url
stringlengths
70
142
headline
stringlengths
32
105
subheadline
stringlengths
32
409
text
stringlengths
942
16.7k
https://www.vikatan.com/spiritual/temples/worlds-tallest-murugan-statue-to-be-opened-in-tamil-nadu
மலேசிய முருகனைவிட பிரமாண்டமாக தமிழகத்தில் தயாராகும் முருகன்..!
முருகனுக்காக அமைக்கப்பட்டிருக்கும் மிக உயரமான சிலை என்கிற பெருமையை விரைவில் மலேசிய முருகன் கோயில் இழக்க இருக்கிறது. வெகுவிரைவில், அந்தப் புகழ் தமிழகத்துக்குச் சொந்தமாக இருக்கிறது.
தமிழ் நிலத்துக்கே உரிய வழிபாடு, முருகன் வழிபாடு. முருகனைப் பற்றி குறிப்பிடும்போதும் 'தமிழ்க் கடவுள்' என்றே சொல்கின்றனர். தமிழர்கள் உலகமெங்கும் பரவி வாழ்கிறார்கள். அவ்வாறு அவர்கள் குடியேறியிருக்கும் இடங்களிலெல்லாம் முருகனுக்கு கோயில்கள் கட்டி வழிபடுகின்றனர். பல்வேறு நாடுகளிலும் முருகக் கடவுளுக்கு கோயில்கள் இருந்தாலும் மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் அமைந்திருக்கும் பத்துமலைக் குகைக் கோயில் மிகவும் பிரபலமானது. இயற்கையாக உருவான சுண்ணாம்புக் குகைக்குள் அமைந்திருக்கும் இந்தக் கோயிலின் நுழைவுவாயிலில் அமைக்கப்பட்டிருக்கும் 140 அடி உயர பிரமாண்ட முருகன் சிலைதான், இதன் புகழுக்குக் காரணம். இந்த பிரமாண்ட முருகனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் மலேசியாவிற்குச் செல்கின்றனர். ஆனால், முருகனுக்காக அமைக்கப்பட்டிருக்கும் மிக உயரமான சிலை என்கிற பெருமையை மலேசிய முருகன் கோயிலிடமிருந்து தமிழகம் பற்றிக்கொள்ள இருக்கிறது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, முருகக் கடவுளுக்கு 146 அடி உயரத்தில் சிலை அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்துவருகிறது. சேலம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் இருக்கிறது, புத்திரகவுண்டம்பாளையம் கிராமம். இங்குதான், தனிநபர் ஒருவரின் முயற்சியால் 146 அடி உயர பிரமாண்ட முருகப் பெருமான் திருமேனி தயாராகிவருகிறது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், கோலாலம்பூரில் 140 அடி உயர சிலை அமைத்த அதே திருவாரூர் தியாகராஜன் ஸ்தபதி தான், இந்த புத்திரகவுண்டம்பாளையம் முருகன் சிலையையும் செய்துவருகிறார். முருகனின் சிலை மட்டும் 126 அடி. பீடத்துடன் சேர்த்து 146 அடி உயரம் இருக்கும் என்கிறார் ஸ்தபதி. “மலேசியா நாட்டில் கோலாலம்பூர், பத்துமலை குகைக்கோயில் நுழைவுவாயிலில் வைக்க, தம்புசாமி என்பவருக்குக் கடந்த 2006-ம் ஆண்டு 140 அடி உயரத்தில் முருகன் சிலை அமைத்துக்கொடுத்தேன். இதுவே முருகனுக்கு அமைக்கப்பட்ட உலகின் உயர்ந்த சிலையாக இதுவரை இருந்துவருகிறது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துநடராஜன் என்பவர், முருகன் சிலையை அமைக்கவேண்டி என்னைத் தொடர்புகொண்டார். அவர் விருப்பப்படி மலேசியா, பத்துமலை முருகன் சிலையை விடவும் 6 அடி உயரம்கூட்டி, 146 அடி உயரத்தில் சிலை அமைத்து வருகிறோம். இந்தப் பணியில் 22 சிற்பிகள், 10 உதவியாளர்கள், எனக்குத் துணையாக இருந்துவருகிறார்கள். மலேசியாவில் வடிக்கப்பட்ட சிலையில், முருகன் வலதுகையால் வேல் பிடித்ததுபோல காட்சி தருகிறார். இங்கு, புத்திரகவுண்டம்பாளையத்தில் வடித்துவரும் சிலையில், முருகப்பெருமான் வலது கையால் ஆசீர்வாதம் செய்வதுபோன்றும், இடது கையால் வேலைத் தாங்கியபடி சிரித்த முகத்துடன் மணிமகுடம் சூடி காட்சிதருவதைப்போன்று அமைத்துவருகிறோம். தற்போது, முருகனுக்கு ஆடை மற்றும் அணிகலன்களை அமைக்கும் நுண்ணிய வேலைப்பாடுகளைச் செய்துவருகிறோம். இந்தச் சிலை அமைக்கும் பணி முடிவடையும்போது, உலக அளவில் முருகனுக்கு அமைக்கப்பட்ட மிகப்பெரிய சிலையாக இது இருக்கும்” என்றார் ஸ்தபதி. புத்திரகவுண்டம்பாளையத்தில் முருகன் சிலையை அமைக்க முயற்சி எடுத்தவர், முத்து நடராஜர். தீவிர முருக பக்தரான இவர், திருப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கையில், தான் உருவாக்க விரும்பிய முருகனைத் தரிசிக்கும் முன்னரே இயற்கை எய்திவிட்டார். அவரது குடும்பத்தினர்தான் தற்போது கோயில் அமைக்கும் பணியைச் செய்துவருகிறார்கள். “என் அப்பா தீவிர முருக பக்தர். அவருக்கு 78 வயதிருக்கும்போது, 2015-ம் ஆண்டு புத்திரகவுண்டம்பாளையம் அருகே நிலம் வாங்கி 2 ஏக்கர் பரப்பளவில் முருகன் சிலை அமைக்க முடிவுசெய்தார். முருகப் பெருமானின் பரம பக்தரான தந்தை, 'முருகப் பெருமானுக்கு மிகப்பெரிய சிலை அமைக்க வேண்டும்' என்று விரும்பினார். அவரது விருப்பப்படிதான் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருக்கும் பத்துமலை முருகன் சிலையைவிடவும் உயரமாக இந்தச் சிலையை எழுப்பத் திட்டமிட்டோம். அதன்படி திருவாரூர் ஸ்தபதி தியாகராஜனைத் தொடர்புகொண்டு, சிலை அமைக்கும் பணியைத் தொடங்கினோம். கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி பூமி பூஜை போடப்பட்டது. தந்தைதான் சிலை அமைக்கும் பணியைக் கவனித்துவந்தார். இந்த நிலையில், அவர் கடந்த ஆண்டு உடல் நலக்குறைவாலும் வயோதிகத்தாலும் இறந்துவிட்டார். தான் அமைக்கும் முருகன் சிலையைக் காண்பதற்கு முன்பே முருகன் அவர்மீது விருப்பம் கொண்டு அழைத்துக்கொண்டார். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக, நான் இப்போது இந்தப் பணிகளைக் கவனித்துவருகிறேன். தந்தையின் விருப்பப்படி, 2020-ம் ஆண்டு பங்குனி உத்திரத்துக்கு முன்பு, குடமுழுக்கு நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்தச் சிலை அமைக்கும் பணி முடிந்த பிறகு, அறுபடை முருகன் சிலைகளையும் இங்கு மக்கள் தரிசிக்கும் வகையில் கோயில் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். அப்போதுதான் தந்தையின் ஆன்மா சாந்தியடையும்” என்றார்.
https://www.vikatan.com/literature/international-2nd-tamil-music-conference-in-malaysia
உலகத் தமிழிசை மாநாடு: 'இசையால் தன்னை உணர்ந்தான் புத்தன், இசையால் தன்னை அழித்தான் ஒளரங்கசீப்!
இவ்விழாவில், இந்தியா, ஃபிரான்ஸ், மலேசியா, மொரீசியஸ், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் தமிழ் இசைக்கு அருந்தொண்டாற்றி வரும் 9 பேராளர்களுக்கு தமிழ் இசை விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.
கடந்த 19.03.2023 அன்று, மலேசியா நாட்டின் பேரா மாநிலம் ஈப்போ நகரில் உள்ள ரிவர் பிரண்ட் நட்சத்திர விடுதி கூட்ட அரங்கில், ஈப்போ முத்தமிழ் பாவலர் மன்றமும், ஈப்போ வெற்றித் தமிழர் இயக்கமும் இணைந்து நடத்திய, இரண்டாவது உலகத் தமிழிசை மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டின் சிறப்பு விருந்தினர்களாக மலேசியா நாட்டின் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவக்குமார், மலேசியா தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவுத் துறை துணை அமைச்சர் சரஸ்வதி உள்ளிட்டோருடன், ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் மற்றும் மல்லைத் தமிழ்ச்சங்கத் தலைவராக இருக்கும் நானும் பங்கேற்று வாழ்த்தி உரையாற்றினோம். இவ்விழாவில் இந்தியா, ஃபிரான்ஸ், மலேசியா, மொரீசியஸ், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் தமிழ் இசைக்கு அருந்தொட்டாற்றி வரும் 9 பேராளர்கள் தமிழ் இசை விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர். மலேசியா பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு, இசை குறித்து கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்கள் 20 பேரை தேர்வு செய்து, ரொக்கப் பரிசும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இம்மாநாட்டில் பெருந்திரளானோர் பங்கேற்றனர். மாநாட்டின் வரவேற்புக் குழு தலைவர் - முத்தமிழ் பாவலர் மன்றத்தின் தலைவர் கவி ரத்னா டாக்டர் அருள் ஆறுமுகம், வெற்றித் தமிழ் இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் விசுவநாதன் உள்ளிட்டோர், இம்மாநாட்டிற்கான சிறப்புப் பணிகளை மேற்கொண்டு வெற்றிகரமாக நடத்தினர். மலேசியத் திருநாட்டின் பேரா மாநிலத்தில் உள்ள ஈப்போ நகரின் ஜீவநதியாக ஓடிக்கொண்டிருக்கும் பேரா நதியின் கிளை நதியான லிம்பா கிண்ட என்னும் கிந்தா நதிக்கரையில் அமைந்திருக்கிறது, ரிவர் ஃப்ரன்ட் நட்சத்திர விடுதி. இங்கு நடைபெற்ற இரண்டாவது தமிழ் இசை மாநாடு, செறிவான விழாவாக அமைந்தது. உலக அளவில் நைல் நதி நாகரிகம், சிந்து நதி நாகரிகம், கங்கை நதி நாகரிகம், காவிரி நதி நாகரிகம் என்று நாகரிகங்கள் நதிக்கரையில்தான் தோன்றியிருக்கின்றன. அதைப் போன்றதொரு நாகரிக நகரம்தான், இந்த ஈப்போ நகர். இங்கு கிந்தா நதி, இரண்டு ஓடைகளாகப் பிரிந்து கிந்தா, கம்பார், கோலாநிஸ் சார், பேராக் தெங்ஙா ஆகிய நான்கு மாவட்டங்களின் வழியாக 100 கிலோ மீட்டர் தூரம், கிளேடாங் மலைத்தொடருக்கு இடையில் பாய்ந்தோடுகிறது.காவிரி ஆறு குடகுமலையில் உருவாகி, பகுத்தறிவு பகலவன், வெண்தாடி வேந்தர் தந்தை பெரியார் பிறந்த பூமிக்கு வருகின்றபோது, இரண்டு ஓடைகளாகப் பிரிந்து சென்று மீண்டும் இணையும் காவிரி, ஈரோடையாக பிரிந்த இடம் ஈரோடை. அது ஈரோடாக மாறியது. அதைப்போன்றோ என்னவோ கிந்த நதி இரண்டாகப் பிரிந்து ஓடியதால் ஈப்போ என்று வந்திருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.கிந்த நதியோரம் வாழ்ந்த ஒராய் அஸ்லி பழங்குடி மக்களின் பூர்விகம் இந்த பூமி. அதற்கு தம்பூன் பாறை ஓவியம் சாட்சியாக இருக்கிறது. உலக ஈயத்தின் தலைநகரம்தான் இந்த ஈப்போ பட்டினம். உலகத்தின் ஈயத் தேவையில் 31% இங்கிருந்துதான் ஏற்றுமதி செய்யப்பட்டது. அதன் மூலமாக மலேசியா பொருளாதாரத்தில் தொழில் வளர்ச்சியில் முன்னேறியது. அந்த வளர்ச்சிக்குக் காரணமாக இருந்த ஈப்போ நகரில் தமிழ் இசைமாநாடு நடைபெறுகிறது.தற்காப்புக் கலைஞனாக அறியப்பட்ட நான், கடந்தாண்டு ஏப்ரல் மாதம் இதே நகரில், மாஸ்டர் ஆனந்தன் அவர்களின் பயிற்சி கூடத்திற்கு எங்கள் குழுவினருடன் வந்து பயிற்சி பெற்று திரும்பினேன். இப்போது இங்கு இசை மாநாடு! இந்த மாநாடு குறித்து, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் நடந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்து, பல்லவர்களின் துறைமுகப் பட்டிணமான திருக்கடல்மல்லை என்னும் மாமல்லபுரத்திற்கு வந்தார்கள். மல்லைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் மாமல்லா நட்சத்திர கடற்கரை விடுதியில் வரவேற்று பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசுகள் வழங்கி விருந்து படைத்து மாமல்லபுரத்தை சுற்றிக்காட்டிவிட்டு, தமிழ் இசை மாநாடு சிறக்க கடல் சங்கை கொடுத்து வாழ்த்தி அனுப்பினோம்.சங்கு மட்டும்தான் சுட சுட வெளுக்கும். அந்த சங்கை வைத்துதான் பரமாத்மா கண்ணன் மகாபாரதப் போரை முடித்தார். அவர் கையில் இருக்கும் சங்கின் பெயர் பாஞ்சஜன்யம். விஷ்ணு கையில் இருக்கும் இந்த சங்கை ஊதும் போதெல்லாம் மழை பெய்யும் என்பது நம்பிக்கை. அந்த சங்கு மனித வாழ்வில் இரண்டறக் கலந்து இன்றியமையாததாகி விட்டது. தமிழன் சங்கம் வைத்து தமிழ் வளர்த்தான் என்பார்கள். அவன் கண்டது முதல் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்றால், தமிழர்களின் வாழ்வியலோடு சங்கும் இன்றியமையாததாக மாறிவிடுகிறது.