text
stringlengths
101
471k
எழுத்தாளரும் கல்குதிரை இதழின் ஆசிரியருமான கோணங்கியிடம் அரூ குழு நடத்திய நேர்காணல். அவரது எழுத்துமுறை, எழுத்தில் அவர் மேற்கொண்ட பரிசோதனை முயற்சிகள், தமிழில் அறிவியல் புனைவு, கல்குதிரை துவங்கிய தருணம், பிரமிள், பயணங்கள் – இப்படிப் பல புள்ளிகளைத் தொட்டுச் செல்கிறது உரையாடல். இதைச் சாத்தியப்படுத்திய நண்பர் ஸ்ரீதர் ரங்கராஜுக்கும், கேள்விகள் தயாரிப்பில் உதவிய நண்பர்கள் கணேஷ் பாபுவுக்கும் கே.பாலமுருகனுக்கும் நன்றி. கோணங்கியின் கலை என்பது என்ன? சூலாகும் விண்மீன்கள் ஒன்றை ஒன்று மோந்துகொள்ளும் மையலின் பால்விதிதான் என் கலை. இதுவரையிலான படைப்புகளைத் திரும்பிப் பார்க்கையில், உங்கள் எழுத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக நினைக்கிறீர்கள்? எப்படியெல்லாம் அது உருமாறியுள்ளது? ஆரம்ப கால எழுத்து ஊரின் குரல்வளையின் சொல்லி எழுத்து. அதற்குப் பின் இன்றுவரை வந்ததெல்லாம் மொழிக்குள் மறைந்து தோன்றும் புராதனக் கதைசொல்லியின் மொழி எழுத்து. மொழி எழுத்துக்கதைகள் அந்தப் புராதன நாடோடிக் கதைசொல்லி தன் கழுதையுடன் கொண்டுவந்திருக்கும் மொழி அபிதானத்தின் கிளைக்கவைகளாகப் பிரிந்து செல்லும் புதிர்களால் பன்மையைக் கைப்பற்றிவிடுகின்றன. மதினிமார்கள் தொகுப்பில் ஆதிவிருட்சம், பாழ் போன்ற இரண்டு கதைகள் இப்பொழுது எழுதும் கதைகளுக்கு அப்பொழுதே மொழியில் உதித்த மகரமீன். இதைச் சித்தன்னவாசல் ஓவியத்திலும் கண்டேன். கொல்லனின் ஆறு பெண்மக்கள் தொகுப்பில் மீண்டும் ஆண்டாளின் தெருக்களில், அப்பாவின் குகையிலிருக்கிறேன் போன்ற கதைகள் இன்றைய மொழிக்கதைகளுக்கு ஆதாரக்கோடுகளாய் முன்பே அமைந்துவிட்டவை. சொல்கதைக்கும் மொழிகதைக்கும் இடையில் பலவெளிகள் கனவுப்புனைகதைகளாக உருவெடுத்துள்ளன. பட்டுப்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம் என்ற முழுத்தொகுதியையும் இதற்கு உதாரணமாகச் சுட்டலாம். தமிழின் சமகால முக்கிய ஆளுமைகள் உங்கள் எழுத்து பற்றிக் கூறும்போது, உங்களின் ஆரம்ப கால எழுத்துகளையே சிறந்த ஆக்கங்கள் என்று குறிப்பிடுவதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? மனிதர்களே பங்குகொள்ளும் சொல்லி எழுத்து போதாமையாக உள்ளது. அவ்வகைமையான கதைகள் கதையின் பால்விதியை அடைவதில்லை. மொழியின்றிச் சொல்லி எழுத்து உயிர்க்குலப் பன்மையை எட்டுவதில்லை. மனிதர்கள் எவரும் பங்குகொள்வதாகக் கதைகள் சொல்லப்படவில்லை முதலில். அப்போதே நாம் கிளம்பி வந்த சுமேரியத் தொன்மத்தின் மூலத்தாய் தியாமெத்தின் யாக்கையில் வரையப்பட்டுள்ள புள்ளி உருவங்கள் கோடுகளாகப் பாய்ந்து விலங்குகளாக மனிதனுக்கு முந்தைய கதை உருவங்களாக எழுதப்பட்டுவிட்டதால் விலங்கு உருவாக்க நிலையே உலகின் முதல் கதை. அதிலிருந்தே புராதனக் கதைசொல்லிகள் மொழி கதைக்குள் தோன்றி மனிதர்களுக்குக் கதைபோட்டு மறைகிறார்கள். உங்கள் கதைகளின் மூலம் தமிழ் நாட்டார் மரபில் பயின்றுவரும் ஆழ்படிமங்களும் (Archtypes) தொன்மங்களும் (Myths) மறுவரையறை செய்யப்பட்டுத் தத்தம் இயல்பு வடிவிலிருந்து வாசகனின் கற்பனையில் மேலும் விரிவான வடிவத்திற்கு நகர்வதை உணர முடிகிறது. உங்கள் படைப்பில் இதைத் திட்டமிட்டு நிகழ்த்துகிறீர்களா? “பித்தோகரஸ் கூறிய அனைத்தும் நமது சிலம்பில் அரங்கேற்றுக்காதையில் இளங்கோவடிகளால் முன்பே கூறப்பட்டுள்ளது. ” கலையில் திட்டமிட்டு எதையும் நிகழ்த்தயியலாது. பெருங்கடலை ஒட்டிவந்த மூ இன மாலுமிகள் தொன்முது காலத்தில் எச்சங்களைத் தேடிவந்த கோடிநாடு மணல் கண்டமாய் இன்றுளது. மூ மாலுமியிடம் மாயன் சுவடிகளும் செங்கோண் தரைச்செலவு நூலுமிருந்ததில் இவர்களும் ஊழியால் அலையும் கதா நரம்பாடிகள் என்றது இசைக்கருவியான கோடு. அதன் நரம்புகள் கீழே உதிர்ந்துகிடந்தன முதுவாய் பாணரின் தொன்மங்களாக. கடகோணிகழ்வுக்கு முன் தப்பியிருந்த மூ இனம் பக்தியற்ற முரட்டு மூதாய்களாக எஞ்சியிருந்தனர் கடல்விதியாய். இந்த மூ இனம் நாம் என்று விளக்க வேண்டியதில்லைதானே? இன்றைய நாவலான பாழியில் மூதாய்களின் நாக்கில் தானிய ஏடுகளும் தேவதாசிகளின் ரத்தாம்பரப் புஸ்தகமும் உள்ளது. நாட்டார் மரபுக்கு ஏகலைவனின் வேட புராண ஏடு உளது. கானல்வரி பாட்டுக்குள் நமது கதைமரபாக உள சிலப்பதிகாரத்தின் கடல்கோள் நிகழ்வு மறைந்துள்ளது. த நாவலின் கடைசி அத்தியாயமான காலரா ரயிலுக்கு முந்தைய அத்தியாயத்தின் தலைப்பு திருப்புநடுவணம் கமாரா. கமாரா என்பது காவேரிபூம்பட்டினம். இதில் நகரும் புனைவுப்பாம்பின் குறுக்குவெட்டுத்தோற்றத்தில் கடல்சிலம்பை உள்ளது. கடல் ஊழியே நமக்குக் கதை மரபாக உளது. கதா நரம்பாடிகள் ஒவ்வொருவரும் நவீனப் புனைகதையாளர்களே. சிலப்பதிகாரம் என்ற செவ்வியல் கலைக்குள் நாட்டார் கதைமரபுகள் மறைந்துள்ளன. அத்தனை மூங்கில் துளைக்கருவிகளும் நாட்டார் மரபிசையிலிருந்தும் மாடு மேய்ப்பவனின் வீசும் நீண்ட புல்லாங்குழலிருந்தும் முல்லைத்தீம்பாணியை அடைந்திருக்கின்றன. நட்சத்திரங்களின் மூலம் வரப்போகும் பேரிடரை அகுதாகவா ’சுழலும் சக்கரங்கள்’ குறுநாவலின் மூலமும் மூடனின் நாட்குறிப்புகள் எனும் நெடுங்கதையின் மூலமும் (தி கிரேட் கான்டோ எர்த்குவாக்) முன்னுணர்ந்ததைப் போல இளங்கோவடிகள் கடல்கோணிகழ்வைக் கானல்வரியில் முன்னுணர்ந்துவிடுகிறார். ஹாருகி முரகாமிக்கு அகுதாகவா மூலப்படிமமாவதைப் போல நமக்கு இளங்கோவடிகள் கடல்கோணிகழ்வுகள் தொன்மத்தின் ஆழத்தில் கதைமரபாகவும் இசைமரபாகவும் கடல் அணங்காகவும் மாதவியின் செங்கோட்டு யாழின் லயமலரானது மொழிகதையாகவே வரிப்பாடலில் தோன்றும் இடமுறைத் திரிபை (anticlockwise) நமது ராசிவட்டத்தைக் கிரேக்கத்திலிருந்து மூ மாலுமிகள் திரும்பியபோது கூட வந்த பித்தோகரஸ் எடுத்துச்செல்கிறார். நம் இசை போல் புதிய இசையை வகுத்தார். பித்தோகரஸ் கூறிய அனைத்தும் நமது சிலம்பில் அரங்கேற்றுக்காதையில் இளங்கோவடிகளால் முன்பே கூறப்பட்டுள்ளது. இசையும் கதைமரபில் ஒன்றுகலந்திருக்கும் முன்னுணர்தல் கானல்வரிப் பாடலிலும் இடமுறைத் திரிபு அனைத்து கலைகளுக்கும் உலகளாவிய மரபைக் கொடுத்துவிடுகிறது. எனவே நாட்டார் தொன்மங்களும் செவ்வியல் தொன்மங்களும் ஒன்றுகலந்திருப்பது மூத்த மொழியான தமிழ், கிரேக்கம் போன்ற மூத்த மொழிகள் விசும்பின் கைவறுநரம்பில் ஒன்றுகலந்துவிடுகின்றன. உங்களின் படைப்புகளில் எவையெல்லாம் அற்புத யதார்த்தக் கதைகள், கனவுப் புனைகதைகள், பின் நவீனத்துவக் கதைகள், பரிசோதனைக் கதைகள் என எண்ணுகிறீர்கள்? நவீனப் புனைகதைகளுக்கு இப்படியான வகைப்பாடுகள் இனி தேவையிருக்காது. ஒவ்வொரு கதையும் பச்சோந்தி உடலெடுத்து நிலவெளித் தோற்றங்களை மொழியின் அகப்பரப்பில் பல்வேறு நிறங்களாகக் கதை தன்னைப் பகிர்ந்துகொள்கிறது. மாயத்தோற்றங்களின் துயரார்ந்த கன்னிகளின் காலடிகளுடன் ஒடிந்த கலப்பை ஒன்றைச் சுற்றி கண் தெரியாத மண்புழு மோகினி ஆட்டத்துடன் சேர்ந்து வளைந்து வளைந்து ஒவ்வொரு திணையில் இருந்தும் உயிர்பெறுகிறது தழும்புகள் சிவந்த அணங்கு நிலம் எனும் குறுநாவல். இதற்குள் முனிவம் ஒன்றில் யூதர்களின் சிவப்பு நிற சாளரத்தை நெருங்காமலும் நீலத்தில் பயணப்பட்டிருக்க வேண்டுமென்கிற விதி செபூலா இனத்து யூத ஆரோனின் கவசத்திலிருந்த 18 ஜன்னல்களைப் பற்றிய கதைகளையும் சொல்லியை வெறுத்துப்போன இசாகா பழங்குடியின் பழமையானபூமி பச்சை நிறமாயிருக்க தங்கையான தீனா மயிற்பீலிகளில் முகங்களை வரைந்து நெஞ்சிலிருந்து தோகை விரித்து நிற்கிறாள். பெண்ணால் எழுதப்பட்ட இக்குறுநாவல் துயர் மிகுந்த கதைப்பாடலுக்கான குருதியின் ரகசிய உரையாடல்கள் உரைநடைக்கு நவீன மரபாக மொழி தன் கால்களுக்குத் தரை தேடி ஒவ்வொரு நிலமாக அலைந்து திரியும் தனிப்பாடலின் விதி புனைகதைக்கும் உண்டுதானே. பலகன்னிகளைப் போர்த்தியுள்ள கூந்தலால் நெய்யப்பட்ட மதினிமார்கள் கதையே இப்பொழுது எழுதி வெளிவராத அயோனிஜா சிறுகதைக்கு மரபுத் தொன்மங்களின் மண்குரல்வளை பாட்டியிடமிருந்து கதை வெளியாகிறது. சிறுகதைக்கே நோபல் பரிசு பெற்ற பாட்டி ஆலிஸ் மன்றோவும் சாத்தூர் நரிமார்க் வாய்ப்பொடி புகையிலையால் கரகரத்துப் போன என் பாட்டியின் புகையிலைக்குரல் வாசனையும் எனக்குக் கதை மரபு இல்லையா. அவள் சேலையில் முடிந்து வைத்த பறங்கிப்புகையிலை விதைகளின் பாதைகளில் என் புனைவின் அத்தனை வாசனையும் 72 பெயர்களில் எழுதிய பறங்கித் தாத்தா பெர்னாண்டோ பெசோவாவின் ’மன உளைவின் புத்தகம்’ பழைய கப்பலாய் அசைந்து பெசோவாவின் நிழல் மெலிதாகப் பரவுகிற யாவினதும் மங்கிய தென்றல் ஒரு போதும் வாழ்வதற்கு துணிவு கொண்டிருக்கவில்லை. முத்துப்பட்டணத்திலும் கொற்கையிலும் அந்தக் கப்பலில் வந்து நிற்கிறார் பெசோவா யாவினதும் ஊமை மூச்சு உணர்தற்கு விளைவு கொண்டிருக்கவில்லை. யாவினது வீண் முனகல்கள் எண்ணிப் பார்க்க விருப்பம் கொண்டிருக்கவில்லை. பெருநீர்ச்சுழிகளினுள்ளாகும் சோம்பல்கதி தவிர்க்க முடியாதபடி உன்னை அடையவிருக்கிறது. வழுக்கலான சரிவுகளின் அடிவாரம் உனக்கான இடமாக அமையப் பெற்றுள்ளது. நிழல்களினுள்ளாக அல்லது ஒளிகளின்னுள்ளாக செல் என்று பெசோவா இன்னும் பலராகக் கருத்த பாய்மரத்தில் கருங்கடல் கிளியாகவும் மாறியிருந்தார். ஒவ்வொரு கதை உருவாகும் சூழலிலும் சமகால வேர்களின் ஊடாகத் தென்கடல் முத்து வாணிபத்தின் கலையின் தரம் நிர்ணயிக்கும் தசமக் கணிதப் பலகை ஜான் பெர்ணான்டோ மச்சாடோ போர்ச்சுக்கீசியத் தந்தைக்கும் பரதவத் தாய்க்கும் பிறந்த கருப்புக் காசாது பாஷை பேசும் முத்து வணிகனின் கையில் உள்ளது. அதைத் தேடி மானாவாரி மனிதர்கள் பஞ்சத்தில் உப்பு வெளிக்குச் சென்றார்கள். நவீனப் புனைகதைக்கு உப்பு ஓடைகள் புதிய வெளியைக் கொடுத்தன எனக்கு. முத்தின் தொல்லுயிர் நவீனக்கதையாகப் பித்தமொழியாகவே தமிழில் வெளிப்படும். இந்தக் குறுநாவல் தழும்புகள் சிவந்த அணங்கு நிலம் யூத வெளியேற்றத்தில் முன்பே மலபாரில் கரை ஏறியோர்க்குச் சேரமான் பெருமாள் கொடுத்த கல்விளக்கு யூதர்களின் சினகாக் ஆலயத்தில் கல்வெட்டு எழுத்துடன் சுடரே துலங்கி எழுதியதுதான் இந்தக் குறுநாவல். மண்சிலம்பை சிறுகதையையும் ’இறந்து கொண்டிருக்கும் சிறுமியின் கற்சாவி’ சிறுகதையையும் உணர்ந்து வாசித்தவர்கள் உணர முடியும். பச்சைநிற மர ஜன்னல், ரேகை பதிந்த சாளரம், பியானோத்தெரு ஜன்னலிருந்து எழுதுவோன் மரபில் தீப்பந்தம் செந்தீ படர நவநவ வேடமிட்ட மோகினியின் தண்யங்களின் ஒளியில் மோனத்தின் கலை நம் நாட்டார் கதைகளிலிருந்து இழைகளை வசப்படுத்தி நவீன மந்திரக்கதைகளாக இயற்றுவதற்குக் கீழ்க்கண்ட கதைகள் இனியான உரைநடைக்கு முன்கண்ட தொன்மங்களின் உரை கல்லாகத்தான் தொடர்ந்து கொண்டிருக்கும். சமகால ஓட்டமும் புனைவும் தொன்மமும் மொழியோடு பித்தமாகக் கலந்து புனைவில் கரைவதற்கு இசையைக் கதையாக மாற்றிப் படைத்த சிலப்பதிகாரம் மனித பயங்கள் நிராசைகள் தாகம் எல்லாம் புனைவின் அட்டவணையில் இடம்மாற்றிக் கோக்கப்பட்ட நிராகரிக்கப்பட்ட பாத்திரங்களின் மெளனங்கள் விளிம்புகளிலிருந்து புனைவு வேகத்தில் இப்புதியப் பரிசோதனைக் கதைகளை வந்தடைகின்றன. நவீனப்புனைவின்பதம் கீறித்தான் ஆகவேண்டும் நிலம். கூட்டாகப் புதைந்துபோன நம் காளைகளோடு விவசாய நாகரித்தின் நூறு கல்தானியங்களில் எம் ஆன்மா உள்ளது. உழவு மாடுகளின் எலும்புத்துகள்களிலிருந்து உயிருருவேறி வரும் ’புலிக்குகை நாயனம்’ கதையையும் ’கண்ணாடியில் மிதக்கும் ரசவாதி’ சிறுகதையையும் சிவனை சிவை என்ற இசைப் பெண்ணாக்கிய மோன இழை சிறுகதையின் இனியான நவீனத்தொன்மமாக அதீத உணர்கதைப் பனுவலாக ஊழின் இயல்களாக இச்சிறுகதைகள் உருவேறியவை. எம்.வி.வெங்கட்ராமின் ’நித்ய கன்னி’ நாவல் அதீதப் புராணிக விலங்காக எனக்குப்படுவதால் அதன் புதிய ஸ்பரிசத்தில் இருந்து யாரும் தப்ப முடியாது. ’நித்ய கன்னி’ நவீன மரபாகப்படுவதால் ’திறந்த விழிகளோடு தூங்கும் ஸ்திரீகள்’ சிறுகதையும் புதுமைப்பித்தனின் துன்பக்கேணியின் இருட்டுக்குள் நீந்தும் மீனாக என் புனைகதைகளின் அலை வேகம் பிஜித்தீவின் கரும்புத் தோட்டத்திலே எட்டையபுர சுப்பையாவின் துயரக்காற்று நவீனப் புனைகதைக்கு மரபாகப் பாடுகவிதையும் உள்ளது என்பதையும் ஆறாம் திருமுறையில் மயிலின் அண்ணாந்த வான்மழை அகவலும் புதிய உரைநடைக்கான மெய்ப்பாட்டியலாகப் பரிணாமம் அடைந்திருக்கிறது. உடுகணப்பேழையை ஏந்தி வரும் உலகவறவியாக மணிமேகலையை அறிவன் தேயத்தாரின் வான் இயற்பியல் திடம்படு மெய்ஞானத்திலிருந்து இனியான நவீனப் புனைகதைகளுக்கான மெய்ப்பாட்டியலாகக் காண்கிறேன். உலகவறவியின் உடுகணப்பேழையிலிருந்து எடுத்த ஒரு நத்தைச் சுரியலுக்குள் விண்மீன்கள் சுற்றுவதால் நத்தைக்கூடெனும் கேலக்ஸியைச் சிறுகதையாக்கினேன். பிரமிளின் கண்ணாடியுள்ளிருந்து கவிதை, நீலம் சிறுகதை, நட்சத்திர வாசி படைப்பில் இருந்தும் பிரமிளை ஓர் அலையும் சாயையாகக் கொண்டு ’நட்சத்திரம் உதிர்ந்த மந்திரச் சிமிழ்’ சிறுகதையை எழுதினேன் புதிய புனைவுப் பரப்பில். ’உப்புக் கத்தியில் மறையும் சிறுத்தை’ கம்போடியா அரண்மனையில் காயடிக்கப்பட்ட உச்ச ஸ்தாயி இசைப்பாலகர்களின் கொம்புக் குழல்களின் இசையில் இருந்து துவங்கி கூவாகத்தில் அரவாண் கடபலியில் குருஷேத்திர தேர் சக்கரத்தில் கண்ணாடிப் பாம்புக் கைவளையல்களை உடைத்து அழுகளத்தில் குருதியும் கண்ணாடித் துண்டுகளும் புனைவோடு கலக்கும் திரு நங்கைகளை புராதனக் கதைப்புனைவை விலங்குக் கதைகளின் வெவ்வேறு உருக்களாக இடம்மாற்றிப் புனைவு உடல் மேல் தைத்திருக்கிறேன். மரணமுகமுடி அணிந்த வண்ணத்துப் பூச்சியை மஞ்சள் அலி கதாபாத்திரத்தின் மேல் புதைத்துப் பூமியின் நிறங்களாக புனை கதையை உறுமாற்றி திருநங்கையரின் ஒற்றை நிறத்தைப் பல்லுயிராய்ப் புனைந்திருக்கிறேன். ’48 கோடி வார்த்தைகளின் மரணம்’ நவீன இலக்கியச் சூழலின் மீதான விமர்சனமாகக் குறுக்கு வெட்டுத்தோற்றம் கனவுப் பாம்பாக மாறியிருக்கிறது. ’நகுலன் இறந்துவிட்ட பின்னும் ஒலிநாடா ஓடிக்கொண்டிருக்கிறது’ சிறுகதை நகுலன் கல்குதிரை சிறப்பிதழ் நிகழ்ந்த காலத்தில் நகுலன் வீட்டில் வைத்து கவுடியார் கிழக்கில் கால்ஃப்லிங்ஸ் வியூவில் உள்ள விளையாட்டு மைதானத்திலும் அன்றைய கேரளாவின் வேலையில்லா பட்டதாரிகள் நடத்தும் கள்ளுக்கடை மேஜையிலும் காலையில் இறக்கும் மதுரக்கள்ளு வர சில மணிநேரம் தாமதமானதில் பெட்டிக்கடையில் வாங்கிய தாளில் சில பக்கங்கள் நான் சொல்லச் சொல்ல ஜாங்கோ சரவணன் என்ற மதுரை ஓவியனால் நான்கு நாட்களில் எழுதப்பட்டது. நகுலன் இறந்துவிட்ட பின்னும் ஒலி நாடா ஓடிக்கொண்டிருக்கும் இக்கதையை நவீனச்சிறுகதைச் சூழல் பற்றிக்கொண்டிருக்கிறது இன்றும். பொம்மைகள் உடைபடும் நகரம் சிறுகதை அமெரிக்க யுத்த விமாங்கள் 1001 அரேபிய இரவுகளின் கதைத் தொன்ம நகரமான பாக்தாத்தைத் தாக்கியபோது எழுதப்பட்ட சிறுகதை. நீல நிறக் குதிரைகள் வட இந்தியாவில் திரிந்தபோது இரும்புப் புகை மண்டும் ரூர்கேலா நகரத்தின் அழுக்கு லாட்ஜ் அறையில் வைத்து தனிமையான துயர் வீசிய இரவில் எழுதிய கதை. சபிக்கப்பட்ட அணில் சிறுகதை அன்றைய சென்னை வாழ்வின் தங்குவதற்கு அறைஅறையாய் இரவில் தலை சாய்க்க முடியாத கலைஞனின் துயர் தாங்கி அலைந்தபோது எழுதிய சிறுகதை. ஒவ்வொரு கதைக்குப் பின்னும் பல்வேறு கதை இரவுகள் அரேபிய விளக்குகளோடு ஸிரசாத்தும் துன்னிய சாத்தும் மரணத்தைத் தள்ளிப்போடும் புதிர்க் கதைகளைச் சொல்லி இருளில் மறைகிறார்கள். உங்கள் எழுத்து முறையைத் “தானியங்கி எழுத்துமுறை” (Automatic narration) எனக் கூறப்படுவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? தானியங்கி எழுத்துமுறையில் அறிவியல் புனைவை நிகழ்த்த இயலுமா? தானியங்கி எழுத்து முறை என் சிறுகதைகளில் சிலவேளை தோன்றி வரைந்து மறைகிறது. என் கதைகள் சிலவற்றிற்குக் கனவு எடிட்டராக அமையும்போது தானியங்கியும் கனவில் தோன்றி மறைகிறான். அவனை நான் பார்த்ததில்லை. எழுதிக்கொண்டிருக்கும் காகிதத்திலிருந்து தலை நிமிரும்போது என் உருவம் சிறிது கணம் எழுதும் கணம் மறைந்து விரல்களுக்கு இடையில் ரேடியம் நிப் மையோட்டத்தில் எழுதிக்கொண்டிருக்கிறது. தானியங்கி என்பவன் அரூபமாக வந்து எழுத்தாளனின் சுயத்தை மறைவுமை பூசி அழித்துவிடுகிறான். அவ்வளவுதான். சங்கரதாஸ் சுவாமிகளுக்குப் பின் உங்கள் தாத்தா மதுரகவி பாஸ்கரதாஸும் பாய்ஸ் கம்பெனி துவங்கி 50 ஆண்டுகள் இயங்கி இருக்கிறார். தாத்தாவிடம் பெற்றதிலிருந்து உங்கள் சிறுகதைகளுக்குள் நாடகத்தின் அடிப்படை இழைகள் தொடர்கின்றனவா? மதுரை என்பது பெரிய நாடக நிலவெளியாக விரிவுகொண்டிருக்கும் நாடகத்திற்கான கபாடபுர வாசிகளாகத்தான் நாமும் இருக்கிறோம். ஒரு நொடி அபிநயத்தின் சோகம் மறைந்துபோன நடிகை கமலவேணி, சிவபாக்கியம் கும்பகோணம் பாலாமணி எக்ஸ்பிரஸ் ரயிலில் நாம் எல்லோரும்தான் நாடக நடிகைகளோடும் விதூசகர்களோடும் பயணித்துக் கொண்டிருக்கிறோம். தேரோட்டி மகன் நாடகத்தை எழுதியவர் மணிக்கொடி எழுத்தாளர் பி.எஸ்.ராமையா. அக்காலத்தின் பிரபல நாடக நடிகரான எஸ்.வி.சகஸ்ரநாமம் நடத்திவந்த சேவாஸ்டேஜ் நாடகக்குழுவிற்காக பி.எஸ்.ராமையா எழுதிய பல நாடகங்களில் ஒன்றுதான் தேரோட்டி மகன். சேவாஸ்டேஜ் நாடகக்குழுவினரால் மிகவும் வெற்றிகரமாக மேடையேற்றப்பட்ட தேரோட்டி மகன் நாடகத்தில் சகாதேவனாகச் சிறிய பாத்திரத்தில் நடித்தவர் கவிஞர் எஸ்.வைத்தீஸ்வரன். தேரோட்டிமகன் நாடகத்தைக் கலையரசு சொர்ணலிங்கம் இலங்கையில் மேடையேற்றியபொழுது, அவர் இந்த நாடகத்தில் வெவ்வேறு பாத்திரங்களில் மாறிமாறி நடித்ததாக அறிகிறோம். நானும் கோவில்பட்டி எழுத்தாளர்களும் தேரோட்டி மகன் நாடகத்தில் நடித்தோம். மதுரையில் என்னுடன் நடித்த சிறுகதை எழுத்தாளர்கள் ச.தமிழ்செல்வன், உதயசங்கர், மூ. அப்பணசாமி, திடவை பொன்னுச்சாமி. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தில் இணைந்திருந்த காலத்தில் நான் சிருஷ்டிக் கலைக்குழுவில் நடிகனாகவும் இருந்தேன். தேவதச்சன் எழுதிய ‘தலைவரின் மரணம்’ நாடகத்திலும் ஆண்டன் செகாவின் ‘பச்சோந்தி’ நாடகத்திலும் நடித்தேன். ‘மாயாண்டிக் கொத்தனின் ரஸமட்டம்’ என் சிறுகதையை நாடகமாக்கி அதில் மாயாண்டிக் கொத்தனாக மாறி மெட்ராஸ் மீது ரஸமட்டம் வைத்துப் பார்த்து ஏழாவது மாடிப்பில்லரிலிருந்து வாஸ்து சரியில்லையென்று அழிவு வரப்போகிறது என்று ரஸமட்டம் பேசுகிறது. இங்கு நான் சொல்ல வந்தது எஸ்.வி.சகஸ்ரநாமம் அவர்களிடம் 20 நாட்கள் நாடகப் பயிற்சி பெற்று மதுரை செளராஷ்ட்ரா பள்ளி மைதானத்தில் அரங்கேற்றினோம். அன்று இரவில் வந்த புதுமைப்பித்தனின் சாயல் கொண்ட ஒப்பனைக்காரன் தாளகபாஸணப் பெட்டியைத் திறந்து இருட்டுக் கண்ணாடியில் எங்களுக்குப் புராண வேடமிட்ட அரிதாரம் நாற பல வேஷங்களில் யார்யாரோ வந்து கொண்டிருந்தார்கள் மதுரைக்கு. பட்டினியும் வறுமையும் பின்துறத்த மவுண்ட் ரோட்டில் புதுமைப்பித்தன் மதுரைத் தெருவில் ஒப்பனைகள் களைந்தெறிந்த ஜி. நாகராஜன் நிரந்தரத் தற்கொலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆத்மாநாம் இந்த விதிகளுக்கு அப்பால் எழுதப்படாத சரித்திரத்தில் அலைந்து கொண்டிருக்கிறான் ஒப்பனைக்காரன் அந்த இருண்ட ஒப்பனைக் கூடத்தில் எங்களுக்கு வேடமிட்டுக்கொண்டிருந்த ஒப்பனைக்காரனைச் சிறுமலராக்கி அந்த மலரை நடிகையாக்கி நடிகையைக் கண்ணாடியாக்கி ‘மதுரைக்கு வந்த ஒப்பனைக்காரன்’ சிறுகதையை எழுதினேன். ஸ்திரீபார்ட்களின் சோக இழையில் பெயர் பெற்ற நடிகர்களும் நடிகைகளும் மறைந்துபோன சுண்ணாம்புக்காரத் தெருவும் கிளாஸ்க்காரச் சந்தும் பனை ஓலை சந்துகளும் நாடக ஏடுகளாக மறைந்திருக்கின்றன. நாடக உடலாக உள்ள வள்ளிதிருமணம் நாடகத்தில் விடியவிடிய வள்ளிக்கும் நாரதருக்கும் நடக்கும் உரையாடல்களும் நடிப்பில் சேர்ந்துகொண்ட ஆலமரப் பச்சிகளும் நாடக ஏடுகளாகிவிடுகிறார்கள். ‘மீனலோச்சனி பாலபாஸ்கர சபா’ தாத்தா உருவாக்கியது. தமிழகம் என்ற மூன்றுமாடி வீட்டை 1ஆம் நம்பர் வாணியர் சந்தில் தாத்தா மதுரையில் கட்டியதும் இரண்டு மாடிகளில் பாய்ஸ் கம்பெனி நடந்தது. எம்.எஸ். என்ற குஞ்சம்மாளுக்கு வாய்ப்பாட்டு சொல்லிக்கொடுத்தவரும் எம் தாத்தாதான். இசை அறிஞர் வீ.பா.கா. சுந்தரம் அவர்களுக்கு இசை இலக்கணம் கற்பித்ததும் தாத்தாதான். எல்லோரும் மதுரைக் கடவில்தான் மறைந்துள்ளார்கள். நடிப்பின் ஒவ்வொரு நொடிப்பொழுதும் உடனே மறைந்துதான் விடுகிறது. அந்தக் கலையின் நொடியில் மறைந்திருக்கும் நடிகைகளின் புகையடைந்த கருப்பு வெள்ளை புகை ஓவியங்கள் அழுக்கடைந்த காரை வீடுகளில் இருக்கக் கூடும். கைலாஷ் ஸ்டுடியோ பழைய கேமராக்காரர்கள் காத்திருந்து சேகரித்த அபிநயத்தின் எத்தனை எத்தனை நொடிகள் பார்வையாளர்களின் மறதியில் விடப்பட்ட ஆழ்ந்த சோகமாய்க் காணாமலே போய்விட்ட நாடகக்காரர்கள், மக்களின் தினசரி வாழ்வில் அவர்களை மறந்துபோய் விடுகிறார்கள். நாடகக் கலைஞர்களின் துக்கம்தான் ஊர்ஊராய்ப் புலம்பி நகரும் வையை நதியாகத் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. மணல்மகுடி நாடகநிலம்… தாத்தாவின் தொன்மத்தோடும் இசைநாடக மூதாய் சங்கரதாஸ் என்ற கலையோகியின் அதிகாரமற்ற எளிமையின் தவத்தைக்கொண்ட புதிய தலைமுறை 23 வருடங்களாய்… சலனமடைந்துகொண்டுதான் இருக்கிறார்கள் காலவெளியில்… எனவே. அமெரிக்கா வாழ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பினரால் புதுமைப்பித்தன் நினைவாகக் கலை – இலக்கியத்தில் சிறப்பாகப் பங்காற்றுபவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் வழங்கப்படும் விளக்கு விருது 2013இல் எழுத்தாளர் கோணங்கிக்கு வழங்கப்பட்டது. அந்நாளில் நாடகக்காரர்கள், கவிஞர்கள், புனைகதை எழுத்தாளர்களைக் கொண்டாடும் கொக்கரை ஒலிச்சடங்கினை மணல்மகுடி நாடக நிலம் கலைஞர்கள் நிகழ்த்தியபோது, நீட்சி வெளியீடாக எழுத்தாளர் பாலைநிலவனின் ‘நகுலனின் மஞ்சள் குப்பிகளை ஏலமிடும் தணிக்கையாளன் வந்துவிட்டபின் ஏன் செக்காவின் ஆறாவது வார்டாக மாறிவிடுகிறது சூழல்?’ என்கிற 60 பக்க நேர்காணல் புத்தகம் வெளியானது. அதிலிருந்து சில வரிகள். “நகுலனின் சூழல் நாற்காலி தன்னந்தனிமையில் மஞ்சள்நிறப் பூனைகள் வட்டமிட, ஆடிக்கொண்டிருக்க பார்த்துக்கொண்டிருக்கிறான் கோணங்கி. ஆண்டன் செகாவின் பழைய புராதன கோட் அணிந்த கோணங்கி அனந்த புரியில் பிஜாய்ஸ் பிராந்திக்குப்பியுடன் ஆட்டோவில் ஏறி அமருகிறான். அதே நகுலன் பயணித்த கவுடியாரில் கிழக்கில் மழைக்கால சாயங்காலம். காகங்களின் பேரவலமான கூர்தீட்டும் அரவம். நகுலன் ஊதியணைக்காமல் சாம்பலின் சுமையுடன் கரைந்துகொண்டிருக்கும் பனாமா பிளைன் சிகரெட்டை சுசீலாவை நினைத்தபடி கோணங்கி இழையவிடுகிறான். சாயைகளின் சலனங்கள் மனநிழலில் பதிய தனது வாழ்வின் வலி மிகும் கடலை பிளேடால் கீறி தமிழ் உணரும் குருதியில் எழுத்துகளை கோர்க்கிறான். கோணங்கியின் பக்கத்தில் அமர்ந்திருக்கும் நகுலனின் மடியில் மஞ்சள் பூனையின் தூக்கம். தினகரன் கொலையுண்ட தினத்தில் நீ எங்கிருந்தாய் என்று கேட்கும் அவரிடம், விசாரத்தில் மூழ்கிய நகுலனின் வீட்டைப் பார்க்கிறான். தினகரனின் சாயை இருவருக்கு இடையில் கடந்து கொண்டிருக்கிறது. இருக்கத்தானே வந்தான் தினகரன், பின் ஏன் அப்படி என நகுலன் வினவ சுவரில் சாய்ந்து அனாதையான தனிமையில் புகைத்துக்கொண்டிருக்கிறான் கோணங்கி. மௌனமே பேருணர்வாய்க் கசிய யாருமற்ற தனிமையில் சுழல் நாற்காலி ஆடிக்கொண்டிருக்கிறது கால காலமாய் மஞ்சள் பூனைகளுக்காக. பெரும் கூட்டமாய் மனிதர்கள் புனைவான நகரத்தில் போலியான சாயைகளுக்கு நடுவே சாலையில் சீறிவரும் ஒரு ஆட்டோவை நிறுத்தி நகுலனும் கோணங்கியும் ஏறி அமர்ந்ததும் மழை விடாமல் பெய்யத் தொடங்குகிறது. பின் ஆட்டோ அநாமதேயத்தில் மறைந்துவிட்டது.” புனைவுக்கும் மிகைபுனைவுக்கும் இடையில் ஊடாடும் மொழிக் கட்டமைப்பு எத்தகைய தன்மைகள் உடையவை? “புனைவற்றவன் தூங்குவதில்லை. ஒவ்வோர் ஊருமே பனியில் துயிலும்போது புனைவைப் பாடும் இராப்பூச்சியின் கோடு காலை கண்ட பின்னும் மறைவதில்லை. உலகிலேயே அழகான வாலைக் கொண்ட மிருகம் புனைவுதான்.” வாசக நரி கண் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தில் ஏமாற்றுக்களும் வறண்ட நிலங்களும் முள்ளுடைக் காடும் சாபங்களும் உள்ள பக்கங்கள் செம்பழுப்புநிற அடிக்கோடிழுத்து உதிராமல் தொடரும் புனைவின் அவதானத் தெளிவுபட்டுப் புனைவே சால்வையாக நெய்து முழு இரவும் துயில்கிறேன். புனைவற்றவன் தூங்குவதில்லை. ஒவ்வோர் ஊருமே பனியில் துயிலும்போது புனைவைப் பாடும் இராப்பூச்சியின் கோடு காலை கண்ட பின்னும் மறைவதில்லை. உலகிலேயே அழகான வாலைக் கொண்ட மிருகம் புனைவுதான். அது நரிதான் என்பதில் இறந்துபோன நரிக்கும் கதை இருந்தது. சோம்பேறிக் கரடி ஏமாற்றத்தைப் பெரிதாக அங்கலாய்க்காது. சிறிய வாலைக் கடவுள் கொடுத்தாலும். கடவுள் படைத்ததில் வண்டிக் குதிரையின் வாலைவிட அழகான முதல் சிருஷ்டி நரிவால் என்பதை எந்தக் குழந்தையும் மறக்கவில்லை. நரிவால் தொட்டு எழுதிய நாவலைக் குறைபாடு கண்டது குழந்தையின் கண்களோ மறுபடி திராட்சையுள் சென்று சுவையேறிப்போன என் மண் நுரையீரலில் இசையும் புனைவும் ஒன்றுகலந்து புனைவுக்கும் மிகைபுனைவுக்கும் இடையில் மொழி ஊடாடுகிறது. உங்கள் பார்வையில் தமிழில் வெளியான சிறந்த அறிவியல் புனைவுகள் பற்றிச் சொல்ல முடியுமா? மாய யதார்த்தவாதமும் பின்நவீனத்துவக் கதைசொல்லல் பாணியும் தமிழில் வழக்கொழிந்துவிட்டன எனக் கருதலாமா? தமிழ்ச்சிறுகதை ஒரு நூற்றாண்டைக் கடந்து ஈராண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் குமார் அம்பாயிரத்தின் ஈட்டி தொகுப்பையும், அசதாவின் இசைக்காத மீனின் அக்கார்டியன் என்ற சிறுகதையையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். பாலசுப்ரமணியன் பொன்ராஜின் துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதைத் தொகுப்பு, குணா கந்தசாமியின் சமீபத்தில் வெளிவந்த கற்றாழைப்பச்சை, சித்ரனின் கனாத்திறமுரைத்த காதைகள் தொகுப்பு, சுனில் கிருஷ்ணின் அம்புப்படுக்கை தொகுப்பிலுள்ள பேசும் பூனை, குருதிச்சோறு ஆகிய இரு கதைகள், யதார்த்தனின் மெடூசாவின் முன்நிறுத்தப்பட்ட காலம், கறுத்தடையானின் ஆதாளி, பாட்டக்குளம் துர்க்கையாண்டியின் பாம்புவால்பட்ட கதை, நரனின் கேசம், தூயனின் இருமுனை ஆகிய சிறுகதைத் தொகுப்புகளில் இருந்து சில கதைகளைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அசதாவின் வார்த்தைப்பாடு தொகுப்பிலுள்ள என் பெயர் டாம் மோர்வெல் என்ற கதை நிகழ்காலச் சலனத்துத் தற்கொலை செய்துகொள்ளும் கடைசி மனிதனைக் குறித்தது. இயற்கையின் உயிர்ச்சுவடுகள் ஏதுமின்றி வெற்றுவெளியில் தனியாக நிற்பவனின் கதையை மாய யதார்த்தப் புனைவாக்கியிருக்கிறார் அசதா. வள்ளி ஒயின்ஸ் சிறுகதை காலிகுப்பிகளாக உலவும் உதிரிகளைப் பற்றிய மஞ்சள் திரவ மயக்கமுறும் மாயச்சிறுகதை. ஈட்டி தொகுப்பிலுள்ள பனம்பூழ் ஏந்திய தனிப்பாடல் பழங்கனவின் கிளையொன்று குறுக்கிட நனவை எதிர்காலக் கனவாக மாற்றியிருந்தது. எங்கோ அடித்துச்செல்லும் வெள்ளி மழையைக் காண்கிறோம். நஷ்ட ஈடாக வந்த வீனஸின் மெய்க்கால்கள் இயலாமையின் துக்கமும், கண்ணீரும் இவ்வுலகின் ஒன்றையும் மாற்றாது என்றாலும் அழுதபடி வீனஸோடு பொருத்தப்பட்ட குதிரைக்கால்களை வெட்டி அகற்றிவிட்டு அதன் புராதனக் கால்களைப் பொருத்தி வீனஸை விடுவிக்க யத்தனிக்கிறது இச்சிறுகதை. ஜீ.முருகனின் தேர்ந்தெடுத்த கதைகளின் தொகுப்பான காண்டாமிருகம், ஜே.பி.சாணக்கியாவின் ஆண்களின் படித்துறை, கல்குதிரையில் வந்த முதல்த்தனிமை கன்னிச்சோடை விழுந்த மைய்யலின் மாய உருக்கம் கதையின் எலும்பையும் கரைக்கிறது. லக்ஷ்மி சரவணக்குமார் எழுதிய நீலநதி சிறுகதையும் கல்மண்டபம் சிறுகதையும் கல்குதிரை வேனிற்காலஇதழிலும் பனிக்கால இதழிலும் பிரசுரமாகியுள்ளன. பதினாறு ஜன்னல்கள் இருந்த தேவதாசி ராஜம்மாள் வீட்டில் கணிகையர் ஐவர் மட்டுமே எஞ்சியிருந்தனர். கடந்த வாழ்வின் களிம்பேறிய நினைவுகளால் கசந்த வீடு சலிப்பின் ஆகக் கடைசியான கால கட்டத்தில் உழுதுண்போர் உழுவித்துண்போர் எனும் பிளவில் காவேரியின் நிழல் படிந்த சிறுகதை. மிராசுகளின் கோரவேர்களை அறிந்து உணர்த்திச் செல்லும் சிறுகதை. பர்மாவுக்குப் போன காலத்தின் தூரப்புள்ளிகள் இசையின் வழி இணைந்து விடுகிறது. கல்மண்டபம் சிறுகதை வறட்சியின் ரேகைகள் அழுத்தமான வேர்களெனப் படர்ந்து கிடக்கும் ஊரின் கதை. பிரேதங்கள் ருசிக்குப்பழகிய நாவுகளில் எப்போதும் இருக்கும் சதையின் வாசனை முன்னோர்களின் கனவுகளைச் செரித்தபடி களவுக் குறி சொல்லும் ஊரின் கதை. குறி கேட்காமல் பூனை வேட்டைக்குக் கிளம்பிய அமாவாசை இரவு விளக்கு வைத்துக் களவுத் துரட்டியுடன் கிளம்பிய பதினாறு பேர் இருளில் நிழல் தெரியாமல் மறைந்துள்ளனர். இக்கதை புனைவும் குருதியும் நஞ்சு தோய்த்த எரியும் கம்பியில் சுட்ட வடுவின் எச்சங்களால் ஆன கதை. வலுத்த சர்ப்பங்கள் கல்மண்டபம் கதையைக் குடிக்கும் இருட்டு புனைவுப் பாம்பாக மாறியுள்ளது. கல்குதிரை 26இல் வந்த அனோஜன் பாலகிருஷ்ணனின் வாசனை சிறுகதை பிறழ்வுற்ற மைய்யலிழப்பின் பால்விதியை வாசனை வழியாகக் கனவுப்புனைவாக்கியுள்ளது. ஜெயந்தன், மதன் இருவருக்கும் இடையேயான உப்பு வாசனை கதைக்குள் வந்துசெல்கிறது. கண்ணாடியில் பார்த்த கடற்கரையும் அதன் கிளைகளை மறைக்கும் மரங்களும் தென்பட்டன. ஜெயந்தனின் ஷேர்ட்லிருந்து வரும் வாசனை அப்பாவின் வாசனை. ஹரி, ஜெயந்தன் இருவர் மீது இருந்துவரும் வாசனையின் வித்தியாசங்கள். கதையின் கடைசியில் வியர்வையில் தோய்ந்த மேல்சட்டையில் கசிந்த அந்த வாசனையை நுகர ஆழமாகக் கசிந்து தகிக்கிறது. அது மறைந்த அப்பாவின் வாசனைக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் இருந்தது. சிவப்பு நிறச் சீலையில் நீல நிறமான நீண்ட கைப்பை தோள் மூட்டில் இருந்து வழிந்து தொங்கிய என் பிம்பத்தை அது காட்டியது. ஏதோவொன்றை வேண்ட வேகமாகக் கீழிறங்கிச் செல்லத் தொடங்கினேன். அப்பாவின் வாசனை மறுபடியும் என் நினைவில் வந்துகொண்டிருந்தது. பெண்ணியல்புகளின் சாயைகளைக் கொண்ட ஒரு அகவெளிப்பரப்பாக நீள்கிறது கதையின் உட்பரப்பின் ஒரு பகுதியில். கதை மையமிழந்து பன்மை லவணக்கற்களாகப் பிரிந்து கதையின் ஊடாட்ட ஒளிகளை நிலைக்கண்ணாடியாக உருமாற்றுகிறது. கதை தற்கணத்தில் உவர் கரிக்கும் வெறுப்பின் ஆழத்தையும் இயல்புகளாகக் கொண்டுள்ளது. யாக்கை உவர்க்கும் கணக்கியலை மெலிதாக்கி புனைவுகொள்ள, கதையின் லயம் நண்பர்கள் சந்தித்துக்கொண்ட சந்தர்ப்பங்கள் ஒரு கணிதவியலாய் உருமாறி ஒரு வாசனையால் கனவுப்புனைவைத் தக்கவைத்துக்கொள்கிறது. லவணத்தின் இயற்கை மைய்யலில் குணரூபமாக இருப்பதால் அப்பா கடைசி வரை அவள் காதலித்தாளா என்று கேட்கவுமில்லை, தான் காதலித்ததாகச் சொல்லவுமில்லை. அதனை எனக்கு அம்மா சொல்லும்போது கண்கள் அகலமாக விரியக் கேட்டுக்கொண்டிருந்தேன். அப்பா கடைசிவரை தன் காதலை என்னிடம் சொன்னதுமில்லை. உப்பின் அரூபவெளி மைய்யலின் தொடரியக்கமாகக் கதையெங்கும் பரவியிருக்கிறது. உப்பே லய அடுக்கில் கரைந்து மைமோகத்தில் கதையாகிறது. ஷோபா சக்தியின் கண்டிவீரன், எம்ஜிஆர் கொலைவழக்கு ஆகிய இரு தொகுப்புகளையும் புனைவுப் பாம்பின் குறுக்குவெட்டுத் தோற்றமாக அளந்து சென்றால்தான் ஒருவன் வேடவாசகனாக மாற முடியும். திசேராவின் வெள்ளைத் தோல் வீரர்கள் தொகுப்பும் கல்குதிரையில் வந்த வாய்டர்கால் சிறுகதையும், கல்குதிரையின் இதழ்களில் வெளிவந்த ராகவனின் உதிரகணம், மீ, மரணநவை ஆகிய சிறுகதைகளையும் இன்றைய தமிழ்ச் சிறுகதைகளின் ஊற்றிலிருந்து இருள்பரப்பும் துயர விளக்கைச் சுற்றிப் புனைவின் இறக்கைகள் நவீனமாகப் பொருந்திவிடுகின்றன. பிரதியின் மடிப்பு சமகால இருப்பில் கதைக்காரர்கள் இருப்பு பெயர்ந்தவர்கள் சூட்சம உடல் கதாபாத்திரங்களாக இருட்டைப் பூசி ஒளிபெறும் தனிமைவளையங்களில் தனித்திருக்கப்பட்டவர்களின் சிறுவெளிச்சமாகச் சிறுகதைகள் துலக்கமான நவீனப் புனைவுருவங்களைப் பெற்றுவிடுகின்றன. பா வெங்கடேசனின் ராஜன் மகள் தொகுப்பில் உள்ள ’நீலவிதி’ ’மலையின் குரல் தனிமை’ ஆகிய இரு நெடுங்கதைகளையும், லக்‌ஷ்மி மணிவண்ணனின் ’வெள்ளைப் பல்லி விவகாரம்’ ’ஆண்டன் செக்காவைச் சென்று சேர்வது எப்படி’ என்ற இரு சிறுகதைகளையும் நவீனப் புனைகதை உருவாக்கத்தில் பரிமாணப் பூரணத்துவம் அடைந்த கதைகளாகக் கூறலாம். பாலைநிலவனின் ’எம்.ஜி.ராமச்சந்திரனும் காரல் மார்க்சும்’ தொகுதியையும் இத்துடன் சேர்க்கலாம். பாலைநிலவனின் சிறுகதைக்குள் ஆஸ்பத்திரி லிப்ட் நின்றுபோகிறது. வெகுநேரம் அடைபட்ட இருட்டுக்குள் எழுதியவனோடு திரும்பவும் கீழிறங்குகிறார்கள். சுவெட்டர் அணிந்த பெண் கையில் கடவுளின் புஸ்தகத்தை வைத்துக்கொண்டு அமர்ந்துகொண்டிருக்கிறாள். புஸ்தகத்திற்கு மேல் ஆஸ்பத்திரியில் சேர்த்த குழந்தையின் அழுகுரல். ஆஸ்பத்திரிக்குக் குழந்தையைத் தோள் மீது போர்த்தியவாறு வருகிறாள். குழந்தைகளுடன் வந்த பெண்கள் சிலைகளென வெவ்வேறு நிலைகளில் அமர்ந்திருக்கிறார்கள். யாருடைய குழந்தைக்காகவோ வந்தவர்களும் அழுகிறார்கள். மனித உயிர்நிலையின் தெருக்கோடி வாழ்வின் ஒரு குடுவை விளக்கொளியில் இக்கதைகளெல்லாம் உப்பினால் கரைகின்றன. மைய்யலுக்கான கழுதை அலைச்சல் கதைகள் தமிழில் நிறைய உண்டு. இந்தக் கழுதை அலைச்சல் கதைகளில் இருந்து கைலாஷ் தப்பித்து வெளியே வந்துவிட்டான். கதையின் முடிவில் தனது ஆன்மாவிலிருந்து மைய்யலை இழந்து நிற்கிறான். சாலையோர விளிம்புகளில் வாழும் மரமாகிறான். இலைகளின் ஒலிகளுக்குள் வாழ்கிறான். பாலைநிலவனின் இம்மூன்று கதைகளும் மாயத்தையும் யதார்த்தத்தையும் பிரிக்காமல் வைத்துள்ளன. சென்ற கல்குதிரை 30இல் வந்த 9 சிறுகதைகளில் யதார்த்தச் சட்டகத்தை விட்டு விலகிய கதைகள் பலவும் புனைவுப்பரப்பை எட்டியுள்ளன. அசோக் ராம்ராஜின் நெற்கட்டாஞ்செவலின் ஈசல், வே.நி.சூர்யாவின் கபாலம் ஒரு மலர்மொட்டு ஆகியவற்றைக் குறிப்பிடலாம். யதார்த்தத்தை முற்றிலும் நிராகரிக்கும் கதையாவதற்கு ரயிலை வளர்ப்பு பிராணியென்ற முதல்வரியாகத் துவங்குகிறது கதை. டெலிபோன் டையரியின் பக்கங்களை வயோதிகத்தையும் இளமையையும் ஓய்வின்றி புரட்டுவதில் இருவருக்கும் ஒரேதலையாகிவிடுகிறது. விண்ணிலிருந்து கீழ்பாயும் ஏணியில் மேலேறிக்கொண்டிருக்கிறார்கள். ஆங்காங்கே எலும்புகள் துருத்திக்கொண்டு தெரிந்தன. கீழேயிருந்து உலோகக் காகிதங்களை வாங்கி கூரையாகப் பரப்புகிறார்கள் எண்களிடப்பட்ட வதையுருவோர். இது மரணவேளையாகயிருந்தது. அந்த ஏணியில் நின்றபடி உரையாடத் தொடங்கினான். ஏன் குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும் இன்னலுக்குரிய காலத்தில் பிறக்கவும் வாழவும் நேரிடுகிறது? யாக்கோபு கனவில் கண்ட விண்ணிற்கும் மண்ணிற்குமான ஏணியில் நின்றுகொண்டிருக்கிறான் அந்நியமான அவன். இந்த ஏணியில்தான் தேவதூதர்கள் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தார்கள். வானத்தின் நுனி வரை ஏணி செல்கிறது. வானத்துக் கதவில் ஒரு பிரம்மாண்ட பூட்டு தென்படுகிறது. மரணத்தின் சாவி எதனிடம் இருக்கிறது. யதார்த்தம் குலைந்த ஏணி கரையானும் மூடுபாலம் போட்டவாறே உயரே சென்று மேலேறும் ஆட்டத்தைக் கலைத்துவிடுகின்றன. ஆனால் சிலந்தி ஏணியை நெய்தவாறு மேலேயேறி ஏணியை நெய்தபடிச் சென்று பூட்டின் துவாரத்தில் தொங்குகிறது. கரையானால் நெய்யும் சிலந்தியைக் கொல்ல முடிவதில்லை. சிலந்தியின் கபாலத்தில் ஒரு மலர் மொட்டு அது சிலந்தியை நெய்துகொண்டிருக்கிறது. மரணத்தின் பூட்டு வானத்தில் தொங்குகிறது. அதன் துவாரத்தில் சிலந்தி நெய்கிறது முடிவற்ற ஏணியை. அதில் மரணத்தின் ஊடுநூலென சாவு ஊர்ந்து செல்கிறது. வதைமுகாமில் கேட்கும் ஒலிகளால் அந்த நூல் இருட்டாகி நகர்கிறது. ஏணியைச் சுற்றி விஷப்புகை ஊட்டும் வதைமுகாமில் எல்லோரும் சீருடை அணிந்தவர்கள். ஏணிக்குக் கீழே கிடந்த சடலம் பார்த்துக்கொண்டிருந்தது. வானத்தில் அங்கே ஒரு கதவு திறந்திருக்கிறது. முகாமுக்குள் வந்த பூச்சி ரயிலில் வதைமுகாமில் இருந்த இறந்த அனைவரும் அமர்ந்திருந்தனர். சிலந்தியின் முடிவற்ற இருட்டு நூலேணியை நோக்கிப் பூச்சி ரயில் ஊர்ந்து மேலேயேறிக் கொண்டிருந்தது. இந்தக் கதையின் ஏணி கீழிறங்குவதும் பூச்சி ரயில் மேலேறுவதுமாகக் கடந்து கொண்டிருப்பதான வதைமுகாமில் நடக்கும் பரமபத விளையாட்டில் கபாலத்தில் ஒரு மலர் மொட்டைச் சுற்றிலும் அதிகாரிகளும் அடிமைசாசனம் எழுதிக்கொடுத்த பிரஜைகளும் வதைமுகாமைச் சுற்றிச் சங்கிலிப் பூட்டைத் திறப்பதற்கு மரணத்தின் சாவியைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அந்தச் சாவி கபாலத்துளையில் மரணத்தின் பாதி வாழ்வாகவும் வதைமுகாமில் அடுக்கிக் கோர்க்கும் உலோகத் தகடாகவும் அமைந்திருக்கிறது கதை. பாலசுப்ரமணியன் பொன்ராஜின் பனிமூடிய சிகரங்களும் நிலத்தடி வசிப்பிடமும். புறவயமான கதைக்கூறுகளை ரத்து செய்யாமல் சுயத்தைக் கரைத்து அசாதரணத் தளத்திற்குப் பனை மதுபான விடுதியில் வைத்தும் பிரித்தானியர் கால பங்களாவில் மூட முடியாதபடிக்கு உடைந்திருக்கும் மரக்கதவுகளை உடைய சாளரத்தின் இருளே பூனையாகத் தாவி மதுவிடுதிக்கு வருகிறது. அதுவே கதையின் இறுதியில் டென்சிங் நார்கே செர்பாவாக மாறிவிடுகிறது. எட்கர் ஆலன் போவின் அமான்டிலாடோ கதைக்குள் வரும் கல்லறைகளும் பழைய திராட்சை தைலமிடப்பட்ட நிலவறைக்குள் பதுங்கியுள்ள ஒரு போத்தல் காடியை எடுத்துத் தருவதாகச் சொல்லி தூணில் நண்பனை விலங்கிட்டு வருகிறான். இருட்டு நிலவறைக்குள் தனிமையில் விடப்பட்டவனின் அலறல் பாலாவின் கதைக்குள் வரும் பனை மதுவிடுதியிலும் கேட்கிறது. நான்கு பிரதியாக எழுதப்பட்ட இச்சிறுகதை நான்கு முறை யதார்த்தவாதம் இடறிவிழுகிறது. யவனிகா ஸ்ரீராமின் விற்பனை பிரதியின் காலாவதிக்காலம் சிறுகதையில் வரலாறும் உலோகங்களும் பிணங்களும்கூட அடுக்குகளாகப் புனைந்திருக்கின்றன. ஈயப்புகையால் தாவரங்களின் இலைகள்கூடக் கருத்த கனிமத்தகடு போலத் தோற்றமளிக்கின்றன. சூழல் சமனிலை குடைசாய்ந்ததிருப்பதைக் கோர்த்துக்கொண்டிருந்தது இச்சிறுகதை. பெரு.விஷ்ணுகுமாரின் தேநீர்க் கோப்பையில் ஆறிடாத மாதவியின் கரு சிறுகதையில் சுழிவுகளால் வரையப்பட்ட உருவங்கள் முதல் இயலில் அத்தியயிக்கும் பென்சில் கோடுகளையும் இரண்டாம் இயலில் வேறுவேறு தலைபாகைகளையும் வரைகின்றன. ஒன்று மாதவியும். மற்றொன்று கிளியோபட்ராவும். நீளமான நகங்களோடு நீண்ட வரிகள் எல்லாவற்றிற்கும் பொதுவான அசைவொன்று இருக்கிறது. அது ஒரே நேரத்தில் சேர முடிகிற மாநாய்க்கனும் தாலமியும் சந்தித்துக்கொண்டதில் எகிப்தை நோக்கியும் தமிழ்க்காப்பியத்தில் திறக்கும் நகரங்களை நோக்கியும் வேறிடம் செல்லும் அயினூற்றுவர் கூட்டத்தின் தலைவனாக மாசாத்துவனும் இருந்தான். திசை மாறிச்செல்லும் வாணிபக் கருங்கலம் ஒருவேளை நம் சமகாலத்தை எட்டிப்பார்க்கிறது. கதையில் வீழ்ந்திருக்கும் சிலம்பு கடற்சிலம்பையின் தொன்மமாகவில்லை. ஆனால் முத்தின் தொன்மையைச் சுற்றி ஆழத்தில் பதிந்திருக்கும் சொற்கள் கைதவறி விழுந்திருக்குமாயின் எதேச்சையின் கணம் எகிப்தின் யவனர்களைக் கொண்டுவந்திருக்காது. மெளத்தீகங்களைத் தரம்பிரிக்கும் தசமகணிதப் பலகையை முன்வைத்து மாசாத்துவனும் தாலமியும் உரையாடியிருந்தால் ஒவ்வொரு இயலும் யதார்த்தத்தைக் கடந்திருக்கும். இக்கதையின் வார்த்தைகளின் அடியிலுள்ள முத்தின் தொன்மையாக இருப்பவர்கள் மாசாத்துவனும் தாலமியும்தான். இவர்களின் வாணிபப் பேரத்தின் உரையாடல் பலவகை இயல்களைக் கொண்டுள்ளது. சிறுகதை வடிவத்தில் இந்த ஆறு இயல்கள் சேர்ந்தும் பிரிந்தும் உள்ளன. மேரி ஷெல்லியின் Frankenstein போன்ற நாவல் தமிழில் வெளிவருவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றனவா? நவீன இலக்கியத்தில் அறிவியல் புனைவுகள் முழுவீச்சில் எழுதப்படாமைக்கான காரணங்கள் என எவற்றைச் சொல்வீர்கள்? பிராங்கன்ஸ்டைன் புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த மேரி ஷெல்லியின் பிரேத மனிதனின் கண் ரெப்பையைத் திறந்து விழிகள் வண்டுகளாக அதிர்ந்து திகைத்து வைத்துப் பறக்கின்றன கதையில். ப்ராம் ஸ்டோக்கருக்கு பைரனின் தாக்கம். எட்கர் அலன் போவிற்கு அதைவிட அதிகம். கல்குதிரை 24இல் சா தேவதாஸ் மொழிபெயர்த்து வெளிவந்தது ஜாய்ஷ் கரோல் ஓட்ஸின் போ இறந்தபிறகு அல்லது கலங்கரைவிளக்கம் கதை. இந்தக் கதை வால்பிரைஸோவிற்கு வடக்கே சிலியின் பாறைமண்டிய கடற்கரையின் மேற்கிருந்து சுமார் 200 மைல் தூரத்தில் தெற்கு பசிபிக் கடலில் 33வது அட்சரேகை மற்றும் 13வது தீர்க்கரேகையில் பிலடெல்பியா சமூகத்தின் இம்சைகளும் ரிச் மாண்டில் கவிதை நெறிகுறித்து எழுதிய காகிதங்களும் கடலில் மூழ்கிக்கொண்டிருக்க, போவின் துணைக்கிருந்த நாய் மெர்க்குரி தாவித் துடித்துக்கொண்டிருக்க இம்மாபெரும்வெளிகளால் ஆகாயம் கடல் பூமி உயிரால் எழுச்சி பெற்றுள்ளன. வினா டெ மாரியிலுள்ள கலங்கரைவிளக்கத்தின் இருண்ட படிக்கட்டுகளில் ஏறி கடல்மேல் விழும் கருவிளக்கை ஒருவரே பராமரித்துவந்துள்ளார்கள். அந்த இருண்ட கலங்கரைவிளக்கத்திற்கு Harpicsஇன் பறவைச்சிறகுகளும் நகங்களும் கொண்ட கிரேக்க அரக்கியின் தோற்றமிருந்தது. அடுத்த கதை கல்குதிரை 27இல் வெளிவந்த தர்ஷிகா தாமோதரன் எழுதிய முள்ளி மலைக்காட்டின் மெமூனாக் குகை. கல்குதிரை 18,19,20 இல் சபரிநாதன் மொழிபெயர்த்த டொனால்ட் பார்த்தல்மேயின் ’தால்ஸ்தாய் மியூசியத்தில்’ கதை. அதே இதழில் T.சுவாமிநாதன் மொழிபெயர்த்த காரல் காபெக்கின் ஆர்க்கிமிடிஸின் மரணம் , ஜெல்.எல்.சின்ஜின் ’யூக்லிடும் ஒரு சிறுவனும்’, ஆர்த்தர் கோஸ்ட்லரின் ’பித்தோகரசும் உளவியலறிஞரும்’ போன்ற மூன்று கணிதவியல் புனைகதைகள் வெளிவந்துள்ளன. அசதா மொழிபெயர்த்த அந்தோனியோ ஜெர்ஜெனக்ஸியின் செர்வாண்டிஸைக் கைப்பற்றுதல் கதை. இந்த வகையில் இன்னும் பிற கல்குதிரையில் பிரசுரமாகியுள்ளன. மேலும் ஸ்டானிஸ்லெவ் லெம்மின் நாவலைத் தழுவியெடுக்கப்பட்ட தார்க்கோவ்ஸ்கியின் சோலாரிஸ் திரைப்படத்தைப் பலமுறை பார்த்திருக்கிறேன். ஹெச்.ஜி வெல்ஸின் கால யந்திரம் க.நா.சு மொழிபெயர்ப்பில் முன்னரே வெளிவந்துள்ளது. “ஒவ்வொரு கிரகமாகக் காட்டி என் கவிதையின் படிமங்கள் எந்த நூற்றாண்டில் விழுந்துகொண்டிருப்பவை என்பதை எதிர்கால வாசகன்தான் புதிர் களைய வேண்டும் என்றார் பிரமிள்.” கவிதைகளையும் விஞ்ஞானத்தையும் தமிழில் தொன்மையான கலைப்படைப்பாக உருவாக்கியது பிரமிள்தான். முதல் கல்குதிரை உருவானபோது பிரமிள் என்னைக் கூட்டிச் சென்றது கோட்டூர்புரத்தில் உள்ள கோளரங்கத்திற்கு. ஒவ்வொரு கிரகமாகக் காட்டி என் கவிதையின் படிமங்கள் எந்த நூற்றாண்டில் விழுந்துகொண்டிருப்பவை என்பதை எதிர்கால வாசகன்தான் புதிர் களைய வேண்டும் என்றார். அவரோடு நடந்து சென்ற வேப்பமரச் சாலையொன்றில் நிலவின் வடக்குயரும் பிறை, தெற்குயரும் பிறை பற்றிய மெய்ஞானத்தை உலகக் கலைகளோடு இணைத்துப் பேசினார். லயம் வெளியீடாக பிரமிள் அறக்கட்டளையின் சார்பில் காலசுப்பிரமணியம் தொகுத்தவற்றில் தொகுதி 2, 6ஐ முழுமையாக வாசித்து உணர்ந்தவர்கள் பிரமிளின் கல்மண்டபத்தைப் புரிந்துகொள்ள முடியும். விண்மீன்களின் தீக்கங்குகள் காலாதீதமான சமிக்ஞைகளில் சூன்ய சம்பாஷணை நிகழ்த்திக் கொண்டிருப்பதை உணர முடியும். நட்சத்திரம் உதிர்ந்த மந்திரச் சிமிழ் என்ற எனது சிறுகதையில் நட்சத்திரவாசி என்கிற கதாபாத்திரம் பிரமிள்தான். விண்மனிதர்களை நோக்கித் திரும்புகிற பிரமிளின் உலகத்தை மேல்நோக்கிய பயணம் கவிதைத் தொகுதியிலும் உணர்ந்தேன். அவரது E = mc2, கண்ணாடியுள்ளிருந்து போன்ற கவிதைகளைப் எழுதத் துவங்கிய காலத்திலேயே வாசித்திருக்கிறேன். அவரது கதைக் குறிப்புகளில் கல் மண்டபம், மை வளையம், குகையியல், கால வெளிக்கதை, ஒளியின் கதை, பிரபஞ்சத்தின் கதை கம்யூட்டரும் ராமானுஜனும், The cave full of stars, The reno insistent, Mary lutein போன்ற பிரமிள் எழுதி எழுதாத ஏகப்பட்ட குறிப்புகள் விஞ்ஞானப் புனை கதைகளில் மிகுந்த ஈடுபாடும் பரந்த வாசிப்பும் உடையவர் பிரமிள். சுயமாக விஞ்ஞானப் புனைவு நாவல்களை எழுதுவதற்கு மிகுந்த விருப்பத்தோடு இருந்தார். அசரீரி என்ற சிறுகதை மட்டுமே அவரது ஆற்றலுக்குச் சிறந்த உதாரணமாகக் கிடைத்துள்ளது. வேலூர்க்கு அருகில் கீழ்வானின் அடியில் கரடிக்குடி என்கிற ஊரில் அவரது திசை நான்காய்த் திரும்பியிருக்கும் சமாதியின் சாம்பல் மரமாக விஞ்ஞானப் புனைவுலகம் அறிவியல் கலைச்சுவடிகளாகப் பதிந்துள்ளன. மேலும் சித்தர்களிடமிருந்தும், சமணர்களிடமிருந்தும், வள்ளலாரின் ஆறாவது திருமுறையிலிருந்தும் சித்த மரபை நோக்கி நாம் செல்ல வேண்டியதிருக்கும். விஞ்ஞானத்தைக் கலையாகவும் தத்துவமாகவும் உருமாற்றும் ரசவாதிகள் நமது சித்த மரபில் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். பதினெண் சித்தர்களின் பழைய ஏட்டை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். அதில் மறைந்திருக்கும் விஞ்ஞானப் புனைவுகளுக்கான தடயங்களையும் நாம் ஆழ்ந்து புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. இது நவீனப் புனைவுகளின் காலம் என்பதால் அறிவன் தேயத்தார் சிலப்பதிகாரத்தில் மாயஜாலக் கண்ணாடியோடு கற்பகத்தரு மீது ஏறிக் கிளையமர்ந்து, பூமியைச் சுற்றியிருக்கும் சக்கரவாள மலையில் நடந்தபடி உடுகணங்களை ஆராய்து கொண்டிருக்கிறார்கள். தமிழில் அறிவியல் புனைவுகள் தோன்றுவதற்கான உரையாடல்கள் இருந்துகொண்டேதான் இருக்கின்றன. நவீனப்புனைவிலக்கியத்தில் அதன் துகள்களும் ஆங்காங்கே தெரியத்தான் செய்கின்றன. அது முழு வீச்சை அடைவதற்கான நேரமிது. இனி தோன்றும் படைப்புகளுக்காக ‘அரூ’வின் வெளியில் காத்திருக்க வேண்டியதுதான். அறிவியல் புனைவு எழுத்து வகை தமிழில் அரிதாகவே தென்படுகிறது. குறிப்பிடத்தக்க அறிவியல் சிறுகதைகளோ கவிதைகளோ கல்குதிரையில் வெளிவந்துள்ளனவா? சிலவற்றைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா? தமிழில் பிரமிள், தேவதச்சன், பிரம்மராஜன், பாம்பாட்டிச் சித்தனின் இஸ்ரேலியம் தொகுப்பின் சில கவிதைகளையும் இங்கு குறிப்பிடலாம். உதாரணமாக தேவதச்சனின் முதல் தொகுதியிலுள்ள கடைசி கவிதையை குறித்து இங்கு பார்க்கலாம். தேவதச்சன் சில கவிதைகளைக் கலையின் சிந்தனைப் பரிசோதையாகக் கட்டமைத்தார். முதல் தொகுப்பின் கடைசி கவிதையில்.. உன் நிலையத்தில் ரயில் வந்தால்தான் உனக்குத் தெரியும் வருமுன்னும் போன பின்னும் கண்ணுக்குத் தெரிவதில்லை எனினும் கருத்துக்குத் தெரியாது போகுமா தன் நிலையத்துக்கு வந்து போனதை வண்ணாத்திப் பூச்சியிடம் கேள் வைரஸிடமும் கேட்டுபார் “வண்ணத்துப்பூச்சியையும் வைரஸையும் வைத்து வந்துபோனதையும் பார்க்காததையும் அளவிடும் கெய்கர் கருவி தேவதச்சனிடம் அசைந்து கொண்டிருக்கிறது. தேவதச்சனும் புனைவின் எதிர்ப்புள்ளியில் பக்கம்பக்கமாய் நகர்ந்துகொண்டிருக்கிறார்.” சிந்தனைப் பரிசோதனை என்பதால் இதைத் தன் மனதில் கட்டமைத்தார். இயற்பியல் விதி மீறப்படவில்லை என்பது கண்கூடு. வண்ணத்துப்பூச்சியையும் வைரஸையும் வைத்து வந்துபோனதையும் பார்க்காததையும் அளவிடும் கெய்கர் கருவி தேவதச்சனிடம் அசைந்து கொண்டிருக்கிறது. அறிவியல் புனைவு எழுத்தாளர் நடைமுறை சாத்தியமற்ற எந்த ஒன்றையும் கற்பனையாக எழுத முடியும். தேவதச்சனும் புனைவின் எதிர்ப்புள்ளியில் பக்கம்பக்கமாய் நகர்ந்துகொண்டிருக்கிறார். வெளியே வந்துபோகாத ரயில் வந்துபோனதை மெய்ப்பிக்க வைரஸிடம் கேட்பது கற்பனை செய்து கவிதையை உருவாக்க இயல்கிறது. வெறும் சிந்தனைப் பரிசோதனையாளருக்கு அதில் உரிமையில்லை. கோட்பாட்டு அளவிலான பரிசோதனையே அது. பெட்டியைத் திறக்கும் முன் பூனை ஒரே நேரத்தில் இருந்து கொண்டும் இறந்தும் இருக்கும் என்பது உயிருடன் இருத்தல் இறந்துவிடுதல் என்னும் இருநிலைகளின் ஒன்றிணைப்பாக பூனையிருக்கும் என்ற குவைய இயற்பியலின் விடைப் பகுத்தறிவுடன் முரண்படுகிறது. ஆனால், கலையின் சாத்தியத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நிலைகளில் ஒன்றில் வைரஸிடமும் கேட்டுப்பார் என்கிறது தேவதச்சன் கவிதை. பாம்பாட்டிச் சித்தனின் இஸ்ரேலியம் தொகுப்பிலுள்ள ஸ்க்ரோடிங்கரின் பூனை நான்கு வழித்தடங்களோடு பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்த நெடுஞ்சாலையை பார்வையிட்டது பூனை கரையும் ஒவ்வொரு நொடியிலும் ஏதேனும் ஒரு தடத்தில் ஒரு வாகனம் பாய்ந்தோடுவதை பூனையின் தலை ஊசலாய் கண்காணித்தது தேவைகள் உந்த பூனை நெடுஞ்சாலையின் குறுக்கே நுழைந்தது நெடுஞ்சாலையை கடக்கும்போது பூனை உயிர் இழக்கலாம் அல்லது நெடுஞ்சாலையை கடந்தபின் பூனை உயிரோடிருக்கலாம் ஆனால் நெடுஞ்சாலையின் குறுக்கே பிரவேசிக்கும் கணத்தில் அது ஓர் உயிரற்ற உயிருள்ள பூனை. எனும் கவிதை கவிதையையும் அறிவியலையும் ஒன்றோடு ஒன்றுகலக்கிறது. சிறுகதையைப் பொறுத்தவரையில், கல்குதிரை 28இல் வந்த பாலசுப்ரமணியன் பொன்ராஜின் ’பிரமிடுகளை அளக்கும் தவளை’ எனும் சிறுகதையைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். மதியழகனின் ’பலூன்’ சிறுகதையில் புனைவின் சாத்தியங்கள் சற்று இடைவெளி கண்டிருப்பினும் அறிவியலும் வரலாறும் புனைவின் கருநிலையிலேயே நிற்கின்றன. இனியாக்கும் கதைகளுக்கு முன்னோட்டமாக அமையலாம் இக்கதை. எஸ்.ராமகிருஷ்ணன் தாவரங்களின் உரையாடல் தொகுப்பிலுள்ள ’புத்தரின் கார்டூன் மொழி’ சிறுகதையையும் குறிப்பிடவேண்டும். புதுமைபித்தனின் சிற்பியின் நரகத்தை நமக்கான ஆதிக்கையாகக் கொள்ளவேண்டும். தெறிகள் சிற்றிதழில் வந்த எஸ்.சம்பத்தின் உதிர்ந்த நட்சத்திரம் சிறுகதையைத் தமிழின் அறிவியல் புனைகதைகளுக்கு முன்மாதிரியாகக் கொள்ளலாம். கருப்பு ரயில் சிறுகதை இரண்டு பாகங்களால் ஆனது. எதார்த்த நடையில் துவங்கி குறியீட்டுப் படிம வெளிக்குள் கதை பயணிக்கும். ஒரே சிறுகதைக்குள் இப்படிச் செய்யலாம் என்ற எண்ணம் தோன்ற உந்துதலாக இருந்தது எது? இருளைக் கீச்சிய சோகமான கருப்புரயிலில் நீங்களும்தான் பயணிக்கிறீர்களா..! பால்யவனத்தில் அழைத்த ஆதிநிலா உங்களையும் தேடி வீட்டிற்குள் வருகிறது. அவள் இல்லாமல் மூடியிருந்தது ரயில்பெட்டி. ரயில்விளையாட்டுகளை எல்லாம் உள்நாட்டு அகதிகளின் நகரமான குட்டி ஜப்பானில் வைத்துக்கொள்ள வேண்டித் திரும்பினேன். அவள் வீட்டுத் தொழுவில் மாட்டு வாசனை. அவற்றின் மோனத்தில் ரொம்ப நேரமாய்க் கல்தொட்டி அருகே நின்று கரைகிறாள். இருட்டிலுள்ள சிலையாக அதே வயதில் நின்றுவிட்டவள் கருப்புரயிலில் வருகிறாள் ஒரே கதைக்குள் இன்னொரு கதையாக. கதைக்குள் கதையாக அருவமாய்த் தெருவில் நடமாடுவது கருப்புரயில் பூச்சிதான். அது எல்லோருக்கும் தெரியும். அது எதிரெதிராய்ச்செல்லும் கருப்புரயில். பள்ளிக்கூடம் விட்டு ஓடும் தெருத்தெருவாய்ச் சுவரில் கிறுக்கிய என் பென்சில் கோடுகளை இருபது வருடம் கழித்துவந்து பார்த்தேன். கோடுகள் அதிசயமாய் கருப்புரயிலில் ஓடிப்போன சிறுவர்களோடு ஓடிக்கொண்டிருந்த தெரு. சலூன் நாற்காலியில் சுழன்றபடி சிறுகதையின் நடை கனவு போலவே இருக்கும். இந்நடையை எவ்வாறு உருவாக்கினீர்கள்? சலூன் கடையில் அவளை விரும்பிய சலூன் நண்பன் சாத்தூரப்பனும் தெற்குத் தெருவில் இருந்தான், அவள் மறதியைத்தான் தேடி சாத்தூர் சலூனுக்குப் போகிறேன். தெருக்கற்களுக்குத் தெரியும் இவனையும் அவளையும் கண்டுவிட்ட நிலவு காரை வீட்டின் அருகில் இருந்தது. சலூன் கண்ணாடியின் மையலில் சாத்தூரப்பனோடு மூழ்கினேன். அமரபட்சம் நான் பிறந்ததில் என் மொழியும் தேய்பிறையில் தேய்கிறது. வடக்குயரும் பிறை சலூன் கண்ணாடியில் அவளெனத்தோன்றியது. மெளனத்தம்பு படிந்த பிறை, பிறை வளையங்களும் கனா நிலைகளும், நிலவிலிருந்து உதிர்ந்த விதை, வாத்துக்காரியின் கிளிஞ்சல் மேட்டிலிருந்து சலூன் கண்ணாடி திரும்பியது. அந்த சலூன் இருந்த சாத்தூரில் அவளோடு சாத்தூரப்பனையும் காணவில்லை. உங்கள் சிறுகதைத் தொகுப்பிற்கு சலூன் நாற்காலியில் சுழன்றபடி என்று ஏன் தலைப்பிட்டீர்கள்? சலூன் நாற்காலிக்கும் உங்களுக்குமான உறவைப் பற்றி? ’அப்பாவின் குகையில் இருக்கிறேன்’ கதைக்குக் காரணமான டவுன்ஹால் ரோடு மலேசியா சலூன்தான். சலூன் ஓவியங்களில் கண்ட துப்பாக்கி வேட்டைக்கார்களின் வேட்டைக்காடுகளில் செவ்விந்திய கௌபாய் தொப்பிகள் பறந்துவந்த குதிரைக்காரர்களையும் அகண்ட கொம்புகளுடன் மெக்சிகன் மாட்டு மந்தைகளையும் கண்டேன். கில்லெட் சவரக்கத்தி தேய்க்கிற தோல் ஓடத்தின் பளிச்சிடும் ஒளியிலிருந்து பிறந்தது சிறுகதைத்தொகுப்பின் தலைப்பு. “மதினிமார்கள் கதை” தொகுப்பிற்குப் பின் மெல்ல மெல்ல உங்கள் எழுத்து மேலும் அகவயமான, பூடகமான நடையை வரித்துக் கொண்டுள்ளதை வாசக உலகம் அவதானித்தாலும், அவற்றினுள் உட்புகுவது சவாலானதாகவே இன்றளவும் உள்ளது. அதிலும் உங்கள் சமீப நாவல்களிலும் கதைகளிலும் நீங்கள் கையாளும் மொழி மிகுந்த சிக்கலானது எனப் பரவலாகவே பேசப்படுகிறது. உங்கள் படைப்புகளைப் புரிந்துகொள்ள வாசகருக்கு நீங்கள் எவ்விதத்திலும் உதவுவதில்லை என்கிறார். உங்கள் எழுத்து முறை மாறிப்போனதைக் குறித்தும் உங்கள் தற்போதைய எழுத்து குறித்தும் வெளியாகும் இத்தகைய கருத்துகளைக் குறித்தும் சொல்லுங்கள். கீழ்த்திசை முறைப்படி கிழக்குத் திசையிலிருந்த வாசகர்கள் முன் கம்பளத்தை விரித்தேன். இதில் கதைக்குள் கவிதையின் வெள்ளி இழைகளை உருவி, உடனே ஓடையாகவும் சிறு அருவியாகவும் உருமாற்றி என்னை விரட்டியது வாசகன்தான். வாசகனிடம் சிறைப்பட்ட புறாவாய் நடுங்கினேன். எனது கதைகளின் ஊமையான கும்காரத்தில் மொழிகதையும் தொடர்ந்து இருப்பதாக ஊர்க்கோடாங்கி சொன்னான். கிரேக்கக் காலத்திலிருந்து தமிழில் இருந்துவரும் ராசிவட்டம் நம் ரத்த நாளங்களில் உடுகணங்களும் சுற்றிக் கொண்டிருப்பதை, நாழிகை வட்டிலுடன் காலத்தைப் பற்றிய நாலாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட கணக்குழுக்களோடு ஓயாத சர்ச்சையில் ‘அறிவன் தேயத்தார் இருப்பதும் காலத்தை எட்டி வளர்ந்த இளங்கோவின் தியானத்தில் உருவான மண் சிலம்பைத் தொடவே நீள்கிறதென் புனைவு. பிரளயக் காலத்தில் தாடியுடன் அசுரரும் தூக்குவோலைக் கொண்டு வந்த ஷணிகத்தை ஒரு வினாடிக்கு முன்பே படைப்பில் தற்கணத்துக்குள் கொண்டு வந்த பழங்கூட்டத்தின் உரையாடல், தொங்கும் நகரத்தில், சொற்களாலான இவ்வீதிகளில் கண்தெரியாத கு.ப.ரா, தன் கதையில், பெண்மையின் தினுசையெல்லாம் மையல் மகுடியில் வாசித்தவேளை இரண்டாம் கிளிமாந்தாவை நாவலாக்கினேன். அனேகமாக மௌனியின் கதைகளில் தேவதாசிகளின் இசையை மாதவியின் கானல்வரிப்பாட்டில் வரும் மாறு என்பதை ஒரு காப்பியத்தின் அடிநாதத்தில் இடமுறைத்திரிபு நவீன நாவல், நெடுங்கவிதை, குறுநாவல், நாடகம் இவற்றுக்கும் பொருந்தி இலக்கணமாய் அமைவது மொழிகதைக்கு நான் மாறுவதற்கும், சிலப்பதிகாரத்தின் இசைமரபு கடல் அணங்கான மாதவியின் கைவரு மகரயாழுக்குள் படிவம்கொண்டிருப்பதை ’த’ நாவலுக்கும் பொருத்திவிடலாம். எனவே தொன்மம் காலவரையறைப்பட்டதல்ல. சமகாலத்தில் நடந்துகொண்டிருக்கும் தொன்மமே மாறு. முன்னால் கண்ட தொன்மங்களின் உறைகல்லாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் சமகால ஓட்டம் கலையும் இனியான நவீனத் தொன்மமும் கம்பனின் அதீத உருக்களும் ந.முத்துச்சாமியின் நீர்மையும், ஆர்.ராஜேந்திரசோழனின் இச்சை பரிணாமச்சுவடுகளிலிருந்து மொழியின் பித்தமாகக் கரைந்து எதிர்காலப்புனைவின் இம்மொழியினை அடைந்திருக்கிறேன். மாறுபட நினைப்பவன் நவீனப்புனைகதையாளன். புரட்டிப்போட நினைப்பவன் தொன்மனாகிறான். கோணல்களை உருவகிக்கிறவன்,புனைகதையின் புதிய வடிவத்திற்கு நாட்டார்மண் குரல்வளையின் ஒப்பாரியிலிருந்து நள்ளிரவில் இறங்கிவரும் தான்தோன்றி உப்போடைகளின் இறந்து உதிர்ந்த ஒரு விண்மீனின் ஒளிவருடங்களுக்காக இசையின் கணிதத்தில் மறைந்திருக்கும் கணிகையர் மரபையே தமிழின் நவீனப்புனைவிற்கு மௌனியின் பிரகாரம்வேண்டிய பேரமைதியில் மயன் மரபையும், திராவிட மரபையும் புனைவு மொழிக்கான சிற்பச்செந்நூலாகச் சித்தம் கொண்டுள்ளது நவீனப்புனைவு. கல்குதிரை உருவான கதை சொல்ல முடியுமா? இதழைத் துவங்கும் எண்ணம் தோன்றியதில் இருந்து முதல் பிரதி உங்கள் கைகளுக்குள் வரும் வரை. 1989 அக்டோபர் 30ஆம் தேதி விருத்தாச்சலம் அருகிலுள்ள பூவனூர் ரயில் நிலையத்திலிருந்து சென்னையை நோக்கிக் கிளம்பிய பகல் நேரத்துப் பாசஞ்சர் வண்டியில் சிறுகதை எழுத்தாளர் உதயசங்கர் அங்கு ஸ்டேசன் மாஸ்டராக இருந்து பச்சைக்கொடி காட்டியதில் கடைசிப் பெட்டியில் இருந்த நான் தூங்கிக்கொண்டிருந்தேன். கடைசி மூன்று ரயில் பெட்டிகளைக் கலைந்துவிட்டுச் சென்னைக்கு ரயில் போய்விட்டது. தூங்கி முழித்தபோது ரயில் திருச்சியை நோக்கி வந்துகொண்டிருந்தது. உளுந்தூர்ப் பேட்டை அவுட்டரில் ரயில் மூச்சு விட்டு நின்றபோது இறங்கி ஒரு முக்கூட்டுச் சாலைக்குப் போய்த் தற்செயலாய் வந்த சேலம் பஸ்சில் சின்னசேலம் போய்ச் சேர்ந்துவிட்டேன். அங்கிருந்து நாலுமைல் தூரத்தில் கல்லாநத்தம் என்ற ஊரில்தான் என் நண்பனான கவிஞர் சௌந்தர்ய அருள் இருந்தான். அவனோடு சிலநாள் அங்குத் திரிந்ததில் கல்வராயன் மலைக்குப் பக்கத்தில் வனம் திரியும் இருளனைச் சந்தித்தேன். இதோ கல்குதிரை பிடி வரம் என்றான். இங்கு எல்லாக் குதிரைகளுமே தமிழிலக்கியத்தில் கண்பட்டை போட்டுக்கொண்டுதான் ஓடுகின்றன. நிழல் குதிரை நிழல் மீசை என்பதுதான் உண்மை என்றான். கால ஒழுங்கை கலையின் விரல்கள் கடைபிடிக்க முடியாது என்றான். துடிப்பான தலைமுறை குதிரையின் தொழில் வேகம் வேகம் என்றான். இது கல்குதிரை சக்தி இருந்தால் உயிரூட்டி சவாரி செய். சௌந்தர்ய அருளின் ‘பீத்தோவன் தோட்டம்’ நெடுங்கவிதையும் நான் எழுதிக்கொண்டு இருந்த ‘மீண்டும் ஆண்டாளின் தெருக்களில்’ சிறுகதையும் முதல் இதழுக்கான படைப்புகளாக இருக்க நீண்ட நாள் கவிதை எழுதுவதில் இருந்து விலகி இருந்த தேவதச்சனின் மூன்று கவிதைகள் கிடைக்கவும் சென்னைக்கு மீண்டும் ரயில் ஏறினேன். விக்ரமாதித்தனோடு கொட்டிவாக்கத்தில் இருந்த பிரமிள் அறைக்குச் சென்றோம். முதலில் பிரமிள் கவிதை தர மறுத்துவிட்டார். ஆனால், அவரோடு இருந்த ‘லயம்’ ஆசிரியர் காலசுப்ரமணியன் அன்று காலப்பிரதீப் சுப்ரமணியனாகப் பிரமிளால் பெயர்மாற்றப்பட்டிருந்தார். அவர்தான் பிரமிளின் ‘வரலாற்றுச் சலணங்கள்’ கட்டுரையை அவரிடம் இருந்து வாங்கிக்கொடுத்தார். இந்த இதழ் சிறப்பாக வர பிரமிளும் விக்ரமாதித்தனும் தேவதச்சனும் இருப்பதில் கவிஞர்கள் சிற்றிதழ் துவங்குவதற்கு ஆதார ஊற்றாக இருக்கிறார்கள் என்பது தெரியும். முதல் இதழிலேயே பிரமிளின் லங்காபுரி ராஜா ‘சிறுகதைத் தொகுப்புக்கு மூ. அப்பண சாமி விமர்சனம் எழுதினார்’. 1989 நவம்பரில் முதலிதழ் தோழர். வைகறை வாணன் நடத்திவந்த ராசகிளி அச்சகத்தில் ஒருமாதக் காத்திருப்பில் முதல் இதழ் வந்தது. தஞ்சாவூர்க்காரர்கள் வைகறையும் வீ. அரசும் ஒவ்வோர் இரவிலும் அமுதமிட்டவர்கள். இவர்கள் இருவரிடமே மணிக்கொடி, சரஸ்வதி, குமாரசாமியின் வைகை இதழ் தொகுப்புகள் அருப்புக்கோட்டைக்கு அருகில் பண்ணை மூன்றடைப்புக் கிராமத்திலிருந்து வந்த யாத்ரா, சாந்தி ஏடுகள், செல்லப்பாவின் எழுத்து இதழ்கள், கசடதபற, பிரஞ்ஞை தொகை நூல் அனைத்தையும் இரவரவாய் வாசிக்க வைத்தவர்களும் இவ்விருவருமே. அன்றைய பொறியியல் கல்லூரி மாணவர்களாய் இருந்த பீட்டர், சாய்ராம், சுப்பையா பாரதி, கைலாஷ்சிவன், த. அஸ்வதரன் இவர்களின் கைகள் கோத்து இதழைக் கொண்டு வந்தனர். த. அஸ்வதரன் மட்டும் எவ்வளவோ முறை இதழ்களைக் கொண்டு வந்தவன் 2000த்திற்கு பிறகான 12 இதழ்களைக் கொணர இன்று வரை முனைப்பாய் செயல்பட்டிருக்கிறார்கள் என் சகோதரர்கள் கவிஞர் தாமரை பாரதியும் எழில் சின்னத்தம்பியும் நண்பன் பீட்டர் பிரசாத்தும். முதல் மூன்று இதழ்கள் அச்சானபோது பிரமிளும் அடிக்கடி அச்சகம் வருவார். நடந்தே திருவான்மியூர் தாண்டி கொட்டிவாக்கம் அறைக்குக் கூட்டி வந்துவிடுவார் பிரமிள். அங்கிருந்து என்னைக் கல்குதிரையை உருவாக்கிய நண்பன் த. அஸ்வதரன் குகை என்ற இடத்தில் கல்குதிரை நடத்துவதற்கு ஆதார முகவரியாக இருந்தான். தனி இதழ் ஐந்து ரூபாய் ஆண்டுச் சந்தா இருபது ரூபாய். கீழே முதல் குறுக்கு தெரு, சிவகாமிபுரம், திருவான்மியூர். அந்த அறை இப்போது இல்லை. இதழின் கடைசி இருபக்கங்களில் பதுங்கு குழியில் இருந்து… என்ற கவிதையைச் சேரன் நாடோடி என்ற பெயரின் கல்குதிரைக்கு அனுப்பி இருந்தார். நான்காவது இதழ் கல்குதிரை எடுக்கும் நாட்டுப்பூக்கள் மு. சுயம்புலிங்கத்தின் கையெழுத்துப் பிரதிகளை கி. ராஜநாராயணன் இடைசெவல் வீட்டில் வைத்துக் கொடுத்த அன்றுதான் க.நா.சு. நடத்திய ’இலக்கிய வட்டம்’ முழு இதழ்களையும் கொடுத்தார். வேப்பலோடை கிராமத்தில் காளயுக்தி வருஷம் 1978 ஐப்பசி மாசம் நாட்டுப்பூக்கள் கையெழுத்துப் பிரதியாக ஒவ்வொரு மாதமும், இலக்கியச் சத்திரத்தில் இரவுவிளக்குகளில் படிக்கப்பட்டன. அந்த ஊர் விவசாயிகள் அனேகம் பேர் வாசித்து ரசித்த பக்கங்களே இவை. இன்னும் பல பக்கங்கள் அவர் மெட்ராஸுக்கு வந்து ‘ஆயிரம் மலர்கள்’ என்ற இருபதுக்கு மேற்பட்ட கையெழுத்துப் பிரதிகளாக வெளியிட்டவை. கிராமத்தில் இருக்க முடியாமல் சம்சாரித்தனத்தை விட்டுவிட்டு மெட்ராஸிக்கு ரயில் ஏறியவர்தான் சுயம்புலிங்கம். ‘நாட்டுப்பூக்கள்’ இந்த நேரத்தில் இதழ் வடிவில் கல்குதிரை இன் 4-வது இதழாக வெளிவந்திருப்பது எல்லாவற்றையும் சேர்த்துக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றுதான். கிராமப்புறங்களின் ஊடே வேகமாக ஓடும் இருண்ட தார் ரோட்டில் எதையும் ஜன்னல் வழியாகத்தான் பார்த்துக் கிரகிக்க வேண்டியிருக்கிறது. இங்குள்ள நாட்டார் மரபின் தான்தோன்றிக் கலைகளின் இயல்பு நிலைகள் குறைத்து மதிப்பிடப்படுகிறது. நவீனக் கலையின் புனைவுக்கு மண் நூரையீரலில் புதைந்து மூச்சுவிடும் கல் விதைகளாகவும் மொழிக்குள் மறைந்துள்ளன களையெடுக்கும் கதிரருக்கும்கதைகள். தான் தோன்றி ஓடைகளிலேயே காட்டு அணங்குகள் அரிச்சலில் தோன்றி மறைவார்கள். வட்டமாய் உருண்டு வரும் முள்லெலிகளின் நண்பகல் உறக்கம்கூடக் கதைக்கான இருட்டாய் இருக்கிறது. வேலன் வெறியாட்டின் காட்டுவாக்குகளாய்க் கதைக்குள் மறைந்திருக்கும் வள்ளி ஓடை அரூவமாய் வந்து பேனா முனையில் தொட்டுக் கொண்டிருக்கிறது. முனியேறிய கதை சொல்லிகள் காட்டில்தான் ஒளிந்திருக்கிறார்கள் கதைகளுக்குள் கிளைத்துச் செல்கிறார்கள். அங்கு ஒவ்வோர் அங்குல மண்ணிலும் கிளைவிடும் கல்லோடைகளின் முணுமுணுப்பில் புனைவின் கல்ரேகைகளை வரைகிறார்கள் மறைந்துபோன உருவிலிகள். 2000 வருஷக் கதை மரபோடு உடனே நவீனமாகிவிடுவார்கள் இந்த நீரர மகளிர். நாட்டுப்பூக்களில் தினம்தினம் உதிர்ந்து கொண்டிருக்கிறார்கள். புதுமைப்பித்தனின் காஞ்சனையின் சுவாசத்தின் புதிய ஸ்பரிசக்திலிருந்து வறண்டுவிட்ட இலக்கியச் சூழலில் புதிய விழைவுகள் ஏற்படட்டும் என்று உருவானதுதான் கல்குதிரை. 1990 ஜனவரி வரையான நான்கு இதழ்களுக்குள் கால ஓட்டத்தையும் இலக்கிய உள்ளூமைகளையும் கூறி முடித்திருக்கிறேன். மற்ற இருபத்தாறு இதழ்கள் குறித்துதானே தோன்றும் வாச்சியார்த்தங்களைச் சமயம் வாய்க்கும்போது விரித்துரைப்பேன் அவ்வளவுதான். கல்குதிரையில் வெளியாகும் படைப்புகளை எவ்வாறு தேர்வு செய்கிறீர்கள்? தேர்வு செய்யும் முறை கடந்த 25 ஆண்டுகளில் எவ்வாறு மாறி உள்ளது? “அந்தந்தக் கவிஞர்களின், கதைக்காரர்களின் இயற்கை நிலையில் இருந்தே ஒவ்வொரு படைப்பையும் பெறுவதற்கான காத்திருப்புதான் தேர்வு செய்யும் முறை.” எதார்த்தம் மீறிய கதைகளையும், மீடியாவுக்கு எதிரான மொழி கொண்டவர்களையும் கல்குதிரை தானே ஈர்த்துக்கொள்கிறது. வசதிப்படி கால நிர்ணயம். பனிக்கால இதழாகவோ வேனிற்கால இதழ்களாகவோ, காற்கால இதழ்களாகவோ படைப்புக்கான காலத்தைத் திறந்தவெளியாக வைத்திருக்கிறது கல்குதிரை. வெகுஜன இதழ்களுக்கு எழுதா விரதத்தைக் கல்குதிரையில் எழுதும் பலரும் கடைப்பிடித்து வருபவர்கள்தான். நடு இதழ்கள் சூழலை வளைத்துக்கொள்கின்றன இன்று. அச்சு இயந்திரத்தின் ராட்சஸ நாக்கில் பெரும்பாலான கதைக்காரர்கள் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கும் சூழல் மெல்லமெல்ல மாறி வருகிறது. ஓர் இதழ் கொண்டுவர பத்து மாதங்கள் வரை ஆகிறது. படைப்புக்காக ஓராண்டு விளைச்சலுக்காக ஒரு விவசாயியைப்போல் காத்திருப்பது சிறுபத்திரிக்கையாளரின் இயல்பாகவும் உள்ளது. காலக்கிரமம் தேவையில்லை. ஓராண்டு மழை பொய்த்துவிட்டால் விளைச்சலும் சுருங்கி முதிர்ந்த வார்த்தைகள் அடியில் உள்ள கவிதைகளைத் தானியங்களாகவும் முத்துகளாகவும் பெறுவது சிரமமாகிவிடுகிறது. அந்தந்தக் கவிஞர்களின், கதைக்காரர்களின் இயற்கை நிலையில் இருந்தே ஒவ்வொரு படைப்பையும் பெறுவதற்கான காத்திருப்புதான் தேர்வு செய்யும் முறை. ஒரு சிறுகதையைப் பலமுறை எழுதிக்கொடுத்தவர்களும் உண்டு. ஈகோவாக எடுத்துக்கொள்ளாதவர்கள் இன்றைய நவீனச் சிறுகதைக்காரர்கள். இதைப்போல் தொண்ணூறுகளின் கவிஞர்கள் கல்குதிரை வயலுக்குப் பறவைக் கூட்டமெனத் தானே தேடிப் பறந்துவந்துவிடுவார்கள். சிறுபத்திரிக்கை என்றாலே கவிஞர்கள்தான். அந்த லாவாவின் கோடுகளில் இருந்து ஒவ்வோர் இதழும் வெடிப்பெழுச்சியாய் வருவதற்கு மூத்த மொழியான தமிழ்க் கவிதைகள் சிறுபத்திரிக்கைச் சூழலை இன்றுவரை காப்பாற்றி வருகிறார்கள். “பயணம் செய்வதற்குக் காசு தேவையில்லை. கால்கள்தாம் தேவை” எனும் பொன்மொழிக்குச் சொந்தக்காரர் தாங்கள். பயணம் உங்களது வாழ்வை, எழுத்தை எவ்வாறு பாதித்தது? இந்திய வனப்பரப்புகளில் மறைந்திருக்கும் என் புனைவின் நிலப்பரப்புகளில் சுவர்ண எறும்புகளின் லட்சம் பாதைகளில் அலைந்து திரியும், நான் நிலவின் ஒளியருந்தும் நரியாக என்னை உருமாற்றிக்கொண்டேன். சாத்பூரா மலையடிவாரங்களிலும், ஆரவல்லி மலைகளிலும் மீனா பழங்குடிகளின் நடுகல்லில் இன்னும் புதிராக உள்ள சிந்துவெளியின் மீனெழுத்தைக் கண்டேன். இதை மொழி அறிஞர் நொபுரு கரசிமா மீன் வடிவத் திடம்படு மெய்ஞானத்தில் கண்டபோது அதிர்ந்தேவிட்டிருந்தேன். அந்த மீனா நடுகல்லின் நிழல் நீண்டு மீன நாட்டைத் தொட்டது. மலையத்துவஜன் குமாரத்தி மீனா தென்கடலில் முன்னைப் பரதவர்க்கு எவ்வளவு தொல்முது தேவதையாக இருக்கிறாள். பயணத்தின் விரிவான வலைக்குள் ஒரு புனைகதையின் குறியீடாகக் கல்மீனைக் கண்டேன். கிர்நாருக்கு அருகில் கடகத் திருப்பத்திலுள்ள குப்தர் காலக் கதைசொல்லிகள் மகாவிஹாரில் வரைந்து சென்ற நிலவின் ஒளியருந்தும் நரியானது என் இருப்பும். அனைத்து அலைச்சலின் ஊடாட்டங்களும் தொலைதூரத்தில் மயங்கியிருக்கும் புனைவின் தூரப்புள்ளிகளாக இருந்தும் எப்போதுமே நவீனப் புனைகதைகளுக்குள் ஊர்ந்து வரியிட்டு இணைந்துகொள்கின்றன. இன்றைய காலத்தில் யுகங்களுக்கு இடையில் திரியும் அலைச்சல்களாக உருவம் கொண்டுள்ளது நவீனப் புனைகதை. இன்னொன்றும், பயணம் என்ற வார்த்தையே இன்று தேய்வழக்குதான். அதை நான் அலைச்சல் என்ற சொல்லால் பதிலீடு செய்ய விரும்புகிறேன். உங்கள் சமகால எழுத்தாளர்களான எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் போன்றவர்கள் பத்திரிகைகளில் (தீவிர இலக்கியப் பத்திரிகைகள், வெகுஜனப் பத்திரிகைகள் இரண்டிலும்) தொடர் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்கள். நீங்கள் இதுவரை பத்திரிகைகளில் தொடர் பத்திகள் எழுதாததற்கான காரணம் தங்கள் பயணம் மட்டும்தானா? புனைவின் சாபமேற்ற என் விரல்கள் மீடியாவுக்குள் போகாமல் அந்தரத்தில் நுழைகின்றன. சிறு விளக்கு தவிட்டுப்பனியில் குளிரும் மண்வீடு கரையும் நாசியில் ஏறிய காற்றை சுவாசிக்கும் தனலட்சுமியாக மாறி அவள் விரல்கொண்டு எழுதும் என் மண்மத்தின் நாவலிதைத் தனுர் இலைகளால் மூடிய பருவத்தை உடலாகக் கொண்டவள் கிணற்றில் நீரிரைக்கும் கயிற்று ஒலியில் தவளைக் குரல் விட்டு விட்டுக் கேட்கிறது. இவ்வேளையும் அவள்தான் நானாகி எழுதிக்கொண்டிருக்கிறேனோ…! வெளுத்த நெல்வயலில் தலை குனிந்து சொற்களைத் தேடும் வேளை எறும்புகள் கமகமத்தன. எறும்புகளிடம் வாக்களித்தவாறு நீயூஸ்பிரிண்ட் அச்சுத்தாளில் என்னால் எழுத முடியவில்லை. பழைய காரை வீட்டுக்கு ஊர்ந்த எறும்புகள் வரைந்த இவ்வோவியம் புழுங்கிய இரவில் வெளியே போனவளைப் பலரும் கூட்டி வருகிறார்கள் கைத்தாங்கலாய், கனவில் முங்கிய தெரு. எல்லார் மறதிகள் வெளிறிய ஊர் என் ஊர். அதற்குத் தெரியாத அச்சு எந்திர ராட்ஷச நாக்கில் மரத்தில் தொங்கும் வேதாளம் இடமாறிச்செல்வதில்லை. கூப்பிடக் கூப்பிட மனதைத் தொத்திய கதை வெளவால்களோடு வாழ்கிறேன். “நித்ய பயணி” என்று அறியப்படும் தாங்கள், கிட்டத்தட்ட பயணத்திலேயே வாழ்வின் பெரும்பகுதியைக் கழித்த தாங்கள், பயணக் கட்டுரைகள் அதிகம் எழுதவில்லையே? “காவிரியின் பூர்வ காதை” என்ற ஒரு நூல்தான் வெளியாகியுள்ளது. தங்களது பயணங்கள் குறித்து விரிவான நூல் எழுதும் திட்டம் இருக்கிறதா? “ பயணம் என்ற வார்த்தையே இன்று தேய்வழக்குதான். அதை நான் அலைச்சல் என்ற சொல்லால் பதிலீடு செய்ய விரும்புகிறேன்.” இந்திய இருப்புப்பாதைகள் ஊழின் ஒலிகளோடு புனைவின் தோற்றப் பின்புலமாகி இரும்புக் காலத்தைத் தொட்டு காலத்தொலைவின் தூரப்புள்ளியில் ஒலிக்க என் கதைகளை வரையும் நீண்ட வீடு அரக்குநிற ரயில்பெட்டிகள் ஓடும் ஜன்னல்களாகின்றன. அகாலத்தில் வரும் நாடோடி ரயில் பிச்சைக்காரர்களின் தகரப்பிடில் உருக்கிய சோகக்காற்று அனாதைகளின் தேநீர்க் கோப்பைகளாகிவிடுகின்றன. ஒவ்வொரு ஜன்னலிலும் வேறுவேறு நிலப்பரப்புகளை மரங்களோடும் விலங்குகளோடும் புராதனப் பட்டிணங்களோடும் யமுனையோடும் ஈர்த்துக்கொள்கிறேன். நிலப்பரப்பின் தொலைதூர அகப்பரப்பில் தோன்றும் வெளிகளில் எந்த வெளியில் புனைவு உருவாகிறது? புனைவுச் சர்ப்பங்கள் எங்கே சுருண்டு திரிகின்றன என்று அளந்து பார்க்க முடிவதில்லை. கண்ணிமைத்துக் காணும் கண்களுக்கு வேண்டுமானால் வெகுவாய் வெகுபாஷை கொள்ளும் நவீனப் புனைவின் தோற்றங்கள் பயணக் குறிப்புகளாகத் தோன்றலாம். அவர்கள் சுருக்கப்பர்களாக எஞ்சிவிடுகிறார்கள். த நாவலில் வரும் மாண்டு நகரம் வடமேற்கின் புலப்படாத ஏதோ நகரமாக நாவலில் கருக்கொள்வதற்கு மார்க்கோபோலோ குப்ளாய்கான் சந்திப்பு காரணமாக இருக்கலாம். காவேரியின் பூர்வகாதையில் நீல நைல் ஒரு கண்ணாடிப் புழுவாக நெளிந்து என் புனைவைத் திரும்பிப் பார்க்கிறது. தஞ்சாவூர் மிதந்து கொண்டிருக்கும் காவேரித் தொன்மம் ஹோமர் வாசிக்கும் லயர் யாழுக்கு இணையானது என்பதைக் கண்டுபிடிக்க தஞ்சாவூர் ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரத்தைத் திறக்க தலைக்காவேரியிலிருந்து பழங்காவேரி வரையுள்ள திராவிட மரபு மயன் மரபு கட்டிடக் கலைக்குள் அமைந்துவிட்ட சிற்ப மரபுகள் மயனாசுரனிடம் இருந்தே தோன்றியிருக்க வேண்டும். நம்முடைய தொன்மங்களோடு இயங்கக் கூடிய சிவராம்காரந்தின் மண்ணும் மனிதரும், அழிந்த பிறகு, பாட்டியின் கனவுகள் இங்கும் கதை மரபாகிறது. யூ.ஆர்.அனந்தமூர்த்தி படைப்புகளான சம்ஸ்காரா, பாரதிபுரா, அவஸ்தே, பவா, திவ்யா, அக்கமாதேவி கவிதைகளில் இருந்து பசவண்ணர் பாடல்கள் வரை சலனமடைந்தது காவேரி. என்னைத் திறந்த சந்திரகிரியில் வடக்கிருந்து உயிர்நீத்த சந்திரகுப்தன் அருகில் 23வது தீர்த்தங்கரர் பார்சுவநாதர் சுற்றி வண்டுகள் ரீங்காரமிட்டு அரூபத்தில் வரைந்து மறைந்து கொண்டிருந்த கலையின் உருவற்ற இயற்கையின் லயமலரை சாதாரண வரிவண்டுகளிடமிருந்து பெற்றுக்கொண்டதுதான் இந்நூல். இங்கே காவேரி கிளைகளில் மெளனியின் பிரபஞ்ச கானத்தையும், லா.ச.ராவின் பச்சைக்கனவையும், கும்பகோணம் வீட்டில் துவங்கிய நகுலனின் நினைவுப்பாதைக்குப் பின்வந்த நாய்கள் நாவலையும், தி.ஜாவின் செம்பருத்தியையும், ந.முத்துசாமியின் புஞ்சைக் கதைகளுக்குள் தோன்றும் செம்பனார்கோவில் ஊர்த்தேடலையும், தஞ்சை பிரகாஷின் மிஷன் தெருவையும் கடந்து திருப்புவனம் சரபேசருக்குப் பின்னுள்ள தெரு ஓவியன் ’மாடுகள்’ முத்துகிருஷ்ணனுக்கு முன்பே நற்றுணையப்பன் கோவில் சிற்பச்சிற்றுருக்களில் வேட்கையை வடிவத்தில் கைவிடாத ஓவியர் மூ. நடேஷையும், காவேரி நீரின் தொன்மங்களாக நெல்மணி திறந்த வெண்மணித் தியாகிகளையும் கீழத்தஞ்சையின் இடதுசாரிகளையும் அனைத்து விவசாயிகளையும் 126 வகை நெல்வகைகளையும் கடந்து கொண்டிருக்கிறது காவேரியின் பூர்வகாதை. மலேசிய சபா சரவாக் நிலப் பழங்குடி மக்களைப் பற்றிய நாவலின் ஆய்வுக்காக நீங்கள் என்னென்ன முயற்சிகள் மேற்கொண்டீர்கள்? அந்த நிலப்பரப்பின் பழங்குடி மக்களின் வரலாற்றின் மூலமாக உங்கள் படைப்பு இந்த உலகிற்கு என்ன சொல்ல விழைகிறது? இந்த நிலத்தஸாக்குகள், கடல் தஸாக்குகள் வெப்ப அயன மண்டலமெங்கும் கடந்து செல்லும் மூங்கில் சாலையான மலேசியாவின் சபா சரவாக் நிலங்களின் பழங்குடி மக்களை அத்தியாயங்களாகக் கொண்ட “த” நாவல் இரண்டாம் பதிப்பாக வெளிவந்துவிட்டது. ஒரு மூங்கிலைத் தொட்டதும் சாண்டகான் காற்று ஒலி. போர்னியா நிலக்குடிகளின் வேறுபடும் பாடல் ஓசை. மூங்கில் வெட்டி அவைகளை மரங்களோடு சேர்த்துக் கொக்கியிட்டு வடிவப்பின்னலில் உருளும் நீருக்குள் மிதக்கும் வழி. மரத்தின் மீது ஏரி ஒரு மூங்கிலைப் புதர்மேல் வீசித் தாவும் சுருளானபாதை. தொடர்ச்சியாகப் பாயும் மூங்கில் நீரில் பட்டுச் சாயும் ஒன்றுமேல் ஒன்றடுக்கி நகரும் படகு வடிவம் கடைசிவரை பள்ளங்களில் கடந்து மிதக்கும் மூங்கில் குகையில் காகாதுயே… பறவையாகக் சஞ்சலந்தி புலம்புகிறது. வர்ணிக்க நேரமிதுவல்ல. அங்குக் குறுகிய துளைப்பாதைகளில் ஸர்ப்பமாக ஊர்ந்து மூச்சுவிடும் பாறைகளில் படிந்த லாவா ரேகைகளில் எழுதினேன். சபா சரவாக் எலும்புகளில் உறைந்த நீரில் சலனம் சாவை நோக்கிச் செல்லும் பாதையில் ரானாவ் பிணைக்கைதிகளின் அணிவகுப்பை நாவலாக எழுதினேன். நீங்கள் இன்னும் செல்லாத இடம் அல்லது செல்ல விரும்பி இதுவரை நிறைவேறாத பயணத் திட்டம் என்று ஏதேனும் இருக்கிறதா? இனிவரும் காலங்களில் உங்களது பயணத்தில் அடுத்தகட்ட மாற்றம் என்பது எவ்வாறு இருக்கும்? மலேசியாவுக்குச் சென்ற ஆண்டு வந்தபோது வல்லினக் குழு காட்டிய பத்து கேவ்ஸ் முருகன் கோவில் சுண்ணாம்பு மலையில் தொங்கும் தலைகீழ் சிற்ப வடிவங்களைத் தொட்டதும் யாரோ வீறிட்டு அலறும் ஒலி கேட்டது. பர்மா மலேசியாவிலிருந்து இந்தோனேஷியா கினபடாங்கன் மலைகளில் இறங்கி சபாசரவா பிலிப்பைன்ஸ் வரை நான்காம் பிறை வடிவிலிருக்கும் சுண்ணாம்பு மலைகளை மலைமலையாய் அலைந்து திரிந்து அதில் மறைய விரும்புகிறேன். இந்த நேர்காணலின் தொடர்ச்சியாகப் படைப்புகளை உள்வாங்கி நவீனப் புனைகதைகளுக்குள் செயல்பட முனைபவர்கள் மற்றும் புதிய உரையாடலைத் துவங்குபவர்களின் கேள்விகளுக்கு எழுத்தாளர் கோணங்கி பதிலளிக்க இருக்கிறார். கேள்விகளை aroomagazine@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் அனுப்பவும். தேர்ந்தெடுத்த கேள்விகள் அவரது பதில்களுடன் அரூ இதழில் பிரசுரமாகும். ஓவியங்கள் ஞானப்பிரகாசம் ஸ்தபதி வேலூர்ப்பக்கம் உள்ள ஆம்பூரில் வசித்து வருகிறார். கடந்த 15 ஆண்டுகளாகக் கல்குதிரையின் ஒவ்வோர் இதழிலும் சில கோட்டோவியங்கள் வரைந்திருக்கிறார். தீவிர இலக்கிய வாசிப்பும் கலை குறித்த விவாதங்களும் செய்யக் கூடியவர். திருநெல்வேலியில் வசிக்கும் ஓவியர் செல்வம் அவர்களின் ஓவியங்கள் பல கல்குதிரை இதழ்களில் வெளியாகியுள்ளன. இந்த ஓவியம் ஓவியர் சந்துருவால் பொதிகைக்கூடலில் நடைபெற்ற ஓவியர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் சந்திப்பில் வரையப்பட்டது. லண்டனில் வசித்து வரும் கவிஞரும், ஓவியருமான றஷ்மியின் தூரிகைச்சிதறலில் பல கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் portraitகள் வந்துள்ளன. அவரது ஆக்கங்கள் ஆயிரம் கிராமங்களைத் தின்ற ஆடு, ஈ தனது பெயரை மறந்து போனது, ஈதேனின் பாம்புகள் ஆகியவை. இதைப் பகிர: Click to email this to a friend (Opens in new window) Click to print (Opens in new window) Click to share on Facebook (Opens in new window) Click to share on Twitter (Opens in new window) Click to share on WhatsApp (Opens in new window) Click to share on Pocket (Opens in new window) Click to share on Tumblr (Opens in new window) Click to share on Pinterest (Opens in new window) தொடர்புடைய படைப்புகள் நேர்காணல்: எழுத்தாளர் ஜெயமோகன் அறிதொறும் அறிதல் பெருகும் முடிவிலியாகவே இந்தப் பிரபஞ்சம் இருக்கும், வெளியிலும் துளியிலும். நேர்காணல்: கவிஞர் சிரில் வாங் நம் இலக்கிய உலகம் டிராகன்ளாலும் ரோபோட்டுகளாலும் மட்டுமே நிறைந்துவிடும் என்பது என் அச்சம். நேர்காணல்: லொந்தார் இதழாசிரியர் ஜேசன் எரிக் லுண்ட்பர்க் பாகம் #2 மற்ற இலக்கிய வகைகளைக் காட்டிலும் அறிவியல் புனைவு உயர்ந்ததோ தாழ்ந்ததோ அல்ல. நேர்காணல்அறிவியல் புனைவு, இதழ் 3, கல்குதிரை, கறுப்பு ரயில், கனவுருப் புனைவு, கோணங்கியின் படைப்புலகம், சிலப்பதிகாரம், செவ்வியல் மரபு, தேவதச்சன், தொன்மம், நகுலன், நாட்டார் மரபு, பரிசோதனை முயற்சிகள், பிரமிள், பின்நவீனத்துவம், புதுமைப்பித்தன், புராதனம், மணிக்கொடி, மாய யதார்த்தம், மிகைப்புனைவு Post navigation ← ஒரு பெருந்திறப்பு ஒரு கனவு → 2 thoughts on “நேர்காணல்: எழுத்தாளர் கோணங்கி” Vijay says: April 12, 2019 at 10:30 am நான் வெகுநேரம் எடுத்துக்கொண்ட நேர்காணல் பதிவு! கோணங்கியாரைப் போலவே மிகச் செறிவாக இருந்தது! நேர்கண்டோருக்கும், பதிந்தோர்க்கும் பகிர்ந்தோர்க்கும், மூலவருக்கும் நன்றிகள்! Reply M.karunanidhi says: April 16, 2019 at 6:54 pm நேர்காணலை இப்போது தான் படித்து முடித்தேன்.சரியான பதிவு.காலத்தின் தேவையும் கூட.கோணங்கியின் புதுச் செல்நெறியை முன் மொழிவதோடு புதுகோணத்தையும் ,கனவுலகின் தமிழ்நிலவெளியின் படிமத்தையும் ,நிகழ்வெளியின் அரிதாரம் பூசா மெய்வுருவையும் எனப் பலகோணத்தில் விரிகிறது நேர்காணல்.மவுனத்தின் நாவில் எழுதப்பட்ட மொழி லாவகமாக பல்நிறம் கொண்டுள்ளது.. நிகழ்த்து வெளியின் பரப்பினை முன்மொழிந்தது, பேசாப் பொருளை பேசத் துணிந்ததன்விளைவாகவே நான் கருதுகிறேன்.மௌனத்தில் உலாவும் நாவின் எழுத்தை உருவாக்கும் தருணத்திற்காக பல்வேறு இடங்களுக்கு பயணம் செல்வதை அலைச்சல் எனக் கூறியது புதுமையானது. பறவைகள் வலசை செல்வது போல ஒரு படைப்பாளி பல்வேறு நிலப்பரப்பின் சுவடுகளைத் தேடி அலைந்து நீரின் தடம் தேடி, நீண்ட மணல் பரப்பின்ஈரத்தின் தடம் தேடி, பூக்களின் வாசம் நுகர்ந்து ,மனிதர்களின் வியர்வையை நுகர்ந்து, வரலாற்றின் சர்வதேச சுவாசத்தை நாடி பிடித்து சொல்வது போல இந்த நேர்காணல் அமைந்துள்ளது.கோணங்கி எனும் படைப்பாளி மிகப் பிரம்மாண்டமான எழுத்துலகம் விரிந்திருக்கிறது.பிரபஞ்சத்தில் இருக்கும் வானத்தைப்போல. இதை அறியாதவர்களுக்கு அறியாதவைகளாகவும் புரிந்தவர்களுக்குப்புரியாதவைகளாகவும் வெளிப்படுகின்றன.தன் படைப்பின் நிலப்பரப்பை மட்டும் இந்த நேர்காணல் விளக்கவில்லை, உலகளாவிய எழுத்தின் முகம் தேடி அனைத்துப்படைப்புலகில் தமிழ் நிலப்பரப்பில் நவீன யுகத்தில் வாழும் படைப்பாளர்களின் பொருண்மைகளை நுண்மாண் நுழைபுலம் கொண்டுஆய்ந்துஆய்ந்துஉய்த்துணர்ந்துவெளிப்பட்டுள்ள கோணங்கி நேர்காணல்.சகபடைப்புலகத்தின் பூடகத்தன்மைகளை வாசித்து வாசித்து ஆழ்ந்த வாசிப்புக்கு உட்படுத்தும்போது வரலாற்றின் படிமங்கள் நம் கண்முன்னே தோன்றக்கூடும்.நவீனத்தொழிநுட்ப யுகத்தில் வாழும் வாசகன் ஒரு படைப்பை ஆழ்ந்து ஆய்ந்து ஆய்ந்து வாசித்தல் நிகழ்வதில்லை. தற்காலச் சூழலில் ஆதலால்தான் கோணங்கி போன்ற புதுயுக படைப்பாளர்களின் படைப்புகளை யாரும் முகர்ந்து பார்ப்பதும் இல்லை.இந்த முகர்ந்து பார்க்கும் படைப்பாளியின் படைப்பு மனத்தை நாடி பிடித்துப் பார்க்கும் வாசகனுக்கு ,இதுநுழைவாயிலாக அமைகிறது இந்த நேர்காணல்.எழுத்தாளர் கோணங்கி அவர்களின் சக உலகளாவிய படைப்பாளர்களின் தன்மையை வெளிப்படுத்துவதோடு தொன்மை தமிழ் இலக்கியங்களிலிருந்து நம் மரபை தேடும் பார்வை நேர்காணலில் வெளிப்பட்டுள்ளது கோணங்கி எனும் நவீன ஆளுமை தத்துவங்களையும் மரபின் தொன்மைகளையும் தமிழ்நில விழுமியங்களையும் சமயங்களையும் கலை இலக்கியப் பெருவெளிகளையும் நீண்டதொரு வாசிப்பிற்குப்பின்னான கருத்தாழமிக்க நேர்காணலாக இது வெளிப்பட்டுள்ளது,சிறப்புக்குரியதாகும்.பரிசுகளை எதிர்பார்க்காத படைப்பாளிகள் அரிதே.அந்தவகையில் கோணங்கியின் படைப்புலகம் விருதுகளும் பரிசுகளும் தன் படைப்பாளுமை விரும்பாத எதிர்நோக்காத பாசாங்கற்ற எழுத்துலகின்பிதாமகனாகவிளங்கும் கோணங்கி அவர்களின் நேர்காணல் சிறப்புக்குரியது.கோணங்கி அவர்களுக்கு பேரன்பும் வாழ்த்துக்கள்… -ம.கருணாநிதி, தமிழ்த்துறை,அருள் ஆனந்தர் கல்லூரி,கருமாத்தூர். Reply உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள் Cancel reply இதழ் வெளியாகும்போது மின்னஞ்சல் பெற Aroo is an online Tamil magazine for speculative and experimental works. Launched in October 2018, we publish one issue every three months. We feature short stories, poetry, essays, interviews, comics, paintings, and all kinds of artwork that are speculative or experimental in nature. The name 'Aroo' (அரூ) is a shortened version of the Tamil word 'Aroobam' (அரூபம்), meaning formlessness. அரூவில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகள் படைப்பாளருடையவையே, அரூவின் கருத்துகள் அல்ல. அரூவில் வெளியாகும் ஓவியங்களும் புகைப்படங்களும் அரூவிற்கென்றே படைப்பாளர்களிடம் பெறப்பட்டவை. உரிய அனுமதியின்றி வேறெங்கும் பயன்படுத்தலாகாது.
