செல்வம் நிலையாமை [செல்வத்தின் நிலையாமையை உணர்த்துவது] பாடல்: அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச் சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம்ஒன் றுண்டாக வைக்கற்பாற் றன்று. குறிப்புரை: அறுசுவை உண்டி - அறுசுவையுள்ள உணவை, இல்லாள் - மனையாள், அமர்ந்து ஊட்ட - விரும்பி உண்பிக்க, மறுசிகை நீக்கி உண்டாரும் - மறுபிடி தவிர்த்து உண்ட செல்வரும், வறிஞராய்ச் சென்று இரப்பர் ஓர் இடத்து கூழ் - ஒரு காலத்தில் வறுமையாளராகி எங்கேனும் ஓர் இடத்திற்போய்க் கூழ் இரப்பர், எனின் - ஆதலின், செல்வம் ஒன்று - செல்வமென்பதொன்று, உண்டாக வைக்கற்பாற்று அன்று - நிலையுடையதாக மனத்திற் கருதக் கூடியதன்று. கருத்து: செல்வரும் வறிஞராக மாறுதலால், செல்வம் நிலையுள்ளதாகக் கருதற்குரியதன்று. விளக்கம்: ‘அமர்ந்து' ‘ ஊட்ட' என்னும் சொற்கள் ஆற்றல் வாய்ந்தவை; அமர்தல் - மனம் பொருந்துதல் ; அன்பு, மகிழ்வோடு உண்ணச் செய்தலின் ‘ஊட்ட' என வந்தது. ஒவ்வொருவகை உணவிலும் ஒவ்வொரு பிடியளவே போதுமானதாயிருந்தமையால் அச் செழுமை மிகுதியால் மறுசிகை நீக்கி உண்டார். உம்மை உயர்வின் மேல் வந்தது. வைக்கறபாற்றன்று - வைக்கற்பாலதன்று. செல்வத்தின் நிலையாமை தெரிந்தால், அதனைக் காலத்தில் தக்கவாறு பயன்படுத்திக்கொள்ளும் உணர்வு உண்டாகும். நிலையாமை கூறும் பிறவிடங்களிலும் இங்ஙனமே கருத்துக்கொள்க.
stringlengths
16
7.39k
இகழுநர் சொல்லஞ்சிச் சென்றார் வருதல் பகழிபோ லுண்கண்ணாய் பொய்யன்மை யீண்டைப் பவழஞ் சிதறி யவைபோலக் கோபந் தவழுந் தகைய புறவு. பதவுரை: பகழிபோல் - அம்புபோலும், உண் கண்ணாய் - மையுண்ட கண்களையுடையாய், ஈண்டை - இவ்விடத்து, பவழம் சிதறியவை போல - பவழம் சிந்தியவை போல, புறவு - காடுகள், கோபம் தவழும் தகைய - இந்திர கோபங்கள் பரக்குந் தகைமையை உடையவாயின ;, இகழுநர் சொல் அஞ்சி இகழ்வார் கூறும் பழிக்கு அஞ்சி ; சென்றார் - பொருள் தேடச்சென்ற தலைவர், வருதல் - மீளவருதல், பொய் அன்மை மெய்யாம். எ-று. தமது தாளாண்மையாற் பொருள்தேடி அறஞ்செய்யாதார்க் குளதாவது பழியாகலின் ‘இகழுநர் சொல்லஞ்சி' எனப்பட்டது. வடிவானும் தொழிலானும் கண்ணுக்குப் பகழி உவமம். பொய்யன்மை - மெய்ம்மை. ஈண்டைப் பவழஞ் தறியவை என்றமையால் தலைமகள் வருத்த மிகுதியால் தான் அணிந்திருந்த பவழவடத்தை அறுத்துச் சிந்தினாளென்பது கருதப்படும். ஈண்டை - குற்றுகரம் ஐகாரச் சாரியையேற்றது. கோபம் - கார்கலத்தில் தோன்றுவதொரு செந்நிறப்பூச்சி; தம்பலப்பூச்சி யென்பர்.
தொடியிட வாற்றா தொலைந்ததோ ணோக்கி வடுவிடைப் போழ்ந்தகன்ற கண்ணாய் வருந்தல் கடிதிடி வான முரறு நெடுவிடைச் சென்றாரை நீடன்மி னென்று. பதவுரை: வடு இடை - மாவடுவின் நடுவே. போழ்ந்து - பிளந்தாற்போலும், அகன்ற கண்ணாய் - பரந்த கண்களை யுடையாய் கடிது இடி வானம் - கடுமையாய் இடிக்கும் முகில், நெடு இடை சென்றாரை - நெடிய வழியிற் சென்ற தலைவரை, நீடன்மின் என்று - காலந் தாழ்க்கா தொழிமின் என்று சொல்லி, உரறும் - முழங்காநிற்கும்;தொடி இட ஆற்றா - வளையிடுதற்கு நிரம்பாவாய், தொலைந்த - மெலிந்த, தோள் நோக்கி - தோள்களைப் பார்த்து வருந்தல் - வருந்தாதே எ.று. ஆற்றா : எதிர்மறை வினையெச்சமுற்று தொடியிடவாற்றா தொலைந்த தோள் என்றது உறுப்பு நலனழிதல் கூறியவாறு; ‘தொடியொடு தொல்கவின் வாடிய தோள்' என்பது முப்பால். போழ்ந்தால் என்பது போழ்ந்து எனத் திரிந்து நின்றது. உவமஉருபு தொக்கத்து. நெடுவிடை - மருவின்பாற்படும்; நெட்டிடை என்பதே பயின்ற வழக்காகலின். .நெறியிடை - என்றும் பாடம்
நச்சியார்க் கீதலு நண்ணார்த் தெறுதலுந் தற்செய்வான் சென்றார்த் தரூஉந் தளரியலாய் பொச்சப் பிலாத புகழ் வேள்வித் தீப்போல எச்சாரு மின்னு மழை பதவுரை: தளர் இயலாய் - தளர்ந்த இயல்பினையுடையாய், நச்சியார்க்கு - தம்மை விரும்பியடைந்தார்க்கு, ஈதலும் - கொடுத்தலும், நண்ணார் - அடையாத பகைவரை, தெறுதலும் - அழித்தலும், தற்செய்வான் - தம்மை நிலைநிறுத்துவனவாக நினைத்து,சென்றார் - பொருள் தேடச் சென்ற தலைவரை, பொச்சாப்பு இலாத - மறப்பில்லாத, புகழ் - புகழையுடைய, வேள்வித் தீப்போல - வேள்வித்தீயைப்போல, எச்சாரும் - எம் மருங்கும், மின்னும் - மின்னாநிற்கும், மழை வானமானது, தரூஉம் - கொண்டு வரும் எ-று. அறஞ் செய்தற்கும் பகைதெறுதற்கும் பொருள் காரணமாதலை, ‘அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும், பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும்.... தருமெனப் பிரிவெண்ணிப் பொருள்வயிற் சென்ற நங்காதலர்' என்னும் பாலைக்கலியானு மறிக. தற்செய்வான் சென்றார் : பன்மை யொருமை மயக்கம்; சில சொற்கள் வருவிக்கப்பட்டன. ‘தளிரியலாய்' என்பது பாடமாயின் தளிர்போலும் சாயலையுடையாய் என்று பொருள் கூறப்படும். பொச்சாப்பின்றிச் செய்தலாற் புகழுண்டாம் ஆகலின் பொச்சாப்பிலாத என்னும் பெயரெச்சம் காரணப்பொருட்டு. ‘பொச்சாப் பார்க்கில்லை புகழ்மை' என்பது திருவள்ளுவப் பயன் வேள்வித்தீ உவமம். அது மழைக்குக் காரணமென்பதற்குப் ஞாபகமாகவும் உள்ளது.
மண்ணியன் ஞாலத்து மன்னும் புகழ்வேண்டிப் பெண்ணிய னல்லாய் பிரிந்தார் வரல்கூறும் கண்ணிய லஞ்சனங் தோய்ந்த போற் காயாவும் நுண்ணரும் பூழ்த்த புறவு. பதவுரை: பெண் இயல் நல்லாய் - பெண் தகைமையையுடைய நல்லாய், மண் இயல் ஞாலத்து - மண்ணானியன்ற உலகத்து, மன்னும் புகழ் வேண்டி - நிலைபெறும் புகழை விரும்பி, பிரிந்தார் - பிரிந்து சென்ற தலைவர், வரல் - மீண்டு வருதலை, கண் இயல் அஞ்சனம் கண்ணிற்கு இயற்றப்பட்டமையை, தோய்ந்தபோல் தோய்ந்தவை போல, காயாவும் - காயாஞ் செடிகளும், நுண் அரும்பு ஊழ்த்த - நுண்ணிய அரும்புகள் மலரப் பெற்ற, புறவு காடுகள், கூறும் - சொல்லாநிற்கும், எ-று. பெண் இயல் - நாண் முதலியன; ‘அச்சமு நாணு மடனுமுந் துறத்த, நிச்சமும் பெண்பாற் குரிய வென்ப'என்று தொல்காப்பியம் கூறுவதுங் காண்க. காயாமலர் அஞ்சனத் தோய்ந்தாற்போலும் என்பதனை ‘செறியிலைக் காயா அஞ்சன மலர' என்னும் முல்லைப்பாட்டானும் அறிக. ஊழ்த்தல் - மலர்தல்; ‘இணரூழ்த்து நாறா மலர்' என்பது திருக்குறள். புறவு பிரிந்தார்வரல் கூறும் என முடிக்க.
கருவிளை கண்மலர் போற் பூத்தன கார்க்கேற் றெரிவனப் புற்றன தோன்றி - வரிவளை முன்கை யிறப்பத் துறந்தார் வரல்கூறும் இன்சொற் பலவு முரைத்து. பதவுரை: கண்மலர் போல் பூத்தன - கண்மலர் போலப் பூத்தனவாகிய, கருவிளை - கருவிளம் பூக்களும், கார்க்கு ஏற்று - கார்ப்பருவத்திற் கெதிர்ந்து, எரி வனப்பு உற்றன - தீயினது அழகையுற்றனவாகிய, தோன்றி - தோன்றிப் பூக்களும், வரிவளை முன்கை இறப்ப - வரியையுடைய வளைகள் முன்னங் கையினின்று கழல, இன்சொல் பலவும் உரைத்து - இனிய சொற்கள் பலவும் மொழிந்து, துறந்தார் - பிரிந்து சென்ற தலைவர், வரல் - வருதலை, கூறும் கூறா நிற்கும், எ-று. கருவிளை - கருங்காக்கணம்பூ; அது கண்போலும் என்பதனைக் கண்ணெனக் ‘கருவிளை மலர' என்னும் ஐங்குறு நூற்றானு மறிக. தோன்றிப்பூ செந்நிற ஒளியுடையது; ‘சுடர்ப்பூந் தோன்றி' என்பது பெருங்குறிஞ்சி. ‘தோடார் தோன்றி குருதி பூப்ப' என்றார் பிறரும் உரைத்து இறப்பத் துறந்தார் என்க. கருவிளையும் தோன்றியும் துறந்தார் வரல்கூறும் என முடிக்க.
வானேறு வானத் துரற வயமுரண் ஆனேற் றொருத்த லதனோ டெதிர்செறுப்பக் கான்யாற் றொலியிற் கடுமான்றே ரென்றோழி மேனி தளிர்ப்ப வரும். பதவுரை: என் தோழி என் தோழியே, வான்ஏறு - இடியேறு, வானத்து உரற - முகிலின்கண் நின்று ஒலிப்ப, வய - வலியினையும், முரண் - மாறுபாட்டினையும் உடைய, ஆன் ஏறு ஒருத்தல் - எருமையின் ஆணாகிய ஒருத்தல், அதனோடு - அவ்விடியேற்றுடன்; எதிர் செறுப்ப - எதிராகி வெகுள, கடுமான்தேர் - விரைந்த செலவினையுடைய குதிரை பூட்டப்பட்ட நம் காதலர் தேர், கான் யாற்று ஒலியின் - காட்டாற்றின் ஒலிபோலும் ஒலியினையுடைத்தாய், மேனி தளிர்ப்ப - நின்மேனி தழைக்க, வரும் - வாரா நிற்கின்றது, எ-று. வய - வலி; ‘வயவலி யாகும்' என்பது தொல்காப்பியம். ஆன் என்னும்பெயர் எருமைக்குரித்தாதலும், ஒருத்தல் என்னும் பெயர் அதன்  ஆணுக்குரித்தாதலும் தொல்காப்பிய மரபியலானறிக; இடபம் எனினும் ஆம். தேரொலி அருவியொலி போலும் என்பதனை ‘அருவியி னொலிக்கும் வரிபுனை நெடுந்தேர்' என்னும் பதிற்றுப்பத்தானும் அறிக. செயவெனச்சம் முன்னைய விரண்டும் நிகழ்விலும், பின்னையது எதிர்விலும் வந்தன.
புணர்தரு செல்வந் தருபாக்குச் சென்றார் வணரொலி யைம்பாலாய் வல்வருதல் கூறும் அணர்த்தெழு பாம்பின் றலைபோற் புணர்கோடல் பூங்குலை யீன்ற புறவு. பதவுரை: வணர் - குழற்சியையுடைய, ஒலி - தழைத்த, ஐம்பாலாய், கூந்தலையுடையாய், அணர்த்துஎழு - மேனோக்கியெழும், பாம்பின் தலைபோல் - பாம்பினது படத்தைப் போல, புணர்கோடல் - பொருந்திய வெண்காந்தள்கள், பூங்குலை ஈன்ற - பூக்கொத்துக்களை யீன்ற, புறவு - காடுகள், புணர்தரு -பொருந்துதலையுடைய, செல்வம் - பொருளை, தருபாக்கு - கொண்டு வர, சென்றார் - பிரிந்து சென்ற தலைவர், வல் வருதல் - விரைந்து வருதலை, கூறும் கூறாநிற்கின்றன, எ-று. தருபாக்கு : வினையெச்சம் வணர் - வளைவு; ஈண்டுக் குழற்சி ஒலி - தழைத்தல்; இஃதிப் பொருட்டாதலை ‘ஒலி நெடும் பீலி' என்னும் நெடுநல்வாடையடி உரையானறிக. ஐம்பால் - ஐந்து பகுப்பினையுடையது; கூந்தல். ஐந்து பகுப்பாவன : குழல், கொண்டை, சுருள், பனிச்சை, முடியென்ப. இங்ஙனம் ஒரொவொருகால் ஒவ்வொரு வகையாக வன்றி, ஒரொப்பனையிற்றானே ஐந்து வகையாற் பிரித்து முடிக்கப்படுவது என்று கோடலும் ஆம். ‘வணரொலி யைம்பாலார்' என இன்னாநாற்பதிலும் இத்தொடர் வந்துள்ளமை காண்க.
மையெழி லுண்கண் மயிலன்ன சாயலாய் ஐயந்தீர் காட்சி யவர்வருதல் திண்ணிதாம் நெய்யணி குஞ்சரம் போல விருங்கொண்மூ வைகலு மேரும் வலம். பதவுரை: மை எழில் - கருமையும் அழகும் பொருந்திய, உண்கண் - மையுண்ட கண்களையுடைய, மயில் அன்ன சாயலாய் - மயில் போலும் சாயலினையுடையாய், நெய் அணி குஞ்சரம்போல எண்ணெய் பூசப்பட்ட யானைகள்போல, இருங்கொண்மூ - கரிய மேகங்கள், வைகலும் - நாடோறும், வலம் ஏரும் - வலமாக எழாநின்றன;ஐயம் தீர் காட்சி - ஐயந்தீர்ந்த அறிவினையுடைய, அவர் - நம் தலைவர், வருதல் திண்ணிது - மீளவருதல் உண்மை, எ-று. சாயல் - மென்மை : உரிச்சொல். ஐயந்தீர்ந்த எனவே திரிபின்மையும் பெற்றாம். காட்சி - அறிவு. காட்சியவர் எனக்குறிப்பு வினைப் பெயராக்கலும் ஒன்று. பொய் உள்ளீ டில்லாததாகலின் உண்மையைத் ‘திண்ணிது' என்றார் . ஆம் : அசை. இருமை - கருமை பெருமையுமாம். ஏர்தல் - எழுதல்; ‘பாடிமிழ் பனிக்கடல் பருகி வலனேர்பு' என்பது முல்லைப்பாட்டு. .திண்ணிதால் என்றும் பாடம்
ஏந்தெழி லல்குலா யேமார்ந்தகாதலர் கூந்தல் வனப்பிற் பெயறாழ - வேந்தர் களிநெறி வாளரவம் போலக்கண் வௌவி ஒளிறுபு மின்னு மழை. பதவுரை: எழில் - அழகினையுடைய, ஏந்து அல்குலாய் - ஏந்திய அல்குலையுடையாய், ஏம் ஆர்ந்த காதலர் - தம் தலைவரொடு கூடி இன்பந் துய்த்த மகளிரின், கூந்தல் - சரிந்த கூந்தலினது, வனப்பின் - அழகுபோல, பெயல் தாழ - மழை பெய்ய, மழை முகில், வேந்தர் களிறு ஏறி - அரசர் யானையை வெட்டி வீழ்த்துகின்ற, அரவம் - ஒலியினையுடைய, வாள் போல - வாளினைப்போல, கண் வௌவி - கண்களைக் கவர்ந்து, ஒளிறுபு - ஒளிவிட்டு , மின்னும் - மின்னா நின்றது;எ-று. ஏம் - ஏமம் : கடைக்குறை காதலர் - ஈண்டு மகளிரை உணர்த்திற்று. ‘அரவம்' என்றமையால் மழைக்கு முழக்கம் வருவித்துக் கொள்ளப்படும் மழையின் மின்னுக்கு வாள் உவம மாதலை, ‘அருஞ்சமத் தெதிர்ந்த பெருஞ்செய லாடவர், கழித் தெறிவாளி னழிப்பன விளங்கு மின்னுடைக் கருவியை யாகி நாளுங் ‘கொன்னே செய்தியோ அரவம் - மழையே' என்னும் அகப்பாட்டானும் அறிக. கண் வௌவல் - கண் வழுக்குறச் செய்தல். ஒளிறுபு; செய்பு என்னும் வாய்பாட்டு வினையெச்சம் காதலர் வருவரென்பது வருவிக்கப்பட்டது. ஏமாந்த என்றும் பாடம்.
செல்வந் தரவேண்டிச் சென்றநங் காதலர் வல்லே வருத றெளிந்தாம் வயங்கிழாய் முல்லை யிலங்கெயி றீன நறுந்தண்கார் மெல்ல வினிய நகும். பதவுரை: வயங்கிழாய் - விளங்காநின்ற அணிகளையுடையாய்! முல்லை - முல்லைக்கொடிகள், இலக்கு - விளங்குகின்ற, எயிறு ஈன மகளிரின் பற்களைப் போலும் அரும்புகளை ஈனும் வகை, நறு தண்கார் - நல்ல குளிர்ந்த மேகம், மெல்ல இனிய நகும் - மெல்ல இனியவாக மின்னாநின்றன;செல்வம் தரல்வேண்டி பொருள் தேடிக்கொள்ளுதலை விரும்பி, சென்ற - பிரிந்து சென்ற, நம் காதலர் - நமது தலைவர், வல்லே வருதல் - விரைந்து வருதலை, தெளிந்தாம் - தெளிய அறிந்தாம் எ-று. வல்லே என்பதில் ஏகாரம் அசை; தேற்றமும் ஆம் தெளிந்தாம் : உளப்பாட்டுத் தன்மைப் பன்மை. எயிறு போலும் அரும்பினை எயிறென்றார். ‘முல்லையெயிறீன' என்பது ஐந்திணையெழுபது. நறு - நல்ல; இஃதிப்பொருட்டாதலைப் ‘பொலனறுந் தெரியல்' என்பதானும் அறிக.
