்த ரேஷன் அட்டை, இந்திய குடிமக்களின் அடையாளத்தை சரிபார்க்க பயன்படுத்தப்படும் 12 இலக்க தனித்துவ அடையாள எண்ணான ஆதாருடன் டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள நடைமுறையில், ரேஷன் உணவு பெறுகின்ற பயனாளி புலம்பெயர்ந்தால், புதிய இடத்தில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள ‘ஒருநாடு ஒரு ரேஷன்கார்டு’ திட்டத்தில், புதிய ரேஷன் கார்டு தேவை என்பது கிடையாது. அரசின் சலுகைகளை பெற அடையாள சரிபார்ப்புக்கு, ஆதார் தவிர வேறு எந்த ஆதாரமும் தேவையில்லை என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படுகிறது. பயனாளிகளின் ரேஷன் கார்டுகளுடன் ஆதார் எண் இணைப்பை அரசு கட்டாயமாக்கிய பிறகு, பயோமெட்ரிக் அங்கீகார முறையின் தவறான செயல்பாட்டால், பலருக்கு உணவு தானியங்கள் மறுக்கப்பட்டதாக, ஆகஸ்ட் 11, 2018இல், இந்தியா ஸ்பெண்ட் கட்டுரை தெரிவித்தது. புதிய திட்டத்திலும் இது நிகழக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். "ஆதார் இணைப்பு அங்கீகாரத்தில் பயனாளிகள் எதிர்கொள்ளும் அனைத்து சிக்கல்களும் 'ஒரு நாடு ஒரு ரேஷன்கார்டு' திட்டத்திலும் எதிர்கொள்ள நேரிடும்," என்று ஒடிசாவின் மாநில உணவு உரிமை பிரச்சாரம் (ஆர்.டி.எஃப்) குழுவின் அமைப்பாளர் சமீத் பாண்டா கூறினார். "ஒருவரின் ஆதார் இணைப்பு முழுமையாகாவிட்டால் அல்லது பயோமெட்ரிக் அங்கீகாரம் தோல்வியுற்றால், ஒருவர் எங்கிருந்தாலும் ரேஷன் பொருளை பெற முடியாது" என்றார் அவர். சவால்களை சந்திக்கும் முக்கிய திட்டங்கள் ஒடிசா அரசு ‘ஒருநாடு ஒருரேஷன்கார்டு ’ திட்டத்தை செப்டம்பர் 1, 2019 இல், மாநிலங்களுக்குள் புலம்பெயர்ந்தோருக்காக செயல்படுத்தத் தொடங்கியது. 3.2 கோடி பயனாளிகளில், 18 லட்சம் பேர் (6%) தங்கள் ரேஷன் கார்டை, ஒடிசா அரசு விதித்திருந்த காலக்கெடுவான 2019 செப்டம்பர் 15 தேதிக்கு முன், ஆதாருடன் இணைக்கவில்லை என்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 2019 செப்டம்பர் 17 செய்தி கூறியது. ஒடிசாவின் நபரங்பூர், நுவாபாடா மற்றும் மல்கன்கிரி மாவட்டங்களில் 348 வீடுகளில் அக்டோபர் 2019 இல் மேற்கொண்ட ஆய்வில் 35% வீடுகளில் ஆதார் எண், ரேஷன் கார்டுடன் இணைக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இவர்களில் 31% பேர், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்டிருந்தனர். 12.42% பேரிடம் ஆதார் கார்டு இல்லை. 19% பேர் அதை சமர்ப்பித்தும் ரேஷன் கார்டுடன் இணைக்க முடியவில்லை என்று, காத்யா அதிகார் அபியான் (ஆர்டிஎப்-இன் ஒடிசா பிரிவு) மேற்கொண்ட ஆய்வு கூறுகிறது. முன்னதாக, ஆகஸ்ட் 2019இல், முக்கிய திட்டமாக ரேஷன் கார்டுகளின் இடைநிலை பெயர்வுத்திறனை, இரண்டு அரசு குழுக்களில் மத்திய அரசு சோதனை செய்தது: ஆந்திரா-தெலுங்கானா மற்றும் குஜராத்-மகாராஷ்டிரா. இது ஒவ்வொரு கிளஸ்டரிலும் குடியேறியவர்களுக்கு, கூட்டாளர் மாநிலத்தில் இருந்து ரேஷன் பெற உதவும். "குஜராத்தில் கிழக்கு பழங்குடி பகுதியில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து வந்து வைரத்தொழிலில் பணிபுரிவோர் என்று, இரு மாநிலத்தவர்களும் உள்ளனர்" என்று, குஜராத் உணவு பாதுகாப்புகாக பணியாற்றும் அன்னசுரக்ஷா அதிகார் அபியான் குழுவின் மாநில அமைப்பாளர் சேஜல் தந்த் கூறினார். "குஜராத்திற்கு புலம் பெயர்ந்து மாநிலத்தில் ரேஷன் பொருள் பெற்ற ஒரு பயனாளியை கூட நாங்கள் பார்த்ததில்லை" என்றார் அவர். குஜராத்தில் உள்ள பழங்குடி சமூகங்கள், தங்கள் சொந்த கிராமத்தில் கூட மோசமான இணையதள இணைப்பு காரணமாக ரேஷன் பொருட்களை பெற முடியவில்லை என்று தந்த கூறினார். "எத்தனை பேர் ரேஷன் பொருட்களை பெற்றார்கள் என்ற தரவுகளை அரசு பகிரங்கப்படுத்த வேண்டும்," என்றார் அவர். பருவத்திற்கு புலம்பெயருவோர் கண்காணிக்கப்படவில்லை நாம் முன்பு குறிப்பிட்டது போல், இந்தியாவுக்குள் குறிப்பாக மாநில அளவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் சரியான எண்ணிக்கையை கணக்கிடுவது எளிதானது அல்ல. பொதுவில் கிடைக்கக்கூடிய சமீபத்திய தரவுகள், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் இருந்து பெற்றவை. "நாடு முழுவதும் புலம்பெயர்வு முறைகள் ஆய்வு செய்யப்பட வேண்டும். நியாய விலைக்கடைகளுக்கு (சொந்த அல்லது புலம்பெயர்ந்த மாநிலத்தில்) புலம்பெயர்ந்தோரின் வருகை மற்றும் வெளிச்செல்லும் தகவல்கள் தேவைப்படும்" என்று, உணவு உரிமை பிரச்சாரக்குழுவின் பாண்டா கூறினார். "ஒவ்வொரு மாநிலத்திற்கும் ரேஷன் ஒதுக்கீடு என்பது புலம்பெயர்வு முறைகளை பொறுத்து மாறுபடும்" என்றார். ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை மற்றும் முந்தைய ஆண்டின் ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாவட்ட வாரியான தேவைக்கேற்ப மத்திய அரசு மாநிலத்திற்கு உணவு தானியங்களை ஒதுக்குகிறது. "எங்கள் புரிதலின்படி, பருவகாலங்களில் புலம்பெயர்ந்தோருக்கு மானிய விலையை வழங்குவதற்கான செலவு மாநிலங்களால் ஏற்கப்படும். ஒரு குறிப்பிட்ட மாநிலத்தின் மானியம், மற்றொரு மாநிலத்தில் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது குறித்து எங்களுக்கு இன்னும் தெளிவு கிடைக்கவில்லை ”என்று இந்திய உணவு கழகத்தின் விற்பனை மற்றும் கொள்முதல் தென் மண்டல (சென்னை) பொதுமேலாளர் எஸ். எஸ். ராமராவ் கூறினார். பாயிண்ட் ஆப் சேல் கருவிகள் (PoS) ‘ஒருநாடு, ஒரு ரேஷன் கார்டு’ திட்டத்திற்கு, அனைத்து நியாயமான விலைக்கடைகளிலும் பாயிண்ட் ஆப் சே (PoS) கருவிகள் நிறுவப்பட வேண்டும். அனைத்து பயனாளிகளின் ஆதார் எண்ணும் ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட வேண்டும். Source: Lok Sabha பிப்ரவரி 2019 நிலவரப்படி நாடு முழுவதும் 72% (533,165 இல் 388,012) நியாய விலைக்கடைகளில் பாயிண்ட் ஆப் சேல் கருவி நிறுவப்பட்டதாக மக்களவையில் அளித்த தரவுகள் காட்டுகின்றன. கடந்த 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, உத்தரப்பிரதேசத்திற்கு அடுத்து நாட்டில் இரண்டாவது அதிகம் புலம்பெயர்ந்தோர் உள்ள பீகாரில், மிகக்குறைந்த எண்ணிக்கையில் பாயிண்ட் ஆப் சேல் கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. "நியாய விலைக்கடைகளில் விற்பனையாளர்கள் ஒவ்வொரு பயனாளியின் பதிவேடுகளையும் கையால் எழுதி வைத்திருக்க வேண்டியதில்லை என்பதால் பாயிண்ட் ஆப் சேல் கருவி அடிப்படையிலான பரிவர்த்தனைகள் மிகுந்த பயனளிக்கின்றன. போலி ரேஷன் கார்டு இருப்பின் அதையும் இக்கருவி சரிபார்க்கிறது,” என்று ராமராவ் கூறுகிறார். (அலி, இந்தியா ஸ்பெண்ட் செய்திப்பணியாளர்). உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளை respond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கணம் கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.
“தலைவிரித்தாடும் கந்து வட்டிக் கொடுமை - அ.தி.மு.க அரசு இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது” : CPIM ஆவேசம்! தமிழகத்தில் தலைவிரித்தாடும் கந்து வட்டிக்கொடுமையை கண்ணைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்கும் எடப்பாடி அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். Prem Kumar Updated on : 30 August 2020, 08:45 AM தஞ்சாவூரில் வட்டி கொடுமையால் இளைஞர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அனைத்து கடன் வசூலையும் ஒத்தி வைப்பதுடன், கந்துவட்டி தடுப்புச் சட்டத்தை கறாராக அமல்படுத்த வேண்டும் என சிபிஐ (எம்) வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தஞ்சாவூர் அருகே, வல்லத்தில் தனியார் வங்கியில் வாங்கிய வீட்டுக் கடனை திரும்ப செலுத்த கால அவகாசம் வழங்காததால், வங்கிக் கிளை முன்பு ஆனந்த் என்ற இளைஞர் நேற்று (29.8.2020) தீக்குளித்து உயிரிழந்தார் என்ற துயரச்செய்தி நெஞ்சை உலுக்குகிறது. வெல்டரான ஆனந்த் வீடு கட்ட தனியார் வங்கியிடம் கடன் பெற்று அசலை விட அதிகமான தொகையை வங்கியில் திருப்பிச் செலுத்தியுள்ளார். ஆனாலும் வங்கி அதிகாரிகள் மீதத் தொகையினை கட்டுமாறு மிரட்டியுள்ளனர். இந்நிலையில் 27.8.2020 அன்று வங்கி அதிகாரிகள் ஆனந்த் வீட்டிற்கு நேரில் சென்று அங்கிருந்த அவரது மனைவி திருமதி. ஹேமாவிடம் வட்டியுடன் முழுத் தொகையும் செலுத்தா விட்டால் வீட்டை ஜப்தி செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். கடன் தவணையைக் கட்டுவதற்கு கால அவகாசம் கேட்டும் வங்கி அதிகாரிகள் மறுத்துவிட்டதால், வங்கி வாசல் முன்பு ஆனந்த் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்துக் கொண்டுள்ளார். பலத்த காயமடைந்த அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் கூட சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கந்து வட்டி கொடுமை கொடி கட்டி பறக்கிறது. இக்கொடுமை தாங்காமல் பலர் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டு வருகின்றனர். ஏற்கனவே புதுக்கோட்டை, திருநெல்வேலி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் கந்து வட்டி கொடுமை தாங்க முடியாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு தீக்குளித்து உயிரிழந்துள்ள சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. கந்து வட்டி கொடுமையால் சிக்கித் தவிப்பவர்கள் தங்களது சொத்துக்கள், உடமைகள் ஆகியவற்றை இழந்து தவித்து வருவதோடு, வீட்டிலிருக்கும் பெண்கள், சிறுமிகள் என அனைவரையும் கந்துவட்டிகாரர்கள் அடியாட்களை நியமித்து தாக்குதல் நடவடிக்கைகள் மற்றும் அவமானப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகுபவர்கள் தங்கள் உயிரை குடும்பத்துடன் மாய்த்துக் கொள்ளும் அவலம் ஏற்படுகிறது. 2003ம் ஆண்டு செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்த போது இயற்றப்பட்ட கந்துவட்டி தடுப்புச் சட்டம் அமலாக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இதுபோன்ற உயிரிழப்புச் சம்பவங்களும், தற்கொலை சம்பவங்களும் நடைபெறுகின்றன என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழுத்தமாக சுட்டிக்காட்ட விரும்புகிறது. அதேபோல கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் ஏழை, எளிய மக்கள் நுண்நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கி சிக்கித் தவித்து வருகின்றனர். கொரோனா மற்றும் ஊரடங்கு காலத்தில் வேலையிழந்து தவிக்கும் மக்கள் தாங்கள் வாங்கிய கடனை கட்ட முடியாத காரணத்தினால் நுண்நிதி நிறுவனங்கள் அடியாட்களை வைத்து மிரட்டி வட்டிக்கு மேல் வட்டி செலுத்த வேண்டுமென நிர்ப்பந்திக்கின்றனர். கொரோனா காலத்தில் இ.எம்.ஐ., கடன்கள், நுண்நிதி கடன்கள், கிரிடிட் கார்ட் கடன்கள் போன்றவற்றை வசூலிக்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ஆனால் இந்நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் உத்தரவை காலில் போட்டு மிதித்துக் கொண்டு அடியாட்களை வைத்து மிரட்டி கடன் வசூலை செய்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைகளுக்கு தூண்டப்படுகின்றனர். இதுபோன்ற கொடுமைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்காமல் கண்ணைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்து வரும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. எனவே, ஆனந்த்தை தற்கொலைக்கு தூண்டிய சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டுமெனவும், அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கிடுவதோடு அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வற்புறுத்துகிறது. மேலும் இதுபோன்ற உயிரிழப்புகளும், துயரச் சம்பவங்களும் தமிழகத்தில் இனி நடைபெறாமலிருக்க தமிழக அரசு உடனடியாக கந்து வட்டி தடுப்புச் சட்டத்தை கறாராக அமல்படுத்த வேண்டும். கொரோனா முடிந்து இயல்பு நிலை திரும்புகிற வரை நுண்நிதி கடன், சுயஉதவிக்குழு கடன், இ.எம்.ஐ., கிரிடிட் கார்ட் கடன் தவணை, வீட்டுக் கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடன் வசூலையும் ஒத்தி வைக்க வேண்டும். மேலும் இக்காலத்திற்கான வட்டித் தொகையினையும் ரத்து செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது. Also Read அரசு உத்தரவை மீறி கடன் வசூலில் ஈடுபட்ட வங்கி : மனமுடைந்த வாடிக்கையாளர் வங்கியின் வாசலில் தீக்குளிப்பு! cpim தஞ்சாவூர் சிபிஐஎம் தீக்குளிப்பு Citi Union Bank சிட்டி யூனியன் வங்கி ஆனந்த் Interest Trending வெடித்து சிதறிய சிலிண்டர்.. 5 பேர் பரிதாப பலி- 49 பேர் கவலைக்கிடம்: ராஜஸ்தானில் துக்க வீடான திருமண வீடு! U Turn எடுக்கும் போது குறுக்கே வந்த லாரி.. விரைவில் திருமணம் செய்ய இருந்த காதல் ஜோடிக்கு நேர்ந்த துயரம்! இப்படி ஒரு தீவிர கால்பந்து ரசிகரா.. ஆனந்த் மஹிந்திராவை ஆச்சரியப்பட வைத்த சம்பவம் என்ன தெரியுமா? மரணம் வாழ்வின் அங்கம்,அதை பேசவேண்டாம்- தொழிலாளர் இறப்பு குறித்து கத்தார் உலகக்கோப்பை தலைவர் கொடூர கருத்து Latest Stories உங்களுக்கு 90s கிட்ஸ்கள் தெரியும்.. ஆனால் Generation Z பற்றி நீங்க கேள்விப்படிருக்கிறீர்களா? இன்று இரவு பேருந்துகள் இயங்காது: போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு இதோ! வெடித்து சிதறிய சிலிண்டர்.. 5 பேர் பரிதாப பலி- 49 பேர் கவலைக்கிடம்: ராஜஸ்தானில் துக்க வீடான திருமண வீடு!
தமிழக எல்லை அருகே கேரளாவில் ஆவணங்களின்றி அரசு பஸ்சில் கொண்டு சென்ற ரூ.28 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர். தென்காசி மாவட்டம், செங்கோட்டை புளியரை அருகே கேரள மாநில ஆரியங்காவு சோதனை சாவடி உள்ளது. தற்போது அனைத்து சோதனை சாவடிகளிலும் சோதனை அதிகப்படுத்தியுள்ள நிலையில், ஆரியங்காவு செக் போஸ்டில் ஆவணங்களின்றி அரசு பஸ்சில் கொண்டு சென்ற ரூ.28 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பணம் ஹவாலா பணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசியிலிருந்து திருவனந்தபுரத்திற்கு கேரள அரசு பஸ் புறப்பட்டது. இது தமிழகத்தில் உள்ள சோதனை சாவடிகளை கடந்து கேரள முதல் சோதனை சாவடியான ஆரியங்காவு செக் போஸ்ட்டில் இந்த அரசு பஸ்சை நிறுத்தி சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கடையநல்லூரைச் சேர்ந்த முகமது அக்ரம் என்பவர் வைத்திருந்த பையில் முறையான ஆவணங்கள் இல்லாமல் ரூ.28 லட்சம் வைத்திருந்தது, கண்டுபிடிக்கப்பட்டது. அதை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். விசாரணையில் கேரளாவிற்கு தங்கம் வாங்குவதற்கு செல்வதாக முகமது அக்ரம் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் அந்தப் பணத்தை சுங்கத் துறையினர் தென்மலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து தற்போது பணத்தை பறிமுதல் செய்து தென்மலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மக்கள் கருத்து மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் ஸ்போர்ட்ஸ் வெர்ஷன் இருப்பது மாதிரி, ஹூண்டாய்க்கும் ஸ்போர்ட்ஸ் வெர்ஷன்கள் உண்டு. ஹூண்டாயின் N Line சீரிஸ் பற்றித் தெரிந்திருக்கும். சமீபத்தில் வந்த ஐ20 காருக்கு N Line சீரிஸ் எனும் பெர்ஃபாமன்ஸ் வெர்ஷன் கொண்டு வந்ததைப்போல், லேட்டஸ்ட்டாக லாஞ்ச் ஆன வென்யூவிலும் N Line வெர்ஷனைக் கொண்டு வந்திருக்கிறது ஹூண்டாய். இந்த ஸ்போர்ட்டியான என்லைன் வென்யூ காம்பேக்ட் எஸ்யூவி எப்படி இருக்கு? வெளிப்பக்க அப்டேட்கள்! ஹூண்டாய் கார்களில் சிவப்பு நிற ஸ்ட்ரிப்களைப் பார்த்தாலே கண்டுபிடித்து விடலாம். அவை N Line சீரிஸ் என்று. இந்த வென்யூவிலும் அப்படித்தான். சிவப்பு மற்றும் கறுப்பு என அந்த டூயல் டோன் பேட்ஜ்களைத் தெளித்து விட்டிருக்கிறார்கள். சிலருக்கு வெள்ளை நிறத்தில் இந்த கலர் காம்பினேஷன் பிடிக்கவில்லை என்றால், Thunder Blue என்றொரு கலர் ஆப்ஷனைச் சொல்கிறது ஹூண்டாய். அது இன்னும் ஸ்போர்ட்டியாக இருக்கும். ஆனால், வெள்ளை நிற காரில் இந்தச் சிவப்பு நிறம்தான் நன்றாக எடுபடுகிறது. முன் பக்க பம்ப்பரில் கீழே ஒரு ஸ்லிம் அண்ட் ஸ்லீக்கான ஒரு சிவப்பு நிற ஸ்ட்ரிப்தான் மெயின் அட்ராக்ஷனாக இருக்கிறது. கார்களின் பக்கவாட்டில் கதவுகளுக்குக் கீழே… வீல் ஆர்ச்சுகளில் லேசாக… ஃபெண்டரில்… என்று ஸ்போர்ட்டியாக இருக்கிறது. அதிலும் பின் பக்கம்தான் சிவப்பு அதிகமாகத் தெரிகிறது. ஆனால், கவனித்துப் பார்த்தால்… அந்தக் கீழே இருக்கும் சிவப்பு ஸ்ட்ரிப்தான் புதுசு. மற்றபடி பின் பக்க டெயில் கேட்டில் கார் முழுக்க நீளும் அந்த டெயில் லைட் அசெம்பிளி, ஸ்டாண்டர்டு வென்யூவில் இருப்பதுதான். இது இந்த என்லைன் சீரிஸுக்கு இன்னும் ஸ்போர்ட்டினெஸ் சேர்த்து விடுகிறது. என் போன்ற டிரைவிங் பார்ட்டிகள்… முதலில் கவனிப்பது அந்த எக்ஸாஸ்ட்டைத்தான். ஆம், அந்த டூயல் டிப் எக்ஸாஸ்ட்கள்தான் இந்த N Line வென்யூவின் இதயம்… முதுகெலும்பு… எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். ஓவர்ஆலாக பெப்பியாக மாறிவிட்டது வென்யூ N Line. இன்டீரியரிலும் அங்கங்கே சிவப்பு நிற வேலைப்பாடுகள்... ஸ்போர்ட்டி. அந்த டேஷ் கேமரா அற்புதம். பட்டர்ஃபளை கன்சோல் செம ஸ்டைல். இன்டீரியரில் என்ன மாறியிருக்கு? உள்பக்கத்தைப் பொருத்தவரை இடவசதியில் சுத்தமாக மாற்றமில்லை. ஆனால், இங்கேயும் கலர் காம்பினேஷனில் விளையாடி இருக்கிறது ஹூண்டாய். ஆல் பிளாக் தீமில் அந்த சிவப்பு நிற விளையாட்டுகள் உள்ளேயும் தொடர்கின்றன. அந்த ஏசி கன்ட்ரோல் வட்ட வடிவ நாப்களில், கியர் லீவரில் ஒரு ஸ்ட்ரிப், ஏசி வென்ட்களில்… அப்புறம் சீட்களில்! இங்கெல்லாம் சிவப்பு வேலைப்பாடுகள் பளீரென்று தெரிவது ஒரு மாதிரியாக… ஜம்மென்றுதான் இருக்கிறது. இன்டீரியர் ஆம்பியன்ட் லைட்டிங்குக்கும் சிவப்பு நிறம் உண்டு. கியர் லீவரில் N பேட்ஜும் இருந்தது வழக்கம்போல்! இதில் 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல் புத்தம் புதுசு! பிடிக்கும்போதே ஸ்போர்ட்டினெஸ் தெரிகிறது. என்ன, ஃப்ளாட் பாட்டம் கொடுத்திருக்கலாம்! ஸ்டீயரிங் வீலுக்குப் பின்னால் இருக்கும் பேடில் ஷிஃப்டர்கள் கறுப்பு நிறத்திலும், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரும்... ஸ்டாண்டர்டு வென்யூவில் இருந்து மாற்றமில்லை. மற்றபடி, சாதா வென்யூவில் இருக்கும் அதே சீட் இடவசதி. வென்யூவில் பின் பக்க இடவசதியைப் பற்றி ஒரு குறை இருந்து வருகிறது. அது இந்த என்லைனுக்கும் பொருந்தும். ஆனால், இந்த பேக்ரெஸ்ட்டுக்கு 2 ஸ்டெப் ரெக்லைன் வசதி கொடுத்திருக்கிறார்கள். இதன் பூட் ஸ்பேஸ் 350 லிட்டர். வசதிகள் N Line–ல் முக்கியமான, கவர்ச்சியான வசதி என்றால்… அது டேஷ் கேம் (Dash Cam)தான். காரின் ரூஃபிலிருந்து தொங்கும் இந்த டேஷ் கேமரா, உள்ளே வெளியே நடக்கும் விஷயங்களை அப்படியே Footage–களாகப் பதிவு செய்கிறது. இது 30fps (Frames Per Second) ரேட்டிங்கில் நிகழ்வுகளை ரெக்கார்டு செய்யும் ஒரு ஃபுல் HD செட்அப் கேமரா. காரை ஆன் செய்த அடுத்த விநாடி, இது தரவுகளைப் பதிவு செய்து, ஒரு SD கார்டில் சேமித்து வைத்துக் கொள்கிறது. காரை பார்க் செய்து நிறுத்தி வைத்திருக்கும்போதும், ரெக்கார்டு செய்யும் ஆப்ஷனும் இருக்கிறது. இது ஒரு ஹேண்டியான வசதி. டிராஃபிக்கில் சிக்னல் தாண்டியதற்காகக் காவல்துறை உங்களை நிறுத்தும்போது, நீங்கள் நல்லவராக இருந்தால் இந்த ரெக்கார்டிங்கைக் காவல்துறைக்குக் காட்டலாம். அற்புதமான வசதி இது. மற்றபடி, N Line–க்கு ஏற்ற மாற்றங்கள் இந்த வென்யூவிலும் தொடர்கின்றன. ஸ்போர்ட்டியான மெட்டல் பெடல்கள் இதிலும் உண்டு. ஆனால் இதில் ஏர் ப்யூரிஃபையரை ஏன் ஹூண்டாய் காலி செய்தது என்பதுதான் விந்தையாக இருக்கிறது. வழக்கமான வசதிகளான சன்ரூஃப், ஒயர்லெஸ் சார்ஜிங், ஆண்ட்ராய்டு ஆட்டோ/ஆப்பிள் கார் ப்ளே கனெக்டிவிட்டி கொண்ட 8 இன்ச் டச் ஸ்க்ரீன், புளூலிங்க் கனெக்டிவிட்டி, பின் பக்கப் பயணிகளுக்கு 2 ஸ்டெப் ரெக்லைன் பேக்ரெஸ்ட் (டாப் வேரியன்ட்டான N8–ல்) உண்டு. இதன் லோ வேரியன்ட்டான N6-ல் பல வசதிகள் மிஸ்ஸிங். ரெக்லைனிங் சீட்ஸ், SOS பட்டன் கொண்ட எலெக்ட்ரோ க்ரோமிக் மிரர், பவர்டு டிரைவர் சீட்கள், பக்கவாட்டு கர்டெய்ன் காற்றுப்பைகள், டேஷ் கேமரா, புளூலிங்க் போன்ற வசதிகள் காலி. ஸ்போர்ட்டி பெர்ஃபாமென்ஸ் கிடைக்கிறதா? இந்த N Line வென்யூ, ஒரே ஒரு டர்போ இன்ஜின் ஆப்ஷன் மற்றும் ஒரு கியர்பாக்ஸ் மட்டும்தான் கிடைக்கும். இதிலிருப்பது 1.0லிட்டர், 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின். 120bhp பவரையும், 172Nm டார்க்கையும் இது வெளிப்படுத்துகிறது. இந்தக் குட்டி எஸ்யூவிக்கு இவை தெறி விஷயங்கள்தான். நினைத்தபடியே வேகமாக இருக்கிறது வென்யூ N Line. ஆனால், இதில் மேனுவல் கியர்பாக்ஸோ… ஐ20 N Line மாதிரி iMT கியர்பாக்ஸோ இல்லையே? இதில் இருப்பது 7 ஸ்பீடு DCT (Dual Clutch Transmission) கியர்பாக்ஸ். பொதுவாக, இந்த வகை கியர்பாக்ஸ்கள் சுறுசுறுப்புக்குப் பெயர் பெற்றவை. ஆனால், இந்த வென்யூ N Line–ல் இருக்கும் DCT கொஞ்சம் மந்தமோ என்று தோன்றுகிறது. இன்னும் ரெஸ்பான்ஸிவ்வாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். சிட்டிக்குள் இதன் செயல்பாடு மந்தமாகவே இருந்தது. சரியான கியர் வரும் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது. முக்கியமாக டவுன்ஷிஃப்ட்களில் இந்த ஸ்லோ மோஷன் நன்றாகவே தெரிகிறது. ஆனால், இந்த நேரத்தில்தான் நமக்கு பேடில் ஷிஃப்டர்கள் பயன்படுகின்றன. வழக்கம்போல், இதில் கார் ஓட்டுவது ஒரு ஜாலியான உணர்வைக் கொடுக்கிறது. இந்த ஸ்லோ கியர்பாக்ஸில் இருந்து நம்மைக் காக்கும் ஆபத்பாந்தவன் இந்த பேடில் ஷிஃப்டர்கள்தான். ஆனால், இதன் இன்ஜின் ரிஃபைன்மென்ட் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால்… பக்கா! பவர் டெலிவரி லீனியராகக் கிடைக்கிறது. ஸ்டாண்டர்டு வென்யூவிலயே டிரைவிங் மோடுகள் இருக்கும். இதில் இல்லாமலா? வழக்கம்போல் டிரைவிங் பார்ட்டிகளுக்கு இந்த Sport மோடு ஒரு வரமே! இந்த ட்வின் பைப் எக்ஸாஸ்ட்டில் இருந்து வரும் சத்தம், என்லைன் ஐ20–ல் கேட்டதுபோல் நல்ல ஸ்போர்ட்டியாகவே இருந்தது. ஸ்டாண்டர்டு வென்யூவுக்கும் இதற்கும் நல்ல வித்தியாசம். ஆக்ஸிலரேட்டரை மிதித்தால்… இந்தச் சத்தத்தை இன்னும் எதிர்பார்க்கிறது மனசு. ஓட்டுதல் மற்றும் கையாளுமை இன்ஜினில்தான் மாற்றமில்லை; இதன் சஸ்பென்ஷன் செட்டிங்கில் நன்றாக வேலை பார்த்திருக்கிறது ஹூண்டாய். இது ஸ்போர்ட்டி கார் இல்லையா… நெடுஞ்சாலைகளில் விர்ரெனச் சீற வேண்டும்; நார்மல் வென்யூவைவிட நிலைத்தன்மை நன்றாகக் கிடைக்க வேண்டும்; கார்னரிங் கிச்சென இருக்க வேண்டும்; பாடி ரோல் இருக்கக் கூடாது. இதைப் பார்த்துப் பார்த்துச் செய்திருக்கிறது ஹூண்டாய். இதற்காக சஸ்பென்ஷனைக் கொஞ்சம் ஸ்டிஃப் ஆக்கியிருக்கிறார்கள். நம்பரில் சொல்ல வேண்டுமென்றால், 34% இதன் டேம்ப்பிங் ஆற்றலை அதிகரித்திருக்கிறார்கள். இதன் விளைவு – ரைடு அண்ட் ஹேண்ட்லிங்கில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது N Line வென்யூவில். இறுக்கமான செட்அப் என்பதால், நினைத்தபடியே குறைந்த வேகங்களில் மட்டும் இது தன் வேலையைக் காட்டுகிறது. சில ஓட்டை ஒடிசல் ரோடுகளில் இதன் தாக்கம் உள்ளே கேபின் வரை தெரிகிறது. ஆனால், நெடுஞ்சாலைகளில் மூன்றிலக்க வேகங்களில் போனாலும்… கிச்! அதேபோல் பாடி ரோலும் நன்றாகவே வசப்பட்டிருக்கிறது. மோடுகளுக்கு ஏற்ப ஸ்டீயரிங் மாறுவது தெரிந்தாலும், ஃபீட்பேக் இன்னும் கொஞ்சம் பெட்டராக இருந்திருக்கலாமோ? இந்த வென்யூ N Line–ல் பின் பக்கமும் டிஸ்க் கொடுத்திருக்கிறார்கள். அதனால், நம்பிக்கை கூடுகிறது. வென்யூ N Line வாங்கலாமா? N6 மற்றும் N8 என 2 வேரியன்ட்களில் வருகிறது N Line வென்யூ. 12.16 லட்சம் முதல் 13.15 லட்சம் வரை எக்ஸ் ஷோரூம் விலை பொசிஷன் செய்திருக்கிறது ஹூண்டாய். வசதிகள் (முக்கியமாக அந்த டேஷ் கேமரா), மொத்தமாக மாறிய ஓட்டுதல் கையாளுமை, பெப்பியான இன்ஜின் பெர்ஃபாமென்ஸ், ஸ்டைலிஷான சிவப்பு வேலைப்பாடுகள் என்று இந்த N Line வென்யூ, ஓட்டுதவற்கு ஒரு ஃபன் டு டிரைவ் காராக ஜொலிக்கிறது. டிரைவிங்கில் பெப்பினெஸ்ஸும், ஸ்டைலிஷான ஒரு எஸ்யூவியும் வேண்டும் என்பவர்கள் – இந்த வென்யூவை வாங்கலாம்! ஸ்டாண்டர்டு வென்யூவைவிட சுறுசுறுப்பாக இருக்கிறான் இந்த N Line வென்யூ. என்ன, இந்தச் சுறுசுறுப்புப் பையனுக்கு, சாந்தமான வென்யூவிலிருந்து எக்ஸ்ட்ராவாக 60,000 முதல் 1.20 லட்சம் வரை எடுத்து வைக்க வேண்டும்.
பல ஆண்டுகளாக, சோமாலிய குலங்கள் மற்றும் கிராமங்கள் இஸ்லாமியக் குழுவான அல்-ஷபாபின் கோரிக்கைகளை எதிர்க்க முயன்றன, அதில் “ஜகாத்” எனப்படும் வரிகள் அடங்கும், மேலும் கால்நடைகள், ஆயுதங்கள் மற்றும் சிறுவர்கள் போராளிகளாக மாறலாம். பல ஆண்டுகளாக, அல்-ஷபாப் உள்ளூர் கிளர்ச்சிகளை திறம்பட நசுக்கியது, பொதுவாக இரக்கமற்ற செயல்திறனுடன். 2018 ஆம் ஆண்டின் முற்பகுதியில், அல்-ஷபாப் போராளிகள் மொகாடிஷுவின் வடக்கே மத்திய ஷாபெல்லே பகுதியில் உள்ள குலான் கிராமத்தை கைப்பற்றினர், மேலும் பணம், துப்பாக்கிகள் மற்றும் சிறுவர்களை “நன்கொடையாக” வழங்குமாறு குடியிருப்பாளர்களைக் கேட்டுக்கொண்டனர். ஒரு உள்ளூர் விவசாயி, ஹிபாத் அலி தாசர், அந்த நேரத்தில் 12 வயதுக்கு குறைவான தனது மகனை ஒப்படைப்பதை விட இறப்பதே சிறந்தது என்றார். அதற்கு பதிலளித்த அல்-ஷபாப் தாசரின் தானியங்களை எடுத்து அவரது பண்ணையை எரித்ததாக தாசரை அறிந்த அடலே துணை மேயர் முக்தார் முகமது முகமது கூறினார். கிராமத்தில் உள்ள தாசர் மற்றும் பிற ஆண்கள் தங்கள் குடும்பங்களை அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள அடலே நகருக்கு மாற்றினர் மற்றும் சுமார் 60 பேர் கொண்ட போராளிக்குழுவை ஏற்பாடு செய்தனர், இது மே 2018 இல் அல்-ஷபாபுடன் மோதியது. அவர்கள் தங்களை “மாவிஸ்லி” என்று அழைத்தனர். அவர்களில் பலர் சேலை அணிகிறார்கள். அந்த ஆண்டு கோடை முழுவதும் மோதல்கள் தொடர்ந்தன. மத்திய அரசு வெடிமருந்துகள் மற்றும் சில ஆயுதங்களை வழங்கியது, ஆனால் மற்றவர்களுக்கு குறிப்பிடத்தக்க ஆதரவு இல்லை, மொஹமட் கூறினார். அந்த அக்டோபரில், தாசர் மற்றும் அவரது ஆட்கள் பலர் தாக்குதலைத் திட்டமிடும் போது, ​​அவர்கள் இரண்டு அல்-ஷபாப் பிரிவுகளால் பதுங்கியிருந்து கொல்லப்பட்டனர். கிளர்ச்சி முடிவுக்கு வந்தது, போராளிகள் தங்கள் வரிகளைப் பெற்றனர். ஆனால் தாசரின் ஆவி மத்திய சோமாலியாவில் உள்ள ஹிரான் மற்றும் கல்முடுக் பகுதிகளில் உள்ள உள்ளூர் மக்களின் மற்றொரு அணிதிரட்டலில் வாழ்கிறது. ஜூன் மாதம், அல்-ஷபாப் வரிகளை எதிர்க்கும் பஹ்தோ கிராமத்தில் வசிப்பவர்கள், குழுவிடமிருந்து ஒரு பெரிய தாக்குதலை எதிர்த்துப் போராடினர். 70 அல்-ஷபாப் போராளிகள் கொல்லப்பட்டதாக கல்முடுக் மாநிலத் தலைவர் அஹ்மத் அப்டி கரியே தெரிவித்தார். போராளிகளுக்கு எதிரான உள்ளூர் மக்களின் எதிர்ப்பை வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று கரியே விவரித்தார். சோமாலிய அரசாங்கம் உள்ளூர் அணிதிரட்டல் முயற்சிகளை பாராட்டியுள்ளது மற்றும் மற்ற பிராந்தியங்களுக்கு எதிர்ப்பை விரிவுபடுத்த அழைப்பு விடுத்துள்ளது. அல்-ஷபாப்பை பலவீனப்படுத்துவது மட்டுமின்றி, அந்த குழுவை ஒழிப்பதற்கும், பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் அவர்களை எதிர்த்துப் போராட, அல்-ஷபாபுக்கு எதிராக ஒரு புதிய உத்தியைப் பயன்படுத்த விரும்புவதாக அதிபர் ஹசன் மொஹமட் கூறியுள்ளார். மீண்டும் மாவிஸ்லி என்று தங்களை அழைத்துக் கொள்ளும் உள்ளூர் போராளிகள் இம்முறை வெற்றி பெறுவார்களா? பிரதமர் ஹம்சா அப்டி பாரேயின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கமல் தாஹிர் ஹசன் குடலே கூறுகையில், “அல்-ஷபாபுடன் போராட பொதுமக்கள் எப்போதும் தயாராகவே இருந்தனர். “இந்த முறை என்ன வித்தியாசமானது அரசாங்கம்; ஜனாதிபதியும் பிரதமரும் சமூகம் அணிதிரட்ட முடிவு செய்தபோது அவர்களை ஊக்குவிக்கவும் அவர்களுடன் நிற்கவும் தொடங்கியுள்ளனர்.” சமீபத்திய வாரங்களில் அல்-ஷபாபுக்கு எதிரான தாக்குதலில் உள்ளூர் போராளிகளுடன் அரசாங்க துருப்புக்கள் இணைந்துள்ளன, மேலும் அதிகாரிகள் குழுவிலிருந்து 40 க்கும் மேற்பட்ட பகுதிகளை எடுத்ததாக தெரிவித்தனர். எதுவும் பெரிய நகரங்கள் அல்ல, மேலும் பல பகுதிகளை மீண்டும் கைப்பற்றியதாக அல்-ஷபாப் அறிவித்தது. ஒரு பதிலடி தாக்குதலில், அல்-ஷபாப் போராளிகள் 20 பேரைக் கொன்றனர் மற்றும் கடந்த மாதம் மஹாஸ் நகருக்கு அருகில் உணவு லாரிகளை எரித்தனர். திங்களன்று, ஹிரான் பிராந்தியத்தில் உள்ளூர் அணிதிரட்டல்களின் மையமான Beledweyne இல் மூன்று கார் குண்டுவெடிப்புகளுக்கு குழு பொறுப்பேற்றது. இது எதிர்ப்பை ஊக்கப்படுத்துவதற்கான ஒரு வெளிப்படையான முயற்சியாகும், 20 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றது மற்றும் உள்ளூர் அரசாங்க தலைமையகத்தை அழித்தது. திங்கட்கிழமை தாக்குதல் அல்-ஷபாப் செய்தித் தொடர்பாளர் அலி தேரின் சமீபத்திய அறிக்கையைத் தொடர்ந்து, கூட்டாட்சி அரசாங்கத்தை ஆதரிக்கும் குலங்களுக்கு எதிரான வன்முறையை அச்சுறுத்தியது. அல்-ஷபாபுக்கு எதிரான அணிதிரள்வு இன்னும் உச்சக்கட்டத்தை எட்டவில்லை என்றும் மேலும் பல குலங்கள் சண்டையில் சேரும் என எதிர்பார்ப்பதாகவும் குட்டாலே கூறினார். இந்த அணிதிரட்டல் “சரியான நேரத்தில்” வருகிறது என்று முன்னாள் சோமாலிய இராணுவத் தலைவர் ஜெனரல் தாஹிர் அடன் எல்மி அல்லது “இந்தோகர்ஷோ” கூறினார். அல்-ஷபாபை எதிர்த்துப் போரிடுவதில் கடந்த காலத்தில் உள்ளூர் போராளிகள் மற்றும் அரசாங்கப் படைகளுக்கு இடையே எந்த ஒருங்கிணைப்பும் இல்லை என்று எல்மி கூறினார். “பல முறை அரசும், உள்ளூர் மக்களும் தனித்தனியாக சண்டையிட்டனர். உள்ளூர்வாசிகள் தனியாகவும், அரசு தனியாகவும் போராடினர். விளைவு சாதிக்காதது,” என்று அவர் VOA விடம் கூறினார். “அரசு இதை ஆதரித்தால் [mobilization] அதிகாரத்துடன், அல்-ஷபாப்பை தோற்கடிப்பதற்கான வழி இதுவாக இருக்கும் என்று நான் காண்கிறேன்.”
பசி அறியான் யாருமில்லை பல சுவை சுவைத்தபின்பும் நா விரும்பிவிட்டால் பொதுநலம் பொடியாகிறது. தேவைக்கு அளித்தால் தேவதை தேவையை தூண்டினால் தீவ... (தலைப்பு இல்லை) அன்பின் அபூர்வ அணிகலன் ஆனந்தம் தரும் ஆற்றலின் ஆணிவேர் இயற்கை இயற்றிய இதயத்தின் இசை ஈரம் நிறைந்த ஈன்றவள் உதட்டசை... வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்! பின்வாங்காமையே உன்னை பிரபலபடுத்தும் கௌரவத்துடன் தன்னடக்கம் உன்னை முடுக்கமடைய செய்யும் ரச...
குஜராத்தில் இளைஞர் ஒருவர் ஃபயர் ஹேர் கட் செய்ய சென்ற இடத்தில் தீ காயங்களுடன் திரும்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தை சேர்ந்த 18-வயது இளைஞர் ஒருவர் அருகில் உள்ள சலூனுக்கு சென்று தனது ஃபயர் ஹேர் கட்டில் முடி வெட்டி விடுமாறு சலூன் கடைக்காரரிடன் கூறியுள்ளார். கர்மாவுக்கு ஏதேனும் விதிகள் உள்ளனவா? -ஐகோர்ட் கிளை அதிரடி!! இதனையடுத்து கடைக்காரர் இளைஞரில் தலையில் நெருப்பை பற்ற வைப்பதற்காக ஒரு வித இராசயனத்தை தடவியுள்ளார். பின்னர் நெருப்பு பற்ற வைக்கும் போது தவறுதலாக இளைஞரின் கழுத்து போன்ற பகுதிகளில் தீ பரவியது. இதனையட்டு தீ காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுடுகாட்டில் புதைக்கப்பட்ட சிறுமியின் சடலத்தில் தலை மாயம் – பின்னணி என்ன? மேலும், ஃபயர் ஹேர் கட் செய்யும் போது தீ பற்றிய சம்பவம் இளைஞர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
கேரட் மிகவும் மலிவாக எளிதில் கிடைக்கும் காய்களில் ஒன்றாகும். அதிக நன்மைகள் நிறைந்த கேரட் அனைவராலும் விரும்பி உண்ணும் சுவை நிறைந்த காயாகும். நாம் அனுதினமும் பயன்படுத்தும் … Read more நெல்லி பொடி நெல்லி பொடி பயன்கள் நெல்லியில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளதால் இது இரத்த சோகைக்கு நல்ல மருந்தாகும். நெல்லியில் அறுசுவையில் உப்பு … Read more முடக்கத்தான் பொடி முடக்கத்தான் பொடி பயன்கள் முடக்கத்தான் முடக்கு அறுத்தான் என்பது நாளடைவில் முடக்கற்றான் என்றானது. கசப்புத் தன்மையுடைய முடக்கத்தான் முடக்கு வாத நோய்களை குணமாக்குவதால் முடக்கத்தான் என்று பெயர் … Read more கரிசலாங்கண்ணி பொடி கரிசலாங்கண்ணி பொடி பயன்கள் கரிசலாங்கண்ணி அதிக அளவில் மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையாகும். இதில் எக்லிப்டால், டெஸ்மீத்தைல், அக்கோண்டனால், ஹென்ட்ரை, ஸ்டிக்மாஸ்டீரால், தங்கச்சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் … Read more ஆவாரம் பூ பொடி ஆவாரம்பூ பொடி பயன்கள் ஆவாரம்பூ துவர்ப்புத் தன்மை உடையது. இதில் தங்கச்சத்து நிறைந்துள்ளது. ஆவாரம் பூ பொடியை தினமும் ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வர சர்க்கரை … Read more கஸ்தூரி மஞ்சள் பொடி கஸ்தூரி மஞ்சள் பொடி பயன்கள் கஸ்தூரி மஞ்சள் முக அழகு சாதன பொருட்களில் ஒன்றாகும். இது அனைத்து வகை சருமத்திற்கும் கேடு விளைவிக்காத அலர்ஜி எதிர்ப்பு தன்மை … Read more எலுமிச்சை தோல் பொடி பயன்கள் எலுமிச்சை தோல் பொடியினைக் கொண்டு ஃபேஸ் பேக் முதல் பாதத்திற்கு அழகு தரும் பெடிக்யூர் வரை பயன்படுத்தலாம். எலுமிச்சை தோலில் அதிக அளவு கலோரிகள், கார்ப்ஸ், நார்ச்சத்து, … Read more ஆரஞ்சு தோல் பொடி ஆரஞ்சு தோல் பொடியின் பயன்கள் ஆரஞ்சு தோலில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்துள்ளது. இது இயற்கை அழகை விரும்பும் பெண்களுக்கு மிகச் சிறந்த அழகு சாதன பொருளாகும். … Read more முருங்கை இலை பொடி முருங்கை இலை பொடி பயன்கள் முருங்கையில் விட்டமின்கள், மினரல், அமீனோ ஆசிட்கள், வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம் மற்றும் புரோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. 10 கிராம் … Read more மருதாணி பொடி மருதாணி பொடி பயன்கள் மருதாணி பொடியானது இளநரையை தடுக்க அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனுடன் அவுரி பொடியை சேர்த்து பயன்படுத்தும் போது நம் கூந்தலுக்கு ஏராளமான நன்மைகள் … Read more ரோஸ் பொடி ரோஸ் பொடியின் பயன்கள் ரோஜாவிற்கு இயற்கையாகவே சருமத்தின் நிறத்தை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. ரோஜாவில் அதிகளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நல்ல ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். ரோஜா … Read more மண் சிகிச்சை மண்ணின் மகத்துவத்தை அறிந்து அதில் உள்ள மருத்துவ குணங்களை கொண்டு மண் சிகிச்சை முறைகளை சித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். பழங்காலங்களில் அனைத்து கிராமங்களிலும் மண் சிகிச்சை முறைகளை … Read more முகத்தில் உள்ள கருமை நீங்க வேண்டுமா? முக அழகு என்பது அனைவரும் விரும்பும் ஒன்றாகும். அதிலும் பெண்கள் முகத்தில் ஏதேனும் ஒரு சிறு பரு வந்தாலும் மிகவும் வேதனைப்படுவர். அநேக பெண்கள் வெள்ளை நிறத்தில் … Read more சர்க்கரை நோயில் இருந்து ஆரம்பத்திலேயே தப்பித்துக்கொள்ள… சர்க்கரைக்கேற்ற முருங்கை சர்க்கரை நோய் சர்க்கரை நோய் இன்றைய காலத்தில் அதிகளவில் காணப்படும் நோயாகும். நம் உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ … Read more உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் புழுக்கமான சீதோஷ்ண நிலை பெரும்பாலும் மே, ஜுனில் காணப்படுகிறது. வறட்சியான ஈரப்பதம் ஃபுளூ காய்ச்சலுக்கு ஈடான உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. மூக்கடைப்பு, டான்சில், குரல் வளை … Read more
தீபாவளி பெருநாள் கொண்டாட்டத்திற்கு இன்னும் சில தினங்களே எஞ்சியுள்ள நிலையில் தங்களது முன்னோர்களை வழிபாடு செய்வது இந்துக்களின் முதன்மை கடமையாகும். அவ்வகையில் மரணித்து விட்ட தங்களது உறவுகளை நினைவுக் கொள்ளும் வகையில் தீபாவளி பெருநாளின் முதல் நாளன்று கல்லறை வழிபாட்டை இந்துக்கள் மேற்கொள்வர். அதன் அடிப்படையில் இங்கு ஷா ஆலம், செக்‌ஷன் 21இல் உள்ள நிர்வணா நினைவு பூங்காவில் இந்துக்கள் துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்டது. 6ஆவது ஆண்டாக மேற்கொள்ளப்படும் இந்த துப்புரவுப் பணி சிலாங்கூர் கைலாசம் சமூகநல இயக்கம் (ஷா ஆலம் கைலாசம் காஸ்கேட்), சிலாங்கூர் மில்லினியம் சமூகநல இயக்கம், சிலாங்கூர் இந்திய சமூகநல சங்கம், சாய் சிவம் காஸ்கேட் இயக்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக இந்த துப்புரவுப் பணியை 3 இயக்கங்கள் முன்னெடுத்து வந்த நிலையில் தற்போது சாய் சிவம் காஸ்கேட் இயக்கம் தம்முடன் இணைந்து தோள் கொடுத்தது என்று சிலாங்கூர் மில்லினியம் சமூகநல இயக்கத்தின் தலைவர் டத்தோஶ்ரீ கே.சரவணன் தெரிவித்தார். மரணத்திற்கு பின்னர் துயில் கொள்கின்ற இந்த நினைவுப் பூங்காவில் இந்துக்கள் தங்களது உறவுகளை வழிபடுவதற்கு ஏதுவாக இந்த துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்டது என்று அவர் சொன்னார். தீபாவளி காலகட்டத்தில் மட்டுமல்லாது பிற நாட்களிலும் தங்களது உறவுகள் துயில் கொள்கின்ற நினைவுப் பூங்காக்களில் துப்புரவுப் பணி மேற்கொள்வது அவசியம் என்று டத்தோஶ்ரீ கே.சரவணன், சிலாங்கூர் கைலாசம் சமூகநல இயக்கத்தின் தலைவர் குனேந்திரன் ஆகியோர் தெரிவித்தனர். இந்த துப்புரவுப் பணியில் கோலசிலாங்கூர் புக்கிட் மெலாவத்தி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த ஷோபா செல்வராஜு, ஷா ஆலம் நகராண்மைக் கழக உறுப்பினர் எஸ்பி சரவணன் செல்வராஜு, சிலாங்கூர் இந்திய சமூகநல சங்கத்தின் தலைவர் தினாகரன், சாய் சிவம் காஸ்கேட் இயக்கத்தின் பன்னீர், பத்மா,உட்பட பொதுமக்களும் பங்கேற்றனர். By myBhaaratham - November 08, 2020 Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest No comments: Post a Comment Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) 'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை பினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங... மரணத்திலும் பிரியாத தம்பதியர் பூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச... சோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்!!! சேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும...
சமைப்பதில் எவ்வளவு சீனியர் ஆக இருந்தாலும், சமையலறை பற்றிய சில குறிப்புகள் சிலபேருக்கு தெரிஞ்சிருக்கும். சில பேருக்கு தெரியாமல் இருக்கும். உங்களுக்கு இதுவரை தெரியாத புத்தம்புதிய சமையலறைக்கு தேவையான 5 குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்களுக்கும் இந்த குறிப்புகள் எல்லாம் பயனுள்ளதாக தெரிந்தால் உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க. இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. எண்ணெய் காய்ந்த பிறகு அதில் கடுகு போட்டால், அந்த கடுகு கட்டாயம் படபடவென பொரிந்து கீழே தெறிக்கும். சில சமயம் நம்மேல் கூட விழுந்துவிடும். இப்படி எண்ணெயில் போட்ட கடுகு சிதறாமல் பொரிவதற்கு என்ன செய்யலாம். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, அந்த எண்ணெய் சூடாகும் போது ஒரு சிட்டிகை அளவு மஞ்சள் தூளை போட்டு விடுங்கள். அதன் பின்பு கடுகை எண்ணெயில் போட்டு தாளித்தால் கடுகு சிதறாமல் பொரியும். ட்ரை பண்ணி பாருங்க. வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு ஒரு பெரிய கஷ்டம் என்னவென்றால் நெய் எண்ணெய் ஊற்றி வைத்து இருக்கும் பாத்திரத்தை தேய்த்து சுத்தம் செய்வது தான். இப்படிப்பட்ட எண்ணெய் பிசுக்கு அதிகமாக இருக்கும் பாத்திரங்களை பல் தேய்க்கும் பேஸ்டை கொண்டு சுத்தம் செய்தால் சீக்கிரமே எண்ணெய் பிசுக்கு நீங்கி விடும். சமையலறையில் அடுக்கி வைத்திருக்கும் மளிகை ஜாமான்களில் 1 கிலோ வாங்கி வைத்தாலும் வண்டு பிடிக்கிறது. 100 கிராம் அளவு வாங்கி வைத்தாலும் வண்டுபிடிக்கிறது. இந்த பருப்பு வகைகள், அரிசி, தானியங்கள், அரைத்து வைத்திருக்கும் கோதுமை மாவு, ரவை, மைதா, இந்த பொருட்களை எல்லாம் பூச்சி வராமல் பாதுகாப்பது என்பது மிக மிக கஷ்டமான விஷயம்தான். இதற்க்கு ஒரு பெஸ்ட் டிப்ஸ். கொட்டாங்குச்சி, தேங்காய் துருவிய பின்பு, அந்த கொட்டாங்குச்சியை சிறு துண்டுகளாக உடைத்து வெயிலில் நன்றாக காய வைத்து விடுங்கள்‌. அதில் ஈரப்பதம் இருக்கக் கூடாது. இந்த சின்ன சின்ன கொட்டாங்குச்சிகளை அரிசி மூட்டையில், பருப்பு போட்டு வைத்திருக்கும் டப்பாவில், மாவு வகைகள் வைத்திருக்கும் டப்பாவில் போட்டு வைத்தால் அதில் பூச்சி அவ்வளவு சீக்கிரத்தில் வராதாம். இதனால்தான் அந்த காலத்திலேயே தேங்காய் நாரை எடுத்து பாத்திரம் தேய்க்க பயன்படுத்தினார்களோ? முழு வீடியோ பதிவு கிழே உள்ளது . Post navigation இடுப்புவலி, கை கால் வலி, குடைச்சலை உடனடியாக விரட்டியடிக்க இதை சாப்பிடுங்க ! இத சாப்பிட்டாலே போதும் இனிமே உடல் வலியிலிருந்து விடுபடலாம்.. அட இதையும் தெரிஞ்சு வச்சிக்கோங்க!! நிறைய காசும் & பணமும் மிச்சமாகும் ! இது கூடவா இதுவரைக்கும் தெரியாம இருக்கோம்..
தனித்தமிழ் நடை… மறைமலையடிகள் நடந்த பாதை. வ.சுப. மாணிக்கனார் சுட்டிய பாதை. மொழித் தூய்மை, ஒலித்தூய்மை கொண்டுத் தமிழைக் கண்ணெனக் காப்பது தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவரின் கடமை. தற்காலத்தின் பேச்சு வழக்கு அதிகமாக அயல் மொழி கலப்புடையதாக உள்ளது. பேச்சு மொழி சார்ந்து எழுதப்படும் படைப்பியலக்கியங்களிலும் அயல்மொழிக்கலப்பு என்பது தவிர்க்க முடியாதது ஆகிவிடுகிறது. பேச்சுத்தமிழும் எழுத்துத் தமிழும் வேறு வேறு என்ற நிலையை எய்திவிட்டால் பேச்சுத்தமிழ் ஒரு தமிழாகிவிடும். எழுத்துத்தமிழ் ஒரு தமிழாகிவிடும். எனவே பேச்சுத்தமிழும் எழுத்துத்தமிழும் ஒன்றைஒன்று அதிக அளவில் சார்ந்தே இயங்கவேண்டும். செய்யுள் நடை, வழக்கு நடை ஆகிய இரண்டு நடைகள் தொன்று தொட்டே வந்துகொண்டுள்ளன. செந்தமிழ், கொடுந்தமிழ் ஆகிய இரண்டும் இருந்துள்ளன. செய்யுள் நடையில் திசைச் சொற்கள் குறைவு. வழக்கு நடையில் திசைச் சொற்கள் கலப்பது ஏற்கத்தக்கது. கொடுந்தமிழைத் தாண்டி, வழக்குத் தமிழைத்தாண்டி செய்யுள் நடை இன்னமும் நிலைத்து நிற்கிறது. அன்றைக்கு எழுதிய சிலப்பதிகாரம் இன்றைக்கும் புரிகிறது என்றால் எழுத்துநடைத் தமிழ் உயரிய நிலையில் பேணப்பட்டு வந்துள்ளது என்றே பொருள். இந்நிலையில் தமிழின் தூய்மையைக் காத்தல் வேண்டும் என்றால் பேச்சுத்தமிழில் அயல்மொழி வழக்குகளைக் குறைக்கவேண்டும். நல்ல தமிழ் பேசப்பட வேண்டும். நல்ல தமிழில் எழுதப்பட வேண்டும் திரையிசைப்பாடல்களில் அளவுக்கதிகமான ஆங்கிலக் கலப்பு, அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் பேச்சுமொழியில் அளவுக்கு அதிகமான அயல் மொழிக் கலப்பு. தொலைக்காட்சித்தமிழில், வானொலித்தமிழில், திரைத்தமிழில் அயல்மொழிக் கலப்பு அதிகம். தமிழில் வார்த்தைகள் குறைவல்ல. தமிழைப் படிப்பவர்கள் குறைவு. தமிழில் படிப்பவர்கள் குறைவு. தமிழைத் தமிழாகக் கற்காதவர்கள் ஒலிபரப்பு நிலையங்களில் இருக்கிறார்கள். அவர்களுக்கு வயிற்றுப் பிழைப்பு நடத்த தமிழ் தன்னை வதைத்துக்கொள்கிறது. தமிங்கிலிஷ் வளருகிறது, தமிழ் தேய்கிறது. எனவே மக்கள் தளத்தில் இயங்குபவர்கள், ஊடகங்களில் இயங்குபவர்கள் நிச்சயமாக தமிழ் படிக்க ஓராண்டு நல்ல தமிழ் கற்பிக்கும் சான்றிதழ்க் கல்வியை அரசு உடனே துவங்கவேண்டும். அதனைப் படித்த பின்பே ஊடகத்துறையில் நுழைய இயலும் என்று சட்டம் வகுக்கப்பட வேண்டும். தமிழ்வழிக் கல்வி – இது ஏற்க முடியாத கல்வி முறையாக இன்றைக்கு ஆகிவிட்டது. தமிழாசிரியர்கள் ஆங்கிலத்தில் ஒரு பாடம் எடுக்க வேண்டும் என்ற கட்டளை பல்வேறு உலகப் பல்கலைக்கழகங்களில் இன்றைய தேவையாக இருக்கிறது. அவ்வாய்ப்புகளுக்குச் சிலர் செல்லட்டும். பலரும் தமிழை நல்ல தமிழாகப் படிக்கட்டும். தமிழ் படிக்க வரும் மாணவர்கள் எந்த பட்டப்படிப்பிலும் இடம் கிடைக்காதவர்களாக தமிழுக்குத் தள்ளப்பட்டவர்களாக இருக்கிறார்கள். நல்ல பட்டப்படிப்பில் சேருவோர்கள் தமிழை விரும்பா நிலை இருக்கிறது. இந்த நிலை மாற தமிழ் படித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் உறுதி செய்யப்பட வேண்டும். தமிழ் சார்ந்த உயர்கல்வி நிறுவனங்கள் தமிழ் படித்தவர்களுக்கான பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கவேண்டும். தமிழ் தாய்மொழி. அது இல்லாமல் தமிழர் இல்லை. ஆனால் அதனை மறந்து வீட்டிலும் தமிழ் பேசுவதைக் குறைத்துக் கொண்டுவருகிறது தமிழ்க் குடும்பங்கள். இந்நிலை மாறவேண்டுமானால் மீண்டும் ஒரு புத்தெழுச்சி உருவாக வேண்டும். இங்குள்ள தமிழர் எல்லோரும் நன்னிலை எய்தும் நாள் எந்நாளோ! முனைவர் மு.பழனியப்பன் இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள். கருத்துக்கள் பதிவாகவில்லை- “தனித்தமிழும் இனித்தமிழும்” கட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com
‘எல்லாத்துக்கும் சீனாவோட’... ‘அந்த மார்கெட் தான் காரணம்’... ‘அதனை க்ளோஸ் பண்ண’... 'ஐ.நா., WHO -க்கு’... ‘கொந்தளித்த பிரதமர்’! முகப்பு > செய்திகள் > உலகம் By Sangeetha | Apr 03, 2020 07:26 PM உலகில் கொரோனா பரவ காரணமாக இருந்த, சீனாவின் இறைச்சி சந்தையை மூட கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார். சீனாவின் ஹூபெய் மாகாணம் வுஹான் நகரில் உள்ள ஹூனான் என்ற இடத்தில் கால்நடை- கடல் உணவு சந்தை உள்ளது. இங்கு கடல் உணவுகளுடன், பாம்பு, நாய், எலி, தேள், கரப்பான் பூச்சி, வவ்வால், முதலைகள், எறும்புத் தின்னி, ஒட்டகம் உள்ளிட்ட 122 விலங்குகளின் இறைச்சிகள் உணவுக்காக விற்கப்படுவதாகவும், இங்குள்ள ஏதோ ஒரு விலங்கில் இருந்து தான் இந்த கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு தொற்றியதாகக் சந்தேகிக்கப்படுகிறது. இதனால் இது ‘கிரவுண்ட் ஜீரோ’ மார்க்கெட் என்றழைக்கப்படுகிறது. இந்நிலையில் செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘உலகில் இதுபோன்ற சந்தைகள் எங்கு இருந்தாலும், அவை உடலுக்கும், நல்ல வாழ்க்கைக்கும் ஆபத்தானவை என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ளார். இந்த கால்நடை- கடலுணவு சந்தையில் இருந்து உருவான வைரசால், இன்று உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். உலக மக்களின் உயிரைக் காக்க உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக இந்த சந்தையை மூட கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார். ‘உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய இந்த சந்தைகள் மூலம், உலகம் முழுவதும் பலரும் கொரோனாவால் பிரச்சனைகளை சந்தித்து வருவது நாம் அறிந்த ஒன்று தான் என பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ளார். இது மிக பெரிய சவாலான விஷயம் தான். எனினும் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார். சீனாவில் புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் இல்லாததை அடுத்து, அங்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட நிலையில், மீண்டும் இந்த கால்நடை-கடல் உணவு இறைச்சிக் கடைகள் செயல்படத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுவரை உலகம் முழுவதும் கொரோனாவால் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். Tags : #CORONAVIRUS #CORONA next தொடர்புடைய செய்திகள் Australian PM Urges WHO & UN To Take Strict Action Against China's Wet Markets COVID-19: 102 New Positive Cases in TN, Total Number Now Stands at 411 1,049 பேருக்கு 'பாதிப்பு'... 5 பேர் 'பலி'... 'கொரோனா' பாதிப்பு 'கட்டுக்குள்' இருந்தாலும்... 'ஒரு மாதம்' ஊரடங்கு பிறப்பித்து 'பிரதமர்' அறிவிப்பு... ‘அத பண்றத தவிர வேறுவழியில்லை’.. இனி ஊரடங்கை மீறினால் ‘சட்டம் தன் கடைமையை செய்யும்’.. முதல்வர் அதிரடி..! 'கொரோனா பரவலுக்கு இது தான் காரணமா?'... டெல்லி நிஜாமுதீன் சம்பவம் குறித்து!... அமெரிக்கா பரபரப்பு கருத்து! 'ஒரே நாள்ல எல்லாம் முடிஞ்சிடுச்சு'... 'நேரில்' சென்று பார்ப்பதற்குள் 'இளம்பெண்ணுக்கு' நேர்ந்த 'துயரம்'... 'கதறும்' சகோதரர்... ‘அதிலிருந்து எல்லாம் கொரோனா பரவாது’... ‘அதற்கு ஆதாரம் இல்ல’... 'சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்’! 'கொரோனா வந்தாலும் வந்துச்சு'...'வேலையில்லா இளைஞர்களுக்கு வந்த வாய்ப்பு'... தமிழக அரசு முடிவு! India Records More Than 2300 Positive Cases While Death Toll on Rapid Rise! '20 வருடங்களில்' இல்லாத அளவுக்கு... திடீரென 'துப்பாக்கிகளை' வாங்கிக்குவித்த அமெரிக்கர்கள்... என்ன காரணம்? ‘8 மாத கர்ப்பம்’!.. ‘திடீர்ன்னு வந்த ஆர்டர்’.. 250கிமீ கார் டிராவல்.. ‘சல்யூட்’ போட வைத்த திருச்சி நர்ஸ்..! COVID-19: Bengaluru-based Startup Launches India’s First at-home Testing Kit! 'மாஸ்க்' அணிவதால் 'மற்றவர்களுக்கே' அதிக பாதுகாப்பு... நம்மைக் காக்க 'இது' கட்டாயம்... வெள்ளை மாளிகை 'அதிகாரி' தகவல்... 'சம்பளம் கொடுக்க பணம் இல்ல'...'36,000 ஊழியர்களுக்கு பெரிய அதிர்ச்சி'... பிரபல நிறுவனம் அதிரடி! மருத்துவர்கள் மீது 'கல்வீச்சு' நடத்திய மக்கள்... எல்லாத்துக்கும் காரணம் 'அந்த' வீடியோ தான்... 'அதிர்ச்சி' பின்னணி! 'டாஸ்மாக் கடைகள் உடைப்பு...' 'மதுபாட்டில்கள் திருட்டு...' 'டாஸ்மாக் மூடப்பட்டதால் தொடரும் குற்றங்கள்...' ‘டவுட் கேட்ட 6-ம் வகுப்பு மாணவி’... ‘வித்தியாசமாக வீட்டுக்கே வந்து’... ‘கணிதப் பாடம் நடத்திய ஆசிரியர்’... 'புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்'! 'நாங்கள் தகவல்களை மறைத்தோம் என்று சொல்வது வெட்கங்கெட்ட பொய்!'... அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு கடுமையாக கொந்தளித்த சீனா! 'ஊரடங்கை மீறுபவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள்'... கடும் 'எச்சரிக்கை' விடுத்த 'அதிபர்'... பிலிப்பைன்ஸில் 'நிலவரம்' என்ன?.... 'கொரோனா' விவகாரத்தில்... தொடர்ந்து 'மவுனம்' காக்கும் நாடு... 'இறுதியில்' வெளியான ரகசியம்?... மேலும் செய்திகளுக்கு ABOUT THIS PAGE This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Australian PM Scott Morrison urges WHO, UN to act China's wet markets | World News.
சூனியத்தின் மூலம் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்பதை ஒரு வாதத்துக்கு ஒப்புக் கொண்டாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைத்திருக்க முடியாது. அப்படிக் கூறும் ஹதீஸ்கள் எந்த நூலில் இடம் பெற்றிருந்தாலும் அது பொய்யான செய்தி தான் என்பதற்கு நாம் எடுத்து வைத்த ஆதாரங்களை மீண்டும் ஒருமுறை தொகுத்துப் பார்ப்போம். முதல் வாதம் மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்காக மனிதர்களில் இருந்தே அல்லாஹ் தூதர்களை அனுப்புகிறான். அவர்கள் எல்லா வகையிலும் மனிதர்களாக இருந்ததால் இறைவனின் தூதர்கள் என்று மக்கள் நம்பவில்லை. மக்கள் நம்புவதற்காக மனிதனால் சாத்தியமாகாத சில அற்புதங்களை இறைவனின் தூதர்கள் என்பதற்கு உரிய சான்றுகளாக இறைவன் கொடுத்தனுப்பினான். மனிதர்கள் செய்ய முடியாத இந்தக் காரியங்களைச் செய்து காட்டுவதைத் தான் இறைத்தூதர் என்பதற்குச் சான்றாக அல்லாஹ் வழங்கினான் என்று இறைத் தூதர்கள் வாதிட்டனர். மனிதனுக்குச் செய்ய முடியாத ஒரு காரியத்தை சூனியக்காரர்களும் செய்தால் இறைத் தூதர்களின் அற்புதம் அர்த்தமற்றுப் போய்விடும். அற்புதம் செய்த உம்மையே அதிசயமான முறையில் மனநோயாளியாக்கி விட்டார்களே என்ற விமர்சனம் நபிமார்களை நோக்கி எழும். இந்தக் காரணத்தினால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்திருக்க முடியாது. இரண்டாவது வாதம் தாம் செய்ததை இல்லை என்று மறுக்கும் அளவுக்கு நபிகள் நாயகத்தின் மனநிலை பாதிப்பு இருந்தது என்று சூனியம் பற்றிய ஹதீஸ்கள் கூறுகின்றன. இப்படி இருந்தால் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் தன்னை இறைத் தூதர் என்று கூறுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள். மன நிலை பாதிப்பின் காரணமாக தன்னை இறைத் தூதர் என்கிறார்; இவராக எதையோ சொல்லி விட்டு இறை வேதம் என்கிறார் என்ற எண்ணம் தான் மக்களிடம் ஏற்படும். இதனால் இஸ்லாத்தின் வளர்ச்சி அப்போதே தடைப்பட்டிருக்கும். ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை என்பதிலிருந்தே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எல்லா நேரத்திலும் மிகத் தெளிவான சிந்தனையுடன் இருந்துள்ளனர் என்பது உறுதியாகிறது. இறைத் தூதர் என்று நிரூபிப்பதற்காக அற்புதங்களை வழங்கி அருள் புரிந்த இறைவன் இறைத் தூதரின் மனநிலையைப் பாதிக்கச் செய்து இஸ்லாத்தின் பால் வராமல் மக்களை விரட்டியடிக்க மாட்டான். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டிருக்க முடியாது என்பது உறுதி. மூன்றாவது வாதம் திருக்குர்ஆனை இறை வேதம் என்று மக்கள் நம்புவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக்கி அவர்கள் மூலம் மிக உயர்ந்த இலக்கியத் தரத்தில் வேதத்தை வழங்கினான். (பார்க்க திருக்குர்ஆன் 29:48) அப்படி இருக்கும் போது வேதத்தில் சந்தேகம் ஏற்படுத்தும் வகையில் அவர்களின் மன நலம் பாதிக்கும் எந்த நிலையையும் ஏற்படுத்த மாட்டான் என்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதை நாம் மறுக்கிறோம். நான்காவது வாதம் நபிகள் நாயகத்தின் உள்ளத்தைப் பலப்படுத்திடவே குர்ஆனை சிறிது சிறிதாக அருளினோம் என்று அல்லாஹ் கூறுகிறான் (திருக்குர்ஆன் 25:32) ஒட்டு மொத்தமாகக் குர்ஆன் அருளப்பட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்த போதும் அதை இறைவன் நிராகரிக்கிறான். ஒட்டு மொத்தமாக அருளினால் உள்ளத்தில் பலமாகப் பதியாது என்பதையே காரணமாகக் கூறுகிறான். இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தைப் பலப்படுத்துவதன் மூலமே குர்ஆன் பாதுகாக்கப்பட்டதாக அல்லாஹ் கூறுவதற்கு முரணாக மேற்கண்ட ஹதீஸ்கள் அமைந்துள்ளன. எங்கோ ஒருவன் இருந்து கொண்டு ஆட்டிப் படைத்து இல்லாததை இருப்பதாகக் கருதும் அளவுக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளம் பலவீனமாக இருந்தது என்று இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன. எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்படவே முடியாது. ஐந்தாவது வாதம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத் தூதர் அல்ல என்று விமர்சனம் செய்த எதிரிகள் அவர்களைப் பைத்தியம் என்றும் சூனியம் வைக்கப்பட்டவர் என்றும் கூறினார்கள். ஆனால் இவ்வாறு கூறுவோர் அநியாயக்காரர்கள் என்று அல்லாஹ் மறுக்கிறான். சூனியம் செய்யப்பட்டவர் என்று எதிரிகள் விமர்சனம் செய்த போது அல்லாஹ் அதைக் கண்டித்திருக்கிறான் என்றால் அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட முடியாது என்பது விளங்கவில்லையா? குர்ஆனுடன் நேரடியாக மோதுவதால் நபிகள் நாயகத்துக்குச் சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஹதீஸ்கள் பொய்யானவை என்பது உறுதி. ஆறாவது வாதம் திருக்குர்ஆனை அல்லாஹ் பாதுகாப்பதாகக் கூறுகிறான். எதிரிகள் சந்தேகம் கொள்ள இடமில்லாத வகையில் பல ஏற்பாடுகளையும் அல்லாஹ் செய்திருக்கிறான். இந்த நிலையில் நபிகள் நாயகத்துக்கு மன நோய் ஏற்பட்டால் அந்தப் பாதுகாப்பு உடைந்து விடுகிறது. அவர்களின் உள்ளம் தெளிவற்றதாக ஆகிவிடுகிறது. பாத்திரம் ஓட்டையாகி விட்டால் ஒழுகத் தான் செய்யும் என்று தான் மக்கள் கருதுவார்கள். அந்த நிலையை இறைவன் ஏற்படுத்த மாட்டான் என்பதால் இது பொய்யான செய்தியாகும் இப்படி ஆதாரங்களை எடுத்துக் காட்டியே சூனியம் பற்றிய ஹதீஸ்களை நாம் மறுத்துள்ளோம். இந்த வாதங்கள் சிலவற்றுக்கு மறுப்பு என்ற பெயரில் இஸ்மாயீல் சலபி தெரிவித்த அனைத்துமே அபத்தமாக அமைந்துள்ளதையும் இத்தொடரில் நாம் நிரூபித்துள்ளோம். சூனியம் பற்றிய ஹதீஸ்களை நாம் விமர்சனம் செய்த போது, அந்த ஹதீஸ்கள் முரண்பட்ட தகவல்களைக் கூறுகின்றன; எனவே அதில் சந்தேகம் அதிகரிக்கிறது என்று கூறி, அந்த அறிவிப்புக்களுக்கு மத்தியில் முரண்பாடுகள் இருப்பதையும் நாம் சுட்டிக் காட்டி இருந்தோம். அந்த அறிவிப்புக்களில் எந்த முரண்பாடும் இல்லாவிட்டாலும் அந்த ஹதீஸ்கள் குர்ஆனுடன் நேரடியாக மோதுவதால் அவற்றை ஏற்க முடியாது. சுற்றி வளைத்து சமாளித்தாலும், அவற்றுக்கிடையே எந்த முரண்பாடும் இல்லாவிட்டாலும் அவை ஏற்கத்தக்கதாக ஆகாது. மேலே நாம் சுட்டிக் காட்டிய அனைத்து ஆதாரங்களுடனும் இவை மோதுவது தான் முக்கியக் காரணம். மேலதிக விளக்கத்துக்காக நாம் சுட்டிக் காட்டிய அந்த முரண்பாடுகளுக்கும் இஸ்மாயில் ஸலபி பதிலளிக்கின்றார். அதை இன்ஷா அல்லாஹ் வரும் இதழில் பார்ப்போம்.
மந்திரங்கள் என்பவை நீண்ட நெடிய வாக்கியங்களோ கவிதைகளாகவோ இருக்க வேண்டியது இல்லை. ஓரிரு எழுத்துக்களிலேயே கூட மந்திரங்கள் உள்ளன. இவை பீஜ மந்திரங்கள் என்று அழைக்கப் படுகின்றன. அதாவது மனித முயற்சிக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியின் விதை இந்த ஓரிரு எழுத்துக்களில் அமைந்துள்ள மந்திரங்கள் ஆகும். உதாரணமாக இயற்கையில் ஒவ்வொரு சக்தியை குறிக்கவும் ஒரு சொல் அல்லது மந்திரம் உள்ளது. உதாரணமாக ஐம்பூதங்கள் ஒவ்வொன்றையும் குறிக்கும் மந்திரங்களைச் சொல்லலாம். ஹம் (ஆகாயம்), யம் (காற்று), நெருப்பு (ரம்), நீர் (வம்) மற்றும் லம் (நிலம்) ஆகியவை ஆகும். இது போல ஓரிரு எழுத்துக்களிலேயே ஏராளமான மந்திரங்கள் உண்டு. எல்லா மந்திரத்துக்கும் தாயாக கருதப்படும் மந்திரம் ஓம் என்னும் மந்திரம் ஒரே எழுத்தில் அமைந்ததே. மநநாத் த்ராயதே இதி மந்த்ர: – மனனம் செய்வதால் காப்பாற்றுவதே மந்திரம் என்றொரு சொல்வழக்கு உண்டு. பீஜ மந்திரங்களை மனனம் செய்வதால் அந்தந்த மந்திரத்துக்குரிய சக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு தேவதைக்கும் ஒரு பீஜ மந்திரம் உண்டு, அல்லது ஒவ்வொரு பீஜ மந்திரத்துக்கும் ஒரு தேவதை உண்டு. உதாரணமாக சக்திக்கு (மாயை) உரிய மந்திரம் ஹ்ரீம் ஆகும். ஹ்ரீம் என்பதையும் பிரித்தால் ஹ + ர + இ + ம என்று ஆகிறது. ஹ என்பது ஆகாயம் (ஹம்), ர என்பது நெருப்பு (ரம்), இ என்பது அர்த்தநாரீஸ்வரர், ம என்பது நாதபிந்து என்று ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு சக்தியைக் குறிக்க, அந்த சக்தியெல்லாம் திரண்டு இந்த மந்திரத்தில் இருப்பதாகக் கருதப் படுகிறது. நான் என்ற சொல்லைக் குறிக்க சம்ஸ்க்ருதத்தில் அஹம் என்ற சொல்ல வேண்டும். அஹம் என்பதைப் பிரித்தால் அ என்பது ப்ரம்மத்தையும் ஹ என்பது மாயையும் குறிக்கும். ப்ரம்மமும் மாயையும் சேர்ந்ததுதான் நான் என்று ஆச்சரியமாக விளக்கம் கூறுவர். மந்திர சாதனை என்பது ஆன்மீகத்தில் தனி துறை ஆகும். இதில் ஈடுபடுவோர் சம்ஸ்க்ருத எழுத்துக்கள் உச்சரிப்புகள் ஆகியவற்றை தெளிவாக தெரிந்த பின்னரே ஈடுபட இயலும். மேற்கத்திய மொழிகளில் எழுத்து (alphabets), உச்சரிக்கும் ஒலி ஆகியவை முதிராத நிலையிலேயே பெரும்பாலும் மேற்கத்திய மொழிகள் உள்ளன. அதனால் அவற்றில் எழுத்துக்கும் ஒலிக்கும் தொடர்பு மிக நெருங்கியதாக இல்லை. ஆனால் கிழக்கத்திய நாட்டு மொழிகளில் குறிப்பாக இந்திய மொழிகள் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை. இவற்றில் எழுத்துக்கும் உச்சரிப்புக்கும் நெருங்கிய துல்லியமான தொடர்பு உள்ளது. அதனால் மந்திரங்கள் இயற்றுவது அவற்றை எழுதி உச்சரிப்பது சாத்தியம் ஆகிறது. அதிலும் சம்ஸ்க்ருதத்தில் எழுத முடியாத உச்சரிப்பில் மட்டுமே உள்ள ஒலிகள் என்று எதுவும் இல்லை. எல்லா உச்சரிப்புகளுக்கும் சம்ஸ்க்ருதத்தில் அக்ஷரங்கள் அல்லது எழுத்துக்கள் உள்ளன. அதே சமயம் மந்திரங்களை எழுதி வைக்கும்போது, சம்ஸ்க்ருத எழுத்துக்களை எழுத ஏற்றதான தேவநாகரி, கிரந்தம், தெலுங்கு, கன்னடம் போன்ற ஏதாவது லிபியை தேர்ந்தெடுப்பது அவசியம். ஏனெனில் தமிழ் போன்ற ஏனைய மொழி லிபிகளில் சம்ஸ்க்ருத உச்சரிப்புகள் எல்லாவற்றையும் சரியான படி எழுத இயலாது. மந்திரங்கள் உச்சரிக்கும்போது தவறு ஏற்படுவது குறித்து ராமாயணத்தில் சுவாரசியமான ஒரு கதை உள்ளது. பிரமனைக் குறித்து தவம் செய்த கும்பகர்ணன், அவர் தோன்றிய போது மரணமற்ற வாழ்வைக் குறிக்கும் சொல்லான நித்யத்வம் வேண்டும் என்று கேட்கும் வேளையில் வாய்குளறி நித்ரத்வம் வேண்டும் என்று தூக்கத்தை வரமாகக் கேட்டு விட்டானாம். அதனால் அவன் வாழ்நாளை தூக்கத்திலேயே கழித்தான். ஆகவே உச்சரிப்பு மிகவும் அவசியம். தற்காலத்தில் நிறைய தமிழ் பக்தி புத்தகங்களில் மந்திரங்களை வெளியிடுகிறார்கள். இவற்றில் தமிழ் லிபியில் சம்ஸ்க்ருத மந்திரங்களைத் தருகிறார்கள். இவ்வாறு தமிழில் சம்ஸ்க்ருத உச்சரிப்புகளை எழுதிப் படிப்பது சரியாக வராது. அதே போல தமிழ் மொழியில் உள்ள தேவாரம் திருவாசகம் போன்ற துதி நூல்களை நாகரி லிபியில் எழுதிப் படிப்பதுவும் கடினம். ஆகவே நேரடியாக மூல மொழியில் படிப்பதே நல்லது. இவற்றில் சில முக்கிய மந்திரங்கள் தகுந்த குருவிடம் கற்றபின் பல வருட ஆன்மீக சாதனைக்கு பின்னரே பலன் தரும். எந்த வித பயிற்சியும் இல்லாமல் மந்திரங்களை ஜபம் செய்வதால் பலன் இல்லை. சில சமயம் விபரீத பலன்கள் ஏற்படுவதைத் தவிர்க்க, புத்தகங்களில் அச்சிடும்போது வேண்டுமென்றே மந்திரங்களை சிறிது சுருக்கியும், முழுவதும் தராமலும் இருந்து விடுவது வழக்கமாம். ஆகவே, மந்திரங்களை மூல மொழியில் ஒரு குருவிடம் நேரடியாக சரியான உச்சரிப்புடன் கற்பதே சிறந்த வழி. எழுத்து, சொல், த்வநி, மந்திரம், மாத்ருகா, வர்ணம் முந்தைய பதிவு ← சம்ஸ்க்ருதத்துக்கும் தமிழ் மொழிக்கும் ஒரே இலக்கணம் – சில முயற்சிகள் அடுத்த பதிவு ” अभिज्झानम् ” – சம்ஸ்க்ருதத்தில் குறும்படம் → Write a Reply or Comment உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன கருத்து Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)
1. இந்திய காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டத்தின்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஐக்கிய முன்னணி தந்திரத்தின் முதல் கட்டம் போல்ஷ்விக் புரட்சி 1917இல் நடந்தது. உலகின் பல்வேறு பகுதிகளில் உதயமான கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து 1919இல் சர்வதேச கம்யூனிஸ்ட் அகிலம் உருவானது. 1920இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உதயமானது. இந்தியாவில் காலனியாதிக்கத்தை எதிர்த்து முதலாளி வர்க்கத்தின் தலைமையில் விடுதலை போராட்டம் நடந்து கொண்டிருந்த நேரம் அது. உதயமானவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன் ஒரு மிகப் பெரிய கேள்வி எழுந்தது. இந்த காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டத்தில் முதலாளிகளுடனும், சமூகத்தின் பிற பிரிவினருடனும் கட்சியின் பங்கு பாத்திரம் என்னவாக இருக்க வேண்டும்? இந்தப் போராட்டத்தில் இவர்களுடன் இணையும் இடத்தில் கட்சியின் யுத்த தந்திரம் என்னவாக இருக்க வேண்டும்? என்ற கேள்வி பெரிதாக எழுந்து நின்றது. அந்த நேரத்தில் 1928இல் நடந்த ஆறாவது சர்வதேச அகிலத்தில் காலனித்துவம் குறித்த ஆய்வறிக்கையின் மீது விவாதம் நடத்தப்பட்டு, ”காலனியாதிக்கத்திற்கு உட்படுத்தப்படும் நாடுகளின் விவசாயிகள் மிகவும் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படுகிறார்களே தவிர, பாட்டாளி வர்க்கமாக்கப்படவில்லை” என்ற முக்கிய முடிவிற்கு வந்தது. மிகப் பெருமளவில் விவசாயக் கூலிகள் இருந்தாலும், விவசாயம் முதலாளித்துவ மயமாக்கப்படுகிறது என்ற முடிவிற்கு அகிலம் வரவில்லை. அதன் காரணமாக, காலனியாதிக்க நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இதனை எதிர் கொள்வதற்கு பொருத்தமான தந்திரங்களோ உத்திகளோ இல்லாமல் போனது. அப்போது இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடுமையான அடக்குமுறைகளை சந்தித்ததோடு, பல்வேறு சதி வழக்குகளையும் சந்தித்தனர். பெஷாவர் சதி வழக்கு (1922-27), கான்பூர் சதி வழக்கு (1924) மற்றும் மீரட் சதி வழக்கு (1929). முக்கிய தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதால் கட்சியின் வளர்ச்சி தடை செய்யப்பட்டாலும், இளைஞர்கள் மத்தியில் கம்யூனிஸ்டுகளுக்கு மரியாதையும் கட்சியின் பால் ஈர்ப்பும் ஏற்பட்டது. பகத் சிங்கும் அவரது தோழர்களும் இந்துஸ்தான் சோசலிச குடியரசு படையில் இருந்து ஈர்க்கப்பட்டவர்கள் தாம். பகத் சிங் தூக்கிலிடப்பட்ட சில நாட்களில் நடைபெற்ற கராச்சி காங்கிரசில் தான் சுதந்திர இந்தியா குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுதந்திர இந்தியாவின் கருத்துருவாக்கத்தில் மதச்சார்பின்மை, ஜனநாயகம், சமத்துவம் என்ற முற்போக்குக் குணாம்சங்கள் இடம்பெற்றிருந்தன. வயதிற்கு வந்த அனைவருக்கும் வாக்குரிமை, சாதி, இன, பாலின வேறுபாட்டினை கடந்து அனைத்து பிரஜைகளும் சட்டத்தின் முன் சமம் என்பன போன்ற முற்போக்குக் கருத்துகளும் அதில் இடம் பெற்றிருந்தன. ஜெர்மனியில் நாஜிக்களின் ஆதிக்கம் துவங்கிய நேரத்தில் 1935இல் ஏழாவது அகிலம் கூடியது. அகிலம், பாசிஸ்ட்டுகளுக்கு எதிராக ஒரு ஐக்கிய முன்னணி அமைக்கப்பட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தது. அதே போன்று காலனியாதிக்க நாடுகளில் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த போராட்டத்தில் பல்வேறு வர்க்கங்களைச் சார்ந்த மக்கள் பிரிவினரையும் உள்ளடக்கிய ஒரு ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தது. இந்தியச் சூழலில் இது தத்-பிராட்லி (Dutt-Bradley thesis) ஆய்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டது. அப்போதும் கம்யூனிஸ்டுகளில் ஒரு பிரிவினர் காங்கிரசில் இரகசியமாக (காங்கிரசிலும், கம்யூனிஸ்ட் கட்சியிலும் உறுப்பினர் என்ற இரட்டை உறுப்பினர் அந்தஸ்த்துடன்) இணைந்து வேலை செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியும் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியுடன் இணைந்து செயல்பட்டது. இதனால் காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டத்தின் போது ஒரு வலுவான இடதுசாரி கருத்தோட்டம் எழுச்சி பெற்றது. ரஜினி பாமி தத்தும் பென் பிராட்லியும் ஜவஹர்லால் நேருவை சுவிட்சர்லாந்தில், அவருடைய மனைவியின் மருத்துவத்திற்காக போயிருந்த இடத்தில், சந்தித்துப் பேசிய பின்னர் இந்த ஒருங்கிணைப்பு இன்னும் வலுவானது. ஏகாதியத்திய எதிர்ப்பு மக்கள் ஐக்கிய முன்னணிக்கான பொருளாரத் திட்டத்திற்கு தத்-பிராட்லி அறிக்கை வைத்த முன்மொழிவில், ”வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்களின் ஊதியத்தினை குறைப்பதை தடுத்து நிறுத்துவது, தொழிலாளர்களை வேலையில் இருந்து தூக்குவது போன்றவை இல்லாமல் தொழிலாளர்களுக்கு வேலைநிறுத்தத்திற்கான உரிமை, தேவைக்கேற்ற குறைந்தபட்ச ஊதியம், எட்டு மணி நேர வேலை, வாடகையை பாதியாகக் குறைப்பது, ஏகாதிபத்திய ஆட்சியாளர்களும், உள்நாட்டு இளவரசர்களும், ஜமீன்தாரர்களும், லேவாதேவிக்காரர்களும் விவசாயிகளிடம் இருந்து நிலங்களை கடன்களுக்காக பறிப்பதை தடுத்து நிறுத்துவது” போன்றவை உள்ளடக்கப்பட்டிருந்தன. 1930 பெருமந்தத்தின் போது, விவசாயிகள் கடுமையான நெருக்கடிக்குள்ளாயினர். பெரும் கடனுக்கு ஆளாகினர். விவசாயத்தை விட்டு நகரங்களை நோக்கி விவசாயிகள் இடம் பெயர்ந்ததன் காரணமாக வேலைக்குக் காத்திருக்கும் தொழிலாளர் படை வீங்கிப் போனது. ஐக்கிய முன்னணி தந்திரம் மட்டுமல்லாமல், இந்திய புறச் சூழலும் காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டத்தை மேலும் வலுவடையச் செய்தது. கம்யூனிஸ்ட் இயக்கம் விவசாயிகளிடையேயும் தொழிலாளர்களிடையேயும் வலுவடைந்தது. நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்களுக்கு எதிரான பிரஜா (குடிமக்கள்) இயக்கம் மறு பகுதியில் பெரிய அளவில் எழுந்தது. அங்கும் கம்யூனிஸ்டுகளே பல பகுதிகளில் தலைமை தாங்கி வழிநடத்தினர். இந்த எழுச்சிகள் 1930-களின் இறுதியில் நடைபெற்ற மாகாண சபை தேர்தல்களில் காங்கிரஸின் வெற்றிக்கு வழிவகுத்தது. அந்த தேர்தல்களில் பல கம்யூனிஸ்டுகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சோவியத் யூனியன் மீது ஜெர்மனி தாக்குதல் நடத்திய போது, நமது போராட்டத்தின் தன்மை மாறிவிட்டது என்று கம்யூனிஸ்ட் கட்சி முடிவிற்கு வந்தது. இதனை காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியும், காங்கிரசும் அதிகாரப்பூர்வமாக நிராகரித்தன. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை அறிவித்தன. ஐக்கிய முன்னணி தந்திரத்தின் இந்த கட்டம் சோவியத் யூனியன் மீது ஜெர்மனி தாக்குதல் நடத்திய போது முடிவிற்கு வந்தது. வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கு எதிரான காலனியாதிக்க அரசின் ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக காங்கிரஸில் அங்கம் வகித்த பல கம்யூனிஸ்டுகளும் நீண்ட காலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். ஆனால், வெள்ளையனே வெளியேறு இயக்க தீர்மானத்தை கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்ததன் காரணமாக, அவர்கள் அடையாளம் காணப்பட்டு, காங்கிரஸிலிருந்து வெளியேற்றப்பட்டனர். நாடு சுதந்திரத்தை நோக்கி நகர்ந்தபோது, காங்கிரஸில் உள்ள கம்யூனிஸ்டுகளுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டி வந்து விடுமோ என்ற அச்சமும் முதலாளித்துவ காங்கிரஸ் தலைமைக்கு பெரிய அளவில் இருந்தது. 2. சுதந்திரத்திற்குப் பின் அமைந்த இந்திய அரசு குறித்த கட்சியின் மதிப்பீடு சுதந்திரத்தின் போது, புதிய அரசின் தன்மை எப்படி இருக்க வேண்டும்? என்பதும், ஆளும் கட்சியுடன் கம்யூனிஸ்டுகளின் உறவு எப்படி இருக்க வேண்டும்? என்ற கேள்வியும் முன்னுக்கு வந்தது. இது குறித்தெழுந்த கடுமையான விவாதம் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் பிளவினை ஏற்படுத்தியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவார்த்த நிலைப்பாடு அதன் கட்சி திட்டத்தில் பொதிந்துள்ளது. ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சிக்குள் புரட்சிக்கு முன்பு நடந்த விவாதத்தின் போது லெனின் எடுத்த நிலைப்பாட்டிலிருந்து தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு எடுக்கப்பட்டது. வரலாற்றில் எந்தெந்த நாடுகளில் எல்லாம் முதலாளித்துவம் தாமதமாக போராட்டத்தில் இணைந்ததோ, அங்கெல்லாம் நிலப்பிரபுத்துவ சொத்து மீதான தாக்குதல் முதலாளித்துவ சொத்து மீதான தாக்குதலாக மாறிவிடும் என்ற பயத்தில் நிலப்பிரபுத்துவ-எதிர்ப்பு ஜனநாயகப் புரட்சியை நடத்தும் திறனை முதலாளிகள் பெற்றிருக்கவில்லை என்பதுதான் லெனினின் வாதம். எனவே, விவசாயிகளின் ஜனநாயகப்பூர்வமான விருப்பங்கள் பூர்த்தி செய்யப்பட முடியாது. தொழிலாளி வர்க்கம் விவசாயிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, நிலப்பிரபுத்துவ சொத்துக்களை உடைத்து, நிலப்பிரபுத்துவ சலுகைகளை அடித்து நொறுக்கி, நில மறுவிநியோகம் செய்யும் புரட்சியினை நடத்தும்போது மட்டுமே, ஜனநாயகப் புரட்சி முழுமை பெறும். அதிலிருந்து சோசலிசத்தை நோக்கி நகர முடியும். நிலச் சீர்திருத்தங்கள் மூலமாக உள்நாட்டுச் சந்தையின் அளவை விரிவுபடுத்த முடியும். இதன் மூலம், விவசாயத்தின் வளர்ச்சியை தீவிரமாக விரைவுபடுத்த முடியும். இருபதாம் நூற்றாண்டில் அனைத்து மூன்றாம் உலக நாடுகளின் புரட்சிகர திட்டத்திலும் லெனினின் நிலைப்பாடே ஏதேனும் ஒரு வகையில் பொதிந்திருந்தது. சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்திய அரசாங்கம் நில மறு விநியோகத்தை தவிர்த்தது என்பதுடன், உயர் தட்டு விவசாயிகளும், ஜமீந்தார்களும் தங்கள் நிலங்களை முதலாளித்துவ விவசாயமாக மாற்றுவதை ஊக்குவித்தது. இதுவே முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவத்துடன் சமரச உடன்பாடு செய்து கொண்டது என்பதை நிரூபிக்கப் போதுமானது. சுதந்திரத்திற்குப் பின் உருவான இந்திய அரசு, பெருமுதலாளிகளின் தலைமையிலான முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ அரசு என்பதால், அது முதலாளித்துவ வளர்ச்சிக்கு வழிவகுத்தது. இதன் காரணமாக கிராமங்களில் நிலப்பிரபுக்களும் விவசாய முதலாளித்துவமும் கலந்திருக்கும் நிலை ஏற்பட்டது. எனவே, பாட்டாளி வர்க்கத்தின் கடமை என்பது, விவசாயிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு ஒரு ஜனநாயகப் புரட்சியை நடத்தி, இந்த நிலப்பிரபுத்துவ – முதலாளித்துவ அரசாங்கத்தினை மாற்றி, ஒரு மாற்று அரசாங்கத்தை உருவாக்கி, அதிலிருந்து சோசலிசத்திற்கு நகர்வது என்பதே ஆகும். அதே நேரத்தில், முதலாளித்துவ வர்க்கம் ஏகாதிபத்தியத்திற்கு அடிபணியாமல், ஒப்பீட்டளவில் தன்னாட்சி பெற்ற ஒரு முதலாளித்துவப் பாதையைத் தொடரும் லட்சியங்களைக் கொண்டிருந்தாலும், அது பெருமளவில் வெளிநாட்டு நிதி மூலதனத்துடன் ஒத்துழைப்பதாகவும் உள்ளது என்றும் கட்சி மதிப்பீடு செய்தது. இதில் இரண்டு அம்சங்கள் கவனத்திற்குரியவையாகும். முதலாவது அம்சம் – முதலாளித்துவ வளர்ச்சியை நோக்கி நகரும்போது, இடதுசாரி அதிதீவிரவாதிகள் சித்தரிப்பது போல, முதலாளித்துவம் ஏகாதிபத்தியத்தின் கீழ் இல்லை என்பதோடு, அது எந்த வகையிலும் ஏகாதிபத்தியத்திற்கு அடிபணியவில்லை என்பதாகும். இது உண்மை என்பதற்கான சான்றுகள் -பொதுத்துறை உருவாக்கம், சோவியத் யூனியனின் உதவியுடன் பொருளாதார இறையாண்மை, பெருநகர மூலதனத்தின் கட்டுப்பாட்டிலிருந்து நாட்டின் இயற்கை வளங்களின் மீதான கட்டுப்பாட்டை மீட்டெடுத்தல், மற்றும் அயலுறவுக் கொள்கையில் அணிசேராமை போன்றவையாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உள்நாட்டில் முதலாளித்துவ வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது என்பதால் சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்திய அரசாங்கம் உலக முதலாளித்துவத்தின் முகாமில் இணைந்துவிட்டது என்பதல்ல என்பதுதான் இதற்குப் பொருள். இரண்டாவது அம்சம் – அரசு, முதலாளித்துவ மற்றும் நிலப்பிரபுக்களின் சொத்துக்களைப் பாதுகாப்பதில் அதன் வர்க்கத் தன்மையை வெளிப்படுத்தியபோதும், முதலாளிகளுக்கு மானியங்களையும் சலுகைகளையும் அள்ளி அள்ளி கொடுத்து, அவர்களை அரசியல் அதிகாரம் படைத்தவர்களாக மாற்றும் ஜங்கர் முதலாளித்துவத்திற்கு வழிவகுத்தாலும், முதலாளித்துவம் மற்றும் நிலப்பிரபுக்களின் நலன்களுக்காக மட்டுமே அது பிரத்தியேகமாக செயல்படவில்லை. அது அனைத்து வர்க்கத்தினருக்கும் மேலானதாக தன்னை காட்டிக் கொண்டது – தோற்றமளித்தது. அவ்வப்போது தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவாகத் தலையீடு செய்தது. புராதன மூலதனக் குவிப்பின் ஒரு பகுதியாக, முதலாளித்துவ விவசாயத்திற்காக நிலத்தை குத்தகைதாரரிடமிருந்து கைப்பற்றி நிலப்பிரபுக்கள் விவசாய முதலாளித்துவத்தை செய்ய வழிவகுத்தாலும், மறு புறம் புராதன மூலதனக் குவிப்பின் செயல்முறையை தடுக்கும் வகையில் நகர்ப்புற பெரு முதலாளித்துவம் விவசாயத்தையோ அல்லது கைவினைஞர்களின் கைவினைக் கலைகளையோ ஆக்கிரமிப்பதை தடுத்து நிறுத்தியது. மாறாக, கைத்தறி துறையின் சிறு உற்பத்தியாளர்கள் ஒரு பகுதி துணி உற்பத்தியை செய்வதற்கென்று ஒதுக்கியது. அதே போல, குலாக்களோ நிலப்பிரபுக்களோ மட்டும் பயனாளிகளாகிவிடாமல், விவசாயச் சந்தைகளில் தலையீடு செய்து விளைபொருட்களை லாப விலைக்கு வாங்கவும் ஏற்பாடு செய்தது. சர்வதேச சந்தையின் ஏற்ற இறக்கங்களிலிருந்து பாதுகாப்பளித்தல், மானிய விலையில் இடுபொருட்கள் கிடைத்தல், மானியத்துடன் கூடிய நிறுவன கடன் வசதிகள், அரசு நிறுவனங்களின் மூலம் புதிய நடைமுறைகள் மற்றும் விரிவாக்கச் சேவைகள், மற்றும் விதை ரகங்கள் கிடைத்தல் போன்ற விவசாயத்திற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது. இவற்றின் பெரும் பயன்களை கிராமப்புறங்களில் வளர்ந்து வரும் முதலாளித்துவ வர்க்கத்தினர் அடைந்தனர் என்றாலும், பெரும் எண்ணிக்கையில் இருந்த விவசாயிகளும் பயனடைந்தனர். ஏகாதிபத்தியத்தின் ஆசிர்வாதங்களின் தேவையின்றி, தொழில்நுட்பத்தைப் பெறுவதற்கு பெருநகர மூலதனத்துடன் அதிகரித்து வரும் ஒத்துழைப்பைப் பொருட்படுத்தாமல், பெருநகர மூலதனத்தையே கூட தியாகம் செய்து, இந்த முதலாளித்துவ வளர்ச்சி என்பது ஒருவிதமான தனித்தன்மையுடன் நடத்தப்பட்டது. இந்த விசித்திரமான குணாம்சத்தின் காரணமாக, காலனித்துவ எதிர்ப்புப் போராட்டத்தின்போது ஏகாதிபத்தியத்திற்கெதிராக ஒன்றிணைந்து போராடிய வர்க்க அணிகளுக்குள் இணைப்பை ஏற்படுத்த முடியாத அளவு இடைவெளி ஏற்படவில்லை. இதையே வேறுவிதமாகக் கூறினால், காலனித்துவ எதிர்ப்புப் போராட்டத்தின்போது வழங்கப்பட்ட உழுபவனுக்கு நிலம் போன்ற பல வாக்குறுதிகளை முதலாளித்துவம் மீறினாலும், டிரிஜிஸ்ட் ஆட்சி (dirigiste regime) – அதாவது ஒரு முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்தின் மீது வெறும் ஒழுங்குமுறை தலையீட்டுப் பாத்திரத்திற்கு மாறாக, ஒரு வலுவான அதிகாரபூர்வமான பாத்திரத்தை வகிக்கும் வகையில் அரசு இருந்த வரை, அது காலனித்துவ எதிர்ப்பு போராட்டத்தின் வாக்குறுதிகளை முற்றிலுமாக மீறவில்லை. அதனால்தான், கட்சி முதலாளித்துவ ஆட்சி முறைக்கு எதிராக இருந்தாலும், அதனுடைய பல்வேறு நடவடிக்கைகளை – வங்கிகளின் தேசியமயம், பொதுத்துறைகளின் உருவாக்கம், பொதுத்துறைகளை பயன்படுத்தி பெருநகர மூலதனத்தின் கைகளிலிருந்து இயற்கை வளங்களை மீண்டும் கைப்பற்றியது, அந்நிய செலாவணி ஒழுங்குமுறை சட்டம் போன்ற பிறவற்றையும் ஆதரித்தது. முதலாளித்துவம் வளர்த்துக் கொண்ட இந்த தனித்துவமான குணாதிசயத்தின் காரணமாக, அது முதலாளித்துவமே இல்லை என்று பலரை தவறாக நம்ப வைத்துள்ளது. அந்த தவறான புரிதலின் ஒரு பகுதிதான் இந்த பொருளாதார ஆட்சி முறையை ‘முதலாளித்துவத்தை நடைமுறைப்படுத்தாத அல்லது முதலாளித்துவத்தை ஆதரிக்காத வளர்ச்சி முறை’ என்று வகைப்படுத்துவதாகும். இது ஆளும் வர்க்கத்தின் குணாம்சத்தை அடையாளம் காணாத எதிர்மறையான விளக்கமாகும். அந்த தவறான புரிதலின் மற்றொரு பகுதிதான் ஆளும் வர்க்கத்தையும் அதன் வளர்ச்சிப் பாதையையும் அடிப்படையற்ற வகையில் – ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் அடையாளப்படுத்துகிறது. அது நகர்ப்புறத்தில் மற்றும் கிராமப்புறத்தில் உள்ள நடுத்தர வர்க்கத்தை அல்லது குட்டி முதலாளித்துவ வர்க்கத்தை, வசதி படைத்த விவசாயிகளை, முதலாளித்துவம் அல்லாத, சோசலிசம் அல்லாத ஒரு ‘இடைநிலை ஆட்சியின்’ பொதுவான வளர்ச்சிப் பாதையில் ஆளும் வர்க்கமாகப் பார்க்கிறது. வரலாற்று ரீதியாக, நடுத்தர வர்க்க மேலாதிக்கம் ஒரு நீடித்த நிகழ்வாக இருந்ததில்லை என்றாலும், போருக்குப் பிந்தைய உலகில் ஒரே நேரத்தில் முதலாளித்துவமும் சோசலிச முகாமும் இருப்பதன் காரணமாக அது நீடித்த நிகழ்வாக இருக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது என்று வாதிடுகிறது. இது தவறு என்று ஏற்கனவே பல நிகழ்வுகள் சுட்டிக் காட்டியுள்ளன. ஆனால் இந்த தவறான புரிதல்கள்தான் சுதந்திரத்திற்குப் பிந்தைய முதலாளித்துவ ஆட்சி முறையின் தனித்துவமான தன்மைக்கு சான்றாகும். 3. சர்வதேச நிதி மூலதன உருவாக்கப் பின்னணியில் இந்திய டிரிஜிஸ்ட் ஆட்சிமுறை கைவிடப்பட்டு நவ தாராளவாத அமலாக்கம் இந்த டிரிஜிஸ்ட் ஆட்சி முறையில் உள்ள அதன் உள்ளார்ந்த முரண்பாடுகளின் காரணமாக வெகுகாலத்திற்கு அதனை நீட்டிக்க முடியாது என்பது ஆரம்பம் முதலே தெளிவாகத் தெரிந்தது. அதனுடைய வளர்ச்சி என்பது உள்நாட்டுச் சந்தையை அடிப்படையாகக் கொண்டது. உள்நாட்டு சந்தையின் வளர்ச்சி விவசாயத் துறையின் வளர்ச்சியை, குறிப்பாக உணவு தானிய உற்பத்தியை, சார்ந்தது. ஒட்டுமொத்த கிராக்கி குறைவதன் காரணமாக பொருளாதாரம் மந்தமடைந்து விடக்கூடாது என்பதில் டிரிஜிஸ்ட் அரசு தலையீடு செய்து சரி செய்ய வேண்டும் என்பதால், தேவையான உணவு தானியங்களை நுகர்விற்கு வாங்கிய பிறகு, ஆலைகளில் தயாராகும் பொருட்களை, சேவைகளை வாங்குமளவிற்கு மக்களின் கையில் உபரியாக வாங்கும் சக்தி இருப்பதையும் உத்தரவாதப்படுத்த வேண்டும். ஏனென்றால் மக்களின் வாங்கும் சக்தி உபரியாக இருப்பதை, வாங்கும் சக்தியின் அதிகரிப்பை உறுதிப்படுத்தினால் மட்டுமே உள்நாட்டுச் சந்தையின் வளர்ச்சி சாத்தியமாகும். மக்கள் தொகை வளர்ச்சியை விட அதிகமான உணவு தானிய உற்பத்தி வளர்ச்சி, அதைவிட துரித உபரியின் வளர்ச்சி, அதன் மூலம் உள்நாட்டு சந்தையின் வளர்ச்சி என்பதுதான் டிரிஜிஸ்ட் ஆட்சி முறை. இந்தியாவில் இருபதாம் நூற்றாண்டின் துவக்கதில் சுதந்திரத்தின் போது தனிநபர் உணவு தானியம் கிடைத்தல் என்பது 150 கிலோ கிராமுக்கும் குறைவாக இருந்தது. டிரிஜிஸ்ட் ஆட்சியின் கீழ் இது 1980களின் இறுதியில் 180 கிலோ கிராமாக மாறியது. ஆனாலும், உணவு தானிய உற்பத்தியின் வளர்ச்சி வீதம், உள்நாட்டுச் சந்தையை விரிவுபடுத்தும் அளவுக்கு வேகமாக இல்லை. கடுமையான பணவீக்கத்தை ஏற்படுத்தாமல், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதத்தை சுமார் 3.5 முதல் 4 சதவிகிதத்திற்கு அதிகமாக உருவாக்க முடியாது. பணவீக்கம் என்பது தேர்தல் காலத்தில் அரசிற்கு பாதகமாக அமையும் என்பதால் அதனை தவிர்க்க வேண்டியிருந்தது. தற்போதைய உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் அந்த நேரத்தில் இருந்த மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்திற்கு சமமாக ஆண்டிற்கு 2 சதவீத வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதத்தைத்தான் தர முடிந்தது. இதனால் வேலையின்மையும் இதே விகிதத்தில் வளர்ந்து கொண்டே வந்தது. சுருக்கமாகச் சொன்னால், நவீனத்துறையில் வேலைவாய்ப்புகளின் வளர்ச்சி தாமதமடைந்தது என்பது சுதந்திரத்தின் போது அளித்த வாக்குறுதிகளை பொய்யாக்கிக் கொண்டிருந்தது. நிலச் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கும் உணவு தானிய உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் போதுமானதாக இல்லை என்பதற்கும் தொடர்புள்ளது. இந்தியாவில் சுதந்திரத்தின்போது எடுக்கப்பட்ட நிலச் சீர்திருத்தங்களின் விளைவு என்னவென்றால், முதல் 15 சதவீத நில உடமைகளின் உரிமையில் அமைப்பு மாற்றம் ஏற்பட்டது என்பது மட்டுமே. பெரிய அளவில் காட்சியில் இல்லாத நில உரிமையாளர்கள் கைகளிலிருந்து அவர்களின் நிலங்கள் பணக்கார குத்தகைதாரர்களுக்கு பணத்தை பெற்றுக் கொண்டு உரிமை மாற்றம் செய்யப்பட்டது. மொத்தத்தில், உயர்மட்ட அளவில் செய்யப்பட்ட இந்த 15 சதவீத நில உரிமை மாற்றம் என்பது உண்மையில் தீவிர நிலச்சீர்திருத்த நடவடிக்கையாக அமையவில்லை. மொத்த விதை நிலத்தின் அளவு கூட வேண்டும். அந்த விளை நிலத்தில் ஒரு ஏக்கருக்கான உற்பத்தி விகிதமும் அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் விவசாய வளர்ச்சி சாத்தியமாகும். நீர்ப்பாசனம் இரண்டையும் அதிகரிக்கும் என்றாலும், எத்தனை விவசாயிகள் அதன் பலன்களை பயன்படுத்துகிறார்கள் என்பதை பொறுத்தது. எத்தனை விவசாயிகள் பயன்படுத்துகிறார்கள் என்பது நில மறுபகிர்மானத்தை, கூட்டு விவசாய முறையை, கூட்டுறவு திட்டங்களை என அனைத்தையும் பொறுத்தது. எனவே சுருக்கமாகச் சொன்னால் டிரிஜிஸ்ட் ஆட்சி முறையின் கீழ் நில மறு பகிர்மானம் அல்லது நிலச் சீர்திருத்தம் இல்லாததால் வேலைவாய்ப்பிலும் வளர்ச்சி ஏற்படவில்லை. இதனால் பொதுவான மக்களிடையே இந்த டிரிஜிஸ்ட் ஆட்சியின் மீது ஒரு ஏமாற்றம் ஏற்பட்டது. அதே நேரத்தில் இந்த டிரிஜிஸ்ட் ஆட்சியின் வலுவான ஆதரவாளராக இருந்த நகர்ப்புற மத்திய தர வர்க்கம், பொருளாதாரத்தை சுதந்திர வர்த்தகத்திற்கும் மூலதன பாய்ச்சலுக்கும் திறந்து விட்டால் அதிக அளவு வளர்ச்சி வாய்ப்புகள் உருவாகும் என்று நினைத்தது. இப்படி நாட்டின் பொருளாதாரம் திறந்து விடப்படும்போது அதிக சம்பளம் கொடுக்கும் வளர்ந்த நாடுகளில் இருந்து குறைந்த சம்பளம் கொடுக்கும் மூன்றாம் உலக நாடுகளுக்கு மூலதனம் வரும். அதனால் நன்மைகள் கிடைக்கும் என்றும், நாடு விட்டு நாடு புலம் பெயர்வது எளிதாகும் என்றும், நகர்ப்புற மத்திய தர வர்க்கம் நினைத்ததால் டிரிஜிஸ்ட் ஆட்சிக்கு அதனுடைய ஆதரவு குறையத் தொடங்கியது. இது எப்படி இருந்தாலும், உலக முதலாளித்துவக் கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றமே டிரிஜிச ஆட்சி முறையின் அழிவுக்குப் பின்னால் இருந்த மிக முக்கியமான காரணி. சோவியத் யூனியனையும் சீனாவையும் சுற்றி வளைக்க அமெரிக்கா உலகெங்கிலும் தனக்கான தளங்களை பராமரித்து வந்தது. அதே நேரத்தில், காலனியாதிக்க காலம் போல காலனி நாடுகளில் இருந்து ‘செல்வத்தின் வடிகால்’ கிடைக்காததால், அமெரிக்காவின் பேலன்ஸ் ஆஃப் பேமெண்ட்களில் நிலையான நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஏற்பட்டதில் அமெரிக்காவால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. எனவே இந்தப் பற்றாக்குறைகளை சரி செய்ய தேவையான நிதிகளை பெறுவதற்காக டாலர்களை அச்சிட வேண்டியிருந்தது. அவை போருக்குப் பிந்தைய பிரெட்டன் வுட்ஸ் அமைப்பின் கீழ் ‘தங்கம் போல் நல்லது’ என்று அறிவிக்கப்பட்டது. மற்றும் அதிகாரப்பூர்வமாக ஒரு அவுன்ஸ் தங்கத்திற்கு 35 டாலர்கள் ($35) என மாற்றப்பட்டது. இது அமெரிக்காவிலிருந்து டாலர்கள் வெளியேற வழி வகுத்தது. ஐரோப்பிய மற்றும் அமெரிக்க வங்கிகளின் கருவூலங்களை நிரப்ப வழிவகுத்தது. ஐரோப்பாவும் அமெரிக்காவும் அந்த மூலதனங்களை லாபகரமான இடங்களில் கடனாகக் கொடுக்க விரும்பின. பிரெட்டன் வுட்ஸ் அமைப்பின் கீழ் எந்த நாட்டிலும் எந்த மூலதனக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுவதையோ அந்த கட்டுப்பாடுகளினால் தங்கள் மூலதனப் பாய்ச்சல் தடைபடுவதையோ அவை விரும்பவில்லை. நிதி மூலதன நடவடிக்கைகளுக்காக உலகம் முழுவதும் திறக்கப்பட வேண்டும் என்று அவை விரும்பின. பண வடிவில் உலகம் முழுவதும் பாய்ந்து கொண்டிருக்கும் இந்த சர்வதேச நிதி மூலதனம் 1973-74லும் 1979-80லும் ஏற்பட்ட இரண்டு எண்ணெய் விலை உயர்வுகளால் மேலும் வீங்கிப் பெருத்தது. இதனால் இந்தியா போன்ற நாடுகளின் மீதும் நிர்ப்பந்தத்தினை அதிகப்படுத்தியது. இந்த நாடுகளின் நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்ட எளிதில் கிடைக்கக்கூடிய நிதி ஆதாரத்தினை இதற்கு சர்வதேச நிதியம் (IMF) போன்ற நிறுவனங்கள் வழங்கும் என்று ஆசை காட்டப்பட்டது. ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவைப் போல் அல்லாமல், இந்த கவர்ச்சி வார்த்தைகளை எதிர்த்து இந்தியா சில காலம் நின்றது. ஆனால் இறுதியாக எண்பதுகளில் இந்தியாவும் அடிபணிந்தது. அது முதல் ஒரு நவ-தாராளவாத ஆட்சியின் முழுமையான அறிமுகத்திற்கான வழியை இந்தியா திறந்தது. இதற்கிடையில் இந்திய பெரு முதலாளித்துவ வர்க்கத்தின் அணுகுமுறையில் ஏற்பட்ட ஒரு ஆழமான குறிப்பிடத்தக்க மாற்றமே இந்த அடிபணிவிற்கு முக்கிய காரணமாகும். ஏகாதிபத்தியத்தை சாராமல் ஒப்பீட்டளவில் தன்னாட்சி பெற்ற ஒரு முதலாளித்துவத்தை இந்தியாவில் கட்டியெழுப்பும் திட்டத்தை இந்திய பெரு முதலாளி வர்க்கம் கைவிட்டது. உள்நாட்டுச் சந்தையில் மட்டும் இருப்பது என்பது அதற்கு முட்டுக்கட்டையாகத் தோன்றியது. சில காலம் உள்நாட்டுச் சந்தையை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு, அந்நிய மூலதனத்துடன் சேர்ந்து சர்வதேச சந்தையில் நுழைவதற்கு சில முன்னெடுப்புகளை செய்தது. ஆனால் அந்நிய மூலதனம் சர்வதேச சந்தையில் இந்திய மூலதனம் தன்னுடன் கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள அனுமதித்ததற்கு ஈடாக இந்தியாவின் உள்நாட்டு சந்தையில் நுழைவதை விரும்பியது. இந்தியப் பெரு முதலாளித்துவ வர்க்கம் இறுதியாக இதற்கு அடிபணிய வேண்டியிருந்தது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் நவ-தாராளமயம் நுழைவதில் சிறு காலதாமதம் ஏற்பட்டது. சோவியத் யூனியன் இருக்கும்போதே இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகுதான் வர்க்க பலாபலன்களின் சமநிலையை நவதாராளவாதத்திற்கு சாதகமான நிலைக்கு மாற்ற முடிந்தது. 4. நவ தாராளவாத ஆட்சிக் காலத்தில் இடதுசாரி அரசாங்களின் சாதனைகள் இந்தியாவில் டிரிஜிஸ்ட் ஆட்சி முட்டுச் சந்திற்கு வந்தது. வேலையின்மை பெருகியது. இந்த ஆட்சி முறையில் வேலையின்மையின் வீச்சை குறைப்பதற்காக எடுக்கும் எந்தவொரு முயற்சியும் பணவீக்கத்தில் கொண்டு விட்டது. உணவுப் பொருட்களின் விலைகள் உட்பட தாறுமாறாக ஏறியபோது மக்கள் தங்கள் கோபத்தினை தேர்தல் ஜனநாயகத்தில் காட்டினர். 1975-77 காலக்கட்டத்தில் எமர்ஜென்சியை விதித்ததன் மூலம், தேர்தல் ஜனநாயகத்தின் கட்டமைப்பை முழுவதுமாக தூக்கி எறியும் ஒரு முயற்சிக்கு மத்திய அரசு சென்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவசரநிலையை கடுமையாக எதிர்த்தது. மற்றும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதியாக நின்றது. 1977 ஆம் ஆண்டு மாநில சட்டமன்றத் தேர்தலில் அது முதல் முறையாக மேற்கு வங்கத்தில் இடது முன்னணி அரசாங்கத்தை அமைத்தது. நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள் இடது முன்னணி அமைச்சத்தால் மேற்கு வங்கத்தில் ஆப்பரேஷன் பர்கா என்ற பெயரில் எடுக்கப்பட்டன. குத்தகைதாரர்களை பதிவு செய்ய அனுமதித்து இந்த அரசு அங்கீகரித்தது. (ஷேர்கிராப்பர் என்பது நில உரிமையாளர் ஒரு ரை அவர் தரும் பயிரின் பங்கிற்கு ஈடாக நிலத்தைப் பயன்படுத்த அனுமதிக்கும் முறையாகும்). அதுவரையில் இந்த குத்தகைதாரர்களுக்கு குத்தகை உரிமை மறுக்கப்பட்டிருந்தது. நிலச்சீர்திருத்தங்களுடன் விவசாயத்திற்கு தேவையான நீர்ப்பாசனம் உள்ளிட்ட வேறு சில அத்தியாவசிய நடவடிக்கைகளும் அதற்கான நிதி அதிகரிப்பும் சேர்த்து எடுக்கப்பட்டதால், மேற்கு வங்கத்தில் விவசாயத் துறையின் வளர்ச்சி விகிதத்தில் துரித முன்னேற்றம் ஏற்பட்டது. மற்றொரு முக்கியமான நடவடிக்கையாக ‘நிலத்தை உழுபவரே அறுவடை செய்ய வேண்டும்’ என்ற விதியை மாநில அரசு கொண்டு வந்தது. முன்பு, நிலத்தை குத்தகைதாரர் பயிரிட்ட பிறகு, நில உரிமையாளர்களின் குண்டர்கள் அறுவடையை எடுத்துச் செல்வார்கள். குத்தகைதாரருக்கு நில உரிமையாளர் என்ன நினைக்கிறாரோ அதனை கொடுப்பார். இது கிராமப்புறங்களில் அதிகார சமநிலையை மாற்ற உதவியது. இதனால் 1990 களில், நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களை விடவும் விவசாயத் துறையின் வளர்ச்சியில் மேற்கு வங்கம் மிக உயர்ந்த விகிதத்தை எட்டியது. இப்படி துரிதப்படுத்தப்பட்ட விவசாய வளர்ச்சி கிராமப்புறங்களில் விவசாயம் சாரா பொருட்களுக்கான கிராக்கியை அதிகப்படுத்தியது. இதன் காரணமாக சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும் வளர்ந்தன. மேற்கு வங்கத்தின் இடது முன்னணி அரசாங்கம் கால் பதித்த மற்றொரு தடம் உள்ளூர் சுயாட்சி அரசு நிறுவனங்களை (LSGIs) உருவாக்கியது. இதனால் ஜனநாயக அதிகாரப் பகிர்வு ஏற்பட்டது. இதற்கான அத்தனை ஆதாரங்களும் இந்த உள்ளூர் சுயாட்சி அரசு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன. திட்டங்கள் உள்ளூர் மட்டத் தேவைகளுக்கிணங்க தீட்டப்பட்டன. அதற்கான முடிவினை தீர்மானிக்கும் இடங்களாக இந்த ஜனநாயக அமைப்புகள் இருந்தன. மக்கள் பங்கேற்புடன் இவை செயல்பட்டன. பிற்காலத்தில் இந்த ஜனநாயக அதிகாரப் பகிர்வு நாடு முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கையாக மாறியது. அரசியலமைப்புச் சட்டத்திலும் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதற்கெல்லாம் மேற்கு வங்கத்தின் இடது முன்னணி அரசாங்கம் முன்னோடியாகத் திகழ்ந்தது. கேரளத்தின் இடது ஜனநாயக முன்னணி அரசு ஒரு படி மேலே சென்றது. அது பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற பல நிறுவனங்களின் நிர்வாகத்தை, இந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுடன் சேர்த்து, உள்ளூர் சுயாட்சி அரசு நிறுவனங்களிடம்(LSGI) ஒப்படைத்தது. அதே நேரத்தில் அவர்களின் சம்பளப் பணத்தை மாநில அரசு தொடர்ந்து கொடுத்தது. கூடுதலாக, கிராம சபைகளால் அவர்களின் சொந்தத் தேவைகளின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்க வேண்டிய திட்டங்கள் என்று தீர்மானிக்கப்படும் திட்டங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் திட்ட நிதியில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை மாநில நிதி ஆணையம் LSGI களுக்கு மாற்றுவது கட்டாயமாக்கப்பட்டது. கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி (LDF) அரசாங்கத்தின் கீழ் விவசாய வளர்ச்சி ஒரு படி அதிகரிக்கவே செய்தது. இருப்பினும் மாநிலத்தின் புவியியல் கட்டுப்பாடுகள் காரணமாக விவசாயத் துறையின் வளர்ச்சி விகிதம் குறைவாகவே இருந்தது. ஆனால் மாநில பட்ஜெட்டில் மக்கள் நலச் செலவினங்களை அதிகரித்ததன் மூலம் மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்தது. உள்ளூர் கிராக்கி அதிகரித்தது. இது விரிவாக்கத்திற்கும் பங்களித்தது. எனவே விவசாயம் அல்லாத சிறு துறைகள் விரைவான வளர்ச்சியடைந்தன. 2004-05க்கும் 2011-12க்கும் இடையில் கேரளாவில் தனிநபர் உண்மை மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, மோடியின் குஜராத்தைப் போலவே இருந்தது. குஜராத்தின் உயர் வளர்ச்சி குறித்து இடைவிடாமல் தம்பட்டமடிக்கப்பட்டது. ஆனால், உண்மையில், அதே அளவு வளர்ச்சி கேரளாவிலும் இருந்தது. இடதுசாரிகள் ஆளும் மூன்றாவது மாநிலமாக இருந்த திரிபுராவில் இந்தக் காலகட்டத்தில் சமூகக் குறியீடுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது. மேற்கு வங்கத்தில் கூர்க்காலாந்து இயக்கம் மற்றும் திரிபுரா பழங்குடியினர் சுயாட்சி இயக்கம் போன்ற பிரிவினைவாத இயக்கங்களின் கோரிக்கைகளைத் தீர்ப்பதற்கான ஒரு வழிமுறையாக சுயாட்சி கவுன்சில்கள் திரிபுராவில் உருவாக்கப்பட்டன. இந்த மூன்று இடது முன்னணி (LF) அரசாங்கங்களின் நடவடிக்கைகளின் மூலம், வளர்ச்சிக்கான ஒரு குறிப்பிட்ட இடதுசாரி உத்தி தெளிவாகப் புலனாகிறது. அதன் முக்கிய கூறுகள்: உழைக்கும் மக்களின் வாங்கும் சக்தியை ஒரு துரிதமான விவசாய வளர்ச்சியின் மூலமும், மாநில அரசிடமிருந்து போதுமான நிதி ஒதுக்கீடு செய்து அளிப்பதன் மூலமும் அதிகரித்தல். கிராமப்புற சமுதாயத்தில் பல்வேறு வர்க்கங்களுக்கு இடையே அதிகார சமநிலையில் மாற்றம் கொண்டு வருதல். உள்ளூர் வாங்கும் சக்தி அதிகரிப்பிலிருந்து எழும் கிராக்கியின் உயர்வு சிறு உற்பத்தித் துறைகளின் உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும். இதன் மூலம் உள்ளூர் மட்டத்தில் பெரிய அளவில் வேலைவாய்ப்பை உருவாக்கும். மேலும் இதன் தாக்கம் பொருளாதாரத்தில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். சமூகச் செலவினங்களை, குறிப்பாகக் கல்வி மற்றும் கிராமப்புற மக்களின் செல்வாதரங்களுக்கான செலவுகளை கணிசமாக உயர்த்துதல். உள்ளூர் அளவிலான பங்கேற்பு ஜனநாயகத்தை அதிகாரப் பகிர்வின் மூலம் வலுப்படுத்துதல். மாநிலங்களின் வரி வருவாயைக் குறைக்கும் வகையில் மத்திய அரசு பெரு முதலாளிகளுக்கு வழங்கிய வரிச் சலுகைகள், மற்றும் நிதியாதாரங்களை மையப்படுத்தும் நடவடிக்கைகள் போன்றவற்றின் காரணமாக மாநில அரசுகளின் மீது பெருகிவரும் இறுக்கமான நிதிக் கட்டுப்பாடுகள் காரணமாக இந்த இடதுசாரி உத்தியை மாநிலங்களில் தொடர்ந்து பின்தொடர்வது காலப்போக்கில் கடினமாகிறது. ஆனால் உழைக்கும் மக்களின் அமோக ஆதரவு இந்த இடதுசாரி உத்திக்கு இருந்தது என்பதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி அரசாங்கங்களின் நீண்ட தேர்தல் வெற்றிகளிலிருந்து தெளிவாக உணர முடிகிறது. உண்மையில் மேற்கு வங்கத்தில் உழைக்கும் மக்கள் இடது முன்னணி அரசாங்கத்தின் மீது 34 ஆண்டு காலமாக நம்பிக்கை வைத்திருந்தனர். இருப்பினும், மத்திய அரசு கடைபிடிக்கும் நவ தாராளவாத உத்திக்கும், இந்த இடதுசாரி உத்திக்கும் இடையில் முரண்பாடு உள்ளது. சர்வதேச நிதி மூலதனத்தின் உத்தரவின் பேரில், விவசாயிகள் மற்றும் விவசாயத்துறை உள்ளிட்ட சிறு உற்பத்தித் துறைகளுக்கு மத்திய அரசின் ஆதரவு திரும்பப் பெறப்பட்டதால், பெருமளவில் ஏற்பட்டுள்ள விவசாய நெருக்கடி, உழைக்கும் மக்களின் கைகளில் வாங்கும் சக்தியைக் குறைக்கிறது. உலக வங்கி, ஐ.எம்.எஃப் போன்ற பிரெட்டன் வுட்ஸ் நிறுவனங்களின் பரிந்துரையின்படி விதிக்கப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரி போன்ற நடவடிக்கைகளின் மூலம் நிதியாதாரங்களை மையப்படுத்தும் மத்திய அரசின் நடவடிக்கைகளால், அரசு நடத்தும் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளின் பராமரிப்பு உள்ளிட்ட சமூக நலச் செலவினங்களுக்கு மாநிலங்களுக்கு சிறிதளவு மட்டுமே நிதி கிடைக்கிறது. கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறையின் தனியார்மயமாக்கலின் காரணமாக உழைக்கும் மக்களின் உண்மை வருமானம் மேலும் குறைகிறது. தொழில்துறை வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக தனியார் துறையின் பெரிய அளவிலான முதலீட்டை மாநிலத்திற்கு வரவழைக்க முனைந்த மேற்கு வங்க மாநில இடதுசாரி அரசாங்கத்தின் தீர்மானத்தை இந்த பின்னணியில் பார்க்க வேண்டும். எனினும் இது மட்டும் போதாது என்பதை அனுபவம் காட்டுகிறது. தொழில்மயமாக்கலுக்கு தேவையான பிற முயற்சிகளும் கூடுதலாக எடுக்கப்பட வேண்டும். சீனாவின் டவுன்ஷிப் மற்றும் கிராம நிறுவனங்களின் நிர்மாண முறையில், LSGI-க்கு சொந்தமான யூனிட்கள் உருவாக்கப்பட வேண்டும். அல்லது கேரளாவில் சில இடங்களில் முயற்சிப்பது போல, கூட்டுறவுக்கு சொந்தமான யூனிட்கள் மூலம் தொழில்மயமாக்கலை ஊக்குவிக்கும் புதுமையான நடவடிக்கையை எடுக்கலாம். மேலும் சில முதலாளிகள் மாநிலத்தில் தொழிற்சாலைகளை தொடங்கும் போது, இந்த நோக்கத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட போது அந்த நிலத்திற்காக வழங்கப்பட்ட நிறுவனப் பங்குகளை வாங்கி LSGI அல்லது விவசாய கூட்டுறவு நிறுவனங்களை உருவாக்க முயற்சி செய்யலாம். இதன் மூலம் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான முரண்பாடுகள் எழுவது குறைக்கப்படும். சுருக்கமாகச் சொன்னால், இடதுசாரி உத்தியை முன்னெடுத்து முன்னேறிச் செல்வதற்கு முழு அளவிலான புதுமையான நடவடிக்கைகள் இடதுசாரிகளால் அவசரமாக எடுக்கப்பட வேண்டியுள்ளது. 5. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிகளும் இன்று சந்தித்து வரும் முன்னெப்போதுமில்லாத சவால்கள் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடதுசாரிகளும் முன்னெப்போதும் இல்லாத சவால்களை சந்தித்து வருகின்றனர். முதலாவதாக ஏகாதிபத்தியங்களுக்கிடையேயான முரண்பாடுகள் சமீபகாலமாக சத்தமின்றி அமுக்கப்படுகின்றன. ஏகாதிபத்தியங்களிடையே தொடர்ந்து மிகத் தீவிரமாக இருக்கும் முரண்கள் புரட்சிகர நடவடிக்கைகளுக்கு சாதகமானது என்று கம்யூனிஸ்ட் கட்சிகளால் ஆரம்பம் முதல் கணிக்கப்பட்டு வருகிறது. உண்மையில், ஏகாதிபத்திய நாடுகளிடையே எழுந்த உள் முரண்களும் மோதல்களும்தான் போல்ஷ்விக் புரட்சியை நடத்துவதற்கும் தக்க வைப்பதற்குமான கால அவகாச இடைவெளியை அளித்தது என்று லெனின் எழுதியுள்ளார். அப்படியிருக்கையில், இன்று ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான உள் முரண்கள் சத்தமில்லாமல் அமுக்கப்படுகின்றன என்பது சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்துள்ள சூழலில், கம்யூனிஸ்டுகளின் நடைமுறை உத்திக்கு எல்லா இடங்களிலும் மிகப் பெரிய சவாலாக மாறிப் போயுள்ளது. இரண்டாவது சவால், நவ தாராளவாதம் உழைக்கும் மக்களை முழுவதுமாக மூழ்கடிப்பது மட்டுமல்லாமல், அவர்களை எதிர்த்துப் போராடும் திறனற்றவர்களாக பலவீனப்படுத்துவதாகவும் உள்ளது. இந்தியாவில் உழைக்கும் மக்கள் முழுமையான வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கிராமப்புற மக்களில் நபர் ஒருவருக்கு ஒரு நாளைக்கு 2200 கலோரி உணவு கிடைக்க முடியாத நிலையில் உள்ளவர்களின் விகிதம் திட்டக் கமிஷனின் முந்தைய அளவுகோலின்படி, 1993-94க்கும் 2011-12க்கும் இடையில் 58 சதவீதத்திலிருந்து 68 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 2100 கலோரிகள் என்ற அளவுகோலாக இருக்கும் நகர்ப்புற இந்தியாவிற்கு இது முறையே 57 சதவீதம் மற்றும் 65 சதவீதம் ஆகும். இது எப்படி நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. விவசாயம் மற்றும் சிறு உற்பத்தித் துறைக்கான அரசின் ஆதரவினை அரசு விலக்கிக் கொள்ளும் போது இந்தத் துறைகள் நெருக்கடிக்குள்ளாகின்றன. அதனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் அதிகமாக இருந்தாலும், விவசாயிகள் நகர்ப்புறங்களை நோக்கி வேலை தேடி புலம் பெயரும் போது வேலை வாய்ப்பும் அதே விகித அளவிலோ அல்லது அந்த விகிதத்தை விடவும் குறைவாகவோ குறைகிறது. 1991 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கும் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கும் இடையில் விவசாயிகளின் எண்ணிக்கை 15 மில்லியன் குறைந்துள்ளது. சிலர் விவசாயக் கூலிகளாக மாறிப் போயுள்ளனர். இன்னும் சிலர் நகர்ப்புறங்களுக்கு புலம் பெயர்ந்து, அங்கு ஏற்கனவே இருக்கிற வேலைகளை பகிர்ந்து கொள்ளும் கூலிகளாக மாறிப் போயுள்ளனர். வேலை தேடும் தொழிலாளர் பட்டாளத்தின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, ஏற்கனவே அமைப்பு சார்ந்த துறையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் ஊதிய விகிதத்திலும் இது தாக்கத்தினை ஏற்படுத்துகிறது. அவர்களின் பேரம் பேசும் சக்தி குறைகிறது. இன்னும் இரண்டு காரணிகளும் தொழிலாளர்களின் பேரம் பேசும் சக்தியின் மீது தாக்கத்தை செலுத்துகின்றன. உலகம் முழுவதும் பாய்ந்து செல்லும் நிதி மூலதனம் போர்க்குணமிக்க அணி திரட்டப்பட்ட தொழிலாளர்கள் உள்ள நாடுகளை விட்டு வெளியேறி, அணி திரட்டப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள நாடுகளை நோக்கி நகர்ந்துவிடும். எனவே, இது தொழிலாளர்களின் போர்க்குணத்தினை தணிக்கும் தாக்கத்தினை செய்கிறது. அடுத்த மற்றொரு காரணி பொதுத்துறை ஊழியர்கள் போர்க்குணம் மிக்கவர்களாக அணி திரட்டப்பட்டவர்களாக இருப்பதால், பொதுத்துறைகள் தனியார்மயமாக்கப்படுகின்றன. தனியார்மயமாக்கல் என்பதும் தொழிலாளர்களின் போர்க்குணத்தினை தணிக்கும் தாக்கத்தினை செய்கிறது. டிரிஜிஸ்ட் காலத்துடன் ஒப்பிடும் போது நவ தாராளவாதம், தொழிலாளர்களின் போராட்டத் திறனை பலவீனப்படுத்தியுள்ளது. இந்தியாவில் நவ-தாராளமயக் காலத்தில் தொழிலாளர்கள் பெரிய வேலைநிறுத்தங்களை நடத்துகின்றனர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் முன்பை விட அவர்களது வேலைநிறுத்த சக்தி பலவீனமடைந்துள்ளது என்பதுதான் உண்மை. அதேபோல், நவ தாராளமயத்தால் இரக்கமின்றி பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் சிறு உற்பத்தியாளர்களை அணிதிரட்டுவது என்பது மிகவும் கடினமான மற்றும் நீடித்த செயல்முறையாகும். நவ தாராளவாதம் தொழிலாளர்களின் எதிர்ப்பினை தெரிவிக்கும் வேலைநிறுத்த வடிவத்தின் திறனை பலவீனப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அவர்கள் தங்களது எதிர்ப்பினை தெரிவிக்க அணிதிரட்டப்பட்ட போராட்டங்களாக நடத்துவதற்குப் பதிலாக தற்கொலை செய்து கொள்கின்றனர். தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மூன்று வேளாண் மசோதாக்களுக்கு எதிராக, தொழிலாளர்களின் ஆதரவுடன் விவசாயிகளால் நடத்தப்பட்ட சமீபத்திய போராட்டம், இவற்றையெல்லாம் மீறி நடந்தேறியதற்காக மிகவும் பெருமைப்பட வேண்டியுள்ளது. நவ தாராளவாதம் ஒருபுறம் வர்க்கப் போராட்டத்தினை தணிப்பதாக உள்ளது. மறுபுறம் அடையாள அரசியலை ஊக்கப்படுத்துகிறது. அடையாள அரசியலை பட்டியலின அல்லது பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுக்க ஊக்கப்படுத்தவில்லை. மாறாக, ஆளும் வர்க்கம் தொழிலாளி வர்க்கத்தின் சாதி உள்ளிட்ட அடையாளங்களை பயன்படுத்தி, அவர்களது விசுவாசத்தை பெற்று, அவர்களை பிளவுபடுத்துகிறது. நவீன தாரளமயக் கொள்கைகள் நெருக்கடிக்குள்ளாகும்போது, அடையாள அரசியலின் தீவிர அரசியல் வடிவமாக வகுப்புவாத பாசிச வடிவத்தினை எடுக்கிறது. பெரு முதலாளி வர்க்கம் நிதியாதாரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் அளித்து இதனை வளர்த்தெடுக்கிறது. டிரிஜிஸ்ட் ஆட்சிமுறையின்போது இருந்தது போல் கம்யூனிச அரசியல் முன்னிலையில் இல்லை என்றாலும், ஒரு தகுந்த சந்தர்ப்பம் வரும்போது இது போன்ற பிளவுவாத அரசியலை முற்றிலுமாக முறியடித்து அது வெடித்துச் சிதறி கிளம்பலாம். நவ-தாராளவாத முதலாளித்துவத்தின் நெருக்கடி அத்தகைய ஒரு சந்தர்ப்பம் வருமென்பதை முன்னறிவிக்கிறது. நவீன தாராளமயக் கொள்கைகளின் காரணமாக, உலகம் முழுவதும் மற்றும் ஒவ்வொரு நாட்டிற்குள்ளும், மிக வேகமாக அதிகரித்து வரும் செல்வ மற்றும் வருமான சமத்துவமின்மையின் விளைவுதான் இந்த நெருக்கடி. இதன் காரணமாக எழுகிற அதீத உற்பத்திப் போக்கை அரசு தலையீடு செய்து தடுத்து நிறுத்த முடியும். ஆனால், சர்வதேச நிதி மூலதனம் தேசிய அரசுகளை அதனுடைய கட்டளைகளுக்கு அடிபணியச் சொல்வதன் காரணமாக, தேசிய அரசுகளின் தலையீடு என்பது தற்போது இல்லாமல் போய் விட்டது. ஏனெனில் உலகமயமாக்கப்பட்ட நிதி மூலதனம் தேசிய-அரசை எதிர்கொள்வது பிந்தையதை அதன் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய நிர்ப்பந்திக்கிறது. இந்த கட்டளைகளில் நிதிப் பற்றாக்குறை தவிர்க்கப்பட வேண்டும் என்பதும் செல்வந்தர்கள் மீது வரி போடக் கூடாது என்பதும் அடங்கும். ஆனால், நாட்டின் பொருளாதாரத்தை தூண்டுவதற்கு அரசின் செலவினங்களை அதிகரிக்க தேவையான நிதியை உருவாக்க உள்ள இரண்டு வழிகள் இவை மட்டுமே. . 6. தூண்டப்படும் வெறுப்பரசியலும் அதனை விஞ்சிய விவசாயிகளின் போராட்டம் அளிக்கும் நம்பிக்கையும் இந்த சூழ்நிலையில்தான் உலகம் முழுவதிலும் உள்ள பல நாடுகளில் உள்ள பெருநிறுவன-நிதிமூலதன தன்னலக்குழுக்கள் நவ-தாராளவாத நிகழ்ச்சி நிரலை தொடர்ந்து நடத்த பாசிச சக்திகளை ஊக்குவித்து வருகின்றன. இந்தப் போக்கிற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. இங்குள்ள பெருநிறுவன-நிதி மூலதன தன்னலக்குழுக்கள் பாசிச இந்துத்துவாவுடன் கூட்டணி வைத்துக் கொண்டுள்ளது. இந்த கார்ப்பரேட்-இந்துத்துவா கூட்டணி தற்போது நமது அரசியலில் ஆதிக்கம் செலுத்துகிறது. இது முஸ்லிம்களை, (மற்றும் சில சமயங்களில் தலித் மற்றும் கிறிஸ்தவர்களை) ‘நாம் அல்லாத மற்றவர்கள்’ என சித்தரித்து வெறுப்பின் இலக்காக ஆக்குகிறது. மேலும் மக்களின் வாழ் நிலைமைகளின் நெருக்கடிகளில் இருந்து அவர்களின் கவனத்தை திசைதிருப்பும் வழிமுறையாக இந்த வெறுப்பரசியலை பயன்படுத்துகிறது, இதன் காரணமாக பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் போன்ற விஷயங்கள் மறக்கப்பட்டு, நெருக்கடிக்கிடையிலும் கார்ப்பரேட் இந்துத்துவா கூட்டணி ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. இந்த கார்ப்பரேட் இந்துத்துவா கூட்டணியானது, உள்நாட்டு மற்றும் அந்நிய பெருநிறுவன-நிதிமூலதன தன்னலக்குழுக்களின் நலன்களுக்காக மட்டுமே பிரத்தியேகமாக செயல்படுகிறது. தொழிலாளர்களின் உரிமைகளைத் தடுக்கும் சட்டங்கள், பின்னர் கொரோனா பெருந்தொற்று காலத்தை தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் சட்டத் தொகுப்பு மசோதாக்கனை மற்றும் மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்ற பயன்படுத்திக் கொண்டது. விவசாயத்திற்கென எஞ்சியிருந்த கொஞ்சநஞ்ச மாநில ஆதரவையும் முற்றிலுமாக விலக்குவதாகவும், கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்திற்கும் அத்துமீறலுக்கும் விவசாயத் துறையை திறந்துவிடுவதற்கு வழிவகுப்பதாகவும் இந்த மூன்று வேளாண் சட்டங்களும் இருந்தன. மோசமான இந்த சட்டங்களுக்கு எதிராக, தொழிலாளர்களின் ஆதரவுடன், விவசாயிகள் நடத்திய ஓராண்டு காலப் போராட்டத்தின் காரணமாக, இறுதியாக அவை திரும்பப் பெறப்பட்டுள்ளன. ஆனாலும் அரசாங்கம் தனது நிகழ்ச்சி நிரலை கைவிட்டுவிடவில்லை. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் அதன் ஆதரவு பெருவணிக நிறுவனங்களுக்கிடையில் அது உருவாக்கியுள்ள விவசாயத்திற்கான இணைக் கடன் ஏற்பாடு என்பது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பொதுமக்கள் வைப்பு நிதியாக வைத்துள்ள நிதி வளங்களை பயன்படுத்தி, பெரு நிறுவனங்கள் விவசாயத் துறையில் ஆக்கிரமிப்பு அத்துமீறல் செய்ய வழி வகுக்கும். இதில் இருந்து, அரசாங்கம் தனது நிகழ்ச்சி நிரலை கைவிட்டுவிடவில்லை என்பது தெளிவாகிறது. எனினும், ஒப்பீட்டளவில் எதிர்ப்பு நிலை மந்தமாகி, எதிர்ப்பற்ற நிலை போன்றிருந்த காலப் பின்னணியில், நடைபெற்ற விவசாயிகளின் போராட்டம் என்பது உழைக்கும் மக்களின் போராட்டங்களின் எழுச்சிக்கான வழியைத் திறந்துள்ளது. அரசியலமைப்பைத் தகர்க்கும் முயற்சி செய்யும் கார்ப்பரேட்-இந்துத்துவா கூட்டணியை தோற்கடிப்பதன் மூலம் அது ஜனநாயக.அரசியலுக்கான வாய்ப்பைத் திறக்கும். ஆனால், பாசிசக் கூறுகளின் தோல்வி என்பது தீர்மானகரமானதாக இருக்க வேண்டுமானால், இந்தக் கூறுகள் உருவாகக் காரணமான நவ தாராளவாத முதலாளித்துவத்தை கடந்து வர வேண்டும். கார்ப்பரேட் இந்துத்துவா கூட்டணியை தோற்கடிப்பது என்று அரசியலமைப்பு உறுதி கூறும் அனைத்து கூறுகளையும் பாதுகாக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் ரீதியாக ஒன்றுபட்ட முயற்சிகள் மேற்கொள்வதுடன், உழைக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான குறைந்தபட்ச பொருளாதார நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து நவ தாராளமயத்தின் எல்லைகளை உடைக்க வேண்டும்.
