text
stringlengths
11
513
பாடம் – 1 வாரன் ஹேஸ்டிங்ஸ் ( 1772 – 1785 ) கற்றல் நோக்கங்கள் மாணவரை பின்வருவனவற்றை அறியும்படி செய்தல் : 1. இந்தியாவில் கிழக்கிந்திய வணிகக் குழுவின் வளர்ச்சி. 2. முதலாவது தலைமை ஆளுநர் வாரன் ஹேஸ்டிங்ஸின் சீர்திருத்தங்கள். 3. 1773 ஆம் ஆண்டு ஒழுங்குமுறைச் சட்டத்தின் விதிமுறைகள் , நிறைகுறைகள். 4. வாரன் ஹேஸ்டிங்ஸின் விரிவாக்கக் கொள்கை முதல் மராட்டியப் போர் , முதல் மைசூர் போர். 5. 1784 ஆம் ஆண்டு பிட் இந்தியச் சட்டம். 6. வாரன் ஹேஸ்டிங்ஸ் மீதான தேசதுரோகக் குற்றம். ஆங்கிலேய கிழக்கிந்திய வணிகக்குழு 1600 ஆம் ஆண்டு
டிசம்பர் 31 ஆம் நாள் ஆங்கிலேயே கிழக்கிந்திய வணிகக்குழு நிறுவப்பட்டது. இதற்கான அரச பட்டயத்தை இங்கிலாந்து அரசி முதலாம் எலிசபெத் வழங்கினார். 1608 ஆம் ஆண்டு கேப்டன் ஹாக்கின்ஸ் என்பவரை வணிகக்குழு முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரின் அவைக்கு அனுப்பி சூரத்தில் வணிக நிலையம் அமைப்பதற்கான அனுமதியைக் கோரியது. முதலில் இதனை நிராகரித்தாலும் , ஆங்கிலேயர் தங்களது முதலாவது வணிக நிலையத்தை சூரத்தில் நிறுவ ஜஹாங்கீர் 1613 ல் ஆணை வழங்கினார். பின்னர் , சர் தாமஸ் ரோ என்பவர் மேலும் பல சலுகைகளையும் உரிமைகளையும் வணிகக் குழுவிற்கு பெற்றுத்
தந்தார். இதனால் , ஆங்கிலேயர் ஆக்ரா , அகமதாபாத் , புரோச் ஆகிய இடங்களில் தமது வாணிப மையங்களை அமைத்தனர். இவ்வாறு ஆங்கிலேய கிழக்கிந்திய வணிகக்குழுவினர் படிப்படியாக தங்களது வாணிப எல்லையை விரிவுபடுத்தி வந்தனர். சர் தாமஸ் ரோ 1639 ல் பிரான்சிஸ் டே என்பவர் சென்னையை நிறுவி அங்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அமைத்தார். மேற்குக் கடற்கரையில் , 1668 ம் ஆண்டு அரசர் இரண்டாம் சார்லசிடமிருந்து ஆண்டுக்கு பத்து பவுன் வாடகைக்கு வணிகக்குழு பம்பாய் தீவைப் பெற்றது. 1690 ஆம் ஆண்டு ஜாப் சார்னாக் என்ற வணிகக் குழுவின் முகவர் வாரன்
ஹேஸ்டிங்ஸ் சுதநூதி , கோவிந்தபூர். காளிகட்டம் என்ற மூன்று கிராமங்களை விலைக்கு வாங்கினார். இவை பின்னர் கல்கத்தா நகரமாக வளர்ச்சியடைந்தது. அங்கு அமைக்கப்பட்ட கோட்டைக்கு ஆங்கில அரசர் மூன்றாம் வில்லியத்தின் நினைவாக வில்லியம் கோட்டை என்று ஜாப் சார்னாக் பெயரிட்டார். இந்தியக் கடற்கரை ஓரங்களில் நிறுவப்பட்ட ஆங்கில வணிக நிலையங்கள் அனைத்தும் பம்பாய் , சென்னை , கல்கத்தா மாகாணங்களாக பின்னர் ஒருங்கிணைக்கப்பட்டன. 1757 ஆம் ஆண்டு பிளாசிப் போர் , 1764 ஆம் ஆண்டு பக்சார் போர் ஆகியவற்றின் விளைவாக வணிகக் குழு ஒரு அரசியல் சக்தியாக
மாறியது. 1858 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு இந்திய நிலப்பகுதிகளை தனது நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வரை , இந்தியாவில் கிழக்கிந்திய வணிகக் குழுவின் ஆட்சியே நடைபெற்றது. வணிகக்குழு ஆட்சியின் போது வில்லியம் கோட்டையின் முதலாவது ஆளுநராக ராபர்ட் கிளைவ் பதவி வகித்தார். அவரைத் தொடர்ந்து வெர்ல்ஸ் , கார்ட்டியர் இருவரும் அப்பதவியில் இருந்தனர். 1772 ஆம் ஆண்டு வணிகக்குழு வில்லியம் கோட்டையின் ஆளுநராக வாரன் ஹேஸ்டிங்ஸை நியமித்தது. வாரன் ஹேஸ்டிங்சின் சீர்திருத்தங்கள் 1772 ஆம் ஆண்டு வங்காளத்தின் ஆட்சிப் பொறுப்பை வாரன்
ஹேஸ்டிங்ஸ் ஏற்றபோது அங்கு குழப்பமே நிலவியது. வணிகக் குழுவின் நிதி நிலைமை மோசமாக இருந்தது. அப்போது நிலவிய பஞ்சம் மேலும் பற்றாக்குறைக்கே வித்திட்டது. ஆகவே , பெருவாரியான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியதன் கட்டாயத்தை வாரன் ஹேஸ்டிங்ஸ் உணர்ந்தார். இரட்டையாட்சியை ஒழித்தல் தமது கிழக்கிந்திய வணிகக் குழு தாமே ‘ திவானி ’ பொறுப்பையும் ஏற்று முகவர்கள் மூலமாக நேரடியாக நிலவரி வசூலிக்க தீர்மானித்தது. எனவே , ராபர்ட் கிளைவ் அறிமுகப்படுத்திய இரட்டையாட்சி முறை ஒழிக்கப்பட்டது. வணிகக்குழுவின் நிதிநிலைமையை சீரமைப்பதற்காக ,
வாரன் ஹேஸ்டிங்ஸ் நவாபிற்கு அளிக்கப்பட்டுவந்த நிதியுதவி 32 லட்ச ரூபாயை பாதியாகக் குறைத்தார். முகலாயப் பேரரசருக்கு வழங்கப்பட்டு வந்த ஆண்டு ஓய்வூதியம் 26 லட்ச ரூபாயையும் நிறுத்தினார். வருவாய் சீர்திருத்தங்கள் இரட்டையாட்சி ஒழிக்கப்பட்டபிறகு வரிவசூல் செய்யும் பொறுப்பை வணிகக்குழுவே ஏற்றது. அதற்காக , கல்கத்தாவில் ஒரு வருவாய் வாரியம் ஏற்படுத்தப்பட்டது. வரிவசூலை இது மேற்பார்வை செய்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆங்கிலேய கெலெக்டர்கள் நியமிக்கப்பட்டனர். கருவூலம் மூர்ஷிதாபாத்திலிருந்து கல்கத்தாவிற்கு மாற்றப்பட்டது. ஒரு
தலைமைக் கணக்கரும் நியமிக்கப்பட்டார். இவ்வாறு , கல்கத்தா 1772 ல் வங்காளத்தின் தலைநகராகியது. பின்னர் , அது பிரிட்டிஷ் இந்தியாவிற்கும் தலைநகராயிற்று. வருவாய் வாரியம் நிலங்களை அவற்றின் உண்மை மதிப்பை அறிந்து கொள்வதற்காக , ஓராண்டுக்குப்பதில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஏலத்துக்கு விட்டது. ஏலத்தில் ஜமீன்தாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. இருப்பினும் , குடியானவர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக ஒரு சில நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. தன்னிச்சையான மேல்வரிகளும் அநியாயமான அபராதங்களும் ஒழிக்கப்பட்டன. மேலும் குத்தகையை
உயர்த்துவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இருப்பினும் இந்த வருவாய்த் திட்டம் தோல்வியில் முடிந்தது. பல ஜமீன்தார்கள் வரிகட்டத் தவறினார்கள். வருவாய் நிலுவை அதிகரித்தது. நீதித் துறையை சீரமைத்தல் வாரன் ஹேஸ்டிங்ஸ் பதவியேற்றபோது , நீதித்துறையில் முறைகேடுகள் மலிந்து காணப்பட்டன. அதுவரை நீதி நிர்வாகத்தை நடத்திவந்த நவாப் தனது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி வந்தார். அவரது பல தீர்ப்புகள் கொடுமையானதாக இருந்தன. ஜமீன்தார்கள் தங்களது கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் நீதிபதிகளாக செயல்பட்டு வந்தனர். அவர்கள்
பாரபட்சமாக நடந்து கொண்டதுடன் , ஊழல் மிக்கவர்களாகவும் இருந்தனர். மொத்தத்தில் , நீதித்துறை ஊழலின் உறைவிடமாகவே காணப்பட்டது. நீதி நிர்வாகத்தை சீரமைக்க வேண்டியதன் அவசியத்தை வாரன் ஹேஸ்டிங்ஸ் உணர்ந்தார். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டரின் கீழ் ஒரு உரிமையியல் நீதிமன்றமும் , இந்திய நீதிபதியின் கீழ் ஒரு குற்றவியல் நீதிமன்றமும் செயல்படுவதற்கு வழிவகை செய்யப்பட்டன. மாவட்ட நீதி மன்றங்களிலிருந்து வரும் வழக்குகளை விசாரிக்க , உரிமையியல் வழக்குகளுக்கு ஒன்றும் , குற்றவியல் வழக்குகளுக்கு ஒன்றும் , ஆக இரண்டு மேல்
முறையீட்டு நீதிமன்றங்கள் கல்கத்தாவில் ஏற்படுத்தப்பட்டன. உரிமையியல் மேல் முறையீட்டு நீதிமன்றம் சதர் திவானி அதலத் என்று அழைக்கப்பட்டது. இதற்கு , ஆளுநரும் , ஆலோசனைக்குழுவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு உறுப்பினர்களும் தலைமை வகிப்பர். அதேபோல் , குற்றவியல் மேல் முறையீட்டு நீதிமன்றம் சதர் நிசாமத் அதலத் எனப்பட்டது. இதற்கு ஆளுநரும் அவரது ஆலோசனைக் குழுவால் நியமிக்கப்பட்ட இந்திய நீதிபதி ஒருவரும் தலைமை வகிப்பர். நீதிபதிகளுக்கு உதவியாக இந்து மற்றும் முஸ்லீம் சட்டங்களின் வல்லுனர்கள் நியமிக்கப்பட்டனர். கற்றறிந்த
பண்டிதர்களால் இந்து சட்டத்தொகுப்பு ஒன்று வடமொழியில் உருவாக்கப்பட்டது. இது பாரசீக மொழியிலும் மொழியாக்கம் செய்யப்பட்டது. இதன் ஆங்கில வடிவம் இந்து சட்டங்களின் தொகுப்பு என்ற பெயரில் ஹால்ஹெட் என்பவரால் உருவாக்கப்பட்டது. வணிக விதிமுறைகளும் பிற சீர்திருத்தங்களும் தஸ்தக்குகள் எனப்பட்ட இலவச அனுமதிச் சீட்டுகளை வாரன் ஹேஸ்டிங்ஸ் ஒழித்தார். உள்நாட்டு வாணிபத்தை முறைப்படுத்தினார். சுங்கவரி நிலையங்களின் எண்ணிக்கையை குறைத்தார். இந்திய மற்றும் அயல்நாட்டு பொருட்கள் அனைத்துக்கும் 2.5 விழுக்காடு என ஒரே சீரான சுங்கவரி
வசூலிக்கப்பட்டது. வணிகக் குழு பணியாளர்கள் தொடர்ந்து தனிப்பட்ட வாணிகத்தில் ஈடுபட்டபோதிலும் அவை ஒரு வரம்புக்குட்பட்டே நடைபெற்றன. நெசவாளர்களின் நலன்களைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஒரே மாதிரியான முன் கட்டண அஞ்சல் முறையை அவர் அறிமுகப்படுத்தினார். கல்கத்தாவில் ஒரு வங்கி தோற்றுவிக்கப்பட்டது. கல்கத்தாவின் காவல்துறை மேம்படுத்தப்பட்டு கொள்ளையர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒழுங்குமுறை சட்டம் ( 1773 ) 1773 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஒழுங்குமுறை சட்டம் வணிகக் குழுவின் அரசியலமைப்பு வரலாற்றில் ஒரு