திருந்திழாய் காதலர் தீர்குவ ரல்லர் குருந்தின் குவியிண ருள்ளுறை யாகத் திருந்தி னிளிவண்டு பாட விருந்தும்பி இன்குழ லூதும் பொழுது. பதவுரை: திருந்திழாய் - திருந்திய அணிகளையுடையாய், குருந்தின் - குருந்த மரத்தின், குவி இணர் உள் - குவிந்த பூங்கொத்துக்களின் உள்ளிடமே, உறை ஆக - தமக்கு உறைவிடமாக இருந்து, திருந்து இன் இளி - திருந்திய இனிய இளியென்னும் பண்ணை, வண்டுபாட வண்டுகள்பாட, இரு தும்பி - கரிய தும்பிகள், இன்குழல் ஊதும்பொழுது - இனிய குழலை ஊதாநிற்கும் இக்காலத்தில், காதலர் - நம் தலைவர், தீர்குவர் அல்லர் -நம்மை நீங்கியிருப்பாரல்லர் எ-று. திருந்து இழை என்னும் இரு சொல்லும் தொக்க வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகைப் பெயர் விளியேற்றுத் திருந்திழாய் என்றாயது; வயங்கிழாய் போல்வனவும் இன்ன. உறை என்னும் முதனிலைத் தொழிற் பெயர் உறையும் கடத்திற்காயிற்று; உள்ளுறை என்பதனை உறையுள் என மாறுதலும் ஆம். இளி - பஞ்சம சுரம். ‘குழலிசை தும்பி கொளுத்திக் காட்ட, மழலை வண்டினம் நல்லியாழ் செய்ய, மயிலாடரங்கின் மந்திகாண் பனகாண்' என்பது மணிமேகலை.
சுருங்குயில் கையற மாமயி லாலப் பெருங்கலி வான முரறும் - பெருந்தோள் செயலை யிளந்தளி ரன்னநின் மேனிப் பசலை பழங்கண் கொள. பதவுரை: பெருந்தோள் - பெரிய தோளினையுடையாய், செயலை - அசோகினது, இளந்தளிர் அன்ன - இளந்தளிர் போன்ற நின்மேனி - உன் உடம்பினது, பசலை - பசலையானது, பழங்கண் கொள - மெலிவு கொள்ளவும், கருங்குயில் - கரிய குயில்கள், கையற - செயலாற்றுத் துன்பமுறவும், மா மயில் - பெரிய மயில்கள், ஆல - களித்து ஆடவும், பெருங் கலி வானம் - பெரிய ஒலியையுடைய முகில்கள், உரறும் - முழங்காநிற்கும், எ-று. கையறல் - ஈண்டுக் கூவாதொடுங்குதல்; கார்காலத்தில் குயில் துன்புறலும் மயில் இன்புறலும் இயற்கை. ஆல - அகல; ஆட. பசலை - காதலர்ப் பிரிந்தார்க்கு உளதாகும் நிற வேற்றுமை. பழங்கண் - மெலிவு; ‘பழங்கணும் புன்கணும் மெலிவின் பால' என்பது திவாகரம். பசலை பழங்கண் கொள என்றது தலைவர் வருகையால் தலைவி மகிழ்ச்சியுற என்றபடி. .அசோகினிளந்தளிர் என்றும் பாடம்.
அறைக்க லிறுவரைமேற் பாம்பு சவட்டிப் பறைக்குர லேறொடு பௌவம் பருகி உறைத்திருள் கூர்ந்தன்று வானம் பிறைத்தகை கொண்டன்று பேதை நுதல். பதவுரை: பேதை - பேதாய், வானம் - மேகமானது, பௌவம் பருகி - கடல் நீரைக் குடித்து, பறைக் குரல் ஏறொடு பறையொலி போலும் ஒலியையுடைய இடியேற்றாலே, பாம்பு சவட்டி பாம்புகளை வருத்தி, அறைக்கல் பாறைகற்களையுடைய, இதுவரை மேல் - பக்க மலையின்மேல், உறைத்து - நீரைச்சொரிந்து, இருள் கூர்ந்தன்று - இருளைமிக்கது;நுதல் - உனது நெற்றி, பிறைத் தகை - பிறை மதியின் அழகை, கொண்டன்று - கொண்டதே எ-று. இறுவரை - பக்கமலை. சவட்டி - வருத்தி; ‘மன்பதை சவட்டுங் கூற்றம்' எனப் பதிற்றுப்பத்திலும் இச் சொல் இப் பொருளில் வந்துள்ளமை காண்க; இது ‘கடிசொல்லில்லைக் காலத்துப் படினே' என்பதனாற் போந்தது. பௌவம் : ஆகுபெயர். உறைத்தல் - துளித்தல்; சொரிதல். கூர்ந்தன்று : கூர் என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த உடம்பாட்டு வினைமுற்று. இருள் கூர்ந்தன்று : ஒரு சொல்லாய் வானம் என்னும் எழுவாய்க்கு முடிபாயிற்று.
கல்பயில் கானங் கடந்தார் வரவாங்கே நல்லிசை யேறொடு வான நடுநிற்பச் செல்வர் மனம்போற் கவினீன்ற நல்கூர்ந்தார் மேனிபோற் புல்லென்ற காடு. பதவுரை: கல்பயில் - மலைநெருங்கிய, கானம் கடந்தார் காட்டைக் கடந்து சென்ற தலைவர் : வர - வரும்வகை, ஆங்கே - அவர் வருங்காலம் வந்தபொழுதே, வானம் - மேகங்கள், நல்இசை - மிக்க ஒலியையுடைய, ஏறோடு - உருமேற்றுடனே, நடுநிற்ப - நடுவு நின்று எங்கும் பெய்தலால், நல்கூர்ந்தார் மேனிபோல் - வறுமையுற்றார் உடம்புபோல, புல்லென்ற -பொலிவிழந்த, காடு - காடுகள், செல்வர் மனம்போல் பொருளுடையார் மனம் போல, கவின் ஈன்ற - அழசைத் தந்தன எ-று. நல் - ஈண்டு மிக்க என்னும் பொருளது; ‘நன்று பெரிதாகும்' என்னும் தொல்காப்பியச் சூத்திரம் இங்கு நோக்கற்பாலது. கடந்தார் வர ஆங்கே வானம் நடுநிற்பக் காடு கவினீன்ற என வினை முடிவு செய்க; வர நடுநிற்ப ஆங்கே கவினீன்ற என முடிப்பினும் அமையும்
நாஞ்சில் வலவ னிறம்போலப் பூஞ்சினைச் செங்கான் மராஅந் தகைந்தன - பைங்கோற் றொடி பொலி முன்கையாள் தோடுணையா வேண்டி நெடுவிடைச் சென்றதென் னெஞ்சு. பதவுரை: நாஞ்சில் வலவன் - கலப்பைப்படை வென்றியை யுடையவனது, நிறம்போல - வெண்ணிறம் போல, பூஞ்சினை பூங்கொம்பினையும், செங்கால் - செவ்விய தாளினையுமுடைய, மரா அம் - வெண்கடம்புகள், தகைந்தன - மலர்ந்தன;என் நெஞ்சு - என் மனம், பைங்கோல் தொடி பசுமையாகிய திரண்ட வளைகள், பொலி - விளங்குகின்ற, முன் கையாள் - முன்னங்கையை யுடையாளின், தோள் - தோள்கள், துணையாவேண்டி - எனக்குத் துணையாக வேண்டி, நெடு இடைச் சென்றது - நெடிய காட்டு வழியைக் கடந்து சென்றது எ-று. நாஞ்சில் வலவன் - பலராமன்; அவன் வெண்ணிறமுடைய னென்பதனையும், கலப்பைப்படையால் வெற்றியுடையனென் பதனையும் ‘கடல்வளர் புரிவளை புரையுமேனி, அடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனும்' என்னும் புறப்பாட்டானுமறிக. மராஅம் - வெண்கடம்பு; ‘செங்கான் மராஅத்த வாலிணர்' என்னும் திருமுருகாற்றுப் படையானும் மராஅம் செங்காலும் வாலிணரு முடைத்தாதல் காண்க. ‘ஒருகுழை யொருவன் போலிணர்சேர்ந்த மராஅமும்' எனப் பாலைக் கலியிலும் வெண்டம்பின் பூங்கொத்திற்குப் பலராமன் உவமை கூறப்பட்டிருத்தல் ஓர்க. தகைதல் - மலர்தல்; இஃதிப் பொருட்டாதலைப் ‘பிடவுமுகை தகைய'என்புழிக் காண்க. நெடு விடைக்கு முன்புரைத்தாங்குரைத்துக் கொள்க.
வீறுசால் வேந்தன் வினையு முடிந்தன ஆறும் பதமினிய வாயின - ஏறோ டருமணி நாக மனுங்கச் செருமன்னர் சேனைபோற் செல்லு மழை. பதவுரை: வீறுசால் - சிறப்பமைந்த, வேந்தன் - அரசனுடைய, வினையும் - போர்த்தொழில்களும், முடிந்தன - முற்றுப்பெற்றன, ஆறும் - வழிகளும், பதம்இனிய ஆயின - செவ்வி யினியவாயின, மழை - மேகங்கள், அருமணி - அரிய மணியையுடைய, நாகம் - பாம்புகள், அனுங்க - வருந்தும் வகை, ஏறொடு உருமேற்றுடனே, செருமன்னர் சேனைபோல் - போர்புரியும் வேந்தரின் சேனைபோல, செல்லும் - செல்லா நிற்கும்;எ-று. இடியோசையால் நாகம் வருந்துதலை ‘விரிநிற நாகம் விடருளதேனும், உருமின் கடுஞ்சினஞ் சேணின்று முட்கும்' என்னும் நாலடியானறிக. ‘முதிர்மணி நாக மனுங்க முழங்கி' என்னும் திணை மொழியைம்பதும் ஈண்டு நோக்கற்பாலது. அணியணியாய் விரைந்து சேறலும், முழங்கலும், அம்பு சொரிதலும் பற்றிச் சேனை உவமமாயிற்று.
பொறிமாண் புனைதிண்டேர் போந்த வழியே சிறுமுல்லைப் போதெல்லாஞ் செவ்வி - நறுநுதற் செல்வ மழைத்தடங்கட் சின்மொழிப் பேதைவாய் முள்ளெயி றேய்ப்ப வடிந்து. பதவுரை: பொறிமாண் - எந்திரச் செய்கைகளான் மாட்சிமைப் பட்ட, புனை திண் தேர் அலங்கரிக்கப்பட்ட திண்ணிய தேர், போந்த வழியே - வந்த வழியிதே, சிறு முல்லைப் போது எல்லாம் - சிறிய முல்லையின் அரும்புகளெல்லாம், வடிந்து - கூர்மையுற்று, செவ்வி நறுநுதல் - செவ்விய அழகிய நெற்றியையும், செல்வ மழைத் தடங்கண் - வளப்பமான மழைபோற் குளிர்ந்த அகன்ற கண்களையும், சில்மொழி - சிலவாகிய மொழியினையுமுடைய, பேதைவாய் - மடவாளது வாயின்கண் உள்ள, முள் எயிறு - கூரிய பற்களை, ஏய்ப்ப - ஒவ்வா நிற்கும் எ-று. சின்மொழி - மெல்லிய மொழியுமாம். ‘முள்ளெயிறொக்க வடிவுபட்டு' என்று பொருளுரைத்து, ‘நின்றது' என்னும் பயனிலை தொக்கது என்றுரைப்பர் பழைய வுரைகாரர். இப்பொருளில் ‘ஏய்ப்ப' என்பது வினையெச்சம்.
இளையரு மீர்ங்கட் டயர வுளையணிந்து புல்லுண் கலிமாவும் பூட்டிய - நல்லார் இளநலம் போலக் கவினி வளமுடையார் ஆக்கம்போற் பூத்தன காடு. பதவுரை: இளையரும் - சேவகரும், ஈர்ங்கட்டு அயர - குளிர் காலத்திற்குரிய உடையினை உடுக்க, உளை அணிந்து - தலையாட்டம் அணிந்து, புல்உண் - புல்லினை யுண்ட, கலிமாவும் மனஞ்செருக்கிய குதிரையையும், பூட்டிய - தேருடன் பூட்டுதலைச் செய்ய, காடு - காடுகள், நல்லார் - நற்குணமுடைய மகளிரின், இளநலம் போல - இளமைச் செவ்விபோல, கவினி - அழகுற்று, வளம் உடையார் - வருவாயுடையாரது, ஆக்கம்போல் செல்வம்போல், பூத்தன - பொலிவுற்றன.. இளையர் - சேவகர் ; ஏவலாளர், ஈர்ங்கட்டயர என்பதற்கு அழகிதாகக் கட்டியுடுத்தலைச் செய்ய என்றனர் பழையவுரைகாரர். உளை - தலையாட்டம்; சாமரை யெனவும்படும்; இது கவரிமான் மயிராற் செய்து குதிரையின் தலையிலணியப்படுவது. பூட்டிய : செய்யிய என்னும் வினையெச்சம். இளநலம் என்புழி நலம் வடிவுமாம். வளம் வருவாயாதலை ‘வளத்தக்காள் வாழ்க்கைத் துணை' என்பதற்குப் பரிமேலழகர் உரைத்த உரையானறிக. பூத்தல் - பொலிதல்; மலர்தலுமாம்.
கண்டிரண் முத்தங் கடுப்பப் புறவெல்லாந் தண்டுளி யாலி புரளப் புயல்கான்று கொண்டெழில் வானமுங் கொண்டன் றெவன் கொலோ ஒண்டொடி யூடுநிலை. பதவுரை: ஒண்டொடி - ஒள்ளிய வளைகளை யணிந்தவளே, புறவு எல்லாம் - காடெங்கும். கண்திரள் முத்தம் கடுப்ப - இடந்திரண்ட முத்தையொப்ப, தண்துளி - குளிர்ந்த நீர்த்துளிகளும் ஆலி - ஆலங்கட்டிகளும் , புரள - புரளும்வகை, புயல் - மேகம், கான்று கொண்டு - மழைபொழிந்து கொண்டு, எழில் - அழகினையுடைய, வானமும் கொண்டன்று - வானத் திடத்தையெல்லாம் கொண்டது, ஊடுநிலை பிணங்குந்தன்மை, எவன் கொல் - எற்றுக்கு, எ-று. கண்டிரள் முத்தம் என்றது மேனி திரண்ட முத்தம் என்றபடி அகத்திலும். பிறாண்டுங் ‘கண்டிரண் முத்தம்' என வருதலுங் காண்க. கொல் , ஓ : அசைநிலை தலைவர் வருவர்; இனிப் பிணங்குதல் வேண்டா என்பது குறிப்பு.
எல்லா வினையுங் கிடப்ப வெழுநெஞ்சே கல்லோங்கு கானங் களிற்றின் மதநாறும் பல்லிருங் கூந்தல் பணிநோனாள் கார்வானம் மெல்லவுந் தோன்றும் பெயல். பதவுரை: கல் ஓங்கு கானம் - மலைகள் உயர்ந்த காடுகள், களிற்றின் மதம் நாறும் - யானையின் மதம் நாறாநிற்கும் ; கார் வானம் - கரிய வானத்தின்கண். பெயல் - மழை. மெல்லவும் தோன்றும் - மென்மையாகத் தோன்றாநிற்கும்;பல் இருங்கூந்தல் - பலவாகிய கரிய கூந்தலையுடையவள், பணிநோனாள் - ஆற்றியிருத்தற்கு நான் கூறிய சொல்லை இனிப் பொறுக்கமாட்டாள்; நெஞ்சே - மனமே, எல்லா வினையும் கிடப்ப - எல்லாத் தொழில்களும் ஒழிந்து நிற்க; எழு - நீ போதற்கு ஒருப்படு, எ-று. கிடப்ப : வியங்கோள்; வினையெச்சமாகக் கொண்டு கிடக்கும் வகை எனப் பொருளுரைத்தலுமாம். களிற்றின் மதம் நாறும் என்றது கார்காலத்தில் பிடியுடன் இயைந்தாடுதலான் என்க. பணி - பணித்த சொல். எல்லியும் என்று பாடமாயின் இரவிலும் எனப் பொருள் கொள்க. எல்லியும் என்றும் பாடம். .செயல் என்றும் பாடம்.
கருங்கால் வரகின் பொரிப்போ லரும்பவிழ்ந் தீர்ந்தண் புறவிற் றெறுழ்வீ மலர்ந்தன சேர்ந்தன செய்குறி வாரா ரவரென்று கூர்ந்த பசலை யவட்கு. பதவுரை: ஈர்ந்தண் புறவில் - குளிர்ச்சி மிக்க காட்டில், கருங்கால் வரகின் பொரிபோல - கரிய தாளினையுடைய வரகினது பொரியைப் போல, தெறுழ்வீ - தெறுழினது மலர்கள், அரும்பு அவிழ்ந்து மலர்ந்தன - அரும்புகள் முறுக்குடைந்து விரிந்தன; செய்குறி சேர்ந்தன -அவர் வாரார் என்று - தலைவர் இனி வரமாட்டாரென்று, அவட்கு - தலைவிக்கு, கூர்ந்த - பசலை மிக்கது, எ-று.  ஈர்ந்தண்: ஒரு பொரு ளிருசொல், தெறுழ்-காட்டகத்ததொரு கொடி கூர்ந்தது என்பதில் ஈறுகெட்டது.
நலமிகு கார்த்திகை நாட்டவ ரிட்ட தலைநாள் விளக்கிற் றகையுடைய வாகிப் புலமெலாம் பூத்தன தோன்றி சில மொழி தூதொடு வந்த மழை. பதவுரை: சிலமொழி - சிலவாகிய மொழியினையுடையாய், தோன்றி - தோன்றிப்பூக்கள், நலம்மிகு கார்த்திகை - நன்மைமிக்க கார்த்திகைத் திருவிழாவில் , நாட்டவர் இட்ட - நாட்டிலுள்ளோர் கொளுத்திவைத்த, தலைநாள் விளக்கின் - முதல் நாள் விளக்கைப் போல், தகை உடையவாகி - அழகுடையனவாகி, புலம் எலாம் - இடமெல்லாம், பூத்தன - மலர்ந்தன; மழை தூதொடு வந்த - மழையும் தூதுடனே வந்தது, எ-று. கார்த்திகை நாளில் நிரை நிரையாக விளக்கிட்டு விழாக் கொண்டாடும் வழக்கம் பண்டைநாள் தொட்டுள்ளது; ‘குறுமுயன் மறுநிறங்கிளர மதிநிறைந், தறுமீன் சேரு மகலிருணடுநாண், மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப், பழவிறன் மூதூர்ப் பலருடன் றுவன்றிய, விழவுட னயர வருகதி லம்ம' அகநானூற்றிலும், ‘கார்த்திகைச் சாற்றிற் கழிவிளக்கு' எனக் களவழிநாற்பதிலும், ‘துளக்கில் கபாலீச்சுரத் தான்றொல் கார்த்தி கைநாள் ............ விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்' எனத்ம தேவாரத்திலும் ‘குன்றிற் கார்த்திகை விளக்கிட்டன்ன' எனச் சிந்தாமணியிலும் இத்திருவிழாக் கூறப்பெற்றுள்ளமை காண்க. தலைநாள் - திருவிழாவின் முதல் நாளாகிய கார்த்திகை; நலமிகு கார்த்திகை என்பதனைக் கார்த்திகைத் திங்கள் எனக் கொண்டு, தலைநாள் என்பதனை அத் திங்களிற் சிறந்த நாளாகிய கார்த்திகை எனக் கொள்ளலும் ஆம்; முன்பு நாட்கள் கார்த்திகை முதலாக எண்ணப்பட்டவாகலின் தலைநாள் என்றார் எனலுமாம். வந்த - ‘கூர்ந்த' என்புழிப்போல் ஈறுகெட்டது. தோன்றிசின் மென்மொழி என்றும் பாடம்.