ஒவ்வொரு தேர்தலிலும் 75 சதவீத வாக்குப்பதிவு ஏற்படுவதை உறுதி செய்ய வேண்டும். அதேபோல் ஒரே நாடு, ஒரே தேர்தல் விவாதத்துக்கு நான் தயாராக இருக்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இந்தியாவில் 1950-ம் ஆண்டு, ஜனவரி 25-ந் தேதி தேர்தல் கமிஷன் ஏற்படுத்தப்பட்டது. இந்த நாள் 2011-ம் ஆண்டு முதல் தேசிய வாக்காளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா முழுவதும் உள்ள பா.ஜ.க. தொண்டர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:- 1950-ம் ஆண்டு முதல் இன்று வரை சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை தேர்தல் கமிஷன் நடத்தி அதன் கண்ணியத்தை பாதுகாத்து வருகிறது. நம் நாட்டில் உள்ள தேர்தல் கமிஷனுக்கு, அதிகாரிகளை இட மாற்றம் செய்யக்கூடிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பல ஜனநாயக நாடுகளில் தேர்தல் கமிஷனுக்கு அத்தகைய அதிகாரம் வழங்கப்படவில்லை இல்லை. 1951-52-ம் ஆண்டில் 45 சதவீதம் என்ற அளவிலேதான் இருந்த வாக்குப்பதிவு சதவீதம் தற்போது 2019 நாடாளுமன்ற தேர்தலில் இது 67 சதவீதமாக உயர்ந்துள்ளது. இருப்பினும் பொதுமக்கள் முதல் அரசியல் கட்சிகள் வரையில் அனைவரும் குறைவாக வாக்குகள் பதிவாவது குறித்து சிந்தித்து பார்க்க வேண்டும். கல்வி அறிவு மற்றும் வளமான பகுதிகளாக கருதப்படுகிற நகர்ப்புறங்களில் கூட குறைந்த வாக்குப்பதிவு சதவீதத்தைத்தான் பார்க்க முடிகிறது. படிப்பறிவு உள்ளவர்கள் சமூக ஊடகங்களில் விவாதிக்கிறார்கள். ஓட்டு போடத்தான் வருவதில்லை. இதனால் ஒவ்வொரு தேர்தலிலும் 75 சதவீத வாக்குப்பதிவு ஏற்படுவதை பா.ஜ.க. தொண்டர்கள் மற்றும் பிற கள பணியாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பொதுமக்களின் ஆதார் எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க சமீபத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது தேர்தலின் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும். அடிக்கடி தேர்தல்கள் நடைபெறுவது நாட்டின் முன்னேற்றத்தை தடுக்கிறது. இதை சரி செய்வதற்கு ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே வாக்காளர் பட்டியல் என்பது தான் சரியாக இருக்கும் என கருதுகிறேன். மக்கள், கல்வியாளர்கள், வல்லுனர்கள், அறிவுஜீவிகள் ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து விவாதிக்க வேண்டும். வெவ்வேறு கருத்துகள் வெளியே வரட்டும். என்னை பொறுத்தவரை தேர்தல் என்பது ஜனநாயக திருவிழா. ஆட்சிக்கு வருவதற்காக மட்டுமல்லாமல் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவே தேர்தலில் போட்டியிட வேண்டும் இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.எம்.கே. ஷாகுல் ஹமீது
In honour of Tamil Heritage Month in January, we had the privilege of speaking to a few individuals in the Tamil community on what Tamil identity means to them. Another area of focus this year was reflections through storytelling. We were able to dive deeper into some of the lives of these individuals through conversations and learn more about their life growing; which included memories of their culture, struggles, traditions, and achievements Here is the story of Sivaram Sivajeyanathan: “My early childhood memories consist of the days that I spent living with my parents back home, my school days, fooling around with friends, and playing a lot of cricket. I remember celebrating Thai Pongal and New Year with fireworks, and flying kites around the neighborhood. One of the most important things I learned, that I still carry today is showing kindness towards the animals and pets around me. As a child, I would have pet fish, cats, dogs, birds, and more that would bring me so much joy. My school life can be split into two periods: pre-1983, and post-1983. Before the riots, I was a brilliant student. I was an all-rounder and top scorer in academics and in sports. However, after 1983, I was forced to move back to Jaffna because Colombo was not safe for Tamils. I was only 9 when I had to live away from my parents to stay with my aunt. Being away from my Amma and Appa was so hard for me. I would always cry for my mother and wish to be close to her. It slowly started to impact my studies. The period where I was kept away from family was dark, and I was only able to experience the joy of school life after being reunited with family. My parents raised us in a way that we would be taken aside even when a chicken would be slaughtered for celebration or festival. They tried to protect us from ever having to experience that kind of pain. I was then only nine years old when the 1983 riots took place. I had an exam day at the Bambalapitiya Colombo Hindu School. I woke up early to finish preparing for my exams and was getting ready to go to school. I never would have been able to anticipate the atrocities that I witnessed that day. I would have never known that this day would leave behind a never-ending nightmare from which I can not awake for decades to come. I had to witness Tamil people slaughtered and burned before me. I couldn’t understand what was happening or why it was happening to us. I just knew that my world was being turned upside down. There is nothing my parents could have done to protect me from the things I’ve had to see and the impact that it has on me to this day. You can read more about my experiences on that day in my Tamil writings. The ways that my family came together in celebration looked different after the riots. In the good days, we would travel from Colombo to Jaffna for the holidays. I would travel by train patiently waiting to see my family, friends, neighbors, and villagers. My family and friends in the village also anticipate my return for the holidays. Those times before 1983 were “sorkkam” (heaven). Holidays after 1983 were like “thavam” which loosely translates to a period of yearning or longing. Amma and Appa had to stay in Colombo to work, and my sister and I were in Jaffna, though not together. In those days we didn’t have a telephone or anything. Letters were the only way to stay connected. Holidays were the only times that I could see my mother. I would count the days till I could finally see her. We didn’t celebrate with fireworks or festivities like we used to but, nor could it be compared to the feeling of being able to see my mother again after months of missing her. In 1987, after 5 crucial years of my childhood spent alone, I was finally reunited with my family. Those were such special days. I remember these days as the best celebrations of my entire lifetime. We always found celebration in moments we spent together. After a few years, my sister had moved to Canada and managed to sponsor my parents as well. While I was still back home, I was a sales representative at Maharajas. I would have to travel to places like Mattakalappu at this time. This is when I witnessed the attack on the Eravur police station. As I was on my way to work, the Sri Lankan army stopped us to take our vehicle to try to prevent the attack. To deny their request would have been a deathwish. So, my colleagues and I had to cooperate. We drove in the front seat along with 4 other vehicles that were stopped in a similar way, and we drove towards the police station with the army sitting in the backseats of our vehicles. At the station, we had to see the fight between the LTTE and the SL Army. We didn’t know what to do. The familiar sense of fear consumed us. We jumped out of the vehicle, rolled onto the floor, and somehow crawled away. To this day I’m not sure how we escaped. After this incident, I didn’t feel safe working in Mattakalappu but my request to transfer to Colombo was also denied. So I quit that job and joined a company called Inoa tech where I was a structured cabling administrator. Working in Colombo, I was no longer immediately exposed to the impacts of the violence. But I knew I was never going to be truly free. The discrimination I had to face when I lived back home prevented me from reaching many of my goals even though I was able to fluently speak all three languages of the country. We Tamils were expected to lead a life of perfection, any less would lead to ridicule, loss of opportunities, or even threat to life. Because I am Tamil I was always blamed for others’ wrongdoings. Because I was Tamil I was stopped and carded everywhere I went. Any real or perceived mistake I may have made was pointed out because of my Tamilness. The only reason I know I’m alive is because I was born in Colombo and speak Sinhala. MyfFriends on the other hand did not have that same privilege. They were forced into prisons and randomly beaten for the only crime of being born Tamil on Tamil lands. The happiest and proudest thing I learned from my parents is determination. To me, my father was the embodiment of determination. No matter where he fell, he would rise again without letting his setbacks prevent him from reaching his larger goals. He rose to every occasion with vigor. He was an accountant, but in my eyes, he was a true fighter, for his children, for his family, and for his dreams. From my mother, I learned patience. She embodied the calmness, and resilience of water. Whether it was fear, doubt, disappointment, or despair she braved it with elegance. My mother and father gave us everything they could. Even after having gone through everything we have together, we did everything we could to create a happy family here in Canada. My parents laid the stepping stones for us to be able to lead the lives that we chose. So today, even as I live in the diaspora, I carry parts of my mother and father. I carry them literally in my name Siva Jeyanthan (Siva for Sivaram and Jeyanthan for Jeyamani), and I carry them in the way that I choose to raise my daughter with a strong sense of Tamilness which carries all the stories of resilience, and determination that leads us to be where we are today.” 1983 July 83 அன்று அப்பொழுது எனக்கு வயது ஒன்பது. கல்விகற்ற கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியில் பரீட்சைக்கான நாள். காலையில் எழுந்து பரீட்சைக்கான எனது தயார்ப்படுத்தல்களை முடித்துக்கொண்டு பள்ளிக்குச் செல்லத்தயாரானேன். அன்று நடக்கவிருக்கும் கொடுமைகளைக் காணப்போகிறேன் என்றோ, அல்லது அந்தக் கொடுமைகளின் தாக்கம் பல தசாப்தங்களைக் கடந்தும் அவன் இதுவரை கண்டுவந்த வண்ணக் கனவுகளைக் கிழித்தெறிந்து கொடிய கனவுகளை இனித் தரும் என நான் நினைத்தே பார்த்ததில்லை. முந்தய ஓரிரு நாட்களாகவே அப்பாவும் அம்மாவும் ஏதோ பதற்றத்தோடே இருந்தார்கள். அவர்களுக்கு நடக்க இருக்கும் துயர நிகழ்வுகளின் கோரம் பற்றி முழுமையாகத் தெரியாவிட்டாலும் கூட ஏதாவது அசம்பாவிதம் நடக்கலாம் என எண்ணிப் பயந்திருந்தனர். எனினும் அதை எமக்கு ஏனோ தெரிவிக்கவில்லை. வெள்ளை மேற்சட்டையும், நீல அரைக்காற்சட்டையும் Northstar shoes ம் போட்டு உற்சாகத்தோடு சகோதரியுடன் புறப்பட்ட எம்மிடம் அம்மா கூறினார் “எக்ஸாம் முடிஞ்ச உடனே இரண்டுபேரும் நேரா வீட்டை வரவேண்டும்”அம்மாவின் வேண்டுகோளில் என்றுமில்லாத சிறு கண்டிப்பும் இருந்தது. அன்று காணப்போகும் அசம்பாவிதங்கள் ஏதும் அறியா ஒன்பது வயதுப் பாலகனாய் கொழும்பு இந்துக்கல்லூரியில் பரீட்சை எழுத தன் சகோதரியுடன் ஆர்வத்துடன் செல்கிறான் அச்சிறுவன். சகோதரி காலிவீதி, லோரன்ஸ் வீதி சந்தியில்விட்டதும் வீதிவழியே பாடசாலையை அடைவதும் மாலையில் பாடசாலை முடிந்ததும் மீண்டும் காலிவீதியில் உள்ள அச்சிறுவனின் தந்தையின் ஊராரின் சைவ சாப்பாட்டுக் கடை (பெயர் மறந்துவிட்டது) வந்து நிற்க அவனின் சகோதரி அழைத்துச்செல்வது தான் வழக்கம். அன்று பாடசாலை சென்றவனுக்கோ பேரதிர்ச்சி. பரீட்சைகள் அனைத்தும் இரத்தானதாகவும் அசம்பாவிதங்கள் நிகழ வாய்ப்புள்ளதால் மறு அறிவித்தல் வரை பாடசாலை மூடப்படுவதாகவும் அனைவரையும் பாதுகாப்பாக வீடு செல்லுமாறும் அதிபர் சங்கரலிங்கம் ஒலிபெருக்கியில் அறிவிக்கின்றார். இவனுக்கும் ஏனைய மாணவர்களுக்கும் ஒரே குழப்பம் இருந்தாலும் உள்ளுக்குள் சந்தோசம் “ஐ எக்ஸாம் இல்லை ஸ்கூல் இல்லை” நிகழ இருக்கும் விபரீதத்தை உணராத பருவம் அது. உதைபந்தை எடுத்துக்கொண்டு மைதானத்திற்கு இறங்கவும், உப அதிபர் பற்குணம் மாஸ்டர் வந்து கடுமையான தொனியில் சொல்லும் போதுதான், ஏதோ விபரீதம் நிகழப்போகிறது என்று அவனுக்குள் உறுத்திற்று. இங்கிருந்து செல்லவேண்டும் ஆனால் எங்கே எதுவுமே தோன்றவில்லை. வழமையாக நிற்கும் சைவக்கடையில் நிற்போம் அக்காவந்ததும் வீட்டை போகலாம் என எண்ணியவாறு லோரன்ஸ் வீதிவழியே காலி வீதி நோக்கி நடக்கிறான் ஏனைய சக மாணவர்களோடு. மோட்டார்சைக்கிளில் வந்த அங்கிள் “தம்பியவை தமிழே?? Hindu collage ஆ?? தனது மகனின் பெயரை சொல்லி தெரியுமே?? என்று கேட்டார் தெரியாது என்று தலையசைத்தான் அவன். பதற்றம் நிறைந்த அவர் கண்களில் ஒருகணம் தந்தையின் கண்டிப்பு தோன்றி மறைந்தது “எங்க சுத்துறீயாள்…கெதியா வீட்டை போங்கோ ஓடுங்கோ” கறுத்தகாற்சட்டையும் வெள்ளை சேட்டும் போட்ட முகம் தெரியாத ஒரு அங்கிள் சொல்லவும் நிலைமையின் மோசத்தை ஓரளவேனும் உணர்ந்தவனின் நடை வேகம் எடுத்தது. சைவக்கடையினை அடைந்ததும் அங்கே எல்லோரது முகத்திலும் இனம் புரியாத பயத்தையும் பதற்றத்தையும் கண்டான். அது அவனுள் இருந்த அச்சத்தை அதிகரித்தது. எப்போதுமே இன் முகத்துடன் வரவேற்கும் சைவகடையின் முதலாளி “ஏன் அப்பு இங்கை வந்தனியால்?? தனியவே?? ஓடுங்கோ வீட்டை ஓடிப்போங்கோ” மிகுந்த பதற்றத்துடன் சொல்லி முடிக்கவும் காடையர் கூட்டம் உள்ளே வந்து கடையை நொறுக்கி உள்ளே இருந்தவர்கள் மீதும் உடைமைகள்மீதும் மூர்க்கமாகவும் கண்மூடித்தனமாகவும் தாக்கினர். உறைந்து போய் நின்ற அச்சிறுவனின் கையைப் பிடித்து இழுத்தபடி ஓடிய முதலாளி பின்வாசல் வழியே வெளியேறி எப்படியாவது தப்பிப்போ என கலங்கிய விழிகளோடு பார்த்தார். என்ன நடக்கிறது… ஏன் நடக்கிறது… எங்கே போவது… அக்கா வந்தால் தேடுவாளே.. எதுவுமே புரியவில்லை. அடுத்து என்ன செய்யவேண்டும் எதுவுமே விளங்கவில்லை மனித ஓலங்கள் ஒன்றை மட்டும் உணர்த்திற்று “ஓடு ஓடு” உள்ளுக்குள் ஏதோ ஒன்று சொல்ல ஓடினான்… எத்தனை தடவை விழுந்தானோ தெரியாது கால்களின் சிராய்பின் எரிச்சல் கூட அவனுக்குத் தெரியவில்லை. அப்போது தான் அந்த சம்பவம் நடந்தது. எந்த அங்கிள் கண்டிப்புடன் இவனைக் கடிந்தாரோ அவர் லோரன்ஸ் வீதியில் இரத்த வெள்ளத்தில் காடையர் மத்தியில் உயிர்ப்பிச்சை கேட்டு கெஞ்சிக்கொண்டிருந்தார்… கூரிய ஆயுதங்களுடன் இருந்த அக்காடையர் முகம் கொடூரமாக இருந்தது இவனுக்கு. திரைப்படங்களில் கூட வன்முறையை பார்க்கவிடாமல் காத்து வளர்த்த இவன் தந்தை கனவில் கூட எண்ணிஇருக்கமாட்டார் ஒன்பது வயதில் வன்முறையின் உச்சத்தை நேரடியாகக் காண்பான் என்று. அங்கிள் தப்புவாரா?? ஏன் கொல்லவருகிறார்கள்?? அங்கிள் தேடிவந்த அவர் மகன் எங்கே?? எதையுமே ஆராயும் நிலையில் இவன் இல்லை. ஓடிச்சென்று காலி வீதியில் தெற்கே செல்லும் எதோ ஒரு பேருந்தில் ஏறுகிறான். “கொய்த யன்னே?? “(எங்கே போகிறாய்??) நடத்துனர் வினவ “க.. க.. கல்கிஸ்ஸ” “டிக்கெட் கண்ட ” எதையும் கிரகிக்க முடியவில்லை கண்ணீரைத்தவிர… அந்த ஒன்பது வயதில் வன்முறையின் உச்சத்தில், எதையெல்லாம் பார்க்கக்கூடாதோ, அதையெல்லாம் தெருவெங்கும் அச்சத்தில் உறைந்த கண்களோடு பார்த்தபடியே பேருந்து அசைய மறுத்து அசைந்தது. எங்குமே மரண ஓலம். காப்பாத்துங்கோ… ஐயோ… அம்மா… என்னை விடுங்கோ… ஆஆ ஐயோ.. வாள்வெட்டுக்கள், கொலைவெறியோடு தாக்கும் மனிதமிருகங்கள், டயர் போட்டு எரித்த குற்றுயிர் உடல்கள், வீடுகள், உடைமைகள், நடுவீதியில் குற்றுயிராய் தண்ணீர்தங்கோ என்று கத்தவும் திராணி அற்று அனுங்கி அடங்கிய பொட்டுவைத்த அப்பெண்ணுயிர், சுவாலைவிட்டு எரியும் பெரு நெருப்பு எரியும் நெருப்பில் வெடித்துப்பறக்கும் ஏதேதோ, கரும்புகை மண்டலம் இரத்தவாடை கண்களில் ஆறாய் ஓடிய நீர் அச்சம் எரிச்சல் கூவி அழவும் முடியாமல் தொண்டை அடைத்துப்போய் இருந்தது. மூன்று மொழி தெரிந்தும் “அம்மா” ஒற்றைச்சொல்லே அவன் விம்மல்களின் இடையே ஒலித்தது. அம்மாவிடம் போகவேண்டும் இது ஒன்றே அவன் இலக்காய் இருந்தது. கல்கிஸ்ஸ அவன் இறங்கவேண்டிய இடம். இறங்க இரத்தம் உறைவது போல் உணர்ந்தான். தனியே எங்குமே செல்லாதவனின் முதல் தனிப்பயணம் இவ்வளவு கொடூரமாகவா இருக்க வேண்டும்?? புகைமண்டலம், எரியும் குற்றுயிர் உடல்கள் சீறும் வாகனங்களினூடே காலி வீதியைக் கடக்கவேண்டும். எப்போதுமே பெரியவர்களின் கையை பிடித்தவாறே பாதையை கடந்து பழகிய அவனுக்கு இது பெரும் சவாலாகவே இருந்தது. அப்போது அவன் கண்ணில் பக்கத்துவீட்டு சிங்கள அங்கிள் கண்ணில்பட்டார். ஓடிச்சென்று கையைப்பற்றினான் கையில் மண்ணெண்ணெய் கொள்கலனும் மறுகையில் பொல்லுடனும் நின்றார். இவன் அச்சத்தின் உச்சிக்கே போய்விட்டான். கல்கிஸ்ஸவில் இருந்த தமிழரின் வாழைப்பழ கடை சூறையாடப்பட்டுக்கொண்டிருந்தது… அங்கிளின் கையை உதறிவிட்டு காலிவீதியை கடக்க ஓடுகிறான். “பொடிப்புத்தா ( அவ்வாறே அவர் அவனை அழைப்பார்) துவன்டேப்பா” (சிறு மகனே ஓட வேண்டாம்). கணத்தில் சீறிவந்த வாகனத்தில் மோத இருந்ததை ஒரு முரட்டுக்கரம் காப்பாற்றியது. ஆம் அந்த பக்கத்துவீட்டு சிங்கள அங்கிள்தான். “ஓமத பார பணின்னே ” “இன்ட மம எக்கங் யன்னணங்” ( இவ்வாறா பாதையைக் கடப்பது ?? பொறுங்கோ நான் கூட்டிக்கொண்டு போறேன்). கூறியவர் இம்முறை இறுக பிடித்து அழைத்துச் சென்றார். உதறவும் முடியாமல் விருப்பமும் இல்லாமல் அழுதபடி தொடர்ந்தான். “கரம்” விளையாட்டு கற்றுக்கொடுத்த கரத்தில் மண்ணெண்ணெய் கொள்கலன். ஜம்பு அம்பரல்லா பறித்து பரிமாறிய குழந்தை போல பழகிய அங்கிளா இப்படி கொலை வெறியுடன்.. எண்ணியவாறே நடக்கிறான். அச்சிறுவனை காலிவீதியை கடந்ததும், அச்சிறுவனை விட்டுவிட்டு தன் கடமையை(?) செய்யப் புறப்பட்டுவிட்டார். விரைந்து சென்று வீட்டை அடைந்ததும் தாயின் மடியில் விழுந்து அழுதான் அழுதான் அழுதுகொண்டே இருந்தான்.. வழமையாக தேற்றும் அன்னை தேறவில்லை. அவள் கரம் மட்டும் தலை கோதியபடி இருந்தது. அவள் முகத்தில் வழமையான சாந்தம் தென்படவில்லை. மாறாக இறுக்கமே பிரதிபலித்தது. ஒருவேளை அழுது தீர்க்கட்டும் என எண்ணியிருக்கலாம் அல்லது எவ்வாறு ஆறுதல் சொல்வது எனத்தெரியாமல் இருந்திருக்கலாம் அல்லது ஆருயிர்க் கணவனையும் ஆசை மகளையும் காணாத ஏக்கமாய் இருக்கலாம். பல கேள்விகள் பிஞ்சு நெஞ்சில் எதற்குமே விடையில்லை அவ் அன்னையிடம். அவனின் வீட்டில் மேலும் இருவர் வெளிநாடு செல்வதற்காக தங்கியிருந்தனர். ஒருவர் அச்சிறுவனின் ஒன்றுவிட்ட அண்ணா மற்றயவர் தந்தையின் உறவினரின் மகன் இருவருமே சிங்களம்பேசாத இளைஞர்கள். இவனது வீட்டிற்கு காடையர் வந்தால் முதலில் பலியாகப்போவது இவ்விருவருமே. இது அச்சிறுவனுக்கும் புரிந்திருந்தது அவ்விளைஞர்களுக்கும் புரியாமல் இல்லை. ஆன்டி பயமாய் இருக்கு. இதுவே தாரக மந்திரமானது. பிற்பகல் 5 மணியை அடித்து ஓய்ந்தது சுவர்க்கடிகாரம் எந்நேரமும் நாமும் தாக்கப்படலாம் அச்சிறுவன் மனதினுள் நினைத்துக்கொண்டான். நானும் ஒரு கத்தியை எடுத்து வைத்துக்கொள்வோமா ?? ஒன்பது வயதில் தற்பாதுகாப்பிற்கு ஆயுதம் தூக்க துணிந்தான். வாசல் கதவு தட்டுப்பட எல்லோரது முகமும் அச்சத்தால் வெளுறிப்போனது.. தட்டும் ஓசை பலமானது எங்கள் இதய ஓசை அதைவிடப் பலமானது… இரு இளைஞர்களும் அடுப்பங்கரையில் விறகு சேமிக்கும் பகுதியில் ஒருவரும் பாத்திரம் வைக்கும் பகுதியில் மற்றயவருமாய் ஒளிந்துகொள்ள “அம்மா திறவுங்கோ கதவை” அது அக்கா என சிறுவன் சொல்லுமுன்பே ஓடிச்சென்று கதவை திறந்து உள்ளே இழுத்தாள் அன்னை. அக்காவின் கையைப் பிடித்தபடி அவள் தோழி. இருவரின் வெள்ளை உடை முழுவதும் குருதி.. அவன் அக்காவின் தோழி சிங்கள இனப்பெண்.. அவள் பயத்தில் உறைந்திருந்தாள்.பயந்ததுபோல் இருவருக்கும் காயங்கள் ஒன்றும் இல்லை என்பது சற்றே ஆறுதல் அடைந்த அன்னைக்கு இப்போது நான்கு பிள்ளைகளை காக்கவேண்டிய பொறுப்பு. என்ன செய்வது என்ற யோசனையில் விட்டத்தை நோக்கினாள்.. “அம்மா பசிக்கிறது” சிறுவனுக்கு தாயின் நிலைமை புரிந்தது.. எனினும் பசி கேட்க வைத்தது. அதுவரை அமைதி காத்தவள் துள்ளி எழுந்து வேகமாக சமைத்தாள்.அன்னை சொன்னாள் விளக்குகளை ஒளிராமல் இருப்போம், வீட்டில் யாரும் இல்லை என நினைத்துவிடுவார்கள். “எங்களுக்கு உதவ யாருமே இல்லையா முருகா”அம்மா வேண்டினாள். பக்கத்து வீட்டில் இருந்த பாரீதா ஆன்டி அம்மாவோடு நல்ல பழக்கம். அவரிடம் உதவி கேட்கலாம் அக்கா யோசனை சொன்னாள். பரீதா ஆன்டியை பின்மதிலால் அழைக்கப்போக 3 வீடு தள்ளியிருந்த சேவியர் வீட்டில் அலறல் ஓலம் கேட்டது. தொடர்ந்து காடையர் வெறித்தாக்குதலால் வீடே எரிந்தது. அம்மா தீர்க்கமாக சொன்னாள் அடுத்தது எம் வீடு வீட்டின் பின்னால் உள்ள மரவள்ளி தோட்டம், வெள்ளவாய்க்காலின் வழியே சென்றால் பக்கத்திலுள்ள விகாரையில் ஹாமதுருவிடம் தஞ்சம் புகலாம், அதற்குமேல் இறைவன் விட்ட வழி. இதற்குள் மேலும் இரு அயலவர்களது வீடுகள் தீக்கிரை ஆகின. பரீதாவை அழைத்து சொல்லிவிட்டு இருளில் ஐவரும் விகாரை நோக்கி நடந்தனர். எரியும் வீடுகளின் ஒளியே வழிகாட்டியது.விகாரைக்கு உள்ளும் காடையர் நடமாட்டம் இருந்தது. பெண்கள் தமிழில் அலறும் ஓசையும் கேட்டது. இனி எங்கே போவது. எரியும் நெருப்பும் மரண ஓலமும் ஈரக்குலையை உலர வைத்தது. ஒரு டாச் விளக்கின் ஒளி வாய்க்காலின் மறுபுறத்தில் எம்மை தேடி அலைந்தது. வினாடிகள் நெருங்க அவ்வொளி அவர்களை நோக்கி வந்தது. அச்சிறுவன் ஒழித்து வைத்திருந்த கத்தியை யாருக்கும் தெரியாமல் வெளியே எடுத்தான். ஒளி அவர்களை நோக்கி செலுத்தப்பட்டது. கூடவே ” ஓகொள்ளு மே த இன்னே ” ( நீங்கள் இங்கேயா இருக்குகின்றீர்கள்). எமது புதிய வீடு உரிமையாளர் ஒரு CID என்பது அப்பொழுது தான் புரிந்தது. அவரின் பாதுகாப்பில் நாம் காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு பின்பு அங்கிருந்து ரத்மலானை விமான நிலையத்தில் உள்ள தமிழருக்கென அமைக்கப்பட்ட அகதி முகாமில் பல ஆயிரம் தமிழ் அகதிகளோடு அடைக்கப்பட்டோம். அப்பா இல்லாமலே எமது குடும்பம் கண்ணீரில் காத்திருக்க மாற்று உடைகள் கூட இல்லாமல் நாம் அகதிகளாக விமான நிலைய ஓடுபாதையில் அடைக்கப்பட்டோம். மூன்றாவது தடவையாக அந்நாளில் யாரோ ஒருவரால் மீண்டும் அச்சிறுவன் காப்பாற்றப்பட்டான்…
வேட்பாளர் வேட்புமனு தாக்கலின்போது படிவம் 3 (வேட்புமனு) மற்றும் படிவம் 3-A (உறுதிமொழி ஆவணம்) ஆகியவற்றுடன் சேர்த்து தாக்கல் செய்த வேட்பாளர்களின் தகவல் குறித்த சுருக்கம் (நாளது தேதிவரை பெறப்பட்ட வேட்புமனுக்களை ஸ்கேன் செய்யப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட மொத்த வேட்புமனுக்களின் எண்ணிக்கை) Captcha-வை தட்டச்சு செய்யவும் பார்வையாளர்களின் எண்ணிக்கை: 6773307 The information published through this website has been entered by the Returning Officer, and is subject to change.
sex stories in tamil என் பெயர் சுகன்யா. இப்பொழுது சொல்ல போவது என் அனுபவம், மிகச் சமீபத்தில் நடந்தது. எனக்கு மட்டும் இதனை அனுபவங்கள் ஏன் இப்படி நடக்கிறது என்று புரியவில்லை, உங்களிடம் இதற்கு ஒரு பதில் எதிர் பார்க்கிறேன், சரி இப்போது என் அனுபவங்களுக்குச் செல்கிறேன். என் கணவர் ஒரு வாரம் பிசினஸ் சுற்றுலா சென்று விட்டு அன்று தான் வரப்போவதாகப் போன் செய்தார், 7 நாட்களுக்கு மேல் என் கூதியும் காய்ந்து கிடந்தது எப்போது வருவார் எப்படி இடிப்பாரோ என்றெல்லாம் யோசித்துக் கொண்டு இருந்தேன். Read More என்ன மாமா ராத்திரி பூரா தூங்கலியா 3 என்ன மாமா ராத்திரி பூரா தூங்கலியா 2 என்ன மாமா ராத்திரி பூரா தூங்கலியா 1 என் குழந்தையும் பள்ளி விடுமுறைக்கு என் அம்மா ஊருக்குச் சென்று விட்டான், வீட்டில் யாரும் இல்லாததால் நானே கண்ணாடியில் என் மார்புகளை உற்றுப் பார்ப்பதும் காம எண்ணத்தால் என் மார்புக் காம்புகள் விறைப்பதனையும் என்னால் உணர முடிந்தது. காலை ஒரு 10.30மணிக்கு ஷர்மிளா அக்கா போன் செய்தார்கள் ( உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா என்று தெரியவில்லை, அவளின் மகன் தான் ஒரு நாள் முழுவதும் வைத்து பொண்டாட்டி என்று ஓத்தான்) என்ன அக்கா என்றேன், அவர்கள் “எனக்கு உடம்பு முடியவில்லை மருத்துவரிடம் போக வேண்டும் கொஞ்சம் வர முடியுமா ?” என்று கேட்டார்கள். என் கணவன் மதியம்தான் வருவதாக சொனார் அதனால் வருகிறேன் என்று சொல்லிவிட்டு, அவர்களோடு மருத்துவமனைக்குச் சென்றேன். ஷர்மிளா அக்காவிற்கு அதிக கச்சல் இருப்பதாகவும் கூட இருந்து கவனிக்க சொல்லி மாத்திரை தந்தார்கள், நான் அக்கா எங்கள் வீட்டில் ரெஸ்ட் எடுங்கள் சாயந்தரம் உடம்பு சரியானவுடன் வீட்டிற்குப் போகலாம் என்று என் வீட்டிற்குக் கூட்டி சென்றேன். அவர்களுடன் பேசி கொண்டு இருந்தேன், அக்கா இரண்டு மாசத்திற்கு ஒரு முறை தான் உங்கள் வீட்டுக்காரர் வருகிறார், அது வரை எப்படி அக்கா படுக்கை விஷயத்தை மறந்து இருக்கீங்க என்றேன். அக்காவும் சிரித்துவிட்டு அதை ஏண்டி கேட்கறே ஒரே கஷ்டம் தான் உடம்பு ஒரு திருகு திருகும் பார், ஆம்பிளைய பொறந்துஇருந்த எவகிட்டயாவது கூடப் போய்விடலாம், பொம்பளைய இருந்து படர கஷ்டம் இருக்கே அப்படி நிறைய கஷ்டம் என்று பெருமூச்சுவிட்டார்கள். உன்னிடம் சொல்வதற்கு என்ன இருக்கு சில நேரங்களில் என் விரலை உள்ளே விட்டு ஆட்டுவேன், மார்புகளைச் சுவரில் வைத்துத் தேய்ப்பேன், படுக்கையில் தொடை இரண்டுக்கும் மத்தியில் எப்போதும் ஒரு தலையணை புருஷன் மாதிரி என்று சொல்லிவிட்டு, போதும் டி எனக்கே கூச்சமா இருக்கு. இன்னும் நிறைய இருக்கு அதைச் சொன்னால் நீங்களா அக்கா இப்படி என்று கூறிவிடுவாய். இப்பொழுது கூட கச்சல் இருக்கு ஆனால் அதைத் தண்டி காம ஜுரம் எனக்குள் அடித்துக் கொண்டு தான் இருக்கு என்று சிரித்தார்கள். நான் அத்துடன் பேச்சை நிறுத்தி விட்டு அவர்களுக்குச் சாப்பாடு கொடுத்து விட்டு எங்கள் பெட் ரூமில் படுக்கவைத்தேன், இரவிலும் என்று மாத்திரை கொடுத்து இருந்தார்கள். மாத்திரை சாப்பிட்டு விட்டு அக்கா தூங்க தொடங்கினார்கள். என் கணவர் மதியம் வந்தார் வந்தவுடன் சமையல் அறையில் என் உதடுகளைக் கவ்வினார் பின்பு ஒரு கையால் என் புண்டயியும் மாறு கையால் என் சூத்தின் பிளவில் நோண்டினார். நான், என்னங்க சும்மா இருங்கள் இரவு பார்த்துக்கலாம். நாம் படுக்கை அறையில் ஷர்மி அக்கா இருக்கிறார்கள் அதனால் அங்கே போவாதீங்க, அவங்களுக்குக் கச்சல் என்பதால் படுக்க வைத்துஇருக்கேன். மாலை அவங்களே வீட்டுக்குப் போய்விடுவார்கள் என்றேன். உடனே அவர் அடிப் போடி நான் செம காமவெறியில் வந்து இருக்கிறேன், ஒரு புது ஆபாச சி டி வாங்கிக் கொண்டு வந்தேன். அதைப் பார்த்துவிட்டு உன்னை விதவிதமாக ஓக்கவேண்டும் அது மட்டும் இல்லை. ரொமப நாள் கழித்து தண்ணி அடித்து அதையும் செய்யலாம் என்று வந்தால் இப்படிச் சொல்கிறாயே என்றார். சரி நீங்க நாம் மாற்று ஒரு அறையில் தான் கம்ப்யூட்டர், படுக்கை என்று சகல வசதியும் இருக்கே அங்கே சென்று நாம் என்ஜோய் செய்யலாம் என்றேன்.அவர் மொனங்கிகொண்டே அந்த அறைக்குச் சென்றார். மாலை 7மணிக்கு என் கணவர் மற்றுஒரு படுக்கை அறையில் தண்ணியடித்து கொண்டும், ஆபாசப் படம் பார்த்துக்கொண்டும் இருந்தார். அவர்கள் கிளம்பிட்டாங்களா, எனக்கு இந்த ரூம் சரிப்படாது அந்த ரூம்தான் என்றார். நான், இப்ப அவங்களை அழைத்துக் கொண்டு விடப்போகிறேன் வீட்டைப் பார்த்து கொள்ளுங்கள் என்றேன். அவர் குடிபோதையில் இருந்ததால், சரி சரி என்று காதில் சரியாக வாங்காதவாறு தலையை அசைத்தார். எங்கள் படுக்கை ரூமிற்கு வந்தபோது ஷர்மிளா அக்கா சாப்பிட்டு விட்டு மாத்திரை போட்டு கொண்டு இருந்தார்கள், ஜுரம் அப்படியே இருந்தது, மருத்துவரிடம் போகலாம் என்ற பொது வேண்டாம், காலையில் எல்லாம் சரி ஆகிவிடும் என்றாள். கொஞ்சம் நேரம் பேசி கொண்டு இருந்தபோது தூக்கமாக வருகிறது என்னைச் சிறிது நேரம் கழித்து எழுப்பு நான் வீட்டுக்குச் சென்று விடுகிறேன் என்றாள். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை, எனக் கணவன் வேறு இந்தப் படுக்கை அறைதான் வேண்டும் என்று கத்திக்கொண்டு இருக்கிறார். சிறிது நேரம் கழித்து ஷர்மிளா அக்காவின் போன் அடித்தது, போனில் அக்காவின் வீட்டுக்காரர் பேசினார். நான் ஷர்மிளாவின் கச்சலை பற்றிக் கூறிவிட்டு என்வீட்டில் உறங்கிக் கொண்டு இருக்கிறாள் என்று கூறினேன். அவர், திடீர் என்று ஆச்சரியம் கொடுக்க ஷர்மிளாவுடன் சொல்லாமல் வீட்டுக்கு வந்துவிட்டேன், தற்பொழுது அவளின் கச்சலை பற்றி விசாரித்துக் கொண்டு இருந்தார். நான் காரில் வந்து ஷர்மிளாவை மருத்துவரிடம் அழைத்துச் சென்று கட்டிவிட்டு வீட்டுக்குச் செல்கிறேன் என்றார். நான் அவரிடம்,” சார் சாவி நானே கொண்டு வருகிறேன் நீங்கள் எதற்கு” என்று கூறிவிட்டு. சாவி எடுத்துக் கொண்டு அவர்கள் வீட்டிற்குச் சென்றேன். எங்கள் தெருவில் அவ்வளவாக வீடு கிடையாது, சிறிது தூரம் சென்று தான் ஷர்மிளா அக்கா வீட்டுக்குச் செல்ல வேண்டும். நான் அக்காவின் வீட்டை அடைந்தேன், அப்பொழுது அக்காவின் கணவர் வீட்டின் வெளியில் காத்துக்கொண்டு இருந்தார். வீட்டின் கதவை திறக்க முயற்சி செய்து கொண்டு இருந்தோம், அப்பொழுது ஒருபக்க கதவு வேகமாக என் முதுகில் இடித்தது. அவர், “ஐயோ மன்னித்து விடுங்கள்!” என்று கூறிக்கொண்டே என் முதுகில் உள்ளங்கையால் வைத்துத் தேய்த்து விட்டார். எனக்கு மிகவும் கூச்சமாக இருந்தது. பரவாயில்லை என்று கூறிக்கொண்டு சற்று தூரமாக நின்றேன். அவரின் கண்கள் என் முலையைப் பார்த்தவாறு இருந்தது, நான் சேலையை எடுத்து மறைத்துக் கொண்டேன். பின்னர் காரில் என் வீட்டுக்கு அழைத்துச் சென்றார், வீட்டுக்குச் சென்றவுடன் பின்னாலே வந்தார். உங்கள் “கணவர் எங்கே?” என்று கேட்டார். அவர் வேறு அறையில் தூங்கிக்கொண்டு இருக்கிறார் என்று கூறினேன். பின்னர் என் படுக்கை அறைக்குச் சென்றோம், அங்கே நான் கண்ட காட்சி துக்கிவாரி போட்டது. என் கணவர் நிர்வாணமாகச் சூத்தை காண்பித்துக் கொண்டு ஷர்மிளா அக்காவின் புண்டையை தூக்கி பூலை திணித்துக் கொண்டு இருந்தார். அக்காவின் ப்ளௌஸ் மற்றும் ப்ரா ஹூக் கழன்று இருந்தது. இரு முனைகளும் கீழே தொங்கிக்கொண்டு இருந்தது. அதைப் பார்த்தவுடன் எனக்கு மயக்கம் வருவது போல் இருந்தது. “ஐயோ! என்னங்க..” என்று தடுக்க சென்றேன், அப்பொழுது ஷர்மிளா அக்காவின் கணவர் என் தோளை பிடித்து நிறுத்தினர். அவர் குடிபோதையில் நான் என்று நினைத்துக் கொண்டு ஷர்மிளா அக்காவை ஒத்துக்கொண்டு இருக்கிறார் என்றேன். என் பொண்டாட்டி என்ன போதையில் இருக்கிறாள் என்று கேட்டார். “இல்ல சார், அக்காவிற்கு கச்சலுக்காக அதிக வீரியம் உள்ள மாத்திரை கொடுத்து இருக்கிறார்கள், அதனால் அக்காவும் சுய நினைவை இழந்து அறா தூக்கத்தில் இருக்கிறாள் என்றேன். மீண்டும் அவர்களைத் தடுக்க சென்றேன், சரி விடுமா ! அதான் உன் கணவர் என் மனைவின் புண்டையில் சொருகி மேட்டர் அடித்து விட்டார். இறுதியாக விந்தையைத் தெளித்து ஆனந்தம் கொள்ளட்டும் என்றார். என் கணவரோ “சுகுணா கொஞ்சம் எழுந்து என் பூலை சப்புடி” என்று உளறிக்கொண்டு கொண்டு அக்காவின் காம்பை கடித்தார். எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல், முழித்துக் கொண்டு இருக்கும்போது திரும்பி பார்த்தேன். ஷர்மிளா அக்காவின் கணவர் தான் போன் அவர்கள் இருவரும் செய்யும் மேட்டர் வீடியோ எடுத்துக் கொண்டு இருந்தார். ஷர்மிளா அக்கா மயக்கத்தில், “இஸ் ஆஹா ஆஹா ஆஹா வேகமா செய்யுங்கள்!” என்று உளறிக்கொண்டு இருந்தாள். அவர்கள் இருவரும் சுயநினைவு இல்லாமல், செக்ஸ் செய்து கொண்டு இருக்கின்றனர், பிரித்து விடலாம் என்று கூறினேன். அந்தச் செயலை செய்யாதீர்கள், கொஞ்சம் வெளியில் வாருங்கள் உங்களிடம் பேச வேண்டும் என்றார். என் கணவரோ நன்றாகச் சுன்னியை அக்காவின் கூதியில் ஆழமாகத் திணித்து அடித்துக் கொண்டு இருந்தார். அவரின் கொட்டை அக்காவின் சூத்தின் ஓட்டையைத் தொடும் அளவுக்கு ஏகிரி கொண்டு இருந்தார். அக்காவின் உதட்டில் அவர் உதட்டைப் பற்றி கடித்து இழுத்தார், மார்புகளை மிக அழுத்தமாகக் கசக்கி கொண்டே கடித்தார். அக்கா, “முடியல! ஓ ஓ ஆஹா ” என்று கதறினாள். பின் அக்காவின் புண்டையில் வாய்வைத்து உறிஞ்சி அங்கே அவர் எச்சிலைத் துப்பி நாக்கை வருடினார் மீண்டும் அவர் பூலை புண்டையில் சொருகி ஆதி ஆதி என்று அடித்தார் கடைசியில் வேகமாகச் செய்து அவருடைய விந்துவை அக்காவின் கூதியில் இறக்கிவிட்டு இறங்கி அக்காவைக் கட்டி பிடித்தவாறே, ” இன்று அருமையான ஒரு ஓழு ” என்று கூறிக்கொண்டே தூங்கினார். அக்காவும் அவரைக் கட்டி பிடித்தவாறு தூங்க தொடங்கினார்கள். நாங்கள் இருவரும் வெளியே வந்தோம், அக்காவின் கணவர் மற்றுஒரு படுக்கை அறை எங்கே ? என்று கேட்டார். அவர்கள் இருவரும் ஒருத்தர் மீது ஒருத்தர் மிகுந்த மரியாதையை வைத்து இருப்பவர்கள், தெரியாமல் மேட்டர் நடந்து விட்டது என்றேன். அவர் சிரித்து கொண்டே, ” அதற்காக உன் புருஷன் என் பொண்டாட்டியை ஓத்தது சரி என்று சொல்கிறீர்களா” என்றார். இல்ல சார் என்றேன். சரி இன்று இரவு இங்கே தாங்கிக்கொள்ளகிறேன், கதவை மூடிவிட்டு வாருங்கள் என்றார். நான் அதிர்ச்சியாக அவரைப் பார்த்தேன், எனப் பண்ண போகிறீர்கள் என்றேன். அவரே கதவை லாக் போட்டுவிட்டு என் கையை பிடித்து இன்னொரு ரூம்க்கு என்னை அழைத்துச் சென்று கதவை லாக் செய்து கொண்டார். அங்கே கம்ப்யூட்டரில் ஆபாசப் படம் ஓடிக்கொண்டு, டேபிள் மீது சரக்கு வேறு இருந்தது. நான் பயம் கலந்த உணர்ச்சியில் தெரியாமல் நடந்து விட்டது, என்னை விட்டு விடுங்கள் என்று அரைமனதாக கூறினேன். அவர் அதற்கு, ” நீ தான் இதற்குத் தீர்வு சொல்லவேண்டும், ஒன்று உன் கணவருக்கு என் போனில் இருக்கும் வீடியோ வைத்துதண்டனை வாங்கிக் கொடுக்கலாம் அல்லது நீ எனக்கு ஒத்துழைப்பு கொடுத்துச் சரி செய்து விடலாம்” என்று கூறினார். நானும் வேறு வழி இல்லாமல் சந்தோசம் கலந்த அதிர்ச்சியில் ஒத்துக்கொண்டேன். அவர் உடனே உடைகளைக் களைந்து விட்டு அவர் பூலை கையால் உருவினார். அது நன்றாக விறைத்து நீளமாக இருந்தது, ஆள் நல்ல வாட்டசாட்டமாக இருந்தார். அவர் நெஞ்சில் மூடிச் செழித்து வளர்ந்து இருந்தது. அவரின் காம்பு பாக்கு கொட்டை போன்று இருந்தது. அவரின் சூத்து கல் மாதிரி இருந்தது, ஆனால் என் கணவரின் சூத்து கொழு கொழு வென்று குழந்தை இருப்பது போன்று இருக்கும். இவர் என்ன செய்வாரோ என்று ஆச்சரியம் கலந்த பயம் இருந்தது. கம்ப்யூட்டரில் இருந்த ஆபாசப் படத்தில் வேறு,”கருப்பன் வெள்ளைக்காரியின் சூத்தில் பூலை இறக்கிக் கொண்டு இருந்தான்”. அவர் என்னைப் பார்த்து இன்று செம மூடாக இருக்கிறது என்று கூறினார். எதுவும் சொல்லாமல், அமைதியாக இருதேன். அருகில் அழைத்து கன்னத்தில் முத்தம் பதித்தார். முதலில் ஒரு மாதிரியாக இருந்தது, பின்னர் என்னை மிகவும் அன்பாகப் பார்த்து கொண்டார். என் கணவருக்கும் மேல் நன்றாகக் கவனித்து கொண்டார். என்னை அருகில் அழைத்தார், இந்தமுறை சற்றும் தயங்காமல் மிக அருகில் சென்றேன். என் கூந்தல் வாசனை இழுத்துக் கொண்டார். நான் அவரின் மேல் சாய்த்தேன். இருவரும் ஒருவருக்கு ஒருவர் நெருக்கம் அடைத்தோம். பின்னர் என் சேலையை கழட்டி எறிந்தார். தற்பொழுது ப்ளௌஸ் மற்றும் பாவாடையுடன் இருந்தேன். என்னைப் படுக்கையில் படுக்க வைத்து ப்ராவை கழட்டி என் முலையைச் சுழற்றி நக்கிக் கொண்டு இருந்தார். பின்னர் என் ஜட்டியைக் கழட்டி எறிந்து புண்டையை பதம் பார்க்க ஆரம்பித்தார். தற்பொழுது இருவரும் நிர்வாணமாகப் படுக்கையில் படுத்துக் கொண்டு எங்களின் காம இச்சைகளைத் தொடங்கினோம். என் சிவந்த புண்டையை விரித்து, பெரிய பூலை உள்ளே நுழைத்தார். அவரின் பூலுடன் ஒப்பிட்டால், என் புண்டை சற்று சிறிது. அவர் சொருகியவுடன், ” ஆஹா ஆஹா. ம் ம் ம் ம் ” என்று கதறினேன். எனக்கு எந்த ஒருவஞ்சையும் பார்க்காமல், ஷர்மிளா அக்காவை ஓப்பது போன்று ஒக்க ஆரம்பித்தார். இருகால்களையும் தோள்மீது வைத்துக் கொண்டு கீழுமாக அடித்தார். என் புண்டை அவர் சுன்னியின் வேகத்தைத் தாங்காமல், நடுநடுங்கியது. பின்னர் தொடர்ந்து ஒத்துக்கொண்டே இருந்தார், அவருக்கு விந்து பீறிக்கொண்டு வெளியில் வந்தது. நான் ஒரு சொட்டு விடாமல் வாயில் வைத்துக் குடித்து விட்டேன். இருவரும் அதிகாலை 4மணிவரை ஒத்துக்கொண்டோம். பின் அவரின் மனைவிக்கு ஆடையை அணிவித்துக் கொண்டு காரில் ஏற்றிக் கொண்டு வீட்டுக்குச் சென்று விட்டார். நான் என் கணவன் உடன் நிர்வாணமாக விடியும்வரை படுத்துக்கொண்டு இருந்தேன். காலை எழுந்த என் கணவன்,” சுகன்யா இரவு என் மேட்டர் எப்படி இருந்தது” என்று ஆனந்தமாகக் கேட்டார். நான் மனதுக்குள் அவரின் பூலை நினைத்துக் கொண்டு அருமையாக உங்களின் பூல் என் புண்டையில் வேலை செய்தது என்றேன். அதன்பிறகு என் கணவருக்கு தெரியாமல், பலமுறை ஒத்துக்கொண்டு இருந்தேன். Related Posts என் காமக் காதலன் என் பயத்தை விட என் காம ஆசை அதிகமாக இருந்தது என் காதலியும் என் நண்பனும் தியேட்டர்யில் கொஞ்சம் ஆட்கள் தான் இருந்தார்கள்! Categories Tamil kama kathaikal Tags sex stories in tamil, sexstorytamil, Tamil Kamakathaikal, tamil sex story, Tamilsex
ஊடுவேன் என்று எண்ணிக் கொண்டு சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விட்டு அவரோடு கூடுவதை கண்டு தழுவினேன். சாலமன் பாப்பையா உரை: அவர் வந்தபோது ஊடல் கொள்ளலாம் என்று எண்ணி, அவர்முன் நில்லாது அப்பால் போனேன்; நான் போன போதும், என் நெஞ்சம் அடக்கம் இல்லாமல் அவரோடு கலக்கத் தொடங்குவதைக் கண்டு இனி அது முடியாது என்று அவரைத் தழுவினேன். கலைஞர் உரை: ஊடல் கொண்டு பிணங்குவோம் என நினைத்துதான் சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விடுத்து அவருடன் கூடுவதைக் கண்டு என் பிடிவாதத்தை மறந்து தழுவிக் கொண்டேன்.
கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளிடையே ஆக்ஸிஜன் அளவு திடீரென வீழ்ச்சியடைகிறது. எனவேதான் நமக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் மிகவும் தேவைப்படுகிறது என்று தெரியும். இது கடுமையான மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறது. கொரோனா வைரஸூக்காக மட்டும் அல்ல, பொதுவாகவே ஆக்ஸிஜன் நமக்கு மிகவும் முக்கியமானது. உங்கள் உடலில் ஆக்ஸிஜன் அளவை பராமரிப்பது உட்பட உங்கள் ஆரோக்கியத்தை தீர்மானிப்பதில் ஊட்டச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. நமது ஆக்ஸிஜன் அளவை பராமரிக்க எந்த உணவுகள் உதவியாக இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம். ஆக்ஸிஜனேற்றிகள் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த உணவுகள் உங்கள் செல்களை ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராகப் பாதுகாக்கலாம் மற்றும் பல நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம். குறிப்பாக இதை புற்றுநோய் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை குறைக்கிறது. அவகேடோ, வாழைப்பழங்கள், கேரட், செலரி, பூண்டு மற்றும் பேரிச்சம் பழங்கள் அதிக ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளன. அவை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். பேரிச்சம் பழங்கள் மற்றும் பூண்டுகளில் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவும் பண்புகள் உள்ளன. தெளிவாக, ஆக்ஸிஜனேற்றிகள் உங்கள் உடலில் ஆக்ஸிஜன் அளவை பராமரிக்க வல்லவை. நார்ச்சத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், பசியின்மை குறைத்தல் மற்றும் கொழுப்பின் அளவைக் குறைத்தல் போன்ற பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. முளைக்கட்டிய பயிர்கள், ஆப்பிள்கள் மற்றும் பாதாம் போன்ற உணவுகள் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் ஆகும். அவை ஜீரணிக்க எளிதானவை. கூடுதலாக, உடலில் ஹார்மோன் சமநிலையை பராமரிக்க உதவும் ஏராளமான என்சைம்கள் அவற்றில் உள்ளன. மேலும் நிச்சயமாக இரத்த ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும். எலுமிச்சை ஆக்ஸிஜன் நிறைந்த உணவில் எலுமிச்சை ஒன்று ஆகும். இது அமிலத்தன்மை கொண்டது. கல்லீரலை சுத்தப்படுத்தும் திறன் எலுமிச்சை சாற்றில் உள்ளது.
பியாஜியோ நிறுவனம் தனது எப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 என்ற புதிய மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இத்தாலியை சேர்ந்த பியாஜியோ குழுமத்தின் கீழ் செயல்படும் வெஸ்பா மற்றும் எப்ரிலியா ஸ்கூட்டர் நிறுவனம் இந்தியாவில் பிரிமீயம் ரக ஸ்கூட்டர் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. வெஸ்பா ஸ்கூட்டர்களுக்கு தனி வாடிக்கையாளர் வட்டம் உள்ளது. இந்தியாவில் தனது மார்க்கெட்டை பெரிது படுத்தும் நோக்கில் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட புதிய மாடல் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள் இந்நிலையில் பியாஜியோவின் எப்ரிலியா நிறுவனம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனது புதிய வடைவமைப்பான எப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 என்ற புதிய மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. Piaggio Aprilia SXR 160 இன் சிறப்பம்சங்கள்; ஏப்ரிலியா எஸ்.எக்ஸ்.ஆர் 160 இல் சிங்கிள் சிலிண்டர், 4-ஸ்ட்ரோக், ஏர்-கூல்ட், 3 வால்வு பியூயல் இன்ஜெக்க்ஷன் கிளீன் எம்மிஷன் என்ஜின் தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. இது 7100 ஆர்.பி.எம்மில் 11 பி.எஸ்ஸின் உச்ச சக்தியை வெளிப்படுத்துகின்றது. சிறந்த சவாரி அனுபவத்தையும், உயர்ந்த அளவிலான சௌகரியத்தை வழங்க, ஏப்ரிலியா எஸ்.எக்ஸ்.ஆர் 160 பெரிய, நீண்ட, வசதியான இருக்கைகளை கொண்டுள்ளது. மேலும் 7 லிட்டர் அளவு திறன் கொண்ட எரிபொருள் டேங்கையும் ஏப்ரிலியா எஸ்.எக்ஸ்.ஆர் 160 கொண்டுள்ளது. விலை நிலவரம்; Piaggio Aprilia SXR 160 1,25,997 ரூபாய்க்கு (எக்ஸ் ஷோரூம் விலை) கிடைக்கிறது. நாடு முழுவதும் உள்ள அனைத்து பியாஜியோ டீலர்ஷிப்களிலும் இதற்கான முன்பதிவு செய்யலாம். சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
பிலிப்பைன்ஸின் Cotabato நகரில் பரபரப்பான வீதியில் இலங்கை வர்த்தகர் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார். கொல்லப்பட்டவர் மகுயிண்டனாவோவில் உள்ள Datu Odin Sinsuat நகரின் பரங்காய் செம்பாவில் வசிக்கும் இலங்கை நாட்டவரான Mohamed Rifard Mohamed Siddeek என அடையாளம் காணப்பட்டார். சித்தீக் தனது வெள்ளை மினி வேனில் இருந்து பாரங்கே போப்லாசியன் மதர் பகுதியில் உள்ள டான் ரூஃபினோ அலோன்சோ அவென்யூ வழியாக இறங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சிட்டி மெகா மார்க்கெட் அருகே குற்றம் நடந்த இடத்தில் காலிபர் 45 துப்பாக்கிக்கான வெற்று குண்டுகளை பொலிஸார் கண்டுபிடித்தனர். துப்பாக்கி ஏந்திய நபர் ஒரு துணைக்கருவியால் இயக்கப்பட்ட மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பிச் சென்றதாக சாட்சிகள் பொலிஸாரிடம் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவரை அறிந்த பொதுமக்கள் கூறுகையில், சித்தீக் பணம் கடன் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும், கடந்த ஆண்டு டத்து ஒடின் சின்சுவாட் நகரின் பரங்கே ப்ரோஸ் என்ற இடத்தில் துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
2 நாள், 3 நாள் மற்றும் 5 நாள் என்ற வகையில் சொகுசு கப்பலின் பயணத்திட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் முதல்முறையாக சுற்றுலா பயணிகளுக்காக சொகுசு கப்பல் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.சென்னை... Comments closed 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்டான மாணவர்களுக்கு மறுதேர்வு- முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவு By murugan தேர்வு எழுதாத மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து உடனடி தேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு மற்றும்... Comments closed சட்டம், ஒழுங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் By murugan தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர். சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டம், ஒழுங்கு நிலை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்... Comments closed பா.ஜனதாவை ஓரம் கட்ட முடிவு- புதிய அணியை உருவாக்க அன்புமணி முயற்சி By murugan 2026 சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா இருக்கும் கூட்டணியே ஆட்சி அமைக்கும் கூட்டணியாக இருக்க வேண்டும் என்ற திட்டத்தோடு அரசியல் பாதையை பா.ஜனதா வகுத்து வருகிறது. சென்னை:தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பங்கள் வரப்போகும் (2024)... Comments closed அமெரிக்காவில் குழந்தை பெற்றுக்கொள்ள அடிமைப்படுத்தப்பட்ட கருப்பின பெண்கள் By Nila Raghuraman on Jul 30, 2020 6 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Reuters அமெரிக்க நாடுகளுக்கு 16 முதல் 19-ம் நூற்றாண்டு வரை அடிமைகளாக அழைத்துவரப்பட்ட ஆப்பிரிக்க மக்கள் பற்றிய பல புதிய தகவல்களை மரபணு ஆய்வு ஒன்று வெளிக்கொண்டு வந்துள்ளது. 50,000 க்கும் மேற்பட்ட மக்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். அடிமை வணிகம், அமெரிக்கக் கண்டத்தில் உள்ள நாடுகளில் எத்தகைய ’’மரபணு தாக்கத்தை’’ ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்த கூடுதல் தகவல்களை அறிய இந்த ஆய்வு நடத்தப்பட்டது. பாலியல் வல்லுறவு,துன்புறுத்தல், நோய் மற்றும் இனவெறி ஆகியவற்றின் விளைவுகளை இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. 1515 முதல் 19-ம் நூற்றாண்டின் மத்தியில் வரை 1.25 கோடி ஆப்பிரிக்கர்கள் அமெரிக்க நாடுகளுக்கு அடிமைகளாக அழைத்து வரப்பட்டனர். அமெரிக்கக் கண்டத்திற்கு அழைத்து வரப்பட்டபோது, கிட்டதட்ட 10 லட்சம் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் வழியிலே இறந்துள்ளனர். இந்த மரபணு ஆய்வை நுகர்வோர் மரபியல் நிறுவனமான ’23அண்டுமீ’ நடத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டத்தில் வசிக்கும் ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த 30,000 பேர் இந்த ஆய்வில் உட்படுத்தப்பட்டுள்ளனர். ஆய்வு முடிவுகள் ’அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் ஹ்யூமன் ஜெனெடிக்ஸ்’ பத்திரிகையில் வெளியிடப்பட்டது. ’’மரபணு முடிவுகளை, அடிமைக் கப்பல்களில் வந்தவர்களின் பட்டியலுடன் ஒப்பிடுவதே எங்கள் நோக்கம். இந்த மரபணுக்கள், அடிமை கப்பலில் வந்தவர்களுடன் ஒத்துப்போகிறதா அல்லது வித்தியாசமாக உள்ளதாக என்பதைப் பார்த்தோம்’’ என 23அண்டுமீ நிறுவனத்தின் மக்கள்தொகை மரபியலாளர் ஸ்டீவன் மைக்கேலேட்டி ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் தெரிவித்தார். ஆப்பிரிக்கக் கண்டத்தில் எங்கிருந்து இந்த மக்கள் அழைத்துவரப்பட்டனர், அமெரிக்கக் கண்டத்தில் எங்கு அடிமைகளாக நடத்தப்பட்டனர் என்பதற்கான வரலாற்று ஆவணங்களுடன், இவர்களது ஆய்வு முடிவுகள் ஒத்துப்போகின்றன. ஆனால், ’’சில சந்தர்ப்பங்களில், எங்களது ஆய்வு முடிவுகள் உடன்படவில்லை’’ என்கிறார் ஸ்டீவன் மைக்கேலேட்டி. தற்போது அமெரிக்க நாடுகளில் உள்ள பெரும்பாலான ஆப்பிரிக்க வம்சாவளிகளின் வேர், அங்கோலா மற்றும் காங்கோ ஜனநாயக குடியரசு நாடுகளில் அமைந்துள்ள பிரதேசங்களில் உள்ளன என்கிறது இந்த ஆய்வு. ஆனால் ஆச்சரியமாக, அமெரிக்காவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் நைஜீரிய வம்சாவளிகள் அதிக அளவில் இருக்கின்றனர். இந்த பகுதியில் அடிமைப்படுத்தப்பட்டவர்கள் குறித்துப் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையையும், ஆய்வுத் தரவை ஒப்பிட்டபோது இது தெரியவந்தது. 1619 முதல் 1807 வரை காலனித்துவ நாடுகளுக்கு இடையே நடந்த அடிமை வர்த்தகம் இதற்குக் காரணமாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பட மூலாதாரம், Getty Images அட்லாண்டிக் கடல் பிரதேச நாடுகளில் அடிமை வணிகத்திற்கு பல தடைகள் அப்போது வந்துக்கொண்டிருந்தது. இந்த நிலையில், அடிமை வர்த்தகத்தைத் தொடர்ந்து நடத்த, பிரிட்டிஷ் கரீபியன் தீவுகளிலிருந்து நைஜீரிய மக்கள் மற்ற பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். அதேபோல், முதல் அடிமைகள் கப்பல் கிளம்பிய செனகல் மற்றும் காம்பியாவைச் சேர்ந்த வம்வாளிகள் தற்போது அமெரிக்காவில் குறைவாகவே இருப்பதைக் கண்டு ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியப்பட்டனர். இதற்கு இரண்டு காரணங்களை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் நெல் வயல்களில் பணியமர்த்தப்பட்டனர். அங்கு மலேரியா போன்ற பல ஆபத்தான நோய்கள் பரவலாக இருந்தன. இதனால் அவர்கள் இறந்திருக்கலாம். இரண்டாவது காரணம், கப்பல் பயணத்தின்போது பலர் உயிரிழந்திருக்கலாம். அமெரிக்க நாடுகளில் அடிமைப்படுத்தப்பட்டிருந்த கருப்பின பெண்கள் நடத்தப்பட்ட விதம், அங்கு மரபணு கலப்பினம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது என்கிறது இந்த ஆராய்ச்சி. அடிமைப்படுத்தப்பட்டவர்களில் பெரும்பாலோனோர் ஆண்களாக இருந்தனர். குறைந்த எண்ணிக்கையிலிருந்த பெண்களை, அவர்களின் உரிமையாளர்கள் பாலியல் வன்கொடுமை செய்தனர் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். லத்தீன் அமெரிக்க நாடுகளில், மரபணு கலப்பு உருவாக்கத்தில் ஒரு ஆப்பிரிக்க ஆண் பங்காற்றியிருந்தால் அதற்கு இணையாக 17 ஆப்பிரிக்கப் பெண்கள் பங்காற்றியிருந்தனர். இதனால், அங்கு ஆப்பிரிக்க இன மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால், கருப்பின மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை விரும்பாத பல லத்தீன் அமெரிக்க நாடுகள், ’’பிரன்க்யுகமெண்டோ’’ எனப்படும் வெள்ளையர்களாக ஆக்குதல் கொள்கையைக் கொண்டுவந்தன. அதன்படி, இனப்பெருக்கம் மூலம் ஆப்பிரிக்கப் பூர்வீகத்தை நீர்த்துப்போகச் செய்யும் நோக்கத்துடன் ஐரோப்பிய வெள்ளை இன ஆண்களின் குடியேற்றத்திற்கு லத்தீன் அமெரிக்க நாடுகள் ஊக்குவித்தன. அடிமை வணிகத்திற்கு தடை விதிக்கப்பட்ட பிறகு, அடிமையாக பணியாற்றும் மக்களின் எண்ணிக்கை குறையாமல் இருப்பதற்காக, அவர்கள் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளக் கட்டாயப்படுத்தப்பட்டனர் என இந்த ஆய்வு கூறுகிறது. அமெரிக்காவில் அடிமையாக இருந்த பெண்கள், குழந்தைகளைப் பெற்றுக்கொண்டால் விடுவிக்கப்படுவர் என்ற வாக்குறுதிகள் தரப்பட்டதாகவும், இனங்கள் கலப்பதற்கு எதிராகக் கொள்கைகள் இருந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவில் சமீபத்தில் துவங்கிய ’கறுப்பினத்தவர்களின் உயிர்களும் முக்கியம்’ என்ற போராட்டம், காலனித்துவத்தின் மோசமான செயல்களையும், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் அடிமைப்படுத்தப்பட்டுக் கொடுமைப்படுத்தப்பட்டதையும் மீண்டும் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டி வருகிறது. காலனித்துவ கால அடிமை வர்த்தகர்களின் சிலைகளை உடைத்த போராட்டக்காரர்கள், அடிமைத்தனத்தின் அடையாளங்களை மகிமைப்படுத்தக்கூடாது எனக் கோரியுள்ளனர்.
CamSoda நெட்வொர்க் அனைத்து கேம் கேர்ள்களையும் கண்டுபிடிப்பதில் சிறப்பாக உள்ளது, அவர்கள் அனைத்தையும் காட்ட தயாராக உள்ளனர், அலெக்ஸாண்ட்ரா கூப்பர் விதிவிலக்கல்ல. அவள் நிர்வாணமாக இருப்பதைப் பார்க்கும்போது, ​​கடந்த இரண்டு வாரங்களாகத் தொடர்ந்து அவர்களின் தளத்தில் அவள் ஏன் அதிகம் தேடுகிறாள் என்பது உங்களுக்குத் தெரியும்! அவளது சரியான 36DD மார்பகங்கள் மற்றும் அவளது அழகான பிட்டம் அல்லது அவளது வெப்கேம் முன் விளையாடும் போது மிகவும் அழகாக இருக்கும் அவளது ஈரமான புண்டை ஆகியவற்றை நீங்கள் போதுமான அளவு பெற முடியாது. இந்த கவர்ச்சியான குழந்தையைத் தவறவிடாதீர்கள் - கேம்சோடாவின் அலெக்ஸாண்ட்ரா கூப்பரை இப்போது நிர்வாணமாகப் பாருங்கள்! நிர்வாண வயது மாடல் அலெக்ஸாண்ட்ரா கூப்பரை சந்திக்கவும்! அலெக்ஸாண்ட்ரா கூப்பர் ஒரு சூப்பர்-பஸ்டி அடல்ட் வீடியோ கலைஞர். கேம்சோடாவின் நேரடி அடல்ட் கேம் ஷோவில் அவளை நிர்வாணமாக இங்கே பாருங்கள். அலெக்ஸாண்ட்ரா கூப்பரை நிர்வாணமாகப் பார்க்கத் தயாரா? சரி, இப்போதே CamSoda இல் பதிவு செய்து கொள்ளுங்கள், பிறகு மேலே உள்ள அவரது நிர்வாண காட்சி இணைப்பைக் கிளிக் செய்யவும். நீங்கள் செய்ததில் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவீர்கள்! அலெக்ஸாண்ட்ரா தனது கவர்ச்சியான உள்ளாடைகள் அனைத்தையும் உரிப்பதற்கு முன் அவளது சுவையான வளைவுகள் அனைத்தையும் வெளிப்படுத்துவதைப் பார்க்கவும். அலெக்ஸாண்ட்ரா நிர்வாணமாக எவ்வளவு சூடாக இருக்கிறார் என்பதை நீங்கள் நம்பமாட்டீர்கள் - வெறுமனே ஆச்சரியமாக இருக்கிறது! அலெக்ஸாண்ட்ரா கூப்பரை நிர்வாணமாக பார்க்கவும் - கேம்சோடாவில் மட்டும்! நிர்வாணமான அலெக்ஸாண்ட்ரா கூப்பருடன் நேரலையில் அரட்டையடிக்கவும்! CamSoda அவர்களின் தளத்தில் மிகவும் பிரபலமான நேரடி செக்ஸ் அரட்டைகளில் ஒன்றாகும், மேலும் வயது வந்தோருக்கான கலைஞர் அலெக்ஸாண்ட்ரா கூப்பர் உங்களுடன் அரட்டையடிக்கக் காத்திருக்கிறார். உங்களின் முதல் வயதுவந்தோர் வீடியோ காட்சியை ஆன்லைனில் அனுபவிக்க விரும்பினால், இன்றே CamSodaவைப் பாருங்கள் மற்றும் செக்ஸ் அரட்டையை ஆராயும் போது இலவச வயதுவந்தோர் வீடியோக்களை அனுபவிக்கவும். சில தளங்கள் இலவசமான செக்ஸ் அரட்டை அறைகளைக் கண்டறிவதை கடினமாக்கும் போது, ​​CamSoda பணம் செலுத்திய உறுப்பினர்களை மட்டுமே வழங்குவதன் மூலம் எளிதாக்குகிறது. மாதாந்திர அல்லது வருடாந்திர சந்தா போன்ற மெம்பர்ஷிப் திட்டத்தில் பதிவு செய்யும் போது சிறப்புத் தள்ளுபடிகளையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அலெக்ஸாண்ட்ரா கூப்பருடன் அரட்டையடிப்பதில் சிறந்த அம்சம் என்னவென்றால், அவர் முற்றிலும் நிர்வாணமாக இருக்கிறார் மற்றும் நிகழ்நேரத்தில் உங்களுடன் உடலுறவு கொள்ளத் தயாராக இருக்கிறார். இன்று CamSoda இல் பதிவு செய்து அவளுடன் அரட்டையடிக்கத் தொடங்குங்கள்!
அடையாறு புற்று நோய் மருத்துவமனையில் தனது இறுதி நாட்களை அம்மா கழித்துக் கொண்டிருந்த போது அங்கு அவளுக்கு பல ஸ்நேகிதிகள் கிடைத்தனர். எல்லோரும் அம்மாவைப் போலவே. நோயின் தன்மையும், தீவிரமும் மட்டுமே மாறுபட்டிருந்தது. அவர்களில் சிலர் அம்மாவின் வயதை ஒத்தவர்கள். ஒரு சிலர் மூத்தவர்கள். தங்களின் நோய் குறித்த கவலைகளை மறந்து ஏதோ பிக்னிக் வந்தது போல அவர்கள் பழகிக் கொள்வதைப் பார்க்கும் போது கொஞ்சம் ஆறுதலாக இருந்தாலும், ஒரு கட்டத்தில் அவர்கள் அனைவருக்குமாக சேர்த்து வேதனை மனதைப் பிசையும். ஒவ்வொருவரும் ஒவ்வோர் இடத்திலிருந்து வந்தவர்கள். அங்கிருந்த நாட்களில் அநேகமாக ஒருவரின் குடும்பத்தைப் பற்றி மற்றவர்களுக்கு தெரிந்திருந்தது. தங்களின் நோய் போக அவரவர், தங்களின், மற்றவரின் குடும்பங்களுக்காகவும் கவலைப்பட ஆரம்பித்தனர். அது போலவே சந்தோஷங்களையும் பகிர்ந்து கொள்ள அவர்கள் தவறவில்லை. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண்மணி ஒருவரும் அம்மாவுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு முஜிபுர் என்று ஒரு மகன். இருபது வயது இருக்கலாம். சட்டையும், கைலியும் அணிந்திருப்பான். மண்டை சின்னதாகவும், உடம்பு குண்டாகவும் இருக்கும். கொஞ்சம் மனநிலை சரியில்லாதவன். என் தகப்பனாரைப் பார்த்தால் ‘மாமா, சும்மா இருக்கேளா’ என்பான். பதிலுக்கு ‘மருமகனே’ என்று என் தந்தை அழைக்கும் போது சந்தோஷமாகச் சிரிப்பான். என்னிடமும் நன்றாக பழகினான். முஜிபுரின் தாயார் தன மகன் யாரிடமும் பேசுவதை கட்டுப்படுத்தியே வந்தார்கள். அவனது மனநிலையைப் புரிந்து கொள்ளாமல் யாரும் அவனையும், தன்னையும் காயப் படுத்தி விடுவார்களோ என்ற பயம் அந்தத் தாய்க்கு. ஆனால் எங்களிடம் முஜிபுர் பழகுவதை நாளடைவில் அவர்கள் தடுக்கவில்லை. முஜிபுருக்கு எந்த நேரமும் சாப்பாட்டைப் பற்றி மட்டுமே சிந்தனை. ‘மெட்ராசுல ஒரு ஹோட்டல்லயும் சின்ன வெங்காயத்தையே கண்ணுல காணோம். எல்லாத்துக்கும் பல்லாரி வெங்காயத்தத்தான் போடுதானுவொ. இட்லியை ஒரு கடையிலயும் வாயில வைக்க வெளங்கலையே. திருநெவேலி அல்வான்னு போர்டு போட்டிருக்கான். ஆனா வாயில போட்டா சவுக்குன்னு சவுக்குன்னு சவைக்கவே முடியலே’ . . இப்படி பல புலம்பல்கள். ஒரு நாள் அம்மாவைப் போய்ப் பார்த்துவிட்டு வெளியே வந்து உட்கார்ந்திருந்தேன். மனது அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை. முஜிபுர் அருகில் வந்து உட்கார்ந்தான். ‘அண்ணே, இங்கனக்குள்ளெ நல்ல மீனு எந்த கடையில கிடைக்கும்’ என்று கேட்டான். ‘எனக்கு தெரியாதே முஜிபுர். நான் சாப்பிடறதில்லையே’ என்றேன். ‘நீங்க ஐயரா? கருப்பா இருக்கீங்க?’ என்றான். நான் பதிலேதும் பேசாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். உடனேயே ‘மன்னிச்சுக்கிடுங்க. உங்களை கருப்பா இருக்கீங்கன்னு சொல்லிட்டேன்’ என்று எழுந்து சென்றான். வருகிற, போகிற எல்லோரிடமும் போய் பேசிக் கொண்டே இருக்கிறான் என்று முஜிபுரை அவன் தாயார் மனமே இல்லாமல் சில நாட்களிலேயே ஊருக்கு அனுப்பிவிட்டார்கள். அம்மாவின் வார்டிலேயே பாப் ஹேர்கட்டிங்கில் ஒரு பெண்மணி இருந்தார்கள். நீண்ட காலம் டெல்லியில் வாழ்ந்த அவர்களுக்கு சாந்தமான முகம். மெல்லப் பேசுவார்கள். நன்கு படித்தவர்கள் என்பது அவர்களின் தோற்றத்திலேயே தெரிந்தது. சில வேளைகளில் ப்ரீத்தி ஜிந்தா சாயலில் உள்ள அவர் மகள் அவருக்கு சாப்பாடு எடுத்து வருவாள். எப்போதும் பேண்ட் ஷர்ட்தான் அணிந்திருப்பாள். தன் தாயாருக்கு நேரெதிராக முகத்தில் ஒரு துளி சிரிப்பு இருக்காது. அவளைப் பார்க்கும் போதெல்லாம் அம்மாவிடம் ‘அந்தப் பொண்ணுக்கிடே ஏதோ சோகம் இருக்கும்மா’ என்பேன். ‘எல்லா ஆம்பிளைப் பயல்களும் பொம்பளைப் பிள்ளையைப் பாத்து சொல்றது இது. உளறாதே’ என்பாள் அம்மா. ஒரு நாள் அம்மாவின் அறைக்கு சென்ற போது அந்தப் பெண்ணின் தாய், அம்மாவிடம் அழுது கொண்டிருந்தார்கள். என்னைப் பார்த்ததும் சிரமப்பட்டு அழுகையை அடக்கிக் கொண்டு அவசர அவசரமாகக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்கள். நான் வெளியே வந்துவிட்டேன். பிறகு அம்மா சொன்னாள். ‘நீ சொன்னது சரிதான். அந்தப் பொண்ணுக்கு கல்யாணம் ஆகி ஒரு மாசம் கூட புருஷனோட வாழலியாம். இன்னிக்கு அவளோட கல்யாண நாளாம். தான் போறதுக்குள்ளே அவளுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி பாத்துரணும்னு சொல்லுதாங்க’ என்றாள். இந்த விஷயம் தெரிந்ததிலிருந்து அந்தப் பெண் ப்ரீத்தி ஜிந்தாவை என்னால் இயல்பாகப் பார்க்க முடியவில்லை. கீமோதெரபி என்னும் கதிரியிக்கச் சிகிச்சையை அம்மாவுக்குக் கொடுக்கத் துவங்கினார்கள். அம்மாவுக்கு எப்போதுமே நீண்ட கரு கரு கூந்தல். கீமோதெரபியின் விளைவாக முதலில் கடுமையான வாந்தியும், பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தலைமுடி உதிர்வதும் ஆரம்பிக்கும். அம்மாவுக்கும் அதுவே நேர்ந்தது. சில நாட்களிலேயே மொட்டையாகிப் போனாள். அம்மாவின் உடன்பிறந்த தங்கையான என் சித்தி சிறு வயதிலிருந்தே அம்மாவின் தலைமுடியைப் பார்த்து சொல்வாள். ‘ உனக்கு முடியும் உதிர மாட்டேங்குது. நரைக்கவும் இல்லையே’ என்று. அம்மாவின் மொட்டைத் தலையைப் பார்த்து தாங்க மாட்டாமல் கதறி அழுதவள் சித்திதான். திரையுலகின் பிரபல விக் மேக்கரான ரவியிடம் சொல்லி ஒரு நல்ல விக் ஏற்பாடு செய்து அம்மாவுக்குக் கொடுத்தேன். ஓரிருமுறை அதை அணிந்திருப்பாள். பிறகு அவள் அதை விரும்பவுமில்லை. அதற்கு அவசியமும் இல்லாமல் போனது. அந்த கொடுமையான கட்டத்திலும் அம்மா மகிழ்ச்சியாகவே இருந்தாள். அதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, அம்மாவுடன் சிகிச்சை பெற்று வந்த ஒரு பிராமணப் பாட்டி. சதா சிரிப்பும், கேலியுமாக சந்தோஷமாக மருத்துவமனையில் வளைய வந்து கொண்டிருந்தார் அந்த பாட்டி. பார்ப்பதற்கு மூன்றாம் பிறை படத்தில் கமலின் வீட்டுக்கு அருகில் ஒரு பாட்டி இருப்பாரே! அவரை அப்படியே உரித்து வைத்திருப்பார். நான் விளையாட்டாக இதை அவரிடம் கேட்டு வைக்க, என்னைப் பார்க்கும் போதெல்லாம் ‘என் ஆட்டோகிரா·ப் வேணுமா’ என்பார். தீவிர கிரிக்கெட் ரசிகையான பாட்டியைப் பார்க்க அவரது மகன் வருவார். அவருக்கு ஒரு நாற்பது வயதிருக்கும். ‘இன்னிக்கு மேட்ச் இருக்காடா?’. மகனைக் கேட்பார் பாட்டி. ‘ஆமாமா. எப்படியும் இந்தியா தோத்திரும். ஆஸ்திரேலியா definiteஆ win பண்ணிருவான்’. . . வம்பு பண்ணுவார் மகன். ‘அடேய் தேசத் துரோகி’. . . சிரித்துக் கொண்டே மகனை கடிந்து கொள்வார் அந்த வயதான தாய். முஜிபுர், ப்ரீத்தி ஜிந்தா, மூன்றாம் பிறை பாட்டியின் மகன் என தங்கள் தாயார்களை உள்ளே அனுமதித்து விட்டு, மருத்துவமனைக்கு வெளியே இருந்த அனைவருமே ஒருவருக்கொருவர் ரகசியமாக மற்றவரைப் பற்றியும் நினைத்துக் கொண்டிருப்பார்கள்தான். அதில் நானும், அம்மாவும் நிச்சயம் இருந்திருப்போம். சிகிச்சை முடிந்து வெளியே வந்த சில காலத்திலேயே அம்மா காலமாகிவிட்டாள். அந்தத் தாயார்கள் யாரைப் பற்றிய தகவலும் எங்களுக்கு தெரியவில்லை. அம்மாவுக்கு தெரிந்திருக்கும்.
“Fish eye lens என்பது பனோரமிக் மற்றும் அரைக்கோள புகைப்படங்களை பரந்த கோணத்தில் படம் பிடிக்க உதவுகின்றன. தட்டையான 180 டிகிரி கோணத்தில் படமெடுக்கக் கூடிய Fish Eye Lens அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் இன்ஸ்டிட்டியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் மாசசூசெட்ஸ் பல்கலைகழக மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” -பெட்டர் போட்டோகிராபி பத்திக்கை, ஆகஸ்ட் 2020 ஹோட்டல் கோல்டன் கிரவுன் பார்ட்டி ஹால்… ஜஸ்டிஷ் டுடேவின் ஊழியர்கள் அனைவரும் குடும்பத்தினருடன் குழுமியிருந்த அந்த பார்ட்டி ஹால் ஜேஜேவென இருந்தது. யசோதரா வழக்கம் போல சாருலதாவை மட்டும் அழைத்து வந்திருந்தாள். ஹேமலதா இம்மாதிரி ஆரவாரங்களில் விருப்பமற்றவள் என்பதால் அவளும் அவளுக்குத் துணையாக மயூரியும் லோட்டஸ் ரெசிடென்சியிலேயே இருந்துவிட்டனர். விஷ்ணுபிரகாஷுடன் அமர்ந்திருந்த பூர்வி அவளது புரொடக்சன் குழுவில் இடம்பெற்றிருக்கும் ரகுவிடம் பேசிக்கொண்டிருந்தாள். “வர்தன் எங்க போனார் ரகு? கொஞ்சநேரத்துக்கு முன்னாடி கூட நான் பாத்தேனே” “அவன் கேர்ள் ஃப்ரெண்ட் கால் பண்ணுச்சுனு போனான் மேம்… அவனும் ரொம்ப நேரம் கால் கட் பண்ணிட்டே இருந்தான்… இதுக்கு மேலயும் கட் பண்ணுனா வருங்கால வாழ்க்கை கேள்விக்குறி ஆகிடுமோனு பயந்துட்டான்… இது தான் தப்பிக்கிறதுக்கான சான்ஸ்னு தெரியாம போறான், ஐடியா இல்லாத பையன்” என்றான் ரகு. அனுராதா அவனது புஜத்தில் கிள்ளவும் “பாத்தீங்களா? வலி தாங்குற வைரம் பாய்ஞ்ச கட்டையான என்னாலயே இவ கிள்ளுறதை தாங்கிக்க முடியல… வர்தன் வலி தாங்காத புள்ளை… அவனை நினைச்சா மனசெல்லாம் வலிக்குது” என்று வராத கண்ணீரைத் துடைத்துக்கொண்டான் ரகு. இதில் வராதவர் பட்டியலில் மேனகாவும் ஸ்ராவணியும் இடம்பெற அவர்களைப் பற்றி விசாரித்தான் விஷ்ணுபிரகாஷ். “வனியும் அபி சாரும் இன்னைக்குத் தான் டெல்லில இருந்து திரும்புனாங்களாம்… அவங்களுக்குள்ள எதோ சண்டையாம்… அதான் மேகி வரல… அந்தச் சண்டைகோழிகளுக்கு சமாதானப்புறா அவளும் அவ ஹப்பி அஸ்வினும் தானே” என்று பதிலிறுத்தாள் அனுராதா. எதேச்சையாகத் திரும்பியவள் யசோதராவும் சாருலதாவும் சுலைகாவுடன் சேர்ந்து செல்பிக்களைச் சுட்டுத் தள்ளுவதையும் அதை பரிதாபமாக வேடிக்கை பார்த்தபடி சுலைகாவின் கணவன் ரஹ்மான் நிற்பதையும் பூர்வியிடம் காட்ட இருவரும் ஹைஃபை கொடுத்துவிட்டு நகைக்க ஆரம்பித்தனர். “ஹேய் பௌட் போஸ் குடுங்கப்பா” சாருலதா கூறவும் மூவரும் உதட்டைக் குவித்து செல்பி எடுத்த தருணத்தில் அவளின் தலையில் யாரோ குட்டினார்கள். “எவன் அவன்?” என்று பல்லைக் கடித்தபடி திரும்பியவள் அங்கே நின்றிருந்த இந்திரஜித்தைக் கண்டதும் அவன் தலையில் நறுக்கென்று குட்டினாள். “போடி குரங்கு… நான் வலிக்காத மாதிரி தானே குட்டுனேன்… நீ உன்னோட புல்டோசர் கைய வைச்சு கொட்டி என் தலைக்குள்ள குருவி பறக்குது” என்றான் இந்திரஜித் தலையைத் தடவியபடி. “தலைக்குள்ள இடமில்லனா அங்க சுத்துற குருவிய உன் ஸ்பைக்குல கூடு கட்டிக்கச் சொல்லு” “என் ஹேர்ஸ்டைல் உனக்குக் குருவிக்கூடு மாதிரியா இருக்கு? உன் தலைல தான் ஸ்பீட் ப்ரேக்கர் முளைச்சிருக்கு… சங்கி மங்கி” என்று கடைசிவார்த்தையில் இராகம் கூட்டி பாடினான் இந்திரஜித். தனது பஃப் ஹேர்ஸ்டைலை அவன் கலாய்த்ததில் சாருலதா கடுப்புற அவர்களுக்குள் சண்டை மூள்வதற்குள் சுலேகாவும் யசோதராவும் அவர்களைச் சமாதானம் செய்ய விழைந்தனர். அப்போது “உங்க செல்பில நானும் ஜாயின் பண்ணிக்கலாமா?” என்ற குரல் கேட்க அந்தக் குரலுக்குரியவன் இங்கே எப்படி வந்தான் என திகைப்புடன் திரும்பினாள் யசோதரா. அங்கே வெண்ணிற சட்டையும் கருநீல ஜீன்ஸும், அதே கருநீலத்தில் ப்ளேசரும் அணிந்து வசீகரிக்கும் புன்னகையுடன் நின்றிருந்தான் சித்தார்த். என்ன தான் கோபம் இருந்தாலும் அவனது சிரிப்பின் முன்னே அந்தக் கோபம் மாயமாய் மறைய இமை தட்டாமல் அவனைப் பார்த்தபடி நின்றாள் யசோதரா. “குட் கேர்ள்… அப்பிடியே போஸ் குடு பாப்போம்” என்றவன் இயல்பாய் அவளைத் தோளணைத்து செல்பிக்களைச் சுட ஆரம்பிக்க இந்திரஜித் தமையனுக்கு கட்டைவிரலை உயர்த்திக்காட்டிவிட்டு சுலேகாவையும் சாருலதாவையும் அழைத்துக்கொண்டு இடத்தைக் காலி செய்தான். அவர்கள் சென்ற பின்னர் யசோதரா அவனது கையைத் தட்டிவிட்டவள் “இங்க எப்பிடிடா வந்த? பார்ட்டி நடக்குதுனு உனக்கு எப்பிடி தெரியும்?” என்று கேள்விக்கணைகளைத் தொடுக்க ஆரம்பித்தாள். “சாரு இருக்க பயமேன்! அவ ஜித்துக்கு இன்பார்ம் பண்ணி ஜித்து என் கிட்ட சொன்னான்… நானும் முதல்ல இங்க வரணுமானு யோசிச்சேன்… ஆனா வந்தது தப்பில்லனு இப்போ தானே புரியுது” என்றவனின் விழிகள் அவளை ரசனையுடன் அளவெடுத்தான். யசோதராவின் கரங்கள் தானாகவே அவள் அணிந்திருந்த கருப்பு நிற ஃபிட் அண்ட் ஃப்ளேர் கவுனை முட்டியைத் தாண்டி இழுத்துவிட ஆரம்பித்தது. சித்தார்த் நமட்டுச்சிரிப்புடன் “ரொம்ப இழுத்துவிடவேண்டாம்… அது லெங்க்த்தே அவ்ளோ தான்… நாட் பேட்… இந்த டிரஸ் கூட நல்லா தான் இருக்குது” என்று கூறிவிட்டு மீண்டும் ரசனை ததும்ப பார்க்கவும் “சிரிக்காதடா… சிரிச்சேனு வையேன் இதை உன் மூஞ்சில ஊத்திடுவேன்” என்று மற்றொரு கரத்தில் பிடித்திருந்த கோப்பையில் இருக்கும் பழச்சாறைக் காட்டினாள் யசோதரா. சித்தார்த் அவளிடமிருந்து அந்தக் கோப்பையை வாங்கியவன் அதிலிருப்பது பழச்சாறு என்றதும் முகம் மலர்ந்தான். “என்னை மாதிரியே உனக்கும் ஆல்கஹால் பிடிக்காது போல… இதுக்குத் தான் சொல்லுறேன், வீ ஆர் மேட் ஃபார் ஈச் அதர்” என்றவனின் காலில் தனது கருப்பு நிற ஸ்டில்லட்டோ ஹீல்சால் மிதித்தாள் யசோதரா. “அவ்வ்” என்று ஒற்றைக்காலை தூக்கி நொண்டியடித்தவனிடம் ஆட்காட்டிவிரலை நீட்டி “நீ பேசாத” என்று மிரட்டிவிட்டு விஷ்ணுபிரகாஷும் சகதோழர்களும் அமர்ந்திருந்த இடத்தை நோக்கி விரைந்தாள். சித்தார்த்தும் அவள் பின்னே விரைந்தான். சென்றவன் விஷ்ணுபிரகாஷிடமும் நாராயணனிடமும் பேச்சு கொடுக்க ஆரம்பித்தான். இடையிடையே பார்வை யசோதராவின் பக்கம் சென்று மீண்டது. அவள் முறைத்தபடி அனுராதாவிடம் திரும்பிக்கொண்டாள். இங்கே கண்ணாமூச்சி விளையாட்டு நடைபெற்று கொண்டிருக்கும் நேரத்தில் மாதவன் லோட்டஸ் ரெசிடென்சியின் F4 ஃப்ளாட்டில் மயூரி இரவுணவு சமைப்பதை கன்னத்தில் கையூன்றி பார்த்துக்கொண்டிருந்தான். அவளோ தவாவில் தோசையை ஊற்றியபடி அவனுடன் பேசிக்கொண்டிருந்தாள். “நீங்க என்ன தான் சொன்னாலும் எனக்கு உங்க ருத்ராஜி மேல நம்பிக்கை வரல மேடி… அவர் மேகசின்ல எழுதுற கட்டுரைக்கும் அவரோட பேச்சுக்கும் அவர் நடந்துக்குற விதத்துக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமில்ல… யசோ பாஸ்ட் ஒன் வீக்கா கலெக்ட் பண்ணுன டீடெய்ல்ஸ் எதுவும் அவரை நல்லவிதமா காட்டல… இந்த ருத்ராட்ச மேட்டரை விடுங்க… அவரோட ஆஸ்ரமத்துலயே நிறைய முறைகேடு நடக்குதுனு நிறைய சோஷியல் ஆக்விஸ்ட்ஸ் சொல்லுறாங்க… ஆனா உங்களை மாதிரி சினிஃபீல்ட்ல இருக்குறவங்க, கவர்மெண்ட்ல இருக்குற ஹையர் அபிஷியல்ஸ், பொலிடீசியன்ஸ் எல்லாரும் அவருக்கு சப்போர்ட் பண்ணுறீங்க… ஏன் இப்பிடினு எனக்குப் புரியவே இல்ல” மாதவன் கன்னத்திலிருந்த கையை எடுத்துக்கொண்டவன் “சிம்பிள்! ஹீ இஸ் அவர் ஸ்பிரிச்சுவல் கைட்… அவர் மேல எங்களுக்கு நம்பிக்கை இருக்கு மய்யூ… எங்க நம்பிக்கை எங்களுக்கு…. அதை அப்பிடியே விட்டுடேன் மய்யூ” என்று கண்களைச் சுருக்கி வேண்டினான். “அப்போ பஞ்சமா பாதகத்தைப் பண்ணி ஊரை ஏமாத்திட்டுக் கடவுள் கிட்ட சரணடைஞ்சுட்டா அந்த மனுசனை நீங்க நம்புவீங்க… ஒரு விசயத்தை புரிஞ்சுக்கோங்க, உங்களுக்கு அவரோட பேச்சும் யோகாவும் மனநிம்மதியைக் குடுக்குறதுங்கிறது உண்மை…. இவ்ளோ ஏன் நானும் யசோவுமே அந்த யோகா குடுக்குற மனஅமைதிய அனுபவிச்சவங்க தான்… ஆனா அதுக்குனு அந்த முக்தி ஃபவுண்டேசனோட தப்பை நாங்க அந்த யோகாவுக்காக மறைக்க நினைக்கலயே! அதை தான் உங்க கிட்ட எதிர்பாத்தேன்… எனி ஹவ், இன்னைக்கு இல்லனா என்னைக்காச்சும் அந்த மனுசன் செய்யுற தப்பு உலகத்தோட பார்வைக்கு வரும்… அப்போவும் உங்களை மாதிரி சிலர் அவருக்குச் சப்போர்ட் பண்ணுவாங்க… சொல்லுறதுக்கு ஒன்னும் இல்லங்க” சலித்துக்கொண்டபடி தோசையைத் திருப்பியவள் “சாப்பிடுறீங்களா?” என்று கேட்க அவ்வளவு நேரம் இருந்த இறுக்கம் தளர மாதவன் அவள் கன்னத்தில் முத்தமிட்டான். “இது தான் மய்யூ! ஆர்கியூ பண்ணுனாலும் என் வயித்தைப் பத்தி யோசிக்கிறீயே” என்று சிலாகித்தவனின் பேச்சில் புன்னகைத்தவள் விசமத்துடன் அவனைப் பார்த்து “காலியான உங்க மூளைய தான் என்னால நிரப்ப முடியல… அட்லீஸ்ட் காலியான வயித்தையாச்சும் நிரப்பலாமேனு ஒரு நப்பாசை தான்” என்று கூறிவிட்டுக் கண்ணைச் சிமிட்டினாள். மாதவனோ அதைக் கேட்டு நகைத்தவன் “நீ என்ன வேணாலும் திட்டு… சாப்பாடுனு வந்துட்டா நான் யார் கழுவி ஊத்துனாலும் கண்டுக்க மாட்டேன்” என்று சாப்பாட்டில் கண் பதித்தான். அதன் பின்னர் மயூரியும் அவனுடன் சாப்பிட அமர்ந்தவள் முக்தியைப் பற்றியோ ருத்ராஜியைப் பற்றியோ எதுவும் பேசினாளில்லை. ஆனால் ஹோட்டல் கோல்டன் கிரவுனில் சித்தார்த் யசோதராவைச் சமாதானம் செய்ய என்னென்னவோ செய்து பார்த்தான். ஆனால் அவள் முறைப்பதை விடுத்து வேறெந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்தவன் இந்திரஜித்திடம் பார்ட்டி முடிந்ததும் வீட்டிற்கு கிளம்பும்படி கூறிவிட்டு யசோதராவிடம் வந்தான். அவள் என்ன என்பது போல புருவம் உயர்த்த “உன் கிட்ட பேசணும்… கொஞ்சம் என்னோட வா” என்று கேட்டான் அவன். “ஏன் இங்க வச்சு பேசலாமே?” “இங்க கொஞ்சம் சத்தமா இருக்குது யசோ” என்றவன் சுற்றியிருப்பவர்களைக் காட்ட யசோதராவும் அவனுடன் செல்ல சம்மதித்தாள். ஹோட்டலின் பார்ட்டி ஹாலை விட்டு வெளியே வந்தவள் “என்ன பேசப்போற?” என்று கேட்க “காருக்குப் போய் பேசலாமா? பிகாஸ் இங்க சிசிடிவி கேமராஸ் அதிகம்” என்று கண்களால் அங்கிருந்த கேமராவைக் காட்ட அவளும் அவனுடன் ஹோட்டலின் தரிப்பிடத்தை நோக்கி சென்றாள். கூடவே “மேகமலைல இருந்து திரும்பி வந்ததுக்கு அப்புறம் எஸ்.ஜி சாரை மீட் பண்ணுனியா?” என்று கேட்டபடி சித்தார்த்தின் காருக்குள் முன்னிருக்கையில் அமர்ந்தாள். ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்த சித்தார்த் அதற்கு பதிலளிக்காது “சீட் பெல்டை போட்டுக்கோ” என்று கூற “இங்க உக்காந்து பேசுறதுக்கு எதுக்கு சீட்பெல்ட் போடணும்?” என்று புரியாமல் கேட்டாள் யசோதரா. “இல்லயே! நாம இப்போ பீச் ஹவுசுக்குப் போகப்போறோம்” என்று கூறியபடி காரைக் கிளப்பியவனை யசோதரா திட்டித் தீர்த்ததெல்லாம் வேறு கதை! “பொய்சொல்லி, ஏமாத்துக்காரன், நீ உருப்படவே மாட்டடா” என்று பொறுமித் தீர்த்தபடி அவனை பட்பட்டென்று அடித்தவள் ஒரு கட்டத்தில் கை வலிக்கவும் கிள்ளி வைத்தாள். “ஏன் எனர்ஜிய வேஸ்ட் பண்ணுற? சேவ் யுவர் எனர்ஜி… பின்னாடி தேவைப்படும்” என்று சொல்லி கண்ணைச் சிமிட்டியவனின் பேச்சில் வாயைப் பிளந்தாள் யசோதரா. “ஹீரோயிசமா? சகிக்கல சித்து” முகத்தைத் திருப்பிக்கொண்டவளின் முகம் பற்றி திருப்பியபடி மற்றொரு கையால் ஸ்டீயரிங்வீலை வளைத்தான். அழுத்தமாக மோவாயைப் பற்றிய கையின் உபயத்தால் யசோதராவின் முகம் அவனை நோக்கி திரும்பியது. “ஒன்வீக் உன்னோட முகத்தை பாக்காம இருந்திருக்கேன்… இப்போ பக்கத்துலயே உக்காந்திருந்தும் அந்தப் பக்கமா திருப்பிக்கிறீயே டார்லிங்… இட்ஸ் டூ பேட்” என்று மூக்கைச் சுருக்கி சித்தார்த் கூற “உன்னோட பீச் ஹவுசுக்கு நம்ம முழுசா போய் சேரணும்னா நீ என் முகத்தைப் பாக்குறதை விட்டு ரோட்டை பாத்து ஓட்டுறது தான் ஒரே வழி… ஆனா நீ அப்பிடி செய்ய மாட்ட… அதான் நானே திருப்பிக்கிட்டேன்” என்றாள் யசோதரா கேலி விரவிய குரலில். “என்னை டிஸ்ட்ராக்ட் பண்ணுறதுக்கு உன்னோட ஃபேஸ் தேவை இல்ல யசோ… உன்னோட ப்ரசென்சும், உன்னோட நியாபகமும் மட்டும் போதும்” என்று சித்தார்த் கூறவும் அவளுக்குள் உறைந்திருந்த கோபத்தையும் தாண்டி குறுகுறுப்பு பரவியது. அதன் விளைவாக யசோதராவின் வதனம் சிவக்க காரினை கிழக்கு கடற்கரை சாலையை நோக்கி செலுத்தியவனின் கவனம் அவளது செந்நிறம் கொண்ட முகத்தின் அழகில் கலைந்தது. கலைந்த கணத்தில் சாலையிலிருந்து அவனது பார்வை யசோதராவின் பக்கம் திரும்ப அப்போது எதிரே வந்த காரில் மோத செல்ல “சித்து” என்று யசோதரா பதறிய கடைசி கணத்தில் எதிரே வந்த காரினைப் பார்த்துவிட்டான் சித்தார்த். காரின் ஸ்டீயரிங்வீலை ஒடித்து திருப்பியவன் மயிரிழையில் எதிரே வந்த காரில் மோதாமல் காரை ஓரங்கட்டினான். யசோதரா அச்சத்தில் முகம் வியர்க்க தலையைப் பிடித்தபடி கண்களை மூடிக்கொண்டாள். எதிரே வந்த காரும் வேகத்தைக் குறைத்து நின்றது. அதிலிருந்து இறங்கியவர்களைப் பார்த்து சித்தார்த் புருவம் சுழிக்க யசோதராவோ இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. அந்தக் காரிலிருந்து இறங்கியவர்கள் சித்தார்த்தின் காரை நோக்கி வர கடைசி நொடியில் யசோதரா தலை நிமிர்த்தி வந்தவர்களைப் பார்த்து “நீங்களா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.
புத்தகச்சிறகுகள் ஏற்பாட்டில் வல்லின பதிப்பகம் எடுத்து நடத்திய ’கவிதை மாலை’ என்கிற நிகழ்வு (16/3/2014) தலைநகரில் வெகு சிறப்பாக நடந்தேறியது. வல்லின ஏற்பாட்டில் நடைபெறுகிற நிகவுகள் என்றால், நாட்டின் ` ஊடக, எழுத்தாள, இலக்கியப் `பிரபலங்களின்’ ஒத்துழைப்பு என்பது சிஞ்சிற்றும் இருக்காது. பேச்சு வழி, முகநூல் வழி, குறுந்தகவல் வழி ஒருவர் மற்றவர்களை அன்புடன் அழைத்து ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு இது என்பதால், அதிகமான இலக்கிய ஆர்வலர்களை எதிர்ப்பார்க்க முடியாது என்கிற அவநம்பிக்கையுடன் சென்ற நான், ஏமார்ந்துதான் போனேன். நாட்டின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் இலக்கிய ஆர்வலர்கள் வருகை புரிந்து, அந்த சிறிய அரங்கமே நிரம்பி இருந்தது, நிகழ்ச்சிக்கு வெற்றியே. மேலும் நாட்டில் நடந்துகொண்டிருக்கின்ற மிகமுக்கிய பிரச்சனைகளின் ஒன்றான, MH370 விமானம் காணாமல் போன சம்பவம் குறித்த தொடர் திருப்பங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்ற சமயத்தில், இதுபோன்ற இலக்கிய நிகழ்வுகளின்பால் ஆர்வம் குறைந்து, மனது சதா நடந்துவிட்ட விபரீதங்களிலேயே மூழ்கியிருக்கின்ற பட்சத்தில், இலக்கியமாவது மண்ணாவது என்கிற உள் உணர்வையையும் மீறி, இந்நிகழ்விற்கு வருகை புரிந்து நிகழ்வு சிறக்க உதவிய அனைவருக்கும் புத்தகச்சிறகுகள் மற்றும் வல்லினம் சார்பாக எனது நன்றி உரித்தாகுக. நிகழ்ச்சியின் தலைப்பு `கவிதை மாலை’. சிறப்பு வருகையாளர் தமிழகத்தின் தலைசிறந்த இலக்கியவாதி எழுத்தாளர் ஜெயமோகன். ம.நவீனின் `வெறி நாய்களுடன் விளையாடுதல்’ என்கிற நூலும், கே. பாலமுருகனின் `தூக்கிலிடப்பட்டவர்களின் நாக்குகள்’ என்கிற கவிதை நூலும் வெளியீடு கண்டன. இந்த நிகழ்வோடு `பறை’ என்கிற கால் ஆண்டு இதழும், அதன் ஆசிரிய குழுமங்களின் விளக்க உரைகளோடு அரங்கத்திற்குள் நுழைந்தது. எளிய தேநீர் விருந்து. புத்தகச்சிறகுகளின் புத்தக விற்பனை ஒருபுறம், என, நிகழ்வுகளை அழகாகவே கோர்த்திருந்தார்கள். சிறப்பு விருந்தினர் எழுத்தாளர் ஜெயமோகன் வரவிருந்த விமானம் சற்று தாமதமாக வந்திறங்கியதால், அவர் வருவதற்குக் கூடுதல் அரைமணிநேரம் ஏடுத்துக்கொண்டு நிகழ்வை ஆரம்பித்த போதிலும், காத்திருக்கின்ற சோர்வே இல்லாமல் அமைதியாகவே நகர்ந்தது `கவிதை மாலை’ நிகழ்வு. நிகழ்வின் தலைப்பில் மாலை இருப்பினும், யாருக்கும் மாலை பொ(ப)ன்னாடை என்று அணிவித்து, வருகையாளர்களின் நேரத்தைக் கொள்ளையடிக்காமல், சொத்தப்பல் பேச்சுகளால் இலக்கிய ஆர்வலர்களின் கழுத்தில் `கத்தி’ போடாமல், நிகழ்வின் நோக்கம் மட்டுமே அரங்கேறியது, வல்லினம் முழுக்க முழுக்க இளஞர்களின் கட்டுப்பாட்டில் இருப்பது புலப்பட்டது. மேடையில் நூல் குறித்த விமர்சனத்தில் அ.பாண்டியன், தினா, விஜயா, யோகி, பூங்குழலி போன்றோர்கள் ரத்தினச்சுறுக்கமாக புத்தகத்தில் தாம் ரசித்த விடயத்தைத் தொட்டு உரையாற்றினார்கள். எல்லோரும் ஒரே மாதிரியான கருத்தினைக் கொண்டிராமல், தத்தம் பார்வையில் வெவ்வேறு கோணத்தில் புத்தகத்தைப்பற்றி பேசியது சிறப்பாகவே இருந்தது. குழலி இன்னும் கொஞ்சநேரம் பேசியிருக்கலாம் என்கிற ஏக்கத்தை உண்டு பண்ணியது அவரின் தெளிவான பேச்சு. நல்ல பேச்சாளராவதற்கான தகுதி அனைத்தும் அமையப்பெற்ற பெண் அவர். கே.பாலமுருகன் புத்தகம் குறித்து, அதனின் நூலாசிரியர்கள் பேசுகிறபோது, கே. பாலமுருகன் தமது உரையினை நகைச்சுவை ததும்ப வழங்கியிருந்தார். நகைச்சுவை பேச்சுதான் என்றாலும் அவரின் உரை சிந்தனையைத்தூண்டியது. யார் வேண்டுமானாலும் கவிதை எழுதலாம் என்கிற சூழல் இப்போது புற்றீசல் போல் பரவி வருவது கண்கூடு என்றார். கவிஞராக இருப்பது எவ்வளவு சிரம்ம் என்பதனையும் ரசிக்கும்படி சொல்லியிருந்தார். போட்டோவிற்கு போஸ் கொடுக்கின்ற போதுகூட கேமராவை நேராகப் பார்க்கக்கூடாது என்கிற கொள்கை உள்ள கவிஞர்களின் நிலைமையினை மிக வருத்தத்துடன் தெரிவிக்கின்றபோது, அவரின் உடல்மொழி நல்ல நகைச்சுவை. கவிதை எழுதுவதற்கு எதாவது ஒரு நிகழ்வு கவிஞர்களுக்குத் தேவைப்படுகிறது. பௌர்ணமி என்றால், கவிதை. தீபாவளி என்றால், கவிதை. விநாயகர் சதூர்த்தி என்றால் கவிதை. நாட்டில் எதாவது நிகழ்ந்தால், கவிதை. பசியில் வாடினால் கவிதை. காதல் வந்தால் கவிதை, தெய்வ சிந்தனை தோன்றினால், கவிதை., என பத்திரிகைகள் அதனின் தரம் காணாமல் கவிதைகள் என்கிற பெயரில் படைக்கப்படுகிற அத்தனை எழுத்துகளையும் வதவதவென்று பிரசுரித்து, அப்படி எழுதுகிறவர்களையும் ஊக்கமூட்டிவருகிறார்கள். இது தவறு. இதனால் எந்த நன்மையும் சமுதாயத்திற்கு வந்து விடப்போவதில்லை, என்கிற ஆதங்கத்தை பகீரங்கமாக வெளிப்படுத்தினார். மேலும் தமது எழுத்து குறித்து சொல்கையில், தாம் ஒரு ஆசிரியர் என்பதால், அச்சூழலின் செயல்பாடுகளை, குறிப்பாக, குழந்தைகளை எந்த ஒரு வெளிநடவடிக்கைகளிலும் ஆர்வம் கொள்ளவைக்காமல் படி, படி, படி என்று பாடபுத்தகங்களை மட்டுமே கட்டி ஆள்கிற துயரங்களைப் பொறுக்க முடியாமல், அவ்வாதகங்கத்தை தாம் கவிதைகளின் வழி மட்டுமே வெளிக்கொணர இயலும் என்று தமது உரையில் வெளிப்படுத்தி முற்றுப்புள்ளிவைத்தார். ம.நவீன் மலேசிய இலக்கியச்சூழலில் அடிக்கடி சர்ச்சையில் மாட்டிக்கொள்ளும் ம.நவீன் மேடையேறினார். அவரின் உரையை நன்கு ரசித்தேன். கொஞ்சம் `சீரியஸா’கவே தமது உரையினை வழங்கினார். அவரும் கவிதை நூல் வெளியிட்டிருப்பினும் (வெறிநாய்களுடன் விளையாடுதல்), கவிதை குறித்த அறிமுகத்தை சுறுக்கமாக முடித்துக்கொண்டு, தாம் வாசித்து நெகிழ்ந்த இலக்கியச் சிதறல்களை அரங்கில் உள்ளவர்களோடு பகிர்ந்துகொண்டார். இலக்கியம் எல்லாக் கட்டமைப்புகளையும் உடைத்தெறிகிற பணியினைச் செய்வதுதான். ஏற்கனவே புனிதம் என்கிற போர்வையில் செல்லரித்து துருப்பிடித்த விடயங்களைப் பூசிமெழுகிற வேலைகளை இன்னமும் எழுத்துலகம் செய்துகொண்டிருப்பது இலக்கிய உலகின் அவலம். ஏன் இலக்கியம் படி(டை)க்கவேண்டும்? இலக்கியம் நம்மை என்ன செய்யும்.? ஏன் நல்ல படைப்பாளிகள் உருவாக வேண்டும்.? எது நல்ல இலக்கியம்.? இலக்கியம் என்பது.... !? என்று ஆரம்பித்து, சில நல்ல சிறுகதைகளை உதாரணமாகக் காட்டி, தமது பேச்சுதனை சுவாரஸ்யமாக நகர்த்திச்சென்றார். அதில் ஜெயமோகனின் யானைக்கதையும் வந்தது. புழுக்களைக் கண்டு அருவருக்கின்ற நாம், புழுக்களும் எதோ ஒரு ஜந்துவின் குழந்தைகளே, என்பதனை என்றாவது உணர்ந்துள்ளோமா.!? குழந்தைகளில் கூட, நன்கு அழகாக மொழுமொழு என்று பொம்மைக் குட்டியைப் போன்று இருக்கின்ற குழந்தைகளைத்தான் நாம் கொஞ்சி மகிழ்கின்றோம். என்றாவது கருப்பாக அசிங்கமாக இருக்கின்ற குழந்தைகளை நாம் நமது கணினியிலோ அல்லது கைப்பேசி ஸ்கிரீனிலோ ரசிப்பதற்காக வைத்திருக்கின்றோமா? குழந்தைகளைக் கொஞ்சுவதாக இருந்தால் எல்லாம் குழந்தைகள்தானே, ஏன், கொஞ்சுவதில் நாம் பாகுபாடு காட்டுகிறோம்.! புழுக்களும் ஒரு பூச்சியின் குழந்தைகள்தானே. ஏன் அருவருக்கின்றோம்.? என்கிற கேள்விக்கணைகள், என்னை என்னவோ செய்தது. யோசித்துப்பார்க்காத ஒரு கரு. யானைக் கதையில் வருகிற ஒரு பகுதியைக் குறிப்பிட்டு, இக்கருத்தை மேற்கோள் காட்டி பகிர்ந்துகொண்டார் நவீன். அடுத்ததாக சு.வேணுகோபாலின் ஒரு சிறுகதை. (தலைப்பு சொல்லவில்லை). அக்கதையினை அவர் சொல்லிமுடிக்கின்றபோது, எனது உரோமங்கள் சிலிர்த்தன. புனிதம் என்று கட்டமைக்கப்பட்ட கோட்பாட்டை, திரைமறைவில் யாருக்கும் தெரியாமல் சுயநலனுக்காக எப்படிவேண்டுமானாலும் உடைத்தெறியலாம் என்கிற நியதியில் முடிவடைகிற சிறுகதை அது. இது எங்கோ யாரோ செய்கிற காரியம்தான். ஆனால், அதைப் படைப்பாளியாகப்பட்டவன் எழுத்தின் மூலம் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுகிற வேலையினை மட்டும் செய்துவிடக்கூடாது. வாசகன் கெட்டுவிடுவான். குழந்தைகள் பாதிப்புக்குள்ளாகும். இதுதான் நம்நாட்டு இலக்கியச்சூழலில் நிகழ்ந்துகொண்டிருக்கும் கட்டபஞ்சாயத்து நியாயம்.! சு.வேணுகோபால் நம் நாட்டு படைப்பாளியா அல்லது தமிழ்நாட்டுப் படைப்பாளியா? என்பது தெரியவில்லை. இங்கே இதுபோன்ற கதைகள் வந்தால், புத்தகத்தை நெருப்பில் போட்டுவிடுவார்கள். ஆக, இதுபோன்ற கதைகள் வந்துள்ளது என்றால், நிச்சயம் அவர் தமிழ்நாட்டு படைப்பாளியாகத்தான் இருக்கவேண்டும். நன்றி, நல்ல எழுத்தாளரையும் இவ்வேளையில் அறிமுகம் செய்துவைத்தமைக்கு.! நிகழ்விற்குச் சிறப்புச் சேர்த்த்து ஜெயமோகனின் உரை. கவிதை மாலை நிகழ்விற்கு, கவிதை குறித்த அவரின் உரையினை, திருவிளையாடல் புரணத்தில் நக்கீரன் தருமி விவகாரத்தில் ஆரம்பித்து, திருவள்ளுவர், பாரதி, பிரமிள் என்று தொடர்ந்தார். மிக ஆழமான பொருள் பதிந்த உரையாகவே அது எனக்குப்பட்டது. அவ்வுரையை நான் எனது கைப்பேசியில் recording செய்தும், கரகரப்பு ஓசையுடன் சரியாகப் பதிவாகாதது எனது துர்ப்பாக்கியம். ஆழமாக பேசப்பட்ட உரையினை, எனது பாணியில் சொல்வதற்கு முயல்கிறேன். காப்பி பேஸ்ட் வசனமும் எனக்கு வராது என்பதும் எனது `பாக்கியம்’.! வள்ளுவரின் வரிகள் அனைத்தும் கவிதைகளே. அவர் சொல்லிச்சென்ற இருவரிகள் இன்னமும் பலகோணத்தில் பாடம் போதித்தவண்ணமாகத்தான் உள்ளது. நாலுவரி கவிதையினை எழுதிவிட்டு செத்துப்போங்கள் பரவாயில்லை. அதை யாராவது என்றாவது பேசுவார்கள்.! கவிதைகளில் வாழ்க்கை, தத்துவம், போதனை, காதல், அறிவுரை, வாக்குமூலம் என எல்லாம் சொல்கிறீர்களா? என்னாலும் அப்படியெல்லாம் யோசிக்கமுடியும். எனக்கு அது வேண்டாம். தமிழில் உங்களுக்கு அனைத்து எழுத்துக்களும் தெரியும். முனைவர் பட்டமெல்லாம் வாங்கியிருக்கலாம். ஆயிரம் ஆய்வுகள் செய்திருக்கலாம். பாண்டித்துவம் மிக்கவராகவும் நீங்கள் இருக்கலாம். ஆனால் ஒரு கவிதை உங்களுக்குப்புரிந்துவிடுமா என்றால் அது சந்தேகம்தான். காரணம் கவிதைக்கென்று இன்னொரு மொழிவடிவம் உள்ளது. அதன் உணர்வு என்பது வேறு. அதன் உலகமும் வேறு. எல்லாக் காலகட்டத்திலும் கவிதை என்றாலும் கவிஞர்கள் என்றாலும் சாமானிய மக்களின் மத்தியில் ஒரு பயம் இருந்துவருவது கண்கூடு. எல்லா இடங்களிலும் கவிதை குறித்த பேச்சுவார்தைகள் மிக எளிதாகவே நடைபெறும், டீக்கடை பார் என, ஆனால் அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி கண்டு மோதலில் முடிவடைவதைத்தான் நாம் பார்க்கமுடியும். காரணம் கவிதை குறித்த புரிதலில் ஒத்துப்போகுதல் என்பது சாத்தியமில்லாதது... இங்கே பிரமிள் கவிதகளை உதாரணமாகக் காட்டினார். எனக்கு பிரமிள் கவிதைகள் என்றாலே உதறல் வந்துவிடும். எழுத்து வடிவில் இருப்பதை விழுந்து விழுந்து வாசிக்கின்ற போதே புரியாது. ஜெயமோகன் அவற்றை மனனம் செய்து ஒப்பிக்கின்றபோது.. சுத்தம்.! முடிவில், இவரின் இந்த உரை குறித்து கேள்விகள் ஏதேனும் இருந்தால் கேட்கலாம், என்றதிற்கு, “கேள்விகள் வேண்டாம். இங்கே நான் சொன்ன அனைத்தும், உடனே புரியுமா என்றால், அது சந்தேகம்தான்.! அதைப்பற்றி நிதானமாக யோசிக்கின்றபோதுதான், வினா எழலாம். ஆக, உடனே கேள்விகள் கேட்டு பதில் கொடுப்பதென்பது, சரிப்பட்டு வராது.” என்று சொல்லி நிராகரித்தார். நிஜம்தாம். நம்மைப் புரிந்துவைத்திருக்கின்ற ஓர் படைப்பாளி அவர். ஜெயமோகன் அவர்களின் புத்தகங்களை விட, அவரின் ப்ளாக்’ஐ அடிக்கடி சென்று வாசிப்பேன். சிறந்த எழுத்தாளர். எழுத்தில் அவரின் பாணியை யாராலும் பின்பற்ற முடியாது. வாசகியான நான் தினமும் அவரின் ப்ளாக் பக்கம் எட்டி எட்டிப் பார்க்கின்ற பட்சத்தில், தொடர்ந்து அவரின் படைப்புகளை எல்லாம் விடாமல் முழுமையான வாசித்து முடிக்கமுடியாமல் திணறி திண்டாடுவேன். ஒரு நாள் விட்டு மறு நாள் சென்றால், வாசிக்காமல் விட்ட விடயங்கள் மலிந்து விடும் அங்கே. அப்பேர்பட்ட படைப்பாளி அவர். நிமிடத்திற்கு ஒரு பதிவு. அவரின் எழுத்துதானா அல்லது அவரின் பேச்சுகளை அவரின் உதவியாளர்கள் கடகடவென தட்டச்சு செய்து ப்ளாக்கில் பதிவேற்றி விடுகிறார்களா.? என்பது தெரியவில்லை. அவ்வளவு பதிவுகள் அங்கே. எல்லாமும் எளிமையான முறையில் சுலபமாக புரியும்படியே இருக்கும். அப்பேர்பட்ட எழுத்தாளரை, சிந்தனையாளரை, சினிமா பிரபலத்தை மிக அருகில் அவரின் பக்கத்திலேயே அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்கிற பாக்கியம் கிடைத்ததில் பெருமை கொள்கிறேன். இந்த வாய்ப்பினை ஏற்படுத்திகொடுத்த வல்லினத்திற்கு நன்றி. முழுக்க முழுக்க தம்பி தயாஜியின் அறிவிப்பில் சோர்வில்லாமல் நகர்ந்த அற்புத நிகழ்வு இது. இவ்வேளையில் அவருக்கும் என் வாழ்த்துகள். இம்மாதம் நான்கு கவிதைப் புத்தகங்கள் என் கைவசம். முகநூல் நண்பர் R.K. குரு (லஷ்மிகாந்தன்) அவர்களின் – தமிழுக்கு ஆட்கள் தேவை என்கிற புத்தகம். தற்போது எனது வாசிப்பில். ப.ராமு – எனது பழைய நண்பர். அவரின், சிணுங்கும் சிறகுகள் என்கிற கவிதைப் புத்தம். கே.பாலமுருகனின் – தூக்கிலிடப்பட்டவர்களின் நாக்குகள் என்கிற கவிதைப் புத்தகம். ம.நவீன் – வெறிநாய்களுடன் விளையாடுதல் என்கிற புத்தகமும்.... எல்லாவற்றையும் வாசித்தபின்பே, அதையொட்டிய கருத்துப்பகிர்தலை முகநூலிலோ அல்லது ப்ளாக்கிலோ பகிர்வேன். கவிதை மாதம் இது எனக்கு. Posted by ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி at 3/17/2014 8 கருத்துகள்: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom) ஆத்மாநாம் உண்மையத் தவிர வேறு எதுவும் இலக்கியமாக முடியாது charu nivedita இலக்கியம் என்பது சுயவிமர்சனத்தில் பிறக்கும் ஒரு கலை வெளிப்பாடு jeyamohan உங்களின் அனுபவங்களை தைரியமாகச் சொல்லுங்கள், நிச்சயம் அவை போல் வேறொன்று இருக்கவே முடியாது. Alvin Toffler `The illiterate of the 21st century will not be those who cannot read and write, but those who cannot learn,unlearn and relearn' Paulo Coelho Don’t try to innovate storytelling, tell a good story and it is magical. I see people trying to work so much in style, finding different ways to tell the same thing. It’s like fashion. Style is the dress, but the dress does not dictate what is inside the dress. பிரபலமான இடுகைகள் மாதவிடாய் மாதவிடாய் - இது பெண்களுக்கான பிரத்தியேக சலுகை. இயற்கையிலே அமையப்பெற்ற ஒரு வரன் என்றும் சொல்லலாம். காரணம் மாதவிடாய் நிற்கும்வரை ஒரு ப... விறால் மீன் விறால் மீன் பற்றிய சில தகவல்கள். விறால் மீன் பிடிப்பது கடினமான ஒரு வேலை. இருப்பினும் சுவாரிஸ்யமான ஒன்று என்கிறார்கள் அனுபவசாலிகள். ஒர... நீண்ட கூந்தல் அவசியமா? திருமணம் ஆகும் வரை எனது கூந்தல் மிக நீளமாகத்தான் இருந்தது. அடர்த்தியாக பட்டுபோல் பளபளப்பாக இருக்கும். அதே போன்று பளபளப்பாக எப்போதும் வைத்தி... அங்கோர் வாட் (சியாம் ரீப்) - பயணக்கட்டுரை நாம் ஏன் பயணம் செய்கிறோம்.? ஒன்று நமக்கு அனுபவம் கிடைக்கவேண்டும் என்பதற்காக, இரண்டாவது நாம் அனுபவித்ததை பிறரோடும் பகிர்ந்து ரசி... பிரசுரமான எனது படைப்புகள் எனது ( கிட்டத்தட்ட இருபது ஆண்டு கால அனுபவம்) எழுத்துலக பயணம், கற்கள் முட்கள் நிறைந்தவை. அப்படி என்னதான் செய்துவந்துள்ளோம்!? என எனக்குள் த... காலை சூரியன் (மாமிகதை) மாமிகதை.. தோல் எல்லாம் அரிப்புகண்டு மிக மோசமாகிவிட்டது மாமியின் உடல். எவ்வளவு அரிப்பு மருந்துகள் வாங்கியும், இலைகளைக்கொண்டு மூலிகை வைத்த... சாருவை சந்தித்தேன்.... நவம்பர் 20ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை, மலாயா பல்கலைக்கழகத்தில், தம்பி தயாஜி மற்றும் நவீன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஓர் அற்புத இலக்கிய ...