கனடாவில் நல்ல படைப்பாளிகள் இருக்கின்ற அளவுக்கு இலக்கிய அமைப்புகளோ, இலக்கிய இதழ்களோ வெளிவருவதில்லை என்றிருக்கின்ற பொதுக் கருத்தை அவ்வப்போது வெளிவந்தாலும் “காலம்” தழ் அடிக்கடி தகர்த்து வருவது வழக்கம். இந்த வகையில் ஜூன் – ஆகஸ்ட் 2009 ற்கான 32வது காலம் இதழ் இதுவரை வெளிவந்த காலம் இதழ்களில் என்னளவில் அதிக நிறைவை தந்ததாக இருக்கின்றது. கடந்த காலம் இதழ்களுடன் ஒப்பிடுகையில் அதிகளவு சிறு கதைகளையும், கவிதைகளையும் தன்னகத்தே கொண்டிருந்தாலும் அகோரமான யுத்தத்தில் அகப்பட்டிருக்கின்ற ஒரு காலத்தின் சாட்சியாக போர்க் கொடுமைகள் பற்றிய ஆக்கங்களே அதிகளவில் இடம்பெற்றிருக்கின்றன. பதினேழாம் நூற்றாண்டில் இரண்டாவது சார்ள்ஸ் மன்னனின் காலத்தில் இங்கிலாந்தில் பிளேக் நோய் பரவியபோது மக்கள் நூற்றுக்கணக்கில் செத்துவிழுந்தார்களாம். இந்த நாட்களில் அரச சேவகர்கள் “பிணங்களை வெளியில் கொண்டுவாருங்கள்” என்றூ கூவியபடி கை வண்டியுடன் தெருத் தெருவாக வருவார்களாம். இந்த நிகழ்வை தற்போதைய வன்னிக் கொடுமைகளுடன் ஒப்பிட்டு அ. முத்துலிங்கம் “பிணங்களை வெளியே கொண்டுவாருங்கள்” என்ற அருமையான ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அவர் கூறிய படி முற்றான இன அழிப்பு முடிவடைந்த பின்னர் “இலங்கை அரசு ஆறுதலான ஒரு பெரிய பெரு மூச்சை விடலாம். என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாக வேடிக்கை பார்த்து வந்த உலக நாடுகளும் பெரு மூச்சு விடும். இந்தியாவின் பெரு முச்சு மிக நீண்டதாக இருக்கும்” போலத்தான் இருக்கின்றது. எனக்குத் தெரிந்து இது இலங்கைப் பிரச்சனை பற்றி இவர் எழுதிய மிகச் சொற்பமான ஆக்கங்களுல் (கிட்டுமாமாவின் குரங்கு ?????, பொற்கொடியும் பார்ப்பாள், மற்றும் 83 கலவரம் பற்றி ஆனந்த விகடனில் வெளிவந்த ஒரு கதை) இதுவே சிறப்பானதாக இருக்கின்றது. இதே இதழில் பத்து நாட்கள் என்ற இவர் எழுதிய இன்னுமொரு சிறு கதையும் இருக்கின்றது. அண்மையில் இவர் எழுதிய “உண்மை கலந்த நாட் குறிப்புகள்” என்ற நாவலில் (?) எந்த ஒரு அத்தியாயத்துக்கு இடையிலும் இதை தூக்கிப் போட்டுவிடலாம். அ. முத்துலிங்கத்தைப் பொறுத்தவரை அவரது எழுத்துக்களின் உச்சத்தில் இருக்கின்றார். அண்மைக்காலமாக அவர் எழுதுபவை எல்லாம் நல்ல “மகிழ்வூட்டும் பிரதிகளாக” இருக்கின்றன. ஒரு கவிஞராகவும், புனைவு எழுத்தாளாராகவும் பரவலாக அறியப்பட்ட டிசே தமிழனின் “ஹேமாக்கா” என்ற சிறு கதை இந்த இதழில் வெளிவந்திருக்கின்றது. அண்மையில் நான் வாசித்த ஆகச் சிறந்த கதை என்று இன்னும் சில காலத்துக்கு நான் சொல்லிக் கொண்டிருக்கப்போகும் கதை இது. போர்க்கால வன் முறைகளால் பாதிக்கப்பட்ட ஒருவன் அந்த அந்த வயதுக்குரிய ஆச்சரியங்களுடன் கதை சொல்வதாக அமைகின்றது. யுத்தம் நடந்த பிரதேசங்களில் வாழ்ந்தவர்கள் பலர் அந்தந்த இடங்களை நீங்கி பலகாலம் பிற தேசங்களில் வாழ்ந்தாலும் வன்முறையின் தாக்கம் அவர்கள் மனதில் பலத்த தாக்கமாக தங்கியிருப்பதை பல தடவைகள் அவதானித்து இருக்கின்றேன். தொடர்ச்சியான கசப்புகளும், ஏமாற்றங்களும் வடுக்களுமே நிலையாகிப்போன எம் மனதில் ஹேமாக்காவும் நெடுங்காலம் வாழ்வார் என்பதற்குரிய எல்லா சாத்தியங்களும் கதையில் தெரிகின்றன. இந்தக் கதையை வாசிப்பவர்கள் முடிவில் ஒரு சொல்ல முடியாத பாரத்தை மனதில் உணர்வார்கள். ஹேமாக்காவின் கண்ணீரை எல்லார் மனதிலும் ஏற்றி வைத்துவிட்டார்போலும். ஈழப்போராட்டத்தின் ஆரம்ப கட்டங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை மையமாக வைத்து செழியன் எழுதிய “தோற்றோடிப்போன குதிரை வீரன்” என்ற கதை ராணுவ ரோந்துகள் என்ற அட்டூழியங்களை கண் முன்னர் நிறுத்துகின்றது. அதே நேரம் உரையாடல்களில் அடிக்கடி பாவிக்கப்படும் “தோழர்” என்ற சொல் வலிந்து திணிக்கப்பட்டதாகவே தோன்றுகின்றது. இக்கதையில் பாவிக்கப்படும் அளவுக்கு தோழர் என்ற சொல் ஈழத்தில் விடுதலை இயக்கங்களிடையே பாவனையில் இருந்ததா என்று அக்காலத்தில் இருந்த யாராவதுதான் தெளிவு படுத்த வேண்டும். அதேநேரம் யுத்த காலக் கொடுமைகளை உக்கிரமாகப் பதிவு செய்யும் இன்னொரு சிறுகதையாக பா. அ. ஜயகரன் எழுதிய அடேலின் கைக்குட்டை என்ற சிறு கதை சிறப்பாகவே அமைந்திருக்கின்றது. யுத்த காலக்கொடுமைகள் பற்றி சொல்லும்போது எந்தவிதமான பிரச்சாரத் தொனியும் விழுந்துவிடாமல் கதைசொல்லி சொல்லிச் செல்ல எல்லா உணர்ச்சிகளும் படிப்பவர் மனதில் ஆழமாகப் பதியும் வண்ணம் “ஹேமாக்கா”, மற்றும் “அடேலின் கைக்குட்டை” என்ற இரண்டு கதைகளும் அமைந்திருப்பது வெகு சிறப்பு. எப்போதும் கனவுகள் பற்றியே ரசனையாக பேசும் மெலிஞ்சி முத்தன் இந்த இதழில் எழுதியுள்ள கதைகூட கனவுடன் தான் ஆரம்பிக்கின்றது. தனக்கேயுரிய கவிதைத் தன்மை வாய்ந்த நடையில் அவர் கதையும் அமைந்துள்ளது. பெரியதொரு இலக்கிய முயற்சியில் ஈடுபடிருக்கும் மெலிஞ்சி முத்தன் அதன் பின்னர் மிகப்பரவலான கவனத்தை பெறவேண்டும் என்பது என் விருப்பம். யுத்தகால அவலம் பேசும் இன்னுமொரு கதையாக சிங்களத்தில் தயாசேன குணசிங்ஹ எழுதி தமிழில் மொஹம்மட் ராசூக் மொழி மாற்றம் செய்த பிசாசுகளின் இரவு, 83 கலவரத்தின் இன்னுமொரு கோணமாக அமைகின்றது. இந்த இதழில் “உறவுகள் ஊமையானால்” என்ற ரஞ்சனி எழுதிய கதையில் பெண்களின் பிரச்சனைகள் பற்றி பேசப்படுகின்றது. பெண்களின் எழுத்துக்களும், பெண்ணியம் சார்ந்த செயல்களும் பெரு வீச்சுடன் வளர்ந்துவரும் இந்நாட்களில் இக்கதை சொல்லும் கருத்துகள் யாவும் மிக ஆரம்பத்தில் எழுப்பப்பட்ட பெண்களுக்கான பிரச்சனைகளாகும். அந்த பிரச்சனை இன்னும் தீரவில்லை என்ற போதிலும், அந்த பிரச்சனைகளுக்கான தீர்வுகளாக கதை சொல்லி கதையின் கடைசிப் பகுதியை கொண்டு செல்லும் பாங்கு நாடகத் தன்மையானதாக இருக்கின்றது. அது மட்டுமல்ல கதையில் அதிகளவு ஆங்கிலச் சொற்கள் Englishலேயே வருகின்றன. அதிலும் நடைமுறை வாழ்வில் கூட நாம் தமிழுடன் கலந்து பேச்சுவாக்கில் அதிகம் பாவிக்காத Perhaps என்ற சொல் கூட கதையின் கடைசிப் பகுதியில் வருகின்றது. இவற்றைத் தவிர்த்திருக்கலாம். இந்த முறை இதழை எடுத்தவுடனேயே நான் முதலில் படித்தது பொ. கருணாகரமூர்த்தி எழுதிய “நல்லாய்க் கேட்டுதான் என்ன செய்யப் போகின்றேன்” என்ற சிறுகதையை. அண்மையில் அவரது சில சிறு கதைகளையும், பெர்லின் இரவுகளையும் படித்து அவரது எழுத்தில் ஒரு ஈர்ப்பு உருவாகியிருந்தது. இந்த கதையை பொறுத்தவரை, இதைவிட சிறந்த கதைகளை மிக இலகுவாகவே எழுதும் வல்லமை பொ. கருணாகரமூர்த்திக்கு உள்ளது என்பது எனது கருத்து. இது தவிர திருமாவளாவன், நிவேதா, உமா வரதராஜன், மலரா, விமலா போன்றோர் எழுதிய கவிதைகளும் புத்தக விமர்சனங்களும் வந்திருக்கின்றன. கவிதைகள் ஆழ்ந்த வாசிப்புக்கும், விமர்சனத்துக்கும் உரியவை. இயன்றவரை எல்லாரும் இந்தக் கவிதைகளை வாசிக்கவேண்டும். புலம்பெயர்ந்த நாடொன்றில், அதிலும் கனடா போன்ற இலவச பத்திரிகைகளையும், தென்னிந்திய சின்னத்திரை நாடகங்களையுமே பொழுது போக்கு முயற்சிகளாக கொண்ட பெரும்பான்மை தமிழ் சமுக்கத்தின் மத்தியில் இருந்து, வணிக ரீதியில் எழும் கடுமையான சிக்கல்களையும் தாண்டி இதழை வெளியிடும் காலம் செல்வமும் மற்றும் காலம் குழுவினரும் படைப்பாளிகளும் மரியாதைக்குரியவர்கள் Share this: Facebook WhatsApp Twitter Print Email Pinterest Tumblr LinkedIn Pocket Reddit Like this: Like Loading... Related இலக்கியம் விமர்சனம் அருண்மொழிவர்மன் May 27, 2009 September 9, 2015 அ. முத்துலிங்கம் காலம் டிசே தமிழன் Post navigation கடல்புரத்தில் நாவலும் கரையோர நினைவுகளும் சில எண்ணங்களும் ”சுடருள் இருள்” 27 thoughts on “காலம் – 2009: சில எண்ணங்கள்” பாரதி.சு says: May 27, 2009 at 9:59 pm சுதன் அண்ணா,என் போன்ற வாசகர்களின் தேடல்களின் வறட்சியோ…அல்லது கனடிய தமிழ் எழுத்தாளர்களின் ஒன்றுகூடல் நிகழ்வுகள் மற்றும் அவர்கள் வெளியிடும் இதழ்கள் போன்றவற்றுக்கான மார்கெட்டிங் குறைபாடோ….எதுவாகவிருந்தாலும்,”காலம்” என்ற பெயரில் ஒரு இதழ் வெளிவருவதையே நான் அறியேன்.ஏதோ உங்கள் பதிவு மூலமாகவாவது அறிந்தேன்.நன்றி.வாசிக்கும் ஆவலை தூண்டுகிறது.எங்கே இப்புத்தகத்தை பெறலாம்.?பி.கு:- நீங்கள் குறிப்பிட்ட புத்தக வெளியீடு இதுவா??e-mail பண்ணுவதாக கூறியிருந்தீர்கள். மறந்துவிட்டீர்கள் போலும். LikeLike Reply வாசுகி says: May 27, 2009 at 10:47 pm வாசிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டியிருக்கிறீர்கள்.ஆனால் புத்தகம் வாசிக்கும் மன நிலை தான் இப்போது இல்லை.//அண்மைக்காலமாக அவர் எழுதுபவை எல்லாம் நல்ல “மகிழ்வூட்டும் பிரதிகளாக” இருக்கின்றன.//நிச்சயமாக, அவரது எழுத்துக்கள் எல்லோரையும் கவரக்கூடியவை.அவரது திகட சக்கரம், வம்ச விருத்தி, வடக்கு வீதி போன்ற சிறுகதைத்தொகுதிகள் வாசித்துஇருக்கிறேன். வாசிக்கும் போது ஒரு சந்தோசம், அதை எப்படி எழுதுவது என்று தெரியவில்லை.எனக்கு மிக மிக மிக பிடித்த எழுத்தாளர். “உண்மை கலந்த நாட்குறிப்பு, மகா ராஜாவின் ரயில் வண்டி,பூமியின் பாதி வயது ” எல்லாம் வாசிக்க வேண்டும் என்ற ஆசை தான்.கடைகளில் ரமணிச்சந்திரன் புத்தகம் தவிர வேறு புத்தகம் எடுப்பது கஸ்டம்.தமிழ்ச்சங்கத்தில் தேடி “அங்கே இப்ப என்ன நேரம் ” மட்டும் கிடைத்தது.மின் நூலாக சில புத்தகம் கிடைக்கிறது.உங்களுக்கும் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.noolaham.orgஆனால் அவரது எழுத்தை புத்தகத்தில் ஆற அமர இருந்து வாசிக்கவே விருப்பம் . LikeLike Reply வாசுகி says: May 27, 2009 at 10:53 pm டி.சே தமிழனின் ஹேமா அக்கா பற்றிய கதை மனதுக்கு பாரமாக இருந்தது.ஆரம்பத்தில் ஒரு நகைச்சுவைக்கதை என்று நினைத்தே வாசித்தேன்.அந்த மொழி நடை பிடித்து இருந்தது.காலம் இதழ் இது வரை நான் வாசிக்கவில்லை. நல்ல அறிமுகம் தந்ததுக்கு நன்றி.ஈழப்பிரச்சினை பற்றி அ.மு பெரிதாக எழுதுவதில்லைத் தான்.ஆனால் அவரது கதையில் எமது ஊரை பார்க்கும் போது சந்தோசமாக இருக்கும்.சாரு, ஜெ.மோ போல் அறிவுஜீவித்தனம் என்ற பெயரில் கட்டுரை எழுதுவதற்குஅ.மு பரவாயில்லை என்பது என் கருத்து. LikeLike Reply தமிழ்நதி says: May 27, 2009 at 11:00 pm தகவலுக்கு நன்றி சுதன். (அருண்மொழிவர்மன் என்று பெயர் பார்த்தேன்) இசையோடு தொடர்புடைய அந்த அருண்மொழிவர்மனா நீங்கள்?இங்கு சென்னையில் நியூ புக் லான்ட்ஸ் இல் ‘காலம்’கிடைத்தது. தீவிர இலக்கியப் பத்திரிகை என்று சொல்லத்தக்கதாக அங்கு ஒன்று வெளிவருகிறதென்றால் அது காலந்தானே… முன்பு ‘ழகரம்’என்று ஒன்று வந்ததாக நினைவு. பிறகு அற்பாயுளில் நின்றுபோயிற்று. பிறகு ‘வைகறை’வருவதாகச் சொன்னார்கள். இங்கு இருப்பதால் கண்ணால் காணக்கிடைக்கவில்லை. LikeLike Reply தமிழ்நதி says: May 27, 2009 at 11:05 pm வாசுகி,”சாரு, ஜெ.மோ போல் அறிவுஜீவித்தனம் என்ற பெயரில் கட்டுரை எழுதுவதற்குஅ.மு பரவாயில்லை என்பது என் கருத்து.”அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்களில் இடையிடை வந்துபோகும் அங்கதச்சுவைக்கு இணையாக எங்கும் படித்ததில்லை. அவர் எடுத்த நேர்காணல்கள் (வேற்றுமொழி எழுத்தாளர்களை)தொகுப்பு ஒன்று இருக்கிறது. பெயர் மறந்துபோயிற்று. அவசியம் படியுங்கள். எழுத்தைப் பற்றி நிறையத் தெரிந்துகொள்வீர்கள். நீங்கள் தர்சினியின் சகோதரி வாசுகிதானே…? LikeLike Reply ஷண்முகப்ரியன் says: May 28, 2009 at 2:47 am இந்தப் பதிவுகளின் மூலம்தான் எனக்கு அறிமுகமான இந்த எழுத்துக்களைத் தேடிப் படிக்க வேண்டுமெனும் ஆவல் கிளர்கிறது.நன்றி,சுதன். LikeLike Reply கதியால் says: May 28, 2009 at 11:55 am உங்கள் பதிவு நிறைய விடயங்களை வெளிக்கொணர்கிறது. அன்னப்பட்சி போல் நீரை விலக்கி சுத்தமான பாலை பருகுமாம். நீங்களும் தெரிந்தெடுத்து தரும் கதைகளை படிக்க ஆவலாக உள்ளோம். தொடரட்டும். ‘காலம்’ கடக்கட்டும் பல படிகள்.தோழர் என்ற பதம் நீண்டகாலமாகவே விடுதலைப்போராட்ட அமைப்புகளில் இருந்து வருகின்ற ஒன்று. இப்பொழுதும் சனநாயக நீரோட்டத்தில்(?) கலந்து இருக்கும் கட்சியாகிய ஈபிடிபி தன்னுடைய உறுப்பினர்களை ‘அன்பாக’ தோழர் என்றே அழைக்கின்றனர். யாழ்ப்பாணத்தில் யாரும் நண்பர் ஒருவரை ‘தோழர்’ வாறார் என்றால் ஒருமாதிரியாகத்தான் பார்ப்பார்கள். LikeLike Reply thurka says: May 28, 2009 at 8:22 pm காலம் பற்றிய உங்கள் கருத்தாடல் நன்றாக இருக்கிறது. சமகாலத்தில் வெளிவருகின்ற இவ்வாறான முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியதும் மக்கள் தளத்துக்கு எடுத்துச் செல்லவேண்டியதுமாகும். அதன் ஒரு அங்கமாக உங்கள் சமூக கடமையை சரியாகவே செய்துள்ளீர்கள். உங்கள் அவதானிப்பின் பின்புலம் அழகாக இருக்கிறது. வாழ்த்துக்கள்! LikeLike Reply அருண்மொழிவர்மன் says: May 28, 2009 at 8:34 pm வணக்கம் பாரதி//….எதுவாகவிருந்தாலும்,”காலம்” என்ற பெயரில் ஒரு இதழ் வெளிவருவதையே நான் அறியேன்.//காலம் சஞ்சிகை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என்ற அடிப்படையில் வெளிவருகின்றது. கனடாவில் வெளிவரும் ஒரெ இலக்கிய இதழ் என்று இதனை தயக்கமின்றி சொல்லலாம்.இந்த புத்தகம் வேண்டுமென்றால் பெற்றுத் தருகின்றேன். கடைகளில் அனேகமாக முருகன் புத்தக கடையில் கிடைக்கலாம்.நான் குறிப்பிட்ட புத்தக வெளியீடு அ. முத்துலிங்கத்தின் புத்தக வெளியீடு. சனிக்கிழமை என்று சொன்னேன். ஆனால் உறுதிப்படுத்த தவறி விட்டேன். மன்னிக்கவும் LikeLike Reply அருண்மொழிவர்மன் says: May 28, 2009 at 8:41 pm வணக்கம் வாசுகி//எல்லாம் வாசிக்க வேண்டும் என்ற ஆசை தான்.கடைகளில் ரமணிச்சந்திரன் புத்தகம் தவிர வேறு புத்தகம் எடுப்பது கஸ்டம்.தமிழ்ச்சங்கத்தில் தேடி “அங்கே இப்ப என்ன நேரம் ” மட்டும் கிடைத்தது.மின் நூலாக சில புத்தகம் கிடைக்கிறது.உங்களுக்கும் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.noolaham.org//அவரது கதை சொல்லும் பாங்கு தனித்துவமானது. அதற்கு அவரே நிகர்.நூலகம் என்பது எம்மிலும் இளையோர் சேர்ந்து செய்யும் மிகப்பெரிய முயற்சி. சேவை. அது எனது தேடல்களுக்கு பெரும் துணாஇ தருகின்றது. அச்சிலே இப்போது இல்லாத (செல்வி, சிவரமணி, சேரன் போன்ற ) பலரது புத்தகங்கள் அங்கே நிறைந்து கிடக்கின்றன.டிசேயின் ஹேமா அக்கா அண்மையில் நான் வாசித்த மிகச் சிறந்த சிறுகதை. தொடர்ச்சியாக அவரது எழுத்துக்கள் இணையத்தில் வந்து கொண்டுள்ளன. வாசிப்பது அதிகம் ஈட்டம் தரும்.அ.மு இலங்கை பிரச்சனை பற்றி எழுதாதது பற்றி கடந்த மாதம் நான் அவரது உண்மை கலந்த நாட்குறிப்புகள் பற்றி எழுதியபோது இதே கருத்தை சொல்லியிருந்தேன்.நன்றி. LikeLike Reply அருண்மொழிவர்மன் says: May 28, 2009 at 8:46 pm வணக்கம் தமிழ்நதி.// இசையோடு தொடர்புடைய அந்த அருண்மொழிவர்மனா நீங்கள்?//இசையோடு எனக்கிருக்கும் தொடர்பு ரசனை சம்பந்தமானது. அதுவும் பெரிது தமிழ் திரை இசையுடன்…..இந்தியாவிலும் காலம் கிடைத்து வாசிப்பது மகிழ்ச்சி. ழகரம் , பறை போன்ற இலக்கிய இதழ்கள் இப்போது நின்றுபோய்விட்டன. வைகறை வார இதழாக வெளியானது. தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அதில் டிசே, சக்கரவர்த்தி, சுமதி ரூபன் போன்ற பலரது ஆக்கங்கள் தொடர்ந்து வெளியாகின…. LikeLike Reply thurka says: May 28, 2009 at 8:47 pm //”சாரு, ஜெ.மோ போல் அறிவுஜீவித்தனம் என்ற பெயரில் கட்டுரை எழுதுவதற்குஅ.மு பரவாயில்லை என்பது என் கருத்து.”//அறிவுஜீவித்தனமோ பைத்தியக்காரத்தனமோ அவர்கள் ஒரு கருத்தை தன்னும் மக்கள் முன் வாதப் பிரதிவாதங்களுக்கு முன்வைக்கின்றனர் என்பது என் கருத்து. “நாங்கள் கவிதை எழுதுவதற்குள் வியட்நாம் யுத்தம் நின்று விட்டது..” என்கின்ற ஒரு போர்க்கால கவிதையை போல இங்கே மேற்குலகுக்கும் வட அமெரிக்கனுக்கும் வாழ்க்கைப்பட்ட சிலர் வாய் திறப்பதற்குள் எல்லா பிணங்களும் கைவண்டியில் கூட எடுப்பாரின்றி மண்மூடிபோனது தான் கண்ட நிஜம். நாங்கள் பேச வேண்டிய சபையில் சோரம் போனோம் அவர்கள் எமக்கான குரலிலுமாய் பேசினார்கள். முடிந்தது கதை இனி மகிழ்வூட்டும் பிரதிகளை தொடரலாம். LikeLike Reply அருண்மொழிவர்மன் says: May 28, 2009 at 8:57 pm மீண்டும் வணக்கம் தமிழ் நதி….//சாரு, ஜெ.மோ போல் அறிவுஜீவித்தனம் என்ற பெயரில் கட்டுரை எழுதுவதற்குஅ.மு பரவாயில்லை என்பது என் கருத்து//சாரு எழுதிய உன்னத சங்கீதம் என்றா கதை பற்றி எனக்கு கருத்து ரீதியான விமர்சனம் ஒன்று உண்டு. ஆனால் அவர்கள், அதிலும் அண்மைக்காலமாய் சாரு ஈழப்பிரச்சனை பற்றி எழுதும் பல கருத்துக்களில் எனக்கு உடன்பாடு உண்டு. அவர் சொல்லும் நிஜத்தின் கசப்பை எம்மால் ஏற்க முடியவில்லை என்பதற்காக அவரை நாம் திட்டிப் பலனென்ன?நாம் பேச வேண்டிய இடத்தில் பேசாமல் இருந்ததால் / இருக்க வேண்டி வந்ததால் இன்று அழ வேண்டிய இடத்தில் கூட அழாமல் / அழ முடியாம வெட்டியாய் பேசிக்கொண்டிருக்கின்றோம்.எமக்குரிய குரல்கள் எல்லாம் ஒரே ஆழியினூடாக ஒலிக்கவேண்டிய கட்டாயம் எம்மீது சுமத்தப்பட்டது. இன்று அந்த ஆழி செயலிழந்தவுடன், எமக்கான குரல்களே இல்லாமல் போய்விட்டது.அ. மு தான் ஈழப்பிரச்சனை பற்றி எழுதாதற்கு தான் மிக ஆரம்பத்திலேயே இலங்கையை விட்டு புறப்பட்டதே கரணம் என்று ஒரு முறை சொன்னார். அந்த காரணாத்தை ஏற்கின்ற அதே வேளை; அவர் தனது குரல் மாற்றுக் குரலாக ஒலித்து விமர்சனமாகுமே என்றா தயக்கத்தில் எழுதாமல் விட்டிருப்பாராரேயானால் அது மிகுந்த முட்டாள்தனத்துக்குரியது.இறுதியாக ஒன்று;பக்கிங்ஹாம் அரண்மனையில், பிரிட்டிஷ் மகாராணி செவிலியாக இருக்க நான் பிறந்தேன் என்று வரலாறூ எழுத எல்லாருக்கும் விருப்பம் தான். ஆனால் நிஜம் அது இல்லையே???/இனியாவது நிஜம் பேசுவோம் LikeLike Reply அருண்மொழிவர்மன் says: May 28, 2009 at 9:00 pm வணக்கம் ஷண்முகப்பிரியன்.டிசேயின் எழுத்துக்களாஇ நான் தந்த தொடுப்பூடாகவே படிக்கலாம் LikeLike Reply பாரதி.சு says: May 29, 2009 at 2:27 pm வணக்கம் அண்ணா,//”ஆனால் அவர்கள், அதிலும் அண்மைக்காலமாய் சாரு ஈழப்பிரச்சனை பற்றி எழுதும் பல கருத்துக்களில் எனக்கு உடன்பாடு உண்டு. அவர் சொல்லும் நிஜத்தின் கசப்பை எம்மால் ஏற்க முடியவில்லை என்பதற்காக அவரை நாம் திட்டிப் பலனென்ன?//நீங்கள் குறிப்பிடுவது போன்ற மாற்றுக்கருத்துகளின் முரண்விவாதங்கள் வரவேற்கப்படவேண்டியவையே. அவர் சொல்லும் நிஜங்கள் கசப்பதால் மட்டும் நான்(ம்) அவரை திட்டவில்லை, அவர் நிஜங்களை “எல்லாவேளையிலும்” உரத்துக்கூற தவறியமையாலேயே…அத்துடன் அவரின் ஜனநாயகவாதம் புலியெதிர்ப்புடன் மட்டும் அமிழ்ந்துபோவதாலுமே. சாரு “சார்ந்திருக்கும்” தளத்தில் (“இந்திய தேசியவாதம்”)நின்று கொடுக்கும் குரலின் “தூய்மை” குறித்தான சந்தேகம் எனக்கு எப்போதுமே உண்டு.மற்றபடி…நீங்கள் குறிப்பிட்டது போலவே நாங்கள் மாலுமி இல்லாத கப்பலில் பயணம் போகின்றோம் என்பதும்..இது எவ்வளவு ஆபத்தானதென்பதும்..காலம் நிச்சயம் பதிவு செய்யும். LikeLike Reply அருண்மொழிவர்மன் says: May 29, 2009 at 11:34 pm வணாக்கம் கதியால்//தொடரட்டும். ‘காலம்’ கடக்கட்டும் பல படிகள்//காலம் வெற்றிகரமாக இயங்கவேண்டும் என்பதில் எனக்கும் பெரு விருப்பம் உள்ளது.//தோழர் என்ற பதம் நீண்டகாலமாகவே விடுதலைப்போராட்ட அமைப்புகளில் இருந்து வருகின்ற ஒன்று. //போராட்ட இயக்கங்கள் ஆரம்ப காலத்தில் தோழர் என்ற பெயரை உபயோகித்ததாக அறிந்திருக்கின்றேன். ஆரம்ப காலத்தில் இடது சாரிக் கொள்கை சார்பானவையாக இயக்கங்கள் இயங்கியபோது தோழர் என்ற பதம் பயன்பட்டிருக்கலாம். ஆனால் கண்ணன் வருகிறார் என்பதைக் கூட “கண்ணன் தோழர் வருகிறார்” என்றூ சொல்லும் அளாவு நடை முறையில் அந்த பதங்கள் பயன்பட்டனவா என்பது எனக்கு சரிவர தெரியவில்லை.எனினும் விளக்கத்துக்கு நன்றிகள் LikeLike Reply அருண்மொழிவர்மன் says: May 29, 2009 at 11:40 pm வணக்கம் துர்க்கா//உங்கள் சமூக கடமையை சரியாகவே செய்துள்ளீர்கள். உங்கள் அவதானிப்பின் பின்புலம் அழகாக இருக்கிறது. வாழ்த்துக்கள்!//நன்றிகள். அண்மையில் ஈழத்தவர்களால் கொண்டாடப்படவேண்டிய ஒரு அற்புதமான எழுத்தாளரிடம் பேசிக் கொண்டிருந்தேன். கனடாவில் இருக்கின்ற ஒரு தமிழ் புத்தக கடையில் தனது புத்தகங்களை விற்பனைக்கு வைத்தபோது ஏதோ ஒரு மூலையில் எவருக்கும் தெரியாத ஒரு இடத்தில் தனது புத்தகங்கள் தொடர்ந்து இருந்ததாக குறிப்பிட்டார். என்ன வேடிக்கை என்றால் அதே கடையில் நான் பல தடவைகள் அவரது புத்தகங்களை தேடி இருக்கின்றேன். ஆனால் எனக்கு கிடைக்கவில்லை. மண்வாசம் என்ற ஒரு இதழை அதை வெளியிடுபவரே விற்கப்படாத பிரதிகளை இலவசமாக விநியோகிப்பதை நான் கவனித்து இருக்கின்றேன்……..//நாங்கள் கவிதை எழுதுவதற்குள் வியட்நாம் யுத்தம் நின்று விட்டது..” என்கின்ற ஒரு போர்க்கால கவிதையை போல இங்கே மேற்குலகுக்கும் வட அமெரிக்கனுக்கும் வாழ்க்கைப்பட்ட சிலர் வாய் திறப்பதற்குள் எல்லா பிணங்களும் கைவண்டியில் கூட எடுப்பாரின்றி மண்மூடிபோனது தான் கண்ட நிஜம்//கற்றதும் பெற்றதுமில் அறிமுகம் பெற்ற வியட்னாமிய கவிதை வரிகள். உங்களுடைய இந்தக் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. LikeLike Reply அருண்மொழிவர்மன் says: May 29, 2009 at 11:43 pm வணக்கம் பாரதி,//சாரு “சார்ந்திருக்கும்”தளத்தில் (“இந்திய தேசியவாதம்”)நின்று கொடுக்கும் குரலின் “தூய்மை” குறித்தான சந்தேகம் எனக்கு எப்போதுமே உண்டு.//ஈழப்பிரச்சனை பற்றிய சாருவின் நிலைப்பாடில் எனக்கு முழுமையான் உடன் பாடு கிடையாது. ஆனால் அவர் அண்மையில் எழுதிய பல கட்டுரைகளில் நிறைய நிஜங்கள் இருந்தன. மேலும், சாரு ஒரு போது இந்திய தேசிய வாதத்தை தூக்கிப் பிடித்தவர் கிடையாது. அவரது அஸாதி அஸாதி கட்டுரையை படித்துப் பாருங்கள். LikeLike Reply DJ says: June 2, 2009 at 11:55 pm நன்றி அருண். காலம் குறித்த பகிர்வுக்கும், எனது கதை குறித்த கருத்துக்கும்….இன்னமும் முழுதாய் 'காலம்' வாசிக்கவில்லை. எத்தனையோ விமர்சனங்கள் இருந்தாலும் செல்வம் காலத்தைக் கொண்டு வருவதையிட்டு நாம் அவரை உற்சாகப்படுத்தத்தான் வேண்டும். LikeLike Reply தமிழன்-கறுப்பி... says: June 3, 2009 at 10:33 am சுதனா அருண்மொழியா அதை சொல்லுங்கோ முதல்ல கனடாக்கு ஒருக்காலெண்டாலும் வரோணும் எண்டு ஒரு கனவுல இருக்கிறன் பாக்கலாம் சந்தர்ப்பம் கிடைக்கட்டும்,டிசேயின் கதையை முன்பும் வாசித்து, பின் அவர் இப்பொழுது பதிவிட்டபொழுதும் வாசித்திருக்கிறேன் இப்போதைக்கு நானும் அதே… அடுத்த கதை வரும் வரையும்.பகிர்வுக்கு நன்றி.. LikeLike Reply தமிழன்-கறுப்பி... says: June 3, 2009 at 10:34 am காலம் குழுவினருக்கு வாழ்த்துக்கள்… LikeLike Reply pratheeb says: June 5, 2009 at 10:39 am puthiya vadivil ungkal thalam azakaaka ullathu. vaalththukkal. thodarnthu ezuthungkal LikeLike Reply அருண்மொழிவர்மன் says: June 5, 2009 at 10:59 pm வணக்கம் டிசே//இன்னமும் முழுதாய் 'காலம்' வாசிக்கவில்லை. எத்தனையோ விமர்சனங்கள் இருந்தாலும் செல்வம் காலத்தைக் கொண்டு வருவதையிட்டு நாம் அவரை உற்சாகப்படுத்தத்தான் வேண்டும்//அதிலும் அவர் மீது பலமாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பலவற்றை இம்முறை தாண்டியுள்ளார் என்றே தோன்றுகின்றது. அது பற்றிய வாய்வழி விளம்பரங்கள் செய்யவேண்டிய பொறுப்பும் எமக்குள்ளது LikeLike Reply அருண்மொழிவர்மன் says: June 5, 2009 at 11:01 pm வணக்கம் தமிழன் கறுப்பி//சுதனா அருண்மொழியா அதை சொல்லுங்கோ முதல்ல//என்னை சுதன் என்று தெரிந்தவர்கள் அழைப்பர். அருண்மொழிவர்மன் என்ப்து முன்பு, ராஜ ராஜன் மீது பெரும் காதல் கொண்டிருந்தகாலத்தில் நான் புனைவாக பாவிக்க தொடங்கிய பெயர் LikeLike Reply அருண்மொழிவர்மன் says: June 5, 2009 at 11:01 pm நன்றி பிரதீப் LikeLike Reply தமிழ்நதி says: June 7, 2009 at 12:59 pm Arulmozhivarman,"சாரு ஈழப்பிரச்சனை பற்றி எழுதும் பல கருத்துக்களில் எனக்கு உடன்பாடு உண்டு."I don't agree with this statement. If we start to discuss about this issue, we won't come to a conclusion but an argument. So i don't want to discuss. (Sorry i am away from home. could not type in tamil) LikeLike Reply கண்டும் காணான் says: June 8, 2009 at 8:14 pm ஆம் தமிழ் நதி, ஈழப் பிரச்சனையில் சாருவின் கருத்துக்கள் , அவர் கண்ட இந்திய நக்சல் குழுக்கள் மற்றும் வீரப்பன் ஆகியவற்றால் அவர் உருவகித்துக் கொண்டவை. அத்துடன் , மாற்றுக் கருத்தாளர்கள் எனச் கூறிக் கொள்பவர்களின் அழைப்பின் பேரில் அடிகடி பாரிஸ் போய், அதனால் அவர்களின் கருத்துச் செல்வாக்குக்கு அடிமையாகிப் போனவர். அதுதான் அவரை வாழ வைக்கும் தின மலர் பற்றி அனைவருக்கும் தெரியும். உலகத்தில் எல்லா விடயங்களிலும் ஒவொருவருக்கும் ஒரு தனிப்பட்ட கருத்து இருக்கும். அதே கருத்தானது அவர்களினது சுற்று வட்டாரத்தில் ஏற்கப்பட்ட , பின்னர் அதுவே ஒருவரின் அசைக்க முடியா கருத்தாக மாறுகின்றது. நக்சல்களை பார்த்து வளர்ந்த சாரு, அவ்வாறே ஈழ பிரச்னையை முடிவுகட்ட அவரது பாரிஸ் நண்பர்களும் தின மலர் காரர்களும் ஒத்து ஊதிவிட்டனர்.காந்தியால் தான் சுதந்திரம் கிடைத்தது என்னும் போதே அவரது பார்வை புரிந்து விடுகின்றது. அந்த ௨௨ போலீஸ் காரர்களுக்காக உண்ணாவிரதத்தை முடித்த காந்தி தூக்கிடப்பட்ட ௧௯ இந்தியர்களுக்காக ஒரு குரல் குடுத்தாரா ? அவர்தான் பகத் சிங்கை தூக்கில் போட்ட பின்தான் லண்டன் பேச்சு வார்த்தைக்கு வருவேன் என்ற சத்தியவான் ஆச்சே . LikeLike Reply Leave a Reply Cancel reply Enter your comment here... Fill in your details below or click an icon to log in: Email (Address never made public) Name Website You are commenting using your WordPress.com account. ( Log Out / Change ) You are commenting using your Google account. ( Log Out / Change ) You are commenting using your Twitter account. ( Log Out / Change ) You are commenting using your Facebook account. ( Log Out / Change ) Cancel Connecting to %s Notify me of new comments via email. Notify me of new posts via email. Δ இந்தத் தளத்தில் தேட Search for: Follow Us Facebook Recent Posts மூளாய் இராவணேசுவரர் குறித்து சில வார்த்தைகள் November 4, 2021 ஈழத்தில் பரவும் இந்திய ஆதிக்கம் October 26, 2021 ஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு October 19, 2021 நந்திக்கடல் பேசுகிறது தொகுப்பை முன்வைத்து… September 12, 2021 எச்சமும் சொச்சமும் June 22, 2021 நதியைக் கடந்த பாட்டியரும் பேத்தியரும் May 27, 2021 செல்வினின் உரைகளும் அவற்றின் தேவைகளும் May 23, 2021 எங்கட புத்தகங்கள் இதழ் குறித்து… February 3, 2021 கல்வியும் மதமும் குறித்து பெரியார்… July 30, 2020 கொரொனா வைரஸ் – யுவால் நோவா ஹராரியின் மூன்று கட்டுரைகள் June 1, 2020 இஸ்லாமிய தமிழ் இலக்கியமும் முஸ்லிம் தேசிய இலக்கியமும் "ராஜீவ் காந்தி படுகொலை - வெளிவராத மர்மங்கள்" புத்தகம். மொழிபெயர்ப்பு : சவால்களும் சில பரிந்துரைகளும் நந்திக்கடல் பேசுகிறது தொகுப்பை முன்வைத்து… மகாபாரதக் கதையின் அரசியல் என்ன? Subscribe to Blog via Email Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email. Join 426 other followers Email Address: Subscribe எழுதியவை எழுதியவை Select Month November 2021 (1) October 2021 (2) September 2021 (1) June 2021 (1) May 2021 (2) February 2021 (1) July 2020 (1) June 2020 (1) May 2020 (2) January 2020 (1) November 2019 (1) September 2019 (1) August 2019 (1) June 2019 (2) May 2019 (1) April 2019 (1) March 2019 (3) February 2019 (2) January 2019 (1) December 2018 (1) November 2018 (1) August 2018 (3) July 2018 (2) June 2018 (2) May 2018 (1) April 2018 (2) March 2018 (1) February 2018 (1) January 2018 (2) December 2017 (3) November 2017 (1) October 2017 (3) September 2017 (1) August 2017 (3) July 2017 (4) June 2017 (2) May 2017 (3) March 2017 (3) February 2017 (2) January 2017 (1) December 2016 (1) November 2016 (2) October 2016 (1) August 2016 (3) July 2016 (3) June 2016 (1) May 2016 (1) April 2016 (2) March 2016 (2) February 2016 (2) January 2016 (2) December 2015 (4) November 2015 (2) October 2015 (3) September 2015 (3) August 2015 (5) July 2015 (5) June 2015 (4) May 2015 (3) April 2015 (3) January 2015 (2) December 2014 (3) November 2014 (3) October 2014 (2) August 2014 (1) June 2014 (1) May 2014 (2) April 2014 (1) March 2014 (2) February 2014 (2) June 2012 (1) May 2012 (1) March 2012 (1) February 2012 (2) November 2011 (3) October 2011 (1) September 2011 (1) July 2011 (1) June 2011 (2) May 2011 (4) April 2011 (2) February 2011 (1) January 2011 (2) December 2010 (4) November 2010 (4) October 2010 (1) September 2010 (1) August 2010 (1) July 2010 (5) June 2010 (3) May 2010 (1) April 2010 (6) March 2010 (4) December 2009 (6) October 2009 (2) September 2009 (1) August 2009 (3) July 2009 (4) June 2009 (5) May 2009 (1) April 2009 (3) March 2009 (5) February 2009 (4) January 2009 (2) December 2008 (3) November 2008 (4) October 2008 (2) September 2008 (2) August 2008 (1) May 2008 (1) February 2007 (1) December 2006 (2) October 2006 (1) August 2006 (2) Twitter Updates மூளாய் இராவணேசுவரர் குறித்து சில வார்த்தைகள் arunmozhivarman.com/2021/11/04/202… 3 weeks ago ஈழத்தில் பரவும் இந்திய ஆதிக்கம் arunmozhivarman.com/2021/10/26/%e0… 1 month ago ஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு arunmozhivarman.com/2021/10/19/202… 1 month ago RT @tovithaikulumam: அறிதலும் பகிர்தலும் 08 அரசும் அதிகாரமும் இணைப்பு - us02web.zoom.us/j/82785207411 Meeting ID: 827 8520 7411 https://t.co/D2… 1 month ago RT @tovithaikulumam: அழைப்பு ‘அரசியலும் அரசியல் விஞ்ஞானமும் சமகால அறிமுகம்’ என்னும் நூல் பேராசிரியர் ஜயதேவ உயன்கொட POLITICS AND POLITICAL… 2 months ago பெரியாரியலின் தேவை https://www.youtube.com/watch?v=XCEIuB47znY&t=2929s The Castless Collection https://www.youtube.com/watch?v=8A7Z67lU9pY&t=2294s பகுப்பு அனுபவம் அரசியல் அறிக்கை அறிவிப்பு ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணம் இலக்கியம் ஈழத்து இலக்கிய வரலாறு ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து திரைப்படம் ஈழப்போராட்டம் ஈழம் உரையாடல் உறவுகள் ஊடகங்கள் எண்ணங்கள் எதிர்வினை எழுத்தாளர்கள் கனேடிய அரசியல் கலை காலம் காலம் செல்வம் கிரிக்கெட் குறும்படம் சமூகநீதி சமூகம் சாதீயம் திரை விமர்சனம் திரைப்படம் தேசியம் நாவல் நிகழ்வுகள் நினைவுப் பதிவு நினைவுப்பதிவு நேர்காணல் பண்பாட்டு அரசியல் பதிகை பத்தி புலம்பெயர் அரசியல் புலம்பெயர் வாழ்வு புலம்பெயர்வாழ்வு பெண்ணியம் மரபுரிமை யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் வரலாறு வாசிப்பு வாசிப்புக் குறிப்புகள் விசாகன் விமர்சனம் விளையாட்டு Documentary Home Sexuality Uncategorized Goodreads Tags .ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Education Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss Kristyn Wong-Tam Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Great Tamasha The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அபியும் நானும் அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரசியல் கிரிக்கெட் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இலங்கை கிரிக்கெட் அணி இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப் போராட்டம் ஈழப்போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த் தோழன் என்னுயிர்த்தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கலைமுகம் கலையரசி கல்விமுறை கல்வெட்டியல் காக்கை சிறகினிலே காணாமல் ஆக்கப்பட்டோர் கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்தியன் சத்திய பவன் சத்யதேவன் சத்யதேவன் சற்குணம் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரௌபதி தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடைதோய்தல் நனவிடை தோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பக்தவத்சல பாரதி பண்பாடு பண்பாட்டுப் படையெடுப்பு பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர்வாழ்வு புலம்பெயர் வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகாபாரதம் மகா பாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதச்சார்பின்மை மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மோகனாங்கி மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விசாகன் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஹைடன் Website Powered by WordPress.com. Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
வாடிக்கையாளர்கள் போன்ற பாவனையில் நகைக்கடைக்குள் நுழைந்த ஐந்து பெண்கள் வெ.65,000 மதிப்பிலான 14 தங்கச் சங்கிலிகளுடன் தப்பியோடினர். இங்குள்ள ஜாலான் டத்தோ தான் செங் லியோங்கிலுள்ள ஒரு நகைக்கடையில் அச்சம்பவம் புதன்கிழமை நிகழ்ந்ததாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலை வர் உதவிக் கமிஷனர் முகமட் அப்டோ இஸ்மாயில் நேற்று தெரிவித்தார்.கடந்த புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு நடந்த அச்சம்பவத்தில் நகைகள் வாங்குவது போல் வந்த அந்த ஐந்து பெண்களிடமும் கடையின் 19 வயது பணியாளர் நகைகளை காட்டிக் கொண்டிருந்தார். Read Nore: Malaysia Nanban Tamil Daily on 2.3.2019 பின்செல் தலைப்புச் செய்திகள் தொழில் முனைவோர், தொழில் துறை வளர்ச்சிக்கான அத்தியாவசிய திறன்களுடன் மலேசிய இந்தியர்களுக்கு சித்தப்படுத்தும் NCER பயிற்சித் திட்டங்கள்.
அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் (American Museum of Natural History) என்பது உலகிலுள்ள அனைத்து இயற்கை அறிவியல் காட்சிச் சாலைகளுள் மிகப்பெரியதாகக் கருதப் படுகிறது. மனித சமுதாயத்திற்குப் பெருமளவு பயன்பட்டுவரும் இந்த அருங்காட்சியகத்தில் பல தலைசிறந்த அறிவியல் அறிஞர்களும், திறமை மிகுந்த ஆய்வாளர்களும்.. பணி செய்கின்றனர். நியூயார்க் நகரத்திலுள்ள மையப் பூங்காவின் மேற்குப் பகுதியில், இதன் தலைமையகம் அமைந்திருக்கிறது. நியூயார்க்கிலுள்ள ஹண்டிங்டன் (Huntington), புளோரிடாவிலுள்ள பிளாசிட் ஏரிப்பகுதி (Lake Placid), அரிசோனாவின் போர்ட்டல் (Portal), பகாமாத் (Bahamas) தீவுகளைச் சேர்ந்த பிமினித்தீவு (Bimini island) போன்ற இடங்களில் இதன் துணை நிலையங்கள் உள்ளன. ஹேடன் வான் காட்சியகம் (Hayden planetarium), நியூயார்க் தலைமையகத்தில் சிறப்பான பகுதியாகச் செயல்பட்டு வருகிறது. அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், ஓர் அறக்கட்டளையின் கீழ் இயங்கி வருகிறது. இதன் இயக்குநர் இந்த அறக்கட்டளையினரால் நியமிக்கப்படுகிறார். இங்கு நுாற்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்ட அறுநூறுக்கு மேற்பட்ட அலுவலர்கள் பணியாற்றுகின்றனர். இதனை நல்ல முறையில் நடத்துவதற்குத் தேவையான நிதி, நியூயார்க் பெருநகர மன்றம் அளிக்கும் நல்கை, தனியார் அறக்கட்டளைகள், உறுப்பினர் கட்டணம் போன்றவற்றிலிருந்து கிடைக்கிறது. அருங்காட்சியகத்திற்குள் செல்ல நுழைவுக்கட்டணம் ஏதுமில்லை. ஆனால் வான்காட்சியகத்தினுள் செல்லக் கட்டணம் உண்டு. ஒவ்வோர் ஆண்டும் மூன்று மில்லியன் மக்கள் அருங்காட்சியகத்தையும், வான்காட்சியகத்தையும் கண்டு களிக்கின்றனர். இந்த அருங்காட்சியத்தைத் தொடங்கவேண்டுமென, முதன்முதலில் ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் (Harvard University) பேராசிரியராகப் பணியாற்றிய லுாயிஸ் அகாசிஸின் (Louis Agassiz) மாணவர், ஆல்பர்ட் எஸ். பிக்மோர் (Albert S. Bickmore) கூறினார். பொருளடக்கம் 1 அமைவு வரலாறு 2 பயன்பாடு 3 மேற்கோள்கள் 4 துணை நூல்கள் அமைவு வரலாறு[தொகு] நியூயார்க் நகரில் மையப் பூங்காவின் ஆணையர்கள் 1869 ஆம் ஆண்டு சனவரித்திங்கள் முதல்நாள் இக்காட்சியகம் தொடங்குவதற்கான ஒப்புதலும், இடமும் அளித்தனர். அருங்காட்சியகத்தின் அமைப்பு முறையும் விதிமுறைகளும் 1869, மே, ஐந்தாம் நாள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் ஏற்பட்ட இடப்பற்றாக்குறை காரணமாக 1877, டிசம்பர், 22-ஆம் நாள் தற்போதுள்ள இடத்திற்கு அருங்காட்சியகம் மாற்றப்பட்டது. புதிய வளாகத்திலுள்ள கட்டிடங்களின் அடிப்பரப்பு 23 ஏக்கர்களாகும். டி.ஜி. எலியட் (D. G. Elliot) அவர்கள் திரட்டிய . 2,500 பதப்படுத்தப்பட்ட பறவைகளும், ஜெர்மானிய இளவரசரான மாக்சிமிலியனுக்குச் (Prince Maximilian) சொந்தமான பதப்படுத்தப்பட்ட 4,000 பறவைகள், 600 பாலூட்டிகள், 2,000 மீன்கள், ஊர்வன ஆகியவையும், முதன் முதலில் வாங்கப்பட்ட சில உயிரியல் காட்சிப் பொருள்களாகும். பேராசிரியர் ஜேம்ஸ் ஹாலுக்குச் (Professor Jaines Hall) சொந்தமான, நியூயார்க் மாநிலத்தில் எடுக்கப்பட்ட, புகழ் பெற்ற புதைபடிவங்களும் ஆரம்ப காலத்திலேயே வாங்கிக் காட்சிக்கு வைக்கப்பட்ட காட்சிப் பொருள்களாகும். மார்கன் நினைவு மண்டபத்தினின்று (Morgan Memorial Hall) பெற்று இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள கனிம மாதிரிகளும் இரத்தினக்கற்களும் மிகச்சிறந்தவை; விலை மதிப்பு மிகுந்தவை. இங்குள்ள மாணிக்கம் உலகிலுள்ள சிறந்த சிவப்பு இரத்தினக்கற்களுள் ஒன்றாகும். உலகிலேயே மிகப்பெரியதாகக் கருதப்படும் இந்திய நீலக்கல்லும் இங்குதான் உள்ளது. இங்குள்ள 66 அடி உயரமுள்ள. ஜூராசிக் காலத்தைச் சேர்ந்த பெரும்பல்லியின் சட்டகம் இங்கு வருவோர் கவனத்தை எளிதாக ஈர்க்கிறது. அருங்காட்சியகத்தில் தொடக்ககாலப் பாலூட்டிகள் கூடம், மானிடவியல் கூடம், மனித வாழ்வியல் கூடம், முதுகெலும்பற்றவற்றின் கூடம், நீர்வாழ் உயிரிகள் கூடம் போன்ற பல பகுதிகள் உள்ளன. ஒவ்வொரு வகை காட்சிப் பொருளும், தனித் தனிப் பிரிவாகத் தனிக் கூடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. சார்லஸ் ஹேடன் (Charles Hayden) என்னும் அமெரிக்க வங்கி அதிபரின் பொருளுதவியுடன் 1935, அக்டோபர் 3ஆம் நாள், ஹேடன் வான் காட்சியகம் தொடங்கப்பட்டது. இவ்வான் காட்சியகத்தில் உள்ள மையக்கூடத்தின் குவிந்த கூரையில் வானத்தில் உள்ள விண்மீன்கள், கோள்கள், சூரியன், சந்திரன் ஆகியவற்றைத் தெளிவாகவும் எளிதாகவும் இயல்பாகவும் காணுமாறு காட்சிக்கு வைத்துள்ளனர். அங்கு வைக்கப்பட்டுள்ள காட்சிப் பொருள்களிலிருந்து பேரண்டத்தின் அமைப்பு, கோள்களின் மேற்பரப்பு அமைப்பு ஆகியவற்றை எளிதாகத் தெரிந்து கொள்ளலாம். பல கோள்களைத் தெளிவாக ஒளிப்படம் எடுத்துத் தேவையான குறிப்புகளுடன் காட்சிக்கு வைத்துள்ளனர். பயன்பாடு[தொகு] கல்லூரி, பள்ளி மாணவர்கள், அறிவியல் ஆர்வமுள்ளவர்கள் போன்ற பலரும் இங்கு நடைபெறும் ஆய்வுப் பணிகளையும் கல்விப் பணிகளையும் பயன்படுத்திக் கொள்கின்றனர். அமெரிக்காவின் பல பகுதிகளிலிருந்தும், உலகின் பல பகுதிகளிலிருந்தும் அறிஞர்கள் இக்காட்சியகத்துடன் தொடர்பு கொண்டு இங்கு செயல்படும் ஆய்வுகளின் பயனைப் பெறுகின்றனர். மானிடவியல் (Anthropology), முதுகெலும்பிகளின் தொல்விலங்கியல், ஊர்வனவியல் (Herpetology), பாலூட்டியியல் (Mammology), பறவையியல் (Ornithology), விலங்கு நடத்தையியல் போன்ற பல துறைகளுடன் தொடர்புடைய ஆய்வுகள் இங்கு நடைபெற்று வருகின்றன. மேற்கோள்கள்[தொகு] ↑ "History 1869-1900". AMNH. ↑ "TEA-AECOM 2016 Theme Index and Museum Index: The Global Attractions Attendance Report" 68–73. Themed Entertainment Association. பார்த்த நாள் அக்டோபர் 23, 2019. ↑ "NPS Focus". National Register of Historic Places. National Park Service. பார்த்த நாள் November 18, 2011. துணை நூல்கள்[தொகு] Collier's Encyclopaedia, Vol.16, P. F. Collier, Inc. London, 1978. Encyclopaedia Britannica, Micropaedia, Vol.1, Encyclopaedia Britannica, Inc., Chicago, 1982. Encyclopaedia Americana Vol. C. Americana Corporation, Danbury, Connecticut, 1980. "https://ta.wikipedia.org/w/index.php?title=அமெரிக்க_இயற்கை_வரலாற்று_அருங்காட்சியகம்&oldid=2822002" இருந்து மீள்விக்கப்பட்டது பகுப்புகள்: Pages using New York City Subway service templates அமெரிக்க அருங்காட்சியகங்கள் மறைக்கப்பட்ட பகுப்புகள்: Infobox mapframe without OSM relation ID on Wikidata Pages with maps வழிசெலுத்தல் பட்டி சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள் புகுபதிகை செய்யப்படவில்லை இந்த ஐபி க்கான பேச்சு பங்களிப்புக்கள் புதிய கணக்கை உருவாக்கு புகுபதிகை பெயர்வெளிகள் கட்டுரை உரையாடல் மாறிகள் expanded collapsed பார்வைகள் படிக்கவும் தொகு வரலாற்றைக் காட்டவும் மேலும் expanded collapsed தேடுக வழிசெலுத்தல் முதற் பக்கம் அண்மைய மாற்றங்கள் உதவி கோருக புதிய கட்டுரை எழுதுக தேர்ந்தெடுத்த கட்டுரைகள் ஏதாவது ஒரு கட்டுரை தமிழில் எழுத ஆலமரத்தடி Embassy சென்ற மாதப் புள்ளிவிவரம் Traffic stats உதவி உதவி ஆவணங்கள் Font help புதுப்பயனர் உதவி தமிழ் விக்கிமீடியத் திட்டங்கள் விக்சனரி விக்கிசெய்திகள் விக்கிமூலம் விக்கிநூல்கள் விக்கிமேற்கோள் பொதுவகம் விக்கித்தரவு பிற விக்கிப்பீடியர் வலைவாசல் நன்கொடைகள் நடப்பு நிகழ்வுகள் கருவிப் பெட்டி இப்பக்கத்தை இணைத்தவை தொடர்பான மாற்றங்கள் கோப்பைப் பதிவேற்று சிறப்புப் பக்கங்கள் நிலையான இணைப்பு இப்பக்கத்தின் தகவல் குறுந்தொடுப்பு இக்கட்டுரையை மேற்கோள் காட்டு விக்கித்தரவுஉருப்படி அச்சு/ஏற்றுமதி ஒரு புத்தகம் உருவாக்கு PDF என தகவலிறக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட பதிப்பு பிற திட்டங்களில் விக்கிமீடியா பொதுவகம் விக்கியினங்கள் மற்ற மொழிகளில் العربية Asturianu Башҡортса Català کوردی Čeština Dansk Deutsch Ελληνικά English Esperanto Español Eesti Euskara فارسی Suomi Français Frysk עברית Hrvatski Magyar Հայերեն Bahasa Indonesia Italiano 日本語 ქართული 한국어 Latina മലയാളം Bahasa Melayu Nederlands Norsk bokmål Polski پنجابی Português Русский Simple English Slovenčina Slovenščina Српски / srpski Svenska Türkçe Українська Tiếng Việt ייִדיש 中文 粵語 இணைப்புக்களைத் தொகு இப்பக்கத்தைக் கடைசியாக 23 அக்டோபர் 2019, 08:27 மணிக்குத் திருத்தினோம். அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.
வலையங்கம் ஆன்மீகம் கதை ஷெர்லக் ஹாய் மதன் ஜோக்ஸ் சினிமா ஜோதிடம் விளையாட்டு சினிமா விமரிசனம் கவிதை அனுபவம் வம்பு துளிகள் விளம்பரம் முகநூல் கார்ட்டூன் கலை நாடகம் வாசகர் மெயில் நொறுக்ஸ் தொலைக்காட்சி புத்தக விமரிசனம் உணவு ஸ்பெஷல் மருத்துவ ஸ்பெஷல் பக்தி ஸ்பெஷல் சினிமா ஸ்பெஷல் பிஸினஸ் ஸ்பெஷல் மருத்துவம் நெட் ஜோக்ஸ் தமிழ் வாவ் வாட்ஸப்! கல்வி கொடுரம் நெகிழ்ச்சி நேயம் பேரிடர் ஆசிரியர் பக்கம் சோகம் Daily Articles கற்பனை நவராத்திரி மக்கள் கருத்து அழகு ஏக்கம் பேசிக்கறாங்க காமிரா கார்னர் விகடகவியார் வாசகர் விஷுவல்ஸ் ஆரோகியம் follow-up காதலர் தின ஸ்பெஷல் விருது மகளிர் ஸ்பெஷல் ஆண்கள் ஸ்பெஷல் தேர்தல் தேர்தல் ஸ்பெஷல் தேர்தல் திருவிழா சைக்கிள் ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ் சிறு தொடர்கதை வரலாறு தீபாவளி ஸ்பெஷல் சுட்டி ஸ்பெஷல் Login முகப்பு இதழ்கள் Login மதனுடன் கல கல Talk! - Click Here “நீலகிரி ஆட்சியர் மாற்றம்...” - ஸ்வேதா அப்புதாஸ் - Click Here விகடகவியார் - Click Here ஐந்தாம் ஆண்டில் விகடகவி - Click Here தக்காளி.. தக்காளி.. - ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்) - Click Here
திருமணத்திற்கு வரன் தேடுகிறீர்களா? - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW இந்திய இராணுவம் அதிகாரபூர்வ இணையதளத்தில் குறுகிய சேவை ஆணையம் -தொழில்நுட்பம் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக பொறியியல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக சென்னை கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள். நிறுவனம் : சென்னை அதிகாரிகள் பயிற்சி அகாடமி பணியின் பெயர் : குறுகிய சேவை ஆணையம் - தொழில்நுட்பம் கல்வித்தகுதி : பொறியியல் பணியிடம் : சென்னை தேர்வு முறை : நேர்காணல் மொத்த காலியிடங்கள் : 191 சம்பளம் : 25,000/- விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் கடைசி தேதி : 27.10.2021 முழு விவரம் : https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/SSC_TECH__58.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள். இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal English Summary Chennai Officers Training Academy job #Officers Training Academy #job கருத்துக் கணிப்பு ஜெய் பீம் குறித்து., ஆதரவு எதிர்ப்பு கருத்து இல்லை Submit your vote கருத்துக் கணிப்பு ஜெய் பீம் குறித்து., ஆதரவு எதிர்ப்பு கருத்து இல்லை Submit your vote செய்திகள் காங்கிரஸ் போஸ்டர்களை மட்டும் அப்புறப்படுத்துவியா.. மாநகராட்சி ஊழியர்களை தாக்கிய முன்னாள் காங்கிரஸ் எம்.எல். ஏ..!
திருமணத்திற்கு வரன் தேடுகிறீர்களா? - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW ஊடகத்துறையினரை இழிவுப்படுத்தும் ஹெச்.ராஜா அவர்கள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என த.வா.க வேல்முருகன் எம்.எல்.ஏ கோரிக்கை வைத்துள்ளார். தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஊடகத்துறையினரை தொடர்ந்து இழிவாக பேசி வரும் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அவர்கள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத்துறையை இழிவாக பேசுவது, அவமரியாதை செய்வது போன்ற நாகரிகமற்ற செயல்களில் பாஜகவினர் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவது வன்மையாக கண்டிக்கதக்கது. குறிப்பாக, கடந்த 2018ஆம் ஆண்டு, பாஜகவை சேர்ந்த எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர் உட்பட, அனைத்து பத்திரிகையாளர்களையும் இழிவுப்படுத்தி மிகவும் தரக்குறைவாக பதிவிட்டிருந்தார். இதே போன்று, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவும், பெண் பத்திரிகையாளர்களை இழிவுப்படுத்தியிருந்தார். இவர்கள் மீது அப்போதைய அதிமுக அரசும், காவல்துறையினரும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கைப் பார்த்தனர். ஆனால் நியாயம் கேட்டு போராடிய ஊடகத்துறையினரை மட்டும் காவல்துறையினர் கைது செய்தனர். குறிப்பாக சொல்ல வேண்டுமானால், எஸ்.வி.சேகர், ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க அதிமுக அரசு அஞ்சியது. அப்போது, எஸ்.வி.சேகர், ஹெச்.ராஜா மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பியிருந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி, நியாயம் கேட்டு போராடியவர்களை கைது செய்வது ஜனநாயக கேலிக்கூத்தாகும் என கண்டனம் தெரிவித்திருந்தது. கடந்த ஆட்சியில் எஸ்.வி.சேகர், ஹெச்.ராஜா மீது அதிமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டியதால், ஊடகத்துறையிரை மீண்டும் இழிவுப்படுத்தும், அநாகரிக சொற்களால் ஹெச்.ராஜா மீண்டும் பேசியுள்ளார். அதிமுக அரசு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்திருந்தால், ஊடகத்துறையினரை மீண்டும் இழிவுப்படுத்தும் துணிச்சல் ஹெச்.ராஜா வகையறாக்களுக்கு வந்திருக்காது. பாஜகவுக்கு ஆன்மிக ஒழுக்கமும் இல்லை, அரசியல் ஒழுக்கமும் இல்லை என்பது ஹெச்.ராஜா உள்ளிட்ட பல்வேறு மாநில பாஜக தலைவர்களின் சமீபத்திய செயல்பாடுகள் மூலமாக வெளிப்பட்டு வருகிறது, எனவே, ஊடகத்துறையினரை இழிவுப்படுத்திய ஹெச்.ராஜா மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் மேலும், ஹெச்.ராஜா போன்ற அடிப்படை நாகரிகரிகமற்றவர்களையும், அரசியல் அறமற்றவர்களையும் ஊடகத்துறையினரும் புறக்கணிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Tamil online news Today News in Tamil பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள். இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal English Summary TVK Velmurugan Request to TN Govt about Arrest H Raja 30 Sep 2021 #TVK #Velmurugan #facebook #H Raja #bjp #tamil online news #politics #Tamilnadu கருத்துக் கணிப்பு ஜெய் பீம் குறித்து., ஆதரவு எதிர்ப்பு கருத்து இல்லை Submit your vote கருத்துக் கணிப்பு ஜெய் பீம் குறித்து., ஆதரவு எதிர்ப்பு கருத்து இல்லை Submit your vote செய்திகள் காங்கிரஸ் போஸ்டர்களை மட்டும் அப்புறப்படுத்துவியா.. மாநகராட்சி ஊழியர்களை தாக்கிய முன்னாள் காங்கிரஸ் எம்.எல். ஏ..!
காங்கிரஸ் போஸ்டர்களை மட்டும் அப்புறப்படுத்துவியா.. மாநகராட்சி ஊழியர்களை தாக்கிய முன்னாள் காங்கிரஸ் எம்.எல். ஏ..!
ஒரு முஸ்லிம் தன் காரியத்தில் வெற்றி பெறுவதற்கு இரண்டை செய்ய வேண்டும். முதலாவது அல்லாஹ்விடம் பிரார்த்திப்பது, இரண்டாவது அந்த செயல் நிறைவேறுவதற்கான காரணத்தை செய்வது. ஆகவே நாம் ஒவ்வொருவரும் அல்லாஹ்விடம் உரிய முறையில் பிரார்த்திப்பதோடு துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களையும், நிலைகளையும் பேணுவோமேயானால் நமது பிரார்த்தனைகளையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்வான் என்பதில் ஐயமில்லை. அந்த நேரங்களும், நிலைகளும் பின்வருமாறு 1. லைலதுல் கத்ரின் இரவில் கேட்கப்படும் பிரார்த்தனை. ‘அல்லாஹ்வின் தூதரே! லைலதுல் கத்ரின் இரவை நான் அடைந்து கொண்டால் என்ன கூறவேண்டும் என கேட்டேன் اَللَّهُمَّ إِنَّكَ عَفْوٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّيْ அல்லாஹும்ம இன்னக அஃப்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஉஃப அன்னீ’. பொருள்: இறைவா! நீ மன்னிப்பவன், மன்னிப்பை விரும்புபவன், என்னை மன்னிப்பாயாக!’ 2. இரவின் நடுப்பகுதியில் கேட்கப்படும் பிரார்த்தனை. இரவின் நடுப்பகுதி அல்லது (இரவில்) மூன்றில் இரண்டு பகுதி சென்றதற்கு பின் உயர்வு மிக்க அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கிக் கேட்கின்றான். ‘ கேட்கக்கூடியவர் இருக்கின்றாரா? கொடுக்கப்படும், பிரார்த்திப்பவர் இருக்கின்றாரா? அவருக்கு விடையளிக்கப்படும், பிழைபொறுப்பு கேட்பவர் இருக்கின்றாரா அவருடைய பாவம் மன்னிக்கப்படும் என்று சுப்ஹுடைய நேரம் வரும் வரை அல்லாஹ் கேட்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம் 3. ஐநேரத் தொழுகைக்குப் பின் (ஸலாம் கொடுப்பதற்கு முன்) அல்லாஹ்வின் தூதரே! எந்த துஆ அல்லாஹ்விடத்தில் மிகவும் ஏற்றுக்கொள்ளப் படக்கூடியது என நபி(ஸல்) அவர்களிடத்தில் கேட்கப்பட்டது, இரவின் கடைசி நேரத்திலும் பர்ளான தொழுகைக்கு பின்னும் என்றார்கள். ஆதாரம்: திர்மிதி ஹதீதில் பர்ளான தொழுகைக்கு பின் என்பதின் கருத்து, ஸலாம் கொடுப்பதற்கு முன்பா அல்லது ஸலாம் கொடுத்ததற்கு பின்பா என்பது பற்றி அறிஞர்கள் கூறும் கருத்து பின்வருமாறு • இப்னு தைமிய்யா மற்றும் இப்னுல் கைய்யிம்(ரஹ்) அவர்களின் கருத்து, ஸலாம் கொடுப்பதற்கு முன்பு என்பதாகும். • ஸாலிஹ் பின் உதைமீன்(ரஹ்) அவர்களும் இந்தக் கருத்தையே கூறுகின்றார்கள். தொழுகைக்கு பின் துஆ ஓதவேண்டும் என்று வரும் ஹதீதுக்குரிய கருத்து, ஸலாம் கொடுப்பதற்கு முன்பு என்பதாகும். தொழுகைக்கு பின் திக்ர் ஓதவேண்டும் என்று வரும் ஹதீதுக்குரிய கருத்து ஸலாம் கொடுத்ததற்கு பின்பு என்பதாகும் எனக் கூறுகின்றார்கள். 4. அதான் இகாமத்துக்கு இடையில் செய்யப்படும் பிரார்த்தனை. ‘அதானுக்கும் இகாமத்துக்குமிடையில் செய்யப்படும் துஆ தட்டப்படமாட்டாது’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: அபூதாவூத், திர்மிதி 5. பர்ளான தொழுகைக்கு பாங்கு சொல்லப்படும் போதும் யுத்த களத்தில் போர் மூழும்போதும் செய்யப்படும் பிரார்த்தனை. ‘இரண்டு பிரார்த்தனை மறுக்கப்படமாட்டாது அல்லது குறைவாகவே தட்டப்படும். தொழுகைக்காக அழைப்பு கொடுக்கப்படும் போதும் போர்களத்தில் சிலர் சிலருடன் சண்டை போட்டுக் கொள்ளும் போதும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஆதாரம்: அபூதாவூத் 6. மழை பொழியும் போது செய்யப்படும் பிரார்த்தனை. ‘இரண்டு பிரார்த்தனைகள் நிராகரிக்கப்படமாட்டாது, தொழுகைக்காக பாங்கு சொல்லப்படும் போதும் மழை பொழியும் போது கேட்கப்படும் பிரார்த்தனையும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஆதாரம்: அபூதாவூத் 7. இரவில் ஒரு நேரம். ‘இரவில் ஒரு நேரம் இருக்கின்றது அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் உலகம் மற்றும் மறுமையின் நலவை கேட்டால் அல்லாஹ் அதை அவனுக்கு கொடுக்காமலில்லை, இது ஒவ்வொரு இரவிலும் இருக்கின்றது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஆதாரம்: முஸ்லிம் 8. வெள்ளிக் கிழமையில் கேட்கப்படும் பிரார்த்தனை. ‘வெள்ளிக்கிழமையில் ஒரு நேரம் இருக்கின்றது அந்த நேரத்தில் ஒரு முஸ்லிமான அடியான் தொழுத நிலையில் அல்லாஹ்விடத்தில் எதைக் கேட்டாலும் அதை அவன் கொடுக்காமல் இருப்பதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஆதாரம்: புகாரி, முஸ்லிம் 9. சுஜுதில் செய்யப்படும் பிரார்த்தனை. ‘ஒரு அடியான் அவனுடைய இறைவனுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் நேரம் அவன் சுஜுது செய்யும் நேரமாகும். ஆகவே (அந்த நேரத்தில் ) அதிகம் துஆச் செய்யுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம் 10. சேவல் கூவும் சப்தத்தை கேட்கும் போது செய்யப்படும் பிரார்த்தனை. ‘சேவல் கூவும் சப்தத்தை நீங்கள் கேட்டால் அல்லாஹ்விடம் அவனின் அருளை கேளுங்கள் நிச்சயமாக அந்தச் சேவல் ஒரு மலக்கை கண்டிருக்கின்றது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம் لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ سُبْحَانَكَ إِنِّيْ كُنْتُ مِنَ الظَّالِمِيْنَ என்னும் திக்ரை ஓதிய பின் செய்யப்படும் பிரார்த்தனை.’ ‘மீனுடைய நபி (யூனுஸ் -அலை-) அவர்கள் மீனுடைய வயிற்றினுள் இருந்த நேரத்தில் அவர் செய்த பிரார்த்தனை’ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ سُبْحَانَكَ إِنِّيْ كُنْتُ مِنَ الظَّالِمِيْنَ என்பதை கூறி எந்த ஒரு முஸ்லிமாவது பிரார்த்தித்தால், அல்லாஹ் அந்த பிரார்த்தனையை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதி இன்னும் (நினைவு கூர்வீராக) துன்னூன் (யூனுஸ் தம் சமூகத்தவரை விட்டும்) கோபமாக வெளியேறிய போது, (பாவிகள் சமூகத்தை விட்டும் வெளியேறி விட்ட படியால்) அவரை நாம் நெருக்கடியில் ஆக்கமாட்டோம் என்று எண்ணிக் கொண்டார்; எனவே அவர் (மீன் வயிற்றின்) ஆழ்ந்த இருளிலிருந்து ”உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்” என்று பிரார்த்தித்தார். (அல்குர்ஆன் 21:87) இந்த ஆயத்திற்கு விளக்கமளிக்கும் போது குர்துபி (ரஹ்) அவர்கள் அவர்களுடைய ‘அல்ஜாமிஉ லிஅஹ்காமில் குர்ஆன்’ எனும் தப்ஸீரில் கூறுகின்றார்கள், யூனுஸ் நபியின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்று அவர்களை பாதுகாத்தது போன்று, இவ்வார்த்தையை கொண்டு பிரார்த்திப்பதை, ஒருவரின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு நிபந்தனையாக அல்லாஹ் கூறுகின்றான்’ என்று கூறியுள்ளார்கள். (தப்ஸீருல் குர்துபி 11-334) 11. ஏதாவது ஒரு துன்பம் ஏற்படும் போது செய்யப்படும் பிரார்த்தனை. நான் நபி(ஸல்) அவர்கள் கூறக்கேட்டிருக்கின்றேன். எந்த ஓர் அடியாருக்காவது ஒரு சோதனை ஏற்பட்டு, அவர் إِنَّا لِلهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ، اَللَّهُمَّ اؤْجُرْنِيْ فِيْ مُصِيْبَتِيْ هَذِهِ وَاخْـلُفْ لِيْ خَيْراً مِنْهَا ”இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன், அல்லாஹும்மஉஃஜுர்னீ ஃபீ முஸீபத்தீ ஹாதிஹி வக்லுஃப் லீ கைரன் மின்ஹா’ பொருள்: (நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள், நிச்சயமாக நாங்கள் அவன் பக்கமாகவே மீளுபவர்களாக உள்ளோம். யா அல்லாஹ்! என்னுடைய சோதனையில் எனக்கு நற்கூலியை தந்தருள்வாயாக! அதைவிடச் சிறந்ததை எனக்குப் பகரமாக்கித் தந்தருள்வாயாக!) என்று கூறுவாரேயானால், அல்லாஹ் அவருக்கு அவரின் சோதனையின் விஷயத்தில் நற்கூலியை வழங்கி, மேலும் அதைவிடச் சிறந்ததை அவருக்குப் பகரமாக்கித் தருவதை தவிர வேறில்லை. உம்மு ஸலமா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள், அபூ ஸலமா(ரலி) மரணம் அடைந்ததும், நபி(ஸல்) அவர்கள் கூறிய இந்த துஆவைக் நான் கூறினேன். அதனை ஏற்று அல்லாஹ் எனக்கு அவரை விடச் சிறந்தவர்களாக நபி(ஸல்) அவர்களை கணவராக ஆக்கித் தந்தான். அறிவிப்பவர்: உம்மு ஸலமா(ரலி), ஆதாரம்:முஸ்லிம். 12. ஒருவரின் உயிர் கைப்பற்றப்பட்டதற்கு பிறகு மனிதர்கள் செய்யும் பிரார்த்தனை நபி(ஸல்) அவர்கள் அபூ ஸலமா(ரலி) அவர்களிடம் சென்றிருந்த போது அவருடைய பார்வை (கண்) திறந்திருந்ததை பார்த்த நபி(ஸல்) அவர்கள், அவர்களின் கண்ணை மூடிக்கொண்டு, நிச்சயமாக உயிர் கைப்பற்றப்படும் போது பார்வை உயிரை பின்தொடருகின்றது என்றார்கள், அப்போது அவர்களின் குடுப்பத்தினர்கள் ஓலமிட்டார்கள், நல்லதைக்கொண்டே தவிர உங்கள் மீது நீங்கள் பிரார்த்திக்க வேண்டாம் காரணம் நீங்கள் கூறுவதற்கு மலக்குகள் ஆமீன் கூறுகின்றார்கள். ஆதாரம்: முஸ்லிம் அபூ ஸலமா(ரலி) அவர்கள் மரணம் அடைந்த பொழுது நபி(ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். அவரின் கண்கள் திறந்து இருந்தன. அவரின் கண்களை நபி(ஸல்) அவர்கள் மூடினார்கள், பிறகு கூறினார்கள், ”நிச்சயமாக உயிர் கைப்பற்றப்பட்டு விட்டால் அவரின் பார்வையும் உயிரை பின்தொடருகின்றது. (ஆகவே மரணமடைந்து விட்டவரின் கண்களை மூடிவிடுங்கள்) அப்பொழுது அபூஸலமாவின் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் கதறி அழுதார்கள். அப்பொழுது நபி(ஸல்) அவர்கள் அவர்களை நோக்கிக் கூறினார்கள், நன்மையைக் கொண்டே தவிர நீங்கள் உங்களுக்கு துஆச் செய்யாதீர்கள். நிச்சயமாக மலக்குகள் நீங்கள் சொல்லக் கூடியவைகளுக்கு ஆமீன் கூறுகிறார்கள்”. பின்பு நபி(ஸல்) அவர்கள், اَللَّهُمَّ اغْفِرْ لِأَبِي سَلَمَةَ، وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيِّيْنَ، وَاخْلُفْهُ فِي عَقِبِهِ فِي الْغَابِرِيْنَ، وَاغْفِرْ لَنَا وَلَهُ يَارَبَّ الْعَالَمِيْنَ، وَافْسَحْ لَهُ فِي قَبْرِهِ، وَنَوِّرْ لَهُ فِيْهِ ”அல்லாஹும்மஃபிர் லி அபீ ஸலமா, வர்பஃ தரஜதஹுஃபில் மஹ்திய்யீன், வக்லுஃப்ஹு ஃபீ அகிபிஹீ பில்ஃஹாபிரீன், வஃபிர்லனா வலஹுயாரப்பல் ஆலமீன் வஃப்ஸஹ் லஹுஃபீ கப்ரிஹி வ நவ்விர்லஹு ஃபீஹி” பொருள்: இறைவா! அபூஸலமாவின் பிழைகளைப் பொறுப்பாயாக! நேர்வழி பெற்றவர்களின் (அந்தஸ்தில்) அவரின் அந்தஸ்தை உயர்த்துவாயாக! அவரின் வாரிசுகளுக்கு நீயே சிறந்த பிரதிநிதியாக இருப்பாயாக! அகிலங்களின் அதிபதியே! எங்களுக்கும் அவருக்கும் பிழை பொறுப்பாயாக! அவரின் மண்ணறையை விஸ்தீரணமாக்கி வைப்பாயாக! அவரின் மண்ணறையை ஒளிமயமாக்கி வைப்பாயாக! என அவருக்காக துஆச் செய்தார்கள். ஆதாரம்: முஸ்லிம், அறிவிப்பவர்: உம்மு ஸலமா(ரலி) 13. நோயாளியிடம் செய்யப்படும் பிரார்த்தனை. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், நீங்கள் நோயாளியிடமோ, அல்லது மரணித்தவரிடமோ சென்றால் நன்மையானவைகளைக் கூறுங்கள். (நல்ல துஆக்களைச் செய்யுங்கள்) நிச்சயமாக மலக்குகள் நீங்கள் கூறுவதின் மீது ஆமீன் சொல்கிறார்கள். உம்மு ஸலமா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள். அபூ ஸலமா(ரலி) அவர்கள் மரணம் அடைந்ததும், நான் நபியவர்களிடம் சென்று அபூஸலமாவின் மரணச் செய்தியைக் கூறினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள். اَلَّلهُمَّ اغْفِرْلِيْ وَلَهُ، وَأَعْقِبْنِيْ مِنْهُ عُقْبًى حَسَنَةً ”அல்லாஹும்மஃபிர்லீ வலஹு, வஅஃகிப்னீ மின்ஹு உக்பன் ஹஸனதன்” பொருள்: இறைவா! எனக்கும் அவருக்கும் பிழை பொறுப்பாயாக! எனக்கு அவரை விட அழகிய பகரத்தை ஏற்படுத்துவாயாக! என நீர் துஆச் செய்வீராக எனக் கூறினார்கள். நான் அவ்வாறு துஆச் செய்தேன். பின்னர் அவருக்கு பகரமாக அவரை விடச் சிறந்தவர்களான நபி(ஸல்) அவர்களை அல்லாஹ் எனக்கு கணவராக ஏற்படுத்தித் தந்தான். ஆதாரம்: முஸ்லிம், அறிவிப்பவர்: உம்மு ஸலமா(ரலி) 14. அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை ‘அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனையை பயந்து கொள்ளுங்கள், காரணம் அநியாயம் செய்யப்பட்டவனின் பிரார்த்தனைக்கும் அல்லாஹ்விற்கும் மத்தியில் திரையில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ ஆதாரம்: அஹ்மத் ‘அநியாயம் செய்யப்பட்டவன் கெட்டவனாக இருந்தாலும் அவனுடைய பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும், அவனுடைய பாவம் அவனோடு சேர்ந்தது’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: அஹ்மத் 15. பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு செய்யும் பிரார்த்தனை ‘மூன்று பேருடைய பிரார்த்தனை நிராகரிக்கப்படமாட்டாது, பெற்றோர் தன் பிள்ளைக்கு செய்யும் பிரார்த்தனை, நோன்பாளி மற்றும் பிரயாணியின் பிரார்த்தனை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: பைஹகி 16. பெற்றோர்கள் தன் பிள்ளைக்கு செய்யும் சாபம் மூன்று பிரார்த்தனைகள் எந்த சந்தேகமுமின்றி ஏற்றுக் கொள்ளப்படும், அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை, பிரயாணியின் பிரார்த்தனை, பெற்றோர் தன் பிள்ளைக்கு செய்யும் சாபம் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதி 17. ஸாலிஹான குழந்தை தன் பெற்றோர்களுக்கு செய்யும் பிரார்த்தனை ‘ஆதமுடைய மகன் மரணித்தால் அவனுடைய அமல்களில் மூன்றைத்தவிர (மற்ற அனைத்து அமல்களும்) துண்டித்து விடும். நிரந்தர தர்மம், அவருக்காக பிரார்த்தனை செய்யும் ஸாலிஹான குழந்தை, பயனுள்ள கல்வி என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ ஆதாரம்: முஸ்லிம் 18. சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்து லுஹர் தொழுவதற்கு முன் செய்யப்படும் பிரார்த்தனை ‘நபி(ஸல்) அவர்கள் சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்ததற்கு பின் லுஹர் தொழுவதற்கு முன் நான்கு ரக்அத் சுன்னத் தொழுதுவிட்டு, இது வானத்தின் கதவுகள் திறக்கப்படும் நேரமாகும், இந்த நேரத்தில் எனது அமல் உயர்த்தப்படுவதை நான் எனது எனது எனது அமல் உயர்த்தப்படுவதை நான் விரும்புகின்றேன் என கூறினார்கள். ஆதாரம்: திர்மிதி 19. இரவில் தூக்கத்திலிருந்து விழித்து செய்யும் பிரார்த்தனை யாராவது இரவில் விழித்தெழுந்து سُبْحَانَ اللهِ، وَالْحَمْدُ لِلهِ، وَلاَ إِلَهَ إِلاَّ اللهُ، اَللهُ اَكْبَرُ، وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ என்று கூறி, அதன் பின் ‘اللَّهُمَّ اغْفِرْ لِيْ என்று கூறினால் அல்லது ஏதாவது பிரார்த்தனை செய்தால் அது ஏற்றுக் கொள்ளப்படும், அவர் உளு செய்து தொழுதால் அவருடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி 20. ஒரு முஸ்லிம் சகோதரருக்காக மறைமுகமாக கேட்கப்படும் பிரார்த்தனை ‘ஒரு முஸ்லிம், தன் சகோதரருக்காக மறைமுகமாக செய்யும் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும், அவருடைய தலைப்பக்கம் அதற்காக சாட்டப்பட்ட ஒரு மலக்கு நின்று கொண்டு தன் சகோதருக்காக நலவானதைக் கொண்டு அவர் பிரார்த்திற்கும் போதெல்லாம், ஆமீன் (அல்லாஹ் இந்த துஆவை ஏற்றுக் கொள்வானாக) என்று கூறுகின்றார், இன்னும் உனக்கும் இவ்வாறு கிடைக்கட்டும் என்றும் பிரார்த்திக்கின்றார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம் 21. நீதியான அரசன் செய்யும் பிரார்த்தனை ‘மூன்று பேர் செய்யும் பிரார்த்தனை நிராகரிக்கப்படமாட்டாது, நோன்பாளி நோன்பு திறக்கும் வரை செய்யும் பிரார்த்தனை, நீதியான அரசனின் பிரார்த்தனை, அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை (இம்மூவரின் பிரார்த்தனையையும்) அல்லாஹ் மேகத்திற்கு மேல் உயர்த்தி வானத்தின் வாசல்களை திறந்து, என் கண்ணியத்தின் மீது ஆணையாக (இப்போது இல்லாவிட்டாலும்) பிறகாவது நிச்சயம் நான் உனக்கு உதவி செய்வேன் என இறைவன் கூறியதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதி 22. பிரயாணி பிரயாணத்தின் போது செய்யும் பிரார்த்தனை நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். மனிதர்களே! அல்லாஹ் தூய்மையானவன் தூய்மையில்லாதவைகளை அவன் ஏற்றுக் கொள்ளமாட்டான். தூதர்களுக்கு ஏவியதையே இறை விசுவாசிகளுக்கும் ஏவியிருக்கின்றான் (என்று கூறிவிட்டு பின்வரும் ஆயத்தை கூறினார்கள்) (என்னுடைய) தூதர்களே! நீங்கள் நல்லவற்றிலிருந்து உண்ணுங்கள், நல்ல காரியத்தையும் செய்யுங்கள். நிச்சயமாக நான் நீங்கள் செய்பவைகளை நன்கறிகிறவன் (அல்குர்ஆன் 23:51) இன்னும் விசுவாசங்கொண்டோரே! நாம் உங்களுக்கு அளித்ததில் நல்லவற்றை உண்ணுங்கள் (அல்குர்ஆன் 2:172) என்ற வசனத்தை கூறிவிட்டு, புழுதிபடிந்த நிலையில் பரட்டைத்தலையுடன் நீளமான பிரயாணம் செய்யும் ஒரு மனிதர் தன் இரு கைகளையும் வானத்தின் பக்கம் உயர்த்தி என் இறைவா! என் இறைவா! என்று (பிரார்த்திக்கின்றார்) அவர் உண்பதும் ஹராம், அவர் குடிப்பதும் ஹராம், அவர் அணிவதும் ஹராம், அவர் ஹராத்தைக் கொண்டே வளர்க்கப்பட்டிருக்கின்றார் அவருடைய பிரார்த்தனை எப்படி ஏற்றுக் கொள்ளப்படும் என்றார்கள். ஆதாரம்: முஸ்லிம். – சுவனப்பாதை உங்கள் காத்தான்குடி Tweet Like this: Like Loading... Related Post navigation Previous Postஅன்றைய புலிகளுக்கு கருணாநிதியின் திடீர் ஆதரவு ஏன்? 20 வருடங்களின் பின் அமெரிக்காவுக்கு உண்மையை பகிரங்கப்படுத்திய விக்கிலீக்ஸ்!Next Postஅரசியல் தீர்வு குறித்து இந்தியக் குழுவினருடன் கூட்டமைப்பு பேச்சு Leave a Reply Cancel reply Enter your comment here... Fill in your details below or click an icon to log in: Email (required) (Address never made public) Name (required) Website You are commenting using your WordPress.com account. ( Log Out / Change ) You are commenting using your Google account. ( Log Out / Change ) You are commenting using your Twitter account. ( Log Out / Change ) You are commenting using your Facebook account. ( Log Out / Change ) Cancel Connecting to %s Notify me of new comments via email. Notify me of new posts via email. Δ eye of the city Top Posts & Pages “பாயசம் வைக்கவேணும் பானையிலோ அரிசி இல்லை” Museum 5-16 வயது: சகல பிள்ளைகளுக்கும் கட்டாய கல்வி தலைமைத்துவம் என்றால் என்ன? உற்பத்தி திறன் மேம்பாட்டு அமைச்சின் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாபெரும் தொழிற்சந்தை அமைச்சர் பஷீர் சேகுதாவூத்தினால் மட்டக்களப்பில் ஆரம்பித்து வைப்பு பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களும், நிலைகளும் நோயாளி நலம் விசாரித்தல் (இறைநினைவுகள்) இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் -எதிர்காலத்தை கட்டியெழுப்ப நாம் அனைவரும் கை கோர்ப்போம்: சிறுவர்தின வாழ்த்துச்செய்தியில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்
எடப்பாடி பழனிசாமி கூட்டணியின் முதல்வர் அல்ல என்று ஜி.கே.மணி அவர்கள் கூறியதாக நியூஸ்18 தமிழ்நாடு செய்தி வெளியிட்டுள்ளது. Fact Check/ Verification 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களமே பரபரப்பாக உள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்தி அரசியல் களத்தை ஆக்கிரமித்து வருகிறது. அதன் வரிசையில் தற்போது பேசுப்பொருளாக இருக்கும் செய்தி அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பதே. அதிமுக தரப்பில் ஏற்கனவே பலக்கட்ட சுற்று பேச்சுவார்த்தைகளை முடித்துவிட்டு எடப்பாடி பழனிசாமி அவர்கள்தான முதல்வர் வேட்பாளர் என்ற முடிவை ஏற்கனவே எடுத்துவிட்டனர். இருப்பினும் அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜகவின் மாநில தலைவர் எல்.முருகன், துணைத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமைதான் முடிவு செய்து அறிவிக்கும் என்று கூறியுள்ளனர். இது கூட்டணிக்குள் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரான கே.பி. முனுசாமி அவர்கள் பாஜக தலைவர்களின் இந்த பேச்சுக் குறித்து கடுமையாக விமர்சித்தார். இந்த பிரச்சனையே ஒரு முடிவுக்கு வராத நிலையில் இருக்கும்போது அதிமுகவுடன் கூட்டணையில் இருக்கும் மற்றொரு கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் தலைவரான ஜி.கே.மணி அவர்கள் “கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி அல்ல” என்று கூறியதாக நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி வெளியிட்டுள்ளது. #BREAKING | கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி அல்ல – ஜி.கே.மணி அதிரடி#ADMK | #EdappadiPalaniswami | #GKMani #TNAssemblyElection2021 விவரம் : https://t.co/AMwn2wtKCO — News18 Tamil Nadu (@News18TamilNadu) December 31, 2020 நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டுள்ள இச்செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இச்செய்திக் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம். உண்மையும் பின்னணியும் நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டதுபோல் “கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி அல்ல” என்று ஜி.கே.மணி அவர்கள் எங்கேயாவது பேசியுள்ளாரா என்பதை அறிய இதுக்குறித்து தேடினோம். அவ்வாறு தேடியதில், ஜி.கே.மணி அவர்களின் சமீபத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பு வீடியோ ஒன்றை நம்மால் காண முடிந்தது. அவ்வீடியோவைக் கண்டதன் மூலம் நியூஸ்18 தமிழ்நாடு வெளியிட்டச் செய்தி முற்றிலும் தவறானது என்பதை நம்மால் அறிய முடிந்தது. உண்மையில் ஜி.கே.வாசன் அவர்கள், “அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு என்பது அவர்கள் கட்சியின் தனி நிலைப்பாடு. கூட்டணி கட்சிகளுக்கும் அதற்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை. எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதல்வர் வேட்பாளராக ஏற்கிறோமா என்பதை தேர்தல் நேரத்தில் மருத்துவர் ராமதாஸ் அறிவிப்பார். “ என்றே பேசியுள்ளார். எந்த ஒரு இடத்திலும் எடப்பாடி பழனிசாமி கூட்டணி கட்சிகளின் முதல்வர் வேட்பாளர் இல்லை என்று ஜி.கே.வாசன் அவர்கள் பேசவே இல்லை. ஜி.கே.வாசன் பத்திரிக்கையாளர் சந்திப்பு வீடியோ, வாசகர்களின் பார்வைக்காக: Courtesy: Sun News Conclusion எடப்பாடி பழனிசாமி கூட்டணியின் முதல்வர் அல்ல என்று ஜி.கே.மணி அவர்கள் கூறியதாக நியூஸ்18 தமிழ்நாடு வெளியிட்டச் செய்தியானது முற்றிலும் தவறானது என்பதை ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம். Result: Misleading Our Sources News18 Tamilnadu: https://twitter.com/News18TamilNadu/status/1344486285193330690 Sun News: https://www.youtube.com/watch?v=C9DOfExIk9Y (உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்) Tags Featured admk EPS Edappadi palanisami g.k.mani Ramkumar Kaliamurthy A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society. Facebook Twitter WhatsApp Linkedin Previous articleரஜினிகாந்தை கஸ்தூரி கிண்டல் செய்தாரா? Next articleகமல்ஹாசன் காருக்கு இன்சூரன்ஸ் கட்டவில்லையா? Ramkumar Kaliamurthy A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society. RELATED ARTICLES Fact Check மதுரையில் பெண்களுக்கென்று தனியாக மதுக்கூடம் தொடங்கப்பட்டுள்ளதா? Ramkumar Kaliamurthy Fact Check Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள் Vijayalakshmi Balasubramaniyan Fact Check நேபாள் மலைப்பகுதியில் கண்டறியப்பட்ட 201 வயதான துறவி எனப்பரவும் வதந்தி! Vijayalakshmi Balasubramaniyan LEAVE A REPLY Cancel reply Comment: Please enter your comment! Name:* Please enter your name here Email:* You have entered an incorrect email address! Please enter your email address here Website: Save my name, email, and website in this browser for the next time I comment. Most Popular ரஞ்சன் கோகாய் அவர்களுக்கு கொரானாவா? மாஸ்க் அணிந்துகொண்டு உணவு சாப்பிடாமல் புகைப்படத்திற்கு மட்டும் போஸ் கொடுத்தாரா ராகுல் காந்தி? அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்த சிவலிங்கமா இது? கடனுதவி பெறுவதற்காக அமெரிக்கா சென்றாரா பிரதமர் மோடி? Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள் சூரியப்புயல் வீசப்போவதால் ஆறு நாட்கள் உலகம் இருளப்போகிறதா? எஸ்.வி.சேகர் ஊடகவியலார்கள் குறித்து கடுமையான வார்த்தைகளை பேசியதாக தவறான வதந்தி பிரதமர் மோடி, அன்னா ஹசாரேவுடன் இருக்கும் புகைப்படமா இது? ABOUT US Newschecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check.