முருகியம்போல் வான முழங்கி யிரங்கக் குருகிலை பூத்தன கானம் - பிரிவெண்ணி உள்ளா தகன்றாரென் றூடியாம் பாராட்டப் பள்ளியுட் பாயும் பசப்பு. பதவுரை: வானம் - மேகம், முருகியம்போல் - குறிஞ்சிப் பறைபோல், முழங்கி இரங்க - முழங்குதலைச் செய்ய, கானம் - காட்டின்கண், குருகுஇலை பூத்தன - குருக்கத்தியிலை விரிந்தன; பிரிவு எண்ணி -பிரிதலை நன்றென்று நினைத்து, உள்ளாது அகன்றார் என்று - நம் வருத்தத்தைக் கருதாது சென்றார் என்று, ஊடுயாம் பாராட்ட - நாம் ஊடுதலைப் பாராட்டுவதால், பசப்பு - பசலை நோய், பள்ளியுள் பாயும் - படுக்கை யிடத்தில் பரவும், எ-று. முருகுஇயம் - குறிஞ்சிப் பறைவிசேடம்; முருகனுக்கு இயக்கப்படுவது; தொண்டகம், துடி என்பனவும் குறிஞ்சிப் பறைகள் முழங்கி இரங்க; ஒரு பொருளிருசொல். குருகு - குருக்கத்தி; முருக்கென்பாரும் உளர். இலையென்றமையால் பூத்தலாவது தழைத்தல் எனக்கொள்க ஊடு : முதனிலைத் தொழிற்பெயர். இகரம் சந்தியால் வந்தது. பள்ளியுட்பாயும் என்றது படுக்கையிற் கிடக்கச் செய்யும் என்னும் குறிப்பிற்று. .பாராட்டில் என்றும் பாடம்
இமிழிசை வானம் முழங்கக் குமிழின்பூப் பொன்செய் குழையிற் றுணர்தூங்கத் தண்பதஞ் செவ்வி யுடைய சுரநெஞ்சே காதலியூர் கவ்வை யழுங்கச் செலற்கு. பதவுரை: இமிழ் இசை - ஒலிக்கும் இசையினையுடைய, வானம் முகில், முழங்க - முழங்குதலைச் செய்ய. குமிழின் பூ - குமிழின் பூக்கள், பொன் செய் குழையின் - பொன்னாற் செய்யப் பட்ட குழைபோல், துணர் தூங்க - கொத்துக்களாய்த் தொங்க, நெஞ்சே - மனமே, காதலி ஊர் - நம் காதலியது ஊருக்கு, கவ்வை அழுங்க - அலர் கெடும் வகை, செலற்கு - நாம் செல்வதற்கு, சுரம் - காடுகள், தண்பதம் செவ்வி உடைய - குளிர்ந்த பதமும் செவ்வியும் உடையவாயின எ-று. இமிழ் இசை - இனிய இசையுமாம். சுரம் - காடு; அருநெறியுமாம். கவ்வை - அலர்; ஊரார் கூறும் பழமொழி. அழுங்கல் வருந்துதல்; ஈண்டு இலவாதல். குமிழிணைப்பூ என்றும், குமிழிணர்ப்பூ என்றும் பாடம்.
பொங்கரு ஞாங்கர் மலர்ந்தன தங்காத் தகைவண்டு பாண்முரலுங் கானம் - பகைகொண்ட லெவ்வெத் திசைகளும் வந்தன்று சேறுநாஞ் செவ்வி யுடைய சுரம். பதவுரை: பொங்கரும் - சோலைகளெல்லாம், ஞாங்கர் பக்கங்களில், மலர்ந்தன - பூத்தன; கானம் - காட்டின்கண்ணே, தங்கா - தங்குதலின்றித் திரியும், தகை வண்டு - அழகையுடைய வண்டுகள், பாண்முரலும் - இசைப்பாட்டைப் பாடாநின்றன; பகைகொண்டல், பகைத்தெழுந்த மேகம், எவ்வெத்திசைகளும் எல்லாத்திசைக் கண்ணும், வந்தன்று - வந்தது; சுரம் - காடுகளும் செவ்வி உடைய - தட்பமுடையவாயின;நாம் சேறும் - நாம் செல்லக் கடவேம், எ-று. பொங்கர் - இலவுமாம். பகைகொண்டல் : வினைத்தொகை சேறும் என்றது நெஞ்சை உளப்படுத்தித் தேர்ப்பாகற்குக் கூறியதுமாம்.
வரைமல்க வானஞ் சிறப்ப வுறைபோழ்ந் திருநிலந் தீம்பெய றாழ - விரைநற ஊதை யுளரு நறுந்தண்கா பேதை பெருமட நம்மாட் டுரைத்து. பதவுரை: வரைமல்க - மலைகள் வளம் நிறைய, வானம் சிறப்ப வானகம் சிறப்பெய்த, இருநிலம் - பெரிய பூமியை, உறை போழ்ந்து - துளிகளால் ஊடறுத்து, தீம்பெயல் தாழ - இனிய மழை விழாநிற்க, விரை நாற - நறுமணம் கமழாநிற்க, ஊதை காற்றானது, பேதை பெருமடம் - காதலியது பெரிய மடப்பத்தை, நம்மாட்டு உரைத்து - நமக்குத் தெரிவித்து. நறுந்தண் கா - நறிய குளிர்ந்த சோலையில், உளரும் - அசையா நிற்கும்எ-று. உறை - நீர்த்துளி : மூன்றன் தொகை ஊதை - குளிர்காற்று. உளர்தல் - அசைதல்; பேதை பெருமடம் - தலைவர் வாரா ரென்று கருதி வருந்தியிருக்கும் தலைவியது அறியாமை. திரை நாற என்றும் பாடம்.
கார்ச்சே ணிகந்த கரைமருங்கி னீர்ச்சேர்ந் தெருமை யெழிலே றெறிபவர் சூடிச் செருமிகு மள்ளரிற் செம்மர்க்குஞ் செவ்வி திருநுதற் கியாஞ்செய் குறி. பதவுரை: எருமை எழில் ஏறு - எருமையினது எழுச்சியையுடைய ஆண், கார்ச்சேண் இகந்த - மேகத்தையுடைய வானின் எல்லையைக் கடந்து உயர்ந்த, கரை மருங்கின் - கரையின் பக்கத்திலுள்ள, நீர்ச் சேர்ந்து - நீரையடைந்து, ஏறி - எறியப்பட்ட, பவர் - பூங்கொடிகளை, சூடி - சூடிக்கொண்டு, செருமிகு மள்ளரில் - போரின்கண் மறமிக்க வீரரைப்போல, செம்மாக்கும் செவ்வி - இறுமாந்திருக்கும் காலமே, திருநுதற்கு - அழகிய நெற்றியை யுடையாளுக்கு, யாம் செய்குறி - நாம் மீள்வதற்குச் செய்த குறியாகும்;எ-று. சேண் - ஆகாயம்; தூரமும் ஆம் எழில் - அழகுமாம். எறி துணித்த எனினும் பொருந்தும். பவர் - கொடி ‘அரிப்பவர்ப் பிரம்பின்' எனக் குறுந்தொகையும், ‘நெடுங்கொடி யுழிஞைப் பவரொடு மிடைந்து' எனப் புறநானூறும் கூறுதல் காண்க. மள்ளர் - வீரர்; போர்வீரர் வெட்சி, வஞ்சி முதலிய மாலைகளைச் சூடித் தருக்கியிருக்கு மாறு போலக் கடாக்கள் பூங்கொடிகளைச் சூடிக்கொண்டு தருக்கியிருக்கும் என்க. ‘மள்ளரன்ன தடங்கோட்டெருமை, மகளிரன்ன துணையொடு வதியும்'என்றார் பிறரும் குற்றிய லிகரம் அலகு பெறாதாயிற்று.
கடாஅவுக பாகதேர் காரோடக் கண்டே கெடாஅப் புகழ்வேட்கைச் செல்வர் மனம்போற் படாஅ மகிழ்வண்டு பாண்முரலுங் கானம் பிடாஅப் பெருந்தகை நற்கு. பதவுரை: கெடாப் புகழ்வேட்கை - அழியாத புகழை விரும்புகின்ற, செல்வர் மனம்போல் - செல்வரது மனத்தைப் போல, படாமகிழ் வண்டு - கெடுதலில்லாத மகிழ்ச்சியையுடைய வண்டுகள்; கானம் - காட்டின்கண், பிடா - பிடவமாகிய, பெருந்தகை - பெருந்தகை யாளிடத்து, நன்கு - நன்றாக, பாண் முரலும் - இசைப்பாட்டினைப் பாடாநிற்கும்; பாக - பாகனே, கார் ஓடக்கண்டு - மேகம் ஓடுதலைக் கண்டு, தேர் கடாவுக - தேரை விரையச் செலுத்துவாயாக எ-று. இப் பாட்டு நன்கடியிலும் முதற்கண் அளபெடை வந்தன; கடாவுக என்று பாடமோதுவாரு முளர். கார் ஓட என்றமையால் மேகத்தின் விரைந்த செலவு குறிப்பித்தவாறு. ‘கொடுஞ்செலவெழிலி' என்றார் பிறரும். புகழை விரும்பும் செல்வர் மனம் மகிழ்ச்சி நிறைந்திருக்குமென்க. பிடவம் - ஒரு செடி; வள்ளன்மையுடை யாரிடத்துப் பாண்மக்கள் பரிசில் கருதிப் பாடுமாறு போலப் பிடவத்தினிடத்துத் தேன்கொளக் கருதிய வண்டுகள் பாடின வென்றுரைக்கப்பட்டது. பெருந்தகை என்புழி ஏழனுருபு தொக்கு நின்றது நற்கு : வலித்தல் விகாரம்.
கடனீர் முகந்த கமஞ்சூ லெழிலி குடமலை யாகத்துக் கொள்ளப் பிறைக்கும் இடமென வாங்கே குறிசெய்தேம் பேதை மடமொழி யெவ்வங் கெட. பதவுரை: கடல்நீர் முகந்த - கடலினது நீரை முகந்த, கமம் சூல் எழிலி - நிறைந்த சூலினையுடைய மேகம், குடமலை ஆகத்து - மேற்கு மலையிடத்து. கொள் அப்பு இறைக்கும் - தான் கொண்ட, நீரினைச் சொரியும், இடம் என - சமயமென்று, ஆங்கே அப்பொழுதே, பேதை - பேதையாகிய, மடமொழி மடப்பத்தினையுடைய மொழியை யுடையாளது, எவ்வம் கெட - வருத்தம் நீங்க, குறி செய்தேம் -எ-று. சூல் போறலின் நீர் சூலெனப்பட்டது; ‘கார்கோண் முகந்த கமஞ்சூன் மாமழை' என்பது திருமுருகாற்றுப்படை ஆகம் - அகம் என்பதன் நீட்டல்; மார்பு எனினும் ஆம். கொள்ளப் பிறக்கும் என்பது பாடமாயின் தாரை கொள்ளத்தோன்றும் எனப் பொருளுரைக்கப்படும்; பிறவாறுரைத்தல் பொருந்துமேற் கொள்க. இடம், ஆங்கு என்பன காலத்தை உணர்த்தின. .கொள்ளப் பிறக்கும் என்றும் பாடம்.
விரிதிரை வெள்ளம் வெறுப்பப் பருகிப் பெருவிறல் வானம் பெருவரை சேருங் கருவணி காலங் குறித்தார் திருவணிந்த ஒண்ணுதல் மாதர் திறத்து. பதவுரை: பெருவிறல் வானம் - மிக்க பெருமையையுடைய மேகம், விரிதிரை வெள்ளம் - விரித்த அலையையுடைய கடலினது நீரை, வெறுப்பப் பருகி - நிறைய உண்டு, பெருவரை சேரும் - பெரிய மலையை அடையாநிற்கும், கரு அணி காலம் - கருங்கொள்ளுங் காலத்தை, திரு அணி - தெய்வ வுத்தியென்னும் தலைக்கோலத்தை யணிந்த, ஒள்நுதல் - ஒள்ளிய நெற்றியை யுடைய, மாதர் திறத்து காதலியிடத்து, குறித்தார் -குறிப்பிட்டார் எ-று. வெறுத்தல் - செறித்தல், நிறைதல்; உரிச்சொல், கெடுப்பதும் எடுப்பதும் ஆகிய எல்லாம் வல்லது மழையாகலின் ‘பெருவிறல் வானம்' என்றார். கரு அணிகாலம் - மழை சூற்கொள்ளும் கார்காலம். திரு - சீதேவி என்னுந் தலையணி; இது தெய்வ வுத்தியென்றுங் கூறப்படும்; ‘தெய்வ வுத்தியொடு வலம்புரி வயின் வைத்து' என்பது திருமுருகாற்றுப்படை.
சென்றநங் காதலர் சேணிகந்தா ரென்றெண்ணி ஒன்றிய நோயோ டிடும்பை பலகூர வென்றி முரசி னிரங்கி யெழில்வானம் நின்று மிரங்கு மிவட்கு. பதவுரை: சென்ற நம் காதலர் - வினைவயிற் பிரிந்து சென்ற நம் தலைவர், சேண் இகந்தார் என்று எண்ணி - நெடுந்தூரத்தைக் கடந்து சென்றாரென்று நினைத்து, ஒன்றிய நோயோடு - பொருந்திய பசப்பு நோயுடனே, இடும்பை பல கூர - பல துன்பங்களும் மிகப் பெறுதலால், இவட்கு - இவள் பொருட்டு, எழில்வானம் - எழுச் சியையுடைய முகில், வென்றி முரசின் இரங்கி - வெற்றியை யறிவிக்கும் முரசின் ஒலியைப் போல இடித்து, நின்றும் - வானின்கண் இருந்தும், இரங்கும் - பரிவுறாநிற்கும் எ-று. முரசின் என்பதில் இன் உவமவுருபு நின்றும் என்பதற்குச் சலியாது நின்று என்று பொருள் கூறுவாருமுளர். வானின்கண் உள்ள மேகமும் இரங்கு மியல்பினாள் திறத்துத் தலைவர் இரங்கி வாராதது என்னை யென்றபடி. சென்று என்றும் பாடம்.
சிரல்வாய் வனப்பின வாகி நிரலொப்ப ஈர்ந்தண் தளவந் தகைந்தன - சீர்த்தக்க செல்வ மழைமதர்க்கட் சின்மொழிப் பேதையூர் நல்விருந் தாக நமக்கு. பதவுரை: ஈர் தண் - குளிர்ச்சி மிக்க, தளவம் - செம்முல்லைப் பூக்கள், சிரல் சிச்சிலிக் குருவியின், வாய் - வாய்போலும், வனப்பின ஆகி - அழகுடையனவாகி, நிரல் ஒப்ப - வரிசை பொருந்த, தகைந்தன - அரும்பின;சீர்த்தக்க - சிறந்த, செல்வம் - செல்வத்தையுடைய, மழை மதர்க்கண் - மழைபோற் குளிர்ந்த மதர்த்த கண்களையும், சில் மொழி - சிலவாகிய மொழியினையு முடைய, பேதை - காதலியது, ஊர் - ஊரானது, நமக்கு நல்விருந்து ஆக - நமக்கு நல்ல விருந்தயரும் இடமாக்கடவது எ-று. சிரல் - மீன்குத்திக் குருவி. தளவம் - செம்முல்லை; இதன் அரும்பு சிரலின் வாய்போலும் என்பதனை, ‘பனிவளர் தளவின் சிரல்வாய்ச் செம்முகை' என்னும் ஐங்குறுநூற்றானும் அறிக. ஈர்ந்தண்; ஒருபொரு ளிருசொல். சீர்த்தக்க : ஒரு சொன்னீர்மைத்து. செல்வத்தையுடைய பேதை என்க; செல்வமழை எனினும் ஆம். விருந்து : ஆகுபெயர். தலைவன் வினைமுற்றி மீண்டபின் காதலியுடன் விருந்தயரும் வழக்கமுண்டென்பதனை ‘வினை கலந்து வென்றீக வேந்தன் மனை கலந்து, மாலை யயர்கம் விருந்து' என்னும் முப்பாலானும் அறிக.
கருங்கடல் மேய்ந்த கமஞ்சூ லெழிலி இருங்க லிறுவரை யேறி யுயிர்க்கும் பெரும்பதக் காலையும் வாரார்கொல் வேந்தன் அருந்தொழில் வாய்த்த நமர். பதவுரை: கருங்கடல் மேய்ந்த - கரிய கடலின் நீரைக் குடித்த, கமம்சூல் - நிறைந்த சூலினையுடைய, எழிலி - மேகம், இரு பெரிய, கல் - கற்களையுடைய, இறுவரை - பக்க மலையிமேல், ஏறி உயிர்க்கும் - ஏறியிருந்து நீரைச் சொரியும், பெரும்பதக்காலையும் - மிக்க செவ்வியையுடைய காலத்தும், வேந்தன் அரசனது, அருந்தொழில் - போர்த்தொழில், வாய்த்த வாய்க்கப்பெற்ற, நமர் - நம் தலைவர், வாரார்கொல் வாராதிருப்பாரோ எ-று. கடல் : ஆகுபெயர். சூல் என்றதற்கேற்ப உயிர்க்கும் என்றார். உயிர்த்தல் - நீரைக் காலுதல்; ஒலித்தல் எனினும் ஆம். வாய்த்த என்றதனால் தப்பாது வென்றிருப்பரென்பது குறிப்பித்தவாறாம். போர்த்தொழிலும் முற்றுப்பெற்றுக் காலமும் செவ்வியை உடைத்தாயவழித் தலைவர் வாராதிரார் என்று கூறித்தோழி தலைவியை ஆற்றுவித்தாளென்க.
புகர்முகம் பூழிப்புரள வுயர்நிலைய வெஞ்சின் வேழம் பிடி யோ டிசைந்தாடுந் தண்பதக் காலையும் வாரா ரெவன்கொலோ ஒன்டொடி யூடு நிலை. பதவுரை: உயர்நிலைய - உயர்ந்த நிலையினையுடைய, வெம்சினம் வேழம் - கடி கோபத்தினையுடைய ஆண் யானைகள், புகர்முகம் - புள்ளியினையுடைய முகம், பூழி புரள - புழுதியிற் புரளும் வகை, பிடியோடு - பெண் யானைகளுடன், இயைந்து ஆடும் - கூடி விளையாடும், தண் பதக் காலையும் - குளிர்ந்த - செவ்வியையுடைய காலத்தும், வாரார் - நம் தலைவர் வாராராயினார்;, ஒள்தொடி - ஒள்ளிய தொடியினையுடையாளே, ஊடு நிலை - அவருக்காக நீ பிணங்குந் தன்மை, எவன்கொல் - என்னை, எ-று. வேழம் பிடியோடியைந்தாடும் என்றது தலைவர் வருதற்கு ஏதுக் கூறியவாறு. குறித்த பருவம் வந்தும் வாராமையாற் பொய்ம்மையும், வேழம் பிடியோடியைந் தாடுதல் கண்டும் வாராமையால் அன்பின்மையும் உடையராயினார்பால் ஊடுதலாற் பயனென்னை என்று தோழி கூறினாளென்க. வாரார்கொல்லோ என இயைத்து வருவர் என்று கூறி ஆற்றுவித்தாள் எனப் பொருள் கொள்ளலும் ஆம். .பூமி புரள என்றும் .உயர்நிலை என்றும்  .இணைதாழ என்றும் பாடம்.
அலவன்க ணேய்ப்ப வரும்பீன் றவிழ்ந்த கருங்குர னொச்சிப் பசுந்தழை சூடி இரும்புன மேர்க்கடி கொண்டார் பெருங்கௌவை ஆகின்று நம்மூ ரவர்க்கு. பதவுரை: அலவன்கண் ஏய்ப்ப - ஞெண்டினது கண்ணினை யொப்ப, அரும்பு ஈன்று - அரும்பினை யீன்று, அவிழ்ந்த - பின் மலர்ந்த, கருங்குரல் - கரிய பூங்கொத்தினையுடைய, நொச்சி நொச்சியினது, பசுந்தழை சூடி - பசிய தழையைச் சூடிக்கொண்டு, இரும்புனம் - பெரிய புனங்களை, ஏர்க்கடி கொண்டார் - உழவர் புதிதாக ஏருவிழுக்கத் தொடங்கினார்கள்;, நாம் ஊர் நம் ஊரின் கண், அவர்க்கு - நம் தலைவர்க்கு, பெருங்கௌவை ஆகின்று - பெரிய அலராயிற்று, எ-று. நொச்சியின் அரும்பு ஞெண்டின் கண்ணுக்கு உவமையாதலை ‘நொச்சி மாவரும் பன்ன கண்ண, எக்கர் ஞெண்டி னிருங்கிளைத் தொகுதி' என்னும் நற்றிணையானும் அறிக. ஏர்க்கடி கொள்ளுதல் - புதிதாய் ஏருழத் தொடங்குதல்; இதனை ‘நல்லேர்' என்றும், ‘பொன்னேர்' என்றும் வழங்குவர். ஆகின்று : உடம்பாட்டு முற்று. .கருங்கதிர் என்றும் பாடம்.