குழந்தை பிறந்தவுடன் பால் சங்கில் பாலை ஊத்தி புகட்டுவார்கள். அது முதல். வாழ்வில் மணமேடையில் சங்கு பயன்படுத்தப்படுவது இடைச்சங்கம். இறந்தவுடன் சங்கை ஊதி முடித்து வைப்பது, கடைசி சங்கு; கடைச்சங்கம் என்பர். ஆக அந்த சங்கை இரண்டாம் தமிழ் இசை மாநாட்டிற்கு கொடுத்து அனுப்பினோம். நாதஸ்வர இசைக் கச்சேரி போட்டியில் வெற்றி பெற்றவர்களை தேர்வு செய்ய, என்னைப் போன்ற தற்காப்பு கலைஞரை அழைத்து, சிறந்த கலைஞனை தேர்வு செய்ய சொன்னபோது, பொறுப்பு கூடியது. போட்டியின் முடிவு என்ன? யார் சிறந்த கலைஞர்கள்? கலைஞர்களும் பார்வையாளர்களும் நடுவரின் தீர்ப்புக்காகக் காத்திருந்தனர். நாதஸ்வரமா, தவிலா, மிருதங்கம்மா, மத்தளமா, வாய்ப்பாட்டுக் கலைஞரா... பரிசுக்குரியவர் யார் என்று ஆவலோடு காத்திருந்தபோது, தற்காப்புக் கலை மாஸ்டர், ஒத்தூதியவர்தான் முதல் பரிசுக்குரியவர் என்று அறிவித்தபோது, அனைவரின் புருவங்களும் உயர்ந்தன. ’ஏன்?’ என்ற கேள்வி அனைவரிடமும் இருந்தது. இறுதியாக வழக்கு ’நீதிமன்றத்திற்குப்’ போனது. ஒவ்வொரு கலைஞரும் தன் திறமை குறித்து எடுத்துச் சொன்னார்கள், அனைத்தையும் பதிவு செய்து கொண்ட ’நீதிபதிகள்’, கச்சேரி நடுவரான மாஸ்டரை அழைத்து, உங்கள் தேர்வுக்கான காரணம் என்ன சொல்லுங்கள் என்று கேட்டனர். அப்போது மாஸ்டர் சொன்னார்... இங்கே வாதிட்ட இசைக்கலைஞர்கள் அனைவரும் நன்றாகவே வாசித்தார்கள், குறை ஏதுமில்லை. ஆனால் ஒத்து ஊதிய நாதஸ்வரக் கலைஞர் மட்டும், போட்டியின் துவக்கத்தில் நாதஸ்வரத்தில் வைத்த வாயை, மேளங்கள் முழங்கிய போதும், நாதஸ்வரங்கள் ஊதிய போதும், வாணர்கள் பாடிய போதும், வாயை எடுக்காமல் இடைவிடாமல் போட்டி முடியும் வரை, ஓய்வெடுக்காமல் ஊதினார். எனவே என் பார்வையில் முதலிடத்திற்கு உரியவர் என்றார். உலகம் என்பது ஒரு நாடக மேடை, அதில் வாழும் நாம் அனைவரும் நடிகர்கள். மனித குலத்தை மகிழ்ச்சியுடனும், குதுகலத்துடனும் வாழச் செய்வது இசைதான். அந்த இசை நான்கு வகையாகப் பிரிக்கப்படுகிறது. * காற்று கருவி * தோல் கருவி* நரம்புக் கருவி * கஞ்சக்கருவிகாற்று கருவிகள்: சங்கு, கொம்பு, புல்லாங்குழல், மகுடி, நாதஸ்வரம், கொக்கரை, துத்தரி, தாரை, ஆர்மோனியம் போன்றவை.தோல் கருவிகள்: பறை, முரசு, குடமுழா, தப்பு, உடுக்கை, உருமி, தவில், மிருதங்கம், பம்பை, நகரா, துடி, மத்தளம், முழவு, தண்ணுமை என்று வகைப்படுத்தப்படுகிறது.நரம்புக் கருவிகள்: யாழ், வீணை, வயலின், கித்தார், தம்புரா என்று வகைப்படுத்தப்படுகிறது.கஞ்சக் கருவிகள்: தாளம், செகண்டி, சிலம்பு, மணி, ஜால்ரா என்று வகைப்படுத்தப்படுகிறது. குழல் மூங்கில் காடுகளில், வண்டுகளால் துளைத்த துவாரத்திலிருந்து வெளிப்பட்ட காற்று, ஓசையுடன் வந்ததை ஆய்வு செய்து, அதைக் கொண்டு ஏழு துளையிட்டு குழல் இசை வந்தது. மூங்கில் புல்லினத்தை சார்ந்தது என்பதால் புல்லால் ஆன குழல் புல்லாங்குழல் ஆனது.யாழின் வகைகள் பேரியாழ், மகரயாழ், சகடையாழ், செங்கோட்டுயாழ், சீரியாழ், மருத்துவயாழ். யாழை மீட்டி பாடுபவர்கள் பாணர்கள் என்று அழைக்கப்படுவர். அதுதான் தமிழ் ஈழத் தாயகத்தின் தலைநகரின் யாழ் மீட்டிய பாணர்கள் வாழ்ந்ததால் யாழ்ப்பாணம் என்றானது.இதன் உண்மைத்தன்மை குறித்து தமிழீழத் தேசிய கவிஞர், உலகம் போற்றும் உணர்ச்சிக் கவிஞர் அண்ணன் காசி ஆனந்தன் அவர்களிடம் நான் கேட்டபோது, அவர் அதை ஆமோதித்துடன் கூடுதலாக ஒரு சுவாரஸ்யமான செய்தியும் சொன்னார். `தம்பி, மட்டக்களப்பில் உள்ள உப்புநீர் ஆற்றை மீன் பாடும் தேனாறு என்று அழைப்பார்கள். இந்த ஆற்றில் வாழும் மீன்கள் யாழிசையை கேட்டுக் கேட்டு அதை உள்வாங்கி யாழ் இசை போன்றே ஒலி எழுப்பும். அதை ஆங்கிலத்தில் ’சிங்கிங் ஃபிஷ்’ என்று அழைப்பார்கள். பல நாடுகளில் இருந்து வந்து அதை ஆராய்ச்சி செய்து உண்மைத்தன்மையை அறிவித்திருக்கிறார்கள்' என்றார். பறவைகள் இசை எழுப்புவதைக் கேட்டு இருக்கின்றோம். ஆனால் தமிழ் ஈழத்தில் மீன் இசை ஒலி எழுப்பும் என்ற செய்தியை என்னிடம் பரிமாறிக் கொண்டார். இலங்கையை ஆண்ட சிவபக்தன், சகல வரங்களும் பெற்றவன், தன் மக்களுக்கு எந்தவித குறையும் இன்றி நல்லாட்சி புரிந்து வந்தவன், இசைஞானி, மாவீரன் இராவணன். அவன் கொற்றக்கொடையில் வீணை சின்னம் பொறிக்கப்பட்டு இருக்கும். சிவனின் அருள் கிடைப்பதற்காக தன் உடலில் உள்ள நரம்புகளை எடுத்து வீணையில் பொருத்தி, வாசித்து பக்திப்பேறு பெற்றான் என்பது புராணம். ஆக, கல்விக்கடவுள் சரஸ்வதி கையில் வீணை, நாரதர் கையில் வீணை என்று வீணையின் சிறப்புகள் சென்று கொண்டிருக்கிறது.இசைப்பாலை: செம்பாலை, பகுமளிப்பாலை, செவ்வழிப் பாலை, அரும்பாலை, கோடிப் பாலை, விளரிப்பாலை, மேற்செம்பாலை என்று இசைப்பாலை உருவானது.தமிழர்கள் திசையை எட்டு என்றனர். இசையை ஏழு வகைப்படுத்தினர். சுவையை ஆறு என்றனர். நிலத்தை ஐந்து வகைப்படுத்தினர். திசையை நான்காகப் பிரித்தனர். தமிழ் இயல், இசை, நாடகம் என்று முத்தமிழ் ஆக மூன்றானது. வாழ்க்கை அகம், புறம் என்று இரண்டானது. ஒழுக்க நெறி மட்டும் ஒன்றானது. தமிழர்களின் வாழ்வியல் என்பது அரசவையில் கவிதைகள், ஆலயங்களில் கலைகள், கழனியில் தானியம், கடல் மேல் வாணிபம், களத்தில் வெற்றி... இதுதான் அவர்கள் வாழ்க்கையாக இருந்தது. தமிழ் இசையின் ஏழு சுரங்கள்... குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம். கர்னாடக இசையில்... சட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம்... இவைதான் ஏழு சுரங்களாக சரிகமபதநி என்றானது. இசை பல்லவி என்பது பதம், லயம், வின்யாசம் ஆகிய சொற்களின் முதல் எழுத்து, ப+ல+வி பல்லவி என்றானது. எந்தச் சூழலையும் மாற்றும் சக்தி இசைக்கு உண்டு. இசை என்பது நம்மை அதன்பால் இசைய வைப்பது. 'குனித்த புருவமுங் கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும்பனித்த சடையும் பவளம்போன் மேனியிற் பால்வெண்ணீறும்இனித்த முடைய வெடுத்தபொற் பாதமுங் காணப்பெற்றால்மனித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே'என்று போற்றப்படும் சிவபெருமான், எந்நாட்டவர்க்கும் இறைவனாக இருந்தாலும் தென்னாடுடைய சிவனே போற்றி என்று பாடப்படுவதின் காரணம், தமிழ் இசையால் ஈர்க்கப்பட்டதால்தான். தமிழ்நாட்டில் அவர் காட்சி கொடுத்தார். அதை திருவிளையாடல் புராணம் கூறுகிறது. தமிழ் இசையால் ஈர்க்கப்பட்ட 'சுடுகாட்டுப் பித்தன்' சிவபெருமான், சிதம்பரம் தில்லையில் தோன்றி நடராஜனாக பிரம்மனின் 32 தலைகளை மாலைகளாக அணிந்து ஆடும்போது, சிவனின் திருமுடியில் உள்ள சந்திரனிலிருந்து அமிர்தம் துளிகளாக மாலையில் உள்ள பிரம்மனின் தலை மீது விழ, அத்தலைகள் அமிர்தம் பட்டவுடன் உடலும் உயிரும் போன்று உயிர் பெற்று குரலும் இசையும் இணைந்து பாடத்துவங்கின. இதிலிருந்துதான் இசை வரலாறு தோன்றியதாக சங்கீத சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆகையால்தான் இன்றளவும் இசை பயில்பவர்களும், நாட்டியம் பயில்பவர்களும் சிதம்பரம் தில்லை நடராஜன் ஆலயத்தில் உள்ள ராஜ்யசபை ஆயிரம் கால் மண்டபத்தில் அரங்கேற்றம் செய்து வருவது வழக்கம். அந்த தில்லையில்தான் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் நிறுவனர், தமிழர்களின் நன்றிக்குரிய உயர் மரியாதைக்குரிய வேந்தர் ஐயா அண்ணாமலை அரசர் அவர்கள் தமிழ் இசைக்கு தனி இயக்கம் கண்டார் என்பது வரலாறு. அதேபோன்றுதான், காவிரியானது குடகுமலையில் உருவாகி 3 மாநிலங்கள் வழியாகப் பாய்ந்தோடி, வங்கக்கடலில் புகும் இடம் பூம்புகார் ஆனது. அந்த பூம்புகார், கடலால் அழிந்து போனது. ஆதி தமிழினத்தின் நாகரிகத்தை பறைசாற்றும் பூம்புகார்பட்டினத்தின் வரலாற்றை, சிலப்பதிகாரம் என்று தொகுத்து வழங்கினார் இளங்கோவடிகள்.சிலப்பதிகாரம் ஆண்டவனின் கதையல்ல. அற்புதங்கள் நிகழ்த்திய அவதாரப் பெருமையல்ல. கடவுள் மனித உருக்கொண்டு மண்ணுக்கு வந்த கதையல்ல. மனித மாண்புகளை விண்ணுக்கு உயர்த்திய கதை சிலப்பதிகாரம். இதை முத்தமிழ்க் காப்பியம் என்றும் குடிமக்கள் காப்பியம் என்றும் அழைப்பர். சிலம்பின் அரங்கேற்றக் காதை ஒன்று மட்டும் போதும்... தமிழின் இசை அறிவை, இசைக் கருவிகளின் வகைகளை, அரங்க அமைப்புகளை, அதன் நுணுக்கங்களை பற்றி உலகம் அறிந்து கொள்ள! யாழ்மேல் பாலை இடமுறை மெலியகுழல் மேல் கோடி வல முறை மெலியவலிவும் மெலிவும் சமனும் எல்லாம்பொழிய கோத்தனர் புலமையோன் உடன்...என்று துவங்கி குழல் வழி நின்றது யாழ்.யாழ்வழித் தண்ணுமை நின்றது தகவேதண்ணுமை பின் வழி நின்றது முழவேவேமுழவோடு கூடி நின்று இசைத்தது ஆமாந்திரிகையோடு அந்தரம் இன்றி கொட்டு இரண்டு உடையதோர் மண்டிலம்ஆகக் கட்டிய மண்டிலம் பதினொன்று என்று.’’குழல் இசையோடு கூடி யாழிசையும், யாழிசைக்கு ஏற்ப மத்தள ஒலியும் பொருந்தி வர, மத்தள ஒலிக்கு ஈடு கொடுக்கும் வண்ணம் மேளம் ஒலிக்க, மேள ஒலிக்கேற்ப ஆம் மாந்திரிகை என்னும் இடக்கை வாத்தியம் இன்னிசை கூட்டியது. இடக்கை வாத்தியத்தோடு மற்ற வாக்கியங்களின் இசையும் சுதி பேதமின்றி பருந்தும் நிழமும் போல ஒன்றாய் பொருந்தி இசைத்தாளத்திற்கு பத்தும் தீர்மானம் ஒன்றுமாக பதினொன்று பற்றிலே கூத்தினை கூத்த நூல் வழி தவறாது மாதவி ஆடினாள்’’ என்று இசை குறித்து குடிமக்கள் காப்பியமான சிலப்பதிகாரம் கூறுகிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன், மௌடிகம் கொடிய கரங்களால் மனித குலத்தை ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தபோது, மனித குல மீட்புக்காக, உலகை தன் ஞானத்தால் அளந்து, மெய்ஞானம் அடைந்த புத்தர் சொன்னார், `கடவுளைப் பற்றி கவலைப்படாதே, இல்லாத மோட்சத்தை இங்கு ஏன் தேடிக் கொண்டிருக்கின்றாய்? இதோ மனிதம் விழுந்து கிடக்கிறது. அவனைத் தூக்கி நிறுத்தச் சொல்வது மகானாகட்டும் அல்லது ரிஷியாகட்டும், எதையும் நம்பிவிடாதே. தர்க்கம் செய், விவாதி, அவற்றில் நல்லனவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு எஞ்சியதை தூக்கிக் குப்பையில் வீசு' என்றார்.