புதிய அத்தியாயமாகும். இதற்கு முன்பு , இங்கிலாந்தில் இருந்த இயக்குநர்கள் குழுவும் , வணிகர்கள் மன்றமும் வணிகக்குழுவை நிர்வகித்து வந்தன. ஆண்டு தோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கொண்ட இயக்குநர்கள் குழுவே வணிகக் குழுவின் அலுவல்களை நிர்வகித்து வந்தது. இந்தியாவிலிருந்த மூன்று மாகாணங்களும் தனித்தனியாக செயல்பட்டன. அவை ஒவ்வொன்றும் தாய்நாட்டு அரசுக்கே நேரடி பொறுப்பானதாகும். மாகாண அரசின் நிர்வாகம் ஆளுநர் மற்றும் அவரது ஆலோசனைக் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்தது. நாடாளுமன்றம் தலையிடுவதற்கான. வணிகக் குழுவின்
அலுவல்களில் சூழ்நிலைகள் அப்போது உருவாயின. ஆங்கிலேய கிழக்கிந்திய வணிகக்குழு , இந்தியாவின் நிலப்பகுதிகளைக் கைப்பற்றியதோடு திவானி உரிமைகளையும் பெற்றதன் மூலம் ஆட்சியதிகாரத்தைப் பெற்றது. அதன் ஆரம்பகால ஆட்சி ஊழல் மலிந்ததாகவும் கொடுமையானதாகவும் இருந்தது. வணிகக்குழு நிதிப்பற்றாக்குறையால் தவித்தபோது , அதன் பணியாளர்கள் செல்வத்தில் கொழித்தனர். 1770 ஆம் ஆண்டு வங்காளத்தில் ஏற்பட்ட கொடிய பஞ்சம் குடியானவர்களை பெரிதும் பாதித்தது. இதனால் , வரிவசூல் மந்தமாயிற்று. வணிகக்குழு திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டது. 1773 ஆம் ஆண்டு
வணிகக்குழு அவசரக் கடனுதவி கேட்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தை நாடியது. இத்தகைய பின்னணியில்தான் வணிகக்குழுவின் அலுவல்களை ஒழுங்குபடுத்துவது என இங்கிலாந்து நாடாளுமன்றம் முடிவு செய்தது. இங்கிலாந்தில் பிரதமராக இருந்த நார்த் பிரபு வணிக்குழுவின் விவகாரங்களை விசாரித்து அறிய ஒரு தேர்வுக்குழுவை நியமித்தார். அக்குழு அளித்த அறிக்கையே ஒழுங்கு முறைச் சட்டம் இயற்றப்படுவதற்குக் காரணமாக அமைந்தது. ஒழுங்குமுறை சட்டத்தின் விதிமுறைகள் ஒழுங்குமுறை சட்டம் வணிக குழுவின் அரசை இந்தியாவிலும் , தாய்நாட்டிலும் மாற்றியமைத்தது. அதில்
இடம்பெற்றிருந்த முக்கிய விதிமுறைகள் ; 1. இயக்குநர்கள் குழுவிலுள்ள உறுப்பினர்களின் பதவிக்காலம் ஓராண்டிலிருந்து நான்கு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது. அவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் ஆண்டுதோறும் ஓய்வு பெறுவர். ஓய்வு பெற்றவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படும் தகுதியை இழந்தவர்களாவர். 2. 3.வங்காள ஆளுநர் இனி வில்லியம் கோட்டையின் தலைமை ஆளுநர் என அழைக்கப்படுவார். அவரது பதவிக்காலம் ஐந்தாண்டுகளாகும். 6. தலைமை ஆளுநருக்கு உதவியாக நான்கு பேர் கொண்ட ஒரு ஆலோசனைக்குழு ஏற்படுத்தப்பட்டது. பெரும்பான்மை முடிவுப்படியே அரசு
செயல்படவேண்டும். தலைமை ஆளுநருக்கு முடிவுசெய்யும் வாக்குரிமை வழங்கப்பட்டது. 4. தலைமை ஆளுநர் மற்றும் ஆலோசனைக்குழுவிற்கு போர் , அமைதி , உடன்பாடு போன்ற விவகாரங்களில் மற்ற மாகாணங்களை கட்டுப்படுத்த அதிகாரம் வழங்கப்பட்டது. 5. கல்கத்தாவில் ஒரு உச்சநீதிமன்றம் ஏற்படுத்த இச்சட்டம் வகை செய்தது. இதில் ஒரு தலைமை நீதிபதியும் மூன்று துணை நீதிபதிகளும் இருப்பர். இது , தலைமை ஆளுநர் மற்றும் ஆலோசனைக் குழுவிற்கு அப்பாற்பட்டு தனித்து இயங்கும். 1774 ஆம் ஆண்டு அரச பட்டயத்தின்படி உச்ச நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது. தலைமை ஆளுநர் ,
ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் , உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட வணிகக்குழுவின் பணியாளர்கள் எவரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பரிசுப் பொருட்கள் , நிதி வெகுமதிகள் போன்றவற்றை பெறுவதற்கு இச்சட்டம் தடைவிதித்தது. சட்டத்தின் நிறைகுறைகள் வணிகக் குழுவின் அலுவல்களை நாடாளுமன்றம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தமையே ஒழுங்குமுறை சட்டத்தின் முக்கியத்துவமாகும். மேலும் இங்கிலாந்து நாடாளுமன்றம் இந்திய மக்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளது என்பதை இச்சட்டம் வெளிப்படுத்தியது. வணிகக் குழுவின் தன்னிச்சையான ஆட்சிக்கு முற்றுப்புள்ளி
வைத்தமையே இச்சட்டத்தின் மிகப்பெரிய நிறையாகும். இந்தியாவின் எதிர்கால நிர்வாகத்திற்கும் சட்டங்களுக்கும் ஒரு வரைச்சட்டமாக இது விளங்கியது. தலைமை ஆளுநருக்கு போதிய அதிகாரம் அளிக்கப்படவில்லை என்பது இச்சட்டத்தின் மிகப்பெரிய குறைபாடாகும். ஆலோசனைக் குழுவிற்கு உச்ச அதிகாரம் அளிக்கப்பட்டமையால் , தலைமை ஆளுநரின் முடிவுகளை இது அவ்வப்போது தடை செய்து நிர்வாக முடக்கத்துக்கு வித்திட்டது. இருப்பினும் , இச்சட்டத்தின் பெரும்பாலான குறைகள் 1784 ஆம் ஆண்டு பிட் இந்தியச் சட்டத்தின்மூலம் சரி செய்யப்பட்டன. வாரன் ஹேஸ்டிங்சின் விரிவாக்கக்
கொள்கை வாரன் ஹேஸ்டிங்ஸ் தமது விரிவாக்கக் கொள்கைக்கு புகழ் பெற்றவராவார். இவரது ஆட்சிக் காலத்தில் ரோகில்லாப் போர் , முதல் ஆங்கிலேய - மராட்டியப் போர் , இரண்டாம் ஆங்கிலேய – மைசூர்ப்போர் ஆகிய போர்கள் நடைபெற்றன. ரோகில்லாப் போர் ( 1774 ) மராட்டியப் பகுதிகளுக்கும் அயோத்திக்கும் இடையே இருந்த ஒரு சிறு அரசு ரோகில்கண்ட். இதன் ஆட்சியாளர் ஹபிஸ் ரகமத் கான். மராட்டியப் படையெடுப்பின் அச்சம் காரணமாக , ரகமத்கான் 1772 ல் அயோத்தி நவாப்புடன் ஒரு பாதுகாப்பு உடன்படிக்கை செய்து கொண்டார். ஆனால் அத்தகைய படையெடுப்பு ஏதும் நடைபெறவில்லை.
ஆனால் , நவாப் அதற்கான கட்டணத்தை தருமாறு வற்புறுத்தினார். ரகமத் கான் காலதாமதம் செய்யவே , பிரிட்டிஷார் உதவியுடன் நவாப் ரோகில்கண்ட் மீது படையெடுத்தார். எதிராக பிரிட்டிஷ் துருப்புகளை அனுப்பிய வாரன் ஹேஸ்டிங்ஸ் அத்தகைய செயலுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ரோகில்கண்டுக்கு முதல் ஆங்கிலேய - மராட்டியப் போர் ( 1775–82 ) 1761 ஆம் ஆண்டு மூன்றாம் பானிப்பட்டுப் போருக்குப் பின்பு மராட்டியர்கள் பெரும்பாலும் ஒற்றுமை குன்றி காணப்பட்டனர். பிரிட்டிஷார் தங்களது விரிவாக்கக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு இதனை தகுந்த வாய்ப்பாக
பயன்படுத்திக் கொண்டனர். 1775 ஆம் ஆண்டு மாதவ ராவ் மற்றும் அவரது சித்தப்பா ரகுநாத ராவ் இருவருக்கிடையே பேஷ்வா பதவிக்காக போட்டி நிலவியது. 1775 மார்ச் திங்களில் பம்பாயிலிருந்த பிரிட்டிஷ் அரசு ரகுநாத ராவுடன் சூரத் உடன்படிக்கையை செய்து காண்டது. இதன்படி சால்செட் , பசீன் பகுதிகளை பிரிட்டிஷாருக்குக் கொடுப்பதாக அவர் வாக்களித்தார். பின்னர் , அவர் அதற்குத் தயக்கம் காட்டவே , பிரிட்டிஷார் அப்பகுதிகளைக் கைப்பற்றினர். பம்பாய் அரசின் இந்த நடவடிக்கையை வாரன் ஹேஸ்டிங்ஸ் ஏற்கவில்லை. இச்சிக்கலைத் தீர்ப்பதற்காக வாரன் ஹேஸ்டிங்கஸ்
1776 இல் கர்னல் அப்டன் என்பவரை அனுப்பி வைத்தார் சூரத் உடன்படிக்கையை ரத்து செய்துவிட்டு மற்றொரு மராட்டியத் தலைவரான நானா பட்னாவிஸ் என்பவருடன் புரந்தர் உடன்படிக்கையை அவர் செய்து கொண்டார். இந்த உடன்படிக்கைப்படி இரண்டாம் மாதவராவ் பேஷ்வாவாக ஏற்றுக் கொள்ளப்பட்டார். பிரிட்டிஷார் செட்டை தக்க வைத்துக்கொண்டதுடன் , பெரும்தொகையை போர் இழப்பீடாகப் சால் பெற்றனர். ஆனால் , தாய்நாட்டு அரசாங்கம் புரந்தர் உடன்படிக்கையை நிராகரித்தது. வாரன் ஹேஸ்டிங்கம் புரந்தர் உடன்படிக்கையை வெற்றுக்காகிதம் எனக் கருதினார். மராட்டியருக்கெதிராக
படையெடுக்கவும் அனுமதியளித்தார். இதற்கிடையில் மராட்டியர்கள் பம்பாய் அரசின் துருப்புக்களை முறியடித்தனர். 1781 ல் வாரன் ஹேஸ்டிங்ஸ் கேப்டன் பாப்ஹாம் என்பவர் தலைமையில் பிரிட்டிஷ் துருப்புக்களை அனுப்பினார். இப்படை மராட்டிய தலைவர் மகாதாஜி சிந்தியாவை பல இடங்களில் முறியடித்து குவாலியரைக் கைப்பற்றியது. 1782 மே திங்களில் வாரன் ஹேஸ்டிங்ஸ் மகாதாஜி சிந்தியா இருவருக்குமிடையே சால்பாய் உடன்படிக்கை கையெழுத்தாயிற்று. இதன்படி , சால்செட் , பசீன் பகுதிகள் பிரிட்டிஷாருக்கு கிடைத்தன. ரகுநாத ராவுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டது.