வந்ததன செய்குறி வாரா ரவரென்று நொந்த வொருத்திக்கு நோய்தீர் மருந்தாகி இந்தின் கருவண்ணங் கொண்டன் றெழில்வானம் நந்துமென் பேதை நுதல். பதவுரை: மென் பேதை - மெல்லிய பேதையே, செய் குறி - தலைவர் செய்த குறிகள், வந்தன - வந்துவிட்டன; அவர் வாரார் என்று - தலைவர் வருகின்றிலர் என்று, நொந்த ஒருத்திக்கு நோதலுற்ற ஒருத்தியாகிய நினக்கு, நோய்தீர் மருந்து ஆகி - நோயைத் தீர்க்கும் மருந்தாகி, எழில்வானம் - அழகிய முகில், இந்தின்கருவண்ணம் - ஈந்தின் கனியினிறம்போலும் கருநிறத்தை, கொண்டன்று - கொண்டது; நுதல் நந்தும் - நினது நுதல் இனி ஒளிவரப்பெறும், எ-று. இச்செய்யுளைத் தலைவர் மீண்டனரென்று தோழி மகிழ்ந்து தன் நெஞ்சிற்குக் கூறியதாகக் கொண்டு, என் பேதை எனப்பிரித்துப் படர்க்கையாக உரைப்பாரும் உளர். ஈந்து இந்தெனக் குறுகியது; ‘முந்நீரை யிந்துருவின் மாந்தி யிருங்கொண்மூ' என்பது திணைமாலை நூற்றைம்பது. ஈந்து - ஈச்சமரம். முற்றிற்று களிவண்ணம் என்றும், கொண்டது என்றும் பாடம்.
பொய்கையார் இயற்றிய களவழி நாற்பது நாண்ஞாயி றுற்ற செருவிற்கு வீழ்ந்தவர் வாண்மாய் குருதி களிறுழக்கத்-தாண்மாய்ந்து முன்பக லெல்லாங் குழம்பாகிப்2பின்பகல் துப்புத் துகளிற் கெழூஉம் புனனாடன் தப்பியா ரட்ட களத்து.பரந்து செறியாநிற்கும் எ-று. நாள் என்பது பகலின் முற்கூறாகிய காலைப்பொழுதைக் குறிக்கும். இதனை, நாணிழல், நாளாங்காடி என்பவற்றால் அறிக; குருதிமாய்ந்து குழம்பாகிக் கெழூஉம் என முடிக்க. செருவிற்கு; வேற்றுமை மயக்கம். வாண்மாய்-மறைதல் என்னும் பொருட்டாய் மாய்தல் என்பதன் முதனிலை அழுந்தும் என்னும் பொருளில் வந்தது. கெழூஉம் : செய்யுளிசை கெட்டவழி வந்த அளபெடை, தப்பியார்: வினையாலணையும் பெயர், தப்பு: பகுதி, இன் இடை நிலை ஈறுகெட்டது. ‘முற்கபல்' என்றும் பாடம். ‘பிற்பகல்' என்றும் பாடம்.
ஞாட்பினு ளெஞ்சிய ஞாலஞ்சேர் யானைக்கீழ் போர்ப்பி லிடிமுரசி னூடுபோ மொண்குருதி கார்ப்பெயல் பெய்தபிற் செங்குளக் கோட்டுக்கீழ் நீர்த்தூம்பு நீருமிழ்வ போன்ற புனனாடன் ஆர்த்தம ரட்ட களத்து. பதவுரை: புனல் நாடான் - நீர் நாட்டையுடைய செங்கட்சோழன், ஆர்த்து - குணலையிட்டு, அமர் - போரில், அட்ட - கொன்ற, களத்து - போர்க்களத்தில், ஞாட்பின்உள் - படையின் கண், எஞ்சிய - ஒழிந்த, ஞாலஞ்சேர் - நிலத்திற்சேர்ந்த, யானை கீழ் - யானைகளின் கீழ், போர்ப்புஇல்- மேற்போர்வை யில்லாத, இடி - இடிபோன்றொலிக்கும், முரசின் ஊடுபோம்- முரசத்தினூடு செல்லும், ஒள்குருதி - ஒள்ளிய உதிரம், கார் பெயல் பெய்தபின் - கார்காலத்து மழைபெய்த பின்பு, செங்குளம் - செங்குளத்தினது, கோடு கீழ் - கரையின் கீழுள்ள, நீர் தூம்பு - மதகுகள், நீர் உமிழ்வ - நீருமிழ்தலை போன்ற - ஒத்தன எ - று. செங்குளம் - செம்மண்ணாற் சிவந்த நீரையுடைய குளம் பொருளின்கண் உள்ள குருதி யென்னும் பெயருக்கேற்ப உவமைக் கண் உமிழ்தலையுடைய நீர் என மாற்றுக. கார்:பருவத்திற்கு இருமடி யாகுபெயர். போன்ற:போல் என்னும் இடைச்சொல்லடியாகப் பிறந்த வினைமுற்று.
ஒழுங்குங் குருதி யுழக்கித் தளர்வார் இழுக்குங் களிற்றுக்கோ டூன்றி யெழுவர் மழைக்குரன் மாமுரசின் மல்குநீர் நாடன் பிழைத்தாரை யட்ட களத்து. பதவுரை: மழை குரல் - மேகத்தின் முழக்கம்போலும் முழக்கத்தையுடைய, மா முரசின்- பெரிய முரசினையுடைய; மல்கு நீர் நாடான் - நிறைந்த நீரினையுடைய நாட்டினையுடையனாகிய செங்கட் சோழன், பிழைத்தாரை - தப்பியவரை, அட்ட கொன்ற, களத்து - போர்க்களத்தில், ஒழுக்கும் குருதி புக்காரை ஒழுகச் செய்யுங் குருதியை உழக்கி - கலக்கி, தளர்வார் -தளர்ச்சி யுறுவார். இழுக்கும் - மறிந்துகிடக்கின்ற, களிற்றுக்கோடு - யானையின் கொம்புகளை, ஊன்றி எழுவர் - ஊன்றுகோலாகக் கொண்டு எழாநிற்பர் எ-று. ஒழுக்கும் - ஒழுகும் என்பதன் பிறவினை; ஒழுகல் - கால் தளர்ந்து செல்லுதல்; இதனை, ‘பரங்குன்றினிற் பாய்புனல் யாமொழுக' என்னும் கோவையாரால் உணர்க. இழுக்குதல் - தவறுதல்; ஆவது வெட்டுண்டு கிடத்தல். முரசினையுடைய நாடன் என்றும், தளர்வார் ஊன்றி யெழுவர் என்றுங் கூட்டுக. 'எழூஉம்' என்றும் பாடம்.
உருவக் கடுந்தேர் முருக்கிமற் றத்தேர்ப் பரிதி சுமந்தெழுந்த யானை - யிருவிசும்பிற் செல்சுடர் சேர்ந்த மலைபோன்ற செங்கண்மால் புல்லாரை யட்ட களத்து. பதவுரை: செங்கண்மால் - செங்கட்சோழன், புல்லாரை பகைவரை; அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், உருவக் கடுந்தேர் - அஞ்சத்தக்க கடிய தேரை, முருக்கி - சிதைத்து, அ தேர் பரிதி - அந்தத் தேருருளினை, சுமந்து எழுந்த யானை - சுமந்தெழுந்த யானைகள், இருவிசும்பு இல் - பெரிய வானத்தில், செல் சுடர் - செல்லுகின்ற ஞாயிறு; சேர்ந்த மலைபோன்ற - அடைந்த மலையையொத்தன எ-று. உரு என்னும் உரிச்சொல் ஈறுதிரிந்தது. இஃது அச்சம் என்னும் பொருட்டாதலை ‘உரு வுட்காகும்' என்பதனால் அறிக. மற்று:அசைநிலை, பரிதி-இது பருதியெனவும் வழங்கும். பருதி-வட்டம்; தேருருளை, வட்டமுடைமையின் பருதியெனப்பட்டது; ‘சுரம்பல கடவும் சுரைவாய்ப் பருதி' என்னும் பதிற்றுப்பத்தும் அதன் உரையும் நோக்குக. சுடர்: ஆகுபெயர், போன்ற; அன் பெறாத அகரவீற்றுப் பலவறிசொல். திருமாலின் வழியில் வந்ததமையால் சோழனுக்கு ‘மால்' என்பது ஒரு பெயர்; பெரும்பாணாற்றில் ‘முந்நீர்வண்ணன் புறங்கடை' என வருவது காண்க.
தெரிகணை யெஃகந் திறந்தவர் யெல்லாம் குருதி படிந்துண்ட காகம் - உருவிழந்து குக்கிற் புறத்த சிரல்வாய செங்கண்மால் தப்பியா ரட்ட களத்து. பதவுரை: செங்கண்மால் - செங்கட்சோழன், தப்பியார் - பிழைத்தாரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், தெரிகணை - ஆராய்ந்த அம்புகளாலும், எஃகம் - வேல்களாலும், திறந்த - திறக்கப்பட்ட, எல்லாவாய்நிறத்தை இழந்து, குக்கில் புறத்த - செம்போத்தின் புறத்தையுடையவாகிய, சிரல்வாய் - சிச்சிலிக் குருவி போன்ற வாயையுடையவாயின எ-று. வாயெல்லாம் என்பதனை எல்லாவாயும் என மாற்றுக. உண்ட என்பது பொதுவினையாதலை ‘உண்ணு நீ ரூட்டிவா' என்னும் குறிஞ்சிக்கலியானும் அறிக. குக்கில் - செம்போத்தாதலை ‘குக்கில் செம்போத்துச் சகோரமு மதற்கே' என்னும் பிங்கலந்தையான் அறிக சிரல் - சிச்சிலி, மீன்கொத்துக் குருவி; ‘புலவுக் கயலெடுத்த பொன்வாய் மணிச்சிரல்' என்பது சிறுபாண்.
நானாற் றிசையும் பிணம்பிறங்க யானை யடுக்குபு வேற்றிக் கிடந்த- இடித்துரறி யங்கண் விசும்பி னுருமெறிந் தெங்கும் பெருமலை தூறெறிந் தற்றே யருமணிப் பூணேந் தெழின்மார் பியறிண்டேர்ச் செம்பியன் தெவ் வேந்தரை யட்ட களத்து. பதவுரை: அரு மணி-, எறிந்தால் அற்று - எறிந்தாற்போலும் எ-று. நானால்: பன்மை குறித்தது; எட்டு எனினும் அமையும் அடுக்குபு வேற்றி: உயிர்வர உகரம் கெடாது நின்றது; ‘அடித்தடித்து வக்கரம்' என்புழிப்போல. இயல்திண்டேர் என்புழி இயல் இப் பொருட்டாதலை ‘இயறேர்க்குட்டுவன்' என்னும் சிறுபாண் உரையாலறிக. 'தூவெறிந்து' என்றும் பாடம்.
அஞ்சனக் குன்றோய்க்கும் யானை யமருழக்கி இங்கு லிகக்குன்றே போற்றோன்றுஞ் - செங்கண் வரிவாரான் மீன்பிறழுங் காவிரி நாடன் பொருநரை யட்ட களத்து. பதவுரை: செம் கண் - சிவந்த கண்களையும், வரி - வரிகளையுமுடைய, வரால்மீன் பிறழும் - வரால்மீன்கள் பிறழா நிற்கும், காவிரிநாடான் - காவிரிநாட்டையுடைய செங்கட் சோழன், பொருநரை -போர் செய்வாரை, அட்டகளத்து - கொன்ற போர்க்களத்தில், அஞ்சனம் குன்று - நீலமலையை, ஏய்க்கும் - ஒத்துத் தோன்றும், யானை - யானைகள், அமர் உழக்கி - போரின்கட் கலக்கி, இங்குலிகக்குன்று போல் சாதிலிங்க மலையைப் போல, தோன்றும் - சிவந்து தோன்றாநிற்கும் எ-று. ஏய்க்கும் - உவமச்செல். மீன் - இத் தமிழ்ச் சொல்லை வடநூலார் மீனம் எனத் திரித்து வழங்குவர்.
யானைமேல் யானை நெரிதர வானாது கண்ணேர் கடுங்காணை மெய்ம்மாய்ப்ப- எவ்வாயும் எண்ணருங் குன்றிற் குரீஇயினம் போன்றவே பண்ணா ரிடிமுரசிற் பாய்புன னீர்நாடன் நண்ணாரை யட்ட களத்து. பதவுரை: பண்ஆர்-ஒப்பனையமைந்த, இடிமுரசு இன்-இடிக்கு முரசினையுடைய, பாய் புனல் - பாய்ந்துசெல்லும் நீரினையுடைய, நீர்நாடான் - காவிரிநாட்டை யுடையோன், நண்ணாரை பகைவரை, அட்டகளத்து -கொன்ற போர்க்களத்தில், யானைமேல் யானை நெரிதர - யானைகள் மேல் யானைகள் சாய, ஆனாது - நீங்காமல், கண்நேர், எண் அரு -அளவில்லாத, குன்றில் - மலைகளில், குரீ இ இனம் - குருவியின் கூட்டங்கள் மொய்த்திருப்பவற்றை, போன்ற - ஒத்தன எ-று. மாய்ப்ப - மறைக்க; இஃது இப் பொருட்டாதலை ‘களிறு மாய்க்குங் கதிர்க் கழனி' என்னும் மதுரைக் காஞ்சியடி உரையானறிக. குரீஇ: இயற்கை யளபெடை, முரசின் யொக்கும் பாய்புனல் என உவமையாக்கலும் ஒன்று.  'மெய்ம்மறைப்ப' என்றும் பாடம்.
மேலோரைக் கீழோர் குறுதிக் குறைத்திட்ட காலார்சோ டற்ற கழற்கா லிருங்கடல் ஊணில் சுறபிறழ்வபோன்ற புனனாடன் நேராரை யட்ட களத்து. பதவுரை: புனல் நாடன்- நீர்நாட்டையுடைய செங்கட்சோழன், நேராரை - பகைவரை, அட்டகளத்து - கொன்ற போர்க்களத்தில், மேலோரை -மேலிருந்தவரை, கீழோர் - கீழ் நின்ற காலாட்கள், குறுகி சென்ற சார்ந்து, குறைத்திட்ட - துணித்த, கால் ஆர் சோடு காற்கிட்ட அரணத்தோடு, அற்ற - அறுபட்ட, கழல், கால் - வீரக்கழலணிந்த கால்கள், இருங்கடல் - பெரிய கடலுள், ஊண் இல் - இரையில்லாத, சுறபிறழ்வ போன்ற - சுறாமீன்கள் பிறழ்வனவற்றை யொத்தன எ-று. சோடு - சுவடு என்பதன் மரூஉ: அரணம் என்பது பொருள். அரணம்-செருப்பு. சுற-இது ‘குறியதனிறுதிச் சினைகெட' என்னுஞ்சூத்திரத்து இலேசானே ஆகாரங் குறுகி உகரம் பெறாது நின்றது. நீலச்சுறா என்னும் பாடத்திற்குக் கரிய சுறாமீன்கள் என்று பொருள் கொள்க. 'இருங்கடலுணீலச்சுறாப்பிறழ்வ' என்றும் பாடம்.
பல்கணை யெவ்வாயும் பாய்தலிற் செல்கலா தொல்கி யுயங்குங் களிறெல்லாந் - தொல்சிறப்பிற் செவ்வலங் குன்றம்போற் றோன்றும் புனனாடன் தெவ்வரை யட்ட களத்து. பதவுரை: புனல் நாடான் - நீர் நாட்டையுடைய செங்கட் சோழன், தெவ்வரை-பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், பல் கணை - பல அம்புகளும், எ வாய் உம் எவ்வுறுப்பிலும், பாய்தல்இன்-பாங்தலால், செல்கலாகாது - செல்ல மாட்டாது, ஒல்கி - தளர்ந்து, உயங்கும் - வருந்தும், களிறு எல்லாம் - யானைகளெல்லாம், தொல் சிறப்புஇன் தொன்றுதொட்டு வருஞ்சிறப்பினையுடைய, செவ்வல் குன்றம்போல் - தாதுமலைபோல, தோன்றும் - தோன்றா நிற்கும் எ - று. செல்கலாது: வினையெச்சம்: குவ்வும் அல்லும் சாரியைகள், செவ்வல்: பண்புப்பெயர். அம்:சாரியை. தாதுமலை-சிந்தூர மலை, ‘இங்குலிகக் குன்றேபோற் றோன்றும்' என முன் வந்தமையும் காண்க.
கழுமிய ஞாட்பினுண் மைந்திகந்தா ரிட்ட ஒழிமுரச மொண்குருதி யாடித் - தொழின்மடிந்து கண்காணா யானை யுதைப்ப விழுமென மங்குன் மழையி னதிரு மதிராப்போர்ச் செங்கண்மா லட்ட களத்து. பதவுரை: அதிரா போர்- கலங்குதலில்லாத போரையுடைய, செங்கண்மால்- செங்கட்சோழன், அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், கழுமிய - நெருங்கிய, ஞாட்பின் உள் - போரில், மைந்து இகந்தார் - வலியிழந்தவர்கள், இட்ட - போகவிட்ட, ஒழீ முரசம் - ஒழிந்த முரசம், ஒள் குருதி - ஒள்ளிய உதிரத்தில், ஆடி படிந்து, தொழில் மடிந்து -கட்புலனிழந்த, யானை உதைப்ப - யானைகளுதைத்தலால், மங்குல் மழையின் - மேகம்போல, இழும் என அதிரும் - இழுமென முழங்காநிற்கும் எ-று. முரசம் ஆடிமடிந்து முழங்கும் என வினைமுடிவு செய்க. மங்குல் மழை-‘ஒருபொருளிரு சொற்பிரிவில வரையார்' என்பதனால் ஒரு பொருண்மேல் வந்தன. அதிரா-கலங்காத, நடுங்காத, ‘அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கஞ் செய்யும்' என்பது காண்க. 'மைந்திழந்தாரிட்ட' என்றும் பாடம்.
ஓவாக் கணைபாய வொல்கி யெழில்வேழந் தீவாய்க் குருதி யிழிதலாற் செந்தலைப் பூவலங் குன்றம் புயற்கேற்ற போன்றவெ காவிரி நாடன் கடாஅய்க் கடிதாகக் கூடாரை யட்ட களத்து. பதவுரை: காவிரி நாடான் - காவிரி நாட்டையுடைய செங்கட் சோழன், கடாஅய் - படையைச் செலுத்தி, கடிதுஆக - விரைந்து, கூடாரை- பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், ஓவா - இடைவிடாது, கணைபாய, அம்புகள் தைக்க, எழில் வேழம் - எழுச்சியையுடைய யானைகள், ஒல்கி தளர்ந்து, தீவாய்- தீயின் நிறம் பொருந்திய, குருதி இழிதலால் உதிரத்தை யொழுக்குதலால், செம்தலை-சிவந்த இடத்தையுடைய, பூவல் குன்றம்-செம்மண் மலைகள், புயற்கு ஏற்ற போன்ற-மழைக்கு எதிர்ந்தன ஒத்தன எ-று. செம்மண்மலையீற் பெய்த மழை செந்நீராயொழுகுமாதலின், உடல்முழுதும் குருதியை யொழுகவிடும் யானைகள் அம் மலைகளை யொக்கும் என்றார். தீவாய் என்பதனைக் கணையோடு இயைப்பினும் அமையும். இழிதல் பிறவினையாயிற்று. பூவல் செம்மண்; "பூவலூட்டிய புனை மாண்பந்தர்க் - காவற்சிற்றிற் கடிமனைப் படுத்து" எனவருவது காண்க. அம்-சாரியை.
