news_id
int64
201
2.26M
news_date
stringlengths
25
29
news_category
stringclasses
3 values
news_title
stringlengths
1
636
news_article
stringlengths
1
138k
201
2010-03-25T01:55:00+05:30
தமிழகம்
மின் தடையை கண்டித்து கிராம மக்கள் மறியல் : போலீஸ் தடியடியால் பதட்டம்
புதுக்கோட்டை : மின்தடையை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற கிராம மக்கள் மீது, போலீசார் திடீரென தடியடி நடத்தினர். இதில் ஊராட்சி தலைவர் உட்பட 20 பேர் காயமடைந்தனர். ஆவேசமடைந்த கிராம மக்கள், போலீசார் மீது கல்வீசி எதிர் தாக்குதல் நடத்தியதில் போலீசார் ஐந்து பேர் காயமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. முன்னறிவிப்பின்றி மின்தடை செய்வதால் விவசாயிகள், வியாபாரிகள், மாணவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். மின்தடை மற்றும் மின்னழுத்த குறைபாடுகளால் ஊராட்சிகளில் குடிநீர் வினியோகம் ஸ்தம்பித்துள்ளது. விவசாயப் பணிகளுக்கு நாள்தோறும் மூன்று மணி நேரம் கூட மின்சாரம் வழங்கப்படுவதில்லை. இதனால், அப்பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் கருகும் நிலையில் உள்ளன. பொறுமை இழந்த விவசாயிகள், பொன்னமராவதி மின்வாரிய கிளை அலுவலக உதவி செயற்பொறியாளரை நேரில் தொடர்புகொண்டு விவசாயப் பணிகளுகளுக்கு தடையின்றி மின்சாரம் வழங்கவேண்டும். முடியாத பட்சத்தில் முன்னறிவிப்புடன் மின்தடை செய்யவேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதை ஏற்ற மின்வாரிய அதிகாரிகள், முன்னறிவிப்புடன் மட்டுமே மின்தடை செய்வதாக உறுதியளித்தனர். இருந்தும் அப்பகுதிகளில் முன்னறிவிப்பின்றி அடிக்கடி மின் வினியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது. இதர நேரங்களில் மின்னழுத்த குறைபாடுகள் காரணமாக மின் மோட்டார்களை இயக்க முடியாத சூழ்நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. மின் வாரியத்தின் இத்தகைய அலட்சியப் போக்கை கண்டித்தும், தடையற்ற மின்சாரம் வழங்கக் கோரியும் பொன்னமராவதி மற்றும் ஆலவயல், நகரப்பட்டி, கண்டியாநத்தம், அம்மாப்பட்டி உள்ளிட்ட ஏழு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் 1,000க்கும் மேற்பட்டோர் பொன்னமராவதி தாலுகா அலுவலகம் முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். இதற்காக நேற்று காலை 11 மணிக்கு கொப்பனாப்பட்டி சந்திப்பில் குவிந்தனர். இதனால், அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து தடைபட்டது. போலீசார் அனுமதி மறுத்ததால் இருதரப்பிலும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆவேசமடைந்த கிராம மக்கள் தடையை மீறி பேரணியாக சென்றனர். தாலுகா அலுவலகம் அருகே இவர்களை வழிமறித்த போலீசார், கலைந்து செல்லுமாறு எச்சரிக்கை விடுத்தனர். இருதரப்பினரிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. பொறுமை இழந்த போலீசார், பேரணிக்கு முன்னிலை வகித்த ஆலவயல் ஊராட்சி தலைவர் மலையாண்டி கையை பிடித்து இழுத்துத் தள்ளினர். இந்நிலையில், கிராம மக்கள் தரப்பிலிருந்து வீசப்பட்ட ஒரு கல் போலீசார் மீது விழுந்தது. இதில், ஏட்டு கணேசமூர்த்தி தலையில் படுகாயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. கிராம மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். ஆத்திரமடைந்த கிராம மக்கள், போலீசார் மீது கல் வீசி எதிர்தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தால் அப்பகுதி போர்க்களம் போல் மாறியது. சம்பவத்தை தொடர்ந்து, பொன்னமராவதி மற்றும் கொப்பனாப்பட்டி பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் தொடர்பாக 50க்கும் மேற்பட்ட கிராம மக்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
202
2010-03-25T01:55:00+05:30
தமிழகம்
விஷத்தன்மையுடன் கோதுமை இறக்குமதி; மூவர் கைது
சென்னை : ஆஸ்திரேலியாவிலிருந்து விஷத் தன்மையுடன் சென்னை வந்த 1,250 டன் கோதுமையை, சுங்கத்துறை அதிகாரிகள் முடக்கி வைத்துள்ளனர். தரமானது தான் என போலி சான் றிதழ் கொடுத்து எடுத்துச் செல்ல முயன்ற சுங்கத்துறை ஏஜன்டுகள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள் ளனர். கோதுமை இறக்குமதியில் சதிவேலை உள்ளதா எனவும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல் போர்ன் துறைமுகத்திலிருந்து எம்.எஸ்.சி.பெக்கி என்ற சரக்கு கப்பல் இரண்டு வாரத்திற்கு முன், சென்னை துறைமுகம் வந்தது. சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு 50 கன்டெய்னர்களில் 1,250 டன் கோதுமை வந்திருந்தது. இவற்றின் மதிப்பு இரண்டு கோடி ரூபாய். கோதுமை கன்டெய் னர்கள் மீஞ்சூரில் உள்ள கன்டெய் னர் யார்டில் பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளன. மத்திய பூச்சி கட்டுப்பாட்டுத் துறை மற்றும் உணவுப் பொருள் ஆய்வுத்துறையின் அனுமதிக்கு பின், சுங்கத்துறை அதிகாரிகள் கோதுமையை விடுவிக்க முடியும். இந்த நடைமுறைக்காக சுங்கத் துறை அதிகாரிகள், கோதுமை மாதிரி எடுத்து, உணவுப் பொருள் ஆய்வுத் துறைக்கு அனுப்பி வைத்தனர். மைசூரில் உள்ள ஆய்வகத்தில் நடந்த சோதனையில், "பூச்சிக் கொல்லி மருந்தின் அளவு அதிகமாகி கோதுமை விஷத்தன்மை கொண்டதாக உள்ளது' என தெரியவந்தது. இதுதொடர்பாக, சுங்கத்துறை புலனாய்வு பிரிவினர் தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர். சி.பி.ஐ., அதிகாரிகள், கன்டெய்னர் யார்டிற்கே சென்று, கோதுமையை முற்றிலும் கொட்டி ஆய்வு நடத்தினர். அடுத்த கட்ட பரிசோதனைக்காக கோதுமை மாதிரிகள் மீண்டும் எடுத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கோதுமையில் விஷத்தன்மை இருப்பது தெரிய வந்துள்ளதால், 1,250 டன் கோதுமையும், மீஞ்சூர் கன்டெய்னர் யார்டிலேயே முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கோதுமை தரமானது தான் என, போலி சான்றிதழைக் கொடுத்து எடுத்துச் செல்லவும் முயற்சி மேற்கொண்டது தெரிய வந்துள்ளது. சுங்கத்துறை கமிஷனர் ராஜன் கூறியதாவது: கோதுமையில் பூச்சிக் கொல்லி மருந்து அதிகம் உள்ளதாக ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது. இதனால் கோதுமைக்கு,"கிளியரன்ஸ்' கொடுக்காமல் முடக்கி வைத்துள் ளோம். கோதுமை தரமானது தான் எனக் கூறி எடுத்துச் செல்ல கஸ்டம்ஸ் ஏஜன்டுகள் முயன்றனர். போலி ஆவணம் என கண்டறிந்து, ஜவஹர், முத்துபிரபு, ரமேஷ் என்ற மூன்று ஏஜன்டுகளை கைது செய்துள்ளோம். விசாரணை தொடர்கிறது. இவ்வாறு ராஜன் கூறினார். விஷத்தன்மை வாய்ந்த கோதுமை இறக்குமதியின் பின்னணியில் சதி வேலை உள்ளதா என்றும் விசாரணை நடந்து வருகிறது. ஏற்கனவே இந்தியாவின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் வகையில், சீனாவிலிருந்து உடல் நலத்தை பாதிக்கும் வகையில், பிரபல பிராண்டுகளின் பெயரில் போலியான சாக்லெட், பிஸ்கட், தோல் நோய் ஏற்படுத்தும் நறுமணப் பொருட்கள், சோப்பு, ஷாம்புகள், பவுடர்களும் இறக்குமதியாகி வருகின்றன. இவை அவ்வப்போது சுங்கத் துறையினரின் பிடியில் சிக்கிய நிலையில், ஆஸ்திரேலியாவிலிருந்து விஷத்தன்மை வாய்ந்த கோதுமை இறக்குமதியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
203
2010-03-25T01:56:00+05:30
தமிழகம்
சாருலதாவுடன் தொடர்பு உதவி கமிஷனர் சஸ்பெண்ட்
சென்னை : போலி ஐ.பி.எஸ்., பெண் அதிகாரி சாருலதாவிடம் தொடர்பு இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், உதவி கமிஷனர் பழனிசாமி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சென்னை நகரில், சாருலதா என்பவர் தன்னை ஐ.பி.எஸ்., அதிகாரி என்று கூறிக் கொண்டு, பல இளைஞர்களிடம், போலீஸ் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நகை, பணம் பெற்றுள்ளார். காவல் துறையிலேயே இவருக்கு பலத்த செல்வாக்கு இருந்ததால், இவரிடம் பணம் மற்றும் நகைகளைக் கொடுத்த இளைஞர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்தனர். ஒரு கட்டத்தில் சந்தேகமடைந்த இளைஞர்கள், போலீசாரின் உதவியை நாடினர். போலீசாரும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் பட்டியலை சரிபார்த்து, சாருலதா போலி ஐ.பி.எஸ்., அதிகாரி என்பதை கண்டுபிடித்து கைது செய்தனர். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், உதவி கமிஷனர் பழனிசாமிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் நேரடியாக விசாரணை நடத்தி, உதவி கமிஷனர் பழனிசாமியை சஸ்பெண்ட் செய்ய அரசுக்கு பரிந்துறை செய்தார். இந்நிலையில், உதவி கமிஷனர் பழனிசாமியை சஸ்பெண்ட் செய்து அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.
204
2010-03-25T01:56:00+05:30
தமிழகம்
பழைய தலைமை செயலக ராணுவ குடோனில் தீ விபத்து
சென்னை : பழைய தலைமைச் செயலகத்தில் உள்ள ராணுவ குடோனில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. பழைய தலைமைச் செயலகத்தில் ராணுவ குடோன் உள்ளது. இந்த குடோனில் ராணுவத்தினர் பயன்படுத்திய தஸ்தாவேஜுகள், நோட்டு புத்தகங்கள், பொருட்கள் வைக்கும் இடமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. நேற்று இரவு 10.30 மணியளவில் ராணுவ குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் கருகிய பொருட்களின் நாற்றம் வரவே, ராணுவ அதிகாரிகள் தீயணைப்புத் துறையினரின் உதவியை நாடினர். தலைமைச் செயலகத்தின் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஆறு தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. குடோனை திறந்து பார்த்த போது அங்கிருந்த பிளாஸ்ட்டிக் நாற்காலிகள் தீயில் எரிந்தது தெரியவந்தது. தலைமைச் செயலகத்தில் இருந்த போலீசார் விசாரணையில், ராணுவ குடோனுக்கு அருகில், ராணுவ கேன்டீன் உள்ளது. இந்த கேன்டீனில் சேகரிக்கப்படும் குப்பைகள், ராணுவ குடோனுக்கு பக்கத்தில் கொட்டப்படுகின்றன. இந்த குப்பைகளை தினத்தோறும் தீயிட்டு எரிப்பது வழக்கம். இதே போல் நேற்றிரவு குப்பைகளை தீயிட்டு எரித்துள்ளனர். இதிலிருந்து தீப்பொறி சாரம் வழியே குடோனில் விழுந்து அங்கிருந்த பழைய பொருட்களின் ஊடே நாற்காலிகளிலும் பற்றிக் கொண்டது தெரியவந்தது.
207
2010-03-25T02:00:00+05:30
இந்தியா
11 பேரை பலி வாங்கிய பஸ் ஆற்றில் பாய்ந்தது எப்படி?
கோட்டயம் : கேரள மாநிலம், சேர்த்தலா பகுதியில் இருந்து கோட்டயம் நோக்கி வந்த தனியார் பஸ் மின் கம்பத்தில் மோதி, ஆற்றில் விழுந்த விபத்தில் 11 பேர் இறந்தனர். ஆற்றில் விழுந்தவர்களை காப்பாற்றப் போனவரும் மூச்சுத் திணறி இறந்தார். கேரள மாநிலம் சேர்த்தலா பகுதியில் இருந்து கோட்டயம் நோக்கி நேற்று முன்தினம் பிற்பகல், 40 பயணிகளுடன் தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. பிற்பகல் 2.30 மணியளவில் கோட்டயம் அருகே தாழத்து அங்காடி பகுதியில் பஸ் சென்ற போது, பின்னால் வந்த காருக்கு பஸ் டிரைவர் வழி விட்டார். அப்போது, சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் பஸ் மோதி, அருகே இருந்த மீனாட்சி ஆற்றில் விழுந்தது. பஸ்சின் முன்பகுதி உட்பட பெரும்பகுதி ஆற்றுக்குள் விழுந்தது. இதில், 11 பேர் பலியாயினர். அவர்களது உடல்களை நீண்ட நேர போராட்டத்திற்கு பின், தீயணைப்புத் துறையினரும் பொதுமக்களும் மீட்டனர். இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆற்றில் பஸ் விழுந்ததில் பலர் நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும் சேற்றில் புதைந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் விபத்தில் காயமின்றி தப்பி ஓடி விட்டனர். விபத்து குறித்து விசாரணை நடத்திய வட்டார போக்குவரத்து அலுவலர், (ஆர்.டி.ஓ.,) பஸ்சில் தொழில் நுட்பக் கோளாறு எதுவும் இல்லை. ஸ்டியரிங் வளையமும் சரியாகத் தான் செயல்பட்டுள்ளது. இருப்பினும், விபத்து எவ்வாறு நடந்தது என்பது தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து, நேற்று காலை அமைச்சரவை கூட்டம் திருவனந்தபுரத்தில் கூடியது. அதில், பலியான ஒவ்வொருவரது குடும்பத்திற்கும் தலா மூன்று லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும், மீட்புப் பணியில் ஈடுபட்டு இறந்த சதீசன் குடும்பத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
208
2010-03-25T02:00:00+05:30
இந்தியா
மாவோயிஸ்ட் வன்முறை நேற்று 6 பேர் படுகொலை
புவனேஸ்வர் : ஒரிசா, பீகார் மாநிலங்களில் மாவோயிஸ்ட்கள் நேற்றும் வன்முறையில் ஈடுபட்டனர். இங்கு நடந்த வெவ்வேறு வன்முறை சம்பவங்களில், பாதுகாப்பு படையினர் மூவர் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். மாவோயிஸ்ட்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளை மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன. இதனால் கோபமடைந்துள்ள மாவோயிஸ்ட்கள், பாதுகாப்பு படையினருக்கு எதிராக முழு வீச்சில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் பீகாரில், ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலை, குண்டு வைத்து கவிழ்த்தனர். ஒரிசா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் மாநிலங்களில் வன்முறை சம்பவங்களை நிகழ்த்தினர். அவர்களின் வன்முறை நேற்றும் தொடர்ந்தது. ஒரிசா, அம்பாஜரி வனப் பகுதியில் மாவோயிஸ்ட்களுக்கு எதிராக, நக்சல் ஒழிப்பு படை மற்றும் மாநில போலீசார் அடங்கிய கூட்டுப் படையினர், நேற்று அதிகாலை தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, அங்கு மறைந்திருந்த ஏராளமான மாவோயிஸ்ட்கள், பாதுகாப்பு படையினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில், பாதுகாப்பு படையினர் மூவர் கொல்லப்பட்டனர்; ஆறு பேர் காயமடைந்தனர். மாவோயிஸ்ட்கள் தரப்பில் ஏற்பட்ட உயிர்ச்சேதம் குறித்து தகவல் இல்லை. அருகில் உள்ள மால்காங்கிரி மாவட்டத்தில் தனியார் நிறுவனம் ஒன்றை, மாவோயிஸ்ட்கள் குண்டு வைத்து தகர்த்தனர். பீகார், கயா மாவட்டத்தில், சுங்க வரி வசூலிப்பு மையம் ஒன்று மீது, மாவோயிஸ்ட் கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில், பாதுகாவலர் உட்பட இருவர் கொல்லப்பட்டனர். அங்கிருந்த பாதுகாப்பு படையினரின் ஏராளமான ஆயுதங்கள், வெடி மருந்துகளையும், மூன்று லட்சம் ரொக்கத்தையும் கைப்பற்றிச் சென்றனர். மேற்கு வங்கம், மிட்னாபூர் மாவட்டத்தில், பசீர் கான் என்ற மார்க்சிஸ்ட் பிரமுகரை, மாவோயிஸ்ட்கள் கொலை செய்தனர். தொடரும் வன்முறை சம்பவங்களையடுத்து, பீகார், ஒரிசா, மேற்கு வங்க மாநிலங்களில், பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
210
2010-03-25T02:01:00+05:30
இந்தியா
கொலைக் குற்றத்தில் தொடர்பு பாலிவுட் நடிகர் ஹாஸ்மி கைது
புதுடில்லி : பாலிவுட்டில் சில படங்களில் நடித்தவன், கொலைக் குற்றத்தில் தொடர்புடையதால் போலீசார் நேற்று அவனை கைது செய்தனர். ரகீமுதீன் என்ற பால்லே என்ற இம்ரான் ஹாஸ்மி (26) என்பவன், டில்லியிலுள்ள வசந்த் குஞ்ச் என்ற பகுதியில் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டான். இவன், உத்தரபிரதேசத்தில் இரண்டு கொலை வழக்குகளில் தொடர்புடையவன். இவனிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி, வெடிபொருட்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். முன்பு, 2007ல் போலீஸ் பாதுகாப்பிலிருந்து தப்பி ஓடிவிட்டான். பின், மும்பைக்கு தப்பி வந்து பாலிவுட்டில் சில படங்களிலும் "டிவி' சீரியல்களிலும் நடித்தான். இவனை கண்டுபிடிப்பவருக்கு 25 ஆயிரம் ரூபாய் உ.பி., போலீசாராலும்,மேலும் 50 ஆயிரம் ரூபாய் டில்லி போலீசாராலும் அறிவிக்கப்பட்டிருந்தது . தற்போது அவனை போலீசார் கைது செய்தனர்.
212
2010-03-25T02:02:00+05:30
இந்தியா
குடிசை மாற்று வாரிய அடுக்கு மாடி வீடு இடிந்து விழுந்ததால் பரபரப்பு
புதுச்சேரி : புதுச்சேரி, திப்ராயப்பேட்டையில் அடுக்கு மாடி வீடுகளின் மேல் தளம் இடிந்து விழுந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. புதுச்சேரி உப்பளம் தொகுதி திப்ராயப்பேட்டையில் குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான 12 அடுக்கு மாடி கட்டடங்கள் உள்ளன. இங்கு, 100க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கட்டடம், பராமரிப்பற்று பாழடைந்த நிலையில் உள்ளது. இந்த குடியிருப்பின் இரண்டாவது மாடி வீட்டின் மேல் தளத்தின் ஒரு பகுதி, நேற்று காலை திடீரென இடிந்து விழுந்தது. இடிந்து விழுந்த சத்தத்தைக் கேட்டு, வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்தனர். பக்கத்தில் வசிப்பவர்களும் அங்கு திரண்டனர். வீடு இடிந்து விழுந்ததில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதிஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். இடிந்து விழுந்த வீட்டை, தொகுதி எம்.எல்.ஏ., அன்பழகன் நேரில் சென்று பார்வையிட்டார். அவரிடம் வீட்டு உரிமையாளர்கள் மனைப் பட்டா வழங்கி, வேறு வீடு கட்டித் தருமாறு முறையிட்டனர். குடிசை மாற்று வாரிய அதிகாரிகள், போலீசாரும் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மேல் தளம் இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
213
2010-03-25T02:04:00+05:30
தமிழகம்
100 டிகிரி பாரன்ஹீட்டை தொட்டது வெயில்
சென்னை : தமிழகத்தில் மதுரை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இப்போதே 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்துகிறது. வடகிழக்கு பருவ மழை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் மாலை 4 மணிக்கு துவங்கும் பனிப்பொழிவு, காலை 8 மணி வரை நீடித்தது. பருவ மழை போதியளவு பெய்யாததால் வெயிலின் தாக்கம், பிப்ரவரி மற்றும் மார்ச் மாத துவக்கத்திலே தெரிந்தது. இதனால், சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் வெயில் சுட்டெரிப்பதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சில வாரங்களாக பகல் முழுவதும் அனல் காற்றுடன் சுட்டெரிக்கும் வெயிலால், சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மதுரை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல இடங்களில் இப்போதே 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்துகிறது. ஆனால், சென்னை மட்டுமின்றி கடலோர மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், கடல் காற்று வீசுவதால் வெயிலின் உக்கிரம் சற்று குறைந்து காணப்படுகிறது. வெயில் எப்படி? சென்னை நகரில் நேற்று 91.76 டிகிரி பாரன்ஹீட்டும், மதுரை 100.76, திண்டுக்கல் 102.20, கோவை 99.68, திருச்சி 98.96, சேலம் 101.84, வேலூர் 101.3, பாளையங்கோட்டை 102.38, கடலூர் 93.2, புதுச்சேரி 91.58, நாகை 97.88, தூத்துக்குடி 93.92, கன்னியாகுமரியில் 93.74 டிகிரி பாரன்ஹீட் அளவு வெயில் பதிவாகியது. சென்னை நகரில் இன்று 94 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் அடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
215
2010-03-25T02:06:00+05:30
தமிழகம்
கதர் வாரியத்தில் அவசியமாகி உபரியாகி போன ஊழியர்கள்
மதுரை : கதர் கிராமத் தொழில் வாரியத்தில் உபரி ஊழியர்கள் அவசியமானவர்களாகி, மீண்டும் உபரியாக மாறிய வினோதம் நடந்துள்ளது. கதர் கிராமத் தொழில் வாரியத்தில், 2001 முதல் 2005 வரை 1196 பதவிகள் நீக்கம் செய்யப்பட்டன. அதில் சில பதவிகள், பதவி உயர்வு பெற முடியாத அளவிற்கு இருக்கிறது. ""இதனால் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பதவி உயர்வு இல்லாமல் இருப்பவரைவிட, இளநிலையில் உள்ளவர் "உதவி இயக்குனர்' பதவியை அடையும் சூழல் ஏற்பட்டு உள்ளது'' என வாரிய ஊழியர்கள் நலச்சங்க மாநிலத் தலைவர் நல்லசிவம் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது: தொழில்நுட்ப பிரிவுகளில் பதவி உயர்வின்றி பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு, வாரிய பணி விதிகளில் வழிவகை இருந்தும் "இளநிலை உதவியாளர்' பதவி உயர்வு மறுக்கப் பட்டுள்ளது. மாவட்ட குடிசைத் தொழில் ஆய்வாளர் பதவிகள் உருவாக்க அரசு உத்தரவிட்டும், இன்னும் உருவாக்கப்படவில்லை. மேலும் உபரி என குறிப்பிடப்பட்ட டைப்பிஸ்ட்களை அவசியமானவர்கள் என கருதி பதவி உயர்வு அளிக்கப் பட்டது. ஆனால் மீண்டும் உபரி ஊழியர்களாக்கிய வினோதத்தால், இரு ஆண்டுகளாக பதவி உயர்வு கிடைக்கவில்லை. இதுபோன்ற குறைபாடுகளை தவிர்க்க, புதிய பணி விதிகள் உருவாக்கிய பின்னரே, அனைத்து பிரிவுகளிலும் ஒரே சமயத்தில் பதவி உயர்வு அளிக்க வேண்டும், என்றார்.
216
2010-03-25T02:06:00+05:30
தமிழகம்
கருத்து கணிப்பு வெளியிட தடை மாநில தேர்தல் கமிஷன் உத்தரவு
சென்னை : பிரசாரம் ஓய்ந்த பின்னும், தேர்தல் நாளன்றும் கருத்துக் கணிப்புகளை நடத்தவும், வெளியிடவும் தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது. இது குறித்து தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தேர்தல் விதிகளின்படி, தேர்தல் நாளன்று (27ம் தேதி), ஓட்டு அளித்து விட்டு வெளியே வருபவர்களிடம் கருத்துக் கணிப்பை நடத்துவதும், அதை தேர்தல் முடியும் வரை வெளியிடுவதும் கூடாது. அது போல், தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளையும், தேர்தல் பிரசாரம் முடியும் இன்று(25ம் தேதி) மாலை 5 மணி முதல் தேர்தல் நடைபெறும் 27ம் தேதி மாலை 5 மணி வரை வெளியிடக் கூடாது. இது அனைத்து "டிவி', ரேடியோ, பத்திரிகை, இன்டர்நெட், மொபைல் போன் என எந்த ஊடகங்களுக்கும், அரசு, தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும். மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
218
2010-03-25T02:08:00+05:30
தமிழகம்
டெண்டர் விண்ணப்பங்களை இணையதளத்தில் எடுக்கலாம்
சென்னை : டெண்டர் ஆவணங்களை இணையதளத்தில் இருந்து இலவசமாக எடுத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. பெரிய டெண்டர்களில், கான்ட்ராக்டர்கள் விண்ணப்பம் பெறுவதே பெரும் சிக்கலாக இருந்தது. பல இடங்களில் அரசியல் முக்கிய புள்ளிகளின் தலையீட்டால், கான்ட்ராக்டர்களை விண்ணப்பம் வாங்க விடாமலும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கொடுக்க விடாமலும் அடித்து விரட்டும் சம்பவங்களும் நடக் கின்றன. இந்நிலையில், தமிழ்நாடு வெளிப்படையான டெண்டர் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட் டுள்ளது. இதன்படி, கட்டுமானப் பணிகளின் மதிப்பீட்டில், 25 லட்சம் ரூபாய்க்கும் மேல் கொள்முதல் மதிப்பு இருந்தாலும், கட்டுமானத் துக்கான ஆலோசகர்கள் நியமித்தல் உட்பட மற்ற அனைத்து வகை கொள்முதல்களிலும், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்பு இருந்தாலும், அதற்கான டெண்டர் ஆவணங்களை இணையதளம் மூலமே எடுத்துக் கொள்ளலாம். டெண்டர்கள் வெளியீட்டுக்கென அரசு வைத்துள்ள இணைய தளம் மற்றும் டெண்டர் விடும் துறை குறிப்பிடும் இதர இணைய தளங்களில், டெண்டர் ஆவணங்களை இலவசமாக, "டவுண்லோடு' செய்து கொள்ள வசதி செய்யப் பட்டுள்ளதாக, நிதித்துறை செயலர் பிறப்பித் துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
219
2010-03-25T02:08:00+05:30
தமிழகம்
மருந்துகளை திருப்பி அனுப்பிய மதுரை வணிகர்கள்
மதுரை : கோவையிலிருந்து அனுப்பப்பட்ட இருமல் மருந்து பாட்டில்கள் காலாவதியானவை என தெரியவந்ததை தொடர்ந்து, 400 பாட்டில்களை மதுரை மருந்துக்கடை உரிமையாளர்கள் திருப்பி அனுப்பினர். சென்னையில் காலாவதியான மருந்துகளை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து மக்களின் உயிரோடு விளையாடியவர்களை போலீசார் கைது செய்தனர். மருந்துகளையும் பறிமுதல் செய்தனர். "இந்த மருந்துகள் மதுரைக்கு அனுப்பப் பட்டதா' என மருந்து ஆய்வாளர்கள் தொடர்ந்து 800க்கும் மேற்பட்ட மருந்து கடைகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன், கோவையில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட டீலரிடமிருந்து 500 பாட்டில்களில் இருமல் மருந்து மதுரைக்கு அனுப்பப்பட்டது. பெட்டியில் 60 பாட்டில்கள் இருப்பதற்கு பதில், 100 பாட்டில்கள் இருந்ததால் மருந்து கடை உரிமையாளர்கள் சந்தேகமடைந்தனர். இதைதொடர்ந்து 400 பாட்டில்களை கோவை டீலருக்கு திருப்பி அனுப்பினர். மருந்து ஆய்வாளர்கள் 100 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மதுரை மருந்து வணிகர் சங்க செயலாளர் பழனியப்பன் கூறியதாவது : மதுரையில் காலாவதியான மருந்துகள் எதுவும் இல்லை என்பதால் மக்கள் பீதி அடைய வேண்டாம். காலாவதியான மருந்து, மாத்திரைகளை மீண்டும் டீலர்களுக்கே அனுப்பி வருகிறோம். காரணம் குறிப்பிட்ட நாட்களுக்குள் அனுப்பினால் எம்.ஆர்.பி. தொகையில் 30 சதவீதம் திருப்பி தருவர். காலாவதியான மருந்துகளை குப்பைகளில் கொட்டாமல், புதைத்தோ, எரித்தோ அழிக்க வேண்டும் என டீலர்களை அரசு எச்சரிக்க வேண்டும். மருந்துகள் குறித்து சந்தேகம் ஏற்பட்டால் எங்கள் சங்கத்தை (0452- 262 3141) தொடர்பு கொள்ளலாம் என்றார். தலைவர் ராஜ்குமார், ஒருங்கிணைப்பாளர் சசிகுமார், பொருளாளர் கண்ணப்பன் உடனிருந்தனர்.
220
2010-03-25T02:09:00+05:30
தமிழகம்
பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியும் புறக்கணிப்பு
திண்டுக்கல் : பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்கப்போவதாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல்லில் மாநில தலைவர் தம்பித்துரை கூறியதாவது: ஏப்ரலில் நடக்க உள்ள பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இதில், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொள்கின்றனர். விடைத்தாள் திருத்தும் பணியில் இல்லாதவர்கள், அன்று ஆதரவாக மையங்களில் நடக்கும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்பர். உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் பதவி உயர்வாகிய மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பணியிடத்தில், 10 சதவீதத்தை பறித்து முதுநிலை ஆசிரியர்களுக்கு வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மாவட்ட கல்வி அலுவலர் பணியிடம் முழுவதையும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கிட வேண்டும். ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை இடைநிலை கல்வி என்றும், பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 வகுப்புக்களை மேல்நிலை கல்வி என்று தனியாக இயக்குனரகம் உருவாக்க வேண்டும். பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை வேலை நாட்களுக்குள் முடித்திட வேண்டும் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை அரசும், கல்வித்துறையும் இன்னும் நிறைவேற்றாததை கண்டித்து விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம், என்றார். கூட்டமைப்பின் தொடர்பாளர் அங்குச்சாமி, நிதிக்காப்பாளர் அருணாச்சலநாதன் உடன் இருந்தனர்.