இரண்டாம் மாதவராவ் பேஷ்வா என ஏற்றுக்கொள்ளப்பட்டார். பிரிட்டிஷ் இந்திய அரசியலில் சால்பாய் உடன்படிக்கை செல்வாக்கை உறுதிப்படுத்தியது. மராட்டியருடன் அடுத்த இருபது ஆண்டுகால அமைதிக்கும் வழிவகுத்தது. மராட்டியர் உதவியுடன் மைசூர் ஆட்சியாளர் ஹைதர் அலியிடமிருந்து இழந்த பகுதிகளைப் பெறுவதற்கு இவ்வுடன்படிக்கை உதவியாகவும் இருந்தது. இந்திய அரசுகளின் ஒன்றுபட்ட எதிர்ப்பிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொண்டதுடன் , அவர்களை பிரித்து வைப்பதிலும் பிரிட்டிஷார் வெற்றி கண்டனர் என்று கூறலாம். இரண்டாம் ஆங்கிலேய - மைசூர் போர் ( 1780 84 )
69 ஆம் முதல் ஆங்கிலேய மைசூர் போர் 1767 ஆண்டுகளில் நடைபெற்றது. பிரிட்டிஷாருக்கு எதிராக ஹைதர் அலி பெரும் வெற்றி பெற்றார். போரின் முடிவில் ஹைதர் அலி மற்றும் பிரிட்டிஷாருக்கிடையே ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. பதினொரு ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் மைசூர் போர் தொடங்கியது. இரண்டாம் ஆங்கிலேய போருக்கான முக்கிய காரணங்களாவன. மைசூர் ஹைதர் அலி 1771 ல் மராட்டியர் மைசூரைத் தாக்கியபோது , பிரிட்டிஷார் ஹைதர் அலியுடன் செய்துகொண்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை மதிக்கத் தவறினர். அமெரிக்க சுதந்திரப் போரின்போது ,
ஆங்கிலேயருக்கும் ஹைதர் அலியின் கூட்டாளிகளான பிரஞ்சுக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன. 3. ஹைதர் அலியின் ஆட்சிப் பகுதிக்குள்ளிருந்த பிரெஞ்சு குடியேற்றமான மாஹி என்ற இடத்தை பிரிட்டிஷார் கைப்பற்றினர். 1779 ல் மராட்டியர் மற்றும் ஹைதராபாத் நிசாம் ஆகியோருடன் ஹைதர் அலி பிரிட்டிஷாருக்கு எதிராக ஒரு பெரும்கூட்டிணைவை ஏற்படுத்திக் கொண்டார். வடசர்க்கார் மாவட்டங்களிலிருந்த குண்டூரைக் கைப்பற்றுவதற்காக பிரிட்டிஷார் ஹைதர் அலியின் ஆட்சிப்பகுதி வழியாக தமது துருப்புக்களை அனுப்பியதால் போர் தொடங்கியது. 1780 ல் ஹைதர் அலி
கர்னல் பெய்லி என்பவரை முறியடித்து ஆற்காட்டை கைப்பற்றினார். அதற்கடுத்த ஆண்டில் , வாரன் ஹேஸ்டிங்ஸ் தனது அரசியல் திறமையால் கூட்டிணைவை சிதறடித்தார். அவர் நிசாமுடன் அமைதி உடன்படிக்கை செய்து கொண்டார். மராட்டியத் தலைவர்களான பான்ஸ்லே மற்றும் சிந்தியா ஆகியோருடனும் சமரசம் செய்து கொண்டு ஹைதர் அலியை தனிமைப்படுத்தினார். 1781 மார்ச் திங்களில் சர் அயர் கூட் பரங்கிப் பேட்டையில் ஹைதர் அலியை முறியடித்தார். 1782 டிசம்பரில் தனது அறுபதாவது வயதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஹைதர் அலி இறந்தார். அவரது புதல்வர் திப்பு சுல்தான்
பதவியேற்கும் வரை இச்செய்தி ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. 1784 ஆம் ஆண்டு மங்களூர் உடன்படிக்கைப்படி இரண்டாம் மைசூர்போர் முடிவுக்கு வந்தது. இருதரப்பிலும் கைப்பற்றப்பட்ட பகுதிகள் திரும்ப அவரவரிடமே ஒப்படைக்கப்பட்டது. இருதரப்பிலும் போர்க்கைதிகளும் விடுவிக்கப்பட்டனர். பிட் இந்திய சட்டம் ( 1784 ) ஒழுங்கு முறைச் சட்டம் சில குறைபாடுகளைக் கொண்டிருந்தது எனக் கண்டோம். 1784 ஜனவரித் திங்களில் இளையபிட் ( பொதுத் தேர்தல்களுக்குப் பின் இங்கிலாந்து பிரதமரானார் ) என்பவர் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இந்தியாவுக்கான வரைவு மசோதாவைக்
கொண்டு வந்தார். இரு அவைகளிலும் கடும் வாக்குவாதம் நடைபெற்றபோதிலும் , ஏழு மாதங்களுக்குப் பிறகு அது நிறைவேற்றப்பட்டது. 1784 ஆகஸ்டில் அரச ஒப்புதலும் வழங்கப்பட்டது. இச்சட்டமே , பிட் இந்திய சட்டம் என புகழ் பெற்றது. முக்கிய விதிமுறைகள் 1. ஆறு உறுப்பினர்கள் கொண்ட கட்டுப்பாட்டு வாரியம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அவர்கள் இங்கிலாந்து அரசரால் நியமிக்கப்பட்டனர். 2. இயக்குநர்கள் குழுவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 3. இந்திய நிர்வாகத்தில் இச்சட்டம் முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்தது. தலைமை ஆளுநரின் அவை உறுப்பினர்
எண்ணிக்கை நான்கிலிருந்து மூன்றாக குறைக்கப்பட்டது. இதில் படைத் தளபதியும் அடங்குவார். அயலுறவுக் கொள்கையைப் பொறுத்தவரை பிட் இந்திய சட்டம் சிறப்புமிக்கதாகும். இச்சட்டத்தை நுணுகி ஆய்வு செய்தால் , வணிகக் குழுவின் நிர்வாகத்தில் ஒருவிதமான இரட்டைத்தன்மை ஏற்படுத்தப்பட்டதை உணரலாம். இயக்குநர் குழுவின் கட்டுப்பாட்டில் வணிக நடவடிக்கைகளும் கட்டுப்பாட்டு வாரியத்தின் கீழ் அரசியல் நடவடிக்கைகளும் விடப்பட்டன. அரசரின் பிரதிநிதியாக கட்டுப்பாட்டு வாரியமும் , வணிகக் குழுவின் அடையாளமாக இயக்குநர் குழுவும் திகழ்ந்தன. வாரன் ஹேஸ்டிங்ஸ்
மீதான தேசத்துரோக குற்றச்சாட்டு 1784 ஆம் ஆண்டு பிட் இந்தியச் சட்டம் வாரன் ஹேஸ்டிங்ஸ்சைப் பொறுத்தவரை அதிர்ச்சியாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது. வங்காள அரசின் கொள்கையைக் கண்டித்து பிரதமர் ஆற்றிய உரை தனது தனிப்பட்ட ஆளுமையை குறை கூறுவதாக வாரன் ஹேஸ்டிங்ஸ் கருதினார். இங்கிலாந்தில் அவரது புகழும் நற்பெயரும் களங்கப்படுத்தப்பட்டது. எனவே , 1785 ஜுன் திங்களில் தமது பதவியைத் துறந்துவிட்டு இந்தியாவிலிருந்து திரும்பினார். 1787 ஆம் ஆண்டு , எட்மண்ட் பர்க் மற்றும் விக் கட்சியினரால் , அதிகார வரம்பு மீறல்களைக் காரணமாகக் காட்டி
வாரன் ஹேஸ்டிங்ஸ் மீது நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது. எட்மண்ட் பர்க் அவர்மீது 22 குற்றங்களைச் சுமத்தினார். அவற்றில் ரோகில்லாப் போர் , நந்தகுமார் விவகாரம் , செயித் சிங் பதவியிறக்கம் செய்யப்பட்டது. அயோத்தி பேகம்கள் துன்புறுத்தப்பட்டது போன்றவை முக்கியமானவையாகும். 1795 ஆம் ஆண்டு வரை விசாரணை நீடித்தது. இறுதியில் வாரன் ஹேஸ்டிங்ஸ் குற்றச் சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டார். வணிகக் குழுவிடமிருந்து ஓய்வூதியம் பெற்று , 1818 வரை உயிர் வாழ்ந்தார். நந்தகுமார் என்பவர் வங்காளத்தில் செல்வாக்கு பெற்ற
அதிகாரியாவார் , பொய் கையெழுத்து என்ற குற்றத்திற்காக கல்கத்தா உச்ச நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார். இத்தீர்ப்பில் ஆங்கிலேயச் சட்டம் பின்பற்றப் பட்டது. | நந்தகுமாருக்கு எதிராக வாரன் ஹேஸ்டிங்ஸ்சும் தலைமை நீதிபதி சர் எலிஜா இம்பே என்பவரும் சதி செய்தனர் என்று கூறப்பட்டது. காசி அரசர் செயித் சிங் மீது வாரன் ஹேஸ்டிங்ஸ் கப்பம் கட்டத் தவறியதற்காக அதிகப்படியான அபராதம் விதித்தார். பின்னர் , அவரை முறையற்ற வகையில் பதவி நீக்கம் செய்தார். வங்காள நவாப்பின் அன்னையும் பாட்டியும் அயோத்தி பேகம்கள்
எனப்பட்டனர். அவர்களிடமிருந்து பணம் பறிக்க முயன்ற நவாப்பிற்கு வாரன் ஹேஸ்டிங்ஸ் படையுதவி அளித்தார். இது அதிகார வரம்பை மீறிய செயலாகும். வாரன் ஹேஸ்டிங்ஸ் பற்றிய மதிப்பீடு மனத்திட்பம் , பேராற்றல் , கடும் உழைப்பு போன்ற குணங்களைக் கொண்ட சிறந்த மனிதராக வாரன் ஹேஸ்டிங்ஸ் திகழ்ந்தார். முகலாயர் காலப் பண்பாட்டில் திளைத்திருந்த வங்காளத்தில் நீண்டகாலம் தங்கியிருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ் வங்காளம் , பாரசீகம் போன்ற கீழ்த்திசை மொழிகளைக் கற்றதோடு , கீழை நாட்டு பழக்க வழக்கங்களையும் வளர்த்துக் கொண்டார். திறமையான நிர்வாகத்தை
இந்தியாவில் ஏற்படுத்துவதற்கு இந்தியப் பண்பாட்டை புரிந்து கொள்ள வேண்டும் என்பதில் வாரன் ஹேஸ்டிங்ஸ் கவனமாக இருந்தார். எனவே , இந்திய மொழிகளைக் கற்பதையும் , கலைகளைப் பேணுவதையும் ஆதரித்தார். எதிர்ப்புகள் நிறைந்த சூழ்நிலையில் அவர் மேற்கொண்ட பணிகள் சவால்கள் நிறைந்தவையாகும். புற எதிரிகளை அசாத்திய துணிச்சலுடனும் , வற்றாத வலிமையுடனும் எதிர்கொண்ட வாரன் ஹேஸ்டிங்ஸ் உடனிருந்த எதிரிகளை அசாதாரண பொறுமையுடனும் திடமனதுடனும் கையாண்டார். வாரன் ஹேஸ்டிங்ஸ் விட்டுச் சென்ற அடித்தளத்தின்மீது தான் அவருக்குப் பின் வந்தோர் பிரிட்டிஷ்
ஆட்சியை நிறுவினர். சரியான சொற்றொடரை கண்டறிக. ஒரு சொற்றொடர் மட்டுமே சரியானது வாரன் ஹேஸ்டிங்ஸ் 1774 ல் வில்லியம் கோட்டையின் ஆளுநராக பதவியேற்றார். வாரன் ஹேஸ்டிங்ஸ் ஆட்சி காலத்தில் ரோகில்லாப் போர் நடைபெற்றது. ஒழுங்குமுறை சட்டத்தின்படி இயக்குநர்கள் மன்றத்தின் ஆயுட்காலம் ஐந்து ஆண்டுகளாகும். ஈ. ராஜா செயித் சிங் அயோத்தியின் ஆட்சியாளர் ஆவார் V. பின்வருவனவற்றை சரியா , தவறா என்று கூறுக. 1. ஆங்கிலக் கிழக்கிந்திய வணிகக் குழு 1600 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் நிறுவப்பட்டது. சால்பாய் உடன்படிக்கை வாரன் ஹேஸ்டிங்ஸ் மற்றும்
இரண்டாம் மாதவராவ் ஆகியோருக்கிடையே செய்து கொள்ளப்பட்டது. சிறு குறிப்பு வரைக. ( ஏதேனும் மூன்று குறிப்புகள் ) VI. 1. ரோகில்லா போர் 2. பிட் இந்திய சட்டம் 3. இரண்டாம் ஆங்கில மைசூர் போர். VII. குறுகிய விடை தருக. ( 100 வார்த்தைகள் ) 1. முதல் ஆங்கில - மராத்திய போர் பற்றி குறிப்பு எழுதுக. 2. ஒழுங்குமுறை சட்டத்தின் முக்கிய விதிமுறைகள் பற்றி விவாதிக்க. VIII. விரிவான விடை தருக. ( 200 வார்த்தைகள் ) 1. வாரன் ஹேஸ்டிங்ஸ் சீர்திருத்தங்களை தொகுத்துக் கூறுக. 2. வாரன் ஹேஸ்டிங்ஸின் விரிவாக்கக் கொள்கையை ஆய்க. பாடம் – 2 காரன்
வாலிஸ் பிரபு ( 1786 – 1793 ) கற்றல் நோக்கங்கள் இப்பாடத்தில் மாணவர் புரிந்து கொள்வது : 1. மூன்றாம் மைசூர்ப்போர் பிரிட்டிஷாரை முறியடிக்க திப்பு சுல்தான் மேற்கொண்ட முயற்சிகள். 2. காரன்வாலிஸ் பிரபுவின் ஆட்சித்துறை சீர்திருத்தங்கள். 3. நீதித்துறை சீர்திருத்தங்கள். 4. காவல்துறை மற்றும் பிற சீர்திருத்தங்கள். 5. காரன்வாலிஸ் பிரபுவின் சாதனைகள் ஒரு சிறந்த ஆட்சியாளரும் போர்த் தளபதியுமான காரன் வாலிஸ் பிரபு , வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபுவைத் தொடர்ந்து 1786 ல் தலைமை ஆளுநராகப் பதவியேற்றார். இவர் அரசியல் தொடர்புகள் மிகுந்த
செல்வாக்கும் செல்வமும் நிறைந்த குடும்பத்தை சேர்ந்தவர். பிரதம அமைச்சர் பிட் என்பவரின் நெருங்கிய நண்பர். கட்டுப்பாட்டு வாரியத்தின் முக்கிய உறுப்பினராக இருந்த டுண்டாஸ் எனபவருக்கும் நெருக்கமானவர். அமெரிக்க விடுதலைப் போரில் ஒரு சிறந்த வீரர் என்பதை நிரூபித்தவர். 1781 ல் அமெரிக்கப் படைகள் முன்பு சரணடைந்த போதிலும் , அவரது புகழ் சற்றும் மங்கவில்லை. இங்கிலாந்து அரசாங்கத்தின் நம்பிக்கையை அவர் தொடர்ந்து பெற்றிருந்தார். அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் , அவருக்கு இந்தியாவில் தலைமை ஆளுநர் பதவி வழங்கப்பட்டது.
