text
stringlengths
328
398k
‘இயல்பான மென் உணர்வு கொண்ட மனிதர்கள் வாழ்வின் கடினமான தருணங்களை எப்படிக்கடந்து போகிறார்கள் என்பதை அருமையாக சித்தரிக்கும் இந்தக் கதையுடன் எனது கதையை ஒப்பீடு செய்தமை என்னை மிகவும் நெகிழச் செய்கிறது. புதிய படைப்பாளிகளை ஊக்குவிக்கும் உங்களது வழிகாட்டலுக்கு மிகவும் நன்றி.’ ‘ Thamilini Jayakumaran தமிழினினி முகநூல் நண்பராகியது அவரது சிறுகதையை வாசித்துவிட்டு நான் படித்த ஆங்கிலக்கதைபோல் இருப்பதாக பாராட்டி எழுதியதற்கு உடனே நன்றி தெரிவித்து எழுதியிருந்தார். அந்தப் போர்க்காலக் கதையை நான் ஏன் இரசித்தேன் என்பதற்கு மாறக பலர் எழுதியதால் அந்தக் கதையை மீண்டும் கீழே பிரசுரித்துள்ளேன். மறைந்த விடுதலைப்புலிகளின் அரசியல்துறைக்கு பொறுப்பாக இருந்த தமிழினிக்கு முகநூலில்இணைவதற்கு அழைப்பு விடுத்தேன். உடனே அது ஏற்றக்கொள்ளப்பட்டது. தமிழினியை நேரே பார்க்காது இருந்தபோதும் உதயம் பத்திரிகை நடத்திய காலத்தில் கூர்மையாக அவதானித்து வந்தேன். போரின் இறுதிக்காலத்தில் வன்னியில் விடுதலைப்புலிகளின் வசமே இருந்து மீட்ட 18 வயதுக்கு கீழ்ப்பட்ட சிறுவர் சிறுமிகளை அவர்கள் தங்கியிருந்த கேகாலை அருகே இருந்த முகாமில் பார்த்து அவர்களுடன் ஒரு பகலைக் கழித்தவன். போர்முடிந்தபின் 350 பெண் போராளிகளுக்கு அரசாங்கம் தையல் பயிற்றுவித்தபோது அவர்களை அந்தத் தொழிற்சாலையில் சந்தித்தேன். சிறையில் இருந்தவர்களது அறிக்கைகள் மற்றும் அவர்கள் சம்பந்தமான சில குறிப்புகளையும், ஒப்புதல் வாக்குமூலங்கள் மற்றும் போராளிகளது வெளியிடப்படாத சுயசரிதைகள் என்பனவும் எனக்கு கிடைத்தது.எதிர்காலத்தில் ஏதாவது நாவல் எழுதுவதற்கு உதவும் என்பதால் அவற்றைச் சேகரித்தேன். சமீபத்தில் நான் கேள்விப்பட்டதில் தமிழினியின் வயிற்று வலி ஆரம்பத்தில் வந்தபோது, அவர் அதைத் தாங்கியபடி “இப்படி ஒரு வலி தனக்கு தேவை’’ என முடிந்தவரை வைத்தியத்திற்கு போகவில்லை என அறிந்தேன். விடுதலைப்புலிகளில் இருந்து செய்ததற்கான பாவத்தின் சம்பளம் அது என நினைத்திருக்கலாம். மலையக வம்சாவளியாக சிவகாமி சுப்பிரமணியத்தைப் போல் பரந்தனில் வசித்திருந்தால் நானும் விடுதலைப்புலிகளில் சேர்ந்திருப்பேன். அவரது விடுதலைப்புலிகள் காலத்து செயல்களுக்கு அவரை நான் பொறுப்பாக்கவில்லை. தற்பொழுது பிரபாகரன் மற்றும் பொட்டம்மான் என்ற இருவரைத்தவிர மற்றவர்களை அவரது சூழ்நிலைகள் அவர்களை உருவாக்கியிருக்கின்றன எனப் பார்க்கிறேன்.. கடைசிப்போரில் அகதிமுகாமில், நான் சென்று பார்த்தபோதும் அதிகமானவர்கள் மலையகத்தில் இருந்து 77லும் அதன் பின்பாகவும் இடம் பெயர்ந்தவர்கள். மக்கள் மீள்குடியேற்றத்தின் பின்பு மீண்டும் செட்டி குளத்தருகே உள்ள அகதிமுகாமில் அக்காலத்தில் எட்டாயிரம் மக்கள் சிறுதுண்டு காணிகூட அற்றதால் வேறு எங்கும் போகாது முகாமில் இருந்தனர். யாழ்ப்பாணத்தவர்கள் தொடக்கிய தமிழீழப்போராட்டத்தை கிழக்கு மாகாணத்தவரும், கடைசியில் வன்னி அதிலும் மலையகத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுமே அதிகமாக உயிர்கொடுத்து நடத்தினார்கள் என்பது தெளிவான விடயம். ஆரம்பகாலத்தில் சில பெண்கள் விடுதலைப்புலிகளை ரோமான்ரிக்காக நினைத்திருக்கலாம்.ஆனால் அவர்களுக்கு அது பிற்காலத்தில் புரிந்தது. அப்படியான இயக்கத்தில் திருமதி அடல் பாலசிங்கத்தின் தலையீட்டால் சிலமாற்றங்கள் வந்தாலும் உண்மையான மாற்றம் கட்டாயமாக திணிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்துப் பையன்கள் தொடர்சியாக வெளிநாடுகள் போனதால் இயக்கத்தில் ஆண்களை மட்டும் வைத்து போர்புரிய முடியாத நிலமை உருவாகியது. அத்தோடு அக்காலத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது இயக்கத்தில் இணைவதன் மூலமே கிடைக்கும் என்ற பிரச்சாரத்தை உண்டாக்கியதால் பல இளவயதுப் பெண்கள் தங்களுடைய பாடசாலைக்காலத்திலேயே இயக்கத்தில் இணைந்தனர். இப்படியான இயக்கத்தில் தமிழினியின் இடம் முக்கியத்துவமடைந்ததற்கு தமிழினியின் அறிவும் அதே நேரத்தில்விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் தமிழ்செல்வனினதும் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடப்பது முக்கிய தகமையாக இருந்திருக்கும். அதுவும் தமிழ்செல்வன் மற்றவர்களை பற்றி எப்பொழுதும் பிரபாகரனுக்கு ஊதும் சங்காக இருந்தவர் என்பது பல பழைய விடுதலைப்புலி இயக்கத்தினரது அபிப்பிராயம். ஆகவே அதையும் தமிழினி மனங்கொண்டிருக்கக்கூடும். தமிழினி இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பதிலிருந்து, பயிற்சிகள் கொடுப்பது, தாக்குதலில் பங்கு பற்றியது மற்றும் சுதந்திரப்பறவைகளில் இருந்தது எனப் பல காரியங்களில் ஈடுபட்டார் என்பதை அறிந்தேன். அவரது பயிற்சியின்போதும் பிற செயற்பாடுகளின் போதும் பல பெண்கள் தாங்கள் எப்படி நடத்தப்பட்டோம் எனச் சொல்லி என்னிடம் அழுதிருக்கிறார்கள். பதுங்கு குழியில் நித்திரையாகிய பெண்கள் தூசண வார்த்தையால் பேசப்படுவது தண்டிக்கப்படுவது சகசமானதானே! தமிழினி நேரடியாக சம்பந்தப்பட்ட பாரதூரமான விடயம் செஞ்சோலைக்கு அண்மையாக அமைந்திருந்த பயிற்சித்திடலில் நடந்த விமானத்தாக்குதலில் பலியான பாடசாலை மாணவிகளின் பலி. ஆனால் இந்த விடயமும் மடுவில் நடந்த தாக்குதல் போல் தமிழ் ஊடகங்களால் திரிக்கப்பட்ட விடயம். இதைக் குறைந்த பட்சம் தற்பொழுதாவது திருத்துவது அவசியம் என நினைக்கிறேன். முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி கல்வி மாவட்டங்களில் இருந்து பெண்கள் பயிற்சிக்காக புதுக்குடியிருப்பிலுள்ள வள்ளிபுனத்தில் வைத்திருந்தபோது இந்த விமானத்தாக்குதல் நடந்தது. இந்தப்பிள்ளைகள் 17-18 வயதிற்கு இடைப்பட்ட பாடசாலைப் பெண்கள். இவர்களை செஞ்சோலைக்கு 400 மீட்டர் அருகாமையில் உள்ள தற்காலிக மண்டபங்களில் வைத்திருந்தது இவர்களது உணவு செஞ்சோலையில் இருந்து கொண்டுவரப்படுமென்பதற்காகவும் தங்குமிட வசதிக்காகவுமே. மேலும் இந்தப்பிள்ளைகளின் பயிற்சிக்கு பொறுப்பாக இருந்தது தமிழினி. ஆனால் அவர்கள் பெற்றோர்களின் மறுப்பின் மத்தியில் அக்காலத்து முல்லைத்தீவு கிளிநொச்சி கல்விப்பணிப்பாளர்களின் பூரண ஒத்துழைப்புடனேயே கொண்டு வரப்பட்டார்கள். இந்தக் கல்விப்பணிப்பளர்கள் விடுதலைப்புலிகளின் கல்விப் பொறுப்பாளர் பேபி சுப்பிமணியத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் . பேபி அண்ணை, பேபி அண்ணை என வாலாட்டும் இவர்கள் தற்போதய மாகாண சபையின் செல்வாக்குமிக்க அரசியல்வாதிகள். அக்காலத்தில் வன்னிமக்களால் வெறுக்கப்பட்ட இவர்கள் இக்காலத்தில் வாக்களித்து அரசியல் பிரமுகர்களாக்கியதும் வன்னி மக்களே. ஆனால் இந்த 53 பெண்பிள்ளைகள் இறந்த (செஞ்சோலை) விடயத்தில் தமிழினியை மட்டும் நான் பொறுப்பாக்கவில்லை. தற்போது மக்களால் மாவட்டசமைக்கு தெரிவான அரசியல்வாதிகள் இதற்கு உடந்தையானவார்கள். இந்த பிள்ளைகள் மடடுமல்ல, வன்னிப் பெண்கள் எல்லோரும் ஆயுதப்பயிற்சிக்கு தயாராக்கப்பட்டதை நாமறிவோம். வயதான மூதாட்டிகளுக்கு பொல்லுடன் பயிற்சியளித்த படத்தினை பலர் பார்த்திருப்பார்கள். இலங்கை இராணுவத்திற்கு தமிழர்களில் மூதாட்டிகளும் ஆயுதமேந்த கற்றவர்கள் என்ற எண்ணத்தை உருவாக்குவதே இதன் நோக்கம். இந்த விடயங்கள் தமிழனியின் பொறுப்பில் இருந்தது. தமிழினி குடும்பத்தோடு சரணடைந்தபோது மக்களாலே அடையாளம் காட்டப்பட்டார் எனச் தெரிவிக்கப்படுகிறது. மேலும் தமிழனிக்காக ஆரம்பத்தில் வாதிட்ட தமிழ் அரசியல்வாதி அப்பாத்துரை விநாயகமூர்த்தி அந்த பொறுப்பில் இருந்து விலகிவிட சிங்கள வக்கிலே இதை வழக்காக்காமல் தமிழினி குற்றத்தை ஒப்புக்கொண்டு புனர்வாழ்வு முகாமுக்குச் செல்லமுடியும் என வாதிட்டதும் வழிகாட்டியதுமாகும். தமிழினிபோன்ற மிக முக்கியமான பொறுப்பில் இருந்த ஒருவரை இலங்கை அரசாங்கம் நாலு வருடத்தில் விடுதலை செய்தது மிகப்பெரியவிடயம். அமரிக்காவில் விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் வேண்டியவர்களுக்கு கிடைத்த இருபத்தைந்து வருடங்களோடு ஒப்பிடும்போது. அல்லது அமரிக்கர்கள் குவாண்டனமோ சிறையில் வைத்திருப்பவர்களோடு ஒப்பிட்டால் எனது கூற்றின் உண்மை புரியும். ஆனால் தமிழினி வெளிவந்தது பலருக்கு வயிற்றில் புளிகரைத்தது. அவர் ஒரு அரசியல்வாதியாக இறங்கியிருந்தால் தங்களது வியாபாரம் மூடிவிடும் என நினைத்திருக்கலாம். அதனால் அவசரம் அவசரமாக தமிழினியை துரோகியாக்க முயற்சித்தார்கள் தமிழினி போன்ற பெண்கள் எமது சமூத்தில் அவர்களது அறிவையும் துணிவையும் சமூகவளத்தைக் கூட்டுவதற்கு பயன்பட்டிருக்கவேண்டும் என நினைத்து ஏமாற்றத்துடன் இதை எழுதுகிறேன். விடுதலைப்புலிகள் இயக்கம் அழிந்துபோனபோது தமிழருக்கு விட்டு சென்றது சில எழுத்தாளர்களும் மற்றும் சில இசைக்கலைஞர்களுமே. அந்த ரீதியில் தமிழினி வாழ்ந்திருந்தால் நமது சோபாசக்தி போன்று பெண் எழுத்தாளர் நமக்கு கிடைப்பதற்கான வாய்ப்பு இருந்தது. ஒருபானை அரிசிக்கு ஒருசோறு பதம் என்பதுபோல் நான் படித்த அந்தச் சிறுகதையில் நான் இரசித்தது கடைசிவரையும் அந்ததோழி மரணமடைந்ததை தெரிவிக்காமல் கொண்டு சென்றது மிகவும் நேர்த்தி. இதைவிட அந்த கதையில் ஏதாவது இடத்தில் இறப்பைக் காட்டுகிறாளா என்பதற்காக இரண்டாவது மீள்வாசிப்பு செய்தேன். “குளிருக்கு விறைச்சுப்போன ஒரு கை நெஞ்சுக்கு மேலே கிடந்தது. மற்றைய கை பக்கத்தில கிடந்தது. ஒரு துப்பு இதை ஆரம்பத்தில் விட்டுவிட்டேன். ஒரு சிறந்த போர்க்கால கதையில் இரண்டு பகுதியையும் காட்டவேண்டும். காரணம் இறப்பு, காயம் இரு பகுதிக்கும் பொதுவானது. அரசியல்வாதிமட்டுமே தனத்து இனத்தை மட்டும் பேசுவான். காரணம் அவன் வாக்குப் பெறுவது அவனது மக்களிடம் இருந்து. ஆனால் கதையாசிரியன் பிரசாரம் செய்பவன் அல்ல. இரண்டு பக்கத்தினதும் நுண்ணிய விடயங்களை எ:டுத்துக்காட்டி வாசிப்பவரிடம் முடிவுகளை விடுவான். தமிழ்சமூகத்தில் போர்க்கால கதைகள் இனத்துவேசத்தையே காட்டி நிற்கும். இதற்கு மாறாக தமிழினியின் கதையில் இரணுவத்தினர் தங்கள் இழப்புகளை பேசுகிறது காட்டப்படுகிறது. போரின் வெற்றியை புகழ்பாடாமல் அதன் வலியை, இழப்பை அழகாக கூறும் கதையிது. இந்தச் சிறுகதை தனது வடிவம் பொருள் என்பதோடு மானிடத்திற்கே பொதுவான நட்பை மிகவும் உயர்ந்த தரத்திற்கு சிறந்த படிமமாக கொண்டு செல்கிறது. இந்தக்கதையின் இடங்களின் வர்ணனை மிகவும் அழகாக, அளவாக இருக்கிறது ‘மெலிந்துபோய்க்கிடந்த வயல் வரம்புகளைப்’எப்பொழுதும் வானம்பொய்த்த அல்லது உழப்படாத விளைநிலத்தை அழகாக உருவகிக்கும் அமரிக்கரான சேர்லி ஜக்சனின் “லாட்டரி “ என்ற கதையோடு ஒப்பிட்டு எழுதினேன். சேர்லி ஜக்சனின் பல கதைகள் எழுதினாலும் பேசப்படுவது இந்த லாட்டரி என்ற கதையே. அதைப்போல சிவாகாமியை தமிழினியாக நினைவுகூறாமல் தமிழில் சிறந்த ஒரு கதையை எழுதிய சிவகாமியாக நினைவு கூறவிரும்புகிறேன் சிறுகதை: மழைக்கால இரவு. – அது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூற்று மூன்றின், கார்த்திகை பன்னிரண்டாம் நாள், மாரி மழை ஊறி ஊறி பெய்து கொண்டேயிருந்தது. “க்குயிங்” “க்குயிங்” என்ற சத்தத்துடன் துப்பாக்கி ரவைகள் காதைக் கிழித்துக் கொண்டு பறந்தன. முன்னணிக் கள முனையில் இடை விடாமல் உறுமிக் கொண்டிருந்த கனரக ஆயுதங்களின் வீரியம் கூடிய ரவைகள் திடீர் திடீரென பக்கத்திலுள்ள பூவரசு வேலிகளையும் பனை மரங்களையும் பிய்த்தெறிந்தன. எறிகணைகள் விழுந்து சிதறும் இடங்களில் கிணறுகளை விடவும் வேகமாகத் தண்ணீர் குமிழி அடித்துக் கொண்டு ஊற்றெடுத்தது. பச்சை இலை குழைகள் கருகும் வாசனையும், கந்தகப் புகை மணமும், இரத்த வாடையும் சேர்ந்து வாந்தி வருமாப்பொல ஒரு கிறுதி மயக்கம் தள்ளாட்டியது. அன்று அதிகாலை ஒன்றரை மணிக்கு மூண்ட யுத்தம் முழு நாளும் தொடர்ந்து கொண்டிருந்தது. உலங்கு வானூர்திகள் மாறி மாறி வந்து தாக்குதல் நடத்திக் கொண்டேயிருந்தன. போர் விமானங்களும் குண்டுகள் முடிய முடிய நிரப்பிக் கொண்டு வந்து கொட்டிக் கொண்டேயிருந்தன. அப்போது நேரம் நண்பகலைக் கடந்துவிட்டிருக்க வேண்டும். ஆண்டுக் கணக்காக பயிரிடப் பட்டிருக்காத பரந்த வயல் வெளி புல்லுப் பற்றையெழும்பிக் கிடந்தது. செப்பனிடப்படாமல் மெலிந்துபோய்க்கிடந்த வயல் வரம்புகளைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. அந்த வயல் வரம்புகளின் தேய்ந்த விளிம்புகளோடு ஒண்டியபடி எனது அணி தற்பாதுகாப்புக்காக நிலையெடுத்திருந்தது. பெரும்பாலும் அன்றிரவு மீண்டும் எனது அணி போரின் முன்னணி களமுனைக்கு அனுப்பப்படலாம் என்ற எதிர்பார்ப்புடனிருந்தேன். எனக்கு தரப்பட்டிருந்த பதினைந்து பேர் கொண்ட அணியில் நேற்றிரவு நடந்தசண்டையில் காயமடைந்தவர்கள், மரணித்தவர்கள் போக ஆறு போ் தான் எஞ்சியிருந்தோம். வேறு அணிகளிலும் எஞ்சியவர்களை ஒன்று சேர்த்து அணிகள் மறு சீரமைக்கப்படும் வரை சிதைவுற்றிருந்த எம்மைப் போன்ற அணியினருக்கு சிறிய ஓய்வு தரப்பட்டிருந்தது. அன்றிரவு நடந்த சண்டையில் காயமடைந்தவர்களை உடனடியாகவே பின்னணியில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் மருத்துவ நிலைகளுக்கு அனுப்பியாகி விட்டது. மரணித்தவர்களின் உடல்கள் மட்டும் அது வரையிலும் அனுப்பப்படாமல் மழைத் தண்ணீரில் நனைந்து ஊறிப் பெருத்து உருமாறிக் கொண்டிருந்தது. அவைகள் பெற்றோர்கள் உரித்துடையோருக்கு ஒப்படைக்கப்படும்வரை மீண்டும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டியிருந்தது. சங்கவி எனக்கருகில் படுத்திருந்தாள் அவள் எப்பவும் அப்படித்தான் நீட்டி நிமிர்ந்து மல்லாந்துதான் படுப்பாள். அப்படிப் படுக்கா விட்டால் நித்திரை வராது எனச் சொல்லுவாள். பொம்பிளைப் பிள்ளைகள் அப்பிடிப் படுக்கக் கூடாது என அவளின் அம்மம்மாவிடம் சின்ன வயதில் அடிக்கடி திட்டு வாங்கியிருப்பதாக சொல்லியிருக்கிறாள். ஆனாலும் அந்தப் பழக்கம் நானறிந்த வரையிலும் அவளுக்கு மாறவேயில்லை. தலை ஒரு பக்கமாக திரும்பியிருந்தது, வாயைக் கொஞ்சமாக திறந்து கொண்டு படுத்திருந்தாள். குளிருக்கு விறைச்சுப்போன ஒரு கை நெஞ்சுக்கு மேலே கிடந்தது. மற்றைய கை பக்கத்தில கிடந்தது. ஆறெழு மாதங்களுக்குப்பின் அன்றுதான் அப்பிடி நிறைய நேரம் சங்கவி படுத்திருந்தாள். நேற்றுக் கூட சொல்லிக் கொண்டிருந்தாள், ’இந்த சண்டை முடியவிட்டு முதலில நிம்மதியா நித்திரை கொள்ளவேணும்.’ உண்மைதான், அந்த யுத்தத்தின் தயார்ப்படுத்தலுக்காக, சுமார் ஒரு வருட காலமாகவே தொடர் பயிற்சிகளும் துாக்கமில்லா இரவுகளும்தான் எங்களுக்கு வாய்த்திருந்தது. போர் தொடங்குவதற்கு முதல்நாள் முன்னிரவுப் பொழுதில் மழை சற்று ஓய்ந்திருந்தது. கருமையான வானத் திரையில் பதிக்கப்பட்ட வைரக்கற்களாக நட்சத்திரங்களின் ஜோலிப்பு மனதைக் கொள்ளையடிப்பதாயிருந்தது. ஐயாயிரம் போராளிகள் பங்கு பற்றும் பெரும் போர் நடவடிக்கையின் கடைசி ஆயத்தங்கள் முடிந்து புறப்படுவதற்கான இறுதி தரிப்பிடங்களில் படையணிகள் நிலை கொண்டிருந்தன. தாக்குதலுக்கு உள்ளாகப் போகும் அந்த இராணுவ முகாமின் பாரிய தேடோளி விளக்குகள் ஆங்குமிங்குமாக சுழன்று சுழன்று இரவைப்பகலாக்கி தமது விழிப்பு நிலையை காண்பித்துக் கொண்டிருந்தன. சிறிய மா மரமொன்றின் அடியில் சாய்ந்திருந்த என்னருகில் சங்கவியும் ஓய்வாக அமர்ந்திருந்தாள். மந்தகாசமான புன்னகையுடன் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தாள். விரிந்த உதடுகளும், கனவு காணுமாப் போல பாதி செருகிக்கிடந்த கண்களும், அவளிதயம் விபரிக்க முடியாத உணர்வுகளுக்குள் லயித்திருப்பதை எனக்கு உணர்த்தியது. “என்னடி முழிச்சுக்கொண்டே நித்திரை அடிக்கிறியோ” எனது சீண்டல் அவளைக் குழப்பியதாக தெரியவில்லை. என்னிதயத்திலும் பொங்கியெழும் உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்ளவேண்டும் போலிருந்தாலும், அவளது அந்த இனிய மோன நிலையை குழப்பவும் மனமில்லாதிருந்தது.. ஒரு போர்ப் பயணத்திற்குரிய பரபரப்பான ஏற்பாடுகள் முடிந்து இன்னும் ஒரு சில மணித்தியாலயங்களில் புறப்படுவதற்கான பதட்டம் அனைவரின் முகங்களையும் கனமாக மூடியிருந்தது. பலர் தாழ்ந்த குரல்களில் தம் தோழியருடன் கதைத்துக் கொண்டிருந்தனர். சிலர் பாதி நிலவு தெளித்திருந்த ஒளியில் தம் உறவுகளுக்கு இறுதியாக சொல்ல நினைக்கும் செய்திகளை கடிதங்களாக வரைந்து கொண்டிருந்தனர். இன்னும் சிலர் எல்லா சலனங்களையும் ஒத்தி வைத்து விட்டவர்கள் போல ஆழ்ந்த உறக்கத்திலிருந்தனர். தன் மௌனம் கலைந்த சங்கவி எனது கையுடன் தனது விரல்களைக் கோர்த்துப் பிணைந்து கொண்டாள். எதையோ பேசுவதற்குத் தயாராகிறாள் என்பது புரிந்தது. “இன்னும் கொஞ்ச நேரத்தில நிலைமை எப்படி மாறப்போகுது. அழகான இந்த இரவின்ர அமைதியே குலையப் போகுது, எத்தனை அம்மாக்களின்ர பத்து மாதக் கனவுகள் கலையப் போகுது நாளைக்கு எங்கட சனங்கள் விழுந்தடிச்சுக் கொண்டு பேப்பர் எடுப்பினம்” எனக் கூறிவிட்டு மீண்டும் அமைதியாகிப் போனாள். நாங்களிருவரும் சம வயதுடையவர்கள். எமக்கு விபரம் புரியத் தொடங்கிய சிறு வயதிலிருந்தே தொண்டையை நெருக்கிக் கொண்டிருக்கின்ற யுத்தத்தின் பாடுகளுக் கூடாகவே வளர்ந்திருந்தோம். நான் வன்னியின் ஒரு கிராமத்திலும் அவள் யாழ்ப்பாணம் வடமராட்சியின் ஊரொன்றிலும் பிறந்திருந்தாலும், அமைதியான ஒரு வாழ்வு எப்படியிருக்கும் என கற்பனை பண்ணிக் கூட பாரக்கவே முடியாதளவுக்கு மலைப்பாம்பு மாதிரி எமது வாழ்வை வளைத்து இறுக்கிக் கொண்டிருந்தது நீண்டு கொண்டேயிருந்த யுத்தம். விறைப்பெடுக்கச் செய்த குளிரையும் மீறி பெரு மூச்சொன்று அவளிடமிருந்து சூடாக வெளியேறியது. எனக்கோ என்றால் நெஞ்சுக்குள்ளாக பாராங்கல்லொன்று அடைத்துக்கொண்டு இருப்பதைப் போல சாதாரணமாக மூச்செடுத்து விடவும் கூட கடினமாக இருந்தது. அவள் சொல்லுவதை மட்டுமே நான் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தேன். படித்து பல்கலைக்கழகம் செல்ல வேண்டுமென்ற கனவு உயர்தரம் படித்துக் கொண்டிருக்கும்போதே ஊரில் நிலவிய யுத்த சூழ்நிலையில் எம்மைப் போன்ற பலருக்கும் கூட கலைந்து போயிருந்தது. ஏதாவது புதுமைசெய்யத்துடிக்கும் அந்த பதின்மப் பருவத்தில் போரிடுதல் ஒன்றுதான் எமது கனவுகளை நனவாக்கும் எனக் கருதினோம். யாழ் நகரத்தில் உள்ள பிரபல கல்லுாரியின் மாணவியான சங்கவியும் வன்னிக் கிராமத்து பள்ளியொன்றின் மாணவியான நானும் போர்ப் பயிற்சிப் பாசறையின் நண்பிகளானோம். எம் நினைவுகளை கலைத்தவாறு சட்டென மரக்கிளைகள் அலைப்புற இரவுப் பறவையொன்று வேகமாக எழும்பிப் பறந்து சென்றது. பொல பொலவெனச் சிதறிய தண்ணீர் துளிகள் இருவரின் தலைகளையும் நனைத்துச் சிதறியது. தண்ணீரைக் கைகளால் வழித்து எறிந்துகொண்டு உடைகளையும் இலேசாக உதறிக்கொண்டோம். தடிப்பான சீருடையையும் தாண்டி தேகம் சிலிர்த்தது “இந்த சண்டை முடிய எல்லாருக்கும் லீவு கிடைக்கும் என பொறுப்பாளர் சொன்னவா, நான் உன்னோட வரட்டுமா? எனக்கு வன்னியில ஊருகளைப் பாக்கிற தெண்டால் சரியான விருப்பமடி. பச்சையான வயலுகளும் நெளிஞ்சு நெளிஞ்சு ஓடுகிற வாய்க்கால்களும், பென்னாம் பெரிய யானை நிக்கிற காடுகளும் அப்பப்பா என்ன இயற்கையப்பா..” “அதுக்கென்னடியப்பா வா போவம் நான் பள்ளிக்கூடம் கொண்டு போன சைக்கிள் இப்பவும் இருக்குமெண்டு என நினைக்கிறன், இரண்டு பேரும் சுத்தித் திரியலாம், நான் படிச்ச பள்ளிக் கூடத்தைக் காட்டுறன், நானும் கூட்டாளிப் பிள்ளைகளும் தாவணி உடுத்துக் கொண்டு ஆனி உத்தரத் திருவிழா பார்க்கப் போன முருகன் கோயிலைக் காட்டுறன், அங்க போகிற பெட்டையள் கூட்டத்தைக் கண்டாலே நாதஸ்வரக்காரன் ’ராசாத்தி மனசில’ பாட்டுத்தான் வாசிப்பான் தெரியுமாடி நாங்கள் அவரை கோவத்தோட நல்லா முறைச்சுப் பாத்திட்டு வருவம்” எனது கதையைக் கேட்டதும் பக்கென வெடித்த சிரிப்பை அடக்குவதற்காக தனது வாயை கைகளால் இறுக்கி பொத்திக்கொண்டாள் சங்கவி. மிக அருகான இராணுவதளத்திலிருந்து ஆட்லெறி எறிகணையொன்று ’கும்’ என்ற அதிர்வுடன் எழும்பி கூவிக் கொண்டு புறப்பட்ட சிலநொடிகளிலேயே தூரத்தில் வெடித்துச்சிதறும் சத்தம் கேட்டது. எத்தனை தொட்டில் குழந்தைகளின் உறக்கம் கலைந்து போனதோ என எண்ணிக் கொண்டேன். தலையை உலுக்கி நினைவுகளை உதற முனைந்தேன்.. அசையாமல் படுத்திருக்கும் சங்கவியின் கிராப்புத் தலை முடியினை கோதி விட வேண்டும் போலிருந்தது. இயக்கத்தில் இணைந்த ஆரம்ப நாட்களில் எல்லாமே புதியதான காலகட்டம், இறுக்கமான நாளாந்த அட்டவணையின்படி செயற்படவேண்டும். பயிற்சி முகாமில் மிகவும் துடிப்பான, கலகலப்பான போ்வழிகளான நாம் அனைவராலும் விரும்பப்பட்டவர்களாக இருந்தோம். பெரும்பாலும் ஒத்துப்போகும் இயல்புகள், ரசனைகள், வேறுபட்ட சிந்தனைபோக்கு இவைகளினால் இணைபிரியாத எமது நட்பு பொறுப்பாளர் மட்டங்களிலும் பிரசித்தமானதாகவே இருந்தது. ஓய்வு நேங்களில் புத்தகவாசிப்பு, ஒன்று சேரும் நேரங்களில் நீளும் உரையாடல்கள், அப்பப்பா எப்பவுமே முடிவடையாதது எங்களின் சம்பாசணைகள் அவளது மூளையின் மடிப்புகளில்தான் எத்தனை கனவுகள், ஆசைகள், இலட்சியங்கள் வைத்திருந்தாள். சராசரியான விடயங்களை பேசிக் கொள்ளும் தோழிகளோடு எங்களிருவருக்கும் எப்போதுமே ஒத்துப்போவது குறைவு. எமது உரையாடல்களில் பங்கு பற்றும் தோழிகள் சற்று நேரத்தில் ’இதுகள் சரியான கழண்ட கேசுகள்’ எனும் விதமான பார்வையை வீசி விட்டு மெதுவாக இடத்தைக்காலி செய்து விடுவார்கள். அந்த யுத்த நடவடிக்கை சரியாக நள்ளிரவு ஒன்றறை மணிக்கு ஆரம்பிக்கப் படவிருந்தது. மிகவும் இரகசியமான சங்கேத சமிக்கைகளுடன் எமது ’முன்னரங்க தடை உடைக்கும்’ அணியும் முன்னணியில் நகர்ந்து கொண்டிருந்தது. ’உச்ச பாதுகாப்புடன் இருந்ததான அந்த இராணுவ முகாமின் முன்னணிப் பாதுகாப்பு வேலியில் காணப்படும், முள்ளுக்கம்பி சுருள்களையும், நிலக் கண்ணிகளையும், சூழ்ச்சிப் பொறிகளையும் தகர்க்கக் கூடிய டோபிடோ குண்டுகளை வெடிக்க வைத்து பாதையொன்றை ஏற்படுத்திக் கொண்டு, இராணுவ நிலைகள் மீது திடீர் தாக்குதல் நடத்தியவாறு, உயரமான மண்அரணை வேகமாக கடந்து உள்ளுக்கு இறங்க வேண்டும். பின்னுக்கு வரும் தாக்குதல் அணிகள் அந்தப் பாதைக்கூடாகவே முன்னேறிச் சென்று இராணுவ தலைமையகம் உள்ளிட்ட பிரதான மையங்கள் மீது தாக்குதலை மேற் கொள்ளுவார்கள்’ இதுதான் எனது அணிக்கு தரப்பட்டிருந்த தாக்குதல் திட்டம். இதற்கான கடின பயிற்சிகளையும் சண்டைக்கான ஒத்திகையினையும் மேற் கொண்டிருந்தோம். இராணுவ தளத்தினை சுற்றி வளைத்து பல முனைகளிலும் அணிகள் இவ்வாறாக பாதைகளை உடைக்க வேண்டியிருந்தது. அந்தப் பாதைகளுக் கூடாக இராணுவ முகாமுக்குள் பெரியளவில் படையணிகள் உள் நுழைந்து தாக்குதல் நடத்துவதுதான் திட்டமாக இருந்தது. இராணுவ முகாம் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் எனவும், பெறுமதியான ஆயுத தளபாடங்கள் கைப்பற்றப்படும் எனவும், இந்த நடவடிக்கையின் வெற்றிக்காக சுமார் ஐயாயிரம் போராளிகள் வரை யுத்தத்தில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும், கூறப்பட்டிருந்தது. இறுதி ஒத்திகைப் பயிற்சி முடிந்து, வரைபடத்தில் விளக்கம் தரப்பட்டு, முழுமையான ஆயுதபாணிகளாக படையணிகள் தயார்ப்படுத்தப்பட்டு, “சென்று வாருங்கள் வென்று வாருங்கள்” என வாழ்த்துக் கூறி வழி அனுப்பப் பட்டிருந்தோம். போர்க்களத்தின் சூனியப் பிரதேசத்தை அண்மித்த பகுதிவரை தாக்குதல் அணிகளை ஏற்றி சென்ற வாகனங்களுக்கு பின்னால் பல லொறிகளில் ஆயிரக்கணக்கான சவப்பெட்டிகளும் தயாரிக்கப்பட்டு கூடவே கொண்டு வரப்பட்டிருந்தன. தாக்குதல் தொடங்கிய சற்று நேரத்திலேயே எமது அணி உள்நுழைந்து விட்டிருந்தாலும், மிகவும் உயரமாக அமைக்கப்பட்டிருந்த மண் அரணை கடந்து முன்னேறிச் செல்லும் முயற்சியிலே அந்த இடத்திலேயே பலர் உயிரிழக்க நேர்ந்தது. இராணுவத்தினர் கனரக ஆயதங்களின் உதவியுடன் பலமான எதிர் தாக்குதலை மேற் கொள்ளத் தொடங்கியிருந்தனர். மிகுந்த பிரயத்தனத்துடன் எனது அணி தனது பணியை முடித்திருந்த போது ஆரம்ப நகர்விலே எம்முடனிருந்த பல தோழிகள் உயிரிழந்தும், இன்னும் சிலர் படு மோசமான காயங்களையும் அடைந்திருந்தனர். எஞ்சியிருந்தவர்கள் பயங்கரமாகக் களைப்படைந்திருந்தோம். அந்த இராணுவ தளம் வயல் வெளி சூழ்ந்த பிரதேசமாகையால், ஏற்கனவே அமைக்கப்பட்ட பாதுகாப்பு நிலைகளிலிருந்து வந்த எதிர்த்தாக்குதல்களால் எமது தரப்பு அணிகள் வயல் வெளியைக் கடக்கும் முயற்சியிலேயே அடிவாங்க வேண்டியிருந்தது. தொடர்ந்து பலர் உயிரிழந்தும், காயமடைந்தும், கொண்டிருந்தனர். உயரமான காவலரணிலிருந்து மேற் கொள்ளப்பட்டுக்கொண்டிருந்த சினைப்பர் தாக்குதல்(குறிபார்த்துச் சுடுதல்) மிகுந்த நெருக்கடியை தந்தது. வரம்புக்கு மேலாக தலையை உயர்த்தினால் கட்டாயம் வெடி விடும் என்ற நிலைமையிலும், இராணுவ காவலரண்களை நோக்கி தாக்குல் நடத்தியவாறு எழும்பி ஓடிச் சென்றவர்கள் தலையிலும், மார்பிலும் சூடுகளை வாங்கியபடி சேற்றுத் தண்ணீர் தளம்பிக் கொண்டிருந்த வயல்களுக்குள் சரிந்து விழுந்து கொண்டேயிருப்பதை தவிர்க்க முடியாமலிருந்தது. அப்படியிருந்தும் பல அணிகள் உள்நுழைந்து மிக நெருக்கமான நிலையில் நின்று போரிட்டனர். அருகருகாகவே இறந்தும் விழுந்தனர். சிக்கலான முள்ளுக் கம்பிச் சுருளுக்குள் ஒரு ஆண் போராளி காயத்துடன் சிக்கிக் கொண்டு திணறிக் கொண்டிருந்தான், அவனை மீட்டெடுப்பதற்கான முயற்சியில் ஓடிச் சென்ற பெண் போராளி ஒருத்தி அந்த இடத்திலேயே சூடுபட்டு விழுந்தாள். பல மணி நேரமாக அந்த இடத்தை எவராலும் நெருங்கவே முடியாமலிருந்தது. அதிகமான இரத்தம் வெளியேறியதால் சற்று நேரத்தில் அவனது சடலம் அக்கம்பிச் சுருளுக்குள் அசைவில்லாமல் தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டேன். எனது அணி மிகவும் நலிவடைந்திருந்தது. காயமடைந்தவர்களுக்கான அவசர முதழுதவிகளை வழங்கி அவர்களை ’காவும் குழுவினர்’ பின்னணி மருத்துவ நிலைகளுக்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களையும் தூக்கிக் கொண்டு பின்வாங்கும்படி எனது அணிக்கு கட்டளை கிடைத்தபோது பொழுது புலரத் தொடங்கியிருந்தது. அன்று நண்பகல்வரையிலும் உக்கிரமாக நீடித்த சண்டை சற்று தணிவான நிலைமைக்கு சென்றிருந்தது. அப்போது களமுனையில் ஒரு சுடுகாட்டின் அமைதி நிலவியிருந்தது. ஓய்வில்லாதபடி குண்டுகளைச் சொறிந்து கொண்டிருந்த வானூர்திகளும் ஓய்வெடுக்கின்றன போல என நினைத்துக் கொண்டேன். எமது அணி ஓய்வுக்காக நிலை கொண்டிருந்த பூவரசு வேலிக் கரையினை அண்டிய சிறிய மண் பாதைக் கூடாக, முன்னணி நிலைகளில் நின்று போரிட்டு எம்மைப் போல பலமாக சிதைவுற்ற அணிகளைச் சேர்ந்தவர்கள் பின்வாங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் எனக்கு அறிமுகமான பலரது முகங்கள் காணாமல் போயிருந்தது. அவர்கள் காயமடைந்தோ அல்லது மரணித்தோ போய்விட்டார்கள் என மனம் சொல்லிக் கொண்டது. அதேவேளை பல புதிய அணிகள் ஓட்டமும் நடையுமாக முன்னணிக்கு நகர்த்தப்பட்டுக் கொண்டிருந்தன. கைகளிலும், கால்களிலும் உடலின் பல பாகங்களிலும் பாரிய காயங்களுடன் அலறிக் கொண்டிருந்த காயக்காரர்களையும், உயிரிழந்து கிடந்த சடலங்களையும் கடந்தவாறு முன்னணிக்கு களமுனைக்கு சென்று கொண்டிருந்தவர்களின் முகத்தில் எந்தச் சுரத்துமே இல்லாதிருந்தது. அன்றிரவு களமுனையில் நான் கண்டு கடந்து வந்த காட்சிகள் இன்னமும் கண்ணுக்குள்ளேயே நின்று சுழன்று கொண்டிருந்தன. சினிமாவில்கூட இரத்தக்காட்சிகள் வரும்போது கண்களை மூடிக் கொள்ளும் இயல்பு கொண்டவர்கள்தான் எனது அதிகமான தோழிகள். காலம் எம்மீது திணித்துவிட்டிருந்த அந்த போராட்ட வாழ்க்கையின் . சில தருணங்களில் நாம் கண்னால் காணும் காட்சிகள் மனதை மிகவும் பேதலிக்கச் செய்பவையாக இருந்தாலும் கட்டளைக்கு கீழ்பணியும் இராணுவ மரபு செயலுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கும் இயந்திரம் போலாக்கிவிடும். அன்றையபோரில் ஈடுபட்டுக் மரித்துப் போன இராணுவத்தினரதும், போராளிகளினதும் சடலங்கள் ஒன்றன் மேலொன்றாக புரண்டு கிடந்ததை என் கண்களால் கண்டேன். பகைமை, விரோதம், கொலைவெறி இவைகளெதுவுமே அப்போது அந்த முகங்களில் தென்படவில்லை. உயிர் போகும் தருணத்தின் கடைசி வலி மட்டும் அந்த முகங்களில் எஞ்சியிருந்தது. ஓயாமல் பெய்த வண்ணமேயிருந்த மழை அங்கு சிந்திக் கொண்டிருந்த இரத்தத்தை கரைத்துக் கொண்டு சிவப்பு வெள்ளமாக வயல்களிலும், வாய்க் கால்களிலும் வழிந்தோடிக் கொண்டிருந்தது . அந்தக் குருதிச் சகதியில் கால்கள் புதையப் புதைய நடந்த போது, இனம்புரியாத ஏதோவொரு இயங்குவிசை என்னை நெட்டித் தள்ளிக் கொண்டு போவதைப் போல உணர்ந்தேன். அடுத்த கட்டளை எந்த நேரத்திலும் எனது அணிக்கு பிறப்பிக்கப்படலாம் என்பதை ஊகிக்க முடிந்தது, உடனடியாக முன்னேறிச் செல்வதற்குரிய தயார் நிலையில் இருந்து கொள்ளும்படி எனது அணியைச் சேர்ந்த தோழிகளுக்கு அடிக்கடி அறிவுறுத்தல் கொடுத்துக் கொண்டிருந்தேன். உடம்பு முழுவதும் சேறும் சகதியுமாயிருந்த, அவர்கள் ஒவ்வொருவருடைய முகங்களிலும் களைப்பு அப்பிப் போயிருந்தது. நின்று நிதானித்துக் கொண்டிருக்க நேரமிருக்கவில்லை, தமக்காக பகிர்ந்தளிக்கப்பட்டிருந்த உலர் உணவுகளை உண்டு பசியாறிக்கொண்டும், தமது துப்பாக்கிகளை சுத்தப்படுத்திக் கொண்டுமிருந்தனர். அவர்களிடையே வழக்கமான எந்த சல சலப்புக்களும் இருக்கவில்லை, ஒரு இறுக்கமான மனநிலையுடன், கட்டளைகளை செயற்படுத்துவதில் மட்டுமே அவர்களுடைய புலன்களை குவித்திருந்தார்கள், ஏதோ ஒரு கட்டத்தில் அந்த சண்டை முடிவுக்கு வரும் போது, உயிரோடு திரும்பும் சந்தர்ப்பம் சிலருக்காவது கிடைக்கலாம். ஆனாலும் எல்லா முகங்களிலுமே அப்படியொரு நிச்சயம் முற்றாக துடைக்கப்பட்டிருந்தது. திடீரென உலங்கு வானூர்திகள் சில மும்முரமான தாக்குதல்களை நடத்திக் கொண்டே வட்டமடிக்கத் தொடங்கின. வேறு சில உலங்கு வானூர்திகள். தரையிறங்குவதும் மேலெழும்புவதுமாக இருந்தன. இராணுவத்தினரும் தமது அணிகளை தயார்படுத்துகிறார்கள் எனப்புரிந்தது. அவர்களில் காயப்பட்டிருந்தவர்களையும், உயிரிழந்துவிட்டவர்களின் உடல்களையும் அந்த வானுார்திகளில் ஏற்றிச் செல்கிறார்கள் என்பது புரிந்தது. அவர்களில் எஞ்சியிருப்பவர்களும் பிரிந்து போன தமது நண்பர்களுக்காக மனம் வருந்திக் கொண்டு, அடுத்த கட்ட யுத்தத்திற்கு தயாராகிக் கொண்டிருப்பார்கள் என நினைத்துக் கொண்டேன். எனது பார்வை உறங்கிக்கிடக்கும் சங்கவி மீது படிந்தது. சாதாரண நாட்களில் தலையிடி காய்ச்சல் எனக்கூட படுத்தறியாத சங்கவி, பயிற்சிக் காலங்களில் நின்று கொண்டே நித்திரை கொள்ளுவாள். குப்புறப்படுத்து நிலையெடுத்தால் பாதியுடம்பு மூழ்கும்படியானபடியான சேற்று வயலில் மணிக்கணக்காக நீளும் இரவுப் பயிற்சிகளின் போது மெல்லிய குறட்டையுடன் அவள் உறங்கி விட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. ஆனால் இப்போது அவளைப்பார்க்க பொறாமையாக இருந்தது. எப்படியொரு நிம்மதியான உறக்கத்திற்குள் சென்றிருக்கிறாள். எனக்கும் கூட உடனடியாகவே அவளைப்போல உறங்கிவிட வேண்டும் போலிருந்தது. வானூர்தியிலிருந்து படையினருக்கு வீசப்பட்டிருந்த உணவுப் பொதிகள் எமது பக்கத்திற்கும் தாராளமாகவே வந்து விழுந்திருந்தன. பேரீச்சம்பழ பக்கற்றுக்கள், டின்களில் அடைக்கப்பட்ட சமைத்த உணவு வகைகள், சீஸ்கட்டிகள், இப்படி நிறைய, ஆனால் எனக்கோ பசி, தாகம் என்பதை உணர முடியாமலிருந்தது. எனது வயிறு ஒட்டிப் போய் இறுகிக் கிடந்தது. ஒருமிடறு தண்ணீர் கூட உள்ளிறங்குமா எனத் தெரியாதிருந்தது. முதல்நாள் மத்தியானம் விசேட உணவாக தரப்பட்டிருந்த புரியாணிப்பார்சலில், மிகவும் சுவையாக சமைக்கப்பட்டிருந்த கோழியின் கால் எலும்பை கடித்து சுவைத்துச் கொண்டிருந்த சங்கவியின் தோற்றம் கண்ணுக்குள் வந்து நின்றது, அவள் நல்ல சாப்பாட்டுப்பிரியை, எஸ். பொ வின் “நனைவிடை தோய்தல்“ புத்தகத்தை வாசித்து வாசித்தே நாக்கைச்சப்புக் கொட்டுவாள். “இந்தச்சண்டை முடிந்தவுடனே வீட்டுக்கு போய் முதல் வேலையாக அம்மாட்டச் சொல்லி குழல்புட்டும் கத்தரிக்காய் பொரிச்ச குழம்பும், நிறைய வெங்காயம் போட்ட முட்டைப் பொறியலும் செய்து சாப்பிடவேணுமடி” என்பாள். சாதாரணமாக பசியிருக்கவே மாட்டாள், கொஞ்சமாக வயிறு கடிக்க ஆரம்பித்ததும் எல்லா வேலைகளையும் மறந்து எங்கயாவது கொஞ்சம் சாப்பாடு கிடைக்குமா, என தேடத் தொடங்கி விடுவாள். நள்ளிரவு நேரமானால் கூட காவல்கடைமை முடித்த கையுடன் ஏதாவது கொறித்து விட்டுத்தான் நித்திரைக்குப் போவாள். இப்போது பசியே இல்லாத மாதிரி படுத்துக் கிடப்பதை பார்த்துக் கொண்டிருந்தேன். சங்கவியின் ஜீன்ஸ் பொக்கட் ஒன்று புடைத்துக் கொண்டு இருப்பதைக்காணமுடிந்தது. கையை உள்நுழைத்துப் பார்த்தேன். “ஓ…. முதல் நாளிரவு கடைசியாக அனைவருக்கும் பகிரப்பட்ட அப்பிள் பழம். இதையேன் சாப்பிடாமல் வைத்திருந்திருந்தாள் என்ற கேள்வி மனதிற்குள் ஓடியது. எத்தனை நாட்கள் ஒரு கப் தேனீரை மாறி மாறி குடித்திருக்கிறோம், ஒரு கோப்பையில மட்டுமே சோறு கிடைக்கும் சந்தர்ப்பங்களில், “அள்ளிச்சாப்பிடு அள்ளிச்சாப்பிடு” என வாஞ்சையுடன் எனக்கென ஒதுக்கி விட்டுக் கொண்டு தான் உண்பது போன்ற பாவனையில் இருந்திருக்கிறாள். நட்புடன் பகிர்ந்து ருசிக்கும் பிஞ்சு மாங்காயின் சுவை கூட, எவ்வளவு அலாதியானது. காதைச்சுற்றி ரீங்காரமிடும் துரத்த முடியாத வண்டுகளைப்போல நினைவுகள் சுழலுகின்றன. எனது கைகள் அவளின் நெற்றியை வருடின. முதல்நாள் மாலை திடீரென தனது குறிப்பு புத்தகத்தை என்னிடம் நீட்டியிருந்தாள் “இதை உன்ர பாக்கில வை இருக்கட்டும்” என்று சொல்லிக் கொண்டாள்.. “திரும்பிப் போகக் கிடைத்தால் நிறையக் கதைகள் எழுத வேணும்” கொள்ளை கொள்ளையான கதைகளை மூடி வைத்திருக்கும் பெட்டகம் மாதிரித்தான் அவளுடைய மனதும் இருந்தது, சங்கவி தூங்கிக் கொண்டேயிருக்கிறாள். ஒரு உழவு இயந்திரம் பெட்டியுடன் வந்து நின்றது. “ கெதியா ஏத்துங்கோ… கெதியா… ” படபட வென நாலைந்து போ் கால்களிளும் கைகளிலும் பிடித்து துாக்கியெடுக்க நான் அவளின் தலையைப் பிடித்துக் கொண்டேன். ஏற்கனவே பல உடல்கள் ஏற்றப்பட்டிருந்த உழவு இயந்திர பெட்டிக்குள்ளே அவளையும் ஏற்றியாகி விட்டது, நான் கீழே நி்ன்றவாறு விலகிப்போக மனதில்லாமல் சங்கவியின் தலையை தொட்டுக் கொண்டேயிருந்தேன், அவள் முகத்தை விடாமல் உற்றுப் பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும் போலிருந்தது. மெதுவாக நகர்ந்து செல்ல ஆரம்பித்தது உழவு இயந்திரம். அன்றிரவு எமது அணிகள் முன்னேறிச் சென்று போரிட்டுக் கொண்டிருந்த போது, சங்கவியும் தனது அணியுடன் போரில் ஈடுபட்டிருந்தாள். அப்பொழுது சரமாரியாக அவளது அணியை நோக்கி தீர்க்கப்பட்ட வேட்டுக்களில் ஒரே ஒரு ரவை அவளது இதயப்பகுதியை ஊடுருவிச் சென்றிருந்தது. உடனே சற்று தலையை உயர்த்தியவளிடமிருந்து ’ஹக்’ என்ற விக்கல் போன்ற ஒரு சத்தம் மட்டுமே கேட்டது. அடுத்தகணம் வாயிலிருந்து சிறிதளவு இரத்தம் கசிந்த வெளியேறியது. எந்த துடிப்போ, துள்ளலோ இல்லாமல் மௌனமாக தலை சரியத் தொடங்கிய சங்கவியின் முகம் சேற்று வயலில் பொத்தெனப் புதைந்து போய் விட்டது . அவளது உடலையும் தோளிலே சுமந்து கொண்டுதான் பின்வாங்கியிருந்தோம். வெகு நேரத்தின் பின்பு அதையும் அனுப்பியாயிற்று. பளிச்சென்ற குங்குமம் தீட்டிய அவளது தாயின் வதனமும், கனிவான புன்னகை படர்ந்திருக்கும் அவளின் தந்தையின் முகமும் எனது கண்களுக்குள் வந்து நின்றது. அடி வயிற்றிலிருந்து கிளம்பிய திரணையொன்று நெஞ்சுக்குள்ளேயே சிக்கிக் கொண்டதால் பிளந்து விடுவது போன்ற வலியில் மூச்சு திணறியது எனக்கு. தீக்கங்குகள் போல சிவந்துபோயிருந்த கண்களின் எரிவு தாங்கமுடியாதிருந்தது. அந்த உழவு இயந்திரத்தின் சத்தம் தூரத்தில் தேய்ந்து மறைந்து போனது. எனக்கோ அசையவும் முடியாமலிருந்தது. “உங்கட ரீமை வேகமாக நகர்த்திக் கொண்டு ஆழமரத்தடி சந்திக்கு வாங்கோ”. வோக்கி டோக்கி இரைச்சலுடன் எனது அணிக்கான கட்டளையை அறிவித்திருந்தது, மீண்டும் போர்க்கள முன்னணிக்கு நகர்வதற்கானக்கான வேகமான தயார்ப்படுத்தலுக்காக அணிகள் ஒருங்கிணைக்கப்பட்டன, கரு மேகங்கள் சூழ்ந்த வானம் இருள்மூடிக் கிடந்தது. நசநச வென்று வெறுக்கும்படியாக மழை பெய்து கொண்டேயிருந்தது, இடை வெளியில்லாமல் காது கிழியும்படி பீரங்கிகள் மீண்டும் முழங்கத் தொடங்கியிருந்தன. நிணமும் குருதியும் கடைவாயில் வழிய வழிய பசியடங்காத பூதம்போல மீண்டும் பயங்கரமாக வாயைப்பிளந்து கொண்டது யுத்தம்.
எங்கள் தலைவரை ஜெயலலிதா வம்புக்கு இழுப்பதும் அவரது குடும்பத்தினரை விமர்சிப்பதும் பண்பாடு ஆகாது. எங்களாலும் கீழே இறங்கி பேச முடியும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் சமீபத்தில் திமுகவில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்ட நடிகை குஷ்பு. கற்பு குறித்துப் பேசி சிக்கிக் கொண்ட நடிகை குஷ்பு அந்த வழக்குகளிலிருந்து சமீபத்தில் உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து வேகம் வேகமாக அவர் திமுகவில் இணைந்தார். தற்போது திமுகவின் பிரசார பீரங்கிகளில் ஒருவராக மாறியுள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தொடர்ந்து முதல்வர் கருணாநிதியை தாக்கிப் பேசி வருவதை கண்டித்து குஷ்பு ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் ஜெயலலிதாவை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து குஷ்பு கூறுகையில், ஜெயலலிதாவுக்கு கோவை, திருச்சி கூட்டங்களில் மக்கள் அலைமோதியதாக சொல்கின்றனர். அது மக்கள் கூட்டம் அல்ல. கடந்த தேர்தலில் தோற்றதும் அவர் வெளியே வரவில்லை. ஓய்வு என்று அறைக்குள்ளேயே இருந்தார். நாலரை வருடங்களாக அவரை பார்க்க முடியவில்லை. எனவே வேடிக்கை பார்க்க அவரது கட்சிகாரர்களே திரள்கிறார்கள். அவரது தோல்விக்கு கவுண்ட்டவுன் ஆரம்பமாகி விட்டது. எங்கள் தலைவரை ஜெயலலிதா வம்புக்கு இழுப்பதும் அவரது குடும்பத்தினரை விமர்சிப்பதும் பண்பாடு ஆகாது. எங்களாலும் கீழே இறங்கி பேச முடியும். ஆனால் நாகரீகமாக பேசுங்கள் என்று சமீபத்தில் நடந்த பேச்சாளர் கூட்டத்தில் கலைஞர் கூறியுள்ளார். ஜெயலலிதா எங்கு வேண்டுமானாலும் கூட்டங்கள் நடத்தி பேசட்டும். நாங்கள் அவரது கூட்டங்களை வேடிக்கையாகத்தான் பார்க்கிறோம். அவற்றை போட்டியாக எடுத்துக் கொள்வது இல்லை. எங்களுக்கு அந்த கூட்டங்களால் எந்த பாதிப்பும் இல்லை என்று பேசியுள்ளார் குஷ்பு.
‘13 பேர் பலி!’.. 31 பேர் படுகாயம்.. கண்டெய்னர் லாரி மீது தனியார் சொகுசுப் பேருந்து மோதி.. நொடியில் நடந்த கோர விபத்து! முகப்பு > செய்திகள் > இந்தியா By Siva Sankar | Feb 13, 2020 08:46 AM லாரி மீது பஸ் மோதிய விபத்தில் 13 பேர் பலியான சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசம் மாநிலத்தின் ஃபிரோசாபாத் என்கிற பகுதியில், இன்று அதிகாலை கண்டெய்னர் லாரி மீது, டெல்லியில் இருந்து பீகார் நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து, மோதியதால் நடந்த கோர விபத்தில் பயணிகள் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 31 பேர் படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிர்வலையை ஏற்படுத்திய இந்த விபத்து சம்பவத்தில் காயமுற்றபவர்களுக்கு தேவையான உடனடி நடவடிக்கைகளை துரிதப்படுத்த உத்தரப் பிரதேச மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். Tags : #ACCIDENT #BUS #UTTARPRADESH next தொடர்புடைய செய்திகள் 'அருகருகே சென்றபோது'... 'திடீரென்று திரும்பியதால்'... 'நடந்த சோகம்'... 'பதற' வைக்கும் வீடியோ! இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...! 'தாறுமாறாக ஓடிய வேன்... வேலைக்கு போன போது... தொழிலாளிக்கு நடந்த சோகம்!' ‘பைக்கில் சென்ற சென்னை இளைஞர்களுக்கு’... ‘வழியில் கார் மோதியதில்’... ‘நிகழ்ந்தேறிய பரிதாபம்’! ‘என் மகன் சாகல’!.. ‘சேலத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பறந்த இளைஞர் இதயம்.. கண்கலங்க வைத்த சம்பவம்..! ‘பாலத்தில் இருந்து பறந்து கீழே சென்ற கார் மேல் விழுந்த மற்றொரு கார்’.. காருக்குள் சிக்கி ஒருவர் பலியான பரிதாபம்..! ‘6 வயது குழந்தையுடன் கிணற்றுக்குள் விழுந்த தாய்’.. குப்பை அள்ளும் வாகனத்தை ஓட்டும்போது நடந்த விபரீதம்..! ‘கண்முன்னே’ பள்ளி ‘மாணவிக்கு’ நேர்ந்த பயங்கரம்... ‘புலம்பியபடியே’ இருந்த ‘உறவினர்’ எடுத்த ‘விபரீத’ முடிவு... ‘டயர் வெடித்து லாரியில் மோதிய கார்’.. கோயிலுக்கு சென்ற தம்பதிக்கு நேர்ந்த சோகம்..! ‘சுற்றுலா’ சென்ற இடத்தில்... ‘அதிவேகத்தில்’ பின்னால் வந்த பேருந்தால் ‘கோர’ விபத்து... ‘மதுரையில்’ நேர்ந்த சோகம்... 'பள்ளிக்கு உறவினருடன்'... 'இருசக்கர வாகனத்தில் சென்ற மாணவிக்கு’... '... ‘அரசுப் பேருந்து மோதியதில் நேர்ந்த பரிதாபம்’! ‘இப்போ உன்ன யாரு கல்யாணம் பண்றாங்கணு பாக்குறேன்’.. திருமணத்துக்கு மறுத்த காதலனுக்கு கொடூர தண்டனை கொடுத்த காதலி..! ‘திருநள்ளாறு கோவிலுக்கு’... ‘குடும்பத்துடன் சாமி கும்பிட சென்றுவிட்டு’... ‘திரும்பிய வழியில் நடந்தேறிய பயங்கரம்’! ‘பேருந்து இடுக்கில்’ சிக்கி ‘மனைவி மற்றும் 9 மாத குழந்தைக்கு’ .. கண்முன்னே நேர்ந்த சோகம்.. கதறித் துடித்த கணவர்! ‘பெண்களை இனிமேல் அங்க உட்கார வைக்கக்கூடாது’.. அதிரடி உத்தரவிட்ட அரசு போக்குவரத்துக் கழகம்..! ‘திடீரென கேட்ட அலறல் சத்தம்’.. ‘தூக்கத்திலேயே பறிபோன உயிர்’.. நெஞ்சை பதறவைத்த சம்பவம்..! சரியாக ‘மூடாத’ கதவால்... கண் ‘இமைக்கும்’ நேரத்தில்... பெண்ணிற்கு நேர்ந்த ‘பயங்கரம்’... ‘அதிர்ச்சி’ வீடியோ... 'நிறைமாத இளம் கர்ப்பிணிப் பெண்'... 'மருத்துவமனைக்கு சென்றபோது'... 'கணவர் கண்முன்னே'... 'நடந்தேறிய கொடூரம்'! ‘திருமணத்திற்கு’ சென்று திரும்பியவர்களுக்கு.. வீட்டு ‘வாசலில்’ நேர்ந்த ‘பயங்கரம்’... ‘பதறவைக்கும்’ சிசிடிவி காட்சிகள்... ‘நேருக்குநேர்’ மோதிய பைக்குகள்.. காரை விட்டு இறங்கி காயமடைந்தவர்கள மீட்ட அமைச்சர்.. குவியும் பாராட்டுகள்..! மேலும் செய்திகளுக்கு ABOUT THIS PAGE This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Bus-truck collision in UP, 13 killed more than 30 injured | India News.
One of the most popular education website in tamilNadu. Get Latest Padasalai, Kalvi seithi, kalvi news, tamilnadu education news kalvimalar kalvisolai and updates C Powered by Blogger. Recent அரையாண்டுத் தேர்வு தேதி அறிவிப்பு; காலாண்டுத் தேர்வைப் போல அல்ல தமிழகத்தில் உள்ள அரசுப் பாடத்திட்டத்தின் கீழ் நடைபெறும் பள்ளிகளுக்கு டிசம்பர் 15ஆம் தேதி அரையாண்டுத் தேர்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள... PF ACCOUNT SLIP download செய்ய -NEW WEBSITE PF ACCOUNT SLIP -NEW WEBSITE GPF Account Opening Form Know your AISPF/GPF/TPF Status GPF Interest Rates Know your Pension Status Download ... கறுப்பு பொங்கல் - அரசு ஊழியர்கள் எச்சரிக்கை அறிவிப்பு அரசு ஊழியர்கள் எச்சரிக்கை அறிவிப்பு அதிமுக ஆட்சியே தேவலை என்றும் குமுறல் - தினமலர் நாளிதழ் செய்தி டிசம்பர் 3 மற்றும் 6 தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பர் 3ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை... அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு - பள்ளிக் கல்வித்துறை 6 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 15 முதல் 23 ம் தேதி வரை அரையாண்டு தேர்வு. மாநிலம் முழுவதும் பொதுவான வினாத்தாள் அடிப்படையில் த... மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது எப்படி?TNEB - Aadhaar Link: யாரெல்லாம் ஆதாரை எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும்? மின்சார மானியம் பெறுவதற்கு மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்... BEL நிறுவனத்தில் ரூ.55,000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு BEL நிறுவனத்தில் Trainee Engineer & Project Engineer பணிகளுக்கு 34 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்... தமிழக அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் வேலைவாய்ப்பு RECRUITMENT VACANCY DETAILS FOR ARULMIGU THYAGARAJA SWAMY TEMPLE – TNHRCE RECRUITMENT 2022 – APPLY COOK AND DRIVER POSTS:- Now, Arulmigu ... கணித புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ரம்மி பாடப்பகுதி : பள்ளிக்கல்வித்துறை விளக்கம் ஆறாம் வகுப்பு கணித பாடத்தில் இடம்பெற்றுள்ள ரம்மி குறித்த பாடப்பகுதி அடுத்த கல்வியாண்டு முதல் நீக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள... தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இன்று ( 28.11.2022 ) துவங்கியுள்ள (STEM திட்டம் மூலம்) வானவில் மன்றங்கள் எதற்காக ? என்ன விளைவை ஏற்படுத்தும்? தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இன்று ( 28.11.2022 ) துவங்கியுள்ள (STEM திட்டம் மூலம்) வானவில் மன்றங்கள் எதற்காக ? என்ன விளைவை ஏற்படுத்த... Popular Posts அரையாண்டுத் தேர்வு தேதி அறிவிப்பு; காலாண்டுத் தேர்வைப் போல அல்ல தமிழகத்தில் உள்ள அரசுப் பாடத்திட்டத்தின் கீழ் நடைபெறும் பள்ளிகளுக்கு டிசம்பர் 15ஆம் தேதி அரையாண்டுத் தேர்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள... PF ACCOUNT SLIP download செய்ய -NEW WEBSITE PF ACCOUNT SLIP -NEW WEBSITE GPF Account Opening Form Know your AISPF/GPF/TPF Status GPF Interest Rates Know your Pension Status Download ... கறுப்பு பொங்கல் - அரசு ஊழியர்கள் எச்சரிக்கை அறிவிப்பு அரசு ஊழியர்கள் எச்சரிக்கை அறிவிப்பு அதிமுக ஆட்சியே தேவலை என்றும் குமுறல் - தினமலர் நாளிதழ் செய்தி டிசம்பர் 3 மற்றும் 6 தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பர் 3ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை... அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு - பள்ளிக் கல்வித்துறை 6 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 15 முதல் 23 ம் தேதி வரை அரையாண்டு தேர்வு. மாநிலம் முழுவதும் பொதுவான வினாத்தாள் அடிப்படையில் த... மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது எப்படி?TNEB - Aadhaar Link: யாரெல்லாம் ஆதாரை எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும்? மின்சார மானியம் பெறுவதற்கு மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்... BEL நிறுவனத்தில் ரூ.55,000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு BEL நிறுவனத்தில் Trainee Engineer & Project Engineer பணிகளுக்கு 34 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்... தமிழக அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் வேலைவாய்ப்பு RECRUITMENT VACANCY DETAILS FOR ARULMIGU THYAGARAJA SWAMY TEMPLE – TNHRCE RECRUITMENT 2022 – APPLY COOK AND DRIVER POSTS:- Now, Arulmigu ... கணித புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ரம்மி பாடப்பகுதி : பள்ளிக்கல்வித்துறை விளக்கம் ஆறாம் வகுப்பு கணித பாடத்தில் இடம்பெற்றுள்ள ரம்மி குறித்த பாடப்பகுதி அடுத்த கல்வியாண்டு முதல் நீக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள... தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இன்று ( 28.11.2022 ) துவங்கியுள்ள (STEM திட்டம் மூலம்) வானவில் மன்றங்கள் எதற்காக ? என்ன விளைவை ஏற்படுத்தும்? தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இன்று ( 28.11.2022 ) துவங்கியுள்ள (STEM திட்டம் மூலம்) வானவில் மன்றங்கள் எதற்காக ? என்ன விளைவை ஏற்படுத்த...
இரண்டாம் ராஜராஜ சோழர் காலத்தில் சோழ நாடு போரின்றி அமைதியாக இருந்தது. சோழர்கள் என்றாலே உக்கிரமான அரசியல், போர்கள் என்றே படித்து பழக்கப்பட்ட நமக்கு இந்த புத்தகம் ஒரு வித்தியாசமான சோழ நாட்டிற்கு அழைத்து செல்கிறது. புத்தகத்தின் பெரும்பாலான பகுதி வாணிபம் மற்றும் வணிகர்களை மையப்படுத்தி நகர்கிறது. பாதி பக்கங்களை கடக்கும் வரை பெரும் போர்களை சந்தித்து விட்டு அமைதியான சூழலில் இருக்கும் சோழ நாட்டில் அதிகாரவர்க்கத்தில் ஏற்படும் மாற்றங்களை கூறுகிறது. மிகவும் சிந்தித்து எழுதி இருக்கிறார் பாலகுமாரன். எனினும் ஒரு கோர்வையாக இல்லாதது போல் உள்ளது. ஒரு விஷயம் நடக்கும் பொழுதே பக்கங்கள் சம்பந்தம் இல்லாத விஷயத்தை பற்றி போகிறது. ஒவ்வொரு படைப்பும் அந்த ஆசிரியரின் சிறந்த படைப்போடு ஒப்பிடப்படுவதை தவிர்க்க முடியாது. அதே போல் இந்த புத்தகத்தை உடையார் உடன் ஒப்பிடும் பொழுது அதில் இருந்த சுவை இதில் சற்று கம்மியோ என்று எண்ண வைக்கிறது. உடையார் ராஜ ராஜ சோழர் காலத்தை மையமாக வைத்து எழுதியது. போர்கள், காதல், ஒற்றர் படை, பிரம்மராயர், ராஜேந்திர சோழருடன் நடக்கும் பனிப்போர் என்று மிக பெரிய கதைக்களத்தில் புனையப்பட்டது. இப்படி தான் இருந்திருப்பார்கள் என்று நம்மை அப்படியே ஒன்றிப்போக செய்துவிடும். ஆனால் அது போல் ஒரு கோர்வையாக இந்த புத்தகம் இல்லை. வணிகர்கள் பற்றிய தகவல்கள் அதிகமாக உள்ளது. ஒரு வித்தியாசமான சூழ்நிலையில் சோழ நாட்டை பாலகுமாரன் காட்டியிருக்கிறார். போரற்ற காலத்தில் நடப்பதால் அரசரும் அவ்வப்போழுதே வந்து போகிறார். நான்கு பாகங்கள் வரும் என்று சொல்லியிருக்கிறார். அடுத்த பாகத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Avani, அவனி, பாலகுமாரன், Balakumaran, Novel, நாவல் , Balakumaran Novel, பாலகுமாரன் நாவல், விசா பப்ளிகேஷன்ஸ், Visa Publications, buy Balakumaran books, buy Visa Publications books online, buy Avani tamil book.
இது முக்கியமாக பால், நெய் மற்றும் சீஸ் போன்ற பல்வேறு பால் பொருட்களை வழங்க கால்நடைகளாக பயன்படுத்தப்படுகிறது. இது உலகம் முழுவதும் பல்வேறு வண்ணங்கள், வடிவங்கள் மற்றும் அளவுகளில் காணப்படுகிறது. இந்தியாவில், மாடு இந்துக்களால் ஒரு புனித விலங்காக கருதப்படுகிறது மற்றும் பண்டைய காலங்களிலிருந்து அவர்களால் வணங்கப்படுகிறது. இது இரண்டு காதுகள் மற்றும் கண்கள், ஒரு பெரிய மூக்கு, இரண்டு கூர்மையான கொம்புகள், ஒரு நீண்ட வால் மற்றும் நான்கு கால்கள். இது புதிய புல், உமி, தானியங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுகிறது. பசுவின் பால் மிகவும் சத்தான மற்றும் மனித நுகர்வுக்கு நன்மை பயக்கும். மாட்டுப் பால் தவறாமல் குடிப்பதால் நம் மூளை கூர்மைப்படுத்துகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். விவசாயிகள் பெரும்பாலும் எருது எனப்படும் ஆண் பசுவைப் பயன்படுத்தி வயல்களை உழுது வண்டிகளை இழுக்கிறார்கள். மாட்டு சாணத்தை தாவரங்கள் மற்றும் பூச்சிகளை விரட்ட எரிபொருளாகவும் உரமாகவும் மக்கள் பயன்படுத்துகின்றனர்.
கோவிலுக்கு சென்ற உடன் அர்ச்சகர் விபூதியை தருவார் நாம் கொடுத்த உடன் டக்கென்று ஏதாவது ஒரு விரலால் எடுத்து வைத்துக்கொண்டு உடனே கிளம்பி விடுவோம். ஆனால் அப்படி செய்யக்கூடாது என்பதே விதியாக உள்ளது. மோதிர விரல், மற்றும் மோதிரவிரல் மற்றும் கட்டைவிரல் இணைந்துதான் விபூதி எடுக்க வேண்டும் மற்ற விரல்களால் எடுத்தால் தீராத நோய்கள்,பிரச்சினைகள் இவைதான் உண்டாகும். மோதிர விரலால் எடுத்தால் மகிழ்ச்சியும் மோதிர விரல் மற்றும் கட்டைவிரலை இணைத்து விபூதி எடுத்தால் விபூதியை இட்டுக் கொணடால் உலகமே வசப்படம். எடுக்கும் முயற்சிகள் யாவிலும் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம். Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
நாடுமுழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளினதும், 10 முதல் 13 வரையான தரங்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் இன்று(08) மீள ஆரம்பிக்கப்படுகின்றன. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார். கல்விப் பொதுத்தராதர சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்காகக் குறித்த வகுப்புக்களுக்கான கற்றல் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு கொவிட் தடுப்பு குழுவின் அனுமதிக்கு அமைய, இன்று கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய பாடசாலைக்குள் முகக்கவசம் அணிதல், கைகளைக் கழுவுதல், சமூக இடைவெளியைப் பேணுதல் முதலான சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுவது கட்டாயமானதாகும். கொவிட் பரவல் காரணமாக சுமார் 2 வருட காலமாக நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இடைக்கிடையே மூடப்பட்டன. கொவிட் பரவல் நிலையானது ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து, நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் உள்ள ஆரம்பப் பிரிவுகள் கடந்த மாதம் 25ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்பட்டன.
#Breaking: பிரபல தமிழ் நடிகை பார்வதி நாயர் காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்.. தொடர் மிரட்டல்., கண்ணீர் குமுறல்.! அடேங்கப்பா.. வேற லெவல்! ஹீரோயின்களுக்கே டப் கொடுப்பார் போல.! அர்ச்சனாவின் மகள் சாரா வெளியிட்ட வீடியோவை பார்த்தீங்களா!! என்னா லுக்குடா.. தாறுமாறு கவர்ச்சியில் இளசுகளை திக்குமுக்காட வைக்கும் மாஸ்டர் நடிகை.! இணையத்தை சூடாக்கும் புகைப்படங்கள்!! என்னம்மா இதெல்லாம்.. குட்டை உடை.. படுக்கையில் டாப் ஆங்கிளில் பிக்பாஸ் அபிராமி வெளியிட்ட புகைப்படம்.! அட.. சூப்பர்! சுந்தரி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல முன்னணி நடிகை.! இப்பவும் எப்படியிருக்காரு பார்த்தீங்களா!! வைரல் வீடியோ.! தங்களது செல்ல மகளின் பெயரை வித்தியாசமாக அறிவித்த ரன்பீர்-ஆலியா ஜோடி.! இந்த பெயருக்கு இவ்வளவு அர்த்தமா?? 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அப்பாவான நடிகர் நரேன்.! என்ன குழந்தை தெரியுமா?? குவியும் வாழ்த்துக்கள்!! உங்களுக்காக நான் என்ன செய்தேன்.! ஏன் இப்படி?? கண்கலங்கி தொகுப்பாளினி பிரியங்கா வெளியிட்ட எமோஷனல் வீடியோ!! நீயே காலேஜ் போற.. இந்த வயசுல குழந்தை தேவையா? - பாக்யலட்சுமி இனியாவை கேள்வியால் விளாசிய நெட்டிசன்கள்..! திருந்தவே மாட்டாங்க போல..!! அடச்சே.. பெண்ணியம் பேசுன என் புத்திய..., - பல்பு வாங்கிய பிரபல நடிகை டிவிட்டரில் கொந்தளிப்பு.! கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளை சோதனை சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளராக வில்சன் என்பவர் பணியாற்றி வந்தார். வில்சன் பணியில் இருந்தபோது, அங்கு வந்த இரண்டு பேர் வில்சனை சுட்டு மற்றும் கத்தியால் குத்திக் படுகொலை செய்தனர். எஸ்.ஐ. வில்சனை அப்துல் சமீம், தவ்பீக் ஆகியோர் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ள நிலையில் கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர். இது தொடர்பாக சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, தவுபீக், ஷமீம் என்ற இளைஞர்களைக் கைது செய்தனர். இவர்கள் இருவரும் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை சுட்டுக் கொன்று விட்டு, அருகில் இருந்த மசூதி வழியாக தப்பிச் சென்றது கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருந்தது. மேலும், அவர்கள் இருவரும் எஸ்ஐ வில்சனை எதிர்பாராத விதமாக கொல்லவில்லை என்றும், வில்சனைக் கொலைச் செய்வதற்காக இரண்டு தினங்கள் தனியே திட்டம் தீட்டியிருப்பதும் தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here Tags: #si wilson #Murder Copy Link தற்போதைய செய்திகள் என் சாவிற்கு அவங்கதான் காரணம்.! இதுதான் நடந்தது.! தற்கொலை செய்துகொண்ட வாலிபர்.! சிக்கிய ஷாக் கடிதம்!! நடுவழியில் டீசல் இல்லாமல் நின்றுபோன தனியார் ஆம்புலன்ஸ்.. பெண் நோயாளி பரிதாப பலி.! நாக்கிற்கு பதிலாக குழந்தையின் பிறப்புறுப்பில் அறுவைசிகிச்சை.! அரசு மருத்துவமனையில் பரபரப்பு.! நடந்தது என்ன?? #Breaking: பிரபல தமிழ் நடிகை பார்வதி நாயர் காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்.. தொடர் மிரட்டல்., கண்ணீர் குமுறல்.!
”எப்படி சார் கருத்தியல் ரீதியாக முற்றிலும் மாறுபட்ட துக்ளக்கில் வேலை பார்த்தீங்க..?” என்பது அடிக்கடி நான் சந்திக்க நேரும் கேள்வி! நான் துக்ளக்கில் ஒரு முழு நேர பத்திரிகையாளராக பணியாற்றவில்லை. நான் ஒரு சுதந்திரப் பத்திரிகையாளனாக தொடர்ந்து சுமார் ஒன்பதாண்டுகள் எழுதினேன். அதற்கும் முன்பாக துக்ளக்கிற்கு ஒரு போட்டோ ஜர்னலிஸ்டாக நிறைய வேலை செய்துள்ளேன். 1985 ல் ஜனசக்தியிலேயே எழுத ஆரம்பித்த நான் துக்ளக்கில் 1996ல் தான் எழுதத் தொடங்கினேன். எனக்கும் துக்ளக் ஆசிரியர் குழுவிற்கும் பரஸ்பர புரிதல் வருவதற்கே சில ஆண்டுகளாயின! என்னை ... Tags: cho editor ramaswamy savithirikannan thuglak சாவித்திரி கண்ணன் சோ அஞ்சலி சமூகம் December 7, 2021 அறம்இலக்கியம்சாவித்திரி கண்ணன் ஜனசக்தி தொடங்கி துக்ளக் வரையிலான என் பயணம்! வாசிப்பால் வளர்கிறோம் என்பதற்கு என் வாழ்க்கையே ஒரு சிறிய எடுத்துக்காட்டாகும்! ஆயிரக்கணக்கான கட்டுரைகள் எழுதி இருக்கிறேன். நாளும் ஒரு கட்டுரை எழுதி வருகிறேன். எதிர்காலம் என்னவென்றே அறியாத தற்குறியாக இருந்த என்னை வாசிப்பு தான் வளர்த்தது. தன்நம்பிக்கை தந்தது! பல பெரிய ஆளுமைகளின் நட்பை பெற்றுத் தந்தது! அனைவரும் அறிந்திருக்கக் கூடிய பத்திரிகையாளனாக மாற்றி இருக்கிறது. அன்னைக்கு அடுத்தபடியாக என்னை வளர்த்தவை புத்தகங்களே…! எட்டு வயதில் எனக்கு வாசிப்பு பழக்கம் தோன்றியது. என் வகுப்பு தமிழ் பாட நூல்களை நான் உண்மையிலேயே விரும்பி படித்தேன். ...
பயங்கரவாதத்துக்கு எதிரான தென்னிலங்கையின் யுத்த முனைப்புத் தீவிரம் பெற்றிருப்பதை அடுத்து வடக்கு, கிழக்கிலும் தென்னிலங்கையிலும் தமிழர்களை வகை தொகை யின்றிக் கைதுசெய்து அடைக்கும் அரச கொடூரக் கைங் கரியமும் தீவிரம் பெறத் தொடங்கியிருக்கின்றது. அரசுத்தரப்பு "பயங்கரவாதம்' எனச் சித்திரிக்கும் வன் முறைப் போராட்டத்துடன் தொடர்புடையவர்களை அல் லது அத்தகைய செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று சந்தேகிக்கப்படுவோரைக் கைது செய்வது என்பது வேறு. இலங்கைச் சட்டங்களின் படியும் தார்மீக நீதிப் படியும் அதில் அர்த்தம் இருப்பதாகக் கொள்ளலாம். ஆனால் எந்தக் காரணமுமின்றி கண்ணில் படும் தமிழர் களை தங்கள் எழுந்தமான எண்ணப்படி "பயங்கரவாதச் சந் தேகநபர்களாக' அடையாளம் கண்டு கைது செய்வதும் தடுத்துவைப்பதும், இம்சைப்படுத்துவதும் வேறு. இப்படிக் காரணமின்றி அர்த்தமின்றி தமிழர்கள் கைது செய்யப்பட்டு தொல்லைப்படுத்துகின்றார்கள் என்பதை அரசின் பிரதி அமைச்சர் ஒருவரே பகிரங்கமாகச் சுட்டிக் காட்டி விசனம் தெரிவித்திருக்கிறார்; ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவுக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தியிருக்கிறார்; ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் அவரின் சகோதர ருமான பஸில் ராஜபக்ஷவுக்கு நேரடியாகவும் விளங்கப் படுத்திக் கூறியிருக்கின்றார். சோதனைகளில் வழி மறிக்கப்படும் தமிழர்கள் அடை யாள அட்டை, கடவுச்சீட்டு, கிராம சேவையாளர் கடிதம், பொலீஸ்பதிவு, வேலைத்தள அடையாள அட்டை என இன்னோரன்ன அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித் துத் தமது ஆளடையாளத்தை ஐயம்திரிபுற நிரூபித்துக் காட் டிய பின்னரும் தமிழர்கள் என்ற காரணத்துக்காக் கைது செய் யப்படுகிறார்கள்; தடுத்துவைக்கப்படுகின்றார்கள். இத்தகைய அணுகுமுறையால் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டுவிடமுடியாது என்று அரசுக்கு இடித்துரைக் கிறார் அதே அரசில் இடம்பெற்றுள்ள பிரதியமைச்சர் பெ. இராதாகிருஷ்ணன். நாட்டில் தமிழ் மக்களின் அன்றாட இயல்பு நிலையைச் சீரழித்து, மக்களது ஜனநாயக அடிப்படை உரிமைகளுக்கு எதிராகக் காவல்துறையினரும் படையினரும் செயற்படு வதையே இக்கைதுகள் எடுத்துக்காட்டுகின்றன எனப் பிரதி அமைச்சர் தெளிவாக எடுத்துரைக்கின்றார். "தமிழர்கள் வேறு; புலிகள் வேறு' என்று தத்துவம் பேசு கிறது தென்னிலங்கை அரசு. புலிகளின் பயங்கரவாதத்துக்கு அரசின் பதில் இராணுவத் தாக்குதல் நடவடிக்கை என் றும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசின் பதில் அரசியல் தீர்வு என்றும் கூட சர்வதேச சமூகத்துக்குப் படம் காட்டுகின்றது தென்னிலங்கை அரசுத் தலைமை. ஆனால், தென்னிலங்கையில் பாதுகாப்புக் கெடுபிடி என்று வரும்போது அனைத்துத் தமிழர்களையும் புலிகளா கவோ அல்லது புலிச் சந்தேகநபர்களாகவோ அடையாளம் காண்கிறது அரசு. "புலிகள் வேறு, தமிழர்கள் வேறு' என்று கூறிக் கொண்டே ஒவ்வொரு தமிழரையும் புலிச் சந்தேகநபராகக் கருதி கண்மூடித்தனமான கைதுகள், தடுத்து வைப்புகளில் ஈடுபடும் அரசுத் தலைமையின் பேரினவாத ஒடுக்குமுறைப் போக்கை, சர்வதேசசமூகம் இந்தக் கைதுகள் மற்றும் கெடு பிடிகள் பற்றிய தகவல்கள் மூலம் நன்கு உணர்ந்துகொள்ள முடியும். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங் களில் இருந்து தென்னிலங்கைக்கு வருவோர் மீதும் கட் டுப்பாடுகள், நெருக்குவாரங்கள் விதிக்கப்படுகின்றன. அவர்கள்அப்படி வருவதற்கு படைத்தரப்பின் முன் அனு மதி பெறவேண்டும் என்ற மட்டுப்படுத்தல் விரைவில் நடைமுறைக்கு வரவிருப்பதாகக் கூறப்படுகின்றது. இது புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் வன்னிப் பிரதேச மக்கள் அனைவரையுமே புலிகள் என்று அடையாளம் கண்ட தென்னிலங்கையின் போக்கினால் எழுந்துள்ள நெருக்கடியன்றி வேறில்லை. ஒவ்வொரு தமிழனையும் தனியாக அடையாளம் காணும் கருதும் சந்தேகிக்கும் அரசுத் தரப்பின் போக்கு தொடருமாயின் தென்னிலங்கைச் சிங்களவர்கள் ஒவ் வொருவரையும் அரசுப்படைகளாக மறுபக்கத்தில் நோக் கும் போக்கை அது நியாயப்படுத்திவிடும். இத்தகைய தவறுகளே இந்தப் பிணக்கில் அப்பாவிப் பொதுமக்களை சிவிலியன்களை அவர்களின் உயிர் களை இந்தப் பிரச்சினைக்குத் தேவையின்றிக் காவு கொடுக்க வைக்கின்ற நிலைமையை ஏற்படுத்தி விடுகின் றன என்பதைத் தென்னிலங்கை அரசுத் தலைமை முதலில் உணரவேண்டும். அப்பாவித் தமிழர்களை சரியான காரணங்கள் பின் னணிகள், சந்தேகிப்பதற்கான நியாயங்கள் ஏதுமின்றி புலிச் சந்தேக நபர்களாக்கும் பாதுகாப்புத்துறையின் அட்டூ ழியம் தொடர்வதற்கு அரசுத் தலைமை அனுமதி அளித்து அதற்கு ஊக்கமும் ஆதரவும் வழங்குமானால் தென்னிலங்கையிலும் பெரும்பான்மையினர் மத்தியில் வாழும் அப்பாவிகளை இலக்குவைத்து அவர்களை நேரடி யாக யுத்தத்துடன் சம்பந்தப்பட்ட மோதும் தரப்புகளாக அர்த்தப்படுத்தி அவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படு வதைத் தடுக்க தவிர்க்க முடியாது போய்விடும். அப்பாவித் தமிழர்களை சரியான உறுதியான தெளி வான திட்டவட்டமான காரணமின்றிப் புலிச்சந்தேக நபராக்கும் தென்னிலங்கை அராஜகம் தென்னிலங்கை அப்பாவிச் சிங்கள மக்களையும் மறுபக்கத்தில் அர்த்தமற்ற தேவையற்ற ஆபத்துக்குள் ஆழ்த்தும் என்பதைத் தென் னிலங்கை அரசு புரிந்துகொள்ளாது ஏனோ? அப்பாவிகளை பயங்கரவாதிகளாக்கி நிழலோடு யுத்தம் புரியும் இந்த அர்த்தமற்ற விபரீதத்தை அரசுத் தலைமை உடன் நிறுத்துவது நல்லது.
2021 ஆம் ஆண்டுக்குரியதாக பாடசாலைப் பரீட்சைகள் இடம்பெறும் திகதிகள் மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கான அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் பாடசாலைத் தவணை நிறைவு செய்தல். Wednesday, 08 December 2021 / Published in Uncategorized 2021 ஆம் ஆண்டுக்குரியதாக பாடசாலைப் பரீட்சைகள் இடம்பெறும் திகதிகள் மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கான அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் பாடசாலைத் தவணை நிறைவு செய்தல். 2021 ஆம் ஆண்டிற்கான பள்ளித் தேர்வுகளின் தேதிகள் 2021 ஆம் ஆண்டுக்கான அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் பாடசாலைத் தவணை நிறைவு செய்தல்.
நீட் தேர்வுக்கு எதிராகவும் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருநங்கை கிரேஸ் பானு என்பவரும் இதற்காக போராடியுள்ளார். இதனால் அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். இது குறித்து அவர் பேசும்பொழுது, நீட் தேர்விற்கு எதிராக கடந்த 7-ம் தேதி WTO அலுவலகத்தில் பூட்டுபோடும் போராட்டம் நடத்தினோம். இதன் காரணமாக கைது செய்த போலீசார் மாஜிஸ்திரேட் முன்பு நிறுத்தினார்கள். அவர் எங்களை 15 நாள்கள் ரிமாண்டில் வைக்க உத்தரவிட்டார். பின்னர், புழல் சிறைக்கு எங்களை அழைத்துச் சென்ற போலீஸார், ‘பெண் கைதிகள் அறையில் வைத்து சோதனை நடத்த வேண்டும் என்றும், அதற்கு நீங்கள் நிர்வாணமாக நிற்க வேண்டும்’ என்றும் கூறினர். நான் எதற்கு உங்கள் முன்பு நிர்வாணமாக நிற்க வேண்டும்’ என்று மறுப்பு தெரிவித்து பலமணி நேரம் போராடினேன். என்னுடைய பேச்சைக் காதில் வாங்காதவர்களாக அவர்கள் பிடிவாதமாக என் ஆடையைக் களையச் செய்தனர் .அதைவிடக் கொடுமை, அறுவை சிகிச்சை செய்துகொண்ட இடத்தைப் பார்த்துக் கிண்டல் செய்து சிரித்தனர். அதைப் பார்த்துத் துடிதுடித்துப் போனேன். எங்களை பெண்கள் அல்லது ஆண்கள் சிறையில் வைக்க வேண்டும். ஆனால் தொற்றுநோயுள்ள கைதிகளை அடைத்துவைக்கும் இடமான தொற்றுத் தடைப்பிரிவில் அடைத்துவைத்தனர் என கூறினார்.
வணக்கம் தமிழ் காமப்பசி அன்பான ஆண், பெண் வாசகர்களே. சரியாக ஒரு வருடம் முன்பு கல்லுரியில் மலர் டீச்சருடன் சுதந்திர தினத்தின் அன்று நடந்த காமக்கதையை ருசிகரமான பகிர்ந்து கொள்கிறேன். கதையை ஒரு வரைகூட விடாமல் முழுமையாக படித்து என்ஜோய் செய்யுங்கள்! வாருங்கள் கதைக்கு போகலாம்! இந்த செக்ஸ் சம்பவம் சரியாக ஆகஸ்ட் 15, 2019 அன்று கல்லுரியில் நடந்தது. சரியாக ஒரு வருடம் கழித்து உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். என் பெயர் மனீஷ், வயது 22. கேரளாவில் உள்ள இன்ஜினியரிங் காலேஜில் இறுதி ஆண்டு படித்து வருகிறேன். என் சொந்த ஊர், கன்னியாகுமரி. கேரளாவில் நல்ல காலேஜ் கிடைத்ததால் கல்லுரி விடுதியில் தங்கி படித்து வருகிறேன். இந்த மாநிலத்தில் கேரளா பசங்களை விட தமிழ் பசங்களை தான் இளம் பெண்களில் இருந்து ஆண்டி வரைக்கும் பிடிக்கும். அதற்கு முக்கிய காரணம், அனைவரும் சாக்லட் கலரில் அழகாக இருப்போம். கேரளா பசங்க நல்ல இருப்பாங்க ஆனால் அதை விட தமிழ்நாட்டு மாணவர்கள் நாட்டுக்கட்டை போன்று இருப்பார்கள். நான் படிப்பில் கொஞ்சம் திறமையானவன், கல்லுரியில் முதல் மதிப்பெண் நல்ல படிக்கும் பையன் என்று பெயர் வாங்கி வைத்திருந்தேன். என்னை பொருத்த வரைக்கும் வாழ்க்கையை ஜாலியாக என்ஜோய் செய்ய வேண்டும். நல்ல படிக்கணும், பெண்களுடன் என்ஜோய் பண்ணிக்கணும். நல்ல படிக்கும் மாணவன் என்பதால் தோழிகளில் இருந்து ஒரு சில டீச்சர் வரைகூட சந்தேகம் கேட்பார்கள். என்னை எப்பவும் பெண்கள் சுற்றி இருந்து கொண்டு இருப்பார்கள். சிலர் என் குஞ்சி மீது கை வைத்து விளையாடுவார்கள். சிலர் உரசி என்ஜோய் செய்வார்கள். நாட்கள் வேகமாக நகர்ந்து சென்றது அப்பொழுது என் கல்லுரிக்கு புதிதாக ஒரு டீச்சர் வந்து சேர்ந்தார்கள். சில மாணவர்கள் கேன்டீனில் பார்த்து விட்டு, “டேய் மச்சான்! புதுசா மேடம் வந்துருக்காங்க! செம்ம அழகு கொஞ்சம் ஆன்டி போல இருந்தாலும் செக்சியாக இருக்காங்க!” என்று அனைவரும் வருணித்து வந்தார்கள். என் கல்லுரியில் மாணவர்கள் டீச்சருடன் சகஜமாக பேசுவது, சிலரை மேட்டர் கூட அடிப்பது எல்லாம் சாதாரணமான விஷயமாக நடக்கும். மலர் டீச்சரும் அதுபோன்று தான் என்று ஆரம்பத்தில் மற்ற மாணவர்கள் நினைத்து ஜொள்ளு விட்டார்கள். நானும் கொஞ்சம் ஆர்வமாக பார்க்க சென்றேன். என் நண்பர்கள் சொன்னது போன்று உண்மையாக சூப்பர் செக்சியாக இருந்தாள். மலர் டீச்சர் என்றவுடன் சினிமாவில் வருவது போன்று இளம் டீச்சர் எல்லாம் இல்லை. இந்த டீச்சர் ஆபாச படத்தில் வரும் மல்லு ஆண்டி போல தளதள வென்று கேரளா சேலை அணிந்துருந்தாள். முதலில் டீச்சரின் நடவடிக்கையை தொடர்ந்து கண்காணித்து வந்தேன். மலர் டீச்சர் கொஞ்சம் கண்டிப்பான ஆசிரியர் போன்று தெரிந்தது. எந்த ஒரு ஆணுடன் சிரித்து எல்லாம் பேசாமல் கறாராக இருந்தாள். ஆண்டிக்கு 34 வயது இருக்கும், திருமணம் முடிந்து ஒரு குழந்தையுடன் கணவரை விவாகரத்து வாங்கி பெற்றோருடன் வசித்து வந்தாள். டீச்சர் கொஞ்சம் கண்டிப்புடன் நடந்து கொண்டதால், மலருக்கு மல்லு ஆண்டி என்று பட்டைபெயர் வைத்தார்கள். நான் பெண்களுடன் கொஞ்சம் கட்டுப்பாடுடன் நடந்து கொள்வேன் ஆனால் அதை மலர் மல்லு உடைத்து தெரிந்தாள். ஆமாம் நண்பர்களே! ஒரு முறை மழை நேரத்தில் வகுப்பு எடுக்க கிளாஸ் வந்தாள். வகுப்பில் மொத்தமாகவே கொஞ்சம் பேர் தான் இருந்தோம். மற்றவர்கள் லீவு போட்டார்கள். அப்பொழுது மழையில் நனைந்து கேரளா வெள்ளை சேலை உள்ளே முலைகள் எல்லாம் புடைத்து கொண்ட நிலையில் வந்தாள். அப்பொழுது தான் முதல் முறையாக மல்லு ஆண்டியை இரண்டு கண்களால் பார்த்து விழுந்தேன். அன்று வகுப்பு வராத மற்ற மாணவர்கள் எல்லாம் கண்டிப்பாக டீச்சரின் அந்த செக்சி கோலத்தை பார்க்காமல் மிஸ் செய்து விட்டார்கள் என்று கூறலாம். டீச்சர் வகுப்பு உள்ளே வந்த கொஞ்ச நேரத்தில் மழை காரணமாக காலேஜ் விடுமுறை விட்டார்கள். அனைவரும் வேகமாக எழுந்து வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்கள். நான் மட்டும் அமைதியாக வகுப்பில் அமர்ந்து டீச்சரின் கவர்ச்சியை ரசித்தேன். இந்த வாய்ப்பை பயன்படுத்தி நெருக்கம் அடைந்து விட வேண்டும் பையில் வைத்திருந்த துண்டை கொடுத்தேன். முதலில் கொஞ்சம் தயக்கத்துடன் பார்த்தால், “டீச்சர்! ரொம்ப நேரம் ஈரத்தில் இருந்தால், ஜுரம் வந்துவிடும்! துவட்டி கொள்ளுங்கள்” என்று கொடுத்தேன். பின்பு சிரித்துக்கொண்டே வாங்கினால், “ரொம்ப தேங்க்ஸ்! ” என்று வாங்கிகொண்டாள். உடம்பில் இருந்த ஈரத்தை துடைத்த நேரத்தில் முந்தானை விலகி கீழே வீழ்ந்தது. இரண்டு முலைகளும் ப்ளௌஸ் உள்ளே மேற்கு தொடர்ச்சி மலை போன்று இரண்டு கூம்பாக நின்றது. டீச்சர் அன்று உள்ளே ப்ரா அணியாமல் இருப்பதை பார்க்க முடிந்தது. முலை காம்புகள் கூர்மையாக எழுந்து நின்று பார்த்தது. முலைகளின் இடையில் பள்ளத்தாக்கு புதைந்திருந்தது. ஆண்டி தொப்புள் ஓட்டை கூதியை போல கொஞ்சம் பெருசாக இருந்தது. சூத்து மேடுகள் தூக்கிக்கொண்டு சூப்பராக இருந்தது. சூத்தின் பிளவு அந்த அழகை எடுத்து காட்டியது. கூந்தல் ஈரமாக இடுப்பு வரை நீண்டதாவும், உதடு பிங்க் நிறத்தில் செக்சியாக இருந்தது. மொத்தத்தில் மலர் டீச்சரை அவளின் புருஷன் கூட இப்படியாலம் செக்சியாக பார்த்துருக்க மாட்டான். முழு காம அழகையும் பார்த்து விட்டு ஒன்றும் பார்க்காத மாதிரி திரும்பி கொண்டேன். அதன்பின் டீச்சருடன் நட்பாக பழக ஆரம்பித்தேன். மற்ற மாணவர்கள் எல்லாம் பேசவே பயந்த நேரத்தில், நான் மட்டும் பைக்கில் எல்லாம் அழைத்து சென்றேன். ஒரு நாள் பஸ் விட்டு தனியாக நின்ற நேரத்தில் பைக்கில் அழைத்து சென்று முலை ஈடுபாடுகளை ரசித்துக்கொண்டேன். நாட்கள் வேகமாக ஓடியது அப்பொழுது ஆகஸ்ட் 15 வந்தது. அன்று காலேஜில் கொடி ஏற்ற மாணவ மாணவிகள் அனைவரும் வந்தார்கள். நான் சீக்கிரமாக வந்துருந்தேன். அப்பொழுது ஒரு கேரளா பொண்ணு வகுப்பில் யாரும் இல்லாத நேரத்தில் இறுக்கமாக கட்டிப்பிடித்து லிப்லாக் கிஸ் அடித்து விட்டாள். அதை மலர் டீச்சர் ஜன்னல் வழியாக பார்த்து விட்டு கோபமாக சென்று விட்டாள். பின்பு அன்று காலை 10 மணிக்கு தேசியக்கொடி ஏற்றிவிட்டு அனைவரும் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்கள். மலர் டீச்சர் என்னிடம் தனியாக பேச வேண்டும் என்று ஆசிரியர் அறைக்கு அழைத்து சென்றார்கள். காலேஜில் யாருமே இல்லை, நானும் மலர் டீச்சர் மட்டுமே இருந்தோம். “உள்ளே வரலாமா? மேடம்!” என்று ஆசிரியர் ரூம் வெளியில் நின்று கேட்டேன். “ஹ்ம்ம் உள்ளே வா! வரும்போது கதவை லாக் செய்து விட்டு வா!” என்று கூறினார்கள். ஒரு வேளை கோபத்தில் என்னை அடிக்க போகிறார்கள் என்று பயந்தேன். “காலை ஒரு பெண்ணுடன் என்ன பண்ண?” என்று கேட்டு எழுந்து நடக்க ஆரம்பித்தாள். “மேடம்! நான் அமைதியாக தான் இருந்தேன். என்னை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து கிஸ் அடித்து விட்டால்” என்று கூறினேன். “டேய்! அந்த காரணம் எல்லாம் என்கிட்ட சொல்லக்கூடாது. உனக்கு எவளோ திமிரு இருந்தால் நான் இருக்கும்போது இன்னோரு பெண்ணை கிஸ் அடிச்சிருப்பா!” என்று சிரித்துக்கொண்டு கூறிவிட்டு அருகில் வந்தாள். இருவருக்கும் வேகமாக மூச்சு காற்று அடித்துக்கொண்டு இருந்தது. “நான் மட்டும் தான் கிச் அடிக்கணும்!” என்று கூறிவிட்டு உதட்டோடு உதட்டை வைத்து லிப்லாக் கிஸ் செய்தாள். மல்லு ஆன்டி உதட்டில் இருந்த லிப்ஸ்டிக் எல்லாம் என் உதட்டில் ஓட்டிக்கொண்டது. எனக்கு கொஞ்ச நேரத்தில் என் நடக்கிறது என்று புரியவில்லை. “உன்னை போன்ற அழகான பையனை யாருக்கு தான் பிடிக்காமல் போகும்” என்று கிஸ் அடிச்சிக்கொண்டே கூறினாள். நானும் ஆரம்பத்தில் கொஞ்சம் பொறுமையாக முத்தம் கொடுத்து விட்டு பின்பு வேகமாக கொடுத்தேன். இருவரின் நாக்கும் உதட்டின் உள்ளே சண்டை போட்டுகொண்டு இருந்தது. எச்சியை தண்ணீர் போன்று சப்பி குடித்தேன். மெதுவாக ப்ளௌஸ் மீது கையை வைத்து பிழிந்தேன். சரியாக நேரம் மதியம் 1 மணி, மேகம் இருட்டாகி மழை வந்தது. இருவருக்கும் உடம்பு மேலும் சூடாக மாறியது. நெற்றியில் முத்தம் கொடுத்துக்கொண்டே கழுத்தில் புதையல் எடுத்தேன். பின்பு ஆசிரியர் அறையில் இருந்த இரண்டு டேபிள் ஒன்றாக இணைத்து படுக்கையறை போன்று மாற்றினேன். அதில் மல்லுவை தூக்கி படுக்க வைத்து முந்தானையை கழட்டினேன். இரண்டு முலைகளும் கூர்மையாக இருந்தது, மெதுவாக பேசிக்கொண்டு ப்ளௌஸ் ஹூக்கை கழட்டினேன். டீச்சர் ப்ரா அணியாமல் முலை தரிசனம் கொடுத்தால், பின்பு முலைகளின் மீது முகத்தை வைத்து வேகமாக தேய்த்தேன். ஒரு முலை காம்பை உதட்டில் வைத்து சப்பிகொண்டு மாற்று ஒரு காம்பை கையால் பிடித்து உருட்டினேன். பின்பு மெதுவாக தொப்புள் ஓட்டையில் நாக்கை வைத்து உறிந்தேன். மேலும் கீழே சென்று பாவாடையை கழட்டி ஜட்டியை கடித்து உருவினேன். புண்டை மூடிகள் ஒன்றும் இல்லாமல் ஷாவ் செய்து செக்சியாக வைத்துருந்தாள். இரண்டு கால்களையும் விரித்து ஆண்டி புண்டை ஓட்டைக்கு நாக்கு போடா ஆரம்பித்தேன். என் தலையை புண்டையுடன் சேர்த்து அணைத்து கொண்டு, “ஹ்ம்ம் சூப்பர் டா இன்னும் ஆழமாக சப்பு!” என்று துடித்தாள். டீச்சர் கூதி கொஞ்ச நேரத்தில் ஈரமாகியது. அதன்பின் என் சுன்னியை எடுத்து மேல்புறத்தில் வேகமாக வைத்து தேய்த்தேன். இரண்டு முலைகளும் பிடித்து சுன்னியை மெதுவாக புண்டை ஓட்டையில் விட்டு இறக்கினேன். வாழை பழத்தில் ஊசி இறங்குவது போன்று மல்லு டீச்சரின் கூதியில் பூல் இறங்கியது. ஆரம்பத்தில் கொஞ்சம் பொறுமையாக அடித்துக்கொண்டே வேகத்தை ஏற்றினேன். என் தோள்பட்டை மீது கால்களை வைத்து புண்டையை ஓத்தேன். பின்பு டாகி ஸ்டைலில் முட்டி போடா வைத்து பின்வழியாக சுன்னியை விட்டு பலமாக அடித்தேன். பின்னால் இருந்து அடிக்கும்போது முன்னால் இரண்டு முலைகளும் குலுங்கியது. பின்பு நான் கீழே படுத்துக்கொண்டு டீச்சரை மேலே ஏறி அடிக்க வைத்தேன். இறுதியாக புண்டையில் சுன்னியை விட்டு ரயில்வேகத்தில் அடித்து தெறிக்க விட்டேன். ஜன்னல் வழியாக மழை சாரல் அடித்தது, “இனிய சுதந்திரதினம்” என்று கூறிவிட்டு புண்டையில் விந்தை சூடாக இறக்கினேன். பின்பு அந்த கொழ கொழப்பான தன்மையில் விட்டு மீண்டும் ஓத்தேன். அதன்பின் டீச்சர் என் சுன்னியை உதட்டில் வைத்து ஒரு மணி நேரம் ஊம்பினாள். மீண்டும் ஒரு முறை மல்லு டீச்சர் முலை மற்றும் உதட்டில் கஞ்சியை அடித்து தெளித்தேன். இறுதியாக மழை விட்டதும், ஆடைகள் அணிந்துகொண்டு மாலை 6 மணிக்கு வீட்டுக்கு புறப்பட்டு சென்றோம். பின்னர் யாருக்கும் தெரியாமல் வகுப்பு அறை, வீடு, ஹோட்டல் என்று செக்ஸ் மட்டுமே வாழ்க்கையாக செய்தோம். அடுத்த வாய்ப்பில் வேறொரு சூப்பரான ஆண்டியை ஓலு ஓத்து விட்டு காம கதையை பகிர்ந்து கொள்கிறேன். எங்களின் காமக்கதையை தொடர்ந்து படித்து ஆதரவு கொடுங்கள்! முற்றும்! மிக்க நன்றி! Tags:latest tamil sex storiestamil aunty sex storiestamil kamakathaikal 2020tamil sex storyஆண்டி செக்ஸ்டீச்சர் செக்ஸ் ஸ்டோரீஸ்தமிழ் காமக்கதைகள்
இந்திய அரசை ஒன்றிய அரசு என்று சொல்லக் கூடாதாம்! தமிழ்நாடு மாநிலத்தையும் தமிழ்நாடு என்று சொல்லக் கூடாதாம்! பாசக தமிழ்நாடு மாநிலத் தலைவர் முருகன் தொடங்கி “தேசிய” நாளேடு தினமலர் வரை குமுறுவதிலும் பொருமுவதிலும் சட்டக் காரணமும் இல்லை: வரலாற்று ஏரணமும் இல்லை. இந்திய அரசமைப்பு இந்தியாவை ”Union of States” என்றே வரையறுக்கிறது. State என்பதை அரசு என்றோ நாடு என்றோ மாநிலம் என்றோ மொழிபெயர்க்கலாம். Nation without State என்பதை அரசற்ற தேசம் என்கிறோம். Stateless people என்றால் நாடற்ற மக்கள் என்று பொருள். United States of America என்பதை அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்று சொல்கிறோம். நீதிமன்றத் தீர்ப்புகளில் இந்திய அரசானாலும் மாநில அரசானாலும் State என்றுதான் குறிக்கப்பெறும். State Government என்னும் போதுதான் அன்றாட வழக்கில் மாநில அரசு என்றாகிறது. இதிலும் கூட province அல்லது மாகாணம் வேறு. State அல்லது மாநிலம் வேறு. மாகாணம் என்பது வெறும் ஆட்சியலகு (admninistrative unit). State அல்லது மாநிலம் என்பது இறைமை அல்லது அரசுரிமையைக் குறிக்கும். இங்கு மாநிலம் என்பதை குறுநிலத்துக்கு எதிர்நிறுத்திப் புரிந்து கொள்ள வேண்டும். குறுநிலம் என்பது இறைமையற்றது, ஒரு பேரரசுக்குக் கப்பம் கட்டி வாழ்வது. அயலாட்சிக்கு அடங்கிய பாளையப்பட்டைப் போன்றது. எனவே Union of states என்பதை அரச மாநிலங்களின் ஒன்றியம் என்று தமிழாக்கம் செய்வது பொருத்தமாக இருக்கும். “India, that is Bharat, shall be a Union of States” (பாரதம் என்னும் இந்தியா அரசமாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்) என்பதுதான் அரசமைப்புச் சட்டத்தின் முதல் உறுப்பு (Article 1). சட்ட முறைப்படியும் அதிகாரமுறைப் படியும் இந்திய ஒன்றியம் என்பதுதான் இந்த நாட்டின் சரியான பெயர். ஆண்டுதோறும் இந்திய நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வது ஒன்றிய நிதிநிலை அறிக்கைதான். உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றங்களும் எப்போதுமே இந்திய அரசை ஒன்றியம் (Union) என்றுதான் குறிப்பிடுகின்றன. ஊடகங்களும் எளிய மக்களும் இந்திய அரசை மத்திய அரசு என்றோ மைய அரசு என்றோ நடுவண் அரசு என்றோ தில்லி சர்க்கார் என்றோ சொல்வதால் இந்திய ஒன்றியம் என்ற அதிகாரமுறைப் பெயர் மறந்தோ மறைந்தோ போய் விடாது. எனவே இந்திய ஒன்றியம் என்பதில் சொற்குற்றம் ஏதுமில்லை. அதற்கு உள்நோக்கம் கற்பிப்பது இந்திய அரசமைப்பின் சிற்பிகளுக்கும் அரசமைப்புப் பேரவைக்கும் உள்நோக்கம் கற்பிப்பதே ஆகும். இந்திய ஒன்றியம் என்பதற்கு மாறுபட்ட பொருள்விளக்கம் தருவதிலும் பிழையில்லை; அது கருத்துரிமையின் பாற்பட்டது. தமிழ்நாடு என்ற பெயருக்கு மறுக்கவியலா இலக்கிய, வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. தொல்காப்பியம் ”வடவேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம்” என்று எல்லை வரையறையே கொடுத்துள்ளது. சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் ”இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இது நீ கருதினை ஆயின்” என்று முக்கடலையும் வேலியாகக் கொண்ட தமிழ்நாடு என்பதை அறுதியிட்டுரைப்பார். எந்த வினாவுக்கும் சரியான விடை (வழா விடை) சொல்ல வேண்டும் என்பதற்கு 11ஆம் நூற்றாண்டிலேயே தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணார் எடுத்துக் காட்டியது என்ன தெரியுமா? ”நும் நாடு யாதென்றால் தமிழ்நாடு என்றல்”! இவ்வளவு தொன்மைச் சிறப்பு வாய்ந்த தமிழ்நாடுதனை பற்பல பாவலர்களும் அறிஞர்களும் போற்றிய போதிலும் தமிழ்நாடு என்ற அரசியல் அலகு ஏதும் அதிகாரமுறைப்படி அறிந்தேற்கப்படாத நிலைதான் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை நிலவிற்று. தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய காந்தியார் மொழிவழிக் குமுகங்களின் விடுமைக்காகக் குரல் கொடுத்தார். முதல் படியாகக் காங்கிரஸ் மாகாண அமைப்புகளை மொழிவழி வகுத்தமைக்க வேண்டும் என வலியுறுத்தினார். 1920ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயககம் நடத்தத் தீர்மானித்த அதே நாகபுரிப் பேராயத்தில்தான் காந்தியாரின் விருப்பப்படி காங்கிரஸ் அமைப்பை மொழிவழி வகுத்தமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இப்படித்தான் தமிழ்நாடு காங்கிரஸ் என்ற பெயர் வந்தது. 1924-25 இல் தந்தை பெரியார் தலைவராக இருந்தது தமிழ்நாடு காங்கிரசுக்குத்தான்! இப்போதும் சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி என்ற பெயர்ப் பலகையைக் காணலாம். விடுமைப் போராட்டக் காலத்தில் மொழிவழி மாநிலங்கள் அமைப்பதாக உறுதியளித்து வந்த காங்கிரஸ் தலைமை அதிகாரக் கைமாற்றத்துக்குப் பின் மொழிவழி மாநிலங்கள் அமைந்து விடாமல் பார்த்துக் கொண்ட போது பொட்டி சிறிராமுலுவின் உயிரீகமும், ”விசலாந்திரத்தில் மக்கள் இராச்சியம்” என்ற முழக்கத்துடன் பொதுமையர் தலைமையில் நடந்த வீரத் தெலங்கான ஆய்தப் போராட்டமும் 1953இல் ஆந்திர மாநிலம் அமைக்கச் செய்தன. மொழிவழி மாநிலம் அமைத்து அதற்குத் தமிழ்நாடு என்று பெயரிடக் கோரி விருதுநகர் சங்கரலிங்கனார் 76 நாள் பட்டினிப் போராட்டம் நடத்தி 1956 அக்டோபர் 13ஆம் நாள் உயிரீகம் செய்தார். 1956 நவம்பர் முதல் நாள்தான் ’மதராஸ்’, கேரளம், கர்நாடகம் ஆகிய மொழிவழி மாநிலங்கள் பிறந்தன. நம் தமிழ்நாடுதான் அப்போது மதராஸ் என்றும் Madras என்றும் சென்னை என்றும் பலவாறு பெயரிட்டழைக்கப் பட்டது. இந்த மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர்சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் ஆட்சியாளர்கள் ஏற்க மறுத்தார்கள். முதலமைச்சர் காமராசரே எள்ளி நகையாடினார். 1967ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர்மாற்றம் செய்வதற்கான தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக இயற்றப்பட்டது. 1968 நவம்பரில் இந்திய நாடாளுமன்றம் இந்தப் பெயர் மாற்றத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியிருந்தது. இப்போது அரசமைப்புச் சட்டத்தின் முதல் அட்டவணையில் அரசமாநிலங்களின் பட்டியலிலும் தமிழ்நாடு என்ற பெயர்தான் உள்ளது. இந்திய ஒன்றியம் என்று சொல்லாதே என்பதில் போலவே தமிழ்நாடு என்று சொல்லாதே என்ற கூச்சலிலும் சட்டக் காரணமோ வரலாற்று ஏரணமோ துளியும் இல்லை. இருக்கிற அரசமைப்புக்கு உட்பட்ட சில உரிமைகளையும் கூட மறுக்கவும் அந்த மறுப்பை ஞாயப்படுத்தவும் இந்திய ஆட்சியாளர்கள் செய்து வரும் கெடுஞ்சதிக்கு உருமறைப்பாகவே இந்துத்துவ ஆற்றல்கள் கூச்சல் கிளப்பிக் கொண்டுள்ளன. இந்திய ஒன்றியம் என்பதிலோ தமிழ்நாடு என்பதிலோ பேச்சுக்கும் கூட பிரிவினை இல்லை. அரசமைப்புக்குட்பட்ட மாநில உரிமைகளையும் கூட மறுத்து அழிச்சாட்டியம் செய்வதன் வாயிலாக நரேந்திர மோதி – அமித்சா வகையறாதான் பிரிவினை எண்ணத்தை மாநிலங்கள் எங்கும் விதைத்து வருகின்றார்கள் என்பதே உண்மை. ஆட்சியாளர்களின் பிரிவினைத் தூண்டுதல் செயல்பாடுகளை மறைக்கவே இந்துத்துவக் கையாட்கள் பிரிவினைப் பூச்சாண்டி கிளப்பி வருகின்றனர். எந்தப் பூச்சாண்டிக்கும் அஞ்சாமல் எல்லாத் தரப்பினரும் இந்திய ஒன்றியம், தமிழ்நாடு என்ற பெயர்களைத் தொடர்ந்து பொருத்தமான எல்லாவிடத்தும் ஆள வேண்டுகிறோம். அதேபோது, இந்தப் பெயர்கள் மட்டுமே இந்திய வல்லரசியத்தை வழிக்குக் கொண்டுவந்து விடும் என்ற மயக்கம் கூடாது. தமிழ்நாடு அரசு இறைமை கொண்டது என்பது மெய்யா? மாநில அதிகாரப் பட்டியல் என்ற அளவிலாவது அதற்கு இறைமை உள்ளதா? மாநிலப் பட்டியலில் மிச்சமுள்ள அற்பசொற்பக் கூறுகளில் சட்டமியற்றுவதானலும் கூட ஆளுநரிடம் (அல்லது குடியரசுத் தலைவரிடம்) ஒப்புதல் பெற வேண்டும் என்ற விதிமுறை இருப்பதால் இந்த அரசமைப்பில் மாநில இறைமை என்பதெல்லாம் சட்டக் கற்பனையே தவிர வேறல்ல. ஒன்றியம் என்ற பெயரே இந்திய ஒன்றியத்தை சோவியத்து ஒன்றியம் போன்றதாக்கி விடாது. ஒன்றியம் என்ற பெயர் இருப்பினும் அதன் உறுப்பலகுகளுக்கு (மொழிவழித் தேசங்களுக்களுக்கு) பிரிந்து செல்லும் உரிமை உள்ளிட்ட தன்தீர்வுரிமை கிடையாது. ஒன்றியம் என்ற பெயரைச் சொன்னாலே கூட்டாட்சிக்கு வழிதிறக்கும் என்பதற்கும் அடிப்படை இல்லை. இந்தியாவைக் கூட்டாட்சி என்று குணங்குறிப்பதை அண்னல் அம்பேத்கர் வன்மையாக மறுத்தார்: அமெரிக்காவில் நடந்தது போல் தற்சார்பான தனித்தனி குடியேற்றங்கள் விரும்பிச் சேர்ந்துதான் கூட்டாட்சி அமைத்தன. இங்கு நாமாக விரும்பிச் சேரவில்லை. பிரித்தானிய ஆட்சியாளர்களே பொருளியல், அரசியல் காரணங்களுக்காக நம்மைச் சேர்த்து வைத்தனர். நாம் சேர்ந்து போராடினோம். சேர்ந்தே தொடர்வோம். அதற்கு ஏற்றது ஒன்றியமே என்றார். மாநிலங்களுக்கென்றுத் தனியாக அதிகாரப் பட்டியல் இருப்பதால், அந்த அளவுக்கு அவை இறைமை கொண்டவை என்று அம்பேத்கர் விளக்கமளித்தார். அவரது எண்ணம் பட்டறிவால் மெய்ப்படவில்லை. இறைமை இருக்கட்டும், மாநில உரிமைகள் படும் பாட்டை அவர் கண்டிருக்க வேண்டும். அரசமைப்புப் பேரவையில் மகபூப் அலி பெய்க் சாகிப் பகதூர் என்ற உறுப்பினர் தந்த எச்சரிக்கையின் தொலைநோக்கு நம் கவனத்துக்குரியது: “நமது அரசு ஒரு கூட்டாட்சி அரசாகத்தான் இருக்க வேண்டும் என்றும், ஒற்றையாட்சி அரசாக இருக்கக் கூடாது என்றும் நீங்கள் கருதினால், எதிர்காலத்தில் ஏதேனும் அதிகார நாட்டங்கொண்ட கட்சி இதனை ஒற்றையாட்சி முறையாக மாற்றி, பாசிச வல்லாட்சியாக்கி விடுவதை நீங்கள் தடுக்க விரும்பினால், கூட்டாட்சி என்ற சரியான சொல்லைத்தான் பயன் படுத்த வேண்டும். ஆகவே ஒன்றியம் என்பதற்கு மாற்றாக கூட்டாட்சி என்ற சொல்லைப் பயன்படுத்துமாறு முன்மொழிகிறேன்.” அவரது முன்மொழிவு மறுதலிக்கப்பட்டது. அவரது எச்சரிக்கையின் அருமையை பாசக ஆட்சி இப்போது புரிய வைத்து விட்டது. அறிஞர் கே.வி. ராவு ”இந்திய நாடாளுமன்றக் குடியாட்சியம் (ஒரு குற்றாய்வு)” என்ற நூலில் ஒன்றியத்தின் உண்மையை உடைக்கிறார்: “நமது அரசமைப்புச் சட்டத்தில் உள்ள ஒற்றையாட்சிக் கூறுகளைக் கோடிட்டுக் காட்டுவதற்குத்தான் ஒன்றியம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. கூட்டாட்சி என்ற சொல் அரசமைப்புப் பேரவையில் வன்மையாகவும் வெற்றிகரமாகவும் எதிர்க்கப்பட்டது.” ஆக, இந்திய ஒன்றியம் என்பது மாநிலங்கள் விரும்பிச் சேர்ந்ததோ விரும்பினால் பிரிந்து செல்லத்தக்கதோ அன்று. இது கூட்டாட்சித் திரையால் தன்னுரு மறைத்துக் கொள்ளும் ஒற்றையாட்சி ஒன்றியமே தவிர, உரிமைகளை மதிக்கும் கூட்டாட்சி - ஒன்றியமன்று. தமிழ்நாடு நாடெனப்பட்டாலும் இறைமை கொண்டு இலங்குவதன்று. மாநிலம் எனப்பட்டாலும் தன்னாட்சி கொண்டு இலங்குவதன்று. இறுதிக்கும் இறுதியாக, அது இந்திய வல்லரசியத்துக்கு அடிமைப்பட்ட ஒரு தேசம். பெயரை மட்டும் மாற்றி வைப்பதாலேயே மீட்சி பெற்று விட முடியாது. இந்திய ஒன்றியம், தமிழ்நாடு என்று நாம் சொல்வதால் இந்துத்துவக் கும்பல் ஆத்திரப்படுவதைக் கண்டு மனநிறைவுற்று, இறைமை மீட்புக்கும் தன் தீர்வுரிமைக்குமாகப் போராடும் தேவையைப் புறக்கணித்து விட வேண்டாம்.