221
2010-03-25T02:09:00+05:30
தமிழகம்
பென்னாகரத்தில் பட்டுவாடா சுறுசுறுப்பு இன்றுடன் பிரசாரம் முடிவு
தர்மபுரி:பென்னாகரம் தொகுதி தேர்தல் பிரசாரம் இன்றுடன் முடிவதால், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தொகுதி முழுவதும் இறுதிக்கட்ட பணம், பரிசுப் பொருட்கள் வினியோகம் சுறுசுறுப்பாக நடக்கிறது.துணை முதல்வர் ஸ்டாலின், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ஆகியோர் இன்று காலை முதல் மாலை 5 மணி வரை தீவிர பிரசாரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். ஸ்டாலின் காலை 10 மணிக்கு தின்னப்பட்டியில் பிரசாரத்தை துவங்கி, மாலை 4 மணிக்கு பாப்பாரப்பட்டியில் நடக்கும் பொதுக் கூட்டத்துடன் பிரசாரத்தை முடிக்கிறார்.தி.மு.க., மத்திய இணை அமைச்சர்கள் காந்திசெல்வம், பழனிமாணிக்கம், ஜெகத்ரட்சகன், தமிழக அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், வேலு, பொன்முடி, நேரு, பன்னீர்செல்வம், அன்பரசு, சாமிநாதன், ராமச்சந்திரன், சுப.தங்கவேலன், மதிவாணன் உள்ளிட்டவர்களும், 17 மாவட்ட செயலர்கள், எம்.பி.,க்கள் உள்ளிட்டவர்கள், தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கிராமங்களில், வீடு வீடாக சென்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். அ.தி.மு.க., வேட்பாளர் அன்பழகனை ஆதரித்து, முன்னாள் அமைச்சர்கள் தம்பிதுரை, பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ஜெயக்குமார், பொன்னையன் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலர்கள் தங்கள் பகுதியில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ஆகியோரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவு முதல் தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ம.க.,வினர் தொகுதி முழுவதும் இறுதிக்கட்ட பண பட்டுவாடாவில் இறங்கினர். பண பட்டுவாடாவை எதிர்த்தால் மக்களிடம் அதிருப்தி வரும் என்பதால் ஒரு கட்சி வழங்கும் பணத்தை மற்றொரு கட்சி கண்டு கொள்ளவில்லை. 500 முதல் 2,000 ரூபாய் வரை கட்சிகள் தங்கள் செல்வாக்கிற்கு ஏற்ப வினியோகம் செய்து வருகின்றன. ஒகேனக்கலில் அலைமோதிய அரசியல் கட்சியினர் கூட்டம்:பல்வேறு கட்சிகளில் இருந்து தமிழகம் முழுவதும் இருந்து வந்துள்ள அரசியல் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் நேற்று காலை ஒகேனக்கலில் குவிந்தனர். வழக்கத்தை விட நீர்வீழ்ச்சி பகுதி, படகு துறையில் கூட்டம் அலைமோதியது.இன்று மாலை 5 மணியில் இருந்து 28ம் தேதி காலை 10 மணி வரையில் ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், வெளி மாவட்ட கட்சியினர் நேற்று ஒகேனக்கலில் குளித்து மகிழ்ந்தனர். வெளி மாவட்டம், வெளியூர் அரசியல் கட்சியினர் வெளியேற வேண்டும் என, தேர்தல் கமிஷன் எச்சரித்துள்ளது. இன்று மாலை 5 மணிக்கு மேல் தொகுதியைச் சுற்றியுள்ள செக்-போஸ்ட்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தவும், பாதுகாப்பு பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
223
2010-03-25T02:10:00+05:30
தமிழகம்
கூடுதல் விலை அறிவிப்பால் இனித்த கரும்பு பாசனநீர் பற்றாக்குறையால் கசக்கிறது
தியாகதுருகம் : பருவமழை பொய்த்ததால் தியாகதுருகம் பகுதி கிணறுகளில் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது. கிணறுகளில் பாசனத்திற்கு போதுமான நீர் கிடைக்கும் என்று நம்பி கூடுதல் பரப்பில் கரும்பு பயிரிட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், தியாகதுருகம் பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். நல்ல விலை கிடைப்பதாலும், பராமரிப்பு சிரமம் குறைவாக இருப்பதாலும், பல விவசாயிகள், கரும்பு பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்பகுதி முழுவதும் கிணற்று பாசனத்தை நம்பியே, கரும்பு பயிரிடப்படுகிறது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன், பதிவு செய்யாமல் பயிரிட்ட கரும்புக்கு எதிர்பார்த்த விலை கிடைக்காமல், பல விவசாயிகள், இடைத்தரகர்களிடம் சிக்கி அலைக்கழிக்கப்பட்டனர். வெட்டுக்கூலி கூட கிடைக்காத நிலையில் கரும்பை தீயிட்டு கொளுத்தினர். தற்போது விழுப்புரம் மாவட்டத்தில், புதிய தனியார் சர்க்கரை ஆலைகளின் வரவால், விளைவிக்கப்படும் கரும்பை வாங்குவதில் இருந்த சிக்கல் தீர்ந்துள்ளது. இதனால் நெல், பருத்தி, வேர்க்கடலை பயிர்களை தவிர்த்து, அவை சாகுபடி செய்த இடங்களில் எல்லாம் கரும்பு பயிராக காட்சியளிக்கிறது. கரும்பு டன் ஒன்றுக்கு 2,000 ரூபாய் அளிக்கப்படும் என்று, தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது, கரும்பு பயிரிட்ட விவசாயிகளுக்கு இனிப்பான செய்தியாக இருந்தது. இருப்பினும், கோடைக்காலம் துவக்கத்திலேயே கிணற்றில் நீர்மட்டம் குறைந்து, தண்ணீர் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது, விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. தியாகதுருகம் பகுதியில் ஏரி, குளங்கள் நிரம்பாததால் ஆயக்கட்டு விவசாயிகள், பெரிதும் பாதிக்கப்பட்டனர். நீர்நிலைகளில் விரைவாக நீர் வற்றியதால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. கோமுகி, மணிமுக்தா ஆறுகளில் கட்டப்பட்ட தடுப்பணைகள், பல இடங்களில் சேதமடைந்து, நீர் கசிந்து விரயமாகி வற்றியது. இதனால், தியாகதுருகம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம், "கிடுகிடு'வென குறைந்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளை போலவே, கடந்த ஆண்டு பருவழை அதிகம் பெய்யும் என்று நம்பி, கூடுதலான பரப்பில் கரும்பு பயிரிட்ட விவசாயிகள், நீர் பற்றாக்குறையால் கவலையடைந்துள்ளனர். மின்தட்டுப்பாட்டால் பயிர்களுக்கு போதுமான நீரை பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டு, பயிர் காய்ந்து விடுமோ என்ற தவிப்பும் ஏற்பட்டுள்ளது. கோடையின் துவக்கத்திலேயே தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் இன்னும் இரு மாதங்களுக்கு சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து கரும்பு பயிரை காப்பாற்ற முடியுமா என்ற அச்சம், விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
224
2010-03-25T02:11:00+05:30
தமிழகம்
இளைஞர்களுக்கான பயிற்சி முகாம்
சென்னை : திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தில் இளைஞர்களுக்கான பன்னாட்டு பயிற்சி முகாம் ஏப்., 20ல் துவங்கி ஒரு மாதம் நடைபெற உள்ளது. திருச்சி திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ணா தபோவனத்தில் இளைஞர்களை நல்வழிப்படுத்தும் வகையில், ஒரு மாத பன்னாட்டு பயிற்சி முகாம் வரும் ஏப்., 20ம் தேதி துவங்கி, மே மாதம் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்பு முடித்த 15 வயதுக்கு மேல், 30 வயதுக்குட்பட்டவர்கள் இதில் பங்கேற்கலாம். கட்டணம் ஏதுமில்லை. நோயாளிகள், துர்பழக்கத்திற்கு ஆளானவர்களும் பங்கேற்கலாம். விண்ணப்பங்கள் ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்திற்கு ஏப்., 10ம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டுமென தபோவனம் தெரிவித்துள்ளது.
225
2010-03-25T02:11:00+05:30
தமிழகம்
நெல்லை மாநகராட்சி பட்ஜெட் கவுன்சிலர்கள் வெளிநடப்பு
திருநெல்வேலி:நெல்லை மாநகராட்சி பட்ஜெட்டை கண்டித்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.திருநெல்வேலி மாநகராட்சியின் 2010-11ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மேயர் சுப்ரமணியன் நேற்று சமர்ப்பித்தார். கமிஷனர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். வரவு 91.28 கோடி ரூபாயாகவும், செலவு 101.72 கோடி ரூபாயாகவும் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏழு கோடி ரூபாயாக இருந்த பற்றாக்குறை பட்ஜெட், இந்த ஆண்டில் 10 கோடியானது. பாபநாசம் அணையில் இருந்து குடிநீர் கொண்டு வருவதால், இலந்தை குளத்தில் தீம் பார்க், நேருஜி சிறுவர் அரங்கத்தை மேம்படுத்தல் என பல ஆண்டுகளாக கூறிவரும் திட்டங்களையே, இந்த பட்ஜெட்டிலும் தெரிவித்திருப்பதாகவும், புதிய வளர்ச்சி திட்டங்கள் இல்லாததை கண்டித்தும், தங்கராஜ் தலைமையில் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். சுயேச்சை கவுன்சிலர் கொப்பரை சுப்பிரமணியன், மாநகராட்சி சார்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களில் டெண்டர் விடப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாக கூறினார். இதற்கு மேயர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரும், மேயரை கண்டித்து வெளிநடப்பு செய்தார்.
229
2010-03-25T02:14:00+05:30
தமிழகம்
தமிழகம் முழுவதும் முதல் முறையாக அஞ்சல் துறை மூலம் பாட புத்தகங்கள்
கடலூர் : தமிழகம் முழுவதும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு, முதல் முறையாக அஞ்சல் துறை மூலம் பாடப் புத்தகங்கள் வினியோகிக்கும் பணி நேற்று துவங்கியது. தமிழகம் முழுவதும், 1 முதல் 12ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு பாட நூல் நிறுவனத்திலிருந்து, அந்தந்த மாவட்ட, "குடோன்'களுக்கு, புத்தகங்கள் அனுப்பப்படும். மாவட்ட கல்வித் துறையிடமிருந்து, பள்ளித் தலைமை ஆசிரியர்கள், இப்புத்தகங்களைப் பெற்றுக் கொள்வது வழக்கம். இந்த நடைமுறையில் பல குழப்பங்கள் ஏற்பட்டதால், கடந்த ஆண்டு, துவக்கப்பள்ளிகளுக்கு அஞ்சல் வழியே பாட நூல்கள் அனுப்பப்பட்டன. தாமதமின்றி குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிகளுக்கு சென்றடைந்ததால், இந்த ஆண்டு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு அஞ்சல் வழியே பட்டுவாடா செய்ய, பள்ளி கல்வித்துறை முடிவு செய்தது. ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பிற்கு இந்த ஆண்டு சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட உள்ளது. இதன் காரணமாக இவ்விரண்டு வகுப்புகள் மற்றும் பாடத்திட்டம் மாற்றியமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள தொழிற்கல்வி பாடங்களைத் தவிர, 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கான பாட நூல்களை தமிழ்நாடு பாட நூல் நிறுவனம், பள்ளி கல்வித்துறை மூலம் ஒவ்வொரு மாவட்ட குடோன்களுக்கும் அனுப்பியது. மெட்ரிக் பள்ளிகளைத் தவிர மற்ற அனைத்து பள்ளிகளுக்கும் நேற்று முதல் அஞ்சல் துறை மூலம் அனுப்பப்பட்டது.
230
2010-03-25T02:14:00+05:30
தமிழகம்
இளைஞர் காங்., தேர்தல் முடிவுகள் அறிவிப்பு தோல்வியடைந்தவர்கள் நாற்காலி வீசி ரகளை
சென்னை:மத்திய சென்னை லோக்சபா தொகுதியில் அடங்கிய சட்டசபை தொகுதிகளின் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் ஓட்டுப் பதிவு எண்ணிக்கை நேற்று மாலை வெளியானது. தோல்வி அடைந்த இளைஞர் காங்கிரசார் மறுதேர்தலை நடத்த வலியுறுத்தி, நாற்காலியை எடுத்து வீசி ரகளையில் ஈடுபட்டனர்.தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நடந்து வருகிறது. அண்ணா நகர், ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம், துறைமுகம், வில்லிவாக்கம், எழும்பூர் ஆகிய ஐந்து சட்டசபை தொகுதிகளின் தலைவர் உள்ளிட்ட 10 நிர்வாகிகள் மற்றும் 10 பிரிதிநிதிகளின் தேர்தல் நேற்று நடந்தது.காலை 8 மணிக்கு துவங்கிய தேர்தல் மாலை 5 மணி வரை நடந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மத்திய அமைச்சர் வாசன், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் செல்லக்குமார், ஜே.எம்.ஆரூண் எம்.பி., ஆதரவாளர்கள் உள்ளிட்ட பல கோஷ்டித் தலைவர்களின் ஆதரவாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். தேர்தலில் வாக்களிக்க வந்த இளைஞர்களின் வாகனங்களை, சத்தியமூர்த்தி பவனில் போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால், சத்தியமூர்த்தி பவன் கட்டடத்தின் வெளியே உள்ள ஜெனரல் பீட்டர்ஸ் சாலையில் வாகனங்களை நிறுத்தினர். அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.ஆயிரம் விளக்கு சட்டசபை தொகுதிக்கு கார்த்தி சிதம்பரம் ஆதரவாளர் ரஞ்சன்குமார், வாசன் ஆதரவாளர் தியாகு, செல்லக்குமார் ஆதரவாளர் கோபிநாத் ஆகியோர் போட்டியிட்டனர். துறைமுகம் தொகுதிக்கு வாசன் ஆதரவாளர் யோகானந்த், சேப்பாக்கம் தொகுதிக்கு ஜே.எம்.ஆரூண் ஆதரவாளர் ரயான்பஷீர், சாம்பிரசாத், அண்ணாநகர் தொகுதியின் பிரிதிநிதி பதவிக்கு வாசன் ஆதரவாளர் ஜி.ஆர்.கதிரவன், செல்லக்குமார் ஆதரவாளர் அனுராதா, எழும்பூர் தொகுதியின் பிரிதிநிதி பதவிக்கு வாசன் ஆதரவாளர் தாஸ்பாண்டியன் உட்பட ஏராளமானோர் போட்டியிட்டனர்.மாலை 5 மணிக்கு மேல் ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. சேப்பாக்கம் தொகுதியின் தலைவராக ரயான்பஷீர் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்டவர் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இதனால் மறு தேர்தல் நடத்த வேண்டும் என, தோல்வி அடைந்தவரின் ஆதரவாளர்கள் தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டனர்."மறுதேர்தல் நடத்த முடியாது' என, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்து விட்டதால் ஆத்திரம் அடைந்த இளைஞர் காங்கிரசார் திடீரென்று நாற்காலிகளை தூக்கி சத்தியமூர்த்தி பவன் வெளியே வீசினர். சிலர் உருட்டுக் கட்டை மற்றும் கம்புகளுடன் உள்ளே நுழைந்து கடும் ரகளையில் ஈடுபட்டனர். பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்து, ரகளையில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரசாரை வெளியேற்றினர். போலீசாருக்கும், இளைஞர் காங்கிரசாருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.ஓட்டு எண்ணிக்கை முடிவில், துறைமுகம் தொகுதியின் தலைவராக வாசன் ஆதரவாளர்கள் யோகானந்த், வில்லிவாக்கம் தொகுதியின் தலைவராக மனோகர், சேப்பாக்கம் தொகுதியின் தலைவராக ரயான் பஷீர் ஆகியோர் வெற்றி பெற்றனர். ஆயிரம் விளக்கு தொகுதி தலைவராக கார்த்தி சிதம்பரம் ஆதரவாளர் செல்வம், அண்ணாநகர் தொகுதி தலைவராக செல்லக்குமார் ஆதரவாளர் அனுராதா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
231
2010-03-25T02:15:00+05:30
தமிழகம்
பத்து ஆண்டுகளாக புகை பிடிப்பவருக்கு காச நோய் வாய்ப்பு பத்து மடங்கு அதிகம்
தேனி : பத்து ஆண்டுகளாக தொடர்ந்து புகை பிடித்து வருபவருக்கு, காச நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு பத்து மடங்கு அதிகம் என கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. வளர்ச்சி செயலாக்க குழுமம் மற்றும் பங்குதாரர்கள் சார்பில், உலக காசநோய் தினம் குறித்த கருத்தரங்கம் தேனியில் நடந்தது. திட்ட இயக்குனர் வனஜா தலைமை வகித்தார். தேனி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி துணை முதல்வர் மைத்ரேயி, சுகாதாரப்பணிகள்(காச நோய்) துணை இயக்குனர் பாலாஜி உட்பட பலர் பங்கேற்றனர். உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசகர் ஹரிஹர சுப்பிரமணியம் பேசுகையில், எச்.ஐ.வி., மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள மாவட்டம் தேனி. தமிழகத்தில் பத்து ஆண்டுகளில் 62,300 பேர் காச நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 54,200 பேர் குணமடைந்துள்ளனர். மீதமுள்ள 8,100 பேர் இன்னும் குணமடையவில்லை. இந்நோயால் தினமும் 5000 பேர் இறக்கின்றனர். ஆண்டுக்கு 1.8 மில்லியன் பேர் இறப்பதாக உலக சுகதார நிறுவனம் தெரிவித்துள்ளது. புகை பிடிப்பவர்களுக்கு காசநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். ஒருவர் பத்து ஆண்டுகளாக தொடர்ந்து புகைப்பிடித்து வந்தால், அவருக்கு காசநோய் வருவதற்கான வாய்ப்பு பத்து மடங்கு அதிகம் உள்ளது. அதேபோல் 30, 40 ஆண்டுகளாக புகைப்பிடிப்பவர்களுக்கு நிச்சயம் காசநோய் இருக்கும். 2006 ல் காசநோய் சிகிச்சை எடுத்தவர்களின் எண்ணிக்கையில், இப்போது இரண்டு, மூன்று மடங்கு குறைந்து விட்டது. காசநோய் என்பது காற்றின் மூலம் பரவக்கூடியது. காசநோய் உள்ள ஒருவரை கண்டறிந்து தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு சிகிச்சை அளித்தால் அவர் மூலம் 25 பேருக்கு காசநோய் பரவுவதை தடுக்க முடியும், என்றார்.
235
2010-03-25T02:17:00+05:30
தமிழகம்
தொழில் நுட்ப உதவியாளர் 2-வது பட்டியல் : மின்சார வாரியத்தின் அலட்சியப்போக்கு
தேனி : மின்வாரியத்தில் தொழில் நுட்ப உதவியாளர் பணிக்கு தேர்வானவர்களின் இரண்டாவது பட்டியலை வெளியிடாமல், மின்வாரிய நிர்வாகம் இழுத்தடிப்பு செய்து வருகிறது. தமிழக மின்வாரியத்தில் 2,600 தொழில் நுட்ப உதவியாளர் பணியிடங்கள் உள்ளன. இதில் 2,200 இடங்கள் காலியாக இருந்தன. இந்த காலியிடங்களை பூர்த்தி செய்ய நடத்திய போராட்டங்களுக்கு பின், டிச., 2007க்குள் 1100 தொழில் நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்பவும், மீதமுள்ள பணியிடங்களை மார்ச் 2008க்குள் நிரப்பவும் மின்வாரிய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் 5,500 பேர், "அப்ரண்டீஸ்' முடித்தவர்கள் 4,800 பேர் உட்பட 10 ஆயிரத்து 300 பேர் நேர்முகத்தேர்வுக்கான பட்டியலில் இடம் பெற்றனர். நேர்முகத்தேர்வை குறிப்பிட்ட காலத்தில் நடத்தாமல் இழுத்தடித்தனர். ஒரு வழியாக ஜூலை 2009ல் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது. 1,100 தொழில் நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கு 10 ஆயிரத்து 300 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. இதனால் 2,200 காலி பணியிடங்களையும் நிரப்ப மின்வாரியம் முடிவு செய்து ஒப்புதல் அளித்தது. தகுதியானவர்களின் பட்டியலை தயாரித்து இரண்டு கட்டமாக முடிவுகளை வெளியிட மின்வாரியம் தீர்மானித்தது. இதன்படி,2009 ஆக., 21ல் தேர்வான 1,100 பேரின் பட்டியலை வெளியிட்டது. அடுத்தவாரத்தில் மீதமுள்ள 1100 பேர் பட்டியலை வெளியிடுவதாக கூறினர். அறிவித்தபடி இரண்டாவது பட்டியலை வெளியிடவில்லை. மின்வாரிய பொறியாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் ஆற்காடு வீராசாமி,"விரைவில் தகுதியான 1,100 பேரின் இரண்டாவது பட்டியல் வெளியிடப்படும்,' என்றார். அவர் அறிவித்து ஐந்து மாதங்கள் ஆகியும் நடவடிக்கை இல்லை. நேர்முகத்தேர்வு முடிந்து ஒன்பது மாதங்கள் ஆகியும் இரண்டாவது பட்டியலை வெளியிடாமல் மின்வாரியம் இழுத்தடித்து வருகிறது.
236
2010-03-25T02:17:00+05:30
தமிழகம்
சுற்றுச்சூழல் மாசுபடாமல் காக்கும் மதுரை நிறுவனம்
சுற்றுச் சூழல்பாதிப்பால் நகர வாழ்க்கை நரக வாழ்க்கையாக மாறி வருகிறது. இதற்கு காரணம் இயற்கையை மனிதர்கள் சின்னா பின்னமாக்குவதே. இன்றைய அவசர உலகில் தம்வீட்டு குப்பையை அடுத்த வீட்டு வாசலில் குவிப்போரே அதிகம். நம்மை சுற்றியுள்ள பகுதியை, சுத்தமாக, ஆரோக்கியமாக, மாசுபடுவதில் இருந்து பாதுகாக்கும் பொதுநலம் உள்ளோர் வெகு சிலரே. சுற்றுச் சூழலை மாசுபடுத்துவதில் தொழில் நிறுவனங்களுக்கு அதிக பங்குண்டு. அவற்றை கட்டுப்படுத்த தனி வாரியமே இருந்தாலும், பல நிறுவனங்களை முழுமையாக கண்காணிக்க முடியவில்லை. எனவே அவை தாமாகவே முன்வந்தால் தான், சுற்றுச் சூழலை காக்க முடியும். மதுரை விளாங்குடி பொன்நகர் முதல் தெருவில் ஜோஸ்லின் எலக்ட்ரிக்கல் இண்டஸ் ட்ரீஸ் நிறுவனம் உள்ளது. 40க்கும் மேற் பட்ட தொழிலாளர்கள் பணியாற்றும் இந்நிறுவனம் எலக்ட் ரிக்கல் "பிட்டிங்ஸ்' தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. டியூப் லைட்டுகளுக்கான பிரேம்கள், பிட்டிங்குகள், அந்த லைட்டுகளை "கவர்' செய்யும் வகையில் தகரத்திலான "ஷேட்'கள், சோக்குகளை தயார் செய்கின்றன. பல ஆண்டுகளாக செயல்படும் இந்நிறுவனம், பத்தாண்டுகளுக்கு முன் தீவிர தயாரிப்பில் இறங்கியது. மாடி வீடுபோன்ற கட்டடத்தில் இயங்கி வருகிறது. சுற்றிலும் குடியிருப்புகள் முளைக்க, இந்நிறுவனத்தினர் சுற்றுச் சூழலில் ஆர்வம் காட்டினர். இங்கு பிட்டிங்குகள் தயாரிக்கப்படுவதால் எந்நேரமும் சத்தம் எழும். அவற்றின் மீது "பெயின்ட்' ஸ்பிரே செய்கின்றனர். வார்னிஷ் பயன்பாடும் உள்ளது. இதனால் அவற்றின் மணம் நிறுவனம் முழுக்க வியாபித்துள்ளது. இது வெளியில் பரவுவதை தவிர்க்க "பெயின்ட் பூத்' என்ற ஒரு சேம்பரை உருவாக்கி உள்ளனர். இதில் வைத்து பெயின்டை ஸ்பிரே செய்யும்போது, அதன் துளிகள், சிதறல்கள் காற்றால் உள்ளிழுக்கப் பட்டு, சிம்னி வழியாக வெளியேறுகிறது. இதனால் அறைக்குள் இருக்கும் பெயின்ட் வாசனை அப்படியே வெளியேற்றப்படுகிறது. வெளியில் மரம் இருப்பதால் அது அதிகம் பரவாமல் தடுக்கப்படுகிறது. இதேபோல தகடு வெட்டும், பிரஷ்ஷிங் செய்யும் சத்தமும் வெளியில் பரவுவதில்லை. இதற்காகவே காம்பவுண்ட் உள்ளும், புறமும், நெட்டிலிங்கம், அசோகா மரங்களை நட்டுள்ளனர். அருகில் உள்ள காலியிடத்தில் வேம்பு, வாகை, வாவரைக்காய்ச்சி போன்ற மரங்களை வளர்க்கின்றனர். அடுத்து நிறுவனத்தில் சேரும் கழிவு நீரையும் தேவையின்றி ரோட்டில் ஓடவிடுவதில்லை. அருகிலேயே ஐந்தடி அகலம், 15 அடி ஆழத்திற்கு குழிதோண்டி, கூழாங் கற்களால் நிரப்பி, கழிவுநீரை பூமிக்குள் இறக்கி விடுகின்றனர். இதனால் நிலத்தடி நீர்மட்டமும் பாதுகாக்கப் படுகிறது. விற்பனை பிரதிநிதி ஜெயராஜ் கூறுகையில், ""சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்பதற்காக இதுபோன்ற நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளோம்,'' என்றார்.
237
2010-03-25T02:18:00+05:30
தமிழகம்
போராட தயாராகும் பள்ளி அலுவலர்கள்
மதுரை: தமிழ்நாடு உதவிபெறும் பள்ளி அலுவலர்கள் சங்க மாநில தலைவர் துரைராஜ் அறிக்கை:சங்கத்தின் செயற்குழு கூட்டம் ஈரோட்டில் நடந்தது. வேலை நியமன தடைச்சட்டம் ரத்து செய்யப்பட்டு நான்காண்டுகளாகி விட்டது. அதன் பின்னும், பல ஆண்டுகளாக காலியாக கிடக்கும் இளநிலை உதவியாளர், பதிவு எழுத்தர், நூலகர், ஆய்வக உதவியாளர், அலுவலக உதவியாளர், காவலர், துப்புரவு பணியாளர் ஆகிய பணியிடங்களை நிரப்ப அனுமதி இல்லை. வேலை நியமன தடைச் சட்டம் அமலில் இருந்தபோது, சிறுபான்மை பள்ளிகளில் நியமிக்கப் பட்ட பணியிடங்களில் உள்ளோருக்கு சில பகுதிகளில் கோர்ட் உத்தரவுப்படி சம்பளம் வழங்கப்படுகிறது. பல மாவட்டங்களில் மேல்முறையீடு செய்துள்ளதால் பணியாளர் வாடும் நிலையில் உள்ளனர். இப்போக்கை எதிர்ப்பதுடன், மேல்நிலைப் பள்ளிகளுக்கு தனியாக பணியாளர் விகிதம் நிர்ணயம் செய்ய வேண்டும். கூடுதல் பணியிடங்கள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இக்கூட்டத்தில் ஈரோடு மாவட்ட தலைவர் தங்கவேலு, மாநில பொதுசெயலாளர் லூர்துமரியராஜ், பொருளாளர் ராஜாமணி உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
238
2010-03-25T02:18:00+05:30
தமிழகம்
பேச்சு, பேட்டி, அறிக்கை
இ.கம்யூ., மாநிலச் செயலர் தா.பாண்டியன் பேச்சு :சேர, சோழ, பாண்டிய மன்னர்களுக்கு கிடைக்காத வாய்ப்பான தமிழகத்தை ஆளும் வாய்ப்பை கருணாநிதிக்கு மக்கள் கொடுத்தனர். வீராணம் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றாமல் விட்டதைப்போல ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தையும் கிடப்பில் போட்டு விட்டார். மீனுக்கு தூண்டில் போடுவதுபோல் கலர், "டிவி' உள்ளிட்ட இலவசத் திட்டங்களை நிறைவேற்றி மக்களை தமிழக அரசு ஏமாற்றி வருகிறது.இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் அறிக்கை: சிறுபான்மையினருக்கு வாரி வழங்கும் மத்திய, மாநில அரசுகள் பெரும்பான்மையினருக்கு செய்தது துரோகம் தான். மதம் மாறிய கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும், தன்மானத்துடன் வாழும் இந்து எஸ்.சி., - எஸ்.டி.,களின் சலுகைகளை பறிக்க துடிக்கின்றனர். இதன்மூலம், ஒட்டுமொத்த மதமாற்றத்தை அறுவடை செய்யலாம் என்பதே அவர்களின் சதி. இதை இந்துக்கள் அனுமதிக்கக் கூடாது.தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேச்சு: "பென்னாகரத்தை, "பொன்' நகரமாக மாற்றுவேன்' என, ஜெயலலிதா கூறியுள்ளார். 10 ஆண்டுகால ஆட்சியில் பொன் நகரமாக மாற்றாமல், தகரமாக ஏன் வைத்திருந்தார். பஞ்சம் பிழைக்க சென்றவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருந்தால், ஏன் வெளியூர் போகின்றனர்.பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: காவிரி கரையிலிருந்து 100 கி.மீ., தொலைவில் உள்ள பெங்களூருக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை கர்நாடகம் நிறைவேற்றியுள்ளது. ஆனால், காவிரி கரையில் வாழும் எங்களுக்கு ஆண்டவர்களும், ஆளுகிறவர்களும் இதுவரை தண்ணீரைக் கொண்டு வர ஆர்வம் காட்டவில்லை என, பென்னாகரம் மக்கள் ஆதங்கமடைந்துள்ளனர். அவர்களுக்கு தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள்.கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் பேச்சு: சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட உழைக்கும் பெண்களின் வாழ்க்கை நிலையில் மாற்றத்தை உருவாக்க நாம் பாடுபட வேண்டும். வரலாற்றை முன்னோக்கிப் பார்த்தால் போராட்டங்களை சந்தித்து தான் பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர்.தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் ராஜேந்திரன் பேச்சு: தமிழ்மொழி தொன்மையான மொழி என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. 1956ல் தமிழ்மொழி ஆட்சி மொழியாகச் சட்டம் இயற்றப் பட்டுள்ளது. இதன்படி, அனைத்து அலுவலகங்களிலும் பணிபுரியும் அலுவலர்கள் கண்டிப்பாக தமிழ் மொழியிலேயே அலுவலக நடைமுறைகளை மேற் கொள்ள வேண்டும்.
240
2010-03-25T02:19:00+05:30
தமிழகம்
பங்குனி உத்திர திருவிழா பழநிக்கு சிறப்பு பஸ்கள்
திண்டுக்கல்: பழநி பங்குனி உத்திர திருவிழாவிற்காக, பல் வேறு இடங்களில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.அரசு போக்குவரத்துக்கழக பொதுமேலாளர் அறிக் கை:பழநி கோயிலில், மார்ச் 29ல் பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது. இதற் காக மார்ச் 28 முதல் மார்ச் 30வரை, அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, கரூர், சேலம், ஈரோடு, கோவை,திருப்பூர் பகுதிகளில் இருந்து பழநிக்கும், அங்கிருந்து பிற இடங்களுக்கும் பக்தர்களின் தேவைக்கேற்ப பஸ்களை இயக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.மேலும் பக்தர்களுக்கு உதவும் வகையில், முக்கிய பஸ் ஸ்டாண்ட்களில் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
242
2010-03-25T02:20:00+05:30
தமிழகம்
காங்., பொறுப்பாளர் தேர்தல் வாசன் கோஷ்டிக்குள் மோதல்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடந்த காங்.,தொகுதி பொறுப் பாளர் தேர்தலில் மோதல் ஏற்பட்டது. தண்டபாணி எம்.எல்.ஏ., தலையிட்டு சமாதானப்படுத்தினார். திண்டுக்கல், நத்தம், நிலக்கோட்டை ஆகிய மூன்று சட்டசபை தொகுதிக்கு காங்., பொறுப்பாளர் கள் தேர்தல் நேற்று திண் டுக்கல் நாராயண அய்யர் திருமண மண்டபத்தில் நடந்தது. ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் ஒரு தலைவர், துணை தலைவர், 10 பிரதிநிதிகள் உட் பட 20 பேர் தேர்வு செய்வதற்கு கட்சியினர் ஓட்டு போட்டனர். வாசன், சிதம் பரம் கோஷ்டியினருக்கு இடையே ஓட்டு கேட்பதில் கடும் போட்டி இருந் தது. வாசன் அணியைச் சேர்ந்த சுரேஷ்குமாருக் கும், ஒய்.எம்.ஆர்.,பட்டி யை சேர்ந்த மணிகண்டனுக்கும் ஓட்டு கேட்பது தொடர் பாக பிரச்னை ஏற் பட்டது. இதனால் மண்டபத்தில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. வாசன் அணிக் குள் மோதல் இருக்கக்கூடாது என தண்டபாணி எம்.எல்.ஏ., செய்தி தொடர்பாளர் ரவி சுப்ரமணியம் இவர் களை சமாதானப்படுத்தினர். இருந்தாலும் வாக்குவாதம் முற்றியதால் நகர் வடக்கு இன்ஸ் பெக்டர் முருகன் தலைமையில் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று சமாதானம் செய்ததையடுத்து அமைதியாக தேர்தல் நடந்தது.
243
2010-03-25T02:20:00+05:30
இந்தியா
தேசிய நெடுஞ்சாலையாக 10 ஆயிரம் கி.மீ., மாநில சாலைகள் தரம் உயர்வு
புதுடில்லி : மாநில அரசின் பராமரிப்பில் உள்ள சாலைகளில் 10 ஆயிரம் கி.மீ., தொலைவிலான சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்த, மத்திய அமைச்சர்கள் குழு அனுமதி வழங்கி உள்ளது. நாட்டின் பல்வேறு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்தும் 50 ஆயிரம் கி.மீ., தொலைவிலான சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தக் கோரி, மத்திய அரசுக்கு கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. இதில், 10 ஆயிரம் கி.மீ., தொலைவிலான சாலையை, தேசிய நெடுஞ்சாலைகளாக மேம்படுத்த, தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டத்தின் புதுப்பிக்கப்பட்ட தொழில்நுட்பம் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு, கொள்கையளவில் அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து, அது தொடர்பான நடைமுறைகள் விரைவில் துவங்க உள்ளன. மாநில அரசின் சாலைகளில் எவற்றை, தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்துவது என்பது குறித்து அமைச்சரவை ஆய்வு செய்து வருகிறது. இதற்காக, எந்த சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்த வேண்டும் என்ற முன்னுரிமை பட்டியல் வழங்குமாறு, மாநில அரசுகளிடம், மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தற்போது, இந்தியாவில் 70 ஆயிரத்து 934 கி.மீ., தொலைவில், தேசிய நெடுஞ்சாலைகள் அமைந்துள்ளன. இப்போது மாநில அரசின் சாலைகளில், 10 ஆயிரம் கி.மீ., தொலைவிலான சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாக மேம்படுத்தப்பட்டால், பின் நாட்டின் தேசிய நெடுஞ்சாலையின் தொலைவு, 80 ஆயிரம் கி.மீ., ஆக அதிகரிக்கும்.