கடமையாற்றுவதில் தீவிரப்பற்று கொண்ட காரன்வாலிஸ் தமது நாட்டு மக்களின் நம்பிக்கைக்கும் உரியவராகத் திகழ்ந்தார். எனவே வங்காள நிர்வாகத்தில் பெரும் மாற்றங்களை காரன் வாலிஸ் பிரபு ஏற்படுத்த வசதியாக அவருக்கு சட்ட ரீதியான சில சிறப்பு அதிகாரங்களை வழங்கவும் நாடாளுமன்றம் முன்வந்தது. 1786 ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி பிட் இந்திய சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆலோசனைக் குழுவின் முடிவை நிராகரிக்க தலைமை ஆளுநருக்கு அளிக்கப்பட்டது. காரன்வாலிசின் நியமனம் மற்றொரு சிறப்பையும் பெற்றிருந்தது. செல்வந்தக்
குடும்பத்திலிருந்து தலைமை ஆளுநர் பதவிக்குரிய நபரை தேர்ந்தெடுப்பது என்ற புதிய நடைமுறை இவரது நியமனத்தால் தொடங்கி வைக்கப்பட்டது. ஜான் ஷோர் , ஜேம்ஸ் கிராண்ட் , சர் வில்லியம் ஜோன்ஸ் போன்ற கீழ் அதிகாரிகள் கிடைத்தமை காரன்வாலிசின் பெரும்பேறு ஆகும். இத்தகைய சாதகமான சூழ்நிலைகள் அமையப் பெற்றிருந்தாலும் , காரன்வாலிஸ் தேவைப்பட்டால் , அதிகாரம் தமது கொள்கையை வகுப்பதில் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டார். திப்பு சுல்தானும் மூன்றாம் மைசூர் போரும் ( 1790 –92 ) மங்களூர் உடன்படிக்கை ( 1784 ) மைசூர் அரசின் படைவலிமையை மட்டுமில்லாமல்
ஆங்கிலேயரின் பலவீனத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது. மேலும் , அது திப்பு சுல்தானுக்கும் வலிமை சேர்த்தது. தனது தந்தையைப் போலவே , ஆங்கிலேயரை இந்தியாவை விட்டு அகற்றுவதில் திப்பு ஆர்வம் கொண்டிருந்தார். தக்க தருணத்தில தனது தந்தையைக் கைவிட்டு பிரிட்டிஷாருடன் சேர்ந்துகொண்ட ஹைதராபாத் நிசாமையும் மராட்டியரையும் பழிவாங்கவும் திப்பு முடிவு செய்தார். மூன்றாம் மைசூர் போருக்கான முக்கிய காரணங்களாவன 1. பல்வேறு உள்நாட்டு சீர்திருத்தங்களை மேற்கொண்டு திப்பு தனது வலிமையை பெருக்கிக் கொண்டார். இதனால் , பிரிட்டிஷாரும் , ஹைதராபாத்
நிசாம் மற்றும் மராட்டியரும் கவலை கொண்டனர். மேலும் , பிரான்சு , துருக்கி போன்ற நாடுகளுக்கு தூதுவர்களை அனுப்பிய திப்பு ஆங்கிலேயருக்கெதிராக அவர்களது உதவியைக் கோரினார். பிரிட்டிஷாரின் கூட்டாளியான திருவாங்கூர் அரசர் போன்றவர்களிடமிருந்து நிலப்பகுதிகளைக் கைப்பற்றி திப்பு தமது அரசின் பரப்பை விரிவு படுத்தினார். 4. 1789 ல் திப்புவுக்கு எதிராக , ஹைதராபாத் நிசாம் மற்றும் மராட்டியருடன் சேர்ந்து ஒரு முக்கூட்டிணைவை பிரிட்டிஷார் ஏற்படுத்தினர். திப்பு சுல்தான் 1790 ல் ஆங்கிலேயருக்கும் திப்புவுக்கும் இடையே போர் தொடங்கியது.
இப்போரின் போக்கை மூன்று கட்டங்களாகக் காணலாம். முதலாவதாக , சென்னை ஆளுநர் மேடோஸ் மைசூர்மீது படையெடுத்தார். திப்புவின் விரைவான முன்னேற்றம் ஆங்கிலேயத் துருப்புக்களை திணறடித்தது. பெரும் இழப்புகளையும் ஏற்படுத்தியது. 1790 ல் காரன்வாலிஸ் தாமே படைத்தலைமையை ஏற்றார். இது இரண்டாம் கட்டப் போராகும். வேலூரிலிருந்து புறப்பட்ட காரன்வாலிஸ் 1791 மார்ச் திங்களில் பெங்களூரைக் கைப்பற்றினார். ஆனால் , திப்புவின் திறமையான போர்த் திட்டங்களால் போர் நீடித்தது. போதிய தளவாடங்கள் இல்லாமையால் காரன்வாலிஸ் மங்களூருக்கு பின்வாங்க நேரிட்டது.
போரின் மூன்றாம் கட்டமாக , தக்க தருணத்தில் மராட்டியர் அனுப்பிய உதவிகளால் , காரன்வாலிஸ் மீண்டும் போரைத் தொடங்கி தமது படைகளுடன் ஸ்ரீரங்கபட்டணத்தை நோக்கி முன்னேறினார். ஆனால் இப்போது நிலைமை திப்புவுக்கு சாதகமாக இல்லை. ஆங்கிலேயப் படைகள் விரைந்து முன்னேறி ஸ்ரீரங்கப் பட்டணத்திற்கருகிலிருந்த மலைக்கோட்டைகளைக் கைப்பற்றின. 1792 பிப்ரவரியில் திப்புவின் தலைநகரமும் கைப்பற்றப்பட்டது. அதேயாண்டில் திப்பு பிரிட்டிஷாருடன் ஸ்ரீரங்கப்பட்டணம் உடன்படிக்கையை செய்துகொண்டார். உடன்படிக்கையின் விவரம் : 1. திப்பு தனது ஆட்சிப் பகுதியில்
பாதியை பிரிட்டிஷாருக்கு விட்டுக் கொடுத்தார். 2. போர் இழப்பீடாக திப்பு மூன்று கோடி ரூபாய் கொடுப்பது என்றும் அதுவரை தனது இருபுதல்வர்களை பிணையாக ஆங்கிலேயரிடம் விட்டுவைப்பது என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது. 3. இருதரப்பினரும் போர்க்கைதிகளை விடுவிக்க ஒப்புக் கொண்டனர். தென்னிந்திய வரலாற்றில் ஸ்ரீரங்கப்பட்டணம் உடன்படிக்கை ஒரு முக்கிய நிகழ்ச்சியாகும். மலபார் கடற்கரையில் பிரிட்டிஷார் ஒரு பரந்த நிலப்பரப்பை இதன்மூலம் பெற்றனர். மேலும் , பாரமகால் மாவட்டத்தையும் திண்டுக்கல் பகுதியையும் பிரிட்டிஷார் பெற்றனர். இந்த
போருக்குப்பின் மைசூரின் புகழ் மங்கியது என்றாலும் முற்றிலும் அழிந்துவிடவில்லை எனலாம். திப்பு தோற்கடிக்கப்பட்டாரே தவிர , முற்றிலும் அழிக்கப் படவில்லை. சீர்திருத்தங்கள் காரன்வாலிஸ் மேற்கொண்ட உள்நாட்டு சீர்திருத்தங்களை மூன்று பிரிவுகளாக அறிந்து கொள்ளலாம். 1. ஆட்சித்துறை சீர்திருத்தங்கள். 2. வருவாய் சீர்திருத்தங்கள் அல்லது நிலையான நிலவரித்திட்டம் ( இப்பகுதி 7 ஆம் பாடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது ) 3. நீதித் துறை மற்றும் பிற சீர்திருத்தங்கள். ஆட்சித் துறை சீர்திருத்தங்கள் திறமையான மற்றும் நேர்மையான பணியாளர்களை
நியமித்து ஆட்சிப் பணித்துறையை செம்மைப்படுத்தியதே காரன்வாலிஸ் மேற்கொண்ட சீர்திருத்தங்களில் முதன்மையானதாகும். சிக்கனம் , எளிமை , தூய்மை ஆகியவற்றை அவர் தனது நோக்கங்களாகக் கொண்டிருந்தார். வணிகக்குழுவில் பணியாற்றிய ஊழியர்களுக்கு சொற்ப ஊதியமே வழங்கப்பட்டு வந்தது. ஆனால் , அவர்கள் வருவாய்க்குமேல் பெருமளவு தரகுப் பணத்தைப் பெற்று வந்தனர். மேலும் , தடை செய்யப்பட்டிருந்த அதிக வருமானமுள்ள தனிப்பட்ட வாணிகத்திலும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயரில் ஈடுபட்டு வந்தனர். ஆட்சித் துறையை தூய்மைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட
காரன்வாலிஸ் , குறைந்த ஊதியம் மற்றும் அதிக ஈட்டுப்படிகள் என்ற வழக்கத்தை ஒழித்தார். வணிகக்குழு ஊழியர்களுக்கு நிறைவான ஊதியம் வழங்கும்படி இயக்குநர் குழுவிடம் கேட்டுக்கொண்டார். இதன்மூலம் , ஊழல் மிகுந்த வணிக முறைகளைக் களையமுடியும் என்று எடுத்துரைத்தார். மேலும் , தகுதியின் அடிப்படையிலேயே நியமனங்கள் செய்யப்படவேண்டும் என்ற கொள்கையையும் காரன் வாலிஸ் தொடங்கி வைத்தார். இவ்வாறு இந்திய ஆட்சிப் பணித்துறைக்கு அவர் அடித்தளம் அமைத்தார். செலவினங்களைக் குறைப்பதற்காக , பல்வேறு அதிகப்படியான பணியிடங்களை ரத்து செய்தார். வணிகம் ,
நீதி , வருவாய் ஆகிய மூன்று துறைகளின் செயல்பாடுகளை தனித்தனியே பிரித்து ஒரு புதிய வகை ஆட்சியமைப்பை அறிமுகப்படுத்தினார். ஆட்சியமைப்பின் அச்சாணிகளாக இருந்த கலெக்டர்களிடமிருந்து நீதித்துறை அதிகாரங்கள் பறிக்கப்பட்டன. அவர்கள் வருவாய்த்துறையில் , வரிவசூலிக்கும் பணியை மட்டும் கவனித்து வந்தனர். மாவட்ட நீதித் துறையை சீரமைக்கும் பணியில் , நீதிபதியும் சிறந்த அறிஞருமான சர் வில்லியம் ஜோன்ஸ் என்பவரின் சேவைகளை காரன் வாலிஸ் பெரிதும் பயன்படுத்திக் கொண்டார். உரிமையியல் , குற்றவியல் நீதிமன்றங்கள் முழுவதுமாக சீரமைக்கப்பட்டன.