புத்தரின் வாழ்வில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம்... சித்தார்த்தன் மெய்ஞானமடைந்து புத்தனாக மாற கடும் தவம் மேற்கொண்டார். அது ஒருநாள், இருநாள் அல்ல... ஆறு வருடங்கள் உருண்டோடின. உடல் மெலிந்து எலும்பும் தோலுமாக நகரக்கூட முடியாமல் தன் வயிற்றை தொட்டுப் பார்க்கின்றார். அது முதுகெலும்புடன் ஒட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால், தான் வேண்டிய புத்தொளி அவருக்குக் கிடைக்கவில்லை. கடும் தவத்தால், உடல் பசியால் வலுவிழந்து, தாகத்தால் களைப்பினால் தன்னிலை மறப்பதால் எவ்வாறு புத்தொளியைக் காண முடியும் என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில், தன் முன்னே இசைக் கலைஞர்கள் வந்தமர்ந்து இசைக்கும்போது சித்தார் இசையிலிருந்து, சரியான சுரம் வரவில்லை. அப்போது இசை ஆசிரியர், `சித்தார் இசைக்கருவியில் பொருத்தப்பட்டுள்ள நரம்பு தளர்ந்தாலோ, கூடினாலோ இசை சுரம் வேறு மாதிரியாக இருக்கும். எனவே நரம்பை சமநிலையில் வைத்து இசைத்தால் நல்ல இசை கிடைக்கும்' என்று சொன்னதைக் கேட்ட சித்தார்த்தன், ’ஓர் இசைக் கருவியிலிருந்து நல்ல இசை வர வேண்டும் என்றால் சமநிலையில் வைத்து இசைக்க வேண்டும். மெய்ஞானம் பெறும் நான் உடலையும் மனதையும் சம நிலையில் வைத்தால் தான் மெய்ஞானம் அடைய முடியும்’ என்று கடும் தவத்தை முடித்துக் கொண்டு உணவை உட்கொண்டு புத்துணர்வு பெற்றார். மீண்டும் ஓர் அரச மரத்தடியில், 40 நாள்கள் அமர்ந்து அமைதியாக தியானம் மேற்கொண்டபோது, ஒரு வைகாசி பௌர்ணமி அன்று, அவரின் உள்ளே புத்தொளி தோன்றியது. உலகப் பிரச்னைகளுக்கு காரணங்கள் இரண்டு. அவை ஆசை, துன்பம். ஆக, ஆசையே துன்பத்திற்குக் காரணம். எனவே, துன்பத்தை கலைந்து மானுடத்தை மகிழ்விப்பது என்ற அறியாமை இருள் விளக்கப்பட்டு, ஒளி என்ற அறிவு வெளிப்பட்டது. சித்தார்த்தன், புத்தரானார். அரசமரம் போதிமரம் ஆயிற்று. ஆக, புத்தர் நிலை அடைவதற்கு சித்தார் இசையும் ஒரு காரணமாக இருந்துள்ளது என்பது செவி வழிச் செய்தி. முகலாய சக்கரவர்த்தி ஔரங்கசீப், தனது தலைநகர் டெல்லி செங்கோட்டையில் இருந்து தனக்கு விருப்பமான பட்டத்து யானையின் மீது அமர்ந்து பாதுகாப்புப்படை பரிவாரங்களுடன் ஆக்ரா நோக்கிச் செல்வது வழக்கம். ஒருநாள் அதே போன்று பயணிக்கும்போது, செங்கோட்டைக்கு அருகே உள்ள ஜூம்மா மசூதி பள்ளிவாசல் அருகே பலர் கூட்டமாக ஒன்றுகூடி ஓவென்று வாய்விட்டு அழுத வண்ணம் இருப்பதைக் கண்டார். மக்களின் கண்ணீருக்குக் காரணம் என்னவென்று கேட்பதற்காக காவலரிடம் அங்கு போகச் சொல்கிறார். அங்கு அவர் கண்ட காட்சி... ஏதோ பிணத்தின் மீது போர்வையை போர்த்தி, அதன் மீது பூக்களை தூவி, அதை சுற்றி நின்று அழுது கொண்டு இருக்கின்றார்கள் அவர்கள். ஔரங்கசீப்பை பார்த்தவுடன் சலாம் சொல்கிறார்கள் மக்கள். அது என்னவென்று கேட்டபோது, கூட்டத்தின் தலைவன் பாதுஷா முன் வந்து நின்று வணங்கிச் சொன்னான், `சக்கரவர்த்தி அவர்களே! நாங்கள் அனைவரும் இசைக் கலைஞர்கள். இசைதான் எங்கள் வாழ்க்கை. மனித வாழ்க்கைக்கு அழகும் பொலிவும் அர்த்தமும் அமைதியும் ஏற்படுத்தும் இசை நிகழ்ச்சிகளுக்கு தங்கள் ஆட்சியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறும் இசைக்கலைஞர்கள் சிறைக்கு அனுப்பப்படுகின்றனர். உங்கள் ஆட்சியில் இசை செத்துவிட்டது. இதோ போர்வையால் போர்த்தப்பட்டு இருப்பது எங்களின் இசைக்கருவிகள். இசைக்கருவி இசைக்கப்படாமல் இறந்து போயின. அந்த இசைக் கருவிகளுக்குத்தான் நாங்கள் அஞ்சலி செலுத்திக்கொண்டு இருக்கின்றோம்" என்றார். அப்படி சொன்னபோது, ’`ஓ! இசை இறந்து விட்டதா? மகிழ்ச்சி. எனக்கும் கூட சற்று சந்தேகம் இருந்தது. தற்போது உண்மை நிலை அறிந்து மகிழ்ச்சி அடைகின்றேன். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இறந்து போன இசையின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் துவா செய்வோம்'’ என்று சொல்லிவிட்டு, ’`இந்த இசை மீண்டும் உயிர்பெற்று வந்துவிடாமல் இருக்க கூடுதலாக ஆழம் தோண்டி புதைத்து விடுங்கள்'’ என்று முகத்தில் புன்னகைத் தவழும் பெருமிதத்துடன் சொன்னார். கலை, இலக்கியம், ஓவியம், இசை போன்றவற்றின் மீது ஈடுபாடு காட்டாதவர் ஔரங்கசீப். கால ஓட்டத்தில் ஔரங்கசீப்கள் இறந்து, மண்ணோடு மண்ணாகிப் போனார்கள். ஆனால் இசை எங்கும் வியாபித்து இருக்கிறது. இசை மேதை பீத்தோவான், சிம்பொனி இசையை மூன்று பகுதிகளாக ஆல்பமாக வெளியிட்டார். உடல்நிலை சரியில்லாமல் செவிப்புலன் பாதிக்கப்பட்டு சிறிது சிறிதாக கேட்கும் திறன் இழந்து வருகின்றார். ஓவியம் வரைவதற்கு, சிற்பம் செதுக்குவதற்கு, கண் எவ்வாறு முக்கியமோ அதைப்போன்று இசைப்பதற்கு காது அவசியம். ஆனால் பீத்தோவன் 9-வது சிம்பொனி அமைத்தபோது முழுமையாக கேட்கும் திறனை இழந்துவிட்டார். ஆனால், தன் உள்ளே இருந்த இசைஞானம் உள் உணர்வின் அடிப்படையில் சிம்பொனியை வெற்றிகரமாக இசைத்து முடித்தார்.அந்த இசை மேதையின் சாதனையை தமிழ்நாட்டைச் சேர்ந்த பண்ணைப்புரத்து இளையராஜா சிம்பொனி இசைத்து மேஸ்ட்ரோ பட்டம் பெற்று இந்தியாவுக்கு, தமிழர்களுக்குப் பெருமை சேர்த்தார். நான் சின்ன குழந்தையாக இருந்தபோது, காரணம் தெரியாமல் அழுதபோது, என்னுடைய அன்னை என்னை தொட்டில் போட்டு தாலாட்டுகின்றபோது..."மாணிக்கம் கட்டி வைரம் இடைக்கட்டி ஆணிப் பொண்ணால் செய்த வண்ண சிறுதொட்டிலில்பிரம்மன் பேணி உனக்கு வீடு தந்தான்தாலே தாலேலோ பாடப்பலம் குறைந்து வாழ்வை வயலாக்கும் முட்டவரும் மாடுகளையும்மூடப் பழக்கத்தையும் வண்டியிலே பூட்டிசீர்தூக்க வந்த ஈடற்ற தோழா இளம் தோழாகண்ணுறங்கு கண்ணுறங்கு..."என்று எந்த தமிழில் என்னை தாலாட்டினாலோ, எந்த தமிழைக் கேட்டு, எந்த தாலாட்டைக் கேட்டு நான் கண்ணுறங்கினேனோ, நான் நடைவண்டியை பிடித்து நடந்தபோது, தத்தா பித்தா என்று பேசியபோது, எந்தத் தமிழ் எனக்குத் தோழமை உணர்வை உருவாக்கித் தந்ததோ, நான் கல்லூரியில் பயின்றபோது, காதலித்தபோது, கனவு கண்டபோது, எந்தத் தமிழ் என்னுடன் தோழமை உணர்வை உருவாக்கியதோ, நான் அரசியல்வாதி ஆனபோது இதுபோன்ற மேடைகளில் எந்தத் தமிழ் எனக்கு சரம் சரமாக அடியெடுத்து தருகின்றதோ, நாளைக்கு நான் சாகின்றபோது என்னுடைய உற்றார் உறவினர்களும் நண்பர்களும் எந்தத் தமிழில் அழுது அங்கு ஒரு சோக மேகத்தை உருவாக்குவார்களோ, அந்த ஒப்பற்ற தமிழ் மொழியே தமிழீர் இசையாக வியாபித்து நிற்கிறது.தமிழ் இசை மாநாட்டின் வெற்றிக்காக ஒடி உழைத்த கால்களுக்கும், ஒத்துழைத்த கரங்களுக்கும், தமிழ் கூறும் நல்லுலகின் சார்பில் நன்றி!- மல்லை சி.ஏ. சத்யா
https://www.vikatan.com/government-and-politics/politics/130455-vaiko-in-malaysia
மலேசியா சென்ற வைகோவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
மலேசியா சென்ற வைகோவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
மலேசிய பினாங்கு மாகாணத்தின் துணை முதலமைச்சரான இராமசாமியின் மகன் திருமணத்தில் கலந்துகொள்ள மலேசியா சென்றுள்ள ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவுக்கு கோலாலம்பூர் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.    பினாங்கு துணை முதலமைச்சராக பொறுப்பு வகிக்கும் இராமசாமியும் வைகோவும் நீண்டகாலமாக நட்புடன் இருப்பவர்கள். ஈழத்தமிழர் பிரச்னைகளுக்காக மலேசியாவில் குரல் கொடுத்து வருபவர் இராமசாமி. அதற்காக பல பிரச்னைகளைச் சந்தித்தார். அவருடைய பூர்வீகம் தமிழ்நாடு ஆகும். அவருடைய மகன் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக வைகோ தனது உதவியாளர்களுடன் நேற்று நள்ளிரவு சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டார். கோலாலம்பூர் சென்றடைந்த வைகோவுக்கு இன்று காலை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மலேசியாவைச் சேர்ந்த கழககுமார், டத்தோ.ராஜிவ், பினாங்கு மாநில சட்டமன்ற உறுப்பினர் சதீஷ்முனியான்டி, கே.எல்.டான், சையித், ஜகா, ராஜீவ்ராவ், ராஜேஷ்ராவ், கமான்டோ ஷான் ஆகியோர் வைகோவுக்கு மாலை அணிவித்து வரவேற்றனர். இன்று கோலாலம்பூரில் பல்வேறு தமிழ் பிரமுகர்களைச் சந்திக்கிறார் வைகோ. கடந்த முறை வைகோ ராமசாமியின் மகள் திருமணத்துக்காக மலேசியா சென்றபோது, விடுதலைப்புலி என்று மலேசிய அதிகாரிகள் அவரை விமான நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியது பெரும் பரபரப்பானது குறிப்பிடத்தக்கது.
https://www.vikatan.com/crime/157573-16-year-girl-died-after-instagram-polling
``வாழ்வா... சாவா...?” - மலேசிய சிறுமியின் உயிரைப் பறித்த இன்ஸ்டாகிராம் போலிங்! #polling
``வாழ்வா... சாவா...?” - மலேசிய சிறுமியின் உயிரைப் பறித்த இன்ஸ்டாகிராம் போலிங்! #polling
இன்ஸ்டாகிராமில் வாக்குப்பதிவு நடத்தியதில் மலேசிய சிறுமி ஒருவர் தற்கொலை செய்திருக்கும் சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சமூக வலைதளங்கள் மனிதர்கள் இணைந்து இருப்பதற்காகவும் தங்களின் மனதில் இருக்கும் விஷயங்களைப் பகிர்வதற்கும் ஒரு தளமாக கொண்டுவரப்பட்டது. பின்னர் அது வளர்ச்சி அடைய அடையைச் சிலர் அதை தவறான வழிகளிலும் பயன்படுத்தினர். பலர் மன ரீதியாக சில பிரச்னைகளையும் சந்தித்தனர். இதுபோன்ற பல விஷயங்களை நாம் செய்திகளில் படித்திருப்போம்.  இன்றைய சூழலில் மொபைல் போன்கள் சிறுவர் சிறுமிகளிடமும் சர்வ சாதாரணமாகப் புழங்குகிறது. சிலர் இதைப் புதிய தேடல்களுக்காக பயன்படுத்திக்கொண்டாலும் பலர் இதை ஒரு பொழுதுபோக்காகதான் பார்க்கின்றனர். இந்த நிலையில், மலேசியாவில் நடந்த ஒரு சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.  மலேசியாவைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் புகைப்படங்களைப் பகிரும் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை போடுகிறார். அதாவது தன்னை அதில் பின் தொடர்பவர்களிடம் ஒரு கேள்வியை முன்வைக்கிறார். அதில், ``இது உண்மையிலே மிக முக்கியமானது. இதில் ஒன்றைத் தேர்வு செய்ய எனக்கு உதவுங்கள். நான் வாழ வேண்டுமா அல்லது சாக வேண்டுமா..?” என  வோட்டிங் முறையில் கேள்வி கேட்கிறார்.  நண்பர்கள் இப்படிக் கேட்கும்போது நம்மில் பலர் நகைச்சுவையாக கலாய்க்கும் விதமாகவும் நெகட்டிவ் பதில்களை அளிப்போம். அப்படிதான் பலர் இரண்டாவது ஆப்ஷனை தேர்வு செய்துள்ளனர். ஆனால், அவர்கள் பின் நடக்க இருக்கும் சம்பவத்தைப் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. சுமார் 69% பேர் இரண்டாவது ஆப்ஷனை தேர்வு செய்ய, அந்தச் சிறுமி தற்கொலை செய்திருக்கிறார்.  இந்தச் சம்பவம் மலேசியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வழக்கறிஞரும் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினருமான ராம்கர்பால் சிங், ``நெட்டிசன்கள் அவருக்கு பாசிட்டிவ் வழியைக் காட்டியிருந்தால் ஒருவேளை அப்பெண்ணைக் காப்பாற்றி இருக்கலாம். ஆனால், அதற்கு மாறாக நடந்துள்ளது. இந்த நாட்டில் தற்கொலை என்பது குற்றம் என்பதால், அதற்குத் தூண்டுதலாக இருந்து வாக்களித்தவர்களும் குற்றவாளிகள்தான். இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும்” என்றார்.  மலேசியாவின் விளையாட்டு மற்றும் இளைஞர்கள் துறை அமைச்சர் சயீத் அப்துல் ரஹ்மான் கூறுகையில், ``நாட்டு மக்களின் மனநிலை குறித்து உண்மையில் கவலைகொள்கிறேன். இது ஒரு தேசிய பிரச்னை. நிச்சயம் இது குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்படும்” என்றார்.  மேலும், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இன்ஸ்டாகிராம் அதிகாரி ஒருவர், ``எங்களின் பிரார்த்தனைகள் அந்தச் சிறுமியின் குடும்பத்தினருடன் இருக்கும். இன்ஸ்டாகிராமை மக்கள் பயன்படுத்தும்போது பாதுகாப்பானதாக மக்கள் உணர்வதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும். எங்களின் முயற்சிக்கு உங்களின் ஒத்துழைப்பும் தேவை. யாருக்காவது ஆபத்து ஏற்படுத்தும் வகையில் ஒரு பதிவைக் கண்டால் உடனடியாக ரிப்போர்ட் செய்வதை உறுதி செய்துகொள்ளுங்கள்” என்றார்.  இன்ஸ்டாகிராம் வாக்குமூலம் சிறுமி எடுத்த தற்கொலை முடிவு மலேசியா மட்டுமல்லாது அனைத்து நாட்டு மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 
https://www.vikatan.com/government-and-politics/151669-explanation-about-the-49-tamilians-who-were-rescued-from-the-malaysian-jail
மலேசியத் தமிழர்கள் மீட்பு விவகாரம்... சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பாதிக்கப்பட்டவர்கள்!
மலேசியா சிறையிலிருந்து மீண்டு வந்திருக்கும் 49 தமிழர்கள் கூறுகையில், ``சாப்பாட்டுக்காக ஒரு மணி நேரம் தரையில வரிசையா உட்கார்ந்திருக்கணும். திரும்பிப் பார்த்தா முதுகுல அடிப்பாங்க. 14 பேருக்குக் காலையில 5 லிட்டர், சாயந்தரம் 5 லிட்டர்னு தண்ணி குடுப்பாங்க. கக்கூஸ் போறதுக்கு, குளிக்கறதுக்கு, குடிக்கறதுக்குனு அத்தனைக்கும் அந்தத் தண்ணிதான். ஊருக்குத் திரும்பிப் போவோம்கிற நம்பிக்கையே இல்லாமப் போச்சு’’ என்கிறார்கள்.