245
2010-03-25T02:21:00+05:30
இந்தியா
மின் திருட்டால் ரூ. 30 ஆயிரம் கோடி இழப்பு: கட்டண வசூலில் குளறுபடி
புதுடில்லி : இந்தியாவில், மின் திருட்டு மற்றும் சரியான கட்டண வசூலிப்பு நடைமுறை இல்லாமை போன்றவற்றால், மின் துறைக்கு ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. இதுகுறித்து திட்டக் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"மின்சாரத்தை நுகர்வோரிடம் கொண்டு சேர்ப்பதற்கான செலவு, கடந்த 2005-06ம் ஆண்டு யூனிட்டிற்கு 3.60 ரூபாயாக இருந்தது. அது, 2009-10ம் ஆண்டு, யூனிட்டிற்கு 4.16 ரூபாயாக அதிகரித்தது. அதுமட்டுமல்லாமல், மின் கட்டணங்களும் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் அரசு விழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்காக, உள்ளூர் செல்வாக்கை வைத்து, கொக்கி போட்டு மின் இணைப்பு ஏற்படுத்தி, மின்சாரத்தை பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. இதை தவிர சில மாநிலங்களில், விவசாய நிலங்களில் பயன்படுத்தப்படும் மோட்டார் பம்ப் போன்றவற்றிற்காகவும் மின் திருட்டு நடைபெறுகிறது. இவை மட்டுமல்லாமல், சில மாநிலங்களில் மின்சார வினியோகத்தில் "த்ரீ பேஸ்' போன்றவற்றிற்கு சரியான மின் கணக்கீடு முறை இல்லாமல், குளறுபடிகள் காணப்படுகின்றன. இதனால், மின் திருட்டு மற்றும் சரியான கணக்கீடு இல்லாமையால், ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, இந்த நஷ்டத்தை சரிசெய்ய, மின் வினியோகத் துறையின் செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும் என, திட்டக் கமிஷனின் இடைக்கால மதிப்பீட்டு அறிக்கை பரிந்துரைத்துள்ளது.
246
2010-03-25T02:21:00+05:30
தமிழகம்
மூணாறில் கட்டுமான பணிகள் நிறுத்தத்தால் தொழிலாளர் பாதிப்பு
மூணாறு: மூணாறில் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக கேரளா ஐகோர்ட் கட்டுமான பணிகளுக்கு தடை விதித்துள்ளதால், கழிப்பறை வசதி கூட செய்து கொடுக்காத நிலையில் தொழிலாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மூணாறில் அரசு நிலங்கள் பெரும் அளவில் ஆக்கிரமிக்கப்படும், சட்ட விரோதமாகவும் கட்டடங்கள் கட்டப்பட்டுள் ளன. இதனால் மூணாறில் சுற்றுப்புற சூழல் பாதிக்கப் பட்டு, பசுமை இழந்து வருவதாக சமூக அமைப்பினர் சார்பில் கேரளா ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து மூணாறில் கட்டுமான பணிகளை நடத்த இரண்டு மாதங்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளதாக, சென்ற மாதம் கேரள ஐகோர்ட் உத்தரவிட்டது. இதனால் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டது. இதனை நம்பி உள்ள தொழிலாளர்கள் பணிகள் இன்றி சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இப்பகுதியில் உள்ள தனியார் தேயிலைத்தோட்ட நிர்வாகம் உள்ள தனியார் தேயிலைத் தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு வீட்டுடன் சேர்த்து கழிப்பறைகளை கட்டிக் கொடுக்கும் பணி நடந்து வந்தது. ஐகோர்ட்டின் உத்தரவால் இதற்கான பணிகள் பல்வேறு எஸ்டேட்டுகளில் பாதியில் நிறுத்தப் பட்டது. கட்டுமான பணிகள் தொடர முடியாத நிலையில் கழிப்பறை வசதியின்றி தோட்ட தொழிலாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தொழிலாளர்களுக்கு கழிப்பறை வசதி செய்து கொடுப்பதற்கு தோட்ட நிர்வாகம் மாற்று நடவடிக்கை ஏதேனும் எடுக்கவேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
249
2010-03-25T02:22:00+05:30
தமிழகம்
கேராள செல்லும் ஜீப்கள் விபத்துக்குள்ளாவது தொடர்கிறது: அதிவேகம், கூடுதல் தொழிலாளர்களை ஏற்றிச்செல்லும் விபரீதம்.
கூடலூர்: கேரளாவில் உள்ள எஸ்டேட் வேலைக்கு தமிழகத்திலிருந்து பெண்களை ஏற்றிச் செல்லும் ஜீப்புகள் அதிவேகமாகவும், கூடுதலான ஆட்களையும் ஏற்றிச் செல்வதால் விபத்துகள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. கூடலூர், கம்பம் பகுதியில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான பெண்கள் கேரளாவில் உள்ள ஏலக்காய் எஸ்டேட் வேலைகளுக்கு செல்கின்றனர். இவர்களை அழைத்து செல்வதற்காக ஏராளமான ஜீப்புகள் உள்ளன. தினமும் அதிகாலை 5.30 மணியில் இருந்து காலை 7 மணி வரையில் கூடலூர் மெயின் ரோட்டில் எஸ்டேட் வேலைக்கு ஏற்றி செல்வதற்காக ஜீப்புகள் வரிசையாக நிற்கும். ஒவ்வொரு ஜீப்புகளிலும் குறைந்தது 15 பெண்கள் முதல் 20 பெண்கள் வரை ஏற்றிச் செல்கின்றனர். பெண்கள் மட்டுமின்றி ஜீப்புகளில் கேரளாவிற்கு கொண்டு செல்ல அரிசி, காஸ் சிலிண்டர், காய்கறிகள் உள்ளிட்ட ஏராளமானவைகளும் கொண்டு இதில் எடுத்துச்செல்லப்படுகிறது. ஏற்கனவே பெண்கள் உட்கார முடியாத நிலையில் உள்ள ஜீப்புகளில் பொருட்களும் ஏற்றிச் செல்வதால் ஜீப் ஒரு பக்கம் சாய்ந்த நிலையில் செல்லும். இது மட்டுமின்றி கேரளாவில் காலை 7.30 மணிக்கு வேலையை தொடங்க வேண்டும் என்பதால் ஜீப் டிரைவர்கள் அதிவேகமாக ஓட்டிச் செல்கின்றனர். கடந்த ஆறு மாதங்களில் பத்துக்கும் மேற்பட்ட ஜீப் விபத்துகள் கூடலூரில் இருந்து குமுளி செல்லும் ரோடுகளில் நிகழ்ந் துள்ளது. குமுளி மலைப்பாதையில் ஐந்து மாதங்களுக்கு முன் நடந்த விபத்தில் பெண்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். அடிக்கடி இதே போல் விபத்து நடந்து கொண்டிருக்கும் நிலையில் இதனை கட்டுப்படுத்த போக்குவரத்து துறை அதிகாரிகளோ, போலீசாரோ இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. நெடுஞ்சாலைத் துறை போலீசார், தினந்தோறும் 20க்கும் மேற்பட்ட பெண்களை ஏற்றிக் கொண்டு வேலைக்கு செல்லும் ஜீப்புகளை வேடிக்கை பார்த்து வண்ணம் உள்ளனர். பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன் கேரளாவிற்கு தோட்ட வேலைக்கு கூடுதல் பெண்களை ஏற்றிச் செல்லும் ஜீப்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
250
2010-03-25T02:22:00+05:30
இந்தியா
வரதட்சணை தண்டனையில் தப்ப புது சட்டம் வருகிறது
புதுடில்லி : வரதட்சணை கொடுப்பவர்கள், வாங்குபவர்களுக்கு எதிராக புகார் கொடுத்துவிட்டு, தண்டனையில் இருந்து தப்பலாம் என்ற வகையில், புதிய சட்டதிருத்தம் வர உள்ளது. தற்போதைய வரதட்சணை தடுப்பு சட்டத்தின் கீழ், வரதட்சணை கொடுப்பவர்கள் மற்றும் வாங்குபவர்கள் இருவருக்குமே சமஅளவு தண்டனை வழங்கப்படுகிறது. அதாவது, இருவருக்கும் குறைந்தது ஐந்தாண்டு சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அல்லது கொடுக்கும் வரதட்சணையின் மதிப்புக்கு ஈடான அபராதம் ஆகியவற்றில் எது அதிகமோ, அது தண்டனையாக வழங்கப்படும். இவ்வாறு சட்டம் இருந்தாலும் மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் இடையே வரதட்சணை கொடுப்பது மற்றும் வாங்குவது இரண்டுமே வழக்கத்தில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த சட்டத்தில் தற்போது திருத்தம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "வரதட்சணை தடுப்பு சட்டத்தில் கொண்டு வரப்படும் திருத்தத்தின் படி, மணமகள் வீட்டார், தாங்கள் மணமகன் வீட்டாருக்கு கொடுத்த வரதட்சணை குறித்து போலீசில் புகார் செய்து விட்டு, தண்டனையில் இருந்து தப்பலாம். இதனால், மணமகள் வீட்டாருக்கு எந்த பாதிப்பும் இல்லை' என்றார். வரதட்சணை கொடுப்பவர்கள், தானே முன்வந்து புகார் கொடுத்தால், அவர்களை குற்றவாளிகளாக கருதாமல், பாதிக்கப்பட்டவர்களாக பார்க்க, இந்த திருத்தம் முதல் முறையாக வழி வகுத்துள்ளது. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சகம், இந்த சட்டத்திருத்தத்தை விரைவில் கேபினட்டின் ஒப்புதலுக்காக அனுப்ப உள்ளது. கேபினட் ஒப்புதல் வழங்கியதும், பார்லிமென்ட்டில் அறிமுகப்படுத்தப்படும். இதுகுறித்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில்,"வரதட்சணை தடுப்பு சட்டம் மணமகள் வீட்டாருக்கு எவ்வித சலுகையும் அளிப்பதில்லை என்ற புகார் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதனால், மணமகள் வீட்டார், வரதட்சணை தொடர்பான புகார்களை தெரிவிக்க முன் வருவதில்லை. இந்த தடையை நீக்குவதே, இந்த சட்டத்திருத்தத்தின் முக்கிய நோக்கம்' என்றார். இதை தவிர மற்றொரு திருத்தமும், இச்சட்டத்தில் மேற்கொள் ளப்பட உள்ளது. அதாவது, மணமகன் அல்லது மணமகள் வீட்டார் தங்களுக்குள் வழங்கும் பரிசு பொருட்களும், தற்போதைய சட்டப்படி வரதட்சணையாக கருதப்படுகிறது. எனவே, இருவீட்டார் இடையே வழங்கப்படும் பரிசுப் பொ ருட்களை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட உள்ளது; இல்லையென்றால், அதுவும் வரதட்சணையாக கருதப்படும். சமூக நெருக்கடி காரணமாகவே, மணமகள் வீட்டார் வரதட்சணை கொடுக்கின்றனர் என்ற தொடர் விவாதத்தின் காரணமாகவே, இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
251
2010-03-25T02:23:00+05:30
தமிழகம்
தீயணைப்பு வீரர் தற்கொலை
போடி: போடி காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்துச்செல்வம் (29). போடி தீயணைப்பு நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும், மனைவி தாமரைச்செல்விக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. மனமுடைந்த முத்துச்செல்வம் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பிராந்தியில் பூச்சை மருந்தை கலந்து குடித்தார். தேனியில் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டதில் இறந்தார். போடி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
252
2010-03-25T02:23:00+05:30
இந்தியா
குளுகுளு சிம்லாவில் வெயில் தலைதூக்குது
சிம்லா : கோடை காலம் துவங்குவதற்கு முன்னரே, இமாச்சல் பிரதேசத்தில் உள்ள சிம்லாவில் அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 8 டிகிரி முதல் 10 டிகிரி வரை அதிகரித்து காணப்படுகிறது. இதுகுறித்து, சிம்லா வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறியதாவது: கடந்த 2004ம் ஆண்டு, மார்ச் மாதம் 7ம் தேதி வெப்பநிலை 25.5 டிகிரி செல்சியசை எட்டியது. இந்தாண்டு, குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் முதல் 7 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்துள்ளது. சிம்லாவை தவிர தரம்சாலா, பனி சூழ்ந்த பிரதேசங்களான லாகவுல் ஸ்பிட்டி மற்றும் கின்னவுர் ஆகிய இடங்களில் வெப்பம் அதிகமாக நிலவுகிறது. இமாச்சல் பிரதேச மாநிலம் முழுவதும் வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அருகில் உள்ள மாநிலமான ஜம்மு காஷ்மீர் கூட, இம்மாநிலத்தில் அதிகரித்து வரும் வெப்பநிலையை குறைக்க உதவவில்லை. எப்போதும் லாகவுல் ஸ்பிட்டி பகுதிக்கு செல்லும் வழியில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக, அப்பகுதிக்கான போக்குவரத்து தடைபடுவது வழக்கம். ஆனால், அந்த பகுதியில் கூட, இந்தாண்டு வெப்பநிலை வழக்கத்தை விட 6 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. சுற்றுலா தலமான தரம்சாலாவில், வெப்பநிலை இயல்பை விட 8 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. இப்பகுதிகளில் பனிப்பொழிவு அதிகரித்தால் தான், வெப்பநிலை குறையும். ஆனால், அதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து, இமாலயன் சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி மைய மூத்த விஞ்ஞானி ஜே.சி.குனியால் கூறுகையில்," உலக வெப்பமயமாதல் மற்றும் கார்பன் வெளியேற்றம் அதிகரித்தல் ஆகியவையே இமாலயன் பகுதியில் வெப்பநிலை அதிகரிப்பிற்கான காரணங்கள்' என்றார்.
253
2010-03-25T02:23:00+05:30
தமிழகம்
அரசு இடத்தை அதிக தொகைக்கு வாடகை கேட்டும் குறைவாக விடுவது ஏன் : கவுன்சிலர்கள் கேள்வி
சிவகாசி: சிவகாசி நகராட்சி கூட்டம் தலைவர் ராதிகாதேவி தலைமையில், துணைத்தலைவர் அசோகன், கமிஷனர் விஜயராகவன் முன்னிலையில் நடந்தது.முனீஸ்வரன்: பஸ்ஸ்டாண்டில் காலியிடத்தை மாதவாடகைக்கு குத்தகை அடிப்படையில் விடுவதற்கு 1200, 1300 ரூபாய்க்கு அதிக தொகை என நிர்ணயம் செய்து தீர்மானம் வந்துள்ளது. ஆனால் அதே இடத்தை மாதம் ரூ.3000க்கு வாடகைக்கு எடுத்து கொள்ள டிராப்ட் அனுப்பியுள்ளார்கள். அது பற்றிய எந்த விபரமும் தெரிவிக்கவில்லை. ஏன் அதிகமாக வாடகை கொடுப்பதை ஏற்க வில்லை. கமிஷனர்: டெண்டரில் குறிப்பிட்ட விதிமுறைகள் படி டிராப்ட் வரவில்லை. டெண்டரில் குறிப்பிட வேண்டும்.துணைத்·தலைவர்: இந்த இடத்தை வாடகைக்கு விடுவதற்கு நகராட்சி உயர் அதிகாரிகள் சிபாரிசு செய்துள்ளனர். அதுபற்றிய விபரம் தனியாக கூறுகிறேன்.அய்யப்பன்: நகராட்சியில் டெண்டர் விவகாரத்தில் தவறு நடக்கிறது. இதனை ஏன் கண்டுகொள்வதில்லை என தெரியவில்லை. 1200க்கு வாடகைக்கு கேட்ட இடத்தை 4000 ரூபாய்க்கு எடுத்துக் கொள்ள டிராப்ட் அனுப்பியும் ஏன் நிராகரிக்கப்பட்டது என விளக்கம் தரவேண்டும்.துணைத்தலைவர்: சொத்து வரி, தொழில் வரியில் இதுவரை 95 சதவீதம் வசூல் இலக்கை எட்டியுள்ளோம். மீதியுள்ள தொகையையும் வசூலிக்க கவுன்சிலர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கூட்டத்தில் 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
254
2010-03-25T02:23:00+05:30
தமிழகம்
ஹர்கிஷன் சிங் பிறந்த நாள் பிரகாஷ் கராத் புது தகவல்
புதுடில்லி:விவசாய குடும்பத்தில் பிறந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் ஹர்கிஷன் சிங்கின் உண்மையான பிறந்த தேதி தெரியாததால், தியாகி பகத் சிங் மறைந்த தினத்தை தனது பிறந்த தேதியாக அறிவித்துக் கொண்டார்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித்தின் 94வது பிறந்த நாள், டில்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. ஹர்கிஷன் சிங்கின் வாழ்க்கை வரலாறு பற்றிய நூல், இந்த விழாவில் வெளியிடப் பட்டது. முதல் பிரதியை ஹர்கிஷன் மனைவி ப்ரீதம் கவுர் பெற்றுக்கொண் டார். இவ்விழாவில் மா.கம்யூ., பொதுச்செயலர் பிரகாஷ் கராத் பேசுகையில், "ஹர்கிஷன் சிங்கை போன்ற கட்சியின் மூத்த தலைவர்கள் ஒன்பது பேரின் புத்தகங்களை வெளியிட திட்டமிட்டுள் ளோம். கடந்த 1916ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் விவசாயக் குடும்பத் தில் பிறந்தவர் ஹர்கிஷன். அவரது பிறந்த நாளை அவரின் பெற்றோர் குறித்து வைக்கவில்லை. பஞ்சாபைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங் தூக்கிலிடப் பட்ட நாளை, ஹர்கிஷன் சிங் தனது பிறந்த நாளாக அறிவித்துக் கொண்டார் என, இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹர்கிஷன் சிங் மூலம் நாம் நிறைய விஷயங் களை தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. கட்சிக் காகவும், விவசாயிகளின் மேம்பாட்டுக்காகவும் அவர் ஆற்றிய பணி மகத் தானது' என்றார்.
255
2010-03-25T02:24:00+05:30
இந்தியா
முஸ்லிம் வாரிய பதவிகளில் பெண்கள் பலம் அதிகரிப்பு
லக்னோ : அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய உறுப்பினர்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் லக்னோவில், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் 21வது மாநாடு நடந்தது. இதன் உறுப்பினர்களில் பெண்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஏற்கனவே வாரியத்தின் நிறுவனரும் உறுப்பினருமான பேகம் நசீர் இக்தெதார் அலி என்பவருடன், லக்னோவைச் சேர்ந்த ருக்ஷானா லரி மற்றும் சாபியா நசீம், கோல்கட்டாவின் நூர்ஜஹான் ஷகீல், ஐதராபாத்தின் அஸ்மா ஜோரா ஆகிய நான்கு பெண்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வழிசெய்யும் விதத்தில், வாரியத்தின் விதிமுறைகளில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 41 லிருந்து 51 ஆக உயர்த்துவதற்கு ஏற்பத் திருத்தங்கள் செய்யப்பட்டன. செயற்குழுவில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேகாலயா, திரிபுரா, அசாம் மற்றும் லடாக் பகுதிகளிலிருந்தும் பெண்கள் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
257
2010-03-25T02:24:00+05:30
தமிழகம்
கிராமங்களில் மின் தடை நேரம் அதிகரிப்பு: 10ம் வகுப்பு மாணவர்கள் தவிப்பு
விருதுநகர்: கிராமப்புறங்களில் மின்தடை அதிகரிப்பு செய்திருப்பதால், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.கோடைகாலம் துவங்கி விட்டதால், மின் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மின் சப்ளை செய்ய முடியாமல் திணறும் மின்வாரியம் வருகின்றனர். அறிவிக்கப்படாமல் மின் தடை செய்கின்றனர். நகர் புறங்களில் மின் தடை செய்தாலும், நுகர்வோர் தொடர்ந்து "பவர் ஹவுஸ்'க்கு போன் மூலம் தொடர்பு கொண்டு தொல்லை செய்வதாலும், முக்கிய அதிகாரிகள் நகரத்தில் இருப்பதாலும் அதிகநேரம் மின் தடை செய்யப்படுவதில்லை. அதிக பட்சமாக 15 நிமிடத்திலிருந்து 45 நிமிடம் வரை மட்டுமே மின் தடை செய்கின்றனர்.கிராமப்புறங்களில் அதிகரிப்பு: ஆனால், கிராமப்புறங்களில் மின் தடை நேரம் பல மணி நேரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் 3 முதல் 6 மணி நேரம் வரை மின் தடை செய்யப்படுகிறது. இதனால் கிராமப்புறங்களில் உள்ள பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இரவு நேரங்களில் சிம்னி விளக்கு, மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்து வருகின்றனர். ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளிகளும் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மேல்நிலைத் தொட்டிகளில் குடிநீர் ஏற்றமுடியாத நிலையில் தண்ணீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.
258
2010-03-25T02:25:00+05:30
தமிழகம்
ராணுவ வீரர் மீது வழக்கு
ஸ்ரீவில்லிபுத்தூர்: வன்னியம்பட்டி அருகே வைத்தியலிங்காபுரத்தை சேர்ந்தவர் அக்னி ராஜ்(27). ராணுவ வீரரான இவரது மைத்துனி சாந்தி(15)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் காளீஸ்வரி மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் அதே பள்ளி மாணவர் ராஜாவுக்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பழக்கம் ஏற்பட்டது. இதையறிந்த அக்னிராஜ், பள்ளி தலைமையாசிரியர் கோவிந்தராஜிடம் சத்தம் போட்டார். இதை தட்டிக் ச்கேட்ட அலுவலக உதவியாளர் சிவ பெருமானை(50), அக்னிராஜ் மிரட்டினார். இது தொடர்பாக வன்னியம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
260
2010-03-25T02:25:00+05:30
தமிழகம்
ராஜதானி எக்ஸ்பிரசை காப்பாற்றியவர்களுக்கு மம்தா பரிசு
புதுடில்லி:புவனேஸ்வரிலிருந்து டில்லி நோக்கி வந்து கொண்டிருந்த ரயில், மாவோயிஸ்ட்களால் தகர்க்கப்பட்ட தண்டவாளத்தில் வரும் போது தடம் புரண்டது. இச்சம்பவத்தில் ரயிலை திறமையாகக் கையாண்டு, பாதிப்பு ஏற்படாமல் காத்த அதன் பணியாளர்களுக்கு, மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி பரிசு அறிவித்துள்ளார். சமீபத்தில், ஒரிசா தலைநகர் புவனேஸ்வரிலிருந்து டில்லி நோக்கி வந்து கொண்டிருந்த ராஜதானி எக்ஸ்பிரஸ், கயா - மொகல் சராய் ரயில் நிலையம் அருகில் தடம் புரண்டது. மாவோயிஸ்ட்கள் அந்த தண்டவாளத்தை வெடி வைத்து தகர்த்தது தான், அந்தச் சம்பவத்துக்கு காரணம் என்று தெரிய வந்தது.இதையடுத்து, மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, அந்த ரயிலின் ஓட்டுனர் குழுவைப் பாராட்டி வெளியிட்ட அறிக்கையில், "மிகவும் விழிப்புணர்வோடு, தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருந்து, அவசர நிலை பிரேக்குகளை சரியாகச் செயல்படுத்தி, ரயிலை அதன் ஓட்டுனர் குழு நிறுத்தியுள்ளது. இதனால், பெரும் விபத்து மற்றும் சேதம் தவிர்க்கப்பட்டது. ரயில் சூப்பிரண்டு, பயணிகள் மத்தியில் இருந்த பயத்தைப் போக்கி, உடனடியாக அவர்களை மீட்பு ரயிலில் ஏற்றி விட்டுள்ளார்.இதனால், இரண்டு லோகோ பைலட் ஆர்.கே.சிங் மற்றும் கோ பைலட் ஏ.கே.கால்கு ஆகியோருக்கு தலா 30 ஆயிரம் ரூபாயும், கார்டு ஆர்.மிஞ்ச் மற்றும் சூப்பிரண்டு ஏ.சி.ஓஜா இருவருக்கும் தலா 20 ஆயிரம் ரூபாயும் பரிசாக வழங்கப்படுகிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.
261
2010-03-25T02:25:00+05:30
தமிழகம்
ஏ.டி.எம்., மையங்களில் கள்ளநோட்டு ?
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர், பரமக்குடி பகுதி ஏ.டி.எம்., களில் கள்ளநோட்டு புழக்கம் அதிகரித்துள்ளதாக, வாடிக்கையாளர்கள் பீதியடைந்துள்ளனர். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வாடிக்கையாளர்களின் சேவைக்காக ஏ.டி.எம்., சேவை மையங் களை துவக்கி செயல்படுத்தி வருகிறது. இங்கு எடுக்கும் பணத்தில் சில நோட்டுக்கள் கள்ள நோட்டுகளாக உள்ளன. இது தொடர்பாக வங்கிகளில் புகார் கூறினால், "அப்படி ஏதும் இருக்க வாய்ப்பில்லை, ' என, மறுக்கின்றனர். வாடிக்கையாளர்கள் கூறியதாவது: தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம்., மையங்களில் அதிகாரிகள் வைக்கும் கரன்சி நோட்டுக்களின் எண்களை பதிவு செய்து வைத்தால், கள்ள நோட்டுக்கள் இருப்பது தெரியவரும்,என்ற னர்.
265
2010-03-25T02:27:00+05:30
தமிழகம்
அழிந்து வரும் தோட்டக்கலை பண்ணை ரூ. பல லட்சம் பொருட்கள் மாயம்
கமுதி: கமுதியில் உள்ள தோட்டக்கலை பண்ணை கட்டடம் பராமரிப்பின்றி அழிந்து வருவதோடு, இங்கிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களும் மாயமாகி உள்ளன.ராமநாதபுரம் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் மர கன்றுகள் வளர்த்து விற்பனை செய்ய ,கமுதியில் மாதிரி தோட்டக் கலை பண்ணை துவங்கப் பட்டது. இங்கு போதிய இடம் , தண்ணீர் வசதிகள் இருந்தும், பூ ,பழம் உள் ளிட்ட மர கன்றுகளை வளர்க்க, எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதனால் இங்கு பல லட்சம் ரூபாய் மதிப் பீட்டில்,அரசால் வழங்கப் பட்ட பூந் தொட்டிகள், கூடாரங்கள் உட்பட உபகரணங்கள் சேதமடைந்து, வீணாகி அழிந்து வருகின்றன. இதனால் இங்குள்ளோர் மர கன்றுகள், பூந்தொட்டிகளை வாங்க உச்சிப்புளி அருகே சுந்தரமுடையான் பண் ணையை நாடி செல்லும் அவலம் ஏற் பட்டுள்ளது. கமுதியில் துவங்கப்பட்டபோதுதான் சுந்தரமுடையானிலும் பணணை ஏற்படுத்தப் பட்டது. ஆனால் சுந்தரமுடையான் தோட்டக்கலை பண்ணை லாபகரமாக செயல்படும் நிலையில் , கமுதி தோட்டக்கலை பண்ணை அழிந்தும், அலுவலக உபகரணங்கள் மாயமாகியும் உள்ளன. கன்றுகள் வளர்க்க வழங்கிய தொட்டிகளும் மணற்குவியல் போல் பயனற்ற நிலையில் அடுக்கி வைக்கப் பட்டுள்ளன. தற்போது தோட்டக்கலைத்துறை பண்ணை இருந்த இடம் தெரியாமல், கட்டடங்கள் சேதமடைந்தும் உள்ளன. கொடைக்கானல் போல் கன்றுகள் வளர்க்க குளிரூட்டப்பட்ட அமைப்புகள் இருந்தும், தற்போது அக்கூடாரம் கால்நடைகள் அடைக்கும் இடமாக உருமாறி வருகிறது. இதன் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, தோட்டக்கலை பண் ணைக்கு புத்துயிர் அளிக்க முன்வரவேண்டும்.
266
2010-03-25T02:27:00+05:30
தமிழகம்
புத்தக சுமையை குறைக்க புதிய வழி ஆராய்ந்து முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவு
சென்னை : மாணவர்களுக்கு பாடப் புத்தக சுமையை குறைக்கும் புதிய வழிமுறையை ஆராய்ந்து முடிவெடுக்குமாறு கல்வித் துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் புவனகிரியைச் சேர்ந்த மோகன் என்பவர் தாக்கல் செய்த மனு: பள்ளிக் குழந்தைகளின் புத்தக சுமையை குறைக்க நான் புதிய வழியை கண்டுபிடித்துள்ளேன். ஒவ்வொரு பாடப் புத்தகத்தையும் நான்கு பகுதிகளாக பிரிக்க வேண்டும். பின், அனைத்து பாடங்களிலும் உள்ள பகுதிகளை ஒன்றாக சேர்க்க வேண்டும். முதல் பருவத் தேர்வு முடிந்த உடன், அந்தப் பாடங்களை அகற்றி விட்டு, அடுத்த தேர்வுக்கான அனைத்து பாடங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால், அனைத்து பாடங்களுக்கும் சேர்த்து ஒரே ஒரு புத்தகத்தை மாணவர்கள் கொண்டு செல்லலாம். பள்ளிகளில் இந்த முறையை அமல்படுத்தினால், மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பெரிய அளவில் சுமையை தூக்கிக் கொண்டு செல்ல வேண்டியதில்லை. பல பள்ளிகளில் இதுபற்றி விளக்கியுள்ளேன். இதுகுறித்து கல்வித் துறைக்கு மனு அனுப்பியுள்ளேன். தேவையான நடவடிக்கைக்காக பள்ளி கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்பியிருப்பதாக எனக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால், மேற்கொண்டு எந்த பதிலும் இல்லை. எனது மனுவை பரிசீலிக்க பள்ளி கல்வித் துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை தலைமை நீதிபதி கோகலே, நீதிபதி தனபாலன் அடங்கிய "முதல் பெஞ்ச்' விசாரித்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் கே.சாந்தகுமாரி வாதாடினார். "முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவில், "கல்வித் துறைச் செயலருக்கு விரிவான மனுவை மனுதாரர் அனுப்பலாம். மனுதாரருக்கு சந்தர்ப்பம் அளித்து, புதிய வழிமுறை எப்படி பயன்படும் என அவர் செய்முறை விளக்கம் அளிக்கலாம். இதை செயலர் ஆராய்ந்து மூன்று மாதங்களில் முடிவெடுப்பார்' என கூறியுள்ளது.
268
2010-03-25T02:28:00+05:30
தமிழகம்
மதுரை ஐகோர்ட் கிளையில் தமிழில் வக்கீல்கள் வாதம்
மதுரை : மதுரை ஐகோர்ட் கிளையில் நேற்று நடந்த வழக்கு விசாரணைகளின் போது வக்கீல்கள் தமிழில் வாதாடினர். ஐகோர்ட்டில் தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும், தமிழில் வாதாட அனுமதிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று முன்தினம், மதுரை ஐகோர்ட் கிளையில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை வக்கீல்கள் துவக்கினர். பிறகு தமிழில் வாதாடுவது உட்பட ஓரிரு கோரிக்கைகளை ஏற்பதாக, பதிவாளர்கள் உதயன், சேஷசாயி தெரிவித்தனர். இதையடுத்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டது. தமிழில் வாதாட அனுமதிக்கப்பட்டதற்கு, வக்கீல்கள் நேற்று ஐகோர்ட் கிளையில் இனிப்பு வழங்கி, நன்றி தெரிவித்தனர். பெரும்பாலான வழக்குகளில், வக்கீல்கள் தமிழில் வாதங்களை எடுத்து வைத்தனர். நீதிபதிகளும் வாதங்களை பதிவு செய்தனர்.