"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:Ceylon_United_Art_Stage&oldid=52150" இருந்து மீள்விக்கப்பட்டது
பேரணாம்பட்டில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 9 பேர் உயிரிழந்த நிலையில், ஆறுதல் கூறச் சென்ற அமைச்சர் ஆர்.காந்தி குழந்தையின் சடலத்தைக் கண்டு தேம்பி அழுதார். Vignesh Selvaraj Updated on : 19 November 2021, 04:20 PM வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 4 குழந்தைகள், பெண்கள் என 9 பேர் உயிரிழந்த நிலையில், ஆறுதல் கூறச் சென்ற அமைச்சர் ஆர்.காந்தி குழந்தையின் சடலத்தைக் கண்டு தேம்பி அழுதார். தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கடுமையாகப் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழை அனைத்துத் தரப்பினருக்கும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலும் தொடர் மழை பெய்து வரும் நிலையில், பேரணாம்பட்டு, மசூதி தெருவில் ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 5 பெண்கள், 4 குழந்தைகள் என மொத்தம் 9 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூபாய் 50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்நிலையில், மழையால் வீடு இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறச் சென்றார் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி. அப்போது, இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த குழந்தையின் சடலத்தைப் பார்த்த அமைச்சர் ஆர்.காந்தி துக்கம் தாளமுடியாமல் தேம்பி அழுதார். இந்நிகழ்வு அங்கிருந்தோரை வேதனையில் ஆழ்த்தியது. Also Read “பெட்ரோல் டீசல் வரியை உயர்த்தியது நீங்க.. மாநில அரசு குறைக்கணுமா?”- பா.ஜ.கவினருக்கு நிதி அமைச்சர் பதிலடி! vellore Minister R Gandhi அமைச்சர் ஆர் காந்தி பேரணாம்பட்டு Trending இந்தியாவை பின்னுக்குத் தள்ளிய இலங்கை, நேபாளம்.. மோடி அரசால் இன்னும் என்னவெல்லாம் நாடு சந்திக்க போகிறதோ? குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை... தஞ்சாவூரில் அதிர்ச்சி! சுதந்திரம் 75 : “விடுதலைப்போரில் வீரத் தமிழர்கள்” - சிறப்பு கட்டுரை ! ’S EX’ என்ற நம்பர் ப்ளேட்டால் மன உளைச்சலுக்கு ஆளான டெல்லி பெண்: நடந்தது என்ன? Latest Stories இந்தியாவை பின்னுக்குத் தள்ளிய இலங்கை, நேபாளம்.. மோடி அரசால் இன்னும் என்னவெல்லாம் நாடு சந்திக்க போகிறதோ? “கொரோனாவே பரவாயில்லைனு நினைக்கிற அளவுக்கு கொடிய தொற்றுகள் இனிமேல் வரும்” : அதிர்ச்சி கிளப்பும் விஞ்ஞானி! ஒமைக்ரான் அச்சுறுத்தலிடையே கர்நாடக நவோதயா பள்ளியில் 107 மாணவர்களுக்கு கொரோனா ; அச்சத்தில் பெற்றோர்கள்!
கொஞ்சம் லேட் விமர்சனமே. நேற்றுதான் பார்த்தேன். பாசிடிவ் விமர்சனம் எழுதுவதா...? நெகடிவ் விமர்சனம் எழுதுவதா....? என்று சத்தியமாக தெரியவில்லை. எனவே என் எண்ணத்தை அப்படியே பதிவு செய்கிறேன். அது எப்படிப்பட்ட விமர்சனம் என்று நீங்களே முடிவு செய்துக்கொள்ளுங்கள். திரைக்கு முன்... திரையரங்கத்திற்குள் நுழையும்போது சூர்யா பாடல் உட்பட பத்துநிமிட படம் முடிந்திருந்தது. அதைவிட பெரிய காமெடி, திரையரங்கில் வெறும் ஆறு பேர் மட்டுமே இருந்தார்கள் என்று சொன்னால் நம்புவீர்களா...? ஆனால் உண்மையில் அதுதான் நடந்தது. மூன்று அரங்கம் கொண்ட அம்பத்தூர் முருகன் காம்ப்லெக்சில் காலை 9 மணிக்காட்சிக்கு சென்றிருந்தோம். நாங்கள் அரங்கம் மாறி அமர்ந்துவிட்டோம் என்றே எண்ணுகிறேன். மொத்தத்தில் அறுநூறு பேர் அமர்ந்து படம் பார்க்கும் இடத்தில் நாங்கள் ஆறு பேர் மட்டுமே அமர்ந்து படம் பார்த்தோம். இடைவேளை கூட விடாமல் தொடர்ச்சியாக ரீல் ஒட்டிவிட்டார்கள். நடுவில் ஒருமுறை மட்டும் சிறுத்தை ட்ரைலர் காண்பிக்கப்பட்டது. சிறுத்தை – முன்னோட்டம் மறுபடியும் ஒரு போலீஸ் கதை. அண்ணனின் காக்க காக்க, சிங்கம் போன்ற படங்களை எல்லாம் ஒரே படத்தில் தம்பி தூக்கி சாப்பிட்டுவிடுவார் போல. அப்படி ஒரு விறைப்பு நம்ம சிறுத்தைகிட்ட. (தேள் எதுவும் கொட்டக்கூடாத இடத்தில் கொட்டிடுச்சு போல). அதுலயும் டபுள் ஆக்ஷன். இன்னொருவர் வழக்கம்போல தமிழ்சினிமாவின் வேலைவெட்டி இல்லாத இளைஞன். தெலுங்கு விக்ரமாற்குடு ரீமேக்காம். வெளங்கிடும். சரி இப்போ நம்ம மன்மதன் அம்புவுக்கே போவோம்... கதைச்சுருக்கம் ஏற்கனவே பல வலைப்பூக்களில் படித்த அதே வாடிப்போன கதைதான். அதாவது நடிகை நிஷாவும் பிரபல தொழிலதிபர் மதனகோபாலும் காதலிக்கிறாங்க. அவர்கள் காதல், திருமணத்தை நெருங்கும் வேளையில் மதனகோபால் நிஷாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு மேஜர் மன்னார் மூலமாக அவரை வேவு பார்க்கிறார். தனது பொருளாதார சூழ்நிலை காரணமாக மேஜர் மன்னார் கொஞ்சம் தகிடுதத்தோம் போட மதனகோபாலும் நடிகை நிஷாவும் இணைந்தார்களா என்பதே மீதிக்கதை. இதில் மேஜர் மன்னார் அவரது மனைவியை விபத்தில் இழந்த கதை, அந்த விபத்துக்கு காரணம் யார், புற்றுநோயால் அவதிப்படும் மேஜர் மன்னாரின் நண்பர், நடிகை நிஷாவின் தோழி தீபாவின் குடும்பம், மதனகோபாலின் அத்தைப்பெண் சுனந்தா என்று சில கிளைக்கதைகள். முக்கிய நடிகர்கள் - மேஜர் மன்னார் கதாப்பாத்திரத்தில் கமல். வழக்கமான கமல் படங்களோடு ஒப்பிட்டு பார்த்தால் கமலின் டாமினேஷன் ரொம்பவும் குறைவே. அடக்கி வாசித்திருக்கிறார். கமல் அறிமுகமாகும் காட்சி தவிர்த்து சண்டைக்காட்சி என்று சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இல்லை. தகிடுதத்தோம் பாடலில் கமல் போட்டது ஒரே ஒரு ஸ்டெப் தான் என்றாலும் அது கமல் ரசிகர்களை சிலிர்க்க வைக்கிறது. - அம்புட்டு அழகு அம்புஜாஸ்ரீ (எ) நடிகை நிஷாவாக த்ரிஷா. ரொம்ப நல்லவங்க. தமிழில் கவிதைகள் எழுதும் தமிழ் நடிகை என்று சொல்லி நம்மை ஏமாற்ற முயல்கிறார். மேலும் சினிமா நடிகைகள் எல்லாம் இவ்வளவு நல்லவங்களா என்று யோசிக்க வைக்கும் ஒரு பாத்திர படைப்பு. - தொழிலதிபர் மதனகோபாலாக மாதவன். ஹீரோ போல அறிமுகமாகி, பின்னர் அமெரிக்க மாப்பிள்ளை போல தடம் மாறி, வில்லனாக உருவெடுத்து இறுதியில் ஒரு இரண்டாம் நாயகனாக முடிக்கிறார். பாதி படத்தில் சரக்கும் சரக்கு நிமித்தமுமாகவே வளம் வருகிறார். போதையில் இருப்பவர்களின் பேச்சுமுறை மற்றும் பாடி லாங்குவேஜ் காட்டுவதில் கலக்கியிருக்கிறார். மற்றும் பலர் - சங்கீதா. கமலுக்கு அடுத்து படத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவர் என்று குறிப்பிடலாம். ஆரம்பத்தில் லோலாயி போல அறிமுகமாகி போகப்போக நடிப்பில் பட்டையை கிளப்பியிருக்கிறார். - இந்த வரிகளை எழுதுவதற்கே வேதனையாக இருக்கிறது. ஊர்வசி – ரமேஷ் அரவிந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் அப்படியே என் அம்மா அப்பாவை நினைவுப்படுத்தி பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை கண்கலங்க வைத்தது. அதிலும் ஹீமொதேரபி, ரேடியேஷன் போன்ற வார்த்தைகள் என்னை பாடாய்ப்படுத்தியது. - அடப்பாவிகளா ஒரு அழகு ஓவியத்தையே வீணடித்திருக்கிறார்கள். நம்ம களவாணிப்பொண்ணு ஓவியா இரண்டே இரண்டு காட்சிகளில் தலை காட்டி இருக்கிறார். இந்த மாதிரி எல்லாம் வந்துபோனா தமிழ் சினிமாவில் துண்டு போட முடியாது அம்மணி. - குருப் என்ற கதாப்பாத்திரம் ஒன்று வருகிறது. கொச்சின் ஹனீபா இருந்திருந்தால் இந்த கேரக்டரை அல்வா மாதிரி தூக்கி சாப்பிட்டிருப்பார். இப்போது நடித்திருக்கும் குஞ்சன் என்ற நடிகரின் நடிப்பும் ஹனீபாவையே நினைவூட்டுகிறது. - பிரெஞ்சு நடிகை கரோலின் கமலின் மனைவியாக ஒரே ஒரு பாடல் காட்சியில் மட்டும் தோன்றுகிறார். வித்தியாசமான ஒரு பாத்திரத்தில் பாடகி உஷா உதுப். - சூர்யா ஒரே ஒரு பாடலில் நடிகர் சூர்யாவாகவே வருகிறார். இயக்குனரும் இசையமைப்பாளரும் ஆளுக்கொரு காட்சியில் தலை காட்டுகிறார்கள். பிண்ணனி தொழில்நுட்பங்கள் - இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் தெரியவே இல்லை சில காட்சிகளை தவிர்த்து. பல காட்சிகள் கமல் படம் என்று சொல்லும் அளவிலேயே இருக்கிறது. - தேவிஸ்ரீ பிரசாத் இசையில் நீலவானம் பாடல் இனிமை. தகிடுதத்தோம் பாடல் முன்னர் குறிப்பிட்டது போல நம்மையும் தகிடுதத்தோம் போட வைக்கிறது. - வசனங்கள் கலக்கல். அதிலும் இரண்டாம் பாதியில் வரும் வசனங்களை எல்லாம் பலமுறை திரும்ப திரும்ப கேட்டு ரசிக்க வேண்டுமென தோன்றுகிறது. - பாரிஸ், பார்சிலோனா, ரோம், வெனிஸ் என்று ஐரோப்ப நாடுகளை சுற்றிக்காட்டியிருக்கிறது மனுஷ் நந்தனின் கேமரா. கப்பல் காட்சிகளும், நீல வானம் பாடலமைப்பும் சபாஷ். படம் சொல்லும் கருத்துக்கள்: கொஞ்சம் சீரியஸ்: - வீரத்தின் மறுபக்கம் மன்னிப்பது. வீரத்தின் உச்சக்கட்டம் மன்னிப்பு கேட்பது. கொஞ்சம் சிரிப்பு: - சிட்டி பொண்ணுங்களை சைட் அடிங்க. வில்லேஜ் பொண்ணுங்களை மேரேஜ் பண்ணுங்க. பஞ்ச் டயலாக்: - பொய் எப்பவும் தனியா வராது. கூட்டமா தான் வரும். ரசிகனின் தீர்ப்பு: கமலின் முழுநீள நகைச்சுவைப்படங்கள் பம்மல் கே.சம்பந்தம், பஞ்சதந்திரம் போன்ற படங்களுடன் ஒப்பிடும்போது மன்மதன் அம்பு கொஞ்சம் தள்ளியே நிற்கிறது. மாறாக மும்பை எக்ஸ்பிரஸ் படத்தோடு ஒப்பிட்டால் தேவலை. முதல்பாதி நிறைய செண்டிமெண்டாக நகர்கிறது. இரண்டாம் பாதியில் நகைச்சுவை கொட்டிக்கிடக்கிறது. கமல் ரசிகன் என்ற முறையில் பார்த்தால் ரசிக்கலாம். மற்றபடி சந்தேகம்தான். மன்மதன் அம்பு – குறி தவறிவிட்டது என்றும் அன்புடன், N.R.PRABHAKARAN Post Comment உதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 07:30:00 வயாகரா... ச்சே... வகையறா: சினிமா விமர்சனம் Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest 68 comments: சி.பி.செந்தில்குமார் said... முத வெட்டு 26 December 2010 at 08:01 சி.பி.செந்தில்குமார் said... சிறுத்தை படு டப்பா ஆகப்போகுது 26 December 2010 at 08:01 சி.பி.செந்தில்குமார் said... >>>பாசிடிவ் விமர்சனம் எழுதுவதா...? நெகடிவ் விமர்சனம் எழுதுவதா....? என்று சத்தியமாக தெரியவில்லை. எனவே என் எண்ணத்தை அப்படியே பதிவு செய்கிறேன். பொதுவாக எல்லாருக்கும் ஏற்படும் குழப்பம்தான் 26 December 2010 at 08:02 !♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said... நல்லாயிருக்கு.. 26 December 2010 at 08:03 சி.பி.செந்தில்குமார் said... படம் பற்றிய விமர்சனம் குறைவு.அதற்கு ஈடு கட்ட சிறுத்தை இன்ன பிற அம்சங்களை சேர்த்து சமாளித்தது சிறப்பு 26 December 2010 at 08:04 !♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said... பொய் எப்பவும் தனியா வராது. கூட்டமா தான் வரும்.:) படம் பார்க்கணும் 26 December 2010 at 08:04 திவ்யா மாரிசெல்வராஜ் said... சபாஷ் சரியான விமர்சனம். 26 December 2010 at 08:06 Unknown said... நாங்கல்லாம் கதைக்குதான் ரசிகர்கள். அப்போ படம் பார்க்கலாமா? வேணாமா? என நாங்கள் படத்தப் பார்த்துதான் தெரிஞ்சிகனுமா? //மன்மதன் அம்பு – குறி தவறிவிட்டது// தவறிய குறி ரசிகன் மேல படுதா? என்று சொல்லவேயில்லையே! 26 December 2010 at 08:12 Unknown said... நடு நிலையான நல்ல விமர்சனம் நண்பா! 26 December 2010 at 08:16 தமிழ்வாசி பிரகாஷ் said... ரெம்ப கஷ்டப்பட்டு படம் பார்திருபிங்க..போல... 26 December 2010 at 08:31 எல் கே said... ஹ்ம்ம் நல்ல விமர்சனம். எப்படியும் படம் பாக்க போறது இல்லை 26 December 2010 at 08:37 Prem S said... Arumaiyana vimarsanam" nadikar suryavai 'nadikai' suryavaka ahkiathai kavanika" 26 December 2010 at 09:05 பெசொவி said... ஒரு கமல் ரசிகனாக இருந்தும், படத்தின் நிறைகுறைகளை விவரித்தது சூப்பர்! 26 December 2010 at 09:09 pichaikaaran said... குப்பை படம் என நான் சொன்னபோது , என் நடுநிலையை சந்தேகப்பட்ட பிரபா...இப்ப நீயும் அதைதான் சொல்கிறாய் 26 December 2010 at 09:27 எப்பூடி.. said... மன்மதன் அம்பு - நோ கொமன்ஸ், சிறுத்தை - கார்த்திக்கு விழும் முதல் அடியாக இருக்குமென்று நம்பலாம். 26 December 2010 at 09:42 பன்னிக்குட்டி ராம்சாமி said... இந்த மாதிரி பண்றதுக்கு இப்போ நிறையப் பேர் இருக்காங்க, கமல் என்னைக்குத் தன் பொறுப்பையும் உணர்ந்து படம் பண்ணுவாரோ? ஆஸ்காருலாம் வெறும் பேச்சுத்தான் போல! 26 December 2010 at 10:01 'பரிவை' சே.குமார் said... படத்தின் நிறைகுறைகளை விவரித்தது சூப்பர்! 26 December 2010 at 10:21 Unknown said... என்னது பஞ்ச தந்திரம் முழு நீல நகைச்சுவை படமா .சரியான கடி ஜோக் படம் . அதுக்கு மும்பை எக்ஸ்பிரஸ் நல்ல காமெடியாக இருக்கும் . 26 December 2010 at 10:26 எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said... கடேசி பத்தி மட்டும் படிச்சேன்.. :) படம் இன்னும் பாக்கல.. அனேகமா பிடிக்காது தான் போல :) 26 December 2010 at 10:26 Unknown said... ///கமல் ரசிகன் என்ற முறையில் பார்த்தால் ரசிக்கலாம். மற்றபடி சந்தேகம்தான்./// என் நண்பர் ஒருவர் கமலின் தீவிர ரசிகர் .அவர் இந்த படத்தை பார்த்து விட்டு கமல் இந்த படத்தை எடுக்காமலே இருந்திருக்கலாம் என்றார் 26 December 2010 at 10:29 Unknown said... நல்ல விமர்சன் பிரபாகரன்.. நடுவுல போனஸா.. சிறுத்தை ட்ரைலர் வேற ஓட்டறீங்க.. சூப்பர்.. 26 December 2010 at 10:39 Anonymous said... :) 26 December 2010 at 11:02 செங்கோவி said... நல்ல விமர்சனம் ப்ரபா..வீரத்தின் உச்சகட்டம் அஹிம்சை..மன்னிப்பது அல்ல. 26 December 2010 at 11:22 FARHAN said... விமர்சனம் சூப்பர் என்னை பொறுத்தவரை படம் சூப்பர் கட்டரில் டோஹா நகரில் சில தமிழ் படங்களே வெளியாகும் மன்மதன் அம்பு சிரிப்பு வெடிகளுடனும் மக்களின் ஆரவாரதோடும் நன்றாக இங்கே போகிறது 26 December 2010 at 11:29 தினேஷ்குமார் said... நல்ல விமர்சனம் 26 December 2010 at 11:34 பாலா said... உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு. கமல் ரசிகர்கள் மட்டுமே இந்த படத்தை ரசிக்க முடியும். என்னை பொறுத்தவரை கடைசி இருபது நிமிடங்களை இன்னும் சுவாரசியமாக அமைத்திருக்கலாம். நன்றி 26 December 2010 at 12:46 ! சிவகுமார் ! said... >>> I am going for it tomorrow...i am a fan of kamal but will post a neutral review. because for me...good cinema is bigger than kamal. his films always get mixed reviews....(a bit lazy, thats why typed in english..excuse) 26 December 2010 at 13:04 ! சிவகுமார் ! said... //குப்பை படம் என நான் சொன்னபோது , என் நடுநிலையை சந்தேகப்பட்ட பிரபா...இப்ப நீயும் அதைதான் சொல்கிறாய்// Ha ha... 26 December 2010 at 13:06 karthikkumar said... படம் பாக்கலாமா... எதுக்கும் பார்ப்போம்... 26 December 2010 at 14:03 சர்பத் said... விஜய் படம் ஓடலை, அஜித் படம் ஓடலை இப்போ கமல் படமும் ஓடலை. இன்னமும் கதைக்காகவோ / திரைகதைக்ககவோ தான் படங்கள் ஓடுகின்றன, நடிக்கும் நாயகர்களை மட்டுமே நம்பி அல்ல. நல்ல படம் எடுங்கப்பா நாங்களும் தியேட்டர்க்கு வர்றோம். 26 December 2010 at 14:24 Geetha6 said... விமர்சனம் super! 26 December 2010 at 14:59 Ram said... ஆஹா.!! மும்பை எக்ஸ்ப்ரஸ் எனக்கு பிடித்த படம்... இதை படிக்கும் போது பலருக்கு ஆச்சர்யம் இருக்கும்.. அதுல எல்லாமே டைமிங் காமெடி பாஸ்.. உணர்ந்து பாத்தா பிடித்திருக்கும்.. அதுபோல தான் இப்ப பிரபா.. ஒரு கமல் ரசிகரா இருந்தாலும் பார்வையாளனின் தொகுக்கபட்ட விமர்சனத்தை படிச்சிட்டு போயி அவரும் நாசமா போயிட்டார்.. எனக்கு படம் ரொம்ப புடிச்சிருந்தது.. தப்பிய அம்பு புரிந்துகொள்பவர் கைகளில் விழுந்துள்ளது.. 26 December 2010 at 19:19 சண்முககுமார் said... விமர்சனம் super! படம் பாக்கலாமா.. இதையும் படிச்சி பாருங்க இந்தியா பைத்தியகார நாடு...? 26 December 2010 at 19:56 goma said... அடடா அப்படிப் போச்சா அம்பு.... 26 December 2010 at 20:22 Philosophy Prabhakaran said... @ சி.பி.செந்தில்குமார், பிரஷா, தமிழ் மதி, யோவ், தமிழ்வாசி - Prakash, எல் கே, சி.பிரேம் குமார், பெயர் சொல்ல விருப்பமில்லை, பார்வையாளன், எப்பூடி.., பன்னிக்குட்டி ராம்சாமி, சே.குமார், நா.மணிவண்ணன், எல் போர்ட்.. பீ சீரியஸ்.., பதிவுலகில் பாபு, கல்பனா, செங்கோவி, FARHAN, dineshkumar, பாலா, சிவகுமார், karthikkumar, சர்பத், Geetha6, தம்பி கூர்மதியன், உண்மை தமிழன், goma வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவை சிறப்பியுங்கள்... 27 December 2010 at 02:52 Philosophy Prabhakaran said... @ சி.பி.செந்தில்குமார் // படம் பற்றிய விமர்சனம் குறைவு.அதற்கு ஈடு கட்ட சிறுத்தை இன்ன பிற அம்சங்களை சேர்த்து சமாளித்தது சிறப்பு // அப்படியெல்லாம் இல்லை நண்பரே... சொல்லப்போனால் படத்தைப் பற்றி இன்னும் இரண்டு பத்திகள் எழுதுவதாக இருந்தது.... எனினும் பதிவு நீளமா இருந்தா நிறைய பேர் படிக்கிறதில்லை.... அதனால்தான் நானே நீளத்தை குறைத்துவிட்டேன்... 27 December 2010 at 02:52 Philosophy Prabhakaran said... @ யோவ் // நாங்கல்லாம் கதைக்குதான் ரசிகர்கள். அப்போ படம் பார்க்கலாமா? வேணாமா? என நாங்கள் படத்தப் பார்த்துதான் தெரிஞ்சிகனுமா? // அப்படின்னா தாராளமா பாருங்க... 27 December 2010 at 02:52 Philosophy Prabhakaran said... @ சி.பிரேம் குமார் // Arumaiyana vimarsanam" nadikar suryavai 'nadikai' suryavaka ahkiathai kavanika" // சுட்டிக்காட்டியதற்கு நன்றி... மாற்றிவிடுகிறேன்... 27 December 2010 at 02:52 Philosophy Prabhakaran said... @ பார்வையாளன் // குப்பை படம் என நான் சொன்னபோது , என் நடுநிலையை சந்தேகப்பட்ட பிரபா...இப்ப நீயும் அதைதான் சொல்கிறாய் // இப்பொழுதும் அதையேதான் சொல்கிறேன்... குப்பைப்படம் என்று சொல்லும் அளவிற்கு படம் மோசமாக இல்லை... மேலும் நீங்கள் கமலையும் ரஜினியையும் ஒப்பிட்டு எழுதியிருந்த விதம் எனக்கு பிடிக்கவில்லை... 27 December 2010 at 02:52 Philosophy Prabhakaran said... @ எப்பூடி.. // மன்மதன் அம்பு - நோ கொமன்ஸ், சிறுத்தை - கார்த்திக்கு விழும் முதல் அடியாக இருக்குமென்று நம்பலாம். // சொல்ல முடியாது.... எங்க தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு அந்த மாதிரி ரத்தத்தை சூடேற்றும் படம்ன்னா ரொம்ப பிடிக்கும்... உணர்ச்சிவசப்பட்டு ஓட வச்சிருவாங்க... (உதாரணம்: சிங்கம்) 27 December 2010 at 02:52 Philosophy Prabhakaran said... @ பன்னிக்குட்டி ராம்சாமி // இந்த மாதிரி பண்றதுக்கு இப்போ நிறையப் பேர் இருக்காங்க, கமல் என்னைக்குத் தன் பொறுப்பையும் உணர்ந்து படம் பண்ணுவாரோ? ஆஸ்காருலாம் வெறும் பேச்சுத்தான் போல! // என்னது ஆஸ்கரா...? காப்பி அடிக்கிறதுக்கு யாராவது ஆஸ்கர் தர்றாங்களா என்ன...? 27 December 2010 at 02:52 Philosophy Prabhakaran said... @ நா.மணிவண்ணன் // என்னது பஞ்ச தந்திரம் முழு நீல நகைச்சுவை படமா .சரியான கடி ஜோக் படம் . அதுக்கு மும்பை எக்ஸ்பிரஸ் நல்ல காமெடியாக இருக்கும் . // அப்படித்தான் சிலர் சொல்கிறார்கள் ஆனால் எனக்கு மும்பை எக்ஸ்பிரசை காட்டிலும் பஞ்சதந்திரம் பிடித்திருந்தது... // என் நண்பர் ஒருவர் கமலின் தீவிர ரசிகர் .அவர் இந்த படத்தை பார்த்து விட்டு கமல் இந்த படத்தை எடுக்காமலே இருந்திருக்கலாம் என்றார் // அவர் நிறைய எதிர்பார்ப்புகளோடு திரையரங்கம் சென்றிருப்பார் என்பது எனது கருத்து.... 27 December 2010 at 02:53 Philosophy Prabhakaran said... @ எல் போர்ட்.. பீ சீரியஸ்.. // கடேசி பத்தி மட்டும் படிச்சேன்.. :) படம் இன்னும் பாக்கல.. அனேகமா பிடிக்காது தான் போல :) // ஏன் இப்படி...? முழுசா படிக்கக்கூடாதுன்னு எதுவும் வேண்டுதலா...? 27 December 2010 at 02:53 Philosophy Prabhakaran said... @ பதிவுலகில் பாபு // நல்ல விமர்சன் பிரபாகரன்.. நடுவுல போனஸா.. சிறுத்தை ட்ரைலர் வேற ஓட்டறீங்க.. சூப்பர்.. // நான் ஓட்டலைங்க தியேட்டர்காரன் தான் ஓட்டி என் வித்தை கலக்கிட்டான்... 27 December 2010 at 02:53 Philosophy Prabhakaran said... @ செங்கோவி // நல்ல விமர்சனம் ப்ரபா..வீரத்தின் உச்சகட்டம் அஹிம்சை..மன்னிப்பது அல்ல. // வீரத்தின் உச்சக்கட்டம் மன்னிப்பு கேட்பது என்று எழுதியிருந்தேன்... படத்தில் அப்படித்தான் வருகிறது... 27 December 2010 at 02:53 Philosophy Prabhakaran said... @ FARHAN // விமர்சனம் சூப்பர் என்னை பொறுத்தவரை படம் சூப்பர் கட்டரில் டோஹா நகரில் சில தமிழ் படங்களே வெளியாகும் மன்மதன் அம்பு சிரிப்பு வெடிகளுடனும் மக்களின் ஆரவாரதோடும் நன்றாக இங்கே போகிறது // அப்படியா... ஒருவருக்கொருவர் ரசனை மாறுபடுகிறது... எனக்கும் மகிழ்ச்சியே... 27 December 2010 at 02:53 Philosophy Prabhakaran said... @ பாலா // உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு. கமல் ரசிகர்கள் மட்டுமே இந்த படத்தை ரசிக்க முடியும். என்னை பொறுத்தவரை கடைசி இருபது நிமிடங்களை இன்னும் சுவாரசியமாக அமைத்திருக்கலாம். நன்றி // எனக்கென்னவோ முதல்பாதியே மெதுவாக நகர்வது போல இருந்தது... மேலும் கொஞ்சம் செண்டிமெண்டாக நகர்ந்தது எனக்கு பிடிக்கவில்லை... 27 December 2010 at 02:53 Philosophy Prabhakaran said... @ சிவகுமார் // I am going for it tomorrow...i am a fan of kamal but will post a neutral review. because for me...good cinema is bigger than kamal. his films always get mixed reviews....(a bit lazy, thats why typed in english..excuse) // உங்கள் நடுநிலையைப் பற்றி தெரியும் சிவா... மேலும் காப்பி அடித்த படங்களை பார்க்கமாட்டேன் என்ற கொள்கையை கடைப்பிடிப்பதாக இருந்தால் இந்தப் படத்தையும் நீங்கள் பார்க்கக்கூடாது...இருக்கட்டும் நீங்கள் ஜப்பானிய மொழியில் கருத்து சொன்னால்கூட நான் மொழிபெயர்த்துக்கொள்வேன்... 27 December 2010 at 02:54 Philosophy Prabhakaran said... @ சர்பத் // விஜய் படம் ஓடலை, அஜித் படம் ஓடலை இப்போ கமல் படமும் ஓடலை. இன்னமும் கதைக்காகவோ / திரைகதைக்ககவோ தான் படங்கள் ஓடுகின்றன, நடிக்கும் நாயகர்களை மட்டுமே நம்பி அல்ல. நல்ல படம் எடுங்கப்பா நாங்களும் தியேட்டர்க்கு வர்றோம். // ஆமாம்... ஹீரோவுக்காக படம் ஓடிய காலமெல்லாம் மாறிவிட்டது... தமிழ் சினிமாவிற்கு கூடிய விரைவில் விடிவுகாலம் பிறக்க இருக்கிறது... 27 December 2010 at 02:54 Philosophy Prabhakaran said... @ தம்பி கூர்மதியன் // ஆஹா.!! மும்பை எக்ஸ்ப்ரஸ் எனக்கு பிடித்த படம்... இதை படிக்கும் போது பலருக்கு ஆச்சர்யம் இருக்கும்.. அதுல எல்லாமே டைமிங் காமெடி பாஸ்.. // இருக்கலாம்... ஆனால் இந்தப் படத்தில் அதுபோல டைமிங் காமெடிகள் அதிகம் இல்லை... நான் மும்பை எக்ஸ்பிரஸ் படத்தைவிட better என்றுதான் கூறினேனே தவிர அதைவிட அதிக டைமிங் காமெடிகள் வருகின்றன என்று கூறவில்லை... // அதுபோல தான் இப்ப பிரபா.. ஒரு கமல் ரசிகரா இருந்தாலும் பார்வையாளனின் தொகுக்கபட்ட விமர்சனத்தை படிச்சிட்டு போயி அவரும் நாசமா போயிட்டார்.. // ஹி... ஹி... ஹி... நான் யாருடைய விமர்சனத்தையும் படித்து அந்த தாக்கத்தில் எழுதுவதில்லை... எனக்கு என்ன தோன்றுகிறதோ அதை மட்டுமே எழுதினேன்... எழுதுவேன்... 27 December 2010 at 02:54 Philosophy Prabhakaran said... @ உண்மை தமிழன் // இதையும் படிச்சி பாருங்க இந்தியா பைத்தியகார நாடு...? // யோவ் உஜிலாதேவி... பினாமி பேரில் வர ஆரம்பிச்சிட்டியா... அதுவும் உண்மை தமிழன் என்ற பெயரில்... படவா இனிமே உன்னை இந்தப்பக்கம் பாத்தா பிச்சிபுடுவேன்... ஓடிப்போயிடு... 27 December 2010 at 02:54 Unknown said... @ பன்னிக்குட்டி ராம்சாமி // இந்த மாதிரி பண்றதுக்கு இப்போ நிறையப் பேர் இருக்காங்க, கமல் என்னைக்குத் தன் பொறுப்பையும் உணர்ந்து படம் பண்ணுவாரோ? ஆஸ்காருலாம் வெறும் பேச்சுத்தான் போல! // என்னது ஆஸ்கரா...? காப்பி அடிக்கிறதுக்கு யாராவது ஆஸ்கர் தர்றாங்களா என்ன.. >>>>>>>>>>>>>>>> பகிர்வுக்கு நன்றி. சில இடங்களில் தங்களின் மனசாட்சி காரணமாக தடுமாறியுள்ளீர்கள் என்று நினைக்கிறேன். ஆஸ்க்கார் நாயகனுக்கே ஆஸ்கார் கொடுக்க மாட்டாங்களா!? why ம்மா why? சமீபத்திய ஓர் விழாவில் அவர் சொன்னது - அவருடைய படங்களின் நிறம் மாறி வருகிறது என்று!? - இதற்க்கு இதுதான் விளக்கமோ!? 27 December 2010 at 07:41 அஞ்சா சிங்கம் said... (மன்)னார் ...............(மதன்)கோபால்..........(அம்பு)ஜா.............. எப்போதும் அதிகமாக எதிர்பார்பதால் தான் உங்களால் ரசிக்க முடியவில்லை என்று நினைக்கிறன்... இது ஒரு நகைச்சுவை படம் அந்த வேலையை இந்த படம் சிறப்பாகவே செய்ததாக நினைக்கிறேன். flashback காட்சிகளின் பின்னோக்கி நகரும் படி காட்டி இருந்த புத்திசாலித்தனம். குறிப்பாக வசனங்கள் ஒழுக்கமா இருக்க நினைக்கிற பொண்ணுக்கு திமிர்தானே வேலி இல்லனா மேஞ்சிட்டு போடுவானுக. இப்படி படம் முழுவதும் வந்து போகும் கூர்மை.... இன்னொரு முறையை நிதானமாக படத்தை பாருங்கள் பிடிக்கும் என்று நினைக்கிறன்....... 27 December 2010 at 11:36 Philosophy Prabhakaran said... // ஆஸ்க்கார் நாயகனுக்கே ஆஸ்கார் கொடுக்க மாட்டாங்களா!? why ம்மா why? // நல்ல கேள்வி... அந்த வார்த்தைகளை நான் எழுதியதற்கு காரணம் என்னவென்றால்... ஒருவேளை மிஷ்கினின் நந்தலாலா படத்தையும் ஜப்பானிய படம் கிகுஜிரோ படத்தையும் ஒரே நேரத்துல ஆஸ்கர் கமிட்டிக்கு அனுப்புறாங்கன்னு வச்சிக்கோங்க... என்ன நடக்கும்... உலக அளவுல நம்ம மானம் போகும்... அதே மாதிரி தான் கமல் படங்களும்... இந்தப் படமும் உலகப்படத்தில் இருந்து சுட்ட கதையே... கமலுடாயா பெரும்பாலான படங்கள் அப்படித்தான்... அதனால் ஆஸ்கருக்கு எல்லாம் அனுப்பினால் அவமானம் நமக்குத்தான்... 28 December 2010 at 03:16 சசி ராஜா said... பார்க்க என் விமர்சனம்: http://alonealike.blogspot.com/2010/12/good-to-see.html என்னைப் பொறுத்தவரையில் படம் பார்க்கும்படியாய்த்தான் இருக்கின்றது..வசனம் சூப்பர்ப். 29 December 2010 at 16:08 Paul said... படத்தை மறுபடியும் திரும்ப பாருங்க தலைவா.. வீரத்தின் உச்சக்கட்டம் அஹிம்சை.. மன்னிப்பு கேட்பது அல்ல. படத்திலயும் வசனம் "வீரத்தின் உச்சக்கட்டம் அஹிம்சை" என்று தான் வரும்.. மிகவும் கவனித்து அந்த வசனம் பிடித்ததால் என் மனதில் நன்றாகவே நிற்கிறது.. நிச்சயமாக அஹிம்சை என்று தான் வசனம் படத்தில் வரும் :) 29 December 2010 at 20:32 Jayadev Das said... // பாரிஸ், பார்சிலோனா, ரோம், வெனிஸ் என்று ஐரோப்ப நாடுகளை சுற்றிக்காட்டியிருக்கிறது மனுஷ் நந்தனின் கேமரா. // இதுக்காகவாச்சும் ஒரே ஒரு தடவை இந்தப் படத்தை பாத்துத் தொலைக்கலாம்னு இருக்கேன். But உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு பிரபாகரன் சார். 29 December 2010 at 21:19 Philosophy Prabhakaran said... @ மனக்குதிரை // பார்க்க என் விமர்சனம்: http://alonealike.blogspot.com/2010/12/good-to-see.html என்னைப் பொறுத்தவரையில் படம் பார்க்கும்படியாய்த்தான் இருக்கின்றது..வசனம் சூப்பர்ப். // பார்த்தேன்... உங்களோட மனக்குதிரை நல்லா இருக்கு... ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ரசனை... 30 December 2010 at 07:14 Philosophy Prabhakaran said... @ பால் [paul] // படத்தை மறுபடியும் திரும்ப பாருங்க தலைவா.. வீரத்தின் உச்சக்கட்டம் அஹிம்சை.. மன்னிப்பு கேட்பது அல்ல. படத்திலயும் வசனம் "வீரத்தின் உச்சக்கட்டம் அஹிம்சை" என்று தான் வரும்.. // சரி நண்பரே... கட்டாயம் மறுபடியும் பார்க்கிறேன் :) ஆனால் டி.வி.டியில் தான் :) 30 December 2010 at 07:15 Philosophy Prabhakaran said... @ Jayadev Das // இதுக்காகவாச்சும் ஒரே ஒரு தடவை இந்தப் படத்தை பாத்துத் தொலைக்கலாம்னு இருக்கேன். But உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு பிரபாகரன் சார். // நன்றி நண்பரே... நீங்க ஏன் மருத்துவப்பதிவுகளோடு சமூகப் பதிவுகளையும் எழுதக் கூடாது... உங்ககிட்ட நல்ல சிந்தனைகள் இருக்கு... 30 December 2010 at 07:17 Jayadev Das said... //நன்றி நண்பரே... நீங்க ஏன் மருத்துவப்பதிவுகளோடு சமூகப் பதிவுகளையும் எழுதக் கூடாது...// ஐயையோ..... மருத்துவத்தைப் பத்தியே ஒன்னும் தெரியாதே! நான் பதிவரே இல்லியே, இதுல சமூகப் பதிவுக்கு நான் எங்கே போவேன்? ஒரு வேலை என்னோட பேருல வேற பயலுக பதிவு போடுரானுங்களா........தெரியலையே! 30 December 2010 at 11:50 Jayadev Das said... //அதே மாதிரி தான் கமல் படங்களும்... இந்தப் படமும் உலகப்படத்தில் இருந்து சுட்ட கதையே... கமலுடாயா பெரும்பாலான படங்கள் அப்படித்தான்... அதனால் ஆஸ்கருக்கு எல்லாம் அனுப்பினால் அவமானம் நமக்குத்தான்...// கமலஹாசனோட ரசிகராக இருந்த போதிலும் இந்த மாதிரி உண்மையை ஒப்புக் கொள்வதற்கே ஒரு பெரிய மனசு வேணும். சில நடிகர்களின் ரசிகர்கள் அப்படியில்லை, அந்த நடிகன் மேல் உள்ள கண்மூடித்தனமான பிரியத்தால் [வெறியால் என்று கூட சொல்லலாம்] இந்த மாதிரி உண்மையை வெளிப்படையாக ஒப்புக் கொள்ள அவர்களது மனம் மறுக்கிறது. "எங்க தலைவரு ஒரு படத்த நல்லா இருக்குதுன்னு சொன்னாலே போதுமய்யா, படம் பிச்சிகிட்டு ஓடும்" ன்னு சொல்றாங்க, ஆனா, "உங்க தலைவரு படமே அப்பப்ப ஊத்திக்குதே அது ஏன்" ன்னு கேட்டா, "தயாரிப்பாளருக்கு வயித்து வலி, கேமரா மேனுக்கு வீட்டுல சண்டை, லைட் பாய் கக்கா போகவில்லை " ன்னு இல்லாத புருடா விடுறாங்க. அதனால உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு பிரபாகரன்!! அது சரி இந்த ஆஸ்கார் பத்தி எனக்கு ஒரு சந்தேகம், நீங்கதான் தீத்து வைக்கணும். ஆஸ்கார் எல்லா மொழிப் படங்களுக்கும் கொடுக்கப் படுவதா? ஆங்கிலப் படங்களுக்கு மட்டும்தானே தருவாங்க? தமிழ்ப் படத்துக்கு எங்கே கிடைக்கும்? அந்நிய மொழிப் படப் பிரிவு ஒன்னு இருக்குது, அதுல ஒரே ஒரு விருது மொத்தமா வரும், இசை, கதை, நடிப்பு, டைரக்ஷன்... என்று எல்லா பிரிவுகளிலும் வாங்கணும்னா அது ஆங்கிலப் படங்களுக்கு மட்டும்தானே வரும்? குழந்தைகளுக்கு பொம்மை கார், ஹெலிகாப்டர் வாங்கித் தந்து சமாதானம் செய்யுற மாதிரி நமக்கும் நடிப்புக்கு ஆஸ்கார் வாங்க முடியாவிட்டாலும் ஆஸ்கார் நாயகன்னு சொல்லி சமாதானப் படுத்துகிறார்களா? 30 December 2010 at 12:06 Philosophy Prabhakaran said... @ Jayadev Das // ஐயையோ..... மருத்துவத்தைப் பத்தியே ஒன்னும் தெரியாதே! நான் பதிவரே இல்லியே, இதுல சமூகப் பதிவுக்கு நான் எங்கே போவேன்? ஒரு வேலை என்னோட பேருல வேற பயலுக பதிவு போடுரானுங்களா........தெரியலையே! // ஆஹா மன்னிக்கணும்... தப்பு நடந்துபோச்சு... நீங்கள் பின்தொடர்ந்து வரும் "ஹாய் நலமா" என்னும் வலைப்பூவினை உங்களுடையது என்று தவறாக புரிந்துக்கொண்டேன்... சரி இருக்கட்டும், அப்படிஎன்றால் நீங்கள் நிச்சயம் எனது வேண்டுகோளை ஏற்று வலைப்பூ ஒன்றினை ஆரம்பிக்க வேண்டும்... 31 December 2010 at 04:05 Philosophy Prabhakaran said... @ Jayadev Das // ஆஸ்கார் எல்லா மொழிப் படங்களுக்கும் கொடுக்கப் படுவதா? ஆங்கிலப் படங்களுக்கு மட்டும்தானே தருவாங்க?// Oscar அல்லது Academy Awards என்று சொல்லப்படுவது அமெரிக்க படங்களுக்காக அமெரிக்கர்கள் கொடுத்துக்கொள்வது... // தமிழ்ப் படத்துக்கு எங்கே கிடைக்கும்? அந்நிய மொழிப் படப் பிரிவு ஒன்னு இருக்குது, அதுல ஒரே ஒரு விருது மொத்தமா வரும், இசை, கதை, நடிப்பு, டைரக்ஷன்... என்று எல்லா பிரிவுகளிலும் வாங்கணும்னா அது ஆங்கிலப் படங்களுக்கு மட்டும்தானே வரும்? // ஆமாம் நீங்கள் சொல்வது முற்றிலும் சரிதான்... அந்நிய நாட்டு படங்கள் என்று ஒரு பிரிவு இருக்கும் அதற்குத்தான் பல நாட்டு படங்களும் போட்டியிட்டுக் கொள்கின்றன... // குழந்தைகளுக்கு பொம்மை கார், ஹெலிகாப்டர் வாங்கித் தந்து சமாதானம் செய்யுற மாதிரி நமக்கும் நடிப்புக்கு ஆஸ்கார் வாங்க முடியாவிட்டாலும் ஆஸ்கார் நாயகன்னு சொல்லி சமாதானப் படுத்துகிறார்களா? // இந்த மாதிரி பட்டப்பெயர் எல்லாம் யார் வைக்கிறதுன்னு பார்த்தா, நம்மளை மாதிரி பதிவர்கள் யாராவது ஆர்வக்கோளாரில் வைத்திருக்கலாம்... அல்லது அரசியல் தலைவர்கள் / தலைவிகளுக்காக அமைக்கப்படும் பேனர்களில் வருங்கால தமிழகமே, முத்தமிழே, மூத்திர தமிழே ன்னு அடிக்கிற மாதிரி எவனாவது அடிச்சு விட்டிருப்பான்.. அதுதான் இப்போ பரவி கிடக்குது... ஆஸ்கர் விருது நமக்கு கிடைத்தால் பெருமைதான்... ஆனால் அதனினும் பெருமை என்னவென்றால் வருங்காலத்தில் அமேரிக்கா உட்பட பிற நாடுகளில் உள்ள சினிமாக் கலைஞர்கள் நம்ம ஊர் filmfare விருதை வாங்குவதற்காக போட்டி போட வேண்டும்... 31 December 2010 at 04:14 Jayadev Das said... //வருங்காலத்தில் அமேரிக்கா உட்பட பிற நாடுகளில் உள்ள சினிமாக் கலைஞர்கள் நம்ம ஊர் filmfare விருதை வாங்குவதற்காக போட்டி போட வேண்டும்...// நீங்க சொல்வது கிரிக்கெட்டில் இப்போது நடந்து கொண்டிருக்கிறது, அவனவனும் தங்கள் நாட்டு அணியில் இருந்து சீக்கிரமே விருப்ப ஓய்வு வாங்கிக் கொண்டு இங்கு வந்து IPL கண்ட்ராவியில ஆடுறானுங்க. வாழ் நாள் முழுவதும் அவனுங்க நாட்டுக்கு ஆடி சம்பாதித்ததை விட அதிகம் ஒரே ஆண்டில் இங்கே பார்த்து விடலாம்!.... நம்ம சனத்துக்கு எவன் ஆடுனா என்ன, பேரு மட்டும் சென்னை பெங்களூருன்னு இருக்குதே அதுக்கே உயிரை விடுறாங்க, இளிச்சா வா பயலுக. ஹா...ஹா...ஹா...ஹா... [எனக்கும் கூடத் தான் தமிழகம் தொழில் நுட்பத்தில் ஜப்பான் மாதிரியும் தூய்மையில் அமேரிக்கா மாதிரியும் பாதுகாப்பில் சிங்கப்பூர் மாதிரியும் ஆகணும்னு ஆசை இருக்கு!!!! காசா பணமா ஆசைப் பட்டு வைப்போமே, இப்போ யாருக்கு என்ன நட்டம்!!] 31 December 2010 at 13:53 Jayadev Das said... பிரபாகரன் சார், உங்க பதிவுக்கு பின்னூட்டம் போடணும்ன்னா பத்து ஆறேழு தடவையாவது Post Comment பட்டனை அழுத்த வேண்டியிருக்குதே! ஏன்? சரி செய்யுங்களேன்! 31 December 2010 at 13:55 Philosophy Prabhakaran said... @ Jayadev Das // நீங்க சொல்வது கிரிக்கெட்டில் இப்போது நடந்து கொண்டிருக்கிறது, அவனவனும் தங்கள் நாட்டு அணியில் இருந்து சீக்கிரமே விருப்ப ஓய்வு வாங்கிக் கொண்டு இங்கு வந்து IPL கண்ட்ராவியில ஆடுறானுங்க. வாழ் நாள் முழுவதும் அவனுங்க நாட்டுக்கு ஆடி சம்பாதித்ததை விட அதிகம் ஒரே ஆண்டில் இங்கே பார்த்து விடலாம்!.... நம்ம சனத்துக்கு எவன் ஆடுனா என்ன, பேரு மட்டும் சென்னை பெங்களூருன்னு இருக்குதே அதுக்கே உயிரை விடுறாங்க, இளிச்சா வா பயலுக. ஹா...ஹா...ஹா...ஹா... // கிரிக்கெட்டை பற்றி சொல்லும்போது... நானும் கொஞ்சம் கிரிக்கெட் பார்ப்பேன்... ஆனால் நீங்கள் சொல்வதுபோல இளிச்ச வாய்ப்பயலா இருக்க மாட்டேன்... டிவியில் பார்த்து ரசிப்பதோடு சரி... என்னைப் பொறுத்தவரையில் அது ஜஸ்ட் ஒரு எண்டர்டெயின்மென்ட்... // பிரபாகரன் சார், உங்க பதிவுக்கு பின்னூட்டம் போடணும்ன்னா பத்து ஆறேழு தடவையாவது Post Comment பட்டனை அழுத்த வேண்டியிருக்குதே! ஏன்? சரி செய்யுங்களேன்! // அப்படியா... கவலை வேண்டாம்... இன்னும் சில நிமிடங்களில் டெம்ப்ளேட் மாற்ற இருக்கிறேன்... அதன்பிறகு இந்த சிக்கல் இருக்காது...
ரூ.2.31 கோடி ஒதுக்கீடா?.. சென்னை மாநகராட்சியின் ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களை நிர்வகிக்க டெண்டர் ரத்து The Main News Home அரசியல் இந்தியா உலகம் சினிமா தமிழ்நாடு தேர்தல் களம் 2020 விளையாட்டு அரசியல் இந்தியா முக்கிய செய்திகள் மோடியும், அமித்ஷாவும் கனவுலகில் வாழ்கிறார்கள்-ராகுல் சாடல் December 5, 2019 cheran 0 Comments #Congress #BJP #RahulGandhi #NarendraModi #Amitsha #GDP #EconomicalStatus வயநாடு, டிசம்பர்-05 நாடு நெருக்கடியில் இருந்து வரும் நிலையில், மோடியும், அமித்ஷாவும் கற்பனை உலகில் வாழ்ந்து வருவதாகவும், தன் மீது பா.ஜ.க. போடும் ஒவ்வொரு வழக்கையும் பதக்கமாக நினைத்து ஏற்பதாகவும் ராகுல் காந்தி கூறியுள்ளார். தனது தொகுதியான கேரள மாநிலம் வயநாட்டிற்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல், பொதுக் கூட்டம் ஒன்றில் பேசினார். அப்போது அவர், அமித்ஷாவும், மோடியும் அவர்கள் உருவாக்கிய கனவுலகில் வாழ்கின்றனர். அவர்கள் வெளி உலகுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. அதனால் தான் நாடு நிதி நெருக்கடியில் இருப்பதை இல்லை என அவர்கள் மறுக்கிறார்கள். நாட்டு மக்களின் குரலை மோடி கேட்டால், இங்கு எந்த பிரச்னையும் இல்லை. மக்களின் கவனத்தை யதார்த்த உலகில் இருந்து திசை திருப்புவதே மோடி ஸ்டைல் ஆட்சி. அவர் கனவுலகில் வாழ்வதால், இந்தியாவும் கனவுலகில் வாழ வேண்டும் என அவர் விரும்புகிறார். இப்போது அது தவிடுபொடியாகி, அவரே சிக்கலில் உள்ளார் என்றார். தொடர்ந்து தன் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் பற்றி பேசிய ராகுல், என் மீது 15 முதல் 16 வழக்குகள் போடப்பட்டுள்ளன. ராணுவ வீரர்களை பார்த்தால் தெரியும், அவர்கள் மார்பில் நிறைய பதக்கங்களை பொறுத்தி இருப்பார்கள். அது போன்று என் மீது போடப்படும் ஒவ்வொரு வழக்கையும் பதக்கமாக நினைத்து ஏற்பேன். இன்னும் எத்தனை வழக்குகள் போட்டாலும் அதையும் மகிழ்ச்சியுடன் ஏற்பேன், அவற்றை கொள்கைகளின் அடிப்படையில் எதிர் கொள்வேன் என்றார். ← பா.ஜ.க. ஆட்சியில் நாட்டை கடவுள் தான் காப்பாற்றவேண்டும்-சிதம்பரம் உள்ளாட்சித் தேர்தல் வழக்கு: 9 மாவட்டங்களை தவிர்த்து தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி → Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked * Comment Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Recent Posts உள்ளாட்சித் தேர்தலில் அமமுக வெற்றியை தடுக்க முடியாது.. அடங்காத தினகரன் மேகதாது அணை பிரச்னை.. அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் அழைப்பு அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே கிடையாது.. எடப்பாடிக்கு செக் வைத்த சசிகலா தெலுங்கானாவில் இலவச ‘சரக்கு’ வழங்க அனுமதி: குடிமகன்கள் ஹேப்பி..! ரூ.2.31 கோடி ஒதுக்கீடா?.. சென்னை மாநகராட்சியின் ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களை நிர்வகிக்க டெண்டர் ரத்து
ரூ.2.31 கோடி ஒதுக்கீடா?.. சென்னை மாநகராட்சியின் ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களை நிர்வகிக்க டெண்டர் ரத்து The Main News Home அரசியல் இந்தியா உலகம் சினிமா தமிழ்நாடு தேர்தல் களம் 2020 விளையாட்டு அரசியல் இந்தியா முக்கிய செய்திகள் ’ரேப் இன் இந்தியா’ விமர்சனத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது: ராகுல் திட்டவட்டம் December 13, 2019 cheran 0 Comments #RahulGandhi #Narendramodi #Congress #BJP #RapeinIndia டெல்லி, டிசம்பர்-13 ’ரேப் இன் இந்தியா’ விமர்சனத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன். டெல்லியை பலாத்காரத்தின் தலைநகரம் என்று மோடி பேசிய வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஜார்க்கண்ட் மாநில தேர்தல் பிரசாரத்தின்போது ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் நாட்டை உயர்த்தப் போவதாக மோடி தெரிவித்திருந்தார். ஆனால், இன்று நாடு முழுவதும் அதிகரித்து வரும் பாலியல் பலாத்காரத்தால் ‘ரேப் இன் இந்தியா’ என்று சொல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என ராகுல் நேற்று பேசியிருந்தார். இந்த கருத்துக்கு பா.ஜ.க.வினர் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இப்படிப்பட்ட உறுப்பினர் இந்த அவையில் அமருவதற்கே அருகதையற்றவர் என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். இந்தியப் பெண்களை எல்லாம் இழிவுப்படுத்தும் வகையில் இப்படிப்பட்ட மோசமான கருத்தை தெரிவித்த ராகுல் காந்தி இதற்காக மக்களவையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி உள்ளிட்ட பாஜக பெண் எம்.பி.க்கள் வலியுறுத்தினர். இன்று பிற்பகல் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி ’ரேப் இன் இந்தியா’ விமர்சனத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். முன்னர் டெல்லியை பலாத்காரத்தின் தலைநகரம் என்று மோடி பேசிய வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. அனைவரும் பார்த்து தெரிந்துக் கொள்ளும் வகையில் அதை எனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுவேன். வடகிழக்கு மாநிலங்களில் பற்றி எரியும் மக்களின் போராட்டத்தை திசை திருப்பும் முயற்சியாக எனது விமர்சனத்தை பாஜகவினர் பெரிதாக்கி வருகின்றனர் எனவும் ராகுல் குறிப்பிட்டார். ← நீட் தேர்வு: தமிழகத்துக்கு விலக்கு இல்லை- மத்திய அரசு திட்டவட்டம் ஜப்பான் பிரதமரின் இந்தியா பயணத்தில் மாற்றம்!!! → Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked * Comment Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Recent Posts உள்ளாட்சித் தேர்தலில் அமமுக வெற்றியை தடுக்க முடியாது.. அடங்காத தினகரன் மேகதாது அணை பிரச்னை.. அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் அழைப்பு அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே கிடையாது.. எடப்பாடிக்கு செக் வைத்த சசிகலா தெலுங்கானாவில் இலவச ‘சரக்கு’ வழங்க அனுமதி: குடிமகன்கள் ஹேப்பி..! ரூ.2.31 கோடி ஒதுக்கீடா?.. சென்னை மாநகராட்சியின் ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களை நிர்வகிக்க டெண்டர் ரத்து
'தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்தத் தகவல்களை தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். - ஆசிரியர் தேனீ வளர்ப்பு! ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் மைராடா வேளாண் அறிவியல் மையத்தில் டிசம்பர் 24-ம் தேதி ஆடு வளர்ப்பு; 29-ம் தேதி இயற்கை பண்ணையம்; 30-ம் தேதி தேனீ வளர்ப்பு; 31-ம் தேதி பயிர் ரகங்களின் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமைச் சட்டம் பற்றிய விழிப்பு உணர்வுப் பயிற்சி ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும். தொடர்புக்கு, தொலைபேசி: 04285-241626 நாட்டுக்கோழி! சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தில் டிசம்பர் 18-ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு; 19ம் தேதி சிறுதானியங்களில் மதிப்புக்கூட்டிய பண்டங்கள் தயாரித்தல்; 23-ம் தேதி மானாவாரி பருத்தியில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்படுத்தும் முறைகள் ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும். தொடர்புக்கு, தொலைபேசி: 04577-264288 மிளகாய்! தூத்துக்குடி மாவட்டம், வாகைகுளம், ஸ்காட் வேளாண் அறிவியல் மையத்தில் டிசம்பர் 12-ம் தேதி மிளகாய் சாகுபடியில் அதிக மகசூல் பெற மெத்திலோ பாக்டீரியத்தின் பங்கு; 16-ம் தேதி வெள்ளாடு வளர்ப்பு; 19-ம் தேதி தரம் உயர்த்தப்பட்ட புறக்கடைக் கோழி வளர்ப்பு; 20-ம் தேதி அதிக வருவாய் பெற விதை உற்பத்தித் தொழில்நுட்பங்கள் ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும். தொடர்புக்கு, தொலைபேசி: 04612-269306, செல்போன்: 9942978526 காளான்! சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்ப்பட்டி பஞ் சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி நிலையத்தில் டிசம்பர் 23-ம் தேதி நவீன முறையில் காளான் வளர்ப்பு; 26-ம் தேதி வணிக ரீதியில் காடை வளர்ப்பு; 29-ம் தேதி வியாபார ரீதியில் அப்பளம் தயாரிப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும். தொடர்புக்கு, செல்போன்: 9941647893, 9488575716 கருத்தரங்கு! காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அரியனூர் கிராமத்தில் உள்ள முன்னோடி இயற்கை விவசாயி அரியனூர் ஜெயச்சந்திரன் தோட்டத்தில் டிசம்பர் 20-ம் தேதி கரிம விவசாயக் கருத்தரங்கு நடைபெற உள்ளது. முன்னோடி விவசாயி சத்தியமங்கலம் சுந்தரராமன், மூத்த வேளாண் விஞ்ஞானி அரு.சோலையப்பன் உள்ளிட்டோர் கருத்துரை வழங்க இருக்கிறார்கள். ஏற்பாடு: கரிம விவசாயக் கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு தொடர்புக்கு, செல்போன்: 9444894181, 9443331393 அங்கக உரத் தயாரிப்பு! கன்னியாகுமரி, விவேகானந்த கேந்திராவில் 2015, ஜனவரி 2 மற்றும் 3-ம் தேதிகளில் வியாபார நோக்கில் அங்கக உரம் (பயோ உரம்) தயாரித்தல் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு தனியாக வழிநடத்துதல் பயிற்சியும் அளிக்கப்படும். பதிவுக் கட்டணம் 100 ரூபாய். உணவு, தங்கு மிடம் இலவசம். முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அனுமதி. தொடர்புக்கு, தொலைபேசி: 04652-246296, செல்போன்: 8220022205 இ.மெயில்: azollapillai@gmail.com அறிவிப்பு தண்டோரா பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044-66802927 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர் முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்பு கொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.
தனங்கிளப்பில் கோர விபத்து!! -காலில்லாத பெண் பலி- தனங்கிளப்பில் கோர விபத்து!! -காலில்லாத பெண் பலி- - Yarl Thinakkural Main Menu முக்கிய செய்திகள் செய்திகள் Video Contacts Us Privacy Policy Home Videos About Contact About Us Advertise With Us HomeJaffna தனங்கிளப்பில் கோர விபத்து!! -காலில்லாத பெண் பலி- Written By:Hamsan September 06, 2020 0 Comments தனங்கிளப்பு சந்தியில் இருந்து சங்குப்பிட்டி பகுதியில் இன்று முற்பகல் 11.45 மணியளவில் நடந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி திசையிலிருந்து பூநகரி திசைக்குப் பயணித்த மோட்டார் சைக்கிளும் எதிர்த் திசையில் வந்த டிப்பருமே மோதுண்டு இந்த விபத்து இடம்பெற்றது. உயிரிழந்த பெண் யார் என்பது தொடர்பான தகவல்கள் கிடைக்கவில்லை. அவர் ஒரு காலையிழந்த நிலையில் செயற்கை கால் பொருத்தப்பட்டவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Tags Jaffna Trending Share Hamsan Journalist | Reporter at Yarlthinakkural Daily News Paper | #Photographer | Online Editor @YarlThinakkural | Instagram : karthyhamsan தொடர்பான செய்திகள் View all Post a Comment Post a Comment Previous Post Next Post facebook twitter instagram YouTube pinterest linkedin Tweets by YarlThinakkural {getWidget} $results={3} $label={Kural} $type={list} நீங்கள் யாழ் தினக்குரல் தமிழ் இணையதளத்தை தொடர்பு கொள்வதை வரவேற்கிறோம். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ, கருத்துக்களோ, அறிவுரைகளோ இருந்தால்
அருகிலேயே அமர்ந்து சொல்லித்தருவது போல இருந்தது.கணினியின் மின்ம பொருட்களை (hardware)பற்றியும் விளக்கியமை தெளிவைத் தந்தது.குறைந்த இணைய வேகம் உடையவன் என்பதாலும், மின்தடை அடிக்கடி நிகழ்ந்ததாலும் 10-12மணிநேரம் பதிவிறக்கம் ஆனது.ஒருவழியாக (in dual boot mode) நிறுவினேன்.தெள்ளிய தமிழ் ஒலிப்புடன் உங்கள் குரல் இருந்தது இன்னும் சிறப்பு.இன்னும் கொஞ்சம் ஆங்கிலச்சொல்லாடலைத் தவிர்க்கவும்.இந்நிகழ்படத்தை பதிவிறக்க, இங்கே வசதி செய்தால் நன்றாக இருக்கும்.இணையவேகம் ஒரு சில நேரங்களில் மட்டுமே பல தமிழக இடங்களில் சிறப்பாக இருக்கும். நான் வியந்தது என்னவென்றால், இயக்குதளம்(OS) நிறுவப்பட்டிருக்கும்போதே இணைய உலாவல் நிகழ்ந்தது.பொதுவாக, இயக்குதளம் நிறுவி முடித்த பின்பு தானே, இணைய உலாவல் செய்யமுடியும்.நானும் இதுபோல, தமிழ் உபுண்டு இணையக்கல்வி வளர, நிகழ்படம் உருவாக்க என்ன செய்யவேண்டும். வழிகாட்டுக. மிக்க நன்றி. வணக்கம். Reply ↓ admin on August 16, 2012 at 5:40 am said: தகவலுழவன், ஆங்கிலத்தை தவிர்ப்பது சாத்தியமே. ஆயினும் வேண்டியே அப்படி செய்திருந்தேன். முழு வீடியோவையும் http://blip.tv/file/get/Yavarkkum-1204172.webm முகவரியில் பெற்றுக் கொள்ளலாம். உங்களுக்கு செய்து காட்ட விர்சுவல் மெஷினில் நிறுவினேன். உபுண்டுக்குள் உபுண்டு. eidete என்ற கருவி கொண்டு செய்திருக்கிறோம். அதுபற்றியும் ஏனைய விஷயங்கள் பற்றியும் கண்டிப்பாக வரக்கூடிய வீடியோக்களில் தர திட்டமிடுகிறோம்.
தி.ச.வரதராசன் என்ற இயற்பெயருடைய வரதர் இன்று காலமான செய்தி யாழிலிருந்து வலைப்பதிவெழுதும் பகீ மூலம் அறிந்து நெஞ்சம் கனத்தது. என் நிறைவேறாத ஆசைகளில் ஒன்று வரதரின் இலக்கியப்பணியை அவர் குரலில் ஆவணப்படுத்துவது அது இனிமேலும் நிறைவேறாது வரதரின் மரணம் என்ற முற்றுப்புள்ளியாக அமைந்துவிட்டது. கடந்த மார்ச், 2005 நான் யாழ்ப்பாணம் சென்றபோது சந்திக்க முனைந்த எழுத்தாளர்களில் ஒருவர் செங்கை ஆழியான், மற்றவர் வரதர். மார்ச் 17 ஆம் திகதி, 2005 காலை வேளை என்அப்பாவின் சைக்கிளை எடுத்துக்கொண்டு யாழ் நகரம் போகும் போது ஆனந்தா அச்சகம் என்ற வரதரின் அச்சக நிலையம் சென்று அவரைச் சந்திக்கலாம் என்று முடிவெடுக்கின்றேன். சைக்கிளை கே.கே.எஸ் வீதியின் ஓரமாக நிறுத்தி விட்டு அச்சகம் உள்ளே நுளைகின்றேன். முகப்பில் இருந்த கதிரையில் இருந்து ஏதோ எழுதிக்கொண்டிருக்கின்றார் வரதர். ஒரு முறையும் சந்திக்கவில்லை என்றாலும் புகைப்படம் மூலம் ஏற்கனவே அறிமுகமாயிருந்த அவரை இனங்கண்டு, "வணக்கம் ஐயா, நான் உங்களைப் பார்க்கவெண்டு வந்திருக்கிறன், உங்கட வரதர் வெளியீடுகள் மூலம் நிறைய வாசித்திருக்கிறன்" இது நான். வெள்ளைத் தும்பை மீசைக்குள்ளால் தன் வெண்பற்கள் எட்டிப்பார்க்க முறுவலித்தவாறே "ஓ அப்பிடியே, சந்தோஷம்", வெளியால இருந்து வந்திருக்கிறீங்களே?" இது அவர். "ஓம் ஐயா, நான் ஒஸ்ரேலியாவில இருக்கிறன், ஊருக்கு விடுமுறையில் வந்த போது உங்களையும் கட்டாயம் பார்க்கவேணும் என்டு வந்தனான்." பவ்யமாக நான் சொல்லவும், எழுத்தை நேசிப்பவர்களை நானும் நேசிப்பேன் என்ற தோரணை கலந்த சிரிப்பு மீண்டும் அவரிடமிருந்து. வரதர் வெளியீடுகளில் 95 இற்குப் பின் நான் தவறவிட்ட அவர் வெளியீடுகள், படைப்புக்களைப் பற்றி நிறையவே பேசினார். கண்ணாடிப்பெட்டிக்குள் அடுக்கியிருந்த நூல்களை எடுத்து உதறித் தட்டி ஒரு துணியால் தூசை வளித்தெடுத்து விட்டுத் தந்தார். "இந்தப் புத்தகங்கள் இப்போது போறது குறைவு" என்றும் அவர் சொன்னது இப்ப நினைவுக்கு வருகுது. என்னால் வாங்கக்கூடிய அவரின் இலக்கியக் கையிருப்பை அப்படியே அள்ளிக்கொண்டேன். "நான் ஒஸ்ரேலியா போனதும் சனிக்கிழமை செய்யும் வானொலி நிகழ்ச்சியில் உங்களின் இலக்கியப் பணி குறித்து ஒரு நேர்காணல் செய்ய விருப்பம்" இது நான். "நல்ல சந்தோஷம், கட்டாயம் செய்வம்" என்றவாறே தன் தொலைபேசி இலக்கம் பொறித்த முகவரி அட்டையைத் தந்தார்.அவரைப்புகைப்படமும் எடுத்துக்கொள்கின்றேன்(மேலே இருக்கும் முதற்படம்) ஒரு பழுத்த இலக்கியக்காரரைச் சந்தித்த நல்லனுபவத்தோடு சைக்கிளில் சவாரியை ஆரம்பித்தேன். வரதர் எனக்குத் தந்த தன் விலாச அட்டை மீண்டும் நான் வாழும் நாடு வந்து வரதரோடு நேர்காணல் செய்ய முனையும் ஒவ்வொரு முனைப்பிலும் ஏதாவது தடங்கல் வந்துவிடும். நாட்டுப்பிரச்சனை கொழுந்து விட்டு எரியவும், முக்கிய பிரச்சனைகளுக்காக வானொலியில் முக்கியத்துவம் கொடுக்கவேண்டி ஏற்பட்டது. யாழுக்கான தொலைபேசி உரையாடலும் சீரற்று வரதர் ஐயா குறித்த என் வானொலி நிகழ்ச்சியும் கனவாயிற்று. "இலங்கையில் உள்ள எழுத்தாளர்களுள், சமுதாயத் தொண்டர்களின் தொகைபெருகி வருகின்றது. வாழ்க்கையை உள்ளத்தால் உணர்ந்து, சிக்கல்களுக்கு மருந்து தேர்ந்து, தெளிந்து அவற்றைத் தம் கதைகளிற் படைத்துக் காட்டுவதில் அவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். திரு.தி.ச.வரதராசன் (வரதர்) இவ்வகையான எழுத்துத் தொண்டொன்று புரிந்து வருகின்றார்"- சொன்னவர் டாக்டர் மு.வரதராசன் (மு.வ) தன் எழுத்தை மட்டுமே நேசித்து மற்றையவர்களில் படைப்பைப் புறங்கையால் ஒதுக்கும் இலக்கியக்காரர் மத்தியில் , தன் எழுத்துப்பணியுடன் மற்றையவர்களை எழுதத் தூண்டி வரதர் பிரசுரம் மூலம் அச்சுவாகனமேற்றும் வரதர் ஐயா உண்மையில் ஒரு ஆலமரம். அவரின் விழுதுகளாக நிலைபெற்றவை அவரின் வெளியீடுகள். வரதர் பிரசுரம் ஒன்றையாதல் வாசிக்காமல் விடுபவர் ஈழத்து இலக்கியத்தின் வாசிப்பனுபவத்தில் குறைவை விட்டுச் செல்பவர். "ஒரு ஆக்க இலக்கியம், எழுத்தாளனுடைய மனத்திலே ஒரு நல்ல கருத்து குடிபுக, அவன் அந்தக் கருத்தைச் சுவையான முறையிலே வெளிப்படுத்துக்கின்றான். வெளிப்படுத்தும் உருவம் இப்படித்தான் இருக்கவேண்டுமென்று யாரும் கட்டுப்பாடு செய்ய முடியாது. நல்ல ஆக்கமானால் அந்த ஆக்க இலக்கியம் விலை போகும். மக்களிடையே பேசப்படும். அதைப்பிறகு ஆய்வு செய்யும் இலக்கணக்காரர்கள் அந்த உருவத்துக்கு ஒரு பெயர் வைக்கட்டும்." - வரதர் திசை புதிது இதழ்-1 (2003) இல் வெளிவந்த வரதர் குறித்த ஆக்கம் (எழுத்தாக்கம் கோபி) மூத்த எழுத்தாளர் வரதர் ஈழத்தின் இலக்கிய வரலாறு எழுதுகையில் தவிர்க்க முடியாத பெயர்களில் ஒன்று 'வரதர்' என்பது. சிறுகதை, புதுக் கவிதை, குறுநாவல், இதழியல், பதிப்புத்துறை என இலக்கியத்தின் எத்துறையை எடுத்தாலும் முத்திரை பதித்தவர் வரதர். 'வரதர்' என்கிற தி. ச. வரதராசன் 1924 இல் யாழ்ப்பாணத்திலுள்ள பொன்னாலையில் பிறந்தார். சிறு வயது முதல் நிறைய வாசிக்கத் தொடங்கிய இவர் மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாச - புராணக் கதைகளில் ஆரம்பித்துப் பின்னர் ஆனந்த போதினி, பிரசண்ட விகடன், கலைமகள் போன்ற சஞ்சிகைகளையும் பலவிதமான நூல்களையும் வாசிக்கத் தொடங்கினார். தொடர்ச்சியான இந்த வாசிப்பே அவரை எழுதத் தூண்டியது எனலாம். ஈழத்தின் மூத்த எழுத்தாளர் பலரையும் போல வரதர் எழுதத் தொடங்கியதும் ஈழகேசரி (1930-58)யிற் தான். ஈழகேசரி கல்வி அனோபந்தத்தில் கட்டுரைகள் எழுதி வந்தார். பின்னர் ஈழகேசரி ஆண்டுமலரில் வெளிவந்த 'கல்யாணியின் காதல்' வரதரின் முதற் சிறுகதை. தொடர்ச்சியாக எழுதி வந்த வரதர் அவரையொத்த எழுத்தாளர்களுடன் தொடர்பு வைத்திருந்தார். அவர்களை இணைத்து ஓர் எழுத்தாளர் சங்கம் உருவாக்கும் ஆவல் வரதருள் எழுந்தது; செயல்வடிவம் பெற்றது. 1943. 06. 13 இல் 'தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம்' உருவானது. இந்த வகையில் ஈழத்தின் முதல் எழுத்தாளர் சங்கத்திற்கு அடித்தளமிட்ட பெருமை பெறுகிறார் வரதர். இதே ஆண்டில் (1943) ஈழகேசரியில் வரதர் எழுதிய 'ஓர் இரவினிலே' எனும் வசன கவிதையே ஈழத்தின் முதற் புதுக்கவிதை எனப்படுகிறது. தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம் முதலில் 'மறுமலர்ச்சி' எனும் கையெழுத்துச் சஞ்சிகையை வெளியிட்டது. 1946 பங்குனியில் மறுமலர்ச்சி முதல் இதழ் அச்சிடப்பட்டது. வரதர், கா.மதியாபரணம், நாவற்குழியூர் நடராசன், ச.பஞ்சாட்சரசர்மா, க.ஆ.சரவணமுத்து ஆகிய ஐவருமே முதல் போட்டு மறுமலர்ச்சியைத் தொடங்கினர். மறுமலர்ச்சி யாருக்குச் சொந்தம் என்பது பிரச்சினையாகி நீதிமன்றம் வரை சென்று மீண்டே மறுமலர்ச்சி வெளியானது. மறுமலர்ச்சி வெளியீட்டாளராக நடராசன் இருந்தார். ஆசிரியர்களாக வரதரும் அ.செ.முருகானந்தனும் இருந்தனர். 18 ஆவது இதழிலிருந்து அ.செ.முருகானந்தனுக்குப் பதிலாக பஞ்சாட்சரசர்மா பணியாற்றினார். 1946 பங்குனி முதல் 1948 ஐப்பசி வரை 'மறுமலர்ச்சி' 24 இதழ்கள் வெளியாகின. ஈழத்துச் சிறுகதையின் தனித்துவத்திற்கும் 50களில் ஏற்பட்ட ஈழத்து இலக்கிய எழுச்சிக்கும் அடித்தளமிட்டது மறுமலர்ச்சி தான் என்றால் அது மிகையாகாது. 1952 இல் வரதர் ஆனந்தன் எனும் சஞ்சிகையை ஆரம்பித்தார். இதுவும் ஓர் இலக்கிய இதழே. ஆரம்பத்தில் யாழ்ப்பாணனும் பின்னர் புதுமைலோலனும் ஆனந்தனின் இணையாசிரியராக இருந்தனர். 1955 இல் வரதர் மஹாகவியை இணையாசிரியராகக் கொண்ட 'தேன் மொழி'யை வெளியிட்டார். ஈழத்தில் கவிதைகளுக்கென வெளிவந்த முதற் சஞ்சிகை தேன்மொழி. தேன்மொழி ஆறு இதழ்களே வெளியாகின. இவை தவிர 'வெள்ளி' எனும் சஞ்சிகையும் 'புதினம்' எனும் வார இதழும் கூட வரதரால் வெளியிடப்பட்டன. பொருளாதாரக் காரணங்களால் இவையும் நின்று போயின. வரதரின் பிரசுர முயற்சிகளும் முக்கியமானவை. பண்டிதமணி கணபதிப்பிள்ளை, கைலாசபதி, மஹாகவி, முருகையன், பொன். முத்துக்குமாரன், செங்கை ஆழியான், காரை சுந்தரம்பிள்ளை, சோமகாந்தன், சாந்தன் முதலான பலரது நால்கள் 'வரதர் வெளியீடு' ஆக வெளிவந்தன. 'வரதரின் பல குறிப்பு' அவரது இன்னொரு முயற்சி. தமிழ் மக்களுக்குத் தேவையான பலவித விடயங்களைத் தொகுத்து ஆண்டுக்கு ஒன்றாக (1971 வரை) நான்கு பதிப்புக்கள் வெளியாகின. வரதரின் இதழியற் பணியில் இன்னொரு மைல்கல் அறிவுக் களஞ்சியம். இலாப நோக்கின்றி குறைந்த விலையில் மாணவர்க்கான அறிவுத் தகவல்களைத் தாங்கி அறிவுக் களஞ்சியம் வெளியானது. செங்கை ஆழியான் இணையாசிரியராக இருந்தார். 1995 இலம் பெயர்வு வரை யாழ்ப்பாணத்தில் 3000 பிரதிகள் வரை விற்பனையாகி அமோக வரவேற்புப் பெற்றது அறிவுக் களஞ்சியம். வரதர் ஈழத்துச் சிறுகதையாசிரியர்களில் முக்கியமானவர். ஈழத்தின் முதலாவதும் முக்கியமானதுமான மறுமலர்ச்சிச் சங்கத்திற்கு கால்கோள் இட்டவர். இதழியலில் சிறந்து விளங்கியவர். முதற் கவிதை இதழ் வெளியிட்டவர். இவை தவிர ஈழத்தின் முக்கிய பதிப்பாளர். வரதரின் சேவைகளைப் பாராட்டி இலங்கைக் கலைக் கழகம் அவருக்கு 'சாஹித்திய இரத்தினம்' எனும் பட்டத்தை அளித்திருக்கிறது. வரதர் ஐயா! போய் வாருங்கள், மீண்டும் நீங்கள் என் தாய்நாட்டில் பிறக்கவேண்டும் என்ற என் சுயநல அவாவுடன் கண்ணீர் அஞ்சலிகளோடு பிரியாவிடை கொடுக்கின்றேன் உங்களுக்கு. Posted by கானா பிரபா at 3:53 PM Email This BlogThis! Share to Twitter Share to Facebook 35 comments: Anonymous said... வணக்கம் கானாண்ணெ, அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம் !!! December 21, 2006 4:54 PM கானா பிரபா said... வருகைக்கு நன்றிகள் திலன் December 21, 2006 5:12 PM வெற்றி said... கா.பி, தகவலுக்கு நன்றிகள். அத்துடன் அன்னாரின் பிரிவால் துயருறும் அவரது சுற்றாத்தார்க்கும் , சக ஈழத்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். நான் இவரைப் பற்றிக் கடந்த வாரம் வரை அறிந்திருக்கவில்லை. பகீ அவர்களின் பதிவில் இவரைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்கள். அண்மையில் ஏதோ புதிய முயற்சி ஒன்றில் இவர் இறங்கியிருப்பதாகப் பகீ சொல்லியிருந்தார்கள். ம்ம், மிகவும் வருத்தமான செய்தி. December 21, 2006 5:58 PM Anonymous said... பிரபா, வரதர் அவர்களின் மறைவுச் செய்தி மேமன்கவி அவர்களின் மடல் மூலம் இப்போதுதான் அறிந்தேன். போன ஞாயிறன்று உங்களைச் சந்தித்தபோது வரதர் அவர்களின் நேர்காணலை எடுக்கவேண்டும் என்று சொல்லியிருந்தீர்கள். அதற்குள் காலன் அவரைக் கொண்டு போய்விட்டான். அவரது புகைப்படங்களையும் நூல்கள் விபரங்களையும் போடுங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன். December 21, 2006 6:07 PM கானா பிரபா said... //வெற்றி said... அண்மையில் ஏதோ புதிய முயற்சி ஒன்றில் இவர் இறங்கியிருப்பதாகப் பகீ சொல்லியிருந்தார்கள்.// //அறிவுக்களஞ்சிய நூல்வரிசை என்ற பெயரில் சிறிய புத்தகங்களை பதிப்பிக்க தொடங்கியுள்ளார். நான்கு புத்தகங்கள் அச்சிடப்பட்டுவிட்டாலும் தற்போதய சூழ்நிலைகாரணமாக வெளிவிடப்படவில்லை. இது சம்பந்தமாக சிறிது கவலையாகவே உள்ளார். இந்நூல்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விடயம் பற்றி ஓரளவு விரிவாக எழுதப்பட்டுள்ளது. யாழ்ப்பாணதேசம், பூதத்தம்பி, கிரண்பேடி, மனிதர்களின் தேவைகள் என்ற தலைப்புகளில் முதல் நான்கு புத்தகங்களும் எழுதப்பட்டுள்ளன. இதில் யாழ்ப்பாணதேசம் மற்றும் பூதத்தம்பி இரண்டும் கலாநிதி க. குணராசாவினாலும் மனிதர்களின் தேவைகள் சாமிஜியினாலும் கிரண்பேடி கிருஸ்ணனாலும் எழுதப்பட்டுள்ளன. இன்றைய சிறுவர்களிற்கு பொதுஅறிவை வளர்க்கும் நோக்கில் எழுந்துள்ள இந்த அறிவுக்களஞ்சிய நூல்வரிசை வெளியிடப்பட்டு தொடர்ந்து வரவேண்டும் என்பதில் வரதர் ஐயா மிக்க ஆவலாயுள்ளார். // இதைத்தான் பகீ தன் வலைப்பதிவில் சொல்லிருந்தார். நம் கொடுப்பினை அவ்வளவு தான்:-( December 21, 2006 8:05 PM மலைநாடான் said... பிரபா! இது என்ன சோதனைக்காலம் தொடர்ந்து முக்கியமானவர்களையெல்லாம் இழந்து வருகிறோமே.. எங்கள் அஞ்சலிகள். December 21, 2006 8:33 PM வசந்தன்(Vasanthan) said... பிரபா, வழமைக்கு மாறாக நீண்டநேரம் கணினியில் இல்லாமல் உருப்படியாக ஒருவேலை பார்த்துவிட்டு இப்போதுதான் வந்து குந்தினேன். வரதர் ஐயாவின் மறைவுச்செய்தி வந்திருக்கிறது. நாங்களெல்லாம் 'அறிவுக்களஞ்சியம்' வாசித்து வளர்ந்த தலைமுறை. ஒரு தினசரிப் பத்திரிகையே வெளியிட முடியாத காலப்பகுதிகளில் மாட்டுத்தாள், அப்பியாசக் கொப்பி ஒற்றைகள் போன்றவற்றைக் கொண்டுகூட அறிவுக்களஞ்சியம் வெளிவந்தது. இந்த மாதத்தில் மட்டுமே அரசியல், இலக்கியம் என்று ஈழத்தவருக்கு எத்தனை பெரிய இழப்புக்கள்? December 21, 2006 8:35 PM Anonymous said... வரதர்! ஈழ இலக்கிய உலகில் பரீட்சயமான பெயர்.நிறைகுடம் தளம்பாது என்பதற்கு உதாரணம்.ஓசைப்படாமல் சாதனை செய்து மறைந்துள்ளார். அவர் ஆத்மா சாந்தியடையட்டும். யோகன் பாரிஸ் December 21, 2006 8:42 PM கானா பிரபா said... //Kanags said... போன ஞாயிறன்று உங்களைச் சந்தித்தபோது வரதர் அவர்களின் நேர்காணலை எடுக்கவேண்டும் என்று சொல்லியிருந்தீர்கள். அதற்குள் காலன் அவரைக் கொண்டு போய்விட்டான். அவரது புகைப்படங்களையும் நூல்கள் விபரங்களையும் போடுங்கள்.// சிறீ அண்ணா இதோ படங்களை இணைத்து விட்டேன். அவரின் நூல்களை ஒவ்வொன்றாக அவ்வப்போது பதிவில் அறிமுகம் செய்கின்றேன். அவருடன் பேசிய போது சொன்ன வாக்குறுதி முடியாமற் போனது குறித்து என் மனது கனக்கின்றது. December 21, 2006 8:54 PM கானா பிரபா said... //மலைநாடான் said... பிரபா! இது என்ன சோதனைக்காலம் தொடர்ந்து முக்கியமானவர்களையெல்லாம் இழந்து வருகிறோமே..// காலன் கூட நமக்கு ஓரவஞ்சனை செய்கின்றான். December 21, 2006 9:26 PM சோமி said... இது என்ன காலமப்பா ஒரு தலைமுறை ஓய்வெடுத்துக் கொள்ளும் காலமோ..?! நான் சந்தித்து பேசியிராத சிலரில் வரதர் ஒருவர்.ஆனால் அவரின் அறிவுகளஞ்சியத்தில அறிவு பெற்ற என் நண்பர்கள் நிறயச் சொல்வார்கள். வளரும் தலைமுறைகான அவரின் பணியென்பது யாழ்ப்பாணத்தில் நடந்த ஆரோக்கியமன செயற்பாடுகளுக்குள் ஒன்று. December 21, 2006 9:45 PM கானா பிரபா said... //வசந்தன்(Vasanthan) said... நாங்களெல்லாம் 'அறிவுக்களஞ்சியம்' வாசித்து வளர்ந்த தலைமுறை. ஒரு தினசரிப் பத்திரிகையே வெளியிட முடியாத காலப்பகுதிகளில் மாட்டுத்தாள், அப்பியாசக் கொப்பி ஒற்றைகள் போன்றவற்றைக் கொண்டுகூட அறிவுக்களஞ்சியம் வெளிவந்தது.// மாட்டுத்தாள் பேப்பர், அப்பியாசக்கொப்பிக்காலத்தில் நானும் இருந்தவன். வரதரிடம் 2005 இல் அவரது நூல்களை வாங்கும் போது கண்ணாடிப்பெட்டிக்குள் இருந்து எடுத்து ஒரு துணியால் தூசை வளித்தெடுத்து விட்டுத் தந்தார். இந்தப் புத்தகங்கள் இப்போது போறது குறைவு என்றும் அவர் சொன்னது இப்ப நினைவுக்கு வருகுது. மூலப்பதிவிலும் இணைத்துள்ளேன். December 21, 2006 9:54 PM Anonymous said... 'வரதர் அகராதி'யும் வெளியிட்டிருந்தார் December 21, 2006 9:57 PM கானா பிரபா said... /Johan-Paris said... வரதர்! ஈழ இலக்கிய உலகில் பரீட்சயமான பெயர்.நிறைகுடம் தளம்பாது என்பதற்கு உதாரணம்.// சரியாகச் சொன்னீர்கள் யோகன் அண்ணா, அவரது இலக்கிய முயற்சிகளுக்குச் சான்று பகரும் வெளியீடுகளை எந்தவொரு இக்கட்டான காலத்திலும் தொடர்ந்த முனைப்போடு பல்கிப் பெருக வெளியிட்டதும் தன் வாழ்நாளின் இறுதி மூச்சுவரை அதே சிந்தையில் அந்த நிறைகுடம் இருந்தது. December 21, 2006 10:02 PM அருண்மொழிவர்மன் said... இந்திய சஞ்சிகைகள் தடை செய்யப்பட்டிருந்த 90 களில் அறிவுக்களஞ்சியம், நங்கூரம் இரண்டும் தான் யாழ் மக்களின் அறிவு தாகத்தை பூர்த்தி செய்தன, அறிவுக்களஞ்சியத்தில் சில பழமொழிகளுக்கான உண்மையான அர்த்தங்களையும் வெளியிட்டுந்தார். அதுமட்டுமல்லாமல் எழுத்தாற்றலை ஊக்குவிக்கும் முகமாக ஆக்கங்களை அனுப்புவோருக்கு சன்மானமும் அளித்திருந்தார்..... இது அவரது எழுத்துக்களால் பாதிக்கப்பட்ட தலைமுறையில் பிறந்தவன் என்ற முறையில் நிச்சயமாஇ இது ஒரு இழப்புதான் December 21, 2006 11:28 PM கோபி said... "நாங்களெல்லாம் 'அறிவுக்களஞ்சியம்' வாசித்து வளர்ந்த தலைமுறை" அறிவுக்களஞ்சியத்தின் முதலிதழிலிருந்து கடைசி வரை வாசித்த எழுதிய பலரில் நனும் ஒருவன். (சயந்தனும் என்று நினைக்கிறேன்) நீங்கள் தந்துள்ள திசைபுதிது கட்டுரையையும் நானே எழுதினேன். அந்தத் திசைபுதிது இதழுக்காக அவரிடம் வாங்கிய கட்டுரையின் எழுத்துவடிவத்தை ஒருமுறை எடுத்துப் பார்த்தேன். இறுதியாக யாழ் சென்ற போது நூலகத்தில் வெளியிட நூல்கள் பெற அவரைச் சந்தித்தேன். மீண்டும் சந்திக்கக் கிடைக்காது என்று அப்போது நினைத்திருக்கவில்லை.... விக்கிபீடியாவில் அவரைப் பற்றிய தகவல்களை விரிவாகத் தந்துள்ளோம். இப்பதிவில் வெளியிடப்பட்டுள்ள வரதரின் படத்தை எடுத்தவர் அதனைக் கட்டற்ற விதத்தில் பகிர அனுமதித்தால் விக்கிபீடியாக் கட்டுரையில் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும். நன்றி. http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF._%E0%AE%9A._%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D -கோபி December 22, 2006 2:48 AM கோபி said... ''நாங்களெல்லாம் 'அறிவுக்களஞ்சியம்' வாசித்து வளர்ந்த தலைமுறை'' கானா பிரபா, வரதர் பற்றிய பல தகவல்களுடன் கட்டுரை ஒன்று விக்கிபீடியாவில் வளர்த்தெடுக்கப்படுகிறது. http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF._%E0%AE%9A._%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D#.E0.AE.B5.E0.AE.B0.E0.AE.A4.E0.AE.B0.E0.AF.8D_.E0.AE.B5.E0.AF.86.E0.AE.B3.E0.AE.BF.E0.AE.AF.E0.AF.80.E0.AE.9F.E0.AF.81 இப்பதிவிலுள்ள வரதரது படத்தை எடுத்தவர் அதனைக் கட்டற்ற விதத்தில் பகிர முன்வந்தால் விக்கிபீடியாவில் பயன்படுத்தலாம். மேலும் குறித்த திசைபுதிதுக் கட்டுரையை எழுதியவன் நான். என் வாழ்க்கைப் பயணத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியவர் வரதர்... கடைசியாக நூலகத்தில் அவரது நூல்ளக்ளை வெளியிடுவதற்காக சென்று சந்தித்தேன். அதுவே கடைசிச் சந்திப்பாக இருக்கும் என்று நினைத்திருக்கவில்லை... December 22, 2006 3:00 AM கோபி said... கானாபிரபா, வரதரின் கயமை மயக்கம் சிறுகதைத் தொகுப்பை நூலகம் திட்டத்தில் வெளியிட நீங்களும் இணைந்து பணியாற்றலாமே. அதுபற்றி பகீயிடமும் கேட்டிருந்தேன். வரதரது சிறுகதை பட்டறிவுக் குறிப்புக்கள் சிறிய நூலாதலால் அதனைத் தனி ஒருவரால் தட்டெழுத முடியும். அது என்னிடமில்லை; பகீ முன்வரக்கூடும். கயமை மயக்கத்தைச் சிலர் சேர்ந்து விரைவில் முடிக்க முயற்சிக்கலாம். நீங்கள் நூலகம் குழுவில் உறுப்பினரெனின் நூலகத்துக்கு மடலெழுதுங்கள். கயமை மயக்கத்தை scan செய்து நூலகத்தில் ஏற்கனவே தந்துள்ளேன். உங்களிடம் அது இல்லையெனின் பதிவிறக்கித் தட்டெழுதப் பயன்படுத்தலாம். கடந்தவாரம் தெளிவத்தை ஜோசப் நூலகத்தில் வெளியிடவென வரதரது மலரும் நினைவுகளைத் தந்தார். விரைவில் அந்நூலையும் scan செய்து வெளியிட முயற்சிக்கிறேன். அவருக்கு அஞ்சலி செலுத்த வேறுவழி தெரியவில்லை.... --கோபி-- December 22, 2006 3:58 AM கானா பிரபா said... //கோபி said... நீங்கள் தந்துள்ள திசைபுதிது கட்டுரையையும் நானே எழுதினேன். அந்தத் திசைபுதிது இதழுக்காக அவரிடம் வாங்கிய கட்டுரையின் எழுத்துவடிவத்தை ஒருமுறை எடுத்துப் பார்த்தேன். விக்கிபீடியாவில் அவரைப் பற்றிய தகவல்களை விரிவாகத் தந்துள்ளோம். இப்பதிவில் வெளியிடப்பட்டுள்ள வரதரின் படத்தை எடுத்தவர் அதனைக் கட்டற்ற விதத்தில் பகிர அனுமதித்தால் விக்கிபீடியாக் கட்டுரையில் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும். நன்றி// வணக்கம் கோபி, என் பதிவில் குறிப்பிட்டது போன்று வரதர் ஐயாவைப் படமெடுத்தவன் நான் என்ற வகையில் விக்கிபீடியாவில் நீங்கள் அவர் படத்தை பயன்படுத்த அனுமதி கொடுக்கின்றேன். உங்கள் கட்டுரை செறிவாகவும் வரதர் ஐயா பற்றிய முழுமையான பார்வையாகவும் இருந்தது, நன்றிகள். December 22, 2006 6:23 AM சயந்தன் said... //அறிவுக்களஞ்சியத்தின் முதலிதழிலிருந்து கடைசி வரை வாசித்த எழுதிய பலரில் நனும் ஒருவன். (சயந்தனும் என்று நினைக்கிறேன்) // ஆம் கோபி.. அறிவுக்களஞ்சியத்ததின் இரண்டாவது இதழிலிருந்து அது என்னோடு பரிட்சையமானது. (அது ஒரு பச்சை நிற அட்டையோடு வந்தது.) ஒரு முறை ஆனந்தா அச்சகத்துக்கு நேரே சென்று ஒரு நகைச்சுவைத் துணுக்கினை வரதர் ஐயாவிடம் கொடுத்திருக்கிறேன். அது அவர் வெளியிட்ட புதினம் இதழுக்கானது. வசந்தன் சொன்னது போல நாம் அறிவுக் களஞ்சியம் வாசித்து வளர்ந்த தலைமுறை. எனது பெயரை முதலில் அச்சில் பார்க்கும் வாய்ப்பினை அறீவுக் களஞ்சியம் தான் அளித்தது. புன்னாலை என்ற பெயரை பொன்னாலை என மாற்றியவர் வரதர் ஐயா என அறிந்தேன். அது பற்றி யாருக்கு ஏதேனும் தெரியுமா December 22, 2006 7:18 AM கானா பிரபா said... //Anonymous said... 'வரதர் அகராதி'யும் வெளியிட்டிருந்தார் December 21, 2006 9:57 PM // ஓமோம் பார்த்திருக்கின்றேன், தமிழ் சிங்கள அகராதியும் வந்ததாக நினைவு December 22, 2006 8:46 AM இளங்கோ-டிசே said... மேலே நண்பர்கள் பலர் குறிப்பிட்டமாதிரி, 'அறிவுக்களஞ்சியம்' வாசித்து வந்த தலைமுறையில் ஒருவன் தான் நான். யுத்தத்தின் நெடுக்கடிக்குள் எம்மை வாசிப்பின் பக்கம் ஆர்வத்தை ஏற்படுத்தச் செய்தது அறிவுக்களஞ்சியமும் நங்கூரமும் தான். ஈழத்து மறுமலர்ச்சிக்கால எழுத்தாளர்களின் கடைசிச் சுவடும் மறைந்துவிட்டது :-(. December 22, 2006 9:58 AM கானா பிரபா said... //சோமி said... வளரும் தலைமுறைகான அவரின் பணியென்பது யாழ்ப்பாணத்தில் நடந்த ஆரோக்கியமன செயற்பாடுகளுக்குள் ஒன்று. // வணக்கம் சோமி வரதரின் நீண்ட எழுத்துலக வாழ்வில் ஒவ்வொரு காலகட்டத்து இளந்தலைமுறையினருக்கும் அவர் படைப்புக்களும் வெளியீடுகளும் தீனி போட்டிருக்கின்றன. December 22, 2006 10:03 AM கானா பிரபா said... //அருண்மொழி said... இந்திய சஞ்சிகைகள் தடை செய்யப்பட்டிருந்த 90 களில் அறிவுக்களஞ்சியம், நங்கூரம் இரண்டும் தான் யாழ் மக்களின் அறிவு தாகத்தை பூர்த்தி செய்தன// முற்றிலும் உண்மை அருண்மொழி அறிவுக்களஞ்சியம் ஒரு தொகுப்பாக வரவேண்டியது காலத்தின் தேவை. December 22, 2006 10:05 AM Boston Bala said... அஞ்சலி December 22, 2006 3:01 PM கானா பிரபா said... //சயந்தன் said... ஒரு முறை ஆனந்தா அச்சகத்துக்கு நேரே சென்று ஒரு நகைச்சுவைத் துணுக்கினை வரதர் ஐயாவிடம் கொடுத்திருக்கிறேன். அது அவர் வெளியிட்ட புதினம் இதழுக்கானது. // வசந்தன் சொன்னது போல நாம் அறிவுக் களஞ்சியம் வாசித்து வளர்ந்த தலைமுறை. //புன்னாலை என்ற பெயரை பொன்னாலை என மாற்றியவர் வரதர் ஐயா என அறிந்தேன். அது பற்றி யாருக்கு ஏதேனும் தெரியுமா?// வணக்கம் சயந்தன் 14 வயதிலேயே அறிவுக்களஞ்சியத்தில் நீங்கள் எழுதியதாகவும், வரதருக்கு ஒரு காட்டமான கடிதத்தை அவ்வயதில் எழுதியதையும் முன் சொல்லியிருக்கிறீர்கள். புன்னாலையை வரதர் பொன்னாலை ஆக்கியதை தன் மலரும் நினைவுகள் நூலின் 32 ஆம் பக்கத்தில் இப்படிச் சொல்லுகின்றார். "நான் சைக்கிளில் யாழ்நகர் போகிறபோது ஒவ்வொரு சந்தியிலும் நிற்கும் மரங்களில் புன்னாலை இத்தனை மைல் என்று எழுதியிருப்பதைப் பார்ப்பேன், Punnalai என்று ஆக்கில எழுத்துக்களால் மட்டுமே எழுதியிரும். இந்த எழுத்துக்களில் இரண்டாவதாக இருக்கும் U என்ற எழுத்தின் மேற்பகுதியில் ஒரு சிறிய வளைவு போட்டால் O ஆகிவிடும் Punnalai புன்னாலை Ponnalai (பொன்னாலை) ஆகிவிடும். யாழ்ப்பாணத்து தியேட்டரில் முதலாம் காட்சியும் இரண்டாம் காட்சியும் நண்பர்களோடு பார்த்துவிட்டு வரும் போது புன்னாலையில் இரண்டாவது ஆங்கில எழுத்தை கறுப்பு மையால் O ஆக்கிவிடுவேன். இப்படி சந்தி தோறும் உள்ள பெயரை மாற்றிவிடுவேன். அரசாங்கம் பெயர்ப்பலகை மாற்றும் போது பொன்னாலை என்றூ மாற்றியதை அப்படியே எழுதிவிட்டார்கள் எல்லாப் பலகைகளிலும். அதுவே நிலைத்துவிட்டது. (வரதரின் 6 பக்க இந்தக்கட்டுரையைச் சுருக்கித் தந்திருக்கின்றேன்) December 22, 2006 9:30 PM கோபி said... கானாபிரபா வரதரின் "கற்பு" சிறுகதையை http://eelamlibrary.blogspot.com/2006/12/blog-post_22.html முகவரியில் தந்துள்ளேன். அந்த வலைப்பதிவு பரவலான வாசிப்பை நோக்கமாகக் கொண்டதல்ல. ஆதலால் எங்கும் அது நிரற்படுத்தப்படுவதில்லை. எவருக்கும் அது தெரியவும் வாய்ப்பில்லை. ஆதலால் அக்கதையை உங்கள் பதிவில் இட்டு பரவலாக வாசிக்கப்பட உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். அக்கதை தொடர்பான செங்கை ஆழியான், கா. சிவத்தம்பி ஆகியோரது கருத்துக்களையும் விரைவிற் தட்டெழுதித் தருகிறேன். மேலும் விக்கிபீடியாவில் வெளியிடப்படும் படங்கள் எவரும் பாவிக்கக்கூடியவை என்பது உங்களுக்கு ஆட்சேபணை இல்லைத்தானே? December 23, 2006 3:03 AM கானா பிரபா said... வணக்கம் கோபி, வரதரின் சிறுகதையை நான் என் பதிவில் போடுகின்றேன். ஆனால் நீங்கள் குறிப்பிட்டது போன்று அச்சிறுகதை குறித்த செங்கை ஆழியான், கா. சிவத்தம்பி ஆகியோரது கருத்துக்களையும் விரைவிற் தட்டெழுதித் தந்தீர்களால் முழு இணைப்பாகக் கொடுத்தால் சுவையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.என் பதிவில் உள்ள படங்கள் அனைத்தினையும் நீங்கள் தாராளமாக உபயோகிக்கலாம். இன்னுமொரு செய்தி, வரதரின் "யாழ்ப்பாணத்தார் கண்ணீர்" படைப்பை முழுமையாகப் பதிவிடவும் எண்ணியுள்ளேன். December 23, 2006 8:49 AM Anonymous said... வணக்கம் கானா வரதர் அவர்களின் ஆத்மா சாந்தியடைய நானும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன் December 23, 2006 1:26 PM Anonymous said... நன்றி கானா பிரபா. உங்களின் பதிவின் மூலம் வரதரைப் பற்றிய பல விடயங்களை அறிந்து கொண்டேன்.நன்றிகள் அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன். December 23, 2006 3:51 PM கானா பிரபா said... வருகை தந்து அஞ்சலியைப் பகிர்ந்த டி.செ, பாஸ்டர் பால, சுந்தரி, கரிகாலன் உங்களுக்கு என் நன்றிகள் December 23, 2006 6:37 PM கோபி said... வணக்கம் கானா பிரபா, நீங்கள் கேட்டபடி சிறுகதை பற்றிய கருத்துக்களை இணைத்துவிட்டேன். வரதரின் "வாத்தியார் அழுதார்" சிறுகதையையும் தட்டெழுதியுள்ளேன். அதனையும் உங்கள் வலைக்குறிப்பில் வெளியிடுங்கள். மேலும் உங்களிடமுள்ள மலரும் நினைவுகள் நூலின் பதிப்பு விபரம் மற்றும் அத்தியாய, பக்க எண்ணிக்கையை எனக்கு அறியத் தாருங்கள். (kopinath'at'gmail'dot'com) ஏனெனில் என்னிடமுள்ள பதிப்பிலிருந்து நீங்கள் தந்ததன் அட்டைப்படம் வேறுபடுகிறது. இறுதிப் பதிப்பை மின்னூலாக்குவதே பொருத்தமாயிருக்கும். மேலும் யாழ்ப்பாணத்தார் கண்ணீரை நீங்கள் உள்ளிட முன்வந்தது மிக்க மகிழ்ச்சி. அதனை முழுமையாகப் பதிவிட்டபின் நூலகத்திலும் வெளியிடுங்கள்! நீங்கள் நூலகம் குழுவில் அங்கத்தவரா? வரதரின் ஏழு நூல்களிலொன்றான "நாவலர்" ஏற்கனவே நூலகத்தில் மின்வடிவமாக உள்ளது. கயமை மயக்கமும் விரைவில் இணையும். நன்றி. December 24, 2006 2:42 AM கானா பிரபா said... மிக்க நன்றிகள் கோபி, இன்னும் இரு நாட்களுக்குள் என் வலைப்பதிவில் இடுகின்றேன். தனிமடலும் அனுப்புக்கின்றேன். விக்கி மற்றும் நூலகத்திற்கு இதுவரை ஆதரவாளன் மட்டுமே கூடிய சீக்கிரமே பங்காளியாக இணைய விருப்பம். December 24, 2006 9:31 AM பகீ said... இன்றுதான் இணையத்தில் நுழைந்து ஓரளவு தட்டெழுதிட முடிகிறது. மிகவும் சிறப்பாக எழுதியிருக்கின்றீர்கள். அச்செடுத்து வரதர் ஐயாவின் துணைவியாரிடம் கொடுத்திருக்கிறேன். கோபி நிச்சயமாய் தட்டெழுத தொடங்குகின்றேன். இப்பொழுது விரல்கள் ஓரளவு ஒத்துழைக்கின்றன. December 25, 2006 8:17 PM கானா பிரபா said... வணக்கம் பகீ வரதர் ஐயாவின் துணைவியாருக்கு நம் எல்லோரது இரங்கலைப் பகிர்ந்தமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். December 26, 2006 10:11 AM Post a Comment Newer Post Older Post Home About Me கானா பிரபா ஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன் View my complete profile Blog Archive ► 2021 (31) ► December 2021 (1) ► November 2021 (2) ► October 2021 (5) ► September 2021 (3) ► August 2021 (4) ► July 2021 (1) ► June 2021 (5) ► May 2021 (1) ► April 2021 (3) ► March 2021 (2) ► February 2021 (1) ► January 2021 (3) ► 2020 (28) ► December 2020 (4) ► November 2020 (3) ► October 2020 (1) ► September 2020 (1) ► August 2020 (2) ► July 2020 (3) ► June 2020 (3) ► May 2020 (4) ► April 2020 (3) ► March 2020 (2) ► February 2020 (2) ► 2019 (19) ► December 2019 (3) ► November 2019 (1) ► October 2019 (1) ► August 2019 (1) ► July 2019 (3) ► June 2019 (2) ► May 2019 (2) ► April 2019 (1) ► March 2019 (2) ► February 2019 (2) ► January 2019 (1) ► 2018 (25) ► December 2018 (2) ► November 2018 (1) ► October 2018 (5) ► September 2018 (1) ► August 2018 (3) ► July 2018 (1) ► June 2018 (3) ► May 2018 (1) ► April 2018 (1) ► March 2018 (2) ► February 2018 (3) ► January 2018 (2) ► 2017 (20) ► December 2017 (2) ► November 2017 (3) ► October 2017 (2) ► September 2017 (2) ► August 2017 (1) ► July 2017 (1) ► June 2017 (1) ► May 2017 (3) ► April 2017 (1) ► March 2017 (1) ► February 2017 (2) ► January 2017 (1) ► 2016 (18) ► December 2016 (2) ► November 2016 (3) ► October 2016 (1) ► September 2016 (1) ► August 2016 (1) ► July 2016 (2) ► June 2016 (3) ► May 2016 (1) ► April 2016 (1) ► March 2016 (1) ► February 2016 (1) ► January 2016 (1) ► 2015 (20) ► December 2015 (3) ► November 2015 (1) ► October 2015 (2) ► September 2015 (1) ► August 2015 (1) ► July 2015 (2) ► June 2015 (1) ► May 2015 (1) ► April 2015 (3) ► March 2015 (1) ► February 2015 (3) ► January 2015 (1) ► 2014 (22) ► December 2014 (3) ► November 2014 (2) ► October 2014 (2) ► September 2014 (1) ► August 2014 (3) ► July 2014 (2) ► June 2014 (1) ► May 2014 (1) ► April 2014 (1) ► March 2014 (1) ► February 2014 (2) ► January 2014 (3) ► 2013 (16) ► December 2013 (2) ► November 2013 (1) ► October 2013 (2) ► September 2013 (1) ► August 2013 (1) ► July 2013 (1) ► June 2013 (1) ► May 2013 (2) ► April 2013 (1) ► March 2013 (1) ► February 2013 (1) ► January 2013 (2) ► 2012 (16) ► December 2012 (2) ► November 2012 (1) ► October 2012 (1) ► September 2012 (1) ► August 2012 (1) ► July 2012 (1) ► June 2012 (2) ► May 2012 (1) ► April 2012 (1) ► March 2012 (2) ► February 2012 (1) ► January 2012 (2) ► 2011 (26) ► December 2011 (3) ► November 2011 (2) ► October 2011 (1) ► September 2011 (1) ► August 2011 (1) ► July 2011 (3) ► June 2011 (5) ► May 2011 (1) ► April 2011 (2) ► March 2011 (2) ► February 2011 (1) ► January 2011 (4) ► 2010 (30) ► December 2010 (2) ► November 2010 (2) ► October 2010 (2) ► September 2010 (4) ► August 2010 (6) ► July 2010 (2) ► June 2010 (2) ► May 2010 (2) ► April 2010 (3) ► March 2010 (1) ► February 2010 (2) ► January 2010 (2) ► 2009 (28) ► December 2009 (2) ► November 2009 (3) ► October 2009 (3) ► September 2009 (1) ► August 2009 (2) ► July 2009 (2) ► June 2009 (4) ► May 2009 (3) ► April 2009 (2) ► March 2009 (2) ► February 2009 (1) ► January 2009 (3) ► 2008 (30) ► December 2008 (4) ► November 2008 (3) ► October 2008 (2) ► September 2008 (3) ► August 2008 (1) ► July 2008 (2) ► June 2008 (3) ► May 2008 (2) ► April 2008 (3) ► March 2008 (1) ► February 2008 (1) ► January 2008 (5) ► 2007 (53) ► December 2007 (1) ► November 2007 (3) ► October 2007 (2) ► September 2007 (14) ► August 2007 (16) ► July 2007 (2) ► June 2007 (2) ► May 2007 (1) ► April 2007 (4) ► March 2007 (2) ► February 2007 (4) ► January 2007 (2) ▼ 2006 (35) ▼ December 2006 (3) வரதரின் படைப்புலகம் வரதர் என்ற எழுத்தாணி ஓய்ந்தது வலைப்பதிவில் ஒரு வருஷம் ► November 2006 (1) ► October 2006 (3) ► September 2006 (3) ► August 2006 (1) ► July 2006 (13) ► June 2006 (1) ► May 2006 (3) ► April 2006 (1) ► March 2006 (2) ► February 2006 (2) ► January 2006 (2) ► 2005 (4) ► December 2005 (4) Followers Powered by Blogger. கண்காணிப்புக்குழு Popular Posts மேளச்சமா...! "மச்சான்! பிள்ளையாரடி கொடியேறி விட்டுது" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ... "அண்ணை றைற்" கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ... வலைப்பதிவில் ஒரு வருஷம் தமிழ் வலைப்பதிவுலகில் நானும் என் உள்ளக் கிடக்கைகளை எழுத வேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்து இன்றோடு ஒரு வருஷம் ஓடி விட்டது. இன்பத் தமி... வாடைக்காற்று செங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் " வாடைக்காற்று எழுதினாரே, அவரா?" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற... என் இனிய மாம்பழமே....! பரமசிவன் குடும்பத்தில் ஒரு ஞானப்பழம் குறித்த பிரச்சனை வந்தது மாதிரி எங்கள் வீட்டிலும் வந்தால் "ஞானப்பழத்தை நீங்களே வச்சுக்கொள்ளுங்கோ, எ... சிதம்பரத்தில் ஓர் அப்பாவிசாமி! இந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம... திரையில் புகுந்த கதைகள் "திரையில் புகுந்த கதைகள்" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல... நான் உங்கள் ரசிகன் முந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, ... வலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள் இன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத... மேதகு 🔥 🔥 பட அனுபவம் “பிரபாகரன்” ஏந்திய குழந்தைக்குப் பெயர் வைக்கும் காட்சியில் சிலிர்த்துப் போய்க் கண் மடை திறக்க, மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றதொரு பரவச அனுப...
ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது கூட்டத்தொடர் இன்று நியூயோர்க்கிலுள்ள ஐ நா தலைமையகத்தில் ஆரம்பமாகியுள்ளது. ”ஐக்கிய நாடுகள் சபையை அனைத்து மக்களுக்கும் நெருக்கமடைய செய்தல் , நீதி , அமைதி மற்றும் பேண்தகு தன்மையும் கொண்ட சமூகங்களுக்கான பூகோள தலைமைத்துவமும், பகிர்ந்த பொறுப்புக்களும் எனும் தொனிப்பொருளில் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் பெற்றுள்ள 193 நாடுகள் இம்முறைய மாநாட்டில் பங்கேற்கின்றன. ஈக்குவடோரைச் சேர்ந்த Maria Fernanda தலைமையில் இன்று ஆரம்பமாகவுள்ள இந்த மாநாடு ஒன்பது நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. உலக அமைதியை நோக்காக் கொண்டு இராஜாந்திர அதிகாரிகளுக்கு இடையில் கலந்துரையாடல்களும் இதன் போது நடத்தப்படவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபை கூட்டத்தொடருக்கு இணையாக இடம்பெறும் பூகோள சமாதானத்திற்கான நெல்சன் மண்டெலா சமாதான மாநாடு இன்று ஆரம்பமாகவுள்ளது. இந்த மாநாட்டிலும் உரையாற்றுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பிரதான கூட்டத் தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளதுடன், நாளை பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு விசேட உரை நிகழ்த்தவுள்ளார். ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ நா பொது சபை கூட்டத்தொடரில் உரையாற்றும் 4 ஆவது சந்தர்ப்பம் இதுவாகும். Sharing is caring! Facebook Twitter Pinterest LinkedIn விளம்பரங்கள் எம்மைப்பற்றி புலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.
பல் மருத்துவம் என்பது (Popular dental clinic in medavakkam) மிகவும் உற்சாகமான தொழில் தேர்வுகளில் ஒன்றாக இருக்கிறது. கல்வி, தடுப்பு, நோயறிதல் மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பல் மருத்துவர்கள் அத்தியாவசிய சுகாதார சேவையை பொதுமக்களுக்கு வழங்குகிறார்கள். பல் மருத்துவ படிப்பிற்கு நீங்கள் விண்ணப்பிப்பதற்கு முன், உங்கள் தொழில் தேர்வு உங்களுக்கு ஏற்றதா, பல் மருத்துவ கல்வி மற்றும் பயிற்சிக்கான தேவைகள் என்ன, பல் மருத்துவக்கல்வியில் உங்களுக்கு என்னென்ன கல்வி வாய்ப்புக்கள் உள்ளன என்பதை பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பல் மருத்துவம் என்பது ஒரு நுட்பமான கலை, இதற்கு துல்லியமான கையேடு மற்றும் வேலைகள் தேவைப்படுகிறது. பல்லை ஒளிரச் செய்தாலும் அல்லது முழு தாடையைச் சரிசெய்தாலும், சிறந்த முடிவுகளை அடைய பல் மருத்துவர்களுக்கு அழகியல் உணர்வு மற்றும் தொழில்நுட்பத் திறன் இருக்க வேண்டும். பல் மருத்துவர்கள் தங்களின் நுண்ணறிவு மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தங்கள் நோயாளிகளுக்கு எது சிறந்தது என்பதைத் தீர்மானிக்கிறார்கள். நோயாளிகளுக்கான சிகிச்சைத் திட்டங்களை உருவாக்கி அவற்றை அடைய அவர்கள் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான முடிவுகளை எடுக்க வேண்டும். இந்த முடிவுக்கு, அவர்கள் சில சிக்கலான காரணிகளை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். பல் மருத்துவத்தில் டிப்ளமோ திட்டத்தின் நோக்கம் மருத்துவ நடைமுறையில் பல் பராமரிப்பு, குறிப்பாக சமீபத்திய அறிவு பற்றியது ஆகிவற்றை சார்ந்து இருக்கிறது. சிக்கலான நோய் பராமரிப்பு மற்றும் சிறப்புத் தேவைகள் உள்ள நோயாளிகளின் வாய்வழி சுகாதாரப் பாதுகாப்பு உள்ள நோயாளிகளின் சமீபத்திய தேவைகளை கருத்தில் கொண்டு உங்களுக்கு பல கற்றல் முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. பல் மருத்துவம் பயிலும் மாணவர்கள் என்னென்ன பாடங்களை தேர்வு செய்து படிக்கலாம் என சென்னை மேடவாக்கத்தில் உள்ள 4 Squares Dentistry பல் மருத்துவமனையை சார்ந்த மருத்துவர் (dentist in medavakkam) ஒருவர் கூறுகிறார். BDS படிப்பிற்கு க்குப் வழங்கப்படும் சில பல் மருத்துவம் சார்ந்த டிப்ளமோ படிப்புக்கள்பற்றி இங்கே காணலாம். வாய்வழி உள்வைப்பு மருத்துவத்தில் முதுகலை சான்றிதழ் / லேசர் பல் மருத்துவத்தில் முதுகலை சான்றிதழ் (மணிபால் பல்கலைக்கழகம்): BDS படிப்பிற்கு பிறகு பல் மருத்துவ படிப்புகள் – 1 வருடம் இருக்கலாம். டிப்ளமோ படிப்புகள் 4 தொடர்பு அமர்வுகளை உள்ளடக்கியது. ஒவ்வொரு அமர்வும் சுமார் 6 நாட்கள் நீடிக்கும். டிப்ளோமா திட்டம் செயற்கையான விரிவுரைகள், வாய்வழி உள்வைப்புகளின் முன்கூட்டிய நடைமுறைகள், அடிப்படை உள்வைப்பு பற்றிய நேரடி விளக்கங்கள் பற்றி கற்பிக்கிறது. இந்த டிப்ளோமாவைப் பெற, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BDS படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அழகியல் பல் மருத்துவத்தில் டிப்ளமோ: அழகியல் பல் மருத்துவம் BDS பட்டதாரி மாணவர்களுக்கு மற்றொரு பிரபலமான டிப்ளமோ படிப்பு ஆகும். இந்த டிப்ளமோ பல் மருத்துவர்களுக்கு புதிய கல்வித் திறன்களையும் அறிவையும் வழங்குகிறது மற்றும் அழகுப் பல் மருத்துவ உலகில் அவர்களின் சிறப்பை மேம்படுத்துகிறது. இந்த திட்டம் கற்பித்தல் மற்றும் ஆதார அடிப்படையிலான கொள்கைகள் மற்றும் அமைப்புகளைப் பயிற்சி செய்வதில் அதிக கவனம் செலுத்துகிறது. வாய்வழி உள்வைப்பு மருத்துவத்தில் முதுகலை சான்றிதழ் (PGCOI): இந்த டிப்ளமோ படிப்புக்கான கால அளவு 1 வருடம் (குறைந்தபட்சம்) மற்றும் நவீன மற்றும் மேம்பட்ட உள்வைப்பு பாடங்களில் நிபுணத்துவத்தை வழங்குகிறது. இந்த பாடத்திட்டமானது உள்வைப்பு சிகிச்சை முறைகளின் பரந்த அளவை உள்ளடக்கியது மற்றும் கற்பித்தல் அடிப்படையிலான நடைமுறையை அடிப்படையாகக் கொண்டது. வாய்வழி உள்வைப்பு மருத்துவத்தில் முதுகலை சான்றிதழ் (PGCOI): வாய்வழி மற்றும் மாக்ஸில்லோஃபேஷியல் அறுவை சிகிச்சை & வாய்வழி உள்வைப்பு. கன்சர்வேடிவ் எண்டோடோன்டிக்ஸ் & அழகியல் பல் மருத்துவம். பீரியடோண்டாலஜி & வாய்வழி உள்வைப்பு. வாய்வழி மருத்துவம் & கதிரியக்கவியல். பொது சுகாதார பல் மருத்துவம் & தடுப்பு பல் மருத்துவம். ஆர்த்தோடான்டிக்ஸ் & டெண்டோஃபேஷியல் எலும்பியல். புரோஸ்டோடோன்டிக்ஸ் கிரவுன் பிரிட்ஜ் & வாய்வழி உள்வைப்பு. எண்டோடோன்டிக்ஸில் முதுகலை சான்றிதழ் (PGCE): இந்த படிப்பை பயில விரும்பும் விண்ணப்பதாரர் பி.டி.எஸ் மருத்துவராகப் பதிவு செய்திருக்க வேண்டும் மற்றும் அவரது இன்டர்ன்ஷிப் திட்டத்தை முடித்திருக்க வேண்டும். அவரது பட்டத்தை இந்திய பல் மருத்துவ கவுன்சில் அங்கீகரிக்க வேண்டும். இது ஒரு வருட சான்றிதழ் திட்டமாகும், இது பல்கலைக்கழக தரத்தின்படி 30 வரவுகளை உள்ளடக்கியது மற்றும் இந்திய பல் மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டது. ஒப்பனை பல் மருத்துவத்தில் பெல்லோஷிப்: இந்த டிப்ளமோ பொது பல் மருத்துவர்களுக்கு அனைத்து நோயறிதல், சிகிச்சை, நோயாளி பராமரிப்பு மற்றும் திட்டமிடல் முடிவுகளுக்கு அறிவியல் அடிப்படையிலான பகுத்தறிவை வழங்குகிறது. இதன் காலம்: 6 மாதங்கள் ஆன்லைனில், 4 வாரங்கள் தொடர்பு திட்டம். நீங்கள் அடிப்படை வாய் அறிவியல், ஒப்பனை பல் மருத்துவம் பற்றிய மேம்பட்ட அறிவைப் பெறுவீர்கள். நவீன அழகியல் சிகிச்சை முறைகள் பற்றிய உங்கள் அறிவையும் இந்த பாடநெறி மேம்படுத்துகிறது. இதற்கெல்லாம் மாற்றாக, ஒருவர் டெல்லியில் உள்ள பல் மருத்துவ மனையில் உள்ள பல டிப்ளமோ படிப்புகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்யலாம். டெல்லி பல் மருத்துவ நிறுவனம், சர்வதேச தரத்தை நன்கு அறிந்த மற்றும் முதுகலைப் பட்டதாரி மாணவர்களுக்கு கற்பித்ததில் பல தசாப்தங்களாக அனுபவமுள்ள பல மூத்த MDS நிபுணர்களைக் கொண்டுள்ளது. பொதுவான, ஆண்டு கால படிப்புகளைத் தவிர, வார இறுதி க்ராஷ் படிப்புகள், ஒருங்கிணைந்த பல் மருத்துவப் படிப்புகள் மற்றும் பல்வேறு குறுகிய மற்றும் நீண்ட கால பல் மருத்துவப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. வார இறுதி படிப்புகள்: நடைமுறை செயல் விளக்கம். டைபோடான்ட்களுக்கு தயார் செய்ய கற்றுக்கொடுத்தல். ரோட்டரி கருவிகளின் பயன்பாடு. ஒருங்கிணைந்த படிப்புகள்: ப்ரோஸ்டோடோன்டிக்ஸ் (மறுசீரமைப்பு மற்றும் புன்னகை வடிவமைத்தல்) எண்டோடோன்டிக்ஸ் (பல் மற்றும் வேர் கால்வாய்) உள்வைப்பு (புரோஸ்டெசிஸ் மற்றும் பல் உள்வைப்புகளை ஆதரிக்கும் கூறுகள்) குறுகிய மற்றும் நீண்ட கால படிப்புகள்: மறுசீரமைப்பு மற்றும் அழகியல் பல் மருத்துவம் விரிவான எண்டோடோன்டிக்ஸ் பல் உள்வைப்புகள் ரோட்டரி எண்டோடோன்டிக்ஸ் புரோஸ்டோடோன்டிக்ஸ் (நிலையான மற்றும் அகற்றப்பட்டது) லேசர் பல் மருத்துவம். மேற்கண்ட படிப்புகளில் இருந்து உங்களுக்கு பொருத்தமான படிப்புகளை நீங்கள் தேர்ந்தெடுத்து படிக்கலாம். இது பற்றிய கூடுதல் தகவல்களை பற்றி தெரிந்துகொள்ள நீங்கள் கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்யவும். Educationguide Team Leave a Reply Cancel reply You must be logged in to post a comment. Blog கல்வி ஈடுபாட்டில் திரை நேரத்தை நிர்வகிப்பதற்கான முக்கிய நடைமுறைகள Educationguide Team October 21, 2021 இன்றைய காலகட்டத்தில் வீடு, உணவகம், பூங்கா, சுரங்கப்பாதை, பேருந்து பயணம் மற்றும் பிற செயல்பாடுகள் ஆகியவற்றில் எங்கு பார்த்தாலும், ஸ்மார்ட்போன்கள் அல்லது டேப்லெட்களில் டிஜிட்டல் மீடியாவுடன் பெற்றோர்களும் சிறு குழந்தைகளும் தொடர்புகொள்வதை நீங்கள் பார்க்க முடியும். இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 38 சதவிகிதமும், இரண்டு முதல் நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 80 சதவிகிதமும் மொபைல் ஊடக சாதனத்தைப் பயன்படுத்தியுள்ளனர். டிஜிட்டல் மீடியா குடும்ப உறுப்பினர்களை ஒருவருக்கொருவர் தனிமைப்படுத்துவது போல் தோன்றினாலும், அது (சரியான முறையில் பயன்படுத்தப்படும் போது) […] Read More Blog Enhancement of working environment for teachers Educationguide Team August 28, 2021 ஆசிரியர்களுக்கான வேலை நிலைமைகளை மேம்படுத்துதல்: கல்வி அமைப்புகளில் மனித வள மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளிப்பதன் அவசியத்தை மிகைப்படுத்த முடியாது. கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கு நேரடியாக பங்களிக்கும் செயலுக்கான உத்திகளில், ஆசிரியர்களின் தொழில் வளர்ச்சி மற்றும் அவர்களின் வேலை மற்றும் வேலைவாய்ப்பு நிலைகளை மேம்படுத்துவதில் ஒரு நிலையான முதலீடு உள்ளது. ஆசிரியர்களின் நிலைக்கும் கல்வி நிலைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஆசிரியர்கள் வகுப்பறையில் குழந்தைகளுடன் தங்கள் வேலையை மேம்படுத்தும் பணியில் ஆதரவளித்தால் மட்டுமே குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான இயக்கத்தில் […] Read More Blog கல்வி நிறுவனத்தின் மார்கெட்டிங்கில் எஸ்.இ.ஓ. Educationguide Team April 9, 2021 தேடுபொறி உகப்பாக்கம் (SEO)சந்தைப்படுத்தல் வியூகத்தின் முக்கிய பகுதியாக மாறுவது கல்வி சுற்றுச்சூழல் அமைப்புக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று தோன்றலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, பள்ளிகள் ஏன் தங்களை சந்தைப்படுத்த வேண்டும்? என்ற கேள்வி கூட நமக்கு தோன்றலாம். ஆனால் இன்றைய சூழ்நிலையில் ஒரு பள்ளி அல்லது கல்லூரி போன்ற ஒரு கல்வி நிறுவனத்தின் விளம்பர தேவைக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொழில்நுட்பம் மிக அவசியமாக தேவைப்படுகிறது. தற்காலத்தில் உள்ள சூழ்நிலைகள் காரணமாக, விளம்பர அணுகுமுறையின் ஒரு பகுதியாக ஒரு […]
சூப்பர் வில்லன் (!?) தானோஸின் ஒரே ஒரு சொடுக்கினால் கரைந்து போன பாதிக்கும் மேற்பட்ட மனித இனத்தை மீட்க, எஞ்சியிருக்கும் அவெஞ்சர்ஸ் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்கின்றனர். இறுதியில் சூப்பர் ஹீரோகளுக்கே வெற்றி! முடிவு சுபம் தான் எனினும், அந்த வெற்றியை அடைய அவர்கள் மேற்கொள்ளும் அந்த உணர்ச்சிகரமான பயணம், இந்தப் படத்தைத் திரையுலக வரலாற்றின் மிக முக்கியமான படமாக உயர்த்துகிறது. ரூசோ சகோதரர்களின் இயக்கத்தில், சூப்பர் ஹீரோ படம் புதிய பரிமாணத்தைப் பெற்றுள்ளது என்றே சொல்லவேண்டும். அவெஞ்சர்ஸில் சிலர் அதி சக்தி படைத்தவர்கள், சிலர் மிகவும் புத்திசாலிகள், சிலர் நவீன உபகரணங்களுடன் தங்கள் பராக்கிரமத்தை உயர்த்திக் கொண்டவர்கள். அவர்கள் அனைவரையும் இணைக்கும் ஒரு புள்ளி என்றால், ஒரு குடும்பமாக இணைந்து உலகைக் காக்கவேண்டுமென்ற அவர்களது எண்ணமே. எத்தனை புரிதலின்மைகள் உருவாகி உரசிக் கொண்டாலும், இறுதியில் ஒற்றுமையாக மனிதக்குலத்திற்காகக் இணைவதால் தான் அவர்கள் சூப்பர் ஹீரோகள். சிவில் வாரில் ஜென்ம விரோதியாக மாறிவிடும் அயர்ன் மேனும், கேப்டன் அமெரிக்காவும், எண்ட்கேமில் தோளோடு தோள் உரசி தானோஸிற்கு எதிராய் அணி திரள்வது மிக அழகு. அதீத சக்தி ஒன்றே ஒருவரை சூப்பர் ஹீரோவாக்கிவிடாது. ஈக்கள் மொய்ப்பது போல் அத்தனை சூப்பர் ஹீரோக்கள் ஒன்று சேர்ந்தாலும், தானோஸ்க்கு எவருமே நிகரில்லை என்றே சொல்லவேண்டும். சூப்பர் ஹீரோகளிடம் உள்ள பலவீனமோ, குழப்பமோ தானோஸ்க்குக் கிடையாது. தானோஸைப் போல் ஒரு வில்லன் பாத்திரத்தைத் திரையில் காண்பது அலாதியான அனுபவமாக உள்ளது. தானோஸ் ஒரு கர்மயோகி. விருப்பு வெறுப்பில்லாமல், பிரபஞ்ச நலனை மட்டுமே லட்சியமாகக் கொண்டவர். யார் மீதும் அவருக்குத் தனிப்பட்ட வெறுப்பில்லை. பூபாரத்தைக் குறைக்க பாரதப்போர் அவசியமென காய்களை நகர்த்திய கிருஷ்ணனுக்கும், தானோஸ்க்கும் பெரிய வித்தியாசமில்லை. தன் சுயநலத்திற்காக, தனது அதீதமான சக்தியைத் தானோஸ் எங்கும் பயன்படுத்துவதில்லை. Power comes with responsibility என்பதை எந்த சூப்பர் ஹீரோவையும் விட நன்றாக உணர்ந்து செயல்படுபவர். அதனால்தான் தனது கடமை முடிந்ததும், முதற்காரியமாக, பேராயுதமாக விளங்கும் இன்ஃபினிட்டி கற்களை அழிக்கிறார் தானோஸ். திரைக்கதையாசிரியர்களான கிறிஸ்டோஃபர் மார்க்கஸும், ஸ்டீஃபன் மெக்ஃபீலியும் அசத்தியுள்ளனர். ஆக்‌ஷன் ஃபேண்டஸியாய் நினைவில் நிற்கவேண்டிய படத்தை, உணர்ச்சிகரமான காவியமாக்கி உள்ளனர். ‘நீங்க மட்டும்தான் பிரபஞ்சத்தில் இருக்கீங்களா? எனக்கு மற்ற உலகங்களையும் காப்பாத்த வேண்டிய கடமையிருக்கு இல்ல?’ எனக் கேட்கிறார் கேப்டன் மார்வெல். தானோஸின் சொடுக்கினால், பூபாரம் மட்டும் குறைவதில்லை, பிரபஞ்சத்தின் பாதி உயிரினங்கள் கரைந்துவிடும். ஆனாலும், பூமிக்கு அந்நியரான கேப்டன் மார்வெலுக்கு, ‘இது பிரபஞ்ச பிரச்சனையில்லை. மனிதர்களின் முடிந்துவிட்ட பிரச்சனை. இனி செய்வதற்கு ஒன்றுமில்லை’ என்றளவே டீல் செய்கிறார். ஆக, இது மனிதர்களின் பிரச்சனை மட்டுமே என அவெஞ்சர்ஸ் தனித்து விடப்படுகின்றனர். பிளாக் விடோ, ஆன்ட் மேன், கேப்டன் அமெரிக்கா, நெபுலா, ராக்கெட், ஹல்க், ஹாக் ஐ, அயர்ன் மேன், தோர் ஆகியோர் குவாண்ட்டம் வெளிக்குள் நுழைந்து கடந்த காலத்திற்குள் செல்கின்றனர். மிகவும் அட்டகாசமான காட்சிகள் அவை. இரண்டு கேப்டன் அமெரிக்காகள் சந்திக்குமிடம், அயர்ன் மேன் தன் தந்தை ஹோவார்ட் ஸ்டார்க்குடன் பேசுமிடம், ஆத்மாவின் கல்லிற்காக பிளாக் விடோவும், ஹாக் ஐயும் போட்டி போடும் காட்சி, தி ஏன்ஷியன்ட் ஒன்னுடன் ஹல்க் உரையாடுமிடமென படத்தின் ஃபேண்டஸியை உணர்வுபூர்வமாகச் சித்தரித்துள்ளனர். வாவ்.! அவெஞ்சர்ஸின் கடந்த காலப் பயணம் அட்டகாசம் எனில், எதிர்காலத்திற்கு வரும் தானோஸின் பயணம் ஆர்ப்பாட்டமாய் உள்ளது. மார்வெல் சூப்பர் ஹீரோகள் அனைவரையும் கொண்டு வந்து, தானோஸின் படைகளோடு ஒரு யுத்தக்காட்சி வைத்துள்ளனர். டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், ஸ்பைடர் மேன், பிளாக் பேன்த்தர், ஃபால்கன், வாஸ்ப் என ஒருவர் பாக்கியில்லாமல் யுத்தத்தில் கலந்து கொள்கின்றனர். அனைவரும் மாயாஜாலத்தால் உருவாக்கப்படும் புழுத்துளையில் இருந்து வருவதைப் பார்க்கப் பரவசம் எழுந்தாலும், சூப்பர் ஹீரோகள் எளிய மனிதர்களாய், குடும்பத்திற்காகவும், குடும்பத்தை இழந்த கோடிக்கணக்கான மனிதர்களுக்காகவும் எடுக்கும் துணிகரமான தியாகத்திற்கு முன், அந்த யுத்தக்காட்சி பெரிதும் கவரவில்லை. அதே போல், 3டி எஃப்ர்க்ட்ஸை மருந்துக்கும் உணர முடிவதில்லை. போர் முடிந்த பின்பும், படம் நிதானமாய் முடிகிறது. வாழ்க்கை என்பது போரையோ, பிரச்சனைகளையோ வெல்வதிலில்லை; மனிதிற்கு அணுக்கமானவர்களோடு மகிழ்ச்சியாக வாழ்வதே! அப்படி வாழ்ந்து, மற்றவர்களும் அப்படி வாழ உதவுபவர்களே சூப்பர் ஹீரோகள். பி.கு.: டிஸ்னி இந்தியா, அயர்ன் மேனுக்கு விஜய் சேதுபதியை டப்பிங் செய்யவைத்து, மார்வெல்லின் அசாதாரணமான ஒரு சூப்பர் ஹீரோக்கு இத்தகைய மாபெரும் துரோகத்தை இழைத்திருக்க வேண்டாம். அந்தத் துரோகத்தையும் மீறி, அயர்ன் மேன் தனது பணியினை நிறைவாகச் செய்துமுடிப்பது சிறப்பு. TAGAvengers Avengers endgame review Avengers endgame Tamil thiraivimarsanam Avengers endgame vimarsanam in Tamil Done Media Hollywood movie review in Tamil Hollywood movie vimarsanam Hollywood movie vimarsanam in Tamil Russo bothers தானோஸ் விஜய் சேதுபதி
உப்பும், நீரும் நம் உணவில் மிகவும் இன்றியமையாததது என்பது எல்லோரும் அறிந்ததே. உப்பில்லாப் பண்டம் குப்பையிலே, உப்புள்ள பண்டம் தொப்பையிலே என்ற கொச்சையான பழமொழி நாம் உணவில் உப்பிற்குக் கொடுக்கும் மதிப்பை காட்டுகிறது. அளவுக்கு மிஞ்சினால் அமிருதமும் விஷமாகும் என்பது போல் நமது உணவில் உப்பின் அளவு அதிகரித்து விட்டதால் நோய்களும் அதிகரித்து விட்டன என்று நவீன மருத்துவம் கூறுகிறது. ரத்தத்தில் உப்பின் அளவு பொதுவாக உடல் நீரின் அளவை எடுத்துக் காட்டுவதாகவே உள்ளது. உதாரணமாக, சோடியம் அளவு வரம்புக்கு மீறி இருந்தால் உடல் நீர் வற்றியுள்ளது என்று அறிகிறோம். சோடியம் அளவு குறைந்தால் உடலில் சேர்ந்துள்ள நீர் அதிகரித்துள்ளது என்பது விளங்கும். மருத்துவர்கள் ரத்த அழுத்தத்திற்கு உப்பையே முக்கியக் காரணமாகச் சொல்கின்றனர். மேலும் இருதயக் கோளாறு, சிறுநீரகக் கோளாறுகளினால் ஏற்படும் நீர் வீக்கத்திற்கு மருத்துவ நிவாரணம், உப்பைக் குறைப்பதும், உப்பைச் சிறுநீர் மூலமாக வெளியேற்றும் மருந்துகளை உட்கொள்ளுவதுமேயாகும். ரத்த அழுத்தம் உள்ள எனது மருத்துவ நண்பர் ஒருவர் திடீரென்று ரத்த அழுத்தம் அதிகமாகி, மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்தம் மூலமாக உப்பை வெளியேற்றும் மருந்தைச் செலுத்திய பின்னரே ரத்த அழுத்தம் குறைந்தது. இதற்குக் காரணம், வீட்டில் வெள்ளையடித்துக் கொண்டிருந்ததால், வீட்டுச் சமையலில்லாமல் 3 நாட்கள் வெளி உணவகத்தில் உண்டதேயாகும். வீட்டில் உபயோகிக்கப்படும் உப்பின் அளவு பத்து சதவீதமே. மீதி உப்பு பக்குவப்படுத்தப்பட்ட உணவின் மூலமும் வெளி உணவகங்களில் உண்ணுவதின் மூலமே நம் உடம்பில் சேர்கிறது என்று ஒரு குறிப்பு அறிவிக்கிறது. மேற்கூறியவற்றிலிருந்து உப்பும் நீரும் இணைந்தே உடலில் வேலை செய்வது தெரிகிறது. இக்கட்டுரையை மேலெழுந்தவாரியாக படித்தால் ரத்த அழுத்தம் இல்லாதவர்களுக்குக் கூட தலை சுற்றலாம். ஆதலால், இது நிதானமாக, கவனத்துடன் படிக்க வேண்டிய கட்டுரை. மருத்துவர்களும் மருத்துவர்களல்லாதவர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய பல புதிய விஷயங்களை இக்கட்டுரைக்கு ஆதரமாயுள்ள இரண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகள் கண்டறிந்துள்ளன. உணவில் உப்பு அதிகரித்தால் தாகம் அதிகரிக்கும். அதனால் அருந்தும் நீரின் அளவு அதிகரிக்கும். அதிகப்படியான தண்ணீரும், உப்பும் சிறுநீரகத்தால் சேர்ந்தே வெளியேற்றப்படும் எனபதே 200 வருடங்களாக மருத்துவம் சொல்லித்தரும் பாடம். உப்பும், நீரும் உடல் நலத்திலும், உடல்நலக் குறைவிலும் ஒருங்கிணைந்தே வேலை செய்கின்றன. இவ்வாறிருக்க, அண்மையில் வெளியான இந்த இரண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகள் உப்பும், நீரும் நாம் நினைப்பது போல் நம் உடலில் இணை பிரியாத் தோழர்கள் அல்ல என்று கூறுகிறது. 200 வருடங்களாக மருத்துவர்களுக்கு போதிக்கப்பட்டு வருவதற்கு எதிமாறாக உள்ளன இந்த ஆராய்ச்சியின் முடிவுகள். ஆராய்ச்சியாளர்கள் எவ்வாறு இந்த முடிவிற்குவந்தார்கள் என்பதை இனி பார்ப்போம். இந்த ஆராய்ச்சியில் முக்கியமான நபர், ஜென் டிட்ஸ் எனும் மருத்துவர். தற்போது அமெரிக்காவில் வாண்டர்பில்ட் பல்கலைக் கழகத்தில் சிறுநீரக மருத்துவ நிபுணராகவும், ஜெர்மானிய ஆராய்ச்சி மையம் ஒன்றிலும் பணி புரிகிறார். 1991ல் இவர் இரண்டாவது வருட மருத்துவ மாணாக்கராக இருந்த சமயம் உயிரியல் வகுப்பில் “தீவிரமான சூழ்நிலையில் நமது உடலியக்கம் ” என்ற தலைப்பில் விண்வெளிப் பயணிகள் முற்றும் விண்வெளிச் சூழலாய் அமைந்த பரிசோதனைக் கூடத்தில் 28 நாட்கள் கழிப்பதனால் ஏற்படும் விளைவுகளை பற்றிக் கற்றறிந்தார். அதற்காகச் சேகரிக்கப்பட்ட தகவல்களில் அப்பயணிகளின் சிறுநீர் அளவு ஒரே சீராக இல்லாமல் ஒரு வாரம் உயர்ந்தும், மறு வாரம் குறைவதுமாக மாறி மாறி இருந்தது. இது உயிரியல் புத்தகத்தில் படித்ததற்கு முரண்பாடாக இருந்ததால அவரிடம் குழப்பத்தையும், ஆர்வத்தையும் உண்டு பண்ணியதோடல்லாமல், ஒரு கேள்விக் குறியாகவும் மாறியது. இதுதான் அவருடைய 10 வருட ஆராய்ச்சியின் தொடக்கம். மூன்று வருடங்களுக்கு பின்னர், ரஷ்ய நாட்டு விண்வெளி வீரர்கள் 105 நாட்கள் மிர் விண்வெளிக்கூடத்தில் 135 நாட்கள் தங்கப்போகிறார்கள் என்று தெரிந்தவுடன் அவர்களது சிறுநீர் போக்கையும், உப்பு சேர்க்கையினால் சிறுநீர் ஓட்டம் எவ்வாறு பாதிக்கப்படுகின்றது என்பதையும் பரிசீலனைசெய்வதற்கு அனுமதி பெற்று தானும் அவர்களுடன் உடனிருந்து ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். உப்பின் அளவு 28 நாட்களுக்கொரு முறை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தது. ஆனால் சிறுநீரின் அளவு, உப்பின் ஏற்ற இறக்கத்திற்குத் தக்கவாறில்லை. பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் அதே மையத்தில் விண்வெளி வீரர்கள் 105 நாட்களும், 205 நாட்களும் உள்ளிருப்பார்கள் என்ற அறிவிப்பு வெளிவந்தவுடன், ஜென் டிட்ஸ் மேற்கூறிய பரிசோதனையைச் சில மாற்றங்களுடனும் சீர்திருத்தங்களுடனும் திரும்ப மேற்கொண்டார். உணவில் 12 கிராம், 9 கிராம், 6 கிராம், 12கிராம் உப்பை 28 நாட்கள் சேர்ப்பதனால் ஏற்படும் விளைவுகளை ஆய்வு செய்ததில் கண்ட முடிவுகள் முந்தைய பரிசோதனையுடன் ஒத்தே இருந்தன. உப்பின் அளவு 6 கிராமிலிருந்து 12 கிராமாக அதிகரிக்கப்பட்டபோது, சிறுநீரகங்கள் வடிகட்டும் நீரின் அளவு அதிகரித்ததினால், உட்கொள்ளும் நீரின் அளவும் சிறுநீரின் அளவும் குறைந்திருந்தது. ஆனால், சிறுநீரில் வெளியேறிய உப்பின் அளவு அதிகமாயிருந்தது. ஒரு வாரம் கழிந்த பின் உப்பின் அளவும், அருந்தும் நீரின் அளவும் மாறாமலிருந்தும், சிறுநீரின் அளவும், யூரியா எனும் உப்பின் அளவும் அதிகரித்திருந்தது. இந்த அமைப்பு வாரத்திற்கொரு முறை மாறி மாறி வந்தது தெளிவாகத் தெரிந்தது. முதல் வாரத்தில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு காரணம், ஆல்டக்டோன் எனும் ஹார்மோன் என்றும், இரண்டாவது வார மாற்றங்களுக்குக் காரணம், கார்டிசோன் என்று சொல்லப்படும் குளுகோகார்டிகாய்ட் ஹார்மோன் என்பதும் இவைகளின் அளவு மாற்றங்களிருந்து தெரிந்தது. மேலும் விண்வெளி வீரர்கள் 12 கிராம் உப்புள்ள உணவை உண்ட நான்கு வாரங்களிலும் அதிகப் பசியுடன் இருந்தார்கள்.. உணவின் அளவு பசிக்கேற்றவாறு அதிகரிக்கப்படாததால், அவர்களின் எடையும் குறைந்திருந்தது. இந்த மாற்றங்களுக்கு இப்பரிசோதனையின் மூலம் விடை காண முடியாததால், சுண்டெலிகள் இப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இந்தச் சுண்டெலிகளுக்கு முதல் இரண்டு வாரங்கள் உப்பு குறைவாயுள்ள உணவும், தண்ணீரும், அடுத்த இரண்டு வாரங்களுக்கு உப்பு அதிகமாயுள்ள உணவும், உப்புத் தண்ணீரும் கொடுக்கப்பட்டன. விண்வெளி வீரர்களுடைய பரிசோதனை முடிவுகளையே, சுண்டெலிகளின் பரிசோதனை முடிவுகளும் ஒத்திருந்தன. உப்பின் அளவு அதிகரித்தபோதிலும் சிறுநீரின் அளவு ஏறவில்லை. ஆனால் சிறுநீரில் உப்பின் அளவு அதிகரித்திருந்தது. ஒரு வாரம் கழிந்த பின்னர் உப்பின் அளவும் அருந்திய தண்ணீரின் அளவும் மாறாவிடினும், சிறுநீரின் அளவு அதிகமாயிருந்தது. உப்பின் அளவு உணவில் அதிகரிக்கப்பட்டவுடன், உண்ட உணவின் அளவும் அதிகமாகியது. இந்த மாற்றங்களுக்கு முக்கியமான காரணம் யூரியா உப்பு என்பதும் நிச்சயமானது. முதல் வாரத்தில் உப்பின் அளவு அதிகரிக்கும்போது யூரியாவின் அளவு சிறுநீரில் குறைவாய் இருந்தது. இதற்கு காரணம் சிறுநீரகங்கள் யூரியா உப்பை உள்ளிழுத்துக் கொள்வதன் மூலம் உட்கொண்ட நீரையும் உடலில் தங்க வைத்து கொள்கிறது என்பது தெளிவாயிற்று. இதனால்தான் உப்பின் அளவு உணவில் அதிகரிக்கும்போது உப்பு வெளியேறும் அளவுக்கு நீர் வெளியேறுவதில்லை. இரண்டாவது வாரம், சிறுநீரின் அளவு அதிகமாவதற்கு காரணம் கார்டிசோன் தசையிலிருந்தும் கொழுப்பிலிருந்தும் வெளிக்கொணர்ந்த யூரியாவை வெளியேற்ற சிறுநீரகங்களுக்கு தேவையான நீராகும். இந்த நீரும் கொழுப்பிலிருந்தும் சதையிலிருந்துமே வெளிக் கொணரப்பட்டது. யூரியாவையம், நீரையும் வெளிக்கொண்டு வருவதற்குக் கூடுதலான சக்தி தேவைப்படுகிறது. இதுவே உப்பின் அளவு கூட்டப்பட்டபோது விண்வெளி வீரர்களின் பசி அதிகரித்ததற்கும், எடை குறைந்ததற்கும் சுண்டெலிகளின் உணவு அளவு கூடியதற்கும் காரணமாகும். இந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளின் முடிவுகள் சிறுநீரக மருத்துவத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதில் சநதேகமேயில்லை. மருத்துவரல்லாதவர்களும் அறிய வேண்டிய பல விஷயங்கள் இந்த ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளன. உணவில் உப்பு அதிகமானால் அருந்தும் நீரளவும் அதிகமாகும். ஆனால், அந்த நீரும் உப்பும் சேர்ந்து வெளியேறும் என்பது சரியல்ல என்று இந்த ஆராய்சசி அறிவிக்கிறது. உப்பு நாக்கில் உள்ள உணர்விகளைத் தூண்டி, தாகத்தையும் உண்ணும் நீரையும் அதிகரித்தாலும், சிறுநீரகங்கள் அதிகப்படியான உப்பை வெளியேற்றும் அதே சமயத்தில், அதிகப்படியான நீரை உடலில் தேக்குவதால் நீர் வீக்கம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. உணவில் உப்பு அதிகரித்தால் ரத்த அழுத்தம் உள்ளவர்களின் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது என்பது உண்மையானாலும், இது அருந்திய நீரின் அளவு உடலில் அதிகரித்தலாலும் இருக்கலாம் என்பதை மருத்துவர்கள் நினைவிற் கொண்டால் ரத்த அழுத்த மாத்திரையை அதிகரிப்பதற்கு பதிலாக இந்த நீரை சிறுநீரகங்கள் மூலமாக வெளியேற்றும் மாத்திரையை அதிகரிக்க இயலும். மேற்சொன்ன எனது மருத்துவ நண்பரின் ரத்த அழுத்தத்தைக் குறைத்தது நீரையும் உப்பையும் சேர்த்து வெளியேற்றும் மருந்தேயாகும் என்பதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும். நீர் வீக்கத்தை தடுக்க வைத்தியர்கள் பிணியாளர்களின் தினசரி எடை அதிகரிப்பு, ஒரு கிலோவிற்கு மேல் சென்றால் நீரை வெளியேற்றும் மருந்தை அதிகரிக்கச் சொல்வது வழக்கமாய் உள்ளது. இது சிறந்த நிவாரணம். ஏனென்றால் அதிக அளவு உப்பு உணவில் சேர்ப்பது தொடர்ந்து நீடித்தால், இரண்டாவது வாரத்தில் எடை குறைய வாய்ப்பு இருப்பதால் அது நீர் வீக்கம் அதிகரித்திருப்பதை மறைத்து விடலாம். இந்த ஆராய்ச்சியின் முக்கியமான அம்சம் அதிக அளவு உப்பை தொடர்ந்து உணவில் சேர்ப்பதால் ஏற்படும் தீய விளைவுகள் மீது நம் கவனம் குவிக்கப்படுவதே ஆகும். அவைகளில் முக்கியமானது கார்டிஸோன் சுரப்பு அதிகமாவதும் அதன் மூலம் கொழுப்பிலிருந்தும் சதையிலிருந்தும் நீர் வெளியேற்றப்படுவதும் ஆகும். கார்டிசோன் அளவு அதிகரிப்பதால், சர்க்கரை வியாதி, எலும்புத்தேய்வு போன்ற வியாதிகள் ஏற்படும். மேலும் பசி அதிகரிப்பதால், உண்ணும் உணவு அளவு மீறினால் எடையேற்றமும் உணவு பற்றாமலிருந்தால் எடையிறக்கமும் ஏற்படக்கூடும் ஆதாரங்கள்: Why Everything We Know About Salt May Be Wrong – The New York Times: மே 8 2017 JCI – Increased salt consumption induces body water conservation and decreases fluid intake, Jens Titze et al: Journal of Clinical Investigation: April 17, 2017 JCI – High salt intake reprioritizes osmolyte and energy metabolism for body fluid conservation: Kento Kitada, Jens Titze et al: Journal of Clinical Investigation: April 17, 2017. ~oOo~ பகிர்க Tweet WhatsApp Email Print Related Leave a Reply Cancel reply This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed. Post navigation Previous Previous post: ஒரு படத்தைப் பார்த்து அது என்னவென்று எப்படி கணினி கண்டுபிடிக்கிறது? Next Next post: நாம் ஏன் போரிடுகிறோம் தேடு… தேடு … படைப்புகளும் பகுப்புகளும் படைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவக் கட்டுரை அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அயல் விழா அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-241 இதழ்-242 இதழ்-243 இதழ்-244 இதழ்-245 இதழ்-246 இதழ்-247 இதழ்-248 இதழ்-249 இதழ்-25 இதழ்-250 இதழ்-251 இதழ்-252 இதழ்-253 இதழ்-254 இதழ்-255 இதழ்-256 இதழ்-257 இதழ்-258 இதழ்-259 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய வரலாறு இலக்கிய விமர்சனம் இலக்கியக் கட்டுரை இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தழுவல் கட்டுரை தாவரவியல் தாவரவியல் கட்டுரை திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நிதி நிர்வாகக் கட்டுரை நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாரதியியல் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொடுவா நாட்டார் கலை பொருளாதாரக் கட்டுரை பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்பு நாவல் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் ரஷ்யச் சிறுகதை லயம் வங்க ஓவியங்கள் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வான் இயற்பியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேதியியல் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized எழுத்தாளர்கள் எழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அகிலா ஆ. அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அஞ்சலி ஸச்தேவா அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அருண்குமார் மகோபாத்யாய் அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அவீக் சாட்டர்ஜீ அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆடம் இஸ்கோ ஆண்டனி கில் ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் குமார் ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆன்டன் செகாவ் ஆமிராபாலன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்ட் கார்டென் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி ஆஸ்டின் சௌந்தர் இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா முருகன் இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலட்சுமிநாராயணன் இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உ நரசிம்மன் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உலகளந்த பெருமாள் உஷா தீபன் usha vaidyanathan உஷாதீபன் எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் எம்.டி வாசுதேவன் நாயர் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் எஸ் சியூயீ லு Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐரோம் சானு சர்மிளா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கஞ்சனூர் கவிப்ரியா கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட்ராமன் கண்ணன் இராமநாதன் கதீர் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா கா.ரபீக் ராஜா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ காரலின் கொர்மான் கார்த்தி கார்த்திக் கிருபாகரன் கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கி. ராஜநாராயணன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரி எஸ். நீலகண்டன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கூம் கூம் ராய் கெ.ம.நிதிஷ் கென் லூ கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச. சிவபிரகாஷ் ச.திருமலைராஜன் சக முத்துக்கண்ணன் சக்தி சட்டோபாத்யாய சக்தி விஜயகுமார் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சந்திரா நல்லையா சமயவேல் சமரேஷ் மஜும்தார் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.பாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி சியாம் பாரதி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுகாந்தொ பட்டாச்சார்யா சுகுமார் ராய் சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுதா ஶ்ரீநிவாசன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுபிமல் மிஸ்ரா சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜான்டி ஹார்னெர் ஜான்பால் ரொசாரியோ ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜாஷுவா ராத்மான் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜிஃப்ரி ஹாசன் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஆர்ச்சர் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேன் ஹெர்ஷ்ஃபீல்ட் ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜொய் கோஸ்வாமீ ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டெம்சுலா ஆவ் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த. நரேஸ் நியூட்டன் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தஸ்லிமா நஸ்ரின் தாட்சாயணி தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் திலீபன் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தென்கரை மகாராஜன் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் தைஸ் லைஸ்டர் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நளினி நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு ravishankar குழு பத்மகுமாரி பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்மா ஸச்தேவ் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி பா ராமானுஜம் Pa Saravanan பா.சுதாகர் பா.தேசப்பிரியா பானு கபில் பானுமதி ந. பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் பீஷ்ம சாஹ்நி புதியமாதவி புதுமைப்பித்தன் புத்ததேவ போஸ் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணற்காடர் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுமிதா மதுரபாரதி மதுரா மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் அரவிந்த டி ரெங்கநாதன் மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலேசியா ஸ்ரீகாந்தன் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மாயா ஏஞ்சலொ மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ம இராமச்சந்திரன் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோதி நந்தி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரக்ஷன் கிருதிக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரபீந்திர நாத் தாகூர் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமநாத் ராய் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ரிச்சர்ட் ரூஸ்ஸோ ருகையா ஷகாவத் ஹுசென் ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோகிணி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லாவண்யா சுந்தரராஜன் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வர்ஜீனியா வுல்ஃப் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜயகுமார் சம்மங்கரை விஜயலக்ஷ்மி விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வீ. வைகை சுரேஷ் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே. சுவேக்பாலா வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷாங்க்யா கோஷ் ஷாதிர் ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸிர்ஷோ பந்தோபாத்யா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special முந்தைய பதிவுகள் முந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2021 அக்டோபர் 2021 செப்டம்பர் 2021 ஆகஸ்ட் 2021 ஜூலை 2021 ஜூன் 2021 மே 2021 ஏப்ரல் 2021 மார்ச் 2021 பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள் Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email. Email Address Subscribe Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use. To find out more, including how to control cookies, see here: Cookie Policy உங்கள் படைப்புகளை அனுப்ப.. வாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும். எழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.) ஒலிவனம்: Listen to the Fiction: Solvanam Audio ஆன்கர் எஃப்.எம். (anchor.fm) 4 யூடியுப் – ஒளிவனம் (YouTube) 3 ஸ்பாடிஃபை (Spotify) 2 சவுண்ட் கிளவுட் (SoundCloud) 1 கிண்டில் புத்தகங்கள் எழுத்தாளர் அம்பை: சொல்வனம் சிறப்பிதழ்கள் 0 ரொபெர்த்தோ பொலான்யோ ஆக்கங்களும் விமர்சனங்களும் 0 வீடும் வெளியும்: கவிதைகளும் கதைகளும் 0 சிறப்பிதழ்கள் அ.முத்துலிங்கம்: 166 அசோகமித்திரன்: 100 அம்பை: 200 அறி-புனை: 189 இசை: இதழ் 15 க.நா.சுப்ரமணியம்: 75 சிறுகதை 1: 107 சிறுகதை 2: 108 சொ.வ. 250 இதழ் தி.ஜானகிராமன்: 50 தீபாவளி – 2020 தொழில்நுட்பம்: 150 பெண்கள் சிறப்பிதழ் 1: 115 பெண்கள் சிறப்பிதழ் 2: 116 பொலான்யோ: 225 லாசரா & சிசு செல்லப்பா: 86 வங்கச் சிறப்பிதழ் 1: 240 வங்கச் சிறப்பிதழ் II: 241 வி. எஸ். நைபால்: 194 வெங்கட் சாமிநாதன்: 139 ஸீபால்ட்: 204 அதிகம் வாசிக்கப்பட்டவை கவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில வன்னி என் தலைக்கான கொன்றை மரபணு திருத்தங்களும் மனமாற்றங்களும் குன்றிமணி - கொல்லும் அழகு பதிப்பாசிரியர் குறிப்பு வார்த்தை என்பது வசவு அல்ல! அம்பையின் சிறுகதைகள் விடுதலைப் போராட்ட வீரர்: செங்கோட்டை சாவடி S. அருணாசலம் பிள்ளை ஒரு முடிவிலாக் குறிப்பு தொகுப்புகள் நூறு நூல்கள் (4) கி.ரா. – அ.ரா. (3) தீர யோசித்தல் (1) புவிச் சூடேற்றம் (6) காவிய ஆத்மாவைத் தேடி (3) பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் (7) முதலியத்தை எதிர்க்கும் பொதுமம் (4) இவர்கள் இல்லையேல் – நாவல் (6) மிளகு: இரா முருகன் – நாவல் (10) ஹைக்கூ வரிசை (5) தடக் குறிப்புகள் (4) தேர்ந்த வாசகருக்கான படப்புத்தகம் (2) பூமிக்கோள் (6) பய வியாபாரியா ஹிட்ச்காக் (2) காருகுறிச்சி (3) காடு (2) மின்னல் சங்கேதம் (12) வங்கம் (13) பரோபகாரம் (5) மொபைல் தொடர்பாடல் வரலாறு (2) தலை சிறந்த 10 தொழில்நுட்பம் (11) இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (16) வண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2) மற்றவர்களின் வாழ்வுகள் (2) விஞ்ஞான திரித்தல் (30) கைச்சிட்டா (8) நோயாளி எண் பூஜ்யம் (2) ஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2) வேகமாய் நின்றாய் காளி! (5) சட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2) கா மென் (2) இசைபட வாழ்வோம் (2) ஹெரால்ட் ப்ளூம் (4) உலக தத்துவம் (6) வெளி மூச்சு (2) 20xx கதைகள் (16) ஆட்டத்தின் ஐந்து விதிகள் (8) தொடர்கள் 20xx கதைகள் – அமர்நாத் எம். எல். – வண்ணநிலவன் சி.சு.செல்லப்பா – வெ.சா தமிழ் இசை மரபு – வெசா தமிழ் இலக்கியம் – வெ.சா. தெருக்கூத்து – வெ.சா. யாமினி – வெங்கட் சாமிநாதன் Writer Usha Deepan's "Nagarum VeedukaL" short story/ எழுத்தாளர் உஷா தீபனின் சிறுகதை "நகரும் வீடுகள்" - Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் Writer Usha Deepan's "Nagarum VeedukaL" short story/ எழுத்தாளர் உஷா தீபனின் சிறுகதை "நகரும் வீடுகள்" To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2010/11/02/நகரும்-வீடுகள்/ ஒலி வடிவம்: சரஸ்வதி தியாகராஜன்/Voice: Saraswathi Thiagarajan Writer Usha Deepan's "Nagarum VeedukaL" short story/ எழுத்தாளர் உஷா தீபனின் சிறுகதை "நகரும் வீடுகள்" 17:55 Writer L. R Vairavan's " Abhikutti" short story/ எழுத்தாளர் லெ.ரா. வைரவனின் சிறுகதை "அபிக்குட்டி" 14:09 Writer Vidhya Arun's "AthuoruIrulvazichalai" short story/ எழுத்தாளர் வித்யா அருணின் சிறுகதை "அது இருளால் செய்த ஒரு வழிச்சாலை!" 13:40 Writer L. R Vairavan's "ஒத்தப்பனை" short story/ எழுத்தாளர் லெ.ரா. வைரவனின் சிறுகதை "ஒத்தப்பனை" 14:18 ஆங்கில மூலம் டெம்சுலா ஆவின் "Laburnum for my Head" தமிழில் மொழிபெயர்த்தவர் எழுத்தாளர் எம்.ஏ. சுசீலா "என் தலைக்கான கொன்றை" 55:04
கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு பக்க வரிசைப்படுத்தல் | மறுப்பு பதிப்புரிமை © 2012-2021 | கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு
திருமணத்திற்கு வரன் தேடுகிறீர்களா? - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW தமிழக - கர்நாடக எல்லைப்பகுதி கிராமத்தை சார்ந்தவர், கர்நாடக மாநிலத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள ராம்நகர் மாவட்டம் கனகபுரா குனசனஹள்ளி கிராமம் தமிழக - கர்நாடக மாநில எல்லைப்பகுதியில் இருக்கிறது. தமிழக எல்லைப்பகுதியில் இருக்கும் கலிபாண்டே கிராமத்தை சார்ந்தவர் சங்கர் (வயது 35). இவர் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் குனசனஹள்ளி கிராமத்தில் இருக்கும் மதுபான விடுதி முன்புறம் நின்று கொண்டு இருக்கையில், அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர், அவர்கள் வைத்திருந்த ஆயுதத்தால் சரமாரியாக சங்கரை தாக்கியுள்ளனர். மேலும், சங்கரின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி செல்லவே, அவர் படுகாயத்துடன் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய தொடங்கியுள்ளனர். விசாரணையில், சங்கர் மற்றும் அவரது நண்பர்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாக சென்னகிருஷ்ணா என்ற நபரை கொலை செய்ததாக கூறப்படும் நிலையில், இதனால் பழிக்கு பழியாக கொலை அரங்கேறியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சென்னகிருஷ்ணாவின் மகன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலையை அரங்கேற்றியுள்ளதாக சந்தேகிக்கப்படுவதால், அவர்களுக்கு வலைவீசப்பட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக கோடிஹள்ளி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். Tamil online news Today News in Tamil பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள். இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal English Summary Tamilnadu Karnataka Border Ramanagara District Tamil Person Murder by Gang Police Investigation #Tamilnadu #karnataka #Tamilnadu Karnataka Border #tamil online news #Murder #Police #Investigation கருத்துக் கணிப்பு உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது? சித்திரை 1 தை 1 கருத்து இல்லை Submit your vote கருத்துக் கணிப்பு உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது? சித்திரை 1 தை 1 கருத்து இல்லை Submit your vote செய்திகள் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரின் கடைசி நிமிட பரபரப்பு காட்சி.! காணமால் போன இளைஞர் சடலமாக மீட்பு.. காவல்துறை தீவிர விசாரணை..! வனத்துறை மரக்கன்றுகளை மக்களுக்கு வழங்க வேண்டும் - மருத்துவர் இராமதாஸ்.! அதிகாலை வீடுபுகுந்து தூக்கிய காவல்துறை., அய்யய்யோ இபிஎஸ் தான் காரணம், நாங்க இல்லை, டிடிவி தினகரன் கொந்தளிப்பு.!
(28/03/2021) கூட்டணிகளில் திராவிட,தேசிய கட்சிகளுக்குள் ஒத்துழைப்பு குறையுதா ? கட்சிகளில் கோஷ்டிகள் பகிரங்கம் ஆகுதா ? செய்தித் தொகுப்பு அரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு தற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை இன்று ஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம் இந்தியா vs நியூசிலாந்து ஸ்பெஷல்ஸ் தேர்தல் முடிவுகள் - 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் இந்தியா vs இங்கிலாந்து தமிழ்நாடு பிரிமீயர் லீக் ஐபிஎல் 2021 இந்தியா vs நியூசிலாந்து டி20 உலகக் கோப்பை நேரலை செய்தித் தொகுப்பு அரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு தற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை இன்று ஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம் இந்தியா vs நியூசிலாந்து ஸ்பெஷல்ஸ் தேர்தல் முடிவுகள் - 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் இந்தியா vs இங்கிலாந்து தமிழ்நாடு பிரிமீயர் லீக் ஐபிஎல் 2021 இந்தியா vs நியூசிலாந்து டி20 உலகக் கோப்பை (28/03/2021) கூட்டணிகளில் திராவிட,தேசிய கட்சிகளுக்குள் ஒத்துழைப்பு குறையுதா ? கட்சிகளில் கோஷ்டிகள் பகிரங்கம் ஆகுதா ? பதிவு : மார்ச் 28, 2021, 08:31 PM (28/03/2021) கூட்டணிகளில் திராவிட,தேசிய கட்சிகளுக்குள் ஒத்துழைப்பு குறையுதா ? கட்சிகளில் கோஷ்டிகள் பகிரங்கம் ஆகுதா ? WhatsApp Facebook Twitter Mail (28/03/2021) கூட்டணிகளில் திராவிட,தேசிய கட்சிகளுக்குள் ஒத்துழைப்பு குறையுதா ? கட்சிகளில் கோஷ்டிகள் பகிரங்கம் ஆகுதா ? தொடர்புடைய நிகழ்ச்சிகள் "அதிமுக தேர்தல் முறையாக நடைபெறவில்லை" - அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி சசிகலா தலைமை ஏற்றிருந்தால் அதிமுகவில் பிரச்சினை இருந்திருக்காது என புகழேந்தி தெரிவித்துள்ளார். 88 views தூண்டில் அமைத்து பிடிக்கப்பட்ட முதலைக்குட்டி மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள சோதியகுடி கிராமத்தில் உள்ள குளத்தில் சுற்றித்திருந்த முதலைக்குட்டி பிடிபட்டது. 51 views அடகு கடையில் கை வைத்த கொள்ளையர்கள் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் நகை மற்றும் அடகு கடையில் இருந்து சுமார் ரூபாய் 40 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். 31 views மெக்சிகோவில் வந்திறங்கிய பட்டாம் பூச்சிகள் - கண்களைக் கவரும் அழகிய காட்சி பனிக்காலத்தை முன்னிட்டு பல லட்சக்கணக்கான மோனார்க் பட்டாம்பூச்சிகள் இடம்பெயர்ந்து மெக்சிகோ நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளன. 26 views மேலும் >> பிற நிகழ்ச்சிகள் (01/05/2021) அரசியல் அரட்டை : கணிப்புக்கு தர்க்கம் என்ன? கழுகுப்பார்வை,காக்கை பார்வை,பூனைப்பார்வை,மீன் பார்வை! தபால் ஓட்டு ? EVM ? (01/05/2021) அரசியல் அரட்டை : கணிப்புக்கு தர்க்கம் என்ன? கழுகுப்பார்வை,காக்கை பார்வை,பூனைப்பார்வை,மீன் பார்வை! தபால் ஓட்டு ? EVM ? 36 views (30/04/21) அரசியல் அரட்டை - கணிப்புகள் உண்மையாகுமா?கிறிஸ்தவ வாக்குகள் ஒரே கூட்டணிக்கா ?-கொரோனா எதிர்கொள்ள அமெரிக்க உதவி பட்டியல் (30/04/21) அரசியல் அரட்டை - கணிப்புகள் உண்மையாகுமா?கிறிஸ்தவ வாக்குகள் ஒரே கூட்டணிக்கா ?-கொரோனா எதிர்கொள்ள அமெரிக்க உதவி பட்டியல் 25 views (28/04/21) அரசியல் அரட்டை - வடமாவட்டங்களில் 10.5 வன்னியர் உள் ஒதுக்கீடு தாக்கம் என்ன? எதிர் தரப்பு சமூக வாக்கு எதிரே சென்றதா? (28/04/21) அரசியல் அரட்டை - வடமாவட்டங்களில் 10.5 வன்னியர் உள் ஒதுக்கீடு தாக்கம் என்ன? எதிர் தரப்பு சமூக வாக்கு எதிரே சென்றதா? 25 views (27.04.2021) அரசியல் அரட்டை - சேதாரமின்றி ஒரு சமூக வாக்கு திமுக கூட்டணிக்கா? ஸ்டெர்லைட் நுழைந்த பின்னணி? மக்கள் எதிர்ப்பா? (27.04.2021) அரசியல் அரட்டை - சேதாரமின்றி ஒரு சமூக வாக்கு திமுக கூட்டணிக்கா? ஸ்டெர்லைட் நுழைந்த பின்னணி? மக்கள் எதிர்ப்பா? 25 views (26/04/21) அரசியல் அரட்டை - தேர்தல் பரப்புரையில் பழுதா? பெரிய கட்சி வாக்கு பாதிப்பா? ஸ்டெர்லைட் - எல்லா கட்சியும் ஒன்னா? (26/04/21) அரசியல் அரட்டை - தேர்தல் பரப்புரையில் பழுதா? பெரிய கட்சி வாக்கு பாதிப்பா? ஸ்டெர்லைட் - எல்லா கட்சியும் ஒன்னா? 24 views (25/04/21) அரசியல் அரட்டை - ஸ்டெர்லைட்: ஆக்சிஜன்-போராட்டக்காரர் ஆலோசனை; வாக்காளருக்கு பட்டுவாடாவா? ஆழ்கடல் மீன் பிடி பயன் உண்டா? (25/04/21) அரசியல் அரட்டை - ஸ்டெர்லைட்: ஆக்சிஜன்-போராட்டக்காரர் ஆலோசனை; வாக்காளருக்கு பட்டுவாடாவா? ஆழ்கடல் மீன் பிடி பயன் உண்டா? 17 views மேலும் >> பதிவு செய்வது எப்படி? ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும். ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.
எஸ்.எம்.எஸ். மூலம் சமையல் கேஸ் பதிவு செய்வதற்கு 10 இலக்க தொலைபேசி எண்ணை இண்டேன், எச்.பி. கேஸ் நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ளதன. இதன்மூலம் 24 மணி நேரமும் வாடிக்கையாளர்கள் கேசுக்கு பதிவு செயலாம். 8124024365 என்ற பத்து இலக்க எண்ணில் இன்டராக்டிவ் வாய்ஸ் சிஸ்டம் மூலம் இதில் 24 மணி நேரமும் கேசுக்கு பதிவு செய்யலாம். மேலும் இந்த 10 இலக்க எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியும் கேசுக்கு பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்ததும், அது தொடர்பான எஸ்எம்எஸ் வாடிக்கையாளரின் செல்போனுக்கு அனுப்பி வைக்கப்படும். இதுபற்றிய மேலும் விவரங்களை www.indane.co.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இதேபோல எச்.பி. கேஸ் வாடிக்கையாளர்கள் 9092223456 என்ற எண் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். எஸ்.எம்.எஸ். முறையை தொடர்ந்து ஆன் லைன் மூலம் பதிவு செய்யும் முறையும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
வணக்கம். நேற்றைய மாலை அக்டோபர் புது இதழ்கள் இரண்டும் கூரியரை நாடிக் கிளம்பி விட்டன ; அவை இன்று உங்கள் கைகளுக்கு வந்து சேர்ந்திட ST கூரியரின் கடாட்சம் நாடுவோம் ! பதிவுத் தபாலில் இதழ்களைப் பெற்று வரும் நண்பர்களுக்கு இன்று காலை தான் பிரதிகள் ship ஆகின்றன ....! இதோ இரத்தப் படலம் - இன்னிங்க்ஸ் 2-ன் அட்டைப்படம் ! முன் + பின் அட்டைகளுக்கு ஒரிஜினல் டிசைன்களையே பயன்படுத்தியுள்ளோம் - எழுத்துச் சேர்ப்போடு ! பின்னட்டையில் சமீப மாதத்துப் பாணிகளைப் பின்பற்றி கதாசிரியர் + ஓவியர்களின் படங்களையும் ; சின்னதாய் கதையைப் பற்றியதொரு intro -வும் கொடுத்துள்ளோம் ! XIII -ன் தொடருக்கு நாலு வரியில் intro எழுதுவதெல்லாம் நாக்குத் தொங்கும் வேலை என்பதால் basic ஆக இந்தத் தொடரைப் பற்றிய outline மட்டும் தந்திருக்கிறேன் ! தவிர இது இரத்தப் படலம் தொடரின் இரண்டாம் இன்னிங்க்ஸ் என்பதால் - பாகம் 20 ; 21 என்றெல்லாம் அட்டையில் போடவில்லை ! புதியதொரு யாத்திரையை - புதியதொரு திசையில் ஆசாமி துவக்குவதால் முந்தைய தொடர்களை குறிப்பிட்டு அநாவசியமாய்ப் புது வாசகர்களை மிரளச் செய்ய வேண்டாமென்று தோன்றியது. சின்னதாய் ஒரு கதைச்சுருக்கம் உங்களின் நினைவுகளை refresh செய்திடவும் வருகிறது ! இங்கே சில சமீப காலத்து வாசகர்களின் பொருட்டு சின்னதாய் ஒரு clarification -ம் கூட ! 'இரத்தப் படலம் பாகம் 1-18 போட்டாச்சு ; ஒ.கே. ! ஆனால் இப்போது வெளியிடுவது பாகம் 20 & 21 என்றால் - part 19 என்னவாச்சு ?' என நிறைய கேள்விகள் வந்துள்ளன நமக்கு ! The making of XIII பாணியிலான ஒரு டாகுமெண்டரி இடையில் ஒரு பாகமாக பிரான்சில் வெளியிடப்பட்டது ; அதனைத் தான் "புலன்விசாரணை" என்ற பெயரில் நாமும் வெளியிட உத்தேசித்து அதற்கான உரிமைகளையும் வாங்கி பணிகளைத் துவக்கிப் பார்த்தோம் ; ஆனால் அது ஒரு காமிக்ஸ் கதை பாணியில் இல்லாது - ஒரு casefile போல் மிகவே dry ஆகப் பயணிப்பதால் விஷப்பரீட்சை வேண்டாமே என்ற எண்ணத்தில் அதை பரணுக்குப் pack செய்திட்டோம்.ஆகையால் இடைப்பட்ட நம்பர் இந்த (வெளி வரா) பாகத்திற்கே! சென்ற மாதத்து அச்சுக் குறைபாடுகளை இம்முறை இயன்ற வரை களைந்துள்ளோம் என்று சொல்லத் தோன்றுகிறது. அச்சுப் பிரிவில் சீனியர் பிரிண்டர் ஒருவரை நியமித்து உள்ளதோடு - நான் ஊரில் இல்லா சமயங்களில் (அது தான் பெரும்பாலும் நடக்கும் சங்கதி!) அச்சினை monitor செய்ய நமது துவக்க காலத்து technician ஆன அமீன் பாயையும் பொறுப்பேற்கச் செய்துள்ளோம். இரத்தப் படலம் இதழினில் ஒரு 8 பக்கங்களில் black மங்கலாக அமைந்திருப்பது நீங்கலாக (apologies for that in advance!) - இரு இதழ்களிலும் மேஜர் flaws என ஏதும் இல்லையென்றே சொல்லத் தோன்றுகிறது !ஆகாயத்தில் அட்டகாசம் நிஜமாக சிறப்பாய் அமைந்துள்ளதாக எனக்குத் தோன்றியது.தொடரும் இதழ்களில் இன்னமும் perfectionக்கு எங்களால் ஆனதைச் செய்வோம் உறுதியாக ! KBT -3-ல் பங்கேற்க ஆர்வம் தெரிவித்திருந்த 39 நண்பர்களுக்கு 8 +6 பக்க லக்கி லூக் குட்டிக் கதைகள் இம்மாத இதழ்களோடு அனுப்பப்பட்டுள்ளன. உச்சமாய் 15 நாள் அவகாசம் எடுத்துக் கொண்டு இதனை சிறப்பாய் மொழியாக்கம் செய்து அனுப்பிடக் கோருகிறேன்! முதலில் சொன்னது போல் இரு வெவ்வேறு பாணிகளிலான கதைகளை அனுப்பிடும் பட்சத்தில் தேர்வு செய்திடும் பணி இடியாப்பம் ஆகி விடும் என்று மண்டையில் உதித்ததால் - ஒரே genre -ல் கதைகளை அனுப்பியுள்ளோம். உங்கள் முயற்சிகளின் தரம் எவ்விதம் இருப்பினும் தவறாது எழுதி அனுப்பிடுங்களேன் - ப்ளீஸ் ? வெற்றி பெறும் இரு மொழிபெயர்ப்புகளும் தொடரும் இதழ்களில் பிரசுரமாகும் என்பதோடு ஏற்கனவே நான் சொல்லி இருந்தது போல் "நாடோடி ரெமி" வண்ண இதழ் ஒன்றும் பரிசாக அனுப்பப்படும் ! Give it your best shot guys ! KBGD முயற்சியில் பங்கேற்க எண்ணும் நண்பர்களும் இப்போதே ஆர்வத்தைத் தெரிவிக்கலாம் ! வரும் வாரமே அதனைத் துவக்கிடும் பட்சத்தில் மட்டுமே அட்டைப்பட டிசைனை உரிய நேரத்திற்கு பூர்த்தி செய்திட இயலும் அல்லவா ? சமீபமாய் இங்கே நம் பதிவுகளில் நண்பர்களின் பங்களிப்பு வெறும் பார்வைகளோடு நின்று வருவது அப்பட்டமாய்த் தெரிகிறது. தினமும் சராசரியாய் 1500 பார்வைகள் என்றாலும் பின்னூட்டங்களின் எண்ணிக்கை கணிசமாய்க் குறைந்துள்ளதில் இரகசியம் ஏதுமில்லை தானே ? வாரா வாரம் எனது பாணியை தொடர்ந்து வாசிப்பதில் எனக்கே கொட்டாவி எழும் போது உங்களிடமும் ஒருவித அயர்ச்சி எழுவதில் வியப்பில்லை என்றே தோன்றுகிறது ! பதிவுகளுக்கிடையிலான அவகாசத்தை சற்றே அதிகரிப்பதன் மூலம் தொடரும் மாதங்களது பணிச் சுமையையும் ; 2014-ன் திட்டமிடல்களையும் அணுகிட எனக்குக் கூடுதலாய் நேரம் கிடைக்கும் என்பதோடு - எழுத்தில் ஒரு staleness தலைதூக்கிடாது இருக்கவும் உதவும் என்று நினைக்கிறேன் ! முயற்சித்துப் பார்ப்போமே ?! See you around folks ! at 10/05/2013 08:35:00 am Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest 394 comments: MH Mohideen 5 October 2013 at 08:41:00 GMT+5:30 முதல்வன் ReplyDelete Replies M.S.குரு பிரசாத் 5 October 2013 at 21:12:00 GMT+5:30 அர்ஜுன் படமா இல்லை ராஜ் டிவி நிகழ்ச்சியா? Delete Replies Reply Reply Aslam Basha 5 October 2013 at 08:46:00 GMT+5:30 ​xiii வருக வருக என வர​வேற்கி​றேன், இன்று வான​வேடிக்​கை தான். ReplyDelete Replies Reply Siva Subramanian 5 October 2013 at 08:50:00 GMT+5:30 ஹலோ! நான் 3 வது. இப்பவே கொரியர் ஆபீஸ் போக ரெடி! ReplyDelete Replies Reply Siva Subramanian 5 October 2013 at 08:55:00 GMT+5:30 // சமீபமாய் இங்கே நம் பதிவுகளில் நண்பர்களின் பங்களிப்பு வெறும் பார்வைகளோடு நின்று வருவது அப்பட்டமாய்த் தெரிகிறது. தினமும் சராசரியாய் 1500 பார்வைகள் என்றாலும் பின்னூட்டங்களின் எண்ணிக்கை கணிசமாய்க் குறைந்துள்ளதில் இரகசியம் ஏதுமில்லை தானே// // பதிவுகளுக்கிடையிலான அவகாசத்தை சற்றே அதிகரிப்பதன் மூலம் தொடரும் மாதங்களது பணிச் சுமையையும் ; 2014-ன் திட்டமிடல்களையும் அணுகிட எனக்குக் கூடுதலாய் நேரம் கிடைக்கும் என்பதோடு// நண்பர்களே! இதுக்கு சீக்கிரம் ஒரு பதில் சொல்லுங்க? ReplyDelete Replies Reply Erode VIJAY 5 October 2013 at 09:06:00 GMT+5:30 எடிட்டர் சார், வாராவாரம் உங்களது எழுத்துக்களைத் தொடர்ந்து படிப்பது எவ்விதத்திலும், எங்களில் யாருக்கும் அயர்ச்சியானதல்ல! மாறாக, வாரம் இரண்டு பதிவுகள் தேவை என்ற கோரிக்கைதானே சமீப காலங்களில் அதிகரித்துவருகிறது? இங்கே பின்னூட்டங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருப்பது எனக்கும் சற்றே குழப்பம் தருகிற விசயம்தான் என்றாலும், அதை ஒரு விவாதப் பொருளாக எடுத்துக்கொண்டு இங்கே உலவும் நம் வாசக வல்லுநர்கள் இப்பதிவிலேயே விடை கண்டுபிடித்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது! தவிர, இங்கே பின்னூட்டமிடுபவர்களைவிட தினமும் பார்வையிடும் passive visitorகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம் என்பதும் தாங்கள் அறியாததல்லவே? வேண்டாமே அப்படியொரு எண்ணம்!!! :( ReplyDelete Replies Siva Subramanian 5 October 2013 at 09:11:00 GMT+5:30 +1. // வாரம் இரண்டு பதிவுகள் தேவை என்ற கோரிக்கைதானே சமீப காலங்களில் அதிகரித்துவருகிறது? // Delete Replies Reply Texkit 5 October 2013 at 09:29:00 GMT+5:30 +1 Delete Replies Reply Jude roshan BLUTCH 5 October 2013 at 12:09:00 GMT+5:30 +1 Delete Replies Reply Thiruchelvam Prapananth 5 October 2013 at 14:56:00 GMT+5:30 +1 Delete Replies Reply Vijayan 5 October 2013 at 21:36:00 GMT+5:30 @ Friends : இங்கு வருகை புரியும் சமயமெல்லாம் நண்பர்கள் பதிவிட வேண்டுமென்ற எதிர்பார்ப்பெல்லாம் நிச்சயமாய் எனக்குக் கிடையாது ! நம்மில் பெரும்பான்மை - பணி / குடும்பம் / தினசரித் தலைவலிகள் என ஓராயிரம் சங்கதிகளுக்குள் தாண்டவம் ஆடிடும் கலைஞர்கள் தானே ? So - நிறைய வேளைகளில் ஏதேனும் எழுதத் தோன்றினால் கூட அவகாசம் / பொறுமை இல்லாது போவது சகஜமே ! ஆனால் இவற்றையும் மீறி பொதுவாக ஒரு சின்ன தொய்வு நிலவுவது போல் மனதுக்குப் பட்டதால் பதிவுகளின் எண்ணிக்கையை தற்காலிகமாய் ரேஷன் செய்திடலாமே என்று நினைத்தேன் ! Delete Replies Reply Prunthaban 6 October 2013 at 08:06:00 GMT+5:30 பின்னூட்ட எண்ணிக்கை குறையக் காரணம் 'சர்ச்சை'கள் குறைவாக இருப்பது தான் (நல்ல விஷயம் தானே). அதை விட இங்கு வள வள என பத்து இருபது பின்னூட்டம் போட்டு களை கட்டச் செய்யும் ஆத்மாக்களில் கூட சில பேர் மிஸ்ஸிங். மிகுதி அனைவரும் வெறும் பதிவுகளைப் படிப்பதோடு சந்தோஷப் பட்டுக் கொள்பவர்கள் தான் :) Delete Replies Reply Reply Erode VIJAY 5 October 2013 at 09:19:00 GMT+5:30 " மாதம் ஒரு முறை காணக்கிடைத்திடும் காமிக்ஸைவிட, வாரம் ஒரு முறையாவது உங்கள் எண்ணங்களையும் எழுத்துக்களையும் கண்டிடத்தானே நாள்தோறும் இங்கே தவமிருக்கிறோம்?" வேறென்ன சொல்ல?! இதைத்தானே நாள்தோறும் 1500 க்கும் மேற்பட்ட பார்வைகள் சொல்லாமல் சொல்லுகின்றன? ReplyDelete Replies Thamira 5 October 2013 at 12:14:00 GMT+5:30 சரியாகச் சொன்னீர் நண்பரே! பார்வையாளர்கள் அதிகரித்துக்கொண்டே போகிறார்களாம். ஆனால் இவர் எழுத்து போரடிக்கிறதே என நாம் எண்ணிவிடக்கூடுமாம். என்ன லாஜிக் இது? பின்னூட்டங்களில் விவாதங்கள், சண்டைகள், ஆந்தையாரின் பங்களிப்பு போன்றன இருந்தால் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் போவது இயல்பு. இல்லாதபட்சத்தில் நமது பின்னூட்ட எண்ணிக்கை நியாயமானதுதான் என்று நினைக்கிறேன். எனக்குத் தெரிந்து இத்தனை வருடத்தில் மிக அதிக பின்னூட்ட சராசரியைக் கொண்ட தமிழ் வலைப்பூ............ நமதுதான்!!!!!! Delete Replies Reply Vijayan 5 October 2013 at 21:40:00 GMT+5:30 ஆதி தாமிரா : //பின்னூட்டங்களில் விவாதங்கள், சண்டைகள், ஆந்தையாரின் பங்களிப்பு போன்றன இருந்தால் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் போவது இயல்பு.// குஸ்திகளோடு பின்னூட்டங்கள் எகிறுவதை விட, நெருடல்களின்றி அவற்றின் எண்ணிக்கை கட்டுக்குள் இருந்தாலும் சந்தோஷமே ! Delete Replies Reply Reply கிருஷ்ணா வ வெ 5 October 2013 at 09:23:00 GMT+5:30 ரத்தபடலம் மிகுந்த எதிர்பார்ப்புடன் வருகிறது. தொடர்ந்து தரம் மேம்படுத்தப்பட்டு மீண்டும் 2012 தரத்தில் வர விரும்புகிறேன். நமது லயனில் வருவதால் ஆங்கிலத்தில் படிக்காமல் இருந்தேன். அப்படியே வரும் மாதங்களில் வரும் புத்தகங்கள் எத்தனை என்று கூறி விடுங்கள் சார். KBT 3 இல் பங்குபெறும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். ReplyDelete Replies கிருஷ்ணா வ வெ 5 October 2013 at 09:28:00 GMT+5:30 பின்னுட்டங்கள் குறைந்ததற்கு பதிவின் வகையும் ஒரு காரணமாக இருக்கும். பொதுவாக பின்னுட்டங்கள் இடுவதற்கு காரணம் தங்களது கருத்து மற்றும் உங்களிடம் கேட்பதற்கு ஏதாவது இருந்தால் இருக்கும். 2014 வரும் புத்தகங்கள் பற்றி அல்லது சந்தா பற்றி ஒரு பதிவு இட்டு பாருங்கள். கண்டிப்பாக பல பின்னுட்டங்கள் வரும் எனபது எனது கருத்து. Delete Replies Reply Erode VIJAY 5 October 2013 at 09:34:00 GMT+5:30 +1 Delete Replies Reply Siva Subramanian 5 October 2013 at 09:39:00 GMT+5:30 +1 Delete Replies Reply Thiruchelvam Prapananth 5 October 2013 at 14:57:00 GMT+5:30 +3 Delete Replies Reply Vijayan 5 October 2013 at 21:42:00 GMT+5:30 கிருஷ்ணா வ வெ : +4 ! நியாயமான கருத்தே ! நண்பர்களது பங்களிப்புக்கு அதிக scope தந்திடா ரகப் பதிவுகள் சமீபத்தியவை என்பதை ஏற்றுக் கொள்கிறேன் ! Delete Replies Reply Reply K Abdhul 5 October 2013 at 09:24:00 GMT+5:30 Dear edi we need minimum two post per week ReplyDelete Replies Reply Texkit 5 October 2013 at 09:25:00 GMT+5:30 7th ReplyDelete Replies Reply Siva Subramanian 5 October 2013 at 09:30:00 GMT+5:30 ஹையா! 2 புக்கும் வாங்கியாச்சு! ரத்த படலம் அட்டைபடம் நேரில் மிக பிரமாதம்! ப்ளூ கோட் புக் கிட் லக்கி போலவே உள்ளது. ReplyDelete Replies Reply Erode VIJAY 5 October 2013 at 09:32:00 GMT+5:30 குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்ததால் என்னால் கடந்த நான்கைந்து நாட்களாக (பின்னூட்டமிட இயலாத) ஒரு மெளனப் பார்வையாளனாகவே இருந்திட முடிந்தது. ஒரு குடும்பம் கொண்ட எனக்கே சில நாட்கள் இங்கே வர நேரம் கிடைத்திடாத நாட்கள் இருந்திடும்போது, பல குடும்பங்களை மெயிண்ட்டெய்ன் பண்ணிக் கொண்டிருக்கும் நம் நண்பர்கள் பலரது நிலைமையும் கஷ்டம்தானே? ;) ReplyDelete Replies Siva Subramanian 5 October 2013 at 09:37:00 GMT+5:30 உங்கள் சுற்றுலா குறித்த பயண அனுபவங்களை கொண்டு ஒரு பதிவிடலாமா,விஜய்? ( உங்களுக்கு விருப்பம் இருந்தால்?) // ஒரு குடும்பம் கொண்ட எனக்கே சில நாட்கள் இங்கே வர நேரம் கிடைத்திடாத நாட்கள் இருந்திடும்போது, பல குடும்பங்களை மெயிண்ட்டெய்ன் பண்ணிக் கொண்டிருக்கும் நம் நண்பர்கள் பலரது நிலைமையும் கஷ்டம்தானே? ;)// ஓ.கே ?!!1@# Delete Replies Reply Erode VIJAY 5 October 2013 at 12:23:00 GMT+5:30 @ Siva subramanian தங்களது ஆர்வத்துக்கு நன்றி நண்பரே! ஆனாலும் அந்த சோகத்தையெல்லாம் சொல்லி இங்கே அழுவானேன்!! ;) தவிர, கீழே நண்பர் காமிக்ஸ் கரடியின் 3வது பாயிண்டைப் படித்தீர்களா? ;) Delete Replies Reply Siva Subramanian 5 October 2013 at 13:53:00 GMT+5:30 @ Erode VIJAY அந்த பாயிண்டை படித்த பிறகு எனது கோரிக்கையை வாபஸ் வாங்க தான் நினைத்தேன்,நண்பரே! இருப்பினும் உங்கள் கருத்தையும் எதிர்பார்த்தேன். மன்னிக்கவும், நான் பெரும்பாலும் வெளியூர் செல்வதில்லை. எனவே ஒரு ஆர்வத்தில் கேட்டும் விட்டேன். இனி இவற்றை தவிர்த்து விடலாம். Delete Replies Reply Vijayan 5 October 2013 at 21:45:00 GMT+5:30 @ All : கரடியாரைக் கண்டு பூனையார் மிரள்வது காட்டில் வேண்டுமானால் லாஜிக் ஆக இருந்திட இயலும் ; இங்கே அதகளம் செய்யும் license பூனையாருக்கு உண்டன்றோ ? Delete Replies Reply Reply Paranitharan.k 5 October 2013 at 09:33:00 GMT+5:30 சார் .....பதிவிற்கு "இடைவெளி " என்பதை மிக ,மிக கடுமையாக எதிர்கிறேன் . இதற்கு "மாற்று கருத்து "என்பது நண்பர்கள் இடையை வராது என்பது அடித்து சொல்ல படும் உண்மை . ReplyDelete Replies Vijayan 5 October 2013 at 21:48:00 GMT+5:30 Paranitharan K : :-) Delete Replies Reply Reply comicskaradi... 5 October 2013 at 09:37:00 GMT+5:30 தலைவா ...."பதிவிற்கு "இடைவெளி விட்டால் இந்த கரடி.... காடு உள்ளவரை "உண்ணாவிரதம் "இருப்பான் . ReplyDelete Replies Vijayan 5 October 2013 at 21:47:00 GMT+5:30 comicskaradi : நாட்டுக்குள்ளேயே இப்போது உண்ணாவிரத சீசன் தானே கரடியாரே ?! உங்கள் கானகத்து உண்ணாவிரதத்தைக் கவனிக்க ஆள் இல்லாமல் போய் விடப் போகிறது - risk வேண்டாம் ! Delete Replies Reply Reply M Harris 5 October 2013 at 09:43:00 GMT+5:30 Dear Editor , Please DO NOT reduce the number of posts in our blog. I am one among the fans who checks our blog spot everyday for the new post , sometimes on hourly basis. A request : Why not NADODI REMI reprint if possible. Kids will love that story. These type stories will reach our junior audience easily. ( I lost my copy :-( ) Mohamed Harris ReplyDelete Replies Vijayan 5 October 2013 at 21:50:00 GMT+5:30 Mohamed Harris : Best way to find a quick copy of NADODI REMI would be to participate & win KBT-3 :-) Those were printed from age old negatives which would now be almost blank ! 30 years is a long long time indeed ! Delete Replies Reply Reply comicskaradi... 5 October 2013 at 09:50:00 GMT+5:30 தலைவா ....கமெண்ட்ஸ் அதிகம் இங்கு இடபடாதன் காரணம் ... 1) இப்பொழுது தோழர்களின் "கமெண்ட்ஸ் "கு தாங்கள் அதிகம் பதில் அளிப்பது இல்லை . 2)தோழர்கள் "மாறுபட்ட "கருத்து சொன்னால் வீண் விவாதம் ஏன் ?என்று ஒதுங்கி கொள்வது . (உதாரணம் போன பதிவில் தோழர் பரணி இன் கருத்துக்கு விஸ்கி சுஸ்கி தவிர மற்றவர் அதிகம் அதிகம் பதில் அளிக்க வில்லை .) 3)கமெண்ட்ஸ் இல் நமது காமிக்ஸ் பற்றிய இடுகைககள் வருவதை விட இப்பொழுது சொந்த ,சோக கதைகள் தான் அதிகம் வருகிறது . ReplyDelete Replies Vijayan 5 October 2013 at 21:59:00 GMT+5:30 comicskaradi... உங்கள் ஆய்வின் முடிவுகள் # 1 & 2 கன கச்சிதம் ! ஆனால் # 3 எல்லா வேளைகளிலும் சரியாகாது ; சில சொந்த / சோகக் கதைகள் சுவாரஸ்யத்துக்குப் பஞ்சம் வைப்பதில்லை ! Delete Replies Reply Reply Siva Subramanian 5 October 2013 at 10:23:00 GMT+5:30 2014 கதைகள் பற்றிய விளம்பரம் ப்ளூ கோட்-இல் வந்துள்ளது! விபரங்கள் விரைவில் - என்று! அதில் ஜில் ஜோர்டானின் (அலைகளின் ஆலிங்கனம்) போட்டோ உள்ளது. அவரின் அசிஸ்டன்ட்-இன் டைமிங் டயலாக்'ஸ் எனக்கு மிகவும் பிடித்தது. வெல்கம் அகைன் ஜில் ஜோர்டான் ! ReplyDelete Replies Vijayan 5 October 2013 at 22:00:00 GMT+5:30 Siva Subramanian : ஜில் ஜோர்டான் நிச்சயம் ஒரு ரவுண்ட் வருவார் என்றே சொல்லத் தோன்றுகிறது ! அந்த semi-cartoon ஸ்டைல் புது வாசகர்களுக்கும் ; சுட்டி வாசகர்களுக்கும் பிடிக்கக் கூடுமென்பது போனஸ் ! Delete Replies Reply சிம்பா 6 October 2013 at 10:04:00 GMT+5:30 தாகபட்டு கிடந்த நேரத்தில் சில்லுனு பீர் கிடச்ச மாதிரி இருக்கு சார்.... எங்கே ஜில் ஜோர்டனை ஓரங்கட்டி விடுவீர்களோ என்று பயந்து கிடந்தேன்.. Delete Replies Reply பாலாஜி 6 October 2013 at 15:40:00 GMT+5:30 ஜில்க்கு ஒரு ஜொள்ளர் பட்டாளமே இருக்கு தல !! Delete Replies Reply Reply Karthik Somalinga 5 October 2013 at 10:31:00 GMT+5:30 டியர் விஜயன் சார், வழக்கம் போல முன் & பின்னட்டை சூப்பர்! மற்ற கருத்துக்கள், இதழ் கையில் கிடைத்த பிறகு!! சரி மெயின் மேட்டருக்கு வருவோம்! ;) //தினமும் சராசரியாய் 1500 பார்வைகள் என்றாலும் பின்னூட்டங்களின் எண்ணிக்கை கணிசமாய்க் குறைந்துள்ளதில்// 1500 என்ற Hits எண்ணிக்கைக்கும், Unique Visitors-களின் எண்ணிக்கைக்கும் எள்ளளவும் தொடர்பு இராது!! இந்த 1500-ல் இடைவிடாது F5 அமுக்கிய விரல்கள் எத்தனையோ?! :) அதிலும், ஆக்டிவாக கருத்து இடுபவர்கள் நூறுக்கும் குறைவே! அந்த நூறிலும் ஒன்றுக்கு மேற்பட்ட பின்னூட்டங்கள் இடுபவர்கள் (நான் உட்பட) வெகு சொற்பமே! இந்த சொற்பத்திலும் ஒரு சிலர் அவ்வப்போது குட்டியாக ப்ரேக் எடுத்துக் கொள்வார்கள் எனும் போது, பின்னூட்டங்களும் அதற்கேற்ப குறையத்தானே செய்யும்? இதில் தவறேதும் இருப்பதாகத் தெரியவில்லை! பணிச்சுமை, குடும்பப் பொறுப்புகள் என்று ஏராளமான காரணங்கள் இருக்கலாம்!!! தவிர, பணிச்சுமையின் காரணமாய் நீங்களே பல பதிவுகளின் பின்னூட்டங்களிற்கு பதில்கள் அளிக்காமல் Just like that கடந்து செல்லும் போது, நண்பர்களும் அவ்வாறே செய்வதில் தவறேதும் இருப்பதாகத் தெரியவில்லை! ;) இங்கு வருகை தரும் ஒவ்வொரு நண்பரும் குறைந்தது இருபது, முப்பது வயதுகளைத் தாண்டியவர்கள் என்பதால் அவர்களும் பலத்த பணி மற்றும் குடும்பச் சுமைகளுக்கு இடையே, இதற்கென நேரம் ஒதுக்கி எழுதுபவர்களே! அப்படி அவர்கள் சிரமப்பட்டு எழுதிய கருத்துகளுக்கு, உங்களிடம் இருந்து பதில்கள் கிடைக்காமல் போகுமானால், அவர்களுக்கு நேரும் ஏமாற்றத்தை தவிர்க்க முடியாது! ஒவ்வொருவருக்கும் பதில் சொல்வதென்பது தனி ஒருவரால் இயலாத காரியம் என்றாலும், பின்னூட்டங்களின் தொய்விற்கு இதுவும் ஒரு காரணம் என்பதையும் நீங்கள் மனதில் கொள்ள வேண்டும்! //வாரா வாரம் எனது பாணியை தொடர்ந்து வாசிப்பதில் எனக்கே கொட்டாவி எழும் போது உங்களிடமும் ஒருவித அயர்ச்சி எழுவதில் வியப்பில்லை// ஒரு விஷயம் அளவுக்கு மிஞ்சும் போது அதில் சலிப்பு ஏற்படுவது இயற்கையே! இங்கே ஆக்டிவாக பின்னூட்டங்கள் இடுவது, மற்றவர்களின் பின்னூட்டங்களுக்கு பதில் சொல்வது, தீவிரமாக விவாதம் செய்வது - என்பதெல்லாம் ஒரு கட்டத்தின் மேல் சலிப்பு தட்டி விடும் சங்கதிகள்! எனக்கு அது நேரும் போது, நானும் சில நாட்கள் லீவ் எடுக்கத்தான் போகிறேன்! ;) இது போன்ற தருணங்களில் பின்னூட்டங்கள் கூடவோ, குறையவோ தான் செய்யும்!! எனவே, பின்னூட்டங்களின் எண்ணிக்கையை வைத்து ஒரு பதிவின் வரவேற்பை கணிப்பது சரியான அணுகுமுறை அல்ல என்றே நினைக்கிறேன்! //பதிவுகளுக்கிடையிலான அவகாசத்தை சற்றே அதிகரிப்பதன் மூலம் தொடரும் மாதங்களது பணிச் சுமையையும் ; 2014-ன் திட்டமிடல்களையும் அணுகிட எனக்குக் கூடுதலாய் நேரம் கிடைக்கும்// "உங்களுக்கு வரும் மாதங்களில் நிறைய வேலை இருக்கிறது என்பதால் இங்கே அடிக்கடி பதிவிட முடியாது" - இதுதானே நீங்கள் சுற்றி வளைத்து சொல்ல வரும் மேட்டர்?! :D நோ ப்ராப்ளம் சார்!! ;) குறிப்பிட்ட இடைவெளியில் சீராக - வாரம் ஒரு பதிவு, முடிந்தால் இரு பதிவு என்று இதை ஒரு ritual ஆகப் பார்த்திடாமல், உங்கள் பணிச்சுமை / இதர பொறுப்புகள் இவற்றிற்கேற்ப - நேரம் கிடைக்கும் போதெல்லாம் மற்றும் பதிவுக்கான மேட்டர் சிக்கும் போதெல்லாம் 'திடீர்' பதிவுகளைப் போட்டால் அதற்கான வரவேற்பே தனியாக இருக்கும்! கொசுறு: Blogger Dashboard - Stats - Traffic Sources பகுதியில் Referring Sites / URL-களில் vampirestat DOT com மற்றும் இது போன்ற புதிரான பெயர்கள் கொண்ட வெப்சைட் பெயர்கள் பல இருக்கும்! ஹிட்ஸ் எண்ணிக்கை அதிகரிக்க இது போன்ற Spam தளங்களும் ஒரு காரணமே!!! ReplyDelete Replies Siva Subramanian 5 October 2013 at 10:43:00 GMT+5:30 // //பதிவுகளுக்கிடையிலான அவகாசத்தை சற்றே அதிகரிப்பதன் மூலம் தொடரும் மாதங்களது பணிச் சுமையையும் ; 2014-ன் திட்டமிடல்களையும் அணுகிட எனக்குக் கூடுதலாய் நேரம் கிடைக்கும்// "உங்களுக்கு வரும் மாதங்களில் நிறைய வேலை இருக்கிறது என்பதால் இங்கே அடிக்கடி பதிவிட முடியாது" - இதுதானே நீங்கள் சுற்றி வளைத்து சொல்ல வரும் மேட்டர்?! :D நோ ப்ராப்ளம் சார்!! ;) // + 1 Delete Replies Reply ரவீ 5 October 2013 at 11:32:00 GMT+5:30 @ கார்த்திக், profile picture - animated gif அருமை! Delete Replies Reply Thamira 5 October 2013 at 12:55:00 GMT+5:30 "உங்களுக்கு வரும் மாதங்களில் நிறைய வேலை இருக்கிறது என்பதால் இங்கே அடிக்கடி பதிவிட முடியாது" - இதுதானே நீங்கள் சுற்றி வளைத்து சொல்ல வரும் மேட்டர்?! :D நோ ப்ராப்ளம் சார்!! ;) அதே.. :-))))))) Delete Replies Reply Vijayan 5 October 2013 at 22:21:00 GMT+5:30 Karthik Somalinga & friends : இது வரைக்கும் Jpeg files ஆக வெளியான நம் பதிவுகள் நீங்கலாய் பாக்கி அனைத்தையும் மாங்கு மாங்கென்று நானே டைப் செய்து நாக்குத் தள்ளிப் போவது வழக்கம் ; ஒரு தாளில் 'பர பர' வென எழுதித் தள்ளியே பழகிப் போன எனக்கு லொட்டு-லொட்டென கீ போர்டைத் தட்டிக் கொண்டே ; transliteration செய்திடும் சேஷ்டைகளை சமாளித்து ; சிந்தனையில் ஒரு flow கொண்டு வருவது - என்பதெல்லாம் நேரத்தை நிறையவே விழுங்கும் சமாச்சாரங்களாய் இருந்திடுகின்றன ! ஆனால் இனி மேற்கொண்டு அதனை நமது டைப்செட்டிங் பணியாளர்களின் பொறுப்புக்கு விடுவதெனத் தீர்மானித்துள்ளதால் எனக்கு செலவாகும் நேரம் நிறையவே குறைந்திடும். அதனை நண்பர்களது கருத்துகளுக்குப் பதில் சொல்லவாவது செலவழிக்கலாம் என்று உள்ளேன் ! தொடரும் பொழுதுகளில் எதிர்நிற்கும் பணிச்சுமை அதிகமாய் இருப்பதும் ஒரு விதத்தில் எனது எண்ணத்துக்குக் காரணமே ; ஆனால் பொதுவாய் நிலவியதொரு சோம்பலான அமைதியே என்னையும் தொற்றிக் கொண்டது என்று சொல்லுவேன் ! அப்புறம் தினசரி 1500 பார்வைகள் என்பது நம் நண்பர்களது Refresh உபயம் என்பது தான் நாடறிந்த ரகசியமாச்சே ?! நீங்கள் குறிப்பிடும் அந்த vampirestat தளம் சொல்லி வைத்தார் போல தினமும் 15 ஹிட்ஸ்-க்கு புண்ணியம் தேடிக் கொள்கிறது ! மற்றபடிக்கு கூகிள் செய்யும் சேவை நம்மைப் பொறுத்த வரை அசாத்தியமானது ! Latvia நாட்டிலிருந்து ரெகுலராக நம் தளத்தை பார்வையிடுவது யாரோ - தெரிய ஆவலாக உள்ளேன் ! Delete Replies Reply Reply Siva Subramanian 5 October 2013 at 10:43:00 GMT+5:30 டியர் விஜயன் சார், // பதிவுகளுக்கிடையிலான அவகாசத்தை சற்றே அதிகரிப்பதன் மூலம் தொடரும் மாதங்களது பணிச் சுமையையும் ; 2014-ன் திட்டமிடல்களையும் அணுகிட எனக்குக் கூடுதலாய் நேரம் கிடைக்கும் என்பதோடு - // உங்களது பணிச்சுமை அதிகம் என்பது உண்மையே! எவ்வகையிலாவது கூடுதல் நேரம் கிடைத்திட நீங்கள் விரும்புவதும் சரியே! ஆனால் உங்களின் பதிவிற்காக தினமும் காத்திருக்கும் நண்பர்களுடன் நீங்கள் செலவிடும் நேரத்தை குறைப்பது என்பதை என்னால் ஏற்க முடியவில்லை. ReplyDelete Replies Vijayan 5 October 2013 at 22:24:00 GMT+5:30 Siva Subramanian : மறுபதிப்புகள் ; +6 ஆகிய இரண்டுமே ஆண்டின் மையப் பகுதிக்குப் பின்னதாக kickstart ஆனதே பணிச்சுமைச் சிக்கலுக்கு பிரதான காரணம் என்று சொல்லலாம் ! தொடரும் ஆண்டில் சற்றே தெளிவோடு (!!) திட்டமிட இந்த அனுபவம் நிச்சயம் உதவிடும் ! Delete Replies Reply Reply Dr. Hariharan 5 October 2013 at 10:59:00 GMT+5:30 ஃபேஸ்புக்கில் 100 பேர் பார்த்தால் 10 பேர் தான் லைக் போடுவார்கள், ஒருவர் தான் கமென்ட் போடுவார். இவ்வளவு கமென்ட் வருதே. அதுக்கு சந்தோஷப்பட வேண்டியது தான். ReplyDelete Replies Vijayan 5 October 2013 at 23:40:00 GMT+5:30 Dr. அல்கேட்ஸ் : நிச்சயமாய் வருத்தங்கள் கிடையாதே ! Delete Replies Reply Reply ரவீ 5 October 2013 at 11:02:00 GMT+5:30 இந்த முறை இரண்டு புத்தகங்களின் அட்டைப்படங்களும் அருமையாக வந்துள்ளன! புத்தகங்களை கைகளில் பெரும் ஆவலுடன் உள்ளேன்! நீண்ட இடைவெளிக்கு பின் சந்திக்கும் நண்பனை காணும் ஆவல் XIII ஏற்படுத்துகிறது. //சென்ற மாதத்து அச்சுக் குறைபாடுகளை இம்முறை இயன்ற வரை களைந்துள்ளோம் என்று சொல்லத் தோன்றுகிறது. அச்சுப் பிரிவில் சீனியர் பிரிண்டர் ஒருவரை நியமித்து உள்ளதோடு - நான் ஊரில் இல்லா சமயங்களில் (அது தான் பெரும்பாலும் நடக்கும் சங்கதி!) அச்சினை monitor செய்ய நமது துவக்க காலத்து technician ஆன அமீன் பாயையும் பொறுப்பேற்கச் செய்துள்ளோம். // சரியான சமயத்தில் எடுக்கப்பட்ட மிகசரியான முடிவு ! நமது தர மேம்பாட்டுக்கு இது ஒரு BIG LEAP! வாசகர்களின் விமர்சனங்களை POSITIVE வாக எடுத்துக்கொண்டு, P.A வை மிகச்சரியான DIRECTION னில் PROJECT செய்யும் உங்களை எப்படி பாராட்டுவது? வாசகர்கள் சார்பாக நன்றிகள் சார்! //ரத்தப் படலம் இதழினில் ஒரு 8 பக்கங்களில் black மங்கலாக அமைந்திருப்பது நீங்கலாக (apologies for that in advance!) - இரு இதழ்களிலும் மேஜர் flaws என ஏதும் இல்லையென்றே சொல்லத் தோன்றுகிறது !