`கனிமொழி (நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்) முயற்சியால் மலேசியாவில் தவித்த 49 தமிழர்கள் மீட்பு - கிராம மக்கள் நன்றி’ என்ற தலைப்பில் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி விகடன் இணையதளத்தில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இதுதொடர்பாக, ஏற்கெனவே மூன்று செய்திகளையும் பதிவிட்டிருந்தோம். மலேசியாவைச் சேர்ந்த தமிழ்ச் சங்கம், எம்.எல்.ஏ. கருணாஸின் புலிப்படை மற்றும் எம்.பி. கனிமொழி ஆகியோர் இந்த மீட்பு நடவடிக்கைகளில் உதவியுள்ளனர்' என்று சம்பந்தப்பட்டவர்களின் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் அந்தக் கட்டுரைகள் எழுதப்பட்டன. இந்நிலையில், `அவர்களை மீட்டது கனிமொழி அல்ல... எங்களின் முயற்சிதான்' என்றபடி முகநூல் மற்றும் யூடியூப் ஆகியவற்றில் காணொலியைப் பதிவேற்றியுள்ளனர் மலேசியாவில் செயல்பட்டுவரும் `அயலகம் உதவிக்குழு - மலேசியா' எனும் அமைப்பினர்.  எது உண்மை? எது உண்மை என்று அறிந்துகொள்ள நெல்லை மாவட்டத்திலிருக்கும் தலைவன்கோட்டை கிராமத்துக்குச் சென்றோம். மலேசியாவிலிருந்து திரும்பியிருக்கும் வெள்ளத்துரை, குணசேகரன், மாரித்துரை, பேச்சிப்பாண்டியன் ஆகியோரைச் சந்தித்தோம். மலேசிய சிறையில் சிக்கி உடல்நலம் குன்றிப்போனவர்கள், இன்னமும் அதிலிருந்து முழுமையாக மீளவில்லை. தொடர்ந்து மருத்துவச் சிகிச்சை எடுத்துவரும் அவர்கள், ``இதுவரைக்கும் எந்த மீடியாவுக்கும் நாங்க பேட்டி கொடுக்கல. செய்தியாளர்கள் பலரும் தேடி வந்தாங்க. இப்ப இருக்குற மனநிலையில யாரிடமும் பேசி, பட்ட கஷ்டங்களையும் வேதனைகளையும் மறுபடியும் நினைச்சுப் பார்க்க விரும்பல. அதனாலதான் யார்கிட்டயும் பேசல. எங்க மேல அக்கறைகொண்டு தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வந்த விகடனே தேடி வந்திருக்கும்போது பேசாம இருக்க முடியல’' என்றவர்கள், தொடர்ந்தனர். அவர்களுடைய பேச்சின் சாராம்சத்தின்படி அயலகம் உதவிக்குழு, கருணாஸ் மற்றும் கனிமொழி மூன்று தரப்புமே அவரவர் பங்குக்கு உதவி செய்திருப்பது தெரியவருகிறது. அயராமல் உதவிய அயலகம்! இதைத் தொடர்ந்து, அயலகம் உதவிக் குழுவைச் சேர்ந்த பாரி தமிழரசனைத் தொடர்புகொண்டு பேசியபோது, ``நானும் ஜோதிபாரதியும் சேர்ந்துதான் அயலகம் உதவிக் குழு அமைப்பைத் தொடங்கினோம். தற்போது 60-க்கும் அதிகமானோர் இந்தக் குழுவில் இருக்கிறார்கள். இங்கே வேலை செய்துகொண்டே பிறருக்கு உதவும் பணியையும் செய்துவருகிறோம். எங்களின் முயற்சியால் நிறைய பேர் சொந்த ஊருக்குத் திரும்பியிருக்கிறார்கள். உரிய அனுமதி பெறாமல் புரோக்கர்களை நம்பி வேலைக்காக வந்து சிறையில் சிக்கிக்கொள்பவர்கள் பற்றிய தகவல்களை உறவினர்களுக்குத் தெரிவிப்பது, தூதரகம் மற்றும் குடியுரிமைத் துறை அதிகாரிகள் மூலமாக மீட்டுச் சொந்த ஊருக்கு அனுப்புவது போன்ற பணிகளைச் செய்துவருகிறோம். அப்படித்தான் அந்த 49 பேருக்கும் உதவி செய்தோம். அவர்களின் வழக்குகளைத் தொடர்ந்து கவனித்துவந்தோம். சிறைக்குச் சென்று உதவிகளைச் செய்தோம். தூதரகத்தில் அவர்களின் நிலையை எடுத்துச் சொல்லி சொந்த ஊருக்கு அனுப்ப முயற்சிகளைச் செய்தோம். ஆனால், எந்த உதவியும் செய்யாத தமிழக அரசியல்வாதிகள் அவர்களை வைத்து அரசியல் செய்வதை என்ன சொல்வது’’ என்றார் காட்டமாக. கருணை காட்டிய கனிமொழி! கனிமொழி தரப்பினரிடம் பேசியபோது, ``செய்யாத உதவிகளுக்கு பெருமைதேடிக் கொள்ளவேண்டிய அவசியம் கனிமொழிக்குக் கிடையாது. மலேசியா சிறையில் தவித்த அந்த 49 பேரின் உறவினர்கள் கனிமொழியைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்ததுமே, மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மூலமாக நடவடிக்கை எடுத்தார். வெளியுறவுத் துறை அதிகாரிகளிடமும் பேசி வந்தார். சிறையிலிருந்தவர்களை, குடியுரிமை தடுப்பு முகாமுக்கு மாற்றி இருப்பதாக சுஷ்மா சுவராஜ் கடிதம் மூலமாகவே கனிமொழிக்குத் தகவல் தெரிவித்துள்ளார். மலேசியாவிலிருந்து மீண்டு வந்திருப்பவர்களே கனிமொழியை நேரில் சந்தித்து, `நீங்க உதவி செய்யலைனா திரும்பி வந்திருக்க முடியாது’ என்று நன்றியும் தெரிவித்துள்ளனர். இப்படி வெளிநாட்டுச் சிறையில் சிக்கிய மீனவர்கள் உள்ளிட்ட பலரையும் மீட்க கனிமொழி உதவி செய்துகொண்டுதான் இருக்கிறார்’’ என்றார்கள். ஒட்டுமொத்தமாகக் கிடைத்த உதவி! ஆக மொத்தம், அயலகம் உதவிக்குழு - மலேசியா, கருணாஸின் ஆட்கள் மற்றும் கனிமொழி ஆகிய மூன்று தரப்புமே இந்த 49 பேருக்கு உதவியுள்ளனர். ஆரம்பத்தில் நமக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கருணாஸ் மற்றும் கனிமொழி ஆகியோரின் உதவிகள் குறித்து செய்திகளை வெளியிட்டிருந்தோம். அயலகம் உதவிக்குழுவின் மனிதாபிமான அடிப்படையிலான முயற்சிகள் பற்றி அப்போது நமக்குச் சொல்லப்படவில்லை. அப்பாவிகளாக வந்து சிக்கிக்கொள்ளும் சகதமிழர்களை மீட்பதற்காகவே மலேசிய மண்ணில் அமைப்பை நடத்திவரும் அயலகம் உதவிக்குழுவின் முயற்சிகள் பாராட்டுக்குரியவையே! கண்ணீர்க் கதை! இந்த விவாதங்கள் ஒருபுறமிருக்க, மறுபுறம் மலேசியாவிலிருந்து மீண்டிருக்கும் அவர்களின் கதை, அனைவருக்கும் கண்ணீரைப் பொங்கவைப்பதாக இருக்கிறது. வெள்ளத்துரை, குணசேகரன், மாரித்துரை, பேச்சிப்பாண்டியன் ஆகியோர் பேசும்போது, ``ஏழை விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த நாங்க, வெளிநாட்டுல வேலை பார்த்தா குடும்பக் கஷ்டங்கள் தீரும்னுதான் வட்டிக்குப் பணத்தை வாங்கி, நேரடியா கம்பெனி மூலமாகவே மலேசியாவுக்குப் போனோம். ஏ.ஜே.என் எனர்ஜி நிறுவனம் சார்பாக மின்சார டவர் அமைக்கும் வேலைக்காகத்தான் போனோம். வேலை நேரம், தங்கும் வசதி, சம்பளம் எல்லாத்தையும் ஒப்பந்தத்திலேயே தெரிவிச்சிருந்தாங்க. ஆனா, அதையெல்லாம் மீறி, மலேசிய காட்டுப் பகுதியில காலை 7 மணியில இருந்து ராத்திரி 7 மணி வரை டவர் அமைக்கிற வேலை செய்ய வெச்சாங்க. பாம்பு, காட்டுப்பன்றி, அட்டைப்பூச்சி, விஷப்பூச்சினு உயிருக்கே ஆபத்தான சூழல்ல உயிரைக் கையில பிடிச்சுக்கிட்டு வேலை பார்த்தோம். ஒருத்தருக்கு விஷப்பூச்சி கடிச்சதால, ஒரு வாரத்துக்குப் பார்வையே தெரியல.  முதல் மாசம் பேசினபடி சம்பளம் கொடுத்தவங்க, அடுத்த மாசமே பாதியா குறைச்சுட்டாங்க. பத்தாயிரம் ரூபாய்தான் கொடுத்தாங்க. ஒப்பந்தப்படி உணவு, தங்குமிடம், குடிநீர் வசதி செய்து கொடுக்கல. அதனால, வேலை செய்ய மறுத்தோம். பாஸ்போர்ட்டை வாங்கிவெச்சுக்கிட்டு, போலீஸில் புகார் செய்துட்டாங்க. `கம்பெனி விதிமுறைகளைக் கடைபிடிக்கலை'னு சொல்லி, ஜெயில்ல போட்டுட்டாங்க. கொலையாளிகள், போதைப்பொருள் கடத்தி தண்டனை பெற்றவங்க உட்பட கொடூரக் குற்றவாளிகளோட எங்களையும் அடைச்சுட்டாங்க. நம்பிக்கையே செத்துப்போச்சு! சாப்பாட்டுக்காக ஒரு மணிநேரம் தரையில வரிசையா உட்கார்ந்திருக்கணும். திரும்பிப் பார்த்தா முதுகுல அடிப்பாங்க. 14 பேருக்கு காலையில 5 லிட்டர், சாயந்தரம் 5 லிட்டர்னு தண்ணி குடுப்பாங்க. கக்கூஸ் போறதுக்கு, குளிக்கறதுக்கு, குடிக்கறதுக்குனு அத்தனைக்கும் அந்தத் தண்ணிதான். குளிக்காததால சொறி, சிரங்கு, சிக்கன்பாக்ஸ் வந்து சிரமப்பட்டோம். ஊருக்குத் திரும்பிப் போவோம்கிற நம்பிக்கையே இல்லாமப் போச்சு. இந்த நிலையிலதான், `அயலகம் உதவிக்குழு'வைச் சேர்ந்த ஜோதிபாரதி, சிறையில் வந்து எங்கள பார்த்தார். வேதனையையெல்லாம் கொட்டித் தீர்த்தோம். எங்க மொபைல் போனுக்கு ரீசார்ச் செய்து கொடுத்தார். எங்க கஷ்டங்கள வீடியோவா பதிவு செஞ்சு வீட்டுக்கு அனுப்பினோம். ஊர்ல இருக்கறவங்ககிட்ட பேசினோம். எங்க உறவினர்கள் நெல்லை மாவட்ட ஆட்சியர்கிட்ட ரெண்டு தடவை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எங்க ஊரைச் சேர்ந்த புலிப்படை மாவட்டச் செயலாளர் ராஜூ குணசேகரன் மூலமாக கருணாஸ் எம்.எல்.ஏ-வுக்கு விஷயத்தை எங்க உறவுக்காரங்க தெரியப்படுத்தியிருக்காங்க. கருணாஸ் சொல்லி, மலேசியாவுல இருக்கிற நந்தகோபால்ங்கறவர் எங்கள வந்துபார்த்துட்டு, தூதரகத்தில் தகவல் சொல்லி உதவி கேட்டார். ஆனா, எந்த உதவியும் கிடைக்கல. பிறகுதான், எங்க ஊரைச் சேர்ந்த பூசைப்பாண்டியன், ராஜூ குணசேகரன், சுப்பையா பாண்டியன், துரைபாண்டியன் இவங்களோட கிராம மக்களும் சேர்ந்து கனிமொழியைச் சந்திச்சி விஷயத்தைச் சொல்லியிருக்காங்க. 2018 டிசம்பர் 20-ம் தேதி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்குக் கனிமொழி கடிதம் எழுதின பிறகுதான், இந்தியத் தூதரகத்துல இருந்து ராமகிருஷ்ணன்கிற அதிகாரி வந்து பார்த்துப் பேசினார். `அயலகம் உதவிக்குழு' ஜோதிபாரதி அடிக்கடி எங்கள சந்திச்சி செல்போனுக்கு ரீசார்ஜ் செய்துகொடுத்து குடும்பத்தோட பேச உதவியா இருந்தார். அவரைப் பார்த்த பிறகுதான், `சொந்த ஊருக்குப் போய்விட முடியும்'கிற நம்பிக்கையே வந்துச்சு. இந்தியத் தூதரகத்துக்கும் அயலகம் உதவிக்குழுவினர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தாங்க. இன்னொரு பக்கம் சுஷ்மா சுவராஜ் மூலமா கனிமொழி தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவே, பக்கிட் (Bukit) ஜெயிலுக்கு எங்கள மாற்றினாங்க. அந்தச் சிறையும் நரகமாகவேதான் இருந்துச்சு. சில நாள்களுக்குப் பிறகுதான் ஊர் திரும்புறதுக்கான நடவடிக்கைள் ஆரம்பமாச்சு. பெயர் வாங்கப் பார்த்த தமிழக அரசு! பிப்ரவரி 20-ம் தேதி காலை 7.30 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு வந்துட்டோம். ஆனா, அமைச்சர்கள் ஜெயக்குமார், ராஜலட்சுமி ரெண்டுபேரும் 9 மணிக்குத்தான் வந்தாங்க. அதுவரை எங்கள வெளியில விடல. உறவினர்களையும் பார்க்க அனுமதிக்கல. சென்னை மாவட்ட கலெக்டரும் அதிகாரிகளும் வந்து, `தமிழக அரசின் முயற்சியாலும் உதவியாலும்தான் சொந்த ஊருக்கு வர முடிஞ்சது’னு சொல்லச் சொன்னாங்க. நாங்க மறுத்துட்டோம். `எங்களுக்கு தமிழக அரசு எந்த உதவியும் செய்யல'னு சொன்னதுக்கு, `நீங்க என்ன ராணுவத்துலயா வேலை செஞ்சுட்டு வந்திருக்கீங்க. பணத்துக்காக வெளிநாட்டு வேலைக்குப் போயிட்டுதானே வந்திருக்கீங்க. உங்களுக்கு என்ன உதவி செய்ய முடியும்’னு அதிகாரிங்க சொன்னாங்க. அமைச்சர்கள் வந்தபிறகும், சால்வை வாங்கிட்டு வர மறந்துட்டதால கூடுதலா ஒரு மணிநேரம் காத்திருக்க வெச்சுட்டாங்க. `தமிழக அரசின் முயற்சியால் 49 தமிழர்கள் மீட்கப்பட்டு இருக்காங்க’னு அமைச்சர் ஜெயக்குமார் கூச்சமே இல்லாம மீடியாகிட்ட சொன்னார். தமிழக அரசு சார்பாக வழிச் செலவுக்கு ரூ.500, காலை உணவு, சொந்த ஊர் செல்ல போக்குவரத்து வசதி எல்லாம் ஏற்பாடு செய்திருக்கிறதா அமைச்சரும் அதிகாரிகளும் சொன்னாங்க. `எந்த உதவியும் தேவையில்லை'னு சொந்தச் செலவுலயே ஊருக்கு வந்துட்டோம். கடைசியா நாங்க சொல்ல விரும்புறது என்னன்னா, தமிழக இளைஞர்கள் யாரும் மலேசியாவுக்கு வேலைக்குப் போய் சிரமப்பட வேண்டாம்கிறதுதான்’’ என்றனர் சற்றே வேதனையுடன். என்ன செய்யப் போகிறது தமிழக அரசு? தொடர்ந்து அவர்கள், ``எங்களுக்குத் தமிழக அரசு எந்த உதவியும் செய்யவில்லை. இதுவரையிலும் இங்கே வந்து எந்த அதிகாரியும் பார்க்கவில்லை. உடல் நலப்பாதிப்பு காரணமாக இன்னும் சிகிச்சை எடுத்துக்கிட்டிருக்கோம். எங்களோட பரிதாபமான நிலையைக் கவனத்துல எடுத்துக்கிட்டு, தொழில் தொடங்க கடன் உதவி அளிக்கவாவது தமிழக அரசு முன்வர வேண்டும்’’ என்றார்கள், பாதிக்கப்பட்ட அப்பாவி இளைஞர்கள்.  அவர்களின் கோரிக்கையையாவது பரிவுடன் பரிசீலிக்குமா, தமிழக அரசு? 