நிரைகதிர் நீளெஃக நீட்டி வயவர் வரைபுரை யானைக்கை நூற - வரைமேல் உருமெறி பாம்பிற் புறளுஞ் செருமொய்ம்பிற் சேஎய்பொரு தட்ட களத்து. பதவுரை: செரு மொய்ம்புஇன் - போர் வலியையுடைய, சேஎய் செங்கட்சோழன், பொருது அட்ட - போர்செய்து கொன்ற, களத்து - போர்க்களத்தில், நிரை கதிர் - நிரைத்த வொளியினையுடைய, நீள் எஃகம் - நீண்ட வாளை, நீட்டி-பின்னே வாங்கி, வயவர்-வீரர்கள், வரைபுரை-மலையையொத்த, யானைகை-யானைகளின் கைகளை, நூற-துணிக்க, வரைமேல்-மலையின்மேல், உரும் எறி-இடிவிழுந்த, பாம்புஇன்-பாம்பைப் போல, புரளும்-புரளாநிற்கும் எ-று. பாம்பு உருமெறியப்பட்டு மலைமேனின்றும் விழுந்து புரளுமாறுபோலக் கையும் வாளெறியப்பட்டு யானையினின்றும் விழுந்து புரளாநிற்கும் என்க. எஃகம் வாளினையும், நீட்டல் பின் வாங்கலையும் குறித்து நின்றன. எறி என்னும் பெயரெச்ச முன்னிலைபாம் பென்னும் செயப்படுபொருட் பெயர் கொண்டது
கவளங்கொள் யானையின் கைதுணிக்கப்பட்டுப் பவளஞ் சொரிதரு பைபோற் றிவளொளிய வொண்செங் குருதி யுமிழும் புனனாடன் கொங்கரை யட்ட களத்து. பதவுரை: புனல் நாடன் - நீர் நாட்டையுடைய செங்கட் சோழன், கொங்கரை - கொங்குநாட்டவரை, அட்டகளத்து - கொன்ற போர்க்களத்தில், கவளம் கொள் - கவளத்தைக் கொள்ளும், யானை கை - யானைகள்துதிக்கைகள், துணிக்கப்பட்டு - துண்டு படுத்தப்பட்டு, பவளம் சொரிதரு பவளத்தைச் சொரியா நின்ற, பைபோல் - பையைப்போல, திவள் ஒளிய - விளங்கும் ஒளியையுடைய, ஒள் - ஒள்ளிய, செம்குருதி - சிவந்த உதிரத்தை, உமிழும் - உமிழா நிற்கும் எ-று. கவளம் - யானையுணவு: ‘கல்லாவிளைஞர் கவளங்கைப்ப' ‘வாங்குங் கவளத்து' என்பன காண்க. இன்:சரியை 'கைகடுணிக்க' என்றும், 'திகழொளிய' என்றும் பாடம்.
கொல்யானை பாயக் குடைமுருக்கி யெவ்வாயும் புக்கவா யெல்லாம் பிணம் பிறங்கத்-தச்சன் பினைபடு பள்ளியிற் றோன்றுமே செங்கட் சினமால் பொருத களத்து. பதவுரை: சினம் - கோபத்தையுடை, செங்கண்மால் - செங்கட்சோழன், பொருத களத்து - போர்செய்த களத்தில், எவாய் உம்-எவ்விடத்தும், குடை முருக்கி - குடைகளையழித்து, கொல் யானை - கொல்லும் யானைகள், பாய - பாய்தலால், புக்க வாய் எல்லாம் - அவ் யானைகள் புகுந்த இடமெல்லாம், பிணம் பிறங்க பிணங்கள் விளங்க, தச்சன் - தச்சனால், வினைபடு - வினை செய்யப்படும், பள்ளியில் - இடங்கள்போல, தோன்றும் தோன்றா நிற்கும் எ-று. பள்ளி இடமென்னும் பொருளாதலைத் தொல்காப்பியத்தே ‘சொல்லிய பள்ளி' என வருதலானறிக. தச்சன்-மரவினைஞன்:‘மரங்கொல் தச்சச்சிறார்' என்பன காண்க.
பரும வினமாகக் கடவித் தெரிமறவர் ஊக்கி யெடுத்த வரவத்தி னார்ப்பஞ்சாக் குஞ்சரக் கும்பத்துப் பாய்வன குன்றிவரும் வேங்கை யிரும்புலி போன்ற புனனாடன் வேந்தரை யட்ட களத்து பதவுரை: புனல் நாடன் - நீர் நாட்டையுடைய செங்கட் சோழன், வேந்தரை - பகை மன்னரை, அட்ட களத்து - கொன்ற போர்க் களத்தில், பருமம் - கல்லணையையுடைய, இனம் மா - திரண்ட குதிரைகள், தெரி மறவர் - விளங்கிய வீரத்தினையுடையரால், கடவி நடத்தப்பட்டு, ஊக்கி - மனவெழுச்சிமிக்கு, எடுத்த எழுப்பப் பட்ட, அரவத்தின் ஆர்ப்பு- மிக்க ஆரவாரத்தை, அஞ்சா-அஞ்சாத, குஞ்சரம் - யானைகளின், கும்பத்து - மத்தகத்தில், பாய்வன - பாய்கின்றவை, குன்று - மலையின்கண், இவரும் பாய்கின்ற, இரு-பெரிய, வேங்கை புலி-வேங்கையாகிய புலியை, போன்ற ஒத்தன எ-று. பருமம், பண், கல்லணை என்பன ஒரு பொருட் சொற்கள், கடவி செயப்பாட்டு வினையெச்சம். மறவர் கடவி என மாற்றுக. கடவப்பட்டு ஊக்கிப் பாய்வன என்க; யானைக்கு அடையாக்கி அஞ்சா என்பதனோடு முடிப்பினும் அமையும்.
ஆர்ப்பெழுந்த ஞாட்பினு ளாளா ளெதிர்த்தோடித் தாக்கி யெறிதர வீழ்தரு மொண்குருதி கார்த்திகைச் சாற்றிற் கழிவிளக்கைப்போன்றனவே போர்க்கொடித் தானைப் பொருபுன னீர்நாடன் ஆர்த்தம ரட்ட களத்து. பதவுரை: போர் - போர்க்குரிய, கொடி-கொடியினையுடைய, தானை - படையினை உடையவனான, பொரு- மோதுகின்ற, புனல்-நீரினையுடைய, நீர் நாடன் - காவிரி நாட்டையுடைய செங்கட் சோழன், ஆர்த்து - ஆரவாரித்து, அமர்-போரில், அட்ட -வீசுதலால், வீழ்தரும் - சொரியா நின்ற, ஒள் குருதி - ஒள்ளிய உதிரம், கார்த்திகை சாறு இல் - கார்த்திகை விழாவில், கழிவிளக்கை - மிக்க விளக்கினை, போன்றன - ஒத்தன எ-று. சாறு-விழா; இதனைச் ‘சாறுதலைக் கொண்டென' என்னும் புறப்பாட்டானும், ‘சாறயர்களத்து' என்னும் முருகாற்றுப்பபடையானும் அறிக. கார்த்திகை நாளில் நிரை நிரையாக விளக்கிட்டு விழாக் கொண்டாடும் வழக்கம் மிக்கிருந்தது. இதனை ‘குறுமயன் மறுநிறங் கிளர மதிநிறைந், தறுமீன் சேறும் அகலிருள் நடுநாள், மறுகுவிளக் குறுத்து மாலை தூக்கிப் - பழவிறன் மூதூர்ப் பலருடன் துவன்றிய, விழவுடனயர வருகதி லம்ம' என்னும் அகப்பாட்டானறிக. ‘துளக்கில்கபா லீச்சரத்தான் றொல்கார்த் திகைநாள்........ விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்' என்பது திருநெறித் தமிழ்மறை . கார்த்திகைக்கு மலையில் விளக்கிடுவது ‘குன்றிற் கார்த்திகை விளக்கிட்டன்ன' என்று சிந்தாமணியிற் கூறப்பெற்றுள்ளது. 'விளக்குப்போன்றனவே' என்றும் பாடம்.
நளிந்த கடலுட் டிமிறிரை போலெங்கும் விளிந்தார் பிணங்குருதி யீர்க்குந் - தெளிந்து தடற்றிடங் கொள்வாட்டளையவிழுந் தார்ச்சஉடற்றியா ரட்ட களத்து. பதவுரை: தெளிந்து - விளங்கி, தடறு - உறையினது, இடம் கொள் - இடத்தினைக் கொண்ட, வாள்-வாளையும் , தளை அவிழும் கட்டவிழ்ந்த, தார்-மாலையையுடைய, சேய்-செங்கட்சோழன், உடற்றியார்-சினமூட்டிய பகைவரை, அட்ட - கொன்ற, களத்து - போர்க்களத்தில், நளிந்த - நீர் செறிந்த, கடல்உள் கடலில், திமில்- தோணியையும், திரை - அலையையும், போல் போல, எங்கும்-எவ்விடத்தும், விளிந்தார் - பட்டாருடைய, பிணம்-பிணக் குப்பையை குருதி ஈர்க்கும் - உதிர வெள்ளம் இழாநிற்கும் எ-று. ‘தடற்றிலங் கொள்வாள்' என்னும் பாடத்திற்கு உறையில் விளங்குகின்ற ‘ஒள்ளிய வாள்' என்று பொருளுரைக்க, நளிந்த - நளியென்னும் உரிச்சொல்லடியாக வந்த பெயரெச்சம்; நீர்மிக்க எனினுமாம்; நளியென்பது பெருமையும், செறிவுமாதல் தொல்காப்பியத்தா னறிக. 'தடற்றிலங்கொள்வாள்' என்றும் பாடம்.
இடைமருப்பின் விட்டெறிந்த வெஃகங்கான் மூழ்கிக் கடைமணி காண்வரத் தோற்றி- நடைமெலிந்து முக்கோட்ட போன்ற களிறெல்லா நீர்நாடன் புக்கம ரட்ட களத்து. பதவுரை: நீர் நாடன்-நீர் நாட்டையுடைய செங்கட்சோழன், அமர் புக்கு - போரிற் புகுந்து, அட்ட களத்து -கடைமணி, காண்வர - விளங்க, களிறு, எல்லாம் - யானைகளெல்லாம், தோற்றி - தோன்றி, நடைமெலிந்து - நடை தளர்ந்து, மு கோட்ட போன்ற - மூன்று கொம்புகளையுடைய யானைகளை யொத்தன எ-று. காழ் என்பதே சிறந்த பாடம். காழ்-காம்பு, மூழ்கலான் என்பது மூழ்கியெனத் திரிந்துநின்றது. முக்கோட்ட இது குறிப்பு வினைப்பெயர். 'எஃகங்காழ்' என்றும் பாடம். 'தோன்றி' என்றும் பாடம். 'தோற்றந்திரலிலா' என்றும் பாடம்.
இரிசிறக ரீர்க்குப் பரப்பி யெருவை குருதி பிணங்கவருந் தோற்றம் - அதிர்விலாச் சீர்முழாப் பண்ணமைப்பான் போன்ற புனனாடன் நேராரை யட்ட களத்து. பதவுரை: புனல் நாடன் - நீர் நாட்டையுடைய செங்கட்சோழன், நேராரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க் களத்தில், எருவை- கழுகுகள், இரு சிறகர் - இரண்டு சிறகின் கண்ணுமுள்ள, ஈர்க்கு பரப்பி - ஈர்க்குகளைப் பரப்பி, குருதி - உதிரத்தோடு, பிணம் கவரும் - பிணங்களைக் கொள்ளை கொள்ளும், தோற்றம் - காட்சி, அதிர்வு இலா கலக்கமில்லாத, சீர் - ஓசையையுடைய, முழ - முழவினை, பண் அமைப்பான் - பண்ணமைப்பவனை, போன்ற - ஒத்தன எ-று. சிறகர் : ஈற்றுப்போலி தோற்றந்திரலிலா' என்றும் பாடம்.
இணைவே லெழின்மருமத் திங்கப்புண் கூர்ந்து கணையலைக் கொல்கிய யானை - துணையிலவாய்த் தொல்வலி யாற்றித்துளங்கினவாய் மெல்ல நிலங்கால் கவரு மலைபோன்ற செங்கட் சினமால் பொருத களத்து. பதவுரை: சினம்- கோபத்தையுடை, செங்கண்மால் செங்கட்சோழன், பொருத களத்து - போர் செய்த களத்தில், இணைவேல் - இணைத்த வேல்கள், எழில் மருமத்து - அழகிய மார்வில், இங்க - அழுந்துதலால், புண்கூர்ந்து - புண்மிகுத்து, கணை அலைக்கு - அம்பின் அலைப்புகளால், ஒல்கிய யானை தளர்ந்த யானைகள், துணை இலவாய் -துணைவரையிலவாய், தொல் வலி - பண்டை வலியினின்று, ஆற்றி - நீங்கி, துளங்கின ஆய் - நடுங்கி, மெல்ல - மெல்ல, நிலம் - நிலத்தை, கால் கவரும் - காலாலே அகப்படுக்கும், மலைபோன்ற - மலையை யொத்தன எ - று. இங்கல் - அழுந்தல், அலை:முதனிலைத் தொழிற் பெயர். அலைக்கு: வேற்றுமை மயக்கம் 'தொல்வலியிற்றீர' என்பதுவே சிறந்த பாடம்.
இருநிலஞ் சேர்ந்த குடைக்கீழ் வரிநுதல் ஆடியல் யானைத் தடக்கை யொளிறுவாள் ஓடா மறவர் துணிப்பத் துணிந்தவை கோடுகொ ளொண்மதியை நக்கும்பாம் பொக்குமே பாடா ரிடிமுரசிற் பாய்புன னீர்நாடன் கூடாரை யட்ட களத்து பதவுரை: பாடு ஆர் - ஒலி நிறைந்த, இடி-இடி போன்ற, முரசின்-முரசினையுடைய, பாய் புனல் - பாய்ந்து செல்லும் நீரினையுடைய, நீர் நாடன்- காவிரி நாட்டை யுடையவனாகிய செங்கட்சோழன், கூடாரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், ஒளிறு வாள் - விளங்கும் வாளையேந்திய, ஓடா மறவர் - புறங்கொடாத வீரர்கள், வரி நுதல் - வரி பொருந்திய நெற்றியையுடைய, ஆடு இயல் - வெற்றி சேர்ந்த, யானை தடகை - யானையின் நீண்டகைகளை, துணிப்ப துண்டுபடுத்த, துணிந்தவை - துண்டிக்கப்பட்ட அவை, இருநிலம் சேர்ந்த - பெரிய நிலத்தில் விழுந்து கிடக்கும், குடைகீழ்-குடைகளின் அருகே. கோடுகொள்-கலை நிறைந்த, ஒள் மதியை - ஒள்ளிய சந்திரனை நக்கும் பாம்பு - தீண்டுகின்ற பாம்பினை, ஒக்கும் ஒத்திருக்கும் எ - று. குடைக்கீழ் கிடப்பன என ஒரு சொல் வருவிக்க. ஆடு-வென்றி; அசைதலும் ஆம். கோடு-பக்கம்; ஈண்டுக் கலையை யுணர்த்திற்று. ‘கோடுதிரள் கொண்மூ' என்பது காண்க. நீர் நாடு : பெயர் : நீர் ஆகுபெயரும் ஆம்.
எற்றி வயவ ரெறிய நுதல்பிளந்து நெய்த்தோர்ப் புனலு ணிவந்தகளிற் றுடம்பு செக்கர்கொள் வானிற் கருங்கொண்மூப் போன்றவே கொற்றவேற் றானைக் கொடித்திண்டேர்ச் செம்பியன் செற்றாரை யட்ட களத்து. பதவுரை: கொற்றம் - வெற்றியையுடை, வேல் - வேலையேந்திய, தானை-சேனையையும், கொடி திண் தேர் - கொடி கட்டிய வலிய தேரையுமுடைய, செம்பியன் செங்கட்சோழன், செற்றாரை - பகைவரை, அட்ட களத்து கொன்ற போர்க்களத்தில், வயவர் எற்றி எறிய- வீரர்கள்எடுத்து எறிய, நுதல் பிளந்து - நெற்றி பிளத்தலால், நெய்த்தோர் புனல் உள் - உதிர நீருள், நிவந்த மூழ்கியெழுந்த, களிறு உடம்பு - யானைகளின் உடம்புகள், செக்கர் கொள் வான்இல் - செக்கர் வானத்தில், கரும் கொண்மூ - கரியமேகத்தை, போன்ற - ஒத்தன எ-று. பிளத்தலால் என்பது பிளந்தெனத் திரிந்து நின்றது. நெய்த்தோர்-குருதி. செக்கர்-செந்நிறம்.
திண்டோண் மறவ ரெறியத் திசைதோறும் பைந்தலை பாரிற் புரள்பவை - நன்கெனைத்தும் பெண்ணையந் தோட்டம் பெருவளி புக்கற்றே கண்ணார் கமழ்தெரியற் காவிரி நீர்நாடன் நண்ணாரை யட்ட களத்து. பதவுரை: கண் ஆர் - கண்ணுக்கு நிறைந்தஎறிதலால், திசை தோறும் - திசைகள் தோறும், பார் இல் - பூமியில், பைந்தலை - கரிய தலைகள், புரள்பவை-புரளுவன, நன்கு எனைத்து உம் - மிகவும், பெண்ணை தோட்டம் - பனங்காட்டில், பெருவளி பெருங்காற்று, புக்கது அற்று- புக்க செயலை யொத்தன எ-று. பசுமை - கருமைமேல் நின்றது. அம்:சாரியை புக்கதற்று என்பது புக்கற்று என்றாயது. பனந்தோட்டத்திற் பெருவளிபுக்கால் காய்கள் உதிர்ந்து புரளுமாறு போலத் தலைகள் புரண்டன என்க.
மலைகலங்கப் பாயு மலைபோ னிலைகொள்ளாக் குஞ்சரம் பாயக் கொடி யெழுந்து பொங்குபு வானத் துடைப்பன போன்ற புனனாடன் மேவாரை யட்ட களத்து. பதவுரை: புனல் நாடன்-நீர் நாட்டையுடைய செங்கட் சோழன், மேவாரை-பகைவரை, அட்ட களத்து -கொன்ற போர்க்களத்தில், மலை கலங்க - மலைகள் கலங்க, பாயும் - பாயா நின்ற, மலைபோல் - மலைகள்போல, நிலைகொள்ளா - நிலை கொண்டு, குஞ்சரம் பாய - யானைகள் பாய்தலால், கொடி -கொடிகள், எழுந்து மேல் எழுந்து, பொங்குபு - விளங்கா நின்று, வானம் - வானத்தை, துடைப்பன போன்ற துடைப்பனவற்றை யொத்திருந்தன எ-று. மலைகலங்கப் பாயுமலைபோல் என்றது இல்பொருளுவமம். கொடி துடைப்பன போன்ற என்க.
எவ்வாயு மோடி வயவர் துணித்திட்ட கைவாயிற் கொண்டெழுந்த செஞ்செவிப் புன்சேவல் ஐவாய் வயநாகங் கவ்வி விசும்பிவருஞ் செவ்வா யுவணத்திற் றோன்றும் புனனாடன் தெவ்வரை யட்ட களத்து. பதவுரை: புனல் நாடன்-நீர் நாட்டையுடைய செங்கட்சோழன், தெவ்வரை- பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்த்தில், எ வாய் உம் ஓடி - எவ்விடத்தும் சென்று வயவர் - வீரர்கள், துணித்திட்ட - துணித்த, கை - கைகளை, வாய்இல் -வாயில், கொண்டு எழுந்த - கவ்விக்கொண்டு மேலெழுந்த, செம் செவி - சிவந்த செவிகளையுடைய, புல் சேவல் - புல்லிய பருந்தின் சேவல்கள். ஐ வாய் - ஐந்து வாயையுடைய, வயம் நாகம் - வலியையுடைய பாம்பை, கவ்வி - கவ்விக்கொண்டு, விசும்பு இவரும் -வானிலே பறந்து செல்லும், செம் வாய்-சிவந்த வாயையுடைய உவணத்தில் - கருடனைப்போல, தோன்றும் - தோன்றா நிற்கும் எ - று. புன்மை - புற்கென்ற நிறம். உவணத்தில் என்புழி இல் ஒப்புப்பொருட்டு.
செஞ்சேற்றுப் செல்யானை சீறி மிதித்தலால் ஒண்செங் குருதிகள் தொக்கீண்டி நின்றவை பூநீர் வியன்றமிடாப்போன்ற புனனாடன் மேவாரை யட்ட களத்து. பதவுரை: புனல் நாடன் - நீர் நாட்டையுடைய செங்கட் சோழன், மேவாரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், செம் சேறு உள் -, தொக்கு ஈண்டி நின்றவை-ஒருங்கு தொக்கு நின்ற, ஒள் ஒள்ளிய, செம் குருதிகள்-சிவந்த உதிரங்கள், பூவியன்ற செம்பூக்களையாக்கிய, நீர்மிடா - நீர்மிடாவை, போன்ற - ஒத்தன எ - று. குழிந்த இடங்களில் என்னுஞ் சொற்கள் அவாய் நிலையான் வந்தன. பூநீர் வியன்றமிடா-செம் பூக்களையுடைய நீரினையுடைய அகன்றமிடா எனினும் ஒக்கும். தொக்கு. ஈண்டி:ஒரு பொருளன. 'பூவியன்ற நீர்மிடா' என்று பாடங்கொள்ளுதல் வேண்டும்.