272
2010-03-25T02:29:00+05:30
தமிழகம்
மகளுடன் நர்ஸ் தற்கொலை வழக்கு : ஜாமீன் கேட்டு டாக்டர் மனு
கோவை : விஷ ஊசியால் மகளை கொலை செய்து, தற்கொலை செய்து கொண்ட நர்ஸ் வழக்கில், சிறையில் அடைக்கப்பட்ட டாக்டர், ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். கோவை மாவட்டம், ஒண்டிப்புதூர், இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் நர்சாக பணியாற்றியவர் ரேணுகாதேவி (40). கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றவர். மகள் சுரேகா(12)வுடன், சிங்காநல்லூர், இந்திரா நகரில் வசித்து வந்தார். ஐந்து ஆண்டுகளாக, சின்னியம்பாளையத்தில் கிளினிக் நடத்தும் டாக்டர் தரணிகுமாருடன் நெருங்கி பழகி வந்தார். டாக்டருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை அறிந்த ரேணுகாதேவி, தன்னை கைவிட்டு விடுவாரோ என சந்தேகம் அடைந்தார். மன வேதனையில் இருந்தவர், கடந்த 21 அன்று, மகளுக்கு விஷ ஊசி போட்டு கொலை செய்தவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிங்காநல்லூர் போலீசார் விசாரித்து, நர்ஸ் தற்கொலைக்கு காரணமாக இருந்ததாக டாக்டர் தரணிகுமாரையும், எப்.எம்., ரேடியோவில் பணியாற்றும் அருணாராணி(46)யையும் கைது செய்தனர். இவர்களில் டாக்டர் தரணிகுமார் சார்பில் ஜாமீன் கேட்டு, மாவட்ட கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு வரும் 29ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
273
2010-03-25T02:30:00+05:30
தமிழகம்
சிங்கப்பூரில் தமிழர்களுக்கு சித்ரவதை : தப்பி வந்தவர் ஐகோர்ட்டில் தகவல்
மதுரை : சிங்கப்பூரில் ஏராளமான தமிழர்கள் சித்ரவதைக்குள்ளாவதாக, 12 ஆண்டுகளுக்கு முன் மாயமான வழக்கில், மதுரை ஐகோர்ட் கிளையில் ஆஜர்படுத்தப்பட்டவர் நீதிபதிகளிடம் தெரிவித்தார். சிவகங்கை அருகே மேலப்பூங்குடியை சேர்ந்த சிட்டு தாக்கல் செய்த ஹேபியஸ் கார்பஸ் மனு: என் கணவர் கிருஷ்ணன், சிங்கப்பூரில் வேலை செய்து வந்தார். 1998ல் சொந்த ஊருக்கு வருவதாக அவரிடமிருந்து போன் வந்தது. ஆனால், அவர் வரவில்லை. அவருடைய பாஸ்போர்ட் எனக்கு தபாலில் அனுப்பப்பட்டது. அதன் மூலம் அவர், சென்னை விமான நிலையம் வந்தது தெரிய வந்தது. அதன்பிறகு, அவர் எங்கு சென்றார் என, தெரியவில்லை. அவரை ஆஜர்படுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டது. மனு நீதிபதிகள் பி.முருகேசன், டி.மதிவாணன் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. கிருஷ்ணனை போலீசார் ஆஜர்படுத்தினர். அவர் நீதிபதிகளிடம் கூறியதாவது: சிங்கப்பூரில் சீன கம்பெனியில் வேலை செய்தேன். அங்கு எனக்கு சரியாக சம்பளம் கொடுக்காமல், சித்ரவதை செய்தனர். அந்த கம்பெனியில் மட்டும் 15 தமிழர்கள் சித்ரவதைக்குள்ளாகினர். அவர்கள் இன்னமும் அங்கு தான் உள்ளனர். இதுதவிர மற்ற மாநிலத்தவரும் உள்ளனர். நான் கள்ள பாஸ்போர்ட்டில் சில நாட்களுக்கு முன் திருவனந்தபுரம் தப்பி வந்தேன். பிறகு, போலீசார் என்னை மீட்டு ஆஜர்படுத்தினர். இவ்வாறு கிருஷ்ணன் கூறினார். அதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அவரது விருப்பப்படி செல்ல உத்தரவிட்டனர்.
274
2010-03-25T02:31:00+05:30
தமிழகம்
வரதட்சணை கேட்டு துன்புறுத்திய கணவன், மாமியாருக்கு சிறை
திருநெல்வேலி : வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை துன்புறுத்திய கணவர்,மாமியாருக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள படலையார்குளத்தை சேர்ந்த பலவேசம் மகள் சங்கரிக்கும், அம்பாசமுத்திரம், வாகைகுளத்தை சேர்ந்த கருப்பசாமி மகன் கணேசனுக்கும் கடந்த 2007 டிச.,16ல் திருமணம் நடந்தது. பெண் வீட்டார், 15 பவுன் நகையும், சீர்வரிசைகளும் செய்தனர். திருமணத்திற்கு பிறகு கணவன் குடும்பத்தினர், மேலும் 10 பவுன் நகைகள் கேட்டு சங்கரியை துன்புறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக சங்கரி போலீசில் புகார் செய்தார். அம்பாசமுத்திரம் ஜெ.எம்.முதலாவது கோர்ட்டில் நடந்த வழக்கில் மாஜிஸ்திரேட் கலைவாணி, வரதட்சணை கேட்டு துன்புறுத்திய கணேசன், அவரது தாயார் இசக்கியம்மாள் ஆகியோருக்கு ஒரு ஆண்டுசிறைத்தண்டனையும் தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.
275
2010-03-25T02:33:00+05:30
தமிழகம்
காலாவதியான மருந்துகள் விற்பனை செய்த வழக்கு : சரணடைந்த இருவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு
சென்னை : காலாவதியான மருந்துகளை விற்பனை செய்த வழக்கில் சரணடைந்த முக்கிய குற்றவாளிகள் இருவர், இன்று கோர்ட் அனுமதியுடன் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்படவுள்ளனர். கொடுங்கையூர் குப்பை கிடங்கில் கொட்டப்படும் காலாவதியான மருந்துகளை சேகரித்து, சென்னை நகர் முழுவதும் விற்பனை செய்த வழக்கில் கொடுங்கையூர் ரவி என்ற பிரபாகரன்(40), டிரைவர் வெங்கடேசன், எழும்பூர் சஞ்சய்குமார், புரசைவாக்கம் சேகர்(35), சூளைமேடு பாஸ்கரன்(35), அரும்பாக்கம் பிரதிப் சோர்த்தியா(32) மற்றும் சின்மயா நகரில், "மீனா ஹெல்த் கேர்' நடத்தி வரும் மீனாட்சிசுந்தரம்(45) ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். இதில், ரவி என்ற பிரபாகரன் எழும்பூர் கோர்ட்டிலும், டிரைவர் வெங்கடேசன் சைதாப்பேட்டை கோர்ட்டிலும் சரணடைந்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களை, இன்று காலை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ஆஜர்படுத்துகின்றனர். பின், கோர்ட் அனுமதியுடன் அவர்களை காவலில் எடுத்து, இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தவுள்ளனர். இந்நிலையில் ரவி உதவியாளரான கொடுங்கையூர், குப்பை மேடு பகுதியைச் சேர்ந்த ஜான் பாஷா(41) என்பவரை நேற்று முன்தினம் போலீசார் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கொடுங்கையூர் குப்பை கொட்டும் பகுதியில் இருந்து காலாவதியான மருந்து, மாத்திரைகளை சேகரித்து ரவியிடம் கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து, ஜான் பாஷாவை கைது செய்து, கோர்ட் உத்தரவுப்படி நேற்று சிறையில் அடைத்தனர். மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட குற்றவாளிகளை கைது செய்ய, தனிப்படை போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதில், மீனாட்சிசுந்தரம் வக்கீல்கள் உதவியுடன் கோர்ட்டிலோ அல்லது போலீஸ் ஸ்டேஷனிலோ சரணடைவார் என தெரிய வருகிறது.
276
2010-03-25T02:36:00+05:30
தமிழகம்
தந்தையுடன் செல்ல மைனர் பெண்ணுக்கு ஐகோர்ட் அனுமதி
மதுரை : தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கடத்தல் வழக்கில் ஆஜர்படுத்தப்பட்ட மைனர் பெண்ணை தந்தையுடன் செல்ல அனுமதித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. ஆண்டிப்பட்டி அருகே திம்மரசநாயக்கனூரை சேர்ந்த சாமிநாதன் தாக்கல் செய்த ஹேபியஸ் கார்பஸ் மனு: என் 14வயது மகள் பிப்ரவரி 26ம் தேதி பள்ளி சென்றார். ஆனால் அவர் பள்ளிக்கு வரவில்லை என ஆசிரியர்கள் தெரிவித்தனர். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. விசாரித்த போது அவரை, இடையப்பட்டியை சேர்ந்த சுமன் கடத்தியது தெரிந்தது. அவர் மீது போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. என் மகளை கண்டுபிடித்து ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனு நீதிபதிகள் பி.முருகேசன், டி.மதிவாணன் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. கடத்தப்பட்ட பெண்ணை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்பெண் பெற்றோருடன் செல்ல விரும்புவதாக நீதிபதிகளிடம் தெரிவித்தார். அதை பதிவு செய்த நீதிபதிகள், தந்தையுடன் செல்ல பெண்ணுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.
277
2010-03-25T02:36:00+05:30
தமிழகம்
ரயில் விபத்தில் காயமடைந்தோருக்கு இன்சூரன்ஸ்: ஐகோர்ட் யோசனை
மும்பை : ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெறும் வகையில், இன்சூரன்ஸ் திட்டம் ஒன்றை அமல்படுத்த வேண்டும் என்று ரயில்வே நிர்வாகத்தை மும்பை ஐகோர்ட் கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த 2004ல் சமீர் ஜவேரி (39) என்பவர், புறநகர் ரயிலில் அடிபட்டு தனது இரண்டு கால்களையும் இழந்துவிட்டார். ரயில்வே விபத்துக்களில் இறந்தோரின் குடும்பத்துக்கு இழப்பீடு தர இன்சூரன்ஸ் திட்டத்தை ரயில்வே நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது. காயமடைந்தோருக்கு அப்படி தனி இன்சூரன்ஸ் திட்டம் இல்லை. இந்த பயணி தொடர்ந்த வழக்கில், ஐகோர்ட் விசாரணை செய்தது. விசாரணை நடத்திய ஐகோர்ட், ரயிலில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட பல அறிவுறுத்தல்களை ரயில்வே நிர்வாகத்துக்கு கூறியிருந்தது. ஆனால் அவற்றில் பலவற்றை ரயில்வே நிர்வாகம் நடைமுறைப்படுத்தவில்லை. இதனால், கோர்ட் அவமதிப்பு வழக்கு ஒன்றை 2009 நவம்பரில் சமீர் தாக்கல் செய்தார். இவ்வழக்கை விசாரித்த ஐகோர்ட், ரயில்வே விபத்துக்களில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க வழிவகை செய்யும் இன்சூரன்ஸ் பற்றிய விதிகளை வரையறை செய்யும் படி, மும்பையிலுள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்றிடம் கேட்டுக் கொண்டிருக்கிறது. அந்நிறுவனம் இன்னும் 15 நாட்களில் இன்சூரன்ஸ் விதிகள் பற்றிய விவரங்களை கோர்ட்டில் அளிக்கும். இத்திட்டம் குறித்து பரிசீலிக்கும்படி மும்பை ஐகோர்ட், ரயில்வே நிர்வாகத்தையும் கேட்டுக் கொண்டுள்ளது. ரயில்வே வளாகங்களுக்குள் விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ஒரு லட்ச ரூபாய் வரை இழப்பீடு வழங்கவும், மருத்துவமனை செலவுகளை ஏற்கும் வகையிலும், தண்டவாளத்தைக் கடக்கும் போது ஏற்படும் விபத்துக்களையும் சேர்த்துக் கொள்ளும் வகையிலும் இந்த இன்சூரன்ஸ் திட்டம் அமையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இத்திட்டம் மேற்கு மற்றும் மத்திய புறநகர் ரயில்வேயில் அமலாக்கப்படலாம் என்று தெரிகிறது.
278
2010-03-26T01:18:00+05:30
தமிழகம்
காலாவதியான மருந்துகளுடன் உள்ள குடோன்களுக்கு சீல் : தமிழகம் முழுவதும் அரசு அதிகாரிகள், போலீஸ் தீவிரம்
சென்னை : தமிழகம் முழுவதும் காலாவதியான மருந்துகளை பதுக்கி வைத்துள்ள குடோன்கள் மற்றும் மருந்துக் கடைகளில், மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகளும், போலீசாரும் தீவிர சோதனை நடத்தி, "சீல்' வைத்து வருகின்றனர். சென்னையில் நேற்று நடத்திய அதிரடி சோதனையில், பல இடங்களில் உள்ள குடோன்கள்,"சீல்' வைக்கப்பட்டன. காலாவதியான மருந்துகளை, மருந்துக் கடைகளில் விற்பனை செய்த விவகாரம், சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்தது. முதல்வர் கருணாநிதி உடனே காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகளைக் கூட்டி ஆலோசித்தார். காலாவதியான மருந்தை பதுக்குபவர்கள், விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களுக்கு ஆயுள் தண்டனை அளிக்கும் வகையில், சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என்றும், முதல்வர் எச்சரித்தார். காலாவதியான மருந்துகளை பதுக்கியவர்களும், மருந்துக் கடைகளில் விற்பனை செய்து கொண்டிருந்தவர்களும் அரசின் நடவடிக்கைக்கு பயந்து, காலாவதியான மருந்துகளை குவியல், குவியலாக தினமும் சாலையோரங்களில் கொட்டி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக, சென்னை உள்ளிட்ட பல இடங்களில் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும், மருந்து குடோன்களிலும், மருந்துக் கடைகளிலும் அரசு அலுவலர்களும், போலீசாரும் தீவிர சோதனை செய்து வருகின்றனர். இந்த அதிரடி சோதனையில், காலாவதியான மருந்துகள் உள்ள குடோன்களும், மருந்துக் கடைகளும் அதிக எண்ணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டு, உடனுக்குடன் அவைகளுக்கு, "சீல்' வைத்து வருகின்றனர். முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான பிரதீப் சோர்டியாவின் சூளை, "ரெயின்போ' வீட்டு வளாகத்தில் உள்ள கார் ஷெட் குடோனில் சோதனை நடத்தப் பட்டது. அங்கு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருந்து மாத்திரைகள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், புரசைவாக்கம், நியூ மாணிக்கம் தெருவில் உள்ள வசந்தா மெடிக்கல் ஏஜன்சீஸ் மற்றும் மீனாட்சி சுந்தரத்தின் தம்பி மாணிக்கத்தின் மனைவி சாந்தா பெயரில் நடந்து வரும் ஸ்ரீ சபரி பார்மா ஆகியவற்றில் சோதனை நடத்தினர். பின், அங்கு வேலை செய்து வந்த ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு, குடோன்களுக்கு, "சீல்' வைக்கப்பட்டன. அரும்பாக்கத்தில் உள்ள ஜி.எச்., பார்மா உள்ளிட்ட சில குடோன்களுக்கு, "சீல்' வைக்கப்பட்டது. சென்னை நகரில் கடந்த சில நாட்களில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள போலி மருந்து மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை மட்டுமின்றி, அனைத்து மாவட்டங்களிலும் மருந்து குடோன்களிலும், மருந்து கடைகளிலும் நடந்துவரும் சோதனை தீவிரம் அடைந்துள்ளது.
288
2010-03-26T03:41:00+05:30
தமிழகம்
மதுரையில் ஏப்.6,7,8 ல் தினமலர் வழிகாட்டி ஒரே இடத்தில் 67 கல்வி நிறுவனங்கள்: 20 கல்வி வல்லுநர்களின் கருத்துரைகள்
மதுரை:பிளஸ் 2 விற்கு பிறகு என்ன படிக்கலாம் என்று நீங்கள் குழம்பவேண்டாம். ஏப்., 6 வரை காத்திருங்கள். தினமலர் சார்பில் மதுரையில் மூன்று நாட்கள் நடக்கும் கல்வி கண்காட்சி, கருத்தரங்கு உங்களுக்கு வழிகாட்டும்.பெற்றோர்களே...உங்கள் குழந்தைகளின் எதிர்கால வாழ்வின் அடிப்படை கல்லூரி படிப்பு தான். அவர்கள் டாக்டர் ஆக வேண்டுமா, இன்ஜினியர் ஆக வேண்டுமா, ஆசிரியர் ஆக வேண்டுமா, அரசு ஊழியர் ஆக வேண்டுமா, வங்கி அதிகாரி ஆக வேண்டுமா என்பதை முடிவு செய்யப்போவது கல்லூரியில் தேர்வு செய்யும் படிப்பு தான். அவர்களின் சரியான படிப்பை தேர்வு செய்யும் பொறுப்பு உங்களுக்கு உண்டு.எந்த படிப்பை எப்படி தேர்வு செய்வது? எதிர்கால வேலைவாய்ப்பிற்கு உகந்த படிப்பு எது? நாம் விரும்பும் படிப்பு எந்த கல்லூரியில் இருக்கிறது?நாம் விரும்பும் கல்லூரியில் விரும்பும் படிப்பு இருக்கிறதா? இப்போது உடனடி வேலைவாய்ப்பு தரும் படிப்புகள், ஐந்தாண்டிற்கு பிறகும் இதே நிலையில் தொடருமா? வெளியூர்களில், வெளிநாடுகளில் படிக்க என்ன செலவாகும்? எந்த கல்லூரியில் படித்தால் வேலைவாய்ப்புகள் எளிதாகும்?இப்படி எண்ணிலடங்கா கேள்விகள் ஏராளம்... உங்கள் குழப்பங்களுக்கு விடை தரவே, நாளிதழ்களில் முதன்முதலாக பல ஆண்டுகளாக தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று, உரிய உயர்கல்வியை தேர்வு செய்து வாழ்வில் வென்றவர்கள் ஏராளம். "எங்கள் வாழ்வில் ஒளியேற்றிய தினமலர் இதழுக்கு நன்றி' என எங்களுக்கு வரும் கடிதங்களே இதற்கு சாட்சி.இந்த ஆண்டும் பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ள மாணவர்களுக்காக தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் ஏப்.6,7,8 தேதிகளில் நடக்கிறது. இதில் 67 தரமான கல்வி நிறுவனங்கள் ஸ்டால்கள் அமைக்கின்றன. இங்கு விண்ணப்பம் வாங்கலாம். சேர்க்கையும் நடைபெறும். நீங்கள் விரும்பும் கல்லூரிகளில் என்ன வசதிகள் உள்ளன என்று இந்த ஸ்டால்களில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.பல கல்லூரிகளுக்கு அலைந்து, திரிந்து நீங்கள் தகவல் திரட்டுவதை எளிமையாக்க அத்தனை கல்லூரிகளையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்துள்ளோம். தினமும் காலை 10 மணிக்கும், மாலை 4 மணிக்கும் கருத்தரங்கு நடக்கிறது. இருபதிற்கும் மேற்பட்ட தலைசிறந்த பல்துறை கல்வி வல்லுநர்கள் உயர்கல்வி குறித்த உங்கள் சந்தேகங்களுக்கு நேரடியாக பதில் தருவர். வழிகாட்டி புத்தகம் ஒன்றும் இலவசம். அனுமதி இலவசம்.மறவாதீர்...அறிவு வளர்க்கும் நாளிதழ் தினமலர் உங்களை அழைக்கிறது.
289
2010-03-26T03:43:00+05:30
தமிழகம்
குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே ஏப்., 15ல் ரயில் போக்குவரத்து துவக்கம்:சீரமைத்த பாலத்தில் சோதனை ஓட்டம் வெற்றி
குன்னூர்:குன்னூர் - மேட்டுப்பாளையம் ரயில் பாதையில், நிலச்சரிவால் சேதமடைந்த 66வது எண் கொண்ட பாலத்தில் சீரமைப்புப் பணி நிறைவு பெற்று, நேற்று சோதனை ஓட்டம் விடப்பட்டது.நீலகிரியில் கடந்தாண்டு நவம்பர் 7ம் தேதி துவங்கி 10ம் தேதி வரை கொட்டித் தீர்த்த வரலாறு காணாத மழையால், ஊட்டி - மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது; ரயில் பாலங்களும் சேதமடைந்தன. ஊட்டி - குன்னூர் இடையே சீரமைப்புப் பணி நிறைவு பெற்று, கடந்த ஜனவரியில் ரயில் போக்குவரத்து துவக்கப்பட்டது. குன்னூர் - மேட்டுப்பாளையம் ரயில் பாதையில் பல இடங்களில் தண்டவாளம் மீது மண், பாறைகள் விழுந்திருந்தன. 56, 63, 66,74 எண் கொண்ட பாலங்கள் சேதமடைந்தன; 56, 74 எண் கொண்ட பாலங்கள் பாதியளவு சேதமடைந்தன; 66, 63 எண் கொண்ட பாலங்கள் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டன.மரப்பாலம் - பர்லியார் இடைப்பட்ட 66வது எண் கொண்ட பாலத்தை சீரமைக்கும் பணி, கடந்தாண்டு டிசம்பர் 17ம் தேதி துவங்கியது. 100க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள், இப்பணியில் ஈடுபட்டனர். மேட்டுப்பாளையம், குன்னூரில் இருந்து கட்டுமானப் பொருட்கள் சரக்கு ரயில் மூலம் கொண்டு செல்லப்பட்டன. இங்கு, 50 மீட்டர் நீளத்துக்கு இரும்பு பாலம் அமைக்கப்பட்டது; பாலத்தை தாங்க மூன்று பில்லர்கள் அமைத்துள்ளனர்; தண்டவாளத்துக்கு பலம் சேர்க்க 80 ஸ்லீப்பர் கட்டைகள் பொருத்தப்பட்டுள்ளன.சீரமைக்கப்பட்ட பாலத்தில், குன்னூர் பகுதி பொறியாளர் அருணாச்சலம், மேட்டுப்பாளையம் பகுதி இளநிலை பொறியாளர் ஜெயராஜ் மேற்பார்வையில் நேற்று காலை 11.15 மணிக்கு, ரயில், சோதனை ஓட்டம் விடப்பட்டது. ரயில் இன்ஜினுடன் ஒரு பெட்டியை இணைத்து கீழ் நோக்கி சோதனை ஓட்டம் விடப்பட்டது; பின், மறுமுனையில் நின்று கொண்டிருந்த மற்றொரு சரக்கு ரயில் பெட்டியை இணைத்து, மேல் நோக்கி சோதனை ஓட்டம் விடப்பட்டது. சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்தது.ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ""குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே பெரும் சேதம் ஏற்பட்ட நான்கு பாலங்களில் மூன்று பாலங்கள் சீரமைக்கப்பட்டுவிட்டன. எஞ்சிய 63வது எண் கொண்ட பாலத்தை சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இன்னும் 10 நாளில் பணி நிறைவு பெற்று, ஏப்ரல் 15ம் தேதி மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே ரயில் இயக்கப்படும்' என்றனர்.
290
2010-03-26T03:45:00+05:30
தமிழகம்
தனியாரிடம் உள்ள கோவில் நிலங்களை மீட்க அதிகாரிகளை நியமித்தது அரசு
தேனி:தமிழகம் முழுவதும் தனிநபர்களின் ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை மீட்டெடுக்க அரசு, அதிகாரி களை நியமித்து துரித நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில், நில உடைமை மேம் பாட்டு திட்டத்தின் கீழ், கோவில் நிலங்களை மீட்டெடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள ஆயிரக் கணக்கான இந்து கோவில்களுக்கு சொந்தமான பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள், தனி நபர்களின் பிடியில் உள்ளன. கோவி லுக்கு வருவாய் தரும் வகையில் இருந்த நிலங்கள், அந்த கோவில்களின் பரம்பரை பூஜாரிகள், கோவில் மூலம் மானி யம் பெறுபவர்கள் பெயரில் தவறுதலாக பட்டா மாறுதல் செய்யப்பட்டு, அவர்களின் அனுபவத்தில் உள்ளன. இதனால் கோவில்களுக்கு வருமானம் இல்லை. காலப்போக்கில் இந்த நிலங்களை அவர்கள், பிறருக்கு விற்கவும் செய்துள்ளனர். இதை கருத்தில் கொண்டு, கோவில் நிலங்களை மீட்கவும், அதன் மூலம் கோவில்களின் வருவாயை பெருக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக கோவை மற்றும் மதுரையை தலைமையிடமாக கொண்டு இரண்டு மண்டலங்களாக இந்து சமய அறநிலையத்துறை கோவில்கள் பிரிக்கப்பட்டுள்ளன. மதுரை மற்றும் கோவையில் பரீட்ச்சார்த்த முறையில் நிலமீட்பு பணிக்காக மாவட்ட வருவாய் அலுவலர் அந்தஸ்தில் தனி அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட வருவாய் அலுவலர்களே இந்த பணிகளை செய்ய உத்தரவிடப் பட்டுள்ளது. ஒவ் வொரு கோவிலுக்கென்றும் தனியாக கோவில் சொத்து பதிவேடுகள் உள்ளன. இந்த பதிவேட்டில் உள்ள நிலங்கள் எங்கெல்லாம் உள்ளன. அவை யாருக்கெல்லாம் தவறுதலாக மாறுதல் செய்யப்பட்டுள்ளன என்பதை கண்டறியும் பணி, தற்போது நடக்கிறது. இதற்கான மேல் முறையீட்டு மனுக்கள், அந்தந்த கோவில் நிர்வாக அலுவலர் கள், தக்கார்களிடம் இருந்து பெறப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து இருதரப்பினரையும் விசாரித்து ஆவண அடிப் படையில் மீண்டும் கோவில் பெயரில் நிலங்களை மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து மதுரை மண்டல கோவில் நிலங்கள் மீட்பு தனி அலுவலர் மனோகரன் கூறுகையில், மதுரை மண்டலத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உட்பட 10  தென் மாவட்டங்களில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் 800 கோவில்களுக்கு சொந்தமான 3,500 ஏக்கர் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதுரை மற்றும் தேனி மாவட்டத்தில் மட்டும் 400 ஏக்கர் நிலங்கள் மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.
291
2010-03-26T12:53:00+05:30
தமிழகம்
பாஸ்போர்ட் வழங்கும் முறையை எளிமைப்படுத்த முடியாது: மத்திய அமைச்சர் சசி தரூர் திட்டவட்டம்
கோவை:''பாதுகாப்பு காரணங்களால், சாதாரண பாஸ்போர்ட் தரும் முறையை எளிமைப்படுத்த சாத்தியமில்லை,'' என மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் சசி தரூர் தெரிவித்தார்.கோவை பாஸ்போர்ட் அலுவலகத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்ட பின், நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்த போது, நாடு முழுவதும் 77 இடங்களில் பாஸ்போர்ட் சேவா கேந்திரங்களை நிறுவ திட்டமிடப்பட்டது. பெங்களூரு, சண்டிகார் ஆகிய இடங்களில் முன்னோடித் திட்டமாக, இந்த சேவா கேந்திரங்கள் விரைவில் இயங்கவுள்ளன.இவற்றின் செயல்பாடுகள் மற்றும் பலன்களைப் பொருத்து, அனுபவ அடிப்படையில் இரண்டு அல்லது மூன்று கட்டங்களில் 75 இடங்களிலும் இந்த சேவா கேந்திரங்கள் அமைக்கப்படும். எப்படியும் இந்த ஆண்டு இறுதிக்குள் கணிசமான அளவுக்கு இந்த கேந்திரங்கள் துவக்கப்பட்டு விடும்.ஒரு மாநிலத்தின் பரப்பளவு, மக்கள் தொகை இவற்றை கணக்கில் கொள்ளாமல், பாஸ்போர்ட் விண்ணப்பங்களின் எண்ணிக்கையைப் பொருத்து இந்த மையங்கள் அமைக்கப்படும்.சாதாரண பாஸ்போர்ட் வழங்குவதில் காவல்துறை விசாரணையில் தான் தாமதம் ஏற்படுகிறது.இதை மேலும் எளிமைப்படுத்த, உள்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்ததற்கு அனுமதி கிடைக்கவில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக அதை உள்துறை விரும்பவில்லை.இதற்கு காரணமும் இருக்கிறது. வடமாநிலத்தில் காவல்துறை விசாரணை முடிந்த பின்பும், பாகிஸ்தானியர் இருவருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், சாதாரண பாஸ்போர்ட் வழங்கும் முறையை எளிமைப்படுத்துவது சாத்தியமில்லை.தபால் துறை அடையாள அட்டையை பாஸ்போர்ட்டுக்கான ஆதார ஆவணமாக ஏற்க முடியாது. இப்போது ஏற்கப்படும் ஆவணங்கள் மட்டுமே, தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். விரைவில் வழங்கப்படவுள்ள தேசிய அடையாள அட்டையை, ஆதார ஆவணமாகச் சேர்க்க அமைச்சகம் பரிசீலிக்கும்.டி.சி.எஸ்., நிறுவனத்திடம், 'அவுட் சோர்சிங்' முறையில் பாஸ்போர்ட் பணிகளை ஒப்படைக்க பணியாளர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சங்கத்தின் கோரிக்கைகளை அமைச்சகம் கருணையுடன் பரிசீலிக்கும். ஆனால், பணியாளர் சங்கங்கள் அச்சப்படும் அளவுக்கு விஷயம் ஒன்றுமில்லை.இறையாண்மைக்குட்பட்ட பணிகள் அனைத்துமே பாஸ்போர்ட் அலுவலர்கள் மற்றும் காவல்துறை வசமே இருக்கும். பாஸ்போர்ட் அலுவலர்களின் திறமை, அனுபவம் ஆகியவற்றைப் பொருத்து, வெளிநாட்டுப் பணிகளுக்கு அவர்களை தேவைக்கேற்ப அனுப்பவும் அமைச்சகம் பரிசீலிக்கும்.இவ்வாறு அமைச்சர் சசி தரூர் தெரிவித்தார்.பேட்டியின் போது, கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் பாலமுருகன் உடனிருந்தார்.