https://sports.vikatan.com/cricket/126675-womens-asia-cup-t20-india-beat-malaysia-by-142-runs
`27 ரன்களில் மலேசியாவைச் சுருட்டிய இந்திய மகளிர் அணி!’ - 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
`27 ரன்களில் மலேசியாவைச் சுருட்டிய இந்திய மகளிர் அணி!’ - 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
மகளிர் ஆசியக் கோப்பை டி20 தொடரின் முதல் போட்டியில் மலேசிய அணியை 142 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி அசத்தல் வெற்றி பெற்றது.  Photo Credit: Twitter/@ACCMedia1  இந்தியா, மலேசியா, இலங்கை, பாகிஸ்தான், தாய்லாந்து உள்ளிட்ட அணிகள் மோதும் மகளிர் ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் மலேசியாவில் நடைபெறுகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் போட்டியை நடத்தும் மலேசிய அணியும், ஆறு முறை சாம்பியனுமான இந்திய அணியும் மோதின. கோலாலம்பூர் கினாரா அகாடமி ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்தது. முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ், 69 பந்துகளில் 97 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மலேசியா தரப்பில் அய்னா ஹஷிம் மற்றும் நூர் ஜக்காரியா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.  170 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மலேசிய அணிக்கு, இந்திய மகளிர் அணியின் கடும் நெருக்கடி கொடுத்தனர். தொடக்க ஆட்டக்காரர்களான யுர்சினா யாகூப் மற்றும் கிறிஸ்டினா பேரெட் ஆகிய இருவரும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். மலேசிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்திய மகளிர் அணியின் சிறப்பான பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல், மலேசிய அனி 13.4 ஓவர்களில் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் ஒரு வீராங்கனை கூட ஒற்றை இலக்க ஸ்கோரைத் தாண்டவில்லை. ஷாஷா ஆஷ்மி எடுத்த 9 ரன்கள்தான் மலேசிய தரப்பில் அதிகபட்ச ஸ்கோர். கேப்டன் வின்ஃப்ரட் துரைசிங்கம் 21 பந்துகளைச் சந்தித்து 4 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் பூஜா வஸ்ட்ராக்கர் 3 விக்கெட்டுகளும், பூனம் யாதவ் மற்றும் அனுஜா பாட்டீல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 97 ரன்கள் குவித்த ஆட்டமிழக்காமல் இருந்த மிதாலி ராஜ், பிளேயர் ஆஃப் தி மேட்ச்சாகத் தேர்வு செய்யப்பட்டார்.      
https://www.vikatan.com/crime/hotel-labor-from-sivagangai-tortured-in-malaysia-hotel
``சம்பளப்பாக்கி கேட்டதற்கு கட்டி வைத்து அடித்தார்கள்!” - அ.தி.மு.க பிரமுகரை குற்றம்சாட்டும் ஊழியர்
மலேசியாவுக்கு வேலை பார்க்கச் சென்ற தேவகோட்டையைச் சேர்ந்த ஊழியர் முகமது யூசுப், அவர் வேலை பார்த்த ஹோட்டல் நிர்வாகிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். அப்போது அவருக்கு ஏற்பட்ட காயங்களை பத்திரிகையாளர்களிடம் அவர் காண்பித்தார்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சேர்ந்த முகமது யூசுப் என்பவர் வேலைக்காக கடந்த 2018-ம் ஆண்டு ஏஜென்ட் உதவியுடன் மலேசியாவுக்குச் சென்றிருக்கிறார். அங்கு கார் கழுவும் வேலையை 7 மாதங்கள் செய்து வந்துள்ளார். கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் லெபாஅம்பாங் பகுதியில் உள்ள காரைக்குடி செட்டிநாடு ஹோட்டலில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். இந்த ஹோட்டல் அ.தி.மு.க-வைச் சேர்ந்த தேவகோட்டை, கண்டதேவி பஞ்சாயத்தின் முன்னாள் தலைவர் முருகன் என்பவருக்குச் சொந்தமானது. இவர் மலேசியாவில் கணேசன் என்பவரை பங்குதாரராக சேர்த்துக்கொண்டு இந்த ஹோட்டலை நடத்தி வந்திருக்கிறார். முருகனுக்குச் சொந்தமான ஹோட்டலில் பணியாற்றிவந்த முகமது யூசுப்பிற்கு மூன்றரை மாத சம்பளப் பாக்கி வைத்திருக்கின்றனர். இதைக் கேட்டபோது ஹோட்டல் உரிமையாளர்கள் எந்தப் பதிலும் தரவில்லை. இந்த நிலையில், ஹோட்டலில் இருந்து யூசுப் கிளம்ப முயன்றபோது கணேசன் மற்றும் மேலாளர் சேனாதிபதி ஆகியோரால் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், முகமது யூசுப் மற்றும் புலம்பெயரும் தொழிலாளர்கள் உரிமைக் கூட்டமைப்பினர் சென்னையில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய முகமது யூசுப், ``மலேசியாவில் முதலில் செய்துவந்த கார் வேலை ஒத்துவரவில்லை என்பதால்தான் ஹோட்டல் வேலைக்குச் சேர்ந்தேன். அதிலும் உரிமையாளர் முருகன் எங்கள் ஊரைச் சேர்ந்தவர் என்பதால் நம்பிக்கையுடன் சேர்ந்தேன். ஆனால், சேர்ந்த பிறகுதான் அங்குள்ள பிரச்னை தெரிந்தது. அங்குள்ள மற்ற 10 ஊழியர்களுக்குமே நிர்வாகத்தினர் சம்பளப் பாக்கி வைத்திருந்திருக்கின்றனர். நான் பலமுறை கேட்டபோதும் ஹோட்டல் நிர்வாகிகள் எந்தப் பதிலும் அளிக்கவில்லை. கடந்த 22-ம் தேதி நான் ஹோட்டலில் இருந்து கிளம்பியபோது முருகன் மற்றும் மேலாளர் சேனாதிபதி என்னைக் கட்டிவைத்து பைப் போன்றவற்றைக் கொண்டு பல மணி நேரம் அடித்தனர். இந்தச் செய்தி புகைப்படங்களாக சமூக வலைதளங்களில் வெளிவரவே  மலேசிய காவல்துறை வழக்கு பதிவு செய்தது. பிரச்னை பெரிதாகிவிடக் கூடாது என்பதற்காக முருகனின் உத்தரவின் பேரில் கணேசன் என்னை சென்னைக்கு விமானத்தில் அனுப்பிவைத்தார். நான் திருச்சிக்கு அனுப்பிவைக்கச் சொல்லித்தான் கேட்டிருந்தேன். சென்னை வந்திறங்கியதும் சிபி என்பவர் விமான நிலையத்திலிருந்து என்னை அழைத்துச் சென்று சாலிகிராமத்தில் உள்ள ஹோட்டலில் அடைத்து வைத்தார். காயங்கள் எல்லாம் சரியான பிறகுதான் அங்கிருந்து செல்ல முடியும். இல்லையென்றால் வெட்டிப் புதைத்துவிடுவேன் என்று மிரட்டினார்” என்றார். இவரைத் தொடர்ந்து பேசிய புலம்பெயரும் தொழிலாளர்கள் உரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பொன்குமார், ``சாலிகிராமத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த முகமது யூசுப்பை விருகம்பாக்கம் காவல்துறையினர்தான் மீட்டுள்ளனர். இதுதொடர்பாக புகார் அளிக்க டி.ஜி.பி அலுவலகம் சென்றபோது சிவகங்கை ஐ.ஜி-யிடம் புகார் அளிக்குமாறு தெரிவித்தனர். சொந்த ஊருக்குச் சென்றால் இவருடைய உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. அதனால் காவல்துறை இவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஹோட்டல் உரிமையாளர் முருகன் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவரைக் கைது செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார். இது தொடர்பாக ஹோட்டல் உரிமையாளர் முருகனைத் தொடர்பு கொண்டபோது அவருடைய இணைப்பைப் பெற முடியவில்லை. விளக்கம் தரும் பட்சத்தில் உரிய பரிசீலனைக்குப் பின் அது பிரசுரிக்கப்படும்.
https://www.vikatan.com/government-and-politics/141013-mother-demanding-to-rescue-his-son-in-pattukottai
`ஆடியோவை கேட்க முடியவில்லை; என் மகனைக் காப்பாற்றுங்கள்' - கலெக்டர் அலுவலகத்தில் கதறிய தாய்!
`ஆடியோவை கேட்க முடியவில்லை; என் மகனைக் காப்பாற்றுங்கள்' - கலெக்டர் அலுவலகத்தில் கதறிய தாய்!
வெளிநாட்டில் வேலைக்குச் சென்ற தன் மகனை, அங்கு அடித்துத் துன்புறுத்துகிறார்கள். அவன் உடல் முழுக்க காயங்களாக இருக்கிறது. என்னைக் காப்பாற்றுங்கள் என அழுதுகொண்டே அவன் பேசும் ஆடியோவை எங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறான். அதைக் கேட்டதிலிருந்து என் மனது தவிக்கிறது எப்படியாவது என் மகனை மீட்டுத் தர வேண்டும் என தாய் ஒருவர் அழுதுகொண்டே கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்த சம்பவம் பார்த்தவர்கள் அனைவரையும் கண் கலங்கச் செய்தது.  பட்டுக்கோட்டை அருகே ஏனாதி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன். இவர் மலேசியாவில் உள்ள சலூன் கடையில் கடந்த ஆண்டு முதல் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வீரப்பன் வேலை செய்யும் இடத்தில் சிலர் கொடுமைப்படுத்தியதோடு வேலை செய்யவிடாமல் மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன வீரப்பன் ஊருக்குத் திரும்பிவிட நினைத்து முதலாளியிடம் கூற அவரும் பார்க்கலாம் சரி எனக் கூறியிருக்கிறார். இதையடுத்து 3 நாள்கள் கழித்து கடையில் 2 லட்சம் பணத்தைக் கையாடல் செய்துவிட்டதாகக் கூறி ஊருக்கு அனுப்பாமல் கடை உரிமையாளர் வீரப்பனை அடித்துத் துன்புறுத்தியுள்ளார். மேலும், குடும்பத்தினருக்கு போன் செய்து 2 லட்சம் பணத்தைக் கொடுத்தால் தான் மகனை ஊருக்கு அனுப்புவேன் என மிரட்டியுள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாள்களாக மருது ரத்த காயத்துடன் இருப்பதுபோல் உள்ள போட்டோவும் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகவும் பேசும் ஆடியோ ஒன்றையும் வீரப்பன் வாட்ஸ் அப் மூலம் அனுப்பியுள்ளார். மேலும், எப்படியாவது என்னைக் காப்பாற்றுங்கள் என அதில் அழுதபடியே கூறியுள்ளார். அதன் பிறகு வீரப்பனின் தாய் இந்திரா அழுதபடியே தன் உறவினர்களுடன் இன்று தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுப்பதற்காக வந்தார்.  இது குறித்து இந்திரா கூறியதாவது, ``கடந்த 23-ம் தேதி என் மகன் போனில் கடைசியாகப் பேசினான். அதன் பிறகு அவனை தொடர்புகொள்ள முடியவில்லை. வெளிநாட்டில் அவன் வேலை செய்யும் இடத்தில் அவனைச் சித்ரவதை செய்து கொடுமைப்படுத்துகின்றனர். உடல் முழுக்க காயங்களோடு இருக்கும் படத்தையும் எப்படியாவது என்னைக் காப்பாற்றுங்கள் என அழுதபடி அவன் பேசும் குரலையும் கேட்ட பிறகு என மனது தவிக்கிறது. குடும்ப கஷ்டத்துக்காகக் கடன் வாங்கி அவனை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தேன். ஆனால், அங்கே என் புள்ளை படாதபாடு பட்டு வருகிறான். அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்வதற்குள் என் மகனை மீட்டுத் தர வேண்டும் என டி.ஆர்.ஓ.,சக்திவேலிடம் மனு கொடுத்திருக்கிறேன். இரண்டு நாட்களில் மகனை மீட்டுக் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறியிருக்கிறார்கள் என்றார். தாய்க்கே உரியத் தவிப்புடன் அழுதபடி அவர் மனு கொடுத்துச் சென்ற சம்பம் பார்ப்பவர்கள் அனைவரையும் கலங்கச் செய்தது.
https://www.vikatan.com/health/diet/politics-behind-the-palm-oil-import-from-malaysia
பாமாயில் நல்லதா, கெட்டதா? ஆயில் அரசியலும் அதன் பின்னணியும்
பாமாயில் கலப்படத்தை அதன் நிறத்தை வைத்தே கணித்துவிடலாம். இதன் சிவப்பு நிறத்துக்குக் காரணம், இதில் இருக்கும் கரோட்டின். ஆனால், இதில் சில ரசாயனங்கள் சேர்த்து வெள்ளை நிற பாமாயிலாக மாற்றப்படுகிறது!