நீதித் துறையின் மேல்மட்டத்தில் , சதர் திவானி அதாலத் என்ற உரிமையியல் நீதிமன்றமும் , சதர் நிசாமத் அதலத் என்ற குற்றவியல் நீதிமன்றமும் கல்கத்தாவில் செயல்பட்டு வந்தன. இவ்விரு நீதிமன்றங்களும் தலைமை ஆளுநர் அவரது ஆலோசனைக் குழுவின் தலைமையில் இயங்கின. கல்கத்தா , டாக்கா , மூர்ஷிதாபாத் , பாட்னா ஆகிய நகரங்களில் நான்கு மாகாண மேல் முறையீட்டு நீதிமன்றங்கள் இருந்தன. இவை ஒவ்வொன்றிலும் மூன்று ஐரோப்பிய நீதிபதிகள் இந்திய ஆலோசனையாளர்களின் உதவியுடன் செயல்பட்டனர். மாவட்டந்தோறும் ஒரு நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட மற்றும் நகர
நீதிமன்றங்கள் ஒவ்வொன்றும் ஒரு ஐரோப்பிய நீதிபதியின் கட்டுப்பாட்டில் இயங்கியது. ஏற்கனவே குறிப்பிட்டபடி , மாவட்ட ஆட்சியர்கள் நீதித்துறை பணியிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தனர். எனவே , புதிதாக மாவட்ட நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். நீதித் துறையின் கீழ்மட்டத்தில் இருந்த அனைத்து நீதிமன்றங்களிலும் இந்திய நீதிபதிகள் அல்லது முன்சீப்கள் நியமிக்கப்பட்டனர். குற்றவியல் வழக்குகளைப் பொறுத்தவரை இஸ்லாமிய சட்டம் மேம்படுத்தப்பட்டு பின்பற்றப்பட்டது. உரிமையியல் வழக்குகளில் , வழக்கு தொடர்புடையவர்கள் சமயத்தின் அடிப்படையில் இந்து
மற்றும் இஸ்லாமிய சட்டங்கள் பின்பற்றப்பட்டன. இந்து முஸ்லீம்ஆகியோருக்கிடையிலான வழக்குகளில் நீதிபதியின் முடிவே இறுதியானது. கருணை உள்ளம் கொண்ட காரன்வாலிஸ் , காட்டுமிராண்டித்தனமான தண்டனைகளை வெறுத்தார். உறுப்புகளை சிதைத்தல் , துன்புறுத்தி விசாரித்தல் போன்ற நடைமுறைகளை அவர் ஒழித்தார். காரன்வாலிஸ் ஆட்சித்துறையைவிட சட்டவியலில் அதிக அக்கறை செலுத்தினார். தனது சக பணியாளரான ஜார்ஜ் பார்லோ என்பவரின் உதவியுடன் , ஒரு முழுமையான சட்டத்தொகுப்பை காரன்வாலிஸ் உருவாக்கினார். ஆட்சித்துறையின் பிரிவுகளான , நீதி , காவல் , வாணிகம் ,
செலவினங்கள் போன்ற அனைத்து நடைமுறைகளையும் இது உள்ளடக்கியிருந்தது. 18 ம் நூற்றாண்டில் மேலை நாடுகளில் புகழ்பெற்றிருந்த மான்டெஸ்கியூ என்பவரின் அதிகாரப் பகிர்வு கோட்பாட்டை ( இச்சட்டத் தொகுப்பு ) அடிப்படையாகக் கொண்டு விளங்கியது. காவல்துறை சீர்திருத்தங்கள் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் செம்மையாக நடைமுறைப் படுத்துவதற்கு காவல்துறையின் சீரமைப்பும் தேவையாக இருந்தது. மாவட்ட நீதிபதியின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருந்தது. ஒவ்வொரு மாவட்டமும் சுமார் 20 மைல் பரப்பளவு கொண்ட ‘ தாணா ' ( காவல் சரகம் ) என்ற
பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு ‘ தாணா ’ பிரிவும் ‘ தரோகா ’ எனப்பட்ட இந்திய அதிகாரியின் கட்டுப்பாட்டில் விடப்பட்டன. அவருக்கு உதவியாக பல காவலர்கள் நியமிக்கப்பட்டனர். இருப்பினும் காவல் துறை திறமையானதாக இல்லை. மார்ஷ்மேன் என்பவரது கூற்றுப்படி தரோகா வரம்பற்ற அதிகாரத்தைப் பெற்றிருந்ததோடு நாட்டில் நிலவிய கொடுமைகளுக்கும் காரணமாக இருந்தார். பிற சீர்திருத்தங்கள் - வணிகக் குழுவின் வாணிப முதலீடுகளை நிர்வகித்து வந்த வணிக வாரியத்தை காரன்வாலிஸ் சீரமைத்தார். சார்லஸ் கிராண்ட் என்பவரின் உதவியோடு அதில் நிலவிய எண்ணற்ற
முறைகேடுகளையும் ஊழல் நடவடிக்கைகளையும் அவர் ஒழித்தார். இந்திய தொழிலாளர்களுக்கும் நெசவாளிகளுக்கும் நியாயமான சலுகைகளை வழங்கினார். நேர்மையான பணியாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தினார். காரன்வாலிஸ் குறித்த மதிப்பீடு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த காரன்வாலிஸ் நாட்டுப்பற்று மிக்கவராகத் திகழ்ந்தார். தனது கடமைகளை அச்சமின்றி நிறைவேற்றினார். கடமையும் தியாகமும் அவரது மூச்சாக விளங்கியது. திப்புவின் வளர்ச்சி அஞ்சும் நிலைக்கு சென்றபோது , தலையிடாக் கொள்கையை கைவிட்டு துணிச்சலுடன் அதனை எதிர்கொண்டார். ஒரு ஆட்சியாளராக ,
வணிகக்குழுவின் ஆட்சியை இந்தியாவில் நிலைப்படுத்தினார். தூய்மையான , திறமையான நிர்வாகத்திற்கு அடித்தளம் வகுத்தார். அவர் கொண்டுவந்த நிலையான நிலவரித் திட்டத்தில் குறைகள் இருந்தபோதிலும் , ஆட்சித் துறை , நீதித்துறை சீர்திருத்தங்களில் தமது முத்திரையை காரன் வாலிஸ் பதித்துவிட்டுச் சென்றார். தற்கால இந்திய ஆட்சிப் பணியின் தந்தை என்று அவரைக் கருதலாம். காரன்வாலிசை தொடர்ந்து சர் ஜான் ஷோர் ( 1793 98 ) தலைமை ஆளுநராக பதவி வகித்தார். இவரது ஆட்சிக்காலத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் ஏதும் இல்லை எனலாம். கற்றல் அடைவுகள் இந்த
பாடத்தில மாணவர்கள் அறிந்தவை : 1. மூன்றாம் மைசூர் போருக்கான காரணங்கள் , போரின் போக்கு மற்றும் விளைவுகள். காரன்வாலிஸ் கொண்டு வந்த ஆட்சித்துறை மாற்றங்கள். நீதித்துறை சீர்திருத்தங்களும் அதன் சிறப்பும் தரோகா என்பவர் ஒரு வருவாய் அதிகாரி. மூன்றாம் ஆங்கிலேய - மைசூர் போர் ஹைதர் அலி மறைந்தபிறகு நடைபெற்றது. V. பின்வருவனவற்றை சரியா , தவறா என்று கூறுக. துணையுடன் உடன்படிக்கையை 1. மங்களூர் உடன்படிக்கை ஆங்கிலேயரின் பலவீனத்தை வெளிப்படுத்தியது. 2. காரன்வாலிஸ் பிரபு ஆட்சிக்காலத்தில் குற்றவியல் வழக்குகளில் இந்து சட்டம்
பின்பற்றப்பட்டது. சிறு குறிப்பு வரைக. ( ஏதேனும் மூன்று குறிப்புகள் ) காரன்வாலிஸ் பிரபுவின் காவல்துறை சீர்திருத்தங்கள். குறுகிய விடை தருக. ( 100 வார்த்தைகள் ) மூன்றாம் மைசூர் போருக்கான காரணங்களை விவாதிக்க. VI. 1. ஸ்ரீரங்கபட்டிணம் உடன்படிக்கை. 2. VII. 1. 2. காரன்வாலிஸ் பிரபுவின் நீதித்துறை சீர்திருத்தங்களை எழுதுக. VIII. விரிவான விடை தருக. ( 200 வார்த்தைகள் ) 1. காரன்வாலிஸ் பிரபுவின் சீர்திருத்தங்களை மதிப்பிடுக. 2. ‘ காரன்வாலிஸ் பிரபுவின் வாழ்க்கை கடமையும் தியாகமும் நிறைந்தது ’ – கருத்துரைக்க. Page 24 of 284
பாடம் - 3 வெல்லெஸ்லி பிரபு ( 1798-1805 ) கற்றல் நோக்கங்கள் மாணவர்கள் பின்வரும் கருத்துக்களை அறிந்துகொள்ளச் செய்தல். 1. வெல்லெஸ்ஸி பிரபு இந்தியாவுக்கு வந்தபோது காணப்பட்ட அரசியல் நிலைமை. 2. துணைப்படைத் திட்டத்தின் பொருள் 3. துணைப்படைத் திட்டத்தின் நிறை , குறைகள் 4. இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட இந்திய அரசுகள் 5. நான்காம் மைசூர் போரும் திப்பு சுல்தானின் வீழ்ச்சியும் 6. மராட்டியருடனான போர் 7. வெல்லெஸ்லி பிரபு பற்றிய மதிப்பீடு வெல்லெஸ்லி பிரபு ரிச்சர்ட் கோலி வெல்லெஸ்லி தலைமை ஆளுநராக நியமிக்கப்பட்டது
பிரிட்டிஷ் இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகும். பேரரசுக் கொள்கையுடைய அவர் தம்மை ‘ வங்கப்புலி ’ என்று கூறிக்கொண்டார். அவர் ஆதிக்கக் கொள்கையைப் பின்பற்றி , ‘ இந்தியாவில் பிரிட்டிஷ் அரசு ’ என்பதற்குப்பதில் ' பிரிட்டிஷ் இந்தியப் பேரரசு ’ ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற தீர்மானத்துடனேயே இந்தியாவுக்கு வந்தார். தனது குறிக்கோளை எட்டுவதற்கு அவர் பின்பற்றிய திட்டம் ‘ துணைப்படைத் திட்டம் ' என்று அழைக்கப்படுகிறது. வெல்லெஸ்லி பதவியேற்றபோது இந்திய அரசியல் நிலைமை வடமேற்கு இந்தியாவில் எந்நேரமும் சாமன் ஷா படையெடுக்கலாம்
என்ற செய்தி பிரிட்டிஷ் இந்திய அரசுக்கு அச்சத்தை கொடுத்தது. இந்தியாவின் வடக்கிலும் , மத்தியிலும் மராட்டியர்கள் வலிமையான அரசியல் சக்தியாக விளங்கினர். ஹைதராபாத் நிசாம் தனது படைகளுக்கு பயிற்சியளிப்பதற்கு பிரெஞ்சுக்காரர்களை நியமித்தார். கர்நாடகப் பகுதியில் குழப்பம் நீடித்தது. பிரிட்டிஷாருக்கு , திப்பு சுல்தான் சமரசத்துக்கு உடன்படாத எதிரியாகவே தென்பட்டார். காரன்வாலிஸ் பிரபுவுக்குப்பிறகு தலைமை ஆளுநராக பொறுப்பு வகித்த சர் ஜான் ஷோர் ஆட்சிக் காலத்தில் அவர் பின்பற்றிய தலையிடாக் கொள்கையால் இந்தியாவில் அரசியல் குழப்பமே
எஞ்சியது. இதனால் , ஆங்கிலேயரின் புகழ் பாதிக்கப்பட்டது. அவரது தலையிடாக் கொள்கை பிரிட்டிஷாருக்கு எதிரான உணர்வுகள் பெருகவும் காரணமாயிற்று. மேலும் , நெப்போலியனின் கீழைப்படையெடுப்பு குறித்த செய்திகள் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு அச்சத்தை கொடுத்தது. இத்தகைய பின்னணியில் தான் வெல்லெஸ்லி தமது கொள்கையை வகுத்தார். பிரிட்டிஷ் புகழைத் தக்கவைப்பது , இந்தியாவில் பிரெஞ்சு ஆதிக்கம் குறித்த அச்சத்தை அகற்றுவது ஆகிய இரண்டுமே அவரது முக்கிய குறிக்கோள்களாக இருந்தன. இந்திய அரசுகளில் நிலவிய கொடுங்கோன்மை மற்றும் ஊழலைக் களைவதற்கு