போதைப் பழக்கத்தை பெருமிதமாக முன்வைக்கும் பாடல்களை ஒலிபரப்பக் கூடாது... FM ரேடியோக்‍களுக்‍கு மத்திய அரசு எச்சரிக்‍கை வாகன எண் பலகையில் அரசியல் தலைவர்களின் படங்களை ஒட்டுவதை போக்குவரத்து அலுவலர்கள் எவ்வாறு அனுமதிக்கின்றனர்? உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை கேள்வி நாடு முழுவதும் ஒரே சீரான மின்கட்டணம் இருக்க வேண்டும்... பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் வலியுறுத்தல் சென்னை கொளத்தூரில் கோயிலுக்கு நடந்து சென்ற பெண்ணிடம் 6 சவரன் தாலி செயின் பறிப்பு... சி.சி.டி.வி. காட்சிகள் வெளியீடு சென்னை அண்ணா நகரில் பட்டாக்‍கத்தியுடன் வாகன ஓட்டிகளை மிரட்டும் ரவுடிக்‍ கும்பல் - தேநீர் கடையில் செல்போன் பறித்த சி.சி.டி.வி காட்சிகள் வெளியீடு கோவை சிலிண்டர் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உரக்கடைகளில் போலீசார் சோதனை... வெடிமருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் சோதனை குஜராத்தில் அமைதியாக நடந்து முடிந்தது முதல் கட்டத் தேர்தல் : 89 சட்டமன்றத் தொகுதிகளில் 60.20% வாக்குப்பதிவு தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்‍கு சில மாவட்டங்களில் இடி-மின்னலுடன் லேசானது முதல் கனமழை பெய்யக்‍கூடும்... இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் கன்னியாகுமரியில் இருந்து டாரஸ் லாரிகளில் கனிம வளங்கள் கேரளாவுக்‍கு கடத்தல்... நெல்லையிலிருந்து குமரி வழியாக கடத்த முயன்ற 5 லாரிகள் பறிமுதல் குறிப்பிட்ட காலத்துக்‍குப் பின் நோயாளிகள் உட்கொள்ளும் மாத்திரைகளின் வீரியம் குறைவதாக அதிர்ச்சித் தகவல் - கிருமிகள் மருந்துகளுக்‍கு எதிரான ஆற்றலை அதிகரித்துக் ‍கொள்வதாக விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
போட்டித்தன்மை கூர்மை பெறுகின்ற இந்த யுகத்தில் வியாபாரமயம், நிதியிடல், முகாமைத்துவம் என்பவை உள்ளடங்கிய விரிவான விடயப் பரப்பைப்பற்றி, ஒரு விடயத்துக்கு மட்டும் வரையறுக்கப்படாத சிறந்த அறிவை உங்களுக்கு வழங்கி, உங்களுடைய தொழிலில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு பட்டய கணக்காளர் தகைமை திட்டமிடப்பட்டது. பட்டய கணக்காளார் பட்டய கணக்காளர் கணக்கீடு, கணக்காய்வு, முகாமைத்துவ கணக்கீடு, தகவல் தொழில்நுட்பம், குத்தகை, கூட்டிணைப்பு மற்றும் வாணிப சட்டம், நிதி முகாமைத்துவம், பொருளியல், ஏனைய தொடர்புடைய விடயங்கள்பற்றி சிறந்த அறிவுடைய கணக்கீட்டுத்துறையில் ஈடுபட்டுள்ள ஒரு தொழில் நிபுணராவார். தற்பொழுது பட்டய கணக்காளர்கள், அரச மற்றும் தனியார் துறைகளில் மிக உயர்ந்த பதவிகளை வகிக்கின்றனர். இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பட்டயக்கணக்காளர்களாகவும் முகாமைத்துவ ஆலோசகர்களாகவும் அவர்கள் சேவையாற்றுகின்றனர். பட்டயக்கணக்காளர்கள் இலங்கை பட்டயக்கணக்காளர் நிறுவனத்தில் அங்கத்தவர்களாக இருக்கின்றனர். தொழில்சார் எதிர்பார்ப்பு அண்மைக் காலங்களிலிருந்து பட்டயக்கணக்காளர்களுக்கு நிலவும் கேள்வி துரிதமாக அதிகரித்துள்ளது. இலங்கையில் அரச மற்றும் தனியார் துறைகளில் தொடர்ச்சியாக அதிகரித்துக்கொண்டிருக்கிற விரிவான பரப்பெல்லைக்குரிய பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் பட்டயக்கணக்காளர்களின் சேவையை மிக அக்கறையுடன் பெற்றுக்கொள்ள முயற்சியெடுக்கின்றன. இலங்கையின் பட்டயக்கணக்காளர்களின் தொழில் தேர்ச்சியும் சிறப்பறிவும் உலகம் முழுவதிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன. தற்பொழுது மொத்த உறுப்பினர்களின் 27% மானவர்கள் வெளிநாடுகளில் சேவையாற்றுகின்றனர். அவர்களின் சேவையைப் பெறுவதற்கு உயர்ந்துகொண்டிருக்கின்ற கேள்வியின் காரணமாக, சமீப காலத்தில் பட்டயக்கணக்காளர்களின் சராசரி வருமானம்/ ஊதியம் துரிதமாக அதிகரித்துள்ளது. அதன் பிரகாரம் தமது பரீட்சையையும் பயிற்சியையும் வெற்றிகரமாகப் பூர்த்திசெய்த மாணவனுக்கு, மாணவிக்கு உயர்ந்த சம்பள திட்டத்தை எதிர்பார்க்க முடியும். இலங்கையில் பட்டயக்கணக்காளர்கள் கொழும்பு பங்குச் சந்தையில் மிக உயர்ந்த நிலையில் இருக்கின்ற 50 வர்த்தக கம்பனிகளுக்கிடையில் நூற்றுக்கு 60% மானவற்றில் தலைவர், பிரதான நிறைவேற்று அதிகாரி அல்லது நிதிப்பணிப்பாளர் என்றவகையில் கடமையாற்றி, இலங்கை வர்த்தக கம்பனிகளின் பணிப்பாளர் சபையில் உன்னதமான பணிகளை இலங்கை பட்டயக்கணக்காளர் நிறுவனத்தின் அங்கத்தினர்கள் நிறைவேற்றுகின்றனர். தகைமை இலங்கை பட்டயக்கணக்காளர் நிறுவனம் வழங்குகின்ற உலகம் முழுவதிலும் வரவேற்புக்குள்ளாகியுள்ள தகைமை, கணக்கீடு போன்று கணக்கீடு உள்ளடங்காத துறைகளைப்பற்றியம் பூரண அறிவை மாணவ/ மாணவிகளுக்கு வழங்குகின்றது. வழங்குகின்ற விரிவான பயிற்சி மற்றும் உயர்மட்ட பாடநெறிகளின் காரணமாக நீங்கள் உலக வரவேற்பைப் பெறுகின்ற தொழில்சார் நிபுணர்களாக முடியும். சேவை பெறுநர்களைச் சார்ந்த பட்டயக்கணக்காளர்களை சொத்தாகக் கருதுகின்றனர். அக்கம்பனிகள் முன்னணிவகித்து நீண்டகால வியாபார வெற்றியில் முன்செல்லக்கூடிய உபாயமுறைகளை மற்றவர்களுக்கும் காட்டுகின்றபோது, பட்டயக்கணக்காளர்களை சேவையிலீடுபடுத்துவது ஒரு முதலீடாகக் கருதப்படும்.
''நிஜமாவே பூகம்பம் வந்துட்டா, பரீட்சையைத் தள்ளி வெச்சுடுவாங்க இல்லே'' என்ற பிரதீப் குரலில் ஆர்வம் பொங்கியது. ''அடப்பாவி! ஏன்டா உனக்கு இந்த விபரீத ஆசை?'' என்ற தீபாவின் குரல், பூகம்பம் வந்ததைப் போல் நடுங்கியது. அன்று ஞாயிற்றுக் கிழமையின் மாலை நேரம். எல்லாச் சுட்டிகளும் மாயா டீச்சர் வீட்டில் ஆஜராகி இருந்தார்கள். அவர்களுக்காக சமையல் அறையில் சிற்றுண்டியைத் தாயாரித்துக்கொண்டு இருந்த டீச்சர், இவர்களின் பேச்சைக் கேட்டு சிரித்துக்கொண்டார். சில நிமிடங்களில் சூடான உணவுடன் டைனிங் ஹாலுக்கு வந்தார். ''இந்தப் பசங்க பேசினதைக் கேட்டீங்களா டீச்சர்?'' என்ற தீபாவின் குரலில் இன்னும் நடுக்கம் போகவில்லை. ''ம்...ம்... கேட்டுக்கிட்டுதான் இருந்தேன். என்ன பரத், பிரதீப் நீங்க எல்லாம் நல்லாப் படிக்கிற பசங்கதானே? அப்புறம் எதுக்கு பூகம்பத்துக்கு இன்விடேஷன் கொடுக்கறீங்க?'' என்று கேட்டார். ''நல்லாவே படிக்கிறோம். எக்ஸாமிலும் நல்லாவே கலக்கிடுவோம். இருந்தாலும் காரணம் சொல்ல முடியாதபடி ஒரு நடுக்கம்'' என்றான் பரத். ''பரவாயில்லை. இந்த நடுக்கம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனா, பூகம்பம் லட்சக்கணக்கான உயிரினங்களைப் பலி வாங்கிடும்'' என்றார் மாயா டீச்சர். ''டீச்சர் என் ஃப்ரெண்டு பாவ்னா, 'ஒவ்வொரு வருஷமும் உலகம் முழுக்க பத்து லட்சம் பூகம்பங்கள் ஏற்படுது’னு சொல்றா. அது உண்மையா? கதை விடறாளா?'' என்று கேட்டாள் சுரேகா. ''உண்மைதான் சுரேகா. ஆனால், பெரும்பாலும் ரொம்பவே சின்னச் சின்ன நிலநடுக்கங்கள். ரிக்டர் அளவில் 1-3 வரையான நிலநடுக்கங்களை, பூகம்பமானியால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.'' என்றார் டீச்சர். ''பூகம்பம், நிலநடுக்கம் இரண்டுமே ஒண்ணுதானே டீச்சர்?'' என்று கேட்டான் பிரதீப். ''சின்னதாக வந்தால் நிலநடுக்கம் என்றும், பெரியதாக வந்தால் பூகம்பம் என்றும் வார்த்தையால் வேறுபடுத்துகிறோம். அவ்வளவுதான். அளவைப் பொறுத்துதான் பாதிப்புகள் இருக்கும். இப்போ இங்கே எட்டு பேர் இருக்கோம். ஒரு செகண்டுக்கும் குறைவான நேரத்தில் ரொம்ப மைல்டா ஒரு நிலநடுக்கம் வந்துட்டுப் போய்டும். பரத், சுரேகான்னு நாலு பேர் உணர்ந்து இருப்பாங்க. நாம நாலு பேர் உணர்ந்துகூட இருக்க மாட்டோம்'' டீச்சர் இப்படிச் சொன்னதும் தரையில்வைத்து இருந்த தனது கால்களைத் தூக்கிக்கொண்டாள் தீபா. இதை நொடியில் கவனித்த மற்றவர்கள் சிரித்தார்கள். ''தீபா நீ ரொம்பவே பயப்படறே. உன் பயத்தைத் தெளியவைக்க ஒரே வழி, ஒரு பூகம்பத்தை நேரடியாக் காட்டுறதுதான்'' என்றார் மாயா டீச்சர். ''ஹை... சூப்பர்! நான் போய் மந்திரக் கம்பளத்தை எடுத்து வரேன்'' என்றவாறு அறைக்குள் ஓடினான் பிரதீப். ''என்னமோ தீம் பார்க் கூட்டிட்டுப் போகிற மாதிரி ஓடறான் பாரு. நான் வர மாட்டேன்ப்பா'' என்றாள் தீபா. ''பயப்படாதே தீபா. மந்திரக் கம்பளத்தை உடையாத பெரிய கண்ணாடிக் கோலிக்குண்டாக மாத்திடறேன். அதில் இருந்தவாறு பார்க்கலாம். எந்த பாதிப்பும் ஏற்படாது'' என்று உறுதி அளித்தார் மாயா டீச்சர். பிரதீப் கம்பளத்துடன் வந்தான். அதில் ஏறியதும் கம்பளம், கண்ணாடி கோலிக்குண்டு போல் மாறியது. பூமியைத் துளைத்துக்கொண்டு கீழே.... கீழே சென்று, ஓர் இடத்தில் மிதந்தது. ''இரண்டு பாறைத் தட்டுக்கள் ஒன்றோடு ஒன்று மோதும் சம்பவம்தான் பூகம்பம் என்று உங்களுக்கு தெரிஞ்சு இருக்கும். இதிலும் மூன்று விதங்கள் இருக்கு. இங்கே ரெண்டு பக்கமும் கவனிங்க. பாறைத் தட்டுக்கள் நகர்ந்து வருது. இந்த நகர்தல் ஆண்டுக்கு சில சென்டி மீட்டர்தான் இருக்கும். சாதாரணக் கண்களுக்கு இது தெரியாது. மந்திரக் கம்பளத்தின் மகிமையால் நம் கண்கள், மெகா சைஸ் மைக்ரோஸ்கோப்பாக மாறி, காட்சியைக் காட்டுது'' என்றார் மாயா டீச்சர். சுட்டிகள் பார்த்தார்கள். பிரமாண்டமான பாறைத் தட்டுக்கள் நேருக்கு நேராக நெருங்கிக்கொண்டு இருந்தன. சுட்டிகள் முகங்களில் 'என்ன நடக்குமோ?’ என்கிற பயம் தோன்றி இருந்தது. ''இந்த மோதல்களில் கூடவா வகைகள் இருக்கு?'' என்று கேட்டான் பரத். ''ஆமா! ஒண்ணு... ஒரே திசையில் பக்கம் பக்கமாகப் போய்ட்டு இருக்கிற இரண்டு பாறைத் தட்டுக்கள், முனைகளில் லேசாக உராய்ந்துகொள்வது. அடுத்தது, பெருசும் சிறுசும் மோதிக்கொள்வது. அதாவது, ஒரு சிறிய பாறைத்தட்டு நேராக வந்து, ஒரு பெரிய பாறைத் தட்டின் கீழே இருக்கும் இடைவெளியில் எக்குத் தப்பாக மாட்டிக்கொள்ளும். மூன்றாவது வகை, சம அளவு உடைய இரண்டு பாறைத் தட்டுக்கள் ஒன்றோடு ஒன்று மோதுவது. இது, இரண்டு சுமோ வீரர்கள் மோதிக்கொள்வது மாதிரி.'' என்றார் டீச்சர். ''அப்படின்னா, இப்போ நாம் பார்க்கிறது சுமோ வீரர்கள் மோதலையா? நல்லாக் கூட்டிட்டு வந்தீங்க டீச்சர்.'' தீபா இப்படி பயத்துடன் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அந்த சம்பவம் நிகழ்ந்தது. இரண்டு பாறைத் தட்டுக்களும் மோதிக்கொள்ள, பயங்கரமான சத்தம். மிக மிக பாதுகாப்பான மந்திரக் கம்பளத்தின் உள்ளேயே அதை உணர முடிந்தது. ''நமக்கே இப்படின்னா, தரைக்கு மேலே என்ன நடந்து இருக்குமோ?'' என்ற சுரேகா குரலில் வருத்தம். ''உங்களுக்கு ஓர் ஆறுதலான விஷயத்தைச் சொல்றேன். இந்த பூகம்பம் நடந்து இருப்பது பெரும்பாலும் வெட்டவெளியாக இருக்கிற ஒரு தீவில்தான். அதனால், உயிர் மற்றும் பொருள் சேதம் குறைவு. இதுவே, கட்டடங்கள் நிறைந்த இடத்தில் ஏற்பட்டு இருந்தால், பயங்கரமாக இருக்கும்.'' என்றார் மாயா டீச்சர். ''அப்படின்னா பெரிதாக ஏற்படுகிற உயிர் சேதங்களுக்கு மனிதர்களும் ஒரு காரணம்னு சொல்லுங்க'' என்றான் பரத். ''ரொம்ப கரெக்ட்! மனிதன் பேராசையால், உயர உயரமான கட்டடங்களைக் கட்டி, அதில் வசிக்கிறான். பூகம்பத்தால் அந்தக் கட்டடங்கள் நொறுங்கி, நொடிப்பொழுதில் பலரைக் கொன்றுவிடுகிறது.'' என்றார் டீச்சர். மந்திரக் கம்பளம் மீண்டும் மேல் நோக்கி செல்ல ஆரம்பித்தது. ''ஜப்பானில் மட்டும் ஏன் டீச்சர் அடிக்கடி பூகம்பம் ஏற்படுது?'' என்று கேட்டான் பிரதீப். ''பூமியின் அடிப் பகுதியில் எங்கே எல்லாம் இரண்டு பாறைத் தட்டுக்கள் சந்திக்கின்றனவோ, அங்கேதான் பூகம்பம் ஏற்படும். ஜப்பான், அந்தமான் தீவுகள் அதில் முக்கியமானவை. அதனால்தான், அங்கே அடிக்கடி ஏற்படுகிறது. ஆனாலும் ஒரு விஷயம். ரிக்டர் அளவில் எட்டுக்கு மேல் மிகப் பெரிய பூகம்பம் ஏற்பட்டால், அந்த இடத்தில் அடுத்த 50 அல்லது 100 ஆண்டுகளுக்கு பூகம்பம் ஏற்படாது. காரணம், இந்த பாறைத் தட்டுக்களால் ஏற்பட்ட அழுத்தம் அந்த இடத்தில் நீங்கிவிட்டு இருக்கும்'' என்றார் மாயா டீச்சர். ஒரு வழியாக மந்திரக் கம்பளம் அவர்களை மாயா டீச்சரின் வீட்டில் பழைய நிலையில் இறக்கியது. தீபா ஓடிச்சென்று தொலைக்காட்சியை இயக்கினாள். அதில், பூகம்பம் ஏற்பட்ட தீவினைக் காட்டிக்கொண்டு இருந்தார்கள். ''அடேங்கப்பா... அதுக்குள்ளே மீடியாக்கள் அங்கே போய் படமே பிடிச்சுடுச்சே'' என்று வியந்தான் பரத். ''எல்லாம் அறிவியல் வளர்ச்சியின் வேகம்தான் காரணம். ஆனால், பழங்காலத்தில் பூகம்பம் பற்றி பல்வேறு மூட நம்பிக்கைகள் இருந்தன. பூமிக்குக் கீழே ஒரு மீன் தாங்கி பிடிச்சுட்டு இருக்கு, அது பாரம் தாங்காமல் உடலைக் குலுக்குவதுதான் பூகம்பம் என்று ஜப்பானியர்கள் நினைத்தார்கள். அந்தமான் பகுதி ஆதிவாசிகள், 'பூமிக்கு கீழே ராட்சசப் பன்றி இருக்கிறது. ஆண்டுக்கணக்கில் தூங்கும் அது, கண் விழித்ததும் சோம்பலுடன் புரண்டு படுக்கும். அதுதான் பூகம்பம்’ என்று நினைத்தார்கள். அவ்வளவு ஏன்? தத்துவ மேதை அரிஸ்டாட்டிலே 'பூமிக்குக் கீழே வீசும் புயலே பூகம்பம்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார். பிறகுதான், இவை எல்லாம் தவறு என்று கண்டுபிடித்தார்கள். பூகம்பமானியால் துல்லியமாக அளக்கும் முறையும் வந்தது'' என்றார் டீச்சர். ''இவ்வளவு கண்டுபிடிச்சாங் களே... பூகம்பம் வருவதை முன்கூட்டியே தெரிஞ்சுக்கிறதுக்கு ஒரு கருவியைக் கண்டுபிடிக் கலையா?'' என்றான் பிரதீப். ''இன்று வரை இல்லை. இனி வருங்காலத்தில் கண்டுபிடித்தால், அது விஞ்ஞான வளர்ச்சியின் மைல் கல்லாக இருக்கும். ஆனால், சில பறவைகள், நாய் போன்ற சில விலங்குகளால் கடைசி சில நிமிடங்களில் உணர முடியும். பூமிக்கு கீழ் பரப்பில் இருந்து மேலே வருகிற கந்தக வாசனையை அறிந்துகொள்ளும். நமக்கு அந்த சக்தி கிடையாது.'' என்றார் டீச்சர். ''சரி, டீச்சர் எங்களுக்கு நேரமாகுது. நாங்க கிளம்பறோம். இல்லைன்னா எக்ஸாமை பக்கத்தில் வெச்சுகிட்டு இவ்வளவு நேரம் அரட்டையானு எங்க வீட்டில் பூகம்பம் ஏற்படும்.'' என்றாள் தீபா.
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை திரைப்படம் வெளியாகி இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைகிறது. இதை ரசிகர்கள் இணையத்தில் ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர். இப்படத்தில் விஜய் சேதுபதி, தமன்னா, சிருஷ்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், கஞ்சா கருப்பு, ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருப்பர். எதார்த்தமான கதைக்களத்தை கொண்ட இத்திரைப்படம் குடும்ப ரசிகர்களுக்கு ஏற்றவாறு அமைந்தது. வாழ்வில் பல துன்பங்களால் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கும் தர்மதுரை எனும் விஜய் சேதுபதி கதாபாத்திரம் எப்படி மறுவாழ்வு பெறுகிறது என்பதே இத்திரைப்படத்தின் கதை சுருக்கம். யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும் பாடல்களும் படத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் அமைந்தது. இப்படத்தில் அமைந்த மக்க கலங்குதப்பா பாடல் படம் பார்க்கும் அனைவரையும் துள்ளாட்டம் போட வைத்த பாடலாக அமைந்தது. இப்படத்திற்கு கவிப்பேரரசு வைரமுத்து நான்கு பாடல்களை எழுதியுள்ளார். வைரமுத்து அவர்கள் எழுதிய எந்தப் பக்கம் பாடல் அவருக்கு 2016-ஆம் ஆண்டிற்கான சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை பெற்றுத்தந்தது. இப்படத்தில் அமைந்த அனைத்து பாடல்களுமே 2016 ஆம் ஆண்டின் சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்தது. இப்படம் வெளியாகி 100 நாட்கள் வெற்றிகரமாக திரையில் ஓடியது குறிப்பிடத்தக்கது. இப்படம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் திரையுலக வாழ்க்கையில் ஒரு முக்கிய வெற்றிப் படமாக அமைந்தது. இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் தற்போது இணையத்தில் ரசிகர்கள் #4YrsOfBBDharmadurai எனும் டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். TagsAishwarya Rajesh Dharmadurai Kollywood Makkal Selvan Srushti Dange Tamannaah Bhatia Trending Vijay Sethupathi
என்னிடம் கேட்டிருந்தால் அப்படியொரு வாய்ப்பே கிடையாது என சத்தியம் செய்திருக்கலாம்தான். ஆனால் இந்தப் படம், அப்படியான கருதுகோள்களை துவம்சம் செய்திருக்கின்றது. 11 வயதுப்பெண், ரிலீயின் குடும்பம், அமெரிக்காவின் மின்னசோட்டாவிலிருந்து சான் ஃப்ரான்சிஸ்கோவிற்கு மாறுவதிலிருந்து ஆரம்பிக்கின்றது திரைக்கதை. அந்த மாறுதலை ஏற்காத ரிலியின் மனத்தில் ஏற்படும் ஒரு சிறிய வருத்தம், தொடர்ந்து எவ்வாறு அவளின் எல்லா மகிழ்ச்சிகளையும், மகிழ்வான நினைவுகளையும், வசந்த காலக் காலை போல் அவளை வரவேற்கக் காத்திருக்கும் எதிர்காலத்தையும் அடியோடு மாற்றி அமைக்கின்றது என்பதே முழுக்கதை. ரிலியின் வாழ்க்கை மாற்றங்களாக அதைக் காட்சிப்படுத்தாமல், அவளின் ஆழ்மனத்தில் இருக்கும் தைரியம், நம்பிக்கை, மகிழ்ச்சி, துயரம், பயம், சோகம் என எல்லா உணர்வுகளையுமே உருவங்களாக்கி, ரிலியின் வாழ்க்கைக்கு ஆதாரமான ஆழ் மன உணர்வுகள், தினசரி நிகழ்வுகளால் அவள் மனத்தில் புதைந்து போகும் கருத்துக்கள் என எல்லாவற்றுக்கும் ஒரு உருவம், ஒரு அறை, ஒரு வடிவம், அதற்கு குரல், உடல் என எல்லாமே கொடுத்து, அவைகளைப் பேசவிட்டால்? இப்படியொரு திரைக்கதை சாத்தியமா என நீங்கள் கேட்கலாம். ஆனால் சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள் அனிமேஷன் துறையில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் பிக்ஸர் குடும்பத்தாரும், குழந்தைகளின் விருப்பமான வால்ட் டிஸ்னி குடும்பத்தாரும். இடம் மாறுதல் என்பது வாழ்வின் ஒரு அங்கம். ஒரு பாகம். நம்மில் பலருக்கு வாழ்வே அத்தகையதுதான். ஆனால், அதனால் ஏற்படும் ஒரு சிறு கவலையைத் துடைத்து விட்டெறியாமல் ஆழ்மனத்தில் புதைத்து வைக்க, ரிலீ வயதொத்த குழந்தைகளின் மனத்தில் கட்டப்பட்டிருக்கும் கற்பனைக்கோட்டைகள், கற்பனை உருவங்கள், நட்புக்கு, அன்புக்கு, அரவணைக்க என அவர்களாகவே ஏற்படுத்தியிருக்கும் பிம்பங்கள் என எல்லாவற்றையும் எவ்வாறு ஒரு சோகம் தகர்க்கின்றது என்பதை சலிப்பு தட்டாமலும், ஆங்கிலப் படங்களுக்கே உரிய விறுவிறுப்பான காட்சிகளாலும் நகர்த்தியிருக்கின்றார் இயக்குநர் பீட் டாக்டெர். (Wiki: Pete Docter) மனித உணர்வுகளினை அழுத்தமான காரணியாகக் கொண்டு நம்முன் இப்படம் விரியும்போது அறிந்திருந்தும் அறியாத ஒரு உலகிற்குள் செல்லும் அவஸ்தை தொற்றிக்கொள்கிறது நம்மை. ஒவ்வொரு மகிழ்விலும், ஒவ்வொரு வருத்தத்திலும் அந்தக் குழந்தையின் உலகில் சடாரென விரியும் ஒரு கோபுரத்தையும், திடீரென அதலபாதாளத்திற்குள் சாயும் அழகிய புகை வண்டியையும் பார்க்கும்போது, ஒரு சின்னஞ்சிறிய விஷயம் கூட குழந்தைகளின் மனத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை உணர்த்துகின்றது. ஒரு சுடுசொல்லிற்கும், ஒரு சிறு புன்னகைக்கும் அவர்கள் கொடுக்கும் விலை புரிகின்றது. குழந்தைகளுக்கே இப்படியெனில், இன்னும் விஷேச திறன்பாடுடைய குழந்தைகளின் வாழ்வு? ஆட்டிஸத்தால் அல்லது மனோ ரீதியாக, சூழல் ரீதியாக, உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு? ஒவ்வொருவரிடமும் பிறர் பேசும் வார்த்தைகள், அவர்கள் செல்லும் இடம், கேட்கும் இசை, நுகரும் மணம், சிந்திக்கும் கற்பனை என எல்லாமே எப்படிப்பட்ட ஓர் உலகை அவரவர்களுக்காகவே கட்டுகின்றன, அதன் அடித்தளமே ஆடிப்போகச் செய்யும் வலிமையை எப்படி கவலையுணர்வு கைக்கொள்கிறது என்பதை இதை விட அழகாக யாரும் சொல்லியிருக்க முடியாது. இதை வாசித்தீர்களா? : அப்துல் கலாம் - முஸ்லிமா? முனாஃபிக்கா? காட்சிகளின் கோவைகளும், பின்னணியும் அழகியல். எல்லா நல்லுணர்வுகளும் இறுதியில் சாம்பலாய்க் கரைய ஆரம்பிக்க, ரிலீயின் அபிமான பின்க் நிற யானையின் பிம்பமும் அவளின் மனமகிழ்வும் மட்டுமே கூடுமானவரை ரிலீயை சோகத்திலிருந்து விடுவித்து வாழ்க்கையை புன்னகையோடு மீட்டெடுக்க தம்மாலான இறுதி முயற்சிகளை மேற்கொள்கின்றன. சோகத்தால் அழிந்த சாம்பல்களிலிருந்து கிளம்பி, இன்னும் கொஞ்சமாக உயிருடன் இருக்கும் மகிழ்ச்சி நிலத்திற்கு செல்ல மூன்று முறை முயன்றும், தோற்கும்போது, பின்க் நிற யானை பிங்க் பாங்க், கீழேயே சுட்டெரிக்கும் சாம்பலில் நின்றுகொண்டு மகிழ்ச்சி உணர்வை மட்டும் மேலே அவ்விடத்திற்கு அனுப்பும் தருணம் வார்த்தைகளுக்கப்பாற்பட்டது. எந்தப் பொருளுமே உங்கள் வாழ்வில் இல்லாவிடினும், மகிழ்ச்சியாக வாழ நினைப்பதன் மூலமே வாழ்வை வளமானதாக்கலாம் என டைரக்டர் பேசும் இடம் அது. அற்புதம்! இதைப் போல பொறுமையாகவும், விடாமுயற்சியுடனும் வாழ்வை அணுக நம் குழந்தைகளுக்கு நாம் சொல்லித் தருகிறோமா… எதிர்வரும் தோல்விகளை விட, கடந்து சென்ற அழகிய தருணங்கள் பெரிது என உணர வைக்கின்றோமா… அவசர உலகின இயந்திர மனிதத்திற்கு முன், இயல்பாக வெற்றி தோல்விகளை கடக்கப் பயிற்றுவிக்கின்றோமா… நம் வீட்டில், நம் குடும்பத்தில் உள்ளோரின் உணர்வுகளையே புரிந்து கொள்ள நம்மில் எத்தனை பேர் முயற்சிக்கிறோம்… ரிலீ வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளாள் என்னும் காட்சியில் நம்மையும் சீட்டின் நுனிக்கு தள்ளிவிடுகிறது, திரைக்கதை. அம்மா அப்பாவுடனான அழகிய பொழுதுகள், ரிலீயின் சிறு வயது நிகழ்வுகள், முதன் முதலாக மனத்தில் சேகரிக்கப்பட்ட உலகின் தருணங்கள் என எல்லாம் சேர்ந்து அவளின் முடிவை மாற்றி அமைக்கும்போது நம்மையே ரிலீயின் இடத்தில் சற்றேனும் பொருத்திக் கொள்ளலாம். ஒரு சிறு கவலை, தோல்வியை ஆழ் மனத்தில் உறைய வைத்து, அழகிய வாழ்வையா பலி கொடுப்பது என்னும் கேள்விக்கான பதிலே இப்படம். ரிலீ மட்டுமல்ல… நம் வீட்டுக்குழந்தைகளும் இன்றைய சூழலில், தொட்டதெற்கெல்லாம் அபாயகரமான முடிவுகளையே எடுக்கின்றனர். ஒவ்வொரு சிறு இடறலுக்கும் வாழ்வையே பணயம் வைக்கத் துணிந்து விடுகின்றனர். அதே துணிவை ஏன் வாழ்வை மீட்டுப் பார்ப்பதற்காக வைக்கக்கூடாது? இது குழந்தைகளுக்கான படமே எனினும், எல்லாப் பெற்றோரும், ஆசிரியப் பெருமக்களும், குழந்தைகள் நல ஆர்வலர்களும் கட்டாயம் காண வேண்டிய படம் இது. இந்தப் படத்தின் டைரக்டரான பீட்டே இப்படியான ஒரு இடமாற்றத்தால் மன உளைச்சலுக்கு உள்ளானவர்தான். மேனிலைப் பள்ளி வரும் வரையிலும் தனித்தே தன் வாழ்வை எதிர்கொண்டவர்தான். காரணம், புதிய இடமும், புதிய நண்பர்களும் பிடிக்காமல் போயிருந்தது அவருக்கு. அதையே இத்தனை வருடம் கழித்து ஒரு செய்தியாய் மக்களுக்கு, அதுவும் இப்படியான புதிய கோணத்தில் தந்திருக்கிறார் என்றால் அது வாழ்வின் மீதான அவரின் நம்பிக்கையை, விடாமுயற்சியைக் காட்டுகின்றது. இதைப் போல பொறுமையாகவும், விடாமுயற்சியுடனும் வாழ்வை அணுக நம் குழந்தைகளுக்கு நாம் சொல்லித் தருகிறோமா… எதிர்வரும் தோல்விகளை விட, கடந்து சென்ற அழகிய தருணங்கள் பெரிது என உணர வைக்கின்றோமா… அவசர உலகின இயந்திர மனிதத்திற்கு முன், இயல்பாக வெற்றி தோல்விகளை கடக்கப் பயிற்றுவிக்கின்றோமா… நம் வீட்டில், நம் குடும்பத்தில் உள்ளோரின் உணர்வுகளையே புரிந்து கொள்ள நம்மில் எத்தனை பேர் முயற்சிக்கிறோம்… ஏராளமான கேள்விக்கணைகளை நம் முன் வீசிவிட்டு, பெற்றோருடன் மீண்டும் ரிலீயைச் சேர்த்து விட்டபடி நிறைவடைகிறது படம். இதை வாசித்தீர்களா? : காவி பயங்கரவாதம் (சன் நியூஸ் விவாத மேடை நிகழ்ச்சி) 15 சிறந்த பட விருதுகள், 21 சிறந்த ஒரிஜினல் திரைக்கதை விருதுகள், 40 சிறந்த அனிமேடட் மூவிகளுக்கான விருதுகள் எனப் பல்வேறு விருதுகளை, பல்வேறு அமைப்புக்களிலிருந்தும், நிறுவனங்களிலிருந்தும் வென்றிருக்கும் இத் திரைப்படம், ராட்டன் டொமேட்டோஸின் 2015இன் சிறந்த படங்களுக்கான வரிசையில் இரண்டாம் இடத்தையும், மெட்டாகிரிட்டிக்ஸின் சிறந்த படங்களின் வரிசையில் முன்னணியிலும் இடம் பிடித்திருக்கின்றது. பிக்ஸாரின் அனிமேட்டட் திரைப்படங்களின் வரிசையில் மற்றுமொரு மைல்கல்லான இந்தப் படத்தை கண்டிப்பாக குடும்பத்தோடு பாருங்கள். ஒரு மாற்றத்தையேனும் உங்களுக்குள் ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.
துவார்க் ராஜா இயக்கத்தில் அதிரடி ஆக்சன் திரைப்படமான ‘பரோல்’ என்ற படம் வரும் 11-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகின்றது. ராஜ்குமார் அமல் இசையமைத்துள்ள இந்தப்படத்தில் கார்த்திக், லிங்கா, கல்பிகா, மோனிஷா, வினோதினி உள்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வரும் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் சற்று முன் வெளியாகி வைரலாகி வருகிறது. மூன்று நிமிட ட்ரைலர் உள்ள இந்த பரோல் திரைப்படம் அண்ணன் தம்பிகளுக்கு இடையே நடக்கும் ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்பதும் முழுக்க முழுக்க ரத்தமும் சதையுமான ஆக்சன் காட்சிகள் டிரைலரில் இருப்பதால் ஆக்சன் பிரியர்களுக்கு இந்த படம் சரியான விருந்தாக அமையும் என்றும் இந்த டிரைலரில் இருந்து தெரியவருகிறது. Tags: Dwarakh Raja parole பரோல் Share on Share on Facebook Share on Twitter Share on Pinterest Share on WhatsApp Share on WhatsApp Share on Linkedin Share on Tumblr Share on Reddit
தென்னாப்பிரிக்காவுடன் முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியை தழுவிய இந்திய அணி இன்று நடைபெறும் 2-வது ஒருநாள் போட்டியில் பதிலடி கொடுக்குமா? என ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லக்னோவில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் அந்த அணி 9 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள் இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில் இந்திய அணி சரிவை சந்தித்தால் தொடரை இழந்து விடும். இதனால் நெருக்கடிக்கு மத்தியில் களம் இறங்கும் இந்திய அணி பதிலடி கொடுக்குமா? என ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். கடந்த முறை சரியான வியூகத்துடன் வீரர்கள் களமிறக்கப்படவில்லை என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்த நிலையில், இந்த முறை இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக புதிய வியூகத்துடன் களம் இறங்க வாய்ப்பு உள்ளது. தீபக் சாஹர் காயம் காரணமாக விலகியுள்ளதால் அவருக்கு பதில் தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் களமிறக்கப்படுகிறார். மேலும், தொடரை கைப்பற்றும் நோக்கத்தில் தென்னாப்பிரிக்கா அணியும் களம் இறங்குவதால் போட்டி பரபரப்பாக இருக்கும் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். -இரா.நம்பிராஜன் சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
பின் பக்கம் அவர்கள் திரும்பி நடக்கும் போது அவர்கள் அளவான மத்தள குண்டிகள் அவர்கள் ஜட்டிக்குள் பிதுங்கி.. அருமையாக தளக் புளக் என்று இரண்டு குடங்கள் ஆடி அசைவது போல அசைந்து அசைந்து ஆடியது.. எனக்கு கங்கா அக்காவை அப்படியே ஓடி சென்று பின் பக்கத்தில் இருந்து கட்டி அனைத்து அப்படியே பின் பக்கம் ஓக்க வேண்டும் போல் துடித்தது.. ஆனால் நான் ஒரு விமான ஓட்டி.. பைலட்.. நான் நிதானம் தவறினால்.. விமானம் நிலைக்குலைந்து விடும்.. ஆட்டோ டிரைவ் அதிக நேரம் தாக்கு பிடிக்காது.. நான் அக்காவை பார்த்தக் கொண்டே ரசித்துக் கொண்டே ஆட்டோ டிரைவை ஆப் மெனுவுக்கு கொண்டு சென்று நான் விமானத்தை ஓட்ட ஆரம்பித்தேன்.. கங்கா அக்கா ம்ம்.. என்று யாரிடமோ வெறும் ம்ம் மட்டும் கொட்டிக் கொண்டே பேசி பேசி நடந்து கொண்டிருந்தார்கள்.. என்னை கண்களால் பார்த்து.. விமானத்தை ஒழுங்க ஓட்டுடா.. என்று கண் ஜாடை செய்தபடியே மீண்டும் ம்ம் என்று ஏதோ யாரிடமோ பெரிய கதை கேட்பது போல் போனில் கதை கேட்டுக் கொண்டு இருந்தார்கள்.. நடந்த நடந்து எனக்கு கவர்ச்சி தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்த கங்கா அக்கா திடீர் என்று அப்படியே எனக்கு முன்பாக நின்றவள்.. என்னது.. ராஜாவுக்கு மூச்சு பேச்சு இல்லாம போச்சா.. ஐயோ.. யமுனா அக்கா என்ன சொல்ற என்று பதறினாள்… தொடரும்… Pages 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 Updated: November 19, 2022 — 3:08 am Tags: sex stories, sex stories in tamil, sex story tamil, sex tamil stories, TAMIL SEX STORIES, Tamil Sex Story, tamilsexstories, tamilsexstory
"இருமுறை எங்களை உயிர்ப்பிக்கச் செய்தாய்; இருமுறை மரணிக்கச் செய்தாய் என்று குற்றமிழைத்தோர் மறுமையில் கதறுவார்கள்'' என இவ்வசனம் (40:11) கூறுகிறது. இருமுறை உயிர்ப்பித்தல் என்பது நமக்கு விளங்குகிறது. இந்த உலகத்தில் ஒருமுறை பிறக்கிறோம். மரணித்த பிறகு அழிக்கப்பட்ட பிறகு மறுபடியும் இறைவன் உயிர் கொடுத்து எழுப்புவான். ஆனால் ஒருமுறை தான் நாம் மரணிக்கிறோம் எனும்போது இரண்டு முறை மரணிக்கச் செய்தாய் என்று எப்படிக் கூற முடியும்? இதை திருக்குர்ஆன் 2:28 வசனம் தெளிவாக விளக்குகிறது. மனிதன் படைக்கப்படுவதற்கு முன் இருந்த நிலைமையைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும்போது "நீங்கள் மரணித்தவர்களாக இருந்தீர்கள், உங்களை உயிர்ப்பித்தான்; பின்னர் மரணிக்கச் செய்து மீண்டும் உயிர்ப்பிப்பான்'' என்று இவ்வசனத்தில் கூறுகிறான். படைக்கப்படாமல் இருந்த அந்த நிலையைத்தான் முதல் மரணம் என்று அல்லாஹ் கூறுகிறான். இதே அடிப்படையில் தான் இருமுறை மரணிக்கச் செய்தாய் என்று குற்றமிழைத்தோர் மறுமையில் கூறுகிறார்கள்.
உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் அவர்கள் கூறியதாக நபித்தோழர் அபூ ஹுரைரா அவர்கள் அறிவிக்கிறார்கள்: நிச்சயமாக உங்களில் ஒருவர் மற்ற சகோதரனின் கண்ணாடி ஆவார். தன் சகோதரரிடம் ஒரு துன்பத்தை ( குறையை) கண்டால் அவர் அதை நீக்கிவிடட்டும். இக்காலத்தில் இந்த சமுதாயத்திற்கு வேண்டிய ஒரு அற்புதமான குணநலனை இந்த ஹதீஸ் விவரிக்கிறது, பொதுவாக இன்று யாருடைய பேச்சையும் யாரும் ஏற்றுக்கொள்கிற பக்குவத்தில் இல்லை. என் கருத்தே மிகச்சரியானது என்று கொடிபிடிக்கும் காலமிது, அது சமூகமாக இருந்தாலும், ஊராக இருந்தாலும், இயக்கமாக இருந்தாலும் ஒரு படி மேலே போய் தனி மனிதனாக இருப்பினும் இதுவே நிலை. நிலை இப்படி இருக்க பெருமானாரின் கருத்தை கேளுங்கள், உங்களில் ஒருவர் தன் சகோதருக்கு கண்ணாடி, கண்ணாடி என்றால்? தலைவாற வா? என்றால் இல்லை தலைக்குள் (மூளை) வருட. கண்ணாடி எப்படி தனக்குள் எத்தனை கீறல்கள் இருந்தாலும் எதிரில் நிற்பவரின் முகத்தில் இருக்கும் ஒரு சிறிய தூசியை கூட தெளிவாக சுட்டிகாட்டுமோ அப்படித்தான் ஒரு முஃமின் இருப்பார் என்கிறது இந்த ஹதீஸ். ஒகோ! நம்மிடம் எந்த பிரச்சனை இருந்தாலும் பிறரிடம் உள்ள குறைகளை மட்டும் தான் நாம் திருத்தவேண்டுமா? என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. இந்த நிலையை ( இன்றைய சமூக நிலையை ஒழிக்க வந்தது தான் இந்த ஹதீஸ்) அல்லாஹ்வும் அவன் தன் தூதரும் மனிதனின் இயற்கை இயல்புகளைப்புரிந்தால் மிகத்தெளிவாக நம்மை பண்படுத்துகினர். பொதுவாக மனித இயல்பு அவனின் நிலைப்பற்றி அவனுக்கு தெரியாது அடுத்தவர்களைப்பற்றியே அதிகமாக பார்த்தும் யோசித்தும் கொண்டிருப்பான். அடுத்தவர்களைப் பற்றி ஒரு செய்தி செல்லப்பட்டால் அவன் ஃபிராட், அவன் ரெம்ப ஒழுக்கமானவனா? அவனைப்பற்றி தெரியாத என்பது போன்றவைத் தான் பதிலாக வரும். இந்நிலையை நுட்பமாக விளங்கியதால் இஸ்லாம் மனிதனின் குணங்களையும், ஆற்றல்களையும் வேறோரு நிலையாக மாற்ற முடியுமே அல்லாது அதை மெத்தமாக அழித்துவிட்டு அதில் மனிதத்தை எழுப்ப முடியாது என்ற கொள்கையை தன் தாரக மந்திரமாக வைத்துள்ளது. ஒரு முஃமின் தன் சகோதர் பார்வை மூலமாக தம்மை எப்படி மேம்படித்திக்கொள்ள முடியும் என்ற நேர்மறை சிந்தனையை இந்த இடத்தில் எடுத்தாளுகிறது. எந்த மனிதனும் தம்மிடம் உள்ள குறைகளை அவ்வளவாக அறியமாட்டான் (அறிந்து வைத்திருந்தாலும் ஒப்புக்கொள்ளமாட்டான்) , உங்களைப்பற்றியே உங்களிடம் கேட்கப்பட்டால் உங்களைப்பற்றி நீங்கள் வரைந்து வைத்திருப்பது நீங்கள் ரெம்ப நல்லவர் என்பதாகத்தான் இருக்கும். இந்த ஒரு பார்வைதான் தம் சுயமுன்னேற்றத்தை தடுக்கும் மிகப்பெரும் தடைக்கல். ஆகையால் ஒரு மனிதன் தன்னை திருத்திக்கொள்ள முற்படுகிற போது அவனுக்கு மிகப்பெரும் உதவியாக இருப்பது அடுத்த ஒரு முஃமினான மனிதன் தான். அவனிடமிருந்து தன்னை பற்றி வரும் செய்திகளை வைத்து அதை நீக்கி தன்னிலை உயர்த்திககொள்வான், இவன் மற்ற சகோதர்களுக்கு கண்ணாடியாக ஆகும்போது ஒரு முழு சமுதாய முன்னேற்றமும், சமுக மாற்றமும் ஏற்பட இது மிகப்பொரும் காரணமாக இருக்கும். அடுத்து, இது ஒரு மனிதனிடம் ஏற்றுக்கொள்ளும் மனோபக்குவத்தை ஏற்படுத்தும், இந்த ஏற்றுக்கொள்ளு பக்குவம் இல்லாததால் தானே இன்று சமூக சீரழிந்து நேர்கதியாக நிற்கிறது. அடுத்து கண்ணாடியிடம் இருக்கிற கீறல்களால் நாம் என்றும் அதை பார்த்து சீவாமல் இருந்து விடுவதில்லையே. இன்று சமூகத்தில் அந்தஸ்தில் உள்ள சிலர் மக்களுக்கு மத்தியில் வரும்போது முகமூடி அணிந்த மிக நல்லவர்களைபோல் வலம்வருபவர்கள் கூட தன் குளியலரையில் கண்ணாடியை பார்த்து சிரித்துக்கொள்கிறார்கள் என்பது தற்கால ஆய்வேட்டின் வேடிக்கையான ஆனால் உணமையான தகவல். தன் சகோதரனைக்கொண்டு தான் முன்னேற்றம் அடையவேண்டும் தன்னை கொண்டு இந்த சமூக மக்களுக்கு பிரையோஜம் ஏற்பட் வேண்டும் என்று நினைத்தால் வெற்றி நிச்சயமே. சரி, நாளை காலையிருந்து இந்த வேலை ஆரம்பிக்கலாம் ஒவ்வொரு ஆளாப்பர்த்து என்னப்பா இப்படி பான்ற? நீ பண்றது சரியில்லை என்று ஆரம்பித்து விடாதீர்கள் அதை எப்படி செய்யனும் என்பது பற்றி மிர்காத் என்ற ஹதீஸ் விரிவுரை நூலில் மிக அழகாகவே எழுதியிருக்காங்க. இது ஒரு அழகான செய்தியாக இருக்கிறதே இதை எப்படி ஆரம்பிப்பதுஎன்று தானே சந்தேகம், வருங்கள்அதையும் பார்போம் 1. தவறுகளை ஒப்புக்கொள்ளுங்கள் : மனிதனாக பிறந்த எவரும் தவறுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை, ஆனால் தவறு என்று தெரிந்த பின்பும் அதை ஒப்புக்கொள்ள தயாராக இருக்கிறோமா என்பது தான் நம்மை பிறரிடமிருந்து வித்தியாசப்படுத்திக்காட்டும். ஆகையால் தவறு என்று தெரிந்துவிட்டால் மனதார ஒத்துக்கொள்ளுங்கள், இது உங்களை குற்ற உணர்சியிருந்து காக்கும், இன்னும் மற்றவர்கள் உங்களை மதிப்பதற்கு காரணமாக இருக்கும். அவ்வாறு ஒப்புக்கொள்ளவில்லையானால் அது கண்ணாடியில் கல்லெரிவதற்கு ஒப்பாகும். கண்ணாடியில் கல்லெறிந்தால் கண்ணாடி உடைந்து போகும் நீங்கள் உங்களை அலங்கரிக்கிற ஒரு வாய்ப்பை இழந்து உங்கள் அகங்காரத்திற்கு தீனிபோட்டிருக்கிறீர்கள் என்று தான் அர்த்தம். இன்னும் கண்ணாடி சுத்தமாகவும் தெளிவாகவும் இருந்தால் தானே அடுத்த பொருளை சரியாக காட்டும். கண்ணாடியே உடைந்து, ரசம் போயிருந்தால் எதிர் பொருளை ஈரண்டிரண்டாகவல்லவா காட்டும். ஒருவர் சொன்ன செய்தி மிக அழகாக நினைவில் நிழலாடுகிறது. நான் என் மகனிடம் பரிட்சைக்கு படி டிவி பார்க்ககூடாது அது தப்பு என்று சொன்னேன்.அவன் பதிலுக்கு சொன்னான். அப்ப நீ மட்டும் டிவி பார்கிற அது தப்பில்லையா என்று கேட்டான். அவர் சொன்னார் எனக்கு பரிட்சை இல்லை என்று சொல்லுவதா? அல்லது நான் நியூஸ் மட்டும் பார்க்கிறேன் என்று சொல்லுவதா?அப்படி சொன்னாலும் அவன் கேட்பான் அப்ப நியூஸ் மட்டும் பாகுறது தப்பில்லையா? அப்படியே எது சொன்னாலும் நீங்கள் சமாளிக்கப்பார்கிறீர்கள். அது வெளியே வெற்றியை வாங்கித்தரலாம், ஆனால் உங்கள் உள்ளே அது ஆராத ரணத்தையல்லவா எற்படுத்திவிடும். உங்கள் தவறு சுட்டிக்காட்டப்பட்டால் அதை மறுத்து சண்டையிருவதற்கு நீங்கள் செலவழிக்கும் சக்தியைவிட அதை ஒப்புக்கொண்டு அடுத்த முறை திருத்திக்கொள்ள செலவழிக்கும் சக்தி குறைவானதே அடுத்து ஒரு உண்மையான மனநிம்மதியையும் அல்லவா கொடுக்கும். அடுத்து, அடுத்தவர் உங்களின் தவறு சுட்டிக்காட்டும் போதுதான், எப்படி நாம் அடுத்த மனிதர்களிடம் பேசக்கூடாது என்ற பாடத்தை நாம் பெற முடியும், நமக்கு வலியை ஏற்படுத்தும் செய்தி அடுத்தவருக்கு எப்படி வலியை ஏற்படுத்தாமல் இருக்கும். ஒரு ஆழிய கருத்தை இந்த ஹதீஸ் சுட்டுகிறது, கண்ணாடி எப்பொழுதும் அழுக்கை மட்டுமே காட்டுவதில்லை, அழுக்கு சிறிய பகுதி என்றால் அழகிய முகம் எவ்வளவு பெரிய பகுதி அதை அல்லவா முழுமையாக காட்டுகிறது. அடுத்தவரின் தவறை மட்டும் சுட்டிக்காட்டுவதோடு நின்றுவிடுவதில்லை,அவரிடம் இருக்கும் நல்ல பண்புகளை பாராட்ட மறந்துவிடாதீர்கள். இது உங்களுக்குரிய நன்மதிப்பை அடுத்தவரிடம் ஏற்படுத்துவதோடு ஒரு அன்பையும் ஏற்படுத்தும். 2. நாகரிகம் பேணுவது: தவறுகளை சுட்டிக்காட்டும் போது கூட வயது, சூழ்நிலையை அனுசரித்து கண்ணியமாக நடந்துகொள்வது. நேரடியாக சுட்டிக்காட்டாமல் நாகரிகமாக செல்லுவது. நண்பர்களிடம் ஒரு தவறினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று கூறி அதன் பின் அதை சுட்டிக்காட்டுவது. சில பேர் ' யார் பொய் கூறினாலும் எனக்கு பிடிக்காது என்று வீராப்பு பேசிக்கொண்டு ஆனால் அவர் தனக்கொன்று வரும் போது பொய்யை அள்ளிவடுவார்'. தன் நிலை மாற்றிக்கொண்டு அடுத்தவருக்கு கூறும்போது அதில் தன்னையரியாமல் ஒரு கண்ணியத்தை கண்டிப்பாக பின்பற்றுவோம். 3. கடைசியாக அற்புதமான செய்தியை ஆசிரியர் கூறிப்படுகின்றார், ஒருவரிடம் உள்ள தவறை சுட்டிக்காட்டினால் ஒப்புகொள்ளமாட்டர் சொன்னாலும் அதை புரியமாட்டார். இது ஒரு பிரச்சனையாக உருவேடுத்துவிடும் எனற சூழ்நிலையில்,ஆகா நாங்கள் ஹதீஸை பின்பற்றுகின்றேன் அதை எப்படி விடலாம் என்று விடாபிடியாக ( இன்று தமிழகத்தில் நடப்பது போன்று சுன்னத்துகளுக்காக பர்ளான ஒற்றுமையை அறுத்து எறிதல் போன்று) ஒரு போர் களத்தை அமைத்தாவது மாற்றிவிடுவது என்று களம் அமைத்துவிடாதீர். இதற்கு அழகிய வழிமுறை இறைவனிடம் முறையாக து ஆவின் வழியில் முறையிடுங்கள் உங்களுக்கு இவ்வெண்ணத்தை ஏற்படுத்தியவனே அவன் தானே, குறையுள்ள சகோதரனை முழுவதுமாக ஆள்வதும் அவன் தானே,ஆகவே முழுமையாக மாற்றுக்கிற பொறுப்பை அவனிடமே விடுங்கள். நீங்கள் நினைப்பதைவிட, எதிர்பார்ப்பதை விட அதிகமான மாற்றத்தை பெற்றுக்கொள்வீர்கள். இதன் சரியான செய்தியை அல்லாஹ்வும் அவனது தூதருமே அறிவார்கள். சத்தியத்தை சத்தியமாக விளங்கி அதன் அடிப்படையில் செல்லுகிற, அசத்தியத்தை அசத்தியமாக விளங்கி அதைவிட்டு தூரமாகும் நஸிபை அல்லாஹ் நம் அனைவருக்கும் தருவானாக. 1 திருச்சி சகோதரர்களின் கவனத்திற்கு: சோழ இளவரசி குந்தவை நாச்சியார் சோழ இளவரசி குந்தவை நாச்சியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை முனைவர் பட்டதுக்கான ஆய்வுத் தலைப்பாக எடுத்து மிக விசாலமாக ஆய்வுசெய்து அதை அதிகாரப்பூர்வ வரலாறாக பதிவாக்கிட வேண்டும். 2 இஸ்லாமிய வங்கி இயலின் தந்தை மறைந்தார்! உலகப் புகழ் பெற்ற இஸ்லாமியப் பொருளாதார நிபுணர் டாக்டர் நஜாத்துல்லாஹ் சித்தீகீ அவர்கள் இயற்கை எய்தினார் என்பதே அது! 3 உணரப் படாத தீமை சினிமா தன்னை ஒரு முஸ்லிம் என்று சொல்லக் கூடியவர் வீட்டில் என்ன நடக்கிறது? குழந்தைகளை கூட வைத்துக் கொண்டு, பெற்றோரும், உற்றாரும் குடும்ப சகிதமாக, தொழுகை நேரம் என்றில்லாமல், சினிமாவை ரசித்துக் கொண்டிருக்கிற காட்சியை பரவலாக காண முடிகிறது (விதிவிலக்காக இருப்பவர்களைத் தவிர்த்து). கடைசியில் தன் குழந்தை, படத்தில் வருவது போல யாரையாவது இழுத்துக் கொண்டு ஓடிய பிறகுதான் பெற்றோர்கள் விழித்துக் கொள்வார்கள். 4 நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி! நான் குர்ஆனைப் படித்த போது, அது குறிப்பாக இறைவன் ஒருவனே! ஒரே ஒருவன் தான் என்று வலியுறுத்தியது. அது நான் கிறிஸ்தவ தேவாலயங்களில் பயின்ற திரித்துவக் கடவுள் கொள்கைக்கு (Trinity of God) முற்றிலும் மாற்றமானதாக இருந்தது. 5 ஆறுதல் சொல்லச் சென்றோர் ஆறுதல் பெற்றுத் திரும்பிய அதிசயம்! செய்தி கேள்விப்பட்ட டாக்டர் அப்துல்லாஹ்வுக்கு கடும் வருத்தம் இருந்தாலும், அனைவருக்காகவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார். அவரே அனைவரையும் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்கிறார்.
வலே மாநிலம் கம்சன் பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றின் மீது மரக்கிளைக்கள் முறிந்து விழுந்துள்ளதை காண்கின்றீர்கள் படப்பிடிப்பு- ச.சந்திரபிரகாஷ்- Share FacebookWhatsAppTwitterGoogle+ReddItPinterestEmail சுவிட்சர்லாந்தின் வலே மாநிலத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் வீசிய புயல் காற்றின் பாதிப்புகள் தொடர்பாக பொலிஸ் கட்டுப்பாட்டு மையத்திற்கு சுமார் 400 அழைப்புகள் வந்துள்ள நிலையில், 40 திற்கும் அதிகமானவர்கள் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என வலே மாநில பொலிசார் தெரிவித்துள்ளனர். பலத்த காற்றின் தாக்கம் காரணமாக அதிகளவிலான விழுந்த மரங்கள் தொடர்பாக பதிவாகியுள்ளன, அவற்றில் சில வீதி போக்குவரத்தை சில மணித்தியாளங்கள் தடை செய்துள்ளன. மேலும் சில குடியிருப்பு பகுதிகளின் கூரைகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. இதேவேளை துர்த்மன் (Turtmann ) பகுதியில் இன்று இடம்பெற்ற பெரியளவிலான கால்பந்து போட்டி ரத்து செய்யப்பட்டது. இப்பகுதியில் காற்றினால் பறந்த பாகங்கள் காரணமாக இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். - Advertisement - மேலும் பிரிகர்பாட் (Brigerbad) பகுதியில் இடியுடன் கூடிய மழை மற்றும் காற்று வலுவாக வீசியதன் காரணமாக இப்பகுதியில் தற்காலிக கூடாரங்களில் வார இறுதி நாட்களை கழிக்க தங்கியிருந்த சுமார் 40 பேர் வரை சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கேரவன்கள் மற்றும் கார்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு பெண் முறிந்து விழுந்த மரக்கிளையால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புயல் 10 முதல் 15 நிமிடங்கள் வரை நீடித்தது , “இதுபோன்ற இடியுடன் கூடிய மழையை நான் இதற்கு முன்பு அனுபவித்ததில்லை” என்று பிரிகர்பாட் பகுதியில் பொழுதை குடும்பத்துடன் கழிக்க வந்திருந்த பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒருத்தனுக்கு கண் இருந்தும் பார்க்க முடியலை; காது இருந்தும் கேட்கமுடியலை; வாய் இருந்தும் பேச முடியலை; மூக்கு இருந்தும் நுகர முடியலைன்னா? ஒன்று: அவன் துஞ்சிட்டு, அதாவது தூங்கிட்டு இருக்கனும். இல்லையென்றால்? அவன் இந்த உலகத்தைவிட்டு கிளம்பியிருக்கனும், அதாவது செத்துப்போய் இருக்கனும் அவ்வளவுதான். “உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு.” --- குறள் 339; அதிகாரம் – நிலையாமை நம் பேராசான் என்ன சொல்கிறார் என்றால், இறப்பு, இறப்பு என்று ரொம்பவே பயப்படுகிறீர்களே (fear of death) அது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை. எப்படி, ஒவ்வொரு நாளும் நாம தூங்குவது போலத்தான் இறப்பு என்பது. அதுபோலவே, பிறப்பு என்பது நாம் காலையில் கண் விழிப்பது என்கிறார். இறப்பும், பிறப்பும் உயிர்களுக்கு மாறி, மாறிவரும். அழியாதது (Immortal) என்று எதுவும் கிடையாதுன்னு என்பதை எடுத்துச் சொல்லி, நிலையாமையை விளக்குகிறார். ரொம்பவே முக்கியமான அதிகாரம் இது. எந்த அதிகாரம் படிக்கவில்லை என்றாலும் இந்த அதிகாரத்தைப் படித்தால் வாழ்வில் தெளிவு பெறலாம் என்றார் ஆசிரியர். இதை பிறகு பார்க்கலாம் என்பதால் சற்று பொறுப்போம். நாம் ஆரம்பித்த இடத்துக்கு வருவோம். துஞ்சுகிறவனுக்கும், செத்தவனுக்கும் உள்ள வேறுபாடு என்னன்னு கேட்டால், தூங்குகிறவனுக்கு உயிர் இருக்கும், அதாவது மூச்சு போய் வந்துட்டு இருக்கும். செத்தவனுக்கு அது இருக்காது. இரண்டு பேருக்கும் உணர்வு இருக்காது. நஞ்சினைக் குடித்தால், அதாவது விஷம் (poison) குடித்தால் என்ன ஆகும்? யாரும் கண்டுக்கவில்லை என்றால் ஆட்டம் அவ்வளவுதான். ஆள் காலி. உயிர் இருக்காது. நஞ்சினைக் குடித்த பின்பு அவனுக்கும் அவனைச்சுற்றி என்ன நடக்குதுன்னு தெரியாது. சரி, என்ன இன்றைக்கு சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் போகுதேன்னு பார்க்கறீங்களா? இதோ வருகிறேன். கள்ளுண்பவனுக்கும் அதே நிலைதான்னு நான் சொல்லலை. நம்ம பேராசான் சொல்கிறார். “துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.” --- குறள் 926; அதிகாரம் – கள்ளுண்ணாமை துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் = இரண்டு பேருக்கும் அறிவு ஒடுங்கி இருப்பதால், தூங்குகிறவனும் இறந்தவனும் ஒன்றுதான்; எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண்பவர் = அது போல, இரண்டு பேரும் மயங்கி இருப்பதால், எல்லாநாளும், கள்ளுண்பவனும், நஞ்சுண்டவனும் ஒன்றுதான். அதாவது, அறிவுகெட்டு இருப்பதால்! நம்மாளு: இரண்டு விஷயம் புரியுது சார். ஒன்னு: சரக்கு அடிப்பவன் செத்த பிணத்துக்கு சமம். எந்தப் பிரயோசனமும் இல்லை. இரண்டு: சரக்கு தெய்வத்திற்கு சமம் சார்! ஆசிரியர்: ??? நம்மாளு: தெய்வம் நின்னு கொல்லும் சார். அதுபோல, சரக்கு வைச்சு செய்யும். நிதானமா ஒருத்தனைக் காலி பண்ணும். விஷம் வந்து ராஜா மாதிரி. உடனே காலி பண்ணிடும். சரியா சார் நான் சொல்றது? ஆசிரியர்: ம்ம்… கிளம்புங்க. ஒழுங்கா வீட்டுக்கு போங்க. நேரமாகிட்டுது. நாளைக்கு பார்க்கலாம்! நம்மாளு: ஐயா உங்க பேச்சுகளைக் கேட்ட பிறகு, நான் இப்பல்லாம் நேரா வீட்டுக்குத்தான் போகிறேன். நன்றி ஐயா, நாளைக்கு பார்க்கலாம்.
சீனாவின் Beijing நகரில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் (Winter olympics) போட்டிகளை ராஜதந்திர மட்டத்தில் பகிஷ்கரிக்க அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது. அவுஸ்திரேலியா தொடர்ந்தும் கலந்துரையாடலுக்கு உட்படுத்திய சீனாவின் ஷிங்ஜியாங் (xinjiang) மாகாணத்தின் மனித உரிமை மீறல் உட்பட சில விடயங்கள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மோரிசன்(Scott Morrison)தெரிவித்துள்ளார். எனினும் அவுஸ்திரேலிய விளையாட்டு வீர, வீராங்கனைகள் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துக்கொள்வார் எனவும் அவர் கூறியுள்ளார். அவுஸ்திரேலியா தொடர்ந்தும் இருத்தரப்பு பேச்சுவார்த்தைகளுக்கான வழியை திறந்தே வைத்துள்ளது. சீனா, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை முன்னேற்றும் சந்தர்ப்பங்களை நிராகரித்து வருகிறது எனவும் ஸ்கொட் மோரிசன் குற்றம் சுமத்தியுள்ளார். சீனாவின் தலைநகர் Beijing இல் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை ராஜதந்திர மட்டத்தில் பகிஷ்கரிக்க போவதாக அமெரிக்க இதற்கு முன்னர் அறிவித்திருந்தது. இதற்கு பதிலளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அப்போது சீனா கூறியிருந்தது.
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படமானது வருகின்ற தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகை நயன்தாரா, நடிகை குஷ்பூ, நடிகை மீனா, நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகர் சூர்யா உள்ளிட்ட ஏராளமான நடிகர் பட்டாளம் உள்ளன. இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளத்தில் வைரலாக பரவியது. இந்த நிலையில் அண்ணாத்த திரைப்படம் வருகிற தீபாவளியன்று திரையரங்கில் வெளியாக உள்ளதால் இணையதளங்களில் இந்த படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளிவர உள்ள அண்ணாத்த படத்தை இணையதளத்தில் வெளியிட தடை விதித்துள்ளது ஹை கோர்ட். சன் டிவி நெட்வொர்க் நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இத்தகைய உத்தரவினை பிறப்பித்துள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் இணையத்தில் அண்ணாத்த படத்தை வெளியிட தடைவிதித்து உத்தரவிட்டார். அண்ணாத்த சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து ஹைகோர்ட் ஆணையிட்டுள்ளது. இணையதள சேவை நிறுவனங்கள் மூலம் சுமார் 350 சட்டவிரோத இணையதளங்களில் படத்தை வெளியிட வாய்ப்புள்ளதாகவும் மனுதாரர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதனால் இந்த படத்தை இணையதளங்கள் வெளியிட்டு தங்களுக்கு பெரிய நஷ்டம் ஏற்படும் என்று மனுதாரர் தரப்பு கூறியுள்ளது. Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள். Categories பொழுதுபோக்கு Tags annathe, nayanthara, rajinikanth வண்டலூரில் அடுத்தடுத்து பேரிழப்பு! ஒரே நாளில் 7 நெருப்புக்கோழிகள் உயிரிழப்பு!! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!!
படிதிருத்துதல் என்பது மொழிபெயர்க்கப்பட்ட ஓர் உரையை, மூல உரையுடன் ஒப்பிட்டுப் பார்த்து, அதில் தட்டச்சுப்பிழைகள், இலக்கணப் பிழைகள், தவறவிடுதல்கள் அல்லது வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்களின் பொருந்தாப் பயன்பாடுகள் ஆகிய எவையும் இல்லை என்று உறுதிசெய்வதாகும். அத்துடன் கூடுதலாக, மொழிபெயர்ப்பில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சொல்வளத்தின் பாணி மற்றும் நிலைப்புத்தன்மையைச் சரிபார்ப்பதையும் படிதிருத்துதல் உள்ளடக்கியுள்ளது. படிதிருத்துதலின்மூலம் உரையை மேம்படுத்துவதற்கும், சொல்வளத்தைத் தரப்படுத்துவதற்குமான பின்னூட்டம் அல்லது பரிந்துரை ஒன்றினைப் பிழைதிருத்துனர் வழங்கவேண்டும். தரம் வாய்ந்த ஒரு மொழிபெயர்ப்பு அவசியம் படிதிருத்தப்படவேண்டும். பிழையைக் கண்டுபிடிக்கமுடியாத அளவுக்கு ஆவணத்தை மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர் அதற்கு மிகவும் நெருக்கமாக இருந்துவிடக் கூடும். ஆவணத்தைப் புதியதாகப் பார்க்கின்ற புதிய பார்வை மீளாய்வு செய்வதற்குத் தேவைப்படுகிறது.. குறிப்பாகப் பிரசுரிக்கப்படவுள்ள ஒரு மொழிபெயர்ப்புக்கு இது மிகவும் அவசியம் ஆகும். ஏனெனில், அச்சிடுவதற்குக் கோப்பை அனுப்புவதற்குச் சற்றே முன்னதாக ஒரு பிழை கண்டுபிடிக்கப்படும்போது எதுவும் செய்யமுடியாமல் போய்விடும்.g. எங்களுடைய தரக்கட்டுப்பாட்டுச் செயல்முறையின் படிநிலைகளில் ஒன்று என்ற முறையில், படிதிருத்துதல் எங்களது அக மொழிபெயர்ப்புகள் குறையற்றவையாக இருப்பதை உறுதிசெய்வதில் முக்கியமான பங்கினை ஆற்றுகிறது. ரேஃபிள்ஸ் ட்ரான்ஸ்லேஷனில் சிறப்பான முறையில் உருவாக்கப்பட்ட சொற்களஞ்சியத் தரவுத்தளங்கள், மொழிபெயர்ப்பு பாணிக்கான வழிகாட்டிகள் மற்றும் விரிவான செயல்முறைகளைப் பயன்படுத்தி, இரண்டு அனுபவம் வாய்ந்த, தகுதியான படிதிருத்துனர்கள் மூலமாகப் பிழைதிருத்துதல் பூர்த்திசெய்யப்படுகிறது. முதல் படிதிருத்துனர், இலக்கு மொழி மூல மொழியின் பொருளைத் துல்லியமாகப் பிரதிபலிக்கிறதா என்பதை உறுதிசெய்யும் பொறுப்பை உடையவர் ஆவார். இரண்டாம் படிதிருத்துனர், எழுதுதலின் அனைத்துப் பயன்பாடுகளும், பாணியும் வழக்கமாகவே சரியானதாகவும், நிலைப்புத்தன்மை கொண்டவையாகவும் உள்ளனவா என்பதை உறுதிசெய்யும் பொறுப்பை உடையவர் ஆவார். இது, மொழிபெயர்க்கப்பட்ட உரை சரளமான ஓட்டத்தை உடையதாக இருப்பதை மட்டுமன்றி, அது பிழை-அற்றதாக இருப்பதையும் முடிவாக உறுதிசெய்கிறது. அக மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட ஆவணங்களைத் தவிர, மற்றொரு நிறுவனம் மூலமாகத் தங்களுடைய ஆவணங்களை மொழிபெயர்த்து, அந்த மொழிபெயர்ப்பைத் திருப்தியற்றதாகக் கருதும் வாடிக்கையாளர்களுக்குப் படிதிருத்துதல் சேவையையும் நாங்கள் வழங்குகிறோம். சட்ட அல்லது நிதியியல் மொழிபெயர்ப்புகளைப் பொருத்தவரை, வழக்கமாக இவ்வாறு நடைபெறுவது உண்மையாக உள்ளது. முறையான மூலாதார வளங்கள் இல்லாத காரணத்தால், சில முகமைகளுக்குத் தரமாக மொழிபெயர்க்கும் ஆற்றல் இல்லாமல் போய்விடுகிறது. இவ்வாறாகப், பிற முகமைகளின் வாடிக்கையாளர்களும் எமது சேவையை நாடுகின்றனர். எங்களுடைய சிறப்புத்தன்மை மிக்க, நிதியியல் மொழிபெயர்ப்பு குறித்த இலவச விலைப்புள்ளி ஒன்றைப் பெற இங்கே கிளிக்செய்யவும் அல்லது 65 6570 6028 எண்ணில் எங்களை அழைக்கவும்.
மக்களின் வரிப்பணத்தை கொள்ளை அடித்து ஊழலின் தாயகமாக இந்தியாவை மாற்றி கொண்டு இருக்கும் அரசியல்வாதிகளை பற்றி இனி எந்த உண்மையை எழுதினாலும் அவர் நாளையே கைது செய்யப்படும் ஆபத்து உள்ளது.... அண்ணல் காந்தி அவர்கள் இந்தியாவுக்கு சுதந்திரத்தோடு பேச்சுரிமை,எழுத்துரிமை ஆகியவற்றையும் சேர்த்துதானே வாங்கி கொடுத்தார்?!இதெல்லாம் சேர்ந்ததுதானே சுதந்திரம்?இந்த அடிப்படை உரிமைகள் I-T SECTION 66 A என்ற விதிப்படி இனி அரசியல்வாதிகளுக்கு தலையாட்டி பொம்மையாக செயல்பட போகிறது..... வாருங்கள் குரல் கொடுப்போம்....நம் உரிமைகளை பேணி காத்திடுவோம்....இதற்கு முன்பே பதிவர்களுக்கு என நிச்சயம் ஒரு சங்கம் வேண்டும் என்று சென்னை பதிவர் மாநாடு நடைபெற்ற சமயத்திலே நான் பதிவு எழுதி இருகிறேன்..அதற்கு இப்பொது நேரம் கனிந்து இருக்கிறது..வாருங்கள் ஒன்றுபடுவோம் நண்பர்களே... I-T ACT SECTION 66 A பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், ( Pranesh Prakash, Policy Director of the Bangalore based Centre for Internet and Society) கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது. அவர் சொல்கிறார்: ’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்! இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்!’ ”ரவி (சீனிவாசன்) மேல் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த புகாரின் பேரில், நீதிமன்றங்கள் அவரைத் தண்டிக்காதவரை அவரைக் கைது செய்தது தவறு” என்று இன்று இந்து தினசரியில் அத்வானி கூறியுள்ளார். இந்துவில் வந்த தலையங்கமும் இக்கருத்தைப் பற்றியும், பேச்சு சுதந்திரத்தைப் பற்றியும் தெளிவாக வலியுறுத்தியுள்ளது. *இவ்வாறு செய்தித் தாட்களில் வந்த செய்திகளை நம் பதிவுகளில் மேற்கோளிடுவதும் கூட இச்சட்டத்தினால் தவறாகக் கருத்தப்படும் என்ற நிலையே இப்போது உள்ளது. இது தனி மனித உரிமைகளையே பறிக்கும். நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை நமக்கு வேண்டும். இந்த உரிமை நம்மிடம் இருக்குமளவிற்கு I-T ACT திருத்தப்பட வேண்டும். *இதனோடு, பிரபலங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் காவல் துறையின் அவசரப் போக்கும் நமக்கு தேவையில்லாத அச்சத்தை மட்டுமே தரும். சரியான விசாரணை வேண்டும்; தேவையற்ற கைது தவிர்க்கப்பட வேண்டும் என்பவைகளைக் காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம். *முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் முன்பே வெகு கோரமான ஊடகச் செய்திகள் குற்றமற்றவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் ஊடகங்களிடம் இல்லை என்பதும் வேதனையான செய்தி. ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு செயல்பட வேண்டும்.
இலங்கையில் இராவணன் என்ற மன்னனும் இல்லை சிவ வழிபாடும் கிடையாது என்று தெரிவித்த முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர, திருக்கோணேஸ்வரம் ஆலயத்திலுள்ள கடைகளைச் சிங்களவர்களுக்குக் கொடுப்பதற்கு ஆலய பரிபாலன சபையே விரும்பும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் மட்டும் எதிர்ப்பது அவர்களின் அரசியல் ஆதாயத்துக்கே எனவும் கூறினார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற திருக்கோணேஸ்வரம் ஆலய ஆக்கிரமிப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், திருக்கோணேஸ்வரம் ஆலயம் தொடர்பில் தவறான வரலாற்றுப் பின்னணி காணப்படுகின்றது. இராணவன் திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுப்பட்டார் என்று குறிப்பிடுகின்றார்கள். ஆனால், இராவணன் என்ற மன்னன் இருந்தாரா, அவர் தமிழரா, சிவ வழிபாட்டில் ஈடுப்பட்டாரா என்பதற்கு எவ்வித சான்றும், வரலாறும் இல்லை. திருக்கோணேஸ்வரம் ஆலயம் அமைந்துள்ள பகுதியில் 300 ஏக்கர் நிலப்பரப்பு காணப்படுகின்றது. இதில் 18 ஏக்கர் நிலப்பரப்பு மாத்திரம் கோயிலுக்குச் சொந்தமானது. ஆலயத்துக்குச் செல்லும் பாதையில் சுமார் 60 கடைகள் உள்ளன. இந்தக் கடைகளைச் சிங்களவர்கள் வைத்திருப்பதால் கூட்டமைப்பினர் அதற்கு எதிராக இனவாதமாக எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்கள். திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் வீதி இருமருங்கில் உள்ள கடைகளைப் புதுப்பிக்க ஆலயத்தின் நிர்வாக சபையினர் விருப்பம் தெரிவித்துள்ளார்கள். கிழக்கு மாகாண ஆளுநர் இனவாதமற்றவர். திருக்கோணேஸ்வரம் ஆலயம் தொடர்பில் தவறான வரலாற்றுப் பின்னணியே காணப்படுகின்றது. திருகோணமலை மாவட்டத்தில் நான்கு தூபிகள் இருந்துள்ளன. அவற்றில் மூன்று தூபிகள் கடலை நோக்கியதாக அமைந்ததால் அது திருக்கோணேஸ்வரம் எனப் பெயர் பெற்றுள்ளது. அத்துடன் மகாவம்சத்திலும் இவ்விடயம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, எமக்கும் வரலாறு தெரியும். நாங்களும் குறிப்பிடுவோம். திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் தொன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கின்றோம். நாங்கள் பாதுகாக்கின்றோம். அதுபோல் நீங்களும் குருந்தூர்மலையைப் பாதுகாக்கக் கவனம் செலுத்துங்கள். அங்கு தமிழ் அடிப்படைவாதிகளால் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் தாக்கப்பட்டுள்ளனர் என்றார்.
ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆபிரிக்க நாடுகளில் 8 ட்ரில்லியன் டொலரை கட்டுமானத் திட்டங்களுக்காக முதலீடு செய்யும் சீனாவின் ஒரு அணை மற்றும் ஒரு பாதைத் திட்டமானது மிகவும் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறது. குறிப்பாக இத்திட்டத்தின் ஊடாக சீனா தனது எத்தகைய நோக்கத்தை நிறைவேற்றுகிறது என்பதை அறியவே இவ்வாறான கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. சீனாவின் இத்திட்டம் தொடர்பாக வொசிங்டனைத் தளமாகக் கொண்டியங்கும் ‘பூகோள அபிவிருத்திக்கான மையம்’ ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வின் பிரகாரம், சீனாவின் ஒரு அணை ஒரு பாதைத் திட்டமானது சிறிய மற்றும் வறிய நாடுகள் மீது பரந்தளவில் கடன் சுமையை உண்டுபண்ணுவதால், இந்த நாடுகளில் நிலைத்தன்மை பிரச்சினைகள் காணப்படுவதாகவும், இதனால் இந்த நாடுகள் இறையாண்மைக் கடன் என்கின்ற ஆபத்திற்கு முகங்கொடுக்க வேண்டியிருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. சீனாவின் இத்திட்டமானது 68 நாடுகளில் பாதிப்பைச் செலுத்துவதுடன் இந்த நாடுகள் ஒவ்வொன்றினதும் பொதுக் கடன் மீதும் தாக்கம் செலுத்தும். சீனாவின் திட்டத்திற்குள் உள்வாங்கப்படும் 68 நாடுகளில் 23 நாடுகள் தற்போது எதிர்நோக்கும் கடன் சுமை ஆபத்து மற்றும் இவற்றின் இறையாண்மை கடன் ஆபத்து விகிதம் மற்றும் உலக வங்கியின் கடன் பேண்தகு நிலை போன்றவற்றை இந்த ஆய்வானது பயன்படுத்தியுள்ளது. 2016 முடிவில், சீனா தனது ஒரு அணை மற்றும் ஒரு பாதைத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக 23 நாடுகளில் குழாய் இணைப்புக்களை இரவலாக வழங்கியுள்ளதால் இந்த நாடுகள் மீதான கடன் சுமை அதிகரித்ததாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சீனாவின் இத்திட்டம் காரணமாக எட்டு நாடுகள் தமது கடனைத் திருப்பிச் செலுத்துவதில் பல்வேறு இடர்பாடுகளைச் சந்திப்பதாக ‘பூகோள அபிவிருத்திக்கான மையத்தின்’ ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த எட்டு நாடுகளில் பாகிஸ்தான், டிஜிபோட்டி, மாலைதீவு, லாவோஸ், மொங்கோலியா, மொன்ரனிக்ரோ, தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகியவை உள்ளடங்குகின்றன. சீன-பாகிஸ்தான் பொருளாதார நடைபாதைத் திட்டம், சீனாவின் ஒரு அணை மற்றும் ஒரு பாதைத் திட்டத்தின் மையப்புள்ளியாகச் செயற்படுவதுடன் சீனாவுடன் அதிக நிதி சார் தொடர்புகளை வைத்திருக்கின்ற நாடாகவும் பாகிஸ்தான் காணப்படுகிறது. சீனாவால் கணிக்கப்பட்ட 62 பில்லியன் டொலரில் 80 சதவீத நிதியை பாகிஸ்தானுக்கு கடனாக வழங்கியுள்ளது. இந்த ஆய்வின் பிரகாரம், சீனா தான் வழங்கிய கடன்களை மீளப்பெற்றுக் கொள்ளும் அணுகுமுறையானது கடந்த காலத்தில் பிரச்சினையை உண்டுபண்ணியமை உறுதிப்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, சிறிலங்கா, சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்ட கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதால் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனா தன்வசப்படுத்தியது. உலகின் ஏனைய கடன்வழங்குநர்களைப் போலல்லாது சீனாவானது கடன் பெற்ற நாடுகள் கடன்களைச் செலுத்தும் போது சந்திக்கும் பிரச்சினைகளை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாக சட்ட விதிகளுக்கு உட்பட்டிருக்கவில்லை. கடன் பெற்ற நாடுகளுடன் நிதி சார் தொடர்புகளைப் பேணுவதற்கான சட்ட விதிகளைப் பின்பற்றும் கடன்வழங்கும் நாடுகளைக் கொண்ட Paris Club அமைப்பின் தற்காலிக பங்குதாரராக சீனா மட்டுமே உள்ளது. உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கடன்வழங்குநர்களுக்கான ஒழுக்க நெறிமுறைகள் மற்றும் நியமங்கள், சீனாவின் ஒரு அணை மற்றும் ஒரு பாதைத் திட்டத்திலும் பிரயோகிக்கப்பட வேண்டும் என ‘பூகோள அபிவிருத்திக்கான மையம்’ தெரிவித்துள்ளது. இதற்காக இத்திட்டத்தில் உலக வங்கி மற்றும் ஏனைய பன்முக வங்கிகள் தமது பங்களிப்பை அதிகரிப்பதுடன் இத்திட்டங்கள் தொடர்பில் நியமங்களை உருவாக்குவது தொடர்பில் சீன அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் ‘பூகோள அபிவிருத்திக்கான மையம்’ சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் பாரிஸ் கழகத்தின் முதன்மையான கோட்பாடுகளை மேற்பார்வை செய்யக்கூடிய புதிய கடன் வழங்கு நாடுகளைக் கொண்ட குழுவொன்றை உருவாக்க வேண்டும் எனவும் இந்தக் குழுவானது சீனாவுடன் அர்த்தமுள்ள பங்களிப்பை உருவாக்க வேண்டும் எனவும் ஆய்வாளர் குழு விதந்துரைத்துள்ளது. கடன் ஆபத்துக்களை குறைப்பதற்காக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு சீனாவானது தொழினுட்ப மற்றும் சட்ட ஆதரவுகளை வழங்க வேண்டும் எனவும் வொசிங்டனைத் தளமாகக் கொண்டியங்கும் ‘பூகோள அபிவிருத்திக்கான மையம்’ பரிந்துரைத்துள்ளது. எடுத்துக்காட்டாக காடுகளைப் பாதுகாத்தல் போன்ற சூழல் பாதுகாப்பை நோக்காகக் கொண்ட திட்டங்களுக்கு கடன்களைப் பெறும் நாடுகளுக்கு ஆதரவாக கடன் இடமாற்று ஏற்பாடுகளை சீனா வழங்க வேண்டும் என இந்த மையம் பரிந்துரைத்துள்ளது.
Thennakam Admin 26th February 2018 Current Affairs – 26 February 20182018-02-26T10:18:11+05:30 நடப்பு நிகழ்வுகள் இந்தியா 1.இந்திய ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட ருஸ்டம்-2 ஆளில்லா விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி கரமாக நடந்து முடிந்தது. 2.ஒடிசா மாநிலம் புரி கடற்கரையில் நடிகை ஸ்ரீதேவிக்கு மணல் சிற்பம் அமைத்து மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் அஞ்சலி செலுத்தியுள்ளார். 3.மைசூரு மன்னர் வம்சத்தின் வாரிசான 28-வது இளவரசருக்கு நேற்று பெங்களூரு அரண்மனையில் நடைபெற்ற விழாவில் அதியவீர் நரசிம்ம உடையார் என்ற பெயர் சூட்டப்பட்டது. விளையாட்டு 1.சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரில் டென்மார்க் வீரரை வென்று இந்திய வீரர் சமீர் வர்மா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 2.தென்கொரியாவின் பியாங்சங் நகரில் நடைபெற்று வந்த 2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று கோலாகலமாக நிறைவடைந்தன. இதில் நார்வே அணி 14 தங்கம், 14 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்தது. அதைத்தொடர்ந்து ஜெர்மனி 14 தங்கம், 10 வெள்ளி, 7 வெண்கலம் என 31 பதக்கங்கள் வென்று இரண்டாவது இடம் பிடித்தது. மூன்றாவது இடத்தை கனடா பிடித்தது. இன்றைய தினம் 1.1909 – முதலாவது வெற்றிகரமான வண்ண அசையும் திரைப்படம் இலண்டனில் அரண்மனை அரங்கில் பொதுமக்களுக்குத் திரையிடப்பட்டது.
bondage.com dating bondage.com login bookofmatches com Italia bookofmatches mobile site Bookofmatches online italia BookOfMatches review bookofmatches reviews Recent Posts கவுண் டமணி நடிக் கும் புதிய படம்.!! முக் கிய கதா பாத் திர த்தில் இணை ந்த டாப் நடி கர்.!!அப் போ காமெ டிக்கு பஞ்ச மே இ ரு க்காது.!! கோலா கல மாக திரு மண த்தை முடி த்த கௌ தம் கார் த்திக் – மஞ் சிமா ஜோடி.!! இணை யத் தில் வெளி யான அழ கிய ஜோடி யின் திரு மண புகை ப்பட ங்கள் உள் ளே.!! என் படம் 115 சர்வ தேச விருது வாங்கி இரு க்கு.!! ஆனா என க்கு இன் னும் ஒரு சொந்த வீடு கூட இல்ல.!! மே டையில் கல ங்கிய பிர பலம்.!! இவ ருக்கே இந்த நிலை யா.?? என க்கு இந்த நடி ப்பு தொழி லே வேண் டாம்.!! ராணு வத் தில் இணை ந்த பிர பல தமிழ் நடி கை.!! இந்த நடிகை யா என்ன ஷாக் கா கும் ரசி கர் கள்.!! இயக்கு னர் ஏ ஆர் முரு கதா சுக்கு வா ய்ப்பு தர மறு த்த பி ரபல நடி கர்.!! தன் னை தூக்கி விட்ட நன்றி இல் லாமல் இய க்கு னரை ஒதுக் கும் நடி கர்.!! விரக் தியில் முருக தாஸ் செய்த செயல்.!!
சீர்பாததேவியின் தேசமான சோழ நாட்டிலே சீர்பாததேவி வாலசிங்கன் திருமணம் இடம்பெற்று சில நாட்கள் அவர்கள் இன்பமாக கழித்த போதிலும் அவர்கள் தங்களின் திருமண வாழ்க்கையினை முழுமையாக அங்கு கழிக்க முடியாது; கணவன் வீட்டில் மனைவி சென்று வாழவேண்டிய தமிழர் பண்பாடும், சிங்கை நாட்டு மன்னவன் என்ற பொறுப்பில் வாலசிங்கன் இருப்தினாலும் அவர்கள் இருவரும் சிங்கை அரண்மனைக்கு திரும்புவது அவசியமான ஒன்றாக காணப்பட்டது. எனினும் தன் மகளை அன்புடனும் பாசத்துடனும் வளர்த்த குமாராங்குசனுக்கு தன் மகள் இன்னுமொரு நாட்டிற்கு மருமகளாக செல்வதென்பது அவனுக்கு பெருத்த மனவேதனையை கொடுத்தது. எனினும் பெண் பிள்ளை என்று பெற்றுவிட்டால் அவளை புகுந்த வீட்டிற்கு அனுப்புவது என்பது பாமர மக்கள் முதல் பாராளும் மன்னன் வரை வழக்கமான விடயமாகக் காணப்பட்டது. இருந்த போதிலும் தன் மகளை இன்னுமொரு நாட்டு மன்னனுக்கு மனைவியாக்கி அனுப்புவதென்ற திருப்தியுடன் மனவேதனையை மூடி மறைத்தவனாய் குமராங்குசன் தன் மகளையும் மருமகனையும் சிங்கை நாட்டிற்கு அனுப்பி வைப்பதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொண்டான். தன்னை பெற்றெடுத்து ஆசையாய் வளர்த்த பாசமிக்க பெற்றோரினை விட்டுப் பிரிந்து செல்வது சீர்பாததேவிக்கும் பெருத்த வேதனையாக இருந்த போதிலும் தன் மனதிற்கு பிடித்த கட்டிளம் காளையை திருமணம் செய்த மகிழ்ச்சியினால் தன் கவலைகளையெல்லாம் மறந்தவளாய் வாலசிங்கனுடன் சிங்கை நகர் செல்வதற்கு சீர்பாததேவியும் தன்னை முழுவதுமாக தயார்படுத்திக் கொண்டாள். என்னதான் அரசிளம் குமாரியாக இருந்தாலும் அவளும் பெண்தானே! இத்தனை வருடம் தன் தாய் நாட்டிலே வாழ்ந்தாலும் இனி ஒரு புதிய தேசத்தில் புதிய சுற்றத்தாருடன் வாழ்வதென்பது சீர்பாததேவிக்கு மனக்கலக்கத்தினை ஏற்படுத்தியது. தன்மகளின் மனக்கலக்கத்தினை உளமார அறிந்து கொண்ட குமாராங்குசன் தன்மகளின் கவலையினை தீர்க்கும் நோக்குடன் தன் அரச குலத்தவர்களில் சிலரை தன்மகளுடன் சிங்கை நகர் அனுப்புவதற்கு முடிவு செய்தான். இதன்படி சோழ நாட்டிலே திருவாரூர், பெருந்துறை, பழையாறை, கட்டுமாவடி முதலான இடங்களில் வாழ்ந்த அரசகுலத்தவர், அந்தணர்கள், வேளாளர், வணிகர் என்னும் பிரிவுகளைச் சேர்ந்த மக்களையும் தன்மகளுடன் துணையாக அனுப்ப முடிவு செய்தான். இதன் பிரகாரம் சிந்தன், காங்கேயன், காலதேவன், பெண்பழச்சி, வெள்ளாயி, நரையாகி, முழவன் போன்ற ஏழு அரசகுலத்தவர்களையும் சந்திரசேகர ஐயங்கார், அச்சுத ஐயங்கார், முதலிய அந்தணர்கள், கண்ணப்ப முதலி என்னும் வேளாளர், முத்துநாயக்க செட்டி, சதாசிவச் செட்டி, சங்கரச்செட்டி போன்ற செட்டிமார்கள் போன்றோர் தங்களின் மனைவிமாருடன் செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டனர். இவர்களும் மன்னவனின் கட்டளைக்கிணங்க சீர்பாததேவி என்னும் இளவரசிக்கு துணையாக சிங்கை நாடு செல்ல பூரண மனதுடன் தயாராகினர். கப்பலிலே கடல்வழியாக சிங்கை நாட்டுக்கு பயணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. இந்த வேளையில் தன் அன்பு மகளுக்கு சீர்பாததேவியின் தாய் அரண்மனையிலே தானும் தன் சோழ குல மகாராணிகளும் பரம்பரை பரம்பரையாக வைத்து வழிபட்டு வந்த முக்கியத்துவம் வாய்ந்த வேலினை பாதுகாப்புக்காக வழங்கினார். தன் அன்னையின் அன்புப்பரிசினை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட சீர்பாததேவி; தன் கணவன் வாலசிங்கனுடன் சோழ மன்னனின் பிரதிநிதிகள் சூழ்ந்திருக்க கப்பலிலே அமர்ந்திருந்து அரசகுல பெண்களின் வாழ்த்தொலிகள் முழங்க கடல்வழியாக பயணத்தினை இறை தியானத்துடன் ஆரம்பித்தார். சிறப்பு பொருந்திய அரசகுலத்தவர்களின் கப்பல் என்ற படியால் அலை எழுப்புகின்ற கடல் அன்னை கூட எந்தவிதமான ஆர்ப்பாட்டமுமின்றி அமைதியாக வழி கொடுத்தாள். தங்கு தடையின்றி கப்பல் வட இலங்கையை நோக்கி சென்று கொண்டிருந்தது. இவ்வாறு வட இலங்கையின் சிங்கை நகரினை கப்பல் அண்மித்த வேளையிலே சீர்பாததேவி தன் அன்பு மன்னவனிடம் ஒரு வேண்டுகோளினை முன்வைத்தாள். அதாவது சிங்கை அரசனின் ஆட்சிக்குட்பட்ட பிரதேசமனைத்தினையும் தான் பார்வையிட வேண்டுமென்பதே அந்த வேண்டுகோள். தன் மனைவி தன்னிடம் கேட்கின்ற அந்த வேண்டுகோளினை ஏற்றுக் கொண்ட மன்னவன் இளவரசியின் விருப்பத்திற்கிணங்க தன் ஆட்சிக்குட்பட்ட பிரதேசமனைத்தினையும் பார்வையிடுவதற்காக கப்பலை கிழக்கு கரையோரமாக திருப்புமாறு கட்டளை பிறப்பித்தான். மன்னவனின் கட்டளைக்கிணங்க கப்பலும் கிழக்கு கரையோரமாக நகர்ந்தது. இலங்கையின் வளம் பொருந்தியதும் செழிப்பான பிரதேசமாகவும் காணப்பட்ட கிழக்கின் அழகினை கப்பலில் இருந்தவர்கள் ரசித்துக் கொண்டு சென்றனர். கிழக்கிலங்கையின் நீர் வளமும் நில வளமும் பச்சைப்பசேலென்று செழித்துக்கிடந்த மரங்களும் நீலச்சேலை விரிக்கப்பட்டது போன்று காணப்பட்ட கிழக்குக்கடலின் எழிலும் அவர்களை ஆச்சரியத்திற்கும் ரசனை உணர்விற்கும் இட்டுச் சென்றது. இவ்வாறு கிழக்கின் எழிலினை ரசித்தவண்ணம் உல்லாசமாக பயணித்துக் கொண்டிருந்த அவர்கள் கிழக்கின் முக்கிய இடமாக விளங்குகின்ற திருகோணமலை கடற் பிரதேசத்திலே பயணித்துக் கொண்டிருந்தபோது திருக்கோணேசர் பெருமானின் ஆலயம் அவர்களின் கண்களுக்கு புலப்பட்டது. கோணேசர் பெருமானின் ஆலயத்திற்கு கப்பலில் இருந்த அனைவரும் கோணேசப் பெருமானை மனமுருக வழிபட்டனர். இவ்வேளையில் கப்பலில் கோளாறு ஏற்படட்டது போல் கப்பல் ஆலயத்திற்கு முன்பாக தடைப்பட்டு நின்றது. கப்பலின் இவ்வாறான நிலமை அதிலிருந்த அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. “கோணேசப் பெருமானை மனதிலே நினைத்துக் கொண்டிருந்த வேளையில் இவ்வாறு கப்பல் தடைப்பட்டிருப்பது இறைவனின் செயலன்றி வேறில்லை" என நினைத்த இளவரசியார் கப்பலில் இருந்த தன்னுடன் வந்தவர்களிடம் கப்பல் நின்றமைக்கான காரணத்தினை கண்டறியுமாறு பணித்தாள். அவ்வேளையில் அங்கிருந்தவர்களில் சிந்தன் என்பவன் அதனை அறியும் பொருட்டு நீரிலே இறங்கி கப்பலின் அடியில் சென்று கப்பல் ஏதாவது பாறைகளில் முட்டி இருக்கின்றதா? என்பதனை ஆராய்ந்தான். எனினும் கப்பல் அப்படியான எந்த ஒரு பொருளிலும் முட்டி மோதவில்லை. சாதாரணமான நிலையிலேயே காணப்பட்டது. அப்போது சிந்தனுடைய கண்களில் விக்கிரகம் ஒன்று தென்பட்டது. அதனை அருகே சென்று பார்த்தபோது அது ஒரு விநாயகர் விக்கிரகம் என்பது சிந்தனுக்கு தெளிவாகியது. எனவே இவ்விடயத்தினை அவன் கப்பலிலே உள்வர்களுக்கு உடனடியாக தெரியப்படுத்தினான். இதனை அறிந்த அரசியார் மீண்டும் ஒரு முறை இறைவனை தியானித்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் அவ்விக்கிரகத்தினை மேலே கொண்டு வருமாறு பணித்தாள். அரசியாரின் வேண்டுகோளிற்கிணங்க சிந்தனும் அவ்விக்கிரகத்தினை நீரில் இருந்து வெளியேற்றி கப்பலிலே சேர்த்தான். அதனைக்கண்ட மன்னன் அரசியார் உட்பட்ட அனைவரும் வியப்புற்றனர். எவ்வாறு இவ்விக்கிரகம் கடலில் வந்து சேர்ந்தது என பலவாறும் வினவினர். எது எவ்வாறாயினும் இறைவன் செயலாகத்தான் இவ்விக்கிரகம் தமக்கு கிடைத்ததாக நினைத்த சீர்பாததேவியார் அவ்விக்கிரகத்தின்பால் ஒரு நேர்த்திக்கடனை முன்வைத்தார். அதாவது தாங்கள் பயணம் செய்யும் இந்தக்கப்பல் எந்த இடத்தில் தரித்து நிற்கின்றதோ அவ்விடத்தில் இவ்விக்கிரகத்தினை வைத்து பிரம்மாண்டமான ஒரு ஆலயத்தினை அமைப்பதாக கூறி கப்பலினை தொடாந்து செலுத்துமாறு கூறினார். அதன்படி கப்பலும் தொர்ந்து பயணத்தினை ஆரம்பித்தது. பயணத்தினை தொடர்ந்த கப்பலானது மட்டக்களப்பு வாவியின் தெற்குத் திசைநோக்கி பயணித்து வாவியின் அந்தமான வீரர்முனை என்ற இடத்தினை கரை தட்டியது. இந்த வீரர்முனை ஆதிகால ஆட்சி வரலாற்றில் முக்கியமான ஒரு இடமாக காணப்பட்டது. அதாவது கி.மு.237 தொடக்கம் கி.மு.215 வரையான காலப்பகுதியில் கூர்த்திகன் என்னும் தமிழ் மன்னன் தன் சகோதரனான சேனன் என்பவனுடன் இணைந்து அக்காலப்பகுதியில் அநுராதபுரத்தினை ஆட்சிசெய்த “சூரதீசன்” என்ற மன்னனை போரில் வெற்றி கொண்டு அநுராதபுரத்தை ஆட்சி செய்தான்; என்பதனை மகாவம்சத்தினூடாக அறிய முடிகின்றது. கூர்த்திகன் கி.மு.3ம் நூற்றாண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு நகரத்தை அமைத்தான் எனவும் வீரர்முனை என அழைக்கப்படுகின்ற இவ்விடத்தில் காவல் அரண்களை அமைத்ததாகவும் கூறப்படுகின்றது. இவ்வாறு போர்வீரர்கள் காவல் அரணில் அமர்த்தப்பட்டதனால் “வீரர்முனை” என பெயர் வழங்கப்பட்டது என்பது வரலாற்று உண்மை. இவ்வாறான வரலாற்று சிறப்புக்கள் வாய்க்கப்பெற்ற வீரர்முனையிலே சீர்பாததேவியும் அவளுடைய குழுவினரும் வந்த கப்பல் கரை தட்டியது. இவ்வாறு வீரர்முனையிலே கப்பல் கரை தட்டி நின்றதும் சீர்பாததேவி மிகவும் மனமகிழ்ச்சியடைந்தார். காரணம் வீரர்முனையின் இயற்கை அழகும் வளம் பொருந்திய அமைவிடமும் ஆகும். மக்கள் வாழ்கின்ற பிரதேசத்திலே ஆலயம் அமைக்கப்படுகின்ற போதுதான் அவ்வாலயத்தினை பராமரித்து அபிவிருத்தி செய்ய முடியும். எனவே வீரர்முனை என்கின்ற இடமானது மக்கள் குடியிருப்புக்களை அமைப்பதற்கேற்ற அனைத்து விதமான வளங்களையும் வசதிவாய்ப்புக்களையும் கொண்டதொரு இடமாக காணப்பட்டது. இவ்வாறான இடத்தில் தங்களுக்கு கிடைத்த விநாயர் விக்கிரகத்தினை வைத்து அழகியதொரு ஆலயத்தினை அமைத்து இவ்விடத்தின் அழகினை மேலும் செழிப்படையச் செய்யும் நோக்கோடு கப்பலில் வந்தவர்கள் அனைவரும் தங்குவதற்காக அவ்விடத்தில் கூடாரங்கள் அமைக்கப்படன. வீரர்முனையிலே ஆலயம் அமைக்கும்பணி துரிதமாக ஆரம்பிக்கப்பட்டது. எனினும் இக்காலப்பகுதியில் வீரர்முனையிலே எவரும் குடியிருக்காமையினாலும் கப்பலில் வந்தவர்கள் ஆலயம் அமைப்பதற்குப் போதாமையினாலும் பாலசிங்கன் வீரர்முனையை அண்மித்த பகுதிகளில் வாழ்ந்தவர்களை ஆலயம் அமைக்கும் பணியில் ஈடுபடுத்தினான். சிறந்த தேர்ச்சி பெற்ற கட்டிடக்கலைஞர்களினதும் மக்களினதும் முழுமூச்சான செயற்பாட்டினால் அழகியதும் சிறப்புமிக்கதுமான ஆலயம் அமைக்கப்பட்டது. சீர்பாததேவியின் நேர்கடன் நிறைவடைகின்ற தருணம் நெருங்கியதைத் தொடர்ந்து அரசியாரும் மன்னவனும் மிக்க மகிழ்ச்சியடைந்தனர். ஆலயத்தின் நிர்மாண வேலைகள் யாவும் நிறைவு பெற்ற நிலையில் அடுத்த கட்ட செயற்பாடுகளான கிரியைகள் செய்யும் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. இதன் பலனாக சோதிடர் குறிப்பிட்டதும் ஆகம முறைக்கு ஏற்றதுமான ஒரு சுப நாளில் விநாயகப் பெருமானுடைய திருவுருவம் ஆலயத்திலே எழுந்தருளப்பட்டு ஆலயத்திலே செய்து முடிக்க வெண்டிய கிரியைகள் அனைத்தையும் பாலசிங்கன் செய்து முடித்தான். சிந்து யாத்திரையின் பயனாக (அதாவது சிந்து என்பது கடல் எனவே கடல் யாத்திரை என்ற அர்த்தத்தினை கொண்டது) கிடைத்த விநாயகர் என்றபடியால் சிந்து யாத்திரைப்பிள்ளையார் என திரு நாமம் சூட்டப்பட்டு வீரர்முனையிலே சிந்து யாத்திரைப் பிள்ளையாருக்கு திருவிழா எடுப்பித்து மகிழ்ந்தனர்; பாலசிங்கனும் சீர்பாததேவியும். தான் ஆலயம் அமைப்பதாக கொண்ட எண்ணம் நிறைவு பெற்ற மகிழ்ச்சி சீர்பாததேவியின் மனதினை ஆட்கொண்டது. எனினும் ஆலயம் அமைக்கும் பணி நிறைவடைந்தமையோடு தமது அரச குலத்தவர்களின் பணி இவ்வாலயத்தில் நிறைவு பெறக்கூடாது என்ற நன்நோக்கோடு தொடர்ச்சியாக இவ்வாலயத்தினை தன்னுடைய அரச பரம்பரையினர்தான் பராமரித்து சிறப்பிக்க வேண்டும் என்ற நீண்டதொரு எண்ணத்துடன் கப்பலில் தனக்க துணையாக வந்த தன் அரச பரம்பரையினை சேர்ந்த அரச குலத்தவர்களான சிந்தன், காங்கேயன், காலதேவன், பெண்பழச்சி, முழவன், வெள்ளாயி, நரையாகி, போன்றோரையும் கண்ணப்ப முதலி என்னும் வேளாளர், முத்துநாயக்கச் செட்டி, சதாசிவச்செட்டி, சங்ரச்செட்டி போன்ற செட்டிமார்களும் சந்திர சேகர ஐயங்கார், அச்சுத ஐயங்கார் எனும் அந்தணர்கள் மற்றும் அவர்களின் மனைவிமார் போன்றோரையும் வீரர்முனைக் கிராமத்திலே குடியமர்த்த முடிவு செய்தார் சீர்பாததேவியார். சீர்பாததேவியினால் வீரர்முனையில் கட்டப்பட்ட சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயத்தின் தற்போதைய தோற்றம் அரசியாரின் விருப்பின்படி சோழநாட்டு மக்கள் அனைவரும் வீரர்முனையிலே குடியமர்த்தப்பட்டனர். அவர்களுக்கு நிலம் சொத்துக்கள் என்பன வழங்கப்பட்டது. அது மாத்திரமன்றி ஆலயத்திலே பூசை வழிபாடுகள் செய்து வருவதற்காகவும் அதனைப் பராமரிப்பதற்காகவும் அவ்வாலயத்தினை அண்டி வாழ்கின்ற மக்களின் வாழ்க்கை வழமானதாக அமையவும் நெற்காணிகளையும் வழங்கி, அவர்கள் அனைவரையும் அழைத்து வாலசிங்க மன்னன் அவர்களை நோக்கி “இதில் அரச குலத்தவர்கள், அந்தணர்கள், செட்டிமார், வேளாளர் போன்ற அனைத்து குலத்தவர்களும் ஒன்றுபட்டு நிற்கின்றீர்கள் நீங்கள் அனைவரும் உங்கள் இளவரசியின் பெயரால் சீர்பாத குலம் என ஒரு குலமாக வகுக்கின்றேன். இன்று முதல் நீங்கள் அனைவரும் அரசகுலத்தவர், அந்தணர், வேளாளர், வணிகர் என்பதிலிருந்து விலகி சீர்பாதகுலத்தவர் என்ற பெருமையுடன் எக்காலத்திலும் உங்களுக்குள் வேற்றுமை இல்லாதவர்களாய் ஒற்றுமையாக வாழ்வதோடு சிந்து யாத்திரைப் பிள்ளையாருக்காக இது முதலாக வீரர்முனையிலே நிரந்தரமாக வாழ ஆரம்பிக்கின்ற நீங்கள் சாதாரணமானவர்கள் அன்று சோழ இளவரசியான சீர்பாத தேவியின் உறவினர்கள். அந்தவகையில் நீங்கள் அரசகுல கௌரவத்தினை உடையவர்கள். இதன்படியாக உங்களக்கு அரவிந்தமலர்,செங்கோல், கொடி என்பன பொறிக்கப்பட்ட அரசகுல விருதினை வழங்கி உங்களை ஈழத்திலே உயர்வானவர்கள் என்ற மதிப்பினையும் அளிக்கின்றேன்” என்று கூறினான். இவ்வாறான சிறப்புக்களுடனும் பெருமைகளுடன் சீர்பாதகுல மக்கள் வீரர்முனையிலே தங்கள் வாழ்க்கைப் பயணத்தினை சிந்து யாத்திரைப்பிள்ளையாரின் அருள் துணையுடன் தொடங்கினர். இவர்கள் தங்களுக்கென்று சிறப்பான கலாசாரம், பண்பாடு போன்றவற்றினை தனித்துவமானதாக்கிக் கொண்டு அவற்றின் வழி உயர்ந்த பண்புமிக்க மக்கள் சமுதாயமாக உருவாக்கம் பெற்றனர். இவ்வாறான சீர்பாதரின் வரலாற்று உண்மைகளை சீர்பாதகுலச் செப்பேடுகளான வீரமுனைச்செப்பேடு, திருகோணமலைச்செப்பேடு, திருக்கோவில் செப்பேடு, கொக்கட்டிச்சோலைச் செப்பேடு, பேன்றவை குறிப்பிடுகின்றது. உதாரணமாக திருக்கோயில் செப்பேட்டுப்பாடலை எடுத்துக்கெண்டால்! சிந்துயாத்திரைப்பிள்ளையார் நாமத்துடன் நித்திய பூசை நியமமாகச் செய்து விநாயகர் ஆலயம் விளங்கிடும்பொருட்டு செந்நெல் விளைவு நிலங்களும் தேவாலயத்தின் திருப்பணி சாமான் எல்லாவற்றையும் எழுத்தில் வரைந்து… சீர்பாததேவியின் திருப்பெயரால் சீர்பாதகுலமென சிறந்த பெயர்சூட்டினர் அரசர்கும் தேவர்கும் அரும்விருந்தான வெற்றிக்கொடியை விரும்பிக்கொடுத்து…… எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பாண்டியமன்னனான மாகன் சாதிகளுக்கான குலவிருதுகள் வகுத்தான். இக்குல விருது கூறும் கல்வெட்டில் சீர்பாதரை அமரர்(தேவர்) எனக் குறிப்பிட்டு அவர்களுக்கான குலவிருதான தேர்க் கெடியும் குறிப்பிடப்பட்டுள்ளது. Copyright 2010-2014 © veeramunai.com All rights reserved. This site best viewed at a screen resolution of 1024 x 768 pixels or higher with most recent versions of browsers. You will need the most recent versions of Adobe Flash Player & etc in order to view some multimedia content.