கடந்த ஜனவரி 8-ம் தேதி, உலகின் மிகப்பெரிய சமையல் எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியா, பாமாயில் மற்றும் பாமொலின் பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி பத்தியில், "இலவசம்" என்பதிலிருந்து "கட்டுப்படுத்தப்பட்டது" என்று மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அதாவது, இனி இந்தியா கச்சா பாமாயிலை மட்டுமே இறக்குமதி செய்ய முடியும். இந்நிலையில், கச்சா பாமாயிலின் மிகப்பெரிய ஏற்றுமதியாளரான இந்தோனேசியாவிற்கு இது வரப்பிரசாதம் என்றாலும், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மற்றும் பாமொலின் ஆகியவற்றின் முதன்மை சப்ளையரான மலேசியாவைப் பெரிதளவு பாதிக்கும். இந்தத் தடைக்கு முதன்மைக் காரணம், மலேசியப் பிரதமர் மஹதிர் முகமது, சமீபத்தில் மோடி அரசாங்கம் குறித்து விமர்சித்ததே என்று இந்திய அரசாங்கமும் தொழில்துறை வட்டாரங்களும் அந்நாட்டுப் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துகொண்டுள்ளனர். கடந்த வருடம் அக்டோபர் மாதம், மலேசிய பிரதமர் மஹதிர், "இந்தியா, காஷ்மீரை படையெடுத்து ஆக்கிரமித்துள்ளது" என்று குற்றம் சாட்டினார். மேலும், இந்திய அரசு வெளியிட்ட புதிய குடியுரிமைச் சட்டம் அமைதியின்மையைத் தூண்டுவதாகவும் குறிப்பிட்டார். மஹதிரின் இந்தக் குறிப்பு, இந்திய அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்தே, பாமாயில் இறக்குமதி இந்தியாவில் ரத்து செய்யப்பட்டது. மலேசியப் பொருளாதாரத்திற்கு பாமாயில் மிகவும் முக்கியமானது. ஏனென்றால், இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.8 சதவிகிதமும், மொத்த ஏற்றுமதியில் 4.5 சதவிகித பொருளாதாரத்தையும் ஈட்டிக் கொடுக்கிறது. மலேசியாவின் மிகப்பெரிய வாடிக்கையாளராக இருந்த இந்தியா, பாமாயில் ஏற்றுமதியில் கடந்த ஆண்டு 28 சதவிகிதம் தொட்டது. இது, முந்தைய ஆண்டைவிட இரண்டு மடங்கு அதிகம். இந்நிலையில், மலேசியா தனது பாமாயில் வர்த்தகத்தைப் பாகிஸ்தானுடன் விரிவுபடுத்தக்கூடும் என்று அரபு செய்தி தெரிவித்தது. 2018-ம் ஆண்டு, மலேசியாவிலிருந்து 2.97 பில்லியன் (730 மில்லியன் டாலர்) மதிப்புள்ள 1.16 மில்லியன் மெட்ரிக் டன் பாமாயிலை பாகிஸ்தான் இறக்குமதி செய்தது. உலகில், தாவர எண்ணெய்களை இறக்குமதிசெய்யும் மிகப்பெரிய நாடு இந்தியா. அதாவது, ஆண்டுதோறும் சுமார் 15 மில்லியன் டன்களை வாங்குகிறது. இதில், பாமாயில் 9 மில்லியன் டன்கள், சோயாபீன் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் இரண்டும் சேர்ந்தது மீதமுள்ள 6 மில்லியன் டன். 60 சதவிகித சந்தைப் பங்குடன் இந்தியாவின் மிகப்பெரிய பாமாயில் ஏற்றுமதியாளராகச் செயல்பட்டுவருகிறது இந்தோனேசியா. ஆனால், அங்கிருந்து கச்சா பாமாயில் மட்டுமே இறக்குமதி செய்யப்படுகிறது. பாமாயிலின் தோற்றம் முதல் அதன் சுகாதார நலன்கள்வரை பகிர்ந்துகொள்கிறார், மருத்துவ உணவியல் நிபுணரும் ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறைகள் துறையின் உதவிப் பேராசிரியருமான இந்திராணி . "உண்ணக்கூடிய இந்த வெஜிடபிள் ஆயில், சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே மனிதர்களால் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. எகிப்தில் உள்ள அபிடோஸ் பகுதியில்தான் முதல்முறையாக பாமாயில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இங்கிருந்துதான் பின்னாள்களில் மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது.கடற்கரை ஓரங்களில், வளர்ந்த மரத்திலிருந்து ஒரு வகையான சிவப்புநிற பழத்திலிருந்து பாமாயில் எடுக்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து, கடற்கரைகள் அதிகமுள்ள இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இந்த மரங்களை வளர்த்து சோதனை செய்துபார்த்துள்ளனர். அதன் தொடர்ச்சியாகவே, குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் பாமாயில் உற்பத்தி அதிகமானது. பழத்தின் சதைப்பகுதியிலிருந்து (Pulp) எடுப்பது மற்றும் பழத்தின் கொட்டையிலிருந்து எடுப்பது எனப் பாமாயிலை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். பழத்தின் சதைப்பகுதி சிவப்பு நிறத்தில் இருக்கும். எனவே, தூய்மையான எண்ணெயின் நிறம் சிவப்பு. இந்தோனேசியாவைத் தொடர்ந்து மலேசியா, நைஜீரியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் பாமாயில் உற்பத்தியில் அடுத்தடுத்த நிலையில் இருக்கின்றன. ஒரு பெரிய கொத்தில் இருக்கும் பழங்களின் சதைப்பற்றான பகுதியிலிருந்துதான் (Pulp) பெரும்பாலும் பாமாயில் எடுக்கப்படுகிறது. ஒரு கொத்தின் எடை 10-15 கிலோ இருக்கும். அதில், ஆயிரத்திலிருந்து மூவாயிரம் பழங்கள் இருக்கும். அதிலிருந்து 22 முதல் 25 சதவிகிதம்வரை எண்ணெய் எடுக்கலாம்.100 கிராம் எண்ணெயில் 884 கிலோ கலோரிகள் உள்ளன. வேறு எந்தப் பழத்திலும் கிடைக்காத வைட்டமின் ஈ நிறைந்துள்ள tocotrienols என்ற ரசாயனம் இதில் இருக்கிறது. அதுவும், ரீஃபைண்டு செய்யப்படாத எண்ணெயில் மட்டுமே இந்த வைட்டமின் சத்து நிறைந்திருக்கும். பாமாயில் கலப்படத்தை அதன் நிறத்தைவைத்தே கணித்துவிடலாம். இதன் சிவப்பு நிறத்துக்குக் காரணம், இதில் இருக்கும் கரோட்டின். ஆனால், இதில் சில ரசாயனங்கள் சேர்த்து வெள்ளை பாமாயிலாக மாற்றும்போது, எண்ணெய் கலப்படமாகிறது. இந்த ரீஃபைண்டு ஆயில், பிஸ்கட், கேக், பீநட் பட்டர், சிப்ஸ் போன்றவை தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகிறது. இது, உடலுக்குப் பல தீங்குகளை விளைவிக்கும். பேக்கரிப் பொருள்கள் தயாரிப்பில் பெரிய பங்கு பாமாயிலுக்கு உண்டு.மீதமிருக்கும் சக்கையை விலங்குகளுக்கு உணவாகப் பயன்படுத்துகிறார்கள்.2017-ம் ஆண்டு மார்ச் மாதம் Deutsche Welle பத்திரிகை தயாரித்த ஆவணப்படம் ஒன்றில், ஜெர்மன் ஆல்ப்ஸில் உள்ள பால் பண்ணைகளில், கன்றுகளுக்கு உணவளிக்க பாலுக்கு மாற்றாக பாமாயில் பயன்படுத்தப்படுவதைக் குறிப்பிட்டிருந்தனர். சில இடங்களில், இதிலுள்ள அதிகப்படியான மீத்தைல்-எஸ்தர் வேதியியல் பொருள்களை உபயோகித்து, பயோ-கேஸாகவும் பயன்படுத்துகிறார்கள்.இதில் ஆன்ட்டி-மைக்ரோபியல் தன்மை (Anti-Microbial Substance) இருப்பதால், இதைக் காயங்களை ஆற்றும் மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர். உடலிலுள்ள தேவையற்ற கொழுப்பை வெளியேற்றும்.இதய பிரச்னைகளிலிருந்து பாதுகாக்கும்.மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உடலில் வைட்டமின் ஏ அளவை அதிகரிக்கும்.சரும ஆரோக்கியம் காக்கும்.இந்த நற்குணங்கள் அனைத்தும் தூய சிவப்பு பாமாயிலில் மட்டும்தான் உள்ளன. இதில் நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் (saturated fatty acids) அதிகமுள்ளது என்பது மிகப் பெரிய குறைபாடு."
https://www.vikatan.com/science/136839-malaysia-passenger-jet-on-google-maps-crashed-in-remote-cambodian-jungle
கூகுள் எர்த் வரைபடத்தில் காணாமல்போன மலேசிய விமானம்?
கூகுள் எர்த் வரைபடத்தில் காணாமல்போன மலேசிய விமானம்?
2014 -ம் ஆண்டு மார்ச் மாதம் 8 தேதி, மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பெய்ஜிங்கிற்குச் சென்ற போயிங் 777 வகை விமானம் காணாமல்போனது. விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் விமானத்துக்கு என்ன நிகழ்ந்தது என்பதுகுறித்து இப்போது வரை கண்டுபிடிக்க முடியாமல் இருந்துவருகிறது. விமானத்தின் உடைந்த பாகங்கள் கிடைத்தன என்று அவ்வப்போது செய்திகள் வந்தாலும், அவை எதுவும் இப்போது வரை உறுதிசெய்யப்படவில்லை.   இதற்கிடையில், விமானத்தின் பாகங்கள் கம்போடியாவின் தலைநகரான Phnom Penh நகரத்திற்குப் பக்கத்தில் இருக்கும் உயர்ந்த மலைக் காடுகளில் கிடப்பதாக, கடந்த 3-ம் தேதி பிரிட்டிஷ் தொழில்நுட்ப நிபுணர் இயன் வில்சன் 'டெய்லி ஸ்டார்' (DAILYSTAR ) என்கிற செய்தி நிறுவனத்துக்குத் தகவல் தெரிவித்தார். அதற்கு ஆதாரமாக,  கூகுள் செயற்கைக்கோள் வரைபடம் ஒன்றை வெளியிட்டார். அதில், விமானம் விழுந்துகிடப்பது தெளிவாகத் தெரிந்தது. செயற்கைக் கோள் வரைபடத்தில் இருக்கும் விமானத்தின் நீளம், 70 மீட்டர்கள் இருப்பதாகவும், காணாமல்போன மலேசியா விமானம் 63.9 மீட்டர் அளவுகொண்டது என்றும் பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் தெரிவித்தனர். விமானத்தின் வால் பகுதி உடைந்து காணப்படுவதால், படத்தில் இருப்பது மலேசியா போயிங் விமானமாக இருக்கலாம் என நம்பப்பட்டது. அதன்படி, வான்வழித் துறை ஆராய்ச்சியாளர்கள் கடந்த மூன்று நாள்களாக ஹெலிகாப்டர் உதவியுடன் வரைப்படம் காட்டிய இடத்தில் விமானத்தின் பாகங்கள் இருக்கிறதா என்பதைத் தேடிவருகின்றனர். இதைத் தொடர்ந்து, சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ் வியூ என்கிற நிறுவனம் 'இயன் வில்சன்' குறிப்பிட்ட, கம்போடிய மலைப் பகுதிகளில் தன்னுடைய செயற்கைக்கோள் உதவியுடன் விமானத்தின் பாகங்கள் இருக்கிறதா எனத் தேடியது. தேடுதலின் கடைசியில் 2015, 2016, 2017 -ம் ஆண்டுகளின் செயற்கைக் கோள் வரைபடங்களைக்கொண்டு ஆராய்ந்து பார்த்ததில், குறிப்பிட்ட பகுதியில் எந்த விமானமும் இல்லை எனத் தெரிவித்தது. தொடர்ந்து தேடுதல் பணி நடைபெறுகிறது. 
https://www.vikatan.com/trending/viral/malaysia-prime-minister-dance-video-goes-viral
குழந்தை நளினம்... குட்டிக் குட்டி ஸ்டெப்ஸ்... மகளோடு மலேசியப் பிரதமரின் 'க்யூட்' டான்ஸ்! #Viralvideo
சிம்பிள் ஸ்டெப்புகளால் அரங்கிலிருந்த அனைவர் மனதையும் கொள்ளை கொண்டார். தற்போது இணையவாசிகளின் 'க்யூட்' கமென்ட்களை அள்ளி வருகிறார்.
தன் மகளின் அழைப்பை ஏற்று மலேசியப் பிரதமர் மகாதீர் ஆடிய அழகு நடனம்தான் தற்போது இணையமெங்கும் செம்ம வைரல். மலேசிய அரசின் ஏழாவது பிரதமராகப் பதவி வகிப்பவர், முஹமது மஹதீர். மலேசிய மக்களின் பிரியத்துக்குரிய பிரதமராக வலம் வருகிறார். தன் முதிய வயதிலும் தவறாமல் உடற்பயிற்சிகளையும் உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்து உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வருபவர். மகாதீரின் மகள் மரீனா. இவர் பல்வேறு தொண்டு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். மலேசியாவின் சபாஹ் சர்வதேசக் கருத்தரங்கு மையத்தின் நிகழ்வொன்றில் கலந்துகொள்ள பிரதமர் வருகை தந்திருக்கிறார். அதில் நடைபெற்ற கொண்டாட்ட பார்ட்டியில் மகள் மரீனா நடனமாடியபடியே, தந்தை மகாதீரையும் ஆடுவதற்கு அழைத்தார். அந்த உற்சாகத் தருணத்தில் மகளோடு இணைத்துக்கொண்டு, சின்னச் சின்ன அசைவுகளால் அட்டகாச நடனத்தை நிகழ்த்தினார், 94 வயது இளைஞரான மகாதீர். இதைக் கண்டு மகிழ்ந்த பார்வையாளர்கள் உற்சாக ஒலி எழுப்பி ஆரவாரம் செய்தனர். இடமும் வலமும் மாறி மாறி கால்களை எட்டு வைத்து, இடுப்பை அப்படி இப்படி என அசைத்து, முன்னும் பின்னும் நகர்ந்து வட்டமடித்து.. சிம்பிள் ஸ்டெப்புகளால் அரங்கிலிருந்த அனைவர் மனதையும் கொள்ளை கொண்டார், மகாதீர். தற்போது இணையவாசிகளின் 'கியூட்' கமென்ட்களை அள்ளி வருகிறார். பிரதமர் பதவியின் வேலைப்பளு கொடுக்கும் பிரஷரையும், தனது வயதையும் தாண்டி தன்னை இவ்வளவு உற்சாகமாக வைத்திருக்கிறாரே என ஆச்சர்யத்தையும் கைதட்டல்களையும் பொழிந்து வருகிறது வலையுலகம். உங்களுக்கு இன்னும் வயசாகல பிரதமரே!
https://www.vikatan.com/government-and-politics/what-happened-to-malaysia-flight-mh370-mystery
என்ன ஆனது மலேசிய விமானம் MH370? : மர்மங்களின் கதை | பகுதி 5
அதிகாலை 12.42 மணிக்கு வானேறிய MH370 விமானம் கடைசியாக தொடர்புக்குள் இருந்தது 1.20 மணி வரை. ராடாரில் காணாமல் போன 1.21 மணிக்கு Transponder கருவி அணைக்கப்பட்டிருக்கிறது.