293
2010-03-26T23:52:00+05:30
இந்தியா
மாவோயிஸ்டுகள் கையில் தெலுங்கானா போராட்டம்
தெலுங்கானா தனிமாநிலக் கோரிக்கை போராட்டத்துக்காக அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜே.ஏ.சி.,), தொடர்ந்து பலவீனப்பட்டு வருவதையடுத்து, மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து, தலைமையை கையில் எடுக்க முயலுகின்றனர்.இதனால், இதுவரை அரசியல் ரீதியில் சென்று கொண்டிருந்த தெலுங்கானா போராட்டத்தின் முகம் முற்றிலும் வேறு திசையில் மாற வாய்ப்பிருக்கிறது.தெலுங்கானா பிரிவினையின் 50 ஆண்டுக்கால கோரிக்கை உச்சக் கட்டம் அடைந்ததன் விளைவாக, உஸ்மானியா பல்கலைக் கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியர் எம்.கோதண்டராம் என்பவர் தலைமையில் மூன்று மாதங்களுக்கு முன், அனைத்துக் கட்சிகளும் இணைந்த கூட்டு நடவடிக்கைக் குழு ஒன்று ஆரம் பிக்கப்பட்டது.போராட்டங்கள், ஆர்ப்பாட் டங்கள், வேலை நிறுத்தம் அனைத்தையும் இந்தக் குழுதான் நடத்தி வந்தது.ஆனால், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியுடன் (டி.ஆர்.எஸ்.,) ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், காங்கிரஸ் அக் குழுவிலிருந்து வெளியேறியது. சமீபத்தில், மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசக் கட்சியின் (டி.டி.பி.,) கூட்டம் நடந்த போது, அதற்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி, அதுவும் குழுவிலிருந்து வெளியேறிவிட்டது.ஆக, முக்கியமான கோரிக்கைக் காகத் துவக்கப்பட்ட கூட்டு நடவடிக்கைக் குழு, அற்ப காரணங் களால் சிதைய ஆரம்பித்துள்ளது, மாவோயிஸ்ட் ஆதரவாளர்களுக்கு சாதகமாகிவிட்டது.புரட்சிகர எழுத்தாளர்கள் சங்கம், ஆந்திரப் பிரதேச சிவில் விடுதலைக் கமிட்டி, புரட்சியை முன்னிறுத்திப் போராடும் கலா சார அமைப்பான அருணோதயா, தெலுங்கானா ஜன சபா ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து, "மக்கள் அமைப்புகளின் ஒருங் கிணைப்புக் குழு' (சி.சி.பி.ஓ.,) என்ற கூட்டு நடவடிக்கைக் குழுவைத் துவக்கியுள்ளன.இவை அனைத்தும் மாவோயிஸ்ட் கொள்கையில் நம்பிக்கை உடையவை என்பது குறிப்பிடத் தக்கது.நக்சல் தலைவரும், ஆந்திர நக்சல் குழுப்பாடகருமான கத்தார் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், "அரசியல் கட்சிகளின் கூட்டு நடவடிக்கைக் குழு, அதன் நோக்கத்தில் பின்னடைவைச் சந்தித்து வருகிறது."அதைப் போல் அல்லாமல், இன்னும் உக்கிரமாக, தீவிரமாக சி.சி.பி.ஓ., தெலுங்கானா கோரிக்கையை முன்னெடுத்துச் செல்லும். அனைத்து விதமான மக்கள் அமைப்புகளையும், ஜாதி சங்கங்களையும் ஒன்றிணைத்து, ஒரே தளத்தில் கொண்டு வருவதன் மூலம் இலக்கை அடைய முடியும். வரும்  11ம் தேதி அன்று  அடுத்த கட்ட நடவடிக்கை  எடுப்பது பற்றி அறிவிப்போம்' என்று  கூறியுள்ளார்.இதற்கிடையில், தெலுங்கானா இயக்கத்தில் மக்களை இணைப்பதற்காக, தெலுங்கானா பகுதிகளில் கூட்டு நடவடிக்கைக் குழு நடத்தி வரும், "பஸ் யாத்திரை'யின் நோக் கத்தில், தொய்வு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. - நமது சிறப்பு நிருபர் -
299
2010-03-26T23:56:00+05:30
தமிழகம்
புதுசெல்லாம் பழசாகுது!கட்டி முடித்த கட்டடங்களில் பூட்டு :
செம்மொழி மாநாட்டுப் பணிகள் துரிதமாக நடக்கும் நிலையில், ஏற்கனவே நடந்து வரும் வளர்ச்சிப்பணிகள் முற்றிலுமாக முடங்கியுள்ளன. நகரில் உருவான பல புதிய கட்டடங்கள், திறக்கப்படாமலே பழமையாகி வருகின்றன.கோவை மாநகராட்சியில் வளர்ச்சிப்பணிகள் வேகம் பெற்றுள்ளன. ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்புத் திட்டத்தில், பில்லூர் இரண்டாவது குடிநீர்த் திட்டம், திடக்கழிவு மேலாண்மைத் திட்டப்பணிகள் நடக்கின்றன.இதே திட்டத்தில் பாதாள சாக்கடைத் திட்டத்துக்கான பணிகளும், நகர்ப்புற ஏழை மக்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து தரும் "பி.எஸ்.யு.பி.,' திட்டத்தில் வீடுகள் கட்டும் பணியும் நடந்து வருகிறது. செம்மொழி மாநாட்டுப் பணிகளும் சேர்ந்து விட்டன. 113 கோடி ரூபாய் மதிப்பில் அணுகுசாலைகள், திட்டச்சாலைகள், நடைபாதைகள், பூங்காக்கள் உட்பட ஏராளமான பணிகள் நடக்கின்றன.  இதற்கு முன், மாநகராட்சி நிதியைச் செலவழித்து பல கோடி ரூபாய் மதிப்பில் செய்த பணிகள் இன்னும் முடியாமல் நிற்கின்றன. கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தின் தலைவர் பைந்தமிழ்பாரி. இவருக்காகவே இரண்டு கோடி ரூபாயில் புதிய மண்டல அலுவலகம் அமைத்தனர்; ஓராண்டாகியும் திறப்பு  விழா நடக்கவில்லை.அரசின் அனுமதி பெறாமல், மாநகராட்சி நிதியைப் பயன் படுத்தி கட்டியதால், சர்ச்சையில் சிக்கியுள்ளது. பயன்படுத்தாததால், பழசாகி வருகிறது."முதல்வர் கருணாநிதி திறந்து வைப்பார்' என காத்திருந்து பல மாதங்கள் கடந்தோடி விட்டன. இது வரை அலுவலகம் திறக்க எந்த முயற்சியும் நடக்கவில்லை.இதே போன்று,  கட்டடம் கட்டி பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் உள்ள வணிக வளாகம் பூ மார்க்கெட். ஒரு கோடியே 13 லட்ச ரூபாய்க்கு மதிப்பீடு தயாரித்து, 80 லட்ச ரூபாய்க்கு கட்டி முடிக்கப்பட்ட இந்த மார்க்கெட். ஓராண்டுக்கு மேலாகியும் இன்னும் திறக்கப்படவில்லை.அதே கட்டடத்தில், கூடுதலாக 15 லட்ச ரூபாய்க்கு பணிகள் நடப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர். இதே போன்று, ஒரு கோடியே 30 லட்ச ரூபாய் மதிப்பில் ஒன்றரை ஆண்டுக்கு முன்பே கட்டி முடிக்கப்பட்டது மீன் மார்க்கெட். இன்னும் "பார்க்கிங்' உள்ளிட்ட பல்வேறு பணிகளும் முடிக்கப்படவில்லை.இவை எல்லாவற்றையும் விட, மேட்டுப்பாளையம் ரோட்டில் ஏழு கோடி ரூபாய் மதிப்பில் துவக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி, மாநகராட்சி நிர் வாக குளறுபடியால், ஆண்டுக்கணக்கில் இழுத்து வருகிறது. "சிவில்' பணிகளை ஆண்டுக்கணக்கில் இழுத்தடித்து வரும் மாநகராட்சி நிர்வாகம், ரோடு போடும் வேலைகளை மட்டும் மின்னல் வேகத்தில் முடித்து விடுவது வியப்பளிக்கிறது.ஒவ்வொரு பணியிலும் காலம் தாழ்த்தி, "ரேட்'டை உயர்த்தி, காசு பார்க்கும் "டெக்னிக்' ஆக இருக்குமோ என மக்கள் சந்தேகிக்கின்றனர்.செம்மொழி மாநாட்டுப் பணிகளை துரிதமாக முடிக்க அக்கறை காட்டும் தமிழக அரசு, பல கோடி ரூபாய் செலவில் நடந்து வரும் இந்தப் பணிகளையும் செம்மொழி மாநாட்டுக்கு முன்பாக முடிக்க உத்தரவிட வேண்டும். 30 லட்சமும் முடிஞ்சிருச்சா?அவிநாசி ரோடு மேம்பாலத்தின் கீழ், சுரங்கப்பாதையில் தண்ணீர் கசிவதைத் தடுக்கவும், டூ வீலர்களில் செல்வோரை நனைக்கும் நீர் வழிப்பாதைக்கு மூடி போடவும் 30 லட்ச ரூபாய்க்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, பணிகள் துவங்கியது; அந்த ரோடும் மூடப்பட்டது. சில அடி தூரத்துக்கு "கான்கிரீட்' போட்டதுடன் பணி யை முடித்து விட்டனர். நீர் வழிப்பாதைக்கு மூடி கூட போடவில்லை. மாநகராட்சியில் தாறுமாறாக மதிப்பீடு தயாரித்து, லட்சம் லட்சமாய் எங்கு போகிறது என்பதை யாரும் கண்காணிப்பதே இல்லை. -நமது நிருபர்-
300
2010-03-26T23:57:00+05:30
தமிழகம்
அரசு பஸ் டிரைவர்களுக்கு கிடுக்கிப்பிடி : டீசலை சேமிக்க நடவடிக்கை
சிவகங்கை : டீசலை சிக்கனப்படுத்த, குறைவான பயணிகள் உள்ள நிறுத்தங்களில் நிற்க வேண்டாம், என அரசு பஸ் டிரைவர்களுக்கு, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக அரசு பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அவ்வப்போது டீசல் கட்டணம் உயர்த்தப்படுவதாலும், முறைகேடுகளாலும், போக்குவரத்து கழகம், ஒன்பது கோடி ரூபாய் நஷ்டத்தில் தள்ளாடுகிறது.சமீபத்தில் டீசல் விலை 35.61 ரூபாயில் இருந்து, 38.16 ஆக உயர்த்தப்பட்டது. இதனால், போக்குவரத்து கழகத்திற்கு நெருக்கடி முற்றியுள்ளது.எனவே, டீசலை சிக்கனமாக பயன்படுத்த, அரசு பஸ் டிரைவர்களுக்கு, கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதன் விபரம்:பஸ் புறப்படுவதற்கு ஒரு நிமிடத்திற்கு முன், இன்ஜினை "ஸ்டார்ட்' செய்தால் போதும். இரண்டு நிமிடங்களுக்கு மேல் நிற்கும் நிறுத்தங்களில், இன்ஜினை "ஆப்' செய்ய வேண்டும். அடிக்கடி "கியர்' மாற்றுவதை தவிர்க்க வேண்டும். வேகமாக செல்லும் வாகனங்களை முந்தி செல்லக் கூடாது. பஸ்சை 40 கி.மீ., வேகத்திலேயே ஓட்டவேண்டும். டீசல் தொடர்பான பழுது ஏற்பட்டால், உடனே சரி செய்ய வேண்டும். அதிக பயணிகள் இல்லாத நிறுத்தங்களில் நிற்க வேண்டாம். கண்டக்டர், பயணிகளிடம் பேசிக்கொண்டு பஸ் ஓட்டக்கூடாது. எல்.எஸ்.எஸ்., பஸ்களுக்கான கட்டணத்தையே, சாதாரண பஸ்சிலும் வசூலிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிரைவர் ஒருவர் கூறுகையில், ""அரசு பஸ் குறைந்த வேகத்தில் செல்வதாக பரவலான கருத்து உள்ளது. மேலும், குறைந்த வேகத்தில் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடிக்கடி இன்ஜினை "ஆப்' செய்தால் பேட்டரியில் "சார்ஜ்' குறைந்துவிடும். டீசல் சிக்கனத்திற்காக பல உத்தரவுகள் வருகின்றன. ஆனால், பழுதடைந்த பஸ்களை பற்றி, நிர்வாகம் கவலைப்படுவதில்லை. இந்த பஸ்களால் தான் டீசல் வீணாகிறது என தெரிந்தும், டிரைவர்களுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்,'' என்றார்.
301
2010-03-27T04:24:00+05:30
தமிழகம்
மூத்த வக்கீல் பெயரில் நூலக கட்டிடம் ஏப்., 2ம் தேதி அடிக்கல் நாட்டு விழா
சேலம்: மூத்த வக்கீல்கள் பெயரில் சேலம் நீதிமன்றத்தில் புதிய நூலக கட்டிடம் கட்டப்படுகிறது. அதற்கான அடிக்கல் நாட்டுவிழா ஏப்ரல் 2ம் தேதி நடக்கிறது. சேலம் நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வரும் நூலகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சட்டப்புத்தகங்கள் உள்ளன. அவற்றின் பயன்பாட்டை அதிகரிக்க, இந்நூலகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. 25 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட உள்ள நூலக கட்டிடத்துக்கு, சேலத்தில் பொன்விழா கண்ட மூத்த வக்கீல்களான சீனிவாசன், பார்த்தசாரதி ஆகியோர் பெயர் சூட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டுவிழா ஏப்ரல் 2ம் தேதி நீதிமன்ற வளாகத்தில் நடக்கிறது. இது குறித்து சேலம் பார் அசோசியேஷன் செயலாளர் விவேகானந்தன் கூறியதாவது:மூத்த வக்கீல்கள் சீனிவாசன், பார்த்தசாரதி பெயரில் அமைய உள்ள நூலக கட்டிட அடிக்கல் நாட்டுவிழா ஏப்ரல் 2ம் தேதி காலை 10 மணிக்கு நீதிமன்ற வளாகத்தில் நடக்கிறது. பார் அசோசியேஷன் தலைவர் ராஜசேகரன் தலைமை வகிக்கிறார். மாவட்ட நீதிபதி சின்னபாண்டி முன்னிலை வகிக்கிறார். உயர் நீதிமன்ற நீதிபதி ஜோதிமணி, அடிக்கல் நாட்டி பேசுகிறார். "ஸ்பான்ஸர்' மூலம் இக்கட்டிடம் கட்டப்பட உள்ளது. அதற்கான நடவடிக்கைகள் சேலம் பார் அசோசியேஷன் மூலம் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
302
2010-03-27T04:25:00+05:30
தமிழகம்
பொட்டல் காடாக மாறி வரும் விளைநிலங்கள்கால்நடைகளை காப்பாற்ற விவசாயிகள் முயற்சி
வாழப்பாடி: வாழப்பாடி பகுதியில் நிலவி வரும் கடும் வறட்சியால், விளைநிலங்கள் பொட்டல் காடாக மாறி வருகின்றன. ஒரு லாரி வைக்கோல் 9,000 ரூபாய் விலை கொடுத்து வாங்கி வந்து, தீவனத்திற்கு வழியின்றி பரிதவித்து வரும் கால்நடைகளை காப்பாற்றும் முயற்சியில் விவசாயிகள்  ஈடுபட்டுள்ளனர்.  சேலம் மாவட்டத்தில் அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, பெத்தாநயக்கன்பாளையம், ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, தம்மம்பட்டி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பெரும்பாலான மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த கூலித்தொழில் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.விவசாயிகளும், விவசாய கூலித்தொழிலாளர்களும் ஆடு மற்றும் கறவை மாடு உள்ளிட்ட கால்நடை வளர்ப்பையே  நிரந்தர வருவாய்க்கு பிரதானமாக கொண்டுள்ளனர். தினந்தோறும் பால் உற்பத்தி மூலம் கணிசமான வருவாய் ஈட்டிக் கொடுக்கும் கறவை மாடுகளையும், இறைச்சிக்காக ஆடுகளையும், ஏர் உழுதல், வண்டியிழுத்தல் போன்ற பணிகளுக்காக எருதுகளையும் விவசாயிகள்  வளர்த்து வருகின்றனர்.இப்பகுதியில் ஆறு மாதத்திற்கு மேலாகவே மழை பொழிவு இல்லாததால், நிலத்தடி நீர்மட்டம் அடியோடு குறைந்து, விளைநிலங்கள் பயிர் செய்ய வழியின்றி பொட்டல்காடாக மாறிவருகின்றன. மேய்ச்சலுக்கு வழியில்லாததால் தீவனத்திற்கு வழியின்றி கால்நடைகள் பரிதவித்து வருகின்றன.கால்நடைகளுக்கு புண்ணாக்கு, தவிடு, பருத்திகொட்டை மற்றும் மக்காச்சோளம், மரவள்ளி கழிவுகளை  விவசாயிகள் வாங்கி போட்டும் போதிய போஷாக்கு கிடைக்காமல் கால்நடைகள் நலிந்து வருகின்றன.எனவே, திருவண்ணாமலை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் நெல் அறுவடை செய்யும் விவசாயிகளிடம் இருந்து நெற்பயிர் வைக்கோலை அதிக விலை கொடுத்து வாங்கி வந்து, பதப்படுத்தி வைத்து, சிறுக சிறுக கொடுத்து கால்நடைகளை காப்பாற்றும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.அதனால், நெற்பயிர் வைக்கோலுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் வரை அதிகபட்சமாக 6,000 ரூபாய் வரை மட்டுமே விற்கப்பட்ட ஒரு லாரி வைக்கோல் தற்போது 9,000 ரூபாயை தாண்டியுள்ளது. இருப்பினும், வைக்கோலை விலை பேசி வாங்கி வருவதற்கு விவசாயிகள் வெளிமாவட்டங்களில் முகாமிட்டுள்ளனர்.
303
2010-03-27T04:25:00+05:30
தமிழகம்
துஷ்ட ஆவிகளை விரட்டுவதாக நம்பிக்கை வாசலில் வெள்ளெருக்கு வளர்க்கும் மக்கள்
மேட்டூர்: வெள்ளெருக்கு செடிகள் துஷ்ட ஆவிகள் வீட்டிற்குள் நுழையாமல் தடுப்பதாகவும், பில்லி, சூனியம், செய்வினை போன்றவற்றை முடக்குவதாகவும் நம்புவதால், மேட்டூர் பகுதியை சேர்ந்த பெரும்பாலான மக்கள் வீட்டு முன் வெள்ளெருக்கு செடி வளர்க்கின்றனர். எருக்கஞ்செடிகளில் நீல எருக்கன், வெள்ளை எருக்கன், முத்து எருக்கன் என பல்வேறு வகைகள் உள்ளது. இதில், வெள்ளை நிற பூக்கள் பூக்கும் எருக்கஞ்செடி வேரில் விநாயகர் சிலை செய்து பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். மேலும், வெள்ளை எருக்கனில் லட்சுமி வாசம் செய்வதாகவும் நம்புகின்றனர். வெள்ளை எருக்கன் செடியை வீட்டின் முன்புறம் வளர்த்தால், வீட்டில் செல்வம் கொழிக்கும். வீட்டிற்குள் துஷ்ட ஆவிகள் நுழையாது. பில்லி, சூனியம், செய்வினை போன்றவற்றால் வீட்டில் வசிப்பவர்கள் பாதிக்காமல் தடுக்கும் என பொதுமக்கள் நம்புகின்றனர். வெள்ளெருக்கு பூக்களில் இருந்து ஆஸ்துமா தடுக்கும் மருந்தும், இலை சாற்றில் இருந்து வாதம், கை, கால் வலியை தடுக்கும் நாட்டு மருந்தும் தயாரிக்கப்படுகிறது.வெள்ளருக்கு தண்டில் இருந்து நாரை எடுத்து குழந்தைகளுக்கு அரைஞான் கயிறாக கட்டினால் நலுங்கு ஏற்படாது என்பதும்  கிராமபுற மக்களின்   நம்பிக்கையாகும்.   அதனால் மேட்டூர், கொளத்தூர் பகுதியில் பெரும்பாலான மக்கள் தங்கள் வீட்டின் முன்பு வெள்ளெருக்கு செடிகளை ஆர்வத்தோடு வளர்க்கின்றனர்.
304
2010-03-27T04:26:00+05:30
தமிழகம்
ஓடை அபிவிருத்தி பணி துரிதம் : உயிர் சேதங்களை தவிர்க்க நடவடிக்கை
சேலம்: சேலம் மாநகராட்சியில் உயிர் சேதங்களை தவிர்க்கும் பொருட்டு வெள்ளக்குட்டை ஓடை அபிவிருத்தி பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சியில் 31 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் திருமணி முத்தாறு இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பழைய பஸ் ஸ்டாண்டு அருகில் ஒரு கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பிலும், குண்டு போடும் இடம் அருகே 66 லட்சம் ரூபாய் மதிப்பிலும், ஆக்ஸ்போர்டு பள்ளி அருகில் இரண்டு கோடியே 95 லட்சம் ரூபாய் செலவிலும் மூன்று பாலங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டது. சில மாதங்களுக்கு முன் அதற்கான பணிகள் துவங்கின.திருமணி முத்தாறு இரண்டாம் கட்ட அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வெள்ளக்குட்டை ஓடை பகுதியில் ஒன்பது கோடியே 31 லட்சம் ரூபாய் மதிப்பில் அபிவிருத்தி பணி மேற்கொள்ள சேலம் மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், பல மாதங்களாக இப்பணி மேற்கொள்ளப்படவில்லை. இந்த பாலம் வழியாக செல்லும் டூ வீலர் மற்றும் கனரக வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளானது. பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் மாணவர்கள்  கடும் சிரமத்துக்குள்ளாகினர். பாலம் குறித்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் எழுப்பினர். தற்போது திருமணி முத்தாறு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வெள்ளக்குட்டை ஓடையை சீரமைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. சேலம் கிச்சிப்பாளையம் பகுதியில் சீரமைப்பு பணிக்கான சர்வே மேற்கொள்ளப்பட்டு, பணிகள் நடந்து வருகிறது. ஆறு மாதங்களுக்குள் இப்பணிகளை முடிக்க பாலாஜி இன்டஸ்டிரியல் கட்டுமான நிறுவனம் முடிவு செய்துள்ளது.
305
2010-03-27T04:26:00+05:30
தமிழகம்
தகவல் கொடுத்ததால் விபரீதம் குடும்பத்தை வெட்டிய கும்பலுக்கு வலை
சேலம்: சேலம் அருகே அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்ரமிப்பு செய்தவர் குறித்து அதிகாரிகளிடம் தகவல் கொடுத்த குடும்பத்தை, அரிவாளால் வெட்டிய கும்பலை, ஓமலூர் போலீஸார் தேடி வருகின்றனர்.ஓமலூர் அருகே உள்ள மூங்கில்பாடி கிராமத்தை சேர்ந்த விவசாயி பெருமாள். அவரது மனைவி கோவிந்தம்மாள். அவர்களது மகள் தாரணி(15), அதே பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். பெருமாள் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது, மர்ம கும்பல் உள்ளே புகுந்து மூன்று பேரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். பெருமாள், கோவிந்தம்மாள், தாரணி ஆகிய மூவரும் படுகாயம் அடைந்தனர். பெருமாள், கோவிந்தம்மாள் ஆகியோரை சேலம் அரசு மருத்துவமனையிலும், தாரணியை தனியார் மருத்துவமனையில் அருகில் இருந்தவர்கள் தீவிர சிகிச்சைக்கு அனுமதித்தனர்.இது குறித்து ஓமலூர் போலீஸாரிடம் பெருமாள் புகார் அளித்துள்ளார். தனது வீட்டு அருகே வசித்து வரும் வக்கீல் என்பவர் அரசு புறம் போக்கு நிலத்தை ஆக்ரமிப்பு செய்து இருந்தார். அது குறித்து ஓமலூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் தெரிவித்தேன். இந்த முன் விரோதம் காரணமாக வக்கீல் அவரது குடும்பத்தினர் எங்களை அரிவாளால் வெட்டியுள்ளனர் என்று தெரிவித்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
306
2010-03-27T04:27:00+05:30
தமிழகம்
அச்சமின்றி ஓட்டளிக்க பலத்த பாதுகாப்பு: தேர்தல் கமிஷன் உறுதி
புதுடில்லி:இன்று நடக்கும் பென்னாகரம் இடைத்தேர்தலில், எல்லா தரப்பு வாக்காளர்களும் அச்சமின்றி ஓட்டளிக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை தலைமைத் தேர்தல் கமிஷன் எடுக்கும் என, உறுதி அளிக்கப்பட்டுள்ளது.டில்லியில் நேற்று மாலை 5 மணியளவில், தி.மு.க., பார்லிமென்ட் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, கட்சியின் தலைமை கொறடா டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் தலைமைத் தேர்தல்  கமிஷனர் நவீன் சாவ்லாவை சந்தித்து, ""பென்னாகரம் தொகுதியில், ஆதிதிராவிட மக்கள் வாழும் 62 பகுதிகளில், தேர்தல் தினத்தன்று பாதுகாப்பு நடடிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும்,'' என, கேட்டுக் கொண்டனர்.நவீன் சாவ்லாவை தி.மு.க.,வினர் சந்தித்த போது, தேர்தல்  கமிஷனர்கள் குரேஷி, சம்பத் ஆகியோரும் உடனிருந்தனர். சந்திப்பு 15 நிமிடம் நீடித்தது. சந்திப்பிற்கு பின் நிருபர்களிடம் டி.ஆர்.பாலு பேசும் போது, ""பென்னாகரம் தொகுதியில் உள்ள 62 பகுதிகளில் கடந்த தேர்தல்களின் போது கணிசமான ஆதிதிராவிட மக்கள் ஓட்டளிக்க முடியவில்லை. உயர் ஜாதி பிரிவினர் வன்முறையை தூண்டிவிட்டு இம்மக்களை ஓட்டளிக்கவிடாமல் செய்தனர்.""ஆகவே, இதுகுறித்து தேர்தல் கமிஷனரிடம் முறையிட்டு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வைத்தோம். தேர்தல்  கமிஷனரும்  உடனடியாக இந்த பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துவோம் என, உறுதி அளித்துள்ளார்,'' என்றார்.
307
2010-03-27T04:29:00+05:30
இந்தியா
மதம் மாறிய தலித்துகளுக்கு சலுகை: பா.ஜ., எதிர்ப்பு
புதுடில்லி: கிறிஸ்தவ மதத்துக்கோ, முஸ்லிம் மதத்துக்கோ மாறிய தலித் மக்களுக்கு தாழ்த்தப்பட்டவர்களுக்குரிய சலுகைகளை அளிக்க பாரதிய ஜனதா கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொடர்பாளர் ராம்நாத் கோவிந்த் இது குறித்து கூறியதாவது: மதம் மாறிய தலித்துகளுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் படி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. இந்து மதத்தில் தான் தீண்டாமை பழக்கம் இருந்துள்ளது.  கிறிஸ்தவ மதத்திலோ முஸ்லிம் மதத்திலோ தீண்டாமை வழக்கம் இல்லை. எனவே, இந்த மதங்களுக்கு மாறிய தலித்துகளுக்கு, தாழ்த்தப்பட்டர்வர்களுக்குரிய சலுகை அளிக்கக்கூடாது. ஏற்கனவே, இவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்குரிய சலுகைகளை அனுபவித்து வருகின்றனர். இந்து மதத்தை சேர்ந்த தலித்துகள் அரசுப் பள்ளிகளில் படிக்கின்றனர். மதம் மாறிய தலித் குழந்தைகள், கான்வென்ட்டில் படிக்கின்றனர் என்பதை அனைவரும் அறிவர் . அம்பேத்கர், நேரு, சர்தார் படேல் போன்றவர்கள் மதம் மாறிய தலித்துகளுக்கான இடஒதுக்கீட்டை ஏற்கவில்லை.மதம் மாறியவர்களுக்கு,  தாழ்த்தப்பட்டவர்களுக்குரிய சலுகை அளிக்கப்பட்டால் மேலும் மதமாற்றம் நடப்பது அதிகரிக்கும். இது ஆரோக்கியமான போக்கல்ல. ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதல்ல. எனவே, இந்த கமிஷன் அளித்த அறிக்கையை அமல்படுத்தக்கூடாது.அதே சமயம், புத்த அல்லது சீக்கிய மதத்தில் உள்ள தலித் என்கிறபோது அவர்கள் அடிப்படை வேறானது.  சலுகை தொடர வேண்டும்.இவ்வாறு ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.
308
2010-03-27T04:29:00+05:30
இந்தியா
ராகுல் உ.பி., வருகையால் தேனீக்கள் விரட்டியடிப்பு
சுல்தான்பூர்:ராகுல் பங்கேற்க இருக்கும் கூட்டம் நடக்கும் இடத்திலுள்ள இரண்டு தேன்கூட்டை, மாவட்ட நிர்வாகம் கலைத்து, அவை பாதுகாப்பான இடம் என்று அறிவித்துள்ளது. திட்டமிட்டபடி ராகுல் நேற்று  சுல்தான்பூர் வந்து சேர்ந்தார். அவர், அமேதி தொகுதியில் கிராமம் கிராமமாக செல்லவிருக்கிறார். உத்தரபிரதேச மாநிலம், சுல்தான்பூரில், "விகாசபவன்' வளாகத்தில் ராகுல் கலந்து கொள்ள இருக்கும் கூட்டம் நடக்க உள்ளது. இந்த இடத்தில் பல ஆண்டுகளாக இரண்டு பெரிய தேன்கூடுகள் இருந்து வருகின்றன. இதுவரையிலும் அதே இடத்தில் நடந்துள்ள பல கூட்டங்களில் ராகுல் கலந்து கொண்டிருக்கிறார். அப்போதெல்லாம் அந்த தேன்கூடுகள் பிரச்னையாகப் படவில்லை.ஆனால், சமீபத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் 25வது ஆண்டு விழாவின் போது, அதன் தலைவரும் மாநில முதல்வருமான மாயாவதி பேசிக் கொண்டிருக்கும் போது, அங்கிருந்த தேன்கூடு கலைந்து, தேனீக்கள் பறக்க ஆரம்பித்தன.இது பெரிய பாதுகாப்பு பிரச்னையாகக் கிளம்பியது. வேண்டுமென்றே மாயாவதி கூட் டத்தில் பிரச்னையை கிளப்ப அதை கலைத்து விட்டதாக கூறப்பட்டது. ஆனால், மேடையில் தேனீக்கள் பறந்து வந்த போதும் மாயாவதி அஞ்சவில்லை.தற்போது, ராகுல் பங்கேற்க இருக்கும் விகாசபவன் வளாகத்திலுள்ள இரண்டு தேன்கூடுகளும், மாவட்டத் தோட்டக்கலை நிபுணர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்புக் குழுவின் கண்காணிப்பில் முற்றிலுமாக  கலைக்கப்பட்டு, அந்த இடம் பாதுகாப்பானது தான் என்று மாவட்ட நிர்வாகத்தால் உறுதிப்படுத்தப்பட்டு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
311
2010-03-27T04:33:00+05:30
தமிழகம்
ரூ. 1,749 கோடிக்கு இறுதி துணை பட்ஜெட் தாக்கல்
சென்னை:சட்டசபையில், 2009-10ம் ஆண்டிற்கு 1,749 கோடி ரூபாய் நிதி ஒதுக்கக் கோரும் இறுதி துணை பட்ஜெட்டை, நிதியமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்தார்.அப்போது, அன்பழகன் கூறியதாவது:சபையில் வைக்கப்பட்ட துணை மதிப்பீடுகள், 1,749 கோடியே 73 லட்சம் ரூபாய்க்கு நிதி ஒதுக்குவதற்கு வகை செய்கின்றன. இதில், 1,364 கோடியே 97 லட்சம் ரூபாய் வருவாய்க் கணக்கிலும், எஞ்சிய 384 கோடியே 76 லட்சம் ரூபாய் மூலதனம் மற்றும் கடன் கணக்கிலும் அடங்கும்.முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு உதவித் திட்டத்தின் கீழ், கருவுற்ற பெண்களுக்கு உதவித்தொகை வழங்க கூடுதலாக 110 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இந்த துணை மதிப்பீடுகளில், அடையாள நிதி ஒதுக்கமாக 1,000 ரூபாய், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை என்பதன் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது. எஞ்சிய தொகை, மானியத்தில் ஏற்படும் மீதத்தில் இருந்து மறு நிதி ஒதுக்கீடு மூலம் செலவிடப்படும்.நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ், பல்வேறு திட்டங்களுக்கு 570 கோடி ரூபாய் கூடுதல் நிதி தேவைப்படுகிறது. இதற்காக, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை என்பதன் கீழ் துணை மதிப்பீடுகளில் 112 கோடி ரூபாய் சேர்க்கப்பட்டுள்ளது. மீதி தொகை, மானியத்தில் ஏற்படும் மீதத்தில் இருந்து மறு நிதி ஒதுக்கீடு மூலம் செலவிடப்படும். மூவலூர் ராமாமிர்தம் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ், ஏழை குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு திருமண நிதி உதவிக்கு கூடுதலாக 100 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இதற்காக, சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் கீழ், அடையாள நிதி ஒதுக்கீடாக 1,000 ரூபாய் சேர்க்கப்பட்டுள்ளது. மீதி தொகை, மறு நிதி ஒதுக்கீடு மூலம் செலவிடப்படும்.இவ்வாறு அன்பழகன் கூறினார். இதன்பின், குரல் ஓட்டெடுப்பு மூலம் துணை பட்ஜெட் நிறைவேற்றப்பட்டு, சபையின் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2010-11ம் ஆண்டின் செலவிற்கான முன்பண மானியக் கோரிக்கை ஆகியவற்றுக்கு சபையில் ஒப்புதல் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2010ம் ஆண்டு நிதி ஒதுக்க சட்ட மசோதாக்களை, நிதியமைச்சர் அன்பழகன் அறிமுகம் செய்தார்.இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிந்ததும், சபையை, ஏப்ரல் 5ம் தேதிக்கு தள்ளி வைக்கும் தீர்மானத்தை, அன்பழகன் கொண்டு வந்தார். அது, நிறைவேற்றப்பட்டதும், "சபை மீண்டும் வரும் 5ம் தேதி காலை 9.30 மணிக்கு கூடும்' என சபாநாயகர் அறிவித்தார். 9.30க்கு துவங்கிய சட்டசபைக் கூட்டம், 9.50க்கு முடிந்தது.சபைக்கு முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வந்திருந்தனர். அ.தி.மு.க., வரிசை, உறுப்பினர்கள் இல்லாமல் வெறிச்சோடியது.ஜெயக்குமார், துரைராஜ் உள்ளிட்ட 12 பேர் மட்டுமே சபைக்கு வந்திருந்தனர். வரும் 5ம் தேதி முதல் பட்ஜெட் மீதான பொது விவாதம் நடத்தப்பட்டு, அதற்கு நிதியமைச்சர் அன்பழகன் பதிலளிக்க உள்ளார்.