ஒரு நாள் இலக்கிய நணபர்கள் சிலரோடு பேசிக் கொண்டிருந்தபோது விடுதலைப்புலிகள் பற்றி பேச்சு வந்தது. அப்போது என் பக்கத்தில் இருந்த ஒரு மூத்த எழுத்தாளர் வெகு சாதாரணமாக விடுதலைப் புலிகளிடம் இருந்த பணத்திற்கு ஏதேனும் ஒரு தீவை விலைக்கு வாங்கி கொண்டு தங்களுடன் வரும் மக்களோடு அங்கே சென்று ஒரு நாட்டை கட்டியிருக்கலாமே என்று கேட்டார். கேள்வி மிக எளிதுதான். அவர் என்னிடம் கேட்க விரும்பியது ஏன் அதே நிலத்தை தக்கவைக்க பிடிவாதமாக உயிரை விடுகிறார்கள் என்பதுதான். அவர் ஒரு முற்போக்கு பிராமணர். பூணூலெல்லாம் அணிந்துக் கொள்ள மாட்டார் . மார்க்சிய சித்தாந்தத்தில் நாட்டமுடையவர். அவர் கேட்ட கேள்வி அங்கு இருப்பவர்கள் அனைவரையும் ஒரு நிமிடம் நியாயம்தானே என்று யோசிக்கும் அளவிற்கு குழப்பியது. நிலத்திற்காக உயிரையா இழப்பார்கள்.. என்ற கேள்விக்கு ஒரு பூர்வக்குடி மனிதனால் என்ன பதில் சொல்ல முடியும் என நீங்கள் நினைக்கிறீர்கள்..? ஆம். நிச்சயம் உயிரை விட தாய்நிலம் மகத்தானது. அதைத்தான் நானும் சொன்னேன். ஆனால் அந்த அறிவு ஜீவி பார்ப்பனரால் என் பதிலை புரிந்து கொள்ள முடியவில்லை. அது அவரது தவறும் இல்லை. பெரும்பாலும் பார்ப்பனர்களுக்கு தாய் நிலப் பற்று இருப்பதில்லை. ஏனெனில் அவர்களுக்கு என தாய்நிலம் என்று எதுவும் இல்லை. தாய்நில நேசிப்பதென்பது பூர்வ குடிகளின் தனித்துவக் குணம். எந்த தாய்நிலத்தில் ஒரு பூர்வக்குடி பிறந்தானோ அதே தாய் நிலத்தில் தான் இறக்கவும் அவன் விரும்புகிறான். அந்த மண்ணோடு அவன் மண்ணாக மட்கி மாறுகையில் தான் அவன் நிறைவுறுகிறான். ஒரு பூர்வக்குடியின் இந்த மகத்தான தாய் நில நேசிப்பு உலகமயம், தாராளமயம், முதலாளித்துவம் , அரசியல் ஆகியவைகளால் எவ்வாறு சூறையாடப்பட்டது என்பதை ஒரு புனைவிற்கு அப்பாற்பட்ட எதார்த்த அழகியலோடு சொல்லப்பட்டிருக்கிற திரைப்படம்தான் மேற்குத் தொடர்ச்சி மலை. திரைப்படம் என்பது ஒரு புனைவிற்கு முடிந்தளவு நேர்மை செய்கிற காட்சி அழகியல் ஊடகம். தன் முன்னால் விரிகிற அந்தக் காட்சியில் பார்வையையும் ஒரு பாத்திரமாக உணரவைத்து அவனையும் உயிரோடு அதில் உலவவைத்து… திரையோடு ஒன்றிட வைக்கும் மகத்தான ஒரு வித்தை தான் திரைப்படம். அந்த வித்தையை மேற்குத் தொடர்ச்சி மலை மிகவும் உணர்வுபூர்வமாக எதார்த்தமாக நிகழ்த்தி இருக்கிறது. அந்த மலை வனம். பூச்சிகளின் ரீங்காரம். பறவைகளின் ஓசை. பசும் ஈரம் நிறைந்த ஏற்ற இறக்கமான வழித்தடங்கள். எப்போதும் வீசிக் கொண்டிருக்கிற ஊதற்காற்று, என திரையரங்கு குள்ளேயே நம்மை மலை வனம் ஒன்றின் பசுமை மணத்தை உணர வைத்திருக்கிறார் இயக்குனர் லெனின் பாரதி. அவருக்குப் பக்கபலமாக ஒளிப்பதிவாளர் தேனீ ஈஸ்வரும், இசைஞானி இளையராஜாவும் செயல்பட்டிருக்கிறார்கள். கால்வலியும் , களைப்பும் நேர வைக்கிற ஓங்கி உயர்ந்த நெடிய மலை. அதில் தன்னந்தனியனாக தகவல் சொல்பவனாக திரியும் ரங்கசாமி. அவனுடனேயே அலையும் அந்த மலை படுகையில் ஒரு சிறு நிலம் வாங்கும் அவனது கனவு. படம் முழுக்க மலைகளில் வாழுகிற எதார்த்த மனிதர்கள் . மூட்டை தூக்கி தூக்கியே ரத்தம் வருமளவிற்கு இருமிச் சாகும் அந்த முதியவர், மனநிலை பாதிக்கப்பட்ட அந்தப் பெண்மணி, தன் கணவனுக்கு மிகுந்த ஆறுதலாக இருக்கிற அந்த எளிய மலை கிராமத்து பெண், கோபமும் எரிச்சலும் இறுதியில் கண்ணீரும் நிரம்பிய அந்த கங்காணி, ஆவேசமும் கொள்கைப்பிடிப்பும் நிறைந்த அந்த செங்கொடி சகா, என படம் முழுக்க உலவுகிற நிஜ மனிதர்களின் உணர்ச்சிக் குவியலே இப்படத்தின் திரைமொழி. கதையை சில வரிகளில் நம்மால் சொல்லிவிட முடியும். ஆனால் அந்த வாழ்க்கை தருகிற வலியை யாரால் விவரிக்க முடியும்… கதை இதுதான். சிறிய நிலம் வாங்க ஆசைப்படுகிற மலை வாழ் இளைஞன் ரங்கசாமி. வீட்டில் உள்ள அனைத்தையும் விற்று ..மனைவியின் தாலியையும் அடமானம் வைத்து ,நிலம் வாங்க ஏலக்காய் முட்டையை சுமந்து செல்லும் போது அதைச் சற்றே வைத்துவிட்டு நிலத்தை குடும்பத்தோடு வேடிக்கை பார்க்கும் ஒரு பொழுதில் மூட்டை சரிந்து பாதாளத்தில் விழ அவனது கனவு நொறுங்குகிறது. பிறகு தந்தைக்கு வேண்டிய ஒருவரால் அந்த நிலம் வாங்கும் கனவு கடனாக சாத்தியப்பட.. அந்நேரத்தில் எஸ்டேட்டை மூடி தொழிலாளிகளின் வயிற்றில் அடிக்கிறான் முதலாளி. தொழிலாளி வர்க்கத்திற்காக நேர்மையாக குரல் கொடுக்கும் உண்மையான ஒரு கம்யூனிஸ்ட் இளைஞனுடன் அந்த முதலாளியையும் அவனுக்குத் துணை போன போலி கம்யூனிஸ்டு தலைவர் ஒருவரையும் கொன்றுவிட்டு சிறை படுகிறான் ரெங்கசாமி. சில வருடங்கள் கழித்து திரும்பி வந்து பார்க்கும்போது தன்னிடத்தில் இருந்த ஒரே சொத்தான நிலத்தை விவசாயம் செய்வதற்காக மனைவி வாங்கிய கடனுக்காக அந்த நிலமும் பறிபோக.. என்ன ஆனது ரெங்கசாமியின் கனவு என்பது தான் மேற்குத் தொடர்ச்சி மலை. பூர்வ குடிகள் நிலங்களை விட்டு வெளியேற முடியாது. ஏனெனில் நிலத்திற்கும், இயற்கைக்கும் ,காடுகள் ,மலைகள் ,சோலைகள் ,தாவரங்கள் என தன்னைச் சூழ்ந்திருக்கும் அனைத்திற்கும் உயிர் இருக்கிறது என நம்பி அந்த வனத்தையும் அந்த மலையையும் மட்டுமே உயிராக நினைத்து வாழ்கின்ற எளிய மக்கள் அவர்கள். அந்த மலையைத் தவிர.. வனத்தை தவிர வேறு எதுவும் தெரியாத அவர்களை பலி கொடுத்தே இங்கே நவீன இந்தியா கட்டப்படுகிறது. வலிமையான பாரதத்தை உருவாக்க பல எளிய மனிதர்களின் வாழ்வும் , கனவும் பலி கொடுக்கப்படுவதை தான் நாம் மேற்குத் தொடர்ச்சி மலையில் கண்ணீர் மல்க பார்க்கிறோம். இப்படத்திற்கு உயிரே இப்படம் கொண்டிருக்கும் கனத்த மௌனம் தான். அதை இளையராஜா முற்றிலும் உணர்ந்திருக்கிறார். மகத்தான அந்தக் கலைஞனுக்கு எங்கெங்கே இசைப்பது என்பதைத் தாண்டி எங்கெங்கே மெளனிப்பது என்பது மிக நுட்பமாக கைவந்த கலையாக இருக்கிறது. சமீபத்திய நம்பிக்கை வரவு ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர். முழு மலையையும் அப்படியே திரைக்குள் கொண்டு வந்து இயற்கை வெளிச்சங்களோடு படத்தின் அழகியலை மெருகேற்றிருக்கிறார். மலையாள திரைப்படங்களில் மட்டுமே நாம் கண்டுணர்ந்த எதார்த்த அழகியல் தமிழ் திரையிலும் ஒளிரத் தொடங்கி விட்டது என்பதற்கான நம்பிக்கைக் கீற்று தான் இந்த மேற்கு தொடர்ச்சி மலை. இந்த உலகமயமும் , சுயநல அரசியல் முறைமைகளும் ஒரு மலை வனத்தின் மென் காற்றாய்.. நிலத்தின் உரிமையாளனாய் .. திரிந்துகொண்டிருந்த ஒரு இளைஞனுக்கு யூனிபார்ம் மாட்டி வாட்ச்மேன் ஆக்கிய கொடும் கதை தான் வீதிக்கு வீதி , ஊருக்கு ஊர் நம் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. அதை ஆவணப்படுத்தியதில் மேற்குத் தொடர்ச்சி மலை முழு வெற்றி அடைந்திருக்கிறது. இயக்குனர் லெனின் பாரதிக்கு கை நிறைய மலை வனப் பூக்களும்..வாழ்த்துகளும்.. இப்படிப்பட்ட படத்தை தயாரித்த நடிகர் விஜய் சேதுபதிக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். 606 total views, 1 views today Related Posts பள்ளிக்கூடம் ----- திரைமொழி நிகழ்த்தும் உணர்வு மேலீடுகிற நெகிழ்வு……………… தமிழனின் பண்பாட்டு வேர்களை அடையாளப்படுத்தி அதன் மூலமாக எளிய மக்கள் கதையை உணர்வுத்தளத்தில் சொல்வதில் வழக்கம்போல் தங்கர்பச்சான் வெற்றிப் பெற்றுள்ளார்.… பள்ளிக்கூடம் ----- திரைமொழி நிகழ்த்தும் உணர்வு மேலீடுகிற நெகிழ்வு……………… தமிழனின் பண்பாட்டு வேர்களை அடையாளப்படுத்தி அதன் மூலமாக எளிய மக்கள் கதையை உணர்வுத்தளத்தில் சொல்வதில் வழக்கம்போல் தங்கர்பச்சான் வெற்றிப் பெற்றுள்ளார்.… வாசுவும் சரவணனும் ஒண்ணா பசரடிச்சவங்க- மதுக்குடி பிதற்றும் திரைமொழி அபத்தம். கடந்த சில வருடங்களுக்கு முன் திமுக தலைவர் கருணாநிதியின் பேரன் துரை தயாநிதி தயாரித்து “வ-குவார்ட்டர்,கட்டிங்” என்ற…
என் பெயர் சுதா, எனக்கு வயது தற்போது 45. இந்த சம்பவம் நடந்தது எனது 30 வது வயதில். எனக்கு திறுமணம் ஆகி 12 வருடம் கழித்து நடந்த சம்பவம் இது. இது ரயிலில் நடந்த சம்பவம். முதலில் என்னை பற்றி தெரிந்து கொள்வோம். என் 30 வது வயதில் என் உடல் நடிகை நமீதாவின் உடல் போல இருக்கும் . என் முலை 42'' இருக்கும். என் குன்டியோ பார்ப்போரை உடனே கவர்ந்திலுக்கும் அளவுக்கு அழகு பெற்றது. என் இடுப்பும் என் வயிறும் நமீதாவின் இடுப்பையும் வயிறையும் பார்த்த்வர்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள்.அன்று நான் என் அலுவலக விசயமாக சென்னையிலிருந்து மும்பை செல்வதற்காக ரயில் ஏறினேன். நான் வசதியானவள் என்பதால் எபோதுமே முதல் வகுப்பில் தான் செல்வேன். நான் இருந்த முதல் வகுப்பு பெட்டியில் ஒரு 25 வயது வாலிபனும் மும்பை செல்வதற்காக அமர்ந்திருந்தான்.ரயில் சரியாக மதியம் இரண்டு மனிக்கு புறப்பட்டது. ரயிலின் அந்த பெட்டியில் நானும் அவனும் மட்டுமே இருந்தோம் . அவன் தன்னை அறிமுகபடித்திக்கொன்டான். தன் பெயர் சிவா என்றும் மும்பையில் படிப்பதாகவும் விடுமுறை முடிந்து செல்வதாகவும் கூறினான். நானும் என்னை அவனிடம் அறிமுகபடுத்தி கொன்டேன். ரயில் கிளம்பி ஒரு மூன்று மணி நேரத்திற்கும் மேல் ஆனது. இருவருமே அமைதியாய் சென்றுகொன்டிருந்தோம். மாலை 5.30 மணிக்கு ஒரு நிறுத்ததில் ரயில் நின்றது.அவன் இறங்கி என்னிடம் கேட்காமலே இரன்டு டீயும் வடையும் வாங்கி வந்தான். அதில் எனக்கொறு டீயும் வடையையும் தந்தான். நானும் நன்றி என கூறிவிட்டு வாங்கி சாப்பிட்டேன். பின்பு அரை மணி நேரம் கழித்து ரயில் புறப்பட்டது. ரயில் புறப்பட்டதிலிருந்து இரவு எட்டு மணி வரை இருவரும் பல கதைகளை பேசிகொன்டே சென்றோம். இடையில் செக்ஸ் டாப்பிக்கும் வந்தது. இருப்பினும் ஜாலியாகவே பேசிகொன்டு சென்றோம்.எட்டு மணிக்கு ரயில் நின்றவுடன் நான் ஏற்கனவே பார்சல் செய்து வைத்திருந்த லெமன் சாதத்தை இருவருமே சாப்பிட்டோம் .அவனும் ஒன்றும் கூறாமல் சாப்பிட்டுவிட்டான். சாப்பிட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு உறங்க தயாரானோம். எனக்கு எதிரே அவன் படுத்துவிட்டான். விளக்கு அனைக்காமல் இருந்தது. அவன் லுங்கி மாற்றிகொன்டு உறங்கினான். இரவு மணி பத்து இருக்கும் . நான் பாத்ரூம் செல்வதற்கக எழுந்திறுந்தேன் எனக்கு பக் என்று ஆகிவிட்டது. ஏனெனில் அவனுடய சாமான் 90 டிகிரி தூக்கிகொன்டு நின்றது. எனக்கோ ஒரு மாதிரியாகிவிட்டது . என்னுடய கனவர் சாமானை விட இரன்டு மடங்கு பெரிதாய் இருந்தது. நானும் பாத்ரூம் போய்விட்டுவந்து மீன்டும் படுத்துவிட்டேன் எனக்கோ தூக்கம் வரவில்லை. அந்த சாமான் தான் என் கண் முன்னே நின்றது. எனக்குள் கட்டுபடுத்த முடியாத ஆசை வந்துவிட்டதை உனர்ந்தேன். சரி இவனை வழிக்கு இழுத்துதான் பார்ப்போமே என்று முடிவெடுத்தேன். ஆனால் இதற்கு முன் என் கனவரை தவிர யாருடனும் படுத்ததில்லை.எனக்குள் தைரியத்தை வரவழைத்துகொன்டு அவனின் சாமானை நோக்கி நின்றேன். எனக்கோ அதனை சப்பி எடுக்கனும் போல் தோன்றியது. ஆனால் பயமாகவும் இருந்தது.உடனே இன்னொறு யோசனை வந்தது. இவனாக நம் வழிக்கு வரும்படி செய்தால் என்ன என்று நினைத்துகொன்டு.என் மார்பு சேலையை விலக்கி என் மாங்கனிகளை கவர்சியாய் தெரியும்படி வைத்துகொன்டேன். என் பாவடையை முட்டிக்குமேல் தூக்கி தொடை தெரியும்படியும் ஆக்கி கொன்டேன். இப்போது அவனை எழுப்ப வேன்டுமே அதனால் மெதுவாக என் கையை அவன் சாமன் மீது தட்டி விட்டு படுத்துகொன்டேன்.அவன் எழுந்து விட்டான். எழுந்தவன் சுற்றும் முற்றும் பார்த்தான். பின் அவனின் பார்வை என் தொடைக்கு வந்தது. அப்படியே என் முகத்தையும் பார்த்தான் . நான் தூங்குவதுபோல் பாவனை செய்துகொன்டேன். மீன்டும் அவன் பார்வை என் தொடைக்கு செல்லும்போது என் தொடையின் உள் பகுதி தெரியும்படி திரும்பினேன். அவன் பதற்றத்துடன் என் அருகே வந்தான். ஆகா நான் நினைத்தது நடக்கபோகிறது என்ற சந்தோசத்தில் தூங்குவது போலவே இருந்தேன்.என் அருகே வந்தவன் மெதுவாய் என் முகத்தை பார்த்தபடியே என் கால் மீது கை வைத்தான் நான் உறங்குவது போலவே இருந்தேன் அவனுக்குள் பயம் இருப்பதை அவன் என் காலை தொடும்போது உனர்ந்துகொன்டேன். பின் அவனுடய கையை என் தொடையை நோக்கி ஏற்றினான். அப்படியே கையை வைத்திருந்தவன் சற்று நேரக்தில் தடவ ஆரம்பித்தான். எனக்கோ ஏதோ செய்தது. அவனுடய மற்றொறு கையை என் மார்புக்கு கொன்டு வந்தவன் ஏதோ குறுட்டு தைரியத்தில் பிசய ஆரம்பித்தான். எனக்கு இதற்கு மேல் அடக்க முடியாமல் அவனுடய கையை பிடித்து என்முலையோடு சேர்த்து அழுத்தினேன். அவன் நான் விழித்திருப்பதை தெரிந்துகொன்டான்.சரி முதலில் நான் நினைத்ததை முடிக்க வேன்டும் என்று எழுந்து அவனிடம் பேச்சு கொடுத்தவாறே உன் சாமானை என் வாய் தேடுது என்றபடி நான் அவன் ஜட்டியை கழட்டினேன். கழட்டிய உடனே அவன் சுண்ணி பொதுக்கென்று வெளியே வந்தது....அதை என் கையால் எடுத்தேன்.. கறுப்பாக இருந்தது. இந்த சுன்னிக்கு என்று ஏதாவது அவார்ட் கொடுக்கலாம். நான் அதை தொட்ட வேகத்திலேயே நன்றாக விரைத்துக்கொண்டது. எப்படித்தான் இவனுக்கு இந்த சின்ன வயதிலும் இவ்வளவு பெரிதாய் இருக்கிற்தோ ?ஆனாலும் அவன் சுன்னி நான் எதிர் பார்த்ததைவிட பெரிதாகவே இருந்தது. மெதுவாக அதன் நுனி தோலை நீக்கி என் நாக்கால் அதன் நுனியை நக்கிகொன்டெ ஊம்பலானேன்.அவன் என் தலைமுடியை பிடித்து அப்படியே அவன் சுண்ணியை நன்றாக ஊம்ப கொடுத்தான். அதை நன்றாக ஊம்பினேன். அவன் சுன்னி பெரிதாக இருந்ததால் அது என் தொன்டை வரை சென்று வந்தது அவன் சுன்னியை ஊம்புவதிலும் எனக்கு சுகமாய் இருந்தது நான் ஊம்பிகொன்டிருக்கும்போதே அப்படியே அவன் தன் கைகலாள் என் பாவடையை தூக்கி என் தொடையை தடவிக்கொண்டு என் பிட்டத்தின் இடுக்கில் வைத்துஅழுத்தினான். அழுத்தும்போது எனக்கு லேசாக வலித்தது. பின் வலுக்கட்டாயமாக தன் சுண்ணியை என் வாயிலிருந்து உருவிக்கொண்டான்... ..அப்படியே அவன் என் கழுத்தை சுற்றி முத்தமிட ஆரம்பித்தான்...அப்படியே தன் தடி நாக்கை வைத்து என் கழுத்திலிலிருந்து நக்கிக்கொண்டே என் காது மடல் வரை சென்றான். அப்படியே தன் நாக்கால் என் காது இடுக்குகளை நக்கினான்..பிறகு அப்படியே வந்து என் உதட்டில் முத்தமிட்டான்...மேலுதடுகளை கவ்வியன் அப்படியே லேசாக கடித்தான். சொர்கம் என்றால் என்ன என்று அப்போதுதான் தெரிந்தது... அப்படியே அவன் நாக்கை கொண்டு வந்து என் கழுத்து முகம் என நக்கி எடுத்தான்.அப்படியே என் நாக்கை எடுத்துக்கொண்டு அவன் நாக்கால் கவ்விக்கொண்டான்.... online advertising online advertising அவன் அதை லேசாக கடித்தபோது என்னுள் எதோ செய்தது.அப்படி அவன் முத்தமிட்டபோது அவன் கைகள் என் அக்குளில் சென்று அங்கு தடவியது லேசான கிசு, கிசுப்பை மூட்டியது... என் முலைகள் விம்மி புடைத்துக்கொண்டது. அவன் அங்கு வருவான் என்று எத்ர்பார்த்தால் அவன் வருவதாக இல்லை. நான் அவனை அப்படியே என் முலைகளுக்கு தள்ள செய்த முயற்சியெல்லாம் பலனில்லாமல் போனது... அவன் தொடர்ந்து என்னை முத்தமிட்டிக்கொண்டே இருந்தான்....நான் அவன் சுண்ணியை பற்றிக்கொண்டேன்... என் கையில் அது லேசாக பிரிகம் லீக் ஆனது...அவனுக்கு என் குன்டியில் ஓப்பதற்கு ஆசையாக உள்ளது என்றான் நானும் எப்படி ஓப்பாய் என்றேன். அவன் உனக்கு சம்மதமா என்றான் நானும் சரி அனுபவித்து தான் பார்ப்போமே என்று சரி என்றேன்.முதலில் என் பாவாடையைதூக்கி குன்டியை தடவிகொடுத்தான். சுகமாக இருந்தது. பின் அபடியே நாய் போல் குனியவைத்தான். முதலில் தன் விரலை என் சூத்தினுள் மெதுவாக நுழைத்தான். எனக்கு வலித்தது. அதை அவனிடம் சொன்னேன். விரலை வெளியில் எடுத்து அவனுடைய எச்சிலை என் சூத்தின் ஓட்டையில் துப்பி அவனுடய சுன்னியை மெதுவாக என் சூத்தினுள் விட்டான். அது உள்ளே செல்லும் போது வலித்தது. ஆனால் உள்ளே சென்றவுடன் சுகமாய் இருந்தது. ரயில் செல்லும் வேகத்திற்கும் ஆட்டதிற்கும் ஏற்றவாறு அவன் உள்ளே விட்டு விட்டு எடுத்தான்ஒரு வலியாய் சூத்தில் ஓப்பதை நிறுத்திவிட்டு என்னை ரயிலின் சீட்டில் மல்லாக்க படுக்க வைத்து என் கவட்டை நன்றாக விரித்துகொன்டான். பின் அவன் நாக்கல் என் புன்டையை நக்க தொடங்கினான். என் புன்டையின் உள் நாக்கை மேலும் கீழும் நக்கி எடுத்தான் எனக்கோ சொர்ர்க்கத்தில் இருப்பது போன்று இருந்தது. என் புன்டயிலிருந்து வடியும் மதன நீரயும் விழுங்கினான்.இதற்கு மேல் என்னால் தாங்க முடியாமல் என்னை சீக்கிறம் ஓழுடா என்றேன். அவனும் சரி என்று அவனுடய அந்த பெருத்த சுன்னியை என்புன்டைக்குள் சொருகி ஓக்க ஆரம்பித்தான். அவனுடய சுன்னி என் புன்டையின் உள் ஆழம் வரை சென்றது. நன்றாக கவட்டை அகற்றி கொன்டு அடி அடி என வெலுத்து வாங்கினான். பின்பு சுன்னியை வெளியே எடுத்து எனது இரண்டு கால்களையும் மேலே தூக்கி கொன்டு மீன்டும் ஓக்க ஆரம்பித்தான் அதற்குமேல் அவனுடய சுன்னி தாக்கு பிடிக்காமல் அவனுடய விந்தை என் புன்டைக்குள் பாய்ச்சி அடித்தான் அது அழகாய் என் புன்டைக்குள் சென்று வெளியேரியது. online advertising அப்படியே இருவரும் ஒரு பத்து நிமிடம் ஓத்த கலைப்பில் படுத்து விட்டோம்.பின்பு இருவரும் எழுந்து பாத்ரூம் போய் சுத்தம் செய்துகொன்டு வந்து பேசிக்கொன்டிருந்தோம். அவனுக்கு மும்பையில் நான் தங்கும் முகவரியை கொடுத்து வரும்படி கூறினேன். அதனை வாங்கி கொன்டு சரி என்றான். மும்பைசெல்லும் வரை எங்களால் முடிந்தவரை காமகளியாட்டம் ஆடினோம் பின்பு மும்பை செல்லும் போதெல்லாம் மும்பையிலும் அது தொடர்ந்தது.
எல்லாமே நேற்று நிகழ்ந்தது போலிருக்கிறது. காலங்கள் நடக்கவில்லை. சக்கரம்பூட்டிக்கொண்டு ஓடுவதனால்தானோ என்னவோ நண்பர் கலாமணியுடனான நட்புறவின் தொடக்கமும் நீட்சியுற்ற நேசமும் பல்வேறு நிகழ்வுகளின் ஊடே மனதில் பசுமையாக நிறைந்திருக்கிறது. இலங்கையில் கலாமணிக்கும் எனக்குமிடையே துளிர்த்த நட்பு அவுஸ்திரேலியாவில்தான் கொடியாக - செடியாக - மரமாக செழித்து கிளைவிட்டு படர்ந்தது என கருதுகின்றேன். அவர் தனது பட்டமேற்படிப்பு ஆய்வுக்காக அவுஸ்திரேலியா சிட்னிக்கு வந்தார். நான் வாழ்ந்த மாநில மாநகரம் மெல்பன். மனைவி பிள்ளைகளை விட்டுப்பிரிந்து வரும் துயரத்தை கடந்துவருதல் என்பது எத்தகைய மனஉளைச்சல் என்பதை அனுபவத்தில் உணர்ந்திருக்கின்றேன். Home Sick இடம்பெயர்ந்தவர்களும் புலம் பெயர்ந்தவர்களும் அனுபவித்த புத்திக்கொள்முதல்தான். எனினும் தான் வந்தநோக்கத்தில் கண்ணும் கருத்துமாக இருந்து அந்த இக்கட்டான காலகட்டத்தை கடந்துவந்தவர் கலாமணி. சிறிது காலத்தில் மிகவும் பிரயாசைப்பட்டு மனைவி மக்களை இங்கு அவர் அழைத்துக்கொண்டபின்பு ஓரு குடும்பத்தலைவன் என்ற முறையில் அவர்களின் எதிர்காலம் குறித்த ஏக்கமும் கவலையும் அவரது மனதில் கொழுவேறியது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் விசேட அனுமதியுடன் மேற்படிப்பு ஆய்வை முடித்துவிட்டால் திரும்பிச்சென்று அதே பல்கலைக்கழகத்தில் அவர் தனது பணிகளைத்தொடரவேண்டும். இங்கேயே குடியுரிமைபெற்று தங்கிவிட்டால் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகவேண்டும். இங்குவந்த பிள்ளைகள் மூவரும் ஆங்கிலமொழிமூலம் கல்வியை தொடர்கின்றனர். மீண்டும் திரும்பிச்செல்லும்போது அவர்களின் கல்வி சார்ந்த எதிர்காலத்திற்கு என்ன வழி? ஏதும் சர்வதேச பாடசாலைகளை நாடவேண்டும். குடும்பத்திற்காக - ஒரு மனைவியின் தாயின் அன்றாடக்கடமைக்காக ஆசிரியப்பணியையும் ஊதியம் அற்ற விடுமுறையில் துறந்துவிட்டு வந்த நேசமும் பரிவும் மிக்க மனைவியின் தொழில்சார் எதிர்காலம்...? இப்படி பல கேள்விகளுடன் அவர் தமது ஆய்வுக்கல்வியை தொடர்ந்தார். நான் அறிந்தவரையில் கலாமணியின் முன்னே ஆச்சரியக்குறிகள் இருக்கவில்லை. தொடர்ந்தும் கேள்விக்குறிகள்தான் பூதாகரமாக தோன்றிக்கொண்டிருந்தன. அந்தக்கேள்விக்குறிகளையெல்லாம் தனது அமைதியாலும் ஆற்றல்களினாலும் கடந்து வந்து ஆச்சரியக்குறிகள் ஆக்கினார். அதனால்தான் இலக்கிய வாசகர்கள் பலருக்கும் தெரியாத கலாமணியின் இந்தப்பக்கங்களை அவரது மணிவிழா தருணத்தில் இங்கே பதிவுசெய்கின்றேன். சிக்கலான முடிச்சுகள் தோன்றினால் பிரச்சினைகள் உருவானால் முடிச்சுகளை அவிழ்ப்பதற்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்கும் ஒவ்வொருவரும் வேறு வழிமுறைகளை பின்பற்றுவர். நண்பர் கலமணி எவ்வாறு அத்தனை சோதனைகளையும் கடந்தார் என்பது சிதம்பர ரகசியம் அன்று. உள்ளார்ந்த அவரது கலைத்தாகம் அவரை உளைச்சல்களிலிருந்து மீட்டெடுத்தது. அவரை உடனிருந்து மீட்டபெருமை அவர் நேசித்த கலை -இலக்கியத்திற்கு மட்டும் உரித்தானதல்ல. உடனிருந்த மனைவி மக்களையும் அந்தப்பெருமை சாரும். அதற்கெல்லாம் நானும் ஒரு மௌனசாட்சி. எமக்கெல்லாம் கலாமணி உதாரணபுருஷர். அவுஸ்திரேலியாவில் அருகிருந்து அவரது செயற்பாடுகளை அவதானித்தமையால்தான் அவரை இவ்வாறு என்னால் சித்திரிக்கமுடிகிறது. திருமதி கலாமணியிடம் நான் இப்படி வேடிக்கையாக சொல்வதுண்டு:- “ உங்களுக்கு மூன்று பிள்ளைகள் இல்லை. கலாமணியுடன் சேர்த்து நான்கு பிள்ளைகள்” கலாமணிக்கு நல்ல குரல்வளம். அது அவருக்குக் கிடைத்த கொடை. எழுத்தாற்றல் பாடும் திறன் நடிப்பாற்றல் இசைநாடகங்களை இயக்கும் அனுபவம் நிரம்பியவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறந்த புலமை. இவையெல்லாம்தான் அவரை பல்வேறு புலம்பெயர் மனஉளைச்சல்களையும் கடந்துவரச்செய்தன எனக்கருதுகின்றேன். இசைநாடகப்பிரதிகள் எழுதினார். ஒரு கதைத்தொகுப்பை வெளியிட்டார். அவருக்கு அவரது கல்விபோன்ற நீண்ட காலமாக மனப்பாடமான பூதத்தம்பி இசைநாடகத்தை சிட்னியிலும் மெல்பனிலும் மேடையேற்றினார். எமது வருடாந்த எழுத்தாளர் விழாக்களில் கலந்துகொண்டு ஆய்வுகள் சமர்ப்பித்தார். இதழ்களுக்கு எழுதினார். அண்ணாவியார் இளையபத்மநாதனின் அன்புக்குப்பாத்திரமாகி அவர் நெறிப்படுத்திய ஒரு பயணத்தின் கதை கூத்து சிட்னியிலும் மெல்பனிலும் மேடையேறியபோது தனது கணீரென்ற குரல்வளத்தினால் அந்தக்கூத்து காலம்கடந்தும் பேசப்படுவதற்கு பக்கத்துணையாக நின்றார். மெல்பனில் நாம் முதலாவது எழுத்தாளர் விழாவை ஒழுங்குசெய்தபோது அதுசம்பந்தமான ஆலோசனைக்கூட்டம் சிட்னி ஹோம்புஷ்ஷில் கலமாணியின் வாடகை விட்டில்தான் நடந்தது. சிட்னியில் வதியும் பல கலை -இலக்கிய ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். பின்னர் சிலர் அந்தவிழாவுக்கு எதிர்வினையாற்றி வரவிருந்த பலரைத்தடுத்தனர். இலங்கையில் நாம் முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டினை நடத்துவதற்காக பணிகளை தொடங்கியபோது மாத்திரம்தான் எதிர்வினைகளும் அவதூறுகளும் பரப்பப்பட்டன என எண்ணவேண்டாம். புலன்பெயர்ந்தவர்கள் எங்கு எந்த நல்ல நோக்கம் முன்வைக்கப்பட்டாலும் தமது தவறான செயற்பாடுகளினால் மக்களை திசைதிருப்பும் வேலைகளை கச்சிதமாகவே செய்வார்கள். ஆனால் புலம்பெயர்ந்த சுயசிந்தனையுள்ள மக்கள் சரியான தெளிவான தீர்வுடன்தான் இருப்பார்கள். காலம் எதற்கும் பதில் சொல்லும் என்பார்கள். அந்த எதிர்வினைகள் இறுதியில் வினைவிதைத்தவர்கள் பக்கமே திரும்பியது. தொடர்ந்தும் அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளர் விழா வருடந்தோறும் நடந்துவருகிறது. 2001 ஆம் ஆண்டு ஜனவரியில் மெல்பனில் இருநாள் நிகழ்வுகளாக நடந்த எமது முதலாவது எழுத்தாளர் விழாவுக்காக சிட்னியிலிருந்து சுமார் நாற்பது பேர் வந்தனர். தமது பூதத்தம்பி இசைநாடகத்தை சிட்னி கலைஞர்களைக்கொண்டு இரவுபகலாக தயாரித்தார். தனது ஆய்வுப்பணிகளையும் தொடர்ந்தவாறு ஒத்திகைகளிலும் தீவிர கவனம் செலுத்தினார். கறுத்தசெம்மறி ஆடுகளும் தம் பணிகளை முடுக்கிவிட்டன. ஒத்திகைக்கு வந்தவர்களின் வீடுதேடிச்சென்றும் தொலைபேசி ஊடாகவும் குறிப்பிட்ட இசைநாடகத்திற்கும் மெல்பன் விழாவுக்கும் ஆதரவோ ஒத்துழைப்போ வழங்கவேண்டாம் என்று பிரசாரம் செய்தன. குறிப்பிட்ட பூதத்தம்பி இசைநாடகத்தில் ஒரு பெண்பாத்திரம் வருகிறது. அதனை ஏற்று நடிக்க ஒழுங்காக ஒத்திகைக்கு வந்த அந்த யுவதிக்கும் சில இளைஞர்களுக்கும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. விழாவுக்கு ஐந்து நாட்கள் இருக்கும் தருணத்தில் அந்த யுவதி உட்பட சிலர் அழுத்தம் தாங்காமல் விலகிக்கொண்டனர். கலாமணி அதனால் சோர்ந்துவிடவில்லை. மற்றும் ஒரு யுவதிக்கு தீவிர பயிற்சி வழங்கினார். புதிய கலைஞர்களை தேர்ந்தெடுத்தார். திட்டமிட்டவாறு விழா மெல்பனில் திறம்பட நடந்தது. பூதத்தம்பி இசை நாடகத்தில்தான் நான் முதல் முறையாக கலாமணியின் கணீரென்ற குரலையும் அவரது அபாரமான நடிப்பையும் பார்த்தேன். அந்த அரங்கத்தில் முன்வரிசையிலிருந்த சிலர் அந்த நாடகத்தின் இறுதிக்காட்சியைப்பார்த்து உணர்ச்சிவசப்பட்டதையும் கண்களை கசக்கிக்கொண்டதையும் அருகிருந்து அவதானித்தேன். அந்த விழாவில் மல்லிகை அவுஸ்திரேலியா சிறப்பிதழும் வெளியிடப்பட்டது. அதற்கான அட்டைப்படத்தை வரைந்தவர் கலாமணியின் மூத்த புதல்வர் பரணி. (பரணி தற்போது யாழ். பல்கலைக்கழக பகுதிநேர விரிவுரையாளர் - ஜீவநதி இதழின் ஆசிரியர்) மல்லிகை அவுஸ்திரேலியா சிறப்பு மலரில் அவுஸ்திரேலியா பற்றிய பல தகவல்குறிப்புகளை தந்தவர் கலாமணி;. விழாவில் கலந்துகொண்டு மலரை வெளியிட்டுவைத்தவர் இன்றைய ஞானம் ஆசிரியர் டொக்டர் ஞானசேகரன். இந்தத்தகவல்களைத் தெரியாத பல வாசகர்களுக்காக இங்கு இவற்றைப் பதிவுசெய்கின்றேன். கொழும்பில் முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டிலும் கலாமணியின் பூதத்தம்பி மேடையேறியது. அவுஸ்திரேலியாவில் எமது விழா இப்பொழுதும் தங்கு தடையின்றி மாநிலங்களில் வருடந்தோறும் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடர்பயணத்தில் நாம் சோர்வடையாமல் இயங்குவதற்கு ஆரம்பத்தில் கலாமணியும் பக்கபலமாக இருந்திருக்கிறார் என்பது தற்போது அவரது மணிவிழாக்காலத்தில் திரும்பிப்பார்க்கும்பொழுது புலனாகிறது. மெல்பனில் எனது வெளிச்சங்கள் (சிறுகதைகள்) சந்திப்பு (நேர்காணல்) ஆகிய நூல்கள் வெளியானபொழுது அந்த நிகழ்வுக்கு தலைமைதாங்கியவர் கலாமணி. சந்திப்பு நேர்காணல் தொகுப்பு வெளியானவேளையில் அதில் இடம்பெற்ற பிரான்ஸில் வசித்த மூத்த படைப்பாளி அகஸ்தியரும் அவுஸ்திரேலியாவில் வசித்த ஓவியர் செல்லத்துரை ஐயாவும் மறைந்துவிட்டார்கள். அதனால் இருவரதும் பெரிய உருவப்படங்களை எனது நூல்வெளியீட்டு விழாவில் திறந்துவைத்துப்பேசுவதற்கு ஏற்பாடு செய்திருந்தேன். அகஸ்தியரின் படத்தை அவருடன் கண்டியில் நன்கு உறவாடிய எனது நண்பரும் சமூக செயற்பாட்டாளருமான கொர்ணேலியஸ் திறந்துவைத்தார். ஓவியர் செல்லத்துரை ஐயாவின் உருவப்படத்தை கலாமணி திறந்துவைத்து ஓவியக்கலை குறித்து சிறப்பான உரையை நிகழ்த்தினார். கலமணியின் தமிழ் - ஆங்கில கையெழுத்துகள் ரசனைக்குரியவை. முத்துக்களை வரிசையாக கோர்த்தது போல் ஓவியமாக காட்சிதரும். அவரது அமைதி – ஆற்றல் - ஆர்ப்பாட்டமற்ற ஆளுமை என்பவைதான் என்னை அவரிடம் நெருங்கச்செய்திருக்கும் என நம்புகின்றேன். என்னை முதல் முதலில் நீர்கொழும்பில் சந்தித்த நாள் முதலாய் சகோதரவாஞ்சையுடன் உறவாடும் இனிய நண்பர் தெணியானுக்கு மட்டுமல்ல கலாமணிக்கும் அவர் ஒரு உடன்பிறவாச்சகோதரன் என்பதை தெணியானை கலாமணி விளிக்கும்பொழுதெல்லாம் “அண்ணை...அண்ணை..” என்று அன்பொழுக அழைப்பதிலிருந்து புரிந்துகொண்டேன். கலாமணியின் ஆன்ம பலம் அவர் உளமாற நேசிக்கும் கலை இலக்கியத்தில் மட்டும் தங்கியில்லை. அவரது அன்பு மனைவி - அருமை மக்கள் மருமக்களிலும் நல்ல நட்புகளிலும் தங்கியிருக்கிறது. எனக்கு ஒரு இனிய சம்பவம் இத்தருணத்தில் நினைவுக்கு வருகிறது. குரும்பசிட்டியில் இரசிகமணி கனகசெந்திநாதனுக்கு மணிவிழா நடந்தபோது அதனை “இரசிகமணிவிழா” என்றே வர்ணித்தார்கள். அதுபோன்று எனது இனிய நண்பர் கலாமணியின் மணிவிழாவை - கலாமணிவிழா என அழைக்க ஆசைப்படுகின்றேன். கலாமணி வதியும் வடமராட்சியில் அவரது மணிவிழா பேராசிரியர் சிவலிங்கராஜா தலைமையில் வதிரி தேவரையாளி இந்துக்கல்லூரியில் விரைவில் வெகு சிறப்பாக நடைபெற ஏற்பாடாகியிருப்பதாக அறிகின்றேன். இவ்விழாவில் மணிவிழா மலருடன் கலாமணியின் சில நூல்களும் வெளியிடப்படவுள்ளன. மணிவிழா நாயகன் கலாமணிக்கு எமது வாழ்த்துக்கள். இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற்ற ஜி 20 நாடுகளின் தலைவர்கள் சந்திப்பின் போது, ​​சீன அதிபர் ஜி ஜின்பிங், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை கடுமையாக சாடினார். இந்த நிகழ்வை காட்டும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் இரு நாட்டுத் தலைவர்களுக்குமிடையில் சந்திப்பு இடம்பெற்றதுடன், குறித்த சந்திப்பு தொடர்பான விபரங்களை கனேடிய ஜனாதிபதி ஊடகங்களுக்கு தெரிவித்ததாக சீன ஜனாதிபதி குற்றம் சுமத்தியிருந்தார். “உங்களை நம்புவது கடினம்” என்று சீன அதிபர் ஒரு மொழிபெயர்ப்பாளர் மூலம் கூறுகிறார். சில நாட்களுக்கு முன் நடைபெற்ற சந்திப்பில் சீன உளவாளிகள் மற்றும் கனேடிய தேர்தல்கள் குறித்து இரு தலைவர்களும் கருத்துகளை பரிமாறிக்கொண்டனர். சில வருடங்களுக்குப் பிறகு இருவருக்கும் இடையே சந்திப்பு நடந்தது. “நாங்கள் விவாதித்த அனைத்து விஷயங்களும் பொருத்தமற்ற பத்திரிகைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.” என்று இந்த கலந்துரையாடலின் போது சீன ஜனாதிபதி குறிப்பிட்டார். அதற்கு கனேடிய பிரதமர், தனது நாடு சுதந்திரமான மற்றும் வெளிப்படையான கருத்துக்களை மதிக்கிறது, அது அவர்களின் கொள்கை என்று குறிப்பிட்டார்.
இலங்கையின் இயற்கை அழகின் திரட்சி மலையகம். அதை இப்படியான செழிப்பு பூமியாய் மாற்றி இலங்கையின் அந்நியச் செலாவணியின் முக்கால் பங்கிற்கு மேலான வருமானத்தை ஈட்டித்தருகிற அந்தப் பூமியின் மக்கள் காலாகாலமாகவே திட்டமிடப்பட்ட விதத்தில் ஏழையாக, விளம்புநிலை மக்களாக வைக்கப்பட்டு சுரண்டப்படுகிறார்கள். ஒட்டுமொத்த இலங்கையையே தாங்கிப்பிடிக்கிற இந்த பொருளாதாரத்தில் – அதாவது அவர்களின் சந்ததி சந்ததியான உழைப்பில்தான்- இலவச கல்வி, இலவச மருத்துவம் எல்லாமும் இன்றுவரை சாத்தியமாக இருக்கிறது. இதை அனுபவித்து படித்து ஆளாகிவர்கள் நாம். அதிகாரங்களிலும் வசதிவாய்ப்புகளிலும் வாழ்வின் சுகிப்புகளில் -ஏற்றத்தாழ்வோடு- மையப் பகுதியிலும் அதையண்டிய பகுதிகளிலும் பரந்து விரிந்து இருக்கும் நாம் இந்த விளிம்புநிலை மனிதர்களை கண்டுகொள்வதில்லை. குற்றவுணர்வு கொள்வதில்லை. அவர்களை ஏழைகள் என்ற தளத்திலும் விம்பத்திலும் மட்டும் வைத்துப் பார்த்து, அதிகபட்சம் இரக்கப்பட்டுவிட்டு நகர்பவர்கள். காடாய்க் கிடந்த அந்தப் பூமியை அதன் இயற்கை வளத்தை கடினமான உடலுழைப்பால் கண்டெடுத்து இலங்கைக்கு வழங்கியவர்கள் அவர்கள். அவர்களுக்கு நாம் உதவுவது என்ற அடிப்படையிலன்றி எமக்கு எழுகிற குற்றவுணர்வின் அடிப்படையில் நாம் இந்த மிகக் குறைந்த அடிப்படையானதும் உடனடி தேவையானதுமான வாழ்வாதார பகிர்வை செய்ய முன்வந்திருக்கிறோம். அதை செய்யும் அமைப்புகள் தனிநபர்களின் வரிசையில் நாமும் ஒருவராக இருப்போம். * தற்போது எதிர்பாராமல் ஏற்பட்டுள்ள கொரோனா நிலைமையால் இலங்கையில் ஊரடங்கு சட்டம் தொடர்கிறது. இதனால் அன்றாடங்காய்ச்சிகளாய் இருக்கும் விளிம்புநிலை மக்கள் மோசமான நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். கொரோனாவை விடவும் பசி அவர்களை அச்சுறுத்துகிறது. தினக்கூலி வேலைகள் இல்லாமல் போனதால் இந்த நிலைமை உருவாகியுள்ளது. எம்மைப் பொறுத்தவரை ஒப்பீட்டளவில் மலையகம் மிக மோசமான நெருக்கடியை சந்தித்துள்ளது. தேயிலைக் கொழுந்து கொய்வது நிறுத்தப்பட்டிருப்பதாலும் கூலிவேலைகளுக்கு போக முடியாததாலும் அவர்களுக்கு எந்தவித வருமானமும் இல்லாமல் போயுள்ளது. பசியில் வாடும் நிலை தோன்றியுள்ளது. அதனால் ஆதரவு அமைப்பு முதற்கட்டமாக 2000 பிராங் (சுமார் மூன்று இலட்சத்து எண்பதினாயிரம் ரூபா) நிதிக்கு அளவான உணவுப் பொதிகளை சுமார் 140 பயனாளிகளை தேர்ந்தெடுத்து வழங்கும் வேலையில் இறங்கியுள்ளது. தமிழ் சிங்கள தோட்டத் தொழிலாளர்களில் தனித்துவாழும் தாய்மார்களுக்கும் பெண்தலைமைத்துவக் குடும்பங்களுக்கும் முன்னுரிமை வழங்கியிருக்கிறோம். வூட்டன் எஸ்ரேற், ஹரிங்டன் எஸ்ரேற், ட்றெயிற்றன் எஸ்ரேற் பாக்கியபுரம், சமாதானபுரம், தர்மபுரம், சௌமியபுரம், அமைதிபுரம் பிராந்தியங்களில் முடிந்தளவுக்கு தேர்வுசெய்து வழங்கிவருகிறோம். மலையகத்தில் சுயமாக இயங்கும் “தனித்துவாழும் பெண்களுக்கான அமைப்புடன் (Single Mothers Empowerment Unity) இணைந்து, எமது “ஆதரவு அமைப்பு” (சுவிஸ்) இப் பணியை முன்னெடுத்திருக்கிறத(Single Mothers Empowerment Unity) இன் உதவியுடன் எமது “ஆதரவு அமைப்பு” (சுவிஸ்) இப் பணியை முன்னெடுத்திருக்கிறது. அந்த அமைப்பின் நண்பர்களான கிங்ஸ்லி, சந்திரலேகா, ஹேரத் ஆகியோர் இக் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களதும் அவர்களின் பிள்ளைகளினதும் பாரிய உழைப்பு இந்த திட்டத்தை ஒரு முறைமைக்கு உட்படுத்தி நடைமுறைப்படுத்துவதை சாத்தியமாக்கியுள்ளது. அத்தோடு உதவிப் பணிக்கான இணைப்பாளர்களாக செயற்படும் செலின் தவமணி, சரத் குணசிறி, சண்முகராஜா,கஜன் தனராஜ் (Stonycliff) போன்றவர்கள் மலையகத்தில் இவ் விநியோகப் பணியை செய்துமுடிப்பதில் உதவியாக இருக்கின்றனர். அவர்களது வீட்டில் வைத்தும், வேறு பொது இடங்களிலும், சிலருக்கு தனியாக வீட்டுக்கும் என விநியோகத்தை செய்கிறோம். ஊரடங்கு சட்ட நிலைமைக்குள்ளும் கொரோனா எச்சரிக்கை நிலைமைக்குள்ளும் இப் பணி செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. பொலிசார் ஊரடங்கு நேரத்தில் இதை செய்வதற்கான அனுமதியை வழங்கியுள்ளனர். ஊரடங்கு முடியும்வரை கட்டங்கட்டமாக இதை நாம் தொடர எண்ணியுள்ளோம். அதன் பிறகு மலையகத்தில் எமது ஆதரவு அமைப்பு வேலைமுறைமையிலான எமது செயற்பாட்டை தொடங்க உள்ளோம். எமக்கு தொடர்ந்து நிதி அன்பளிப்பு செய்துவரும் ஆதரவு நண்பர்கள் அனைவருக்கும் இங்கு மீண்டும் நன்றியைத் தெரிவத்துக்கொள்கிறோம். வழமைபோலவே ஆதரவு.கொம் இணையத்தளத்தில் இன்னும் சில தினங்களில் கணக்கு விபரங்கள் பொதுவெளியில் முன்வைக்கப்படும்.
பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் சென்னை உள்பட 11 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மலைப்போல் சரிந்த தங்கம் விலை: கொண்டாட்டத்தில் அள்ளிச்செல்லும் நகை பிரியர்கள்..!! அதன் படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. இதனை தொடர்ந்து தஞ்சாவூர், திருவாரூர் , மயிலாடுதுறை. கடலூர். அரியலூர். கரூர். நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி திடீர் பயணம்: பின்னணி என்ன? மேலும், சென்னையை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது. Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
`The illiterate of the 21st century will not be those who cannot read and write, but those who cannot learn,unlearn and relearn' Paulo Coelho Don’t try to innovate storytelling, tell a good story and it is magical. I see people trying to work so much in style, finding different ways to tell the same thing. It’s like fashion. Style is the dress, but the dress does not dictate what is inside the dress. பிரபலமான இடுகைகள் மாதவிடாய் மாதவிடாய் - இது பெண்களுக்கான பிரத்தியேக சலுகை. இயற்கையிலே அமையப்பெற்ற ஒரு வரன் என்றும் சொல்லலாம். காரணம் மாதவிடாய் நிற்கும்வரை ஒரு ப... விறால் மீன் விறால் மீன் பற்றிய சில தகவல்கள். விறால் மீன் பிடிப்பது கடினமான ஒரு வேலை. இருப்பினும் சுவாரிஸ்யமான ஒன்று என்கிறார்கள் அனுபவசாலிகள். ஒர... நீண்ட கூந்தல் அவசியமா? திருமணம் ஆகும் வரை எனது கூந்தல் மிக நீளமாகத்தான் இருந்தது. அடர்த்தியாக பட்டுபோல் பளபளப்பாக இருக்கும். அதே போன்று பளபளப்பாக எப்போதும் வைத்தி... அங்கோர் வாட் (சியாம் ரீப்) - பயணக்கட்டுரை நாம் ஏன் பயணம் செய்கிறோம்.? ஒன்று நமக்கு அனுபவம் கிடைக்கவேண்டும் என்பதற்காக, இரண்டாவது நாம் அனுபவித்ததை பிறரோடும் பகிர்ந்து ரசி... பிரசுரமான எனது படைப்புகள் எனது ( கிட்டத்தட்ட இருபது ஆண்டு கால அனுபவம்) எழுத்துலக பயணம், கற்கள் முட்கள் நிறைந்தவை. அப்படி என்னதான் செய்துவந்துள்ளோம்!? என எனக்குள் த... காலை சூரியன் (மாமிகதை) மாமிகதை.. தோல் எல்லாம் அரிப்புகண்டு மிக மோசமாகிவிட்டது மாமியின் உடல். எவ்வளவு அரிப்பு மருந்துகள் வாங்கியும், இலைகளைக்கொண்டு மூலிகை வைத்த... சாருவை சந்தித்தேன்.... நவம்பர் 20ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை, மலாயா பல்கலைக்கழகத்தில், தம்பி தயாஜி மற்றும் நவீன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஓர் அற்புத இலக்கிய ...
Tamil sex story வணக்கம் நண்பர்களே. என் பெயர் அரவிந்த். இந்த தளத்தில் நான் எழுதும் முதல் கதை. இதற்கு முன்பு கதை தளத்தில் இரண்டு கதைகள் எழுதி இருக்கிறேன். அதை படித்து விட்டு. ஒரு ஆன்டி என்னை தொடர்பு கொண்டால். அவளின் சம்மதத்தோடு இந்த கதையை எழுதுகிறேன். நான் தற்போது சென்னை யில் வசிக்கிறேன். செக்ஸ் செய்ய விருப்பம் உள்ள பெண்கள், ஆண்டிகள், விதவைகள் தொடர்பு கொள்ளவும். உங்கள் ரகசியம் பாதுகாக்கப்படும். என்னை நீங்கள் நம்பலாம். நம்பியவர் கு துரோகம் செய்ய மாட்டேன். சரி வாங்க கதைக்கு போவோம். டிசம்பர் மாதம் எனக்கு ஓரு மெயில் வந்துச்சு. நானும் சாட் செய்தேன். அப்போது ஜெயந்தி ணு ஒரு ஆண்ட்டி சாட் பண்ணா. நானும் தொடர்ந்து பேசினேன். அவ என் கதை ரொம்ப பிடிச்சுருக்கு ணு சொல்லி. Read More நீங்க பண்ணியது எனக்கு பிடிச்சிருந்த்து என் அத்தையை அனுபவித்த கதை அய்யோயோய் அப்படி ஒரு அழகு செக்ஸ் செய்ய ஆசையா இருக்கு. ஆன பயமா இருக்கு ணு சொன்னா. நானும் ஒரு மாசம் டெய்லி சாட் பண்ணேன். ஒரு வழியா. என்னை நம்ப ஆரம்பச்சா. சரி எப்போ செய்வோம் ணு கேட்ட. நான் என் ரூம் கு வா.நா மட்டும் தான் தனியா இருக்கேன் ணு சொன்னேன். சரி ணு ஒரு monday வரேன் ணு சொன்னா. நானும் காத்து கிட்டு இருந்தேன். மெயில் ல என் நம்பர் ஆ sent பண்ணேன். அவளும் நா சொன்னா இடத்துக்கு சரியா 12மணிக்கு வந்து எனக்கு போன் பண்ணா. நானும் அவல பிக்கப் பண்ண போன்னேன். அப்போது தான் அவல first டைம் பாத்தேன். சும்மா தல தலன்னு கும்முனு இருந்தா. சுருக்கமா சொல்லல போன. உயிர் படத்துல வர சங்கீதா மாதிரி இருந்தா. அவ கண்ணஆ பாக்கும் போது படுக்க வரியா னு கேக்குற மாதிரி இருந்துச்சு. அவல பத்தி சொல்லணும் நா. வயசு 35 இருக்கும். ஒரு குழந்தை பெத்தவங்க னு யாருமே சொல்லல மாட்டாங்க. அவ்ளோ அழகா இருந்தா.சைஸ். 32-30-32 வட்டமான முகம். ரோஸ் கலர் லிப்ஸ். ரெட் கலர் சாரீ ல பாக்கவே செமையா இருந்தா. அவல வீட்டுக்கு கூட்டி வந்து. கொஞ்ச நேரம் ரெண்டு பேரும் பேசிட்டு இருந்தோம். அப்பறம் கூல்ட்ரிங்க்ஸ் குடிச்சுட்டு. ரெண்டு பேரும் கண்ணாலயே பேசிகிட்டோம். டக்குனு கட்டி பிடிச்சு. லிப் லாக் பண்ணோம். ரொம்பவும் வேகமா பண்ணா. நா அவ லிப்ஸ் ஆ கடிச்சு நல்லா உறிஞ்சேன். அப்டியே பெட் ரூம் கு போய். டிரஸ் கசங்காம கழட்டி போட்டு வெறும். ப்ரா ஜட்டி ஓட இருந்தா. எது எது எங்க இருக்கணுமோ. அது ரொம்ப சரியா இருந்துச்சு.. அப்டியே என் டிரஸ் ஆ கலட்டி போட்டு ரெண்டு பேரும் கட்டிபுடிச்சி உறுண்டோம். ப்ரா வோட அவ மொலய கசக்கி ஈரம் பண்ணேன். அவ போட்டிருந்த perfume என்னை கேரங்கடிச்சது. அப்படியே. ப்ரா வா கழட்டி தூக்கி போட்டு. அவ மொலய பாத்தேன். நல்ல கல்லு மாதிரி இருந்துச்சு. மொலை காம்ப நல்ல சப்புனேன். அது விரைச்சுட்டு நின்னுச்சு. ரெண்டு மொலையும் மாறி மாறி சப்பி என் எச்சில் ஆள குளிப்பட்டிட்டேன். அப்பறம் அவஜட்டி ய கழட்டி. மோந்து பாத்தேன். அந்த ஸ்மல் எனக்கு பிடிச்சிருந்தது. வெறி வந்தவன் போல அவ புண்டைய பேசஞ்சு நக்கி சப்ப ஆரம்பச்சேன். நல்லா அவ முழு புண்டையும் என் வாய்க்குள்ள வச்சி. நாக்க உள்ள விட்டு விட்டு சப்புனேன். அவ ஆஆஆஆ ஆஆஆஆ ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆஆஸ்ஸ்ஸ்ஸ் சூப்பர் டா. ஐயோ ஸ்ஸ்ஸ்ஸ் பறக்குற மாதிரி இருக்கு டா ஆஆஆஆ ஆஆஆ ஸ்ஸ்ஸ்ஸ் ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆஆ ஆஆஆ ஸ்ஸ்ஸ்ஸ் ஸ்ஸ்ஸ்ஸ் னு முனகி கிட்டு இருந்தா. நா சப்பும் போது என் எச்சில் அவ புண்டைல இருந்து ஒழுகி பெட் ல விழுந்துச்சு. நா விடாம சப்பிகிட்டே இருந்தேன். அவ என் தலையை பிடிச்சு நல்லா அழுத்தி என் மூஞ்சிலயே அவளோட தண்ணிய விட்டா. நா சப்பி குடிச்சுட்டு. அவ புண்டைய அரை மணி நேரம் சப்புனேன். |தினமும் கதையை படி கையை அடி www.tamilsexstories.info| அப்பறம் அவ புண்டை ய என் மூஞ்சில வச்சு தேக்க சொன்னேன். அவளும் நல்லா தேச்சா. எனக்கு வெறி தலைக்கு எரிச்சு. அவல முட்டி போட வச்சு. என் poola நல்லா ஊம்ப வச்சேன். அவளும் என் poola தலையை ஆட்டி ஆட்டி நல்லா ஊம்புனா. நா அவ தலையை பிடிச்சு அடி தோண்ட வர விட்டு அடிச்சு அவ வாயிலேயே ஒழுத்தேன்.பத்து நிமிஷதுகு அப்பறம். கஞ்சிய அவ மூஞ்சில அடிச்சு தெளிச்சேன். அவ மூஞ்சில ல கஞ்சி ய பாக்கும் போது. நல்லா இருந்துச்சு. அப்படியே ரெண்டு பேரும் கிஸ் பண்ணிட்டு சப்பிட்டு இருந்தோம். மறுபடியும் என் பூல் நல்லா நிக்க ஆர்பிச்சு. அவல படுக்க வச்சு என் poola உள்ள விட்டேன். அது சர் னு வலிக்கிட்டு போச்சு. அவ என்னை போட்டு கால் குள்ள lock பண்ணிக்கிட்டா. நா விடாம. அடி அடி அடிச்சு ஒழுத்தேன். மொலை காம்ப கடிச்சு கிட்டே வெறித்தனமா அவ புண்டைய பொளந்து கிட்டு இருந்தேன். அவ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ அப்டிதாண்டா ஸ்ஸ்ஸ்ஸ் ஸ்ஸ்ஸ்ஸ் ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆஆ ஆஆஆஆ அடிடா அடிடா அடிடா னு mottivate பண்ணா. நானும் அடி அடி னு அடிச்சே. அவல பின்னாடி திரும்ப வச்சு. கூதியில் ல விட்டு. முடிய கொத்தா பிடிச்சு கிட்டு. குதிரை ஓட்டுனேன். டப் டப் னு சத்தம் அந்த ரூம் fulla கேட்டுச்சு. அதுக்கு மேல அவளுக்கு முடியல. போதும் னு சொன்னா. எனக்கு அது இன்னும் மூட ஏத்துச்சு. நா அவல படுக்க வச்சு விடாம சொருகு சொருகுன்னு அடிச்சு ஓலு ஒழுனு அவல ஒழுதுதள்ளுனேன். மொத்தமா 35நிமிஷம் ஓலுக்கு அப்பறம் என் கஞ்சி ய எடுத்து ஆன மூஞ்சி கு நேரா குலுக்கினேன். அது அவ மூஞ்சி மற்றும் மொலை மேல போய் விழுந்துச்சு. அப்படியே one hour ரெஸ்ட் எடுத்துட்டு. டாய்லெட் கு போய் ரெண்டு பேரும் குளிச்சோம். அப்போ அங்க ஒரு தடவ குதிரை ஓட்டுனேன். அப்பறம் அவ கிளம்பும் போது 3000ரூபாய் பணம் குடுத்தா. அப்டியே அவல கூட்டிட்டு போய் அவ ஏரியா கு பக்கத்துல விட்டுட்டேன். அப்பறம் அவ போன் பண்ணி. ரொம்ப வருசத்துக்கு அப்பறம். என்னை ரொம்ப சந்தோச படுத்தின னு சொன்னா. அடுத்த மீட்டிங் காக ரெண்டு பேரும் வெயிட் பண்றோம். நன்றி. நீங்கள் ஆதரவு தரும் பட்சத்தில் தொர்ந்து எழுதுவேன். நன்றி….. Related Posts என்னை ஒரு பிச் போல ஃபக் செய் தங்கை உடன் ஒரு இரவு! என்னுடன் பணித்த ஒரு பெண்ணை கரைக்ட் பண்ணி அவளுக்கு ஒரு குழந்தைய குடுத்தேன்! நித்யா உடன் ஒரு நாள் Categories Tamil kama kathaikal Tags Tamil Kamakathaikal, tamil Sex, Tamil Sex Stories, tamil sex story
ஹெலிகாப்டர் விபத்து: சம்பவங்களை நேரில் பார்த்தவர்களிடம் விசாரணை - குன்னூர் மக்கள் சொன்ன உருக்கமான பதில் ! தமிழக அரசு சார்பில் ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட விசாரணை அதிகாரி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சம்பவங்களை நேரில் பார்த்த மக்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. Prem Kumar Updated on : 11 December 2021, 08:12 AM நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள நஞ்சப்பன் சத்திரம் பகுதியில் உள்ள காப்பு காட்டில் கடந்த 8ஆம் தேதி காலை 12 மணியளவில் கடுமையான மேகமூட்டம் காரணமாக நாட்டின் முப்படை தளபதி பிபின் ராவுத், அவரது மனைவி உட்பட 14 பேர் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டர் நஞ்சப்பா சத்திரம் பகுதியில் உள்ள மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். கேப்டன் வருண் சிங் மட்டும் 70% காயங்களுடன் பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு விமானப்படை அதிகாரி ஏர் மார்ஷல் மான் வேந்தர் சிங் தலைமையில் விமானப்படை அதிகாரிகள் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதியில் நான்காவது நாளாக இன்றும் தடயங்களை சேகரித்து வரும் நிலையில் ட்ரோன் கேமரா மூலமும் ,தடயங்களை சேகரித்து வருகின்றனர் . இந்நிலையில் தமிழக அரசு சார்பில் குன்னூர் ,நஞ்சப்பா சத்திரம் ஹெலிகாப்டர் விபத்து குறித்த விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட முத்து மாணிக்கம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவுத் ஆகியோர் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் விபத்து குறித்து அப்பகுதியில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் நஞ்சப்ப சத்திர கிராம மக்களிடையே விசாரணை நடத்தி வருகின்றனர். நான்காவது நாளாக இன்றும் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதியை சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ராணுவ கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அப்பகுதிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நஞ்சப்பா சத்திரம் கிராமப்பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி 13 பேர் உயிர் இழந்ததால் நஞ்சப்ப சத்திர கிராம மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் மீட்பு பணியின் போது, முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்துடன் நடந்த கடைசி உரையாடலை பற்றி பேட்டி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக, குன்னூர் நஞ்சப்பன் சத்திரம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் கூறுகையில், இரண்டாவதாக அடையாளம் காணப்பட்ட நபரிடம் தான் நாங்கள் பேசினோம். அப்போது எங்க கிட்ட தண்ணி கேட்டாரு.. நாங்க உங்கள காப்பாத்தீடுறோம் சார்னு சொன்ன உடனே, கையெடுத்து கும்பிட்டாரு. அம்புலன்ஸ்ல ஏத்துன வரைக்குமே கைய அப்படியேதான் வெச்சிருந்தாரு. 3 மணி நேரம் கழிச்சு ராணுவ அதிகாரி வந்து நீங்க பேசுனவருதான் முப்படை தலைமை தளபதி என அவரு இறந்துட்டாருனு சொன்னதும் ரொம்ப வேதனையாயிடுச்சு” என்றார். Also Read “கையெடுத்து கும்பிட்டாரு..” : பிபின் ராவத்தின் கடைசி நிமிடம் - மீட்பு பணியில் ஈடுபட்டவர் உருக்கம்! coonoor helicopter crash Trending சட்டையை கழட்டி காவலருக்கு மிரட்டல்.. வைரலான வீடியோ.. பாஜக மாவட்ட செயலாளர் அதிரடி கைது! ராகுல விடுங்க, கேட்ச பிடிக்காம இவர் என்ன செய்தார் என்றே புரியல- தமிழக வீரரை விமர்சித்த தினேஷ் கார்த்திக்! YOUTUBE-ல் அதிகம் TREND-ஆன வீடியோ பட்டியல் வெளியீடு.. இதில் இடம்பிடித்த ஒரே தமிழ் வீடியோ என்ன தெரியுமா? நகைக்காக 80 வயது மூதாட்டி கொலை.. உடலை வீட்டின் அலமாரியில் ஒளித்து வைத்த பெண்: பெங்களூருவில் அதிர்ச்சி! Latest Stories ராகுல விடுங்க, கேட்ச பிடிக்காம இவர் என்ன செய்தார் என்றே புரியல- தமிழக வீரரை விமர்சித்த தினேஷ் கார்த்திக்! கூடுதல் விலைக்கு மது விற்பனை.. 852 பணியாளர்கள் சஸ்பெண்ட்: அதிரடி காட்டும் அமைச்சர் செந்தில் பாலாஜி! இந்திய அளவில் அசத்திய 'அரபிக் குத்து' வீடியோ.. YOUTUBE டாப்-10 வீடியோக்கள் பட்டியலில் இடம்பிடித்து சாதனை!
கோவையில் பாஜக மேற்கொள்ள உள்ள பந்த் சட்டவிரோதம் என்று அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவசர வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது. கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தில் மிபின் என்பவர் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்துள்ளனர். சட்டம், ஒழுங்கு மாநிலங்களின் பொறுப்பு – பிரதமர் மோடி!! இந்நிலையில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு தொடர்பாக இருப்பதால் தேசிய புலனாய்வுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கிடையில் வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என கோரி அக்.31 தேதி பாஜக சார்பில் பங்க் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என கோவையை சேர்ந்த தொழிலதிபர் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில் ஏற்கனவே இந்த வழக்கு தேசிய புலனாய்வுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் பங்கு தேவையில்லாத ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்மாவுக்கு ஏதேனும் விதிகள் உள்ளனவா? -ஐகோர்ட் கிளை அதிரடி!! இதனால் கட்சியினர் கடைகளை மூட நெருக்கடி கொடுப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில் தற்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர் ஒருவரின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கிய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 43 வயதான சந்தேகநபர் ஹோகந்தர பிரதேசத்தில் மறைந்திருந்த போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஏனைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்களுடன் ஸ்கூட்டரில் காலி முகத்திடலுக்கு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மிரிஹான போராட்டத்தின் போது, ​​பின்னர் எரிக்கப்பட்ட இராணுவ பேருந்தை ஓட்டிச்சென்று ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு முன்னால் நிறுத்தியதாக நம்பப்படுவதாகவும் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். கடந்த மே மாதம் 5 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இந்த நபர் போராட்டக்காரர்களுக்கு எதிராக பேசியதையும் அவதானிக்க முடிந்தது. இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. (யாழ் நியூஸ்) காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பொலிஸ் மா அதிபர், விசேட அதிரடிப் படையின் கட்டளை அதிகாரி மற்றும் பொலிஸ் விசேட பணியகத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் இன்று வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். Share Previous News Next News யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
இரண்டாம் உலகம் அருமையான படைப்பு. அகமனத்தை முன்னிறுத்திப் பார்க்க வேண்டிய படம். எல்லாப் படங்களையும் போல நேரிடையான காட்சிகளால் கருத்துச் சொல்லக் கூடியதோ அல்லது வறட்டுக் கேளிக்கை விழுமியங்களால் ஆக்கப்பட்டதோ அல்ல இந்தப் படம். கதை இல்லை எனும் கருத்து எந்த அடிப்படையுமற்றதாகும். நல்ல படம் என்பது பல்விதமான படிமங்களைக் கொண்டே ஆக்கப்பட்டிருக்கும். படத்தைப் பார்க்கும் நுகர்வாளன், அந்த படிமங்களினூடாகப் பயணித்து கற்பனா சக்தியுடன் மனம் இருந்த வாக்கில் கதையை அமைத்துக் கொள்ளக் கூடிய வகையில் அமைவதே நல்ல படம். அதன்படிதான் இப்படமும் படைக்கப்பட்டிருக்கிறது. இரு உலகங்களை ஒரு சேரக் காண்பிப்பதன் மூலம் ஒரு மாய யதார்த்தவாதத்தை திரைப்பட நேயர்களுக்குள் நிகழ்த்த முயன்றிருக்கிறார் இயக்குநர். அம்முயற்சிக்கு பாராட்டப்பட வேண்டியவர் அவர். புலன்களுக்கு வழமைப்படாத மாய அனுபவங்களைக் காட்டுவது போலவே துல்லியமான காட்சித் தன்மையுடனும் படிமங்களைக் காண்பிப்பதை கையிலெடுத்திருக்கிறார். அதாவது இயல்பானவற்றில் மாயத்தையும் ஒரு சேரக் கலப்பது. இப்படத்தில் சொல்லப்படும் மாயங்கள் மனத்திரிபுகளோ, மூட நம்பிக்கைகளோ அல்ல. ஒவ்வொரு படிமக்காட்சியும் ஏதோவொரு குறியீட்டுத்தன்மை கொண்டவை. அவற்றைப் பார்க்கத் தம்மைப் பழக்கிக் கொண்டாக வேண்டும். பழக்கப்படாதவர்களுக்கு படம் ஒரு எட்டாக் கனியாகவே அமையும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. இது போன்ற படங்கள் இன்னும் நிறைய வர வேண்டும். தயவு செய்து எடுத்த எடுப்பில் படம் புரியவில்லை எனச் சொல்லும் போக்கை மக்கள் கைவிட வேண்டும். எவ்விதமான உழைப்புமற்று படம் புரியவில்லை என்பது படைப்பாளியின் ஆடைகளை உருவி அம்மணமாக ஓட விடுவதற்குச் சமமாகும். பொருள்வயமான உலகில் அடிப்படைக் காட்சிகளினூடாகக் கேளிக்கைகளைக் கொட்டிக் கொட்டிப் பழக்கப்படுத்தப்பட்ட வணிகப் படங்களுக்கு மத்தியில் படைப்பூக்கமும் புத்தூக்கமும் கொண்ட ஓர் அரிய படம் இரண்டாம் உலகம். வகைப்பாடு பொது பணிவுடன் பழமைபேசி 1 comment: கரந்தை ஜெயக்குமார் said... இரண்டாம் உலகம் பற்றி வலைப் பூவில் இதுவரை நான் படித்த விமர்சனங்களில் இருந்து வேறுபட்டு ஓர் புதிய அணுகுமுறையினை தங்களிடம் கண்டேன்.
#Breaking: வெண்ணிலா கபடிக்குழு நடிகர் ஹரி வைரவன் உடல்நலக்குறைவால் மரணம்... கண்ணீரில் ரசிகர்கள்., சோகத்தில் திரையுலகம்.! ஐயோ சிரிப்ப அடக்க முடியலப்பா... மேடையில் மா.கா.பா ஆனந்த் செய்த செயல்... விழுவிழுந்து சிரிக்கும் நடுவர்கள்... வைரலாகும் வீடியோ!! அட அட... இரண்டாம் திருமணம் குறித்து நடிகை மீனா என்ன கூறியுள்ளார் பாருங்கள்... நடிகர் விஜய் வசந்தின் மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்துள்ளீர்களா... வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படம்... திருமணம் செய்யாமலேயே பிரபல நடிகை கர்ப்பமா?... கோபத்தில் கொதித்தெழுந்து உண்மையை போட்டுடைத்த நடிகர்.! அடேங்கப்பா... வாயை பிளக்க வைக்கும் நயன்தாராவின் சொத்து மதிப்பு.. இவ்வுளவு கோடிக்கு அதிபதியாம்.! திரையை மிரட்ட வருகிறது டிமான்டி காலனி 2... எதிர்பார்ப்பின் உச்சக்கட்டத்தில் ரசிகர்கள்..! படுக்கையில் இருந்தே எழ முடியவில்லை.. கவலைக்கிடமான சமந்தாவின் நிலை.. வெளிநாட்டில் சிகிச்சை பெற முடிவா?..! பிரபல நடிகை லட்சுமி திடீர் மரணம்.! தீயாய் பரவிய வதந்தி.! முற்றுப்புள்ளி வைத்து விளக்கமளித்த பிரபலம்!! வேற லெவல்.. மாஸ் லுக்.! உறுதியான சூப்பரான தகவல்! கொண்டாடாத்தை தொடங்கிய தளபதி ரசிகர்கள்!! கோவை மாவட்டத்தை சேர்ந்த சேகர் என்பவர் சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் தங்கி சமையல் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் வழக்கம்போல் நேற்று சமையல் வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் மாலை வீடு திரும்பினார். அப்போது, அவரது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்துள்ளது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சேகரின் மனைவி ஆனந்தி வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அவர்களது பீரோ உடைக்கப்பட்ட நிலையில் மர்ம நபர் அதன் அருகே மயக்க நிலையில் கிடந்துள்ளார். இதனைப்பார்த்து பதறிப்போன ஆனந்தி அலறல் சத்தம் போட்டுள்ளார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடிவந்துள்ளனர். சேகரின் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற கொள்ளையன், அளவுக்கு அதிகமான போதையில் விழுந்து கிடப்பது தெரிந்தது. இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த நபரை தெளிய வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த நபர் பெயர் நாகராஜ் என தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here Tags: #arrest #drunken robbber Copy Link தற்போதைய செய்திகள் 4 கணவர்களை ஏமாற்றி 2ம் கணவருடன் உல்லாசம், உற்சாகம்.. காதலில் மோசடி செய்து சம்பாதித்த காதல் ராணியின் பரபரப்பு வாக்குமூலம்.! அறுவை சிகிச்சை மூலமாக பசுவின் வயிற்றில் இருந்த 65 கிலோ பிளாஸ்டிக், ஆணி, இரும்பு பொருட்கள் அகற்றம்..! ஊழல் வழக்கில் முதல்வரின் துணை செயலாளர் அமலாக்கத்துறையினாரால் கைது.. அரசியல் மட்டத்தில் பேரதிச்சி.! EMI செலுத்துவோருக்கு அடுத்த ஷாக் அறிவிப்பு?.. ரிசர்வ் வங்கி எடுக்கப்போகும் முடிவு என்ன?..! எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள்.!
எல் லாஸ் ஏஞ்சல்ஸ் - பீட்டர் ஃப்ராம்டன் பெவர்லி ஹில்ஸ் ஹோட்டலில் உள்ள தனது ஆடம்பரமான பங்களாவில் தனது படுக்கையில் மெதுவாகத் தன்னைத் தளர்த்திக்கொண்டார். அவர் அங்கு ஒரு வாரம் கழித்தார், 1976 இல் தனது கடைசி கச்சேரிகளை மட்டும் செய்ய வெளியில் சென்றார் - இங்கிள்வுட்டில் உள்ள 18,000 இருக்கைகள் கொண்ட மன்றத்தில் நான்கு இரவுகள் விற்றுத் தீர்ந்தன. 'ஹோவர்ட் ஹியூஸ் இங்கே தங்கியிருந்தார்,' என்று ஃப்ராம்டன் தெரிவித்தார். அவர் உடனடியாக மன்னிப்பு கேட்டார்: 'இவை அனைத்திலும் நான் மிகவும் வசதியாக இருக்கிறேனா என்று எனக்குத் தெரியவில்லை,' என்று அவர் கூறினார். 'இது எனக்கு இன்னும் புதியது.' சுமார் ஒரு வருடம் புதியது, உண்மையில். பிராம்ப்டன், 26, அறுபதுகளின் பிற்பகுதியில் பிரிட்டிஷ் பாப் இசைக்குழுவான ஹெர்டுடன் 16 வயதில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1969 இல், பணமில்லாமல் குழு பிரிந்தது. ஸ்மால் ஃபேஸ்ஸின் ஃப்ராம்டன் மற்றும் ஸ்டீவ் மேரியட் பின்னர் ஹம்பிள் பையை உருவாக்கினர். ஃபிராம்ப்டன் இசைக்குழுவின் மூன்றாவது யு.எஸ். ஆல்பத்தில் நீடித்தார், ராக்கிங் தி ஃபில்மோர் . அவர் ஒரு அமர்வு கிதார் கலைஞராக தனது கையை முயற்சித்தார் (ஆன் ஷ்மில்சனின் மகன் மற்றும் அனைத்து விஷயங்களும் கடந்து செல்ல வேண்டும் ) பின்னர் ஒரு தனி கலைஞராக. ஃபிராம்ப்டன் எப்பொழுதும் தன்னைத்தானே ஆறுதல்படுத்திக்கொண்டார், அவர் சொந்தமாக குண்டு வீசினால், அவர் எப்போதும் அமர்வு வேலைக்குத் திரும்பலாம். ஜனவரி 1976 வெளியீடு வரை இது ஒரு உண்மையான சாத்தியம் என்று அவர் கருதினார் ஃபிராம்ப்டன் உயிருடன் வருகிறார்! ஒரு மாதத்திற்குள், எல்பி முதல் பத்து இடங்களுக்குள் வந்தது. மார்ச் மாதத்தில் அது ஒரு வாரத்திற்கு நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அடுத்த மூன்று மாதங்கள், ஃபிராம்ப்டன் உயிருடன் வருகிறார்! முதல் ஐந்தில் நீடித்து, இடம் கொடுத்தது ஈகிள்ஸின் சிறந்த வெற்றிகள் , இருப்பு , கருப்பு மற்றும் நீல மற்றும் ஒலியின் வேகத்தில் இறக்கைகள் , ஜூன் வரை, அது மீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றியது மற்றும் கோடை மற்றும் ஆரம்ப இலையுதிர் காலம் முழுவதும் அசைய மறுத்தது. அவர் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த இருநூறாண்டு கோடைகாலத்தின் முக்கிய ஈர்ப்பாக ஆனார். ஸ்டீவி வொண்டர்ஸ் வாழ்க்கையின் திறவுகோலில் பாடல்கள் இறுதியாக பதவி நீக்கம் செய்யப்பட்டது ஃபிராம்ப்டன் உயிருடன் வருகிறார்! நவம்பர் பிற்பகுதியில், சாதனை 17 வாரங்களுக்குப் பிறகு. ஃபிராம்ப்டனின் ஆல்பம் அமெரிக்காவில் 7 மில்லியன் பிரதிகளும், உலகம் முழுவதும் 3 மில்லியன் பிரதிகளும் விற்றுள்ளன; அதே காலகட்டத்தில், ஃப்ராம்டன் கிட்டத்தட்ட 2 மில்லியன் கச்சேரி டிக்கெட்டுகளை விற்றது. ஒரு ஆல்பத்திற்கு 'தோராயமாக' 67¢ என்ற ராயல்டி விகிதத்தில் (A&M ரெக்கார்ட்ஸ் படி), இது ஒரு வருடத்திற்கு அபரிமிதமான வருமானத்தை ஈட்டுகிறது. மக்கள் இதழ் ஃப்ராம்ப்டனின் புகைப்படத்திற்கு தலைப்பிட்டது:”... அவரது ஜிஎன்பி? 50 மில்லியன்.' அந்த உருவம் ஃபிரம்ப்டனை வருத்தப்படுத்தியது: “அந்த உருவம் என்ன என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன் அருகில் எங்கும் இல்லை உண்மையில் என்ன சம்பாதித்தது,' என்று அவர் கூறினார். 'நிறைய பேர் என்னிடம் வந்து, 'உண்மையில் உங்களிடம் இவ்வளவு பணம் இருக்கிறதா?' என்று சொன்னார்கள், மேலும் நான், 'இல்லை, என் மீது இல்லை, இல்லை' என்று சொல்ல வேண்டும். மொத்த தேசிய உற்பத்தி வருமானம் என்பதை அவர்கள் உணரவில்லை. இசை வணிகம், புகைப்படம் எடுத்தல் வணிகம், போஸ்டர்கள், டி-சர்ட் வியாபாரம்... நான் உட்பட மற்றவர்களுக்கு. 'எவ்வளவு இருக்கிறது என்பதை நான் உண்மையில் உணரவில்லை,' என்று ஃப்ராம்டன் கூறினார். 'நான் ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் ஃபோன் செய்து, 'இப்போது எவ்வளவு கிடைத்துள்ளது?' என்று நான் சொல்ல விரும்பவில்லை.' சிந்தனையில், அவர் மேலும் கூறினார்: 'இது ஒரு அதிர்ச்சியூட்டும் தொகை, துரதிருஷ்டவசமாக....' பணத்துடன் பாராட்டுகளும் வந்தன. எல்லோரும் ஒரு வெற்றியாளரை விரும்புகிறார்கள். ஃப்ராம்டன் 'ஆண்டின் ராக் ஆளுமை' என்று பெயரிடப்பட்டார் விளம்பர பலகை கடந்த ஜூன் மற்றும் செப்டம்பரில் ராக் இசை விருதுகள்; அவர் 'ஆண்டின் சிறந்த கலைஞர்' ரோலிங் ஸ்டோன் இசை வாக்கெடுப்பு. கடந்த ஆண்டு இறுதியில் அவர் ராபர்ட் ஸ்டிக்வுட்டின் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சார்ஜென்ட் பெப்பர்ஸ் லோன்லி ஹார்ட்ஸ் கிளப் பேண்ட் . 'இந்த வருடத்தை நான் இப்படித்தான் நினைவில் கொள்வேன்... சரி, அதன் அர்த்தம் துயர் நீக்கம் ஒரு வழியில்,' ஃப்ராம்டன் கூறினார். 'ஆனால் நான் எனது கட்டணத்தை செலுத்த முடிந்தால் மட்டுமே. நான் அதைப் பற்றி சிந்திக்காமல் இருக்க முயற்சிக்கிறேன். நான் பத்திரிகை கிளிப்பிங்ஸைக் குவித்து என் அம்மாவுக்கு அனுப்புகிறேன். நான் எட்டு வயதாக இருந்தபோது அவளுக்கு ஒரு ஸ்கிராப்புக் உள்ளது. அது மூழ்கத் தொடங்குகிறது, என்ன நடக்கிறது. உண்மையில் மூழ்குவதற்கு அதிக நேரம் எடுக்கும், சிறந்தது. 1975 ஆம் ஆண்டு குளிர்காலத்தில் பீட்டர் ஃபிரம்ப்டன் பற்றிய தெளிவான நினைவகம் எனக்கு உள்ளது: ஒரு வெளிர், மெல்லிய, குழந்தை போன்ற சுருக்கம் படிந்த பச்சை நிற சாடின் பேன்ட் அணிந்து, ஹாலிவுட்டில் உள்ள A&M ஸ்டுடியோவில் அவர் வைத்திருந்த 17 நிமிட பாடலின் நேரலைப் பதிவைக் கேட்டுக்கொண்டிருந்தார். 73-ன் முற்பகுதியில் இருந்து ஒவ்வொரு இரவும் நடைமுறையில் விளையாடியது - 'நாங்கள் செய்வது போல் உங்களுக்குத் தோன்றுகிறதா?' ஃப்ராம்டன் சிரித்துக் கொண்டிருந்தான். ஏன் என்று கேட்டேன். 'அவர்களை கவனி!' அவர் மற்ற இசைக்கருவிகளுக்கு சவால் விடும் அளவுக்கு சத்தமாக ரசிக்கும் பார்வையாளர்களின் ஒலிகளை மீண்டும் இயக்கினார். எது சரியாக யோசனையாக இருந்தது. 'அவர்களும் இந்த பதிவின் ஒரு பகுதியாக உள்ளனர்,' என்று அவர் கூறினார். இந்த ஆல்பம் எண்ணற்ற மாற்றங்களைச் சந்தித்தது. முதலில் இது ஒரு ஒற்றை ஆல்பமாக இருந்தது, அனைத்து ராக் & ரோல் மற்றும் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள வின்டர்லேண்ட் ஆடிட்டோரியத்தில் பதிவு செய்யப்பட்டது. பின்னர் ஒலி பொருள் சேர்க்க முடிவு வந்தது. A&M தலைவர் ஜெர்ரி மோஸ் கேட்கும் அமர்வுக்குப் பிறகு, 'இப்போது நாம் மற்ற ஆல்பத்தைக் கேட்கலாமா?' ஃபிராம்ப்டன் உயிருடன் வருகிறார்! இரு சாதனை படைத்தது. நியூயார்க்கின் லாங் ஐலேண்ட் மற்றும் பிளாட்ஸ்பர்க்கில் உள்ள ஃப்ராம்டன் நிகழ்ச்சிகளை டேப் செய்ய கடைசி நிமிடத்தில் ரிமோட் ரெக்கார்டிங் டிரக் அனுப்பப்பட்டது. பத்து நாட்களுக்குப் பிறகு அவர் A&M ஸ்டுடியோவுக்குத் திரும்பி, இறுதிக் கலவைகளைச் சரிபார்த்து, கேட்டுக்கொண்டிருந்தார் ஃபிராம்ப்டன் உயிருடன் வருகிறார்! முதன்முறையாக முழுமையாக. கடைசிப் பக்கம் முடிந்ததும், ஃப்ராம்ப்டன் குறிப்பாக மகிழ்ச்சியாக இல்லை. அவர் சோர்வாக இருந்தார், அதை வெளியே எடுக்க ஆர்வமாக இருந்தார். நான் அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். அவர் சொன்னார் - வேறு என்ன - அவருக்கு அது தேவை என்று. ஓ ஒரு வருடம் கழித்து, வாரம் வரை, நாங்கள் அவருடைய பெவர்லி ஹில்ஸ் பங்களாவில் அமர்ந்து வெற்றியைத் தவிர வேறு எதையாவது பேச முயற்சித்தோம். அது சாத்தியமற்றது. தவிர்க்க முடியாத அழுத்தங்களுக்கு மத்தியில், அவர் நீண்ட காலமாகக் கருதப்பட்டவராகத் தொடர்ந்து இருக்க முடியுமா என்று நான் வியந்தேன்: ஒரு தாழ்ந்த, தொந்தரவு இல்லாத நல்ல பையன். ஃபிராம்ப்டனின் முகம் சோகத்தில் நொறுங்கியது. 'நான் இங்கிலாந்தில் இருந்தபோது, ​​என் பெற்றோருடன் வாழ்ந்தபோது, ​​ஒரு காரில் அல்லது ஏதாவது ஒரு திரைப்பட நட்சத்திரத்தைப் பார்த்தது எனக்கு நினைவிருக்கிறது, 'ஆஹா, நான் உண்மையில் அவரைப் பார்த்தேன்' என்று நான் நினைப்பேன். நீங்கள் 'ஆன்' ஆக வேண்டும். கடமை' எல்லா நேரத்திலும், ரசிகர்களுக்காக. ஆனால் நான் கடினமாகிவிடுவதற்குப் பதிலாக…” அவர் தனது வார்த்தைகளை கவனமாக தேர்ந்தெடுத்தார். 'இது ஒரு மோசமான விஷயம், ஆனால் என்னைச் சுற்றியுள்ளவர்கள் என்னைச் சந்திப்பதில் என்னை வருத்தப்படுத்துவார்கள் என்று அவர்களுக்குத் தெரிந்தவர்களுக்கு கடினமாக்குகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். 'பார்ப்பதே உண்மையான அவமானம் மற்றவை நீங்கள் நீண்ட காலமாக அறிந்தவர்கள், நீங்கள் மாறாதபோது மாறுவார்கள். நான் துறவியாக இருக்க விரும்புகிறேன். இது அனைத்து வேலை வருகிறது. நான் விடுமுறையில் இருக்கும்போது நான் எனது நண்பர்களுடன் மெக்சிகோவுக்குச் செல்வேன் அல்லது வீட்டில் இருப்பேன். நான் தொலைக்காட்சியை விரும்புகிறேன். பத்து நாட்கள் கிதார் பார்க்காமல் வீட்டில் இருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்... ஆனால் அதை மீண்டும் எடுப்பதில் எனக்கு மிகவும் பிடிக்கும். என் வாழ்க்கை எவ்வளவு எளிமையாக இருக்கிறதோ, அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன். மேடையில், பீட்டர் பிராம்ப்டனின் பாலியன்னா-இஷ் ஆளுமை தீவிர பரவசத்திற்கு மாறுகிறது. அவரது கவர்-பாய் சிரிப்பின் ஒளிரும் வெகுஜன விருந்துகளைத் தூண்டுகிறது. சில முக்கியமான வட்டங்களில் ஜான் டென்வரின் ராக் அண்ட் ரோலின் நிழல்கள் காணப்பட்டாலும், இது ஒரு தொற்று மகிழ்ச்சி. 'இது மிகவும் இயற்கையானது,' ஃப்ராம்டன் கூறினார். 'மேடையில் எங்களுக்கு ஒரு நல்ல நேரம் இருக்கிறது, ஏனெனில் அது பார்வையாளர்களுக்கு செல்கிறது என்பதை நாங்கள் உணர்கிறோம். கிழிந்த லெவி ஜோடியை அணிந்துகொண்டு, பார்வையாளர்களுக்கு முதுகில் 72-பார் கிட்டார் தனிப்பாடல் செய்யும் வயது போய்விட்டது. அவர்கள் பொழுதுபோக்க விரும்புகிறார்கள். அதைச் செய்ததற்காக நான் பாராட்டப்படும்போது, ​​​​அது என்னை அதிகம் மகிழ்விக்க வேண்டும். ” அவர் ஓய்வு பெறுவதற்கு நீண்ட காலம் ஆகும், ஃப்ராம்டன் சத்தியம் செய்கிறார் உயிருடன் வருகிறது! பொருள். அவரது உச்சக்கட்ட மராத்தான், 'உனக்கு தோணுதா' என்ற தவிர்க்க முடியாத நிஜம் கூட பல வருடங்கள் அவரை வியப்பில் ஆழ்த்தவில்லை. 'நான் 'லைலா' என்று எழுதினால், நான் இன்னும் அதைச் செய்வேன்,' என்று அவர் கூறினார். 'எரிக் கிளாப்டன் அதைச் செய்வதை நிறுத்தியிருக்கலாம், ஆனால் நான் ஒருபோதும் செய்யமாட்டேன். உண்மையான இசை இனி மாறாது, ஆனால் பார்வையாளர்களின் எதிர்வினை மாறுகிறது. இது நம்பமுடியாதது. ஒவ்வொரு இரவும் என்னிடமிருந்து புதிய விஷயங்களைக் கொண்டுவருகிறது. அதனால்தான் நான் சலிப்படைய மாட்டேன். ” உண்மையில், ஃபிராம்ப்டனுக்கு கூட நேரம் கிடைக்குமா என்பது சந்தேகமே கருதுகின்றனர் சலிப்பின் கருத்து. இரண்டு ஆண்டுகளில் அவரது முதல் ஸ்டுடியோ ஆல்பத்தை எழுதி பதிவு செய்வது அவரது அட்டவணையில் முதன்மையானது. அதன் பிறகு படப்பிடிப்பு நடக்கிறது சார்ஜென்ட் மிளகு ஆரம்ப கோடையில். இன்னும் முடிவு செய்யப்படாத ஆறு பீட்டில்ஸ் பாடல்களின் ஃபிராம்ப்டன் விளக்கங்களைக் கொண்ட ஒரு ஒலிப்பதிவு ஆல்பம் திரைப்படத்தின் கிறிஸ்துமஸ் 1977 வெளியீட்டுடன் ஒத்துப்போகும். ஃபிராம்ப்டன் மிகவும் கடினமாக முயற்சி செய்கிறார். 'பென்னி [காதலி பென்னி மெக்கால்] மற்றும் எனக்கும் இந்த பழமொழி உள்ளது: 'இன்றிரவு கிக் முடியும் வரை நாளை இல்லை,' என்று அவர் கூறினார். 'என் மனதில் ஏதாவது இருந்தால், இப்போது அது ஆல்பம், அது முடியும் வரை, எதிர்காலம் இல்லை.' ஆல்பத்திற்கு தலைப்பு வைக்கப்படும் நான் உன்னில் இருக்கிறேன் . பிராம்ப்டன் முதலில் டெட்ராய்டில் உள்ள அதே மோட்டவுன் ஸ்டுடியோவில் அவரது ஹீரோ ஸ்டீவி வொண்டர் தனது அனைத்து ஆரம்ப வெற்றிகளையும் பதிவு செய்ய எண்ணினார். “நான் மோடவுனைக் கேட்கும் முன், அது ஏதோ ஒரு பத்திரிகையில் வெளிவந்தது. அவர்கள் போன் செய்து மோடவுனிடம் இது உண்மையா என்று கேட்டார்கள், மோடவுன், ‘இல்லை, இல்லை, நாங்கள் யாரையும் அனுமதிக்கவே இல்லை.’ என்று என்னை நானே கேட்டுக்கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் அதைப் பற்றி மோசமாக உணர்ந்தேன். 'இப்போது நான் அதை எங்கு செய்வேன் என்று எனக்குத் தெரியவில்லை, அநேகமாக எனது புதிய வீட்டில் [அப்ஸ்டேட் நியூயார்க்கில்]. நாங்கள் எங்கிருந்தாலும், அங்குதான் ஆல்பம் செய்வோம். இது பலனளிக்கும் என்று நம்புகிறேன், அதனால் ஸ்டுடியோவில் அல்லாமல் ஒரு வீட்டில் அதைச் செய்ய முடியும். நான் உன்னில் இருக்கிறேன் , Frampton படி, ஈஸ்டர் வெளியிடப்படும். “ஒவ்வொரு ஆல்பமும் மொத்த பதிவு நேரத்தில் ஆறு வாரங்கள் எடுத்துள்ளது. கவர் மற்றும் எல்லாவற்றையும் தயார் செய்ய நீங்கள் இரண்டு மாதங்கள் அனுமதிக்க வேண்டும். தொண்டையை இறுக்கிக் கொண்டான். 'இது நன்றாக இருக்க வேண்டும்.' பிறகு இருக்கிறது சார்ஜென்ட் மிளகு . 'நான் எப்போதுமே ஒரு திரைப்படம் செய்ய விரும்பினேன், மேலும் அதில் ஈடுபடுவது மிகவும் பெரிய விஷயம், குறிப்பாக அதன் பின்னால் இருக்கும் அனைவரையும் சந்தித்த பிறகு. இது கிறிஸ் பியர்டின் முதல் படம்' - இயக்குனராக இருக்கும் பியர்டே, தொலைக்காட்சியில் இருந்து வந்தவர்: தி காங் ஷோ மற்றும் சோனி மற்றும் செர் ஆகியவை அவரது வரவுகளில் அடங்கும் - 'மற்றும் ஹென்றி எட்வர்ட்ஸின் முதல் ஸ்கிரிப்ட்' - எட்வர்ட்ஸ் நியூயார்க்கை தளமாகக் கொண்ட ராக் எழுத்தாளர். 'முதலில் ராபர்ட் ஸ்டிக்வுட் தவிர, மிகவும் அனுபவம் வாய்ந்தவர்.' (பிற திட்டங்களுக்கிடையில், ஸ்டிக்வுட் படத்தின் பின்னால் இருந்தார் இயேசு கிறிஸ்து சூப்பர் ஸ்டார்! ) படம் ஒரு முயற்சி அனுபவமாக இருக்கும், ஃபிராம்ப்டன் ஒப்புக்கொண்டார், ஆனால் இது நீண்டகால பீட்டில்ஸ் வெறியருக்கு 'காதலின் உழைப்பாக' இருக்கும். இந்த ஆல்பத்துடன் தனது முதல் சந்திப்பை ஃப்ராம்டன் தெளிவாக நினைவு கூர்ந்தார் சார்ஜென்ட் மிளகு : “பெட்டிகோட் லேனில், ரெக்கார்டுகளை வெளிவருவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு விற்கும் இந்தக் கடையில் வாங்கியது எனக்கு நினைவிருக்கிறது. அவர்கள் கப்பலுக்குச் செல்லும் வழியில் ஒரு சுமையைத் தட்டிவிடுவார்கள்... எனக்கு கிடைத்தது சார்ஜென்ட் மிளகு அது வெளிவருவதற்கு பத்து நாட்களுக்கு முன். என் வீட்டில் இன்னும் அசல் மோனோ காப்பி உள்ளது. ஃபிராம்ப்டன் படத்தைப் பற்றி விரிவாகக் கூறினார்: “இதெல்லாம் இசையாக இருக்கும்; சில உரையாடல்கள், கதைசொல்லல் இருக்கும், ஆனால் நான் எதுவும் சொல்லவில்லை. பாடல்கள் ஒலிக்கும்போது, ​​​​அது டாமியைப் போல இருக்கும், இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது, ஆனால் இது இன்னும் நிறைய நகைச்சுவையாக இருக்கும். ஹென்றி எட்வர்ட்ஸின் கூற்றுப்படி, ஃபிராம்ப்டன் 'படத்தில் ஒரு உண்மையான ஹீரோவாகவும், ஒரு தடகள வீரராகவும் நடிப்பார் - அவர் பாடுவார், நடிப்பார், நடனமாடுவார் மற்றும் மீன் மிஸ்டர். கடுக்கின் பிடியில் இருந்து தனது பெண்ணைக் காப்பாற்ற தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வார். அவர் ஒரு சிறிய நகர அமெரிக்க இசைக்குழுவில் இளம் மற்றும் அழகான கிட்டார் வாசிப்பாளரான பில்லி ஷியர்ஸ் ஆக நடிக்கிறார். ஏன் ஒரு அமெரிக்க இசைக்குழு? நாங்கள் ஒரு திரைப்படத்தை உருவாக்க விரும்புகிறோம், அது பீட்டில்ஸ் திரைப்படம் அல்ல. இது நிகழ்காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது, அறுபதுகளில் அல்ல.' பெரும்பாலான நடிப்பு இன்னும் காற்றில் உள்ளது. தேனீ கீஸ், 'மூன்று புத்திசாலிகள்' என்று கதையை விவரிக்கும். இரண்டு பெண் கதாபாத்திரங்கள் உள்ளன - ஷியர்ஸின் காதலி, ஸ்ட்ராபெரி ஃபீல்ட்ஸ் மற்றும் லூசி. ஒலிவியா நியூட்டன்-ஜான் மற்றும் டோனா சம்மர் ஆகியோர் சாத்தியக்கூறுகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். பாப் நட்சத்திரங்களுக்கு எதிராக விளையாடுவது அவரைப் பின்தொடர்வதை நீர்த்துப்போகச் செய்யும் என்று ஃப்ராம்டன் நம்பவில்லை. 'இது எனது பின்தொடர்வை விரிவுபடுத்தும் என்று நான் நினைக்க வேண்டும்,' என்று அவர் கூறினார். 'தவிர, லைவ் ஆல்பத்தின் அதே இசைக்குழுவுடன் விளையாடுவேன்...' பொருள் பணத்திற்கு மாறியபோது, ​​​​ஃபிராம்டன் தனது புதிய அதிர்ஷ்டத்தை எவ்வாறு பாதுகாக்கிறார், ஒரு விமானத்திலிருந்து வெளியே தள்ளப்படவிருக்கும் ஒருவரின் இறுக்கமான வெளிப்பாட்டால் முந்திய ஒரு எளிதான மற்றும் உற்சாகமான முகத்தை நான் பார்த்தேன். “ஓ . . . நான் இன்னும் ஆலோசனை எடுத்துக்கொள்கிறேன், ”என்று அவர் தயக்கத்துடன் கூறினார். 'எனக்கு தெரியாது . . . உங்களிடம் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக அது ஒரு பிரச்சனை. நான் அதிக வரி செலுத்துகிறேன். மற்றும் அதை வரிக்காக ஒதுக்கி வைக்கிறது. இரண்டு வீடு வாங்கினேன். அதுமட்டுமல்லாமல், பணம் கவனித்துக் கொள்ளப்படுகிறது, ஆனால் சரியான நபர்கள் அதைக் கவனித்துக்கொள்வதற்கு எனக்கு போதுமான நேரம் கிடைத்ததால் மட்டுமே. 'பண விஷயம் மிகவும் தொட்டது. நான் அதைப் பற்றி பேச விரும்பவில்லை, ஏனென்றால் நான் அதைப் பற்றி சிந்திக்கவில்லை. நான் சொன்னது போல், நான் செய்ய விரும்புவது எனது பில்களை செலுத்த முடியும். செலவில் போகாததை நான் ஒதுக்கி வைக்கப் போகிறேன், என்னைச் சுற்றியுள்ள அனைவருக்கும் நல்ல நேரம் கிடைக்கும். அதுதான் எனக்கு வேண்டும்.' எஞ்சியிருப்பது அவ்வளவுதான். 26 வயதிற்குள் உங்களின் உயர்ந்த இலக்குகளை அடைவது அவ்வளவு எளிதானது அல்ல. சிறிது காலத்திற்கு முன்பு, CBS-TVயில் ராக் மியூசிக் விருதை 'ஆண்டின் ராக் பர்சனாலிட்டி' என்ற பெயரில் ஃபிராம்ப்டன் வென்றபோது சர்க்யூட் ஓவர்லோடை ஏறக்குறைய தாக்கியது. விருதை வழங்கியவர் ஸ்டீவி வொண்டர். 'எனது முழங்கால்கள் மேடை வரை குலுக்கியது,' ஃப்ராம்ப்டன் விவரித்தார். “அந்த நடை எவ்வளவு தூரம் தெரியுமா? நான் 'பேபி, ஐ லவ் யுவர் வே' இசைக்காமல் கிட்டாரை கீழே போட்டுக் கொண்டிருந்தபோது, ​​உஷார் ஒருவர், 'சரி, நீங்கள் இனி தேவையில்லை, சார், தயவுசெய்து நீங்கள் டிரஸ்ஸிங் ரூமுக்குத் திரும்பிச் செல்ல முடியுமா?' என்று சொன்னேன். 'நான் முன்னோக்கி தோன்றுவதை வெறுக்கிறேன், ஆனால் நான் இந்த பிரிவில் பரிந்துரைக்கப்பட்டேன்.' எனவே நான் இசைக்குழுவிடம், 'மன்னிக்கவும், நண்பர்களே, ஆனால் நாங்கள் அதைப் பெற்றதாக நான் நினைக்கவில்லை. யாராவது உங்களை டிரஸ்ஸிங் ரூமுக்குத் திரும்பிப் போகச் சொன்னால்...’ 'நான் பிறகு ஸ்டீவி வொண்டருக்குச் சென்று, 'உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. நான் உங்கள் பேச்சைக் கேட்க ஆரம்பித்து நீண்ட நாட்களாகிவிட்டது. ஒரு நாள் கூடி விளையாடினால் நன்றாக இருக்கும்' என்று சொல்லிவிட்டு, 'ஆமாம், அருமை' என்றான். நான் நடந்து செல்லும் போது, ​​'நீயே ஒரு மோசமான பையை விளையாடாதே' என்றான். நான் சொன்னேன். சரி, நான் யாரிடம் கற்றுக்கொண்டேன் என்பது உங்களுக்குத் தெரியும், இல்லையா?’ அவர் சென்றார், ‘ஆமாம், எனக்குத் தெரியும்.’ அது மிகவும் அருமையாக இருந்தது. பீட்டர் ஃபிராம்ப்டன் போன்ற ஒருவரை எல்லோருக்கும் தெரியும் - பணிவான மற்றும் கவனமாக, பாதிக்கப்படக்கூடிய, ஒருவரின் பாதுகாப்பு உள்ளுணர்வை தொடர்ந்து நேரடியாக ஈர்க்கும். ஆனால் ஃப்ராம்ப்டனுக்கு உதவி தேவை இல்லை. 'எனக்கு இவ்வளவு அனுபவம் கிடைத்ததற்கு நான் மிகவும் அதிர்ஷ்டசாலி,' என்று அவர் கூறினார். 'இதற்கு முந்தைய பத்து ஆண்டுகள் மற்றும் அதற்கு முந்தைய ஐந்து அரைத் தொழில் ஆண்டுகள். இசைக்குழுக்களிலும் மக்களைச் சுற்றியும் இருப்பதன் அனுபவம் மற்றும் எதைத் தொங்கவிடக் கூடாது என்பதைக் கற்றுக்கொள்வது - அது உண்மையில் விஷயம்.' அவரது அவதானிப்பில் முடிவான ஒரு குறிப்பு இருந்தது. பின்னர் அவர் நீட்டிக்க படுக்கையில் இருந்து நழுவினார்…மேலும் ஏதோ தெரிந்த பதிவு. அவர் அதே பழைய பச்சை நிற சாடின் பேண்ட்டை அணிந்திருந்தார். மீண்டும் சுருக்கம்.
இரு நிலவுகள் ஒன்றாகி சிலிர்க்கின்றது சில நினைவுகள் நெஞ்சோடு துளிர்கின்றது சித்தம் இழந்து, சுயம் மறந்து வரம் ஒன்று கேட்க மனம் துடிக... microsoft தரும் இலவச ஆன்டிவைரஸ். கணனிகளுக்கு இருக்கும் முக்கிய பிரச்சனை வைரஸ் தாக்கம் .நாங்களும் எப்படி தான் கணணியை பாதுகாப்பாக வைத்திருந்தாலும் சில சமயங்களில் எமக்கு தெரி... இவள்! யார் இவள்..? இலையுதிர் காலத்தால் சபிக்கப்பட்டவளாய் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறாளே..! புயல் கொண்ட பின் ஒரு நகரமாய் சாயல் அழிந்த பி... திருமண நாள் அன்று ..! ஆண் பெண் என்ற இரு சாதி வர்க்கம் மறந்து ஒன்றித்து வாழ்க்கை பயணம் தொடங்கும் தண்டவாளம் கல்யாணம்! புதிய உயிர்களை பூமியில் எழுப்பிட போடப்படும்...
இலங்கை கிரிக்கெட் அணியின் சகல துறை ஆட்டக்காரர் ஷாமிக்க கருணாரத்னவிற்கு ஒரு வருட போட்டி தடையை விதிக்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது. அத்துடன், ஷாமிக்க கருணாரத்னவிற்கு 5000 அமெரி;க்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் போது, ஷாமிக்க கருணாரத்னவிற்கு எதிராக ஒழுக்காற்று குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, இந்த தீர்மானத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் எடுத்துள்ளது, அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும், ஷாமிக்க கருணாரத்னவிற்கு ஒத்தி வைக்கப்பட்ட போட்டி தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இருபதுக்கு இருபது தொடரில், மோதல் ஒன்றில் ஈடுபட்டமை தொடர்பிலான குற்றச்சாட்டை, ஷாமிக்க கருணாரத்ன ஏற்றுக்கொண்டுள்ள நிலையிலேயே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. (TrueCeylon)
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை, காலி, மாத்தறை, அனுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 1 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் மொணராகலை மாவட்டங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். களுத்துறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடும். நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும். இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையான) பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் Related posts: ஜெயலலிதாவின் வெற்றி இலங்கைக்கு ஆபத்து! - தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் அமரர் சிவப்பிரகாசத்தின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி அஞ்சலி! பெண்களுக்கெதிரான வன்முறைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு - 1938 ஐ அழைப்பவர் எண்ணிக்கையும் நாளாந்தம் அதிகரி... Tweet தனியார் வைத்திய கல்லூரிகள் நாட்டுக்கு தேவை! உயர்கல்வி அமைச்சர் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியால் அரியாலை ஜெயபாரதி சனசமூக நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கிவைப்பு! 9 ஆவது நாடாளுமன்றுக்கு செல்ல மக்களால் நிராகரிக்கப்பட்ட 23 முக்கிய பிரபலங்கள் – குழப்பத்தில் ரணில் வி...
KineMaster என்று சொல்லக்கூடிய இந்த செயலியை KineMaster Corporation என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த செயலி 2013 டிசம்பர் 26 ஆம் நாள் கூகுள் ப்ளே ஸ்டோரில் KineMaster Corporation நிறுவனம் வெளியிட்டது. இதுவரை இந்த செயலியை 10,00,00,000 க்கும் மேற்பட்ட நபர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். தற்போது இந்த செயலியை நீங்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் 75.78 எம்பிக்கு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலிக்கு ப்ளே ஸ்டோரில் இதுவரை 5 க்கு 4.4 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த செயலியின் பயன்கள் கீழே பார்க்கலாம். COMPARED TO PC SOFTWARES கணினியில் உங்களது வீடியோக்களை எடிட் செய்வதற்கு Adobe premiere Pro மிகப்பெரிய மென்பொருளாக உள்ளது. அதைப்போன்று மொபைலில் வீடியோக்களை எடிட் செய்வதற்கு முதலிடத்தில் உள்ள செயலி Kinemaster. இதை யாராலும் மறுக்க முடியாது. பிரீமியர் புரோவிலுள்ள அனைத்து அம்சங்களும் இந்த Kinemaster உள்ளது. எனவே மொபைலில் வீடியோக்களை எடிட் செய்வதற்கு இந்த செயலி மிக சிறந்த ஒன்றாக உள்ளது. HOW TO USE THIS BLACK SCREEN EFFECT இந்த வீடியோ விளைவைக் கொண்டு உங்கள் வீடியோ அல்லது புகைப்படங்களை மேலும் அழகாக வடிவமைக்க இந்த விளைவு உதவுகிறது. இதை எப்படி பயன்படுத்துவது என்று கூறுகிறேன். உங்களது புகைப்படங்கள் அல்லது வீடியோவில் மேல் இந்த விளைவை வைத்துவிட்டு வீடியோவை தேர்வு செய்த பின்னர் பிலண்டிங் என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும். அதில் ஸ்கிரீன் என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும் பின்னர் உங்களது வீடியோ அந்த விளைவுடன் சேர்ந்து விடும். HOW TO USE THIS GREEN SCREEN EFFECT இந்த விளைவை கொண்டு உங்களது புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை அழகாக மாற்ற முடியும். இந்த விளைவில் பல வகையான வடிவங்கள் உள்ளது. இதை எப்படி பயன்படுத்துவது என்று கூறுகிறேன். உங்களது புகைப்படத்தின் மேல் விளைவு வீடியோவை வைத்துவிட்டு குரோமோ கீ என்ற ஒரு ஆப்சன் இருக்கும் அதை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் விளைவில் உள்ள அனைத்தும் உங்களது புகைப்படத்தின் மேல் சேர்ந்துவிடும். HOW TO USE THIS INTRO TEMPLATE இந்த டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உங்களது இன்ட்ரோ வீடியோ உருவாக்க முடியும். இதில் உங்களது லோகோ மற்றும் டெக்ஸ்ட் மட்டும் சேர்த்து ஒரு இன்ட்ரோ வீடியோ உருவாக்கிக்கொள்ள முடியும். இதை மொபைல் மூலம் உருவாக்க முடியும் என்பது தனிச்சிறப்பு எனலாம். இந்த டெம்ப்ளேட்டை கையாள்வது மிகவும் எளிமையான ஒன்று. எனவே அனைவரும் இதை பயன்படுத்தி உங்களது யூட்யூப் சேனலுக்கான இன்ட்ரோ வீடியோ உருவாக்கிக்கொள்ள முடியும். KINEMASTER PREMIUM FEATURES MULTIPLE LAYERS KineMaster அப்ளிகேஷனில் உங்களது விருப்பமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை ஒன்றன் பின் ஒன்றாக add செய்து உங்களால் எடிட் செய்ய முடியும். பல செயலிகள் இருந்தாலும் இந்த சிறப்பம்சம் Kinemaster அப்ளிகேஷனில் மட்டுமே உள்ளது. இதனால் உங்களது விருப்பமான வீடியோக்களை சரியாக எடிட் செய்துகொள்ள முடியும். BLENDING MODE கூகுள் ப்ளே ஸ்டோரில் வீடியோ எடிட் செய்வதற்காக பல செயலிகள் உள்ளது. ஆனால் அவற்றை எதிலுமே இந்த ப்லண்டிங் ஆப்ஷன் கிடையாது. இந்த செயலில் மட்டுமே உள்ளது. இந்த ப்லண்டிங் ஆப்ஷனை பயன்படுத்தி உங்களது விருப்பமான வீடியோ மற்றும் புகைப்படங்களை ஒன்றாக இணைக்க முடியும். CHROMA KEY வீடியோவின் பேக்ரவுண்ட் ஐ அளிக்க இந்த chroma key ஆப்ஷன் பயன்படுகிறது. வீடியோவின் பேக்ரவுண்ட் ஒரே கலராக இருந்தாள் சுலபமாக அளிக்கமுடியும். உதாரணமாக வீடியோவின் பேக்ரவுண்ட் பச்சை நிறத்தில் இருந்தால் ரிமூவ் செய்வதற்கு எளிதாக இருக்கும். வீடியோவில் கலர் எது என்று தெரிந்து கொண்டு ரிமூவ் செய்யும்போது கீ கலர் அதே கலராக செலக்ட் செய்ய வேண்டும். அப்போதுதான் வீடியோவின் பின்புற பேக்ரவுண்ட் ரிமூவ் செய்ய முடியும். VOICE RECORDING வீடியோவை எடிட் செய்யும்போது தேவையான இடத்தில் உங்களது குரலை பதிவு செய்ய இந்த செயலியில் அதற்கான அம்சமும் உள்ளது. குரலைப் பதிவு செய்வதற்கு கூகுள் ப்ளே ஸ்டோரில் பல செயலிகள் உள்ளது இருப்பினும் உங்களது வீடியோக்களை நீங்கள் எடிட் செய்யும்போதே வாய்ஸ் ரெக்கார்ட் செய்வதற்கு இந்த செயலியில் அம்சம் உள்ளது. HANDWRITING இந்த அம்சம் மூலம் உங்களது வீடியோக்களில் தேவையான இடத்தில் சில குறியீடுகளை அமைக்க முடியும். இதனால் உங்களது வீடியோக்களை பார்க்கும் பார்வையாளர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது குறியீடு மூலம் காட்டும்போது அவர்களுக்கு எளிதாக புரியும். VOICE CHANGER உங்களது உண்மையான குரலை மாற்றவும் அல்லது வீடியோவில் உள்ள பிற குரலை வேறு குரலாக மாற்ற இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. உதாரணமாக உங்களது குரலை ரோபோட் பேசினால் எப்படி இருக்கும் அதுபோன்று மாற்றவும் இந்த செயலியில் அம்சங்கள் உள்ளது. EQ MODES ஆடியோவில் பல விளைவுகளை ஏற்படுத்த இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. இதன் மூலம் உங்களது ஆடியோ கேட்பதற்கு தெளிவாகவும் அந்த ஆடியோவை கேட்டுக்கொண்டே இருக்க செய்ய பல ஆப்ஷன்ஸ் இதற்குள் உள்ளது. உதாரணமாக கூறினால் ராக் கிளாசிக் போக் இதுபோன்ற ஆடியோ பில்டர்ஸ் இதில் உள்ளது. இதை பயன்படுத்தும் போது உங்களது ஆடியோ கேட்க இனிமையாக இருக்கும். PREMIUM COLOUR FILTER வீடியோ மற்றும் புகைப்படங்களில் கலரை பிடித்த மாறி மாற்றிக்கொள்ள இந்த கலர் பில்டர் ஆப்ஷன் பயன்படுகிறது. இதன் மூலம் உங்களது வீடியோ மற்றும் புகைப்படத்தின் கலரை மாற்றுவதன் மூலம் அதன் தோற்றம் அழகாக இருக்கும். இதை பயன்படுத்திப் பார்த்தால் மட்டுமே அதன் அனுபவம் உங்களுக்கு தெரியும். EXPORT QUALITY இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் எடிட் செய்யும் வீடியோக்களை 4K 60fps வரை அவுட்புட் எடுத்துக்கொள்ள முடியும். இதன் மூலம் உங்களது வீடியோக்களை பார்க்க தெளிவாக இருக்கும். பார்ப்பவர்களுக்கு வீடியோவில் உள்ள தகவல்களை எளிதாக புரிந்து கொள்ள முடியும். இதில் உங்களுக்குப் பிடித்த பார்மட்டில் வீடியோக்களை மாற்றிக் கொள்ளவும் முடியும். உதாரணமாக உங்களுக்கு 720p 30fps வரை போதும் என்றால் அந்த அளவுக்கு உங்களது வீடியோக்களை அவுட்புட் எடுத்துக்கொள்ளலாம். SPEED CONTROL உங்களது வீடியோக்களை வேகமாக மற்றும் மெதுவாக இயக்க இந்த ஸ்பீட் கண்ட்ரோல் ஆப்சன் பயன்படுகிறது. இதன் மூலம் உங்களது வீடியோவை தேவையான இடத்தில் வேகமாக இயக்கவும் அல்லது மெதுவாக இயக்கவும் முடியும். இதை பயன்படுத்தி எடிட் செய்யும்போது பார்வையாளர்களை கவர்ந்து இழுக்க முடியும். ஏனென்றால் வேகமாக நடக்கும் நிகழ்ச்சியை மெதுவாக பார்க்கும் அனுபவம் புதிதாக இருக்கும். இதை நீங்கள் பயன்படுத்தி பார்த்தால் மட்டுமே இந்த அம்சத்தின் சிறப்பை நீங்கள் உணர முடியும். VIDEO REVERSE MODE ஒரு நிகழ்வை தொடக்கத்திலிருந்து பார்க்காமல் கடைசியிலிருந்து முதல் பகுதிக்கு மாற்றி பார்க்க இந்த ரிவர்ஸ் ஆப்சன் பயன்படுகிறது. உதாரணமாக உங்களுக்குப் புரியும் படி கூறினாள் ஒரு மிதிவண்டி சென்றுகொண்டிருக்கிறது அதை அப்படியே பின்புறமாக வரச்செய்யுவும் மற்றும் பழையபடியே அதை செயல்படுத்தவும் பயன்படும் ஆப்ஷன் வீடியோ ரிவர்ஸ் மூடு ஆகும். THREE TYPE OF VIDEO RATIO உங்களது வீடியோக்களை உங்களுக்கு பிடித்த பார்மெட்டில் எடிட் செய்ய இந்த செயலியில் அம்சங்கள் உள்ளது. உதாரணமாக கூறினால் வாட்ஸ்அப் ஃபுல் ஸ்க்ரீன் வீடியோ சைஸில் எடிட் செய்யவும் யூடியூப் வீடியோ சைஸில் எடிட் செய்யவும் இன்ஸ்டாகிராம் போஸ்ட் சைஸில் வீடியோ எடிட் செய்யவும் இதில் ஆப்ஷன்ஸ் உள்ளது. இதை பயன்படுத்தி உங்களுக்கு பிடித்த வடிவத்தில் உங்களது வீடியோக்களை எடிட் செய்ய முடியும். CLIP GRAPHICS இந்த ஆப்ஷனை பயன்படுத்தி உங்களது வீடியோக்களில் நடுவில் புதிய விளைவுகளை ஏற்படுத்த முடியும். உதாரணமாக கூறினால் ஒரு வீடியோவை நடுவில் இரண்டாக கட் செய்திருந்தால் அந்த இடத்தில் ஒரு புதிய எபெக்ட்ஸ் கொடுக்க முடியும். இதன் மூலம் ஒரு வீடியோவில் இருந்து மற்றொரு வீடியோவிற்கு மாறும்பொழுது நீங்கள் ஏற்படுத்திய எபெக்ட்ஸ் நடுவில் இருக்கும். அப்பொழுது அந்த வீடியோவை பார்க்க அழகாக இருக்கும். ஏனெனில் ஒரு வீடியோவில் இருந்து மற்றொரு வீடியோ மாறும்போது நீங்கள் ஏற்படுத்திய விளைவு அந்த வீடியோவை அழகாக்கும். ROTATE AND MIRRORING OPTION வீடியோ மற்றும் புகைப்படங்களை உங்களுக்கு ஏற்றார்போல் ஏற்ற திசைக்கு மாற்றிக்கொள்ள இந்த ரோட்டைட் அண்ட் மிரர் ஆப்சன் பயன்படுகிறது. உதாரணமாக கூறினால் உங்களது வீடியோ கிழக்கு திசையை பார்த்து இருந்தால் அதை மேற்கு மற்றும் உங்களுக்கு பிடித்த திசையில் மாற்றிக்கொள்ள இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. இதை உங்கள் பிச்சர் மற்றும் வீடியோவில் பயன்படுத்திக் கொள்ளலாம். COLOUR ADJUSTMENT உங்களது வீடியோ மற்றும் புகைப்படங்களில் கலர் வெளிச்சம் கம்மியாக இருந்தால் உங்களது வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்க்கும்போது ஒரு தெளிவு இருக்காது. அப்படி இருக்கும் உங்களது வீடியோ மற்றும் புகைப்படங்களை இந்த கலர் அட்ஜஸ்ட்மெண்ட் ஆப்ஷனை பயன்படுத்தி தேவையான இடத்தில் காண்ட்ராஸ்ட் லெவல் பிரைட்னஸ் அட்ஜஸ்ட் செய்யும் போது பார்க்க ஒரு அளவுக்கு தெளிவாகவும் அழகாகவும் மாற்ற இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. எனவே தெளிவில்லாத மற்றும் மங்கலாக இருக்கும் பிச்சர் மற்றும் வீடியோக்களில் இந்த ஆப்ஷனை பயன்படுத்தினால் பார்க்க ஓரளவு நன்றாக இருக்கும். VOLUME ENVELOPE இந்த ஆப்ஷன் Kinemaster அப்ளிகேஷன் அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல உதவியது எனலாம். ஏனெனில் இந்த ஆப்சன் கணினியில் எடிட் செய்வதற்கு மட்டுமே உள்ளது. ஆண்ட்ராய்டு செயலியில் அரிதாக காணலாம். அது இந்த இந்த செயலிலும் உள்ளது. இதன்மூலம் உங்களது வீடியோ மற்றும் ஆடியோவில் தேவையான இடத்தில் வால்யூம் அதிகப்படுத்தவும் தேவையற்ற இடத்தில் வால்யூம் முழுமையாக குறைக்கவும் முடியும். VIGNETTE MODE இதைப் பயன்படுத்தி வீடியோ மற்றும் பிச்சர் இன் கரையில் கருநீல ஷேடோ ஏற்படுத்தமுடியும். இதனால் நடுவிலுள்ள அனைத்தும் தெளிவாக பார்க்க முடியும். இதற்காக இந்த ஆப்ஷன் பயன்படுத்துகிறோம். இது வீடியோவை தனித்துவமாக காட்ட உதவுகிறது. நீங்கள் எடிட் செய்ய விரும்பும் போது இதை ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள் இதன் சிறப்பம்சம் உங்களுக்கு புரியும். EXTRACT AUDIO இதுவும் ஒரு சிறந்த அம்சம் எனக் கூறலாம் இந்த செயலியில் ஏனெனில் வீடியோ எடிட் செய்யும் போது அந்த வீடியோவுக்காண பாடல் உங்களிடம் இல்லை என்றாலும் அந்த ஆடியோ விற்கான வீடியோ உங்களிடம் இருந்தால் அந்த வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரித்தெடுக்க முடியும் எடுத்துவிட்டு நமக்குத் தேவையில்லாத வீடியோவை டெலிட் செய்து கொள்ளலாம். நீங்கள் பாடல் டவுன்லோட் செய்யாமலே உங்களுக்கு தேவையான பாடலை தனியாக எடுத்துக்கொள்ள இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. TRIM AND SPLIT OPTION வீடியோ ஆடியோ மற்றும் புகைப்படங்களை தேவையில்லாத இடத்தை வெட்ட இந்த ட்ரிப் அண்ட் ஸ்பிளிட் ஆப்ஷன் பயன்படுகிறது. இந்த ஆப்ஷன்ஸ் சிறப்பாக செயல்படுகிறது. ஏனெனில் கூகுள் ப்ளே ஸ்டோரில் வீடியோ எடிட் செய்வதற்கான செயலிகள் பல உள்ளது. அவற்றை ஒப்பிடும்போது இந்த செயலியில் நாம் விரும்பும் இடத்தை சரியான இடத்தில் வெட்டி மற்றொரு இடத்தை சேர்க்கவும் முடியும். PAN AND ZOOM இந்த ஆப்ஷன் மூலம் உங்களது வீடியோக்களை பார்வையாளர்களுக்கு மிக அருகாமையில் காட்ட இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. உதாரணமாக கூறினால் மிக பின்புறத்தில் உள்ள ஒரு சப்ஜெக்ட்டை மிக அருகாமையில் அதாவது திரைக்கு முன்பாக மிக அருகே கொண்டுவர இந்த ஆப்ஷன் பயன்படுகிறது. PREMIUM TEXT இந்தச் செயலியில் அளவுக்கு அதிகமான அகராதிகள் உள்ளது. உங்களுக்கு பிடித்த மொழியை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும். Kinemaster asset Store ல் உங்களுக்கு தமிழ்மொழி தேவை என்றால் தமிழ் மொழியை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த செயலியில் டிபால்ட் ஆக ஆங்கில அகராதிகள் உள்ளது. இதை நீங்கள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். OVERLAY AND STICKERS வீடியோ மற்றும் புகைப்படங்களை மேலும் அழகாக்க இந்த ஓவர்லே அண்ட் ஸ்டிக்கர்ஸ் ஆப்ஷன்ஸ் பயன்படுகிறது. உதாரணமாக கூறினால் உங்களது வீடியோவில் தீப்பொறி பறப்பதுபோல் விளைவை ஏற்படுத்தலாம் மற்றும் உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதுபோல் விளைவும் ஏற்படுத்த முடியும். இதுவே ஓவர்லே அண்ட் ஸ்டிகர்ஸ் ஆப்ஷன் ஆகும். SPECIAL EFFECTS இதிலும் ஓவர்லே அண்ட் ஸ்டிக்கர்ஸ் ஆப்ஷனை போன்று உங்களுக்குப் பிடித்த விளைவுகளை உங்களது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களில் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த ஆப்ஷனை வீடியோ மற்றும் புகைப்படங்களில் குறிப்பிட்ட இடத்தில் சரியாக பயன்படுத்த முடியும் தேவையில்லாத இடத்தில் அதை நிறுத்திக் கொள்ளவும் முடியும். இதன் மூலம் உங்களது வீடியோ மற்றவர்கள் வீடியோவிலிருந்து தனித்துவமாக தெரியும். ANIMATION AND TRANSITION EFFECTS எழுத்துக்களில் விளைவுகளை ஏற்படுத்த அனிமேஷன் எபெக்ட்ஸ் பயன்படுகிறது. Transition புகைப்படங்கள் மற்றும் வீடியோவில் விளைவுகளை ஏற்படுத்த உதவுகிறது. இதில் தொடக்கத்தில் ஒரு அனிமேஷன் ஆப்ஷனை பயன்படுத்த முடியும் முடிவில் ஒரு ஆப்ஷனை பயன்படுத்த முடியும். தெளிவாகக் கூறினால் ஒரு எழுத்துக்களின் தொடக்கத்தில் ஒரு விளைவையும் அந்த எழுத்து மறையும் பொழுது ஒரு விளைவையும் கொடுக்க முடியும். KINEMASTER TIPS: WHY DO I HAVE IMAGE INSERT OF MEDIA ? இந்த செயலியில் லேயர் ஆப்ஷனில் மீடியாவிற்கு பதிலாக இமேஜ் என்று இருந்தால் வீடியோக்களை பயன்படுத்த முடியாது. அதை எப்படி மீடியா என மாற்றுவது என்று கூறுகிறேன். Kinemaster அப்ளிகேஷனை ஓபன் செய்ததும் ரேஷியோ செலக்ட் செய்வதற்கு கீழ் ஒரு கியர் ஐகான் இருக்கும். அதை கிளிக் செய்த பிறகு பல ஆப்ஷன்ஸ் அதில் வரும் அவற்றில் மூன்றாவதாக DEVICE CAPABILITY INFORMATION என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்த பிறகு உங்கள் மொபைலை பற்றிய விவரங்கள் அதில் கூறப்பட்டிருக்கும். அதன்பிறகு மேலே மூன்று புள்ளிகள் இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள் செய்தபிறகு RUN ANALYSIS NOW என்று வரும் அதை கிளிக் செய்யுங்கள் செய்தபிறகு இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் அது பிராசசிங் ஆகும். அதுவரை வேறு எந்த ஒரு செயலிக்கும் நீங்கள் செல்லக்கூடாது. இது நீங்கள் செய்தபிறகு அப்ளிகேஷனை ஓபன் செய்து பாருங்கள் லேயரில் இமேஜ் என்று இருந்தால் அது மீடியாவாக மாற வாய்ப்பு உள்ளது. இந்த முறையைப் பயன்படுத்தி அனைவருக்கும் மாறும் என்றால் அது கிடையாது உங்களது மொபைலின் process ஐ பொருத்து மாறக்கூடும்.