// ஜீரோ DEFECT எனபது சாத்தியப்படாத செயல்.ISO/ IS 2500 தர மேலாண்மை கொள்கையில் பிழைகளுக்குகென்றே ன்றே ஒரு BANDWIDTH உள்ளது. இது போன்ற சிறு நேருடல்களையும் சரிசெய்து NEAR PERFECTION னுக்கு வரும் காலம் அதிக தொலைவில் இல்லை சார்! "apologies" போன்ற வார்த்தைகளை தவிர்கலாமே! //? வெற்றி பெறும் இரு மொழிபெயர்ப்புகளும் தொடரும் இதழ்களில் பிரசுரமாகும் என்பதோடு ஏற்கனவே நான் சொல்லி இருந்தது போல் "நாடோடி ரெமி" வண்ண இதழ் ஒன்றும் பரிசாக அனுப்பப்படும் !// எனது முந்தய ஒரு பின்னூட்டத்தை இங்கே நினைவுபடுத்துகிறேன். வெற்றியாளருக்கு பரிசு என்பதை போல பங்கேற்பாளர்களுக்கு ஒரு சிறு participation certificate போல இனி வரும் ஏதாவது ஒரு புத்தகத்தில் ஒரு வாழ்த்து செய்தியோடு உங்கள் கையெப்பமிட்டு கொடுத்தால் எங்களுக்கு ஒரு பூஸ்ட் ஆகா இருக்கும் சார்! அதோடு பங்கேற்பாளர்களுடைய லிஸ்ட் டாவது வெற்றிபெற்ற கதை வெளியிடப்படும் புத்தகத்தில் வரலாமே . நமது படைப்பு வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் நமது உழைப்பும் நாம் செலவிடும் நேரமும் ஓன்று தானே ??அதற்க்கு ஒரு சிறு ACKNOWLEDGEMENT கொடுப்போமே //KBGD முயற்சியில் பங்கேற்க எண்ணும் நண்பர்களும் இப்போதே ஆர்வத்தைத் தெரிவிக்கலாம் ! // நானும் ரெடி சார்! :) //சமீபமாய் இங்கே நம் பதிவுகளில் நண்பர்களின் பங்களிப்பு வெறும் பார்வைகளோடு நின்று வருவது அப்பட்டமாய்த் தெரிகிறது. தினமும் சராசரியாய் 1500 பார்வைகள் என்றாலும் பின்னூட்டங்களின் எண்ணிக்கை கணிசமாய்க் குறைந்துள்ள...// இங்கே பின்னூட்டம் இடுவதில் நண்பர்களின் ஆர்வம் சற்றே குறைந்துள்ளது உண்மை. பதிவுகளை ஆர்வமாக படிக்கு நண்பர்கள் ஆங்கிலதிலானாலும் தமிழிலானாலும் ஒரு சிறு ACKNOWLEDGEMENT செய்யவேண்டியது மிக அவசியம். போன பதிவில் ஈமெயில் SUBSCRIPTION, கமெண்ட் இடுபவர்களுக்கு மட்டும் என மாற்றியுள்ளது நல்ல முயற்சி. இந்த பலன் இனி தெரியலாம். நமது சொந்த RESERVATIONகளை உடைதேறிந்துவிட்டு உங்கள் மனதில் தொன்றும் கருத்துக்களை வெளிப்படையாக இங்கே பதிவிடுங்கள் நண்பர்களே! நமது ஆசிரியர் தனது பல்வேறு பணிச்சுமைகளுக்கிடயே நமக்காக நேரம் ஒதுக்கி இங்கே பதிவிடுகிறார்.அதை நாமே ACKNOWLEDGE செய்யாமல் செல்வது அவ்வளவு நன்றாக இல்லை இதை போல எனக்கு தெரிந்த வரை எந்த புத்தகத்தின் எடிட்டரும் வாசகர்களுக்கு நெருங்கி வருவதில்லை. இந்த முயற்சியை மேலும் சிறப்பிக்க செய்யவேண்டுமோ தவிர குறைத்துக்கொள்ள கூடாது. ReplyDelete Replies மஞ்சள் சட்டை மாவீரன் 5 October 2013 at 12:03:00 GMT+5:30 +1 Delete Replies Reply Erode VIJAY 5 October 2013 at 12:29:00 GMT+5:30 +1 Delete Replies Reply Thiruchelvam Prapananth 5 October 2013 at 15:11:00 GMT+5:30 Sure Sir Delete Replies Reply Vijayan 5 October 2013 at 22:27:00 GMT+5:30 விஸ்கி-சுஸ்கி : //வெற்றியாளருக்கு பரிசு என்பதை போல பங்கேற்பாளர்களுக்கு ஒரு சிறு participation certificate போல இனி வரும் ஏதாவது ஒரு புத்தகத்தில் ஒரு வாழ்த்து செய்தியோடு உங்கள் கையெப்பமிட்டு கொடுத்தால் எங்களுக்கு ஒரு பூஸ்ட் ஆகா இருக்கும் சார்!// நிச்சயமாய் செயல்படுத்தி விடுவோம் - KBT -3 முதற்கொண்டே ! Point well noted ! Delete Replies Reply Erode VIJAY 5 October 2013 at 22:42:00 GMT+5:30 ஆஹா! எனக்குக் கிடைக்கவிருக்கும் participation certificateஐ காண இப்போதே ஆவலாய் இருக்கிறேன். ஹி ஹி! Delete Replies Reply Reply Siva Subramanian 5 October 2013 at 11:13:00 GMT+5:30 // இது போன்ற சிறு நேருடல்களையும் சரிசெய்து NEAR PERFECTION னுக்கு வரும் காலம் அதிக தொலைவில் இல்லை சார்! "apologies" போன்ற வார்த்தைகளை தவிர்கலாமே! // +1 vijayan,sir. ReplyDelete Replies Reply ரமேஷ் குமார், கோவை 5 October 2013 at 11:19:00 GMT+5:30 //பதிவுகளுக்கிடையிலான அவகாசத்தை சற்றே அதிகரிப்பதன் மூலம் தொடரும் மாதங்களது பணிச் சுமையையும் ; 2014-ன் திட்டமிடல்களையும் அணுகிட எனக்குக் கூடுதலாய் நேரம் கிடைக்கும் என்பதோடு - எழுத்தில் ஒரு staleness தலைதூக்கிடாது இருக்கவும் உதவும் என்று நினைக்கிறேன்!// புதியபதிவுகளின் எண்ணிக்கை குறைவது, பணிகளை எளிதாக்கும்பட்சத்தில் அதுவே சிறந்தது. அதேநேரம் தங்களுடைய பின்னூட்டங்கள் / interaction-க்கு கொஞ்சம் அவகாசத்தை ஒதுக்க இயன்றால் பின்னூட்டமிடும் வாசகர்களுக்கும் திருப்தியாகிவிடும்! //ஆகாயத்தில் அட்டகாசம் நிஜமாக சிறப்பாய் அமைந்துள்ளதாக எனக்குத் தோன்றியது.// Great to hear! ReplyDelete Replies ரமேஷ் குமார், கோவை 5 October 2013 at 19:57:00 GMT+5:30 // KBGD முயற்சியில் பங்கேற்க எண்ணும் நண்பர்களும் இப்போதே ஆர்வத்தைத் தெரிவிக்கலாம்! // Count me in! Already sent email for entry. Delete Replies Reply Vijayan 5 October 2013 at 22:28:00 GMT+5:30 Ramesh Kumar : KBGD - -க்கான files வரும் வாரத்திலேயே அனுப்பிடப்படும் ! Delete Replies Reply Reply குற்றச் சக்கரவர்த்தி 5 October 2013 at 11:30:00 GMT+5:30 வணக்கம் எடிட்டர் சார், இந்த மாத ப்ளூ கோட் பட்டாளம் மற்றும் XIII இன் அட்டை படங்கள் பிரமாதமாக உள்ளது. இந்த landmark -ல் புக்ஸ் உடனே கிடைக்க வழி ஏதும் இல்லையா, எங்களுக்கு புத்தகங்களை கண்ணால் பார்க்கவே 15 நாட்கள் ஆகிவிடுகிறது. என் விலாசத்திற்கு கூரியரில் ஆர்டர் செய்தால் அதில் உள்ள பிரச்னை என்னவென்றால், நான் வசிக்கும் இடம் பல வீடுகளும் அதில் பல வாண்டுகளும் கொண்ட குடியிருப்பு. நான் வேறு இருக்கும் இடம் கூட தெரியாமல் அமைதியாக வாழும் ஜீவன். என் பெயரை சொல்லி யாரவது கேட்டால் அப்படி யாரும் இந்த குடியிருப்பில் இல்லை என்று சொல்லி வீட்டுக்கு வந்த சரஸ்வதி (lion காமிக்ஸ்) யை திருப்பி அனுப்பி விடுவார்கள். மீறி போஸ்ட் man கொடுத்து விட்டு சென்றாலோ, அந்த parcel தமக்கே வந்ததாக கருதி பிரித்து மேய்ந்து விடுவார்கள்.மொத்தத்தில் புக் எனக்கு கிடைக்காது,கிடைத்தாலும் முழுதாக கிடைக்காது.அப்படிப்பட்ட ஒரு மந்திர மண்டலத்தில் தான் அடியேனின் பாசறை உள்ளது. எனவே தான் புத்தகத்தை கடையில் வாங்க ஆசைப்படுகிறேன். இது என் பிரச்னை. இனி பொது பிரச்சனைக்கு வருகிறேன். அதாவது நீங்கள் blog எழுதுவதை குறைப்பதாக கூறி இருந்தீர்கள் ,தாராளமாக செய்யுங்கள். எனக்கு மட்டும் அல்ல நிறைய பேருக்கு அதில் ஆட்சபனை இருக்காது ஆனால் அதற்க்கு முன்பாக நமது மாத இதழை வார இதழாக மாற்றி விடுங்கள். வார வாரம் உங்கள் எழுத்தை அதில் படித்து கொள்கிறோம். அப்புறம் சென்ற ஒரு சில பதிவுகள் மிகவும் slow வாக இருந்தது ஏனென்றால், நீங்கள் கேப்டன் விஜயகாந்த் போல புள்ளி விவரங்களை அள்ளி விட்டு இருந்தீர்கள் அதை நாங்கள் படித்து தெரிந்து கொண்டதோட சரி , மற்றப்படி அதனை விவாதிக்கவோ கேள்வி கேட்கவோ ஏதும் இல்லை, மற்றப்படி உங்கள் எழுத்து என்றுமே எங்களுக்கு தேன் தான். முடிந்தால் தினமும் ஒரு பதிவு இடுங்கள் நாங்களும் புது புது கமெண்ட்ஸ் இடுகிறோம். எப்பூடி? நன்றி வணக்கம். ReplyDelete Replies Thamira 5 October 2013 at 12:46:00 GMT+5:30 ஆனால் அதற்க்கு முன்பாக நமது மாத இதழை வார இதழாக மாற்றி விடுங்கள். வார வாரம் உங்கள் எழுத்தை அதில் படித்து கொள்கிறோம். // இது டீல்! :-)))) Delete Replies Reply Erode VIJAY 5 October 2013 at 16:04:00 GMT+5:30 @ குற்றச்சக்கரவர்த்தி அருமையான டீல்! ;) Delete Replies Reply Vijayan 5 October 2013 at 22:32:00 GMT+5:30 குற்றச் சக்கரவர்த்தி : Landmark நிறுவனத்தின் மத்தியக் கொள்முதல் கட்டுப்பாட்டு அலுவலகம் செயல்படுவது பூனாவில் இருந்து ! So அங்கிருந்து முறையாக ஆர்டர் பார்ம் போடப்பட்டு நமக்குக் கிடைத்த பின்னரே இதழ்களை அனுப்புவது சாத்தியமாகும். வரும் செவ்வாய் முதல் 4 ஸ்டோர்களிலும் புதிய இதழ்கள் கிடைக்கும் ! //கேப்டன் விஜயகாந்த் போல புள்ளி விவரங்களை அள்ளி விட்டு இருந்தீர்கள் அதை நாங்கள் படித்து தெரிந்து கொண்டதோட சரி , மற்றப்படி அதனை விவாதிக்கவோ கேள்வி கேட்கவோ ஏதும் இல்லை,// சரியான கருத்தே ! ஏற்றுக் கொள்கிறேன் வலை மன்னரே ! Delete Replies Reply பாலாஜி 6 October 2013 at 15:45:00 GMT+5:30 டக்கரான டீல்.. கண்டிப்பா இத நாங்க ஆதரிக்கிறோம்.. என நான் சொல்றது சரிதானே!! Delete Replies Reply Reply ரவீ 5 October 2013 at 12:28:00 GMT+5:30 எனக்கு புத்தகங்கள் வந்துவிட்டன நண்பர்களே ! : ))))))! முதல் முறையாக இவ்வளவு விரைவாக ST கொரியர் அன்பர்கள் பட்டாசாக வேலை செய்துள்ளார்கள்! நன்றிகள் ST கொரியர் நண்பர்களுக்கு XIII அட்டைப்படம் வாவ்! நேரல் பார்க்கும் போது கண்களை அள்ளுகிறது !அட்டைப்பட பிரிண்டிங் தரம் அற்புதம் முன்னட்டையில் பிரிண்டிங் அவ்வளவு தெளிவு ! சித்திரத்தின் FG க்கும் BG க்கும் எந்த ஒரு நெருடலும் இல்லாத ஒரு FLUID கலர் MERGING! கலக்கல் சார்! ஏதாவது புதிய டெக்னாலஜி உபயோகப்படுத்தப்பட்டுள்ளதா ?? கீழேயுள்ள ரத்த டிசைன் மட்டும் இன்னமும் கொஞ்சம் சிறப்பாக செய்திருக்கலாம்! பின்னட்டை ஒரு CLEAN CUT RAZOR SHARP டிசைன். அழகுக்கு அழகு! நமது புத்தகமா இது என வியக்கவைக்கும் அட்டைப்பட தரம்! முதல் முறையாக XIII புத்தகம் வண்ணத்தில் அசத்துகிறது.லார்கோவுக்கு இணையாக ஓவியங்கள் வண்ணத்தில் மிளிர்கின்றன .ஓவியங்கள் ஷார்ப் & CLASSICAL லுக்குடன் அதகளம் செய்கின்றன. வான்சின் படைப்புக்களை வண்ணத்தில் நாம் பார்க்காததால் இந்த ஓவியரை அவருடன் COMPARE செய்ய முடியவில்லை. லைன் DRAWINGகில் ஜிகுநோவ், வான்சுக்கு ஈடுகொடுக்கிறார். ஓவியர் மாறிவிட்டார் என்று சொல்லாவிட்டால் வித்தியாசம் தெரியாது! பிரிண்டிங் தரம் ஓவியங்களை ரசிக்கும் வகையில் சிறப்பாக வந்துள்ளது. புத்தகத்தின் உள்ளே ஒரு சில பக்கங்கள் மட்டும் ஆசிரியர் சொன்னது போல சற்றே DULL ஆகா உள்ளது. BUT NOT BAD! ஓவியங்களை நமது அளவுகளுக்கு சற்றே RESIZE செய்தமாதிரி தெரிகிறது. இது ஓவியங்களின் SHARPNESS & DETAILS சை இன்னமும் கூட்டுகிறது. இந்த புத்தகத்தின் ஆக்கதுக்காக உழைத்த ஆசிரியர் மற்றும் பதிப்பக தோழர்களுக்கு நன்றிகள்! அடுத்த ஆண்டுக்கான கதைகளை பற்றிய ஒரு சின்ன TEASER விளம்பரம் புத்தகத்தில் உள்ளது. ஆகாயத்தில் அட்டகாசம் அட்டைபடம் சிம்ப்ளி SUPERB! EYE CATCHER! கடைகளில் பல சுட்டிகளை நிச்சயம் கவரும். கதையில் ஓவியங்கள் அருமை. அற்புதமான பிரிண்டிங் தரம். எந்த ஒரு குறையும் இல்லாத முழுமையான நிறைவை தரும் பிரிண்டிங் & BINDING தரம். கதையை படித்துவிட்டு வருகிறேன். மீண்டும் சிந்திப்போம் நண்பர்களே! : ) HAPPY CHERISHING & READING ! ReplyDelete Replies RAMG75 5 October 2013 at 22:53:00 GMT+5:30 இந்த புத்தகத்திலேயே வான்ஸ்.. நட்புக்காக ஒரிரு பக்கங்கள் வரைந்திருப்பதாக எங்கேயோ படித்தேன். எந்த பக்கங்கள் என்று தெரியவில்லை Delete Replies Reply Reply Thamira 5 October 2013 at 12:50:00 GMT+5:30 நீண்ட நாட்களுக்குப்பிறகு கடந்த 10 நாட்களாக சொந்த ஊர் பயணம். இணையமில்லா பெருவாழ்வு. அப்படியும் செல்போனில் மெயில்களையும், இந்தத் தளத்தின் பதிவுகளையும் படித்துக்கொண்டுதான் இருந்தேன். பின்னூட்டம்தான் இடமுடியவில்லை. இதை சொல்லலாம் என்று நினைத்துக்கொண்டு வரும்போதே.. இங்கேயும் பின்னூட்டப் பிரச்சினைதான் ஓடிக்கொண்டிருக்கிறது.. ஹிஹி! ReplyDelete Replies RAMG75 5 October 2013 at 22:55:00 GMT+5:30 நீங்கள் சொல்வதே எனக்கும் நேர்ந்தது. அதிக நேரம் செல்போனில் படிப்பதால், கமெண்ட் இட முடியவில்லை Delete Replies Reply Reply Thamira 5 October 2013 at 12:53:00 GMT+5:30 எனக்கும் புக்கு கைக்கு வந்து சேர்வதற்குள் போதும் போதும்னு ஆகிவிடுகிறது. நான் டிஸ்கவரி புக்பேலஸ் வாடிக்கையாளன். நண்பர் விஸ்கியின் அப்டேட் வரும்போதெல்லாம் செமை பொறாமையாகிவிடுகிறது. :-))) ReplyDelete Replies குற்றச் சக்கரவர்த்தி 5 October 2013 at 13:10:00 GMT+5:30 me too Delete Replies Reply Vijayan 5 October 2013 at 22:34:00 GMT+5:30 ஆதி தாமிரா : Discovery Book Palace-ல் செவ்வாய் / புதனில் கிடைக்குமென்று நினைக்கிறேன் ! Delete Replies Reply Reply Thamira 5 October 2013 at 12:57:00 GMT+5:30 எல்லாம் சரி, அடுத்த மாசம் தீபாவளி வேற.. என்னென்ன புக்ஸெல்லாம் வருது..? எனக்குத் தெரிஞ்சி ஒரு நாலைஞ்சி சேர்ந்து வரணும்னு நினைக்கிறேன். நியாபகம் இருக்கிறவங்க ஆந்தையாரின் கமிட்மெண்ட்ஸை கொஞ்சம் நினைவுகூர்ந்து லிஸ்ட் நம் வயிற்றில் பாலையும், ஆந்தையார் வயிற்றில் புளிக்கரைசலையும் ஊற்றமுடியுமா? ஹிஹி!! ReplyDelete Replies ரவீ 5 October 2013 at 13:17:00 GMT+5:30 @ஆதி ஆசிரியரின் ஹாட் லைனில் இருந்து, நவம்பர் வெளியீடுகள்... #1 சன் ஷைன் லைப்ரரி தீபாவளி ஸ்பெஷல் மலர் 456 பக்கங்கள் டேச்வில்ளீர் சாகசம் #2 சன் ஷைன் லைப்ரரி சிக்பில் ஸ்பெஷல் 100 பக்கங்கள் #3 முத்து காமிக்ஸ் சிப்பாயின் சுவடுகள் 112 பக்கங்கள் Delete Replies Reply Thamira 5 October 2013 at 13:30:00 GMT+5:30 என்ன நண்பரே இவ்வளவுதானா? நல்லா யோசிச்சிப்பாருங்க.. வேற என்னென்னலாமோ அவர் சொன்னதா நியாபகம். நீங்க சொன்னது தவிர்த்து நவம்பர்ல.. 112 பக்க ஜானி ஸ்பெஷல் 280 பக்க கலர் டைகர் ஸ்பெஷல் 340 பக்க பி&ஒ டயபாலிக் அப்புறம் ஏதோ புது ஆக்‌ஷன் கதை ஒண்ணு லக்கி ஸ்பெஷல் 2 இப்படியெல்லாம் ஏதேதோ எனக்கு ஞாபகம் வருது.. ஹிஹி.. எனக்கு ஞாபக சக்தி கொஞ்சம் கம்மி!! Delete Replies Reply ரவீ 5 October 2013 at 14:01:00 GMT+5:30 //டேச்வில்ளீர் // டெக்ஸ் வில்லர் என்று படிக்கவும் : ) @ ஆதி //இப்படியெல்லாம் ஏதேதோ எனக்கு ஞாபகம் வருது.. !!// +1 . : ) Delete Replies Reply Vijayan 5 October 2013 at 22:37:00 GMT+5:30 ஆஹா....நான் எங்கே இருக்கேன் ? என் பெயர் சஞ்சய் ராமசாமியா ? Delete Replies Reply V Karthikeyan 6 October 2013 at 05:12:00 GMT+5:30 lol :-) Delete Replies Reply Reply Ranjith R 5 October 2013 at 13:04:00 GMT+5:30 எடிட்டர் சார் இரத்த படலம் அட்டைசூப்பர், இந்த புத்தகத்தில் குறைகள் எதுவுமே இல்லை,மிக அருமையாக இருக்கிறது ReplyDelete Replies Vijayan 5 October 2013 at 22:38:00 GMT+5:30 ranjith ranjith : Thanks ranjith ! குறை இல்லாவிட்டால் அதுவொரு சேதி என்ற நிலையை மாற்றிடுவோம் - ரொம்ப சீக்கிரமே ! Delete Replies Reply Reply Rummi XIII 5 October 2013 at 13:11:00 GMT+5:30 உங்களுடைய எழுத்து பாணி வசீகரிக்க கூடியதே... அதே நேரத்தில் எளிதாக imitate செய்ய கூடியதும்!! ReplyDelete Replies Vijayan 5 October 2013 at 22:43:00 GMT+5:30 Rummi XIII - காக்காய் 'கா-கா-' வென்று கரைந்தால் தான் பொருத்தமாய் இருக்கும் சார் ! என் அடையாளத்துக்கு முகமூடி மாட்டி விடுகிறேன் பேர்வழி என்று புதுப் பாணிகளில் எழுதும் விஷப்பரீட்சைகளில் இறங்குவானேன் ? Delete Replies Reply Reply Ranjith R 5 October 2013 at 13:15:00 GMT+5:30 மர்ம மனிதன் டைலான் டாக் 2014 வருகிறார் என்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம் ReplyDelete Replies Vijayan 5 October 2013 at 22:43:00 GMT+5:30 ranjith ranjith : :-) Delete Replies Reply Reply Erode VIJAY 5 October 2013 at 14:13:00 GMT+5:30 நண்பர் சேலம் 'டெக்ஸ் விஜயராகவன்' தனது மொபைலிலிருந்து கமெண்ட் செய்யும் வசதியில்லாததால் அவரது எண்ணங்களை எனது மொபைலுக்கு SMS மூலமாக டைப்பியிருந்ததன் தமிழாக்கம் இதோ! (KBT-3 க்கு ஒரு முன்னோட்டம் பார்த்த மாதிரியும் ஆச்சு, ஹி ஹி!) " புத்தகங்கள் கிடைக்கப்பெற்றன சார். இரண்டின் அட்டைகளுமே அட்டகாசம் சார். XIIIன் கெட்டியான அட்டைகள் என்னை மிகவும் கவர்ந்திருக்கின்றன. தயவுசெய்து இப்படியே தொடரவும். என் சிறுவயது நண்பனைப் போன்ற XIIIஐ மீண்டும் சந்தித்ததில் ஏக மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். அச்சுத் தரத்தை உயர்த்த உங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் எடுப்பீர்களென்று நம்புகிறேன். அடுத்து வரயிருக்கும் 'டமால்-டுமீல் தலைவர் ஸ்பெசல்'லில் தயவுசெய்து எந்த குறையும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டுகிறேன் சார். இனி நமது நண்பர் 'மியாவ்' ஈரோடு விஜய் மூலமாக அடிக்கடி பின்னூட்டமிடுகிறேன் சார். எங்களுக்கு வாரம் இருமுறை உங்கள் பதிவு வேண்டும் சார். " - சேலம் டெக்ஸ் விஜயராகவன் ReplyDelete Replies M.S.குரு பிரசாத் 5 October 2013 at 21:09:00 GMT+5:30 விஜய் நானும் உங்களுக்கு SMS அனுப்பி விடுகிறேன். நீங்களும் அதை தமிழில் டைப் செய்து இங்கே அளிக்க முடியுமா? Delete Replies Reply Erode VIJAY 5 October 2013 at 21:26:00 GMT+5:30 @ M.S. குரு பிரசாத் செஞ்சுட்டாப் போச்சு! ஆனால் என்னிக்காச்சும் ஒருநாள் கொஞ்சம் விவகாரமான (உள்குத்து கொண்ட) ஒரு SMSஐ நானும் விசயம் புரியாம மொழிபெயர்த்து இங்கே பதிவிட "அய்யய்யோ நான் அப்படி எதுவும் மெசேஜ் அனுப்பவேயில்லையே!"ன்னு கவுத்திட்டீங்கன்னா, நான் அம்பேல்! :) ஹா!ஹா! அப்படியெதுவும் நடக்காதுன்னு நம்பறேன். என் ப்ரொஃபைல் ஐடியிலிருக்கும் மெயில் ஐடிக்கு உங்க மொபைல் நம்பரை தட்டி விடுங்க! என்னால் முடிஞ்ச வரைக்கும் உங்களுக்கு உதவ தயாரா இருக்கேன்! :) Delete Replies Reply Vijayan 5 October 2013 at 22:46:00 GMT+5:30 //அடுத்து வரயிருக்கும் 'டமால்-டுமீல் தலைவர் ஸ்பெசல்'லில் தயவுசெய்து எந்த குறையும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டுகிறேன்.// சேலம் டெக்ஸ் விஜயராகவன் through Erode VIJAY : "தலைவர்" ஸ்பெஷல் என்ற பில்டப் நம் உடம்புக்கு ஆகாது !! "இரவுக் கழுகார் ஸ்பெஷல்' என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுவோமே ? Delete Replies Reply RAMG75 5 October 2013 at 22:58:00 GMT+5:30 XIII அட்டைப்படம் அருமை. கெட்டியான அட்டை இந்த முறை. அதனால் படிக்க பாதுகாக்க நன்றாக இருக்கிறது. பின் அட்டை - வாவ்... மிக..மிக..மிக.. அருமை ப்ளூகோட்ஸ் பிரிண்டிங், மொழிபெயர்ப்பு, கதை என அனைத்தும் அருமை. மிகவும் நிறைவான கதை மற்றும் சிரிக்கவைக்கும் மொழிபெயர்ப்பு என மெகா ஹிட் இது. நியாபகத்தை மறந்தவரை நாளை படிக்க வேண்டும் :-) Delete Replies Reply Erode VIJAY 6 October 2013 at 10:22:00 GMT+5:30 SMS அனுப்பியவர் : சேலம் டெக்ஸ் விஜயராகவன் மொழியாக்கம் : ஈரோடு விஜய் " வாவ்! முதன்முதலா எடியிடமிருந்து எனக்கு பதில் வந்திருக்கு! ஹேப்பி இன்று முதல் ஹேப்பி.... எனக்கு மட்டும் 20 நாள் முன்னாடியே தீபாவளி வந்துட்டமாதிரி இருக்கு சார்! அந்தப் பெருமாளே என் புரட்டாசி விரதத்துக்கு பலன் கொடுத்துட்டமாதிரி இருக்கே! ( மைன்ட் வாய்ஸ்: அடப்பாவி! கொலஸ்ட்ரால் ஏகத்துக்கும் ஏறிப்போச்சுங்கற பயத்துல 37 வயசுல முதல்மறையா மட்டன் சாப்பிடாம இருக்கறவனெல்லாம் விரதம்னு சொல்லுறானுங்களே!!) #சேலம் டெக்ஸ் விஜயராகவன் Delete Replies Reply Reply lion ganesh 5 October 2013 at 14:37:00 GMT+5:30 இப்போதான் கொஞ்ச நாளா கமெண்ட் எழுத ஆரம்பித்தேன் அதுக்குள்ள எடிட்டர் இப்படி எங்களுக்கு போர் அடிக்குது என்று சொல்லி விட்டாரே தினமும் நமது ப்ளாக் பக்கம் போகாமல் இருந்ததேயில்ல , நான் சொல்ல வேண்டியத பிறர் சொல்லி விட ,போதும் கமெண்ட் என்று விட்டு விடுவேன், இனி கமெண்ட் கொடுத்து கொண்டே இருக்க வேண்டியது தான் ReplyDelete Replies M.S.குரு பிரசாத் 5 October 2013 at 21:08:00 GMT+5:30 //நான் சொல்ல வேண்டியத பிறர் சொல்லி விட ,போதும் கமெண்ட் என்று விட்டு விடுவேன், இனி கமெண்ட் கொடுத்து கொண்டே இருக்க வேண்டியது தான்// எனக்கும் இதே எண்ணம்தான் Delete Replies Reply Vijayan 5 October 2013 at 22:47:00 GMT+5:30 lion ganesh & M.S.குரு பிரசாத் : அட..ஆமாம்..இதுவும் ஒரு valid point தானே ! Delete Replies Reply Reply chennaivaasi 5 October 2013 at 14:40:00 GMT+5:30 வணக்கம் வாத்யாரே! கால்ல எய்ந்து நாஷ்டா துன்னுபுட்டு, பாஷ்ட்டா லேன்ட் மார்க்குல போய் வாத்தியாரு வுட்ட புக் வந்துச்சான்னு பாத்தா வரலையே. ஏன் வாத்தியாரே இந்த கொல வெறி? போன மாசம் கூட ரொம்ப நாள் தள்ளி தான் வந்துது இந்த மாசமும் அப்டி தானா? சொலுங்க வாத்யாரே சொல்லுங்க.... ReplyDelete Replies ரமேஷ் குமார், கோவை 5 October 2013 at 14:54:00 GMT+5:30 அப்பப்போ இதேமேரி சவுண்டு வுட்னே இர் தலீவா... நீ கூவசொல்லோ கேக்க குஜாலாகீது... Delete Replies Reply Erode VIJAY 5 October 2013 at 17:33:00 GMT+5:30 :D Delete Replies Reply Vijayan 5 October 2013 at 22:51:00 GMT+5:30 chennaivaasi : கொஞ்சமா அண்ணாந்து பாத்தாக்கா - குற்ற சக்கரவர்த்தின்னு ஒரு தோஸ்த்துக்கும் இதே சந்தேகம் தலை ; அதுக்கான பதிலே எழுதி வுட்டிருக்கேன்பா ! Delete Replies Reply ரமேஷ் குமார், கோவை 5 October 2013 at 23:57:00 GMT+5:30 //அதுக்கான பதிலே எழுதி வுட்டிருக்கேன்பா!// @chennaivaasi உன்க்காவ Translation-பா: எழுதி = எய்தி Delete Replies Reply Reply King Viswa 5 October 2013 at 15:27:00 GMT+5:30 காமிரேட்ஸ் இன்றைய டெக்கன் குரோனிக்கல் - சென்னை குரோனிக்கல் பத்திரிக்கையின் தலைப்பு செய்தியாக வந்து இருக்கும் காமிக்ஸ் கட்டுரையில் நமது எடிட்டரின் பிரத்யேக பேட்டி + இந்த மாதத்திய நமது காமிக்ஸ் வெளியீடுகளின் அட்டைப்படங்கள் (இரத்தப் படலம், ஆகாயத்தில் அட்டகாசம்) வந்துள்ளது. வழக்கம் போல அதனையும் ஒரு காமிக் கட்ஸ் பதிவாக வலையேற்றியிருக்கிறேன். நேரமிருப்பின் படிக்கவும். ReplyDelete Replies லக்ஷ்மி நாராயணன் 5 October 2013 at 17:58:00 GMT+5:30 + 100 Delete Replies Reply Vijayan 5 October 2013 at 22:55:00 GMT+5:30 King Viswa & லக்ஷ்மி நாராயணன் : சென்னையில் இல்லாததால் நானும் DC E -Paper -ல் தான் பார்க்க இயன்றது ! Delete Replies Reply Reply King Viswa 5 October 2013 at 15:30:00 GMT+5:30 காமிரேட்ஸ் இந்த மாதத்திய நமது காமிக்ஸ் வெளியீடுகள் eBay யில் லிஸ்ட் ஆகி, பிரமாதமாக விற்பனை ஆகியும் வருகிறது. 10க்கும் குறைவான பிரதிகளே இருப்பதாக லிஸ்ட் தகவல் தெரிவிக்கிறது. முந்துங்கள். eBay வில் வாங்க: http://www.ebay.in/sch/thecomicsstores2012/m.html?_nkw=&_armrs=1&_from=&_ipg=&_trksid=p3686 ReplyDelete Replies லக்ஷ்மி நாராயணன் 5 October 2013 at 17:58:00 GMT+5:30 eBay வில் எடிட்டர் குறைவான அளவிலேயே புத்தகங்களை அளிக்கிறாரோ? Delete Replies Reply ரமேஷ் குமார், கோவை 5 October 2013 at 21:45:00 GMT+5:30 As of now the ebay listing says "More than" 10 available. Not less than 10 :) So no chance for shortages as of today! :D Delete Replies Reply Vijayan 5 October 2013 at 22:53:00 GMT+5:30 @ friends : எப்போதுமே வார இறுதிகளில் E-Bay விற்பனை சூடு பிடிப்பது வழக்கம் ! அதிலும் புது இதழ்கள் வெளியாகும் வாரமென்றால் வேகம் ஒரு notch கூடிடும் ! Delete Replies Reply Reply Msakrates 5 October 2013 at 15:53:00 GMT+5:30 WELCOME XIII... ReplyDelete Replies Vijayan 5 October 2013 at 22:56:00 GMT+5:30 Msakrates : இரண்டாம் சுற்றுக்குத் தயாராகி விட்டார் XIII ! Delete Replies Reply Reply T K AHMED BASHA 5 October 2013 at 15:59:00 GMT+5:30 உங்கள் பதிவிற்காக காத்துக்கொண்டிருக்கும் நம்மை ஆடச்செய்துவிட்டது உங்களுடைய வார்த்தைகள்.... நண்பர்களின் பதிவுகள் இங்கு குறைந்து போனது சென்ற மாத அச்சுக்கோளாறின் காரணமாகத்தான் என்பது என்னுடைய யூகம். அன்றி ஆசிரியரின் மீதும் அவருடைய எழுத்துக்களின் மீதும் பற்று குறையவே குறையாது ReplyDelete Replies Vijayan 5 October 2013 at 22:58:00 GMT+5:30 AHMEDBASHA TK : //நண்பர்களின் பதிவுகள் இங்கு குறைந்து போனது சென்ற மாத அச்சுக்கோளாறின் காரணமாகத்தான் என்பது என்னுடைய யூகம்.// அதுவும் கூட ஒரு காரணமாய் இருக்கலாம் தான் ! நிச்சயம் அதைக் களைய முயற்சிகள் எடுத்திடுவோம் ! அன்புக்கு என்றும் நன்றிகள் சார் ! Delete Replies Reply Reply சிவ.சரவணக்குமார் 5 October 2013 at 17:29:00 GMT+5:30 ப்ளூ கோட்ஸ் சந்தேகமில்லாமல் சூப்பர் ஹிட்....கையைக்கொடுங்கள் சார்....[ குலுக்கிவிட்டு திருப்பித்தந்துவிடுகிறேன் ] நீண்ட இடைவெளிக்குப்பிறகு சந்தேகமில்லாமல் ஒரு கார்ட்டூன் ஹீரோ [ ஹீரோக்கள் ?] செட் ஆகி உள்ள‌னர்.......ஸ்டீல்பாடி ஷெர்லக் போன்ற தலைவலிகளை விட ரூபி & கோ அட்டகாசம்........ பல இடங்களில் மனம்விட்டு , வாய்விட்டு சிரித்தேன்...... கார்ட்டூன் ஹீரோக்களின் தீவிர ஆதரவாள‌னான நான் , புரட்டாசி சனியன்று கிடைத்த பெருமாள் கோயில் சர்க்கரைப்பொங்கலின் சுவை கொண்ட ப்ளூகோட் பட்டாள‌த்தை வாழ்த்திவரவேற்கிறேன்....... மேலும் பதிவுகளின் குறைவுக்கான காரணமாக , //இப்பொழுது தோழர்களின் "கமெண்ட்ஸ் "கு தாங்கள் அதிகம் பதில் அளிப்பது இல்லை .// காமிக்ஸ் கரடி அவர்களின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்.......... ReplyDelete Replies Vijayan 5 October 2013 at 22:59:00 GMT+5:30 சிவ.சரவணக்குமார் : //கார்ட்டூன் ஹீரோக்களின் தீவிர ஆதரவாள‌னான நான் , புரட்டாசி சனியன்று கிடைத்த பெருமாள் கோயில் சர்க்கரைப்பொங்கலின் சுவை கொண்ட ப்ளூகோட் பட்டாள‌த்தை வாழ்த்திவரவேற்கிறேன்.......// இதற்கு மேலொரு வாழ்த்தா ? வாய்ப்பே இல்லை ! நன்றிகள் சார் ! Delete Replies Reply Reply Erode VIJAY 5 October 2013 at 17:32:00 GMT+5:30 பின்னூட்டங்களின் எண்ணிக்கை குறைய காரணங்கள் என்னென்ன? ஒரு அலசல் பார்வை: (1) மொபைல் Dataக்கான tarrif எல்லா ஆபரேட்டர்களாலும் உயர்த்தப்பட்டிருக்கிறது. (2) சமீப காலமாக இந்த வலைப்பூ பிரச்சினைகள் ஏதுமின்றி ஒரு அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. வளைத்து வளைத்து விரட்ட நம் நண்பர்களுக்கு முகம் தெரியாத யாராவது ஒருவர் எப்போதும் தேவைப்படுகிறார். ;) (3) சற்று கடினமான பாணியில் எடிட்டரிடம் மல்லுக்கட்டும் சில நண்பர்களும் தற்காலிகமாக ஊடலில் இருப்பதால் இங்கே ரொம்பவே நிசப்தம் நிலவுகிறது. (4) கொஞ்சம் எசகு-பிசகான கேள்வியைக் யாராவது கேட்டுவிட்டாலும் அல்லது கருத்துச் சொல்லிவிட்டாலும் உடனடியாக தீர்ப்பை மாற்றி எழுதச் சொல்லிட 24X7 சேவையில் ஒரிரு நண்பர்கள் செயல்பட்டு வருவதும் காரணமாக இருக்கக்கூடும். ;) (5) இங்கே அடிக்கடி வந்துகொண்டிருந்த/வந்துகொண்டிருக்கும் வாசக நண்பர்கள் பலரும் தங்கள் மனதில் தோன்றிடும் சந்தேகங்களை எடிட்டரிடம் ஏற்கனவே கேட்டுத் தெளிவுபெற்று ஒரு 'திருப்தி-நிலை' அடைந்துவிட்டனர். பல சமயங்களில் மற்ற நண்பர்கள் கேட்டு அதற்கு எடிட்டர் அளிக்கும் பதிலே தங்களுக்கும் தேவையான தகவலாக அவர்கள் உணர்கிறார்கள். (6) ஒரு சீரான இடைவெளியில் தொடர்ந்து நம் காமிக்ஸ் வெளியாகி வருவதால் ஒரு stability ஏற்பட்டிருக்கிறது. நண்பர்கள் பலரும் 'அடுத்தமாசம் என்னென்ன கதைகள்' என்று கேட்டுத் தெரிந்துகொள்வதோடு திருப்தியடைகிறார்கள். (7) நண்பர்களுக்கு மாதாமாதம் சொல்லி வைத்தாற்போல் கிடைத்திடும் காமிக்ஸ் தாண்டி, பல பணிகளுக்கு நடுவே இங்கே வந்து தங்கள் சந்தோசத்தை வெளிப்படுத்திட அவ்வப்போது எடிட்டரிடமிருந்து ஏதேனும் அதிரடி அறிவிப்புகள் தேவைப்படுகின்றன. (8) இங்கே அடிக்கடி பின்னூட்டமிடும் நண்பர்கள் தற்போது பரஸ்பரம் தங்கள் மொபைல் நம்பரைப் பறிமாற்றிக் கொண்டு தங்கள் கருத்துக்களையும், ஆதங்கங்களையும் பேசித் தீர்த்துவிடுவதால் பின்னூட்டமிட விசயமில்லாமல் போகிறது. (9) நண்பர்கள் பலருக்கும் அலுவலகங்களில் இன்டர்நெட் உபயோகிப்பதில் இப்போதெல்லாம் ஏக கெடுபிடி என்று கேள்விப்பட்டேன். மேற்கூறியவைகளுக்கான மாற்றுக் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. இன்னான்றீங்கோ? ;) ReplyDelete Replies M.S.குரு பிரசாத் 5 October 2013 at 21:07:00 GMT+5:30 //நண்பர்கள் பலருக்கும் அலுவலகங்களில் இன்டர்நெட் உபயோகிப்பதில் இப்போதெல்லாம் ஏக கெடுபிடி என்று கேள்விப்பட்டேன். // 100% உண்மை. Delete Replies Reply M.S.குரு பிரசாத் 5 October 2013 at 21:07:00 GMT+5:30 ப்ளாக்கர் தடை செய்யப்பட்டுள்ளது Delete Replies Reply Ranjith R 5 October 2013 at 22:57:00 GMT+5:30 விஜய்;நான் மொபைல் முலமாகத்தான் இங்கு தமிழ் மொழியில் பதிவு செய்து வருகிறோன் Delete Replies Reply Vijayan 5 October 2013 at 23:03:00 GMT+5:30 Erode VIJAY : ஸ்டீல்பாடியார் விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்ப நீங்கள் பிரமாதமான சாய்ஸ் ! என்ன ஒரு துல்லியமான, நேர்த்தியான அலசல் ! ஷெர்லாக் ஹோம்ஸ் (ஒரிஜினல் பார்ட்டி தான் !) பெருமை கொண்டிருப்பார் உங்களின் லாஜிக் நிமித்தம் ! Delete Replies Reply RAMG75 5 October 2013 at 23:10:00 GMT+5:30 எடிட்டர் சார்.. நீங்கள் மற்றும் நான் - இவ்விருவரும் தான் ஸ்டீல்பாடியாருக்கு ரசிகர்கள்.. ஸ்டீல்பாடியார் பரண் ஏறியது பற்றி வருத்தமே.... ம்ம்ம்.. Delete Replies Reply Reply லக்ஷ்மி நாராயணன் 5 October 2013 at 17:35:00 GMT+5:30 வாழ்த்துக்கள் விஸ்வா. அந்த கட்டுரை முழுக்க உங்களைப்பற்றியே அமைந்து இருக்கிறது :) கடைசியில் தான் எடிட்டரே வருகிறார் (படங்களில் கெஸ்ட் ரோல் போல). இதுபோன்ற தினசரிகளிலும், வார இதழ்களிலும் தொடர்ந்து நமது காமிக்ஸ் குறித்த அறிமுகங்களும் விமர்சனங்களும் வந்தால் அதனாலேயே நிறைய புதிய வாசகர்கள் கிடைப்பார்கள். ஜூனியர் விகடன் விளம்பரம் வந்ததும் என்னுடைய நண்பர்களிடம் காண்பித்து இரண்டு நாட்கள் இதைப்பற்றியே பேசிக்கொண்டு இருந்தேன். எடிட்டர் சார், ஞானவேல் என்கிற பெயரில் புதிய சந்தாதாரர் உருவாகி இருந்தால் என்னுடைய முயற்சி பலன் அளித்து உள்ளது என்று சந்தோஷப்படுவேன் ReplyDelete Replies Vijayan 5 October 2013 at 23:04:00 GMT+5:30 லக்ஷ்மி நாராயணன் : //ஞானவேல் என்கிற பெயரில் புதிய சந்தாதாரர் உருவாகி இருந்தால் என்னுடைய முயற்சி பலன் அளித்து உள்ளது என்று சந்தோஷப்படுவேன்// எந்த ஊரிலிருந்து என்றும் சொல்லுங்களேன் சார் ? Delete Replies Reply Reply லக்ஷ்மி நாராயணன் 5 October 2013 at 17:45:00 GMT+5:30 எடிட்டர் சார், புத்தகங்களை பற்றிய என்னுடைய கருத்து: அட்டைப்படம் - ஆகாயத்தில் அட்டகாசம்: அசலாக பிரெஞ்சு மொழியில் வெளிவந்த அதே அட்டைப்படம் என்றாலும் வண்ணகலவை மெருகூட்டப்பட்டு பிரம்மாதமாக இருக்கிறது. எனக்கு தெரிந்து இந்த வருட அட்டைப்படங்களில் இதுதான் டாப் அட்டைப்படமாக இருக்கும் என்று நம்புகிறேன். (வருட முடிவில் நீங்கள் கண்டிப்பாக ஒரு தேர்தல் வையுங்கள், அட்டைப்படங்கள், கதைகள் ஹீரோக்கள் குறித்து - ஆனால் அது நவம்பர் மாத புத்தகத்தில் இருக்கட்டும், நூற்றி சொச்ச நபர்கள் கருத்திடும் இணையதளம் வேண்டாம்). பெர்ஃபெக்ட் பைண்டிங் இல்லாமல் சென்டர் பின் அடித்துத்தானே இந்த புத்தகம் வரப்போகிறது? (இன்னமும் கைவரப்பெரவில்லை, அதனாலேயே இந்த கேள்வி). எனக்கு தெரிந்தவரையில் சுட்டிலக்கி போல இதுவும் சென்டர் பின் அடித்து இருந்தால் படிப்பதற்கு மிகவும் ஏதுவாகவும், வசதியாகவும் இருக்கும். கதை ஆசிரியர்களை பற்றிய அறிமுகம் தொடரட்டும். இதன் மூலம் ஒரு சர்வதேச பார்வை (international look என்பதை தமிழில் இப்படித்தானே சொல்ல வேண்டும்?) கிடைக்கிறது ReplyDelete Replies Vijayan 5 October 2013 at 23:10:00 GMT+5:30 லக்ஷ்மி நாராயணன் : //(வருட முடிவில் நீங்கள் கண்டிப்பாக ஒரு தேர்தல் வையுங்கள், அட்டைப்படங்கள், கதைகள் ஹீரோக்கள் குறித்து - ஆனால் அது நவம்பர் மாத புத்தகத்தில் இருக்கட்டும், நூற்றி சொச்ச நபர்கள் கருத்திடும் இணையதளம் வேண்டாம்).// நீங்கள் நிச்சயமாய் ஒரு mindreader ! நமது நவம்பர் இதழ்களில் இவற்றை வடிவமைக்கும் பணி நேற்று முதல் தான் துவங்கியுள்ளது !அவசியம் வரும் ! Delete Replies Reply Vijayan 5 October 2013 at 23:15:00 GMT+5:30 லக்ஷ்மி நாராயணன் : //கதை ஆசிரியர்களை பற்றிய அறிமுகம் தொடரட்டும்.// இதன் பின்னணி மதிப்பிற்குரிய திரு ட்ராட்ஸ்கி மருது அவர்களே என்று தான் சொல்ல வேண்டும். பெங்களுரு COMIC CON -ல் நமது ஸ்டாலில் அவர் நேரம் செலவிட்ட போது 'கதைகளின் ஓவியரை முன்னிலைப்படுத்தி அவரைப் பெருமைப் படுத்துங்கள் !' என்று சொல்லி இருந்தார் ! அதை கொஞ்சமாய் develop செய்து - கதாசிரியர் + ஓவியர் என இருவரையுமே (நமது ) வெளிச்ச வட்டத்துக்குள் கொண்டு வரலாம் எனத் தீர்மானித்தேன் ! Delete Replies Reply Reply லக்ஷ்மி நாராயணன் 5 October 2013 at 17:57:00 GMT+5:30 எடிட்டர் சார், கமெண்ட் போடும்போது ரெண்டு கருத்து சொல்லவேண்டுமேன்பது சங்க விதி என்பதால் இந்தாருங்கள் சில இலவச ஆலோசனைகள்: 1. இரத்தப் படலம் அட்டைப்படம் அருமையாக தெரிகிறது. உறுத்தும் ஒரே விஷயம் என்னவெனில் அட்டையின் அடியில் உள்ள அந்த இரத்தம் தெறிக்கும் டிசைன் மட்டும் ஏதோ ஸ்டிக்கர் கொண்டு ஒட்டியது போல பொருந்தாமல் இருக்கிறது. 2. அதைப்போலவே அட்டையில் இருக்கும் எழுத்துக்களில் படலம் மற்றும் ! (ஆச்சர்யக்குறி) இடையே இடைவெளி அதிகமாக இருப்பதாக தெரிகிறது. ஸ்கேல் வைத்து அளந்து வேறு பார்த்தேன். வேண்டுமென்றால் சொல்லுங்கள், ஆதாரங்களுடன் தனி பதிவு வேண்டுமானாலும் இடுகிறேன். ஆகையால் இனிமேல் இப்படி இருக்காமல் பார்த்துகொள்ளுங்கள்! :) இங்கே ஒரு இறுக்கமான சூழல் நிலவுவதாக தெரிகின்றது. இந்த கமெண்ட் அந்த இறுக்கத்தை குறைக்கவே இடப்பட்டது. இதனால் தனியாக பிரச்சனை ஏதாவது எழுந்தால் அதற்க்கு சங்கம் பொறுப்பல்ல. ReplyDelete Replies Reply MH Mohideen 5 October 2013 at 19:24:00 GMT+5:30 சார், இரண்டு இதழ்களும் அட்டகாசம். அதிலும் ப்ளூகோட் பட்டாளத்தின் சாகசம் ஒரு அதிர்வேட்டு! எப்போதும் தலையங்கம் படித்துவிட்டு கதைக்குப் போகும் நான், சரி புது வரவை சும்மா இரண்டு பக்கங்கள் படிக்கலாம் என்று ஆரம்பித்தால் கதையை முடித்துவிட்டுதான் தலையங்கத்தையே படித்தேன் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்! அந்த அளவிற்கு தூள் கிளப்பிவிட்டார்கள். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல் 57 கதைகளின் வெற்றியைக் கணிக்க இந்த ஒன்றுப் போதும் அதைப் பறைச்சாற்ற! கதையின் தலைப்போ ஆகாயத்தில் அட்டகாசம்! கூரியரில் இன்று கிடைத்தவர்களுக்கோ கொண்டாட்டம்! அது கைக்கு இன்னும் வரப்பெறாதவர்களுக்கோ திண்டாட்டம்! தமிழில் வழங்கிய தாங்கள் தைரியமாக போடலாம் ஒரு குத்தாட்டம்! ReplyDelete Replies Vijayan 5 October 2013 at 23:17:00 GMT+5:30 MH Mohideen : புத்தகம் கிடைக்காதோர் கொட்டி விடுவர் வண்டாட்டம் ! Delete Replies Reply Reply பாலாஜி 5 October 2013 at 19:57:00 GMT+5:30 தல எனக்கு இன்னும் புக் கிடைக்கல!! இவங்க வேற சும்மா அது சூப்பர் இது சூப்பர் அப்டின்னு வெறுப்பேத்தராங்க.. முடியல தல... ReplyDelete Replies M.S.குரு பிரசாத் 5 October 2013 at 21:06:00 GMT+5:30 என்னையும் அந்த அணியில் சேர்த்துக்கொள்ளுங்கள் பாலாஜி எனக்கும் இன்னமும் புத்தகம் வரவில்லை. நாளைக்கு இந்த பக்கமே வரமால் இருக்க வேண்டும். இல்லை எனில் ஆளாளுக்கு அது சூப்பர், இது அட்டகாசம் , பிரம்மாதம் என்று சொல்லியே கடுப்பேத்துவார்கள் (புத்தகம் வராதவர்களின் நிலையை எண்ணி பாருங்கள் தோழமைஸ்). Delete Replies Reply பாலாஜி 5 October 2013 at 21:18:00 GMT+5:30 குரு எப்டி பாத்தாலும் எல்லாம் நம்ப பயலுவுக(comics lovers).. படிச்சிட்டு போறாங்க விடுங்க!! Delete Replies Reply RAMG75 5 October 2013 at 23:14:00 GMT+5:30 பாலாஜி ராம்நாத் - அதுவும் அந்த 32 ஆம் பக்கத்துல இருக்குற காமெடிய என்னன்னு சொல்ல.. இது மாதிரி எங்கயுமே படிச்சதில்லீங்க... அந்த 43 ஆம் பக்கம் டாப் க்ளாஸ். அந்த 72 ஆம் பக்க முடிவு.. வாவ்.. ( ஹீ..ஹீ.. இது போதும்னு நினைக்கிறேன் :-) ) பிகு - 72ஆம் பக்கம் புத்தகத்திலேயே இல்லை. ஆனாலும் சூப்பர் :) Delete Replies Reply Vijayan 5 October 2013 at 23:18:00 GMT+5:30 RAMG75 : ஆனாலும் இது டூ டூ மச் :-) Delete Replies Reply WillerFan@RajaG 6 October 2013 at 01:37:00 GMT+5:30 Ha ha ha :) Delete Replies Reply பாலாஜி 6 October 2013 at 15:52:00 GMT+5:30 எப்படியோ ST கொரியர் தம்பிya டார்சர் செஞ்சு புக்ஸ வாங்கிடொம்ல!! Delete Replies Reply Reply T K AHMED BASHA 5 October 2013 at 21:55:00 GMT+5:30 ஆசிரியர் அவர்களே..2014 க்கான முன்னோட்டத்தில் டெக்ஸ் வில்லரின் வண்ணப்படம் இடம் பெற்றுள்ளதே...அப்படியென்றால் வரும் வருடம் டெக்ஸை வண்ணத்தில் எதிர்பர்க்கலாமா? ReplyDelete Replies Vijayan 5 October 2013 at 23:20:00 GMT+5:30 AHMEDBASHA TK : 2014-ன் ட்ரைலர் நவம்பரில் உங்களுக்கு முழுதாய் கிடைத்து விடும் ! அது வரை - the guessing games are on ! Delete Replies Reply ரமேஷ் குமார், கோவை 5 October 2013 at 23:23:00 GMT+5:30 Ok, அப்பன்னா அது முழுவண்ண டெக்ஸ்தான்னு Confirm ஆய்டிச்சி! :D Delete Replies Reply Reply Karthik Somalinga 5 October 2013 at 22:01:00 GMT+5:30 @விஜயன் சார்: //சென்ற மாதத்து அச்சுக் குறைபாடுகளை இம்முறை இயன்ற வரை களைந்துள்ளோம்// கை மீறிப் போன பிரிண்டிங் தரத்தை உங்கள் கட்டுக்குள் கொண்டு வர நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் இம்மாத இதழ்களில் தெளிவாக பிரதிபலிக்கிறது! மிக்க மகிழ்ச்சி!! & வாழ்த்துக்கள்! குறிப்பாக ஆ.அ.வின் தரம் ஆஹா! இரண்டு இதழ்களின் அட்டைப் படங்களும் டாப் கிளாஸ்!!! கதைகளை இன்னமும் படிக்கவில்லை! புதிய ஃபேஸ்புக் முகவரியை முதல் பக்கத்திலேயே தெள்ளத் தெளிவாக வெளியிட்டு இருக்கிறீர்கள் - வெரி குட்! //KBT -3-ல் பங்கேற்க ஆர்வம் தெரிவித்திருந்த 39 நண்பர்களுக்கு 8 +6 பக்க லக்கி லூக் குட்டிக் கதைகள் இம்மாத இதழ்களோடு அனுப்பப்பட்டுள்ளன.// எனக்கு ஒரே ஒரு எட்டு பக்க கதை தான் வந்துள்ளது! 20 பேருக்கு எட்டு பக்க கதை, மீத 19 பேருக்கு ஆறு பக்க கதை என அணி பிரித்து இருக்கிறீர்களா?! போட்டியில் வெல்பவர்களுக்கு பரிசு புத்தகத்தையாவது முழுதாக கொடுப்பீர்கள் தானே?! ;) அதே போல எனக்கு அனுப்பட்ட கதை, எந்த ஒரு முன்னறிமுகமும் இன்றி 'பொதக்கடீர்' என்று துவங்குவதுகிறது! :) ஒருவேளை, பல சிறுகதைகள் அடங்கிய லக்கி ஆல்பத்தின் இரண்டாவது பாகம் இதுவோ?! //KBGD முயற்சியில் பங்கேற்க எண்ணும் நண்பர்களும் இப்போதே ஆர்வத்தைத் தெரிவிக்கலாம் !// ஆர்வத்தை கடந்த பதிவிலேயே தெரிவித்தாகி விட்டது! பரிசு புத்தகத்தை அறிவிக்க வேண்டியது ஒன்றுதான் பாக்கி - அப்போதுதான் சூடு பிடிக்கும்! ;) @Siva Subramanian: //வெல்கம் அகைன் ஜில் ஜோர்டான் !// +1 :) @விஸ்கி-சுஸ்கி: //profile picture - animated gif அருமை!// நன்றி விசு! லயன் ஃபேஸ்புக் பேஜுக்காக முத்து, லயன் & சன்ஷைன் இவற்றின் லோகோக்கள் ஒரு செகண்டுக்கு ஒரு முறை மாறும் விதத்தில் ஒரு படத்தை profile picture-க்காக அனுப்ப எண்ணி இருந்தேன்! ஆனால், FB-யில் GIF சப்போர்ட் கிடையாது! @குற்றச் சக்கரவர்த்தி: //அந்த parcel தமக்கே வந்ததாக கருதி பிரித்து மேய்ந்து விடுவார்கள்.... அப்படிப்பட்ட ஒரு மந்திர மண்டலத்தில் தான் அடியேனின் பாசறை உள்ளது// ஹா ஹா!! குற்றச் சக்கரவர்த்திக்கு இப்படி ஒரு சோதனையா?! :) உங்களுடைய முதல் பத்தி செம காமெடி! :) @chennaivaasi: //சொலுங்க வாத்யாரே சொல்லுங்க....// இந்த டயலாக் மட்டும் சென்னை பைந்தமிழுக்கு கொஞ்சம் செட் ஆக மாட்டேன் என்கிறது! :) @Ramesh Kumar: //அப்பப்போ இதேமேரி சவுண்டு வுட்னே இர் தலீவா... நீ கூவசொல்லோ கேக்க குஜாலாகீது...// செம! :) @Erode VIJAY: //மேற்கூறியவைகளுக்கான மாற்றுக் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. இன்னான்றீங்கோ? ;)// டியர் விஜய் சார், என் கருத்துக்களை உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பியுள்ளேன்! படித்து விட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கவும்! ;) @லக்ஷ்மி நாராயணன்: //அட்டையில் இருக்கும் எழுத்துக்களில் படலம் மற்றும் ! (ஆச்சர்யக்குறி) இடையே இடைவெளி அதிகமாக இருப்பதாக தெரிகிறது. ஸ்கேல் வைத்து அளந்து வேறு பார்த்தேன்.// உண்மை தான்! நானும் அளந்து பார்த்தேன்! படலதிற்கும், ஆச்சரியக் குறிக்கும் இடையே முழுசாக ஒரு சென்டிமீட்டர் இடைவெளி உள்ளது! ;) ReplyDelete Replies Vijayan 5 October 2013 at 23:24:00 GMT+5:30 Karthik Somalinga : Oops...நேற்று மாலைய பரபரப்பில் இரண்டாம் கதையின் xerox களை சிலருக்கு இணைக்க மறந்து விட்டார்கள். தனியாய் ஒரு கூரியரில் அவை கிளம்பியுள்ளன ! (So much for my money saving formula :-) ) அப்புறம் இவை அனைத்துமே லக்கி லுக்கின் சிறுகதைத் தொகுப்புகளின் கதைகள் ! ஒன்றுக்கொன்று தொடர்பில்லா independent stories ! Delete Replies Reply Reply Erode VIJAY 5 October 2013 at 22:13:00 GMT+5:30 சற்று முன்புதான் புத்தகங்கள் என் கைகளை அடைந்தன. இரு புத்தகங்களுமே அட்டைப்பட டிசைனில் (குறிப்பாக பின்னட்டைகள் படு அட்டகாசம்) அசத்துகின்றன!! வழக்கமான நமது 'பளீர்' பாணியிலான அட்டைகளிலிருந்து XIIIன் அட்டை முற்றிலும் மாறுபட்டு டார்க்காக இருப்பது ஒரு 'அடடே' மற்றும் 'ஆஹா' வித்தியாசம்! இப்படிப்பட்ட டார்க்கான அட்டைப்படத்தைத் தேர்வு செய்திடவும் ஒரு 'தில்' தேவைப்படுகிறது. அந்த 'தில்' பலனும் அளித்திருப்பதாகத் தோன்றுகிறது. கடைகளில் தொங்கவிடப்படும்போது இது எந்த அளவுக்கு பார்ப்பவர்களின் கண்களைக் கவர்ந்திடும் என்ற சிறு சந்தேகம் மட்டும் கொஞ்சமாய் எஞ்சி நிற்கிறது! இந்த தில்லான தேர்வின் பின்னணி பற்றி ஏதேனும் கதை இருந்தால் இங்கே பகிரலாமே எடிட்டர் சார்? ReplyDelete Replies Vijayan 5 October 2013 at 23:32:00 GMT+5:30 Erode VIJAY : அட்டைப்படத்திற்கென நமக்கிருந்த சாய்ஸ் - கோட் சூட் மாட்டியவாறு லாப்டாப்பை வெறித்து நிற்கும் XIII - அல்லது சிறைக் கம்பிகளை எண்ணிடும் ஜோன்சின் சித்திரம் ! ஜோன்சின் கண்களில் தெரிந்த ஒரு ஈர்ப்பு இந்த அட்டைப்படத்தை நிச்சயம் தூக்கி நிறுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது ! அவரது தலையில் அணிந்திருக்கும் ஸ்கார்ப் ஒரிஜினலில் காக்கி கலரிலேயே இருந்தது ; அதனை மாத்திரமே சிகப்பாய் மாற்றினால் போதுமென்று நினைத்தேன் ! தவிர பிரிண்டிங்கில் பின்னணியில் உள்ள கைதிகளின் முகங்கள் ஒரேடியாக இருளில் மூழ்கிடக் கூடாதே என்ற பயம் மட்டும் இருந்தது ; so பொன்னனிடம் சொல்லி background -ல் ப்ளூ & black depth கூடிட வேண்டாமே என்று கோரியிருந்தேன். கச்சிதமாய் அவரும் தன பங்கைச் செய்திட, அச்சிலும் கரை சேர்த்து விட்டார்கள் ! Delete Replies Reply Reply everconstantine 5 October 2013 at 22:29:00 GMT+5:30 Editor and friends forgive me for this comment............. //வாரா வாரம் எனது பாணியை தொடர்ந்து வாசிப்பதில் எனக்கே கொட்டாவி எழும் போது உங்களிடமும் ஒருவித அயர்ச்சி எழுவதில் வியப்பில்லை என்றே தோன்றுகிறது ! // மாதம் மாதம் புக் வருவதும் அந்த புக்ஸ் வாசிப்பதில் அயர்ச்சி எழுவதில் வியப்பில்லை என்றே தோன்றுகிறது so books ஐ வெளீடும் அவகாசத்தை சற்றே அதிகரிப்பதன் மூலம் தொடரும் மாதங்களது பணிச் சுமையையும் ; 2014-ன் திட்டமிடல்களையும் அணுகிட எனக்குக் கூடுதலாய் நேரம் கிடைக்கும் என்பதோடு - ஒரு staleness தலைதூக்கிடாது இருக்கவும் உதவும் என்று நினைக்கிறேன் என்று அர்த்தம் அப்பாடிதாநே எடிட்டர் சார்// sorry to this line............ please dont stop posting new post.............. plz i beg u ReplyDelete Replies Vijayan 5 October 2013 at 23:33:00 GMT+5:30 everconstantine : Beg என்பதெல்லாம் பெரிய வார்த்தை ...ப்ளீஸ் வேண்டாமே ?! Delete Replies Reply Reply Ranjith R 5 October 2013 at 23:13:00 GMT+5:30 சமிப காலத்தில் லக்கி லுக் கதைகள் படித்து வாராத சிரிப்பு ப்ளுகோட்ஸ் முலம் அக்குறையை நிவர்த்தி செய்து உள்ளிர், ReplyDelete Replies RAMG75 5 October 2013 at 23:17:00 GMT+5:30 முற்றிலும் உண்மை.. பறக்கும் பலூன் என வித்தியாசமான கதைக் களன். இந்தக் கதையை ( மற்ற கதைகளை க்கு முன்பு) வெளியிட்ட எடிட்டர், வெகுஜன ரசிக நாடி தெரிந்த சித்த வைத்தியர் என்பதனை மீண்டும் உணர்த்தி விட்டார் :-) Delete Replies Reply Vijayan 5 October 2013 at 23:36:00 GMT+5:30 RAMG75 : இதன் credit Cinebooks ஆங்கிலப் பதிப்புகளையே சாரும் ; அழகான கதைகளை வெளிச்சம் போட்டுக் காட்டி நம் பணிகளை சுலபமாக்குகிறார்களே ! Delete Replies Reply Reply RAMG75 5 October 2013 at 23:19:00 GMT+5:30 இப்பொழுது தான் கவனித்தேன். - தொடரும் ஒரு தேடல் என்பது இந்தக் கதையின் டைட்டிலா ?. நான் கேப்ஷன் என நினைத்திருந்தேன். ReplyDelete Replies Reply RAMG75 5 October 2013 at 23:21:00 GMT+5:30 ஹீரோவை விட்டு விட்டு.. ஏன் ஜோன்ஸ் இருக்கும் அட்டைப்படத்தை எடிட்டர் தேர்ந்து எடுத்ததன் பின்னணி என்ன என்று எடிட்டர் சொன்னால் நன்றாக இருக்கும். ReplyDelete Replies Vijayan 5 October 2013 at 23:37:00 GMT+5:30 RAMG75 : இதே கேள்வியினை ஈரோடு விஜயும் எழுப்பியுள்ளார் - பாருங்களேன் எனது பதிலை ! Delete Replies Reply Reply COMICSPRIYAN@SALEM.AMARNATH 6 October 2013 at 00:10:00 GMT+5:30 வெகுஜன ரசிக நாடி தெரிந்த சித்த வைத்தியர்!! :-) ReplyDelete Replies Reply Radja 6 October 2013 at 01:45:00 GMT+5:30 என்ன சார், உங்கள் எழுத்து போர் என்று யாராவது சொல்லுவார்களா? ஆனால் நீங்கள் அடிக்கடி இப்படி நினைத்து / எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். தயவுசெய்து உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். பலராலும் விரும்பி படிக்கப்படுவது உங்களின் பதிவுகள். நானும் கடந்த சில பதிவுகளில் பார்வையாளனாக கடந்து சென்று விட்டேன். மறுபதிப்புகளில் எனக்கு ஆர்வம் என்றுமே இருந்ததில்லை (ஒரே ஒரு முறை தவிர - detective ஸ்பெஷல்). ஆகையால் அதுபோன்ற விவாதங்களில் பங்கேற்காமல் சென்றுவிடுவேன். எது எப்படி இருந்தாலும் நாள் தவறாமல் நமது தளத்தில் புதிய செய்தி உள்ளதா என்று பலமுறை பார்ப்பது வழக்கம். ReplyDelete Replies Vijayan 6 October 2013 at 17:35:00 GMT+5:30 Radja from France : புதிய வருடம், புதுக் கதைகள் என எதிர்நோக்கியிருக்கும் வேளைகளில் நிச்சயம் புதுச் சங்கதிகள் இருந்திடும் ! Delete Replies Reply Reply WillerFan@RajaG 6 October 2013 at 01:55:00 GMT+5:30 ஆசிரியரின் பதிவு ஏதாவது புதியதாய் வந்திருக்கிறதா என்று வாரத்திற்கு மூன்று முறை ப்ளாக் கை பார்த்து செல்வேன்! ஆனால் கமெண்ட் இடுவது குறைவு தான்! இருந்தாலும் புதிய பதிவை பார்த்ததும் உண்டாகிற உற்சாகத்தோடு கூடிய ஆர்வம் நிச்சயம் அனைவருக்கும் உண்டென்று நம்புகிறேன் சார்! Please keep Updating as usual, Sir! ReplyDelete Replies Vijayan 6 October 2013 at 17:36:00 GMT+5:30 :-) Delete Replies Reply Reply Thiruchelvam Prapananth 6 October 2013 at 03:50:00 GMT+5:30 டியர் எடிட்டர் , XIII - ஒரு புலன் விசாரணை , அதாவது பாகம் 19 இன் வேலைகள் எல்லாம் செய்து விட்டு அதை பரணுக்கு அனுப்பி விடுவது சரிதானா? "நல்லதோர் வீணை செய்து அதை நலன் கெட புழுதியில் எறிவதுண்டோ" அதை தூசு தட்டி மறுபடியும் வெளியிடும் வாய்ப்புள்ளதா சார் ? தயவு செய்து தங்களின் பதிவுகளில் இடைவெளி அதிகரிக்கும் எண்ணத்தினை கைவிட இறைஞ்சி வேண்டிகொள்கிறேன் . உங்களின் பதிவினை எதிர்பார்த்து காத்து கிடப்போரில் அடியேனும் ஒருவன் . ஏற்கனவே வருவதே போதாது என்று பீல் செய்யும் வேளையில் , இப்படி ஒரு முடிவு வேண்டாமே ப்ளீஸ் ? ReplyDelete Replies Vijayan 6 October 2013 at 17:39:00 GMT+5:30 Thiruchelvam Prapananth : XIII - ஒரு புலன் விசாரணை - அத்தொடரின் hardcore வாசக ரசிகர்களுக்கு மாத்திரமே பிடிக்கக் கூடியதொரு பாணியல்லவா ? More of a collector's piece than of reading interest ! Delete Replies Reply கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 6 October 2013 at 18:19:00 GMT+5:30 நிச்சயம் வேண்டும் சார் புலன்விசாரனைக்கு உத்தரவிடுங்கள்! Delete Replies Reply Reply இளம் பரிதி 6 October 2013 at 08:39:00 GMT+5:30 டியர் சார் .....இரண்டு புத்தகங்களும் இந்த முறை மிக சிறப்பாக வந்துள்ளது ....பதிவுகளை குறைப்பது என்ற உங்கள் முடிவு மிக வருத்தம் அளிக்கிறது .....மேலும் தீபாவளிக்கு இரு நாட்கள் முன்பேனும் புத்தகங்கள் கையில் கிடைக்க ஏற்பாடு செய்தல் நலம் .....ஏன்னா டெக்ஸ் வேற வர போறாரே அதான்....அடுத்த வருடம் ஒரு பத்து டெக்ஸ் கதைகளை எதிர் பார்க்கிறேன் .... ReplyDelete Replies பாலாஜி 6 October 2013 at 15:26:00 GMT+5:30 நண்பரே அதை நான் வழிமொழிகிறேன் .. Delete Replies Reply Vijayan 6 October 2013 at 17:41:00 GMT+5:30 இளம் பரிதி : கவலை வேண்டாம் - தீபாவளிக்கு உங்கள் கைகளில் நிச்சயமாய் பிரதிகள் இருந்திடும் ! Delete Replies Reply Reply Dr.Sundar,Salem. 6 October 2013 at 10:14:00 GMT+5:30 dear vijayan , எமனின் திசை மேற்கு புத்தக மதிப்பீடு , தமிழ் ஹிந்து பேப்பர் ல் கண்டு மகிழ்ச்சி உற்றேன் ! நாம் எந்த துறையில் இருக்கிறோமோ அந்த துறையில் மிக சிறப்பனவர்களாக திகழ வேண்டும் என்பது சான்றோர் கூற்று ! அதன்படி தமிழ் காமிக்ஸ் துறையில் no 1 ஆக திகழ்ந்து வரும் நீங்கள் எங்களை போன்று பலருக்கு மானசீக குருவாக உள்ளீர் கள் என்றால் மிகை அல்ல - அதாவது நாங்களும் அந்தந்த துறையில் சிறப்பனவர்களாக மாறவேண்டும் என்ற உத்வேகத்தை உங்களிடம் இருந்து கற்று கொள்வதால் ...... அப்படிப்பட்ட நீங்கள் உங்களையே அடிக்கடி ஆந்தை விழியார் என்று சுய கிண்டல் செய்து கொள்வது கொஞ்சம் அல்ல நிறையவே குறைத்து கொள்ள லாமே சார் -அது ஜாலி யாக இருந்தாலும் கூட இணையத்தில் அதிகம் எழுதாதற்கு வேலைபளுவே காரணம் ,நம் தளத்தில் ஒரு நண்பர் இணைய புதைகுழி என்றொரு பதத்தை உபயோகம் செய்து இருந்தார் .அது உண்மைதான் ... ReplyDelete Replies King Viswa 6 October 2013 at 10:52:00 GMT+5:30 டாக்டர் சார், என்ன ஆச்சர்யம்? காலையில் லேட்டாக எழுந்து இப்போதுதான் அந்த பக்கத்தை ஸ்கான் செய்து எடிட்டருக்கு அனுப்பி விட்டு வந்து இங்கே பார்த்தால் உங்களது இந்த கமெண்ட் அதே 11ம் பக்கத்தை பற்றி. Remarkable coincidence. Delete Replies Reply Vijayan 6 October 2013 at 17:47:00 GMT+5:30 Dr.Sundar, Salem : இது நாம் அனைவருமாய் சேர்ந்து கட்டிடும் ஒரு அழகான கூடு ; இதன் கிரெடிட் என் ஒருவனுக்கு சேர்வதெல்லாம் நிச்சயம் பொருத்தம் ஆகாது ! இங்குள்ள ஒவ்வொருவரும் தத்தம் விதங்களில் எத்தனை ஆற்றலாளர்கள் என்பது தான் நித்தமும் நாம் ரசிக்கும் ஒரு சங்கதி அன்றோ ?! "குரு" என்பதெல்லாம் நிச்சயம் பெரிய வார்த்தை ; அந்த ஸ்தானம் நம்மை இங்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கும் ஆசான்களுக்கு பிரத்யேகமாய் இருந்திடட்டுமே ? Delete Replies Reply Reply Dr.Sundar,Salem. 6 October 2013 at 10:38:00 GMT+5:30 உங்களின் பதிவை மட்டும் பார்த்து விட்டு நேரமின்மை காரணமாக பதிவிட முடியாமல் போகிறது ! மேலும் இணையத்தில் நேரம் செலவிடுவதை காட்டிலும் ,, "தங்கமணி " என்ஜாய் ன் போது அவிழ்த்த வேர்கடலையை அருகில் வைத்து கொண்டு டெக்ஸ் (பழிக்கு பழி ,இரத்த முத்திரை ,டிராகன் நகரம் குறைந்தது 50முறையாவது படித்து இருப்பேன் )மற்றும் மாடஸ்டி யுடன்(எவர்க்ரீன் கழுகு மலைகோட்டை ) மல்லு கட்டுவது - அது சொர்க்கம் யா (சாலமன் பாப்பையா வாய்ஸ் ல் படித்தால் சந்தோசபடுவேன் ) ! கண்டிப்பாக உங்களின் பழகிய எழுத்து நடையை பார்த்து நண்பர்கள் போர் அடித்து கருத்து பதிவிடுவதில்லை என்பதை நான் ஒருக்காலும் ஒத்துக்கொள்ள மாட்டேன் , writer சுஜாதா வின் எழுத்து மிகவும் பழகிய எழுத்து தான் -அது போர் அடித்ததா என்ன ..அவர் கடைசி வரை கொடி கட்டி பறக்க வில்லையா ! ஆமா உங்களின் எழுத்து போர் என்று எவன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் சொன்னான் (நற நற ) ReplyDelete Replies Reply King Viswa 6 October 2013 at 10:50:00 GMT+5:30 காமிரேட்ஸ், நேற்று ஆங்கிலம் என்றால் இன்று தமிழ். நேற்று டெக்கன் குரோனிக்கல் என்றால் இன்று தி இந்து தமிழ். நேற்று கட்டுரை என்றால் இன்று புத்தக விமர்சனம். ஆம், இன்றைய தி இந்து சென்னை பதிப்பிலும், கோவை மதுரை, திருநெல்வேலி மற்றும் திருச்சி ஆகிய ஐந்து பதிப்பிலும் நூல்வெளி (புல் வெளி மாதிரி) என்கிற புத்தக விமர்சன / மதிப்புரை பக்கத்தில் நண்பர் CM (சந்திர மோகன்) அவர்களால் பதிப்பிடப்பட்டு சிறப்பாக வெளிவந்துள்ளது. அவருக்கும், இந்த புத்தகத்தை விமர்சனமாக வெளியிட உதவிய நண்பருக்கும் நன்றி. தி இந்து தமிழ் நாளிதழின் நிர்வாகத்திர்க்கும் நன்றி. ReplyDelete Replies Reply King Viswa 6 October 2013 at 11:04:00 GMT+5:30 காமிரேட்ஸ் மன்னிக்கவும், திருநெல்வேலியில் பதிப்பு (இப்போதைக்கு) இல்லையாம். ஆகையால் தமிழ் நாட்டில் மொத்தம் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி என்று நான்கு பதிப்புகள் தான். அதே சமயம் கேரளாவில் திருவனந்தபுரத்திலும், கர்நாடகாவில் பெங்களூருவிழும் தமிழ் பதிப்புகள் உண்டு. So, மேலே குறிப்பிட்ட ஊரில் இருக்கும் நண்பர்கள் இன்றைய தி இந்து தமிழ் நாளிதழை வாங்கி இன்புறுங்கள் (ஐந்தே ஐந்து ரூபாய்தான், ஜென்டில்மென்). நாளைக்கோ அல்லது பின்னரோ இந்த புத்தக விமர்சனம் வெளியிடப்படும். ReplyDelete Replies Reply Erode VIJAY 6 October 2013 at 12:08:00 GMT+5:30 நமது காமிக்ஸ் பற்றிய செய்திகள் தொடர்ந்து 'இந்தியா டுடே', 'டெக்கான் க்ரானிக்கிள்', 'தி இந்து' போன்ற முன்னணி பத்திரிக்கைகளில் வெளியாகிவருவது மகிழ்ச்சியளிக்கிறது! தொடர்ந்து இம்முயற்சிகளில் ஈடுபட்டுவரும் கிங் விஸ்வா மற்றும் அவரது பத்திரிக்கையுலக நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும்!! ReplyDelete Replies King Viswa 6 October 2013 at 12:22:00 GMT+5:30 இந்த பாராட்டு (தி இந்து குறித்து) செல்ல வேண்டியது அந்த புத்தக மதிப்புரையை எழுதிய நண்பர் வெற்றிவேல் சந்திரமோகன் அவர்களுக்கே. இந்த ஆண்டு சென்னை புத்தக திருவிழாவில் இந்த புத்தகத்தை வாங்கியதில் இருந்தே அதன்பால் ஈர்க்கப்பட்டு இருந்த அவர், சரியான நேரம் பார்த்து இப்போது அதனைப்பற்றி அழகாக எழுதி இருக்கிறார். Delete Replies Reply Erode VIJAY 6 October 2013 at 12:35:00 GMT+5:30 நண்பர் வெற்றிவேல் சந்திரமோகன் அவர்களுக்கு காமிக்ஸ் உலகின் நன்றிகள் பல! 'எமனின் திசை மேற்கை' அனுபவித்து படித்ததாலோ என்னவோ, அனுபவித்து விமர்ச்சித்திருக்கிறார். விமர்ச்சனத்திற்காகக் கொடுக்கபட்ட சிறிய இடத்திற்குள் தேவையான தகவல்களைப் புகுத்தி நிறைவான விமர்ச்சன அனுபவத்தைக் கொடுத்திருக்கிறார்! வாழ்க வளமுடன்!! Delete Replies Reply பாலாஜி 6 October 2013 at 15:54:00 GMT+5:30 யாராவது அந்த பக்கத்த அப்டேட் பண்ணுங்கப்பா!! உங்களக்கு புண்ணியம் கிடைக்கும்.. இங்க ஹிந்து பேப்பர் கிடைக்கல.. Delete Replies Reply Vijayan 6 October 2013 at 17:52:00 GMT+5:30 balaji ramnath : இங்கேயும் கூடக் கிடைக்கவில்லை !! எனினும் நமக்குப் பெருமை சேர்த்துள்ள டெக்கான் Chronicle & ஹிந்து இதழ்களுக்கு நமது நெஞார்ந்த நன்றிகள் ! Thanks Vishwa too Delete Replies Reply Reply saint satan 6 October 2013 at 12:16:00 GMT+5:30 கணக்கரசருக்கு புத்தகங்கள் வந்துவிட்டதாம்.ஆனால்,ரஷ்ய சர்வாதிகாரிக்கும்,நல்ல பிசாசுக்கும் இன்னும் வரவில்லை.தாவாங்கட்டையை சொறிந்தபடி மோட்டுவளையை பார்த்துக்கொண்டு சோகத்துடன் புலம்புகிறாராம் நல்ல பிசாசு. இது "கிழக்கத்திய நாடுகளின் சதி"யாக இருக்குமோ...?என்று வேறு குற்றம் சாட்டுகிறாராம் பிசாசார்.ஒருவேளை ,அப்படியும் இருக்குமோ...? ReplyDelete Replies Erode VIJAY 6 October 2013 at 12:27:00 GMT+5:30 கணக்கரசருக்கு எச்சரிக்கை! வெறும் கையோடு உங்கள் அலுவலகத்துக்குள் எட்டிப்பார்த்திடும் சாத்தான், திரும்பிச் செல்லும்போது கைகளில் கலர் புத்தகங்களையும் வாய்நிறைய நமுட்டுச் சிரிப்பையும் சுமந்து செல்லக்கூடும்! Beware of பிசாசுகள்! ;) Delete Replies Reply Vijayan 6 October 2013 at 17:54:00 GMT+5:30 இந்த சதிக்குப் பின்னணி ST கூரியரில் உள்ள ஆட்பற்றாக்குறை சாத்தான்ஜி ! Delete Replies Reply Reply Erode VIJAY 6 October 2013 at 12:18:00 GMT+5:30 'எமனின் திசை மேற்கு' பற்றிய இன்றைய 'தி இந்து தமிழ் நாளிதழின்' விமர்ச்சனம் நேர்த்தியாக உள்ளது. க்ராபிக் நாவலுக்கும் காமிக்ஸுக்குமுள்ள வித்தியாசத்தில் துவங்கி, காமிக்ஸ் கற்றுக்கொடுக்கும் விசயங்கள், அவை உருவாகிடும் பின்புலங்கள், முத்துக்காமிக்ஸின் சாதனை, மொழிபெயர்ப்பில் எடிட்டர் கண்டிடும் சவால், 'எமனின் திசை மேற்கு' பற்றிய அழகான சுருக்கமான விமர்ச்சனம் ஆகியவற்றை உள்ளடக்கி, படித்து முடிக்கும்போது ஒருவகையான திருப்தியையும் தருகிறது! அருமை!! ReplyDelete Replies Vijayan 6 October 2013 at 17:54:00 GMT+5:30 Yes, short n' sweet.... Delete Replies Reply Reply saint satan 6 October 2013 at 12:27:00 GMT+5:30 மை டியர் மானிடர்களே!!! காமிக்ஸை வாங்கினோமா ,படித்தோமா என்று மட்டும் இருந்திடாமல் அதன் வளர்ச்சிக்கு தன்னால் முடிந்த அத்தனை உதவிகளையும் பிரதிபலன் பாராமல் செய்துவரும் மரியாதைக்குரிய நண்பர் கிங் விஸ்வா அவர்களை பாராட்ட வார்த்தைகளில்லை.அவருடைய காமிக்ஸ் சேவை இன்றைய வர்த்தக சூழலில் நம்மை போன்ற சிறு பத்திரிக்கைகளுக்கு மிக பெரிய அனுகூலங்களை ஏற்படுத்தும் என்பது நிச்சயம். கிங் விஸ்வா அவர்களை மனதார பாராட்டுகிறேன்!!! ReplyDelete Replies Reply Podiyan 6 October 2013 at 13:13:00 GMT+5:30 வருடத்தின் இறுதியை நோக்கி வேகமாக நகரும் இந்த மாதங்கள் பலருக்கும் பணிச் சுமையை தூக்கி தலையில் வைத்துவிடுவதால் இங்கு வந்து பதிவைப் படித்துவிட்டு நகர்ந்துவிடுகிறார்கள் என்று நினைக்கிறேன் (நானும்கூட). சட்டென்று பின்னூட்டமிடவேண்டிய செய்தி மனதில் ஒளிர்ந்தால் உடனே டைப் செய்து பதிந்துவிடலாம். அல்லது, 'நான் முதலாவது, ரெண்டாவது... வந்துட்டேன்.. ப்ரசண்ட் சார்...' என்பதுபோல ஒரு வரியில் பின்னூட்டமிடுவதாயினும் இலகுதான். ஆனால், பதிவிலிருந்து எழும் சந்தேகங்களை கேட்கவிரும்பும்போது அதற்கு பொறுமையும் சற்றே அதிக நேரமும் தேவைப்படுகிறது. அதனால் தான் பல நண்பர்கள் படித்துவிட்டு பிறகு வருவோம் என்று நகர்ந்து, அப்படியே நேரமின்மையால் பின்னூட்டமிடுவதை தவறவிட்டுவிடுகிறார்கள். பின்னர், அந்த கேள்வியோடு பதிவிடவரும்போது வேறு ஒருவர் அந்தக் கேள்வியைக் கேட்டு அதற்கு ஆசிரியரும் பதில் அளித்திருந்தால், பதிவிட வேறு விடயத்தை தேடவேண்டியிருக்கும். எனவே, பதிவைப் படிப்பவர்கள் பின்னூட்டமிடுவது சில காலப்பகுதியில் குறைவடைவதை தவிர்க்க இயலாது. அதே நேரம், ஆசிரியர் பதில்கள் அளிக்கும் பதிவுகளில் பின்னூட்டங்களும் அதிகரித்துச் செல்வதையும் அவதானிக்கலாம். 'இண்ட்டரக்ட்' பண்ணுவதற்கு வாய்ப்பிருக்கும்போது உரையாடல்களும் பிறப்பது வழமையே! ReplyDelete Replies Vijayan 6 October 2013 at 17:55:00 GMT+5:30 Podiyan : //'இண்ட்டரக்ட்' பண்ணுவதற்கு வாய்ப்பிருக்கும்போது உரையாடல்களும் பிறப்பது வழமையே!// Very true... Delete Replies Reply Reply Podiyan 6 October 2013 at 13:13:00 GMT+5:30 டைலன் டாக் பற்றி நண்பர்கள் இங்கு பேசுவது எதைவைத்து என்பது புரியவில்லை. ஒருவேளை புதிய இதழ்களில் விளம்பரம் வந்திருக்கிறதா? ReplyDelete Replies திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் 6 October 2013 at 15:18:00 GMT+5:30 நண்பர் பொடியன் அவர்களே, நண்பர் சௌந்தர் அவர்களுடைய 106 ஆவது பதிவை பார்த்த பின்புதான் எனக்கும் புரிந்த்தது. நீங்களும் பாருங்களேன் :) http://tamilcomics-soundarss.blogspot.com.au/ உங்க வலைப்பூவில் முதல் பதிவிற்கு அப்புறம் எதுவும் இல்லையே நண்பரே ? Busy ? Delete Replies Reply Reply saint satan 6 October 2013 at 13:37:00 GMT+5:30 டியர் எடிட்டர்ஜீ !!! புதிதாக வெளிவரும் "தி இந்து"நாளிதழில் நமது காமிக்ஸ் விளம்பரங்களை வெளியிடலாமே..?அரசியல் வார இதழ்களில் நமது விளம்பரங்கள் வருவதைவிட செய்தி தாள்களில் வெளியிடுவது கொஞ்சம் காஸ்ட்லியாக இருந்தாலும் "பலன்"சற்று பெரிதாக இருக்கும் என கருதுகிறேன். (அடியேன் தினகரனுக்கு பதிலாக இந்துவுக்கு மாறிவிட்டேன்.ஹிஹி!!!) ReplyDelete Replies ஜெ. சுந்தரமூர்த்தி 6 October 2013 at 14:22:00 GMT+5:30 இன்றைய “ தி இந்து” தமிழ் நாளிதழில் நமது wild west special பற்றிய புத்தக மதிப்புரை வெளிவந்திருக்கிறது. Delete Replies Reply பாலாஜி 6 October 2013 at 15:33:00 GMT+5:30 This comment has been removed by the author. Delete Replies Reply Reply ஜெ. சுந்தரமூர்த்தி 6 October 2013 at 14:32:00 GMT+5:30 ஆதி தாமிரா , கார்த்திக் சோமலிங்கா போன்றவர்களுக்கு KBT , KBGD, போட்டிகள். என்னை போன்ற “ அல்லக்கை” களுக்கு தினமலர் சிறுவர்மலரில் வருவது போன்ற போட்டிகளல்லாம் வைக்கமாட்டீர்களா விஜயன் சார்?. ReplyDelete Replies Vijayan 6 October 2013 at 18:00:00 GMT+5:30 sundaramoorthy j : அது ஏன் "அல்லக்கை" பட்டியலுக்குள் உங்களை கொண்டு செல்வானேன் ? தைரியமாய் முயற்சிக்கலாமே ? தவிர வாரமலர் போட்டிகளை குறைத்து எடை போடவும் வேண்டாமே - குட்டீஸ்களுகாக சின்னதாய் சவால்களை அமைப்பதும் சுவாரஸ்யம் தானே ? Delete Replies Reply Reply திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் 6 October 2013 at 15:31:00 GMT+5:30 விஜயன் சார், பின்னூட்டங்களின் எண்ணிக்கை குறைவதற்கான காரணங்களை நண்பர்கள் பட்டியலிட்டு விட்டார்கள். நானும் கடந்த சில மாத காலமாக குறைவான பின்னூட்டம் தான் இட்டு உள்ளேன். காரணம் 1. நான் சொல்ல வந்த கருத்தை நண்பர்கள் சொல்லி விடுவது 2. பணிசுமை காரணமாக நேரம் குறைவாக கிடைக்கும் பொழுது, பதிவு மற்றும் நண்பர்களின் பின்னூட்டங்களை படிக்கவே நேரம் போதவில்லை ... (கடந்த 2 மாதமாக) ஆகவே இங்கே யாருக்கும் உங்களது எழுத்து போரடிக்கவில்லை என்பதே உண்மை. ReplyDelete Replies Reply Domo 6 October 2013 at 15:50:00 GMT+5:30 Dear Editor Sir, I'm a fan of Muthu/Lion comics for around 20+ years and residing at Chennai. Since I don't have proper permanent address. I used to order books via EBay. I used to purchase all the issues. Recently I noted that, even if two issues released in a month, you are posting them as individual listing, for which I need to pay courier charges twice (although its sent in single parcel). Why don't you provide an option for clubbing monthly issues together (Tex's two issues and Diabolique's issue was posted like that). Please provide with such options. ReplyDelete Replies Vijayan 6 October 2013 at 18:02:00 GMT+5:30 Domo : There are quite a few readers who opt to buy just the cartoon editions ; so clubbing them with Ratha Padalam is not going to suit them. Why not subscribe - you can still amend your address whenever needed ?! Delete Replies Reply Reply கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 6 October 2013 at 17:20:00 GMT+5:30 சார் உங்கள் எழுத்துக்கள், நண்பர்களுடைய கருத்துக்கள்,அதகலபடுத்தும் அரட்டைகள் என இதனை விட பெரும் பேரு ஏதுமில்லை! பணி தொய்வால் உற்ச்சாகமாய் பங்கேற்க இயலவில்லை ,என்னை போன்றே சிலரும் இருக்கலாம்! எனக்கு புத்தகங்கள் வந்து சேரவில்லை , ஆனாலும் தளராமல் சுஸ்கி விஸ்கி இடமிருந்து லவட்டி கொண்டு வந்து விட்டேன்! ப்ளூ கோட் பட்டாளத்தை நான்கு பக்கங்கள் புரட்டிய பின்னர், ரத்தபடலம் படிக்க அமர்ந்தேன் ,சும்மா நான்கு பக்கங்களை புரட்டலாம் என்று, வைக்கவே இயலவில்லை! ஓவியதரம் பல இடங்களில் புகை படமோ என ஐயுருமளவிற்க்கு உள்ளது , ஓவியருக்கு மெகா சல்யூட். அட்டைபடங்களுக்கு ஒரு திருஷ்டி சுற்றி போடுங்கள் ,நீங்கள் கூறியது போல அந்த கண்கள் அட்டை படத்தில் சுண்டி இழுக்கும் வசீகரம் சேர்த்து விட்டன! வில்லியம் வான்சை விட அசத்துகிறார் ; அதனை வண்ணத்தின் காரணத்ததாலா என சொல்ல தெரியவில்லை ! நிச்சயம் அந்த கதைக்கு இது சளைத்ததல்ல ! முன் கதையோடு பின்னி சென்றாலும் செல்லும் திசை அருமை ! கதாசிரியரும் வான் ஹம்மே உடன் போட்டி போடுகிறார் ! மொழி பெயர்ப்பு சொல்லவே வேண்டாம்....... இதுவும் பதினெட்டு பாகங்கள் வந்தால் அடடா என எண்ணத்தோன்றுகிறது ! ஆனால் வருடம் ஒன்றுதான் எனும் போது போங்க சார்! , கதை முழுதும் நமது நண்பர் மற்றும் ஜோன்ஸ் அடுத்து என்ன நேருமோ என அவரவர் திசையில் நம்மை எங்கும் திரும்பாமல் மனதை கட்டி இழுத்து செல்கிறார்கள் குதிரையின் கண்களுக்கு திரை போட்டது போல ! இங்கும் விதியின் விளையாட்டு , கதாசிரியரின் மந்திர விரல்களால் நாயகனின் தலை எழுத்துக்களாய் விறுவிறுப்பாய் விரைவாய் ! இந்த கதை தொடரும் செம போடு போட போவது உறுதி ! ப்ளூ கோட் இவ்வளவு நாள் ஏன் விட்டு வைத்தீர்கள் என கோபம் வருகிறது ! நமது ஸ்டார் வரிசை பெருகி வருவது சந்தோசமளிக்கிறது! உங்களது நகைசுவை மொழி பெயர்ப்பிற்கு தீனி கிட்டியிருக்கிறது என்றே நினைக்கிறேன், நிறைந்தது எனது வயிரல்லவா ! ஒவ்வொரு கட்டங்களும் வயிறை பதம் பார்க்கின்றன! நாலடி குதிரை மேல் சவாரி பண்றதுக்கும், நூறடி உசரத்திலே பலூனில் சவாரி பண்றதுக்கும் பெரிய வித்தியாசமில்லை எனும் வரிகளை படித்து விழுந்து விழுந்து சிரித்தேநென்றால் , நேற்று நண்பர் சுச்கியிடம் வாங்கியபோது இன்று படித்தால் என்ன நாளை படித்தால் என்ன , எல்லாம் ஒன்றுதான் எனக்கு கொடுடா என வாங்கியதை நினைத்தும் கூடத்தானோ ! ஆக மொத்தம் என் மன தொய்வை நீக்கிய இரண்டு முத்துக்கள், ஒன்று சிங்கமெனினும் நமது மணி மகுடத்திலே! ReplyDelete Replies Vijayan 6 October 2013 at 17:57:00 GMT+5:30 கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : Welcome back :-) Delete Replies Reply கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 6 October 2013 at 18:10:00 GMT+5:30 thank u sir Delete Replies Reply Erode VIJAY 6 October 2013 at 18:22:00 GMT+5:30 நல்வரவு இரும்புக் கையாரே! :) வாழ்க்கை தன் சோக முகத்தைக் காட்டும்போது அதைக் கொஞ்சமாய் அனுபவிச்சுட்டு 'ஒரு கழுதையின் கதை'யை ஒருமுறை படிங்க! குறிப்பா ஷெரிப் டாக்புல்லின் முகபாவங்களைக் கவனிங்க; உங்க சோகமெல்லாம் காத தூரம் விலகி ஓடிடும்! :) ஆனா தப்பித்தவறி 'அரக்கன் ஆர்டினி'யை படிச்சுத் தொலைச்சுடாதீங்க; அப்புறம் வாழ்க்கை மறுபடி சோகமாயிடும்! :D Delete Replies Reply கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 6 October 2013 at 18:27:00 GMT+5:30 அப்புறம் ஆசிரியை அந்த மெகா ச்பிடர் கதை கேட்பேன் , முடியாது என்பார் //அப்புறம் வாழ்க்கை மறுபடி சோகமாயிடும்! :D// Delete Replies Reply கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 6 October 2013 at 18:27:00 GMT+5:30 சாரி ஸ்பைடர் என படிங்க Delete Replies Reply Reply Chinnapparaj 6 October 2013 at 18:48:00 GMT+5:30 XIII ஐய் வரவேற்காத உள்ளமும் உண்டோ !!! ReplyDelete Replies Reply Chinnapparaj 6 October 2013 at 18:53:00 GMT+5:30 நண்பர்களே இன்றைய தி ஹிந்து நாளிதழில் நமது காமிக்ஸ் பற்றிய செய்தி குறிப்பு வந்துள்ளது october 6th Sunday ReplyDelete Replies Reply Unknown 6 October 2013 at 19:12:00 GMT+5:30 டியர் எடிட்டர் எனக்கு இன்னும் புக் கிடைக்கவில்லை அதனால் தான் இந்த தாமதமான பதிவு. ஒருவர் தன் கட்சியை வளர்ப்பதற்காக தள்ளாத வயதிலும் தனது தம்பிகளுக்கு தினமும் கடிதம் எழுதுகிறார். வெறும் 20 வயது இளைஞரான தாங்கள் நம் காமிக்ஸ் வளர்ச்சிக்கு உங்கள் தம்பிகளுக்கு வாரம் ஒரு பதிவிடவே மிகவும் யோசிக்கிறீர்கள் என்ன நியாயம் இது. எனவே எங்களுக்கும் தினமும் ஒரு பதிவு வேண்டும். (பி கு ) கருத்து கருத்தை மட்டும் எடுத்து கொள்ளவும். ReplyDelete Replies saint satan 6 October 2013 at 20:02:00 GMT+5:30 எடிட்டர் விஜயனுக்கு 20 வயது ஆகிறதா.....? ஆஹா....அவர் என்னைவிட 4 வயது மூத்தவரா...:-) Delete Replies Reply King Viswa 6 October 2013 at 20:53:00 GMT+5:30 சாத்தான் ஜி, //எடிட்டர் விஜயனுக்கு 20 வயது ஆகிறதா.....? ஆஹா....அவர் என்னைவிட 4 வயது மூத்தவரா...:-)// அப்போ உங்களுக்கு பதினாறு வயது ஆகிறதா? ஆஹா .......நீங்கள் என்னைவிட 2 வயது மூத்தவரா? எனக்கு 14 வயதுதான் :) Delete Replies Reply ரமேஷ் குமார், கோவை 6 October 2013 at 21:15:00 GMT+5:30 அப்போ என்னோட வயசு (20/48)*34 = 14.1 Delete Replies Reply Reply சிம்பா 6 October 2013 at 21:23:00 GMT+5:30 எது அசைந்தாலும் சுட உத்தரவு இடுகிறேன்.... அடேய் ய் ய் முகாமுக்கு வெளியே டா............ முடியலப்பா சாமி.... ReplyDelete Replies Reply Add comment Load more... Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) Total Pageviews Comics Lovers ஆன்லைனில் வாங்கிட : FACEBOOK BULLETIN BOARD Lion-Muthu Comics Promote Your Page Too Contact Form Name Email * Message * Feedjit Click below to buy CINEBOOK English Comics Online from us ! CLICK IMAGE FOR BOOKSELLERS LISTS Featured post ஒரு அட்டவணைத் திருவிழா !! OUR WEBSITE Click on the logo to go to official website About Me Vijayan View my complete profile Blog Archive ► 2021 (112) ► November (5) ► October (17) ► September (7) ► August (9) ► July (8) ► June (11) ► May (25) ► April (8) ► March (9) ► February (7) ► January (6) ► 2020 (102) ► December (6) ► November (6) ► October (6) ► September (6) ► August (9) ► July (8) ► June (11) ► May (9) ► April (12) ► March (12) ► February (8) ► January (9) ► 2019 (77) ► December (6) ► November (5) ► October (12) ► September (6) ► August (7) ► July (5) ► June (5) ► May (9) ► April (4) ► March (5) ► February (5) ► January (8) ► 2018 (83) ► December (4) ► November (5) ► October (6) ► September (10) ► August (7) ► July (8) ► June (6) ► May (6) ► April (7) ► March (11) ► February (6) ► January (7) ► 2017 (89) ► December (5) ► November (5) ► October (11) ► September (8) ► August (9) ► July (10) ► June (7) ► May (5) ► April (7) ► March (7) ► February (7) ► January (8) ► 2016 (83) ► December (6) ► November (5) ► October (6) ► September (6) ► August (10) ► July (8) ► June (9) ► May (8) ► April (5) ► March (6) ► February (7) ► January (7) ► 2015 (69) ► December (5) ► November (7) ► October (6) ► September (7) ► August (6) ► July (4) ► June (5) ► May (5) ► April (7) ► March (6) ► February (4) ► January (7) ► 2014 (66) ► December (4) ► November (7) ► October (4) ► September (8) ► August (6) ► July (6) ► June (4) ► May (4) ► April (8) ► March (4) ► February (5) ► January (6) ▼ 2013 (58) ► December (4) ► November (4) ▼ October (7) படிக்க.....படம் பார்க்க ! ஒரு நவம்பர் நாயகன் ! எங்கள் வீதியில் ஒரு வானவில் ! உலகம் சுற்றலாம் வாங்க..! உதை வாங்கும் நேரமிது ! தொடரும் ஒரு யாத்திரை ! நீலச் சட்டைகளுக்கு சிகப்புக் கம்பளம்...! ► September (5) ► August (5) ► July (5) ► June (4) ► May (5) ► April (4) ► March (5) ► February (5) ► January (5) ► 2012 (66) ► December (5) ► November (4) ► October (3) ► September (4) ► August (5) ► July (3) ► June (5) ► May (4) ► April (9) ► March (8) ► February (7) ► January (9) ► 2011 (5) ► December (5) News 7 நண்பர்களே, வணக்கம். புது வருஷமும் புலர்ந்து மூன்று வாரங்களும் ஓட்டமெடுத்து விட்டாச்சு ; முன்னணியில் நிற்போருக்கு நம்பிக்கைகளோடு தடுப்பூசி... கடைசி க்வாட்டர் '21...! நண்பர்களே, வணக்கம். செப்டெம்பரின் முக்கால்வாசி கடந்து சென்றிருக்க, ஆண்டின் கடைசிக் க்வாட்டர் நம் முன்னே !! (" கடைசிக் க்வாட்டர்" ... சின்னச் சின்ன ஆசைகள் !! நண்பர்களே, வணக்கம். சான் பிரான்சிஸ்கோவுக்கும், லாஸ் ஏஞ்சலீசுக்கும் மத்தியில் ஒன்றரை நாட்களாய்த் தெறிக்கும் பயணங்களில் இங்கே ஒரே பிசி ! &quo...
Developing the abilites an individual to face Socio-Economic Problems be might have to overcome in future through the School Curriculum. பாடசாலையை கலைத்திட்டத்தினுடாக எதிர்கால சவால்களுக்கும், சமூகப் பிரச்சினகை்கும் முகம் கொடுக்கக்௬டிய தனியாள் விருத்தியை ஏற்படுத்தல்.
வாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்... 07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர் ரிஷபன் இவரின் வலைப்பூ ரிஷபன் Loading... முந்தைய ஆசிரியர்கள் ஆசிரியர்கள் பட்டியல் 4வேடந்தாங்கல்-கருண் - Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் "அருண்பிரசாத்" "ஒற்றை அன்றில்" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ? காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி? எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை! அது விரிக்கும் தன் சிறகை! நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் ! மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர் சீனா ... (Cheena) - அசைபோடுவது Loading... சிந்தாநதி Loading... நன்றி! திரட்டிகளின் தொகுப்பு பிரதேசங்கள் கங்காரு சென்னப்பட்டினம் கடல்கன்னி வலைப்பதிவர் உதவிப்பக்கம் வலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்!!! தமிழில் எழுத மென்பொருள் NHM Writer Blogservice பிளாக்கர் வேர்ட்பிரஸ் fb like Powered by Morgan&Men SEO Consulting - Widget ஞானாலயா = புதுக்கோட்டை வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது முகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் | Sunday, May 25, 2014 ஆண்டிச்சாமி ஆசிரியப் பொறுப்பினை சுவாமிநாதன் இராமனிடம் ஒப்படைக்கிறார் ➦➠ by: * அறிமுகம் அன்பின் சக பதிவர்களே ! வணக்கம் வலை நண்பர்களே, இன்றுடன் முடிகிற வாரத்திற்கு ஆர்வமுடன் ஆசிரியர் பொறுப்பேற்று இருந்த ஆண்டிச்சாமி அவர்கள் தமது பணியை திறம்படவும், ஆர்வமுடனும், மிகுந்த பொறுப்புடனும் செய்து முடித்து நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார். அவர் கீழ்கண்ட தலைப்புகளில் ஐந்து பதிவுகள் வரை எழுதியுள்ளார். ஆண்டிச்சாமி ( கிலாடி ரங்கா ) என்னைப்பற்றி, பதிவுலகில் என் மானசீக குரு , வளர்ந்து வரும் இளம் சினிமா பதிவர்கள், சிறுகதை எழுத்தாளப் பதிவாளர்கள், வலைச்சரத்தில் கடைசி நாள். அவருக்கு கிடைத்த மறுமொழிகள் : 055 பக்கப்பார்வைகள் : 1091 திரு ஆண்டிச்சாமி அவர்களை வாழ்த்தி வழியனுப்புவதில் வலைச்சரக் குழு பெருமகிழ்ச்சி அடைகிறது. நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்க ஒரு ஊழியனின் குரல் என்ற வலைப்பூவை எழுதி வரும் பதிவரை அழைக்கின்றோம். இவரது பெயர் : சுவாமி நாதன் இராமன் இவர் 28 ஆண்டுகளாக எல்.ஐ.சி ஊழியராக பணியாற்ருகிறார். . தொழிற்சங்க இயக்கத்திலும் அதே அனுபவம். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் வேலூர் கோட்டப் பொதுச்செயலாளர் பொறுப்பில் 15 ஆண்டுகளாக செயல்படுகிறார். . இவர் அரசியல் கருத்துக்களைச் சொல்வதற்காகத்தான் வலைப்பக்கம் எழுதத் தொடங்கினாலும் கவிதைகள் எழுதுவதும் இணைந்து கொண்டது. மார்க்சியமே வெல்லும் என்ற உறுதியோடு பயணிக்கிறார். ” ஒரு ஊழியனின் குரல் “ வலைப்பூ பதிவரை வருக வருக என வாழ்த்தி வரவேற்று ஆசிரியர் பணியில் அமர்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்....
Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript! Sunday, November 28, 2021 Home ஆன்மிகம் சுய முன்னேற்றம் ஆலய தரிசனம் நீதிக்கதைகள் பக்திக் கதைகள் உடல் நலம் உழவாரப்பணி மன வளம் மகா பெரியவா மாமனிதர்கள் பிரார்த்தனை கிளப் ரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு முக்கிய நிகழ்ச்சிகள் About me… Donate us Search for: Please specify the group Home > Featured > அள்ளித் தரும் அன்னாபிஷேகம் & அன்னாபிஷேக அன்னத்தை புசிப்பதால் கிட்டும் பலன்கள்!! அள்ளித் தரும் அன்னாபிஷேகம் & அன்னாபிஷேக அன்னத்தை புசிப்பதால் கிட்டும் பலன்கள்!! Right Mantra Sundar October 25, 2015 October 26, 2015 Featured, ஆன்மிகம் 6 print நாளை மறுநாள் செவ்வாய்கிழமை ஐப்பசி பௌர்ணமி, அஸ்வினி நட்சத்திரத்தன்று அன்னாபிஷேகத் திருநாள். அன்னாபிஷேகம் குறித்து இது வரை நம் தளத்தில் பல பதிவுகள் வெளியாகியிருந்தாலும் மேலும் சில தகவல்களை திரட்டி இந்த பதிவை அளிக்கிறோம். பதிவு உங்களை கவரும் என்று நம்புகிறோம். மகாவிஷ்ணு அலங்காரப் பிரியர் என்றால் சிவபெருமான் அபிஷேகப் பிரியர். சிவபெருமானுக்கு அடிக்கடி அபிஷேகம் செய்து வருவது சகலவிதங்களிலும் நன்மை தரக்கூடியது. தூய நீர், பசும்பால், இளநீர், கரும்புச் சாறு, சந்தனம், விபூதி, பசுந்தயிர், பஞ்சாமிர்தம், மாப்பொடி, மஞ்சள் தூள், அன்னம் ஆகியவை சிவபெருமானின் அபிஷேகத்துக்கு உரியவை. இவற்றில் அன்னம் மட்டும் ஐப்பசி மாதம் வரும் பௌர்ணமியன்று அபிஷேகம் செய்யப்படும். அந்த வைபவத்திற்கு அன்னாபிஷேகம் என்றே பெயர். சிவபெருமானுக்கு செய்யப்படும் பல்வேறு அபிஷேகங்களில் மிக மிக உயர்வானது அன்னாபிஷேகமே. நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ அது தான் உங்கள் உடல். எனவே என்றும் நல்ல, சுத்தமான உணவையே உண்ணவேண்டும். ஆச்சாரம், சுத்தம் குறைவான இடங்களில் உண்பதை தவிர்க்க வேண்டும். “கூழானாலும் குளித்துக்குடி, கந்தையானாலும் கசக்கிக் கட்டு” என்று ஆன்றோர் சொன்ன வாக்கில் தான் எத்தனை பொருள். அன்னம் என்பது பிராணன் என்றும், அஹமன்னம் எனவும் வேதங்கள் போற்றுகின்றன. ஒருவன் எத்தகைய உணவு உண்கிறானோ அதைப் பொறுத்தே அவனது மனம் இருக்கும் என்கின்றன நமது உபநிடதங்கள். சாத்வீகமான உணவுகளையே என்றும் உண்ணவேண்டும். மேலும் அற்றார் அழிப்பசி தீர்க்கும் அன்னத்தை சிறிதும் வீணாக்ககூடாது என்பதற்காகவும், அது கடவுளுக்கு ஒப்பானது என்பதை நம் அனைவருக்கும் உணர்த்தவே சர்வேஸ்வரனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. பஞ்ச பூதங்களையும் படைத்து அவற்றை கட்டுப்படுத்துபவன் சிவபெருமான். அன்னம் கூட பஞ்சபூதங்களின் சேர்க்கையால் நமக்கு கிடைக்கும் ஒன்று. நிலத்தில் விதைத்து வானிலிருந்து பொழியும் மழையால் விளைந்து, காற்றினால் கதிர்பிடித்து, சூரியனின் ஒளியால் வளர்ச்சி பெற்று அறுவடையை தருகிறது. பஞ்சபூதங்களின் சேர்க்கை இல்லாவிட்டால் அரிசியானது விளையாது. எனவே எந்த அபிஷேகத்தைவிட அன்னாபிஷேகத்தை சிவபெருமான் மிகவும் விரும்பி ஏற்றுக்கொள்கிறான். அன்னாபிஷேகம் எப்படி செய்யப்படுகிறது? அன்னாபிஷேகத் திருநாளில் முதலில் சிவபெருமானுக்கு ஐந்து விதமான பொருட்களால் அர்ச்சனை செய்து, பின்னர் நன்கு வடித்து ஆறவைத்த பச்சரிசி அன்னத்தை கொண்டு காப்பு போல அப்பி பூசுவார்கள். அன்னமானது மேலேயிருந்து வைத்துக்கொண்டு வருவார்கள். பிரம்மபாகம் விஷ்ணுபாகம் சிவபாகம் என்று சிவலிங்கத்தை மூன்றாக பிரிப்பார்கள். முழு லிங்கத்தையும் மூடுவிதமாக அபிஷேகம் செய்வார்கள். பின்னர் இரண்டு நாழிகை நேரம் (90 நிமிடங்கள்) அப்படியே வைத்திருப்பார்கள். அந்த நேரத்தில் சிவபெருமான் மிகவும் ஆனந்தமாக இருப்பார் என்று சொல்லப்படுகிறது. எனவே உலக நன்மைக்காக வேத பாராயணமும், ருத்ர பாராயணமும் அந்த நேரம் செய்வார்கள். பின்னர் அன்னத்தை கலைத்துவிடுவார். பின்னர் மறுபடியும் அபிஷேகம் நடைபெறும். ஆவுடை மீதும் பானத்தின் மீதும் சாத்தப்பட்டிருக்கும் அன்னம், மிக மிக வீரியமிக்கது. அதை நாம் உண்ணக்கூடாது. அதை நீர்நிலைகளிலும் குளங்களிலும் சமுத்திரங்களிலும் கரைப்பார்கள். நீர் வாழ் உயிரினங்கள் சிவப்பிரசாதமான அதை உண்டு அரனருள் பெறுவார்கள். பிரம்ம பாகத்தில் சாத்தப்பட்ட அன்னம், மனிதர்களுக்கு வழங்கப்படும். இது ஏகப்பட்ட அருட்சக்திகளை, அதிர்வுகளை லிங்கத்திலிருந்து ஈர்த்து தன்னகத்தே கொண்டிருக்கும். இதை மனிதர்கள் மட்டுமே சாப்பிடமுடியும். சாப்பிடவேண்டும். அப்படி சாப்பிடுவது மிகவும் சிறப்பு. அப்படி நமக்கு அன்னம் வழங்கப்படும்போது, அதில் தயிர் சேர்க்கப்பட்டு வழங்கப்படும். இதை புசிப்பதால், நோய்நொடிகள் அண்டாது. கருப்பையில் ஏற்பட்டுள்ள கோளாறுகள் நீங்கிவிடும். புத்திரப்பாக்கியம் வேண்டுவோர் அவசியம் சிவாலயம் சென்று இந்த பிரசாதத்தை வாங்கி சாப்பிடவேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை தஞ்சை பெரிய கோவிலின் மறுபதிப்பாக விளங்கும் கங்கை கொண்ட சோழபுரத்தில், எழுந்தருளிருக்கும் பிரகதீஸ்வரருக்கு காஞ்சி பெரியவரின் அறிவுறுத்தலின் பேரில் அன்னாபிஷேகம் பல்லாண்டுகளாக நடைபெற்று வருகிறது. (இடையே இது பல நூற்றாண்டுகள் நின்றுபோயிருந்தது.) சுமார் பதின்மூன்றரை அடி உயரமும் அறுபது அடி சுற்றளவும் கொண்ட இந்த சிவலிங்கத் திருமேனிக்கு, 108 மூட்டை அரிசி அன்னமாக சமைக்கப்பட்டு அன்னா பிஷேகம் நடைபெறுகிறது. இறைவனுக்குப் படைக்கப்பட்ட அன்னம் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. கங்கை கொண்ட சோழபுரத்தைச் சுற்றியுள்ள கிராமங்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் கூடி அன்னாபிஷேகத்தை தரிசித்து மகிழ்கின்றனர். நாளை வரக்கூடிய அன்னாபிஷேக திருநாளில் அருகே உள்ள சிவாலயத்திற்கு தேவையான காணிக்கைகளை கொடுத்து அன்னாபிஷேகம் சிறக்க உதவிடுங்கள். அன்னாபிஷேகத்தையும் தரிசியுங்கள். இகபர சுகங்களை சிவனருளால் பெறலாம். அன்னாபிஷேக தரிசன நேரத்தை பற்றி பல நண்பர்கள் கேட்டிருக்கிறார்கள்… அன்னாபிஷேகம் மாலை தான் நடைபெறும். நாளை (27/10) செவ்வாய் மாலை 6.00 pm மணியளவில் சென்றால் அனைத்துக் கோவில்களிலும் நீங்கள் அன்னாபிஷேகம் செய்யப்பட்ட லிங்கத்தை தரிசிக்கலாம். சாத்தப்பட்ட அன்னத்தை களைத்து பிரசாதமாக தரும் நேரம் கோவிலுக்கு கோவில் மாறுபடும். பெரும்பாலான கோவில்களில் இரவு 8.30 அளவில் களைத்து பிரசாதம் தருவார்கள். =================================================== ஒரு வேண்டுகோள்! அடுத்தடுத்த அறப்பணிகள் மற்றும் செலவினங்களால் தளம் தற்போது கடும் நிதிச்சுமையில் இருக்கிறது. ஊருக்கு நடுவே இருக்கும் குளத்து நீர் எப்படி அனைவரின் தாகம் தீர்க்கவும் பயன்படுகிறதோ அது போன்றது தான் ரைட்மந்த்ரா கணக்கில் இருக்கும் பணமும் தகுதியுடைய பல விஷயங்களுக்கு தவறாமல் செல்லும். வாசகர்கள் மனமுவந்து நன்கொடை அளித்து, தளம் தொய்வின்றி தொடரவும் நம் பணி சிறக்கவும் உதவ வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். சில வாசகர்கள் நமக்கு உதவ விருப்பம் தெரிவித்திருந்தும் அதை செய்ய அவர்களுக்கு சந்தர்ப்பம் அமையவில்லை. அப்படிப்பட்டவர்கள் இப்போது செய்தால் நமக்கு மிகவும் உதவியாக இருக்கும். உங்கள் உதவிக்கரத்தை எதிர்நோக்கும்… அன்பன், ரைட்மந்த்ரா சுந்தர் =================================================== அன்னாபிஷேகத்தின் பலன்கள் என்ன என்று பார்ப்போமா? * வியாபாரத்தில் அபிவிருத்தியும் லாபமும் வேண்டுவோர் அவசியம் அன்னாபிஷேகத்தன்று அன்னலிங்கத்தை தரிசித்து பிரசாதத்தை சாப்பிடவேண்டும். * படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளுக்கு அன்னாபிஷேக பிரசாதத்தை சாப்பிட கொடுத்தால் அவர்கள் படுக்கையில் சிறுநீர் கழிப்பது நிற்கும். * மந்தபுத்தி மற்றும் கற்றலில் குறைபாடு (DYSLEXIA) உள்ள குழந்தைகள் அன்னாபிஷேக அன்னத்தை சாப்பிட்டால் புத்திக் கூர்மை பெறுவார்கள். * வீட்டில் சிவலிங்கம் வைத்திருந்தால் அவசியம் நித்ய பூஜை செய்யவேண்டும். அவ்வாறு செய்ய தவறியவர்களுக்கு அன்னாபிஷேகம் ஒரு அருமையான வாய்ப்பாகும். அவர்கள் அன்னலிங்கத்தை தரிசிப்பதன் மூலம் அந்த தோஷத்தை போக்கிக் கொள்ளலாம். * அன்னாபிஷேக பிரசாதத்தை உண்டால், அடுத்த அன்னாபிஷேகம் வரை உணவு தட்டுப்பாடு என்பதே இருக்காது. வீட்டிலும் தானிய தட்டுப்பாடு வராது. * அது மட்டுமல்ல தோற்றப் பொலிவு, தன்னம்பிக்கை இவை யாவும் அன்னாபிஷேக பிரசாதத்தை உண்டால் கிடைக்கும். * தொன்மையான சிவாலயம் ஏதாவது ஒன்றுக்கு அபிஷேகம் செய்து அன்னாபிஷேகம் செய்தால் ஊர் செழிக்கும், மழை பொழியும், பசுமை பொங்கும். செய்பவர் வியாபாரம் உத்தியோகம் மேன்மையடையும். =================================================== நமது அன்னாபிஷேக தரிசனம்! நம்மை பொருத்தவரை மகா சிவராத்திரியை போன்றே அன்னாபிஷேகமும் விசேஷம் தான். இது வரை கடந்த மூன்று ஆண்டுகளாக நமது அன்னாபிஷேக தரிசன அனுபவங்களை பற்றி பதிவளித்திருக்கிறோம். இந்த ஆண்டும் சென்னை மயிலையில் உள்ள திருவள்ளுவர் கோவிலில் அன்னாபிஷேக தரிசனம் செய்துவிட்டு அதன் அருகே உள்ள வாலீஸ்வரர், விருபாக்ஷீஸ்வரர், உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களை தரிசிக்கவிருக்கிறோம். சென்ற ஆண்டை போலவே கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் மற்றும் மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோவில் ஆகிய ஆலயங்களில் அன்னாபிஷேகத்திற்கு அரிசி நம் தளம் சார்பாக வழங்கப்படவிருக்கிறது. நாமும் மேலே குறிப்பிட்ட ஆலயங்கள் சென்று தரிசிக்கவிருக்கிறோம். நன்றி! =================================================== Also check : தலைவருடன் ஒரு சந்திப்பு! அடுத்த அன்னாபிஷேகம் வரை அன்னத்துக்கு குறைவின்றி வாழ விருப்பமா? அன்னாபிஷேகத் திருநாள் — இன்று சிவனை தரிசித்தால் கோடி சிவதரிசனத்துக்கு சமம்! கேட்காமலே அள்ளிக் கொடுப்பவனிடம் கேட்க என்ன இருக்கிறது? =================================================== [END] Share on Facebook Share Share on TwitterTweet Share on Google Plus Share Share on Pinterest Share Share on LinkedIn Share Share on Digg Share Post navigation சகல சௌபாக்கியங்களும் தரும் ‘கோவத்ஸ துவாதசி’! அம்பாள் அனுக்ரஹம்! பெரியவா கடாக்ஷம்!! Right Mantra Sundar http://www.rightmantra.com Related Articles வருவாய் உண்டு – வாழ வழியில்லை – பரிதாப நிலையில் தமிழகத் திருக்கோவில்கள்! ஆயிரக்கணக்கான கிளிகளின் காட்ஃபாதரின் குமுறலை கொஞ்சம் கேளுங்கள்! ராம நாம மகிமை & போதேந்திராள் வாழ்க்கை வரலாற்று நாடகம்! ஒரு நேரடி அனுபவம்!! 6 thoughts on “அள்ளித் தரும் அன்னாபிஷேகம் & அன்னாபிஷேக அன்னத்தை புசிப்பதால் கிட்டும் பலன்கள்!!” mano says: October 26, 2015 at 13:49 Rightmantra மூலம் தான் அன்னாபிஷேகம் பற்றி அறிந்தேன். நம் தலைவருக்குண்டான மிக பெரும் விழா நாளை என்பது பதிவை படித்த பின்பே தெரிந்தது. அன்னாபிஷேகம் பற்றி A டு Z தெளிவாக அறிந்து கொண்டோம். ஏன் அன்னாபிஷேகம் கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரசித்தம்? நம் கலியுக கண்கண்ட தெய்வம் மகா பெரியவாவின் அறிவுறுத்தலின் பேரில் நடக்கிறது என்ற செய்தி..காண கிடைக்காத முத்து.. அன்னாபிஷேகம் எப்படி செய்யபடுகிறது மற்றும் அன்னாபிஷேகம் பலன்கள் என்று தொகுத்து இருப்பது மிக மிக சிறப்பே. மீள்பதிவாய் 4 பதிவுகள் -> கண்டிப்பாக படித்து பகிர வேண்டியவை. ஆனந்தம் தரும் அன்னாபிஷேகம் பதிவு … நன்றி அண்ணா.. Reply sravichandran says: October 26, 2015 at 14:45 அன்னாபிஷேகத்தை பற்றி இத்தனை விலா வாரியாக எடுத்து சொன்னதற்கு மிக மிக நன்றி சார். மயிலை, மற்றும் உள்ள சிவாலைய தரிசனத்துக்கு ஆவலுடன் காத்திருக்கும் தங்களின் சோ ரவிச்சந்திரன் சார், ஒரு விளக்கம் தேவை//. எங்கள் வீட்டில் நண்பர்கள் அல்லது உறவினர்கள் யாரும் விருந்து சாப்பிட்டால் அடுத்த கொஞ்ச நாட்களில் அவர்கள் எங்களை விரோதிகளாக அல்லது பகைவர்களாக பார்கிறார்கள்///. இது ஒருமுறை அல்ல பல முறை பலர் மாறிவிட்டார்கள் .இப்போது பேசுவதை நிறுத்திவிட்டார்கள் ///. அதுமட்டும்மல்ல சார் . அவர்கள் தரவேண்டிய/வாங்கிய பணம் லச்சகணக்கில் நாமம் போட்டுவிட்டார்கள்.. இதுக்கு என்ன காரணம்?. இப்போ எந்த நபரையும் சாப்பிட கூப்பிடவே பயமாக இருக்குது சார் . என்னவாக இருக்கும் சார்?. தங்களின் ரவிச்சந்திரன் Reply Sai Ram says: October 26, 2015 at 21:23 Dear Ravi Sir, My humble greetings to you and your family members. The almighty says, “The reason some people have turned against you and walked away from you without reason, has nothing to do with you.It is because HE has removed them from your life and the reason for this is, God has decided to take you to the next level and your relatives cannot travel with you in this journey.They will only hinder you in your next level because they have already served their purpose in your life.Let them go and keep moving. Greater is coming… And for the Money, Just see if the below helps Step 1: On an Auspicious day early in the morning take a clean shower and sit in your pooja room with your body straight , eyes closed, take a deep breath 3 times.(upto 9 times in case if your mind is not silent) Step 2: Assume your beloved Lord is appearing in front of you. There is a connection from your third eye area and your Lord’s feet. Step 3: Bring up all your worries (money issues, etc etc) and imagine all your worries are moving one by one towards the Lords feet..meaning you have given up all your worries to the Lord of the universe. Step 4: Very important step Never ever think about that money(and your worries) again in your life.This is the only way your beloved Lord can play with you to test your devotion.Initially it will be difficult but later it will be fine. Now it’s your Lords duty to return back the favor to you…and that depends on the level of your surrender to HIM. May the Lord bring Love and Light to one and All. Kind Regards, Sai Ram. Reply sravichandran says: October 27, 2015 at 17:24 நன்றி சாய் ராம் சார், மனதுக்கு ரொம்ப லேசா இருக்குது இப்போ//. நீங்கள் சொன்னபடி நான் செய்து பார்கிறேன் // நல்லதே நடக்கும் என நினைக்கிறன் //. தங்களின் பதிலுக்கு மிக மிக நன்றி. சோ RAVICHANDRAN Reply T.Senthilsigamani says: October 26, 2015 at 15:22 அருமையான கருத்து . நன்றி சுந்தர்ஜி . Reply பிரேமலதா says: October 26, 2015 at 16:07 சற்று இடைவெளிக்கு பிறகு வருகிறேன். இடையே சில பதிவுகளை மட்டும் படிக்கவில்லை. அனைத்தையும் சேர்த்து வைத்து படித்து வருகிறேன். தளத்தின் புதிய தோற்றம் அருமை. பல பழைய பதிவுகளை சுலபமாக படிக்க முடிகிறது. மொபைலில் கூட நன்றாக தெரிகிறது. வாழ்த்துக்கள். அன்னாபிஷேகம் பற்றி நம் தளத்தில் படித்தால் தான் படித்தது போல உள்ளது. பல புதிய தகவல்களை பார்த்து பிரமித்தேன். நம் தளம் அறிமுகனானது முதல் முக்கிய நாள் கிழமை விஷேசங்களன்று கோவிலுக்கு செல்ல தவறுவதில்லை. சென்ற வருடம் அன்னாபிஷேகம் தங்கள் புண்ணியத்தால் தரிசித்தேன். அவருக்கு உத்தியோகத்தில் இருந்த பல பிரச்சனைகள் தீர்ந்தன. என் மகளுக்கு அடிக்கடி ஏதேனும் உடம்புக்கு வந்துகொண்டே இருக்கும். அதுவும் முடிவுக்கு வந்தது. இந்த வருடம் எனக்கு தெரிந்த பலரிடம் அன்னாபிஷேக தரிசனம் பற்றி சொல்லியிருக்கிறேன். நம் தளத்தின் பதிவு பற்றியும் கூறி படிக்கச் சொல்லியிருக்கிறேன்.
நடு ரோட்டில் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட விசிக பிரமுகர்.. 7 பேர் கொண்ட கூலிப்படை கும்பல் அதிரடி கைது. | Vizika Pramukar, who was hacked to death while running in the middle of the road, was arrested by a mercenary gang of 7 people. Malayalam English Kannada Telugu Tamil Bangla Hindi Live TV Languages Live TV Politics Coronavirus Tamil Nadu Cinema Video Gallery India World Sports Life Style Business Crime Technology live TV Tamil News crime நடு ரோட்டில் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட விசிக பிரமுகர்.. 7 பேர் கொண்ட கூலிப்படை கும்பல் அதிரடி கைது. விடுதலை சிறுத்தைகள் கட்சியிலும் முக்கிய பொறுப்பில் இருந்தார். கடந்த மாதம் 25ஆம் தேதி சென்னை சேத்துப்பட்டு பழைய சிட்டிபாபு தெருவில் தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போதே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. Ezhilarasan Babu Chennai, First Published Oct 30, 2021, 11:32 AM IST சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஏழு பேர் கொண்ட கூலிப்படை கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் சிசிடீவி காட்சிகளை வைத்து விசாரித்து வந்த நிலையில் கொலையாளிகள் கைதாகி உள்ளார். சென்னை, மதுரை, நெல்லை உள்ளிட்ட பெருநகரங்களில் நாளொரு மேனியும் பொழுதொரு சம்பவமாக கொலை கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளன. திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டுவர தமிழக காவல்துறைக்கு அதிரடியாக உத்தரவிட்டதின் அடிப்படையில், டிஜிபி சைலேந்திரபாபு தலைமையிலான தமிழக போலீசார் தமிழகம் முழுவதும் ஹிஸ்டரி ஷீட் குற்றப் பின்னணி உள்ள குற்றவாளிகளை குறிவைத்து கைது செய்யும் படலத்தை தொடங்கி அது நடைபெற்று வருகிறது. பழிவாங்கும் கொலைகள், பணத்திற்கு கொலை செய்யும் கூலிப்படை கொலைகள் போன்றவை அதிகரித்து வருவதால், கூலிப்படை கும்பல்களை குறி வைத்து போலீஸ் வேட்டை நடத்தப் பட்டு வருகிறது. ஆனால் போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் கடந்த மாதம் 25ஆம் தேதி சென்னை சேத்துப்பட்டு சிட்டிபாபு தெருவில் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சிகயை சேர்ந்த பிரமுகர் இளங்கோவன் என்பவர் ஓட ஒட வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது சென்னை போலீசாரை மிகவும் அதிர்ச்சி அடைய வைத்தது, கூலிப்படை கும்பல்கள் வேட்டையாடப்பட்டு வரும் நிலையிலும் இப்படி ஒரு கொலையா என அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீஸ் நடத்திய விசாரணையில், சேத்துப்பட்டு நாதன் தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் இவர் அம்பேத்கர் சமூக நல சங்கம் என்ற அமைப்பின் தலைவராக இருந்து வந்தார்.விடுதலை சிறுத்தைகள் கட்சியிலும் முக்கிய பொறுப்பில் இருந்தார். கடந்த மாதம் 25ஆம் தேதி சென்னை சேத்துப்பட்டு பழைய சிட்டிபாபு தெருவில் தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போதே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இந்த கொலை தொடர்பாக அப்பகுதியில் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சஞ்சய் பிரபு, புஜ்ஜி ராகேஷ், விஜய், ஆகாஷ், மூர்த்தி, மணிராஜ், தமிழா, என்ற 7 பேர் இளங்கோவனை சரமாரியாக வெட்டிவிட்டு பயங்கர ஆயுதங்களுடன் தப்பித்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் சேத்துப்பட்டு பகுதியில் குமரவேல் என்பவர் வெல்டிங் கடை நடத்தி வருவதாகவும், அவரது கடைக்கு எதிரே ரமேஷ் என்பவர் டீக்கடை வைத்துள்ளதாகவும், குமரவேலின் வெல்டிங் கடையில் இருந்த இரும்பு துகள்கள் டீக்கடையில் பரவுவதால், இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாகவும், அப்போது வெல்டிங் கடை குமரவேலுவுக்கு ஆதரவாக சஞ்சய் பிரபுவும், டீக்கடை ரமேசுக்கு ஆதரவாக இளங்கோவனும் பஞ்சாயத்தில் ஈடுபட்டு வருவதால், இளங்கோவனுக்கும் சஞ்சை பிரபுவுக்கும் இடையே மோதல் இருந்து வந்தது, எனவே இளங்கோவனை தீர்த்து கட்டினார் சஞ்சய் பிரபு முடிவு செய்ததுடன், தனது ஆதரவாளர்களுடன் இணைந்து சஞ்சய் பிரபு இளங்கோவனை வெட்டிக் கொன்றதாக அவர்கள் கூறினர். இந்நிலையில் கொலையில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என இளங்கோவன் புகார் அளித்திருந்த நிலையில் அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. Last Updated Oct 30, 2021, 11:32 AM IST VCK Murder Follow Us: Download App: RELATED STORIES டபுள் டபுளா பேசி.. அங்காங்கே தொட்டு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியரை போக்சோவில் தூக்கிய போலீஸ்.! வேகமெடுக்கும் கோவை பள்ளி மாணவி 'தற்கொலை' விவகாரம்... விசாரணை அறிக்கை தமிழக அரசிடம் "விரைவில்" தாக்கல் மகன் வயசு பையனுடன் உல்லாசம்.. எச்சரித்த கணவர்.. 19 வயது கல்லூரி மாணவருடன் ஓட்டம் பிடித்த 40 வயது ஆண்டி..! கல்லூரி மாணவிகளுக்கு வாட்சப்பில் 'ஆபாச' மெசேஜ்... 'பாலியல்' தொல்லை கொடுத்த பேராசிரியர் கைது… "ஓராண்டு" வரை சிறை தண்டனை… கோவை மாணவி தற்கொலை விவகாரத்தில் அத்துமீறிய 41 ‘யூடியூப்’ சேனல்கள் மீது நடவடிக்கை ! Top Stories Shreya Ghoshal: வாவ் செம்ம கியூட்... 6மாத குழந்தையின் முகத்தை ரசிகர்களுக்கு முதல் முறையாக காட்டிய ஸ்ரேயா கோஷல்
சி.பி.செந்தில்குமார் 7:30:00 AM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments 1 ஓசி லட்டு பக் வீட் ல தந்தா அதிகபட்சம் 5 தருவாங்க.10 எப்டி தருவாங்க?சுட்டதே 15 தானாம்.என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா ============= 2 அன்பும் ,வாழ்த்தும் தானா தேடி வந்து கிடைக்கனும்.வேண்டி விரும்பிக்கேட்டபின் கிடைப்பது சொர்க்கத்தில்.சேராது =============== 3 கையெழுத்து போடத்தெரிந்த ஒருவரது கை ரேகை அவர் உணர்வில்லாத போது விரலைஎடுத்து ஒத்தி எடுத்திருக்கலாம் என்பதால் அது சட்டப்படி செல்லாது ============== 4 நேற்று இன்று நாளை என ஒருவர் அன்பு மாறிக்கொண்டே இருந்தால் அது நிலை இல்லாத அன்பு என கொள்க ================== 5 வசதி இருக்கறவங்கதான் சொந்த டிபி வைக்கனும்னா ஊர்ல ஒரு பய சொந்த டிபி வைக்க முடியாது.கட்ஸ் /கெத்து இருந்தா யார் வேணா வைக்கலாம் ================== 6 சொந்த கிராமத்திற்கு பண்டிகை நாளில் செல்வதும் ஊர் மக்களை அக்கம் பக்கத்தினரை நலம்.விசாரிப்பதும் தமிழர்களின் தொன்றுதொட்டு வரும் பழக்கம் ============= 7 ஜெ கை ரேகை வெச்சது சட்டப்படி செல்லாதுன்னு காலைல நான் சொன்னப்போ கிண்டல் பண்ணாங்க.இப்போ சன் டி வி நியூஸ் ல சொல்லிட்டாங்க ============ 8 மருதாணி யில் சிவந்த உன் விரல்கள் தான் "கை வண்ணம்" ============= 9 1 அழகான மனைவி , 2 அன்பான துணைவி என 2 அமைந்தாலே பேரின்பமே! ன்னு பாட்டை ,பாட்டோட அர்த்தத்தை மாத்தி இன்னும் யாரும் பாடலையா ================ 10 1998 தீபாவளி மலர் விகடன் ஜோக்ஸ் ,2001 கல்கி மலர் ஜோக்சை எல்லாம் மதுரை முத்து சன் டிவி ல பிரமாதமா ஒப்பிச்ட்டு இருக்காரு.நல்ல மெம்மரி ============= 11 ராத்திரி 10 45 க்கு " நான் மசினகுடில இருக்கேன்"னு FB ல 1 பொண்ணு போட்ட ஸ்டேட்டஸ்க்கு ஒரு நெட் தமிழன் " போட்டோ அப்டேட்.அழகிய இடம்"கறான், அவ்ளோ இருட்ல எப்டி ஃபோட்டோ எடுக்க? ================== 12 ஒவ்வொரு வேளை உணவிலும் பூண்டு சேர்ப்போம் என உறுதி பூண்டு இருந்தால் ஆரோக்ய உணவு ஆகும் ================ 13 மெல்லிசை என்ற கவி நயம் ததும்பும் தலைப்பை புரியாத புதிர் என பழைய தலைப்பாக மாற்றியது ஏன் என்பது புரியாத புதிர் ============== 14 லிங்கு சாமி டைரக்ட் பண்ணின ஆனந்தம் படம் எங்க ஊரு டென்ட் கொட்டாய்ல ரிலீஸ் ஆனப்ப பக் வீட் பிகர்ட்ட பாடினது ஆனந்தம் வந்ததடி ஆனந்தி ================ 15 என்னது?காஷ்மோரா படத்தை இன்னொரு தடவை பார்க்கப்போறீங்களா?என்பதன் சுருக் அதிர்ச்சி சொல் =காஷ் ஒன்ஸ்மோரா? ============= 16 காஷ்மோரா = ஓம் சாந்தி ஓம் + அருந்ததி கொடி = புதுக்கதை அப்போ எது பெஸ்ட்? ============== 17 கொடி படம் நல்லாருக்குன்னு சொன்னா ஏன் தனுஷ் க்கு கொடி பிடிக்கறீங்க?னு கேட்கும் சமூகம் இது ============== 18 நான் நிக்கறேன்.ஒரு ஆளு எதிர் சீட்ல கால் வெச்சு SIT சார்.FB ல இதைப்போட்ட நேரம் அந்தாள் கால்லயே போட்டிருக்கலாமில்ல? ================ 19 ஒத்தை வெடி , அத்தை மக இடை ரெண்டையும் கிள்ளி வைக்கனும் =============== 20 ஸ்கூல்ல படிக்கும்போது லாஸ்ட் ரேங்க் வாங்கறவன் கூட FB ல பொண்ணுங்க போஸ்ட் க்கு பாய்ஞ்சு போய் "மீ பர்ஸ்ட் " னு கமெண்ட் போடறான் ================ Tweet Newer Post Older Post Home 0 comments: Post a Comment Follow @writer_cps Followers Featured Post மின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள் வே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...
புதுடில்லி: நீா்மூழ்கிக் கப்பலைத் தாக்கி அழிக்கவல்ல 11-வது பி-8ஐ போர் விமானம் அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தடைந்தது.அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து எட்டு பி-8ஐ போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு கடந்த 2009-ம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது. முதல் பி-8ஐ போர் விமானம் கடந்த 2013-ம் ஆண்டில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. சுமார் 30 ஆயிரம் மணி முழு செய்தியை படிக்க Login செய்யவும் 10 புதுடில்லி: நீா்மூழ்கிக் கப்பலைத் தாக்கி அழிக்கவல்ல 11-வது பி-8ஐ போர் விமானம் அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தடைந்தது. அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து எட்டு பி-8ஐ போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு கடந்த 2009-ம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது. முதல் பி-8ஐ போர் விமானம் கடந்த 2013-ம் ஆண்டில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. சுமார் 30 ஆயிரம் மணி நேரத்திற்கு மேலாக அந்தப் போர் விமானங்கள் பறந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்தப் போர் விமானங்கள் நீா்மூழ்கிக் கப்பலைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டவையாகும். இந்திய கடற்பகுதியை கண்காணிப்பதில் பி-8ஐ விமானங்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. அதையடுத்து, கூடுதலாக 4 போர் விமானங்களை வாங்க கடந்த 2016-ம் ஆண்டில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 9வது பி-8ஐ போர் விமானம் கடந்த ஆண்டு நவம்பரிலும், 10வது போர் விமானம் கடந்த ஜூலை மாதமும் இந்தியாவுக்கு வந்தது. இந்நிலையில் தற்போது 11வது பி-8ஐ போர் விமானம் கோவா வந்தடைந்துள்ளது. இந்த தகவலை போயிங் நிறுவனம் உறுதிசெய்துள்ளது. தற்போது இந்தியா வந்துள்ள இந்த விமானம் பேரிடர் காலங்களில் மீட்பு பணிக்கும் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்து வருகின்ற நிலையில் இந்தியக் கடற்படையை பலப்படுத்துவதற்கும், இந்திய பெருங்கடலில் வலிமையை நிலைநிறுத்துவதற்கும் இந்த விமானம் பயன்படும் எனக் கூறப்படுகிறது. புதுடில்லி: நீா்மூழ்கிக் கப்பலைத் தாக்கி அழிக்கவல்ல 11-வது பி-8ஐ போர் விமானம் அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தடைந்தது.அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து எட்டு பி-8ஐ போர் ஊடக தர்மம் உங்கள் கரங்களில்...! சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம். நன்றி. தினமலர் For technical contact : webmaster@dinamalar.in இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள். Allow ads on Dinamalar Back AdBlock Adblock Plus uBlock Origin Other 1. Click the AdBlock icon in the browser extension area on the upper right corner. 2. Select Don't run on pages on this site. 3. In the "Don’t run AdBlock on..." dialog box, select Exclude. The AdBlock icon changes to a “thumbs up” image. 1.Click the Adblock Plus icon in the browser extension area on the upper right corner. 2. Click the “power” button so that it slides left. 3. Click the Refresh button. 1. Click the uBlock Origin icon in the browser extension area on the upper right corner. 2. Click the “power” button. It turns gray, indicating that ads on that site are no longer being blocked. 3. Click the “Refresh” button 1. Click the icon of the ad blocker extension installed on your browser. You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed. 2. Follow the instructions for disabling the ad blocker on the site you’re viewing. You may have to select a menu option or click a button. 3. Refresh the page, either by following prompts or clicking your browser’s “Refresh” or “Reload” button. Refresh page உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join Telegram Channel for FREE Advertisement Related Tags Indian Navy Receives P8i Aircraft 11th Boeing Aircraft Boost Anti Submarine Operations Indian Ocean Region இந்தியா கடற்படை வட கொரியா மீண்டும், மீண்டும் ஏவுகணை சோதனை!(2) முந்தய கேரளாவில் 10 அணைகளுக்கு அபாய எச்சரிக்கை: கரையோர பகுதிகளுக்கு 'ரெட் அலர்ட்'(3) அடுத்து » பொது முதல் பக்கம் » தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து (10) புதியவை பழையவை அதிகம் விவாதிக்கப்பட்டவை மிக மிக தரமானவை மிக தரமானவை தரமானவை செல்வம் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ 19-அக்-202117:55:45 IST Report Abuse அப்போ காங்கிரசு எல்லார்கிட்டயும் காட்டியும் கொடுக்குமா 2009 ல அக்ரிமெண்ட் போட்டு கொடுத்தது காங்கிரஸ் தானே Rate this: 0 votes 0 votes 2 votes Share this comment Reply Cancel sankaseshan - mumbai,இந்தியா 19-அக்-202116:24:40 IST Report Abuse காங்கிரஸ்காரன் எந்த அளவுக்கு நம் ராணுவத்தை பலவீனமாக வைத்திருந்தான் என்று தெரிகிறது இது நேரு காலத்தில் ஆரம்பித்தது சீனாவை வி ட நம் ராணுவம் பலவீனமாக இருக்கவேண்டும் எனறு செயல்பட்டார் இந்த அரசு ராணுவத்தை பலபடுத்தி வருகிறது Rate this: 0 votes 0 votes 3 votes Share this comment Reply Cancel RandharGuy - Kolkatta,இந்தியா 19-அக்-202115:18:07 IST Report Abuse லக்னோ: போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து கல்லூரியில் சேர்ந்தது தொடர்பான வழக்கில், 28 ஆண்டுகளுக்கு பின், தற்போதைய பா.ஜ., எம்.எல்.ஏ., இந்திரா பிரதாப் திவாரிவுக்கு, 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. Rate this: 3 votes 0 votes 0 votes Share this comment visu - Pondicherry,இந்தியா 20-அக்-202106:21:18 IST Report Abuse இதற்கும் செய்திக்கும் என்ன சம்பந்தம்... Rate this: 0 votes 0 votes 1 votes Share this comment Reply Cancel மேலும் 6 கருத்துக்கள்... உங்கள் கருத்தைப் பதிவு செய்ய (Press Ctrl+g to toggle between English and Tamil) My Page Login : Log in Forgot password ? New to Dinamalar ? Create an account கருத்து விதிமுறை Submit × வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். Close X Prev « முந்தய வட கொரியா மீண்டும், மீண்டும் ஏவுகணை சோதனை! (2) Next அடுத்து » கேரளாவில் 10 அணைகளுக்கு அபாய எச்சரிக்கை: கரையோர பகுதிகளுக்கு 'ரெட் அலர்ட்' (3) சினிமா → கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் → கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு → கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் → தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் → தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. Designed and Hosted by Web Division,Dinamalar. | Contact us We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.
எழுத்தாளன் நுண் உணர்வுகளுடன் அந்த அனுபவங்களை அணுகி ஒரு படைப்பாக்கி அதை மற்றவருக்குத் தரும் போது, பிரக்ஞை அற்று கடந்து பழைய அனுபவங்கள் அடி மனதில் இருந்து மேல் எழுந்து வருகின்றது. சுந்தர வடிவேலன் வணக்கம் ஜெயமோகன் அவர்களே…! ‘தேர்வு’ என்கிற தங்களின் அனுபவ எழுத்தினை இன்று வாசித்தேன். சில கணங்கள் என்னை உலுக்கி எடுத்தது. ஒவ்வொரு பிள்ளையையும் அதனுடைய விருப்பு- வெறுப்புக்களுக்கு அமைய வளர விடவேண்டும் என்பதை அச்சொட்டாக சொன்னது ‘தேர்வு’. என்னுடைய தந்தையார் என்னை நான் விரும்பியதை படிக்க அனுமதித்தார். உலக நடப்புக்களில் ஆர்வமுள்ள எனக்கு ஊடகத்துறையில் கற்று தொழில் புரிய வாய்ப்பு கிடைத்தது. நீங்களும் மகனின் விருப்பத்துக்கு அமைய அவனை அனுமதித்ததை பார்த்து மகிழ்சியளிக்கிறது. இந்தக் கதையைப் படிக்கின்ற பலருக்கு இது நல்ல விடயத்தினை அதாவது பிள்ளை வளர்ப்பின் சில தத்துவங்களை சொல்லும் என்று நம்புகின்றேன். இப்போதெல்லாம் நான் அதிகம் வாசித்தாலும் அவ்வளவு இயல்பான- மனதில் பதிகின்ற எழுத்துக்களை காண முடிவதில்லை. ஆனாலும், ‘தேர்வு’ என்னை சில கணங்கள் உலுக்கி எடுத்தது என்பது உண்மை. நன்றி. புருஷோத்தமன் தங்கமயில். இன்று காலை ஒரு கல்லூரி நிகழ்ச்சி ஒரு ஆசிரியர் இன்று’ஊடகங்கள் குழந்தைகளைக் கெடுக்கின்றன , என்ன செய்யலாம்’என்றார் குழந்தைகளை மூடி போட்டு வைத்து அவர்களை மண்ணாந்தைகளாக ஆக்குவதைவிட கெட்டுப்போக வைப்பது மேல்’என்றேன் அதேதான். அவர்களுக்கு ஒரு மலரும் முறை இருக்கிறது. எந்த மலரையும் விரியவைக்க நம் விரல்களால் முடியாது ஜெ குறிச்சொற்கள் சமூகம். வாசகர் கடிதம் Facebook Twitter WhatsApp Telegram Email Print முந்தைய கட்டுரைஅறம் வரிசை கதைகள்-கடிதங்கள் அடுத்த கட்டுரைஆதிச்சநல்லூர், ராஜராஜசோழன் இரு கடிதங்கள் Aranga தொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் மழையும் ரயிலும் – கடிதங்கள் குடிப்பொறுக்கிகள் தமிழ்ச்சமூகத்தில் அறமும் ஆற்றலும்(ராஜ் கெளதமன்) -சக்திவேல் கோபி வாசகர் கடிதங்கள் புதுவாசகர் சந்திப்பில் துவங்கிய பேலியோ- வெங்கி சிஷ்டி கவிதைகள்- கடிதங்கள் அஜ்மீர் கடிதங்கள்-4 தீபாவளிக்கு நூற்பின் ஆடைகள் இல்லம்தேடி கல்வி- கடிதங்கள் பொலிவன, கடிதங்கள் வெள்ளை யானை, கடிதங்கள் அஜ்மீர்- கடிதங்கள்-2 வெண்முரசு இசை வெளியீடு வெண்முரசு நூல்கள் வாங்க விஷ்ணுபுரம் பதிப்பகம் முந்தைய பதிவுகள் சில நாமக்கல் புதிய வாசகர் சந்திப்பு - கடிதங்கள் அறத்தாறிது... ஒழிமுறி-மாத்ருபூமி தமிழக வரலாறு தொடங்குமிடம் எது? ’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 70 உதகை காவியமுகாம் 2014 அறிவிப்பு உருவம் நற்றிணை இலக்கியவட்டம் -கடலூர் ஆதியும் அனந்தமும் கோபல்லபுரத்து மக்கள் – வாசிப்பனுபவம் முந்தைய பதிவுகள் முந்தைய பதிவுகள் Select Month November 2021 (153) October 2021 (166) September 2021 (169) August 2021 (170) July 2021 (165) June 2021 (175) May 2021 (171) April 2021 (162) March 2021 (203) February 2021 (149) January 2021 (141) December 2020 (145) November 2020 (123) October 2020 (141) September 2020 (142) August 2020 (155) July 2020 (161) June 2020 (151) May 2020 (166) April 2020 (175) March 2020 (141) February 2020 (123) January 2020 (157) December 2019 (151) November 2019 (118) October 2019 (135) September 2019 (129) August 2019 (143) July 2019 (136) June 2019 (134) May 2019 (145) April 2019 (141) March 2019 (125) February 2019 (132) January 2019 (155) December 2018 (144) November 2018 (148) October 2018 (137) September 2018 (118) August 2018 (121) July 2018 (146) June 2018 (144) May 2018 (139) April 2018 (135) March 2018 (75) February 2018 (123) January 2018 (148) December 2017 (128) November 2017 (120) October 2017 (110) September 2017 (108) August 2017 (129) July 2017 (132) June 2017 (144) May 2017 (121) April 2017 (128) March 2017 (134) February 2017 (114) January 2017 (123) December 2016 (139) November 2016 (122) October 2016 (104) September 2016 (92) August 2016 (106) July 2016 (104) June 2016 (89) May 2016 (88) April 2016 (145) March 2016 (128) February 2016 (112) January 2016 (131) December 2015 (127) November 2015 (114) October 2015 (122) September 2015 (107) August 2015 (102) July 2015 (115) June 2015 (110) May 2015 (87) April 2015 (142) March 2015 (120) February 2015 (93) January 2015 (137) December 2014 (119) November 2014 (121) October 2014 (122) September 2014 (122) August 2014 (94) July 2014 (104) June 2014 (93) May 2014 (88) April 2014 (83) March 2014 (78) February 2014 (69) January 2014 (80) December 2013 (77) November 2013 (92) October 2013 (106) September 2013 (69) August 2013 (105) July 2013 (91) June 2013 (73) May 2013 (62) April 2013 (63) March 2013 (84) February 2013 (54) January 2013 (78) December 2012 (74) November 2012 (77) October 2012 (73) September 2012 (67) August 2012 (60) July 2012 (65) June 2012 (72) May 2012 (62) April 2012 (54) March 2012 (59) February 2012 (58) January 2012 (66) December 2011 (76) November 2011 (52) October 2011 (79) September 2011 (72) August 2011 (104) July 2011 (81) June 2011 (71) May 2011 (64) April 2011 (81) March 2011 (100) February 2011 (109) January 2011 (75) December 2010 (76) November 2010 (79) October 2010 (73) September 2010 (70) August 2010 (43) July 2010 (36) June 2010 (24) May 2010 (19) April 2010 (45) March 2010 (74) February 2010 (61) January 2010 (77) December 2009 (88) November 2009 (68) October 2009 (80) September 2009 (72) August 2009 (69) July 2009 (54) June 2009 (74) May 2009 (60) April 2009 (52) March 2009 (74) February 2009 (63) January 2009 (64) December 2008 (55) November 2008 (41) October 2008 (51) September 2008 (42) August 2008 (43) July 2008 (41) June 2008 (37) May 2008 (30) April 2008 (34) March 2008 (32) February 2008 (50) January 2008 (18) December 2007 (8) October 2007 (3) August 2007 (4) July 2007 (3) May 2007 (11) April 2007 (2) March 2007 (1) February 2007 (6) January 2007 (4) November 2006 (1) July 2006 (1) May 2006 (5) April 2006 (1) February 2006 (3) January 2006 (1) November 2005 (1) May 2005 (2) January 2005 (2) December 2004 (5) June 2004 (1) May 2004 (5) April 2004 (2) March 2004 (49) February 2004 (1) November 2003 (1) May 2003 (5) April 2003 (1) March 2003 (1) January 2003 (1) December 2002 (2) October 2002 (1) August 2002 (2) May 2002 (1) April 2002 (8) April 2001 (3) March 2001 (1) February 2001 (1) December 2000 (1) July 2000 (1) December 1999 (2) May 1990 (1) வெண்முரசு விவாதங்கள் பதிவுகளின் டைரி November 2021 M T W T F S S « Oct 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 கட்டுரை வகைகள் கட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி கி.ராஜநாராயணன் கோவை ஞானி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உணவு உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் தொல்லியல் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் நகைச்சுவை நேர்காணல் நேர்காணல் மற்றும் பேட்டிகள் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பிறர் படைப்புகள் நூல் மதிப்புரை பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் மதிப்புரை விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெண்முரசு – ஒலிவடிவம் வெண்முரசு – வாசகர் கடிதம் வெண்முரசு – வாசகர் மதிப்புரை வெண்முரசு ஆவணப்படம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை விவாத இணையதளங்கள் வெண்முரசு விவாதங்கள் விஷ்ணுபுரம் கொற்றவை பின் தொடரும் நிழலின் குரல் பனிமனிதன் காடு ஏழாம் உலகம் அறம் வெள்ளையானை குருநித்யா விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சொல்புதிது குழுமம் Subscribe in Email Subscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email RSS Feeds Subscribe in a reader தொடர்புக்கு இணையதள நிர்வாகி : [email protected] ஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected] பதிவுகளை உடனடியாக பெற © 2005 - 2021 Writer Jayamohan Copyright related: Articles published in this website can be shared freely on the Internet. But in order to publish the articles - in part or in full - on other mediums and formats such as print, television, or e-book, prior permission needs to be obtained from the author. © 2005 - 2021 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளில் பொதுத்தேர்வு என்பது குழந்தைகள் மீதான ஆகப்பெரும் வன்முறை! இடைநிற்றலுக்குத் தள்ளி, மாணவர்களை வடிகட்டி வெளியேற்றும் சதித்திட்டம் என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…. நடப்புக் கல்வியாண்டு முதல் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளில் பொதுத்தேர்வினை நடத்தவிருப்பதாகத் தமிழக அரசு அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது. ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளில் பொதுத்தேர்வு என்பது மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற புதிய கல்விக்கொள்கையில் இருக்கிற ஒரு கூறாகும். புதிய கல்விக்கொள்கை குறித்த தனது நிலைப்பாட்டை இதுவரை தெளிவுபடுத்தாத நிலையில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளில் பொதுத்தேர்வினை அமல்படுத்தத் துணிவதன் மூலம் புதிய கல்விக்கொள்கையினை ஏற்கத் தமிழக அரசு தயாராகிவிட்டது என்பதையே இது காட்டுகிறது. ஒரு மாணவனுக்குள் இருக்கும் தனித்திறமையை வெளிக்கொணர்ந்து அவனை அத்துறையில் மேதையாக வளர்த்தெடுப்பதும், ஆளுமையாக உருவாக்குவதுமே கல்வியின் நோக்கமாகும். அதற்குப் பாடச்சுமையை மாணவனின் தோளில் ஏற்றாத, தேர்வுப் பயத்தை அவனுள் உருவாக்காத, மதிப்பெண்ணைக் கொண்டு அவனது அறிவை எடைபோடாத ஒரு தனித்திறன் முறை கல்வி வேண்டும். அத்தகைய கல்வி முறையைக் கொண்டு அருகமைப்பள்ளிகளை நிறுவி, தாய்மொழியில் பயிற்றுவித்ததாலேயே கல்வியில் முதன்மை நாடுகளாகப் பின்லாந்தும், தென்கொரியாவும் நிகழ்கின்றன. அத்தகைய கல்வி முறையைத்தான் நாம் தமிழர் கட்சி தனது ஆட்சியின் செயற்பாட்டு வரைவில் வலியுறுத்துகிறது. முன்னேறிய மேலை நாடுகள் யாவும் கல்விக்கூடங்களை நவீனப்படுத்தி கல்வியிலே கோலோச்சிக்கொண்டிருக்கிற சூழலில், இங்கு காற்றோட்டமான வகுப்பறையும், சுகாதாரமான கழிப்பறையும், விளையாட்டுத்திடலும், அனைத்துப் பாடங்களுக்குமான ஆசிரியருமே பெரும் கனவாக இருக்கிறது. இத்தகைய அடிப்படை வசதிகளையும், உட்கட்டமைப்புகளையும் உருவாக்க முனையாத தமிழக அரசு வெறுமனே தேர்வின் மூலம் மாணவர்களைத் தரப்படுத்த எண்ணுவது என்பது ஆகப்பெரும் மோசடி. இந்தியாவில் நான்கு கோடியே எழுபது இலட்சம் பேர் பத்தாம் வகுப்பில் பள்ளிப்படிப்பைப் பாதியில் விட்டிருப்பதாக 2016 ஆம் ஆண்டு புள்ளிவிபரம் கூறுகிறது. அவ்வாறு படிப்பைத் தொடர முடியாமல் போவதற்குரிய முதன்மைக் காரணிகளுள் ஒன்றாக மனஅழுத்தம் தரும் பாடச்சுமையைக் குறிப்பிடப்படுகிறது அவ்வறிக்கை. பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதுகிற பதின்பருவப் பிள்ளைகளே தேர்வு பயத்தாலும், தேர்வில் மதிப்பெண் குறைவதாலும் தற்கொலை செய்துகொள்கின்றனர். அத்தகைய நிலையில் ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளில் பொதுத்தேர்வினைக் கொண்டு வருவது நிலையை மேலும் சிக்கலாக்கும் பேராபத்து. முதிர்ச்சியோ, பக்குவமோ அற்ற வயதில் பொதுத்தேர்வு வைத்து அவர்களைப் பீதியடையச்செய்வது என்பது கல்வியைத் தொடராது பாதியிலேயே அவர்கள் இடைநிற்றல் செய்வதற்கே வழிவகுக்கும். பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு என்பது அவர்கள் எத்துறையைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்பதற்கும், பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு என்பது கல்லூரியைத் தேர்வுசெய்வதற்குமான ஒரு அளவீடாகக் கொள்ளப்படுகிறது. அதிலும் தற்போது நீட் போன்ற தேசிய தகுதித்தேர்வுகளைக் கொண்டு வந்து பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்ணே தேவையற்ற ஒன்றாக மாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில், எவ்விதத் தேவையுமற்று ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளில் பொதுத்தேர்வு என்பது மாணவர்களை கல்வியிலிருந்து வடிகட்டி உயர்நிலைக் கல்வியையே நிறைவுசெய்யாத நிலைக்கு இட்டுச்செல்லும் சதித்திட்டமே! தொடக்கக் கல்வியிலும், உயர்நிலைக்கல்வியிலும் தன்னிறைவை எட்ட முடியாத இந்நாட்டில் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புகளில் பொதுத்தேர்வினைக் கொண்டு வருவது என்பது பொதுத்தேர்வுகளின் பெயரால் குழந்தைகள் மீது செலுத்தப்படும் ஆகப்பெரும் வன்முறையாகும். இது உளவியலாக அவர்களைச் சிதைத்து அவர்களது தனித்திறன்களையும், சமூகப்பார்வையையும் முற்றிலும் அழித்தொழிக்கும் கொடுஞ்செயல். ஆகவே, குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் மனநலன் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளில் பொதுத்தேர்வு கொண்டு வரும் இம்முறையினை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனத் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
பொழுது போக்குகாக பல ஆங்கில நாவல்கள் படித்தாலும் , என்னை முதன் முதலாக ஈர்த்த நாவல்கள் அயன் ராண்ட் நாவல்கள்தான் . அந்த அளவுக்கு வலிமையான எழுத்து அவருடையது. ஆனால் அவர் எழுத்து , வெறும் பிரச்சாரமாக நின்று விட்டதே என்ற ஆதங்கமும் இருந்தது. நாம் என்பது பொய்யானது , நான் என்பதே நிஜம் என்ற கருத்தை வலியுறுத்தியே அவர் நாவல்கள் இருக்கும். கதா நாயகன் அவர் கருத்தை வலியுறுத்தும் நல்லவனாக இருப்பான் . எதிர் கருத்து கொண்டவர்கள் கெட்டவர்களாக இருப்பார்கள். இந்த டெம்ப்ளேட்டில் அவர் நாவல்கள் இருக்கும். நான் , நாவல் என்ற முரண்பாட்டு பிரச்சினையை , இவர் சார்பு ஏதும் எடுக்காமல் அலசி இருந்தால் , அருமையாக இருந்து இருக்கும் என அவ்வப்போது நினைப்பதுனடு. அப்படி ஒரு நாவல் வந்தால் படிக்க ஆவலாக இருந்தேன் . வேறொரு கதை அம்சம் கொண்ட இன்னொரு நாவலில் , இந்த பிரச்சினை பல மடங்கு அருமையாக , ஆழமாக , நடு நிலையாக அலசப்பட்டு இருப்பதை , சமீபத்தில் படித்து ஆச்சர்யமும் , மகிழ்ச்சியும் அடைந்தேன். ஆனால் இந்த பிரச்சினை நாவலின் மைய இழை அல்ல.. தத்துவம் மதம், காதல் , கலை , அதிகாரம் , மதம் என பலவற்றை தொட்டு செல்கிறது நாவல். அந்த நாவல்தான் என் பெயர் சிவப்பு. துருக்கி நாவல். ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு , ஆங்கிலம் வழியாக தமிழிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. முதல் பந்திலேயே சிக்சர் அடித்து பேட்டிங்கை ஆரம்பிப்பது போல அதிரடியாக நாவல் தொடங்குகிறது. ஒரு பிரேதம் தன் கதையை சொல்வது போல கதை தொடங்குகிறது. ஆரம்பமே ஆவலை தூண்டுவது போல இருப்பதால், விறுவிறுப்பாக படிக்க ஆரம்பிக்கிறோம். வசீகரன் எஃபெண்டி என்ற நுண்ணோவியன் ஏதோ சில காரணங்களாக கொல்லப்பட்டு இருக்கிறான என்பது தெரிகிறது. கொன்றவன் வில்லனாக இருப்பான் என நினைத்து படிக்க ஆரம்பிக்கிறோம். ஆனால் விரைவிலேயே நம் எண்ணம் தவறு என நம் தோல்வியை மகிழ்ச்சியுடன் ஏற்று கொண்டு நம் வாசிப்பு தொடங்குகிறது. கொலையுண்டவன் முதல் அத்தியாயத்தில் பேசுகிறான் என்றால் கொலைகாரன் தன் பார்வையில் நிகழ்ச்சியை இன்னொரு அத்தியாயத்தில் சொல்கிறான். இப்படி ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொருவர் பார்வையில் நக்ர்வதால் , நிகழ்ச்சிகளைப் பற்றி முழுமையான பார்வை கிடைக்கிறது. பதினாறாம் நூற்றாண்டு வாக்கில் கதை நிகழ்கிறது. இஸ்தான்புல்லைத் தலைநகராகக் கொண்டு , ஒட்டாமன் சாம்ராஜ்ஜியத்தை ஆண்டுவரும் சுல்தான் ஹிஜிரா ஆயிரமாவது ஆண்டு விழாவிற்காக , திருவிழா மலர்களையும் , தன் பெருமையை வெனிசீய மன்னருக்கு எடுத்தியம்பும் வகையில் , தன் உருவப்படத்தையும் உருவாக்க உத்தரவிடுகிறார். இந்த பணி ரகசியமாக நடக்கிறது . எனிஷ்டே எஃபெண்டி தலைமையில் தலை சிறந்த ஓவியர் குழு இந்த பணியை மேற்கொள்கிறது . நாரை, வண்ணத்துப்பூச்சி, ஆலிவ், மற்றும் வசீகரன் எனும் புனைப்பெயர்களைக் கொண்ட நுண்ணோவியர்கள் இந்த குழுவில் உள்ளனர். இந்த “வசீகரன்” தான் அடையாளம் தெரியாத ஒரு கொலைகாரனால் முதல் அத்தியாயத்தில் கொல்லப்பட்டவன் . அவனை கொன்றது யார் என்பது யாருக்கும் தெரியவில்லை. இது ஒரு புறம். கருப்பு என்ற ஓவியனின் மாமாதான் இந்த எனிஷ்டே எஃபெண்டி. 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கருப்பு இஸ்தான்புல் வருகிறான். மாமா மகளான ஷெகூரேவை காதலித்து , அந்த காதலில் தோல்வி அடைந்த வரலாறு இவனுக்கு உண்டு. இவன் ஊருக்கு திரும்பி வரும்போது , அவளுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன் இருக்கிறாள். போருக்கு சென்ற அவள் கணவன் திரும்பி வரவில்லை. இறந்து விட்டானா அல்லது உயிருடன் இருக்கிறானா என்பது தெரியாததால் அவள் வாழ்க்கை குழப்பத்தில் இருக்கிறது. அவள் கணவன் இறந்து விட்டான் என்பது உறுதியானால் அவள் மறுமணம் செய்து கொள்ளலாம். ஆனால் அந்த மரணம் உறுதியாக தெரியவில்லை. கணவனின் தம்பிக்கு அவள் மேல் ஆசை. இது ஒரு கதை. இதற்கிடையில் சமூக அமைப்பு எப்படி இருக்கிறது என்பது சொல்லப்படுகிறது. பாரம்பரிய இஸ்லாம் மதத்துக்கு எதிரான போக்கை நுஸ்ரத் ஹோஜா போன்றோர் கண்டிக்கிறார்கள். இதை மத விரோதம் என்கிறார்கள். சிலரோ அவர்களையே கிண்டல் செய்கிறார்கள். இந்த போக்கு ஓவியத்திலும் பிரதிபலிக்கிறது. பாரம்பரிய பாணிக்கும் , வெளி கலாச்சார பாணியிலான நவீன ஓவியத்துக்கும் இடையே மோதல் நிலவுகிறது. இந்த நிலையில் எனிஷ்டே எஃபெண்டி கொலை செய்யப்படுகிறார். அவர் இறந்த நிலையில், கணவனின் தம்பியுடன் தான் அவர் மகள் சென்றாக வேண்டும் . இதை தவிர்க்க கருப்பு , மாமா மகளை மணந்து கொள்கிறான். அவன் தான் , மாமா மகளை மணக்கும் பொருட்டு , எனிஷ்டே எஃபெண்டியை கொன்று விட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. உண்மையான கொலைகாரனை கண்டு பிடிக்க வேண்டிய நெருக்கடி கருப்பு ஏற்படுகிறது. தன் உத்தரவை செயல்படுத்தி வந்த ஓவியர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டது சுல்தானுக்கு கோபம் ஏற்படுத்துகிறது. மூன்று நாட்களுக்குள் கொலைகாரனை கண்டு பிடிக்க வேண்டும் என சுல்தான் உத்தரவிடுகிறார் . தலைமை குரு உதவியுடன் கொலைகாரனை கண்டு பிடிக்க முயல்கிறான் கருப்பு. கொலைகாரன் யார் என்பதை விட கொலைக்கான காரணமே முக்கியம் என நமக்கு தோன்றி விடுகிறது. அதுதான் நாவலின் வெற்றி. இல்லையேல் துப்பறியும் நாவலாக இது நின்று போய் இருக்கும். கொலைக்கான காரணம் நியாயமா இல்லையா என்பதும் , கொலைகாரன் வில்லனா எனபதும் வேறு விஷயம். இரு தரப்பு கருத்து மோதல்கள்தான் கவனத்துக்கு உரியது. திருக்குறளை அனைவரும் படிக்கிறோம். ஆனால் அதை எழுதியவர் பெயர் யாருக்கேனும் தெரியுமா ? திருவள்ளுவர் என்பதெல்லாம் பிற்காலத்தில் நாமாக வைத்த பெயர்தான். காக்கை பாடினியார் , செம்புலப் பெயல் நீரார் என்பதெல்லாம் அவர்கள் பாடிய பாடலை வைத்து நாம் வைத்த பெயர்கள்தான். தம் படைப்புகளே முக்கியம் , பெயர்கள் அல்ல எனப்தே அவர்கள் எண்ணமாக இருந்து இருக்கிறது. இந்த நாவல் இதைப்பற்றி பேசுகிறது எங்கே உண்மையான கலையும் களங்கமின்மையும் இருக்கிறதோ அங்கே ஒரு கலைஞன் தனது அடையாளத்தின் சிறிய சுவடைக்கூட விட்டுச்செல்லாமல் ஓர் ஒப்பிடவியலா மகத்தான படைப்பைத் தீட்டமுடியும் நுண்ணோவியம் என்ற கலையில் தனி மனித சாதனை முக்கியம் இல்லை. ஒட்டு மொத்தமான கலைப் படைப்பே முக்கியம். நான் என்ற சிந்தனையே , சாத்தானின் தூண்டுதல்தான் . அதே போல , உலகில் நாம் காணும் விஷ்யங்கள் எந்த முக்கியத்துவமும் அற்றவை. சாஸ்வதம் அற்றவை. அதை அப்படியே தத்ரூபமாக வரைவதில் எந்த பெருமையும் இல்லை என்பது அவர்கள் சிந்தனை போக்கு. இதற்கு எதிரான வெளி தேசத்து சிந்தனைகளுடன் ஏற்படும் முரண்களை நாவல் அட்டகாசமாக சொல்கிறது. எல்லா தரப்பு கருத்துகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. “ ஓர் ஓவியம் அதன் அழகின் மூலமாக நம்மை வாழ்க்கையின் முழுமையை நோக்கி பரிவுணர்வை நோக்கி, இறைவன் உருவாக்கிய ஆட்சியிலுள்ள பல்வேறு நிறங்கள்மீது மதிப்பை நோக்கி, பிரதிபலிப்பையும் நம்பிக்கையையும் நோக்கி நம்மை செலுத்துவதுதான் முக்கியம். வரைந்த நுண்ணோவியத்தின் அடையாளம் முக்கியமல்ல.” மனம் எதைக் காண்கிறதோ, ஓவியம் அதற்கு உயிர்கொடுத்து கண்களுக்கு விருந்தாக்குகிறதெனலாம்: கண்கள் உலகத்தில் எதைக்காண்கிறதோ அது மனதில் பதிகின்ற அளவுக்கு ஓவியத்தில் பதிவாகிறது. ஆகையால் மனது ஏற்கனவே அறிந்திருப்பதை கண்கள் நமது உலகத்தில் கண்டுபிடிப்பதே அழகு எனப்படுகிறது இறைதூதரின் பிறப்புக்காவியம் வாசிக்கப்பட்டதா? இறந்தவர்களை கௌரவிக்கும் முகமாக ஹல்வா, பொரி, மாவுருண்டை போன்ற இனிப்புகள் அப்போது நாற்பதாவது நாள் சடங்கின்போது வழங்கப்பட்டதா? முகம்மது வாழ்ந்தபோது புனித குர் ஆன் ஒரு பாடலைப்போல இசைக்கப்பட்டதா? ‘தீர்ப்பு தினத்தன்று ஓவியர்களை அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பார் என்று நமது இறைத் தூதர் எச்சரித்திருப்பதை அவர்கள் அறிவர்.” “ஓவியர்களை அல்ல; பிரதிமைகளைச் செய்பவர்களை. மேலும் இது குர் ஆனில் இருப்பதல்ல; புக்காரியில் இருப்பது” ”ஓவியம் என்பது கதையின் நீட்சி அல்ல. தன்னளவில் அது தனிப் பொருள்” ”காதல் நம்மை முட்டாள் ஆக்குகிறதா அல்லது முட்டாள்கள் மட்டுமே காதலில் விழுகிறார்களா ?” ”நான் மரமாக இருக்க விரும்பவில்லை. அதன் பொருளாக இருக்க விரும்புகிறேன்” ”நிறம் என்பது கண்ணின் தொடுகை” என்பது போன்ற பல வரிகளை ரசித்து படிக்கலாம். ஓவியம் பற்றி எதுவும் தெரியாதவர்கள்கூட புரிந்து கொள்ளும் வண்ணம் விவரித்து எழுதி இருக்கிறார் கதாசிரியர் . கூர்ந்து படித்தால் , இது ஓவியத்துக்கு மட்டும் அன்றி எல்லா கலைகளுக்கும் பொருந்தும் என்பது புரியும். யதார்த்தமாக படம் எடுக்கிறேன் என சிலர் டாக்குமெண்ட்ரி போல படம் எடுக்கிறார்கள். இதில் கலை எங்கே இருக்கிறது என தேட வேண்டி இருக்கிறது இல்லையா ? கமல் ஹாசன் போன்றவர்கள் , வெளி நாட்டு படங்களை போலி செய்வதையே தம் சாதனையாக நினைக்கிறார்கள்.. இதில் கலை எங்கே இருக்கிறது ? கலையை தம் மகிழ்ச்சிக்கு செய்யாமல் , பார்வையாளர்களை மகிழ்ச்சியூட்டும் நோக்கத்தில் , மேக் அப் போடுவது , கிராபிக்ஸ் என்பதையே நடிப்பு என வைத்து ஏமாற்றுகிறார்கள் அதே நேரத்தில் பாதுகாப்பான வேலைகளை உதறி விட்டு, உண்மையான நல்ல படங்கள் , குறும்படங்கள் எடுத்து உரிய அங்கீகாரம் இல்லாமல் வாழும் நல்ல கலைஞர்களும் வாழ்கிறார்கள்.இங்கே முரண் வந்து விடுகிறது இல்லையா. ஏதோ ஒரு நூற்றாண்டியில், ஒரு குறிப்பிட்ட கலையை மட்டும் வைது எழுதப்பட்ட இந்த நாவல் , உலகளாவிய வரவேற்பு பெறுகிறது என்றால் , அதற்கு காரணம் , மேலே நான் உதாரணத்தை போல , அது எல்லா இடங்களுக்கும் ,எல்லா கலைகளுக்கும் பொருத்தமாக இருப்பதால்தான்.. மொழி பெயர்ப்பாளர் குப்புசாமி சிறப்பான பணியை செய்து இருக்கிறார். மொழி பெயர்ப்பு என்பது சிக்கலான பணி. ஒரேயடியாக தமிழ் படுத்திவிட்டால் , மூல நூலின் சுவை போய் விடும். லேசான மொழி பெயர்ப்பு செய்தால் , கரடு முரடாக இருக்கும் . குப்புசாமி மிக மிக சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார். அதேபோல ஆங்கில பெயர்ப்பும் அருமை. நோபல் பரிசு பெற ஆங்கில மொழி பெயர்ப்பும் ஒரு காரணம். குறைகள் என எதையும் சொல்ல முடியாது.. ஆனால் என் எதிர்பார்ப்புகள் சில நிறைவேற்றப்படவில்லை என்பது ஒரு வாசகனாக என் கருத்து தர்க்கா வழிபாடு, இறை நேசர்களை போற்றுவது பற்றி உண்மையிலேயே இஸ்லாம் நிலை என்ன என்பது பற்றிய ஆழமான விவாதங்கள் இல்லை சீரோ டிகிரி போன்ற பின் நவீனத்துவ நாவல்களில் , நான் லீனியர் முறையை பயன்படுத்தி , சிதறுண்ட வடிவ முறையில் , நிறைய விஷ்யங்களை சொல்லி இருப்பார்கள்.. ஆனால் இந்த நாவல் லீனியர் முறையிலேயே செல்வதால் , வாசகனின் யோசிப்புக்கு அந்த அளவுக்கு பெரிய சவால் இல்லை. குறிப்பிட்ட இடப்பரப்பையும் , கால் அளவையுமே நாவலால் சொல்ல முடிகிறது. கருப்பின் காதல் புரிகிறது. ஆனால் காதல் சம்பவங்களில் ரொமாண்டிக் அம்சம் குறைவே . வெர்டிகெட் என் பெயர் சிவப்பு - சிறப்பு எழுதியவர் - ஒரான் பாமுக் Posted by pichaikaaran at 9:32 AM Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Labels: புத்தக விமர்சனம் 3 comments: ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி August 16, 2012 at 7:12 PM அருமையான எளிமையான நடை உங்களின் எழுத்து.. நானும்தான் அந்நாவலைப் படித்துக்கொண்டிருந்தேன்,ஆனால் கதையின் போக்கு அவ்வளவு எளிதல்லவே. தமிழில் மொழிபெயர்த்தவரும் அங்கும் இங்கும் தாவுவதைபோன்ற ஒரு பிரம்மையை ஏற்படுத்துகின்றார். இதுபோன்ற நாவல்களின் மொழிபெயர்ப்பை விட அசலில் படிப்பது சிறப்பு என ஒருவர் முகநூலில் பின்னூட்டம் இட்டதால் அதை அப்படியே அலமாரியில் வைத்து விட்டேன். நாவல்கள் படிப்பதில் ஒரு சூட்சமம் இருக்கின்றது தெரியுமா? நாம் மனதின் நுண்ணிய உணர்வுகளுக்கு அந்நாவல் ஒத்துவரவில்லையென்றால், அதில் மனம் ஒன்றாமல், அதன் வாசலிலேயே நின்றுக்கொண்டு ஏடுகளை மட்டும் புரட்டிக்கொண்டு பேந்த பேந்த விழித்துக்கொண்டிருப்போம். இந்நாவல், தொடக்கத்தில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் தொடரும் போது சோர்வாகவே இருக்கின்றது. அது மொழிப்பெயர்ப்பால் வந்த கோளாறா என்பதும் தெரியவில்லை. உங்களின் இந்த விமர்சனம் படித்த பின்,அது ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கலைகளின், குறிப்பாக ஓவியக்கலையின் நுணுக்கங்கள் சொல்லப்பட்டுள்ளது என்பதனையும் உள்வாங்கிக்கொண்டேன். நிச்சயம் அந்நாவலைத் தொடர்வேன் சகோ. எஃக்யூஸ்மீ, உங்களின் ப்ளாக்’ஐ ஏன் என்னால் பின் தொடர முடியவில்லை.? பல முறை முயன்றும், பதிவுகள் என் ப்ளாக்கிற்கு வரமாட்டேன் என்கிறது. எதாவது ரகசிய கோட் மூலம் பலமான தடுப்புக் காவல் இட்டுள்ளீர்களா? தயவு செய்து அகற்றுங்கள். நல்ல பதிவுகள் உங்களின் ப்ளாக்கில்,வளரும் வாசகர்களுக்கு வழிகாட்டியாய் உதவலாமே..! ReplyDelete Replies Reply கார்த்திக் August 16, 2012 at 11:49 PM நான் இந்த நாவலை ஆங்கிலத்தில் வாசித்தேன்..மிகவும் ரசித்து வாசித்த நாவல், உங்கள் விமர்சனம் அருமை !! நான் இந்நாவலில் பெரும் குறையாக கருதுவது, மீண்டும் மீண்டும் மீண்டும் வரும் பெரும் உணர்வெழுச்சியை தட்டாத நுண்ணோவிய விளக்கங்களே.. அவையே எனக்கு மிகபெரும் வேக தடைகளாக இருந்தன.. தமிழில் இந்த குறை இல்லாதிருந்தால் மகிழ்ச்சியே!! ReplyDelete Replies Reply pichaikaaran August 17, 2012 at 1:40 AM @கார்த்திக் ஆழ்ந்து படித்திருக்கிறீர்கள் . மகிழ்ச்சி . ஓவியர்கள் ஒரே மாதிரியான ஓவியம் வரைந்து அலுத்து போய் இருக்கிறார்கள் . இந்த அலுப்பை வாசகனுக்கு உணர வைக்கும் யுக்திதான் மீண்டும் மீண்டும் ஒரே விபரங்களை சொல்வது . ReplyDelete Replies Reply Add comment Load more... NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im] உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im] Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு .... Get Follow Me Buttons hit Blog Archive ► 2021 (20) ► November (3) ► October (1) ► July (1) ► June (7) ► May (6) ► February (1) ► January (1) ► 2020 (114) ► December (3) ► October (4) ► September (7) ► August (8) ► July (3) ► June (7) ► May (15) ► April (27) ► March (9) ► February (17) ► January (14) ► 2019 (124) ► October (2) ► September (4) ► June (9) ► May (32) ► April (25) ► March (21) ► February (16) ► January (15) ► 2018 (32) ► December (7) ► November (9) ► October (4) ► August (1) ► June (11) ► 2017 (17) ► October (1) ► August (7) ► July (1) ► June (5) ► January (3) ► 2016 (16) ► November (1) ► September (2) ► August (1) ► July (2) ► June (1) ► May (1) ► April (3) ► January (5) ► 2015 (37) ► December (12) ► October (2) ► August (2) ► July (2) ► June (3) ► May (6) ► February (7) ► January (3) ► 2014 (69) ► December (5) ► November (27) ► October (5) ► September (2) ► August (1) ► July (2) ► June (6) ► May (3) ► April (1) ► March (3) ► February (3) ► January (11) ► 2013 (121) ► December (18) ► November (14) ► October (13) ► September (6) ► August (10) ► July (8) ► June (11) ► May (14) ► April (9) ► March (2) ► February (3) ► January (13) ▼ 2012 (173) ► December (19) ► November (20) ► October (12) ► September (10) ▼ August (9) காளமேகப்புலவர் பண்டைக்கால சாருவா?- இதென்ன கலாட்டா? பதிவர் சந்திப்பும் மதுபான சர்ச்சையும் - என் நிலைப்... ரா கி ரங்கராஜன் - என் நிறைவேறாத கனவு ஆசையை வெல்ல ஆசைப் படலாமா - ஜெ கிருஷ்ண மூர்த்தி காப்பி அடித்தல் கலையா ? என் பெயர் சிவப்பு- வாசிப்... உலக புகழ் பெற்ற ரஷ்ய சிறுகதை - குதிரை வண்டி இடைவெளி- சம்பத் அளித்த இணையற்ற நாவல் மதுபான கடையா அல்லது மதுபானக் கடையா? ” நிதானமாக” ஓர... பில்லா-2 ஃபிளாப்பா அல்லது வெற்றியா ? ► July (12) ► June (11) ► May (16) ► April (10) ► March (9) ► February (27) ► January (18) ► 2011 (189) ► December (17) ► November (31) ► October (9) ► September (6) ► August (7) ► July (10) ► June (8) ► May (14) ► April (11) ► March (40) ► February (17) ► January (19) ► 2010 (277) ► December (37) ► November (29) ► October (40) ► September (32) ► August (14) ► July (28) ► June (26) ► May (14) ► April (41) ► March (16) என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா pichaikaaran View my complete profile ட்விட்டரில் இந்த முட்டாள்!! Tweets by @pichaikkaaran copy நன்றி... நன்றி சிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி
1. திருமலையப்பன் தனது பக்தரான தொண்டைமான் சக்கரவர்த்திக்குத் தனது சங்கு சக்கரங்களை அளித்தார். கொடிய பகைவனான சிம்மாதனை மலையப்பன் தந்த அந்த திவ்ய ஆயுதங்களைக் கொண்டு தொண்டைமான் சக்கரவர்த்தி வென்றான். பக்தனுக்கு ஆயுதம் தந்ததன் அடையாளமாகத் தன் திருமேனியில் சங்கு சக்கரங்கள் ஏந்தாமலேயே சில காலம் நின்றிருந்தார் பெருமாள். இது பிராம்ம புராணத்தின் ஏழாம் அத்தியாயத்திலும், பிரம்மாண்ட புராணத்தின் பதினொன்றாம் அத்தியாயத்திலும் சொல்லப்பட்டுள்ளது. பின்னர் ராமாநுஜர் சங்கு சக்கரங்களைப் பெருமாளுக்குச் சமர்ப்பித்த போது, பெருமாள் அவற்றை ஆசையுடன் கையில் எடுத்துக் கொண்டார். இன்றளவும் சங்கு சக்கரங்களோடு மலையப்ப சுவாமி நமக்குத் தரிசனம் தருகிறார். 2. மார்கழி மாத விடியற்காலை பூஜைகளில் திருமலையப்பனுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்யப்படுகிறது. ஹாரீத ஸ்ம்ருதி என்ற உயர்ந்த நூலின் ஐந்தாம் அத்தியாயத்தில் மார்கழி மாதத்தில் திருமாலுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வது விசேஷம் என்று சொல்லப்பட்டுள்ளது. வராக புராணத்திலும், திருமலையில் தவம் புரிந்த மாமுனிவர்கள் வில்வ இலைகளால் திருமாலுக்கு அர்ச்சனை செய்தார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. வில்வ இலை திருமகளுக்கும் உகந்ததாக இருப்பதால், அவளைத் திருமார்பில் கொண்ட திருவேங்கடமுடையானுக்கு வில்வார்ச்சனை சிறப்பானதாகக் கருதப்படுகிறது. 3. திருமகளோடு சேர்ந்த திருமாலுக்கு வெள்ளிக் கிழமைகளில் அபிஷேகம் செய்தால், அது எல்லாச் செல்வங்களையும் அதிகமாகத் தரும் என்று வைகானச ஆகமத்தின் ஆனந்த சம்ஹிதையில் சொல்லப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், சிறந்த செல்வ அபிவிருத்தி உண்டாவதற்காக, திருமலையப்பனுக்கு வெள்ளிக் கிழமைகளில் திருமஞ்சனம் நடக்கும்படி ஏற்பாடு செய்தார் ராமாநுஜர். பவிஷ்யோத்தர புராணத்தின் 14-ம் அத்தியாயத்தில், பண்டைக் காலத்திலும் மலையப்பனுக்கு வெள்ளிக்கிழமை திருமஞ்சனம் நடைபெற்று வந்ததாகக் குறிப்பு உள்ளது. 4. பாத்ம புராணம் பத்தாம் அத்தியாயத்தில், ஜம்பூ த்வீபத்தில், பாரத நாட்டில், கங்கைக்கு இருநூறு யோசனை தெற்கேயும், கிழக்குக் கடலுக்கு ஐந்து யோசனை மேற்கேயும் உள்ள நாராயண கிரி என்னும் திருமலையில், சுவாமி புஷ்கரிணியின் மேற்குக் கரையில் புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரம் துவாதசி திதி திங்கட் கிழமை சித்த யோகத்தில் நிவாசன் அவதாரம் செய்தார் என்று சொல்லப்பட்டுள்ளது. 5. வெள்ளிக் கிழமை திருமஞ்சனத்தின்போது, பெருமாளின் திருமார்பில் உள்ள தேவித் தாயாரைத் திருமார்பில் இருந்து இறக்கி எழுந்தருளச் செய்து, அவளுக்குத் திருமஞ்சனம் செய்வார்கள். அகலகில்லேன் இறையும் என்று ஒரு நொடி கூடப் பெருமாளைப் பிரியாத அந்தத் திருமகள், திருமஞ்சனக் காலத்தில் பிரிவுத் துயரால் வாடுவாள் அல்லவா அவளது பிரிவுத் துயரை ஆற்றுவதற்காக, பூமி தேவி நாச்சியாரின் அவதாரமான ஆண்டாள் பாடிய நாச்சியார் திருமொழியைத் திருமஞ்சனக் காலத்தில் ஓத வேண்டும் என்ற முறையை ஏற்படுத்தி வைத்தார், ராமாநுஜர். இன்றளவும் இது பின்பற்றப்பட்டு வருகிறது. 6. சுக முனிவர், பிருகு முனிவர், பிரகலாதன், அம்பரீஷன் போன்ற பல அடியார்கள் திருமலையைத் திருமாலின் வடிவமாகவே கருதி, அதைக் காலால் மிதிக்க அஞ்சி, மலை அடிவாரத்திலேயே வசித்துத் தவம் செய்கிறார்கள் என்றும் மலைமேல் அவர்கள் ஏறுவதில்லை என்றும் வாமன புராணத்தின் இரண்டாம் அத்தியாயத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆழ்வார்களும் திருமலையையே மலையப்பனாகக் கருதிப் பாசுரங்கள் பாடியுள்ளார்கள். திருமலையே அடைய வேண்டிய இலக்கு என்றும், அந்த மலையே அதை அடைவிக்கும் சாதனம் என்றும் பாடியுள்ளார்கள். எனவே தங்கள் பாதத்தால் திருமலையைத் தீண்டுவது கூடாது என எண்ணி, மலையடிவாரத்தில் இருந்தே மங்களாசாசனம் செய்தார்கள் என்று சொல்லப்படுகிறது. எனவே, ஆழ்வார்களை திருமலைக்கு மேல் பிரதிஷ்டை செய்தால் அது அவர்களின் திருவுள்ளத்துக்கு ஒவ்வாது எனக் கருதி, அவர்களை மலை அடிவாரத்தில் திருமலையைப் பார்த்தபடி மங்களாசாசனம் பண்ணும் திருக்கோலத்தில் பிரதிஷ்டை செய்தருளினார் ராமாநுஜர். 7. சோழ மன்னனால் தில்லைநகர் திருச்சித்ரகூடம் என்னும் திவ்ய தேசத்துக்கு ஆபத்து நேர்ந்த போது, அங்குள்ள உற்சவ மூர்த்தியைக் காத்து, கீழத் திருப்பதியில் தென்புறத்தில் உள்ள பெரிய ஏரியின் அருகே அவரைப் பிரதிஷ்டை செய்தார் ராமாநுஜர். அவர்தான் கீழத் திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள். யாதவ மன்னன் மூலம் பள்ளிகொண்ட கோலத்தில் உள்ள மூல மூர்த்தியை ஆவாகனம் செய்து பிரதிஷ்டை செய்தார். 8. திருமலையப்பனின் எல்லையற்று இடையறாத செல்வத்தின் வளர்ச்சிக்காக அவரது திருமார்பில் உள்ள பொற்கண்டியில் வியூக லட்சுமியைப் பிரதிஷ்டை செய்தார் என்று வேங்கடாசல இதிகாச மாலை சொல்கிறது. 9. கோவிந்தராஜப் பெருமாளின் செல்வமும் இடையறாது மேன்மேலும் வளர்வதற்காக, வியூக லட்சுமியின் யந்திர மந்திரங்களை முறைப்படி எழுதி அலங்கரிக்கப்பட்ட திவ்ய சிம்மாசனத்தில் ஆண்டாளைப் பிரதிஷ்டை செய்தார் ராமாநுஜர் என்றும் வேங்கடாசல இதிகாச மாலை சொல்கிறது. 10. சுவாமி புஷ்கரிணிக் கரையில் புளிய மரத்தின் வடிவில் திருமாலும் செண்பக மரத்தின் வடிவில் திருமகளும் எழுந்தருளி இருப்பதாக பாத்ம புராணம், பவிஷ்யோத்தர புராணம், வராக புராணம் ஆகியவற்றில் சொல்லப்பட்டுள்ளது. 11. வீர நரசிம்ம கஜபதி என்ற விஜயநகர மன்னர் மலையப்பன் திருக்கோவிலுக்குக் கோபுரம் கட்டிக் கொடுத்தார். அப்போது அவரது கனவில் ஆதிசேஷன் தோன்றி, என் உருவமாய் இருக்கும் மலைக்கு மேல் நீங்கள் கட்டும் கோபுரத்தின் பாரத்தால் எனக்குப் பெருந்துன்பம் உண்டாகிறது. பெருமாளின் கையில் என்னைச் சேர்த்தால் தான் எனது துன்பம் தீரும் என்று கூறினார். அதன் அடிப்படையில், வீர நரசிம்ம கஜபதி நாகாபரணம் செய்து சமர்ப்பிக்க, அது திருவேங்கடமுடையானின் வலக்கரத்தில் அணிவிக்கப்பட்டது. 12. சுவாமி புஷ்கரிணியின் மேல் கரையில் நரசிம்மப் பெருமாள் எழுந்தருளி இருந்தார் என்றும் அவரைப் பரமசிவன் வழிபட்டார் என்றும் ஸ்காந்த புராணத்தின் சுவர்ணமுகீ மாகாத்மியம் கூறுகிறது. திருமங்கை ஆழ்வார் வேங்கடத்து அரியை பரிகீறியை என்று இப்பெருமாளைப் பாடியுள்ளார். ஆனால் சுவாமி புஷ்கரிணி மேல் கரையில் இருந்த அவர் சந்நிதிக்குச் சில இடையூறுகள் ஏற்பட்டதாலே, திருவேங்கடமுடையானின் கோவிலுக்கு உள்ளேயே வடகிழக்குப் பகுதியில் ஆனந்த நிலைய விமானத்தைப் பார்த்தபடி அந்த நரசிம்மரைப் பிரதிஷ்டை செய்தார் ராமாநுஜர். 13. மார்க்கண்டேய புராணத்தின் படி, திருமலைக்கு மார்க்கண்டேய முனிவர் வந்த போது, நடுவழியில் ஒரு மலைக் குகையில் நரசிம்மரைத் தரிசித்தார். புராணத்தில் சொல்லப்பட்ட இந்த இடத்தில் நரசிம்மருக்கு ஆலயம் அமைத்துப் பிரதிஷ்டை செய்தார் ராமாநுஜர். அவர்தான் நடுவழி நரசிங்கப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். 14. ராமாநுஜரின் சீடரான அனந்தாழ்வான் மலையப்பனுக்காக நந்தவனம் அமைத்துப் புஷ்ப கைங்கரியம் செய்தார். இன்றும் அனந்தாழ்வான் தோட்டத்தில் இருந்துதான் மலையப்பனுக்குப் பூக்கள் செல்கின்றன. அனந்தாழ்வான் தோட்டம் அமைக்கும் வேளையில், மலையப்பன் சிறுவன் வடிவில் வந்து அவருடன் விளையாட, அனந்தாழ்வான் கடப்பாறையால் அச்சிறுவனின் தாடையில் அடித்து விட்டார். பின் பெருமாளின் தாடையில் இருந்து ரத்தம் வழிந்தது. அதைக் கண்டு வருந்திய அனந்தாழ்வானிடம் பெருமாள், நீ வருந்தாதே, திருமார்பில் உள்ள வத்சம் என்ற மறுவைப் போலே தாடையில் உள்ள தழும்பையும் அலங்காரமாக நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றார். இச்சம்பவத்தை நினைவூட்டத் தன் தாடையில் பச்சைக் கற்பூரம் அணிவிக்க வேண்டும் என்று மலையப்பன் கட்டளை இட்டார். அனந்தாழ்வான் தன்னை அடித்த கடப்பாறையையும் உயர்ந்த இடத்தில் பொருத்தி நிறுத்த வேண்டும் என்று கட்டளை இட்டார். கோபுர வாசலின் வடதிசைச் சுவரின் மேற்புரத்தில் அந்தக் கடப்பாறையை இன்றும் காணலாம். 15. கீழத் திருப்பதியில் திருமலைப் படிகள் ஏறும் வழியின் தொடக்கத்தில் உள்ள ஒரு புளியமரத்தடியில் ராமாநுஜர் தனது மாமாவான திருமலை நம்பிகளிடம் ராமாயணத்தின் உட்பொருள்களைப் பயின்றார். ஒருநாள் அங்கிருந்த குண்டுக் கல்லில் கஸ்தூரி, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் ஆகியவை மணம் கமழ, சந்தனம், புஷ்பம், துளசியால் அலங்கரிக்கப்பட்ட மலையப்பனின் திருவடிகள் தோற்றம் அளித்தன. ராமாயணத்தைக் கேட்க மலையப்பனே வந்திருக்கிறான் என்று அவர்கள் உணர்ந்தார்கள். ராமாநுஜர் அங்கே பெருமாளைப் பிரதிஷ்டை செய்தார். திருமலைக்கு மேலே சிலர் ஏறக்கூடாது என்ற நிலை இருந்த அக்காலத்தில், புரட்சியாளரான ராமாநுஜர், மலையடிவாரத்தில் உள்ள இந்த திருவடிகளைத் தரிசித்தாலே மலை ஏறி மலையப்பனைத் தரிசித்த பலன் கிடைக்கும்படியாக அங்கே பிரதிஷ்டை செய்து வைத்தார். 16. வராக புராணம் முதல் பகுதி முப்பதாம் அத்தியாயத்தில், திருமலையில் உள்ள முனிவர்கள் கூட்டமாக இணைந்து, கோவிந்தா கோவிந்தா என்று கோஷம் இட்டு வருவதாகச் சொல்கிறது. எனவே தான் இன்றளவும் மலை மீது ஏறும் அடியார்கள் கோவிந்தா... கோவிந்தா... என்ற நாம உச்சாரணத்துடன் மலை ஏறுவதைப் பார்க்கிறோம். 17. வைகைக் கரையில் உள்ள குருவித் துறையில் விபீஷணனுக்கு அருள்புரியும் திருக்கோலத்தில் உள்ள ராமரை விச்வம்பரர் என்ற முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். அவ்வூரில் கலகம் ஏற்படவே, அந்த ராமரையும் அவரது பரிவாரத்தையும் அங்கிருந்து திருமலை அடிவாரத்தில் திருமலை நம்பிகளிடம் ராமாயணம் கேட்டு வந்த ராமாநுஜரிடம் கொண்டு வந்து சேர்த்தார்கள். அச்சமயம் திருமலை நம்பிகளும் ராமாயணத்தில் விபீஷண சரணாகதி பற்றித் தான் ராமாநுஜருக்கு விவரித்துக் கொண்டிருந்தார். தனக்கு அருள்புரிவதற்காகத் தேடி வந்த ராமரையும் அவரது பரிவாரத்தையும் மலையப்பனின் கருவறைக்குள்ளேயே பிரதிஷ்டை செய்தார் ராமாநுஜர். திருமலையில் ராமாநுஜர் ஏற்படுத்திய ஒழுக்க விதிகள் *திருமலையில் பெரிய பெரிய முனிவர்களும் யோகிகளும் எப்போதும் எழுந்தருளி இருந்து மலையப்பனை வணங்கி வருகிறார்கள். எனவே, பெருமாளுக்கு அருகில் இருந்து அவரது முக மலர்த்திக்காக முக்கியக் கைங்கரியம் செய்பவர்கள் மட்டுமே மலைக்கு மேல் தங்க வேண்டும். தூரத்தில் இருந்தபடி குணாநுபவமும் தொண்டும் செய்ய வல்லவர்கள் மலைக்குக் கீழேயே தங்கிக் கொள்ளலாம். திருவிழாக் காலங்களில் மட்டும் அவர்கள் மலைக்கு மேலே போகலாம். *திருமலையில் விளையும் காய், கனி எதையுமே மலையப்பனுக்குப் படைக்காமல் உண்ணக் கூடாது. *திருமலையில் வசிப்பவர்கள் தங்கள் வீட்டில் உள்ள பெருமாளுக்கு நேரடியாகச் சந்தனம், புஷ்பம் சமர்ப்பிக்காமல் மலையப்பனுக்குச் சாத்திய பிரசாதத்தையே கொண்டு வந்து சாத்தவேண்டும். *திருமலையில் யாரேனும் மரணத் தருவாயில் இருந்தால், மரணத்துக்கு முன் கீழத் திருப்பதிக்குக் கொண்டு வந்து விட வேண்டும். ஒருவேளை திருமலையில் இறந்து விட்டால், மலைக்குக் கீழே கொண்டு வந்து தான் ஈமக்கிரியைகள் செய்ய வேண்டும். *திருமலையில் மான், பறவை, எறும்பு உள்ளிட்ட பல வடிவங்களில் தேவர்களும் நித்திய சூரிகளும் இருந்து மலையப்பனை வணங்கி வருகிறார்கள். அதனால் மலையில் வாழும் எந்த உயிரினத்தையும் துன்புறுத்தக் கூடாது. *திருமலையில் நடந்து ஏறிச் செல்லும் போதும், பெருமாளின் வீதிகளிலும் காலணிகள் அணியக் கூடாது. *திருமலையில் பெருமாளைத் தவிர வேறு யாரும் பூமாலைகள் அணிந்து கொள்ளக் கூடாது. பெருமாள் அணியும் மாலைகளைப் பரிவார தேவதைகளுக்குச் சாத்துவார்கள். அல்லது பூலபாவியில் இட்டு விடுவார்கள். பக்தர்களுக்கு மாலைப் பிரசாதம் வழங்கப்படுவதில்லை. குடந்தை வெங்கடேஷ் மேலும் செய்திகள் நல்வேளை தந்தருளும் பரங்கிரிச் செவ்வேள் கிரிவலம் எனும் இருதய ஸ்தானம் ஈஸ்வரபுரத்து சிவாலயத்தில் பேயாரும் பெருங்காடும் கலையரசியின் கவின்மிகு கோயில்கள் தீராத விளையாட்டுப் பிள்ளை நாகதோஷம் போக்கும் திருத்தலம் : தேவாரப்பதிகங்களில் பாடப்பட்ட திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மருத்துவம் வேர் சிகிச்சையில் நவீன தொழில்நுட்பம் BMI மட்டுமே போதுமானதல்ல! பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!! ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!! சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!! ஆந்திராவில் கொட்டித்தீர்த்த கனமழை!: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள்...இடுப்பளவு தண்ணீரில் அல்லல்படும் மக்கள்..!!
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் மின்சாரத்தின் தேவைக்கும், உற்பத்திக்குமான இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நிலைமையை சமாளிக்க வெளிச்சந்தைகளில் இருந்து மிக அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு மின் வாரியம் தள்ளப்பட்டிருக்கிறது. உற்பத்திச் செலவை விட 5 மடங்கு அதிக விலை கொடுத்து வாங்குவது மின்வாரியத்தை நிலைகுலையச் செய்து விடும். தமிழ்நாட்டில் 2500 மெகாவாட் அளவுக்கு மின்தட்டுப்பாடு இருப்பதை மின்சாரத்துறை அமைச்சரும் ஒப்புக் கொண்டிருக்கிறார். அதை சமாளிக்க ஒரு யூனிட் மின்சாரம் ரூ.2.61 என்ற விலையில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறி வருகிறார். ஆனால், களச்சூழலின் அவசரத்திற்கு ஏற்ப அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரியவில்லை. ஒரு யூனிட் அனல் மின்சாரம் ரூ.2.61க்கு கிடைத்தால் அது அரசுக்கு லாபம் தான்; ஆனால், கிடைக்குமா? என்பது தெரியவில்லை. தமிழ்நாடு அரசும், மின்சார வாரியமும் ஒரு விஷயத்தை மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழ்நாடு மின்சார வாரியம் ஏற்கனவே 1.59 லட்சம் கோடி கடனில் சிக்கித் தவிக்கிறது. மின்சார வாரியத்தின் நடவடிக்கைகளும், செயல்பாடுகளும் இந்தக் கடனையும், மின்சார வாரியத்தின் இழப்பையும் குறைக்கும் வகையில் இருக்க வேண்டுமே தவிர, அதிகரிக்கும் வகையில் அமைந்துவிடக் கூடாது. அதற்கேற்ற வகையில் இப்போதைய மின் தட்டுப்பாட்டைப் போக்கவும், எதிர்கால மின்சாரத் தேவையை சமாளிக்கவும் திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். Tags: Electricity demand plan to deal with Ramadas மின் தேவை சமாளிக்க திட்டம் ராமதாஸ் மேலும் செய்திகள் ஜி.கே.மணி அறிவிப்பு பாமகவினர் நாளை முதல் விருப்பமனு அளிக்கலாம் பொது விநியோக திட்டத்தை வருமானம் அடிப்படையில் குறைக்க முயற்சிப்பதா: ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை அரசுக்கு ராமதாஸ் வேண்டுகோள் ஐகோர்ட் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் சொல்லிட்டாங்க... குளிர்கால தொடர் நாளை தொடங்கும் நிலையில் பரபரப்பு காங்.குடன் இணைந்து செயல்பட மாட்டோம்: திரிணாமுல் காங்கிரஸ் திடீர் அறிவிப்பு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அதிமுகவினர் விண்ணப்பித்தனர்: நாளை மறுதினம் வரை வழங்கலாம் பல்கேரியாவில் பயணிகள் பேருந்தில் தீ விபத்து!: 12 குழந்தைகள் உட்பட 45 பேர் தீயில் கருகி உயிரிழப்பு..!! ‘கலைஞரின் மனசாட்சி’முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!! சேலத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 4 வீடுகள் தரைமட்டம்...இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..!! ஆந்திராவில் கொட்டித்தீர்த்த கனமழை!: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்புகள்...இடுப்பளவு தண்ணீரில் அல்லல்படும் மக்கள்..!!
சுழியோடிகளின் பிரச்சினை தீர்ந்து வைக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை சுழியோடிகளின் பிரச்சினை தீர்ந்து வைக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - Yarl Voice சுழியோடிகளின் பிரச்சினை தீர்ந்து வைக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - Yarl Voice "mainEntityOfPage": { "@type": "NewsArticle", "@id": "" }, "publisher": { "@type": "Organization", "name": "YarlVoice", "url": "http://www.yarlvoice.com", "logo": { "url": "https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png", "width": 600, "height": 60, "@type": "ImageObject" } }, "image": { "@type": "ImageObject", "url": "https://1.bp.blogspot.com/-K36yA2Hh1Fo/Xq7BbpX_pII/AAAAAAAAMbQ/L4ukVFZyVgoZCpUfYMtwIGIcmlGxK9TiQCLcBGAsYHQ/s1600/logo.png", "width": 1280, "height": 720 } }, ] } Home உள்நாடு முக்கிய செய்திகள் செய்திகள் ஏனையவைகள் _மருத்துவம் _ஜோதிடம் About Us Contacts Us HomeLanka சுழியோடிகளின் பிரச்சினை தீர்ந்து வைக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை Published byNitharsan - February 20, 2021 0 கடற்றொழிலாளர்கள் சுழியோடுவதற்கு கடந்த ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட தடை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பாக அவதானம் செலுத்திய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, விரைவில் நியாயமான தீர்வினை வழங்குவதற்கும் உறுதியளித்தார். மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சின் கேடபோர் கூடத்தில் அகில இலங்கை சுழியோடிகள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் கடற்றொழில் அமைச்சருக்கும் இடையில் நேற்று (20.02.2021) இடம்பெற்ற சந்திப்பிலேயே குறித்த வாக்குறுதியை வழங்கியுள்ளார். குறித்த கலந்துரையாடலில், இரவு நேரங்களில் சுழியோடும் தொழிலுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சங்கத்தின் உறுப்பினர்கள் அமைச்சரிடம் வேண்டு கோள் விடுத்தனர். 2019 மார்ச் மாதம் 22ம் திகதி ஐ.தே.கட்சியின் ஆட்சியில் அப்போதைய கடற்றொழில் அமைச்சரினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் குறித்த தடை விதிக்கப்பட்டதாகவும் இதன் மூலம் 04 மைல் எல்லைக்குட்பட்ட கடற்பகுதியில் இரவில் கடலட்டை பிடிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டதாகவும் இச்சங்கத்தின் உறுப்பினர்கள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டினர். குறித்த 04 மைல் எல்லைப் பகுதியிலேயே பாறைகள் காணப்படுவதாகவும் அப்பகுதியிலேயே கடலட்டைகள், சிங்கிறால் மற்றும் சில வகை மீன்கள் காணப்படுமெனவும் விசேடமாக பூன் எனப்படும் ஒரு வகை கடலட்டைகள் இரவு நேரங்களிலேயே பிடிபடுமெனவும் சங்கத்தின் பிரதிநிதிகளினால் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், குறித்த தடை காரணமாக தங்களது வாழ்வதாரம் மட்டுமல்லாமல் கடலட்டை ஏற்றுமதியாளர்களும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இதனால் நாட்டிற்கு கிடைக்க வேண்டிய ஏராளமான அந்நியச் செலாவணி இழக்கப்படுவதாகவும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இச்சங்கத்தின் உறுப்பினர்களுடன் பேசுவதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டார். அத்துடன் குறித்த விடயம் தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்க் கிழமை (23.02.2021) கடற்றொழில் அமைச்சு, கடற்றொழில் திணைக்களம், தேசிய நீரியல் வள அபிவிருத்தி முகவர் அமைப்பு (நாரா) மற்றும் கடற்படை உயர் அதிகாரிகளிடம் கலந்துரையாடி துரித மற்றும் சிறந்த தீர்வினைப் பெற்றுத் தருவதாகவூம் அன்றைய தினம் இச்சங்கத்தின் பிரதிநிதிகளும் அச்சந்திப்பில் கலந்து கொள்ளலாமெனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Tags Lanka Share Published by:-Nitharsan Journalist | Reporter at Kalaikathir Daily News Paper | Online Editor @YarlVoice | Twitter : nitharsan_vino தொடர்பான செய்திகள் Show more 0/Post a Comment/Comments Post a Comment Previous Post Next Post Tweets by Yarl Voice பிரதான செய்திகள் [getWidget results='5' label='Lanka' type='list'] ட்ரெண்டிங் வீடியோ மின்னஞ்சல் தொடர்புக்கு yarlvoicenews@gmail.com விளம்பர தொடர்புக்கு Ph: +9477 194 5672 Ph: +9470 307 3280 Yarl Voice Yarl Voice Covers Breaking News, Latest News in Politics, Sports & Business. A Premier Breaking News Website Offering News From Sri Lanka in Tamil. Copyright © YarlVoice.com, All Rights Reserved. About Privacy Contact Us Terms of Service Contact Form ');c.each(function(){if(b.animated==true){a(this).addClass(n)}e.find('.select-tab').append(' '+a(this).attr('tab-ify')+' ')}).eq(d).addClass(k).addClass('tab-'+b.transition);e.find('.select-tab a').on(event,function(){var f=a(this).parent().index();a(this).closest('.select-tab').find('.active').removeClass('active');a(this).parent().addClass('active');c.removeClass(k).removeClass('tab-'+b.transition).eq(f).addClass(k).addClass('tab-'+b.transition);return false}).eq(d).parent().addClass('active')})}}(jQuery); /*! jQuery replaceText by "Cowboy" Ben Alman | v1.1.0 - http://benalman.com/projects/jquery-replacetext-plugin/ */ (function($){$.fn.replaceText=function(b,a,c){return this.each(function(){var f=this.firstChild,g,e,d=[];if(f){do{if(f.nodeType===3){g=f.nodeValue;e=g.replace(b,a);if(e!==g){if(!c&&/
தலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (342) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (275) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா? (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (21) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (528) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,214) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (367) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87) தேதிவாரியாக பதிவுகள் November 2015 S M T W T F S 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 « Oct Dec » Archives Archives Select Month November 2021 (2) June 2021 (4) May 2021 (2) June 2018 (1) February 2018 (1) January 2018 (3) December 2017 (2) November 2017 (14) October 2017 (5) August 2017 (1) July 2017 (5) June 2017 (5) April 2017 (4) March 2017 (1) December 2016 (20) November 2016 (4) October 2016 (3) September 2016 (8) July 2016 (2) June 2016 (26) May 2016 (27) April 2016 (28) March 2016 (31) February 2016 (28) January 2016 (35) December 2015 (29) November 2015 (25) October 2015 (1) August 2015 (3) July 2015 (2) May 2015 (3) April 2015 (7) March 2015 (6) February 2015 (2) January 2015 (3) December 2014 (11) November 2014 (9) October 2014 (7) September 2014 (5) August 2014 (23) July 2014 (2) June 2014 (3) May 2014 (10) April 2014 (6) March 2014 (15) February 2014 (17) January 2014 (21) December 2013 (14) November 2013 (22) October 2013 (13) September 2013 (22) August 2013 (28) July 2013 (26) June 2013 (23) May 2013 (37) April 2013 (28) March 2013 (15) February 2013 (5) January 2013 (5) December 2012 (16) November 2012 (16) October 2012 (22) September 2012 (21) August 2012 (29) July 2012 (32) June 2012 (33) May 2012 (34) April 2012 (18) March 2012 (28) February 2012 (30) January 2012 (53) December 2011 (25) November 2011 (28) October 2011 (36) September 2011 (37) August 2011 (27) July 2011 (22) June 2011 (20) May 2011 (40) April 2011 (73) March 2011 (67) February 2011 (67) January 2011 (52) December 2010 (6) November 2010 (7) October 2010 (3) September 2010 (2) August 2010 (1) July 2010 (1) June 2010 (3) May 2010 (2) March 2010 (3) February 2010 (2) January 2010 (3) December 2009 (2) November 2009 (1) October 2009 (4) September 2009 (5) August 2009 (4) July 2009 (4) June 2009 (7) May 2009 (6) April 2009 (4) March 2009 (4) February 2009 (8) January 2009 (8) November 2008 (3) October 2008 (2) July 2008 (3) June 2008 (3) May 2008 (2) April 2008 (7) March 2008 (3) February 2008 (2) January 2008 (2) August 2007 (1) April 2007 (3) August 2006 (3) July 2006 (3) June 2006 (3) May 2006 (3) April 2006 (2) March 2006 (2) February 2006 (1) January 2006 (7) December 2005 (4) September 2005 (2) August 2005 (6) July 2005 (4) June 2005 (4) May 2005 (5) April 2005 (5) March 2005 (5) February 2005 (5) January 2005 (6) February 2003 (1) Visitors since 22-3-13 இதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,886 முறை படிக்கப்பட்டுள்ளது! சர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 1/2 Posted on 25th November, 2015 *வெந்தயம்: தினமும் வெந்தயம் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும் என்பது ஓரளவுதான் உண்மை. வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். இதில் உள்ள டிரைகோனெல்லின் என்ற வேதிப்பொருள் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் தன்மைக் கொண்டது. வெந்தயம் மட்டுமே சர்க்க்ரை நோய்க்கு மருந்து என்று நினைப்பது தவறு. தினமும் 100 கிராம் வெந்தயத்தை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. *தேன்: . . . → தொடர்ந்து படிக்க.. Hadeeths/Quran Search புகாரி முஸ்லிம் குர்ஆன் அல்குர்ஆன் Search Arabic Quran by English அல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக அல்குர்ஆன் தமிழில் தேடல் ஹதீதில் தேட தமிழில் தளத்தில் தேட: பதிவுகளில் சில.. பயமும் தயக்கமும்! தேர்வுகள் முடிந்துவிட்டது – விடுமுறையை.. முகப்பரு வரக் காரணம் என்ன? பெற்றோரின் மகிமை பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவது? பிச்சைக்காரன் – சிறுகதை பாஸிடிவ” பார்வைகள்! – சிறுகதை அண்டார்ட்டிக்கா திகிலூட்டும் சில உண்மைகள் Subscribe2 Leave This Blank: Leave This Blank Too: Do Not Change This: Your email: அறிவியல் கூடங்குளம் அணுமின் நிலையம் தடுப்பூசி ரகசியங்கள் ஊட்டச் சத்துக்கள் (Nutrients) காட்டாமணக்கு எண்ணெயில் விமானம் இயக்கி சாதனை! தனியே ஒரு குரல் ப்ளூம் பாக்ஸ் – மின்சாரத் தமிழர்! தேன்கூடு -2 சர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 1/2 வரலாறு சோனி நிறுவனம் உருவான கதை புவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள் பத்மநாபசுவாமி கோயில் – மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி தோப்பில் முகம்மது மீரான் திருமறை நபிமொழி தமிழாக்கப் பணி! நபி(ஸல்) அவர்களுக்கு விரோதிகளின் சொல்லடிகள் சகோதரர் அஹமது தீதாத் விஜய பாண்டியன் UserOnline 14 Users Online Feedjit Widget "இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்"
Tag: 54321 movie, 54321 movie trailer, 54321 டிரெயிலர், 54321 திரைப்படம், director a.ragavendra prasad, இயக்குநர் ஏ.ராகவேந்திர பிரசாத் 54321 – திரைப்படத்தின் டிரெயிலர் Jun 09, 2016 54321 is a psychological thriller Written and Directed by A. Ragavendra Prasad, Produced by G.V. Kannan of Mainstream Productions,...
பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு மசோதா ஒருவழியாக நேற்று மாநிலங்களவையில் நிறைவேறி இருக்கிறது. இதன் மூலம் மொத்தமுள்ள 543 உறுப்பினர்கள் கொண்ட மக்களவையில் இனி 181 பெண் எம்.பிக்கள் இருக்க முடியும். 28 மாநிலங்களில் மொத்தமுள்ள 4109 எம்.எல்.ஏக்களில் இனி 1370 பேர் பெண்களாக இருக்க முடியும். ஒரு மகத்தான அத்தியாயம் ஆரம்பித்திருப்பதாக காங்கிரஸ், இடதுசாரிக்கட்சிகள் சொல்கிறார்கள். இதன்மூலம் 13 வருடமாக இழுத்துக்கொண்டு இருந்த பிரச்சினை ஒன்று முடிவுக்கு வந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். அப்படியெல்லாம் எதற்கும் இந்த ஜனநாயக அமைப்பில் எளிதில் முடிவு வந்துவிடாது என்பதும், வேறு வடிவங்களில் அவை வெளிப்படும் என்பதும் கடந்தகால வரலாறு அறிந்தவர்களால் புரிந்துகொள்ள முடியும். மசோதாவில் லல்லுவின் கட்சி, முலாயம் கட்சி, மாயாவதி உள்ளிட்ட சில கட்சிகள் திருத்தங்களைக் கோருகிறார்கள். இவர்கள் அனைவரும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தலைவர்கள் என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விஷயம். அதுபோல, பெண்களுக்கான அதிகாரத்தையும், சுதந்திரத்தையும் போற்றாத இந்து சனாதனத்தில் ஊறித் திளைத்திருக்கும் பாரதீய ஜனதாக் கட்சி இந்த மசோதாவை ஆதரிப்பதும் குறிப்பிடத்தக்க விஷயமே. இந்த மசோதாவை எதிர்ப்பவர்கள் அனைவரும் ஆணாதிக்க சிந்தனை கொண்டவர்களாக மட்டுமே காட்டும் ஒரு சித்திரம் இங்கே இயல்பாக எழும்புகிறது. ஒரு மேலோட்டமான புரிதலில் நாம் இயங்கிக்கொண்டு இருக்கிறோம் என்பதுதான் இப்படியாக வெளிப்படுகிறது. முன்வைக்கப்பட்ட ஒரு விவாதத்தை, எதிர்ப்பவர்களின் கருத்துக்களை ஒற்றை வரியில் நிராகரிக்கும் மனோபாவமே நம்மிடம் இருக்கிறது. அவர்கள் அனைவரையும் தாட்சண்யமில்லாமல் சட்டென்று பெண்களுக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்தி விடுவது ஆரோக்கியமாக இருக்காது. அவர்கள் என்னதான் சொல்கிறார்கள் என்பதையும் ஒரு ஜனநாயக அமைப்பில் கேட்டே ஆக வேண்டியிருக்கிறது. “தலீத் பகுதியிலிருந்தே வரமுடியாதபோது தலித் பெண்கள் மட்டும் வந்துவிடப் போகிறார்களா? முஸ்லீம்களே வரமுடியாதபோது முஸ்லீம் பெண்கள் மட்டும் வந்துவிடப் போகிறார்களா?” “காங்கிரஸின் தலைவியே ஒரு பெண்தான். அவர் தன் கட்சியில் 33 சதவீதம் பெண்களை தேர்தலில் நிற்கவைத்துவிட்டாரா? ஒவ்வொரு கட்சியும் 33 சதவீதம் பெண்களை நிறுத்த வேண்டும் என முதலில் சொல்லட்டுமே” “எந்தக் கட்சி தங்கள் வேட்பாளர்களில் 33சதவீதம் பெண்களை நிறுத்தவில்லையோ, அந்தக் கட்சியை, தேர்தல் கமிஷன் தடைசெய்ய சட்டம் கொண்டு வரட்டுமே!” “பணியிடங்களில் 33 சதவீதம் என்ன 50 சதவீதம் பெண்களுக்கு இடம் கொடுக்கட்டுமே. அதற்கென சட்டம் கொண்டு வரட்டுமே. அங்கெல்லாம் கொண்டு வராமல் இங்கு ஏன் கொண்டு வரவேண்டும்?” “பல கட்சிகளில் முடிவு எடுக்கும் உயர்ந்த பட்ச அமைப்பில் எத்தனை பேர் பெண்கள் இருக்கிறார்கள். இவர்கள் பாராளுமன்றத்தில் 33 சதவீத இடம் கோருவது விநோதமாயில்லை?” இன்னும், இதையொட்டி இன்னபிற விவாதங்களும், கேள்விகளும், சந்தேகங்களும் முன்வைக்கப்படுகின்றன. பாராளுமன்றத்தில் முஸ்லீம்கள், தலித்துக்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியோரின் எண்ணிக்கையை குறைப்பதற்கான சதி இந்த மசோதாக்களில் இருப்பதாக லல்லு பிரசாத், முலாயம், மாயாவதி, சரத் ஆகிய தலைவர்கள் ஆத்திரத்துடன் கூறுகின்றனர். அதாவது, 543 உறுப்பினர்களில் இருந்து 181 பெண்களுக்குப் போக, மீதி 362 இடங்களுக்குள்ளேதான் இனி, தலித்கள், முஸ்லீம்கள், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோர் உறுப்பினர்களாகும் வாய்ப்பாக குறுக்கப்பட்டு இருக்கிறது என்பது அவர்களது குற்றச்சாட்டு. இதையொட்டி இந்த மகளிர் இட ஒதுக்கீட்டில் உள்ளொதுக்கீடு வேண்டும் எனவும் திருத்தங்கள் கோரப்படுகின்றன. இப்போது ஒன்று தெளிவாகப் புரியும். இந்த 181 மகளிர் இட ஒதுக்கீட்டில் பெரும்பாலும் உயர் ஜாதியினரே வரக்கூடும் என்பதே எதிர்த்துக் கருத்துக்கள் தெரிவிப்பவர்களின் மையப்புள்ளியாக இருக்கிறது. சமூகத்தில் ஒரளவுக்கு முன்னேறிய, வசதிபடைத்த, வெளியுலகம் தெரிந்த பெண்களே இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதும், தலித், முஸ்லீம் பெண்கள் அந்த நிலைமையில் இல்லையென்பதும் அவர்களின் வாதமாக இருக்கிறது. அதிகாரம் என்பதை நோக்கியே எல்லாக் கண்களும் இருக்கின்றன. அரசியல், வியாபாரம், பண்பாடு என எல்லாவற்றிலும் இந்த பார்வை நிலைகொண்டு இருக்கிறது. ஒவ்வொருவரும் அடிப்படையில், இயல்பாகவே தங்கள் நலன் சார்ந்தே யோசிக்கிறார்கள். பிரச்சினைகள் எல்லாவற்றுக்குமான ஊற்றுக்கண் இதுதான். நம் சமூக அமைப்பில், இத்தனை வருட அனுபவத்தில் இந்த நிலைமைதான் நீடிக்கிறது. இந்த தேர்தல் முறையில், அழுகிப்போய்க்கொண்டு இருக்கும் அதன் நடைமுறைகளில் நியாயங்கள் நீர்த்துப்போய்க்கொண்டு இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் இடமளிப்பது, எல்லாக் கருத்துக்களையும், பார்வையையும் உட்கொள்வது, எல்லாருக்கும் பொதுவானதாக இருப்பதுதான் ஜனநாயகத்தின் யோக்கியதையாக இருக்க முடியும். அப்படி இருந்திருக்கிறதா என்பதுதான் இன்று மக்கள் மக்களிடமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி. ஜனநாயகம் அப்படி இல்லாதபோது, மகளிர் மசோதாக்கள் குறித்து இப்படிக் கேள்விகளும், சந்தேகங்களும் எழுவது தவிர்க்கமுடியாதவை. அரசியல் கட்சிகள், அவர்தம் நிலைபாடுகள் தாண்டி, தேசத்தின் பிரஜைகளாக இந்த விவாதங்களை நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம், எந்த வகையான உரையாடலை நாம் நடத்தப் போகிறோம்? ஜாதி, மத, மொழி பாகுபாடுகள் குறித்து பேசப்படுகிற அளவு, அவைகளுக்கு அழுத்தம் கொடுக்கிற அளவு இந்திய சமூகத்தில் பாலின பாகுபாடுகளுக்கு நாம் முன்னுரிமை கொடுக்கிறோமா? பெண்களையும் அதிகாரத்தை நோக்கி நகர்த்துவதற்கான முனைப்பு சமூகத்திடம் இருக்கிறதா? இவைகளின் ஒரு பகுதியே இந்த இடஒதுக்கீடு மசோதா என்று உணரவும், உணர்த்தியாகவும் வேண்டியிருக்கிறது. 1952ல் நடந்த பொதுத் தேர்தலில் மொத்தம் 19 பெண்களே எம்பிக்களாக இருந்தனர். 57 ஆண்டுகள் கழித்து 2009ம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தம் 59 பெண்கள் எம்.பிக்களாக இருக்கின்றனர். அதாவது 10.82 சதவீதம்! இந்த எளிய உண்மையே போதும், பெண்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது புரிந்துகொள்ள. எந்த ஜாதியிலிருந்தாலும், எந்த மதத்திலிருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும் பெண்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு, இருட்டடிப்பு செய்யப்பட்டவர்களாகவே இருக்கின்றனர். பஞ்சாயத்துத் தேர்தல்களில் மகளிருக்கான இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. பல நாற்காலியில் அவர்களது கணவன்மார்களே உட்காருகிறார்கள். சட்டங்களை அனுமதித்துக்கொண்டே அதிகாரம் வேறு ரூபத்தில், வடிவத்தில் தன்னை தக்கவைத்துக்கொள்கிறது. இதைச் சுட்டிக்காட்டி குறை சொல்லும் கருத்துக்களில் எவ்வளவு நியாயம் இருக்கிறதோ, அதே நியாயம் சில இடங்களில் பெண்களும் உட்காரவும் முடிந்திருக்கிறது என்கிற உண்மையை புரிந்துகொள்வதிலும் இருக்கிறது. மனித சமூகம் அவமானப்படத்தக்க வகையில் பாலின பாகுபாடு நிறைந்து இருக்கும் அமைப்பில், இந்த மசோதா வரவேற்கப்படத்தக்கதும், ஆரோக்கியமானதும் ஆகும். மேலும், இதுபோன்ற இடஒதுக்கீடுகள் ஒரு தீர்வு கிடையாது என்பதையும், காலம் காலமாய் புரையோடிப் போயிருக்கும் ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்வதற்கான ஒரு ஏற்பாடே என்பதையும் சேர்த்து நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. மொத்த சமூகமும், பொதுவான நியாய அநியாயங்களோடு இந்த முரண்பாடுகளைப் புரிந்து, அதைச் சரிசெய்ய முன்வருவதே தீர்வாக இருக்க முடியும். சாதிய, மத ரீதியான பாகுபாடுகளுக்கு முன்னுரிமை கொடுத்து பெண்களின் உரிமைகளை தள்ளிவைப்பதோ, பெண்ணுரிமையை காரணம் காட்டி சமூக ஏற்றத்தாழ்வுகளை புறக்கணிப்பதோ சரியாய் இருக்காது. இரண்டையும் சரியாக புரிந்துகொண்டு, இரண்டுக்குமே முன்னுரிமை கொடுக்க வேண்டும். அது அவ்வளவு எளிதான காரியமல்ல. மசோதா நிறைவேற்றப்பட வேண்டியது எழுத்தில் அல்ல, இந்த அர்த்தத்தில்தான். Tags சமூகம் தீராத பக்கங்கள் மகளிர் மசோதா புதியது பழையவை மாதவராஜ் உலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள். மேலும் காட்டு கருத்துரையிடுக 24 கருத்துகள் * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin. கண்ணகி 10 மார்ச், 2010 அன்று முற்பகல் 11:19 நீங்கள் சொல்வது மூழுவதும் உண்மைதான் சார். பார்ப்போம். என்ன நடக்கிறது என்று. யார் யார் எப்படி என்று.. பெண்களுக்கு இது உண்மையிலேயே மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி இது..நடைமுறை எப்படி என்று பார்ப்போம்.. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி சாந்தி மாரியப்பன் 10 மார்ச், 2010 அன்று முற்பகல் 11:30 //மனித சமூகம் அவமானப்படத்தக்க வகையில் பாலின பாகுபாடு நிறைந்து இருக்கும் அமைப்பில், இந்த மசோதா வரவேற்கப்படத்தக்கதும், ஆரோக்கியமானதும் ஆகும். மேலும், இதுபோன்ற இடஒதுக்கீடுகள் ஒரு தீர்வு கிடையாது என்பதையும், காலம் காலமாய் புரையோடிப் போயிருக்கும் ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்வதற்கான ஒரு ஏற்பாடே என்பதையும் சேர்த்து நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது// இப்பத்தானே ஆரம்பிச்சிருக்கு.. நல்லதே நடக்கும் என்று நினைப்போம் அண்ணா.. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி CLASSBIAS 10 மார்ச், 2010 அன்று பிற்பகல் 1:25 This is definitely a historic move. But we cannot dismiss the apprehension that educated, English-speaking women will get preference when parties choose candidates. Our middle-class fascination for 'educated' politicians will extend to this area also. They do not generally take into account that it was a section of the educated politicians who are taking this country along a disastrous development path. Another danger is that party leaders' wives and daughters will also find a prominent place. Recent experience shows that thhis is a problem common to all political parties, including the Left. We hope that pressure builds up from below in these parties to avoid choice of elite women and daughters, wives, daughters-in-law, as candidates. The choice should be based on a woman's political commitment, the extent, of her conatact with the people, her abililty to mingle with the people and take up issues arising at the local level, and so on. The panchayat experience shows that 'uneducated' women in villages and small towns have emerged as successful leaders against heavy odds. It is these women who should be taken to the Assemblies and Parliament. Will the political parties do this? At least, the Left shoud do this and lead by example. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பெயரில்லா 10 மார்ச், 2010 அன்று பிற்பகல் 1:54 'அதுபோல, பெண்களுக்கான அதிகாரத்தையும், சுதந்திரத்தையும் போற்றாத இந்து சனாதனத்தில் ஊறித் திளைத்திருக்கும் பாரதீய ஜனதாக் கட்சி இந்த மசோதாவை ஆதரிப்பதும் குறிப்பிடத்தக்க விஷயமே' உமா பாரதி,சுஷ்மா சுவராஜ்,வசுதா ராஜே என்று மூன்று பெண் முதல்வர்களைக் முன்னிறுத்த பாஜகவால் முடிந்தது. கெளரி அம்மாவிற்கு கேரளாவில் உங்கள் கட்சி அந்த வாய்ப்பினை தரவில்லியே.சுசீலா கோபலன், கெளரி போன்றவர்களை கட்சி எந்த அளவில் நிறுத்தியது எந்தப் பதவி வரை அனுமதித்தது. இன்று சுஷ்மா சுவராஜ் அத்வானி ஏற்றிருந்த பொறுப்பில் இருக்கிறார்.உங்கள் கட்சியில் அது போல் சாத்தியமேயில்லை.பொலிட்பிரோவில் ஒரே ஒரு பெண் அதுவும் பிருந்தா கரத் என்று சாதனை படைத்த கட்சியினர் பாஜகவில் எத்தனை பெண் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கட்டும்.மேற்கு வங்கத்தில் இடதுசாரி கூட்டணியில் எத்தனை பெண் அமைச்சர்கள்/தலைவர்கள் இருக்கிறார்கள். சிஐடியுவில் எத்தனை பெண்கள் நிர்வாகக் குழுவில் இருக்கிறார்கள்.பாஜக இடதுகளை விட இதில் முற்போக்கு என்று நிருபீத்துள்ளது. அது சனாதனத்தில் திளைத்திருந்தால் இது எப்படி சாத்தியமாகியிருக்கும். தமிழ் நாட்டில் உங்கள் கட்சியில் இதுவரை பெண்கள் யாரவது கட்சியின் சட்டமன்றத் தலைவராக, பொதுச் செயலாளராக இருந்திருக்கிறார்களா.ஏன் இல்லை. பாஜகவை குறை கூறும் உங்கள் கட்சியின் யோகயதை என்ன. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி ராம்ஜி_யாஹூ 10 மார்ச், 2010 அன்று பிற்பகல் 2:33 பாரளுமன்றத்திலும் அதுதான் நடக்கும், இப்போது உள்ள எம்பிக்களின் மனைவிமார்கள், மகள்கள் வருவார்கள். அப்படியாவது வரட்டும். ஆனால் அதிலும் சில வேளைகளில் நன்மை நிகழ்ந்து விட்கிறது. அந்த உறவினர்கள் படித்தவர்களை, பண்பு உள்ளவர்களாய் இருந்தால் நன்மை நிலவுகிறது. உதாரணம்- தூத்துக்குடி பெரியசாமிக்கு பதிலாக அவர் மகள் அமைச்சராக வந்ததால் சாந்தம் நிலவுகிறது. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி க.பாலாசி 10 மார்ச், 2010 அன்று பிற்பகல் 2:52 இந்த மசோதாவால் பெண்களுக்கு குறைந்தபட்ச முன்னுரிமை கொடுக்கப்படும் என்பது சந்தோஷமான விசயம்தான். இதை எதிர்ப்பவர்களை பற்றின என் மனோபாவமும் தாங்கள் முதற்சொன்ன வகையிலேயே இருந்தது. பிறகு செய்தியை முழுமையாய் தெரிந்து தெளிந்தேன். தாங்கள் சொல்வதுபோல் எதுவும் எழுத்தில் மட்டும் இருக்கக்கூடாது. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி அமுதா 10 மார்ச், 2010 அன்று பிற்பகல் 3:51 /*மகளிர் மசோதா நிறைவேறப்பட வேண்டியது எழுத்தில் அல்ல, அர்த்தத்தில்! */ உண்மை /*மேலும், இதுபோன்ற இடஒதுக்கீடுகள் ஒரு தீர்வு கிடையாது என்பதையும், காலம் காலமாய் புரையோடிப் போயிருக்கும் ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்வதற்கான ஒரு ஏற்பாடே என்பதையும் சேர்த்து நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. */ இதுபோன்ற விஷயங்களில் தீர்வு என்று எதையும் அறுதியிட்டு கூற இயலாது. ஒருவருக்கு தீர்வு என்பதே இன்னொருவருக்கு பிரச்னை ஆகலாம். என்றாலும் , நீங்கள் சொல்வது போல் காலம் காலமாய் புரையோடிப் போயிருக்கும் ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்வதற்கான ஒரு ஏற்பாடாக இருக்கலாம். பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி அமிர்தவர்ஷினி அம்மா 10 மார்ச், 2010 அன்று பிற்பகல் 3:59 பஞ்சாயத்துத் தேர்தல்களில் மகளிருக்கான இடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. பல நாற்காலியில் அவர்களது கணவன்மார்களே உட்காருகிறார்கள். சட்டங்களை அனுமதித்துக்கொண்டே அதிகாரம் வேறு ரூபத்தில், வடிவத்தில் தன்னை தக்கவைத்துக்கொள்கிறது. இதைச் சுட்டிக்காட்டி குறை சொல்லும் கருத்துக்களில் எவ்வளவு நியாயம் இருக்கிறதோ, அதே நியாயம் சில இடங்களில் பெண்களும் உட்காரவும் முடிந்திருக்கிறது என்கிற உண்மையை புரிந்துகொள்வதிலும் இருக்கிறது // தெளிவான கட்டுரை. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி ராஜ நடராஜன் 10 மார்ச், 2010 அன்று பிற்பகல் 4:10 பிற்காலத்தில் மகளிர் மசோதா திசை திரும்ப நிச்சயம் சாத்தியங்கள் உண்டு.ஆனால் அஸ்திவாரம் தோண்டியாகி விட்டது.இனி மேல் கட்டமைப்புக்களை செய்வது பணம் பற்றாக்குறையிலும்(மசோதா முழுமையின்மை)கடனை,உடனை வாங்கி கட்டி முடிக்கிறமாதிரி எளிதானது. கட்சிகள் தங்கள் பங்குக்கு மசோதாவை ஆமோதித்ததை வரவேற்கிறேன். பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி pavithrabalu 10 மார்ச், 2010 அன்று பிற்பகல் 6:53 ////அப்படியெல்லாம் எதற்கும் இந்த ஜனநாயக அமைப்பில் எளிதில் முடிவு வந்துவிடாது என்பதும், வேறு வடிவங்களில் அவை வெளிப்படும் என்பதும் கடந்தகால வரலாறு அறிந்தவர்களால் புரிந்துகொள்ள முடியும். //////// சுழற்சி முறையில் தலித் தொகுதிகள் ஒதுக்கப்படும் நடைமுறை உள்ளது, அந்த தொகுதியே மகளிருக்கு ஒதுக்கப்பட்டதாக இருக்கும் பொழுது தலித் மகளிர் வர முடியுமே- ....எல்லாவற்றுக்கும் இடமளிப்பது, எல்லாக் கருத்துக்களையும், பார்வையையும் உட்கொள்வது, எல்லாருக்கும் பொதுவானதாக இருப்பதுதான் ஜனநாயகத்தின் யோக்கியதையாக இருக்க முடியும்,,, நியாயமான, நேர்மையான உணர்வுகளைப் பதிவு செய்திருக்கிறீர்கள், வாழ்த்துக்கள் பின்குறிப்பு (இன்று கூட பல நண்பர்கள் பெண்களை நோக்கி ஏன் இனிப்பு கொடுத்து கொண்டாடவில்லை என்றும், தாங்கள் பெண்களுக்கு 33 சதவிகித இடங்களை விட்டுக் கொடுத்து விட்டதற்காக (தியாகம்-?) அவர்களை வாழ்த்த வேண்டும் என்றும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்,, என்ன செய்ய தோழர்? பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி அம்பிகா 10 மார்ச், 2010 அன்று பிற்பகல் 8:10 \\மனித சமூகம் அவமானப்படத்தக்க வகையில் பாலின பாகுபாடு நிறைந்து இருக்கும் அமைப்பில், இந்த மசோதா வரவேற்கப்படத்தக்கதும், ஆரோக்கியமானதும் ஆகும்.\\ நல்லதே நடக்கும் என நம்புவோம். பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பெயரில்லா 10 மார்ச், 2010 அன்று பிற்பகல் 8:27 WHY I support this bill ------------------------ I wish a historic bill like this should never go to dust bin. Indian democracy will cherish by passing the bill, a notion that was not tried anywhere in the world. Today in Parliament many bills are passed without even any discussion, because of the unruly behavior of the MPs and most of them are men. This will get streamlined when more women MPs go to parliament. Many MPs and MLAa have criminal records and statistically male indulges in more criminal activity than a female. So the parliament and assembly will have some respected members. Also a woman works more both in the family and outside and a mother’s contribution towards the development of a child is more than a father. Obviously one can expect similar kind of work in administration too. Rabri Devi got a chance just because Laluji was out in jail. Otherwise she would not have had a chance to contest and become a CM in Bihar. Now she will have more social respect than be treated just as Laluji’s wife. Now because of reservation all parties are bound to put more women candidates in the fray. Also the argument like Panjayat administration is being run by a woman leader’s husband will not hold well in terms of MPs and MLAs. They can’t do the same in assembly and parliament. I think the arguments like lack of minority muslim candidates, etc., all won't stand in the long run if the bill is actually implemented. This will give a real opportunity for all the women (including dalit and Muslim) to come forward and prove the diversity of our nation. This will in fact help the Hindu-Muslim unity and solve the long standing problem. Why can't one see it in a positive way than just be scared of hearing the word 'RESERVATION' Swami பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பெயரில்லா 10 மார்ச், 2010 அன்று பிற்பகல் 9:04 Response on Anonymous' views There are three MLAs (out of nine)from CPM in Tamilnadu Assembly. One of them is a dalit woman who was fielded by the party in a general constituency -- Ms Latha from Gudiyatham and she could win. Ms Balabarathy is the leader of the Party in the Assembly. The reservation would certainly encourage women to take more active part in political administration. Communist parties do not nominate people to leadership; they encourage women to evolve and emerge and whoever could occupy higher positions, it is due to their work. More space requires to be given to women if only the entire society is to be empowered. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பெயரில்லா 10 மார்ச், 2010 அன்று பிற்பகல் 9:48 BTW from my earlier post if it gives some wrong impression, please ignore it. I support reservation, and not against it. Swami பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பெயரில்லா 10 மார்ச், 2010 அன்று பிற்பகல் 10:07 "More space requires to be given to women if only the entire society is to be empowered" Well this is arguable. A women's perspective(view) on a social problem may differ from its counterparts. Unless sufficient representation is not there in the highest decision making body, chances of loosing their argument in majority-minority vote is possible and also it won't reach or may not be reviewed in the highest decision making body. Swami பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி khaleel 10 மார்ச், 2010 அன்று பிற்பகல் 10:26 This has not been brushed off in one line. This has been debated endlessly for the past 14 years. Secondly atleast women will stop saying that they are not treated equally. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பெயரில்லா 11 மார்ச், 2010 அன்று முற்பகல் 11:56 Communist parties do not nominate people to leadership; they encourage women to evolve and emerge and whoever could occupy higher positions, it is due to their work. அப்படியானால் இ.கம்யுனிஸ்ட் கட்சியில் பிருந்தா கரத்திற்கு முன்பு பொலிட்பீரோ உறுப்பினர் ஆகும் தகுதி எந்தப் பெண்ணிற்கும் இருந்ததில்லை என்று சொல்கிறீர்களா. ஆண்களுக்கு வேறு விதிகள் என்றும் சொல்லியிருக்கலாமே.சீதாராம் யெச்சுரிக்கும்,பிரகாஷ் கரத்திற்கும் வெகுமக்கள் அரசியலுக்கும் என்ன தொடர்பு என்று விளக்குங்கள். பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி Subu 11 மார்ச், 2010 அன்று பிற்பகல் 12:19 பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதா உண்மையில் பெண்காளுக்காகவா, இல்லை அரசின் திசை திருப்பல் விளையாட்டா ? ஒரு ஓட்டெடுப்பு http://manakkan.blogspot.com/2010/03/blog-post_10.html பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பகுத்தறிவு 12 மார்ச், 2010 அன்று முற்பகல் 11:07 நடுநிலையில் நின்று எழுதியிருக்கிறீர்கள்! பாராட்டுகள்! படித்தவுடன் நண்பர்கள் அனைவருக்கும் உங்களுடைய கட்டுரையை மின்னஞ்சலிட்டுவிட்டேன்! பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி மாதவராஜ் 15 மார்ச், 2010 அன்று பிற்பகல் 6:00 கண்ணகி! உண்மைதான். பார்ப்போம். நன்றி. அமைதிச்சாரல்! நம்பிக்கை முக்கியம்தானே. நன்றிங்க. CLASSBIAS! //The panchayat experience shows that 'uneducated' women in villages and small towns have emerged as successful leaders against heavy odds. It is these women who should be taken to the Assemblies and Parliament.// ஆஹா.! அருமை. ஆமோதிக்கிறேன். அனானி! உங்களுக்கு இன்னொரு அனானியே பதில் சொல்லி இருக்கிறார் கீழே. படித்தீர்களா? ராம்ஜி! குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்த மாதிரியா..... :-)))))) பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி மாதவராஜ் 15 மார்ச், 2010 அன்று பிற்பகல் 6:11 பாலாசி! ஆமாம், நண்பரே! அமுதா! நன்றி. அமித்து அம்மா! நன்றி. ராஜநடராஜன்! நன்றி. பவித்ராபாலு! //இன்று கூட பல நண்பர்கள் பெண்களை நோக்கி ஏன் இனிப்பு கொடுத்து கொண்டாடவில்லை என்றும், தாங்கள் பெண்களுக்கு 33 சதவிகித இடங்களை விட்டுக் கொடுத்து விட்டதற்காக (தியாகம்-?) அவர்களை வாழ்த்த வேண்டும் என்றும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்,, என்ன செய்ய தோழர்?// இப்படித்தான் இருக்கிறது நமது சமூகம். நியாயமான (50%?) ஒன்று நிக்ழந்திருக்கிறது என்பதைவிட, தங்களது பெருந்தன்மை எனக் காட்டிக்கொல்வதில்தான் இவர்களுக்கு அக்கறை. இந்த மனோபாவங்களில் மாற்றங்களை முதலில் ஏற்படுத்த வேண்டியிருக்கிறது. அம்பிகா! நிச்சயம் நம்புவோம். சுவாமி! நீங்கள் சொல்கிற பல விஷயங்களில் ஒத்துப் போக முடிகிறது. ஆனால், இடதுசாரி, முற்போக்கு இயக்கங்களின் தொடர்ந்த நடவடிக்கைகளினால் மட்டுமே சாத்தியப்படும். பாதை வகுக்கப்பட்டு இருக்கிறது. பயணம் நிறைய அனுப்வங்களைத் தரும்தானே? அனானி! மிக்க நன்றி. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி மாதவராஜ் 15 மார்ச், 2010 அன்று பிற்பகல் 6:20 கலீல்! //atleast women will stop saying that they are not treated equally.// என்ன நண்பரே! இப்படிச் சொல்லி விட்டீர்கள். இதற்காகத்தானா, இந்த மசோதா. பவித்ரா பாலுவின் பின்னோட்டத்தின் கடைசி பாரா பாருங்களேன். அனானி! பீடம் தெரியாமல் சாமி ஆட வேண்டாமே! subu! வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி. ஆதி! மிக்க நன்றி. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பெயரில்லா 16 மார்ச், 2010 அன்று முற்பகல் 10:44 Anonymous reply to an anonymous' response to an anonymous posting: I agree that women legislators like Balabarathi have done very very well in Assembly. She is an excellent poet and orator also. Definitely the credit goes to the CPI(M) for this. You say that communist parties do not nominate people to leadersship: But in Tamil nadu it happened a few years before when a leader's daughter was elevated to the Central Committee, taking the entire organisation by surprise. What was the basis for this promotion? Exceptional work in the party or in its women's wing? There was at least one woman leader who is also an intellectioal who was not considered even to the State secretariat of the CPI(M. She has a long history of serving the party and the women's movement after giving up an excellent career at the international level. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி சுந்தர்ஜி 19 மார்ச், 2010 அன்று பிற்பகல் 1:07 ஏறிய விலைவாசியைப் பற்றியோ பணவீக்கத்தைப் பற்றிப் பேசுவதையோ தள்ளிப் போட ஒரு வழி. பெண்களின் உரிமை குறித்த மாற்றங்கள் கிராமங்களிலிருந்து தனி மனங்களிலிருந்தும் தொடங்க வேண்டும். பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி கருத்துரையைச் சேர் மேலும் ஏற்றுக... Goodreads ஏற்றுகிறது… பக்கங்கள் Home எழுதியவை Subscribe Enter your email address: Delivered by FeedBurner அறிமுகம் மாதவராஜ் உலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.
உளுந்து வடை தெரியும், மசால் வடை தெரியும், இது என்னங்க வாழைக்காய் வடை, வாழைக்காய் மாதிரி வடையா என்று குழப்பிக் கொள்ளவேண்டாம். இங்கு கொடுத்துள்ள குறிப்புகளைப் படித்து அதே மாதிரி செய்து சாப்பிடவும். (அம்மா செய்ய ஐயா சாப்பிடுவார். ஆளுக்கு ஒரு வேலை) அப்புறம் எனக்கு "சமையல் சக்கரவர்த்தி" என்னும் பட்டமே கொடுத்து விடுவீர்கள். போனவாரம் என் சம்பந்தி தோட்டத்திற்குப் போயிருந்தோம். அவர் அப்போதுதான் ஒரு முற்றின வழைத்தார் வெட்டி வைத்திருந்தார், மொந்தன் வாழைத்தார். மொந்தன் வாழைக்காய்கள் கறி செய்வதற்குத்தான் பயன்படும். பழுக்காது. நாங்கள் திரும்பி வரும்போது ஒரு சீப்பு (வாழைக்காய் சீப்புங்க, தலை சீவற சீப்புன்னு நெனக்காதீங்க) கொடுத்தனுப்பினார். அதை வாங்கி வந்து வீட்டில் வைத்திருந்தோம். அடுத்த நாள் அவைகளில் லேசாக மஞ்சள் நிறம் தட்டியது. அவை நல்ல முத்தின காய்களாக இருந்த தால் பழுக்க ஆரம்பிக்கிறது என்று புரிந்தது. அத்தனை காய்களையும் உடனே கறி செய்து சாப்பிட முடியாது. தவிர வாழைக்காய் கறி கொஞ்சம் திகட்டிப்போய் விட்டது. என் தங்கைக்கு யாரோ எப்போதோ சொல்லியிருந்த குறிப்பு நினைவிற்கு வந்தது. வாழைக்காய் வடை சுடலாமா என்று ஒரு மந்திராலோசனை செய்து அந்த யோசனை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அன்று நான் பகல் தூக்கத்தை முடித்துவிட்டு எழுந்திருக்கும்போதே கமகமவென்று மசால் வாசனை மூக்கைத் துளைத்தது. அவசர அவசரமாக முகத்தைக் கழுவி விட்டு வந்தால் ஒரு தட்டில் வடை மாதிரி நாலைந்து சமாச்சாரம் இருந்தது. ஒன்றைப் பிய்த்து வாயில் வைத்தேன். அப்படியே கரைந்து வயிற்றுக்குள் போய்விட்டது. இது என்னடா என்று அடுத்ததைப் பிய்க்காமல் வாயில் போட்டேன். கொஞ்ச நேரம் வாயில் இருந்தது. அப்போதுதான் அதன் ருசி நாக்கிற்கு உரைத்தது. இது வரை நான் அப்படிப்பட்ட ஒரு வடை ருசியை அனுபவித்ததில்லை. கொஞ்சம் மொறுமொறுப்பு. கொஞ்சம் இனிப்பு சுவை. லேசான காரம். ஒரு பக்கத்தில் மசால் வாசனை. வடையில் வழக்கமாக க் காணப்படும் எண்ணையே இல்லை. இந்த ருசியை அனுபவிக்கக் கொடுத்து வைத்திருக்கவேண்டும். இதுதான் வாழைக்காய் வடை என்றார்கள். நான் முதலில் கொடுத்த வடைகளைச் சாப்பிட்டவுடன் அடுத்து ஒரு ஐந்து வடை கொடுத்தார்கள். அதைச் சாப்பிட்டு முடித்தவுடன் அடுத்து ஒரு ஐந்து வடை. ............................. இப்படியே சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது திடீரென்று வடை சப்ளை நின்று விட்டது. என்ன என்று கேட்டேன். அவ்வளவுதான் சுட்டவடைகள் எல்லாம் தீர்ந்து விட்டன என்று பதில் வந்தது. எத்தனை வடை சாப்பிட்டேன் என்று நினைவிற்கு வரவில்லை. அப்படியான ஒரு சுவை. "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற பரந்த மனப்பான்மையில் அந்த வடை சுடுவதின் ரகசியங்களைக் கேட்டறிந்து உங்களுக்குச் சொல்லுகிறேன். நல்ல முற்றின வாழைக்காய்கள் ஒரு பத்து எடுத்துக் கொள்ளுங்கள். அவைகளை அப்படியே இட்லிப்பானையில் வைத்து வேகவையுங்கள். நன்றாக வேகவேண்டும். ஆனால் குழைந்து போகக்கூடாது. அவைகளை ஆறின பிறகு எடுத்து தோல்களை உறித்து விடவும். தோல்கள் வேண்டாம். அவைகளைக் கடாசிவிடவும். இதன் கூட ஒரு டம்ளர் பொட்டுக்கடலை, அரைமூடி தேங்காய் துருவின தேங்காய்த் துருவல், ஒரு தேக்கரண்டி சோம்பு, இரண்டு துண்டு லவங்கப்பட்டை, இரண்டு தேக்கரண்டி மிளகாய்த்தூள், அளவான உப்பு, கொஞ்சம் கருவேப்பிலை, சொஞ்சம் கொத்தமல்லித் தழை இவைகளைச் சேர்த்து கல்லுரலில் போட்டு நைசாக வரும் வரை ஆட்டிக் கொள்ளவும். ஆட்டும்போது தேவையான தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். ஆட்டின மாவு வடை சுடும் பக்குவத்திற்கு ஆட்ட வேண்டும். அவ்வளவுதான். இந்த மாவை சிறு சிறு வடைகளாக எண்ணையில் பொரித்தெடுக்கவும். இந்த வேலைகளை எல்லாம் வீட்டுக்கார அம்மா செய்யும்போது நீங்கள் உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்க்கவும். ஒவ்வொரு அடைசலாக சுட்டவுடன் தட்டில் உங்களுக்கு வரும். டிவி பார்த்துக்கொண்டே சாப்பிடவும். ஒரு கட்டத்திற்கு அப்புறம் வடை வருவது நின்று விடும். அப்போது எழுந்திருந்து போய் கைகளைக் கழுவிவிட்டு வரவும். பிறகு காப்பி வரும். அதைக் குடித்துவிட்டு ஓய்வு எடுக்கவும். இதுதாங்க வாழைக்காய் வடை சுடும் சாப்பிடும் பக்குவம். எப்படி ஆண்களும் பெண்களும் வீட்டு வேலைகளைப் பங்கிட்டுக் கொள்வது என்பதை இந்தப் பதிவில் எவ்வளவு அழகாகக் கூறியுள்ளேன் என்பதை ரசிக்கவும். நேரம் மார்ச் 17, 2015 இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் லேபிள்கள்: வடைவடையாம் 62 கருத்துகள்: திண்டுக்கல் தனபாலன் செவ்வாய், 17 மார்ச், 2015 அன்று முற்பகல் 7:58:00 IST // ஒரு கட்டத்திற்கு அப்புறம் வடை வருவது நின்று விடும்... // ஹா... ஹா.... ஆமாம், ஸ்பெஷல் மருந்து (யூனிஎன்ஜைம்) தேவையில்லையா...? பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி கரந்தை ஜெயக்குமார் செவ்வாய், 17 மார்ச், 2015 அன்று முற்பகல் 8:01:00 IST வாழைக்காய் பஜ்ஜி கேள்விபட்டிருக்கிறேன் வாழைக்காய் வடை புதிதாக அல்லவா இருக்கிறது ஐயா நன்றி தம +1 பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பெயரில்லா செவ்வாய், 17 மார்ச், 2015 அன்று முற்பகல் 8:27:00 IST இந்த உலகத்தில் சீப்பாக கிடைப்பது இரண்டே இரண்டு உருப்படிகள்தான். ஒன்று தலை வாரும் சீப்பு. இன்னொன்று வாழை சீப்பு. இதை இவ்வளவு அழகாக நகைச்சுவையோடு சொல்ல அய்யாவால்தான் முடியும். ஆனாலும் இந்த வயதில் தலையில் முடி போய்விட்டதால் தலை வாரும் சீப்பு - உபயோகமில்லை. வயிறு தொந்திரவு செய்வதால் வாழை சீப்பும் (இந்த மாதிரி வாழை வடை, வாழைக்காய் பஜ்ஜி போன்றன) உபயோகமில்லை. அய்யா அவர்களின் பதிவில் படித்து சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான். துளசி மைந்தன் பதிலளிநீக்கு பதில்கள் பெயரில்லா செவ்வாய், 17 மார்ச், 2015 அன்று பிற்பகல் 12:17:00 IST சீப்பு என்றால் தமிழிலும் இவை மட்டும்தான். ஆங்கிலத்தில் cheap (சீப்பு) என்றாலும் இவை மட்டும்தான். வேறு எந்த பொருள் இன்று சீப்பாக (ஆங்கில சீப்பு) கிடைக்கிறது? முன்பெல்லாம் ஒரு பிரச்சினை என்றால் "வா ஒரு காபி சாப்பிட்டுக்கொண்டே பிரச்சனை பற்றி பேசலாம்" என்று சொல்லுவோம். ஒரு காபி விலை 15 ரூபாய் எனும்போது இன்று அந்த காபி சாப்பிடுவதே பிரச்சனை ஆகிவிட்டதே. இதில் சீப்பு cheap என்று நாம் பேசி நகைத்துக்கொள்ள வேண்டியதுதான். காயத்ரி மணாளன் நீக்கு பதில்கள் பதிலளி ப.கந்தசாமி செவ்வாய், 17 மார்ச், 2015 அன்று பிற்பகல் 12:50:00 IST எங்க ஊரு அன்னபூர்ணா ஹோட்டலில் ஒரு காப்பி விலை 25 ரூபாய். வடை 26 ரூபாய். இரண்டு பேர் வடை காப்பி சாப்பிட்டால் 110 ரூபாய் காலி. நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி பெயரில்லா செவ்வாய், 17 மார்ச், 2015 அன்று முற்பகல் 8:31:00 IST மீண்டும் சமையல் பற்றிய பதிவு என்றவுடன், சென்ற இல்லாள் இன்னும் திரும்ப வில்லையோ என்று நினைத்தேன். "அம்மா சுட அய்யா சாப்பிட" என்று பதிவில் படித்தவுடன்தான் மனது சாந்தி அடைந்தது. இருவரும் சேர்ந்து வாழ்க பல்லாண்டு. சேலம் குரு பதிலளிநீக்கு பதில்கள் ப.கந்தசாமி செவ்வாய், 17 மார்ச், 2015 அன்று பிற்பகல் 12:01:00 IST வாழ்த்துக்கு மிக்க நன்றி, சேலம் குரு.. நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி பெயரில்லா செவ்வாய், 17 மார்ச், 2015 அன்று முற்பகல் 8:34:00 IST //(அம்மா செய்ய ஐயா சாப்பிடுவார். ஆளுக்கு ஒரு வேலை)// நீங்கள்தான் அய்யா பெண்ணியக்கத்தின் பெரிய ஆதரவாளர். அவனவன் 33% க்கே பெண்களை சுற்றலில் விடும்போது நீங்கள் எவ்வளவு அழகாக பாதி வேலை ஆம்படையாளுக்கும் பாதி வேலையை நீங்களும் எடுத்துக்கொண்டு 50% பங்களுக்கு விட்டு கொடுத்துள்ளீர்கள். உங்களை நினைத்தால் பெருமையாக உள்ளது. திருச்சி அஞ்சு பதிலளிநீக்கு பதில்கள் ப.கந்தசாமி செவ்வாய், 17 மார்ச், 2015 அன்று பிற்பகல் 12:04:00 IST ஒரு கதை கேள்விப்பட்டதில்லையா? நீ அவல் கொண்டு வா, நான் உமி கொண்டு வாறேன். இரண்டையும் கலக்கி இரண்டு பேரும் ஊதி ஊதித் தின்னலாம். இதில் நான் செய்த முன்னேற்றம். இரண்டையும் கலக்கி நீ ஊது, நான் திங்கறேன். இது எப்படியிருக்கு? நீக்கு பதில்கள் பதிலளி பெயரில்லா செவ்வாய், 17 மார்ச், 2015 அன்று பிற்பகல் 12:27:00 IST என்ன கிண்டல் செய்கிறீர்களா? சமையல் வேலையை பெண்களிடம் கொடுத்துவிட்டு உட்கார்ந்த இடத்தில் சாப்பிடும் வேலையை மட்டும் செய்யும் ஆண்களை கிண்டலா செய்கிறீர்கள்? எந்த ஒரு புது ஐட்டம் செய்தாலும் சோதனை விலங்கு (கினியா பிக்) ஆண்கள்தானே. புது ஐட்டத்தை சந்தோசமாக செய்து விடலாம். என்ன வருமோ எப்படி வருமோ என்றே தெரியாமல் நடுங்கிக்கொண்டு உட்கார்ந்திருக்கும், சாப்பிட்ட பின் நன்றாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அருமை அருமை எல்லாம் உன் கைப்பக்குவம் என்று பெரிய பொய்யை சொல்ல வேண்டிய நிலையில் இருக்கும் ஆண்களை இப்படிடும் கிண்டல் செய்வீர்கள் இதற்கு மேலும் கிண்டல் செய்வீர்கள். காயத்ரி மணாளன் நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி பெயரில்லா செவ்வாய், 17 மார்ச், 2015 அன்று முற்பகல் 8:36:00 IST // நாங்கள் திரும்பி வரும்போது ஒரு சீப்பு (வாழைக்காய் சீப்புங்க, தலை சீவற சீப்புன்னு நெனக்காதீங்க) கொடுத்தனுப்பினார்// சம்பந்தி வாழைத்தார் கொடுத்தனுப்புவது இருக்கட்டும். நீங்கள் கொண்டு போனது என்ன என்று சொல்லவே இல்லையே. அதை பற்றி தனி பதிவு போடலாம் என்று நினைத்திருந்தால் அதை படிக்க ஆவலோடு உள்ளோம். காயத்ரி மணாளன் பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பெயரில்லா செவ்வாய், 17 மார்ச், 2015 அன்று முற்பகல் 8:40:00 IST //மொந்தன் வாழைக்காய்கள் கறி செய்வதற்குத்தான் பயன்படும். பழுக்காது........அவை நல்ல முத்தின காய்களாக இருந்த தால் பழுக்க ஆரம்பிக்கிறது என்று புரிந்தது.// அய்யா எனக்கு ஒரு சந்தேகம். மொந்தன் வாழைக்காய்கள் பழுக்குமா பழுக்காதா? இளசா அல்லது முத்திய மொந்தனா என்று எப்படி கண்டு பிடிப்பது? திருச்சி தாரு பதிலளிநீக்கு பதில்கள் ப.கந்தசாமி செவ்வாய், 17 மார்ச், 2015 அன்று பிற்பகல் 12:05:00 IST இதுக்கு விவசாயக் கல்லூரியில பி.எச்.டி படிப்பு படிக்கணும்? நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி Jayakumar Chandrasekaran செவ்வாய், 17 மார்ச், 2015 அன்று முற்பகல் 8:41:00 IST ஐயா நீங்கள் விரிவாக எழுதியதைச் சுருக்கமாகச சொல்கிறேன். வாழைக்காய் புட்டில் கொஞ்சம் பொட்டுக்கடலை அல்லது கடலை மாவு, உப்பு, அளவான மசாலா மற்றும் மிளகாய்பொடி சேர்த்து மசால் வடை மாதிரி சுடவும் (எண்ணெயில் பொரித்தெடுக்கவும்). ஆனால் வாழக்காய் விலை தான் கொஞ்சம் ஆலோசிக்க வைக்கிறது. -- Jayakumar பதிலளிநீக்கு பதில்கள் ப.கந்தசாமி செவ்வாய், 17 மார்ச், 2015 அன்று பிற்பகல் 12:06:00 IST அதே, அதே. நீக்கு பதில்கள் பதிலளி பெயரில்லா செவ்வாய், 17 மார்ச், 2015 அன்று பிற்பகல் 12:08:00 IST திரு ஜெயகுமார் அவர்களே பன்னிரண்டை "ஒரு டசன்" என்றும் சொல்லலாம். அல்லது "பத்தோடு பதினொன்னு அத்தோடு இதவும் ஒன்னு" என்றும் சொல்லலாம். டசன் என்று சொன்னால் ஓஹோ அப்படியா சரி சரி என்று தலையாட்டிவிட்டு போய்விடுவோம். பத்தோடு பதினொன்னு அத்தோடு இதவும் ஒன்னு என்று சொன்னால் முதலில் வந்த பத்து என்ன அதனோடு ஏன் பதினொன்று சேரனும் அத்தோடு சேர்ந்த இந்த ஒன்று எப்படி இருக்கும் என்று சுவையும் ஆர்வமும் கூடும். மற்றபடி ரெண்டும் ஒன்றுதான். சொல்கிற விதத்தில்தான் வித்தியாசம். சேலம் குரு நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி பெயரில்லா செவ்வாய், 17 மார்ச், 2015 அன்று முற்பகல் 8:44:00 IST //மந்திராலோசனை செய்து ...// நீங்கள் சாண்டில்யனின் பரம ரசிகர் என்பது புரிந்து விட்டது. மந்திராலோசனை போண்டர் வார்த்தை பிரயோகங்கள் எல்லாம் அவருக்கே உரித்தான trade mark வார்த்தைகள். அவரை பற்றிய பதிவுகள் சிலது உங்களிடம் எதிர்பார்க்கலாம் என்று நினைக்கிறேன். ஆவலுடன் காத்திருக்கிறோம். சேலம் குரு பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பெயரில்லா செவ்வாய், 17 மார்ச், 2015 அன்று முற்பகல் 8:51:00 IST //மந்திராலோசனை செய்து...........அவைகளைக் கடாசிவிடவும்.// மந்திராலோசனை - பழைய சரித்திர கால வார்த்தை கடாசி - இன்றைய கால சென்னை பாஷை இரண்டையும் ரொம்ப சுலபமாக உபயோகிக்கிறீர்களே. உங்களை புரிந்து கொள்ளவே முடியவில்லை குருப்ரியா பதிலளிநீக்கு பதில்கள் பெயரில்லா செவ்வாய், 17 மார்ச், 2015 அன்று பிற்பகல் 12:03:00 IST இதிலொன்றும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லையே. மந்திராலோசனை - படித்ததில் பிடித்தது கடாசி - கேட்டதில் படித்தது. சரிதானே அய்யா? திருச்சி அஞ்சு நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி பெயரில்லா செவ்வாய், 17 மார்ச், 2015 அன்று முற்பகல் 8:54:00 IST //இது வரை நான் அப்படிப்பட்ட ஒரு வடை ருசியை அனுபவித்ததில்லை. கொஞ்சம் மொறுமொறுப்பு. கொஞ்சம் இனிப்பு சுவை. லேசான காரம். ஒரு பக்கத்தில் மசால் வாசனை. வடையில் வழக்கமாக க் காணப்படும் எண்ணையே இல்லை. இந்த ருசியை அனுபவிக்கக் கொடுத்து வைத்திருக்கவேண்டும்// கேட்கும் போதே நாக்கில் எச்சில் ஊறுகிறது. அடா அடா ஒரு சிலருக்குத்தான் பார்த்ததை, சாப்பிட்டதை இப்படி வர்ணனை செய்ய வரும். படிக்கும் போதே அப்படியே வாழைக்காய் வடை கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்களே. மனம் நிறைந்த பாராட்டுக்கள். காயத்ரி மணாளன் பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பெயரில்லா செவ்வாய், 17 மார்ச், 2015 அன்று முற்பகல் 8:58:00 IST //நான் முதலில் கொடுத்த வடைகளைச் சாப்பிட்டவுடன் அடுத்து ஒரு ஐந்து வடை கொடுத்தார்கள். அதைச் சாப்பிட்டு முடித்தவுடன் அடுத்து ஒரு ஐந்து வடை. .// சுடுவது அவர்கள் வேலை. சாப்பிடுவது நமது வேலை. . நமது வேலையை நாம் சரியா செய்ய வேண்டுமல்லவா? அருமை அருமை. கொடுக்க கொடுக்க உள்ளே தள்ளிக்கொண்டே இருந்தது பிரமாதம் என்றால் அதை சொன்ன விதம் இன்னும் பிரமாதம். என்னதான் இருந்தாலும் " தனக்கு மிஞ்சிதான் தான தர்மம்" அது வாழைக்காய் வடையாகவே இருந்தாலும் சரி என்று கர்ம சிரத்தையுடன் காரியமாற்றிய உங்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. சேலம் குரு பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பெயரில்லா செவ்வாய், 17 மார்ச், 2015 அன்று முற்பகல் 9:01:00 IST ஆமாம் ஐந்தைந்தாக உள்ளே தள்ளிக்கொண்டே இருந்தது சரி. "யூனிஎன்ஜைம்" எல்லாம் பஜ்ஜிக்கு மட்டும்தானா? வடைக்கு இல்லையா? இல்லை சாப்பிட மறந்து விட்டீர்களா? (ஐயா அவர்கள் மேல் எனக்கு எவ்வளவு அக்கறை பார்த்தீர்களா?) திருச்சி அஞ்சு பதிலளிநீக்கு பதில்கள் ப.கந்தசாமி செவ்வாய், 17 மார்ச், 2015 அன்று முற்பகல் 11:59:00 IST இதுல எண்ணை அதிகம் இல்லை. அதனால் யூனிஎன்ஜைம் வேண்டியதில்லை. நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி பெயரில்லா செவ்வாய், 17 மார்ச், 2015 அன்று முற்பகல் 9:03:00 IST //திடீரென்று வடை சப்ளை நின்று விட்டது.// இதை விட சுவையாக யாராலும் சுட்ட வடை அனைத்தையும் ஒருவராகவே சாப்பிட்டு முடித்ததை சொல்லி விட முடியாது. அத்தனைக்கும் வயிற்றில் இடம் இருந்ததா? திருச்சி தாரு பதிலளிநீக்கு பதில்கள் ப.கந்தசாமி செவ்வாய், 17 மார்ச், 2015 அன்று பிற்பகல் 12:00:00 IST இந்த மாதிரி கேள்வியெல்லாம் கேட்கப்படாது. நீக்கு பதில்கள் பதிலளி பெயரில்லா செவ்வாய், 17 மார்ச், 2015 அன்று பிற்பகல் 12:12:00 IST சுரைக்காய் கூட்டும் பாகற்காய் பொரியலும் செய்து கொண்டு வந்து வைத்தால் வந்த பசியும் போய்விடும். இப்படி வாழைக்காய் வடை மொறு மொறு என்று லேசான இனிப்புடன் சற்றே காரத்துடன் பார்க்க எண்ணையே இல்லாமல் இருந்தால் வயிறு தானாக பெரிதாகிவிடும். சுரைக்காய்க்கும் பாகற்காய்க்கும் நான் எதிரி இல்லையென்றாலும் வாழைக்காய் வடை என்று வரும்போது மற்றவை இரண்டாம் பட்சம்தான் இல்லையா? சேலம் குரு நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி பெயரில்லா செவ்வாய், 17 மார்ச், 2015 அன்று முற்பகல் 9:06:00 IST //திடீரென்று வடை சப்ளை நின்று விட்டது. என்ன என்று கேட்டேன். அவ்வளவுதான் சுட்டவடைகள் எல்லாம் தீர்ந்து விட்டன என்று பதில் வந்தது.// இப்போது நீங்கள் சமையல் அறை பக்கம் எட்டி கிட்டி பார்த்து விடாதீர்கள். கஷ்டப்பட்டு வடை சுட்டால் ஒரு பேச்சுக்காவது நீ ஒன்று சாப்பிட்டாயா என்று கூட கேட்காமல் அனைத்தையும் பகாசுரன் மாதிரி ஸ்வாஹா செய்து விட்ட உங்களை தன பார்வையாலே பஸ்மம் செய்யும் அளவுக்கு கோபத்துடன் உங்கள் ஆம்படையாள் சமையல் அறை உள்ளே இருப்பார்கள். ஜாக்கிரதை. சேலம் குரு பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பெயரில்லா செவ்வாய், 17 மார்ச், 2015 அன்று முற்பகல் 9:09:00 IST // இந்த வேலைகளை எல்லாம் வீட்டுக்கார அம்மா செய்யும்போது நீங்கள் உட்கார்ந்து கொண்டு வேடிக்கை பார்க்கவும்// சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விட்டது. இந்த காட்சியை நினைத்துப்பார்த்தேன். மீண்டும் சிரிப்புதான். இந்த மனுசனுக்கு என்னாகிவிட்டது என்று என் சகதர்மிணி பயத்துடன் எட்டி பார்த்த பிறகுதான் எனது சிரிப்பு நின்றது. காயத்ரி மணாளன் பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பெயரில்லா செவ்வாய், 17 மார்ச், 2015 அன்று முற்பகல் 9:13:00 IST //ஒரு கட்டத்திற்கு அப்புறம் வடை வருவது நின்று விடும். அப்போது எழுந்திருந்து போய் கைகளைக் கழுவிவிட்டு வரவும்.// "பிறகு கடைக்கு சென்று இன்னொரு சீப்பு மொந்தன் வாழை வாங்கி வரவும். வீட்டுக்காரம்மாவின் கோபத்தை தணிக்க - பின்னே சுட்ட வடை எல்லாவற்றையும் ஒருவரே தின்று தீர்த்துவிட்டால், கோபம் வராமல் பின் என்ன வரும் - வீட்டுக்காரம்மாவை ஹாலில் உட்காரவைத்துவிட்டு நாம் சென்று வாழைக்காய் வடை சுட்டுக்கொண்டு வந்து மனைவிக்கு கொடுக்க வேண்டும்" என்று நடந்த உண்மையை சொல்வீர்கள் என்று பார்த்தால் காபி குடித்தேன் என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிரீர்களே. துளசி மைந்தன் பதிலளிநீக்கு பதில்கள் பெயரில்லா செவ்வாய், 17 மார்ச், 2015 அன்று பிற்பகல் 12:30:00 IST சில உண்மைகளை இல்லை மறைவு காய் மறைவாகத்தான் சொல்ல வேண்டியிருக்கும். இப்படி பட்டென்று போட்டு உடைக்கக்கூடாது. சேலம் குரு நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி பெயரில்லா செவ்வாய், 17 மார்ச், 2015 அன்று முற்பகல் 9:17:00 IST //ஒரு கட்டத்திற்கு அப்புறம் வடை வருவது நின்று விடும். அப்போது எழுந்திருந்து போய் கைகளைக் கழுவிவிட்டு வரவும். பிறகு காப்பி வரும். அதைக் குடித்துவிட்டு ஓய்வு எடுக்கவும்.// நிஜமாகவே மனைவிக்கு ஒன்று கூட கொடுக்காமலா சாப்பிட்டீர்கள்?அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் ஆண் பிள்ளை சிங்கம்தான். சுட்ட வடை அனைத்தையும் சிங்கிள் ஆளாகத்தின்று விட்டு காபியும் குடித்துவிட்டு ஓய்வு எடுப்பதற்கு ரொம்ப தைரியம் வேண்டும். எதற்கும் கையை கிள்ளி பார்த்துக்கொள்ளுங்கள். ஏதேனும் கனவு கினவாக இருக்க போகிறது திருச்சி அஞ்சு பதிலளிநீக்கு பதில்கள் பெயரில்லா செவ்வாய், 17 மார்ச், 2015 அன்று பிற்பகல் 12:34:00 IST அவ்வளவு வடையையும் சிங்கிளாகத்தின்ற நமது அய்யா அவர்கள் கண்டிப்பாக ஆண்பிள்ளை சிங்கம்தான். ஏனென்றால் நமது சூப்பர் ஸ்டார் சொல்வது மாதிரி சிங்கம் எப்போதும் சிங்கிளாகத்தான் வரும். சேலம் குரு நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி பெயரில்லா செவ்வாய், 17 மார்ச், 2015 அன்று முற்பகல் 9:23:00 IST //எப்படி ஆண்களும் பெண்களும் வீட்டு வேலைகளைப் பங்கிட்டுக் கொள்வது என்பதை இந்தப் பதிவில் எவ்வளவு அழகாகக் கூறியுள்ளேன் என்பதை ரசிக்கவும்.// அருமை அருமை இதை என் இல்லாளுக்கு படித்து காட்டினேன். படிக்க படிக்க அப்படியே நான் இருக்கும் இடத்தில் வெப்பம் கூடிகொண்டே வந்தது. அடுப்பு எரிக்காமலேயே அந்த இடத்திலேயே வடை சுட்டு விடலாம் என்ற அளவுக்கு என் வீட்டுக்காரம்மாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக்கொண்டிருந்தது. வாழைக்காய் சுடும் பக்குவம் இருக்கட்டும் இப்போது என் கைப்பக்குவத்தை பாருங்கள் என்றவுடன் தப்பித்தேன் பிழைத்தேன் என்று எடுத்தேன் பாருங்கள் ஓட்டம். வீடு திரும்புமுன் ஒரு டசன் வாழைக்காய் வடையுடன்தான் திரும்ப வேண்டும் என்றிருக்கிறேன். அதற்கு அய்யா அவர்கள்தான் உதவி செய்ய வேண்டும் சேலம் குரு பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பெயரில்லா செவ்வாய், 17 மார்ச், 2015 அன்று முற்பகல் 9:28:00 IST //ஒவ்வொரு அடைசலாக சுட்டவுடன் தட்டில் உங்களுக்கு வரும். டிவி பார்த்துக்கொண்டே சாப்பிடவும். ஒரு கட்டத்திற்கு அப்புறம் வடை வருவது நின்று விடும். அப்போது எழுந்திருந்து போய் கைகளைக் கழுவிவிட்டு வரவும். பிறகு காப்பி வரும். அதைக் குடித்துவிட்டு ஓய்வு எடுக்கவும்.// யூனி என்சைம் மாத்திரையும் சாப்பிடாததால் ஓய்வு எங்கே எடுப்பது. டக்கென்று ஒரு ஆட்டோ பிடித்து பக்கத்தில் இருக்கும் டாக்டர் வீட்டுக்குத்தான் செல்ல வேண்டும். திருச்சி அஞ்சு பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி பெயரில்லா செவ்வாய், 17 மார்ச், 2015 அன்று முற்பகல் 9:31:00 IST // கல்லுரலில் போட்டு நைசாக வரும் வரை ஆட்டிக் கொள்ளவும்.// அப்படியென்றால் என்ன என்று என் சகதர்மிணி கேட்கிறாள். மிக்சி தெரியும் கிரைண்டர் தெரியும் வடை மாவு ஆட்டுவதற்கு கல்லுரல் என்று ஒன்று இருந்ததா என்று கேட்கிறாள். அடுக்கு மாடி கட்டிடத்தில் புறாக்கூண்டு போல இருக்கும் ஒரு அபார்ட்மெண்டில் இருந்து கொண்டு கல்லுரலுக்கு நான் எங்கே போவேன்? காயத்ரி மணாளன் பதிலளிநீக்கு பதில்கள் ப.கந்தசாமி செவ்வாய், 17 மார்ச், 2015 அன்று பிற்பகல் 12:54:00 IST உங்களுக்கு வாழைக்காய் வடை பிராப்தம் இல்லை. எங்காவது கிராமத்திற்கு அக்கா தங்கச்சி வீட்டுக்குப்போனா செஞ்சு குடுக்கச் சொல்லி சாப்பிடுங்கள். நீக்கு பதில்கள் பதிலளி பெயரில்லா புதன், 18 மார்ச், 2015 அன்று முற்பகல் 11:53:00 IST "நம்ம வீட்டுக்கு வாரும். உங்க பேரை சொல்லி நானும் இன்னொரு தடவை வாழைக்காய் வடையை ஒரு பிடி பிடிக்கிறேன்" என்று சொல்வீர்கள் என்று பார்த்தால் கொடுப்பினை இல்லை பிராப்தம் இல்லை என்று சொல்லி ஏமாற்றி விட்டீர்களே. நான் ஒன்றும் சும்மா வர மாட்டேன். கண்டிப்பாக ஒரு ரெண்டு டசன் வாழைக்காய் நன்கு முற்றியதாக வாங்கிக்கொண்டுதான் வருவேன். காயத்ரி மணாளன் நீக்கு பதில்கள் பதிலளி ப.கந்தசாமி புதன், 18 மார்ச், 2015 அன்று பிற்பகல் 5:05:00 IST அய்யய்யோ, நீங்க எல்லாம் நம்ம ஊட்டுக்கு வருவீங்களோ, மாட்டியளோ அப்படீங்கற நெனப்பில சொல்லீட்டனுங்க. எப்ப வேணும்னாலும் வாங்க, வாழைக்காய் வடையிலயே உங்களைக் குளிப்பாட்டிடறனுங்க. நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி Jayakumar Chandrasekaran செவ்வாய், 17 மார்ச், 2015 அன்று முற்பகல் 9:34:00 IST ஐயா புளிக்கும் என்று விட்டப்போ தமிழ் மணம் 8க்கு வந்துட்டீங்க. வெங்கட் நாகராஜ் பகவான்ஜி கில்லெர்ஜி எல்லாம் கொஞ்சம் வழி விடுறாங்க போலிருக்கு. -- Jayakumar பதிலளிநீக்கு பதில்கள் ப.கந்தசாமி வியாழன், 19 மார்ச், 2015 அன்று முற்பகல் 6:00:00 IST ஏதோ உங்க மாதிரி மகராஜன்கள் புண்ணியத்தில இப்பத்தான் 11 வது ரேங்கிற்கு வந்திருக்கேன். தொடர்ந்து ஆதலவு கொடுத்தால் இன்னும் முன்னேறுவேன் என்று நம்புகிறேன். எல்லாம் உங்கள் கையில். நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி பெயரில்லா செவ்வாய், 17 மார்ச், 2015 அன்று பிற்பகல் 12:49:00 IST ஏய்! போராண்டி! ரம்பநாயகனே!.....இப்படி அருக்கிரீர்களே. போராண்டி! கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா போராண்டி? ஆள் வைத்து வைத்து பின்னோட்டம் என்ற பேரில் ஆள் வைத்து நீங்களும் உங்கள் அடிவருடிகளும் மாற்றி மாற்றி போடும் ரம்பத்தை ஆபாசத்தை விடுமையா! உங்க தற்புகழ்ச்சி தாங்க முடியல சாமி---ஹலோ! பழனிசாமி! பதிலளிநீக்கு பதில்கள் ப.கந்தசாமி செவ்வாய், 17 மார்ச், 2015 அன்று பிற்பகல் 4:07:00 IST இது யாரடா, நம்மளைப் பேராண்டீன்னு கூப்படறாங்கன்னு பார்த்தேன். அப்பறம்தான் போராண்டின்னு புரிஞ்சுது.இந்தப்பேரும் நல்லாத்தான் இருக்கு. அப்புறம் வயித்து வலிக்காரரெல்லாம் வடை சாப்பிட ஆசைப்படலாமோ? எங்காச்சும் லேகியம் விக்கற எடத்துக்குப் போகோணும். ஒடம்பைப் பாத்துக்குங்க. நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி ஸ்ரீராம். செவ்வாய், 17 மார்ச், 2015 அன்று பிற்பகல் 12:58:00 IST இது புதுசு. (எனக்கு) பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி வே.நடனசபாபதி செவ்வாய், 17 மார்ச், 2015 அன்று பிற்பகல் 1:13:00 IST வாழைப்பூ வடை சாப்பிட்டு இருக்கிறீர்களா? அதுவும் சுவையாய் இருக்கும். பதிலளிநீக்கு பதில்கள் ப.கந்தசாமி செவ்வாய், 17 மார்ச், 2015 அன்று பிற்பகல் 4:02:00 IST நன்றாக இருக்கும். சாப்பிட்டிருக்கிறேன். ஆனால் அதில் வாழைப்பூவை கிளீன் செய்வது ஒரு நச்சு வேலை. நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி G.M Balasubramaniam செவ்வாய், 17 மார்ச், 2015 அன்று பிற்பகல் 3:05:00 IST செய்து பார்த்து விட வேண்டியதுதான் பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி ”தளிர் சுரேஷ்” செவ்வாய், 17 மார்ச், 2015 அன்று பிற்பகல் 4:04:00 IST வாழைப்பூ வடை கேள்விப்பட்டு இருக்கிறேன்! சுவைத்தும் இருக்கிறேன்! வாழைக்காய் வடை புதிதுதான்! ஆனால் நன்கு முற்றிய வாழைக்காய் விலைதான் பயமுறுத்துகிறது! பதிலளிநீக்கு பதில்கள் பெயரில்லா புதன், 18 மார்ச், 2015 அன்று பிற்பகல் 12:04:00 IST காசுக்கேத்த தோசை சுவைக்கேத்த காசு. ஹோட்டலுக்கு போய் பில் என்ற பெயரில் - நாம் சாப்பிடும் பொது வராத வயிற்றெரிச்சல், பில்லை பார்க்கும் பொது கண்டிப்பாக வரும் -கொட்டிக்கொடுப்பதற்கு, விலை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் சரி என்று வாங்கி வந்து வீட்டில் சுத்தபத்தத்தோடு செய்து சாப்பிட்டால் வரும் சந்தோஷமே தனிதான். காசு - உங்களிடம். வாழைக்காய் - கடையில். செய்முறை - அய்யாவின் பதிவில். செய்ய வேண்டியது - உங்கள் மனைவி எனவே நேரத்தை வீண் செய்து கொண்டிருக்காமல் உங்கள் மனைவியை சற்றே சரி செய்யுங்கள். சுவையான வாழைக்காய் வடை சாப்பிடுங்கள். சேலம் குரு நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி தி.தமிழ் இளங்கோ செவ்வாய், 17 மார்ச், 2015 அன்று பிற்பகல் 7:03:00 IST நல்ல ருசியான பதிவு. வாழைக்காய் பஜ்ஜி சாப்பிட்டு இருக்கிறேன். வாழைக்காய் வடை பற்றி இப்போதுதான் கேள்விப் படுகிறேன். உங்கள் புண்ணியத்தில் யாராவது ஒருவர் இந்த “வாழைக்காய் வடை” செய்முறையின்படி பிரமாதமாக சுட்டு, விற்று பெரிய ஆளாக வர வாய்ப்பு இருக்கிறது. த.ம.6 பதிலளிநீக்கு பதில்கள் பெயரில்லா புதன், 18 மார்ச், 2015 அன்று பிற்பகல் 12:59:00 IST வாழைக்காய் வடை சுட்டு விற்று அவர் பெரிய ஆளாக ஆனார் என்றால் கண்டிப்பாக அய்யா அவர்களுக்கு ரெசிபிக்காக ராயல்டி தொகை ஒன்றை நன்றி மறவாமல் வழங்க வேண்டும். அப்படியே அய்யா அவர்களுக்கு ஒரு ராயல்டி வருமானத்துக்கு ஒரு வழி சொன்னதால் ஒரு பர்சென்டேஜ் எனக்கும் அய்யா அவர்கள் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். துளசி மைந்தன் நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University செவ்வாய், 17 மார்ச், 2015 அன்று பிற்பகல் 9:23:00 IST புதுவகையான வடையாக உள்ளது. அதைவிட தாங்கள் எங்களுடன் பகிர்ந்து பரிமாறிய விதம் மிகவும் அருமை. பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி Unknown செவ்வாய், 17 மார்ச், 2015 அன்று பிற்பகல் 9:50:00 IST #வாழைப்பூவை கிளீன் செய்வது ஒரு நச்சு வேலை.#இது அனுபவமா ,இல்லை சகதர்ம பத்தினி கஷ்டப் படுவதைப் பார்த்ததால் உண்டான பரிதாபமா :) பதிலளிநீக்கு பதில்கள் பெயரில்லா புதன், 18 மார்ச், 2015 அன்று பிற்பகல் 12:06:00 IST அய்யாவின் இந்த வயதில் இது ஒரு கேள்வியே இல்லை. இருவரும் சேர்ந்துதான் வாழைப்பூவை ஆய வேண்டியிருக்கும். கீரையை சுத்தம் செய்வது போல வாழைப்பூவை ஆய்வதும் ஒரு பெரிய நச்சு பிடித்த வேலைதான். வெளிப்படையாக அய்யா சொல்லவில்லையே தவிர நமக்கு புரியாதா என்ன? திருச்சி அஞ்சு நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி Unknown செவ்வாய், 17 மார்ச், 2015 அன்று பிற்பகல் 9:55:00 IST #வெங்கட் நாகராஜ் பகவான்ஜி கில்லெர்ஜி எல்லாம் கொஞ்சம் வழி விடுறாங்க போலிருக்கு.# வட போச்சேன்னு வருத்தப் படுபவன் நானில்லை ,இதோ ,இந்த பதிவே ,வாசகர் பரிந்துரையில் வரச் செய்யும் என் ஏழாவது வாக்கு :) பதிலளிநீக்கு பதில்கள் ப.கந்தசாமி புதன், 18 மார்ச், 2015 அன்று முற்பகல் 11:15:00 IST எங்கீங்க, சரியா வழி விடமாட்டீங்கறாங்க. இதுக்கு ஒரு வழி சொல்லுங்க? நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி S.P.SENTHIL KUMAR செவ்வாய், 17 மார்ச், 2015 அன்று பிற்பகல் 11:00:00 IST வாழைக்காய் வடை ரெசிபியை ஒரு நாள் வீட்டில் செய்துவிட வேண்டியதுதான். த ம 8 பதிலளிநீக்கு பதில்கள் பெயரில்லா புதன், 18 மார்ச், 2015 அன்று பிற்பகல் 12:56:00 IST அப்படியே மறக்காமல் ஒரு கணிசமான அளவில் சுட்ட வடைகளை அய்யா அவர்களுக்கு அனுப்பி வைக்கவும். சாப்பிட்டுக்கொண்டே இருந்தவர் வடை தீர்ந்து விட்டது என்று பார்யாள் சொன்னவுடன் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார். எனவே தயவு செய்து அய்யாவுக்கு இந்த உதவியை மறக்காமல் செய்து விடவும். சேலம் குரு நீக்கு பதில்கள் பதிலளி பதிலளி G.M Balasubramaniam புதன், 18 மார்ச், 2015 அன்று பிற்பகல் 3:51:00 IST பகவான் ஜி டாக்டர் எழுதி இருப்பது வாழைக்காய் பஜ்ஜிதானே. வாழைப்பூ பஜ்ஜி அல்லவே. சிரமம் இருக்காது/ செய்து தரச் சொல்லுங்கள். பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி G.M Balasubramaniam புதன், 18 மார்ச், 2015 அன்று பிற்பகல் 3:53:00 IST வாழைக்காய் பஜ்ஜி என்று தவறுதலாக தட்டச்சி விட்டேன் வடை என்று மாற்றி வாசிக்கவும். பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி Unknown புதன், 18 மார்ச், 2015 அன்று பிற்பகல் 7:35:00 IST யாராவது சுட்டுத் தந்தால் வடைஎன்னா பஜ்ஜிஎன்னா ,லபக் லபக்குன்னு விழுங்க நான் தயார் :) பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி Thulasidharan V Thillaiakathu சனி, 21 மார்ச், 2015 அன்று முற்பகல் 10:55:00 IST திடீரென்று வடை சப்ளை நின்று விட்டது. என்ன என்று கேட்டேன். அவ்வளவுதான் சுட்டவடைகள் எல்லாம் தீர்ந்து விட்டன என்று பதில் வந்தது.// ஹஹஹஹ் அப்படியென்றால் அதன் சுவை தானோ...புதிய வடை ரிசிப்பி நிச்சயமாகச் செய்து விட வேண்டியதுதான் ஐயா! மிக்க நன்றி! பதிலளிநீக்கு பதில்கள் பதிலளி வை.கோபாலகிருஷ்ணன் சனி, 28 மார்ச், 2015 அன்று பிற்பகல் 11:11:00 IST //ஒரு கட்டத்திற்கு அப்புறம் வடை வருவது நின்று விடும். அப்போது எழுந்திருந்து போய் கைகளைக் கழுவிவிட்டு வரவும். பிறகு காப்பி வரும். அதைக் குடித்துவிட்டு ஓய்வு எடுக்கவும்.//
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Guruleninn&oldid=1545627" இருந்து மீள்விக்கப்பட்டது
அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.
இபிகோ 124-A ராஜ துரோக ஷரத்தை சுப்ரீம் கோர்ட்டே நீக்க முன் வர வேண்டும்! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web Skip to content December 5, 2021 Facebook Twitter Instagram AanthaiReporter.Com | Tamil Multimedia News Web Primary Menu செய்திகள் தமிழகம் இந்தியா உலகம் சினிமா சினிமா செய்திகள் சின்னத்திரை புகைப்படம் டிரைலர் எடிட்டர் சாய்ஸ் அலசல் ஆய்வு முடிவு சர்ச்சை ஆந்தை யார்! சொல்றாங்க டெக்னாலஜி வழிகாட்டி கல்வி வேலை வாய்ப்பு ரவி நாக் பகுதி வணிகம் டூரிஸ்ட் ஏரியா மறக்க முடியுமா Search for: Home எடிட்டர் ஏரியா சொல்றாங்க இபிகோ 124-A ராஜ துரோக ஷரத்தை சுப்ரீம் கோர்ட்டே நீக்க முன் வர வேண்டும்! Exclusive Slider எடிட்டர் ஏரியா சொல்றாங்க இபிகோ 124-A ராஜ துரோக ஷரத்தை சுப்ரீம் கோர்ட்டே நீக்க முன் வர வேண்டும்! 5 months ago aanthai 0 SHARES ShareTweet மோடி தலைமையிலான பாஜக கடந்த 2014ம் ஆண்டு மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்போர் என்ற தேச துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டுகளில் மட்டும் 10,898 பேர் மீது தேசதுரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கொலை மற்றும் பாலியல் வன்புணர்வு ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக அதிகமான அளவுக்கு வருகின்ற குற்றபதிவு ராஜ துரோகம் தான். ஏதோ நாடே ராஜ துரோகத்தில் நிரம்பி இருப்பது போலவும் மற்றும் மக்கள் கிளர்ச்சி மனநிலையில் இருப்பதாகவும் அரசே தோற்றத்தை உருவாக்குகிறது.என்கிறார்கள் பத்திரிகையாளர்கள் 2018ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டே அரசை விமர்சிப்பது தேசதுரோகம் ஆகாது எனத் தெரிவித்தது. ஆனாலும் தனது போக்கை நிறுத்திக்கொள்ளாத மோடி அரசு, தேசதுரோக சட்டத்தின் மூலம் ஜனநாயகத்தைக் கொல்லும் செயலில் இறங்கியுள்ளதுதான் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தும், கடந்த 2010 முதல் 2020 வரையிலான 10 ஆண்டுகளில், 798 வழக்குகளில் 10,898 பேர் மீதுதேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அவர்களில் ஒன்பது பேர் இளம் சிறார். மோடி பிரதமரான பிறகு 65 சதவிகித வழக்குகள் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படி 124-A ராஜ துரோக பிரிவு பயன்படுத்தப்பட்டதைப் பற்றி சில இணையவாசிகள் ஆராய்த போது மோடி அரசின் சட்டங்களை எதிர்த்துக் கருத்து சொல்வது, போராட்டம் நடத்துவது என்று நிராயுதபாணியாக மக்கள் செய்வது எல்லாவற்றையும் 124-A ராஜ துரோக பிரிவு அல்லது ஊபா UAPA-வுக்குள் குற்றமாக்குகிறது. “போஸ்டர் வைத்திருத்தல் சமூக வலைத்தளங்களில் போடப்படும் பதிவுகள் முழக்கங்களை எழுப்புதல் மற்றும் தனிப்பட்ட செய்தி தொடர்புகள்” போன்ற ‘தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய சாதாரண முறைகளையும் கூட ‘ராஜ துரோகக்’ குற்றத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது மோடி அரசு என்கிறார்கள் குறிப்பாக, குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் ஹத்ராஸ் பாலியல் வல்லுறவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. ஹத்ராஸில், ஒரு பத்திரிகையாளர் உட்பட 18 பேர் மீது தேசத் துரோக குற்றச்சாட்டில் 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 25 சி.ஏ.ஏ வழக்குகளில் 3,700 பேர் மீது குற்றம்சாட்டியுள்ளது. ஜார்க்கண்டில் பதல்கடி போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான பழங்குடியினர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டை பா.ஜ.க அரசு சுமத்தியது. பட்டிதார், ஜாட்கிளர்ச்சியாளர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில், நாட்டில் அதிக தேசத்துரோக வழக்குகளைக் கொண்ட மாநிலமாக பீகாரை மாறியுள்ளது. அதன்படி, பீகாரில் 168, உத்தரப்பிரதேசம்- 115, ஜார்க்கண்ட்- 62, கர்நாடகா- 50 தமிழ்நாட்டில், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கூடங்குளம் போராட்டத்திற்கு எதிராக 80 சதவிகித வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. உ.பி.யில், 115 வழக்குகளில் 77 சதவிகிதம்ஆதித்யநாத் முதல்வரான பிறகு. இவற்றில் பெரும்பாலானவை ‘தேசியவாதம்’ தொடர்பானவை என தெரியவந்துள்ளது. இந்தப் பட்டியலைப் பார்த்தாலே மேற்படி சட்டம் போகும் பாதையை தெரிந்து அதை உடனடியாக நீக்க சுப்ரீம் கோர்ட்டே முன் வர வேண்டும் என்பதே இந்திய பிரஜையின் எதிர்பார்ப்பு! நிலவளம் ரெங்கராஜன் 0 SHARES ShareTweet Continue Reading Previous வாழ் – ஓடிடி விமர்சனம்! Next ஸ்டேன் சுவாமி அஸ்திக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை!- வீடியோ! More Stories Exclusive Slider இந்தியா நாகாலாந்தில் பாதுகாப்புபடையினரால் 13 அப்பாவிகள் சுட்டுக்கொலை! 12 mins ago aanthai Exclusive Running News சினிமா செய்திகள் சோனியா அகர்வால் நடித்த ‘கிராண்மா’ டிரெய்லர் ரிலீஸ் பங்க்‌ஷன் ஹைலைட்ஸ்! 2 hours ago aanthai Exclusive Running News சினிமா செய்திகள் நான்கு நாயகிகள் இணைந்து நடிக்கும் புது பட பூஜை ரிப்போர்ட்! 1 day ago aanthai Latest Popular Soldranga Exclusive Slider இந்தியா நாகாலாந்தில் பாதுகாப்புபடையினரால் 13 அப்பாவிகள் சுட்டுக்கொலை! 12 mins ago aanthai Exclusive Running News சினிமா செய்திகள் சோனியா அகர்வால் நடித்த ‘கிராண்மா’ டிரெய்லர் ரிலீஸ் பங்க்‌ஷன் ஹைலைட்ஸ்! 2 hours ago aanthai Exclusive Running News சினிமா செய்திகள் நான்கு நாயகிகள் இணைந்து நடிக்கும் புது பட பூஜை ரிப்போர்ட்! 1 day ago aanthai Exclusive Slider தமிழகம் கூரியர் மூலம் போதைப் பொருள் கடத்தல் – சென்னைப் போலீஸ் கிடுக்கிப்பிடி! 1 day ago aanthai Exclusive Slider எடிட்டர் ஏரியா சொல்றாங்க முழக்கங்களின் ஜனநாயக முடக்கம்: சரியா? தவறா? ரமேஷ் பாபு! 1 day ago aanthai Running News எச்சரிக்கை ஹெல்த் கேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்!
கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு பக்க வரிசைப்படுத்தல் | மறுப்பு பதிப்புரிமை © 2012-2021 | கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு
ராமேசுவரம் கோவிலில் நவராத்திரி 4-ம் நாள் விழாவில் பர்வதவர்த்தினி அம்பாள் சரஸ்வதி அலங்காரத்தில் எழுந்தருளிய காட்சி அளித்தார். ராமேசுவரம் கோவிலில் பர்வதவர்த்தினி அம்பாள் சரஸ்வதி அலங்காரத்தில் எழுந்தருளிய காட்சி. Advertising Advertising நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு தினமும் அம்பாள் ஒவ்வொரு அவதாரத்தில் வருகின்ற 14-ந் தேதி வரையிலும் ஒன்பது நாட்களும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நவராத்திரி திருவிழாவின் 4-வது நாளான நேற்று ராமேசுவரம் கோவிலில் பர்வதவர்த்தினி அம்பாள் சரஸ்வதி அலங்காரத்தில் கொலு மண்டபத்தில் எழுந்தருளினார். இதில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. திருவிழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியாக வருகிற 15-ந் தேதி சாமி அம்பாள் அம்பு எய்தல் நிகழ்ச்சியானது கோவிலின் உள்ளேயே நடைபெறுகின்றது. வழக்கமாக நவராத்திரி திருவிழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியான சாமி அம்பாள் அம்பு எய்தல் நிகழ்ச்சியானது ராமேஸ்வரம் கோவிலோடு சேர்ந்த உபகோவிலான பத்திரகாளியம்மன் கோவில் அருகே வைத்து நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமை இந்த 3 நாட்களை தவிர்த்து வழக்கம்போல் மற்ற நாட்களில் மட்டும் பக்தர்கள் கொலு மண்டபத்தில் நடைபெறும் அம்பாள் பூஜைகளை காண அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகின்றது.
"https://www.noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:Journal_of_Development_Administration&oldid=89766" இருந்து மீள்விக்கப்பட்டது
வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: இனி அச்சிறுபாக்கம், ஒரத்தி காவல் எல்லைகளுக்குள் தேவையற்று சுற்றுபவர்களின் உரிமம் ரத்து மற்றும் வாகனம் பறிக்கப்படும் | Acharapakkam Inspector Warning their Police Limit People Pages முகப்பு மாவட்டம் வாரியாக செய்திகளை படிக்க | Vil Ambu District News தேசிய செய்திகள் சர்வதேச செய்திகள் வேலைவாய்ப்பு செய்திகள் காணொளிகள் மருத்துவ குறிப்புகள் இ-பேப்பர் ஆப்பம் செய்முறை தமிழில்# கேழ்வரகு முறுக்கு # தூதுவளை தோசை # பரங்கிக்காய் அடை எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும் எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி... For Advertisement விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்... Thursday, April 09, 2020 இனி அச்சிறுபாக்கம், ஒரத்தி காவல் எல்லைகளுக்குள் தேவையற்று சுற்றுபவர்களின் உரிமம் ரத்து மற்றும் வாகனம் பறிக்கப்படும் | Acharapakkam Inspector Warning their Police Limit People செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் மற்றும் ஒரத்தி காவல் எல்லைகளுக்குள் தேவையற்று இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வலம் வருபவர்களின் வாகனம் பறிக்கப்படும் எனவும் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் அச்சிறுபாக்கம் காவல் ஆய்வாளர் டி.எஸ்.சரவணன் திட்டவட்டமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களின் உயிரை பாதுகாத்து வைரஸ் பரவாமல் இருக்க வரும் ஏப்ரல் 14-ம் தேதிவரை இந்திய அரசாங்கம் 144 தடை உத்தரவினை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் சிலர் அத்தியாவசிய பொருட்களை வாங்கச் செல்வதாகக் கூறி தேவையில்லாமல் ஊற்சுற்றி வருகின்றனர். எனவே, இப்படி சுற்றுபவர்களின் வாகனம் பறிக்கப்படுவது மட்டுமின்றி அப்படி சுற்றுபவரின் மீது தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவும் செய்யப்படும் என எச்சரிகை விடுத்துள்ளார். அப்படி தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டால் அந்த நபர் எதிர்காலத்தில் பாஸ்போர்ட் மற்றும் விசா பெறுவதற்கு தடைவிதிக்கப்பட்ட நபராக கருதப்படுவார். மேலும் எதிர்காலத்தில் அரசு பணியில் சேர தகுதியில்லாத நபராக கருதப்படுவார். எனவே, அப்படி ஒரு சூழலை பொதுமக்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டாம் என ஆட்டோ மூலமும் பிரச்சராம் மேற்கொண்டு வருகிறார் அச்சிறுபாக்கம் காவல் ஆய்வாளர் டி.எஸ்.சரவணன். மேலும், இதுநாள் வரை அச்சிறுபாக்கம் மற்றும் ஒரத்தி காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 90 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Posted by Vil Ambu Editor RunWorld Media on 4/09/2020 09:23:00 PM Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Labels: Acharapakkam Police News, Chengalpattu District News, Corona Awareness News, Corona Precautions, Madurantakam Taluk News No comments: Post a Comment Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) சமீபத்திய செய்திகள் Recent Posts Widget Your browser does not support JavaScript! Video வீடியோக்கள் Follow பட்டனை கிளிக் செய்து confirm செய்யுங்கள் கடந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை வண்டலூர் மேம்பாலம் அருகே மயங்கிய நிலையில் இருந்த முதியவருக்கு உதவிய காவலர் | Vandalur Police News | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் மேம்பாலம் அருகே முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் படுத்துகொண்டு இருந்தார். அவ்வழியாக சென்ற காவலர் சந்தோஷ் என்... வேலை வாய்ப்பு அலுவலகத்தில் ரெனிவல் செய்ய தவறியவரா நீங்கள்..? இதோ அரிய வாய்ப்பு | Employment Card Renewal Extension Period | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News 2014-ம் ஆண்டு முதல் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு இதோ..! Yo... பெரும்பேர் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கிய தி.மு.க-வினர் | Acharapakkam Union DMK | Perumber Kandigai | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், பெரும்பேர் கண்டிகையில் உள்ள முதியோர் இல்லத்தில் தி.மு.க-வினர் மதிய உணவு வழங்கினர். தி.மு.க இளைஞரண... மதுராந்தகம் அருகே அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் திமுகவில் இணைந்தார் | Netrambakkam ADMK Village President Joined to DMK at Saravampakkam | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சரவம்பாக்கம் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்க... டீச்சர் கண்ணத்தில் பளார் என வைத்து தள்ளிவிட்ட அரசு பள்ளி மாணவர் | ஓசூர் அருகே பரபரப்பு | Student Beating Teacher in Govt School near Hosur | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News ஓசூர் அருகே அரசுப் பள்ளியின் மாணவர் ஒருவர், ஆசிரியை தாக்கி கீழே தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்... விபத்தில் சிக்கிய மாணவனின் உயிரைக் காப்பாற்றிய செவிலியர்! குவியும் பாராட்டு..! | Nurse Emergency Treatment to Student at Road Accident | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News மன்னார்குடியில் நேர்ந்த சாலை விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவருக்கு CPR எனும் முதலுதவி சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றிய செவிலியர் வனஜாவை பொத... ஊரப்பாக்கம் இரட்டை கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்ட ஆய்வாளர் குழுவுக்கு டிஜிபி வெகுமதி அளித்த பாராட்டு | DGP Giving Award to Urapakkam Double Murder Case Investigation Police Team | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News Share செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் இரட்டை கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை விரைந்து பிடித்த ஓட்டேரி சட்ட ஒழுங்கு கா... வேலூரில் நில அதிர்வு | Vellore Mild Earthquake | Vil Ambu News | வில் அம்பு செய்திகள் வேலூரில் இன்று அதிகாலை 4.17 மணியளவில் இலேசான நில அதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ள இந்த நில அதிர்வு வேலூரின் தென்மேற... அச்சிறுப்பாக்கம் கிளை நூலகம் சொந்த கட்டடத்திற்கு மாற்றம் | Acharapakkam Library Shifted to Own Building | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கத்தில் 1962 ஆம் ஆண்டு கிளை நூலகம் தொடங்கப்பட்டது. இந்த நூலகத்தில் தினசரி நாளிதழ் படிக... தங்கையை பலாத்காரம் செய்த அண்ணன்.. தாயை இழந்த சிறுமிக்கு சோகம் | Krishnagiri Men Rapped Her Sister | Vil Ambu News | வில் அம்பு செய்திகள் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியை சேர்ந்தவர் விஜய் (23). இவர் ஜேசிபி இயந்திர ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். விஜயின் தாய் திடீரென உடல்நலக்... #CovidFree India கடந்த ஆண்டில் அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts மாணவி தற்கொலை..! மதுரையில் சோகம்...! நடந்தது என்ன...? | Madurai Student Suside | Vil Ambu News | Tamil Latest News பேஷன் டெக்னாலஜி படிப்பதற்காக வங்கிக் கடனுக்கு காத்திருந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ... உட்காரும் இடத்தில் ஏன் இப்படி கொப்புளம் வருகிறது? வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்? பருக்கள், கொப்புளங்கள் என்பவை சின்ன விஷயங்கள் என்றாலும் இவை சில இடங்களில் வரும்பொழுது, உண்மையிலேயே மிகவும் எரிச்சலடையச் செய்யும். ... கீழாமூரில் செல்பி எடுத்த நபர் கிளியாற்றில் மூழ்கி பலி | Keezhamur Kiliyar River Selfie Died | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News கிளி ஆற்று வெள்ளத்தில் நேற்று செல்பி எடுக்கும் பொழுது தவறி விழுந்து மனைவி கண்ணெதிரே கணவன் தண்ணிரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்த... ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது தமிழக அரசு | Lockdown Tamilnadu News | Vil Ambu News | Tamil Latest News *கொரோனா ஊடரங்கில் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது தமிழ்நாடு அரசு* *தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு* *இரவு 10 மணி முதல் காலை 4... 99% நிரம்பிய மதுராந்தகம் ஏரி | Madurantakam Eri Nearby Full | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஏரி விரைவாக நிரம்புகிறது. அதன் முழு கொள்ளளவான 23.3 அடியில் இதுவரை 22.9 எட்டியது. தற்போது கிளியாறு மற... மின்வாரிய வேலைவாய்ப்பு | தமிழக இளைஞர்களுக்கு ஹேப்பி நியூஸ் | TNEB Requirements Latest News | Vil Ambu News மின்வாரியத்தில் 56 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளன. முன்னுரிமையின் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரி... ஏரியாவில் காணமல் போன ஏரி | வெளியான சேட்டிலைட் மேப்பால் அதிர்ச்சி | Velachery Lake Missing in Sattlite Map | Vil Ambu News | வில் அம்பு செய்திகள் சென்னையின் புறநகர் பகுதியான வேளச்சேரி ஒரு காலத்தில் முழுக்க, ஏரியாக இருந்த பகுதி , என்பதற்கான வரைபட தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக சுற... Total Pageviews Last 30 Days Popular Posts கீழாமூரில் செல்பி எடுத்த நபர் கிளியாற்றில் மூழ்கி பலி | Keezhamur Kiliyar River Selfie Died | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News கிளி ஆற்று வெள்ளத்தில் நேற்று செல்பி எடுக்கும் பொழுது தவறி விழுந்து மனைவி கண்ணெதிரே கணவன் தண்ணிரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்த... 99% நிரம்பிய மதுராந்தகம் ஏரி | Madurantakam Eri Nearby Full | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஏரி விரைவாக நிரம்புகிறது. அதன் முழு கொள்ளளவான 23.3 அடியில் இதுவரை 22.9 எட்டியது. தற்போது கிளியாறு மற... ஏரியாவில் காணமல் போன ஏரி | வெளியான சேட்டிலைட் மேப்பால் அதிர்ச்சி | Velachery Lake Missing in Sattlite Map | Vil Ambu News | வில் அம்பு செய்திகள் சென்னையின் புறநகர் பகுதியான வேளச்சேரி ஒரு காலத்தில் முழுக்க, ஏரியாக இருந்த பகுதி , என்பதற்கான வரைபட தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக சுற... அச்சிறுபாக்கம் - எலப்பாக்கம் - இராமாபுரம் சாலைகளில் காவு வாங்கும் பெரும் பள்ளங்கள் | Acharapakkam - Elapakkam - Ramapuram Road Issue | Vil Ambu News | வில் அம்பு செய்திகள் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கம் - எலப்பாக்கம் மாநில நெடுஞ்சாலை மற்றும் எலப்பாக்கம் - இராமாபுரம் மாநில நெடுஞ்சசா... வண்டலூர் மேம்பாலம் அருகே மயங்கிய நிலையில் இருந்த முதியவருக்கு உதவிய காவலர் | Vandalur Police News | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் மேம்பாலம் அருகே முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் படுத்துகொண்டு இருந்தார். அவ்வழியாக சென்ற காவலர் சந்தோஷ் என்...
தேர்தல் முடிவுகள் - 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் இந்தியா vs இங்கிலாந்து தமிழ்நாடு பிரிமீயர் லீக் ஐபிஎல் 2021 இந்தியா vs நியூசிலாந்து டி20 உலகக் கோப்பை நேரலை செய்தித் தொகுப்பு அரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு தற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை இன்று ஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம் இந்தியா vs நியூசிலாந்து ஸ்பெஷல்ஸ் தேர்தல் முடிவுகள் - 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் இந்தியா vs இங்கிலாந்து தமிழ்நாடு பிரிமீயர் லீக் ஐபிஎல் 2021 இந்தியா vs நியூசிலாந்து டி20 உலகக் கோப்பை அதிமுகவில் ஜெயலலிதா ஆளுமை - ராணுவ கட்டுப்பாட்டில் அதிமுக பதிவு : அக்டோபர் 17, 2021, 07:16 PM பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அதிமுகவில், எம்ஜிஆருக்கு பின்னர் ஜெயலலிதாவின் ஆளுமை குறித்து ஒரு தொகுப்பை பார்க்கலாம்... WhatsApp Facebook Twitter Mail எம்.ஜி.ஆரை போலவே திரையுலகில் வெற்றிப்பாதையில் பயணித்த ஜெயலலிதா, 1982 ஜூன் 5 ஆம் தேதி எம்.ஜி.ஆர். முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். எம்.ஜி.ஆரின் சத்துணவு திட்டத்தை மேற்பார்வையிடும் உயர்மட்ட கமிட்டி உறுப்பினரான ஜெயலலிதா, 1983 ஆம் ஆண்டு அதிமுக கொள்கை பரப்பு செயலளாராகவும், 1984 ஆம் ஆண்டு கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராகவும் உயர்ந்தார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், இந்தி என்ற பன்மொழி ஆளுமை அரசியலில் ஜெயலலிதாவுக்கு சிறப்பான இடத்தை பெற்று தந்தது. கட்சி பொதுக்கூட்டங்களில் அவருடைய ஆவேச பேச்சு பொதுமக்களை வெகுவாக ஈர்த்தது. எம்.ஜி.ஆர். மறைவையடுத்து கட்சி பிளவுப்பட்டு, இரட்டை இலை முடக்கப்பட்டது. ஜெயலலிதா தலைமையில் செயல்பட்ட அணி சேவல் சின்னத்தில் களமிறங்கி 1989 சட்டப்பேரவை தேர்தலில் 27 இடங்களை வென்றது. அதே ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, காங்கிரஸ் கூட்டணி தமிழகம், புதுச்சேரியில் 39 இடங்களில் வென்றது. தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்றார் ஜெயலலிதா. 1991 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, காங்கிரஸ் கூட்டணி 234 இடங்களில் 224 இடங்களை வென்றது. 39 நாடாளுமன்ற தொகுதிகளையும் கைப்பற்றியது. பெரும்பான்மையுடன் முதல்வர் அரியணையில் ஏறினார் ஜெயலலிதா. அப்போது தமிழக சட்டப்பேரவையில் அதிகப்பட்சமாக 25 பெண் எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். 1992 ஆம் ஆண்டு பெண் சிசுக்கொலையை தவிர்க்கும் வகையில் அவர் கொண்டுவந்த தொட்டில் குழந்தை திட்டம்; மகளிர் காவல் நிலையம், அம்மா உணவகம் போன்ற திட்டங்கள் பெரும் வரவேற்பை பெற்று இன்றும் நடைமுறையில் உள்ளது. பின்னர் 1996 சட்டப்பேரவை தேர்தலில் அவரது தலைமையில் கட்சி தோல்வியை தழுவிய நிலையில் 2001-ல் ஆட்சியை கைப்பற்றியது. 2006 சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியை தழுவிய அதிமுக, 2011, 2016 தேர்தலில் அமோக வெற்றியை பெற்று தொடர்ச்சியாக 2 முறை எம்.ஜி.ஆர். வழியில் அதிமுகவை அரியணையில் ஏற்றிக் காட்டினார், ஜெயலலிதா. எம்.ஜி.ஆருக்கு பின்னர் பெரிய கட்சி என்ற அந்தஸ்துக்கு அதிமுகவை வலுப்படுத்தினார். கடந்த 2016 ஆம் ஆண்டு அவரது மறைவையடுத்து இரண்டு அணிகளாக அதிமுக பிரிந்தது. பின்னர் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., இரட்டை தலைமையின் கீழ் அதிமுக வந்தது. ஜெயலலிதா இல்லாமல் இரட்டை தலைமையின் கீழ் சட்டமன்ற தேர்தலை சந்தித்த அதிமுக, ஆட்சியை இழந்து, பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. உள்ளாட்சி தேர்தல் தோல்வி, சசிகலாவின் அரசியல் பிரவேசம், இரட்டை தலைமை மீது எழும் தொடர் கேள்விகள் என பொன்விழா ஆண்டில் அந்த கட்சியில் அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை தமிழகம் உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கிறது. தொடர்புடைய செய்திகள் நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. 190 views மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை 94 views கரூரில் வெளுத்து வாங்கும் கனமழை - மிதக்கும் குடியிருப்புகள் கரூரில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. 11 views மேலும் >> பிற செய்திகள் ஒரு மாசமா ஒரே விலை...! பெட்ரோல், டீசல் விலை 30ஆவது நாளாக மாற்றமின்றி அதே விலைக்கு விற்கப்பட்டு வருகிறது 0 views காதலன் மீது பிக் பாஸ் ஜூலி புகார் திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னிடம் பண மோசடி செய்துவிட்டதாக தன் காதலன் மீது நடிகை ஜூலி போலீசில் புகார் அளித்துள்ளார். 36 views மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (04/12/2021) | Noon Headlines | Thanthi TV மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (04/12/2021) | Noon Headlines | Thanthi TV 9 views அதிமுக அலுவலகத்தில் கைகலப்பு - பெரும் பரபரப்பு அதிமுக தேர்தலுக்காக, கட்சியின் தலைமை அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், திடீர் கைகலப்பு சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. 13 views காதலன் மீது ஆசிட் வீசிய காதலி - கோவையில் பரபரப்பு காதலன் மீது ஆசிட் வீசிய காதலி - கோவையில் பரபரப்பு 14 views கரூரில் வெளுத்து வாங்கும் கனமழை - மிதக்கும் குடியிருப்புகள் கரூரில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. 11 views மேலும் >> பதிவு செய்வது எப்படி? ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும். ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.