312
2010-03-28T03:58:00+05:30
தமிழகம்
திருச்சியில் புதுமாப்பிள்ளைக்கு கத்திக்குத்து: சொத்து பிரச்னையில் நேர்ந்த விபரீதம்
திருச்சி: திருச்சி பாலக்கரையில் சொத்து பிரச்னை காரணமாக திருமணமாகி ஐந்து நாட்களே ஆன புதுமாப்பிள்ளை உள்ளிட்ட இருவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய எட்டு பேரை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். திருச்சி பாலக்கரை எடத்தெருவைச் சேர்ந்தவர் அர்ஜுனன் மகன் மருந்து விற்பனை பிரதிநிதி நாராயணன் (25). இவரது பெரியப்பா மகன் ரங்கசாமி (30). இவர் சங்கிலியாண்டபுரம் பகுதியில் மெடிக்கல் வைத்துள்ளார். இவர்களில் ரங்கசாமிக்கு கடந்த 21ம் தேதி பாலக்கரைச் சேர்ந்த கோமதி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. நாராயணனுக்கு இன்னும் 10 நாட்களில் திருமணம் நடக்க நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. நாராயணனின் தந்தை அர்ஜுனனுக்கும், பாலக்கரை பகுதியைச் சேர்ந்த தங்கவேலுக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது. நேற்றுமுன்தினம் இரவு ரங்கசாமியும், நாராயணனும் கீழ படையாச்சி தெருவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தங்கவேலு உள்ளிட்ட எட்டு பேர் கொண்ட கும்பல் இருவரையும் வழிமறித்து சொத்து பிரச்னை தொடர்பாக வாக்குவாதம் செய்ததில் கைகலப்பாக மாறியது. இதில், தங்கவேலுவுடன் வந்தவர்கள் கொண்டு வந்திருந்த கத்தியால் புதுமாப்பிள்ளை ரங்கசாமியையும், நாராயணனையும் மார்பு, கழுத்து, வயிறு பகுதிகளில் சரமாரியாக குத்தினர். இதில், படுகாயம் அடைந்தனர். தங்கவேல் தரப்பினர் அங்கிருந்து தப்பியோடினர். இதையடுத்து மயங்கி விழுந்த இருவரையும் அக்கம்பக்கத்தார் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின் அங்கிருந்து அவர்கள் இவரும் மேல் சிகிச்சைக்காக மாருதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவலறிந்த பாலக்கரை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். திருச்சி மாநகர போலீஸ் டி.சி., தமிழ்ச்சந்திரன், கோட்டை ஏ.சி., சீனிவாசன், பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ஆகியோர் விசாரணை நடத்தினர். பிரச்னையில் தொடர்புடைய இருவரும் பாலக்கரை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அங்கு மேலும் பிரச்னை ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. நேற்று அதிகாலை முதல் மதியம் பாலக்கரை பகுதிகளில் உள்ள வீடுகளில் கத்தியால் குத்தியவர்கள் துங்கியிருக்கின்றனரா? என்று போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால், யாரும் சிக்கவில்லை. இதையடுத்து பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் பாலக்கரை பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
315
2010-03-28T04:03:00+05:30
தமிழகம்
எஸ்.ஐ.டி., முன் ஆஜரானார் முதல்வர் மோடி:பல மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை
காந்திநகர்:குஜராத் வன்முறை குறித்து விசாரிக்க, சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி.,) முன், அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி நேற்று ஆஜரானார். அவரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர், பல மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது ஏராளமான கேள்விகளுக்கு மோடி பதில் அளித்தார்.குஜராத்தில் 2002ம் ஆண்டு சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிக்கப்பட்டதை தொடர்ந்து, அம்மாநிலத்தில் பெரும் வன்முறை வெடித்தது. ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இந்த வன்முறை சம்பவங்கள் குறித்து விசாரிக்க, சி.பி.ஐ.,யின் இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஆர்.கே.ராகவன் தலைமையில் ஐந்து உறுப்பினர்கள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை, சுப்ரீம் கோர்ட் நியமித்தது. இந்தக் குழு முன், காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ஈஷன் ஜாப்ரேயின் மனைவி ஜகியா ஜாப்ரே மனு ஒன்றை அளித்தார். அதில், "2002ல் குல்பர்க் சொசைட்டி பகுதியில் நடந்த வன்முறையில் என் கணவர் உட்பட பலர் கொல்லப்பட்டது குறித்து, முதல்வர் மோடியிடம் விசாரணை நடத்த வேண்டும். ஏனெனில், குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என, மோடி உத்தரவிட்டுள்ளார்' என, கூறியிருந்தார்.இதையடுத்து, சிறப்பு புலனாய்வுக் குழு முன் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும் என, முதல்வர் மோடிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இருந்தாலும், அவர் ஆஜராவாரா, மாட்டாரா என்ற சஸ்பென்ஸ், கடந்த சில நாட்களாக தொடர்ந்தது. அந்த சஸ்பென்ஸ் நேற்று முடிவுக்கு வந்தது. குஜராத் காந்தி நகரில், பழைய தலைமைச் செயலக கட்டடத்தில் உள்ள சிறப்பு புலனாய்வுக் குழு அலுவலகத்திற்கு, நேற்று மதியம் சென்ற முதல்வர் மோடி, குழு முன் ஆஜரானார். மோடி ஆஜரான நேரத்தில், குழு தலைவர் ராகவன் இல்லை என்பதால், அவருக்கு அடுத்த அந்தஸ்தில் உள்ள உறுப்பினரான மல்கோத்ரா, விசாரணை நடத்தினார். இவர் சி.பி.ஐ.,யின் முன்னாள் டி.ஐ.ஜி., என்பது குறிப்பிடத்தக்கது.மோடியிடம் முதலில் ஐந்து மணி நேரம் விசாரணை நடந்தது. அப்போது 68க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். பின், வெளியே வந்த மோடி, மீண்டும் இரவு 9 மணிக்கு சிறப்பு புலனாய்வுக் குழு முன் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு விளக்கமாக பதில் அளித்தார். சிறப்பு புலனாய்வுக் குழு முன் மோடி ஆஜராவதையொட்டி, பழைய தலைமைச் செயலக கட்டடத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காலை முதலே ஏராளமான பத்திரிகையாளர்கள் அங்கு குவிந்திருந்தனர். வெள்ளை நிற குர்தா மற்றும் பைஜாமா அணிந்து காரில் வந்து இறங்கிய மோடி, பத்திரிகையாளர்களைப் பார்த்து பெரிய கும்பிடு போட்டு விட்டு, சிறப்பு புலனாய்வுக் குழு அலுவலகத்திற்கு சென்றார். கிரிமினல் குற்றச்சாட்டு தொடர்பாக, சிறப்பு புலனாய்வுக் குழு முன், முதல்வர் ஒருவர் ஆஜராவது இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது. மோடி ஆஜரானது குறித்து குஜராத் அரசின் தகவல் தொடர்பாளர் கூறுகையில், ""சிறப்பு புலனாய்வு குழு முன் ஆஜரானதால், மோடிக்கோ அல்லது பாரதிய ஜனதா கட்சிக்கோ பின்னடைவு இல்லை. அவர் எப்போதும் சட்டத்திற்கு கட்டப்பட்டவர் என, நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். அது உறுதி செய்யப்பட்டுள்ளது,'' என்றார்."சிறப்பு புலனாய்வு குழு முன் மோடி ஆஜரானாது துரதிருஷ்டமானது' என, மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியுள் ளார். "இப்படிப்பட்ட சூழ்நிலை யை மோடியே உருவாக்கிக் கொண்டுள்ளார். இது விரும்பத்தக்கது அல்ல; இருந்தாலும், துரதிருஷ்டவசமாக நடந்து விட்டது' என, அவர் மேலும் கூறினார்.
316
2010-03-28T04:04:00+05:30
தமிழகம்
சூரிய சக்தியால் பார்லிமென்ட்டை ஒளிர செய்ய முடிவு
புதுடில்லி:பார்லிமென்ட்டின் சுற்றுச்சூழல் கெடாதவாறு சூரிய சக்தியால் மின் விளக்குகளை எரியவிடவும், பேட்டரியால் இயங்கும் வாகனங்களை இந்த வளாகத்தில் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.நம் நாட்டு ஜனநாயகத்தின் பாரம்பரிய சின்னமாக கருதப்படும் பார்லிமென்ட்டின் சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து கடந்த வாரம் சபாநாயகர் மீரா குமார் தலைமையில் பார்லிமென்ட் குழு கூடி விவாதித்தது.சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், மரபுசாரா எரிசக்தித்துறை அமைச்சர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர், இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். பார்லிமென்ட்டின் பாரம்பரிய அந்தஸ்தை பேணி காக்கவும், இதன் சுற்றுச் சூழலை பாதுகாக்கவும், இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள ராஜ்ய சபா துணைத் தலைவர் ரஹ்மான் கான் தலைமையில் அமைச்சர் ஜெய்ராம் உட்பட 32 உறுப்பினர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.பார்லிமென்ட் வளாகத்தில் சத்தம் அதிகமில்லாத பேட்டரியால் ஓடும் வாகனங்களை இயக்குவது, சூரிய சக்தியால் அனைத்து மின்விளக்குகளையும் எரியவிடுவது, பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள பழமையான மரங்களை காப்பது, இங்குள்ள குளங்களில் எப்போதும் நீர் தளும்பியிருக்க செய்வது போன்ற முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டன.பார்லிமென்ட் வளாகத்தில் இன்னும் அதிக மரங்களை வளர்த்து வளாகத்தை குளுமையடைய செய்து, "ஏசி' பயன்பாட்டை குறைக்கும் படி ராஜ்யசபா உறுப்பினர் ஒருவர் இந்த கூட்டத்தில் கருத்து தெரிவித்தார். அவரது கருத்தையும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
317
2010-03-28T04:06:00+05:30
General
பக்கவாதம் தடுக்க தக்காளி சாறு போதும்
லண்டன்:தக்காளி சாறு, பக்கவாதம் மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கும் தன்மை கொண்டது என்று பிரிட்டன் ஆய்வு தெரிவிக்கிறது.லண்டன் அபர்தீன் பல்கலைக் கழக விஞ்ஞானிகள், தக்காளி சாறு பக்கவாதம், இதயநோய்களை தடுக்கும் சக்தி கொண்டது என்று தங்கள் ஆய்வு மூலம் நிரூபித்துள்ளனர். பொதுவாக, இந்த நோய்களுக்கு ஆஸ்பிரின் மாத்திரைகள் பயன்படுத்தப் படுகிறது.ஆஸ்பிரின் அதிகம் பயன்படுத்தும் போது ரத்தப்போக்கு, அல்சர் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இந்த தக்காளி சாற்றை பயன் படுத்துவதன் மூலம் பக்கவாதம், மாரடைப்பு வராமல் தடுக்கலாம் என் கின்றனர்.தக்காளி விதைகளை சுற்றி உள்ள பசை போன்ற திரவம் ரத்தம் உறைதலை தடுக்கிறது என்றும் தெரிவிக்கின்றனர். இந்த ஆய்வுக்காக விஞ்ஞானிகள் தக்காளி சாற்றையும் ஆஸ்பிரினையும் ஒப்பிட்டு 43 நபர்களுக்கு கொடுத்து பரிசோதித்து உள்ளனர்.ஏழு மாத பரிசோதனைக்கு பின்னர், எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. சிறந்த பலன் கிடைத்திருப் பதை கண்டுபிடித்துள்ளனர்.
319
2010-03-28T04:08:00+05:30
General
பிரிட்டன் வாழ் ஆசிய கோடீஸ்வரர்களில் தொழிலதிபர் லட்சுமி மிட்டல் முதலிடம்
லண்டன்:வெளிநாட்டு வாழ் இந்திய தொழிலதிபர் லட்சுமி மிட்டல், பிரிட்டனில் வாழும் ஆசிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு, 1.22 லட்சம் கோடி ரூபாய்.ஆசியன் மீடியா அண்ட் மார்க்கெட்டிங் குரூப்பின், "ஈஸ்டர்ன் ஐ' என்ற பத்திரிகை, "ஆசிய பணக்காரர்கள் பட்டியல் 2010'ஐ, லண்டனில உள்ள சாபிடெல் ஓட்டலில் வெளியிட்டது.வெளிநாட்டு வாழ் இந்திய தொழிலதிபரான லட்சுமி மிட்டல்(59), பிரிட்டனில் வாழும், ஆசிய கோடீஸ்வரர்களில் முதலிடம் பிடித்துள்ளார். உலகின் மிகப் பெரிய ஸ்டீல் கம்பெனியான ஆர்சிலர் மிட்டல் நிறுவன உரிமையாளரான லட்சுமி மிட்டலின் சொத்து மதிப்பு, 1.22 லட்சம் கோடி ரூபாய்.இவரை தொடர்ந்து, இந்துஜா சகோதரர்கள், வேதாந்தா சுரங்க குழுமத்தின் அனில் அகர்வால், பெஸ்ட் வேஸ் நிறுவனத்தின் சர் அன்வர் பர்வேஸ் மற்றும் கப்பாரோ நிறுவன உரிமையாளர் ஸ்வராஜ் பால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.இந்நிகழ்ச்சியில், இந்துஜா குழுமத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவரான எஸ்.பி.இந்துஜா மற்றும் ஜி.பி.இந்துஜா ஆகியோருக்கு "வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கப்பட்டது. ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும், இவர்களின், இந்துஜா பவுண்டேஷன் சார்பில் மும்பையில், பி.எச்., இந்துஜா தேசிய மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ள இந்துஜா சகோதரர்கள் கூறுகையில், "இந்தியாவின் உள்கட்டமைப்பு துறைக்காக, குறைந்தது 100 கோடி ரூபாய் நிதியுடன் கூடிய நிதியம் ஒன்றை அமைக்க வேண்டும் என்பதே நோக்கம்' என்றனர். இவர்களின் சொத்து மதிப்பு 57 ஆயிரத்து 600 கோடி ரூபாய்.இப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் சுவராஜ் பால், "கடின உழைப்பு, ஒற்றுமை மற்றும் அதிர்ஷ்டம்' ஆகியவையே தன் வெற்றிக்கு காரணம் என்றார். இவரின் சொத்து மதிப்பு 3,672 கோடி ரூபாய்.
320
2010-03-28T04:09:00+05:30
தமிழகம்
செம்மொழி மாநாட்டில் பங்கேற்கும் தமிழறிஞர்களுக்கு அடையாள அட்டை
கோவை:ஆய்வரங்கத்தில் பங்கேற்கும் தமிழறிஞர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டுமென்று, ஆய்வரங்க அமைப்புக் குழுச் செயலர் கனிமொழி அறிவுறுத்தியுள்ளார்.கோவை கொடீசியாவில், செம்மொழி மாநாட்டிற்கான மாதிரி அரங்கங்களை, ஆய்வரங்க அமைப்புக் குழுச் செயலர் கனிமொழி நேற்று பார்வையிட்டார்.ஆய்வரங்கங்களில் பங்கேற்க வரும் தமிழறிஞர்களை எளிதில் அடையாளம் காணும் வகையில், அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கலாம் என்று ஆலோசனை கூறிய அவர், தமிழறிஞர்கள் தங்குமிடங்கள் குறித்து, அமைச்சர் பழனிசாமியிடம் பல்வேறு விவரங்களைக் கேட்டறிந்தார்.ஆய்வரங்கத்துக்கு வரும் தமிழறிஞர்களை எந்தவித சிரமமும் இன்றி அழைத்து வருவதற்கும், தக்க பாதுகாப்பு வழங்குவதற்கும் செய்துள்ள ஏற்பாடு பற்றி, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திர பாபுவுடன் ஆலோசித்தார்.
321
2010-03-28T04:10:00+05:30
தமிழகம்
கலெக்டர் காரை முற்றுகையிட்ட பா.ம.க.,
பென்னாகரம்:ஓட்டுப்பதிவை பார்வையிட சென்ற கலெக்டர் காரை, பா.ம.க.,வினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட சாமிசெட்டிப்பட்டி அரசு துவக்கப்பள்ளி ஓட்டுச்சாவடியை, கலெக்டர் அமுதா பார்வையிட சென்ற போது, அவருடன் வந்த கோவை தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படை போலீசார், ஓட்டுச்சாவடி முன் நின்றிருந்த கட்சியினரை அடித்து விரட்டினர்.இதில், பா.ம.க.,வை சேர்ந்த குமார் என்பவரை போலீசார் அடித்ததில், அவரால் நடந்து செல்ல முடியவில்லை. இதனால், ஆத்திரமடைந்த பா.ம.க.,வினர் சிலர், கலெக்டர் கார் முன் அமர்ந்து முற்றுகையிட்டனர்.இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டுச்சாவடியை ஆய்வு செய்த பின், வெளியில் வந்த கலெக்டர் அமுதா, போலீசார் மீது நடவடிக்கை எடுப்பதாகவும், அடிபட்டவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினார்.அங்கிருந்த பா.ம.க., மாவட்ட ஊராட்சி தலைவர் வெங்கடேஸ்வரன், முற்றுகையிட்டவர்களை கலைந்து போகச் செய்தார். அங்கிருந்து புறப்பட்ட கலெக்டர், ஏலகிரி, பாலஜங்கமனஅள்ளி, இண்டூர் உள்ளிட்ட பல்வேறு ஓட்டுச்சாவடிகளில் அடுத்தடுத்து ஆய்வு செய்தார்.எஸ்.எம்.எஸ்: பென்னாகரம் இடைத்தேர்தலில், ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை, ஓட்டுப்பதிவு சதவீதத்தை கொடுக்க, ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு சிம்கார்டு வழங்கப்பட்டது.அதன் மூலம், 250 ஓட்டுச்சாவடிகளில் இருந்து தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாடு அறையில் உள்ள கம்ப்யூட்டருக்கு, எஸ்.எம்.எஸ்., கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. முறையாக வந்து கொண்டிருந்த எஸ்.எம்.எஸ்., காலை 11 மணிக்கு மேல் "சர்வரில்' ஏற்பட்ட பிரச்னை காரணமாக, உடனுக்குடன் ஓட்டு சதவீதங்கள் தெரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. இறுதிக்கட்ட ஓட்டுப்பதிவு நேரமான மாலை 3 மணிக்கு மேல் 5 மணி வரை, அரை மணி நேரத்துக்கு ஒரு முறை ஓட்டுப் பதிவு சதவீதம் எஸ்.எம்.எஸ்., செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
322
2010-03-28T04:17:00+05:30
தமிழகம்
விடைத்தாள் திருத்தும் பணியில் கல்வித்துறை விதிப்படி ஆசிரியர் நியமனம் : புதியதாக உருவாகியுள்ள சர்ச்சையால் பரபரப்பு
தூத்துக்குடி, மார்ச் 28-பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி விடைத்தாள் திருத்தும் பணியில் கல்வித்துறை விதிமுறைப்படி ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும். சிபாரிசுக்கு இடம் அளிப்பதால் மாணவர்களுக்கு மார்க்கில் பாதிப்பும், ஆசிரியர்களுக்கு மனரீதியான பாதிப்பும் ஏற்படும் என்று ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வு முடிந்து விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் முதல் துவங்க உள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் விடைத்தாள் காப்பகங்கள் அமைக்கப்பட்டு விடைத்தாள் திருத்தும் முதன்மை எக்சாமினர்களுக்கு பயிற்சி நடந்து வருகிறது. எல்லா மாவட்டங்களிலும் விடைத்தாள் திருத்தப்படுகிறது. அந்தந்த மாவட்ட பேப்பர்கள் அந்தந்த மாவட்டத்தில் திருத்தப்படமாட்டாது. பிற மாவட்டங்களில் திருத்தப்படுகிறது. விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் நியமனம் செய்வதில் கல்வித்துறை உத்தரவுப்படி செயல்பட வேண்டும் என்றும், சிபாரிசுகளுக்கு இடம் கொடுத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பாதிப்படைய செய்யக் கூடாது என்று ஆசிரியர்கள் மத்தியில் புதுவித புயல் கிளம்பியிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கல்வித்துறை உடனடியாக இந்த பிரச்னையை கையாண்டு முழுமையாக பேப்பர் திருத்தும் பணி ஒன்றிரண்டு நாளில் ஆரம்பிப்பதற்குள் இதற்கு தீர்வு காண வேண்டும் என்று ஆசிரிர்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது. இது குறித்து ஆசிரியர்கள் பலர் கூறியதாவது; பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி விடைத்தாள் திருத்தும் பணி மூன்று கட்டமாக மேற்கொள்ளப்படுகிறது. ஏ.இ எனப்படும் அசிஸ்டென்ட் எக்சாமினர் விடைத்தாளை திருத்துவார். எஸ்.ஓ எனப்படும் ஸ்குரூட்னிங் ஆபிசர் அதனை மதிப்பீடு செய்வார். சி. இ எனப்படும் முதன்மை எக்சாமினர் அதனை மறு மதிப்பீடாக சரிபார்ப்பார். இவ்வாறு ஒரு பேப்பரை மூன்று பேர் பார்வையிடுவர்.இந்த பணிகளுக்கு நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் சீனியார்டி அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி நியமனம் இருந்தால் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக இதில் சிபாரிசு உள்ளிட்ட வேண்டப்பட்டவர்களுக்கு காட்டப்படும் சலுகையால் தான் பிரச்னை ஏற்பட்டு ஆசிரியர்களை கொதிப்படைய செய்கிறது.ஏழு ஆண்டாக ஆசிரியராக பணியாற்றி வரும் ஆசிரியரை உயர்மட்ட சிபாரிசு, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் சிபாரிசு போன்றவற்றால் அவர் சீப் எக்சாமினராக நியமனம் செய்யப்பட்டு விடுவதாக கூறப்படுகிறது. ஆனால் 10 ஆண்டு, 15 ஆண்டு சீனியார்டி உள்ளவர்கள் ஏ.ஏ வாகவும், எஸ்.ஓ வாகவும் பேப்பர் திருத்தும் பணியிலும், மதிப்பீடு செய்யும் பணியிலும் ஈடுபட்டு வரும் நிலை ஏற்படுவதாக கூறப்படுகிறது. தன்னை விட சீனியார்டி குறைந்த நிலையில் உள்ள ஆசிரியரிடம் போய் திருத்திய பேப்பரை கொடுத்து அவரிடம் சைன் வாங்குவதும், திருத்திய பேப்பருக்கு அரசு வழங்கும் பணத்தை பெற கையெழுத்து வாங்குகிற போதும் சீனியார்டி உள்ள ஆசிரியர்களுக்கு கஷ்டம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர்.ஆசிரியர்களுக்கு மனதளவில் மட்டுமே இதில் பாதிப்பு ஏற்படுகிறது. பேப்பர் திருத்தி முடித்தவுடன் அந்த பிரச்னை முடிந்துவிடுகிறது. ஆனால் மாணவர்களுக்கு அப்படி இல்லை. மனதளவில் பாதிப்பை வைத்துக் கொண்டு ஆசிரியர்கள் பேப்பர் திருத்தும் போது மாணவர்களின் விடைத்தாளை அவர்களால் முழு ஈடுபாட்டுடன் செய்ய முடியுமா என்பது கேள்விக்குறியாகி இருப்பதாக கூறப்படுகிறது.இதனால் இந்த விஷயத்தில் கல்வித்துறையினர் கவனமாக சீனியார்டி படி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். அதோடு ஒரு ஆசிரியருக்கு காலையில் 15 பேப்பர், மாலையில் 15 பேப்பர் தான் திருத்துவதற்கு கொடுக்க வேண்டும். ஆனால்விரைவாக பேப்பர் திருத்த வேண்டும் என்பதற்காக விடைத்தாள் திருத்தும் மைய பொறுப்பில் இருக்கும் ஒரு சில அதிகாரிகள் கூடுதலாக காலை மற்றும் மாலையில் தலா 5 பேப்பர் அதிகமாக கொடுப்படுகிறது. விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் வெளியூர்களில் இருந்து வருவார்கள். சில இடங்களுக்கு போதிய பஸ்வசதி இருக்காது. அப்படி இருக்கின்ற போது அவர்கள் பஸ்சை பிடிக்க வேண்டும் என்பதற்காக வேகமாக பேப்பரை திருத்த வேண்டிய சூழ்நிலை வரும். இதுபோன்ற காரணங்களால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.இந்த நிலையை ஆரம்பத்திலே கல்வித்துறை தடுத்து நிறுத்துவதற்கு வேண்டிய வழி வகைகளை கையாள வேண்டும். பேப்பரை திருத்தும் முன்பாக இந்த பணிகளை செய்தால் தான் நன்றாக இருக்கும். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்று ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் விரும்புகின்றனர். கடந்த ஆண்டில் இதுபோன்ற திருத்தும் பணியினை மேற்கொண்ட ஆசிரியர்கள் 50 பேர் வரை நடவடிக்கைகக்கு உள்ளாகியுள்ளனர். இதுபோன்ற பிரச்னை இந்த ஆண்டில் நடக்காத வகையில் கல்வித்துறை முன்னேற்பாடு செய்ய வேண்டும் என்றும் ஆசிரியர்கள் விரும்புகின்றனர்.
323
2010-03-28T04:18:00+05:30
தமிழகம்
காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கர்சிப் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் : அமைச்சர் அறிவுரை
தூத்துக்குடி : காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டிப்பாக கர்சிப் வைத்திருக்க வேண்டும். பிறருக்கு எளிதில் பரவிவிடக் கூடாது என்பதால் அவர்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும்.என்று தூத்துக்குடியில் நடந்த விழாவில் அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.தூத்துக்குடியில் நேற்று உலக காசநோய் தினவிழா நடந்தது. இதனை ஒட்டி காலையில் ராஜாஜி பூங்காவில் இருந்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதனை டி.ஆர்.ஓ துரை.ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார். பின்னர் தூத்துக்குடி மாநகராட்சி திருமண மண்டபத்தில் உலக காசநோய் தினவிழா மேயர் கஸ்தூரிதங்கம் தலைமையில் நடந்தது. காசநோய் பிரிவு துணை இயக்குநர் சுப்பையா வரவேற்றுப் பேசினார்.அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது; தூத்துக்குடி மாவட்டத்தில் 70 சதவீதம் காசநோய்களை கண்டறியவும், 85 சதவீத காசநோயாளிகளை குணப்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனாம் இம் மாவட்டம் இலக்கை தாண்டி சாதனை படைத்துள்ளது. காசநோய் பாதித்தவர்கள் கட்டாயம் கர்ச்சிப் யூஸ் பண்ண வேண்டும். இதற்கு காரணம் அவர் இருமும் போது அடுத்தவருக்கு அந்த நோய் பரவாமல் இருப்பதற்கு இது மிகவும் அவசியம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
324
2010-03-28T04:18:00+05:30
தமிழகம்
மின்சாரம் திடீர், திடீரென தடைபடுவதால் ஆபரேஷன் போன்ற பணிகள் பாதிப்பு : தமிழக அரசு மருத்துவக்கல்வி இயக்குநரிடம் டாக்டர்கள் புகார்
தூத்துக்குடி : மின்சாரம் திடீர், திடீரென தடைபடுவதால் ஆபரேஷன் போன்ற பணிகள் பாதிக்கப்படுவதாக இயக்குநரிடம் டாக்டர்கள் தரப்பில் புகார் கூறப்பட்டது. இதற்கு உயர் அதிகாரிகள் மூலம்  உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மருத்துவக்கல்வி இயக்குநர் விநாயகம் தெரிவித்தார்.நேற்று தமிழக அரசு மருத்துவக் கல்லூரி இயக்குநர் விநாயகம் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். புதிய கட்டடத்தை ஆய்வு செய்தார். ஆஸ்பத்திரியில் சில பகுதியினையும் பார்வையிட்டார். பின்னர் கான்பரன்ஸ் ஹாலில் ஆய்வு கூட்டம் இயக்குநர் விநாயகம் தலைமையில் நடந்தது.ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் விஜயசேகரன், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி முதல்வர் தேன்மொழிவள்ளி, துணை முதல்வர் டாக்டர் சரஸ்வதி, ஆர்.எம்.ஓ டாக்டர் விஸ்வநாதன், ஏ.ஆர்.எம்.ஓ டாக்டர் சைலஷ்ஜெபமணி, டாக்டர்கள் ராமசுப்பிரமணியன், காமேஸ்வரன், பொதுப்பணித்துறை இன்ஜினியர்கள் செல்வராஜ், அருள்மொழிச்செல்வன், ராமகிருஷ்ணன், கணேசன் மற்றும் டாக்டர்கள், ஆஸ்பத்திரி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  பணிகளை இயக்குநர் ஆய்வு செய்தார். அப்போது அவர் பேசியதாவது;இன்னும் ஒரு வாரத்திற்குள் புதிய கட்டடத்திற்கு ஆஸ்பத்திரி மாற்றம் செய்ய வேண்டும். இதில் வேறு ஏதாவது பிரச்னை இருக்கிறதா, வேறு பணிகள் பாக்கி எதுவும் இருக்கிறதா என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டார். சிறிய, சிறிய பணிகள் பாக்கியுள்ளது. ஒன்றிரண்டு நாளில் அவை முடிக்கப்பட்டு விடும் என்று அவர்கள் தெரிவித்தனர்.முதலில் தரைத்தளத்தில் வெளிநோயாளிகள் பிரிவை ஏப்ரல் முதல் வாரத்திற்குள் மாற்றிவிட வேண்டும். இதனை நான் சுகாதாரத்துறை செயலாளரிடம் தெரிவித்து விடுவேன். அதன் பிறகு ஏதாவது பிரச்னை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் முதல் வாரத்தில் வெளி நோயாளிகள் பகுதி அங்கு செயல்பட வேண்டும்.அதன் பிறகு படிப்படியாக அனைத்து தளத்திற்கும் ஆஸ்பத்திரி மாற்றம் செய்ய வேண்டும். முழுமையாக மே மாதம் 15ம் தேதிக்குள் மாற்றப்பட வேண்டும். இதில் எந்த மாற்றமும் கிடையாது. அதற்கு ஏற்ப பணிகளை செய்து முடிக்க வேண்டும் என்றார் இயக்குநர்.மின்சாரம் திடீர், திடீரென தடைபடுவதால் ஆபரேஷன் போன்ற பணிகள் பாதிக்கப்படுவதாக இயக்குநரிடம் டாக்டர்கள் தரப்பில் கூறப்பட்டது. ஆஸ்பத்திரிக்கு தடையில்லாமல் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க வேண்டும். பொதுப்பணித்துறை மின் பிரிவு அதிகாரிகள் இது சம்பந்தமாக மின்வாரியத்திற்கு தெரிவித்திருக்கிறீர்களா என்று இயக்குநர் கேட்டார்.அதற்கு எலக்டிரிக்கல் இன்ஜினியர் மின்வாரிய கண்காணிப்பு பொறியாளருக்கு தகவல் அனுப்பியுள்ளோம். ஆனால் அப்படி விதிவிலக்கு அளிக்க முடியாது என்று அவர்கள் கூறி விட்டதாக கூறினார். மின் பராமரிப்பு நேரத்தில் கூட ஆஸ்பத்திரிக்கு மின் தடை செய்யக் கூடாது. இது சம்பந்தமாக சென்னையில் மின்வாரிய உயர் அதிகாரிகளிடம் பேசி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக இயக்குநர் கூறினார்.தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி நர்சிங் பிரிவுக்கு சில பணிகளுக்கு அரசு அனுப்பிய 32 லட்ச ரூபாய் பணத்தை ஏன் இன்னும் செலவு செய்யவில்லை. என்ன பணிகள் செய்யலாம் என்று தெரிவித்த கைடுலைனை பார்த்து பணிகள் செய்ய வேண்டியது தானே, வீணாக அதனை செலவு செய்யாமல் வைத்திருக்கிறீர்களே, சரண்டர் செய்தால் வேறு ஆஸ்பத்திரிக்காவது கொடுத்திருக்கலாமே என்று இயக்குநர் கோபமாக கேட்டார். தூத்துக்குடி மருத்துவக்கல்லூரியில் வாறுகால் மற்றும் மாணவர் விடுதியில் செப்டிக் டேங்க் பிரச்னை இருப்பதாக டீன் தேன்மொழி கூறினார்.   மாணவர் ஆஸ்டலில் கிச்சன் பராமரிப்புக்கும் உடனடியாக நிதியுதவி செய்வதாக இயக்குநர் தெரிவித்தார்.மருத்துவக் கல்லூரியில் இரண்டு லிப்ட் உள்ளது. 160 கே.வி ஜெனரேட்டர் உள்ளது. ஏ.சி உள்ளிட்ட வசதிகள் இருக்கிறது. ஆனால் மின்பராமரிப்புக்கு 2 லட்சம் மட்டுமே நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த தொகை மிக குறைவு. ஒன்பது லட்ச ரூபாய் வரை வழங்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை எலக்டிரிக்கல் இன்ஜினியர் கூறினார். இதற்கு ஏற்பாடு செய்வதாக இயக்குநர் தெரிவித்தார்.தொடர்ந்து ஆஸ்பத்திரி மற்றும் மருத்துவ கல்லூரியில் மருத்துவக் கல்வி இயக்குநர் ஆய்வு செய்தார்.
325
2010-03-28T04:18:00+05:30
தமிழகம்
தூத்துக்குடியில் புதிய கோர்ட் கட்டும் பணிகள் சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆய்வு
தூத்துக்குடி :  தூத்துக்குடியில் கட்டப்பட்டு வரும் புதிய ஒருங்கிணைந்த கோர்ட் கட்டும் பணியினை சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜெயச்சந்திரன் ஆய்வு செய்தார். இலவச சட்ட பணிகளில் வக்கீல்கள் அதிகமாக ஈடுபட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.தூத்துக்குடி கோர்ட் வளாகத்தில் சுமார் ஏழரை கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் கட்டும் பணி வேகமாக நடந்து வருகிறது. மொத்தம் ஏழு கோர்ட்கள் 7 ஆயிரத்து 498 சதர அடியில் கட்டப்பட்டு வருகிறது. இரண்டு லிப்ட் வசதிகள் உள்ளிட்ட அனைத்து நவீன வசதிகளும் இதில் உருவாக்கப்படுகிறது. புதிய கோர்ட் கட்டும் பணியினை நேற்று சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜெயச்சந்திரன் ஆய்வு செய்தார். அவரிடம் பணிகள் விபரம் குறித்து பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ஞானசேகரன் விளக்கினார். பின்னர் அந்த பகுதி முழுவதையும் ஐகோர்ட் நீதிபதி சுற்றிப்பார்த்தார்.கோர்ட் வளாகத்திற்கு வந்த ஐகோர்ட் நீதிபதிக்கு தூத்துக்குடி வக்கீல்கள் சங்கம் சார்பில் தலைவர் ஜோசப் செங்குட்டுவன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்குள்ள அலுவலகத்திற்கு சென்ற நீதிபதி வக்கீல்களிடம் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது; தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் பாரம்பரியம் மிக்கது. இளைய தலைமுறை வக்கீல்கள் இந்த பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும். இலவச சட்ட பணிகளில் வக்கீல்கள் ஆர்வம் காட்ட வேண்டும். சட்ட விழிப்புணர்வுகளை இன்னும் அதிகமாக கிராமப்புறங்களில் ஏற்படுத்த வேண்டும். சேம்பர்களில் உள்ள நூலகங்களில் லேட்டஸ்ட் புத்தகங்கள் இருக்க வேண்டும். நீதித்துறையில் அதிக தொழில் நுட்பங்கள் வந்துவிட்டது. எல்லா இடங்களிலும் உடனடியாக அதனை அமல் செய்வதற்கு நிதி பற்றாக்குறை இருக்கிறது. படிப்படியாக அந்த நவீன வசதிகள் அனைத்து இடங்களுக்கும் வரும்.இவ்வாறு நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி ஆவடி தியாகராஜமூர்த்தி, நீதிபதிகள் பரமராஜ், மேரிஅன்சலம், வக்கீல் சங்க செயலாளர் விஜயசுந்தர், பொதுப்பணித்துறை கட்டட பிரிவு உதவி செயற்பொறியாளர் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
326
2010-03-28T04:19:00+05:30
தமிழகம்
கடம்பாகுளம் ஸ்ரீ பூலுடையார் சாஸ்தா கோயிலில் நாளை பங்குனி உத்திர திருவிழா
தூத்துக்குடி : தென்திருப்பேரை கடம்பாகுளம் ஸ்ரீ பூலுடையார் சாஸ்தா மற்றும் பூர்ணகலா புஷ்பகலா சமேத கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நாளை நடக்கிறது.தென்திருப்பேரை கடம்பாகுளம் கரையில் அமைந்துள்ள ஸ்ரீ பூலுடையார் சாஸ்தா கோயிலில் நாளை பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு தாமிரபரணியில் இருந்துபுனிதநீர் எடுத்துவரப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், சந்தனகாப்பு அலங்காரமும் அதைத்தொடர்ந்து சிறப்பு பூஜையும் நடக்கிறது.அதைத்தொடர்ந்து காலை 8 மணியளவில் அன்னதானமும், மதியம் 1 மணி அளவில் 12 வகை சிறப்பு அலங்கார தீபாராதனையும், அதனை தொடர்ந்து மதியம் 2 மணியளவில் அன்னதானமும் நடக்கிறது. மாலை 4 மணியளவில் சிறப்பு பூஜையும், நடுஇரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், 1 மணியளவில் சிறப்பு பூஜையும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில்தலைவர் கண்ணன், செயலாளர் கல்லை, சிந்தா,மற்றும் நிர்வாகிகள், பொதுகுழு உறுப்பினர்கள் செய்துஉள்ளனர்.