டிபரரிங் டூல் கிட் செட் சூப்பர் ஹெவி-டூட்டி, அதன் கைப்பிடி பிரீமியம் பெயிண்ட் செய்யப்பட்ட அலுமினிய அலாய், ரோட்டரி மவுண்டிங் ஹெட் கடினமான எம்2 அதிவேக எஃகு, பிளேடுகள் தரமான அதிவேக எஃகு ஆகியவற்றால் ஆனது. இந்த டூல் கிட் செட் நீண்ட நேரம் பயன்படுத்துவதற்கு ஏற்ற தயாரிப்பு ஆகும்.360 டிகிரி சுழலும் கைப்பிடியில் பிளேடு பொருத்தப்பட்டுள்ளது, வலது/இடது கை நண்பர் இருவருக்கும் நன்றாக வேலை செய்கிறது.பொத்தானை அழுத்துவதன் மூலம் பிளேட்டை மாற்றலாம், இது மிகவும் எளிமையானது.கிரிப் 12.8cm (5 அங்குலம்) நீளம் கொண்டது, மேலும் இது வசதியாகவும் பாதுகாப்பாகவும் உள்ளது. விசாரணைவிவரம் விலைப்பட்டியலுக்கான விசாரணை எங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்பவும், நாங்கள் 24 மணிநேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ரஜத் பட்டிடார் எடுக்கப்பட உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. டி20 உலக கோப்பை தொடர் அக்டோபர் 16ம் தேதி துவங்குகிறது. இதற்கு முன்னோட்டமாக தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுடன் டி20 தொடரில் இந்திய அணி பங்கேற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. அதற்கு அடுத்ததாக செப்டம்பர் 18-ஆம் தேதி துவங்கும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்பதற்கு இந்திய வீரர்கள் தயாராகி வருகின்றனர். முதல் டி20 போட்டி திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்காக வீரர்கள் அனைவரும் அங்கு சென்று விட்டனர். ஏற்கனவே தென் ஆப்பிரிக்க வீரர்கள் திருவனந்தபுரம் மைதானத்திற்கு வந்திறங்கி தங்களது பயிற்சிகளை துவங்கிவிட்டனர். முதல் கட்டமாக மூன்று டி20 போட்டிகள் நடைபெறுகிறது. அதற்கு அடுத்ததாக மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடத்தப்பட உள்ளது. அக்டோபர் நான்காம் தேதி வரை டி20 போட்டிகள் நடைபெறுகிறது. அதற்கு அடுத்த நாள் இந்திய அணி வீரர்கள் டி20 உலக கோப்பை தொடருக்கு ஆஸ்திரேலியா செல்கின்றனர். 15 வீரர்கள் மற்றும் நான்கு ரிசர்வ் வீரர்கள் என 19 பேர் ஆஸ்திரேலியா சென்ற பிறகு, இந்தியாவில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்தியா ஏ அணி பங்கேற்க இருக்கிறது. ஷிகர் தவான் இந்த அணிக்கு தலைமை பொறுப்பேற்று விளையாட உள்ளார். சுப்மண் கில், சஞ்சு சாம்சன் ஆகியோரும் இந்த அணியில் விளையாடுகின்றனர். ஸ்ரேயாஸ் ஐயர் ரிசர்வ் வீரராக இருப்பதால் ஆஸ்திரேலிய செல்லும் இந்திய அணியுடன் அவரும் செல்கிறார். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது ஷ்ரேயாஸ் ஐயரின் இடத்தை நிரப்புவதற்கு பிசிசிஐ திட்டமிட்டு வந்தது. அந்த இடத்திற்காக ஆர்சிபி அணியை சேர்ந்த ராஜத் பட்டிடார் தேர்வு செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2022 ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடிய இவர், உள்ளூர் கிரிக்கெட்டில் மத்திய பிரதேஷ் அணிக்காகவும் அபாரமாக செயல்பட்டார். தொடர்ந்து மிக சிறப்பான ஃபார்மில் இருந்து வரும் இவருக்கு பிசிசிஐ வாய்ப்பு கொடுக்க உள்ளது. இதற்கு பிசிசிஐ அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில், “ரஜத் பட்டிடார் தற்போது இருக்கும் பார்மிற்கு நிச்சயம் அவருக்கு இந்திய அணியில் இடம் கொடுக்க வேண்டும். குறிப்பாக ஷ்ரேயாஸ் ஐயர் ரிசர்வ் வீரராக ஆஸ்திரேலியா செல்வதால் மிடில் ஆர்டரில் இடம் காலியாக இருக்கிறது. அந்த இடத்திற்கு இவர் தான் முதன்மையான வீரராக இருக்கிறார்.” என்று தெரிவித்தார். Facebook Twitter Pinterest WhatsApp Previous articleகேஎல் ராகுல் சொற்ப ரன்களில் அவுட் ஆவது ஏன்? – சுனில் கவாஸ்கர் பேட்டி! Next articleதென்னாபிரிக்கா டி20 தொடரை வெல்வதற்கு ரோகித் சர்மா இதை மட்டும் செய்தால் போதும் – சுனில் கவாஸ்கர் கருத்து!
حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏حَمَّادِ بْنِ زَيْدٍ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏حَمَّادُ بْنُ زَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏هَارُونَ بْنِ رِيَابٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏كِنَانَةُ بْنُ نُعَيْمٍ الْعَدَوِيُّ ‏ ‏عَنْ ‏ ‏قَبِيصَةَ بْنِ مُخَارِقٍ الْهِلَالِيِّ ‏ ‏قَالَ ‏ ‏تَحَمَّلْتُ ‏ ‏حَمَالَةً ‏ ‏فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَسْأَلُهُ فِيهَا فَقَالَ أَقِمْ حَتَّى تَأْتِيَنَا الصَّدَقَةُ فَنَأْمُرَ لَكَ بِهَا قَالَ ثُمَّ قَالَ يَا ‏ ‏قَبِيصَةُ ‏ ‏إِنَّ الْمَسْأَلَةَ لَا تَحِلُح إِلَّا لِأَحَدِ ثَلَاثَةٍ رَجُلٍ تَحَمَّلَ ‏ ‏حَمَالَةً ‏ ‏فَحَلَّتْ لَهُ الْمَسْأَلَةُ حَتَّى ‏ ‏يُصِيبَهَا ‏ ‏ثُمَّ يُمْسِكُ وَرَجُلٌ أَصَابَتْهُ ‏ ‏جَائِحَةٌ ‏ ‏اجْتَاحَتْ مَالَهُ فَحَلَّتْ لَهُ الْمَسْأَلَةُ حَتَّى يُصِيبَ ‏ ‏قِوَامًا مِنْ عَيْشٍ ‏ ‏أَوْ قَالَ سِدَادًا مِنْ عَيْشٍ ‏ ‏وَرَجُلٌ أَصَابَتْهُ ‏ ‏فَاقَةٌ ‏ ‏حَتَّى يَقُومَ ثَلَاثَةٌ مِنْ ذَوِي الْحِجَا مِنْ قَوْمِهِ لَقَدْ أَصَابَتْ فُلَانًا ‏ ‏فَاقَةٌ ‏ ‏فَحَلَّتْ لَهُ الْمَسْأَلَةُ حَتَّى يُصِيبَ ‏ ‏قِوَامًا مِنْ عَيْشٍ ‏ ‏أَوْ قَالَ سِدَادًا مِنْ عَيْشٍ ‏ ‏فَمَا سِوَاهُنَّ مِنْ الْمَسْأَلَةِ يَا ‏ ‏قَبِيصَةُ ‏ ‏سُحْتًا يَأْكُلُهَا صَاحِبُهَا ‏ ‏سُحْتًا நான் (மற்றொருவர் செலுத்த வேண்டிய) ஓர் இழப்பீட்டுத் தொகைக்குப் பொறுப்பேற்றுக்கொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஏதேனும் கேட்பதற்காகச் சென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “தர்மப் பொருட்கள் நம்மிடம் வரும்வரை இங்கேயே இருங்கள். அதில் ஏதேனும் உங்களுக்குத் தரச் சொல்கிறோம்” என்று கூறினார்கள். பிறகு, “கபீஸா! மூன்று பேருக்கு மட்டுமே யாசிக்க அனுமதி உண்டு. ஒருவர் மற்றவரது ஈட்டுத் தொகைக்குப் பொறுப்பேற்றுக்கொண்டவர். அவர் அத்தொகையை (உரியவரிடம் ஒப்படைப்பதற்காக அதைப்) பெறுகின்றவரை யாசிக்கலாம். பிறகு (யாசிப்பதை) நிறுத்திக்கொள்ள வேண்டும். மற்றொருவர் (இயற்கைச்) சேதம் ஏற்பட்டு, செல்வங்களை இழந்தவர். அவர் அடிப்படை வாழ்வாதாரத்தை அல்லது வாழ்க்கையின் அவசியத் தேவையை அடைந்துகொள்ளும்வரை யாசிக்கலாம். இன்னொருவர் வறுமைக்கு ஆட்பட்டவர். அவருடைய கூட்டத்தாரில் (அவரைப் பற்றி) விவரம் தெரிந்த மூவர் முன் வந்து, ‘இன்னார் வறுமைக்கு ஆட்பட்டுள்ளார்’ என்று (சாட்சியம்) கூறினால், அவர் அடிப்படை வாழ்வாதாரத்தை அல்லது வாழ்க்கையின் அவசியத் தேவையை அடைகின்றவரை யாசிப்பது அவருக்குச் செல்லும். கபீஸா! இவையன்றி மற்ற யாசகங்கள் யாவும் தடை செய்யப்பட்டவை (ஹராம்) ஆகும். தடை செய்யப்பட்ட வழியில் யாசித்து உண்பவர் ஹராமை உண்கின்றார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : கபீஸா பின் முகாரிக் அல்ஹிலாலீ (ரலி) மேலும் காண்பி... ↓ விரும்பும் பாடம் செல்ல… ↓ விரும்பும் பாடம் செல்ல… Select Category 43.37 நபி (ஸல்) அவர்களைக் கண்ணியப்படுத்துவதும் … (8) 43.36 நபி (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டியது (முஸ்லிம்களின்) கட்டாயக் கடமையாகும் (1) 43.35 நபி (ஸல்) அவர்களின் அல்லாஹ்வைப் பற்றிய அறிவும் அவனைப் பற்றிய கடுமையான அச்சமும் (2) 43.34 நபி (ஸல்) அவர்களின் பெயர்கள் (3) 43.33 நபி (ஸல்) மக்காவிலும் மதீனாவிலும் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்? (8) 43.32 நபி (ஸல்) இறந்தபோது அவர்களுக்கு வயது எத்தனை? (2) 43.31 நபி (ஸல்) அவர்களின் உடலமைப்பு; நபியாக அனுப்பப்பெற்றது; அவர்களின் வயது (1) 43.30 நபி (ஸல்) உடலில் நபித்துவ முத்திரை … (3) 43.29 நபி (ஸல்) அவர்களின் தலைநரைமுடி (10) 43.28 நபி (ஸல்) அவர்களின் வெண்ணிறமும் களையான முகமும் (2) 43.27 நபி (ஸல்) அவர்களின் வாய், கண்கள், குதிகால்கள் ஆகியவை (1) 43.26 நபி (ஸல்) அவர்களது தலைமுடியின் தன்மை (3) 43.25 நபி (ஸல்) அவர்களின் உருவத் தோற்றம் … (3) 43.24 நபி (ஸல்) தமது தலைமுடியை … (1) 43.23 நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு வரும்போது … (4) 43.22 நபி (ஸல்) அவர்களது வியர்வையின் நறுமணமும் அதன்மூலம் வளம் ஏற்பட்டதும் (3) 43.21 நபி (ஸல்) அவர்களின் மேனியில் கமழ்ந்த நறுமணம் … (3) 43.20 நபி (ஸல்) பாவங்களை விட்டு வெகு தொலைவில் விலகியிருந்தது … (3) 43.19 நபி (ஸல்), மக்களுடன் நெருங்கிப் பழகியதும் அவர்களிடமிருந்து மக்கள் வளம் பெற்றதும் (3) 43.18 மனைவியர்மீது நபி (ஸல்) காட்டிய அன்பும் … (4) 43.17 நபி (ஸல்) அவர்களின் புன்னகையும் அழகிய உறவாடலும் (1) 43.16 நபி (ஸல்) அவர்களின் நாண மிகுதி (2) 43.15 நபி (ஸல்) குழந்தைகள் மீதும் குடும்பத்தார் மீதும் காட்டிய அன்பு … (5) 43.14 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வேண்டப்பட்ட எந்த ஒன்றுக்கும் அவர்கள் “இல்லை” என்று சொன்னதேயில்லை … (5) 43.13 அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மக்களிலேயே மிகவும் அழகான … (5) 43.12 மக்களிலேயே நபி (ஸல்), தொடர்ந்து வீசும் (மழைக்) காற்றைவிட … (1) 43.11 நபி (ஸல்) அவர்களின் வீரமும் அறப்போருக்காக அவர்கள் முன்னே சென்றதும் (2) 43.10 உஹுதுப் போர் நாளில் நபி (ஸல்) … (2) 43.9 நம் நபி (ஸல்) அவர்களுக்கு (மறுமையில் ‘அல்கவ்ஸர்’) தடாகம் உண்டு … (20) 43.8 உயர்ந்தோன் அல்லாஹ் ஒரு சமுதாயத்தின்மீது அருள் புரிய நாடினால் … (1) 43.7 நபி (ஸல்), இறுதி இறைத் தூதர் என்பது பற்றிய குறிப்பு (4) 43.6 நபி (ஸல்), தம் சமுதாயத்தார் மீது கொண்டிருந்த பரிவும் … (4) 43.5 நபி (ஸல்), நேர்வழியுடனும் ஞானத்துடனும் அனுப்பப் பெற்றதற்கான உவமை (1) 43.4 அல்லாஹ்வையே முழுமையாக நபி (ஸல்) சார்ந்திருந்ததும் … (1) 43.3 நபி (ஸல்) அவர்களின் அற்புதங்கள் (7) 43.2 எல்லாப் படைப்புகளையும்விட நம் நபி (ஸல்) அவர்களின் சிறப்பு (1) 43.1 நபி (ஸல்) அவர்களின் தலைமுறையின் சிறப்பும் … (2) 42.4 நபி (ஸல்) கண்ட கனவு (6) 42.3 கனவுக்கு விளக்கமளித்தல் (1) 42.2 ஷைத்தான் கனவில் விளையாடியது குறித்து … (3) 42.1 கனவில் என்னைக் கண்டவர் … (4) 42.01 கனவுகள் (11) 41.2 பகடை விளையாட்டு, தடை செய்யப்பட்டதாகும் (1) 41.1 கவிதைகள் (9) 40.5 நறுமணப் பொருட்களில் மிகவும் சிறந்த கஸ்தூரியைப் பயன்படுத்துவது … (4) 40.4 ஒருவர், ‘கபுஸத் நஃப்ஸீ’ (என் மனம் அசுத்தமாகிவிட்டது) எனும் சொல்லை … (2) 40.3 ‘அப்து’ (அடிமை ஆண்), ‘அமத்து’ (அடிமைப் பெண்), ‘மவ்லா’/’ஸய்யித்’ (அடிமையின் உரிமையாளர்) ஆகிய சொற்களின் சட்டம் (3) 40.2 திராட்சையை, “கர்மு / கண்ணியம்” என்று பெயரிட்டழைப்பது … (7) 40.1 காலத்தை ஏசுவதற்குத் தடை (5) 39.41 விலங்குகளுக்கு நீர் புகட்டுவதின், உணவளிப்பதின் சிறப்பு (3) 39.40 பூனைகளைக் கொல்வதற்குத் தடை (2) 39.39 எறும்புகளைக் கொல்லத் தடை (3) 39.38 பல்லியைக் கொல்வது நல்லது (5) 39.37 பாம்பு போன்ற விஷ ஜந்துகளைக் கொல்வது (13) 39.36 தொழுநோயாளிகள் போன்றோரிடம் நெருக்கம் தவிர்ப்பது (1) 39.35 சோதிடர்களிடம் செல்வதும் சோதிடம் பார்ப்பதும் (5) 39.34 பறவை சகுனம், நற்குறி, துர்குறி பற்றிய பாடம் (11) 39.33 இல்லாத சகுனங்களும் தொற்றுநோய்களும் (6) 39.32 கொள்ளைநோய், பறவை சகுனம், சோதிடம் போன்றவை (8) 39.31 தேனூட்டு மருத்துவம் (1) 39.30 ‘தல்பீனா‘, நோயாளியின் மனத்துக்கு(ம் உடலுக்கும்) தெம்பு அளிக்கக்கூடியதாகும் (1) 39.29 கருஞ்சீரக மருத்துவம் (2) 39.28 இந்தியக் கோஷ்டக் குச்சியால் சிகிச்சையளிப்பது (2) 39.27 நோயாளிக்கு வற்புறுத்தி சிகிச்சையளிப்பது … (1) 39.26 ஒவ்வொரு நோய்க்கும் மருந்து உண்டு; (நோய்க்கு) மருத்துவம் செய்துகொள்வது விரும்பத் தக்கது (17) 39.25 தொழுகையில் மனம் அலைபாயச் செய்யும் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புக் கோரல் (1) 39.24 பிரார்த்திக்கும்போது வலியுள்ள இடத்தில் கையை வைப்பது (1) 39.23 குர்ஆன் வசனங்கள் மற்றும் அல்லாஹ்வைத் துதிக்கும் சொற்களால் ஓதிப்பார்ப்பதற்கு ஊதியம் பெறலாம் (2) 39.22 இறைவனுக்கு இணை கற்பிதம் இல்லாத சொற்களால் ஓதிப்பார்பது தவறில்லை (1) 39.21 கண்ணேறு, சின்னம்மை, விஷக்கடி, (தீய)பார்வை ஆகியவற்றுக்காக ஓதிப்பார்ப்பது விரும்பத் தக்கதாகும் (12) 39.20 பாதுகாப்புக் கோரும் அத்தியாயங்களால் நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது … (2) 39.19 நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது விரும்பத் தக்கதாகும் (4) 39.18 விஷம் (1) 39.17 சூனியம் (1) 39.16 நோயும் மருத்துவமும் ஓதிப்பார்த்தலும் (4) 39.15 மூன்றாமவரின் ஒப்புதலின்றி இருவர் மட்டும் இரகசியம் பேசிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும் (3) 39.14 … அந்நியப் பெண்ணை, வழிசெல்லும் ஒருவர் வாகனத்தில் அமர்த்திக்கொள்ளலாம் (2) 39.13 பெண்கள் இருக்கும் இடத்திற்கு அலிகள் செல்லத் தடை (2) 39.12 அமர்ந்திருந்த இடத்திற்கு உரியவர் (1) 39.11 அமர்ந்திருக்கும் ஒருவரை எழுப்பிவிடுவது தடை செய்யப்பட்டதாகும் (4) 39.10 அவைக்கு வருபவர், அமரும் ஒழுங்கு (1) 39.9 … கெட்ட எண்ணத்தை அகற்றுவது விரும்பத் தக்கதாகும் (2) 39.8 அந்நியப் பெண்ணிடம் … தனிமையில் இருப்பது தடை செய்யப்பட்டதாகும் (3) 39.7 … பெண்கள் வெளியே செல்லலாம் (2) 39.6 உள்ளே செல்ல அனுமதியாகக் கருதுவதற்கு … (1) 39.5 சிறாருக்கு(ப் பெரியவர்கள்) முகமன் கூறுவது விரும்பத் தக்கதாகும் (2) 39.4 வேதக்காரர்களுக்கு முந்திக்கொண்டு ஸலாம் கூறுவதற்குத் தடை (7) 39.3 ஸலாத்துக்குப் பதிலுரைப்பது முஸ்லிமுக்குக் கடமை (2) 39.2 நடைபாதைகளில் அமர்வதன் ஒழுங்குகளில் … (2) 39.1 முந்தி ஸலாம் சொல்ல வேண்டியவர்கள் (1) 38.10 இயல்பான பார்வை (1) 38.9 பிறர் வீட்டில் எட்டிப் பார்ப்பது தடை செய்யப்பட்டதாகும் (5) 38.8 “யார்?“ என்று கேட்டால் … (2) 38.7 அனுமதி கோருதல் (5) 38.6 “என் அருமை மகனே!“ (2) 38.5 குழந்தை பிறந்தவுடன் இனிப்பான பொருளை மென்று அதன் வாயிலிடுவதும் … (9) 38.4 மன்னாதி மன்னன் எனப் பெயர் சூட்டிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும் (2) 38.3 அருவருப்பான பெயரை அழகான பெயராக மாற்றியமைப்பது … (6) 38.2 அருவருப்பான பெயர்கள் … (4) 38.1 … விரும்பத் தகுந்த பெயர்கள் (8) 37.35 வெறும் பெருமை (2) 37.34 மெல்லிய உடையணிந்து, பிறரைத் தன்பால் ஈர்க்கும் வண்ணம் தோள்களைச் சாய்த்து ஒயிலாக நடக்கும் பெண்கள் (1) 37.33 பெண்களின் பொய் அலங்காரங்காரங்களுக்குத் தடை (10) 37.32 நடைபாதைகளில் அமர்வதற்குத் தடையும் பாதைகளுக்குரிய உரிமைகளைப் பேணுவதும் (1) 37.31 தலை முடியில் பகுதி மழித்துவிட்டு, பகுதி மழிக்காமல் விட்டுவிடுவது வெறுக்கத் தக்கதாகும் (1) 37.30 ஸகாத் / ஜிஸ்யாவுக்கான கால்நடைகளில் சூடிட்டு அடை யாளமிடலாம் (4) 37.29 விலங்குகளின் முகத்தில் அடிப்பதும் அடையாளச் சூடிடுவதும் தடை செய்யப்பட்டவை ஆகும் (3) 37.28 ஒட்டகத்தின் கழுத்தில் (திருஷ்டிக்) கயிற்று மாலை அணிவிப்பது வெறுக்கத் தக்கதாகும் (1) 37.27 பயணத்தின்போது நாயும் (ஒலியெழுப்பும்) மணியும் வெறுக்கத் தக்கவை (2) 37.26 உயிரினங்களின் உருவப் படங்களை வரைவதும் … தடை செய்யப்பட்டவை ஆகும் (21) 37.25 (நரைமுடிக்கு) சாயமிட்டுக்கொள்வது யூதர்களுக்கு மாறு செய்வதாகும் (1) 37.24 நரைமுடியில் கருப்பு நிறச் சாயமிடுவது தடை செய்யப்பட்டதாகும் (2) 37.23 ஆண்கள் (மேனியில்) குங்குமப்பூச் சாயமிட்டுக்கொள்வதற்குத் தடை (1) 37.22 மல்லாந்து படுத்துக்கொண்டு கால்மீது காலைப் போட்டுக் கொள்வதற்கு அனுமதி (1) 37.21 மல்லாந்து படுத்துக்கொண்டு கால்மீது காலைப் போட்டுக் கொள்வதற்குத் தடை (3) 37.20 தடை செய்யப்பட்ட இரு நிலைகள் (2) 37.19 காலணிகளை அணிந்து கழற்றும் முறைகள் (3) 37.18 காலணி அல்லது அது போன்றதை அணிந்துகொள்வது விரும்பத் தக்கதாகும் (1) 37.17 மோதிரம் அணிவதற்குத் தடை செய்யப்பட்ட விரல்கள் (2) 37.16 கைச் சுண்டுவிரலில் மோதிரம் அணிவது (1) 37.15 அபிசீனியக் வெள்ளிக் குமிழ் மோதிரம் (2) 37.14 மோதிரங்களை(க் கழற்றி) எறிந்த நிகழ்வு (2) 37.13 நபி (ஸல்) அவர்களின் (முத்திரை) மோதிரம் (3) 37.12 ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ எனும் இலச்சினை பொறிக்கப்பட்ட வெள்ளி மோதிரம் (2) 37.11 ஆண்கள் தங்க மோதிரம் அணிவதற்குத் தடை (3) 37.10 ஆடைகளை எண்ணிப் பெருமை கொண்டு, கர்வத்தோடு நடப்பதற்குத் தடை (2) 37.9 பெருமைக்காக ஆடையைத் தரையில் படும்படி இழுத்துச் செல்வதற்குத் தடை (7) 37.8 தேவைக்கு அதிகமான விரிப்புகளும் ஆடைகளும் இருப்பது விரும்பத் தக்கதன்று (1) 37.7 படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்த அனுமதி (2) 37.6 ஆடையில் (எளிமை,) பணிவு காட்டுவது … (5) 37.5 பருத்தி ஆடை அணிவதன் சிறப்பு (2) 37.4 ஆண்கள் செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட ஆடை அணிவதற்குத் தடை (5) 37.3 தோல் உபாதைகள் இருந்தால் ஆண்கள் பட்டாடை அணியலாம் (3) 37.2 பொன் மோதிரம் மற்றும் பட்டாடை அணிவது ஆண்களுக்குத் தடை; பெண்களுக்கு அனுமதி (20) 37.1 பொன் / வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவது ஆண்களுக்கும் பெண்களுக்கும் தடை (2) 36.35 உணவைக் குறை சொல்லவேண்டாம் (2) 36.34 இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் உண்பார்; இறைமறுப்பாளன் ஏழு குடல்களில் உண்பான் (5) 36.33 உணவு குறைவாக இருக்கும்போது … (4) 36.32 விருந்தினரை உபசரிப்பதும் முன்னுரிமை வழங்குவதன் சிறப்பும் (6) 36.31 வெள்ளைப் பூண்டு சாப்பிடக்கூடியதே … (2) 36.30 உணவுக் காடியின் சிறப்பும் … (4) 36.29 ‘அல்கபாஸ்’ பழங்களில் கருப்பு நிறப் பழத்தின் சிறப்பு (1) 36.28 உணவுக் காளானின் சிறப்பும் … (6) 36.27 மதீனத்துப் பேரீச்சம் பழங்களின் சிறப்பு (3) 36.26 குடும்பத்தாருக்காக … உணவுகளைச் சேமித்துவைத்தல் (2) 36.25 பலருடன் சேர்ந்து உண்பவர் … (2) 36.24 உணவு உண்பவர் அமரும் முறை; பணிவோடு அமர்வது விரும்பத் தக்கது (2) 36.23 பேரீச்சை செங்காய்களுடன் வெள்ளரிக்காயையும் சேர்த்து உண்பது (1) 36.22 விருந்தளிப்பவருக்காக விருந்தாளி பிரார்த்திப்பது … (1) 36.21 சுரைக் குழம்பு உண்ண அனுமதி … (2) 36.20 வீட்டு உரிமையாளரின் சம்மதம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் … (4) 36.19 விருந்துக்கு அழைக்கப்பட்டவரைத் தொடர்ந்து அழைக்கப்படாதவரும் வந்துவிட்டால் … (2) 36.18 உண்டு முடித்ததும் விரல்களைச் சூப்புவதும் உணவுத் தட்டை வழித்து உண்பதும் … (9) 36.17 வலப் பக்கத்திலிருந்து பரிமாறுதல் விரும்பத் தக்கதாகும் (4) 36.16 பாத்திரத்தினுள் (பருகும்போது) வெளியே மூன்று முறை மூச்சு விட்டுப் பருகுவது விரும்பத் தக்கதாகும் (3) 36.15 ஸம்ஸம் நீரை நின்றுகொண்டு அருந்துவது (4) 36.14 நின்றுகொண்டு அருந்துவது வெறுக்கத் தக்கதாகும் (4) 36.13 உண்பது, அருந்துவது ஆகியவற்றின் ஒழுங்குகளும் விதிமுறைகளும் (10) 36.12 இரவு நேர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் (6) 36.11 பழச்சாறுகளைப் பருகுவதும் பாத்திரங்களை மூடிவைப்பதும் (3) 36.10 (ஆட்டுப்) பால் அருந்த அனுமதி (3) 36.9 பழச்சாறுகள் (புளித்துக்) கெட்டியாகி, போதையேறாதவரை அனுமதிக்கப்பட்டவையாகும் (10) 36.8 குடிகாரன் பாவமன்னிப்புக் கோரி திருந்தாவிட்டால் … (3) 36.7 போதை தரும் ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்ட மதுவாகும் (9) 36.6 பானங்கள்-பாத்திரங்கள், தடை-தடை நீக்கம் (36) 36.5 பேரீச்சம் பழம், உலர் திராட்சைக் கலவை ஊறல் வெறுக்கத் தக்கதாகும் (14) 36.4 ‘மதுபானம்’ என்று சொல்லப்படுபவை (4) 36.3 மதுவை மருந்தாகப் பயன்படுத்துவதற்குத் தடை (1) 36.2 மதுபானத்தை (சமையல்) காடியாக மாற்றிப் பயன்படுத்துவதற்குத் தடை (1) 36.1 போதையூட்டும் ஒவ்வொன்றும் மதுவாகும் (9) 35.8 அல்லாஹ் அல்லாதவரின் பெயர் கூறிப் பிராணிகளை அறுப்பதற்குத் தடை (3) 35.7 தலைமுடியை, நகங்களைக் களைவதற்குத் தடை (5) 35.6 அல் ஃபரஉ வல் அத்தீரா (1) 35.5 பலி இறைச்சியை எவ்வளவு காலம் சேமித்து வைக்கலாம்? (14) 35.4 பல், நகம், எலும்பு ஆகியவை தவிர எந்தப் பொருளாலும் பிராணியை அறுக்க அனுமதி (1) 35.3 தாமே அறுப்பதும் அல்லாஹ்வின் பெயரோடு தக்பீர் கூறுவதும் விரும்பத் தக்கவை ஆகும் (3) 35.2 பலிப் பிராணியின் வயது (4) 35.1 பலி கொடுக்கப்படும் நேரம் (10) 34.12 விலங்குகளைக் கட்டிவைத்து அம்பெய்து கொல்வதற்குத் தடை (5) 34.11 … கத்தியைக் கூர்மையாகத் தீட்டிக் கொண்டு வதையற்ற முறையைக் கையாளக் கட்டளை (1) 34.10 … பயிற்சிகளை மேற்கொள்வது அனுமதிக்கப் பட்டதாகும். கல்சுண்டு விளையாட்டு வெறுக்கப்பட்டதாகும் (2) 34.9 முயல் கறி உண்ணத் தக்கது (1) 34.8 வெட்டுக்கிளி உண்ணத் தக்கது (1) 34.7 உடும்புக் கறி உண்ணத் தக்கது (13) 34.6 குதிரைகளின் இறைச்சியை உண்பது கூடுமா? (3) 34.5 நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்பதற்குத் தடை (14) 34.4 கடல்வாழ் உயிரினங்களில் செத்தவற்றை உண்பதற்கு அனுமதி (5) 34.3 உண்பதற்குத் தடை செய்யப்பட்ட விலங்குகளும் பறவைகளும் (6) 34.2 வேட்டையாடிய பிராணி மறைந்து, பிறகு கிடைத்தால் … (2) 34.1 பயிற்சியளிக்கப்பட்ட நாய்கள் மூலம் வேட்டையாடுதல் (8) 33.56 பயணத்திலிருந்து திரும்புகின்றவர் … (5) 33.55 பயணம் என்பது துன்பத்தின் ஒரு பகுதியாகும் … (1) 33.54 பயணத்தில் கால்நடைகளின் நலன் காப்பதும் … (2) 33.53 “என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் எப்போதுமே உண்மைக்கு ஆதரவாளர்களாக இருப்பார்கள் … (8) 33.52 அம்பெய்வதன் சிறப்பும் … (3) 33.51 உயிர்த் தியாகிகள் பற்றிய விளக்கம் (3) 33.50 அல்லாஹ்வின் பாதையில் எல்லைக் காவல் புரிவதன் சிறப்பு (1) 33.49 கடல்வழிப் போரின் சிறப்பு (2) 33.48 போரில் கலந்துகொள்ள முடியாமல் போனவருக்கும் நன்மை … (1) 33.47 அறப்போரில் கலந்துகொள்ளாமல் இறந்துபோனவர் … (1) 33.46 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணத்தை வேண்டுவது விரும்பத் தக்கதாகும் (2) 33.45 “எண்ணங்களைப் பொருத்தே செயல்கள் அமைகின்றன” எனும் நபிமொழி … (1) 33.44 … போர்ச் செல்வங்களைப் பெற்றோரும் பெறாதோரும் … (2) 33.43 பிறர் பார்ப்பதற்காகவும் விளம்பரத்திற்காகவும் போரிட்டவர் … (1) 33.42 அல்லாஹ்வின் பாதையில் போரிட்டவர் … (3) 33.41 உயிர்த் தியாகிக்குச் சொர்க்கம் நிச்சயம் (6) 33.40 தகுந்த காரணம் உள்ளவர்களுக்கு அறப்போரில் கலந்து கொள்வது கடமை இல்லை (2) 33.39 அறப்போர் வீரர்களின் துணைவியருடைய கண்ணியம் … (1) 33.38 அறப்போர் வீரருக்கு வாகனம் மற்றும் பிற உதவிகள் … (6) 33.37 அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்வதன் சிறப்பும் அதற்குக் கிடைக்கும் பன்மடங்கு நன்மைகளும் (1) 33.36 இறைமறுப்பாளனை (போரில்) கொன்ற பின்னர் (மார்க்கத்தில்) உறுதியோடு இருத்தல் (2) 33.35 இரு போராளிகளில் ஒருவர் மற்றவரைக் கொன்று, பின் அவ்விருவருமே சொர்க்கத்தில் … (2) 33.34 அறப்போர் மற்றும் எல்லைக் காவலின் சிறப்பு (3) 33.33 வீரமணம் அடைந்தவர்களின் உயிர்கள் … (1) 33.32 அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவரின் கடனைத் தவிர அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன (3) 33.31 அல்லாஹ் (தனது பாதையில்) அறப்போர் புரிந்தவர்களுக்காகச் சொர்க்கத்தில் வைத்துள்ள உயர்நிலைகள் (1) 33.30 அல்லாஹ்வின் பாதையில் காலையாயினும் மாலையாயினும் (போரிடச்) செல்வதன் சிறப்பு (5) 33.29 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணம் அடைவதன் சிறப்பு (4) 33.28 அல்லாஹ்வின் பாதையில் புறப்படுதலின், அறப்போரில் ஈடுபடுதலின் சிறப்பு (4) 33.27 குதிரையின் தன்மைகளில் விரும்பத் தகாதவை (1) 33.26 மறுமை நாள்வரை நெற்றிகளில் நன்மை பிணைக்கப்பட்டிருக்கும் குதிரைகள் (5) 33.25 குதிரைப் பந்தயமும் அதற்காகக் குதிரையை மெலிய வைப்பதும் (1) 33.24 குர்ஆன் பிரதிகளை இறைமறுப்பாளர்களின் நாட்டுக்கு எடுத்துச் செல்வது … (3) 33.23 பருவ வயது பற்றிய விளக்கம் (1) 33.22 இயன்றவரை கட்டுப்பட்டு நடப்பதாக உறுதிமொழி அளித்தல் (1) 33.21 பெண்களிடம் உறுதிப் பிரமாணம் (பைஅத்) வாங்கும் முறை (2) 33.20 மக்கா வெற்றிக்குப் பின் ஹிஜ்ரத் கிடையாது (5) 33.19 நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றவர் மீண்டும் தமது தாயகத்தில் குடியேறுவதற்குத் தடை (1) 33.18 ஆட்சித் தலைவர் படையினரிடம் உறுதி மொழி பெற்றுக்கொள்வது … (13) 33.17 ஆட்சித் தலைவர்களில் நல்லவர்களும் தீயவர்களும் (2) 33.16 ஆட்சித் தலைவர்கள் மார்க்கத்திற்கு முரணாகச் செயல்படும்போது … (2) 33.15 இரு ஆட்சியாளர்களுக்கு வாக்களிப்புப் பிரமாண நெருக்கடி ஏற்பட்டால் … (1) 33.14 முஸ்லிம்கள் (ஒரே தலைமையின் கீழ்) ஒன்றுபட்டிருக்கும்போது … (2) 33.13 குழப்பங்கள் தோன்றும்போது கூட்டமைப்போடு சேர்ந்திருப்பது கடமையாகும் … (8) 33.12 உரிமைகள் மறுக்கப்பட்டாலும் தலைமைக்குக் கட்டுப்படுதல் (1) 33.11 அதிகாரத்திலிருப்போர் அநீதியிழைக்கும்போதும் தகுதியற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும்போதும் … (1) 33.10 கலீஃபாக்களில் முதலாமவருக்கு உறுதிப் பிரமாணம் (பைஅத்) அளிப்பது கடமையாகும் (3) 33.9 ஆட்சித் தலைவர் கேடயம் போன்றவர் … (1) 33.8 பாவமற்றவற்றில் தலைவர்களுக்குக் கட்டுப்படுவது கடமையாகும். பாவமானவற்றில் கட்டுப்படுவதற்குத் தடை (11) 33.7 அதிகாரிகளுக்கு அன்பளிப்புகள் வழங்குவதற்குத் தடை (3) 33.6 பொதுச் சொத்துகளில் மோசடி செய்வது வன்மையாகத் தடை செய்யப்பட்டது (1) 33.5 நேர்மையான ஆட்சியாளரின் சிறப்பும் … (6) 33.4 தேவையின்றி ஆட்சிப் பொறுப்பை ஏற்பது விரும்பத் தக்கதன்று (2) 33.3 ஆட்சியதிகாரத்தைத் தேடி அலைவதற்கும் அதன் மீது ஆசை கொள்வதற்கும் தடை (3) 33.2 ஆட்சித் தலைவரை நியமிக்கலாம்; நியமிக்காமல் விடலாம் (2) 33.1 ஆட்சியதிகாரம் குறைஷியரிடையேதான் இருக்கும் (10) 32.51 அறப்போர்களில் இறைமறுப்பாளரிடம் உதவி கோருவது … (1) 32.50 ‘தாத்துர் ரிக்காஉ’ (ஒட்டுத் துணிப்) போர் (1) 32.49 நபி (ஸல்) கலந்துகொண்ட அறப்போர்களின் எண்ணிக்கை (6) 32.48 அறப்போரில் கலந்துகொண்ட பெண்களுக்கு … (4) 32.47 அறப்போரில் ஆண்களுடன் பெண்களும் கலந்துகொள்வது (2) 32.46 “அவனே உங்களைத் தாக்காமல் அவர்கள் கைகளை தடுத்(து வைத்)தான்” எனும் (48:24) வசனம் (2) 32.45 ‘தூ கரத்’ போரும் பிற போர்களும் (2) 32.44 அஹ்ஸாப் போர் (அ) அகழ்ப் போர் (6) 32.43 கைபர் போர் (5) 32.42 கஅப் பின் அல்அஷ்ரஃப் கொல்லப்படுதல் (1) 32.41 அபூஜஹ்லு கொல்லப்படுதல் (1) 32.40 நபி (ஸல்) (மக்களை) இறைவன்பால் அழைத்து, துன்பங்களைப் பொறுத்துக் கொண்டது (2) 32.39 நபி (ஸல்) எதிர்கொண்ட துன்பங்கள் (7) 32.38 இறைதூதரால் கொல்லப்பட்டவன் மீது இறைவனின் கோபம் (1) 32.37 உஹுதுப் போர் (3) 32.36 கூட்டுப் படையினருக்கு எதிரான அகழ்ப் போர் (2) 32.35 வாக்குறுதியை(ப் போரிலும்) நிறைவேற்றுவது (1) 32.34 ஹுதைபிய்யா சமாதான உடன்படிக்கை’ (7) 32.33 மக்கா வெற்றிக்குப் பின் … (1) 32.32 கஅபாவைச் சுற்றிலும் இருந்த சிலைகளை அப்புறப்படுத்தியது (1) 32.31 மக்கா வெற்றி (2) 32.30 பத்ருப் போர் (1) 32.29 தாயிஃப் போர் (1) 32.28 ஹுனைன் போரில் … (5) 32.27 இறைமறுப்பு அரசர்களுக்கு நபி (ஸல்) எழுதிய கடிதங்கள் (1) 32.26 அழைப்பு விடுத்து ஹெராக்ளியஸ் மன்னருக்கு நபி (ஸல்) எழுதிய கடிதம் (1) 32.25 போரில் கிடைத்த உணவை, பகை நாட்டில் இருக்கும் போதே உண்ணலாம் (2) 32.24 முஹாஜிர்கள் தன்னிறைவு அடைந்தபோது … (2) 32.23 செயல்களுள் முன்னுரிமை அளிக்கத் தக்கது (1) 32.22 ஒப்பந்தத்தை முறித்துவிட்ட (பகை)வர்களுடன் போர் செய்யலாம் (3) 32.21 யூத கிறித்தவர்கள் அரபிய தீபகற்பத்திலிருந்து வெளியேற்றப்படுவது (1) 32.20 யூதர்களை ஹிஜாஸ் பகுதியிலிருந்து நாடு கடத்தியது (2) 32.19 கைதியை என்னென்னவெல்லாம் செய்யலாம் (1) 32.18 பத்ருப் போரில் வானவர்களின் உதவியும் … (1) 32.17 போர் வெற்றிச் செல்வத்தைப் பங்கிடும் முறை (1) 32.16 இறைத்தூதர்களுக்கு யாரும் (சொத்தில்) வாரிசாக முடியாது (5) 32.15 போர் செய்யாமல் கிடைத்த செல்வங்களின் சட்டம் (3) 32.14 … போர்க் கைதிகளைப் பரிமாறிக்கொள்வது (1) 32.13 போரில் கொல்லப்பட்ட எதிரியின் உடைமைகள் (4) 32.12 போர் வெற்றிச் செல்வங்கள் (7) 32.11 போர் வெற்றிச் செல்வங்கள் யாருக்குச் சொந்தம்? (1) 32.10 போரில் மரங்களை வெட்டுவதும் எரிப்பதும் அனுமதிக்கப்பட்டதாகும் (3) 32.9 பெண்களையும் குழந்தைகளையும் அறியாமல் கொன்றுவிட்டால் … (3) 32.8 போரில் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதற்குத் தடை (2) 32.7 எதிரிகளை(ப் போரில்) எதிர்கொள்ளும்போது பிரார்த்திப்பது (2) 32.6 எதிரியை(ப் போர்க் களத்தில்) சந்திக்க ஆசைப்படுவது வெறுக்கத் தக்கது … (2) 32.5 போரில் தந்திரம் அனுமதிக்கப்பட்டது (2) 32.4 மோசடி செய்வது தடை செய்யப்பட்டதாகும் (8) 32.3 மக்களிடம் இலகுவாக நடந்துகொள்ள வேண்டும்; வெறுப்பைக் கைவிட வேண்டும் (3) 32.2 படைத் தலைவர், போர் நெறிகள் குறித்து அறிவுறுத்துவது (1) 32.1 முன்னறிவிப்பின்றித் தாக்குதல் தொடுக்கலாமா? (1) 31.5 பயணத்தில் உணவைப் பகிர்ந்துண்ணல் (1) 31.4 செல்வத்தால் பிறருக்கு உதவுவது விரும்பத் தக்கது (1) 31.3 விருந்தோம்பல் சார்ந்தவை (3) 31.2 உரிமையாளரின் அனுமதியின்றி கால் நடையில் பால் கறப்பதற்குத் தடை (1) 31.1 ஹாஜிகள் தவறவிட்டவை (2) 31.0 கண்டெடுக்கப்பட்டவை (5) 30.11 நீதிபதி சமரசம் செய்துவைப்பது விரும்பத் தக்கதாகும் (1) 30.10 ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடு (1) 30.9 சாட்சிகளில் சிறந்தவர் (1) 30.8 தவறான தீர்ப்புகளைத் தள்ளுபடி செய்வதும் (மார்க்கத்தில் இல்லாத) புதுமைகளை நிராகரிப்பதும் (2) 30.7 கோபமாக இருக்கும் நீதிபதி, தீர்ப்பளிப்பது விரும்பத் தக்கதன்று (1) 30.6 நீதிபதியின் ஆய்வுக்கு நன்மை உண்டு (1) 30.5 தடைகள் மூன்று (4) 30.4 ஹிந்த் (ரலி) வழக்கு (3) 30.3 வாதங்களின் அடிப்படையில் தீர்ப்பு அமைந்துவிடுதல் (2) 30.2 சத்தியத்தின் / சாட்சியத்தின் அடிப்படையில் தீர்ப்பளித்தல் (1) 30.1 சத்தியம் செய்து நிரூபிப்பது பிரதிவாதிமீது கடமையாகும் (2) 29.11 இழப்பீடு இல்லாத விபத்துகள் (2) 29.10 தண்டனைகள், குற்றங்களுக்கான பரிகாரமாகும் (3) 29.9 சீர்திருத்திற்காக வழங்கப்படும் சாட்டையடிகளின் (அதிகபட்ச) அளவு (1) 29.8 மது அருந்திய குற்றத்திற்கான தண்டனை (4) 29.7 மகப்பேறான பெண்ணின் தண்டனையைத் தள்ளிவைத்தல் (1) 29.6 இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் யூதர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டாலும் கல்லெறி தண்டனை (6) 29.5 விபச்சாரம் செய்தவரின் ஒப்புதல் வாக்குமூலம் (9) 29.4 மணமானவர்கள் விபச்சாரம் செய்தால் கல்லெறி தண்டனை (1) 29.3 விபச்சாரக் குற்றத்திற்கான தண்டனை (2) 29.2 தண்டனையிலிருந்து விலக்கு அளிக்குமாறு பரிந்துரைப்பதற்குத் தடை (3) 29.1 தண்டனைக்குரிய திருட்டின் அளவுகோலும் தண்டனையும் (7) 28.11 சிசுக் கொலைக்கான இழப்பீடும் … (6) 28.10 கொலையாளி, தன் குற்றத்தை ஒப்புக்கொள்வதும் … (2) 28.9 மனிதர்களின் உயிர், தன்மானம், செல்வம் ஆகியவற்றுக்கு ஊறு விளைவிப்பது … (2) 28.8 மறுமையில் வழங்கப்படும் தீர்ப்பும் தண்டனையும் … (1) 28.7 கொலையை (உலகுக்கு) அறிமுகப்படுத்தியவர் மீதான பாவம் (1) 28.6 முஸ்லிமின் மரண தண்டனைக்கான காரணங்கள் (2) 28.5 பற்கள் போன்ற(உறுப்புகளான)வற்றில் பழிக்குப்பழி உண்டு (1) 28.4 தாக்க வந்தவனிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக … (6) 28.3 கல் மற்றும் கூராயுதங்களால் கொலை செய்தால், பழிக்குப்பழி உண்டு … (3) 28.2 வன்முறையாளர்களுக்கும் மதம் மாறியோருக்குமான தண்டனை (4) 28.1 அல்கஸாமா (4) 27.13 விடுதலைக்கு வாக்களிக்கப்பட்ட அடிமையை விற்கலாம் (2) 27.12 அடிமையில் தமது பங்கை மட்டும் விடுதலை செய்தல் (8) 27.11 ‏தன் உரிமையாளருக்கு விசுவாசமாகவும் … (4) 27.10 அடிமைக்கு எஜமானர் உண்பதிலிருந்து உணவளிப்பதும் … (4) 27.9 விபசாரம் செய்துவிட்டதாக அவதூறு கூறுவதற்கான கண்டனம் (1) 27.8 அடிமைகளுடனான நல்லுறவும் கன்னத்தில் அறைந்ததற்கான பரிகாரமும் (8) 27.7 இறைமறுப்பாளராக இருந்தபோது செய்த நேர்ச்சை… (2) 27.6 ஆகுமாக்கப்பட்டதற்கான சத்தியமாக இருந்தாலும் … (1) 27.5 இன்ஷா அல்லாஹ் என்பதை (சத்தியத்தின்போது) சேர்த்துக் கூறுதல் (4) 27.4 சொல்பவரின் எண்ணப்படியே ஒருவருடைய சத்தியம் அமையும் (2) 27.3 சத்தியம் செய்தவர், அதைவிடச் சிறந்ததாக மற்றொன்றைக் காணும்போது … (12) 27.2 ‘லாத்’ மற்றும் ‘உஸ்ஸா’வின் மீது சத்தியம் செய்துவிட்டவர் … (2) 27.1 அல்லாஹ்வைத் தவிர எவர்/எதன் மீதும் சத்தியம் செய்யத் தடை (3) 26.5 நேர்ச்சை முறிவுக்கான பரிகாரம் (1) 26.4 கஅபாவரை நடைப்பயணம் செல்வதாக நேர்ந்துகொண்டவர் (3) 26.3 இறைவனுக்கு மாறு செய்வதிலோ உரிமை இல்லாததிலோ நேர்ச்சை. (1) 26.2 நேர்ச்சை செய்வதற்குத் தடை; அது (விதியில்) எதையும் மாற்றிவிடாது (6) 26.1 நேர்ச்சையை நிறைவேற்றக் கட்டளை (1) 25.5 வசதியற்றவர் மரண சாஸனம் செய்ய முடியாது (6) 25.4 அறக்கொடை (1) 25.3 மனிதன் இறந்த பின்பும் தொடரும் நன்மைகள் (1) 25.2 இறந்துவிட்டவருக்காகச் செய்யப்படும் தர்மங்களின் நன்மை … (3) 25.1 மரண சாஸனம் 1/3 மட்டுமே (5) 25.0 மரண சாஸனம் (2) 24.4 ஆயுட்கால அன்பளிப்பு (11) 24.3 அன்பளிப்பு வழங்குவதில் பிள்ளைகளிடையே பாகுபாடு காட்டுவது … (10) 24.2 தானமும் அன்பளிப்பும் வழங்கப்பட்ட பின், திரும்பப் பெறுவதற்குத் தடை … (4) 24.1 தானமாகக் கொடுத்ததை விலைக்கு வாங்குவது விரும்பத் தக்கதல்ல (4) 23.4 ஒருவர் விட்டுச்செல்லும் செல்வம் அவருடைய வாரிசுகளுக்கு உரியதாகும் (4) 23.3 இறுதியாக அருளப்பெற்றது கலாலா வசனமாகும் (4) 23.2 ‘கலாலா’ சொத்துரிமை (5) 23.1 உரியவர்களுக்கும் உறவினருக்கும் பிரிக்கப்பட்ட பாகங்கள் (3) 23.0 ஒரு முஸ்லிம், இறைமறுப்பாளருக்கு வாரிசாகமாட்டார் (1) 22.31 பாதைக்கு நிலம் ஒதுக்குவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதற்கான தீர்வு (1) 22.30 பிறர் நிலத்தை அபகரித்தல் போன்ற அநீதி இழைத்தல்களுக்குத் தடை (6) 22.29 அண்டை வீட்டாரின் சுவரில் (சாரம் கட்டுவதற்கு) மரக்கட்டை பதிப்பது (1) 22.28 பங்காளியின் இசைவு (3) 22.27 வியாபாரத்தில் (வீண்)சத்தியம் செய்வது விலக்கப்பட்டுள்ளது (2) 22.26 உணவுப் பொருட்களைப் பதுக்குவதற்குத் தடை (2) 22.25 முன்பணம் செலுத்தும் வணிகம் (2) 22.24 அடமானம் உள்ளூரிலும் பயணத்திலும் செல்லும் (3) 22.23 ஓர் உயிரினத்தை அதே இனத்திற்குப் பதிலாக ஏற்றத்தாழ்வோடு விற்கலாம் (1) 22.22 உங்களில் சிறந்தவர் கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே (4) 22.21 ஒட்டகத்தை விற்றவர் அதில் பயணிக்க நிபந்தனை விதிப்பது (5) 22.20 அனுமதிக்கப்பட்டவற்றையும் ஐயத்திற்குரியவற்றையும் கையாளுதல் (1) 22.19 வட்டி வாங்குபவருக்கும் வட்டி கொடுப்பவருக்கும் சாபம் (2) 22.18 உணவுப் பொருளை, சரிக்குச் சரியாக விற்றல் (12) 22.17 பொன்னும் மணியும் பதித்த மாலையை விற்பது (4) 22.16 தங்கத்திற்கு வெள்ளியைக் கடனாக விற்பதற்குத் தடை (3) 22.15 நாணயமாற்று வியாபாரம்; வெள்ளிக்குத் தங்கத்தை ரொக்கத்துக்கு விற்பது (7) 22.14 வட்டி (4) 22.13 மது, செத்தவை, பன்றி, சிலைகள் ஆகியவற்றை விற்பதற்குத் தடை (4) 22.12 மதுபான வியாபாரத்திற்குத் தடை (4) 22.11 குருதி உறிஞ்சி எடுப்பதற்காகக் கூலி பெறுவது கூடும் (4) 22.10 வேட்டை, காவல், பாதுகாப்புக்காக நாய் வளர்க்கலாம் (18) 22.9 நாய் விற்ற காசு, சோதிடரின் தட்சணை, விபச்சாரியின் வருமானம் (4) 22.8 தேவைக்குப் போக மீதம் உள்ள நீரை விற்பதற்குத் தடை (5) 22.7 வசதியுள்ளவர் கடனைச் செலுத்த தாமதம் செய்யக் கூடாது (1) 22.6 கடனை அடைக்க சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிப்பதன் சிறப்பு (7) 22.5 திவாலானவரிடம் திரும்பப் பெற்றுக்கொள்ளும் உரிமை (4) 22.4 கடனில் தள்ளுபடி செய்வது விரும்பத் தக்கதாகும் (3) 22.3 சேதமடைந்த பழங்களுக்கான தொகைக்குத் தள்ளுபடி (5) 22.2 மரம் நடுதலின், பயிர் செய்தலின் சிறப்பு (5) 22.1 நிபந்தனையின் பேரில் தோப்பைக் குத்தகைக்கு விடுவது (4) 21.21 நிலத்தை (விளைவித்துக்கொள்ள) இரவலாக வழங்குவது (4) 21.20 ‘முஸார’ஆவும் ‘முஆஜரா’வும் (2) 21.19 பொன், வெள்ளி(நாயணங்களு)க்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (3) 21.18 தானியத்திற்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (2) 21.17 நிலக் குத்தகை (24) 21.16 தடை செய்யப்பட்ட வியாபார வகைகள் (6) 21.15 கனிகள் நிறைந்த பேரீச்ச மரத்தை விற்பது (4) 21.14 (மரத்திலுள்ள) செங்கனிகளை மாற்றிக் கொள்வதற்குத் தடை (14) 21.13 மரத்திலுள்ள பழங்களை முற்றுவதற்கு முன் விற்பதற்குத் தடை (10) 21.12 வியாபாரத்தில் ஏமாற்றப்படுபவர் (1) 21.11 வியாபாரத்தில் உண்மை பேசுவதும் குறைகளைத் தெளிவுபடுத்துவதும் (1) 21.10 விற்பவருக்கும் வாங்குபவருக்கும் வியாபாரத்தை முறித்துக்கொள்ளும் உரிமை (4) 21.9 அளவு தெரியாத பேரீச்சம் பழக் குவியலை விற்பதற்குத் தடை (1) 21.8 வாங்கப்பட்ட பொருள் கைக்கு வருமுன் (பிறருக்கு) விற்பது கூடாது (13) 21.7 மடி கனக்கச் செய்யப்பட்ட கால்நடைகளை விற்பனை செய்வது பற்றிய சட்டம் (5) 21.6: கிராமவாசிக்காக, நகரவாசி விற்றுக் கொடுக்கத் தடை (5) 21.5: விற்பனைக்கு வரும் சரக்குகளை இடைமறித்து வாங்கத் தடை (4) 21.4: வியாபாரத்தில் தடை செய்யப்பட்டவை (7) 21.3: ஒட்டகக் கன்று (அது பிறக்குமுன்) விற்பதற்கு தடை! (2) 21.2: கல்லெறி வியாபாரம் மற்றும் மோசடி வியாபாரம் ஆகியவை செல்லாது (1) 21.1: ‘முலாமஸா’ மற்றும் ‘முனாபதா’ ஆகிய வியாபாரங்கள் செல்லாது (3) 20.7: அடிமையான தந்தையை விடுதலை செய்வதன் சிறப்பு (1) 20.6: அடிமைகளை விடுதலை செய்வதன் சிறப்பு (4) 20.5: விடுதலை செய்த உரிமையாளரை மாற்றிக் கூறத் தடை (4) 20.4: வாரிசாகும் உரிமையை விற்பதற்கும் அன்பளிப்பாக வழங்குவதற்கும் தடை (1) 20.3: விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியது (9) 20.2: அடிமை (தனது முழு விடுதலைக்காக) உழைத்துப் பொருளீட்டுவது (2) 20.1: ஓர் அடிமையி(ன் விலையி)ல், ஒருவர் தமக்கான பங்கை விடுவிப்பது (1) 19.1: சுய சாபம் வேண்டுதல் (17) 18.9: கணவன் இறந்து ‘இத்தா’விலிருக்கும் பெண் துக்கம் கடைப்பிடிப்பது (11) 18.8: கர்ப்பமுற்றிருக்கும் பெண்ணின் ‘இத்தா’க் காலம், பிரசவத்துடன் முடிந்துவிடும் (2) 18.7: ‘இத்தா’விலிருக்கும் பெண் தன் தேவைக்காக வெளியே செல்லலாம் (1) 18.6: மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சம் பற்றி… (18) 18.5: ஈலாச் செய்வது, மனைவியிடமிருந்து விலகுவது, விருப்ப உரிமை அளிப்பது (5) 18.4: மனைவிக்கு (த் தம்மைப் பிரிந்துவிட) உரிமை அளிப்பது மணவிலக்கு ஆகாது (8) 18.3: மணவிலக்குச் செய்யும் நோக்கமின்றி கூறினால், அது மணவிலக்கு ஆகாது (4) 18.2: மூன்று தலாக்குகள் (3) 18.1: மாதவிடாயான மனைவியை அவளது சம்மதமின்றி மணவிலக்குச் செய்வதற்குத் தடை (14) 17.19: ஹவ்வா-வும், பெண்கள் கணவரை ஏமாற்றுதலும் (2) 17.18: மனைவியரின் நலம் நாடுதல் (4) 17.17: பயன் தரும் இவ்வுலகச் செல்வங்களுள் மிகச் சிறந்த செல்வம், நற்குணமுள்ள மனைவியே (1) 17.16: கன்னிப் பெண்ணை மணப்பது விரும்பத் தக்கதாகும் (5) 17.15: மார்க்கப் பற்றுள்ள பெண்ணை மணப்பது விரும்பத் தக்கதாகும் (2) 17.14: மனைவியருள் ஒருவர், தனது முறைநாளை மற்றவருக்கு விட்டுக்கொடுக்கலாம் (4) 17.13: மனைவியருக்கு (இரவுகளை) ஒதுக்கீடு செய்வது (1) 17.12: கன்னி கழிந்த பெண்ணுக்கும், கன்னிப் பெண்ணுக்கும் கணவன் ஒதுக்க வேண்டிய நாட்கள் (6) 17.11: சாயல் அறியும் நிபுணரின் கூற்றுப்படி, குழந்தைக்கு உரியவரைக் கண்டறிவது (3) 17.10: எஜமானரின் கீழ் வாழும் பெண்ணின் குழந்தை, அவருக்கே உரியது (2) 17.9: பெண் போர்க் கைதியுடன் உடலுறவு கொள்ளலாம் (2) 17.8: பசிக்காகத் தாய்ப்பால் அருந்தினால்தான் பால்குடி உறவு ஏற்படும் (1) 17.7: பருவ வயதை அடைந்தவருக்குப் பாலூட்டுவது (6) 17.6: ஐந்து தடவை அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும் (2) 17.5: ஓரிரு தடவை (பெண்ணின் மார்பில்) பால் குடிப்பது பற்றிய சட்டம் (6) 17.4: மனைவியின் மகளையும் மனைவியின் சகோதரியையும் மணப்பதற்குத் தடை (2) 17.3: பால்குடிச் சகோதரரின் மகளை மணப்பது தடை செய்யப்பட்டுள்ளது (3) 17.2: பால்குடித் தந்தையின் (இரத்த பந்த) உறவினரும் மணமுடிக்கத் தகாதவரே! (6) 17.1: பிறப்பால் ஏற்படும் உறவும் பால்குடி உறவும் (2) 16.24: பாலூட்டும் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அஸ்லுச் செய்வது வெறுக்கத் தக்கது (3) 16.23: கருவுற்றிருக்கும் பெண் போர்க் கைதியுடன் உடலுறவு கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது (1) 16.22: உடலுறவின்போது இடைமுறிப்பு – ‘அஸ்லு’ச் சட்டம் (12) 16.21: மனைவியுடன் நடைபெறும் உடலுறவு இரகசியங்களை வெளியே சொல்வது தடுக்கப்பட்டது (2) 16.20: ஒரு பெண், தன் கணவனின் படுக்கைக்குச் செல்ல மறுப்பதற்குத் தடை (3) 16.19: உடலுறவின் ஒழுங்குகள் (2) 16.18: உடலுறவின்போது ஓத வேண்டிய விரும்பத் தகுந்த பிரார்த்தனை (1) 16.17: மூன்று முறை மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்ணின் மறுவிருப்பம் (4) 16.16: விருந்துக்கான அழைப்பை ஏற்பது பற்றிய கட்டளை (13) 16.15: ஸைனப் பின்த்து ஜஹ்ஷு (ரலி) திருமணம்; ஹிஜாப் பற்றிய வசனம்; மணவிருந்து (7) 16.14: அடிமைப் பெண்ணை விடுதலை செய்து, பின்னர் அவளை மணமுடித்துக்கொள்வதன் சிறப்பு (6) 16.13: மணக்கொடை (மஹ்ரு) என்பது … (7) 16.12: ஒருவர் தாம் மணமுடிக்க விரும்பும் பெண்ணின் முகத்தையும் இரு முன் கைகளையும் பார்ப்பது (2) 16.11 ஷவ்வால் மாதத்தில் மணமும் தாம்பத்திய உறவும் (1) 16.10: இளவயதுக் கன்னிக்கு அவளுடைய தந்தை மணமுடித்துவைத்தல் (4) 16.9: மணப் பெண்ணின் வாய் வழிச் சம்மதமும் மௌனச் சம்மதமும் (4) 16.8: திருமண (முன்) நிபந்தனைகளை நிறைவேற்றல் (1) 16.7: மணக்கொடையில்லா திருமணம் செல்லாது (5) 16.6: தம் (முஸ்லிம்) சகோதரன் கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணை, மற்றவர் கேட்கலாகாது (7) 16.5: இஹ்ராம் புனைந்தவர் திருமணம் செய்வதற்குத் தடை; அவர் பெண் கேட்பது வெறுக்கத் தக்கது (8) 16.4: மனைவியின் அத்தையை, சின்னம்மாவை மணக்கத் தடை (8) 16.3: இடைக்காலத் திருமணம், (முத்ஆ) காலாவதியானது (21) 16.2: இச்சை தூண்டப்பட்டவர், தமது இச்சையைத் தணித்துக் கொள்ளட்டும் (2) 16.1: வசதி இருந்தால் மணமுடிப்பதும் இல்லாதவர் நோன்பு நோற்பதும் (6) 15.97: குபாப் பள்ளிவாசல், அதில் தொழுவது, அதைத் தரிசிப்பது ஆகிய சிறப்புகள் (7) 15.96: இறையச்சத்தின் மீது நிறுவப்பட்ட பள்ளிவாசல் (1) 15.95: மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெதற்கும் (புனிதப்) பயணம் கிடையாது (2) 15.94: மக்கா, மதீனாப் பள்ளிவாசல்களில் தொழுவதன் சிறப்பு (6) 15.93: ‘உஹுத்’ மலை நம்மை நேசிக்கிறது; நாமும் அதை நேசிக்கின்றோம் (3) 15.92: சொர்க்கப் பூஞ்சோலைகளுள் ஒன்று (3) 15.91: மதீனாவாசிகள் மதீனாவை விட்டு அகலும்போது அதன் நிலை (2) 15.90: மதீனாவிலேயே தங்கியிருப்பதற்கு ஆர்வமூட்டல் (2) 15.89: மதீனாவாசிகளுக்குக் கேடு நினைப்பவர்களை, அல்லாஹ் உருக்குலைத்துவிடுவான் (3) 15.88: தன்னிலுள்ள தீயவர்களை மதீனா அகற்றிவிடும் (5) 15.87: கொள்ளை நோயும் தஜ்ஜாலும் நுழைய முடியாமல் மதீனா பாதுகாக்கப்பட்டுள்ளது (2) 15.86: மதீனாவில் ஏற்படும் நெருக்கடிகளைச் சகித்துக்கொண்டு, அங்குக் குடியிருக்க ஆர்வ மூட்டல் (10) 15.85: மதீனாவின் சிறப்பு; பிரார்த்தித்ததும் புனிதமானவையும் (17) 15.84: இஹ்ராமின்றி மக்காவிற்குள் நுழைய அனுமதி (5) 15.83: அவசியத் தேவையின்றி மக்காவிற்குள் ஆயுதம் எடுததுச் செல்வதற்குத் தடை (1) 15.82: மக்காவும், அதன் புனிதமானவைகளும் (4) 15.81: முஹாஜிருக்கு மக்காவில் தக்குவதற்கு அனுமதிக்கப்பட்ட நாட்கள் (4) 15.80: ஹாஜிகள் மக்காவில் தங்குவதும் அங்குள்ள வீடுகளை வாரிசுரிமையாகப் பெறுவதும் (3) 15.79: ஹஜ், உம்ரா, அரஃபா நாள் ஆகியவற்றின் சிறப்பு (3) 15.78: இணைவைப்பவருக்கான ஹஜ் சட்டங்கள் (1) 15-77: ஹஜ் அல்லது உம்ராவிலிருந்து திரும்பும்போது துல்ஹுலைஃபாவில் தங்கித் தொழுவது (5) 15.76: பயணத்திலிருந்து திரும்பி வரும்போது ஓத வேண்டியவை (2) 15.75: பயணங்களில் வாகனத்தில் ஏறியதும் ஓத வேண்டிய துஆ (2) 15.74: மஹ்ரமான ஆணுடன் மட்டுமே பெண்ணின் ஹஜ் முதலான பயணம் (11) 15.73: ஹஜ் கடமை, ஆயுளில் ஒரு முறைதான் (1) 15.72: குழந்தையின் ஹஜ் செல்லும்; அதை ஹஜ்ஜுக்கு அழைத்துச் சென்றவருக்கும் நற்பலன் உண்டு (3) 15.71: இயலாதவருக்காகவோ, இறந்தவருக்காகவோ பிறர் ஹஜ் செய்தல் (2) 15.70: கஅபாவின் வளைந்த சுவரும் அதன் தலைவாயிலும் (1) 15.69: இறையில்லம் கஅபாவை இடித்துக் கட்டுதல் (7) 15.68: கஅபாவின் உள்ளே நுழைவதும் அதனுள் தொழுவதும் (9) 15.67: விடைபெறும் தவாஃப் மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணுக்குக் கடமையில்லை (8) 15.66: செல்லும் வழியில் பலிப் பிராணி பாதிப்புக்குள்ளாகிவிட்டால் … (2) 15.65: பலியிடக் கொண்டுசெல்லும் ஒட்டகத்தில், பயணம் செய்ய அனுமதி (6) 15-64: ஹரம் எல்லைக்குச் செல்லாதவர், பலிப் பிராணியை அனுப்பிவைக்கும் முறை (11) 15.63: ஒட்டகத்தை அறுக்கும் முறை (1) 15.62: பலிப் பிராணிகளுள் மாட்டிலும் ஒட்டகத்திலும் கூட்டுச் சேர்வது (8) 15.61: பலிப் பிராணிகளின் இறைச்சி, தோல், சேணம் ஆகியவை தர்மத்துக்குரியன (2) 15.60: ‘தஷ்ரீக்’ நாட்களின் இரவுகளில் மினாவில் தங்குவது கட்டாயமாகும் (2) 15.59: ‘நஃப்ரு’டைய நாளில் ‘அல்முஹஸ்ஸபி’ல் தங்குவதும் அங்குத் தொழுவதும் (9) 15.58: துல்ஹஜ் பத்தாவது நாளில் ‘தவாஃபுல் இஃபாளா’ செய்வது (2) 15.57: ஹஜ் சடங்குகளில் முன் – பின் ஆகிவிட்டால் … (6) 15.56: துல்ஹஜ் பத்தாம் நாளின் சடங்குகள் (3) 15.55: தலைமுடியை மழிப்பதும் குறைப்பதும் (6) 15.54: கற்களின் எண்ணிக்கை (1) 15.53: கல்லெறியும் நேரம் (1) 15.52: பொடிக் கற்கள் போதும் (1) 15.51: துல்ஹஜ் பிறை பத்தில் ஜம்ரத்துல் அகபாவுக்குக் கல்லெறிதல் (3) 15.50: ‘ஜம்ரத்துல் அகபா’வின் மீது கல் எறியும்போது தக்பீர் கூறுவது (4) 15.49: முஸ்தலிஃபாவிலிருந்து மினாவிற்குப் புறப்படச் செய்வது (11) 15.48: முஸ்தலிஃபாவில் ஸுப்ஹுத் தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவது (1) 15.47: மஃக்ரிப், இஷா வை அடுத்தடுத்துத் தொழுவது (14) 15.46: அரஃபா நாளில் மினாவிலிருந்து அரஃபாவிற்குப் போகும்போது தல்பியாவும் தக்பீரும் கூறுதல் (4) 15.45: துல்ஹஜ் பத்தாவது நாளன்று கல்லெறியத் துவங்கும்வரை தல்பியாச் சொல்லிக்கொண்டிருப்பது (7) 15.44: ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீ (ஓட்டம்) ஒரே தடவைதான் (1) 15.43: ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீச் செய்வது முக்கியக் கடமையாகும் (5) 15.42: வாகனங்கள் மீதமர்ந்து தவாஃப் செய்யலாம் (6) 15.41: தவாஃபின்போது ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது (5) 15.40: இறையில்லத்தில் முத்தமிடப்படும் இரு மூலைகள் (6) 15.39: தவாஃபில் விரைந்து நடப்பது விரும்பத்தக்கது (12) 15.38: மக்காவினுள் நுழையும் முன்… (4) 15.37 மக்காவினுள் நுழைவதும் வெளியேறுவதும் (3) 15.36 ரமளான் மாதத்தில் உம்ராச் செய்வதன் சிறப்பு (2) 15.35: நபியவர்களின் உம்ரா எண்ணிக்கையும் காலமும் (4) 15.34 நபியவர்களின் தல்பியாவும் பலியும் (4) 15.33: உம்ராவில் தலைமுடி குறைத்தல் (5) 15.32: இஹ்ராமின்போது பலிப் பிராணி (4) 15.31: ஹஜ்ஜுப் பருவங்களில் உம்ராச் செய்ய அனுமதி (6) 15.30: தமத்துஉ ஹஜ் (2) 15.29: இஹ்ராம் ஹாஜிக்குக் கட்டாயம் (3) 15.28: தவாஃபும் ஸயீயும் கட்டாயம் (3) 15.27: ஹஜ் உம்ரா சேர்த்தும் தனித்தும் செய்வது (3) 15.26: ஒரே இஹ்ராமில் உம்ரா ஹஜ் (3) 15.25: இஹ்ராமிலிருந்து விடுபடுதல் (3) 15.24: பலிப் பிராணியும் ஹஜ் கடமையும் (2) 15.23: தமத்துஉ ஹஜ் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும் (13) 15.22: ஒருவர் வேறொருவரின் இஹ்ராமை அச்சொட்டி பூணுதல் (3) 15.21: அரஃபா பெருவெளியில் தங்கி திரும்புதல் தொடர்பான இறை கூற்று (3) 15.20: அரஃபாப் பெருவெளி முழுவதும் தங்குமிடம் (2) 15.19: நபி (ஸல்) அவர்களின் ஹஜ் (1) 15.18: உம்ராவையும் ஹஜ்ஜையும் தனித் தனியாக நிறைவேற்றி பயனடைதல் (2) 15.17: இஹ்ராமின் முறைகள் (27) 15.16: இரத்தப்போக்குடைய பெண் இஹ்ராமில் குளித்தல் (2) 15.15: இஹ்ராமிலிருந்து விடுபட முன் நிபந்தனையிட அனுமதி (5) 15.14: முஹ்ரிம் இறந்துவிட்டால் செய்ய வேண்டியவை (9) 15.13: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், தம் உடலைக் கழுவிக்கொள்ள அனுமதி (1) 15.12: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், தம் கண்களுக்கு மருந்திட அனுமதி (2) 15.11: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், ஹிஜாமா செய்ய அனுமதி (2) 15.10: முஹ்ரிமுக்குத் தலைமுடி மழிக்க அனுமதியும் பரிகாரமும் (7) 15.09: ஹரம் எல்லைக்குள் கொல்ல அனுமதிக்கப்பட்டவைகள் (12) 15.08: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம் வேட்டையாடுவது குறித்து.. (9) 15.07: இஹ்ராமின்போது நறுமணம் பூசுதல் (19) 15.06: துல்ஹுலைஃபா பள்ளியில் தொழுதல் (1) 15.05: வாகனம் புறப்படுவதற்கு ஆயத்தமானவுடன் தல்பியா கூறுவது (4) 15.04: மதீனாவாசிகள் இஹ்ராம் பூண வேண்டிய இடம் (2) 15.03: தல்பியாவின் பண்பும் அதன் நேரமும் (4) 15.02: ஹஜ்/உம்ராவிற்கான இஹ்ராம் எல்லைகள் (7) 15.01: ஹஜ்/உம்ராவில் அனுமதிக்கப்பட்டவை.. (10) 14.04: துல்ஹஜ் மாதத்தின் பத்து நோன்புகள் (2) 14.02: இஃதிகாஃப் இருக்குமிடத்தினுள் நுழையும் நேரம் (1) 14.03: இறுதிப் பத்தில் வழிபாடுகளில் ஈடுபடுவது (2) 14.01: இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருத்தல் (5) 13.40: லைலத்துல் கத்ர் இரவு குறித்து.. (17) 13.39: ஷவ்வால் ஆறு நோன்பு (1) 13.37: ஷஅபான் மாத இறுதியில் நோன்பு நோற்றல் (3) 13.38: முஹர்ரம் நோன்பின் சிறப்பு (2) 13.36: சுன்னத்தான நோன்புகள் (5) 13.35: ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு (12) 13.34: நோன்பில்லாமல் எந்த மாதத்தையும் கடக்க விடாமலிருப்பது விரும்பத் தக்கது (9) 13.33: மறதியால் (நோன்பாளி) நோன்பு முறியாது (1) 13.32: கூடுதலான நோன்பு முடிவு செய்வதற்கும் விடுவதற்கும் அனுமதி (2) 13.31: அல்லாஹ்வின் பாதையில் செல்லும்போது சக்தி பெற்றிருப்பவர் நோன்பு நோற்பதன் சிறப்பு (2) 13.30: நோன்பின் மாண்பு (6) 13.29: நோன்பாளி, நாவைக் காப்பது (1) 13.28: நோன்பாளி விருந்துக்கு அழைக்கப்பட்டால் “நான் நோன்பாளி” என்று சொல்லிவிட வேண்டும் (1) 13.27: இறந்துபோனவரின் விடுபட்ட நோன்பை நோற்பது (5) 13.26: ரமளானில் விடுபட்ட நோன்பை ஷஅபான் மாதத்தில் ‘களா’ச் செய்தல் (2) 13.25: இறைவசனம் வேறொரு வசனத்தின் மூலம் மாற்றம் (2) 13.24: வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்பது விரும்பத் தக்கதன்று (3) 13.23: அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் நோன்பு நோற்பதற்குத் தடை (2) 13.22: நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் நோன்பு நோற்பதற்குத் தடை (6) 13.20: ஆஷூரா நோன்பை எந்த நாளில் நோற்க வேண்டும்? (4) 13.19: ஆஷூரா நாளில் நோன்பு நோற்றல் (17) 13.18: அரஃபா நாளில் அரஃபாவில் தங்கும் ஹாஜிகளின் நோன்பு (4) 13.17: பயணத்தில் நோன்பு நோற்பதையோ விட்டுவிடுவதையோ தேர்ந்துகொள்ளலாம் (5) 13.16: பயணத்தில் நோன்பைக் கைவிட்டவர், பொதுப் பணியாற்றினால் கிடைக்கும் நன்மை (3) 13.15: பயணத்தில் இருப்பவர் மீதான கடமையான ரமளான் நோன்பு (11) 13.14: ரமளான் பகலில் உடலுறவில் ஈடுபடுவதற்குத் தடையும் அதன் பரிகாரமும் (5) 13.13: பெருந்துடக்குடன் வைகறைப் பொழுதை அடைந்தவரின் நோன்பு செல்லும் (6) 13.12: கட்டுப்படுத்தும் நோன்பாளிக்கு (தம் மனைவியை) முத்தமிடத் தடையில்லை (13) 13.11: தொடர்நோன்பு நோற்பதற்குத் தடை (7) 13.10: பகற் பொழுது வெளியேறி நோன்பு நிறைவடையும் நேரம் (3) 13.09: ஸஹரைத் தாமதிப்பதும் நோன்பு துறப்பதை விரைந்து செய்வதும் (6) 13.08: ஃபஜ்ரு நேரம் வந்தவுடன் நோன்பு ஆரம்பமாகிவிடும் (11) 13.07: ‘இரு பெருநாட்களின் இரு மாதங்களும் குறைவுபடாது’ நபிகளாரின் விளக்கம் (2) 13.06: (வானை) மேகம் மூடிக்கொண்டால் (மாதத்தின் நாட்கள்) முப்பதாக முழுமையாக்கப்படும் (2) 13.05: ஒவ்வோர் ஊர்க்காரர்களுக்கும் அவரவர் பார்க்கும் பிறையே பொருந்தும் (1) 13.04: மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கும் (6) 13.03: ரமளானுக்கு முந்தைய இரு நாள்களில் நோன்பு நோற்கக் கூடாது (1) 13.02: ரமளான் நோன்பு தொடக்கமும் முடிவும் (17) 13.01: ரமளான் மாதத்தின் சிறப்பு (2) 12.55: ஸகாத் வசூலிப்பவர், தடை செய்யப்பட்டதைக் கோராதவரை அவரைத் திருப்திபடுத்த வேண்டும் (1) 12.54: தர்மப் பொருள் கொண்டுவந்தவருக்காகப் பிரார்த்தித்தல் (1) 12.53: நபி (ஸல்) அன்பளிப்பை ஏற்றதும் தர்மத்தை மறுத்ததும் (1) 12.52: தர்மப் பொருள், அதன் பண்பு நீங்கி விடுதல் (5) 2.27: நாய் நக்கிய பாத்திரம் பற்றிய சட்டம் (6) 2.28: தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் சிறுநீர் கழிப்பதற்குத் தடை (3) 2.29: பெருந்துடக்குடையவர் தேங்கிய நீரில் இறங்கிக் குளிக்கத் தடை (1) 2.30: பள்ளிவாசலில் சிறுநீர் கழித்தால்… (3) 2.31: தாய்பால் குடிக்கும் குழந்தையின் சிறுநீரைக் கழுவும் சட்டம் (4) 2.32: விந்து பற்றிய சட்டம் (4) 2.33: மாதவிடாய் இரத்தம் கழுவும் முறை (1) 2.34: சிறுநீரைச் சுத்தம் செய்வது கட்டாயம் (1) 3.01: மாதவிடாயான மனைவியைக் கீழாடைக்கு மேல் அணைத்துக் கொள்வது. (3) 3.02: மாதவிடாயான மனைவியுடன் ஒரே போர்வைக்குள் படுத்துக் கொள்வது. (2) 3.03: மாதவிடாயான பெண் செய்ய அனுமதிக்கப்பட்டவை (11) 3.04: இச்சை நீர் (3) 3.05: உறங்கி எழுந்ததும் முகத்தையும் கையையும் கழுவுதல் (1) 3.06: பெருந்துடக்காளி செய்ய வேண்டியவை (8) 3.07: மதன நீர் வெளிப்பட்ட பெண்ணுக்குக் குளியல் கடமை. (5) 3.08: ஆண்/பெண் (விந்து-மதன)நீரிலிருந்துதான் குழந்தை உருவாகிறது. (1) 3.09: பெருந்துடக்கிற்கான குளியல் முறை (5) 3.10: பெருந்துடக்கு குளியல் தொடர்பானவை (14) 3.11: குளிக்கும் போது மூன்றுமுறை தண்ணீர் ஊற்றுதல் (4) 3.12: குளிக்கும் பெண்களின் சடைமுடி பற்றிய சட்டம் (2) 3.13: மாதவிடாய் குளியலின் போது கஸ்தூரி பயன்படுத்துதல் (2) 3.14: தொடர் உதிரப் போக்குடைய பெண்களின் தொழுகை மற்றும் குளியல் (5) 3.15: மாதவிடாய் நாட்களில் விடுபட்ட கடமைகள் (3) 3.16: குளிப்பவர் திரையிட்டுக் கொள்தல் (3) 3.17: பிறரின் மறையுறுப்பைப் பார்த்தல் (1) 3.18: தனித்துக் குளிக்கும் போது ஆடையின்றி குளித்தல் (1) 3.19: மறையுறுப்பை மறைத்துக் கொள்வதில் கவனம் (3) 3.21: (விந்து)நீர் வெளிப்பட்டாலே (குளியல்)நீர் கடமையாகும் (9) 3.22: ஆண்-பெண் குறிகள் இணைந்து விட்டால் குளியல் கடமையாகும் (3) 3.23: சமைக்கப்படவற்றை உண்டால் மீண்டும் உளூ செய்தல் (3) 3.24: சமைக்கப் பட்டவற்றை உண்டால் உளூச் செய்யும் கட்டாயம் மாற்றப் பட்டது (8) 3.25: ஒட்டக இறைச்சி உண்டால் உளூச் செய்ய வேண்டும் (1) 3.26: வாயு பிரிந்த சந்தேகம் ஏற்பட்டாலும் தொழலாம் (2) 3.27: பதனிடப்படுவதால் செத்த பிராணியின் தோல் தூய்மை ஆகும் (7) 3.28: தயம்மும் (6) 3.29: ஒரு முஸ்லிம் (பெருந்துடக்கு ஏற்பட்டதால்) அசுத்தமாகிவிட மாட்டார். (2) 3.30: பெருந்துடக்கு போன்ற நிலைகளிலும் அல்லாஹ்வைத் துதித்தல். (1) 3.31: சிறுதுடக்காளி (உளூச் செய்யாமல்) உண்ணலாம் (4) 3.32: கழிப்பிடத்திற்குச் செல்லும்போதான பிரார்த்தனை (1) 3.33: உட்கார்ந்து கொண்டு உறங்குவது உளூவை முறிக்காது. (4) 4.01: தொழுகை அழைப்பின் தொடக்கம் (1) 4.02: தொழுகை அறிவிப்பு தொடர் அமையும் விதம் (3) 4.03: தொழுகை அழைப்பு முறை (1) 4.04: ஒரு பள்ளிவாசலுக்கு இரு தொழுகை அழைப்பாளர்கள் (1) 4.05: பார்வையற்றவர் தொழுகை அழைப்பு விட நிபந்தனை (1) 4.06: போரின் போது இணைவைப்பாளர் நாட்டில் தொழுகை அழைப்பு விடுக்கப்பட்டால் (1) 4.07: தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் செய்ய வேண்டியவை (4) 4.08: தொழுகை அழைப்பின் சிறப்பும் ஷைத்தான் வெருண்டோடுவதும் (6) 4.09: இரு கைகளையும் தோள் புஜத்துக்கு உயர்த்துதல் (4) 4.10: அல்லாஹு அக்பர், ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ் கூறும் இடங்கள் (5) 4.11: தொழுகையில் அல்ஃபாத்திஹா அத்தியாயம் ஓதுதல் (8) 4.12: இமாமைப் பின்பற்றித் தொழுபவர் உரத்து ஓதலாகாது (2) 4.13: பிஸ்மில்லாஹ்வை(த் தொழுகையில்) உரத்து ஓதாலாகாது என்போரின் வாதம் (2) 4.14: அத்தியாயங்களின் துவக்கம் “பிஸ்மில்லாஹ்” குறித்த வாதம் (1) 4.15: தக்பீருக்குப் பின்னும் சஜ்தாவிலும் கைகளை வைக்கும் முறை (1) 4.16: தொழுகையில் அத்தஹிய்யாத் ஓதுவது (4) 4.17: இறுதி அத்தஹியாத்திற்குப் பின் ஸலவாத் கூறுதல் (4) 4.18: ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா ல(க்)கல் ஹம்து, ஆமீன் ஆகியவை கூறுவது (5) 4.19: இமாமை மஃமூம் பின்தொடர்வது (5) 4.20: இமாமை முந்துவதற்குத் தடை (4) 4.21: இமாமைப் பின்பற்றுவதில் சட்ட மாற்றம் (10) 4.22: இமாம் வருவதற்குத் தாமதமானால்… (2) 4.23: தொழுகையில் இமாமுக்கு ஏதாவது உணர்த்த விரும்பினால்… (1) 4.24: தொழுகையை முழுமையாக உள்ளச்சத்துடன் தொழல் (4) 4.25: தொழுகையில் இமாமை முந்தாமல் இருத்தல் (7) 4.26: தொழும்போது வானத்தை அண்ணாந்து பார்ப்பதற்குத் தடை (2) 4.27: தொழுகையில் ஒழுங்குகள் (3) 4.28: தொழுகையில் வரிசைகளைப் பேணுதல் (11) 4.29: ஆண்களுக்குப் பின்னால் தொழும் பெண்கள் தலை உயர்த்தும் முறை (1) 4.30: பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்தல், நறுமணம் பூசுதல் (11) 4.31: தொழுகையில் அச்சநிலையில் குர்ஆன் ஓதும் முறை (2) 4.32: குர்ஆன் ஓதப்படும்போது செவிதாழ்த்திக் கேட்க வேண்டும். (2) 4.33: ஸுப்ஹுத் தொழுகையில் உரத்துக் குர்ஆன் ஓதுதல் (4) 4.34: லுஹ்ரு, அஸ்ருத் தொழுகைகளில் குர்ஆன் ஓதுதல் (8) 4.35: ஸுப்ஹுத் தொழுகையில் குர்ஆன் ஓதுதல் (13) 4.36: இஷாத் தொழுகையில் குர்ஆன் ஓதுவது (8) 4.37: தொழுகையைச் சுருக்கி, நிறைவுறத் தொழுவிப்பதற்கான கட்டளை (11) 4.38: தொழுகையின் நிலைகளை நிதானமாக, சுருக்கி, நிறைவாகச் செய்வது (4) 4.39: தொழுகையில் இமாமை முந்தி விடாமலிருத்தல் (5) 4.40: ருகூஉவிலிருந்து தலையை உயர்த்திய பின் ஓத வேண்டியவை (5) 4.41: ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் குர்ஆன் ஓதுவதற்குத் தடை (6) 4.42: ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் ஓத வேண்டியவை (9) 4.44: ஸஜ்தாவின் போது தரையில் படவேண்டிய உறுப்புகள் (7) 4.45: சீராக ஸஜ்தா செய்தல் (2) 4.46: தொழுகை முறைத் தொகுப்பு (5) 4.47: தனித்துத் தொழுபவர் தடுப்பு ஒன்றை வைத்துக் கொள்வது (13) 4.48: தொழுகையில் குறுக்கே செல்பவரைத் தடுப்பது (4) 4.49: தொழுபவர், தடுப்புக்கு நெருக்கமாக நிற்க வேண்டும் (3) 4.50: தொழுபவருக்கான குறுக்குத் தடுப்பின் அளவு (2) 4.51: தொழுபவருக்குக் குறுக்கே படுத்திருப்பது (8) 4.52: ஒரே ஆடை அணிந்து தொழும் முறை (9) 5.01: பூமியில் எழுப்பப்பட்ட முதலாவது இறையாலயம் (8) 5.02: மஸ்ஜிதுந் நபவீ கட்டப்பட்ட வரலாறு (2) 5.03: தொழுகைத் திசை(கிப்லா) கஅபாப் பள்ளிக்கு மாற்றம் (4) 5.04: மண்ணறைகளில் செய்யக்கூடாதவை (6) 5.05: மஸ்ஜிதுகள் கட்டுவதன் சிறப்பும் அதற்கான ஆர்வமூட்டலும் (2) 5.06: ருகூஉவில் உள்ளங்கைகளை வைப்பதற்கான சட்டத் திருத்தம் (5) 5.07: இரு குதிகால்கள்மீது (தொழுகை அமர்வில்) அமர அனுமதி (1) 5.08: தொழுகையில் பேசிக் கொள்ள இருந்த அனுமதி நீக்கம் (6) 5.09: தொழுகைக்கு இடையில் செய்ய அனுமதிக்கப்பட்டவை (2) 5.10: குழந்தைகளைச் சுமந்துகொண்டு தொழுவதற்கு அனுமதி (3) 5.11: தொழுகையின்போது ஓரிரு அடிகள் நடக்க அனுமதி (1) 5.12: இடுப்பில் கையூன்றிக் கொண்டு தொழுவது வெறுக்கத் தக்கது (1) 5.13: தொழும்போது மண்ணைச் சமப்படுத்துதல் வெறுக்கத் தக்கது (3) 5.14: பள்ளிவாசலில் எச்சில் துப்பத் தடை (10) 5.15: காலணி அணிந்து கொண்டு தொழுவதற்கு அனுமதி (1) 5.16: கவனத்தை ஈர்க்கும் ஆடை அணிந்து தொழுதல் வெறுக்கப்பட்டது (3) 5.17: சிறுநீர்/மலம் அடக்குதல், உணவு காக்க வைத்தல் நிலையில் தொழுதல் (4) 5.18: துர்நாற்றத்துடன் பள்ளிச்செல்லுதலும் அவரை வெளியேற்றலும் (10) 5.19: பள்ளிவாசலினுள் காணாமற்போன பொருளைத் தேடத் தடை (3) 5.20: தொழுகையில் ஏற்படும் மறதிக்குப் பரிகாரம் (17) 5.21: ஸஜ்தா திலாவத் (9) 5.22: அத்தஹிய்யாத்தில் அமரும் முறை (5) 5.23: தொழுகையை நிறைவு செய்யும்போது ஸலாம் கூறும் முறை (3) 5.24: தொழுத பின்னர் திக்ரு (3) 5.25: மண்ணறை வேதனையிலிருந்து பாதுகாப்புக் கோருதல் (3) 5.26: தொழுகையில் பாதுகாப்புக் கோரப்பட வேண்டியவை (8) 5.27: தொழுகைக்குப்பின் திக்ரு செய்தல் (9) 5.28: தொடக்கத் தக்பீருக்குப் பின் கூறவேண்டியவை (4) 5.29: தொழுகையில் கலந்துகொள்ள செல்லும் முறை (5) 5.30: தொழுகைக்காக மக்கள் எப்போது எழுந்து நிற்க வேண்டும்? (5) 5.31: கூட்டுத்தொழுகையை அடைந்துகொள்ள நிபந்தனை (5) 5.32: ஐவேளைத் தொழுகை நேரங்கள் (13) 5.33: கடுங்கோடையில் ஜமாஅத் தொழுகை (8) 5.34: கடுங்கோடையில்லா சமயத்தில் ஜமாஅத் தொழுகை (4) 5.35: அஸ்ருத் தொழுகையின் நேரம் (7) 5.36: அஸ்ருத் தொழுகையைத் தவறவிட்டால்.. (3) 5.37: அஸ்ரு நடுத்தொழுகை என்போரின் சான்று (6) 5.38: ஸுப்ஹு, அஸ்ருத் தொழுகைகளின் சிறப்புகள் (6) 5.39: மஃக்ரிபுத் தொழுகையின் ஆரம்ப நேரம் (2) 5.40: இஷாத் தொழுகையின் நேரமும் அதைத் தாமதமாகத் தொழுவதும் (12) 5.41: ஸுப்ஹுத் தொழுகையின் நேரம் மற்றும் ஓதப்படும் (குர்ஆன் வசனங்களின்) அளவு (7) 5.42: தொழுகைக்கு உரிய நேரத்தைத் தாமதப்படுத்துதல் (7) 5.43: கூட்டுத் தொழுகையின் சிறப்பும் அதைத் தவற விடுவது பற்றிய கண்டனமும் (10) 5.44: தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் பள்ளிவாசலுக்குச் செல்வது கட்டாயமாகும் (1) 5.45: கூட்டுத் தொழுகை என்பது நேர்வழியைச் சார்ந்தது (2) 5.46: பாங்கு கூறிய பின்னர் பள்ளிவாசலிலிருந்து வெளியேறத் தடை (2) 5.47: இஷா மற்றும் ஸுப்ஹு கூட்டாகத் தொழுவதன் சிறப்பு (4) 5.48: கூட்டுத் தொழுகையைத் தவிர்ப்பதற்கான அனுமதி (1) 5.49: நஃபில் தொழுகைகளை ஜமாஅத்தாகத் தொழுதல் (6) 5.50: கூட்டுத் தொழுகைக்காகக் காத்திருப்பதன் சிறப்பு (5) 5.51: பள்ளிவாசலுக்கு நடந்து செல்வதன் சிறப்பு (6) 5.52: தொழுகைக்கு நடந்து செல்பவருக்குக் கிடைக்கும் பலன்கள் (4) 5.53: உதயம்வரை தொழுத இடத்தில் அமர்ந்திருப்பதன் சிறப்பு (3) 5.54: தொழுகைக்குத் தலைமையேற்க அதிகத் தகுதியுடையவர் (5) 5.55: எல்லாத் தொழுகைகளிலும் குனூத் ஓதும் காலகட்டம் (15) 5.56: விட்டுப்போனத் தொழுகைகளைத் தொழுதல் (8) 6.01: பயணிகளின் தொழுகை; சுருக்கித் தொழுதல் (20) 6.02: மழையின்போது இருப்பிடங்களில் தொழுதுகொள்ளலாம் (4) 6.03: நஃபில் தொழுகைகளை வாகனத்தில் செல்பவர் தொழலாம் (10) 6.04: பயணத்தில் இரு தொழுகைகளைச் சேர்த்து தொழலாம் (7) 6.05: உள்ளூரில் இருக்கும்போது இரு தொழுகைகளை இணைத்து தொழுதல் (10) 6.06: தொழுது முடித்தபின் வலம், இடம் திரும்பி அமர்தல் (3) 6.07: இமாமுக்கு வலப்பக்க வரிசையில் நிற்பது விரும்பத்தக்கது (1) 6.08: இகாமத் கூறத் தொடங்கி விட்டால் நஃபில் தொழுவது வெறுக்கத்தக்கது (5) 6.09: பள்ளிவாசலுக்குள் நுழையும்போது கூறவேண்டிய துஆ (1) 6.10: பள்ளிக் காணிக்கை தொழுகை தொடர்பாக (4) 6.11: பயணத்திலிருந்து திரும்பியவர் இரண்டு ரக்அத் தொழுதல் (3) 6.12: முற்பகல் (ளுஹா) தொழுகை எண்ணிக்கை (11) 6.13: ஃபஜ்ருடைய இரு ரக்அத் சுன்னத் தொழுகை (15) 6.14: சுன்னத் தொழுகைகளின் சிறப்பும் எண்ணிக்கைகளும்! (3) 6.15: நஃபில் தொழுகைகளைத் தொழும் முறைகள் (14) 6.16: இரவுத் தொழுகை (18) 6.17: இரவுத் தொழுகையின் ஒருங்கிணைந்த விபரங்கள் (4) 6.18: அவ்வாபீன் தொழுகை (2) 6.19: இரவுத் தொழுகை, வித்ருத் தொழுகை ரக்அத்கள் (16) 6.20: வித்ருத் தொழுகை நேரம் (2) 6.21: தொழுகையில் மிகச் சிறந்தது (2) 6.22: இரவில் பிரார்த்தனை ஏற்கப்படும் நேரம் (2) 6.23: இரவின் இறுதி நேரத்தில் பிரார்த்தனை (5) 6.24: ‘கியாமு ரமளான்(தராவீஹ்) தொழ ஆர்வமூட்டல் (8) 6.25: இரவுத் தொழுகையில் பிரார்த்திப்பதும் நின்று வணங்குவதும் (17) 6.26: இரவுத் தொழுகையில் நீண்ட நேரம் (நின்று) குர்ஆன் ஓதுவது (2) 6.27: தொழாமல் விடியும்வரை உறங்குபவர் (3) 6.28: கூடுதலான நஃபில் தொழுகைகள் (6) 6.29: நற்செயல்களை வழக்கமாகச் செய்வதன் சிறப்பு. (4) 6.30: இபாதத் தூக்கத்தால் தடைப்பட்டால்… (5) 6.31: குர்ஆனின் தொடர்பைப் பற்றிப் பிடித்துக்கொள்ளக் கட்டளை (7) 6.32: குர்ஆனை இனிய குரலில் ஓதுவது விரும்பத் தக்கதாகும் (5) 6.33: மக்கத்து வெற்றி நாளில்… (2) 6.34: குர்ஆனை ஓதுவதால் இறங்கும் அமைதி (3) 6.35: குர்ஆனை மனனமிட்டவரின் சிறப்பு (1) 6.36: குர்ஆனை ஓதுகின்ற இருவகையினரின் தனிச் சிறப்புகள் (1) 6.37: குர்ஆனில் தேர்ந்த மேன்மக்கள் முன்னிலையில் குர்ஆன் ஓதுவது (2) 6.38: குர்ஆனைச் செவியேற்பதன் சிறப்பு (3) 6.39: குர்ஆனைக் கற்பது மற்றும் ஓதுவதன் சிறப்பு (2) 6.40: குர்ஆன் ஓதுவதன் சிறப்பும் அல்பகரா அத்தியாயத்தின் சிறப்பும் (2) 6.41: ஸூரத்துல் ஃபாத்திஹா, அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்களின் சிறப்பு (2) 6.42: ஸூரத்துல் கஹ்ஃப் மற்றும் ஆயத்துல் குர்ஸீ ஆகியவற்றின் சிறப்பு (3) 6.43: குல் ஹுவல்லாஹு அஹது (அத்தியாயத்தை) ஓதுவதன் சிறப்பு (4) 6.44: அல்முஅவ்விதத்தைன் (பாதுகாவல்) அத்தியாயங்களை ஓதுவதன் சிறப்பு (2) 6.45: குர்ஆனின்படி தாமும் செயல்பட்டுப் பிறருக்கும் அதைக் கற்பிப்பவரின் சிறப்பு (4) 6.46: குர்ஆன் ஏழு (வட்டார) மொழிநடையில் அருளப்பெற்றுள்ளது என்பதன் விளக்கம் (4) 6.47: குர்ஆனை வேகமாக ஓதுவதைத் தவிர்த்தல் (4) 6.48: குர்ஆன் ஓதும் முறைகளுள் சில (4) 6.49: தொழத் தடுக்கப்பட்ட நேரங்கள். (8) 6.50: அம்ரு பின் அபஸா (ரலி) இஸ்லாத்தை ஏற்றமை (1) 6.51: சூரியன் உதிக்கும் நேரத்தையும் மறையும் நேரத்தையும் தேர்ந்தெடுத்துத் தொழாதீர்கள்! (2) 6.52: நபி (ஸல்) அஸ்ருக்குப் பிறகு தொழுதுவந்த இரண்டு ரக்அத்கள் எவை? (5) 6.53: மஃக்ரிப் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவது விரும்பத் தக்கது (2) 6.54: பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையிலுள்ள தொழுகை (1) 6.55: அச்சச் சூழல் தொழுகை (8) 7.01: வெள்ளிக்கிழமையில் குளிப்பது வயதுவந்த ஒவ்வோர் ஆண் மீதும் கடமை (7) 7.02: வெள்ளிக்கிழமையில் பல் துலக்குவதும் நறுமணம் பூசுவதும் (4) 7.03: வெள்ளிக்கிழமை சொற்பொழிவின்போது அமைதி காத்தல் (2) 7.04: வெள்ளிக்கிழமையில் (பிரார்த்தனை ஏற்கப்படுவதற்கு) உள்ள ஒரு நேரம் (4) 7.05: வெள்ளிக்கிழமையின் சிறப்பு (2) 7.06: இந்தச் சமுதாயத்தின் (சிறப்பு வழிபாட்டு) நாள் வெள்ளிக்கிழமை (4) 7.07: வெள்ளிக்கிழமை (தொழுகைக்கு) முன்னதாகச் செல்வதன் சிறப்பு (2) 7.08: மௌனமாக (வெள்ளிக்கிழமை) உரையைச் செவியேற்பவரின் சிறப்பு (2) 7.09: சூரியன் (உச்சியிலிருந்து) சாயும்போது ஜும்ஆத் தொழுவது (5) 7.10: தொழுகையின் உரைகளும் இடையே (இமாம்) அமர்வதும் (3) 7.11: வியாபாரத்தையோ வேடிக்கையையோ கண்டால் (62:11ஆவது) இறைவசனம் (4) 7.12: ஜும்ஆத் தொழுகையை(த் தொழாமல்) கைவிடுவதற்குக் கண்டனம் (1) 7.13: (ஜும்ஆத்) தொழுகையையும் (குத்பா) உரையையும் சுருக்கமாக அமைத்தல் (11) 7.14: இமாம் (ஜும்ஆ) உரை நிகழ்த்தும்போது காணிக்கை தொழுகை (6) 7.15: பொது போதனைக்கு நடுவில் தனி போதனை (1) 7.16: ஜும்ஆத் தொழுகையில் ஓத வேண்டியவை (3) 7.17: வெள்ளிக்கிழமை (ஃபஜ்ருத் தொழுகையில்) ஓத வேண்டியவை (3) 7.18: ஜும்ஆவுக்குப் பின் தொழ வேண்டியவை (16) 8.01: பெருநாள் திடலில் பெண்கள் பங்கேற்பது (3) 8.02: பெருநாள் திடலில் தொழுகைக்கு முன்போ பின்போ தொழக் கூடாது (1) 8.03: இரு பெருநாள் தொழுகைகளில் ஓதக் கூடியவை (2) 8.04: பெருநாட்களில் பாவமில்லா விளையாட்டுகளில் ஈடுபட அனுமதி (7) 9.00: இமாம் (மழைத் தொழுகையில்) மேல்துண்டை மாற்றிப் போட்டுக் கொள்வது (4) 9.01: மழைவேண்டிப் பிரார்த்திக்கும்போது இருகைகளை உயர்த்துதல் (3) 9.02: மழைவேண்டிப் பிரார்த்தித்தல் (2) 9.03: கடும் காற்றையும் மேகத்தையும் காணும்போதும்.. மழை பெய்யும்போதும்.. (3) 9.04: கீழைக் காற்று (’ஸபா’) மற்றும் மேலைக் காற்று (’தபூர்’) பற்றிய குறிப்புகள் (1) 10.01: சூரிய கிரகணத் தொழுகை (7) 10.02: கிரகணத் தொழுகையின்போது மண்ணறை வேதனை பற்றி நினைவு கூர்வது (1) 10.03: கிரகணத் தொழுகையின்போது சொர்க்கமும் நரகமும் (6) 10.04: கிரகணத் தொழுகையில் எட்டு ருகூஉகளும் நான்கு ஸஜ்தாக்களும்.. (2) 10.05: கிரகணத் தொழுகைக்காக, “அஸ்ஸலாத்து ஜாமிஆ” அறிவிப்பு.. (8) 11.01: மரணத் தருவாயில் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (எனும் கலிமா)வை நினைவூட்டுதல் (2) 11.02: துன்பம் நேரும்போது வேண்டக்கூடிய பிரார்த்தனை (2) 11.03: நோயாளியிடமும் மரணத் தருவாயில் இருப்பவரிடமும் சொல்ல வேண்டியவை (1) 11.04: உயிர் பிரிந்தவுடன் இறந்தவருக்குச் செய்ய வேண்டியவை (1) 11.05: இறப்பவரின் பார்வை தனது உயிரை நோக்கி நிலைகுத்தி நிற்றல் (1) 11.06: இறந்தவருக்காக அழுவது (3) 11.07: நோயாளிகளைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தல் (1) 11.08: பொறுமை என்பது துன்பத்தின் முதல் நிலையில் கடைப்பிடிப்பதாகும் (2) 11.09: இறந்தவருக்காக ஒப்பாரி வைத்து அழுதால்.. (14) 11.10: ஒப்பாரிக்குக் கடுமையான கண்டனம் (5) 11.11: ஜனாஸாவின் இறுதி ஊர்வலத்தைப் பின்தொடர்ந்து செல்வதற்குப் பெண்களுக்குத் தடை (2) 11.12: மையித்தைக் குளிப்பாட்டுதல் (4) 11.13: மய்யித்திற்கு ‘கஃபன்’ உடை அணிவித்தல் (4) 11.14: மய்யித்தை மூடிவைத்தல் (1) 11.15: மய்யித்திற்கு அழகிய முறையில் கஃபன் அணிவித்தல் (1) 11.16: இறந்தவர் உடலைத் துரிதமாக அடக்கம் செய்தல் (2) 11.17: ஜனாஸாத் தொழுகையின் மற்றும் ஜனாஸாவைப் பின்தொடர்வதன் சிறப்பு (6) 11.18: மய்யித்துக்காக நூறு பேர் தொழுது செய்யும் பரிந்துரை ஏற்கப்படும் (1) 11.19: மய்யித்துக்காக நாற்பது பேர் பரிந்துரை (1) 11.20: இறந்தவர் குறித்துப் புகழ்ந்து, அல்லது இகழ்ந்து பேசப்படுதல் (1) 11.21: ஓய்வு பெற்றவரும் ஓய்வளித்தவரும் (1) 11.22: ஜனாஸாத் தொழுகையில் சொல்ல வேண்டிய தக்பீர்கள் (6) 11.23: மண்ணறை அருகில் (ஜனாஸாத் தொழுகை) தொழுவது (4) 11.24: ஜனாஸாவுக்காக எழுந்து நிற்பது (7) 11.25: ஜனாஸாவுக்காக எழுந்து நிற்கும் வழக்கம் மாற்றப்பட்டது (3) 11.26: இறந்தவருக்காக ஜனாஸாத் தொழுகையில் செய்யும் பிரார்த்தனை (2) 11.27: ஜனாஸாத் தொழுகையின்போது இமாம் எந்த இடத்தில் நிற்க வேண்டும்? (2) 11.28: ஜனாஸாத் தொழுகை தொழுதுவிட்டு வாகனத்தில் ஏறித் திரும்பிச் செல்லலாம் (2) 11.29: உட்குழியும் மையித்தின் மேல் செங்கற்களை அடுக்குவதும் (1) 11.30: கப்றுக் குழியினுள் போர்வையை விரித்து (மையித்தை) வைப்பது (1) 11.31: கப்றைத் தரை மட்டமாக்க உத்தரவு (2) 11.32: கப்றுகளைக் காரையால் பூசுவதோ அதன் மீது கட்டடம் எழுப்புவதோ கூடாது (2) 11.33: கப்றின்மீது அமர்வதும் அதன் மீது தொழுவதும் தடுக்கப்பட்டவை (3) 11.34: பள்ளிவாசலில் ஜனாஸாத் தொழுகை நடத்துவது (3) 11.35: மையவாடிக்குள் கூற வேண்டியதும் பிரார்த்திப்பதும் (3) 11.36: நபி (ஸல்), தம் தாயாரின் கப்றைக் காண்பதற்கு இறைவனிடம் அனுமதி கோரியது (3) 11.37: தற்கொலை செய்தவருக்கு, (ஜனாஸா) தொழுகையைக் கைவிட்டது (1) 12.00: பல வகை வள வரிகள் (5) 12.01: பத்து சதவீத ஸகாத்; அல்லது ஐந்து சதவீத ஸகாத் (1) 12.02: ஒரு முஸ்லிம் மீது அவர்தம் அடிமைக்காகவும் குதிரைக்காகவும் ஸகாத் கடமை இல்லை (3) 12.03: ஸகாத்தைச் சமர்ப்பிப்பதும் ஸகாத் கொடுக்க மறுப்பதும் (1) 12.04: பெருநாள் தர்மமாகப் பேரீச்சம் பழம், பார்லி (10) 12.05: பெருநாள் தொழுகைக்கு முன்பே பெருநாள் தர்மத்தை வழங்க கட்டளை (2) 12.06: ஸகாத் வழங்க மறுப்பது குற்றமாகும் (4) 12.07: ஸகாத் வசூலிப்பவர்களிடம் கனிவுடன் நடந்துகொள்வது (1) 12.08: ஸகாத் வழங்காதவருக்கான கடும் தண்டனை (2) 12.09: தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டல் (2) 12.10: செல்வத்தைச் சேமித்தோர் பற்றிய கண்டனம் (2) 12.11: தர்மம்: ஆர்வமூட்டலும் நற்கூலி உண்டு என்ற நற்செய்தியும் (2) 12.12: செலவழிப்பதன் சிறப்பும் வழங்காதவனின் பாவமும் (4) 12.13: தமக்கும், குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்குமாக செலவிடுதல் (1) 12.14: இணை வைக்கும் உறவுகளுக்குச் செலவழிப்பதன் சிறப்பு (8) 12.15: இறந்தவருக்காகத் தர்மம் செய்தல் (1) 12.16: எல்லா நல்லறமும் ஸதகா எனப்படும் (5) 12.17: அறவழியில் செலவு செய்பவரும் செய்யாதவரும் (1) 12.18: தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டல் (5) 12.19: தர்மம் (இறைவனிடம்) ஏற்கப்படுவதும் வளர்வதும் (3) 12.20: இன் சொல்லையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து பாதுகாப்பு பெறல் (5) 12.21: தர்மத்தின் அளவில் குறை காண தடை (1) 12.22: பாலுக்காக இரவல் வழங்கப்படும் கால்நடைகளின் சிறப்பு (2) 12.23: வள்ளலுக்கும் கஞ்சனுக்குமான உதாரணம் (3) 12.24: உரியவருக்குத் தர்மம் சேரவில்லையேனும் பலன் (1) 12.25: உரிமையாளரின் அனுமதியுடன் தர்மம் செய்தவருக்கும் பலன் (3) 12.26: ஓர் அடிமை தன் உரிமையாளரின் செல்வத்திலிருந்து (அறவழியில்) செலவழித்தல் (3) 12.27: தர்மத்தையும் இதர நற்செயல்களையும் இணைத்துச் செய்தவர் (3) 12.28: அறவழியில் தாராளமாக செலவிடலும் கணக்கு பார்ப்பது விரும்பத்தக்கதல்ல என்பதும் (3) 12.29: சிறிய அளவு தர்மம் (1) 12.30: இரகசியமாகத் தர்மம் செய்வதன் சிறப்பு (1) 12.31: மிகச் சிறந்த தர்மம் (2) 12.32: சிறந்த கை (4) 12.33: யாசிப்பதற்குத் தடை (3) 12.34: ஏழை என்பவன், அடிப்படைத் தேவைகளுக்குப் போதிய பொருளாதாரம் இல்லாதவன் (2) 12.35: மக்களிடம் யாசிப்பது வெறுக்கப்பட்டதாகும் (6) 12.36: யாருக்கு யாசிக்க அனுமதி? (1) 12.37: எதிர்பார்ப்பு இல்லாமல், யாசிக்காமல் வாழ்பவருக்கு வழங்கப்பட்டால் பெற்றுக்கொள்ளலாம் (4) 12.38: உலகாதாயத்தின் மீது பேராசை கொள்வது விரும்பத் தக்கதன்று (2) 12.39: இரு ஓடைகள் இருந்தாலும் மூன்றாவது ஓடையை எதிர்பார்த்தல் (4) 12.40: வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று (1) 12.41: இவ்வுலகத்தின் கவர்ச்சி குறித்து அஞ்சுதல் (3) 12.42: சுயமரியாதை மற்றும் பொறுமையின் சிறப்பு (1) 12.43: போதுமான வாழ்வாதாரமும் போதுமென்ற மனமும் (4) 12.44: அருவருப்பாகப் பேசி, கடுஞ் சொற்களால் கேட்டவருக்கும் தானம் வழங்குவது (4) 12.45: இறைநம்பிக்கை, (வறுமையால்) கேள்விக்குள்ளாக்கப்படுபவருக்கு உதவுதல் (1) 12.46: இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு வழங்கலும் இறை நம்பிக்கை வலுவானவர் பொறுமை கொள்ளலும் (8) 12.47: காரிஜிய்யாக்களும் அவர்களின் தன்மைகளும் (10) 12.48: காரிஜிய்யாக்களைக் கொல்லுவதற்கு ஊக்கப்படுத்துதல் (4) 12.49: காரிஜிய்யாக்கள் படைப்பினங்களிலேயே தீயவர்கள் ஆவர் (3) 12.50: தூதரின் குடும்பத்தார் ஸகாத் பெறுவதற்குத் தடை (6) 12.51: நபி (ஸல்) குடும்பத்தாரைத் தர்மப் பொருட்கள் வசூலிக்கப் பயன்படுத்தலாகாது (1) 2.26: அசுத்தமான கையைப் பாத்திரத்தில் நுழைத்தல் (2) 2.25: ஒருநாள் தொழுகைகளை ஒரு உளூவில் தொழ அனுமதி (1) 2.24: காலுறையில் மஸஹு செய்து தொழுவதற்கான வரம்பு (1) 2.23: முன் தலை மற்றும் தலைப்பாகை மீது மஸஹு செய்தல் (4) 2.22: காலுறையில் மஸஹு செய்தல் (9) 2.21: தண்ணீரால் கழுவித் துப்புரவு செய்தல் (3) 2.20: மலம் கழிப்பதற்குத் தடையுள்ள இடங்கள் (1) 2.19: செயல்களை வலப் புறமிருந்து தொடங்குதல். (2) 2.18: வலக் கரத்தால் கழுவத் தடையானவை (3) 2.17: கழிப்பிடத்தில் துப்புரவு செய்தல் (7) 2.16: இயற்கை மரபுகள் (8) 2.15: பல் துலக்குதல் (7) 2.14: சிரமகாலங்களிலும் முழுமையாக ஒளு செய்வதன் சிறப்பு (1) 2.13: உளூவில் தண்ணீர் படும் இடங்களில் ஒளி படர்தல் (1) 2.12: உளூவில் உறுப்புகளை அதிகப்படுத்திக் கழுவுதல் (6) 2.11: உளூ செய்த நீரோடு வெளியேறும் பாவங்கள் (2) 2.10: உளூவில் உறுப்புகள் முழுவதும் கழுவுதல் (1) 2.09: இரு கால்களையும் முழுமையாகக் கழுவுதல் கட்டாயம் (6) 2.08: சுத்தம் செய்யும் போது ஒற்றைப்படையாக செய்தல் (5) 2.07: நபி (ஸல்) அவர்கள் செய்த அங்கத் தூய்மை (உளூ) (2) 2.06: அங்கத் தூய்மை (உளூ) செய்தபிறகு ஓதப்படும் பிரார்த்தனை (1) 2.05: சிறு பாவங்களுக்கான பரிகாரங்கள் (3) 2.04: அங்கத்தூய்மையின் சிறப்பும் அதன் பின் தொழுவதன் சிறப்பும் (9) 2.03: அங்கத் தூய்மை (உளூ) செய்முறையும் அதை நிறைவாகச் செய்வதும் (2) 2.02: தொழுகைக்குக் கட்டாயமான (அங்கத்) தூய்மை (2) 2.01: அங்கத்தூய்மை(உளூ)யின் சிறப்பு (1) 1.96: மறுமையில் ஆதம்(அலை) அவர்களுக்கு இடப்படும் கட்டளை (1) 1.95: சொர்க்கவாசிகளில் பாதிபேர் (3) 1.94: விசாரணையோ வேதனையோ இன்றி சொர்க்கம் செல்வோர் (7) 1.93: நட்பு கொள்ளத் தக்கவர்களும் தகாதவர்களும் (1) 1.92: இறைமறுப்பாளரின் நற்செயல்கள் பலனளிக்காது (1) 1.91: நரகவாசிகளிலேயே மிகக்குறைவான வேதனை அனுபவிப்பவர். (4) 1.90: அபூதாலிபுக்காக நபி(ஸல்) அவர்களின் பரிந்துரை (3) 1.89: நெருங்கிய உறவினருக்கு எச்சரிக்கை செய்தல் (5) 1.88: இறைமறுப்பாளருக்கு எந்தப் பரிந்துரையும் பலனளிக்காது (1) 1.87: தம் சமுதாயத்தார் மீது நபி(ஸல்) அவர்களுக்குள்ள பரிவு (1) 1.86: நபி(ஸல்) அவர்களின் பரிந்துரைப் பிரார்த்தனை! (8) 1.85: சொர்க்கத்திற்காகப் பரிந்துரைக்கும் முதல் மனிதர் (4) 1.84: சொர்க்கவாசிகளுள் ஆகக் குறைந்த பதவி (14) 1.83: இறுதியானவராக வெளியேறும் நரகவாசி. (3) 1.82: ஷஃபாஅத்(பரிந்துரை) செய்யப்படுபவர்கள் (2) 1.81: இறைவனைக் காணும் வழிமுறை (3) 1.80: இறைவனைக் காண்பதற்கான சான்று (2) 1.79: அல்லாஹ்வின் பார்வை பற்றிய விளக்கம் (2) 1.78: மிஃராஜின் போது நபி(ஸல்) கண்டது பற்றிய விளக்கம் (2) 1.77: நபி(ஸல்) அவர்கள் இறைவனைப் பார்த்தார்களா? என்பது பற்றிய விளக்கம் (5) 1.76: சித்ரத்துல் முந்தஹா(இலந்தை மரம்) பற்றிய குறிப்பு! (4) 1.75: ஈஸா(அலை) மற்றும் தஜ்ஜால் பற்றிய குறிப்புகள் (6) 1.74: விண்ணுலகப் பயணமும் தொழுகை கடமையாக்கப்படலும் (12) 1.73: வேத வெளிப்பாடு (வஹீ) தொடங்குதல் (3) 1.72: இறை நம்பிக்கை ஏற்கப்படாத காலகட்டம் (5) 1.71: ஈசா(அலை) இஸ்லாமிய நெறிப்படி நீதி வழங்குதல் (6) 1.70: தூதுத்துவம் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது (3) 1.69: இறைச்சான்றுகள் மூலம் மன அமைதி (1) 1.68: ஒருவரை இறைநம்பிக்கையாளர் என்று முடிவு செய்தல் (2) 1.67: அச்சநேரத்தில் இறைநம்பிக்கையாளர் நிலை (1) 1.66: இறுதிக் காலத்தில் இறை நம்பிக்கை (அற்றுப்) போய் விடுவது. (2) 1.65: இஸ்லாத்தின் மீளெழுச்சி. (3) 1.64: உள்ளங்களில் குழப்பங்கள் தோன்றுவது. (2) 1.63: குடிமக்களைச் சுரண்டும் ஆட்சியாளன் நரகத்திற்குரியவன் ஆவான். (3) 1.62: செல்வத்தைக் காக்கப் போராடியவர் மற்றும் பிறர் செல்வத்தைப் பறிக்க முனைந்தவர் (2) 1.61: மாற்றாரின் பொருளைக் கைப்பற்றுபவர் நிலை. (5) 1.60: இறைநம்பிக்கையில் தடுமாற்றம் ஏற்பட்டால்.. (8) 1.59: நல்ல-தீய எண்ணங்களுக்கான கூலி (5) 1.58: தீய எண்ணங்களைச் செயல்படுத்தாமல் இருத்தல் (2) 1.57: தாங்க முடியாத சுமை? (2) 1.56: இறை நம்பிக்கையின் வாய்மையும் தூய்மையும் (1) 1.55: இறைமறுப்பாளராக இருந்தபோது செய்த நல்லறங்கள் (3) 1.54: முன் செய்த பாவங்கள் (2) 1.53: அறியாமை காலத்தில் செய்த தீமைகள் (2) 1.52: இறைநம்பிக்கையாளரின் அச்சம் (1) 1.51: குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் நற்செயல் புரிய விரைதல் (1) 1.50: மறுமை நெருங்கும் வேளையில் வீசும் காற்று (1) 1.49: ஹிஜ்ரத்தில் தற்கொலை செய்து கொண்டவரின் நிலை (1) 1.48: கையாடல் செய்பவரும் இறைநம்பிக்கையாளரும் (2) 1.47: தற்கொலை செய்பவரும் கட்டுப்பட்டு வாழ்பவரும் (7) 1.46: மூன்று பெரும் தவறான செயல்கள் (4) 1.45: புறங்கூறுவது வன்மையாகத் தடை செய்யப் பட்டது (3) 1.44: துக்க வேளைகளில் தடை செய்யப்பட்ட செய்கைகள்! (3) 1.43: முஸ்லிம்களை வஞ்சித்தவர் நிலை! (2) 1.42: முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர் நிலை! (3) 1.41: “லா இலாஹ இல்லல்லாஹ்” கூறியவரைக் கொல்லத்தடை! (4) 1.40: இணைவைத்தலின் விளைவுகள் (5) 1.39: தற்பெருமை (3) 1.38: பெரும் பாவங்கள் (5) 1.37: பாவங்களில் மிகவும் அருவருப்பானது (2) 1.36: நற்செயல்களில் சிறந்தது (6) 1.35: தொழுகையை விடுதலும் குஃப்ரும் (3) 1.34: இறைநம்பிக்கை குறைவும் குஃப்ர் எனும் சொல்லும் (1) 1.33: அன்ஸாரிகளையும் அலி(ரலி)யையும் நேசித்தல் (6) 1.32: மழையும் இறைமறுப்பும் (4) 1.31: ஓடிப்போன அடிமை (3) 1.30: இறைமறுப்பின் அடையாளங்கள் (1) 1.29: இறைமறுப்பாளர்களாய் மாறுதல் (2) 1.28: முஸ்லிமோடு போரிடுதல் (1) 1.27: தந்தையை வெறுப்பவன் நிலை (4) 1.26: முஸ்லிமை நோக்கி காஃபிர் என அழைத்தல் (2) 1.25: நயவஞ்சகனின் குணங்கள். (3) 1.24: இறைநம்பிக்கையில் குறைவு ஏற்படல் (2) 1.23: மார்க்கம் என்பதே நலன் நாடுவதுதான். (4) 1.22: இறைநம்பிக்கையாளர்களை நேசித்தல் (1) 1.21: இறைநம்பிக்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வு (9) 1.20: நன்மையை ஏவுதல், தீமையைத் தடுத்தல் (2) 1.19: நல்லவற்றிற்கு ஆர்வமூட்டுதல் (3) 1.18: அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரக் கூடாது (1) 1.17: தமக்கு விரும்வுவதைச் சகோதரனுக்கும் விரும்புதல் (2) 1.16: தூதரை நேசிப்பது கடமை (2) 1.15: இறைநம்பிக்கையின் இனிமை (2) 1.14: இஸ்லாம் கூறும் நல்லறங்களில் சிறந்தது (4) 1.13: இஸ்லாத்தின் அனைத்துப் பண்புகளின் கலவை (1) 1.12: இறைநம்பிக்கையின் கிளைகள் (5) 1.11: இறைநம்பிக்கையைச் சுவைப்பவர் (1) 1.10: ஓரிறை கோட்பாட்டில் மரணித்தவர் நிலை (11) 1.09: இணை வைத்த நிலையில் மரணித்தவர் நிலை (3) 1.08: ஜிஸ்யா செலுத்தாதவர் மீது போர் புரிதல் (6) 1.07: இஸ்லாத்தை ஏற்க அழைப்பு விடுத்தல் (2) 1.06: அறியாதவர்களுக்கு அறிவித்தல் (4) 1.05: இஸ்லாமியக் கடமைகள் (4) 1.04: சொர்க்கம் செல்பவர் (7) 1.03: இஸ்லாத்தின் தூண்கள் (2) 1.02: தொழுகை பற்றிய விளக்கம் (2) 1.01: இறைநம்பிக்கை குறித்த விளக்கம் (7)
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் நாளை அதிகாலை (26) ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு பயணமாகின்றார். முதலில் ஜப்பானுக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், ஜப்பானின் முன்னாள் பிரதமர் சின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளவுள்ளார். இதனையடுத்து ஜப்பானிய பிரதமர், வெளிவிவகார அமைச்சர், நிதியமைச்சர் ஆகியோருடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார். அதன்பின்னர், ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்களின் கூட்டத்திற்கு தலைமை தாங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், எதிர்வரும் 28 ஆம் திகதி பிலிப்பைன்ஸ் செல்கின்றார்.இதன் போது பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பொங்பொங் மார்கஸ் (Bongbong Marcos) மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவா (Masatsugu Asakawa) ஆகியோருடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் விஜயங்களை நிறைவு செய்துகொண்டு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் எதிர்வரும் 30 ஆம் திகதி நாடு திரும்புவார். ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க, சர்வதேச அலுவல்கள் பணிப்பாளர் தினுக் கொழம்பகே, ஊடக பணிப்பாளர் ஷானுக்க கருணாரத்ன, நிலைபெறுதகு அபிவிருத்தி தொடர்பான பணிப்பாளர் ரந்துல அபேவீர, ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோர் இந்த விஜயத்தில் பங்கேற்கின்றனர். இதேவேளை ஜனாதிபதியின் பிலிப்பைன்ஸ் விஜயத்தில் திறைசேரி செயலாளரும் இணைந்து கொள்ள உள்ளார். பிலிப்பைன்ஸ் விஜயத்தில் தினுக் கொழம்பகே மற்றும் ரந்துல அபேவீர பங்கேற்க மாட்டார்கள்.
حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ النَّضْرِ بْنِ أَبِي النَّضْرِ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏أَبُو النَّضْرِ هَاشِمُ بْنُ الْقَاسِمِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ الْأَشْجَعِيُّ ‏ ‏عَنْ ‏ ‏مَالِكِ بْنِ مِغْوَلٍ ‏ ‏عَنْ ‏ ‏طَلْحَةَ بْنِ مُصَرِّفٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏ ‏كُنَّا مَعَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي مَسِيرٍ قَالَ فَنَفِدَتْ ‏ ‏أَزْوَادُ ‏ ‏الْقَوْمِ قَالَ حَتَّى هَمَّ بِنَحْرِ بَعْضِ ‏ ‏حَمَائِلِهِمْ ‏ ‏قَالَ فَقَالَ ‏ ‏عُمَرُ ‏ ‏يَا رَسُولَ اللَّهِ لَوْ جَمَعْتَ مَا بَقِيَ مِنْ أَزْوَادِ الْقَوْمِ فَدَعَوْتَ اللَّهَ عَلَيْهَا قَالَ فَفَعَلَ قَالَ فَجَاءَ ذُو ‏ ‏الْبُرِّ ‏ ‏بِبُرِّهِ وَذُو التَّمْرِ بِتَمْرِهِ قَالَ وَقَالَ ‏ ‏مُجَاهِدٌ ‏ ‏وَذُو النَّوَاةِ بِنَوَاهُ قُلْتُ وَمَا كَانُوا يَصْنَعُونَ بِالنَّوَى قَالَ كَانُوا يَمُصُّونَهُ وَيَشْرَبُونَ عَلَيْهِ الْمَاءَ قَالَ فَدَعَا عَلَيْهَا حَتَّى مَلَأَ الْقَوْمُ أَزْوِدَتَهُمْ قَالَ فَقَالَ عِنْدَ ذَلِكَ ‏ ‏أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنِّي رَسُولُ اللَّهِ لَا ‏ ‏يَلْقَى اللَّهَ بِهِمَا عَبْدٌ غَيْرَ ‏ ‏شَاكٍّ ‏ ‏فِيهِمَا إِلَّا دَخَلَ الْجَنَّةَ ‏حدثنا ‏ ‏أبو بكر بن النضر بن أبي النضر ‏ ‏قال حدثني ‏ ‏أبو النضر هاشم بن القاسم ‏ ‏حدثنا ‏ ‏عبيد الله الأشجعي ‏ ‏عن ‏ ‏مالك بن مغول ‏ ‏عن ‏ ‏طلحة بن مصرف ‏ ‏عن ‏ ‏أبي صالح ‏ ‏عن ‏ ‏أبي هريرة ‏ ‏قال ‏ ‏كنا مع النبي ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏في مسير قال فنفدت ‏ ‏أزواد ‏ ‏القوم قال حتى هم بنحر بعض ‏ ‏حمائلهم ‏ ‏قال فقال ‏ ‏عمر ‏ ‏يا رسول الله لو جمعت ما بقي من أزواد القوم فدعوت الله عليها قال ففعل قال فجاء ذو ‏ ‏البر ‏ ‏ببره وذو التمر بتمره قال وقال ‏ ‏مجاهد ‏ ‏وذو النواة بنواه قلت وما كانوا يصنعون بالنوى قال كانوا يمصونه ويشربون عليه الماء قال فدعا عليها حتى ملأ القوم أزودتهم قال فقال عند ذلك ‏ ‏أشهد أن لا إله إلا الله وأني رسول الله لا ‏ ‏يلقى الله بهما عبد غير ‏ ‏شاك ‏ ‏فيهما إلا دخل الجنة நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தபோது, பயணக் கூட்டத்தாரின் ஒட்டகங்களில் சிலவற்றை அறுத்தால்தான் உணவு என்ற அளவுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டது. அப்போது உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! மக்களிடம் எஞ்சியுள்ள உணவுப் பொருட்களை ஒன்று திரட்டி, அதில் (பெருக்கம் ஏற்பட) நீங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தாலென்ன?” என்று வினவினார். “சரி, செய்யுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் அனுமதியளித்தார்கள். அப்போது கோதுமை வைத்திருந்தவர், அவரது கோதுமையைக் கொண்டு வந்தார்; பேரிச்சம் பழங்கள் வைத்திருந்தவர் பேரிச்சம் பழங்களைக் கொண்டுவந்தார்” – முஜாஹித் (ரஹ்) அவர்கள், “பேரிச்சம்பழக் கொட்டைகள் வைத்திருந்தவர் பேரீச்சம்பழக் கொட்டைகளைக் கொண்டு வந்தார்” என்று (சேர்த்துக்) கூறினார். – “பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை வைத்து மக்கள் என்ன செய்தார்கள்?” என்று (தல்ஹா பின் முஸ்ர்ரிஃப் ஆகிய) நான் கேட்டேன். அதற்கு அவர்கள், “அவற்றை வாயில் இட்டுச் சுவைத்துவிட்டு, அதற்கு மேல் தண்ணீரை அருந்திக் கொள்வார்கள்.” என்று கூறினார்கள். (மக்களிடமிருந்து உணவுப்பொருள்கள் ஒன்று திரட்டப்பட்டன) அதில் (பெருக்கம் ஏற்பட) நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். மக்கள் அனைவரும் தங்கள் பயண (த்திற்கு வேண்டிய) உணவை நிரப்பிக் கொள்ளும் அளவுக்குப் பெருக்கம் ஏற்பட்டது. (இதைக்கண்ட) நபி (ஸல்) அவர்கள், “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறில்லை என்றும், நான் அல்லாஹ்வின் தூதர் ஆவேன் என்றும் நான் உறுதி கூறுகிறேன். இவ்விரு உறுதிமொழிகளுடன், அவற்றில் சந்தேகம் கொள்ளாமல் இறைவனைச் சந்திக்கும் அடியார் எவரும் சொர்க்கம் செல்லாமல் இருக்க மாட்டார்” என்று கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) ← முந்தைய ஹதீஸ்அத்தியாயம்: 1, பாடம்: 1.10, ஹதீஸ் எண்: 38 அடுத்த ஹதீஸ் →அத்தியாயம்: 1, பாடம்: 1.10, ஹதீஸ் எண்: 40 abdrahuman ↓ விரும்பும் பாடம் செல்ல… ↓ விரும்பும் பாடம் செல்ல… Select Category 43.37 நபி (ஸல்) அவர்களைக் கண்ணியப்படுத்துவதும் … (8) 43.36 நபி (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டியது (முஸ்லிம்களின்) கட்டாயக் கடமையாகும் (1) 43.35 நபி (ஸல்) அவர்களின் அல்லாஹ்வைப் பற்றிய அறிவும் அவனைப் பற்றிய கடுமையான அச்சமும் (2) 43.34 நபி (ஸல்) அவர்களின் பெயர்கள் (3) 43.33 நபி (ஸல்) மக்காவிலும் மதீனாவிலும் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்? (8) 43.32 நபி (ஸல்) இறந்தபோது அவர்களுக்கு வயது எத்தனை? (2) 43.31 நபி (ஸல்) அவர்களின் உடலமைப்பு; நபியாக அனுப்பப்பெற்றது; அவர்களின் வயது (1) 43.30 நபி (ஸல்) உடலில் நபித்துவ முத்திரை … (3) 43.29 நபி (ஸல்) அவர்களின் தலைநரைமுடி (10) 43.28 நபி (ஸல்) அவர்களின் வெண்ணிறமும் களையான முகமும் (2) 43.27 நபி (ஸல்) அவர்களின் வாய், கண்கள், குதிகால்கள் ஆகியவை (1) 43.26 நபி (ஸல்) அவர்களது தலைமுடியின் தன்மை (3) 43.25 நபி (ஸல்) அவர்களின் உருவத் தோற்றம் … (3) 43.24 நபி (ஸல்) தமது தலைமுடியை … (1) 43.23 நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு வரும்போது … (4) 43.22 நபி (ஸல்) அவர்களது வியர்வையின் நறுமணமும் அதன்மூலம் வளம் ஏற்பட்டதும் (3) 43.21 நபி (ஸல்) அவர்களின் மேனியில் கமழ்ந்த நறுமணம் … (3) 43.20 நபி (ஸல்) பாவங்களை விட்டு வெகு தொலைவில் விலகியிருந்தது … (3) 43.19 நபி (ஸல்), மக்களுடன் நெருங்கிப் பழகியதும் அவர்களிடமிருந்து மக்கள் வளம் பெற்றதும் (3) 43.18 மனைவியர்மீது நபி (ஸல்) காட்டிய அன்பும் … (4) 43.17 நபி (ஸல்) அவர்களின் புன்னகையும் அழகிய உறவாடலும் (1) 43.16 நபி (ஸல்) அவர்களின் நாண மிகுதி (2) 43.15 நபி (ஸல்) குழந்தைகள் மீதும் குடும்பத்தார் மீதும் காட்டிய அன்பு … (5) 43.14 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வேண்டப்பட்ட எந்த ஒன்றுக்கும் அவர்கள் “இல்லை” என்று சொன்னதேயில்லை … (5) 43.13 அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மக்களிலேயே மிகவும் அழகான … (5) 43.12 மக்களிலேயே நபி (ஸல்), தொடர்ந்து வீசும் (மழைக்) காற்றைவிட … (1) 43.11 நபி (ஸல்) அவர்களின் வீரமும் அறப்போருக்காக அவர்கள் முன்னே சென்றதும் (2) 43.10 உஹுதுப் போர் நாளில் நபி (ஸல்) … (2) 43.9 நம் நபி (ஸல்) அவர்களுக்கு (மறுமையில் ‘அல்கவ்ஸர்’) தடாகம் உண்டு … (20) 43.8 உயர்ந்தோன் அல்லாஹ் ஒரு சமுதாயத்தின்மீது அருள் புரிய நாடினால் … (1) 43.7 நபி (ஸல்), இறுதி இறைத் தூதர் என்பது பற்றிய குறிப்பு (4) 43.6 நபி (ஸல்), தம் சமுதாயத்தார் மீது கொண்டிருந்த பரிவும் … (4) 43.5 நபி (ஸல்), நேர்வழியுடனும் ஞானத்துடனும் அனுப்பப் பெற்றதற்கான உவமை (1) 43.4 அல்லாஹ்வையே முழுமையாக நபி (ஸல்) சார்ந்திருந்ததும் … (1) 43.3 நபி (ஸல்) அவர்களின் அற்புதங்கள் (7) 43.2 எல்லாப் படைப்புகளையும்விட நம் நபி (ஸல்) அவர்களின் சிறப்பு (1) 43.1 நபி (ஸல்) அவர்களின் தலைமுறையின் சிறப்பும் … (2) 42.4 நபி (ஸல்) கண்ட கனவு (6) 42.3 கனவுக்கு விளக்கமளித்தல் (1) 42.2 ஷைத்தான் கனவில் விளையாடியது குறித்து … (3) 42.1 கனவில் என்னைக் கண்டவர் … (4) 42.01 கனவுகள் (11) 41.2 பகடை விளையாட்டு, தடை செய்யப்பட்டதாகும் (1) 41.1 கவிதைகள் (9) 40.5 நறுமணப் பொருட்களில் மிகவும் சிறந்த கஸ்தூரியைப் பயன்படுத்துவது … (4) 40.4 ஒருவர், ‘கபுஸத் நஃப்ஸீ’ (என் மனம் அசுத்தமாகிவிட்டது) எனும் சொல்லை … (2) 40.3 ‘அப்து’ (அடிமை ஆண்), ‘அமத்து’ (அடிமைப் பெண்), ‘மவ்லா’/’ஸய்யித்’ (அடிமையின் உரிமையாளர்) ஆகிய சொற்களின் சட்டம் (3) 40.2 திராட்சையை, “கர்மு / கண்ணியம்” என்று பெயரிட்டழைப்பது … (7) 40.1 காலத்தை ஏசுவதற்குத் தடை (5) 39.41 விலங்குகளுக்கு நீர் புகட்டுவதின், உணவளிப்பதின் சிறப்பு (3) 39.40 பூனைகளைக் கொல்வதற்குத் தடை (2) 39.39 எறும்புகளைக் கொல்லத் தடை (3) 39.38 பல்லியைக் கொல்வது நல்லது (5) 39.37 பாம்பு போன்ற விஷ ஜந்துகளைக் கொல்வது (13) 39.36 தொழுநோயாளிகள் போன்றோரிடம் நெருக்கம் தவிர்ப்பது (1) 39.35 சோதிடர்களிடம் செல்வதும் சோதிடம் பார்ப்பதும் (5) 39.34 பறவை சகுனம், நற்குறி, துர்குறி பற்றிய பாடம் (11) 39.33 இல்லாத சகுனங்களும் தொற்றுநோய்களும் (6) 39.32 கொள்ளைநோய், பறவை சகுனம், சோதிடம் போன்றவை (8) 39.31 தேனூட்டு மருத்துவம் (1) 39.30 ‘தல்பீனா‘, நோயாளியின் மனத்துக்கு(ம் உடலுக்கும்) தெம்பு அளிக்கக்கூடியதாகும் (1) 39.29 கருஞ்சீரக மருத்துவம் (2) 39.28 இந்தியக் கோஷ்டக் குச்சியால் சிகிச்சையளிப்பது (2) 39.27 நோயாளிக்கு வற்புறுத்தி சிகிச்சையளிப்பது … (1) 39.26 ஒவ்வொரு நோய்க்கும் மருந்து உண்டு; (நோய்க்கு) மருத்துவம் செய்துகொள்வது விரும்பத் தக்கது (17) 39.25 தொழுகையில் மனம் அலைபாயச் செய்யும் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புக் கோரல் (1) 39.24 பிரார்த்திக்கும்போது வலியுள்ள இடத்தில் கையை வைப்பது (1) 39.23 குர்ஆன் வசனங்கள் மற்றும் அல்லாஹ்வைத் துதிக்கும் சொற்களால் ஓதிப்பார்ப்பதற்கு ஊதியம் பெறலாம் (2) 39.22 இறைவனுக்கு இணை கற்பிதம் இல்லாத சொற்களால் ஓதிப்பார்பது தவறில்லை (1) 39.21 கண்ணேறு, சின்னம்மை, விஷக்கடி, (தீய)பார்வை ஆகியவற்றுக்காக ஓதிப்பார்ப்பது விரும்பத் தக்கதாகும் (12) 39.20 பாதுகாப்புக் கோரும் அத்தியாயங்களால் நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது … (2) 39.19 நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது விரும்பத் தக்கதாகும் (4) 39.18 விஷம் (1) 39.17 சூனியம் (1) 39.16 நோயும் மருத்துவமும் ஓதிப்பார்த்தலும் (4) 39.15 மூன்றாமவரின் ஒப்புதலின்றி இருவர் மட்டும் இரகசியம் பேசிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும் (3) 39.14 … அந்நியப் பெண்ணை, வழிசெல்லும் ஒருவர் வாகனத்தில் அமர்த்திக்கொள்ளலாம் (2) 39.13 பெண்கள் இருக்கும் இடத்திற்கு அலிகள் செல்லத் தடை (2) 39.12 அமர்ந்திருந்த இடத்திற்கு உரியவர் (1) 39.11 அமர்ந்திருக்கும் ஒருவரை எழுப்பிவிடுவது தடை செய்யப்பட்டதாகும் (4) 39.10 அவைக்கு வருபவர், அமரும் ஒழுங்கு (1) 39.9 … கெட்ட எண்ணத்தை அகற்றுவது விரும்பத் தக்கதாகும் (2) 39.8 அந்நியப் பெண்ணிடம் … தனிமையில் இருப்பது தடை செய்யப்பட்டதாகும் (3) 39.7 … பெண்கள் வெளியே செல்லலாம் (2) 39.6 உள்ளே செல்ல அனுமதியாகக் கருதுவதற்கு … (1) 39.5 சிறாருக்கு(ப் பெரியவர்கள்) முகமன் கூறுவது விரும்பத் தக்கதாகும் (2) 39.4 வேதக்காரர்களுக்கு முந்திக்கொண்டு ஸலாம் கூறுவதற்குத் தடை (7) 39.3 ஸலாத்துக்குப் பதிலுரைப்பது முஸ்லிமுக்குக் கடமை (2) 39.2 நடைபாதைகளில் அமர்வதன் ஒழுங்குகளில் … (2) 39.1 முந்தி ஸலாம் சொல்ல வேண்டியவர்கள் (1) 38.10 இயல்பான பார்வை (1) 38.9 பிறர் வீட்டில் எட்டிப் பார்ப்பது தடை செய்யப்பட்டதாகும் (5) 38.8 “யார்?“ என்று கேட்டால் … (2) 38.7 அனுமதி கோருதல் (5) 38.6 “என் அருமை மகனே!“ (2) 38.5 குழந்தை பிறந்தவுடன் இனிப்பான பொருளை மென்று அதன் வாயிலிடுவதும் … (9) 38.4 மன்னாதி மன்னன் எனப் பெயர் சூட்டிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும் (2) 38.3 அருவருப்பான பெயரை அழகான பெயராக மாற்றியமைப்பது … (6) 38.2 அருவருப்பான பெயர்கள் … (4) 38.1 … விரும்பத் தகுந்த பெயர்கள் (8) 37.35 வெறும் பெருமை (2) 37.34 மெல்லிய உடையணிந்து, பிறரைத் தன்பால் ஈர்க்கும் வண்ணம் தோள்களைச் சாய்த்து ஒயிலாக நடக்கும் பெண்கள் (1) 37.33 பெண்களின் பொய் அலங்காரங்காரங்களுக்குத் தடை (10) 37.32 நடைபாதைகளில் அமர்வதற்குத் தடையும் பாதைகளுக்குரிய உரிமைகளைப் பேணுவதும் (1) 37.31 தலை முடியில் பகுதி மழித்துவிட்டு, பகுதி மழிக்காமல் விட்டுவிடுவது வெறுக்கத் தக்கதாகும் (1) 37.30 ஸகாத் / ஜிஸ்யாவுக்கான கால்நடைகளில் சூடிட்டு அடை யாளமிடலாம் (4) 37.29 விலங்குகளின் முகத்தில் அடிப்பதும் அடையாளச் சூடிடுவதும் தடை செய்யப்பட்டவை ஆகும் (3) 37.28 ஒட்டகத்தின் கழுத்தில் (திருஷ்டிக்) கயிற்று மாலை அணிவிப்பது வெறுக்கத் தக்கதாகும் (1) 37.27 பயணத்தின்போது நாயும் (ஒலியெழுப்பும்) மணியும் வெறுக்கத் தக்கவை (2) 37.26 உயிரினங்களின் உருவப் படங்களை வரைவதும் … தடை செய்யப்பட்டவை ஆகும் (21) 37.25 (நரைமுடிக்கு) சாயமிட்டுக்கொள்வது யூதர்களுக்கு மாறு செய்வதாகும் (1) 37.24 நரைமுடியில் கருப்பு நிறச் சாயமிடுவது தடை செய்யப்பட்டதாகும் (2) 37.23 ஆண்கள் (மேனியில்) குங்குமப்பூச் சாயமிட்டுக்கொள்வதற்குத் தடை (1) 37.22 மல்லாந்து படுத்துக்கொண்டு கால்மீது காலைப் போட்டுக் கொள்வதற்கு அனுமதி (1) 37.21 மல்லாந்து படுத்துக்கொண்டு கால்மீது காலைப் போட்டுக் கொள்வதற்குத் தடை (3) 37.20 தடை செய்யப்பட்ட இரு நிலைகள் (2) 37.19 காலணிகளை அணிந்து கழற்றும் முறைகள் (3) 37.18 காலணி அல்லது அது போன்றதை அணிந்துகொள்வது விரும்பத் தக்கதாகும் (1) 37.17 மோதிரம் அணிவதற்குத் தடை செய்யப்பட்ட விரல்கள் (2) 37.16 கைச் சுண்டுவிரலில் மோதிரம் அணிவது (1) 37.15 அபிசீனியக் வெள்ளிக் குமிழ் மோதிரம் (2) 37.14 மோதிரங்களை(க் கழற்றி) எறிந்த நிகழ்வு (2) 37.13 நபி (ஸல்) அவர்களின் (முத்திரை) மோதிரம் (3) 37.12 ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ எனும் இலச்சினை பொறிக்கப்பட்ட வெள்ளி மோதிரம் (2) 37.11 ஆண்கள் தங்க மோதிரம் அணிவதற்குத் தடை (3) 37.10 ஆடைகளை எண்ணிப் பெருமை கொண்டு, கர்வத்தோடு நடப்பதற்குத் தடை (2) 37.9 பெருமைக்காக ஆடையைத் தரையில் படும்படி இழுத்துச் செல்வதற்குத் தடை (7) 37.8 தேவைக்கு அதிகமான விரிப்புகளும் ஆடைகளும் இருப்பது விரும்பத் தக்கதன்று (1) 37.7 படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்த அனுமதி (2) 37.6 ஆடையில் (எளிமை,) பணிவு காட்டுவது … (5) 37.5 பருத்தி ஆடை அணிவதன் சிறப்பு (2) 37.4 ஆண்கள் செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட ஆடை அணிவதற்குத் தடை (5) 37.3 தோல் உபாதைகள் இருந்தால் ஆண்கள் பட்டாடை அணியலாம் (3) 37.2 பொன் மோதிரம் மற்றும் பட்டாடை அணிவது ஆண்களுக்குத் தடை; பெண்களுக்கு அனுமதி (20) 37.1 பொன் / வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவது ஆண்களுக்கும் பெண்களுக்கும் தடை (2) 36.35 உணவைக் குறை சொல்லவேண்டாம் (2) 36.34 இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் உண்பார்; இறைமறுப்பாளன் ஏழு குடல்களில் உண்பான் (5) 36.33 உணவு குறைவாக இருக்கும்போது … (4) 36.32 விருந்தினரை உபசரிப்பதும் முன்னுரிமை வழங்குவதன் சிறப்பும் (6) 36.31 வெள்ளைப் பூண்டு சாப்பிடக்கூடியதே … (2) 36.30 உணவுக் காடியின் சிறப்பும் … (4) 36.29 ‘அல்கபாஸ்’ பழங்களில் கருப்பு நிறப் பழத்தின் சிறப்பு (1) 36.28 உணவுக் காளானின் சிறப்பும் … (6) 36.27 மதீனத்துப் பேரீச்சம் பழங்களின் சிறப்பு (3) 36.26 குடும்பத்தாருக்காக … உணவுகளைச் சேமித்துவைத்தல் (2) 36.25 பலருடன் சேர்ந்து உண்பவர் … (2) 36.24 உணவு உண்பவர் அமரும் முறை; பணிவோடு அமர்வது விரும்பத் தக்கது (2) 36.23 பேரீச்சை செங்காய்களுடன் வெள்ளரிக்காயையும் சேர்த்து உண்பது (1) 36.22 விருந்தளிப்பவருக்காக விருந்தாளி பிரார்த்திப்பது … (1) 36.21 சுரைக் குழம்பு உண்ண அனுமதி … (2) 36.20 வீட்டு உரிமையாளரின் சம்மதம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் … (4) 36.19 விருந்துக்கு அழைக்கப்பட்டவரைத் தொடர்ந்து அழைக்கப்படாதவரும் வந்துவிட்டால் … (2) 36.18 உண்டு முடித்ததும் விரல்களைச் சூப்புவதும் உணவுத் தட்டை வழித்து உண்பதும் … (9) 36.17 வலப் பக்கத்திலிருந்து பரிமாறுதல் விரும்பத் தக்கதாகும் (4) 36.16 பாத்திரத்தினுள் (பருகும்போது) வெளியே மூன்று முறை மூச்சு விட்டுப் பருகுவது விரும்பத் தக்கதாகும் (3) 36.15 ஸம்ஸம் நீரை நின்றுகொண்டு அருந்துவது (4) 36.14 நின்றுகொண்டு அருந்துவது வெறுக்கத் தக்கதாகும் (4) 36.13 உண்பது, அருந்துவது ஆகியவற்றின் ஒழுங்குகளும் விதிமுறைகளும் (10) 36.12 இரவு நேர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் (6) 36.11 பழச்சாறுகளைப் பருகுவதும் பாத்திரங்களை மூடிவைப்பதும் (3) 36.10 (ஆட்டுப்) பால் அருந்த அனுமதி (3) 36.9 பழச்சாறுகள் (புளித்துக்) கெட்டியாகி, போதையேறாதவரை அனுமதிக்கப்பட்டவையாகும் (10) 36.8 குடிகாரன் பாவமன்னிப்புக் கோரி திருந்தாவிட்டால் … (3) 36.7 போதை தரும் ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்ட மதுவாகும் (9) 36.6 பானங்கள்-பாத்திரங்கள், தடை-தடை நீக்கம் (36) 36.5 பேரீச்சம் பழம், உலர் திராட்சைக் கலவை ஊறல் வெறுக்கத் தக்கதாகும் (14) 36.4 ‘மதுபானம்’ என்று சொல்லப்படுபவை (4) 36.3 மதுவை மருந்தாகப் பயன்படுத்துவதற்குத் தடை (1) 36.2 மதுபானத்தை (சமையல்) காடியாக மாற்றிப் பயன்படுத்துவதற்குத் தடை (1) 36.1 போதையூட்டும் ஒவ்வொன்றும் மதுவாகும் (9) 35.8 அல்லாஹ் அல்லாதவரின் பெயர் கூறிப் பிராணிகளை அறுப்பதற்குத் தடை (3) 35.7 தலைமுடியை, நகங்களைக் களைவதற்குத் தடை (5) 35.6 அல் ஃபரஉ வல் அத்தீரா (1) 35.5 பலி இறைச்சியை எவ்வளவு காலம் சேமித்து வைக்கலாம்? (14) 35.4 பல், நகம், எலும்பு ஆகியவை தவிர எந்தப் பொருளாலும் பிராணியை அறுக்க அனுமதி (1) 35.3 தாமே அறுப்பதும் அல்லாஹ்வின் பெயரோடு தக்பீர் கூறுவதும் விரும்பத் தக்கவை ஆகும் (3) 35.2 பலிப் பிராணியின் வயது (4) 35.1 பலி கொடுக்கப்படும் நேரம் (10) 34.12 விலங்குகளைக் கட்டிவைத்து அம்பெய்து கொல்வதற்குத் தடை (5) 34.11 … கத்தியைக் கூர்மையாகத் தீட்டிக் கொண்டு வதையற்ற முறையைக் கையாளக் கட்டளை (1) 34.10 … பயிற்சிகளை மேற்கொள்வது அனுமதிக்கப் பட்டதாகும். கல்சுண்டு விளையாட்டு வெறுக்கப்பட்டதாகும் (2) 34.9 முயல் கறி உண்ணத் தக்கது (1) 34.8 வெட்டுக்கிளி உண்ணத் தக்கது (1) 34.7 உடும்புக் கறி உண்ணத் தக்கது (13) 34.6 குதிரைகளின் இறைச்சியை உண்பது கூடுமா? (3) 34.5 நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்பதற்குத் தடை (14) 34.4 கடல்வாழ் உயிரினங்களில் செத்தவற்றை உண்பதற்கு அனுமதி (5) 34.3 உண்பதற்குத் தடை செய்யப்பட்ட விலங்குகளும் பறவைகளும் (6) 34.2 வேட்டையாடிய பிராணி மறைந்து, பிறகு கிடைத்தால் … (2) 34.1 பயிற்சியளிக்கப்பட்ட நாய்கள் மூலம் வேட்டையாடுதல் (8) 33.56 பயணத்திலிருந்து திரும்புகின்றவர் … (5) 33.55 பயணம் என்பது துன்பத்தின் ஒரு பகுதியாகும் … (1) 33.54 பயணத்தில் கால்நடைகளின் நலன் காப்பதும் … (2) 33.53 “என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் எப்போதுமே உண்மைக்கு ஆதரவாளர்களாக இருப்பார்கள் … (8) 33.52 அம்பெய்வதன் சிறப்பும் … (3) 33.51 உயிர்த் தியாகிகள் பற்றிய விளக்கம் (3) 33.50 அல்லாஹ்வின் பாதையில் எல்லைக் காவல் புரிவதன் சிறப்பு (1) 33.49 கடல்வழிப் போரின் சிறப்பு (2) 33.48 போரில் கலந்துகொள்ள முடியாமல் போனவருக்கும் நன்மை … (1) 33.47 அறப்போரில் கலந்துகொள்ளாமல் இறந்துபோனவர் … (1) 33.46 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணத்தை வேண்டுவது விரும்பத் தக்கதாகும் (2) 33.45 “எண்ணங்களைப் பொருத்தே செயல்கள் அமைகின்றன” எனும் நபிமொழி … (1) 33.44 … போர்ச் செல்வங்களைப் பெற்றோரும் பெறாதோரும் … (2) 33.43 பிறர் பார்ப்பதற்காகவும் விளம்பரத்திற்காகவும் போரிட்டவர் … (1) 33.42 அல்லாஹ்வின் பாதையில் போரிட்டவர் … (3) 33.41 உயிர்த் தியாகிக்குச் சொர்க்கம் நிச்சயம் (6) 33.40 தகுந்த காரணம் உள்ளவர்களுக்கு அறப்போரில் கலந்து கொள்வது கடமை இல்லை (2) 33.39 அறப்போர் வீரர்களின் துணைவியருடைய கண்ணியம் … (1) 33.38 அறப்போர் வீரருக்கு வாகனம் மற்றும் பிற உதவிகள் … (6) 33.37 அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்வதன் சிறப்பும் அதற்குக் கிடைக்கும் பன்மடங்கு நன்மைகளும் (1) 33.36 இறைமறுப்பாளனை (போரில்) கொன்ற பின்னர் (மார்க்கத்தில்) உறுதியோடு இருத்தல் (2) 33.35 இரு போராளிகளில் ஒருவர் மற்றவரைக் கொன்று, பின் அவ்விருவருமே சொர்க்கத்தில் … (2) 33.34 அறப்போர் மற்றும் எல்லைக் காவலின் சிறப்பு (3) 33.33 வீரமணம் அடைந்தவர்களின் உயிர்கள் … (1) 33.32 அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவரின் கடனைத் தவிர அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன (3) 33.31 அல்லாஹ் (தனது பாதையில்) அறப்போர் புரிந்தவர்களுக்காகச் சொர்க்கத்தில் வைத்துள்ள உயர்நிலைகள் (1) 33.30 அல்லாஹ்வின் பாதையில் காலையாயினும் மாலையாயினும் (போரிடச்) செல்வதன் சிறப்பு (5) 33.29 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணம் அடைவதன் சிறப்பு (4) 33.28 அல்லாஹ்வின் பாதையில் புறப்படுதலின், அறப்போரில் ஈடுபடுதலின் சிறப்பு (4) 33.27 குதிரையின் தன்மைகளில் விரும்பத் தகாதவை (1) 33.26 மறுமை நாள்வரை நெற்றிகளில் நன்மை பிணைக்கப்பட்டிருக்கும் குதிரைகள் (5) 33.25 குதிரைப் பந்தயமும் அதற்காகக் குதிரையை மெலிய வைப்பதும் (1) 33.24 குர்ஆன் பிரதிகளை இறைமறுப்பாளர்களின் நாட்டுக்கு எடுத்துச் செல்வது … (3) 33.23 பருவ வயது பற்றிய விளக்கம் (1) 33.22 இயன்றவரை கட்டுப்பட்டு நடப்பதாக உறுதிமொழி அளித்தல் (1) 33.21 பெண்களிடம் உறுதிப் பிரமாணம் (பைஅத்) வாங்கும் முறை (2) 33.20 மக்கா வெற்றிக்குப் பின் ஹிஜ்ரத் கிடையாது (5) 33.19 நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றவர் மீண்டும் தமது தாயகத்தில் குடியேறுவதற்குத் தடை (1) 33.18 ஆட்சித் தலைவர் படையினரிடம் உறுதி மொழி பெற்றுக்கொள்வது … (13) 33.17 ஆட்சித் தலைவர்களில் நல்லவர்களும் தீயவர்களும் (2) 33.16 ஆட்சித் தலைவர்கள் மார்க்கத்திற்கு முரணாகச் செயல்படும்போது … (2) 33.15 இரு ஆட்சியாளர்களுக்கு வாக்களிப்புப் பிரமாண நெருக்கடி ஏற்பட்டால் … (1) 33.14 முஸ்லிம்கள் (ஒரே தலைமையின் கீழ்) ஒன்றுபட்டிருக்கும்போது … (2) 33.13 குழப்பங்கள் தோன்றும்போது கூட்டமைப்போடு சேர்ந்திருப்பது கடமையாகும் … (8) 33.12 உரிமைகள் மறுக்கப்பட்டாலும் தலைமைக்குக் கட்டுப்படுதல் (1) 33.11 அதிகாரத்திலிருப்போர் அநீதியிழைக்கும்போதும் தகுதியற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும்போதும் … (1) 33.10 கலீஃபாக்களில் முதலாமவருக்கு உறுதிப் பிரமாணம் (பைஅத்) அளிப்பது கடமையாகும் (3) 33.9 ஆட்சித் தலைவர் கேடயம் போன்றவர் … (1) 33.8 பாவமற்றவற்றில் தலைவர்களுக்குக் கட்டுப்படுவது கடமையாகும். பாவமானவற்றில் கட்டுப்படுவதற்குத் தடை (11) 33.7 அதிகாரிகளுக்கு அன்பளிப்புகள் வழங்குவதற்குத் தடை (3) 33.6 பொதுச் சொத்துகளில் மோசடி செய்வது வன்மையாகத் தடை செய்யப்பட்டது (1) 33.5 நேர்மையான ஆட்சியாளரின் சிறப்பும் … (6) 33.4 தேவையின்றி ஆட்சிப் பொறுப்பை ஏற்பது விரும்பத் தக்கதன்று (2) 33.3 ஆட்சியதிகாரத்தைத் தேடி அலைவதற்கும் அதன் மீது ஆசை கொள்வதற்கும் தடை (3) 33.2 ஆட்சித் தலைவரை நியமிக்கலாம்; நியமிக்காமல் விடலாம் (2) 33.1 ஆட்சியதிகாரம் குறைஷியரிடையேதான் இருக்கும் (10) 32.51 அறப்போர்களில் இறைமறுப்பாளரிடம் உதவி கோருவது … (1) 32.50 ‘தாத்துர் ரிக்காஉ’ (ஒட்டுத் துணிப்) போர் (1) 32.49 நபி (ஸல்) கலந்துகொண்ட அறப்போர்களின் எண்ணிக்கை (6) 32.48 அறப்போரில் கலந்துகொண்ட பெண்களுக்கு … (4) 32.47 அறப்போரில் ஆண்களுடன் பெண்களும் கலந்துகொள்வது (2) 32.46 “அவனே உங்களைத் தாக்காமல் அவர்கள் கைகளை தடுத்(து வைத்)தான்” எனும் (48:24) வசனம் (2) 32.45 ‘தூ கரத்’ போரும் பிற போர்களும் (2) 32.44 அஹ்ஸாப் போர் (அ) அகழ்ப் போர் (6) 32.43 கைபர் போர் (5) 32.42 கஅப் பின் அல்அஷ்ரஃப் கொல்லப்படுதல் (1) 32.41 அபூஜஹ்லு கொல்லப்படுதல் (1) 32.40 நபி (ஸல்) (மக்களை) இறைவன்பால் அழைத்து, துன்பங்களைப் பொறுத்துக் கொண்டது (2) 32.39 நபி (ஸல்) எதிர்கொண்ட துன்பங்கள் (7) 32.38 இறைதூதரால் கொல்லப்பட்டவன் மீது இறைவனின் கோபம் (1) 32.37 உஹுதுப் போர் (3) 32.36 கூட்டுப் படையினருக்கு எதிரான அகழ்ப் போர் (2) 32.35 வாக்குறுதியை(ப் போரிலும்) நிறைவேற்றுவது (1) 32.34 ஹுதைபிய்யா சமாதான உடன்படிக்கை’ (7) 32.33 மக்கா வெற்றிக்குப் பின் … (1) 32.32 கஅபாவைச் சுற்றிலும் இருந்த சிலைகளை அப்புறப்படுத்தியது (1) 32.31 மக்கா வெற்றி (2) 32.30 பத்ருப் போர் (1) 32.29 தாயிஃப் போர் (1) 32.28 ஹுனைன் போரில் … (5) 32.27 இறைமறுப்பு அரசர்களுக்கு நபி (ஸல்) எழுதிய கடிதங்கள் (1) 32.26 அழைப்பு விடுத்து ஹெராக்ளியஸ் மன்னருக்கு நபி (ஸல்) எழுதிய கடிதம் (1) 32.25 போரில் கிடைத்த உணவை, பகை நாட்டில் இருக்கும் போதே உண்ணலாம் (2) 32.24 முஹாஜிர்கள் தன்னிறைவு அடைந்தபோது … (2) 32.23 செயல்களுள் முன்னுரிமை அளிக்கத் தக்கது (1) 32.22 ஒப்பந்தத்தை முறித்துவிட்ட (பகை)வர்களுடன் போர் செய்யலாம் (3) 32.21 யூத கிறித்தவர்கள் அரபிய தீபகற்பத்திலிருந்து வெளியேற்றப்படுவது (1) 32.20 யூதர்களை ஹிஜாஸ் பகுதியிலிருந்து நாடு கடத்தியது (2) 32.19 கைதியை என்னென்னவெல்லாம் செய்யலாம் (1) 32.18 பத்ருப் போரில் வானவர்களின் உதவியும் … (1) 32.17 போர் வெற்றிச் செல்வத்தைப் பங்கிடும் முறை (1) 32.16 இறைத்தூதர்களுக்கு யாரும் (சொத்தில்) வாரிசாக முடியாது (5) 32.15 போர் செய்யாமல் கிடைத்த செல்வங்களின் சட்டம் (3) 32.14 … போர்க் கைதிகளைப் பரிமாறிக்கொள்வது (1) 32.13 போரில் கொல்லப்பட்ட எதிரியின் உடைமைகள் (4) 32.12 போர் வெற்றிச் செல்வங்கள் (7) 32.11 போர் வெற்றிச் செல்வங்கள் யாருக்குச் சொந்தம்? (1) 32.10 போரில் மரங்களை வெட்டுவதும் எரிப்பதும் அனுமதிக்கப்பட்டதாகும் (3) 32.9 பெண்களையும் குழந்தைகளையும் அறியாமல் கொன்றுவிட்டால் … (3) 32.8 போரில் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதற்குத் தடை (2) 32.7 எதிரிகளை(ப் போரில்) எதிர்கொள்ளும்போது பிரார்த்திப்பது (2) 32.6 எதிரியை(ப் போர்க் களத்தில்) சந்திக்க ஆசைப்படுவது வெறுக்கத் தக்கது … (2) 32.5 போரில் தந்திரம் அனுமதிக்கப்பட்டது (2) 32.4 மோசடி செய்வது தடை செய்யப்பட்டதாகும் (8) 32.3 மக்களிடம் இலகுவாக நடந்துகொள்ள வேண்டும்; வெறுப்பைக் கைவிட வேண்டும் (3) 32.2 படைத் தலைவர், போர் நெறிகள் குறித்து அறிவுறுத்துவது (1) 32.1 முன்னறிவிப்பின்றித் தாக்குதல் தொடுக்கலாமா? (1) 31.5 பயணத்தில் உணவைப் பகிர்ந்துண்ணல் (1) 31.4 செல்வத்தால் பிறருக்கு உதவுவது விரும்பத் தக்கது (1) 31.3 விருந்தோம்பல் சார்ந்தவை (3) 31.2 உரிமையாளரின் அனுமதியின்றி கால் நடையில் பால் கறப்பதற்குத் தடை (1) 31.1 ஹாஜிகள் தவறவிட்டவை (2) 31.0 கண்டெடுக்கப்பட்டவை (5) 30.11 நீதிபதி சமரசம் செய்துவைப்பது விரும்பத் தக்கதாகும் (1) 30.10 ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடு (1) 30.9 சாட்சிகளில் சிறந்தவர் (1) 30.8 தவறான தீர்ப்புகளைத் தள்ளுபடி செய்வதும் (மார்க்கத்தில் இல்லாத) புதுமைகளை நிராகரிப்பதும் (2) 30.7 கோபமாக இருக்கும் நீதிபதி, தீர்ப்பளிப்பது விரும்பத் தக்கதன்று (1) 30.6 நீதிபதியின் ஆய்வுக்கு நன்மை உண்டு (1) 30.5 தடைகள் மூன்று (4) 30.4 ஹிந்த் (ரலி) வழக்கு (3) 30.3 வாதங்களின் அடிப்படையில் தீர்ப்பு அமைந்துவிடுதல் (2) 30.2 சத்தியத்தின் / சாட்சியத்தின் அடிப்படையில் தீர்ப்பளித்தல் (1) 30.1 சத்தியம் செய்து நிரூபிப்பது பிரதிவாதிமீது கடமையாகும் (2) 29.11 இழப்பீடு இல்லாத விபத்துகள் (2) 29.10 தண்டனைகள், குற்றங்களுக்கான பரிகாரமாகும் (3) 29.9 சீர்திருத்திற்காக வழங்கப்படும் சாட்டையடிகளின் (அதிகபட்ச) அளவு (1) 29.8 மது அருந்திய குற்றத்திற்கான தண்டனை (4) 29.7 மகப்பேறான பெண்ணின் தண்டனையைத் தள்ளிவைத்தல் (1) 29.6 இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் யூதர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டாலும் கல்லெறி தண்டனை (6) 29.5 விபச்சாரம் செய்தவரின் ஒப்புதல் வாக்குமூலம் (9) 29.4 மணமானவர்கள் விபச்சாரம் செய்தால் கல்லெறி தண்டனை (1) 29.3 விபச்சாரக் குற்றத்திற்கான தண்டனை (2) 29.2 தண்டனையிலிருந்து விலக்கு அளிக்குமாறு பரிந்துரைப்பதற்குத் தடை (3) 29.1 தண்டனைக்குரிய திருட்டின் அளவுகோலும் தண்டனையும் (7) 28.11 சிசுக் கொலைக்கான இழப்பீடும் … (6) 28.10 கொலையாளி, தன் குற்றத்தை ஒப்புக்கொள்வதும் … (2) 28.9 மனிதர்களின் உயிர், தன்மானம், செல்வம் ஆகியவற்றுக்கு ஊறு விளைவிப்பது … (2) 28.8 மறுமையில் வழங்கப்படும் தீர்ப்பும் தண்டனையும் … (1) 28.7 கொலையை (உலகுக்கு) அறிமுகப்படுத்தியவர் மீதான பாவம் (1) 28.6 முஸ்லிமின் மரண தண்டனைக்கான காரணங்கள் (2) 28.5 பற்கள் போன்ற(உறுப்புகளான)வற்றில் பழிக்குப்பழி உண்டு (1) 28.4 தாக்க வந்தவனிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக … (6) 28.3 கல் மற்றும் கூராயுதங்களால் கொலை செய்தால், பழிக்குப்பழி உண்டு … (3) 28.2 வன்முறையாளர்களுக்கும் மதம் மாறியோருக்குமான தண்டனை (4) 28.1 அல்கஸாமா (4) 27.13 விடுதலைக்கு வாக்களிக்கப்பட்ட அடிமையை விற்கலாம் (2) 27.12 அடிமையில் தமது பங்கை மட்டும் விடுதலை செய்தல் (8) 27.11 ‏தன் உரிமையாளருக்கு விசுவாசமாகவும் … (4) 27.10 அடிமைக்கு எஜமானர் உண்பதிலிருந்து உணவளிப்பதும் … (4) 27.9 விபசாரம் செய்துவிட்டதாக அவதூறு கூறுவதற்கான கண்டனம் (1) 27.8 அடிமைகளுடனான நல்லுறவும் கன்னத்தில் அறைந்ததற்கான பரிகாரமும் (8) 27.7 இறைமறுப்பாளராக இருந்தபோது செய்த நேர்ச்சை… (2) 27.6 ஆகுமாக்கப்பட்டதற்கான சத்தியமாக இருந்தாலும் … (1) 27.5 இன்ஷா அல்லாஹ் என்பதை (சத்தியத்தின்போது) சேர்த்துக் கூறுதல் (4) 27.4 சொல்பவரின் எண்ணப்படியே ஒருவருடைய சத்தியம் அமையும் (2) 27.3 சத்தியம் செய்தவர், அதைவிடச் சிறந்ததாக மற்றொன்றைக் காணும்போது … (12) 27.2 ‘லாத்’ மற்றும் ‘உஸ்ஸா’வின் மீது சத்தியம் செய்துவிட்டவர் … (2) 27.1 அல்லாஹ்வைத் தவிர எவர்/எதன் மீதும் சத்தியம் செய்யத் தடை (3) 26.5 நேர்ச்சை முறிவுக்கான பரிகாரம் (1) 26.4 கஅபாவரை நடைப்பயணம் செல்வதாக நேர்ந்துகொண்டவர் (3) 26.3 இறைவனுக்கு மாறு செய்வதிலோ உரிமை இல்லாததிலோ நேர்ச்சை. (1) 26.2 நேர்ச்சை செய்வதற்குத் தடை; அது (விதியில்) எதையும் மாற்றிவிடாது (6) 26.1 நேர்ச்சையை நிறைவேற்றக் கட்டளை (1) 25.5 வசதியற்றவர் மரண சாஸனம் செய்ய முடியாது (6) 25.4 அறக்கொடை (1) 25.3 மனிதன் இறந்த பின்பும் தொடரும் நன்மைகள் (1) 25.2 இறந்துவிட்டவருக்காகச் செய்யப்படும் தர்மங்களின் நன்மை … (3) 25.1 மரண சாஸனம் 1/3 மட்டுமே (5) 25.0 மரண சாஸனம் (2) 24.4 ஆயுட்கால அன்பளிப்பு (11) 24.3 அன்பளிப்பு வழங்குவதில் பிள்ளைகளிடையே பாகுபாடு காட்டுவது … (10) 24.2 தானமும் அன்பளிப்பும் வழங்கப்பட்ட பின், திரும்பப் பெறுவதற்குத் தடை … (4) 24.1 தானமாகக் கொடுத்ததை விலைக்கு வாங்குவது விரும்பத் தக்கதல்ல (4) 23.4 ஒருவர் விட்டுச்செல்லும் செல்வம் அவருடைய வாரிசுகளுக்கு உரியதாகும் (4) 23.3 இறுதியாக அருளப்பெற்றது கலாலா வசனமாகும் (4) 23.2 ‘கலாலா’ சொத்துரிமை (5) 23.1 உரியவர்களுக்கும் உறவினருக்கும் பிரிக்கப்பட்ட பாகங்கள் (3) 23.0 ஒரு முஸ்லிம், இறைமறுப்பாளருக்கு வாரிசாகமாட்டார் (1) 22.31 பாதைக்கு நிலம் ஒதுக்குவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதற்கான தீர்வு (1) 22.30 பிறர் நிலத்தை அபகரித்தல் போன்ற அநீதி இழைத்தல்களுக்குத் தடை (6) 22.29 அண்டை வீட்டாரின் சுவரில் (சாரம் கட்டுவதற்கு) மரக்கட்டை பதிப்பது (1) 22.28 பங்காளியின் இசைவு (3) 22.27 வியாபாரத்தில் (வீண்)சத்தியம் செய்வது விலக்கப்பட்டுள்ளது (2) 22.26 உணவுப் பொருட்களைப் பதுக்குவதற்குத் தடை (2) 22.25 முன்பணம் செலுத்தும் வணிகம் (2) 22.24 அடமானம் உள்ளூரிலும் பயணத்திலும் செல்லும் (3) 22.23 ஓர் உயிரினத்தை அதே இனத்திற்குப் பதிலாக ஏற்றத்தாழ்வோடு விற்கலாம் (1) 22.22 உங்களில் சிறந்தவர் கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே (4) 22.21 ஒட்டகத்தை விற்றவர் அதில் பயணிக்க நிபந்தனை விதிப்பது (5) 22.20 அனுமதிக்கப்பட்டவற்றையும் ஐயத்திற்குரியவற்றையும் கையாளுதல் (1) 22.19 வட்டி வாங்குபவருக்கும் வட்டி கொடுப்பவருக்கும் சாபம் (2) 22.18 உணவுப் பொருளை, சரிக்குச் சரியாக விற்றல் (12) 22.17 பொன்னும் மணியும் பதித்த மாலையை விற்பது (4) 22.16 தங்கத்திற்கு வெள்ளியைக் கடனாக விற்பதற்குத் தடை (3) 22.15 நாணயமாற்று வியாபாரம்; வெள்ளிக்குத் தங்கத்தை ரொக்கத்துக்கு விற்பது (7) 22.14 வட்டி (4) 22.13 மது, செத்தவை, பன்றி, சிலைகள் ஆகியவற்றை விற்பதற்குத் தடை (4) 22.12 மதுபான வியாபாரத்திற்குத் தடை (4) 22.11 குருதி உறிஞ்சி எடுப்பதற்காகக் கூலி பெறுவது கூடும் (4) 22.10 வேட்டை, காவல், பாதுகாப்புக்காக நாய் வளர்க்கலாம் (18) 22.9 நாய் விற்ற காசு, சோதிடரின் தட்சணை, விபச்சாரியின் வருமானம் (4) 22.8 தேவைக்குப் போக மீதம் உள்ள நீரை விற்பதற்குத் தடை (5) 22.7 வசதியுள்ளவர் கடனைச் செலுத்த தாமதம் செய்யக் கூடாது (1) 22.6 கடனை அடைக்க சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிப்பதன் சிறப்பு (7) 22.5 திவாலானவரிடம் திரும்பப் பெற்றுக்கொள்ளும் உரிமை (4) 22.4 கடனில் தள்ளுபடி செய்வது விரும்பத் தக்கதாகும் (3) 22.3 சேதமடைந்த பழங்களுக்கான தொகைக்குத் தள்ளுபடி (5) 22.2 மரம் நடுதலின், பயிர் செய்தலின் சிறப்பு (5) 22.1 நிபந்தனையின் பேரில் தோப்பைக் குத்தகைக்கு விடுவது (4) 21.21 நிலத்தை (விளைவித்துக்கொள்ள) இரவலாக வழங்குவது (4) 21.20 ‘முஸார’ஆவும் ‘முஆஜரா’வும் (2) 21.19 பொன், வெள்ளி(நாயணங்களு)க்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (3) 21.18 தானியத்திற்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (2) 21.17 நிலக் குத்தகை (24) 21.16 தடை செய்யப்பட்ட வியாபார வகைகள் (6) 21.15 கனிகள் நிறைந்த பேரீச்ச மரத்தை விற்பது (4) 21.14 (மரத்திலுள்ள) செங்கனிகளை மாற்றிக் கொள்வதற்குத் தடை (14) 21.13 மரத்திலுள்ள பழங்களை முற்றுவதற்கு முன் விற்பதற்குத் தடை (10) 21.12 வியாபாரத்தில் ஏமாற்றப்படுபவர் (1) 21.11 வியாபாரத்தில் உண்மை பேசுவதும் குறைகளைத் தெளிவுபடுத்துவதும் (1) 21.10 விற்பவருக்கும் வாங்குபவருக்கும் வியாபாரத்தை முறித்துக்கொள்ளும் உரிமை (4) 21.9 அளவு தெரியாத பேரீச்சம் பழக் குவியலை விற்பதற்குத் தடை (1) 21.8 வாங்கப்பட்ட பொருள் கைக்கு வருமுன் (பிறருக்கு) விற்பது கூடாது (13) 21.7 மடி கனக்கச் செய்யப்பட்ட கால்நடைகளை விற்பனை செய்வது பற்றிய சட்டம் (5) 21.6: கிராமவாசிக்காக, நகரவாசி விற்றுக் கொடுக்கத் தடை (5) 21.5: விற்பனைக்கு வரும் சரக்குகளை இடைமறித்து வாங்கத் தடை (4) 21.4: வியாபாரத்தில் தடை செய்யப்பட்டவை (7) 21.3: ஒட்டகக் கன்று (அது பிறக்குமுன்) விற்பதற்கு தடை! (2) 21.2: கல்லெறி வியாபாரம் மற்றும் மோசடி வியாபாரம் ஆகியவை செல்லாது (1) 21.1: ‘முலாமஸா’ மற்றும் ‘முனாபதா’ ஆகிய வியாபாரங்கள் செல்லாது (3) 20.7: அடிமையான தந்தையை விடுதலை செய்வதன் சிறப்பு (1) 20.6: அடிமைகளை விடுதலை செய்வதன் சிறப்பு (4) 20.5: விடுதலை செய்த உரிமையாளரை மாற்றிக் கூறத் தடை (4) 20.4: வாரிசாகும் உரிமையை விற்பதற்கும் அன்பளிப்பாக வழங்குவதற்கும் தடை (1) 20.3: விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியது (9) 20.2: அடிமை (தனது முழு விடுதலைக்காக) உழைத்துப் பொருளீட்டுவது (2) 20.1: ஓர் அடிமையி(ன் விலையி)ல், ஒருவர் தமக்கான பங்கை விடுவிப்பது (1) 19.1: சுய சாபம் வேண்டுதல் (17) 18.9: கணவன் இறந்து ‘இத்தா’விலிருக்கும் பெண் துக்கம் கடைப்பிடிப்பது (11) 18.8: கர்ப்பமுற்றிருக்கும் பெண்ணின் ‘இத்தா’க் காலம், பிரசவத்துடன் முடிந்துவிடும் (2) 18.7: ‘இத்தா’விலிருக்கும் பெண் தன் தேவைக்காக வெளியே செல்லலாம் (1) 18.6: மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சம் பற்றி… (18) 18.5: ஈலாச் செய்வது, மனைவியிடமிருந்து விலகுவது, விருப்ப உரிமை அளிப்பது (5) 18.4: மனைவிக்கு (த் தம்மைப் பிரிந்துவிட) உரிமை அளிப்பது மணவிலக்கு ஆகாது (8) 18.3: மணவிலக்குச் செய்யும் நோக்கமின்றி கூறினால், அது மணவிலக்கு ஆகாது (4) 18.2: மூன்று தலாக்குகள் (3) 18.1: மாதவிடாயான மனைவியை அவளது சம்மதமின்றி மணவிலக்குச் செய்வதற்குத் தடை (14) 17.19: ஹவ்வா-வும், பெண்கள் கணவரை ஏமாற்றுதலும் (2) 17.18: மனைவியரின் நலம் நாடுதல் (4) 17.17: பயன் தரும் இவ்வுலகச் செல்வங்களுள் மிகச் சிறந்த செல்வம், நற்குணமுள்ள மனைவியே (1) 17.16: கன்னிப் பெண்ணை மணப்பது விரும்பத் தக்கதாகும் (5) 17.15: மார்க்கப் பற்றுள்ள பெண்ணை மணப்பது விரும்பத் தக்கதாகும் (2) 17.14: மனைவியருள் ஒருவர், தனது முறைநாளை மற்றவருக்கு விட்டுக்கொடுக்கலாம் (4) 17.13: மனைவியருக்கு (இரவுகளை) ஒதுக்கீடு செய்வது (1) 17.12: கன்னி கழிந்த பெண்ணுக்கும், கன்னிப் பெண்ணுக்கும் கணவன் ஒதுக்க வேண்டிய நாட்கள் (6) 17.11: சாயல் அறியும் நிபுணரின் கூற்றுப்படி, குழந்தைக்கு உரியவரைக் கண்டறிவது (3) 17.10: எஜமானரின் கீழ் வாழும் பெண்ணின் குழந்தை, அவருக்கே உரியது (2) 17.9: பெண் போர்க் கைதியுடன் உடலுறவு கொள்ளலாம் (2) 17.8: பசிக்காகத் தாய்ப்பால் அருந்தினால்தான் பால்குடி உறவு ஏற்படும் (1) 17.7: பருவ வயதை அடைந்தவருக்குப் பாலூட்டுவது (6) 17.6: ஐந்து தடவை அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும் (2) 17.5: ஓரிரு தடவை (பெண்ணின் மார்பில்) பால் குடிப்பது பற்றிய சட்டம் (6) 17.4: மனைவியின் மகளையும் மனைவியின் சகோதரியையும் மணப்பதற்குத் தடை (2) 17.3: பால்குடிச் சகோதரரின் மகளை மணப்பது தடை செய்யப்பட்டுள்ளது (3) 17.2: பால்குடித் தந்தையின் (இரத்த பந்த) உறவினரும் மணமுடிக்கத் தகாதவரே! (6) 17.1: பிறப்பால் ஏற்படும் உறவும் பால்குடி உறவும் (2) 16.24: பாலூட்டும் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அஸ்லுச் செய்வது வெறுக்கத் தக்கது (3) 16.23: கருவுற்றிருக்கும் பெண் போர்க் கைதியுடன் உடலுறவு கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது (1) 16.22: உடலுறவின்போது இடைமுறிப்பு – ‘அஸ்லு’ச் சட்டம் (12) 16.21: மனைவியுடன் நடைபெறும் உடலுறவு இரகசியங்களை வெளியே சொல்வது தடுக்கப்பட்டது (2) 16.20: ஒரு பெண், தன் கணவனின் படுக்கைக்குச் செல்ல மறுப்பதற்குத் தடை (3) 16.19: உடலுறவின் ஒழுங்குகள் (2) 16.18: உடலுறவின்போது ஓத வேண்டிய விரும்பத் தகுந்த பிரார்த்தனை (1) 16.17: மூன்று முறை மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்ணின் மறுவிருப்பம் (4) 16.16: விருந்துக்கான அழைப்பை ஏற்பது பற்றிய கட்டளை (13) 16.15: ஸைனப் பின்த்து ஜஹ்ஷு (ரலி) திருமணம்; ஹிஜாப் பற்றிய வசனம்; மணவிருந்து (7) 16.14: அடிமைப் பெண்ணை விடுதலை செய்து, பின்னர் அவளை மணமுடித்துக்கொள்வதன் சிறப்பு (6) 16.13: மணக்கொடை (மஹ்ரு) என்பது … (7) 16.12: ஒருவர் தாம் மணமுடிக்க விரும்பும் பெண்ணின் முகத்தையும் இரு முன் கைகளையும் பார்ப்பது (2) 16.11 ஷவ்வால் மாதத்தில் மணமும் தாம்பத்திய உறவும் (1) 16.10: இளவயதுக் கன்னிக்கு அவளுடைய தந்தை மணமுடித்துவைத்தல் (4) 16.9: மணப் பெண்ணின் வாய் வழிச் சம்மதமும் மௌனச் சம்மதமும் (4) 16.8: திருமண (முன்) நிபந்தனைகளை நிறைவேற்றல் (1) 16.7: மணக்கொடையில்லா திருமணம் செல்லாது (5) 16.6: தம் (முஸ்லிம்) சகோதரன் கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணை, மற்றவர் கேட்கலாகாது (7) 16.5: இஹ்ராம் புனைந்தவர் திருமணம் செய்வதற்குத் தடை; அவர் பெண் கேட்பது வெறுக்கத் தக்கது (8) 16.4: மனைவியின் அத்தையை, சின்னம்மாவை மணக்கத் தடை (8) 16.3: இடைக்காலத் திருமணம், (முத்ஆ) காலாவதியானது (21) 16.2: இச்சை தூண்டப்பட்டவர், தமது இச்சையைத் தணித்துக் கொள்ளட்டும் (2) 16.1: வசதி இருந்தால் மணமுடிப்பதும் இல்லாதவர் நோன்பு நோற்பதும் (6) 15.97: குபாப் பள்ளிவாசல், அதில் தொழுவது, அதைத் தரிசிப்பது ஆகிய சிறப்புகள் (7) 15.96: இறையச்சத்தின் மீது நிறுவப்பட்ட பள்ளிவாசல் (1) 15.95: மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெதற்கும் (புனிதப்) பயணம் கிடையாது (2) 15.94: மக்கா, மதீனாப் பள்ளிவாசல்களில் தொழுவதன் சிறப்பு (6) 15.93: ‘உஹுத்’ மலை நம்மை நேசிக்கிறது; நாமும் அதை நேசிக்கின்றோம் (3) 15.92: சொர்க்கப் பூஞ்சோலைகளுள் ஒன்று (3) 15.91: மதீனாவாசிகள் மதீனாவை விட்டு அகலும்போது அதன் நிலை (2) 15.90: மதீனாவிலேயே தங்கியிருப்பதற்கு ஆர்வமூட்டல் (2) 15.89: மதீனாவாசிகளுக்குக் கேடு நினைப்பவர்களை, அல்லாஹ் உருக்குலைத்துவிடுவான் (3) 15.88: தன்னிலுள்ள தீயவர்களை மதீனா அகற்றிவிடும் (5) 15.87: கொள்ளை நோயும் தஜ்ஜாலும் நுழைய முடியாமல் மதீனா பாதுகாக்கப்பட்டுள்ளது (2) 15.86: மதீனாவில் ஏற்படும் நெருக்கடிகளைச் சகித்துக்கொண்டு, அங்குக் குடியிருக்க ஆர்வ மூட்டல் (10) 15.85: மதீனாவின் சிறப்பு; பிரார்த்தித்ததும் புனிதமானவையும் (17) 15.84: இஹ்ராமின்றி மக்காவிற்குள் நுழைய அனுமதி (5) 15.83: அவசியத் தேவையின்றி மக்காவிற்குள் ஆயுதம் எடுததுச் செல்வதற்குத் தடை (1) 15.82: மக்காவும், அதன் புனிதமானவைகளும் (4) 15.81: முஹாஜிருக்கு மக்காவில் தக்குவதற்கு அனுமதிக்கப்பட்ட நாட்கள் (4) 15.80: ஹாஜிகள் மக்காவில் தங்குவதும் அங்குள்ள வீடுகளை வாரிசுரிமையாகப் பெறுவதும் (3) 15.79: ஹஜ், உம்ரா, அரஃபா நாள் ஆகியவற்றின் சிறப்பு (3) 15.78: இணைவைப்பவருக்கான ஹஜ் சட்டங்கள் (1) 15-77: ஹஜ் அல்லது உம்ராவிலிருந்து திரும்பும்போது துல்ஹுலைஃபாவில் தங்கித் தொழுவது (5) 15.76: பயணத்திலிருந்து திரும்பி வரும்போது ஓத வேண்டியவை (2) 15.75: பயணங்களில் வாகனத்தில் ஏறியதும் ஓத வேண்டிய துஆ (2) 15.74: மஹ்ரமான ஆணுடன் மட்டுமே பெண்ணின் ஹஜ் முதலான பயணம் (11) 15.73: ஹஜ் கடமை, ஆயுளில் ஒரு முறைதான் (1) 15.72: குழந்தையின் ஹஜ் செல்லும்; அதை ஹஜ்ஜுக்கு அழைத்துச் சென்றவருக்கும் நற்பலன் உண்டு (3) 15.71: இயலாதவருக்காகவோ, இறந்தவருக்காகவோ பிறர் ஹஜ் செய்தல் (2) 15.70: கஅபாவின் வளைந்த சுவரும் அதன் தலைவாயிலும் (1) 15.69: இறையில்லம் கஅபாவை இடித்துக் கட்டுதல் (7) 15.68: கஅபாவின் உள்ளே நுழைவதும் அதனுள் தொழுவதும் (9) 15.67: விடைபெறும் தவாஃப் மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணுக்குக் கடமையில்லை (8) 15.66: செல்லும் வழியில் பலிப் பிராணி பாதிப்புக்குள்ளாகிவிட்டால் … (2) 15.65: பலியிடக் கொண்டுசெல்லும் ஒட்டகத்தில், பயணம் செய்ய அனுமதி (6) 15-64: ஹரம் எல்லைக்குச் செல்லாதவர், பலிப் பிராணியை அனுப்பிவைக்கும் முறை (11) 15.63: ஒட்டகத்தை அறுக்கும் முறை (1) 15.62: பலிப் பிராணிகளுள் மாட்டிலும் ஒட்டகத்திலும் கூட்டுச் சேர்வது (8) 15.61: பலிப் பிராணிகளின் இறைச்சி, தோல், சேணம் ஆகியவை தர்மத்துக்குரியன (2) 15.60: ‘தஷ்ரீக்’ நாட்களின் இரவுகளில் மினாவில் தங்குவது கட்டாயமாகும் (2) 15.59: ‘நஃப்ரு’டைய நாளில் ‘அல்முஹஸ்ஸபி’ல் தங்குவதும் அங்குத் தொழுவதும் (9) 15.58: துல்ஹஜ் பத்தாவது நாளில் ‘தவாஃபுல் இஃபாளா’ செய்வது (2) 15.57: ஹஜ் சடங்குகளில் முன் – பின் ஆகிவிட்டால் … (6) 15.56: துல்ஹஜ் பத்தாம் நாளின் சடங்குகள் (3) 15.55: தலைமுடியை மழிப்பதும் குறைப்பதும் (6) 15.54: கற்களின் எண்ணிக்கை (1) 15.53: கல்லெறியும் நேரம் (1) 15.52: பொடிக் கற்கள் போதும் (1) 15.51: துல்ஹஜ் பிறை பத்தில் ஜம்ரத்துல் அகபாவுக்குக் கல்லெறிதல் (3) 15.50: ‘ஜம்ரத்துல் அகபா’வின் மீது கல் எறியும்போது தக்பீர் கூறுவது (4) 15.49: முஸ்தலிஃபாவிலிருந்து மினாவிற்குப் புறப்படச் செய்வது (11) 15.48: முஸ்தலிஃபாவில் ஸுப்ஹுத் தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவது (1) 15.47: மஃக்ரிப், இஷா வை அடுத்தடுத்துத் தொழுவது (14) 15.46: அரஃபா நாளில் மினாவிலிருந்து அரஃபாவிற்குப் போகும்போது தல்பியாவும் தக்பீரும் கூறுதல் (4) 15.45: துல்ஹஜ் பத்தாவது நாளன்று கல்லெறியத் துவங்கும்வரை தல்பியாச் சொல்லிக்கொண்டிருப்பது (7) 15.44: ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீ (ஓட்டம்) ஒரே தடவைதான் (1) 15.43: ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீச் செய்வது முக்கியக் கடமையாகும் (5) 15.42: வாகனங்கள் மீதமர்ந்து தவாஃப் செய்யலாம் (6) 15.41: தவாஃபின்போது ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது (5) 15.40: இறையில்லத்தில் முத்தமிடப்படும் இரு மூலைகள் (6) 15.39: தவாஃபில் விரைந்து நடப்பது விரும்பத்தக்கது (12) 15.38: மக்காவினுள் நுழையும் முன்… (4) 15.37 மக்காவினுள் நுழைவதும் வெளியேறுவதும் (3) 15.36 ரமளான் மாதத்தில் உம்ராச் செய்வதன் சிறப்பு (2) 15.35: நபியவர்களின் உம்ரா எண்ணிக்கையும் காலமும் (4) 15.34 நபியவர்களின் தல்பியாவும் பலியும் (4) 15.33: உம்ராவில் தலைமுடி குறைத்தல் (5) 15.32: இஹ்ராமின்போது பலிப் பிராணி (4) 15.31: ஹஜ்ஜுப் பருவங்களில் உம்ராச் செய்ய அனுமதி (6) 15.30: தமத்துஉ ஹஜ் (2) 15.29: இஹ்ராம் ஹாஜிக்குக் கட்டாயம் (3) 15.28: தவாஃபும் ஸயீயும் கட்டாயம் (3) 15.27: ஹஜ் உம்ரா சேர்த்தும் தனித்தும் செய்வது (3) 15.26: ஒரே இஹ்ராமில் உம்ரா ஹஜ் (3) 15.25: இஹ்ராமிலிருந்து விடுபடுதல் (3) 15.24: பலிப் பிராணியும் ஹஜ் கடமையும் (2) 15.23: தமத்துஉ ஹஜ் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும் (13) 15.22: ஒருவர் வேறொருவரின் இஹ்ராமை அச்சொட்டி பூணுதல் (3) 15.21: அரஃபா பெருவெளியில் தங்கி திரும்புதல் தொடர்பான இறை கூற்று (3) 15.20: அரஃபாப் பெருவெளி முழுவதும் தங்குமிடம் (2) 15.19: நபி (ஸல்) அவர்களின் ஹஜ் (1) 15.18: உம்ராவையும் ஹஜ்ஜையும் தனித் தனியாக நிறைவேற்றி பயனடைதல் (2) 15.17: இஹ்ராமின் முறைகள் (27) 15.16: இரத்தப்போக்குடைய பெண் இஹ்ராமில் குளித்தல் (2) 15.15: இஹ்ராமிலிருந்து விடுபட முன் நிபந்தனையிட அனுமதி (5) 15.14: முஹ்ரிம் இறந்துவிட்டால் செய்ய வேண்டியவை (9) 15.13: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், தம் உடலைக் கழுவிக்கொள்ள அனுமதி (1) 15.12: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், தம் கண்களுக்கு மருந்திட அனுமதி (2) 15.11: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், ஹிஜாமா செய்ய அனுமதி (2) 15.10: முஹ்ரிமுக்குத் தலைமுடி மழிக்க அனுமதியும் பரிகாரமும் (7) 15.09: ஹரம் எல்லைக்குள் கொல்ல அனுமதிக்கப்பட்டவைகள் (12) 15.08: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம் வேட்டையாடுவது குறித்து.. (9) 15.07: இஹ்ராமின்போது நறுமணம் பூசுதல் (19) 15.06: துல்ஹுலைஃபா பள்ளியில் தொழுதல் (1) 15.05: வாகனம் புறப்படுவதற்கு ஆயத்தமானவுடன் தல்பியா கூறுவது (4) 15.04: மதீனாவாசிகள் இஹ்ராம் பூண வேண்டிய இடம் (2) 15.03: தல்பியாவின் பண்பும் அதன் நேரமும் (4) 15.02: ஹஜ்/உம்ராவிற்கான இஹ்ராம் எல்லைகள் (7) 15.01: ஹஜ்/உம்ராவில் அனுமதிக்கப்பட்டவை.. (10) 14.04: துல்ஹஜ் மாதத்தின் பத்து நோன்புகள் (2) 14.02: இஃதிகாஃப் இருக்குமிடத்தினுள் நுழையும் நேரம் (1) 14.03: இறுதிப் பத்தில் வழிபாடுகளில் ஈடுபடுவது (2) 14.01: இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருத்தல் (5) 13.40: லைலத்துல் கத்ர் இரவு குறித்து.. (17) 13.39: ஷவ்வால் ஆறு நோன்பு (1) 13.37: ஷஅபான் மாத இறுதியில் நோன்பு நோற்றல் (3) 13.38: முஹர்ரம் நோன்பின் சிறப்பு (2) 13.36: சுன்னத்தான நோன்புகள் (5) 13.35: ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு (12) 13.34: நோன்பில்லாமல் எந்த மாதத்தையும் கடக்க விடாமலிருப்பது விரும்பத் தக்கது (9) 13.33: மறதியால் (நோன்பாளி) நோன்பு முறியாது (1) 13.32: கூடுதலான நோன்பு முடிவு செய்வதற்கும் விடுவதற்கும் அனுமதி (2) 13.31: அல்லாஹ்வின் பாதையில் செல்லும்போது சக்தி பெற்றிருப்பவர் நோன்பு நோற்பதன் சிறப்பு (2) 13.30: நோன்பின் மாண்பு (6) 13.29: நோன்பாளி, நாவைக் காப்பது (1) 13.28: நோன்பாளி விருந்துக்கு அழைக்கப்பட்டால் “நான் நோன்பாளி” என்று சொல்லிவிட வேண்டும் (1) 13.27: இறந்துபோனவரின் விடுபட்ட நோன்பை நோற்பது (5) 13.26: ரமளானில் விடுபட்ட நோன்பை ஷஅபான் மாதத்தில் ‘களா’ச் செய்தல் (2) 13.25: இறைவசனம் வேறொரு வசனத்தின் மூலம் மாற்றம் (2) 13.24: வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்பது விரும்பத் தக்கதன்று (3) 13.23: அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் நோன்பு நோற்பதற்குத் தடை (2) 13.22: நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் நோன்பு நோற்பதற்குத் தடை (6) 13.20: ஆஷூரா நோன்பை எந்த நாளில் நோற்க வேண்டும்? (4) 13.19: ஆஷூரா நாளில் நோன்பு நோற்றல் (17) 13.18: அரஃபா நாளில் அரஃபாவில் தங்கும் ஹாஜிகளின் நோன்பு (4) 13.17: பயணத்தில் நோன்பு நோற்பதையோ விட்டுவிடுவதையோ தேர்ந்துகொள்ளலாம் (5) 13.16: பயணத்தில் நோன்பைக் கைவிட்டவர், பொதுப் பணியாற்றினால் கிடைக்கும் நன்மை (3) 13.15: பயணத்தில் இருப்பவர் மீதான கடமையான ரமளான் நோன்பு (11) 13.14: ரமளான் பகலில் உடலுறவில் ஈடுபடுவதற்குத் தடையும் அதன் பரிகாரமும் (5) 13.13: பெருந்துடக்குடன் வைகறைப் பொழுதை அடைந்தவரின் நோன்பு செல்லும் (6) 13.12: கட்டுப்படுத்தும் நோன்பாளிக்கு (தம் மனைவியை) முத்தமிடத் தடையில்லை (13) 13.11: தொடர்நோன்பு நோற்பதற்குத் தடை (7) 13.10: பகற் பொழுது வெளியேறி நோன்பு நிறைவடையும் நேரம் (3) 13.09: ஸஹரைத் தாமதிப்பதும் நோன்பு துறப்பதை விரைந்து செய்வதும் (6) 13.08: ஃபஜ்ரு நேரம் வந்தவுடன் நோன்பு ஆரம்பமாகிவிடும் (11) 13.07: ‘இரு பெருநாட்களின் இரு மாதங்களும் குறைவுபடாது’ நபிகளாரின் விளக்கம் (2) 13.06: (வானை) மேகம் மூடிக்கொண்டால் (மாதத்தின் நாட்கள்) முப்பதாக முழுமையாக்கப்படும் (2) 13.05: ஒவ்வோர் ஊர்க்காரர்களுக்கும் அவரவர் பார்க்கும் பிறையே பொருந்தும் (1) 13.04: மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கும் (6) 13.03: ரமளானுக்கு முந்தைய இரு நாள்களில் நோன்பு நோற்கக் கூடாது (1) 13.02: ரமளான் நோன்பு தொடக்கமும் முடிவும் (17) 13.01: ரமளான் மாதத்தின் சிறப்பு (2) 12.55: ஸகாத் வசூலிப்பவர், தடை செய்யப்பட்டதைக் கோராதவரை அவரைத் திருப்திபடுத்த வேண்டும் (1) 12.54: தர்மப் பொருள் கொண்டுவந்தவருக்காகப் பிரார்த்தித்தல் (1) 12.53: நபி (ஸல்) அன்பளிப்பை ஏற்றதும் தர்மத்தை மறுத்ததும் (1) 12.52: தர்மப் பொருள், அதன் பண்பு நீங்கி விடுதல் (5) 2.27: நாய் நக்கிய பாத்திரம் பற்றிய சட்டம் (6) 2.28: தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் சிறுநீர் கழிப்பதற்குத் தடை (3) 2.29: பெருந்துடக்குடையவர் தேங்கிய நீரில் இறங்கிக் குளிக்கத் தடை (1) 2.30: பள்ளிவாசலில் சிறுநீர் கழித்தால்… (3) 2.31: தாய்பால் குடிக்கும் குழந்தையின் சிறுநீரைக் கழுவும் சட்டம் (4) 2.32: விந்து பற்றிய சட்டம் (4) 2.33: மாதவிடாய் இரத்தம் கழுவும் முறை (1) 2.34: சிறுநீரைச் சுத்தம் செய்வது கட்டாயம் (1) 3.01: மாதவிடாயான மனைவியைக் கீழாடைக்கு மேல் அணைத்துக் கொள்வது. (3) 3.02: மாதவிடாயான மனைவியுடன் ஒரே போர்வைக்குள் படுத்துக் கொள்வது. (2) 3.03: மாதவிடாயான பெண் செய்ய அனுமதிக்கப்பட்டவை (11) 3.04: இச்சை நீர் (3) 3.05: உறங்கி எழுந்ததும் முகத்தையும் கையையும் கழுவுதல் (1) 3.06: பெருந்துடக்காளி செய்ய வேண்டியவை (8) 3.07: மதன நீர் வெளிப்பட்ட பெண்ணுக்குக் குளியல் கடமை. (5) 3.08: ஆண்/பெண் (விந்து-மதன)நீரிலிருந்துதான் குழந்தை உருவாகிறது. (1) 3.09: பெருந்துடக்கிற்கான குளியல் முறை (5) 3.10: பெருந்துடக்கு குளியல் தொடர்பானவை (14) 3.11: குளிக்கும் போது மூன்றுமுறை தண்ணீர் ஊற்றுதல் (4) 3.12: குளிக்கும் பெண்களின் சடைமுடி பற்றிய சட்டம் (2) 3.13: மாதவிடாய் குளியலின் போது கஸ்தூரி பயன்படுத்துதல் (2) 3.14: தொடர் உதிரப் போக்குடைய பெண்களின் தொழுகை மற்றும் குளியல் (5) 3.15: மாதவிடாய் நாட்களில் விடுபட்ட கடமைகள் (3) 3.16: குளிப்பவர் திரையிட்டுக் கொள்தல் (3) 3.17: பிறரின் மறையுறுப்பைப் பார்த்தல் (1) 3.18: தனித்துக் குளிக்கும் போது ஆடையின்றி குளித்தல் (1) 3.19: மறையுறுப்பை மறைத்துக் கொள்வதில் கவனம் (3) 3.21: (விந்து)நீர் வெளிப்பட்டாலே (குளியல்)நீர் கடமையாகும் (9) 3.22: ஆண்-பெண் குறிகள் இணைந்து விட்டால் குளியல் கடமையாகும் (3) 3.23: சமைக்கப்படவற்றை உண்டால் மீண்டும் உளூ செய்தல் (3) 3.24: சமைக்கப் பட்டவற்றை உண்டால் உளூச் செய்யும் கட்டாயம் மாற்றப் பட்டது (8) 3.25: ஒட்டக இறைச்சி உண்டால் உளூச் செய்ய வேண்டும் (1) 3.26: வாயு பிரிந்த சந்தேகம் ஏற்பட்டாலும் தொழலாம் (2) 3.27: பதனிடப்படுவதால் செத்த பிராணியின் தோல் தூய்மை ஆகும் (7) 3.28: தயம்மும் (6) 3.29: ஒரு முஸ்லிம் (பெருந்துடக்கு ஏற்பட்டதால்) அசுத்தமாகிவிட மாட்டார். (2) 3.30: பெருந்துடக்கு போன்ற நிலைகளிலும் அல்லாஹ்வைத் துதித்தல். (1) 3.31: சிறுதுடக்காளி (உளூச் செய்யாமல்) உண்ணலாம் (4) 3.32: கழிப்பிடத்திற்குச் செல்லும்போதான பிரார்த்தனை (1) 3.33: உட்கார்ந்து கொண்டு உறங்குவது உளூவை முறிக்காது. (4) 4.01: தொழுகை அழைப்பின் தொடக்கம் (1) 4.02: தொழுகை அறிவிப்பு தொடர் அமையும் விதம் (3) 4.03: தொழுகை அழைப்பு முறை (1) 4.04: ஒரு பள்ளிவாசலுக்கு இரு தொழுகை அழைப்பாளர்கள் (1) 4.05: பார்வையற்றவர் தொழுகை அழைப்பு விட நிபந்தனை (1) 4.06: போரின் போது இணைவைப்பாளர் நாட்டில் தொழுகை அழைப்பு விடுக்கப்பட்டால் (1) 4.07: தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் செய்ய வேண்டியவை (4) 4.08: தொழுகை அழைப்பின் சிறப்பும் ஷைத்தான் வெருண்டோடுவதும் (6) 4.09: இரு கைகளையும் தோள் புஜத்துக்கு உயர்த்துதல் (4) 4.10: அல்லாஹு அக்பர், ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ் கூறும் இடங்கள் (5) 4.11: தொழுகையில் அல்ஃபாத்திஹா அத்தியாயம் ஓதுதல் (8) 4.12: இமாமைப் பின்பற்றித் தொழுபவர் உரத்து ஓதலாகாது (2) 4.13: பிஸ்மில்லாஹ்வை(த் தொழுகையில்) உரத்து ஓதாலாகாது என்போரின் வாதம் (2) 4.14: அத்தியாயங்களின் துவக்கம் “பிஸ்மில்லாஹ்” குறித்த வாதம் (1) 4.15: தக்பீருக்குப் பின்னும் சஜ்தாவிலும் கைகளை வைக்கும் முறை (1) 4.16: தொழுகையில் அத்தஹிய்யாத் ஓதுவது (4) 4.17: இறுதி அத்தஹியாத்திற்குப் பின் ஸலவாத் கூறுதல் (4) 4.18: ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா ல(க்)கல் ஹம்து, ஆமீன் ஆகியவை கூறுவது (5) 4.19: இமாமை மஃமூம் பின்தொடர்வது (5) 4.20: இமாமை முந்துவதற்குத் தடை (4) 4.21: இமாமைப் பின்பற்றுவதில் சட்ட மாற்றம் (10) 4.22: இமாம் வருவதற்குத் தாமதமானால்… (2) 4.23: தொழுகையில் இமாமுக்கு ஏதாவது உணர்த்த விரும்பினால்… (1) 4.24: தொழுகையை முழுமையாக உள்ளச்சத்துடன் தொழல் (4) 4.25: தொழுகையில் இமாமை முந்தாமல் இருத்தல் (7) 4.26: தொழும்போது வானத்தை அண்ணாந்து பார்ப்பதற்குத் தடை (2) 4.27: தொழுகையில் ஒழுங்குகள் (3) 4.28: தொழுகையில் வரிசைகளைப் பேணுதல் (11) 4.29: ஆண்களுக்குப் பின்னால் தொழும் பெண்கள் தலை உயர்த்தும் முறை (1) 4.30: பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்தல், நறுமணம் பூசுதல் (11) 4.31: தொழுகையில் அச்சநிலையில் குர்ஆன் ஓதும் முறை (2) 4.32: குர்ஆன் ஓதப்படும்போது செவிதாழ்த்திக் கேட்க வேண்டும். (2) 4.33: ஸுப்ஹுத் தொழுகையில் உரத்துக் குர்ஆன் ஓதுதல் (4) 4.34: லுஹ்ரு, அஸ்ருத் தொழுகைகளில் குர்ஆன் ஓதுதல் (8) 4.35: ஸுப்ஹுத் தொழுகையில் குர்ஆன் ஓதுதல் (13) 4.36: இஷாத் தொழுகையில் குர்ஆன் ஓதுவது (8) 4.37: தொழுகையைச் சுருக்கி, நிறைவுறத் தொழுவிப்பதற்கான கட்டளை (11) 4.38: தொழுகையின் நிலைகளை நிதானமாக, சுருக்கி, நிறைவாகச் செய்வது (4) 4.39: தொழுகையில் இமாமை முந்தி விடாமலிருத்தல் (5) 4.40: ருகூஉவிலிருந்து தலையை உயர்த்திய பின் ஓத வேண்டியவை (5) 4.41: ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் குர்ஆன் ஓதுவதற்குத் தடை (6) 4.42: ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் ஓத வேண்டியவை (9) 4.44: ஸஜ்தாவின் போது தரையில் படவேண்டிய உறுப்புகள் (7) 4.45: சீராக ஸஜ்தா செய்தல் (2) 4.46: தொழுகை முறைத் தொகுப்பு (5) 4.47: தனித்துத் தொழுபவர் தடுப்பு ஒன்றை வைத்துக் கொள்வது (13) 4.48: தொழுகையில் குறுக்கே செல்பவரைத் தடுப்பது (4) 4.49: தொழுபவர், தடுப்புக்கு நெருக்கமாக நிற்க வேண்டும் (3) 4.50: தொழுபவருக்கான குறுக்குத் தடுப்பின் அளவு (2) 4.51: தொழுபவருக்குக் குறுக்கே படுத்திருப்பது (8) 4.52: ஒரே ஆடை அணிந்து தொழும் முறை (9) 5.01: பூமியில் எழுப்பப்பட்ட முதலாவது இறையாலயம் (8) 5.02: மஸ்ஜிதுந் நபவீ கட்டப்பட்ட வரலாறு (2) 5.03: தொழுகைத் திசை(கிப்லா) கஅபாப் பள்ளிக்கு மாற்றம் (4) 5.04: மண்ணறைகளில் செய்யக்கூடாதவை (6) 5.05: மஸ்ஜிதுகள் கட்டுவதன் சிறப்பும் அதற்கான ஆர்வமூட்டலும் (2) 5.06: ருகூஉவில் உள்ளங்கைகளை வைப்பதற்கான சட்டத் திருத்தம் (5) 5.07: இரு குதிகால்கள்மீது (தொழுகை அமர்வில்) அமர அனுமதி (1) 5.08: தொழுகையில் பேசிக் கொள்ள இருந்த அனுமதி நீக்கம் (6) 5.09: தொழுகைக்கு இடையில் செய்ய அனுமதிக்கப்பட்டவை (2) 5.10: குழந்தைகளைச் சுமந்துகொண்டு தொழுவதற்கு அனுமதி (3) 5.11: தொழுகையின்போது ஓரிரு அடிகள் நடக்க அனுமதி (1) 5.12: இடுப்பில் கையூன்றிக் கொண்டு தொழுவது வெறுக்கத் தக்கது (1) 5.13: தொழும்போது மண்ணைச் சமப்படுத்துதல் வெறுக்கத் தக்கது (3) 5.14: பள்ளிவாசலில் எச்சில் துப்பத் தடை (10) 5.15: காலணி அணிந்து கொண்டு தொழுவதற்கு அனுமதி (1) 5.16: கவனத்தை ஈர்க்கும் ஆடை அணிந்து தொழுதல் வெறுக்கப்பட்டது (3) 5.17: சிறுநீர்/மலம் அடக்குதல், உணவு காக்க வைத்தல் நிலையில் தொழுதல் (4) 5.18: துர்நாற்றத்துடன் பள்ளிச்செல்லுதலும் அவரை வெளியேற்றலும் (10) 5.19: பள்ளிவாசலினுள் காணாமற்போன பொருளைத் தேடத் தடை (3) 5.20: தொழுகையில் ஏற்படும் மறதிக்குப் பரிகாரம் (17) 5.21: ஸஜ்தா திலாவத் (9) 5.22: அத்தஹிய்யாத்தில் அமரும் முறை (5) 5.23: தொழுகையை நிறைவு செய்யும்போது ஸலாம் கூறும் முறை (3) 5.24: தொழுத பின்னர் திக்ரு (3) 5.25: மண்ணறை வேதனையிலிருந்து பாதுகாப்புக் கோருதல் (3) 5.26: தொழுகையில் பாதுகாப்புக் கோரப்பட வேண்டியவை (8) 5.27: தொழுகைக்குப்பின் திக்ரு செய்தல் (9) 5.28: தொடக்கத் தக்பீருக்குப் பின் கூறவேண்டியவை (4) 5.29: தொழுகையில் கலந்துகொள்ள செல்லும் முறை (5) 5.30: தொழுகைக்காக மக்கள் எப்போது எழுந்து நிற்க வேண்டும்? (5) 5.31: கூட்டுத்தொழுகையை அடைந்துகொள்ள நிபந்தனை (5) 5.32: ஐவேளைத் தொழுகை நேரங்கள் (13) 5.33: கடுங்கோடையில் ஜமாஅத் தொழுகை (8) 5.34: கடுங்கோடையில்லா சமயத்தில் ஜமாஅத் தொழுகை (4) 5.35: அஸ்ருத் தொழுகையின் நேரம் (7) 5.36: அஸ்ருத் தொழுகையைத் தவறவிட்டால்.. (3) 5.37: அஸ்ரு நடுத்தொழுகை என்போரின் சான்று (6) 5.38: ஸுப்ஹு, அஸ்ருத் தொழுகைகளின் சிறப்புகள் (6) 5.39: மஃக்ரிபுத் தொழுகையின் ஆரம்ப நேரம் (2) 5.40: இஷாத் தொழுகையின் நேரமும் அதைத் தாமதமாகத் தொழுவதும் (12) 5.41: ஸுப்ஹுத் தொழுகையின் நேரம் மற்றும் ஓதப்படும் (குர்ஆன் வசனங்களின்) அளவு (7) 5.42: தொழுகைக்கு உரிய நேரத்தைத் தாமதப்படுத்துதல் (7) 5.43: கூட்டுத் தொழுகையின் சிறப்பும் அதைத் தவற விடுவது பற்றிய கண்டனமும் (10) 5.44: தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் பள்ளிவாசலுக்குச் செல்வது கட்டாயமாகும் (1) 5.45: கூட்டுத் தொழுகை என்பது நேர்வழியைச் சார்ந்தது (2) 5.46: பாங்கு கூறிய பின்னர் பள்ளிவாசலிலிருந்து வெளியேறத் தடை (2) 5.47: இஷா மற்றும் ஸுப்ஹு கூட்டாகத் தொழுவதன் சிறப்பு (4) 5.48: கூட்டுத் தொழுகையைத் தவிர்ப்பதற்கான அனுமதி (1) 5.49: நஃபில் தொழுகைகளை ஜமாஅத்தாகத் தொழுதல் (6) 5.50: கூட்டுத் தொழுகைக்காகக் காத்திருப்பதன் சிறப்பு (5) 5.51: பள்ளிவாசலுக்கு நடந்து செல்வதன் சிறப்பு (6) 5.52: தொழுகைக்கு நடந்து செல்பவருக்குக் கிடைக்கும் பலன்கள் (4) 5.53: உதயம்வரை தொழுத இடத்தில் அமர்ந்திருப்பதன் சிறப்பு (3) 5.54: தொழுகைக்குத் தலைமையேற்க அதிகத் தகுதியுடையவர் (5) 5.55: எல்லாத் தொழுகைகளிலும் குனூத் ஓதும் காலகட்டம் (15) 5.56: விட்டுப்போனத் தொழுகைகளைத் தொழுதல் (8) 6.01: பயணிகளின் தொழுகை; சுருக்கித் தொழுதல் (20) 6.02: மழையின்போது இருப்பிடங்களில் தொழுதுகொள்ளலாம் (4) 6.03: நஃபில் தொழுகைகளை வாகனத்தில் செல்பவர் தொழலாம் (10) 6.04: பயணத்தில் இரு தொழுகைகளைச் சேர்த்து தொழலாம் (7) 6.05: உள்ளூரில் இருக்கும்போது இரு தொழுகைகளை இணைத்து தொழுதல் (10) 6.06: தொழுது முடித்தபின் வலம், இடம் திரும்பி அமர்தல் (3) 6.07: இமாமுக்கு வலப்பக்க வரிசையில் நிற்பது விரும்பத்தக்கது (1) 6.08: இகாமத் கூறத் தொடங்கி விட்டால் நஃபில் தொழுவது வெறுக்கத்தக்கது (5) 6.09: பள்ளிவாசலுக்குள் நுழையும்போது கூறவேண்டிய துஆ (1) 6.10: பள்ளிக் காணிக்கை தொழுகை தொடர்பாக (4) 6.11: பயணத்திலிருந்து திரும்பியவர் இரண்டு ரக்அத் தொழுதல் (3) 6.12: முற்பகல் (ளுஹா) தொழுகை எண்ணிக்கை (11) 6.13: ஃபஜ்ருடைய இரு ரக்அத் சுன்னத் தொழுகை (15) 6.14: சுன்னத் தொழுகைகளின் சிறப்பும் எண்ணிக்கைகளும்! (3) 6.15: நஃபில் தொழுகைகளைத் தொழும் முறைகள் (14) 6.16: இரவுத் தொழுகை (18) 6.17: இரவுத் தொழுகையின் ஒருங்கிணைந்த விபரங்கள் (4) 6.18: அவ்வாபீன் தொழுகை (2) 6.19: இரவுத் தொழுகை, வித்ருத் தொழுகை ரக்அத்கள் (16) 6.20: வித்ருத் தொழுகை நேரம் (2) 6.21: தொழுகையில் மிகச் சிறந்தது (2) 6.22: இரவில் பிரார்த்தனை ஏற்கப்படும் நேரம் (2) 6.23: இரவின் இறுதி நேரத்தில் பிரார்த்தனை (5) 6.24: ‘கியாமு ரமளான்(தராவீஹ்) தொழ ஆர்வமூட்டல் (8) 6.25: இரவுத் தொழுகையில் பிரார்த்திப்பதும் நின்று வணங்குவதும் (17) 6.26: இரவுத் தொழுகையில் நீண்ட நேரம் (நின்று) குர்ஆன் ஓதுவது (2) 6.27: தொழாமல் விடியும்வரை உறங்குபவர் (3) 6.28: கூடுதலான நஃபில் தொழுகைகள் (6) 6.29: நற்செயல்களை வழக்கமாகச் செய்வதன் சிறப்பு. (4) 6.30: இபாதத் தூக்கத்தால் தடைப்பட்டால்… (5) 6.31: குர்ஆனின் தொடர்பைப் பற்றிப் பிடித்துக்கொள்ளக் கட்டளை (7) 6.32: குர்ஆனை இனிய குரலில் ஓதுவது விரும்பத் தக்கதாகும் (5) 6.33: மக்கத்து வெற்றி நாளில்… (2) 6.34: குர்ஆனை ஓதுவதால் இறங்கும் அமைதி (3) 6.35: குர்ஆனை மனனமிட்டவரின் சிறப்பு (1) 6.36: குர்ஆனை ஓதுகின்ற இருவகையினரின் தனிச் சிறப்புகள் (1) 6.37: குர்ஆனில் தேர்ந்த மேன்மக்கள் முன்னிலையில் குர்ஆன் ஓதுவது (2) 6.38: குர்ஆனைச் செவியேற்பதன் சிறப்பு (3) 6.39: குர்ஆனைக் கற்பது மற்றும் ஓதுவதன் சிறப்பு (2) 6.40: குர்ஆன் ஓதுவதன் சிறப்பும் அல்பகரா அத்தியாயத்தின் சிறப்பும் (2) 6.41: ஸூரத்துல் ஃபாத்திஹா, அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்களின் சிறப்பு (2) 6.42: ஸூரத்துல் கஹ்ஃப் மற்றும் ஆயத்துல் குர்ஸீ ஆகியவற்றின் சிறப்பு (3) 6.43: குல் ஹுவல்லாஹு அஹது (அத்தியாயத்தை) ஓதுவதன் சிறப்பு (4) 6.44: அல்முஅவ்விதத்தைன் (பாதுகாவல்) அத்தியாயங்களை ஓதுவதன் சிறப்பு (2) 6.45: குர்ஆனின்படி தாமும் செயல்பட்டுப் பிறருக்கும் அதைக் கற்பிப்பவரின் சிறப்பு (4) 6.46: குர்ஆன் ஏழு (வட்டார) மொழிநடையில் அருளப்பெற்றுள்ளது என்பதன் விளக்கம் (4) 6.47: குர்ஆனை வேகமாக ஓதுவதைத் தவிர்த்தல் (4) 6.48: குர்ஆன் ஓதும் முறைகளுள் சில (4) 6.49: தொழத் தடுக்கப்பட்ட நேரங்கள். (8) 6.50: அம்ரு பின் அபஸா (ரலி) இஸ்லாத்தை ஏற்றமை (1) 6.51: சூரியன் உதிக்கும் நேரத்தையும் மறையும் நேரத்தையும் தேர்ந்தெடுத்துத் தொழாதீர்கள்! (2) 6.52: நபி (ஸல்) அஸ்ருக்குப் பிறகு தொழுதுவந்த இரண்டு ரக்அத்கள் எவை? (5) 6.53: மஃக்ரிப் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவது விரும்பத் தக்கது (2) 6.54: பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையிலுள்ள தொழுகை (1) 6.55: அச்சச் சூழல் தொழுகை (8) 7.01: வெள்ளிக்கிழமையில் குளிப்பது வயதுவந்த ஒவ்வோர் ஆண் மீதும் கடமை (7) 7.02: வெள்ளிக்கிழமையில் பல் துலக்குவதும் நறுமணம் பூசுவதும் (4) 7.03: வெள்ளிக்கிழமை சொற்பொழிவின்போது அமைதி காத்தல் (2) 7.04: வெள்ளிக்கிழமையில் (பிரார்த்தனை ஏற்கப்படுவதற்கு) உள்ள ஒரு நேரம் (4) 7.05: வெள்ளிக்கிழமையின் சிறப்பு (2) 7.06: இந்தச் சமுதாயத்தின் (சிறப்பு வழிபாட்டு) நாள் வெள்ளிக்கிழமை (4) 7.07: வெள்ளிக்கிழமை (தொழுகைக்கு) முன்னதாகச் செல்வதன் சிறப்பு (2) 7.08: மௌனமாக (வெள்ளிக்கிழமை) உரையைச் செவியேற்பவரின் சிறப்பு (2) 7.09: சூரியன் (உச்சியிலிருந்து) சாயும்போது ஜும்ஆத் தொழுவது (5) 7.10: தொழுகையின் உரைகளும் இடையே (இமாம்) அமர்வதும் (3) 7.11: வியாபாரத்தையோ வேடிக்கையையோ கண்டால் (62:11ஆவது) இறைவசனம் (4) 7.12: ஜும்ஆத் தொழுகையை(த் தொழாமல்) கைவிடுவதற்குக் கண்டனம் (1) 7.13: (ஜும்ஆத்) தொழுகையையும் (குத்பா) உரையையும் சுருக்கமாக அமைத்தல் (11) 7.14: இமாம் (ஜும்ஆ) உரை நிகழ்த்தும்போது காணிக்கை தொழுகை (6) 7.15: பொது போதனைக்கு நடுவில் தனி போதனை (1) 7.16: ஜும்ஆத் தொழுகையில் ஓத வேண்டியவை (3) 7.17: வெள்ளிக்கிழமை (ஃபஜ்ருத் தொழுகையில்) ஓத வேண்டியவை (3) 7.18: ஜும்ஆவுக்குப் பின் தொழ வேண்டியவை (16) 8.01: பெருநாள் திடலில் பெண்கள் பங்கேற்பது (3) 8.02: பெருநாள் திடலில் தொழுகைக்கு முன்போ பின்போ தொழக் கூடாது (1) 8.03: இரு பெருநாள் தொழுகைகளில் ஓதக் கூடியவை (2) 8.04: பெருநாட்களில் பாவமில்லா விளையாட்டுகளில் ஈடுபட அனுமதி (7) 9.00: இமாம் (மழைத் தொழுகையில்) மேல்துண்டை மாற்றிப் போட்டுக் கொள்வது (4) 9.01: மழைவேண்டிப் பிரார்த்திக்கும்போது இருகைகளை உயர்த்துதல் (3) 9.02: மழைவேண்டிப் பிரார்த்தித்தல் (2) 9.03: கடும் காற்றையும் மேகத்தையும் காணும்போதும்.. மழை பெய்யும்போதும்.. (3) 9.04: கீழைக் காற்று (’ஸபா’) மற்றும் மேலைக் காற்று (’தபூர்’) பற்றிய குறிப்புகள் (1) 10.01: சூரிய கிரகணத் தொழுகை (7) 10.02: கிரகணத் தொழுகையின்போது மண்ணறை வேதனை பற்றி நினைவு கூர்வது (1) 10.03: கிரகணத் தொழுகையின்போது சொர்க்கமும் நரகமும் (6) 10.04: கிரகணத் தொழுகையில் எட்டு ருகூஉகளும் நான்கு ஸஜ்தாக்களும்.. (2) 10.05: கிரகணத் தொழுகைக்காக, “அஸ்ஸலாத்து ஜாமிஆ” அறிவிப்பு.. (8) 11.01: மரணத் தருவாயில் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (எனும் கலிமா)வை நினைவூட்டுதல் (2) 11.02: துன்பம் நேரும்போது வேண்டக்கூடிய பிரார்த்தனை (2) 11.03: நோயாளியிடமும் மரணத் தருவாயில் இருப்பவரிடமும் சொல்ல வேண்டியவை (1) 11.04: உயிர் பிரிந்தவுடன் இறந்தவருக்குச் செய்ய வேண்டியவை (1) 11.05: இறப்பவரின் பார்வை தனது உயிரை நோக்கி நிலைகுத்தி நிற்றல் (1) 11.06: இறந்தவருக்காக அழுவது (3) 11.07: நோயாளிகளைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தல் (1) 11.08: பொறுமை என்பது துன்பத்தின் முதல் நிலையில் கடைப்பிடிப்பதாகும் (2) 11.09: இறந்தவருக்காக ஒப்பாரி வைத்து அழுதால்.. (14) 11.10: ஒப்பாரிக்குக் கடுமையான கண்டனம் (5) 11.11: ஜனாஸாவின் இறுதி ஊர்வலத்தைப் பின்தொடர்ந்து செல்வதற்குப் பெண்களுக்குத் தடை (2) 11.12: மையித்தைக் குளிப்பாட்டுதல் (4) 11.13: மய்யித்திற்கு ‘கஃபன்’ உடை அணிவித்தல் (4) 11.14: மய்யித்தை மூடிவைத்தல் (1) 11.15: மய்யித்திற்கு அழகிய முறையில் கஃபன் அணிவித்தல் (1) 11.16: இறந்தவர் உடலைத் துரிதமாக அடக்கம் செய்தல் (2) 11.17: ஜனாஸாத் தொழுகையின் மற்றும் ஜனாஸாவைப் பின்தொடர்வதன் சிறப்பு (6) 11.18: மய்யித்துக்காக நூறு பேர் தொழுது செய்யும் பரிந்துரை ஏற்கப்படும் (1) 11.19: மய்யித்துக்காக நாற்பது பேர் பரிந்துரை (1) 11.20: இறந்தவர் குறித்துப் புகழ்ந்து, அல்லது இகழ்ந்து பேசப்படுதல் (1) 11.21: ஓய்வு பெற்றவரும் ஓய்வளித்தவரும் (1) 11.22: ஜனாஸாத் தொழுகையில் சொல்ல வேண்டிய தக்பீர்கள் (6) 11.23: மண்ணறை அருகில் (ஜனாஸாத் தொழுகை) தொழுவது (4) 11.24: ஜனாஸாவுக்காக எழுந்து நிற்பது (7) 11.25: ஜனாஸாவுக்காக எழுந்து நிற்கும் வழக்கம் மாற்றப்பட்டது (3) 11.26: இறந்தவருக்காக ஜனாஸாத் தொழுகையில் செய்யும் பிரார்த்தனை (2) 11.27: ஜனாஸாத் தொழுகையின்போது இமாம் எந்த இடத்தில் நிற்க வேண்டும்? (2) 11.28: ஜனாஸாத் தொழுகை தொழுதுவிட்டு வாகனத்தில் ஏறித் திரும்பிச் செல்லலாம் (2) 11.29: உட்குழியும் மையித்தின் மேல் செங்கற்களை அடுக்குவதும் (1) 11.30: கப்றுக் குழியினுள் போர்வையை விரித்து (மையித்தை) வைப்பது (1) 11.31: கப்றைத் தரை மட்டமாக்க உத்தரவு (2) 11.32: கப்றுகளைக் காரையால் பூசுவதோ அதன் மீது கட்டடம் எழுப்புவதோ கூடாது (2) 11.33: கப்றின்மீது அமர்வதும் அதன் மீது தொழுவதும் தடுக்கப்பட்டவை (3) 11.34: பள்ளிவாசலில் ஜனாஸாத் தொழுகை நடத்துவது (3) 11.35: மையவாடிக்குள் கூற வேண்டியதும் பிரார்த்திப்பதும் (3) 11.36: நபி (ஸல்), தம் தாயாரின் கப்றைக் காண்பதற்கு இறைவனிடம் அனுமதி கோரியது (3) 11.37: தற்கொலை செய்தவருக்கு, (ஜனாஸா) தொழுகையைக் கைவிட்டது (1) 12.00: பல வகை வள வரிகள் (5) 12.01: பத்து சதவீத ஸகாத்; அல்லது ஐந்து சதவீத ஸகாத் (1) 12.02: ஒரு முஸ்லிம் மீது அவர்தம் அடிமைக்காகவும் குதிரைக்காகவும் ஸகாத் கடமை இல்லை (3) 12.03: ஸகாத்தைச் சமர்ப்பிப்பதும் ஸகாத் கொடுக்க மறுப்பதும் (1) 12.04: பெருநாள் தர்மமாகப் பேரீச்சம் பழம், பார்லி (10) 12.05: பெருநாள் தொழுகைக்கு முன்பே பெருநாள் தர்மத்தை வழங்க கட்டளை (2) 12.06: ஸகாத் வழங்க மறுப்பது குற்றமாகும் (4) 12.07: ஸகாத் வசூலிப்பவர்களிடம் கனிவுடன் நடந்துகொள்வது (1) 12.08: ஸகாத் வழங்காதவருக்கான கடும் தண்டனை (2) 12.09: தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டல் (2) 12.10: செல்வத்தைச் சேமித்தோர் பற்றிய கண்டனம் (2) 12.11: தர்மம்: ஆர்வமூட்டலும் நற்கூலி உண்டு என்ற நற்செய்தியும் (2) 12.12: செலவழிப்பதன் சிறப்பும் வழங்காதவனின் பாவமும் (4) 12.13: தமக்கும், குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்குமாக செலவிடுதல் (1) 12.14: இணை வைக்கும் உறவுகளுக்குச் செலவழிப்பதன் சிறப்பு (8) 12.15: இறந்தவருக்காகத் தர்மம் செய்தல் (1) 12.16: எல்லா நல்லறமும் ஸதகா எனப்படும் (5) 12.17: அறவழியில் செலவு செய்பவரும் செய்யாதவரும் (1) 12.18: தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டல் (5) 12.19: தர்மம் (இறைவனிடம்) ஏற்கப்படுவதும் வளர்வதும் (3) 12.20: இன் சொல்லையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து பாதுகாப்பு பெறல் (5) 12.21: தர்மத்தின் அளவில் குறை காண தடை (1) 12.22: பாலுக்காக இரவல் வழங்கப்படும் கால்நடைகளின் சிறப்பு (2) 12.23: வள்ளலுக்கும் கஞ்சனுக்குமான உதாரணம் (3) 12.24: உரியவருக்குத் தர்மம் சேரவில்லையேனும் பலன் (1) 12.25: உரிமையாளரின் அனுமதியுடன் தர்மம் செய்தவருக்கும் பலன் (3) 12.26: ஓர் அடிமை தன் உரிமையாளரின் செல்வத்திலிருந்து (அறவழியில்) செலவழித்தல் (3) 12.27: தர்மத்தையும் இதர நற்செயல்களையும் இணைத்துச் செய்தவர் (3) 12.28: அறவழியில் தாராளமாக செலவிடலும் கணக்கு பார்ப்பது விரும்பத்தக்கதல்ல என்பதும் (3) 12.29: சிறிய அளவு தர்மம் (1) 12.30: இரகசியமாகத் தர்மம் செய்வதன் சிறப்பு (1) 12.31: மிகச் சிறந்த தர்மம் (2) 12.32: சிறந்த கை (4) 12.33: யாசிப்பதற்குத் தடை (3) 12.34: ஏழை என்பவன், அடிப்படைத் தேவைகளுக்குப் போதிய பொருளாதாரம் இல்லாதவன் (2) 12.35: மக்களிடம் யாசிப்பது வெறுக்கப்பட்டதாகும் (6) 12.36: யாருக்கு யாசிக்க அனுமதி? (1) 12.37: எதிர்பார்ப்பு இல்லாமல், யாசிக்காமல் வாழ்பவருக்கு வழங்கப்பட்டால் பெற்றுக்கொள்ளலாம் (4) 12.38: உலகாதாயத்தின் மீது பேராசை கொள்வது விரும்பத் தக்கதன்று (2) 12.39: இரு ஓடைகள் இருந்தாலும் மூன்றாவது ஓடையை எதிர்பார்த்தல் (4) 12.40: வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று (1) 12.41: இவ்வுலகத்தின் கவர்ச்சி குறித்து அஞ்சுதல் (3) 12.42: சுயமரியாதை மற்றும் பொறுமையின் சிறப்பு (1) 12.43: போதுமான வாழ்வாதாரமும் போதுமென்ற மனமும் (4) 12.44: அருவருப்பாகப் பேசி, கடுஞ் சொற்களால் கேட்டவருக்கும் தானம் வழங்குவது (4) 12.45: இறைநம்பிக்கை, (வறுமையால்) கேள்விக்குள்ளாக்கப்படுபவருக்கு உதவுதல் (1) 12.46: இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு வழங்கலும் இறை நம்பிக்கை வலுவானவர் பொறுமை கொள்ளலும் (8) 12.47: காரிஜிய்யாக்களும் அவர்களின் தன்மைகளும் (10) 12.48: காரிஜிய்யாக்களைக் கொல்லுவதற்கு ஊக்கப்படுத்துதல் (4) 12.49: காரிஜிய்யாக்கள் படைப்பினங்களிலேயே தீயவர்கள் ஆவர் (3) 12.50: தூதரின் குடும்பத்தார் ஸகாத் பெறுவதற்குத் தடை (6) 12.51: நபி (ஸல்) குடும்பத்தாரைத் தர்மப் பொருட்கள் வசூலிக்கப் பயன்படுத்தலாகாது (1) 2.26: அசுத்தமான கையைப் பாத்திரத்தில் நுழைத்தல் (2) 2.25: ஒருநாள் தொழுகைகளை ஒரு உளூவில் தொழ அனுமதி (1) 2.24: காலுறையில் மஸஹு செய்து தொழுவதற்கான வரம்பு (1) 2.23: முன் தலை மற்றும் தலைப்பாகை மீது மஸஹு செய்தல் (4) 2.22: காலுறையில் மஸஹு செய்தல் (9) 2.21: தண்ணீரால் கழுவித் துப்புரவு செய்தல் (3) 2.20: மலம் கழிப்பதற்குத் தடையுள்ள இடங்கள் (1) 2.19: செயல்களை வலப் புறமிருந்து தொடங்குதல். (2) 2.18: வலக் கரத்தால் கழுவத் தடையானவை (3) 2.17: கழிப்பிடத்தில் துப்புரவு செய்தல் (7) 2.16: இயற்கை மரபுகள் (8) 2.15: பல் துலக்குதல் (7) 2.14: சிரமகாலங்களிலும் முழுமையாக ஒளு செய்வதன் சிறப்பு (1) 2.13: உளூவில் தண்ணீர் படும் இடங்களில் ஒளி படர்தல் (1) 2.12: உளூவில் உறுப்புகளை அதிகப்படுத்திக் கழுவுதல் (6) 2.11: உளூ செய்த நீரோடு வெளியேறும் பாவங்கள் (2) 2.10: உளூவில் உறுப்புகள் முழுவதும் கழுவுதல் (1) 2.09: இரு கால்களையும் முழுமையாகக் கழுவுதல் கட்டாயம் (6) 2.08: சுத்தம் செய்யும் போது ஒற்றைப்படையாக செய்தல் (5) 2.07: நபி (ஸல்) அவர்கள் செய்த அங்கத் தூய்மை (உளூ) (2) 2.06: அங்கத் தூய்மை (உளூ) செய்தபிறகு ஓதப்படும் பிரார்த்தனை (1) 2.05: சிறு பாவங்களுக்கான பரிகாரங்கள் (3) 2.04: அங்கத்தூய்மையின் சிறப்பும் அதன் பின் தொழுவதன் சிறப்பும் (9) 2.03: அங்கத் தூய்மை (உளூ) செய்முறையும் அதை நிறைவாகச் செய்வதும் (2) 2.02: தொழுகைக்குக் கட்டாயமான (அங்கத்) தூய்மை (2) 2.01: அங்கத்தூய்மை(உளூ)யின் சிறப்பு (1) 1.96: மறுமையில் ஆதம்(அலை) அவர்களுக்கு இடப்படும் கட்டளை (1) 1.95: சொர்க்கவாசிகளில் பாதிபேர் (3) 1.94: விசாரணையோ வேதனையோ இன்றி சொர்க்கம் செல்வோர் (7) 1.93: நட்பு கொள்ளத் தக்கவர்களும் தகாதவர்களும் (1) 1.92: இறைமறுப்பாளரின் நற்செயல்கள் பலனளிக்காது (1) 1.91: நரகவாசிகளிலேயே மிகக்குறைவான வேதனை அனுபவிப்பவர். (4) 1.90: அபூதாலிபுக்காக நபி(ஸல்) அவர்களின் பரிந்துரை (3) 1.89: நெருங்கிய உறவினருக்கு எச்சரிக்கை செய்தல் (5) 1.88: இறைமறுப்பாளருக்கு எந்தப் பரிந்துரையும் பலனளிக்காது (1) 1.87: தம் சமுதாயத்தார் மீது நபி(ஸல்) அவர்களுக்குள்ள பரிவு (1) 1.86: நபி(ஸல்) அவர்களின் பரிந்துரைப் பிரார்த்தனை! (8) 1.85: சொர்க்கத்திற்காகப் பரிந்துரைக்கும் முதல் மனிதர் (4) 1.84: சொர்க்கவாசிகளுள் ஆகக் குறைந்த பதவி (14) 1.83: இறுதியானவராக வெளியேறும் நரகவாசி. (3) 1.82: ஷஃபாஅத்(பரிந்துரை) செய்யப்படுபவர்கள் (2) 1.81: இறைவனைக் காணும் வழிமுறை (3) 1.80: இறைவனைக் காண்பதற்கான சான்று (2) 1.79: அல்லாஹ்வின் பார்வை பற்றிய விளக்கம் (2) 1.78: மிஃராஜின் போது நபி(ஸல்) கண்டது பற்றிய விளக்கம் (2) 1.77: நபி(ஸல்) அவர்கள் இறைவனைப் பார்த்தார்களா? என்பது பற்றிய விளக்கம் (5) 1.76: சித்ரத்துல் முந்தஹா(இலந்தை மரம்) பற்றிய குறிப்பு! (4) 1.75: ஈஸா(அலை) மற்றும் தஜ்ஜால் பற்றிய குறிப்புகள் (6) 1.74: விண்ணுலகப் பயணமும் தொழுகை கடமையாக்கப்படலும் (12) 1.73: வேத வெளிப்பாடு (வஹீ) தொடங்குதல் (3) 1.72: இறை நம்பிக்கை ஏற்கப்படாத காலகட்டம் (5) 1.71: ஈசா(அலை) இஸ்லாமிய நெறிப்படி நீதி வழங்குதல் (6) 1.70: தூதுத்துவம் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது (3) 1.69: இறைச்சான்றுகள் மூலம் மன அமைதி (1) 1.68: ஒருவரை இறைநம்பிக்கையாளர் என்று முடிவு செய்தல் (2) 1.67: அச்சநேரத்தில் இறைநம்பிக்கையாளர் நிலை (1) 1.66: இறுதிக் காலத்தில் இறை நம்பிக்கை (அற்றுப்) போய் விடுவது. (2) 1.65: இஸ்லாத்தின் மீளெழுச்சி. (3) 1.64: உள்ளங்களில் குழப்பங்கள் தோன்றுவது. (2) 1.63: குடிமக்களைச் சுரண்டும் ஆட்சியாளன் நரகத்திற்குரியவன் ஆவான். (3) 1.62: செல்வத்தைக் காக்கப் போராடியவர் மற்றும் பிறர் செல்வத்தைப் பறிக்க முனைந்தவர் (2) 1.61: மாற்றாரின் பொருளைக் கைப்பற்றுபவர் நிலை. (5) 1.60: இறைநம்பிக்கையில் தடுமாற்றம் ஏற்பட்டால்.. (8) 1.59: நல்ல-தீய எண்ணங்களுக்கான கூலி (5) 1.58: தீய எண்ணங்களைச் செயல்படுத்தாமல் இருத்தல் (2) 1.57: தாங்க முடியாத சுமை? (2) 1.56: இறை நம்பிக்கையின் வாய்மையும் தூய்மையும் (1) 1.55: இறைமறுப்பாளராக இருந்தபோது செய்த நல்லறங்கள் (3) 1.54: முன் செய்த பாவங்கள் (2) 1.53: அறியாமை காலத்தில் செய்த தீமைகள் (2) 1.52: இறைநம்பிக்கையாளரின் அச்சம் (1) 1.51: குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் நற்செயல் புரிய விரைதல் (1) 1.50: மறுமை நெருங்கும் வேளையில் வீசும் காற்று (1) 1.49: ஹிஜ்ரத்தில் தற்கொலை செய்து கொண்டவரின் நிலை (1) 1.48: கையாடல் செய்பவரும் இறைநம்பிக்கையாளரும் (2) 1.47: தற்கொலை செய்பவரும் கட்டுப்பட்டு வாழ்பவரும் (7) 1.46: மூன்று பெரும் தவறான செயல்கள் (4) 1.45: புறங்கூறுவது வன்மையாகத் தடை செய்யப் பட்டது (3) 1.44: துக்க வேளைகளில் தடை செய்யப்பட்ட செய்கைகள்! (3) 1.43: முஸ்லிம்களை வஞ்சித்தவர் நிலை! (2) 1.42: முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர் நிலை! (3) 1.41: “லா இலாஹ இல்லல்லாஹ்” கூறியவரைக் கொல்லத்தடை! (4) 1.40: இணைவைத்தலின் விளைவுகள் (5) 1.39: தற்பெருமை (3) 1.38: பெரும் பாவங்கள் (5) 1.37: பாவங்களில் மிகவும் அருவருப்பானது (2) 1.36: நற்செயல்களில் சிறந்தது (6) 1.35: தொழுகையை விடுதலும் குஃப்ரும் (3) 1.34: இறைநம்பிக்கை குறைவும் குஃப்ர் எனும் சொல்லும் (1) 1.33: அன்ஸாரிகளையும் அலி(ரலி)யையும் நேசித்தல் (6) 1.32: மழையும் இறைமறுப்பும் (4) 1.31: ஓடிப்போன அடிமை (3) 1.30: இறைமறுப்பின் அடையாளங்கள் (1) 1.29: இறைமறுப்பாளர்களாய் மாறுதல் (2) 1.28: முஸ்லிமோடு போரிடுதல் (1) 1.27: தந்தையை வெறுப்பவன் நிலை (4) 1.26: முஸ்லிமை நோக்கி காஃபிர் என அழைத்தல் (2) 1.25: நயவஞ்சகனின் குணங்கள். (3) 1.24: இறைநம்பிக்கையில் குறைவு ஏற்படல் (2) 1.23: மார்க்கம் என்பதே நலன் நாடுவதுதான். (4) 1.22: இறைநம்பிக்கையாளர்களை நேசித்தல் (1) 1.21: இறைநம்பிக்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வு (9) 1.20: நன்மையை ஏவுதல், தீமையைத் தடுத்தல் (2) 1.19: நல்லவற்றிற்கு ஆர்வமூட்டுதல் (3) 1.18: அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரக் கூடாது (1) 1.17: தமக்கு விரும்வுவதைச் சகோதரனுக்கும் விரும்புதல் (2) 1.16: தூதரை நேசிப்பது கடமை (2) 1.15: இறைநம்பிக்கையின் இனிமை (2) 1.14: இஸ்லாம் கூறும் நல்லறங்களில் சிறந்தது (4) 1.13: இஸ்லாத்தின் அனைத்துப் பண்புகளின் கலவை (1) 1.12: இறைநம்பிக்கையின் கிளைகள் (5) 1.11: இறைநம்பிக்கையைச் சுவைப்பவர் (1) 1.10: ஓரிறை கோட்பாட்டில் மரணித்தவர் நிலை (11) 1.09: இணை வைத்த நிலையில் மரணித்தவர் நிலை (3) 1.08: ஜிஸ்யா செலுத்தாதவர் மீது போர் புரிதல் (6) 1.07: இஸ்லாத்தை ஏற்க அழைப்பு விடுத்தல் (2) 1.06: அறியாதவர்களுக்கு அறிவித்தல் (4) 1.05: இஸ்லாமியக் கடமைகள் (4) 1.04: சொர்க்கம் செல்பவர் (7) 1.03: இஸ்லாத்தின் தூண்கள் (2) 1.02: தொழுகை பற்றிய விளக்கம் (2) 1.01: இறைநம்பிக்கை குறித்த விளக்கம் (7)
பேரறிவாளன் அவர்களை விடுதலை செய்து 18.05.2022 அன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேசுவர ராவ் மற்றும் ஜி.ஆர்.கவாய் ஆகியோர் பேரறிவாளனுக்கு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பயன்படும் வகையில் அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-க்குத் தெளிவாக விளக்கமளித்துள்ளார்கள். ஆளுநர்கள் விருப்பு வெறுப்பு அடிப்படையில் எதேச்சாதிகாரிகளாகச் செயல்படுவதற்கு வரம்பு கட்டியிருக்கிறார்கள். அவ்விரு நீதிபதிகளுக்கும் பாராட்டுகள்! நீதிபதிகளின் நீதி சார்ந்த தனி அக்கறைகளும் சார்பற்ற அணுகுமுறையும் பல முற்போக்குத் தீர்ப்புகளுக்கு அடித்தளமாக இருந்துள்ளன. அளவுக்கு அதிகமாகப் பேரறிவாளன் தண்டனை அனுபவித்துவிட்டார், சிறையில் நன்னடத்தைப் பண்புகளைக் கொண்டிருந்தார் என்ற சிறப்புக் கூறுகளைக் கவனத்தில் எடுத்துக் கொண்டதுடன், மாநில அரசுக்கும், ஆளுநர்க்கும் இருக்க வேண்டிய செயல் உறவு பற்றிய அரசமைப்புச் சட்ட விளக்கத்தையும் இத்தீர்ப்பில் கூறியுள்ளார்கள். அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-இன்கீழ் தமிழ்நாடு அமைச்சரவை பேரறிவாளன் உட்பட இராசீவ்காந்தி கொலை வழக்கில் வாழ்நாள் தண்டனை வழங்கப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய முடிவெடுத்து, ஆளுநர்க்கு 2018 செப்டம்பரில் அனுப்பிய பின், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அதை ஏற்காமல் கிடப்பில் போட்டதும், பின்னர் குடியரசுத் தலைவர் ஆய்வுக்கு அனுப்பியதும் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான சட்டவிரோதச் செயல் (Constitutionally illegal) என்றும் நீதிபதிகள் கூறியுள்ளார்கள். இது மிக முக்கியமான முடிவு. ஆனால் ஒவ்வொரு நீதிபதிக்கும், அரசமைப்புச் சட்ட விளக்கங்கள் மாறுபடுவதையும் பார்க்கிறோம். அடுத்து, நரேந்திர மோடி அரசு பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் விடுதலை செய்யக் கூடாது என்று மூர்க்கமாக, முரட்டுத்தனமாகக் கடைசிவரை வாதிட்டது. எழுத்து வடிவில் கடைசியாகத் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யுமாறு உச்ச நீதிமன்றம் 11.52022 அன்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க கொடுத்த பதிலுரையிலும் நரேந்திர மோடி அரசு, பேரறிவாளனை விடுதலை செய்யக்கூடாது, உச்ச நீதிமன்றத்திற்கு அந்த அதிகாரம் இல்லை என்றே கூறியிருந்தது. பா.ச.க. வலியுறுத்தும் இந்துத்துவ “தர்மம்” எப்படிப்பட்ட பாகுபாட்டுத் தர்மம் என்பதையே மோடி அரசின் இந்த முரட்டு அணுகுமுறை வெளிப்படுத்துகிறது. ஏழு பேரையும் விடுதலை செய்யக் கூடாது என்பதிலும், அரசமைப்பு உறுப்பு 161-ஐத் தவறாகப் பயன்படுத்துவதிலும் காங்கிரசு ஆட்சிக்கும் பா.ச.க. ஆட்சிக்கும் ஒற்றுமையே நிலவுகிறது. பேரறிவாளன் சார்பில் விடாமல் தொடர்ச்சியாக சிறப்பாக வாதிட்ட வழக்கறிஞர்கள் கோபால் சங்கரநாராயணன் மற்றும் பிரபு சுப்பிரமணியன், பாரி ஆகியோர் தமிழ் கூறும் நல்லுலகின் பாராட்டுக்குரியவர்கள்! பேரறிவாளனின் அம்மையார் அற்புதம் அம்மாளின் அக்கறையும், அயரா உழைப்பும் உலக அற்புதம்! தமிழ்நாடு அரசு ஊசலாட்டமின்றி உறுதியுடன் பேரறிவாளன் விடுதலைக்கு உண்மையாக வாதிட்டது. அதற்குப் பாராட்டுகள்! இவ்வழக்கில் எஞ்சியுள்ள ஆறு பேரையும் விடுதலை செய்யத் தமிழ்நாடு அரசு தனி சட்ட முயற்சி எடுத்து, சிறை மீட்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இப்பிரபஞ்சத்தின் தொடக்கமோ முடிவோ நமக்குத் தெரியாது. ஏன், இவ்வுலகின் தோற்றம் மறைவு பற்றி கூடத் தெரியாது. ஆனால் இவ்வுலகில் அடங்கியுள்ள பல்வேறு உயிரினங்கள், தாவரங்கள், குறிப்பிட்ட வடிவமும் குணமும் உள்ள பொருட்கள் ஆகியவற்றுக்கும் குறிப்பிட்ட வகையிலான இயக்கங்களுக்கும் அமைப்புகளுக்கும் ஓரளவு கால அளவை அளவிட்டிருக்கிறோம். அதை வயது என்கிறோம். வயது என்பது மிகக் குறுகிய காலம் முதல் லட்சக்கணக்கான ஆண்டுகள் வரை சொல்லப்படுகிறது. பௌதீகப் பொருள்களின் மாற்றங்களையெல்லாம் வயதென்று குறிப்பிட்டால் கோடிக்கணக்கான ஆண்டுகளைக்கூட வயதென்று சொல்லலாம். காலத்துக்கும் தூரத்துக்கும் எல்லை இல்லை. அதனால் அவற்றை இவ்வளவு சிறியது அல்லது இவ்வளவு பெரியது என்று சொல்ல முடியாது. இந்த நிலையில் வாழும் மனித வாழ்வின் ஆயுள் ஏறக்குறைய நூறாண்டுகள் என்று வைத்துக் கொண்டாலும் அது பிரபஞ்சத்தின் ஆயுளோடுகூட வேண்டாம் நாம் வாழும் பூமியோடு ஒப்பிட்டால்கூட மிக மிக அற்பமான ஒன்றாகி விடும். அத்தகைய குறுகிய கால வயதுடைய நாம் நம்மையும் நாம் சார்ந்துள்ள உலகையும் சரியாகப் புரிந்து கொள்ளாமல் நமது வாழ்வின் வளர்ச்சி விதிகளைப் பற்றிக்கூடத் தெரிந்து கொள்ளாமல் கிட்டத்தட்ட அர்த்தமற்ற, முறையற்ற, முரண்பாடுகள் மயமான, குழப்பமான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு மறைகிறோம். தாறுமாறான வாழ்க்கைச் சூழலில் அவதிப்படும் நிலையில் ஒவ்வொருவரும் திட்டவட்டமான தெளிவில்லரத முறையில்தான் வாழ்வின் பெரும்பகுதியைக் கழிக்கிறோம். எதிலுமே ஈடுபாடு குறைந்தவர்களாய் செய்யும் செயல்களின் விளைவுகளைப் பற்றி அக்கரை இல்லாதவர்களாய் பெரும்பகுதி மக்கள் வாழும் நிலையில் ஓரளவு அல்லது சிறந்த அறிவாற்றல் பெற்றவர்கள்கூட சிறந்த முறையில் வாழும் வழி முறைகள் மறுக்கப்பட்டவர்களாக அல்லது வாய்ப்பற்றவர்களாகத் தரம் தாழ்ந்த மக்களுக்கு ஈடான முறையில் அல்லல்பட வேண்டியுள்ளது. இதனால் வாழ்நாளின் பெரும்பகுதி அர்த்தமற்ற முறையில் வீணாக்கப் படுகிறது. இந்த நிலை மாற வேண்டுமெனில் அல்லது இந்த நிலையில் ஓரளவு சிறப்பாக வாழ வேண்டுமெனில் ஒவ்வொருவரும் அல்லது ஓரளவு அறிவுத் தெளிவு பெற்றோராவது சில கால நெறிகளைப் பின்பற்றினால் வாழும் காலம் சிறப்பாக இருக்கும. எனவே நமது வாழ்நாளின் பெரும்பகுதி வீணாகாமல் தடுக்க நேரந்தவறாமையும் காலந்தாழ்த்தாமையும் மிக முக்கியமானவை ஆகும். திட்டவட்டமாகக் குறித்த நேரத்தில் கடமைகளைச் செய்வதை நேரந்தவறாமை என்றும் செய்யவேண்டிய நல்லசெயல்களைக் காலம் தாழ்த்தாமல் சீக்கிரம் செய்துமுடித்துவிடும் ஆர்வத்தை காலம் தாழ்த்தாமை என்றும் கூறுகிறோம். நமது வாழ்வில் நாம்வாழ, நம்மைச் சார்ந்துள்ளவர்கள் வாழ சமுதாயக்கடமைகளைச் செய்ய, நாம் சில கடமைகளை வகுத்துக் கொண்டு செய்ய வேண்டியதுள்ளது. ஒவ்வொரு கடமையை நிறைவேற்றவும் நமது வாழ்நாளில் ஒரு பகுதி செலவிடப்படுகிறது. நமது வாழ்நாளில் நாம் எதைச் செய்தாலும் அல்லது சும்மா இருந்தாலும் அதற்காக ஒருபகுதி வாழ்நாளைச் செலவழிக்கிறோம். கடந்து போன காலத்தை நிச்சயம் திரும்பப் பெற முடியாது. கால ஓட்டத்தில் நமது ஆயுள் என்று ஏற்பட்டிருக்கும் காலத்தில் மனித வடிவில் வாழ்க்கை என்ற நிலையில் வாழும் வரையில் அந்த வாழ்க்கை அதற்குண்டான சமுதாயப் பொறுப்புடன் பொதுவான நியதிகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும். அத்தகைய வாழ்க்கை சிறப்பாக இருப்பதே விரும்பப் படுகிறது. அது உண்மையில் சிறப்பாக இருக்க வேண்டுமானால் ஆயுள் என்று சொல்லப்படும் வாழ்நாள் முழுவதும் திட்டவட்டமான கால அட்டவணையைப் போன்று ஒழுங்கானதாக அந்தந்தப் பருவத்துக்கேற்ற கடமைகளைச் சிறப்புடன் நிறைவேற்றத் தக்க வகையில் அமைந்திருக்க வேண்டும. அதற்குக் குழந்தைப் பருவம் முதலே எந்தெந்த வேலையை எவ்வெப்போது செய்ய வேண்டும என எண்ணுகிறோமோ அந்தந்த வேலையை அந்தந்த நேரத்தில் தவறாமல் செய்ய வேண்டும். வாழ்நாள் முழுக்க எந்த ஒரு கடமையையும் திட்டமிட்ட காலத்தில் செய்ய வேண்டும். தவிர்க்க முடியாத காரணம் இருந்தா லொழிய நேரந் தவறுதல் கூடாது. இயற்கையில் எல்லாமே திட்டமிட்டபடி இயங்கும்போது மனித வாழ்வும் திட்டமிட்ட நேரத்தில் திட்டமிட்டபடி இயங்க வேண்டும். அதேபோன்று நம் மனதில் செய்யவெண்டும் என்று எத்தனையோ நல்ல காரியங்களை நினைப்போம். ஆனால் அதற்கு நெரம் ஒதுக்காமல் சாதாரணக் கடமைகளைச் செய்து கொண்டு காலம் கடத்த்கொண்டு இருப்போம். அதே போலக் கடினமான பணிகளை எதிர் கொள்ளத் தயக்கப்பட்டு காலம் கடத்துவோம். காலம் தாழ்த்துவதால் அந்தப்பணியின் தன்மை மேலும் கடினம்தான் ஆகும். அதேபோல சிக்கலான ஆனால் நாம்தான் தீர்க்க வேண்டும் என்ற கட்டாயத்திலுள்ள பல பிரச்சினைகளையும் தள்ளிப் போட்டுக் கொண்டே போவோம். களையெடுக்கக் காலம் தாழ்த்துமளவு களைகள் வலுப்பெறும். பயிர்கள பாதிக்கப்படும். அதுபோலக் காலம் தாழ்த்துமளவு பிரச்சினைகள் அதிகமாகி மனச்சுமையும் கவலையும் அதிகரிக்கும். நம்மைப்போலவே இயற்கையில் நடப்பவை எல்லாம் திட்டமிட்டதுபோல் ஒழுங்காக நடக்காவிட்டால் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்க்கவேண்டும். பூமியில் ஏற்படும் பருவகாலங்கள் தவறினால் என்னஆகும்? பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் காலமும் அதுசூரியனைச் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் காலம் தவறினால் எப்படி இருக்கும்? ஒவ்வொரு உயிரினமும் தாய்வயிற்றில் கருவாக இருக்கும் காலமுமும் நமக்கும் மற்ற உயிரினங்களுக்கும் உணவு கொடுக்கும் பயிர் வகைகளும் காய், கனி, பழ வகைகளை அள்ளித்தரும் தாவரங்களும் தமது இயல்பான கால அளவுகளில் இருந்து தவறினால் எப்படி இருக்கும்? அவ்வளவு ஏன் மனிதனால் உருவாக்கப்பட்ட நேரங்காட்டும் கடிகாரங்கள் காட்டும் நேரம் தவறினால் எப்படி இருக்கும்? ஆக நம்மைச் சுற்றி நடப்பதெல்லாம் திட்டமிட்டபடி நேரந்தவறாமல் நடந்தால்தான் எல்லாம் சரியாக இருக்கும், நம்மாலும் வாழமுடியும் என்கிற நிலையில் வாழ்ந்துகொண்டுள்ள நாம் மட்டும் நேரந்தவறினால் காலந்தாழ்த்துவதைப் பழக்கமாக வைத்துக்கொண்டால் நம்மால் எப்படி சிறப்பாக வாழ்ந்துவிடமுடியும்? காலா காலத்தில் கடமைகளைச் செய்து முடித்து விட்டால் எண்ணிய நல்ல காரியங்களை, எதிர்வரும் பிரச்சினைகளை, அவ்வப்போது முடித்துவிட்டால் மனச்சுமை குறைவதோடு அடுத்த கடமைகளைச் செய்ய பலமும் பத்துணர்ச்சியும் பெருகும். சோம்பல் என்பது நம்மை அண்டாது. கடமைகளைத் தள்ளித் தள்ளிப் போட்டு அதுபற்றியே எண்ணிக் குமைந்து கொண்டு இருப்பதை விட முடித்துவிட்டால் கிடைக்கும் நிம்மதி இணையற்றது. எனவே நேரந்தவறாமையும் காலம் தாழ்த்தாமையும் நமது வாழ்நாளைப் பயனுள்ள வகையில் கழிக்கக் கடைப்பிடிக்க வேண்டிய உன்னத நெறிகளாகும்.