‏حَدَّثَنِي ‏ ‏عَبْدُ الْحَمِيدِ بْنُ بَيَانٍ الْوَاسِطِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏سُهَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عُبَيْدٍ الْمَذْحِجِيِّ ‏ ‏قَالَ ‏ ‏مُسْلِم ‏ ‏أَبُو عُبَيْدٍ ‏ ‏مَوْلَى ‏ ‏سُلَيْمَانَ بْنِ عَبْدِ الْمَلِكِ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ سَبَّحَ اللَّهَ فِي ‏ ‏دُبُرِ ‏ ‏كُلِّ صَلَاةٍ ثَلَاثًا وَثَلَاثِينَ وَحَمِدَ اللَّهَ ثَلَاثًا وَثَلَاثِينَ وَكَبَّرَ اللَّهَ ثَلَاثًا وَثَلَاثِينَ فَتْلِكَ تِسْعَةٌ وَتِسْعُونَ وَقَالَ تَمَامَ الْمِائَةِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ غُفِرَتْ خَطَايَاهُ وَإِنْ كَانَتْ مِثْلَ ‏ ‏زَبَدِ ‏ ‏الْبَحْرِ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ زَكَرِيَّاءَ ‏ ‏عَنْ ‏ ‏سُهَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عُبَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏ ‏قَالَ ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ “யார் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் முப்பத்து மூன்று முறை ஸுப்ஹானல்லாஹ் என்றும், முப்பத்து மூன்று முறை அல்ஹம்து லில்லாஹ் என்றும், முப்பத்து மூன்று முறை அல்லாஹு அக்பர் என்றும் ஆக மொத்தம் தொன்னூற்று ஒன்பது முறை கூறி, இறுதியில் நூறாவதாக லா இலாஹ இல்லல்லாஹு; வஹ்தஹூ லா ஷரீக்க லஹு; லஹுல் முல்க்கு, வலஹுல் ஹம்து; வஹுவ அலா குல்லி ஷையின் கதீர் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையில்லை; ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது; எல்லாப் புகழும் அவனுக்கே உரியது. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன்) என்று நிறைவு செய்கிறாரோ அவருடைய (சிறு) பாவங்கள் யாவும் கடலின் நுரையளவு இருந்தாலும் மன்னிக்கப்படுகின்றன” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) அத்தியாயம்: 5, பாடம்: 27, ஹதீஸ் எண்: 938 ‏حَدَّثَنَا ‏ ‏نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أَحْمَدَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمْزَةُ الزَّيَّاتُ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى ‏ ‏عَنْ ‏ ‏كَعْبِ بْنِ عُجْرَةَ ‏ ‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مُعَقِّبَاتٌ ‏ ‏لَا يَخِيبُ قَائِلُهُنَّ أَوْ فَاعِلُهُنَّ ثَلَاثٌ وَثَلَاثُونَ تَسْبِيحَةً وَثَلَاثٌ وَثَلَاثُونَ تَحْمِيدَةً وَأَرْبَعٌ وَثَلَاثُونَ تَكْبِيرَةً فِي ‏ ‏دُبُرِ ‏ ‏كُلِّ صَلَاةٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَسْبَاطُ بْنُ مُحَمَّدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَمْرُو بْنُ قَيْسٍ الْمُلَائِيُّ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ “சில துதிச் சொற்கள் உள்ளன. அவற்றை ஓதிவருபவர் நட்டமடையமாட்டார். (அவை) ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் முப்பத்து மூன்று முறை ஸுப்ஹானல்லாஹ்; முப்பத்து மூன்று முறை அல்ஹம்து லில்லாஹ்; முப்பத்து நான்கு முறை அல்லாஹுஅக்பர் என்று கூறும் துதிச்சொற்களாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : கஅப் பின் உஜ்ரா (ரலி) அத்தியாயம்: 5, பாடம்: 27, ஹதீஸ் எண்: 937 و حَدَّثَنَا ‏ ‏الْحَسَنُ بْنُ عِيسَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ الْمُبَارَكِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَالِكُ بْنُ مِغْوَلٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏الْحَكَمَ بْنَ عُتَيْبَةَ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى ‏ ‏عَنْ ‏ ‏كَعْبِ بْنِ عُجْرَةَ ‏ ‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مُعَقِّبَاتٌ ‏ ‏لَا يَخِيبُ قَائِلُهُنَّ أَوْ فَاعِلُهُنَّ ‏ ‏دُبُرَ ‏ ‏كُلِّ صَلَاةٍ مَكْتُوبَةٍ ثَلَاثٌ وَثَلَاثُونَ تَسْبِيحَةً وَثَلَاثٌ وَثَلَاثُونَ تَحْمِيدَةً وَأَرْبَعٌ وَثَلَاثُونَ تَكْبِيرَةً “சில துதிச் சொற்கள் உள்ளன. அவற்றைக் கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் ஓதி வருபவர் நட்டமடையமாட்டார். (அவை) முப்பத்துமூன்று முறை ‘ஸுப்ஹானல்லாஹ்’; முப்பத்து மூன்று முறை ‘அல்ஹம்துலில்லாஹ்’; முப்பத்து நான்கு முறை ‘அல்லாஹு அக்பர்’ என்று துதிப்பதாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : கஅப் பின் உஜ்ரா (ரலி) அத்தியாயம்: 5, பாடம்: 27, ஹதீஸ் எண்: 936 حَدَّثَنَا ‏ ‏عَاصِمُ بْنُ النَّضْرِ التَّيْمِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْمُعْتَمِرُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَجْلَانَ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏سُمَيٍّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏وَهَذَا حَدِيثُ ‏ ‏قُتَيْبَةَ ‏ أَنَّ فُقَرَاءَ ‏ ‏الْمُهَاجِرِينَ ‏ ‏أَتَوْا رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالُوا ذَهَبَ أَهْلُ ‏ ‏الدُّثُورِ ‏ ‏بِالدَّرَجَاتِ الْعُلَى وَالنَّعِيمِ الْمُقِيمِ فَقَالَ وَمَا ذَاكَ قَالُوا يُصَلُّونَ كَمَا نُصَلِّي وَيَصُومُونَ كَمَا نَصُومُ وَيَتَصَدَّقُونَ وَلَا نَتَصَدَّقُ وَيُعْتِقُونَ وَلَا نُعْتِقُ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَفَلَا أُعَلِّمُكُمْ شَيْئًا تُدْرِكُونَ بِهِ مَنْ سَبَقَكُمْ وَتَسْبِقُونَ بِهِ مَنْ بَعْدَكُمْ وَلَا يَكُونُ أَحَدٌ أَفْضَلَ مِنْكُمْ إِلَّا مَنْ صَنَعَ مِثْلَ مَا صَنَعْتُمْ قَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ تُسَبِّحُونَ وَتُكَبِّرُونَ وَتَحْمَدُونَ ‏ ‏دُبُرَ ‏ ‏كُلِّ صَلَاةٍ ثَلَاثًا وَثَلَاثِينَ مَرَّةً ‏ ‏قَالَ ‏ ‏أَبُو صَالِحٍ ‏ ‏فَرَجَعَ فُقَرَاءُ ‏ ‏الْمُهَاجِرِينَ ‏ ‏إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالُوا سَمِعَ إِخْوَانُنَا أَهْلُ الْأَمْوَالِ بِمَا فَعَلْنَا فَفَعَلُوا مِثْلَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ذَلِكَ فَضْلُ اللَّهِ يُؤْتِهِ مَنْ يَشَاءُ ‏ ‏وَزَادَ غَيْرُ ‏ ‏قُتَيْبَةَ ‏ ‏فِي هَذَا الْحَدِيثِ ‏ ‏عَنْ ‏ ‏اللَّيْثِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَجْلَانَ ‏ ‏قَالَ ‏ ‏سُمَيٌّ ‏ ‏فَحَدَّثْتُ بَعْضَ أَهْلِي ‏ ‏هَذَا الْحَدِيثَ فَقَالَ وَهِمْتَ إِنَّمَا قَالَ تُسَبِّحُ اللَّهَ ثَلَاثًا وَثَلَاثِينَ وَتَحْمَدُ اللَّهَ ثَلَاثًا وَثَلَاثِينَ وَتُكَبِّرُ اللَّهَ ثَلَاثًا وَثَلَاثِينَ فَرَجَعْتُ إِلَى ‏ ‏أَبِي صَالِحٍ ‏ ‏فَقُلْتُ لَهُ ذَلِكَ فَأَخَذَ بِيَدِي فَقَالَ اللَّهُ أَكْبَرُ وَسُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ اللَّهُ أَكْبَرُ وَسُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ حَتَّى تَبْلُغَ مِنْ جَمِيعِهِنَّ ثَلَاثَةً وَثَلَاثِينَ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ عَجْلَانَ ‏ ‏فَحَدَّثْتُ ‏ ‏بِهَذَا الْحَدِيثِ ‏ ‏رَجَاءَ بْنَ حَيْوَةَ ‏ ‏فَحَدَّثَنِي ‏ ‏بِمِثْلِهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏أُمَيَّةُ بْنُ بِسْطَامَ الْعَيْشِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ زُرَيْعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏رَوْحٌ ‏ ‏عَنْ ‏ ‏سُهَيْلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُمْ قَالُوا يَا رَسُولَ اللَّهِ ذَهَبَ أَهْلُ ‏ ‏الدُّثُورِ ‏ ‏بِالدَّرَجَاتِ الْعُلَى وَالنَّعِيمِ الْمُقِيمِ بِمِثْلِ حَدِيثِ ‏ ‏قُتَيْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏اللَّيْثِ ‏ ‏إِلَّا أَنَّهُ أَدْرَجَ فِي حَدِيثِ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَوْلَ ‏ ‏أَبِي صَالِحٍ ‏ ‏ثُمَّ رَجَعَ فُقَرَاءُ ‏ ‏الْمُهَاجِرِينَ ‏ ‏إِلَى آخِرِ الْحَدِيثِ وَزَادَ فِي الْحَدِيثِ يَقُولُ ‏ ‏سُهَيْلٌ ‏ ‏إِحْدَى عَشْرَةَ إِحْدَى عَشْرَةَ فَجَمِيعُ ذَلِكَ كُلِّهِ ثَلَاثَةٌ وَثَلَاثُونَ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஏழை முஹாஜிர்கள் (சிலர்) வந்து, “செல்வந்தர்கள் (மறுமையின்) உயர் பதவிகளையும் நிலையான இன்பங்களையும் (தட்டிக்) கொண்டு போய்விடுகின்றனர்” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “எப்படி?” என்று கேட்டார்கள். அவர்கள், “(ஏழைகளாகிய) நாங்கள் தொழுவதைப் போன்றே அவர்களும் தொழுகின்றனர். நாங்கள் நோன்பு நோற்பதைப் போன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர். ஆனால், அவர்கள் தர்மங்கள் செய்கின்றனர். நாங்கள் தர்மங்கள் செய்(ய முடி)வதில்லை. அவர்கள் அடிமைகளை விடுதலை செய்கின்றனர். நாங்கள் அடிமைகளை விடுதலை செய்(ய முடி)வதில்லை” என்று கூறினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நான் ஒன்றை உங்களுக்கு அறிவிக்கட்டுமா (அதை நீங்கள் செயல்படுத்திவந்தால் இந்தச் சமுதாயத்தில்) உங்களை முந்திவிட்டவர்களையும் உங்களுக்குப் பின்னால் வருபவர்களையும் நீங்கள் எட்டிவிடுவீர்கள். உங்களைப் போன்று செயல்படுத்தினால் தவிர உங்களைவிட வேறெவரும் சிறந்தவர்களாக ஆகிவிட முடியாது” என்று கூறினார்கள். முஹாஜிர்கள், “ஆம் (அறிவியுங்கள்) அல்லாஹ்வின் தூதரே!” என்று வேண்டினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நீங்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் ஸுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) என்றும், அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்றும், அல்ஹம்து லில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்றும் முப்பத்து மூன்று முறை கூறுங்கள்” என்றார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) குறிப்பு : பிறகு அந்த ஏழை முஹாஜிர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் திரும்பிவந்து, “செல்வந்தர்களான எங்கள் சகோதரர்கள் நாங்கள் செய்துவருவதைக் கேள்விப்பட்டு அவர்களும் அவ்வாறே செய்து வருகின்றனர்” என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இது அல்லாஹ்வின் அருட்கொடை அவன் நாடியவர்களுக்கு அதை வழங்குகிறான்” என்று சொன்னார்கள் என்று அபூஸாலிஹ் (ரஹ்) கூறியதாக இடம்பெற்றுள்ளது. நான் இந்த ஹதீஸை என் குடும்பத்தாரில் ஒருவரிடம் அறிவித்தேன். அவர், “நீர் கூறுவது தவறு. முப்பத்து மூன்று முறை ஸுப்ஹானல்லாஹ் என்றும், முப்பது மூன்று முறை அல்ஹம்துலில்லாஹ் என்றும், முப்பத்து மூன்று முறை அல்லாஹூ அக்பர் என்றும் கூறுவீராக! என்றே அபூஸாலிஹ் (ரஹ்) கூறினார்கள்” என்றார். உடனே நான் அபூஸாலிஹ் (ரஹ்) அவர்களிடம் சென்று இது பற்றிக் கேட்டேன். அவர்கள் எனது கையைப் பிடித்தவாறு, “அல்லாஹு அக்பர் வஸுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி; அல்லாஹு அக்பர் வஸுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி என்று எல்லாம் சேர்த்து முப்பத்து மூன்று தடவையை எட்டும் அளவுக்குக் கூறுவீராக!” என்றார்கள். இந்த ஹதீஸை நான் ரஜாஉ பின் ஹய்வா (ரஹ்) அவர்களிடம் தெரிவித்தேன். அவர்களும் அபூஸாலிஹ் (ரஹ்) அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்ததைப் போன்றே எனக்கு அறிவித்தார்கள் என்று குதைபா (ரஹ்) இடம்பெறாத அறிவிப்புகளில் ஸுமை (ரஹ்) கூறியதாக இடம்பெற்றுள்ளது. உமையா பின் பிஸ்தாம் அல்அய்ஷீ (ரஹ்) வழி அறிவிப்பில், “… பிறகு ஏழை முஹாஜிர்கள் திரும்பி வந்தனர் …” என்று அபூஸாலிஹ் (ரஹ்) கூறியது இடையில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் சுஹைல் (ரஹ்), “(ஸுப்ஹானல்லாஹ் அல்ஹம்து லில்லாஹ் அல்லாஹூ அக்பர் ஆகிய ஒவ்வொன்றையும்) பதினோரு முறை பதினோரு முறை கூறுங்கள். ஆக மொத்தம் இவை யாவும் சேர்ந்து முப்பத்து மூன்று முறையாகும்” என்று அறிவித்தார்கள் என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம்: 5, பாடம்: 27, ஹதீஸ் எண்: 935 و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏قَالَ ‏ ‏كَانَ ‏ ‏ابْنُ الزُّبَيْرِ ‏ ‏يَقُولُ فِي ‏ ‏دُبُرِ ‏ ‏كُلِّ صَلَاةٍ حِينَ يُسَلِّمُ ‏ ‏لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَلَا نَعْبُدُ إِلَّا إِيَّاهُ لَهُ النِّعْمَةُ وَلَهُ الْفَضْلُ وَلَهُ الثَّنَاءُ الْحَسَنُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ وَقَالَ كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُهَلِّلُ ‏ ‏بِهِنَّ ‏ ‏دُبُرَ ‏ ‏كُلِّ صَلَاةٍ ‏ و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏مَوْلًى لَهُمْ ‏ ‏أَنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ ‏ ‏كَانَ ‏ ‏يُهَلِّلُ ‏ ‏دُبُرَ ‏ ‏كُلِّ صَلَاةٍ بِمِثْلِ حَدِيثِ ‏ ‏ابْنِ نُمَيْرٍ ‏ ‏وَقَالَ فِي آخِرِهِ ثُمَّ يَقُولُ ‏ ‏ابْنُ الزُّبَيْرِ ‏ ‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُهَلِّلُ ‏ ‏بِهِنَّ ‏ ‏دُبُرَ ‏ ‏كُلِّ صَلَاةٍ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ عُلَيَّةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْحَجَّاجُ بْنُ أَبِي عُثْمَانَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو الزُّبَيْرِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ ‏ ‏يَخْطُبُ عَلَى هَذَا الْمِنْبَرِ وَهُوَ يَقُولُ ‏ ‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ إِذَا سَلَّمَ فِي ‏ ‏دُبُرِ ‏ ‏الصَّلَاةِ ‏ ‏أَوْ الصَّلَوَاتِ ‏ ‏فَذَكَرَ بِمِثْلِ حَدِيثِ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْمُرَادِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَالِمٍ ‏ ‏عَنْ ‏ ‏مُوسَى بْنِ عُقْبَةَ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا الزُّبَيْرِ الْمَكِّيَّ ‏ ‏حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ ‏ ‏وَهُوَ يَقُولُ فِي ‏ ‏إِثْرِ ‏ ‏الصَّلَاةِ إِذَا سَلَّمَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِهِمَا وَقَالَ فِي آخِرِهِ وَكَانَ يَذْكُرُ ذَلِكَ عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் ஸலாம் கொடுத்தவுடன், “லா இலாஹ இல்லல்லாஹு; வஹ்தஹூ லா ஷரீக்க லஹூ; லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். லா ஹவ்ல, வலா குவ்வத்த இல்லா பில்லாஹ். லா இலாஹ இல்லல்லாஹு வலா நஅபுது இல்லா இய்யாஹு; லஹுந் நிஅமத்து, வலஹுல் ஃபள்லு, வலஹுஸ் ஸனாஉல் ஹஸனு; லா இலாஹ இல்லல்லாஹு முக்லிஸீன லஹுத்தீன வலவ் கரிஹல் காஃபிரூன் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையில்லை; ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. எல்லாப் புகழும் அவனுக்கே உரியது. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன். அல்லாஹ்வின் உதவியின்றி பாவங்களிலிருந்து விலகிச் செல்லவோ, நல்லறங்கள் புரிய வலிமை பெறவோ (எவராலும்) இயலாது; வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை; அவனைத் தவிர வேறெவரையும் நாங்கள் வழிபடமாட்டோம். அருட்கொடைகள் அவனுக்கே உரியன. மாட்சிமை அவனுக்கே உரியது. அழகிய கீர்த்தியும் அவனுக்கே உரியது. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை; இறைமறுப்பாளர்கள் எத்துணை வெறுத்தாலும் வழிபாடுகளை அப்பழுக்கற்று முற்றிலும் அவனுக்கே உரித்தாக்குகிறோம்)” என்று கூறுவார்கள். மேலும், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் இந்த திக்ருகளை ஓதிவந்தார்கள்” என்றும் கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) வழியாக அபுஸ்ஸுபைர் அல்மக்கீ (ரஹ்) குறிப்பு : அல்ஹஜ்ஜாஜ் பின் அபீஉஸ்மான் (ரஹ்) வழி அறிவிப்பில், “அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் இந்தச் சொற்பொழிவு மேடைமீது நின்று உரையாற்றும்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகைக்கு/தொழுகைகளுக்குப்பின் ஸலாம் கொடுத்தவுடன் மேற்கண்டவாறு கூறுவார்கள்” என அபுஸ்ஸுபைர் அல்மக்கீ (ரஹ்) கூறியதாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம்: 5, பாடம்: 27, ஹதீஸ் எண்: 934 و حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ الْمَكِّيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدَةُ بْنُ أَبِي لُبَابَةَ ‏ ‏وَعَبْدُ الْمَلِكِ بْنُ عُمَيْرٍ ‏ ‏سَمِعَا ‏ ‏وَرَّادًا ‏ ‏كَاتِبَ ‏ ‏الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ ‏ ‏يَقُولُا ‏ ‏كَتَبَ ‏ ‏مُعَاوِيَةُ ‏ ‏إِلَى ‏ ‏الْمُغِيرَةِ ‏ ‏اكْتُبْ إِلَيَّ بِشَيْءٍ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ فَكَتَبَ إِلَيْهِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ إِذَا قَضَى الصَّلَاةَ ‏ ‏لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ اللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلَا يَنْفَعُ ‏ ‏ذَا الْجَدِّ ‏ ‏مِنْكَ ‏ ‏الْجَدُّ முஆவியா (ரலி), முஃகீரா (ரலி) அவர்களுக்கு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து தாங்கள் செவியேற்ற (ஹதீஸ்) ஒன்றை எனக்கு எழுதி அனுப்புங்கள்” என்று எழுதிக் கேட்டிருந்தார். அதற்கு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் ‘லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹூ லா ஷரீக்க லஹூ, லஹுல் முல்க்கு, வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். அல்லாஹும்ம லா மானிஅ லிமா அஃதைத்த; வலா முஃத்திய லிமா மனஃத்த; வலா யன்ஃபஉ தல்ஜத்தி மின்க்கல் ஜத் (வணங்குதற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. எல்லாப் புகழும் அவனுக்கே உரியது. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன். இறைவா, நீ கொடுத்ததைத் தடுப்பவர் எவருமிலர். நீ தடுத்ததைக் கொடுப்பவர் எவருமிலர். செல்வந்தரின் செல்வம் எதுவும் உன்னிடமிருந்து காத்துக் கொள்ள அவருக்குப் பயனளிக்காது)’ என்று கூறுவதை நான் செவியேற்றிருக்கிறேன்” என்று முஃகீரா (ரலி) மறுமொழி எழுதினார்கள். அறிவிப்பாளர் : முஃகீரா பின் ஷுஅபா (ரலி) வழியாக அவர்களின் (முன்னாள்) அடிமை வர்ராது (ரஹ்) அத்தியாயம்: 5, பாடம்: 27, ஹதீஸ் எண்: 933 حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏الْمُسَيَّبِ بْنِ رَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏وَرَّادٍ ‏ ‏مَوْلَى ‏ ‏الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ ‏ ‏قَالَ ‏ ‏كَتَبَ ‏ ‏الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ ‏ ‏إِلَى ‏ ‏مُعَاوِيَةَ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ إِذَا فَرَغَ مِنْ الصَّلَاةِ وَسَلَّمَ قَالَ ‏ ‏لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ اللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلَا يَنْفَعُ ‏ ‏ذَا الْجَدِّ ‏ ‏مِنْكَ ‏ ‏الْجَدُّ ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏وَأَحْمَدُ بْنُ سِنَانٍ ‏ ‏قَالُوا ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏الْمُسَيَّبِ بْنِ رَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏وَرَّادٍ ‏ ‏مَوْلَى ‏ ‏الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْمُغِيرَةِ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِثْلَهُ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏فِي رِوَايَتِهِمَا قَالَ فَأَمْلَاهَا عَلَيَّ ‏ ‏الْمُغِيرَةُ ‏ ‏وَكَتَبْتُ بِهَا إِلَى ‏ ‏مُعَاوِيَةَ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَكْرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَبْدَةُ بْنُ أَبِي لُبَابَةَ ‏ ‏أَنَّ ‏ ‏وَرَّادًا ‏ ‏مَوْلَى ‏ ‏الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ ‏ ‏قَالَ كَتَبَ ‏ ‏الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ ‏ ‏إِلَى ‏ ‏مُعَاوِيَةَ ‏ ‏كَتَبَ ذَلِكَ الْكِتَابَ لَهُ ‏ ‏وَرَّادٌ ‏ ‏إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ حِينَ سَلَّمَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِهِمَا إِلَّا قَوْلَهُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ فَإِنَّهُ لَمْ يَذْكُرْ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏حَامِدُ بْنُ عُمَرَ الْبَكْرَاوِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بِشْرٌ يَعْنِي ابْنَ الْمُفَضَّلِ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَزْهَرُ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَوْنٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏وَرَّادٍ ‏ ‏كَاتِبِ ‏ ‏الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ ‏ ‏قَالَ كَتَبَ ‏ ‏مُعَاوِيَةُ ‏ ‏إِلَى ‏ ‏الْمُغِيرَةِ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏وَالْأَعْمَشِ முஃகீரா பின் ஷுஅபா (ரலி), முஆவியா பின் அபீஸுஃப்யான் (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள். அதில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்தவுடன், “லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லா ஷரீக்க லஹூ; லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து; வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். அல்லாஹும்ம லா மானிஅ லிமா அஃதைத்த; வலா முஃத்திய லிமா மனஃத்த; வலா யன்ஃபஉ தல்ஜத்தி மின்க்கல் ஜத் (வணங்குதற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. எல்லாப் புகழும் அவனுக்கே உரியது. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன். இறைவா, நீ கொடுத்ததைத் தடுப்பவர் எவருமிலர். நீ தடுத்ததைக் கொடுப்பவர் எவருமிலர். செலவந்தரின் செல்வம் எதுவும் உன்னிடமிருந்து காத்துக் கொள்ள அவருக்குப் பயனளிக்காது)” என்று கூறுவார்கள் என்று எழுதப்பட்டிருந்தது. அறிவிப்பாளர் : முஃகீரா பின் ஷுஅபா (ரலி) வழியாக அவர்களின் (முன்னாள்) அடிமை வர்ராது (ரஹ்) குறிப்பு : அபூபக்ரு (ரஹ்), அபூகுரைப் (ரஹ்) ஆகிய இருவர் வழி அறிவிப்பில், “முஃகீரா (ரலி) என்னை எழுதப் பணித்ததன்பேரில், முஆவியா (ரலி) அவர்களுக்கு அதை நான் எழுதினேன்” என்று வர்ராது (ரஹ்) குறிப்பிடுகிறார். இபுனு ஜுரைஜ் (ரஹ்) வழி அறிவிப்பு, “முஃகீரா பின் ஷுஅபா (ரலி), முஆவியா (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள் … அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுகையை முடித்து விட்டால் …” என்று தொடங்கி, “லா இலாஹ இல்லல்லாஹு … ” எனத் தொடர்ந்து, “… என்று கூற நான் செவியேற்றிருக்கிறேன்” என முஃகீரா (ரலி) கூறியதாக முடிகிறது. ஆனால் அதில், “… வஹுவ அலா குல்லி ஷையின் கதீர் (அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன்)” எனும் சொற்கள் இடம்பெறாமல் (விடுபட்டு) உள்ளன. இபுனு அவ்னு (ரஹ்) வழி அறிவிப்பில், “முஆவியா (ரலி), முஃகீரா (ரலி) அவர்களுக்கு விளக்கம் கேட்டு எழுதியதாகவும் அதற்கு மறுமொழியாக, முஃகீரா (ரலி) இந்த ஹதீஸை(க்கூற, வர்ராது-ரஹ்) எழுதியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தியாயம்: 5, பாடம்: 27, ஹதீஸ் எண்: 932 حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَابْنُ نُمَيْرٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَاصِمٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏ ‏كَانَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا سَلَّمَ لَمْ يَقْعُدْ إِلَّا مِقْدَارَ مَا يَقُولُ ‏ ‏اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ تَبَارَكْتَ ذَا ‏ ‏الْجَلَالِ ‏ ‏وَالْإِكْرَامِ ‏ ‏وَفِي رِوَايَةِ ‏ ‏ابْنِ نُمَيْرٍ ‏ ‏يَا ذَا ‏ ‏الْجَلَالِ ‏ ‏وَالْإِكْرَامِ ‏ ‏و حَدَّثَنَاه ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو خَالِدٍ يَعْنِي الْأَحْمَرَ ‏ ‏عَنْ ‏ ‏عَاصِمٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ ‏ ‏يَا ذَا ‏ ‏الْجَلَالِ ‏ ‏وَالْإِكْرَامِ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَارِثِ بْنُ عَبْدِ الصَّمَدِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَاصِمٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ ‏ ‏وَخَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏بِمِثْلِهِ غَيْرَ أَنَّهُ كَانَ يَقُولُ يَا ذَا ‏ ‏الْجَلَالِ ‏ ‏وَالْإِكْرَامِ நபி (ஸல்) அவர்கள் (தொழுகையில்) ஸலாம் கொடுத்து முடித்ததும், “அல்லாஹும்ம அன்த்தஸ் ஸலாம்; வ மின்கஸ் ஸலாம்; தபாரக்த தல் ஜலாலி வல் இக்ராம் (இறைவா, நீ சாந்தியளிப்பவன்; உன்னிடமிருந்தே சாந்தி ஏற்படுகிறது; வல்லமையும் மாண்பும் உடைய நீ பேறுமிக்கவன்)” என்று கூறும் அளவுக்குத்தான் அமர்ந்திருப்பார்கள். அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) குறிப்பு : அபூகாலித் அல் அஹ்மர் (ரஹ்), ஷுஅபா (ரஹ்), அப்துல் வாரிஸ் பின் அப்துஸ்ஸமது (ரஹ்) இப்னு நுமைர் (ரஹ்) ஆகியோர் வழி அறிவிப்பில், “யா தல் ஜலாலி இக்ராம் (வல்லமையும் மாண்பும் உடையவனே! நீ பேறுமிக்கவன்)” என்று “யா” எனும் விளிச்சொல் கூடுதலாக இடம் பெற்றுள்ளது. அத்தியாயம்: 5, பாடம்: 27, ஹதீஸ் எண்: 931 حَدَّثَنَا ‏ ‏دَاوُدُ بْنُ رُشَيْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْوَلِيدُ ‏ ‏عَنْ ‏ ‏الْأَوْزَاعِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عَمَّارٍ اسْمُهُ شَدَّادُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي أَسْمَاءَ ‏ ‏عَنْ ‏ ‏ثَوْبَانَ ‏ ‏قَالَ ‏ ‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا انْصَرَفَ مِنْ صَلَاتِهِ اسْتَغْفَرَ ثَلَاثًا وَقَالَ ‏ ‏اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ تَبَارَكْتَ ذَا ‏ ‏الْجَلَالِ ‏ ‏وَالْإِكْرَامِ ‏ ‏قَالَ ‏ ‏الْوَلِيدُ ‏ ‏فَقُلْتُ ‏ ‏لِلْأَوْزَاعِيِّ ‏ ‏كَيْفَ الْاسْتِغْفَارُ قَالَ تَقُولُ أَسْتَغْفِرُ اللَّهَ أَسْتَغْفِرُ اللَّهَ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் மூன்று முறை இறைவனிடம் பாவமன்னிப்பு (இஸ்திஃபார்) கோரிவிட்டு, “அல்லாஹும்ம அன்த்தஸ் ஸலாம்; வ மின்கஸ்ஸலாம்; தபாரக்த தல் ஜலாலி வல் இக்ராம்” (இறைவா, நீ சாந்தியளிப்பவன்; உன்னிடமிருந்தே சாந்தி ஏற்படுகிறது; வல்லமையும் மாண்பும் உடைய நீ பேறுமிக்கவன்)” என்று கூறுவார்கள். அறிவிப்பாளர் : ஸவ்பான் (ரலி) குறிப்பு : நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) அவ்ஸாயீ (ரஹ்) அவர்களிடம், “பாவமன்னிப்புக் கோருவது எவ்வாறு?” என்று கேட்டேன். அதற்கு, “அஸ்தஃக்ஃபிருல்லாஹ்; அஸ்தஃக்ஃபிருல்லாஹ் (நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகிறேன்; நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகிறேன்) என்று கூறுவீராக!” என்றார்கள் என்று இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான வலீத் (ரஹ்) கூறுகிறார். மேலும் காண்பி... ↓ விரும்பும் பாடம் செல்ல… ↓ விரும்பும் பாடம் செல்ல… Select Category 43.37 நபி (ஸல்) அவர்களைக் கண்ணியப்படுத்துவதும் … (8) 43.36 நபி (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டியது (முஸ்லிம்களின்) கட்டாயக் கடமையாகும் (1) 43.35 நபி (ஸல்) அவர்களின் அல்லாஹ்வைப் பற்றிய அறிவும் அவனைப் பற்றிய கடுமையான அச்சமும் (2) 43.34 நபி (ஸல்) அவர்களின் பெயர்கள் (3) 43.33 நபி (ஸல்) மக்காவிலும் மதீனாவிலும் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்? (8) 43.32 நபி (ஸல்) இறந்தபோது அவர்களுக்கு வயது எத்தனை? (2) 43.31 நபி (ஸல்) அவர்களின் உடலமைப்பு; நபியாக அனுப்பப்பெற்றது; அவர்களின் வயது (1) 43.30 நபி (ஸல்) உடலில் நபித்துவ முத்திரை … (3) 43.29 நபி (ஸல்) அவர்களின் தலைநரைமுடி (10) 43.28 நபி (ஸல்) அவர்களின் வெண்ணிறமும் களையான முகமும் (2) 43.27 நபி (ஸல்) அவர்களின் வாய், கண்கள், குதிகால்கள் ஆகியவை (1) 43.26 நபி (ஸல்) அவர்களது தலைமுடியின் தன்மை (3) 43.25 நபி (ஸல்) அவர்களின் உருவத் தோற்றம் … (3) 43.24 நபி (ஸல்) தமது தலைமுடியை … (1) 43.23 நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு வரும்போது … (4) 43.22 நபி (ஸல்) அவர்களது வியர்வையின் நறுமணமும் அதன்மூலம் வளம் ஏற்பட்டதும் (3) 43.21 நபி (ஸல்) அவர்களின் மேனியில் கமழ்ந்த நறுமணம் … (3) 43.20 நபி (ஸல்) பாவங்களை விட்டு வெகு தொலைவில் விலகியிருந்தது … (3) 43.19 நபி (ஸல்), மக்களுடன் நெருங்கிப் பழகியதும் அவர்களிடமிருந்து மக்கள் வளம் பெற்றதும் (3) 43.18 மனைவியர்மீது நபி (ஸல்) காட்டிய அன்பும் … (4) 43.17 நபி (ஸல்) அவர்களின் புன்னகையும் அழகிய உறவாடலும் (1) 43.16 நபி (ஸல்) அவர்களின் நாண மிகுதி (2) 43.15 நபி (ஸல்) குழந்தைகள் மீதும் குடும்பத்தார் மீதும் காட்டிய அன்பு … (5) 43.14 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வேண்டப்பட்ட எந்த ஒன்றுக்கும் அவர்கள் “இல்லை” என்று சொன்னதேயில்லை … (5) 43.13 அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மக்களிலேயே மிகவும் அழகான … (5) 43.12 மக்களிலேயே நபி (ஸல்), தொடர்ந்து வீசும் (மழைக்) காற்றைவிட … (1) 43.11 நபி (ஸல்) அவர்களின் வீரமும் அறப்போருக்காக அவர்கள் முன்னே சென்றதும் (2) 43.10 உஹுதுப் போர் நாளில் நபி (ஸல்) … (2) 43.9 நம் நபி (ஸல்) அவர்களுக்கு (மறுமையில் ‘அல்கவ்ஸர்’) தடாகம் உண்டு … (20) 43.8 உயர்ந்தோன் அல்லாஹ் ஒரு சமுதாயத்தின்மீது அருள் புரிய நாடினால் … (1) 43.7 நபி (ஸல்), இறுதி இறைத் தூதர் என்பது பற்றிய குறிப்பு (4) 43.6 நபி (ஸல்), தம் சமுதாயத்தார் மீது கொண்டிருந்த பரிவும் … (4) 43.5 நபி (ஸல்), நேர்வழியுடனும் ஞானத்துடனும் அனுப்பப் பெற்றதற்கான உவமை (1) 43.4 அல்லாஹ்வையே முழுமையாக நபி (ஸல்) சார்ந்திருந்ததும் … (1) 43.3 நபி (ஸல்) அவர்களின் அற்புதங்கள் (7) 43.2 எல்லாப் படைப்புகளையும்விட நம் நபி (ஸல்) அவர்களின் சிறப்பு (1) 43.1 நபி (ஸல்) அவர்களின் தலைமுறையின் சிறப்பும் … (2) 42.4 நபி (ஸல்) கண்ட கனவு (6) 42.3 கனவுக்கு விளக்கமளித்தல் (1) 42.2 ஷைத்தான் கனவில் விளையாடியது குறித்து … (3) 42.1 கனவில் என்னைக் கண்டவர் … (4) 42.01 கனவுகள் (11) 41.2 பகடை விளையாட்டு, தடை செய்யப்பட்டதாகும் (1) 41.1 கவிதைகள் (9) 40.5 நறுமணப் பொருட்களில் மிகவும் சிறந்த கஸ்தூரியைப் பயன்படுத்துவது … (4) 40.4 ஒருவர், ‘கபுஸத் நஃப்ஸீ’ (என் மனம் அசுத்தமாகிவிட்டது) எனும் சொல்லை … (2) 40.3 ‘அப்து’ (அடிமை ஆண்), ‘அமத்து’ (அடிமைப் பெண்), ‘மவ்லா’/’ஸய்யித்’ (அடிமையின் உரிமையாளர்) ஆகிய சொற்களின் சட்டம் (3) 40.2 திராட்சையை, “கர்மு / கண்ணியம்” என்று பெயரிட்டழைப்பது … (7) 40.1 காலத்தை ஏசுவதற்குத் தடை (5) 39.41 விலங்குகளுக்கு நீர் புகட்டுவதின், உணவளிப்பதின் சிறப்பு (3) 39.40 பூனைகளைக் கொல்வதற்குத் தடை (2) 39.39 எறும்புகளைக் கொல்லத் தடை (3) 39.38 பல்லியைக் கொல்வது நல்லது (5) 39.37 பாம்பு போன்ற விஷ ஜந்துகளைக் கொல்வது (13) 39.36 தொழுநோயாளிகள் போன்றோரிடம் நெருக்கம் தவிர்ப்பது (1) 39.35 சோதிடர்களிடம் செல்வதும் சோதிடம் பார்ப்பதும் (5) 39.34 பறவை சகுனம், நற்குறி, துர்குறி பற்றிய பாடம் (11) 39.33 இல்லாத சகுனங்களும் தொற்றுநோய்களும் (6) 39.32 கொள்ளைநோய், பறவை சகுனம், சோதிடம் போன்றவை (8) 39.31 தேனூட்டு மருத்துவம் (1) 39.30 ‘தல்பீனா‘, நோயாளியின் மனத்துக்கு(ம் உடலுக்கும்) தெம்பு அளிக்கக்கூடியதாகும் (1) 39.29 கருஞ்சீரக மருத்துவம் (2) 39.28 இந்தியக் கோஷ்டக் குச்சியால் சிகிச்சையளிப்பது (2) 39.27 நோயாளிக்கு வற்புறுத்தி சிகிச்சையளிப்பது … (1) 39.26 ஒவ்வொரு நோய்க்கும் மருந்து உண்டு; (நோய்க்கு) மருத்துவம் செய்துகொள்வது விரும்பத் தக்கது (17) 39.25 தொழுகையில் மனம் அலைபாயச் செய்யும் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புக் கோரல் (1) 39.24 பிரார்த்திக்கும்போது வலியுள்ள இடத்தில் கையை வைப்பது (1) 39.23 குர்ஆன் வசனங்கள் மற்றும் அல்லாஹ்வைத் துதிக்கும் சொற்களால் ஓதிப்பார்ப்பதற்கு ஊதியம் பெறலாம் (2) 39.22 இறைவனுக்கு இணை கற்பிதம் இல்லாத சொற்களால் ஓதிப்பார்பது தவறில்லை (1) 39.21 கண்ணேறு, சின்னம்மை, விஷக்கடி, (தீய)பார்வை ஆகியவற்றுக்காக ஓதிப்பார்ப்பது விரும்பத் தக்கதாகும் (12) 39.20 பாதுகாப்புக் கோரும் அத்தியாயங்களால் நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது … (2) 39.19 நோயாளிக்கு ஓதிப்பார்ப்பது விரும்பத் தக்கதாகும் (4) 39.18 விஷம் (1) 39.17 சூனியம் (1) 39.16 நோயும் மருத்துவமும் ஓதிப்பார்த்தலும் (4) 39.15 மூன்றாமவரின் ஒப்புதலின்றி இருவர் மட்டும் இரகசியம் பேசிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும் (3) 39.14 … அந்நியப் பெண்ணை, வழிசெல்லும் ஒருவர் வாகனத்தில் அமர்த்திக்கொள்ளலாம் (2) 39.13 பெண்கள் இருக்கும் இடத்திற்கு அலிகள் செல்லத் தடை (2) 39.12 அமர்ந்திருந்த இடத்திற்கு உரியவர் (1) 39.11 அமர்ந்திருக்கும் ஒருவரை எழுப்பிவிடுவது தடை செய்யப்பட்டதாகும் (4) 39.10 அவைக்கு வருபவர், அமரும் ஒழுங்கு (1) 39.9 … கெட்ட எண்ணத்தை அகற்றுவது விரும்பத் தக்கதாகும் (2) 39.8 அந்நியப் பெண்ணிடம் … தனிமையில் இருப்பது தடை செய்யப்பட்டதாகும் (3) 39.7 … பெண்கள் வெளியே செல்லலாம் (2) 39.6 உள்ளே செல்ல அனுமதியாகக் கருதுவதற்கு … (1) 39.5 சிறாருக்கு(ப் பெரியவர்கள்) முகமன் கூறுவது விரும்பத் தக்கதாகும் (2) 39.4 வேதக்காரர்களுக்கு முந்திக்கொண்டு ஸலாம் கூறுவதற்குத் தடை (7) 39.3 ஸலாத்துக்குப் பதிலுரைப்பது முஸ்லிமுக்குக் கடமை (2) 39.2 நடைபாதைகளில் அமர்வதன் ஒழுங்குகளில் … (2) 39.1 முந்தி ஸலாம் சொல்ல வேண்டியவர்கள் (1) 38.10 இயல்பான பார்வை (1) 38.9 பிறர் வீட்டில் எட்டிப் பார்ப்பது தடை செய்யப்பட்டதாகும் (5) 38.8 “யார்?“ என்று கேட்டால் … (2) 38.7 அனுமதி கோருதல் (5) 38.6 “என் அருமை மகனே!“ (2) 38.5 குழந்தை பிறந்தவுடன் இனிப்பான பொருளை மென்று அதன் வாயிலிடுவதும் … (9) 38.4 மன்னாதி மன்னன் எனப் பெயர் சூட்டிக்கொள்வது தடை செய்யப்பட்டதாகும் (2) 38.3 அருவருப்பான பெயரை அழகான பெயராக மாற்றியமைப்பது … (6) 38.2 அருவருப்பான பெயர்கள் … (4) 38.1 … விரும்பத் தகுந்த பெயர்கள் (8) 37.35 வெறும் பெருமை (2) 37.34 மெல்லிய உடையணிந்து, பிறரைத் தன்பால் ஈர்க்கும் வண்ணம் தோள்களைச் சாய்த்து ஒயிலாக நடக்கும் பெண்கள் (1) 37.33 பெண்களின் பொய் அலங்காரங்காரங்களுக்குத் தடை (10) 37.32 நடைபாதைகளில் அமர்வதற்குத் தடையும் பாதைகளுக்குரிய உரிமைகளைப் பேணுவதும் (1) 37.31 தலை முடியில் பகுதி மழித்துவிட்டு, பகுதி மழிக்காமல் விட்டுவிடுவது வெறுக்கத் தக்கதாகும் (1) 37.30 ஸகாத் / ஜிஸ்யாவுக்கான கால்நடைகளில் சூடிட்டு அடை யாளமிடலாம் (4) 37.29 விலங்குகளின் முகத்தில் அடிப்பதும் அடையாளச் சூடிடுவதும் தடை செய்யப்பட்டவை ஆகும் (3) 37.28 ஒட்டகத்தின் கழுத்தில் (திருஷ்டிக்) கயிற்று மாலை அணிவிப்பது வெறுக்கத் தக்கதாகும் (1) 37.27 பயணத்தின்போது நாயும் (ஒலியெழுப்பும்) மணியும் வெறுக்கத் தக்கவை (2) 37.26 உயிரினங்களின் உருவப் படங்களை வரைவதும் … தடை செய்யப்பட்டவை ஆகும் (21) 37.25 (நரைமுடிக்கு) சாயமிட்டுக்கொள்வது யூதர்களுக்கு மாறு செய்வதாகும் (1) 37.24 நரைமுடியில் கருப்பு நிறச் சாயமிடுவது தடை செய்யப்பட்டதாகும் (2) 37.23 ஆண்கள் (மேனியில்) குங்குமப்பூச் சாயமிட்டுக்கொள்வதற்குத் தடை (1) 37.22 மல்லாந்து படுத்துக்கொண்டு கால்மீது காலைப் போட்டுக் கொள்வதற்கு அனுமதி (1) 37.21 மல்லாந்து படுத்துக்கொண்டு கால்மீது காலைப் போட்டுக் கொள்வதற்குத் தடை (3) 37.20 தடை செய்யப்பட்ட இரு நிலைகள் (2) 37.19 காலணிகளை அணிந்து கழற்றும் முறைகள் (3) 37.18 காலணி அல்லது அது போன்றதை அணிந்துகொள்வது விரும்பத் தக்கதாகும் (1) 37.17 மோதிரம் அணிவதற்குத் தடை செய்யப்பட்ட விரல்கள் (2) 37.16 கைச் சுண்டுவிரலில் மோதிரம் அணிவது (1) 37.15 அபிசீனியக் வெள்ளிக் குமிழ் மோதிரம் (2) 37.14 மோதிரங்களை(க் கழற்றி) எறிந்த நிகழ்வு (2) 37.13 நபி (ஸல்) அவர்களின் (முத்திரை) மோதிரம் (3) 37.12 ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ எனும் இலச்சினை பொறிக்கப்பட்ட வெள்ளி மோதிரம் (2) 37.11 ஆண்கள் தங்க மோதிரம் அணிவதற்குத் தடை (3) 37.10 ஆடைகளை எண்ணிப் பெருமை கொண்டு, கர்வத்தோடு நடப்பதற்குத் தடை (2) 37.9 பெருமைக்காக ஆடையைத் தரையில் படும்படி இழுத்துச் செல்வதற்குத் தடை (7) 37.8 தேவைக்கு அதிகமான விரிப்புகளும் ஆடைகளும் இருப்பது விரும்பத் தக்கதன்று (1) 37.7 படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்த அனுமதி (2) 37.6 ஆடையில் (எளிமை,) பணிவு காட்டுவது … (5) 37.5 பருத்தி ஆடை அணிவதன் சிறப்பு (2) 37.4 ஆண்கள் செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட ஆடை அணிவதற்குத் தடை (5) 37.3 தோல் உபாதைகள் இருந்தால் ஆண்கள் பட்டாடை அணியலாம் (3) 37.2 பொன் மோதிரம் மற்றும் பட்டாடை அணிவது ஆண்களுக்குத் தடை; பெண்களுக்கு அனுமதி (20) 37.1 பொன் / வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவது ஆண்களுக்கும் பெண்களுக்கும் தடை (2) 36.35 உணவைக் குறை சொல்லவேண்டாம் (2) 36.34 இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் உண்பார்; இறைமறுப்பாளன் ஏழு குடல்களில் உண்பான் (5) 36.33 உணவு குறைவாக இருக்கும்போது … (4) 36.32 விருந்தினரை உபசரிப்பதும் முன்னுரிமை வழங்குவதன் சிறப்பும் (6) 36.31 வெள்ளைப் பூண்டு சாப்பிடக்கூடியதே … (2) 36.30 உணவுக் காடியின் சிறப்பும் … (4) 36.29 ‘அல்கபாஸ்’ பழங்களில் கருப்பு நிறப் பழத்தின் சிறப்பு (1) 36.28 உணவுக் காளானின் சிறப்பும் … (6) 36.27 மதீனத்துப் பேரீச்சம் பழங்களின் சிறப்பு (3) 36.26 குடும்பத்தாருக்காக … உணவுகளைச் சேமித்துவைத்தல் (2) 36.25 பலருடன் சேர்ந்து உண்பவர் … (2) 36.24 உணவு உண்பவர் அமரும் முறை; பணிவோடு அமர்வது விரும்பத் தக்கது (2) 36.23 பேரீச்சை செங்காய்களுடன் வெள்ளரிக்காயையும் சேர்த்து உண்பது (1) 36.22 விருந்தளிப்பவருக்காக விருந்தாளி பிரார்த்திப்பது … (1) 36.21 சுரைக் குழம்பு உண்ண அனுமதி … (2) 36.20 வீட்டு உரிமையாளரின் சம்மதம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் … (4) 36.19 விருந்துக்கு அழைக்கப்பட்டவரைத் தொடர்ந்து அழைக்கப்படாதவரும் வந்துவிட்டால் … (2) 36.18 உண்டு முடித்ததும் விரல்களைச் சூப்புவதும் உணவுத் தட்டை வழித்து உண்பதும் … (9) 36.17 வலப் பக்கத்திலிருந்து பரிமாறுதல் விரும்பத் தக்கதாகும் (4) 36.16 பாத்திரத்தினுள் (பருகும்போது) வெளியே மூன்று முறை மூச்சு விட்டுப் பருகுவது விரும்பத் தக்கதாகும் (3) 36.15 ஸம்ஸம் நீரை நின்றுகொண்டு அருந்துவது (4) 36.14 நின்றுகொண்டு அருந்துவது வெறுக்கத் தக்கதாகும் (4) 36.13 உண்பது, அருந்துவது ஆகியவற்றின் ஒழுங்குகளும் விதிமுறைகளும் (10) 36.12 இரவு நேர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் (6) 36.11 பழச்சாறுகளைப் பருகுவதும் பாத்திரங்களை மூடிவைப்பதும் (3) 36.10 (ஆட்டுப்) பால் அருந்த அனுமதி (3) 36.9 பழச்சாறுகள் (புளித்துக்) கெட்டியாகி, போதையேறாதவரை அனுமதிக்கப்பட்டவையாகும் (10) 36.8 குடிகாரன் பாவமன்னிப்புக் கோரி திருந்தாவிட்டால் … (3) 36.7 போதை தரும் ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்ட மதுவாகும் (9) 36.6 பானங்கள்-பாத்திரங்கள், தடை-தடை நீக்கம் (36) 36.5 பேரீச்சம் பழம், உலர் திராட்சைக் கலவை ஊறல் வெறுக்கத் தக்கதாகும் (14) 36.4 ‘மதுபானம்’ என்று சொல்லப்படுபவை (4) 36.3 மதுவை மருந்தாகப் பயன்படுத்துவதற்குத் தடை (1) 36.2 மதுபானத்தை (சமையல்) காடியாக மாற்றிப் பயன்படுத்துவதற்குத் தடை (1) 36.1 போதையூட்டும் ஒவ்வொன்றும் மதுவாகும் (9) 35.8 அல்லாஹ் அல்லாதவரின் பெயர் கூறிப் பிராணிகளை அறுப்பதற்குத் தடை (3) 35.7 தலைமுடியை, நகங்களைக் களைவதற்குத் தடை (5) 35.6 அல் ஃபரஉ வல் அத்தீரா (1) 35.5 பலி இறைச்சியை எவ்வளவு காலம் சேமித்து வைக்கலாம்? (14) 35.4 பல், நகம், எலும்பு ஆகியவை தவிர எந்தப் பொருளாலும் பிராணியை அறுக்க அனுமதி (1) 35.3 தாமே அறுப்பதும் அல்லாஹ்வின் பெயரோடு தக்பீர் கூறுவதும் விரும்பத் தக்கவை ஆகும் (3) 35.2 பலிப் பிராணியின் வயது (4) 35.1 பலி கொடுக்கப்படும் நேரம் (10) 34.12 விலங்குகளைக் கட்டிவைத்து அம்பெய்து கொல்வதற்குத் தடை (5) 34.11 … கத்தியைக் கூர்மையாகத் தீட்டிக் கொண்டு வதையற்ற முறையைக் கையாளக் கட்டளை (1) 34.10 … பயிற்சிகளை மேற்கொள்வது அனுமதிக்கப் பட்டதாகும். கல்சுண்டு விளையாட்டு வெறுக்கப்பட்டதாகும் (2) 34.9 முயல் கறி உண்ணத் தக்கது (1) 34.8 வெட்டுக்கிளி உண்ணத் தக்கது (1) 34.7 உடும்புக் கறி உண்ணத் தக்கது (13) 34.6 குதிரைகளின் இறைச்சியை உண்பது கூடுமா? (3) 34.5 நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்பதற்குத் தடை (14) 34.4 கடல்வாழ் உயிரினங்களில் செத்தவற்றை உண்பதற்கு அனுமதி (5) 34.3 உண்பதற்குத் தடை செய்யப்பட்ட விலங்குகளும் பறவைகளும் (6) 34.2 வேட்டையாடிய பிராணி மறைந்து, பிறகு கிடைத்தால் … (2) 34.1 பயிற்சியளிக்கப்பட்ட நாய்கள் மூலம் வேட்டையாடுதல் (8) 33.56 பயணத்திலிருந்து திரும்புகின்றவர் … (5) 33.55 பயணம் என்பது துன்பத்தின் ஒரு பகுதியாகும் … (1) 33.54 பயணத்தில் கால்நடைகளின் நலன் காப்பதும் … (2) 33.53 “என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் எப்போதுமே உண்மைக்கு ஆதரவாளர்களாக இருப்பார்கள் … (8) 33.52 அம்பெய்வதன் சிறப்பும் … (3) 33.51 உயிர்த் தியாகிகள் பற்றிய விளக்கம் (3) 33.50 அல்லாஹ்வின் பாதையில் எல்லைக் காவல் புரிவதன் சிறப்பு (1) 33.49 கடல்வழிப் போரின் சிறப்பு (2) 33.48 போரில் கலந்துகொள்ள முடியாமல் போனவருக்கும் நன்மை … (1) 33.47 அறப்போரில் கலந்துகொள்ளாமல் இறந்துபோனவர் … (1) 33.46 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணத்தை வேண்டுவது விரும்பத் தக்கதாகும் (2) 33.45 “எண்ணங்களைப் பொருத்தே செயல்கள் அமைகின்றன” எனும் நபிமொழி … (1) 33.44 … போர்ச் செல்வங்களைப் பெற்றோரும் பெறாதோரும் … (2) 33.43 பிறர் பார்ப்பதற்காகவும் விளம்பரத்திற்காகவும் போரிட்டவர் … (1) 33.42 அல்லாஹ்வின் பாதையில் போரிட்டவர் … (3) 33.41 உயிர்த் தியாகிக்குச் சொர்க்கம் நிச்சயம் (6) 33.40 தகுந்த காரணம் உள்ளவர்களுக்கு அறப்போரில் கலந்து கொள்வது கடமை இல்லை (2) 33.39 அறப்போர் வீரர்களின் துணைவியருடைய கண்ணியம் … (1) 33.38 அறப்போர் வீரருக்கு வாகனம் மற்றும் பிற உதவிகள் … (6) 33.37 அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்வதன் சிறப்பும் அதற்குக் கிடைக்கும் பன்மடங்கு நன்மைகளும் (1) 33.36 இறைமறுப்பாளனை (போரில்) கொன்ற பின்னர் (மார்க்கத்தில்) உறுதியோடு இருத்தல் (2) 33.35 இரு போராளிகளில் ஒருவர் மற்றவரைக் கொன்று, பின் அவ்விருவருமே சொர்க்கத்தில் … (2) 33.34 அறப்போர் மற்றும் எல்லைக் காவலின் சிறப்பு (3) 33.33 வீரமணம் அடைந்தவர்களின் உயிர்கள் … (1) 33.32 அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவரின் கடனைத் தவிர அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன (3) 33.31 அல்லாஹ் (தனது பாதையில்) அறப்போர் புரிந்தவர்களுக்காகச் சொர்க்கத்தில் வைத்துள்ள உயர்நிலைகள் (1) 33.30 அல்லாஹ்வின் பாதையில் காலையாயினும் மாலையாயினும் (போரிடச்) செல்வதன் சிறப்பு (5) 33.29 அல்லாஹ்வின் பாதையில் வீரமரணம் அடைவதன் சிறப்பு (4) 33.28 அல்லாஹ்வின் பாதையில் புறப்படுதலின், அறப்போரில் ஈடுபடுதலின் சிறப்பு (4) 33.27 குதிரையின் தன்மைகளில் விரும்பத் தகாதவை (1) 33.26 மறுமை நாள்வரை நெற்றிகளில் நன்மை பிணைக்கப்பட்டிருக்கும் குதிரைகள் (5) 33.25 குதிரைப் பந்தயமும் அதற்காகக் குதிரையை மெலிய வைப்பதும் (1) 33.24 குர்ஆன் பிரதிகளை இறைமறுப்பாளர்களின் நாட்டுக்கு எடுத்துச் செல்வது … (3) 33.23 பருவ வயது பற்றிய விளக்கம் (1) 33.22 இயன்றவரை கட்டுப்பட்டு நடப்பதாக உறுதிமொழி அளித்தல் (1) 33.21 பெண்களிடம் உறுதிப் பிரமாணம் (பைஅத்) வாங்கும் முறை (2) 33.20 மக்கா வெற்றிக்குப் பின் ஹிஜ்ரத் கிடையாது (5) 33.19 நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றவர் மீண்டும் தமது தாயகத்தில் குடியேறுவதற்குத் தடை (1) 33.18 ஆட்சித் தலைவர் படையினரிடம் உறுதி மொழி பெற்றுக்கொள்வது … (13) 33.17 ஆட்சித் தலைவர்களில் நல்லவர்களும் தீயவர்களும் (2) 33.16 ஆட்சித் தலைவர்கள் மார்க்கத்திற்கு முரணாகச் செயல்படும்போது … (2) 33.15 இரு ஆட்சியாளர்களுக்கு வாக்களிப்புப் பிரமாண நெருக்கடி ஏற்பட்டால் … (1) 33.14 முஸ்லிம்கள் (ஒரே தலைமையின் கீழ்) ஒன்றுபட்டிருக்கும்போது … (2) 33.13 குழப்பங்கள் தோன்றும்போது கூட்டமைப்போடு சேர்ந்திருப்பது கடமையாகும் … (8) 33.12 உரிமைகள் மறுக்கப்பட்டாலும் தலைமைக்குக் கட்டுப்படுதல் (1) 33.11 அதிகாரத்திலிருப்போர் அநீதியிழைக்கும்போதும் தகுதியற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும்போதும் … (1) 33.10 கலீஃபாக்களில் முதலாமவருக்கு உறுதிப் பிரமாணம் (பைஅத்) அளிப்பது கடமையாகும் (3) 33.9 ஆட்சித் தலைவர் கேடயம் போன்றவர் … (1) 33.8 பாவமற்றவற்றில் தலைவர்களுக்குக் கட்டுப்படுவது கடமையாகும். பாவமானவற்றில் கட்டுப்படுவதற்குத் தடை (11) 33.7 அதிகாரிகளுக்கு அன்பளிப்புகள் வழங்குவதற்குத் தடை (3) 33.6 பொதுச் சொத்துகளில் மோசடி செய்வது வன்மையாகத் தடை செய்யப்பட்டது (1) 33.5 நேர்மையான ஆட்சியாளரின் சிறப்பும் … (6) 33.4 தேவையின்றி ஆட்சிப் பொறுப்பை ஏற்பது விரும்பத் தக்கதன்று (2) 33.3 ஆட்சியதிகாரத்தைத் தேடி அலைவதற்கும் அதன் மீது ஆசை கொள்வதற்கும் தடை (3) 33.2 ஆட்சித் தலைவரை நியமிக்கலாம்; நியமிக்காமல் விடலாம் (2) 33.1 ஆட்சியதிகாரம் குறைஷியரிடையேதான் இருக்கும் (10) 32.51 அறப்போர்களில் இறைமறுப்பாளரிடம் உதவி கோருவது … (1) 32.50 ‘தாத்துர் ரிக்காஉ’ (ஒட்டுத் துணிப்) போர் (1) 32.49 நபி (ஸல்) கலந்துகொண்ட அறப்போர்களின் எண்ணிக்கை (6) 32.48 அறப்போரில் கலந்துகொண்ட பெண்களுக்கு … (4) 32.47 அறப்போரில் ஆண்களுடன் பெண்களும் கலந்துகொள்வது (2) 32.46 “அவனே உங்களைத் தாக்காமல் அவர்கள் கைகளை தடுத்(து வைத்)தான்” எனும் (48:24) வசனம் (2) 32.45 ‘தூ கரத்’ போரும் பிற போர்களும் (2) 32.44 அஹ்ஸாப் போர் (அ) அகழ்ப் போர் (6) 32.43 கைபர் போர் (5) 32.42 கஅப் பின் அல்அஷ்ரஃப் கொல்லப்படுதல் (1) 32.41 அபூஜஹ்லு கொல்லப்படுதல் (1) 32.40 நபி (ஸல்) (மக்களை) இறைவன்பால் அழைத்து, துன்பங்களைப் பொறுத்துக் கொண்டது (2) 32.39 நபி (ஸல்) எதிர்கொண்ட துன்பங்கள் (7) 32.38 இறைதூதரால் கொல்லப்பட்டவன் மீது இறைவனின் கோபம் (1) 32.37 உஹுதுப் போர் (3) 32.36 கூட்டுப் படையினருக்கு எதிரான அகழ்ப் போர் (2) 32.35 வாக்குறுதியை(ப் போரிலும்) நிறைவேற்றுவது (1) 32.34 ஹுதைபிய்யா சமாதான உடன்படிக்கை’ (7) 32.33 மக்கா வெற்றிக்குப் பின் … (1) 32.32 கஅபாவைச் சுற்றிலும் இருந்த சிலைகளை அப்புறப்படுத்தியது (1) 32.31 மக்கா வெற்றி (2) 32.30 பத்ருப் போர் (1) 32.29 தாயிஃப் போர் (1) 32.28 ஹுனைன் போரில் … (5) 32.27 இறைமறுப்பு அரசர்களுக்கு நபி (ஸல்) எழுதிய கடிதங்கள் (1) 32.26 அழைப்பு விடுத்து ஹெராக்ளியஸ் மன்னருக்கு நபி (ஸல்) எழுதிய கடிதம் (1) 32.25 போரில் கிடைத்த உணவை, பகை நாட்டில் இருக்கும் போதே உண்ணலாம் (2) 32.24 முஹாஜிர்கள் தன்னிறைவு அடைந்தபோது … (2) 32.23 செயல்களுள் முன்னுரிமை அளிக்கத் தக்கது (1) 32.22 ஒப்பந்தத்தை முறித்துவிட்ட (பகை)வர்களுடன் போர் செய்யலாம் (3) 32.21 யூத கிறித்தவர்கள் அரபிய தீபகற்பத்திலிருந்து வெளியேற்றப்படுவது (1) 32.20 யூதர்களை ஹிஜாஸ் பகுதியிலிருந்து நாடு கடத்தியது (2) 32.19 கைதியை என்னென்னவெல்லாம் செய்யலாம் (1) 32.18 பத்ருப் போரில் வானவர்களின் உதவியும் … (1) 32.17 போர் வெற்றிச் செல்வத்தைப் பங்கிடும் முறை (1) 32.16 இறைத்தூதர்களுக்கு யாரும் (சொத்தில்) வாரிசாக முடியாது (5) 32.15 போர் செய்யாமல் கிடைத்த செல்வங்களின் சட்டம் (3) 32.14 … போர்க் கைதிகளைப் பரிமாறிக்கொள்வது (1) 32.13 போரில் கொல்லப்பட்ட எதிரியின் உடைமைகள் (4) 32.12 போர் வெற்றிச் செல்வங்கள் (7) 32.11 போர் வெற்றிச் செல்வங்கள் யாருக்குச் சொந்தம்? (1) 32.10 போரில் மரங்களை வெட்டுவதும் எரிப்பதும் அனுமதிக்கப்பட்டதாகும் (3) 32.9 பெண்களையும் குழந்தைகளையும் அறியாமல் கொன்றுவிட்டால் … (3) 32.8 போரில் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதற்குத் தடை (2) 32.7 எதிரிகளை(ப் போரில்) எதிர்கொள்ளும்போது பிரார்த்திப்பது (2) 32.6 எதிரியை(ப் போர்க் களத்தில்) சந்திக்க ஆசைப்படுவது வெறுக்கத் தக்கது … (2) 32.5 போரில் தந்திரம் அனுமதிக்கப்பட்டது (2) 32.4 மோசடி செய்வது தடை செய்யப்பட்டதாகும் (8) 32.3 மக்களிடம் இலகுவாக நடந்துகொள்ள வேண்டும்; வெறுப்பைக் கைவிட வேண்டும் (3) 32.2 படைத் தலைவர், போர் நெறிகள் குறித்து அறிவுறுத்துவது (1) 32.1 முன்னறிவிப்பின்றித் தாக்குதல் தொடுக்கலாமா? (1) 31.5 பயணத்தில் உணவைப் பகிர்ந்துண்ணல் (1) 31.4 செல்வத்தால் பிறருக்கு உதவுவது விரும்பத் தக்கது (1) 31.3 விருந்தோம்பல் சார்ந்தவை (3) 31.2 உரிமையாளரின் அனுமதியின்றி கால் நடையில் பால் கறப்பதற்குத் தடை (1) 31.1 ஹாஜிகள் தவறவிட்டவை (2) 31.0 கண்டெடுக்கப்பட்டவை (5) 30.11 நீதிபதி சமரசம் செய்துவைப்பது விரும்பத் தக்கதாகும் (1) 30.10 ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடு (1) 30.9 சாட்சிகளில் சிறந்தவர் (1) 30.8 தவறான தீர்ப்புகளைத் தள்ளுபடி செய்வதும் (மார்க்கத்தில் இல்லாத) புதுமைகளை நிராகரிப்பதும் (2) 30.7 கோபமாக இருக்கும் நீதிபதி, தீர்ப்பளிப்பது விரும்பத் தக்கதன்று (1) 30.6 நீதிபதியின் ஆய்வுக்கு நன்மை உண்டு (1) 30.5 தடைகள் மூன்று (4) 30.4 ஹிந்த் (ரலி) வழக்கு (3) 30.3 வாதங்களின் அடிப்படையில் தீர்ப்பு அமைந்துவிடுதல் (2) 30.2 சத்தியத்தின் / சாட்சியத்தின் அடிப்படையில் தீர்ப்பளித்தல் (1) 30.1 சத்தியம் செய்து நிரூபிப்பது பிரதிவாதிமீது கடமையாகும் (2) 29.11 இழப்பீடு இல்லாத விபத்துகள் (2) 29.10 தண்டனைகள், குற்றங்களுக்கான பரிகாரமாகும் (3) 29.9 சீர்திருத்திற்காக வழங்கப்படும் சாட்டையடிகளின் (அதிகபட்ச) அளவு (1) 29.8 மது அருந்திய குற்றத்திற்கான தண்டனை (4) 29.7 மகப்பேறான பெண்ணின் தண்டனையைத் தள்ளிவைத்தல் (1) 29.6 இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் யூதர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டாலும் கல்லெறி தண்டனை (6) 29.5 விபச்சாரம் செய்தவரின் ஒப்புதல் வாக்குமூலம் (9) 29.4 மணமானவர்கள் விபச்சாரம் செய்தால் கல்லெறி தண்டனை (1) 29.3 விபச்சாரக் குற்றத்திற்கான தண்டனை (2) 29.2 தண்டனையிலிருந்து விலக்கு அளிக்குமாறு பரிந்துரைப்பதற்குத் தடை (3) 29.1 தண்டனைக்குரிய திருட்டின் அளவுகோலும் தண்டனையும் (7) 28.11 சிசுக் கொலைக்கான இழப்பீடும் … (6) 28.10 கொலையாளி, தன் குற்றத்தை ஒப்புக்கொள்வதும் … (2) 28.9 மனிதர்களின் உயிர், தன்மானம், செல்வம் ஆகியவற்றுக்கு ஊறு விளைவிப்பது … (2) 28.8 மறுமையில் வழங்கப்படும் தீர்ப்பும் தண்டனையும் … (1) 28.7 கொலையை (உலகுக்கு) அறிமுகப்படுத்தியவர் மீதான பாவம் (1) 28.6 முஸ்லிமின் மரண தண்டனைக்கான காரணங்கள் (2) 28.5 பற்கள் போன்ற(உறுப்புகளான)வற்றில் பழிக்குப்பழி உண்டு (1) 28.4 தாக்க வந்தவனிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக … (6) 28.3 கல் மற்றும் கூராயுதங்களால் கொலை செய்தால், பழிக்குப்பழி உண்டு … (3) 28.2 வன்முறையாளர்களுக்கும் மதம் மாறியோருக்குமான தண்டனை (4) 28.1 அல்கஸாமா (4) 27.13 விடுதலைக்கு வாக்களிக்கப்பட்ட அடிமையை விற்கலாம் (2) 27.12 அடிமையில் தமது பங்கை மட்டும் விடுதலை செய்தல் (8) 27.11 ‏தன் உரிமையாளருக்கு விசுவாசமாகவும் … (4) 27.10 அடிமைக்கு எஜமானர் உண்பதிலிருந்து உணவளிப்பதும் … (4) 27.9 விபசாரம் செய்துவிட்டதாக அவதூறு கூறுவதற்கான கண்டனம் (1) 27.8 அடிமைகளுடனான நல்லுறவும் கன்னத்தில் அறைந்ததற்கான பரிகாரமும் (8) 27.7 இறைமறுப்பாளராக இருந்தபோது செய்த நேர்ச்சை… (2) 27.6 ஆகுமாக்கப்பட்டதற்கான சத்தியமாக இருந்தாலும் … (1) 27.5 இன்ஷா அல்லாஹ் என்பதை (சத்தியத்தின்போது) சேர்த்துக் கூறுதல் (4) 27.4 சொல்பவரின் எண்ணப்படியே ஒருவருடைய சத்தியம் அமையும் (2) 27.3 சத்தியம் செய்தவர், அதைவிடச் சிறந்ததாக மற்றொன்றைக் காணும்போது … (12) 27.2 ‘லாத்’ மற்றும் ‘உஸ்ஸா’வின் மீது சத்தியம் செய்துவிட்டவர் … (2) 27.1 அல்லாஹ்வைத் தவிர எவர்/எதன் மீதும் சத்தியம் செய்யத் தடை (3) 26.5 நேர்ச்சை முறிவுக்கான பரிகாரம் (1) 26.4 கஅபாவரை நடைப்பயணம் செல்வதாக நேர்ந்துகொண்டவர் (3) 26.3 இறைவனுக்கு மாறு செய்வதிலோ உரிமை இல்லாததிலோ நேர்ச்சை. (1) 26.2 நேர்ச்சை செய்வதற்குத் தடை; அது (விதியில்) எதையும் மாற்றிவிடாது (6) 26.1 நேர்ச்சையை நிறைவேற்றக் கட்டளை (1) 25.5 வசதியற்றவர் மரண சாஸனம் செய்ய முடியாது (6) 25.4 அறக்கொடை (1) 25.3 மனிதன் இறந்த பின்பும் தொடரும் நன்மைகள் (1) 25.2 இறந்துவிட்டவருக்காகச் செய்யப்படும் தர்மங்களின் நன்மை … (3) 25.1 மரண சாஸனம் 1/3 மட்டுமே (5) 25.0 மரண சாஸனம் (2) 24.4 ஆயுட்கால அன்பளிப்பு (11) 24.3 அன்பளிப்பு வழங்குவதில் பிள்ளைகளிடையே பாகுபாடு காட்டுவது … (10) 24.2 தானமும் அன்பளிப்பும் வழங்கப்பட்ட பின், திரும்பப் பெறுவதற்குத் தடை … (4) 24.1 தானமாகக் கொடுத்ததை விலைக்கு வாங்குவது விரும்பத் தக்கதல்ல (4) 23.4 ஒருவர் விட்டுச்செல்லும் செல்வம் அவருடைய வாரிசுகளுக்கு உரியதாகும் (4) 23.3 இறுதியாக அருளப்பெற்றது கலாலா வசனமாகும் (4) 23.2 ‘கலாலா’ சொத்துரிமை (5) 23.1 உரியவர்களுக்கும் உறவினருக்கும் பிரிக்கப்பட்ட பாகங்கள் (3) 23.0 ஒரு முஸ்லிம், இறைமறுப்பாளருக்கு வாரிசாகமாட்டார் (1) 22.31 பாதைக்கு நிலம் ஒதுக்குவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அதற்கான தீர்வு (1) 22.30 பிறர் நிலத்தை அபகரித்தல் போன்ற அநீதி இழைத்தல்களுக்குத் தடை (6) 22.29 அண்டை வீட்டாரின் சுவரில் (சாரம் கட்டுவதற்கு) மரக்கட்டை பதிப்பது (1) 22.28 பங்காளியின் இசைவு (3) 22.27 வியாபாரத்தில் (வீண்)சத்தியம் செய்வது விலக்கப்பட்டுள்ளது (2) 22.26 உணவுப் பொருட்களைப் பதுக்குவதற்குத் தடை (2) 22.25 முன்பணம் செலுத்தும் வணிகம் (2) 22.24 அடமானம் உள்ளூரிலும் பயணத்திலும் செல்லும் (3) 22.23 ஓர் உயிரினத்தை அதே இனத்திற்குப் பதிலாக ஏற்றத்தாழ்வோடு விற்கலாம் (1) 22.22 உங்களில் சிறந்தவர் கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே (4) 22.21 ஒட்டகத்தை விற்றவர் அதில் பயணிக்க நிபந்தனை விதிப்பது (5) 22.20 அனுமதிக்கப்பட்டவற்றையும் ஐயத்திற்குரியவற்றையும் கையாளுதல் (1) 22.19 வட்டி வாங்குபவருக்கும் வட்டி கொடுப்பவருக்கும் சாபம் (2) 22.18 உணவுப் பொருளை, சரிக்குச் சரியாக விற்றல் (12) 22.17 பொன்னும் மணியும் பதித்த மாலையை விற்பது (4) 22.16 தங்கத்திற்கு வெள்ளியைக் கடனாக விற்பதற்குத் தடை (3) 22.15 நாணயமாற்று வியாபாரம்; வெள்ளிக்குத் தங்கத்தை ரொக்கத்துக்கு விற்பது (7) 22.14 வட்டி (4) 22.13 மது, செத்தவை, பன்றி, சிலைகள் ஆகியவற்றை விற்பதற்குத் தடை (4) 22.12 மதுபான வியாபாரத்திற்குத் தடை (4) 22.11 குருதி உறிஞ்சி எடுப்பதற்காகக் கூலி பெறுவது கூடும் (4) 22.10 வேட்டை, காவல், பாதுகாப்புக்காக நாய் வளர்க்கலாம் (18) 22.9 நாய் விற்ற காசு, சோதிடரின் தட்சணை, விபச்சாரியின் வருமானம் (4) 22.8 தேவைக்குப் போக மீதம் உள்ள நீரை விற்பதற்குத் தடை (5) 22.7 வசதியுள்ளவர் கடனைச் செலுத்த தாமதம் செய்யக் கூடாது (1) 22.6 கடனை அடைக்க சிரமப்படுபவருக்கு அவகாசம் அளிப்பதன் சிறப்பு (7) 22.5 திவாலானவரிடம் திரும்பப் பெற்றுக்கொள்ளும் உரிமை (4) 22.4 கடனில் தள்ளுபடி செய்வது விரும்பத் தக்கதாகும் (3) 22.3 சேதமடைந்த பழங்களுக்கான தொகைக்குத் தள்ளுபடி (5) 22.2 மரம் நடுதலின், பயிர் செய்தலின் சிறப்பு (5) 22.1 நிபந்தனையின் பேரில் தோப்பைக் குத்தகைக்கு விடுவது (4) 21.21 நிலத்தை (விளைவித்துக்கொள்ள) இரவலாக வழங்குவது (4) 21.20 ‘முஸார’ஆவும் ‘முஆஜரா’வும் (2) 21.19 பொன், வெள்ளி(நாயணங்களு)க்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (3) 21.18 தானியத்திற்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (2) 21.17 நிலக் குத்தகை (24) 21.16 தடை செய்யப்பட்ட வியாபார வகைகள் (6) 21.15 கனிகள் நிறைந்த பேரீச்ச மரத்தை விற்பது (4) 21.14 (மரத்திலுள்ள) செங்கனிகளை மாற்றிக் கொள்வதற்குத் தடை (14) 21.13 மரத்திலுள்ள பழங்களை முற்றுவதற்கு முன் விற்பதற்குத் தடை (10) 21.12 வியாபாரத்தில் ஏமாற்றப்படுபவர் (1) 21.11 வியாபாரத்தில் உண்மை பேசுவதும் குறைகளைத் தெளிவுபடுத்துவதும் (1) 21.10 விற்பவருக்கும் வாங்குபவருக்கும் வியாபாரத்தை முறித்துக்கொள்ளும் உரிமை (4) 21.9 அளவு தெரியாத பேரீச்சம் பழக் குவியலை விற்பதற்குத் தடை (1) 21.8 வாங்கப்பட்ட பொருள் கைக்கு வருமுன் (பிறருக்கு) விற்பது கூடாது (13) 21.7 மடி கனக்கச் செய்யப்பட்ட கால்நடைகளை விற்பனை செய்வது பற்றிய சட்டம் (5) 21.6: கிராமவாசிக்காக, நகரவாசி விற்றுக் கொடுக்கத் தடை (5) 21.5: விற்பனைக்கு வரும் சரக்குகளை இடைமறித்து வாங்கத் தடை (4) 21.4: வியாபாரத்தில் தடை செய்யப்பட்டவை (7) 21.3: ஒட்டகக் கன்று (அது பிறக்குமுன்) விற்பதற்கு தடை! (2) 21.2: கல்லெறி வியாபாரம் மற்றும் மோசடி வியாபாரம் ஆகியவை செல்லாது (1) 21.1: ‘முலாமஸா’ மற்றும் ‘முனாபதா’ ஆகிய வியாபாரங்கள் செல்லாது (3) 20.7: அடிமையான தந்தையை விடுதலை செய்வதன் சிறப்பு (1) 20.6: அடிமைகளை விடுதலை செய்வதன் சிறப்பு (4) 20.5: விடுதலை செய்த உரிமையாளரை மாற்றிக் கூறத் தடை (4) 20.4: வாரிசாகும் உரிமையை விற்பதற்கும் அன்பளிப்பாக வழங்குவதற்கும் தடை (1) 20.3: விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியது (9) 20.2: அடிமை (தனது முழு விடுதலைக்காக) உழைத்துப் பொருளீட்டுவது (2) 20.1: ஓர் அடிமையி(ன் விலையி)ல், ஒருவர் தமக்கான பங்கை விடுவிப்பது (1) 19.1: சுய சாபம் வேண்டுதல் (17) 18.9: கணவன் இறந்து ‘இத்தா’விலிருக்கும் பெண் துக்கம் கடைப்பிடிப்பது (11) 18.8: கர்ப்பமுற்றிருக்கும் பெண்ணின் ‘இத்தா’க் காலம், பிரசவத்துடன் முடிந்துவிடும் (2) 18.7: ‘இத்தா’விலிருக்கும் பெண் தன் தேவைக்காக வெளியே செல்லலாம் (1) 18.6: மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சம் பற்றி… (18) 18.5: ஈலாச் செய்வது, மனைவியிடமிருந்து விலகுவது, விருப்ப உரிமை அளிப்பது (5) 18.4: மனைவிக்கு (த் தம்மைப் பிரிந்துவிட) உரிமை அளிப்பது மணவிலக்கு ஆகாது (8) 18.3: மணவிலக்குச் செய்யும் நோக்கமின்றி கூறினால், அது மணவிலக்கு ஆகாது (4) 18.2: மூன்று தலாக்குகள் (3) 18.1: மாதவிடாயான மனைவியை அவளது சம்மதமின்றி மணவிலக்குச் செய்வதற்குத் தடை (14) 17.19: ஹவ்வா-வும், பெண்கள் கணவரை ஏமாற்றுதலும் (2) 17.18: மனைவியரின் நலம் நாடுதல் (4) 17.17: பயன் தரும் இவ்வுலகச் செல்வங்களுள் மிகச் சிறந்த செல்வம், நற்குணமுள்ள மனைவியே (1) 17.16: கன்னிப் பெண்ணை மணப்பது விரும்பத் தக்கதாகும் (5) 17.15: மார்க்கப் பற்றுள்ள பெண்ணை மணப்பது விரும்பத் தக்கதாகும் (2) 17.14: மனைவியருள் ஒருவர், தனது முறைநாளை மற்றவருக்கு விட்டுக்கொடுக்கலாம் (4) 17.13: மனைவியருக்கு (இரவுகளை) ஒதுக்கீடு செய்வது (1) 17.12: கன்னி கழிந்த பெண்ணுக்கும், கன்னிப் பெண்ணுக்கும் கணவன் ஒதுக்க வேண்டிய நாட்கள் (6) 17.11: சாயல் அறியும் நிபுணரின் கூற்றுப்படி, குழந்தைக்கு உரியவரைக் கண்டறிவது (3) 17.10: எஜமானரின் கீழ் வாழும் பெண்ணின் குழந்தை, அவருக்கே உரியது (2) 17.9: பெண் போர்க் கைதியுடன் உடலுறவு கொள்ளலாம் (2) 17.8: பசிக்காகத் தாய்ப்பால் அருந்தினால்தான் பால்குடி உறவு ஏற்படும் (1) 17.7: பருவ வயதை அடைந்தவருக்குப் பாலூட்டுவது (6) 17.6: ஐந்து தடவை அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும் (2) 17.5: ஓரிரு தடவை (பெண்ணின் மார்பில்) பால் குடிப்பது பற்றிய சட்டம் (6) 17.4: மனைவியின் மகளையும் மனைவியின் சகோதரியையும் மணப்பதற்குத் தடை (2) 17.3: பால்குடிச் சகோதரரின் மகளை மணப்பது தடை செய்யப்பட்டுள்ளது (3) 17.2: பால்குடித் தந்தையின் (இரத்த பந்த) உறவினரும் மணமுடிக்கத் தகாதவரே! (6) 17.1: பிறப்பால் ஏற்படும் உறவும் பால்குடி உறவும் (2) 16.24: பாலூட்டும் மனைவியுடன் உடலுறவு கொள்ளும்போது அஸ்லுச் செய்வது வெறுக்கத் தக்கது (3) 16.23: கருவுற்றிருக்கும் பெண் போர்க் கைதியுடன் உடலுறவு கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது (1) 16.22: உடலுறவின்போது இடைமுறிப்பு – ‘அஸ்லு’ச் சட்டம் (12) 16.21: மனைவியுடன் நடைபெறும் உடலுறவு இரகசியங்களை வெளியே சொல்வது தடுக்கப்பட்டது (2) 16.20: ஒரு பெண், தன் கணவனின் படுக்கைக்குச் செல்ல மறுப்பதற்குத் தடை (3) 16.19: உடலுறவின் ஒழுங்குகள் (2) 16.18: உடலுறவின்போது ஓத வேண்டிய விரும்பத் தகுந்த பிரார்த்தனை (1) 16.17: மூன்று முறை மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்ணின் மறுவிருப்பம் (4) 16.16: விருந்துக்கான அழைப்பை ஏற்பது பற்றிய கட்டளை (13) 16.15: ஸைனப் பின்த்து ஜஹ்ஷு (ரலி) திருமணம்; ஹிஜாப் பற்றிய வசனம்; மணவிருந்து (7) 16.14: அடிமைப் பெண்ணை விடுதலை செய்து, பின்னர் அவளை மணமுடித்துக்கொள்வதன் சிறப்பு (6) 16.13: மணக்கொடை (மஹ்ரு) என்பது … (7) 16.12: ஒருவர் தாம் மணமுடிக்க விரும்பும் பெண்ணின் முகத்தையும் இரு முன் கைகளையும் பார்ப்பது (2) 16.11 ஷவ்வால் மாதத்தில் மணமும் தாம்பத்திய உறவும் (1) 16.10: இளவயதுக் கன்னிக்கு அவளுடைய தந்தை மணமுடித்துவைத்தல் (4) 16.9: மணப் பெண்ணின் வாய் வழிச் சம்மதமும் மௌனச் சம்மதமும் (4) 16.8: திருமண (முன்) நிபந்தனைகளை நிறைவேற்றல் (1) 16.7: மணக்கொடையில்லா திருமணம் செல்லாது (5) 16.6: தம் (முஸ்லிம்) சகோதரன் கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணை, மற்றவர் கேட்கலாகாது (7) 16.5: இஹ்ராம் புனைந்தவர் திருமணம் செய்வதற்குத் தடை; அவர் பெண் கேட்பது வெறுக்கத் தக்கது (8) 16.4: மனைவியின் அத்தையை, சின்னம்மாவை மணக்கத் தடை (8) 16.3: இடைக்காலத் திருமணம், (முத்ஆ) காலாவதியானது (21) 16.2: இச்சை தூண்டப்பட்டவர், தமது இச்சையைத் தணித்துக் கொள்ளட்டும் (2) 16.1: வசதி இருந்தால் மணமுடிப்பதும் இல்லாதவர் நோன்பு நோற்பதும் (6) 15.97: குபாப் பள்ளிவாசல், அதில் தொழுவது, அதைத் தரிசிப்பது ஆகிய சிறப்புகள் (7) 15.96: இறையச்சத்தின் மீது நிறுவப்பட்ட பள்ளிவாசல் (1) 15.95: மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெதற்கும் (புனிதப்) பயணம் கிடையாது (2) 15.94: மக்கா, மதீனாப் பள்ளிவாசல்களில் தொழுவதன் சிறப்பு (6) 15.93: ‘உஹுத்’ மலை நம்மை நேசிக்கிறது; நாமும் அதை நேசிக்கின்றோம் (3) 15.92: சொர்க்கப் பூஞ்சோலைகளுள் ஒன்று (3) 15.91: மதீனாவாசிகள் மதீனாவை விட்டு அகலும்போது அதன் நிலை (2) 15.90: மதீனாவிலேயே தங்கியிருப்பதற்கு ஆர்வமூட்டல் (2) 15.89: மதீனாவாசிகளுக்குக் கேடு நினைப்பவர்களை, அல்லாஹ் உருக்குலைத்துவிடுவான் (3) 15.88: தன்னிலுள்ள தீயவர்களை மதீனா அகற்றிவிடும் (5) 15.87: கொள்ளை நோயும் தஜ்ஜாலும் நுழைய முடியாமல் மதீனா பாதுகாக்கப்பட்டுள்ளது (2) 15.86: மதீனாவில் ஏற்படும் நெருக்கடிகளைச் சகித்துக்கொண்டு, அங்குக் குடியிருக்க ஆர்வ மூட்டல் (10) 15.85: மதீனாவின் சிறப்பு; பிரார்த்தித்ததும் புனிதமானவையும் (17) 15.84: இஹ்ராமின்றி மக்காவிற்குள் நுழைய அனுமதி (5) 15.83: அவசியத் தேவையின்றி மக்காவிற்குள் ஆயுதம் எடுததுச் செல்வதற்குத் தடை (1) 15.82: மக்காவும், அதன் புனிதமானவைகளும் (4) 15.81: முஹாஜிருக்கு மக்காவில் தக்குவதற்கு அனுமதிக்கப்பட்ட நாட்கள் (4) 15.80: ஹாஜிகள் மக்காவில் தங்குவதும் அங்குள்ள வீடுகளை வாரிசுரிமையாகப் பெறுவதும் (3) 15.79: ஹஜ், உம்ரா, அரஃபா நாள் ஆகியவற்றின் சிறப்பு (3) 15.78: இணைவைப்பவருக்கான ஹஜ் சட்டங்கள் (1) 15-77: ஹஜ் அல்லது உம்ராவிலிருந்து திரும்பும்போது துல்ஹுலைஃபாவில் தங்கித் தொழுவது (5) 15.76: பயணத்திலிருந்து திரும்பி வரும்போது ஓத வேண்டியவை (2) 15.75: பயணங்களில் வாகனத்தில் ஏறியதும் ஓத வேண்டிய துஆ (2) 15.74: மஹ்ரமான ஆணுடன் மட்டுமே பெண்ணின் ஹஜ் முதலான பயணம் (11) 15.73: ஹஜ் கடமை, ஆயுளில் ஒரு முறைதான் (1) 15.72: குழந்தையின் ஹஜ் செல்லும்; அதை ஹஜ்ஜுக்கு அழைத்துச் சென்றவருக்கும் நற்பலன் உண்டு (3) 15.71: இயலாதவருக்காகவோ, இறந்தவருக்காகவோ பிறர் ஹஜ் செய்தல் (2) 15.70: கஅபாவின் வளைந்த சுவரும் அதன் தலைவாயிலும் (1) 15.69: இறையில்லம் கஅபாவை இடித்துக் கட்டுதல் (7) 15.68: கஅபாவின் உள்ளே நுழைவதும் அதனுள் தொழுவதும் (9) 15.67: விடைபெறும் தவாஃப் மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணுக்குக் கடமையில்லை (8) 15.66: செல்லும் வழியில் பலிப் பிராணி பாதிப்புக்குள்ளாகிவிட்டால் … (2) 15.65: பலியிடக் கொண்டுசெல்லும் ஒட்டகத்தில், பயணம் செய்ய அனுமதி (6) 15-64: ஹரம் எல்லைக்குச் செல்லாதவர், பலிப் பிராணியை அனுப்பிவைக்கும் முறை (11) 15.63: ஒட்டகத்தை அறுக்கும் முறை (1) 15.62: பலிப் பிராணிகளுள் மாட்டிலும் ஒட்டகத்திலும் கூட்டுச் சேர்வது (8) 15.61: பலிப் பிராணிகளின் இறைச்சி, தோல், சேணம் ஆகியவை தர்மத்துக்குரியன (2) 15.60: ‘தஷ்ரீக்’ நாட்களின் இரவுகளில் மினாவில் தங்குவது கட்டாயமாகும் (2) 15.59: ‘நஃப்ரு’டைய நாளில் ‘அல்முஹஸ்ஸபி’ல் தங்குவதும் அங்குத் தொழுவதும் (9) 15.58: துல்ஹஜ் பத்தாவது நாளில் ‘தவாஃபுல் இஃபாளா’ செய்வது (2) 15.57: ஹஜ் சடங்குகளில் முன் – பின் ஆகிவிட்டால் … (6) 15.56: துல்ஹஜ் பத்தாம் நாளின் சடங்குகள் (3) 15.55: தலைமுடியை மழிப்பதும் குறைப்பதும் (6) 15.54: கற்களின் எண்ணிக்கை (1) 15.53: கல்லெறியும் நேரம் (1) 15.52: பொடிக் கற்கள் போதும் (1) 15.51: துல்ஹஜ் பிறை பத்தில் ஜம்ரத்துல் அகபாவுக்குக் கல்லெறிதல் (3) 15.50: ‘ஜம்ரத்துல் அகபா’வின் மீது கல் எறியும்போது தக்பீர் கூறுவது (4) 15.49: முஸ்தலிஃபாவிலிருந்து மினாவிற்குப் புறப்படச் செய்வது (11) 15.48: முஸ்தலிஃபாவில் ஸுப்ஹுத் தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவது (1) 15.47: மஃக்ரிப், இஷா வை அடுத்தடுத்துத் தொழுவது (14) 15.46: அரஃபா நாளில் மினாவிலிருந்து அரஃபாவிற்குப் போகும்போது தல்பியாவும் தக்பீரும் கூறுதல் (4) 15.45: துல்ஹஜ் பத்தாவது நாளன்று கல்லெறியத் துவங்கும்வரை தல்பியாச் சொல்லிக்கொண்டிருப்பது (7) 15.44: ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீ (ஓட்டம்) ஒரே தடவைதான் (1) 15.43: ஸஃபா-மர்வாவுக்கிடையே ஸயீச் செய்வது முக்கியக் கடமையாகும் (5) 15.42: வாகனங்கள் மீதமர்ந்து தவாஃப் செய்யலாம் (6) 15.41: தவாஃபின்போது ஹஜருல் அஸ்வதை முத்தமிடுவது (5) 15.40: இறையில்லத்தில் முத்தமிடப்படும் இரு மூலைகள் (6) 15.39: தவாஃபில் விரைந்து நடப்பது விரும்பத்தக்கது (12) 15.38: மக்காவினுள் நுழையும் முன்… (4) 15.37 மக்காவினுள் நுழைவதும் வெளியேறுவதும் (3) 15.36 ரமளான் மாதத்தில் உம்ராச் செய்வதன் சிறப்பு (2) 15.35: நபியவர்களின் உம்ரா எண்ணிக்கையும் காலமும் (4) 15.34 நபியவர்களின் தல்பியாவும் பலியும் (4) 15.33: உம்ராவில் தலைமுடி குறைத்தல் (5) 15.32: இஹ்ராமின்போது பலிப் பிராணி (4) 15.31: ஹஜ்ஜுப் பருவங்களில் உம்ராச் செய்ய அனுமதி (6) 15.30: தமத்துஉ ஹஜ் (2) 15.29: இஹ்ராம் ஹாஜிக்குக் கட்டாயம் (3) 15.28: தவாஃபும் ஸயீயும் கட்டாயம் (3) 15.27: ஹஜ் உம்ரா சேர்த்தும் தனித்தும் செய்வது (3) 15.26: ஒரே இஹ்ராமில் உம்ரா ஹஜ் (3) 15.25: இஹ்ராமிலிருந்து விடுபடுதல் (3) 15.24: பலிப் பிராணியும் ஹஜ் கடமையும் (2) 15.23: தமத்துஉ ஹஜ் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும் (13) 15.22: ஒருவர் வேறொருவரின் இஹ்ராமை அச்சொட்டி பூணுதல் (3) 15.21: அரஃபா பெருவெளியில் தங்கி திரும்புதல் தொடர்பான இறை கூற்று (3) 15.20: அரஃபாப் பெருவெளி முழுவதும் தங்குமிடம் (2) 15.19: நபி (ஸல்) அவர்களின் ஹஜ் (1) 15.18: உம்ராவையும் ஹஜ்ஜையும் தனித் தனியாக நிறைவேற்றி பயனடைதல் (2) 15.17: இஹ்ராமின் முறைகள் (27) 15.16: இரத்தப்போக்குடைய பெண் இஹ்ராமில் குளித்தல் (2) 15.15: இஹ்ராமிலிருந்து விடுபட முன் நிபந்தனையிட அனுமதி (5) 15.14: முஹ்ரிம் இறந்துவிட்டால் செய்ய வேண்டியவை (9) 15.13: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், தம் உடலைக் கழுவிக்கொள்ள அனுமதி (1) 15.12: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், தம் கண்களுக்கு மருந்திட அனுமதி (2) 15.11: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம், ஹிஜாமா செய்ய அனுமதி (2) 15.10: முஹ்ரிமுக்குத் தலைமுடி மழிக்க அனுமதியும் பரிகாரமும் (7) 15.09: ஹரம் எல்லைக்குள் கொல்ல அனுமதிக்கப்பட்டவைகள் (12) 15.08: இஹ்ராம் பூண்ட முஹ்ரிம் வேட்டையாடுவது குறித்து.. (9) 15.07: இஹ்ராமின்போது நறுமணம் பூசுதல் (19) 15.06: துல்ஹுலைஃபா பள்ளியில் தொழுதல் (1) 15.05: வாகனம் புறப்படுவதற்கு ஆயத்தமானவுடன் தல்பியா கூறுவது (4) 15.04: மதீனாவாசிகள் இஹ்ராம் பூண வேண்டிய இடம் (2) 15.03: தல்பியாவின் பண்பும் அதன் நேரமும் (4) 15.02: ஹஜ்/உம்ராவிற்கான இஹ்ராம் எல்லைகள் (7) 15.01: ஹஜ்/உம்ராவில் அனுமதிக்கப்பட்டவை.. (10) 14.04: துல்ஹஜ் மாதத்தின் பத்து நோன்புகள் (2) 14.02: இஃதிகாஃப் இருக்குமிடத்தினுள் நுழையும் நேரம் (1) 14.03: இறுதிப் பத்தில் வழிபாடுகளில் ஈடுபடுவது (2) 14.01: இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருத்தல் (5) 13.40: லைலத்துல் கத்ர் இரவு குறித்து.. (17) 13.39: ஷவ்வால் ஆறு நோன்பு (1) 13.37: ஷஅபான் மாத இறுதியில் நோன்பு நோற்றல் (3) 13.38: முஹர்ரம் நோன்பின் சிறப்பு (2) 13.36: சுன்னத்தான நோன்புகள் (5) 13.35: ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு (12) 13.34: நோன்பில்லாமல் எந்த மாதத்தையும் கடக்க விடாமலிருப்பது விரும்பத் தக்கது (9) 13.33: மறதியால் (நோன்பாளி) நோன்பு முறியாது (1) 13.32: கூடுதலான நோன்பு முடிவு செய்வதற்கும் விடுவதற்கும் அனுமதி (2) 13.31: அல்லாஹ்வின் பாதையில் செல்லும்போது சக்தி பெற்றிருப்பவர் நோன்பு நோற்பதன் சிறப்பு (2) 13.30: நோன்பின் மாண்பு (6) 13.29: நோன்பாளி, நாவைக் காப்பது (1) 13.28: நோன்பாளி விருந்துக்கு அழைக்கப்பட்டால் “நான் நோன்பாளி” என்று சொல்லிவிட வேண்டும் (1) 13.27: இறந்துபோனவரின் விடுபட்ட நோன்பை நோற்பது (5) 13.26: ரமளானில் விடுபட்ட நோன்பை ஷஅபான் மாதத்தில் ‘களா’ச் செய்தல் (2) 13.25: இறைவசனம் வேறொரு வசனத்தின் மூலம் மாற்றம் (2) 13.24: வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்பது விரும்பத் தக்கதன்று (3) 13.23: அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் நோன்பு நோற்பதற்குத் தடை (2) 13.22: நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் நோன்பு நோற்பதற்குத் தடை (6) 13.20: ஆஷூரா நோன்பை எந்த நாளில் நோற்க வேண்டும்? (4) 13.19: ஆஷூரா நாளில் நோன்பு நோற்றல் (17) 13.18: அரஃபா நாளில் அரஃபாவில் தங்கும் ஹாஜிகளின் நோன்பு (4) 13.17: பயணத்தில் நோன்பு நோற்பதையோ விட்டுவிடுவதையோ தேர்ந்துகொள்ளலாம் (5) 13.16: பயணத்தில் நோன்பைக் கைவிட்டவர், பொதுப் பணியாற்றினால் கிடைக்கும் நன்மை (3) 13.15: பயணத்தில் இருப்பவர் மீதான கடமையான ரமளான் நோன்பு (11) 13.14: ரமளான் பகலில் உடலுறவில் ஈடுபடுவதற்குத் தடையும் அதன் பரிகாரமும் (5) 13.13: பெருந்துடக்குடன் வைகறைப் பொழுதை அடைந்தவரின் நோன்பு செல்லும் (6) 13.12: கட்டுப்படுத்தும் நோன்பாளிக்கு (தம் மனைவியை) முத்தமிடத் தடையில்லை (13) 13.11: தொடர்நோன்பு நோற்பதற்குத் தடை (7) 13.10: பகற் பொழுது வெளியேறி நோன்பு நிறைவடையும் நேரம் (3) 13.09: ஸஹரைத் தாமதிப்பதும் நோன்பு துறப்பதை விரைந்து செய்வதும் (6) 13.08: ஃபஜ்ரு நேரம் வந்தவுடன் நோன்பு ஆரம்பமாகிவிடும் (11) 13.07: ‘இரு பெருநாட்களின் இரு மாதங்களும் குறைவுபடாது’ நபிகளாரின் விளக்கம் (2) 13.06: (வானை) மேகம் மூடிக்கொண்டால் (மாதத்தின் நாட்கள்) முப்பதாக முழுமையாக்கப்படும் (2) 13.05: ஒவ்வோர் ஊர்க்காரர்களுக்கும் அவரவர் பார்க்கும் பிறையே பொருந்தும் (1) 13.04: மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கும் (6) 13.03: ரமளானுக்கு முந்தைய இரு நாள்களில் நோன்பு நோற்கக் கூடாது (1) 13.02: ரமளான் நோன்பு தொடக்கமும் முடிவும் (17) 13.01: ரமளான் மாதத்தின் சிறப்பு (2) 12.55: ஸகாத் வசூலிப்பவர், தடை செய்யப்பட்டதைக் கோராதவரை அவரைத் திருப்திபடுத்த வேண்டும் (1) 12.54: தர்மப் பொருள் கொண்டுவந்தவருக்காகப் பிரார்த்தித்தல் (1) 12.53: நபி (ஸல்) அன்பளிப்பை ஏற்றதும் தர்மத்தை மறுத்ததும் (1) 12.52: தர்மப் பொருள், அதன் பண்பு நீங்கி விடுதல் (5) 2.27: நாய் நக்கிய பாத்திரம் பற்றிய சட்டம் (6) 2.28: தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் சிறுநீர் கழிப்பதற்குத் தடை (3) 2.29: பெருந்துடக்குடையவர் தேங்கிய நீரில் இறங்கிக் குளிக்கத் தடை (1) 2.30: பள்ளிவாசலில் சிறுநீர் கழித்தால்… (3) 2.31: தாய்பால் குடிக்கும் குழந்தையின் சிறுநீரைக் கழுவும் சட்டம் (4) 2.32: விந்து பற்றிய சட்டம் (4) 2.33: மாதவிடாய் இரத்தம் கழுவும் முறை (1) 2.34: சிறுநீரைச் சுத்தம் செய்வது கட்டாயம் (1) 3.01: மாதவிடாயான மனைவியைக் கீழாடைக்கு மேல் அணைத்துக் கொள்வது. (3) 3.02: மாதவிடாயான