ஓடா மறவ ருருத்து மதஞ்செருக்கிப் பீடுடை வாளார்பிறங்கிய ஞாட்பினுட் கேடகத்தோ டற்ற தடக்கைகொண்டோடி இகலன்வாய்த் துற்றியதோற்ற மயலார்க்குக் கண்ணாடி காண்பாரிற் றோன்றும் புனனாடன் நண்ணாரை யட்ட களத்து. பதவுரை: புனல் நாடன - நீர் நாட்டையுடைய செங்கட் சோழன், நண்ணாரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், ஓடா மறவர் - புறங்கொடாத வீரர்கள், உருத்து - கோபித்து, மதம் செருக்கி - களிப்பால் மிகுந்து, பீடு உடை - பெருமையையுடைய, வாளார் - வாளேந்தினவராய், பிறங்கிய - போர் செய்த, ஞாட்பின்உள் - போரின் கண், கேடகத்தோடு அற்ற - கேடகத்தோடறுபட்ட, தட கை - நீண்ட கைகளை, கொண்டோடி - கொண்டுசென்று , இகலன் - ஓரிகள், வாய் துற்றிய -வாயிற் கவ்விய, தோற்றம் - காட்சி, அயலார்க்கு - அயலில் நின்றவர்க்கு கண்ணாடி காண்பார் இல் - கண்ணாடி காண்பாரைப் போல தோன்றும் தோன்றாநிற்கும் எ - று. பிறங்குதல் போர் செய்தலை யுணர்த்திற்று. அயலார்க்குத் தோன்றும் என்க. 'வாளர்' என்றும், 'ஓரி இகலனவாய்' என்றும், 'வாய்துற்றிய' என்றும் பாடம்.
கடிகாவிற் காற்றுற் றெறிய வெடிபட்டு வீற்றுவீற் றோடு மயிலினம்போல்-நாற்றிசையும் கேளி ரிழந்தா ரலறுபவே செங்கட் சினமால் பொருத களத்து. பதவுரை: செங்கண்- சிவந்த கண்களையும், சினம்-வெகுளியையுமுடைய, மால்-செங்கட்சோழன், பொருத களத்து போர் செய்த களத்தில், கடிகாஇல்-மரங்கள் செறிந்த சோலையில், காற்று உற்று எறிய-காற்று மிக்கு எறிதலால், வெடிபட்டு-அஞ்சி, வீற்று வீற்று ஓடும்- வேறு வேறாக ஓடும், மயில் இனம் போல் -மயிலின் கூட்டம்போல், நால்திசைஉம் நான்கு திசையிலும், கேளிர் இழந்தார்- கொழுநரையிழந்த மகளிர், அலறுப: அலறாநிற்பர் எ-று. வீறு-வேறு; ‘சோறுடைக் கையர் வீற்று வீற் றியங்கும்' எனப் புறத்தில் வருவது காண்க. செங்கண்மால் என இயைத்துப் பெயராக்குதலும் ஆம். நாற்றிசையும் அலறுப என்க. அலறுப - பலர்பால் முற்று.
மடங்க வெறிந்து மலையுருட்டு நீர்போல் தடங்கொண்ட வொண்குருதி கொல்களி றீர்க்கு மடங்கா மறமொய்ம்பிற்செங்கட் சினமால் அடங்காரை யட்ட களத்து. பதவுரை: மடங்கா-மடங்குத லில்லாத, மறம் - மறத்தினையுடைய, மொய்ம்பு இன் - மார்பினையும், செம் கண் -சிவந்த கண்ணினையும், சினம் - கோபத்தையும் உடைய, மால் செங்கட்சோழன் அடங்காரை- பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், மலை மடங்க எறிந்து - மலைகள் மறிய எறிந்து, உருட்டும் நீர் போல் -உருட்டுகின்ற வெள்ளத்தைப்போல, தடம்கொண்ட - பரந்த, ஒள் குருதி-ஒள்ளிய உதிர வெள்ளம், கொல்களிறு - கொல்லப்பட்ட யானைகளை, ஈர்க்கும்-இழுத்துச் செல்லா நிற்கும் எ-று. மறம் மொய்ம்பு - முறையே வீரமும் வலியும் எனினும் பொருந்தும். மடங்கல் என்னும் பாடத்திற்குச் சிங்கம் போல என்றும், மடங்குதல் அல்லாத என்றும் பொருள் கொள்ளலாகும். கொல்களிறு-கொலைத் தொழிலையுடைய யானை எனினும் அமையும். செங்கண் என்பதற்கு மேலுரைத்தமை காண்க. 'மடங்கன் மறமொய்ம்பின்' என்றும் பாடம்.
ஓடா மறவ ரெறிய நுதல்பிளந்த கோடேந்து கொல்களிற்றுக் கும்பத் தெழிலோடை மின்னுக் கொடியின் மிளிரும் புனனாடன் ஒன்னாரை யட்ட களத்து. பதவுரை: புனல் நாடன் - நீர் நாட்டையுடைய செங்கட் சோழன், ஒன்னாரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், ஓடா, மறவர் - புறங்கொடாத வீரர்கள், எறிய - வேலினை யெறிதலால், நுதல் பிளந்த - நெற்றி பிளந்த, கோடு ஏந்து - கொம்பினை யேந்திய, கொல் களிறு - கொல்லும் யானையின், கும்பத்து - மத்தகத்தில்மின்னற்கொடி போல, மிளிரும் - விளங்கா நிற்கும் எ-று. பிளந்தகளிறு ஏந்துகளிறு எனத் தனித்தனி முடிக்க, பிளந்த - பிளக்கப்பட்ட மின்னுக்கொடி - ‘தொழிற் பெயரியல' என்பதனான் உகரம் பெற்றது.
மையின்மா மேனி நிலமென்னும் நல்லவள் செய்யது போர்த்தாள்போற் செவ்வந்தாள்1- பொய்தீர்ந்த பூந்தார் முரசிற் பொருபுன னீர்நாடன் காய்ந்தாரை யட்ட களத்து. பதவுரை: பூ தார் - பூமாலையினையும், முரசு இன் -வெற்றி முரசினையுமுடைய, பொய்தீர்ந்த - வறத்தலில்லாத, பொர மோதும், புனல் - நீரினையுடைய, நீர்நாடன் காவிரி நாட்டையுடைய செங்கட் சோழன், காய்ந்தாரை - வெகுண்ட பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், மை இல் - குற்றமில்லா, மாமேனி - அழகிய மேனியையுடைய, நிலம் என்னும் நல்லவள் - பூமி என்னு மாது, செய்யது - சிவந்த போர்வையை, போர்த்தாள்போல் - போர்த்தவள் போல, செவ் வந்தாள் - செந்நிற மெய்தினாள் எ-று. நிலத்தை மகடூஉவாகக் கூறுதல் மரபு. "செல்லான் கிழவனிருப்பினிலம்புலந், தில்லாளி னூடி விடும்" என்பதும் சிந்திக்கற்பாலது. செய்யது: குறிப்பு வினைப்பெயர். செவ்வந்தாள் - செவ்வரல்: பகுதி. செவ்வென்றாள் எனின் செவ்வென் பகுதி. முரசினையுடைய நாடன் என்க. பொய் தீர்ந்த என்பதனை ‘வானம்' பொய்யாது' என்புழிப்போலக் கொள்க. காவிரியின் பொய்யாமையை கரியவன் புகையினும்........ஓவிறந்தொலிக்கும்' என்னும் நாடுகாண்காதை யடிகளானறிக. 'செவ்வென்றாள்' என்றும் பாடம்.
பொய்கை யுடைந்து புனல்பாய்ந்த வாயெல்லாம் நெய்த லிடையிடை வாளை பிறழ்வனபோல் ஐதிலங் கெஃகி னவிரொளிவா டாயினவே கொய்சுவன் மாவிற் கொடித்திண்டேர்ச் செம்பியன் தெவ்வரை யட்ட களத்து. பதவுரை: கொய் - கத்திரித்த, சுவல் - புறமயிரையுடைய, மா இன் -குதிரையினையும், கொடி - கொடிகட்டிய, திண் தேர் - வலிய தேரினையுமுடைய, செம்பியன் - செங்கட்சோழன், தெவ்வரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், பொய்கை உடைந்து - பொய்கைக் கரையுடைதலால், புனல் பாய்ந்த -நெய்தல் பூக்களின், இடை இடை - நடுவே நடுவே, வாளை பிறழ்வனபோல் - வாளை மீன்கள் பிறழ்தல்போல, ஐது இலங்கு - அழகியதாய் விளங்கா நின்ற, எஃகுஇன் - வேலோடு, அலர் ஒளி - விளங்கும் ஒளியையுடைய, வாள் தாயின வாள் பறந்தன எ-று. ஐது: அஃறிணை யொன்றன்பாற் படர்க்கைக் குறிப்பு வினைமுற்று எச்சமாய் இலங்கு என்னும் காலங்கரந்த பெயரெச்சங்கொண்டது. ஐ: பகுதி, து:ஒன்றன்பால் விகுதி. தாயின: அஃறிணைப் பலவின்பாற் படர்க்கை இறந்தகால வினைமுற்று; தாவு:பகுதி, இன்:இடைநிலை, வகரம் யகரமாய்த் திரிந்தது.
இணரிய ஞாட்பினு ளேற்றெழுந்த மைந்தர் சுடரிலங் கெஃக மெறியச் சோர்ந் துக்க குடர்கொண்டுவாங்குங் குறுநரி கந்தில் தொடரொடு கோணாய் புரையு மடர்பைம்பூட் சேய்பொரு தட்ட களத்து. பதவுரை: அடர்- தகட்டுவடிவாகிய, பைம் பூண்- பசிய அணிகலத்தினையுடைய, சேய் - செங்கட்சோழன், பொருது அட்ட - போர்செய்து கொன்ற, களத்து - களத்தின்கண், இணரிய ஞாட்பின் உள்-தொடர்ந்து நெருங்கிய போரில், ஏற்று எழுந்த-எதிர்த்தெழுந்த, மைந்தர் -வீரர்கள், சுடர் இலங்கு ஒளிவிளங்காநின்ற, எஃகம் - வேல்களை, எறிய - எறிதலால், சோர்ந்து உக்க - சரிந்து சிந்திய, குடர் கொண்டு -, கோணாய் புரையும் - கோணாய்களை யொக்கும் எ-று. இணரிய - இணர்: பகுதி, இன்:இடைநிலை கடைகுறைந்து நின்றது. கோணாய் வேட்டமாடும் நாய், குறுநரி - நரியின் ஒரு வகை: ‘குறுநரி பட்டற்றால்' என்பது கலி. அடர்-தகடு. 'குடர்கொடு' என்றும் பாடம்.
செவ்வரைச் சென்னி யரிமானோ டவ்வரை ஒல்கி யுருமிற் குடைந்தற்றான் - மல்கிக் கரைகொன் றிழிதரூஉம் காவிரி நாடன் உரைசா லுடம்பிடி மூழ்க வரசஅரசுவா வீழ்ந்த களத்து. பதவுரை: மல்கி- மிகுந்து, கரை கொன்று - கரைகளையழித்து, இழிதரும் - செல்லும், காவிரிநாடன் - காவிரி நாட்டையுடைய செங்கட்சோழனது, உரைசால் -புகழமைந்த, உடம்பிடி மூழ்க - வேல்கள் குளிப்ப, அரசுஓடு - அரசரோடு, அரசுஉவா-, செம் வரை - செவ்விய மலையின், சென்னி - உச்சியிலுள்ள, அரிமான் ஓடு - சிங்கத்துடன், அவரை - அந்த மலை, ஒல்கி - தளர்ந்து ; உருமிற்கு - இடியேற்றிற்கு, உடைந்தற்று - அடைந்தாற்போலும் எ-று. அரசற்கு அரிமானும், யானைக்கு மலையும் உவமம். உடைந்தால் என்பது உடைந்து என நின்றது.
ஓஓ உவம னுறழ்வின்றி யொத்ததே காவிரி நாடன் கழுமலங் கொண்டநாள் மாவுதைப்ப மாற்றார் குடையெலாங் கீழ்மேலா ஆவுதை காளாம்பி போன்ற புனனாடன் மேவாரை யட்ட களத்து. பதவுரை: காவிரி நாடன் - காவிரி நாட்டையுடைய செங்கட் சோழன், கழுமலம் - கழுமலமென்னும் ஊரினை, கொண்ட நாள் - கைக்கொண்ட நாளில், புனல் நாடன் - அவன், மேவாரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், மா உதைப்ப - குதிரைகளுதைத்தலால்; மாற்றார் - பகைவரின், குடையெல்லாம் - குடைகளெல்லாம், கீழ் மேல் ஆய் கீழ்மேலாகி, ஆ உதை - ஆனிரைகளா லுதைக்கப்பட்ட, காளாம்பி போன்ற - காளாம்பியை யொத்தன, உவமன் - அவ்வுவமை, உறழ்வு இன்றி - மாறுபாடில்லாமல், ஒத்தது - பொருந்தியது எ-று. முதலடி முற்றுமோனை, ‘ஓ' வென்பது சிறப்புணர்த்திற்று. புனனாடன் என்பது சுட்டு. உவமன் என்புழிச் சுட்டு வருவிக்க கழுமலம் சேரநாட்டகத்ததோர் ஊராதல் வேண்டும். ‘நற்றேர்க்குட்டுவன் கழுமலம்' என்பதும் காண்க.
அரசர் பிணங்கான்ற நெய்த்தோர் முரசொடு முத்துடைக் கோட்ட களிறீர்ப்ப-எத்திசையும் பௌவம் புணரம்பி போன்ற புனனாடன் தெவ்வரை யட்ட களத்து. பதவுரை: புனல் நாடன்- நீர் நாட்டையுடைய செங்கட் சோழன், தெவ்வரை - பகைவரை, அட்ட களத்து - கொன்ற போர்க்களத்தில், அரசர் பிணம் - அரசர் பிணங்கள், கான்ற - சிந்திய நெய்த்தோர் - உதிர வெள்ளங்கள், எ திசைஉம் எல்லாத் திசைகளிலும், முரசுஒடு - முரசினோடு, முத்துஉடை - முத்தினையுடைய, கோட்ட - கொம்புகளையுடைய, களிறு - யானைகளை, ஈர்ப்ப - இழுப்பசார்ந்த, அம்பி - மரக்கலங்களையும், போன்ற-ஒத்தன எ-று. அரசரின் உடல் மறிந்து கிடப்பதனை அரசர் பிணம் என்றார். முரசினையும் களிற்றினையும் ஈர்ப்ப என்க. அவையெனச் சுட்டு வருவிக்க. கோட்ட: குறிப்புப் பெயரெச்சம்.
பருமப் பணையெருத்திற் பல்யானை புண்கூர்நஉருமெறி பாம்பிற் புரளுஞ் - செருமொய்ம்பிற் பொன்னார மாற்பிற் புனைகழற்காற் செம்பியன் துன்னாரை யட்ட களத்து. பதவுரை: செரு மொய்ம்பு இன் - போர் வலியினையும், பொன் ஆரம் - பொன்னாற் செய்த ஆரத்தை யணிந்த, மார்பு இன் மார்பினையும், புனைகழல்கால் - கட்டிய வீரக்கழலினையுடைய காலினையுமுடைய, செம்பியன் - செங்கட்சோழன், துன்னாரை - பகைவரை, அட்ட களத்து- கொன்ற போர்க்களத்தில், பருமம் - பண்ணினையும், பணை - பருத்த; எருத்து இன் - பிடரினையுமுடைய, பல் யானை - பல யானைகள், புண்கூர்ந்து -புண்மிகுதலால், உரும் எறி - இடயேற்றா லெறியப்பட்ட, பாம்பு இன் பாம்பு போல, புரளும் - புரளாநிற்கும் எ-று. பருமம் - ஒப்பனை பாம்பின்:ஐந்தனுருபு ஒப்புப் பொருட்டு எருத்தின் முதலியவற்றில் சாரியை யுள்வழித் தன்னுருபு நிலையாது வருதலை, ‘மெல்லெழுத்து மிகுவழி என்னுஞ் சூத்திரத்து ‘மெய்பெற' என்பதனாற் கொள்ப.
மைந்துகால் யாத்து மயங்கிய ஞாட்பினுட் புய்ந்துகால் போகிப் புலான்முகந்த வெண்குடை பஞ்சிபெய் தாலமே போன்ற புனனாடன் வஞ்சிக்கோ வட்ட களத்து பதவுரை: புனல் நாடன் - நீர் நாட்டையுடைய செங்கட் சோழன், வஞ்சி கோ - வஞ்சி யரசனாகிய சேரனை, அட்டகளத்து - கொன்ற போர்க்களத்தில், மைந்து -மறவர்கள், கால் யாத்து - காலைத் தளை செய்தலால், மயங்கிய - போகாதுமிடைந்த, ஞாட்பின் உள் - போரின் கண், கால் புய்ந்து போகி - காம்பு பறிந்து போகப்பட்டு, புலால் முகந்த - செந்தசையை முகந்த, பறிந்து போகப்ப்ட்டு, புலால் முகந்த - செந்தசையை முகந்த, வெண்குடை - வெள்ளைக் குடைகள், பஞ்சிபெய் - செம்பஞ்சுக் குழம்பு பெய்த, தாலம் ஏ போன்ற - தாலத்தையே யொத்தன எ-று. தாலம் - வட்டில், புய்ந்து - புய் : பகுதி, ‘புய்த்தெறி நெடுங்கழை' என்பது புறம்.
வெள்ளிவெண் ணாஞ்சிலான் ஞால முழுவனபோல் எல்லாக் களிறு நிலஞ்சோர்ந்த - பல்வேற் பணைமுழங்கு போர்த்தானைச் செங்கட் சினமால் கணைமாரி பெய்த களத்து பதவுரை: பல்வேல்- பல வேலினையும், பணை முழங்கு - முரசு முழங்காநின்ற, போர் தானை - போர்ச்சேனையையும், சினம் கோபத்தையு முடைய, செங்கண்மால் - செங்கட்சோழன், கணைமாரி - அம்பு மழை, பெய்த களத்து - பெய்த போர்க்களத்தில், வெள்ளி-வெள்ளியாற் செய்த, வெள்நாஞ்சிலால் - வெள்ளிய கலப்பையால் ஞாலம் உழுவனபோல் - நிலத்தை யுழுதல்போல, களிறு எல்லாம் - யானைகளெல்லாம், நிலம் சேர்ந்தநிலத்தைச் சேர்ந்தன எ-று. யானையின் வெண்கோடுகள் வெள்ளிநாஞ்சில் போன்றன மாரி பெய்தவழி நிலம் உழுதலாகிய செயல் நினைப்பிக்கப்பட்டது.