இந்த விமர்சனத்தை தற்போது நடித்து வரும் நேர்கொண்ட பார்வை படத்தில் உடைத்து எறியவிருக்கும் அஜித் பிங்க் ரீமேக்கான இந்தப் படத்தில் வக்கீலாக நடிக்கிறார். அதிகார வர்க்கத்தால் பாதிக்கப்பட்ட 3 பெண்களுக்காக, அஜித் நீதிமன்றத்தில் போராடி அவர்களுக்கு நல்ல தீர்ப்பு வாங்கித் தருவதுதான் படத்தின் கதை. படத்தில் நீதிமன்ற காட்சிகள் ஏராளமாக உள்ளது. ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் உள்ள நீதிமன்ற அரங்கில் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது. இதில் வரும் நீளமான வசனங்களை மனப்பாடம் செய்யாமல் உதவி இயக்குநரை வாசிக்கச் சொல்லி கேட்டு மனதில் நிறுத்திக் கொண்டு பேசி அசத்தினராம் அஜித். அவரது வசன உச்சரிப்பு ஸ்டைலே வேற லெவலில் இருக்கும் என்கிறார்கள். திட்டமிட்ட காலத்தை விட நான்கு நாள்கள் முன்னதாகவே படப்பிடிப்பு முடிந்து விட்டதாம். இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடக்கிறது. அதில் அஜித், வித்யாபாலன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்படவிருக்கிறது. படத்தை மே- 1 ஆம் திகதி வெளியிடுவதாக அறிவித்திருக்கிறார்கள். #Boney_Kapoor, #Ajith_Kumar, #Vidya_Balan, #Shraddha_Srinath, #Pink, #Nerkonda_Parvai Related Posts cinema news Post a Comment Popular Posts `` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு ஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்... விமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா அண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக... புத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி சட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா... கமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே கமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ... சற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும... ரஜினியா? கமலா? மக்கள் யாரை தேர்வு செய்வார்கள் இம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்... கமலை அசிங்கப்படுத்திய பாஜக! கமலின் பதில் என்ன? கமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B... சிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப... ஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...
தலைநகர் டெல்லியில் குளிர்காலத்தில் ஏற்படும் காற்று மாசுபாட்டிற்கு தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் உமிழ்வே அதிகக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதிகளில் குளிர்காலத்தில் ஏற்பட்ட கடுமையான காற்று மாசுபாடு குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ஒன்றிய இணை அமைச்சர் அஸ்வினி குமார் சோபே பதிலளித்திருந்தார். Air Pollution 2018ஆம் ஆண்டு ARAI மற்றும் TERI இணைந்து நடத்திய “Source Apportionment of PM2.5& PM10 of Delhi NCR for Identification of Major Sources” ஆய்வின் முடிவுகளை தனது பதிலில் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். அந்த ஆய்வின்படி டெல்லியில் குளிர்காலத்தின் போது ஏற்படும் காற்று மாசுபாட்டிற்கு அப்போதைய வானிலை, போக்குவரத்து மற்றும் தொழிற்சாலை உமிழ்வுகள், கட்டுமான நடவடிக்கை, குப்பைகள் எரிப்பது உள்ளிட்டவை காரணம் எனவும் ஒட்டு மொத்த காற்று மாசுபாடில் தொழிற்சாலையில் இருந்து வெளியாகும் PM 10 27% மற்றும் PM 2.5 30% பங்காற்றுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மரணத்தோடு ஒரு மனிதனின் வாழ்க்கை முற்றுப் பெறுவதில்லை. அது மேலும் மேலும் தொடர்கிறது. யாருக்கு மறுபிறவிகள் ஏற்படாது என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். இதற்கு சாஸ்திரங்கள், கருட புராணம், கடோபநிஷதம் போன்றவை மறுபிறவி, பற்றிய சில செய்திகளை குறிப்பிடுகின்றன. பொதுவாக பூமியில் அனுபவிக்க வேண்டிய அனைத்தையும் அனுபவித்து முடிந்தவருக்கு மீண்டும் மறுபிறவி ஏற்படுவதில்லை. இது கர்ம பூமியாதலால் தங்களது கர்மத்தை அனுபவிக்கவே உயிர்கள் பிறப்பெடுக்கின்றன. அவற்றை முற்றிலுமாக அனுபவித்து விட்டு, இனி அனுபவிக்க சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா, ஆகாம்ய கர்மா என ஏதும் இல்லாதவர்களுக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை. இவ்வுலக ஆசைகள் ஏதும் இல்லாமல், பற்றற்ற வாழ்க்கை வாழ்பவர்களுக்கும், தவயோகிகளுக்கும் மறுபிறவி இல்லை. சிறந்த தவத்துடனும் பக்தியுடனும் வாழ்ந்து, இறைவன் ஒருவனையே தங்கள் பற்றுக் கோடாகக் கொண்டு, தாங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணித்து வாழ்பவர்களுக்கு மறுபிறவி இல்லை. தாங்கள் செய்த பாவக் கணக்கும், புண்ணியக் கணக்கும் சரியாகி கழிக்க ஏதும் கர்மவினைகள் இல்லாதவருக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை. தன்னலம் கருதாது வாழ்ந்து மறைந்த மகான்களுக்கு மறுபிறவி இல்லை. இறைவனின் கட்டளைப்படி மட்டுமே அவர்களது அவதாரம் நிகழும். பந்தம், பாசம், மோகம், அகந்தை, காமம் போன்ற மன அழுக்குகளிலிருந்து விடுபட்டு, இவ்வுலக வாழ்வை வெறுத்து, இறைவனையே சதா தியானித்து, அவன் நாமத்தையே எப்போதும் கூறி வரும் உண்மையான பக்தர்களுக்கு மறுபிறவி ஏற்படுவதில்லை. நமது சாஸ்திரங்கள் கூறும் முறைப்படி பரமாத்மாவிலிருந்து பிரிந்து வந்த ஜீவாத்மாக்கள் அனைவரும், ஏதாவது ஒரு காலத்தில் அந்தப் பரமாத்மாவோடு இணைந்து தான் ஆக வேண்டும். அது ஒரு பிறவியிலும் நிகழலாம்.
يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَطَلِّقُوهُنَّ لِعِدَّتِهِنَّ وَأَحْصُوا الْعِدَّةَ ۖ وَاتَّقُوا اللَّهَ رَبَّكُمْ ۖ لَا تُخْرِجُوهُنَّ مِن بُيُوتِهِنَّ وَلَا يَخْرُجْنَ إِلَّا أَن يَأْتِينَ بِفَاحِشَةٍ مُّبَيِّنَةٍ ۚ وَتِلْكَ حُدُودُ اللَّهِ ۚ وَمَن يَتَعَدَّ حُدُودَ اللَّهِ فَقَدْ ظَلَمَ نَفْسَهُ ۚ لَا تَدْرِي لَعَلَّ اللَّهَ يُحْدِثُ بَعْدَ ذَٰلِكَ أَمْرًا ( 1 ) நபியே! நீங்கள் பெண்களைத் 'தலாக்' சொல்வீர்களானால் அவர்களின் 'இத்தா'வைக் கணக்கிட ஏற்ற வகையில் (மாதவிடாய் அல்லாத காலங்களில்) தலாக் கூறுங்கள். உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள், தவிர, (அப்பெண்கள்) பகிரங்கமான மானக்கேடான (காரியத்)தைச் செய்தாலன்றி அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து நீங்கள் வெறியேற்றாதீர்கள்; அவர்களும் வெளியேறலாகாது, இவை அல்லாஹ் (விதிக்கும்) வரம்புகள் எவர் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகிறாரோ, அவர் திடமாகத் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்: (ஏனெனில், கூடி வாழ்வதற்காக) இதன் பின்னரும் அல்லாஹ் ஏதாவது ஒரு வழியை உண்டாக்கலாம் என்பதை அறியமாட்டீர். فَإِذَا بَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ فَارِقُوهُنَّ بِمَعْرُوفٍ وَأَشْهِدُوا ذَوَيْ عَدْلٍ مِّنكُمْ وَأَقِيمُوا الشَّهَادَةَ لِلَّهِ ۚ ذَٰلِكُمْ يُوعَظُ بِهِ مَن كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ۚ وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا ( 2 ) ஆகவே, அவர்கள் தங்கள் (இத்தாவின்) தவணையை நெருங்கினால், அப்பொழுது முறைப்படி (மனைவியராக) அவர்களை நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; அல்லது முறைப்படி அவர்களைப் பிரித்து (விட்டு) விடுங்கள், அன்றியும், உங்களில் நியாயமுடைய இருவரைச் சாட்சியாக வைத்துக் கொள்ளுங்கள், மேலும், சாட்சியத்தை அல்லாஹ்வுக்காக (நேர்மையாக) நிலைப்படுத்துங்கள்; அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசம் கொண்டிருப்போருக்கு இந்த நற்போதனை செய்யப்படுகிறது - தவிர, எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (தக்க ஒரு) வழியை உண்டாக்குவான். وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ ۚ وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ ۚ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ ۚ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا ( 3 ) அ(த்தகைய)வருக்கு, அவர் எண்ணியிராத புறத்திலிருந்து, அவன் உணவு (வசதி)களை அளிக்கிறான், மேலும், எவர், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவன் போதுமானவன், நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தை நிறைவாக்குபவன் - திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அளவை உண்டாக்கி வைத்திருக்கின்றான். وَاللَّائِي يَئِسْنَ مِنَ الْمَحِيضِ مِن نِّسَائِكُمْ إِنِ ارْتَبْتُمْ فَعِدَّتُهُنَّ ثَلَاثَةُ أَشْهُرٍ وَاللَّائِي لَمْ يَحِضْنَ ۚ وَأُولَاتُ الْأَحْمَالِ أَجَلُهُنَّ أَن يَضَعْنَ حَمْلَهُنَّ ۚ وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا ( 4 ) மேலும், உங்கள் பெண்களில், எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால், அப்பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாப் பெண்களுக்கும், 'இத்தா'(வின் தவணை) மூன்று மாதங்களாகவும், தவிர கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய ('இத்தா'வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும், மேலும், எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்குகிறான். ذَٰلِكَ أَمْرُ اللَّهِ أَنزَلَهُ إِلَيْكُمْ ۚ وَمَن يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا ( 5 ) இதுவே அல்லாஹ்வின் கட்டளையாகும் - இதை அவன் உங்களுக்கு இறக்கியருளினான். எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுகிறாரோ, அவரை அவருடைய பாவங்களை விட்டும் நீக்கி, அவருக்கு (நற்) கூலியையும் மகத்தானதாக்குகின்றான். أَسْكِنُوهُنَّ مِنْ حَيْثُ سَكَنتُم مِّن وُجْدِكُمْ وَلَا تُضَارُّوهُنَّ لِتُضَيِّقُوا عَلَيْهِنَّ ۚ وَإِن كُنَّ أُولَاتِ حَمْلٍ فَأَنفِقُوا عَلَيْهِنَّ حَتَّىٰ يَضَعْنَ حَمْلَهُنَّ ۚ فَإِنْ أَرْضَعْنَ لَكُمْ فَآتُوهُنَّ أُجُورَهُنَّ ۖ وَأْتَمِرُوا بَيْنَكُم بِمَعْرُوفٍ ۖ وَإِن تَعَاسَرْتُمْ فَسَتُرْضِعُ لَهُ أُخْرَىٰ ( 6 ) உங்கள் சக்திக்கேற்ப நீங்கள் குடியிருக்கும் இடத்தில் ('இத்தா'விலிருக்கும்) பெண்களை நீங்கள் குடியிருக்கச் செய்யுங்கள், அவர்களுக்கு நெருக்கடியுண்டாக்குவதற்காக அவர்களுக்குத் தொல்லை கொடுக்காதீர்கள், அவர்கள் கர்ப்பமுடையவர்களாக இருந்தால், அவர்கள் பிரசவிக்கும் வரை, அவர்களுக்காகச் செலவு செய்யுங்கள்; அன்றியும் அவர்கள் உங்களுக்காக (உங்கள் குழந்தைகளுக்குப்) பாலூட்டினால், அதற்கான கூலியை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள். (இதைப் பற்றி) உங்களுக்குள் நேர்மையாகப் பேசி முடிவு செய்து கொள்ளுங்கள், ஆனால் (இது பற்றி) உங்களுக்குள் சிரமம் ஏற்பட்டால் (அக்குழந்தைக்கு) மற்றொருத்தி பால் கொடுக்கலாம். لِيُنفِقْ ذُو سَعَةٍ مِّن سَعَتِهِ ۖ وَمَن قُدِرَ عَلَيْهِ رِزْقُهُ فَلْيُنفِقْ مِمَّا آتَاهُ اللَّهُ ۚ لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا مَا آتَاهَا ۚ سَيَجْعَلُ اللَّهُ بَعْدَ عُسْرٍ يُسْرًا ( 7 ) தக்க வசதியுடையவர்கள், தம் வசதிக்கேற்ப (இவ்விஷயத்தில்) செலவு செய்து கொள்ளவும், ஆனால், எவர் மீது அவருடைய உணவு (வசதி) நெருக்கடியாக்கப் பட்டுள்ளதோ, அவர் தமக்கு அல்லாஹ் கொடுத்ததிலிருந்து செலவு செய்து கொள்ளவும், எந்த ஆத்மாவையும் அல்லாஹ் அதற்குக் கொடுத்திருப்பதேயல்லாமல் (மிகையாக செலவு செய்யும் படி) சிரமப்படுத்த மாட்டான், கஷ்டத்திற்குப் பின்னர், அல்லாஹ் அதி சீக்கரத்தில் இலகுவை (சுகத்தை) உண்டாக்கியருள்வான். وَكَأَيِّن مِّن قَرْيَةٍ عَتَتْ عَنْ أَمْرِ رَبِّهَا وَرُسُلِهِ فَحَاسَبْنَاهَا حِسَابًا شَدِيدًا وَعَذَّبْنَاهَا عَذَابًا نُّكْرًا ( 8 ) எத்தனையோ ஊர்கள் தம் இறைவனுடையவும் அவனுடைய தூதர்களுடையவும் கட்டளைக்கு மாறு செய்தனர், ஆதலால், நாம் வெகு கடுமையாக அவற்றைக் கணக்குக் கேட்டு, அவர்களைக் கொடிய வேதனையாகவும் வேதனை செய்தோம். فَذَاقَتْ وَبَالَ أَمْرِهَا وَكَانَ عَاقِبَةُ أَمْرِهَا خُسْرًا ( 9 ) இவ்வாறு அவை தம் செயலுக்குரிய தண்டனையை அனுபவித்துக் கொண்டன, அன்றியும், அவர்களுடைய செயல்களின் முடிவும் நஷ்டமாகவே ஆயிற்று. أَعَدَّ اللَّهُ لَهُمْ عَذَابًا شَدِيدًا ۖ فَاتَّقُوا اللَّهَ يَا أُولِي الْأَلْبَابِ الَّذِينَ آمَنُوا ۚ قَدْ أَنزَلَ اللَّهُ إِلَيْكُمْ ذِكْرًا ( 10 ) அல்லாஹ் (அவர்களுக்குக்) கடினமான வேதனையை (மறுமையில்) சித்தம் செய்திருக்கின்றான், ஆகவே, ஈமான் கொண்டுள்ள அறிவுடையோரே! அல்லாஹ்வை நீங்கள் அஞ்சி நடந்து கொள்ளுங்கள் - திட்டமாக அல்லாஹ் உங்களுக்கு நினைவுறுத்தும் இவ்வுபதேசத்தை இறக்கி வைத்திருக்கின்றான். رَّسُولًا يَتْلُو عَلَيْكُمْ آيَاتِ اللَّهِ مُبَيِّنَاتٍ لِّيُخْرِجَ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ ۚ وَمَن يُؤْمِن بِاللَّهِ وَيَعْمَلْ صَالِحًا يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ۖ قَدْ أَحْسَنَ اللَّهُ لَهُ رِزْقًا ( 11 ) அன்றியும், ஒரு தூதரையும் அவன் (அனுப்பி வைத்தான்); அவர் அல்லாஹ்வுடைய தெளிவான வசனங்களை உங்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார், ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்பவர்களை இருள்களிலிருந்து, ஒளியின் பக்கம் கொண்டு வருவதற்காக, மேலும் எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல் செய்கின்றாரோ அவரை அல்லாஹ் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்கிறான் - அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள், அல்லாஹ் அவர்களுக்குத் திடமாக உணவை அழகாக்கினான். اللَّهُ الَّذِي خَلَقَ سَبْعَ سَمَاوَاتٍ وَمِنَ الْأَرْضِ مِثْلَهُنَّ يَتَنَزَّلُ الْأَمْرُ بَيْنَهُنَّ لِتَعْلَمُوا أَنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ وَأَنَّ اللَّهَ قَدْ أَحَاطَ بِكُلِّ شَيْءٍ عِلْمًا ( 12 ) அல்லாஹ் தான் ஏழு வானங்களையும் இன்னும் பூமியிலிருந்து அவற்றைப் போலவும் படைத்தான், நிச்சமயாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன் என்பதையும், மேலும் நிச்சயமாக அல்லாஹ் தன் ஞானத்தால் எல்லாப் பொருளையும் சூழ்ந்தறிகிறான் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக, அவற்றின் (வானங்கள், பூமியின்) இடையே அவன் கட்டளையிறங்கிக் கொண்டேயிருக்கிறது. Share Select language Select language ...العربيةEnglishEnglish - Yusuf AliEnglish - TransliterationFrançaisNederlandsTürkçeMelayuIndonesia中文日本語Italiano한국어മലയാളംPortuguêsEspañolاردوবাংলাதமிழ்ČeskéDeutschفارسىRomânăРусскийSvenskaShqipAzəriBosanskiБългарскиHausaكوردیNorwegianPolskisoomaaliSwahiliТоҷикӣТатарчаไทยئۇيغۇرچەЎзбекދިވެހިSindhi
மிக நவீன திருமணங்கள் கூட இன்னும் சில நேரம் மதிக்கப்படும் மரபுகளைப் பின்பற்றுகின்றன. ஒரு திருமண தொந்தரவை ஒன்றாக இணைக்கத் தேர்ந்தெடுப்பது நிச்சயமாக அவற்றில் ஒன்றாக இருக்கலாம். பிரைடல் ட்ரஸ்ஸோ என்றால் என்ன? ஒரு மணப்பெண் தொந்தரவு என்பது ஆடை, நகைகள் மற்றும் கைத்தறி போன்ற உடைமைகளின் தொகுப்பாகும், மணமகள் தனது திருமண நாளுக்கும் திருமணத்திற்கும் தயாராகி வருகிறார். ஒரு திருமண தொந்தரவு அதை விட மிக அதிகமாக இருக்கும் உள்ளாடை தொகுப்பு உங்கள் திருமண இரவில் அணிய திட்டமிட்டுள்ளீர்கள். இது உங்கள் ஒத்திகை இரவு மற்றும் திருமண நாள் முழுவதும் நீங்கள் அணிய விரும்பும் பொருட்களின் தொகுப்பாகவும், உங்கள் தேனிலவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ள பொருட்களாகவும் இருக்கலாம். திருமண வாழ்க்கையில் உங்களுடன் கொண்டு வர நீங்கள் விரும்பும் சில மதிப்புமிக்க குடும்ப குலதெய்வங்களும் இதில் அடங்கும். அலியா மற்றும் நிக் பள்ளத்தாக்கின் கூற்றுப்படி, நிறுவனர் பள்ளத்தாக்கு & நிறுவன நிகழ்வுகள் , இது அணிய வேண்டிய நகைகள், உங்கள் உள்ளாடைகள் மற்றும் உடை, காலணிகள், ஒரு முக்காடு மற்றும் திருமண உள்ளாடை . 'உன்னதமான தொந்தரவில் ஒரு நவீன திருப்பம் இருக்கும்போது, ​​இந்த யோசனை இன்னும் பாரம்பரியத்தில் மூழ்கியுள்ளது, ஆனால் தனிப்பயனாக்கப்பட்டு மணமகள் அன்பே வைத்திருப்பதை மாற்றியமைக்கலாம்' என்று அவர்கள் கூறுகிறார்கள். நிபுணரை சந்திக்கவும் அலியா மற்றும் நிக் வேலி ஆகியோர் நிறுவனர் பள்ளத்தாக்கு & நிறுவன நிகழ்வுகள் , வாஷிங்டனின் சியாட்டிலில் உள்ள ஒரு முழு சேவை திருமண திட்டமிடல் நிறுவனம். உங்கள் சொந்த திருமண தொந்தரவை ஒன்றாக இணைக்கத் தொடங்க தயாரா? இந்த பாரம்பரியத்தின் வரலாறு, அதன் பொருள் மற்றும் உங்கள் நவீனகால திருமணத்தில் அதை எவ்வாறு இணைத்துக்கொள்ளலாம் என்பதைப் பற்றி மேலும் அறிய படிக்கவும். பிரைடல் ட்ரஸ்ஸோவின் வரலாறு மற்றும் பொருள் ஒரு திருமண தொந்தரவின் பாரம்பரியம் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தையது. 'இது பெரும்பாலும் அந்தஸ்தின் அடையாளமாக கருதப்பட்டது. ஒரு மணமகளின் குடும்பம் தனது புதிய திருமண வாழ்க்கைக்கு அவளை தயார்படுத்துவதற்காக ஆடைகள், கைத்தறி மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களால் மார்பை நிரப்ப முடியும், ”என்கிறார் அலியா மற்றும் நிக் வேலி. பாரம்பரியம் அதைப் போலவே, முழு மற்றும் பணக்கார ஒரு தொந்தரவாக இருந்தது, மணமகளின் நிலை உயர்ந்தது. இலக்கிய குறிப்புகளில், ஒரு தொந்தரவு ஒரு குடும்பத்தின் நிதி நிலை, உள்நாட்டு கலைகள், வீட்டை விட்டு வெளியேறுதல் மற்றும் கன்னித்தன்மையை குறிக்கிறது. விக்டோரியன் காலங்களிலிருந்து, ஒரு பெண் தனது திருமண, தேனிலவு மற்றும் புதுமணத் தம்பதிகள் மூலம் பார்க்க புத்தம் புதிய ஆடைகளைக் கொண்டிருந்தது. ஒரு குடும்பம் செல்வந்தர்களாக இல்லாவிட்டால், ஒரு தொட்டியில் உள்ள ஆடைகள் பெரும்பாலும் ஒரு தாய், அத்தை, பாட்டி அல்லது சிறுமியால் கையால் தைக்கப்படுகின்றன, ஊசியுடன் திறமை இருந்தால். காலப்போக்கில், பாரம்பரியம் மாறிவிட்டது, இறுதியில் நிலை மற்றும் வர்க்கத்தின் அடையாளத்தை விட்டுச்செல்கிறது. இருப்பினும், மணப்பெண்கள் இன்னும் தங்கள் சொந்த பாணி மற்றும் அழகியலுக்கு பொருந்தக்கூடிய அதி-தனிப்பட்ட பொருட்களை இணைத்து வருகின்றனர். 'இன்றைய மணமகள் தனது சொந்த தொட்டியை உருவாக்குகிறாள் என்று தெரியவில்லை என்றாலும், அவள் திருமண மழையிலிருந்து பரிசுகளை சேகரிப்பதன் மூலமும், பாட்டியின் வைர காதணிகளை ஒதுக்கி வைப்பதன் மூலமும், தாயின் முக்காடு மற்றும் சரிகை அட்டவணை ஓடுபவர்களையும், அவள் அவளுக்காகப் பயன்படுத்தும் பிற பொருட்களையும் செய்கிறாள் திருமண நாள் அல்லது திருமண வாழ்க்கையில் மாற்றம், ”என்கிறார் அலியா மற்றும் நிக் வேலி. பிரைடல் ட்ரஸ்ஸோ கேள்விகள் மணப்பெண் தொண்டையை உருவாக்கும் சில பாரம்பரிய பொருட்கள் யாவை? ஒவ்வொரு திருமண தொல்லையும் நிச்சயமாக வேறுபட்டது, ஆனால் சில ஒற்றுமைகள் உள்ளன. 'ஒரு தொட்டியில் மட்பாண்டங்கள் முதல் நகைகள், ஆடைகள், குடும்ப குலதனம், குயில்ட் படுக்கை, பணம் மற்றும் ஒரு புதிய வீட்டைத் தயாரிப்பதற்கான பிற பொருட்கள் ஆகியவை அடங்கும்' என்று அலியா மற்றும் நிக் வேலி கூறுகிறார். 'பழையது, புதியது, கடன் வாங்கிய ஒன்று, நீல நிறம், மற்றும் அவரது ஷூவில் ஒரு வெள்ளி சிக்ஸ் பென்ஸ்' என்ற பழமொழியை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நல்ல அதிர்ஷ்டத்திற்காக சிக்ஸ் பென்ஸ் (அல்லது ஒரு பைசா) சேர்த்தல், அத்துடன் உங்கள் திருமண நாளுக்காக நீங்கள் தயாராகும் போது நீங்கள் தயாராகும் ஆடை மற்றும் உள்ளாடைகள் ஆகியவற்றைக் கொண்டு, அந்த பொக்கிஷமான பொருட்கள் அனைத்தையும் வைத்திருக்க உகந்த இடமாக உங்கள் திருமண தொந்தரவு உள்ளது, தேனிலவு , மற்றும் திருமண வாழ்க்கை. உங்கள் தேனிலவுக்கு நீங்கள் பொதி செய்யும்போது, ​​உங்கள் திருமண தொந்தரவு நிச்சயமாக கைக்குள் வரக்கூடும். உங்கள் நீச்சலுடை போன்ற விஷயங்களைச் சேர்க்கவும் அல்லது குளத்தை மூடிமறைக்கவும், எனவே திருமண திட்டமிடல் குழப்பங்களுக்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களை பேக் செய்ய மறக்காதீர்கள். மணப்பெண் தொல்லை எங்கே வைக்கப்படுகிறது? பாரம்பரியமாக, ஒரு திருமண தொந்தரவு ஒரு சிடாரில் வைக்கப்பட்டது நம்பிக்கை மார்பு , கையால் செய்யப்பட்ட பெட்டி அல்லது அழகான தண்டு. பெரும்பாலும், இது குடும்பத்தின் ஊடாக கடந்து செல்லும் ஒரு குலதனம். ஒரு நவீன தொந்தரவு பலவகையான கொள்கலன்களில் வைக்கப்படலாம். 'ஒரு தொந்தரவு ஒரு நேர்த்தியான பயண மார்பு அல்லது ஒரு ஸ்டீமர் தண்டு வடிவத்தில் வரக்கூடும் திருமண காலணிகள் திருமண நாளில் ஒரு மணமகள் தயாராக இருக்கும் இடத்திற்கு வரக்கூடிய வாசனை திரவியம் அல்லது திருமண காலை வஸ்திரம், ”என்கிறார் அலியா மற்றும் நிக் வேலி. உங்கள் திருமண தொல்லைக்கு நீங்கள் தேர்வுசெய்தவற்றைக் கொண்டு படைப்பாற்றல் பெற பயப்பட வேண்டாம். பெட்டிகளிலிருந்து பைகள் வரை, விருப்பங்கள் உண்மையிலேயே முடிவற்றவை. இது உங்கள் ஆளுமை மற்றும் பாணிக்கு ஏற்ற ஒன்றைக் கண்டுபிடிப்பது பற்றியது. மணமகள் திருமண மணப்பெண்ணை ஒன்றாக இணைக்கத் தொடங்குவது எப்படி? ஒரு திருமண தொட்டியை ஒன்றாக இணைப்பது பல வடிவங்களில் வரலாம். இது உங்கள் மிகவும் மதிப்புமிக்க உடைமைகளாக இருக்கலாம் அல்லது தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு வழங்கப்படும் பொருட்களாக இருக்கலாம். உங்கள் தாய் அல்லது பாட்டி போன்ற உங்களுக்கு நெருக்கமானவர்களிடமிருந்து பொருட்களை சேகரிப்பது ஒரு அர்த்தமுள்ள தொந்தரவை ஒன்றிணைக்க உதவும், அதே நேரத்தில் உங்கள் திருமண நாளில் அல்லது உங்கள் அணியத் திட்டமிடும் பொருட்களைச் சேர்க்கும்போது திருமண இரவு உள்ளாடை பின்னர் மாலை. மணமகள் எப்போது ஒரு திருமண தொட்டியை ஒன்றாக இணைக்க ஆரம்பிக்க வேண்டும்? சில திட்டமிடல்களைச் செய்வதற்கு இது ஒருபோதும் முன்கூட்டியே இல்லை. உங்கள் திருமண நாளுக்காக நீங்கள் அணியும் பொருட்களையும், உங்கள் தேனிலவுக்கு நீங்கள் அணியக்கூடிய பொருட்களையும் ஒன்றாக இணைப்பதில் உற்சாகமாக இருந்தால், உங்கள் நிச்சயதார்த்தத்தை நீங்கள் கொண்டாடிய பிறகு ஏன் தொடங்கக்கூடாது? ஒரு மணப்பெண் தொல்லை உருப்படிகள் சேர்க்கப்படுவதால் காலப்போக்கில் மாறலாம் மற்றும் மாறலாம். திருமண தொல்லைக்கு வேறு ஏதேனும் பயன்பாடுகள் உள்ளதா? திருமணத்திற்கு முன்பும், திருமணத்தின் போதும் எல்லாவற்றையும் ஒரே இடத்தில் வைத்திருக்க ஒரு திருமண தொந்தரவு நிச்சயமாக உதவியாக இருக்கும், இது திருமண புகைப்படங்களுக்கு சரியான கூடுதலாகவும் உதவும். அலியா மற்றும் நிக் பள்ளத்தாக்கின் கூற்றுப்படி, மணப்பெண் தொந்தரவு பாணியில் இருப்பது அசாதாரணமானது அல்ல புகைப்படங்கள் , எழுதப்பட்ட சபதம், ஒரு பூச்செண்டு, ஒரு ஹேர்பீஸ் அல்லது வேறு எந்த டோக்கன் போன்றவற்றையும் சேர்த்து மணமகள் பெரிய நாளில் சுமக்கக்கூடும். திருமணத்திற்குப் பிறகு உங்கள் திருமண தொந்தரவை நீங்கள் என்ன செய்ய வேண்டும்? உங்கள் திருமண தொட்டியை ஒரு அழகான நம்பிக்கை மார்பு, ஒரு சிறப்பு பெட்டி அல்லது ஒரு உடற்பகுதியில் ஒன்றாக இணைத்திருந்தால், இது வரவிருக்கும் பல ஆண்டுகளாக உங்களுடன் இருக்கும் ஒரு துண்டு. உங்கள் கடன் வாங்கிய அல்லது பிற குடும்ப குலதெய்வங்கள் போன்ற சில பொருட்கள் திருப்பித் தரப்படலாம் என்றாலும், உங்கள் திருமண நாள்பட்டியில் மற்ற கீப்ஸ்கேக்குகளை வைப்பது உங்கள் பெரிய நாளை நினைவுகூரும் ஒரு அழகான வழியாகும். உங்கள் வருங்கால மகள் அல்லது மருமகளுக்கு அவர்களின் சொந்த திருமண நாளுக்காக அதை அனுப்பும் வகையில் பெட்டியையும் உடற்பகுதியையும் வைத்திருப்பதை நீங்கள் பரிசீலிக்கலாம். உங்கள் திருமணத்திற்கான பழைய, புதிய, கடன் வாங்கிய மற்றும் நீல யோசனைகள் ஆசிரியர் தேர்வு ஆசாரம் & ஆலோசனை நீங்கள் ஒரு துணைத்தலைவராக கேட்கப்பட்ட பிறகு வாரம் செய்ய வேண்டிய 9 விஷயங்கள் உங்கள் நண்பரின் பெரிய நாளின் ஒரு பகுதியாக இருப்பதற்குப் பிறகு செய்ய வேண்டிய இறுதி பட்டியல் இங்கே! மேலும் படிக்க தேனிலவு திட்டமிடல் உங்கள் வாளி பட்டியலைத் திட்டமிடுவது எப்படி படகோனியா ஹனிமூன் சிலி படகோனியாவின் இதயத்திற்கு புதிய பருவகால விமானங்கள் என்பது உங்கள் கனவுகளின் படகோனியா தேனிலவை திட்டமிடுவதை விட எளிதானது என்று பொருள்.
இந்த பொருள் மீண்டும் உங்களிடம் அழைத்து வந்துவிட்டது.! புகைப்படத்துடன் மறைந்த நடிகர் சேதுராமன் மனைவி வெளியிட்ட உருக்கமான பதிவு!! என்ன கொடுமை சார் இது... ராதிகாவுடன் ரொமான்ஸ் செய்யப்போன கோபி... கடைசியில் இப்படி ஆச்சே!! கலகலப்பான ப்ரோமோ வீடியோ!! சைக்கோ கணவரால் வைக்கம் விஜயலட்சுமிக்கு நடந்த சோகம்... விவாகரத்துக்கான காரணத்தை பகிர்ந்த விஜயலட்சுமி..! 37 வயதில் காதலனை கரம் பிடித்த பிரபல சீரியல் நடிகை... வைரலாகும் திருமண புகைப்படம்!! அடக்கடவுளே.! பாடகி வைக்கம் விஜயலட்சுமியின் திருமண வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டங்களா.! அவரே உடைத்த உண்மைகள்!! பழம்பெரும் வில்லன் நடிகர் ஜெய்சங்கரின் மகனை பார்த்துள்ளீர்களா... வைரலாகும் புகைப்படம்!! பாண்டியன் ஸ்டோர் தொடரில் மாற்றப்பட்டு வரும் நடிகைகள்... இப்ப யார் மாறியுள்ளார் தெரியுமா.? நடிகர் சிபிராஜின் மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்துள்ளீர்களா... புகைப்படம் இதோ... சந்திரமுகியாக தமிழ் சினிமா ரசிகர்களை கலக்கவரும் கங்கனா ரனாவத்.. அதிகாரப்பூர்வ தகவலால் எதிர்பார்ப்பின் உச்சக்கட்டத்தில் ரசிகர்கள்.! திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே அரியமங்கலத்தில் ஜெய் அகோர காளி கோவில் உள்ளது. இதனை காசியில் அகோரி பயிற்சி பெற்ற மணிகண்டன் என்பவர் நிர்வகித்து வருகிறார். சமீபத்தில் இறந்த இவரது தாயாரின் உடல் அடக்கம் செய்யும் பொழுது அவர் செய்த சம்பவங்கள் ஊர் மக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக அகோரிகள் வடமாநிலங்களில் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதிகளில் தான் வாழ்ந்து வருவார்கள் என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இவர்கள் பெரும்பாலும் காசி பகுதியை மையமாகக் கொண்டு வாழ்ந்து வருவர். அகோரி மணிகண்டன் சில மாதங்களுக்கு முன்பு திருச்சி அரியமங்கலம் அருகே பாய்ந்தோடும் உய்யங்கொண்டான் வாய்க்கால் கரையில் உள்ள காளி கோவிலில் ஒரு மிக பெரிய அகோரிகள் பூஜையை நடத்தினார். அங்கு கட்டப்பட்டு வந்த அகோர பைரவர் சிலைக்கு பிரிதிஷ்டை செய்திட வட இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து அகோரிகளை அழைத்து வந்த மணிகண்டன், இந்த சிறப்பு பூஜையை நடத்தினார். இவர் மேலும் இப்பகுதியில் பில்லி சூனியம், பேய் ஓட்டுதல், மாந்திரிக பூஜைகள் வாராவாரம் வெள்ளி, செவ்வாய் தினங்களிலும், அமாவாசை, பௌர்ணமி போன்ற முக்கிய தினங்களிலும் செய்து வருவது வழக்கம். இவர் காசியில் தான் அகோரியாக தீட்சை எடுத்துக்கொண்டதாகக் கூறிக்கொண்டு தனது சீடர்களுடன் இப்பகுதியில் கோயில் கட்டி பூஜைகள் நடத்தி வருகிறார். இவரின் இதுபோன்ற வித்தியாசமான செயல்களால் அப்பகுதி மக்கள் எப்போதும் ஒருவித அச்சத்துடனேயே வாழ்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், அகோரி மணிகண்டனின் தாயார் மேரி திடீரென மரணமடைந்தார். இதையடுத்து அவரது உடல் அடக்கம் அரியமங்கலம் மத நல்லிணக்க இடுகாட்டில் நடைபெற்றது. முன்னதாக மேரியின் உடலை ஊர்வலமாக எடுத்து சென்றனர். இதில் அகோரிகள் மற்றும் பக்தர்கள் பலர் பங்கேற்றனர். இடுகாட்டிற்கு சென்றதும் இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அப்போது அகோரி மணிகண்டன் தனது தாயின் உடல் மீது அமர்ந்து, மந்திரங்கள் ஓத பூஜைகள் செய்தார். அவருடன் சக அகோரிகளும் டம்ரா மேளம் முழங்க, சங்கு ஊதி அகோரி பூஜை நடத்தினர். . இவ்வாறு இறந்தவரின் உடல் மீது அமர்ந்து அஞ்சலி பூஜை நடத்தினால் அவரது ஆன்மா இறைவனை சென்றடையும் என்று விளக்கம் கூறப்பட்டது. இது அகோரிகளின் வழக்கமாகவும் இருந்து வருகிறது. இதையடுத்து மேரியின் உடலுக்கு தீபாராதனை காட்டப்பட்டு, அடக்கம் செய்தனர். மரணமடைந்த தாயின் உடல் மீது அமர்ந்து அகோரி நடத்திய விசித்திர பூஜையானது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here Tags: #aghori manikandan #aghori manikandan mom funeral #aghoris in trichy Copy Link தற்போதைய செய்திகள் திடீர் மூச்சுதிணறல்.! கேஜிஎப் பட நடிகர் மரணம்.! சோகத்தில் திரையிலகினர் இரங்கல்!! பிரேத பரிசோதனையின் போது உயிரிழந்தவரின் உடலிலிருந்து உயிருடன் வெளியே வந்த பாம்பு.! அலறியடித்து ஓடிய பெண்.! திகில் சம்பவம்!! இந்த பொருள் மீண்டும் உங்களிடம் அழைத்து வந்துவிட்டது.! புகைப்படத்துடன் மறைந்த நடிகர் சேதுராமன் மனைவி வெளியிட்ட உருக்கமான பதிவு!!
நயாகரா பிராந்தியத்தில் இரண்டு வயது குழந்தையை தாக்கிய குற்றச்சாட்டை ஒன்ராறியோ செவிலியர் ஒருவர் எதிர்கொள்கிறார். ஆகஸ்ட் 5 ஆம் தேதி தோரோல்டில் உள்ள முகவரிக்கு அவர்கள் அழைக்கப்பட்டதாக நயாகரா பிராந்திய போலீசார் தெரிவித்தனர். அவர்கள் வந்தபோது, ​​​​அதிகாரிகள் இரண்டு வயது குழந்தையை கண்டுபிடித்தனர். பலத்த காயங்களுக்கு ஆளாகியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். குழந்தை ஆரம்பத்தில் உள்ளூர் மருத்துவமனைக்கு துணை மருத்துவர்களால் கொண்டு செல்லப்பட்டது, அதற்கு முன் மேம்பட்ட மற்றும் சிறப்பு கவனிப்புக்காக வெளியூர் மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர். சிறுவர் துஷ்பிரயோகப் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாவசங்கீர்த்தனம் என்னும் இந்த ஒப்புரவு அருள் அடையாளத்தைப் பல கத்தோலிக்கர்கள் ஒரு பொக்கிஷமாகக் கருதுகின்றனர். நமது ஆலயத்தில் நடைபெறும் அனைத்துத் திருப்பலிக்கு 15 நிமிடங்களுக்கு முன் ஒப்புரவு அருள் அடையாளம் அளிக்கப்படுகிறது. அவசரத் தேவைக்கு தயவு செய்து எங்கள் பங்கு அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும். ஒப்புரவு அருள் அடையாளம் இந்த ஒப்புரவு அருள் அடையாளத்தால் நமக்கும் நம் ஆன்மாவிற்கும் கிடைக்கும் நிம்மதிக்கும், மன அமைதிக்கும் ஈடிணையில்லை. உறுதியற்ற நிலையிலிருந்த நாம், நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு, நாம் கடவுளுடன் சரிசமமானவர்களாக, உறுதியான நம்பிக்கையில் இருக்கிறோம் என்ற அமைதியை இது அளிக்கிறது. கத்தோலிக்க திருச்சபையைத் தழுவிய பலர் ஆரம்பத்தில் சற்று பயந்தாலும், இவ்வருள் அடையாளத்தால் கிடைக்கும் உண்மையான பலனை நேசிக்க ஆரம்பித்தனர். பொதுவாக “பாவசங்கீர்தனம்” என்றும் “ஒப்புரவு” என்றும் அழைக்கப்படும் இவ்வருள் அடையாளத்திற்குத் “தவம்” என்னும் சொல் சிறந்தது. ஏனெனில் இதற்குத் தேவையான அத்தியாவசியமான நம் மனதின் உள்நிலைப்பாட்டை இது விவரிக்கிறது. உண்மையில், தவம் ஒரு நல்லொழுக்கம். இது விசுவாசத்தால் அறியப்பட்ட ஒரு நோக்கத்திலிருந்து நம்முடைய பாவங்களை வெறுக்கத் தூண்டி, கடவுளுக்கு விரோதமாக இனிமேல் இப்படிப்பட்டப் பாவங்களைச் செய்வதில்லை என்ற உறுதியுடன் நம்மைத் திருப்தியுடன் மனநிம்மதியுடன் நடக்கச் செய்கிறது. இந்த ஒப்புரவு அருள் அடையாளத்தின் வழியாக, திருமுழுக்கிற்குப் பின் நாம் செய்யும் அனைத்துப் பாவங்களுக்காக நாம் மனம் வருந்தி, மன்னிப்பு கேட்டு, அதைக் கடவுளின் பிரதிநிதியாகிய குருவானவரிடம் அறிக்கையிடும் போது, அவற்றை அவர் மன்னிக்கிறார். இயேசு, தனது சிலுவை மரணத்தால் நம் பாவத்திலிருந்தும், பாவத்தின் விளைவுகளிலிருந்தும், குறிப்பாகப பாவத்தால் கிடைக்கும் நித்திய மரணத்திலிருந்தும் நம்மை மீட்டார். ஆகையால், அவர் இறந்தோரிலிருந்து உயிர்த்த நாளிலே, மனிதர்களுடையப் பாவங்களை மன்னிக்கும் இந்த அருள் அடையாளத்தை நிறுவினார்.
நான் பசுபதி 19. வசதியான வீட்டு பையன். எங்க ஊர்களில் எங்கள் குடும்பம் பெரிய குடும்பம். வீட்டில் நான், அம்மா சீதா, அப்பா மற்றும் தங்கை, ஆகியோர் வசித்து வருகிறோம். இது என் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம். எங்க வீட்டில் பின் பகுதியில் ஒரு மாட்டு தொழுவம் உண்டு. அதில் 8 மாடுகள் கொண்டு. எங்கள் வீட்டு தேவைக்கு பால் போன்றவை எடுக்க நாங்கள்வளர்த்து வருகிறோம். அதில் அன்னம்மா என்ற பெண் வேலை பார்த்து வருகிறாள் அவள் வயது 30 இருக்கும். எனக்கு ஒரு போதும் அவள் மீது காம எண்ணம் இல்லை. அப்போது வெளியூரில் ஒரு திருமண வீட்டுக்கு எங்க வீட்டில் அம்மா அப்பா தங்கை மூவரும் சென்றனர். அப்போது வீட்டில் தனியாக இருப்பதால். இனையதளத்தில் sex படங்கள் பார்த்து வெறி அதிகமானது. என்ன செய்வது என்றே தெரிய வில்லை 3 முறை கை அடித்தும் mood குறைய வில்லை. வெளியே செல்ல குளிக்க போகும் போது. சன்னல் வழியே அன்னம் மாட்டுக்கு தண்ணி வைக்க போவதை பார்த்தேன் அப்போது அவளது முலை பகுதி முழுவதும் எனக்கு தெரிந்தது. நான் அதை மேலிருந்து ரசித்தேன். அப்போது தான் அவளை செய்ய எனக்கு ஆசை வந்தது. நேரே கீழே சென்று அவளிடம் மேல என் அறையை கூட்ட சொல்லி சொன்னேன் அவள் தயங்கினாள் ஏனென்றால் அவள் ஒரு நாளும் எங்கள் வீட்க்கு உள்ளே வந்ததே இல்ல. நான் பரவா இல்லை வீட்டில். நான் மட்டும் உள்ளேன் என்று சமாதானம் சொல்லி போக சொன்னேன். அவளை பற்றி சொல்லி ஆக வேண்டும் வீட்டில் அவள் வாரம் ஒரு முறை தான் குளிப்பால். பால் கறக்க வரும் ஆட்க்கள் அவன் முலையை சாப்பிடுவது போல பார்த்து ரசிப்பார்கள். இருந்தும் யாரும் அவளை திருமணம் செய்ய முன் வரவில்லை. அப்போது அவள் மேலே என் அறைக்கு சென்று கூட்ட தொடக்கினால். நான் கீழே கதவுகளை சாத்தி விட்டு மேல சென்றேன். TV on செய்து பிட்டு படத்தை போட்டேன் அவள் அதை ஒர கண்ணால் பார்த்து ரசிப்பது எனக்கு தெரியும் அவள் கூட்டி முடிக்கும் போது. பின்னால் இருந்து அவள் சூத்து என்னை அழைத்தது. நான் நேர சென்று அவளை கட்டி இருக்கினேன். அவள் பயந்து திருப்பினால். அவள் மேல் கெட்ட நாற்றம் வீசியது. அவள் உடல் சூட்டை நான் புரிந்து கொண்டேன். பின்பு அவள் என்னை தள்ளி விட முற்பட்டால் பின் நான் அவளை இறுக்கி பிடித்தேன். அவள் சின்னயா வேண்டாம் வெளியே தெரிந்தால் என்னை கொன்று விடுவார்கள் என்றால். நான் வீட்டில் யாரும் இல்லை நாம் மட்டும் தான் உள்ளோம் என்றேன். அவள் கண்களில் பயம் கலந்த காமம் தெரிந்தது. அவளை மேற்கொண்டு இருக்கினேன். அவள் முகம் முழுவதும் முத்த மழை பொழிந்தேன். அவளால் அதை தடுக்க முடியவில்லை. அவள் அமைதி யானால் என்னால் பொறுக்க முடியவில்லை. என் ஜட்டி போடாத சுண்னிய shorts ஓடு அவள் புண்டை இருக்கும் இடத்தில் இடித்தேன். அப்படியே அவள் முலையை பிடித்து கசக்கினேன் என் வலிமையான கை கொண்டு அதை பதம் பார்த்தேன். பின் அவள் செவ்விதல் களை ருசி பார்த்தேன். அவள் பல் தேய்க்க மாட்டாள் போல் வாய் நாற்றம் அடித்தது அதையும் விட்டாமல் முத்த கனல் களை வழங்கினேன். அவளை அந்த முக்கு ஓரம் தள்ளி என் வேலைகளை தொடத்தேன். பின் அவள் தாவணியை கழட்ட முற்பட்ட போது. வேண்டாம் என கண்களால் மன்றாடினால். என்னால் இதற்கு மேல் அவளை அனுபவிக்கலாம் விட மண மில்லை அதனால் அவள் எதிர்ப்பையும் மீறி அதை உருவி எறிந்தேன். இப்போது பாவாடை ஜாக்கெட் மட்டும் போட்டு கொண்டு இருந்தாள். அவள் முலை நல்ல தூக்கி கொண்டு இருந்தது. மேலே இருந்து பார்த்தது விட பெரியது. அவள் கையை பிடித்து இழுத்து கட்டில் மேல் போட்டேன் என் tshirt ஐ கலட்டி விட்டு அவள் மேல் பாய்ந்தேன். அவள் முகம் முழுக்க முத்த கொடுத்து கொண்டு இருந்தேன் அவளுக்கு பயத்தில் வேர்க்க தொடங்கியது உடல் முழுவது வேர்த்து அதை ரசித்து அந்த உப்பு நீரை நாக்கால் நக்கினேன். பின் அவள் ஜாக்கெட் ஊக்கு களை கலிட்டி போட்டு கைகளை அவள் முலை மீது வைத்தேன். அவள் bra போட்டது இல்லை என நினைக்கிறேன். இழந்த முலை மீது முதல் கை வைக்கும் ஆண் நான் தான் போல. அது கல் போன்று கைக்கு அடக்காமல் இருந்தது. உடனே அதை என் வாயில் வைத்து சப்பினேன். அவள் கண்களை மூடி கொண்டு இதை ரசித்து கொண்டு இருந்தாள். அவள் முலை காம்பை பற்களை கொண்டு இலவாகமாக கடித்தேன் அவள் ஆ. இஸ் இஸ். ஆ. அம்மா. என்று முனகி கொண்டு இருந்தாள். அவள் வலது முலையை கசக்கியும் இடது முலையை கடித்தும் இன்பம் வழங்கினேன். இதற்குள் எனின் shorts க்கு கிழிந்து விடும் படி என் சுண்ணி தூக்கி கொண்டு நின்றது அவள் அதை பார்த்தால். அவள் கையை பிடித்து அதில் வைத்தேன் அவள் அதை அமுக்கி இழுத்து விட்டால். அதை வெளியே எடுக்க கட்டளை இட்டேன். shorts ஐ கிழே இறக்கிய உடன் என் 8 inch பாம்பு அவள் முகம் முன் வந்து ஓடம் எடுத்தது பின் அவள் அதை பிடித்து பார்த்து அதன் தடிமனை உணர்ந்தாள். அவள் வாய் அருகே கொண்டு சென்று அவள் உதட்டில் தேய்த்தேன் பின்பு அவளை ஊம்ப சொன்னேன் அவள் தெரியாது என்றால். அவள் வையை திறக்க சொல்லி அதில் என் குஞ்சை விட்டு ஊம்ப சொல்லி கொடுத்தேன். நன்றாக பல் படாமல் ஊம்ப சொன்னேன் அதே போல் செய்தால். என்னால் தாங்க முடிய வில்லை அவள் தலையை பிடித்து தொண்டை வரை இடிக்க தொடங்கினேன். அவள் திமிறினாள் பின் என் வேகத்தை கூட்டி வாயில் ஒத்து கொண்டு இருந்தேன். பின் ஒரு 15 நிமிடங்களுக்கு பின் அவளை விடு வித்தேன். அவள் மூச்சு வாங்கினால். பின் அவள் பாவாடையை நாடாவை கையில் பிடித்து இழுத்தேன் அது பழைய பாவாடை போல. சர் ரென கிழிந்து விட்டது. அவள் என்னை பார்த்து பொறுமையாக பண்ணுங்க. என்று சொன்னால். நான் ஆறுதலாக பாவாடை வாங்கி தருவதக கூறினேன். பின் அவள் பாவடையை தூக்கி வீசி விட்டு அவள் தொடை முதல் கால் வரை முத்த மிட்டேன் பின் முட்டி போட்டு அவள் தொடை அருகே முத்த மிட்டு கொண்டு சென்றேன். அங்கே புதர் காடு போன்று அவள் புண்டை இருந்தது. அவள் பிறந்தது முதல் shave செய்த்து இல்லயாம். இது என் முதல் அனுபவம் தான். அதில் இப்படி ஒரு புண்டை என நினைத்து கொண்டு வாய் அருகே கொண்டு சென்றேன். திடிரென எனக்கு வாந்தி வரும் போல் இருந்தது. அந்த அளவுக்கு மூத்திர நாற்றம். அவள் புண்டை கழுவி எத்தனை நாள் ஆட்சி என்று கேட்ட போது தான் சொன்னால் 7 மாதம் ஆகிறதாம். மூத்திரம் போகும் போது கூட கழுவ மாட்டலாம். என்னால் அதை தாங்க முடிய வில்லை என்றாலும் அதில் வையை வைக்க சென்றேன். அந்த முடிகளை விலக்கி அந்த இதழ்களில் வையை வைத்து மெல்ல சப்ப தொடங்கினேன். பின் அந்த நாற்றத்தை என் வாயால் சுத்தம் செய்தேன். அவள் அதை தாக்காமல் அம்மா ஆ ஆ இஸ் ஸ்ஸ் என முனகினாள். அவள் முனக முனக எனக்கும் வெறி ஆகி அவள் புண்டையை கடித்து சப்பி எடுத்தேன். பின் அவளை முழு நீள அம்மணம் ஆக்கி bed இன் விளிம்பில் படுக்க வைத்து என் சுன்னியை கையில் பிடித்து ஆட்டி அதிக எழுச்சியை கொண்டு வந்தேன். பின் அவள் மீது விழுந்து அவள் முலையை கவ்வி சுவைத்து மெதுவாக அவள் கால்களை அகட்டி என் சுன்னியை புண்டை மேல்பகுதியில் வைத்து தேய்த்தேன். பின் மெதுவாக உள்ளே சென்றது. அவள் அதை தாங்க முடியாமல் கத்த அவள் வாயை வாய் வைத்து முத்தம் கொடுத்து அழுத்தினேன் என் சுண்ணி பாதி தான் சென்றது அவள் பயந்து வலி தாங்காமல் காலை சுருக்க எனக்கு வலி எடுக்க தொடங்க கியது அவளை பளாரென அடித்து காலை அகற்றினேன். பின் குத்த தொடகிங்கினேன் மெதுவாக சென்று. என்னால் என் வேகத்தை கட்டு படுத்த முடியவில்லை பின் முழு சுன்னியும் உள்ளே செல்லும் படி அசுர அடி அடித்தேன். அவள் இஸ் ஆ ஆ ஆ ஆஅ ஆ ஆ அம்மா மெதுவா தம்பி மெதுவா பண்ணுங்க. ஆ. ஆ. ஆ. அவள் முலையை வாய் வைத்து வெறியில் பல் படும் படி கடித்தேன். என்னால் முடிய வில்லை அதிக 30 நிமிட குத்துகளுக்கு பின்னர் என் ஆண்மையை அவள் புண்டையில் இறக்கினேன். இருவர் உடல் முழுவதும் வியர்த்து ஊத்தி இருந்தது. முதல் முதல் பெண்ணை அடைந்த சந்தோஷத்தில் அவளுக்கு முத்தங் கள் வழங்கினேன். அவள் உதடுகளை கவ்வி சப்பி என் நன்றியை தெரிவித்தேன். அதன் பின் 15 நிமிட இடைவெளிப்பின் மீன்டும் அவளை அடைத்தேன் அவள் புண்டையை பதம் பார்த்தேன். பின் அப்படியே இருவரும் உறங்கினோம். பின் 4 மணி வாக்கில் தான் எனக்கு தூக்கம் தெளிந்து. அவள் மேலே நான் படுத்து இருந்தேன். பின் எழுந்து என் உடையை அணைத்தேன் அவளை எழுப்பினேன். முதலிரவு முடித்த புது பெண் போல என்னை பார்த்து வெட்க பட்டால். கிழே இறங்கி அவள் பாவாடை பார்த்தால் அது அவள் புண்டை போல் கிழிந்து இருந்தது. என் தங்கை பாவாடை ஒன்றை எடுத்து கொடுத்தேன் இருவரும் முத்த கொடுத்து விடை பெற்றோம். அந்த கணமே அவளை மீண்டும் ஓக்க வேண்டும் என ஆசை வந்தது. அதற்கான சந்தர்ப்பம் வரும் வரை காத்திருந்தோம். பல முறை பல வாறு அவளை அனுபவித்து இருக்கிறன். இன்று அவளுக்கு கல்யாணம் முதலிரவு பல முறை நான் பார்த்தவன்.
அனைத்துலக முறை அலகுகள்(SI) குழுமத்தினரால் நிர்ணயித்தபடி, நேரத்தின் அடிப்படை அலகு, நொடி அல்லது வினாடி ஆகும். இதன் குறியீடு மற்றும் சுருக்கக் குறியீடு பின்வருமாறு: ஒரு ஊசலால் நிர்வகிக்கப்படும் கடிகாரம், ஒவ்வொரு வினாடியும் துடிக்கும், தப்பிக்கும் சுழல் சக்கர கடிகாரம் குறியீடு: (ஆங்கிலம்: s; தமிழ்: வி அல்லது வினாடி அல்லது நொடி) சுருக்கக் குறியீடு: (சுருக்கக் குறியீடு: ஆங்கிலம்: s; தமிழ்: வி).[1][2] மணிநேரத்தினை முதல் முறையாக அறுபது பிரிவுகளகப் பிரிக்கும்போது நிமிடங்கள் கிடைக்கின்றன. மணிநேரத்தினை முதல் முறையாகப் பிரித்துக் கிடைக்கும் நிமிடங்களை இரண்டாவது முறையாக அறுபது பிரிவுகளகப் பிரிக்கும்போது நொடிகள் அல்லது வினாடிகள் கிடைக்கின்றன. இரண்டாவது முறையாகப் பிரித்தலை ஆங்கிலத்தில் 'Second' - 'செகண்டு' என்கிறோம்.[3] சீசியம் (அணு நிறை:133) அணு இயல்நிலையில் இரண்டு மீ நுண் மட்டங்களுக்கு இடையே நிலைமாற்றம் கொள்ளும்போது தோன்றும் கதிர்வீச்சுக்கான காலம் 9 192 631 770 கால அளவுகள் ஆகும். இதுவே SI அலகில் நொடி அல்லது வினாடி எனப்படுகிறது.[1][4] நொடி (அல்லது வினாடி) என்பது காலத்தை அளவிடப் பயன்படும் அடிப்படை அலகு.[5] 60 நொடிகள் = 1 நிமிடம் (மணித்துளி) ஆகும்.[6] பொருளடக்கம் 1 வரையறை வரலாறு 1.1 ஆரம்பகால நாகரிகங்கள்: 1.2 சந்திர சுழற்சியின் துணைப்பிரிவுகளின் அடிப்படையில்: 1.3 இயந்திர கடிகாரங்களின் அடிப்படையில்: 1.4 சீசியம் நுண்ணலை அணு கடிகாரத்தின் அடிப்படையில்: 1.5 முன்மொழியப்பட்ட ஒளியியல் அணு கடிகாரத்தின் அடிப்படையில்: 2 Notes and references வரையறை வரலாறுதொகு ஆரம்பகால நாகரிகங்கள்:தொகு ஆரம்ப கால நாகரிகங்கள் ஒரு நாளை சிறு பிளவுகளாக்கி பகுத்துக் கூறுகளுக்கு தனித்தனி பெயரிட்டன. ஆனால் கூறாகிய நேரத்தின் சிறு பகுதிக்கு வினாடி அல்லது நொடி என்ற வார்த்தையை யாரும் முறையாக பயன்படுத்தவில்லை. கி.மு. 2000ல் எகிப்தியர்கள் ஒரு நாளை பகல் பன்னிரண்டு மணிநேரம் என்றும், இரவு பன்னிரண்டு மணிநேரம் என்றும், சமமாகப் பிரித்திருந்தனர். எனவே பருவகால மாறுபாடுகளுக்கு ஏற்ப பகல் மற்றும் இரவுகளில் மணிநேர நீளத்தின் அளவுகளும் வேறுபட்டன. ஹெலனிய கால வானியலாளர்களான ஹிப்பார்க்கஸ் (கி.மு 150 கி.மு.) மற்றும் தொலெமி (சி.டி. 150) ஆகியோர், மணிநேரத்தை அறுபது பகுதிகளாகப் (அறுபதிற்குரிய பின்னங்களின் கீழ் எண் அமைப்பு) பிரித்தனர். ஒரு சராசரி மணி நேரத்தை (1/24 நாள்) என்றும், ஒரு மணி நேரத்தின் எளிய பின்னக்கூறுகள் (1/4, 2/3, முதலியன) என்றும், மற்றும் நேரக் கோணத்தை (1/360 நாள் அல்லது அதற்குச் சமமான நான்கு நவீன நிமிடங்கள்) என்றும் பயன்படுத்தினர்.[7] கி.மு. 300 க்குப் பின்னர் பபிலோனியர்கள் அறுபதிற்குரிய பின்னங்களின் கீழான முறையைப் பயன்படுத்தி ஒரு நாளை திட்டமிட்டனர். அடுத்துள்ள ஒவ்வொரு துணைப்பிரிவும் அறுபதுகளால் பிரிக்கப்பட்டது. அதாவது 1/60, 1/60, 1/60 என்று, அறுபதின் விசைமடங்காகக் கணக்கிடப்படுகிறது. இதன் துல்லியத் தன்மை 2 மைக்ரோ வினாடிகளுக்குச் சமமானதாகும்.[8] பாபிலோனியர்கள் மணிநேரத்தை பயன்படுத்தவில்லை. ஆனால் 120 நவீன நிமிடங்கள் கொண்ட இரட்டை கால அளவு பயன்படுத்தப்பட்டது. ஒரு கால அளவு-நான்கு நீடித்த நிமிடங்களாக கணிக்கப்பட்டது. ஒரு பார்லிகார்ன் என்பது 3 1/3 நவீன வினாடிகள் நீடிக்கும் (நவீன ஹீப்ரூவின் காலண்டர் வளைவு),[9] ஆனால், அறுபதிற்குரிய பின்னங்களின் கீழ் சிறிய அலகுகளாகப் பிரித்தெடுக்கப்படவில்லை. சந்திர சுழற்சியின் துணைப்பிரிவுகளின் அடிப்படையில்:தொகு தொகுப்பளவை வினாடி அல்லது நொடி சிர்கா 1000, பாரசீக அறிஞர் அல்-பிருனி அரபு மொழியில் வினாடி அல்லது நொடி என்ற முறையைப் பயன்படுத்தியுள்ளார். இரண்டு அமைவாதைகளுக்கு இடையே உள்ள காலத்தை வாரங்கள், நாட்கள், மணிநேரம், நிமிடங்கள், வினாடிகள், மூன்றாவது மற்றும் நான்காவது பிற்பகல் ஞாயிறு எனப் பிரித்துள்ளார்.[10] 1267 ஆம் ஆண்டில், இடைக்கால விஞ்ஞானி ரோஜர் பேகன், லத்தீன் மொழி அறிக்கையில், மூன்றாவது மற்றும் நான்காவது முழு நிலா எனப்படும் பூரணைகளுக்கு இடையேயான பிரிவைக் கொண்டு மணிநேரங்கள் (ஹொரே-horae), நிமிடங்கள்(மினுடா-minuta), விநாடிகள்(செகுண்டா-secunda), மூன்றாவது(டெர்ஷியா-tertia) மற்றும் நான்காவது(குவார்டா-quarta) ஆகியவற்றை குறிப்பிட்ட நாட்காட்டியில் வரையறுத்தார்.[11] நவீன நொடிகள் அல்லது வினாடிகள், பின்வருமாறு தசம எண்களைப் பயன்படுத்தி பிரிக்கப்பட்டு வருகின்றன - மூன்றாவது குறியீட்டு சொல் (1⁄60 வினாடிப்பகுதி) பிற மொழிகளிலும் நொடிகள் அல்லது வினாடிகள் என்ற வார்த்தைப் பயன்பாடு உள்ளது. உதாரணம்: போலிய மொழி (டர்க்ஜா-tercja) மற்றும் துருக்கிய மொழி (சலிசெ-salise). இயந்திர கடிகாரங்களின் அடிப்படையில்:தொகு கலாட்ராவா 1(Calatrava1) 16 ஆம் நூற்றாண்டின் கடைசியில், நொடிகளைக் காட்டப் பயன்படும் ஆரம்பகால கடிகாரங்கள் தோன்றின. இயந்திரக் கடிகாரங்கள் உருவானதன் பின் நொடிகள் அல்லது வினாடிகளைத் துல்லியமாக அளப்பது எளிதானது. இது சூரிய மணிகாட்டி மூலம் காட்டப்படும் உத்தேச நேரத்திற்கு எதிரானது. ஃப்ரேமர்ஸ்டார்ஃப் (Fremersdorf) சேகரிப்பில் ஆர்ஃபியஸை (Orpheus) சித்தரிக்கும் கடிகாரம், சுருள் வில்லுடன் விநாடிகளைக் குறிக்கக்கும் கையுடன் கூடிய உந்துதல் கடிகாரம் ஆகியவை மக்களை மிகவும் கவர்ந்தன. இதன் தொடக்க காலம் 1560 நிறைவுறு காலம் 1570.[12]:417–418[13] 16 ஆம் நூற்றாண்டின் மூன்றாம் காலாண்டில், தகி-அல்-தின் (Taqi al-Din) ஒவ்வொரு 1/5 நிமிடத்தையும் காட்டும் ஒரு கடிகாரம் உருவாக்கினார்.[14] 1579ல் ஹோஸ்த் பர்கி (Jost Bürgi) ஹெஸ்ஸ (Hesse) நாட்டின் வில்லியமுக்கு வினாடிகளைக் காட்டும் ஒரு கடிகாரம் செய்தார்.[12]:105}} 1581ல் டைக்கோ பிராகி மறுசீரமைக்கப்பட்ட கடிகாரங்களை உருவாக்கினார். அதனைத் தன் வானியல் ஆய்வு மையங்களில் பயன்படுத்தினார். அவை நிமிடங்களையும் நொடிகளையும் காட்டின. எனினும், அவை வினாடிகளை கணிக்கப் போதுமான துல்லியத்துடன் இல்லை. 1587 ஆம் ஆண்டில், டைக்கோ தனது நான்கு கடிகாரங்கள், நான்கு வினாடிகள் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ வேறுபடுத்திக் காட்டியதாகk குறை கூறினார்.seconds.[12]:104 1644 ஆம் ஆண்டில், மரின் மெர்சென் (Marin Mersenne) 39.1 அங்குல நீளம் (0.994) ஊசலைப் பயன்படுத்தி வினாடிகளைக் கணக்கிட்டார். அது, திட்ட புவியீர்ப்பு முடுக்கத்துடன் செயல்பட்டது. ஊசல் முன்னோக்கிச் செல்ல ஒரு விநாடியும், மீண்டும் பின்னோக்கிச் செல்ல ஒரு விநாடியும், ஆகும் எனத் துல்லியமாக கணக்கிட்டு செயல்படுத்தினார்[15] 1670 ஆம் ஆண்டில், லண்டன் கடிகார தயாரிப்பாளர் வில்லியம் கிளெமெண்ட் (William Clement) இந்த வினாடி ஊசலை, கிறித்தியான் ஐகன்சின் அசல் ஊசல் கடிகாரத்துடன் இணைத்தார்.[16] 1670 முதல் 1680 வரை, கிளெமெண்ட் தனது கடிகாரங்களுக்கு பல மேம்பாடுகளைச் செய்தார். 1832 இல், கார்ல் பிரீடிரிக் காஸ் தனது மில்லிமீட்டர்-மில்லிகிராம்-வினாடி தரப்படுத்தப்பட்ட முறை அலகுகளில், நேரத்தின் அடிப்படை அலகு வினாடி என முன்மொழிந்தார். 1862ஆம் ஆண்டு, அறிவியல் முன்னேற்றத்திற்கான பிரிட்டிஷ் கூட்டமைப்பினர், (BAAS-British Association for the Advancement of Science) "விஞ்ஞானத்தின் அடிப்படையில், அனைத்து மாந்தர்களும் சூரிய நேரத்தின் சராசரி அடிப்படை அலகு நேரம் வினாடி என்ற கால அளவைப் பயன்படுத்த வேண்டும்" என ஒப்புக் கொண்டுள்ளனர்.[17] ஒரு வருடத்தின் ஒரு பகுதி என்ற அடிப்படையில்: புவியின் இயக்கம் சார்ந்த, நியூகோம்பின் (Newcomb) சூரிய இயக்க அட்டவணையில் (1895) ந்ப்டிகள் பற்றி விவரிக்கப்பட்டது. 1750க்கும் 1892க்கும் இடைப்பட்ட காலத்தில் வானியல் கண்காணிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, சூரிய இயக்கத்தின் மதிப்பை மதிப்பிடுவதற்கான ஒரு சூத்திரம் உருவாக்கப்பட்டது.[18] குறிப்பாக, 20 ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதியில் பயன்படுத்தப்பட்ட அட்டவணைகள் நியூகொம்ஸின் சூரிய இயக்கத்தை ஒட்டியவை. (1900 முதல் 1983 வரை). மேலும், எர்னெசுட்டு வில்லியம் பிரவுனின் நிலவு அட்டவணைகள் 1923 முதல் 1983 வரை பயன்படுத்தப்பட்டன. சீசியம் நுண்ணலை அணு கடிகாரத்தின் அடிப்படையில்:தொகு 1000000000 நொடிகள் பல ஆண்டுகளின் வேலைகளைத் தொடர்ந்து இங்கிலாந்தின் டெடிங்டன், தேசிய இயற்பியல் ஆய்வகத்திலிருந்து லூயிஸ் எஸென் (Louis Essen) மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டு கடற்படையின் வானியல் நிலையத்திலிருந்து வில்லியம் மார்கோவிட்ஸ் (William Markowitz) ஆகியோர், சீசியம் அணுவின் மீ நுண் நிலைமாற்ற அதிர்வெண் மற்றும் கோளியல் காலம் ஆகியவற்றுக்கு இடையேயான உறவை உறுதிப்படுத்தினர்.[19] இதில், டபிள்யூ. டபிள்யூ. வி. (WWV) வானொலி நிலையத்திலிருந்து பெறப்பட்ட சமிக்ஞைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு பொதுவான காட்சி அளவீட்டு முறை பயன்படுத்தப்பட்டது.[20] அவர்கள் கோளியல் காலம் (ET), நொடி அல்லது வினாடி, தேர்ந்தெடுக்கப்பட்ட சீசியம் அணுவின் அதிர்வெண் ஆகியவை ஒரே அளவிலான 9,192,631,770 ± 20 சுழற்சிகளைப் பெற்றுள்ளன என்பதை கண்டறிந்து உறுதி செய்தனர்.[19] எஃப். ஓ. சி. எஸ். 1 (FOCS 1), சுவிட்சர்லாந்தில், உள்ள ஒரு தொடர்ச்சியான குளிர் சீஸியம் நீரூற்று அணு கடிகாரம் 2004 இல் இயங்கத் தொடங்கியது. இதன் நிச்சயமற்ற நிலை, 30 மில்லியன் ஆண்டுகளில் ஒரு வினாடி. (SI வினாடி ஏற்கெனவே ஏற்கப்பட்டது. SI வினாடியானது, சராசரி சூரிய காலத்தின் வினாடி மதிப்பைக் காட்டிலும் சிறிது குறுகியதாக இருந்தது.[21][22]) சார்பியல் ரீதியாக, SI வினாடி மதிப்பு பூமிவடிவத்தின் மற்றும் சுழற்சியின் சரியான நேரமாக வரையறுக்கப்படுகிறது.[23] முன்மொழியப்பட்ட ஒளியியல் அணு கடிகாரத்தின் அடிப்படையில்:தொகு லட்லோ எட் ஆல் (Ludlow et al) மேற்கோள்: இன்று, நுண்ணலைப் பகுதியில் செயல்படும் அணு கடிகாரங்களுக்கு, ஒளியியல் அணு கடிகாரங்கள் ஒரு சவாலாக அமையும்.[24] கனடிய தேசிய ஆராய்ச்சி கவுன்சில் 2.5 × 10−11 "ஒப்பீட்டளவில் நிச்சயமற்றது" என்பதைக் குறிக்கிறது. அயோடின் (அணு எடை 127) மூலக்கூறை அடிப்படையாகக் கொண்டிருக்கும் அணு கடிகாரத்திற்கு பதிலாக, ஸ்ட்ரான்சியம் (அணு எடை 88) அயனி பொறியைப் பயன்படுத்துவதை ஆதரிக்கிறது.[25] நிச்சயமற்ற நிலைகள் நுண்ணலைப் பகுதியில் உள்ள NIST-F1 சீசியம் அணுக் கடிகாரத்தை எதிர்த்து நிற்கின்றன, அதிர்வெண் அடிப்படையில் ஒரு நாளின் பகுதிகள் சராசரியாக பத்தின் அடுக்கு பதினாறு என்று மதிப்பிடப்படுகின்றன.[26][27] SI multiples for வினாடி (எஸ் (s)) Submultiples Multiples Value Symbol Name Value Symbol Name 10−1 எஸ் (s) dஎஸ் (s) deciவினாடி 101 எஸ் (s) daஎஸ் (s) decaவினாடி 10−2 எஸ் (s) cஎஸ் (s) centiவினாடி 102 எஸ் (s) hஎஸ் (s) hectoவினாடி 10−3 எஸ் (s) mஎஸ் (s) milliவினாடி 103 எஸ் (s) kஎஸ் (s) kiloவினாடி 10−6 எஸ் (s) µஎஸ் (s) microவினாடி 106 எஸ் (s) Mஎஸ் (s) megaவினாடி 10−9 எஸ் (s) nஎஸ் (s) nanoவினாடி 109 எஸ் (s) Gஎஸ் (s) gigaவினாடி 10−12 எஸ் (s) pஎஸ் (s) picoவினாடி 1012 எஸ் (s) Tஎஸ் (s) teraவினாடி 10−15 எஸ் (s) fஎஸ் (s) femtoவினாடி 1015 எஸ் (s) Pஎஸ் (s) petaவினாடி 10−18 எஸ் (s) aஎஸ் (s) attoவினாடி 1018 எஸ் (s) Eஎஸ் (s) exaவினாடி 10−21 எஸ் (s) zஎஸ் (s) zeptoவினாடி 1021 எஸ் (s) Zஎஸ் (s) zettaவினாடி 10−24 எஸ் (s) yஎஸ் (s) yoctoவினாடி 1024 எஸ் (s) Yஎஸ் (s) yottaவினாடி பொதுவான முன்னொட்டுகள் தடித்த எழுத்துகளில் ஒரு நொடி என்பது துல்லியமான நிலைநாட்டலின் படி கீழ்க்காணுமாறு குறிப்பிடப்படும். சீசியம்-133 என்னும் அணு, தன் அடி நிலையில் இருக்கும் பொழுது அதன் அணுக்கருவில் உள்ள காந்தப்புலனின் விளைவால் நிகழும் மீ நுண் ஆற்றல் வேறுபாடுகளின் அடிப்படையில் ஒரு நொடி என்பது விளக்கபடுகின்றது. ஒரு நொடி என்பது அசையாது 0 K (கெல்வின்) வெப்பநிலையில் இருக்கும் ஒரு சீசியம்-133அணுவின் அடி நிலையில் உள்ள இரு வேறு மிக நுண்ணிய ஆற்றல் இடைவெளிகளுக்கிடையே நிகழும் 192 631 770 அலைவுகளின் கால அளவு ஆகும். ஒரு நாளில் 3600 விநாடிகள் உள்ளன. ஒரு நாளில் 24 மணி நேரமும், ஒரு மணி நேரத்தில் 60 நிமிடங்களும், ஒரு நிமிடத்தில் 60 செக்கன்களும் உள்ளன. எனவே ஒரு விநாடி 24 செக்கன்களுக்குச் சமமாகும். Notes and referencesதொகு ↑ 1.0 1.1 "Unit of time (second)". SI Brochure. BIPM. திசம்பர் 22, 2013 அன்று பார்க்கப்பட்டது. ↑ "Second".. Merriam Webster Learner's Dictionary. ↑ "Online Etymology Dictionary". ↑ "Base unit definitions: Second". physics.nist.gov. செப்டம்பர் 9, 2016 அன்று பார்க்கப்பட்டது. ↑ "அனைத்துலக முறை அலகுகள் (அனைத்துலக முறை அலகுகள்) (ஆங்கில மொழியில்)". தரங்கள், தொழினுட்பத்துக்கான தேசிய நிறுவனம். அக்டோபர் 18, 2012 அன்று பார்க்கப்பட்டது. ↑ "நேர அலகு மாற்றி (ஆங்கில மொழியில்)". ஈசி யுனிட்டுக் கன்வட்டர். அக்டோபர் 31, 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. அக்டோபர் 18, 2012 அன்று பார்க்கப்பட்டது. ↑ G. J. Toomer (1998). Ptolemy's Almagest. Princeton, New Jersey: Princeton University Press. பக். 6–7, 23, 211–216. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-691-00260-6. ↑ O Neugebauer (1975). A history of ancient mathematical astronomy. Springer-Verlag. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-387-06995-X. ↑ See page 325 in O Neugebauer (1949). "The astronomy of Maimonides and its sources". Hebrew Union College Annual 22: 321–360. ↑ al-Biruni (1879). The chronology of ancient nations: an English version of the Arabic text of the Athâr-ul-Bâkiya of Albîrûnî, or "Vestiges of the Past". Sachau C Edward. பக். 147–149. https://books.google.com/?id=pFIEAAAAIAAJ&pg=PA148#v=onepage&q=. ↑ R Bacon (2000) [1928]. The Opus Majus of Roger Bacon. BR Belle. University of Pennsylvania Press. table facing page 231. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-85506-856-8. ↑ 12.0 12.1 12.2 Landes, David S. (1983). Revolution in Time. Cambridge, Massachusetts: Harvard University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-674-76802-7. ↑ Willsberger, Johann (1975). Clocks & watches. New York: Dial Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8037-4475-7. https://archive.org/details/clockswatchessix0000will. full page color photo: 4th caption page, 3rd photo thereafter (neither pages nor photos are numbered). ↑ Helaine Selin (July 31, 1997). Encyclopaedia of the History of Science, Technology, and Medicine in Non-Westen Cultures. Springer Science & Business Media. பக். 934. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7923-4066-9. https://books.google.com/books?id=raKRY3KQspsC&pg=PA934. ↑ Greg Jenner (January 29, 2015). A Million Years in a Day: A Curious History of Everyday Life. Orion. பக். 275. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-297-86979-5. https://books.google.com/books?id=dKenAwAAQBAJ&pg=PT275. ↑ Jessica Chappell (October 1, 2001). "The Long Case Clock: The Science and Engineering that Goes Into a Grandfather Clock". Illumin 1: 1. http://illumin.usc.edu/184/the-long-case-clock-engineering-behind-a-grandfather-clock/. ↑ Jenkin, தொகுப்பாசிரியர் (1873). Reports of the committee on electrical standards. British Association for the Advancement of Science. பக். 90. https://books.google.com/books?id=540DAAAAQAAJ&pg=PR1#v=onepage&q&f=true. ↑ "Leap Seconds". Time Service Department, United States Naval Observatory. மே 27, 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. நவம்பர் 22, 2015 அன்று பார்க்கப்பட்டது. ↑ 19.0 19.1 W Markowitz, RG Hall, L Essen, JVL Parry; Hall; Essen; Parry (1958). "Frequency of cesium in terms of ephemeris time". Physical Review Letters 1 (3): 105–107. doi:10.1103/PhysRevLett.1.105. Bibcode: 1958PhRvL...1..105M. http://www.leapsecond.com/history/1958-PhysRev-v1-n3-Markowitz-Hall-Essen-Parry.pdf. ↑ S Leschiutta (2005). "The definition of the 'atomic' second". Metrologia 42 (3): S10–S19. doi:10.1088/0026-1394/42/3/S03. Bibcode: 2005Metro..42S..10L. ↑ DD McCarthy, C Hackman, R Nelson; Hackman; Nelson (2008). "The Physical Basis of the Leap Second". Astronomical Journal 136 (5): 1906–1908. doi:10.1088/0004-6256/136/5/1906. Bibcode: 2008AJ....136.1906M. https://archive.org/details/sim_astronomical-journal_2008-11_136_5/page/1906. "... the SI second is equivalent to an older measure of the second of UT1, which was too small to start with and further, as the duration of the UT1 second increases, the discrepancy widens.". ↑ In the late 1950s, the caesium standard was used to measure both the current mean length of the second of mean solar time (UT2) (7009919263183000000♠9192631830 cycles) and also the second of ephemeris time (ET) (7009919263177000000♠9192631770±20 cycles), see L Essen (1968). "Time Scales". Metrologia 4 (4): 161–165. doi:10.1088/0026-1394/4/4/003. Bibcode: 1968Metro...4..161E. http://www.leapsecond.com/history/1968-Metrologia-v4-n4-Essen.pdf. ↑ See page 515 in RA Nelson et al. (2000). "The leap second: its history and possible future". Metrologia 38 (6): 509–529. doi:10.1088/0026-1394/38/6/6. Bibcode: 2001Metro..38..509N. http://www.cl.cam.ac.uk/~mgk25/time/metrologia-leapsecond.pdf. ↑ AD Ludlow et al. (2006). "Systematic study of the 87Sr clock transition in an optical lattice". Physical Review Letters 96 (3): 033003. doi:10.1103/PhysRevLett.96.033003. Bibcode: 2006PhRvL..96c3003L. ↑ "Optical Frequency - Research Projects". பிப்ரவரி 28, 2006. ஜனவரி 25, 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. ↑ R Wynands, S Weyers; Weyers (2005). "Atomic fountain clocks". Metrologia 42 (3): S64–S79. doi:10.1088/0026-1394/42/3/S08. Bibcode: 2005Metro..42S..64W.
அதில் ஒன்றாக அப்பொழுது தான் ஒரு பேருந்தை முந்தி சென்று கொண்டிருந்த அந்த அரசு பேருந்தில் இருந்தவர்கள் அனைவரும் அயர்ந்து உறங்கி கொண்டிருக்க, பேருந்தில் மெல்லிய இசை ஒலித்துக் கொண்டிருந்தது. அது நேரம் நள்ளிரவு இரண்டு மணி. தூக்கத்தில் பேருந்தில் இருந்த ஒரு சிலர் இருக்கையை அசவுகரியமாக உணர்ந்து நெளிந்து விட்டு கொண்டனர். அதே போல் லேசாக நெளிந்த கயற்கண்ணிக்கு உறக்கம் லேசாகக் களைய ஆரம்பிக்கவும், தான் இருக்கும் இடம் உணர்ந்து சட்டெனத் தான் அவ்வளவு நேரம் தலை சாய்த்திருந்த தன்னவனின் தோளில் இருந்து நிமிர்ந்து அமர்ந்தாள். அவளின் அசைவில் அந்தத் தோளுக்குச் சொந்தமானவனான இளஞ்சித்திரனுக்கும் உறக்கம் கலைய கண்களைப் பட்டென விழித்தவன் “கண்ணு என்னாச்சுடா?” என்று பதட்டத்துடன் கேட்டான். அவனின் கேள்வியைக் காதில் வாங்காது சுற்றும், முற்றும் பார்த்தவளின் கையைப் பிடித்துத் தன் பக்கம் திருப்பி “என்ன கண்ணு பயந்துட்டியா? பயப்படாதே டா! நாம இப்ப பத்திரமா இருக்கோம். இனி ஒரு தொந்தரவும் இல்லை. நீ தூங்கு…!” என்றான் அவளின் பார்வையின் அர்த்தத்தை நன்றாக உணர்ந்தவனாக. அவனைப் பார்த்து மனம் கலங்கியவள் போலத் தயக்கத்துடன் விழித்தவள் பின்பு அவனின் பேச்சு புரிந்து ‘சரி’ எனத் தலையசைத்தாள். அவளின் அந்தக் கலக்கம் அவனை மனம் வருந்த வைத்தது. ஆனாலும் அதை அவளிடம் காட்டிக்கொள்ளாமல், தன்னைச் சாதாரணமாகக் காட்டிக் கொண்டவன் இதழ் பிரியாமல் லேசாக உதட்டில் புன்னகையைக் காட்டி “தூங்குடா கண்ணு! இனிமேயும் நாம ஓடிட்டே இருக்க வேண்டிய நிலையில் தேன் இருக்கப் போறோம். இதுபோலக் கிடைக்கிற செத்த நேரத்துல தூக்கம் நம்மள அதுவே தழுவினா தேன் உண்டு. தானா வாச்ச இந்தத் துக்கத்தை விட்டுறாதே, தூங்கு! இனி என்னன்னு நினைச்சு பயந்து நடுங்காம இந்த நிமிசத்தை மட்டும் நினைச்சுக்கோடாமா…” என்றவன் குரல் அவளுக்கு மட்டும் கேட்கும் வண்ணம் மெல்லியதாக ஒலித்தாலும் அதில் இருந்த அவனின் நிதானம் அவளையும் அமைதி அடைய வைத்தது. அவனுக்கும் தானே என்னைப் போலப் பயம் இருக்கும்? அப்படி இருந்தும் தன்னைப் பொறுமையாக அமைதிப்படுத்தும் அவனின் இந்தக் குணம் தானே அவனின் பின்னால் என்னை இப்படி வர வைத்தது. உயிர் பயம் துரத்திக்கொண்டிருந்தும் தன்னுடையவன் தயவில் எல்லாம் தவிடு பொடி ஆகும் என்ற திடம் அவளில் மனதிலும் உண்டாகத் தானும் புன்னகைக்க முயன்று கொண்டே “நான் இங்கினக்குள்ள சாயணும்…” என அவனின் தோளை காட்டி முணுமுணுத்தாள். அவளில் பேச்சில் இப்பொழுது நன்றாகவே சத்தம் இல்லாமல் சிரித்தவன் “கொஞ்ச நேரத்துக்கு முன்ன என்கிட்ட கேட்டுக்கிட்டா சாய்ஞ்ச?” எனக் கேலியாகத் தூக்கத்தில் அவளாகச் சாய்ந்ததைக் குறிப்பிட்டான். அவனின் கேலியில் கூச்சம் வந்தாலும் அதை மறைத்து “அது எனக்குச் சொந்தமானது. நான் அப்படித்தேன் சாய்வேன்…” என்று பட்டெனப் பதிலளித்தாள். “அதான் உனக்கே தெரியுதே? உனக்குச் சொந்தமானதுன்னு. அப்புறமும் என்ன பெர்மிஷன் கேட்டுக்கிட்டு இருக்க?” எனக் கேட்டவனைப் பார்த்துக் கண்கலங்கியவள், “எனக்குத் தெரியுதுயா. ஆனா எனக்குச் சொந்தமானது இல்லைனு ஆக்கிருவாகளோன்னு இன்னமும் பயமா இருக்கு. அத்தன பேரு கண்ணுல மண்ணைத் தூவிட்டு ஓடியாந்திருக்கோம். அந்தக் கோபத்துல நம்மள எதுவும் செய்துருவாகளோனு பயமா இருக்கு…” என்று சொன்னவளின் கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் கன்னத்தில் வந்து விழுந்தது. அவளின் கண்ணீரையும், கலக்கத்தையும் உணர்ந்தவன் தானாகவே அவளை நெருங்கி அமர்ந்து அவளின் தோளில் கையைப் போட்டு இதமாக அணைத்து கொண்டவன் “அழாத கண்ணு! என்னைய உன்னோடது இல்லன்னு யாராலும் ஆக்க முடியாது. ஆக்கவும் விட மாட்டேன். அப்படி மண்ணைத் தூவிட்டு ஓடி வந்தது நம்ம நன்மைக்குத்தேன் கண்ணு. நாம கடைசியா எந்த ஊருக்கு போனோம்னு தெரியாம குழம்பி அவங்க மண்டை காயணும். அதுக்குத் தேன் இந்த ஓட்டம். இனி நாம ஓட வேண்டியிருக்காது…” எனக் குரல் இறுக உறுதியாகச் சொல்லி அவளின் தோளை அழுத்தி விட்டான் இளஞ்சித்திரன். தனக்குத் தைரியம் சொன்ன தன்னவன் தோளில் சாய்ந்து “நமக்கு மட்டும் ஏன்யா இப்படி?” எனக் கேட்டு லேசாகத் தேம்பினாள் கயற்கண்ணி. அவளின் தோளை இன்னும் லேசாக அழுத்தியவன் சில நொடிகள் மௌனமாக இருந்தான். பின்பு ஒரு பெருமூச்சை இழுத்து விட்ட இளஞ்சித்திரன் “அம்புட்டும் நாம வாங்கி வந்த வரம்…!” என்றவன் குரலும் இப்போது கலக்கமாக ஒலித்தது. அதை உணர்ந்து மெல்ல நிமிர்ந்து அவனின் முகத்தைப் பார்த்தாள். அவனும் அந்நொடி அவளைப் பார்க்க இருவரின் கண்களும் அந்தப் பேருந்தின் மெல்லிய ஒளியில் கண்ணீரால் ஜொலித்துக் கொண்டிருந்தது. உனக்கு நான் ஆறுதல். எனக்கு நீ ஆறுதல் என்பது போல இருவரின் கண்களும் கலந்து நின்றது. பேருந்தில் யாரோ ஒருவரின் இருமல் சத்தம் கேட்க, தாங்கள் இருக்கும் இடம் உணர்ந்து அவளின் தோளில் இருந்து கையை எடுத்துவிட்டு சிறிது தள்ளி அமர்ந்து கொண்டு தன் தோளில் அவள் சாய்வதற்கு வசதியாக வைத்து விட்டு “விடிய இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்குடாமா. அதுக்குள்ளார கொஞ்சம் கண் அசந்துக்கோ…!” என்றான். “ம்ம்…” என்றவள் கண்களை மூடி தூங்க முயன்றாள். அவனும் சீட்டில் நன்றாகத் தலையைச் சாய்த்தவன் கண்களை இறுக மூடிக் கொண்டான். அவளைத் தூங்க சொன்னவனுக்குத் தூக்கம் எட்டி நின்று வேடிக்கை காட்டியது. சிறிது நேரத்தில் கயற்கண்ணி உறக்கத்தைத் தழுவ தலையை நிமிர்த்தி அவளைப் பார்த்தான். “பாவம்டா நீ! உன்னைய நாலு நாளா பஸ்ஸிலேயே அலைய வைக்கிறேன். அந்த அலைச்சலில் உடம்பு வலிச்சும் அதைக் காட்டிக்காம எனக்குத் தெரியாம சமாளிக்கப் பார்க்குற. எனக்கு நல்லாவே தெரியுது ஓ வலி. ஏன் வாட்டசாட்டமா இருக்குற எனக்கே வலிக்கும் போது மென்மையான உனக்கு வலிக்கத் தானே செய்யும்? நம்மோட இந்த ஓட்டம் இன்னும் ஒரு நாளு தேன்டா. இதுவரை அவுகளுக்குப் போக்கு காட்ட நாம ஓடின ஓட்டம் எல்லாம் போதும். இனி நமக்குன்னு ஒரு வீட்டில் நமக்கேயான நம்ம வாழ்க்கையைத் துவங்குவோம்…” என்று தனக்குள் சொல்லிக்கொண்டு அவளையே நேரம் கடந்தும் பார்த்துக் கொண்டே இருந்தான். நான்கு மணி ஆன நிலையில் பேருந்து சிறிது ஓய்விற்காகச் சாலையோரம் கடைகள் இருக்கும் பகுதியில் சென்று நின்றது. நடத்துனர் பதினைந்து நிமிடம் பேருந்து நிற்கும் எனப் பயணிகளுக்கு அறிவிக்க, உறக்கம் கலைந்து ஒவ்வொருவராக எழ ஆரம்பித்தனர். கயற்கண்ணியும் சத்தம் கேட்டு எழுந்து நேராக அமர்ந்து இளஞ்சித்திரனை பார்த்தாள். அவன் கண்களில் சிறிதும் உறக்கம் இல்லாமல் அமர்ந்திருப்பதைப் பார்த்து “நீ தூங்கலையாய்யா?” எனக் கேட்டவளுக்கு இல்லை என்ற அவனின் தலையசைப்பே பதிலாகக் கிடைத்தது. அதில் நொடியில் அவளின் முகத்தில் சுணக்கம் வந்துவிட “இதுக்கு ஏன்டாமா வருத்தப்படுற? நாலு நாளா பஸ்ஸில் தூங்கிக்கிட்டு தானே இருக்கோம். அதான் இப்ப தூக்கம் வரலை. சரி எழுந்திரு, பஸ் கொஞ்ச நேரம் தேன் நிக்கும். அதுக்குள்ளார பாத்ரூம்மு போய்ட்டு வந்துடலாம்…” என்று அவளை மேலும் யோசிக்க விடாமல் எழுப்பி அழைத்துச் சென்றான். பேருந்தை விட்டு இறங்கும் போதே இருவரின் கவனமும் உச்சி முனையில் நின்றன. கயற்கண்ணி வெளிப்படையாகவே சுற்றும், முற்றும் பயத்துடனே பார்த்து தன் கவனத்தை வைக்க, இளஞ்சித்திரன் தன் பயத்தைக் காட்டி கொள்ளாமல் கவனத்துடன் ஒவ்வொரு அடியும் எடுத்து வைத்தான். இனி யாரின் கண்களிலும் பட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். இதுவரை வேண்டும் என்றே அவர்களின் கண்களில் பட்டிருந்தாலும் இனி தெரியாமல் கூட அப்படி நடந்து விடக் கூடாது என்பதால் இளஞ்சித்திரன் அதிகக் கவனத்துடனே இருந்தான். தங்களுக்குத் தெரிந்த முகம் ஏதாவது தென்படுகிறதா? என ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டே நடந்தான். இயற்கை உபாதையைச் சரி செய்து விட்டு வந்து, இருவரும் தேநீரை வாங்கிப் பருகி விட்டு வேகமாகப் பேருந்தில் வந்து அமர்ந்தார்கள். இருக்கையில் அமர்ந்ததும் கயற்கண்ணி நிம்மதியாக ஒரு மூச்சுவிட்டு இளஞ்சித்திரனை பார்த்து லேசாகச் சிரித்தாள். ஆனால் பதிலுக்குச் சிரிக்காமல் “ஒவ்வொரு நிமிசமும் நீ பயந்து நடுங்குற நிலைக்கு நான் கொண்டாந்துட்டேன்ல?” என்று வருத்ததுடன் கேட்டான். அதில் அவளின் சிரிப்பு அப்படியே உறைந்து விட ‘இல்லை’ என வேகமாகத் தலையசைத்தாள். “இல்லடா உண்மைதானே? இப்போ கூடப் பயந்துட்டே தானே போனோம்…” என்று இளஞ்சித்திரன் கேட்க, “அப்படிப் பாத்தா நாந்தேன் இந்த நிலைக்குக் பொறுப்புயா நிம்மதியா ராசா போலச் சுத்திட்டு இருந்த ஓ மனசில சலனத்த வரவைச்சு இப்ப ஓடி ஒளியுற நிலைக்குக் கொண்டாந்து விட்டுப்புட்டேன்…” எனக் கண்கள் கலங்க சொன்னாள். “இல்லடாமா, கண்டிப்பா இல்லை. நாந்தேன்! நான் மட்டும் தேன் பொறுப்பு. விலகி விலகி போன உன்னைய விரட்டி, விரட்டி காதலை சொல்லி இப்ப உசுரு பயத்த கொடுத்துட்டேன்…” என்று வருந்தினான். “இல்லை…” என்று அவளும் ஏதோ சொல்லி தன்னையே காரணம் சொல்லிக்கொண்டாள். இங்கே கர்நாடக மாநிலத்தை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தில் இருவரும் மாறி மாறி இன்றைய நிலைக்குத் தானே காரணம் எனச் சொல்லி கொள்ள, “இன்னுமாடா அந்த ஓடுகாலிக இருக்குற இடம் தெரியலை? இத்தனை பயலுக நம்ம ஆளுக இருந்து என்ன பிரயோசனம்டா? இரண்டு ஓடுகாலிக நாலு நாளா ஆட்டம் காட்டுதுங்க. அதுங்களைப் பிடிக்கத் துப்பில்லாம அதுங்க எங்குட்டு போனாவுகனே தெரியலைன்னு வந்து நிக்கிறிங்க. நம்ம குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிகளை இன்னேரம் வெட்டி கூறு போட்டுட்டேன்னு வந்து சொல்ல வேணாமா?” என்று கர்ண கொடூரமாக ஆக்ரோஷமான குரலில் கத்தி கொண்டிருந்தார் வேங்கையன். “இல்லய்யா! நம்ம தம்பி பய அண்ணங்காரன் என்கிட்டயே ஆட்டம் காட்டுறான்யா. இங்கன இருந்து அவன் அந்த ஓடுகாலி புள்ளயையும் இழுத்துக்கிட்டு மெட்ராசு பஸ்ல போறதாத்தேன் தகவல் வந்ததுயா. நானும் மெட்ராசுல நம்ம தம்பி பயலுக்குத் தெரிஞ்ச இடத்துல எல்லாம் ஒரு அலசு அலசிப்புட்டேன். ஆனா அங்கிருந்து பய கோவை போய்ட்டான்னு நம்ம சொந்தகார பய ஒருத்தன் அங்க பார்த்தான்னு சொல்லவும், நேர அங்கன ஓடினேன்யா. ஆனா அங்கிருந்து நம்ம பய ஓடிட்டான். பொறவு குமரி பக்கம் அவனைப் பார்த்ததா தகவல் தெரிஞ்சு போனா அங்கனயும் இல்லைய்யா அவன். ஊரு ஊரா நம்ம சொந்தகாரனுங்க கண்ணுல பட்டுட்டு அங்கிருந்து போயிருக்கான். ஆனா கடைசியா எந்த ஊர் பஸ்ல போனான்னு யாருக்கும் தெரியலை. நானும் தம்பி பய எங்க எல்லாம் போயிருக்க முடியும்னு யோசிச்சு அங்கன எல்லாம் அலசிட்டு ஏமாந்து போய் இப்போ தான் வீட்டுக்குள்ள நுழையுறேன்யா. இனி எங்க எப்படித் தேடனு சொல்லுங்கய்யா செய்றேன். அந்த ஓடுகாலிகளை ஒரு கை பார்த்தாதேன் ஏ கண்ணிலே உறக்கம் வரும்யா…” என்று ஏமாற்றம் தந்த வெறுப்பில் தந்தையை விட ஆக்ரோஷமாகச் சபதமிட்டான் இமயவரம்பன். மகன் சொன்னதை எல்லாம் கேட்ட வேங்கையன் ஒரு கையை இடுப்பில் கைவைத்து, இன்னொரு கையால் தன் மீசையை முறுக்கி விட்டவர், “பய விவரமா தான் நமக்கு ஆட்டம் காட்டியிருக்கான். இந்த வேங்கையன் மவன்ல. அதான் வேங்கையா பாய்ஞ்சிருக்கான். இந்த விவரத்தை இந்தப் பய பொண்ணு தேர்ந்தெடுக்குற விசயத்திலேயும் காட்டிருக்கலாம். இதுல மட்டும் இந்தப் பய புத்தி எப்படி இப்படிப் போச்சோ போ. ஆனாலும் இந்த அப்பனை பத்தி முழுசா அவனுக்குத் தெரியல. தெரிய வைக்கிறேன்…” என மீசையை இரண்டு கையாளும் இழுத்து விட்டுக் கொண்டார். “வரம்பா நம்ம ஊரு பயலுகளை எல்லாம் அவுக அவுக வீட்டுக்குப் போகச் சொல்லு. கொஞ்ச நாள் விசயத்தை ஆற போடு. ஓ தம்பி நம்ம எங்கனக்குள்ள எல்லாம் தேடுவோம்னு தெரிஞ்சே அந்த ஊரெல்லாம் நாலு நாளா ரவுண்டு போட்டு நமக்கு ஆட்டம் காட்டிருக்கான். ஏ கணிப்புச் சரினா பய இப்ப நமக்கு இதுவர பழக்கம் இல்லாத ஊரு பக்கம் தான் போய்ட்டு இருப்பான். ஒருநாளு கண்டிப்பா வெளிய தலையைக் காட்டுவான். அன்னைக்குக் கோழியைப் பிடிச்சு அமுக்குறாப்புல அமுக்கி புடுவோம். என்னைக்கி இருந்தாலும் இந்த அப்பன் கையால தான் அவனுக்குச் சாவுன்னு அவனே அவன் தலையெழுத்தை எழுதி வச்சுட்டு போய்ட்டான். இனி அவனே நினைச்சாலும் அதை மாத்த முடியாது…” என்று கொடூரம் தாங்கிய குரலில் சொன்னவரின் கண்களும் கொடூரமாக ஜொலித்தது. “அதில் ஏ பங்கும் இருக்கும்யா…” என்று தானும் கர்ஜித்த இமயவரம்பன் “நான் போய் நம்ம பயலுகளை அனுப்பிட்டு வர்றேன்யா…” என்று வாசலில் நின்றிருந்த ஆட்களை அனுப்பி வைக்கச் சென்றான். அதே ஊரின் இன்னொரு மூலையில் இருந்த அந்த ஓட்டு வீட்டின் உள்ளே “விசயம் தெரிஞ்ச அன்னைக்கே அவ சோத்துல வெசத்த வச்சிருந்தா இப்ப ஒடுகாலினு பேரு வாங்கியிருப்பாளா? எல்லாம் உங்களால தான், ஒத்த பொட்டபுள்ள அவளை அடைச்சு மட்டும் போடுன்னு சொன்னீங்கன்னு அடைச்சு வச்சா ஓட்டை பிரிச்சு அந்தப் பெரிய வீட்டு பய கூட ஓடி போயிருக்கா. இந்தக் கழுதைக்கு இழுத்துட்டு ஓட அந்த வீட்டுப் பயதேன் கிடைச்சானா? கேனச்சிறுக்கி! நம்ம யாரு. அவுக யாருனு புத்தி வேணாம்?” அழுகையும், ஆங்காரமும் சேர்ந்து கத்திய வேலம்மாள் தன் கணவனான கந்தசாமியையும் விடாமல் திட்டி தீர்த்தார். “அடியே வேலு! சும்மா கத்தாம கெடடி! ஒத்த பொட்டபுள்ளய பார்த்துக்கத் துப்பில்லாம ஓட விட்டுப்புட்டு இப்ப மூக்க சிந்தினா ஆச்சா? அந்த வீட்டு பெரிய மனுஷன் நாலு நாளா நம்மள கண்ணுல காங்க விடாம விரட்டி விரட்டி காவ காக்க நம்ம வீட்டை சுத்தி ஆளை போட்டுருக்காரு. நாம என்னவோ அவுக வீட்டு பயல வீட்டுக்குள்ளார ஒளிச்சு வச்சுக்கிட்டது போல வீட்டையே இரண்டாக்கிட்டு வேற போட்டு வச்சுருக்காரு. போ! போய் அதை எல்லாம் ஒதுங்க வை! ஒம் மவள எப்படியும் அந்த வீட்டு மனுஷன் இழுத்துட்டு வந்து நம்ம வீட்டுக்குள்ள தள்ளுவாரு. அப்போ ஓ மவளுக்கு வெசத்தை வைச்சு கொல்லு. இப்ப போய்ப் பொழப்ப பாரு…” என்று வேலம்மாளை மேலும் பேச விடாமல் வேலையைப் பார்க்க விரட்டி விட்டு வீட்டுத் திண்ணையில் சென்று அமர்ந்தார். இளஞ்சித்திரன், கயற்கண்ணி இருவரின் உயிரும் பெற்றவர்களின் கையிலேயே ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்க, இங்கே பெங்களூர் மாநகரில் உள்ள பெலந்தூர் பகுதியில் ஒரு ஆட்டோவில் மேடு, பள்ளத்தில் குலுங்கிய படி இருவரும் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது காலை மணி எட்டு ஆகியிருந்தது. பேருந்தில் வந்த பயணக் களைப்பில் இருவரின் முகமே சோர்ந்திருந்தது. கலைந்த தன் கேசத்தை ஒதுக்கி விட்ட படி தாங்கள் செல்லும் வழியைப் பார்த்துக் கொண்டு வந்தாள் கயற்கண்ணி. அவளையே பார்த்துக் கொண்டு காற்றில் ஆடிய அவளின் பின் கேசத்தைத் தன் கையில் லேசாகப் பிடித்து இன்னும் பின்னால் விட்டவன் “என்ன கண்ணு இப்பயாவது கேட்பியா? கேட்க மாட்டியா?” என்று வினவியவனை வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தவள் திரும்பி கேள்வியாகப் பார்த்தாள். “என்னய்யா கேட்கணும்?” “நான் உன்னைய இப்ப எங்கன கூட்டிட்டு போறேன்னு தேன். வூட்டை விட்டு வெளியில் வந்த நிமிசத்துல இருந்து நீ இதுவர ஒருதடவ கூட நாம எங்க போறோம்னு கேட்கவே இல்லை. நாலு நாளா நான் எந்தப் பஸ்ஸில் ஏறினாலும் என்ன ஏதுன்னு ஒரு கேள்வி கூடக் கேட்காம என் பின்னாடி வர்ற. நானா சொன்னாதான் நாம எங்க போறோம்னே உனக்குத் தெரியுது. நானும் நீயா வாயை திறந்து எங்க போறோம்னு எங்கயாவது கேட்பனு பார்த்தேன். ஆனா இப்போ வர கேட்கலை. இனியும் நீ கேட்பனு எனக்கு நம்பிக்கை இல்லை. அதான் நானே எடுத்துக் கொடுக்கிறேன். இப்பயாவது நாம எங்க தான் போறோம்னு கேளேன்….” என்றான். “ஏன் கேட்கணும்யா?” அவளோ திருப்பிக் கேட்டாள். அவள் கண்களையே கூர்ந்து சில நொடிகள் பார்த்தவன், “நான் ஏமாத்திருவேன்னு பயமா இல்லையா? இந்த நேரத்துல எந்தப் பொண்ணா இருந்தாலும் சாதாரணமா கேட்குற கேள்வி எங்க போகப் போறோம்? அடுத்து என்ன செய்யப் போறோம்? நாம எங்க தங்குவோம்? அப்படினு தானே? ஆனா அந்தச் சாதாரணக் கேள்வி கூட என்னைய நீ கேட்கலையே ஏன்?” எனக் கேட்டான். அவளோ அதற்குப் பதில் சொல்லாமல் அவன் கண்களையே விடாமல் ஊடுருவுவது போல் பார்த்தாள். அவனும் எந்தச் சலனமும் இல்லாமல் அவளின் கண்களைப் பார்க்க “ஓ கண்ணே சொல்லுதுயா, உன்னைய நான் முழுசா நம்பலாம்னு. மொதல்ல ஓ மேல நம்பிக்கை இல்லனா நீ கூப்பிட்டதும் ஓ பின்னால வந்துருக்கவே மாட்டேன். ஓ மேல நம்பிக்கை வைச்சு கிளம்பிட்டு வெளிய வந்ததும், என்னைய எங்க கூட்டிட்டு போவ? எங்க வச்சு வாழவைப்பனு கேட்குறது தான் ஓ மேல நம்பிக்கை இல்லாதது போல ஆக்கிரும். என்னைய இழுத்துட்டு வந்தா உசுரு போகும்னு தெரிஞ்சே துணிஞ்சு என்னைய கூட்டிட்டு வந்துருக்க. இதுக்கு மேல நீ ஏமாத்திருவனு நினைக்க என்ன இருக்கு? என்னைய கூட்டிட்டு வந்த உனக்கு, எங்க? எப்படி வச்சு வாழ வைக்கணும்னும் நல்லாவே தெரியும். உனக்கு நல்லா தெரிஞ்ச ஒன்னை நான் ஏன்யா கேட்கணும்? இன்னும் கூட நீ எங்கனக் கூட்டிட்டு போனாலும் நான் வருவேன். ஆனா அதுக்கு இப்ப அவசியம் இல்ல போல இருக்கே. வீடா வருதே இங்கே. நாம இங்கனக்குள்ள தேன் எங்கனயாவது தங்க போறோம் போல…” அவனின் மீது இருக்கும் நம்பிக்கையைச் சாதாரணம் போலச் சொல்லி விட்டு மீண்டும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தவளை மனம் உருக பார்த்துக் கொண்டு வந்தான் இளஞ்சித்திரன். வெளியே பார்த்து விட்டு உள்ளே திரும்பியவள் அவனின் அந்தப் பார்வையில் கூச்சம் கொண்டு தலையைக் குனிந்தாள். “ஏன்யா அப்படிப் பார்க்கிற?” என்று குனிந்த தலையுடன் முனங்களாகக் கேட்டாள். சிறிது நேரத்திற்கு முன் இருந்தது போல இல்லாமல் காதல் நிறைந்து அப்பொழுதே அவளைத் தன் கைகளுக்குள் கொண்டு வர துடிப்பது போல் இருந்தது அவனின் பார்வை. சில நொடிகளுக்குப் பிறகு “இல்லி எல்லி ஓகுபேக்கு?” (இங்கே எங்கே போகணும்?) என்ற ஆட்டோ ஓட்டுனரின் கேள்வியில் மோனநிலையில் இருந்து கலைந்தான் இளஞ்சித்திரன். முதலில் அவரின் கன்னடம் புரியாமல் முழித்தவன் தான் வந்த தெருவை கவனித்து எந்த வீடு எனக் கேட்குறார் எனக் கணித்தவன் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் அடையாளத்தைச் சொன்னான். அவன் சொன்ன சில நொடிகளில் ஒரு மூன்று அடுக்குக் கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் முன் வண்டி நின்றது. அதைப் பார்த்தவன் ஆட்டோவிற்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு கயற்கண்ணியை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான். ஆட்டோ சத்தம் கேட்டு வேகமாகக் கீழ் தளத்தில் இருந்த ஒரு சிறிய வீட்டின் உள்ளிருந்து ஓடி வந்த ஒருவன் “எவரண்டா நூவு?”(யார் நீங்க?) எனக் கேட்டான். அவனின் கேள்வியை அரைகுறையாகப் புரிந்து கொண்டு “தேர்ட் ப்ளோர் 108 வது நம்பர் வீட்டுக்கு வந்திருக்கேன். மஞ்சுநாதாகிட்ட பேசிட்டேன். உங்ககிட்ட சொல்லி சாவி வாங்கிக்கச் சொன்னார். நீங்களும் ஒரு டைம் பேசிருங்க…” என்றவன் தன் போனை எடுத்து மஞ்சுநாதாவிற்கு அழைத்து அவரிடம் தான் இங்கே வந்து விட்டதாக ஆங்கிலத்தில் உரைத்து விட்டு அந்தக் குடியிருப்பில் காவலாளியாக இருக்கும் எதிரே இருப்பவரிடம் போனை கொடுத்தான். காவலாளி சிறிது நேரம் மஞ்சுநாதாவிடம் பேசி முடித்துவிட்டு வீட்டு சாவியை எடுத்து வருவதாகச் சொல்லி மீண்டும் உள்ளே சென்றான். அவன் சென்றதும் “என்னய்யா இவுக பேசுறதெல்லாம் ஒண்ணுமே புரியல…” என இவ்வளவு நேரம் மொழி புரியாமல் திருதிருத்துக் கொண்டிருந்தவள் பயத்துடன் கேட்டாள். “கர்நாடகால இருக்கோம்ல கண்ணு? கன்னடம் பேசுறாவுக. எனக்கும் ஒன்னும் புரியலடா. ஏதோ சொல்லி சமாளிச்சுட்டு இருக்கேன்…” என்றான் மெதுவான குரலில். அவனின் ரகசியமான குரலில் அவளுக்குப் புன்னகை அரும்பினாலும், மொழி புரியாத ஊரில் தாங்கள் எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்று தெரியாமல் உள்ளுக்குள் பயந்து தான் போனாள் தன் ஊரை தவிர வெளியூரில் எங்கும் இதுவரை தங்கியிறாத அந்தக் கிராமத்துப் பெண்கிளி. காவலாளி சாவியை எடுத்துக் கொண்டு வந்து தன் பின்னால் வரும் படி அழைத்தான். அந்த அடுக்கு மாடியில் தரை தளத்துடன் சேர்த்து மொத்தம் எட்டு வீடுகள் கொண்டதாக இருந்தது. தரை தளத்தில் இரண்டு வீடுகள். முதல் தளத்தில் இரண்டு, இரண்டாம் தளத்தில் இரண்டு, மூன்றாவது தளத்தில் இரண்டு என இருந்த கட்டிடத்தில் மூன்றாவது தளத்தில் இருந்த ஒரு வீட்டின் கதவை திறந்து உள்ளே அழைத்துச் சென்றவன் “நானு கெலயத்தா இரேரி. எதனு பேக்குந்தரக் கூங்கண்டா…”(நான் கீழே தான் இருப்பேன். எதுவும் உதவி வேணுமா கூப்பிடுங்க) எனச் சொல்லிவிட்டுச் சென்றான். அவன் சென்றதும் கதவை தாழ் போட்டுவிட்டு வந்த இளஞ்சித்திரன், வீட்டை பார்த்துக் கொண்டு நின்ற கயற்கண்ணியிடம் வந்தவன் அவளின் தோளை பிடித்துத் தன் புறம் திருப்பி, அவளின் கண்ணோடு கண்கள் கலந்து “இன்னும் கொஞ்ச நேரத்துல நமக்குக் கல்யாணம் கண்ணு…” என்றான்.
Chinese Simplified Chinese Traditional Albanian Arabic Belarusian Bengali Bulgarian Cambodian Croatian Czech English Esperanto Filipino French German Greek Hausa Hebrew Hindi Hungarian Indonesian Italian Japanese Korean Laos Malay Mongol Myanmar Nepal Persian Polish Portuguese Pushtu Romanian Russian Serbian Sinhalese Spanish Swahili Tamil Thai Turkish Ukrainian Urdu Vietnamese 2022 உலக சுகாதார உச்சிமாநாடு துவக்கம் 2022-10-17 14:45:00 பகிர்க: 2022ஆம் ஆண்டு உலக சுகாதார உச்சிமாநாடு 16ஆம் நாள் ஜெர்மனியின் தலைநகர் பெர்லின்னில் துவங்கியது. ஐ.நா பொது செயலாளர் குட்ரேஸ், உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டெட்ரோஸ், ஐ.நா குழந்தை நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கேத்தரின் ரஸ்ஸல், ஜெர்மனித் தலைமை அமைச்சர் ஸ்கோல்ஸ் முதலியோர் காணொலி வழியாக 3 நாட்கள் நீடிக்கும் இவ்வுச்சிமாநாட்டின் துவக்க விழாவில் பங்கேற்றனர். சுகாதார துறையில் பன்னாடுகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டுமென நடப்பு உச்சிமாநாட்டின் தலைவர் வேண்டுகோள் விடுத்தார். காலநிலை மாற்றம் மற்றும் ஆரோக்கியம், தொற்றுநோய் தடுப்புக்கான கொள்கை, தொடரவல்ல உலக சுகாதார அமைப்பு முறையின் உருவாக்கம் உள்ளிட்ட அம்சங்கள் இதில் முக்கியமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. அறிவியல், வணிகத் துறை மற்றும் அரசு சாரா அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 6000 பிரதிநிதிகள் அதில் கலந்து கொண்டனர்.
2008 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஈழத் தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்தக் கோரி ஒழுங்கு செய்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆளும் தி.மு.க.வைத் தவிர அனைத்துக் கட்சிகளும் பங்கேற்று ஒருமித்த உணர்வை வெளிப்படுத்தினர். தனிமைப்படுத்தப்பட்ட தி.மு.க. - இந்த ஓர்மையை சிதைக்க திட்டங்களை வகுத்தது. மயிலை மாங்கொல்லையில் கலைஞர் கருணாநிதி ஒரு கூட்டத்தைக் கூட்டி, ஈழத் தமிழர்களுக்கு உருக்கமான குரல் கொடுத்தார். மத்திய அரசு தலையீட்டைக் கோரி போர் நிறுத்தத்துக்கு காலக் கெடு நிர்ணயித்தார். போர் நிறுத்தம் வராவிடில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவதாக அறிவித்தார். மனிதச் சங்கிலி போராட்டத்தை அறிவித்தார். கட்சிகளை உதறிவிட்டு, தமிழர்கள் அணி திரண்டனர். அதன் பிறகுதான் முதுகில் குத்தும் படலங்கள் தொடர்ந்தன. போர் நிறுத்தத்தை வலியுறுத்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மறுத்தது. அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன், நார்வே உள்ளிட்ட நாடுகளும் அய்.நாவும் போரை நிறுத்த வலியுறுத்தியும், இந்தியா மவுனம் சாதித்தது. மாறாக ஈழத் தமிழர் இனப் படுகொலைக்கு உதவியது. தி.மு.க.வின் குரலும் மாறி ஒலிக்கத் தொடங்கியது. போர் நிறுத்தமும் வரவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகும் திட்டமும் கைவிடப்பட்டது. தி.மு.க.வின் செயற்குழு கூடி களத்தில் நின்று போராடிய போராளிகளை குற்றம் சாட்டியது. பிரபாகரன் சர்வாதிகாரி என்றார் கலைஞர் கருணாநிதி. சிங்கள ஆட்சியின் அதிகாரபூர்வ ஏடாக செயல்பட்ட ‘இந்து’ ஏடு தி.மு.க.வின் செயற்குழு தீர்மானத்தைப் பாராட்டி தலையங்கம் தீட்டியது. ஈழப் பிரச்சினையில் முதல்முறையாக மிகுந்த மதிநுட்பத்தோடு சரியான நிலையை தி.மு.க. எடுத்துள்ளதாக புகழ் மாலைகளை சூட்டியது. போர் நிறுத்தத்தை வலியுறுத்தாத மத்திய அரசை தி.மு.க. நியாயப்படுத்தத் தொடங்கியது. இன்னொரு நாட்டின் பிரச்சினையில் ஒரு எல்லைக்கு மேல் எப்படி தலையிட முடியும்? என்று முதல்வர் பேசத் தொடங்கினார். தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி வேண்டும் என்று நாம் கருதுவது போலவே, மத்தியில் சோனியாவின் வழிகாட்டுதலில் நடக்கும் மன்மோகன்சிங் ஆட்சியும் நமக்குத் தேவை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் பேசினார். ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த இலங்கைத் தமிழர் பாதுகாப்புக் கழகத்துக்கு போட்டியாக இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை என்ற அமைப்பை தி.மு.க. தொடங்கியது. உறுதியோடு போராடி வந்த வழக்கறிஞர்கள் போராட்டம், காவல்துறையைக் கொண்டு ஒடுக்கப்பட்டது. இலங்கை ராணுவத்தின் இனப்படுகொலையைக் கண்டிக்காத உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், போராளிகள் ஆயுதங்களைக் கீழே போட்டு சரணடைய வேண்டும் என்றார். ப. சிதம்பரத்தின் கருத்தை நியாயப்படுத்தி, துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார். முதலில் ராணுவம் போரை நிறுத்தக் கோரி, மனித சங்கிலிக்கு அழைப்புவிட்ட தி.மு.க., பிறகு குரலை மாற்றிக் கொண்டு, போராளிகள், ஆயுதங்களைக் கீழே போட வலியுறுத்தும் மனித சங்கிலியை தி.மு.க. இளைஞரணி பெயரால் நடத்தியது. தூத்துக்குடி வந்த வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ‘இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்ய வேண்டும்’ என்று ஒரு பேட்டியில் கூறியவுடன், கலைஞர் கருணாநிதி, பாராட்டுகளைக் குவித்தார். தூதரக உறவுகளை இந்தியா துண்டிக்க வேண்டும் என்றார். அதன் பிறகு, போரை நிறுத்துமாறு தங்களை இந்திய அரசு கோரவில்லை என்று, இலங்கை அரசு அறிவித்தப் பிறகு, முதலமைச்சர் மவுனமாகிவிட்டார். மக்கள் கொதிப்பை திசை திருப்ப போர் நிறுத்தம் கோரி, திடீரென்று உண்ணா விரதம் தொடங்கிய முதல்வர் கலைஞர் கருணாநிதி, சில மணி நேரங்களிலே போர் நிறுத்தம் வந்துவிட்டது என்று கூறி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். அதற்குப் பிறகுதான் ஒரே நாளில் 30000 தமிழர்களை ராணுவம் பிணமாக்கியது. வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த போராளிகளையும், மக்களையும் சுட்டுக் கொன்றது. தேர்தல் களத்தில் பிரச்சாரம் செய்த ஜெயலலிதாவும் தம் பங்கிற்கான துரோகத்தை செய்தார். ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் தமக்கு உண்மைகள் புரியத் தொடங்கிவிட்டன என்றும், தனி ஈழம் பெற்றுத் தர தாம் தயாராக இருப்பதாகவும், திடீரென தேர்தல் கூட்டங்களில் பேசத் தொடங்கினார். கடலில் தத்தளிப்போருக்கு உயிர் பிழைக்க துரும்பு கிடைத்ததுபோல், ஜெயலலிதாவின் குரல் ஆறுதலாக இருந்தது என்றாலும், தேர்தலோடு ஜெயலலிதா தனது தமிழ் ஈழ ஆதரவுக் கருத்தை மூட்டைக் கட்டிவிட்டார். 2009 ஆம் ஆண்டு தமிழகம், இப்படி துரோகங்களை சந்தித்த ஆண்டாகவே இருந்தது.
ஆண் பெண் ஈர்ப்புக்கு ஆரோக்கியமான அடித்தளம் அமைய இந்தக் காலக் கல்வி இம்மியும் உதவவில்லை. பண அடிப்படையில் ஒழுக்கங்கள் பறிபோகின்றன. நல்லொழுக்கங்களைப் பேணத்தான் பெரியோர் குடும்ப அமைப்பைக் கண்டார்கள். ஆனால் குடும்ப அமைப்பு ஆணுக்கு மட்டுமே விதிகளை மீற மேலாண்மை அதிகாரம் வழங்கியது. குடும்ப அமைப்பு இன்றைய ஜனநாயகம் போல தாறுமாறாக இருக்கிறது. - ராஜம் கிருஷ்ணன் துரதிர்ஷ்டவசமாக நம் நாட்டில் புராணங்கள், இதிகாசங்கள் மதத்தை மட்டுமே சார்ந்தது என்று இன்றைய மதச்சார்பில்லா சமூகத்தில் இரு தலைமுறையினர் இந்தியக் கலாசாரத்தின் பல அடையாளங்களை அறிவதிலிருந்து தடுக்கப்பட்டு விட்டார்கள். இந்துத்துவா என்று முத்திரை குத்தி இவற்றைப் போற்றுபவர்கள் இந்த உலகத்திலேயே வாழத் தகுதியற்றவர்கள் என்று எண்ண வைத்து விடுகிறார்கள். நமது கலாசாரப் பரிச்சயத்திற்கு ஒரு பெரும் இழப்பு, பாடப் புத்தகங்களில் புராண, இதிகாசக் கதைகளைத் தவிர்த்து நமது மதச்சார்பின்மையை நிலைநிறுத்தியது. - அசோகமித்திரன் 1953-ல் எனக்கு 18 வயசு. ஒரு நாள், ரேஷன்ல அரிசி வாங்கப் போயிருந்தேன். 14 கிலோ அரிசியை அளந்து பையில கட்டிட்டு கிளம்புறப்போ வந்து நின்ன தாசில்தார், “ஒரு ஆள் இத்தனை கிலோ அரிசியைத் தூக்கிட்டுப் போறதுக்குச் சட்டப்படி அனுமதியில்லை. பையை வெச்சுட்டுப் போ”ன்னாரு. “இப்ப நான் போறேன். ஆனா, இதே அரிசியை நீங்களே என்னைத் தேடி வந்து வாங்கிக்கோன்னு கெஞ்சுவீங்க”ன்னு மட்டும் சொல்லிட்டு வந்தேன். அவர்மேல கேஸ் போட்டேன். தீர்ப்பு வந்துச்சு. நான் சொன்ன மாதிரியே, ஒரு பையில அதே 14 கிலோ அரிசியைத் தூக்கிட்டு வந்து எங்க வீட்டுக் கதவைத் தட்டுனாரு அந்த தாசில்தார். அந்த வயசுல அது பெரிய சாதனையா, ரொம்ப மிதப்பா இருந்துச்சு. ஆனா, அதையெல்லாம் தாண்டிப் புரிஞ்ச ஒரு விஷயம்... எதிர்த்து நிக்கிறது எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும், நியாயம் நம்ம பக்கம் இருந்தா நாம பயப்படவோ, கவலைப்படவோ தேவையில்லை. கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் கடைசியில நாமதான் ஜெயிப்போம். - டிராஃஃபிக் ராமசாமி ஈழத்தில் வாடும் தமிழரும், புலம்பெயர்ந்து வாழும் தமிழரும், தாயகத் தமிழரை இனி நம்ப வேண்டாம். ஆயுதத்தை மறந்து விடுங்கள். அகிலம் முழுவதும் அறப்போரை நடத்துங்கள். அகிம்சையே வலிமை மிக்க ஆயுதம் என்று போற்றிய புரட்சியாளர்கள் மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலாவை நெஞ்சில் நிறுத்துங்கள். பிரபாகரனே வெளிப்பட்டாலும் அகிம்சை வழியில் புரட்சியைத் தொடர்வதே உகந்தது. ஆயுதப் போரில் இனியும் எம் தமிழினம் அழியக்கூடாது - தமிழருவி மணியன் மேயர் முதல் கல்விச் செயலாளர், அமைச்சர் வரை எல்லா அரசு ஊழியர்களின் வீட்டுக் குழந்தைகளும் மாநகராட்சி, அரசுப் பள்ளிகளில் தான் படிக்க வேண்டும் என்ற விதியை ஏற்படுத்தினால்தான், வரிப்பணத்தை பள்ளிகளுக்குச் செலவழித்து அவற்றின் தரத்தை மேம்படுத்துவார்கள். அப்போதுதான் அட்மிஷனுக்கு வந்தால் இனிப்புத் தரப்படும் என்ற அறிவிப்புப் பலகைகளுக்கு அவசியமில்லாமல் போகும். - ஞாநி தமிழை விட எளிமையான மொழி எதுவும் இல்லை. ஆங்கிலத்தில் பேசுவதை பெருமையாகக் கருத வேண்டியதில்லை. மொழி, கலாசாரம், பண்பாடு நிறைந்த இம்மண்ணில் வாழ விரும்ப வேண்டும். தேவைக்கு ஏற்ற பணத்தை வைத்துக்கொண்டு மற்றதை சமுதாயத்துக்கு செலவிட வேண்டும். இல்லையேல் அப்பணமே வாழ்க்கையே அழித்துவிடும் - சிவகுமார் நாம் பல்வேறு பெரும் புலவர்களின், எழுத்தாளர்களின் படைப்புகளைப் படித்துள்ளோம். என்றாலும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக திருவள்ளுவர் அருளிய திருக்குறளில் இருக்கும் 1,330 குறள்களில் இல்லாத கருத்துக்கள் எதுவும் இல்லை. திருக்குறள் காட்டும் நெறிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் அனைவரையும் சென்று சேர வேண்டும். சமுதாய முன்னேற்றத்துக்குத் திருக்குறள் காட்டும் வாழ்க்கை முறையை உலகம் முழுவதும் பரவச் செய்யத் தமிழ் இலக்கிய படைப்பாளிகள் முன்வர வேண்டும். - அப்துல் கலாம் இப்போது நானும் ஒரு கனவு காண்கிறேன். கிராமம், நகரம் என்ற பாகுபாடு இல்லாத, அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்கக்கூடிய, லஞ்சமும், ஊழலும் இல்லாத, தீவிரவாதத்தால் பாதிக்கப்படாத இந்தியாவைக் காணவேண்டும் எனக் கனவு காண்கிறேன்.