மனைவியுடன் ஒரே போர்வைக்குள் படுத்துக் கொள்வது. (2) 3.03: மாதவிடாயான பெண் செய்ய அனுமதிக்கப்பட்டவை (11) 3.04: இச்சை நீர் (3) 3.05: உறங்கி எழுந்ததும் முகத்தையும் கையையும் கழுவுதல் (1) 3.06: பெருந்துடக்காளி செய்ய வேண்டியவை (8) 3.07: மதன நீர் வெளிப்பட்ட பெண்ணுக்குக் குளியல் கடமை. (5) 3.08: ஆண்/பெண் (விந்து-மதன)நீரிலிருந்துதான் குழந்தை உருவாகிறது. (1) 3.09: பெருந்துடக்கிற்கான குளியல் முறை (5) 3.10: பெருந்துடக்கு குளியல் தொடர்பானவை (14) 3.11: குளிக்கும் போது மூன்றுமுறை தண்ணீர் ஊற்றுதல் (4) 3.12: குளிக்கும் பெண்களின் சடைமுடி பற்றிய சட்டம் (2) 3.13: மாதவிடாய் குளியலின் போது கஸ்தூரி பயன்படுத்துதல் (2) 3.14: தொடர் உதிரப் போக்குடைய பெண்களின் தொழுகை மற்றும் குளியல் (5) 3.15: மாதவிடாய் நாட்களில் விடுபட்ட கடமைகள் (3) 3.16: குளிப்பவர் திரையிட்டுக் கொள்தல் (3) 3.17: பிறரின் மறையுறுப்பைப் பார்த்தல் (1) 3.18: தனித்துக் குளிக்கும் போது ஆடையின்றி குளித்தல் (1) 3.19: மறையுறுப்பை மறைத்துக் கொள்வதில் கவனம் (3) 3.21: (விந்து)நீர் வெளிப்பட்டாலே (குளியல்)நீர் கடமையாகும் (9) 3.22: ஆண்-பெண் குறிகள் இணைந்து விட்டால் குளியல் கடமையாகும் (3) 3.23: சமைக்கப்படவற்றை உண்டால் மீண்டும் உளூ செய்தல் (3) 3.24: சமைக்கப் பட்டவற்றை உண்டால் உளூச் செய்யும் கட்டாயம் மாற்றப் பட்டது (8) 3.25: ஒட்டக இறைச்சி உண்டால் உளூச் செய்ய வேண்டும் (1) 3.26: வாயு பிரிந்த சந்தேகம் ஏற்பட்டாலும் தொழலாம் (2) 3.27: பதனிடப்படுவதால் செத்த பிராணியின் தோல் தூய்மை ஆகும் (7) 3.28: தயம்மும் (6) 3.29: ஒரு முஸ்லிம் (பெருந்துடக்கு ஏற்பட்டதால்) அசுத்தமாகிவிட மாட்டார். (2) 3.30: பெருந்துடக்கு போன்ற நிலைகளிலும் அல்லாஹ்வைத் துதித்தல். (1) 3.31: சிறுதுடக்காளி (உளூச் செய்யாமல்) உண்ணலாம் (4) 3.32: கழிப்பிடத்திற்குச் செல்லும்போதான பிரார்த்தனை (1) 3.33: உட்கார்ந்து கொண்டு உறங்குவது உளூவை முறிக்காது. (4) 4.01: தொழுகை அழைப்பின் தொடக்கம் (1) 4.02: தொழுகை அறிவிப்பு தொடர் அமையும் விதம் (3) 4.03: தொழுகை அழைப்பு முறை (1) 4.04: ஒரு பள்ளிவாசலுக்கு இரு தொழுகை அழைப்பாளர்கள் (1) 4.05: பார்வையற்றவர் தொழுகை அழைப்பு விட நிபந்தனை (1) 4.06: போரின் போது இணைவைப்பாளர் நாட்டில் தொழுகை அழைப்பு விடுக்கப்பட்டால் (1) 4.07: தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் செய்ய வேண்டியவை (4) 4.08: தொழுகை அழைப்பின் சிறப்பும் ஷைத்தான் வெருண்டோடுவதும் (6) 4.09: இரு கைகளையும் தோள் புஜத்துக்கு உயர்த்துதல் (4) 4.10: அல்லாஹு அக்பர், ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ் கூறும் இடங்கள் (5) 4.11: தொழுகையில் அல்ஃபாத்திஹா அத்தியாயம் ஓதுதல் (8) 4.12: இமாமைப் பின்பற்றித் தொழுபவர் உரத்து ஓதலாகாது (2) 4.13: பிஸ்மில்லாஹ்வை(த் தொழுகையில்) உரத்து ஓதாலாகாது என்போரின் வாதம் (2) 4.14: அத்தியாயங்களின் துவக்கம் “பிஸ்மில்லாஹ்” குறித்த வாதம் (1) 4.15: தக்பீருக்குப் பின்னும் சஜ்தாவிலும் கைகளை வைக்கும் முறை (1) 4.16: தொழுகையில் அத்தஹிய்யாத் ஓதுவது (4) 4.17: இறுதி அத்தஹியாத்திற்குப் பின் ஸலவாத் கூறுதல் (4) 4.18: ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா ல(க்)கல் ஹம்து, ஆமீன் ஆகியவை கூறுவது (5) 4.19: இமாமை மஃமூம் பின்தொடர்வது (5) 4.20: இமாமை முந்துவதற்குத் தடை (4) 4.21: இமாமைப் பின்பற்றுவதில் சட்ட மாற்றம் (10) 4.22: இமாம் வருவதற்குத் தாமதமானால்… (2) 4.23: தொழுகையில் இமாமுக்கு ஏதாவது உணர்த்த விரும்பினால்… (1) 4.24: தொழுகையை முழுமையாக உள்ளச்சத்துடன் தொழல் (4) 4.25: தொழுகையில் இமாமை முந்தாமல் இருத்தல் (7) 4.26: தொழும்போது வானத்தை அண்ணாந்து பார்ப்பதற்குத் தடை (2) 4.27: தொழுகையில் ஒழுங்குகள் (3) 4.28: தொழுகையில் வரிசைகளைப் பேணுதல் (11) 4.29: ஆண்களுக்குப் பின்னால் தொழும் பெண்கள் தலை உயர்த்தும் முறை (1) 4.30: பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்தல், நறுமணம் பூசுதல் (11) 4.31: தொழுகையில் அச்சநிலையில் குர்ஆன் ஓதும் முறை (2) 4.32: குர்ஆன் ஓதப்படும்போது செவிதாழ்த்திக் கேட்க வேண்டும். (2) 4.33: ஸுப்ஹுத் தொழுகையில் உரத்துக் குர்ஆன் ஓதுதல் (4) 4.34: லுஹ்ரு, அஸ்ருத் தொழுகைகளில் குர்ஆன் ஓதுதல் (8) 4.35: ஸுப்ஹுத் தொழுகையில் குர்ஆன் ஓதுதல் (13) 4.36: இஷாத் தொழுகையில் குர்ஆன் ஓதுவது (8) 4.37: தொழுகையைச் சுருக்கி, நிறைவுறத் தொழுவிப்பதற்கான கட்டளை (11) 4.38: தொழுகையின் நிலைகளை நிதானமாக, சுருக்கி, நிறைவாகச் செய்வது (4) 4.39: தொழுகையில் இமாமை முந்தி விடாமலிருத்தல் (5) 4.40: ருகூஉவிலிருந்து தலையை உயர்த்திய பின் ஓத வேண்டியவை (5) 4.41: ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் குர்ஆன் ஓதுவதற்குத் தடை (6) 4.42: ருகூஉவிலும் ஸஜ்தாவிலும் ஓத வேண்டியவை (9) 4.44: ஸஜ்தாவின் போது தரையில் படவேண்டிய உறுப்புகள் (7) 4.45: சீராக ஸஜ்தா செய்தல் (2) 4.46: தொழுகை முறைத் தொகுப்பு (5) 4.47: தனித்துத் தொழுபவர் தடுப்பு ஒன்றை வைத்துக் கொள்வது (13) 4.48: தொழுகையில் குறுக்கே செல்பவரைத் தடுப்பது (4) 4.49: தொழுபவர், தடுப்புக்கு நெருக்கமாக நிற்க வேண்டும் (3) 4.50: தொழுபவருக்கான குறுக்குத் தடுப்பின் அளவு (2) 4.51: தொழுபவருக்குக் குறுக்கே படுத்திருப்பது (8) 4.52: ஒரே ஆடை அணிந்து தொழும் முறை (9) 5.01: பூமியில் எழுப்பப்பட்ட முதலாவது இறையாலயம் (8) 5.02: மஸ்ஜிதுந் நபவீ கட்டப்பட்ட வரலாறு (2) 5.03: தொழுகைத் திசை(கிப்லா) கஅபாப் பள்ளிக்கு மாற்றம் (4) 5.04: மண்ணறைகளில் செய்யக்கூடாதவை (6) 5.05: மஸ்ஜிதுகள் கட்டுவதன் சிறப்பும் அதற்கான ஆர்வமூட்டலும் (2) 5.06: ருகூஉவில் உள்ளங்கைகளை வைப்பதற்கான சட்டத் திருத்தம் (5) 5.07: இரு குதிகால்கள்மீது (தொழுகை அமர்வில்) அமர அனுமதி (1) 5.08: தொழுகையில் பேசிக் கொள்ள இருந்த அனுமதி நீக்கம் (6) 5.09: தொழுகைக்கு இடையில் செய்ய அனுமதிக்கப்பட்டவை (2) 5.10: குழந்தைகளைச் சுமந்துகொண்டு தொழுவதற்கு அனுமதி (3) 5.11: தொழுகையின்போது ஓரிரு அடிகள் நடக்க அனுமதி (1) 5.12: இடுப்பில் கையூன்றிக் கொண்டு தொழுவது வெறுக்கத் தக்கது (1) 5.13: தொழும்போது மண்ணைச் சமப்படுத்துதல் வெறுக்கத் தக்கது (3) 5.14: பள்ளிவாசலில் எச்சில் துப்பத் தடை (10) 5.15: காலணி அணிந்து கொண்டு தொழுவதற்கு அனுமதி (1) 5.16: கவனத்தை ஈர்க்கும் ஆடை அணிந்து தொழுதல் வெறுக்கப்பட்டது (3) 5.17: சிறுநீர்/மலம் அடக்குதல், உணவு காக்க வைத்தல் நிலையில் தொழுதல் (4) 5.18: துர்நாற்றத்துடன் பள்ளிச்செல்லுதலும் அவரை வெளியேற்றலும் (10) 5.19: பள்ளிவாசலினுள் காணாமற்போன பொருளைத் தேடத் தடை (3) 5.20: தொழுகையில் ஏற்படும் மறதிக்குப் பரிகாரம் (17) 5.21: ஸஜ்தா திலாவத் (9) 5.22: அத்தஹிய்யாத்தில் அமரும் முறை (5) 5.23: தொழுகையை நிறைவு செய்யும்போது ஸலாம் கூறும் முறை (3) 5.24: தொழுத பின்னர் திக்ரு (3) 5.25: மண்ணறை வேதனையிலிருந்து பாதுகாப்புக் கோருதல் (3) 5.26: தொழுகையில் பாதுகாப்புக் கோரப்பட வேண்டியவை (8) 5.27: தொழுகைக்குப்பின் திக்ரு செய்தல் (9) 5.28: தொடக்கத் தக்பீருக்குப் பின் கூறவேண்டியவை (4) 5.29: தொழுகையில் கலந்துகொள்ள செல்லும் முறை (5) 5.30: தொழுகைக்காக மக்கள் எப்போது எழுந்து நிற்க வேண்டும்? (5) 5.31: கூட்டுத்தொழுகையை அடைந்துகொள்ள நிபந்தனை (5) 5.32: ஐவேளைத் தொழுகை நேரங்கள் (13) 5.33: கடுங்கோடையில் ஜமாஅத் தொழுகை (8) 5.34: கடுங்கோடையில்லா சமயத்தில் ஜமாஅத் தொழுகை (4) 5.35: அஸ்ருத் தொழுகையின் நேரம் (7) 5.36: அஸ்ருத் தொழுகையைத் தவறவிட்டால்.. (3) 5.37: அஸ்ரு நடுத்தொழுகை என்போரின் சான்று (6) 5.38: ஸுப்ஹு, அஸ்ருத் தொழுகைகளின் சிறப்புகள் (6) 5.39: மஃக்ரிபுத் தொழுகையின் ஆரம்ப நேரம் (2) 5.40: இஷாத் தொழுகையின் நேரமும் அதைத் தாமதமாகத் தொழுவதும் (12) 5.41: ஸுப்ஹுத் தொழுகையின் நேரம் மற்றும் ஓதப்படும் (குர்ஆன் வசனங்களின்) அளவு (7) 5.42: தொழுகைக்கு உரிய நேரத்தைத் தாமதப்படுத்துதல் (7) 5.43: கூட்டுத் தொழுகையின் சிறப்பும் அதைத் தவற விடுவது பற்றிய கண்டனமும் (10) 5.44: தொழுகை அழைப்பைச் செவியுறுபவர் பள்ளிவாசலுக்குச் செல்வது கட்டாயமாகும் (1) 5.45: கூட்டுத் தொழுகை என்பது நேர்வழியைச் சார்ந்தது (2) 5.46: பாங்கு கூறிய பின்னர் பள்ளிவாசலிலிருந்து வெளியேறத் தடை (2) 5.47: இஷா மற்றும் ஸுப்ஹு கூட்டாகத் தொழுவதன் சிறப்பு (4) 5.48: கூட்டுத் தொழுகையைத் தவிர்ப்பதற்கான அனுமதி (1) 5.49: நஃபில் தொழுகைகளை ஜமாஅத்தாகத் தொழுதல் (6) 5.50: கூட்டுத் தொழுகைக்காகக் காத்திருப்பதன் சிறப்பு (5) 5.51: பள்ளிவாசலுக்கு நடந்து செல்வதன் சிறப்பு (6) 5.52: தொழுகைக்கு நடந்து செல்பவருக்குக் கிடைக்கும் பலன்கள் (4) 5.53: உதயம்வரை தொழுத இடத்தில் அமர்ந்திருப்பதன் சிறப்பு (3) 5.54: தொழுகைக்குத் தலைமையேற்க அதிகத் தகுதியுடையவர் (5) 5.55: எல்லாத் தொழுகைகளிலும் குனூத் ஓதும் காலகட்டம் (15) 5.56: விட்டுப்போனத் தொழுகைகளைத் தொழுதல் (8) 6.01: பயணிகளின் தொழுகை; சுருக்கித் தொழுதல் (20) 6.02: மழையின்போது இருப்பிடங்களில் தொழுதுகொள்ளலாம் (4) 6.03: நஃபில் தொழுகைகளை வாகனத்தில் செல்பவர் தொழலாம் (10) 6.04: பயணத்தில் இரு தொழுகைகளைச் சேர்த்து தொழலாம் (7) 6.05: உள்ளூரில் இருக்கும்போது இரு தொழுகைகளை இணைத்து தொழுதல் (10) 6.06: தொழுது முடித்தபின் வலம், இடம் திரும்பி அமர்தல் (3) 6.07: இமாமுக்கு வலப்பக்க வரிசையில் நிற்பது விரும்பத்தக்கது (1) 6.08: இகாமத் கூறத் தொடங்கி விட்டால் நஃபில் தொழுவது வெறுக்கத்தக்கது (5) 6.09: பள்ளிவாசலுக்குள் நுழையும்போது கூறவேண்டிய துஆ (1) 6.10: பள்ளிக் காணிக்கை தொழுகை தொடர்பாக (4) 6.11: பயணத்திலிருந்து திரும்பியவர் இரண்டு ரக்அத் தொழுதல் (3) 6.12: முற்பகல் (ளுஹா) தொழுகை எண்ணிக்கை (11) 6.13: ஃபஜ்ருடைய இரு ரக்அத் சுன்னத் தொழுகை (15) 6.14: சுன்னத் தொழுகைகளின் சிறப்பும் எண்ணிக்கைகளும்! (3) 6.15: நஃபில் தொழுகைகளைத் தொழும் முறைகள் (14) 6.16: இரவுத் தொழுகை (18) 6.17: இரவுத் தொழுகையின் ஒருங்கிணைந்த விபரங்கள் (4) 6.18: அவ்வாபீன் தொழுகை (2) 6.19: இரவுத் தொழுகை, வித்ருத் தொழுகை ரக்அத்கள் (16) 6.20: வித்ருத் தொழுகை நேரம் (2) 6.21: தொழுகையில் மிகச் சிறந்தது (2) 6.22: இரவில் பிரார்த்தனை ஏற்கப்படும் நேரம் (2) 6.23: இரவின் இறுதி நேரத்தில் பிரார்த்தனை (5) 6.24: ‘கியாமு ரமளான்(தராவீஹ்) தொழ ஆர்வமூட்டல் (8) 6.25: இரவுத் தொழுகையில் பிரார்த்திப்பதும் நின்று வணங்குவதும் (17) 6.26: இரவுத் தொழுகையில் நீண்ட நேரம் (நின்று) குர்ஆன் ஓதுவது (2) 6.27: தொழாமல் விடியும்வரை உறங்குபவர் (3) 6.28: கூடுதலான நஃபில் தொழுகைகள் (6) 6.29: நற்செயல்களை வழக்கமாகச் செய்வதன் சிறப்பு. (4) 6.30: இபாதத் தூக்கத்தால் தடைப்பட்டால்… (5) 6.31: குர்ஆனின் தொடர்பைப் பற்றிப் பிடித்துக்கொள்ளக் கட்டளை (7) 6.32: குர்ஆனை இனிய குரலில் ஓதுவது விரும்பத் தக்கதாகும் (5) 6.33: மக்கத்து வெற்றி நாளில்… (2) 6.34: குர்ஆனை ஓதுவதால் இறங்கும் அமைதி (3) 6.35: குர்ஆனை மனனமிட்டவரின் சிறப்பு (1) 6.36: குர்ஆனை ஓதுகின்ற இருவகையினரின் தனிச் சிறப்புகள் (1) 6.37: குர்ஆனில் தேர்ந்த மேன்மக்கள் முன்னிலையில் குர்ஆன் ஓதுவது (2) 6.38: குர்ஆனைச் செவியேற்பதன் சிறப்பு (3) 6.39: குர்ஆனைக் கற்பது மற்றும் ஓதுவதன் சிறப்பு (2) 6.40: குர்ஆன் ஓதுவதன் சிறப்பும் அல்பகரா அத்தியாயத்தின் சிறப்பும் (2) 6.41: ஸூரத்துல் ஃபாத்திஹா, அல்பகரா அத்தியாயத்தின் இறுதி வசனங்களின் சிறப்பு (2) 6.42: ஸூரத்துல் கஹ்ஃப் மற்றும் ஆயத்துல் குர்ஸீ ஆகியவற்றின் சிறப்பு (3) 6.43: குல் ஹுவல்லாஹு அஹது (அத்தியாயத்தை) ஓதுவதன் சிறப்பு (4) 6.44: அல்முஅவ்விதத்தைன் (பாதுகாவல்) அத்தியாயங்களை ஓதுவதன் சிறப்பு (2) 6.45: குர்ஆனின்படி தாமும் செயல்பட்டுப் பிறருக்கும் அதைக் கற்பிப்பவரின் சிறப்பு (4) 6.46: குர்ஆன் ஏழு (வட்டார) மொழிநடையில் அருளப்பெற்றுள்ளது என்பதன் விளக்கம் (4) 6.47: குர்ஆனை வேகமாக ஓதுவதைத் தவிர்த்தல் (4) 6.48: குர்ஆன் ஓதும் முறைகளுள் சில (4) 6.49: தொழத் தடுக்கப்பட்ட நேரங்கள். (8) 6.50: அம்ரு பின் அபஸா (ரலி) இஸ்லாத்தை ஏற்றமை (1) 6.51: சூரியன் உதிக்கும் நேரத்தையும் மறையும் நேரத்தையும் தேர்ந்தெடுத்துத் தொழாதீர்கள்! (2) 6.52: நபி (ஸல்) அஸ்ருக்குப் பிறகு தொழுதுவந்த இரண்டு ரக்அத்கள் எவை? (5) 6.53: மஃக்ரிப் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவது விரும்பத் தக்கது (2) 6.54: பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையிலுள்ள தொழுகை (1) 6.55: அச்சச் சூழல் தொழுகை (8) 7.01: வெள்ளிக்கிழமையில் குளிப்பது வயதுவந்த ஒவ்வோர் ஆண் மீதும் கடமை (7) 7.02: வெள்ளிக்கிழமையில் பல் துலக்குவதும் நறுமணம் பூசுவதும் (4) 7.03: வெள்ளிக்கிழமை சொற்பொழிவின்போது அமைதி காத்தல் (2) 7.04: வெள்ளிக்கிழமையில் (பிரார்த்தனை ஏற்கப்படுவதற்கு) உள்ள ஒரு நேரம் (4) 7.05: வெள்ளிக்கிழமையின் சிறப்பு (2) 7.06: இந்தச் சமுதாயத்தின் (சிறப்பு வழிபாட்டு) நாள் வெள்ளிக்கிழமை (4) 7.07: வெள்ளிக்கிழமை (தொழுகைக்கு) முன்னதாகச் செல்வதன் சிறப்பு (2) 7.08: மௌனமாக (வெள்ளிக்கிழமை) உரையைச் செவியேற்பவரின் சிறப்பு (2) 7.09: சூரியன் (உச்சியிலிருந்து) சாயும்போது ஜும்ஆத் தொழுவது (5) 7.10: தொழுகையின் உரைகளும் இடையே (இமாம்) அமர்வதும் (3) 7.11: வியாபாரத்தையோ வேடிக்கையையோ கண்டால் (62:11ஆவது) இறைவசனம் (4) 7.12: ஜும்ஆத் தொழுகையை(த் தொழாமல்) கைவிடுவதற்குக் கண்டனம் (1) 7.13: (ஜும்ஆத்) தொழுகையையும் (குத்பா) உரையையும் சுருக்கமாக அமைத்தல் (11) 7.14: இமாம் (ஜும்ஆ) உரை நிகழ்த்தும்போது காணிக்கை தொழுகை (6) 7.15: பொது போதனைக்கு நடுவில் தனி போதனை (1) 7.16: ஜும்ஆத் தொழுகையில் ஓத வேண்டியவை (3) 7.17: வெள்ளிக்கிழமை (ஃபஜ்ருத் தொழுகையில்) ஓத வேண்டியவை (3) 7.18: ஜும்ஆவுக்குப் பின் தொழ வேண்டியவை (16) 8.01: பெருநாள் திடலில் பெண்கள் பங்கேற்பது (3) 8.02: பெருநாள் திடலில் தொழுகைக்கு முன்போ பின்போ தொழக் கூடாது (1) 8.03: இரு பெருநாள் தொழுகைகளில் ஓதக் கூடியவை (2) 8.04: பெருநாட்களில் பாவமில்லா விளையாட்டுகளில் ஈடுபட அனுமதி (7) 9.00: இமாம் (மழைத் தொழுகையில்) மேல்துண்டை மாற்றிப் போட்டுக் கொள்வது (4) 9.01: மழைவேண்டிப் பிரார்த்திக்கும்போது இருகைகளை உயர்த்துதல் (3) 9.02: மழைவேண்டிப் பிரார்த்தித்தல் (2) 9.03: கடும் காற்றையும் மேகத்தையும் காணும்போதும்.. மழை பெய்யும்போதும்.. (3) 9.04: கீழைக் காற்று (’ஸபா’) மற்றும் மேலைக் காற்று (’தபூர்’) பற்றிய குறிப்புகள் (1) 10.01: சூரிய கிரகணத் தொழுகை (7) 10.02: கிரகணத் தொழுகையின்போது மண்ணறை வேதனை பற்றி நினைவு கூர்வது (1) 10.03: கிரகணத் தொழுகையின்போது சொர்க்கமும் நரகமும் (6) 10.04: கிரகணத் தொழுகையில் எட்டு ருகூஉகளும் நான்கு ஸஜ்தாக்களும்.. (2) 10.05: கிரகணத் தொழுகைக்காக, “அஸ்ஸலாத்து ஜாமிஆ” அறிவிப்பு.. (8) 11.01: மரணத் தருவாயில் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (எனும் கலிமா)வை நினைவூட்டுதல் (2) 11.02: துன்பம் நேரும்போது வேண்டக்கூடிய பிரார்த்தனை (2) 11.03: நோயாளியிடமும் மரணத் தருவாயில் இருப்பவரிடமும் சொல்ல வேண்டியவை (1) 11.04: உயிர் பிரிந்தவுடன் இறந்தவருக்குச் செய்ய வேண்டியவை (1) 11.05: இறப்பவரின் பார்வை தனது உயிரை நோக்கி நிலைகுத்தி நிற்றல் (1) 11.06: இறந்தவருக்காக அழுவது (3) 11.07: நோயாளிகளைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தல் (1) 11.08: பொறுமை என்பது துன்பத்தின் முதல் நிலையில் கடைப்பிடிப்பதாகும் (2) 11.09: இறந்தவருக்காக ஒப்பாரி வைத்து அழுதால்.. (14) 11.10: ஒப்பாரிக்குக் கடுமையான கண்டனம் (5) 11.11: ஜனாஸாவின் இறுதி ஊர்வலத்தைப் பின்தொடர்ந்து செல்வதற்குப் பெண்களுக்குத் தடை (2) 11.12: மையித்தைக் குளிப்பாட்டுதல் (4) 11.13: மய்யித்திற்கு ‘கஃபன்’ உடை அணிவித்தல் (4) 11.14: மய்யித்தை மூடிவைத்தல் (1) 11.15: மய்யித்திற்கு அழகிய முறையில் கஃபன் அணிவித்தல் (1) 11.16: இறந்தவர் உடலைத் துரிதமாக அடக்கம் செய்தல் (2) 11.17: ஜனாஸாத் தொழுகையின் மற்றும் ஜனாஸாவைப் பின்தொடர்வதன் சிறப்பு (6) 11.18: மய்யித்துக்காக நூறு பேர் தொழுது செய்யும் பரிந்துரை ஏற்கப்படும் (1) 11.19: மய்யித்துக்காக நாற்பது பேர் பரிந்துரை (1) 11.20: இறந்தவர் குறித்துப் புகழ்ந்து, அல்லது இகழ்ந்து பேசப்படுதல் (1) 11.21: ஓய்வு பெற்றவரும் ஓய்வளித்தவரும் (1) 11.22: ஜனாஸாத் தொழுகையில் சொல்ல வேண்டிய தக்பீர்கள் (6) 11.23: மண்ணறை அருகில் (ஜனாஸாத் தொழுகை) தொழுவது (4) 11.24: ஜனாஸாவுக்காக எழுந்து நிற்பது (7) 11.25: ஜனாஸாவுக்காக எழுந்து நிற்கும் வழக்கம் மாற்றப்பட்டது (3) 11.26: இறந்தவருக்காக ஜனாஸாத் தொழுகையில் செய்யும் பிரார்த்தனை (2) 11.27: ஜனாஸாத் தொழுகையின்போது இமாம் எந்த இடத்தில் நிற்க வேண்டும்? (2) 11.28: ஜனாஸாத் தொழுகை தொழுதுவிட்டு வாகனத்தில் ஏறித் திரும்பிச் செல்லலாம் (2) 11.29: உட்குழியும் மையித்தின் மேல் செங்கற்களை அடுக்குவதும் (1) 11.30: கப்றுக் குழியினுள் போர்வையை விரித்து (மையித்தை) வைப்பது (1) 11.31: கப்றைத் தரை மட்டமாக்க உத்தரவு (2) 11.32: கப்றுகளைக் காரையால் பூசுவதோ அதன் மீது கட்டடம் எழுப்புவதோ கூடாது (2) 11.33: கப்றின்மீது அமர்வதும் அதன் மீது தொழுவதும் தடுக்கப்பட்டவை (3) 11.34: பள்ளிவாசலில் ஜனாஸாத் தொழுகை நடத்துவது (3) 11.35: மையவாடிக்குள் கூற வேண்டியதும் பிரார்த்திப்பதும் (3) 11.36: நபி (ஸல்), தம் தாயாரின் கப்றைக் காண்பதற்கு இறைவனிடம் அனுமதி கோரியது (3) 11.37: தற்கொலை செய்தவருக்கு, (ஜனாஸா) தொழுகையைக் கைவிட்டது (1) 12.00: பல வகை வள வரிகள் (5) 12.01: பத்து சதவீத ஸகாத்; அல்லது ஐந்து சதவீத ஸகாத் (1) 12.02: ஒரு முஸ்லிம் மீது அவர்தம் அடிமைக்காகவும் குதிரைக்காகவும் ஸகாத் கடமை இல்லை (3) 12.03: ஸகாத்தைச் சமர்ப்பிப்பதும் ஸகாத் கொடுக்க மறுப்பதும் (1) 12.04: பெருநாள் தர்மமாகப் பேரீச்சம் பழம், பார்லி (10) 12.05: பெருநாள் தொழுகைக்கு முன்பே பெருநாள் தர்மத்தை வழங்க கட்டளை (2) 12.06: ஸகாத் வழங்க மறுப்பது குற்றமாகும் (4) 12.07: ஸகாத் வசூலிப்பவர்களிடம் கனிவுடன் நடந்துகொள்வது (1) 12.08: ஸகாத் வழங்காதவருக்கான கடும் தண்டனை (2) 12.09: தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டல் (2) 12.10: செல்வத்தைச் சேமித்தோர் பற்றிய கண்டனம் (2) 12.11: தர்மம்: ஆர்வமூட்டலும் நற்கூலி உண்டு என்ற நற்செய்தியும் (2) 12.12: செலவழிப்பதன் சிறப்பும் வழங்காதவனின் பாவமும் (4) 12.13: தமக்கும், குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்குமாக செலவிடுதல் (1) 12.14: இணை வைக்கும் உறவுகளுக்குச் செலவழிப்பதன் சிறப்பு (8) 12.15: இறந்தவருக்காகத் தர்மம் செய்தல் (1) 12.16: எல்லா நல்லறமும் ஸதகா எனப்படும் (5) 12.17: அறவழியில் செலவு செய்பவரும் செய்யாதவரும் (1) 12.18: தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டல் (5) 12.19: தர்மம் (இறைவனிடம்) ஏற்கப்படுவதும் வளர்வதும் (3) 12.20: இன் சொல்லையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து பாதுகாப்பு பெறல் (5) 12.21: தர்மத்தின் அளவில் குறை காண தடை (1) 12.22: பாலுக்காக இரவல் வழங்கப்படும் கால்நடைகளின் சிறப்பு (2) 12.23: வள்ளலுக்கும் கஞ்சனுக்குமான உதாரணம் (3) 12.24: உரியவருக்குத் தர்மம் சேரவில்லையேனும் பலன் (1) 12.25: உரிமையாளரின் அனுமதியுடன் தர்மம் செய்தவருக்கும் பலன் (3) 12.26: ஓர் அடிமை தன் உரிமையாளரின் செல்வத்திலிருந்து (அறவழியில்) செலவழித்தல் (3) 12.27: தர்மத்தையும் இதர நற்செயல்களையும் இணைத்துச் செய்தவர் (3) 12.28: அறவழியில் தாராளமாக செலவிடலும் கணக்கு பார்ப்பது விரும்பத்தக்கதல்ல என்பதும் (3) 12.29: சிறிய அளவு தர்மம் (1) 12.30: இரகசியமாகத் தர்மம் செய்வதன் சிறப்பு (1) 12.31: மிகச் சிறந்த தர்மம் (2) 12.32: சிறந்த கை (4) 12.33: யாசிப்பதற்குத் தடை (3) 12.34: ஏழை என்பவன், அடிப்படைத் தேவைகளுக்குப் போதிய பொருளாதாரம் இல்லாதவன் (2) 12.35: மக்களிடம் யாசிப்பது வெறுக்கப்பட்டதாகும் (6) 12.36: யாருக்கு யாசிக்க அனுமதி? (1) 12.37: எதிர்பார்ப்பு இல்லாமல், யாசிக்காமல் வாழ்பவருக்கு வழங்கப்பட்டால் பெற்றுக்கொள்ளலாம் (4) 12.38: உலகாதாயத்தின் மீது பேராசை கொள்வது விரும்பத் தக்கதன்று (2) 12.39: இரு ஓடைகள் இருந்தாலும் மூன்றாவது ஓடையை எதிர்பார்த்தல் (4) 12.40: வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று (1) 12.41: இவ்வுலகத்தின் கவர்ச்சி குறித்து அஞ்சுதல் (3) 12.42: சுயமரியாதை மற்றும் பொறுமையின் சிறப்பு (1) 12.43: போதுமான வாழ்வாதாரமும் போதுமென்ற மனமும் (4) 12.44: அருவருப்பாகப் பேசி, கடுஞ் சொற்களால் கேட்டவருக்கும் தானம் வழங்குவது (4) 12.45: இறைநம்பிக்கை, (வறுமையால்) கேள்விக்குள்ளாக்கப்படுபவருக்கு உதவுதல் (1) 12.46: இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு வழங்கலும் இறை நம்பிக்கை வலுவானவர் பொறுமை கொள்ளலும் (8) 12.47: காரிஜிய்யாக்களும் அவர்களின் தன்மைகளும் (10) 12.48: காரிஜிய்யாக்களைக் கொல்லுவதற்கு ஊக்கப்படுத்துதல் (4) 12.49: காரிஜிய்யாக்கள் படைப்பினங்களிலேயே தீயவர்கள் ஆவர் (3) 12.50: தூதரின் குடும்பத்தார் ஸகாத் பெறுவதற்குத் தடை (6) 12.51: நபி (ஸல்) குடும்பத்தாரைத் தர்மப் பொருட்கள் வசூலிக்கப் பயன்படுத்தலாகாது (1) 2.26: அசுத்தமான கையைப் பாத்திரத்தில் நுழைத்தல் (2) 2.25: ஒருநாள் தொழுகைகளை ஒரு உளூவில் தொழ அனுமதி (1) 2.24: காலுறையில் மஸஹு செய்து தொழுவதற்கான வரம்பு (1) 2.23: முன் தலை மற்றும் தலைப்பாகை மீது மஸஹு செய்தல் (4) 2.22: காலுறையில் மஸஹு செய்தல் (9) 2.21: தண்ணீரால் கழுவித் துப்புரவு செய்தல் (3) 2.20: மலம் கழிப்பதற்குத் தடையுள்ள இடங்கள் (1) 2.19: செயல்களை வலப் புறமிருந்து தொடங்குதல். (2) 2.18: வலக் கரத்தால் கழுவத் தடையானவை (3) 2.17: கழிப்பிடத்தில் துப்புரவு செய்தல் (7) 2.16: இயற்கை மரபுகள் (8) 2.15: பல் துலக்குதல் (7) 2.14: சிரமகாலங்களிலும் முழுமையாக ஒளு செய்வதன் சிறப்பு (1) 2.13: உளூவில் தண்ணீர் படும் இடங்களில் ஒளி படர்தல் (1) 2.12: உளூவில் உறுப்புகளை அதிகப்படுத்திக் கழுவுதல் (6) 2.11: உளூ செய்த நீரோடு வெளியேறும் பாவங்கள் (2) 2.10: உளூவில் உறுப்புகள் முழுவதும் கழுவுதல் (1) 2.09: இரு கால்களையும் முழுமையாகக் கழுவுதல் கட்டாயம் (6) 2.08: சுத்தம் செய்யும் போது ஒற்றைப்படையாக செய்தல் (5) 2.07: நபி (ஸல்) அவர்கள் செய்த அங்கத் தூய்மை (உளூ) (2) 2.06: அங்கத் தூய்மை (உளூ) செய்தபிறகு ஓதப்படும் பிரார்த்தனை (1) 2.05: சிறு பாவங்களுக்கான பரிகாரங்கள் (3) 2.04: அங்கத்தூய்மையின் சிறப்பும் அதன் பின் தொழுவதன் சிறப்பும் (9) 2.03: அங்கத் தூய்மை (உளூ) செய்முறையும் அதை நிறைவாகச் செய்வதும் (2) 2.02: தொழுகைக்குக் கட்டாயமான (அங்கத்) தூய்மை (2) 2.01: அங்கத்தூய்மை(உளூ)யின் சிறப்பு (1) 1.96: மறுமையில் ஆதம்(அலை) அவர்களுக்கு இடப்படும் கட்டளை (1) 1.95: சொர்க்கவாசிகளில் பாதிபேர் (3) 1.94: விசாரணையோ வேதனையோ இன்றி சொர்க்கம் செல்வோர் (7) 1.93: நட்பு கொள்ளத் தக்கவர்களும் தகாதவர்களும் (1) 1.92: இறைமறுப்பாளரின் நற்செயல்கள் பலனளிக்காது (1) 1.91: நரகவாசிகளிலேயே மிகக்குறைவான வேதனை அனுபவிப்பவர். (4) 1.90: அபூதாலிபுக்காக நபி(ஸல்) அவர்களின் பரிந்துரை (3) 1.89: நெருங்கிய உறவினருக்கு எச்சரிக்கை செய்தல் (5) 1.88: இறைமறுப்பாளருக்கு எந்தப் பரிந்துரையும் பலனளிக்காது (1) 1.87: தம் சமுதாயத்தார் மீது நபி(ஸல்) அவர்களுக்குள்ள பரிவு (1) 1.86: நபி(ஸல்) அவர்களின் பரிந்துரைப் பிரார்த்தனை! (8) 1.85: சொர்க்கத்திற்காகப் பரிந்துரைக்கும் முதல் மனிதர் (4) 1.84: சொர்க்கவாசிகளுள் ஆகக் குறைந்த பதவி (14) 1.83: இறுதியானவராக வெளியேறும் நரகவாசி. (3) 1.82: ஷஃபாஅத்(பரிந்துரை) செய்யப்படுபவர்கள் (2) 1.81: இறைவனைக் காணும் வழிமுறை (3) 1.80: இறைவனைக் காண்பதற்கான சான்று (2) 1.79: அல்லாஹ்வின் பார்வை பற்றிய விளக்கம் (2) 1.78: மிஃராஜின் போது நபி(ஸல்) கண்டது பற்றிய விளக்கம் (2) 1.77: நபி(ஸல்) அவர்கள் இறைவனைப் பார்த்தார்களா? என்பது பற்றிய விளக்கம் (5) 1.76: சித்ரத்துல் முந்தஹா(இலந்தை மரம்) பற்றிய குறிப்பு! (4) 1.75: ஈஸா(அலை) மற்றும் தஜ்ஜால் பற்றிய குறிப்புகள் (6) 1.74: விண்ணுலகப் பயணமும் தொழுகை கடமையாக்கப்படலும் (12) 1.73: வேத வெளிப்பாடு (வஹீ) தொடங்குதல் (3) 1.72: இறை நம்பிக்கை ஏற்கப்படாத காலகட்டம் (5) 1.71: ஈசா(அலை) இஸ்லாமிய நெறிப்படி நீதி வழங்குதல் (6) 1.70: தூதுத்துவம் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது (3) 1.69: இறைச்சான்றுகள் மூலம் மன அமைதி (1) 1.68: ஒருவரை இறைநம்பிக்கையாளர் என்று முடிவு செய்தல் (2) 1.67: அச்சநேரத்தில் இறைநம்பிக்கையாளர் நிலை (1) 1.66: இறுதிக் காலத்தில் இறை நம்பிக்கை (அற்றுப்) போய் விடுவது. (2) 1.65: இஸ்லாத்தின் மீளெழுச்சி. (3) 1.64: உள்ளங்களில் குழப்பங்கள் தோன்றுவது. (2) 1.63: குடிமக்களைச் சுரண்டும் ஆட்சியாளன் நரகத்திற்குரியவன் ஆவான். (3) 1.62: செல்வத்தைக் காக்கப் போராடியவர் மற்றும் பிறர் செல்வத்தைப் பறிக்க முனைந்தவர் (2) 1.61: மாற்றாரின் பொருளைக் கைப்பற்றுபவர் நிலை. (5) 1.60: இறைநம்பிக்கையில் தடுமாற்றம் ஏற்பட்டால்.. (8) 1.59: நல்ல-தீய எண்ணங்களுக்கான கூலி (5) 1.58: தீய எண்ணங்களைச் செயல்படுத்தாமல் இருத்தல் (2) 1.57: தாங்க முடியாத சுமை? (2) 1.56: இறை நம்பிக்கையின் வாய்மையும் தூய்மையும் (1) 1.55: இறைமறுப்பாளராக இருந்தபோது செய்த நல்லறங்கள் (3) 1.54: முன் செய்த பாவங்கள் (2) 1.53: அறியாமை காலத்தில் செய்த தீமைகள் (2) 1.52: இறைநம்பிக்கையாளரின் அச்சம் (1) 1.51: குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் நற்செயல் புரிய விரைதல் (1) 1.50: மறுமை நெருங்கும் வேளையில் வீசும் காற்று (1) 1.49: ஹிஜ்ரத்தில் தற்கொலை செய்து கொண்டவரின் நிலை (1) 1.48: கையாடல் செய்பவரும் இறைநம்பிக்கையாளரும் (2) 1.47: தற்கொலை செய்பவரும் கட்டுப்பட்டு வாழ்பவரும் (7) 1.46: மூன்று பெரும் தவறான செயல்கள் (4) 1.45: புறங்கூறுவது வன்மையாகத் தடை செய்யப் பட்டது (3) 1.44: துக்க வேளைகளில் தடை செய்யப்பட்ட செய்கைகள்! (3) 1.43: முஸ்லிம்களை வஞ்சித்தவர் நிலை! (2) 1.42: முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர் நிலை! (3) 1.41: “லா இலாஹ இல்லல்லாஹ்” கூறியவரைக் கொல்லத்தடை! (4) 1.40: இணைவைத்தலின் விளைவுகள் (5) 1.39: தற்பெருமை (3) 1.38: பெரும் பாவங்கள் (5) 1.37: பாவங்களில் மிகவும் அருவருப்பானது (2) 1.36: நற்செயல்களில் சிறந்தது (6) 1.35: தொழுகையை விடுதலும் குஃப்ரும் (3) 1.34: இறைநம்பிக்கை குறைவும் குஃப்ர் எனும் சொல்லும் (1) 1.33: அன்ஸாரிகளையும் அலி(ரலி)யையும் நேசித்தல் (6) 1.32: மழையும் இறைமறுப்பும் (4) 1.31: ஓடிப்போன அடிமை (3) 1.30: இறைமறுப்பின் அடையாளங்கள் (1) 1.29: இறைமறுப்பாளர்களாய் மாறுதல் (2) 1.28: முஸ்லிமோடு போரிடுதல் (1) 1.27: தந்தையை வெறுப்பவன் நிலை (4) 1.26: முஸ்லிமை நோக்கி காஃபிர் என அழைத்தல் (2) 1.25: நயவஞ்சகனின் குணங்கள். (3) 1.24: இறைநம்பிக்கையில் குறைவு ஏற்படல் (2) 1.23: மார்க்கம் என்பதே நலன் நாடுவதுதான். (4) 1.22: இறைநம்பிக்கையாளர்களை நேசித்தல் (1) 1.21: இறைநம்பிக்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வு (9) 1.20: நன்மையை ஏவுதல், தீமையைத் தடுத்தல் (2) 1.19: நல்லவற்றிற்கு ஆர்வமூட்டுதல் (3) 1.18: அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரக் கூடாது (1) 1.17: தமக்கு விரும்வுவதைச் சகோதரனுக்கும் விரும்புதல் (2) 1.16: தூதரை நேசிப்பது கடமை (2) 1.15: இறைநம்பிக்கையின் இனிமை (2) 1.14: இஸ்லாம் கூறும் நல்லறங்களில் சிறந்தது (4) 1.13: இஸ்லாத்தின் அனைத்துப் பண்புகளின் கலவை (1) 1.12: இறைநம்பிக்கையின் கிளைகள் (5) 1.11: இறைநம்பிக்கையைச் சுவைப்பவர் (1) 1.10: ஓரிறை கோட்பாட்டில் மரணித்தவர் நிலை (11) 1.09: இணை வைத்த நிலையில் மரணித்தவர் நிலை (3) 1.08: ஜிஸ்யா செலுத்தாதவர் மீது போர் புரிதல் (6) 1.07: இஸ்லாத்தை ஏற்க அழைப்பு விடுத்தல் (2) 1.06: அறியாதவர்களுக்கு அறிவித்தல் (4) 1.05: இஸ்லாமியக் கடமைகள் (4) 1.04: சொர்க்கம் செல்பவர் (7) 1.03: இஸ்லாத்தின் தூண்கள் (2) 1.02: தொழுகை பற்றிய விளக்கம் (2) 1.01: இறைநம்பிக்கை குறித்த விளக்கம் (7)
செம்பருத்திப் பூ இந்தியா மற்றும் இலங்கையில் அதிகமாக வளர்க்கப்படுகிறது. இதன் தாயகம் கிழக்கு ஆசியா; மலேசியாவின் தேசிய மலர். சீன ரோஜா என்ற வேறு பெயரும் உண்டு. அதனாலோ என்னவோ சீனா, இது எங்களுக்குச் சொந்தமானது என்று கூறுகிறது. இது ஒருபுறமிருக்க, செம்பருத்தி என்பது வேறு, செம்பரத்தை என்பது வேறு என்ற தகவல் நம்மில் பலருக்கு தெரியாது. செம்பருத்தி என்பது பருத்தியில் ஒருவகை. அது இப்போது அழிந்து போய் விட்டது. செம்பரத்தை என்பதே இன்றைக்கு செம்பருத்தி என அழைக்கப்படுகிறது. சித்தர்கள் செம்பருத்தியை தங்கபஸ்பம் என்று அழைக்கிறார்கள். அந்த அளவுக்கு மருத்துவக் குணங்கள் நிறைந்தது செம்பருத்தி. செம்பருத்தி பூவின் சாற்றுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து வாணலியில் இட்டு காய்ச்சி, வடி கட்டி, கண்ணாடி பாட்டில்களில் பத்திரப்படுத்த வேண்டும். இந்த எண்ணெயை தினமும் தடவி வர தலை முடி கருத்து அடர்த்தியாக வளரும். மாதவிடாய் காலத்தில் அதிகமாக உண்டாகும் குருதி பெருக்கிற்கு பத்து செம்பருத்தி பூவின் இதழ்களை நெய்யில் வதக்கி சாப்பிட வேண்டும். செம்பருத்தி பூ இதழின் வடிசாறு சிறுநீர் கழிக்கும் பொழுது உண்டாகும் எரிச்சலை நீக்கும். நீர் சுருக்கை போக்கி சிறுநீரை பெருக்கி நஞ்சுகளை வெளியேற்றும். இனப்பெருக்க உறுப்பு நோய்களுக்கும் இது மருந்தாகின்றது. செம்பருத்தி பூ இதய நோய் அணுகாமல் தடுக்கும் அற்புதமான டானிக். செம்பருத்தி பூவைப் பசுமையாகவோ, காய வைத்து பொடி செய்தோ வைத்துக் கொண்டு, பாலில் கலந்து காலை, மாலை வேளைகளில் குடித்து வர இதய பலவீனம் தீரும். உடல் சூடு காரணமாக பலருக்கு வாய்புண், வயிற்றுப்புண் உண்டாகும். அவர்கள் தினம் 10 பூவின் இதழ்களை மென்று சாப்பிட்டால் புண்கள் ஆறும். ஒரு மாத காலம் தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும். செம்பருத்தி பூ குளிர்ச்சி பொருந்தியது. சருமத்திற்கு இதமும், சுகமும் அளித்து ரத்தத்தை சுத்தம் செய்து உடலை பளபளப்பாக்கும். செம்பருத்தி பூக்களை அரைத்து தலையில் தடவி ஊற வைத்துக் குளிக்க தலைப் பேன்கள் குறையும். 10 செம்பருத்திப் பூ இதழ்களை நீரில் இட்டு காய்ச்சி குடித்து வர சிறு நீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் குணமாகும். செம்பருத்தி பூ, உடல் வெப்பத்தை அகற்றி குளிர்ச்சியை உண்டாக்கும். கருப்பை நோய்கள், இதய நோய்கள், ரத்த அழுத்தம் போன்றவைகளுக்கு சிறந்த நிவாரணியாகும். செம்பருத்தி பூவின் இதழ்களை 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து, காலை நேரத்தில் அருந்தி வந்தால், ரத்த அழுத்தம் சீராகும். செம்பருத்தி பூத்தூளுடன் சம எடை அளவு மருதம் பட்டைத் தூள் கலந்து 1 தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட, இரத்தத்தில் இரும்புச் சத்து அதிகரித்து இரத்த சோகை நோய் குறையும். சிலர் காய வைத்த செம்பருத்திப் பூக்களுடன் ஆவாரம்பூ, பாசிப்பயறு, கறிவேப்பிலை சேர்த்துப்பொடியாக்கி சோப்புக்குப் பதிலாக தலை முதல் கால் வரை பூசிக் குளிப்பார்கள். இதனால் தோல் நோய்களில் இருந்து விடுபடுவதோடு, நோய் வராமலும் காத்துக் கொள்ளலாம். பெண்களுக்கு தலைமுடி பிரச்னை பெரும்பிரச்னை. முடி அதிகம் வளர வேண்டுமென்றால் இது கைகொடுக்கும். ஆனால் முடி அதிகம் வளர்ந்து சிலருக்கு ஈறும், பேனும் வந்து மிகுந்த அவதிக்குள்ளாவார்கள். அப்படிப்பட்டவர்கள் செம்பருத்திப் பூக்களைப் பறித்து இரவில் தலையில் சூடிக்கொண்டு அப்படியே படுத்து தூங்கி விட வேண்டும். இதேபோல் தொடர்ந்து செய்து வந்தால் பேன்கள் ஒழிவதோடு, பொடுகுத் தொல்லையும் நீங்கிவிடும். இதன் இலையை வெறுமனே அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் முடி பட்டுப்போன்று மென்மையாக மாறும். ஷாம்புகளை தலையில் தேய்த்து பக்க விளைவுகளால் அவதிப்படுவோர் அதுக்கு மாற்றாக செம்பருத்தியைப் பயன்படுத்தலாம்.
இந்தியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 19 நாடுகளின், ஐரோப்பிய கூட்டமைப்பும் ஒன்றிணைந்துள்ள ஜி-20 நாடுகளும் 2 நாள் உச்சி மாநாடு இந்தோனேசியாவில் பாலி தீவில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோபைடன், சீன அதிபர் ஜின்பிங், இங்கிலாந்து அதிபர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் மெக்ரான் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் பங்கேற்றார்கள். நேற்றைய மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, உக்ரைன்- ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தினார். மேலும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசினார். பின்னர் அமெரிக்கா அதிபர் ஜோபைடனுடன் பிரதமர் மோடி சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது இருதரப்பு உறவை வலுப்படுத்த ஆலோசனை நடத்தினார். மேலும் செனகல் அதிபர் மேக்சி சால், நெதர்லாந்து அதிபர் மார்க்ரூட் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் மெக்ரான் ஆகியோரை சந்துத்து நலம் விசாரித்தார். பிரதமர் மோடி இன்று பாலி தீவில் உள்ள அலையாத்தி காடுகளை பார்வையிட்டார். கடல் அரிப்பை தடுப்பது, கரியமில வாயுக்களை கட்டுப்படுத்துவது ஆகியவற்றில் அலையாத்தி காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதன் காரணமாக அந்த காடுகளை உலக நாடுகள் பராமரித்து அழிவில் இருந்து தடுக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் அலையாத்தி காடுகளை உலக நாடுகளின் தலைவர்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் அலையாத்தி காடுகளை பார்வையிட்டனர். தமிழ்நாட்டில் சுனாமி ஏற்பட்டபோது அரணாக இருந்து பாதிப்பை தடுத்ததில் அலையாத்தி காடுகள் முக்கிய பங்கு வகித்தன. மாநாட்டின் 2வது மற்றும் கடைசி நாளான இன்றும் பிரதமர் மோடி பல்வேறு நாட்டு தலைவர்களுடன் சந்தித்து பேசினார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், சிங்கப்பூர் பிரதமர் லீ ஹசின் லூக், ஜெர்மனி அதிபர் ஒலப் ஸ்கோல்ஸ், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அடுத்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்துகிறது. ஜி-20க்கு இந்தியா தலைமை தாங்குவதையடுத்து அதற்கான செயல்முறைகளை பிரதமர் மோடியிடம் இந்தோனேசியா அதிபர் விடோடோ முறைப்படி வழங்கினார். உச்சிமாநாட்டின் நிறைவு விழாவில் இந்தோனேசியா ஜனாதிபதி விடோடோ ஜி20 தலைவர் பதவியை இந்தியாவிடம் ஒப்படைத்தார். இதன்மூலம், டிசம்பர் 1ம் தேதி ஜி-20 தலைமை பதவியை இந்தியா அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது. இதன்மூலம், பிரதமர் மோடி உலக தலைவர்களின் தலைவரானார்.
சுசில் பிரேமஜயந்தவை பதவி நீக்குவதனால் இலங்கையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வைக்கான முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர், அரசாங்கத்தை விமர்சித்து பேசிய 24 மணித்தியாலங்களின் பின்னர் அவரது அமைச்சுப்பதவி ஜனாதிபதியினால் நீக்கப்பட்டுள்ளது. விமர்சனம் செய்ததற்காக சுசில் பிரேமஜயந்தவை நீக்கியவர்கள், அரசை தொடர்ந்து அதிகமாக விமர்சித்துவரும் நிமல் லன்சாவிற்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? தவறுகளை திருத்திக் கொண்டு, மக்களின் பிரச்சினையைத் தீர்த்தால் அரசாங்கத்தினால் முன்னோக்கிச் செல்ல முடியும் என்றும் மைத்திரி அறிவுறுத்தியுள்ளார். இதேவேளை, நாடு முழுவதும் வீடுகளில் எரிவாயு வெடிப்பு சம்பவங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக அவர் அரசாங்கத்தை விமர்சித்துள்ளார். Tags srilanka Newer Older Top Post Ad Below Post Ad உங்கள் பிரதேச செய்திகளை +94 751651409 என்ற இலக்கத்திற்கு வாட்ஸாப் செய்யுங்கள். செய்திகளை உடனுக்குடன் பெற எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்யுங்கள்.
தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தளபதி 63 படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் தளபதியின் அடுத்த படம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆம், தளபதி 64 படத்தில் விஜய் மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்கிறார் என்று தெரியவந்துள்ளது. மேலும், மோகன் ராஜாவிற்கு முன்பு தளபதி சிவாவிடம் தான் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார் என்று தெரிகிறது. ஆனால் சிவா தற்போது வேறு ஒரு படத்தில் சிக்கியதால், விஜய் படத்தை இயக்க முடியாமல் போய்விட்டதாம். இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் விஜய் அடுத்த படத்திலிருந்து அவரது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க உள்ளாராம். அந்த நிறுவனத்திற்கு கீழ் தான் அடுத்தடுத்த படங்களை தயாரிக்க போகிறாராம். இது பற்றிய முழு விவரங்கள் கீழே உள்ள வீடியோவில் இணைத்துள்ளேன், கிளிக் செய்து பார்க்கவும். #vijay64 #thalapathy64director #vijaynextwithmohanraja #vijaywithsiva #vijay64withmohanraja #vijaywithmohanrajasnext #vijayinsultedchowdary Related Posts tamil cinema news Post a Comment Popular Posts `` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு ஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்... விமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா அண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக... புத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி சட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா... கமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே கமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ... சற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும... ரஜினியா? கமலா? மக்கள் யாரை தேர்வு செய்வார்கள் இம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்... கமலை அசிங்கப்படுத்திய பாஜக! கமலின் பதில் என்ன? கமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B... சிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப... ஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...
அன்னையவர்கள் இளம் வயதிலேயே வாரி வழங்கும் வள்ளல் குணம் கொண்டவர்களாகத் திகழ்ந்தார்கள். ஏழைகளைத் தேடிச்சென்று உணவளிக்கும் உயர் குணத்தைக் கொண்டிருந்ததால் உம்முல் மஸாகீன் – ஏழைகளின் தாய் என்று அழைக்கப்படலானார்கள். முதலில் பிரபல்யமான நபி மணித்தோழர் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அம்மையாரை மணந்திருந்தனர். ஹிஜ்ரி 3ஆம் ஆண்டு நடைபெற்ற உஹத் யுத்தத்தில் கலந்து கொண்ட அப்துல்லாஹ் வீர மரணம் எய்தப்பெற, அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை மறுமணம் புரிந்தனர். எனினும் திருமணம் முடித்து இரண்டு அல்லது மூன்று மாதங்கள் மட்டுமே அன்னையவர்கள் அண்ணலாரோடு தம் வாழ்வினை பகிர்ந்து கொண்டார்கள். மதீனப் பெருநகரில் வைத்து ஹிஜ்ரி 04ஆம் ஆண்டு ரபீஉல் அவ்வல் மாதத்தில் அன்னையவர்கள் வபாத்தானார்கள். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்) ஜன்னத்துல் பகீஃ இல் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். இந்நேரத்தில் அன்னையவர்களுக்கு வயது முப்பதுதான். நபியவர்கள் காலத்திலேயே இம்மை வாழ்வைத் துறந்த மணவாட்டிகளில் கதீஜா அம்மையாருக்குப் பிறகு அன்னை ஜெய்னப் அவர்கள் மட்டுமே! எனவே அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தம் பொற்கரங்களால் இறுதிச் சடங்குகளை செய்கின்ற பாக்கியத்தினையும் அன்னை ஜெய்னப் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் பெற்றார்கள்.
37 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இரு ஐம்பொன் சிலைகள் அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்டு கோயில் நிர்வாகத்திடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. மதுரையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையின் இயக்குனர் ஜெயந்த் முரளி மற்றும் ஐஜி தினகரன் ஆகியோர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அவர்கள் கூறுகையில், "1985-ம் ஆண்டு தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் உள்ள அருள்மிகு நரசிங்கநாதர் கோயிலில் இருந்து 11-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட கங்காள நாதர் மற்றும் அதிகார நந்தி ஆகிய இரண்டு ஐம்பொன் சிலைகள் கடத்தப்பட்டு காணாமல் போனது. 1986-ம் ஆண்டு சிலைகளை மீட்க முடியாமல் உள்ளூர் காவல்துறையினரால் வழக்கு முடித்து வைக்கப்பட்ட நிலையில், இந்த இரண்டு சிலைகளும் தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகர அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. இவற்றை யார் கடத்தியது, எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. வெளி நாடுகளில் இருந்து இதுவரை 22 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த ஒரே ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக 10 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் சிலைகள் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளன. இன்னும் 40-க்கும் மேற்பட்ட சிலைகள் மீட்கப்பட வேண்டும். மதுரையிலுள்ள மரகதலிங்கம் ஒப்படைக்கப்பட்ட நபரிடம் இருந்து மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது" என்றனர். மேலும், "மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மயில் சிலைகள் காணாமல் போன வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தில் உள்ளது. தமிழகத்தில் உள்ள சிலைகள் கடத்தல் வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட சுபாஷ் கபூர் மீது மொத்தம் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையில் உள்ளார்" என்றனர். இதனைத் தொடர்ந்து, மீட்கப்பட்ட கங்காள நாதர் மற்றும் அதிகார நந்தி ஆகிய இரண்டு ஐம்பொன் சிலைகளையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறை இயக்குனர் ஜெயந்த் முரளி, காவல்துறை தலைவர் தினகரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மலைச்சாமி ஆகியோர் கோயில் செயல் அலுவலர் கண்ணதாசனிடம் ஒப்படைத்தனர்.
இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்பகுதியை மூடி உள்ள சளிச்சவ்வுகள் இந்த அமிலங்களின் தாக்குதலில் இருந்து இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதுகாக்கின்றன. இந்த சளிச்சவ்வுகள் சரிவர செயல்படாதபோது அல்லது சளிச்சவ்வுகளின் தொடர்ச்சியில் இடைவெளி (breakdown) ஏற்படும்போது அமிலமானது இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதித்து சிவந்து வீக்கம் மற்றும் வலியுடன் கூடிய புண்ணை (ulcer) ஏற்படுத்துகிறது. சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள் : அரை ஸ்பூன் சுக்குத்தூளைக் கரும்புச் சாற்றில் கலந்து காலை வேளையில் அருந்தலாம். ஏலம், அதிமதுரம், நெல்லி வற்றல், சந்தனம் வால்மிளகு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அதைப்போல இரண்டு பங்கு சர்க்கரை சேர்த்து, 2 கிராம் வீதம் 3 வேளை உண்ணலாம். கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மஞ்சள், திப்பிலி, சுக்கு சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகலாம். வால்மிளகைப் பொடித்து அரை ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம். பிரண்டையின் இளந்தண்டை இலையுடன் உலர்த்திப் பொடித்து சம அளவு சுக்குத் தூள், மிளகுத் தூள் கலந்து அதில் அரை ஸ்பூன் எடுத்து வெண்ணெயில் கலந்து உண்ணலாம். மணத்தக்காளிக் கீரையைப் பாசிப் பயிறு, நெய் சேர்த்துச் சமைத்து உண்ணலாம். பெருஞ்சீரகம், சுக்கு, மிளகு திப்பிலி, சம அளவு எடுத்துப் பொரித்து, 2 கிராம் எடுத்து, உணவிற்குப் பின் உண்ணலாம். சில்லிக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றை அரைத்து, சுண்டைக்காய் அளவு எடுத்துக் கருப்பட்டி சேர்த்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து உண்ணலாம். சேர்க்க வேண்டியவை : கோஸ், கேரட், வெண்பூசணி, தர்பூசணி, பப்பாளி, ஆப்பிள், நாவல், மாதுளம்பழம், வாழைப்பழம் தயிர், மோர். இள நுங்கு. தவிர்க்க வேண்டியவை : அதிகக் காரம், பொரித்த உணவுகள், அசைவ உணவுகள், தேன், புளி. கடைப்பிடிக்க வேண்டியவை : காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. உரிய நேரத்தில் உணவை உண்ண வேண்டும். பரபரப்பைத் தவிர்த்தல் அவசியம். தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். சரியான நேரத்துக்குத் தூக்கம் அவசியம்.
ஜேர்மனியிலும் உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்கள், ஜேர்மன் நகரமான கெம்னிட்ஸ் இன் (Chemnitz) பாசிசவாத வன்முறை காட்சிகளுக்கு தமது வெறுப்பையும் கோபத்தையும் வெளிப்படுத்தி உள்ளனர். ஆகஸ்ட் 27 அன்று, அந்நகர் எங்கிலும் அணிவகுத்துச் சென்ற ஆயிரக்கணக்கான நவ-நாஜிக்கள், போலிஸாரால் தொந்தரவுக்கு உள்ளாக்கப்படாமல் ஹிட்லர் வணக்கம் செய்ததுடன், வெளிநாட்டவர்கள் என்று அடையாளம் கண்டவர்களைத் தாக்கினார்கள். சமீபத்திய நாட்களில், பத்தாயிரக் கணக்கானவர்கள் இந்த மிதமிஞ்சிய வலதுசாரி வன்முறைக்கு எதிராக ஜேர்மனி எங்கிலும் ஆர்ப்பாட்டங்களில் பங்கெடுத்துள்ளனர். ஆனால் பாசிசவாத அடாவடித்தனத்தை நிறுத்த தார்மீகரீதியான கோபம் மட்டும் போதுமானதல்ல: அதன் மீள்எழுச்சிக்கான அரசியல் வேர்களைப் புரிந்து கொள்வது அவசியமாகும். 1930 களைப் போல் அல்லாமல், நாஜிக்கள் இன்று ஒரு பரந்துபட்ட இயக்கமாக இல்லை, மாறாக வெறுக்கப்படும் ஒரு சிறுபான்மையாக உள்ளனர். ஆனால் இது அவர்களை அபாயம் குறைந்தவர்களாக ஆக்கிவிடாது. அவர்கள் ஸ்தாபக கட்சிகளின் அரசியலில் இருந்தும் மற்றும் அரசு எந்திரத்தில் இருந்து அவர்கள் பெறும் ஆதரவிலிருந்தும் தங்களின் பலத்தைப் பெறுகிறார்கள். அவர்கள் போலிஸ், இரகசிய சேவை மற்றும் அரசாங்கத்தில் அவர்களின் நண்பர்களைக் கொண்டிருப்பதால் பலமாக உணர்கிறார்கள். கெம்னிட்ஸ் இல் நாஜி அணிவகுப்புக்கு முன்னதாக வலதுசாரி தீவிரவாத அரசியலை ஊக்குவிப்பதற்கான பல ஆண்டுகால பிரச்சாரம் நடந்தது. எட்டாண்டுகளுக்கு முன்னர், சமூக ஜனநாயக கட்சி (SPD) தலைவர் திலோ சராஸின் (Thilo Sarrazin) எழுதிய "ஜேர்மனி தன்னைத்தானே அழித்துக் கொள்கிறது" என்ற நூல் வெளிநாட்டவர் விரோத மனோபாவம் மற்றும் இனவாதத்திற்கு உத்தியோகபூர்வமாக புத்துயிரூட்ட கதவுகளைத் திறந்துவிட்டது. ஜேர்மன் சமூகம் வெளிநாட்டவர்களால் அழிக்கப்பட்டு வருவதாக வாதிட்ட இந்நூலின் முதல் பிரதி புத்தக நிலையங்களை எட்டுவதற்கு முன்னரே, முக்கிய கட்டுரைகளிலும் உரையாடல் நிகழ்ச்சிகளிலும் அது பெரியளவில் விற்பனையாகி வரும் நூலாக பாராட்டப்பட்டது. 2013 இல், ஜேர்மன் ஜனாதிபதி ஜோஹாயிம் கௌவ்க் ஜேர்மன் இராணுவக் கட்டுப்பாடுகள் முடிந்துவிட்டதாக அறிவித்தார், புதிதாக அமைக்கப்பட்ட மகா கூட்டணி அரசாங்கம் பாரிய இராணுவ மீள்ஆயுதமயமாக்கல் திட்டத்திற்கு உடன்பட்டது. அந்த அரசாங்கம் உக்ரேனில் வலதுசாரி ஆட்சிக்கவிழ்ப்பு சதியை ஆதரித்ததுடன், ரஷ்யாவுடன் ஒரு தொடர்ச்சியான மோதலை இயக்கத்திற்குக் கொண்டு வந்தது. ஜேர்மன் அரசியல் ஸ்தாபகம், முதலாம் மற்றும் இரண்டாம் உலக போர்களில் ஜேர்மன் குற்றங்களைக் குறைத்துக் காட்டும் ஒரு திட்டமிட்ட பிரச்சாரத்தைத் தொடங்கியது. “ஒவ்வொன்றுக்கும் நம்மை பழிக் கூற வேண்டியிருக்கும் என்ற கருத்துடன் நீங்கள் ஆரம்பித்தால், ஐரோப்பாவில் அதுவொரு பொறுப்பான கொள்கையாக இருக்காது,” என்று பேர்லின் கல்வித்துறையாளர் ஹெர்பிரீட் முன்ங்லெர் தெரிவித்தார். Der Spiegel சஞ்சிகையில், அவர் சக கல்வியாளர் ஜோர்க் பார்பெரோவ்ஸ்கி நாஜி அனுதாபியான ஏர்ன்ஸ்ட் நோல்ட ஐ பாதுகாத்ததுடன், ஹிட்லர் "யூதர்களை நிர்மூலமாக்குவது குறித்து அவர் மேசையில் பேச" விரும்பவில்லை என்பதால் அவர் "வக்கிரமானவர் இல்லை" என்று விவரித்தார். 2014 இல் ஜேர்மன் வரலாற்று அருங்காட்சியகத்தில் ஒரு குழு விவாதத்தின் போது, பார்பெரோவ்ஸ்கி கூறுகையில், மேற்கத்திய இராணுவங்கள் "பிணைக்கைதிகளைப் பிடிக்க, கிராமங்களை எரிக்க, மக்களைத் தூக்கிலிட, அச்சம் மற்றும் பீதியைப் பரப்ப" தயாராக இருந்தால் தான், சிரியாவில் இஸ்லாமிக் அரசு மற்றும் பிற பயங்கரவாதிகளுடனான சண்டையில் ஜெயிக்க முடியும் என்றார். பார்பெரோவ்ஸ்கி மே 2016 இல் ஒரு மெய்யியல் கருத்தரங்க விழாவில், புலம்பெயர்ந்தோர் வன்முறைக்கு எதிராக "ஜேர்மனியில் ஆண்கள்" ஒன்றும் செய்ய இயலாது இருப்பதாகவும், ஏனென்றால் அவர்களால் சண்டையிட முடியாது இருப்பதால் என்றும் வாதிட்டார். “வன்முறையை எவ்வாறு கையாள்வது என்று ஜேர்மனியர்களுக்கு தெரியவில்லை என்பதை நாம் பார்க்கிறோம்,” என்றார். எண்ணற்ற வலதுசாரி வலைத் தளங்களில் பிரசித்தமாக மேற்கோளிடப்படும் இந்த கருத்துக்கள், நடைமுறையில் கெம்னிட்ஸ் இல் பாசிசவாத கும்பல்களால் புகுத்தப்பட்டது. ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியும் (Sozialistische Gleichheitspartei – SGP) மற்றும் அதன் மாணவர் அமைப்பான IYSSE உம் பார்பெரோவ்ஸ்கியின் வலதுசாரி தீவிரவாத நிலைப்பாடுகள் மற்றும் நாஜி குற்றங்களை மூடிமறைப்பதற்கான அவர் முயற்சிகளுக்கு எதிராக போராடிய போது, ஜேர்மன் அரசியல் ஸ்தாபகத்தின் வெறித்தனமான வேட்டையாடலின் இலக்கில் நாம் வைக்கப்பட்டோம். பார்பெரோவ்ஸ்கி அனைத்து தொலைக்காட்சி சேவைகளிலும் அகதிகளுக்கு எதிராக கலகம் தூண்டியதுடன், பாசிசவாத ஜேர்மனிக்கான மாற்றீட்டின் (AfD) முன்னணி பிரதிநிதிகள் பங்கெடுத்த ஒரு வலதுசாரி விவாதக் குழுவை அவர் ஸ்தாபித்த வேளையில், ஊடகங்களும் ஹம்போல்ட் பல்கலைக்கழக நிர்வாகமும் பார்பெரோவ்ஸ்கியை பாதுகாத்தன. இந்த வலதுசாரி சூழலில் தான் AfD செழித்தோங்கியது. அரசினது—அதாவது இராணுவம், உளவுத்துறை அதிகாரிகள், போலிஸ்காரர்கள், நீதிபதிகள் மற்றும் பேராசிரியர்களின் பல பிரதிநிதிகளும் அந்த பாசிசவாத கட்சியின் தலைவர்களில் உள்ளடங்கி உள்ளனர். இந்தாண்டின் பொதுத் தேர்தலில் வெறும் 13 சதவீத வாக்காளர்கள் மட்டுமே AfD ஐ ஆதரித்திருந்த போதினும், இப்போது அது பேர்லினில் அரசியல் கருத்தை தீர்மானிக்கின்றது. இந்த கூட்டாட்சி அரசாங்கமும் AfD இன் வெளிநாட்டவர் விரோத அகதி கொள்கையை முற்றுமுழுதாக ஏற்றுள்ளது. முக்கிய நாடாளுமன்ற குழுக்களுக்கு தலைமை கொடுத்து வருகின்ற AfD, உத்தியோகபூர்வ எதிர்கட்சியாக இருப்பதுடன் பொருத்தமற்ற விகிதாசாரத்தில் ஊடகங்களில் பிரசன்னத்தை அனுபவித்து வருகிறது. இந்த வலதுசாரி சூழ்ச்சியில் இரகசிய உளவுச்சேவை ஒரு முக்கிய பாத்திரம் வகித்துள்ளது. அதன் 3,100 பணியாளர்கள் மற்றும் 350 மில்லியன் யூரோ ஆண்டு வரவுசெலவு திட்டக்கணக்குடன், அரசியலமைப்பு பாதுகாப்புக்கான அலுவலகம் என்றழைக்கப்படும் ஜேர்மன் இரகசிய சேவை, வலதுசாரி தீவிரவாதத்தின் விளைநிலமாக உள்ளது. தேசிய சோசலிஸ்ட் தலைமறைவு (National Socialist Underground - NSU) இனவாத பயங்கரவாத குழுவில் இரகசிய சேவைக்குப் பணியாற்றும் நிழலுலக உளவாளிகள் வியாபித்திருப்பதுடன், அது பகுதியாக அதற்கு நிதி வழங்குகிறது. ஜூலையில் வெளியான ஜேர்மன் இரகசிய சேவையின் "அரசியலமைப்பு பாதுகாப்பு அறிக்கை 2017,” AfD இல் இருந்து பிரித்துப் பார்க்கவியலாத அளவுக்கு AfD இன் வார்த்தைப்பிரயோகங்களை பயன்படுத்தி உள்ளது. AfD மற்றும் பெஹிடாவைச் சுற்றிய நவ-நாஜிக்கள், ஜார்ன் ஹோகே (Björn Höcke), கோட்ஸ் குபிட்செக் (Götz Kubitschek) மற்றும் யூர்கன் எல்சஸர் (Jürgen Elsässer) போன்ற புதிய வலதின் பிரதிநிதிகள், அத்துடன் Junge Freiheit மற்றும் Compact போன்ற வலதுசாரி தீவிரவாத பிரசுரங்கள் என இவற்றின் வலையமைப்பு குறித்து அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவே இல்லை. “இடதுசாரி தீவிரவாதிகள்" என்று குற்றஞ்சாட்டப்படுபவர்களால் பாதிக்கப்பட்டதாக மட்டுமே AfD இன் பெயர் தென்படுகிறது! AfD க்கு சுதந்திர அனுமதி வழங்குகின்ற அதேவேளையில், அந்த அறிக்கை “தேசியவாதம் எனப்படுவதற்கும், ஏகாதிபத்தியம் மற்றும் இராணுவவாதத்திற்குமான (மூலப்பிரதியில் உள்ளவாறு)” எதிர்ப்பை அரசியலமைப்பிற்கு எதிரானது என்று திட்டவட்டமாக முத்திரை குத்துகிறது. "இடதுசாரி தீவிரவாத கட்சி" என்றும், “கண்காணிப்பதற்குரிய ஒன்று" என்பதாகவும் SGP அந்த அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதுதான், தீவிர வலதை அம்பலப்படுத்துதவற்கான SGP இன் முயற்சிகளுக்கு ஜேர்மன் இரகசிய சேவையினது பதில். ஜேர்மன் அரசின் பார்வையில், ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சியோ நவ-நாஜிக்களோ பிரச்சினை இல்லை, மாறாக அவர்களை எதிர்ப்பவர்கள் தான் பிரச்சினையாக தெரிகிறார்கள். அரசும் அரசாங்கமும், AfD மற்றும் நவ-நாஜிக்களை ஆதரிக்கின்றன, ஏனென்றால் அவை இராணுவ மீள்ஆயுதமயமாக்கல், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் சமூக சிக்கன நடவடிக்கைகளின் அதன் கொள்கைகளுக்கு ஒரு ஆதரவாளர் வட்டத்தை உருவாக்க சேவையாற்றுகின்றன. ஜேர்மன் ஜனநாயகம் 1930 களில் இருந்ததைப் போலவே உடையும் நிலையில் இருப்பதையே சமீபத்திய வாரங்களின் இந்த அபாயகரமான அபிவிருத்திகள் எடுத்துக்காட்டுகின்றன. ஜேர்மன் ஆளும் வர்க்கம் ஓர் ஏகாதிபத்திய வல்லரசு கொள்கையை ஏற்று, அடிமட்டத்திலிருந்து எதிர்ப்பை உணர்ந்ததும், உடனேயே மீண்டும் அது தீவிர வலதுக்கு நகர்கிறது. கிறிஸ்துவ ஜனநாயகம் மற்றும் சமூக ஜனநாயகவாதிகளின் இந்த மகா கூட்டணி ஒரு பாரிய இராணுவ மீள்ஆயுதமயமாக்கல் திட்டத்திற்கு உடன்பட்டுள்ளன. வெளியுறவுத்துறை அமைச்சர் ஹெய்கோ மாஸ் (SPD) உலகின் மிகப்பெரிய இராணுவ சக்தியான அமெரிக்காவை, வெள்ளை மாளிகை "சிவப்பு கோட்டை" தாண்டினால் ஒரு "எதிர்பலத்தைச்" சந்திக்குமென எச்சரித்துள்ளார். ஊர்சுலா வொன் டெர் லெயெனின் கீழ் பாதுகாப்பு அமைச்சகத்தின் மூலோபாய ஆவணங்கள் ஐரோப்பா மீதான ஜேர்மன் மேலாதிக்கத்திற்கான நாஜி போர்வெறிகளைப் போல எழுதப்பட்டுள்ளன. இந்த கொள்கைக்கு மக்களிடையே எந்த ஆதரவும் இல்லை. இதனால்தான் உத்தியோகபூர்வ அரசியல் அரசின் உயர் மட்டத்தில் சூழ்ச்சி வடிவத்தை எடுக்கிறது, இதில் எதிர்கட்சிகளும் —பசுமை கட்சி, இடது கட்சி மற்றும் சுதந்திர ஜனநாயக கட்சி (FDP)—சம்பந்தப்பட்டுள்ளன. இவை அனைத்துமே, பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளியை விரிவாக்கிய சமூக சிக்கன நடவடிக்கைகளை ஒழுங்கமைக்க உதவி உள்ளன. இவை அதிக போலிஸ் மற்றும் பலமான உளவுத்துறை சேவைகளைக் கோருவதுடன், இந்த மகா கூட்டணி அரசாங்கத்தின் இராணுவவாத கொள்கைகளை ஆதரிக்கின்றன. இந்த அபிவிருத்தி ஜேர்மனியோடு மட்டுப்பட்டதல்ல. ஐரோப்பா எங்கிலும், அதிகரித்து வரும் சமூக பதட்டங்களின் முன்னால், ஆளும் உயரடுக்குகள் எதேச்சதிகார ஆட்சி வடிவங்கள் மற்றும் பாசிசவாத சக்திகளைச் சார்ந்து வருகின்றன. இந்த நிகழ்ச்சிபோக்கின் உலகளாவிய இயல்பு என்ன தெளிவுபடுத்துகிறது என்றால் இதுவொரு தற்செயலான நிகழ்வு அல்ல, மாறாக முதலாளித்துவ அமைப்புமுறையின் அடிப்படை போக்கு என்பதைத் தெளிவுபடுத்துகிறது. இந்த அபிவிருத்தியை எதிர்க்கக் கூடிய மற்றும் தீவிர வலதுசாரிகளைத் தடுக்கக் கூடிய ஒரே சமூக சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கமாகும். இந்த காரணத்திற்காக தான், ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (SGP) வர்க்கப் போராட்டத்தை இக்கண்டம் தழுவி விரிவாக்க அழைப்பு விடுக்கிறது. இந்த மகா கூட்டணி, உளவுத்துறை சேவைகள் மற்றும் வலதுசாரி தீவிரவாதிகளின் சூழ்ச்சியை நிறுத்தியாக வேண்டும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் அதன் பிரிவுகள் பாதுகாக்கும் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லுக்செம்பேர்க், லீப்னெக்ட், லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் புரட்சிகர சோசலிச பாரம்பரியங்களை மீட்டுயிர்பிக்க இதுவே சரியான தருணமாகும். தொழிலாளர்களும் இளைஞர்களும் SGP இல் சேருவதற்கும், முதலாளித்துவம், பாசிசவாதம் மற்றும் போருக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதற்கும் SGP அழைப்புவிடுக்கிறது. SGP இன் கோரிக்கைகள்: * மகா கூட்டணி, அரசு எந்திரம் மற்றும் அதிவலது தீவிரவாதிகளின் சூழ்ச்சியை நிறுத்து! * இனியும் போர் வேண்டாம்! மீண்டும் இராணுவவாத வல்லரசு அரசியலை நோக்கி ஜேர்மனி திரும்புவதை நிறுத்து! * இரகசிய சேவையைக் கலைத்து விட்டு, உடனடியாக SGP மற்றும் ஏனைய இடதுசாரி அமைப்புகளைக் கண்காணிப்பதை நிறுத்து! * தஞ்சம் கோரும் உரிமையைப் பாதுகாக்க வேண்டும்! அரசு அதிகாரங்கள் மற்றும் கண்காணிப்பை அதிகரிக்காதே! * சமூக சமத்துவத்திற்காக—வறுமை மற்றும் சுரண்டல் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்! நிதியியல் செல்வந்த தட்டுக்கள், வங்கிகள் மற்றும் பிரதான பெருநிறுவனங்களின் செல்வவளங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும்!
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா சமீப காலமாக நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில், பேமிலிமேன் 2 வெப் தொடரில் சர்ச்சை கதாபாத்திரத்தில் நடித்து எதிர்ப்புக்கும் உள்ளானார். தற்போது சமந்தா நடித்துள்ள யசோதா படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இப்படத்தின் டிரெய்லரை தமிழில் சூர்யா, தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, கன்னடத்தில் ரஷ்கித் ஷெட்டி, மலையாளத்தில் துல்கர் சல்மான், இந்தியில் வருண் தவான் ஆகியோர் வெளியிட்டு உள்ளனர். இந்நிலையில் நடிகை சமந்தா, சமீபத்தில் தனது சமூக ஊடக பதிவின் மூலம் தான் மயோசிடிஸ் என்ற ஆட்டோ இம்யூன் கோளாறால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். அதன் காரணமாக தான் தொடர் சிகிச்சையில் இருந்து வருவதாக தெரிவித்த அவர், விரைவில் குணமடைந்து விடுவேன் என்றும் அந்த பதிவில் கூறியிருந்தார். இந்த நிலையில் நடிகை சமந்தாவின் நடிப்பில் வெளிவர உள்ள யசோதா படத்தின் புரமோஷன் வருகிற 11-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. அந்த நிகழ்ச்சியில் சமந்தா கலந்து கொள்ள இருக்கிறார். இதைத்தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் மீண்டும் ஒரு புதிய பதிவை மேற்கொண்டு இருக்கிறார். அதில், “சில தினங்கள் நல்ல நாட்களாகவும் சில நாட்கள் மோசமான நாட்களாகவும் இருக்கிற நிலையில் நான் உடல்நிலை உயிருக்கே ஆபத்தான நிலையில் இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது. இருப்பினும் இந்த கணம் வரை நான் சாகாமல் உயிருடன்தான் இருக்கிறேன். நான் சாகாமல் தான் இருக்கிறேன். மிகவும் கஷ்டமான நிலையில் தான் இருந்தாலும் அதனை எதிர்த்துப் போராடுவேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் கோவிலில் பூஜை செய்து சரவணனுக்கு பரிவட்டம் கட்டி சிறப்பு செய்வதோடு பார்வதி, பாஸ்கருக்கும் மரியாதை செய்கின்றனர். பிறகு பூசாரி எல்லோருக்கும் சர்க்கரையை பிரசாதமாக கொடுக்க அப்போது தான் சக்கரை நியாபகம் வந்து உடனடியாக வெளியே ஓடுகிறார். அவரை தொடர்ந்து குடும்பத்தார் எல்லோரும் ஓடுகின்றனர். சந்தியா சக்கரையை தேடி பிடித்து செல்வம் ஏதாவது சொன்னாரா? பத்திரமா வச்சிக்க சொல்லி எதையாவது கொடுத்தானா என கேட்க முதலில் இல்லை என கூறிய சக்கரை பிறகு இந்த கோட் போட்டுட்டு கூட்டத்துக்குள்ள போகாதனு சொன்னாரு, இந்த வாட்ச் கொடுத்தாரு என கூறுகிறார். பிறகு சந்தியா சக்கரையை அவசரமாக வெளியே அழைத்து சென்று பாம் இருக்கா என பரிசோதனை செய்து பார்த்து அதிர்ச்சி அடைகிறார். - Advertisement - பிறகு சக்கரையை ஆடாமல் அசையாமல் இருக்க சொல்லி கோட் கழட்ட பாம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். பிறகு பார்வதிக்கு போலீஸ் செய்ததை போலவே டிப்பியூஸ் செய்கிறார். டிப்பியூஸ் ஆகி விட்டது என நினைத்து கொண்டு அனைவரும் சர்க்கரைக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டு இருக்க அப்போது திடீரென ஆதி இன்னும் டைமர் போயிட்டு தான் இருக்கு என கவனித்து சொல்ல என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறார் சந்தியா ‌‌ இந்த நேரத்தில் சரவணன் வெடி குண்டை பிடிங்கி கொண்டு ஒதுக்குபுறமான இடத்திற்கு ஓடுகிறார். செந்தில் சந்தியா உட்பட எலீலோரையும் தடுத்து நிறுத்த ஒரு கட்டத்தில் பாம் வெடித்து சிதறியது. சரவணனுக்கு என்னாச்சு என தெரியாமல் ஊர் மக்கள் உட்பட எல்லோரும் பதற்றமாக இருக்கின்றனர். அழுது புலம்புகின்றனர். - Advertisement - இந்த நேரத்தில் சரவணன் சிறு காயங்களுடன் அந்த இடத்தில் இருந்து வெளியே வர சந்தியா ஓடி சென்று சரவணனை கட்டி பிடித்து ஆறுதல் கூறி கீழே அழைத்து வருகிறார். ‌‌ குடும்பம் அனைவரும் சரவணன் நல்லபடியாக வந்ததை எண்ணி சந்தோஷப்படுகின்றனர். சந்தியா சரவணன் இருவரும் மாறி மாறி பாராட்டி கொள்ள சரவணன் இனிமே நம்ம ஊர்ல இப்படி நடக்கவே நடக்காது என்று கூறுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது. amil Cinema News App: உடனுக்குடன் சினிமா செய்திகளை உங்களது தமிழ் சினிமா ஆப்பில் நொடியில் பார்க்கலாம். Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் மலைஒளி இணையதளத்தை இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Albanian / Amharic / Arabic / Bengali / Bosnian / Chinese / Dutch / English / Finnish / French / German / Hindi / Indonesian / Malay / Persian / Oromo / Russian / Swedish / Somali / Tamil / Telugu / Thai / Turkish / Urdu "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3 "LIFE OF MUHAMMAD" SEMINAR - PART 3 முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு பாகம் 1ஐ இங்கு படிக்கவும். முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு பாகம் 2ஐ இங்கு படிக்கவும். இந்த கட்டுரையில் அதன் தொடர்ச்சியாக மூன்றாம் பாகத்தை காண்போம். எச்சரிப்பவராக முஹம்மது: "பிரச்சாரம் செய்தல், ஒடுக்கப்படுதல் மற்றும் பாதுகாக்கப்படுதல்" [பிரச்சாரம் செய்தல், ஒடுக்கப்படுதல் மற்றும் பாதுகாக்கப்படுதல்: LoM p117-218, Tabari vol 6 p88-145, various Hadith] முஹம்மது இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகள் வரை தனக்கு ஏற்பட்ட அனுபவத்திற்கு பிறகு, இஸ்லாமைப் பற்றி வெளிப்படையாக மக்காவின் மக்களுக்கு பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார். அவர்கள் "ஓர் இறைவனை" வணங்கும் படி, தன்னை ஒரு உண்மையான அல்லாஹ்வின் நபி என்று நம்பும்படி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். அவர்களின் இதர தெய்வ நம்பிக்கையைப் பற்றி கடுமையாய் விமர்சித்தார். இந்த காலக்கட்டத்தில் முஹம்மது "எச்சரிக்கை" செய்பவராக மட்டுமே இருந்தார். மக்கள் தன் கொள்கை மீது நம்பிக்கை கொள்ளும் படிச் செய்ய, அவர்களை கட்டாயப்படுத்த‌ அவருக்கு ஆற்றல் இல்லாமல் இருந்தது. "வரவிருக்கும் பயங்கரமான அழிவைப் பற்றி எச்சரிக்கை செய்ய‌ நான் வந்திருக்கிறேன்". "நான் உங்கள் அனைவரையும் ஒன்று கூட்டி, இறைவனின் தண்டனையைப் பற்றி எச்சரிக்கை செய்கிறேன்". Tabari vol 6, page 89, 92. மேலும், உம் இறைவன் நாடியிருந்தால், பூமியிலுள்ள யாவருமே ஈமான் கொண்டிருப்பார்கள்; எனவே, மனிதர்கள் யாவரும் முஃமின்களாக (நம்பிக்கை கொண்டோராக) ஆகிவிடவேண்டுமென்று அவர்களை நீர் கட்டாயப்படுத்த முடியுமா? குர்‍ஆன் 10:99 மக்காவில் முஹம்மதுவின் வாழ்க்கை இயேசுவின் வாழ்க்கைக்கு ஒத்து இருந்தது. முஹம்மது தன் செய்தியை உறுதியுடன் போதித்தார். அவர் நிந்தனைகளையும், அவமானங்களையும் பயமுறுத்தல்களையும் சந்தித்தார் மற்றும் சகித்தார். முஹம்மது மக்கா மக்களின் நம்பிக்கையை பரிகாசம் செய்தார் அதனால், மக்கா மக்கள் அவர் மீது கடுங்கோபம் கொண்டு கொதித்தெழுந்தனர். ஒரு குறிப்பிட்ட சமயத்தில், "தங்கள் நம்பிக்கையைப் பற்றி பரிகசித்து பேசுவதை நிறுத்திவிட்டால், உம்மை விட்டுவிடுகிறோம்" என்று அம்மக்கள் சொன்னார்கள், ஆனால், முஹம்மது மறுத்துவிட்டார். முஹம்மது மக்கா மக்களின் மத நம்பிக்கையை அவமானப்படுத்தியதாலும், வேறு ஒரு நம்பிக்கையை தங்களுக்கு போதித்ததாலும், அவர்கள் அவருக்கு எதிராக எழும்ப ஆரம்பித்தார்கள். முஹம்மதுவின் சித்தப்பா அபூ தலிப் அவருக்கு பாதுகாப்பு அளித்துக்கொண்டு வந்தார். இதன் காரணமாக, மக்கா மக்கள் உடனே அவரை கொல்லமுடியவில்லை. "அபூ தலிப் உங்கள் சொந்தக்காரர் [முஹம்மது] எங்கள் தெய்வங்கள் பற்றி தவறாக பேசுகிறார், நம் மதத்தை பகிரங்கமாக குற்றஞ்சாட்டுகிறார். நம்முடைய கலாச்சாரத்தை ஏளனம் செய்கிறார் மற்றும் நம்முடைய முற்பிதாக்கள் வழிதவறியவர்கள் என்றுச் சொல்கிறார். அவர் எங்கள் மீதான தன் குற்றச்சாட்டுக்களை நிறுத்திக்கொள்ளும்படி செய்யும், அல்லது நாங்கள் அவருக்கு தகுந்த பதில் அளிக்க (ஒரு கை பார்க்கும் படி) எங்களுக்கு அனுமதி அளியும். நாங்கள் எப்படி அவருக்கு எதிராக இருக்கிறோமோ, அதே போல நீரும் இருக்கிறீர், உங்களுக்காக வேண்டுமானால் நாங்கள் அவரை பார்த்துக்கொள்கிறோம். Tabari, vol 6, pages 93, 94. தன்னை பின்பற்றும் சிலரை முஹம்மது சம்பாதித்தார். மக்கா மக்கள் அவரை பின்பற்றுகிறவர்களை அடிக்கடி தாக்கி பேசினார்கள். "இஸ்லாமை ஏற்றுக்கொண்டு முஹம்மதுவின் சகாக்களாக இருந்தவர்களுக்கு எதிராக குரைஷி மக்கள் விரோதத்தை வளர்த்துக்கொண்டார்கள், அவர்களுக்கு எதிராக கலகஞ்செய்தார்கள்." Tabari vol 6, page 97. தன்னை எதிர்த்த சிலரை முஹம்மது வெறுத்தார், "கேளுங்கள் குரைஷி மக்களே, முஹம்மதுவின் உயிர் தங்கியிருக்கும் இறைவனின் பெயரில் சொல்கிறேன், உங்களுக்கு நான் மரணத்தை தருவேன்" என்று முஹம்மது கூறினார். Tabari vol 6 page 102. இஸ்லாமியர்களுக்கு ஒடுக்குதல் மிகவும் தீவிரமாக இருந்தது, அதனால் முஹம்மது தன்னை பின்பற்றுகிறவர்கள் சிலரை பாதுகாப்புக்காக அபிசீனியாவிற்கு அனுப்பிவிட்டார். முஸ்லீம்களுக்கு எதிராகவும் அவர்களின் இனத்திற்கு எதிராகவும் மக்கா மக்கள் மிகப்பெரிய புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்தார்கள். முஹம்மது தன் மார்க்கத்தை விட்டுவிட, மக்கா மக்கள் அவருக்கு இலஞ்சம் கொடுக்கவும் முயற்சித்தார்கள். இறைத்தூதருக்கு குரைஷி மக்கள் அதிகமதிகமான சொத்துக்களை கொடுப்பதாகவும், அதனால், மக்காவில் முஹம்மது மட்டுமே மிகப்பெரிய பணக்காரராக இருப்பார் என்றும் வாக்களித்தனர். அவருக்கு எத்தனை மனைவிகள் விருப்பமோ அத்தனை மனைவிகளை கொடுப்பதாகும், மற்றும் அவரது கட்டளைகளுக்கு கீழ்படிந்து இருப்பதாகும் வாக்களித்தனர். குரைஷி மக்கள் முஹம்மதுவிடம் இவ்விதமாக கூறினார்கள், "முஹம்மதுவே நீர் எங்கள் தெய்வங்கள் பற்றி ஏளனமாக பேசாமல் இருந்தால், குற்றப்படுத்தாமல் இருந்தால், இவைகளை நாங்கள் உங்களுக்குத் தருவோம். இப்படி நீர் செய்யவில்லையானால், இன்னொரு விஷயத்தையும் நாங்கள் சொல்கிறோம், இதனால் நீரும் நாங்களும் நன்மையடைவோம்". அது என்ன என்று அவர் கேட்டார். அதற்கு அவர்கள் "நீர் எங்கள் தெய்வங்களான அல் லத் மற்றும் அல் உஜ்ஜாவை ஒரு ஆண்டுகாலம் வணங்கவேண்டும், அதே போல நாங்கள் உங்கள் இறைவனை ஒரு ஆண்டுகாலம் வணங்குவோம்" என்றனர். Tabari, vol 6, pages 106, 107. இதற்கு முஹம்மது ஒப்புக்கொள்ளவில்லை. அவர் தன் நிலையைவிட்டுவிடவோ, தன் நம்பிக்கையை விட்டுவிடவோ விரும்பவில்லை (பார்க்கவும் குர்‍ஆன் சூரா 109:1 லிருந்து 6 வரை). முஸ்லீம்களுக்கு செய்யப்பட்ட கொடுமைகள் உச்சியை எட்டியது, அவர்களுக்கு வாழ்வு மிகவும் கடினமாக இருந்தது. ஏதாவது கேள்விகள் உண்டா? முக்கிய அம்சம்: சாத்தானின் வசனங்கள் (THE SATANIC VERSES) [சாத்தானின் வசனங்கள்: "Tabari's History", vol 6 p 107-113, "Kitab al-Tabaqat al-Kabir", pages 236-239, LoM p165-167, "The Life of Mahomet", Volume 2, pages 150-152, by W. Muir, quoting "Kitab al-Wakidi"] அநேகங் கள்ளத் தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள் - இயேசு, மத்தேயு 24:11 "And many false prophets will appear and deceive many people." Jesus, Matthew 24:11 அனேக‌ இஸ்லாமிய‌ர்க‌ள் இப்ப‌டிப்ப‌ட்ட‌ ஒரு நிக‌ழ்ச்சி (சாத்தானின் வசனங்கள்) ந‌டைபெற‌வில்லை என்றுச் சொல்கிறார்க‌ள். ஆனால், உண்மையில் "சாத்தானின் வ‌சன‌ங்க‌ள்" நிகழ்ச்சி ப‌ற்றிய‌ விவ‌ர‌ங்க‌ள் ஆர‌ம்ப‌கால‌ இஸ்லாமிய‌ நூல்க‌ளில் ப‌திவு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து. இது ம‌ட்டும‌ல்ல‌, இந்த‌ விவ‌ர‌ங்க‌ள் ஹ‌தீஸ்க‌ள் ம‌ற்றும் குர்‍ஆனில் உள்ள‌ விவ‌ர‌ங்க‌ளோடு ஒத்துப்போகிற‌து. முஹ‌ம்ம‌து த‌ன்னை ந‌ம்புகிற‌வ‌ர்க‌ளின் துன்ப‌ங்க‌ளுக்கு ஒரு முடிவு க‌ட்ட‌வேண்டும் என்று விரும்பினார். அதே நேர‌த்தில் த‌ன் ஊர் ம‌க்க‌ளாகிய‌ ம‌க்காவின‌ரோடு ச‌மாதான‌மாக‌ இருக்க‌ விரும்பினார். இந்த பிரச்சனைகளுக்கு முடிவு கட்ட அல்லாஹ் ஒரு வெளிப்பாட்டை அனுப்புவார் என்று முஹ‌ம்ம‌து ந‌ம்பினார். "இறைத்தூதர் தன் மக்களின் நலனில் அதிக அக்கரையுள்ளவராக இருந்தார் மற்றும் மக்காவினரோடு ஒற்றுமையடைந்து சமாதானமாக இருக்க விரும்பினார்..." Tabari vol 6, page 107, 108. இந்த சந்தர்ப்பத்தை சாத்தான் பயன்படுத்திக்கொண்டு முஹம்மதுவின் வாயில் தன் வசனங்களை போட்டுவிட்டான். முஹம்மது சாத்தானின் வார்த்தைகளை அப்படியே அல்லாஹ்வின் வார்த்தையாக வெளிப்படுத்திவிட்டார் மற்றும் மக்காவினரின் தெய்வங்களுக்கு மரியாதையும் செய்ய அனுமதித்து விட்டார். குர்‍ஆன் சூரா 53:19-20 நீங்கள் (ஆராதிக்கும்) லாத்தையும், உஸ்ஸாவையும் கண்டீர்களா? மற்றும் மூன்றாவதான "மனாத்"தையும் (கண்டீர்களா?) இவைகள் உயர பறப்பவைகள், இவர்களின் மத்தியஸ்தம் அங்கீகாரத்தோடு ஏற்றுக்கொள்ளப்படும். முஹம்மதுவின் வார்த்தைகளை மக்கா மக்கள் ஏற்றுக்கொண்டனர், ஏனென்றால், இவர் அவர்களின் தெய்வங்களை அங்கீகரித்தார். "குரைஷிகள் இதை கேட்டதும், மட்டில்லா மகிழ்ச்சி கொண்டனர், மற்றும் அவர் தங்கள் தெய்வங்கள் பற்றி சொன்ன விதம் அவர்களுக்கு அதிக சந்தோஷத்தை கொடுத்தது..." Tabari vol 6, page 108. காபிரியேல் தூதன் முஹம்மதுவை கடிந்துக்கொண்டு அவரின் தவறை திருத்தினார். இதனால், முஹம்மது குர்‍ஆனில் இருந்த அந்த சாத்தானின் வசன பகுதிக்கு பதிலாக வேறு வசனத்தைச் சொன்னார், மறுபடியும் இது மக்காவினரின் மனதை வேதனைக்குள்ளாக்கியது. முஹமம்து தன் பாவத்திற்காக அதிகமாக வேதனையடைந்தார், ஆகையால், காபிரியேல் முஹம்மதுவிடம் "அல்லாஹ் உன் தவறை லேசாக எடுத்துக்கொண்டார்" என்றுச் சொன்னார், அதாவது சாத்தானின் பொய்யான வசனத்தை குர்‍ஆனோடு சேர்த்த முஹம்மதுவின் பாவத்தை அல்லாஹ் அவ்வளவு பெரிய பாவமாக கருதவில்லை. இதோடு நின்றுவிடாமல், முந்தைய நபிகளும் இதே போல சாத்தானால் தூண்டப்பட்டு, இதே பாவத்தை செய்தார்கள், அதாவது சாத்தானின் வசனத்தை இறைவனின் வசனமாகச் சொன்னார்கள் என்றும் அல்லாஹ் கூறினார். "முஹம்மதுவே நீர் செய்தது என்ன? நான் இறைவனிடமிருந்து கொண்டுவராத வசனத்தை நீ சொல்லியிருக்கிறீர் மற்றும் உம்மிடம் சொல்லாத ஒன்றை சொன்னதாக சொல்லியுள்ளீர்". இதனால் இறைத்தூதர் மிகவும் வேதனையுற்றார் மற்றும் இறைவனுக்கு அதிகமாக பயந்தார். ஆனால், இறைவன் அவருக்கு வெளிப்பாட்டை அனுப்பினார், ஏனென்றால், அவர் மிகவும் கிருபையுள்ளவர், முஹம்மதுவை தேற்றினார் மற்றும் இந்த விஷயத்தை மிகப்பெரிய தவறாக எடுத்துக்கொள்ளவில்லை. மேலும், அவருக்கு முன்பிருந்த நபிகளும் அல்லது இறைத்தூதர்களும், முஹம்மது விரும்பியது போல விரும்பினார்கள், ஆனால், சாத்தான் தன் வார்த்தைகளை அவர்களின் வெளிப்பாடுகளில் புகுத்திவிட்டான், எப்படி முஹம்மதுவின் நாவில் போட்டானோ அது போல" என்று அல்லாஹ் முஹம்மதுவிற்கு அறிவித்தார். Tabari Vol 6, p109 பழைய ஏற்பாட்டின்படி, யாராவது ஒரு நபர் தேவனைவிட்டு வேறு தெய்வங்களை வணங்கும்படி செய்தால், அப்படிப்பட்டவர் கொல்லப்படவேண்டும் என்று கட்டளையுண்டு. யாராவது உண்மையான தேவன் சொல்லாத வசனத்தைச் சொன்னால், அவர் கொல்லப்படவேண்டும் உபாகமம் 13:1-5. யேகோவா தேவன் இப்படிப்பட்ட பாவத்தை லேசாக எடுத்துக்கொள்ள மாட்டார். ஆனால், அல்லாஹ் இப்படிப்பட்ட பாவத்தை லேசாக எடுத்துக்கொண்டார். ஆகையால், யேகோவா தேவனும் அல்லாஹ்வும் ஒருவரே அல்ல. துரதிஷ்டவசமாக, சில கிறிஸ்தவர்கள், இஸ்லாமிய அல்லாஹ்வும், கிறிஸ்தவ தேவனும் அல்லது யேகோவா தேவனும் ஒருவரே என்றுச் சொல்கிறார்கள், ஆனால், உண்மையில் அது தவறாகும், இவ்விருவரும் ஒருவரல்ல. சிந்திக்க ஆய்வு செய்ய சில கேள்விகள் (QUESTIONS FOR THOUGHT AND STUDY) 1) தேவன் எப்போதாவது இப்படிப்பட்ட மிகப்பெரிய பாவத்தை, லேசாக விட்டுவிடுவாரா? 2) குர்‍ஆன் ஒரு விசேஷித்த ஒன்றாக இருந்தால், ஏன் சாத்தானின் வசனத்திற்கும் அல்லாஹ்வின் வசனத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை குர்‍ஆனால் சொல்லமுடியவில்லை? 3) முஹம்மதுவினாலும், முஸ்லீம்களாலும் எது சாத்தானின் வசனம் எது அல்லாஹ்வின் வசனம் என்று வகைபிரிக்க தெரியாமல் இருக்கும்போது, குர்ஆனில் எவ்வளவு வசனங்கள் சாத்தானால் இறக்கப்பட்டு இருக்கும்? 4) குர்‍ஆன் என்பது பரிசுத்தமான இறைவனின் வேதமாக இருந்தால், முஹம்மதுவினால் உடனே அவ்வசனம் சாத்தானின் வசனம் என்று ஏன் கண்டுபிடிக்கமுடியவில்லை? ஏன் முஹம்மதுவை பின்பற்றினவர்களும் கண்டுபிடிக்கவில்லை? முஹம்மதுவினால், எது சாத்தானின் வசனம், எது அல்லாஹ்வின் வசனம் என்று வேறுபிரித்து சொல்லத் தெரியவில்லையானால், அவர் ஒரு உண்மையான நபி (தீர்க்கதரிசி) என்றுச் சொன்னால் ஏற்கக்கூடியதாக உள்ளதா?