- ஆர்.எஸ்.ஜெ எல்லா நாட்களை போலவும் அந்த நாளிலும் மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையம் பரபரப்பாக இருந்தத. சீனாவின் பெய்ஜிங்குக்கு காலை 6.30 மணிக்கு சென்று சேர வேண்டிய மலேசிய விமானம், 227 பயணிகளை ஏற்றிக் கொண்டு அதிகாலை 12.42 மணிக்கு புறப்பட்டது. விமானப்பாதையில் ஓடி MH370 என்ற அந்த விமானம் வானேறியது. பொழுது விடிந்து 6.30 மணி ஆனது. MH370 விமானம் பெய்ஜிங் சென்று சேரவேயில்லை.பணியாளர்களும் பைலட்டுகளும் சேர்ந்து மொத்தமாக 239 பேர் விமானத்தில் இருந்தனர். எவரை பற்றியும் எந்தவித எந்த தகவலும் கிடைக்கவில்லை. மார்ச் 8, 2014 ஓடுதளத்திலிருந்து வானேறியதும் வான் போக்குவரத்து மையத்தின் கட்டுப்பாட்டிலிருந்து லம்ப்பூர் ரேடாரின் கட்டுப்பாட்டுக்கு விமானம் சென்றது. MH370 விமானத்தின் கடைசியான தகவல் பரிமாற்றம் 1.19 மணிக்கு நடந்திருக்கிறது. வியட்நாம் நாட்டின் வான்வெளிக்குள் விமானம் நுழைவதை லம்ப்பூர் வான் போக்குவரத்து மையம் உறுதிப்படுத்த, விமானத்தின் தலைமை பைலட் கேப்டன் சகரி அதை ஏற்றார். வியட்நாம் வான்வெளிக்குள் நுழைந்ததும் ஹோசிமின் வான் போக்குவரத்து மையத்துக்கு விமானத்திலிருந்து தகவல் கிடைத்திருக்க வேண்டும். கிடைக்கவில்லை.MH370 விமானத்தின் ட்ராண்ஸ்பாண்டர் இயக்கம் நின்றவுடன், விமானம் வலது பக்கத்துக்கு திரும்பியதாக மிலிட்டரி ராடார் கண்டறிந்திருக்கிறது. வலதுபக்கம் திரும்பி இடது பக்கம் திரும்பியிருக்கிறது. 1.52 மணிக்கு பெனாங்க் தீவின் தெற்கே விமானம் பறந்திருக்கிறது. கடைசியாக மலேசியாவின் மிலிட்டரி ரேடாரின் தகவல்படி விமானம் பெனாங் விமான நிலையத்தின் வட மேற்கில் பறந்திருக்கிறது.12.45 மணிக்கு வானேறிய விமானம் அரை மணி நேரம் மட்டுமே நேரடி தொடர்புக்குள் இருந்திருக்கிறது. அதற்கு பின் விமானம் கொடுத்த சமிக்ஞைகள் மட்டுமே. அவையும் அடுத்த சில மணித்துளிகளில் நின்றுவிட்டது. 239 பேரை கொண்ட விமானம் சீனாவுக்கு சென்று சேராமல் புறப்பட்ட இடத்துக்கே திரும்பி, அந்த இடத்தையும் சென்று சேராமல் தென்னிந்திய பெருங்கடலை நோக்கி நேராக பயணித்திருக்கிறது.மூன்று வாரங்களுக்கு பிறகு மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் ஊடகங்களை சந்தித்தார். விபத்துகளை துப்பறியும் பிரிவு மற்றும் செயற்கைக்கோளின் தகவல்கள்படி கடைசியாக விமானம் தென்னிந்திய பெருங்கடலுக்கு மேல் பறந்ததாகவும் அங்கு விமானம் இறங்கும் தளம் ஏதுமில்லை என்பதால் கடலில் விழுந்திருக்கலாம் என்றும் அறிவித்தார். MH370 விமானத்தின் மர்மத்துக்கு காரணமாக மூன்று முக்கியமான விஷயங்கள் சொல்லப்படுகின்றன. 1. தொழில்நுட்ப கோளாறு 2. திட்டமிட்ட சதி 3. தீவிரவாத தாக்குதல். முதல் விஷயமான தொழில்நுட்ப கோளாறு இயல்பாகவே விமானங்களில் ஏற்படுவதுதான். அவற்றை உடனுக்குடன் தெரியப்படுத்துவதற்கான வழிமுறைகள் இருக்கின்றன. எல்லா விமான கட்டுப்பாட்டு மையங்களும் எப்போதுமே சேதிகளை அறிந்துகொள்ளவும் அனுப்பவும் தயார் நிலையிலேயே இருக்கின்றன. எல்லா நாடுகளிலும் Air Traffic Control எனப்படும் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையங்கள் இருக்கின்றன. அந்தந்த நாடுகளின் வானுக்குள் நுழையும் எந்த விமானமும் இவர்களின் அனுமதி பெற்றுத்தான் நுழைய முடியும். அனுமதி இல்லையென்றால் எச்சரிக்கை கொடுக்கப்படும். பிற நாடுகளின் வான் கட்டுப்பாட்டு மையங்கள் தொடர்பு கொண்டு விசாரிக்கப்படும். எங்கும் நம்பகத்தன்மை வாய்ந்த தகவல் கிடைக்கவில்லையெனில் ராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்படும். விமான போக்குவரத்தைக் கண்காணிக்க பயன்படும் வழிகளில் முதன்மையானது ராடார். வான்வெளியில் கிடைக்கும் சமிக்ஞைகளை கொண்டு விமானங்கள் அடையாளம் காணப்படும். முதன்மை ராடார் அல்லாமல் secondary radar மற்றும் மிலிட்டரி ராடார் ஆகியவையும் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக செயற்கைக்கோள் இருக்கிறது. விமானத்திலுள்ள transponder என்னும் கருவி, சமிக்ஞைகளை ராடாருக்கு அனுப்பி தன் இருப்பிடத்தை அறிவித்துக் கொண்டே இருக்கும். பைலட்டுகள் கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பும் சேதிகள் அடிப்படையான தொடர்புவகையைச் சேரும்.இவை ஏதுமின்றி எந்த கண்காணிப்புக்கும் தட்டுப்படாமல் விமானம் பறந்து செல்லக் கூடிய வழி இல்லையா என கேட்டால், இருக்கிறது என்பதே பதில். நிலத்தில் இருந்து அனுப்பப்படும் ராடார் சமிக்ஞைகள் வானுக்கு சென்று பரவுவது குறிப்பிட்ட ஓர் உயரத்துக்கு மேல்தான். அந்த உயரத்தை தொடாமல், தாழ்வாக விமானம் பறந்தால் ராடாரின் வளையத்துக்குள் விமானம் சிக்காது. ஆனால் அந்த உயரத்தில் நிலப்பகுதிக்குள் பறக்கும்போது மிக எளிமையாக மக்களுக்கு புலப்பட்டு விடும். வழக்கமான உயரத்தை காட்டிலும் குறைவான உயரம் என்பதால் மிக எளிதாக மக்களுக்குள் சந்தேகம் கிளப்பிவிடும். பிறகு ராணுவ நடவடிக்கைதான். MH370 விமான விபத்துக்கான இரண்டாவது காரணமாக திட்டமிட்ட சதி கூறப்படுகிறது. சதி என ஆலோசிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் MH370 விமானத்தின் Transponder கருவி அணைக்கப்பட்டதே.அதிகாலை 12.42 மணிக்கு வானேறிய MH370 விமானம் கடைசியாக தொடர்புக்குள் இருந்தது 1.20 மணி வரை. ராடாரில் காணாமல் போன 1.21 மணிக்கு Transponder கருவி அணைக்கப்பட்டிருக்கிறது. தொழில்நுட்ப கோளாறாக இருந்திருந்தால், மொத்த விமானத்திலும் அது வெளிப்பட்டிருக்கும். வான் கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் சென்று சேர்ந்திருக்கும். அப்படி எந்த தகவலும் வரவில்லை என்பதால், விமானத்துக்குள் இருந்தே transponder கருவி யாரோ ஒருவரால் அணைக்கப்பட்டிருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. Transponder கருவியை பைலட் மட்டுமே இயக்க முடியும். ஆதலால் விபத்துக்கான மொத்த சந்தேகமும் விமானத்தின் முதல் கேப்டனான சகாரி அகமது ஷா மீதும் விழுந்திருக்கிறது. சந்தேகத்துக்கேற்பவே அவர் நடத்தையும் இருந்ததே இன்னும் சந்தேகத்தை வலுப்படுத்தியிருக்கிறது.சகாரி அகமது ஷா 53 வயதானவர். அவரது மனைவியும் மக்களும் அவரை பிரிந்து விட்டிருந்தனர். காரணம், அவர் கொண்டிருந்த பெண்கள் தொடர்பு. அது பிரச்னையாகி அவரது குடும்பம் பிரிந்து அவர் தனிமையில் இருந்திருக்கிறார். விமானம் ஓட்டாத காலத்தில் அவருக்கு இருந்த முக்கியமான பொழுதுபோக்குகள் இரண்டுதான் என்கிறார்கள் அவரின் நண்பர்கள். முகநூல் போன்ற சமூக ஊடகங்கள், ஒன்று. இன்னொன்று அவர் வீட்டுக்குள்ளேயே உருவாக்கி வைத்திருந்த Flight Simulator. Flight Simulator என்பது வீடியோ கேம் போல. ஒரு விமானத்தின் பைலட் இருக்கும் அறையை போல வீட்டிலேயே உருவாக்கிக் கொள்ள முடியும். விமான ஓட்டி அமர்ந்து எதிரில் கண்ணாடி வழியே பறக்கும் வானை பார்ப்பது போல் திரையில் இயக்கத்துக்கு ஏற்ப படம் தெரியும். விமானம் ஓட்டுவதற்கான சாதனங்கள் எல்லாமும் அறைக்குள்ளே இருக்கும். அந்த சாதனங்களை இயக்குகையில், இயக்கத்துக்கு ஏற்ப திரையில் படங்கள் தோன்றும். உதாரணமாக வீட்டின் அறைக்குள் இருந்துகொண்டு, விமானத்தை எழுப்புவதற்கான சாதனங்களை பயன்படுத்தினால், திரையில் விமானம் எழும் தோற்றம் உருவாகும்.MH370 விபத்துக்கு பிறகு, சந்தேகங்கள் அனைத்தும் சகாரியின் மீது குவிய முக்கிய காரணமாக இருந்தது Flight Simulatorதான். ஏனெனில், சகாரி வைத்திருந்த Flight Simulator-ல் இணைக்கப்பட்டிருந்தது MH370 ரக விமான மாதிரி. அதில் அவர் ஓட்டி பழகிய பாதை தென்னிந்தியக் கடல். எரிபொருள் தீரும் வரை ஒவ்வொரு முறையும் simulator-ஐ ஓட்டி பழகியிருக்கிறார். எல்லாம் சரி. ஆனால் சகாரிதான் விமானத்தை விபத்துக்குள்ளாக்கினார் என்பதற்கான சாத்தியம் என்னவென்ற கேள்விக்கு வில்லியம் லேங்கெவீஷ் (WILLIAM LANGEWIESCHE) போன்ற பத்திரிகையாளர்கள் ஆராய்ந்து சொல்லும் பதில் இதுதான்.தான் கொண்டிருந்த மனஅழுத்தத்தாலும் தனிமையாலும் மரணத்துக்கு சகாரி தயாராகி இருக்கலாம். தன்னை இந்நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியதாக சமூகத்தின் மீது அர்த்தமற்ற கோபம் கொண்டு, விமானத்தை பயணிகளோடு கொண்டு சென்று கடலில் மோதி விபத்துக்குள்ளாக்கி இருக்கலாம். ஆனால் விமான ஓட்டியின் அறைக்குள் இரண்டு விமான ஓட்டிகள் இருப்பார்கள். அதில் ஒருவரான சகாரி விமானத்தை விபத்துக்குள்ளாக்கும் முடிவை எடுத்திருந்தாலும் அடுத்தவர் எப்படி சம்மதித்திருப்பார்?அதற்கு பதிலளிக்கும் வில்லியம், `சகாரியுடன் இருந்த விமான ஓட்டி குறைந்த அனுபவத்தைக்கொண்டவர். சரியாக சொல்வதெனில் சகாரிக்கு ஜூனியர். அவரை கழற்றி விடுவது ரொம்ப சுலபம். விமான ஓட்டி அறைக்கு வெளியே சென்று எதையேனும் பரிசோதிக்க சொல்லியிருக்கலாம்’ என்கிறார்.சக விமான ஓட்டியை வெளியே அனுப்பிவிட்டு, சகாரி தன் வேலையை தொடங்கி இருக்கக்கூடும். விமானத்தை இன்னும் அதிகமாக, 40,000 அடி உயரத்துக்கு மேலேற்றி, காற்றழுத்தும் இல்லாத நிலைக்கு கொண்டு சென்றிருக்கலாம். காற்றழுத்தமும் ஆக்சிஜனும் இல்லாத நிலையில், பயணிகள் மயங்கியிருப்பார்கள். மயக்கத்திலேயே சில மணிகளில் மரணத்தை தழுவியிருப்பார்கள். பிறகு சாவகாசமாக சகாரி தன் Flight Simulator-ல் ஓட்டி பயிற்சி பெற்ற தென்னிந்திய பெருங்கடலை நோக்கி நேராக விமானத்தை செலுத்தியிருக்கலாம். சகாரியின் சக விமான ஓட்டியான ஃபாரிக் அகமதுக்கு அப்போதுதான் திருமணம் நிச்சயமாகி இருந்தது. இன்னும் அந்த விமானத்தில் இருந்த பலருக்கும் பல கனவுகள் இருந்திருக்கலாம். தொழில்நுட்பக் கோளாறோ திட்டமிட்ட சதியோ எதுவாகினும் அவர்களின் அத்தனை பேரின் கனவுகளும் இந்தியப் பெருங்கடலின் ஏதோவொரு ஆழத்தில் புதைந்திருக்கும்.MH370 விமானம் கடலிலேயே விழுந்திருந்தாலும் அதன் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்குமே என்ற கேள்விக்கு, ஒரே ஒரு பாகம் மட்டும் கிடைத்தது என்பதே பதில். அந்த பாகமும் மனித அறிவால் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆப்பிரிக்கத் தீவின் கடலோரத்தில் கரையொதுங்கி தன்னை அடையாளம் காட்டிக் கொண்டது. MH370 விமானத்தின் இறக்கையில் இருக்கும் ஒரு பகுதி அது.சகாரி பற்றிய ஊகத்தை சொன்ன வில்லியம், MH370 தன் பயணத்தை முடித்திருக்கக் கூடிய விதத்தையும் கூறுகிறார். அந்த பெரும் உலோகப் பறவையில் அநேகமாக ஒரே ஒருவர் உயிரோடு இருந்திருக்கலாம். விமான ஓட்டியின் அறைக்குள் ஏதோவொரு நிம்மதி நெஞ்சை கவ்வ அவர் அமர்ந்திருந்திருக்கலாம். எந்த அவசரமும் இல்லாமல் இருந்திருப்பார். கதவுக்கு வெளியே 238 பேர் தங்களின் உயிர் போன கதையே தெரியாமல் விமானத்தின் போக்குக்கு உயிரற்று ஆடிக் கொண்டிருந்திருப்பார்கள். விமான ஓட்டியின் அறைக்குள்ளிருந்த எல்லா திரைகளும் காரணமின்றி பூகோளத்தை காண்பித்திருக்கும். காற்றின் பேரிரைச்சல் விமானத்துக்குள் ஊளையிட்டிருக்கும். காலை 7 மணி அளவில் கிழக்கில் சூரியன் உதித்திருப்பான். அதன் அழகை ரசித்தபடி விமான ஓட்டி விமானத்தை கடலுக்குள் செலுத்தியிருப்பார். கடலின் பரப்பை தொட்டதும் விமானம் சிதறத் தொடங்கியிருக்கும். உலோகம் நொறுங்கி உடல்களுக்குள் பாய்ந்து, அத்தனை பேரும் கடலின் அடி ஆழத்தில் இருந்த மரணத்தின் ரகசியத்தை நோக்கி சென்று கொண்டிருந்திருப்பார்கள்.மனிதனுக்கு புரிபடாத வானமும் கடலும் ஒன்றிணைந்து ஓலம் எழுப்பியிருக்கும்!பல்லாயிர வருடங்களின் மனிதச் சரித்திரத்தை உண்டுச் செரித்து அலையாடும் கடல் அலட்சியத்துடன் அலையடித்துக் கொண்டு இருக்கிறது.
https://www.vikatan.com/environment/grow-plants-in-diwali-instead-of-bursting-crackers-says-penang-sangh
"தீபாவளிக்கு வெடிக்கு பதிலாக செடி!" பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்!
பட்டாசுகள் வெடிக்கப்படுவதால் காற்றில் தூசி மற்றும் மாசு அதிகரிக்கின்றன. பட்டாசுகளில் உள்ள சல்பர், துத்தநாகம், தாமிரம், சோடியம் போன்ற ஆபத்தான இரசாயனங்கள் நிரம்பிய தூசி மற்றும் மாசு படிந்த காற்று பல பகுதிகளுக்குப் பரவுகின்றன...