இந்தியாவில் ஒரு வலிமைமிக்க பிரிட்டிஷ் ஆட்சியை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று அவர் கருதினார். ஆகவே , தலையிடாக் கொள்கையைக் கைவிட்டு , ‘ துணைப்படைத்திட்டம் ’ என்ற தமது குறிக்கோள் நிறைந்த திட்டத்தை அவர் வகுத்தார். துணைப்படைத் திட்டம் வெல்லெஸ்லிக்கு முந்தைய ஆட்சியாளர்கள்கூட அயோத்தி நவாப் , ஹைதராபாத் நிசாம் போன்ற இந்திய அரசர்களுடன் ஒப்பந்தங்களை செய்து கொண்டனர். இந்திய அரசுகளை பாதுகாப்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் படைகளுக்கு ஆகும் செலவினங்களை ஈடுகட்ட அந்தந்த ஆட்சியாளர்களிடமிருந்து
உதவித்தொகையையும் அவர்கள் பெற்றனர். இவ்வாறு ஏற்கனவே நடைமுறையிலிருந்த வழக்கத்தை வெல்லெஸ்லி தமது திட்டமாக விரிவுபடுத்தினார். இருப்பினும் , அத்திட்டத்தை நடைமுறைப் படுத்தியதில்தான் அவரது தனித்தன்மை வெளிப்பட்டது. துணைப்படை திட்டத்தின் சிறப்புக் கூறுகள் 1. பிரிட்டிஷாருடன் துணைப்படை ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்பும் இந்திய அரசர் தனது ஆட்சிப்பகுதியில் பிரிட்டிஷ் படையை வைத்து பராமரிக்க வேண்டும். இப்படைக்கு பிரிட்டிஷ் அதிகாரி தலைமை வகிப்பார். அத்தகைய இந்திய அரசு ‘ பாதுகாக்கப்பட்ட அரசு ’ என்று அழைக்கப்பட்டது. பிரிட்டிஷ்
அரசு ‘ தலைமை அரசு ’ என்று குறிக்கப்படும். அயல் நாட்டு ஆக்கிரமிப்பு மற்றும் உள்நாட்டு அமைதி ஆகியவற்றை பாதுகாப்பது பிரிட்டிஷாரின் கடமையாகும். படைகளுக்கு ஆகும் செலவினை சரிகட்ட ‘ பாதுகாக்கப்பட்ட அரசு ’ ஒரு தொகை அல்லது ஒரு நிலப்பகுதியை பிரிட்டிஷாருக்கு கொடுக்க வேண்டும். 2. பாதுகாக்கப்பட்ட அரசு ஆங்கிலேயர் தவிர வேறு ஐரோப்பிய அரசுகளுடனான உறவுகளைத் துண்டிக்க வேண்டும். குறிப்பாக பிரஞ்சுக்காரர்களுடன் உறவு முற்றிலும் தடை செய்யப்பட்டது. மேலும் , பிரிட்டிஷாரின் அனுமதியின்றி பாதுகாக்கப்பட்ட அரசு வேறு இந்திய அரசுகளுடனும்
அரசியல் தொடர்பு வைக்கவும் தடை விதிக்கப்பட்டது. 3. பாதுகாக்கப்பட்ட அரசின் ஆட்சியாளர் தனது படைகளைக் கலைப்பதுடன் , ஒரு பிரிட்டிஷ் தூதுவரையும் தனது அரசவையில் வைத்துக்கொள்ள வேண்டும். தலைமை அரசின் அனுமதியின்றி அவர் ஐரோப்பியர்களை பணியில் அமர்த்தக்கூடாது. 4. பாதுகாக்கப்பட்ட அரசின் உள்விவகாரங்களில் தலைமை அரசு தலையிடக்கூடாது. பிரிட்டிஷாருக்கு ஏற்பட்ட நன்மைகள் பிரிட்டிஷ் பேரரசுக் கொள்கையின் திறமைமிக்க செயல்களில் ஒன்றாக வெல்லெஸ்லியின் துணைப்படைத் திட்டம் கருதப்படுகிறது. பாதுகாக்கப்பட்ட அரசுகளின் செலவில் வணிகக்குழு
இந்தியாவில் தனது படை வலிமையை பெருக்கிக்கொண்டது. வணிகக் குழுவின் ஆட்சிப் பகுதிகளில் போர்க்கால அழிவுகள் ஏற்படாமல் இத்திட்டம் பாதுகாத்தது. இதனால் , இந்தியாவில் பிரிட்டிஷாரின் ஆட்சி நன்கு நிலைப்படுத்தப்பட்டது. இந்தியாவிற்குள்ளிருந்த மற்றும் அயல்நாட்டு பகைவர்களுக்கு எதிராக பிரிட்டிஷ் ஆட்சி மேலும் வலிமையடைந்தது. இத்திட்டத்தின்கீழ் பிரிட்டிஷ் ஆட்சி மேலும் எளிமையாக விரிவடைந்தது. வெல்லெஸ்லி பிரபுவின் இத்தகைய அரசியல் வெல்திறனால் பிரிட்டிஷார் இந்தியாவின் தலைமையிடத்தைப் பிடித்தனர். துணைப்படைத்திட்டத்தின் குறைகள்
இந்தியப் பகுதிகளில் பிரிட்டிஷ் துணைப்படையை நிறுத்திவிட்டு , இந்திய அரசர்கள் தங்களது படைகளைக் கலைத்து வீரர்களை வீட்டுக்கு அனுப்பியதால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. வேலையிழந்த வீரர்கள் கொள்ளையில் ஈடுபட்டதால் ஏற்கனவே பிண்டாரிகளின் தொல்லைக்குட்பட்டிருந்த மத்திய இந்தியா பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் , துணைப்படைத்திட்டம் பாதுகாக்கப்பட்ட அரசுகளின் ஆட்சியாளர்களிடையே பொறுப்பின்மையை ஏற்படுத்தியது. அயல்நாட்டு அச்சம் , உள்நாட்டு கலகம் ஆகியவற்றிலிருந்து அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதால் தங்களது ஆட்சி
பொறுப்புகளை அவர்கள் அலட்சியம் செய்தனர். உல்லாச வாழ்க்கையில் நாட்டம் செலுத்த ஆரம்பித்தனர். இதனால் , முறைகேடான நிர்வாகம் தோன்றியது. காலப்போக்கில் இத்ததைய அரசுகளின் நிலவிய முறைகேடான ஆட்சியினால் , பிரிட்டிஷாரே அவற்றை இணைத்துக் கொள்ளவும் வழிவகுத்தது. இவ்வாறு , துணைப்படைத்திட்டம் நாடுகளை இணைப்பதற்கு அடிகோலியது. மேலும் , பாதுகாக்கப்பட்ட அரசுகளிடமிருந்து பிரிட்டிஷார் அதிகபட்ச உதவித்தொகையை வாங்கியதால் பொருளாதாரமும் வெகுவாக பாதித்தது. துணைப்படைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் ஹைதராபாத் வெல்லெஸ்லி வகுத்த
துணைப்படைத்திட்டம் 1798 ல் முதன்முதலில் ஹைதராபாத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த ஆண்டு செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை தற்காலிகமானதாகும். அதன்படி துணைப்படை நிர்வாகத்துக்காக ஆண்டுக்கு லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. ஹைதராபாத்திலிருந்த பிரஞ்சுப்படைகள் முழுவதும் வெளியேற்றப்பட்டன. அதற்கு பதில் பிரிட்டிஷாரின் துணைப்படை நிறுத்திவைக்கப்பட்டது. 1800 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட புதிய உடன்படிக்கைப்படி நிசாம் பெரும் நிலப்பகுதியை பிரிட்டிஷாருக்கு விட்டுக் கொடுத்தார். இப்பகுதி ‘ கொடை மாவட்டங்கள் ’ எனப்படும். அயோத்தி
24 ஆப்கானிய சாமன் ஷாவின் படையெடுப்பு அச்சத்தை காரணமாகக் காட்டி வெல்லெஸ்லி அயோத்தி நவாப் மீது துணைப்படை ஒப்பந்தத்தை திணித்தார். இதன்படி , நவாப் செல்வ வளமிக்க பகுதிகளான ரோகில் கண்ட் , கீழ் தோ ஆப் , கோரக்பூர் போன்றவற்றை பிரிட்டிஷாருக்கு வழங்கினார். அயோத்தி தலைநகரில் நிறுத்தப்பட்டிருந்த பிரிட்டிஷ் துருப்புக்களின் எண்ணிக்கை உயர்ந்துவிட்டது. நவாப்பின் படையில் வீரர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டது. அயோத்தியில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க விதிமுறைகளை ஏற்படுத்தும் பொறுப்பையும் பிரிட்டிஷாரே மேற்கொண்டனர். இதனால் ,
அயோத்தியின் உள்விவகாரங்களிலும் அவர்கள் தலையிடும் உரிமையைப் பெற்றனர். வணிகர் குழுவிற்கு வளமிக்க நிலப்பகுதிகள் கிடைக்க வழிசெய்த போதிலும் , வெல்லெஸ்லியின் வரம்புமீறிய இந்த நடிவடிக்கை கடுமையாக விமர்சிக்கப்பட்டது. தஞ்சாவூர் , சூரத் , கர்நாடகம் தஞ்சாவூர் , சூரத் , கர்நாடகம் ஆகிய பகுதிகளின் ஆட்சியாளர்களோடு உடன்படிக்கை செய்துகொண்டு அந்த அரசுகளின் நிர்வாகத்தை வெல்லெஸ்லி தாமே எடுத்துக்கொண்டார். தஞ்சையை ஆண்ட மராட்டியருக்கிடையே வாரிசுரிமைச் சிக்கல் நிலவியது. 1799 ல் தஞ்சை அரசர் சரபோஜியுடன் வெல்லெஸ்லி உடன்படிக்கை செய்து
கொண்டார். இதன்படி ஆட்சிப் பொறுப்பை பிரிட்டிஷாரே ஏற்றனர். சரபோஜி , ' ராஜா ' என்ற பட்டத்தை தக்க வைத்துக் கொண்டதுடன் ஆண்டுக்கு நான்கு லட்ச ரூபாய் ஒய்வூதியமும் பெற்றார். ராஜா சரபோஜி பண்பு நலனும் ஒழுக்கமும் நிரம்பியவர். சுவார்ட்ஸ் என்ற அறிஞரின் சீடர். தஞ்சையில் இவர் ஏற்படுத்திய சரஸ்வதி மகால் நூலகத்தில் பல அரிய புத்தகங்களும் கையேடுகளும் உள்ளன. இவர் கலை மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கு பெரிதும் உதவினார். 1759 ஆம் ஆண்டிலேயே சூரத் பிரிட்டிஷாரின் காப்பரசாக மாறியது. 1799 ல் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நகரத்தின் நவாப்
மறைந்தார். அவரது சகோதரர் ஆட்சிக்கு வந்தார். இத்தருணத்தை நன்கு பயன்படுத்திக்கொண்ட வெல்லெஸ்லி சூரத்தின் ஆட்சிப் பொறுப்பை தாமே ஏற்றார். நவாப்பிற்கு பட்டத்தை சூட்டிகொள்ளும் உரிமையும் , ஆண்டுக்கு ஒரு லட்சரூபாய் ஓய்வூதியமும் வழங்கப்பட்டது. இரட்டையாட்சியின் கர்நாடகத்தில் வாழ்ந்த மக்கள் நீண்டகாலமாகவே கொடுமையை அனுபவித்து வந்தனர். நவாப் உமாதத் - உல் - உமாரா திறமையற்றவராகவும் செலவாளியாகவும் இருந்தமையால் முறைகேடான ஆட்சி ஏற்பட வழிவகுத்தது. 1801 ஆம் ஆண்டு அவர் மறைந்தார். அவரது மகன் அலி உசேன் நவாப் பதவியை ஏற்றார்.