வெட்கப்படும் தருணத்தில்... ஒவ்வொரு பெண்ணுமே அழகுதான். அதுவும் திருமணப் பெண்ணின் வெட்கம்... கூடுதல் அழகு. குறிப்பாக, கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த மணமகள்களின் அழகுக்கு கூடுதல் அழகு சேர்த்து தேவதையாக்குவது 'ஜுனோ மேரி’ மணமகள் உடைதான். ''சென்னையில் மணப்பெண்களுக்காகவே ஸ்பெஷலாக நிறைய புடவைக் கடைகள் இருந்தாலும், கிறிஸ்தவ மணப்பெண்களுக்கான 'கவுன்’ போன்ற உடைகளுக்கு சில கடைகளே உள்ளன. அதிலும் நிறைய கலெக்ஷன்ஸ் இருக்காது. அந்தக் குறையைப் போக்குவதற்காக துவங்கப்பட்டதுதான் எங்கள் நிறுவனம்'' - புன்னகை மின்னச் சொல்கிறார், இதன் நிறுவனரான சென்னை கோட்டூர்புரம் திவ்யா. இவர் படித்தது டிராவல் அண்ட் டூரிஸம். வேலை செய்தது, விமானத்துறையில். தற்போது, கால்பதித்திருப்பது ஆடை நிறுவனத்தில். ''இந்து, முஸ்லிம், நார்த் இண்டியன்னு எல்லா சமூகத்திலும் கல்யாணப் பொண்ணோட டிரெஸ் ரொம்ப கலர்ஃபுல்லா, கிராண்டா இருக்கும். ஆனா... கிறிஸ்டியன் கல்யாணப் பொண்ணுங்களுக்கு மட்டும் பெரும்பாலும் வெள்ளை கவுன்தான். அதுவும் ஃபாரின் கன்ட்ரீஸ்ல இருக்கற மாதிரி மாடல் மாடலான கவுனும் இங்க கிடைக்காது. ஒரு கிறிஸ்டியன் கல்யாணத்துக்குப் போயிட்டு வந்ததும், இதைப்பத்தி ரொம்ப தீவிரமா யோசிச்சதுதான்... 'வெட்டிங் கவுன்’ பிசினஸுக்கு நான் வரக் காரணம். ஆரம்பத்துல, எங்ககிட்ட வந்த கஸ்டமர்ஸுக்கு அளவெடுத்து, ஜப்பான், சைனாவில் இருக்குற டிசைனர்களுக்கு அனுப்பி கவுன் தைச்சு வாங்கிட்டிருந்தோம். அதுல தேவையான ஆல்டரேஷன்ஸ் பண்ணி கொடுத்துடுவோம். இப்படித்தான் 'ஜுனோ மேரி’ நிறுவனத்தை ஆரம்பிச்சோம். ஆரம்பத்துல நண்பர்கள், அவங்களுக்கு தெரிஞ்சவங்கனு டிசைன் பண்ணிக் கொடுத்தோம். எங்க டிசைன் எல்லாருக்கும் பிடிக்க ஆரம்பிச்சு, அப்படியே பிசினஸ் நல்லா பிக்-அப் ஆகிடுச்சு. பிறகு, வெப்சைட் ஆரம்பிச்சு... எல்லா மாடல் கவுன்ஸையும் அப்லோட் பண்ணினோம். நேர்ல வரமுடியாத கஸ்டமர்ஸ் எங்க வெப்சைட்டை பார்த்தேகூட எந்த மாடல் கவுன் வேணும்னு செலக்ட் செய்ய முடியும். 'ஏ லைன்’, 'பால் லைன்’, 'ஸ்லிம் லைன்’, 'மெர்மெய்ட்’னு மொத்தம் நாலு வெரைட்டி இருக்கு. ஸ்டைல், கலர், துணி வகைனு எல்லாத்தையுமே கஸ்டமர் விருப்பத்துக்கு ஏத்த மாதிரி செலக்ட் செஞ்சுக்கலாம். எங்க சிறப்பே, 'கஸ்டமைஸ்ட் வெடிங் கவுன்’தான்'' என்ற திவ்யா நிறைவாக, ''பொண்ணுங்க, சாதாரணமா டிரெஸ் பண்ணும்போதே, அழகா தெரியணும்னு ஆசைப்படுவாங்க. அதுவும் கல்யாணத்துக்குனா கேக்கவே வேணாம். அதுக்கேத்த மாதிரி எங்ககிட்ட எல்லா மாடல் டிசைன், பல வகையான துணி, கலர் இப்படி நிறைய இருக்கு. அதனாலதான் எந்த விளம்பரமும் கொடுக்காம ஒருத்தர் மாத்தி ஒருத்தர் சொல்லி சொல்லியே... என்னோட பிசினஸ் நல்லா வளர்ந்துடுச்சி. டிரெஸ் ரெடி பண்றதுக்கு ரெண்டு மாசம் டைம் கேப்போம். இது போதுமான அளவுக்கு கலைநயத்தோட தைக்கறதுக்குத்தான். ஆனாலும் 45 நாள்லயே டெலிவரி பண்ணிடுவோம். தமிழ்நாட்டுல மட்டும் இல்லாம கேரளா, மகாராஷ்டிரா, டார்ஜிலிங், ஷில்லாங்னு பல இடங்களுக்கு கவுன்களை சப்ளை செய்றோம். போன மாசம் பெங்களூருல ஒரு ஷோரூம் திறந்திருக்கோம். சினிமா, சின்னத்திரை மற்றும் பிசினஸ் வி.ஐ.பி-க்கள் நிறைய பேருக்கு வெடிங் கவுன் டிசைன் பண்ணிக் கொடுத்திருக்கோம். வசதியானவர்களுக்கு மட்டும் இல்லாம, நடுத்தர மக்களும் வாங்கக்கூடிய விலையில் கவுனை விற்பனை செய்றோம். என்னைப் பொறுத்தவரைக்கும் கஸ்டமரை திருப்திபடுத்தணும். அவ்வளவுதாங்க!'' என்று சந்தோஷமாக சொல்கிறார் திவ்யா!
Tamil Family Kamakathigal – வணக்கம் நண்பர்களே, சில தினங்களுக்கு முன்பு தங்கை லாவண்யா நடந்த கவர்ச்சி மேட்டர் சம்பவத்தை பகிர்ந்து கொள்கிறேன். இந்த உண்மை அண்ணன் தங்கை காம கதைகள் முழுமையாக படித்து உங்களின் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்! நான் சில வருடங்களுக்கு முன்பு இன்ஜினியரிங் படிப்பை முடித்து விட்டு தற்பொழுது சென்னையில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை செய்து வருகிறேன். என்னோட மூத்த அண்ணனுக்கு சில நாட்களுக்கு முன்பு திருமணம் முடிந்தது. என் இளைய தங்கை நர்சிங் முதலாம் ஆண்டு படித்து கொண்டு இருக்கிறாள். என் மூத்த அண்ணன் சில தினங்களுக்கு முன்பு சண்டை போட்டுகொண்டு மனைவியை அழைத்து தனி குடித்தனம் சென்று விட்டான். வீட்டில் பெற்றோர் மற்றும் தங்கையுடன் வசித்து வந்தேன். என் தங்கையின் பெயர் லாவண்யா, வயது 20 இருக்கும். சின்ன வயதில் இருந்தே இருவரும் நண்பர்கள் போன்று பழகி வளர்ந்து வந்தோம். நான் ஆஃபிஸில் ஒரு பெண்ணை நீண்ட நாட்களாக காதலித்து வந்தேன். இருவரும் வெளியில் சுற்றுவது மற்றும் சினிமா பார்ப்பது என்று சந்தோஷமாக இருந்தோம். அதிகப்படியாக என் காதலியுடன் கிஸ் மட்டுமே செய்து இருக்கிறேன் தவிர வேற ஒன்றும் செய்து பார்த்தது இல்லை. சில தினங்களுக்கு முன்பு இருவரும் ரூம் போட்டு மேட்டர் போடலாம் என்று சென்றோம். காதலியின் மார்பகத்தை பிசைந்து விட்டு பேண்ட் கழட்டி சுன்னியை வெளியில் எடுத்தேன். திடீர் என்று காதலிக்கு வயிற்று வலி வந்தது ஆகையால் அன்றைய தினத்தில் மேட்டர் போடாமல் வீட்டுக்கு சென்று விட்டோம். அடுத்த கொஞ்ச நாட்கள் வெளியில் சுற்ற வாய்ப்பு கிடைக்கவில்லை. என் காதலி மீது காதல் இருந்ததை விட செக்ஸ் மோகம் இருந்ததே அதிகம். ஆகையால் தினமும் கையடிக்காமல் விந்தை சேமித்து சூப்பராக மேட்டர் போடலாம் என்று இருந்தேன். ஆனால் அவளின் வீட்டில் பிரச்சனை ஆகி வேறு ஒரு பையனுடன் திருமணம் செய்து வைத்தார்கள். எனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது, இது என்னோட தங்கைக்கும் தெரியும். வீட்டில் வருத்தமாக இருக்கும்போது எல்லாம் ஆறுதலாக அருகில் வந்து பேசினாள். ஒரு முறை கண்கள் கலங்கியதை பார்த்து, இறுக்கமாக கட்டிப்பிடித்து “அண்ணா! எல்லாம் சரி ஆகிடும்” என்று செய்தாள். அந்த தருணம் என்னுள் இருந்த மிருகம் வெளியில் வந்தது. தங்கையின் முலை மேல் முகம் அழுந்தியது. முலை பவுடர் வாசனை அடித்தது, தங்கை என்று மறந்து மேலும் இறுக்கமாக கட்டிப்பிடித்தேன். அதன்பின் காதலியின் மீது இருந்த செக்ஸ் மோகம், தங்கை மீது மாறியது. அந்த நேரம் பார்த்து நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நோய் வந்தது. நான் தொடர்ந்து மூன்று மாதங்கள் மேலாக வேலைக்கு செல்லாமல் இருந்தேன். தங்கைக்கு காலேஜ் வைக்கும் அறிகுறி கூட தெரியவில்லை. தினமும் இணையதளம் வழியாக வகுப்பு வைத்து வந்தார்கள். என் போன் வாங்கி கிளாஸ் அட்டென்ட் செய்வாள். என் சித்தி வீடு அருகில் இருப்பதால் அடிக்கடி பெற்றோர்கள் இந்த நேரத்தில் உறுதுணையாக இருப்பதற்கு சென்று விட்டு வருவார்கள். அந்த நேரத்தில் போனில் ஆபாச படம் பார்த்து கையடிப்பேன். சின்ன வயதில் இருந்தே வீட்டில் பெற்றோர்கள் ஒரு அறையிலும், தங்கையும் நானும் ஒரு அறையிலும் ஒன்றாக உறங்கி கொண்டு வருவோம். நான் ஒரு நாள் காலை 4 மணிக்கு எல்லாம் எழுந்தேன். காலை நேரம் என்பதால் உடம்பில் சூடான ரத்தம் பரவி குஞ்சி முறுக்கு ஏறி கொண்டு இருக்கும். அமைதியாக ஹெட் செட் மாட்டிக்கொண்டு பிட்டு படம் பார்க்க ஆரம்பித்தேன். எனக்கு மேட்டர் போடும்போது சத்தம் அதிகம் வந்தால் பிடிக்கும் ஆகையால் பிட்டு படம் பார்க்கும்போது சத்தமாக ஹெட் செட்டில் வைத்து பார்ப்பேன். விறுவிறுப்பாக பார்த்து கொண்டு சுன்னியை வெளியில் எடுத்து வேகமாக சுயஇன்பம் செய்து கொண்டு இருந்தேன். ஒரு கட்டத்தில் தங்கையின் முகத்தை பார்த்து கையடிக்க ஆரம்பித்தேன். கொஞ்ச நேரத்தில் கஞ்சி பீச்சி கொண்டு வெளியில் வேகமாக அடித்தது. விந்தின் ஒரு சொட்டு தங்கை முகத்தில் எகிறி அடித்தது. லாவண்யா கழட்டி வைத்து இருந்த ப்ராவை எடுத்து சுன்னியில் வழிந்த விந்தை துடைத்து கொண்டேன். பின்பு தங்கையின் அருகில் சென்று உடம்பை நுகர்ந்து பார்த்து மேலும் மூடு ஏற்றுக்கொண்டேன். இரண்டாவது முறையாக தங்கையின் ஜட்டியை நுகர்ந்து பார்த்தபடி சுன்னியை இறுக்கமாக பிடித்து கையடித்தேன். “ஓஹோ யா ஓ யா ” என்று முனறிக்கொண்டு விந்தை ஜட்டியில் தெளித்தேன். பின்பு லுங்கியை கூட சரியாக காட்டாமல் சோர்வாக படுத்தேன். காலை தங்கை என்னை அரைகுறை நிலையில் தான் பார்த்து இருப்பாள் என்று தோன்றியது. கொரோனா ஊரடங்கு தளர்வுகள் கொஞ்ச கொஞ்சமாக குறைந்தது. கிராமத்தில் இருக்கும் தாத்தா, பாட்டியை பெற்றோர்கள் பார்த்து விட்டு வருவதாக புறப்பட்டு சென்றார்கள். லீவு நாட்கள் என்பதால் காலை உறங்க ஆரம்பித்தால், மதியம் மேல் எழுந்திருப்பேன். “அண்ணா! அம்மா அப்பா நைட் வீட்டுக்கு வரமாட்டாங்களாம்! இப்போ தான் போன் பண்ணாங்க!” என்று கூறிவிட்டு பாத்ரூம் உள்ளே குளிக்க சென்றாள். கொஞ்ச நேரம் கழித்து துண்டை மார்பு வரை கட்டிக்கொண்டு வெளியில் வந்தால், அந்த நிலையில் தங்கையை பார்த்தவுடன் காமம் தலைக்கு ஏறியது. பின்பு அடுத்து நான் குளிக்க சென்றேன். எனக்கு குஞ்சி சுற்றி அதிகமாக மூடிகள் வளர்ந்து இருந்தது ஆகையால் ஷாவ் செய்யலாம் என்று ரேசர் பிளேடு எடுத்தேன் ஆனால் அது கொஞ்சம் ஈரமாக கொஞ்சம் மூடிகள் ஒட்டிக்கொண்டு இருந்தது. தங்கை புண்டை மூடிகளை ஷாவ் செய்து இருக்கிறாள் என்று அறிந்து கொண்டேன். பாத்ரூம் ஓரமாக கூதி மயிர் இருந்தது, அதை பார்த்ததும் மேலும் செக்ஸ் மூடு ஏறியது. முழுமையாக குளித்து விட்டு துண்டை கட்டிக்கொண்டு உள்ளே ஜட்டி போடாமல் வெளியில் வந்தேன். என் தங்கை சோபாவில் படுத்து கொண்டு டிவி பார்த்தபடி ரிமோட் உதட்டில் வைத்து கடித்து கொண்டு இருந்தாள். அவள் கவுன் அணிந்து இருந்ததால், முலை இரண்டும் பழுத்த மாங்கனிகள் போன்று அருமையாக தெரிந்தது. சூத்தை பின்புறமாக கட்டிக்கொண்டு படுத்து இருந்தாள். அவளின் கவர்ச்சியான அழகை பார்த்து ரசிப்பதை பார்க்காமல் இருந்தால், பின்பு வேகமாக சென்று நாற்காலியின் மீது நின்று லைட் சரி செய்வது போன்று நடித்தேன். அப்பொழுது கீழே அமர்ந்து இருந்த லாவண்யா, மேலே தொங்கி கொண்டு இருந்த சுன்னி மற்றும் கொட்டை பார்த்து விட்டாள். எனக்கு இருக்கும் மெகா சைஸ் பூல் பார்த்து வாய் அடைத்து போனாள். பின்பு அமைதியாக எழுந்து கிட்சன் ரூமுக்கு சென்றாள். மாலை 4மணி ஆனதால் டீ போடுவது போன்று தலையை கீழே குனிந்து நகத்தை கடித்து கொண்டு இருந்தாள். நான் மெதுவாக பின்னால் சென்று நின்று, “லாவண்யா! குடும்ப செக்ஸ் பற்றி! நீ என்ன நினைக்கிற?” என்று நேராக கேட்டேன். “எதற்கு இத்தலம் கேக்கற?” என்றாள். “சொல்லு சும்மா கேட்போம்” என்றேன். “இருவருக்கும் பிடித்து இருந்தால் செய்து கொள்ளலாம்” என்று கூறிவிட்டு மீண்டும் டி போடுவதில் கவனம் செலுத்துவது போன்று நடித்தாள். “உன் கவுன் பின்புறத்தில் பூச்சி ஒன்று இருக்கிறது” என்று பயப்பட வைத்தேன். சுற்றி சுற்றி பார்த்தால், நான் மெதுவாக கையை சூத்தில் வைத்து தேய்த்தேன். “ஹ்ம்ம் எனக்கு அது கிடைச்சிருச்சி!” என்று சூத்தை தடவி புண்டை ஓட்டையில் கையை விட்டேன். “அண்ணா! வேண்டாம் இது தப்பு வேணாம்!” என்று சொல்லிக்கொண்டு இருந்தாள். ஆடையை தூக்கி விட்டு சூத்தில் சுன்னியை வைத்து மென்மையாக தேய்த்தேன். அவள் குரல் குறைந்து போனது, கையை எடுத்து புண்டையின் மேல்புறத்தில் மென்மையாக தேய்த்தேன். தங்கை உள்ளே ஜட்டி போடாமல் இருந்தால் ஆகையால் விறல் விட்டு ஆட்டுவதற்கு மிகவும் சுலபமாக இருந்தது. மூச்சு காற்றை வேகமாக இழுத்து விட்டுக்கொண்டு இருந்தால், புண்டை ஓட்டையில் முதலில் ஒரு விரல் பின்பு மூன்று விறல் என்று வரிசையாக விட்டு வேகமாக அடித்தேன். அவளை தூக்கிக்கொண்டு பெட் ரூம் உள்ளே சென்றேன். படுக்க வைத்து விட்டு இரண்டு கால்களையும் விரித்து விட்டு புண்டையை வேகமாக நக்கினேன். “ஹ்ஹம்ம்ம்ம்ம் அம்ம்மா அம்மா ஆஹா ஸ் ஸ் ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ” என்று துடித்தாள். கொஞ்ச நேரத்தில் சுகம் தாங்கமுடியாமல் விந்தை என் முகத்தில் அடித்து தெளித்தாள். எனக்கு இப்போவே கஞ்சி வந்துடுச்சி! ஆஹா முடில! என்று தங்கை முனறினாள். நான் இன்னும் செய்யவே ஆரம்பிக்கல! என்று கூறி தங்கையின் முழு ஆடையும் கழட்டினேன். உள்ளே சின்னதாக ஒரு உள்ளாடை கூட போடாமல் இருந்தால், முலையை கையால் பிடித்து பிசைந்து பால் குடித்தேன். இரண்டு முலைகளின் காம்புகளையும் உருட்டி விளையாடி வந்தேன். தங்கை என்று கூட பார்க்காமல் செக்ஸ் மோகத்தில் சந்தோஷமாக இருந்தேன். மெதுவாக கீழே வந்து இருகால்களையும் விரித்து வைத்து சுன்னியை மேல்புறமாக வைத்து தேய்த்தேன். முலையை பிடித்தபடி சுன்னியை மெதுவாக கூதியில் விட்டு நுழைத்தேன். தங்கை விர்ஜின் என்பதால் கொஞ்சம் உள்ளே செல்வது கஷ்டமாக இருந்தது. முழு திறனையும் பயன்படுத்தி சுன்னியை உள்ளே விட்டு அழுத்தினேன். சுன்னி உள்ளே சென்று தங்கையின் விர்ஜின் சீல் உடைத்து. கொஞ்சம் ரத்தம் வழிந்தது, சுன்னியை வெளியில் எடுத்து விடலாம் என்று நினைத்தேன். “டேய்! தேவிடியா பையா! விடாமல் அடி டா ஆஹா ஆஹா ஸ் ஸ் ஸ் ஸ் ஸ் ம் ம் ம் ம்” என்று தங்கையின் குமுறல் சத்தம் கேட்டது. அவளின் அழகான பிங்க் புண்டையை நீண்ட நேரமாக ஓத்து விந்தை முலை மற்றும் மூஞ்சி மேலே அடித்து பரப்பினேன். “எனக்கு இது ரொம்ப புடிச்சிருக்கு! நாம்ப இனிமே வீட்டுக்கு தெரியாமல் பண்ணலாம்!” என்று தங்கை கூறினாள். எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது, “டேய் அண்ணா! நீ என்னோட ப்ரா, ஜட்டியில் எல்லாம் கையடிச்சு தடவி விட்டது எல்லாம் எனக்கு தெரியும்” என்று கூறினாள். அன்று முதல் இருவரும் வீட்டில் பெற்றோர்கள் இல்லையெனில் செக்ஸ் பார்ட்னராக மாறிவிடுவோம். உங்களுக்கு இதுபோல வாய்ப்பு கிடைத்தால் செய்து விட்டு கீழே கமெண்ட் செய்யுங்கள்! Tags:tamil family sex storiestamil kamaveritamil sex stories 2019tamil sexy girlsஅண்ணன் தங்கை செக்ஸ்குடும்ப செக்ஸ்தங்கை செக்ஸ்தமிழ் காமவெறி
எனக்கு என்ன விட முத்த பெண்களை அதிகமா பிடிக்கும். நான் எப்பொழுதும் கல்யாணமான பெண்களின் முலைகளைப் பார்த்து ரசித்து கனவு கண்டு ஆனந்தம் அடைந்து கொள்வேன். இந்த கதை முற்றிலும் மாறுபட்ட கதை. இந்த சம்பவம் 6 வருடங்களுக்கு நடந்தது. என் பெயர் சந்தோஷ், அந்த சமயத்தில் 20 வயது தான் ஆனது. நான் பார்ப்பதற்கு அழகாக இருக்க மாட்டேன், ஆனால் உயரமாக ஒல்லியாக இருப்பேன். என் சுன்னி 7 இன்ச் பெரியதாக இருக்கும். உடம்பு கட்டுமஸ்தாக இருக்கும். அவள் பெயர் வினோதா, வயது 18. அவள் அழகு தேவதை போன்று இருப்பாள். பார்ப்பதற்கு வெள்ளையாக, பெருத்த முலைகளுடன் வட்டமான சூத்துடன் இருப்பாள். அவள் குண்டாக இருந்த காரணத்தினால் தான் கவர்ச்சியாக இருந்தாள். இருவரும் சென்னையில் வெவேறு பகுதியில் வசித்து வந்தோம். இந்த கதை வெயில் காலத்தில் ஆரம்பித்தது. ஆறு வருடத்துக்கு முன்னர் அனைவரும் பாட்டி வீட்டுக்குச் சென்றோம். ஒரு அருமையான கிராமத்துக்குச் சென்றோம். அந்த சூடான ஞாயிற்றுக்கிழமை அன்று நானும், தாத்தாவும் தோட்டத்துக்குச் சென்றோம். காலை உணவு எடுத்துச் செல்லவில்லை. அன்று மதியம் வினோதா, என் மாமாவுடன் மதியவுணவு எடுத்துக் கொண்டு வந்தாள். அனைவரும் நட்பாகப் பழகி, உணவு சாப்பிட்டு முடித்தோம். எங்கள் பண்ணைவீட்டில் இரு படுக்கை கொண்ட அறை இருந்தது. எனக்குத் தூக்கம் வருவது போன்று இருந்தது. நான் ஒரு அறையில் படுத்து உறங்கினேன், தாத்தாவும் வினோதாவும் மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டு இருந்தார்கள். மாமா பைக்கை எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்று சென்று விட்டார். நான் நன்றாகத் தூங்கிக் கொண்டு இருந்தேன், தாத்தா எழுந்து வயலுக்குச் சென்று விட்டார். வினோதா தனியாகக் கழுத்து வரை போர்வை போர்த்திக் கொண்டு இருந்தாள். அதுவரை அவள் மேல் எந்த ஒரு தவற எண்ணமும் இல்லாமல் தான் இருந்தேன், ஆனால் அவளைப் பார்த்தவுடன் சுன்னி விறைத்துக் கொண்டு போனது. அவளின் அருகில் சென்று போர்வை தள்ளிப் பார்த்தேன். அவள் தூக்கத்தில் இருந்து எழுந்திருக்க வில்லை. அவள் மூச்சு விடும்போது முலைகள் மேலும் கீழுமாகச் சென்று வந்து கொண்டு இருந்தது. அவள் ப்ளௌஸ், ஸ்கிர்ட் மற்றும் துப்பட்டா அணிந்து கொண்டு இருந்தாள். அவளின் முலைகள் தெள்ளத்தெளிவாகத் தெரிந்து கொண்டு இருந்தது. என் பூல் மேலும் நீண்டு கொண்டு சென்றது. மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, முலைகளைத் தொட்டுப் பார்த்தேன். அவளிடம் இருந்து எந்த ஒரு அசைவும் வரவில்லை. பின்னர் அவளின் ப்ளௌஸ் மற்றும் துப்பட்டா மேல் கையை வைத்துப் பிசைந்து கொண்டு இருந்தேன். எந்த ஒரு அசைவும் கொடுக்காமல், வேகமாக மூச்சை இழுத்து வெளியில் விட்டுக் கொண்டு இருந்தாள். அவளின் உதட்டில் முத்தம் ஒன்றைப் பதித்தேன். இறுதியாக ப்ளௌஸ் உள்ளே ஒரு கை மற்றும் ஸ்கிர்ட் வழியாகக் கீழே ஒரு கையை விட்டுக் கொண்டு ஒரே சமயத்தில் பிசைந்து கொண்டு இருந்தேன். திடீர் என்று கண்களை விழித்துப் பார்த்து, “ஆகா. . . . ” என்று கத்தினாள். என் கண்களை நேராகப் பார்த்தாள். என் கைகளை எடுக்காமல் தொடர்ந்து வேலை செய்து கொண்டு இருந்தேன். என்னை பார்த்துச் சிரித்து, ” என்ன செய்து கொண்டு இருக்கிறாய்?” என்று கேட்டாள். ” நீ மிகவும் அழகாக மற்றும் கவர்ச்சியாக இருக்கிறாய். உன்னை மிகவும் பிடிக்கும், நீ எனக்கு வேண்டும்” கூறினேன். மீண்டும் என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டு, இப்பொழுது யாராவது வந்தார்கள் என்றால், கொன்று விடுவார்கள் என்று கூறினாள். “யாரும் வரமாட்டார்கள்” என்று முலையைப் பிசைந்து கொண்டு, உதட்டில் முத்தம் கொடுத்துக் கொண்டு இருந்தேன். சிறிது நேரத்துக்குப் பிறகு அவளும் என்னுடன் ஒத்துழைப்பு கொடுக்க தொடங்கி விட்டாள். இருவரின் உதடுகளும் ஒன்றுக்கு ஒன்று பிணைந்து கொண்டு இருந்தது. என் கால்சட்டை கழட்டி, ஜட்டியை உருவி சுன்னியைக் கையில் பிடித்துக் கொண்டாள். என் பூலை நன்றாக இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு மேலும் கீழுமாக ஆட்டிக்கொண்டு இருந்தாள். நான் அவளின் ப்ளௌஸ் கழட்டினேன், உள்ளே உள்ளாடை எதுவும் அணியாமல் குலுங்கிய முலையுடன் நின்று கொண்டு இருந்தாள். நான் அந்த முலைகளைப் பிடித்துக் கொண்டு சப்பத் தொடங்கி விட்டேன், ” ம் ஆகா ம் ஆகா. . ” என்று முனறிக்கொண்டு இருந்தாள். அவளின் முலைகளைக் கசக்கிப் பிடித்துவிட்டு, கீழே இறக்கி மன்மத புண்டையைச் சுவைத்தேன். அவள் சுகத்தில் கதறிக் கொண்டு இருந்தாள். பின்னர் எழுந்து நின்று பூலை எடுத்து வாயில் சொருகினேன். திடீர் என்று மாமா வந்து விட்டார். இருவரும் அவசரமாக ஆடைகளை அணிந்து கொண்டோம். அவள் ஒன்றும் அறியாத பெண் போன்று நின்று கொண்டு இருந்தாள். இருவருக்கும் பத்தியில் எழுந்து வந்ததில் மிகவும் வருத்தத்தில் இருந்தோம். அதன்பின் அடுத்த வாய்ப்புக்கு காத்துக்கொண்டு இருந்தோம். என் ஆசை நிறைவேறவில்லை. அவளுக்கு வேறு ஒரு விவசாயியுடன் திருமணம் நடந்தது. நானும் வேலையாக இருந்து விட்டேன். அவள் குழந்தை பெற்று ஒரு தாயாகவே மாறிவிட்டாள். இருவரும் சொந்தக்கார கல்யாணத்தில் சந்தித்துக் கொண்டோம். அவளை ஒரு விதமான அழகில் இருந்தாள். அவளின் அந்த பெருத்த முலை சுன்னியை ஆடவைத்தது. என் அருகில் வந்து நீண்ட நேரம் பேசிவிட்டு, கிளம்பினாள். அன்று இரவு அவளின் அம்மா வீட்டில் பைக்கில் அழைத்துச் சென்று விடுமாறு கூறினாள். அவள் சிவப்பு நிற சேலை அணிந்து கொண்டு இருந்தாள். வினோதா பின் அமர்ந்து கொண்டு வந்தால், பெருத்த முலைகள் தொடர்ந்து உரசிக் கொண்டு வந்தது. கையை என் பூல் மேல் வைத்துக் கொண்டு அமுக்கிக் கொண்டு வந்தாள். என் சுன்னி விறைத்துக் கொண்டது. அவளின் முலைகள் முதுகில் அழுத்தியவாறு இருந்தது. இருவருக்கும் பழைய மலரும் நினைவுகள் வந்தது. அவளின் வீட்டின் அருகில் வினோதா அம்மா நின்று கொண்டு காத்துக்கொண்டு இருந்தாள். அவளை அங்கு இறக்கி விட்டு, சிறிது நேரம் பேசிவிட்டுப் புறப்பட்டுச் சென்றேன். அவளுக்கு என்மேல் இன்னும் ஆசை இருப்பதை அறிந்து கொண்டேன். ஆறு மாதத்துக்குப் பிறகு. . . . நான் எப்பொழுது போன்றும் வேலைக்குக் கிளம்பிக் கொண்டு இருந்தேன். என் பெற்றோர்கள் அன்று மாலை வெளியூருக்கு வினோதா அம்மாவுடன் கல்யாணத்துக்குச் செல்வதாகக் கூறினார்கள். வருவதுக்கு 3 நாட்கள் ஆகும் என்று தெரிவித்தார்கள். நான் வேலைக்குச் சென்றுவிட்டு மாலை வீட்டுக்கு வந்தேன். வீட்டில் உள் புறம் பூட்டி இருந்தது. நான் கதவைத் தட்டினேன். கதவைத் திறந்தவுடன் ஆச்சரியம் காத்துக்கொண்டு இருந்தது. வினோதா ! கதவைத் திறந்தாள். வீட்டில் அம்மா, அப்பா, கணவர், குழந்தை அனைவரும் கல்யாணத்துக்குச் சென்று விட்டார்கள். எனக்குச் செல்வதற்குப் பிடிக்கவில்லை. ஆகையால் உங்கள் வீட்டுக்குத் தங்கலாம் என்று வந்துவிட்டேன் என்று கூறினாள். சாப்பாடு எடுத்து வைத்து இருக்கிறேன், வந்து சாப்பிடு என்று அழைத்தாள். அவளை இன்று இரவு சாப்பிட்டு விடலாம் என்று முடிவு செய்து வைத்து இருந்தேன். நான் ஷார்ட்ஸ் மற்றும் டீ-ஷர்ட் மாற்றிக்கொண்டு அறையில் இருந்து வந்தேன். அவள் ரோஸ் கலர் நிறத்தில் லேசான புடைவை அணிந்து கொண்டு, கருப்பு நிற ப்ளௌஸ் உள்ளே முலையைத் தாங்கிப்பிடித்துக் கொண்டு இருந்த ப்ராவை நன்றாகப் பார்க்க முடிந்தது. நெற்றியில் போட்டு வைத்துக் கொண்டு, தலை முழுவதும் மல்லிகை பூ வைத்துக் கொண்டு மங்களகரமாக இருந்தாள். இருவரும் சாப்பிட்டு முடித்து விட்டு, அரைமணி நேரமாகப் பேசிக்கொண்டு இருந்தோம். அவளை பார்த்துப் பேசிக்கொண்டு இருக்கும் போது சுன்னி விறைத்துக் கொண்டு ஜட்டியை விட்டு வெளியே வரத் துடித்துக் கொண்டு இருந்தது. நான் நாற்காலியில் இருந்து எழுந்து டிவி போட்டு விட்டு, அவள் அருகில் அமர்ந்தேன். அவள் டிவி பார்த்துக் கொண்டு இருந்தாள். இருவரும் அடுத்த 5 நிமிடத்துக்கு அமைதியாகப் பேசாமல் இருந்தோம். பிறகு அவளின் தோள்பட்டை மீது கையை வைத்தேன். என்னை எதுவும் சொல்லாமல் கண்களைப் பார்த்து விட்டு, உதட்டைக் கடித்தாள். அவளின் உதட்டில் முத்தம் கொடுத்தேன். அவளும் பதிலுக்கு முகம் மற்றும் உதடு என்று அருமையாக முத்தம் கொடுத்துக் கொண்டு இருந்தாள். அவளை தூக்கிக் கொண்டு படுக்கை அறைக்கு சென்றேன். வினோதாவை தூக்கிப் படுக்கையில் போட்டு விட்டுப் பார்த்தேன், மிகவும் கவர்ச்சியாக இருந்தாள். பின்னர் அவளின் மீது சாய்ந்து சேலையை உருவினேன். அவள் ப்ளௌஸ் மற்றும் பாவாடை மட்டும் அணிந்து கொண்டு இருந்தாள். அவளின் ப்ளௌஸ், ப்ரா என்று அனைத்தும் கழட்டிவிட்டேன். முலைகளை வாயில் வைத்துக் கடித்துக் கொண்டு இருந்தேன். அவளின் காம்பில் இருந்து பால் வடியத் தொடங்கியது. நன்றாகச் சுவைத்துக் குடித்தேன். ஆற்றல் அதிகம் ஆனது. பின்னர் அவளின் பாவாடை மற்றும் ஜட்டியைக் கழட்டி எறிந்து, இரு தொடைகளையும் நன்றாக விரித்துப் பார்த்தேன். புண்டை முழுவதும் முடிகள் நிறைந்து இருந்தது. என் பெரிய சுன்னியை மெதுவாகப் புண்டையின் உள்ளே சொருகினேன். “ஆஹா. . . ” என்று தொடங்கினாள். அவளின் கதறல் சத்தத்தைக் கேட்டு, அடித்து கூதியை கிழிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். சுன்னியின் தோலைக் கீழே இழுத்து விட்டு, புண்டைக்குள் சொருகினேன். உள்ளே, வெளியே என்று வேகமாக அடித்து கொண்டு இருந்தேன். மென்மையாக சென்று வந்தது. முதலில் வலியில் துடித்து கொண்டு இருந்த வினோதா, பிறகு சுகத்துக்கு அடிமையானாள். பின்னர் வேகத்தை கூட்டினேன். இரு முலைகளையும் பிடித்து கொண்டு, பூலை கூதியில் சொருகி வேகமாக அடித்து கொண்டு இருந்தேன். “ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ம் ம் ம் ம் ம் ம் ம். . . . . ” என்று கதறி கொண்டு இருந்தாள். கண்களை மூடிக்கொண்டு உதட்டை கடித்து கொண்டு செக்ஸ் அனுபவத்தை என்ஜோய் செய்து கொண்டு இருந்தாள். அவளை தூக்கிவைத்து அடிக்க ஆரம்பித்தேன். இடுப்புடன் சேர்ந்து அணைத்து சுவற்றில் வைத்து வேகமாக அடித்துக்கொண்டு காம்பை உதட்டில் வைத்து சப்பிக்கொண்டு சுகத்தை அனுபவித்துக் கொண்டு இருந்தேன். “ம் ம் வேகமாக பண்ணு டா!” என்று கதறி கொண்டு இருந்தாள். இறுதியாக சூடான விந்து புண்டைக்குள் அடித்து நிரப்பியது. அவளின் கூதி முழுவதும் விந்தால் நிரம்பி வழிந்தது. பிறகு என் முன் முட்டிபோட்டு கொண்டு பூலை எடுத்து வாயில் வைத்து கொண்டு ஊம்புவதற்குத் தயார்ப் படுத்திக் கொண்டாள். பூலை மெதுவாக எடுத்து உதட்டில் வைத்து கொண்டு ஊம்பினாள். மேலும் கீழும் வேகமாக சப்பிகொண்டு இருந்தாள். எனக்கு கண்கள் சொருகியது. அவளுடன் நடை பெற்ற செக்ஸ் அனுபவம் வாழ்வில் மறக்க முடியதா அனுபவமாக அமைந்து விட்டது. சுன்னி தொண்டை வரை சென்று வந்தது. சுமார் 30 நிமிடம் சப்பிக்கொண்டு இருந்தாள். அதன்பின் விந்து முழுவதும் வாயில் இறங்கியது. ஒரு சொட்டு விடாமல் அனைத்தும் குடித்து விட்டாள். பிறகு அன்று இரவு முழுவதும் நிர்வானமாக படுத்து கொண்டு பலமுறை மேட்டர் அடித்து கொண்டோம். அதன்பின் அவளின் கணவனுக்கு தெரியாமல் சில பல முறை செக்ஸ் பழக்கம் வைத்து கொண்டோம். Related Posts பவர் கட் Sex Stories In Tamil தங்கையின் தாகம் – 3 – Tamil Story - Sex Stories கிராமத்து காவியம் – Tamil Story - Sex Stories சஹானாவின் சங்கீதம் 2 – Tamil Story - Sex Stories Categories Mami Sex Stories In Tamil, Office Tamil Sex Stories, Pondati Sex Stories Tamil, Purushan Sex Stories In Tamil, Tamil dirty stories, Tamil Kamaveri, Tamil Sex Stories
போர்வந்தால் உயிரின் பொருட்டு அஞ்சாமல் போர் செய்யத் துணியும் வீரர், அரசன் சினந்தாலும் தம்முடைய சிறப்புக் குன்றாதவர் ஆவர். சாலமன் பாப்பையா உரை: போர் வந்தால் தம் உயிர்க்கு அஞ்சாது செல்லும் வீரர், அப்போரை வேண்டா என்று அரசு சினந்து தடுத்தாலும், தம் வீரத்தில் குறைய மாட்டார். கலைஞர் உரை: தலைவன் சினந்தாலும் சிறப்புக் குறையாமல் கடமை ஆற்றுபவர்கள்தான், போர்களத்தில் உயிரைப் பற்றிக் கலங்காத வீர மறவர்கள் எனப் போற்றப்படுவர்.
சமீபத்தில் வெளியான கங்குபாய் கத்தியாவதி மூலம் இந்திய ரசிகர்களின் மனங்களில் மாஃபியா குயினாக இடம்பிடித்தவர். இவரின் க்யூட்டி ப்யூட்டி ரகசியம் என்ன என்று தேடினோம். நீங்கள் நம்புவீர்களா? அலியா பல க்ரேசியான, வித்தியாசமான உணவுமுறைகளை எல்லாம் பின்பற்றி இருக்கிறார். ஒரு காலத்தில் கோழி மற்றும் காய்கறிகள் மட்டுமே சாப்பிட்டிருக்கிறார். புகழ்பெற்ற ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகருடன் ஓர் உரையாடலில், அலியா இனி பைத்தியக்காரத்தனமான டயட்களை பின்பற்றப்போவதில்லை என்றும், முழுமையான நிறைவான மற்றும் ஆரோக்கியமான உணவுத் திட்டத்தை முன்னெடுப்பதில் முழு நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் வெளிப்படுத்தினார். இப்பொழுதெல்லாம் அலியாவின் தினசரி உணவுத் திட்டங்கள் எளிமையானவை மற்றும் குழப்பங்கள் இல்லாதவைதான். காலை உணவு என்பது நாளின் மிக முக்கியமான பகுதியாகும், அலியாவும் அதையே முழுமையாக ஆதரிப்பவர். எனவே, காலை உணவு வேளையை தனக்கு நிறைவைத் தரும் உணவுகளையும் கலோரிகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் உணவுகளையும் கொண்டு தொடங்க விரும்புவார். இவரது காலை உணவுத் தட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உணவுகள் நிறைந்திருக்கும். பொதுவாக அகாய் பெர்ரி, பப்பாளி போன்ற பருவகால பழங்களைத் தவிர்ப்பதே இல்லை. சர்க்கரை இல்லாமல் மூலிகை தேநீர் அல்லது காபியுடன் தன் நாளைத் தொடங்க விரும்புகிறார். பின்னர், போஹா அல்லது முட்டை சாண்ட்விச் போன்றவற்றைக் கொண்டு பசியை சமாதானப்படுத்துகிறார். ஸ்னாக்ஸ் சாப்பிடத்தோன்றினால், வேர்க்கடலை அல்லது மக்கானா போன்ற ஆரோக்கியமானவற்றை மட்டும் அவர் கொரிப்பதை ஷூட்டிங் ஸ்பாட்டில் நாம் காணலாம். அலியாவின் உணவுத் திட்டம் இவரை நாள் முழுவதும் சிறிய அளவிலும் தினசரி ஆறேழு முறையும் சாப்பிடவைக்கிறது. எவ்வளவு பிஸியாக வேலை செய்தாலும் சாப்பிடுவதைத் தவறவிடுவதில்லை. ஓவர் ஈட்டிங் -ஐத் தவிர்க்க இந்தத் திட்டத்தை கடைப்பிடிப்பது ஒரு சிறந்த வழிமுறை என்பது அலியாவின் நம்பிக்கை. இரவு உணவுக்கான அலியாவின் திட்டம் எளிமையானது. ஆடம்பரமானது எதுவும் இல்லை. பருப்பு-சாதம் மற்றும் தயிர்-சாதம் அவருக்கு மிகவும் பிடித்தமானவை. தண்ணீர் இன்றி எந்த டயட்டும் செல்லுபடியாகாது. அலியா ஒரு தண்ணீர் பைத்தியம் எனலாம். எப்பொழுதும் ஹைட்ரேட்டட் ஆக இருக்க அவர் பெரும் சிரத்தை எடுக்கிறார். மேலும், வொர்க்அவுட்டில் சமரசம் செய்துகொள்வது அலியாவின் வழியல்ல. அவர் நிறைய பைலேட்ஸ் மற்றும் கார்டியோ செய்கிறார். இதனால் அவர் எப்போதும் தன்னை ஃபிட்டாகவும் வலுவாகவும் உணர்வதாகச் சொல்கிறார். ஜிம்மில் இப்படி வேர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சிகள் செய்வதால் ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்களை சேமித்து பது அவருக்கு முக்கியமானது. தேங்காய்த் தண்ணீர் அல்லது எலுமிச்சைப் பழம் போன்ற சப்ளிமென்ட்ஸில் வலுவூட்டப்பட்ட ஏதாவது ஒன்றை உட்கொள்வது, அவரின் அன்றைய தினத்தை சுறுசுறுப்பாக்குகிறது. ஃபிட்னெஸ்க்கு உடற்பயிற்சி மட்டுமல்லாது, யோகாவும், நடனமாடுதலும் இவரின் ஃபேவரைட். ஜும்பா போன்ற நடன உடற்பயிற்சிகளில் பெரிதாக ஆர்வம் இல்லாவிட்டாலும் நன்றாக உடலை வளைத்து நடனமாடும்போது உடலின் தேவையற்ற கலோரிகள் கரைகின்றன என்பதால் நடனமாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.இயற்கையான அழகுக்கே முக்கியத்துவம் தருவதால், ஆர்கானிக் பொருட்களைக் கொண்டு சருமத்தையும் கூந்தலையும் பராமரிப்பதையே விரும்புகிறார். தனக்கென தனியாக ஃபிட்னெஸ் குரு ஒருவரையும் வைத்திருக்கிறார். வொர்க் அவுட், டயட், ஓய்வு என எல்லாவற்றையும் அவர் திட்டமிடும்படிதான் செய்கிறார் அலியா. ‘ஒரு நிபுணரிடம் உங்களை ஒப்படைக்கும்போதுதான், நம்முடைய ஹெல்த் பற்றிய கவலையின்றி செய்ய வேண்டிய வேலைகளைச் சிறப்பாகச் செய்ய முடியும்’ என்கிறார்.‘அழகு என்பது தனியாக இல்லை. நாம் ஃபிட்டாக, ஆரோக்கியமாக இருந்தால் அதுவே நம்மை தன்னம்பிக்கையோடு இருக்கச் செய்து நம்மை அழகாகக் காட்டும் எனவே ஃபிட்தான் எப்போதும் கவர்ச்சியானது. கவர்ச்சி என்பது ஆடையிலோ தோற்றத்திலோ இல்லை’ என்று தத்துவம் பேசுகிறார் இந்த க்யூட் கங்குபாய். தொகுப்பு: ஆர்.மோனிகா மேலும் செய்திகள் X க்ளினிக்...சொல்லித் தெரிவதுதான் மன்மதக் கலை! X க்ளினிக்... சொல்லித் தெரிவதுதான் மன்மதக் கலை! X க்ளினிக்... சொல்லித் தெரிவதுதான் மன்மதக் கலை! X க்ளினிக்... சொல்லித் தெரிவதுதான் மன்மதக் கலை! வெள்ளைப்படுதல் (Leucorrhoea) திருமண பந்தத்தை தாம்பத்ய வாழ்க்கை உறுதியாக்கும்! மருத்துவம் ஆரோக்கியம் காக்கும் வைட்டமின் ங போல் வளை... திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!! தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!! குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..! புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!! சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு
(நபியே!) இது உம்மீது இறக்கியருளப்பட்டிருக்கும் வேதமாகும். எனவே, இதனைப் பற்றி உமது உள்ளத்தில் எவ்விதத் தயக்கமும் ஏற்பட வேண்டாம். (சத்தியத்தை மறுப்போர்க்கு) இதன் மூலம் நீர் எச்சரிக்கை செய்ய வேண்டும். மேலும், இறைநம்பிக்கை கொண்டோர்க்கு இது ஓர் அறிவுரையாகத் திகழ வேண்டும் என்பதற்காகவே இது இறக்கி வைக்கப்பட்டது. இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுவதாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அறிவித்திருக்கிறார். இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, பவதாரிணி என மூன்று வாரிசுகள் இருக்கிறார்கள். மூவருமே படங்களுக்கு இசையமைத்து வருகிறார்கள். முதலில் சுஜயா என்ற பெண்ணை திருமணம் செய்தார் யுவன் சங்கர் ராஜா. கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுக் கொண்டனர். பிறகு ஷில்பா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்தார். யுவனுக்கும் ஷில்பாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுவதாக தனது ட்விட்டர் தளத்தில் கூறியுள்ளார். ” நான் மூன்றாவது திருமணம் செய்துகொள்ளவில்லை. அச்செய்தி பொய்யானது. ஆம். நாம் இஸ்லாம் மதத்தினை பின்பற்றுகிறேன். எனது குடும்பத்தினர் எனது முடிவை ஏற்றுக்கொண்டார்கள். எனக்கும் என் அப்பாவிற்கும் எந்தவிதத்திலும் கருத்து வேறுபாடு இல்லை” என்று கூறியுள்ளார் யுவன்.
கேரட் மிகவும் மலிவாக எளிதில் கிடைக்கும் காய்களில் ஒன்றாகும். அதிக நன்மைகள் நிறைந்த கேரட் அனைவராலும் விரும்பி உண்ணும் சுவை நிறைந்த காயாகும். நாம் அனுதினமும் பயன்படுத்தும் … Read more நெல்லி பொடி நெல்லி பொடி பயன்கள் நெல்லியில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளதால் இது இரத்த சோகைக்கு நல்ல மருந்தாகும். நெல்லியில் அறுசுவையில் உப்பு … Read more முடக்கத்தான் பொடி முடக்கத்தான் பொடி பயன்கள் முடக்கத்தான் முடக்கு அறுத்தான் என்பது நாளடைவில் முடக்கற்றான் என்றானது. கசப்புத் தன்மையுடைய முடக்கத்தான் முடக்கு வாத நோய்களை குணமாக்குவதால் முடக்கத்தான் என்று பெயர் … Read more கரிசலாங்கண்ணி பொடி கரிசலாங்கண்ணி பொடி பயன்கள் கரிசலாங்கண்ணி அதிக அளவில் மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையாகும். இதில் எக்லிப்டால், டெஸ்மீத்தைல், அக்கோண்டனால், ஹென்ட்ரை, ஸ்டிக்மாஸ்டீரால், தங்கச்சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் … Read more ஆவாரம் பூ பொடி ஆவாரம்பூ பொடி பயன்கள் ஆவாரம்பூ துவர்ப்புத் தன்மை உடையது. இதில் தங்கச்சத்து நிறைந்துள்ளது. ஆவாரம் பூ பொடியை தினமும் ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வர சர்க்கரை … Read more கஸ்தூரி மஞ்சள் பொடி கஸ்தூரி மஞ்சள் பொடி பயன்கள் கஸ்தூரி மஞ்சள் முக அழகு சாதன பொருட்களில் ஒன்றாகும். இது அனைத்து வகை சருமத்திற்கும் கேடு விளைவிக்காத அலர்ஜி எதிர்ப்பு தன்மை … Read more எலுமிச்சை தோல் பொடி பயன்கள் எலுமிச்சை தோல் பொடியினைக் கொண்டு ஃபேஸ் பேக் முதல் பாதத்திற்கு அழகு தரும் பெடிக்யூர் வரை பயன்படுத்தலாம். எலுமிச்சை தோலில் அதிக அளவு கலோரிகள், கார்ப்ஸ், நார்ச்சத்து, … Read more ஆரஞ்சு தோல் பொடி ஆரஞ்சு தோல் பொடியின் பயன்கள் ஆரஞ்சு தோலில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்துள்ளது. இது இயற்கை அழகை விரும்பும் பெண்களுக்கு மிகச் சிறந்த அழகு சாதன பொருளாகும். … Read more முருங்கை இலை பொடி முருங்கை இலை பொடி பயன்கள் முருங்கையில் விட்டமின்கள், மினரல், அமீனோ ஆசிட்கள், வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம் மற்றும் புரோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. 10 கிராம் … Read more மருதாணி பொடி மருதாணி பொடி பயன்கள் மருதாணி பொடியானது இளநரையை தடுக்க அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனுடன் அவுரி பொடியை சேர்த்து பயன்படுத்தும் போது நம் கூந்தலுக்கு ஏராளமான நன்மைகள் … Read more ரோஸ் பொடி ரோஸ் பொடியின் பயன்கள் ரோஜாவிற்கு இயற்கையாகவே சருமத்தின் நிறத்தை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. ரோஜாவில் அதிகளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நல்ல ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். ரோஜா … Read more மண் சிகிச்சை மண்ணின் மகத்துவத்தை அறிந்து அதில் உள்ள மருத்துவ குணங்களை கொண்டு மண் சிகிச்சை முறைகளை சித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். பழங்காலங்களில் அனைத்து கிராமங்களிலும் மண் சிகிச்சை முறைகளை … Read more முகத்தில் உள்ள கருமை நீங்க வேண்டுமா? முக அழகு என்பது அனைவரும் விரும்பும் ஒன்றாகும். அதிலும் பெண்கள் முகத்தில் ஏதேனும் ஒரு சிறு பரு வந்தாலும் மிகவும் வேதனைப்படுவர். அநேக பெண்கள் வெள்ளை நிறத்தில் … Read more சர்க்கரை நோயில் இருந்து ஆரம்பத்திலேயே தப்பித்துக்கொள்ள… சர்க்கரைக்கேற்ற முருங்கை சர்க்கரை நோய் சர்க்கரை நோய் இன்றைய காலத்தில் அதிகளவில் காணப்படும் நோயாகும். நம் உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ … Read more உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் புழுக்கமான சீதோஷ்ண நிலை பெரும்பாலும் மே, ஜுனில் காணப்படுகிறது. வறட்சியான ஈரப்பதம் ஃபுளூ காய்ச்சலுக்கு ஈடான உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. மூக்கடைப்பு, டான்சில், குரல் வளை … Read more
ஸ்கிரீன் ஸ்கிராப்பிங் என்பது வலைத்தளங்களிலிருந்து தரவைப் பிரித்தெடுக்கப் பயன்படுத்தப்படும் ஒரு நுட்பத்தைக் குறிக்கிறது மற்றும் சில நேரங்களில் உள்ளடக்க ஸ்கிராப்பிங்கில் குழப்பமடைகிறது, இது வெப்மாஸ்டரின் ஒப்புதல் இல்லாமல் வலைத்தளங்களிலிருந்து உள்ளடக்கத்தை அறுவடை செய்ய கையேடு மற்றும் தானியங்கி வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது. ஸ்கிரீன் ஸ்கிராப்பர்கள் இணையத்திலிருந்து தகவல்களைப் பெறுவதற்கும் ஊர்ந்து செல்லும் செயல்முறையை எளிதாக்குவதற்கும் ஆகும். அவை ஜாவாஸ்கிரிப்ட், பைதான், ரூபி, சி ++, பி.எச்.பி, ரூபி மற்றும் பிற நிரலாக்க மொழிகளில் தயாரிக்கப்படுகின்றன, மேலும் அவை வலை அறுவடை செய்பவர்கள் மற்றும் தரவு பிரித்தெடுப்பவர்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. PromptCloud - நம்பகமான திரை ஸ்கிராப்பிங் சேவை: ப்ராம்ப்ட் கிளவுட் அதன் ஊடாடும் வலை வலம் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட தரவு ஸ்கிராப்பிங் அம்சங்களுக்காக அறியப்படுகிறது. 110 க்கும் மேற்பட்ட மொழிகளில் இணையத்திலிருந்து தகவல்களைத் துடைக்க இது நம்மை அனுமதிக்கிறது. மேலும், எங்கள் வலை உள்ளடக்கத்தை வலம் வரலாம் மற்றும் தளங்களின் தேடுபொறி தரவரிசைகளை மேம்படுத்தலாம். PromptCloud இன் சொந்த தரவுத்தளத்தில் தரவைச் சேமிக்க அல்லது ஆஃப்லைன் பயன்பாடுகளுக்காக எங்கள் வன்வட்டில் பதிவிறக்க முடியும். இந்த கிளவுட் அடிப்படையிலான ஸ்கிரீன் ஸ்கிராப்பர் மூலம் விவாத மன்றங்கள், மறுஆய்வு வலைத்தளங்கள், சமூக ஊடக நெட்வொர்க்குகள், பயண இணையதளங்கள், ஈ-காமர்ஸ் தளங்கள் மற்றும் செய்தி தளங்களை நீங்கள் எளிதாக குறிவைக்கலாம். PromptCloud உங்கள் வலைப்பக்கங்களை ஊர்ந்து செல்லவும், குறியிடவும் வல்லது மற்றும் Google, Bing மற்றும் Yahoo முடிவுகளில் உங்கள் உள்ளடக்கத்தைக் காணும்படி செய்கிறது. 2009 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட, ப்ராம்ப்ட் கிளவுட் தரவு-ஒரு-சேவை தீர்வுகளில் ஒரு முன்னோடி மற்றும் உலகளாவிய தலைவராக உள்ளது. அதன் பணியின் ஒரு ஒருங்கிணைந்த பகுதி தரவு பிரித்தெடுத்தல் ஆகும், இது பல்வேறு கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பங்களுடன் செய்யப்படுகிறது. ப்ராம்ப்ட் கிளவுட் நிறுவனங்கள் மற்றும் புரோகிராமர்கள் இணையத்திலிருந்து கட்டமைக்கப்பட்ட தரவைப் பெற உதவுகிறது. அதன் தரவு பிரித்தெடுக்கும் அம்சங்கள் நிதி, பயணம், சந்தைப்படுத்தல், சுகாதாரம், பகுப்பாய்வு மற்றும் பிற உள்ளிட்ட பல களங்களிலிருந்து முக்கிய பிராண்டுகளுக்கு ஏற்றது. 1. ப்ராம்ப்ட் கிளவுட் மூலம் உள்ளடக்க கட்டமைப்புகளைப் பிடிக்கவும்: PromptCloud இன் மிகவும் தனித்துவமான அம்சங்களில் ஒன்று, இது வெவ்வேறு உள்ளடக்க கட்டமைப்புகளைப் பிடிக்க உதவுகிறது மற்றும் தகவல்களைத் துடைப்பதை எளிதாக்குகிறது. உதாரணமாக, ஈ-காமர்ஸ் தளங்களிலிருந்து தரவைத் துடைக்க மற்றும் உங்கள் சொந்த வலைத்தளத்திற்கான விலை தகவல், படங்கள் மற்றும் தயாரிப்பு விளக்கங்களைப் பெற நீங்கள் ப்ராம்ப்ட் கிளவுட் பயன்படுத்தலாம். இந்த ஸ்கிரீன் ஸ்கிராப்பர் உங்கள் தரவின் தரத்தை பராமரிக்கும் மற்றும் செயல்முறை முடிந்தவுடன் அதை உங்கள் வன்வட்டில் பதிவிறக்கும். 2. இந்த கருவி மூலம் உங்கள் தளத்தை மேம்படுத்தவும்: PromptCloud இணையத்தில் சிறந்த வலை கிராலர்களில் ஒன்றாகும். இது உங்கள் தளத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் அதன் அளவிடுதல் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்துகிறது. நூற்றுக்கணக்கான முதல் ஆயிரக்கணக்கான வலைப்பக்கங்கள் வரை தரவைப் பிரித்தெடுக்க விரும்பினால் இதுபோன்ற அம்சங்கள் முக்கியம். 3. இது வெவ்வேறு வடிவங்களுக்கு தரவை இறக்குமதி செய்கிறது: தரவு ஸ்கிராப்பிங் முடிந்ததும், ப்ராம்ப்ட் கிளவுட் CSV மற்றும் JSON வடிவங்களுக்கு தகவல்களை இறக்குமதி செய்யும். இது உங்கள் தரவை Google இயக்ககம், டிராப்பாக்ஸ் மற்றும் பாக்ஸ்.நெட்டில் சேமிப்பதற்கான வசதியையும் வழங்குகிறது. மாற்றாக, நீங்கள் அதை ஒரு நெகிழ் இயக்ககத்தில் நகலெடுக்கலாம் அல்லது பிற்கால பயன்பாடுகளுக்கு உங்கள் வன் வட்டில் பதிவிறக்கலாம். ஒரு உள்ளீட்டு CSV கோப்பு மற்றும் தரவுத்தள வினவல் ஒரு வலை படிவத்திற்கு உள்ளீட்டு மதிப்புகளை வழங்க உதவுகிறது, எனவே நீங்கள் CSV கோப்புகளை நூற்றுக்கணக்கான முக்கிய வார்த்தைகளுடன் எளிதாக உருவாக்கலாம் மற்றும் தனிப்பட்ட சொற்களுக்கான தேடல் படிவங்களை சமர்ப்பிக்கலாம். டைனமிக் தளங்கள் மற்றும் ஈ-காமர்ஸ் வலைத்தளங்களிலிருந்து தகவல்களைப் பெற கிட்டத்தட்ட எல்லா பழமையான திரை ஸ்கிராப்பர்களும் உங்களை அனுமதிக்காது. PromptCloud மூலம், நீங்கள் அனைத்து சிக்கலான மற்றும் மாறும் வலைத்தளங்களையும் குறிவைக்கலாம் மற்றும் அஜாக்ஸ், குக்கீகள், வழிமாற்றுகள் மற்றும் ஜாவாஸ்கிரிப்ட் மூலம் தளங்களை குறிவைக்கலாம்.
இவ்வசனத்தில் தாரிக் மீது சத்தியமாக என்று சொல்லப்பட்டுள்ளது. தாரிக் என்பது என்ன என்றும் அடுத்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது தாரிக் என்பது ஒளி வீசும் ஒரு நட்சத்திரத்தின் பெயர் என்பது இதிலிருந்து தெரிகின்றது. நட்சத்திரங்களில் அதிகாலையில் அதிகப் பிரகாசத்துடன் காட்சி தரும் விடிவெள்ளியைத் தான் தாரிக் என்று சொல்வார்கள். அகராதி நூல்களிலும் விடிவெள்ளி என்று தான் சொல்லப்பட்டுள்ளது. இரவு முழுவதும் தென்படாமல் திடீரென்று அதிகாலையில் வெளிச்சம் தருவதால் தாரிக் (திடீரென வெளிச்சம் தருவது) என்று சொல்லப்பட்டுள்ளது. அனைவரும் அன்றாடம் பார்க்கக் கூடிய அனைவரும் அறிந்து வைத்திருக்கக் கூடியதைத் தான் இவ்வசனம் சொல்கிறது. தாரிக் என்பதற்கு வேறு அர்த்தம் கொள்ளக் கூடாது என்பதற்காகவே அது ஒளிவீசும் நட்சத்திரம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இவ்வசனத்துக்கு நவீன காலத்துக்கு ஏற்ப விளக்கம் கொடுப்பதாக எண்ணிக் கொண்டு சிலர் புது விளக்கம் கொடுக்கின்றனர். அதாவது சப்தமிடக் கூடியது என்பது இதன் பொருள். நட்சத்திரங்களில் சப்தமிடக் கூடியவை இரண்டு லட்சத்துக்கு மேல் உள்ளதாகவும், அதைத் தான் இவ்வசனம் கூறுவதாகவும் இவர்கள் கூறுகின்றனர். திருக்குர்ஆனில் பல அறிவியல் உண்மைகள் கூறப்பட்டுள்ளன. ஆனால் இவ்வசனத்திற்கு இவர்கள் கொடுக்கும் அறிவியல் விளக்கம் ஏற்புடையதல்ல. தாரிக் என்பது ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தின் பெயர் என்றுதான் இவ்வசனம் கூறுகிறது. சப்தமிடும் இரண்டு லட்சம் நட்சத்திரங்களை குறிப்பிடுவதாகச் சொல்வது வலிந்து தினிக்கப்பட்ட கற்பனையாகவே தெரிகிறது. மேலும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து, மக்களின் கண்களுக்குத் தென்படாத நட்சத்திரங்களை இச்சொல் குறிக்கவில்லை. மக்கள் பார்க்கும் வகையில் ஒளி வீசும் விடிவெள்ளியையே இது குறிக்கிறது. இதை அடுத்த வசனம் தெளிவாகச் சொல்கிறது. எனவே தான் சப்தமிடும் நட்சத்திரம் என்று நாம் பொருள் கொள்ளவில்லை. தாரிக் என்பதற்கு கதவைத் தட்டுதல், சம்மட்டியால் தட்டுதல் என்ற பொருள் இருப்பது போல் திடீரென்று தோன்றுதல், எதிர்பாராமல் வருதல், யாருக்கும் தெரியாமல் வருதல் என்று பல அர்த்தங்கள் உள்ளன. ஆனால் இந்த இடத்தில் சப்தமிடும் நட்சத்திரம் என்பது பொருந்தாது.
அரசியல்வாதிகள் அரசியல் செய்ய சாதாரண மக்களை எப்படியெல்லாம் பகடைகாயாக பயன் பயன்படுத்துகிறார்கள் என்று சொல்லும் படம் படவீடு. லிஜு கிருஷ்ணன் இயக்கத்தில் நிவின் பாலி, அதிதி பாலன், ஷாமி திலகன் நடித்துள்ளார்கள். மல்லூர் என்ற ஊரில் விளையாட்டு வீரரான ரவி (நிவின் பாலி) ஒரு விபத்தில் சிக்கியாதால் எந்த வேலைக்கும் போகாமல் வீட்டில் இருக்கிறார். புதிதாக வளர வேண்டும் என்று நினைக்கும் அரசியல்வாதி குயாலி (ஷாமி திலகன் ) மல்லூர் மக்களுக்கு நலத்திட்டம் என்ற பெயரில் வீடு கட்டி கொடுத்து ஈர்க்க முயல்கிறார். இந்த திட்டத்தின் அடிப்படையில் ரவியின் வீட்டை புனரமைக்கிறார். ரவிக்கு இது பிடிக்கவில்லை. ரவி ஒரு சோம்பேறி. வேலைக்கு செல்லாதவன் என்றெல்லாம் ஊர் மக்களும், எதிர் கட்சியினரும் இகழ்கிறார்கள். படவீடு இந்த கோபத்தில் அரசியல்வாதி குயாலி தன் வீட்டின் முன் வைத்திருந்த விளம்பர கல்வெட்டை அடித்து உடைத்து விடுகிறார் ரவி. இந்த பிரச்சனை மிக பெரிய பகையாக ரவிக்கும் அரசியல்வாதிக்கும் இடையே மாறுகிறது. அடுத்தடுத்து நடக்கும் விஷயங்களை சமகால அரசியல்களத்தில் சொல்லியிருக்கிறார் லிஜு. திரைக்கதை வேகமாக நகராவிட்டாலும் காட்சிப்படுத்திய விதம் நம்மை ஈரக்கிறது. இலவசம் என்ற பெயரில் அரசும் அரசியல்வாதிகளும் செய்யும் கயமைகளை இப்படம் நன்றாக சொல்லியுள்ளது. ஊரின் முன் அசிங்கப்படுவது, துன்பத்திலிருந்து மீண்டு நம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்வது என குறைவான வசனங்களில் மிக சிறந்த நடிப்பை தந்துள்ளார் நிவின். வேலையில்லாத நபராக நடிக்க முன் தொப்பையுடன் திரையில் வந்ததற்கு நிவினுக்கு சபாஷ் போடலாம்.அத்தையாக வரும் ரம்யா சுரேஷ் நாம் அன்றாடம் சந்திக்கும் பெண்ணை போல நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். நிவின் பாலி அரசியல்வாதி ஷாமி திலகன் உதட்டில் சிரிப்பும் பார்வையில் விஷமுமாக வேறொரு பரிணாமத்தில் நடிப்பை தந்துள்ளார். சில இடங்களில் தனது தந்தை திலகனை நினைவு படுத்துகிறார்.அதிதி பாலன் அமைதியாக வந்து போகிறார். கோவிந்த் வசந்தாவின் இசையும், தீபக்.D. மேனன் ஒளிப் பதிவும் சேர்ந்து ஒரு காட்சிகளின் மேஜிக்கை (visuval mgic ) தந்திருக்கிறது. இலவசங்களுக்கு பின் மிக பெரிய அரசியல் சதுரங்கம் இருப்பதை டைரக்டர் தெளிவாக புரியவைத்துள்ளார். நில உடமை அரசியலை ஒரு வீட்டை வைத்து சொல்லியுள்ளார். "வீடு நமது, நிலம் நமது, தேசம் நமது" என்று படம் இறுதியில் சொல்லப்படும் வசனங்கள், படம் முடிந்து பல மணிநேரம் நம் மனதில் நிற்கிறது.
ஜனவரி திங்கள் முதலாம் நாளில் புத்தாண்டு மலர்ந்துள்ளது. இச்சிறப்பான தருணத்தில், நேயர்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கின்றேன். சீனாவை பொறுத்த வரை, 2008ம் ஆண்டு மிகவும் அசாதாரண ஆண்டாகும். கடந்த ஆண்டின் துவக்கத்தில், சீனாவின் தென் பகுதி பனி மற்றும் மழை சீற்றத்தால் அவதிக்குள்ளானது. 2008ம் ஆண்டு மே 12ம் நாள், சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் வென் சுவான் மாவட்டத்தில் ஏற்பட்ட ரிக்டர் அளவு கோலில் 8.0 ஆக பதிவான நிலநடுக்கத்தில் குழந்தைகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பாமர மக்கள் உயிரிழந்தனர். ஆனால், அந்த இயற்கை சீற்றங்களில், நேயர்கள் உள்பட அனைத்து உலக மக்களும் சீன அரசு மற்றும் மக்களுக்கு மாபெரும் ஆதரவையும் உதவியையும் வழங்கியுள்ளனர். உங்களது மனித நேய எழுச்சியை அச்செயல் முழுமையாக வெளிப்படுத்தியுள்ளது. சீனாவில் கவனம் செலுத்தி வருகின்ற தமிழ் மொழி நேயர்கள் அனைவருக்கும் நான் உன்னத மதிப்புக்களை உரித்தாக்குகின்றேன். கடந்த ஆண்டு, நான் விளையாட்டுச் செய்திகளை மொழி பெயர்த்து, வாசித்து வருகின்றேன். 12 திங்கள் காலப் பணியில் எளிய மற்றும் சிக்கலான அனுபவம் அமைந்திருந்த்து. ஆனால் இவ்வாண்டில், இலக்கணம், உச்சரிப்பு, வாக்கிய அமைப்பு முறை ஆகியவற்றில் பல புதிய அம்சங்களை நான் கற்றுக்கொண்டேன். குறிப்பாக, கடிதங்கள் மூலம், பல நேயர்களே எனக்கு ஊக்கம் அளித்தனர். 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, நேயர்களுக்கு நாங்கள் ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட நகரங்கள், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு சீனாவிலுள்ள வெளிநாட்டு தூதரின் நல்வாழ்த்துக்கள் முதலிய சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கினோம். இந்த நிகழ்ச்சிகள் மனநிறைவு அளித்ததை நீங்கள் தெரிவித்தீர்கள். மிக்க நன்றி. இப்பணிகளின் மூலம், என் மொழி பெயர்ப்புத் திறனையும் தொடர்ந்து உயர்த்தி வருகின்றேன். இதற்காக நான் மேலும் அதிகமாக பாடுபட வேண்டியுள்ளது. 2009ம் ஆண்டில், உங்களுக்கு மேலதிக மகிழ்ச்சியை எங்கள் நிகழ்ச்சி வழங்க வேண்டுமென விரும்புகின்றேன். நாம் இணைந்து வெற்றியடைய என்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன். உங்களுடன் நான் தொடர்பு கொள்ள முயன்று வருகின்றேன். எங்களின் சேவைப் பணிக்கு நீங்கள் மேலும் அதிக ஆதரவு அளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். உங்களது ஆதரவு, எங்கள் பணிக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக விளங்கும். எதிர்காலத்தில், உங்கள் நல்ல நண்பராக மாற வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். புத்தாண்டு வாழ்துக்கள்.
காலநிலை மாற்றம் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புணர்வுக்காக பாகிஸ்தான், இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளிடையே கிரிக்கெட் சுற்றுப்போட்டியை நடாத்துவுள்ளதாக பாகிஸ்தான் பாகிஸ்தான் காலநிலை மாற்ற அமைச்சர் முர்ஷிதுல்லாஹ் கான், அந்நாட்டுக்கு சென்றுள்ள அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் காலநிலை மாற்ற அமைச்சர் முர்ஷிதுல்லாஹ் கான் மற்றும் அந்நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று (12) அவரது அமைச்சில் நடைபெற்றது. பாகிஸ்தான் நாட்டில் குடிநீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு முறைமைகள், நடைமுறைப்படுத்தப்படும் வெள்ளத்தடுப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் கடல் நீரை குடிநீராக சுத்திகரிக்கும் தொழில்நுட்பங்கள் தொடர்பாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் இச்சத்திப்பில் விரிவாக கலந்துரையாடினார். காலநிலை மாற்ற அமைச்சர் முர்ஷிதுல்லாஹ் கான், பாகிஸ்தானின் காலநிலை மாற்றம் தொடர்பாகவும் நீர் சுத்திகரிப்பு சம்மந்தமாகவும் விளக்கினார். உறைந்த பனிப்பாறைகள் மற்றும் அணை ஆகியவற்றிலிருந்து நீரை பெற்றுக்கொள்ள புதிய அணைகள் கட்டப்படுகின்றன. சீன நீர்வள முகாமைத்துவ முறையை திறம்பட நீர் முகாமைத்துவத்துவத்துக்கு பயன்படுத்துவது தொடர்பாகவும் அவர் விளக்கமளித்தார். காலநிலை மாற்றத்தின் பல எதிர்மறை தாக்கங்கள் நிகழ்கின்றன. இதனை எதிர்கொள்ளும் நோக்கில், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் இயற்கை அனர்த்தம் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்காக “பசுமைப் போட்டி”தொடரொன்று இலங்கை, பாகிஸ்தான், இந்தியா அணிகளுக்கிடையில் நடத்தப்படவேண்டும் என பாகிஸ்தான் அமைச்சர் தெரிவித்தார். பாகிஸ்தானில் காலநிலை மாற்றத்துக்கு என தனியான அமைச்சு இயங்குவது வரவேற்கத்தக்கது. பாகிஸ்தானின் நிபுணத்துவத்திலிருந்து பேரழிவு முகாமைத்துவம் தொடர்பாக அறிந்துகொள்ள வேண்டும் எனவும், பொது விழிப்புணர்வுக்காக கிரிக்கெட் போட்டியை நடாத்தும் பாகிஸ்தானின் திட்டத்தையும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பாராட்டினார். இந்தப் போட்டியை ஒழுங்கமைப்பது குறித்து இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையுடன் பேசுவதாகவும் அவர் இதன்போது உறுதியளித்தார். இதேவேளை, பாகிஸ்தான் பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் குர்ஷித் ஷா மற்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இடையிலான சந்திப்பும் நேற்று (12) எதிர்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இருதரப்பு உறவுகள் குறித்து நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பாகிஸ்தான் நாட்டு மக்களின் வாழ்வாதாரம், சனத்தொகை மற்றும் விவசாயம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், இஸ்லாமாபாத் நகரில் நடைபெற்றுவரும் SACOSAN எனப்படும் தெற்காசியாவின் சுகநல பாதுகாப்பு தொடர்பான 7ஆவது மாநட்டின் நிறைவு விழாவில் இன்று (13) கலந்துகொண்டு உரையாற்றினார். இஸ்லாமாபாத் நகரில் 10 முதல் 14 வரை நடைபெறும் SACOSAN எனப்படும் தெற்காசியாவின் சுகநல பாதுகாப்பு தொடர்பான 7ஆவது மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை சார்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான தூதுக்குழு பாகிஸ்தான் சென்றுள்ளது. தெற்காசிய நாடுகளிலிருந்து 700க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் தேசிய பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்துகொண்டுள்ளர். நீர், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் ஆகிய பகுதிகளில் பரஸ்பர ஒத்துழைப்புக்கான இரு நாடுகளுக்கும் இடையேயான ஒப்பந்தத்திலும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கையொப்பமிட்டார்.
கண்ணகி அம்மன் வழிபாடு கி.பி 171 முதல கி.பி 193வரை அனுராதபுரத்தில் இருந்து ஆட்சி புரிந்த கஜபாகு என்ற அரசனால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதென இராஜவாளி என்ற சிங்கள நூல் கூறுகிறது. கஜபாகு ஆட்சி காலத்தில் சேரமன்னன் செங்குட்டுவன் தனது தலைநகராகிய வஞ்சியில் இமயமலையில் இருந்து கொண்டுவந்த கல்லில் கண்ணகிக்கு சிலை செய்து கோயில் அமைத்து பெருவிழா எடுத்தான் . கிபி 178ல் நடந்த அவ்விழாவிற்கு செங்குட்டுவனின் அழைப்பையேற்று அவன் நண்பனாகிய கஜபாகு விழாவில் கலந்து கொண்டான். இவ்விழாவில் பாண்டிய மன்னன் வெற்றிவேற் செழியனும், சோழ அரசன் பெருநற்கிள்ளியும், கொங்குதேச அரசன் இளங்கோ அடிகளும், மகத தேச மன்னரும் கலந்துகொண்டாதாக துரை ஜெயநாதன் ‘ஆதிதிராவிடரும் அழிந்துபோன சங்கங்களும் என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். விழாவில் கலந்த கஜபாகு கண்ணகியின் அற்பதங்களைக் கண்டு வியந்தான். கஜபாகு , கண்ணகியை செங்குட்டுவனைப் போல் நித்தியபூசை செய்து வலம் வந்து தன் நாட்டிலும் எழுந்தருளி அருள்புரிய வேண்டும் என்று அவன் கேட்டு பிரார்த்தித்தான். அவன் விரும்பியபடி எல்லாம் நடக்குமென ஆசி கேட்டு கஜபாகு உள்ளம் நெகிழ்ந்து கண்ணகி மேல் கூடிய நம்பிக்கை கொண்டான். இலங்கையில் கண்ணகி வழிபாட்டினை பரப்ப தன் விருப்பத்தை செங்குட்டுவனிடம் கஜபாகு தெரிவித்தான். செங்குட்டுவன் சந்தன மரத்தால் செய்த கண்ணகி சிலையையும் ஒரு காற்சிலம்பையும் சந்தனமரப் பேழையில் வைத்து கஜபாகுவிடம் கையளித்தான். கஜபாகு கண்ணகி விக்கிரகத்துடன் இலங்கைக்குத் திரும்பும்போது தன்னுடன் பன்னிரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பல்குடிமக்களையும் அழைத்துச்சென்றான். அவன் வந்திறங்கிய சிலையுடன் வந்திறங்கியது மாதகலுக்கருகேயுள்ள சம்புகோள துறைமுகம். யானை மேல் சிலையை வைத்து பல யானைகள் பின்னே வர ஊர்வலமாய் பல இடங்களுக்கு எடுத்துச்சென்றான். ஊர்வலம் நின்றயிடமெல்லாம் கண்ணகி வழிபாடு தோன்றிற்று. யாழ்குடாநாட்டில் கண்ணகியம்மன் வழிபாடு இம்மன்னனால் யாழ்ப்பாணத்தில் முதலாவது கண்ணகி கோயில் ஸ்தாபிக்கப்பட்ட இடம் அங்கணாகடவை எனப்படும். அங்கனா என்பது அம்மனை குறிக்கும். சிங்களநாட்டில் 'பத்தினி தெய்யோ' என கண்ணகி அம்மனை அழைத்தனர். ஒல்லாந்தர் காலத்தில் அக்கோயிலும் சிலையும் யானையால் சிதைக்கப்பட்டது. யாழ்ப்பாண குடாநாட்டில் இருந்த பல கண்ணகி அம்மன் கோயில்கள் நாளடைவில் நாக அம்பாள் , இராஜேஸ்வரி அம்பாள் , முத்துமாரி அம்பாள் என்ற பெயரில் வணங்கப்பட்டது. இன்று இளவாலை, மண்டதீவு , பளை , வீமன்காமம், தெல்லிப்பளை , மாசியப்பிட்டி , கச்சாய் , பருத்தித்துறை , புலோலி , காரைநகர் ஆகிய இடங்களில் கண்ணகி அம்மனுக்கு கோயில்களுண்டு. மூத்ததம்பியின் யாழ்ப்பாண சரித்திரம் என்ற புத்தகத்தில் முதற் கண்ணகி அம்மன் கோயில் நாவற்குளியில் உள்ள வேளம்பாடியில் தோன்றியதென குறிப்பிட்டுள்ளார். எங்கு முதலில் கண்ணகி அம்மனுக்கு கோயில் தோன்றியதென்பதற்கு தக்க ஆதாரங்கள் கிடையாது. முல்லைத்தீவில் உள்ள பிரசித்தம்பெற்ற வற்றாப்பளை கண்ணகியம்மன் கோயில் கஜபாகுவினால் ஸ்தாபிக்கப்பட்ட பத்தாவது கண்ணகி ஆலயம். அனுராதபுரத்தில் இசுருமுனிய விகாரகவிற்கு அருகேயுள்ள தடாகத்துக்கு முன்னால் கண்ணகி ஆலயம் அமைத்தான். வருடாவருடம் ஆடிமாத பூரணையில் கண்ணகிக்கு விழா எடுத்தான். இதனை சிங்களவர் 'எசல பெரஹரா' என அழைத்தனர். கண்ணகி வருகையால் இலங்கையில் மழைவளம் பொழிந்து விளைச்சல் பெருகி செழிப்புள்ள நாடாகியது. இக்கதைக்கு மாறாக சிங்கள சரித்திர நு¡ல்கள் கஜபாகு தெனிந்தியாவுக்கு படையெடுத்துச் சென்று 24000 சிங்களவரை சிறைமீட்டி வரும்போது கண்ணகியின் விக்கிரகத்தையும் சிலம்பினையும் இலங்கைக்கு கொண்டுவந்ததாகக்கூறுகின்றன. சோழ அரசன் செங்குட்டுவன் கஸபாகுவை வரவேற்று 24.000 சிங்களவரை விடுதலை செய்யும் போது 24.000 சோழநாட்டவர்களையும் கூட்டிச்செல்ல ஒப்புதல் கொடுத்ததாக மஹாவம்சத்தில் குறிப்பிடப்படவில்லை. கண்ணகியின் காற்சிலம்பிற்கு சின்னம்மை, பெரியம்மை , சின்னமுத்து, கூவக்கட்டு, குக்கல் போன்ற தொற்று வியாதிகளைக் குணப்படுத்தும் அதிசயமான சக்தியுண்டு என்பது மக்கள் நம்பிககை. சிங்களப் பகுதிகளில் கண்ணகி வழிபாடு சீதாவக்கை காலத்தில் (கி.பி 1530 - 1592) பத்தினி வழிபாடு பிரபல்யமானது. டிக்கிரி பண்டார என்ற இளவரசன் சீதாவக்கையை ஆண்ட மாயதுன்னை என்ற தன் தந்தையை நஞ்சு வைத்து கொலைசெய்து சீதாவாக்கைக்கு 1582ல் முதலாம் இராஜசிங்க என்ற நாமத்துடன் அ¡¢யாசனம் ஏறினான். பெளத்த தர்மத்தின்படி தகப்பனைக் கொன்ற பாவம் அவனைவிட்டு பல ஜென்மங்களுக்குப் போகாது என பெளத்த பிக்குமார் சொல்லியதைக்கேட்டு அவன் பொருமாள் என்ற பிராமணன் அல்லாத நண்பணின் உபதேசத்தின் பேரில் இந்துமதத்தை தழுவினான். கற்புக்கரசியான கண்ணகிக்கு களனி கங்கை ஓரத்தில் கொழும்பு அவிசாவலை பதையில் உள்ள கடுவலை எனும் ஊரில் கோயில் கட்டினான். இக்கோயில் போர்த்தகேயர் காலத்தில் (1505-1658) கட்டியதென கோயிலுக்கு அருகேயுள்ள கற்தூணில் உள்ள கல்வெட்டில் காணக் கூடியதாகயிருக்கிறது என காலம் சென்ற கலாநிதி செனரத் பரனவித்தாரன குறிப்பிட்டுள்ளார். மலபாரைச் சேர்ந்த நாயக்கர் பரம்பரை கண்டி இராச்சியத்தை 17ஜ9 முதல் 1815 வரை ஆண்டபோது கண்ணகி வழிபாட்டுக்கு கண்டி இராச்சியத்தில் முக்கிய இடம் கொடுக்கப்பட்டது. சமன் என அழைக்கப்கட்ட சமனலகந்த என்ற மலையின் காவல் தெய்வ வழிபாட்டுக்கு பதிலாக பத்தினி தெய்வம் வழிபாடு ஆரம்பிக்கப் பட்டது. கஜபாகு அரசன் நடத்தி வந்த கண்ணகி அம்மன் விழாவின் தொடர்ச்சியே கண்டியில் நடக்கும் எசல பெரஹராவாகும். தலதா மாளிகை எசல பெரஹராவில் கீழ்கண்ட பெரஹராக்கள் இடம்பெறும: தலதா மாளிகை பெரஹரா, நாத தேவாலய பெரஹரா , மஹாவிஷ்ணு தேவாலய பெரஹரா , கதிர்காம பெரஹரா , பத்தினி தேவாலய பெரஹரா. உடகம என்ற கண்டிப்பகுதியில் இரண்டாம் இராஜசிங்கனால் (16ஜ5-1687) பத்தினி கோயில் கட்டப்பட்டது. 15 நாட்கள் இக்கோயிலில் திருவிழாக்கள் நடைபெறும். பத்தினிக்கு பதுளை, ஹங்குரன்கெட்ட என்ற சிங்களப் பகுதிகளிலும் கோயில்களுண்டு. கதி¡காமத்திலும் பத்தினிதெய்வத்துக்கு கோயிலுண்டு. சிங்களவரிடையே பத்தினி வழிபாட்டுடன் கொம்பு விளையாட்டு , தோடம்பழம் அடிக்கும் விளையாட்டு , தேங்காய் உடைக்கும் விளையாட்டு , பூ விளையாட்டு போன்ற விளையாட்டுகளுக்கு முக்கியத்துவமுண்டு. கண்ணகியின் கணவன் கோவலனை சிங்களவர் ‘பலங்க' என்பர். 11ம் நு¡ற்றாண்டு கண்ணகி , பலங்க சிலைகள் நிக்காவெவ என்ற சிங்களப்பகுதியில் உள்ள குகையொன்றில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அந்த சிலையில கண்ணகி சாதாரண சிலம்புடனும் வேலைப்பாடுகள் நிறைந்த காப்புகளுடனும் காணப்படுகிறாள். கண்ணகி கோயில்களில் தீ மிதித்தல் தீயில் பழிகொடுத்தல் போன்றவை இடம்பெறும். கொம்பு விளையாட்டுக்கும் கண்ணகி கோவலன் கதைக்கும் சம்பந்தப்பட்ட கதை ஒன்றுண்டு. கண்ணகியும் கோவலனும் மரம் ஒன்றிலிருந்து பூப்பறிக்க கொழுக்கிகள் உள்ள இரு தடிளைப் பாவித்த போது கொழுக்கிகள் மாட்டிக்கொண்டன. அதனைக் கலட்ட முடியாமல் போனபோது ஆண்கள் ஒரு பக்கமும் பெண்கள் ஒரு பக்கமும் சேர்ந்து கலட்ட முயன்றபோது ஆண்கள் பக்கத்து தடி முறிந்ததாக கதையுண்டு. கிழக்கிலங்கையில் கண்ணகி வழிபாடு அனுராதபுர மன்னன் கஜபாகு காலத்தில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட கண்ணகி வழிபாடு கிழக்கிழங்கைக்கும் பரவி இருக்காலம் என்பது பலர் கருத்து. கஜபாகு விக்கிரகத்துடன் இலங்கை திரும்பிவந்து அனுராதபுரத்திலிருற்து 15 வருடகாலமே ஆட்சி புரிந்த படியால் அந்தச் சொற்ப காலத்துக்குள் கண்ணகி வழிபாட்டினை கிழக்கிழங்கையில் பரப்பியிருக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் இல்லையென்னபது ஒரு சாரார் கருத்து. கண்ணகி வழிபாடு கி.பி 16ம் நு¡ற்றாண்டில் மட்டக்களப்பு பகுதிகளில் அறிமுகமானதென மட்டகளப்பு மான்மியம் குறிப்பிட்டுள்ளது. கிழக்கு பிரதேசத்தில் வாழ்ந்த தமிழ் சிற்றரசர்களே கண்ணகி வழிபாடு பரவலுக்கு முக்கிய பங்களித்துள்ளார்கள் என்பதக்கு பல சான்றுகளுண்டு. முல்லைத்தீவில் உள்ள வற்றாப்பளை கண்ணகியம்மன் கோயில் வழிபாட்டிலிருந்து இவ்வழிபாடு கிழக்கிழங்கைக்கு பரவியிருக்கலாம் என்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வாதம். போர்த்துக் கேயர் காலத்தில் யாழ்குடா நாட்டிலிருந்து மட்டக்களப்பிற்கு நாடார் குடியேற்றம் ஒன்று நிகழ்ந்தது. கந்தப்பர் என்பவர் தலைமையில் புலம்பெயர்ந்தவர்கள் தங்களுடன் கொண்டு வந்த ஏழு கண்ணகியம்மன் சிலைகளை ஏழு கிராமங்களில் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டி வணங்கியதாகவும் அவர்கள் மண்முனைக்கு அருகாமையில் குடியேறி வாழ்ந்ததாக மட்டகளப்பு மான்மீயம் குறிப்பிட்டுள்ளது. மட்டக்கிளப்பின் வெருகல் ஆற்றுக்குக் கிழக்கே உள்ள துறைமுகத்தில் மதுரையிலிருந்து செண்பகநாச்சியம்மன் , பத்திரகாளியம்மன் , கண்ணகியம்மன் சிலைகளைக் கொண்டு வந்ததாகவும் அதில் கண்ணகியம்மன் சிலையை மட்டக்கிளப்புக்கு தெற்கேயுள்ள ஊர் ஒன்றில் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக வரலாற்றுச் செய்தியுண்டு. கி.பி 2ம் நு¡ற்றாண்டில் மதுரையிலிருந்து கொண்டுவரப்பட்ட செண்பகச்செல்வி என்ற கண்ணகி விக்கிரகம் தம்பிலுவில்லைச் சேர்ந்த ஊராக்க என்ற இடத்தில் ஆலயம் அமைத்து பிரதிஷ்டைசெய்து வழிபடப்பட்டது. பெளத்த சிங்கள அரசர்களினதும் , தமிழ் அரசர்கள், சிற்றரசர்களினதும் ஆதரவில் கி.பி 2ம் நு¡ற்றாண்டு தொடக்கம் 12ம் நு¡ற்றாண்டு வரை கண்ணகி வழிபாடு செழித்து வளர்ந்தது. திருக்கோயில் சித்திரவேலாயுதர் ஆலயத்தில் அர்ச்சகர்களாக பணிபுரிய வீரசைவககுருமார்கள் அக்காலத்தில் வரவழைக்கப்பட்டனர். இவர்கள் தம் பட்டர் என வாழ்த்தி குடியேற்றி அவ்வூருக்கு தம்பட்டை என நாமம் சூட்டப்பட்டது. மேலும் இவர்களது வழிபாட்டுக்காக மல்லிகார்ச்சுன புரத்திலிருந்து கணேஷ விக்கிரகம் ஒன்று பெறப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் மேலும் மேகவண்ணன் தனது தாயார் தம்பதிநள்ளாள் பெயரில் வாவியொன்றையும் வெட்டுவித்து அவ்வாவிக்கு தம்பதிவில் எனப்பெயர் இட்டான். வில் என்ற சொல் வில்லைப் போன்ற குளத்தைக் குறிக்கும். மழைபொழிய வேண்டி கொம்பு விளையாடல் என்ற வழிபாட்டின் மூலம் கண்ணகியம்மனை வழிபடுவார்கள். தம்பிலுவில கண்ணகியம்மன் கோயிலில் இவ்விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுகிறது. பொதுவாக கண்ணகி கோயிற்கதவுகள் ஆண்டுக்கொரு முறை திறக்கப்பட்டு பதத்தி என்ற முறைப்படி 10 நாட்கள் வரை பூஜஜகள் செய்யப்பட்டு பின் கதவுகள் மூடப்படும். மக்கள்பெருதளவில் கூடி பயபக்தியுடன் வணங்குவர். கள்ளங்குடா, ஆரையம்பதி, செட்டிப்பாளையம், களுவாஞ்சிக்குடி, துறைநீலாவணை ஆகிய இடங்களில் உள்ள கண்ணகி கோயில்களில் நடைபெறும் வழிபாட்டு முறைகள், சடங்குகள், சம்பிரதாயங்களில் வேறுபாடுகளுண்டு. ஈழத்தில் பிரசித்தம் பெற்ற கண்ணகியம்மன் கோயில்கள் கண்ணகி அம்மன் கோயில் வலந்தலை காரைநகர் 1725ல் ஸ்தாபிக்கப்பட் ட பழம் பெருமை வாய்ந்த கோயிலிது. சந்தனமரத்திலான கண்ணகி அம்மனும் , வைரவருமுண்டு. வருடாவருடம் சித்திரை வருடப்பிறப்பை அடுத்துவரும் முதல் வெள்ளிக்கி¨மை கும்பம்வைத்து ஒன்பது நாட்களுக்கு திருவிழாநடைபெறும். கண்ணகியம்மன் கோயில், இத்தியடிபுலம், புங்குடுதீவு சுமார் 130 வருடங்கள் பழமையான ஆலயமிது. பல வருடங்களுக்குமுன் இரை தேடிச்சென்ற தனது தனது கால்வடைகள் திரும்பாதறிந்த இடையன் ஒருவன் அவைற்றை தேடிச்சென்றான். தனது காலநடைகள் ஒரு பேழையைச் சுற்றி படுத்திருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டு, பேழையைத் திறந்து பார்த்த போது அதனுள் கண்ணகி விக்கிரகம் இருப்பதைக் கண்டதாக கதையொன்றுண்டு. ஆடிப்பூரம் இங்கு விசேஷமான தினமாகும். வருடாந்த உற்சவம் சித்திரை மாதத்தில் தொடர்ந்து 15 நாட்களுக்கு நடைபெற்று சித்திரைப் பெளர்ணமியன்று தேர்திருத்விழாநடைபெறும். மூலமூர்த்தி கண்ணகி. பரிவாரமூர்த்திகள் இராஜஇராஜேஸ்வரி, பிள்ளையார் , முருகன் பத்திரகாளி. நடராஜர், வைரவர் ஆகியோர் உளர். பெரிய இராஜகோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் பெயரை இராஜஇராஜேஸ்வரி அம்மன் கோயிலென்றும் அழைப்பர். கண்ணகி அம்மன் கோயில், அங்கணாக்கடவை சண்டிலிப்பாய் இலங்கை மன்னன் கஜபாகு கண்ணகி சிலைகளையும் காற்சிலம்புகளையும் சேரன் செக்குட்டுவனிடமிருந்து பெற்றுக் கொண்டு தனது பரிவாரங்களடன் யாழ்ப்பாணத்தின் மாதகலுக்கு அருகேயுள்ள சம்புகோளம் என்ற பிரசித்தம்பெற்ற துறைமுகத்தில் வந்திறங்கினான். இலங்கையில் இம்மன்னனால் ஸ்தாபிக்கப்பட்ட முதலாவது கண்ணகி ஆலயம் யாழ்ப்பாணம் திருவடிநிலைக்கு அருகாமையில் உள்ள அங்காணாக்கடவையில் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் அங்கிருந்து அனுராதபுரத்துக்கு பூநகரி வழியாகச் செல்லும் பாதைகளில் உள்ள ஊர்களில் கண்ணகிக்கு ஆலயங்கள் அமைத்தான் என யாழ்ப்பாணச் சா¢த்திரத்தில் முதலியார் செ இராசநாயகம் குறிப்பிட்டுள்ளார். அடையளாம் காணமுடியாத அங்காணாக்கடவை கண்ணகி கோயில் தற்போது கந்தரோடையில் உள்ளகதிரமலைக்கருகாமையில் இருந்ததாகவும் சரித்திர வல்லுனர்கள் கூற்று. கண்னகியம்மன் கோயிலுக்கு எதிர்புறத்திலிருந்து கல்லாலான கஜபாகு மன்னனின் சிலை சில நு¡ற்றாண்டுகளுக்கு முன் யானையொன்றினால் சிதைக்கப்பட்டு பின் சிலையின் கால் பகுதியும் தலையும் கலாநிதி பீரிஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு யாழ்ப்பாண நூதனசாலையில் வைக்கப்பட்டது. இக்கோயில் இப்போது சிறுதளவில் இயங்குகிநது. வைகாசி விசாகப் பொங்கல் சிறப்பாக நடைபெறும். பக்கத்து ஊர்களான நவாலி , மாதகல் ஆகிய கிராமங்களிலும் கண்ணகிக்கு கோயில்கள் உண்டு. மாதகல் என்ற பெயர் மாதா என அழைக்கப்படும் கண்ணகியம்மனின் கல்லினாலான விக்கிரகம் வந்திறங்கியபடியால் வந்ததென ஒரு கதையுண்டு. வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயில் , முல்லைத்தீவு தமிழ்நாட்டில் கண்ணகி அம்மனுக்கு கோயில் அமைத்த காலம் தொடக்கம் இத்தலம் இருந்து வருகிறது. கஜபாகு அரசனால் இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்ட பழமைவாய்ந்த பத்தாவது கண்ணகியம்மாள் கோயிலிது எனகருதப்படுகிறது. கண்ணகியம்மாள் வந்தமர்ந்த இடமாகிய பத்தாம்பளை. என்பது மருவி வற்றாப்பளையாயிற்று என்பது வரலாறு. மூலமூர்த்தியாக கண்ணகியம்பாள் வீற்றிருக்க , விநாயகர் , நாகதம்பிரான் , ஆகிய மூர்த்திகள் பரிவாரத்தில் உள்ளனர். கடல் நீரில் கோயில் விளக்கு எற்றுவதாக மக்கள் கருத்து. கொக்கிளாயிலும் கண்ணகி அம்மனுக்கு கோயிலுண்டு. யாழ்குடாநாட்டிலும் வன்னிப்பகுதிகளிலும் மற்றைய கண்ணகி கோயில்கள் : கண்ணகியம்மன் கோயில் , மண்டைதீவு - 1942ல் ஸ்தாபிக்கப்பட்டகோயிலிது. கண்ணகியம்மன் கோயில் ஏழாலை கண்ணகியம்மன் கோயில் மேளாய் , நல்லு¡ர் , பூநகரி கண்ணகியம்மன் கோயில் , காங்கேசன்துறை துர்துலிடைக்க கண்ணகியம்மன் கோயில் , தையிட்டி, காங்கேசன்துறை. 182 இல் ஸ்தாபிக்கப்பட்டது. கண்ணகியம்மன் கோயில் , வீரமாணிக்கதேவன் துறை, மயிலிட்டி. கண்கியம்மன் கோயில் நாகர்கோயில் - இது மிகப்புராதன ஆலயம். தலவிருட்சம் ஆல். பழமைவாய்ந்த கோவலன் கண்ணகி கதை ஏடு ஒன்றுண்டு. 1978ல் கோயில் கல்லினால் கட்டப்பட்டது. கண்ணகியம்மன் கோயில் , புத்தூர். கண்ணகியம்மன் கோயில் , கோப்பாய் வடக்கு. கண்ணகியம்மன் கோயில் , அச்செழு , நீர்வேலி. கண்ணகியம்மன் கோயில் , கைதடி. இக்கோயில்கள் சிவன், முருகன் , பிள்ளையார், சக்தி கோயில்களைக் போல்பிரசித்தமானவையல்ல . ஆனால் எவ்வளவுக்கு கண்ணகி வழிபாடு கிராமங்களில் பரவியிருந்ததை எடுத்துக்காட்டுகிறது. தீவகத்தில் சில கண்ணகி கோயில்கள் இராஜஇராஜேஸ்வரி கோயிலாக பெயர் மாற்றம் செய்யப்பட்டன. இத்தியடிப்புல கண்ணகியம்மன் கோயில் இதற்கு சான்று. மண்டைதீவில் உள்ள கண்ணகியம்மன் கோயில் பூசாரிகள் பிராமணரல்லாதோர். ஸ்ரீ கண்ணகி அம்பாள் கோயில் காரைதீவு , நிந்தாவூர் 500 வருடங்களுக்கு முன் காரேறு மூது¡ர் என்ற பெயர் வழக்கிலிருந்த போது ஸ்தாபிக்கப்பட்டது. இப்பெயர் திரிந்து காரைதீவாயிற்று. கதிர்காமம்செல்லும் யாத்திரிகர்கள் இக்கோயிலில் தங்கிச் செல்வது வழக்கம். கோயிலின் தலவிருட்சம் வயது முதிர்ந்த வேப்ப மரம். இப்பகுதியை அரசாண்ட வன்னிய மன்னன் நிலபுலன்களை பார்வையிட வந்த சமயம் அரசனின் யானை கீழே விழுந்து மயங்கி படுத்ததாகவும் அப்போது கோயில் மணி ஒலிக்க அங்கு வந்த ஏவலாளர்கள் கோயிலின் மகிமையை அரசனுக்கு எடுத்துச் சொன்னார்கள். கோயிலில் பூஜை செய்து கொண்டிருந்த தேவந்தி என்ற பெண் விவரம் அறிந்து வேப்பமிலை அரைத்து குளிகைசெய்து யானைக்கு கொடுத்து தீர்த்தம் பருக்கியபின் யானை எழுந்ததாகவும் ஒரு கர்ணபரம்பரை கதையுண்டு. அதற்கு கைமாறாக அரசன் ஆலயம் அமைத்து கொடுத்தானாம். அரசனுடைய இரு மனைவியர்களில் ஒருவாரான சிறிய பூற்கோதைக்கு இழந்த கண்பார்வை அம்மனை வணங்கியதால் கிட்டியதாகவும் கதையுண்டு. ஆலயம் தொடர்பான வழக்குலை என்னும் என்ற ஏடு ஒன்றுண்டு. வருடா வருடம் 7 நாட்கள் நடக்கும் உற்சவத்தில் இது தினமும் பாடப்பெற்று நிறைவு பெறும். 1976 ல் கோயில் புனருத்தாரணம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தம்பிலுவில் கண்ணகி அம்மன் கோயில் கி.மு 5ம் நு¡ற்றாண்டில், விஜயன் காலத்தில் திருக்கோவில் தம்பிலுவில் பிரதேசத்தில் வாழ்ந்தவர்கள் ஆதித்திராவிடர்களான நாகர் குடி மக்கள். கி,மு 600ம் நு¡ற்றாண் டில் இப்பிரதேசம் நாகர் முனை எனப்பெயர் பெற்றதாக மட்டகிளப்பு மானமீயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.மு 1ம் 2ம் நூற்றாண்டில் திருக்கோயில் துறைமுகம் பிரபல்யமடைந்திருந்தது. இத்துறையினூடாக தமிழ்நாட்டின் கிழக்குக் கரையிலிருந்த காவிரிப்பூம்பட்டணத்துடன் வர்த்தகத் தொடர்பு இருந்ததாக ‘கண்ணகி வழக்குரை' என்ற கிராமீய இலக்கியம் குறிப்பிட்டுள்ளது. கஜபாகு மன்னன் அனுராதபுரத்தை ஆட்சி செய்த காலத்தில் (கி.பி 171 -193) மட்டக்கிளப்பு பகுதிகளுக்கு கண்ணகி வழிபாடுவந்ததாகவும் அதன் பின் கதங்கள்¢ழக்கு இலங்கையின் வெவ்வேறு ஊர்களை ஆட்சிசெய்த சிற்றரசர்கள் ஆட்சி பிரதேசங்களில் கண்ணகி வழிபாட்டினை பரப்பியதாக வரலாற்று குறிப்புகளுண்டு. மேலும் இவ்வழிபாடு முல்லைத்தீவிலிருந்து கடல்மார்க்கமாக மட்டக்கிளப்பு பகுதிகளுக்கு வந்திருக்கக் கூடிய சாத்தியக் கூறுகளுண்டு. கி.பி 1626ல் கண்டி மன்னன் செனரதன மலேய வீரர்களின் உதவியுடன் போர்த்துக்கேயரை மட்டக்கிளப்பில் இருந்து அகற்றி மலாய வீரர்களை காவலுக்கு வைத்தான். அக்காலப்பகுதியில் மட்டக்கிளப்பில் நாடார் குடியேற்றம் நடந்தது. யாழ்குடாநாட்டிலிருந்து கந்தப்பர் என்பவரது தலைமையில் புலம் பெயர்ந்து வந்த குடும்பங்கள் ஏழு கண்ணகி விக்கிரகங்களையும் தங்களுடன் எடுத்து வந்து பிரதிஷ்டை செய்து வணங்கத் தொடங்கினரென மட்டகிளப்பு மான்மியம் கூறுகின்றது. கி.பி 159ஜ -180ஜ வரையுள்ள கண்டி மன்னர்களினது காலத்தில் தம்பிலுவில் பிரதேசத்தில் கண்ணகி வழிபாடு சிறப்புற்றிருந்ததுக்கு இலக்கிய தொல்லியல் சான்றுகள் உண்டு. சிங்கள அரசர்களும் நாயக்கர் வம்ச கண்டி மன்னர்களும் கண்ணகி வழிபாட்டனை ஆதரித்து மானியங்கள் பல வழங்கிவந்துள்ளனர். கிழக்குப் பகுதி கிராமங்களில் பின் வரும் கண்ணகியம்மன் கோயில்கள் குறிப்பிடப்படவேண்டியவை: பட்டிநகர் ஸ்ரீ கண்ணகி அம்மன் கோயில் , பனங்காடு , அக்கரைப்பற்று. கண்ணகி அம்மன் கோயில் சம்மாந்துறை. கண்ணகி அம்மன் கோயில் , வீரமுனை, சம்மாந்துறை. கண்ணகி அம்பாள் கோயில் களுவாஞ்சிக்குடி. இது 200 வருடங்களுக்கு முற்பட்ட புராதான ஆலயம். வைகாசி பெளர்ணமிக்கு மன் 7 றாட்களுக்கு கதவு திறக்கப்பட்டு விசேட வழிபாடு நடைபெறும். கடற்கரை கண்ணகி அம்பாள் கோயில் , கல்முனை. கண்ணகி அம்மன் கோயில், துறைநீலாவணை. மட்டக்கிளப்பு மான்மியத்தில் இக்கோயிலைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. கண்ணகி அம்மன் கோயில் விடத்தல்முனை , புளியந்தீவு. கண்ணகி அம்மன் கோயில் தாளங்குடா , காத்தான்குடி. கண்ணகி அம்மன் கோயில் புன்னைச்சோலை , அமிர்தகழி , மட்டக்கிளப்பு. கண்ணகி அம்மன் கோயில் , சத்துருக்கொண்டான், மட்டக்கிளப்பு . 100 வருடங்களுக்கு முற்பட்ட கோயிலிது. கண்ணகி அம்மன் கோயில், கல்குடா , வாளைச்சேனை. கண்ணகி அம்மன் கோயில், கல்குடா , சித்தாண்டி கண்ணகி அம்மன் கோயில், கல்குடா , கிரான். கண்ணகி அம்மன் கோயில், கல்குடா , முறக்கொட்டாஞ்சேனை கண்ணகியம்மன் கோயில்களின் எண்ணிக்கையிலிருந்து யாழ்குடா நாட்டை விட கிழக்கு ஈழத்தில் எவ்வளவு து¡ரத்திற்கு கண்ணகியம்மன் வழிபாடு கிராமங்களில் இயல் இசை நாடகங்களுடன் ஒன்று கலந்து பரவியிருந்ததை அறியக் கூடியதாகயிருக்கிறது.
[ 30/11/2022 ] ஜோதிடத்தை எப்போது கற்க முடியும்? ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி. #astrologeradityaguruji YOUTUBE [ 29/11/2022 ] எப்போது ஜோதிடம் பார்க்கலாம்? ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி விளக்கம்.#astrologeradityaguruji GURUJI'S LIVE videos [ 29/11/2022 ] 8ம் அதிபதி எப்போது நன்மை? மீனம் – TRAILER – 444#astrologeradityaguruji GURUJI'S ANDROID APP [ 29/11/2022 ] யோகி – அவயோகி யார்? ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி விளக்கம்.#astrologeradityaguruji GURUJI'S LIVE videos [ 28/11/2022 ] 8ம் அதிபதி எப்போது நன்மை? கும்பம் – TRAILER – 443#astrologeradityaguruji GURUJI'S ANDROID APP Search for: HomeGURUJI'S ANDROID APPCANCER-DISEASE-LEND-ENEMY – கடன்-நோய்-எதிரி-எப்போது வரும்?#adityaguruji#GURUJIvideos CANCER-DISEASE-LEND-ENEMY – கடன்-நோய்-எதிரி-எப்போது வரும்?#adityaguruji#GURUJIvideos 31/12/2021 admin123 GURUJI'S ANDROID APP, PREMIUM VIDEOS 0 Previous article Next article காதல் எனும் பெயரில் கற்பிழக்கச் செய்யும் ராகு…! C – 053 – Kadhal Yennum Peyaril Karppizhakka Seiyum Raahu…
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி என்ற தொடர் பரவலாகப் புகழப்பெற்றது. இங்கே, காதல் என்ற சொல் மானுடவுயிர் இறையை அடையும் ஒன்றுதலை க் குறிப்பதற்காக வரும். அதைப்போலவே ஆடவன் ஒருவரின் உள்ளமும் பெண் ஒருத்தியின் உள்ளமும் அன்பினால் ஒன்று கலப்பதைக் காதல் என்று கூறுகிறோம். இரண்டு கண்கள் இருந்தாலும் இரண்டு வெவ்வேறு பார்வைகள் இல்லையே? இரு கண்களின் பார்வையும் ஒருகிணைந்தால்தானே ஒரு பொருளைப் பார்க்க முடியும். காதல் என்பதும் இரண்டு மனங்களின் சரியான சங்கமமாகத்தான் இருக்க வேண்டும். இன்றைக்கும் காதல் அந்த மாதிரியாகத்தான் இருக்கிறதா என்பதுதான் கேள்வி. இன்றைக்குக் காணப்பெறும் காதல் என்னென்ன காரணங்களால் உருவாகிறதெனப் பார்க்கலாம். 1. தாம் கண்ட, கேட்ட, படித்த காதலர்களைப் போலத் தாமும் இருக்க வேண்டுமென்ற உந்துதலால், போலச் செய்வதாகக் காதல் கொள்வது. 2. நவீன உலகத்தில் வாழ்வதாகக் காதல்புரியும் போலி மனப்பான்மை. 3. பருவ வயதின் காரணமாக, வாலிபப் பருவக் கோளாறு காரணமாகக் காதலிப்பது 4. ஒரு பாலினம் மற்ற பாலினம் கொண்டுள்ள அழகு, புகழ், தீரம் இவற்றில் மயங்கி விருப்பம் கொள்வது. 5. பொழுதுபோக்கிற்காகவும் நேரங்கடத்தவும் நடப்புக்காலக் கலாசாரம் என்பதற்காகவும் காதல் மேற்கொள்வது. 6. திரைப்படம், இதழ்கள், தொலைக்காட்சிகள் வெளிச்சம் போட்டுக்காட்டிய காதல் உலகில் தம்மையும் இணைத்துக் கொள்ள விரும்புவது. 7. சில இடங்களில் ரொக்கம், காதலுக்கான அடிப்படையாவது. 8. பெற்றோர், உறவினர் ஆகியோரிடம் கிடைக்காத இனந்தெரியாத அன்பு எவரால் தரப்பெறுகிறதோ அவரைத் தமக்குரியவராகக் கருதிக் காதலிப்பது. இவைபோல எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். ஆனால், காதல் என்பது நேர்மையானதாக இருக்க வேண்டும். ஆனால் மின்னல் போல் தோன்றி மறைந்துபோகும் காதல்களே மிகுதியாகத் தென்படுகின்றன. முப்பது, நாற்பதாண்டுகளுக்கு முன்பெல்லாம் காதல் பற்றிய திரைப்படங்கள் நாகரிகத்தைக் குலைக்காதவாறு வெளிவந்தன.வெற்றிபெறாத காதலை உள்ளடக்கிய படங்கள்கூட அமரகாவியம் எனப் போற்றப்பட்டன. தெய்வீகக் காதல் என்ற சொல் அழுத்தமாக உச்சரிக்கப்பெற்றது. இன்று தலைகீழாக யாவும் மாறிப்போய்விட்டன. தமிழகத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், தமிழாக்கத் தொடர்கள், புராணக் கதைகள் தவிர ஏனைய நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் காதல் உணர்வு கொச்சைப்படுத்தப்படுகிறது என்பது அப்பட்டமான உண்மை. ஒரு பெண்ணைப் பல ஆடவர்கள் காதல் கொள்வது அல்லது ஆண்மகன் ஒருவனை நங்கையர் பலர் காதல் கொள்வது, முறைகேடான காதல் நிலைகளை மேற்கொள்வது, என்பன போன்ற கதைப்பகுதிகளே பரவலாகத் தென்படுகின்றன. இதனால் இவற்றைப் பார்க்கும் இளம் பருவத்தினரின் உள்ளங்களில் கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சு கலக்கப்பெறுகின்றது. காதல் என்பது தேவையற்றதாகவோ, தீண்டத்தகாததாகவோ கருதப்பெறும் ஒன்றல்ல. சரியானதாகவும் நெறியானதாகவும் வடிவமைக்கப்பெற்ற காதல் வாழ்க்கையே மிகவும் சிறந்தது. அங்கே பூசல்கள், போர்கள், பிணக்குகளுக்கு வாய்ப்பே இல்லை. மேலோட்டமான காதலை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கையில் இன்பம் என்பது கானல் நீராகத்தான் இருக்கமுடியும். காதலித்து இல்லறத்தை மேற்கொண்டவர்களின் வாழ்க்கையில் சிக்கல்களும் பிரிவுகளும் ஏற்பட என்ன காரணம்? திருமணத்திற்குப் பிறகும் காதல் தொடரப்படாததுதான். காதலால் பல பயன்கள் உண்டு. அது சாதி, மதம் பார்ப்பதில்லை. மொழியோ, வட்டாரமோ காதலை முடமாக்கிவிடாது. அழகு, பணம், வேறு கூறுகள் காதலுக்கு இடைஞ்சலாக அமைவதில்லை. உண்மையான காதலுக்கு நேரம், வயது, வாழுமிடம் போன்றவை முட்டுக்கட்டை போடுவதில்லை. முறைப்படியான காதல் காலங்கடந்து நிற்கும். பழங்காலக் காதல் குறைவேதுமற்ற, குற்றமேதுமற்ற நிறைவான காதலாயிருந்தது. ஏமாற்று வேலைகளுக்கு அங்கே வேலையில்லை. கவர்ச்சி, மேனிப்பசி, மோகம் போன்ற இழிவான குணநலன்கள் அக்காலத்தில் எட்டிக்கூடப் பார்த்ததில்லை. இக்காலத்தில் அவையே காதலுக்கான மூலதனங்கள். மெய்ம்மை உணர்வுடன், நியதிகளுக்கு உட்பட்ட காதல் அங்கொன்று இங்கொன்றாக மட்டுமே வெகு அரிதாகத் தென்படுகின்றது. தாய் போன்ற உறவுகளிடம் கொள்ளும் காதல் பாசம் எனப்படும். மொழி, நாடு இவற்றின் மீதான காதல், பற்று என்றழைக்கப்படும். பிறர் மீது இரக்கம் கொண்டு எழும் காதலுக்குப் பரிவு என்பது பெயர். வேறுபாடு கருதாத அருளுணர்வு கலந்த காதல் கருணை என்ற பெயர்பெறும். மற்றவழிகளில் வருபவை இச்சை, கீழானவேட்கை, இழிகாமம் ஆகும். ஒழுங்கானதும் ஒழுக்கம் நிறைந்ததுமான காதலால் சாதி, மத, சமயப் பூசல்கள் மறையும். வேறு பிரிவினைகள் ஒழியும்; அன்பு பெருகும்; இல்லறம் நல்லறமாகும்; வாழ்க்கை வளமும் நலமும் உடையதாகும். எனவே, நல்ல காதலுக்கு வாழ்த்துமடல் வாசிப்போம். பாரதியுடன் சேர்ந்து நாமும் பாடுவோம்: ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே.
மாதவன் நடிப்பு, இயக்கம், தயாரிப்பில் உருவாகியுள்ள “ராக்கெட்ரி” படமல்ல வரலாற்று காவியம் என இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை புகழாரம் சூட்டியுள்ளார். மங்கள்யான் உள்ளிட்ட பல்வேறு இஸ்ரோவின் கனவு திட்டங்களை சாத்தியமாக்கிய விகாஸ் ராக்கெட் என்ஜினை உருவாக்குவதில் முக்கிய அங்கம் வகித்தவர் விஞ்ஞானி நம்பி நாராயணன். இந்தியா ராக்கெட்டுக்களில் திரவ என்ஜின்களை பயன்படுத்துவதற்கு அடித்தளமிட்ட அவரின் வாழ்க்கை வரலாற்று படம் ”ராக்கெட்ரி- நம்பி விளைவு”. இந்திய விண்வெளித்துறை முன்னேற்றத்திற்கு நம்பி நாராயணன் ஆற்றிய சாதனைகளை எடுத்துரைக்கும் இந்த படம், நாட்டின் ராக்கெட் ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்றதாக சுமத்தப்பட்ட பொய்யான குற்றச்சாட்டால் அவர் வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் அழுத்தமாக பேசுகிறது. கடந்த 1ந்தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ”ராக்கெட்ரி” திரைப்படம் சிறப்பாக இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் ஏற்கனவே புகழாரம் சூட்டியுள்ளனர். அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்யடி படம் ”ராக்கெட்ரி” என நடிகர் ரஜினிகாந்த் தனது பாராட்டுக் கடிதத்தில் கூறியிருந்தார். இந்நிலையில் இஸ்ரோ செயற்கைகோள் மையத்தின் முன்னாள் இயக்குனரும், சந்திரயான் 1, சந்திரயான் 2, மங்கள்யான் திட்டங்களில் முக்கிய பங்கு வகித்தவருமான மயில்சாமி அண்ணாத்துரை ”ராக்கெட்ரி” திரைப்படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். 36 ஆண்டுகள் இஸ்ரோவில் பணியாற்றிய மயில்சாமி அண்ணாதுரை, இந்த படம் பார்த்த போது மீண்டும் இஸ்ரோவில் வாழ்ந்தது போன்ற உணர்வு தமக்கு ஏற்பட்டுள்ளதாக புகழாரம் சூட்டியுள்ளார். இது படம் அல்ல வரலாற்று காவியம் என தனது மகிழ்ச்சியை மயில்சாமி அண்ணாத்துரை வெளிப்படுத்தியுள்ளார். விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு நிகழ்ந்தது போன்ற அநீதி இனி யாருக்கும் நிகழக்கூடாது என்கிற மாதவனின் மிஸன்தான் இந்த படம் என்று பாராட்டியுள்ள மயில்சாமி அண்ணாதுரை, மாதவனின் எண்ணங்கள் மக்களிடையே சென்றடைந்துள்ளதாகக் கூறியுள்ளார். ராக்கெட்ரி அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் எனக் கூறியுள்ள மயில்சாமி அண்ணாதுரை, இந்த படத்தை கொடுத்தற்காக மாதவனுக்கு தமது சல்யூட் என்றும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். Facebook Twitter WhatsApp முந்தய செய்தி பிரிட்டிஷ்காரர்களால் உருவாக்கப்பட்ட கல்வி முறை ஒருபோதும் இந்திய கல்விமுறையாக இருக்க முடியாது – தேசிய கல்விக் கொள்கை கருத்தரங்கில் பிரதமர் மோடி பேச்சு..! அடுத்த செய்தி மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவாக ‘புர்ஜ் கலிஃபாவில்’ லேசர் ஷோ! சத்குருவின் 2 நிமிட வீடியோவும் ஒளிபரப்பு..!