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ’ஜகமே தந்திரம்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் ஜோஜு ஜார்ஜ்ஜின் காரை காங்கிரஸ் கட்சியினர் நடுரோட்டில் அடித்து நொறுக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவதால் கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் அந்த வழியாக நடிகர் ஜோஜு ஜார்ஜ் தனது காரில் வந்தபோது அவரது கார் தடுத்து நிறுத்தப்பட்டது. - Advertisement - இதனையடுத்து அவர் காரில் இருந்து கொண்டு போராட்டத்தை கைவிடுங்கள் என்றும், அவசரமாக மருத்துவமனை செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியினர் நடிகர் ஜோஜு ஜார்ஜ்ஜின் காரை அடித்து நொறுக்கியுள்ளனர். இந்த விவகாரம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ஜோஜு ஜார்ஜ் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி அளித்த போது, “காரில் கீமோதெரபி சிகிச்சைக்காக ஒருவரை அழைத்துச் செல்வதாகவும், இந்த வெயிலில் எத்தனை பேர் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் ஒரு குறிப்பிட்ட கட்சியினரை எதிர்த்து பிரச்னை செய்யவில்லை, பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும் வகையில் அவர்கள் நடந்துகொண்டதைத் தான் தட்டிக்கேட்டேன். - Advertisement - ஆனால் அதற்காக என் வயதான பெற்றோர் குறித்து அறுவறுப்பான சொற்களை பயன்படுத்தி திட்டினர். என்னை வேண்டுமானலும் அடிக்கட்டும், என் பெற்றோரை எப்படி அவர்கள் திட்டலாம்? என கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் கேரள மாநில தலைவர் கே.சுதாகரன் நடிகர் ஜோஜு ஜார்ஜ் ஒரு ரவுடியை போல காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
பிளசென்டா(Placenta) எனப்படும் நச்சுக் கொடி கருப்பையில் ஒட்டிக் கொண்டு தாயின் இரத்தத்தில் இருந்து குழந்தைக்குத் தேவையான பொருட்களைப் பிரித்து எடுத்து தொப்புள் கொடி மூலமாக குழந்தைக்கு அனுப்பும் ஒரு அமைப்பாகும். நச்சுக்கொடி (placenta) இது பொதுவாக கருப்பையின் மேற்பகுதியிலேயே ஒட்டிக் கொண்டிருக்கும். இது கருப்பையின் கீழ்ப் பகுதியில்அமைவது ஆபத்தாகும். கருப்பையின் கீழ்ப் பகுதியில் நச்சுக் கொடி காணப்படுவதே Placenta previa ( நச்சுக் கொடி இறக்கம்) எனப்படும். எந்தளவிற்கு கருப்பையின் கீழ்ப் பகுதியில் இது இருக்கிறது என்பதைப் பொறுத்து இந்த நோயின் தீவிரங்கள் தீர்மானிக்கப்படும். முற்றாக கீழ் பகுதியில் நச்சுக் கொடி அமையும் போது குழந்தை பிறக்கும் கருப்பை வாயிலை மூடிக் கொண்டிருக்கும்.இது மிகவும் தீவிரமான நிலையாகும். இந்த நிலையில் சீசர் செய்வதைவிட வேறு வழியில்லை. கருப்பை வாயில் வரை நச்சுக்கொடி(placenta) கீழிறங்கி இருக்கும் ஆபத்தான நிலை இந்த நோயின் அறிகுறி கர்ப்பம் தரித்து ஆறு மாத காலமளவில் பிறப்புறுப்பு வழியே சிறிதளவு இரத்தம் போகுதல்.இதன் போது எந்தவிதமான வலியும்ஏற்படாது.இது எச்சரிக்கைக் குறியாக எடுத்துக் கொள்ளப்படும்(warning bleeding).அதாவது கர்ப்பம் தரித்து 5 மதத்திற்குப் பிறகு சிறிதளவு ரத்தக் கசிவு ஏற்பட்டாலேயே உடனடியாக வைத்திய சாலைக்குச் செல்ல வேண்டும். அதைத் தவற விடும் பட்சத்தில் அடுத்தமுறை இரத்தப்போக்கு ஏற்பட்டால் அது தீவிரமானதாக இருக்கும். அதற்கு முன்னமே வைத்திய சாலைக்கு சென்று முற்பாதுகாப்பு எடுத்துக் கொள்ள வேண்டியது கட்டாயமாகும். இந்த நோயை உறுதிப் படுத்திக் கொள்ள ஒரே வழி ஸ்கேன் செய்வதே. அநேகமான நாடுகில் எல்லா கர்ப்பிணிகளுக்கும் ஸ்கேன் செய்து இந்த நோய் உள்ளதா என்று அறிகுறிகள் ஏற்படுவதற்கு முன்னமே பார்க்கப்படும். இருந்தாலும் நம் நாட்டில் போதிய வசதி இல்லாத் படியால் எல்லாக் கர்ப்பிணிகளுக்கும் அந்த ஸ்கேன் செய்யப்படுவதில்லை. ஆனாலும் இரத்தம் போகிறவர்களுக்கு கட்டாயாமாக ஸ்கேன் செய்தே ஆக வேண்டும்.. இந்த நோய் உள்ளது உறுதிப் படுத்தப்பட்ட பின்பு அந்த நோயின் தீவிரத்தைப் பொறுத்து அதற்கான சிகிச்சை தீர்மானிக்கப்படும். நச்சுக்கொடி பெருமளவில் கருப்பையின் கீழ் பகுதியில் இருந்தால் அந்த நோயாளி குழந்தை பெறும் வரை வைத்திய சாலையில் நீண்ட நாட்களுக்கு இருக்க வேண்டி வரலாம். மேலும் முன்னேற்பாடாக அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தினத்திற்கு முன்னமே சீசர் செய்யப்படும். சிறிதளவான அளவில் நச்சுக் கொடி கீழே இருப்பவர்கள் வீட்டிற்கு அனுப்பப்படலாம். ஆனாலும் அடிக்கடி வைத்தய்சாலைக்கு செல்ல வேண்டியதுடன் சகல வசதிகளும் கொண்ட ஒரு வைத்திய சாலையிலேயே குழந்தைப் பிறப்பு மேற்கொள்ள வேண்டும்.அவர்கள் சாதாரணமான முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். இது எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தும்.... இந்த நோயினால் குழந்தைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. ஆனால் அதிகமான ரத்தப் போக்கு ஏற்பட்டு அம்மாவின் உயிரைப் பறித்து விடக்கூடியது. ரத்தப் போக்கு குழந்தை பெறுவதற்கு முன் ஏற்படலாம் அல்லது குழந்தை பிறந்த பின் ஏற்படலாம். சீசர் செய்த பின்பு கூட இவர்களுக்கு அதிகமாக ரத்தப் போக்கு ஏற்படலாம். அதனால் நான்கு பைண்ட்ஸ் இரத்தம் தயாராக வைத்துக் கொண்டே அவர்களுக்கு சீசர் செய்யப்படும். அதேபோல சாதாரண குழந்தைப் பேரின் பின்னும் இரத்தப்போக்கு அதிகமாகப் போகலாம். அதனால் இந்த நிலையை சமாளிக்கும் வசதிகளாக இரத்த வங்கி ,சத்திர சிகிச்சை கூடம் உள்ள வைத்திய சாலைகளிலே குழந்தைப் பேறு மேற்கொள்ள வேண்டும். மிகவும் முக்கியமாக இந்த நோயாளிகள் குழந்தை பெறும் வரை முற்று முழுதாக உடலுறவைத் தவிர்க்க வேண்டும்.. Posted by துமிழ் at 12:51 PM 0 comments Labels: கர்ப்பிணி மருத்துவம் Saturday, April 14, 2012 இயற்கையான கருத்தடை முறைகள் உடலுறவின் போது கருத்தரிப்பதைத் தடுப்பதற்காக கருத்தடை முறைகள் பயன் படுத்தப்படுகின்றது .இதிலே பல முறைகள் உள்ளது. அதிலே ஒன்றுதான் இயற்கையான கருத்தடை முறையாகும்.இயற்கையான முறை எனப்படுவது எந்தவிதமான உபகரணங்களையோ அல்லது மருந்துகளையோ பயன்படுத் -தாமல் மேற்கொள்ளப்படும் முறையாகும். இது இரண்டு விதமாக மேற்கொள்ளப்படலாம். முதலாவதாக கருத்தரிக்கும் சந்தர்ப்பம் குறைவாக உள்ள நாட்களில் உடலுறவில் ஈடுபடுவதுடன் ,கருத்தரிக்கும் சந்தர்ப்பம் அதிகமாக உள்ள நாட்களில் உடலுறவில் ஈடுபடுவதைத் தவீர்க்கும் முறையாகும்.இந்த நாட்கள் ஒவ்வொருபெண்ணுக்கும் வேறுபாடும் . அந்த நாட்களை கணித்துக் கொள்ளும் முறையை இந்த இடுகையில் வாசித்தறியவும்.இந்த முறை ஒழுங்காக மாதமொருதடவை மாதவிடாய் ஏற்படுகின்ற பெண்களுக்கே உகந்தது. அடுத்த முறையானது உடலுறவின் போது ஆண் விந்தணுக்களை பெண் உறுப்பினுள்ளே செலுத்தாமல் ஆண்குறியை வெளியில் எடுத்தல். இது உச்சக்கட்டத்திற்கு(climax) முன் கட்டுப்பாட்டுடன் ஆண் குறியை வெளியெடுக்கக் கூடிய ஆண்களுக்கே சிறந்தது. இந்த இயற்கை முறைகள் பக்க விளைவுகள் குறைந்தது என்றாலும் அவற்றின் நம்பகத் தன்மையானது மிகவும் குறைவாகும். அதனால் குழந்தைகளை எதிர்பார்த்திருக்காத தம்பதிகள் இந்த இயற்கையான முறைகளை நம்பாமல் நம்பகமான வேறு ஒரு முறையினை பாவிப்பது கட்டாயமாகும். Posted by துமிழ் at 7:06 PM 1 comments Labels: கருத்தடை ஒருவருக்கு எந்தச் சந்தர்ப்பங்களில் எயிட்ஸ் தொற்றலாம் எயிட்ஸ் எனப்படும் நோய் பற்றி எல்லோரும் அறிந்துதான் இருப்பீர்கள். இருந்தாலும் இது தொற்றக் கூடிய சந்தர்ப்பங்கள் பற்றி தெளிவாக இல்லாதததால் பல பேர் தங்களுக்கும் எயிட்ஸ் தொற்றி இருக்குமோ என்ற அச்சத்தில் உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள்.அவ்வாறான சந்தேகங்களை களைவதற்கே இந்த விளக்கம். எயிட்ஸ் நோயினை ஏற்படுத்தும் வைரஸ் இரத்தம் மற்றும் உடலில் இருந்து வெளியேறும் சில திரவங்களின் நேரடித் தொடர்பினால் மட்டுமே தொற்றும். அதுதவீர சுவாசத்தின் மூலமோ உணவின் மூலமோ இந்த நோய் தொற்றுவதில்லை. அதாவது எயிட்ஸ் தொற்றக் கூடிய சந்தர்ப்பங்கள் உடலுறவின் போது- நோயுள்ள ஒருவரோடு உடலுறவில் ஈடுபடும் போது இது தொற்றலாம். இது ஆண் பெண் தொடர்பு , அல்லது ஓரினச் சேர்க்கை என எந்தவிதமான உறவிலும் ஏற்படலாம்.அதேபோல் யோனி வழி ,குதவழி என எந்தவிதமான உறவின் போதும் தொற்றலாம். கொண்டம்(ஆணுறை) பாவிப்பது இவ்வாறு நோய் தொற்றுவதைத் குறைக்கும். எனினும் கொண்டம்(ஆணுறை) நூறு வீதம் பாதுகாப்பை அளிப்பதில்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு நம்பகமான , எயிட்ஸ் நோய் இல்லாத ஒருவரோடு உடலுறவில் ஈடு படும் போது எயிட்ஸ் ஏற்படாது. அடுத்தததாக நோயுள்ள ஒருவர் பாவித்த ஊசி ,பிளேட் ,சவரக் கத்தி போன்றவற்றை பாவிக்கும் போது. அதாவது இவ்வாறான கூரான உபகரணங்கள் மூலம் நோயுள்ளவரின் இரத்தம் நோயற்றவர்களின் இரத்தத்தோடு தொடர்பு படக்கூடிய சந்தர்ப்பம் இருப்பதால் எயிட்ஸ் தொற்றலாம்.இந்த உபகரணங்கள் நோயாளியில் சிறிய காயத்தை ஏற்படுத்தி பின்பு நோய் இல்லதவரில் காயத்தை ஏற்படுத்தும் போது இரத்தம் தொடர்பு படலாம். இதைத் தடுப்பதற்கு தனித்தனியே சவரக் கத்தி பிளேட் என்பவற்றை பாவிக்க வேண்டும். சலூனுக்கு செல்லும் போது உங்களுக்கென தனியாக புது பிளேட்
இதை நான் சொல்லியே ஆக வேண்டும். அப்படிச்சொல்லவில்லை என்றால் நான் நன்றி கெட்டவள் ஆகிவிடுவேன். ஒருவரின் மறைவு ஈடுகட்டமுடியாத இழப்பு என்பதற்கான அர்த்தத்தை இப்போது உணர்ந்து, அதைக் கொஞ்ச நாளாக அனுபவித்து வருகிறேன். நாம் நேசித்த ஒருவர் மண்ணைவிட்டு மறைந்துவிட்டால், அவரின் நினைவு வருகிறபோதெல்லாம், அவர் நமக்கு சுயநலமில்லாமல் செய்த சில செயல்கள் நம் முன் வந்து வந்து போகும். நட்பு என்றால், தினமும் கைக்கோர்த்து நடந்து சென்று உண்பது அரட்டை அடிப்பது ஊர் சுற்றுவது என்பதுதான் என்று பெருவாரியாக நினைக்கின்றபோதிலும், கிட்டத்தட்ட 18ஆண்டுகள் பார்க்காமல் சந்திக்காமல் தொலைத்தொடர்பின் மூலமாகவே நட்பு பாராட்டி உளமாற ரசனைகளைப் பகிர்ந்து, படித்ததை, பார்த்ததை அனுபவித்ததை, கேட்டதை நினைத்த நேரத்தில் நினைத்த மாத்திரத்தில் மனதில் எந்த ஒரு நெருடலும் இல்லாமல் உடனுக்குடன் பகிர்ந்து களிப்புறுகிற நட்பு நம்மில் எத்தனை பேருக்கு வாய்த்திருக்குமென்று எனக்குத்தெரியாது. ஆனால் நான் மிகுந்த அதிர்ஷ்டசாலி. எனக்கு அப்படி ஒரு நட்பு இருந்தது ஆனால் இப்போது இல்லை. மரணித்துவிட்டார். சொல்லாமல் சென்றுவிட்டார். நோயாளியல்ல அவர். நோய்களுக்கு மருந்துசொல்லும் மருத்துவர். இருந்தபோதிலும் நோய் ஆள்பார்த்து வருவதில்லையே. அவரையும் தாக்கியது மாரடைப்பு. இறப்புச் செய்தியினைக்கேட்டு அவரின் மனைவிக்கு அழைத்தபோது சொன்னார், திடீர் மூச்சுத்திணறல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அசைவற்று, ஒருவாரத்திற்குப்பிறகு திரும்பிவரவேயில்லை, என்று. அன்று அவரின் மனைவிக்கு ஆறுதல் சொன்ன நான் ஆரம்பத்தில் தெளிவாகத்தான் இருந்தேன். கண்களில் ஒரு சொட்டு நீர்கூட வரவில்லை எனக்கு. மரணம் இயற்கை என்று மனதிற்குள் சொல்லிவிட்டு ஒரிரு வார்த்தைகளை முகநூலில் பகிர்ந்துவிட்டு, நான் எனது அன்றாட கடமைகளில் வழக்கமாக ஈடுபடத்துவங்கினேன். சில நாட்கள் சென்றது, எனது மகிழ்வு, சோகம், வாசிப்பு, எழுத்து, அறிவுப்பூர்வ கேள்வி, அறிவியல், மருத்துவம், இலக்கியம், நகைச்சுவை, பழைய சினிமா, காதல், வரலாறு, புத்தகம், ஆங்கிலம் என எதையொட்டிய தேடலாக இருந்தாலும் அங்கே டாக்டர் மட்டுமே வந்து நிற்கிறார். என்ன நடக்கிறது எனக்குள், என்கிற குழப்பத்தில் துவண்டுபோனேன். கிட்டத்தட்ட பதினெட்டு ஆண்டுகள் எனது மனப்பூர்வ பகிர்வுகளில் டாக்டர் ஒருவர் மட்டுமே ஆக்கிரமித்துக்கொண்டிருந்ததை உணரத்துவங்கினேன். உணர்ந்த மறுநொடி பயங்கரமான தனிமைக்குள் தள்ளப்பட்டேன். யாரிடமும் நான் மனதளவில் இவ்வளவு நெருக்கமாக இருந்தது கிடையாது. பெண் நட்பில்கூட இப்படி ஒரு நல்ல நட்பு எனக்கு இதுவரையிலும் இருந்ததில்லை. நிறைய நட்புகள் நமக்கு இருக்கலாம், இருந்தபோதிலும் யாரிடம் நாம் எல்லாவற்றையும் நம்பிக்கையுடன் பகிர்ந்துகொண்டிருக்கின்றோம் என்பதனை கூர்ந்து நோக்கினால் அங்கே ஒருவர் மட்டுமே இருப்பார். அப்படி இருந்த ஒர் நட்புதான் டாக்டர் ஜி.ஜான்சன். டாக்டர் அவர்களின் நட்பு 2000ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் துவங்கியது. அப்போது, அவர் தமிழ்நேசன் பத்திரிகையில் மருத்துவ கேள்வி பதில் அங்கத்தை எழுதிக்கொண்டிருந்தார். அந்த அங்கத்தில் மருத்துவம் சார்ந்த கேள்விகளுக்கு மட்டுமே இடமுண்டு என்கிறபோதிலும், அங்கு அச்சிடப்பட்டுள்ள அவரின் கைபேசிக்கு அழைத்துப்பேசினால், முகஞ்சுளிக்காமல் அனைத்துவிதமான கேள்விகளுக்கும் பதில் சொல்வார். விலாவரியாக மிகுந்த அக்கரையுடன் அன்புமிகுந்த பணிவுடன் இருக்கும் அவரின் பேச்சு. மெத்தப்படித்த ஒரு மருத்துவர் சாதாரண மக்களின் அழைப்பை ஏற்று அக்கரையுடன் பணிவாக பதிலளிக்கின்ற பாணி பிடித்திருந்ததால் அவருடனேயான நட்பை நான் தக்கவைத்துக்கொண்டு தொடர்ந்தேன். ஒருமுறை கேள்வி ஒன்றினை வைத்தபொழுது, இக்கேள்விக்கான பதிலை நான் பத்திரிகையில் இன்னும் பல உதாரணங்களோடு விளக்கமளிக்கின்றேன் விஜயா, இவ்வார நேசனை கண்டிப்பாக வாசியுங்கள் என்று கூற, அந்த வாரம் அனைத்து கேள்விகளும் வர, எனது கேள்வி விடுபட்டிருந்தது. அதற்கான காரணத்தைக்கேட்க மீண்டும் அழைத்தபோது, அடுத்தவாரம் கண்டிப்பாக வரும் என்று சொல்ல, அடுத்தடுத்த வாரமும் வராமல் இருக்க… அதையொட்டிய அழைப்புகள் தொடர, பத்திரிகையின் நிலவரங்களை நகைச்சுவையாக சுட்டிக்காட்ட, நட்பு மலர்ந்தது எங்களுக்குள். இந்த நட்பு கிட்டத்தட்ட பல ஆண்டுகள் கடந்துகொண்டிருக்கின்றவேளையில், ஜொகூர்பாருவில் இருந்து இலக்கிய நிகழ்வு ஒன்றிற்கு, 2018 ஜூலை மாதம் என்று நினைக்கிறேன், தலைநகர் வந்திருந்தபோது, அழைப்பு விடுத்தார் சந்திக்க, வேலை நாட்களில் பணியிடத்திலிருந்து தலைநகர் செல்வது சாமானியமான செய்கை அல்ல, அதனால் அந்தச் சந்தர்ப்பமும் நழுவியது. அவரை நான் சந்தித்ததே இல்லை. சிலரின் நட்பு நம்மை ஒன்றுமே செய்யாது. இருந்தார் மறைந்தார் என்று ஒரு நாள் அல்லது இரண்டு நாள் துக்கம் அனுசரித்துவிட்டு கடந்துவிடலாம். பெரும்பாலும் நட்பு என்கிறபோது, நட்பு என்றல்ல, என் அப்பாவின் மறைவைத்தவிர்த்து மற்ற யாரின் மறைவும் என்னை எதுவுமே செய்தில்லை. ஆனால் டாக்டர் ஜான்சனின் மறைவு கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கடந்துவிட்ட போதிலும், ஒவ்வொருநாளும் அவரின் நினைவு இல்லாமல் பொழுது விடிவது இல்லை. எனக்கு ஏற்படுகிற அனைத்து அனுபவங்களையும், கேள்விகளையும், சந்தேகங்களையும் பக்குவப்பட்ட, கல்வியறிவில் சிறந்து விளங்கிய, உலக விவரங்களை விரல் நுனியில் வைத்திருந்த டாக்டரிடம் மட்டுமே பகிரவேண்டும் என்கிற எண்ணம் விடாமல் என்னைத் துரத்துகிறது. தினமும் பேசுவோம். நான் ஒரு கேள்வியினை வைத்திருக்க, அவர் அதற்கு பதில் கொடுத்து கூடுதல் விவரங்கள் பகிர, அந்த விவரங்களில் இருந்து வேறொரு தகவல்கள் உதிக்க, அப்படி உதிக்கின்ற தகவல்கள் எந்த அளவிற்கு நமது அடுத்தடுத்த தேடல்களைத் தூண்டிவிடும் என்பதை அவரின் நட்பின் வழி உணர்ந்துகொண்டேன். அவரைப்பற்றி சொல்லவேண்டுமென்றால்… தனது மருத்துவப் பணியினை உளமாற நேசிப்பவர். இரவு பகல் பாராமல் உழைத்தார், எவ்வளவு நேரம் உழைத்தாரோ அந்த அளவிற்கு எழுதவும் வாசிக்கவும் செய்தவர். எப்போது பார்த்தாலும் எதையவது வாசித்துக்கொண்டேதான் இருப்பார். பெரிய பெரிய ஆங்கில நாவலாகட்டும் கடுகளவு வந்துள்ள வாசகர் கடிதமாகட்டும் அனைத்தையும் வாசிப்பார். ஞாயிற்றுக்கிழமைகளில் வெளிவரும் அனைத்து தமிழ் பத்திரிகைகளையும் வாங்கி வாசித்துவிடுவார். 2000ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தரணிமைந்தன் என்கிற புனைப்பெயரில் பல சிறுகதைகளை விமர்சனம் செய்துவந்தபோது, அவர் வாசித்துவிட்ட சிறுகதைகளை என்னை வாசிக்கச்சொல்லி கருத்து கேட்பார். நான் வாசிக்க தாமதமானாலும் காத்திருந்து கதை எப்படி இருந்தது என்று கேட்பார். நன்றாக இல்லாத, ஒன்றுமே இல்லாத எழுத்துகளை, நான், இது கதையே அல்ல என்று சொல்லும் போது, எப்படிச் சொல்கிறீர்கள்.? ஏன் சொல்கிறீர்கள்.? எந்தப்பகுதி உங்களை அப்படிச்சொல்லவைத்தது.? புதிய எழுத்தாளர் என்பதாலா.? நீண்ட நாள் எழுதிய எழுத்தாளார் என்பதாலா.? என்றெல்லாம் கேட்பார். இருவரிடையே என்னமாதிரியான கருத்துக்கள் பரிமாறப்பட்டாலும், எழுதுகிறபோது யார் மனதேனும் புண்பட்டுவிடுமே என்கிற நோக்கிலேயே விமர்சம் வைப்பார். அந்தப்பகுதியில் வந்த அனைத்து விமர்சனமும் எழுத வரும் புதிய வாசகர்களுக்கு உத்வேகமாக இருக்கும்படி பார்த்துக்கொள்வார். எழுத்தில் கன்னியம் காப்பதுபோலவே பேச்சிலும் யாரைப்பற்றியும் தரக்குறைவாக பேசாத பண்பும் என்னை அவரிடம் நெருங்க வைத்து நம்பகத்தன்மையை வளர்த்து நட்பில் தடுப்புச்சுவர் இல்லாமல் தைரியமாக அனைத்தையும் பகிர வழிவகுத்தது. கணினி பயன்பாட்டில் பரிச்சயம் இல்லாமல் இருந்தவரை, கணினி யுகத்திற்கு (தமிழில் தட்டச்சு செய்வது, கைபேசியில் குறுந்தகவல் அனுப்புவது, முகநூலில் பதிவுகள் செய்வது புகைப்படம் ஏற்றுவது, வட்சாப் அனுப்புவது) அழைத்து வந்ததே நான் தான் என்று இந்த அடியேன் மார்தட்டிக்கொள்ளலாம். புத்தகப்புழுவாக இருந்த அவரை, கணினியின் பக்கம் தற்போதைய மாற்றங்களை நோக்கி (எனக்குப்புரிந்தவரையில்) நகரவைத்த எனக்கு அடிக்கடி புகழாரம் சூட்டுவார். அதை வஞ்சப்புகழ்ச்சியாக நான் புறக்கணித்தாலும், அவர் அதை மனதார சொல்வதாகச் சொல்வார். மெத்தப்படித்த அவர் கணினி பற்றிய போதனையின்போது பாலர்பள்ளி மாணவன் போல் ஆகிவிடுவார். குறிப்பு எடுத்துவைத்துக்கொண்டு நேரம் கிடைக்கின்றபோதெல்லாம் அதை மீண்டும் மீண்டும் செய்துபார்த்து விளக்கம் கேட்டு முழுமையாக புரிந்துகொண்ட பண்பைக் கண்டு வியந்துபோவேன். ஓஷோ சொல்வதைப்போல், மனிதன் எப்போதும் காலி கோப்பையாக இருக்கவேண்டும். அப்போதுதான் கற்றலின்போது காலிகோப்பையை நிரப்பிக்கொள்ளலாம், என்று. அதுபோலவே இறுதிவரை காலி கோப்பையாகவே இருந்தார் டாக்டர். தினமும் எதையாவது கற்றுக்கொள்ளவேண்டும் என்கிற தீராத வேட்கை அவரிடம் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம். சிலவேளைகளில் நான் பிதற்றுவதை ஏற்கனவே அவர் எங்கேனும் வாசித்திருந்தாலும் சரி, அல்லது அந்த விவரம் அவருக்கு ஏற்கனவே தெரிந்திருந்தாலும் சரி, நம் பேச்சினை இடைமறித்துப் பேசாமல் அமைதியாக முழுமையாக கேட்டுவிட்டு, மிகப் பணிவாக அதைப்பற்றிய மேல் விவரங்களை நம்மிடம் பகிர்கிற பாணியினை நானும் பழகவேண்டும் என்று நினைத்துக்கொண்ட நற்பண்பு அது. ஒன்றுமே தெரியாத அப்பாவிபோல் இருப்பார், அனைத்தும் அவருக்கு தெரிந்திருந்தாலும் கூட. யாரைப்பற்றியும் அநாவசியமாக புறங்கூறும் மனிதரல்ல. பிடித்தவரை தூக்கிவைத்துக்கொண்டாட மாட்டார் அதேவேளையில் பிடிக்காதவரை வெறுத்துத் தூற்றித்திரியவும் மாட்டார். அவருக்கு மிகவும் பிடித்த விஷயம் புகைப்பிடித்துக்கொண்டே தேநீர் அருந்துவது. காரில் நீண்ட தூர பயணத்தின் போது மிக மிக பழைமையான (ஜிக்கி, AM ராஜா, கண்டசாலா, ராஜேஸ்வரி, தியாகராஜ பாகவதர், பானுமதி) அவர் பதிவு செய்து வைத்திருந்த பாடல்களை கேட்டுக்கொண்டே செல்வது பிடித்தமான ஒன்று. பயணத்தின்போது இடையே எனக்கும் அழைத்து, பாடலின் ஒலியை வேகமாக வைத்து, இந்தப்பாடலை கேட்டுப்பாருங்களேன், அற்புதம் ஆஹா.. என்று நம்மையும் ரசிக்கவைப்பார். எப்போதும் உற்சாகமாகவே இருப்பார். கவலையாக சோர்வாக இருந்ததை ஒருமுறைகூட கண்டதில்லை. அவரின் மூத்த மகன் காரில் அமர்ந்தவாக்கிலேயே மரணமுற்ற இரண்டு நாளுக்குபின் நான் யதார்த்தமாக அழைத்தபோது, முதலில் அந்த கவலையினை வெளிக்காட்டாமல் என்னிடம் எப்போதும்போலவே பேசிவிட்டு, கைப்பேசியினை வைக்கின்றவேளையில் இந்தச் சோகச்செய்தியினைப் பகிர்ந்தார். அதிர்ச்சிக்குள்ளான நான் அவருக்கு ஆறுதல் சொன்னபோது, ``அதைவிடுங்க.. என்ன செய்வது, என் மனைவிதான் பாவம்,’’ என்று பெருமூச்சுடன்.. ச்ச், என்கிற வார்த்தையில் அந்தச் சோகத்தைக் கடந்துசென்றார். வாசிப்பு மற்றும் எழுதுவது இறுதி மூச்சுவரை உயிர் துடிப்பாய் இருந்தவை அவரிடம். திண்ணையில் ‘தொடுவானம்’ தொடரை விடாமல் எழுதிக்கொண்டே வந்தார். தொடுவானமும் புத்தக வடிவில் வந்தது. அது அவரின் இரண்டாவது நூல். முதல் நூல் அவர் உயிராய் நேசித்த அவரின் மருத்துவ பணியின் சவாலை ரசித்து ரசித்து எழுதிய நாவல் `உடல் உயிர் ஆத்மா’. இரண்டு நாவல்களும் என்னிடம் உண்டு. உடல் உயிர் ஆத்மா நாவல் என்னைக்கவர்ந்தது காரணம் ஆன்மிகமும் விஞ்ஞானமும் கலவையாக வந்து அவர் சந்தித்த பல பிரபலங்களையும் இனைத்து நாவலாக்கியிருந்தார். தொடுவானம் – சுயசரிதை - வாசிப்பில் எனக்கு சோர்வினைத்தந்தது. அதை அவரிடமும் பகிர்ந்தேன். வள்ளுவனின் திருக்குறளை தினமும் ஒரு குறள் எடுத்து, அதே இரண்டு வரிகளில் தமிழில் உள்ளதுபோலவே அதன் அழகைச் சிதைக்காமல் ஆங்கிலப்படுத்திக்கொண்டிருந்தார். எனக்கு ஆங்கில அறிவு தமிழறிவை விட படுமோசம், அதை என்னிடம் காண்பித்து விளங்காத கடினமான சொற்களுக்கு விளக்கம் கொடுப்பார். விளங்கிக்கொள்வதற்கு ஆர்மூட்டுவார். குறளை தமிழில் உள்ளதுபோலவே அதே பாணியில் அதே நடையில் தாம் மட்டுமே ஆங்கிலப்படுத்திக்கொண்டிருப்பதாகச் சொல்லி மகிழ்ந்துகொள்வார். உள்ளூர் கவிஞர்களின் தமிழ் கவிதைகளை (அவருக்கு மிகவும் பிடித்தமான) ஆங்கிலப்படுத்தி வாசித்துக்காட்டி பரவசப்படுவார். அர்த்தம் அதே போல் உள்ளதா, என்றும் கேட்பார். கவிதை என்பது உணர்வு, எப்படி மொழிபெயர்த்தாலும் அதன் உள்ளடக்கம் வேறு கோணத்தில்தான் இருக்கும், அதனால் அதை அப்படியே விட்டுவிடுங்கள் என்பேன். அதில் முரண்படுவார். அப்படியென்றால் கவிதைக்கு விளக்கம் கொடுக்கமுடியாதா.? ஏன் கவிஞர்கள் புரியாத மொழிநடையில் எழுதுகிறார்கள்.? புரியாமல் எழுதி யாருக்கு என்ன சொல்லவருகிறார்கள்.? எது இலக்கியம் .? காமம் கலந்து எழுதினால் அது இலக்கியமா.? எது கவிதை.? பாரதியார்/பாரதிதாசன் போல் கவிதை எழுதிவிட்டார்களா அவர்கள்..? புரியாமல் எழுதி என்ன சாதிக்கப்போகின்றார்கள்.? என்று ஆவேசமாக பேசுவார். எனக்கு அது படு நகைச்சுவையாக இருக்கும். Leo Tolstoy யின் அன்னகரினா நாவலை மீள்வாசிப்பு செய்துகொண்டிருந்தபோது, அந்நாவல் புதிய வாசிப்பில் தமக்கு இன்னும் பல சுவாரஸ்யங்களைக் கொடுப்பதாகச் சொல்வார். அந்நாவல் கொடுக்கின்ற புதிய அனுபவங்களை என்னிடம் பகிர்ந்தவண்ணமாகவே இருந்தார். தினமும் நாவலின் முக்கிய அத்தியாயங்களை என்னிடம் பகிர்வார். அன்னகரினா நாவலை வாசிக்காமலேயே அந்தக் கதையின் கரு எனக்குப் பரிச்சயமானது. ஆங்கிலப்பத்திரிகைகளை வாங்கி வாசிக்கும்படி அடிக்கடி வழிகாட்டுவார். ஆங்கில வாசிப்பு அவசியம் என்பார். தமிழ் முக்கியம் என்கிற கருத்தில் அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருப்பினும், ஆங்கிலமும் அதே அளவிற்கு முக்கியம் என்பதனையும் அடிக்கடி வலியுறுத்துவார். அவர் தினமும் வாசிக்கின்ற NST பத்திரிகையில் அடிக்கடி கட்டுரைகள் எழுதுவார். குறிப்பாக பொங்கல் வந்தால், பொங்கல் தமிழர் திருநாள், தை முதல்நாள் தான் நம்மவர்களின் புத்தாண்டு, என்பனவற்றைக் குறிப்பிட்டு திராவிடர் வரலாற்றுச்சான்றுகளோடு திராவிடர் தலைவர்கள் முன்மொழிந்த தைத்திருநாள் சான்றுகளை சாட்சிகளாக வைத்து தைப்பொங்கல்தான் நமது புத்தாண்டு என்று சொல்லி கட்டுரையினை முடித்திருப்பார். அது வாசகர் கருத்துப்பகுதியில் முக்கிய எழுத்தாக பிரசுரமாகும், நல்ல தலைப்புடன். இதை ஒவ்வொரு வருடமும் விடாமல் எழுதிக்கொண்டே இருப்பார். NST’யும் பிரசுரித்துக்கொண்டே இருக்கும். இந்த வருடத்தில் இருந்து அது வராது. நான் பெரிய படிப்பு படித்தவன், எனக்கு எல்லாம் தெரியும் என்று ஒருநாளும் காட்டிக்கொண்டு பேசியதே இல்லை. அலோபதி மருந்து மாத்திரைகளைப் பற்றி கறாரான கருத்துகள் வைத்திருந்தாலும், நாட்டு வைத்தியம், சித்த வைத்தியம், தொடுசிகிச்சை போன்றவற்றைப்பற்றி கருத்து சொல்ல மாட்டார். இருக்கலாம்…!! என்று மௌனமாக நழுவிவிடுவார். படித்தவர் பண்பு அதுதானே. நவம்பரில் தீபாவளி வரும், டிசம்பர் 20 ஆம் தேதி அவரின் பிறந்தநாள். டிசம்பர் 25 கிருஸ்த்துமஸ். பிறகு புத்தாண்டு போகி பொங்கல் என ஆண்டு இறுதியிலும் புத்தாண்டு பிறப்பிலும் பலவிதமான வாழ்த்துப்பரிமாற்றங்கள் வழி மீண்டும் உறவை புத்தாண்டு தொடக்கத்தில் புத்திப்பித்து நட்பிற்கு உயிர் கொடுப்போம். கடந்த தீபாவளிக்கு அவரின் தீபாவளிவாழ்த்து அழைப்பு வரவில்லை. வட்சாப் கூட அனுப்பிவைக்கவில்லை. தீபாவளி முடிந்த பத்தே நாட்களில் 16/11/2018யில் இறப்புச்செய்தி வந்தது. எல்லோருக்கும் வருவதுதானே என்று நினைத்தாலும் சிலரின் மறைவு ஈடுகட்டமுடியாத இழப்பு. நான் ஒரு நூலகத்தை, பொக்கிஷத்தை, வழிக்காட்டி அகராதியை இழந்து வாடுகிறேன். இனி இவர்போல் நட்பு எனக்கு வாய்க்காது. அதற்கு அவசியமும் இருக்காது. படித்தவற்றை பாராபட்சமில்லாமல் பகிர்கிற தன்மை எல்லோருக்கும் வந்துவிடாது. நமக்கு என்ன தேவையோ, எதையொட்டிய விவரத்தில் சந்தேகமோ, அதை யாரிமாவது கேட்டு, எங்கேயாவது வாசித்து நேரமெடுத்து நம்மிடம் பகிர்வார். அப்பேர்பட்ட பண்பு கொண்ட நல்ல நண்பர் டாக்டர் ஜி.ஜான்சன் எனக்கு 18 ஆண்டு கால நட்பாய் இருந்தது நான் செய்த பாக்கியம். இந்த நட்பு ஒரு வரம். அதன் அத்தியாயம் முடிந்துவிட்டது. வெள்ளைமனம் கொண்ட வளர்ந்த குழந்தை டாக்டர் ஜி.ஜான்சன்… Posted by ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி at 1/14/2019 1 கருத்து: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom) ஆத்மாநாம் உண்மையத் தவிர வேறு எதுவும் இலக்கியமாக முடியாது charu nivedita இலக்கியம் என்பது சுயவிமர்சனத்தில் பிறக்கும் ஒரு கலை வெளிப்பாடு jeyamohan உங்களின் அனுபவங்களை தைரியமாகச் சொல்லுங்கள், நிச்சயம் அவை போல் வேறொன்று இருக்கவே முடியாது. Alvin Toffler `The illiterate of the 21st century will not be those who cannot read and write, but those who cannot learn,unlearn and relearn' Paulo Coelho Don’t try to innovate storytelling, tell a good story and it is magical. I see people trying to work so much in style, finding different ways to tell the same thing. It’s like fashion. Style is the dress, but the dress does not dictate what is inside the dress. பிரபலமான இடுகைகள் மாதவிடாய் மாதவிடாய் - இது பெண்களுக்கான பிரத்தியேக சலுகை. இயற்கையிலே அமையப்பெற்ற ஒரு வரன் என்றும் சொல்லலாம். காரணம் மாதவிடாய் நிற்கும்வரை ஒரு ப... விறால் மீன் விறால் மீன் பற்றிய சில தகவல்கள். விறால் மீன் பிடிப்பது கடினமான ஒரு வேலை. இருப்பினும் சுவாரிஸ்யமான ஒன்று என்கிறார்கள் அனுபவசாலிகள். ஒர... நீண்ட கூந்தல் அவசியமா? திருமணம் ஆகும் வரை எனது கூந்தல் மிக நீளமாகத்தான் இருந்தது. அடர்த்தியாக பட்டுபோல் பளபளப்பாக இருக்கும். அதே போன்று பளபளப்பாக எப்போதும் வைத்தி... அங்கோர் வாட் (சியாம் ரீப்) - பயணக்கட்டுரை நாம் ஏன் பயணம் செய்கிறோம்.? ஒன்று நமக்கு அனுபவம் கிடைக்கவேண்டும் என்பதற்காக, இரண்டாவது நாம் அனுபவித்ததை பிறரோடும் பகிர்ந்து ரசி... பிரசுரமான எனது படைப்புகள் எனது ( கிட்டத்தட்ட இருபது ஆண்டு கால அனுபவம்) எழுத்துலக பயணம், கற்கள் முட்கள் நிறைந்தவை. அப்படி என்னதான் செய்துவந்துள்ளோம்!? என எனக்குள் த... காலை சூரியன் (மாமிகதை) மாமிகதை.. தோல் எல்லாம் அரிப்புகண்டு மிக மோசமாகிவிட்டது மாமியின் உடல். எவ்வளவு அரிப்பு மருந்துகள் வாங்கியும், இலைகளைக்கொண்டு மூலிகை வைத்த... சாருவை சந்தித்தேன்.... நவம்பர் 20ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை, மலாயா பல்கலைக்கழகத்தில், தம்பி தயாஜி மற்றும் நவீன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஓர் அற்புத இலக்கிய ...
கிட்டத்தட்ட அனைவருமே எதிர்பார்த்த ஒரு நிகழ்வு இன்று நடந்துள்ளது. பாகிஸ்தானின் ராணுவத் தளபதி ஜெனரல் பர்வீஸ் முஷரஃப், நாட்டில் நெருக்கடி நிலையைப் பிரகடனப் படுத்தியுள்ளார். அவரது கோணத்திலிருந்து இதை மட்டும்தான் அவரால் செய்திருக்க முடியும். ஆனால் இது பாகிஸ்தானைப் பெரும் உள்நாட்டுப் போரில் கொண்டுபோய் சேர்க்கப்போகிறது. 1. நீதிபதிகள் ஒடுக்கப்படுவர். ஒட்டுமொத்தமாக சிறையில் அடைக்கப்படுவர். சிலர் தீர்த்துக்கட்டப்படலாம். தலைமை நீதிபதி இஃப்திகார் சவுதுரி நிச்சயமாக சிறையில் தள்ளப்படுவார். 2. முக்கியமான சில வக்கீல்கள் - முஷரஃபை எதிர்ப்பவர்கள் - காணாமல் போகலாம். உயிருடன் திரும்பி வந்தால் பெரிய விஷயம். 3. எதிர்க்கட்சித் தலைவர்கள் நிச்சயமாக ஒடுக்கப்படுவர். நவாஸ் ஷரீஃப், பேநசீர் புட்டோ இருவருக்கும் தலைவலி. பாகிஸ்தானின் முன்னாள் ஆட்சியாளர்கள் கொடுத்த நெருக்கடி நிலை ஆட்சிக்கும் இப்போதுள்ள ஆட்சிக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். முஷரஃபின் முதல் நெருக்கடி நிலை ஆட்சிக்கும் இப்போதுள்ளதற்கும்கூட வித்தியாசங்கள் உண்டு. முதல்முறை முஷரஃபை மக்கள் ஆதரித்தனர். இப்போது முஷரஃபுக்கு எல்லாத் தரப்பு மக்களிடமிருந்தும் எதிர்ப்பு வலுத்துள்ளது. ஆனால் முஷரஃபின் பெரும் தலைவலி மதத் தீவிரவாதிகளிடமிருந்துதான் வரும். அவர்களைத்தான் முஷரஃப் தாக்குவார். அவர்கள் பதில் தாக்குதல் தொடுப்பார்கள். ஆனால் இப்பொழுது எதிர்க்கட்சியினரும் மக்களில் சிலரும் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தருவார்கள். விளைவு... பாகிஸ்தான் அரசியலே தீவிரவாதத்தின் பிடியில் மாட்டிக்கொள்ளும்.
இயக்குனர் சித்தார்த் குமார் திவாரி இயக்கத்தில் வந்துள்ள இணையத்தொடர் எஸ்கேப் லைவ் . இந்த இணையத் தொடரில் ஸ்வேதா திரிபாதி , பிளபிதா போர்தாகூர் , ஸ்வஸ்திகா முகர்ஜி மற்றும் நடிகர் சித்தார்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் கதை பொழுதுபோக்கு மொபைல் ஆப் ஒன்று திறமைகளை வளர்ப்பது , பொழுதுபோக்கு என்று கூறி ஒரு போட்டி ஒன்றினை அறிவிக்கிறது. இந்த போட்டியில் ஒரு சிறுமி உட்பட ஆறு வெவ்வேறு போட்டியாளர்கள் பங்கேற்க்கின்றனர். 30 நாட்களில் யார் அதிகம் பார்வையாளர்கள், டைமன்ட்கள் பெருகிறார்களோ அவர்களுக்கு 3 கோடி பரிசுத் தொகையாக அறிவிக்கின்றனர். அதற்காக திறமை என்ற பெயரில் அந்த ஆறு பேர் கோமாளித்தனமான, மூடத்தனமாக என்ன செய்கிறார்கள் யார் வெற்றி பெற்றார்கள் என்பது தான் மீதிக்கதை. சோசியல் மீடியா திரில்லர் என்ற வடிவில் இது உருவாகி உள்ளது. இது கற்பனை கதை என்று கடந்து சென்று விட முடியாது, காரணம் கிட்ட தட்ட இந்தியாவில் நடந்த சம்பவங்கள் குறிப்பாக தமிழகத்தில் நடந்துக்கொண்டிருக்கும் சம்பவத்தை தான் அப்படியே பிரதிபலித்துள்ளதாக பார்க்க முடிகிறது. dubsmash , musically வந்த புதிதில் facebook,instagram போல சாதாரணமாக ஒரு பொழுதுபோக்கு ஆப் என்று நினைத்தார்கள்.ஆனால் அதன் பிறகு வந்த tik tok இந்த எல்லைகளை கடந்து நாங்களும், எங்களது திறமைகளை காட்டுகிறோம் பாருங்கள் என ஒரு கூட்டம் கிளம்பியது. போட்டிக்கு போட்டியாக வீடியோ போடுவது ஒருவரை ஒருவர் வசைபாடுவது ஆபாசமாக நடனமாடுவது இதை எல்லாம் என்னுடைய திறமையை வெளிபடுத்தும் ஒரு வாய்ப்பு என் தங்கம் என் உரிமை என்ற அளவுக்கு பில்டப் செய்து பேசியது எல்லாம் வரலாற்றில் இன்றும் உள்ளது. இந்த இணையத்தொடரில் வரும் கதாபாத்திரங்கள் உண்மையாகவே தமிழகத்தில் இன்றும் உலாவுகின்றன காத்து கருப்பு கலை , திருச்சி சாதனா , ரவுடி பேபி சூர்யா , ஜி.பி.முத்து, இலக்கியா , திவ்யா கள்ளச்சி , தேனி சுகந்தி , வணக்கமுங்கோ ஷீலா , சேலம் மணி என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். இவர்களை பெரிய நட்சத்திர அந்தஸ்க்கு உயர்த்திவிட்டது ,நண்டு சுண்டு youtube சேனல்கள் ஆபாச டைட்டில் , அதிக பார்வையாளர்கள் பார்க்க வேண்டும் என்ற ஒரு கேவலமான நோக்கத்திற்காக இது போன்ற கழிசடைகளை நடமாட தொடங்கின. இது போதாது என்று 2k கிட்ஸ் என்ற பெயரில் சில நண்டு சிண்டுகள் முளைக்க தொடங்கியது.அதில் நறுக்கப்பட்டது தான் குட்டி வடிவேலு என்ற பொடியன் பள்ளிப்பெண்ணுடன் டிக் டாக் வீடியோ போட்டு 90s கிட்ஸ்களின் சாபத்தின் பேரிலும் புகாரின் பேரில் காவல்துறை அழைத்து செல்லமாக கொஞ்சி அனுப்பியதில் தற்போது youtube தளம் தப்பித்தது. tik tok போன்ற செயலிகளுக்கு பின்னால் நடக்கும் வியாபாரத்தை கனகச்சிதமாக இயக்குனர் வெளிபடுத்தி உள்ளார். லைக்ஸ் மற்றும் டைமென்ட்க்காக இருவரை மோத விடுவது,அதற்காக அவர்கள் செய்யும் மூடத்தனத்தால் பாதிப்புக்குள்ளான பிறகும் அவர்களை தொடர்ந்து வீடியோ செய்யும் படி வற்புறுத்துவது என பல உண்மை சம்பவங்கள் அப்படியே இதில் பிரதிபலித்துள்ளது என்று கூறலாம். ஒரு டான்ஸ் நிகழ்ச்சியில் சிறுமி என்று கூறிய காரணத்தால் பெரிய பெண்ணாக மாறவேண்டும் சிறுமி கூறும் விளையாட்டுத்தனமான பேச்சைக்கொண்டு பெரிய பெண்ணாக மாறுவதற்க்காக ஊசி செலுத்திக்கொள்வது என சிறுமி இதற்கு அடிமையாவது , தவறான பாதைக்கு செல்வது என தமிழகத்தில் மாணவர்களின் எதிர்காலம் எதை நோக்கி செல்கிறது என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்த இணையத்தொடர் ஓடிடி தளமான டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. விறுவிறுப்பான திரைக்கதை கடைசி வரைக்கும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. மொத்தம் 7 எபிசோடுகள் 7வது எபிசோடில் அடுத்த சீசனுக்கும் தொடர்ச்சி விட்டு சென்றிருக்கிறார் இயக்குனர் சித்தார்த் குமார் திவாரி. Kotravai 29 November 2022 தேசத்தந்தை காந்தி பிறந்தநாள் - அக்டோபர் 02 தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி சிபிஐ (எம்), சிபிஐ, விசிக அறைகூவல்! 26 September 2022 தற்கொலைகளை தடுக்க வாழ்வோம் வாழ்விப்போம் என்ற தலைப்பில் ஒன்றிணைவு நிகழ்ச்சியை நடத்தி தற்கொலை தடுப்பு உறுதிமொழி எடுத்த 116 அரசு செவிலியர்கள்
நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி முதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி தொலைபேசி எண் கணிப்பொறி -லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ் -க்கு அழைத்திடுக யான் மேயன்AzoresBougainvilleCasey Station (அன்டார்க்டிக்கா)Ceuta / MelillaChatham IslandsChuukDavis Station (அன்டார்க்டிக்கா)Dumont d'Urville Station (அன்டார்க்டிக்கா)GalapagosGambier IslandsKerguelenKiritimatiLord Howe IslandMadeiraMarquesasMawson Station (அன்டார்க்டிக்கா)McMurdo Station (அன்டார்க்டிக்கா)Palmer Station (அன்டார்க்டிக்கா)PohnpeiRothera Station (அன்டார்க்டிக்கா)Saint-BarthélemySyowa Station (அன்டார்க்டிக்கா)TarawaTroll Station (அன்டார்க்டிக்கா)Vostok Station (அன்டார்க்டிக்கா)Wakeஅங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டார்க்டிக்காஅன்டிகுவா பர்புடாஅப்காசியாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க கன்னித் தீவுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇங்கிலாந்துஇசுக்கொட்லாந்துஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்ஈஸ்டர் தீவுஉகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஏர்ட் தீவுஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்ஓலாண்ட் தீவுகள்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகாத்தலோனியாகானாகாபோன்காம்பியாகால்வாய் தீவுகள்கினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறிஸ்துமசு தீவுகிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குயெர்ன்சிகுராசோகுரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவாம்குவைத்கூபாகென்யாகேனரி தீவுகள்கேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசன்சிபார்சபாசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எசுடேசசுசெயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரிசுதான் டா குன்ஹாடிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்கன் குடியரசுடொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துர்கசு கைகோசு தீவுகள்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சண்ட்விச் தீவுகள்தெற்கு சூடான்தெற்கு யோர்சியா தீவுதொங்காநகோர்னோ கரபாக் குடியரசுநடுவழி தீவுகள்நமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரஞ்சு தெற்கத்திய மற்றும் அண்டார்க்டிக் நிலங்கள்பிரான்சுபிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம்பிரித்தானிய கன்னித் தீவுகள்பிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபுவேர்ட்டோ ரிக்கோபுவேர்ட்டோ ரிக்கோபூட்டான்பூவே தீவுபெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொனெய்ர்பொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமக்குவாரி தீவுமக்டொனால்ட் தீவும்மங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமயோட்டேமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமாண் தீவுமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமேற்கு சகாராமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொன்செராட்மொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்யேர்சிரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வட அயர்லாந்துவடகொரியாவடக்கு சைப்பிரசுவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாவேல்ஸ்ஸ்வால்பார்ட்ஹவாய்ஹொங்கொங்ஹொண்டுராஸ்
இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 634,708 ரூபாவாக பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சிறிது உயர்ந்து வருகின்றது. இலங்கையில் தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 179,150 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 164,200 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 156,750 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது. எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தது. எனினும், அடுத்து வந்த சில நாட்களில் 20 தொடக்கம் 40 ஆயிரம் ரூபாவால் இலங்கையில் தங்கத்தின் விலை குறைவடைந்து தற்போது 160,000 என்பதை அண்மித்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.
அமைச்சரவையில் டெல்டா மாவட்டங்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்கப்படாதது பெரிய குறையாக இருக்கிறது. ஹாட்ரிக் வெற்றியடைந்த தன் மகனுக்காக, மில்க் சீனியர் தகிடுதத்தம் போட்டும் முதன்மையானவர் மனதை அசைக்க முடியவில்லை. ஜனவரி மாதம் வாரிசுக்கு மகுடம் சூட்டத் திட்டமிட்டிருக்கும் முதன்மையானவரிடம், மறுபடியும் தன் மகனுக்காகப் பேசினாராம் மில்க் சீனியர். ‘பார்க்கலாம்’ என்று மட்டும் பதில் சொன்ன முதன்மையானவர், கற்பிக்கும் துறையின் இளம் அமைச்சரை அழைத்து, “டெல்டாவில் கட்சியை வளர்க்கவேண்டியது உன் பொறுப்பு. வேறு யாருக்கும் இப்போதைக்கு நான் முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன்” என்றாராம். அடுத்தகட்டமாக இல்லத்து ஆட்களை அணுகி மகனுக்காக மன்றாடவிருக்கிறாராம் மில்க் சீனியர். மகனா... மந்திரியா? மகனுக்கு ஏதாவது ஒரு முக்கியப் பொறுப்பைப் பெற்றுவிட, பலவிதங்களிலும் காய்நகர்த்துகிறாராம் பசுமையான அமைச்சர். சமீபத்தில் முதன்மையானவரைச் சந்தித்து நீண்ட நேரம் பேசியவர், மகன் குறித்த கோரிக்கையையும் சொல்லியிருக்கிறார்.சம்பந்தப்பட்ட துறையை இப்போது முழுதாக நிர்வகிப்பதே அமைச்சரின் வாரிசுதான். அதை மனதில்வைத்து, “உங்க மகன் இப்பவே பவரில்தானே இருக்கார்?” என முதன்மையானவர் சொல்லிச் சிரிக்க, அமைச்சருக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டதாம். “சும்மா தமாஷுக்குத்தான் சொன்னேன்…” என முதன்மையானவர் சகஜப்படுத்திய பிறகுதான் இயல்புநிலைக்குத் திரும்பினாராம் பசுமையான அமைச்சர்! கடன் கிடையாது… காரியம் வேணா உண்டு! கடந்த தேர்தலில், தன் தொகுதியை மட்டுமல்லாமல் தன் மாவட்டத்துக்கு உட்பட்ட அத்தனை தொகுதிகளையும் வெல்லவைக்க வியூகம் வகுத்தார் மேற்கு மாவட்டப் பசை அமைச்சர். அதேபோல் வென்றும் காட்டினார். ஆனால், வியூகத்தைச் செயல்படுத்த அப்போது பசைக்குத் தடுமாறிய அமைச்சர், முன்னாள்-இந்நாள் என வேறுபாடு பார்க்காமல் பலரிடமும் கடன் பெற்றாராம். பணம் கொழிக்கும் வளமான துறைகளுக்கு அமைச்சரான பிறகும், வாங்கிய பசையைத் திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடிக்கிறாராம். “பணமா தர முடியாது. காசு பார்க்கிற வேலைகள் ஏதாச்சும் எடுத்துட்டு வாங்க. செஞ்சு கொடுக்கிறேன்…” எனக் கடன் கொடுத்தவர்களிடம் வித்தியாசமான டீல் பேசுகிறாராம். டீலுக்கு ஒத்துவராதவர்களின் போனை பிளாக் லிஸ்ட்டில் போட்டுவிட்டு, அணுக முடியாத தூரத்துக்குப் போய்விடுகிறாராம்!
செமால்ட்டிலிருந்து பயிற்சி: கூகிள் அனலிட்டிக்ஸ் இருந்து நிலையான மற்றும் டைனமிக் ஐபி முகவரியை எவ்வாறு விலக்குவது செமால்ட்டிலிருந்து பயிற்சி: கூகிள் அனலிட்டிக்ஸ் இருந்து நிலையான மற்றும் டைனமிக் ஐபி முகவரியை எவ்வாறு விலக்குவது உங்கள் வலைத்தளத்திற்கான போக்குவரத்து உள் (ஊழியர்கள் போன்ற உங்கள் நிறுவனத்தில் உள்ள பயனர்களிடமிருந்து) அல்லது வெளிப்புறமாக இருக்கலாம் (இருக்கும் மற்றும் சாத்தியமான வாடிக்கையாளர்களிடமிருந்து). கூகிள் அனலிட்டிக்ஸ் ஒரு பயனுள்ள அறிக்கையை வழங்க விரும்பினால், நீங்கள் உள் போக்குவரத்தை விலக்க வேண்டும் என்று செமால்ட்டின் மூத்த வாடிக்கையாளர் வெற்றி மேலாளர் ஜூலியா வாஷ்னேவா கூறுகிறார். ஏனென்றால் நிறுவனத்தின் போக்குவரத்து முக்கியமான பகுப்பாய்வு அளவீடுகளையும் மாற்று விகிதங்களையும் கூட கணிசமாக மாற்றும். Google Analytics இலிருந்து நிலையான ஐபி தவிர்த்து உள் போக்குவரத்தை கண்காணிப்பதில் இருந்து அனலிட்டிக்ஸ் நிறுத்த பல்வேறு வழிகள் உள்ளன. நீங்கள் ஒரு நிலையான ஐபி முகவரியைப் பயன்படுத்தினால், நிறுவனத்தின் போக்குவரத்தைத் தவிர்ப்பது மிகவும் எளிதானது, ஏனெனில் பின்வரும் வழிமுறைகளைப் பயன்படுத்தி ஐபி முகவரி வடிப்பானை உருவாக்குவது இதில் அடங்கும்: உங்கள் ஐபி முகவரியைத் தீர்மானிக்கவும்: கூகிள் "எனது ஐபி முகவரி" மற்றும் கூகிள் உங்கள் பொது ஐபி முகவரியைக் காண்பிக்கும். GA இலிருந்து நீங்கள் விலக்க வேண்டிய முகவரி இது. ஐபி முகவரிக்கு புதிய வடிப்பானை உருவாக்கவும்: இந்த கட்டத்தில், உங்கள் பொது ஐபி முகவரியிலிருந்து போக்குவரத்தை விலக்க புதிய வடிப்பானை உருவாக்க வேண்டும். இந்த பணிக்கு உங்களுக்கு நிர்வாகி உரிமைகள் தேவை. உங்கள் GA கணக்கில் உள்நுழைந்த பிறகு, நிர்வாகம்> அனைத்து வடிப்பான்கள்> புதிய வடிகட்டி என்பதைக் கிளிக் செய்க. வடிப்பானுக்கு ஒரு பெயரைத் தேர்ந்தெடுத்து சேர்க்கவும். அடுத்து, இந்த ஐபி முகவரியிலிருந்து போக்குவரத்தை விலக்க கீழ்தோன்றும் மெனுவைப் பயன்படுத்தவும். இறுதியாக, இந்த வடிப்பான் பயன்படுத்த விரும்பும் வலைத்தளம் (களை) தேர்ந்தெடுத்து மாற்றங்களைச் சேமிக்கவும். ஐபி முகவரி விலக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தவும்: நிகழ்நேர தரவைச் சரிபார்க்கவும், நீங்கள் சேர்த்த ஐபி முகவரி விலக்கப்பட்டிருந்தால், வடிகட்டுதல் வெற்றிகரமாக இருந்தது. GA இலிருந்து டைனமிக் ஐபி முகவரியைத் தவிர்த்து உங்கள் நிறுவனத்தில் சப்நெட் அல்லது ஐபி முகவரிகள் உள்ளன. அல்லது உங்கள் சாதனம் பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த சந்தர்ப்பங்களில், GA இலிருந்து உள் போக்குவரத்தை விலக்க மற்றொரு அணுகுமுறை எடுக்கப்படுகிறது, மேலும் இது பின்வரும் படிகளை உள்ளடக்கியது: புக்மார்க்கெட் அல்லது GMT ஐப் பயன்படுத்தி குக்கீ அமைக்கவும். உள் போக்குவரத்து 5 நபர்கள் அல்லது அதற்கும் குறைவான குழுவிலிருந்து வந்தால், புக்மார்க்கெட் போதுமானது. ஒரு பெரிய குழு அல்லது பல சாதனங்களில் வடிகட்டுவதற்கு, GMT விருப்பம் விரும்பப்படுகிறது. வருகை உள்நாட்டில் உருவாக்கப்பட்டதா அல்லது அது வெளிப்புற பயனரிடமிருந்து வந்ததா என்பதைத் தீர்மானிக்க GA இல் தனிப்பயன் பரிமாணத்தை உருவாக்கவும். நிர்வாக பிரிவில், PROPERTY நெடுவரிசை> தனிப்பயன் வரையறைகள்> தனிப்பயன் பரிமாணங்களுக்குச் செல்லவும். தனிப்பயன் பரிமாணத்திற்கான மதிப்பாக "உள் போக்குவரத்து" அமைக்கவும். டைனமிக் ஐபிக்களுக்கு ஒரு வடிப்பானை உருவாக்கவும்: நிர்வாக பிரிவுக்குச் சென்று காட்சி நெடுவரிசையில் வடிப்பான்களைத் தேர்ந்தெடுக்கவும். "+ புதிய வடிகட்டி" (சிவப்பு பொத்தான்) என்பதைக் கிளிக் செய்து, "உள் போக்குவரத்தை விலக்கு (டைனமிக் ஐபி)" ஐ உள்ளிடவும். வடிகட்டி வகையாக விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் உருவாக்கிய தனிப்பயன் பரிமாணத்தைத் தேடி, வடிகட்டி வடிவத்திற்காக உண்மையை உள்ளிடவும். Add ஐ சேர்ப்பதன் மூலம் வடிப்பானைச் செயல்படுத்தவா? உங்கள் தளத்தின் URL இன் இறுதியில் உள்ளக. வடிகட்டி செயல்படுத்துவதற்கு நீங்கள் புக்மார்க்கையும் பயன்படுத்தலாம். கடைசியாக, வடிகட்டி செயலில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும். உங்கள் தளத்தின் எந்தப் பக்கத்திற்கும் செல்லுங்கள் அல்லது நீங்கள் தற்போது இருக்கும் பக்கத்தைப் புதுப்பிக்கவும். நிகழ்நேர அறிக்கையைத் திறந்து, உங்கள் கடைசி வருகை அறிக்கையில் காட்டப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும். இது காண்பிக்கப்படாவிட்டால், உங்கள் வடிப்பான் செயலில் உள்ளது. உள் போக்குவரத்து உங்கள் வணிகத்தில் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். வாடிக்கையாளர் நடத்தை குறித்த கூகுள் அனலிட்டிக்ஸ் பயனுள்ள நுண்ணறிவுகளை வழங்குகிறது என்பதை உறுதிப்படுத்த நிலையான மற்றும் மாறும் ஐபி முகவரிகளுக்கான வடிப்பான்கள் செயலில் வைக்கப்படுவது கட்டாயமாகும்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது. இது தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுவடைந்து வருகிறது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், அதனையடுத்து மண்டலமாகவும் வலுவடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், அதனைத்தொடர்ந்து மண்டலமாகவும் வலுவடைய வாய்ப்பு உள்ளது. ஆனால் அது புயலாக மாறுவதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 14-ந்தேதி வரை 5 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும். இன்று (10-ந்தேதி) தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழையும், தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கனமழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை (11-ந்தேதி) மற்றும் 12-ந்தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் கனமுதல் மிக கனமழை பெய்யும். 13, 14-ந்தேதிகளிலும் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை கடற்கரை பகுதி முதல் தமிழக கடலோர பகுதிகளில் கனமழை இன்று மாலையில் இருந்து 14-ந்தேதி வரை பெய்யக்கூடும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர். நாளை 11-ந்தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமுதல் மிக கன மழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இரட்டை குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகிப்பார்களாயின் அவர்களுக்கு எதிராக எடுக்கப்படும் சட்ட நடவடிக்கை தொடர்பில் சட்டமா அதிபர் உட்பட சட்ட வல்லுநர்களின் ஆலோசனை கோர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரு சிலர் இரட்டை குடியுரிமை உடையவர்கள் என வெளியாகும் செய்தி தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற நடவடிக்கை ஊடாக இரட்டை குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை அடையாளம் காண முடியாது என அவர் கூறியுள்ளார். ‘குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தில் இரட்டை குடியுரிமை உடையவர்களுக்கு அரசியல் பிரவேசத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தில் இரட்டை குடியுரிமை உடையவர்கள் அரசியலில் செல்வாக்கு செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே இரட்டை குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பார்களாயின் இலங்கை பிரஜை எவரும் அவர்களுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யலாம். இரட்டை குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகிப்பார்களாயின் அவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கை தொடர்பில் சட்டமாதிபர் மற்றும் சட்ட வல்லுநர்களின் ஆலோசனை கோர தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில், ஹங்கேரியைச் சேர்ந்த ஆயிஷா என்ற சகோதரி Reading Islam இணையதளத்திற்கு அனுப்பிய மின்னஞ்சல் அந்த தளத்தில் வெளியாகி இருந்தது. சமீபத்தில், ஹங்கேரியைச் சேர்ந்த ஆயிஷா என்ற சகோதரி Reading Islam இணையதளத்திற்கு அனுப்பிய மின்னஞ்சல் அந்த தளத்தில் வெளியாகி இருந்தது. இஸ்லாத்தை இளவயதில் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் சந்திக்கக்கூடிய சவால்களை அழகாக வெளிப்படுத்தியது அந்த கடிதம். அந்த மின்னஞ்சல் உங்கள் பார்வைக்காக… “என் பெயர் ஆயிஷா. ஹங்கேரியின் வடக்கு பகுதியைச் சேர்ந்தவள். நான் இஸ்லாத்தைப் பற்றி என் மேல்நிலை வகுப்பில் படித்திருக்கிறேன், ஏனென்றால் ஹங்கேரி சுமார் 150 ஆண்டுகள் துருக்கியின் ஆக்கிரமைப்பில் இருந்த நாடு. பிறகு, பல்கலைகழகத்தில் மூலக்கூறு உயிரியல் (Molecular Biology) வகுப்பில் சேர்ந்த போது நிறைய வெளிநாட்டு முஸ்லிம் மாணவர்களை சந்தித்தேன். ஏன் முஸ்லிம்கள், தங்களை முஸ்லிம்கள் என்று கூறிக்கொள்வதில் இவ்வளவு பெருமை கொள்கின்றனர் என்பதை அறிய எப்போதுமே மிகுந்த ஆவல். நான் கத்தோலிக்க பின்னணியை கொண்டவள், நல்ல மதம்தான், ஆனால் எப்போதுமே என் மதத்தை பற்றி மனதில் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தேன், அதுமட்டுமல்லாமல் ஒரு சில விசயங்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உதாரணத்துக்கு, எப்படி கடவுளுக்கு மகன் இருக்க முடியும், அதுபோல திரித்துவ கொள்கையை (Trinity) என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒருமுறை, என் நண்பர்களுடன் இரவு உணவு உட்கொண்டிருந்தபோது, பாங்கு ஆரம்பித்தது. ஒரு நண்பர் அதனை நிறுத்துமாறு கூறினார், நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். அது என்னை மிகவும் கவர்ந்தது, நிச்சயமாக அதில் ஏதோ ஒன்று என் இதயத்தை தொடுவதாக உணர்ந்தேன். பிறகு, கோடைக்காலத்தில், நான் ஏன் இணையத்தளத்திலிருந்து குரான் சம்பந்தபட்ட ஒரு பதிவை பதிவிறக்கம் (Download) செய்தேனோ தெரியவில்லை. அதனை நான் அரபியில் கேட்டுக்கொண்டே ஆங்கிலத்தில் படித்தேன். பிறகு, நான் இஸ்லாமை பற்றி நிறைய சிந்திக்க துவங்கிவிட்டேன், அதுமட்டுமல்லாமல் இஸ்லாம் தொடர்பான நிறைய நூல்களை படித்தேன். இரண்டு மாத தீவிர யோசனைக்கு பிறகு இறுதியாக இஸ்லாத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டேன். என் இரு நண்பர்கள் முன்பாக ஷஹாதா கூறினேன்… “வணக்கத்துக்குரியவன் இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவன் தூதரென்றும் சாட்சியம் கூறுகிறேன்” நான் என் கலாச்சாரத்துக்கு எதிராகவும் என் குடும்பத்திற்கு எதிராகவும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன், குறிப்பாக என் தாயாருக்கு இதில் சுத்தமாக உடன்பாடு இல்லை. நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சில நாட்களில் ரமலான் மாதம் வந்தது. இஸ்லாத்தில் என்னுடைய புது வாழ்வை ரமலான் மாதத்தில் இருந்து தொடங்குவதென முடிவெடுத்தேன். அல்ஹம்துலில்லாஹ்…ரமலான் மாதத்தை வெற்றிகரமாக கடந்தேன். ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதியிலிருந்து தொழ ஆரம்பித்தேன். துவக்கத்தில் எனக்கு மிக கடினமாக இருந்தது, ஏனென்றால் என்னை சுற்றி இருந்த முஸ்லிம்கள் யாரும் இஸ்லாத்தை சரிவர பின்பற்றவில்லை, அதனால் நான் யாரிடமும் கேட்கவில்லை. எப்படி தானாக தொழுவது என்று இணையதளங்களில் இருந்து கற்றுக்கொண்டேன், ஏனென்றால், யாரும் எனக்கு எப்படி தொழ வேண்டும் என்றோ அல்லது உளு எப்படி செய்ய வேண்டும் என்றோ அல்லது இஸ்லாத்தின் சட்டத்திட்டங்களையோ சொல்லித்தரவில்லை. ஒருமுறை என் நண்பர் ஒருவர் சொன்னது என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது. அவர் கூறினார், உன்னால் நிச்சயமாக இஸ்லாத்தை புரிந்து கொள்ள முடியாது, ஏனென்றால் நீ முஸ்லிமாக பிறக்கவில்லை என்று”. (இப்படி சொன்ன அந்த சகோதரருக்கு, இஸ்லாமை பற்றிய தெளிவான அறிவை இறைவன் அளிப்பானாக…ஆமின்) “நான் ரமலானில் நோன்பு நோற்க விருப்பப்படுகிறேன் என்று நான் அவரிடம் கூறியபோது, அவர் கூறினார், ரமலான் என்பது பசியோடு இருப்பது மட்டும் அல்ல என்று. இது நடந்தபோது நான் இஸ்லாத்திற்கு மிக புதியவள், இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு ஒரு மாதம் தான் ஆகியிருந்தது. அப்போது நான் மிகவும் பயந்துவிட்டேன் என்னால் அரபியில் தொழ முடியாமலேயே போய்விட்டால் என்ன செய்வது? என்னால் சரியாக தொழ முடியாவிட்டால் என்ன செய்வது? அதுமட்டுமல்லாமல் என்னிடம் ஹிஜாபோ, தொழுகை விரிப்போ கூட இல்லை, உதவி செய்யவும் யாருவில்லை. மிகவும் பயந்துவிட்டேன்… ஆனால், நான் தொழ ஆரம்பித்தபோது, இறைவன் நிச்சயமாக இப்போது என்னைப் பார்த்து புன்னகைத்து கொண்டிருப்பான் என்றே நினைத்தேன். ஏனென்றால், சூராக்களையும் தொழும் முறைகளையும் ஒரு தாளில் எழுதிக்கொள்வேன், பின்னர் அந்த தாளை என் வலது கையில் வைத்துக்கொண்டு சத்தமாக படிப்பேன், பிறகு ருக்கூ செய்வேன்,அப்படியே படிப்பேன்…இப்படியே தொடரும்… நிச்சயமாக நான் செய்வது வேடிக்கையாய் இருக்கிறதென்று எனக்கு தெரியும். பிறகு வெற்றிகரமாக சூராக்களை அரபியில் மனப்பாடம் செய்துக்கொண்டேன், அதன் பிறகு பிரச்சனை இல்லை. பிறகு facebook வந்தேன், நிறைய நண்பர்களும், சகோதரிகளும் கிடைத்தார்கள். அந்த சகோதரிகளிடமிருந்து நிறைய அன்பையும் துணிவையும் பெற்றேன். பிறகு முஸ்லிம் ஒருவர் என்னை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். அவர்தான் எனக்கு ஹிஜாபும், தொழுகை விரிப்பும், ஒரு இஸ்லாமிய நூலையும் பெற்றுத் தந்தார். அதுமட்டுமல்லாமல், ஜோர்டானிலிருந்து என் முதல் அரபி குரானை தபால் மூலம் பெற்றேன், ஏனென்றால் இங்கு அதை வாங்கமுடியாது. இப்போது சுமார் ஒரு வருடமாக நான் ஹிஜாப் அணிகிறேன். என் தாயுடன் மிக கஷ்ட காலங்களை கடந்து வந்தேன். அவர் என்னிடம் கூறுவார், நீ தீவிரவாதி ஆகிவிடுவாய் என்று. எப்படி என் பழைய மதத்தை விட்டு விலகி வந்தேனோ, அதுபோல என் தாயாரையும், என் நாட்டையும் விட்டு விலகிவிட எண்ணினேன். அவர் எல்லா பன்றி இறைச்சிகளையும் குளிர் சாதன பெட்டியில் வைத்துவிடுவார், நான் அவற்றை உண்ண மறுப்பேன், பிறகு அது அவருக்கும் எனக்குமிடையே பெரும் வாக்குவாதமாக மாறிவிடும்.. அவரால் நான் தொழுவதையோ, ஹிஜாப் அணிந்திருப்பதையோ பொறுத்துக்கொள்ள முடியாது. அதனால் நான் மாடியில் என் அறையில் தொழுதுக் கொள்வேன். நான் ஹிஜாப் அணிந்திருக்கும்போது என்னை திரும்பிக்கூட பார்க்கமாட்டார், அப்போது கூறுவார் “நான் ஒரு கிருத்துவ மகளைத் தான் பெற்றெடுத்தேன், ஹிஜாப் அணிந்த முஸ்லிமை அல்ல” என்று… ஆக, எங்களுக்குள் கடுமையான பிரச்சனைகள். ஆனால் நான் எப்பொழுதும் என் தாயாரிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதில்லை. அல்ஹம்துலில்லாஹ்…. இப்பொழுது என் தாயார் அமைதியாகிவிட்டார்,நான் இஸ்லாத்தை தழுவியதையும் ஏற்றுக்கொண்டு விட்டார். அதற்காக நான் அல்லாஹ்விற்கு நன்றி சொல்கிறேன். இப்போதெல்லாம் நான் ஹிஜாபுடனே வெளியே செல்கிறேன், என் தாயாரும் ஒன்றும் சொல்லுவது இல்லை. என் தந்தையுடன் நான் என் வாழ்நாளில் பேசியதே இல்லை, அவரும் என்னைப் பார்க்க விரும்பியதில்லை. ஆனால் இப்போதோ, இஸ்லாமினால், நான் அவரிடம் நெருங்க ஆரம்பித்திருக்கிறேன், அதனால் இப்போதெல்லாம் அவர் எங்களை அடிக்கடி வந்து பார்க்கிறார். ஆம், என் வாழ்க்கை ஒரு மிகப்பெரிய சோதனை, ஆனால் அதற்காக நான் இறைவனுக்கு நன்றி சொல்லுகிறேன், அதுமட்டுமல்லாமல் எனக்கு பொறுமையும் நம்பிக்கையும் இருக்கிறது. கியாமத் நாளில் நான் அவர்களுக்கு நன்றி உடையவளாய் இருப்பேன். நான் மென்மேலும் என்னை தூய்மைப்படுத்திக்கொள்ளவும், என் மார்க்கத்தை பற்றி அறிந்து கொள்ளவும் முயற்சி செய்கிறேன். சமீபத்தில், ஹங்கேரியைச் சேர்ந்த ஆயிஷா என்ற சகோதரி Reading Islam இணையதளத்திற்கு அனுப்பிய மின்னஞ்சல் அந்த தளத்தில் வெளியாகி இருந்தது. அல்லாஹ் என் மீது என்ன விதித்திருக்கிறானோ அதுதான் நடக்கும். அதனால் இறைவன் எனக்கு அளித்த இந்த வாழ்வை அழகான முறையில் வாழவே விரும்புகிறேன். நான் இப்போது டெப்ரசென்னில் (Debrecen, the second largest city in Hungary) மற்றவர்களுக்கு உதவிக் கொண்டிருக்கிறேன். சமீபத்தில் நான் ஒரு பணி திட்டத்தை துவங்கியுள்ளேன், அது, மக்களிடமிருந்து, ஏற்கனவே பயன்படுத்திய உடைகளை சேகரித்து இங்குள்ள அகதிகள் முகாமில் இருக்கும் மக்களுக்கு கொடுப்பதாகும். யுத்தங்களினால் வீடில்லாத நிறைய முஸ்லீம்களும் இங்கு இருக்கின்றனர். அதனால், உடைகளை சேகரித்து அங்கு சென்று அவர்களுக்கு கொடுத்தோம். அங்கு உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாகிஸ்தானி ரொட்டிகள் தயாரித்து கொடுத்தேன், என்னுடைய இந்த செயல் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது, அதனை பார்க்கும்போது எனக்கு மிகவும் சந்தோஷமாய் இருந்தது. முன்பெல்லாம் எனக்கு தொந்தரவு தரும் வகையில் யாராவது பேசினால் மிகவும் கோபப்படுவேன், ஆனால் இப்போதோ, நான் போகுமிடமெல்லாம் மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாய் இருக்க விரும்புகிறேன். அதுமட்டுமல்லாமல், இஸ்லாத்தை ஏற்க விரும்புகிறவர்களுக்கும்,புதிதாய் ஏற்றவர்களுக்கும் வழிகாட்ட முயற்சிக்கிறேன். ஒருநாள் இங்கு, புதிதாய் இஸ்லாத்தை தழுவிய இரண்டு ஹங்கேரிய சகோதரிகளை சந்தித்தேன். அவர்களுக்கு இஸ்லாமிய புத்தகங்களையும், என்னுடைய தொழுகை விரிப்புகளையும், குரானையும் கொடுத்தேன். அல்ஹம்துலில்லாஹ், நாங்கள் மூவரும் சேர்ந்தே தொழுதோம், அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. முஸ்லிம்களாகிய நாங்கள் அருமையானவர்கள், நட்பானவர்கள், நல் இதயத்தை உடையவர்கள் என்ற பிம்பத்தை விட்டுச் செல்லவே முயற்சிக்கிறேன். நான் இஸ்லாத்தை தழுவி ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. நான் இப்போது, குரானை ஓதுவதற்காக அரபி கற்றுக் கொண்டிருக்கிறேன். தற்போது குரானை ஹங்கேரி மொழியில் படிக்கிறேன், தொழுகைகளை தவறாமல் நிறைவேற்றுகிறேன், குரானையும் சுன்னாவையும் சரியாக பின்பற்ற முயற்சிக்கிறேன், இஸ்லாத்தை மெம்மேலும் புரிந்து கொள்ள நிறைய நூல்களை படிக்கிறேன்……
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினரான போலாந்து வம்சாவழி இரெனா ஸெசிவின்ஸ்கா அம்மையார் ஆடவர் குண்டு எறிதல் போட்டியில் தங்க பதக்கம் பெற்ற சகநாட்டவர் மாஜீவ்ஸ்க்கியை கட்டித் தழுவி அன்புடன் முத்தமிட்டார். • 29வது கோடைகால ஒலிம்பிக் தொடக்க விழாவை கண்டுகளித்த நேயர்களின் கருத்துக்கள் 2008-08-14 இப்போது விளையாட்டுப் செய்திகள் நிகழ்ச்சி நேரம். இன்றைய நிகழ்ச்சியில் முக்கியமாக 29வது கோடைகால ஒலிம்பிக் தொடக்க விழாவை கண்டுகளித்த நேயர்களின் கருத்தை கேளுங்கள்.<?xml:namespace prefix = o ns = "urn:schemas-microsoft-com:office:office" /> • துவங்கியுள்ள ஒலிம்பிக் செய்தி மையம் 2008-08-08 பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை அறிவிக்கு செய்தியாளர்களுக்கு செய்தி ஊடக சேவையும் துவங்கியது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத பணி இறுதி காலத்தில் நுழைந்துள்ளதை இவையனைத்தும் கோடிட்டுக் காட்டியுள்ளன. • ஒலிம்பிக் ஆயத்த பணியின் மீளாய்வு 2008-07-31 நிகழ்ச்சியின் துவக்கமாக சீன தேசிய விளையாட்டு அரங்கு பற்றிய தகவல். அதன் பறவைக் கூடு என்றும் இன்னொரு பெயரில் அது அழைக்கப்படுகின்றது. • சீற்றத்தை துணிவுடன் எதிர்நோக்கியுள்ள சீன மக்கள் 2 2008-07-24 இப்போதும் சிச்சுவான் மாநில மக்களும் சீனாவின் பல்வேறு மாநிலங்களும் தொடர்ந்து பேரிடர் நீக்க மீட்புதவி பணியில் ஈடுப்பட்டு தங்கள் முயற்சிளால் பேரிடரை குறைக்க இயன்ற பணிகளை செய்து வருகின்றனர்.
அமெரிக்காவின் சிகாகோ அருகே அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் ஊழியர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சிகாகோ: அமெரிக்காவின் சிகாகோ அருகே அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் ஊழியர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 6 போலீஸ்காரர்கள் காயமடைந்தனர். ஜனநாயக நாடான அமெரிக்காவில் குடிமக்கள் துப்பாக்கி போன்ற பயங்கர ஆயுதங்கள் வைத்திருக்க அந்த நாட்டு அரசியல் சாசனம் அனுமதி அளித்து உள்ளது. இதனால் அங்கு பெரும்பாலானவர்கள் நவீன துப்பாக்கிகளை வைத்துள்ளனர். ஆனால் இதுவே அமெரிக்க அரசுக்கு தற்போது பெரும் தலைவலியாக மாறி இருக்கிறது. ஏனெனில் பல்வேறு காரணங்களுக்காக சிலர், சக குடிமக்களை கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அங்கு அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் மீண்டும் ஒரு சம்பவம் தற்போது அரங்கேறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவின் இல்லினாயிஸ் மாகாணத்துக்கு உட்பட்ட சிகாகோ நகரின் புறநகர் பகுதியான அரோராவில் ஹென்றி பிராட் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்களுக்கான வால்வுகள் தயாரிக்கும் இந்த நிறுவனம் வட அமெரிக்காவின் மிகப்பெரிய உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் உற்பத்தி பிரிவு கட்டிடம் ஒன்றில் நேற்று முன்தினம் பகலில் மும்முரமாக பணிகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு பணியாற்றிக்கொண்டு இருந்த கேரி மார்ட்டின் (வயது 45) என்ற ஊழியர் திடீரென தனது துப்பாக்கியை எடுத்து சக ஊழியர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டார். இதில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ஒருவர் பின் ஒருவராக சரிந்தனர். இதைப்பார்த்த பிற ஊழியர்கள் தங்கள் உயிரை காத்துக்கொள்வதற்காக அங்கும் இங்கும் ஓடினர். இதனால் தொழிற்சாலையில் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் குண்டு பாய்ந்து 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து உடனே அரோரா நகர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் ஹென்றி பிராட்டை சரணடையுமாறு கூறினர். ஆனால் அவர் போலீசாரையும் நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் 6 போலீசார் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். காயமடைந்த போலீசார் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. அமெரிக்காவில் இந்த ஆண்டு நடந்த மிகப்பெரிய துப்பாக்கிச்சூடு சம்பவமாக இது கருதப்படுகிறது. அதேநேரம் 5 அல்லது அதற்கு மேல் உயிரிழப்புகளை ஏற்படுத்திய 3-வது சம்பவம் எனவும் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் சிகாகோ நகர் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
முன்பெல்லாம் முறைப்படி நடனம் கற்றவர்கள் மட்டுமே ஆடி வந்தனர். ஆனால் இப்போதெல்லாம் சாதாரணமாகவே பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் பள்ளி, கல்லூரி விழாக்கள் என்றால் கேட்கவே வேண்டாம். அங்கு ஆட்டம், பாட்டத்துக்கு குறையே இருக்காது. இளம்பெண்களின் நடனமாடும் ஆசையின் தொட்டக்கப்புள்ளியாக ஷெரிலை சொல்லலாம். ஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு இவர் ஆடிய நடனம் வேற லெவலில் ஹிட் ஆனது. அதன்பின்னர் தொடர்ந்து பலரும் அதேபோல் பலரும் ஆடத் தொடங்கினர். அவற்றில் சில வைரலும் ஆனது. பள்ளி, கல்லூரி விழாக்களிலும் மாணவிகள் மேடை ஏறி பட்டையை கிளப்புகின்றனர். இங்கும் அப்படித்தான் ஒரு விஷயம் தான் நடந்துள்ளது. நீங்களே பாருங்க. வீடியோ இதோ.. Post navigation Previous Post:கில்லி படத்தில் திரிஷாவுக்கு அம்மாவாக நடித்தவர் யார் தெரியுமா.? இந்தகார ணத்துக்காக தான் அவரை படத்துல நடிக்க வெச்சிருக் காங்க..!! யாருன்னு பாருங்க ஷா க் ஆகிடுவி ங்க..!! Next Post:நடிகை ஹன்சிகா வெ ளியிட்டுள்ள புகைப்படங்கள்..! சொ க்கிப்போ ன இ ளசுகள்..! ஹாட் போ ட்டோஸ் உள்ள..
தற்போதைய பிரதமர் யாயிர் லெபிட் மற்றும் இஸ்ரேலில் நீண்ட காலம் பதவி வகித்த முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹுவும் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இறுதியாக கடந்த வருடம் மார்ச் மாதம் இஸ்ரேலிய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றிருந்தது. 120 ஆசனங்கள் கொண்ட இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் பல கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்த நெப்தலி பென்னட் 61 ஆசனங்களுடன்,. அதாவது ஒரு பெரும்பான்மை ஆசனத்துடன் பிரதமராக பதவியேற்றார். இஸ்ரேலிய நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் இன்று செவ்வாய்க்கிழமை (01) நடைபெறுகிறது. அந்நாட்டில், கடந்த 4 வருடங்களில் நடைபெறும் 5 ஆவது பொதுத் தேர்தல் இதுவாகும். தற்போதைய பிரதமர் யாயிர் லெபிட் மற்றும் இஸ்ரேலில் நீண்ட காலம் பதவி வகித்த முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹுவும் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இறுதியாக கடந்த வருடம் மார்ச் மாதம் இஸ்ரேலிய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றிருந்தது. 120 ஆசனங்கள் கொண்ட இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் பல கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்த நெப்தலி பென்னட் 61 ஆசனங்களுடன்,. அதாவது ஒரு பெரும்பான்மை ஆசனத்துடன் பிரதமராக பதவியேற்றார். எனினும், வலதுசாரி லிகுட் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூவும் மீண்டும் பிரதமராகுவதற்கு தீவிரமாக முயற்சிக்கிறார். அவர் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குண்டுதுளைக்காத பஸ் ஒன்றிலிருந்து தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் உரையாற்றிய பெஞ்சமின் நெத்தன்யாஹு, நாட்டை பாதுகாப்பாக வைத்திருக்க தன்னால் முடியும் எனக் கூறினார். Videos play பிம்ஷானியை அவரது பதவியில் இருந்து நீக்க முயற்சிக்கும் பொலிஸ் மா அதிபரின் வெள்ளை மற்றும் கருப்பு மகன்கள்!
சென்னை: 96 பட பிரச்சனைக்கும் விஷாலுக்கும் தொடர்பு இல்லை என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்டோர் நடித்த 96 படம் பிரச்சனைக்கு பிறகு ரிலீஸானாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்க 96 படக்குழு செய்தியாளர்களை சந்தித்தது. அப்போது விஜய் சேதுபதி கூறியதாவது, சின்னப்புள்ளத்தனமாக பேசுகிறார்கள் 96 பிரேம் குமார் எடுத்த படம். அது அந்த ஆளுக்கு மட்டுமே சொந்தமான படம். ஆனால் பார்க்கும் அத்தனை பேருக்கும் சொந்தமான படம் 96. ப்ளூ சட்டை மாறன் வந்து படத்தை ரொம்ப நல்லா சொல்லிட்டார் என்று இருக்கிறது. விஷால் நல்லவர், அவருக்கும் 96 பட பிரச்சனைக்கும் தொடர்பு இல்லை. விஷால் எவ்வளவு வட்டி கட்டுகிறார், எவ்வளவு கஷ்டப்படுகிறார் என்பது யாருக்கு தெரியும். விஷால் செய்தது எனக்கு தவறாக தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் பணத்தை விட்டுக் கொடுக்கும்போது அது குறித்து செய்தியாளர் சந்திப்பு வைத்தா சொல்ல முடியும். தற்போது கொடுத்த பணத்தையும் வேண்டாம் என்று விஷால் கூறிவிட்டார்.பெரியவர்கள் இந்த மேடையில் எல்லா பெரிய மனுஷங்களும் சின்னப்புள்ளத்தனமாக பேசுகிறார்கள். சின்னவர்கள் பெரியவர்கள் மாதிரி பேசுகிறார்கள். இந்த படம் ரிலீஸ் அன்று பிரச்சனை ஏற்பட்டது. அது சகஜம் தான். யாரும், யார் மீது குறை சொல்ல ஒன்றுமே இல்லை. இது யாரோ ஒருத்தர் யாரோ ஒருவரை டார்கெட் பண்ணுவது இல்லை. 96 ரிலீஸ் படத்தை ரிலீஸ் செய்ய இரவு நந்தகோபால் பட்ட கஷ்டத்தை பார்த்தேன். என் வாழ்க்கையில் இது போன்ற பிரச்சனைகள் வந்தால் நான் அடுத்த கட்டத்திற்கு செல்லப் போகிறேன் என்று நம்புவேன். நீங்கள் பாராட்டும் போதையில் அடுத்து வருபவர்களும் இந்த போதைக்கு ஆசைப்பட்டு புதிதாக படங்களை சிந்திப்பார்கள், கொடுப்பார்கள். நல்ல படங்கள் வரும், அது பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்று நம்புகிறேன். சீமராஜா நான் செஸ் விளையாடி இருக்கிறேன். ஆனால் 96 படம் ரிலீஸாவதற்கு முந்தைய நாள் நான் செஸ் போர்டில் ஒரு காயினாக இருந்தேன். சீமராஜாவுக்கு முன்பு சிவாவுக்கு நடந்தது என்ன என்று தெரியும். அதற்கு முன்பு விமலுக்கு நடந்தது தெரியும். எல்லோருக்கும் நடப்பது தான் எனக்கும் நடந்துள்ளது. தயாரிப்பாளர்கள் பைனான்சியர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் பணம் தான் பலம். அது தான் அவர்களின் அடையாளம். அவர்கள் அதை தக்க வைக்கத் தான் போராடுகிறார்கள். தீர்வு இல்லாத பிரச்சனையை வெளிப்படையாக பேசி என்ன பயன்?. யார் தீர்வு கொடுப்பார்கள்?. அதனால் தான் வெளியே சொல்ல முடியவில்லை. பிரச்சனை இருக்கு அதை வெளியே சொல்ல முடியவில்லை என்றார் விஜய் சேதுபதி. அரசியலில் விஷாலுடன் கைகோர்க்கிறாரா விஜய் சேதுபதி என்ற பேச்சு சினிமா வட்டாரத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது . Posted in Cinema, Politics Post navigation PREVIOUS POST Previous post: ஆமாம்.. தினகரன் கட்சியினர் எங்களுக்கும் தூது விட்டாங்க.. தமிழிசை அதிரடி!!
ஏதேனும் ஓர் இணைய தளத்தை, குரோம் பிரவுசர் வழியாகக் காண்கையில், அது முடக்கப்படுகிறதா? கிராஷ் ஆகித் தொடர்ந்து பயன்படுத்தாத நிலையில் உள்ளதா? அதே வேளையில், பயர்பாக்ஸ், இண்டர்நெட் எக்ஸ்புளோரர் போன்ற மற்ற பிரவுசர்களில் இந்த பிரச்னை இல்லாமல், சரியாகச் செயல்படுகிறதா? அப்படியானால், இதனை கூகுள் குரோம் இணைய தளத்திற்குத் தெரிவிக்க வேண்டியது அவசியம். இதற்கான வழிமுறைகளை இங்கு காணலாம் . முதலில் அந்த இணையதளம் செல்லவும். அதன் சரியான முகவரியைத் தெரிந்து பயன்படுத்தவும். குரோம் பிரவுசரின் வலது மேல் மூலையில் உள்ள ரிஞ்ச் பட்டனைக் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில், “Tools” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில், “Report an issue” என்பதை அடுத்துத் தேர்ந்தெடுக்கவும். இப்போது புதிய “Feedback” என்னும் டேப் கிடைக்கும். அதன் கீழாக “Tell us what is happening (required)” என்று ஒரு பெட்டி கிடைக்கும். இதில் உங்களுக்கு ஏற்பட்ட பிரச்னை குறித்தும், அது எந்த சூழ்நிலையில் ஏற்பட்டது எனவும் தெளிவாகக் குறிப்பிடவும். குறிப்பிட்ட இணைய தளத்தில் எதனையேனும் தேடுகையில், இந்தப் பிரச்னை ஏற்பட்டிருந்தால், அது எந்த வகையான தேடல் என்றும் குறிப்பிடவும். உங்களுடைய யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் எதனையும் தர வேண்டாம். ப்ளக் இன் புரோகிராம் பயன்படுத்தும் போது கிராஷ் ஏற்படுகிறதா அல்லது ஏதேனும் குறிப்பிட்ட டேப்பில் கிளிக் செய்திடுகையில் ஏற்படுகிறதா என்பதனையும் விளக்கிக் கூறவும். “Include this URL” மற்றும் “Include this screenshot” ஆகியவற்றில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். குரோம் பிரவுசர் பற்றி சில…! குரோம் பிரவுசரில் தேடல் பகுதியில், டெக்ஸ்ட் அமைக்கையில், பிரவுசர் தன் குக்கீகளிடமிருந்து எந்த வகையான டெக்ஸ்ட் அமைக்கப்படலாம் என சிலவற்றைக் காட்டும். இந்த வசதியை நீக்கிவிடலாம். ஏனென்றால், பெரும்பாலான இடங்களில், இந்த வசதி பயனற்றதாகவே உள்ளது. இதனை நீக்கக் கீழ்க்கண்ட வழிகளைப் பின்பற்றவும். செட்டிங்ஸ் (“Settings”) என்பதைத் தேர்ந்தெடுக்கவும். புதிய “Settings” டேப் கிடைக்கும். அல்லது chrome://chrome/settings/ எனவும் டைப் செய்து இதனைப் பெறலாம். இங்கு “Search” என்பதற்குக் கீழாக உள்ள “Enable Instant for faster searching” என்பதில் டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும். இதனை அடுத்து விண்டோவின் கீழாக உள்ள “Show advanced settings” என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். கீழாகச் சென்று, “Privacy” என்ற இடத்தில் உள்ள “Use a prediction service to help complete searches and URLs typed in the address bar” என்பதில் இருக்கும் டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இவற்றை முடித்த பின்னர், “Settings” டேப்பில் கிளிக் செய்து மூடவும். குரோம் பிரவுசர், தன் மாறா நிலையில், தரவிறக்கம் செய்யப்படும் பைல்களை C:UsersName Downloads என்ற டைரக்டரியில் பதிந்து வைக்கும். இதில் Name என்பது, யூசரின் பெயர் ஆகும்.இதற்குப் பதிலாக, நாம் தரவிறக்கம் செய்யப்படும் பைல்களின் தன்மைக்கேற்ப, அவற்றை வெவ்வேறு டைரக்டரி அல்லது போல்டர்களில் பதிந்து வைக்க விரும்புவோம். எனவே, தரவிறக்கம் செய்திடும் முன், பிரவுசர் நம்மிடம், எந்த இடத்தில் தரவிறக்கம் செய்திட வேண்டும் எனக் கேட்பது நமக்கு வசதியைத் தரும். இதற்குக் கீழ்க்காணும் செட்டிங்ஸ் அமைக்கவும்.முன்பு கூறியது போல, செட்டிங்ஸ் பக்கம் செல்லவும்.செட்டிங்ஸ் டேப் திறந்தவுடன், “Show advanced settings என்பதில் கிளிக் செய்திடவும்.கீழாகச் சென்று “Downloads” என்பதன் கீழே, “Ask where to save each file before downloading” என்பதில் டிக் செய்து அமைக்கவும்.முடிந்தவுடன் settings டேப்பில் கிளிக் செய்து மூடவும். குரோம் பிரவுசர் தொடங்குகையில், எந்த இணையப் பக்கத்துடன் தொடங்க வேண்டும் என்பதனை, இங்கு எப்படி அமைக்கலாம் என்பதனைக் காணலாம். மாறா நிலையில், குரோம் பிரவுசர் தொடங்குகையில், “New Tab” பக்கம் காட்டப்படும். இதில், பயனாளர், அடிக்கடி பார்க்கும் இணையதளப் பக்கங்களின் காட்சி காட்டப்படும். இது பலருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தங்களுக்குத் தேவையான, தாங்கள் அடிக்கடி செல்லும் இணையதளப் பக்க படத்தின் மீது கிளிக் செய்து, அதனைப் பெற்று பணி தொடங்கலாம். சிலருக்கு இது பிடிக்காது. அவர்கள், தாங்கள் விரும்பும் இணையதளம் மட்டும் தானாகத் திறக்கப்பட வேண்டும் என விரும்புவார்கள்.அல்லது எந்த இணையப் பக்கமும் இல்லாமல், காலியாக உள்ள பக்கமே காட்டப்பட வேண்டும் என விரும்புவார்கள்.இதனை அமைக்கக் கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றுங்கள்.wrench பட்டனைக் கிளிக் செய்திடவும்.“Options” தேர்ந்தெடுக்கவும். இப்போது “Options” டேப் காட்டப்படும். இனி இடதுபக்கம் உள்ள “Basics” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். “On startup” என்ற பிரிவில், “Open the following pages” என்ற ரேடியோ பட்டனில் கிளிக் செய்திடவும். குரோம் பிரவுசர் ஒன்று அல்லது பல இணைய தளங்களுடன் தொடங்க வேண்டும் என எண்ணினால், அவற்றை நீங்களாகத் தேர்ந்தெடுக்கவும். இதற்கு “Add” பட்டனில் கிளிக் செய்திடவும். இங்கு “Add page” என்ற டயலாக் பாக்ஸ் காட்டப்படும். இதில் நீங்கள் காட்டப்பட விரும்பும் இணைய தளத்தின் முகவரியை டைப் செய்திடவும். இப்படியே, நீங்கள் விரும்பும் அனைத்து இணைய தளங்களின் முகவரிகளை இணைக்கவும்.
சென்னை: தமிழகம் முழுவதும் பொறியியல் பொது பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக நேற்று தொடங்கியது. தமிழகத்தில் உள்ள அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை முதல்கட்டமாக கடந்த ஏப்ரல் 20ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடந்தது. இதில், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகிய சிறப்பு பிரிவு மாணவர்களுக்கும், அரசுப் பள்ளிகளில் பயின்று 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் இடம் பிடித்தவர்களுக்கான சிறப்புப் பிரிவில் கலந்தாய்வில் பங்கேற்றனர். இதை தொடர்ந்து, பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 25 தொடங்கி அக்.21ம் தேதி வரை நடைபெற இருந்தது. ஆனால் நீட் தேர்வு முடிவுகள் வராததால் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து, செப்.7ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், செப்.10ம் தேதி பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 7ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு நேற்று ஆன்லைன் வாயிலாக தொடங்கியது. தமிழகம் முழுவதும் 110 மையங்களில் கலந்தாய்வு 4 கட்டங்களாக நடைபெற உள்ளது. நேற்று தொடங்கிய முதல்கட்ட கலந்தாய்வு நாளை வரை நடைபெறும். கட்-ஆப் மதிப்பெண் 184 முதல் 200 வரை உள்ள 14,524 பேர் முதல் சுற்று கலந்தாய்வில் பங்கேற்கின்றனர். இரண்டாம் கட்ட கலந்தாய்வு செப். 25 முதல் 27ம் தேதி வரையும், மூன்றாம் கட்ட கலந்தாய்வு அக்.13 முதல் அக்.15 வரையிலும், நான்காம் கட்ட கலந்தாய்வு அக்.29 முதல் அக்.31 வரையிலும் நடக்கிறது. கலந்தாய்வில் இடங்களை தேர்வு செய்யும் மாணவர்கள் 7 நாட்களுக்குள் கட்டணத்தை செலுத்தி கல்லூரியில் சேர்ந்துவிட வேண்டும் என்ற புதிய முறையும் நடப்பாண்டு முதல் நடைமுறை செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் ஏற்கனவே தேர்வு செய்த கல்லூரியில் படிப்பதற்கு விருப்பம் தெரிவித்தாலும், வேறு கல்லூரியில் படிப்பதற்கு இடம் கிடைத்தால் அதில் சேர விரும்புகிறேன் என தெரிவித்தாலும், அதற்கான கட்டணத்தை தமிழ்நாடு பொறியியல் மாணவர் உதவி மையத்தில் செலுத்த வேண்டும். மாணவர்கள் சேர்க்கையின் பொது செலுத்த வேண்டிய கட்டண விவரங்களும் ஒதுக்கீட்டு ஆணையில் தெரிவிக்கப்படும். *நடப்பாண்டில் பழைய கட்டணத்தையே வசூலிக்க வேண்டும்: அமைச்சர் பொன்முடி பொறியியல் கலந்தாய்வு ஆன்லைனில் எவ்வாறு நடக்கிறது என்பது குறித்து கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குனர் அலுவலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பொறியியல் கலந்தாய்வு முதல் ரேங்க் தொடங்கி 14,524வது ரேங்க் வரை உள்ளவர்களுக்கு 12ம் தேதி வரை நடைபெறும். அந்த மாணவர்களுக்கு 15ம் தேதி சேர்க்கை ஆணை கொடுக்கப்படும். மாணவர்கள் ஒரு வாரத்திற்குள் ரூ.15,000 கட்டணம் செலுத்த வேண்டும். அவ்வாறு பணம் கட்டாத மாணவர்களின் இடம் காலியிடமாக கருதப்பட்டு அடுத்த ரேங்கில் உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும். 7.5% இட ஒதுக்கீட்டில் 6-12ம் வகுப்பு வரை படித்த மாணவ, மாணவியருக்கு கலை மற்றும் பொறியியல் கல்லூரிகளில் இடம் வழங்க வேண்டும் என்ற முதலமைச்சரின் உத்தரவு பெரிய பலனை தந்துள்ளது. 23,321 விண்ணப்பங்கள் வந்துள்ளன. 12,982 மாணவர்களும் 10,339 மாணவிகளும் விண்ணப்பித்துள்ளனர். 7.5% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 11,150 பேருக்கு சீட் வழங்க முடியும். அண்ணா பல்கலையில் மட்டும் 76 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டில் அரசு கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் பழைய கட்டண முறைப்படி மட்டுமே கட்டணத்தை பெற வேண்டும். கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. Related Stories: புழல், கண்ணன்கோட்டை, செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர்வரத்து நிலவரம் மணலி அருகே ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை! சென்னை, செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு சென்னை வழிப்பறி ஆசாமி சிவங்கையில் அதிரடி கைது பெரம்பூர் பேருந்து நிலையத்தில் பஸ்சில் நடத்துனர்- இளம்பெண் மாறி மாறி சரமாரியாக தாக்குதல்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் ஆலந்தூரில் உள்ள இறைச்சி கடைகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் வாழை, மந்தாரை இலை: மண்டல சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தல் 18 ஆண்டுக்கு முன் இறந்த தாய் அழைப்பதாக கூறி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வாலிபர் தற்கொலை: தண்டையார்பேட்டையில் பரபரப்பு வடபழனியில் உள்ள அரசு கல்லூரி மாணவர் விடுதியில் 7 பேருக்கு திடீர் வயிற்றுப்போக்கு பைக் விபத்தில் உயிரிழந்த இன்ஜினியரிங் மாணவன் உடல் உறுப்புகள் தானம் காவல்துறை குறித்து அவதூறு வழக்கில் குற்றப்பத்திரிகை குற்றவாளிக்கு 48 நாளில் தண்டனை: சென்னை போலீஸ் சாதனை: கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டு மீன்பிடி பிரச்னையில் ஊரைவிட்டு வெளியேற முயன்ற கிராம மக்கள்: சப்-கலெக்டர் சமரச பேச்சுக்கு பின் கலைந்து சென்றனர் தொற்றுநோய் மருத்துவமனையில் மாணவிகளுக்கு செவிலியர் பயிற்சி: மாநகராட்சி அழைப்பு தவறான சிகிச்சையால் கணவருக்கு கால் பறிபோனது புத்தூர் கட்டு வைத்திய சாலை உரிமையாளர் மீது பரபரப்பு புகார்: கமிஷனர் அலுவலகத்தில் குழந்தையுடன் பெண் மனு வியாசர்பாடி மின்வாரிய அலுவலகத்தில் மின் கம்பிகளை திருடிய பிரபல ரவுடி கைது: ஆட்டோ டிரைவரும் சிக்கினார் தரமணி மயான பூமியில் பராமரிப்பு பணி 20 நாட்களுக்கு வேளச்சேரி மயானபூமியை பயன்படுத்த வேண்டுகோள்: மாநகராட்சி அறிவிப்பு
அரசியல் தலைவர்கள், அரசாங்க அதிகாரிகள், அறுவை மருத்துவ வல்லுநர்கள், அலுவலர்கள், ஆசிரி யர்கள், உற்றார் உறவினர்கள் ஆகிய அனைவரின் மதிப்பையும் பெற்றவர் மகப்பேறு மருத்துவர் மாமேதை பூ.பழநியப்பன் அவர்கள். சில நிகழ்வுகளை நினைவு கூர விரும்புகிறேன். படிக்கும்போது மாணவர்கள் ஆசிரியருக்கு மதிப்பு அளிப்பதில் வியப்பில்லை. படித்து முடித்துப் பல ஆண்டு கள் ஆன பின்னரும் மங்காத மதிப்பு இருந்ததுதான் குறிப்பிட வேண்டியுள்ளது. எனக்குச் செயலாளராக இருந்தவர் அவருடைய மனைவிக்குக் கருத்தடை செய்ய விரும்பிய போது, மரு. பூ.ப. அவர்களிடம் பேசி னேன். “நாளைக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்புங்கள்” என்றார். அடுத்த நாள் அந்த இணை யர் எல்லோரும் சென்ற பின்னரும் மரு. பூ.ப. அவர் களுக்காகக் காத்திருந்தனர். அங்கிருந்தவர் “ஏன் யாருக்காகக் காத்திருக்கிறீர்கள்?” என்று கேட்ட போது “டாக்டர் பழநியப்பன் வரச்சொன்னார் என்று விடை பகர்ந்தார் அந்த அம்மையார்.” பி.பி.எல். (BPL) வரச் சொன்னாரா என்று கேட்டுவிட்டு உள்ளே அழைத்துச் சென்றார். “காப்பர்டி”யை மாட்டி அனுப்பிவிட்டார்கள். அப்போதுதான் காப்பர் டி அறிமுகமாகிக் கொண்டிருந்தது. அடுத்த மாதம் அந்த அம்மையாருக்கு இரத்தப் போக்கு அதிகமாக இருந்ததால் அருகாமையில் இருந்த தனியார் மருத்துவமனைக்குச் சென்றபோது அங்கிருந்த பெண் மருத்துவர் காப்பர் டியை எடுத்துவிட் டார். என் மனைவி அம்மருத்துவமனைக்குச் சென்ற போது மரு. பூ.ப. அவர்களின் பெயரைக் கூறியபோது, அங்கிருந்த பெண் மருத்துவர் “BPL-ஆ, BPL-ஆ” என்று வாயைப் பிளந்தார். “அவர் என்னுடைய குரு நாதர். அவருடைய Procedure -இல் குறை கண்டேன் என அவரிடம் சொல்லிவிடாதீர்கள்” என்று அலறி அலறிப் பேராசிரியரின் புகழ் பாடினார். அவர் பத்து ஆண்டுகளுக்கு முன் மரு. பூ.ப. அவர்களிடம் DGO படித்த மாணவி. பேராசிரியர் மரு. பூ.ப. அவர்களின் ஆளுமைத் திறன் வியக்கத்தக்கது. அந்த ஆளுமைத்திறன் அவருடைய பதவி, செல்வாக்கு, தேர்ந்த மருத்துவ அறிவு ஆகியவற்றால் அல்ல. அவருடைய பேச்சில் நகைச்சுவை மிளிரும். மயக்க மருந்து கொடுத்து அறுவை மருத்துவம் செய்வதுபோல் நகைச்சுவை யால் திருத்த வேண்டியதைத் திருத்திவிடுவார். சில நேரங்களில் அவருடைய நகைச்சுவைப் பேச்சு அவருடைய அறுவைக் கருவிகளைவிடக் கூர்மை யாக இருக்கும். திரும்பவும் தவறு செய்யாவண்ணம் தடுத்துவிடும். இளைஞர்களுடன் பேசும்போது சிருங்காரரசத்துடன் நகைச்சுவையுடன் பேசுவார். மூடநம்பிக்கையில் மூழ்கியுள்ள பெரியவர்களிடம் பேசும் போது குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைத்து வாழைப் பழத்தில் ஊசியை ஏற்றுவதுபோல் சீர்திருத்தக் கருத்து களைப் புகுத்திவிடுவார். பள்ளியில் படித்துக் கொண்டி ருந்த என் மகள் கேட்ட கேள்விக்கு விடை அளித்தவர் “டாக்டர்களுக்கு ஸ்பெல்லிங் வீக். அதனால் கையெழுத்து நல்லா இருக்காதம்மா. ஆனால் மற்றவர்களின் தலை யெழுத்தைத் தீர்மானிப்பார்கள்” என்றார். நோய் நாடி நோய் முதல் நாடி மருத்துவம் செய்ய வேண்டும் என்பது வள்ளுவரின் கட்டளை அல்லவா! நோய் நாட அறிவியல் முறை ஆய்வுகள் தேவைப் பட்டாலும் நோய்முதல் நாடப் போதிய தரவுகள் வேண்டு மல்லவா? மருத்துவம் பார்க்க வருவோரிடமும் நண்பர்களிடமும் மற்றவர்களிடமும் செய்தி சேகரிப்பதில் அவரிடம் தனிப்பாங்கு இருந்தது. பூந்தமல்லி சாலையில் நேரு பூங்காவிற்கு எதிரில் மாலையில் ஓர் அறையில் அமர்ந்திருந்தார். என்னை வரவேற்று “நீங்கள் மட்டும் வந்திருக்கிறீர்களே” என்றார். “எனக் காகத் தான் வந்திருக்கிறேன்” என்றேன். “நான் பொம்பளைங்க டாக்டர். என்னைத் தேடி வந்திருக்கீங் களே” என்றார். வழக்கமான கேள்விகளுக்குக்கூட நகைச்சுவையான வினாக்களையே விடுத்தார். “அவ் வப்போது தீர்த்தம் சாப்பிடுவது உண்டா?” என்று கேட்டார். சற்றுத் திகைத்து நின்றேன். “சும்மா சொல்லுங்க சார், நான் கூட எப்போதாவது சாப்பிடுவது உண்டு” என்றார். “இல்லை” என்றேன். அடுத்த வினா. “தீர்த்தம் சாப்பிடாத உங்களுக்கு எப்படி தனியார் துறையில் உயர் பதவிகள் கொடுத்தார்கள்?” “உயர் பதவிகளுக் குத் தீர்த்தம் குடிக்க வேண்டிய கட்டாயம் இல்லை” என்றேன். கவனமாக விடை சொல்லுபவர்களிடத்திலே இப்படிக் கேள்விகள் கேட்பவர் அவரைத் தேடி வருகிற பெண்டிரிடம் எத்தகைய கேள்விகளைக் கேட்டிருப்பார் என்று யூகித்துப் பாருங்கள். ஆழ்ந்து ஆராயும் பொறுமை இருந்ததால்தான் அவர் வெற்றி பெற்றார். அவரைத் தேடி மகளிர் கூட்டம் வந்தது. இந்திய அளவில் உள்ள பல்வேறு மகப்பேற்றுச் சங்கங்களுக்குத் தலைமைச் சங்கத்தின் தலைவராக மரு. பூ.ப. தேர்வு பெற்ற போது, அயனாவரம் திரு. மோகன் அவர்களும் நானும் பாராட்டுத் தெரிவிக்க அவர் வீட்டிற்குச் சென்றோம். “பெண்கள் பாராட்டு தெரிவிக்கலே. ஆண்கள் வந்து பாராட்டுத் தெரிவிக் கிறீர்களே” என்றார். அண்ணாநகரில் இப்போது வஸந்தபவன் இருக்குமிடத்தில் சிறிய உடுப்பி உணவு விடுதி இருந்தது. அங்கே சிறிய அளவில் ஒரு பாராட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்தோம். அழைப்பிதழில் திரு. மோகன் அவர்களின் மனைவி திருமதி. அம்புஜம் அம்மாள். என் மனைவி திருமதி. தேமலர் என்ற பெயர்கள் இருந்தன. தேமலர் வரவேற்புரை ஆற்ற, அம்புஜம் அம்மாள் நன்றி உரை படித்தார். மரு. பூ.ப. ஏற்புரையில் எல்லாப் பாராட்டுக் கூட்டங்களைவிட அக்கூட்டத்தில் பெருமகிழ்ச்சி அடைந்ததாக நன்றி கூறினார். ஆண்கள் பக்கம் திரும்பிச் சற்றுப் பொறுத்து உங்களுக்கும்தான் என் நன்றி என்று கூறி சிரிப் பொலியை எழுப்பினார். நான் அண்ணாநகர் அரிமா சங்கத்தில் செயலா ளராக இருந்த போது மரு. பூ.ப. அவர்களை ஒரு மாலைக் கூட்டத்தில் பேச அழைத்த போது “ஜிமாவும் ஜமாவும்” என்ற தலைப்பைக் கொடுத்தார். தலைப்புப் புலப்படாததால் விளக்கம் கேட்டேன். விளக்கம் கேட்டால் பேச வரமுடியாது என்றார். வேறு வழியின்றி, சுற்றறிக்கையில் அத்தலைப்பைப் போட்டிருந்தேன். தலைப்பு மர்மமானதாக இருந்ததாலும் மகளிர் மருத்துவர் என்பதாலும் அன்று பெண்களின் கூட்டம் முழு அளவில் இருந்தது. சிரிப்பொலிகள் தவிர மிக அமைதியான சூழ்நிலையில் 45 மணித்துளிகளில் பேசி முடித்தார் ஜிமா - Journal of Indian Medical Association; ஜமா- Journal of American Medical Association என்பனவற்றின் சுருக்கம் என, இறுதியில் மருமத்தை அவிழ்த்தார். அந்த இதழ்களில் வந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளின் உட்கருத்தே தன் பேச்சு என்றார். தொடர்ந்து கேள்விகள் வந்துகொண்டிருந்த போது எப்படி நிறுத்தவது என்று தலைவர் தயங்கிக் கொண்டிருந்த போது, “அருமைப் பெண்மணிகளே! என் வயிற்றில் மணி அடிக்கிறது” என்றார் மருத்துவர். அனைவரும் உணவுக்குச் சென்றனர். இப்போது நல்ல நட்சத்திரத்தில் குழந்தை பிறக்க அறுவை மருத்துவம் செய்வதில் வியப்பேதும் இல்லை. அதில் மரு. பூ.ப. அவர்களுக்கு உடன்பாடு இல்லை. நீண்டகாலத்திற்கு முன் ஒருநாள் இரவில் தனியார் மருத்துவமனையிலிருந்து அவசர அழைப்பு வந்தது. அப்போது பிரசவத்திற்கு அறுவை மருத்துவம் செய்ய மரு. பூ.ப. போன்ற சிறப்பு மருத்துவர்களின் ஆலோச னையும் தேவைப்பட்டது. அப்பெண் வலியில் துடித் துக் கொண்டிருந்த போதும் அறுவை மருத்துவம் செய்யாமல் இயல்பாகக் குழந்தை பிறக்கச் செய்தார். முன்னிரவில் சென்றவர் விடியற்காலை வரை விழித் திருந்து ஆண் குழந்தை பிறந்த நல்ல செய்தியை அறிவித்துவிட்டு வீடு திரும்பினார். பல ஆண்டுகளுக்குப்பின் ஒரு நாள் தண்ணீர்க் குழாய் பழுது பார்க்க ஓர் ஆளை அனுப்ப வேண்டி னார். எனக்குத் தெரிந்தவரை அனுப்பினேன். பழுது பார்த்துவிட்டுப் பணம் பெற மறுத்ததால் மரு. பூ.ப. என்னிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டார். பழுது பார்த்தவரிடம் பேசிய போது மேற்கூறிய பிள்ளைப்பேறு நிகழ்ச்சியைக் கூறி விட்டு, “என் வாழ்நாள் முழுவதும் மருத்துவரிடம் பணம் வாங்க மாட்டேன்” என்றார். இத்தகைய நிகழ்வுகள் பல இருந்தன. அவை அவர் புகழ் பாடும். அவர் வாழ் வாங்கு வாழ்ந்தவர்!
மேலதிக 36 ரபேல் விமானங்கள் ஆர்டர் செய்யப்பட உள்ளதாகவும் அதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய ஆர்டர் அடுத்த வருடம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன் தான் Indian Air Force முதல் ரபேல் விமானத்தை பிரான்சிடம் இருந்து பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலதிக 36 ரபேல் விமானங்கள் ஆர்டர் செய்யப்படும் பட்சத்தில் மொத்த ரபேல் விமானங்களின் எண்ணிக்கை 72 ஆகும்.இது இந்திய விமானப்படையின் சரிந்து வரும் ஸ்குவாட்ரான்கள் எண்ணிக்கைக்கு மீட்பாக அமையும்.மேலும் எதிர்காலத்தில் பாலக்கோட் போன்ற தாக்குதல்களை மிக எளிதாக மேற்கொள்ள முடியும். எப்-16 விமானத்தை விங் கமாண்டர் அபி அவர்கள் வீழ்த்திய பிறகு அதை வாங்க இந்தியா முயற்சிக்கவில்லை.அதே போலவே எப்-21 கூட இந்தியா பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. ஆனால் Boeing F-18 வாங்குவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது.எப்-18ஐ விமானம் தாங்கி கப்பல்களில் இருந்து செயல்படுத்த முடியும். SAAB’s Gripen-E வாங்கப்பட வாய்ப்பில்லை போல தெரிகிறது. Russian Mig-35 மற்றும் Sukhoi-Su-35 ரபேல் கூட போட்டியிட்டு வெற்றிபெற வாய்ப்பில்லை. மேலும் 18 Su-30 MKI மற்றும் 21 Mig-29 fighter விமானங்கள் வாங்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.மேலும் விமானப்படையில் உள்ள 272 aircraft of Su- 30 MKI fleet-யும் அப்கிரேடு செய்து நவீனப்படுத்தப்பட உள்ளது.