வேனிறத் திங்க வயவரா லேறுண்டு கானிலங் கொள்ளாக் கலங்கிச் செவிசாய்த்து மாநிலங் கூறு மறைகேட்ப போன்றவே பாடா ரிடிமுரசிற் பாய்புன னீர்நாடன் கூடாரை யட்ட களத்து. பதவுரை: பாடு ஆர் - ஒலி நிறைந்த, இடி - இடியேறுபோன்ற முரசு இன் - முரசினையுடைய, பாய் புனல் - பாய்ந்து செல்லும் நீரினையுடைய, நீர்நாடன்- காவிரி நாட்டையுடைய செங்கட் சோழன், கூடாரை - பகைவரை, அட்டகளத்து கொன்ற போர்க்களத்தில், வேல் - வேலானது, நிறத்து இங்க - மார்பிலழுந்த, வயவரால் - வீரரால் , ஏறுண்டு - குத்தப்பட்டு, கால் நிலம் கொள்ளாது - கால்கள் தளர்ந்து, கலங்கி - வீழ்ந்து செவி சாய்த்து - செவிகளைச் சாய்த்து, யானைகள் கிடத்தல்) , மா நிலம் - பெரிய நிலமகள், கூறும் - உபதேசிக்கும், மறை - உபதேச மொழியை, கேட்ப போன்ற கேட்டலை யொத்தன எ-று. மறை - மந்திரம், மறைந்த பொருளுடையது, செவி சாய்த்து என்பதனால் அது கேட்கு முறைமையுணர்த்தப்பட்டது. அவாய் நிலையாற் சில சொற்கள் வருவிக்கப்பட்டன. களவழி நாற்பது முற்றும்
பந்தமில் லாத மனையின் வனப்பின்னா தந்தையில் லாத புதல்வ னழகின்னா அந்தண ரில்லிருந் தூணின்னாவாங்கின்னா மந்திரம் வாயா விடின். பதவுரை: பந்தம் இல்லாத - சுற்றமில்லாத, மனையின் இல்வாழ்க்கையின், வனப்பு - அழகானது, இன்னா - துன்பமாம் தந்தையில்லாத - பிதா, இல்லாத, புதல்வன் - பிள்ளையினது, அழகு - அழகானது, இன்னா - துன்பமாம்; அந்தணர் - துறவோர், இல் இருந்து - வீட்டிலிருந்து, ஊண் - உண்ணுதல், இன்னா துன்பமாம் ஆங்கு - அவ்வாறே, மந்திரம் - மறைமொழியாய மந்திரங்கள், வாயாவிடின் - பயனளிக்காவிடின், இன்னா துன்பமாம் எ-று. பந்தம் - கட்டு; சுற்றத்திற்காயிற்று. மனை - மனைவாழ்க்கை அதன் வனப்பாவது செல்வம். "சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான் பெற்றத்தாற் பெற்ற பயன்" என்பவாகலின் சுற்றமில்லாத மனையின் வனப்பு இன்னாவாயிற்று. இனி, அன்பில்லாத இல்லாளின் அழகு, இன்னாவாம் எனினும் அமையும் ‘தந்தையொடு கல்வி போம்'. ஆதலின் ‘தந்தையில்லாத' என்றதனால் கல்விப் பேற்றையிழந்த, என்னும் பொருள் கொள்ளப்படும். அந்தணர் துறவோர் இதனை, ‘அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ், செந்தண்மை பூண்டொழுக லான்' என்னும் பொய்யா மொழியா னறிக. துறவறத்தினர் காட்டில் கனி கிழங்கு முதலிய உண்டலேனும், நாட்டில் ஒருவழித் தங்காது திரிந்த இரந்துண்டலேனும், செயற்பாலரன்றி, ஒரு மனையின்கட்டங்கியுண்ணற்பாலரல்ல ரென்க. மந்திரம் இன்னதென்பதனை "நிறைமொழி மாந்தராணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரமென்ப" என்னும் தொல்காப்பியத்தா னறிக. மந்திரம் அமைச்சரது சூழ்ச்சி எனப்பொருள் கோடலும் ஆம்; சூழாது செய்யும் வினை துன்பம் பயக்கு மென்பது கருத்து.
பார்ப்பாரிற் கோழியு நாயும் புகலின்னா ஆர்த்த மனைவி யடங்காமை நன்கின்னா பாத்தில் புடைவை யுடையின்னாவாங்கின்னா காப்பாற்றா வேந்த னுலகு. பதவுரை: பார்ப்பார் - பார்ப்பாருடைய, இல் - மனையில், கோழியும் நாயும், புகல் - நுழைதல், இன்னா - துன்பமாம்; ஆர்த்த - கலியாணஞ் செய்துகொண்ட, மனைவி - மனையாள் அடங்காமை -அடங்கி நடவாமை, நன்கு இன்னா - மிகவுந் துன்பமாம்; பாத்துஇல் - பகுப்பு இல்லாத, புடைவை - புடைவையை, உடை - உடுத்தல், இன்னா - துன்பமாம், ஆங்கு அவ்வாறே, உலகு - நாடு, இன்னா - துன்பமாம் எ-று. பார்ப்பாரில்லிற் கோழியும் நாயும் புகலாகா தென்பதனை ‘மனையுறைகோழியொடு ஞமலி துன்னாது' என்னும் பெரும்பாணாற்றுப்படையடியானு மறிக. ஆர்த்தல் - கட்டுதல்; அது தொடர் புண்டாமாறு கலியாணஞ் செய்து கொள்ளுதலையுணர்த்திற்று. அடங்காமை - எறியென் றெதிர் நிற்றல் முதலியன. பாத்து பகுத்து என்பதன் மரூஉ : ஈண்டுத் தொழிற் பெயர் சிலப்பதிகாரத்தில் ‘பாத்தில் பழம்பொருள்' என வருதலுங் காண்க. புடைவை - ஆடவருடையையும் குறிக்கும். ‘பாத்தில் புடைவையுடையின்னா' என்றதனாற் சொல்லியது ஒன்றுடுத்தலாகாதென்பதாம். ‘ஒன்றம ருடுக்கை' என்னும் பெரும்பாணாற்றடி ஒன்றுடாமையே தகுதி யென்பது காட்டி நிற்கின்றது. காப்பு ஆற்றா - காத்தலைச் செய்யாத : ஒரு சொல்லுமாம்.
கொடுங்கோல் மறமன்னர் கீழ்வாழ்த லின்னா நெடுநீர் புணையின்றி நீந்துத லின்னா கடுமொழி யாளர் தொடர்பின்னா வின்னா தடுமாறி வாழ்த லுயிர்க்கு. பதவுரை: கொடுங்கோல் - கொடுங்கோல் செலுத்தும், மறம் கொலைத் தொழிலையுடைய, மன்னர்கீழ் - அரசரது ஆட்சியின் கீழ், வாழ்தல் - வாழ்வது, இன்னா துன்பமாம்; நெடுநீர் மிக்க நீரை, புணை இன்றி - தெப்பமில்லாமல், நீந்துதல் - கடந்து செல்லுதல், இன்னா - துன்பமாம்; கடுமொழியாளர் - வன்சொல் கூறுவோரது, தொடர்பு - நட்பு, இன்னா - துன்பமாம்; உயிர்க்கு உயிர்களுக்கு, தடுமாறி, - மனத்தடுமாற்ற மடைந்து, வாழ்தல் வாழ்வது, இன்னா - துன்பமாம் எ-று. கொடுங்கோல் - வளைந்த கோல்; அரச நீதியாகிய முறையினைச் செங்கோல் என்றும், முறையின்மையைக் கொடுங்கோல் என்றும் கூறுதல் வழக்கு : இவை ஒப்பினாகிய பெயர். மன்னர் என்பது அவரது ஆட்சிக்காயிற்று. கடுமொழியாளர் - மிகுதிக் கண் கழறிக் கூறுமுறையன்றி, எம்பொழுதும் வன்சொல்லே கூறுமியல்பினர் என்றபடி, தடுமாற்றம் - வறுமை முதலியவற்றாலுண்டாகும் மனவமைதி யின்மையாகிய துன்பம் உயிரென்றது ஈண்டு மக்களுயிரை.
எருதி லுழவர்க்குப் போகீர மின்னா கருவிகண் மாறிப் புறங்கொடுத்த லின்னா திருவுடை யாரைச் செறலின்னா வின்னா பெருவலியார்க் கின்னா செயல். பதவுரை: எருது இல் -செல்வமுடையவர் பால், செறல் - செற்றங் கொள்ளல், இன்னா - துன்பந் தருவதாகும்; பெருவலியார்க்கு - மிக்க திறலுடையார்க்கு, இன்னா செயல் - தீமை செய்தல், இன்னா துன்பந் தருவதாகும் எ-று போகுதல் - அருகுதல், ஒழித்தல்; ‘மன்னர் மலைத்தல் போகிய' என்புழி இப் பொருட்டாதல் காண்க. கருவி - தொகுதி; ஈண்டுப்படையது தொகுதி யென்க. கண்மாறி : ஒரு சொல் : ‘ஆங்கவனீங் கெனையகன்று கண்மாறி' என்புழிபோல. இனி, கண்மாறி யென்பதற்கு அரசனிடத் தன்பின்றி எனப்பொருள் கொள்ளலுமாம். கருவிகள் மாறி எனப் பிரித்தல் பொருந்து மேற் கொள்க. பெருவலியார் - பொருள் படை முதலியவற்றாற் பெருவலி யுடையராய அரசரும், தவத்தால் ஒன்னார்த் தெறலும் உவந்தாரை யாக்கலுமாம். பெருவலி பெற்றுடையராய முனிவரும் ஆம் ; பெருவலியார்க் கின்னா செயல் துன்பந் தரும் என்பதனைக், ‘கூற்றத்தைக் கையால் விளித்தற்றா லாற்றுவார்க், காற்றாதாரின்னாசெயல்' என்னுந் திருவள்ளுவப்பயனாலுமறிக.
சிறையில் கரும்பினைக் காத்தோம்ப லின்னா உறைசேர்பழங்கூரை சேர்ந்தொழுக லின்னா முறையின்றி யாளு மரசின்னா வின்னா மறையின்றிச் செய்யும் வினை. பதவுரை: சிறைஇல் - வேலியில்லாத, கரும்பினை - கரும்புப்பயிரை, காத்து ஓம்பல் - பாதுகாத்தல், இன்னா - துன்பமாம்; உறைசேர் - மழைத்துளி ஒழுகுதலையுடைய, பழங்கூரை - பழைய கூரையையுடைய மனையில், சேர்ந்து ஒழுகல் - பொருந்தி வாழ்தல், இன்னா - துன்பமாம்; முறை இன்றி - நீதி யில்லாமல், ஆளும் - ஆளுகின்ற, அரசு - அரசரது ஆட்சி, இன்னா - துன்பமாம்; மறை இன்றி - சூழ்தலில்லாமல், செய்யும், வினை - செய்யுங் கருமம், இன்னா - துன்பந் தருவதாகும் எ-று. காத்தோம்பல் : ஒரு பொரு ளிருசொல் உறைசேர் பழங்கூரை என்றது செய்கையழிந்து சிதைவுற்று மழைநீர் உள்ளிழியுஞ் சிறு கூரையினை. அரசு - அரசனுமாம் அரசன் முறையிலனாயின் முறையிழத்தலானே யன்றி மழையின்மையாலும் நாடு துன்புறும்; ‘முறைகோடி மன்னவன் செய்யி னுறைகோடி, யொல்லாது வானம் பெயல்' என்பது காண்க. அமைச்சருடன் மறைவிற்செய்யப் படுவதாகலின் சூழ்ச்சி மறையெனப் பட்டது.
அறமனத்தார் கூறுங் கடுமொழியு மின்னா மறமனத்தார் ஞாட்பின் மடிந்தொழுக லின்னா இடும்பை யுடையார் கொடையின்னா வின்னா கொடும்பா டுடையார்வாய்ச் சொல். பதவுரை: அறம் மனத்தார் - அறத்தை விரும்பும் நெஞ்சத்தினர், கூறும் - சொல்லுகின்ற, கடுமொழியும் - கடுஞ் சொல்லும், இன்னா - துன்பமாம்; மறம் மனத்தார் - வீரத் தன்மையையுடைய நெஞ்சத்தினர், ஞாட்பில் போரின்கண், மடிந்து ஒழுகல் சோம்பி இருத்தல், இன்னா - துன்பமாம்; இடும்பை உடையார் - வறுமை உடையாரது, கொடை - ஈகைத் தன்மை, இன்னா துன்பமாம்; கொடும்பாடு உடையார் - கொடுமையுடையாரது, வாய்ச்சொல் - வாயிற் சொல்லும், இன்னா - துன்பமாம் எ-று. 'அழுக்கா றவாவெகுளி யின்னாச்சொ னான்கும், இழுக்கா வியன்ற தறம்என்பவாகலின் அறமனத்தார் கூறுங் கடு மொழியும் இன்னாவாயிற்று. உம்மை : எச்சப்பொருளது. இடும்பை - துன்பம்; ஈண்டுக் காரணமாய வறுமைமேல் நின்றது. ‘வளமிலாப் போழ் தத்து வள்ளன்மை குற்றம்' என்று பிற சான்றோருங் கூறினர். கொடும்பாடு - கொடுமை : ஒரு சொல். ‘அருங்கொடும்பாடுகன் செய்து' என்பது திருச்சிற்றம்பலக் கோவையார் ; நடுவுநிலை யின்மையும் ஆம். வாய்ச்சொல் என வேண்டாது கூறியது தீமையே பயின்ற தென வேண்டியது முடித்தற்கு. வாய்ச்சொல்லும் என்னும் உம்மை தொக்கது. கடுமொழியின்னா,
ஆற்ற லிலாதான் பிடித்த படையின்னா நாற்ற மிலாத மலரி னழகின்னா தேற்ற மிலாதான் றுணிவின்னா வாங்கின்னா மாற்ற மறியா னுரை. பதவுரை: ஆற்றல் இலாதான் - வலியில்லாதவன், பிடித்த படை கையிற்பிடித்த படைக்கலம், இன்னா - துன்பமாம்; நாற்றம் இலாத - மணமில்லாத, மலரின் அழகு - பூவின் அழகானது. இன்னா - துன்பமாம்; தேற்றம் இலாதான் - தெளிவு இல்லாதவன், துணிவு - ஒரு வினை செய்யத்துணிதல், இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே மாற்றம் - சொல்லின் கூறுபாட்டினை, அறியான் - அறியாதவனது உரை - சொல், இன்னா - துன்பமாம் எ-று. ஆற்றல் - ஈண்டு ஆண்மை யெனினும் ஆம், ‘வானொடென் வன்கண்ண ரல்லார்க்கு'என்பது காண்க. தேற்றம் - ஆராய்ந்து தெளிதல்; ‘தெளிவி லதனைத் தொடங்கார்' என்பது வாயுறை வாழ்த்து. மாற்றம் - பேசு முறைமை யென்றும், எதிருரைக்கும் மொழியென்றும் கூறலுமாம்.
பகல்போலு நெஞ்சத்தார் பண்பின்மை யின்னா நகையாய நண்பினார் நாரின்மை யின்னா இகலி னெழுந்தவ ரோட்டின்னா வின்னா நயமின் மனத்தவர் நட்பு. பதவுரை: பகல்போலும் - ஞாயிறுபோலும், நெஞ்சத்தார் - மனமுடையார், பண்பு இன்மை - பண்பில்லா திருத்தல், இன்னா துன்பமாம்; நகை ஆய - நகுதலையுடைய, நண்பினார் - நட்பாளர்; நார் இன்மை - அன்பில்லா திருத்தல், இன்னா துன்பமாம்; இகலின் எழுந்தவர் - போரின்கண் ஏற்றெழுந்தவர், ஒட்டு - புறங்காட்டி யோடுதல், இன்னா - துன்பமாம்; நயம்இல் நீதியில்லாத, மனத்தவர் - நெஞ்சினையுடையாரது; நட்பு - கேண்மை, இன்னா - துன்பமாம் எ-று. பகல்போலும் நெஞ்சம் - ஞாயிறு திரிபின்றி ஒரு பெற்றித்தாதல் போலத் திரிபில்லாத வாய்மையையுடைய நெஞ்சம்; ‘ஞாயிறன்ன வாய்மையும்' என்பது புறம். இனி நுகத்தின் பகலாணி போல் நடுவுநிலை யுடைய நெஞ்சம் எனினும் பொருந்தும். "நெடுநுகத்துப் பகல்போல, நடுவு நின்ற நன்னெஞ்சீனோர்" என்பது பட்டினப்பாலைபண்பாவது உலகவியற்கை யறிந்து யாவரொடும்பொருந்தி நடக்கும் முறைமை. "பண்பெனப் படுவது பாடறிந்தொழுகல்" என்பது கலித்தொகைதூயமனமுடையரேனும் உலகத்தோடு பொருந்தி நடவாமை தீதென்பதாம் நகையாய நண்பீனார்நாரின்மையாவது, முகத்தால் நகுதல் செய்து அகத்தே அன்பு கருங்குதல். நயம் - நீதி யென்னும் பொருளதாதலைத் திருக்குறள் பரிமேலழகருரை நோக்கித் தெளிக; இனிமை யெனவும் விருப்பம் எனவும் பொருள் கூறலும் ஆம்.
கள்ளில்லா மூதூர் களிகட்கு நன்கின்னா வள்ளல்க ளின்மை பரிசிலர்க்கு முன்னின்னா வண்மை யிலாளர் வனப்பின்னா வாங்கின்னா பண்ணில் புரவி பரிப்பு. பதவுரை: கள் இல்லா - கள் இல்லாத, மூதூர் - பழைமையாகிய ஊர், களிகட்கு - கள்ளுண்டு களிப்பார்க்கு, நன்கு, இன்னா - மிகவுந் துன்பமாம்; வள்ளல்கள் - வள்ளியோர், இன்மை - இல்லா திருத்தல், பரிசிலர்க்கு -இரவலர்க்கு, முன் இன்னா - மிகவுந் துன்பமாம்; வண்மை இலாளர் - ஈகைக்குண மில்லாதவர்களுடைய, வனப்பு - அழகு, இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, பண் இல் - கலனையில்லாத, புரவி - குதிரை, பரிப்பு - தாங்குதல் இன்னா - துன்பமாம் எ-று. களிகட்கு இன்னா என்றது எடுத்துக்காட்டு மாத்திரையே, களித்த லென்னுஞ் சொல் கள்ளுண்டு மகிழ்தல் என்னும் பொருளில் முன் வழங்கியது; இக் காலத்தே பொதுப்பட மகிழ்தல் என்னும் பொருளதாயிற்று. களி - கள்ளுண்போன்.முன் : மிகுதி யென்னும் பொருளது. பண் கலனை ; இதுகல்லணையெனவும் வழங்கும்.
பொருளுணர்வா ரில்வழிப் பாட்டுரைத்த லின்னா இருள்கூர் சிறுநெறி தாந்தனிப்போக் கின்னா அருளில்லார் தங்கட் செலவின்னா வின்னா பொருளில்லார் வண்மை புரிவு. பதவுரை: பொருள் உணர்வார் -செல்லுதல் ; இன்னா துன்பமாம் ; பொருள் இல்லார் பொருளில்லாதவர், வண்மை புரிவு ஈதலை - விரும்புதல், இன்னா - துன்பமாம் எ-று. புலவராயினார் பாட்டின் பொருளுணரும் அறிவில்லார்பால் தாம் அரிதிற் பாடிய பாட்டுக்களைக்கூறின், அவர் அவற்றின் பொருளை அறியாராகலின், தம்மை நன்கு மதித்தல் செய்யார் அதுவேயன்றி இகழ்தலுஞ் செய்வர் ;அவற்றின் மிக்க துன்பம் பிறிதில்லை யாகலின் ‘பொருளுணர்வா ரில்வழிப் பாட்டுரை தலின்னா' எனப்பட்டது. "புலமிக் கவரைப் புலமை தெரிதல் புலமிக் கவர்க்கே புலனாம்" ‘கல்லா தவரிடைக் கட்டுரையின் மிக்கதோர் பொல்லாத தில்லை யொருவற்கு' என்னும் பழமொழிச் செய்யுட்கள் இங்கே கருதற்பாலன. தாம்அசை. தம் : சாரியை.
உடம்பா டில்லாத மனைவிதோ ளின்னா இடனில் சிறியாரோ டியர்த்தநண் பின்னா இடங்கழி யாளர் தொடர்பின்னா வின்னா கடனுடையார் காணப் புகல். பதவுரை: உடம்பாடு இலாத - உளம் பொருந்துலில்லாத மனைவி தோள் - மனைவியின் தோளைச்சேர்தல், இன்னா - துன்பமாம்; இடன் இல் . விரிந்த வுள்ளமில்லாத, சிறியாரோடு - சிறுமையுடையாருடன்; யாத்த நண்பு - பிணித்த நட்பு; இன்னா - துன்பமாம்; இடங்கழியாளர் - மிக்க காமத்தினை யுடையாரது, தொடர் - சேர்க்கை, இன்னா - துன்பமாம்; இடங்கழியாளர் மிக்க காமத்தினை யுடையாரது, தொடர் - சேர்க்கை, இன்னா - துன்பமாம்; கடன் உடையார் - கடன் கொடுத்தவர், காண பார்க்கமாறு, புகல் - அவர்க்கெதிரே செல்லுதல்,இன்னா - துன்பமாம் எ-று. மனைவிதோள் : இடக்கரடக்கல். ‘உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருட், பாம்போடுடனுறைந் தற்று' என்னுங் குறள் இங்குநினைக்கற்பாலது. இட னென்றது ஈண்டு உள்ள விரிவை யுணர்த்திற்று. குற்றியலிகரம் அலகு பெறாதாயிற்று. இடங்கழி - உள்ளம் நெறிப்படாதோடுதல்; கழிகாமம் என்பது கருத்து; ‘இடங்கழி காமமொடடங்கானாகி' என்பது மணிமேகலை சிலர் ‘விடங்களியாளர்' எனப் பாடங்கொண்டு, விடம்போலும் கள்ளுண்டு களிப்போர் எனப் பொருள் கூறினர்; அது பொருந்தாமை யோர்க. ‘கடன் கொண்டான் றோன்றப் பொருள் தோன்றும்' ஆகலின், ‘காணப்புகல் இன்னா' என்றார்; கடன்படுதல் என்பது கருத்தாகக் கொள்க.