ஓய்வூதியம் பெற்றுக்கொண்டு ஆட்சியை ஆங்கிலேயரிடம் ஒப்படைக்குமாறு வெல்லெஸ்லி அவரிடம் கூறினார். அதற்கு , நவாப் மறுக்கவே , 1801 ஆம் ஆண்டு மறைந்த நவாப்பின் ஒன்றுவிட்ட மகனான ஆசிம் உத் தௌலாவுடன் வெல்லெஸ்லி ஒரு உடன்படிக்கை செய்துகொண்டார். இதன்படி கர்நாடகத்தின் ராணுவ மற்றும் சிவில் ஆட்சி முழுவதும் பிரிட்டிஷாரின் கைக்கு வந்தது. நான்காவது ஆங்கிலேய - மைசூர் போர் ( 1799 ) நான்காம் மைசூர் போருக்கு வழிவகுத்த சூழ்நிலைகளை பின்வருமாறு தொகுத்துக் கூறலாம். பிரிட்டிஷாரிடம் அடைந்த படுதோல்விக்கும் , தன்மீது திணிக்கப்பட்ட
நிபந்தனைகளுக்கும் பழிவாங்குவதற்கான தருணத்தை திப்புசுல்தான் எதிர்நோக்கி இருந்தார். மேலும் , மைசூரை ஒரு வலிமைவாய்ந்த அரசாக மாற்றவும் அவர் தீர்மானித்தார். பிரிட்டிஷ் பேரரசுக்கு எதிராகப் போரிட பல்வேறு உதவிகளை திப்பு நாடினார். பிரான்சு , அரேபியா , துருக்கி போன்ற நாடுகளின் உதவியைப் பெற முயற்சிகள் மேற்கொண்டார். 1798 ஜூலையில் பிரஞ்சு புரட்சி அரசாங்கத்துடன் அவர் தொடர்பு கொண்டார். ஸ்ரீரங்கப்பட்டணத்தில் ஜாகோபியின் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. பிரெஞ்சு குடியரசின் கொடியும் அங்கு பறக்கவிடப்பட்டது. சுதந்திர மரம் நடப்பட்டது.
பின்னர் , நெப்போலியன் ஆட்சிக்கு வந்தபிறகு , அவரிடமிருந்து நட்புக்கடிதம் ஒன்றையும் திப்பு பெற்றார். ( அப்போது நெப்போலியன் எகிப்தின் மீது படையெடுத்திருந்தார் ). இத்தருணத்தில்தான் வெல்லெஸ்லி பிரபு கல்கத்தாவை அடைந்தார். வரும்போதே நெப்போலியப் படையெடுப்பு குறித்த அச்சம் அவருக்கு இருந்தது. எனவே , மைசூருக்கு எதிராகப் போரிடுவது என அவர் தீர்மானித்தார். இதற்காக 1790 ஆம் ஆண்டு முக்கூட்டிணைவை மீண்டும் புதுப்பிக்க அவர் முயற்சியெடுத்து மராட்டியருடன் தொடர்பு கொண்டார். அவரது யோசனையை மராட்டியர் ஏற்கவில்லை. இருப்பினும் நடுநிலை
வகிப்பதாக உறுதியளித்தனர். இதற்கிடையில் , ஹைதராபாத் நிசாமுடன் துணைப் படை ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டு அங்கிருந்த பிரஞ்சுப்படை விலக்கப்பட்டது. வெல்லெஸ்லி திப்பு சுல்தானுடனும் துணைப்படை ஒப்பந்தம் செய்துகொள்ள விழைந்தார். பிரஞ்சுக்காரர்களை விரட்டும்படியும் , ஆங்கிலத் தூதரை ஏற்கும்படியும் வணிகக் குழுவுடனும் அதன் கூட்டாளிகளுடனும் இணக்கமாக செல்லும்படியும் கோரி வெல்லெஸ்லி திப்புவுக்கு கடிதங்கள் எழுதினார். இவற்றை திப்பு அலட்சியப்படுத்தியதால் நான்காம் மைசூர் போர் தொடங்கியது. இப்போர் குறுகிய காலமே நடைபெற்றது.
ஆங்கிலேயரின் திட்டப்படி பம்பாய் ராணுவம் தளபதி ஸ்டூவர்ட் தலைமையில் மேற்கிலிருந்து மைசூரைத் தாக்கியது. தலைமை ஆளுநரின் சகோதரர் , ஆர்தர் வெல்லெஸ்லியின் சென்னைப் படைகள் திப்புவை அவரது தலைநகர் ஸ்ரீரங்கப்பட்டணத்திற்கே பின்வாங்கும்படி செய்தது. படுகாயம் அடைந்த நிலையிலும் திப்பு இறுதிவரை போரிட்டார். ஸ்ரீரங்கப்பட்டணம் கைப்பற்றப்பட்டது. திப்பு சுட்டுக் கொல்லப்பட்டார். போருக்குப்பின் மைசூர் திப்பு சுல்தானின் வீழ்ச்சிக்குப் பிறகு , மைசூர் வெல்லெஸ்லியின் காலடியில் கிடந்தது. மைசூர் அரசின் மையப் பகுதியில் மீண்டும் இந்து அரசை
அவர் ஏற்படுத்தினார். மூன்றாம் கிருஷ்ணராஜா என்ற ஐந்து வயது சிறுவன் மன்னராக முடி சூட்டப்பட்டான். சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மைசூர் தலைநகராகியது. முந்தைய அமைச்சரான பூரணய்யா திவானாக நியமிக்கப்பட்டார். மைசூர் அரசின் எஞ்சிய பகுதிகளை பிரிட்டிஷாரும் நிசாமும் பங்கிட்டுக் கொண்டனர். கனரா , வையநாடு , கோயம்புதூர் , தர்மபுரி , ஸ்ரீரங்கப்பட்டணம் ஆகியவற்றை பிரிட்டிஷார் தம்வசமே வைத்துக்கொண்டனர். கூட்டியை சுற்றியிருந்த பகுதிகள் , சித்தூரின் ஒரு பகுதி , சித்தலதுர்க்கா மாவட்டங்கள் ஆகியவை நிசாமுக்கு கொடுக்கப்பட்டன.
மைசூரில் ஆங்கிலேய தூதுவர் ஒருவர் நியமிக்கப்பட்டார். திப்புவின் குடும்பத்தினர் வேலூர் கோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வெல்லெஸ்லியும் மராட்டியர்களும் துணைப்படைத் திட்டத்திற்கு உட்படாத ஒரே பகுதி மராட்டியமாகும். மராட்டியர்களின் தலைவராக நானாபட்னாவிஸ் திறம்பட செயல்பட்டார். பிரிட்டிஷாரின் ஆதிக்கத்தில் சிக்காமல் மராட்டிய அரசை சுதந்திரமாக வைத்திருக்க அவர் பாடுபட்டார். திப்புவுக்கு எதிராக காரன் வாலிசுக்கு உதவியதால் , மைசூரிலிருந்து பெரும் நிலப்பகுதிகள் அவருக்கு கிடைத்தன. 1800 ஆம் ஆண்டு நானா பட்னாவிஸ் மறைந்தது
மராட்டியருக்கு பேரிழப்பாகும். பேஷ்வா இரண்டாம் பாஜிராவ் , கல்விமானாகவும் தோற்றப் பொலிவுடனும் இருந்தபோதிலும் , அவரிடம் அரசியல் அறிவு குறைவாகவே காணப்பட்டது. மராட்டிய தலைவர்களுக்கிடையே காணப்பட்ட உட்பூசல் அழிவுக்கே இட்டுச் சென்றது. ஜஸ்வந்த் ராவ் ஹோல்கரும் , தௌலத்ராவ் சிந்தியாவும் ஒருவருக்கொருவர் சச்சரவிட்டுக் கொண்டனர். பேஷ்வா , ஹோல்கருக்கெதிராக சிந்தியாவை ஆதரித்தமையால் , ஹோல்கர் பேஷ்வாமீது பீதியடைந்த பேஷ்வா இரண்டாம் பாஜிராவ் பசீன் என்ற இடத்துக்கு தப்பியோடினார். 1802 ல் அவர் பசீன் உடன்படிக்கையில் கையெழுத்திட்டார்.
இது ஒரு துணைப்படை ஒப்பந்தமாகும். இதன்படி , பேஷ்வா மீண்டும் மராட்டிய அரசின் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டார். இது பெயரளவுக்கே என்ற போதிலும் , பசீன் உடன்படிக்கை வெல்லெஸ்லியின் துணைப்படைத் திட்டத்தின் மணிமகுடமாக கருதப்படுகிறது. ஏனெனில் , இவ்வுடன்படிக்கைப்படி மராட்டியரின் அயலுறவுக் கொள்கை பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. இதனால் , மராட்டியத் தலைவர்கள் பிரிட்டிஷாருக்கு எதிராக செயல்படுவது தவிர்க்கப்பட்டது. எனவேதான் மராட்டியர்கள் இந்த உடன்படிக்கையை அடிமை சாசனம் என்று குறிப்பிட்டனர். பசீன்
உடன்படிக்கையின் உடனடி விளைவாக , பிரிட்டிஷ் படைகள் ஆர்தர் வெல்லெஸ்லி தலைமையின் கீழ் பூனாவிற்கு சென்று அங்கு பேஷ்வாவை மீண்டும் பதவியில் அமர்த்தியது. ஹோல்கர் பூனாவிலிருந்து தப்பியோடினார். இரண்டாம் மராட்டியப் போர் ( 1803 – 1805 ) தௌலத்ராவ் சிந்தியாவும் , இரகூஜி பான்ஸ்லேயும் பசீன் உடன்படிக்கையை மராட்டியரின் தேசத்திற்கு ஏற்பட்ட இழுக்காக கருதினர். இவ்விரு தலைவர்களின் படைகளும் ஒன்றிணைந்து நர்மதை ஆற்றைக் கடந்து வந்தன. 1803 ஆகஸ்டில் வெல்லெஸ்லி மராட்டியருக்கெதிராக போர் அறிவிப்பு செய்தார். 1803 ஆகஸ்டில் அகமது நகரை
கைப்பற்றிய ஆர்தர் வெல்லெஸ்லி , மராட்டியக் கூட்டுப்படைகளை அவுரங்காபாத்துக்கு அருகிலுள்ள அசே என்ற இடத்தில் முறியடித்தார். பின்னர் , மராட்டிய தேசத்துக்குள் நுழைந்த ஆர்தர் வெல்லெஸ்லியின் படைகள் போன்ஸ்லேயை அரகான் சமவெளியில் தோற்கடித்தன. இதன் விளைவாக , வெல்லெஸ்லி போன்ஸ்லேயுடன் தியோகன் உடன்படிக்கையை செய்துகொண்டார். இதுவும் துணைப்படை ஒப்பந்தமாகும். இதன்படி ஒரிசாவின் கட்டாக் மாகாணம் பிரிட்டிஷாருக்கு கிடைத்தது. ஒரு சிந்தியாவுக்கு எதிராக பிரிட்டிஷ் படைத்தளபதி லேக் மேற்கொண்ட படையெடுப்பு பிரமிக்கத் தக்கதாகும். வரலாற்றுப்
புகழ்வாய்ந்த டெல்லி நகருக்குள் நுழைந்த லேக். அங்கிருந்த முகலாயப் பேரரசர் ஷா ஆலத்தை பிரிட்டிஷாரின் பாதுகாப்பில் கொண்டு வந்தார். பரத்பூர் அரசருடன் பேச்சுவார்த்தை நடத்திய லேக் ஆக்ராவை ஆக்ரமித்துக் கொண்டார். இந்த படையெடுப்பில் ஆயிரக்கணக்கான மராட்டிய வீரர்கள் கொல்லப்பட்டனர். சிந்தியா பிரிட்டிஷாருடன் துணைப்படை ஒப்பந்தம் செய்து கொண்டார். இது சுர்ஜி - அர்ஜுன்கான் உடன்படிக்கை எனப்படும். சிந்தியாவின் பகைவர் என்பதால் , ஹோல்கர் இப்போரில் மராட்டியரை ஆதரிக்காமல் தனிமை காத்தார். வெல்லெஸ்லி ஒப்பந்தம் செய்யத் தூண்டியபோது
பெரும் கோரிக்கைகளை ஹோல்கர் முன்வைத்தார். இதனால் , வெல்லெஸ்லி அவர்மீது போர் தொடுத்தார். இப்படையெடுப்பு நன்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும் ஆங்கிலேய தளபதிகளின் சில தவறுகளால் ஹோல்கரை வெல்லத் தவறினார். வெல்லெஸ்லி பற்றிய மதிப்பீடு ஆதிக்கக் கொள்கையை பின்பற்றிய வெல்லெஸ்லி நாடுகளை வென்று இணைப்பதிலேயே குறியாக செயல்பட்டார். பேரரசுக்கு அடிகோலிய மாமனிதர்களில் வெல்லெஸ்லியும் ஒருவர். இந்தியாவில் பிரிட்டிஷ் பேரரசு என்பதை பிரிட்டிஷ் இந்தியப் பேரரசு என்று மாற்றிய பெருமை அவரையே சாரும். இந்தியாவில் பிரிட்டிஷ் தலைமையை
ஏற்படுத்தியதே அவரது முக்கியச் சாதனையாகும். இந்திய அரசுகளின் பலவீனத்தை கண்டறிந்து தனது அரசியல் நுட்பத்தை ( துணைப்படைத் திட்டம் ) அவர் நன்கு பயன்படுத்தினார். கர்நாடகம் , தஞ்சாவூர் அரசுகளை இணைத்தமையால் சென்னை மாகாணம் உருவாக அவர் வழிவகுத்தார். சென்னை மாகாணத்தையும் ஆக்ரா மாகாணத்தையும் உருவாக்கியவர் என்று இவரை அழைக்கலாம். இத்தகைய வழிகளில் , இந்திய துணைக் கண்டத்தின் பெரும்பகுதி வணிகக்குழுவின் பாதுகாப்பின்கீழ் கொண்டு வரப்பட்டது. " வாணிப கழகமாக இருந்த கிழக்கிந்திய வணிகக் குழுவை ஒரு பேரரசு சக்தியாக இவர் மாற்றினார் ".