அனைவருக்கும் வணக்கம். இந்த தளத்திற்கு நான் புதிது. இது என்னோட முதல் கதை. என் வாழ்வில் 2 வருசத்துக்கு முன்னாடி நடந்த உண்மை கதைகள் இது. முதலில் என்னோட விவரம் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் என்னோட பெயர் அஹமத். வயது 25. உயரம் 5 அடி 3 அங்குலம் இருப்பேன் கொஞ்சம் கருப்பு வெள்ளை கலந்த கலைவாயாக இருப்பேன். சரி இப்போ கதைக்கு போவோம். நான் வேலூரில் வேலை செய்வதால் இங்கு நான் தனியாக அறை எடுத்து தங்கி இருக்கிறேன். இங்கு இருக்கும் தெருவில் என் அறை தாண்டி மூன்று வீடுகள் தள்ளி ஒரு ஆண்டி இருக்கிறாங்க. அவங்க பாக்க 32 வயசு இருக்கும். இந்த வயசுலயும் எதோ சின்ன பொண்ணு மாதிரி மேக்கப் போட்டுட்டு இங்க இருக்குற பசங்களுக்கு கஞ்சி வர வச்சிருவாங்க அப்படி பட்ட அழகு. அவங்க உடம்ப சொல்லணும் னா வார்த்தை இல்லனு தான் சொல்லணும். அவங்க எப்பவும் சுடிதார் தான் போடுவாங்க. அதனால அவங்க முலை அப்படி இறுக்கமா இருக்கும் பாக்கும் போதே கடிச்சி சாப்டனும் தோணும். சரி அவங்க எப்படி என் வழிக்கு வர வச்சேன்னு பாப்போம். அவங்களுக்கு கல்யாணம் ஆகி அவா புருஷன் விட்டுட்டு போய்ட்டான். அவங்களுக்கு 12 வயசுல ஒரு பையன் இருக்கான் 8 வது படிக்கிறான். அவனுக்கு படிப்பு சரியா வருதுன்னு டியூஷன் அனுப்ப முடிவு பண்ணி இருக்காங்க அப்போ என் பக்கத்து விட்டு அக்கா மூலம் எனக்கு அடிச்சது அதிர்ஷ்டம். அந்த அக்கா ஆண்டி கிட்ட போய்ட்டு என்ன பத்தி சொல்லி இருகாங்க. நான் கல்லூரி முடிச்சி இருக்கேன் அதனால என் கிட்ட உதவி கேட்டாங்க அந்த ஆண்டி. அப்போ தான் எனக்கு அவங்க பெயர் தெரிஞ்சிது பிரியா ( பெயர் மாற்றபட்டுள்ளது ) என்னோட பையனுக்கு டியூசன் சொல்லி கொடுங்க மாசம் மாசம் நான் என்ன பீஸ் குடுத்துறேன்னு சொன்னாங்க. அப்போ நான் சொன்ன அதெல்லாம் வேணாம் படிப்புக்கு எதுக்கு காசுன்னு. அப்புறம் கொஞ்சம் நாள் கழிச்சு அவங்க பையனுக்கு டியூசன் சொல்லி குடுத்துனு இருக்கும். போது ஒரு நாள் என் வீட்டுக்கு வந்தாங்க அப்போ பையன் எப்படி படிக்கிறேன்னு கேட்டாங்க. நான் இப்போ பரவா இல்ல நல்லா படிக்க ஆரம்பிச்சி இருக்கானு சொன்ன. அவங்க அதுக்கு நன்றி சொல்லிட்டு உங்களுக்கு எதாவது வேணும் னா சொல்லுங்க நான் செய்றேன்னு சொன்னாங்க அப்போ எனக்கு புரியல மனசுல நினைச்சேன் நீ கிடைச்ச போதும் ணு. இல்ல ஆண்டி ஏதும் வேணாம் சொல்லிட்டேன். அவங்க போகும் போது அவங்க குண்டி அப்படி ஆடி ஆடி போகும் போது என்னோட சுன்னி ஏற ஆரம்பிட்டிச்சு. அப்புறம் டெய்லி அவங்க என் விட்டுக்கு வர ஆரம்பிச்சாங்க. நானும் மறைமுகமா அவங்க முலை. குண்டினு ரசிச்சி குளியல் அறைல போய்ட்டு என்னோட சுன்னிய உளுக்கி கஞ்சிய வர வைப்பேன். இப்படியே நாள் போச்சு ஒரு நாள் நல்லா மழை அதுல நனைச்சு என் வீட்டுக்கு போய் என்னோட டிரஸ் மாத்தும் போது யாரோ கதவுல இருக்குற ஓட்டைல பாக்குற மாதிரி இருந்துச்சு. வெளியே வந்து பார்த்த யாரும் இல்ல. கொஞ்சம் நேரம் கழிச்சு ஆண்டி வந்தாங்க. வாங்க ஆண்டி எங்க பையன காணும் சொன்ன இல்ல அவனுக்கு ஜுரம் அதான் இன்னிக்கு வர முடியாது சொல்லிட்டு போலாம் வந்தேன் சொன்னாங்க சரி ஆண்டி சொல்லிட்டு இருக்கும் போது தும்பிட்டேன். அப்போ ஆண்டி சொன்னாங்க என்ன இப்படியே மழைல நனைச்சு வந்து இருக்க இருனு சொல்லி என்னோட டவல் எடுத்து தலைய துவட்டி விடும் போது அவங்க முலை என்னோட முகத்துல பட்டுச்சு. நான் கொஞ்சம் நெளிஞ்சேன். அப்பறம் ஆண்டி இன்னும் அவங்க முலையால அமுக்க ஆரம்பிச்சாங்க. அப்போ தான் எனக்கு புரிஞ்சது ஆண்டிக்கு நான் தேவனு. நான் சரி விடுங்க ஆண்டி சொன்ன. அவங்க இரு உனக்கு டீ போடு தரேன்னு சொல்லிட்டு என் ரூம்க்குல போய்ட்டாங்க. சுட டீ போட்டு எடுத்து வந்தாக எனக்கும் அவங்களுக்கும் சேர்த்து. அவங்க முலை என் மேல பட்ட வீரியம் என்னோட சுன்னிலா அப்படியே முக்கோண வடிவுல என்னோட பேண்ட் லா தெரிய அவங்க அத பார்த்துட்டு சிரிச்சிட்டு இருந்தாங்க அப்போ எதுக்கு சிரிக்கிறீங்கனு கேட்டேன் ஒன்னும் இல்லனு சொல்லிட்டு என்னோட பேண்ட் தான் பார்த்துனு இருந்தாங்க. திடிர்னு கரண்ட் கட் ஆக இருட்டுல என்னோட பேண்ட்லா யாரோ கை வைக்கிரமாதிரி இருந்துச்சு. அப்போனு பார்த்து கரண்ட் வர பார்த்த ஆண்டி தான் கண்ணா முடி என்னோட பேண்ட் மேல கை வச்சி இருகாங்க. நான் ஆண்டி என்ன பண்ணுறீங்கனு. கேட்டேன் ஆழ ஆரம்பிச்சாங்க. என் கை பிடிச்சு என் புருஷன் விட்டு போய் நாலு வருஷம் ஆச்சு. எனக்கு உங்கள மாதிரி பசங்க கூட செய்யணும் ஆசையா இருக்குனு சொன்னாங்க. என்னால என்னோட கண்ணா நம்ப முடியல எத்தனை நாள் இதுக்காக ஏங்கி இருந்தேனோ அது இன்னிக்கு நடக்க போகுது நினைச்சு சந்தோச பட்டேன். இதுக்கு அப்பறம் என்னனு அவளை கட்டி பிடிச்சு உதட்டுல முத்தம் குடுத்தேன். அவளும் என்னோட கீழ் உதட இழுத்து கடிச்சி விளையாடிட்டு இருந்த. நான் என்னோட கைய அவ முலைல வச்சி அமுக்கிட்டு இருந்தேன். சும்மா சொல்ல கூடாது யாரு கையும் படாம கல்லு மாதிரி இருந்துச்சு. அவ என்னோட பேண்ட கழட்ட பாக்க எதுக்கு அவளுக்கு கஷ்டம்னு நானே பேண்ட் கழட்ட அவளும் சுடிதார் கழட்ட. வெள்ள நிற பிரா போட்டு இருந்த அதுல தெரிஞ்ச அவா முலை. கூண்டுல மட்டுல முயல் மாதிரி இருந்துச்சு அப்பறம் அதுக்கும் விடுதலை குடுக்கும் போது அப்பாஆஆ என்ன முலை அப்படியே குத்தி நிக்குது அதுல சுத்தி இருந்த பிங்க் கலர் காம்பு. என்னோட சுன்னிய தூக்கி விட்டுடிச்சு. இத பார்த்த அவா என்னோட முலைய பார்த்ததும் இப்படியே இருதுன்னு சொல்லிட்டு கீழ போட்ட இருந்ததையும் கழட்டி போட்ட ஜட்டி போடல அதனால முழுசா நிர்வாணமா அவா இருந்த அத பாக்கும் போது என்னோட சுன்னி வெடிச்சுரும் போல இருந்துச்சு. அவா அப்படியே கீழ வந்து என்னோட சுன்னிய பார்த்து இன்னிக்கு தான் ஒரு முஸ்லீம் பையோனோட சுன்னி பாக்குறேன். சொல்லிட்டு ஒரு முத்தம் குடுத்த. அப்போ சொன்ன நீ டிரஸ் மாத்தும் போது சின்னதா இருந்துச்சு இப்போ என்னடா னா உளுக்க மாதிரி இருக்குனு சொன்ன அப்போ தான் புரிஞ்சிது இவ தான் கதவு வழிய பார்த்து இருத்தனு. அப்படியே. என்னோட சுன்னிய அவா வாயால ஊம்ப ஆரம்பிச்சாஆஆ. ஆஆஆஆ அப்படியே சொர்க்கம் மாதிரி இருந்துச்சு முதல் தடவ ஒரு பொண்ணு என்னோட சுன்னிய அவா வாயில வச்சு ஊம்புற அதை நினைக்கும் போதே கஞ்சி வந்துடிச்சு அதை அப்படியே அவா குடிச்சிட்ட. என்னடா சீக்கிரம் வந்துடிச்சுனு கேட்டு இதுவரை எந்த பொண்ணுகூட பண்ணதிலையனு கேட்ட நான் இல்ல இதுவரை இல்ல. நீங்க தான் முதல சொன்ன அவா அந்த சந்தோஷத்துல என்னோட சுன்னிய ஊம்ப மறுபடியும் பெருசா ஆக ஆரம்பிச்சிச்சு. இந்த முறை கஞ்சி கொஞ்சம் நேரம் கழிச்சு தான் வந்துச்சு. அப்பறம் அவ புண்டைய பாக்கணும் சொன்ன இந்த உனக்கு இல்லியான்னு சொல்லி என்ன கீழ உக்கார வச்சு என்னோட வாயில அவா புண்டைய வச்ச. அப்போ அவா புண்டையில எதோ பிசு பிசுனு. வந்துச்சு. சும்மா சொல்லக்கூடாது புண்டைய நல்லா சுத்தமா சேவ் பண்ணி வச்சி இருந்த. அதும் இல்லாம அவ புண்டை வாசனை எதோ பண்ணிச்சு இதே வெறில அவா புண்டையா நாக்கை போட்டு நக்க ஆரம்பிச்சேன். நான் நக்குனா நக்குல அவா அய்யோ அம்மா ஆஆஆஆ ஸ்ஸ்ஸ் னு முனுக ஆரம்பிச்ச நான் இத கேட்டு இன்னும் நக்க. கொஞ்சம் நேரதுல அவ கஞ்சி பூர என்னோட வாயில விட்ட அத அப்படியே குடிச்சிட்டேன். நக்குனது போதும் இப்போ உன்னோட சுன்னிய உள்ள விடுன்னு சொல்லி கீழ படுக்க நான் என்னோட சுன்னிய அவ புண்டை ஓட்டைல விட்டேன் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு அப்பறம் எச்சி விட்டு உள்ள விட்டேன். இப்போ உள்ள அழகா போச்சு. அவ ஆஆஆஆ னு கத்துனா. நானும் கொஞ்சம் கொஞ்சம் மா உள்ள வெளியான்னு விளையாடிட்டு இருந்தேன். அவா அந்த சுகத்துல ஆஆஆ ஸ்ஸ்ஸ்ஸ் உஉஉஉஉஉ. கத்த. வேகாம குத்துடா சொல்ல நான் என்னோட முழு பலத்தோட அவ புண்டைல குத்திடு இருந்தேன் அவ ஸ்ஸ்ஸ்ஸ் ம்ம்ம்ம்ம் ஆஆஆஆ குத்துடா குத்துடா ம்ம்ம்ம்ம்ம் ஆஆஆஆ சொல்லிட்டு என்னோட உதடை கடிக்க ஆரம்பிச்ச. நானும் பதிலுக்கு கடிக்க அவ. அவா வலில கத்த ஆரம்பிசிட்டா. நான் அவா முலைய பிடிச்சு பிசஞ்சு அமுக்க. அவ காம்ப நக்கி கடிக்க அவா இஸ்ஸ்ஸ்ஸ் னு சொல்லிட்டு இருந்த. கீழ குத்த மேல கடிக்க இப்படியே ஒரு அரை மணி நேரம் பண்ணிட்டு இருக்கும் போது ரெண்டுபேரும் கஞ்சிய விட்டுட்டோம். நான் அவா மேல சாய. என்ன கட்டி பிடிச்சு முத்தம் குடுத்த. கொஞ்சம் நேரம் கழிச்சு மறுபடியும் என்னோட சுன்னிய ஊம்ப என்னோட சுன்னிய நல்லா பெருசா ஆச்சு இந்த ஆண்டி என்ன கீழ படுக்க வச்சு அவா மேல உக்காந்து தேங்காய் உரிக்க ஆரம்பிச்ச. அது எனக்கு பிடிச்சு இருந்துச்சு. அவா மேல கீழனு குதிக்க. நான் அவா முலைய பிடிச்சு காம்ப திருக்க ஈஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ். மாஆஆஆஆஆஆஆஆஆஆ னு சொல்லிட்டு அவா கஞ்சி கீழ விட்ட ஆன எனக்கு வரல அதனால அவள குனிய வச்சு அவா கூதில மெதுவா உள்ள விட்ட போகல இறுக்கமா இருந்துச்சு மறுபடியும் எச்சி விட்டு உள்ள விட்டேன் இப்போ கொஞ்சம் கொஞ்சம போக. எனக்கு இன்னும் வேகம் வந்து உள்ள விட. அய்யோஓஓஓ அம்மாட்டிய்ய்ய்ய்ய் கத்த. இது எனக்கு ஒரு வித போதை தந்துச்சு. வேகமா குத்திட்டு இருந்தேன். அவளும் இஸ்ஸ்ஸ்ஸ் ஊஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம். கத்திட்டு இருந்த. இந்த முறை என்னோட கஞ்சி முழுசா அவா கூதில விட்டேன். அப்படியே அவா முதுகுல சாஞ்சிட்டேன். இப்படியே அன்னிக்கு மட்டும் மூணு முறை அவள செஞ்சிட்டேன்.
திரிபுரா மாநிலத்தில் கூட்டணி சகிதமாக அமோக வெற்றி பெற்று இடதுசாரிகளின் கோட்டையைத் அனாயசமாக தகர்த்தெறிந்துள்ளது பாஜக. கால் நூற்றாண்டு காலமாக ‘லால் சலாம்’ முழக்கம் மட்டுமே நீக்கமற நிறைந்திருந்த அந்த மாநிலத்தில், தேர்தல் முடிவு வெளியான நேற்றிலிருந்து ‘பாரத் மாதா கி ஜே’வும், ‘வந்தே மாதரம்’ முழக்கமும் எதிரொலிக்கின்றன. திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் முடிந்து, முடிவுகள் நேற்று (மார்ச் 3, 2018) வெளியாகின. மூன்று மாநில தேர்தல் முடிவுகளிலும் ஒரு நெருக்கமான ஒற்றுமை இருக்கிறது. அது, நீண்ட காலம் ஆட்சியில் இருப்போரை மாற்ற வேண்டும் என்று மக்கள் யோசித்திருப்பது தெரியவருகிறது. குறிப்பாக, திரிபுரா. அது, காலங்காலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டை. தொடர்ச்சியாக நான்கு முறை வெற்றிபெற்று 20 ஆண்டுகளாக முதல்வர் பதவியை அலங்கரித்து வந்த மாணிக் சர்க்கார், எளிமையின் மொத்த வடிவம். ஊழலற்ற ஆட்சி. வெளிப்படையான நிர்வாகம். ஆனால் இது மட்டுமே போதாது என அம்மாநில மக்கள் ஒருமனதாக தீர்மானித்திருக்க வேண்டும். அதன் எதிரொலிதான், அங்கு மாணிக் சர்க்கார் இந்தமுறை தோல்வியைத் தழுவ நேர்ந்துள்ளது. திரிபுரா இடதுசாரிகள், மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உள்ளவர்கள்தான். ஆனால், செங்கோட்டையைத் தகர்த்த மமதை பாஜகவிடம் தெரிகிறது. எள்ளி நகையாடும் போக்கும் அத்தனையும் மூன்றாம் தர, நாலாம்தரமானவை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர்களுள் ஒருவரான பிருந்தா காரத் நெற்றியில் அணிந்திருக்கும் சிவப்பு பொட்டின் அளவுக்குக்கூட, இந்தியாவில் கம்யூனிஸ்டுகளின் ஆட்சி பரப்பளவு இல்லை என்கிறார் ஒரு பாஜக ஆதரவாளர். பலரும் சொல்லி வைத்தாற்போல் மாணிக் சர்க்காரை, கேரளாவுக்கும், மேற்கு வங்கத்திற்கும், வங்கத்திற்கும் துரத்தி அடிக்கின்றனர். இப்போதைக்கு கம்யூனிஸ்டுகளுக்கு கேரளாவைத் தவிர வேறு எங்கும் கிளைகள் இல்லை என்றும் கிண்டலடி க்கிறார் மற்றொரு ஆர்எஸ்எஸ் பிரமுகர். இத்தகைய விமர்சகர்கள், ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் என்பதை மறந்துவிடுகின்றனர். சரி. நாட்டிலேயே ஏழை முதல்வர்தான்; சொந்தமாக வீடுவாசல்கூட இல்லாதவர்தான், மாணிக் சர்க்கார். பிறகு ஏன் அவர் தலைமையிலான கட்சி தோல்வியைத் தழுவியது? கடந்த ஜனவரி மாத இறுதியில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை செய்தியாளர் மாணிக் சர்க்காரிடம், ”இந்த முறை பாஜக உங்களுக்கு சவாலாக இருக்கிறதே. அவர்கள் வெற்றி பெற்றுவிட்டால்…” எனக் கேட்டிருக்கிறார். அதற்கு மாணிக் சர்க்கார், ”ஹாஹா…” என சிரித்தவர், ”இதே கேள்வியை மக்களிடம் கேளுங்கள். அவர்கள் உங்களுக்கு பதில் சொல்வார்கள். இந்தமுறையும் வெற்றி பெற்று ஆட்சியைத் தொடர்வோம்,” என்றார். அந்தளவுக்கு அவர் தன் நிர்வாகத்தின் மீதும், தன் மக்களின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கையைக் கொண்டிருந்தார். ஆனால் தேர்தல் முடிவோ அவருடைய நம்பிக்கைக்கு நேர்மாறாக அமைந்தது. இடதுசாரிகளின் வீழ்ச்சிக்கு வேறு என்னதான் காரணமாம்…. ♦ காரணம் 1: திரிபுரா மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு இன்னும் நான்காவது சம்பளக்குழு பரிந்துரைப்படிதான் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் பலமுறை போராடிப் பார்த்தும் மாணிக் சர்க்கார் அரசு கண்டுகொள்ளவில்லை. ஆனால், நடந்து முடிந்த 2018ம் ஆண்டு தேர்தலின்போது, 7வது ஊதிய விகிதம் அமல்படுத்தப்படும் என்று உறுதி அளித்திருந்தார். அது, அரசு ஊழியர்களிடம் எடுபடவில்லை. ♦ காரணம் 2: இளைய சமூகத்தினர் இயல்பாகவே இடதுசாரி சித்தாந்தத்தைவிட்டு சற்று எட்டியே நிற்கின்றனர். அவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கிக் கொடுக்கத் தவறியிருக்கிறது மாணிக் சர்க்கார் அரசு. கணிசமான அரசு வேலைகளிலும் இடதுசாரிகளின் குடும்பங்களைச் சேர்ந்த வாரிசுகளே ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். திரிபுரா தலைநகர் அகர்தலா தவிர மற்ற பகுதிகளில் நவீனமயம் என்றால் என்னவென்றே தெரியாத அளவுக்கு பின்தங்கியிருக்கின்றன. வேலையில்லாத் திண்டாட்டம், கணிசமான இளம் வாக்காளர்கள் மத்தியில் இடதுசாரிகள் மீது உச்சக்கட்ட வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. ♦ காரணம் 3: மனித மனங்களில் இயல்பாகவே கெட்டிப்பட்டிருக்கக் கூடிய தலைமுறை இடைவெளி. கால் நூற்றாண்டு காலமாக ஒரே ஆட்சி. அதில் மாணிக் சர்க்காரே தொடர்ந்து நான்கு முறை முதலமைச்சர். இதுபோன்ற அம்சங்களில் மக்களும் உளவியல் ரீதியாக ஒருவித சலிப்பைச் சந்திக்கின்றனர். அதன் தாக்கமும் இடதுசாரிகளின் வீழ்ச்சிக்கு ஒரு காரணம் என்கிறார்கள். ♦ காரணம் 4: மாணிக் சர்க்காரை பொருத்தவரை கரைபடியாக கரங்களுக்குச் சொந்தக்காரர். ஆனால் அது மட்டுமே அந்த மாநிலத்திற்குப் போதாது. திரிபுராவில் அண்மையில் எழுந்த, நிதி நிறுவனங்களின் மீதான மோசடி புகார்களை தேர்தல் நெருக்கத்தில் பாஜக தரப்பு, அரசுக்கு எதிரான விமர்சனமாக முன்வைத்தது. சர்க்கார், வங்க பேரினவாதி என்றும் கூச்சல் போட்டது. ♦ காரணம் 5: திரிபுராவில் கடந்த கால தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி 10 இடங்கள் முதல் 12 இடங்கள் வரையில் கைப்பற்றி இருக்கிறது. இந்த முறை அக்கட்சி ஓரிடத்தில்கூட வெற்றி பெற முடியவில்லை. ஆனால் களத்தில் இருந்த காங்கிரஸ் வேட்பாளர்கள் சிலரை, பாஜக தங்கள் பிடிக்குள் கொண்டு வந்துவிட்டதும் பாஜகவுக்கு திரிபுரா வசமாக முக்கிய காரணம். இப்படி சில காரணிகளை இடதுசாரிகளின் தோல்விக்குக் காரணங்களாக அடுக்குகின்றனர். ஆனால், திரிபுராவின் சித்தாந்ததிற்கு சற்றும் ஒவ்வாத, அதுவும் பூச்சியத்தில் இருந்து ஒரு கட்சி, நாலு கால் பாய்ச்சலில் ஆட்சியைப் பிடித்துவிட இவை மட்டும்தான் காரணங்களாக இருக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. அதீத தன்னம்பிக்கை: மாணிக் சர்க்கார் தன்னுடைய வெளிப்படையான நிர்வாகத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்டுவிட்டார். இந்தமுறையும் முதல்வராக நீடித்துவிடுவோம் என்று அவர் எண்ணியிருக்கக் கூடும். எண்ணத்தில், கொண்ட நம்பிக்கையில் பழுதில்லை. ஆனால், எதிரிகளின் வியூகங்களை அவர் அசட்டையாக விட்டுவிட்டார் என்பதையும் மறுக்க முடியாது. அங்கு கணிசமாக உள்ள கிறிஸ்தவ மிஷனரிகள் சென்றமுறை காங்கிரஸ் கட்சியை ஆதரித்தன. இந்த தேர்தலில் அவை, இடதுசாரிகளை ஆதரிக்க தாமாகவே முன்வந்து மாணிக் சர்க்காரிடம் பேச்சு நடத்தின. ஆனால் சர்க்கார், கிறிஸ்தவ என்ஜிஓக்களின் ஆதரவு வேண்டாம் என மறுத்துவிட்டார். காரணம், பல என்ஜிஓக்கள் வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாக நன்கொடை பெற்று வருவதுதான். அதேபோல் ஐஎன்பிடி கட்சியும் இந்த முறை காங்கிரஸை உதறிவிட்டு, சிபிஎம் கட்சியை ஆதரிக்க முன்வந்தது. ஐஎன்பிடி கட்சி, குறுங்குழுவாதம் பேசக்கூடியது என்பதால், அக்கட்சியின் ஆதரவையும் பெற மறுத்துவிட்டார் மாணிக் சர்க்கார். தன் மீதும், இடதுசாரி சித்தாந்தத்தின் மீதும் அதீத நம்பிக்கை கொண்ட சர்க்கார், இந்தமுறை யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிட்டார். பிரிவினைவாதிகளுடன் பாஜக கூட்டு: ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் என்பது, அகண்ட பாரதத்தை விரும்புவது. அதன் பிள்ளையான பாஜகவின் முழக்கமும் அதுதான். ஆனாலும், திரிபுராவைப் பொருத்தவரை பாஜக தன்னுடைய சித்தாந்தத்தை தேர்தல் வெற்றிக்காக முற்றிலும் காவு கொடுத்திருப்பதை உற்று நோக்கினால் உங்களுக்கே விளங்கும். ஆம். சித்தாந்தத்தின் மீது பிடிப்பு கொண்ட மாணிக் சர்க்காரின் உத்திக்கு நேர்மாறான முடிவை எடுத்தது பாஜக. திரிபுராவைப் பிரித்தாள நினைக்கும், வங்கதேசத்தில் இருந்து இயக்கப்படும் ஐபிஎப்டி (Indigenous People’s Front, Tripura – IPFT), என்எல்எப்டி (National Liberation of Fron of Tripura – NLFT), ஏடிடிஎப் (All Tripura Tigers Force – ATTF) ஆகிய பிரிவினைவாத குழுக்களுடன் பாஜக மிகத்துணிச்சலாக இந்தமுறை கூட்டு வைத்தது. அந்த முடிவுக்குக் கைமேல் பலனும் கிடைத்துள்ளது. திரிபுரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 35 இடங்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களையும் கைப்பற்றியது என்றால், பாஜ கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிரிவினைவாத குழுவான ஐபிஎப்டி கட்சி 8 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. தேர்தல் வெற்றியின் மீது பாஜகவுக்கு எத்தனை கோரப்பசி இருந்திருக்கும் என்பதை அதன் கூட்டணி முடிவுகளே பறைசாற்றும். விந்தையான தேர்தல் முடிவு: தேர்தல் களத்தில் ஒரு வாக்கு வித்தியாசத்தினால் முன்தினாலும் வெற்றி, வெற்றிதான். அதே கதைதான் இந்த தேர்தலிலும் நடந்துள்ளது. திரிபுராவில் பாஜக 35 தொகுதிகளைக் கைப்பற்றி, 43 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. அதாவது 999093 பேர் அக்கட்சிக்கு வாக்களித்துள்ளனர். இரண்டாம் இடம் பிடித்துள்ள ஆளும் இடதுசாரி கட்சி 16 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. ஆனால் அக்கட்சி 992575 வாக்குகளைப் பெற்றுள்ளது. அதாவது, 42.7 சதவீதம் பேர் மாணிக் சர்க்கார் ஆட்சி தொடர வேண்டும் என்று வாக்களித்துள்ளனர். ஆக, பாஜகவுடன் ஒப்பிடுகையில் சிபிஎம் கட்சி வெறும் 6518 வாக்குகளே குறைவாக பெற்று, சரிவை சந்தித்துள்ளது. அரை விழுக்காடு வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சியை பறிகொடுத்துள்ளார் மாணிக் சர்க்கார். புதிய அரசு அமைவதற்கு வழிவிட்டு இன்று (மார்ச் 4, 2018) அவர் திரிபுரா ஆளுநர் ததகதா ராயிடம் தனது ராஜிநாமா கொடுத்துவிட்டு, மக்களுக்கு நன்றி சொல்லி, விடைபெற்றார் மாணிக் சர்க்கார். சித்தாந்தத்தையும், நேர்மையையும் மட்டுமே நம்பி களமிறங்கிய மார்க்சிஸ்ட் கட்சிக்கு இந்த தேர்தலில் கிடைத்தது தோல்வியும் அல்ல; வெற்றி மீதான வெறியுடன் சித்தாந்தத்தை மறந்து பிரிவினை கும்பலுடன் கைகோத்து அரை விழுக்காடு வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சிக்கு வந்த பாஜகவுக்கு இந்த தேர்தலில் கிடைத்திருப்பது வெற்றியும் அல்ல. – பேனாக்காரன். Share this: WhatsApp Tweet Telegram Related Articles Posted in அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள் Tagged Agartala, Assembly election, BJP, BJP supporter, Brinda Karat, Lal Salaam, left wing defeat, Manik Sarkar, Marxist Communist, Tripura, ஏழை முதல்வர், சட்டப்பேரவை பொதுத்தேர்தல், திரிபுரா, பாஜக., பிருந்தா காரத்., மாணிக் சர்க்கார்., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் Prevதிரிபுராவில் ஆட்சியமைக்கிறது பாஜக; நாகாலாந்து, மேகாலயாவில் தொங்கு சட்டப்பேரவை Nextமேகாலயா: ஜனநாயகம் என்றால் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது என்று பொருள்! Top Posts செரீனா வழக்கு, கங்கை அமரனின் பங்களா பறிப்பு; சசிகலா மட்டும்தான் காரணமா? புற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே! ஹெர்னியா அச்சம் வேண்டாம்! டாக்டர் சொல்வதை கேளுங்க... சர்வோதய சங்கங்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல்; நெசவாளர்களை சுரண்டும் கும்பல்! ஆதாரங்களுடன் அம்பலம்!!
இது பட்டியலில் இல்லை எடப்பாடியை அதிமுகவிலிருந்து நீக்கிய பன்னீர்செல்வம் அங்கே 18 இங்கே 22 என்னதான் நடக்கிறது..! அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப், உள்ளிட்ட 18 நபர்களை எடப்பாடி பழனிசாமி கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்து நீக்கிய நிலையில். எடப்பாடிபழனிசாமி உள்ளிட்ட 22 நபர்களை நீக்குவதாக ஓ பன்னீர்செல்வம் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஓ பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த முட்டுக்கட்டைகள் வழக்குகளை கடந்து 11 ஆம் தேதி சென்னையில் அதிமுகவினரின் பொதுக்குழு கூட்டம் நடந்து முடிந்தது. ஒரு பக்கம் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கடும் மோதலில் ஈடுபட்டார்கள். மறுபக்கம் பொதுக்குழுவில் ஜெயலலிதா அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் என்ற தீர்மானம் ரத்து செய்யப்பட்டது. ஓ பன்னீர்செல்வம் தகுதி நீக்கம் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக பொருளாளராக நியமிக்கப் பட்டுள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்து ஓ பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம், ஜேசிடி பிரபகர், மனோஜ் பாண்டியன், ஆகியோர் சிறப்பு தீர்மானம் போட்டு அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்கள். 18 நபர்கள் தகுதி நீக்கம் இந்த நிலையில் மேலும் 18 நபர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி இருக்கிறார், இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதில் ஓ பன்னீர்செல்வம் மகன்கள் ரவீந்திரநாத் எம்பி, ஜெயபிரதீப், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பி என் பி வெங்கட்ராமன். ஆர் ராமச்சந்திரன், எம்ஜிஎம் சுப்பிரமணியன், ஓம்சக்தி சேகர், கோவை செல்வராஜ், முன்னாள் எம்பிகள் கோபால கிருஷ்ணன், உள்ளிட்டோர் நீக்கப்பட்டுள்ளார். ஓ பன்னீர்செல்வம் பதிலடி என்ன அதேபோல் மருது அழகுராஜ், வினு பாலன்,லட்சுமி, சைதை எம்எம் பாபு, கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, ரமேஷ், வைரமுத்து, அசோகன், ஆகிய நபர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கு கடுமையான பதிலடி கொடுக்கும் விதமாக உடனடியாக ஓ பன்னீர்செல்வம் அவர்கள் எடப்பாடி பழனிசாமியின் முக்கிய ஆதரவாளர்களாக இருக்கும். அதிமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 22 நபர்களை கட்சியில் இருந்து நீக்குவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். யார் அந்த 22 நபர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், கேபி முனுசாமி, தங்கமணி, வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார், கோகுல இந்திரா,வளர்மதி, ஆர் பி உதயகுமார். சிவி சண்முகம், எஸ் மணியன், செல்லூர் ராஜ், திநகர் சந்தியா,அசோகன், கந்தன், இளங்கோவன், ஆதிராஜாராம், ஜக்கையன், ராஜன்செல்லப்பா, அவர்களை நீக்குவதாக ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இந்திய தண்டனை சட்டப்பிரிவு 370 விளக்கம்..! அதிமுகவில் இப்பொழுது ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி கே பழனிசாமி ஆகிய இரு தரப்பினருக்கும் கடுமையான மோதல்கள் நிகழ்ந்து வருகிறது. 4 lakh for goat farming Central Government best scheme அதுமட்டுமில்லாமல் திருமதி சசிகலா அவர்கள் கட்சியையும் அதிமுக அலுவலகத்தையும் கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறார். ஆனால் இந்த அனைத்து கட்டுப்பாடுகளையும் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் தன் வசம் வைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், முக்கிய தலைவர்கள் மற்றும் அடிப்படைத் தொண்டர்கள், என அனைவரும் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களை விரும்புகிறார்கள்.
ஒவ்வோர் ஆண்டும், புத்தகக் கண்காட்சிக்காக, இலக்கிய வரிசையில் பெரும் தொகுப்புகள் ஒன்று அல்லது இரண்டை வெளியிடுவது கிழக்கின் வழக்கம். 2005 கண்காட்சிக்கு அசோகமித்திரனின் கட்டுரைகளின் முழுத்தொகுப்பாக (ஒன்று | இரண்டு) கெட்டி அட்டை - சுமார் 1900 பக்கங்கள் - புத்தகங்களை வெளியிட்டோம். 2006-ல் ஆதவன், எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதைத் தொகுப்புகள். 2007-ல் இரா.முருகன் சிறுகதைத் தொகுப்பு, ஹோமரின் இலியட் என்னும் இதிஹாசத்தின் நாகூர் ரூமியின் தமிழ் மொழிபெயர்ப்பு. அந்த வரிசையில் இந்த ஆண்டு, இரண்டு முக்கியமான புத்தகங்களைக் கொண்டுவருகிறோம். ஒன்று இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்களின் முழுத்தொகுப்பு. இதில் அவர் எழுதிய 15 நாடகங்கள் உள்ளன: மழை, போர்வை போர்த்திய உடல்கள், கால யந்திரங்கள், நந்தன் கதை, கொங்கைத் தீ, ஔரங்கசீப், ராமாநுஜர், இறுதி ஆட்டம், சூறாவளி, பசி, கோயில், தர்மம், நட்டக்கல், புனரபி ஜனனம், புனரபி மரணம், வீடு. முன்னுரையில் இந்திரா பார்த்தசாரதி சொல்வதிலிருந்து ஒரு சிறு துண்டு இங்கே: தில்லியில் அப்பொழுது ‘Enact’ என்ற ஒரு பத்திரிகையை ராஜேந்திர பால் என்பவர் நாடகத்துக்கென்றே நடத்தி வந்தார். இவரால்தான், இவர் நடத்தி வந்த பத்திரிகையால்தான், இன்று அகில இந்திய நாடக உலகில் அறியப்படுகின்ற மோஹன் ராகேஷ், விஜய் டெண்டுல்கர், கிரிஷ் கர்னார்ட், பாதல் சர்க்கார் முதலியவர்கள் பிரபலமானார்கள். ‘Enact’ ல், இவர்களுடைய நாடகங்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் பிரசுரமாகின. ‘போர்வை போர்த்திய உடல்கள்’ இப்பத்திரிகையில் ஆங்கிலத்தில் வெளியானது. மொழி பெயர்த்தவர் என்.எஸ்.ஜகன்னாதன். இதைத் தொடர்ந்து நான் எழுதிய பல நாடகங்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு, ‘Enact’ ல் வெளிவந்தன. இவை ஆங்கிலத்திலிருந்து ஹிந்தியில் மொழிபெயர்ப்பாகி மேடை ஏறின. தில்லியிலும், பிற இடங்களிலும், நான் நாவலாசிரியன் என்பதைக் காட்டிலும், நாடக ஆசிரியனாக அறியப்பட்டதற்கு இதுவே காரணம். ‘நந்தன் கதையும்,’ ‘ஔரங்கசீப்’பும் தமிழில் மேடை ஏறுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னாலேயே, ஹிந்தியில் அரங்கமேறின. நாடகம் எழுதுவதை நான் மிகவும் விரும்புகின்றேன். ஆனால் என் பல நாடகங்கள் தமிழ் நாட்டில், நான் எழுதிய மொழியில், மேடையேறவில்லை என்ற குறை எனக்கு உண்டு. மற்றொரு கெட்டி அட்டைப் புத்தகம், யுவன் சந்திரசேகரின் 37 சிறுகதைகளின் தொகுப்பு. அவரது முன்னுரையிலிருந்து சிறு பகுதி. அப்பா, பகல் கனவுன்னா என்னப்பா? அப்பா சொன்னார்: கனவுன்னா, தூங்கும்போது வரும். பகல் கனவு முழிச்சிண்டிருக்கும்போது வரும். வளர்ந்து வரும் பாதையில் நானாகச் சில வித்தியாசங்கள் தெரிந்துகொண்டேன். உளவியலாளர்கள் சொல்லும் கனத்த வித்தியாசம், பகற்கனவு மேல்மன ஆசைகள் உண்டாக்கும் சித்திரம்; கனவு ஆழ்மன விழைவுகளும் நிராசைகளும் உருவாக்குவது. தவிர, யாருக்கும் தெரியுமே, கனவு தானாக வருவது. பகற்கனவு நாமாக உண்டாக்கிக்கொள்வது. எனக்கு முக்கியமானதாகப் படும் இன்னொரு விஷயம், பகற்கனவை விட்ட இடத்திலிருந்து தொடர முடியும். கனவை அவ்வாறு தொடர்வதற்கில்லை. குறுக்கீடுகள் எதுவும் பகற் கனவைக் குலைப்பதில்லை. எழுத்தைப் பொறுத்தவரை கனவும் பகற்கனவும் ஒருசேரப் பிணைந்த ஒரு புலமாகத் தோன்றுகிறது. என்ன எழுதவேண்டும் என்பது ஒரு கனவின் தன்மையோடுதான் கருக்கொள்கிறது. எப்படி எழுதவிருக்கிறோம் என்பது ஒரு பகற்கனவைப் போலவே வளர்ச்சி கொள்கிறது. கடந்த எட்டு வருடங்களில் நான் தொடர்ந்து கண்டுவந்த கனவுகள் மற்றும் பகற்கனவுகளின் ஒரு பகுதிதான் இந்தத் தொகுப்பாக நிகழ்ந்திருக்கிறது. பெரும்பாலான கதைகள் கிருஷ்ணன் என்ற மையக் கதாபாத்திரத்தின் வழியாகச் சொல்லப்பட்டவை. தன்மை ஒருமையில் கதை சொல்வதன் வசதி கருதி அவ்வாறு எழுதினேன். எழுதுபவருக்கும் வாசிப்பவருக்கும் கதையுடன் ஒருவித உணர்வுநெருக்கம் தன்னியல்பாகவே உருவாவதற்கும் தோதுவாக இருக்கும் என்று. பிழைதிருத்துவதற்காக இவற்றை மொத்தமாகப் படிக்கும்போது, கிருஷ்ணனின் வயது முதல் அவனது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அவன் எதிர்கொண்ட தருணங்கள், புறச் சூழல் இவற்றில் பலவிதமான தகவல் குளறுபடிகள் இருப்பதைக் கவனிக்க முடிந்தது. எல்லாக் கதைகளையும் கிருஷ்ணன் வழியாகச் சொல்வது ஒரு முன் தீர்மானத்தின்படி நடந்தது அல்ல என்பதாலும், இவை எல்லாமே தனித்தனிக் கதைகள் என்பதாலும் இவ்வாறு நேர்ந்துவிட்டிருக்கிறது. தவிர, இவை புனைகதைகள்தாம்; என்னுடைய தன் வரலாறோ, கிருஷ்ணன் என்ற அசலான நபரின் வரலாறோ அல்ல என்பதால்,மேற்படி முரண்களைப் பொருட்படுத்த வேண்டியதில்லை என்று தோன்றுகிறது.
இணைய தளத்தை பயன்படுத்துபவர்கள் பெரும்பாலோனோருக்கு GOOGLE EARTH பற்றி தெரிந்திருக்கும் .GOOGLE EARTH மென்பொருள் பற்றி விளக்கமாக அறிய விரும்புபவர்களுக்கான பதிவு இது . GOOGLE EARTH மென்பொருள் மூலம் நமது கணினி முன் அமர்ந்தவாறே உலகின் எந்த ஒரு இடத்திற்கும் வினாடிகளில் பயணிக்கலாம் .அதன் மூலம் ஒவ்வொரு நாடுகளின் அமைப்பை நாம் கணினியில் இருந்தவாறே பார்த்து ரசிக்கலாம் .முன் பின் தெரியாத ஊர்களுக்கு செல்லுமுன் இதன் மூலம் அங்கு பயணித்து விட்டு அதன் பின்னர் செல்வோமானால் பயணம் எளிதாக அமையும் . இனி இதை எப்படி பயன் படுத்துவது என்பதை பற்றி பார்க்கலாம் .முதலில் இங்கே கிளிக் செய்து GOOGLE EARTH மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள் . இது இலவச மென்பொருள்தான் .நிறுவியபின் மென்பொருளை திறக்கவும் .இப்போது கீழே இருப்பது போன்ற ஒரு ஜன்னல் திறக்கும் .பெரிதாக பார்க்க விரும்புபவர்கள் படத்தின் மீது சுட்டவும் . 1. நீங்கள் எந்த இடத்தை பார்க்க விரும்புகிறீர்களோ அதன் பெயரை இங்கே தட்டச்சு செய்து ENTER அழுத்துங்கள் .இப்போது அந்த இடத்திற்கு நீங்கள் அழைத்து செல்ல படுவீர்கள் .MOUSE ஐ முன்னும் பின்னும் SCROLL செய்து அருகிலோ அல்லது தூரத்திலோ இருந்து பார்க்கலாம் . 2 . நீங்கள் எதாவது இடத்திற்கு பெயர் சூட்ட விரும்பினால் இதை தேர்வு செய்து நீங்கள் விரும்பும் இடத்தில் சுட்டி பெயர்சூட்டலாம் . 3.இதை தேர்வு செய்து சுட்டுவதன் மூலம் இரு ஊர்களுக்கு இடையேயான தூரத்தை அளக்கலாம் . 4.GOOGLE EARTH ன் சிறப்பம்சமே இதில்தான் அடங்கியிருக்கிறது .இதை DRAG செய்து ஒரு தெருவில் நிறுத்தினால் அந்த தெரு இயற்கையாக உள்ளபடியே தோற்றமளிக்கும் .அனைத்து இடங்களையும் இது போல பார்வையிட தற்போது வசதி இல்லை என்றாலும் அனேக முக்கிய நகரங்களை பார்வையிட முடிகிறது ,
தென்னிந்திய சினிமா உலகில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்து வரும் நடிகை அனுஷ்கா. இவர் தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான ரெண்டு படத்தின் மூலும் சினிமா உலகில் அறிமுகமானார். பின்னர் பல வெற்றிப்படங்களை தகதாக்கி கொண்டார். சில ஆண்டுகளாகவே அனுஷ்காவுக்கும், தெலுங்கு நடிகர் பிரபாஸ்ஸுக்கும் காதல் என்று சமூக வலைத்தளங்களில் பல கிசுகிசுக்கள் வந்ததையடுத்து இருவரும் அந்த காதலை இல்லை என மறுத்து விட்டார்கள். பின் அனுஷ்கா ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் தகவல்கள் வந்தது. ஆனால், அந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை தற்போது நடிகை அனுஷ்கா அவர்கள் வட இந்தியாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் என்றும் அவர் ரஞ்சி போட்டிகளில் விளையாடி வருகிறார் அவரையே அனுஷ்கா காதலிப்பதாக இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது. , வீரர் அணி ஒன்றுக்காக என்றும் கூறப்பட்டது. இது குறித்து அனுஷ்காவிடம் கேட்ட போது அவர் கூறியது, காதல், திருமணம் என்றாலே என்னைப் பற்றி கிசுகிசுக்கள் தான் சமூக வலைத்தளங்களில் எப்போதும் வரும். இது வழக்கமான ஒன்றாக வைத்து விட்டார்கள். பல தடவை எனக்கு திருமணம் செய்து வைத்தார்கள். பல பேருடன் என்னை இணைத்து பேசியுள்ளார்கள். ஒரு தொழிலதிபரை விரும்புகிறேன், டாக்டரை விரும்புகிறேன் என்றும், என்னுடன் நடித்த நடிகர்களுடன் இணைத்தும் பேசினார்கள். இப்போது கிரிக்கெட் வீரரை காதலிக்கிறேன் என்று கூறுகிறார்கள். எதுவும் உண்மை இல்லை. என்னை ஏன் இப்படி குறி வைக்கிறார்கள் என்று தெரியலை. நடிகைகள் பற்றி வதந்திகள் வருவது சாதாரணமான ஒன்று தான். எனது திருமண முடிவை நான் என் பெற்றோர்களிடம் விட்டுவிட்டேன். அவர்கள் யாரைப் பார்த்து திருமணம் செய்து வைக்கிறார்களோ அவர் தாலி கட்ட கழுத்தை நீட்டுவேன் என்று தெளிவாக அனுஷ்கா கூறியிருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாகிவருகிறது. Related Posts tamil cinema news Post a Comment Popular Posts `` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு ஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்... விமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா அண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக... புத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி சட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா... கமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே கமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ... சற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும... ரஜினியா? கமலா? மக்கள் யாரை தேர்வு செய்வார்கள் இம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்... கமலை அசிங்கப்படுத்திய பாஜக! கமலின் பதில் என்ன? கமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B... சிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப... ஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...
பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீட்டினை தமிழக அரசு, குறிப்பாக தமிழக முதல்வர் திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் அறிவித்துவிட்டார்கள் என்றவுடன் பார்ப்பனக் காகிதப் புலிகள் ஆத்திரத்துடன் உறும ஆரம்பித்து விட்டன! 28.01.1980 அன்று விடுதலையில், “பார்ப்பனக் காகிதப் புலிகளின் பாய்ச்சல்’’ என்ற தலைப்பில் தலையங்கத்தை இரண்டு பகுதிகளாக விளக்கியிருந்தேன். பார்ப்பனக் காகிதப் புலிகளான ‘இந்து’, ‘மெயில்’ ஏடுகள் எப்படி 9000 ரூபாய் வருமான வரம்பு ஆணையை தமிழக அரசு திரும்பப் பெற்றது குறித்தும், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 31 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தியது குறித்தும், எழுது-கின்றன என்பதை ஓரளவு முதல் தலையங்கத்தில் சுட்டிக்காட்டியிருந்தேன். மீண்டும் ‘இந்து’, ‘எக்ஸ்பிரஸ்’ ஏடுகளில் தங்கள் குருசேத்திரமான “ஆசிரியர் கடிதங்களை எழுதின. இதனை இரண்டாவது நாள் எழுதியுள்ள (29.01.1980) தலையங்கத்தில் விரிவாக விளக்கியுள்ளேன்’’ அந்தப் பகுதியை அப்படியே இங்கு தருகின்றேன். “தான் கொண்ட திட்டத்திலிருந்து திடீரென்று தமிழக அரசு மாறியிருப்பது அரசியல் நெருக்கடியால்தான் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. ரூ.9 ஆயிரம் வருமான வரம்பு ஆணையை மாற்ற வேண்டிக் கோரி சில கட்சிகள் பெரும் கிளர்ச்சியை நடத்துவதாக அச்சுறுத்தின’’ என்று எழுதியதன் மூலம் கிளர்ச்சிக்கும் அரசியல் நெருக்கடிக்கும் இந்த அரசு அடிபணிந்தது என்று பட்டவர்த்தனமாக இந்து ஏடு சொல்கிறது. மகிழ்ச்சிதான். ‘அவாளுக்கு’ இவ்வாட்சியின்மீது ஏற்பட்டுள்ள திடீர்க் ‘கோபாக்கினி’ ஆவேசத்தின் துவக்கமே இது. இந்தப் போக்கில் எழுதினால் ஏதோ எழுதுகிறது; இதுதானே “அவாள் பத்திரிகா தர்மம்’’ என்று விட்டுவிடலாம். ஆனால் அடுத்து அது எவ்வளவு ஆத்திரத்தின் உச்சக்கட்டத்திற்கு சென்றுள்ளது தெரியுமா? “A very large percentage of candidates those qualifications may be no more than that they happen to belong to a particular caste will get selected, while others even with better attainments are in danger of being denied opportunities for no other reason than that they belong to the so called forward classes.” “ஏராளமான மனுதாரர்கள் இந்த புதிய ஆணை காரணமாக தாங்கள் ஒரு குறிப்பிட்ட (அதாவது பிற்படுத்தப்பட்ட) ஜாதியைச் சார்ந்தவர்கள் என்ற ஒரே தகுதி காரணமாக தேர்வு செய்யப்படுவதும், அவர்களைவிட அதிக தகுதிகளை உடையவர்கள் பலருக்கு அவர்கள் முன்னேறிய வகுப்பு என்பதாகச் சொல்லப்படும் ஒரே “பாவத்திற்காக’’, வாய்ப்புக்கள் மறுக்கப்படக்கூடிய அபாயகரமான நிலை ஏற்படவே செய்யும்’’ என்று அபாயச் சங்கு ஊதுகிறது ‘மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு’’ ஏடு! இதன்படி, பிற்படுத்தப்பட்டவர்கள் தேர்வு செய்யப்படுவது ஏதோ ஜாதி என்ற ஒரே தகுதி காரணமாகத்தானாம்! இதைவிட அண்டப்புளுகு, யோக்கியப் பொறுப்பற்ற புகார் வேறு இருக்க முடியுமா? மருத்துவக் கல்லூரிகட்கு 60 சதவிகித மார்க் - அதாவது முதல் வகுப்பு மார்க் வாங்கியவராக இருந்தால்தான் பிற்படுத்தப்பட்டவர் ஜாதியில் அவர் பிறந்திருந்தாலும் கூட, மனுவே போட முடியும். அதற்கு அப்புறம் தேர்வு நடக்கையில், தமிழக அரசு கடந்த சில ஆண்டுகளாக கடைப்பிடித்து வரும் முறைப்படி பார்த்தால் பிற்படுத்தப்பட்ட மாணவர்களிலிருந்து தேர்வுக்கும் முன்னேறிய சமூக மாணவர்களி-லிருந்து செய்யப்படும் தேர்வுக்கும் இடைவெளி மார்க் வெறும் 5 மார்க்குகள்தான். (உதாரணமாக பிற்படுத்தப்பட்டவருக்கு 200க்கு 185 மார்க் என்றால், முன்னேறிய ஜாதியினருக்கு 190 மார்க் என்றுதான் ஓர் அடிப்படை வைத்து தேர்வு செய்கின்றனர்). அதேபோல், பொறியியல் (எஞ்சினீயரிங்) கல்லூரிகட்கு மனுபோட 70 சதவிகித மார்க்குகள் வாங்கியவர்கள்தான் மனுவே போட முடியும். பிற்படுத்தப்பட்டோருக்கும் இதே விதிதானே! அப்படியிருக்கையில் தகுதி (Merrit) எப்படி போய்விடும்? பொய் அழுகை, போலிக்கூப்பாடு போட்டு நீலிக்கண்ணீர் விடும் மவுண்ட்ரோடு மனுபிரான் இந்து கூறட்டுமே! பிற்படுத்தப்பட்டவர்களையும் ஏதோ ஃபெயில் ஆன மாணவர்களைச் சேர்த்து விடுவது மாதிரி அல்லவா கூறுகிறார்கள். பிற்படுத்தப்-பட்ட மாணவர்களிலும் படிப்புத் தகுதி, உடற்கூறு, விளையாட்டு வீரம், பொது அறிவுக்கூர்மை - இவைகளையெல்லாம் பற்றி ஆராய்ந்துதானே “தேர்வு’’ செய்கின்றனர்! வெறும் ஜாதி ஒன்றினை மட்டுமே பார்த்து, மற்றவைகளை அலட்சியப்படுத்தி விட்டா தேர்வு நடக்கிறது? பார்ப்பன ஆத்திரம் அவ்வளவு பற்றி எரிகிறது! நோஞ்சான் பிள்ளைகளை முதலில் கவனித்து, கொழுத்தவர்-களைக் காக்க வைப்பது எப்படி தவறானதாகும்? “ஒரு குறிப்பிட்ட ஜாதியில் பிறந்த “பாவத்திற்காக’’ அவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படலாமா? என்று இன்று ஓங்காரக் கூச்சல் இடும் ‘இந்து’க் கூட்டத்தினரே. “சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் அறிவை, கல்வியைக் கொடுக்கக் கூடாது என்று பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மிகப் பெரும்பாலான மக்களுக்கு கல்வி, உத்தியோக வாய்ப்புக்களை மறுத்து வந்தீர்களே அது எந்த நியாயத்தின் பாற்பட்டது?’’ சூத்திரனுக்குக் கல்வி கூடாது என்பது “ஒரு குறிப்பிட்ட ஜாதியில் பிறந்த “பாவத்திற்காகவே’’ மறுக்கப்பட்ட அந்த தர்மம் தவறு என்று சங்கராச்சாரியிலிருந்து சவுண்டிப் பார்ப்பனர் வரை எவராவது ஒருவர் கூறியிருக்கிறீர்களா?’’ நீங்களும் உங்கள் வம்ச வழிகளும் ஒரு எள் மூக்கு முனை அளவு பாதிக்கப்பட்டால் உடனே “தர்ம நியாயம்’’ பேசக் கிளம்பிவிடுவதுதானே உங்கள் வாடிக்கை வழமை எல்லாம்? ‘சூத்திரனுக்கு ஒரு நீதி, தண்டச் சோறுண்ணும் பார்ப்பானுக்கு வேறு ஒரு நீதி’ என்பது இன்றும் அமலாக வேண்டும் என்றுதான் இந்து கூட்டம் விரும்புகிறது என்பது இவ்வாதத்தின் மூலம் புரியவில்லையா? இப்போது கேட்கத் துவங்கும் இந்தக் கேள்வியை 5000 ஆண்டுகளுக்கு முன்பே நீங்கள் கேட்டிருந்தால், பார்ப்பனர்களே நீங்கள் யோக்கியர்கள்; ஆனால் எவர் கேட்டார்கள்? கேட்டவர்களை உயிருடன் வாழக்கூட நீங்கள் விட்டது கிடையாதே! அது மட்டுமா? தந்திரமாக ஒரு அஸ்திரத்தைப் பிரயோகப்படுத்தி சூழ்ச்சி வலையைப் பின்னலாம் என்று இந்து, மெயில் கூட்டம் கணக்குப் போடுகிறது! பிற்படுத்தப்பட்ட தன்மையே ஒரு நிலைபெற்ற அம்சமாகி விடும் அபாயம் தோன்றுமாம்! இப்படி கூறும் மகாமகா யோக்கியர்கள் தங்களை ஏன் சிறுபான்மையினர் (Minorities) என்று கூறி அதற்கேற்ற பாதுகாப்பு தேவை என்று துடியாய்த் துடிக்கின்றனர். மைனாரிட்டியினர் என்பதற்காக சலுகை எவருக்கு கொடுத்தாலும் அது நிலையாகி அதுவே ஒரு முதலீடு மூலதனமாகும் பேரபாயம் ஏற்பட்டுவிடுமே என்று நாங்கள் சொன்னால் நீங்கள் ஏற்பீர்களா? இடஒதுக்கீடு என்பது மிஞ்சினால் 50 ஆண்டுகால சாதனை; அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது 5 ஆயிரம் ஆண்டுகளாக அல்லவா? அதை மறந்துவிட்டு அல்லது மறந்துவிட்டதுபோல நடித்து வாதம் செய்வது பச்சை அயோக்கியத்தனம் அல்லவா? அரசியல் சட்டத்தின்படி ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு; அது மறுக்கப்படக் கூடாது என்று உரிமைக்குரலை எழுப்பும் பூணூல் பேனாக்கள், கோடானுகோடி பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களும் குடிமக்கள்தான் என்பதை உணர்ந்து ஒப்புக் கொண்டால் அவர்களது ஏற்றத்திற்கு எதிராக இவ்வளவு சீறிப்பாயத் துவங்குவார்களா? அரசியல் சட்டம் என்பது உங்களுக்கு மட்டும்தானா? பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களுக்கு சம வாய்ப்புகள் (Equality of Opportunities) கொடுப்-பது எப்படி என்பதை சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் திரு.கே.சுப்பாராவ் அவர்கள் ஒரு தீர்ப்பில் மிகவும் ஆழமாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார்: (AIR 1964 s c 179 at page 189 in para 23) “Article 14 lays down the General Rule of Equality. Article 16 is an instance of the application of the General Rule with special reference to opportunity or appointments under the state. It says that there shall be equality of opportunity for all citizens in matters relating to employment or appointment to any office under the State. If it stood alone, all the Backward Communities would go to the walls in a society of uneven basic social structure. The said rule of equality will remain only a utopian conception unless a practical content was given to it. Its strict enforcement brings about the very situation it speaks to avoid. To make my point clear, take the illustration of a Horse Race. Two horses are set down to run a race - one is a first class race horse and other is an ordinary one. Both are made to run from the same starting point. Though theoritically they are given equal opportunity to run the race, in practice, the ordinary horse is not given equal opportunity to compete with the race horse. Indeed that is denied to it, so a handicap may be given either in the nature of extra weight or to start from a longer distance. By doing so, what would otherwise have been a farce of a competition would be made a real one. The same difficulty has confronted the makers of the Constitution at the time it was made. Centuries of calculated oppression and habitual submission reduced a considerable section of our community to a life of serfdom. It would be well neigh impossible to raise their standards if the doctrine of equal opportunity was strictly enforced in their case. They would not have any chance, if they were made to enter the open field of competition without adventitious aids till such time when they could stand on their own legs. That is why the makers of the Constituion introduced the clause 4 in Article 16. The expressin “Nothing in this Article” is a legislative devise to express its intention in a most emphatic way that the power conferred under the Article is not limited in any way by the main provision but falls outside it. It has not really carved out an exception, but has preserved a power untramelled by the other provisions of Constitution. இதன் தமிழாக்கம் இதோ: அரசியல் சட்டம் 14ஆவது பிரிவு சம உரிமை என்னும் பொது விதியைப் பற்றிக் கூறுகிறது. 16ஆவது பிரிவு மேலே கூறப்பட்ட பொதுவிதியை எப்படி கையாளுவது என்பது பற்றி விவரிக்கிறது. அதாவது அது ஒரு மாநிலத்துக்குரிய வாய்ப்பையும், மாநிலஅரசு உத்தியோகங்களை வழங்குவது பற்றியும் குறிப்பாக எடுத்துக் கூறுவதாகும். மாநிலஅரசு வேலையையும், அரசு உத்தியோகத்தையும் வழங்குவதில் குடிமக்களுக்குள் சம உரிமை செறிந்த வாய்ப்பு அளிக்க வேண்டும். அந்த விதியை மாத்திரம் தனியாக விட்டு வைத்திருந்தால் ஏற்றத் தாழ்வுகள் அடிப்படை-யில் அமைந்துள்ள ஒரு சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களின் கதி அதோ கதியாகத் தானிருக்கும். மேலே குறிப்பிட்டுள்ள விதியை அதற்குரிய இலக்கணப்படி நடைமுறைப் படுத்தப்படாவிட்டால் அதில் அடங்கியுள்ள சம உரிமை என்பது ஒரு கனவாகத்தான் போய்விடும். அந்த விதியை மிகவும் கடுமையாக பிரயோகப்படுத்தினால் அந்த விதி எந்த நிலையைத் தவிர்க்க வேண்டுமென்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டதோ அதே நிலையை உண்டாக்கிவிடும். என்னுடைய கருத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். பந்தய குதிரைகளின் உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு குதிரை ஓட்டப் பந்தயத்தில் தேர்ந்த முதல் தரமான குதிரை மற்றொன்று சாதாரண குதிரை. ஓட்டப் பந்தயத்திற்கு இரண்டு குதிரைகளையும் கொண்டு வந்து நிறுத்துங்கள். இரண்டு குதிரைகளையும் ஒரே நேர்கோட்டிலிருந்து ஓட்டத்தை ஆரம்பிக்கச் செய்யுங்கள். தத்துவ ரீதியாகப் பார்த்தால் இரண்டு குதிரைகளுக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட்டதாகத்தான் தோன்றும். ஆனால், நடைமுறையில் பார்த்தால் சாதாரண குதிரைக்கு ஓட்டப் பந்தயத்தில் தேர்ந்த குதிரையுடன் போட்டியிட சமவாய்ப்பு அளித்ததாக ஆகாது. உண்மையிலேயே அந்த சாதாரண குதிரைக்கு அந்த சமவாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. எனவே அந்த சாதாரண குதிரைக்கு ஒரு சலுகை கொடுக்க வேண்டும். அந்த சலுகை பிரத்தியேக உரிமையாகவோ அல்லது பந்தயக் குதிரையை வெகு தூரத்திலிருந்து ஓடும்படி செய்வதாகவோ இருக்கலாம். அப்படி செய்வதனால் ஒரு உண்மையான பந்தய ஓட்டத்தை ஏற்பாடு செய்ததாக ஏற்படும். இல்லையென்றால் இந்த சமஉரிமை என்ற கருத்து ஒரு நாடகமாகவே போய்விடும். அரசியல் சட்டத்தை உருவாக்கி-யவர்-களுக்கு இதே சங்கடம்தான் ஏற்பட்டது. பல நூற்றாண்டு காலமாக திட்டமிட்டு செய்யப்பட்ட மற்றவர்களை நசுக்கும் மனப்பான்மையும் எதற்கும் அடிபணிந்து செல்லும் பழக்கமும் நமது சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களை அடிமைத் தனத்திலிருக்கும்படி செய்துவிட்டது. அப்பேற்பட்ட மக்களை மேல்நிலைக்கு கொண்டுவர வேண்டுமென்றால் எல்லோருக்கும் சமஉரிமை என்கின்ற தத்துவத்தைக் கடுமையாக நடைமுறைப் படுத்தினால் அந்த நோக்கம் நிறைவேறாது. அப்படி அமுக்கப்பட்ட மக்களுக்கு அவர்களே தங்கள் காலிலே நிற்கும் அளவுக்கு அவர்களுக்கு ஊன்றுகோலை கொடுத்து அவர்களைப் பொதுப் போட்டியில் கொண்டுவந்து நிறுத்த வேண்டும். அப்படி செய்யாவிட்டால் சம உரிமை என்ற தத்துவத்தில் எந்தவித நன்மையும் அவர்களுக்கு ஏற்படாது. இந்தக் கருத்தை மனதில் கொண்டுதான் அரசியல் சட்டம் உருவாக்கியவர்கள் அரசியல் சட்டம் 16ஆவது விதிக்கு 4ஆவது உட்பிரிவை ஏற்படுத்தினார்கள். இதில் குறிப்பிட்ட எதுவும் என்கிற வாக்கியம் சேர்க்கப்பட்டுள்ளது. சட்டம் செய்பவர்களுக்கு அணுசரணையாக மிகவும் வலுவாக இந்தக் கருத்தை மேலும் வலியுறுத்துவதற்காகத்தான் இதை நுழைத்திருக்கிறார்கள். இந்த அடிப்படையில்தான் சட்டம் செய்யப்படும் உரிமை வழங்கப்பட்டது. இதை எந்த விதத்திலும் பொது விதியினால் கட்டுப்படுத்தவோ அல்லது முடக்கி விடவோ முடியாது. இது கட்டுப்படுத்தலுக்கு அப்பாற்பட்டு, நிற்பதாகும். அதை இணைத்ததினுடைய எண்ணமே, அதை ஒரு பிரத்தியேக நிலை உடையதாகவே இருக்கக் கூடாது என்பதாகத்-தான். அதனுடைய அடிப்படைக் கருத்தோ அதற்கு ஒரு முழு வலுவை அதாவது அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மற்ற விதிகள் எந்த விதத்திலும் அதை பாதிக்க முடியாத அளவு முழு வலிமை உடையதாக்குவதேயாகும். சமவாய்ப்பு என்பதற்கு உண்மையான பொருளைப் புரிந்துதான் 50 சதவிகித ஒதுக்கீடு என பிற்படுத்தப்பட்ட மக்களுக்குத் தரப்பட்டுள்ளது. “Any Special Provision” என்ற சொற்களுக்கு 15/4 பிரிவிலும் Any Provision for Reservation of such appointments” என்ற சொற்றொடர்கள் மாநில அரசுக்கு முழு அதிகாரம் இருக்கிறது. சட்டப்படி இந்த இடங்களை உயர்த்துவதற்கு என்பதையே அப்பட்டமாக விளங்குகின்றன. எனவே ஜஸ்டிஸ் திரு.சுப்பாராவ் அவர்கள் குறிப்பிட்டது போல மட்டக் குதிரையும், பாயும் குதிரையும் ஒரே இடத்தில் புறப்படுவது சரியான பந்தயம் ஆகாது என்று உணர்ந்தே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை துள்ளும் பூணூலார் துல்லியமாய்த் தெரிந்துகொள்ளுவது நல்லது. இதை நாம் பார்ப்பனர்களுக்காக மட்டும் கூறவில்லை; அரை வேக்காடுகளான நம் இனத் தமிழர்களுக்கும் இது விளங்க வேண்டும் என்பதற்காகவே எழுதுகிறோம். தமிழ்நாட்டு அரசியலில் எக்கட்சியினரா-யினும் நீங்கள் உள்ளுக்குள் ஆசையை வளர்த்துத் துடிக்கும் காங்கிரசை மீண்டும் “தனிக்காட்டு ராஜாவாக’’ வலம் வரும் “உலக அதிசயம்’’ அற்புதங்கள் நிகழ்ந்தால் கூட, அப்போதும் இந்த ‘தேவ அசுர’ப் போர் மும்முரமாகுமே தவிர, முடிந்த நிலையாகி-விடாது. எனவே, சுவரில் எழுதப்பட்ட கொட்டை எழுத்துக்களை (writing on all) பார்க்கத் தவறி விடாதீர்கள். பார்ப்பனர்களே, காலம் காலமாக நீங்கள் செய்த மனிதாபிமானமற்ற அதே கொடுமையான தவறை மீண்டும் செய்யாதீர்கள்! “நீங்கள் தமிழ்நாட்டில் எந்தக் கட்சியையும், எந்தத் தலைவரையும் “தத்து எடுத்து’’ அரசியல் நடத்திடலாம் என்று மனப்பால் குடித்து, உங்களின் எதிர்கால வாழ்வுக்கு மண்ணைப் போட்டுக் கொள்ள வேண்டாம் என்று தமிழ்நாட்டு 4 கோடி தமிழர்கள் சார்பில் எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.’’ என்று எடுத்துரைத்தேன்.
இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின்போது ஒருங்கிணைந்த பஞ்சாப் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. முஸ்லிம்கள் அதிகம் வாழ்ந்த மேற்கு பஞ்சாப், பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டது. சீக்கியர் மற்றும் இந்துக்கள் அதிகம் வாழ்ந்த கிழக்கு பஞ்சாப், இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இந்தியாவின் உணவுக் களஞ்சியம் எனப்படும் பஞ்சாப், வீரத்தின் விளைநிலம். இன்று வரை ராணுவத்தில் சீக்கியர்களே பெருமளவில் இருக்கின்றனர். சமயம், பண்பாடு, கலாசாரம் எனத் தங்களுக்கென தனித்துவமான அம்சங்களைக்கொண்ட சீக்கியர்கள், விசுவாசத்துக்காக உயிர்கொடுப்பவர்கள். இந்தியப் பிரிவினை, பல்லாயிரம் சீக்கியர்களைக் காவு வாங்கியிருக்கிறது. அதன் ஓலக் குரலை இன்றும் பஞ்சாபி இலக்கியங்களில் காணலாம். ##~## சீக்கியம் 15-ம் நூற்றாண்டில் இந்தியாவில் தோன்றிய மதம். சீக்கியம் என்பதன் பொருள் சீடர் அல்லது மாணவர் என்பதே. இது, ஞானி குருநானக் உருவாக்கிய மதம். ஒரே முடிவற்ற இறைவனையும், குருநானக் முதல் ஸ்ரீகுரு கோவிந்த் சிங் வரையிலான பத்து குருக்களையும், புனித நூலான கிரந்த சாஹிப்பையும், பத்து குருக்களின் போதனைகளையும் முழுமனதாக நம்புபவனே சீக்கியன். சீக்கிய ஆண்கள் சிங்கம் எனப் பொருள்படும் சிங் என்ற பெயரையும், பெண்கள் ராணி எனப் பொருள் தரும் கௌர் என்ற பெயரையும் தங்களின் பெயருக்குப் பின்னால் இணைத்துக்கொள்கின்றனர். சீக்கிய மதத்தின் பூர்வீகம், ஒருங்கிணைந்த பஞ்சாப் மாகாணம். சீக்கியர்கள் ஐந்து விஷயங்களைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். அவை, கேஷ் எனப்படும் வெட்டப்படாத தலைமுடி, இதை சுருக்கி சிறிய கொண்டை போல போட்டுக்கொள்கின்றனர். கங்கா எனப்படும் மரத்தாலான சீப்பு, கச்சாஹெரா எனப்படும் இடுப்பிலிருந்து முட்டி வரை இருக்கும் வெள்ளை ஆடை, கடா எனும் இரும்பாலான கையணி, அத்துடன் கிர்ப்பான் எனும் வளைகத்தி. குரு கோவிந்த் சிங் 'கல்சா’ எனும் அமைப்பை 1699-ல் நிறுவி இந்த ஒழுக்கமுறையை அறிமுகம்செய்தார். மொகலாயர்களின் ஆட்சிக் காலத்தில் சீக்கிய மதம் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளானது. சீக்கியக் குருமார்கள் சிலர் மொகலாயர்களால் கொல்லப்பட்டனர். இன்று, உலகளவில் 27 மில்லியன் சீக்கியர்கள் வாழ்கின்றனர். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு இடங்களிலிருந்தும் சீக்கியர்கள் இடம்பெயர்ந்து, அதிக அளவில் இங்கிலாந்துக்குச் சென்றனர். பிறகு, அமெரிக்கா, கனடா மற்றும் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளிலும் குடியேறினர். இந்திய ராணுவத்தில் சீக்கிய ரெஜிமென்ட், மிகவும் திறமை வாய்ந்தது. இந்த ரெஜிமென்ட், 2 பரம்வீர் சக்ரா விருதுகளையும், 14 மஹாவீர் சக்ரா, 5 கீர்த்தி சக்ரா, 67 வீர் சக்ரா மற்றும் 1,596 கேலன்டிரி விருதுகளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய சுதந்திரப் போராட்டக் களத்தில் சீக்கியர்கள் மிகுந்த மனவலிமையோடு போராடினர். பிரிட்டிஷ் அரசால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அந்தமான் தீவுகளுக்குக் கொண்டுசெல்லப்பட்ட 2,646 இந்தியர்களில், 2,147 பேர் சீக்கியர்கள். ஜாலியன் வாலாபாக்கில் படுகொலை செய்யப்பட்டவர்களில் 799 பேர் சீக்கியர்கள். விடுதலைப் போராட்டத்தின்போது, தூக்கிலிடப்பட்ட இந்தியர்களில் 73 பேர் சீக்கியர்கள். தங்களுக்கெனத் தனி வரலாறுகொண்டிருக்கும் சீக்கியர்கள் நெடுங்காலமாகவே, தங்களின் சுயாட்சிக்காக தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துக் குரல் எழுப்பி வந்தனர். தங்களுக்கான தனி நாடாக 'காலிஸ்தான்’ வேண்டும் என்று குரல் எழுப்பினர். காலிஸ்தான் என்றால், தூய்மையின் தேசம் என்று பொருள். இந்தக் கோரிக்கையை அகாலி அமைப்பு, மின்டோ மார்லி கமிட்டியிடம் முன்வைத்தது. காலிஸ்தான் குறித்து பல தரப்புப் பேச்சு வார்த்தைகள் நடந்தன. ஒருங்கிணைந்த இந்தியாவில் சீக்கியர்களுக்கான சமூக, பொருளாதார மற்றும் மத ரீதியான உரிமைகள் முழுமையாகக் காப்பாற்றப்படும் என்று, நேரு வாக்குறுதி அளித்தார். காந்தியும் சீக்கியர்கள் சார்பாகவே பேசினார். ஆனால், சுதந்திரத்துக்குப் பிறகு தனி நாடு கோரிக்கை கிடப்பில் போடப்பட்டது. தங்களை ஏமாற்றிவிட்டதாக சீக்கியர்கள் குரல் எழுப்பினர். தனிநாடு கேட்கும் அமைப்புகளுக்குத் தடைவிதிக்கப்படும் என்று நேரு எச்சரித்தார். பஞ்சாபில் 1952, 57 மற்றும் 62 ஆகிய ஆண்டுகளில் நடந்த பொதுத் தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரதாப் சிங் கைரோன், பஞ்சாப் முதல்வராகப் பதவியேற்றார். இவர், மத்திய அரசின் தலையாட்டி பொம்மையாகவே செயல்பட்டார் என்று குற்றம்சாட்டியது அகாலி தளம். 1966-ல் இந்திரா காந்தி பிரதமரானதும், ஒருங்கிணைந்த பஞ்சாப் மாகாணம் பஞ்சாப், ஹரியானா, இமாச்சல் பிரதேசம் என மூன்று மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டன. தங்களின் நீண்ட காலக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதாக, சீக்கியர்கள் சந்தோஷப்பட்டனர். அதன்பிறகு, அங்கு நடந்த தேர்தலில் அகாலி தளம் தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அர சியல் காரணங்களுக்கான பகடைக்காயாகப் பயன்படுத்தப்பட்ட காலிஸ்தான் கோரிக்கை உருமாறி, தீவிரவாத இயக்கமாகத் திசைமாறியது. 1972-ல் நடந்த பொதுத் தேர்தலில் தோற்றுப்போனது அகாலி தளம். தோல்விக்கான காரணங்களைக் கண்டறிந்து ஆனந்த்பூர் தீர்மானம் என்ற ஒன்றை வெளியிட்டது. அதில்தான் காலிஸ்தான் கோரிக்கை மீண்டும் உயிர்பெற்றது. கூடவே, மதவாத அதிகாரம் வலுப்பெற வேண்டும். அதற்கு இளைஞர்களை ஒன்றுதிரட்ட வேண்டும் என்ற எண்ணம் வெளிப்பட்டது. இதற்குத் தூண்டுகோலாக அமைந்தது சீக்கியரான ஜகஜித் சிங் சௌஹானின் செயல். 1971-ம் ஆண்டு ஜகஜித் சிங் சௌஹான் என்பவர், காலிஸ்தான் என்ற நாடு உருவாக்கப்பட இருப்பதாக, அமெரிக்காவில் வெளியாகும் நியூ யார்க் டைம்ஸ் இதழில் விளம்பரம் கொடுத்தார். இதையடுத்து, நிதி உதவிகள் குவியத் தொடங்கின. 1980-ம் ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி ஜகஜித் சிங் சௌஹான், இந்திரா காந்தியை சந்தித்து பேசினார். பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து, தேசிய காலிஸ்தான் கவுன்சிலை உருவாக்கியிருப்பதாக அறிவித்தார். அதன் தலை வராக தன்னையும், பொதுச் செயலாளராக பல்பீர் சிங் சந்து என்பவரையும் அறிவித்தார். 1980-ம் ஆண்டு மே மாதம் சௌஹான், லண்டன் சென்றார். அங்கு, காலிஸ்தான் என்ற தனிநாடு உதயமானதாக அறிவித்தார். அதேபோன்ற அறிவிப்பை அமிர்தசரஸில் சந்துவும் வெளியிட்டார். அதோடு, காலிஸ்தான் நாட்டுக்கான தனி ரூபாய் நோட்டு, ஸ்டாம்ப்கள் வெளியிடப்பட்டன. காலிஸ்தான் பற்றிய பகிரங்க அறிவிப்புகளுக்குப் பிறகும் சௌகான் மற்றும் சந்து ஆகியோர் மீதோ அவர்களது அமைப்பின் மீதோ, அப்போதிருந்த காங்கிரஸ் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, காங்கிரஸின் கண்மூடித்தனமான போக்கை அகாலி தளத் தலைவர் லோங்கோவால் கடுமையாக கண்டித்தார். 1977-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பஞ்சாபில் காங்கிரஸைத் தோற்கடித்தது அகாலி தளம். அதையடுத்து, பஞ்சாபில் காங்கிரஸ் வளர வேண்டுமானால், அகாலி தளம் கட்சியை உடைக்க வேண்டும் என காங்கிரஸ் திட்டமிட்டது. அதற்கு ஆயுதமாக அடையாளம் காணப்பட்டவரே பிந்தரன்வாலே. தீவிர மதப்பற்றுமிக்க குடும்பத்தில் பிறந்து பஞ்சாபின் புகழ்பெற்ற சமயப் பள்ளியான தம்தாமி தக்ஸால்சில் படித்தவர் பிந்தரன்வாலே. சமயப் பள்ளியான தம்தாமி தக்ஸாலின் தலைவராக இருந்தார். பிந்தரன்வாலேயைக்கொண்டு சீக்கிய இளைஞர்களை மனமாற்றம் செய்யத் தொடங்கியது காங்கிரஸ். நிரங்காரி பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் அகண்ட் கீர்த்தனி பிரிவுக்கும் இடையே, 1978-ம் ஆண்டு மோதல் ஏற்பட்டது. அகண்ட் கீர்த்தனியைச் சேர்ந்த 13 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, பஞ்சாபில் மதக் கலவரம் வெடித்தது.
100 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தின் கிங்ஸ் பள்ளத்தாக்கில் துட்டன்காமுனின் பளபளக்கும் கல்லறையை ஹோவர்ட் கார்ட்டர் கண்டுபிடித்தபோது, ​​​​அவர் பாலைவனத்தால் சூழப்பட்ட ஒரு மண் செங்கல் வீட்டில் வசித்து வந்தார், அது கல்லறைகள், மம்மிகள் மற்றும் உயர்ந்த கோயில்களை 3,000 ஆண்டுகளுக்கும் மேலாக பாதுகாத்து வந்தது. அடுத்த நூற்றாண்டில், கார்டரின் வீடு நைல் நதியில் இருந்து கொண்டு வரப்பட்ட தண்ணீருக்கு நன்றி, பச்சை, பனை தோட்டத்துடன் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. 1970 ஆம் ஆண்டு எகிப்தின் அஸ்வான் உயர் அணைக்கட்டு, லக்சருக்கு மேல் மற்றும் தெற்கில் கட்டப்பட்டதன் மூலம் ஆற்றின் வருடாந்திர வெள்ளம் தணிந்தது, மேலும் அடிக்கடி நடவு செய்ய அனுமதித்தது. மேலும் மேலும், விவசாயிகள் நைல் நதியின் நீரை பயன்படுத்தி விரிவடைந்து வரும் பாசிப்பருப்பு, கரும்பு மற்றும் காய்கறிகளின் வயல்களை மூழ்கடித்தனர். அந்தத் தண்ணீர் அனைத்தும் லக்சரின் இதிகாசக் கோயில்களின் கல் அஸ்திவாரங்களிலும், கார்ட்டர் ஹவுஸின் மண் செங்கல்களிலும் ஊடுருவி, மண்ணிலும் கற்களிலும் உப்பு கலந்ததால், அவை வைக்கோல் போல தண்ணீரை மேலே இழுத்தன. மணற்கல் மணலாக மாறியது மற்றும் சுண்ணாம்புக் கற்கள் விரிசல் அடைந்தன. கார்ட்டர் ஹவுஸ் இந்த மாதம் மீண்டும் திறக்கப்பட்டது, அதன் சொந்த நீர்-பசியுள்ள தோட்டத்திலிருந்து பாலைவனத்தின் புதிய வட்டத்தால் பாதுகாக்கப்பட்டது, இரண்டு வருட மறுசீரமைப்பிற்குப் பிறகு, அடித்தளங்களை உறுதிப்படுத்தியது மற்றும் உட்புறத்திற்கு கார்ட்டர் கால தளபாடங்கள் மற்றும் கலைப்படைப்புகளை வழங்கியது. கர்னாக் மற்றும் மெடினெட் ஹபுவின் புகழ்பெற்ற கோயில்கள் இப்போது நிலத்தடி நீரை உறிஞ்சும் மாபெரும் பம்புகளால் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால் ஆபத்து மேலே இருந்தும் கீழே இருந்து வருகிறது: உள்ளூர்வாசிகள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், காலநிலை மாற்றம், கற்கள் அரிப்பு மற்றும் சிற்பங்களில் இருந்து பழங்கால நிறத்தை கழுவுதல் ஆகியவற்றுடன் மழைப்பொழிவு அதிகரித்து வருகிறது. லக்சரில், மாறிவரும் வானிலை பல நூற்றாண்டுகளாக நினைவுச்சின்னங்களைச் சுற்றியுள்ள மனித வளர்ச்சிகளின் அழிவுகரமான தாக்கங்களை அதிகரிக்கிறது. எகிப்தின் சில நினைவுச்சின்னங்கள் ஏற்கனவே காணக்கூடிய வகையில் சேதமடைந்துள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர், மற்றவை, அலெக்ஸாண்ட்ரியாவில் உள்ள கைட்பேயின் 15 ஆம் நூற்றாண்டின் சிட்டாடல் போன்ற கடல்கள் உயரும் அபாயத்தில் உள்ளன. “இந்த நினைவுச்சின்னங்களுக்கு தண்ணீரும் உப்பும் எதிரி” என்று சிகாகோ பல்கலைக்கழகத்தில் உள்ள ஓரியண்டல் இன்ஸ்டிட்யூட்டின் எபிகிராஃபிக் சர்வேயின் மூத்த எபிகிராஃபர் பிரட் மெக்லைன் கூறினார். “இந்த நினைவுச்சின்னங்கள் வறண்டதால் உயிர் பிழைத்தன.” லக்சரின் நினைவுச்சின்னங்களில் மிகவும் வெளிப்படையான மனித தாக்கம், அவற்றைப் பார்வையிடும் மக்களின் எண்ணிக்கையாகும். 2020 ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடங்குவதற்கு முன்பு, கிங் டட்டின் கல்லறை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் சென்றனர். சுற்றுலாவை பாதுகாப்போடு சமநிலைப்படுத்த முயற்சித்த அரசாங்கம், மனித வியர்வை மற்றும் சுவாசத்தால் ஏற்படும் ஈரப்பதத்தைக் குறைக்க காற்றோட்ட அமைப்பை நிறுவ, கெட்டி கன்சர்வேஷன் இன்ஸ்டிட்யூட்டை நியமித்தது. திட்டம் 2019 இல் திறக்கப்பட்டது.
மேஷம்: எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்களே! நவம்பர் 22ம் தேதி முதல் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உச்சமடைந்து 10ம் வீட்டில் அமர்வதால், உங்களுடைய நிர்வாகத் திறன் அதிகரிக்கும். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். புதனும், சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால், பணவரவு திருப்தி தரும். சூரியன் 8ல் நிற்பதால், அரசு காரியங்கள் தாமதமாகி முடியும். வியாபாரத்தில் புது இடத்துக்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் நீங்கள் உயரதிகாரிகளால் அலைக்கழிக்கப்பட்டாலும், சக ஊழியர்களால் உதவிகள் உண்டு. ஆரோக்கியம்... அறிவுக்கூர்மை அதிகரிக்கும்! ரிஷபம்: விடாமுயற்சியால் முதலிடம் பிடிப்பவர்களே! ராசிநாதன் சுக்கிரன் 7ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்த்துக்கொண்டிருப்பதால், உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். அழகு, ஆரோக்கியம் கூடும். 22ம் தேதி முதல் செவ்வாய் உச்சமாகி 9ம் வீட்டில் அமர்வதால்... வீடு, மனை வாங்குவது, விற்பதில் இருந்த சிக்கல்கள் நீங்கும். உறவினர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தி, அழகுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் நீங்கள் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். திறமைகள் வெளிப்படும்! மிதுனம்: படிப்பறிவுடன் பட்டறிவும் உள்ளவர்களே! குருபகவான் 2ம் வீட்டில் வலுவாக நிற்பதால், எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். சுக்கிரன் ராசிக்கு 6ல் மறைந்து நிற்பதால், வாழ்க்கைத் துணைவருடன் விவாதம்.... பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் வந்து போகும். சூரியன் 6ம் வீட்டில் நிற்பதால், அரசு காரியங்கள் சுலபமாக முடியும். புது வேலை தேடுபவர்களுக்கு நல்ல சேதி வரும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு கிட்டும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். அயல்நாட்டில் இருந்து ஆதாயம்! கடகம்: ஒளிவுமறைவு இல்லாமல் பேசுபவர்களே! ராகு வலுவாக 3ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். வெளிநாட்டிலிருக்கும் உறவினர், தோழிகளால் ஆதாயமடை வீர்கள். நவம்பர் 22ம் தேதி முதல் செவ்வாய் உச்சம் பெற்று 7ம் வீட்டில் அமர்வதால், வாழ்க்கைத் துணைவர் உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பார். 5ம் வீட்டில் சூரியன் நிற்பதால், அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக்கொள்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ளாதீர்கள். ரியல் எஸ்டேட் லாபம் தரும்! சிம்மம்: சிகரத்தைத் தொட்டபோதும் தலைக்கனம் கொள்ளாதவர்களே! சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால், பணப் புழக்கம் கணிசமாக உயரும். உறவினர்கள் உங்கள் நல்ல குணத்தைப் புரிந்துகொள்வார்கள். ரியல் எஸ்டேட் லாபம் தரும். குரு 12ல் மறைந்திருப்பதால், எதிர்பாராத பயணங்களும், செலவுகளும் வந்து போகும். நவம்பர் 22ம் தேதி முதல் செவ்வாய் ராசிக்கு 6ம் வீட்டில் அமர்வதால், பிள்ளைகளால் இருந்த பிரச்னைகள் தீரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். சிலர் புதுக்கிளைகள் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டாம். மனநிறைவான மணவாழ்க்கை! கன்னி: இயற்கையை அதிகம் நேசிப்பவர் களே! சூரியன் 3ல் வலுவாக நிற்பதால்,. வீடு மாறுவது, கட்டுவது சாதகமாக அமையும். வாழ்க்கைத் துணைவர் உங்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வார். மகனுக்கு புது வேலை கிடைக்கும். அயல்நாடு செல்லும் வாய்ப்பும் வரும். சர்ப்ப கிரகங் களின் சஞ்சாரமும், சனியின் போக்கும் சாதகமாக இல்லாததால்... உறவினர் வகையில் பிரச்னை, தூக்கமின்மை, வீண் செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துகொள்வீர்கள். உத்யோகத்தில் நீங்கள், உயரதிகாரிகள் நினைப்பதை முடித்துக்காட்டுவீர்கள். மூளை பலத்தால் முன்னேற்றம்! துலாம்: பணம், காசு வந்தாலும் குணம் மாறாதவர்களே! சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், மூளை பலத்தால் முன்னேறுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். நெடுநாட்களாக பார்க்க நினைத்த உறவினர்களை சந்திப்பீர்கள். 2ல் சூரியன், ராகு நிற்பதால், சேமிப்புகள் கரையும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். பேச்சில் கடுமை வேண்டாம். வியாபாரத்தில் நாணயமாக நடந்துகொள்வதால், வாடிக்கையாளர் எண்ணிக்கை நாளடைவில் அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை! விருச்சிகம்: நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ளவர்களே! நவம்பர் 22ம் தேதி முதல் உங்கள் ராசிநாதன் செவ்வாய் 3ல் உச்சம் பெற்று அமர்வதால், புது வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சிறந்த நிறுவனத்தில் பதவி அமையும். குடும்ப வருமானம் உயரும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். ராசிக்குள் சூரியன் நிற்பதால், உடல்நலக் கோளாறு வந்து போகும். உறவினருடன் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் வரவு உயரும். பாக்கிகள் வசூலாகும். வேலையாட்கள் உதவிகரமாக இருப்பார்கள். உத்யோகத்தில் உங்களுக்கு எதிரான சூழ்ச்சிகளை உடைத்தெறிவீர்கள். போட்ட திட்டம் நிறைவேறும்! தனுசு: உண்மைக்கு முக்கியத்துவம் தருபவர்களே! சுக்கிரன் சாதகமாக இருப்பதால், நீங்கள் போட்ட திட்டங்கள் நிறைவேறும். தாமதமான விஷயங்கள் உடனே முடியும். வாராது என்றிருந்த பணம் வரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். நவீன எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்குவீர்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். சூரியன் ராசிக்கு 12ல் மறைந்திருப்பதால், வீண் செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் நீங்கள் பொறுப்பாக நடந்துகொண்டாலும், மேலதிகாரி குறைகூறத்தான் செய்வார். சாமர்த்தியம் துணை நிற்கும்! மகரம்: மனிதநேயத்தின் மறுஉருவமாய் விளங்குபவர்களே! சூரியன் லாப வீட்டில் அமர்ந்திருப்பதால், வீட்டில் கூடுதலாக ஒரு தளம் அமைப்பீர்கள். சிலர் வீடு மாற திட்டமிடுவீர்கள். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உறவினர்கள், தோழிகளால் உதவிகள் உண்டு. நவம்பர் 22ம் தேதி முதல் ராசிக்குள் செவ்வாய் உச்சம் பெற்று அமர்வதால், சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி கள் அதிசயிக்கும்படி நடந்துகொள்வீர்கள். பிள்ளைகள் மனம் குளிரும்! கும்பம்: செயல் வேகத்தால் அசத்துபவர் களே! புதன் சாதகமான வீடுகளில் செல்வதால், வீடு கட்டும் பணி முழுமையடையும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உறவினர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வீட்டு உபயோக சாதனங்களைப் புதிதாக வாங்குவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். குரு 6ல் மறைந்திருப்பதால் மற்றவர்களை நம்பி குறுக்கு வழியில் செல்ல வேண்டாம். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்களை ஆதரிப்பார்கள். பாசமழையில் நனையும் பொழுது! மீனம்: கடந்து வந்த பாதையை மறவாதவர்களே! செவ்வாய் வலுவாக அமர்ந்திருப்பதால், பணபலம் உயரும். வாழ்க்கைத் துணைவர் பாசமழை பொழிவார். பிள்ளைகளின் நினைவாற்றல் கூடும். இங்கிதமான பேச்சால் உறவினர்களைக் கவருவீர்கள். உங்களுக்கு எதிராக பேசிக்கொண்டிருந்தவர்கள் தங்கள் தவறை உணர்வார்கள். அஷ்டமத்துச் சனி தொடர்வதால் பயம், மனஇறுக்கம் வந்து செல்லும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் உங்களுக்கு பதவி உயர்வு உண்டு. இடமாற்றமும் ஏற்படலாம்.
வீட்டுக் கடன் என்பது ஒருவர் எடுக்கும் மிகப்பெரிய கடனாக இருக்கலாம். கடன் தொகையின் அடிப்படையில் மட்டுமின்றி 15 ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும் பதவிக்காலங்களும். ஒருவர் செலுத்தும் மொத்த இறுதித் தொகையானது கடனாகப் பெற்றதை விட இரட்டிப்பாக இருக்கலாம். ஆனால் வீட்டுக் கடன் கிடைக்கக்கூடிய மலிவான கடன்களில் ஒன்றாகும் பொதுவாக ஒரு நபர் ஒரு வீட்டை வாங்குவதற்கான ஒரே வழி இதுதான். வீட்டுக்கடன் ‘நல்ல‘ கடன் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது நீண்ட காலத்திற்குப் பாராட்டக்கூடிய உறுதியான சொத்தைப் உதவுகிறது. நீங்கள் அதில் வசிக்க திட்டமிட்டால் ஒரு வீட்டை வாங்குவது அர்த்தமுள்ளதாக இருக்கும். இந்தியாவில் பல வீட்டுத் திட்டங்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாகத் தாமதமாகி வருவதைத் தவிர நிதி ஆலோசகர்கள் வீடு மாறுவதற்குத் தயாராக இருக்கும் வீட்டை வாங்க வேண்டும் என்று கூறுவதும் இதுதான் காரணம். Categories Entertainment News Tags 2022 Best Home Loan ..?, 2022 சிறந்த வீட்டுக் கடன்..?, Home Loan, Home Loan Plan கார்ரின் உரிமையாளரே கார்க்கு குண்டு வைத்த சம்பவம்..! யாருக்கு COVID Booster அவசியம் திறந்து படியுங்கள்..! Recent Posts Why is Crypto the biggest solution For our problems? United States Dollar மதிப்பு என்ன ? புஷ்பா தி ரூல் நாளை பூஜை விழாவுடன் தொடங்குகிறது:- படத்தின் இணை தயாரிப்பாளராக ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைகோர்த்து வரும் நிலையில், துருவ நட்சத்திரம் விரைவில் வெளிவரவுள்ளது.
கேரட் மிகவும் மலிவாக எளிதில் கிடைக்கும் காய்களில் ஒன்றாகும். அதிக நன்மைகள் நிறைந்த கேரட் அனைவராலும் விரும்பி உண்ணும் சுவை நிறைந்த காயாகும். நாம் அனுதினமும் பயன்படுத்தும் … Read more நெல்லி பொடி நெல்லி பொடி பயன்கள் நெல்லியில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளதால் இது இரத்த சோகைக்கு நல்ல மருந்தாகும். நெல்லியில் அறுசுவையில் உப்பு … Read more முடக்கத்தான் பொடி முடக்கத்தான் பொடி பயன்கள் முடக்கத்தான் முடக்கு அறுத்தான் என்பது நாளடைவில் முடக்கற்றான் என்றானது. கசப்புத் தன்மையுடைய முடக்கத்தான் முடக்கு வாத நோய்களை குணமாக்குவதால் முடக்கத்தான் என்று பெயர் … Read more கரிசலாங்கண்ணி பொடி கரிசலாங்கண்ணி பொடி பயன்கள் கரிசலாங்கண்ணி அதிக அளவில் மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகையாகும். இதில் எக்லிப்டால், டெஸ்மீத்தைல், அக்கோண்டனால், ஹென்ட்ரை, ஸ்டிக்மாஸ்டீரால், தங்கச்சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் … Read more ஆவாரம் பூ பொடி ஆவாரம்பூ பொடி பயன்கள் ஆவாரம்பூ துவர்ப்புத் தன்மை உடையது. இதில் தங்கச்சத்து நிறைந்துள்ளது. ஆவாரம் பூ பொடியை தினமும் ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வர சர்க்கரை … Read more கஸ்தூரி மஞ்சள் பொடி கஸ்தூரி மஞ்சள் பொடி பயன்கள் கஸ்தூரி மஞ்சள் முக அழகு சாதன பொருட்களில் ஒன்றாகும். இது அனைத்து வகை சருமத்திற்கும் கேடு விளைவிக்காத அலர்ஜி எதிர்ப்பு தன்மை … Read more எலுமிச்சை தோல் பொடி பயன்கள் எலுமிச்சை தோல் பொடியினைக் கொண்டு ஃபேஸ் பேக் முதல் பாதத்திற்கு அழகு தரும் பெடிக்யூர் வரை பயன்படுத்தலாம். எலுமிச்சை தோலில் அதிக அளவு கலோரிகள், கார்ப்ஸ், நார்ச்சத்து, … Read more ஆரஞ்சு தோல் பொடி ஆரஞ்சு தோல் பொடியின் பயன்கள் ஆரஞ்சு தோலில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்துள்ளது. இது இயற்கை அழகை விரும்பும் பெண்களுக்கு மிகச் சிறந்த அழகு சாதன பொருளாகும். … Read more முருங்கை இலை பொடி முருங்கை இலை பொடி பயன்கள் முருங்கையில் விட்டமின்கள், மினரல், அமீனோ ஆசிட்கள், வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம் மற்றும் புரோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. 10 கிராம் … Read more மருதாணி பொடி மருதாணி பொடி பயன்கள் மருதாணி பொடியானது இளநரையை தடுக்க அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனுடன் அவுரி பொடியை சேர்த்து பயன்படுத்தும் போது நம் கூந்தலுக்கு ஏராளமான நன்மைகள் … Read more ரோஸ் பொடி ரோஸ் பொடியின் பயன்கள் ரோஜாவிற்கு இயற்கையாகவே சருமத்தின் நிறத்தை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. ரோஜாவில் அதிகளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நல்ல ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். ரோஜா … Read more மண் சிகிச்சை மண்ணின் மகத்துவத்தை அறிந்து அதில் உள்ள மருத்துவ குணங்களை கொண்டு மண் சிகிச்சை முறைகளை சித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். பழங்காலங்களில் அனைத்து கிராமங்களிலும் மண் சிகிச்சை முறைகளை … Read more முகத்தில் உள்ள கருமை நீங்க வேண்டுமா? முக அழகு என்பது அனைவரும் விரும்பும் ஒன்றாகும். அதிலும் பெண்கள் முகத்தில் ஏதேனும் ஒரு சிறு பரு வந்தாலும் மிகவும் வேதனைப்படுவர். அநேக பெண்கள் வெள்ளை நிறத்தில் … Read more சர்க்கரை நோயில் இருந்து ஆரம்பத்திலேயே தப்பித்துக்கொள்ள… சர்க்கரைக்கேற்ற முருங்கை சர்க்கரை நோய் சர்க்கரை நோய் இன்றைய காலத்தில் அதிகளவில் காணப்படும் நோயாகும். நம் உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ … Read more உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் புழுக்கமான சீதோஷ்ண நிலை பெரும்பாலும் மே, ஜுனில் காணப்படுகிறது. வறட்சியான ஈரப்பதம் ஃபுளூ காய்ச்சலுக்கு ஈடான உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. மூக்கடைப்பு, டான்சில், குரல் வளை … Read more
அந்த பிரமாண்ட மாளிகையில்……. விஜயேந்தர் குடும்பத்தினர் குழுமியிருந்தனர்..... அவர்கள் அனைவர் பார்வையும் ராதாவைச் சுற்றி இருக்க……….. விஜய் உச்சக் கட்ட ஆத்திரத்தில் இருந்தான்………….. சுரேந்தரும் தன் அண்ணனின் மன நிலையில் இருக்க… யுகேந்தர் மட்டுமே தங்கையை நினைத்து கவலையாய் இருந்தும்…….. இருந்தும் அதை வெளிக்காட்டாமல் நின்று கொண்டிருந்தான்………… இவர்களின் பெற்றோரும் ராதாவை நினைத்து கவலையோடு நின்றுகொண்டிருக்க…………. மகளின் பிடிவாதம் ஒருபுறம் இருக்க……… அந்த வீட்டின் மூத்தவனின் பிடிவாதம் மறுபுறம் இருக்க…………… ராதாவின் மேல் கவலை கொண்ட போதும் மகனின் பிடிவாதம் நியாயமாகவேப் பட்டது இருவருக்கும்… விஜயேந்தரின் கோபத்திற்கு காரணம்……….. ராதா கலைச்செல்வியிடம் இளமாறனை திருமணம் செய்ய மறுத்து பேசியிருந்ததே காரணம்…… விஜய் குரலை உயர்த்திப் பேச ஆரம்பித்தான் ராதாவிடம்……….. “ராதா……… எனக்கு அவங்கள பிடிக்கலை………… நம்ம குடும்பத்துக்கும் அவங்க சரி வரமாட்டாங்க……….. புரிஞ்சுக்கோ…………. பிடிக்கலைனு தெரிஞ்சும் நம்ம வீட்டு படி ஏறி பொண்ணு கேட்க வந்தாங்க………. அதுதான் அன்னைக்கு அவமானப் படுத்தி அனுப்புனேன்…… என்றவன் தன் தங்கையின் முகம் இன்னும் தெளியாததை உணர்ந்து “இன்னைக்கு உனக்கு நான் சொல்வது தப்பா தெரியலாம்………… இந்த வயசு இன்னைக்கு இதுதான் முக்கியம்னு சொல்லும்………. நாளை நீ நல்லா வாழும்போது கண்டிப்பா இந்தக் காதல்லாம் நினைத்து சிரிப்பம்மா………. புரிஞ்க்கோ…………. என்ன புரியிறது………… இதுதான் என் முடிவு
நடிகர் சித்தார்த்தின் காதலித்து கழட்டிவிட்ட நடிகைகள் குறித்த செய்தி தான் தற்போது கோலிவுட்டில் தீயாய் பேசப்பட்டு வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் சித்தார்த். 43 வயதாகும் இவர் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தில் நடித்து நடிகராக அறிமுகமானார். SIDHHARTH 4 அதன் பின்னர் ஆயுத எழுத்து, காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யணும் குமாரு, ஜிகர்தண்டா, காவியத் தலைவன் உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் தற்போது நடிகை அதிதி ராவ் ஹைதாரியை காதலித்து வருவது தான் கோலிவுட்டின் தலைப்பு செய்தியாக பேசப்பட்டு வருகிறது. sidhharth 2 இதற்கு முன்னர் சித்தார்த் 2002இல் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மேக்னா என்ற பின்னணி பாடகி காதலித்து திருமணம் ஒரு மகனையும் பெற்றுவிட்டு விவாகரத்து செய்துவிட்டார். அதன் பிறகு திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்தார். sidhharth 1 பின்னர் தெலுங்கில் ஓ மை பிரண்ட் படத்தில் நடித்த போது ஸ்ருதி ஹாசனை காதலித்து லிவிங் டூ கெதரில் வாழ்ந்து பிரிந்துவிட்டார். அதன் பிறகு தமிழில் கவனம் செலுத்திய சித்தார்த் அப்போதைய புது வரவான சமந்தாவை காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் வரை சென்று பிரிந்துவிட்டனர். இதையும் படியுங்கள்: ஹஹாஹா… போஸ் கொடுக்குற Gapல பொசுக்குன்னு கடிச்சுடீங்களே? ஸ்ருதி ஹாசனின் Funny வீடியோ! sidhharth 3 தற்ப்போது நடிகை அதிதி ராவ் ஹைதாரியை காதலித்து மும்பையில் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார். பொதுவெளியில் ஒன்றை சேர்ந்து சுற்றியபோது மீடியாக்களிடம் பிடிபட்ட சித்தார்த், நேரம் வரும்போது நானே கூறுகிறேன் என காதலிப்பதை உறுதி செய்துள்ளார். இதுவாவது நிலைக்குமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்… Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
உலகில் அதிகளவில் பசி பஞ்சம் பட்டினி நிறைந்த நாடுகளின் வரிசையில் இந்தியா 107-வது இடம் பிடித்து அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சர்வதேச அளவில் உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு போன்றவை குறித்து பல்வேறு நாடுகளில் ஆய்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் உலகப் பட்டினிக் குறியீடு வெளியிடப்பட்டு வருகிறது. அயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் என்ற நிறுவனமும், ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ஃபே என்ற நிறுவனமும் வெளியிட்ட 121 நாடுகள் அடங்கிய இந்த பட்டியலில் இந்தியா 107-வது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த வகையில் இந்தியா குறித்து அநத அமைப்பு பல பகீர் தகவல்களைத் தெரிவித்துள்ளது. அதாவது பசி, பஞ்சம் விவகாரத்தில் இந்தியா தீவிர அபாயம் கொண்ட நாடாக வகைப்படுத்தப் பட்டுள்ளது. தெற்காசியாவில் ஆப்கானிஸ்தான் தவிர மற்ற அனைத்து நாடுகளும் இந்தியாவைவிட சிறப்பாக செயல்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் இந்தியாவில்தான அதிக அள்விலான குழந்தைகள் தங்கள் உயரத்துக்கு தகுந்த எடை இல்லாமல் ஊட்டச்சத்து குறைபாடுடன் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசியாவை பொறுத்தவரையில் பொருளாதாரத்தில் இந்தியாவை விட பிந்தங்கிய பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபாளம், மியான்மர் ஆகியவை கூட உலகப் பட்டினிக் குறியீட்டில் இந்தியாவை விட முன்னணியில் இருக்கின்றன. இந்த விஷயத்தில் ஆப்கானிஸ்தான் மட்டுமே இந்தப் பட்டியலில் இந்தியாவிட பின்தங்கி இருக்கிறது. இந்தப் பட்டியலில் சீனா, துருக்கி, குவைத் உள்ளிட்ட 17 நாடுகள் பட்டினி இல்லாத நாடாக முன்னணியில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
புளோரிடாவிலுள்ள பார்க்லேண்டில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 17 பேரைக் கொன்று குவித்த துப்பாக்கிதாரிக்கு மரண தண்டனை விதிக்கக் கோரும் வழக்குரைஞர், திங்களன்று ஜூரிகளுக்கு நிகோலஸ் குரூஸ் தனது பாதிக்கப்பட்டவர்களை எப்படிக் குளிர்ச்சியாக வெட்டினார், சிலரிடம் காயத்துடன் திரும்பி வந்து, இரண்டாவது சரமாரியில் அவர்களை முடித்தார். பிப்ரவரி 14, 2018 அன்று மார்ஜோரி ஸ்டோன்மேன் டக்ளஸ் உயர்நிலைப் பள்ளியில் க்ரூஸ் தங்கள் குழந்தைகளை எப்படிக் கொன்றார் என்பதைத் தனது தொடக்க அறிக்கையில் விவரிக்கும் போது சில பெற்றோர்கள் அழுது புலம்பினர். மற்றவர்கள் கைகளை மார்புக்கு மேல் நீட்டிக் கொண்டு அமர்ந்திருந்தனர். தன் மகளை இழந்த ஒரு பெண் தன் முகத்தில் டிஷ்யூவைப் பிடித்து அழுதுகொண்டே நீதிமன்ற அறையை விட்டு ஓடினாள். க்ரூஸ் தூக்கிலிடப்பட்டாரா அல்லது பரோல் இல்லாமல் சிறையில் வாழ்கிறாரா என்பதை தீர்மானிக்க விசாரணையின் தொடக்கத்தில் சாட்ஸின் கருத்துக்கள் வந்தன. 14 மாணவர்கள் மற்றும் மூன்று பணியாளர்கள் இறந்தவர்கள் மற்றும் 17 பேர் காயமடைந்த 17 பேரில் ஒவ்வொருவரையும் எப்படி குரூஸ் சுட்டுக் கொன்றார் என்பது குறித்து வழக்குரைஞரின் விளக்கக்காட்சி சென்றது. சிலர் தங்கள் மேசைகளில் அமர்ந்து சுடப்பட்டனர், சிலர் தப்பி ஓடியபோது மற்றும் சிலர் தரையில் ரத்தம் வழிந்தபடி கிடந்தனர், முன்னாள் ஸ்டோன்மேன் டக்ளஸ் மாணவர் மூன்று மாடி கட்டிடத்தில் ஏஆர்-15 அரை-தானியங்கி துப்பாக்கியுடன் கிட்டத்தட்ட ஏழு நிமிடங்கள் முறையாகப் பின்தொடர்ந்தார். 23 வயதான க்ரூஸ், அக்டோபரில் கொலை மற்றும் கொலை முயற்சியில் குற்றத்தை ஒப்புக்கொண்டார், மேலும் அவரது தண்டனையை மட்டும் எதிர்த்துப் போட்டியிடுகிறார். நான்கு மாதங்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த விசாரணை 2020ல் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் கோவிட்-19 தொற்று மற்றும் சட்டச் சண்டைகளால் அது தாமதமானது. சாட்ஸ் கொலைகளை குளிர்ச்சியானது, கணக்கிடப்பட்டது, கொடூரமானது மற்றும் கொடூரமானது என்று அழைத்தார், அப்போது 19 வயதான க்ரூஸ், படப்பிடிப்புக்கு மூன்று நாட்களுக்கு முன்பு செய்த வீடியோவை மேற்கோள் காட்டினார். “இது பிரதிவாதி கூறினார்: ‘ஹலோ, என் பெயர் நிக். 2018 ஆம் ஆண்டின் அடுத்த பள்ளி துப்பாக்கி சுடும் வீரராக நான் இருக்கப் போகிறேன். AR-15 மற்றும் சில ட்ரேசர் சுற்றுகளுடன் குறைந்தது 20 பேர் இருக்க வேண்டும் என்பதே எனது இலக்கு. இது ஒரு பெரிய நிகழ்வாக இருக்கும், நீங்கள் என்னை செய்திகளில் பார்க்கும்போது, ​​​​நான் யார் என்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் அனைவரும் இறக்கப் போகிறீர்கள். ஆம், என்னால் காத்திருக்க முடியாது,” என்று சாட்ஸ் கூறினார். முதல் சாட்சிகளில் டேனியல் கில்பர்ட், ஒரு ஜூனியர், அவர் படப்பிடிப்பு தொடங்கியபோது உளவியல் வகுப்பில் இருந்தார். ஆசிரியர் மாணவர்களை தன் மேசைக்குப் பின்னால் வரும்படி கூறினார். “உட்கார்ந்த வாத்துகளைப் போல நாங்கள் அமர்ந்திருந்தோம். எங்களைப் பாதுகாத்துக் கொள்ள எங்களுக்கு வழி இல்லை, ”என்று கில்பர்ட் கூறினார், அவர் இப்போது மத்திய புளோரிடா பல்கலைக்கழகத்தில் மாணவராக உள்ளார். கில்பர்ட் வகுப்பறைக்குள் எடுத்த செல்போன் வீடியோவை நடுவர் மன்றத்திற்குக் காட்டப்பட்டது. ஆசிரியையின் மேசைக்கு அடியில் ஒரு பெண் சுருண்டு கிடப்பதோடு, கில்பர்ட் உட்பட மற்றவர்கள், அவர்கள் பின்னால் குனிந்துகொண்டிருப்பதைக் காணமுடியாமல் காட்சிகள் தொடங்கியது. நெருப்பு எச்சரிக்கை ஒலிக்கும்போது கதவுக்கு வெளியே இருந்து சுமார் இரண்டு டஜன் காட்சிகள் வேகமாக அடுத்தடுத்து கேட்கின்றன. கண்ணுக்கு தெரியாத ஒரு சிறுவன் இரண்டு முறை கூக்குரலிடுகிறான், “யாராவது எனக்கு உதவுங்கள். “துப்பாக்கிச் சத்தங்கள் இன்னும் தொலைவில் உள்ளன, ஆனால் மாணவர்கள் அமைதியாகவும், பதுங்கியும், கிசுகிசுப்பாக மட்டுமே பேசுகிறார்கள். இறுதியில், போலீஸ் அதிகாரிகளின் குரல்கள் நெருங்கி வருகின்றன. ஆசிரியர் எழுந்து நிற்கிறார், தலையைப் பிடித்துக் கொண்டார். “அவர்கள் வருகிறார்கள், வருகிறார்கள், நாங்கள் நலமாக இருக்கிறோம்,” என்று ஒரு சிறுவன் கிசுகிசுக்கிறான். SWAT அதிகாரிகள், துப்பாக்கிகளை ஏந்தியபடி, யாரேனும் காயப்பட்டிருக்கிறார்களா என்பதை அறிய விரும்பி உள்ளே நுழைந்தனர். மாணவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள் மற்றும் கில்பர்ட் தனது கேமராவுடன் நிற்கிறார். காயமடைந்த சிறுவனும் சிறுமியும் மீட்கப்பட்டனர். ஒரு பெண் ரத்த வெள்ளத்தில் கிடக்கிறாள். அதிகாரிகள் மாணவர்களை வெளியே ஓடச் சொல்கிறார்கள். அவர்கள் ஒரு வாகன நிறுத்துமிடத்திற்குள் நுழைவதற்கு முன்பு ஹால்வேயில் கிடந்த மேலும் இரண்டு உடல்களைக் கடந்து சென்றனர். அவரது சாட்சியம் முடிந்து, கில்பர்ட் சோகத்தில் உடைந்தார். அவளுடைய தந்தை அவளைச் சுற்றி கையை வைத்து அவளை நீதிமன்றத்திலிருந்து அழைத்துச் சென்றார். வக்கீல்கள் மற்றொரு மாணவரிடமிருந்து செல்போன் வீடியோவை வழங்கினர், இது வகுப்புத் தோழர்கள் நாற்காலிகளுக்குப் பின்னால் குனிந்திருப்பதைக் காட்டியது, குரூஸ் வகுப்பறை கதவு ஜன்னல் வழியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். நீதிமன்ற அறையின் பின்புறத்தில் இருந்து, அந்த வகுப்பறையில் இறந்த ஒரு சிறுமியின் உறவினர், ஜாமீன்கள் அந்தப் பெண்ணை அமைதியாக இருக்கும்படி கேட்கும் முன் வழக்கறிஞர்கள் அதை அணைக்குமாறு கத்தினார். இந்த வெடிப்புக்கு எதிராக ஒரு தவறான விசாரணையை பாதுகாப்பு கோரியது, ஆனால் அது மறுக்கப்பட்டது. ஏழு ஆண்கள், ஐந்து பெண்கள் கொண்ட நடுவர் மன்றம் 10 மாற்றுத்திறனாளிகளால் ஆதரிக்கப்படுகிறது. நடுவர் மன்றத்தின் முன் சென்ற தேசத்தின் மிக மோசமான வெகுஜன துப்பாக்கிச் சூடு இதுவாகும். குறைந்தது 17 பேரைக் கொன்ற மற்ற ஒன்பது துப்பாக்கிதாரிகள் அவர்கள் துப்பாக்கிச் சூட்டின் போது அல்லது உடனடியாக தற்கொலை அல்லது போலீஸ் துப்பாக்கிச் சூடு மூலம் இறந்தனர். டெக்சாஸின் எல் பாசோவில் உள்ள வால்மார்ட்டில் 2019 இல் 23 பேரைக் கொன்ற சந்தேக நபர் விசாரணைக்காக காத்திருக்கிறார். க்ரூஸை ஆதரிக்க யாராவது நீதிமன்ற அறையில் இருந்தார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை, அவருடைய வழக்கறிஞர்களுக்கு இடையில் பாதுகாப்பு மேஜையில் அமர்ந்திருந்தார். சாட்ஸின் தொடக்க அறிக்கையின் போது, ​​அவர் பெரும்பாலும் கையில் பென்சிலுடன் காகிதத் திண்டுகளைப் பார்த்தார், ஆனால் அவர் எழுதத் தோன்றவில்லை. அவர் சில சமயங்களில் சாட்ஸ் அல்லது நடுவர் மன்றத்தை முறைத்துப் பார்ப்பார், பார்வையாளர்களை உற்றுப் பார்ப்பார் அல்லது அவரது வழக்கறிஞர்களிடம் கிசுகிசுப்பார். சாட்ஸ் பேசிய பிறகு, க்ரூஸின் வழக்கறிஞர்கள் தங்கள் வழக்கை வார வாரங்களில் முன்வைக்கும் வரை தொடக்க அறிக்கையை வழங்க மாட்டோம் என்று அறிவித்தனர். இது ஒரு அரிதான மற்றும் ஆபத்தான உத்தியாகும், ஏனென்றால் ஜூரிகள் கொடூரமான ஆதாரங்களை ஆய்வு செய்வதற்கும், உயிர் பிழைத்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள் மற்றும் வாழ்க்கைத் துணைவர்களிடமிருந்து சாட்சியங்களைக் கேட்பதற்கும் முன்பு சாட்ஸுக்கு ஒரே கருத்தை அளிக்கிறது. முன்னணி பாதுகாவலர் மெலிசா மெக்நீல் தனது அறிக்கையை அளிக்கும் போது, ​​க்ரூஸ் ஒரு இளம் வயது வந்தவர், அவர் வாழ்நாள் முழுவதும் உணர்ச்சி மற்றும் உளவியல் சிக்கல்களைக் கொண்டவர், அவர் கரு ஆல்கஹால் நோய்க்குறி மற்றும் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டார். சர்க்யூட் நீதிபதி எலிசபெத் ஷெரருக்கு இது முதல் மரண தண்டனை விசாரணை. இறுதியில் ஜூரிகள் இலையுதிர்காலத்தில் வழக்கைப் பெறும்போது, ​​அவர்கள் 17 முறை, பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் ஒருமுறை, மரண தண்டனையை பரிந்துரைக்க வேண்டுமா என்று வாக்களிப்பார்கள். ஒவ்வொரு வாக்கும் ஒருமனதாக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களில் எவருக்கும் ஒருமனதாக வாக்களிக்கவில்லை என்றால், அந்த நபருக்கு க்ரூஸின் தண்டனை ஆயுள் தண்டனையாக இருக்கும். மரணதண்டனைக்கு வாக்களிக்க, பாதிக்கப்பட்டவருக்கு எதிராக வழக்குத் தொடரும் மோசமான சூழ்நிலைகள், அவர்களின் தீர்ப்பில், தற்காப்புத் தணிக்கும் காரணிகளை விட அதிகமாக இருக்க வேண்டும் என்று ஜூரிகள் கூறுகின்றனர். ஆதாரம் எதுவாக இருந்தாலும், எந்தவொரு ஜூரியும் கருணையின்றி சிறையில் வாழ்நாள் முழுவதும் வாக்களிக்க முடியும். நடுவர் தேர்வின் போது, ​​குழு உறுப்பினர்கள் எந்த தண்டனைக்கும் வாக்களிக்க முடியும் என்று உறுதிமொழியின் கீழ் தெரிவித்தனர்.