327
2010-03-28T04:20:00+05:30
தமிழகம்
தேனியில் போக்குவரத்தை சீர்படுத்துவதில் சிக்கல் : போலீசார் பற்றாக்குறையால் திணறும் இன்ஸ்பெக்டர்.
தேனி : தேனியில் போக்குவரத்து போலீசார் ஒருவர் கூட இல்லாததால் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் ஒருவரே தனியாக நகரை வலம் வந்துகொண்டிருக்கிறார்.  தேனி அல்லிநகரம் நகராட்சியில் மக்கள் தொகை பல மடங்கு பெருகி விட்டது. வர்த்தக மையமாக விளங்குவதால் பல்வேறு மாவட்டங் களில் இருந்து வியாபாரிகளும், பொதுமக்களும் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.  மேலும் மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, தேனி- கம்பம் தேசிய நெடுஞ்சாலைகள் என முக்கிய நெடுஞ்சாலைகள் நகரின் மையப்பகுதியில் செல்கின்றன. இதனால் தேனியில் எந்தநேரமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன விபத்துக்களும் அதிகம் நடக்கின்றன. இவற்றை கட்டுப்படுத்துவதில் போக்குவரத்து போலீசாரின் பங்கு முக்கியமானது.  தேனி போக்குவரத்து போலீசில் ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு எஸ்.ஐ., உட்பட 19 போலீசார் இருக்க வேண்டும். ஆனால் 17 பேர் தான் இருந்தனர். இதில் ஆறுபேர் எஸ்.எஸ்.ஐ.,க்களாக பதவி உயர்வு பெற்று வேறு பணிக்கு சென்று விட்டனர்.  எஸ்.ஐ., சென்னைக்கு பயிற்சிக்கு சென்று விட்டார். ஒருவர் மருத்துவ விடுப்பில் உள்ளார். இருக்கும் ஒன்பது பேரில் ஏழு பேரை பழனி பங்குனி உத்திர பந்தோபஸ்துக்கு அனுப்பிவிட்டனர். இதனால் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் காலியாகிவிட்டது. ஸ்டேஷன் எழுத்தரும், இன்ஸ்பெக்டர் மட்டுமே தற்போது பணியில் உள்ளனர். இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் இல்லை. இன்ஸ்பெக்டர் மட்டும் தனியாக நகர் வலம் வந்துகொண்டிருக்கிறார். மாவட்ட போலீசாரில் 60 சதவீதம் பேர் பந்தோபஸ்துக்கு சென்றுவிட்ட நிலையில் தேனி மாவட்டத்தில் விசாரணை முதற்கொண்டு பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
328
2010-03-28T04:20:00+05:30
தமிழகம்
நீர் திருட்டை கண்காணிக்க நான்கு குழுக்கள் அமைப்பு
தேனி :  கோடை காலம் துவங்கி விட்ட நிலையில் மாவட் டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சுருளியாறு, வைகையாறு ஆற்றுப்படுகைகளில் மின் மோட்டார் மற்றும் ஆயில் இன்ஜின் மோட்டார்களை பயன்படுத்தி விவசாயத்திற்கும், உறைகிணறுகள் மூலமும் தண்ணீர் எடுப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. கலெக்டர் முத்துவீரன் கூறுகையில், தண்ணீர் எடுப்பது கண்டறியப்பட் டால் மோட்டார்களை பறிமுதல் செய்து, போலீஸ் மூலம் வழக்கு பதிவு செய்யப்படும். இப்பணிகளை கண்காணிக்க வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, மின்சார வாரியம், குடிநீர் வடிகால்வாரியம் ஆகியோர்களை கொண்ட நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
329
2010-03-28T04:21:00+05:30
தமிழகம்
போடியில் தே.மு.தி.க., கூட்டம்
போடி : போடிநகர தே.மு.தி.க., செயல்வீரர்கள் கூட்டம் அவைத்தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடந்தது.   நகர செயலாளர் முரசு பாலு, பொருளாளர் கல் யாணகுமார், செயற்குழு உறுப்பினர் மோகன் துணை செயலாளர் தெய் வேந்திரன் முன்னிலை வகித்தனர்.   ரேஷன் பொருட்களை கேரளா பகுதிக்கு கடத்தப்படுவதை தடுக்கும் வகையிலும்,  எடை குறைவின்றி ரேஷன் பொருட்கள் சப்ளை செய்ய  வேண் டும், பெரியாண்டவர் ஹைரோட்டில் உள்ள சாக்கடை பல மாதங்களாக தூர்வாரப்படாமல் உள்ளதால் பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் சுகாதார கேடு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க   முன் வர வேண்டும்  உட் பட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
330
2010-03-28T04:21:00+05:30
தமிழகம்
அரசு விடுதிக்கு தள்ளு வண்டியில் தண்ணீர் எடுக்கும் மாணவர்கள்
ஆண்டிபட்டி :  ரங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே அரசு சார்பில் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகள் உள்ளன. 6 முதல் 12 வகுப்பு வரை படிக்கும் வெளியூர் மாணவர்கள் இந்த விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர்.  விடுதி வளாகத்தில் சில மாதங்களுக்கு முன்பு பழுதான ஆழ்குழாய் மோட் டார் சரிசெய்யப்படவில்லை.  விடுதி அருகில் தண்ணீருக்கான மற்ற எந்த வசதியும் இல்லை. இதனால் குடிநீருக்கு மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.  தண்ணீர் இல்லாததால்  கழிப்பிடம் செல்வவும், குளிக்கவும், துணிகளை துவைக்கவும் முடிவதில்லை.சமையல் செய்வதற்கான தண்ணீரை விடுதி மாணவர்களைக்கொண்டு ஒரு கி.மீ.,தூரத்தில் உள்ள ஜம்புலிபுத்தூரில் இருந்து கொண்டு வருகின்றனர்.  தள்ளு வண்டிகளில் பெரிய "டிரம்' களை வைத்து பொதுக்குழாயில் தண்ணீர் பிடித்து அன்றாடம் தள்ளிக்கொண்டு வருகின்றனர்.  கடுமையான இந்த வேலையை செய்யும் மாணவர்கள் சோர்ந்து விடுவதால் படிப்பில் கவனம் குறைகிறது. விடுதிக்கு தேவையான தண்ணீர் வசதி செய்து தர  பிற்பட்டோர் நலத்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
331
2010-03-28T04:22:00+05:30
தமிழகம்
உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு தேடி கொட்டில்பாடு மீனவ கிராம மக்கள் தஞ்சம்
குளச்சல் : கோஷ்டி மோதலால் மூட்டை முடிச்சுகளுடன் குடும்பமாக கொட்டில்பாடு கிராம மக்கள் வெளியேறி வருகின்றனர்.கொட்டில்பாடு கிராமத்தில் கடந்த டிசம்பர் 27ம் தேதி பங்கு பேரவை தேர்தல் நடந்தது. இத்தேர்தல் சம்பந்தமாக இருதரப்பினரிடையே கோஷ்டி பூசல் இருந்து வருகிறது. அடிக்கடி மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகி வந்ததால் கொட்டில்பாடு கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் இங்குள்ள திருமண மண்டபத்தின் பின்புறம் உள்ள தோப்பில் புதைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர். அப்போது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக செயல்பட்டதாக 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில் மீண்டும் கொட்டில்பாடு குளத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரும்பு பைப் உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் மீட்டதுடன் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 22ம் தேதி இரவு இருவர் தகராறு செய்த சம்பவம் கோஷ்டி பூசலாக மாறியது. இதில் ஒரு கோஷ்டியை சேர்ந்த மிக்கேல்(40), சுனின்(28) மற்றொரு கோஷ்டியை சேர்ந்த பிரபாகரன்(25), அலெக்சாண்டர்(50) ஆகியோர் படுகாயம் அடைந்து ஆசாரிப்பள்ளம் அரசு மெடிக்கல் கால÷ஜ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.மேலும் இருகோஷ்டியைச் சேர்ந்த 12 பேர் மீது குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பை சேர்ந்த ஐந்து பேரின் வீடுகளை உடைத்து சேதப்படுத்தியதாக 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதுடன் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது. கடந்த 24ம் தேதி மதியம் நகராட்சி கவுன்சிலர் மரியஜாண் தலைமையில் கொட்டில்பாடு கிராமத்தை சேர்ந்த சுமார் 250க்கும் மேற்பட்டோர் நாகர்கோவில் பிஷப் ஹவுஸை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.அப்போது கோஷ்டி மோதல் காரணமாக மணல் ஆலைக்கு மணல் எடுப்பது குறித்து சில அமைப்புகள் புகார் கூறியுள்ளதாகவும், ஆரம்ப கட்டத்திலே பேசி தீர்க்கப்பட வேண்டிய பிரச்னையை சிலர் பெரிதாக்கி விட்டதாகவும் பொதுமக்கள் பிஷப்பிடம் கூறினர்.இந்நிலையில் கடந்த ஒருசில நாட்களாக கொட்டில்பாடு கிராம மக்கள் தங்கள் உடைமைகளை மூட்டைக்கட்டி குடும்பத்துடன் தங்கள் உறவினர் வீடுகளுக்கும், வேறு இடங்களுக்கும் இடம்பெயர்ந்து வருகின்றனர். இதுவரை சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீட்டை காலி செய்துவிட்டு வெளியேறியுள்ளதாக தெரிகிறது.கடந்த 1997ம் ஆண்டு ஜனவரி மாதம் இதுபோன்று இக்கிராமத்தில் ஏற்பட்ட கோஷ்டி மோதலின் போது வீடுகளில் உள்ள பொருட்கள் சூறையாடப்பட்டதாக கூறப்படுகிறது. மக்கள் குடும்பத்துடன் வெளியேறியதால் கொட்டில்பாட்டில் சில தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டது. குளச்சல் இன்ஸ்பெக்டர் கந்தகுமார், நாகர்கோவில் குற்றத்தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ராவணன் தலைமையில் கொட்டில்பாட்டில் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமலிருக்க ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
332
2010-03-28T04:22:00+05:30
தமிழகம்
குமரிக்கு படையெடுக்கும் செம்மரி ஆடுகள்
வில்லுக்குறி : குமரி மாவட்டத்தில் செம்மரி ஆடுகளுக்கான மேய்ச்சல் அதிகரித்துள்ளது.குமரி மாவட்டத்தில் தற்பொழுது கும்பப்பூ அறுவடை முடிவடையும் தருவாயில் உள்ளது. குறிப்பாக வில்லுக்குறி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அறுவடை முடிந்துள்ளது. சிலர் தங்களுடைய வயல்களில் உளுந்து பயிரிட்டுள்ளனர். அது முளைவிட்டு வளரும் பருவத்தில் உள்ளது. வெயிலின் தாக்கம் குமரி மாவட்டத்தில் தற்பொழுது கடுமையாக உள்ளது. ரோடு ஓரங்களில் இளநீர், நுங்கு, தார்பூசணிக்காய் போன்ற குளிர்பான வியாபாரங்கள் ஜோராக நடந்து வருகிறது. ஆடு வளர்ப்பவர்கள் பலர் அண்டை மாவட்டங்களில் இருந்து குமரிமாவட்டத்திற்குள் படை எடுக்க துவங்கியுள்ளனர்.அண்டை மாவட்டத்தில் இருந்து செம்மரி ஆடுகளை வில்லுக்குறி பகுதியில் மேய்ச்சலில் ஈடுபடுத்தி உள்ள மூர்த்தி மற்றும் இசக்கியப்பன் கூறியதாவது: நாங்கள் ராதாபுரம் அருகில் உள்ள உதையத்தூர் என்ற ஊரில் இருந்து வந்துள்ளோம். அங்கு இப்பொழுது கடும் வறட்சியால் ஆடுகளுக்கு உணவு சரியாக கிடைப்பதில்லை. இங்கு அறுவடை நேரம் என்பதால் செம்மரி ஆடுகளுக்கு உணவு தாராளமாக கிடைக்கும். இதனால் குமரிமாவட்டம் நோக்கி வந்துள்ளோம். நாங்கள் விருப்பப்பட்ட வயலில் ஆட்டு கிடை போடுகிறது. ஒரு குழுவில் 400 ஆடுகள் இருக்கும். ஒரு நாளைக்கு ஆடொன்றுக்கு ஒரு ரூபாய் வீதம் மேய்ச்சல் கூலியாக தருவார்கள். அதன் மூலம் நாங்கள் வாழ்க்கை நடத்தி வருகிறோம். பச்சைப்புல் தாய் ஆடுகள் விரும்பி சாப்பிடுவதால் குட்டி ஆடுகள் நல்ல வளர்ச்சியடையும். இவ்வாறு மூர்த்தி, இசக்கியப்பன் கூறினர்.
334
2010-03-28T04:23:00+05:30
தமிழகம்
தனித்தேர்வு ஹால் டிக்கெட்டில் குழப்பம் : மாணவனுக்கு தேர்வு எழுத அனுமதி மறுப்பு
புதுக்கடை : புதுக்கடை அருகே எஸ்.எஸ்.எல்.சி., தனித்தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவனுக்கு மெட்ரிக்., தேர்வுக்கான ஹால் டிக்கெட் வழங்கியதால் மாணவரை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை.தமிழகத்தில் 2009-2010ம் கல்வி ஆண்டிற்கான எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக்., ஓ.எஸ்.எல்.சி., ஆங்கிலோ இந்தியன் தேர்வுகள் கடந்த 23ம் தேதி துவங்கியது. கடந்த ஆண்டு வரை மெட்ரிக்., தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு தனி அறையும், ஸ்டேட் போர்டு(எஸ்.எஸ்.எல்.சி) எழுதும் மாணவ, மாணவியருக்கு தனி அறையும் ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு மெட்ரிக்., மாணவர்களும், எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களும் ஒரே அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இதனால் சில பள்ளிகளில் மெட்ரிக்., மாணவர்களுக்கு வழங்க வேண்டிய வினாத்தாளை எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கும், எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு வழங்க வேண்டிய வினாத்தாளை மெட்ரிக்., மாணவர்களுக்கும் மாறுதலாக வழங்கப்பட்டது.இந்த குளறுபடி சற்று ஓய்ந்த நிலையில் ஹால் டிக்கெட் பிரச்னையால் ஒரு மாணவனது எதிர்காலம் கேள்வி குறியாகியுள்ளது. புதுக்கடை அருகே பைங்குளம், மேலவிளாகத்தை சேர்ந்தவர் ஸ்ரீஜித்(16). இவர் கடந்த ஆண்டு அனந்தமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., படித்துள்ளார். 2008-2009ம் கல்வி ஆண்டில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வை எழுதினார். இதில் ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் என நான்கு பாடங்களில் தோல்வியடைந்தார். தோல்வியடைந்த பாடங்களை தனித்தேர்வு எழுத அனந்தமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஒப்புதலுடன் திருநெல்வேலி மண்டல அலுவலகத்திற்கு விண்ணப்பம் அனுப்பியிருந்தார்.தேர்வு துவங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன் ஹால் டிக்கெட் வந்துள்ளது. ஆங்கிலம் முதல்தாள் தேர்வு நடந்த அன்று ஸ்ரீஜித் ஹால் டிக்கெட்டுடன் மார்த்தாண்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு தேர்வு எழுத சென்றுள்ளார். இவருடைய ஹால் டிக்கெட்டை வாங்கி பார்த்த ஆசிரியர் தேர்வு எழுத அனுமதி மறுத்துள்ளார். காரணம் இவருடைய ஹால் டிக்கெட்டில் மெட்ரிக்குலேஷன் தேர்வு 2010 என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் தேர்வு எழுத முடியாமல் மாணவன் சோகத்துடன் வீடு திரும்பினார். இந்த மாணவனின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.எனவே இந்த மாணவனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கல்வித்துறை தேர்வுகள் எழுத அனுமதிக்க வேண்டும். கல்வித்துறையின் குளறுபடி காரணமாக மாணவனின் வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதை கல்வித்துறை கவனத்தில் கொள்ள வேண்டும்.
335
2010-03-28T12:35:00+05:30
இந்தியா
ண்ச்ஞீச் ஞீச்ண்ஞீ
awdasdasd asda
336
2010-03-28T14:49:00+05:30
இந்தியா
ஞீஞ்ஞீ
dfgdgd
337
2010-03-29T01:28:00+05:30
தமிழகம்
லாரிகள் ஸ்டிரைக்கை தவிர்க்க மத்திய அரசு இன்று பேச்சு
நாமக்கல் : நான்கு அம்ச கோரிக் கையை வலியுறுத்தி, ஏ.ஐ. எம்.டி.சி.,யினர் வரும் 5ம் தேதி அறிவித்துள்ள காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடர்பாக, அதன் நிர்வாகிகளுடன்  டில்லியில் பேச்சுவார்த்தை நடத்துகிறது."டயர் விலை குறைக்க வேண்டும், அனைத்து சுங்கச் சாவடியிலும் ஒரே கட்டணம் வசூல் செய்ய வேண்டும்; என்பது உட்பட நான்கு அம்ச கோரிக் கையை வலியுறுத்தி, டில்லியில் நடந்த அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் (ஏ.ஐ.எம்.டி.சி.,) கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இவை நாளைக்குள் நிறைவேற்றாத பட்சத்தில் ஏப்., 5ம் தேதி நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட் டம் நடத்தப்படும் என்றும் அறிவித்திருந்தனர்.இதனால், அகில இந்தியமோட்டார் டிரான்ஸ் போர்ட் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் மத்திய அரசு இன்று (மார்ச் 29) காலை 11 மணிக்கு டில்லியில் பேச்சுவார்த்தை நடத்துகிறது.  அதில் ஏ.ஐ.எம்.டி.சி., தலைவர் சண்முகப்பா தலைமையில், தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் நல்லதம்பி, ஆந்திரா பிரதேச லாரி உரிமையாளர் சங்க தலைவர் கோபால் நாயுடு ஆகியோர் பங்கேற்கின்றனர். தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் நல்லதம்பி கூறியதாவது:மொததம் 15 ஆயிரம் ரூபாய் செலுத்தினால், இந்தியா முழுவதும் லாரிகள் இயக்க அனுமதிக்க வேண்டும்; டயர் விலையை குறைக்க வேண்டும்; டீசல் விலையை குறைக்க வேண்டும்; அனைத்து சுங்க சாவடியிலும் ஒரே கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது.இக்கோரிக்கையை மார்ச் 30ம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவ்வாறு நிறைவேற்றாத பட்சத்தில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவதாக புதுடில்லியில் நடந் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.அதன்படி மத்திய அரசு நாளை(இன்று) பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிடுத்துள்ளது. அதில் பங்கேற்க உள்ளோம். 4 அம்ச கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றாத பட்சத்தில், ஏப்., 5ம் தேதி நள்ளிரவு முதல் காலவரையற்ற போராட்டம் துவங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.மத்திய அரசு கோரிக்கையை நிறைவேற்றாத பட்சத்தில் லாரி ஸ்டிரைக் தொடர்ந்தால் நாடு முழுவதும் 70 லட்சம் லாரிகள் இயங்காது. ஒரு லட்சத்து 35 ஆயிரம் லாரி புக்கிங் அலுவலங்களும் மூடப்படும். இதன்மூலம் அரசுக்கு பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
340
2010-03-29T01:31:00+05:30
தமிழகம்
தமிழகம் முழுவதும் மின்வெட்டு நேரம் அதிகரிப்பு : பற்றாக்குறையால் மின்வாரியம் அதிரடி
கோடை காரணமாக தமிழகத்தில் நீர், காற்றாலை மின் உற்பத்தி குறைந்துள்ள நிலையில், மின் தேவை அதிகரித்துள்ளது. மின் பற்றாக்குறையை சமாளிக்க  தினமும் மூன்று மணி நேரம் மின்தடை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மின்தடை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.  தமிழகம் முழுவதும் இரண்டு கோடி மின் நுகர்வோர் உள்ளனர். மின்தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப மின் உற்பத்தி அதிகரிக்காததால் மின்பற்றாக்குறையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதை சமாளிக்க,  2008 செப்டம்பர் 1ம் தேதி முதல் மின்வாரியம் சென்னை தவிர தமிழகத்தின் பிற பகுதியில் தினமும் இரண்டு மணி நேர மின்தடையை அமல்படுத்தியது.  போதிய மழை இல்லாததால், நடப்பாண்டில் பிப்ரவரி மாதத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகரித்தது. அதை சமாளிக்க மக்கள், "ஏசி' பிரிட்ஜ், மின் விசிறி, ஏர்கூலர் ஆகியவற்றை அதிகம் பயன்படுத்தத் துவங்கினர். அதனால்,  ஒரு மாதகாலத்துக்கும் மேலாக  தமிழகத்தில் மின்நுகர்வு அதிகரித்தது. மாலை 6 முதல் இரவு 10 மணி வரையிலான பீக் ஹவரில் மட்டும் மின்தேவை 10 ஆயிரத்து 771 மெகாவாட் ஆக உயர்ந்தது. தமிழகத்தின் மொத்த அனல், புனல், காற்றாலை நிலையங்கள் மூலம் 10 ஆயிரத்து 214 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். கோடைகாலம் துவங்கி விட்டதால் புனல், காற்றாலை மின் நிலையங்களில் மின் உற்பத்தி குறைந்து விட்டது.கடந்த சில நாட்களாக, சராசரியாக 8,700 மெகாவாட் மின்சாரம் மட்டுமே வினியோகம் செய்யப்படுகிறது. தினமும் பீக் ஹவரில் மட்டும் 2,000 மெகாவாட் மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மின் பற்றாக்குறையை சமாளிக்க  இரு ஆண்டுகளாக வாரியம், தினமும் வீடுகளுக்கு இரண்டு மணி நேரம் மின்தடை செய்தது.தற்போதைய கூடுதல் மின் பற்றாக்குறையை சமாளிக்க பல்வேறு வகையில் முயன்றும், மின் வாரியத்தின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இதையடுத்து, நேற்று முதல் தினமும் மூன்று மணி நேரம் மின்தடை செய்யப்படுவதாக மின் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அத்துடன் அந்தந்த மின் பகிர்மான வட்டங்களில் தேவைக்கு ஏற்ப மூன்று மணி நேர மின்தடை நேரத்தை மாற்றி அமைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழ்நாடு மின்சார வாரிய, சேலம் மேற்பார்வை பொறியாளர் சுந்தரேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கிராமப்புறங்களில் பகலில் ஆறு மணி நேரமும், இரவில் மூன்று மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். மற்ற நேரங்களில் 12 மணி நேரம் இருமுனை மின்சாரம் வழங்கப்படும். மேலும், மூன்று மணி நேரம் மின்தடை செய்யப்படும்' என, கூறியுள்ளார். வரும் மே மாதத்திற்குள் கோடை மழை பெய்யாவிடில் மின்தேவை மேலும் அதிகரிக்கும். அதனால், மின்தடை நேரம் மேலும் அதிகரிக்கக் கூடும் என மின் வாரியத்தினர் தெரிவித்தனர்.ஏற்கனவே போதிய மின்சாரம் கிடைக்கவில்லை எனக் கூறி டெல்டா மாவட்ட விவசாயிகள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அரசு, மூன்று மணி நேரம் மின்தடை என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது, விவசாயிகளை மேலும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தென் மாவட்டங்களின் பல பகுதிகளில் ஏற்கனவே மின் சப்ளை முறையாக இல்லாமல் இருக்கும் போது, இந்த அறிவிப்பால், இனி அந்தந்தப் பகுதியில்  மின் வெட்டு  மேலும் அதிகரித்து மக்களை சிரமப்படுத்தும்.                    மின்தடை செய்வதில் புது யுக்தி :மின்தட்டுப்பாட்டை சமாளிக்க, புதிய யுத்தியை கையாள மின் வாரியம் முடிவெடுத்துள்ளது. மின் உற்பத்தி மையங்களில், மின் அளவையில் அடிக்கடி கணக்கிட்டு, பற்றாக்குறைக்கு ஏற்ப மின்தடை செய்ய, சென்னையில் உள்ள மின்பளு அனுப்புகை மையங்களுக்கு (மெயின் லோ டெஸ்பேட்ச் சென்டர்) தகவல் தெரிவிக்கப்படுகிறது. சென்னையில் இருந்து, மண்டல துணை மின்பளு அனுப்புகை மையங்கள் மூலம், துணை மின்நிலையத்தில், மின்தடை செய்யப்படுகிறது.தற்போது இந்த முறையில் மாற்றம் செய்ய மின் வாரியம் ஆலோசித்து வருகிறது. துணை மின்நிலையங்களில் பயன்படுத்தப்படும் மின் அளவு, தேவை, நிலை குறித்து, "லீஸ்லைன்' வாயிலாக அறிந்து கொள்ளப்படுகிறது.இந்த அடிப்படையில் மின்தடை செய்ய, "ஸ்கேடா சிஸ்டம்' அறிமுகம் செய்ய மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இதன்படி, சென்னை மின்பளு அனுப்புகை மையத்தில் இருந்து பற்றாக்குறைக்கு ஏற்ப, அங்கிருந்தே தடை செய்து கொள்ளும், யுக்தியை பயன்படுத்த வாரியம் முடிவு செய்துள்ளது. -நமது சிறப்பு நிருபர்-
341
2010-03-29T01:32:00+05:30
இந்தியா
முழுவதும் எழுத படிக்க தெரிந்த கேரளாவின் கண்ணூர் மாவட்டம்
கண்ணூர் : கேரளாவின் கண்ணூர் மாவட்டம், முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.கேரளாவில் கல்வி கற்றவர்கள் அதிகம் என்றாலும், முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்ணூர் மாவட்டத்தில், கண்ணவம் காலனி என்ற குடிசை பகுதியில் முழு எழுத்தறிவு பிரசாரம் துவக்கப்பட்டது.பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்டோர், சிறை கைதிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் கல்வியறிவை ஏற்படுத்த, எழுத்தறிவு இயக்கம் அமைக்கப்பட்டது.கண்ணூர் மாவட்டத்தில் கூலித் தொழிலாளர்கள் அதிகம் என்பதால் மாலை நேர பள்ளிகள் துவக்கப்பட்டன. இந்த பள்ளிகளில் படிப்பவர்களுக்காக தனி பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டன. மலையாளம், ஆங்கிலம், அடிப்படை அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்கள் போதிக்கப்பட்டன.மாவட்ட ஊராட்சி, கிராம ஊராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ஒரு கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கப்பட்டு எழுத்தறிவு இயக்கம் செயல்படுத்தப்பட்டது. ஓய்வு பெற்ற ஆசிரியர்களும், தன்னார்வலர்களும் பாடங்களை கற்றுக் கொடுத்தனர்; 2 ஆயிரத்து 368 வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன.  இதன் மூலம் தற்போது கண்ணூர் மாவட்டத்தில் அனைவரும் எழுத, படிக்க தெரிந்தவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்."அடுத்த மாதம் கண்ணூர் மாவட்டம், தேசிய அளவில் முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக முறைப்படி அறிவிக்கப்படும்' என, மாவட்ட எழுத்தறிவு இயக்க இயக்குனர் ஜெயதேவன் தெரிவித்துள்ளார்.இந்த மாவட்டத்தில் உள்ள 15 வயது முதல் 50 வயதுள்ள அனைவரும் நான்காம் வகுப்புக்கு இணையாக கல்வித் தகுதியை முழுமையாக பெற்றுள்ளனர்.
342
2010-03-29T01:33:00+05:30
தமிழகம்
காலாவதி மருந்துகளை திரும்ப பெற்று அழிப்பது யார் கடமை?