தலைதண்ட மாகச் சுரம்போத லின்னா வலைசுமந் துண்பான் பெருமித மின்னா புலையுள்ளி வாழ்த லுயிர்க்கின்னா வின்னா முலையில்லாள் பெண்மை விழைவு. பதவுரை: தலை தண்டம் ஆக - தலை அறுபடும்படி, சுரம் போதல் - காட்டின்கட் செல்லுதல், இன்னா - துன்பமாம், வலை சுமந்து - வலையைச் சுமந்து, உண்பான் - அதனால் உண்டு வாழ்வானது, பெருமிதம் - செருக்கு, இன்னா - துன்பமாம்; புலை - புலால் உண்ணுதலை, உள்ளி - விரும்பி, வாழ்தல் - வாழ்வது, உயிர்க்கு -உயிர்க்கு, இன்னா - துன்பமாம். முலை இல்லாள் - முலையில்லாதவள், பெண்மை - பெண்தன்மையை, விழைவு - விரும்புதல், இன்னா - துன்பமாம் எ-று. வலைசுமந்து என்னுங் காரணம் காரியத்தின்மேற்று. புலை புன்மை : தன்னுயிரோம்பப் பிறவுயிர் கொன்றுணல் சிறுமையாகலின். அது புலை யெனப்படும். பெண்மை விழைவு இன்னா என் என்றது கடைபோகாதாகலின், ‘கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டு, மில்லாதான் பெண்காமுற் றற்று' என்பதுங் காண்க.
மணியிலாக் குஞ்சரம் வேந்தூர்த லின்னா துணிவில்லார் சொல்லுந் தறுகண்மை யின்னா பணியாத மன்னர்ப் பணிவின்னா வின்னா பிணியன்னார் வாழு மனை. பதவுரை: மணி இலா - [ஓசையினால் தன் வருகையைப் பிறர்க்கு அறிவிக்கும்] மணியை அணியப்பெறாத, குஞ்சரம் - யானையை, வேந்து - அரசன், ஊர்தல் - ஏறிச்செல்லுதல், இன்னா துன்பமாம்; துணிவு இல்லார் - பகையை வெல்லுந் துணிவில்லாதார், சொல்லும் - கூறும், தறுகண்மை - வீரமொழிகள், இன்னா துன்பமாம், பணியாத - வணங்கத்தகாத, மன்னர் -அரசரை, பணிவு - வணங்குதல், இன்னா - துன்பமாம்; பிணி அன்னார்பிணிபோலும் மனைவியர், வாழும் மனை வாழ்கின்ற இல், இன்னா - துன்பமாம் எ-று. சொல்லும் என்றதனால் தறு கண்மை மொழிக்காயிற்று; வஞ்சினமும் ஆம். பணியாத மன்னராவார் தம்மிற் றாழ்ந்தோர். பணிதல் - இன்சொல்லும் கொடையும். ‘எள்ளாத வெண்ணிச் செயல் வேண்டுந் தம்மொடு கொள்ளாத கொள்ளா துலகு'என்றபடி, தாம் வலியராய் வைத்து மெலிய பகைவரைவணங்குதல் எள்ளற் கேதுவாகலின் ‘பணிவின்னா'என்றார். ‘மன்னர் பணிவு' என்று பாடமாயின், அகத்தே பணிதலில்லாத பகை மன்னரது புற வணக்கம் இன்னாவாம் என்று பொருள் கூறிக்கொள்க. ‘சொல் வணக்க மொன்னார்கட் கொள்ளற்க' ‘தொழுத கையுள்ளும் படையொடுங்கும்' என்பன இங்கே கருதற்பாலன. பிணிபோறல் - சிறு காலை அட்டில் புகாமை முதலியன.
வணரொலியைம்பாலார் வஞ்சித்த லின்னா துணர் தூங்கு மாவின் படுபழ மின்னா புணர்பாவை யன்னார் பிரிவின்னா வின்னா உணர்வா ருணராக் கடை. பதவுரை: வணர் - குழற்சியையுடைய, ஒலி - தழைத்த, ஐம்பாலார் - கூந்தலையுடைய மகளிர், வஞ்சித்தல்வஞ்சித் தொழுகுதல், இன்னா - துன்பமாம்; துணர் கொத்தாக, தூங்கும் - தொங்குகின்ற, மாவின் - மாவினது, படு பழம் - நைந்து விழுந்த கனி, இன்னா - துன்பமாம்; புணர் - வேற்றுமையின்றிப் பொருந்திய, பாவை அன்னார் - பாவைபோலும் மகளிரது, பிரிவு - பிரிதல், இன்னா - துன்பமாம்; உணர்வார் - அறியுந் தன்மையர், உணராக் கடை - அறியாவிடத்து, இன்னா - துன்பமாம் எ-று. வணர் - வளைவு; ஈண்டுக் குழற்சி. ஒலி - தழைத்தல்; இஃதிப் பொருட்டாதலை ‘ஒலிநெடும் பீலி ' என்னும் நெடுநல்வாடை யடி உரையா னறிக. ஐம்பால் - ஐந்து பகுப்பினை யுடையது கூந்தல் ஐந்து பகுப்பாவன : குழல், கொண்டை, சுருள், பனிச்சை, முடி யென்ப. இங்ஙனம் ஒரோவொருகால் ஒவ்வொருவகையாக வன்றி ஒரொப்பனையிற்றானே ஐந்து வகையாற் பிரித்து முடிக்கப் படுவது என்று கோடலும் ஆம். படு பழம் - செவ்வியழிந்து விழுந்த பழம் புணர்தல் அன்பால் நெஞ்சு கலத்தல் : மணம் பொருந்துதலும் ஆம். உணர்வார் - உணர்ந்து குறை தீர்க்க வல்லார்; பாட்டின் பொருளறிவாரும் ஆம்.
புல்லார் புரவி மணியின்றி யூர்வின்னா கல்லா ருரைக்குங் கருமப் பொருளின்னா இல்லாதார் நல்ல விருப்பின்னாவாங்கின்னா பல்லாரு ணாணப் படல். பதவுரை: புல் - புல்லை, ஆர் - உண்கின்ற; புரவி - குதிரையை, மணி இன்றி - மணி யில்லாமல், ஊர்வு - ஏறிச் செலுத்துதல், இன்னா - துன்பமாம்; கல்லார் உரைக்கும் - கல்வியில்லாதார் கூறும், கருமப் பொருள் - காரியத்தின் பயன், இன்னா - துன்பமாம்; இல்லாதார் - பொருளில்லாதவரது, நல்ல விருப்பு - நல்லவற்றை விரும்பும் விருப்பம், இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, பல்லாருள் - பலர் நடுவே, நாணப்படல் - நாணப்படுதல், இன்னா - துன்பமாம் எ-று ஊர்வு : தொழிற்பெயர். பொருள் - பயன், நல்ல - அறம் நுகரப்படுவனவும் ஆம். நாணப்படல் - மானக்கே டெய்துதல்.
உண்ணாது வைக்கும் பெரும்பொருள் வைப்பின்னா நண்ணாப் பகைவர் புணர்ச்சி நனியின்னா கண்ணி லொருவன் வனப்பின்னா வாங்கின்னா எண்ணிலான் செய்யுங் கணக்கு. பதவுரை: உண்ணாது வைக்கும் - நுகராது வைக்கும், பெரும் பொருள் வைப்பு - பெரிய பொருளின் வைப்பானது, இன்னா துன்பமாம்; நண்ணா - உளம் பொருந்தாத, பகைவர் பகைவரது, புணர்ச்சி - சேர்க்கை, நனி இன்னா - மிகவுந் துன்பமாம்; கண் இல் ஒருவன் - விழியில்லாத ஒருவனது, வனப்பு - அழகு, இன்னா துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, எண் இலான் - எண்ணூல் பயிலாதவன், செய்யும் கணக்கு - இயற்றும்கணக்கு, இன்னா - துன்பமாம் எ-று. வைப்பு - புதைத்து வைப்பது, கண் - கண்ணோட்டமும் ஆம். எண் - கணிதம்; நூலுக்காயிற்று. எண்ணிலான் என்பதற்குச் சூழ்ச்சித் திறனில்லான் என்றும், செய்யுங் கணக்கு என்பதற்குச் செய்யுங்காரியம் என்றும் பொருள் கூறலும் ஆம் .
ஆன்றவிந்த சான்றோருட் பேதை புகலின்னா மான்றிருண்ட போழ்தின் வழங்கல் பெரிதின்னா நோன்றவிந்து வாழாதார் நோன்பின்னா வாங்கின்னா ஈன்றாளை யோம்பா விடல். பதவுரை: ஆன்று - கல்வியால் நிறைந்து, அவிந்த - அடங்கிய, சான்றோர் உள் - பெரியோர் நடுவே, பேதை - அறிவில்லாதவன், பகல் - செல்லுதல், இன்னா - துன்பமாம்; மான்று - மயங்கி, இருண்ட போழ்தின் - இருண்டுள்ள காலத்தில், வழங்கல் - வழிச் செல்லுதல், பெரிது இன்னா - மிகவுந் துன்பமாம்; நோன்றுஅடங்கி, வாழாதார் - வாழாமாட்டாதவர், நோன்பு - நோற்றல், இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, ஈன்றாளை - பெற்ற தாயை, ஓம்பாவிடல் - காப்பாற்றாமல் விடுதல், இன்னா துன்பமாம், எ-று. ஆன்று : ஆகல் என்பதன் மரூஉவாகிய ஆல் என்னும் பகுதியடியாகப் பிறந்தது. குணங்களால் நிறைந்து என்று கூறலும் ஆம். அவிந்த - ஐம்புலனும் அடங்கிய; பெரியோர்பாற் பணிந்த என்றுமாம். ‘ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் சான்றோர்' என்னும் புறப்பாட்டும், அதனுரையும் நோக்குக. மான்று - மால் என்பது திரிந்து நின்ற தெனினும் ஆம். பொழுது என்பதன் மரூஉ. ஓம்பா : ஈறு கெட்டது.
உரனுடையா னுள்ள மடிந்திருத்த லின்னா மறனுடை யாளுடையான் மார்பார்த்த லின்னா சுரமரிய கானஞ் செலவின்னா வின்னா மனவறி யாளர்தொடர்பு. பதவுரை: உரன் உடையான் - திண்ணிய அறிவுடையவன். உள்ளம் மடிந்து இருத்தல் - மனமடித்திருத்தல், இன்னா - துன்பமாம்; மறன் உடை - வீரமுடைய, ஆள் உடையான் - ஆட்களையுடையான், மார்பு ஆர்த்தல் - மார்பு தட்டுதல், இன்னா - துன்பமாம்; சுரம் - அருநெறியாகிய, அரிய - இயங்குதற்கரிய, கானம் - காட்டின் கண், செலவு - செல்லுதல், இன்னா - துன்பமாம்; மனம் வறியாளர்- மன வறுமை யுடையாரது, தொடர்பு - சேர்க்கை, இன்னா - துன்பமாம். உரன் - திண்ணிய அறிவாதலை ‘உரனென்னுந் தோட்டியான்' என்னுங் குறட்குப் பரிமேலழகர் உரைத்த உரையா னறிக. மார்பு ஆர்த்தல் - மார்பு தட்டிப் போர்க்கெழுதல்; காரணம் காரியத்திற்காயிற்று. வீரரையுடையான் தானே போர்க்குச் செல்லுதல் வேண்டா என்றபடி; வலிதிற் செல்லுதல் எனினும் ஆம். மனவறியாளர் மனநிறை வில்லாதவர்; புல்லிய எண்ணமுடையார் எனினும் ஆம். பாடம்) . அகம்வறியாளர்.
குலத்துப் பிறந்தவன் கல்லாமை யின்னா நிலத்திட்ட நல்வித்து நாறாமை யின்னா நலத்தகையார் நாணாமை யின்னாவாங் கின்னா கலத்தில் குலமில் வழி. பதவுரை: குலத்துப் பிறந்தவன் - நற்குடியிற் பிறந்தவன், கல்லாமை - கல்லாதிருத்தல், இன்னா - துன்பமாம்; நிலத்து இட்ட - பூமியில் விதைத்த, நல்வித்து - நல்ல விதைகள், நாறாமை முளையாமற் போதல், இன்னா - துன்பமாம்; நலம் தகையார் தன்மையாகிய அழகினையுடைய மகளிர், நாணாமை - நாணின்றி யொழுகுதல், இன்னா - துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, குலம் இல்வழி - ஒவ்வாத குலத்திலே, கலத்தல் - மணஞ் செய்து கலத்தல், இன்னா - துன்பமாம் எ-று. மகளிர்க்கு நாணம் சிறந்ததென்பது ‘உயிரினுஞ் சிறந்தன்று நாணே' என்னும் தொல்காப்பியத்தானு மறியப்படும். நலத்தகையார் நாணாமை என்பதற்கு நற்குணமுடைய ஆடவர் பழிபாவங்கட்கு அஞ்சாமை எனப் பொருள் கூறுவாருமுளர். மணஞ்செய்வார் ஆராய வேண்டியவற்றுள் குடியொப்புக் காண்டலும் ஒன்று : "கொடுப்பினன் குடைமையும் குடிநிரலுடைமையும், வண்ண முந் துணையும் பொரீஇ யெண்ணா, தெமியேத் துணிந்த வேமஞ்சா லருவினை" என்னுங் குறிஞ்சிப் பாட்டடிகள் ஈண்டு நோக்கற்பாலன.
மாரிநாட் கூவுங் குயிலின் குரலின்னா வீர மிலாளர் கடுமொழிக் கூற்றின்னா மாரி வளம்பொய்ப்பி னூர்க்கின்னா வாங்கின்னா மூரி யெருத்தா லுழவு பதவுரை: மாரி நாள் - மழைக்காலத்தில் , கூவும் - கூவுகின்ற, குயிலின் குரல் - குயிலினது குரலோசை, இன்னா - துன்பமாம்; ஈரம இலாளர் - அன்பில்லாதவரது, கடுமொழி கூற்று கடிதாகிய சொல், இன்னா - துன்பமாம்; மாரி வளம் பொய்ப்பின் - மழை வளம் பொய்க்குமாயின், ஊர்க்கு - உலகிற்கு, இன்னா துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, மூரி எருத்தால் - மூரியாகிய எருதால், உழவு - உழுதல்; இன்னா - துன்பமாம் எ-று. வீரமிலாளர் என்று கொள்ளலும் ஆம். மொழிக்கூற்று : ஒருபொருளிருசொல்; மொழியின் பகுதியுமாம். மழையாகிய வளம் என்க; மழையினது வளம் எனலுமாம். பொய்த்தல் - இல்லையாதல்; ‘விண்ணின்று பொய்ப்பின்' என்பது திருக்குறள். ‘மாரி பொய்ப்பினும்' என்பது புறம். மூரி யெருத்து : இரு பெயரொட்டு. வலிமை மிக்க எருதுமாம். ‘எருமையு மெருதும் பெருமையுஞ் சோம்பும் வலியு முரணு நெரிவு மூரி என்பது பிங்கலம். கட்டுக் கடங்காத காளையால் உழுதல் துன்பம் என்பதாம் முதிர்ந்த எருதால் என்று பொருள் கூறுவாரு முளர்.
ஈத்த வகையா னுவவாதார்க் கீப்பின்னா பாத்துண லில்லா ருழைச்சென் றுணலின்னா மூத்த விடத்துப் பிணியின்னா வாங்கின்னா ஓத்திலாப் பார்ப்பா னுரை. பதவுரை: ஈத்த வகையால் - கொடுத்த அளவினால், உவவாதார்க்கு - மகிழாதவர்க்கு, ஈப்பு கொடுத்தல், இன்னா துன்பமாம்; பாத்து உணல் - பகுத்து உண்ணுதல், இல்லார் உழை இல்லாதவரிடத்தில், சென்று - போய், உணல் - உண்ணுதல், இன்னா - துன்பமாம்; மூத்த இடத்து - முதுமையுற்ற பொழுதில், பிணி - நோய் உண்டாதல், இன்னா - துன்பமாம்; ஆங்கு அவ்வாறே, ஓத்து இலா - வேதத்தை ஓதுதல் இல்லாத, பார்ப்பான் - பார்ப்பானுடைய, உரை - சொல், இன்னா துன்பமாம் எ-று. ஈந்த வென்பது வலித்தலாயிற்று. உவவாதார்க் கீப்பின்னா என்பதனை, ‘இன்னா திரக்கப்படுத லிரந்தவ ரின்முகங் காணுமளவு' என்னுங் குறளுடன் பொருத்திக் காண்க. பாத்துணல் - தென்புலத்தார் முதலாயினார்க்கும், துறந்தார் முதலாயினார்க்கும் பகுத்துண்ணுதல். பாத்து - பகுத்து என்பதன் மரூஉ ஓத்து - ஓதப்படுவது; வேதம்.
யானையின் மன்னரைக் காண்ட னனியின்னா ஊனைத்தின் றூனைப் பெருக்குதல் முன்னின்னா தேனெய் புளிப்பிற் சுவையின்னா வாங்கின்னா கான்யாறிடையிட்ட வூர். பதவுரை: யானைஇல் - யானைப்படையில்லாத, மன்னரை - அரசரை, காண்டல் - பார்த்தல், நனி இன்னா - மிகவுந் துன்பமாம்; ஊனைத் தின்றுசுவை, இன்னா - துன்பமாம், ஆங்கு - அவ்வாறே, கான்யாறு - காட்டாறு, இடை இட்ட இடையிலே உளதாகிய, ஊர் - ஊரானது, இன்னா - துன்பமாம் எ-று. ‘யானையில் மன்னரைக் கண்டால் நனியின்னா' என்றாரேனும் அரசர் படையில் யானையில்லாதிருத்தல் இன்னா என்பது கருத்தாகக் கொள்க. ‘படைதனக்கு யானை வனப்பாகும்' என்பது சிறுபஞ்சமூலம். இனியவை நாற்பதிலுள்ள ‘யானையுடைய படைகாண்டன் மிகவினிதே ஊனைத்தின் றூனைப் பெருக்காமை முன்னினிதே, கான்யாற்றடைகரை யூரினி தாங்கினிதே, மானமுடையார் மதிப்பு என்னுஞ் செய்யுளுடன் இதனை ஒப்பு நோக்குக.
சிறையில்லாத மூதூரின் வாயில்காப் பின்னா துறையிருந் தாடை கழுவுத லின்னா அறைபறை யன்னவர்சொல்லின்னா வின்னா நிறையில்லான் கொண்ட தவம். பதவுரை: சிறை இல்லா - மதில் இல்லாத, மூதூரின் பழைமையாகிய ஊரினது, வாயில் காப்பு - வாயிலைக் காத்தல், இன்னா - துன்பமாம்; துறை இருந்து - நீர்த்துறையிலிருந்து, ஆடை கழுவுதல் - ஆடைதோய்த்து மாசுபோக்குதல், இன்னா துன்பமாம்; அறை - ஒலிக்கின்ற, பறை அன்னவர் - பறைபோன்றாரது, சொல் - சொல்லானது, இன்னா துன்பமாம்; நிறை இல்லான் -நிறுத்துந் தன்மையில்லாதவன் - கொண்ட - மேற்கொண்ட, தவம் தவமானது, இன்னா - துன்பமாம்; எ-று. நீர்த்துறையில் ஆடை யொலித்தல் புரியின், நீர் வழி நோயணுக்கள் பரவி இன்னல் விளைக்குமாகலின், "துறையிலிருந்தாடை கழுவுதலின்னா" என்றார். இனம் பற்றிப் பிற தூயதன்மை புரிதலுங் கொள்க. அறைபறை யன்னவர் - தாம் கேட்ட மறைக்கப்படும் பொருளினை யாண்டும் வெளிப்படுத்து மியல்பினர்; ‘அறைபறை யன்னர் கயவர்தாங் கேட்ட, மறைபிறர்க் குய்த்துரைக் கலான்' என்றார் பொய்யில் புலவரும். அறைபறை யாயவர்.