பாலிவுட் பெரும்பாலும் பல பிரபலங்கள் புகழ், வெற்றி மற்றும் பணம் ஆகியவற்றைப் பிடுங்குவதைக் கண்டிருக்கிறது. சிலர் அதிலிருந்து வெளியே வர முடிகிறது, சிலர் கடன்கள் மற்றும் வரவுகளுக்கு மத்தியில் மூழ்கிவிடுகிறார்கள். திவால்நிலை என்பது பாலிவுட்டுக்கு ஒருபோதும் புதிதல்ல. ஆனால், அமிதாப் பச்சன் அதிலிருந்து வெளியேற முடிந்தது, எப்படி! அவரது திவால்நிலைக்கு என்ன வழிவகுத்தது என்பதைப் பார்ப்போம் அமிதாப் பச்சன் இன்னும் குடும்பத்தைச் சேர்ந்தவர்ட்விட்டர் வீடியோவின் ஸ்கிரீன் ஷாட் ஏபிசிஎல் ஏபிசிஎல் அல்லது அமிதாப் பச்சன் கார்ப்பரேஷன் லிமிடெட் மாறுபட்ட சினிமாவுக்கு ஒரு தளத்தை வழங்குவதற்கும் சில பெரிய வெற்றிகளைத் தருவதற்கும் நோக்கமாக உருவாக்கப்பட்டது. ரூ .60.52 கோடி நிகர மதிப்புடன் தயாரிக்கப்பட்ட இந்நிறுவனம் முதல் ஆண்டில் சுமார் ரூ .15 கோடி லாபம் ஈட்டியது. விஷயங்கள் அதிகரிக்கத் தொடங்கியபோது, ​​தொடர்ச்சியான தோல்வியுற்ற திட்டங்கள் நிறுவனத்தை ரூ .70.82 கோடி இழப்புக்கு இட்டுச் சென்றன. பங்குகளில் முரண்பாடுகள் இருந்தன, கடன் கணக்கை பராமரிக்கத் தவறியது, வட்டி செலுத்தத் தவறியது, மற்ற வங்கிகளுடன் பரிவர்த்தனை செய்வது ஒப்பந்தங்களை மீறுவது ஆகியவை விரைவில் முன்னிலைப்படுத்தப்பட்ட சில காரணங்கள். திட்டங்கள் உலக அழகி நிகழ்ச்சி: ஏபிசிஎல் பெங்களூரில் ஒரு காலா மிஸ் வேர்ல்ட் ஷோவை ஏற்பாடு செய்திருந்தது. இங்கிருந்துதான் நிறுவனம் ஊழியர்களுக்கும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கும் கூட பணம் கொடுக்க முடியாதபோது நிதி சிக்கல்கள் சத்தமாகவும் தெளிவாகவும் மாறியது. இந்த நிகழ்ச்சி எதிர்பார்த்த சலசலப்பு மற்றும் மூலங்களை உருவாக்கத் தவறிவிட்டது. மிருத்யுதாதா: படம் ஒரு பெரிய பேரழிவு மற்றும் அவர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது. சாத் ரங் கே சப்னே: சிறந்த நட்சத்திரங்கள் மற்றும் பிரியதர்ஷன் இருந்தபோதிலும், படம் சிறப்பாக செயல்படத் தவறியது, இது நிறுவனத்தின் நிதி நெருக்கடியை மேலும் மோசமாக்கியது. அபி பேபி, இசை ஆல்பம்: இந்த ஆல்பம் பார்வையாளர்களுடன் ஒரு நாட்டத்தைத் தாக்க முடிந்தது, ஆனால் போதுமான பணத்தை உருவாக்கத் தவறிவிட்டது. நாம் க்யா ஹை: முகுல் தேவ் நடித்த படத்திற்கு அன்றைய ஒளியைக் காண முடியவில்லை. சண்டை அமிதாப் பச்சன் தான் சிறந்ததைச் செய்வதன் மூலம் தடையைத் தாண்ட முடிவு செய்ததாக வெளிப்படுத்தியிருந்தார் – அதுதான் செயல். அவர் யஷ் சோப்ராவுக்குச் சென்று, திவாலாகிவிட்டதால் தனக்கு இந்தத் திட்டம் தேவை என்று கூறினார். யஷ் அந்த நேரத்தில் மொஹாபடீனில் பணிபுரிந்து வந்தார், அவருக்கு அந்த பாத்திரத்தை கொடுக்க முடிவு செய்தார், இது அவரது தொழில் மற்றும் பாலிவுட் வரலாற்றில் மிகச் சிறந்த பாத்திரங்களில் ஒன்றாக மாறியது. Muhammad Shami “ஆத்திரமூட்டும் தாழ்மையான பயண வெறி. உணர்ச்சிமிக்க சமூக ஊடக பயிற்சியாளர். அமெச்சூர் எழுத்தாளர். வன்னபே பிரச்சினை தீர்க்கும் நபர். பொது உணவு நிபுணர்.” READ ஆயுஷ்மான் குர்ரானாவின் மாமியார் இந்த இரக்கமுள்ள அரக்கனை ராமாயணத்தில் நடித்தது உங்களுக்குத் தெரியுமா? - தொலைக்காட்சி SaveSavedRemoved 0 Previous ஏப்ரல் 2020 மாதாந்திர இராசி நன்மை - மீனம் மீனம் | சித்திராய் மாதா ராசி பலன் 2020 துலாம் முதல் மீனம் வரை Next அது என்ன .. ஒரு புதிய வெள்ளை முகமூடி. | கொரோனா வைரஸ்: மணி மோடி தனது பாரம்பரிய திருடனை இன்று முகமூடியாகப் பயன்படுத்துவதால் மணிப்பூர் பாராட்டுகிறார் Related Articles Added to wishlistRemoved from wishlist 1 மார்ஸ் மிஷன்: செவ்வாய் கிரகத்தின் போது இறக்கும் விண்வெளி வீரர்கள் மற்ற குழு உறுப்பினர்களால் சாப்பிடலாம் Added to wishlistRemoved from wishlist 0 ஸ்வேதா திவாரி எடை இழப்பு ரகசியங்கள்: ஸ்வேதா திவாரி எடை இழப்பு ரகசியம் அவர் தனது கடினமான பயிற்சி வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் Added to wishlistRemoved from wishlist 1 முன்னணி நடிகை பிரியா மணி ராஜ் ஹிஸ் ஸ்டோரி சுவரொட்டி சர்ச்சையில் பேசினார் – ஒரு நடிகராக எங்களிடம் சொன்னதை நாங்கள் செய்கிறோம் | முன்னணி நடிகை பிரியாமணி ராஜ் ‘அவரது கதை’ சுவரொட்டி சர்ச்சையில் பேசினார் – ஒரு நடிகராக எங்களிடம் பேசப்படுவதை நாங்கள் செய்கிறோம்
தென்காசி, சூன் 24 -தென்காசி தொகுதி வளர்ச்சி பணிகளுக்காக அமைச்சர்களை பழனி நாடார் எம்எல்ஏ நேரில் சந்தித்து மனுக்களை கொடுத்தார். தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் சென்னையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை நேரில் சந்தித்து ராமநதி – ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டத்தினை செயல்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சிற்றாறு வடிநில கோட்டத்திற்கு உட்பட்ட இரட்டைகுளம் – ஊத்துமலை புதிய கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை மனு கொடுத்தார். அடுத்து சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம், கிராமிய பண்பாட்டு கலைஞர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பனிடம் தென்காசி தொகுதியில் அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து மனு கொடுத்தார். மேலும், கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம், திப்பணம்பட்டியில் கால்நடை மருத்துவமனை மற்றும் அரியப்பபுரத்தில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் கால்நடை மருத்துவமனைக்கு அரசு கட்டிடம் வேண்டும் என்றும் கோரிக்கை மனு கொடுத்தார். மேலும் சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் ரகுபதியிடம் தென்காசியில் கட்டப்பட்டுள்ள புதிய நீதிமன்ற கட்டிடத்தை உடனடியாக திறக்கவும், அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்கவும் கோரி மனு கொடுத்தார். அடுத்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமியிடம் தென்காசி தொகுதிக்கு உட்பட்ட அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்கடன் வழங்கவும், தென்காசி மாவட்டத்திற்கு என தனி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை அமைக்கவும், தனி கூட்டுறவு இணை பதிவாளர் அலுவலகம் அமைக்கவும் வேண்டி மனு கொடுத்தார். மேலும், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனிடம் ராமநதி- ஜம்புநதி கால்வாய் திட்டத்திற்கு வனத்துறையின் தடையில்லா சான்று வழங்க கோரி தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் மனு கொடுத்தார்.
அருகம்புல்லை சிறு துண்டுகளாக வெட்டி பச்சையாக அரைத்து எடுத்து அதைப் பசையுடன் மஞ்சள் சேர்த்து நன்றாக கலக்கி விட வேண்டும் .இது உடல் அரிப்பு, சொறி,சிரங்கு,படர்தாமரை, வேர்க்குரு போன்றவை சரியாகிவிடும். மேலும் அருகம்புல் அக்கி, கொப்பளங்கள் ,சொரியாசிஸை குணப்படுத்தும். கண்நோய்களை தீர்க்க அருகம்புல்லை துண்டுகளாக நறுக்கி அதை நீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும் காலையில் அந்த நீரை மட்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். வடிகட்டிய நீருடன் காய்ச்சிய பால் சேர்த்து காலை மாலை குடித்துவர கண் எரிச்சல் அரிப்பு போன்றவை சரியாகும். அருகம்புல்லை நீர் விடாமல் அரைத்து அதன் சாற்றை இரண்டு சொட்டு என்ற அளவில் மூக்கில் விட்டால் மூக்கில் இருந்து வரும் ரத்தம் குணமாகும். வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த அறுகம்புல் சாறு 50 மில்லி லிட்டர் எடுக்கவேண்டும். அதனுடன் புளிப்பு இல்லாத கெட்டித் தயிர் சேர்த்து இதை காலை மாலை என குடித்து வர வயிற்று போக்கு சரியாகும். அருகம்புல்லை பயன்படுத்தி உடல் சூட்டை தணிக்க கூடிய மற்றும் உடலில் ஏற்படும் புண்களை ஆற்றக் கூடிய மருந்து தயாரிக்கலாம். பகிரவும்: Facebook WhatsApp Email Twitter பசுமை விவசாயம் என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்
பூமியின் மக்கள்தொகை எகிறிக்கொண்டே செல்கிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) உலக மக்கள்தொகை 800 கோடி அதிகரித்து . ஐ.நா.வின் புதிய மக்கள்தொகை மதிப்பீட்டில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக இனி, 800 கோடியில் ஒருவர் நாம்! பூமியில் மனிதர்களின் எண்ணிக்கை 800 கோடி ஆகப்போகும் தகவல், கடந்த ஜூலை 11-ந் தேதி, ஐ.நா.வால் வெளியிடப்பட்டது. உலக மக்கள்தொகை தினமான அன்றைய நாளில் வெளியான ஐ.நா. உலக மக்கள்தொகை வாய்ப்பு 2022 அறிக்கையில் அந்த தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த இலக்கை இன்னும் 2 நாட்களில் எட்டப் போகிறோம். பூமிப்பந்து, மக்கள்தொகையால் பிதுங்கி வழிவது கொஞ்சம் பீதி ஏற்படுத்தினாலும், ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் நம்பிக்கையோடு பேசுகிறார்.’ நமது பன்முகத்தன்மையை கொண்டாடுவதற்கான, பொது மனிதநேயத்தை அங்கீகரிப்பதற்கான, வாழ்நாளை நீட்டித்து, மகப்பேறுகால மற்றும் குழந்தை இறப்பு விகிதத்தை வெகுவாக குறைத்துள்ள மருத்துவத்துறையின் மகத்துவத்தை போற்றுவதற்கான நேரம் இது’ என்கிறார். அதேநேரம் ஐ.நா. பொதுச் செயலாளர் கூறும் முக்கியமான எச்சரிக்கை இது. ‘உலக மக்கள்தொகை 800 கோடியை எட்டுவது, நமது பூமியைக் காக்கும் நம்முடைய கூட்டுப் பொறுப்பை நினைவூட்டும் விஷயமும் ஆகும். நமது பொறுப்புகளில் எங்கே பின்தங்கியிருக்கிறோம் என்று சிந்திப்பதற்கான நேரமும் இது’ என்கிறார். 2050-ம் ஆண்டளவில், உலக மக்கள்தொகையில் பாதிக்கு மேல், இந்தியா, பாகிஸ்தான், காங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், தான்சானியா ஆகிய 8 நாடுகளிலேயே அடங்கியிருக்கும் என்றும் ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக மக்கள்தொகை 700 கோடியில் இருந்து 800 கோடி ஆவதற்கு 12 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இதிலிருந்து 900 கோடி தொடுவதற்கு 15 ஆண்டுகள் ஆகுமாம். ஆக 2037-ல்தான் அந்த ‘மைல்கல்’லை எட்டுவோம். ஒட்டுமொத்த உலக மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருவதை இது காட்டுகிறது என்கிறார்கள் நிபுணர்கள்.
யாழ் மாவட்டத்தில் நேற்று (24) பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்பட்ட துரித அன்டிஜன் சோதனையில் 239 பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர். வைத்தியசாலைகளிற்கு சென்ற போது, தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த போது, மற்றும் பிற சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் சோதனைகளில் தொற்றிற்குள்ளானவர்கள் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ரீதியாக தொகுக்கப்பட்டுள்ளது. தெல்லிப்பளை சகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 18 பேர் (வசாவிளானை சேர்ந்த 1 வயதான சிறுமியும் உள்ளடக்கம்) கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேர் (கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் 2 உத்தியோகத்தர்கள், ஊரெழு மேற்கில் உயிரிழந்த முதியவர் ஆகியோர் உள்ளடக்கம்) யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 32 பேர் (1 வயதான சிறுமி, யாழ்ப்பாணம் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் 2 பேர் உள்ளடக்கம்) நல்லுர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 18 பேர் (1, 4, 8, 9 வயதுடைய சிறுமிகளும் உள்ளடக்கம்) வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேர் (17 வயதான மாணவனும் உள்ளடக்கம்) சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 38 பேர் ( 2, 3, 4,15, 18, 19 வயதானவர்களும் உள்ளடக்கம்) காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 14 பேர் (35 வயதான தாயாரும், அவரது 4 வயது மற்றும் 42 நாள் வயதான பிள்ளைகளும் உள்ளடக்கம்) சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 31 பேர் (13, 18, 18 வயதானவர்களும், மூளாய் கூட்டுறவு சங்கத்தில் தென்பகுதியை சேர்ந்த 3 பேரும் உள்ளடக்கம்) சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 67 பேர் (12, 14, 15, 16 வயதானவர்களும் உள்ளடக்கம்) என 239 பேர் தொற்றிற்குள்ளாகினர்.
மண் காக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதன் மூலம் என் மனம் குளிர்ந்துள்ளது என முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த கடா கோவில் பகுதியில் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தின் துவக்க விழா இன்று நடைபெற்றது. விழாவில் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகளுக்கான ஆணையை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், " திமுக அரசியல் ஆட்சியில் இந்த நாள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள். முடியாது என்று சொல்வதை முடித்துக்காட்டுவது தான் திமுக. நல்லாட்சியில் நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது. பெய்யும் மழையால் மண் குளிர்ந்து கொண்டிருக்கிறது. மண் காக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதால் என் மனமும் குளிர்ந்துள்ளது. இந்தியாவிலேயே எந்த மாநில அரசும் செய்யாத சாதனையை தமிழக அரசு செய்துள்ளது. ஒன்றை ஆண்டுகளில் ஒன்றை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. 15 மாதங்களில் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு என்பது எந்த யாரும் செய்யாத ஒரு சாதனை. அகில இந்திய அளவில் மின் உற்பத்தியில் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் சூரிய மின்சக்தி மாவட்டங்களாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒரு துறை மட்டுமல்லாமல் அனைத்து துறைகளுமே போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கான நலத்திட்டங்களை செய்து கொண்டிருக்கின்றன" என்றார்.
ட்விட்டர் ஆரமித்து நாட்களில் ட்விட்டரை அதிகம் யாரும் பயன்படுத்தாது இருந்தபோது, அந்த நேரத்தில் நடிகர்கள் ட்விட்டரை பயன்படுத்த ஆரம்பித்தார்கள். அப்போது ட்விட்டர் எடுத்த கணக்கெடுப்பில் ட்விட்டரில் அதிக மக்களை கவர்ந்த நடிகர்கள் யார் என்று பார்த்தால் அதில் இந்தியாவில் ரஜினிக்கு தான் அதிக ரசிகர்கள் இருந்துள்ளார்கள். ஆனால் தற்போது ரஜினியை கமல் பின்னுக்கு தள்ளியுள்ளார். இது குறித்த முழு விவர வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது கிளிக் செய்து பார்க்கவும். #rajinitwitterfollowers #kamaltwitterfollowers #twitterfollowers #worldtwittercelebrities #tamilcinemaking Related Posts tamil cinema news Post a Comment Popular Posts `` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு ஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்... விமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா அண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக... புத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி சட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா... சற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும... கமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே கமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ... ரஜினியா? கமலா? மக்கள் யாரை தேர்வு செய்வார்கள் இம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்... கமலை அசிங்கப்படுத்திய பாஜக! கமலின் பதில் என்ன? கமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B... சிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப... ஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...
‘இந்தி தேர்வில் தோல்வி..’ பள்ளி சிறுவனை பிரம்பால் அடித்தே கொன்ற ஆசிரியர்.. பாஜக ஆளும் உ.பி-யில் கொடுமை ! இந்தி தேர்வில் தோல்வியடைந்ததால் பள்ளி மாணவர் ஒருவரை ஆசிரியர் ஒருவர் பிரம்பால் அடித்து கொன்ற சம்பவம் உத்தர பிரதேசத்தில் அரங்கேரியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. KL Reshma Updated on : 18 October 2022, 08:58 AM இந்தி தேர்வில் தோல்வியடைந்ததால் பள்ளி மாணவர் ஒருவரை ஆசிரியர் ஒருவர் பிரம்பால் அடித்து கொன்ற சம்பவம் உத்தர பிரதேசத்தில் அரங்கேரியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் நொய்டா பகுதியை அடுத்துள்ள பாடல்பூர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் 12 வயதுடைய சிறுவன். இவர் அந்த பகுதியிலுள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். அவரது வகுப்பு ஆசிரியராக ஷோபரன் என்ற 42 வயதுடைய நபர் இருந்து வருகிறார். இந்த நிலையில், அந்த மாணவன் சமீபத்தில் நடந்த இந்தி தேர்வில் தோல்வியுற்றுள்ளார். இதனால் மாணவனை கண்டிப்பதற்காக ஆசிரியர் பிரம்பால் தாக்கியுள்ளார். அதில் ஆசிரியர் மாணவனை கடுமையாக தாக்கியதில், சிறுவன் சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்துள்ளார். மயக்கமடைந்த சிறுவனை பதற்றத்துடன் சக ஆசிரியர்கள் சேர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். அதோடு சிறுவனை கடுமையாக தாக்கியதாக சிறுவனின் உறவினர்கள், பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் பள்ளி நிர்வாகமும் இதற்கு முறையாக விளக்கம் அளிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினர். அதோடு இது குறித்து காவல்துறையிலும் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், பெற்றோர்களின் போராட்டத்தை கைவிடுமாறும் வலியுறுத்தினர். பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் மாணவனை தாக்கிய ஆசிரியரே, மாணவனுக்கு உதவி செய்து வந்ததாக காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி மாணவரின் குடும்பத்திற்கும் சம்மந்தப்பட்ட ஆசிரியர் பண உதவி செய்துள்ளார். இந்த நிலையில் தற்போது தீவிர சிகிச்சை பெற்று வந்த மாணவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவன் இறந்த செய்தியை அறிந்த ஆசிரியர் தலைமறைவாகியுள்ளார். பின்னர் அவரை தீவிர தேடி வந்த காவல்துறை தாத்ரி பைபாஸ் அருகே வைத்து ஆசிரியரை கைது செய்தனர். மருத்துவ பரிசோதனை அறிக்கையின்படி, ஆசிரியர் அடித்ததில் மாணவரின் மூளையில் ரத்தம் உறைந்திருப்பதாகவும், நரம்பின் சிதைவு காரணமாக இறந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பித்தக்கது. இந்த நிகழ்வு அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Also Read “இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு பேராபத்து” : இந்தித் திணிப்புக்கு எதிரான தீர்மானத்தில் முதல்வர் உரை ! uttar pradesh hindi imposition murder hindi exam Trending பணிநீக்கிய ஊழியரை வேலைக்கு அழைத்து பின்னர் மீண்டும் நீக்கிய Twitter- வறுத்தெடுக்கும் இணையவாசிகள் ! குடும்ப கஷ்டத்துக்காக வேலைக்கு சென்ற மாணவி.. தகவலறிந்து கல்விச்செலவை ஏற்றுக்கொண்ட தி.மு.க நிர்வாகி ! 3 மாத Plan.. 3 நிமிடம் வேடிக்கை பார்த்ததால் மாட்டிய திருடர்கள்: சென்னை நகை கடை கொள்ளை சம்பவத்தில் திடுக்!
ஹிந்து மஹாசபையைப் பற்றி நாம் பல தடவைகளில் அது வர்ணாஸ்ரம சபை என்றும், இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு விரோத மான சபை என்றும், பிராமணாதிக்கத்திற்காக உழைக்கும் சபை என்றும் எழுதி வந்தது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கலாம். சில நண்பர்களுக்கு இவ்வாறு எழுதியதைப் பற்றி மனவருத்தம் ஏற்பட்டிருந்தாலும் இருக்கலாம். ஆனால் இப்பொழுது வரவர அதன் யோக்கியதை நாம் எழுதியபடியே முழுவதும் வெளியாகி விட்டது. அதாவது, விதவா விவாகத் தீர்மானம் ஹிந்து மஹாசபை மஹாநாட்டின் விஷயாலோசனைக் கமிட்டியில் நிறைவேறினதும், அதன் அக்கிராசனராகிய பண்டித மாளவியா மஹாநாட்டுப் பந்தல் பக்கம் கூட எட்டிப் பார்க்கமாட்டேன் என்று அத்தீர்மானத்திற்கு ஆதாரமாயிருந்தவர்களை விரட்டித் தீர்மானத்தையே மஹாநாட்டிற்குள் கொண்டு வரவிடாமல் நசுக்கி விட்டார். பின்னர் தீண்டாமையைப் பற்றின தீர்மானம் மஹாநாட்டில் நிறைவேறினவுடன் சபையில் உள்ளவர்களெல்லாம் எழுந்து ஓடிப்போய் விட்டார்களாம் . ஆதலால் தலைவர்கள் எழுந்து போனவர்களை அழைத்து வந்து இத்தீர்மானத் தின் ரகசியத்தை எடுத்துரைத்து, அதாவது இத்தீர்மானத்தை தீண்டாமை ஒழியத் தகுந்த மாதிரி விதமான ஏற்பாடும் நாங்கள் செய்துவிடவில்லை. பொது ஜனங்களை ஏமாற்றுவதற்காக வேண்டி ஏதோ தீண்டாமையில் அக்கறையுள்ளவர்கள் போல் காட்டுவதற்காகச் செய்யப்பட்டதே ஒழிய வேறல்ல என்று பொருள்படும்படி பேசி அத்தீர்மானத்தில் யாதொரு சத்துமில்லை என்கிற ரகசியத்தை வெளிக்காட்டி, அதுவும் ஏற்பாடு செய்யுங்களென்று கேட்டுக் கொள்ளு கிறோமேயல்லாமல் வேறில்லை. உங்களுக்கு இஷ்டமிருந்தால் செய்யுங்கள், இல்லாவிட்டால் வேண்டாம். வெளிப் பிரசாரத்திற்கு இம்மாதிரி தீர்மானங்களையெல்லாம் நிறைவேற்ற வேண்டியிருக் கிறது. காரியத்தில் செய்யவில்லையானால் பரவாயில்லை. அது உங்கள் இஷ்டம் என்று சொன்ன பிறகுக் கூட வெளியே போனவர்கள் போயே தீர்ந்தார்களாம். இதோடு ஹிந்து மஹாசபையின் தீர்மானங் களையும், உரிமைகளையும் காப்பாற்றுவதாக வாக்களிப்பவர்களுக்கு மாத்திரமே வோட்டு கிடைக்கும்படி பிரசாரம் செய்ய வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார்களாம். இதிலிருந்து அறியக்கிடப்ப தென்னவென்றால் விதவா விவாகத்தையும், தீண்டாமை ஒழிப்ப தையும் ஒப்புக்கொள்ளுகிறவர்களுக்கு ஹிந்து மஹாசபை எதிர் பிரசாரம் செய்யும் என்பதும், மகாத்மா காந்தியடிகளே சட்டசபைக்கு நிற்பினும் அவருக்குக்கூட வோட்டுக் கொடுக்கக் கூடாதென்றேதான் சொல்லும். இதுவே அதன் கொள்கையாகும் என்பதை இப்பொழு தாவது வாசகர்கள் உணர்வார்கள் என்று நினைக்கிறோம். ----------------- தந்தைபெரியார்- "குடிஅரசு" - 21.3.26 Posted by புரட்சியாளர் பெரியார் at 20:01 No comments: Labels: ஹிந்து மஹாசபை Sunday, March 30, 2008 தெய்வ வரி நம் தேசத்தில் நாம் கொடுக்கும் வரிக்கு அளவே இல்லை. அரசாங்க சம்பந்தத்தில் பூமிவரி, வருமானவரி, கள்ளுவரி. துணிவரி, சாமான் வரி முதலியவைகளோடு முனிசிபாலிடி வரி, போர்டுவரி, லஞ்ச வரி, மாமூல் வரி என்று இவ்வாறாக அநேக வரிகள் கொடுக்க வேண்டி இருக்கிறது. இதல்லாமல் தெய்வத்திற்காகவும், மதத்திற்காகவும் கொடுத்துவரும் வரி அளவுக்கு மீறினவைகளாய் இருப்பதோடு நமக்கு யாதொரு பிரயோஜனத்தையும் கொடுக்காமல் மேற்சொல்லிய அரசாங்க சம்பந்த வரிகளின் அளவைவிட ஏறக்குறைய அதிகமாகவே கொடுக்கப்படுகிறது. அன்றியும், இவ்வரிகளால் தத்துவ விசாரணையும் நாம் கொஞ்சமும் செய்வதிற்கில்லாமல் செய்து, நமது மூடநம்பிக்கையால் பிழைக்க வேண்டிய சிலரின் நன்மைக்காக அவர்கள் எழுதிவைத்ததையும் சொல்வதையும் நம்பி நாம் கஷ்டப்பட்டு வரி செலுத்துவதல்லாமல், வேறு என்ன உண்மை லாபம் அடைகிறோம் ? தெய்வத்தை உத்தேசித்தோ, ஸ்தலத்தை உத்தேசித்தோ, தீர்த்தத்தை உத்தேசித்தோ, நமது பிராயணச் செலவு எவ்வளவு ? பூஜை, பூசாரி காணிக்கை, பிரார்த்தனை முதலியவற்றுக்காக ஆகும் செலவு எவ்வளவு? சாதாரணமாய் திருப்பதி வெங்கடாசலபதி என்கிற தெய்வத்துக்கு மாத்திரம் வருஷம் ஒன்றுக்குப் பதினெட்டு லட்சம் ரூபாய் வரும்படி வருகிறது. இதைத் தவிர மேற்படி யாத்திரைக்காரர்களுக்கும் அங்குள்ள பூசாரிகளுக்காகவும் மற்றும் சில தர்மத்திற்காகவும் அங்கு போகும் ரயில் சத்தம்,* வண்டிச் சத்தத்திற்காகவும் ஆகும் செலவு எவ்வளவு? இதுபோலவே இமயம் முதல் கன்னியாகுமரி வரை உள்ள தீர்த்தம், ஸ்தலம், கோவில் முதலியவைகளுக்கு மக்கள் போக்குவரவு செலவுகள் முதலியவைகளை நினைத்துப் பார்த்தால் உடல் நடுங்குகிறது. இஃதன்றி வீடுகளில் நடைபெறும் வைதீகச் சடங்குகளான கலியாணம், வாழ்வு, சாவு, திதி இவைகளுக்காகவும் அதை நடத்திவைக்கவும் புரோகிதர் பிராமணர்கள் செலவும் எவ்வளவாகிறது? இவைகளை எல்லாம் மக்களின் பேராசையும், மூடநம்பிக்கையும்தானே செய்விக்கின்றது. தாங்கள் எவ்வளவு கொடுமையும் பாவமும் செய்திருந்தாலும் மேற்கூறிய தெய்வயாத்திரையோ, வைதீகச் சடங்கோ செய்வதால் தப்பித்துக் கொள்ளலாமென்றும், தாங்கள் யோக்கியதைக்கு மேல் எதை விரும்பினாலும் பெற்றுவிடலாமென்றும் நினைக்கின்ற பேராசை நினைப்புகளும் இவைகளுக்குக் காரணமாய் இருப்பதன்றித் தங்கள் முன்னோர்கள் அவர்களின் குணகர்ம யோக்கியதையைப் பொறுத்தல்லாமல், தாம் வைதீகச்சடங்கு செய்து பிராமணர்களுக்குப் பணம் கொடுப்பதன் மூலமாய் அவர்களை மோட்சத்திற்கு அனுப்பிவிடலாம் என்கிற மூடநம்பிக்கையும் இவர்களை இப்படிச் செய்விக்கச் செய்கின்றது. இதனால் மக்கள் ஒழுக்கம் பெறுவதற்கு இடமுண்டாகின்றதா? ஒருவர் ஏமாறவும் மற்றொருவர் ஏமாற்றவும் தானே பழக்கப்படுகிறது. கடவுளின் உண்மைத் தத்துவத்தையும், தங்கள் தங்கள் செய்கைகளின் பலன்களையும் மக்களுக்குப் போதித்து வந்திருந்தால் இவ்வளவு பேராசையும், செலவும் தெய்வத்தின் பெயராலும் ஏமாற்றுதலாலும் ஏற்பட்டிருக்கவே முடியாது. தெய்வத்திற்காகச் செலுத்தப்படும் காணிக்கைகள் என்னவாகின்றன ? வைதிகச் சடங்குகளின் பலன்கள் என்னவாகின்றன ? இவ்விரு கர்மங்களையும் நடத்தி வைப்பவர்களின் யோக்கியதை என்ன என்பதை மக்கள் கவனிப்பதில்லை. "காளை மாடு கன்று போட்டதென்றால் கன்றுக்குட்டியைப் பிடித்துக் கொட்டத்தில் கட்டு " என்றே சொல்லி விடுகிறோம். காளை மாடு எப்படி கன்று போடும் என்பதை நாம் கவனிப்பதே இல்லை. பூசாரிக்குப் பணம் கொடுப்பதாலும், காணிக்கைப் போடுவதாலும், நமது குற்றச் செயல்கள் எவ்வாறு மன்னிக்கப்படும் ? நமது ஆசைகள் எவ்வாறு நிறைவேறும்? தெருவில் போகும் பிராமணர்களைக் கூப்பிட்டு அவர்களுக்கு அரிசி, பருப்பு, பணம், காசு கொடுப்பதாலும் அவர்கள் ஏதோ சில வார்த்தைகளை உச்சரிப்பதாலும் நமது முன்னோர்கள் எப்படிச் சுகப்படுவார்கள் என்று யோசிப்பதே இல்லை. இவைகளால் நமது பொருள், நேரம், தத்துவம் வீணாகப் போவதல்லாமல், ஒரு மனிதன் கொலை, கொள்ளை முதலிய துஷ்டச் செயல்கள் செய்யும் பொழுது தன்னுடைய பணச் செருக்கையும், வக்கீல்களையும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதையும் நினைத்துக் கொண்டு, இவர்களால் தப்பித்துக் கொள்ளலாமென்று எப்படித் தைரியமாய்ச் செய்கிறானோ அப்படியே இந்த ஷேத்திரங்களையும், காணிக்கைகளையும், புரோகிதர்களையும் நம்பிக்கொண்டு தைரியமாய்க் குற்றங்கள் செய்கிறான். அதோடு அல்லாமல் தேசத்தில் சோம்பேறிகளும், கெட்டகாரியங்களும் வளருகின்றன. நல்ல யாத்திரை ஸ்தலம் என்று சொன்னால் நல்ல வியாபார ஸ்தலம் என்பதுதான் பொருளாக விளங்குகிறது. தேர்த்திருவிழா ஸ்தலங்களுக்குப் போனவர்களுக்கும், யாத்திரை போனவர்களுக்கும் அநேகமாக இதன் உண்மை விளங்காதிருக்காது. நல்ல புரோகிதர்கள் என்போர்கள் தங்கள் வரும்படியை விபச்சாரத்திற்கும், சூதுக்கும், போதை வஸ்துகளுக்குமே பெரும் பான்மையாக உபயோகித்து வருகின்றனர். வைதீகச் சடங்கைப் பற்றி ஒரு பெரியாரால் சொல்லப்பட்ட ஒரு கதையைச் சொல்லி இக்கட்டுரையை முடிக்கிறேன். ஒரு ஆற்றங்கரை ஓரத்தில் ஒரு புரோகிதர் ஒருவருக்கு வைதீக கர்மம் செய்து வைத்துக்கொண்டிருக்கும்பொழுது, தான் கிழக்கு முகமாக நின்று தன் இரு கைகளாலும் தண்ணீரை அள்ளி இறைத்துக் கொண்டிருந்தார். அதைக் கண்டு ஒரு பெரியார், தான் மேற்கு முகமாய் நின்று தன் இரு கைகளாலும் தண்ணீரை அள்ளி இறைத்தார். புரோகிதர் : ஐயா, என்ன மேற்கு முகமாய்ப் பார்த்து தண்ணீரை இறைத்துக் கொண்டிருக்கிறீர் ? பெரியார் : நீங்கள் கிழக்கு முகமாய்ப் பார்த்து எதற்காகத் தண்ணீர் இறைக்கிறீர்கள் ? புரோகிதர் : இது, மேல் உலகத்திலுள்ள பிதுர்க்களைப் பரிசுத்தமாக்கும். பெரியார் : நான் இறைப்பது என்னுடைய காய்கறித் தோட்டத்தின் செடிகளை நன்றாக வளர்க்கும். புரோகிதர் : இங்கு நின்று கையால் வாரி இறைப்பது வெகு தூரத்திலுள்ள தோட்டத்திற்கு எவ்வாறு போய்ச்சேரும் ? பயித்தியமாய் இருக்கிறீர்களே ! பெரியார் : நீர்! இறைக்கும் தண்ணீர் மாத்திரம் என்னுடைய தோட்டத்தை விட எத்தனையோ அதிக தூரத்திலிருக்கும் மேல் உலகத்திற்கு எப்படிப் போய்ச் சேரும் ? புரோகிதர் : (வெட்கத்துடன்) இந்த வார்த்தையை இவ்வளவுடன் விட்டுவிடுங்கள். வெளியில் சொல்லி என் வரும்படியைக் கெடுத்துவிடாதீர்கள். இஃதல்லாமல் குருமார்களென்று எத்தனையோ பேர் நமது நாட்டிடைத் தோன்றி மக்களைத் தம் சிஷ்யர்களாக்கி அவர்களிடை எவ்வளவு பணம் பறித்துப் பாழாக்குகிறார்கள் என்பதைப் பற்றி மற்றொரு சமயம் எழுதுவோம். -------------------------- தந்தைபெரியார்- "குடிஅரசு" 26 - 7 -1925 நன்றி; குடிஅரசு -1925 Posted by புரட்சியாளர் பெரியார் at 20:18 No comments: Labels: தெய்வ வரி Saturday, March 29, 2008 காந்தீயம் காந்தீயம் என்பது மகாத்மா காந்தியை மூல புருஷராய் வைத்து அவரது சரித்திரத்தையும், கொள்கையையும், அதன் பலனையும் பற்றியது. எப்படி சைவம் என்பது சிவனை முதன்மை யாகக் கொண்டதோ, வைணவம் என்பது விஷ்ணுவை முதன்மை யாகக் கொண்டதோ, ராமாயணம் என்பது எப்படி ராமரை முதன்மை யாகக் கொண்டதோ அதுபோல் காந்தீயம் என்பது காந்தியை முதன்மை யாகக் கொண்டது. இவற்றில் மக்களுக்காக மகாத்மா காந்தி ஏற்படுத்திய கொள்கைகளும் அதற்காக அவரது சேவையும் அவரது தியாகமும் முதன்மையானது. அதனால் எற்பட்ட பலன்களும் நிகழ்ச்சி களும் இரண்டாவதாகச் சொல்லலாம். நமது தேசத்தில் இவ்விருபதாம் நூற்றாண்டில் ராஜாக்களும், பிரபுக்களும், பெரும்பதவி அதிகார முடையவர்களும் எத்தனையோ பேர் பிறந்திருந்தாலும் மறைந்திருந் தாலும் 33 கோடி பேர்களும் மதிக்கத் தகுந்த மாதிரி மகாத்மா காந்தியைப் போல் மற்றொருவரை சொல்ல முடியாமற் போனதற்குக் காரணம் என்ன? காந்தியை மாத்திரம் மகாத்மா என்று சொல்லக் காரணமென்ன? தங்கள் தங்கள் சுயநலத்துக்காக வாழ்கிறவர்கள் எவ்வளவு பெரியவர்களென்று சொல்லிக் கொண்டபோதிலும் அவர் கள் சாதாரண மனிதர்களாகத்தான் உலகத்தினரால் கருதப்படுவார்கள். உலகத்துக்காக வாழ்கிறவர்கள் எவ்வளவு சிறியவர்களாக இருந்த போதிலும் மகாத்மாவாகத்தான் கருதப்படுவார்கள். அப்படியானால் உலகத்துக்காக வாழ்கிறதாகச் சொல்லிக் கொண்டு எத்தனையோ தலைவர்களிருக்கின்றார்களே நாமும் அவர்களை எல்லாம் தலைவர்கள் தலைவர்களென்கிறோமே, ஏன் காந்தியை மாத்திரம் மகாத்மா என்று சொல்லவேண்டும் என்கிறதாக ஒரு கேள்வி பிறக்கலாம். மகாத்மா வைத் தவிர மற்ற தலைவர்களெல்லாம் பிறத்தியாருக்கு சொல்ல மாத்திரம் தெரிந்தவர்களேயல்லாமல் அதுபோல நடக்க முடியாத வர்களும், நடக்க இஷ்டமில்லாதவர்களுமாகவே இருப்பார்கள். ஆனால், மகாத்மாவோ சொல்லுகிறபடி நடப்பவர், நடக்கக் கூடியதையே சொல்லுபவர். இந்தக் குணந்தான் அவரை மகாத்மா வாக்கியது. அவர் கண்ணுக்கு உண்மைதான் வெளிப்படும். அவரு டைய மனமும் வாக்கும் உண்மையைத்தான் நினைக்கும், உண்மையைத்தான் பேசும். அவருடைய நோக்கமெல்லாம் ஏழைகளைப் பற்றியதாய்த்தானிருக்கும். அவருடைய கொள்கைகளெல்லாம் ஏழைகளின் கஷ்டத்தை ஒழிப்பதற்குத்தான் ஏற்படும். அவர் இந்தியாவின் விடுதலை என்பது ஏழைகள் விடுதலையைத்தான் குறிக் கும். மகாத்மாவின் சுயராஜ்யமே ஒடுக்கப்பட்டவர்களுக்கும் தாழ்த்தப் பட்டவர்களுக்கும் சுயமரியாதையையும் சமத்துவத்தையுமே அடிப் படையாகக் கொண்டது. அவருடைய சேவை என்பது தியாகத்தையும் கஷ்டமநுபவிப்பதையும் அடிப்படையாகக் கொண்டது. இந்தக் காரணங்களால் அவர் தானாகவே மகாத்மா ஆகிவிட்டார். உபசாரப் பத்திரங்களில்லையே, வண்டியில்லையே, ஊர்வலமில்லையே என்று விசாரப்படுகிறவர்களும், ஊர்வலத்தையும் உபசாரப் பத்திரத்தையும் நாடிக்கொண்டு திரிகிறவர்களும், தங்களைத் தலைவர்களென்று சொல்ல வேண்டுமென்று பணம் கொடுத்து சொல்லச் செய்வோர்களும், பாமர ஜனங்களை ஏமாற்றி தாங்களும் தங்கள் குலத்தார்களும் மாத்திரம் மேன்மையடைய வேண்டுமென்று நினைத்துக் கொண்டு அலைவதையும் தேச சேவை, பொது ஜன சேவை என்று சொல்லிக் கொண்டு திரிவார்களேயானால் அவர்கள் எப்படி மகாத்மாவாகக் கூடும்? பதவிகளையும் பட்டங்களையும் மனதில் குறிப்புக் கொண்டு சுயராஜ்யம் சம்பாதிப்பதற்காக சட்டசபைக்குப் போகிறேன் என்று சொல்லுகிறவர்களும் அதற்கு வோட்டு சம்பாதிப்பதற்காக பணத்தைக் கொடுத்து பலரைக் கூட்டிக் கொண்டு தங்களைத் தலைவர்கள் தலைவர்கள் என்று சொல்லும்படி செய்கிறவர்களும் எப்படி மகாத்மா ஆகக்கூடும்? முதல் முதல் பாமர ஜனங்களுக்கு காந்தியென்று ஒருவர் இருக்கிறார் என்று அறியவே தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களின் சுயமரியாதைக்காக தானும் தன் குடும்பமும் கூட்டோடு சிறை சென்றதும் அங்கு நினைக்க வொண்ணாத கொடுமைகளையெல்லாம் அநுபவித்ததுந்தான் முக்கியக் காரணங்கள். அதற்குப் பிறகு இந்திய மக்களுக்கு இந்தியாவிலேயே சுயமரியாதை, சமத்துவம் வேண்டு மென்ற சேவையில் இறங்கியதே 2 - வது காரணம். அதற்குப் பிறகு ஏழை மக்களுக்கு வேண்டிய உண்மையான சுயராஜ்யத்தைக் கண்டு பிடித்து அதற்காக அஞ்சாது உண்மைபேசி பதினாயிரக்கணக்கான ஜனங்களைப் பின்பற்றும்படி செய்து தானும் அவர்களுமாய் சிறை சென்றதே மூன்றாவது காரணம். இன்னமும் அவருடைய கருத்தும் உழைப்பும் ஏழைகளையே பிரதானமாகக் கொண்டிருக்கிறது. ஆனால், ஏழைகள் விடுதலை பெற்றால், தாழ்த்தப்பட்டவர்கள் சுயமரியாதை யடைந்தால், ஒதுக்கப்பட்டவர்கள் சமத்துவமடைந்தால் பிரபுக ளென்போருக்கும் படித்தவர்களென்போருக்கும் உயர்ந்த ஜாதியா ரென்போருக்கும் தனி யோக்கியதை இருக்காது என்கிற காரணத்தினால் இம்மூவர்களும் மகாத்மாவுக்கு எதிரிகளாயிருக்க வேண்டிய அவசிய மேற்பட்டுப் போய்விட்டது. அதன் பலனாய் மகாத்மாவின் கொள்கை கள் கொஞ்சங் கொஞ்சமாய் ஓய்வு பெற வேண்டியதாயிருக்கிறது. காந்தீயமென்னும் ஏழைகளை விடுதலை செய்ய ஏற்பட்ட இயக்கத்தை பரப்ப ஆயுதமாய்க் கொண்ட காங்கிரஸ் என்னும் சபையானது படித்தவர்கள் வசமும் உயர்ந்த ஜாதியார் என்று சொல்லுகிறவர்கள் வசமும் செல்வவான்கள் வசமும் சிக்குண்டு போய்விட்டபடியால் படித்தவர்களுக்கு உத்தியோகம் சம்பாதிப்பதற்கும் மேல் ஜாதியா ரென்போருக்கு தங்களுடைய உயர்ந்த ஜாதித் தத்துவத்தை நிலை நிறுத்திக் கொள்வதற்கும் உபயோகப்படுத்திக் கொள்ளத் தக்கதாய்ப் போய்விட்டதோடு ஏழைகளின் நிலைமை நாளுக்கு நாள் அதோ கதியாய் ஒரு வேளைக் கஞ்சிக்கு 2 - தரம் மூன்று தரம் தங்களுடைய கற்பை விற்க வேண்டிய ஸ்திரீகளையும் ஒரு வேளை சாப்பாட்டிற்காக ஏழை மக்களின் துரோகிகளின் பின்னால் திரிந்து கொண்டு அவர்களை இந்திரன் சந்திரன் என்று பாமர ஜனங்களிடம் புகழ்ந்து அவர்களுக்கு வோட்டு வாங்கிக் கொடுக்க தங்கள் மனசாட்சியை விற்கத்தகுந்த ஆண்களையும் லட்சக்கணக்காய் பெருக்கி வருகிறது. இவ்வுண்மை யறிந்த மகாத்மா இவர்களோடிருக்க மனம் பொறாதவராகி தனியே பிரிந்து ஏழைகளுக்கு உழைப்பதற்கென்று ராட்டினமும் கையுமாய் உட்கார்ந்து கொண்டு இரவும் பகலும் ராட்டினத்தைச் சுற்றிக்கொண்டு ஏழைகளிடத்தில் அன்பிருக்கிறவர்களெல்லாம் ராட்டினத்தைச் சுற்றுங்கள், கதரை உடுத்துங்கள், ஏழைகளைக் காப்பாற்றுங்கள், சட்டசபையில் ஏழைகளுக்கான காரியம் ஒன்றுமில்லை; தேச விடுதலைக்கு சட்டசபையினால் ஒரு பலனும் உண்டாகாது; எனக்கு அதில் கொஞ்சமும் நம்பிக்கையில்லை யென்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். இதுதான் காந்தீயம் என்பது. காந்தீயம் என்பதைச் சுருக்கமாய்ச் சொல்வதானால் ராட்டினம் சுற்றுவதும் கதர் உடுத்துவதும்தான் என்று சொல்லலாம். மகாத்மாவின் சுயராஜ்யம் என்பதையும் சுருங்கச் சொல்லுவதானால் தீண்டாமையை ஒழிப்பதும் கதர் உடுத்துவதும்தான் என்று சொல்லலாம். ஏறக்குறைய 30,40 வருஷங்களாக நமது ஜனங்கள் சட்டசபைக்கு போய்க்கொண்டும் வந்து கொண்டுந்தானிருக்கிறார்கள். சர்க்காரிடமிருந்தும் பல சீர்திருத்தங்களையும் பெற்று அதன் மூலமாய் அநேக பதவிகளையும் உத்தியோகங்களையும் அடைந்துமிருக்கிறார்கள். உதாரணமாய், ராஜப் பிரதிநிதி என்கிற ஒரு உத்தியோகம் தவிர மற்றபடி கவர்னர், நிர்வாகசபை அங்கத்தினர், மந்திரி, ரெவின்யூ போர்டு அங்கத்தினர் முதலிய பொறுப்பு வாய்ந்த உத்தியோகங்களும் கலெக்டர், ஜட்ஜூ, கமிஷனர் முதலிய அதிகாரம் வாய்ந்த உத்தியோகங்களும் இந்தியர்கள் வகித்து வருகிறார்கள். இதுகளினால் ஏழை மக்களுக்கு இதுவரையில் என்ன பலன் கிடைத்திருக்கிறது? சட்டசபை இல்லாத காலத்தில் இருந்ததைவிட சட்டசபை ஏற்பட்டபிறகு மக்களுக்கு நிர்ப்பந்தங்கள் அதிகமாகவும், சீர்திருத்தங்கள் இல்லாத காலத்திலிருந்ததைவிட ஏழைகளுக்கு வரி அதிகமாகவும், தரித்திரங்கள் அதிகமாகவும் ஏற்பட்டு இருக்கிறதே யல்லாமல் என்ன தேசத்துக்கு பலன் ஏற்பட்டிருக்கிறது. ஏழைகளின் பிரதிநிதிகள் என்று சொல்லி ஏழைகளை ஏமாற்றி சட்ட சபைக்குப் போனவர்கள் தங்களுக்கும், தங்கள் பிள்ளை குட்டிகளுக்கும், தங்கள் ஜாதியார்களுக்கும் பல உத்தியோகத்தையும் நிரந்தரமான பதவியையும் சம்பாதித்துக் கொண்டார்கள். இனியும் அதற்காகத்தான் படித்தவர் களும் உயர்ந்த ஜாதியாரென்பவர்களும் ஏழைகளை ஏமாற்றி வருகிறார் கள். ஆகையால் சட்டசபைப் பயித்தியத்தை மறந்து விடுங்கள்; ஏழைகளைக் கவனியுங்கள்; காந்தியை நினையுங்கள்; ஏழைகள் வாயில் மண்ணைப் போட்டுவிட்டு துணியின் மூலமாகவும் மற்றும் அந்நிய நாட்டு சாமான்கள் மூலமாகவும் அந்நிய நாட்டுக்கு அனுப்பும் பணத்தை நிறுத்துங்கள்; நீங்கள் கட்டியிருக்கும் அந்நிய நாட்டுத் துணியின் ஒவ்வொரு இழைநூலும் கிராம சிறீகளான உங்கள் சகோதரி களைக் கஞ்சிக்கு அலைய விட்டுவிட்டு அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய கூலியை அந்நிய நாட்டுக்குக் கொண்டு போய் விட்டது. நீங்கள் 15 ரூபாய் போட்டு வாங்கும் 1 பீஸ் மல் துணியில் ஒன்னரை ரூபாய் பொரும்படியான பஞ்சுதானிருக்கிறது. பாக்கி ஏழை மக்களுக் குக் கிடைக்க வேண்டிய கூலியாகிய 13-8-0 ரூபாய் அந்நிய நாட்டுக்குப் போய்விட்டது. இந்த 13-8-0 ரூபாயில்லாமல் நம் நாட்டில் எத்தனை குடும்பம் பட்டினி இருக்கிறதென்பதை நினைத்துப் பாருங்கள். இந்த மல் துணிக்குப் பதிலாய் கதர் துணியை வாங்கிக் கட்டியிருப்பீர்களானால் அவ்வளவு பணமும் ஏழைத் தொழிலாளர் களுக்கும் விவசாயிகளுக்குந்தானே போய்ச் சேர்ந்திருக்கும். உங்களுக்கு ஜீவகாருண்யம் இருக்குமேயானால் கதரை வாங்கிக் கட்டாமலிருந் திருப்பீர்களா? அன்னதான மென்றாலென்ன? பாயாசத்திற்கு பாதாமிப் பருப்பு போதவில்லை என்று சொல்லித் திரியும் சோம்பேறி களுக்கு சமையல் செய்து போடுவதில்தான் அன்னதானம் என்று நினைக்கிறீர்களே. தவிர பசியால் வாடி தங்களது கற்பையும் தர்மங் களையும் இழந்து திரியும் சகோதரி, சகோதரர்களுக்கு கஞ்சி கிடைக்கும் வழியை கொஞ்சமும் கவனிக்காமலிருக்கிறீர்கள். இனியாவது சட்டசபைப் பயித்தியத்தையும், படித்தவர்களும் உயர்ந்த ஜாதியாரென்பவர்களும் தங்கள் உத்தியோகத்திற்கும், உயர்ந்த தன்மையை நிலை நிறுத்திக் கொள்ளுவதற்கும் கூலி கொடுத்து ஆள் களைக் கூட்டிக்கொண்டு வந்து உங்களை ஏமாற்றுவதையும் மறந்து, மகாத்மா காந்தியையும் ஏழைகளையும் பார்த்து நீங்கள் எல்லோரும் கதர் உடுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்ளுகிறேன். இதுதான் உண்மையான காந்தீயமாகும். காந்தி படத்தை வைத்துக் கொண்டு பூஜை செய்வதும் காந்தி பெயரைச் சொல்லிக்கொண்டு சட்ட சபைக்குப் போவதும் ஒருக்காலும் காந்தீயமாகாது என்று உங்களுக்கு நான் வணக்கத்துடன் தெரியப்படுத்திக் கொள்கிறேன். (திருவாரூர் தேசாபிமானச் சங்கத்தின் நான்காவது ஆண்டு நிறைவு விழா 24-3-26 லிருந்து 28-3-26 வரை தொடர்ந்து ஐந்து தினங்கள் நடைபெற்றது.இதில் 28-3-26 - ந் தேதி தலைமை வகித்து காந்தீயம் என்பது பற்றி தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு) Posted by புரட்சியாளர் பெரியார் at 07:29 No comments: Labels: காந்தீயம் Friday, March 28, 2008 அதிகம் பேர் படிக்கவேண்டும் இந்த புத்தக வியாபார நிலையத்தின் துவக்கவிழா ஆற்றுவதில் நான் மிகுதியும் மகிழ்ச்சியடைகிறேன். தோழர் சண்முக வேலாயுதம் அவர்கள் என்னை வேண்டிக் கொள்ளும்போது இப்புத்தக வியாபார நிலையம் சுயநல இலாபத்தை பண வருவாயை உத்தேசித்து துவக்கப் பட்டதல்லவென்றும் நம் இயக்க நூல்களையும், பத்திரிகைகளையும் துண்டுப் பிரசுரங்களையும் மக்களுக்குப் பரப்ப வேண்டும் என்ற பொது நல நோக்கத்தையே முக்கியமாகக் கருதி துவக்குவதாகவும் சொன்னார். இதைக் கேட்டு நான் மிகுதியும் மகிழ்ச்சியடைந்தேன். இந்தப் பணியாற்றுகிறவர்கள் நமது நாட்டில் இதுவரை எங்கும் துணிந்து இம்மாதிரி முன் வந்தததில்லை; முன் வந்தாலும் இலாபத்துக்காக அதாவது, ஏதாவது ஒரு இயக்கத்துக்காகவாவது ஏதாவது ஒரு கொம்கைக்காவது, ஏதாவது ஒரு மனிதனுக்காவது செல்வாக்கேற் பட்டால் அந்தப் பெயரைச் சொல்லிக் கொண்டு, அந்தக் கொம்கையைச் சொல்லிக் கொண்டு, அந்த மனிதனைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொண்டு அவன் பெயரைச் சொல்லிக் கொண்டு வயிறு வளர்க்க முன் வருபவர்களும், தன் வாழ்வை அமைத்துக் கொம்பவர்களும் அந்த இயக்கத்தை, கொம்கையை, மனிதனை வைவதில் செல்வாக்கேற்ப்பட்டால் உடனே வயிற்றுப் பிழைப்புக்கும் வாழ்க்கை நலத்துக்குமாக அவைகளை வைத்துக் கொண்டு வயிறு பிழைப்பவர்களும் அல்லது இந்தக் காரியங்களுக்குக் கூலி பெற்றுக் கொண்டு தொண்டர்களாக இருப்பவர்களும் எங்குமுண்டு என்றாலும் நம்நாட்டில் அதிகம். ஏனெனில், இங்கு மனிதத் தன்மையை உணர்ந்த மனிதத் தன்மையில் கவலைகொண்ட மக்கள் அரிது. அதாவது தங்களுடைய சுய இலா நஷ்டம், பெருமை, சிறுமையே இலட்சியமென்பதில்லாமல் பொதுநலக் கொம்கைகளுக்காக என்று வெளிவந்து தொண்டாற்றும் மக்கள் மிக மிக அருமையாகும். பெரிய ஜனக்கூட்டங்களில், அல்லது சந்தைகளில், நாடக இடங்களில் காப்பிக்கடை ஓட்டல்கள், சோடா, லெமன், லட்டுக்கடைகள் வைத்து விற்பனை செய்பவர்கள் பெரிய பொதுநலத் தொண்டர்கள், தியாகிகள் என்றால் முந்திய ஆட்களும், பெரிய பொதுநலத் தொண்டர்களும் தியாகிகளுமாவார்கள் என்கின்ற நிலையில் உள்ளவர்கள் அநேகர். சந்தை, நாடகம் கலைந்தவுடன் காப்பிக்கடை, ஓட்டலை மூடிவிட்டு வேறு வேலைக்குப் போவதுபோல் இந்தக் கூட்டங்களும் இயக்கத்துக்கோ, அதன் கொம்கைகளுக்கோ, தலைவனுக்கோ கொஞ்சம் செல்வாக்குக் குறைந்தவுடன் அவற்றின் மீது ஆளுக்கொரு கல்லை எறிந்துவிட்டு ஓடுபவர்களாவார்கள். அதுபோல் தான் சிலர் இன்று நம் கூட்டங்களிலும் வந்த பகுத்தறிவு நூல்கள் வெளியிடுவதும், சீர்திருத்த நூல்கள் வெளியிடுவதும் விற்பதுமாக இருக்கிறார்கள். இந்த நபர்கள் உற்சவம், வேறு பெருங்கூட்ட இடம் முதலியவைகளில் சென்று, அங்கு புராணங்கள், விபூதி, ருத்திராட்சம், துளசிமாலை, சாமி படம் விற்பவர்களாகவும் இருப்பார்கள். மற்றும் நாடகக்காரர்களும் இப்படித்தான்; ஒரு ஊரில் சீர்திருத்த நாடகம், புரட்சி நாடகம் என்று ஆடுவார்கள்; மற்றொரு ஊரில் பக்தி நாடகம், கடவும் திருவிளையாடல்கள் நாடகம் என்று ஆடுவார்கள்; சிலர் இரண்டிலும் கலந்துகொண்டு இருகூட்டத்தாரிடையும் செல்வாக்குப் பெற்று, இருகூட்டப்பிரச்சாரகர்களையும் விலைக்கு வாங்கிப் பொதுமக்கள் காசைக் கறந்து கொம்வார்கள். ஆகவே, இப்படி யாவும் வியாபார முறையில் இயக்கம், கொம்கை, நபர்கள் கொண்டாடப்படுவதும், வெறுக்கப்படுவதும், தொண்டாற்றப்படுவதும் அநேகம் காண்கிறோம். நூல் வியாபார நிலையங்கள் எந்த மாதிரி நூல் நிலையமானாலும் இனி நஷ்டப்பட வேண்டிய அவசியமேற்படாது. நாட்டில், படிக்கும் மக்கள் அதிகமாகி வருகிறார்கள். படித்த மக்கள் அதிகமாகப் பெருகிவிடவில்லையென்றாலும் படித்த மக்கள் கொஞ்சம் பேரும் எதையாவது படிக்கவேண்டும் என்கின்ற ஆர்வமுள்ளவர்களாக ஆகி வருகிறார்கள்; ஒன்றுமற்ற அத்தான், அம்மாஞ்சி, மன்னி, மதனி ஆரிய பழக்க வழக்க உரையாடல்களும், வெறும் காதல் கதைகளும்; நேரப்போக்கு, போதைக்கேற்ற பித்தலாட்டக் கட்டுரைகளும்; ரிஷிகள், மகான்கள், பாபாக்கள், விளம்பரங்கள் செய்து மக்களை வஞ்சிக்க ஏமாற்றுச் செய்திகளும் இவ்வளவு ஏராளமாய் விற்பனையாகுமா? இவைகளுக்காகவும், கொம்கை இல்லாமல் ஈசல்களைப் போல் பொல பொலவென்று தோன்றுமா? மக்களைப் படிக்கச் செய்யாமல் செய்து வைத்திருந்தார்கள் ஒரு கூட்டத்தார்; அதை மீறிக் கொண்டு எப்படியோ மக்களுக்கும், எதையாவது படிக்கவேண்டும் என்கின்ற ஆர்வம் வந்துவிட்டது. இது யாரால் ஏற்பட்டிருந்தாலும் இந்த ஆர்வத்தை முன் தடை செய்து வைத்திருந்த கூட்டத்தார் மூடநம்பிக்கைக்கும் மானமற்ற தன்மையை விரும்புவதற்கும் பித்தலாட்ட வஞ்சகர்களுக்கு மக்களை அடிமையாக்குவதற்கும் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார்கள். அதற்கு நாம் இடம் விடுவதென்றால் இது மகாமோசமான காரியமேயாகும். இந்த நாடு, இன்று சிறப்பாக நம் மக்கள் படியாமையைவிட படித்தாலேயே பெரிதும் மானமற்றவர்களாகவும் இன்னும் சொல்ல வேண்டுமானால் அயோக்கியர்களாகவும், பாமர மக்களைச் சுரண்டிப் பிழைப்பதிலேயே இன்பம் அனுபவிப்பவர்களாகவும், அனேகராகி விட்டார்கள் என்றால் அதைச் சுலபத்தில் மறுக்க எவராலும் முடியாது என்பேன். படிப்பு எதற்கு? அறிவுக்கு அறிவு எதற்கு? மனிதன் மனிதத் தன்மையோடு வாழ்ந்து மற்ற மனிதனுக்கு உதவியாய் தொல்லை கொடுக்காதவனாய் நாணயமாய் வாழ்வதற்கு என்பதல்லாமல் வேறு எதற்கு என்று சொல்லுவோம்? ஆனால், தோழர்களே! இன்று நீங்கள் படித்தவர்கள் என்பவர்களைப் பாருங்கள். 'படித்த கூட்டத்தில்' நான் மேலே சொல்லியபடி பயன்படுகிறது. ஒரு படித்தவனைக் காட்டுங்கள், பார்க்கலாம். இமயம் முதல் குமரி வரை உங்களுக்கு நன்றாய் அனுபவத்தில் தெரிந்த எவனாவது ஒரு படித்தவனை இந்தத் தன்மையில் அதாவது, 'படித்ததால் இந்த தன்மை ஏற்பட்டது' என்று காட்டுங்கள்; சொல்லுங்கள்! சாதாரண மனிதரில் கூட இல்லாவிட்டாலும் பெரிய மகான்கள், பேரறிவாளர்கள் பிரபுக்கள், இராசாக்கள், ஆச்சாரியார்கள், குருமார்கள், ரிஷிகள், மகாத்மாக்கள், தெய்வீக சக்தி பொருந்தியவர்கள், சாமியார்கள், அரும்வாக்காளர்கள், தியாகிகள், வீரர்கள் முதலிய எந்தக் கூட்டத்திலாவது ; ஜட்ஜுகள், வியாபாரிகள், உத்தியோகஸ்தர்கள், குமாஸ்தாக்கள், வாத்தியார்கள், வித்துவான்கள், வக்கீல்கள் முதலிய எந்தக் கூட்டத்திலாவது காட்டுங்கள் பார்க்கலாம்! ஆனால், இதன் காரணத்தாலேயே மக்களைப் பிறவி அயோக்கியர்கள் என்று யாராவது சொல்லக்கூடுமா? ஒரு நாளும் சொல்லமாட்டார்கள், அப்படியானால் படித்த மக்கள் என்பவர்கள் பெரிதும் 100க்கு 99பேர், ஏன் உபகாரிகளாக இல்லை என்றால் இதற்கு என்னுடைய பதில், 'அவர்கள் படிப்பு அப்படிப்பட்டதாகும்' என்பதைத் தவிர வேறொன்றும் என்னால் சொல்ல முடியவில்லை. இன்றைக்கு நாம் அனுபவிக்கும் தொல்லைகளுக்கு அதாவது மக்களால் மக்கள் அனுபவிக்கும் தொல்லைகளுக்குப் படித்தவர்கள், படிப்பு காரணம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆடு, நரிக்குப் பயன்படுவதுபோல், படிக்காதவன் படித்தவர்கட்கு உணவாய்ப் பயன்படுகிறான். நன்றாகச் சொல்ல வேண்டுமானால், படித்தவன் படிக்காதவனை ஏமாற்றிச் சுரண்டுகிறான் என்பதைத் தவிர, படிப்பு என்பது எதற்குப் பயன்படுகிறது? அப்படியானால், படிப்பு கூடாது என்று நான் சொல்லுகிறேனா? அல்லது, நான் சொல்லுவதிலிருந்து படிப்பது தப்பு என்று அர்த்தமா? இரண்டும் அல்ல. மற்றென்னவென்றால், நம் நாட்டில் ஆரியர் ஆதிக்கம், வருணமுறை ஏற்பட்ட காலம் முதல் நமக்களிக்கப்படும் படிப்பு - நாம் படிக்க முடிகிற படிப்பு அப்படிப்பட்டது. எப்படிப்பட்டது என்றால், பெரிதும் அயோக்கியத்தனத்துக்கு பித்தலாட்டத்துக்கு, மற்றவனை ஏமாற்றிப் பிழைப்பதற்குத் தூண்டுவது, நடத்துவது தவிர வேறொன்றுக்கும் பயன்படாதது என்றுதான் பொரும் கொள்ள வேண்டும். அரசியலில் மூத்த அரசாங்க அதிகாரிகளைப் பாருங்கள். எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும், அயோக்கியத்தனமாய், ஆணவமாய் நடக்காத ஒரு அதிகாரியைக் காட்டுங்கள். அதிகாரி என்றால் அவர்கள் இலஞ்சம் வாங்கினாலும் மக்களுக்கு எஜமானத்தனம் செய்வதையே பிழைப்பாய்க் கொண்டவர்கள் என்பதல்லாமல் மக்களுக்கு நாணயமாக ஒரு நிலையாகத் தொண்டாற்றுவது, தயவு தாட்சண்யம், அனுதாபம் ஆகியவைகளுடன் மக்களுடன் நடந்து கொள்ளுவது என்கின்ற தத்துவத்தில் நடப்பவர் யார்? அடுத்து படித்தவர் என்பவர்கள், அரசியலில் தலைமை வகிக்கும் வக்கீல்கள் என்பவர்கள். இந்தக் கூட்டத்தார்தான் இப்போது மகாத்மா முதல், அரசியல், தலைமை மந்திரி, அய்கோர்ட் ஜட்ஜ் முதலிய பதவிகளைக் கைப்பற்றிக் கொண்டவர்கள், இவர்களால் மனித சமுதாயத்திற்கு தாசி, வேசி, சூது, கள், சாராயக்கடை, வழிப்பறி, தீவட்டிக் கொள்ளை, பிக்பாக்கெட் முதலியவைகளால் மக்களுக்கேற்படும் கேடுகள், மோசங்கள் ஆகியவைகளைவிட அதிகமாக ஏற்படுகின்றன என்பதல்லாமல் அதில் அவர்கள் பணிகளில் உள்ள பொதுநலம் என்னவென்று சொல்லுங்கள். பார்க்கலாம் வக்கீல்களும், ஜட்ஜுகளும் இல்லாமலிருந்தால் மக்களுக்கும் இவ்வளவு சாந்தியற்ற தன்மை, நாயணக் குறைவாய் நடப்பதால் இன்பம் (என்பவை) ஏற்பட்டிருக்குமா? அடுத்தபடியாகப் படித்தவர்கள், கல்வித்துறையில் வாத்தியார்கள். இவர்கள் வாழ்க்கை எதற்குப் பயன்படுகிறது என்று பார்த்தால், இவர்களிடம் படித்தவர்கள் தாம் அல்லது, இதற்குத் தகுந்த படிப்பை மக்களுக்கும் புகுத்தச் சாதனமாய், ஆயுதமாய் இருந்தவர்கள் தாம் வாத்தியார்கள் என்றால் யார் மறுக்க முடியும்? படித்தவர்களில் பெரும்பாலோர் யோக்கியர்களாய் இல்லையென்றால், வாத்தியார்கள் வாழ்வு, வாத்தியார்கள் தொண்டு எப்படி யோக்கியமானதென்று கூறமுடியும்? இனி, பொதுஜன ஊழிய குமாஸ்தாக்கள் நிலையைச் சொல்லவே வேண்டாம். அவர்கள் கழுகுகள் அல்லது கத்தரிக்கோலால் வாழ்கின்றவர்கள் என்பதல்லாமல் அதில் பொதுநலம் பொதுநல உணர்ச்சி என்பது என்ன இருக்கிறது! இனி, பண்டிதர்கள். இவர்கள் ஒழுக்க இயலைச் சேர்ந்தவர்கள். இவர்களை எதற்குச் சமமாய்ச் சொல்லலாம்? மலக்குழியைக் கலக்கிவிடுகிறவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். மக்களுக்குத் தெரியாத அயோக்கியத்தனத்தை-சுலபத்தில் தெரிந்துகொள்ள முடியாத அயோக்கியத்தனத்தை மூடத்தனத்தை ஒருவரை ஒருவர் சுரண்டுவதற்குக் காட்டிக் கொடுப்பவர்கள் என்பதல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்? பத்திரிகைக்காரர்கள், புத்தகம் எழுதுகிற எழுத்தாளர்கள், மகான்கள், புராணப் பிரசங்கிகள், மதவாத அறிஞர்கள் முதலிய இவர்கள் தொண்டில் இருக்கும் பொது நலம், நாணயம், முன்னேற்றத்தன்மை, அறிவு விரியும்நிலை, நல்ல சங்கதிகள் தெரியும் நன்மை என்ன இருக்கின்றன? பத்திரிகைக்காரர்கள் - மக்களை முட்டாம்களாக்கவும்; அவர்கள் மானம் பெறாமல் இருக்கவும்; முன்னைய கூட்டத்தாருக்கு அடிமையாக இருக்கவும்; தாங்கள் கொள்ளை கொள்ளவும்; மனிதனின் மான உணர்ச்சியை, முற்போக்கு உணர்ச்சியை மழுங்க வைத்துப் பொய்யையும், ஏமாற்றத்தையும் அறிவிக்க அறிவுக் களஞ்சியமாக மக்களுக்கும் நிரப்பவுமல்லாமல் - அவர்களது தொண்டால் மக்களுக்கு ஏற்பட்ட பயன் என்ன? சயன்ஸ் விஞ்ஞானம் படித்த தனி நிபுணர்கள் என்பவர்களும் மக்களை ஏமாற்றித் தன்னைப் பெரிய மேதாவி என்று கருதிக் கொண்டு, அகம்பாவமாய் மற்றவர்களை முட்டாம்கள் என்று அவமதிப்பதல்லாமல் அவர்களால் ஏற்பட்ட விஞ்ஞான நலம் என்ன? உதாரணமாக, இந்த மேசை மேலிருக்கும் ரேடியோ என்பது 4,5 வருடங்களுக்கு முன்பே 250 ரூபாய்க்கு வாங்கி இருப்பார்கள். இதுவரை இலட்சக்கணக்கான மக்கள் கேட்டிருப்பார்கள். கண்டிருப்பார்கள். நமது நாட்டில் இலட்சக்கணக்கான ரேடியோ இருக்கின்றது. அப்படியிருந்தும் இது எப்படி ஒலிகளைக் கொண்டு வந்து எப்படிப் பரப்புகிறது என்பது இதுவரை எத்தனைப் பேருக்குத் தெரியும்? கம்பியில்லாத் தந்தி எப்படிச் சேதி சொல்லுகிறது? கிராம போன் எப்படிப் பாடுகிறது. பேசுகிறது என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்? புராணம் எழுதி அச்சுப்போட்டு விற்றது எத்தனையோ லட்சப் பதிப்புகளும், கோடி, கோடி ரூபாய்களுமிருக்கும். அதில் ஏற்பட்ட நல்லறிவை நல்ல படிப்பை (அதில் இல்லை; இருந்தால்) தெரிந்து கொண்டவர்கள் எத்தனைப்பேர் இருக்கிறார்கள்? தோழர் திரு.வி.கல்யாணசுந்தர (முதலியார்) டி.கே.சிதம்பரநாத (முதலியார்), நாமக்கல் இராமலிங்கம் (பிள்ளை), மகா மகோபாத்தியாய கதிரேசன் (செட்டியார்) மீனாட்சி சுந்தரம் ( பிள்ளை) போன்ற திராவிடர்கள் பலர் - பார்ப்பனர்களால் புலவர்கள் என்று மாபெரும் விளம்பரம் பெற்றவர்களாவர். இவர்களால் இதுவரை ஏற்பட்ட மூட நம்பிக்கையில்லாத மானமற்ற தன்மை அல்லாத அறிவு நூல் ஒன்றைக் காட்டுங்கள். உயர்ந்த கலைகள் என்பவை மக்களை எச்சில் கலையாக ஆக்குகின்றன. மற்ற எழுத்தாளர்கள் பகுத்தறிவை மனித முன்னேற் றத்தை மானத்தைக் குறியாகக் கொண்ட வீரத்தைக் கிளப்பும் புத்தகம் ஒன்றைக் காட்டுங்கள்! படித்தவர்கள் கூட்டத்திலுள்ள திராவிடன் கதியே இப்படியிருந்தால், இனி ஆரியன் எழுதும் பத்திரிகை, பிரசுரிக்கும் புத்தகம், பாடும் பாட்டு, ஆடும் நாடகம், எழுதும் நாவல், கதை எப்படியிருக்கும்? கடவுளையும், காதலையும் இன்னது என்று புரிந்து கொள்ளாதவர்களே கலை உலகில் புகுந்து கொலை செய்கிறார்கள். இவைகளுக்கெல்லாம் காரணம், 'இவர்கள் படித்த படிப்பு அப்படிப்பட்டது' என்று தான் நான் சொல்லுவேனேயொழிய, இவர்கள் மேல் குற்றம் சொல்லவில்லை. இன்றைய படிப்பின் தொல்லைகளின் மாபெரும் தொல்லை 'சம்பளம் போதாது' என்பது. இது மகா அக்கிரமம். ஏனெனில், உழைப்புக் கணக்குப் பார்த்துச் சம்பளம் கேட்பதில்லை. படித்தால், படிப்பைப் பார்த்து சம்பளம் கேட்கப்படுகிறது; மாதம் 15 ரூபாய்காரரும் சம்பளம் பற்றாது என்கிறார்; 30 ரூபாய்க்காரரும் பற்றாது என்கிறார். 100 ரூபாய்க்காரரும் அதற்கு மேற்பட்டவரும் பற்றாது என்கிறார். இதற்கு அர்த்தம் என்ன? படித்தால் மேல் வாழ்வு வாழவேண்டும்; படித்திருக்கும் குடும்பத்துக்கு அதிகச் செலவு செய்யவேண்டும். ஆதலால் அதிகச் சம்பளம் வேண்டும் என்பதல்லாமல் வேறு என்ன? மற்றவன் படிக்காதவன் - அவனுக்கு மேல் வாழ்வு தேவையில்லை; அவன் குடும்பத்துக்கு அதிகச் செலவு தேவையில்லை - 20 அல்லது 30 ரூபாய் போதும்; அதுவே கொடுக்கக்கூடாது என்பது போலத்தானே - குறைந்த சம்பளத்துக்குக் காரணம் சொல்லப்படுகிறது. சம்பளப் போராட்டம், படித்தவர்களிடையே இப்படியிருக்க லஞ்சம், கொள்ளை, லாப வியாபாரம், புரட்டு இத்தனையும் படித்தவர்கள் என்பவர்களிடையில்தான் இருக்கின்றன. சம்பளம் உயர வேண்டுமானால், சர்க்கார் பொக்கிஷத்துக்கு வரியின் மூலம்தான் பணம் வரவேண்டும்; வரியென்றால் அது பெரிதும் படிக்காத உழைப்பாளி மக்களின் உழைப்பில் இருந்துதான் கசக்கிப் பிழியப்பட வேண்டும். அந்த உழைப்பாளியின் வாழ்க்கைத்தரம், துணிமணி செலவு, பிள்ளைகுட்டி படிப்பு, சினிமா, டிராமா, பெண்டு பிள்ளை அலங்காரம், காபி, உப்புமா, சீர் ஆகிய ஒன்றைப் பற்றியும் கவலைப்பட்டு சம்பளத் திட்டம் போடுவதில்லை. ஏன்? உழைப்பாளி படியாதவன். உழைக்காமல் பேனாவில், பாட்டில், கூத்தில், பிரசங்கத்தில், கவியில் வாழ்வு நடத்துகிறவன் படித்தவன். இது தவிர, இரு கூட்டத்துக்கும் வேறு வித்தியாசம் என்ன சொல்லமுடியும்? எனவே, இன்றையப் படிப்பு வர்ணாசிரம தர்மத்தை அனுசரித்து ஏற்பட்டது என்பதோடு, ஒருவன் உழைக்க வேண்டும்; ஒருவன் உழைக்காமல் ஏமாற்றி வாழ வேண்டும்; இதற்காக ஒரு கூட்டம் இதற்கேற்ற படிப்பு படித்திருக்க வேண்டும்; ஒரு கூட்டம் படியாமல் முட்டாம்களாக- அப்பாவிகளாக வைக்கப்பட்டிருக்க வேண்டும். இதுவும் படிப்படியாய் வருணாசிரம தர்மம்போல் இருக்க வேண்டும் என்பதையே அடிப்படையாய்க் கொண்டு இருக்கிறது. ஆகையால், இப்போது உண்மையாகப் பொது நலத்துக்கு ஏதாவது உழைக்க வேண்டும் என்பவர்கள் - இந்தப் படிப்பு மாறும்படியான காரியத்துக்கு - இந்தப் படிப்பால் ஏற்பட்ட கேடுகள் மாறும்படியான காரியத்துக்கு ஏற்ற படிப்பினை உண்டாக்க வேண்டும். அதற்கேற்ற பிரசுரங்கம் ஏற்பட வேண்டும்; அவை எப்படியாவது மக்களுக்கும் பரப்பப்பட வேண்டும். இவையெல்லாம் பிரசங்கத்தாலேயே முடிந்துவிடாது. இவற்றிற்கு உதவும் படியான பிரசுரம் தெளிவாகக் குறைந்த விலையில் சவுகரியமாக யாருக்கும் கிடைக்கும்படிச் செய்யப்பட வேண்டும். இப்போதுள்ள பிரசுரம் / 100க்கு 99பேர் மோசடிக்கும் கொள்ளையடிப்பதற்குமே பயன்படுகிறது. இது சமயத்தில் பொதுமக்களுக்கு ஒரு வார்த்தை அறிவியக்க நூல்கள் - சீர்சிருத்த நூல்கள் என்றால் ஒவ்வொன்றையும் வாங்கி வீட்டில் நிரப்பிக் கொள்ளவேண்டுமென்பது அர்த்தமல்ல. வாங்கிப் படித்துவிட்டு, படித்து முடிந்தவுடன் முக்கால் விலைக்கு அரை விலைக்கு விற்றுவிட வேண்டும். மறுபடி வேறு வாங்க வேண்டும். புத்தக வியாபாரியும் தான் விற்ற புத்தகத்தை அரை விலைக்குக் கொண்டு வந்து கொடுத்தால், நலுங்காமலிருந்தால் வாங்கிக் கொள்ள வேண்டும். இதுதான், மேலைநாடுகளில் புத்தகம், பிரசுரம் முதலியவை விஷயங்களில் இருந்துவரும் பழக்கம். வாங்கினால் படிக்க வேண்டும்; படித்தவுடன் விற்றுவிட வேண்டும்; 'முக்கிய புத்தகம்' 'கிடைக்காது' என்றிருந்தால் வைத்துக் கொள்ளலாம். அதிகம் பேர் படிக்கவேண்டும் என்பது தான் யோக்கியமான பொதுநல ஆசிரியர்களின், பொதுநல வியாபாரிகளின் இலட்சியமாய் இருக்கும். ------ ஈரோட்டில் 22.1.1947 ல் நடந்த புத்தக வியாபார நிலையத்தின் துவக்க விழாவில் தந்தை பெரியார் அவர்களின் சொற்பொழிவு Posted by புரட்சியாளர் பெரியார் at 18:52 No comments: Labels: புத்தகம்-பெரியார் நான் நாத்திகன் - ஏன்? நான் நாத்திகன் - ஏன்? என்னும் இந்நூல் தோழர் சர்தார் கே. பகத்சிங் அவர்களால் லாகூர் சிறைக் கோட்டத்திலிருந்து அவரது தந்தையார்க்கு காவற்கூட அதிகாரிகளின் அனுமதியின்மீது எழுதப்பட்ட ஒரு கடிதமாகும். அக்கடிதத்தை தோழர் பகத்சிங் அவர்களின் தகப்பனார் லாகூரிலிருந்து வெளிவரும் `ஜனங்கள் என்னும் ஆங்கில கிழமை வெளியீட்டில் பிரசுரித்திருந்தார். அக்கடிதத்தை மொழிபெயர்த்து புத்தக ரூபமாய் வெளியிட வேண்டுமென்று பல தோழர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, சென்னை மாகாண நாத்திக சங்க அமைச்சர் தோழர் ப. ஜீவானந்தம் அவர்களால் இனிய தமிழில் மொழிபெயர்த்து நமக்குக் கொடுக்கப்பட்டதாகும். அந்த நூலிலிருந்து சில பகுதிகள்: எனது நாஸ்திக உணர்ச்சி இவ்வளவு சமீபகாலத்தில் தோன்றியதன்று பிறர் என்னைத் தெரிந்து கொள்ளாத சாதாரண வாலிபனாக இருந்த காலத்திலேயும் மற்ற எனது தோழர் பலருக்கு கடவுள் என்பதாக ஒன்று இருக்கிறது என்று தெரிவதற்கு முன்பேயும் தெய்வ நம்பிக்கையை விட்டு விட்டேன். இதை எனது தோழர்கள் அறியார். கல்லூரி மாணாக்கனாக மட்டும் இருக்கும் ஒருவன் நாத்திக உணர்ச்சியைத் தூண்டத் தகுந்த அவ்வளவு மிதமிஞ்சிய அகங்காரத்தைப் பெருக்கிக் கொள்ள முடியாது. கல்லூரியில் வாசிக்கும்பொழுது நான் சில ஆசிரியர்களால் நேசிக்கப்பட்டேன். சிலரால் வெறுக்கப் பட்டேன். என்றாலும், நான் ஒருபோதும் மிகுந்த சுறுசுறுப் புடைய மாணாக்கனாகவோ, சதா படித்துக் கொண்டிருக்கும் பையனாகவோ இருந்ததில்லை. அந்நாளில் அகங்காரத்தால் தலைகொழுக்கும் உணர்ச்சிகள் ஊட்டும் சந்தர்ப்பங்கள் எனக்கு ஒன்றேனும் வாய்க்கவில்லை. நான் சுபாவத்தில் நாணமும், கூச்சமும் உள்ள பையனாக இருந்ததோடு, பிற்கால வாழ்க்கையில் நம்பிக்கையற்றவனாகவும், குழப்பமுடையவனாகவும் இருந்தேன். அக்காலத்தில் நான் ஒரு பூரண நாஸ்திகவாதியல்ல. என்னைச் சீராட்டி, பாராட்டி வளர்த்த என்னுடைய பாட்டனார் மிகப் பிடிவாதமுள்ள வைதீக ஆரிய சமாஜி. ஆரிய சமாஜி வேறு எதற்கு வேண்டுமானாலும் இடங்கொடுப்பார். ஆனால் நாஸ்திகத் திற்கோ கடுகளவும் இடங்கொடாத பரம விரோதி. எனது ஆரம்பக்கல்வியை முடித்த பிறகு நான் லாகூர் டி.ஏ.வி. கலாசாலையில் சேர்ந்து அங்குள்ள விடுதியில் ஒரு வருஷம் கழித்தேன். அங்கே நான், காலை மாலை பிராத்தனையோடு, காயத்திரி மந்திரத்தை மணிக்கணக்காக ஜெபிப்பது வழக்கம். அக்காலத்தில் நான் ஓர் பரம பக்தனாகவே இருந்தேன். பின்னர் எனது தகப்பனாரோடு வாழ ஆரம்பித்தேன். மத வைராக் கியத்தைப் பொறுத்தமட்டில் அவர் ஒரு தாராள நோக் குடையவராகவே இருந்தார். அவருடைய உபதேசங்களால்தான் நான் சுதந்திரத்திற்காக எனது வாழ்க்கையைத் தத்தஞ் செய்ய வேண்டுமென்று உணர்ச்சியும், உறுதியும் கொண்டேன். ஆனால், அவர் ஒரு நாஸ்திகரல்ல. அவர் கடவுளிடத்தில் திடமான நம்பிக்கையுடையவர். தினசரி பிரார்த்தனை செய்யும்படியாக அவர் எனக்கு உற்சாகமூட்டுவது வழக்கம். இவ்விதமாகவே நான் ஆரம்பித்தில் வளர்க்கப்பட்டேன். ஒத்துழையாமை காலத்தில் நான் தேசியக் கல்லூரியில் சேர்ந்தேன். அங்குதான் எல்லா மதங்களைப் பற்றியும் - கடவுளைப் பற்றியும்கூட தாராளமாக எண்ணுவதற்கும், ஆராய்ச்சி செய்வதற்கும், தர்க்கிப்பதற்கும் ஆரம்பித்தேன். அப்பொழுதும் கூட நான் பரம தெய்வபக்தனாகவே இருந்தேன். அதுகால பரியந்தம், நான் எனது தலைமயிரைக் கத்தரித்துவிடாமல் (மதாச்சாரப்படி) வளர்த்துக் கட்டிக்காப்பாற்றி வந்தேனானா லும், சீக்கிய மதத்திலும் பிற மதங்களிலுமுள்ள சித்தாந்தங் களிலும் கொள்கைகளிலும் எனக்குக் கிஞ்சிற்றும் நம்பிக்கை கிடையாது. ஆனால், கடவுள் ஒருவர் உண்டு என்பதில் மந்திரம் எனக்குப் பரிபூரண நம்பிக்கையிருந்தது. பச்சை நாத்திகனானேன் நமது போராட்டத்திற்குரிய லட்சியம் எது என்று தெளிவாக அறிந்திருக்க வேண்டிதே மிக முக்கியம். நாங்கள் காரியத்தில் காட்டித் தீர வேண்டிய குறிப்பாக திட்டமெதுவும் அப்பொழுது எங்களுக்கு இல்லாதிருந்த காரணத்தால் உலகப் புரட்சி சம்பந்தமான பலதிறப்பட்ட லட்சியங்களை ஆர அமர சீர் தூக்கிப் பார்ப்பதற்குப் போதுமான சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. நான் அராஜகத் தலைவரான பக்குனின் என்பவரின் தத்துவங்களைக் கற்றேன். பொதுவுடைமைத் தத்துவத்தின் தந்தையாகிய மார்க்சின் நூல்களில் சிலவற்றைக் கற்றுணர்ந்தேன். ஏகாச்சக்ராதிபத்திய ஆதிக்க இருள் படர்ந்திருந்த தங்களுடைய நாட்டில் புரட்சியை வெற்றிகரமாகச் செய்து முடித்த கர்ம வீரர்களான லெனின், ட்ராஸ்கி இன்ன பிறரால் இயற்றப்பட்ட நூற்களில் பெரும்பாலானவற்றை அலசி அலசி ஆராய்ச்சி செய்தேன். அவர்கள் எல்லோரும் பச்சை நாத்திகர்களே. பக்குனின் எழுதிய `கடவுளும் ராஜ்யமும் என்ற நூல் பூர்த்தி செய்யப்படாத துண்டு துணுக்குகளாக இருந்த போதிலும், விசயத்தை வெகு ருசிகரமாக விளக்குகிறது. சில காலத்திற்குப் பின் நிர்லம்ப சாமியால் எழுதப்பட்ட பகுத்தறிவு என்னும் புத்தகத் தையும் படிக்க நேர்ந்தது. அதில் நாத்திக வாதம் தெளிவு படும்படியில்லாமல் ஒரு தினுசாகக் கூறப்படுகிறது. இந்த விசயமானது அந்தக் காலத்தில் எனக்கு மிக ருசிகரமானதாகி, எனது உள்ளத்தை கொள்ளைக் கொண்டு விட்டது. 1926-ஆம் ஆண்டு முடிவில் இந்த பிரபஞ்சத்தைப் படைத்து, காத்து, நடத்தி வரும் சர்வசக்தி வாய்ந்த கடவுள் ஒருவர் உண்டு என்ற கொள்கை அடியோடு ஆதாரமற்றதென உணர்ந்து கொண்டு விட்டேன். என்னுடைய இந்த தெய்வ நம்பிக்கையற்ற தன்மையை நாத்திக வாதத்தை பகிரங்கப்படுத்தினேன். சில நிபந்தனைகள் ஒரு நாள் காலையில் சி.அய்.டி. இலாக்காவின் பிரதம சூப்பிரன்டெண்டான மிஸ்டர் நியூமென் என்னிடம் வந்தார். அவர் மிகுந்த அனுதாபத்தோடு நீண்ட நேரம் என்னோடு பேசிக் கொண்டிருந்தார். பின் முடிவாக, அவர்களால் கோரப்படுகிறபடி நான் எவ்விதமான அறிக்கையும் கொடுக்காவிட்டால், காக்கோரி வழக்கு சம்பந்தமாய், யுத்தம் தொடங்கச் சதியாலோசனை செய்ததாகவும், தசரா வெடிகுண்டு விபத்து சம்பந்தமாய் கொடிய கொலைகள் செய்ததாகவும், என்னை விசாரணைக்கு அனுப்புமாறு தாங்கள் நிர்ப்பந்திக்கப்படுவோமென்று கூறினார். மேலும் அவர் என்னை குற்றவாளியாக்கவும் தண்டித்துத் தூக்குத் தண்டனை விதிக்கவும் போதுமான சாட்சியங்கள் இருப்ப தாகவும் என்னிடம் கூறினார். நான் முற்றும் குற்றமற்ற நிரப ராதியாயிருந்தேன். ஆயினும், அந்தக் காலத்தில் போலீசார் எதையும் இஷ்டப்பட்டால் இஷ்டப்படி முடித்து விடுவார் களென்று நம்பினேன். அன்றைய தினமே சில போலீஸ் உத்தியோகஸ்தர்கள் என்னிடம் வந்து ஒழுங்காக இரண்டு வேளைகளிலும் கடவுளை பிரார்த்தனை செய்யும்படி என்னைத் தூண்ட ஆரம்பித்தார்கள். நானோ அப்பொழுது ஒரு நாஸ்தி கனாக இருந்தேன். சமாதானமும் சந்தோசமும் குடிகொண்டி ருக்கும்பொழுது மாத்திரம்தான் நான் நாஸ்திகவாதியென்று தற்புகழ்ச்சியடைந்து கொள்வதா அன்றி மிக்க கஷ்ட திசையிலும் யான்கொண்ட கொள்கையில் விடாப்பிடியாக ஒட்டிக் கொண்டிருப்பதா என்பதைக் குறித்து எனக்குள்ளாகவே ஒரு முடிவுக்கு வரவேண்டுமென்று விரும்பினேன். நீண்ட நெடும் ஆலோசனைக்குப் பின்னர் எனது மனோரதம் கடவுளை நம்பி பிரார்த்தனை செய்யும்படி தூண்டக்கூடாதென்று முடிவு கட்டினேன். அம்முடிவின்படி நான் எவ்விதப் பிரார்த்தனையும் செய்யவில்லை. எனது உண்மையான சோதனைகள் அதுதான். நான் அதில் வெற்றி சூடினேன். பழிகள் வரும் நம்முடைய முன்னோர்கள் ஏதோ உயர்ந்த வஸ்துவான சர்வசக்தியுள்ள கடவுள்மீது நம்பிக்கை வைத்துக் கொண்டிருந் தவர்களென்ற காரணத்திற்காக, யாரேனும் ஒருவன் அந்த நம்பிக்கையின் உண்மையை மறுக்கத் துணிந்தால், அல்லது அந்த சர்வ சக்தி பொருந்திய வஸ்துவை மறுப்பதற்குத் திடம் கொண்டால், அவன் மதத்துரோகியென்றும், விசுவாச காதக னென்றும் பழித்துரைக்கப்படுகின்றான். அவனுடைய வாதங்கள் எதிர்வாதங்களால் அசைக்க முடியாதபடி ஆணித்தரமானவை களாயிருந்தால், அவனுடைய உணர்ச்சி பயங்கரமான கஷ்ட நிஷ்டூரங்களாலும் சர்வசக்தியுள்ள கடவுளின் கோபாக்கினி யாலும் சிதறடிக்கப்படாத வன்மையுடையதாயிருந்தால், அவனை அகங்காரம் பிடித்தவனென்றும் அவனுடைய உணர்ச்சியைத் தற்பெருமை கொண்டதென்றும் எள்ளி இழித்துத் தூற்றுகிறார்கள். பின்னர் ஏன் இவ்வாஸ்திக சிகாமணிகள் இந்த வீண் வாதத்தில் காலங்கடத்த வேண்டும்? சகல விஷயங்களையும் பூராச்சங்கதிகளையும் பூரணமாகத் தர்க்கித்துவிட ஏன் முயற்சி செய்ய வேண்டும்? முதன் முதலாக இப்பொழுதுதான் பொது மக்களுக்கு இத்தகைய கேள்விகள் தோன்ற ஆரம்பித்திருக்கின்றன. முதன் முதலாக இப்பொழுது தான் பொது மக்களால் இது காரியானுஷ்டானத்திலும் கையாளப்படுகிறது. எனவே, இவ்விஷயத்தை விரிவாக ஆராய்ச்சி செய்ய நேரிட்டிருக்கிறது. முதல் கேள்வியைப் பொறுத்தவரையில் என்னை நாஸ்தி கனாகும்படித் தூண்டியது எனது அகங்காரமல்லவென்பதைத் தெளிவுப்படுத்திவிட்டேனென்றே கருதுகிறேன். என்னுடைய விவாதத்தின் போக்கைப் பரிசீலனை செய்து பொருத்த முடையதா அல்லவா என்று தீர்மானிக்க வேண்டிய பொறுப்பு வாசகர்களைச் சேர்ந்ததேயன்றி என் பொறுப்பன்று. அப்பொழு துள்ள நிலைமையில் கடவுள் நம்பிக்கையானது எனது வாழ்வில் ஆறுதலளித்து பாரத்தையும் குறைக்கும். கடவுள் நமபிக்கையற்ற தன்மையோ, சந்தர்ப்பங்களையெல்லாம் சங்கடத்திற்குள் ளாக்குவதோடு நிலைமையை மோசமாக்கி கடுமையும், கொடுமையும் நிறைந்ததாகச் செய்துவிடும். மதோன்மத்தர் போதம் துளியளவு இருப்பினும் வாழ்க்கை காவிய வர்ணனைக் காண்பதுபோல் நயமுள்ளதாகத் திகழும். ஆனால், எனது முடிவுக்குத் துணை புரிய எந்தவிதமான போதையையும் - மயக்க நெறியையும் - நான் விரும்பவில்லை. நான் ஒரு யதார்த்தவாதி. என்னுள் எழும் உணர்ச்சியைப் பகுத்தறிவின் துணையால் அடக்கியாள முயற்சித்துக் கொண்டு வருகிறேன். இந்த முடிவை அடைவதில் நான் எப்பொழுதுமே வெற்றி பெற்று வரவில்லை. ஆனால் மனிதனுடையே கடமை இடையறாது முயற்சிப்பதே. ஜெயாப ஜெயம் சந்தர்ப்பத்தையும் சுற்றுச் சார்புகளையும் பொறுத்தது. குருட்டு நம்பிக்கை ஆபத்தை விளைவிக்கும் முன்னேற்றத்தை நாடும் எந்த மனிதனும் பழைய மதத்தின் ஒவ்வொரு பாகத்தையும் அலசி அலசி ஆராய்ச்சி செய்து தீர வேண்டும். பழைய கொள்கைகளையும், கோட்பாடுகளையும் போட்டிக்கழைத்துத் தீர வேண்டும். பிரஸ்தாபத்திலிருக்கும் மத சம்பிரதாயங்கள் ஒவ்வொன்றுக்கும் - எவ்வளவு அற்ப சொற்ப மானதாயிருந்தாலும் - காரண காரியங்கள் கண்டுபிடித்துத் தீர வேண்டும். இவ்விதமாக ஆழமாய் ஆராய்ச்சி செய்தபின், ஒருவன் ஏதேனுமொரு கொள்கையை அன்றி, கோட்பாட்டை நம்பும்படி நேர்ந்தால், அவனுடைய நம்பிக்கை தப்பும் தவறுமுடையதாக தவறான வழியில் செலுத்தப்பட்டதாக மயக்கம் நிறைந்ததாக இருக்கலாம். இருந்தபோதிலும் அவன் சீர்திருத்தமடைவதற்கு இடமுண்டு. ஏனென்றால், பகுத்தறிவே அவனுக்கு வழிகாட்டும் நட்சத்திரமாக ஒளிர்கின்றது. ஆனால், விருதா நம்பிக்கையும் குருட்டு நம்பிக்கையும் ஆபத்தை விளைவிக்கும். அது மூளையை மந்தப்படுத்தி, மனிதனை பிற்போக்காளனாக மாற்றி விடுகிறது. தான் உண்மை நாடுவோன் என்று உரிமைப் பாராட்டிக் கொள் ளும் எந்த மனிதனும் பழைய நம்பிக்கை முழுவதையும் போட்டிக்கழைத்தாக வேண்டும். பழைய நம்பிக்கையால் ஆராய்ச்சிக்கு ஈடு செய்ய முடியாவிட்டால், அது நொறுங்கி தவிடுபொடியாகி விடும். எனவேஅவனுடைய முதற்கடமை, அதனைச் சின்னாபின்னமாகச் சிதறியடிப்பதன் மூலம், புதிய தத்துவத்தை நிறுத்துவதற்கான நிலத்தை செப்பனிடுவதாகும். இது அழித்தல் வேலை. இதன் பிறகுதான் ஆக்கல் வேலையின் ஆரம்பம். இந்தத் புனருத்தாரணத்திற்குப் பழையவற்றில் சிலவற்றை சாதகமாக உபயோகப்படுத்திக் கொள்ளவும் செய்யலாம். கேள்விகள் எழுப்புகிறேன் பிரபஞ்சத்தை இயக்கி, தனது ஆக்ஞா சக்கரத்தைச் செலுத்திக் கொண்டு இருக்கும் நன்னறிவோடு கூடிய முழு முதற்பொருள் (கடவுள்) ஒன்று இல்லை என்று நான் உணர்ந்துகொண்டு வந்திருக்கிறேன். நாம் இயற்கையில் நம்பிக்கை வைக்கிறோம். முன்னேற்ற இயக்கம் முழுவதும் மனிதன் தனக்கு ஊழியஞ் செய்வதற்காக இயற்கையை அடக்கி ஆதிக்கம் செலுத்துவதில் குறிக் கொண்டிருக்கிறது. ஆனால், ஒரு `சின்மய சக்தி பின்னாலிருந்து இயற்கையை நடத்திக் கொண்டிருக்கிற தென்பதுதான் நமது தத்துவ சாஸ்திரத்தின் சாரம். நாஸ்திகவாதத்தின் சார்பாக நான் சில கேள்விகளை ஆஸ்திகர்களிடம் கேட்கிறேன் (1) நீங்கள் நம்புவதுபோல் சர்வ வியாபியும், சர்வக்ஞனும், சர்வசக்தனுமாகிய ஒரு கடவுள் இந்த உலகத்தைப் படைத்திருந்தால், அவன் ஏன் இதைப் படைத்தானென்று தயவு செய்து கூறுங்கள். அந்தோ! துன்பமும், துயரமும், கஷ்ட நிஷ்டூரங்களும் நிறைந்த உலகம்! பல திறப்பட்ட சதா இருந்து கொண்டிருக்கிற கணக்கு வழக்கற்ற முடிவுகள். பூரணமாக திருப்தியடைந்த ஜீவன் ஒன்றுகூட இல்லை. தயவு செய்து, அது தெய்வ சங்கற்பம் - கடவுள் சித்தம் - ஈசன் இட்ட சட்டம் என்று கூறிவிடாதீர்கள். அவன் எந்தச் சட்டத் திலாவது கட்டுப்படுத்தப்பட்டு விட்டால், அவன் சர்வசக்தி யுடையவனல்ல; அவனும் நம்மைபோன்ற மற்றொரு அடிமை யாகத்தான் இருக்க முடியும். அது அவனுடைய பொழுதுபோக்கு - தமாஷ் - லீலா வினோதம் என்பீர்களோ? தயவு கூர்ந்து அவ்வாறு சொல்லாதீர்கள். நீரோ என்பவன் ரோமாபுரியை எரித்தான். `நீரோ, கொடுங்கோலன், ஈரமற்ற நெஞ்சினன், கேடு கெட்டவன் என்று பலமாகக் கண்டித்து, கர்ண கடூரமான தூஷணைச் சொற்களால் வசைமாரி செய்திருப்பதால் சரித் திரத்தின் பக்கங்கள் கறைப்பட்டுப் போயின. செங்கிஷ்கான் என்பவன் தனது சந்தோஷத்தையும் இன்பத்தையும் நாடி சில ஆயிரம் பேர்களை பலியிட்டான். நாம் அவனை மிகக் கடுமையாக வெறுக்கிறோம். அவனுடைய பெயரைக்கூட வெகுவாக நிந்திக்கிறோம். என்ன தீர்ப்பு சொல்லுகிறீர்கள்? அப்படியானால் கணக்கு வழக்கற்ற கொலைகளை - துக்கமும் துயரமும் நிறைந்த சம்பவங்களை ஒவ்வொரு நாளிலும், ஒவ்வொரு நாழிகையிலும், ஒவ்வொரு நிமிஷத்திலும் செய்து கொண்டிருக்கிற `என்றுமுள நீரோவாகிய முழு முதற் கடவுளுக்கு நீங்கள் என்ன தீர்ப்புக் கூறப் போகிறீர்கள்? செங்கிஷ்கான் தோற்றோடும்படியாக ஒவ்வொரு கணத்திலும் நடைபெறும் அவனுடைய (கடவுள்) தீய காரியங்களை நீங்கள் எவ்வாறு ஆதரிக்க நினைக்கிறீர்கள்? அவன் இந்த உலகத்தை மெய்யான (கண்கண்ட) நரகத்தை - சதாகவலையும், குழப்பமும், சஞ்சலமும் நிறைந்த கசப்புக்குரிய அமைதியற்ற ஸ்தலத்தை - எதற்காகப் படைத்தான்? படைக்காதிருக்கக்கூடிய சக்தியும் தன்னிடமிருக்கும்பொழுது சர்வ சக்தனாகிய அக்கடவுள் மனிதனை, ஏன் இத்தகைய உலகில் சிருஷ்டித்தான்? உத்தமர் களான நிரபராதியான தியாக மூர்த்திகளை, உண்மையின் பொருட்டுக் கஷ்ட நிஷ்டூரங்களுக்கு இரையாகின்றவர்களை மறுமையில் சம்மானிப்பதற்காகவும், துஷ்டர்களை, கொடியவர் களை, மோச நாசக்காரர்களை மறுமையில் தண்டிப்பதற் காகவுமே கடவுள் சிருஷ்டித்தார் என்று கூறுகிறீர்களா? நன்று நன்று! உங்களிடம் ஒன்று கேட்கின்றேன். பின்னால் மிக மிருதுவான பஞ்சால் ஒத்தடம் கொடுத்து, அரிய இனிய சிகிச்சையால் நோவைக் குறைத்து நோவை சுகப்படுத்துவதற்காக, தற்பொழுது உடம்பில் படுகாயம் பண்ணுகிறேன் என்று கூறும் ஒரு மனிதனுடைய வாதத்தை நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா? கிளாடியேட்டர் ஸ்தாபனத்தை ஆதரிக்கிறவர்களும், நிர்வகிக்கிற வர்களும், அகோரப் பசியால் பயங்கரமான கோபாவேசத்துடன் கர்ஜிக்கும் சிங்கங்களின் முன்னால் மனிதர்களைத் தூக்கியெறி கிறார்கள். அவ்வாறு தூக்கியெறிவது எறியப்படுகிறவர்கள் சிங்கங்களோடு போராடி, அந்தக் கொடிய மிருங்கங்களால் ஏற்படும் மரணத்திலிருந்து தப்பித்துக் கொண்டாரானால், அவர்களைப் பின்னால் பாதுகாத்து நல்ல மாதிரியிற் பராமரிப்பதற்காகவேயென்று காரணம் கூறுகிறார்கள்? இந்த நியாயம் பொருத்தமாயிருக்க முடியுமா? முடியாது. இதனாலே தான் அந்த முழுமுதற் கடவுள் எதற்காக உலகத்தைப் படைத்து, அதில் மனிதனைச் சிருஷ்டித்தான் என்றும், தமாஷ் பண்ணி பொழுதுபோக்கவென்றால் அவனுக்கும் நீரோவுக்கும் என்ன வித்தியாசமென்றும் நான் கேட்கிறேன். தரித்திரமும், மூடத்தனமும் தலைவிரித்தாடும் ஒரு தோட்டியின் குடும்பத்திலோ அன்றி, ஒரு சாமர் சாதிக்காரன் (தீண்டக் கூடாதவன்) குடும்பத்திலோ ஒரு மனிதன் பிறந்தால் அவன் கதி என்னாகும்? அவன் பரம ஏழை ஆகையால் படிப்பது அசாத்தியம். சாதித் திமிர் கொண்ட மேல்ஜாதிக்காரர்களால் அவன் வெறுத்து ஒதுக்கப்படுகிறான். அவனுடைய மூடத்தனம், அவனுடைய தரித்திரம், அவன் நடத்தப்படுகின்ற தன்மை இவைகளெல்லாம் ஒன்றாகி, சமுதாயத்தை வெறுக்கும்படியான நிலைமைக்கு கொண்டு வந்துவிடுகிறது. அதன் காரணமாக அவன் குற்றஞ் செய்கிறானென்று வைத்துக் கொள்ளுவோம்! அதற்கு ஜவாப்தாரி யார்? கடவுளா? அவனா? அல்லது சமுதாயத் தின் படித்த கூட்டத்தாரா? மமதையும், பேராசையும், உச்சி முதல் உள்ளங்கால்வரையில் கொண்ட, குதிக்கும் `பிராமணர்களால் வேண்டுமென்றே நிர்மூடத்தனத்தில் ஆழ்த்தி அமுக்கப்பட்டிருக் கும் தாழ்த்தப்பட்ட மக்களின் தண்டனைக்குப் பொறுப்பாளி யார்? உங்களுடைய `பரிசுத்த ஞான நூற்ககளாகிய வேதங் களிலிருந்து சில வாக்கியங்களை அவர்கள் கேட்டாலும், அவர்களுடைய காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டுமென்று தண்டனை விதித்ததற்கு அபராதம் செலுத்த வேண்டியவர்கள் யார்? அவர்கள் ஏதாவது குற்றஞ் செய்தால் அவர்களுக்காக யார் பொறுப்பேற்று தண்டனைக்குத் தலை கொடுப்பார்? அன்புக் குரிய நண்பர்களே! மேற்கூறிய கோட்பாடுகளெல்லாம் விசேஷ சலுகையடைவோரின் கற்பனைகள். இக்கோட்பாடுகளின் உதவியால் அவர்கள் தாங்கள் பிறரிடமிருந்து பறித்துக் கொண்ட அதிகாரம், அய்ஸ்வர்யம், அந்தஸ்து முதலானவையென்று தீர்மானிக்கிறார்கள். நூல்: திராவிடர் கழக வெளியீடு - நன்கொடை ரூ.10 Posted by புரட்சியாளர் பெரியார் at 09:10 No comments: Labels: பகத்சிங்-நாத்திகன் Sunday, March 23, 2008 ஏன் வேண்டும் தமிழிசை? தமிழன் தான் நுகரும் இசையை, தமிழில் இசை, தமிழில் பாடு, தமிழர்களைப் பற்றித் தமிழர்களுக்கு ஏற்றதைத் தமிழர்களுக்குப் பயன்படுமாறு பாடு என்கின்றான். இதை யார்தான் ஆகட்டும், ஏன் ஆட்சேபிக்க வேண்டும்? ஏன் குறை கூறவேண்டும் என்று கேட்கிறேன். அதிலும் தமிழன் இப்படிக் கேட்பதை - தமிழனால் தமிழனல்லாதவன் என்று கருதப்பட்டவன், ஏன் மறுக்க வேண்டும்? இது மிக மிக அதிசயமானதும், தமிழனால் மிக மிக வருந்தத்தக்கதுமாகும். தமிழன் - தமிழ் மக்கள், தமிழில் பாட்டுக் கேட்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். பணம் கொடுப்பவன், தனக்குத் தமிழ்ப் பாட்டுப் பாடப்படவேண்டு மென்று ஆசைப்படுகிறான்; பாட்டுக் கேட்-பவன் தமிழில் பாட்டுப் பாடவேண்டும் என்று ஆசைப்படுகிறான். இந்த ஆசையில் பழந்தமிழர் அல்லாதார் அதை மறுக்கவோ, குறை கூறவோ, குற்றம் சொல்லவோ எப்படி உரிமையுடையவர்கள் என்று கேட்கிறேன். தமிழரென்றும், தமிழரல்லாதவர் என்றும் பேதம் பாராட்டக் கூடாது என்பதாகத் தமிழர்களுக்கு அறிவுரை கூறும் இந்தப் பெருமான்களே, தமிழில் பாடவேண்டும் என்பது பொதுநலத்துக்குக் கேடு, கலைக்குக் கேடு, கலை நலத்துக்குக் கேடு என்று சொல்ல வந்தால் - இவர்கள் உண்மையில் தமிழர் - தமிழரல்லாதவர் என்கின்ற உணர்ச்சியைக் குறையச் செய்பவர்களா?, அல்லது நெருப்பில் நெய்யை ஊற்றி எரியச் செய்யும்படியான மாதிரியில் வளரச் செய்பவர்களா? என்று கேட்கிறேன். அன்றியும், இப்படிப்பட்ட இவர்கள் தங்களைத் தமிழர்களென்று சொல்லிக் கொள்ளக்கூடுமா? காது, கண், மனம் ஆகியவை எல்லா விஷயங்களுக்கும் எல்லாருக்கும் ஒன்றுபோல் இருக்க முடியாது என்பது அறிஞர் ஒப்ப முடிந்த விஷயமாகும். தமிழில் பாடு! என்றால், சிலர் - அதுவும் ஒரு வகுப்பாரே பெரிதும் ஆட்சேபணை சொல்ல வந்ததாலேயே, தமிழ் இசை இயக்கம் வகுப்புத் துவேஷத்தையும் உண்டு பண்ணக் கூடிய இயக்கமாகவும், பலாத்காரத்தை உபயோகித்தாவது தமிழ் இசையை வளர்க்க வேண்டிய இயக்கமாகவும் ஆகவேண்டியதாய் விட்டது. இத்தனை பெரியவர்கள் எதிர்ப்பும், தமிழரல்லாதவர்களின் பத்திரிகைகளின் எதிர்ப்பும் ஏற்பட்ட பிறகேதான் இது ஒரு இயக்கமாக விளங்க வேண்டியதாயும், சில இடங்களில் பாட்டுப் பிழைப்புக்காரர்களை நிர்ப்பந்தப்டுத்தி, பயமுறுத்தித் தமிழில் பாடச் செய்ய வேண்டியதாயும், பாட்டுப் பிழைப்புக்காரர்கள் சில இடங்களுக்குப் போகும்போது பந்தோபஸ்துக்கு ஆட்களைக் கூட்டிக்கொண்டு போகவேண்டியதாயும் ஏற்பட்டுவிட்டது. பாட்டுப் பிழைப்புக்காரனான சிலர்மீது தமிழர்களுக்கு வெறுப்புக்கூட ஏற்படும்படியாக நேர்ந்துவிட்டது. கூடிய சீக்கிரத்தில் இசைக் கலை வியாபாரம் தமிழர்கள் அல்லாதவர்களை விட்டு விலகினாலும் விலகிவிடலாம்; அல்லது, அவர்களே அதை விட்டு விலகினாலும் விலகிவிட நேரிடலாம் என்றுகூடக் கருத-வேண்டியதுமாகிவிட்டது. பொதுவாகச் சொன்னால், இந்த நிலையானது நாட்டின் நலத்துக்கும் ஒற்றுமைக்கும் ஏற்றதல்ல என்றே சொல்லுவேன். இன்று தமிழனின் நிலைமை தமிழன் அன்னிய மொழியைக் கற்கவேண்டும் என்று சொல்லுவது தேசாபிமானமும் நாட்டு முற்போக்கு இயல்கலை அபிவிருத்தியாக ஆகிவிடுகிறது. தமிழனுக்குத் தெரியாத - புரியாத மொழியில் தமிழன் பாட்டுக்கேட்க வேண்டும்; இதற்குப் பேர்தான் கலை வளர்ச்சியாம்! மற்றும், தமிழனுக்குத் தமிழ் வேண்டும்; தமிழ் இசை வேண்டும் என்பது தேசத் துரோகமாகவும், கலைத் துரோகம் வகுப்புத் துவேஷம் என்பதாகவும் ஆகிவிடுகிறது. காரணம், பெண்களுக்கு ஆண்கள் ஒழுக்க நூலும், கற்பு நூலும் எழுதுவதுபோல் - தமிழனுக்குத் தமிழனல்லாதவன் - தமிழரை அடிமை கொண்டு அடக்கி ஆண்டு சுரண்டிக் கொண்டிருப்பவன் - தேசாபிமானம், மொழியபிமானம், கலையபிமானம் முதலியவை கற்பிப்பவனாய்ப் போய்விட்டதேயாகும். அறிஞர்களே! நமக்குப் பாட்டுக் கேட்கக்கூடத் தெரியாது என்றும், நம் மொழியானது பாட்டு இசைக்கக்கூடப் பயன்படாது என்றும் சொன்னால், இந்த இழிமொழி - நம் உயிரைப் போயல்லவா கவ்வுகிறதாயிருக்கிறது என்று மிக்க வேதனையோடு கூறுகிறேன். தமிழ்த் துரோகத்தால் வாழவேண்டியவனும், வள்ளுவர் சொன்னதுபோல் - குலத்திலே அய்யப் படவேண்டியவனுமான தமிழ் மகன்-களுக்கு, இது எப்படி இருந்தாலும் அவர்களது வாழ்வும் நம் எதிரிகளின் புகழுமே அவர்-களுக்கு