(உரை) அழகிய உதரத் திலஞ்சியிலே பிரமா உதிப்பதற் கிடமாகிய தாமரைப் பூவையும் மேகநிறமாகிய திருமேனியையுமுடைய திருமாலும், ஸ்வர்ண நிறத்தையுடைய தாமரை மாலை நீங்காப் புயத்தையும் நான்கு திருமுகத்தையுமுடைய பிரமாவும், இவர்களிருவரும் இகலாற் பொருந்தி விஷ்ணு வராகரூபமாகியும் பிரமா ஓதிமமாகிய பக்ஷிரூபமாகியும் நிரைநிரையே பூமியை யிடந்து சப்தபாதாளங் களையுங் கீண்டு திருவடியைச் சோதித்துக் காணாத திருவடியும் சப்தலோகங்களினும் பறந்துதேடிக் காணாத திருமுடியும், இவர்கள் சங்கற்பத்தினாற் காண்பா மென்கையால் எக்காலத்திலும் அவர்களுக் கறியப்படாத இயல்பினை யுடையவன். பொற்பமைந்த, நாமேவு மாதுபுணர் நான் முகத்தோன் பாட பேதம். (இதற்குப் பிரமாணம்) “தேட்டற்று நின்றவிடஞ் சிவமாம்” (திருக்களிற்றுப் படியார், 29) என்பதறிக. 2-8. அன்றியும் சுடரொளியான் : (உரை) இருதொழிற் கடவுளராகிய இவர்களிருவரு மல்லாமல் தேவேந்திரனும், தேவர்களும், அன்றி ஸ்வர்க்க மேலடுக்குக்களிலே பலப்பிராப்திகள் பலவிதத்திலே யிருக்கப்பட்ட பேர்களும், மந்திர சஞ்சாரரும், பூமி முதலாய அதோமுக அடுக்குக்களி லிருக்கப்பட்ட பலவகை யான்மாக்களும், உலகரடிக்ஷ காரணமாக ஒப்பற்ற ஸ்வர்ண மலை ரூபமாகத் தாங்கியிருக்கப்பட்ட மஹோமேருவும், ஜலரூபமாகி விரிந்து திரைக்கரங்களையுடைய சமுத்திராதிபரும், சப்தகோடியாய் விரிந்திருக்கப்பட்ட மந்திரமூர்த்திகளும், இருக்கு யஜுஸ் சாமம் அதர்வணமென்று பெயர் பெற்றுச் சப்தரூபமாக விரிந்த வேதாதிபரும், அந்த வேதத்துக்குக் காரணமாகிய சுத்தமாயா சத்திகளும் ஓசை வடிவாகிய நாதாதிகளும், முந்த இந்த நிலைமைகள் தாமே கதியென்றும் கடவுளென்றும் பற்றிநிற்கிற ஆன்மகோடிகளுங் காணப்படாததே குணமாகவுடையவன். சொல்லிறந்தவிடத்துத் தோன்றலானாகையால் வாக்குகளாலே யெட்டாதவன். போதருதற்குச் சற்றும் பிரயாசமில்லாத காட்சியான். தர்க்கங்களினாலே அளந்தறிதற் களவுபடாப் பெருமையினாலே தர்க்க நிர்ணயங்கடந்த பெருமையான். அணுவுக்குத்தான் அணுவாய் நுணங்குவனாதலாற் சிறுமையையுடையவன். இப்படிப் பெரிதுஞ் சிறிதுமுடைய பெற்றியனாயினும் பிரத்தியக்ஷத்திற் காணும்படி அடியவர்க்குத் தனது காருண்ய சத்தியை வாமபாகத்திலுடையவன். வாயுப்போல ஆகாயம் போலத் தோன்றாத அருவமே திருமேனியானவன் அன்றியும், அபரவிந்து, அபரநாதம், பரவிந்து, பரநாதமாயுள்ள நான்கு பேதத் திருமேனியுமானவன். அசுத்தமாயை, பிரகிருதி மாயை யதிட்டித்துச் சிருஷ்டி நடத்தும் போது மகேசுரர் உருத்திரர் விஷ்ணு பிரமாவென்று நான்கு பேதமாகப் பிரத்தியக்ஷத் திருமேனியை யுடையவன். உத்தியுக்தராய்ச் சதாசிவமூர்த்தமு மல்லாமற் பேரொளியாய் விளங்குந் திருவுருவத்தையு முடையவன்; அன்றியும் இப்படிப்பட்ட திருமேனியையுங் கடந்தவ னென்றுமாம். நித்தமுத்த சுத்தனாகையாற் சாதலாயது எக்காலமு மில்லாதவன்; அன்றியும் ஒன்றைத் தனக்குச் சுட்டியறிய வேண்டும் பகுதியில்லாதவன். அப்படிப்பட்டவனாயினும், பிறந்திறந்து திரிகிற ஆன்மகோடிகளி னுயிர்க்கு உயிரானவன்; அன்றியும் தன்னை நினைக்குமவ ருள்ளம் நீங்காதவன். தனதிடத்து ஆராமை பூண்ட சத்தியர்க்குச் சத்திய தரிசனனானவன். சரியை கிரியை யோகமென்னுந் தந்திரத்து நின்றவர்களுக்கு ஸ்வதந்தரந் தானாய் நின்றவன். சாருவாகன் புத்தன் முதலாய திரிபதார்த்த நிர்ணயமில்லாத அசத்தியர்க்கெல்லாம் அசத்தியனாயுள்ளவன்; அன்றியும் நாஸ்திவிரத்திகளுக்கும் இல்லாமையாகவே யானவன். எப்படிப் பட்ட ஆன்மாக்களுக்கும் பிதாவானவன். தாருகாவனத்து அவிசார ஓமத்துண்டாய்ச் சங்கரிக்க இருடிகளேவலால் வரப்பட்ட பெரும்பாம்பைத் தானே தனக்கு ஆபரணமாகத் தரித்த எல்லாவற்றிற்கும் மேலானவன். ஆன்மாக்கள் எண்ணிறந்திருந்தாலுந் தானொருவனேயாயினும் ஆன்மகோடிகளுள்ள மட்டும் பூரணனாகிலும் ஓவாது மேலாய்க் கர்த்தனாகப் பட்டவன். சோமசூரியாக்கினி முதற் பலவாகிய பிரகாசத்துக் கெல்லாம் ஒளியைக் கொடா நின்றவன்.முடிவும்விளை பாட பேதம். 9-16. என்றுமுளன் உரையேன் : (உரை) இப்படிப்பட்ட சிவனானவன் ஆதியாகத் தோன்றாது நித்தனாக இருக்கப்பட்டவன்றே அவனைப்போல அனாதியாய் யானும் நித்தனாகிலும், அவனைப்போல் அனாதிமலரகிதனாகாத படியாலே அனாதியே அவனுடனே கலந்திருந்துஞ் சலிப்பற நில்லாமல் மலனாகையால் ஏகதேசப்பட்டுச் சிருஷ்டிகள் தோறுங் கர்த்தாவாலே யுண்டாக்கப்பட்ட தோற்றம் நால்வகையாய் அதிலமைந்த பிறப்புத் தாபரம் ஊர்வன தேவர் நீர்வாழ்வன பறவைகள் நாற்காலிகள் மானுடர் உட்பட்ட எழுவகை யெண்பத்து நான்கு நுறாயிரம் யோனிகள் தோறுஞ் ஜனித்தும் மரித்தும், அந்தந்த ஜன்மங்கள்தோறுந் திரிவித கரணங்களால் தரிசிக்கப்பட்ட புண்ய பாவத்தின் பகுதியாகிய பலபதத்தை யுண்டாக்கப்பட்ட தானத்தையுடையேன்; நூலுணர் வில்லாத பாச அறிவால் மிக்குச் சாருவாகன் மதத்தைப் பொருந்துங் கிஞ்சிஞ்ஞவுணர்வனாகி, கோரமாகப் போகுமிடத்துத் தனுவினின்றும் புறப்பட்ட பகழியினது வேகம்போலப் போய், மயக்க மிகுதியாலே தொன்றுதொட்டுப் புண்யபாவத் தாழ்ச்சி யுயர்ச்சியினாலே வரப்பட்ட ஜாதியினது பேதமும் பாராமற் பிறர்மனையால் வருங் குற்றமும் நோக்காமற் பிறனில் விழைந்தும், இந்தப் பூமியினிடத்து நல்லோர்களாலும் நீதி நூல்களாலும் நீக்கப்பட்டுச் சற்றுங் கிருபை யில்லாமற் பண்ணப்பட்ட வதைத் தொழிலும், பிறர் பொருளென்று ஒன்றையும் புத்திபண்ணாது அதற்கான மார்க்கஞ்செய்து அபகரிப்பும், காலம் இடம் வேளை பாராமல் மயக்கமாகிய மாதர் புணர்ச்சி வேட்கையும் இவைகளினிமித்தமாகத் தேசந் திக்கு நாடுகளில் முசிப்பில்லாமல் திரிந்தும், சகல உயிர்ச் செய்தியும் இயற்கையாகக் கண்டு அவைகளை அதற்கேற்றபடி முறை பிறழாது ஊட்டி உறக்கி நடத்திப் பாராமல் நிற்கிற பேரறிவாகியும் அந்தந்த அறிவுக் கீடாக அத்தனுக்கள் அடங்கின திருவருளை நாடாது, தான் பிறவிக்குச் சேரவுமில்லை அப்படிச் செய்தும் வந்ததில்லையென்னும் நினைவு தொழிலினாற் சோம்பி யிடையுங் கருவிகளில் தலைமையாகி மனதுக்கும், மனதாகிய கருவி விளங்காமற் பற்றிய விடயங்களை மறத்தல் பண்ணாது அதற்கேற்றபடி நிச்சயம் பண்ணும் புத்திக்கும், யானென தென்று மேற்செல்லும் வலியினையுடைத்தாய்ப் புந்தியினின்று மூன்றாய ஆங்கார தத்துவத்துக்கும், வாராது நினைத்து நிச்சயித்ததொரு விடயத்தினது குற்றம்பாராது முடித்தலால் அந்த விடயத்திலே வேறொன்றுந் தெரியாமற் படுத்தி நிற்குஞ் சித்தத்துக்கும் இந்தக் கரணங்களுக்குந் தலைமையாய் அதன்வழிக்காய் அவைகள் ஒன்றுசெய்தது ஒன்று செய்யாது மாறுபட்டுத் தனித்தனி செயல்களுக்கெல்லாந் தான் ஏகனாய் நித்தியனாயிருந்து அந்தரங்கத்திற் படும் விதனமுமன்றிப் பிறப்பிற் கருவியாய தனுவின் மூப்பாற் சோர்வுண்டாயபோது அயர்ந்தும் அந்தத் தனுக் கெடும்போது படுந் துயரப்பகுதி முற்றும் படும் ஆன்மாவினது துயரசாகரத்தை யுரைப்பதற்கு வரையறை பண்ண மாட்டேன்.அருவுருவுமில்லான் பாடபேதம். 16-22. வயிரமே மயங்கினேன் : (உரை) பதியுள்ளவன்றே தொடங்கி இற்றை வரையும் எடுத்த தனுக்களில் ழைவு முதலாய இன்பத்தை முள்ளிப் பூவினது மதுவெனக் கண்டுங் கேட்டும் ஒழியாது நாடோறும் முற்றிப் பலமுடைய ஆசைப்பற்றுக்கும், சிறிதுஞ் சாந்தியில்லாமல் விரோதமே விளைக்கின்ற கோபனுக்கும், தான் பொருந்திய விடயத்தினது நலம் தீமை காணாது அதுதானாக மயக்குவிக்கும் மோகனுக்கும், மிகுந்த கர்வத்தையுஞ் செய்து பிறர்மாட்டு விரோதங் காட்டாது அனுகூலம் போல இருந்து விரோதத்தை முற்றுவிக்கும் மாச்சரியனுக்கும், மாறுபடாத வல்லமையே வெற்றியாகவுடைய சோத்திரந் தொக்கு சக்ஷசிங்ஙுவை ஆக்கிராணமாகிய ஞானேந்திரியங்களைந்தும் வாக்கு பாதம் பாணி பாயுரு உபத்தமாகிய கன்மேந்திரியம் ஐந்தும் ஆகப் பத்தாகிய இவைகளுக்கும், சத்த பரிச ரூப ரச கந்தமும் வசன கமன தான விசர்க்கம் ஆனந்தமுமான பத்துக்கும், தனுவுள்ள மட்டுங் காரிய காரணங்களாய் அழியாது நின்றுபகரிக்கும் பிருதிவி அப்பு தேயுவாயு ஆகாசமென்னும் பூதமைந்துக்கும், சித்தத்தை நல்வழி சிந்தியாதபடி பற்றிக் கொண்டு நோக்காடு செய்யும் ஆதிதைவிகம் ஆதி பௌதிகம் ஆதியாத்மிகமாகிய துக்கத்திரயங்களுக்கும் அன்றியுங் காமம் வெகுளி மயக்கமுமாமென அறிக சாத்துவிகம் இராசதந் தாமதமாகிய முக்குணங்களுக்கும், முதற்காரணமாகிய ஆணவமும் மாயையும் கன்மமுமாகிய மூன்றுக்கும், கேவல சகல மத்தியமாகிய மூன்றவத்தைகளுக்கும், தனது சுதந்தரமாக வந்த வேளை முறை பிறழாது பொருந்திப் புசிப்பிக்கும் புண்ணிய பாவங்களுக்கும், பிரத்தியக்ஷமல்லாத பிராணன் அபானன் உதானன் வியானன் சமானன் நாகன் கூர்மன் கிரிகரன் தேவதத்தன் தனஞ்சயன் ஆகப் பத்தாய வாயுகளுக்கும், ஒருகாலும் இதஞ்சொல்லாது பெற்றதினும் அமையாது குறைகளைச் சொல்லி ஆதியே தொன்று தொட்டு வரப்பட்ட மாதா பிதா மாதுலன் முதலாயினோர்க்கும், மிகவும் வருந்தித் தேடப்பட்ட திரவியத்தின் பொருட்டும், அன்புடனே பற்பலவாய இவைகளின் பொருட்டாக இச்சாஞானக் கிரியா சொரூபனாகி, அவ்விடத்துத் தன்னை வினையைத் தலைவனை ஊன்றிப் பாராமல் விஷயாதியின் பொருட்டு அவைகளுக் கேற்ற தொழில் செய்யுமிடத்து எப்படியாமோ என்னுஞ் சங்கையில்லாத பயத்துடனும் அவை முடித்தற் பொருட்டுச் சாருந் தாக்ஷண்யம் இல்லாமையுங் கலனாகத் தரித்து, அரையிலே மஹாநாகத்தைக் கச்சையாகச் சாத்தியருளுஞ் சிவன் அருளிச் செய்த திவ்யாகமங்களினுண்டான வசனத்துவழி ஆதரியாமல், ஒன்று போயவழி ஒன்று போகாமலிருக்க அதனாலே அம்பெடுத்துப் பல்வகையான தத்துவங்களின் சூதாய சூழ்ச்சி வார்க்குத்தியிற் பொருத்தி மருண்டேன்.குடிப்பழுதே பாடபேதம். 22-29. தேருங்கால் புகலக்கேள் : (உரை) விசாரிக்குமிடத்து எனக்குச் சகாவாய் யான் படும் பலவாய துயர் நீக்குகைக்கு நீயன்றியிலே ஒருவரு மில்லையென்பதை நீதானே யறிவையே ; அதாவது, எனக்கு விட்டு நீங்காத தானமாக வுடையையாகலின் நீ அறிவையே பாச அறிவு பசு அறிவு போலாது எப்போதும் ஒரு படித்தாய் எல்லா அறிவுக்குந் தான் முதன்மையாய்த் தனக்கொரு சகாவேண்டு மென்பதில்லா ஒப்பற்ற சிவஞானத்தைப் பூர்வத்தில் ‘புறப்பற்றாகிய பொருட்பற்றும் அகப்பற்றாகிய இரண்டுடம் பிற் பற்றும் முற்றத் துறந்தவர்களே சிவஞானம் பெற்றவர்கள். இதில் யாதானு மொன்றிற் சிறிதாயினும் பற்றிருந்ததாயின் அவர்களே ஜனன மரணமாகிய பந்தமுற்றவர்கள்’ என்று தமிழ் நிலையிட்டுச் சங்கப்பலகை யிடங்கொடுத் தேறியிருந்த நாற்பத்தொன்பது பேர்களையும் விழத்தள்ளித் தனக்கு மாத்திரஞ் சங்கப்பலகையாகக் குறுக்கின குறள் வெண்பாவின் சொல்லும் பொருளும் நாவிடங் கொண்ட தெய்விக வித்வானான அழகிய வள்ளுவ நாயனார் ஓதியருளின சத்திய வாசகப் பயனை ஆசையாகப் பாராமல், பஞ்சேந்திரியங்கள் அது அது வேண்டிய விஷயத்திற் செல்வதற் கன்யமாக மாறுபடாமல் அதற்கேற்பப் பொருந்தி அதன் வரம்பு கடவாது நிற்க அதனால் விளைந்த பாவமாகிய நரகசமுத்திரத்திலே தாழக்கரைகாணாத வண்ணம் அமுக்குண்டு, மீண்டு வெளிப்பட்டவிடத்தினும் மெல்லியராகிய மாதர் தம் மான்விழி போன்ற விழிப்பிறழ்வின் பாசப்பிணிப்பினுக்குள்ளாய் அவர்களுடனே கூடுதற்கு வேண்டிய அமருகம் கொக்கோகம் முதலிய நூலின் பயனைப் புத்தி பண்ணி, மெய்யாகிய ஞானத்தைத் தரப்பட்ட நூல்களைப் படித்தறியாமல், அறிவு சிறிதும் புகட்டப்படாமற் சிக்கென்ற நெஞ்சாகையால் நாவாற் கடினமான கற்றுக் கதறியும், தினந்தினம் இந்தப்படி இறக்கிறதும் பிறக்கிறதுமே மேம்பாடாகப் பூண்டு திரியும், இப்படி இன்னதுவன்றியிலே சரிக்கும் ஆன்மாவாகிய நான் அசைவற ஒன்றினும் படாமலிருக்கும் நிலைக்கான உபாயஞ் சிந்தியாய், நீயே நானே யென்று பேதமில்லாத சத்தியாகிய மனமே! அதற்கு வகையாவது எப்படியாமென்று கேட்பாயாகில், உனக்கு நன்றாய் அழகுறத் தெரியும்படி நான் சொல்லுகிறேன் கேள். 29-38. வெற்பின்மிசை பேணிக்கேள் : (உரை) தென்றிசை புனிதமாகவும் தேவர்கள் இருடிகள் பொருட்டாகவும் திவ்யமான திருமேனியாக உமையுடனே வெள்ளி மயமாகிய கைலாய மலையினுச்சியிலே எழுந்தருளியிருக்குந் தகுதியை யுடையவன். அதுவன்றியிலும் தங்கள் தவ மிகுதியின் கர்வத்தாலுங் கோட்டைவலியின் பலத்தாலுந் தேவர்கள் இருடிகள் ஒருவரும் எண்ணிக்கையில்லாதது போல அவர்களுட னொப்பாக நினைந்திருந்த முப்புராதிகளும் அவர்களுடைய கோட்டையுஞ் சிவந்த அக்னி சமுத்ரத்தினாலே காணாமற் போம்படி கோபாக்னியாகிய சிறு நகை செய்தருளின ஸ்வாமி. அப்படிப் பிரத்யக்ஷமான திருமேனியாயினும் சர்வ சப்தங்களையுந் தனக்குள்ளே யடக்கி முடிவில்லாமல் நிற்கும் வேதத்தின் தாற்பரியத்தின் பொருளுக்குத் தொனியர்த்தமான அறிவானது. முதலே மலமில்லாத நின்மலனாயினுங் கிருபையானவன். எல்லா அறிவுக்கும் மேலான ஞானமும் அதற்குத் தலைமையுந் தரிசித்த ஞானானந்திகள் திருமேனிகள் திருமேனியே தனது திருமேனியாகவுடைய இயற்கையன். பிருதிவி ஈறாக அடைவே தரப்பட்ட ஆகாச வெளிக்கும் வெளியாகிய பிரகிருதி வெளி அதற்குக் காரணமாகிய கலையான வெளியிலே நிலையானவன். அந்தக் கலாதத்துவத்திலிருந்தும் அதில் தோய்விலாதவன். அந்தக் கலைக்கு மேலாகிய ஒளியான அசுத்தமாயையொளி அதற்கு மேலாகிய சுத்தவித்தை யொளி அந்தச் சுத்தவித்தை யொளிக்கு மேலாகிய விந்துவாகிய வொளியிலிருந்து சகலமும் உண்டாக்கப்பட்டவன். அந்த விந்துவுக்கு மேலாய் அனுக்ரகமே தொழிலான சதாசிவனுக்கு மேலாய்க் கிருபை தானான பராசத்தி அந்தப் பராசத்திக்குக் காரணமாய பரமசிவம். அப்படிக் கிருபையனாயினும் காண்டல் கருதல் உரையென்னும் அளவளந்த அறிஞரளவிற்கு அளவானவன். ஆகிலும் அறிஞர் அளந்தறிந்ததில் அமிழ்ந்தாது அவ்விடத்து விரகு பிறக்கிற் சற்றுந் தோற்றாதாய் நீங்குஞ் சத்தியுடையவன். அளவையினாலே அளப்பதற்கும் அளப்பரிதாய நிலையையுடைத்தாய் ஜடசித்தாகிய எல்லாம் பூரணமாகி இப்படி ஒருபொருள் உண்டென்று நிச்சயிக்கப்பட்டவர்கள் மனதிலே புதிதாகத் தோன்றப் பட்டவனாகிலும் ஆன்மபோதத்தால் அறியப்படாதவன். ஒருகாலத்து ஓரிடத்து விளங்கியும் ஓரிடத்து ஓர்கால் நந்தியும் வாராது ஒருபடித்தாய் அசைவற்ற சீர்த்தியாய் இருளறுக்கும் விளக்குப்போல ஆன்மாக்கள் மலவிருள் இரிக்கைக்கு விளக்காய் ஏகதேசப் படாமற் சர்வான்மாக்களிடத்தும் நிரம்பி மேன்மேற் பிரகாசிக்கப்பட்ட தேஜசாய்ப் பூமியின்க ணன்றியிலுஞ் சர்வ தேவர்களுக்குந் தேவனாகச் சலனமற்று ஒளியாய் வழங்குவதற் கெல்லாந் தான் ஒளி கொடுப்பதாய்ப் பெருமையுடைய பிரபை. தற்றெரிசனிகள் அறிவின் கண்ணே தோன்றுவதன்றிக் கடபடாதிகள் போல ஊனக் கண்களுக்குக் காணப்படாதவன். அனாதி மலமில்லாதவன். அண்டங்கள் புவனங்கள் யாவையினும் அதன்கண் வாழுந் தாபரசங்கமங்கள்மாட்டுந் தோன்றாத் துணையாய் நிற்பதுதானே நிலைமையானவன். கன்ம மலம் மாயாமலம் இரண்டும் நீங்கின அஞ்ஞான ஆன்மாக்கள் எண்ணிறந்தபடியாக வேதாகமங்களாலே திருவுளம் பற்றப்பட்ட புகழையுடைய சிவனது சரித்திரத்தைப் புண்ணிய பாவப் பகுதியாகிய கன்மமல மாயாமல பந்தனாகிய யானும் இப்போதும் என்னாலியன்ற மரியாதை உனக்கின்னும் ஒருவகைத் தகுதிப்படச் சொல்லுகிறேன். அதை நன்றாகப் புத்தி பண்ணிக் கேட்பாயாக. 38-39. பாசம் குன்றோன் : (உரை) காமியம் மாயை ஆணவமென்னு மும்மலத்தின் காரிய காரணங்களை யறிந்து நீங்கின உபசாரத்துடன் சிவஞான சம்பந்தரான ஆன்மாக்கள் இருதயமான பொதுவெளியிலே விளங்கி நின்ற குணமான மலையான் ; இதுவன்றி, எண்ணிறந்த படித்தாகும் பிணிப்பை யுடைய ஐவகைச் சத்திகளினது வியாத்தி வியாபகங்களுக்கப்பாலாகியும் அதனுட் கட்டுற்று இலக்கமிலவாய உயிர்க ளிவைக் கந்தரம் போற் றலையளிசெய்யும் பேரறிவா யதுவே பொருந்தும் தில்லைப் பொதுவில் யாவருங் கண்டு மகிழ்வுண்டாக நட்டம் பயில்வனவே குணமான மலையென்றுமாமென்க.விண்மேல் பாட பேதம். 39-57. இலகவே ஆறுடையான் : (உரை) விளங்கச் செய்யப்பட்ட சிவபுண்ணியமான மலையிலே யிறங்கி, அபரஞானத்தின் தலைமைகண்டவரது கூர்ந்த அறிவுக்குப் பிரயோசனமாகி யேத்தும்படிக்குச் சந்தோஷத்துடனே வேகமுடைத்தாய், ஒன்றை யொன்றாகத் திரியக் காணுதலையும் அங்குத் தோன்றுபுத் தோன்றுமாக நினைக்குதலையும் அச்சப்படுதலையும் ஆசைப்பற்றையும் பிறவுயிர் வதையையும் அகங்காரத்தையும் முறுக்கி, சத்தி அனந்தமான புண்ணிய பாவங்களையெல்லாங் கெடுத்து, களிப்புடனே ஜடசித்துக்கள் முற்றும் இயல்பாய் நாதமுழக்கஞ் செய்து வேகத்தினாலே நடந்து ஞானத்தின் பகுதியாய்த் திவ்யாகமங்களில் நன்றாய் அறிவாய்ச் சென்று, ஆணவம் மாயை காமியமென்று விரிந்திருண்ட காட்டு விருத்தி நாசமாம்படி அதற்குக் காரணமாகிய கிழங்கைப் பிடுங்கி, சர்வமுமாய்ச் சகல சத்தங்களுஞ் சகல சத்தத்தின் பொருள்களும் உண்டாக்கியறிகையால் அதுவெல்லாந் தனக்குக் கீழாகையாலும் அதனளவில் அளவுபடாமையாலுங் கல்வியினது வரம்பையும் உடைத்து, பிருதிவி அப்பு தேயு வாயு ஆகாயமென்னும் ஐந்து பூதமும் ஐந்து நான்கு மூன்று இரண்டு ஒன்றென்னும் அதன் ஜடப் பிரஞ்ஞைக் குணங்களின் விரிவையும் போக்கி, அநித்யமான ஊரும் பேரும் குடிமையும் அழகும் பெரியனென்னுங் கீர்த்தியும் நிறுத்தப்பட்ட ஆன்மாக்கள் சரீரத்தில் நிற்கும் பரிசத்தினது தன்மையும் வாயினிடமாக நின்ற சிங்ஙுவையின் தன்மையும் நேத்திரத்தினிடமாய் நின்ற ரூபத்தினது தன்மையும் துண்டத்தினிடமாக நின்ற ஆக்ராணத்தினது தன்மையும் கர்ணத்தினிடமாக நின்ற சோத்ரத்தினது தன்மையும் இப்படிப் பலவாய தன்மையாய்ச் சிங்கம் போன்று ஐந்து வாயினானும் விழைவை விரும்பும் ஞானேந்திரியங்களாற் பற்றும் ஆசையைப் போக்கி, தன்னைப் பெருமைக்காகாது கீழப்படுத்துவிக்கு மியல்பினை யுடைத்தாகிக் கடின பாடணமாகச் சொல்லினின் விளக்கும் வாக்கையும் பாவவேதுவான காரியத்திலே செல்லக் கால் நின்று கமனிக்கும் பாதத்தையும் கியாதிலாப் பூச்சியங்களைத் தழுவாத புண்ணியத்திற் செய்யாது ஆர்வங் கண்ணோட்டமாகிய பசுத் தர்மத்திலே யிடுதலும் இது ஏற்கவொண்ணாதென்று விசாரியாமல் ஏற்குங் கையினின்று செய்யும் பாணியினையும் உதரத்தினின்று ஜலத்தையுங் கட்டத்தையும் வேறுவேறுபடுத்தும் பாயுருவையும் விடயானந்தத்தை இருவகையான கோசபவக் குறியினின்று விளைக்கும் உபத்தத்தையும் இப்படிப் பலபேதப்பட்ட கன்மேந்திரியங்களைந்தையும் விடுவித்துத் தான் நெருங்கி அந்தத் தானங்களெல்லாம் நிரம்புவித்து, என்றும் நீக்கப்படாத சங்கற்ப விகற்பமாகிய பொழிற் செறிவை வெளியாக உருவியும் நிறைந்தோடி, நான்கு நான்கு பேதமாக ஆட்டுக்காணும் அந்தக்கரணங்களினுடைய தற்குணங்கெடத் தாக்கி, பற்பலவாகச் செய்யுந் தத்துவங்களின் சேட்டையை நிறுத்தி யாவுஞ் சிவஞானத்தின் தன்மையேயாகிப் பெருக வளரப்பண்ணி, சாத்விகம் ராசதம் தாமதமென்னும் பெயரினையுடைய குணத்ரயங்களின் செயல் பதி மாறிமாறிவரும் மிகுவெற்றியையெல்லாந் தனது ஒருபடித்தாய இன்பநிறையாற் கோபித்து, உடல் முழுவ துள்ளும் நிரம்பி மிகுதியாற் புறம்பு புக்கோடி மூன்றரைக்கோடி யுரோமவழி யெல்லாஞ் சுகம்பிறந்து மயிர்கள் சிலிர்ப்ப மாயாதனுவின் நித்யகுணமான தாபசோபமும் அனாதி ஜனனமரண அழலிக்கையும் நீக்கித் தட்பமுடையவாய பெருஞ்சுகம் விளையப் புலன்களைந்தின் சிறுதொழிலான் மருட்டுவழிச் சார்தல் அறப்பண்ணி, அண்டத்துந் தனு கரணங்களுக்குக் காரணமாகிய வினைகள் நிரம்பிய சந்திரமுதற் கலையீறா அறுவகை நிலங்களும் அடங்கச்சென்று பாய்ந்து, பசுங்கூட்டாகிய சந்தனங்களினாற் பொதிந்து நெருங்கிய கொங்கைகளையுடைய அங்கனையார்கள் செய்யுங் கோலக்கோட்டிகளால் விழைவுற்றுச் செல்லும் அறியாமையை நீக்கி, அண்டத்தும் பிண்டத்தும் எழுதல் இயல்பாகி வாதனையுடைய அக்னிமண்டலம் ஆதித்தமண்டலஞ் சந்த்ரமண்டலமாகிய முச்சுடர்களுந் தனது காருண்ய ஆணைப்படியே சர்வத்துக்கும் பொதுவாய் நடுவுநிலைமையாயே நில்லாது அதிகார மலத்தால் விகாரப்படாமல் பார்த்து நிறுத்தி, மூலாதாரஞ் ஸ்வாதிஷ்டானம் மணிபூரகம் அனாகதம் விசுத்தி ஆஞ்ஞையென்னும் ஆதாரத்தினடைவே முற்றும் நிறைந்து, ஒன்றோடொன்று மாறுபட்டுப் பொருதல் புரியும் பிராணன் அபானன் உதானன் வியானன் சமானன் நாகன் கூர்மன் கிருகரன் தேவதத்தன் தனஞ்செயனென்னு மேலாய மாருதமும் அண்டத்துக் காரணவாயுப் பத்தும் விளங்க மேற்கொண்டோடி மேலடாது கோபித்து, தேகத்தின் காரியமாய்ப் பஞ்சபூதத்தின் காரணமாகிய அண்டத்து அதோமுகமாய் நீடுநிற்கும் ஐவிதமான பூதத்தானங்கள் கலைகளெங்கும் பரந்துநின்று, அண்டத்தும் பிண்டத்தும் உற்பவநாச குற்றந்தீரா ஆன்மாக்கள் போலாது கடவுளாகி நிராதார அதிட்டிதமாகி நிவர்த்திகலை யதிபரான பிரம சிருஷ்டியையும் பிரதிட்டாகலையினின்று திதிபெற்றுச் செய்யும் விஷ்ணுவின் திதியையும் வித்தியாகலையினிருந்து சங்காரத்தைச் செய்யும் உருத்திரமூர்த்தி சங்காரத்தையும் சாந்திகலையினிலையாகித் திரோபவத்தைப் பண்ணும் மஹேசுரர் மறைப்புச் செய்தலையும் ஆகாயபூத வியாபகவந்தமான சாந்தியாதீதகலைக்குக் காரணராகி அனுக்கிரகத்தை ஐவகை நிறமுடைய முகங்களாற் புரியுஞ் சதாசிவ மூர்த்தி யனுக்கிரகத்தையும் இந்தக் கலைகளும் இந்தச் சதாசிவ மூர்த்திகளுந் தனுகரண முதலியவையாகக் காரணமான சுத்தமாயையின் அதோமுகமான விந்துவான பராசத்தியையும் அந்தச் சுத்த மாயையில் ஊர்த்துவமுகமாய் ஓசைவடிவாகிய அபரநாதத்தையும் பிறகிட்டு மேற்சென்று, சுத்தமாயா காரணங்கடந்து நின்மலமாகி, நிராமயமான பரவிந்துவென்னும் பராசத்தியினது முடிவிலா வியாத்தியாகிச் சித்தஞ் செல்லாத சூனியமெங்குங் குறைவர நிரம்பி, அவ்வளவிலும் நில்லாது பரந்து, ஞானபாதங்களில் முதற் பேசப்பட்ட பராசத்தி ஞானத்து மேலாகிப் பூரணமான பரநாதத்தையுந் தனக்குள்ளேயாக மேல் தனதெல்லையளவு செறிந்தோடும் நீர்மையாய்ச் சுத்தப்பேரறிவேயாகி வேறு சந்தேகமில்லாது தீர்ந்து, பாதாளசத்தி தொடங்கிப் பரந்த வியாபகமும் பலவாய சத்திகளுமன்றி ஜடசித்தாகிய எல்லாப் பொருள்களின் ஞானங்களும் தன்னதேயாகியவாயினுஞ் சேர்ந்த உயிர்களுக்குச் சுத்த முத்தியுங் கொடுத்துத் தனக்கு அபின்னமான நிரதிகாரத்துக்குத் தான் திருமேனியாயிருந்தாலும் மூவகையுமல்லாத உயிர்களுக் குயிராய் நிற்குந் தன்மையுங் குன்றாதுமாகி, கண்டிக்கப்படாததாய்ச் சர்வமும் நிரம்பித் தூலசூக்குமமான இருவகையிற் சிருட்டி திதி சங்காரம் திரோபவம் அனுக்கிரகங்களாய ஐந்தவதரமும் இல்லாததாகிப் பரமாய் நிர்மலமாய் நித்தமாய் ஒன்றாய்ச் சருவப் பிராணிகளுக்கும் அறிவாகி அசலமாகிப் போதங்களாற் செப்பவரிதாய்த் தற்சிவமாகிய மிகுந்த ஒளியே தனக்குக் காரணமாய்க் கதியாக அதனுடன் இரண்டறப் போய்ப் புக்கு இதுவன்றியுஞ் சுத்தாவத்தையி லுண்டாகிய பஞ்சபேதமான அவத்தையுங் கடந்த பேரொளியே கதியாகச் சென்று பாய்ந்தெனவுமாம்., சொல்லிப் போந்தவை யாவுஞ் செய்யுமிடத்துச் சர்வப் பிராணிகளுக்கும் தத்தம் வினையால் வேறுபாடு காண்டலல்லது தான் செய்தால் பக்கஞ் சார்தலின்றி முடிவும் முதலென்பதும் இலவாகிச் சகல உயிர்களையுந் தனதியல்பில் நிறுத்துமென்னும் நினைவாய் அளவிறந்த காருண்யந் தானே மேன்மேலும் வளர்கின்ற மிகுமின்ப சுகந்தானே தசாங்கப் பொருளுக்கு ஆறாய பகுதியுடைவன்.மோதி யலைக்கும் அருணீர்மை முக்குணமும் பாடபேதம். 57-58. ஆனந்தம் நாடுடையான் : (உரை) அருளாய் அடைந்த ஆன்மாக்களுக்குஞ் சுகசொரூபமே செய்வதற்குக் காரணமாகி அருநிலைமை அறிதற்குக் காரணக் கருவியான நான்கு வேதமும் இருபத்தெட்டுத் திவ்வியாகமமுங் களங்கமற ஓதி அதன் தாற்பரியமுடிவை யறியச் செய்த மஹத்துக்களுக்கும் அந்த அறிவாற் பொருந்தப்படாது நுண்ணியதான சிற்சத்தித் தானமே தனக்கும் சுத்தமான நாடாக உடையவன்.திகைப்பொழிந்தங் கெவ்வறிவுக் பாடபேதம். 58-60. எண்ணெண் ஊருடையான் : (உரை) விரிந்த அபர ஞானமாகிய அறுபத்துநான்கு வகைப்பட்ட கலைகளினது ஞானங்களை ஆராய்ந்து ஒன்றின் கருத்து ஒன்று சொல்லாது வெவ்வேறு பேதப்பட்டுச் சொல்லுகையாற் பயன் நிலையாமை கண்டு மனமுருகி நொந்து திரிவித கரணங்களும் எப்போதும் பற்றாக ஆசைப்படுஞ் சுத்தமாயா பீடத் திருத்தல் முதலிய கீழுள்ள போகத்தானங்கள் முடிய அநித்யமென்று நீத்து அருளுருவாற் சலிப்பற நின்ற ஆன்மாக்களிடத்திலே அவ்விடத்து உதிக்குஞ் சிவஞான மதுவே தனுவாக ஆன்மசகா விதமாகிய போக்குவரவற்ற பூரணத்துவம் வந்தவிடத்து அழகு செறியும் அனுபூதியாய பகுதிக்கு நாயகன். 60-63. நாட்டத்தால் மெய்யினான் : (உரை) என்பதை பொய்யிற் கூடாமற் சிந்தைமயக்கந் தெளிந்து நாட்டத்தால் தெண்ணீர் அருவிவிழ உண்ணீர்மையெய்த வுரோம மெலா நண்ணும் புளகம்புனை மெய்ய ருளகம்பங்கொண் டுள்ளுருகி யளவிலா மாலா யிருக்குமவர் மனத்தை வாங்க அருள் மேலாய் விளங்கலங்கல் மெய்யினான் எனமாறுக. பொருளாவது : மலையினுச்சியி னட்டுத் தெளிந்த நறுநீரானது இடையறாது விழுமாப் போல இரண்டு கண்களினாலுங் கண்ணீர் தாரைவிட ஆன்மாவினுடைய ஐயுறவு நீங்கி உள்ளே ஞானம் விளங்க மயிர்க்கால் தோறுஞ் சுகபுளக முண்டாகுஞ் சத்தியத் திருமேனியானவர் இந்தப் பிரபஞ்சப் பொய்யை நீத்தவர்களிடத்திலே கம்பிதமான ஆனந்தமுண்டாகத் தான் ஒருபொருளென்னுந் தன்மைபோய் நீராளமாய்க் கரையிறந்த பற்றாம் வாஞ்சையுடைய ஆன்மாக்கள் செயலானது விஷயாதிகளிற் செல்லாமல் நிறுத்தித் தன்வயத்தாக்கும் அருளே யாவைக்கும் அதிகமாகத் தோற்றப்பட்டவையை அழகு செறிய மாலையாகத் தரித்து அறிவுதானே தடித்தனவே திருமேனியாக உடையவன். 63-65. தோலாத வாசியான் : (உரை) பேரிருளாய் வழங்குதலில்லாத வெறுவெளிகளும் இரு நூற்றிருபத்துநான்கு புவனங்களும் அஷ்டகுல பர்வதங்களுஞ் சப்த சமுத்திரங்களுஞ் சப்தபாதாளங்களும் ஆன்மகோடிகளுக் குடம்புண் டாகைக்கு மூலமுங் காரியப்படுவதுமான பஞ்சபூதமும் அந்த ஆன்ம கோடிகள் யாவைக்கும் அறிவு எவ்வளவோ அவ்வளவுக்குத் தேர்தலுள வவ்வளவவ்வளவ தன்றியேயாகியுஞ் சொல்லப் போந்தவை யித்தனையுந் தன்னிடத்திலே யுண்டாக்கி உண்டாக்கியும் வினைப்பகுதியால் விளக்குகையால் தானல்லவுமாய்ப் போதமிக்கால் பகுத்தறியும் அறிவினர் பகுத்துக் காண்கைக்குக் காணாமையுங் காட்டுவதுமான சித்தாய் மனவேகமான இச்சை கிரியை ஞானசத்திகள் இத்தன்மைய வானதே கடுங்குதிரையாக உடையவன்; இதுவன்றி அப்படித் தோய்ந்தும் தோயாமையுமான விசித்திரமான வாசியே வாசியா யுடையனென்க. 65-73. சொல்லாரும் ஆனையான் : (உரை) ஈசுவரவாக்யங்களாலே அதோமுக உலோகங்களெங்குந் தடையறப் புகுந்து அதன்மேல் ஆதிநடுவாய் அதிற் பிலக்கத்தீவு முதல் புண்டரீகத்தீவு ஈறாகச் சப்ததீவுள்ளும் அதன்மேலாகி ஊர்த்தமுகமான பூலோகமுதலாக அடைவே உயர்ந்த சத்யலோக மீறாக ஏழுமேலுலோகங்க ளுள்ளவாய்த்தான் நிலையாக நிற்கைக்குத் தானமாகி, அன்றியும் அதன்மேலாய வுலோகங்களாய்க் கண்டிதமன்றி அருவாயிருக்குஞ் சுத்த மாயாலோகம் யாவும்நிறைந்து, இப்படியிருந்தாலுஞ் சுட்டிச் சொல்வதற்குக் காட்சியிற் படாது. ஆனால் இல்லாததோ வென்னிற் சுட்டிறந்தாற் சொல்லிற் பட்டதாய், அன்றியும் மேலோர்க் கல்லது உச்சரிக்கப்படாத வேதம் நான்கும் சிடிக்ஷ கற்பம் வியாகரணம் நிருத்தஞ் சோதிடஞ் சத்தமென்று சொல்லப்பட்ட அங்கங்க ளாறும் இவைக்குத் தானல்லதுவேறுயிரின விலதாய் அதிற்பிரித்துப் பிரபஞ்ச சருவமுஞ் சொல்லுவதாய் அதுவே அதனுக்குயிராய் அதிலே நிச்சயமான தாற்பரியமே அந்த உயிர்க்கு ஞானமாய் இந்த விதத்தாலாய சரீரமே மிகப்பருத்து, தனது மெய்யடியார்களிடத்தில் கடினப் பிரவிர்த்தியான பொல்லாத பந்தகட்டை அற்றுப்போம்படி செய்து, திரிவித கரணங்களினால் ஏறுசெய்திக்கீடான பற்பல ஜனிப்புத்தாப சோபமாய்ப் பற்றுக்கோடாய்க் கரையிறந்து நிலைகாணாத சாகரத்தைப் போலப் பயனிலவாய ஜனன சாகரத்தை நன்றாய் நசையீரஞ் சிறிது மில்லாது துகளெழக் கடந்து, சந்தேகப்படுவனவும் விஷய விருப்பும் அதனால் வரும் வெகுளி ஈயாமை யாதுந் தெரியாமல் மயக்கிற்படுகை தன்னை மதித்துக் கெர்வித்தல் முதலானவைகளை வெகுண்டு நெருக்கி, மரித்து மரித்துத் திரிவதற்குக் காரணமாய புவன போகத்தை நசுங்க மிதித்து, வேறுவேறு பெயரிட்டு கொள்ளே அச்சம் பொருந்தி தீர்க்கப் பிரயோசன மில்லாத நூலாகிய பற்பல வார்த்தையாகக் குரைக்கும் புறச்சமயிகளாகிய புன்மையார் கோவைசெய் தகுதியின் வெற்றியைச் சின்னாபின்னமாகத் துணித்து, தன்திறமற்று அச்சமுறல் பிறவுயிர் கோறல் முதலிய செய்வதற்கிசைதலை நாசஞ்செய்து, நாடோறும் நாடோறும் புனைந்த செயலுரைகளின் பிணிப்பாற் பெருகிவரும் புத்ரர் முதலாயின பற்றும் வேரற அடர்த்து மோதி, களத்ரப் பற்றைச் சிறிதுமில்லாமலறுத்து, அளவற்ற கருணையினால் எந்த விதத்தினாலே ஆன்மகோடிகளின் பந்தம் நீங்குமென்கிற நினைவான கடுமைதானே குணமாகி ; அதுவன்றியும் அந்தக் கிருபை தானே மிக்க ஆராமையாகிய மயக்குற்று ; உமை திரு வாணியென்னும் மூன்று சத்திகளையும் மும்மதமாகப் படைத்து அந்த மதங் கரைக்குங் கர்வத்தாற் சாதாரணமாகிய தேக காரியமான தத்துவம் எவ்வளவுள அவ்வளவும் அதனுட் செறிந்து அந்தத் தத்துவங்களுடம்பாய உயிர்கள் அவைகளினாலே விஷய நுகர்ச்சி நுகர்தற்குரியன உட் கலந்து நிற்றலாலே அந்தப் புவனபோகங்களில் தனக்கு யோக்யமான நிர்மலமாய சுத்தமாயா போகத்தில் உண்டோ இல்லையோவெனச் சிறிதே தேன்போன்ற தெளிவைக் குடித்து அதனால் மிகுசல்லாப மடைந்து வீறிட்டு மிகவும் உன்னதமான யாவையினும் நீண்டு வெகு விதமான வேதங்களெல்லாவற்றையுங் தனக்கு நாலு கொம்பாகப் பொருந்தி விளங்காநின்ற கிரியை இச்சா ஞானமே தனக்கு அங்கமான கொலுயானையான உடையவன்.குரோதமத மாச்சரியம் பாடபேதம். 73-74. இருமுச்சமையம் துவசன் : (உரை) உட்சமயங்களான வாமம் வைரவம் மஹாவிரதம் காளாமுகம் பாசுபதம் சைவம் ஆறினுங் கொண்ட பொருள்நிலைக்கு மேம்பட்டு அந்த நிலை அந்த அருளினர் நிலைக்கல்லது பின்னை யாவர்க்கும் கட்டாமையால் ஒப்பற்றுச் சர்வதொழிலையுஞ் சுமத்திக் கொண்டு துன்புறும் உயிர்களினை வைத்துத் தாம் யாவைக்கும் பிராத்திகனென்னும் அறிவை விளக்கி அந்தத் துன்பச்சுமை யில்லாதபடி செய்தலால் அவையே அவனுக்குக் கொடியாக உடையவன். 74-77. கமையொன்றி நெடுமுரசோன் : (உரை) விஷயப் பகுதியாற் புலன்வழிச் சேறலை யடக்கித் தாப சோபமாற்றி உயிரென்று வேறேயொன் றில்லை பிராணவாயுவே யென்று அறுதியிட்டு முக்கோணமான மூலாதாரத் தக்கினியை ஜொலிப்பதற்காம் வகையாலே ஜொலிக்கப் பண்ணி இந்தப் பூததனுவிற் புசிப்பும் இதுவன்றி நீங்கித் தேவலோகம் முதலான தானங்களுக்கான உடம்பிற் புசிப்பும் இவையிரண்டுமல்லவாய் இந்தத் தனுவிலே சுபாவமாக நடக்கும் இடைபிங்கலையான வாயுக்கள் இரண்டும் நடவாது தம்பிக்கச்செய்து, அதுவன்றியும் புறம்பாய் இதற்குச் சகா காரணமாயுள்ள பூதவாயுவின் சகாயத்தையும் நிறுவித்துச் சுழுமுனை நாடியி னுண்டாய வாயுவாலே மூலாதாரத்தில் ஜொலிக்கிற அக்கினியை யெழுப்பி இலாடத்தானத்துச் சந்திர மண்டலத்திலே தாக்கி அதிலுண்டாய அமிர்த கசிவாய புசிப்பால் உள்ளெங்கு மின்பாய் அதுவே புசித்து முன்னுள்ள தனுவுக்குள் நரை திரை மூப்பு மிருத மற்று அந்த உடம்பே வஜ்ரகாயமாய் இளமைபெற்று அளவிறந்த காலம் நித்யராயிருக்கும் மஹாத்மாக்களுள்ளே நீங்காமல் எப்பொழுதும் விளங்கிய பேரொலியே பெரிய பேரிகையொலியா யுடையவன். 77-79. அன்றியும் ஆணையான் : (உரை) அல்லது பிரமாவினாலே சிருஷ்டிக்கப்பட்டு விஷ்ணுவினாலே இரக்ஷியா நிற்கின்ற பிரகிருதிக்குக் கீழ்ப்பட்ட உலகமெங்கும் பெருகினதன்றி அசுத்தமாயையினுடைய உருத்திர மூர்த்திகளாலே நடக்கப்பட்ட உலகங்களும், அன்றியினுந் தனித்தனியாகக் கீழும் மேலும் உண்டாய உலகங்களும் அதற்குக் காரணர்கள் மாட்டு யாவைக்கும் மேலாய் அசுத்த மாயையினுண்டாய உலகங்களினும் அதில் அதிபரிடத்தும் ஆன்மாக்க ளறிவால் அறியப்படாத குய்யத் தானங்களினும் விளங்கப் பிரகாசித்துச் செல்லும் அழகிய ஆக்கினையினை உடையவன். 79-81. அலகிறந்த தோன்றலான் : (உரை) எண்ணிறந்த ஆன்மாக்களுக்குந் தான் ஒருவனே புகலிடமாக இருந்தாலும் ஒருபடித்தாகாமல் அவரவர் கோட்பாடுகளுக்குத் தக்கதாக வேறுவேறு ஒன்றோடொன்று இசையாத படியாகக் காணுந் தன்மையன். உயிர்கட்கு மேலாய ஞானங் கொண்டல்லது தற்போதங்களினாற் காணப்படாதவன். வேதாகமங்களின் பொருளினனாக நிச்சயிக்கப்பட்டுள்ளவன். அந்த வேதாகமங்களினால் நிச்சயம் நிலையிடப்பட்டவைக்கெல்லாந் தான் நிலையாதவன். தான் மேலாய ஸ்வரூபியா யிருக்கினும் சர்வான்மாக்களுக்கும் அதுவே பேறாக்குகையின் பொருட்டு அவ்வவர்கள் மதத்துக் கீடாக நன்மைதீமை புசிப்பதற்கு வேதனை விதமான காரியங்களையும் உண்டாக்கப்பட்டுடையவன். பூலோக மெங்கும் எட்டுத்திக்கும் கீழும் மேலுஞ் சஞ்சரிக்கப்பட்ட பரிதி அங்கி இந்து மற்றுமுள்ள ஒளிகட்குத் தான் ஒளியுமாய் அந்த ஒளி மூர்த்திகளுக்கும் பிரபை கொடுத்துள்ளவன்; ஒரு முதல் சொல்லப்படு மிடத்து அதற்கு அடி முடி உண்டாகையால் அப்படிப் போல்வதோர் அடி நடு அந்தமிலாதாகித் தானே தோன்றிய முதலானவன். 81-83. வேராகி ஒருவன் : (உரை) தாபர சங்கமமென்னும் இருவகைத் திணையில் தாபரங்களுக்குப் பொருந்தும் உயிர்காறுங் கருவிமுதற் காரணமாகிய பீஜமும் அதற்கு நிலையாகிய மூலமும் அதன்மே லெழுந்துண்டாம் பணை சினை அடை தளிர் பலங்களுமாக்கி, சங்கமங்களுக்குப் பொருந்து முயிர்க்கு அது அதுகளுக்கேற்குங் காரணங்களுந் தனுக்களுமுண்டாக்கி, அதற்குள் நடத்துங் காரண பூதங்களையும் படைத்து, அந்தப் பூதாதிக்குக் காரணமாய தன் மாத்திரையாய்ச் சத்த முதலியவற்றைப் பூதாதியாங்காரத்தினும் உண்டாக்குவித்து, அப்படிப் பிரகிருதி மாயா காரியத்தை அதிஷ்டித்து ஆக்கினானாயினும் அவனுண்மை சொல்லுமிடத்துச் சுத்தமென்ற அபர விந்துவையும் வெறுவெளியாய அபர நாதத்தையும் பாழாய பரவிந்துவையும் வெறும்பாழாய பரநாதத்தை யுங்கடந்து இவைகளிற் றோய்ந்த குணமில்லையாய்த் துகள்தீர்ந்த ஆன்மாக்கள் பெறும் பேறாய்ச் சலனமற்ற தனி முதல்வன். அபரவிந்துவைச் சுத்தமென்றது சதாசிவ முதலிய மூர்த்திகளுக்குத் தனுவாகையினானுஞ் சுத்தமாயா மந்திரம் இதிற் பிறக்கையானுஞ் சிவசத்திகள் இதிற் றோய்ந்திட்டிருக்கையானு மென அறிக. அபரநாதத்தை வெறுவெளியென்ற தென்னையெனில், சிவசத்திகள் தாக்கின் மேற்கொண்டு பராசத்தி வெளியிற் படருகையாலும் அருவாகையாலுஞ் சுத்தமாயையில் ஊர்த்தமுக மாகையாலும் அவ்விடத்துண்டாவது யாது மில்லையாகையாலுமென அறிக. பரவிந்துவைப் பாழென்றது அவ்விடத்துப் பொருந்திய ஆன்மாக்களின் சத்தி செயலில்லாதாகை யாலும் நித்தநிராமயமாகிய நிர்மலமாகையாலு மெனக் கொள்க. பரநாதத்தை வெறும்பாழென்றது அந்தத் தானங்களிற் பற்றிய உயிர்கள் உயிரென்பதொரு முதலுமற்று ஞேயந்தானே யாகுகையால் அப்படிச் சொன்னதென அறிக. அப்பாலுறு பொருளாய் நின்ற ஒருவனென்பது திரிபுடியும் நஷ்டமான பெறும்பேறாய் ஏகாந்தனாய் நிறைந்த அசலமென்றதென அறிக இப்படிப்பட்டவன், 83-88. பொறியிலியேன் இயல்பினான் : (உரை) அப்படிச் சர்வசூன்யனாகி மறைந்தவனாயினும் பிரத்யக்ஷ மாகப் பிரபஞ்சத்திலே சத்தாதியாய இந்திரியம் நிற்க மெய் வாய்கண் மூக்குச் செவியென்னுந் தானங்களும் வழக்கமில்லாத யான்; அது வன்றியினும் அவன்செய்த காரியத்துக்குப் பிராத்தியான பாத்ரமில்லாத யான்; துயர அழலினாலே வாட்டும் பிறவிக்கடலில் அழுந்தாமல் மோக்ஷத்தைத் தந்து சம்பந்தமாமுனி யென்னும் மஹத்தாய நாமத்தினையும் புனைந்து எனக்குச் சாமியுமானோன். இம்மட்டுமல்லாமல்,சமுத்திரஞ் சூழ்ந்து அழகிய உலகிலுண்டான மஹத்துக்களும் மானுடராயினோர் யாவரும் வந்தனை செய்யப்பட்ட தனது அழகிய பாதமிரண்டும் ஒன்றுமாகாத ஈனமான என்னுடைய சிரசில் ஒருகாலும் மறையாமல் விளங்கவைத்தவன். அவன் நாமரூபியாயிருந்தாலும் அறிவால் விசாரிக்கில் புண்ணிய ரூபமான இடபநந்தி முதுகின்மேலே யிருக்கப்பட்ட என்னுடைய கர்த்தன். பற்பலவாய சமயிகள் அவரவர்கள் வேறு வேறாகச் சொல்லுஞ் சொற்கு அர்த்தமானவன். ஒன்றோடுங் கூடாது ஒருவனாகச் சர்வத்துக்குங் காரணனாயினும் அப்படிச் சுட்டிக் காணப்படாதவன். நிர்மலமாய் அழியாததாய் வேறொன்று வந்து பொருந்தாததாய் ஒப்பற்றதாயிருக்கப்பட்ட சுகசொரூபமாய்ப் பிரகாசிக்கப்பட்டவன். இப்படி நிகழ்த்தலாய்ப் பிரகாசத்தை யுடையனாயினும், மந்தம் மந்ததரம் தீவிரம் தீவிரதரமென்னும் நான்கு சத்தினி பாதமும் பொருந்திய சகலரை இரக்ஷிக்கை நிமித்தமாக அவர்கள் அறிந்து வழிபடத்தக்க ஆசிரியரூபத்தைத் தரித்துளனாயினும் நாம ரூபக் குணங் குறியிலதாகி எங்கும் நிரம்பி ஒழியாத திருமேனியான பெரிய கர்த்தன். நால்வகைத் தோற்றத்தின் எழுவகைப் பிறப்பினும் அதற்கதற் கேற்ற யோனிகளினுருவாகைக்குக் காரணமான கன்மமல ஆணவமல அனாதிப்பிணிப்பைச் சுத்தமாக அரிந்தவன். வேதாகம சம்பன்னராயுள்ளவர்கள் நிரம்பிய வாழ்வுடைய சிதம்பரமாகிய தில்லைவனமே தனக்கு ஊராக உடையவன்; நூலறிவாலே மிக்கவர்களைப் பிரபஞ்ச வாழ்க்கையில் வாழுதலிலதாகச் செய்பவனெனவுமாம் ; பிரமாவிஷ்ணு இருவருஞ் சபத மிட்டுக்கொண்டு அடிமுடி யறுதியிடுவோமென்று தேட இன்னுங் காணாதவன்; அன்றியும் தற்போத மிகுத்தோர் அளவை கொண்டு மட்டிட அந்த மட்டில் அடங்காதவன். 88-91. மட்டவிழ்தார் காட்டினான் : (உரை) ஞானசூரியனாக என்னுடைய ஸ்வாமி எழுந்தருளு கையால் மலபந்தமாய்த் திணிந்த பூதவிருளாய் அந்தகாரமாய் மூடிக்கொண்டிருக்கும் ஆன்மாக்க ளிதயமாகிய மொக்கை விகசிதமாக்கி மலர்த்துதலால் அதில் ஞானாமிர்த மதுக்களை யுண்டு தேக்கிடப் பெற்ற பிரகாசம் பொருந்திய ஞானசிற்சத்தி வடிவாகிய கொன்றைமாலை மார்பிலிலங்க எழுந்தருளி வாராநின்ற பெண்ணாகடந் திருப்படை வீடாகிய மறைஞானசம்பந்த மாமுனி ஒன்றுக்கும் பற்றாத என்னை அடிமைகொள்ளும்படி பவனிவரக் கண்டு நல்வினை வல்வினை யிரண்டும் அறியாத எண்பத்து நான்கு நூறாயிரம் யோனிபேதத்தில் மொத்துண்ட உயிர்கள் யாவருங் கண்டு ஆனந்தபரவசமடையும் பகுதியில் யானும் ஓர் உயிராகக் கண்டு தொழுதேன். அடியேன்பேரிற் சிவோகம் பாவித்துப் பூரண திருஞானப் பார்வை செய்து யானெனதென்னும் பழவினையாகிய மூலஆணவமலம் திரோதை மாயை கன்மம் மஹாமாயை இவ்வைந்தினுடைய மூலக்கிழங்கை ஞானாக்கினியினாற் பசையற எரித்துப் பாழ்படுத்தி, யான் ஒரு நாயகபுருடனாகவுந் தமது திருவருளே நாயகியாகவும் அளிகள் மத்தமதுக்களை யுண்டு மயங்கிக் கிடப்பதுபோல என்மனத்து எனக்குத் தெரியாமையாய்ப் பற்றற வேறாக்கிப் பசுகரணஞ் சிவகரண மாக்கி இரதகுளிகையைச் சேர்ந்த செம்புபோல என்னைத் தன்வசமாக்கித் தத்துவக் குப்பைகளாகிய தொண்ணூற்றறுவரையுங் கீழ்ப்படுத்திச் சரீரத்துவக் குப்பைகளனைத்தையும் பதைப்பற அறுத்து ஞானானந்தத் திருநோக்கினாலே பேரின்ப வெள்ளத்தை என்னுள்ளும் புறம்பும் ஒழுகும்படி காட்டினான். தனது சிற்சத்தி விளங்காநின்ற திருவடியை அடியேனுக்கு உள்ளபடி காட்டினான். 9192. வெண்ணீறும் மனையுமே : (உரை) பராபரமாகிய வஸ்துவே திருவெண்ணீறும், அகப்பற்றுப் பாழ்படுத்திய அடியார்கள் திருவேடமும், பஞ்சசுத்தி செய்து சித்திர தீபம்போல மனதை நிறுத்திச் செய்கிற பூஜையுமே மெய்யென்றும், பொய்யான திரவியமும் பிரபஞ்ச வாழ்க்கையும் மனைகளும் பொய்யென்றும் ; 92-99. நாடரிய ஈர்த்தான் : (உரை) சம்பிரதாய வழியிற் கர்ணபாரம்பரையல்ல தறிய அரிதாகிய அஞ்சக்கரத்துக்கு அதிதெய்வஞ் சிவமுதல் மலமீறாக ஐந்து காரணமும் அடைவே நிற்குந் தன்மையுணர்த்தி; அதன்றி அந்த மந்திரம் இருதயத்திலே நீங்காதபடி வடுப்படச்செய்து அதினுண்டாம் அனுபவத்துக்கும் ஆசைப்பற்றுண்டாக்கி; இப்படியல்லது நெஞ்சுள் நடுவாக உயிரடையாளம் நிறுத்தி மேல் தாலு இலாடத்தானத்தில் ஞானநேயத்தை நிறுத்தி அதனோடு பொருந்துமாசையை யுண்டாக்கி யெனவுமாம்; இலாடந் தாலு இருதயம் நாபி மூலமாகிய அஞ்சு கரணத்திலுஞ் சிகாரமுதலாய் அமைத்தபடியே உச்சாரணம் பண்ணும் வகையையும் அனாதியுள்ளபடி யறிந்து அந்த உச்சாரணம் பண்ணுகைக்கே அக்கரமும் அதன் மூர்த்திகளும் நிறுத்தி மார்க்கத்திலே மனதினுடைய சஞ்சலத்தை நிறுத்தி இந்தச் செய்தொழிலிலே பிரவர்த்தித்து, எரியுந் தீபத்தைக் கோல்கொடு தூண்டியபோது உண்டாய மிகுபிரபை போன்றதாகச் சிகார அக்கரத்தையும் அதனை நீங்காத சத்திரூபமான வகரம் நிலையொத்த தீபநிறமாகவும் அதற்குள்ளே கனற்பொறி நிறம் பெற்று நின்ற யகரமாகிய ஆன்மாவை வகர வொளியானது பற்றி மேலாய் மிகுந்த சிகரமாகிய தீடிக்ஷயிலே உச்சரிப்புக் கூட்டி இலாடமுதல் இருதயமீறாக உள்ளேதான் பாவிப் பித்து, இப்படிப் பாவிக்குமிடத்துப் பூவினுண்டாய தேன் போக்கு வரத்தில்லாமல் அவ்விடத்துப் பருவத்தாயதுபோலப் பாவித்து, இப்படிப் பாவிப்பித்தவிடத்து அந்தப் பாவனை இறக்க அவ்விடத்துண்டாகிய மாயையில் தோயாத அருளைப் பிரவேசிப்பித்து, அருளொழியினும் நில்லாது காண்டலும் உணர்ச்சியிற் படலும் இல்லாதாகிய தானத்திலே என்னுடைய ஜனனமரண தாபசோபத்தைப் போக்கின ஞேயமான சுகத்தில் நிறுத்தி, வாயே திறக்க வழக்கில்லாமல் என் உயிர் உடல் பொருளாயதெல்லாந் தான்கொண்டதனுக்கு அவனால் தரப்பட்டது தன்னுடைய கிருபாசமுத்திரமாகத் தலையளி செய்த பற்றே பற்றாக வாழ்ந்து மயங்க எனக்குத் தந்து இரண்டற்ற உணர்ச்சியாகக் கூடினான். எனக்குளதாய அஞ்சவத்தையெல்லாம் போக்கிப் பேரறிவேயாகச் செய்து என் கரணச் செயல் யாவையுங் கெடுத்து எனக்குள்ளதாய நடந்த ஜனனத்தையும் அறுத்தான். 99-100. விறற்சொல்லுக்கு எழுத்தினான் : (உரை) சர்வசொற்களுக்கும் மூலமாய் மேலாய வேதங்களுக்கும் அறுதியிடப்படாதவன். ஒருவராலுஞ் செய்துமுடியாக் கிரமமும் யாவராலும் ஒப்பு தீட்டாச் சரீரமு முடையவன். பிரபஞ்ச சிருஷ்டி இரடிக்ஷ காரணமாகிய மாயாகாரியத்துக் காரியமாகிய குணங்களைப் பொருந்தினானாயினும் அதில் தோய்விலாதவன். ஆகில் அதற்கு அறுதி எப்படி என்னில், என்றும் பசுஞானங்களைப் பொருந்தி னானாயினும் அதில் தோய்விலாதவன். ஆகில் அதற்கு அறுதி எப்படியென்னில், நாற்செய்தியுந் தொழிலுஞ் சரித்திரமுங் காட்டலுமே அதுதானே இயற்கையாகிய சர்வகர்த்திருத்துவமுடையவன் என்க; இப்படிப் பட்டவனாகிலும் வழிபடுமடியார் விதியானவன்; அன்றியும் சர்வத்துக்கும் உற்பத்திக் காரணமான பிரணவாக்ஷரகாரணன்.பேரொளியினுள்ளே பாடபேதம். 100-102. மட்டாரும் பலகையிட்டான் : (உரை) என்பதை ஆடலாராடல் அகன்பதியாங் கூடலார் மட்டாரும் பாடலா ராடலார் பண்பலார் நண்பலார் பாணற்கிலகு பலகையிட்டான் காணக்கிடையாதான் காண்பார்க்குக் காட்சியான் என்று பொருளுக்கேற்க மாறுக. பொருளாவது : தாளவகை முழுவதும் நவநாடக வீதி முழுவதும் அறிந்து, எந்த வேளையினும் நடம் புரியாது பெருகி மிக்க நகரமாகிய மதுரையிலே மந்தரம் மத்திமை தாரகமென்னும் அறுதியையுடைய பண்கள் இராகங்கள் யாவையுங் கரை கண்டு அந்தப் பண்களுக்குள்ள தாளவகையையும் நூற்றெட்டுத் தாண்டவத்தையும் நிலையிட்டதுமன்றிப் பலபேதமாகிய பண்பு முழுவதுங் குணங்கள் யாவையினும் அதிகமான நண்பாய வகையாவும் நிறைந்த அடியாராகிய யாழ்ப்பாண நாயனார் ஏறியெழுந்தருளியிருந்து தம்மைப்பாடி யாழ்வாசிக்க யுகந்தோறும் யுகந்தோறும் வித்வமுத்திரையா லுயர்ந்தோர் பலரும் ஏறியிருக்க இடங்கொடுத்து விளங்கப் பட்டுவருஞ் சங்கப்பலகை யாசனம் போட்டருளினவன் ; அன்றியிலும் பொற்பலகை போட்டருளினா னெனவுமாம்; எந்தெந்தத் தந்திரங்களினாலுங் காண்போமென் பவர்க்குங் காணப்படாதவன். தனதருட் காட்சியார்க்குப் பிரத்தியக்ஷமானவன். 103-107. சேணிற் செப்பக்கேள் : (உரை) அதுவன்றியிலும் அந்திவானில் விளங்குஞ் சிவப்புப் போன்ற திருமேனியனாயினும் பூமிமுதல் ஆகாயமளவாக வளர்ந்த விஷ்ணுவுக்கு முயர்ந்தவன். அதுவுமன்றிச் சர்வ அண்டங்களிலும் சர்வ புவனங்களிலும் எண்ணில் உயிர்கள்மாட்டும் ஒழியாது அழகுபெற நிரம்பியவன். தாபரம் ஊர்வன தேவர்கள் நீர்வாழ்வன பறப்பன நாற்காலுடையன மானுடர் ஆகிய எழுவகை ஜனனத்துள் எண்பத்துநான்கு நூறாயிரம் யோனி வகையினுங் காற்றாடி, சுழற்காற்று, வட்டஞ் சுற்றும் வண்டு, கையிற் பிடித்து வீசும் உற்கை இவையின் வேகம்போல மாறிமாறிப் பிறக்கும் வேகச்சுற்றைத் தனது கிருபையினாலே போக்கிச் சலிப்பற நிறுத்தினான். விபூதி தூளனவொளி மிளிருந் திருமேனியன். நிர்மலமானவன். அனாதியே மலமில்லாதவன். தனது ஞானத்தை எனக்கு நிலையாகத் தந்த முன்னோன். சர்வ பிராணிகளும் அறியும் பகுதியாய் கீர்த்திக்குத் தான் காரணனாயுள்ளவன். அஞ்ஞானிகளாயுள்ள ஆன்மாக்களுக் கெல்லாந் தான் உண்மை ஞானமாகச் சூன்யமாயும், தன்னை முதலென்றறிந்து வழிபட்ட ஆன்மாக்க ளுளத்திற் சத்தியமாகத் தோன்றப்பட்டவன். இப்படிப்பட்டவனாகிலுஞ் சீறி யுத்தத்திலே தாருகாவனத்து இருடிகள் கோபித்துச் சங்கரிக்க விட்ட பரசைத் தானே தனக்காயுதமாகச் சதாகாலமுந் தரிக்கப்பட்டவன். என்னுடைய ஸ்வாமி. அவன் பக்கலில் நீ போமிடத்து நடுவே நடுவே இடையூறுகளுண்டு. அவைகளை உனக்கு உளவாகச் சொல்லுகிறேன். அந்தக்கரணங்களின் பகுதியிற் படும் எனதுள்ளமாகிய சத்தியே, சொல்லக் கேட்பாயாக. 107-110. நித்தலுமே உறாதே : (உரை) நாடோறும் நாடோறும் அநித்தியமாய்க் குற்றமான சரீரத்தை நித்தியமாகக் குணமெனக்கருதி நலமாகச் சந்தனகளப கஸ்தூரிகளால் திமிர்ந்து கொண்டு சுகந்தவகை மாலைகளையும் முடித்து நல்ல சாலியன்னத்துடனே பால் முதலிய வஸ்துக்கள் கூடின அறுசுவை யமைந்த ஐவகை யுண்டியும் புசித்து மேலாய பருத்திவர்க்கம் பட்டு பீதாம்பர முதலிய தரித்துப் பற்பல வாசனையுடனே கூடி நெய்த்திருண்ட குழலினையுடைய மாதர்களுடனே சரசலீலை பிரியாத பற்றாகப் போதிக்கப்பட்டு அவ்விடத்தினுண்டாம் இணைவிழைச்சாய சங்கமச் சிற்றின்ப சமுத்திரத்துக்குள் அழுந்தி விடாத பண்பு பெருக அனுபவிப்பதே பிரத்தியக்ஷமுத்தி; இதுவேயல்லது இந்தச் சரீரத்திலே நித்யனாக ஓர் ஆன்மா உண்டென்றும், பிரத்தியக்ஷமான ராசாவேயல்லது கரணரகிதமாகக் காணும் ஒரு சிவன் உண்டென்றும் அந்தச் சிவயோகத்தை அந்த ஆன்மா அசரீரியாய் இரண்டற்றுப் புசிப்பனென்றும் வேதாகமங்களிற் சொல்லுகிறதெல்லாம் அல்லவென்று கொள்ளிக்கு நீக்கங் கொடாத மைபோன்று அறியாமையே குணமாய்ப் பசாசுகள்போலக் குற்றமே இயல்பாய்ச் செய்து திரியுஞ் சாருவாகனுடைய வெறும் அசத்தாய காட்சியிற் பட்டு நின்றுவிடாதே.வட்டமென மாறில் பாடபேதம். 110-111. பலகாலும் நண்ணாதே : (உரை) எந்த வேளையினும் எந்தக் காலத்தினும் எந்த அவத்தை யினும் மறவாது தன்னையும் பரத்தையும் பிறித்தறிந்து பெறுவானும் பேறுமாக இரண்டற்றிருக்கும் ஜீவன் முத்தரைப்போலக் கருவி நீக்கத்து ஆன்மாவைத் தரிசித்துத் தானே அகம்பிரமமென்னும் மாயாவாதிகள் பக்கல் போய்விடாதே. 111-113. ஊன் தனக்கு விழாதே : (உரை) உடம்பு வளர்க்கும் பொருட்டாக நாற்காலுடையவை பறவைகள் சில ஜந்து முதலியவைகளைத் தன்பொருட்டாக ஒருவன் வதைத்துப் புசிப்பதால் தனக்குப் பாவ மில்லையென்று சிருஷ்டித்துக் கொண்டு தன்வயத்தான ஆன்மகோடிகளுக்கும் உபதேசமாகச் செய்ததுமன்றித் தெய்வமென்பது அனாதியாகப் புண்ணியமே தெய்வமாக உள்ளதென்று நூலுடனும் நிச்சயித்து, அந்தப் புண்ணியப் பொருளைப் பெறுவதற்குக் காரணம் வெற்றியாக நட்புபகை யிரண்டினிடத்தும் விருப்பு வெறுப்பற்று ஒத்திருப்பதாதலால் அந்தப் புண்ணியம் பெறலாம் அதுவே நிஜமான முத்தியென்னும் பௌத்தர் பாவத்துக் கேதுவான ஈனவார்த்தையின் வகையிலே பற்றாய் மயக்குற்றுத் தடுமாற்றப்பட்டு நின்று விடாதே. 113-115. நிறைமேவி மருவாதே : (உரை) பக்கஞ்சார் துலைநாப் போன்று எவ்வுயிர்க்கும் ஒத்துத் துக்கஞ்செயாது நாடோறும் நடப்பாரைப் போலப் புறந்தூய்மையும் நீராற் றூய்மை செய்யாது உள்ளம்போல உடம்பும் அழுக்கடைந்து புழுதி படைத்துத் தலைமுதலாகத் தன் சரீரத்துப் பொருந்திய மயிரெல்லாந் தனது உயிர் வருத்தமுறப் பிடுங்கி உயிர்க்கொலையைத் தவிர்ந்து உடையை நீத்துச் சீவரந் தாங்கித் தாழ்வாகிய பிறப்புக் கேது வாய உருவம் வேதனை குறிப்பு பாவனை விஞ்ஞானமென்னும் பஞ்சகந்தங் கெட இருப்பது மோக்ஷமென்னும் சூழ்ச்சியினைத் தவிராது முன்னிலும் மிகவுடையனாய சமணனாகுமவன் பிரயோசனத்திலே சென்று விடாதே. 115-116. செஞ்சொல்புனை மேவாதே : (உரை) வேறு சந்தேகப்படுவதற் கிடமில்லாமல் விதிவாக்யமே சத்யமாக எவர்க்கும் பொருந்திய பிரமாணமாய்ச் சர்வ நூலுக்கும் பிரதானமாகிக் கடவுட்டன்மையுடைய வேதத்தை நன்றாக அத்யயனம் பண்ணியும் அதன் தாற்பரியத்தை முன்னொடுபின் சீர்தூக்கி மறவாது பார்த்துப் பொருள் நிச்சயிக்கமாட்டாது கருமமே துணையென்னும் பாட்டப்பிரபாகராதி வைதிகர் சொல்லும் போதகத்தைச் சத்தியமென்று புத்திபண்ணி அவர்கள் பக்கலிற் போய்விடாதே. 116-117. ஆதியின்மேல் செல்லாதே : (உரை) சர்வகடவுளர்க்குஞ் சர்வாதிகாரத்துக்கும் முதலாகிய சிவன் தனது காருண்யமேனியிற் சாத்தியருளும் பெருமையுடைய விபூதியினையும் மஹாலிங்கங்களாய் ஸ்வயம்பு மூர்த்தமாக எழுந்தருளியிருக்கும் அழகிய கோயில்களையும் அன்புடனே தரித்தலும் வணங்கலுமின்றி அவ்விரண்டினுந் துவேஷமான மனதினையுடைய பிரத்தியக்ஷமான அறிவினுக்கு அவரே நீசர் அவள்களண்டையிலே போய்விடாதே. 117-118. நற்றவஞ்சேர் முயங்காதே : (உரை) ‘மாலற நேய மலிந்தவர் வேடமும்’ (சிவஞானபோதம், 12) என்றும், ‘அந்தரி யாகந்தன்னை முத்திசாதனம்’ (சித்தியார், 9.10) என்றும், ‘அறிவுதனை அருளினால் அறியாதே அறிந்து’ (சித்தியார், 8.30) என்றும், ‘ஆசா னருளா லடிசேர் ஞானம்’ (சித்தியார் 12.6) என்றும், இத்தன்மையுடைய மஹத்துக்களுடன் உசாவியிருத்தலால் ஆன்ம லாபமும் உயிருக்குறுதியுந் தானே விளையும் ; அந்த வழியில் நில்லாமல் என்போலிகள் போன்ற பாஷண்டியான மூடருடன் கூடினால் நல்லறிவு உனக்கு வரமாட்டாது, அஃதெப்படி யென்றால், ஆன்ம சத்தி கூடினதுடனே கூடி நிற்குந் தன்மை அதன் சுபாவ மாகையால், வீணாய் அலக்கழிந்து திரியாதே. 118-119. நீட பாராதே : (உரை) சகல ஆன்மாக்களையும் சிருஷ்டி திதி தேவதைகளையும் தேவேந்திரன் முதலிய தேவர்களையும் சரம் அசரங்களையும் சர்வமுஞ் சிருஷ்டி திதி சங்காரப்படுத்திச் சகல ஆன்மாக்களுக்கும் ஜனன மரண இளைப்பொழித்துத் தமது திருவடி நீழலில் இருக்கும்படி செய்யுங் கர்த்தவ்யத்தைப் பழித்துச் சொல்லப்பட்ட பேரை நீ பாராதே ; ‘வரமுடைத் தக்கன் செய்த மாவேள்வி தீமை யாகி’ (சித்தியார், 2.29) என்றார் மேலோர். அன்றியும், ‘ஈசனை யன்றித் தேவர் கணத்திடை யாரேயோ’ என்றார் மேலோர். 119-120. விழித்தருளைத் லாய்நின்றோன் : (உரை) சகலமுந் தனது காருண்யமாய் விளங்காநின்ற பொற் பிரகாசமாய்ப் பொருந்தியிராநின்ற திருவடியிற் பொருந்தும்படி முன்னமே சத்யோநிருவாண தீடிக்ஷக்கிரமத்திலே ஆறத்துவா சோதித்துக் கலாசோதனை பண்ணும்போது அடியேனுடைய பொல்லாத கருக்குழிக்கும்பியில் குருஸ்வாமி நாடீசந்தான வழியாய் உள்புக்கு அவ்விடத்து ஞானசூரியனாகி எழுந்தருளியிருந்து அத்துவாவிற் கட்டுப்பட்டிருந்த சஞ்சித பிராரத்த கன்மத்தைத் தனது ஞானாக் கினியினாலே பசையற அருள்கூர்ந்து திருநோக்கம்பாலித்து அருட்சத்தியை நிலைக்கும்படி நிறுத்தி என்னையுந் தன்னையுங் காட்டி அடிமை படைக்கவும் மலங்களைப் போக்கவும் நாம் வயிரியென்றும் வீரகண்டாமணியையும் துவசக்கொடியையுங் கட்டியிருக்கிறோ மென்றும் ஆன்மாவைத் தனது திருவடிநீழலின்கீழ் இரண்டறப் புணர்ந்து பொருந்தும்படி செய்தான்.‘முத்தாந்தப் பாதமலர்க் கீழ்வைப்பன்’ (சித்தியார். 8.16) என்றும், ‘ஆரியனா மாசான்வந் தருளாற் றோன்ற அடிஞானம் ஆன்மாவில் தோன்றுந் தோன்றத், தூரியனாஞ் சிவன்தோன்றுந் தானுந் தோன்றும்’ (சித்தியார், 8.28) என்றார் மேலோர். அன்றியும், பரம்பரையாகையால் குருகொள்லீலை யுபரிசுரதலீலை சையோகஞ் சம்பிரதாய மென்றார். அன்றியும், ‘அன்னத்தின் மேலேறி யாடு மணிமயில்போ, லென்னத்த னென்னையு மாட்கொண்டான்’ என்றார் மேலோர். அன்றியும், அந்த அந்தரங்கத்தில் அடியேனுக்குத் சிந்தாமணி போலுஞ் சிரோரத்னம் போலும் உள்ளங்கை நெல்லிக்கனி போலும் கருவூலமாகப் போதனென்னும் ஒரு பிள்ளையைக் கட்டளையிட்டாராகையால் அடிமைக்குங் குருவுக்குஞ் சம்பந்த மென்பதற்கு ஓர் உத்தரம் வாய்திறந்து சொல்ல வேண்டுவதில்லை. அன்றியும் முனிவனென்னுங் கருத்து குரு அடியேனை அடிமை படைக்க எழுந்தருளி உள்ளபடி கட்டுப்பட்டிருந்த வினைகளை ஞானாக்கினியினாலே பசையற எறித்த தனாலென்றறிக. ‘கட்டறுத்தெனை யாண்டு’ (திருவாசகம், திருச்சதகம், 49) கொண்டானென்றார் மேலோர். ‘பூதவிருள் போமடியிற் பொருந்தமலம் போ’ மென்றார் மேலோர். அண்டங்கடந் தப்பாலாய் நின்றானென்பதற்கு அச்சமயிகள் அவரவர் கொண்ட கோட்பாட்டுக் கேற்ற பொருளாய் அவைகளுக்கும் வேறாய்க் குருகாட்டுங் குறியுடைத்தாய் வேதாகமங்க ளளவைப் பிரமாணங்களின் அளப்பரி தாய்க் குறியிறந்தறியும் அறிவினுள் அறிவாய் அப்பாலுக் கப்பாலாய் இருந்தான் குரு. 120-121. எந்தைபிரான் ஓலக்கம் : (உரை) ஏகாந்தமாய்க் குருவிருந்த இடம் மனவாக்குக் காயங்களினாலே அளவு பிரமாணஞ் சொல்லி முடியாது. அந்த இடம், ‘அத்தன் பரதத்துவன்’ என்னுந் திருவிருத்தத்திற் கண்டுகொள்க. அன்றியும், ‘ஓங்கார மேநற் றிருவாசி’ (உண்மை விளக்கம், 35) என்றும், ‘உய்யவென் னுள்ளத்தி னோங்காரமாய்’ (திருவாசகம், சிவபுராணம், 33) என்றுமிருப்பது கண்டுகொள்க. குரு இருந்தகோலம் ‘ஓமெனு மோங்காரத்து’ ளென்றும், ‘ஓங்காரத்துட் பொருள்’ (திருவாசகம், அச்சோ. 7) என்றும், ‘துரிய மிறந்திடம்’ என்றும், ‘அத்துவிதப் பொரு’ ளென்றும், ‘முப்பாழும் பா’ ழென்றும், ‘அம்மானிருந்தது’ மென்றும், ‘தான்றான் றம்பிரா’ னென்றும், ‘ஆதாரத்தாலே நிராதாரத்தே சென்று, மீதானத்தே’ (திருவுந்தியார், 8) யென்றும், ‘குரவுவா ரளகி கணவகே ளொன்றுக்கொன்று குழிமார’ என்றும், ‘நின்றவை சாக்கிரத்துரிய’ மென்றும், ‘முற்றார்ந்த வீதி’ யென்றும், ‘உடையா ளுன்ற னடுவிருக்கும் முடியா முதலே’ (திருவாசகம், கோயில் மூத்த திருப்பதிகம், 1) யென்றும், பின்னும் ‘அளவிறந்த பொரு’ ளென்றும் மேலோர் சொல்லுவார்கள். ‘குருஇருந்த கோலங் கூறரி’ தென்றார் மேலோர். அந்த ரகசியமான இடத்தில் ; 121. எய்திஅடி போற்றியென : (உரை) தங்கள் நாயகன் இருந்த இடத்துக்குச் செல்லுகிறதற்குத் தங்குதடை யிடையில்லையென்று நீ ஆன்மசத்தி வேகமாய்ப் போகாதே, கைகட்டி வாய்புதைத்து முந்தானை யொதுக்கிப் பையப் பையச்சென்று இடது பாகத்தில் ஓவியம்போல நில்லு, அந்த அவசரத்திற் சிற்பரன் திரும்பி நிரம்பிய கிருபையுடன் அருள்நோக்கம் பாலிக்க அந்தத் திரும்பின முகத்திற் சிற்சத்தி நிற்பள், அந்த அவதரத்தில் உள்ளும் புறம்பும் ஒருதன்மையாக அட்டாங்க பஞ்சாங்க திரிவிதாங்க த்விதாங்க ஏகாங்கமாக உன் உடையவிழ உடலவிழ உரையவிழ உயிரவிழ உணர்வவிழ உளமவிழ இந்த ஜடகாரியமும் அவிழும்படியாகத் தண்டனிட்டு, ‘என் கருத்து முடியும் வண்ணமுன்னின்று’ (திருவாசகம், கோயில் மூத்த திருப்பதிகம், 1) என்றும், ‘ஏகமாய் நின்றே யிணையடிகள்... உள்குவா ருள்கிற்றை, யுள்ளத்தாற் காணாவோ வுற்று’ (சிவஞானபோதம், 11.2) என்றும், ‘இரும்பைக் காந்தம் வலித்தாற் போல்’ (சித்தியார், 11.12) என்றும் திருவுள்ளத் துதிக்கும் அந்த அவதரத்தில் எக்காலமும் நிறைகுறைவில்லாமல் நீ இப்படியே வாழ்க வாழ்க அளவிறந்த அடிமைகளுக்கும் இனிமேலுந் திருவடிக்காளாய் வருகிற அடியார்களுக்கும் அடிமையாக்கி என்னைப் பாதுகாத்து ரக்ஷிக்க வேண்டுமென்று “இமைப்பொழுது மென்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க”, (திருவாசகம், சிவபுராணம் 2) என்றார் மேலோர். திரிகரண சுத்தியாய்ச் சிரசின் பேரிற் கைகூப்பி அபிநயமாய் அடியேன் படும் இடர்களெல்லாம் விண்ணப்பஞ்செய. 121-122. ஆர்த்தகரி வீழ்வரோ : (உரை) தாருகாவனத்து ருஷிகள் மஹாகோபத்துடன் அபிசார ஹோமஞ் செய்து அந்த ஹோமத்தில் வரப்பட்ட பெருமை பொருந்திய கன்னமதங் கபோலமதங் கோசமதம் மூன்றும் வெள்ளமாய்ப் பெருக வெகு ஆங்காரத்துடன் வருகின்ற வெறுமலையென்னும் யானையைக் கங்காள வேடமாய் வந்த ஸ்வாமியை விழுங்கும்படி யனுப்ப, அப்படியே யானை ஸ்வாமியை விழுங்க, அதுகண்டு உமையவள் அஞ்சி விநாயகனை முன் நடத்திக் கந்தனை யிடுக்கிக் கொண்டு த்வஜஸ்தம்ப மட்டும் போய்த் திரும்பிப் பார்க்க, ஸ்வாமி மான் மழு சூல கபாலங் கடகங் கேடயம் வரதம் அபயமுடைய அஷ்டபாணியாய் வீரட்டேசுர மூர்த்தமாய் யானை வீறிட்டலறும்படி தலைகீழாக மிதித்து அட்டகாசஞ்செய்து யானையைக் கிழித்துப் போர்வையாகத் தரித்துக் கொண்டு குருஸ்வாமி ஆனந்த நிருத்தஞ் செய்ததைக் கண்டு, உமையவள் ஸ்வாமி பக்கத்தில் வந்து திருவாய் மலர்ந்தருளினாள். ஆதலால் இரண்டாயிரந் தந்த பந்தியையுடைய ஐராவதத்தின்மேல் எழுந்தருளிப் பவனிவருகிற ஸ்வாமியைக் கண்டு தேவர்கள் பொன்மாரி புஷ்பமாரி பொழியத் தேவதுந்துபி முழங்க மூன்று லோகத்தாரும் அடியார்களுந் தோத்திரஞ் செய்து தொழுது பேரானந்தப் பெருவெள்ளத் தழுந்தித் தேக்கிட்டுப் பரவசராகி யிருந்தார்கள். தென்றல் தேராகவும், இரவு யானையாகவும், தத்தை குதிரையாகவும், பெண்கள் பதாதியாகவும், சந்திரன் குடையாகவும், சமுத்திரம் பேரியாகவும், ரதி தேவியாகவும், பூஞ்சோலை பாசறையாகவும், கரும்பு வில்லாகவும், வண்டு நாணாகவும், அரவிந்தம் சூதம் அசோகு முல்லை நீலோற்பலம் பாணமாகவும், இப்படி வெற்றி பொருந்தி மூன்று லோகத்தாரையுந் தனது வசப்படுத்த வல்லமையுடைய மன்மதன் மாய்கையில் வீழார்கள் உம்முடைய பவனி கண்ட பேர். ‘யானை யிரதம் பரியாளவை யில்லை, தானு மனங்கன் றனுக்கரும்பு தேனார், மலரம்பால் வென்று வடுப்படுத்தான் மாரன், உலகங்கள் மூன்று மொருங்கு’ என்றார் மேலோர். இப்படி நொய்யவனாகையால் ‘மதனம்புக் கிளையா’ ரென்றார் மேலோர். 122-123. நின்றிடத்து புகுவரோ : (உரை) பிரமவிஷ்ணுக்கள் தேவேந்திரன் முதலாகியார் செல்வமும் அதோமுக அடுக்குகளி லிருக்கப்பட்ட பேர்கள் செல்வமும் பெரிதென்று மனவாக்கு காயத்திலும் எண்ணுவதில்லை. ‘செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே’ (சம்பந்தர் 1.80.5) என்றார் மேலோர். அப்படி யெண்ணாமல் அவர்கள் செல்வத்துக் கவாவாகி நரக வேதனைப் பட்டுழலார்கள் உம்முடைய திருவடி கண்டபேர். 123-124. பல்லோரும் திகைப்பரோ : (உரை) சகல வேதாகம புராண கலைஞானம் சமைவாக்கு மற்றுமுள்ள சாத்திரங்கள் இவைகளனைத்தும் சைவ சித்தாந்த சமயமே சமயம் பரமசிவமே அதற்குக் காருண்யமான பொருளென்று சொல்லி முறையிடப் பதிபசு பாசத்தினுண்மையை விளங்கச் சொல்லும் மெய்கண்ட சந்தானமே சந்தானம் அதைப் பெரிதென் றெண்ணாமல் மனம் பலகாலுந் திகைத்துத் திரியார்கள். ‘தலைப்படு சால்பினுக்குந் தளரார்’ (திருக்கோவையார், 25) என்றார் மேலோர். அன்றியும் புறச்சமயிகள் மார்க்கத்திற் செல்லார்கள். ‘வாழ்வெனு மையல்விட்டு... போழிள மதியினானைப் போற்றுவா ரருள்பெற் றாரே’ (சித்தியார், 2.91) என்றார் மேலோர். 124-125. முத்தம் வருவரோ : (உரை) பேதைமுதற் பேரிளம் பெண்ணந்தஞ் சிறியன தந்த பந்திகளைக் கண்டு முல்லையரும்பும் மாதுளம் பழவித்தும் இகலி வெட்கி நாணும், பெண்கள் பாதாதி கேசமளவுங் கரும்புரசனை என்று அவர்களின்பங் கிஞ்சித இன்பம் அதைப் பெரிதென்றெண்ணி மயங்கித் திரியார்கள்.‘இறைவன் கழலேத்து மின்ப மின்பமே’ (சம்பந்தர் 1.80.4) என்றார் மேலோர். 125-126. இருபொழுதும் குறிப்பரோ : (உரை) இரவும் பகலும் இருபத்தேழு நக்ஷத்திரமும் நவக்கிரகமுங் கோள்களினாலே வரப்பட்ட நலந்தீங்குகளென்று குறியார். 126-127. வேளை தையல் : (உரை) முன்னஞ் சொல்லப்பட்ட வெற்றியையுடைய மன்மதனை யெரித்த பாலநேத்திரத்தினுடைய உண்மையை இவ்வளவென்று சொல்லி முடியாது. அது என்னெனில், ‘தூயநேத் திரத்தினாலே சுட சுடரொளி கொடுத்த பண்பாற், றேயமா ரொளிக ளெல்லாஞ் சிவனுருத் தேச’ தென்றார் (சித்தி. பர. 72) மேலோர். அந்த இடம் நிறைவு குறைவில்லாத இடம். அஃதெப்படியென்றால், அதனுடைய நுட்பம் ‘விண்ணுற வடுக்கிய விறகின் வெவ்வழ, லுண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்’ (அப்பர் 4.11.3) என்றார் மேலோர். சகல ஆன்மாக்களையும் இருவினையொப்பு மலபரிபாகம் வரும்படி எம்முடைய குரு கருணை கூர்ந்துவிட நேயத்தழுத்த லென்றும் பேரின்பவெள்ளத்து இன்ப மிருக்குமிடமிதுவென்று சுட்டிக் காண்பிக்கு மிடமாய்ப் ‘பிறவி வழக்கறுத் தானந்தவாரியி னேயத்தழுத்த’ லென்றார் மேலோர். அந்த இடம் தான் பெற வேணுமென்று தன் மதி மறந்து பேரானந்தப் பெருவெள்ளத்தின்பம் என்று கிடைக்குமோவென்று சகோர பக்ஷி சந்திர கிரணத்தைப் புசிக்கக் காத்திருந்தது போலும், தலையீற்றுக் கன்றானது கறவை எப்போது வருமென்று அமுதம் புசிக்கக் காத்திருந்தது போலும், பேதைமுதற் பேரிளம்பெண் பருவமட்டும் இந்தத் தையலாகிய பெண் முன்னங் குருபரன் செய்த சகாயத்தை மறந்தவ ளாகையாற் பார்த்துப் பார்த்து ஏங்கி யேங்கியிடருற்றாள்; அன்றியும், முன்னந் தீடிக்ஷயென்னும் இயற்கைப் பெயரையுடைய சிவசத்தியால் என்னை அநாதியிற் பசுத்துவத்தினால் அஞ்ஞானியா யிருக்கின்ற ஜனன மரணத்துக் கேதுவாகிய மலமாயா கன்மங்களோடு பொருந்தாம லிருக்க ஷடத்துவா சோதனைசெய் தெடுத்துச் சமனாந்தம் பாசக்கூட்டங் கூடாதவகை சின்மாத்திரஞ் சுத்தகேவலமாய் சேட்டிக்கப் பண்ணிய குருவுக்குந் தெரியும்படி சொல். 127-128. வருத்தமெலாம் தாழ்ந்திறைஞ்சி : (உரை) அடியேன்படுந் துயரமெல்லாந் தீர்க்கவேணுமென்று நீ குருபரனுக்குத் தெரியும்படி சொல்லிப் பொற்பிரகாசம் பொருந்தி ஆயிரத்தெட் டிதழையுடைய செங்கமலப் பூவினுஞ் சிறந்த திருத்தாளைத் தரவேணுமென்று சிரசின்பேரிற் கைகூப்பி மும்முறையே தண்டனிட்டுத் தொழுது தோத்திரஞ் செய்து மயிர்க்கூச் செறிய அந்தத் திருவடியினுடைய பெருமையின் நுட்பமும் யாவராலும் மட்டிட்டுச் சொல்லி முடியாதென்று மேலோர் சொல்லுவார்கள். என்னவெனில், ‘ஏகமாய் நின்றே யிணையடிகள்’ (சிவஞானபோதம், 11.2) என்றும், ‘மெய்ச்சுடருக்கெல்லா மொளிவந்த பூங்கழ’ லென்றும் ‘மின்னே ரனைய பூங்கழல்கள்’ (திருவாசகம், ஆனந்தமாலை, 1) என்றும், ‘போற்றி யருளுகநின் னாதியாம் பாதமலர்’ (திருவெம்பாவை, 20) என்றும் ஆதியெழு பருவமு மென்றும், ‘விரவியெனை யெடுத்தாண்ட செய்யதிருவடி’ யென்றும், ‘ஆனந்த வாரியி லான்மாவைத் தானழுத்தல், தானெந்தை யார்பரதந் தான்’ (உண்மைவிளக்கம், 37) என்றும், ‘உள்ளும் புறம்பு மொழிவின்றி நின்ற, வள்ளன்மை காட்டு மலரடி’ (இருபாவிருபது, 20) யென்றும், ‘ஆட வெடுத்திட்ட பாதமன் றோநமை யாட்கொண்டதே’ (அப்பர் 1.81.10) என்றும் இப்படிச் சொல்லப்பட்ட திருவடியைத் தரவேணுமென்று திருவடியிலே தாழ்ந்து தண்டம் பண்ணிக் கேள். ‘வேண்டுவார் வேண்டியது மெய் தருகுவா’ னென்றார் மேலோர். 128-129. ஏராரும் இனி : (உரை) அழகு பொருந்திய அருட்சத்தியாகிய சிவகந்தம் பரிமளிக்கவும் ஆன்மவர்க்கமாகிய மதுகரங்கள் தேன்களை யுண்டு தேக்கிட்டுச் சிவோகம் பாவிக்கப்பட்டவுமான கொன்றை மாலையை வாங்கும் படியாய்ப் புகழ்ந்து, இன்பத்தைச் செய்யும் நெஞ்சமே, மீட்டும் என்னுடன் பொருந்தும்படி இவ்விடத்து வந்து இனிச் சேருவாயாக.புகழ்வது என்னவென்றால், ‘வேண்டுக வேண்டுக மறவாமை’ யென்றும், ‘இந்நிலை யதனி னேழையேற் கிரங்கி’ (இருபாவிருபது, 12), ‘நின்னது கருணை சொல்லளவின்று’ (யூ14) என்றும், ‘உள்குவா ருள்கிற்றை, யுள்ளத்தாற் காணானோ வுற்று’ (சிவஞான போதம் 11.2) என்றும், ‘பெண்டான் சமைந்து பெரியவ ளாகுநாட கொண்டா னறிவான் குணாகுணத்தை’ யென்றும், ‘எழுதாத புத்தகத் தேட்டின் பயனைப்... பிறவாத வண்டு மணமுண்ட வாறே’ (திருமந்திரம், 2885) யென்றும், ‘பேரா தருளுதல் பெரியோர் கடனே’ (இருபாவிருபது, 16) யென்றும், ‘ஈய வேண்டுமென் னும்விதி யின்றாம்’ (யூ14) என்றும், ‘ஒன்றா காம லிரண்டாகாம, லொன்று மிரண்டு மின்றா காமல்’ (யூ20) என்றும், ‘மாலையா மாற்ற மதி’ (யூ5) என்றும், ‘உரையும் பொருளு முடலு முயிரும் ; விரையு மலரும் போல் விம்மிப் புரையின்றி’ (கைலைபாதி காளத்திபாதி யந்தாதி, 27) யென்றும், ‘மாலை வருகு’ தென்றும், ‘மாலாகினால் கொன்றை மாலைவரக் கண்டு மகிழ்ந்தா’ னென்றும், ‘தான்றான் றம்பிரா’ னென்றும் இங்ஙனஞ் சொல்லி வந்த காரணகாரியங்களெல்லாம் அடியேன் உனக்குச் சொன்ன காரணம் மறந்து மயங்கியிருக்கப் போகிறாயென்று உனக்குத் திடம்வரச் சொன்னது. அடியேன் செய்த பாக்கியம், குருபரனை நீ கண்டு, அவருடைய ‘திருவடியைக் கண்ட பேருக்குத் தீங்கில்லை’ யென்றார் மேலோர். ‘உன் கையிற் பிள்ளை யுனக்கே யடைக்கலம்’ (திருவெம்பாவை, 19) ‘வெஞ்சே லனைய கண்ணார்தம்...... பஞ்சே ரடியாள் பாகத் தொருவா பவளத் திருவாயால், அஞ்சே லென்ன ஆசைப்பட்டேன் கண்டா யம்மானே’ (திருவாசகம், ஆசைப்பத்து, 10) ‘அன்றே யென்ற னாவியுமுடலு முடைமை யெல்லாமுங், குன்றே யனையா யென்னை யாட் கொண்ட போதே கொண்டிலையோ, இன்றோ ரிடையூ றெமக் குண்டோ வெண்டோள் முக்க ணெம்மானே, நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ விதற்கு நாயகமே’ (திருவாசகம், குழைத்த பத்து, 7), ‘கூசி மொழிந் தருண்ஞானக் குறியினின்று கும்பிட்டுத் தட்டமிட்டுக் கூத்தாடித் திரியே’ (சித்தியார், 12.2), ‘மாதாளும் பாகத் தெந்தை, யாவர்கோ னென்னையும்வந் தாண்டு கொண்டான் யாமார்க்குங் குடியல்லோ மியாது மஞ்சோ, மேவினோ மவனடியா ரடியா ரோடு மேன் மேலுங் குடைந்தாடி யாடு வோமே’ (திருவாசகம், திருச்சதகம், 30), ‘செங்கமலத் தாளிணைகள் சேரலொட்டாத் திரிமலங்க ளறுத்தீச னேசரோடுஞ் செறிந்திட், டங்கவர்தந் திருவேட மாலயங்க ளெல்லாம் அரனெனவே தொழுதிறைஞ்சி யாடிப்பாடி, யெங்குமியா மொருவர்க்கு மெளியோ மல்லோ மியாவர்க்கு மேலானோ மென்றிறுமாப் பெய்தித், திங்கண்முடி யாரடியா ரடியோ மென்று’ (சித்தியார், 12.1) இப்படியெல்லாம் மேலோர் திருவுளம் பற்றினார்கள். அன்றியும், ‘அருளி னருளே யருளாபே ரின்பப், பொருளின் பொருளாம் பொருளேகுருவாம், மருதத் தலைவர் கொன்றை மாலைதனை நெஞ்சே, தருகவெனக் கின்று தகும்’, ‘வாராது வாராது வள்ளிதழேய் பூங்கொன்றைத், தாரார் புயமருதச் சம்பந்தன் சீரார்ந்தே, எங்கிலுந் தான்சடசித் தாயிருந் தான்நெஞ்சே, இங்கினியு முண்டோ விடர்’ என்பன கண்டுகொள்க.
சென்றவாரம் இந்தியாவில் ஒரு மிகப்பெரிய விஷயம் நடந்தேறி இருக்கிறது. அதிகாரமும் செல்வாக்கும் மிக்க தனது மேலதிகாரியை எதிர்த்துக் குரல் எழுப்பிய ஒரு பெண்ணின் துணிச்சலின் விளைவு, அதிகம் படித்த நவநாகரிகமான, நகரமயமாகிய, நுனிநாக்கில் ஆங்கிலம்பேசும் கலாசாரத்தைத் தழுவிய வர்க்கம் முதன் முறையாக, தன்னைத் தானே உற்று நோக்கிக் கொள்ளும்படி, வெகுகாலமாகத் தான் அடைகாத்து வரும் ஆணாதிக்கத்தையும் பெண்கள் மீதான காழ்ப்பையும் எதிர் கொள்ள நேரிட்டிருக்கிறது. பல ஆண்டுகளாக இதே வர்க்கம் தான், தங்களை விட இளைத்த வர்க்கங்களிடையே நிலவும் ஆணாதிக்க மனப்பான்மையை - காவல்துறையினர், மத அடிப்படைவாதிகள், பண்படாத அரசியல்வாதிகள், உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்த நடுத்தர மக்கள், அல்லது தெருவில் பெண்களிடம் வம்பிழுக்கும் காலிகள் - இவர்களையெல்லாம் ஓயாது கண்டித்தும், ஏளனம் செய்தும், தோலுரித்துக் காட்டியும் வந்துள்ளது. ஆனால், இந்த உயர்ந்த வர்க்கத்தினரைச் சேர்ந்த ஆண்கள் ஒரு போதும் பெண்களிடத்திலான தங்களது கண்ணோட்டத்தைச் சுயபரிசீலனை செய்து கொண்டதில்லை. போலவே இவ்வர்க்கத்தின் பெண்களும் இவர்களின் ஆணாதிக்கப் பார்வையைப் பலவழிகளில் அனுமதித்து வருவதோடல்லாமல், கண்டும் காணாமலும் செல்வதுமான தங்கள் குற்றத்தை உணர்ந்ததுமில்லை. இந்தச் சம்பவமோ அதற்கு ஷோமா சௌத்ரியின் எதிர்வினையோ எனக்குச் சிறிதும் வியப்பளிக்கவில்லை. நான் பார்த்த வரை மிகவும் முற்போக்கான, பரந்த நோக்குள்ளதாகக் கருதப்படும் ஆங்கில ஊடகங்கள், மற்றும் கலை இலக்கிய உலகில் பெண்களைப் பற்றி மிகவும் பிரச்னைக்குரிய பார்வைகள் ஆழமாகப் பதிந்திருப்பதையும், அது குறித்து எந்த ஆணோ பெண்ணோ கேள்வி எழுப்பாமலிருப்பதையும் எப்போதோ கண்டு கொண்டேன். ஆண் எழுத்தாளர்களின் பலரது படைப்பில் இதைக் காணலாம். சல்மான் ருஷ்டி முதல் இந்தத் தலைமுறையைச் சார்ந்த சமித் பாசு, பலாஷ் கிருஷ்ண மெஹ்ரோத்ரா வரை; அவர்களது பெண் பாத்திரங்கள் (நாயகிகள்) பெரும்பாலும் பக்குவப்படாத கற்பனை மிஞ்சிய உருவங்களே ஒழிய முப்பரிமாணமும் கொண்ட பெண்களாக இருப்பதில்லை. ஐம்பதுகளில் யஷ்பால் எழுத்தில் உருவான இந்தித் திரைப்படங்களின் நாயகிகள் உருவாக்கப்பட்ட அதே கரிசனம், புரிதல், மற்றும் செறிவுடன் தங்கள் பெண் பாத்திரங்களை உருவாக்கும் இந்த ஆங்கில ஆண் எழுத்தாளர்களை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. பெண்கள் மீதான இவர்களது காழ்ப்பு அவர்களது முகநூல் சுவர்களில் தெறிக்கிறது; உடலுறவு பற்றிய அவர்களது நிலைச்செய்திகளில், அழகிய, பெருமைக்குரியவர்களாகக் கருதப்படும் பெண்களுடனான அவர்களது புகைப்படங்களில். அவர்கள் கலந்து கொள்ளும் இலக்கியக் கூட்டங்களில், விருந்துகளில், உரையாடல்களில், அலுவலகங்களில் எல்லாம் அது வெளிப்படுகிறது. ’கெட்ட பசங்க’ படிக்கும் புத்தகங்களில் கூட. பெருமதிப்பிற்குரிய எழுத்தாளரும் ஆசிரியருமான ஒருவர் தனது மாணவியையும் புகழ்வாய்ந்த பத்திரிகையாளர் கூட வேலை பார்க்கும் பெண்ணைப் பாலியல் ரீதியாகச் சீண்டியதும் இங்கே சகஜமாக நடந்துள்ளது. ஆண்கள் இதழான மேக்ஸிம் இந்தியாவுக்காக எழுதும் ஆண் எழுத்தாளர்கள் பலர் செல்வாக்குள்ள அழகுப் பெண்களைப் புகைப்படங்கள் எடுக்கும் முகமாகத் தாங்கள் எளிதில் தொடர்பு கொள்வது பற்றிப் பீற்றிக் கொள்பவர்கள் தாம். இவர்கள் தாம் (எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், வலைப்பூ எழுத்தாளர்கள்) ஆபாசக் கார்ட்டூன் மீது அரசு கொண்டு வந்த தடையை எதிர்த்துப் போராட்டத்தை முன்னெடுத்து நடத்திய வீரர்கள். இதைப் போல் கணக்கிலடங்கா எடுத்துக்காட்டுக்களை என்னால் தரமுடியும், எப்படி இந்த அறிவு ஜீவி ஆண்கள் பெண்களை வெறும் கண்ணுக்கழகான கைக்கடக்கமான காமப் பொருட்களாகப் பார்க்கிறார்கள் என்று. ஆம், அப்படிப்பட்ட பார்வைக்கும், அப்பொருட்களை எங்கு எப்போது விரும்பினாலும் நுகரலாம் என்ற மனப்பான்மைக்கும் வெகு தூரமில்லை; ஒரே சீரான சரிவுதான். இந்தச் சூழலில், இப்படிப்பட்ட ஆண்களுடன் வேலை செய்தும் வாழ்ந்தும் வருகிற நிலையில் பெண்கள் தங்கள் இயல்புக்காகவே நேசிக்கப் படுவோம் என்று எதிர்பார்க்க முடியாது. தாங்கள் செய்யும் வேலைக்காகவே மதிக்கப்படுவோம் என்றும் கருத முடியாது. உண்மை என்னவென்றால் முன்னேறியாக வேண்டுமென்றால் மிதமான ஆணாதிக்கப் பார்வையைக் கண்டும் காணாது இருக்க வேண்டும். தங்கள் மூளைக்குள் ஒலிக்கும் அந்த முரணான குரலை அடக்கி விட்டு, தங்கள் அறிவுக்கும் திறமைக்குமான சலுகைகள் தாம் அளிக்கப்படுவதாக நம்பிக் கொள்ள வேண்டும். ஆனால், மீண்டும் மீண்டும், உடல்சார்ந்த பண்டங்களாக மட்டுமே குறுக்கப் படுகின்றனர் பெண்கள். இங்கே அப்படிப் பாதிக்கப்பட்டவரில் ஒருவர் தான் தெகல்காவின் அந்தப் பெண் ஊழியர். ஆம், திங்க் நிறுவனத்தால் (தெகல்காவுடன் சம்பந்தப்படாத) அவர் பயன்படுத்திக் கொள்ளப்பட்டார். பெரிய இடத்து விருந்தினர்களான டி நீரோ போன்ற ஆட்களைக் கவனித்துக் கொள்ள, விழாவைத் தொகுத்தளிக்க உதவும் அழகிய முகமாக. இருவரும் மனமொத்து நிகழ்ந்ததாக அந்தச் சம்பவத்தைத் திருத்தி எழுத முனைந்த தேஜ்பாலின் தனிப்பட்ட இமெயிலுக்குப் பதிலிறுக்கும் விதமாக அந்தப் பெண் எழுதுகிறார் - “புயலும், இடிமேகங்களும் அல்ல, நான் எந்த அலுவலுக்காக அன்று உங்களைச் சந்தித்தேன் என்பது உங்கள் நினைவில் இருந்திருக்கக் கூடாதா என்று ஆதங்கப்படுகிறேன்...நமது உரையாடல் விளையாட்டாகவோ சரசம் நிறைந்ததாகவோ இருக்கவில்லை; நீங்கள் காமம் குறித்தும் உடலுறவு குறித்தும் பேசிக் கொண்டிருந்தீர்கள். ஏனென்றால் எப்போதுமே என்னிடம் அப்படிப்பட்ட பேச்சைப் பேசவே விரும்புவீர்கள்; என் வேலையைப் பற்றி அல்ல.” ஒவ்வொரு பெண் ஊழியரும் இதைச் சந்திக்கிறார். நான் ஓராண்டு வெகு உற்சாகத்துடனும் கடமையுணர்ச்சியுடனும் ஓஷியன்ஸ் இலக்கிய நிறுவனத்தில் உதவியாசரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அங்கு என் பணி முடிவுக்கு வந்த விதம் இவ்வாறானது. பிரபல நடிகரொருவர் பங்கேற்கவிருந்த அலுவலக விழாவொன்றில் மேடை மீது ஒரு விளம்பர அட்டையைத் தாங்கியவாறே ஒய்யார வலம் வருவதற்கு என்னையும் உள்ளிட்ட ஒன்பது பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். எங்கள் விருப்பம் குறித்துக் கேட்கப்படக் கூட இல்லை, என்னவோ அது எங்களுக்கு அளிக்கப்பட்ட ஒரு பெருமை போல. புதிதாகச் சேர்ந்திருந்த முன்னாள் மாடல் ஒருவர் எங்களுக்கு எப்படி நடப்பது, என்ன உடுத்துவது என்றெல்லாம் கற்றுத் தருவார் என்றும் சொல்லப்பட்டது. நானும் கலை வரலாற்று நிபுணர்களாகப் பணிபுரிந்து கொண்டிருந்த இன்னும் இரு பெண்களும் இதற்கு மறுத்தோம். ’நாங்கள் இதைச் செய்யமாட்டோம், இதற்காக இங்கே நாங்கள் பணிக்கமர்த்தப்படவில்லை’ என்று சுட்டிக் காட்டினோம். சினமுற்ற எங்கள் முதலாளி ’சொன்னபடி செய்யாவிட்டால் ராஜினாமா செய்துவிடுங்கள்’ என்று சீறினார். நான் ராஜினாமா செய்தேன் - எனக்கு இயன்ற அந்த வசதி பலருக்கும் இருக்காது, என்னுடன் சேர்ந்து போராடிய அவ்விரு பெண்களுக்கு உட்பட. கலை, ஊடகம் மற்றும் பதிப்பகத் துறை நிறுவனங்கள் பல ஆண்டுகளாக தேஜ்பால் மற்றும் என் முன்னாள் முதலாளி போன்ற சக்திவாய்ந்த ஆண்களின் தலைமையில் செயல்பட்டு வருகின்றன. அசைக்கமுடியாத ஆதிக்கம் செலுத்திவரும் இந்த கடவுளர்களின் தலைமையில் அவை சமயமரபுகள் போல் விளங்கி வருகின்றன. ஊழியர்களோ, குறிப்பாகப் பெண்கள் அவர்களைச் சுற்றி பக்தைகள் போல் வலம் வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகப் பெண்கள் தலைமைப் பொறுப்புகளை ஏற்கத் தொடங்கி இருந்தாலும் அவர்கள் ஆண்கள் சென்ற அதே பாதையைத் தான் பின்பற்றுகின்றனர்; அவர்கள் நடத்தியது போலவே, அதே சக்தியை உள்வாங்கிக் கொண்டு; தங்கள் நிறுவனத்தின் ஏனைய பெண்களை அதே போல் குறைந்தபட்ச மரியாதையோடு. நான் ராஜினாமா செயததைக் கேட்டு எனது உடனடி மேலதிகாரியான பெண்மணி ஒன்றுமில்லாததை நான் காரணமில்லாமல் பெரிதுபடுத்திவிட்டதாக மிகவும் கோபமடைந்தார். தனது பதினைந்து ஆண்டு பத்திரிகை மற்றும் பதிப்பகத்துறை அனுபவத்தில் இது போல் என்னவெல்லாமோ செய்து தான் முன்னிலைக்கு வரவேண்டி இருந்ததாகக் குறிப்பிட்டார். மேலும் இச்சம்பவத்தை நான் பகிர்ந்து கொண்ட வேறொரு பெண் பத்திரிகை ஆசிரியரோ அலட்சியமாகத் தோளைக்குலுக்கினார். ’அழகான இளம் பெண்களை’ நிறுவனங்கள் இவ்வாறு பயன்படுத்திக் கொள்வது எங்கேயும் நடப்பது தான். அவ்வளவு ஏன், தான் கூட தனது அழகைப் பயன்படுத்தித் தான் பணியாற்றும் இடங்களில் சலுகைகள் பெறத் தயங்கியதே இல்லை என்றும், முக்கியமான கூட்டங்களுக்குச் செல்லும் போது அழகாக உடையணிந்து கொண்டு போய் நினைத்ததைச் சாதித்ததுண்டு என்றும் கூறினார். இதே ஆசிரியர் தான் சமீப காலமாக இந்தியாவுக்கு மேற்கத்திய மாடல்கள், கவர்ச்சி நடிகைகள் எழுதிய டயட் மற்றும் உடற்பயிற்சி புத்தகங்கள், மில்ஸ் அண்ட் பூன் காதல் புத்தகங்களின் இந்தியப் பதிப்புகள், மற்றும் சிக் லிட் என்று சொல்லப்படும் இளம்பெண்களைக் குறிவைக்கும் காதல் கதைகள் போன்றவற்றை இந்தியாவுக்க்க் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர். இங்கிருக்கும் சந்தையின் தேவையைப் பூரித்தி செய்வதாகச் சொன்னாலும், மேற்கத்திய முதலாளித்துவ மாதிரியைக் கொண்டு இந்தச் சந்தையை உருவாக்கியதே இவர் போன்ற பத்திரிகை ஆசிரியர்கள் தாம். இந்த உயரடுக்கு உலகத்தின் பிரச்னைகளில் பெரும்பங்கு வகிப்பதே கண்மூடித்தனமாக மேற்குலக நாகரிகங்களைத் தழுவும் முயற்சியில், அதன் ஆண் முதலாளித்துவத்தையும் உடல் மற்றும் பாலியல் சுதந்திரத்தை மட்டுமே குறிக்கோளான அதன் பெண்ணியச் சிந்தனைகளையும் சேர்த்துத் தழுவி, சிதைந்து போனதொரு கலாசாரத்தைத் துப்பி இருக்கிறது; இதில் பெண்கள் வெறும் போகப் பொருட்களாக மாறிப் போனது மட்டுமன்றி தாங்கள் விரும்பி போராடிய சுதந்திரம் தங்களுக்குக் கிடைத்து விட்டதாக நம்பவும் ஆளாகி இருக்கிறார்கள். இந்தியாவிலும் ஒரு குறிப்பிட்ட வர்க்கப் பெண்கள் - நகரத்தின் மேல்தட்டுப் பெண்கள் தங்களைப் பெண்ணியவாதிகளாக நம்பிக் கொண்டாலும் தாங்கள் மேலே செல்ல இயலாத முட்டுச் சந்தில் முட்டிக் கொண்டிருப்பதை உணரவில்லை. மாறாக, பெண்களைக் காமப் பொருட்களாகச் சித்தரிக்கும் விளம்பரங்கள் மீதான தடைகளை அகற்றக் கோரி கட்டுரைகள் எழுதி வருகிறார்கள். வோக், காஸ்மாபாலிடன், எல்லி, போன்ற பளபளக்கும் மேற்கத்திய ஃபேஷன் இதழ்களில் பணியாற்றுகிறார்கள், மாடல்களாகக் கூட; தாங்கள் பெண்ணியவாதிகள் என்று பறைசாற்றியபடியே. மேட்டுக்குடியின் பெண்ணியப் போராட்டங்களெல்லாம் கீழ்த்தட்டு மக்களின் ஆண்களையே குறிவைக்கின்றன. ஆண் பெண் இருபாலரும் எழுதும் அப்படிப்பட்ட எழுத்துக்களிலும் பிங்க் ஜட்டி, mend the gap, slut walk, blank noise project campaigns உள்ளிட்ட போராட்டங்களிலும் நிலவும் வர்க்கக் காழ்ப்பு என்னை வருந்தச் செய்கிறது. எளிய வர்க்கத்தினர் பல உண்மையான பிரச்னைகளைச் சந்தித்து வரும் நிலையில், இந்த மேல்தட்டு எழுத்துக்களும் போராட்டங்களும் தெருவில் போகும் அந்த நாகரிகம் குறைந்த ஏழை மனிதன் மீதிருக்கும் இவர்களது ஆழ்ந்த அச்சத்தைத் தான் வெளிப்படுத்துகிறது. அலுவலகத்தில் மிகவும் எளிமையான, ஆங்கிலம் பேசத்தெரியாத ஒரு குமாஸ்தாவை அவனது மதஅடிப்படைவாதத்துக்காக இவர்கள் ஏளனம் செய்வதாகத் தான் அமைகிறது. அவன் மதஅடிப்படைவாதியோ இல்லையோ அது பொருட்டில்லை. உண்மையில் மேல்தட்டுப் பெண்களுக்கு உள்ள சக்தியையும், உழைப்பாளி மற்றும் கீழ் நடுத்தர வர்க்க ஆண்களின் மேல் இவர்களுக்குள்ள ஆதிக்கத்தையும், (தெருவில் விசிலடித்துத் திரியும் தருணங்களைத் தவிர) உணர்ந்து கொள்ள அதிகம் யாரும் முயற்சி எடுப்பதில்லை. ஆகவே ”ஸ்லட்” (பாலியல் சுதந்திரம் பெற்ற பெண் - ஆங்கிலத்தில் மிக மரியாதைக் குறைவான சொல்) ஆகவும் ’பப்’களுக்குச் செல்வதற்கும் தங்களுக்கு வேண்டும் உரிமைக்காகவும் போராடுவது, மேற்குலகில் ஆனது போல் பெண்களுக்கு இன்னொரு சிறையாகத் தான் முடியும். - அது இன்னும் ஆபத்தான சிறை, ஏனெனில் அங்கு பெண்கள் தாங்கள் சுதந்திரம் அடைந்து விட்டதாக நம்பிக் கொண்டிருப்பார்கள். ஆணாதிக்கம், பாலியல் சில்மிஷங்கள், இவையெல்லாம் ’அறியாமையில் திளைக்கும்’ பாமர மக்களோடே சார்புபடுத்திப் பார்க்கப் படுவதால், மேல்தட்டுப் பெண்களுக்கு தாங்கள் அவமதிக்கப்படுவதையும், வன்முறைக்கு ஆளாவதையும், பாலியல் ரீதியாகத் தாக்கப்படுவதையும், பொருள்மயமாக்கப்படுவதையும், உணர முடிவதில்லை. அல்லது, அத்தகைய சூழலில் (தங்கள் தவறுகளால்) சிக்க வைக்கப்பட்டதாக உணர்வதால் பேச இயல்வதில்லை. ஏனென்றால் இவையெல்லாம், அழகான, பண்பட்ட, பரந்த நோக்குடைய பசப்புப் பேச்சுக்களால் போர்வையிடப்பட்டிருக்கின்றன. ஆகவே, வெளிப்படையான ஆணாதிக்கத்தை விடவும், பழம்பஞ்சாங்க ஆண்களின் அடக்குமுறையை விடவும் ஆபத்தானது என்று உணரவேண்டும். இந்தியப் பெண்கள் தற்போது தங்கள் சுதந்திரமான ஆசைகள், அபிலாஷைகள், காதல் மற்றும் உடல்ரீதியான சுதந்திரம் குறித்தெல்லாம் சிந்திப்பதால், பொதுப்புத்தியில் பெண் என்பவள் எப்படி இருக்க வேண்டும் என்ற பிம்பங்களெல்லாம் மாறி வருகிற இவ்வேளையில், அதிகாரபலம் வாய்ந்த ஆண்கள், குறிப்பாக நவநாகரிகமான மேல்தட்டுப் பிலுக்கர்கள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன் படுத்திக் கொள்ள முனைகிறார்கள். அவர்களது செய்கைகளுக்கு நீங்கள் பணியாவிட்டால் நீங்கள் முற்போக்கானவள் இல்லை, பழமையான கட்டுப்பெட்டித் தனமானவள் என்பது தான் உங்களைச் சிக்கவைக்கும் கணக்கு. “ஒருவருக்கு மேற்பட்டவரை நீ காதலிக்கலாம்” என்றிருக்கிறார் தேஜ்பால், அப்பெண்ணிடம், கிட்டத்தட்ட ஒரு சவாலை முன்வைப்பது போல். காதல் இங்கு எங்கு வந்தது? ஆண்கள் பெண்களை அவர்கள் இயல்புப்படியே பார்க்க இயலாத வரை, அவர்களைத் தங்கள் சொந்த இன்பத்துகான காமப் பொருட்களாக நோக்கும் பாங்கு மாறாத வரை இங்கே ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உண்மையான காதல் என்பது சாத்தியமே இல்லை. வெளிப்படையாகப் பேசவும், தங்கள் இனத்தின் தடைகளை உடைக்கவும் பெண்கள் எடுக்கும் முயற்சிகள் யாவையும் அவர்களைத் தங்கள் சுயவிருப்புக்காக இணங்க வைக்கவும், பின்பு அதற்கு அவர்களே காரணம் என்று சிக்கவைப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. தேஜ்பால் போதையேறிய தனது இமெயிலில் இவ்வாறு எழுதுகிறார்: “..அன்று நமது உரையாடல் சரசம் நிறைந்ததாக இருந்ததை நினைவு கூர்வாயாக. நாம் விளையாட்டாகவும் சரசமாகவும் காமம், உடலுறவு குறித்தும், ஒழுக்கம் என்பதன் மாயை பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்தோம். மேலும், புயல் காற்றடித்த ஒரு நாள் மாலை, நான் இடிமேகங்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது என்னை வந்து சந்தித்தாயே..அதையும்.” இப்படித் தான் பெண்கள் திறமையாகக் கையாளப்படுகிறார்கள். நடந்ததற்கு அவர்கள் தான் பொறுப்பு என்பது போலவும், எல்லாவற்றிலும் அவர்களுடைய பங்கும் இருப்பது போலவும். யாரோ ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்தால் அக்குற்றம் தெள்ளத் தெளிவாகிறது. ஆனால் இது போன்ற சூழல்களில் பெண்கள் தாங்களும் காரணம் தானோ என்ற நினைப்பினால் பெரும்பாலும் அமைதி காத்திவிட நேர்கிறது. ஆண் பெண் உறவுகள் மாறி வரும் கால கட்டங்களில் இது போல் இன்னும் பல நிகழ்வுகள் அரங்கேறக் கூடும் - பெண்கள் அவற்றை உள்ளது உள்ளபடி பார்க்க வேண்டியதும், ஆண்கள் தங்களைச் சுற்றியுள்ள பெண்களோடு எவ்விதமாகத் தங்களைப் பொருத்திப் பார்க்கிறோம் என்று ஆழ்ந்த சுயபரிசீலனை செய்து கொள்வதும் மிகவும் அவசியமாகிறது. நடந்த இந்தச் சம்பவம் நம்மை இது போன்ற முயற்சிகளுக்கு ஊக்குவிப்பதாய் அமையவேண்டும்; ஆண் பெண் உறவுகளுக்குப் புதிய நியதிகளை வரையறுக்கும் முயற்சியாய் அது அமைய வேண்டும். - கவிதா பானோட் (தமிழில் தீபா) நன்றி: www.Kafila.org http://kafila.org/2013/12/03/the-misogyny-of-indias-cultural-elite-kavita-bhanot/ லண்டனில் பிறந்து வளர்ந்தவர் கவிதா பானோட். இந்திய-பிரிட்டிஷ் இலக்கிய நிகழ்ச்சி ஒன்றை இயக்குவதற்காக தில்லி வந்தவர் இந்தியாவின் முதல் இலக்கிய நிறுவனத்தில் பணிபுரியத் தொடங்கினார். இவரது எழுத்துக்கள் பல ஆங்கில இதழ்களிலும் தொகுப்புகளிலும் வெளிவந்துள்ளன.
இந்திய அணியின் அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனி இனிமேல் விக்கெட் காப்பில் ஈடுபடக்கூடாது என்று இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்டக்காரரும், முன்னாள் அணித்தலைவருமான குமாரா சங்கக்காரா தெரிவித்துள்ளார். விக்கெட் காப்பாளராக தனது கிரிக்கெட் வாழ்வை தொடங்கிய சங்கக்காரா, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த துடுப்பாட்ட வீரராக பிரகாசிக்க தொடங்கியதும் விக்கெட் காப்புப் பணியில் ஈடுபடுவதை நிறுத்தினார். தனித்த துடுப்பாட்ட வீரராக விளையாடத் தொடங்கியதன் பின்பு சங்கக்கார அதிகமான ஓட்டங்களைக் குவிக்கத் தொடங்கியதுடன், அவரது சராசரியும் மிக வேகமாக அதிகரிக்கத் தொடங்கியது. இலங்கை அணி சார்பாக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும், டி20 சர்வதேசப் போட்டிகளிலும் சங்கக்காரா விக்கெட் காப்பில் ஈடுபடுகின்ற போதிலும், டினேஷ் சந்திமாலின் எழுச்சி காரணமாக இனிவரும் விக்கெட் காப்பில் சந்திமால் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், நடைபெற்றுவரும் ஐ.பி.எல். போட்டிகளில் சங்கக்காரா விக்கெட் காப்பில் ஈடுபடுவதில்லை. இந்நிலையில் டோனியின் கிரிக்கெட் வாழ்வும் முக்கியமான கட்டத்தை அடைந்திருப்பதாகத் தெரிவித்த சங்கக்காரா, டெஸ்ட் போட்டிகளில் டோனி விக்கெட் காப்பில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்தார். டோனியின் டெஸ்ட் துடுப்பாட்ட சராசரி அவரது உண்மையான திறமையை வெளிப்படுத்துவதில்லை. அவர் அணித்தலைவராகவும், துடுப்பாட்ட வீரராகவும், விக்கெட் காப்பாளராகவும் செயற்படுவதன் காரணமாகவே டோனிக்கு இந்த நிலை காணப்படுகிறது என்றார். மேலும் அவர் கூறுகையில், டோனி மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர். ஆனால், வேலைப்பழு காரணமாக அவரால் முழுத்திறமையையும் வெளிப்படுத்த முடியவில்லை எனவும் தெரிவித்தார். சங்கக்காரா, கிரிக்கெட்டின் பைபிள் என்றழைக்கப்படும் விஸ்டன் சஞ்சிகையின் சிறந்த வீரர் என்ற பெருமையை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிய கிண்ண கிரிக்கட்: கோஹ்லியின் அதிரடி சதத்தால் இந்தியா அபார வெற்றி posted Mar 19, 2012, 6:04 AM by Rasanayagam Vimalachandran ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியின் பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் கோஹ்லியின் அதிரடி சதத்தால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் பங்கேற்கும் ஆசியக் கிண்ண கிரிக்கட் போட்டிகள் வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை நான்கு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் ஐந்தாவது லீக் ஆட்டம் இன்று மிர்புரில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி துடுப்பெடுத்தாட முடிவு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய நசிர் ஜாம்ஷெட் 105 ஓட்டங்களும், முகமது ஹபிஸ் 112 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய 28 ஓட்டங்களும், யூனிஸ் கான் 52 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 329 ஓட்டங்கள் எடுத்தது. இதனையடுத்து 330 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கவுதம் கம்பீர் ஓட்டங்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சச்சின் டெண்டுல்கர் 52 ஓட்டங்களும், அடுத்து களமிறங்கிய வீராட் கோஹ்லி சதத்தை கடந்து 183 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ரோகித் சர்மா 68 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 47.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 330 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வீராட் கோஹ்லி புதிய சாதனை வீராட் கோஹ்லி 148 பந்துகளில் ஒரு சிக்ஸர், 22 பௌண்டரிகள் உட்பட 183 ஓட்டங்களைப் பெற்றார். ஆசிய கிண்ண போட்டியொன்றில் வீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை இதுவாகும். 2004 ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கிண்ணத் தொடரில் ஹொங்கொங் அணிக்கெதிரான போட்டியில் பாகிஸ்தான் வீரர் யூனிஸ்கான் 144 ஓட்டங்களைப் பெற்றமையே இதுவரை சாதனையாக இருந்தது. இத்தொடரில் நாளை மறுதினம் இலங்கை –பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன. இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டி எதிர்வரும் 22 ம் திகதி நடைபெறவுள்ளது. 148 பந்துகளில் ஒரு சிக்ஸர், 22 பௌண்டரிகள் உட்பட 183 ஓட்டங்களைப் பெற்றார். ஆசிய கிண்ண போட்டியொன்றில் வீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை இதுவாகும். பிரபு தேவா, சல்மான், ப்ரியங்கா நடனத்துடன் தொடங்குகிறது ஐபிஎல்! posted Mar 18, 2012, 10:32 AM by Sathiyaraj Thambiaiyah [ updated Mar 18, 2012, 10:32 AM ] 2012-ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி நடிகர் / இயக்குநர் பிரபு தேவாவின் அட்டகாச நடனத்துடன் ஆரம்பிக்கிறது. ஏப்ரல் 3-ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்குகின்றன. சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் கோலாகலத்துடன் தொடங்குகிறது போட்டி. அன்றைக்கு பிரபலமான தமிழ் மற்றும் இந்திப் பாடல்களுக்கு மேடையில் நடனமாடுகிறார் பிரபுதேவா. அவருடன் பிரபல இந்தி நடிகர்கள் சல்மான்கான், பிரியங்கா சோப்ரா ஆகியோரும் கலந்து கொண்டு நடனமாடுகிறார்கள். மிகப் பிரமாண்டமான நிகழ்வாக இதனை ஏற்பாடு செய்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகிறவர்... இந்தியின் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன். ஏப்ரல் 3-ம் தேதி பிரபு தேவாவுக்கு இன்னொரு விசேஷமான நாள். அன்றுதான் அவரது பிறந்த நாள். இந்த நாளில் இப்படியொரு பிரமாண்ட ஷோவில் அவர் ஆடுவது இதுதான் முதல்முறை! பரபரப்பான ஆட்டத்தில் வங்கதேசம் வெற்றி: இந்தியாவின் போராட்டம் வீணானது posted Mar 16, 2012, 10:53 PM by Rasanayagam Vimalachandran ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியின் இந்தியாவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் வங்கதேசம் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் பங்கேற்கும் ஆசிய கிண்ணக் கிரிக்கட் போட்டிகள் வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றுடன் மூன்று போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதும் நான்காவது போட்டி இன்று மிர்புரில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற வங்கதேச அணி களத்தடுப்பை முதலில் தெரிவு செய்தது. இதனையடுத்து இந்திய அணி துடுப்பாட்டத்தை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கவுதம் கம்பீர் 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான முன்னணி நட்சத்திர துடுப்பாட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் பலநாட்களாக தவற விட்ட தனது நூறாவது சதத்தை கடந்து 114 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய வீராட் கோஹ்லி 66 ஓட்டங்களும், சுரேஷ் ரெய்னா 51 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 289 ஓட்டங்கள் எடுத்தது. இதனையடுத்து, 290 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தமிம் இக்பால் 70 ஓட்டங்களும், நசிமுடின் 5 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ஜக்ருல் இஸ்லாம் 53 ஓட்டங்களும், நசிர் ஹுசைன் 54 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் வங்கதேச அணி 49.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 293 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சச்சினின் சாதனைகள் posted Mar 16, 2012, 10:51 PM by Rasanayagam Vimalachandran உலக கிரிக்கட் ரசிகர்களின் ஆதரவை பெற்ற இந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் படைத்த சாதனைகள் அளப்பரியது. 1989: பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஸ்ரீகாந்த் தலைமையிலான இந்திய அணியில் 16 வயது சிறுவனாக அறிமுகம். 1990: இங்கிலாந்துக்கு எதிராக ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் முதலாவது டெஸ்ட் சதம்(119*). 1993: இந்திய மண்ணில் முதல் டெஸ்ட் சதம்(சென்னை, இங்கிலாந்துக்கு எதிராக 165). 1994: தனது 79வது போட்டியில் முதல் ஒருநாள் சதம்(கொழும்புவில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி, சிங்கர் கிண்ணம்). 1996: உலக கிண்ணப் போட்டியில் 2 சதம் உட்பட 523 ஓட்டங்கள். 1997: ஆண்டின் சிறந்த வீரராக விஸ்டன் இதழ் தெரிவு. 1998: சென்னை டெஸ்டில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 155 ஓட்டங்கள் விளாசல். இந்தியா 179 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி. 2001: ஒருநாள் போட்டி வரலாற்றில் 10,000 ஓட்டங்கள் கடந்து சாதனை. 100 விக்கெட்டும் கைப்பற்றினார். 2002: சர் பிராட்மேனின் 29 சத சாதனையை சமன் செய்தார்(மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 117, போர்ட் ஆப் ஸ்பெயின்). அதே ஆண்டில் பிராட்மேன் சாதனையை முறியடித்தார் (இங்கிலாந்துக்கு எதிராக 193, லீட்ஸ்). 2003: ஐசிசி உலக கிண்ணப் போட்டியில் 673 ஓட்டங்கள் குவித்து புதிய சாதனை. 2004: கவாஸ்கரின் 34 சத சாதனை சமன். எல்லா டெஸ்ட் அணிக்கு எதிராகவும் சதம் அடித்த 3வது வீரர் என்ற பெருமை(1.கிர்ஸ்டன், 2.ஸ்டீவ் வாஹ்). ஒருநாள் போட்டிகளில் 50 ஆட்ட நாயகன் விருது பெற்ற முதல் வீரர். 2005: தனது 122வது டெஸ்டில் 10,000 ஓட்டங்களை கடந்து சாதனை மைல் கல்லை எட்டினார். 2006: ஒருநாள் போட்டிகளில் 14,000 ஓட்டங்களை கடந்தார் 2007: 400வது சர்வதேச ஒருநாள் போட்டியில் பங்கேற்பு. 2008: அவுஸ்திரேலியாவிற்கு எதிரான முத்தரப்பு தொடரின் போது ஒருநாள் போட்டிகளில் 16,000 ஓட்டங்களை கடந்தார். பிரையன் லாராவின் 11,953 ஓட்டங்களை கடந்து டெஸ்ட் ஓட்டக் குவிப்பில் முதலிடத்துக்கு முன்னேறினார். 2009: ஒருநாள் போட்டிகளில் 17,000 ஓட்டங்களை கடந்து சாதனை. 2010: ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய முதல் வீரர் என்ற மகத்தான சாதனை. அதிக டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கிய வீரராகவும் சாதனை(ஸ்டீவ் வாஹை முந்தினார் 168). 2011: அதிக ஒருநாள் போட்டிகளில் களமிறங்கிய வீரர் என்ற பெருமை(ஜெயசூரியாவை முந்தினார் 444). 2011: இந்திய அணி 2வது முறையாக உலக கிண்ணத்தை வென்றதில் முக்கிய பங்காற்றினார். இந்திய அணியில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரராக(482) பெருமை. 2012: ஆசிய கிண்ணப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 100வது சர்வதேச சதம் விளாசி உலக சாதனை. பாகிஸ்தான் அணி அபார வெற்றி: பரிதாபமான நிலையில் இலங்கை posted Mar 15, 2012, 9:25 AM by Rasanayagam Vimalachandran ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியின் இலங்கைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் பங்கேற்கும் ஆசிய கிண்ணக் கிரிக்கட் போட்டிகள் வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதும் மூன்றாவது போட்டி இன்று மிர்புரில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி, முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அணித்தலைவர் மஹேல ஜெயவர்த்தன 12 ஓட்டங்களும், திலகரத்தன டில்சன் 20 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய சங்கக்கரா 71 ஓட்டங்களும், உபுல் தரங்கா 57 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் இலங்கை அணி 45.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ஓட்டங்கள் எடுத்தது. இதனையடுத்து பாகிஸ்தான் அணி 189 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய முகமது ஹபிஸ் 11 ஓட்டங்களும், நசிர் ஜாம்ஷெட் 18 ஓட்டங்களும், எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய யூனிஸ் கானும் 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் களமிறங்கிய உமர் அக்மல் அதிரடியாக விளையாடி 77 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் உபுல் தரங்கா பிடியில் ஆட்டமிழந்தார். அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் 72 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 189 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அதே நேரம் இலங்கை அணி இரண்டாவது முறையாக தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இலங்கை பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்த இந்திய துடுப்பாட்ட வீரர்கள்: போனஸ் புள்ளியுடன் இந்தியா அமோக வெற்றி posted Feb 28, 2012, 4:59 AM by Rasanayagam Vimalachandran சி.பீ கிண்ண முத்தரப்பு தொடரின் இலங்கைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சி.பீ கிண்ண முத்தரப்பு தொடரின் இன்றைய ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி, முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி துடுப்பெடுத்தாடியது. இலங்கை அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய தில்ஷானும், ஜெயவர்தனேவும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 12 வது ஓவரின் முடிவில் இலங்கை அணி தனது முதல் விக்கெட்டை இழந்தது. ஜெயவர்தனே 22 ஓட்டங்கள் எடுத்திருந்த போது, ஜடேஜா பந்துவீச்சில் ஷேவாக்கிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். மாத்யூஸ் 14 ஓட்டங்களும், சங்ககாரா சதத்தை கடந்து 105 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான தில்ஷன் 11 பவுண்டரி, 3 சிக்சருடன் 160 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 320 ஓட்டங்கள் எடுத்தது. இதனையடுத்து 321 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய வீரேந்திர சேவக் 30 ஓட்டங்களும், சச்சின் டெண்டுல்கர் 39 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனையடுத்து களமிறங்கிய காம்பிர் 63 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். வீராத் கோக்லி சிறப்பாக விளையாடி 86 பந்துகளில் 16 பவுண்டரி, 2 சிக்சருடன் 133 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றி பெற செய்தார். இந்திய அணி 36.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 321 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் சிபீ கிண்ண தொடரில் 11 போட்டிகள் நிறைவடைந்துள்ளதன்படி புள்ளிப்பட்டியலில் அவுஸ்திரேலியா தொடர்ந்தும் முன்னிலையில் திகழ்வதோடு, இலங்கை மற்றும் இந்திய அணிகள் தலா 15 புள்ளிகளைப் பெற்று முறையே இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பிடித்துள்ளன. எனினும் ஓட்ட சராசரி விகிதத்தின்படி இலங்கை அணி முன்னிலை வகிக்கிறது. இலங்கை அணி 15 +0.162 புள்ளிகளையும் இந்திய அணி 15 -0.593 புள்ளிகளையும் பெற்றுள்ளன. இதன்படி மார்ச் 2ம் திகதி இடம்பெறவுள்ள அவுஸ்திரேலிய அணியுடனான போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றால் மாத்திரமே இறுதிப் போட்டிக்கு தெரிவாவது உறுதியாகும். தென் ஆப்ரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி posted Feb 25, 2012, 9:21 AM by Sathiyaraj Kathiramalai [ updated Feb 25, 2012, 9:21 AM ] நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கட் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து-தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் ஓருநாள் கிரிக்கட் போட்டி இன்று வெல்லிங்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி துடுப்பெடுத்தாட முடிவு செய்தது. நியூசிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ராப் நிகோல் 30 ஓட்டங்களும், மார்டின் குப்தில் 7 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய பிராண்டன் மெக்கல்லம் 56 ஓட்டங்களும், வில்லியம்சன் 55 ஓட்டங்களும், மற்றவர்கள் சொற்ப ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 253 ஓட்டங்கள் எடுத்தது. அதன் பின் 254 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்ரிக்கா அணி களமிறங்கியது. தென் ஆப்ரிக்கா அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஆம்லா 8 ஓட்டங்களும், ஸ்மித் 9 ஓட்டங்களும், கல்லிஸ் 13 ஓட்டங்களும், ஜீன் பால் டுமினி 46 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். டி வில்லியர்ஸ் சதத்தை கடந்து 106 ஓட்டங்களுடனும், பிளஸ்ஸிஸ் 66 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் 45.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 254 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா அணி வெற்றி பெற்றது. சி.பீ கிண்ண முத்தரப்பு கிரிக்கட் தொடர்: இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி posted Feb 24, 2012, 5:58 AM by Rasanayagam Vimalachandran சி.பீ கிண்ண முத்தரப்பு கிரிக்கட் தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான பரபரப்பான இன்றைய(24.02.2012) போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சி.பீ கிண்ண முத்தரப்பு கிரிக்கட் போட்டி தொடரின் இன்றைய போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா அணி, முதலில் துடுப்பெடுத்தாடியது. அவுஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மேத்யு வடே 5 ஓட்டங்களும், வார்னர் 7 ஓட்டங்களும் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய பீட்டர் பாரஸ்ட் சதத்தை கடந்து 104 ஓட்டங்களும், மைக்கேல் கிளார்க் 72 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 280 ஓட்டங்கள் எடுத்தது. இதையடுத்து 281 ஒட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய தில்சன் 3 ஓட்டங்களும் அடுத்து களமிறங்கிய சங்கக்கரா 22 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அணித்தலைவர் ஜெயவர்த்தனே 85 ஓட்டங்களும், சண்டிமால் 80 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இலங்கை அணி 49.2 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 283 ஓட்டங்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா, அவுஸ்திரேலியாவிடம் சுருண்டது posted Feb 19, 2012, 6:43 PM by Sathiyaraj Kathiramalai [ updated Feb 19, 2012, 6:44 PM ] முத்தரப்பு ஒருநாள் கிரிக்கட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் அவுஸ்திரேலியா 110 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. முத்தரப்பு ஒருநாள் கிரிக்கட் தொடரில் பிரிஸ்பேனில் நடந்த இன்றைய ஆட்டத்தில் இந்தியா, அவுஸ்திரேலியா அணிகள் மோதின. நாணயசுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 288 ஓட்டங்கள் எடுத்தது. அந்த அணியில் மைக் ஹசி 59 ஓட்டங்களும், பாரஸ்ட் 52 ஓட்டங்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் பதான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 289 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 43.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 110 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. 1-10 of 86 Copyright 2010-2014 © veeramunai.com All rights reserved. This site best viewed at a screen resolution of 1024 x 768 pixels or higher with most recent versions of browsers. You will need the most recent versions of Adobe Flash Player & etc in order to view some multimedia content.
யாழ்ப்பாணத்தில் திகதி காலாவதியான பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 11 வர்த்தகர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் (செப்டெம்பர்) 20, 21ஆம் திகதிகளில் யாழ். மாநகர சபை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் மாநகர சபைக்கு உட்பட்ட பலசரக்குக் கடைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போது வண்ணார்பண்ணை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவில் 10 பலசரக்குக் கடைகளில் திகதி காலாவதியான பொருட்கள் அப்பகுதி பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் கைப்பற்றப்பட்டன, அத்துடன் நல்லூர் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவிலும் ஓர் கடையில் திகதி காலாவதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டன. மேற்படி கடை உரிமையாளர்களுக்கு எதிராக நேற்று யாழ். மேலதிக நீதிவான் நீதிமன்றில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கை விசாரித்த நீதிவான் கடை உரிமையாளர்கள் 11 பேருக்கும் மொத்தமாக ஒரு இலட்சத்து 85 ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறவிட்டுத் தீர்ப்பளித்தார்.