தீபாவளி அன்று, தீபங்களின் ஒளி பிரகாசிக்கட்டும் பட்டாசுகளின் சத்தம் குறையட்டும் என்று மலேசியாவில் உள்ள பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி பிரிவு அதிகாரி  என்.வி. சுப்பாராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ''தீபாவளிப் பண்டிகை இந்தியாவில் மட்டுமல்ல, மலேசியாவிலும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. எந்த நாட்டில் பட்டாசு வெடித்தாலும் சூழலுக்கு பாதிப்புத்தான் ஏற்படும். பட்டாசுகள் வெடிக்கப்படுவதால் காற்றில் தூசி மற்றும் மாசு அதிகரிக்கின்றன. பட்டாசுகளில் உள்ள சல்பர், துத்தநாகம், தாமிரம், சோடியம் போன்ற ஆபத்தான இரசாயனங்கள் நிரம்பிய தூசி மற்றும் மாசு படிந்த காற்று பல பகுதிகளுக்குப் பரவுகின்றன. இந்த காற்றை மக்கள் சுவாசிக்கும்போது பல நோய்கள் வர வாய்ப்புகள் உள்ளது. மேலும் இந்த தூசி மற்றும் மாசுபடுத்திகள் நமது சுற்றுச்சூழலை அழித்து, நமது ஆரோக்கியத்தை எளிதில் கெடுகின்றது. ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் பாதித்தவர்கள் மற்றும் உடல் நலமில்லாத பெரியவர்ளுக்கு இந்த மாசு ஆபத்தை ஏற்படுத்தும். மேலும் பட்டாசுகளால் ஏற்படும் சத்தம் மற்றும் இரைச்சல் செவிமெடுக்கும் திறனை பாதிக்கிறது. பட்டாசுகளின் இரைச்சல் அளவீடுகள் அதிக ஒலி அழுத்த உச்ச அளவை உருவாக்குகின்றன என்பதைக் காட்டுகின்றன. தற்போது உள்ள பட்டாசுகளின் சத்தம் காதுகளுக்கு வலியை ஏற்படுத்துகின்றது. சில நாடுகளில் பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் ஒலி வரம்புகள் மற்றும் அளவீட்டு முறைகள் வழங்கப்படுள்ளது.ஆகவே ஆண்டுக்கு ஒரு முறைதானே என்ற நோக்கத்தில் சுற்றுச்சூழல் மற்றும் அதிக இறைச்சலை ஏற்படுத்தும் பட்டாசுகளை பயன்படுத்தாமல் ஆளுக்கு ஒரு செடியை நட்டு நல்ல உணவை  உற்பத்தி செய்ய முயற்சிக்கலாம்" என சுப்பாராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
https://www.vikatan.com/government-and-politics/tamil-people-returned-after-50-days-from-other-states-and-other-countries
பசி பட்டினி.. தூங்காத இரவுகள்.. 50 நாட்களுக்கு பிறகு ஊர் திரும்பிய தமிழர்கள் வேதனை!
“கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவித்த தமிழர்கள் இன்று திருச்சி வந்தடைந்தனர். கடந்த 50 நாட்களாக நாங்கள் பட்ட வலிகளைச் சொல்ல வார்த்தைகளே இல்லை” எனக் கலங்கினார்கள்.
தமிழகத்தில் இருந்து வேலை உள்ளிட்ட காரணங்களுக்காக மலேசியா நாட்டில் தங்கி இருந்தவர்கள் கொரோனா விவகாரத்தால் நாடு திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். இந்தியாவுக்கான அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டதால் அவர்கள் செய்வதறியாமல் தவித்தனர். ஏற்கனவே திருச்சியில் இருந்து இரண்டு சிறப்பு விமானம் மூலம், மலேசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் அந்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு வந்தே பாரத் மிஷன் எனும் பெயரில் வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களைத் தாய்நாட்டுக்கு அழைத்துவரச் சிறப்பு தனி விமானங்களை அனுப்பி ஏற்பாடு செய்தது. அதன்படி மத்திய அரசு ஏற்பாடு செய்த ஏர்இந்தியா சிறப்பு தனி விமானம் மூலம் மலேசியாவில் சிக்கித் தவித்த 178 பயணிகள் நேற்று இரவு திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு வருகை புரிந்தனர்.திருச்சி விமான நிலையத்துக்கு வந்த அவர்களை, திருச்சி மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் சுப்ரமணி, வருவாய் கோட்டாட்சியர் விசுவநாதன், பொன்மலை உதவி ஆணையர் தயாநிதி, மாநகராட்சி நகர் நல அலுவலர் ஜெகநாதன், திருச்சி கிழக்கு வட்டாட்சியர் மோகன், தேர்தல் தனி வட்டாட்சியர் முத்துசாமி ஆகியோர் சகிதமாக மாவட்ட ஆட்சியர் சிவராசு வரவேற்றார். அங்கேயே திருச்சி மாவட்ட சுகாதாரத்துறையின் மூலம் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து பயணிகளில் ஒருவருக்கு கிட்னி தொடர்பான பிரச்னை இருக்கவே, அவர் திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.சிறப்பு தனி விமானம் மூலம் வந்த யாருக்கும் கொரோனா வைரஸ் நோய் அறிகுறி இல்லை. ஆனாலும் அவர்கள் மத்திய சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படி 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் முகாமில் தங்க வைப்பதற்காக திருச்சி மணிகண்டம் அருகில் உள்ள சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரி விடுதிவிடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு சுமார் 117 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மீதமுள்ள 60 பேர் அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் குரு ஹோட்டல், ராஜசுகம் ஹோட்டல், பெமினா ஹோட்டல் மற்றும் பல்வேறு ஹோட்டல்களில் தங்கவைத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து சில தினங்களில் மற்றொரு விமானம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நம்மிடம் பேசிய பயணிகள், ”கொரோனா ஊரடங்கு இந்தியாவை விட மலேசியாவில் மிகக் கடுமையாக பின்பற்றப்படுகிறது. விதிமுறைகளை மீறினால், கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுகிறது. இதனால் சொல்லமுடியாத துயரத்துக்கு ஆளாகிப் போனோம். கொரோனா பாதிப்பு அதிகரித்தவண்ணம் இருப்பதால், குடும்பத்தைத் தமிழகத்தில் விட்டுவிட்டு, மலேசியாவில் எங்கள் மனநிலை பட்ட பாடுகளைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. நல்லபடியாக நாங்கள் ஊர் வந்து சேர்ந்தோம் என்பதை நம்ப முடியவில்லை” என்றார்கள். இதேபோல், மகாராஷ்டிரா மாநிலம் சோழாப்பூரில் பணிபுரிந்த தமிழகத்தில் 34 மாவட்டங்களை சேர்ந்த 962 தொழிலாளர்கள் மத்திய - மாநில அரசுகளின் நடவடிக்கையால், பந்தர்பூர் ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு இரயில் மூலம் அழைத்துவரப்பட்டனர். அவர்கள் இன்று திருச்சி இரயில்வே ஜங்சன் வந்து சேர்ந்தனர். அவர்கள் அனைவரையும் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, நேரில் பார்வையிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் 30 சிறப்பு பேருந்துகள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். மதுராந்தகத்தைச் சேர்ந்த கார்த்திக் நம்மிடம் பேசுகையில், “கடந்த 50 நாட்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளானோம். திடீரென அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டோம். பல நாட்கள் சோறு இல்லாமல் பட்டினியாக கிடந்தோம். மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகம் இருப்பதால் அங்குச் சூழல் மோசமாக உள்ளது. சாப்பிட வெளியே சென்றாலும் போலீஸார் கைது செய்கிறார்கள். உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கிடந்த நாங்கள், ஊருக்கு வருவோம்னு நம்பவே இல்லை.” என்றார். திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு கூறுகையில், “இவர்கள் அனைவரும், மகாராஷ்டிரா மாநிலம் சோழாப்பூரில் பணி புரிந்தவர்கள். கொரோனா ஊரடங்கில் சிக்கிக் கொண்ட இவர்கள், சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டும் எனக் கோரிக்கை வைக்கவே, மத்திய, மாநில அரசுகள் அரசுகளின் நடவடிக்கையின் மூலம் அழைத்துவரப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள 34 மாவட்டங்களைச் சேர்ந்த இந்த 962 பேரையும், திருச்சியில் இருந்து சிறப்பு பேருந்துகள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்களுக்கு அந்தந்த மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உள்ளதா எனப் பரிசோதனை செய்யப்படுவார்கள்” என்றார்.
https://www.vikatan.com/government-and-politics/coronavirus-mutation-detected-in-malaysia
மலேசியா: `கொரோனா வைரஸின் புதிய திரிபு’ - 10 மடங்கு வேகமாகப் பரவுவதாக எச்சரிக்கை
மலேசியாவில் கொரோனா வைரஸின் திரிபு எனக் கருதப்படும் 'D624G' வகை கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வுகான் நகரிலிருந்து கடந்த ஜனவரி மாதம் முதல் பரவத்தொடங்கியதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ் இன்று மொத்த உலக நாடுகளுக்கும் பரவி மனிதனின் இயல்பு வாழ்க்கையை வெகுவாகப் பாதித்துள்ளது. இந்தக் கொரோனா வகைகளில் பல வைரஸ்கள் இருப்பதாகவும் அது தொடர்ந்து தன் தன்மையை மாற்றிக்கொள்வதால் அதனைப் பற்றி முழுதாக அறிந்துகொள்ள முடியவில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் மலேசியாவில் கொரோனாவின் 'D624G' என்ற திரிபு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து மலேசியா திரும்பிச் சென்ற ஒரு உணவக உரிமையாளர் தனது 14 நாள் தனிமைப்படுத்துதலை மீறியுள்ளார். அவர் மூலம் 45 பேருக்கு கொரோனா பரவியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த உணவக உரிமையாளருக்கு கொரோனா திரிபு இருப்பதாகச் சந்தேகப்பட்டு அவர் தீவிர மருத்துவ பரிசோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இதன் முடிவில் அவருக்கு 'D624G' என்ற திரிபு இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவருக்கு ஐந்து மாத சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிலிப்பைன்ஸில் இருந்து மலேசியா திரும்பும் மக்களில் சிலருக்கும் 'D624G' திரிபு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. “இந்த வகை தொற்று 10 மடங்கு வேகமாகவும் மிகவும் எளிதாகவும் மற்றவர்களுக்குப் பரவும். மலேசியாவில் இந்தத் திரிபு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும், அதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த வைரஸை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு மிகவும் தேவைப்படுகிறது. இதன் மூலம் நம்மால் தொற்றுநோய் சங்கிலியை உடைக்க வேண்டும். பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகளையும் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்” என அந்நாட்டு சுகாதார இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். இந்த வகை பிறழ்வு ஜூலை மாதம்தான் தெரியவந்துள்ளது, எனவே, தற்போதுள்ள தடுப்பு மருந்துகளால் இந்த வகை பாதிப்பைத் தடுக்க முடியுமா எனும் சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கிடையே மலேசியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,200-ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 8,859 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 125 பேர் பலியாகியுள்ளனர். இப்போது 216 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
https://www.vikatan.com/literature/arts/148587-2-elderly-women-killed-in-freemeal-stampede-in-malaysia
மலேசியாவிலும் இலவசம்... கூட்ட நெரிசலில் சிக்கி இரு மூதாட்டிகள் பலி!
மலேசியாவிலும் இலவசம்... கூட்ட நெரிசலில் சிக்கி இரு மூதாட்டிகள் பலி!
மலேசியாவில் இலவச உணவுக் கூப்பனை வாங்கத் திரண்ட கூட்டத்தில் சிக்கி இரு மூதாட்டிகள் பலியாகினர்.  சீன புத்தாண்டு 5 மற்றும் 6m தேதிகளில் கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு கோலாலம்பூரில் அன்றைய தினத்தில் நடைபெறும் விருந்தில் பங்கேற்க இலவச உணவுக் கூப்பன்களை விநியோகிப்பதாகத் தனியார் நிறுவனம் அறிவித்திருந்தது. சுமார் 200 உணவுக் கூப்பன்களைப் பெற ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். இதனால், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஆ போ (வயது 85) லா லான் நங் (வயது 78) என்ற இரு மூதாட்டிகள் பரிதாபமாக பலியாகினர். மேலும், இருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலவச உணவுக் கூப்பன்களை பெற முயன்ற வயதான மூதாட்டிகள் இறந்தது மலேசியாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 29-ம் தேதி இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.  பலியான லா லான் நங்கின் மகள் கூறுகையில், ``எங்கள் தாயார் அவ்வப்போது தன் தோழிகளுடன் சேர்ந்து வெளியே செல்வார். அப்படித்தான் எங்காவது சென்றிருக்கலாம் என்று நினைத்தோம். இதுபோன்று இலவச உணவுக் கூப்பன் பெறப்போகிறார் என்றால் நிச்சயம் தடுத்திருப்போம். தாயார் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தது எங்களுக்கு அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் உள்ளது’ என்கிறார். பணக்கார நாடான மலேசியாவிலும் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 
https://www.vikatan.com/government-and-politics/130008-we-will-not-send-zakir-naik-to-india-malaysian-pm
``ஜாகிர் நாயக்கை இந்தியா அனுப்ப முடியாது" - மலேசியப் பிரதமர்!
``ஜாகிர் நாயக்கை இந்தியா அனுப்ப முடியாது" - மலேசியப் பிரதமர்!
தீவிரவாத நடவடிக்கைகளைத் தூண்டும் வகையில் பேசியதால் இந்தியாவில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கை மலேசியாவில் இருந்து நாடு கடத்த முடியாது என்று மலேசிய பிரதமர் மஹாதிர் முகம்மது கூறியிருக்கிறார். தீவிரவாத நடவடிக்கைகளில் தொடர்பு, வன்முறையைத் தூண்டும் வகையிலான பேச்சு போன்ற குற்றச்சாட்டுகள் காரணமாக, ஜாகிர் நாயக்குக்கு எதிராக இந்தியாவில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் மலேசியாவில் நிரந்தரக் குடியுரிமை பெற்று அங்கு தங்கியுள்ளார். அவரை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று ஏற்கெனவே மத்திய அரசின் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.  தொலைக்காட்சிகளில் மதப் பிரசார நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஜாகிர் நாயக், கடந்த 2016-ம் ஆண்டு இந்தியாவிலிருந்து வெளியேறி மலேசியாவில் தஞ்சம் புகுந்தார், அங்கு அவருக்கு நிரந்தரக் குடியுரிமையை அந்நாட்டு அரசு வழங்கியுள்ளது.  இந்நிலையில், அவரை இந்தியாவுக்கு அனுப்பி வைக்குமாறு மத்திய அரசு, கடந்த ஜனவரி மாதம் மலேசியாவிடம் கோரிக்கை விடுத்தது. இந்தியா - மலேசியா இடையே குற்றம்சாட்டப்பட்டவர்களை பரஸ்பரம் ஒப்படைக்கக்கூடிய வகையிலான ஒப்பந்தம் நடைமுறையில் இருந்து வருகிறது.  இதற்கிடையே கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டுப் பிரதமர் மஹாதிர் முகம்மது, ``மலேசியாவில் ஜாகிர் நாயக் ஏதாவது பிரச்னையை உருவாக்காமல் இருக்கும்வரை, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த முடியாது. அவருக்கு நிரந்தரக் குடியுரிமை அந்தஸ்தை மலேசிய அரசு வழங்கியுள்ளது" என்றார். இந்திய இளைஞர்களைத் தன்னுடைய தவறான மதப் பிரசாரத்தின் மூலம் கவர்ந்திழுத்து, அவர்களை தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்த ஜாகிர் நாயக் தூண்டியதாக ஏற்கெனவே குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள ஜாகிர் நாயக், அது முற்றிலும் பொய்யானது என்றும், அதில் உண்மை ஏதும் இல்லை என்றும் மறுத்துள்ளார். ஜாகிர் நாயக்கைப் பொறுத்தவரை, சர்ச்சைக்குரிய பேச்சு மற்றும் செயல்பாடுகள் காரணமாக, பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகினார். இதையடுத்து கடந்த 2010-ம் ஆண்டு ஜாகிர் நாயக், பிரிட்டனுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்தது. நியூயார்க் உலக வர்த்தக மையம் கடந்த 2001-ம் ஆண்டு விமானங்களைக் கொண்டு மோதி தகர்க்கப்பட்ட நிலையில், தாக்குதலுக்குக் காரணமாக விமானங்களை அல்-கொய்தா அமைப்பினர் கடத்தவில்லை என்று, 2008-ம் ஆண்டு டி.வி. நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஜாகிர் நாயக் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

TLDR

Downloads last month
0
Edit dataset card