அணியாகவும் அலங்காரமாகவும் முக்கிய இலட்சியமாகவும் இருக்கும். ஏன் - நம் எதிரிகளுக்கு இருக்கும் செல்வாக்கால் நம்மில் துரோகிகள் பெருகிவிட்டார்கள்; இன்னும் பெருகுவார்கள் என்பதும் உண்மைதான். ஏனெனில், மானங்கெட்ட தமிழ்மக்கள் பலர் இப்படிப்பட்ட இனத் துரோகிகளை அறியா-மையாலும், சுயநலத்துக்காகவும் ஆதரிக்கிறார்-கள் என்பதை நாம் பிரத்தியட்சத்தில் காண்கிறோம். ஆனால், நாம் இப்படிப்-பட்டவர்களையும்தான் முதலில் நன்றய் வெறுக்க வேண்டும்; அவர்களைத் தமிழர் சமுதாயத்தில் இருந்து ஒதுக்கித் தள்ள வேண்டும். தமிழ் இசையை நாம் ஏன் வேண்டுகிறோம்? எதற்காக நமக்குத் தமிழில் இசை வேண்டு-மென்கிறோம்? தமிழ்மொழியை ஏன் வேண்டுகிறோம்? ஸ்காந்தத்தை - கந்த புராணம் என்றும், கிருஷ்ணனை - கிருட்டிணன் என்றும், ஹோம் நமஹா என்பதை - ஓம் நமோ என்றும், நரசிம்ஹமூர்த்தி என்பதை - சிங்கமுகக் கடவுள் என்றும், தசகண்ட இராவணன் என்பதை - பத்துத் தலை இருட்டுத் தன்மையன் என்றும் மொழிபெயர்த்துக் கொண்டு வணங்கி, நம்பி, திருப்தி அடையவா? என்று கேட்கிறேன். தமிழிசைக்கு நாம் கிளர்ச்சி செய்ததானது வீணாகவில்லை. தமிழிசைத் தொழிலாளர்கள் தமிழில் இசை கற்று வருகிறார்கள்; பெரும்பாலும் தமிழில் பாடுகிறார்கள். இசையை நுகர்வோரும் தமிழில் இசை வேண்டுமென்று விரும்புகிறார்கள். இனி இந்த உணர்ச்சி குன்றிவிடாது. இசை விருந்தளிக்கும் செல்வவான்களும், நுகர்வோர்களும் தமிழுணர்ச்சி உள்ளவர்களாக இருக்கும் வரை இந்த உணர்ச்சி வலுத்துக்கொண்டே போகும். தமிழிசை நமது நல்வாழ்வுக்குப் பயன்படும்படி செய்யவேண்டியது நமது கடமை. இன்று இதுவரை தமிழல்லாத வேறு மொழியில் இருந்த இசை (பாட்டுகள்), தமிழில் பாட வேண்டியதாக ஏற்பட்டதற்குக் காரணம், நமக்குத் தமிழினிடம் ஏற்பட்ட உணர்ச்சியாகும். இது ஒரு பெரிய மாறுதல்தான். இசை, நடிப்பு ஆகியவை எதற்குப் பயன்-படுகின்றன? ஏதாவது ஒரு கருத்தை ஒரு சேதியைக் காட்டுவதற்கும், அதை மனத்தில் பதிய வைப்பதற்கும் அது வெறும் வாக்கியத்தில் இருப்பதை இசை இன்பத்தோடும், நடிப்பு இன்பத்தோடும் மனத்திற்குள் புகுத்துவதற்கும் ஆகவே முக்கியமாய் இருந்து வருகின்றன. அடுத்தபடியாக இரண்டாவதாகத்தான் அவற்றில் இன்ப நுகர்ச்சி வருகின்றது. ஆகவே, இசைக்கும் நடிப்புக்கும் கருத்தும் செய்திகளும் பிரதானமாகும்; அடுத்ததாகவே சுவை பிரதானமாகும். அதன் உண்மையான அனு-பவமும் அப்படியேதான் இருந்து வருகிறது. ஆனால், நுகர்வோரும் இசைத்து நடிப்போரும் செய்தியையும், சுவையையும் பற்றிக் கவலை-யில்லாமல் நுகர்வோர்கள் நேரப் போக்குக்கும், வேறு பல காட்சி இன்பத்திற்கும் அதைச் சாக்காக வைத்து நுகர்வதாலும், இசைத்து நடிப்போர்கள் பொருளுக்கும், வேறு சுயநலத்துக்கும் பயன்படுத்துவதாலும் அதற்கு உண்டான பயன் ஏற்படாமல் போய் விடுகிறது. -------------------------------------------------- தந்தைபெரியார் Posted by புரட்சியாளர் பெரியார் at 08:11 No comments: Labels: தமிழிசை-பெரியார் தமிழ் வழிக் கல்வி உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் சிறுபான்மையினரின் பண்பாட்டு உரிமை பற்றியும், அந்த உரிமையின்படி சிறுபான்மை மக்கள் தங்களின் தாய்மொழி வாயிலாகவே தத்தம் ஆரம்பகால கல்வியைப் பெற முடியுமா? இவ்வுரிமையை அடிப்படை உரிமையாக நமது அரசியல் சட்டம் அங்கீகரிக்கிறதா? என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் என்ற சொல், மத சிறுபான்மையினர் என்ற சொல்லோடு தொடர்புடையது அல்ல. மத சிறுபான்மையினரின் நலன்களை நமது அரசியல் சட்டம் பாதுகாக்கும் நோக்கத்தோடு, நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் அவர்களுக்கு சிறப்பு அங்கீகாரம் வழங்கபோது, எண்ணிக்கையில் ஒப்பிடும்போது குறைந்த எண்ணிக்கையில் உள்ளவர்களை மொழி சிறுபான்மையினர் என்று நான் குறிப்பிடுகிறேன். எடுத்துக்காட்டாக, சென்னையை பூர்வ இடமாகக் கொண்டு வாழ்ந்த தமிழர்கள், வேலை தேடி பம்பாயில் குடியேறுகின்றனர். இவர்கள் பொதுவாக, வந்தேறியாக அல்லது மொழி ரீதியாக இந்தியா முழுமையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, சிறுபான்மையினராகக் கொள்ளப்படாவிட்டாலும், தாங்கள் வாழும் பகுதிகளில் மொழி சிறுபான்மையினராகவே வாழ நேரிடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இவர்களை நான் "கலாச்சார சிறுபான்மையினர்' (Cultural Minorities) என்று குறிப்பிட விரும்புகிறேன். இந்தியா ஒரே நாடு என்று பொருள்படுத்தி, தமிழர்களின் மக்கள் தொகையைக் கணக்கிட்டு, பம்பாயில் வாழும் தமிழர்களின் பண்பாட்டு உரிமைகளைப் புறக்கணிக்க நான் தயாராக இல்லை . இவர்கள் தாங்கள் வாழுமிடத்தில் அல்லது தங்குமிடத்தில் மொழி ரீதியாக வாழ நேரிடுவதால், அவர்களின் உரிமைகளை எவ்வித இடையூறுமின்றிப் பாதுகாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. அவர்களது மொழி, எழுத்து மற்றும் இலக்கியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் நான் மிகுந்த அக்கறை கொண்டுள்ளேன். பணிக்காக புலம் பெயர்ந்து செல்பவர்கள், அங்கு நிரந்தரமாகத் தங்க விரும்புவதில்லை. தங்களின் பூர்வீக இடத்தின் மொழி, வாழ்வியல் முறை மற்றும் பண்பாட்டைத் துளியும் இழக்க அவர்கள் தயாராக இருப்பதும் இல்லை. மாறாக, தங்களது பூர்வீக இடத்துடன் நிரந்தரத் தொடர்பினை ஏற்படுத்தி தங்களின் வாழ்க்கையை நடத்துகின்றனர். திருமணம், திருவிழா மற்றும் அனைத்துச் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் சொந்த ஊருக்குச் சென்று மகிழ்கின்றனர். நடைமுறை இவ்வாறாக உள்ளபோது, தங்களின் பணிநிமித்தம், பம்பாயில் வாழும் தமிழர்களுக்கு தமிழ்க் கல்வி தருவது, பம்பாய் அரசினுடைய கடமை. இந்தக் கடமையை நான் சட்டப்பூர்வமான உரிமையாக அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடுகின்றேன். இதைப்போலவே, அந்தந்த மொழிவாரி மாநிலங்களைச் சார்ந்த மக்கள், தங்களது தேவைகளுக்காக, வேற்று மொழி மாநிலங்களுக்குச் சென்று வாழ்ந்தாலும், அவர்களது தாய் மொழிக் கல்வியினை தடையின்றிப் பெறுவதற்கு, சம்பந்தப்பட்ட மாநில அரசு தங்களது சட்ட மன்ற விதிகளின் படி வழிவகை செய்ய வேண்டும். இது, அரசமைப்புச் சட்டத்தின் கடமை என்பதை இங்கு நான் வலியுறுத்துகிறேன். ஆந்திரம் அல்லது தமிழ் நாட்டைச் சார்ந்தவர் பம்பாயில் வாழும் போது, பம்பாயில் இந்தி பிரதான மொழியாக இருப்பதால், தமிழ் அல்லது தெலுங்கு படிப்பது மிகுந்த பொருட்செலவினை ஏற்படுத்தும். இந்தத் தடையை நீக்கி புலம் பெயர் சிறுபான்மையினர்களின் தாய் மொழிக் கல்விக்கு ஆகும் செலவை, சம்பந்தப்பட்ட மாநில அரசு முழுமையாக ஏற்றுக் கொள்ள நமது அரசியல் சட்டம் வழிவகை செய்துள்ளது. ஒரு மொழியின் எழுத்தும், கலாச்சாரமும் அனைத்து வகையிலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் மற்ற எல்லா நடைமுறை சிக்கலைவிடவும் முக்கியம். எந்த ஒரு மாநில அரசு இயற்றும் சட்டமும், நமது நாட்டின் எந்தவொரு மொழியின் எழுத்து மற்றும் கலாச்சாரம் பாதிக்கும் வகையில் இருத்தல் கூடாது. ஏனெனில், ஒரு மொழியின் எழுத்து அல்லது கலாச்சாரம் பாதிக்கப்படுமானால், அது சம்பந்தப்பட்ட தனிமனிதனின் அடிப்படை உரிமையை அர்த்தமற்றதாக மாற்றி விடுகிறது. இதை அனைத்து மாநில அரசுகளும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதை மீறி எந்த ஒரு மாநில அரசாவது சட்டத்தின் மூலம் தங்கள் மொழியைத் திணிக்க, புலம் பெயர் வாழ் மக்களின் மொழியை அலட்சியப்படுத்தினால், அந்த மாநில அரசு இயற்றும் சட்டம், இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 8க்கு முரண்பாடு உடையதாகிறது. இதன்படி, அந்த மாநில அரசின் சட்ட மன்றம் இயற்றும் சட்டம் செயலற்றதாகி விடும் என்று நமது அரசியல் சட்டம் தெளிவாகக் கூறுகிறது. ‘பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு' : 13 பக்கம் : 429 Posted by புரட்சியாளர் பெரியார் at 08:02 No comments: Labels: தமிழ் வழிக்கல்வி-அம்பேத்கர் Saturday, March 22, 2008 இன்றைய கடவுள் பட பிரச்சினை நமக்கு ஒரு நல்ல வாய்ப்பு கடவுள் சம்பந்தமான சர்ச்சை (விவகாரம்) அரசியலில் கிளம்பி விட்டது. இதுபொது நன்மைக்கு நலம் தரும் காரியம் என்றே நான் கருதுகிறேன். இதன்மீது சத்தியாக்கிரகம் - பட்டினி - மறியல் - போராட்டம் - கிளர்ச்சி - வாக்குவாதம் முதலியவை தீவிரத்தன்மையில் நடைபெற வேண்டும் என்றே ஆசைப்படுகிறேன். அப்போது தான் மக்கள் தெருக்களில் கடவுள் பொம்மை (உருவத்தையும், படங்களையும், கடவுள் பிரச்சார (சம்பந்தமான) புராண இதிகாசக் கதை முதலியவற்றையும் தெருவில் போட்டு உடைக்கவும் கிழித்தெறியவும் தீயிட்டுக் கொளுத்துவுமான காரியங்களை குஷாலாக உற்சாகமாகச் செய்ய முன்வரக் கூடும் ஏன் என்றால் நம் நாட்டில் யாருக்குமே கடவுள் என்றால் என்ன என்பது தெரியவே தெரியாது. பார்ப்பானுக்கு மாத்திரம் தான் நன்றாகத் தெரியும். அதாவது தங்கள் ஜாதியார் அல்லாத மக்களை மடையர்களாக்கவும் (அவர்களது) ``இழிவின்'' பயனாகவும் உழைப்பின் பயனாகவும் தாங்கள் (பார்ப்பனர்கள்) மேல்ஜாதிக்காரராகவும் பாடுபடாமல் உயர்பதவிகள் பெற்று ``மேன்மக்களாக'' வாழ்வு நடத்தவுமான ஒரு சாதனம் கடவுளை உண்டாக்கி பரப்பி மக்களை வணங்கச் செய்யத் தக்கதுதான் என்பது பார்ப்பனக் குஞ்சு குருத்து முதல் எல்லோருக்கும் தெரியும். அதனால், ஏமாந்துபோய் முட்டாள்களாக - ``இழிபிறவி'' மக்களாக ஆக்கப்பட்டிருப்பவர்கள் வெட்கப் பட்டு விஷயம் உணர்ந்து சிறிதாவது திருத்தமடைய மேற்கண்ட கிளர்ச்சிகள் பயன்படும் என்றே கருதி வரவேற்கிறோம். தமிழன் - திராவிடன் என்றாலே மானம் ஈனம் அற்ற பிண்டம் என்பது இன்று உலகம் எங்கும் கருதப்பட்டு வருகிறது. இந்த நிலை இப்படிப்பட்ட கிளர்ச்சிகளாலாவது ``தமிழர்களுக்கு இப்போதுதான் மான உணர்ச்சி ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது'' என்று தோன்றக்கூடும். அதிலும் இம்மாதிரிக் கிளர்ச்சிகளால் மக்கள் ஜெயிலுக்குப் போகும்படியான நிலை ஏற்படுமானால் பொதுமக்களுக்கு எளிதில் அவர்களுடைய மான உணர்ச்சியைத் தூண்டக் கூடிய வாய்ப்பு ஏற்படலாம் என்றும் கருதுகிறேன். மக்களுக்குப் போதிய அறிவும் பிரச்சாரமும் இல்லாத காரணம் கூட இன்று இவ்வளவு சர்ச்சைக்கு இடமான காரியமாக ஆக்கப்படுகிறது. தக்க பிரச்சாரம் நடந்தால் அரசாங்க பொதுக் காரியாலயங்களில் உள்ள படங்கள் மாத்திரமல்லாமல் தனிப்பட்ட மக்கள் தங்கள் வீடுகளில் மாட்டியிருக்கும் படங்களையும் தங்கள் முட்டாள்தனத்தையும் உணர்ந்து அவற்றையும் தூக்கி வீசி குப்பைத் தொட்டியில் போடுவார்கள். அதற்கு ஒரு நல்ல வாய்ப்பு இப்படிப்பட்ட கிளர்ச்சிகளால்தான் முடியும். இதை நாமே தொடங்கி இருக்க வேண்டியது அறிவுடைமையாகும். அதில்லாததனால் பார்ப்பனர்கள் தொடங்கி இருக்கிறார்கள். இது நமக்கு ஒரு நல்ல வாய்ப்பே ஆகும். இனி இந்தப் பிரச்சினை தமிழர் சமுதாய இயல் பிரச்சார பிரச்சினையில் ஒரு முக்கிய பிரச்சினையாக உருவம், உருவப்படம், பிரச்சார நூல்கள் ஆகியவற்றை அழிப்பதும் எரிப்பதும் அப்புறப்படுத்துவதுமான காரியத்தை வலியுறுத்தும் பிரச்சாரத்தையும் சேர்ந்து பிரச்சாரம் செய்ய வேண்டியது அவசியமாகும். கடவுள் படத்தை சுவரில் தொங்கவிடுவது பக்திக்கு ஆகவா, பிரச்சாரத்திற்கு ஆகவா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம் (`விடுதலை, 31.7.1968). Posted by புரட்சியாளர் பெரியார் at 20:04 No comments: Labels: கடவுளை ஒழிக்க இலஞ்சம் பற்றி பெரியார் நமது நாட்டிடை இதுகாலை அரசாங்க ஊழியர்களுக்குள்ளும் பொது மக்களுக்குள்ளும் லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் மிகவும் எளிய வழக்கமாகப் போய்விட்டது. மக்களிடையே இவ்வித வழக்கங்களை இழிவாய்க் கருதும் மனப்பான்மையும் மாறிவிட்டது. அரசாங்க ஊழியர்கள் என்போர் ஓர் ஊரினின்றும் மற்றொரு ஊரிற்கு மாற்றப்பட்டு வந்தால் முதன் முதலாக அந்த ஊரில் லஞ்சம் வாங்கிக் கொடுக்கும் தரகர்களைத் தேடுவதுதான் அநேகமாய் அவர்களது வேலையாய் இருக்கின்றது. பொதுமக்களும், அரசாங்க நீதி மன்றங்களிலோ, நிர்வாக மன்றங்களிலோ தங்களுக்கு ஏதேனும் அலுவல்கள் ஏற்பட்டால் லஞ்சம் வாங்கிக் கொடுக்கத் தரகர்களைத் தான் முதலில் நாடுகிறார்கள். இவ்விரு கூட்டத்தாரிடையினும் லஞ்சம் வாங்கவும் கொடுக்கவும் தற்காலம் பெரும்பாலும் வக்கீல் கூட்டங் களிலிருந்தே தரகர்கள் தெரிந்தெடுக்கப்படுகின்றனர். இதனால் நியாய மன்றங்களில் விவகாரங்களைத் தாக்கல் செய்யவேண்டிய கட்சிக்காரர்கள் நியாயாதிபதிகளுக்குத் தரகர்களாய் இருக்கும் வக்கீல்கள் யாரோ, அவர்களிடமே அதிகம் செல்லுகின்றனர். சில வக்கீல்களும் தங்களுக்கு இவ்வளவு, நியாயாதிபதிக்கு இவ்வளவு என்று பேசியே தொகை வாங்குகின்றனர். சில அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதில்லை என்று சொல்லிக் கொண்டு சிற்சில வக்கீல்களிடம் சிநேகமாகவும், தாட்சண்யமாகவும், பாரபட்சமாகவும் நடந்து கொண்டு, அதன் மூலமாக வக்கீல்களுக்கு வரும்படி செய்து வைத்து அவர்களிடம் பணமாக அல்லாமல் வேறு வழிகளில் தாங்கள் லாபம் அடைகின்றனர். இதை வழக்கத்தில் லஞ்சம் என்று சொல்லாவிடினும், இதுபோன்ற செயல்கள் உண்மையான லஞ்சத்தின் பலனையே உண்டாக்குகிறது. தாட்சண்யம் காட்டப்படும் வக்கீல்கள் இதன் பலனாய் லஞ்சம் என்கிற பெயரால் இல்லாவிடினும், வேறு வழியில் கட்சிக்காரர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளுகின்றனர். இதனால் அநேகமாய் இவ்வழக்கமுள்ள வக்கீல்களிடம்தான் கட்சிக்காரர்கள் செல்லுகின்றனரே அன்றி, கெட்டிக்காரர்களாகவும், யோக்கியமாகவுமுள்ள வக்கீல்களிடம் செல்லுவதில்லை. அரசாங்க ஊழியர் என்று சொல்லும் அதிகாரிகளும் லஞ்சம் வாங்குவதில் பலவித தத்துவங்களை உபயோகிக்கின்றனர். சிலர் இரண்டு கட்சிக்காரரிடம் வியாபாரம் பேசுவது போல் பேசி, அதிக தொகை கொடுத்தவனுக்கு அனுகூலமாகவே தங்கள் தீர்ப்பைக் கொடுக்கின்றனர். சில சமயங்களில் இரண்டு பேரிடமும் வாங்கிக் கொண்டு இருவரையும் திருப்தி செய்யும்படி ராஜி செய்து அந்த ராஜிக்கு ஏற்றவிதமாய் தங்கள் தீர்ப்பை அளித்து விடுகின்றனர். சில தருணங்களில் ஒரு கட்சிக்காரருக்குத் தெரியாமல் மற்றொரு கட்சிக்காரரிடம் இவ்வளவிற்குக் குறைவில்லாத தொகைக்கோ, தண்டனைக்கோ தீர்ப்புச் செய்கிறேன் என்றும், இன்னொரு கட்சியாரிடம் இவ்வளவுக்கதிகமல்லாத தொகைக்கோ, தண்டனைக்கோ தீர்ப்புச் செய்கிறேன் என்றும் இருவரிடமும் வாங்கிக் கொள்ளுவதும், சில தருணங்களில் பெரிய தண்டனை செய்யவேண்டியதையோ, பெரிய தொகைக்குத் தீர்ப்புச் செய்ய வேண்டியதையோ குறைந்த அளவிற்குச் செய்வதாய்ச் சொல்லி வாங்குவதும், இன்னும் சில சந்தர்ப்பங்களில் தங்களிடமுள்ள விவகாரங்களில் நியாயம் இன்னாருக்குத்தான் என்று தெரிந்து அந்தக் கட்சியாரிடம் வாங்கிக் கொள்ளுவதும் இப்படி இன்னும் அநேக விதமாய் வாங்கப்படுகின்றன. இப்படி வாங்கப்படும் லஞ்சங்கள் பெரும்பான்மையாய் முழுவதும் தாங்களே அடைவதில்லை. மேல் அதிகாரிகளுக்கும் பங்கு கொடுக்க நேரிட்டு விடுகின்றது. அந்தப் பங்கு என்பது தொகையாகவோ, சப்ளைகள் மூலமாகவோ, சாமான்களாகவோ, வேறுவிதமாய் அவரைத் திருப்தி செய்வதன் மூலமாகவோ பங்கு செலுத்தி யாகிவிடுகின்றது. அப்படிச் செலுத்தி மேலதிகாரிகளுக்கு நல்லவனாய் நடந்து கொண்ட இவ்வதிகாரிகள் வெகு தைரியமாய் தங்களுடைய தீர்ப்புகளைக் கடைவைத்து வியாபாரம் செய்வது போல் விற்று வருகின்றனர். பொது ஜனங்களும் கடைகளில் கத்தரிக்காய், வாழைக்காய் விலைபேசி வாங்குவதுபோல தீர்ப்பை விலைக்கு வாங்குகின்றனர். இவை பெரும்பாலும் வெளிப்படையான ரகசியங்களாய் விளங்குகின்றன. வியாஜ்யங்களும்,* விவகாரங்களும் அதிகமாகிக் கொண்டு வருவதற்கு நமது நாட்டு வக்கீல்கள் முக்கியக் காரணமென்று சொல்லுவது ஒரு பக்கமிருந்தபோதிலும், இந்த லஞ்சம் வாங்கலும் கொடுக்கலும் அதற்கு எவ்விதத்திலும் குறைந்தது அல்லவென்றே சொல்லலாம். மேல் அதிகாரிகள் என்று சொல்லப்படுவோர் லஞ்சம் வாங்கும் கீழ் அதிகாரிகளிடம் பங்கு வாங்காவிட்டாலும் குருட்டுத் தனமான அபிமானத்தாலோ, வேறு சிபாரிசின் காரணங்களாலோ, தங்கள் இஷ்டம் போல் நடக்கிறார்கள் என்பதினாலோ, அல்லது நாம் தாம் வாங்குவது போலவே அவரும் வாங்கிவிட்டுப் போகட்டும் என்று கருணை காட்டுவதினாலோ, தம்முடைய மேல் அதிகாரிக்கு வேண்டியவராகவும் இருக்கிறார்கள் என்ற காரணத்தினாலோ, அன்றியும் ராஜீய விஷயங்களில் சர்க்காருக்கு அனுகூலமாய் அவரது மனசாட்சிக்கு விரோதமாய் அநேகம் பேரைத் தண்டனை செய்துள்ளார் என்றோ, வெள்ளையருக்கும் இந்தியருக்கும் நடந்த விவகாரங்களில், வெள்ளைக்காரருக்கு அனுகூலமாகத் தீர்ப்புச் செய்துள்ளார் என்றோ இத்தியாதி காரணங்களால், எவ்வளவு வெளிப்படையாயும், எவ்வளவு மக்கள் வருந்தும்படியாயும், லஞ்சம் வாங்கினாலும் கவனிக்காமல் விட்டு விடுகின்றனர். லஞ்சம் என்று சொல்லுவது சாதாரணமாய் போலீஸ், ரிவனியூ, இஞ்சினியர், வைத்தியம், பாரஸ்ட், சால்ட் முதலிய இந்த இலாகாக்களுக்குப் பிறவிக்குணமாய் இருந்து அரசாங்கத்தாலும் பொதுமக்களாலும் சகஜந்தான் எனக்கருதி கவனிக்காமலே அனுமதிக்கப்பட்டு வந்திருந்த போதிலும், ஜனங்களின் வாழ்வு - தாழ்விற்குப் பெரிதும் காரணமாயிருக்கிற சிவில், கிரிமினல் இலாகாக்களில் கூட தலைவிரித்தாடி வருகின்றன. இவர்களில் சிலர் பணமும், நோட்டும் வாங்கினால்தான் லஞ்சமென்றும், வேறுவித காரியங்கள் என்ன செய்தாலும் லஞ்சம் இல்லை என்கிற எண்ணத்துடனேயே தங்கள் காரியங்களைச் செய்கின்றனர். சாதாரணமாய் உத்தியோகஸ்தரில் லஞ்சம் வாங்காதவரை மற்ற அதிகாரிகள் முட்டாள் என்றே கருதுகின்றனர். அநேகமாய் அவர்களுக்கு மேல் உத்தியோகமும் கிடைப்பதில்லை. தாங்கள் லஞ்சம் வாங்குவதில்லை என்கிற அகம்பாவத்தால் மேல் அதிகாரிகளை இவர்களும் இலட்சியம் செய்யாதிருந்துவிடுவது. அதனால் மேல் அதிகாரிகள் இவர்களைக் கெடுத்து விடுகின்றனர். இவை இப்படியிருக்க, அதிகாரிகளிலேயே சிலரும், படித்தவர்களில் சிலரும் தாங்கள் ஒரு குற்றமும் செய்யாமல் உத்தியோகமும் மேல் உத்தியோகமும் சம்பாதிப்பதற்காகவே ஆயிரம் பதினாயிரக்கணக்காகவும் கொடுக்க வேண்டி ஏற்பட்டுப் போய்விடுகின்றது. சில உத்தியோகஸ்தர்கள் வாங்க இஷ்டப்படாதவர் களாயிருந்தாலும் மேல் உத்தியோகஸ்தர்களுக்குக் கொடுக்கவும், செலவு செய்வதற்கும் என்றே லஞ்சம் வாங்க வேண்டியவர்களாய் விடுகிறார்கள். சில இலாகாக்களில் லஞ்சம் மாமூலாகவே கருதப்பட்டு வருகின்றது. சில அதிகாரிகள் தாம் வாங்காதிருந்தால் போதும் என்று, மற்றவர்கள் வாங்குவது நன்றாகத் தெரிந்திருந்த போதிலும் கவனியாமலே இருந்து விடுகிறார்கள். இவ்விதமாக அதிகாரிகளின் யோக்கியதை கவனிக்கத் தகுந்த அளவிற்குப் பெருகி வருகிறது. எவ்வளவு ரூபாய் சம்பளம் கொடுத்தால் லஞ்சம் வாங்க மாட்டார்கள் என்று சொல்லுவதற்கு ஒரு தொகையே இல்லாமல் போய்விட்டது. சில்லறை உத்தியோகஸ்தர்கள் வாங்கும் லஞ்சம் அவ்வளவு கெடுதியை உண்டாக்காவிட்டாலும், அதன் விபரங்களைப் பற்றிப் பின்னர் எழுதுவோம். கவுரவ உத்தியோகஸ்தர்களும் லஞ்சம் வாங்குவது சகஜமாகி விட்டதல்லாமல், அரசாங்கமும் அனுமதித்து விடும் போலிருக்கிறது. லஞ்சம் விஷயமாய் ஒரு பெரிய அதிகாரிக்கும், ஒரு பெரிய மனிதருக்கும் நடந்த சம்பாஷணையை மாத்திரம் எழுதிவிட்டு இதை முடிக்கிறோம். பெரிய மனிதர் : என்ன ஐயா, உங்கள் இலாகாவைச் சேர்ந்த ஒரு பெரியஉத்தியோகஸ்தர் இவ்விதமாக லஞ்சம் வாங்குகிறாரே, எங்களுக்கு எல்லாம் வெளியில் தலை நீட்டுவதற்கு வெட்கமாய் இருக்கிறதே, இதைப்பற்றிக் கேள்வி முறை இல்லையா ? பெரிய உத்தியோகஸ்தர் : ஆம்! எல்லாருக்கும் தெரிந்ததுதான். ஆனால் நான் என்ன செய்யமுடியும் ? வேண்டுமானால் அந்த உத்தியோகஸ்தரை வேறு ஊருக்கு மாற்ற முடியும். கேஸ் எடுத்து நடவடிக்கை நடத்தவே முடியாது. அப்படி ஏதாவது ஆரம்பித்து விட்டால் ஜாதி அபிமானங்களும், சிபார்சுகளும் வந்து கழுத்தை முறித்து விடுகிறது. அதற்கும் துணிந்தால் நமது பேரில் ஏதேனும் கெட்ட எண்ணத்தைக் கற்பித்துப் பழியையும், ஏதாவது ஒரு கெட்ட பெயரையும் ஏற்படுத்தி விடுவதோடு நம்முடைய விருத்தியையும் கெடுத்துவிடுகின்றனர். பெரிய மனிதர் : அப்படி ஆனால் அவரை வேறு ஊருக்காவது மாற்றித் தொலைப்பதுதானே ! பெரிய உத்தியோகஸ்தர் : இதனால் என்ன பொது நன்மை விளையும் ? இந்த ஊரில் வாங்குபவர் அங்குபோய் வாங்குகிறார். இப்பொழுது அவர் இருக்கும் ஊராவது பணக்காரர்களும், லஞ்சம் கொடுக்கப் பழகினவர்களாகவும், லஞ்சம் கொடுக்கிறோமே என்று வருத்தப்படாதவர்களும் இருக்கிற ஊராகும். இனி அவரை இதைவிட்டு வேறு ஊரிற்கு மாற்றினால் அங்கு போய் கடைவைத்து வியாபாரம் ஆரம்பிப்பதற்குள் வீண் கெட்ட வாசனை ஏற்பட்டுவிடும். பெரிய மனிதர் : சரி, சரி அப்படி ஆனால் ஒத்துழையாதார் பேரில் தப்பிதமே இல்லையே ? பெரிய உத்தியோகஸ்தர் : யார் தப்பிதம் சொல்லுகிறார்கள் ? ---------------தந்தைபெரியார்-"குடிஅரசு" 1925 Posted by புரட்சியாளர் பெரியார் at 05:13 No comments: Labels: இலஞ்சம் நான் சொல்வது கட்டளையா? நான் சொல்வன எல்லாம் எனது சொந்த அபிப்பிராயங்கள்தாம் என்று சொல்வதோடு, நான் ஒரு சாதாரண மனிதன்தான். நான் எவ்விதத் தன்மையும் பொருந்திய ஒரு தீர்க்கதரிசியல்லன். ஆகையால், தனி மனிதன் என்கின்ற முறையில்தான் என்னுடைய அபிப்பிராயங்களையும் - நான் பார்த்தும் ஆராய்ச்சி செய்தும் அனுபவத்தில் அறிந்தது-மானவைகளைத்தான் - அதிலும் எனக்குச் சரி என்று பட்டதைத்தான் உரைக்கின்றேன். ஒரு பெரியார் உரைத்துவிட்டார் என நீங்கள் கருதி அப்படியே அவைகளைக் கேட்டு நம்பிவிடு-வீர்களானால், அப்பொழுது - நீங்கள் யாவரும் அடிமைகளே! நான் உரைப்பதை நீங்கள் நம்பாவிட்டால், பாவம் என்றாவது, தோஷம் என்றாவது அல்லது நரகத்துக்குத்-தான் போவீர்கள் என்றாவது சொல்லிப் பயமுறுத்தவில்லை. யார் உரைப்பதையும் நாம் கேட்டு, வேத வாக்கு என அப்படியே நம்பிவிட்டதனால்தான் நாம் இன்று அடிமைகளாக இருக்கின்றோம். ஆகவே, நான் உரைப்பவைகளை ஆராய்ந்து பாருங்கள்! உங்களுக்கு அவைகள் உண்மை-யென்று தோன்றினால் அவைகளை ஒப்புக் கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் தள்ளி விடுங்கள். உண்மையெனப் புலப்படுமாகில், அவைகளை உண்மையென ஒப்புக் கொள்வதில் மட்டும் பிரயோசனம் இல்லை; அவைகளை அனுஷ்டானத்தில் கொண்டு வந்து அதன்படி நடக்க முயற்சியுங்கள். எனது சொநத் அனுபவங்களை நானறிந்து உங்களுக்கு உரைப்பதுதான் என்னுடைய விடுதலை. அவைகளை ஆராய்ந்து அறிவது, அதன்படி நடப்பதுதான் உங்கள் விடுதலை. ----------- தந்தைபெரியார்- "விடுதலை" 8.10.1951 Posted by புரட்சியாளர் பெரியார் at 01:24 No comments: Labels: சிந்தியுங்கள் Friday, March 21, 2008 குஷ்பு -அறிவுமதி -அதி அசுரன் 1.நடிகை குஷ்புவின் மமதை - இதுதான் நடந்தது! - அறிவுமதி ஆழி பதிப்பகத்தின் நூல்கள் வெளியீட்டுவிழா.ஆதி என்கிற என் நண்பனின் நூலும் அதில் ஒன்று. அவரது அழைப்புதான் என்னை அங்கே அழைத்துச் சென்றது. பார்வையாளனாக இருந்த என்னை.. அண்ணன் வண்ணநிலவன் அவர்கள் வராத வெற்றிடத்தை நிரப்பும் வண்ணம். அண்ணன் கல்யாண்ஜி அவர்களின் ஒலிக்கவிதைகள் வெளியீட்டாளனாக மேடைக்கு என்னை அழைத்துச் சென்றது. மேடையில், தங்கைகள் கனிமொழி, தமிழச்சி, குஷ்பு, அண்ணன் கல்யாண்ஜி, தம்பி ஸ்டாலின் இராசாங்கம் என் முன்வரிசையில் அமர்ந்திருந்தோம். தம்பிகள் அய்யனார், இராம். ஆனந்த்தராசன் மேடையில் இருந்தனர். நூல்கள் வெளியீட்டு நிகழ்வு முடிந்து, கல்யாண்ஜி அண்ணன் பற்றி நான்பேசி. அண்ணன் பேசி. தமிழச்சி பேசச் சென்றார். தலைவர் திருமாவளவன் அவர்கள் அரங்கிற்குள் நுழைய, அவரது இயக்கத்தினர் வாழ்த்துக் குரல் எழுப்ப, தங்கை கனிமொழி, அண்ணன் கல்யாண்ஜி, தம்பி ஸ்டாலின் இராசாங்கம் என அனைவரும் எழுந்து வணக்கம் சொல்லி... இருக்கையில் அவரையும் அமரச் சொல்லி அமர்ந்தோம். அவர் வருவது தெரிந்ததும்.. முகத்தைச் சட்டென திருப்பிக் கொண்டு.. தமிழச்சியின் பேச்சைக் கேட்பது போல் பாவனை செய்தார் குஷ்பு. இருவரும் இந்தச் சந்திப்பை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்று எதிர்பார்த்த பார்வையாளர்களுக்கு குஷ்புவின் அந்தப் பாவனை அருவருப்பை ஊட்டியது. திரும்பி வணக்கம் சொல்லிவிட்டால்.. தானும் வணக்கம் சொல்லவேண்டும் என்கிற மனோநிலையில், தலைவர் திருமாவளவன் இரண்டு மூன்று முறை திரும்பிப் பார்த்தார். குஷ்பு திரும்பவே இல்லை. அந்த நேரத்து திருமா அவர்களின் உளவியல் மனவலி என்னை அறுத்தது.தங்கை தமிழச்சிக்குப் பிறகு. குஷ்பு அவர்கள் பேசச் சென்றார். தான் வெளியிட்ட நூல் பற்றியும், நூலாசிரியர் பற்றியும் பேசியதைவிட.. கடந்த ஆண்டில் அவர் ஏற்படுத்திய சர்ச்சை பற்றியே அதிகமாகப் பேசினார். பேச்சுக்கு இடையே, தோழர் திருமாவளவன் அவர்கள் இருக்கிற மேடையிலேயே நானும் நிற்கிறேன். இதில் நான் வெற்றிபெற்றுவிட்டதாகவே நினைக்கிறேன் என்று கர்வமாகக் கூறினார். அதற்குப் பிறகு அவர் பேசியதுதான் தங்கை கனிமொழி நக்கீரனில் சொல்லியிருப்பதைப் போல அநாகரிகத்தின் உச்சகட்டமாக இருந்தது. ''தோழர் திருமாவளவன் வந்தபோது நான் வணக்கம் வைக்கவில்லை.வணக்கம் வைக்கவில்லை என்பதற்காக அவரது தோழர்கள் அதற்கொரு வழக்குப் போட்டாலும் போட்டுவிடுவார்கள்.அதற்காக அவருக்கு ஒரு வணக்கம் வைத்துவிடுகிறேன்.''என்று சொல்லி, அவர்பக்கம் திரும்பி வணக்கம் வைப்பதாக இரு கைகளையும் கூப்பி...''தோழர் திருமா.. வணக்கம்'' என்று கூறிய முறை இருக்கிறதே... அது தலைவர் திருமாவை மட்டுமன்று... ஒட்டுமொத்தத் தமிழர்களையே. தன் காலுக்குக் கீழ்போட்டு மேல் நிற்பதான மமதையில் கூறியதாகவே இருந்தது. ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையாக, உலகத் தமிழர்களின் நல்லெண்ணமாக வளரும் தலைவர் திருமாவளவன் அவர்கள் வந்தபோது, குஷ்பு கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்தது குறித்தோ, அவரைப் பார்க்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டது குறித்தோ, இங்கு கவலையில்லை. அதுதான் அவருக்கு அவரது மனம் கற்றுக் கொடுத்த நாகரிகம் என்று விட்டுவிட்டோம். திரும்பிப் பார்க்காத அதே உறுதியில், வணக்கம் வைக்காத அதே திமிரில், மேடையில் வெளியிட்ட நூல்பற்றியும், நூலாசிரியர் பற்றியும் பேசாமல் எல்லாவற்றையும் மறந்து பெருந்தன்மையோடு மேடைக்கு வந்திருக்கும் ஒரு தலைவரை, வம்புக்கு இழுத்து வணக்கத்தைப் பிச்சை போடுவது போல் போட்டு, போட்டதோடு நில்லாமல், போடாவிட்டால் வழக்கு போடுவீர்கள் என்று, நக்கலான ஒரு சொல்லால் தலைவர் திருமாவை, தலைவர் திருமாவின் தலைமையின் கீழ் இயங்கும் இயக்கத்தை, அவரின் மீது உயிரையே வைத்திருக்கும் இலட்சோப இலட்சம் மக்களை ஏன் ஒட்டுமொத்தத் தமிழினத்தையே இழிவு செய்த அந்த அநாகரிகச் செயல்தான் என்னைச் சடக்கென எழவைத்து கண்ணுக்கெதிரே நடக்கும் மனித நேயமற்ற இந்தக் கொடுஞ்செயலுக்குக் கண்டனம் தெரிவிக்கத் தூண்டியது. தன்னைத் தமிழ்நாட்டின் கருத்துருவாக்கத் தலைவியாய் ஆக்கிக் காட்டுவதாக உறுதி கொடுத்தவர்களின் முன் ஒரு முறைக்குப் பலமுறையாக ஒத்திகை பார்த்த பிறகு இங்கு வந்து அரங்கேற்றப்பட்ட நாடகமாகவே அவரது உரையாடல்களும், உடல் மொழிகளும் அமைந்திருந்தன. அவை, நம் தமிழனத்திற்கான மிகப்பெரிய ஆபத்துகளாக அமைவன என்பதையும் உளவியல் ரீதியாக உணர்ந்தே மேடைக்கு உந்தப்பட்டேன். தலைவர் திருமாவளவனை அவமானப்படுத்திவிட்ட திருப்தியில், எழுந்துபோக முயன்றவரை, அமருங்கள். உங்களிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும் என்று கூறிவிட்டு, பேசத் தொடங்கினேன். இலக்கிய விழாவை இலக்கிய விழாவாகவே நடத்த வேண்டும் என்கிற நாகரிகத்தோடு நாங்கள் அனைவரும் பேசினோம். நீங்கள் அந்த மரபைவிட்டு வெளியே போய் அரசியல் பேசியதால்தான் நாங்களும் அரசியல் பேசவேண்டியிருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்க்கை மறுக்கப்பட்ட மக்களின் தலைவர் திருமாவளவன். மலமும் சிறுநீரும் கொடுத்து அவமானப்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசியல் கொடுக்க வந்த தலைவர் திருமாவளவன். ஒவ்வொரு நிமிடமும், பல பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் அவலநிலையை அதட்டிக் கேட்க வந்த தலைவர் திருமாவளவன். அவரை வென்றுவிட்டேன் என்று அகங்காரமாகப் பேசுகிறீர்கள். அவருக்கும் உங்களுக்கும் என்ன போரா நடந்தது?அதோடு இல்லாமல், தேவையில்லாமல் அவர் வருகிறபோது, சராசரி மனிதப் பண்பாடு கூட இல்லாமல் அவமரியாதை செய்துவிட்டு,. அதற்குப் பிறகு அவரைக் கூப்பிட்டு, இந்தா வணக்கம். என்று கேவலப்படுத்துகிற உரிமையை உங்களுக்கு யார் தந்தது? அப்படித்தான். பெரியார் திரைப்பட நூறாவது நாள் விழாவில், தங்கர்பச்சானின் ஒளிப்பதிவில் நடிக்காமல் போனதற்காக வருத்தப்படுகிறேன் என்று அழுது வழிந்தீர்கள்.அதற்கு முன்னதாக. செயா தொலைக்காட்சியில் கூண்டில் நிறுத்தி கேள்விகள் கேட்ட நிகழ்ச்சியில், நாற்பத்தைந்து நிமிடங்கள் தங்கர் பச்சானைப் பற்றியே பேசிவிட்டு, இறுதியாக நீங்கள் இயக்கும் படத்திற்குத் தங்கர்பச்சான் தான் ஒளிப்பதிவு செய்யவேண்டும் என்று உங்கள் தயாரிப்பாளர் கேட்டால், அதற்கு என்ன சொல்வீர்கள் என்று கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொன்னீர்கள்?Who are you? அவன் யார்? என்று கேட்டீர்கள்.ஏன் இப்படி, முரண்பாட்டின் முட்டையாக இருக்கிறீர்கள்?அவன் யார் என்கிறீர்கள்.அப்புறம்அவர் ஒளிப்பதிவில் நடிக்க முடியாததற்காக வருத்தப்படுகிறேன் என்கிறீர்கள். எங்கள் தலைவர் வருகிறபோது வணக்கம் வைக்க மாட்டேன் என்கிறீர்கள். அப்புறம் மேடைக்கு வந்து, வழக்கு போடுவீர்கள் என்பதற்காக வணக்கம் வைக்கிறேன் என்கிறீர்கள்.எங்கெங்கிருந்தோ பிழைக்க வந்தவர்களெல்லாம், இப்படி எங்கள் கலைஞர்களை, தலைவர்களை எப்படி வேண்டுமானாலும் கேலி பேசலாம். நக்கல் செய்யலாம். அவமானப் படுத்தலாம் என்கிற நிலையை எப்படி பொறுத்துக் கொள்வது? இந்த தமிழினம் ஏன் இப்படி அவலங்களுக்கு ஆளாகிறது?என்று என் ஆதங்கங்களைப் பதிவு செய்து, என் தம்பியின் மனைவி என்கிற முறையில் கூறுகிறேன். கருத்துகள் கூற அனைவருக்கும் உரிமையுண்டு. அதே நேரத்தில், எம் தலைவரை எம் இனத்தை அவமானப்படுத்த யாருக்கும் உரிமையில்லை என்று கூறிவிட்டு வந்து அமர்ந்தேன். அதற்குப் பிறகுதான் குஷ்பு எழுந்து சாமியாடத் தொடங்கினார். இதெல்லாம் கேக்கறீங்க, எங்கருத்துக்கு என்ன சொல்றீங்க? அன்னைக்கு நான் வச்ச அந்தக் கருத்துக்கு என்ன சொல்றீங்க?என்று ஆவேசப்பட்டு பேச...பார்வையாளர்கள் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்க..தலைவர் திருமா சென்று, குஷ்பு அவர்களைக் கொஞ்சம் ஒதுங்குங்கள், நான் பேசுகிறேன் என்று கூறி, தோழர்களை ஒற்றைச் சொல்லிலேயே அமைதிப்படுத்தி பேசத் தொடங்கினார். அவரது பேச்சிலும், உங்களின் கருத்துரிமையைப் பறிக்கும் உரிமை எங்களுக்கில்லை, அதே நேரத்தில் எங்களை புண்படுத்தும் உரிமையும் உங்களுக்கில்லை. ஒரு கருத்தை வைக்கும்போது அந்த இன மக்களின் மனநிலை உணர்ந்து பேசவேண்டும். அப்படிப் பேசாமல்...யார் இங்கே யோக்கியர்கள் என்று நீங்கள் பேசிய அந்தச் சொல்தான் மக்களைத் தன்னெழுச்சியாய் ஆத்திரப்பட வைத்தது. மற்றப்படி நாங்கள் பெண்களுக்கோ பெண்ணுரிமைக்கோ எதிரானவர்களல்ல.நாங்கள் பெரியாரின், அம்பேத்கரின் பிள்ளைகள் என்று பேசி முடித்தார். பேசி முடித்ததும், சமாதான முறையில் மறுபடியும் படம் எடுத்துக் கொண்டு, கூட்டம் கலைந்தது.ஆம். இதுதான் நடந்தது. இந்த இடத்தில், அறிவுமதியாகிய நான் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். தி.மு.க. பிறந்த 1949-இல்தான் நானும் பிறந்தேன். கொள்கையில் கற்பு கெடாத ஒரு தி.மு.க. செயலாளருக்கு மகனாகப் பிறந்தேன். எம் இனத்திற்குஎம் மொழிக்குஓர் இடர் வந்தால்... எதிர்த்து நில்என்று எனக்குச் சொல்லிக் கொடுத்தது...திராவிட இயக்கம்.தந்தை பெரியார்தலைவர் கலைஞர். அய்ந்து வயதுக்கு முன்னதாகவே, ஒரு சீர்திருத்தத் திருமண நாளன்று, தி.மு.க. கொடியேற்றும்போது நிறுத்துங்கள் சிவப்பு மேலே இருக்கிறது கறுப்பை மேலே வைத்துக் கட்டுங்கள் என்று சொன்னவன் நான். கலைஞர் கவிஞரே இல்லை என்று ஓர் எழுத்தாளர் எகத்தாளமாய் எழுதியபோது கொதித்து மறுப்புச் சொன்ன ஒரே பிள்ளை நான். இருவர் படத்தில் எம் தங்கையின் அம்மா அப்பாவை மணிரத்னம் கொச்சை செய்தபோது வலிவாங்கி எதிர்த்த ஒரே அண்ணன் நான். வயது சொல்லி எம் தலைவரை பார்ப்பணியம் ஓவ்வெடுக்கச் சொன்னபோது ஓங்கிக் குரல் கொடுத்தத் தொண்டன் நான். அப்படித்தான் என் கண்முன்பாகவே எம் உயிருக்குயிராக நேசிக்கும் தலைவர் திருமாவை ஒருவர் அவமானப்படுத்துகிறபோது பொறுத்துக்கொள்ள இயலாமல் போய் பதில் சொன்னேன். எம் அன்பான ஊடகங்களே! என் அன்பான உறவுகளே!இப்படிப்போய் எம் தலைவர் திருமாவின் வலிவாங்கி நான் பதில் சொன்னது நாகரிகமற்ற செயல் என்றால் மன்னியுங்கள். அந்த நாகரிகமற்ற செயலை நான் செய்து கொண்டேதான் இருப்பேன். இறுதிவரை பெரியாரின், அம்பேத்காரின் பிள்ளையாகவே இருப்பேன். இறுதிவரை கைநாட்டு மரபிலிருந்து எம்மைக் கையெழுத்து மரபிற்கு அழைத்து வந்த திராவிட இயக்கத்திற்கு நன்றி சொல்லிக் கொண்டே இருப்பேன். என்றும் எந்தக் குறுகிற வட்டத்திற்குள்ளும் சிக்கமாட்டேன். நான்.. உலகத் தமிழர்களின் செல்லப்பிள்ளை! -----------------நக்கீரனில் "பாவலர் அறிவுமதி" அவர்கள் 2.தோழர் அதிஅசுரன் அவர்கள் பாவலர் அறிவுமதி அவர்களுக்கு எழுதிய திறந்த மடல்: சென்னையில் ஆழி பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு (06.01.2008) விழாவில் நடந்த சம்பவங்களை அனைவரும் அறிந்திருப்பீர்கள். அதில் குஷ்பு அவர்கள் தோழர் திருமாவளவன் அவர்களுக்கு வணக்கம் சொல்லவில்லை என்பதை சாக்காக வைத்து தன் மனதிலுள்ள நஞ்சைக் கக்கியுள்ள அண்ணன் அறிவுமதி அவர்களுக்கு ஒரு திறந்த மடல். திரைத்துறையில் பார்ப்பன ஆதிக்கத்தை கேள்விக்குள்ளாக்கும் விதத்தில் பல இளைஞர்களை நல்ல இயக்குநர்களாக தமிழ் திரையுலகிற்குத் தந்துள்ளீர்கள். எண்ணற்ற திரைத்துறைக் கவிஞர்கள், இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் உங்களை அவர்களின் ஆண்தாயாக எண்ணிப் பெருமைப்படுவதையும் அறிந்திருக்கிறோம். நான் நிறைய தமிழ் திரைப்படங்கள் பார்ப்பவன். நீங்கள் பணியாற்றிய, பாடல்கள் எழுதிய படங்களையும் நிறைய பார்த்தவன். ஆனால் நீங்கள் ஒரு நல்ல கவிஞர், திரைப்பட இயக்குனர் என்ற அடையாளங்களிலல்லாமல் ஒரு பெரியார் தொண்டர் என்ற முறையில் தான் எம் போன்ற தோழர்களுக்கு முக்கியமான நபராக மாறினீர்கள். நீங்கள் எழுதிய நட்புக்காலத்தை நூற்றுக்கணக்கில் வாங்கி எமது நண்பர்களுக்கு வழங்கியிருக்கிறோம். சாதி மறுப்புத்திருமணங்களை வலியுறுத்தும் உங்களது பல கவிதைகளை – பெண்விடுதலை நோக்கிய உங்கள் கவிதைகளை ஆயிரக்கணக்கில் அச்சிட்டு காதலர்தினங்களிலும், மகளிர் தினங்களிலும் தென்மாவட்டங்களின் பேருந்து நிலையங்களிலும், இரயில் நிலையங்களிலும் பிரச்சாரம் செய்திருக்கிறோம். ஒட்டன்சத்திரத்தில் நாங்கள் நடத்திய காதலர் தின விழாவிலும் உங்களைப் பேசவைத்தோம். அந்த உரிமையில் எழுதுகிறேன். என்னதான் பெரியாரைப் பேசினாலும், பெரியார் தொண்டர்களோடு பழகினாலும் உங்களின் அடிமனத்திலுள்ள நச்சுக்கருத்துக்களை அவ்வப்போது வெளிப்படுத்தி விடுகிறீர்கள். திராவிடர் கழக, பெரியார் திராவிடர் கழகத் தலைவர்களையும், அவ்வமைப்பின் தோழர்களையும் நெருங்கிய நண்பர்களாக, உறவுகள் எனவும் அழைத்துக்கொண்டாலும் முருகனடிப்பொடி போல எங்கு போனாலும் முருகக்கடவுள் பிரச்சாரத்தை விட மறுக்கிறீர்கள். அய்யப்பசாமிக்கு மாலை போட்டுவிட்டு டாஸ்மாக்கில் தனிக்கிளாசில் தண்ணியடிக்கும் அய்யப்ப பக்தனுக்கும், கறுப்புச் சட்டைபோட்டுக்கொண்டு முருக வழிபாட்டை பிரச்சாரம் செய்யும் உங்களுக்கும் வேறு பாடு என்ன? உங்கள் தனிப்பட்ட , சொந்த விசயமாக வைத்துக் கொண்டால்கூடப் பரவாயில்லை. தலைவர் பிரபாகரனைப் பாடும் போதுகூட அந்த முருகனுக்கே நிகரானவன் எனப் பாடல் எழுதுவது தேவையா? பக்தி விசயத்தில் என்னத்தையோ சொல்லிவிட்டுப்போங்கள். ஆனால் சாதி ஒழிப்பு, பெண்விடுதலை போன்றவை தொடர்பாகக் கருத்துச்சொல்லும் பொழுது கொஞ்சம் யோசித்துப் பேசுங்கள். ஏனென்றால் அந்த இரண்டிலும் சரியாக இருப்பீர்கள் என நம்பித்தான் எம் போன்ற பல இளைஞர்கள் உங்களை எங்கள் இயக்க நிகழ்வுகளுக்கு அழைத்துக்கொண்டிருக்கிறோம். தி.க, பெரியார் தி.க என நாங்கள் பிளவுபட்டிருந்தாலும் இரு அமைப்புத் தோழர்களுமே உங்களை மதிப்பதற்குக் காரணம் சாதி ஒழிப்பு, பெண்விடுதலை பேசுபவர் என்பதால்தான். ஆனால் அண்மையில் ஆழி பதிப்பக விழாவில் போராளி குஷ்பு அவர்களை நோக்கி நீங்கள் பேசிய பேச்சு எங்கள் உள்ளங்களில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. உங்களைக் கோபப்படுத்தும் அளவுக்கு அவர் பேசியது ….. ''தோழர் திருமாவளவன் வந்தபோது நான் வணக்கம் வைக்கவில்லை. வணக்கம் வைக்கவில்லை என்பதற்காக அவரது தோழர்கள் அதற்கொரு வழக்குப் போட்டாலும் போட்டுவிடுவார்கள். அதற்காக அவருக்கு ஒரு வணக்கம் வைத்துவிடுகிறேன்.'' என்று சொல்லி, அவர்பக்கம் திரும்பி வணக்கம் வைப்பதாக இரு கைகளையும் கூப்பி... ''தோழர் திருமா.. வணக்கம்'' இதிலென்ன தவறு இருக்கிறது. இப்படி அவர் சொல்லாமல் இருந்திருந்தால் அவர் மீது வழக்கு போட்டிருக்கமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? இப்படி மலிவான விசயங்களுக்கெல்லாம் வழக்குப் போட்டவன்தானே தமிழன். வல்லமைதாராயோ படவிழாவில் கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார் என்பதற்காக - அது மிகப்பெரும் தவறு என்ற உயர்ந்த இலட்சியத்திற்காக வழக்குப் போட்டவர்கள்தானே உங்கள் உறவுகள், இரத்தங்கள்? உங்கள் தம்பியின் மனைவி என்ற உரிமையில் …..என்று பித்தலாட்ட வசனம் வேறு சொல்கிறீர்கள். அந்த உரிமையில் தம்பி வீட்டிற்கே சென்று சண்டைபோட்டிருக்கலாம். அந்த தவறை முறையாக புரியவைத்து குஷ்பு மூலம் அந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்க வைத்திருக்கலாம். ஒரு பெரியார் தொண்டன் அவ்வாறுதான் செய்திருப்பான். ஆனால் திட்டமிட்டு ஒரு கலகத்தை உருவாக்கவேண்டும், எப்படியாவது குஷ்பு அவர்களைப் பணியவைக்கவேண்டும், தம்பி தங்கர்பச்சான் மனம் குளிரவைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு வந்துள்ளீர்கள். அதனால்தான் குஷ்புவின் பேச்சை திருமாவளவன் அவர்களே கண்டுகொள்ளாதபோது நீங்கள் அவசர அவசரமாக மேடையேறி, கிடைத்தவாய்ப்பை நழுவவிடக்கூடாது என்ற வேகத்தில் மைக்கைப் பிடுங்கி, இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்க்கை மறுக்கப்பட்ட மக்களின் தலைவர் திருமாவளவன். மலமும் சிறுநீரும் கொடுத்து அவமானப்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசியல் கொடுக்க வந்த தலைவர் திருமாவளவன். ஒவ்வொரு நிமிடமும், பல பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் அவலநிலையை அதட்டிக் கேட்க வந்த தலைவர் திருமாவளவன்என முழங்கியுள்ளீர்கள். உங்கள் தம்பி சீமானின் பாஞ்சாலங்குறிச்சி படத்தில் ஒரு காட்சிவரும். மக்காச்சோளக்காட்டில் வடிவேலு அவர்களுடன் வரும் அவரது நண்பர் சோளக்கதிர்களைத் திருடுவார். தோட்டஉரிமையாளர் பார்த்துவிடுவார். திருடியவன் காதுசவ்வு கிழியும்வகையில் ஒரு அடி விழும். அடி வாங்கியன் தோட்ட உரிமையாளரைப் பார்த்து, யோவ் என்னய அடிச்சுட்டீல்ல… முடிஞ்சா எங்க அண்ணன் சிங்கத்தைத் தொட்டுப்பாருய்யா தெரியும் என வடிவேலுவை நோக்கி கையை நீட்டுவார். அப்படித்தான் அண்ணன் திருமா அவர்களை வைத்து நீங்கள் விளையாடி யிருக்கிறீர்கள். மலமும் சிறுநீரும் கொடுத்து அவமானப்படுத்தப்பட்ட மக்களின் தலைவர் என சொன்னீர்கள். திருச்சி திண்ணியத்தில் மலம் தின்ன வைக்கப்பட்ட மக்களுக்காக திருமாவளவன் அவர்கள் செய்ததென்ன? ஒரு பேரணி நடந்தது. அதன் பிறகு மலம் தின்ன வைத்தவன் வீட்டிலேயே விடுதலைச்சிறுத்தைகளுக்கு விருந்தும் நடந்தது. மறுக்கமுடியுமா? அந்த வழக்கில் வாதாடிய வழக்கறிஞர் தோழர் இரத்தினம் பல செய்திகளைச் சொல்லியுள்ளார். உங்களுக்கும் தெரியும். வெளிப்படையாக அதை நீங்கள் கண்டிக்கத்தயாரா? திண்டுக்கல் மாவட்டம் பள்ளபட்டி அருகேயுள்ள கவுண்டன்பட்டியில் சிறுநீர்குடிக்க வைக்கப்பட்ட கொடுமைக்கு விடுதலைச்சிறுத்தைகளின் எதிர்வினை என்ன? சொல்ல முடியுமா? சரி, அதெல்லாம் போகட்டும். கைநாட்டு மரபிலிருந்து கையெழுத்து மரபிற்கு எம்மை வளர்த்தது திராவிடஇயக்கம் என அடிக்கடி சொல்லிக்கொள்கிறீர்கள். அந்த இயக்கத்தின் தலைவர் பெரியார். அந்தப் பெரியார் தாழ்த்தப்பட்ட மக்களின் விரோதி என திருமா அவர்கள் ஆசிரியராக இருக்கும் தாய்மண் இதழில் தற்போது உங்களின் பாசமிகு தம்பியாக மாறியிருக்கும் இரவிக்குமார் அவர்கள் தொடர்ந்து எழுதினாரே! அப்போது உங்கள் வெளிப்படையான எதிர்வினை என்ன? மதுரையில் பெரியார் தாழ்த்தப்பட்டமக்களின் விரோதியா? என்ற தலைப்பில் தோழர் இரஜினி அவர்கள் ஒரு கருத்தரங்கம் ஏற்பாடு செய்திருந்தார். அதில் எனக்கு முதலில் பெரியாரைத் தான் தெரியும். அவர் மூலம் தான் அம்பேத்கரைத் தெரியும் என்றும் பெரியார் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் மட்டுமே என முழங்குபவர் ஆதித்தமிழர் பேரவையின் தலைவர் தோழர் அதியமான். உண்மையாகவே இந்து மத வர்ணாசிரமக் கொடுமையால், சாதிக்கொடுமைகளால் மிக அதிகமாகத் துன்பங்களை அனுபவிக்கும் அருந்ததியர் நிரம்பிய அமைப்பு ஆதித்தமிழர் பேரவை. சுமூகத்தில் எவனும் செய்யத்தயங்கும், யோசிக்கவே தயங்கும் மலமள்ளும் பணியை, சாக்கடை சுத்தப்படுத்தும் பணிகளை இன்றளவும் விடமுடியாமல் செய்து வரும் தோழர்களின் அமைப்பு. இரட்டைக்குவளை, இரட்டை இருக்கை, தெருவில் நடக்க இயலாமை, செருப்புபோட்டு நடக்க இயலாமை, கல்வி வேலைவாய்ப்புகளில் பங்குபெற இயலாமை போன்ற பல கொடுமைகளைச் சகித்துக்கொண்டு மீள வழியில்லாமல் உழைப்பவர்களின் அமைப்பு ஆதித்தமிழர் பேரவை. அதன் தலைவர் அதியமான். அவரை அந்தக் கருத்தரங்க மேடையிலேயே கொலைவெறியில் தாக்கவந்தார்கள் சிறுத்தைகள். சோடா பாட்டில்களால் அவரைக் குத்தவும் முயன்றனர். அங்கிருந்த ஆதித்தமிழர் பேரவை மற்றும் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் மேடையைச் சுற்றி நின்று காவல்துறை துறை உதவியுடன் தோழர் அதியமான் காப்பாற்றப்பட்டார். இறுதிவரை அவரைப் பேச விடவில்லை. மிகுந்த கூச்சல்குழப்பங்களுடன் மிரட்டல்களுடன் பெ.தி.க தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் மட்டும் உரையாற்றினார். பேசிவிட்டு தோழர்கள் புடைசூழ காவல்துறை அதைச்சுற்றி வளையம் அமைத்து அதன் பின்தான் தோழர் அதியமான் அவர்களும், உங்களை உயிராக மதிக்கும் அண்ணன் கொளத்தூர் மணி அவர்களும் மதுரையைவிட்டு வெளியேற முடிந்தது. அனைத்தும் வீடியோவில் பதிவாக உள்ளது. நீங்களும் பார்த்திருப்பீர்கள். உங்களுக்கும் வீடியோவை அனுப்பினோம். இச்சம்பவங்களுக்கு நீங்கள் செய்த வெளிப்படையான எதிர்வினை என்ன? இச்சம்பவங்களுக்கு தோழர் திருமா காரணமில்லை என வாதத்திற்கு வைத்துக்கொண்டாலும், முழுக்காரணமான சட்டமன்ற உறுப்பினர் இரவிக்குமார் அவர்களையாவது கண்டித்தீர்களா? எங்காவது அவர் பேசும் போது போய் மைக்கை புடுங்கியிருக்கியிருக்கிறீர்களா? இப்போதும் தமிழ்நாட்டில் கரடிச்சித்தூரில், கோவையில், திருச்சியில், விருதுநகர் மாவட்டத்தில் இன்னும் பல இடங்களில் ஆதித் தமிழர் பேரவைத் தோழர்கள் விடுதலைச்சிறுத்தைகளால் வெட்டப்பட்டுள்ளனர். சிறுத்தைகளால் பாலியல் வன்முறைக்கு ஆளாகியுள்ளனர். ஆதித் தமிழர் பேரவையின் கூட்டத்திற்கான சுவரொட்டியை விடுதலைச்சிறுத்தைகள் வசிக்கும் இடங்களில் ஒட்டியது மாபெரும் குற்றமாம். அதற்காக அருந்ததியர் சமுதாயத்தினர் வெட்டப்பட்டுள்ளனர். இதற்கெல்லாம் நீங்கள் தோழர் திருமா அவர்களை விமர்சனம் செய்ததுண்டா? எங்காவது ஒரு மேடையில் அவர் பேசும்போது மைக்கைப் பிடுங்கும் துணிச்சல் உண்டா? ( இப்போது திருமா அவர்களும் அண்ணன் கொளத்தூர் மணி அவர்களும் ஒரே மேடையில் தாழ்த்தப்பட்டோர் விடுதலைப் போராட்டங்களில் ஒன்றாக முழங்குகிறார்கள். வரவேற்க வேண்டிய மாற்றங்கள்தான். ) உங்கள் தலைவர் திருமா அவர்கள் எந்தக்கூட்டத்திற்குப் போனாலும் தாமதமாகவும் முக்கியமானவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதும் சுமார் நூறு தோழர்களுடன் நுழைந்து அந்த அரங்கங்களில் அதுவரை இருந்த இயல்பான சூழலை மாற்றி, யாரையும் பேசவிடாமல், யாரையும் கேட்கவும் விடாமல் திருமா அசைந்தாலும், மீசையை முறுக்கினாலும், தாடியைத் தடவினாலும் வாழ்க வாழ்க என முழக்கமிட்டு நிகழ்ச்சிகளைக் கெடுத்து வருகிறாரே உரிமையுடன் அதைத் திருத்தலாமே? எழவு வீட்டிற்குப் போனாலும் வாழ்க வாழ்க என முழங்கியதை வீடியோவில் பதிவுசெய்து வைத்துள்ளேன். பலநூற்றுக்கணக்கான கூட்டங்களுக்கு அவர் செல்லும் போது நடப்பது இதுதான். ஆதாரப்பூர்வமாக சொல்லஇயலும். உங்களை விமர்சனம் செய்யத் தொடங்கி அது தோழர் திருமா அவர்களை விமர்சிக்கும் மடலாக மாறிவிடக்கூடாது என்பதற்காக அந்தப் பட்டியலை இங்கு கூற விருப்பமில்லை. எந்த நிகழ்ச்சிக்குப் போவதாக இருந்தாலும் கூட்டம் தொடங்க குறித்த நேரத்தில் போகவேண்டும் என்ற நல்லபழக்கத்தை அவர் கடைபிடித்திருந்தால் ஆழிபதிப்பக விழாவில் இந்த சண்டையே வந்திருக்காது. குஷ்பு அவர்களை வம்பிழுக்க உங்களுக்கு வாய்ப்பும் கிடைத்திருக்காது. மேலும் நக்கீரன் இதழில், ஆடை அவிழ்ப்பவர்கள் எல்லாம் கற்பு பற்றி பேசும் கேடான நிலை வந்துவிட்டது எனவும் மலேசியாவில் தமிழன் கொடுமைப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் அங்கு போய் குத்தாட்டம் போட்டு வந்துள்ளீர்கள் எனவும் குஷ்பு மீது குற்றஞ்சாட்டி யுள்ளீர்கள். பஞ்சாபிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து தமிழர்களிடம் ஆடை அவிழ்த்துக் காட்டியே ஆக வேண்டும் என்னும் வெறியுடன் குஷ்பு வந்ததைப் போலல்லவா கூறுகிறீர்கள்? திரைத்துறையில் இருக்கும் நீங்கள் அதைச் சொல்லலாமா? இது நேர்மையற்ற குற்றச்சாட்டு என உங்களுக்கே தெரியாதா? உங்கள் தம்பி சீமானின் தம்பி பட விழாவில் சிங்கள நடிகை பூஜா ஒரு திருக்குறளைச் சொன்னாரே, பூஜா அவிழ்க்காத ஆடையா? நீயெல்லாம் திருக்குறளைச் சொல்லலாமா என அந்த மேடையில் மைக்கைப் படுங்க வேண்டியதுதானே? மேலும் திரைப்படங்களில் நடிகைகளின் ஆடைகளை மக்கள் விரும்புகிறார்கள் என்ற சாக்கில் அவிழ்ப்பவர்கள் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் தானே? குஷ்புவோ வேறு எந்த நடிகையுமோ இதற்கு எப்படிப் பொறுப்பாவர்கள்? சரி குஷ்பு ஆடை அவிழ்க்க சம்மதிக்கவில்லை என்றால் அப்படிப்பட்ட பாடல் காட்சிகள் ஆடையுடன்தான் வந்திருக்குமா? அவர் திரைத்துறையில் முன்னேற அவரது ஆடையைத் தான் அவிழ்த்தார். உங்களைப் போன்ற பாடலாசிரியர்கள், இயக்குநர்கள் அடுத்தவர் ஆடையையல்லவா அவிழ்க்கிறீர்கள். நீங்கள் பணியாற்றிய சிறைச்சாலையில் நடிகை தபு வின் உடலுக்கு முத்தத்தாலே சேலை நெய்யவில்லையா? நாணத்தாலோர் ஆடை சூடிக்கொள்ள வில்லையா? ஆற்றுநீரில் மோகன்லால் முழு ஆடையுடனும், தபு மட்டும் முக்கால் நிர்வாணத்துடனும் பாடும் காட்சி உங்கள் ஒத்துழைப்புடன்தானே படமாக்கப்பட்டது. அதற்கு திரைக்கதை வசனம் நீங்கள் தானே? ஊட்டி என்றால் குளிர்தான் உடனே மூளைக்கு எட்டும். உங்கள் பாடல் மூலம் தானே ஊட்டி சூடேற்றும் என்பதை உணர்ந்து கொண்டோம். இன்னும் எவ்வளவோ எடுத்துக்காட்டுக்களைக் கூறலாம். இப்படிப்பட்ட நீங்களெல்லாம் கற்பு பற்றி பேசலாம், குஷ்பு பேசக்கூடாதா? உங்களைப் போன்ற பாடலாசிரியர்களை விட, இயக்குநர்களை விட பலமடங்கு தகுதி போராளி குஷ்புவுக்கே உண்டு. மலேசியாவில் தமிழர்கள் கொடுமைப்படுத்தப்படும் பொழுது குத்தாட்டம் ஆடினீர்கள் எனச் சொல்லியுள்ளீர்கள். குஷ்பு மட்டும் போய் தனியாக ஆடினாரா? உங்கள் இளைய திலகம் பிரபும் தான் ஆடினார் என செய்திகள் உள்ளனவே? வாழ்த்துக்கள் பாடல் வெளியீட்டு விழாவில் அவரையும் கண்டித்திருக்கலாமே. ஏன் கண்டிக்கவில்லை? மலேசியாவில் தமிழர் கொடுமைப்படுத்தப்படுகிறார்களா? இல்லையா என்பது விவாதத்திற்குரியது. ஆனால் ஈழத்தில் … தமிழன் வாழவே முடியாத நிலை என்பதை நீங்களோ மனித உணர்வுள்ள எவனுமோ மறுக்க மாட்டான். அந்த ஈழப்பகுதிக்குச் சென்று வாழ்த்துக்கள் திரைப்படத்தின் பாடல் காட்சிகளை எடுத்துத்திரும்பினாரே சீமான், அவரைக் கேட்கவேண்டியது தானே. திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்திய உண்ணாநோன்பில் இருவரும் கலந்து கொண்டு பேசினீர்களே அப்போது சீமானிடம் இவ்வளவு கொடுமைகள் நடந்து கொண்டிருக்கும் இடத்திற்குச் சென்று காதல் காட்சிகளை படம்பிடிக்கிறாயே? நீயெல்லாம் ஈழத்தமிழர்களைப் பற்றிப் பேசலாமா? எனக் கேட்டு மைக்கை பிடுங்கியிருக்கவேண்டியது தானே? அதே விழாவில், குஷ்புவைப் பார்த்து, தங்கர்பச்சானை இழிவு படுத்தினாய். அவர் என் இனம். என் இரத்தம் என இரத்தபாசத்தைக் காட்டியுள்ளீர்கள். ஜெயா டி.வி நேர்காணலில் தங்கர் பச்சானைப் பற்றிக் கேட்டபோது, யார் அவன்? என குஷ்பு பதில் தந்தாராம். அதற்காக உங்கள் இரத்தம் கொதித்திருக்கிறது. நக்கீரன் இதழின் இணையப் பதிப்பில் மாறவர்மன் என்பவர் அது இரத்தபாசம் மட்டுமல்ல சாதிப்பாசமும்கூட. இருவரும் ஒரு சாதி என எழுதியுள்ளார். அப்படியெல்லாம் உங்களை நாங்கள் நினைக்கவில்லை. அதே சமயம்உங்கள் தங்கர்பச்சான் ஒருமுறை குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் பெரியாரை விட நான் அதிகம் சிந்திப்பவன் என திமிராகப் பேட்டி கொடுத்தானே மறந்துவிட்டீர்களா? பேட்டி கொடுத்து அடுத்த நாளே திருச்சியில் தமிழ்பாதுகாப்பு மாநாட்டில் நீங்களும் அவரும் இணைந்து பேசினீர்களே நினைவிருக்கிறதா? ஒரு பெரியார் தொண்டராக அந்த மேடையில் தம்பி என்ற உரிமையில் ஒரே அடியில் தங்கரின் காது சவ்வைக் கழித்திருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை? தங்கர் பச்சானை நோக்கி, யார் அவன்? எனக்கேட்ட ஒரே காரணத்திற்காகத் தான் குஷ்பு அவர்களை நாங்கள் போராளி குஷ்பு என்கிறோம். பெரியாரை எவன் வேண்டுமானாலும் கண்டபடி பேசலாம், பெரியார் கொள்கைகளை யார் வேண்டுமானாலும் வாய்க்குவந்தபடி விமர்சனம் செய்யலாம், யாருக்காகப் பெரியார் இறுதிவரை உழைத்தாரோ அந்த இனத்தையே பெரியாருக்கு எதிராகத் திசைதிருப்பி பார்ப்பான் காரியத்தை நிறைவேற்றலாம். பெரியார் கொள்கைகளுக்காக வாழ்நாள் முழுதும் உழைத்துக்கொண்டிருக்கும் தலைவர்களை மேடையிலேயே யார் வேண்டுமானாலும் தாக்கலாம், மோதிப்பார்ப்போம் என சவால் விடலாம், நேரடியாக மோத முடியாத பார்ப்பானெல்லாம் நம் தோழர்களைப் பயன்படுத்தி மோதிப்பார்க்கலாம். அப்போதெல்லாம் நீங்கள் வாயையும் கையையும் அடக்கிக்கொண்டு இருப்பீர்கள். பெரியார் கருத்தை ஆதரித்து குஷ்பு பேசினால் மட்டும் மேடையில் ஏறி மைக்கைப் பிடுங்கி வசனம் பேசுவீர்கள் என்றால் நீங்கள் பெரியாரைப் பேசுவதில், பெண்ணுரிமை பேசுவதில், சாதி ஒழிப்புப் பேசுவதில் ஏதோ உள்நோக்கம் - தவறான - இந்த இனத்திற்குக் கேடான உள்நோக்கம் இருப்பதாகத்தான் எமக்குத் தோன்றுகிறது. பெண்ணுரிமை குறித்து உங்களைப் பேச அழைத்த தோழர்களெல்லாம், இயக்கம் கடந்த மகளிரெல்லாம் உங்களை நோக்கி இதைவிடக் கடுமையான விமர்சனங்களை வைக்கத் தயாராக உள்ளனர். இனிமேல் அவர் பங்கேற்கும் விழாக்களுக்கு அது யார் நடத்தும் விழாவாக இருந்தாலும் எங்களை அழைக்காதீர்கள் என எம் வீட்டுப் பெண்கள் உறுதியாக இருக்கின்றனர். பதில் சொல்வதோ, இவனெல்லாம் யார் என்னைக் கேட்க என எம் கேள்விகளைப் புறந்தள்ளுவதோ உங்கள் விருப்பம். இப்படிக்கு, வெளிப்படையாக பதிலை எதிர்நோக்கும் தோழர்களில் ஒருவன் அதி அசுரன் இருவரின் கருத்துக்களையும் ஆழமாகப்படியுங்கள்.நாம் இன்னும் பயணிக்கும் பயணத்துக்கு சரியான இலக்கு எது என்பது புரியும். Posted by புரட்சியாளர் பெரியார் at 06:51 No comments: Labels: குஷ்பு -அறிவுமதி -அதி அசுரன் என் பழக்கங்கள் கேள்வி : தங்களைப் போல் 95 வயது வரையிலும் வாழ்வதற்கு என்ன செய்யவேண்டும்? பதில் : எப்போதும் ஆக்டிவாக (சுறுசுறுப்பாக) இருக்க வேண்டும். கேள்வி : இந்த வயதிலும், தாங்கள் பல மைல்கள் சுற்றுப் பயணம் செய்கிறீர்களே, உடல் நலம் பாதிக்காதா? பதில் : வயதிற்கும், இதற்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை. என்னைப் பொறுத்தவரை சும்மா இருக்கப் பிடிக்காது. சுற்றுப்பயணம் செய்தால் தான் நன்றாக இருக்கிறது. கேள்வி : எத்தனை மணி நேரம் தூங்குகிறீர்கள்? பதில் : சாதாரணமாக இரவு, 8, 9 மணிக்குத் தூங்கிவிடுவேன். பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சி-கள் இருந்தால், இரவு 11 மணிக்கு, 12 மணிக்கு மேல் தூங்குவேன். எப்படியும், 8 மணி நேரம் தூங்கிவிடுகிறேன். கேள்வி : தங்கள் உணவுப் பழக்கம் என்னென்ன? பதில் : எப்பொழுதும், காலை 6 மணிக்கு எழுந்துவிடுவேன். 8 மணிக்கு 2 இட்டிலி, ஒரு வாழைப்பழம் சாப்பிடுவேன். முன்பெல்லாம், 4, 3 வாழைப்பழங்கள் சாப்பிட முடிந்தது. ஆனால், இப்போது ஒரு பழத்திற்கு மேல் சாப்பிட முடியவில்லை. அதன் பிறகு, பார்வை-யாளர்களைச் சந்திப்பேன். இடையிடையே சிறிது காப்பி, பால் அருந்துவேன். மதியம் 12--1 மணிக்குள் ஒரு கரண்டி சாதம், சிறிதளவு மாமிசம், தயிர், குருமா, ஒரு வாழைப்பழம் இதுதான் ஆகாரம். மாமிசம் சாப்பிடாவிட்டால் அவ்வளவு திருப்திகரமாக இருக்காது. நிருபர் : மாமிசம் சாப்பிடுவதால் ஜீரண சக்தி பாதிக்கப்படவில்லையா? பதில் : என்னைப் பொறுத்தவரை, மற்ற உணவுப் பதார்த்தங்களைவிட மாமிசம் சாப்பிட்டால் ஜீரணமாகிவிடுகிறது. அதனால் எந்தவிதத் தொந்தரவும் கிடையாது. மாமிசம் இல்லாவிட்டால் தான் தொந்தரவு. இரவு 7 மணியிலிருந்து 8 மணிக்குள் 2 இட்லி, ஒரு வாழைப்பழம், ஒரு டம்ளர் பால் அத்துடன் சரி. காப்பியும் பாலும் தான் முக்கிய உணவு. கேள்வி : பொதுக்கூட்டங்கள், மற்ற நிகழ்ச்சிகள் உள்ள நாட்களில் என்ன செய்வீர்கள்? பதில் : பொதுக்கூட்டங்கள், இரவு 10-11 மணிக்கு முடிந்ததும் அதன் பின்பு தான் சாப்பிடுவேன். கேள்வி : ஒரு நாள் பொழுதை எப்படிக் கழிக்கிறீர்கள்? பதில் : முன்பெல்லாம் நிறையப் புத்தகங்கள் படிப்பேன்; எழுதுவேன். ஆனால் இப்போது படிக்கக் கஷ்டமாக இருக்கிறது. எழுதுவதற்குச் சலிப்பாக இருக்கிறது. யாராவது கட்டுரைகள் கேட்டால் எழுதித் தருவேன். அத்துடன் முன்பு மாதிரி மூளை தெளிவாக இல்லை. கஷ்டப்பட்டுச் சிந்திக்க வேண்டியிருக்கிறது. முன்பெல்லாம் ஒன்றைப் பற்றித் தொடர்ச்சியாக வரும். ஆனால் இப்பொழுது நினைவாற்றல் குறைந்து வருகிறது. கேள்வி : மது அருந்தும் பழக்கம் பற்றித் தங்கள் கருத்து என்ன? தங்களுடைய அனுப-வத்தை அறிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். பதில் : இதுநாள்வரை நான் மதுவை அருந்தியதேயில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை பலருக்கு வாங்கிக் கொடுத்து இருக்கிறேன். மது அருந்துவதால் கெடுதி இல்லை. அளவுக்கு மேல் போனால் தான் எதுவுமே கெடுதலே தவிர, அளவோடு இருந்தால் எந்தவிதக் கெடுதலும் இல்லை. 100-க்கு 90 பேர் அளவோடுதான் குடிக்கிறார்கள். கேள்வி : முன்பெல்லாம் மாலை நேரங்களில் கார் மூலம் உலாவப் போவீர்களே, இப்போது போவதுண்டா? பதில் : என்றைக்காவது ஒரு நாள் போவேன். முன்புபோல் இப்போது போக முடிவதில்லை. பொழுது போகவே கஷ்ட-மாகத்தான் இருக்கிறது. அப்படிப்பட்ட சமயங்களில் போவதுண்டு. கேள்வி : கிளர்ச்சி, போராட்டம் நடத்த வேண்டும் என்கிறீர்களே, அது எப்படி இருக்கும்? பதில் : என் உடல் வேண்டுமானால் தளர்ந்திருக்கலாம். ஆனால் நான் அவற்றில் நேரடியாகவே ஈடுபட நினைக்கிறேன். நான் என்ன சொல்லுகிறேனோ, அதை நானே முன்னின்று செய்தால் தானே நன்றாக இருக்கும்? ஒதுங்கிக் கொள்வது என்பது எனக்குப் பிடிக்காது. கேள்வி : ஒரு குறிப்பிட்ட இனத்தார் மீது தங்களுக்கு வெறுப்பு ஏற்படக் காரணம், தாங்கள் அரசியலில் ஈடுபட்ட சமயத்தில் முதல் முதலாக ஒரு விருந்தில் தாங்கள் அலட்சியமாக நடத்தப்பட்டது தான் என்று சொல்லப்-படுகிறதே, அதுதான் உண்மையா? பதில் : எனக்கு, யார் மீதும் வெறுப்புக் கிடையாது. நான் எதையும் லட்சியம் செய்யாமல், முரட்டுத்தனமாக யதேச்சையாகத் திரிந்தேன். அந்தச் சமயத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களும் சமுதாயத்தில் இருந்த மூடப்பழக்க வழங்கங்களும் தான் காரணமே தவிர, வேறு காரணம் எதுவுமில்லை. ஆனால், அந்தக் காலத்தில் விருந்துகளில் கூட நம்மை மிக இழிவாகவும், தரக்குறைவாகவும் நடத்தி ஒதுக்கியே வந்தார்கள். ----------"மாலை முரசு"-16.9.1973 நாளிதழுக்கு தந்தைபெரியார் அளித்த நேர்காணல் Posted by புரட்சியாளர் பெரியார் at 06:20 No comments: Labels: பெரியாரின் நேர்காணல் Thursday, March 20, 2008 இந்திய சமுதாயத்தில் ஜாதீ இந்தியாவில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் ஜாதீயம் நான்கு பிரிவுகளாக ஆரம்பமாயி-ருக்கிறது. நாளடைவில் ஜாதிப் பிரிவுகளின் எண்ணிக்கை கூடியிருக்கிறது. இன வேற்று-மையும், நிற வேறுபாடும், தொழில் வித்தியாசம் போன்றவை ஜாதீயம் ஏற்படுவதற்கு அடிப்-படைக் காரணங்களாக இருந்திருக்கின்றன. கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் ஜாதிகளின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக கூடியிருக்கிறது. பதினான்காம் நூற்றாண்டு முதல் ஜாதிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. நீக்குப் போக்கற்ற தன்மையும், இறுக்கமும் நாளடைவில் கூடியிருக்கிறது. தற்பொழுது, இந்திய சமுதாயத்தில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட ஜாதிப்பிரிவுகள் உள்ளன. இந்திய சமுதாயம்தான் உலகில் மிக அதிகமான பிளவுகளுடைய சமுதாயமாகும். ஒவ்வொரு ஜாதிப்பிரிவினரும் தனித்தனியான சமுதாயமாகச் செயல்படுகிறார்கள். ஒவ்வொரு ஜாதிப்பிரிவினரும் தங்களுடைய ஜாதிப்பிரிவுக்குள்ளேயே திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்த அகமண முறையால், ஒவ்வொரு ஜாதியினரும் தங்களுக்கென்று தனி ஒழுக்க நெறிகளையும், பழக்க வழக்கங்-களையும், சடங்குகளையும், சம்பிரதாயங்-களையும் ஏற்படுத்திக் கொண்டு விட்டார்கள். திருமண உறவை ஜாதிப்பிரிவுக்குள்ளேயே நடத்திக் கொள்வதால் ஜாதிப்பற்றும், வெறியும் மேலோங்கி நிற்கிறது. இந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்கு மாறியவர்களிடம் கூட ஜாதீய உணர்வு தொடர்ந்து நீடிக்கிறது. கிறித்தவ மதத்திற்கு மாறியவர்கள் கூட பார்ப்பன கிறித்துகள் என்றும், நாயர் கிறித்துவர் என்றும் கூறிக்கொண்டு பெருமைப்-பட்டுக் கொள்கிறார்கள். இசுலாமிற்கு மாறியவர்கள் கூட ராஜ்புத், முசுலீம், தியாகி முசுலீம் என்று சொல்லிப் பெருமைப்-படு-கிறார்கள். தென் இந்தியாவில் உயர் ஜாதிகளி-லிருந்து கிறித்துவ மதத்திற்கு மாறியவர்கள் தாழ்த்தப்பட்ட ஜாதிகளிலிருந்து கிறித்துவ மதத்திற்கு மாறியவர்களைச் சமமாக நடத்து-வதில்லை. அந்த அளவிற்கு, ஜாதிய உணர்வு இந்திய மக்களின் மனோநிலையை ஆட்டிப்-படைக்கிறது. ஜாதீய உணர்வு மக்களது ஒழுக்கத்தையும் நடத்தையையும் வெகுவாகப் பாதிக்கிறது. முதலாவதாக, தங்களுடைய ஜாதீய நலனைப் முக்கியமாகக் கருதும்படி செய்கிறது. ஜாதீய எல்லை-க்கு அப்பால் சிந்திக்காதவாறு எண்ணங்-களைக் கட்டுப்படுத்துகிறது. சமு-தாயத்-தின் பொது நலனிலும், முன்னேற்றத்-திலும் அக்கறை காட்டாமலிருக்கும்படி செய்து விடுகிறது. சக மனிதர்களை மனிதர்களாக நோக்காமல், உயர்வாகவோ அல்லது தாழ்வாகவோ நோக்கும்-படிச் செய்கிறது. பிற ஜாதீய மக்களைத் தேவையில்லாமல் சந்தேகத்துடன் நோக்கும்-படிச் செய்கிறது. ஜாதிப்படித்தட்டில் தன் ஜாதியை விடத் தாழ்ந்த படித்தட்டிலுள்ள மக்களை இழிவாக நடத்தும்படிச் செய்கிறது. சுருக்கமாகச் சொன்னால், ஜாதீய உணர்வு மனித உறவைக் கொச்சைப்படுத்துகிறது. சக மனிதர்களிடம் நியாயமில்லாமல் நடக்கும்-படிச் செய்கிறது. இதனால், பல ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் கூட்டாக ஒரு காரியத்தில் ஈடுபடும்போது, ஒற்றுமையின்மை நிலவுகிறது. உள்சண்டை நிலவுகிறது. ஜாதியினருக்கிடையே உள்ள பொறாமை உணர்வு ஒற்றுமைக்குக் கேடாக உள்ளது. ஜாதிப் போட்டியின் காரணமாக அரசியல், சமூக, பொருளாதாரச் செயல்பாடுகள் அனைத்தும் மந்தமாக நடைபெறுகின்றன. பல்வேறு ஜாதி மக்களிடையே நிலவும் போட்டியால், அதிக மனித சக்தி இப்போட்டி-யைச் சமாளிப்பதற்கே செலவாகிறது. பார்ப்பனப் புரோகிதர்கள் ஜாதீயத்திற்கு மதச் சாயம் பூசி, அதைக் கடைபிடிப்பது மதக் கடமை என்று பிரச்சாரம் செய்கிறார்கள். ஜாதீயத்தின் மூலமாக அவர்கள் பெரிதும் பயன-டைவதால், அவ்வாறு வியாக்யானம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஜாதீயத்தைப் பற்றி பல குழப்பமான எண்ணங்கள் மக்கள் மனதை ஆட்கொண்டி-ருக்-கிறது. பெரும்பான்மை மக்கள் ஜாதீயத்தின் தீய விளைவுகளை உணராமல் இருக்கிறார்கள். உயர்கல்வி பெற்றவர்கள் கூட ஜாதீயம் என்பது கடைப்பிடிக்க வேண்டியதா அல்லது ஒழிக்-கப்பட வேண்டியதா என்பது பற்றி அறிவுத் தெளிவற்றவர்களாக இருக்கிறார்கள். இந்திய சரித்திரத்தைக் கவனமாகப் படித்துப் பார்த்தால், இந்திய சமுதாயம் அரசி-யல் ரீதியாகவும், பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் தாழ்ந்த நிலையை அடைந்த-தற்கு ஜாதீயமே காரணமாக இருக்கிறது. இந்திய சமுதாயம் பல்வேறு ஜாதிகளாகப் பிரிந்ததால், அயலார் படையெடுப்புகளில் தோல்வி கண்டது. அயலார்களிடம் அடிமைப்-பட்டது. மேலும், ஜாதீயம் வேலைகளில் உயர்வு தாழ்வு கற்பித்த காரணத்தாலும், உழைப்பவர்-களுக்கு தகுந்த உரிமையும், கவுரவமும் அளிக்-காத காரணத்தாலும் பொருளாதார சீரழிவும் ஏற்பட்டிருக்கிறது. பெரும்பான்மை மக்களுக்குத் தங்களுடைய அறிவையும், ஆற்றலையும் வளர்த்துக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்படாத காரணத்தால், அறிவியல் துறைகளிலும் பின்தங்கி, பெரும்-பான்மை மக்களின் மனித சக்தி, சமுதாயத்தின் வளத்தைப் பெருக்குவதற்கும், அறிவியல் வளர்ச்சிக் காரியங்களுக்கும் கிட்டவில்லை. ஒரு சமுதாயத்தின் மக்கள் ஒன்றுகூடி, ஒற்றுமையாக இணைந்து செயல்பட்டால் முன்னேற்றம் அடைவதற்கான சாத்தியக்கூறு-கள் அதிகமாகிறது. சமுதாயத்தின் ஒழுக்க-நெறிகள் அனைவருக்கும் சம உரிமைகள் அளிக்கும் பட்சத்தில் மனிதசக்தி வீணாவது குறைகிறது. சம உரிமை அளிக்காத பட்சத்தில் மனித சக்தி வீணாவது அதிகமாகி விடுகிறது. கடந்த சில நூற்றாண்டுகளில், இந்திய சமுதாயத்தில் பல நல்ல சமுதாய மாற்றங்கள் நடந்திருக்-கின்றன. பதினெட்டாம் நூற்றாண்-டில் இந்து சமுதாயத்தில் ஜாதியின் பெயரால் கொடுமைகள் கடுமையாகவும், கொடூர-மாகவும் இருந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டில், ஆங்கி-லேயர்-களின் ஆட்சி இந்திய சமுதாயத்தில் நல்ல பல சமூக மாற்றங்களை ஏற்படுத்தியது. கல்வி பரவலாக்கப்பட்டது சமூக மாற்றத்-திற்கு உதவியது. அனைத்து மக்களும் தங்களு-டைய சாதிக்குரிய வேலைகளைச் செய்யாமல், வேறு தொழில்களை அல்லது வேலைகளை மேற்கொள்ள வாய்ப்பளித்தது. சுதந்திரம் அடைந்தவுடன் இந்திய அரசு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதி மக்களின் உயர்விற்கான காரியங்களில் கவனம் செலுத்தியது. கல்வியி-லும், பொருளாதாரத்திலும் பின்தங்கியிருந்த சாதி மக்களை கல்வியிலும், பொருளாதாரத்-திலும் உயர்த்த பல நடவடிக்கைகள் எடுத்தன. இந் நடவடிக்கைகள் பல சமூக மாற்றங்களை ஏற்படுத்தின. இதுதவிர, தொழில் வளர்ச்சி, நகர்ப்புற வளர்ச்சி, போக்குவரத்து சாதனங்களின் வளர்ச்சி போன்றவைகளின் பலனாக பல்வேறு ஜாதி மக்களும் நெருங்கிப் பழக வாய்ப்பு ஏற்பட்டன. ஒவ்வொரு ஜாதியினரும் பிற சாதியினரைப் பற்றிக் கொண்டிருந்த தப்-பெண்ணங்-கள் நீங்கின. இம்மாற்றங்களால், ஜாதியின் அடிப்படையில் நிகழ்ந்து கொண்டி-ருந்த கொடுமைகள் குறைந்தன. மனிதன் இயற்கையில் சமூக வாழ்க்கை வாழ விரும்புகிறவன் என்பது மனோதத்துவர்களின் கருத்து. சக மனிதர்களுடன் இணக்கமாக வாழ மனிதன் பழக்கப்படுத்த வேண்டியதில்லை. மனிதனிடம் இத்திறன் இயற்கையாகவே இருக்-கிறது. உலக மக்கள் அனைவரும் சமத்துவ கருத்தை ஏற்று, சக மனிதர்களுடன் இணக்க-மாக வாழத் திறன் உடையவர்கள். இந்திய மக்களும் சமத்துவ கருத்துகளை ஏற்கும் திறன் படைத்தவர்கள்தான். நம்நாட்டில் இந்து மதமும், ஜாதீயமும் தான் சமத்துவ கருத்துகளை ஏற்பதற்குத் தடைகளாக இருக்கின்றன. ஜாதீயத்தைப் பற்றி சரித்திர அறிஞர், அர்னால்ட் டாயின்பீ தன்னுடைய சரித்திர ஆய்வு என்ற புத்தகத்தில் ஜாதீயம் சமூகத்தின் பெரிய தீய சக்தியாக உருவாகும் வாய்ப்போடு இருக்கிறது; ஜாதீயம் மதத்தின் சம்மதத்தையும், அங்கீகாரத்தையும் பெற்றவுடன் அதனுடைய தீயவிளைவுகள் மிகவும் பேருரு நிலைக்கு வளர்ந்து விடுகிறது என்கிறார். அவர் விமர்-சனம் செய்ததுபோல், ஜாதீயம் இந்திய சமுதாயத்தை இழிவான நிலைக்கு இட்டுச் செல்லும் பயங்கரவாதியாகச் செயல்படுகிறது. உண்மையான மதத்திறன் குறிக்கோள் சக மனிதர்களிடம் அன்பு செலுத்தவும், சமுதாய நலனுக்கும், உயர்வுக்கும் உழைக்கும் ஆர்வத்-திற்குத் தூண்டுகோலாகச் செயல்படுவதாகும் எனப்படுகிறது. மனித சமுதாய நலனுக்குத் தன்னுடைய சக்தியை சந்தோஷமாகவும், இலவசமாகவும் அர்ப்பணிக்கக்கூடிய மனோநி-லையைக் கொண்ட சுதந்திரமான, பொறுப்-பான நபர்களை உருவாக்குவது தான் உண்மை-யான மதத்தின் இலக்கு என்று புகழ்பெற்ற விஞ்ஞானி அல்பெர்ட் அய்ன்ஸ்டைன் சொல்கிறார். மதம் சம்பந்தமான விளக்கங்களை ஒப்புக் கொண்டால், இந்து மதம் உண்மை-யான மதம் அல்ல. இந்து மதத்துறவி விவேகானந்தர் இந்து மதத்தின் இக்குறைபாட்டை உணர்ந்து ஜாதீயத்தைக் கடுமையாகக் கண்டனம் செய்-தார். உலகில் எந்த மதமும், தன்னுடைய மத நம்பிக்கையாளர்களை, இந்து மதம் கொடு-மைப்-படுத்துவது போல் செய்வதில்லை என்கிறார். இதற்கு நிவாரணமும் சொன்னார். இந்து மதம், இஸ்லாம் மதத்தின் சமத்துவ கொள்கையையும், கிறிஸ்துவமதத்தின் தொண்டு மனப்பான்மையையும் உள்வாங்கிக் கிரகித்துக் கொள்ள வேண்டும் என்றார். இந்து மதம் அவ்வாறு செய்யாவிட்டால், பிழைக்-காது என்று எச்சரித்தார். ஜாதீயத்தின் தன்மை வலிமை இழந்து கொண்டே போகிறது. ஆனால் ஜாதி என்ற குழு உணர்வு வலிமை பெற்றுவிட்டது. இப்போக்கு கட்டுப்படுத்தப் படாவிட்டால் சாதிச் சண்டைகள் பெருகி விடும். பொருளா-தார நிலை உயர்வால் மட்டும் ஜாதீய உணர்வை வலுவிழக்கவோ, சாகடிக்கவோ இயலாது என்பதுதான். மனமாற்றம் மூலமாகவே ஜாதீய உணர்வைப் போக்க முடியும். மனமாற்றம் நடைபெற மக்களிடையே விழிப்புணர்ச்சி உண்டாக்குவதுடன், ஜாதீயத்-தை பல்வேறு முனைகளில் தாக்க வேண்டும். ஜாதீயத்தை நிலைநாட்டும் அனைத்து அமைப்புகளையும் அழிக்க வேண்டும். ஜாதீயம் சம்பந்தமான அறிவுபூர்வமான விவாதங்களை ஊக்குவிக்க வேண்டும். ஜாதீயத்தை ஒழிக்க வேண்டியதின் காரணங்களை வெகுஜன ஊடகங்கள் மூலமாகத் தெளிவாக விளக்க வேண்டும். ஜாதி மறுப்புத் திருமணங்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஏனெனில், அது ஜாதீயத்தை ஒழிக்க நல்ல கருவியாகும்.அரசியல் கட்சிகள் ஜாதிப் பிரச்சினையைத் தொடவும், தலையிடவும் விரும்பவில்லை. பல அரசியல் கட்சிகள் ஜாதீயம் முக்கியமற்ற பிரச்சினை என்று கருதுகின்றன. சில அரசியல் கட்சிகள், ஜாதீயம் ஒரு சிறு சமூகப் பிரச்சினை என்று சொல்லித் தப்பித்துக் கொள்கின்றன. அனைத்து அரசியல் கட்சி-களும் ஜாதியப் பிரச்சினையில் தலையிடத் தயாராய் இல்லை. உண்மையில், பல அரசியல் தலைவர்கள் ஜாதியமைப்பை தங்களுடைய செயல்பாடு-களுக்கு வசதியாகக் கருதுகின்றனர். சாதி உணர்வைத் தூண்டி தேர்தல்களில் எளிதாக வெற்றிபெற முடிவதால், ஜாதியமைப்பை வசதியாகக் கருதுகின்றனர். ஜாதி அமைப்பிலிருந்து வெளிவருபவர்களுக்கு, அரசு சமூக பாதுகாப்பு அளிக்கவேண்டும். சாதீய கட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்களை சமூக பிரதிஷ்டம் செய்தல், சமூகத்திலிருந்து விலக்கல் போன்ற நியாயமற்ற செயல்பாடுகள் சட்டப்படி கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகக் கருதவேண்டும் என்று டாக்டர் அம்பேத்கர் கருத்துத் தெரிவித்துள்ளார். அவர் கூறிய கருத்துகள் ஆழ்ந்து சிந்திக்கப்-பட வேண்டியவை. ஜாதிக் கட்டுப்பாடு-களுக்குக் கட்டுப்பட மறுப்பவர்களை சமூக பிரதிஷ்டம் செய்து, துன்பப்படுத்தும் செயல்பாடுகள் தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகக் கருதப்-பட வேண்டும். அவற்றைச் செயல்படுத்தும் ஜாதீயத் தலைவர்கள்மீது சட்டப்படி நட-வடிக்கை எடுக்க வேண்டும். அய்ரோப்பாவின் சமூக முன்னேற்றத்தைப் பார்த்தால், மேற்கு அய்ரோப்பாவில் கி.பி.14-ஆம் நூற்றாண்டு தொடங்கி 17ஆம் நூற்-றாண்டு வரையிலான காலகட்டத்தில் அறிவி-யல் மறுமலர்ச்சி அல்லது புத்துணர்வு ஏற்பட்டிருக்-கிறது. பதினாறாம் நூற்றாண்டி-லிருந்து 17ஆம் நூற்றாண்டுக் கால கட்டத்தில் பிரபுத்துவ மதிப்பீடுகள் முன்னேற்றத்திற்குத் தடைகளாக இருப்பதை உணர்ந்தார்கள். உடன் அம்மதிப்பீடுகளை நீக்கிக் கொண்டார்-கள். சமத்துவக் கொள்கையை ஏற்றுக் கொண்டார்கள். சமத்துவத்தின் அடிப்-படையில் சமூக அமைப்பையும், ஒழுங்கையும் மாற்றிக் கொண்டார்கள். அவர்கள் மாற்றம் செய்து கொண்டது போல், நாம் சமத்துவமின்மையை நிலை-நாட்டும் நம்பிக்கைகளையும், பழக்க வழக்-கங்களையும் ஒழிக்கவேண்டும். சம உரிமை-யையும், சம வாய்ப்பை அளிக்கும் அனைத்து மதிப்பீடுகளையும் செயல்படுத்த வேண்டும். ஜாதீயத்தை மேன்மைப்படுத்தும் பல நம்பிக்-கைகளையும், பழக்க வழக்கங்களையும் ஒட்டு மொத்தமாக மாற்றுவதன் மூலமே, நாம் ஜாதீயத்தின் பிடியிலிருந்து விடுபட முடியும். நம்முடைய சமுதாயத்தில் பல ஜாதிகளைச் சார்ந்த மக்களுக்கிடையேயான திருமணங்களை எளிதாகப் பிரபலப்படுத்தி விடலாம். இது அமெரிக்க அய்க்கிய நாட்டில் அல்லது தென் ஆப்ரிக்காவில் இரு இன மக்களிடையே (வெள்ளை, கருப்பு என்ற இரு நிறத்தவரிடையே) திருமணங்களைப் பிரபலப்படுத்துவது போல் கடினமான காரியமல்ல. நம்முடைய சமுதாயத்தில் பல்வேறு ஜாதியினருக்கிடையே திருமணங்களைப் பிரபலப்படுத்துதல் மிக எளிதானது. ஏனெனில், புறத்தோற்றத்தைப் பார்த்தோ, தோலின் நிறத்தைப் பார்த்தோ, தலை மயிரின் தன்மையைப் பார்த்தோ ஒருவரின் ஜாதியைச் சொல்ல இயலாது. ஆகவே, சமத்துவ மனப்பான்மையை நன்கு பரவலாக்கினால், பல்வேறு ஜாதிகளை ஒன்றாக இணைத்து, நம்முடைய சமுதாயத்தை சாதியற்ற சமுதாயமாக மாற்றுவது மிக எளிதான காரியமாகும்.
விழுப்புரம் அருகே பாமக மாவட்ட துணைத்தலைவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த பாதிராபுலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதித்யன். இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட துணைத் தலைவராக பொறுப்பில் இருந்தார். நேற்று வெளியே சென்று விட்டு இரவு 10 மணி அளவில் கும்பகோணம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் பனையபுரத்திலிருந்து கப்பியாம்புலியூர் கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த அடையாளம் தெரியாத இரண்டுக்கும் மேற்பட்ட நபர்கள் ஆதித்யனை வழிமறித்து கழுத்து, மார்பு உள்ளிட்ட இடங்களில் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே ஆதித்யன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இச்சம்பவத்தை அறிந்த விக்கிரவாண்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவரின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா தீவிர விசாரணை மேற்கொண்டார். குற்றவாளிகளைப் பிடிக்க விழுப்புரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையில் நான்கு தனிப்படைகள் அனைத்து மோப்பநாய் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஆதித்யனுக்கும், அவரது பங்காளி உறவு முறை கொண்ட நபர்கள் ஒருசிலருக்கும் நீண்ட நாட்களாக பகை இருந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. இதன் காரணத்தினாலேயே கூலிப்படையை ஏவி ஆதித்யன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இலங்கை கடற்படையினரால் செப்-11 அதிகாலை மட்டக்களப்புக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல முயன்ற 85 பேரை கைது செய்தனர். இதில் 60 ஆண்கள், 14 பெண்கள் மற்றும் 11 குழந்தைகள் இருந்தனர். இவர்கள் சென்ற உள்ளூர் மீன்பிடி இழுவை படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மட்டக்களப்பு, திருகோணமலை, மூதூர், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் மடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் திருகோணமலை துறைமுக போலீஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். அதேவேளை, மொஹத்திவரம் கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் மூலம் 85 நபர்களை படகு மூலம் வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சித்த ஐவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது. கடந்த சில மாதங்களாக கடல் வழியாக சட்டவிரோதமாக இடம்பெயர முயன்ற பலரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். முன்னதாக ஜூன் 15 ஆம் தேதி, கிழக்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​படகு மூலம் இடம்பெயர முயன்ற மேலும் 64 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஊட்டி, தமிழ்நாடு : நீலகிரியில் உள்ள ஊட்டி மிகவும் பிரபலமான மலைவாசஸ்தலமாகும். தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, ஊட்டி ஏரி ஆகியவை இங்கு பிரபலமான இடங்கள். கேரளா : கடவுளின் சொந்த நாடு என்று வர்ணிக்கப்படும் கேரளா பல தேனிலவு ஜோடிகளை ஈர்க்கிறது. காரணம் ஒரு கலாச்சார கட்டிடம், கோவில், ஆறு, ஏரி என நீர் மற்றும் பசுமையால் சூழப்பட்டதாக இருக்கலாம். கூர்க், கர்நாடகா : கூர்க் இந்தியாவின் ஸ்காட்லாந்து என்று அழைக்கப்படுகிறது. ஆரஞ்சு தோப்பும் காபியின் நறுமணமும் தேனிலவு கொண்டாடும் அனைவரையும் கவர்கிறது. கோவா : உலகின் பல நாடுகளில் இருந்து தம்பதிகள் தங்கள் தேனிலவுக்கு இங்கு வருகிறார்கள். அதன் கடற்கரைகள், இயற்கை அழகு மற்றும் மிதமான காலநிலை ஆகியவற்றுடன், கோவா பல நிகழ்வுகளை நடத்துகிறது. ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீர் : வாழ்நாள் முழுதும் உங்களின் ஹனிமூன் நாட்களை நினைவுப்படுத்தும் விதத்தில் இயற்கை அமைந்துள்ள பள்ளத்தாக்குகள், ஏரிகள், வானைந்தொடும் பனி மலைகள் என்று பார்க்கும் இடமெல்லாம் அழகு நிரம்பி வழிகிறது. நைனிடால், உத்தரகண்ட் : இந்தியாவின் ரொமான்டிக்கான மலைப்பகுதி. அழகான ஏரிகள், இயற்கை சூழல், படகு சவாரி மற்றும் வானிலை ஆகியவை மனதைக் கவரும். ஜெய்சல்மர், ராஜஸ்தான்: பழைய கால சூழலில் ராயலான முறையில் உள்ள ஜெய்சல்மர் யானை, ஒட்டக சவாரி மற்றும் வரலாற்று பின்னணியுடன் கோட்டைகள் என்று பார்ப்பதற்கு அத்தனை அழகுடன் காட்சியளிக்கிறது. சிம்லா, இமாச்சல பிரதேசம் : சிம்லா நீண்ட காலமாக தேனிலவு செல்வோர் முதலில் தேர்வு செய்யும் இடமாக இருந்து வருகிறது. இங்குள்ள குளிர்ச்சியான வானிலை அனைவரையும் எளிதில் கவர்ந்துவிடுகிறது. லட்சத்தீவுகள் : ஒரு சிறிய யூனியன் பிரதேசமாக இருந்தாலும், கடற்கரைகள் மற்றும் காட்டேஜ்கள் இங்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. டார்ஜிலிங், மேற்கு வங்காளம் : மிகவும் குளிர்ந்த காலநிலையைக் கொண்ட டார்ஜிலிங், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் மிதமான காலநிலை காரணமாக திருமணமான தம்பதிகளால் விரும்பப்படுகிறது.
திருவண்ணாமலை கார்த்திகை தீப திருநாளில் பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்லும் வசதிக்காக கூடுதலாக 3 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா வரும் 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் அக்கோயிலில் கார்த்திகை மகா தீபம் டிசம்பர் 6-ம் தேதி ஏற்றப்படுகிறது. தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த கார்த்திகை தீபத்தை காண வருகை தருவார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் கார்த்திகை தீப திருவிழா எளிமையாக நடந்தது. இந்நிலையில் இந்தாண்டு டிசம்பர் 6-ம் தேதி மகா தீபமும், டிசம்பர் 7-ம் தேதி பெளர்ணமியும் வருவதால் சுமார் 40 லட்சம் பேர் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி பக்தர்கள் வந்து செல்ல வசதியாக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்ட உள்ளன. குறிப்பாக, கோயம்பேடு, தாம்பரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ஆரணி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கூடுதலாக 3 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Microsoft Office நிரல்கள், Microsoft Outlook, Word மற்றும் Excel, Office 2007 இல் இருந்து மெனுவிற்குப் பதிலாக வழிசெலுத்தல் ரிப்பனைப் பயன்படுத்துகின்றன. இது அதற்கு முன் தரநிலையாக இருந்த கீழ்தோன்றும் மெனுக்களுக்குப் பதிலாக புலப்படும் பொத்தான்களை உங்களுக்கு வழங்குகிறது. ஒருவரின் விருப்பத்தைப் பொருட்படுத்தாமல், ஒரு வழி அல்லது வேறு, மைக்ரோசாப்ட் நீங்கள் அவர்களின் தயாரிப்புகளை எவ்வாறு வழிநடத்த விரும்புகிறது. ஆனால் அவுட்லுக் 2013 இல் வழிசெலுத்தல் ரிப்பனை மறைக்க முடியும், இது நீங்கள் நிரலைப் பயன்படுத்த வேண்டிய உருப்படிகளைக் கண்டறிவதை கடினமாக்கும். இது தற்செயலாக அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்டிருந்தாலும், ரிப்பன் எல்லா நேரத்திலும் காண்பிக்கப்படும் வகையில் உங்கள் அமைப்புகளை மாற்ற விரும்புவதை நீங்கள் காணலாம். அதிர்ஷ்டவசமாக இது ஒரு சில விரைவான படிகளைப் பயன்படுத்தி சாத்தியமாகும். அவுட்லுக் 2013 இல் நேவிகேஷனல் ரிப்பனைக் காட்டு ரிப்பன் மறைக்கப்பட்டிருந்தாலும், சாளரத்தின் மேலே உள்ள தாவல்களில் ஒன்றைக் கிளிக் செய்வதன் மூலம் மெனுவில் உள்ள பொத்தான்களை நீங்கள் இன்னும் அணுகலாம், பின்னர் அவற்றை மறைக்க தாவலை மீண்டும் கிளிக் செய்யவும். ஆனால் இந்த டுடோரியல் உங்கள் அமைப்புகளை எவ்வாறு சரிசெய்வது என்பதைக் காண்பிக்கும், இதனால் ரிப்பன் எப்போதும் சாளரத்தின் மேல் காட்டப்படும். படி 1: Outlook 2013ஐத் திறக்கவும். படி 2: ரிப்பனை விரிவாக்க சாளரத்தின் மேல் உள்ள தாவல்களில் ஒன்றைக் கிளிக் செய்யவும். படி 3: ரிப்பனின் வலது பக்கத்தில் உள்ள வெற்று இடத்தில் வலது கிளிக் செய்து, பின்னர் கிளிக் செய்யவும் ரிப்பனை சுருக்கவும் தேர்வுக்குறியை அழித்து, அவுட்லுக் 2013 ஐ உள்ளமைக்க, உங்கள் ரிப்பன் எப்போதும் காட்டப்படும். Outlook 2013 புதிய செய்திகளை அடிக்கடி பார்க்க வேண்டுமா? உங்கள் அனுப்புதல் மற்றும் பெறுதல் அமைப்புகளை எவ்வாறு சரிசெய்வது என்பதை இங்கே அறிக.
அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தில் இருந்து விலகிய 10 கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுயாதீன எம்.பிக்கள் குழு தீர்மானித்துள்ளது. பிரதமருடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இதனைத் தெரிவித்துள்ளார். - Advertisement - நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு எந்தவொரு அமைச்சுக்களையும் ஏற்காமல் ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, பாராளுமன்றத்தில் விரைவில் இடைக்கால வரவு-செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டதாவும் கம்பன்பில தெரிவித்தார்.