காலாவதி மருந்துகளை ஒரு கும்பல் மீண்டும் புழக்கத்தில் விட்ட விவகாரம் வெளிச்சத்திற்கு வந்திருப்பதைத் தொடர்ந்து, காலாவதியான மருந்துகளை அழிக்கும் நடைமுறையை கடுமையாக்குவதுடன், மருந்துக் கடைகளில் டாக்டர்களின் மருந்துச் சீட்டு இல்லாமலும், பில் இல்லாமலும் மருந்துகளை விற்பனை செய்பவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.மருந்துகள் உற்பத்தியான தேதியிலிருந்து, குறிப்பிட்ட தினங்கள் வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த தேதிக்கு மேல் மருந்தை பயன்படுத்தக் கூடாது. ஆனால், காலாவதியான மருந்துகளை ஒரு கும்பல் சேகரித்து, மருந்து அட்டையில் உள்ள உற்பத்தி தேதி மற்றும் காலாவதியாகும் தேதியை மாற்றி, மீண்டும் புழக்கத்தில் விட்டது.தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து நடந்து வரும் இந்நிகழ்வுகள், பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் மருந்துகளை உற்பத்தி செய்வதற்கும், காலாவதியான மருந்துகளை அழிப்பதற்கும் தனி நடைமுறைகள் வகுக்கப் பட்டுள்ளன. அதே போன்ற நடைமுறைகள் நம் நாட்டு சட்டத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளன.மருந்துகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், அவற்றை மொத்த விற்பனையாளருக்கு வழங்குகின்றன. அவர்கள் வினியோகஸ்தர்களுக்கும், அங்கிருந்து சில்லரை விற்பனையாளர்களுக்கும், மருந்துக் கடைகளுக்கும் மருந்துகள் செல்கின்றன. காலாவதியான மருந்துகளையும் இதே வழியில் மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் திரும்பப் பெற்று அழிக்க வேண்டும்.காலாவதியான மருந்துகளை வெளியில் கொட்டுவதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படலாம். மேலும், வெளியே கொட்டப்படும் இம்மருந்துகளை தெரியாமல் சாப்பிட்டு, கால்நடைகள் உள்ளிட்ட உயிரினங்கள் உயிரிழக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, காலாவதியான மருந்துகளை, முறைப்படி உற்பத்தி செய்யும் நிறுவனங்களே திரும்பப் பெற்று அழிக்க வேண்டியது அந்நிறுவனங்களின் கடமை.சில நிறுவனங்கள் காலாவதி மருந்துகளை அழிக்க, தங்கள் நிறுவனத்திலேயே தனி வசதிகளை ஏற்படுத்தி அப்பணியைச் செய்கின்றன. மேலும், சில நிறுவனங்கள் காலாவதி மருந்துகளை அழிக்கும் பணியை வேறொரு நிறுவனத்திற்கு வழங்குகின்றன. ஆனால், நம் நாட்டில் மருந்துகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் பல, விற்பனையில் மட்டுமே அதிக கவனம் செலுத்துகின்றனவே தவிர, காலாவதியான மருந்துகளை திரும்பப் பெற்று அவற்றை அழிக்கும் நடைமுறைக்கு முக்கியத்துவம் தருவதில்லை.சில மருந்துகளை டாக்டர்களின் அறிவுரை இல்லாமல் உட்கொள்ளக் கூடாது என சட்டம் உள்ளது. ஆனால், நம் நாட்டில் மருந்துக் கடைக்காரர்களே பாதி டாக்டர்களைப் போல செயல்படுகின்றனர்.எந்த டாக்டர் பரிந்துரையின் பேரில், யார், யாருக்கு எவ்வளவு மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன, மருந்துக் கடையில் எவ்வளவு மருந்து ஸ்டாக் வைக்கப்படுகிறது, எவ்வளவு மருந்து விற்பனை செய்யப்படுகிறது, எவ்வளவு மருந்து மீதமுள்ளது, அதில் காலாவதியான மருந்துகள் எவ்வளவு என்பது குறித்து எந்தவிதமான புள்ளி விவரமும் இல்லாமல் போய் விடுகிறது.மேலும், தமிழகத்தில் உள்ள மருந்துக் கடைகள் அனைத்திற்கும் அவ்வப்போது சென்று சோதனை நடத்துவதற்கு, அத்துறையில் போதிய எண்ணிக்கையில் ஆட்களும் இல்லை. அரசு உடனே தலையிட்டு, மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையில் போதுமான அளவு ஆட்களை நியமிப்பதுடன், மருந்து விற்பனை தொடர்பாக அத்துறை அடிக்கடி தொடர் சோதனை நடத்துவதை உறுதிப்படுத்த வேண்டும்.காலாவதி மருந்தினால், சென்னை புளியந்தோப்பில் கடந்த டிசம்பர் மாதம் ஒரு குழந்தை பலியானது. இதைத் தவிர, காலாவதி மருந்தால் தமிழகத்தில் வேறு எந்த உயிரிழப்பும் இதுவரை நடக்கவில்லை. ஆனால், காலாவதி மருந்தால், நோயை குணப்படுத்தும் தன்மை குறையும்.காலாவதி மருந்து விற்பனை விவகாரத்தில் போலீசார் சோதனையில் இறங்கியிருப்பதால், முறைப்படி மருந்து விற்பனைத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களும் தற்போது அச்சத்தில் உள்ளனர். ஒரு மீனாட்சி சுந்தரத்தால், எதிர்காலத்தில் போலீசார் மருந்துக் கடைகள் மற்றும் குடோன்களுக்கு அடிக்கடி சென்று, காலாவதி மருந்து இருக்கிறதா என சோதனை நடத்தி, மிரட்ட வாய்ப்புள்ளது என மருந்து விற்பனையாளர்கள் பயத்தில் ஆழ்ந்துள்ளனர். ரூ.20 ஆயிரம் அபராதம்: இந்த பிரச்னையின் பல்வேறு அம்சங்கள் குறித்து  மருந்து கட்டுப்பாட்டுத் துறை இயக்குனர் பாஸ்கரன் கூறியதாவது:மருந்துகள் எந்த வழியில் மருந்துக் கடைகளை வந்தடைகின்றனவோ, அதே வழியில் தான் காலாவதியான மருந்துகளையும் உற்பத்தியாளர் திரும்பப் பெற வேண்டும். இப்பிரச்னை வருவதற்கு முன்பாகவே மருந்து விற்பனையாளர்களிடம், மருந்துகள் காலாவதியாவதற்கு மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு முன், அவற்றை திருப்பி அனுப்பும் நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினேன்.ஒரு கும்பல் குறிப்பிட்ட நிறுவனம் மூலமாக மட்டுமே காலாவதி மருந்துகளை விற்பனை செய்ய முயன்றுள்ளது; அதையும் தடுத்து நிறுத்தியுள்ளோம். இதற்கு முன், சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் அடிக்கடி சோதனை நடத்தியுள்ளோம். அப்போது, இந்த காலாவதி மருந்துகள் இல்லை.மேலும் தேவைக்கு ஏற்ப மருந்துகளை கொள்முதல் செய்ய வேண் டும். மருந்துக் கடைகள் காலாவதியான மருந்துகளை திருப்பி அனுப்புவதற்கு போதிய முக்கியத்துவம் வழங்குவதில்லை. டாக்டர்கள் வழங்கும் மருந்துச் சீட்டை வழங்கி, அதிலுள்ள மருந்துகளை முழுமையாக உட்கொண்டால் தான் நோய் குணமாகும். இம்மருந்தை குறைத் தால், நோய் குணமாகும் வேகம் குறையலாம்.மருந்துக் கடைக்கு சென்று தலைவலி, காய்ச்சல் என கேட்டு, ஏதாவது மருந்து வாங்கிச் சாப்பிடுவது தவறு என கூறி வருகிறோம். அவ்வாறு மருந்துகளை விற்கக்கூடாது என மருந்துக் கடைகளையும் எச்சரித்து வருகிறோம். தலைவலி, காய்ச்சல் வேறு ஏதாவது நோய்க்கு அறிகுறியாகக்கூட இருக்கக்கூடும். ஆனால், அது தெரியாமல், மருந்துக் கடைகளில் சென்று மருந்து வாங்கி சாப்பிடுவதால், நோய் குணமாகாது. டாக்டரிடம் சென்று பார்த்தால் தான், நோயின் உண்மையான தாக்கம் தெரிய வரும்.கடந்த 2009ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட மத்திய அரசின் மருந்து கட்டுப்பாட்டு சட்டத்தின்படி, தவறு செய்பவர்களுக்கு கடும் தண்டனைகள் விதிக்கப்படும். ஒரு மருந்துக் கடையில், டாக்டரின் மருந்துச் சீட்டு இல்லாமல், ரசீது இல்லாமல், போலியான மருந்துகளை விற்பனை செய்தால், அது மூன்று குற்றங்களாகக் கருதப்படுகிறது. இத்தவறுக்கு குறைந்தபட்சம் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் ஒன்று முதல் 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும். அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் அபராதத்திலிருந்து ஆயுள் தண்டனை வரை வழங்கப்படும்.மருந்துக் கடையின் உரிமை தனிநபரிடம் இருந்தால் அவரும், பார்ட்னர் அடிப்படையில் அந்நிறுவனம் இயங்கினால், பார்ட்னர்கள் அனைவரும் குற்றவாளிகளாகக் கருதப்படுவர். மருந்துக் கடையில் "ஏசி' மாட்ட வேண்டும் என அறிவுரை வழங்கி வருகிறோம். இதை மருந்துக் கடைகள் படிப்படியாக அமல்படுத்தி வருகின்றன.இவ்வாறு பாஸ்கரன் கூறினார். -நமது சிறப்பு நிருபர்-
343
2010-03-29T01:34:00+05:30
இந்தியா
சொத்து குவிப்பில் முதலிடம் காங்கிரஸ் : மூன்றாமிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
புதுடில்லி : அரசியல் கட்சிகளில், அதிகளவுக்கு சொத்து சேர்த்துள்ள கட்சியாக காங்கிரஸ் கட்சி திகழ்கிறது. அக்கட்சிக்கு 340 கோடி ரூபாய்க்கு சொத்துகள் உள்ளன. இரண்டாமிடத்தில் பா.ஜ.,வும், மூன்றாம் இடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் உள்ளன.நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் 2008-09ம் ஆண்டுக்கான வரி தொடர் பாக சமர்ப்பிக்கப்பட்ட சொத்து விவரம், வெளிச்சத்திற்கு வந் துள்ளது. இதில், தற்போது மத்தியில் ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு தான் நாட்டிலேயே அதிக சொத்து உள்ளது.இக்கட்சிக்கு 340 கோடி ரூபாய் சொத்து உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து, மிகவும் பின்தங்கி இரண்டாம் இடத்தில் பா.ஜ., கட்சிக்கு 177 கோடி ரூபாய் அளவிற்கும், மூன்றாவதாக அதிக வித்தியாசமின்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 156 கோடி ரூபாய்க்கும் சொத்துகள் உள்ளன.அதேபோல், சமாஜ்வாடி கட்சிக்கு 144 கோடி ரூபாய் அளவிற்கும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 118 கோடி ரூபாய்க்கும் சொத்துகள் உள்ளன. கடந்த 1999ம் ஆண்டு ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டு, பின்னர் 2004ம் ஆண்டு மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றியது முதல் காங்., கட்சிக்கு அதிகளவு சொத்துகள் குவிந்துள்ளன என்பது கணக்குகள் மூலம் தெரிய வந்துள்ளது.இக்கட்சிக்கு 2002ம் ஆண்டு வெறும் 65 கோடி ரூபாய்க்குத் தான் சொத்துகள் இருந்தன. தொடர்ந்து 2004ம் ஆண்டில் 136 கோடி ரூபாயாக சொத்துகள் அதிகரித்தது. அப்போது, பா.ஜ., கட்சியின் சொத்து 156 கோடி ரூபாயாக இருந்தது. அக்கால கட்டத்தில், காங்கிரசை விட பா.ஜ., கட்சிக்குத் தான் அதிக சொத்துகள் இருந்தன.ஆனால், அதற்கு அடுத்து வந்த ஆண்டுகளில் பா.ஜ., கட்சியை விட அதிகளவு சொத்துகள் காங்கிரஸ் கட்சிக்கு குவியத் துவங்கியது. இதையடுத்து, 2006ம் ஆண்டு அக்கட்சிக்கு 229 கோடி, 2008ம் ஆண்டு 340 கோடி ரூபாயாகவும் உயர்ந்தது.அதற்கு பின்னர் தான், பா.ஜ., கட்சியை விட அதிக சொத்துகளுடன் காங்., முதலிடத்தைப் பெற்றது. மாநிலங்களை பொறுத்தவரையில் உத்தர பிரதேசத்தில் ஆட்சி, அதிகாரம் தங்கள் வசம் இல்லாவிட்டாலும், அதிக சொத்துகளை தன்வசம் வைத்துள்ளது சமாஜ்வாடி கட்சி தான்.
345
2010-03-29T01:36:00+05:30
இந்தியா
ஐ.பி.எல்., மீது கில் பாய்ச்சல்!
புதுடில்லி : வர்த்தக நோக்கில் நடத்தப்படும் ஐ.பி.எல்., போட்டிகளால் கிரிக்கெட் உணர்வு பாதிக்கப்படுவ தாக, மத்திய விளையாட்டு துறை அமைச்சர் எம்.எஸ்.கில் குற்றம் சாட்டினார்.இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் (பி.சி.சி.ஐ.,) இந்தியன் பிரிமியர் லீக்(ஐ.பி.எல்.,) அமைப்பு துவங்கப் பட்டது. மூன்றாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் தற்போது நடக்கிறது. வீரர்களை கோடிகள் கொடுத்து ஏலத்தில் எடுப்பது, அணிகளை ஆயிரம் கோடிக்கு மேல் கொடுத்து வாங்குவது என ஐ.பி.எல்., அமைப்பில் பணம் தாராளமாக புழங்குகிறது. இப்படி கிரிக்கெட் விளையாட்டு, ஒரு வியாபாரமாக மாறி விட்டதை எம்.எஸ்.கில் கடுமையாக சாடினார். இது குறித்து இவர் அளித்த பேட்டி: கிரிக்கெட் போட்டியை, ஐ.பி.எல்., அமைப்பு வர்த்தகமயமாக்கி விட்டது. இதற் கேற்ப விதிமுறைகளை தளர்த்தி பி.சி.சி.ஐ., மறைமுகமாக உதவுகிறது. "பவுண்டரி' அளவுகள் குறைக்கப்படுகின்றன. பொழுதுபோக்கு அம்சத்தை அதிகரிப்பதற்காக, பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக விதிகள் மாற்றப்படுகிறது. இதனால் பவுலர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஒட்டுமொத்தமாக கிரிக்கெட் உணர்வை கெடுத்து விடுகின்றனர். லாபம் இலக்கு: பணம் சம்பாதிப்பதை மட்டும் இலக்காக கொண்டு ஐ.பி.எல்., அமைப்பு செயல்படுகிறது. சமீபத்தில் ஒரு அணியை வாங்கிய உரிமையாளர் கூட இதே கருத்தை பகிரங்கமாக கூறினார். ஐ.பி.எல்., அமைப்பில் இருக்கும் சிலர் பி.சி.சி.ஐ., நிர்வாகத்திலும் முக்கிய பொறுப்பில் உள்ளனர். இது மிகவும் ஆபத்தான விஷயம். விருது முன்னுரிமை: ஐ.பி.எல்., போட்டிகளால் மற்ற விளையாட்டுகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. கிரிக்கெட் வீரர்கள் நாட்டுக்காக ஆடுவதை காட்டிலும் வர்த்தக ரீதியிலான ஐ.பி.எல்., தொடரில் விளையாடுவதற்கு முக்கியத்துவம் அளிக் கின்றனர். உயரிய விருதுகளும் கிரிக்கெட் வீரர்களுக்கு தான் கொடுக்கப்படுகின்றன. இம் முறை மூன்று கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. அதே நேரத்தில் பீஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமாரை விருதுக் கான பரிந்துரையில் நிராகரித்து விட்டனர். வரிவிலக்கு கூடாது: ஐ.பி.எல்., ஏலத்தில் பாகிஸ்தான் வீரர்கள் புறக்கணிக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது. ஐ.பி.எல்., தொடருக்கு வரிவிலக்கு அளிக்க கூடாது. மாநில அரசுகளும் கிரிக்கெட் வீரர்களுக்கு தான் பரிசுகள் அளிக் கின்றன. மற்ற விளையாட்டு நட்சத்திரங்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். இவ்வாறு எம்.எஸ்.கில் கூறினார். அடுத்து பாம்பு பேட்?ஐ.பி.எல்., தொடரில் இம்முறை மங்கூஸ் (கீரிப்பிள்ளை) வகை பேட் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. இது குறித்து எம்.எஸ்.கில் கூறுகையில், ""ஐ.பி.எல்., மூலம் வியாபாரம் படுஜோராக நடக் கிறது. தற்போது "மங்கூஸ்' பேட் பயன்படுத்து கின்றனர். அடுத்து "கோப்ரா'(பாம்பு) பேட் அறிமுகம் செய்வார்கள் என எதிர்பார்க்கிறேன்,'' என, நகைச்சுவையாக குறிப்பிட்டார். அரை ஓவர் போட்டி : ஐ.பி.எல்., "டுவென்டி-20' போட்டிகளால் டெஸ்ட், ஒரு நாள் போட்டிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக எம்.எஸ்.கில் குறிப்பிட்டார். இவர் கூறுகையில்,""டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்களை காண முடியவில்லை. 50 ஓவர் போட்டி, 20 ஆக மாறி விட்டது. இனி 5 ஓவர், ஒரு ஓவர், அரை ஓவர் என குறைந்து கொண்டே போகலாம்,'' என்றார்.
348
2010-03-29T01:39:00+05:30
தமிழகம்
தாலி கட்டிய இரண்டு நாளில் விவாகரத்தா? சுப்ரீம் கோர்ட் நிராகரிப்பு
புதுடில்லி : திருமணம் ஆன இரண்டு நாட்களுக் குள் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்த தம்பதியினர் மற்றும் அவர்களின் சார்பில் வாதாடிய  வக்கீல்களுக்கு சுப்ரீம் கோர்ட்  கடும்  கண்டனம் தெரிவித்துள்ளது. விவாகரத்து கேட்பவர்கள் மணம் ஆகி ஆறு மாதம் கழிந்த பின்பே அதற்காக விண்ணப்பிக்க முடியும் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளது.டில்லியை சேர்ந்தவர்கள் சுமித், பூனம் தம்பதி;  திருமணம் நடந்த ஓரிரு நாட்களிலேயே விவாகரத்து கேட்டு குடும்ப நலக் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர். அரசியல் சாசனப் பிரிவு 32 ஐ தங்கள் மனுவில் மேற்கோள் காட்டியிருந்தனர். ஒரு குடிமகனின் அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து, மாநில அரசுக்கோ அல்லது அதிகாரிகளுக்கோ சுப்ரீம் கோர்ட் வழிகாட்ட வகை செய் வது தான் இந்த சட்டப் பிரிவு.இவர்களின் கோரிக் கையை  ஏற்கனவே  குடும்ப நலக் கோர்ட்,  நிராகரித்து விட்டது.  அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்த பூனம், 32வது பிரிவை சுட்டிக் காட்டி, குடும்ப நலக் கோர்ட் அந்தப் பிரிவை மீறி செயல்பட்டதாகக் கூறியிருந்தார். அவரது மனுவை நிராகரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், தங்கள் தீர்ப்பில் கூறியதாவது:தம்பதியினர், ஆறு மாத திருமண வாழ்க்கையை  முடித்திருக்க வேண்டும்; அதனால்,  இன்னும் ஆறு மாதங்கள் கழிந்த பின்னரே தம்பதியினர் குடும்ப நலக் கோர்ட்டை அணுகலாம்.குடும்ப நலக் கோர்ட், அடிப்படை உரிமைகளை எவ்விதம் மீறியது என்று பூனத்தின் வக்கீல்கள் சரியாகச் சுட்டிக்காட்டவில்லை. மேலும் தம்பதியினர் மற்றும் அவர்களின் வக்கீல்களின் இந்தச் செயல் கண்டனத்துக்குரியது.சிறிதும் பொறுப்புணர்வில்லாமல் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள் ளது. இதுபோன்ற வழக்குகள் நீதி நிர்வாகத்தில் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.இவ்வாறு சுப்ரீம் கோர்ட் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
357
2010-03-29T10:46:00+05:30
தமிழகம்
இளைஞர் காங்., தேர்தல்:பல இடங்களில் அதிருப்தி
சென்னை:சில தொகுதிகளில் இளைஞர் காங்கிரஸ் தேர்தல் முடிவுக்கு, கடும் எதிர்ப்பு அக்கட்சியில் எழுந்துள்ளது. மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சத்தியமூர்த்தி பவனில் நேற்று இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மத்திய சென்னை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தேர்தல் கடந்த 24ம் தேதி நடந்தது. சேப்பாக்கம் சட்டசபை தொகுதி தலைவர் தேர்தலில், ரியாஸ் வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்ததாக, ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தலைவர் பதவியை அப்பாஸ் இழந்தார். தேர்தலில் முறைகேடு நடந்ததால் தான் தோல்வியுற்றதாக அப்பாஸ் குற்றம் சாட்டினார்.மறுதேர்தல் நடத்த வேண்டுமென இளைஞர் காங்கிரசார் 50 பேர், சத்தியமூர்த்தி பவனில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். 'தேர்தல் அதிகாரிகளை மாற்றவேண்டும்' என்ற கோஷத்தை இளைஞர் காங்கிரசார் எழுப்பினர்.வேளச்சேரி சட்டசபை தொகுதி தலைவர் பதவிக்கும் மறு தேர்தல் நடத்த வேண்டுமென, கார்த்தி சிதம்பரம் ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரவாயல் தொகுதியில் ஓட்டுப் பதிவான எண்ணிக்கையை விட, கூடுதலாக இரண்டு ஓட்டுகள் பதிவாகியுள்ளது. அத்தொகுதியிலும் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை அக்கட்சியில் எழுந்துள்ளது. தேர்தல் புகார் தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுலுக்கு, இ-மெயில் மூலம் இளைஞர் காங்கிரசார் புகார் தெரிவித்துள்ளனர்.
358
2010-03-29T10:51:00+05:30
தமிழகம்
முதலீடுகளை ஈர்க்கும் மாநிலம் தமிழகம்: துணை முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
செங்கல்பட்டு:தமிழகம் தலைசிறந்த முதலீடுகளை ஈர்க்கும் மாநிலமாக திகழ்கிறது என ஒரகடத்தில், சான்மினா நிறுவன திறப்பு விழாவில், துணை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.சான்மினா எஸ்.சி.ஐ., என்ற மின்னணு தயாரிப்பு சேவை நிறுவனம் தனது அதிநவீன ஸ்டேட் ஆப் தி ஆர்க் தொழில்நுட்ப தயாரிப்பு தொழிற்சாலையை, சென்னை அருகே ஒரகடம் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைத்துள்ளது. 100 ஏக்கர் பரப்பளவில் இயங்கி வரும் இத்தொழிற்சாலையில் 1,500 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இந்நிறுவன திறப்பு விழா நேற்று நடந்தது.நிறுவன சேர்மன் சுரி சோலா தலைமை தாங்கினார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அன்பரசன் முன்னிலை வகித் தார். தமிழக தொழில்துறை முதன்மைச் செயலர் ராஜிவ் ரஞ்சன், அமெரிக்க தூதரக அதிகாரி ஆண்ரூ டி சிம்கின் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.துணை முதல்வர் ஸ்டாலின், நிறுவனத்தை துவக்கி வைத்து பேசியதாவது:உலக அளவில் எலக்ட்ரானிக் உற்பத்தி மற்றும் சேவையில் நான்காவது இடம் வகிக்கும் இந்நிறுவனம், தனது தொழிற்சாலையை அமைக்க சென்னையை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.இந்நிறுவனம் 225 கோடி ரூபாய் முதலீட்டில் எலக்ட்ரானிக் வன்பொருள் திட்டத்தை துவக்க, தமிழக அரசுடன் 2007ம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. தற்போது முதலீடு 250 கோடியை தாண்டி 1,400 பேருக்கு நேரடியாகவும், 300 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பையும் அளிக்கிறது.இந்தியாவை பொறுத்தவரையில் வன்பொருள் தேவைக்கும், உற்பத்திக்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளது. இந்த இடைவெளி வரும் காலத்தில் அதிகரிக்கும். இது உள்நாட்டில் இப்பொருட்களின் உற்பத்தியை பெருக்க உதவும்.முன்பு 2006ல் நோக்கியா மற்றும் பிற நிறுவனங்களால் நடத்தப்பட்ட ஆய்வு, சீனாவைவிட விலை மற்றும் போட்டி தன்மையில் சென்னை சிறந்து விளங்குகிறது என குறிப்பிட்டுள்ளது.தமிழகம் தலைசிறந்த முதலீடுகளை ஈர்க்கும் இடமாக திகழ்கிறது.சென்னை எலக்ட்ரானிக் வன்பொருள் தயாரிப்பில் பெரிய உற்பத்தி மையமாக உருவாகியுள்ள நிலையிலும், நமது நாட்டை பொறுத்தவரை எலக்ட்ரானிக் உபகரணங்களுக்கு இறக்குமதியையே நம்பியுள்ளோம். எலக்ட்ரானிக் உபகரண உற்பத்தியாளர்களை தமிழகத்தில் முதலீடு செய்ய கேட்டுக்கொள்கிறேன். சான்மினா நிறுவனம் ஒரு பிரின்டட் சர்க்கியூட் போர்டு தயாரிக்கும் தொழிற்சாலையை தமிழகத்தில் துவக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
362
2010-03-30T01:07:00+05:30
இந்தியா
காங்கிரசுக்கு பயம்! லோக்சபாவில் பெண்கள் மசோதா தாக்கலாகுமா? ஆதரவு எம்.பி.,க்கள் கணக்கு போட்டு தயக்கம்
பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே லோக்சபாவிலும் நிறைவேற்ற வேண்டுமென்று இதற்கு ஆதரவு தந்த முக்கிய எதிர்க்கட்சிகளான பா.ஜ., மற்றும் இடதுசாரிகள் கோரி வருகின்றன. ஆனால், ஆளும் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள பயம் காரணமாக இந்த மசோதாவை தாக்கல் செய்யுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா, ராஜ்யசபாவில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுவிட்டது. இந்த மசோதாவை நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டுமென இடதுசாரிகளும், பா.ஜ.,வும் கோரி வருகின்றன. இந்த இரண்டு கட்சிகளின் தயவால்தான் ராஜ்யசபாவில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை காங்கிரசால் நிறைவேற்ற முடிந்தது.பட்ஜெட் கூட்டத்தொடரின் முற்பகுதி முடிந்துவிட்ட நிலையில், வரும் ஏப்., 15ம் தேதி அன்று மீண்டும் இரண்டாம் கட்டமாக பார்லிமென்ட் கூடுகிறது. அப்போது பெண்கள் மசோதா நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.ஏற்கனவே இம்மசோதாவை நிறைவேற்றியே தீருவோம் என்று காங்கிரஸ் தைரியமாக கூறிவந்தாலும்,  பல்வேறு பிரச்னைகள் குறித்து அக்கட்சி பரிசீலனை செய்து வருகிறது.காங்கிரஸ் கட்சியின் 125ம் ஆண்டுவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அக்கட்சியின் சேவா தள பிரிவு நேற்று டில்லியில் ஒரு கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்து கொள்ளும் சோனியா, பெண்கள் மசோதா குறித்து நிச்சயம் அறிவிப்பு வெளியிடுவார் என்றும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், தனது 10 நிமிட உரையில் பெண்கள் மசோதா பற்றி ஒருவார்த்தை கூட சோனியா குறிப்பிடவில்லை. இத்தனைக்கும் சோனியாவுக்கு முன் பேசிய சேவாதள அகில இந்திய நிர்வாகி மகேந்தர் ஜோஷி, பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை எப்பாடுபட்டாவது நிறைவேற்றியே தீருவோம் என்று பேசினார்.அதற்கு அரங்கில் பலத்த கைதட்டலும் எழுந்தது. அடுத்து பேசிய சோனியா இதுபற்றி எதுவுமே குறிப்பிடாமல் பொதுவாகவே பேசினார். அவர் பேசும்போது, "சேவாதள அமைப்பு அரசியல் அமைப்பல்ல. கட்சிக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு அமைப்பு. அரசின் திட்டங்களை நாட்டு மக்களுக்கு எடுத்துச் செல்வதிலும் இந்த அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது' என்ற அளவில் மட்டுமே பேசினார்.நிகழ்ச்சியில் சேவாதள மேலிடப்பொறுப்பாளர் அமைச்சர் முகுல் வாஸ்னிக், அமைச்சர் அம்பிகாசோனி, மோதிலால் ஓரா, அகமது படேல், ஜனார்த்தன் திவேதி உட்பட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி நடந்த இரண்டு மணி நேரத்தில் ஒரு வார்த்தை கூட ஆங்கிலத்தில் யாரும் பேசவில்லை. முழுக்க முழுக்க இந்தியில் மட்டுமே பேசினர். இதனால் தமிழகத்தில் இருந்து வந்திருந்த சேவாதள தொண்டர்கள், 80 பேருக்கும்  தலைவர்கள் பேசியது  ஏதாவது புரிந்ததா என்பது தெரியவில்லை. பெண்கள் மசோதா குறித்து சோனியா பேசாதது ஏன் என்பது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியாவது:ஏற்கனவே 300க்கும் அதிகமான எம்.பி.,க்களின் ஆதரவுடன் இயங்கிக் கொண்டிருந்த மத்திய அரசு, ராஜ்யசபாவில் பெண்கள் மசோதா நிறைவேற்றப் பட்ட பின்னர் ஆதரவு குறைந்துவிட்டது.  குறிப்பாக சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் 50 எம்.பி.,க்கள் ஆதரவு அரசுக்கு கிடைக்காமல் உள்ளது.தனிப்பெரும்பான்மைக்கு 274 எம்.பி.,க்கள் தேவை என்ற நிலையில், தற்போது 10 முதல் 15 எம்.பி.,க்கள் வரை அரசுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கூட்டணியில் உள்ள திரிணமுல் காங்கிரஸ், ராஜ்யசபாவில் மசோதா நிறைவேற்றப்பட்டபோது அரசுக்கு ஆதரவு அளித்து ஓட்டுப்போடாமல் பிரச்னை செய்தது. கூட்டணிக்குள்ளேயே இப்படி பிரச்னை இருந்து வருகிறது. பெண்கள் மசோதாவை லோக்சபாவில் நிறைவேற்றுதில் அரசுக்கு சிரமம் இருக்காது. காரணம் இங்கும் பா.ஜ., - இடதுசாரிகள் அரசை ஆதரித்து ஓட்டுப்போட்டு மசோதாவை நிறைவேற்ற துணைநிற்பர். ஆனால் விலைவாசி உயர்ந்துவிட்டதை காரணம் காட்டி அரசை, சபையில் வெட்டுத் தீர்மானம் கொண்டு வந்து தோற்கடிக்கும் வகையில் இந்த எதிர்க்கட்சிகள் அணி திரளவுள்ளனர் என்ற வதந்தி பலமாக தலைநகர் டில்லியில் உலா வந்து கொண்டிருக்கிறது.எனவே எந்த  அபாயத்தையும் சந்திக்க காங்கிரஸ் தயாராக இல்லை. ஆகவே தான் பெண்கள் மசோதாவை நடப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற அரசு ஆர்வம் காட்டவில்லை. இதனால் தான் சோனியாவும் தனது பேச்சில் பெண்கள் மசோதா குறித்து எதுவும் பேசவில்லை. - நமது டில்லி நிருபர் -
363
2010-03-30T01:07:00+05:30
தமிழகம்
மூன்று மணி நேர மின் தடையால் பொருட்கள் விலை உயரும் அபாயம்
சேலம் : தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மூன்று மணி நேர மின் தடையால், அனைத்து பொருட்களின் விலையும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், மின் பற்றாக்குறை அதிகரித்துள்ளதை தொடர்ந்து, தினசரி, மின் தடையின் நேரம் மூன்று மணி நேரமாக அதிகரித்துள்ளது. பல்வேறு தொழில்களில் உற்பத்தி செலவுகள் அதிகரிப்பதால், விலைவாசி அதிகரிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.சேலம் மாவட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் சங்கத் தலைவர் இன்ஜினியர் மாரியப்பன் கூறியதாவது:"மே முதல் சிறு தொழிற்சாலைகளுக்கு மின்வெட்டிலிருந்து விலக்கு' என, மின்வாரிய அமைச்சர் உறுதியளித்திருந்தார். "பீக் அவர்ஸ் எனப்படும் மாலை 6 மணி முதல் 10 மணி வரை தொழிற்சாலைகள் கூடுதல் கட்டணம் செலுத்தி, தங்கு தடையின்றி மின்சாரம் பெற்றுக் கொள்ளலாம்' என, மின்வாரிய தலைவர் சி.பி.சிங் அறிவித்தார். இதை நம்பி, சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள், உள்நாடு மற்றும் வெளிநாட்டு ஆர்டர் களை எடுத்துள்ளன.அதற்கான உற்பத்தியில் இறங்கியுள்ள நேரத்தில், மின்தடை அதிகரித்திருப்பது தலையில் இடி விழுந்ததை போன்று உள்ளது.தொழிலாளர்கள் பற்றாக் குறை காரணமாக ஏற்கனவே நலிந்து வந்த தொழில்கள், மேலும் பல மடங்கு அதிகம் பாதிக்கும். சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேர மின்சாரத்தை வழங்கி விட்டு, சிறு தொழிற்சாலைகளை  நசுக்குவது எந்த விதத்தில் நியாயம்?இந்நிலை நீடித்தால் சிறு, குறு தொழிற்சாலைகளின் நிலை கேள்விக்குறி தான். மின்தடையிலிருந்து வீடுகளுக்கும், சிறு, குறு தொழிற்சாலைகளுக்கும் விலக்களிக்க வேண்டும்.இவ்வாறு மாரியப்பன் கூறினார்.தென்னிந்திய நூற்பாலை சங்க துணைத் தலைவர் தினகரன் கூறியதாவது: நூற்பாலைகளுக்கு தற்போது மூன்று மணி நேரம் மின்தடை, மாலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மற்றும் 20 சதவீத மின்தடையிலிருந்து 30 சதவீதம் என, ஒரு நாளைக்கு 58 சதவீத மின்தடை செய்யப்படுகிறது.ஒரு நாளைக்கு 24 மணி நேரமும், மூன்று ஷிப்டுகளில் தொழிலாளர்கள் வேலை செய்யும் நூற்பாலைகள் கடும் பாதிப்பை சந்திக்கும். மூன்றில் ஒரு பங்கு தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலையும் உருவாகும்.ஏற்கனவே பருத்தி விலை அதிகரித்ததால் ஏற்படும் நூல் விலையேற்றத்தை சமாளிப்பதே சவாலான சூழலாக உள்ளது. இந்த மின் தடையால், உற்பத்தி மிகவும் குறையும். மேலும் மின் தடையால், நூல் விலையும் அதிகரிக்கும்.பெரும்பாலான நூற்பாலைகளில், எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அடிக்கடி ஏற்படும் மின்தடையால் அவை பழுதாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு தினகரன் கூறினார்.
369
2010-03-30T01:11:00+05:30
இந்தியா
சானியா-சோயப் மாலிக் திருமணம்?
ஐதராபாத் : இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.சர்வதேச டென்னிஸ் அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார் சானியா மிர்சா. கடந்த 2009, ஜூலை 10ம் தேதி சானியா மற்றும் அவரது குழந்தை பருவ நண்பரான முகமது சோஹ்ராப் மிர்சா இடையே திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நடந்தது.இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த ஜனவரி மாதம் திடீரெனநிச்சயதார்த்தம் ரத்து செய்யப் பட்டது. இந்நிலையில் நேற்று பாகிஸ்தானில் உள்ள தனியார் டிவி சேனலில், இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் இருவருக்கும் அடுத்த மாதம் திருமணம் நடக்க இருப்பதாக, செய்திகள் வெளியாகின.இதுகுறித்து அந்த சேனலில் வெளியான செய்தியில், ""சோயப் மாலிக்கின் தாயார், ஐதராபாத்தில் உள்ள சானியாவின் பெற்றோரை சந்தித்து, மாலிக்-சானியா திருமணம் குறித்து உறுதி செய்துள்ளார் என்றும். வரும் ஏப்ரல் 16 அல்லது 17ம் தேதி லாகூரில் இவர்களது திருமண வரவேற்பு நடக்க இருக்கிறது,'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2வது திருமணம்?பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக், கடந்த 2002ம் ஆண்டு தொலைபேசி மூலம் ஐதராபாத்தில் உள்ள ஆயிஷா சித்திக் என்பவருடன் நிச்சயம் மேற் கொண்டு, பின்னர் அதே ஆண்டு ஜூன் 3ம் தேதி திருமணம் செய்து கொண்டார் என தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆனால், சோயப் மாலிக் இதனை மறுத்திருந்தார்.