அடுத்த தலைமை ஆளுநராக சர் ஜார்ஜ் பார்லோ ( 1805 1807 ) இரண்டு ஆண்டுகள் பதவி வகித்தார். இவரது ஆட்சியின் போதுதான் 1806 ஆண்டு வேலூர் சிப்பாய் கலகம் நடைபெற்றது. அடுத்து மின்டோ பிரபு ( 1807 1813 ) தலைமை ஆளுநரானார். இவர் 1809 ல் பஞ்சாப் அரசர் ரஞ்சித் சிங்குடன் உடன்படிக்கையை செய்து கொண்டார். 1813 ஆம் ஆண்டு பட்டயச் சட்டமும் இக்காலத்திலேயே நிறைவேற்றப்பட்டது. கற்றல் அடைவுகள் இந்த பாடத்தை கற்றதனால் மாணவர்கள் அறிந்து கொண்டவை : 1. வெல்லெஸ்லி பதவியேற்றபோது இந்திய அரசியல் நிலைமை பிரிட்டிஷாருக்கு சாதகமாக இல்லை. 2. இந்திய
அரசுகளை பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு வெல்லெஸ்லி பயன்படுத்திய துணைப் படைத்திட்டம் என்ற நடைமுறை. 3. இத்திட்டத்தில் இந்திய அரசுகள் கொண்டு வரப்பட்ட விதம். 4. பிற்காலத்தில் அவை நிரந்தரமாகவே பிரிட்டிஷ் பேரரசில் இணைக்கப் படுவதற்கான சூழ்நிலைகள். 5. நான்காவது மைசூர் போரின் முடிவில் திப்பு சுல்தானின் வீழ்ச்சியால் இந்தியாவில் பிரிட்டிஷ் விரிவாக்கத்துக்கு இருந்த பெரும் தடை நீங்கியது. 6. மராட்டிய கூட்டிணைவின் பலவீனத்தை இரண்டாம் மராட்டியப் போர் வெளிப்படுத்தியது. இதனால் பிரிட்டிஷார் பெற்ற நன்மைகள். இந்தியத்
துணைக் கண்டத்தில் வணிகக்குழுவை சக்தியாக வெல்லெஸ்லி மாற்றினார். பேரரசு I. சரியான விடையைத் தேர்வு செய்க. 1. 1798 ல் வெல்லெஸ்லி பிரபுவின் துணைப்படைத் திட்டத்தின்கீழ் கொண்டு வரப்பட்ட முதல் நாடு அ. அயோத்தி இ. சூரத் கோடிட்ட இடத்தை நிரப்புக. நான்காம் மைசூர் போர் நடைபெற்ற ஆண்டு சிந்தியா பிரிட்டிஷாருடன் செய்துகொண்ட துணைப்படைத் திட்ட உடன்படிக்கையின் பெயர் மராட்டியர் 2. சரபோஜி கர்நாடகம் 3. மைசூர் 4. ஈ. தஞ்சாவூர் IV. சரியான சொற்றொடரை கண்டறிக. ஒரு சொற்றொடர் மட்டுமே சரியானது அ. 1798 ல் வெல்லெஸ்லியின் துணைப்படைத்
திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட முதல் சுதேச அரசு தஞ்சாவூர் ஆகும். வெல்லெஸ்லி 1789 ஆம் ஆண்டு மூவர் கூட்டணியை புதுப்பிக்க முயற்சி செய்தார். 1802 ஆம் ஆண்டு இரண்டாம் பேஷ்வா பாஜிராவ் ஆங்கிலேயருடன் பசீன் உடன் படிக்கையில் கையெழுத்திட்டார். சிந்தியா பிரிட்டிஷாருடன் தேவகான் உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். பின்வருவனவற்றை சரியா , தவறா என்று கூறுக. சர் ஜான் ஷோர் வெல்லெஸ்லி பிரபுவுக்குப்பின் பதவிக்கு வந்தார். 1802 ல் இரண்டாம் பாஜிராவ் பசீன் உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். நான்காம் மைசூர் போருக்குப்பிறகு , திப்புவின்
குடும்பம் வேலூர் கோட்டைக்கு அனுப்பப்பட்டது. VI. சிறு குறிப்பு எழுதுக. ( ஏதேனும் மூன்று குறிப்புகள் ) 1. துணைப்படைத் திட்டத்தின் குறைகள் 2. பசீன் உடன்படிக்கை VII. குறுகிய விடை தருக. ( 100 வார்த்தைகள் ) 1. துணைப்படைத்திட்டத்தின் முக்கிய கூறுகளை குறிப்பிடுக. 2. நான்காம் மைசூர் போருக்கு வழிவகுத்த நிகழ்ச்சிகளை விவாதிக்க. VIII. விரிவான விடை தருக. ( 200 வார்த்தைகள் ) 1. வெல்லெஸ்லி பிரபுவின் துணைப்படைத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டதை ஆய்க. 2. வெல்லெஸ்லி பிரபுவின் சாதனைகளை மதிப்பிடுக. பாடம் – 4 ஹேஸ்டிங்ஸ் பிரபு (
1813 – 1823 ) கற்றல் நோக்கங்கள் மாணவர் இப்பாடத்தைப் படிப்பதன்மூலம் அறிந்து கொள்வது 1. ஹேஸ்டிங்ஸ் பிரபு பதவியேற்றபோது இந்தியாவின் நிலைமை. 2. கூர்க்கா அரசான , நேபாளத்துடன் நடைபெற்ற போர். 3. பிண்டாரிகள் யார் என்பதும் அவர்கள் ஒடுக்கப்பட்டதும். 4. மூன்றாவதும் இறுதியுமான மராட்டியப் போர். 5. பிரிட்டிஷாரிடம் மராட்டியர் தோற்றதற்கான காரணங்கள். 6. ஹேஸ்டிங்ஸ் பிரபு மேற்கொண்ட சீர்திருத்தங்கள். 7. ஹேஸ்டிங்ஸ் பிரபு பற்றிய மதிப்பிடு 1813 ஆம் ஆண்டு ஹேஸ்டிங்ஸ் பிரபு தலைமை ஆளுநராகப் பதவியேற்றார். ஆதிக்கக் கொள்கையை தீவிரமாக
பின்பற்றிய அவர் பல போர்களில் ஈடுபட்டார். அவரது தீவிர மற்றும் பேரரசுக் கொள்கைகள் பிரிட்டிஷ் பேரரசின் விரிவாக்கத்திற்கு வித்திட்டன. முதன்மையானதாக உண்மையில் மாற்றியவர் இவரேயாகும். இந்தியாவில் பிரிட்டிஷ் அரசை ஹேஸ்டிங்ஸ் பதவியேற்றபோது இந்தியாவின் நிலைமை பிரிட்டிஷ் ஆட்சிக்கு பெரும் அச்சத்தை அளிப்பதாகவே இருந்தது. மத்திய இந்தியாவில் குழப்பம் நீடித்தது. பிண்டாரிகள் அப்பகுதியை கொள்ளையடித்த வண்ணம் இருந்தனர். மராட்டியரால் அவர்களை ஒடுக்க முடியவில்லை. மராட்டிய தலைவர்களுக்குள் உட்பூசல்கள் தொடர்ந்தன. இருப்பினும் , அவர்கள்
பிரிட்டிஷாரை இந்தியாவைவிட்டு விரட்டுவதிலேயே குறியாக இருந்தனர். பேஷ்வா பிரிட்டிஷாருக்கு எதிரான சதிகளில் ஈடுபட்டார். கூர்க்காக்களின் ஆக்ரமிப்பு ஹேஸ்டிங்சுக்கு கவலையளிப்பதாக இருந்தது. எனவே , பிண்டாரிகளை ஒடுக்கி அமைதியை நிலை நாட்டவும் , மராட்டியருடனும் கூர்க்காக்களுடனும் போரிட்டு பிரிட்டிஷ் அரசுக்கு இருந்த அச்சத்தைப் போக்கவும் அவர் உறுதி பூண்டார். ஹேஸ்டிங்ஸ் பிரபு கூர்க்காவினருக்கு எதிரான போர் ( 1814 – 1816 ) 1768 ல் நேபாளம் ஒரு வலிமை மிக்க கூர்க்கா அரசாக எழுச்சி பெற்றது. இந்தியாவின் வடக்கிலிருந்த நேபாளம் சீனாவை
வடக்கிலும் வங்காளத்தை கிழக்கிலும் அயோத்தியை மேற்கிலும் எல்லைகளாகக் கொண்டிருந்தது. 1801 ஆம் ஆண்டு அயோத்தி நவாப்பிடமிருந்து கோரக்பூர் , பாஸ்தி மாவட்டங்களை பிரிட்டிஷார் பெற்றனர். இதனால் , பிரிட்டிஷ் ஆட்சியின் எல்லை நேபாளம் வரை விரிவடைந்தது. பிரிட்டிஷ் ஆட்சிப் பகுதியில் கூர்க்காக்கள் மேற்கொண்ட ஆக்கிரமிப்புகள் போருக்கு இட்டுச் சென்றது. 1814 ஆம் ஆண்டு மே மாதம் , கூர்க்காக்கள் பிரிட்டிஷ் காவல் நிலையத்தை தாக்கி அங்கிருந்த அதிகாரியையும் 18 காவலர்களையும் கொன்றனர். எனவே , ஹேஸ்டிங்ஸ் நேபாளத்தின்மீது போர் தொடுத்தார்.

Tamil Public Domain Books (Tamil)

The dataset comprises over 30 school textbooks and certain TNPSC (Tamil Nadu Public Service Commission) materials in Tamil medium, presumed to be in the public domain.

Downloads last month
0
Edit dataset card