Junior Vikatan - 10 June 2020 - மிஸ்டர் கழுகு: முதல்வர் போட்ட இடமாற்றல் உத்தரவு... மனம் மாற்றிய அமைச்சர் | mister-kazhugu-politics-and-current-affairs-june-10-2020 - Vikatan Save the vikatan web app to Home Screen tap on Add to home screen. X READ IN APP Login செய்திகள் லேட்டஸ்ட் இந்தியா தமிழ்நாடு உலகம் வணிகம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இதழ்கள் ஆனந்த விகடன் ஜூனியர் விகடன் அவள் விகடன் சக்தி விகடன் நாணயம் விகடன் மோட்டார் விகடன் பசுமை விகடன் விகடன் செலக்ட் தீபாவளி மலர் அவள் கிச்சன் டெக் தமிழா ஸ்போர்ட்ஸ் விகடன் சுட்டி விகடன் டாக்டர் விகடன் அவள் மணமகள் விகடன் தடம் விகடன் ஆர்கைவ்ஸ் சினிமா தமிழ் சினிமா இந்திய சினிமா ஹாலிவுட் சினிமா சினிமா விமர்சனம் சின்னத்திரை மெகா சீரியல்கள் வெப் சீரிஸ் ஆன்மிகம் திருத்தலங்கள் மகான்கள் விழாக்கள் இன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன் குருப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி ஜோதிடம் விளையாட்டு கிரிக்கெட் கால்பந்து ஐ.பி.எல் ஆன்லைன் தொடர்கள் New My News ராசி காலண்டர் மேலும் மெனுவில் Search ஜூனியர் விகடன் அலசல் கோயம்பேடு பகீர்! - மாற்றப்பட்ட மார்க்கெட்... யாருடைய டார்கெட்? - ஜூ.வி ஸ்பெஷல் ரிப்போர்ட் கொரோனா ஊழல்... அரசின் மறுப்பும் ஜூ.வி-யின் கேள்விகளும்! ஆபத்தில் இந்தியாவின் சூழலியல் பாதுகாப்பு! கழுகார் மிஸ்டர் கழுகு: முதல்வர் போட்ட இடமாற்றல் உத்தரவு... மனம் மாற்றிய அமைச்சர் கழுகார் பதில்கள் சமூகம் இதுதானா உங்கள் சமூக இடைவெளி? அன்பாயுதம்! கைவிடப்படும் நோயாளிகள்... எகிறும் கொரோனா பலி! கல்லணைக் கால்வாய்க்கு ஆபத்து! பசுஞ்சோலையை மொட்டையடித்த டிம்பர் மாஃபியா! வீட்டு வேலைக்கு அழைத்துவந்து பாலியல் தொழிலில் தள்ளிய கொடுமை! 2018-ல் மழை... 2019-ல் வெயில்... இப்போது கொரோனா... அரசியல் சசிகலா பக்கம் சாய்கிறாரா பன்னீர்செல்வம்? தொடர்கள் ஜெயில்... மதில்... திகில்! - 29 - கைதி உடையில் கருணாநிதி! கலை மிஸ்டர் மியாவ் Published: 06 Jun 2020 6 AM Updated: 06 Jun 2020 6 AM மிஸ்டர் கழுகு: முதல்வர் போட்ட இடமாற்றல் உத்தரவு... மனம் மாற்றிய அமைச்சர் கழுகார் ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட் Use App மிஸ்டர் கழுகு பதவி கிடைக்காத வருத்தத்தில் இருந்த துரைமுருகன் சில நாள்களுக்கு முன்னர் ஏற்காடுக்குச் சென்று ஓய்வு எடுத்திருக்கிறார் உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற... இன்ஸ்டால் விகடன் ஆப் பிரீமியம் ஸ்டோரி “அக்னி நட்சத்திரம் முடிந்ததும் வெயிலின் கொதிப்பு ஓரளவு அடங்கியிருக்கிறது. அப்பாடா...” என்றபடி அலுவலகத்துக்கு ஆஜரான கழுகாருக்கு இளநீர்ப் பாயசம் கொடுத்தோம். “ஆஹா... அற்புதம்!’’ என்றபடி பருகத் தொடங்கியவரிடம், “தி.மு.க-வில் துரைமுருகனுக்கு மீண்டும் பொருளாளர் பதவி கொடுத்துவிட்டார்களே...” என்று கேள்வியை வீசினோம். “நான் ஏற்கெனவே உம்மிடம் சொன்னதுதான். பதவி கிடைக்காத வருத்தத்தில் இருந்த துரைமுருகன் சில நாள்களுக்கு முன்னர் ஏற்காடுக்குச் சென்று ஓய்வு எடுத்திருக்கிறார். அங்கிருந்து ஜெகத்ரட்சகன், டி.ஆர்.பாலு உள்ளிட்ட சீனியர்களிடம் தனது வழக்கமான கிண்டல் பாணியில் போனில் பேசி பொழுதைக் கழித்திருக்கிறார். அப்போதெலாம், ‘நான் என்னப்பா... ஒரு சாதாரண உறுப்பினர்’ என்றரீதியில் பேசினாராம். இந்தத் தகவல்கள் தலைமையின் காதுக்கு போகவே... அதன் பிறகே இப்படியோர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.” துரைமுருகன், ஸ்டாலின் “துரைமுருகனுக்கு கருணாநிதியின் பிறந்தநாள் பரிசு என்று சொல்லும்!’’ ‘‘ஆமாம். கருணாநிதியின் பிறந்தநாள் விழாவுக்காகச் சென்னை வந்த துரைமுருகன், அன்றைய தினம் காலையில் ஸ்டாலினைச் சந்தித்துள்ளார். அப்போதும் சரியாக முகம் கொடுத்து பேசவில்லையாம். இது ஸ்டாலினுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. பிறகு ஸ்டாலினே ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட சீனியர்களிடம் ‘துரை அண்ணன் வருத்தத்தில் இருப்பதுபோலத் தெரிகிறது. மாற்று ஏற்பாட்டை உடனடியாக செய்துவிட வேண்டும்’ என்று தனது எண்ணத்தையும் வெளிப்படுத்தினாராம். அதன் தொடர்ச்சியாகத்தான் அன்று மாலையே அவசரமாக துரைமுருகனுக்கு மீண்டும் பொருளாளர் பதவியை வழங்கியிருக்கிறார்கள்.” “சரி... பொதுச்செயலாளர் தேர்வு எப்போதுதான் நடக்குமாம்?” “ `செப்டம்பர் மாதத்தில்தான் சாத்தியம்’ என்கிறார்கள். துரைமுருகனைப்போல டி.ஆர்.பாலுவும் வருத்தத்தில் இருக்கிறாராம். அடுத்தகட்டமாக அவரும் தலைமைக்கு நெருக்கடியைக் கொடுக்கலாம்.” Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். “தி.மு.க-வில் அதிரடிக்குப் பெயர்பெற்ற ஜெ.அன்பழகன் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாரே?” அன்பழகன் “கடைசியாக நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் `ஐபேக்’ நிறுவன தலையீடு தொடர்பாக ஸ்டாலினிடம் மாற்றுக் கருத்துகளை துணிச்சலாக எடுத்துவைத்தார் அன்பழகன். அப்போதே ஸ்டாலின், ‘உன் உடல்நிலையை முதலில் பார்த்துக்கொள் அன்பு’ என்று சொல்லியிருக்கிறார். கொரோனா நிவாரணப் பணிகளில் தீவிரமாக இருந்த அன்பழகனால் தனக்கும் கொரோனா தொற்று இருந்ததைக் கண்டறிய முடியவில்லை. ஏற்கெனவே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட அன்பழகன், அதற்கும் மருந்துகளைச் சாப்பிட்டு வருகிறார். இந்த நிலையில்தான் அவரையும் கொரோனா வைரஸ் தொற்றியிருக்கிறது என்கிறார்கள்.’’ முதல்வர் - ஆளுநர் சந்திப்பின்போது... “அச்சச்சோ!” “கருணாநிதி பிறந்தநாளுக்கான நலத்திட்டங்கள் வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார் அன்பழகன். ஆனால், அதற்கு முன்தினம் அவருக்கு வயிற்றுவலி அதிகமாகியிருக்கிறது. உடனடியாக ஜெகத்ரட்சகனிடம் பேசியவர், ரேலா மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்ந்திருக்கிறார். கருணாநிதி பிறந்தநாள் அன்று காலையில்தான் அன்பழகனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. கூடவே அவருக்கு மூச்சுத்திணறலும் அதிகமாகியிருக் கிறது. சிறுநீரகச் செயல்பாட்டிலும் சிக்கல் வந்ததாம். இதனால் அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தியிருக் கிறார்கள். அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருக்கிறது. ‘அன்பழகனை எப்படியாவது குணப்படுத்தி விடுங்கள்’ என்று மருத்துவர்களிடம் பேசியிருக்கிறார் ஸ்டாலின்.’’ ‘‘தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்துக்குப் பதவி நீட்டிப்பு வந்துள்ளதே?” “ஜூலை மாதத்துடன் சண்முகம் ஓய்வு பெறவிருப்பதால் அவரது பதவிக்காலத்தை ஆறு மாதங்கள் நீட்டிக்க வேண்டும் என்று முதல்வர் தரப்பிலிருந்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதப்பட்டிருந்தது. ஆனால், மத்திய அரசு தரப்பிலிருந்து மூன்று மாதங்களுக்கு மட்டும் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. தவிர, `இப்படியான பதவி நீட்டிப்புகளை மூன்று மூன்று மாதங்களாக மட்டுமே நீட்டிக்க முடியும்’ என்கிறார்கள் அதிகாரிகள் தரப்பில்.” நிர்மலா சீதாராமன் “சரி... மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் என்ன நடந்தது?” “நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். ஆனால், அவற்றுக்குத் தேவையான நிதியை எந்த வகையில் கொண்டுவருவது என்கிற குழப்பம் மத்திய அரசிடம் இருக்கிறதாம். இதுவரை மத்திய அரசு அறிவித்த நிதியுதவித் திட்டம் எதுவும் மக்களை நேரடியாகச் சென்று சேரவில்லை; திட்டங்கள் தொடர்பாக மக்களிடம் எந்தத் தாக்கமும் ஏற்படவில்லை. இந்தத் தகவலும் உளவுத்துறை மூலமாக மத்திய அரசுக்கு சென்றுள்ளது. இதைப் பற்றியும் தீவிரமாக ஆலோசனை செய்திருக்கிறார்கள். அடுத்த வாரம் ஊரடங்கு குறித்தும், நிதியுதவி தொடர்பாகவும் மேலும் சில அறிவிப்புகளை வெளியிடுவாராம் பிரதமர்.’’ விஜயபாஸ்கர் - பீலா ராஜேஷ் “ `பிரதமரின் கொரோனா நிவாரண நிதியைப் பற்றி எந்தத் தகவலும் அளிக்க முடியாது’ என்று பிரதமர் அலுவலகத் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறதே..?” ‘‘இதைவைத்து காங்கிரஸ் கட்சி பெரிய அளவில் சர்ச்சையைக் கிளப்ப இருக்கிறதாம். `கொரோனா காலத்தில் பல்வேறு நிறுவனங்கள் பிரதமரின் நிவாரண நிதிக்கு உதவிகளைச் செய்துள்ளன. சுமார் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதி வந்திருக்கும்’ என்கிறார்கள். ஆனால், ‘பி.எம் கேர் என்கிற பெயரில் தனியான அறக்கட்டளை மூலமே இந்த நிதி வசூல் நடப்பதால், இதைப் பற்றிப் பொதுவெளியில் கருத்துச் சொல்ல அவசியம் இல்லை’ என்று பிரதமர் அலுவலகத்தில் பதில் சொல்லியிருக்கிறார்கள்.’’ “அதெல்லாம் இருக்கட்டும்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக ஆளுநரைச் சந்தித்ததில் ஏதேனும் முக்கிய செய்தி இருக்கிறதா?’’ “ `வழக்கமான சந்திப்புதான்’ என்கிறார்கள். ஆனால், கொரோனா தீவிரமாகப் பரவுவது தொடர்பாக இந்த முறை ஆளுநர் தரப்பில் சற்றே கடுமை காட்டப்பட்டதாம். சந்திப்பின்போது, ‘சென்னையில் கொரோனா கட்டுக்கடங்காமல் பரவிவருகிறது. பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசு என்னதான் செய்துவருகிறது? இப்படியான சூழலில் சுகாதாரத்துறையில் பல்வேறு குளறுபடிகள் நடப்பது குறித்தும் தகவல்கள் வருகின்றன’ என்று ஆளுநர் தரப்பில் கடும் வருத்தம் தெரிவிக்கப்பட்டதாம். அப்போது, ‘விரைவில் கட்டுக்குள் கொண்டுவந்துவிடுவோம்’ என்று மட்டும் முதல்வர் தரப்பில் சொல்லியிருக்கிறார்கள்.’’ ‘‘சுகாதாரத்துறைச் செயலாளரை மாற்றுவது குறித்து தலைமையிலிருந்து உத்தரவிடப்பட்டு, இடையே அது கேன்சல் செய்யப்பட்டதாகவும் ஒரு தகவல் கோட்டை வட்டாரத்தில் சுற்றுகிறதே?” ``சுகாதாரத்துறையில் நேர்மையான அதிகாரி என்று அறியப்பட்ட திட்ட இயக்குநர் நாகராஜுக்கும், துறைச் செயலாளரான பீலா ராஜேஷுக்கும் கருத்து முரண்பாடுகள் இருந்தன. ஒருகட்டத்தில் முதல்வர் கலந்துகொண்ட நிகழ்ச்சியிலேயே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். அப்போது சில முறைகேடுகளை முதல்வர் தரப்பிடமே சுட்டிக்காட்டியிருக்கிறார் நாகராஜ். `அப்போதே பீலாவைத் துறையிலிருந்து மாற்றிவிடுங்கள்’ என்று தனது செயலாளர்களிடம் சொல்லிவிட்டு கார் ஏறிவிட்டாராம் முதல்வர். ஆனால், முதல்வர் வீடு போய்ச் சேரும்போது வீட்டில் காத்துக்கொண்டிருந்த விஜயபாஸ்கர் தரப்பினர், ‘பீலா ராஜேஷை இப்போது மாற்றினால் கொரோனா பணிகள் பாதிக்கப்படும்’ என்றதுடன், துறைரீதியான இன்னும் சில உள் விஷயங்களைச் சொல்லி பீலாவைக் காப்பாற்றிவிட்டு, நாகராஜை மாற்றிவிட்டார்கள் என்கிறார்கள்.’’ ‘‘அமைச்சர்கள்மீது முதல்வர் கோபமாக இருக்கிறார் போலிருக்கிறது?’’ ‘‘சில நாள்களுக்கு முன்னர் ராஜேந்திர பாலாஜியின் ஆதரவாளர்கள் சிலர், ‘ஆகஸ்ட் மாதம் சின்னம்மா சிறையிலிருந்து வந்துவிடுவார். அதற்குப் பிறகு அண்ணன் சில அதிரடிகளை அரங்கேற்றப் போகிறார்’ என்று கோட்டை வட்டாரத்தில் கொளுத்திப்போட... தகவல் அப்படியே முதல்வர் தரப்புக்குச் சென்றுள்ளது. கோபமடைந்த முதல்வர் தரப்பு, பிரச்னை ஓரளவு தணிந்த பிறகு ராஜேந்திர பாலாஜிக்கு மட்டுமல்லாமல், மேலும் சிலருக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கவிருக்கிறதாம்!’’ ‘‘ஓஹோ!’’ ‘‘சென்னையில் ஈ.சி.ஆர் பகுதியில் தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் பலரும் பல கோடி ரூபாய் மதிப்பில் இடம் வாங்கிவருகிறார்கள். அந்த இடங்களுக்குள் பிரபல மூன்று எழுத்து நிறுவனத்தைச் சேர்ந்த வாரிசு ஒருவர் புகுந்து வில்லங்கம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளாராம். `புதிதாக யார் இடம் வாங்கினாலும், போலி ஆவணங்களை வைத்து சம்பந்தப்பட்டவர்களிடம் பிரச்னை செய்து பெரும் தொகையைக் கறந்துவிடுகிறார்’ என்கிறார்கள். இதற்கு அந்தப் பகுதியின் முக்கிய காக்கியும் உடந்தையாக இருக்கிறாராம்” என்ற கழுகார் சிறகுகளை விரித்துப் பறந்தார். துரும்பைக்கூடக் கிள்ளிப் போடவில்லை தீபா! ‘ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் எங்களைக் கேட்காமல் எந்த ஆணையும் பிறப்பிக்கக் கூடாது’ என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்திருக்கிறார். இதற்கிடையே `தீபா - தீபக் இடையே உரசல் மீண்டும் ஆரம்பித்துவிட்டது’ என்கிறார்கள். “போயஸ் கார்டன் இல்லம் தொடர்பான வழக்கு விவகாரத்தில் தீபா சிறு துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை; இப்போது உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுவைக்கூட நாங்கள்தான் தாக்கல் செய்ய வேண்டியிருக்கிறது; இந்த மனுவில் கையெழுத்து போடக்கூட தீபா இழுத்தடித்தார். தீர்ப்பு சாதகமாக வந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் தீபாவைச் சுற்றி சேரக் கூடாத கூட்டம் ஒன்று சேர்ந்துவிட்டது” என்று தீபக் தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பித் தீர்க்கிறாராம்! நிறுத்தப்பட்ட ‘காட்மேன்’! தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று தயாரித்த ‘காட் மேன்’ வெப் சீரீஸ் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராகச் சில காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அந்தத் தொலைக்காட்சி நிறுவனத்தின் முதலாளியைச் சந்தித்துப் பேசியிருக் கிறாராம் சுப்பிரமணிய சுவாமி. இருவருமே நெருங்கிய நண்பர்கள். இந்தச் சந்திப்புக்குப் பிறகு தொடரை ஒளிபரப்புவதை தற்காலிகமாக ஒத்திவைத்துவிட்டதாம் நிறுவனம். நீதிமன்றப் படியேறும் கெளரி காமாட்சி! காஞ்சி மடத்துக்குச் சொந்தமாக திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி கைமாறும் விவகாரம் சூடுபிடித்துள்ளது. அந்தக் கல்லூரியை கெளரி காமாட்சி என்பவர் நிர்வகித்துவருகிறார். இந்தநிலையில் கல்லூரியை அவரிடமிருந்து பறித்து, தமிழக அரசியல் புள்ளி ஒருவரிடம் விற்பதற்காக அதிகார மட்டத்திலிருக்கும் முக்கியஸ்தர் மூலம் மடம் தரப்பில் தீவிரமாகப் பேசிவருகிறார்கள். இதைத் தொடர்ந்து அந்தக் கல்லூரியை ஜெயேந்திரர், தன்னிடம் ஒப்படைத்தபோது பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தங்கள், ஆவணங்களுடன் நீதிமன்றத்தை நாடவிருக்கிறாராம் கெளரி காமாட்சி.
உத்தரப்பிரதேசத்தின் மீரட் பகுதியில் இந்து அமைப்பு ஒன்று மார்ச் 18-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்கியமஹாயாக்யா அல்லது இந்து மதச் சடங்கு என்ற நிகழ்ச்சியில் மாமரத்தின் மரத் துண்டுகளை…
பெயருக்கு ஏற்ப வெள்ளி கிரகம் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு மேற்கு வானில், அல்லது சூரிய உதயத்துக்கு முன்னர் கிழக்கு வானில், வைர மூக்குப் பொட்டு போல ஜொலிக்கும். மாலையில் இருட்டிய பிறகு மேற்கு வானில் தெரிந்தால் அதன் பெயர் அந்தி வெள்ளி, அதி காலையில் கிழக்கு வானில் தெரிந்தால் விடி வெள்ளி என்று அழைக்கின்றனர். இரண்டுமே ஒன்று தான். வெள்ளி (Venus) கிரகத்தைக் காணாதவர்கள் இருக்க முடியாது. பிரகாசமான ஒளியை வீசுவதால் அது இயல்பாக உங்களைக் கவரும். மேற்கு வானில் சந்திரன் அருகே ஒளிப்புள்ளியாகத் தெரிவதே வெள்ளி கிரகம் ஆனால் ஜூன் 6 ஆம் தேதி காலையில் சூரியனின் ஒளித் தட்டில் வெள்ளி கிரகத்தை நீங்கள் கருப்புப் பொட்டு வடிவில் காணலாம். இது ஒரு வகையில் கிரகணம் போன்றதே. ஆனாலும் இதை கிரகணம் என்று வர்ணிப்பதில்லை. சூரிய கிரகணம் பற்றி நமக்குத் தெரியும். சந்திரன் சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே நேர் குறுக்காக வந்து நிற்கும் போது அது சூரிய ஒளித் தட்டை முற்றிலுமாக அல்லது ஓரளவில் மறைக்கும். எல்லா அமாவாசைகளிலும் சந்திரன் இப்படி சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே அமைந்திருக்கும் என்றாலும் நேர் குறுக்கே வராது. சந்திரனின் சுற்றுப்பாதை பெரும்பாலான சமயங்களில் சாய்வாக அமைவதே அதற்குக் காரணம். அபூர்வமாக சூரியன்,- சந்திரன் - பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அந்த வரிசையில் அமையும் போது மட்டுமே சூரிய கிரகணம் நிகழ்கிறது. வெள்ளி கிரகத்தின் சுற்றுப்பாதை பூமிக்கும் சூரியனுக்கும் இடையே அமைந்துள்ளது சூரிய மண்டலத்தில் புதன் கிரகம் சூரியனுக்கு அருகில் உள்ளது. புதன் முதல் வட்டத்தில் உள்ளது என்றால், வெள்ளி கிரகம் இரண்டாவது வட்டத்திலும் பூமி மூன்றாவது வட்டத்திலும் அமைந்துள்ளன. வேறு விதமாக்ச் சொல்வதானால் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே புதன், வெள்ளி ஆகியவை அமைந்துள்ளன. (இந்திய ஜோசிய சாஸ்திரத்தில் வெள்ளி கிரகத்துக்கு சுக்கிரன் என்று பெயர்) வெள்ளி கிரகமானது 583 நாட்களுக்கு ஒரு முறை சூரியனுக்கும் பூமிக்கும் நடுவே அமைகிறது. அதாவது சூரியன், வெள்ளி, பூமி ஆகியவை ஒரே வரிசையில் இருக்கும். ஆனால் வெள்ளியின் சுற்றுப்பாதை சற்றே சாய்வாக இருப்பதால் அது சூரியனுக்கும் பூமிக்கும் நேர் குறுக்கே வந்து நிற்காது. அதாவது அது சூரியனை மறைத்துக் கொண்டு நிற்பதில்லை.ஆனால் 105 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியன், வெள்ளி, பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் அமைகின்றன. ஆனால் நடுவே அமைந்த வெள்ளி கிரகம் சூரியனை முழுதாக மறைப்பதில்லை. இதற்குக் காரணம் உண்டு. சூரியன், வெள்ளி (சுக்கிரன்) பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருந்தால் மட்டுமே வெள்ளி கடப்பு நிகழும் சந்திரன் பூமியிலிருந்து அதிகபட்சம் 4 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. வெள்ளி கிரகமோ 4 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நீங்கள் டிவி பார்க்கும் போது ஒரு கண்ணை மூடிக்கொண்டு இன்னொரு கண் முன்னே புருவத்தைத் தொடுகிற அளவுக்கு உங்கள் கட்டை விரலை வைத்துக் கொண்டால் டிவி திரை முற்றிலுமாக மறைக்கப்படும். ஆனால் நீங்கள் அடுத்து கையை நன்கு நீட்டி வைத்துக் கொண்டால் அதே கட்டை விரல் டிவி திரையை மறைக்காது. டிவி திரையின் பின்னணியில் கட்டை விரல் கருப்பாகத் தெரியும். வெள்ளி கிரகம் சூரியனுக்கும் பூமிக்கும் நேர் குறுக்கே வந்து நிற்கும் போது அது சூரிய ஒளித் தட்டில் வெறும் கருப்புப் பொட்டு போலத் தெரிவதற்கு அதுவே காரணம். இதைத் தான் வெள்ளி கடப்பு (Transit of Venus) என்று குறிப்பிடுகின்றனர். இந்த நிகழ்வை தமிழகத்தில் உள்ளவர்கள் ஜூன் 6 ஆம் தேதி காலை காணலாம். சூரியன் உதிக்கும் போதே அதன் இடது புறத்தின் மேல் மூலையில் வெள்ளி கிரகம் கருப்புப் பொட்டாகத் தெரியும். இது இந்திய நேரப்படி காலை 10-20 வரை தெரியும். பின்னர் வெள்ளி கிரகம் சூரிய ஒளித் தட்டிலிருந்து விலகி விடும். சூரிய ஒளித் தட்டில் வெள்ளி இவ்விதமாகக் கரும் புள்ளியாகத் தெரியும் சூரிய ஒளித் தட்டில் வெள்ளி கிரகம் கரும் பொட்டாகத் தெரிகின்ற வேளையில் வெள்ளி கிரகத்துக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம் சுமார் 11 கோடி கிலோ மீட்டராக இருக்கும். வெள்ளி கடப்பின் போது அதை உலகின் பல பகுதிகளிலும் இருந்து விஞ்ஞானிகள் ஆராய்வார்கள். வெள்ளி கடப்பு ஒரு தடவை நிகழ்ந்தால் அடுத்து எட்டு ஆண்டுகளில் அதே போல இன்னொரு வெள்ளி கடப்பு நிகழும். இதற்கு முன்னர் 2004 ஆம் ஆண்டில் இது போன்ற வெள்ளி கடப்பு நிகழ்ந்தது. இதற்கு முன்னர் வெள்ளி கடப்பு 1874 ஆம் ஆண்டிலும் 1882 ஆம் ஆண்டிலும் நிகழ்ந்தது. அடுத்து 2117 ஆம் ஆண்டிலும் 2125 ஆம் ஆண்டிலும் நிகழும். ஆனால் அவை தமிழகத்தில் தெரியாது. 2255 ஆம் ஆண்டில் நிகழும் வெள்ளி கடப்பு தமிழகத்தில் தெரியும். சூரிய ஒளித் தட்டில் வெள்ளி எவ்விதமாக நகரும் என்பதை இந்த வரை படம் காட்டுகிறது முன்பு 1761 ஆம் ஆண்டிலும் பின்னர் 1769 ஆம் ஆண்டிலும் நடந்த வெள்ளி கடப்பு வரலாற்று ரீதியிலும் அறிவியல் ரீதியிலும் முக்கியமானது. பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம் எவ்வளவு என்பது அறியப்படாத காலம் அது. வெள்ளி கடப்பின் போது வெள்ளி கிரகம் சூரிய ஒளித் தட்டை எப்போது தொடுகிறது, எப்போது விலகுகிறது என்பதை மிகத் துல்லியமாக அறிந்து கொண்டால் பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரத்தைக் கணக்கிட்டு விட முடியும் என்று அப்போது இங்கிலாந்தின் மற்றும் ரஷியாவின் விஞ்ஞானிகள் கருதினர். ஆகவே சூரிய கடப்பு நிகழும் போது உலகின் பல பகுதிகளுக்கும் விஞ்ஞானிகளை அனுப்பி இத்தகவல்களைப் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஏற்பாட்டின்படி 1761 ஆம் ஆண்டில் பிரெஞ்சு விஞ்ஞானி ஒருவர் சைபீரியாவுக்குச் சென்று வெள்ளி கடப்பு தகவலகளைப் பதிவு செய்தார். அதே விஞ்ஞானி பின்னர்1769 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவுக்கும் சென்று வெள்ளி கடப்பு நிகழ்வை ஆராய்ந்தார். அங்கு அவர் டைபாய்ட் ஜூரத்தால் பாதிக்கப்பட்டு கடைசியில் இறந்தே போனார். 1769 ஆம் ஆண்டு வெள்ளி கடப்பு நிகழ்ச்சியைப் பதிவு செய்வதற்காக இங்கிலாந்திலிருந்து பிரபல கேப்டன் குக் தென் பசிபிக் கடலில் உள்ள தாகிதி தீவுக்கு அனுப்பப்பட்டார். அப்போதெல்லாம் பாய்மரக் கப்பலில் தான் கடற்பயணம் மேற்கொள்ள முடியும். கேப்டன் குக் எட்டு மாத கால கடற்பயணத்துக்குப் பிறகு தாகிதி தீவுக்கு போய்ச் சேர்ந்து அங்கிருந்தபடி வெள்ளி கடப்பு நிகழ்ச்சியைப் பதிவு செய்தார். தாகிதி தீவுக்கு அனுப்பப்பட்ட கேப்டன் குக் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கில்லாமே டி ஜெண்டில் என்ற விஞ்ஞானியின் அனுபவம் துயரம் வாய்ந்தது. அவர் 1760 ஆண்டு பாண்டிச்சேரி நோக்கிக் கப்பலில் கிளம்பினார். இந்தியாவில் காலூன்ற அப்போது இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையே கடும் போட்டா போட்டி நடந்து கொண்டிருந்தது. அவர்கள் இடையிலான போரில் பாண்டிச்சேரி அடிக்கடி கைமாறியது. ஜெண்டில் கிளம்பிய சமயம் பாண்டிச்சேரி பிரான்ஸ் வசம் இருந்தது. ஆனால் அவர் பாண்டிச்சேரி வந்து சேருவதற்குள் அது பிரிட்டிஷார் வசமாகிவிட்டிருந்தது. ஆகவே பாண்டிச்சேரியில் வந்து இறங்க அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனாலும் நடுக்கடலில் கப்பலில் இருந்தபடியே அவர் 1761 ஆம் ஆண்டு வெள்ளி கடப்பை ஆராய்ந்தார். அடுத்த வெள்ளி கடப்புக்கு மேலும் எட்டு வருடங்கள் இருந்தாலும் அவர் நாடு திரும்ப விரும்பவில்லை. எப்படியும் குறிக்கோளை அடைய விரும்பிய அவர் ஆப்பிரிக்காவில் இருந்த பிரெஞ்சுப் பகுதிகளில் காலத்தைக் கழித்து விட்டு 1768 மார்ச் வாக்கில் மறுபடி பாண்டிச்சேரிக்குத் திரும்பினார். அது மீண்டும் பிரான்ஸ் வசம் வந்துவிட்டதால் அவருக்குப் பிரச்சினை ஏற்படவில்லை. பாண்டிச்சேரியில் சிறிய வான் ஆராய்வுக்கூடத்தை நிறுவி 1769 ஜூன் 4 ஆம் தேதி நிகழவிருந்த வெள்ளி கடப்பை ஆராய்வதற்கு ஆயத்தமானார். அந்தத் தேதியும் வந்தது. ஆனால் அவரது துரதிருஷ்டம், வான்ம் மேகங்களால் சூழப்பட்டதாகக் காட்சி அளித்தது..பைத்தியம் பிடிக்காத குறை. மனமொடிந்தவராக தாயகம் நோக்கிக் கிளம்பினார். கப்பலில் செல்கையில் அவருக்கு வயிற்றுக் கடுப்பு. ஏதோ தீவில் அவரை இறக்கிவிட்டுச் சென்றனர். பிறகு ஒரு வழியாக பிரான்ஸ் வந்து சேர்ந்தார். 11 ஆண்டுகளாக ஆளைக் காணாததால் அவர் செத்துவிட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தார். பிரெஞ்சு ராயல் அகாடமியில் அவர் வகித்து வந்த பதவியில் வேறு ஒருவர் அமர்ந்திருந்தார். அது கூடப் பரவாயில்லை. தமது மனைவி வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு விட்டதை அறிந்தார். ஜெண்டிலின் சொத்துக்களை அவரது சொந்தக்காரர்கள் பிரித்துக் கொண்டு அனுபவித்துக் கொண்டிருந்தனர். ஜெண்டில் வழக்குப் போட்டார். மன்னரிடம் முறையிட்டார். மீண்டும் பதவி கிடைத்தது. சொத்துக்களும் அவரது கைக்கு வந்தன. அவர் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு புது வாழ்க்கையைத் தொடங்கினார். எவ்வளவோ இன்னல்கள் ஏற்பட்டாலும் அறிவியலுக்காக அவற்றைத் தாங்கிக் கொண்ட விஞ்ஞானிகளில் ஜெண்டிலும் ஒருவர். 1769 ஆம் ஆண்டு வெள்ளி கடப்பின் போது உலகில் 70 க்கும் மேற்பட்ட இடங்களில் பல நாடுகளின் விஞ்ஞானிகளும் சேகரித்த தகவல்களை வைத்து கணக்கிட்டதில் பூமியிலிருந்து சூரியனுக்கு உள்ள தூரம் 93 மில்லியன் மைல்களாக இருக்கலாம் என்று உத்தேசமாகத் தோன்றியது. அதுவரையில் சூரியனுக்கு உள்ள தூரம் 55 மிலியன் மைல்களாக இருக்கலாம் என்று ஊகிக்கப்பட்டு வந்தது. 1960 களில் நவீன முறைகளைப் பின்பற்றிக் கணக்கிட்டதில் சூரியனுக்கு உள்ள சராசரி தூரம் 149 மிலியன் கிலோ மீட்டர் என்பது தெரிய வந்தது. இவையெல்லாம் ஒரு புறம் இருக்க, ஜூன் 6 ஆம் தேதி காலை சூரியன் உதித்த பின்னர் சூரிய ஒளித் தட்டில் வெள்ளி கிரகம் கருப்புப் பொட்டாகத் தெரியுமா என்பது உங்கள் ஊரில் வானிலை நிலவரம் எப்படி என்பதைப் பொருத்தது. பிரிவுகள்/Labels: சூரிய மண்டலம், வானவியல், வெள்ளி கடப்பு, வெள்ளி கிரகம் 4 comments: Salahudeen said... நல்ல தகவல் நன்றி ஐயா இங்கு பஹ்ரைன் தினசரியிலும் இது பற்றி செய்தி வந்துள்ளது. June 05, 2012 11:05 PM டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said... உங்கள் பதிவு பற்றி வலைசரத்தில் குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. நேரமிருப்பின் பார்த்து கருத்தளிக்கவும் http://blogintamil.blogspot.in/ June 07, 2012 12:07 PM madhu said... thanks sir.... June 07, 2012 7:13 PM JAYARAJ MATHS TEACHER said... Story of Mr.Jentile is very Pathetic. But his perseverence should be honoured June 11, 2012 12:27 PM Post a Comment Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) தேடல் (தமிழில் தேட உதவி) மிகவும் விரும்பியவை பூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம் சனிப் பெயர்ச்சி என்பது என்ன? பூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா? அதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்? மிகப் பிரகாசமான நட்சத்திரம்: மேற்கு வானில் காணலாம் அப்துல் கலாம்: இந்தியாவை வல்லரசாக மாற்றியவர் பூமி நிச்சயம் அழியப் போவதில்லை.: பீதி வேண்டாம் குலசேகரப்பட்டினத்தில் அப்படி என்ன இருக்கு? நூடுல்ஸ் விவகாரம்: உடலில் காரீயம் கலந்தால் பெரும் தீங்கு சீனாவை அஞ்ச வைக்கும் இந்தியாவின் அக்னி-4 ஏவுகணை வாசகர் படித்த பக்கங்கள் சமீபத்தில் விரும்பியவை அதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்? மேற்குத் திசையில் தெரியும் அதிர்ஷ்டக் கிரகம் பூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம் சனிப் பெயர்ச்சி என்பது என்ன? நூடுல்ஸ் விவகாரம்: உடலில் காரீயம் கலந்தால் பெரும் தீங்கு பூமி மூன்று நாள் இருளில் மூழ்கப் போகிறதா? ராமதுரை காலமானார் மிகப் பிரகாசமான நட்சத்திரம்: மேற்கு வானில் காணலாம் குலசேகரப்பட்டினத்தில் அப்படி என்ன இருக்கு? கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் ஜி.எஸ்.எல் வி ராக்கெட் எழுதிய யாவும் ► 2021 (2) ► January (2) ► 2018 (8) ► October (1) ► March (3) ► February (2) ► January (2) ► 2017 (2) ► December (2) ► 2016 (2) ► April (1) ► January (1) ► 2015 (37) ► December (2) ► November (1) ► October (1) ► September (1) ► August (4) ► July (4) ► June (5) ► May (1) ► April (4) ► March (3) ► February (5) ► January (6) ► 2014 (46) ► December (7) ► November (4) ► October (8) ► September (8) ► August (10) ► July (4) ► May (1) ► February (2) ► January (2) ► 2013 (28) ► December (2) ► November (2) ► October (3) ► September (1) ► August (1) ► July (3) ► May (5) ► April (5) ► March (3) ► February (1) ► January (2) ▼ 2012 (73) ► December (5) ► November (6) ► October (5) ► September (9) ► August (11) ► July (4) ▼ June (2) தலைக்கு மேலே இந்திய செயற்கைக்கோள்கள் சூரிய ஒளித் தட்டில் கருப்பாகத் தெரியும் வெள்ளி ► May (6) ► April (9) ► March (4) ► February (5) ► January (7) ► 2011 (67) ► December (12) ► November (20) ► October (35) பிரிவுகள் / Labels GSLV (6) PSLV (4) அணு உலை (6) அணுவியல் (8) அஸ்டிராய்ட் (11) எரிமலை (5) கடல் (10) கண்டப் பெயர்ச்சி (4) கண்டம் (8) சந்திரன் (17) சனி கிரகம் (3) சுற்றுச்சூழல் (8) சுனாமி (2) சூரிய மண்டலம் (11) சூரியன் (18) செயற்கைக்கோள் (15) செவ்வாய் கிரகம் (20) தினமணி சுடர் (2) நட்சத்திரம் (6) நியூட்ரினோ (6) புதன் கிரகம் (5) புயல் (4) புளூட்டோ (5) பூகம்பம் (9) பூமி (16) மங்கள்யான் (8) மற்றது (21) வால் நட்சத்திரம் (14) வானம் (6) வானவியல் (21) வானிலை (7) விஞ்ஞானிகள் (4) விண்கலம் (15) விண்கல் (9) விண்வெளி (19) விண்வெளி பயணம் (5) வியாழன் கிரகம் (8) வெள்ளி கிரகம் (6) Copyright © 2011-21 என்.ராமதுரை. தங்கள் பதிவில் அல்லது மற்ற தளங்களில் என் பதிவின் இணப்பை பகிர்ந்தால் மகிழ்ச்சி. இணைப்பை மட்டும் கொடுக்கலாம், அல்லது 1-2 பத்திகளை மட்டும் மறுபதிப்பு செய்துவிட்டு இணைப்பைத் தரலாம் - முழுமையாக மறுபதிப்பு செய்யக்கூடாது. மேற்கூறியது போல் இணைப்பது, பதிவுகளை மேற்கோள் காட்டுவது, விமர்சனம் செய்வது தவிர மற்ற மறுபதிப்புக்கு என்னுடைய முன் அனுமதி தேவை. என் மின்னஞ்சல் முகவரி: nramadurai at ஜிமெயில்.காம்
செவிலியர்கள், தாதிகள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் (dietiticians), போன்ற மருத்துவம் சார்ந்த தொழில் நெறிஞர்கள், நோயாளிகளின் பேணுகையை மேம்படுத்த, பிணி சார்ந்த வழியுரைகளை திறன்பட இணைத்துக்கொள்ள முடியும். | Cochrane Jump to navigation மொழி: தமிழ் Deutsch English Español Français அதிக மொழிகளில் கிடைக்கும் சில மொழிகளை காண்பி ஊடகம் எங்களை தொடர்பு கொள்ள சமூகம் என் கணக்கு Cochrane நம்பகமான ஆதாரங்கள். தெரிவிக்கப்பட்ட முடிவுகள் மேலான ஆரோக்கியம். Coronavirus (COVID-19) resources செவிலியர்கள், தாதிகள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் (dietiticians), போன்ற மருத்துவம் சார்ந்த தொழில் நெறிஞர்கள், நோயாளிகளின் பேணுகையை மேம்படுத்த, பிணி சார்ந்த வழியுரைகளை திறன்பட இணைத்துக்கொள்ள முடியும். செவிலியர்கள், தாதிகள், நல உணவு வல்லுநர் மற்றும் இதர மருத்துவம் சார்ந்த உடல்நல பராமரிப்பு நிபுணர்களுக்கு பிணி சார்ந்த வழியுரை வெளியிடுவதன் மூலம் நடைமுறையில் உள்ள வேறுபாடுகளைக் குறைப்பதோடு நோயாளிகள் பேணுகையும் மேம்படும். குறைந்த அளவு ஆராய்ச்சிகளே இருந்தபோதும் வழியுரை, பேணுகையை மேம்படுத்தும் என்றும் தொழில்முறை பணிகள் திறம்பட மாற்றீடு செய்யப்பட முடியும் என்பதற்கும், எடுத்துக்காட்டாக சில சூழ்நிலைகளில் ஒரு மருத்துவர் பணியை ஒரு செவிலியர் செய்ய முடியும் என்பதற்கும் சில ஆதாரங்கள் வுள்ளதாக இந்த திறனாய்வு கண்டறிந்தது. அத்தகைய தலையீடுகளது விருப்பறிவிப்புகளால் செலவுகள் குறைவதற்கான வாய்ப்பு உள்ளது ஆனால் இந்த தலைப்பின் அனைத்து பகுதிகளிலும் மேலும் ஆராய்ச்சி தேவைப்படுகிறது. மொழிபெயர்ப்பு குறிப்புகள்: மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.அர் குழு Tools Information Share facebook twitter whatsapp email வெளியீடு: 25 ஜனவரி 1999 ஆசிரியர்கள்:: Thomas LH, Cullum NA, McColl E, Rousseau N, Soutter J, Steen N முதன்மை திறனாய்வுக்குழு: Effective Practice and Organisation of Care Group முழு திறனாய்வையும் பார்க்க காக்ரேன் நூலகம் ► அச்சிடு சான்று Thomas LH, Cullum NA, McColl E, Rousseau N, Soutter J, Steen N. Guidelines in professions allied to medicine. Cochrane Database of Systematic Reviews 1999, Issue 1. Art. No.: CD000349. DOI: 10.1002/14651858.CD000349
தேவகோட்டை : தேவகோட்டையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் தலைவர் கமல்ஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி நடந்தது.மாநில இளைஞர் அணி செயலாளர் சினேகன் துவக்கி வைத்தார்.ஸ்ரீவில்லிபுத்துார் வேல்முருகன் முதலிடத்தையும் , கிருஷ்ணன்கோவில் குணாளன் இரண்டாவது இடத்தையும், திருச்சி பிரகாஷ் மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.இளைஞர் அணி மண்டல துணை அமைப்பாளர் பரணி ராஜன், முழு செய்தியை படிக்க Login செய்யவும் தேவகோட்டை : தேவகோட்டையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் தலைவர் கமல்ஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி நடந்தது.மாநில இளைஞர் அணி செயலாளர் சினேகன் துவக்கி வைத்தார்.ஸ்ரீவில்லிபுத்துார் வேல்முருகன் முதலிடத்தையும் , கிருஷ்ணன்கோவில் குணாளன் இரண்டாவது இடத்தையும், திருச்சி பிரகாஷ் மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.இளைஞர் அணி மண்டல துணை அமைப்பாளர் பரணி ராஜன், மதுரை மண்டல பொறுப்பாளர் அழகர், சிவகங்கை மாவட்ட ஊடகதுறை தில்லைராஜன், மகளிர் அணி வக்கீல் சங்கீதா, மாவட்ட வடக்கு செயலாளர் அமல்ராஜ் பங்கேற்றனர். தேவகோட்டை : தேவகோட்டையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் தலைவர் கமல்ஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி நடந்தது.மாநில இளைஞர் அணி செயலாளர் சினேகன் துவக்கி ஊடக தர்மம் உங்கள் கரங்களில்...! சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம். நன்றி. தினமலர் For technical contact : webmaster@dinamalar.in இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள். Allow ads on Dinamalar Back AdBlock Adblock Plus uBlock Origin Other 1. Click the AdBlock icon in the browser extension area on the upper right corner. 2. Select Don't run on pages on this site. 3. In the "Don’t run AdBlock on..." dialog box, select Exclude. The AdBlock icon changes to a “thumbs up” image. 1.Click the Adblock Plus icon in the browser extension area on the upper right corner. 2. Click the “power” button so that it slides left. 3. Click the Refresh button. 1. Click the uBlock Origin icon in the browser extension area on the upper right corner. 2. Click the “power” button. It turns gray, indicating that ads on that site are no longer being blocked. 3. Click the “Refresh” button 1. Click the icon of the ad blocker extension installed on your browser. You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed. 2. Follow the instructions for disabling the ad blocker on the site you’re viewing. You may have to select a menu option or click a button. 3. Refresh the page, either by following prompts or clicking your browser’s “Refresh” or “Reload” button. Refresh page உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join Telegram Channel for FREE Advertisement வழிகாட்டி நிறுவனமாக பொறியியல் கல்லுாரி தேர்வு முந்தய கமுதியில் கூட்டம் அடுத்து » பொது முதல் பக்கம் » தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்! உங்கள் கருத்தைப் பதிவு செய்ய (Press Ctrl+g to toggle between English and Tamil) My Page Login : Log in Forgot password ? New to Dinamalar ? Create an account கருத்து விதிமுறை Submit × வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். Close X Prev « முந்தய வழிகாட்டி நிறுவனமாக பொறியியல் கல்லுாரி தேர்வு Next அடுத்து » கமுதியில் கூட்டம் சினிமா → கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் → கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு → கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் → தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் → தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. Designed and Hosted by Web Division,Dinamalar. | Contact us We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.
கிணத்துக்கடவு: கிராம குடிநீர் தொட்டிகளில் தேக்கப்படும், நீரின் தரத்தை சுகாதார ஆய்வாளர்கள் பரிசோதித்து, ஆய்வு மேற்கொண்டனர்.பருவமழை காலங்களில், தேங்கி நிற்கும் நீரில் கிருமிகள் தோன்றி, நீரை பருகுவோர், வயிற்று போக்கு, டைப்பாய்டு காய்ச்சல், காலரா, உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.இதனை தடுக்கும் வகையில், குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என, மக்களிடம் முழு செய்தியை படிக்க Login செய்யவும் கிணத்துக்கடவு: கிராம குடிநீர் தொட்டிகளில் தேக்கப்படும், நீரின் தரத்தை சுகாதார ஆய்வாளர்கள் பரிசோதித்து, ஆய்வு மேற்கொண்டனர்.பருவமழை காலங்களில், தேங்கி நிற்கும் நீரில் கிருமிகள் தோன்றி, நீரை பருகுவோர், வயிற்று போக்கு, டைப்பாய்டு காய்ச்சல், காலரா, உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.இதனை தடுக்கும் வகையில், குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என, மக்களிடம் அறிவுறுத்திய சுகாதார ஆய்வாளர்கள், கிணத்துக்கடவு ஒன்றியத்தில் உள்ள, 34 ஊராட்சிகளில் அமைந்துள்ள தரைமட்ட, மேல்நிலை தொட்டிகளில் இருக்கும் நீரின் தன்மை, தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.சில தொட்டிகளில் குளோரின் கரைசல் கரைக்கப்பட்டது. ஆய்வில், சுகாதார மேற்பார்வையாளர் ராஜவேல் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் குணசேகரன், முத்துக்கிருஷ்ணன், செல்வம், சரவணகுமார் ஆகியோர் ஈடுபட்டனர். கிணத்துக்கடவு: கிராம குடிநீர் தொட்டிகளில் தேக்கப்படும், நீரின் தரத்தை சுகாதார ஆய்வாளர்கள் பரிசோதித்து, ஆய்வு மேற்கொண்டனர்.பருவமழை காலங்களில், தேங்கி நிற்கும் நீரில் கிருமிகள் ஊடக தர்மம் உங்கள் கரங்களில்...! சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம். நன்றி. தினமலர் For technical contact : webmaster@dinamalar.in இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள். Allow ads on Dinamalar Back AdBlock Adblock Plus uBlock Origin Other 1. Click the AdBlock icon in the browser extension area on the upper right corner. 2. Select Don't run on pages on this site. 3. In the "Don’t run AdBlock on..." dialog box, select Exclude. The AdBlock icon changes to a “thumbs up” image. 1.Click the Adblock Plus icon in the browser extension area on the upper right corner. 2. Click the “power” button so that it slides left. 3. Click the Refresh button. 1. Click the uBlock Origin icon in the browser extension area on the upper right corner. 2. Click the “power” button. It turns gray, indicating that ads on that site are no longer being blocked. 3. Click the “Refresh” button 1. Click the icon of the ad blocker extension installed on your browser. You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed. 2. Follow the instructions for disabling the ad blocker on the site you’re viewing. You may have to select a menu option or click a button. 3. Refresh the page, either by following prompts or clicking your browser’s “Refresh” or “Reload” button. Refresh page உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join Telegram Channel for FREE Advertisement ராணிப்பேட்டையில் 144 டூவீலர்கள் திருடிய 2 பேர் கைது முந்தய பள்ளி வளாகத்தில் பாம்பு உடுமலையில் பரபரப்பு அடுத்து » சம்பவம் முதல் பக்கம் » தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்! உங்கள் கருத்தைப் பதிவு செய்ய (Press Ctrl+g to toggle between English and Tamil) My Page Login : Log in Forgot password ? New to Dinamalar ? Create an account கருத்து விதிமுறை Submit × வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். Close X Prev « முந்தய ராணிப்பேட்டையில் 144 டூவீலர்கள் திருடிய 2 பேர் கைது Next அடுத்து » பள்ளி வளாகத்தில் பாம்பு உடுமலையில் பரபரப்பு சினிமா → கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் → கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு → கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் → தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் → தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. Designed and Hosted by Web Division,Dinamalar. | Contact us We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.
புதுடில்லி : பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் 44 மாவட்டங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.நாட்டில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் 44 மாவட்டங்கள், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கியவையாக 'நிடி ஆயோக்' தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இம்மாவட்டங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளுக்கு மத்திய முழு செய்தியை படிக்க Login செய்யவும் 3 புதுடில்லி : பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் 44 மாவட்டங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் 44 மாவட்டங்கள், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கியவையாக 'நிடி ஆயோக்' தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இம்மாவட்டங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் இளைஞர் விவகாரங்கள் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் கூறியதாவது: பழங்குடியினர் அதிகம் வசிக்கும் 44 மாவட்டங்களில் பிரதமரின் 'கிராமின் சதக் யோஜனா' திட்டத்தின் கீழ் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.அங்கு 14 ஆயிரத்து 041 கி.மீ., சாலை அமைப்பதுடன் 2,626 பாலங்கள் கட்டப்பட உள்ளன. இதற்கான திட்டமதிப்பு 33 ஆயிரத்து 822 கோடி ரூபாய். இதில் 22 ஆயிரத்து 978 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கும்.ஆந்திரா, சத்தீஸ்கர், மஹாராஷ்டிரா உட்பட ஐந்து மாநிலங்களில் 7,287 கிராமங்களில் தொலைதொடர்பு சேவை கோபுரங்கள் அமைக்கப்படும். இதன் வாயிலாக லட்சக்கணக்கானோர் இணைய சேவை பெறுவர்.இவ்வாறு, அவர் கூறினார். புதுடில்லி : பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் 44 மாவட்டங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.நாட்டில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் 44 ஊடக தர்மம் உங்கள் கரங்களில்...! சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம். நன்றி. தினமலர் For technical contact : webmaster@dinamalar.in இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள். Allow ads on Dinamalar Back AdBlock Adblock Plus uBlock Origin Other 1. Click the AdBlock icon in the browser extension area on the upper right corner. 2. Select Don't run on pages on this site. 3. In the "Don’t run AdBlock on..." dialog box, select Exclude. The AdBlock icon changes to a “thumbs up” image. 1.Click the Adblock Plus icon in the browser extension area on the upper right corner. 2. Click the “power” button so that it slides left. 3. Click the Refresh button. 1. Click the uBlock Origin icon in the browser extension area on the upper right corner. 2. Click the “power” button. It turns gray, indicating that ads on that site are no longer being blocked. 3. Click the “Refresh” button 1. Click the icon of the ad blocker extension installed on your browser. You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed. 2. Follow the instructions for disabling the ad blocker on the site you’re viewing. You may have to select a menu option or click a button. 3. Refresh the page, either by following prompts or clicking your browser’s “Refresh” or “Reload” button. Refresh page உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join Telegram Channel for FREE Advertisement Related Tags Union Cabinet PM Modi Tribal Areas Anurag Thakur Prime Minister Narendra Modi PMGSY இனி எல்லாமே துரை தான்! வைகோ மகற்காற்றிய நன்றி(34) முந்தய ஜெய்பீம் படத்தில் காவல் அதிகாரி கதாபாத்திரத்தின் பெயரை மாற்றியது ஏன்?: சூர்யாவிற்கு பா.ஜ., கேள்வி(60) அடுத்து » அரசியல் முதல் பக்கம் » தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து (3) புதியவை பழையவை அதிகம் விவாதிக்கப்பட்டவை மிக மிக தரமானவை மிக தரமானவை தரமானவை Samathuvan - chennai,இந்தியா 18-நவ-202116:56:27 IST Report Abuse பழங்குடி என்ற வார்த்தையை கேட்டு இந்த ரெண்டு ஜீ களோட முகத்தை கொஞ்சம் பாருங்க. இப்போ விளங்குதா இவர்கள் பழங்குடி மேல வைத்து இருக்கும் அதீத பாசத்தை. Rate this: 0 votes 0 votes 0 votes Share this comment Reply Cancel சீனி - Bangalore,இந்தியா 18-நவ-202108:38:03 IST Report Abuse உலகின் அதிவேக வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் மாற்றம், புதிய வன சட்டங்கள் காரணமாக வறுமையில் உள்ள பல மலை கிராமங்கள் தான் இன்று மதமாற்ற கும்பலின் முக்கிய தளமாக உள்ளன. அங்கே அடிப்படை கட்டமைப்பு, தொழில் வளர்ச்சி மற்றும், மத மற்றும் கலாச்சார பாதுகாப்புக்கு அரசு உறுதி செய்யவேண்டும். முக்கியமாக இந்து முன்னணி, வாரம் ஒருமுறை பழங்குடிகள், பூர்வகுடிகளை, பட்டியலினத்தவர்களை சந்தித்து குறை கேட்கவேண்டும், அவர்கள் கலாச்சாரத்தையும் பாதுக்காக்க முயற்சி எடுக்கவேண்டும். Rate this: 0 votes 0 votes 4 votes Share this comment Reply Cancel அப்புசாமி - ( Posted via: Dinamalar Android App ) 18-நவ-202107:50:47 IST Report Abuse பெருங்குடி, புதுக்குடியினரை எல்லாம் உசத்தி எங்கேயோ கொண்டு போயாச்சு. இப்போ பழங்குடினரை ஒசத்தப் போறாங்கோ... Rate this: 0 votes 0 votes 1 votes Share this comment Reply Cancel உங்கள் கருத்தைப் பதிவு செய்ய (Press Ctrl+g to toggle between English and Tamil) My Page Login : Log in Forgot password ? New to Dinamalar ? Create an account கருத்து விதிமுறை Submit × வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். Close X Prev « முந்தய இனி எல்லாமே துரை தான்! வைகோ மகற்காற்றிய நன்றி (34) Next அடுத்து » ஜெய்பீம் படத்தில் காவல் அதிகாரி கதாபாத்திரத்தின் பெயரை மாற்றியது ஏன்?: சூர்யாவிற்கு பா.ஜ., கேள்வி (60) சினிமா → கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் → கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு → கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் → தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் → தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. Designed and Hosted by Web Division,Dinamalar. | Contact us We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.
புதுடில்லி: வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்ததை அடுத்து, விவசாயிகளின் சத்தியாகிரக போராட்டத்தால ஆணவம் வீழ்த்தப்பட்டது என்று காங்., எம்.பி., ராகுல் கூறியுள்ளார். இது போல் தமிழக முதல்வர் ஸ்டாலின் இது அறப்பபோராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றும், பிரதமர் முடிவை வரவேற்பதாகவும் கூறியுள்ளார்.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து முழு செய்தியை படிக்க Login செய்யவும் 111 புதுடில்லி: வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்ததை அடுத்து, விவசாயிகளின் சத்தியாகிரக போராட்டத்தால ஆணவம் வீழ்த்தப்பட்டது என்று காங்., எம்.பி., ராகுல் கூறியுள்ளார். இது போல் தமிழக முதல்வர் ஸ்டாலின் இது அறப்பபோராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றும், பிரதமர் முடிவை வரவேற்பதாகவும் கூறியுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் மோடி இன்று (நவ.,19) அறிவித்துள்ளார். வரும் பார்லி குளிர்கால கூட்டத்தொடரில் இந்த வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் இந்த அறிவிப்பிற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வேளாண் சட்டங்கள் தொடர்பாக பிரதமர் மோடியின் அறிவிப்பு வரவேற்புக்குரியது. இது அரசியல்வாதி போன்ற முடிவு. பிரதமர் மோடி, தனது பேச்சின் போது, இந்தியா தொடர்ந்து விவசாயிகளுக்கு சேவையாற்றும். அவர்களின் வளர்ச்சிக்கு எப்போதும் ஆதரவு அளிக்கும் என்றார். ஒவ்வொரு இந்தியரின் நலனை தவிர வேறு சிந்தனை இல்லை என்பதையே இது காட்டுகிறது. பிரதமர் மோடி தனது அபாரமான அரசியல் திறனை வெளிப்படுத்தி விட்டார். காங்கிரஸ் தலைவர் சோனியா விவசாயிகளின் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. நீதிக்கான இந்த போராட்டத்தில், 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். அவர்களின் தியாகத்திற்கு இன்று நீதி கிடைத்துள்ளது. இன்று, உண்மை, நீதி, அகிம்சை வெற்றி பெற்றுள்ளது. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிராக சதி செய்த ஆட்சியாளர்கள் தோல்வியடைந்துள்ளனர். விவசாயம் மற்றும் வாழ்வாதாரம் மீது தாக்குதல் நடத்த முயன்ற சதி தோற்கடிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் வெற்றி பெற்றுள்ளனர். ஜனநாயகத்தில் எந்த முடிவு எடுத்தாலும், அது சம்பந்தப்பட்ட அனைவர் மற்றும் எதிர்க்கட்சிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தி எடுக்கப்பட வேண்டும். மோடி அரசு சில பாடங்களை படித்திருக்கும் என நம்புகிறேன். ராகுல், காங்கிரஸ் நாட்டிற்கு உணவளிக்கும் விவசாயிகளின் சத்யாகிரக போராட்டத்திற்கு ஆணவம் அடிபணிந்தது. அநீதிக்கு எதிரான வெற்றிக்கு வாழ்த்துக்கள். நான் ஏற்கனவே மத்திய அரசு திரும்ப பெறும் என கூறியதையும் நினைவுப்படுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார். ராகேஷ் திகாயத், பாரதிய கிஷான் சங்கத்தலைவர்: போராட்டத்தை வாபஸ் பெற மாட்டோம். பார்லிமென்டில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் நாளுக்காகக் காத்திருக்கிறோம். குறைந்தபட்ச ஆதார விலை தவிர விவசாயிகளின் மற்ற பிரச்னைகள் குறித்தும் அரசு பேச வேண்டும். மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ்: இது வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல நாட்களாக போராடி வரும் விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி. இந்த போராட்டத்தால் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர். விவசாயிகள் படும் கஷ்டங்களுக்கு யார் பொறுப்பேற்பார்கள்? பார்லிமென்டில் இந்த பிரச்னைகளை எழுப்புவோம். மஹாராஷ்டிரா உள்துறை அமைச்சர் பாட்டீல்: இந்த முடிவை முன்பே எடுத்திருந்தால் இவ்வளவு விவசாயிகள் இறந்திருக்க மாட்டார்கள். அரசாங்கம் முன்னதாகவே பேச்சுவார்த்தைகளை துவங்கியிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. விவசாயிகள் தெருக்களில் இறங்கி போராடியதால், அவர்களின் கோரிக்கை இன்று நிறைவேறியுள்ளது. இது விவசாயிகளின் வெற்றி. சிதம்பரம், காங்கிரஸ்: ஜனநாயக போராட்டங்களால் சாதிக்க முடியாததை, வரவிருக்கும் தேர்தல்களுக்கு பயந்து சாதிக்க முடிந்துள்ளது. மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது குறித்த பிரதமரின் அறிவிப்பு கொள்கை மாற்றத்தினாலோ அல்லது மனமாற்றத்தினாலோ செய்யவில்லை. தேர்தல் பயத்தால் ரத்து செய்துள்ளார். எப்படியோ, வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகளுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. பஞ்சாப் துணை முதல்வர் எஸ்.எஸ்.ரந்தாவா: விவசாயிகள் 11 மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 700 விவசாயிகள் உயிரிழந்தனர். தாமதமாக முடிவெடுத்திருந்தால் நல்ல முடிவு. மத்திய அரசு தனது தவறை ஏற்று விவசாய சட்டங்களை ரத்து செய்ததை நான் வரவேற்கிறேன். பஞ்சாப் அரசு செய்தது போல், உயிரிழந்த 700 குடும்பங்களுக்கும் மத்திய அரசு உதவ வேண்டும். ஸ்டாலின், தமிழக முதல்வர்: மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப்போவதாக பிரதமர் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். இது முழுக்க முழுக்க உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். மக்களாட்சியில் மக்களின் எண்ணங்கள்தான் மதிக்கப்பட வேண்டும்; இதுவே வரலாறு சொல்லும் பாடம். உழவர் பக்கம் நின்று போராடியதும், வேளாண் விரோதச் சட்டங்களுக்கு எதிராக கழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதும் நாம் பெருமை கொள்ளத்தக்கதாகும். அறவழிப் போராட்டத்தின் வழியே உரிமைகளை வென்றெடுத்து இந்தியா காந்தியின் மண் என்று உழவர்கள் உலகிற்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்! பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.,: விவசாயிகளின் நீண்டகால பிரச்னையை தீர்க்கவே பிரதமர் மோடி வேளாண் சட்டங்களை கொண்டுவந்தார். கே.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூ.,: போராடிய விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி; தாமதமான முடிவு என்றாலும் வரவேற்கத்தக்க அறிவிப்பு. திருமாவளவன், விசிக: தாமதமான முடிவு என்றாலும் ஓராண்டாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன். வைகோ, மதிமுக.,: மக்கள் சக்தியே மகேசன் சக்தி என்பதை உணர்ந்து மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. போராட்டத்தில் இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும். செம்மலை, அதிமுக: மூன்று வேளாண் சட்டங்களிலும் தேவையெனில் திருத்தங்களை கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தினோம். விவசாயிகளின் கோரிக்கைக்கு மதிப்பளித்து பிரதமர் அறிவித்துள்ளார். கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ்: இடைத்தேர்தல்களுக்கு முன்பாகவே இதனை ரத்து செய்திருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், இடைத்தேர்தல்களில் தோல்வியடைந்த பிறகு இந்த முடிவு எடுத்துள்ளது மத்திய அரசின் சந்தர்ப்பவாதத்தையே காட்டுகிறது. விவசாயிகள் இதனை ஏற்கமாட்டார்கள். காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா தேர்தல் நெருங்கி வருகிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ளாமல் இல்லை. சூழ்நிலை சரியாக இல்லை என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டுள்ளனர். கருத்துக்கணிப்பு மூலமும் தெரிந்து கொண்டுள்ளனர். இதற்காக தேர்தலுக்கு முன்பு மன்னிப்பு கேட்பதற்கு முன்வந்துள்ளனர். விவசாயிகள் கொலை, தடியடி, கைத ஆகியவற்றை செய்தது யார். உங்களது அரசு தான் செய்தது. இன்று நீங்கள் வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறுவதாக நீங்கள் கூறுகிறீர்கள். உங்களை எப்படி அவர்கள் நம்புவார்கள். நாட்டில், விவசாயிகளை விட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை என்பதை அரசு புரிந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. டில்லி முதல்வர் கெஜ்ரிவால் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்று இன்றைய நாள் வரலாற்றில் குறித்து வைக்கப்படும். விவசாயிகளுக்கு மட்டுமல்ல, ஜனநாயகத்திற்கும் கிடைத்த வெற்றி. வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை சீர்குலைக்க அனைத்து விஷயங்களையும் மத்திய அரசு செய்தது. ஆனால், விவசாயிகள் போராட்டத்தை கைவிட வில்லை. ஹரியானா துணை முதல்வர் வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவது என்ற மத்திய அரசின் முடிவை வரவேற்கிறோம். சமூகத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும். போராட்டத்தை முடித்து கொள்ள வேண்டும் என்று விவசாய சங்கத்தினரை கேட்டு கொள்கிறோம். விவசாயிகளின் நலனுக்கு தொடர்ந்து முயற்சி செய்வோம். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் நாடு மற்றும் விவசாயிகளின் நலன் கருதி, வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். விவசாயிகள் மற்றும் குடும்பத்தினர், இதற்காக நீண்ட நாட்கள் காத்திருந்தனர். இதனை மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள். விவசாயிகளுக்கு எப்போதும் பீஜூ ஜனதா தளம் ஆதரவாக இருக்கும். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் நாட்டில் நிலவும் சூழல் காரணமாக 3 சட்டங்களையும் திரும்ப பெற வேண்டிய சூழல் பிரதமருக்கு ஏற்பட்டது. உ.பி., தேர்தலை மனதில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது. தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பிரதமரும், பா.ஜ.,வும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் விவசாயிகள் வெற்றி பெற்றுள்ளனர். அராஜகம் தோல்வி அடைந்துள்ளது. பயங்கரவாதிகள், சீனா- பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என அழைக்கப்பட்ட விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி. நாட்டுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் மோடியும், பா.ஜ.,வும் மன்னிப்பு கேட்க வேண்டும். கேரள முதல்வர் பினராயி விஜயன் வேளாண் சட்டங்கள் திரும்ப பெற்றது. விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. பல்வேறு சவால்களுக்கு மத்தியில் போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவது என்ற முடிவை முன்னரே எடுத்திருக்க வேண்டும். குறைந்த பட்ச ஆதார விலைக்கு சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக சட்டம் கொண்டு வர வேண்டும் என வரும் குளிர்கால பார்லிமென்ட் கூட்டத்தொடரில் வலியுறுத்துவோம். இவ்வாறு தலைவர்கள் கூறியுள்ளனர். புதுடில்லி: வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்ததை அடுத்து, விவசாயிகளின் சத்தியாகிரக போராட்டத்தால ஆணவம் வீழ்த்தப்பட்டது என்று காங்., எம்.பி., ராகுல் கூறியுள்ளார். இது ஊடக தர்மம் உங்கள் கரங்களில்...! சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம். நன்றி. தினமலர் For technical contact : webmaster@dinamalar.in இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள். Allow ads on Dinamalar Back AdBlock Adblock Plus uBlock Origin Other 1. Click the AdBlock icon in the browser extension area on the upper right corner. 2. Select Don't run on pages on this site. 3. In the "Don’t run AdBlock on..." dialog box, select Exclude. The AdBlock icon changes to a “thumbs up” image. 1.Click the Adblock Plus icon in the browser extension area on the upper right corner. 2. Click the “power” button so that it slides left. 3. Click the Refresh button. 1. Click the uBlock Origin icon in the browser extension area on the upper right corner. 2. Click the “power” button. It turns gray, indicating that ads on that site are no longer being blocked. 3. Click the “Refresh” button 1. Click the icon of the ad blocker extension installed on your browser. You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed. 2. Follow the instructions for disabling the ad blocker on the site you’re viewing. You may have to select a menu option or click a button. 3. Refresh the page, either by following prompts or clicking your browser’s “Refresh” or “Reload” button. Refresh page உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join Telegram Channel for FREE Advertisement Related Tags Farm Laws Reaction Rahul Congress இந்தியாவில் மேலும் 11 ஆயிரம் பேருக்கு கோவிட்: 12 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ் முந்தய வேலூர் அருகே வீடு இடிந்து 9 பேர் பலி; ரூ.5 லட்சம் முதல்வர் நிவாரணம்(7) அடுத்து » அரசியல் முதல் பக்கம் » தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து (111) புதியவை பழையவை அதிகம் விவாதிக்கப்பட்டவை மிக மிக தரமானவை மிக தரமானவை தரமானவை Kumar - Madurai,இந்தியா 20-நவ-202110:59:59 IST Report Abuse தேசத்தின் பாதுகாப்பை முன்னிட்டு ,அந்த மூன்று சட்டங்களும் வாபஸ் பெறப்பட்டன. வாழ்க வளமுடன்.வாழ்க வையகம். Rate this: 0 votes 0 votes 2 votes Share this comment Reply Cancel அப்புசாமி - ( Posted via: Dinamalar Android App ) 20-நவ-202108:05:02 IST Report Abuse போராட்டம் நடத்த வெளிநாட்டிலிருந்து பணம் வருதுன்னு புதுசா ஒரு பிட்டப் போடுறாங்க. டிஜிட்டல் இந்தியா ஆளுங்கலால் இந்தப் பணப் பரிமாற்றத்தைக் கண்டு பிடிக்க முடியாதா? Rate this: 1 votes 0 votes 0 votes Share this comment Reply Cancel கு.ரா.பிரேம் குமார் பெங்களூர் - ( Posted via: Dinamalar Android App ) 20-நவ-202107:03:58 IST Report Abuse தெளிவான சட்டங்களை புரியாதது மாறி நடித்து எதிர்ப்பவர்கள், தூங்குவதை போல் பாவனை செய்பவர்களுக்கு சமமானவர்கள். அத்தகையோரின் பின்னால் போவதைவிட, விவசாயிகளையும் நாட்டை முன்னேற்ற பாதையில் உடன் அழைத்து செல்லவும், எதிர்கட்சிகளின் தவறான பாதையிலிருந்து அவர்களை தடுத்து நிறுத்தவும், வேறு மார்க்கம் இல்லாத காரணத்தால் தான் பிரதமர் மூன்று விவசாய சட்டங்களை, தடித்த மனதுடன் விலக்கி கொள்ள முடிவெடுத்தார் Rate this: 0 votes 0 votes 1 votes Share this comment Reply Cancel மேலும் 108 கருத்துக்கள்... உங்கள் கருத்தைப் பதிவு செய்ய (Press Ctrl+g to toggle between English and Tamil) My Page Login : Log in Forgot password ? New to Dinamalar ? Create an account கருத்து விதிமுறை Submit × வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். Close X Prev « முந்தய இந்தியாவில் மேலும் 11 ஆயிரம் பேருக்கு கோவிட்: 12 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ் Next அடுத்து » வேலூர் அருகே வீடு இடிந்து 9 பேர் பலி; ரூ.5 லட்சம் முதல்வர் நிவாரணம் (7) சினிமா → கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் → கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு → கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் → தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் → தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. Designed and Hosted by Web Division,Dinamalar. | Contact us We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.
காரைக்குடி-காரைக்குடி அருகே உள்ள சங்கராபுரம் ஊராட்சியில் 35 ஆண்டுகளாக கழிவுநீர் கால்வாய் அமைக்காததால் மழைநீர் வெளியேற வழியின்றி வீடுகளுக்குள் புகுந்தது.சாக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட சங்கராபுரம் ஊராட்சி அதிக வருவாய் தரும் ஊராட்சி. தவிர முன்னாள் எம்.எல்.ஏ., மற்றும் இந்நாள் எம்.எல்.ஏ., வசிக்கும் பகுதியாகும். இங்குள்ள கற்பக விநாயகர் குடியிருப்பு கடந்த 1984ல் அப்ரூவல் முழு செய்தியை படிக்க Login செய்யவும் காரைக்குடி-காரைக்குடி அருகே உள்ள சங்கராபுரம் ஊராட்சியில் 35 ஆண்டுகளாக கழிவுநீர் கால்வாய் அமைக்காததால் மழைநீர் வெளியேற வழியின்றி வீடுகளுக்குள் புகுந்தது.சாக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட சங்கராபுரம் ஊராட்சி அதிக வருவாய் தரும் ஊராட்சி. தவிர முன்னாள் எம்.எல்.ஏ., மற்றும் இந்நாள் எம்.எல்.ஏ., வசிக்கும் பகுதியாகும். இங்குள்ள கற்பக விநாயகர் குடியிருப்பு கடந்த 1984ல் அப்ரூவல் பெற்று முறையாக உருவாகியுள்ளது. ஏழு வீதிகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.கடந்த 35 ஆண்டுகளாக இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவில்லை. இப்பகுதியில் பெய்யும் மழைநீர், வரத்துக் கால்வாய் மூலம் இலுப்பக்குடி கண்மாய் வரை சென்றது.தற்போது, வரத்துக் கால்வாய் அடைபட்டதால் மழைநீர், கழிவுநீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதோடு வீடுகளுக்குள் புகுந்துள்ளது. வீடுகளுக்குள் சென்ற தண்ணீரை வாளி, மோட்டார் மூலம் மக்கள் வெளியேற்றினர். அப்பகுதியைச் சேர்ந்த முன்னாள் தலைமையாசிரியர் நாகராஜன் கூறுகையில்;இப்பகுதியில் இதுவரை கழிவுநீர் கால்வாய் வசதி அமைக்கப்படவில்லை. வரத்துக் கால்வாய் வழியாக தண்ணீர் வெளியே சென்ற நிலையில் தற்போது வரத்து கால்வாயும் மூடப்பட்டு மழைநீர் வெளியேற வழி இல்லை. தமிழகத்தின் மிகப்பெரிய ஊராட்சியில் அடிப்படை வசதி இல்லாதது கவலை அளிக்கிறது. காரைக்குடி-காரைக்குடி அருகே உள்ள சங்கராபுரம் ஊராட்சியில் 35 ஆண்டுகளாக கழிவுநீர் கால்வாய் அமைக்காததால் மழைநீர் வெளியேற வழியின்றி வீடுகளுக்குள் புகுந்தது.சாக்கோட்டை ஒன்றியத்துக்கு ஊடக தர்மம் உங்கள் கரங்களில்...! சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம். நன்றி. தினமலர் For technical contact : webmaster@dinamalar.in இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள். Allow ads on Dinamalar Back AdBlock Adblock Plus uBlock Origin Other 1. Click the AdBlock icon in the browser extension area on the upper right corner. 2. Select Don't run on pages on this site. 3. In the "Don’t run AdBlock on..." dialog box, select Exclude. The AdBlock icon changes to a “thumbs up” image. 1.Click the Adblock Plus icon in the browser extension area on the upper right corner. 2. Click the “power” button so that it slides left. 3. Click the Refresh button. 1. Click the uBlock Origin icon in the browser extension area on the upper right corner. 2. Click the “power” button. It turns gray, indicating that ads on that site are no longer being blocked. 3. Click the “Refresh” button 1. Click the icon of the ad blocker extension installed on your browser. You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed. 2. Follow the instructions for disabling the ad blocker on the site you’re viewing. You may have to select a menu option or click a button. 3. Refresh the page, either by following prompts or clicking your browser’s “Refresh” or “Reload” button. Refresh page உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join Telegram Channel for FREE Advertisement அடர்காடு வளர்ப்பு திட்டம் முந்தய கீழப்பூங்குடி வீரங்கண்மாய்க்கு தண்ணீர்திறக்க கோரி கடையடைப்பு, மறியல் அடுத்து » பொது முதல் பக்கம் » தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்! உங்கள் கருத்தைப் பதிவு செய்ய (Press Ctrl+g to toggle between English and Tamil) My Page Login : Log in Forgot password ? New to Dinamalar ? Create an account கருத்து விதிமுறை Submit × வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். Close X Prev « முந்தய அடர்காடு வளர்ப்பு திட்டம் Next அடுத்து » கீழப்பூங்குடி வீரங்கண்மாய்க்கு தண்ணீர்திறக்க கோரி கடையடைப்பு, மறியல் சினிமா → கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் → கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு → கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் → தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் → தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. Designed and Hosted by Web Division,Dinamalar. | Contact us We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.
அண்ணா நகர் : தி.மு.க., பிரமுகர் கொலை வழக்கில், பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்.சென்னை, டி.பி., சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத்குமார்; தி.மு.க., பிரமுகர். இவரை, சில மாதங்களுக்கு முன்பு, அண்ணா நகர் காவல் நிலையம் அருகே நடுரோட்டில் வைத்து, மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர்.இந்த கொலையில் கணவன், மனைவி உட்பட, எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், முக்கிய குற்றவாளியான முழு செய்தியை படிக்க Login செய்யவும் அண்ணா நகர் : தி.மு.க., பிரமுகர் கொலை வழக்கில், பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர். சென்னை, டி.பி., சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத்குமார்; தி.மு.க., பிரமுகர். இவரை, சில மாதங்களுக்கு முன்பு, அண்ணா நகர் காவல் நிலையம் அருகே நடுரோட்டில் வைத்து, மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர்.இந்த கொலையில் கணவன், மனைவி உட்பட, எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி லெனின் என்பவரை, போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், அண்ணா நகரில் லெனின் பதுங்கியிருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு போலீசார் அவரை மடக்கிப் பிடிக்க முயன்ற போது, மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தப்ப முயன்றார்.இதில், அவரது கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, அண்ணா நகர் போலீசார் லெனினை கைது செய்து விசாரிக்கின்றனர். அண்ணா நகர் : தி.மு.க., பிரமுகர் கொலை வழக்கில், பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்.சென்னை, டி.பி., சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத்குமார்; தி.மு.க., பிரமுகர். இவரை, சில மாதங்களுக்கு ஊடக தர்மம் உங்கள் கரங்களில்...! சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்... ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம். நன்றி. தினமலர் For technical contact : webmaster@dinamalar.in இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள். Allow ads on Dinamalar Back AdBlock Adblock Plus uBlock Origin Other 1. Click the AdBlock icon in the browser extension area on the upper right corner. 2. Select Don't run on pages on this site. 3. In the "Don’t run AdBlock on..." dialog box, select Exclude. The AdBlock icon changes to a “thumbs up” image. 1.Click the Adblock Plus icon in the browser extension area on the upper right corner. 2. Click the “power” button so that it slides left. 3. Click the Refresh button. 1. Click the uBlock Origin icon in the browser extension area on the upper right corner. 2. Click the “power” button. It turns gray, indicating that ads on that site are no longer being blocked. 3. Click the “Refresh” button 1. Click the icon of the ad blocker extension installed on your browser. You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed. 2. Follow the instructions for disabling the ad blocker on the site you’re viewing. You may have to select a menu option or click a button. 3. Refresh the page, either by following prompts or clicking your browser’s “Refresh” or “Reload” button. Refresh page உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join Telegram Channel for FREE Advertisement பஸ் சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி பெண் பலி முந்தய வறுமையின் கொடுமையால் 3 மகள்களின் தாய் தற்கொலை அடுத்து » சம்பவம் முதல் பக்கம் » தினமலர் முதல் பக்கம் வாசகர் கருத்து முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்! உங்கள் கருத்தைப் பதிவு செய்ய (Press Ctrl+g to toggle between English and Tamil) My Page Login : Log in Forgot password ? New to Dinamalar ? Create an account கருத்து விதிமுறை Submit × வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம். Close X Prev « முந்தய பஸ் சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி பெண் பலி Next அடுத்து » வறுமையின் கொடுமையால் 3 மகள்களின் தாய் தற்கொலை சினிமா → கோலிவுட் செய்திகள் பாலிவுட் செய்திகள் விமர்சனம் டிரைலர்கள் பட காட்சிகள் சூட்டிங் ஸ்பாட் சினி விழா நடிகைகள் வால் பேப்பர்கள் கோயில்கள் → கோயில் வீடியோ 108 திவ்ய தேசம் சிவன் கோயில் அம்மன் கோயில் நவக்கிரக கோயில் தனியார் கோயில் அறுபடைவீடு வழிபாடு விளையாட்டு → கிரிக்கெட் ஹாக்கி டென்னிஸ் பாட்மிடன் கால்பந்து விளையாட்டு மலர் பிற விளையாட்டு உலக தமிழர் செய்திகள் → தமிழ் சங்கங்கள் தமிழ் வானொலி அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்கா வளைகுடா தென் கிழக்கு ஆசியா ஆஸ்திரேலியா பிறமாநில செய்திகள் → தமிழ் சங்கங்கள் புதுடில்லி மும்பை கோல்கட்டா பெங்களூரு பிற மாநிலங்கள் சினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. Designed and Hosted by Web Division,Dinamalar. | Contact us We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.
நூல்கள் [11,889] இதழ்கள் [13,502] பத்திரிகைகள் [53,846] பிரசுரங்கள் [1,196] நினைவு மலர்கள் [1,526] சிறப்பு மலர்கள் [5,642] எழுத்தாளர்கள் [4,925] பதிப்பாளர்கள் [4,237] வெளியீட்டு ஆண்டு [187] குறிச்சொற்கள் [91] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,707] வாழ்க்கை வரலாறுகள் [3,166] உங்கள் பங்களிப்புகளுக்கு "https://www.noolaham.org/wiki/index.php?title=உதய_தாரகை_Morning_Star_1890.09.04&oldid=407889" இருந்து மீள்விக்கப்பட்டது
{{இதழ்| நூலக எண் = 80578 | வெளியீடு = [[:பகுப்பு:2020|2020]].10.24-30 | சுழற்சி = வாரஇதழ் | இதழாசிரியர் = [[:பகுப்பு:பிரேமானந்த்,தே.|பிரேமானந்த்,தே.]] | மொழி = தமிழ் | பதிப்பகம் = [[:பகுப்பு:-|-]] | பக்கங்கள் = 24 | }} =={{Multi|வாசிக்க|To Read}}== <!--pdf_link-->* [http://noolaham.net/project/806/80578/80578.pdf செம்மண் 2020.10.24-30] {{P}}<!--pdf_link--> [[பகுப்பு:2020]] [[பகுப்பு:பிரேமானந்த்,தே.]][[பகுப்பு:செம்மண்]]
www.tamilvu.org பயன்படுத்தி, நீங்கள் உங்கள் சாதனத்தின் குக்கீகளை வைக்க முடியும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். விவரங்களுக்கு எங்கள் தனியுரிமை மற்றும் கொள்கைகள் பார்க்கவும்.
மற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள்? அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை? ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும் புது கட்டளை விதியை இணை மற்றும் அல்லது அல்ல Limit results to: சேமகம்? OISE Library Thomas Fisher Rare Book Library, University of Toronto Trinity College Archives University of St Michael's College Archives University of St. Michael's College, John M. Kelly Library, Special Collections University of Toronto Archives and Records Management Services University of Toronto Media Commons Archives University of Toronto Mississauga Library, Archives & Special Collections University of Toronto Music Library University of Toronto Scarborough Library, Archives & Special Collections Victoria University Archives Victoria University Library - Special Collections உயர்மட்ட விவரணம் முடிவுகளை [இதன்] படி வடிகட்டுக: விவரிப்பு மட்டம் சேர்வு Collection File Fonds உருப்படி Manuscript Collection Series Sous-fonds Subseries Digital object available ஆம் இல்லை உதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது உயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும் திகதி வரிசை/ ஒழுங்குப் படி வடிகட்டுக ஆரம்பம் முடிவு மேற்படிவான துல்லியமான Use these options to specify how the date range returns results. "Exact" means that the start and end dates of descriptions returned must fall entirely within the date range entered. "Overlapping" means that any description whose start or end dates touch or overlap the target date range will be returned.
“இன்டர்நெட் ன்னா என்னங்க ? ” என யாரிடமாவது கேட்டால் நம்மைப் பார்த்து அவர்கள் வயிறு வலிக்கச் சிரிக்கக் கூடும். “இந்தியாவுக்குச் சுதந்திரம் கெடச்சுடுச்சா?” என கேட்பதைப் போல அதரப் பழசான விஷயமாகிப் போய்விட்டது அது ! இணையம் வந்த காலத்தில் ஒரு மின்னஞ்சல் வைத்திருப்பது கௌரவமாகப் பார்க்கப் பட்டது. “ஒரு மெயில் அனுப்பிட்டு வரேன்” என்று சொல்லி விட்டு இன்டர்நெட் கஃபேக்குப் போவது அப்போதைய இளசுகளின் “ஸ்டைல்” ! அங்கே கியூவில் நின்று ஒரு மெயில் அனுப்பி விட்டு வருகையில் ஏதோ தொழில்நுட்பத்தையே கரைத்துக் குடித்த பெருமை அவர்கள் முகத்தில் மிளிரும். பிறகு கம்ப்யூட்டர்கள் விலை குறைந்தன. இணையத்தின் பயன்பாடு அதிகரிக்க ஆரம்பித்தது. கணினிகள் வீடுகளின் அறைகளுக்குள் வந்து விட்டன. போன் வயரைக் கனெக்ட் பண்ணி இன்டர்நெட்டில் கட்டை வண்டி மாதிரி பயணித்தோம். பிறகு அறைக் கணினிகள், மடிக்கணினிகளால் மவுசு இழந்தன. போன் வயர் டயல் இணைய சேவையானது பிராட்பேண்ட்களால் காணாமல் போச்சு. பின்னர் டேட்டா கார்ட், வயர்லெஸ், பிராட்பேண்ட் வயர்லெஸ் என இணைய வகைகள் வந்து நிலமையை படு சுலபமாக்கிவிட்டன. இப்போது மடிக்கணினிகளும் மவுசை இழக்கத் துவங்கிவிட்டன. கைகளுக்கும், சட்டைப் பைகளுக்குமாய் ஓடித் திரியும் ஸ்மார்ட் போன்கள் இணையத்தை விரல் சொடுக்கில் தொட்டுத் திரும்புகின்றன. இந்த நிலையைத் தாண்டி என்ன தான் வரப் போகிறது எனும் ஆர்வம் எப்போதுமே மனசில் இருக்கும். ஒரு சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம் போல ஏதோ ஒரு வசீகரம் நம்மை எப்போதுமே புரட்டிப் போடுகிறது இல்லையா ? அப்படி ஒரு வியப்பூட்டும் நிலையை இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் ( IOF : Internet Of Things ) உருவாக்கும். ஒரு தகவல் தேவைப்படுகிறது என வைத்துக் கொள்ளுங்கள். சட்டென “கூகிள்” பக்கத்துக்குத் தாவி வார்த்தையை டைப் செய்து மவுஸைச் சொடுக்குவீர்கள் இல்லையா ? அது உங்கள் விண்ணப்பத்துக்குத் தேவையான பக்கங்களை அள்ளிக் கொண்டு வந்து தரும். இப்போது டைப் கூட செய்யத் தேவையில்லை, பேசினாலே போதும் என்பது புது வரவு ! அப்படி வந்து சேரும் பக்கங்களில் உங்களுக்கு என்ன தேவையோ அதை எடுத்துக் கொள்ளலாம் என்பதே இன்றைய நிலை. இதில் அடிப்படை என்னவென்றால், தகவல்கள் இணையத்தில் இருக்க வேண்டும். யாரோ ஒருவர், எங்கோ ஒரு மூலையில் ஒரு தகவலை இணையத்தில் சேமித்து வைத்தால் மட்டுமே அதைப் பயன்படுத்த முடியும். அதுவும் தகவல்கள் மட்டுமே இப்போதைக்கு நமக்குக் கிடைக்கும் இல்லையா ? இதை இன்டர்நெட் ஆஃப் டேட்டா ( Internet of Data) எனலாம். அதாவது தகவல்களுக்கான இணையம். இதை அப்படியே கொஞ்சம் வசீகரக் கற்பனையில் விரித்துப் பாருங்கள். உலகில் இருக்கின்ற பொருட்கள் எல்லாமே ஏதோ ஒரு வகையில் இணைக்கப்பட்டிருந்தால் எப்படி இருக்கும் ? நம்ம வீட்டுக் கொல்லையில் இருக்கும் பலா மரம் முதல், வெள்ளை மாளிகையில் இருக்கும் ஒபாமா வீட்டு நாய்க்குட்டி வரை எல்லாமே இணைக்கப் பட்டிருந்தால் எப்படி இருக்கும் ? உலகிலுள்ள எந்தப் பொருளை வேண்டுமானாலும், ஒரு தனிப்பட்ட அடையாளத்தின் மூலம் கண்டறிய முடிந்தால் எப்படி இருக்கும் ? இப்படி எழுந்த ஏகப்பட்ட “எப்படி இருக்கும்” எனும் கேள்விகளுக்கான விடையாகத் தான் வரப் போகிறது “இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ்” அல்லது பொருட்களின் இணையம். “இணையம் என்றால் என்ன ? “ உலக அளவிலான வலையமைப்பு ஒன்று கணினி நெட்வர்க்களை ஒரு நேர்த்தியான தகவல் பரிமாற்ற இணைப்பு மூலம் (TCP/IP) இணைப்பது. “பொருட்கள்” என்பது என்ன ? “நம்மைச் சுற்றியுள்ள ஸ்பெஷல் அடையாளம் உள்ள, அல்லது தனித்துவ அடையாளம் இல்லாத விஷயங்கள்”. இந்த இரண்டையும் இணைத்துப் பாருங்கள். நம்மைச் சுற்றியுள்ள எல்லா விஷயங்களையும் தனித்துவ அடையாளம் மூலம் இனம் காண முடியும் ஒரு வலையமைப்பு. இது தான் “இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ்”. என்னால் சொல்ல முடிந்த மிக எளிய விளக்கம் இது தான். தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள், இன்டர்வியூக்களில் கேட்கப்படலாம் ! இதன் மூலம் உலகிலுள்ள பொருட்களுக்கெல்லாம் தனியே “அறிவு” வந்துவிடும். அதாவது செயற்கை அறிவு. உதாரணமாக இப்போதெல்லாம் காரில் ரிவர்ஸ் “சென்சார்கள்” இருப்பதை அறிவீர்கள் தானே. காரை பின்னோக்கி எடுக்கும்போது வண்டி எதிலாவது மோதுமா ?, எத்தனை தூரத்தில் தடை இருக்கிறது? என்பதை காரின் பின்னால் இருக்கும் சென்சார்கள் கவனித்துச் சொல்கின்றன. இதன் மூலம் காருக்கு ஒரு சின்ன “செயற்கை அறிவு” கிடைத்து விடுகிறது இல்லையா ? இப்படி ஒவ்வொரு சூழலுக்கும், ஒவ்வொரு பொருளுக்கும், ஒவ்வொரு இடத்துக்கும் செயற்கை அறிவு கிடைப்பது தான் விஷயம். இதன் மூலம் பொருட்களை அடையாளம் காண்பது மட்டுமல்லாமல், பொருட்கள் ஒன்றுடன் ஒன்று பேசிக்கொள்ளவும், சூழலோடு பேசிக்கொள்ளவும், தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும் முடியும். குழப்பமாக இருக்கிறதா ? ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். கூகிள் கார் கேள்விப்பட்டிருப்பீர்கள். டிரைவரே இல்லாமல் தனியே ஓடக் கூடிய கார் அது. நீங்கள் எங்கே செல்ல வேண்டும் எனும் தகவலை அதனிடம் சொல்லிவிட்டால் கார் உங்களைக் கூட்டிக் கொண்டு பத்திரமாய் அந்த இடத்தில் கொண்டு சேர்க்கும். சில ஆயிரம் மைல் தூரங்கள் ஆனாலும் கார் தொடர்ந்து பயணிக்கும். டிராபிக் வரும்போது வண்டியை நிதானமாக்கும், சாலை ஓரங்களில் இருக்கும் சிக்னல்களைக் கவனித்து அதன்படி நடக்கும், ஸ்பீட் லிமிட் போர்ட்கள் இருந்தால் அதன் படி காரை இயக்கும். பெட்ரோல் தீரப் போகிறது எனில் சொல்லும். கூடவே அடுத்த பெட்ரோல் பங்க் எங்கே இருக்கிறது, எவ்வளவு நேரம் ஆகும் எனும் சகல ஜாதகத்தையும் சொல்லும். மதிய வேளை ஆனால், “இன்னும் நாலு மைல் தூரத்துல ஒரு பிரியாணி கடை வருது நிப்பாட்டவா ?” என கேட்கும். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். சின்ன வயசில் படித்த அலாவுதீன் கதை உங்களுக்கு ஞாபகம் வருகிறதா ? இங்கே, கார் அதைச் சுற்றியிருந்த சிக்னல் லைட், தகவல் போர்ட், டிராபிக், டைம், காலநிலை என பல விஷயங்களோடு “கம்யூனிகேட்” செய்தது. அதாவது உரையாடியது, அல்லது தகவலைப் பெற்றுக் கொண்டது ! அதன் மூலம் தனது வேலையை கட்சிதமாய் முடித்தது. இந்த முறையில் விபத்துகள் கணிசமாகக் குறையும் என கணித்திருக்கிறார்கள். இது இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் – ன் ஒரு சின்ன சாம்பிள். RFID – ஞாபகம் இருக்கிறதா ? NFC பற்றிப் பேசியபோது நாம் பார்த்தோம். ரேடியோ பிரீக்வன்ஸி ஐடன்டிபிகேஷன் ( Radio-frequency identification) என்பதன் ரத்தினச் சுருக்கம் தான் RFID. ஒரு பொருளிலுள்ள “டேக்” ( tag) வானொலி அலை மூலமாக ஒரு தகவலை பரிமாற்றுவது தான் இதன் அடிப்படை. காரில் போகும்போது காணும் ஒரு விளம்பரச் சுவரொட்டியிலுள்ள ஒரு டேக் உங்கள் கையிலுள்ள ஸ்மார்ட் போனுக்கு ஒரு தகவலைப் பரிமாற்றுவது இதன் மூலம் சாத்தியம். இந்த ஆர்.எஃப்.ஐ.டி தொழில் நுட்பம் தான் இன்டெர்நெட் ஆஃப் திங்க்ஸ் எனும் கனவுக்குக் கலர் அடிக்கப் போகிறது ! அத்தோடு இணைந்து உதவப் போவது பல வகையிலான சென்சார்கள். உணவு, போக்குவரத்து, அலுவலகங்கள், தண்ணீர் சப்ளை, உணவுப் பொருட்கள் மேலாண்மை போன்ற விஷயங்களில் இவை மிகப்பெரிய பணியைச் செய்ய முடியும் என்கின்றனர் வல்லுநர்கள். ஐ.பி.எம் போன்ற பெரிய நிறுவனங்களெல்லாம் இன்டெர்நெட் ஆஃப் திங்க்ஸ் எனும் சிந்தனையின் அடிப்படையிலான ஆயிரக்கணக்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன என்பது கவனிக்கத் தக்கது. ஜி.இ நிறுவனம் வெள்ளோட்டம் விட்ட “ஸ்மார்ட் ஹாஸ்பிடல் ரூம்” வியக்க வைக்கிறது. இந்த அறையை அறையின் மேல்கூரையில் பொருத்தப்பட்டிருக்கும் மூன்று சென்சார்கள் முழு நேரமும் கவனித்துக் கொண்டே இருக்கின்றன. அவை தகவல்களை ஒரு ஸ்பெஷல் மென்பொருளுக்கு பரிமாற்றிக் கொண்டே இருக்கின்றன. எத்தனை முறை டாக்டர்கள் வருகின்றனர், நர்ஸ்கள் வருகின்றனர் என்பதை அது கவனிக்கிறது. நோயாளியைத் தொடும் முன்பும், பின்பும் டாக்டர் கை கழுவவில்லையேல் “டாக்டர், நீங்க கை கழுவ மறந்துட்டீங்க” என குரல் கொடுக்கும். நோயாளி வலியால் துடித்தால் அவருடைய முக பாவனையை வைத்தே டாக்டருக்கு அவசரச் செய்தி அனுப்பும் ! ரொம்பப் பக்கத்தில் எந்த நர்ஸ் இருக்கிறாரோ அவரை உஷார் படுத்தும். ஆச்சரியமாய் இருக்கிறது இல்லையா ? இவையெல்லாம் வரப் போகும் மாற்றத்துக்கான படிகளே. வீடுகளுக்குப் பொருத்தப்படும் வாட்டர் சிஸ்டம், அவசர காலத்தில் நம்மை எச்சரிக்கை செய்யும் சிஸ்டம், காலநிலை மாற்றத்தை முன்னரே கண்டறியும் திட்டம் என இந்த மாற்றத்தின் கிளைகள் பல இடங்களிலும் விரிவடைந்து கொண்டிருக்கின்றன. தற்போது தயாராகி வரும் ஸ்மார்ட்போன், டேப்லெட் போன்றவை பெரும்பாலும் இந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டு செயல்படக் கூடிய வகையிலேயே உருவாகின்றன. இந்தத் திட்டம் நிறைவேறவேண்டுமெனில் சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை. குறிப்பாக செல்போன் சேவை நிறுவனங்கள், தயாரிப்பாளர்கள், தனியார் நிறுவனங்கள், வர்த்தக சேவைகள், இணைய சேவை நிறுவனங்கள், சமூக வலைத்தளங்கள் என நீளும் எல்லாரும் கைகோக்க வேண்டியது ரொம்ப முக்கியம் “குளோபல் பல்ஸ்” எனும் முயற்சியின் இயக்குனர் ராபர்ட் கிர்க்பேட்ரிக். இவர் இந்த ஒருங்கிணைப்பை “டேட்டா பிலன்ந்தராபி (data philanthropy) என பெயரிட்டு அழைக்கிறார். 2020ம் ஆண்டு நிறைவேறிவிடும் எனும் கனவுடன் இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் எனும் முயற்சியை உலக நிறுவனங்கள் தொடர்கின்றன. இந்தக் கனவு பல சவால்களை எதிர்கொள்கிறது. ஒன்று மாறிவரும் தொழில் நுட்பம். ஆண்டு தோறும் நிகழும் பல்வேறு புதிய தொழில்நுட்ப மாற்றங்கள் திட்டத்தை அடிக்கடி மறுபரிசீலனை செய்து, புதுமைப்படுத்த வைக்கிறது. இரண்டாவது இதற்கு அதிகப்படியான ‘எனர்ஜி’ தேவைப்படும். அந்த சக்தியை இயற்கையிலிருந்து உருவாக்கும் சக்தி கொண்ட பொருட்களை உருவாக்குவது அவசியம். மூன்றாவது, இது தனி மனித சுதந்திரத்தை குழியில் போட்டுவிடும் எனும் அச்சம் ! இதைத் தவிரவும் ஏகப்பட்ட தொழில்நுட்ப சாவல்கள், தொழில் நுட்பம் சாராத சவால்கள் இதைச் சுற்றி உலவுகின்றன. இங்கிலாந்திலுள்ள சவுத்ஆம்டன் பல்கலைக்கழக பேராசிரியர் நிகல் ஸேட்போல்ட் இது குறித்துப் பேசும்போது ரொம்ப உற்சாகமாகிவிடுகிறார். உலகம் இதுவரை காணாத ஒரு மிகப்பெரிய அறிவுப் புள்ளியாய் உருமாறிவிடும். உங்கள் பிரிட்ஜ் முதல் பிரிட்ஜ்க்கு உள்ளே இருக்கும் ஆப்பிள் வரை எல்லாமே தொடர்புக்குள் இருக்கும். “என்னைக் குடிக்காதே நான் காலாவதி ஆனவன்” என மருந்து பாட்டில் எச்சரிக்கும். இந்தப் பொருளை விட அடுத்த கடையில் இருக்கும் பொருள் விலைகுறைவு என பொருளே தகவல் சொல்லும். இப்படி ஒரு அறிவியல் புனைக்கதை போன்ற ஒரு உலகில் நீங்கள் உலவலாம். என வியக்க வைக்கிறார். இன்னும் சிறிது காலத்தில் “மூக்குக் கண்ணாடியை எங்கேடா வெச்சேன் பேராண்டி” எனக் கேட்கும் தாத்தாவுக்கு பேரன் “இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ்” மூலம் தேடி எடுத்துத் தருவான் ! கட்டிலுக்கு அடியிலிருந்து. ஃ சேவியர் நன்றி – தினத்தந்தி. Share this: Facebook Twitter Email More Print LinkedIn WhatsApp Skype Like this: Like Loading... By சேவியர் • Posted in ALL POSTS • Tagged article, அறிவியல், கட்டுரை, சமூகம், சேவியர், விமர்சனம், internet, io, IOF 6 Jun 15 2012 POS ! என்ன ? ஏன் ? எப்படி ? “சார், லைஃப் டைம் ஃபிரீ கிரெடிட் கார்ட் சார்.. வாங்கிக்கிறீங்களா ?” என வசீகரிக்கும் குரலில் உங்களுக்கு பல முறை அழைப்புகள் வந்திருக்கலாம் ! காரணம் கார்ட்களுக்கு இருக்கக் கூடிய மார்க்கெட் மற்றும் தேவை. காய்கறி வாங்குவதற்குக் கூட கிரடிட் கார்ட் எடுத்துக் கொண்டு போவது நகர்ப்புறங்களில் இன்றைக்கு சர்வ சாதாரணம். கிரடிட் கார்ட் வேண்டாம் என நினைப்பவர்களிடமும் இருக்கவே இருக்கும் ஒரு டெபிட் கார்ட். மிச்சம் வைக்காமல் மாதா மாதம் பணம் கட்டுபவர்களுக்கு கிரடிட் கார்ட் ரொம்பவே வசதி. மாதா மாதம் ஒழுங்காகக் கட்டாமல் மிச்சம் மீதியை அடுத்த மாதத்துக்குத் தள்ளி வைப்பவர்களுக்கு அதுவே வட்டி மேல் வட்டி வந்து இரத்தம் உறிஞ்சும் அட்டையாக மாறிவிடும் அபாயமும் உண்டு என்பதை சொல்லத் தேவையில்லை. கடைக்குச் சென்று பொருட்களை வாங்குவீர்கள். பிறகு பணம் செலுத்துவதற்காக உங்களுடைய அட்டையைக் கடையில் கொடுப்பீர்கள் இல்லையா ? அதை ஒரு சின்ன கருவியில் அதைத் தேய்ப்பார்கள். உங்களிடம் இருப்பது “ஸ்மார்ட் கார்ட்” எனில் அந்தக் கருவியில் சொருகுவார்கள். பார்த்திருப்பீர்கள். அந்தக் கருவியின் பெயர் தான் பாயின்ட் ஆஃப் சேல் ( Point of Sale – POS ). பி.ஓ.எஸ் என அதைச் சுருக்கமாக அழைப்பார்கள். ஹார்ட்வேர் மற்றும் சாஃப்ட் வேர் இரண்டும் இணைந்து ஒரு விற்பனை பரிமாற்றம் நடத்துவது தான் இது ! அதைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா ? 1973ல் ஐ.பி.எம் (IBM) நிறுவனம் அறிமுகப்படுத்திய ஐபிஎம் 3650 மற்றும் ஐபிஎம் 3660 இரண்டும் தான் இவற்றின் முன்னோடி ! 1974ம் ஆண்டு மெக்டானல்ஸ் உணவகம் இதே போன்ற ஒரு கருவியை அறிமுகம் செய்தது. ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு பட்டன் இருக்கும். என்னென்ன பொருட்கள் தேவையோ அதற்கு எதிரே இருக்கும் பொத்தான்களையெல்லாம் ஒவ்வொன்றாய் அமுக்க வேண்டும். கடைசியில் கருவி மொத்தம் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் எனும் “பில்”லை எடுத்து நீட்டும். அப்போது எல்லோரும் வாய் பிளந்து பார்த்த அந்தக் கருவி, இன்றைக்கு அருங்காட்சியகத்துக்குப் போய்விட்டது ! இப்போதைய பி.ஓ.எஸ் கள் அதி நவீனம் ! கம்ப்யூட்டர், மொபைல் போன்றவற்றுக்கெல்லாம் ஏகப்பட்ட மென்பொருட்கள் உண்டு. அதே போல பி.ஓ.எஸ் கருவியில் செயல்படுவதற்கென்றும் ஏகப்பட்ட மென்பொருட்கள் உண்டு. 1992ம் ஆண்டு மார்ட்டின் குட்வின் மற்றும் பாப் ஹென்றி எனும் இருவரும் இணைந்து ஐ.டி ரிடெயில் ( IT Retail) எனும் ஒரு மென்பொருளை உருவாக்கினார்கள். மைக்ரோசாஃப்ட் வின்டோஸ் செயலியில் செயல்படக் கூடிய அந்த மென்பொருளை இன்றைய “பி.ஓ.எஸ்” மென்பொருட்களின் பிதாமகன் என்று சொல்லலாம் ! தப்பில்லை ! “பார் கோட்” (Bar Code) தெரியும் தானே ? பொருட்களின் பின்னால் புரியாத வகையில் கருப்பு நிறத்தில் கோடு கோடாய் இருக்குமே !. அது வந்த பிறகு பி.ஓ.எஸ் கருவிகளின் முகமும், அகமும் மாறிப் போய்விட்டது. இன்றைக்கு வழக்கமாக இருக்கும் முறை இது தான். நீங்கள் பொருட்களை வாங்கிக் கொண்டு கார்டைக் கொடுக்கும் போது விற்பனையாளர் அந்த கார்டை பி.ஓ.எஸ் கருவியில் தேய்க்கிறார். கருவி அந்த கார்டில் உள்ள எண்ணை ஸ்கேன் செய்து கொள்கிறது. சில பி.ஓ.எஸ் கருவிகளில் தானாகவே எண் எடுத்துக் கொள்ளப் படுவதில்லை. அதை டைப் செய்ய வேண்டும் ! அதன் பிறகு எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் எனும் விஷயத்தையும் கொடுத்தால் கருவி ஒரு “செய்தி”யை நெட்வர்க்கிற்கு அனுப்பும். அந்த நெட்வர்க் “சுவிட்ச்”(Switch Software) எனப்படும் மென்பொருளுக்கு அந்தத் தகவலை அனுப்பும். சுவிட்ச் தான் நம்முடைய வங்கிக் கணக்கில் கை வைக்கும். கார்ட் நல்லது தானா ? அப்படி ஒரு வங்கிக் கணக்கு உண்டா ? என பல சோதனைகளுக்குப் பிறகே அது வேலை பார்க்கத் துவங்கும். டெடிட் கார்டாய் இருந்தால் உடனடிப் பணக் குறைப்பும், கிரடிட் கார்ட் எனில் கணக்கில் வரவு வைக்கவும் சுவிட்ச் தான் முடிவு செய்யும். ஒவ்வொரு செய்திக்கும் ஒவ்வொரு பொருள் உண்டு. பெரும்பாலானவை “ஃபைனான்ஸியல் டிரான்ஸாக்சன்ஸ்” தான். உதாரணமாக, ஒரு ஹோட்டலுக்குச் சென்று வயிறுமுட்டச் சாப்பிடுகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். கடைசியில் பில் வரும். உங்களுடைய கார்டை வைப்பீர்கள். அவர்கள் அதை பயன்படுத்தி “பில்” கொண்டு வைப்பார்கள். ஒருவேளை நீங்கள் ரொம்ப தாராள மனம் படைத்தவராக இருந்தால் என்ன செய்வீர்கள் ? அந்த பில்லில் “டிப்ஸ்” 50 ரூபாய் என எழுதி கையெழுத்துப் போடுவீர்கள், பின் கார்டை எடுத்துக் கொண்டு போய் விடுவீர்கள். அவர்களுக்கு அந்தப் பணம் எப்படிப் போய் சேர்கிறது ? நீங்கள் தான் உங்கள் கார்டை இரண்டாவது முறை கொடுக்கவேயில்லையே ? யோசித்ததுண்டா ? இந்த டிப்ஸ் – டிரான்சாக்ஸன் “பிரி ஆத்” (Pre Auth) எனப்படும். பிரி ஆத்தரைசேஷன் ( Pre Authorization) என்பதன் சுருக்கம் தான் அது ! ஏற்கனவே ஒரு அனுமதி தகவல் பகிர்வை உங்கள் கார்டைப் பயன்படுத்தி வாங்கி வைத்திருப்பார்கள். நீங்கள் டிப்ஸ் கொடுத்தால் பயன்படுத்திக் கொள்வார்கள். இல்லையேல் அது டம்மி டிரான்சாக்ஸனாக மாற்றப்பட்டுவிடும். வேகமான செயல்பாடு, பணத்தை நாலு தடவை எச்சில் தொட்டு எண்ணும் அவஸ்தையிலிருந்து விடுதலை, கணக்கு இடிக்குதே என தலையைச் சொறிவதிலிருந்து எஸ்கேப், எளிய பயன்பாடு, கள்ள நோட்டுப் பிரச்சினை இல்லை என ஏகப்பட்ட பயன்கள் இந்த பி.ஓ.எஸ் பயன்பாட்டில் உண்டு. ஒரே ஒரு சிக்கல், இந்த கருவியின் பயன்பாட்டு அடிப்படையில் உரிமையாளர் பணம் கட்ட வேண்டும் என்பது தான். அந்தப் பணம் மென்பொருள் தயாரிப்பவர்கள், மெயின்டென்ய் செய்பவர்கள், இணையப் பயன்பாடு கொடுப்பவர்கள் என பலருக்கும் போய்ச் சேரும். அதற்கெல்லாம் சேர்ந்து பொருட்களில் விலை ஏற்றி உங்களிடமிருந்து கறந்து விடுவார்கள் என்பது சொல்லக் கூடாத தொழில் ரகசியம். இந்த பி.ஓ.எஸ் கருவிகளில் வயர் இணைக்கப்பட்டது, வயர்லெஸ் என இரண்டு வகைகள் உண்டு. இணைப்பு கருவிகள் டெலபோன் வயருடன் இணைக்கப்பட்டிருக்கும். வயர்லெஸ் கருவிகள் ‘கம்பியில்லாத் தந்தி’ தொழில் நுட்பத்தில் இயங்குவது ! போகும் வழியில் டிராபிக் போலீஸ்காரர் உங்களை வழிமறித்து “ஃபைன் “ கொடுக்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அவரிடம் இருக்கும் பி.ஓ.எஸ் மெஷின் வயர்லெஸ் வகையைச் சேர்ந்ததாய் இருக்கும் ! வெளிநாடுகளில் வயர்லெஸ் பி.ஓ.எஸ் கருவிகள் தான் பெரும்பாலும் பயன்பாட்டில் இருக்கின்றன. குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகளில் நீங்கள் வண்டியை பார்க்கிங் செய்யும் இடமானாலும் சரி, பயணிக்கும் டேக்ஸி ஆனாலும் சரி, காய்கறி கடை ஆனாலும் சரி, ஹோட்டல் ஆனாலும் சரி எல்லா இடங்களிலும் வயர்லெஸ் மயம் தான் ! ரேடியோ அலைகள் மூலமாக தகவல்கள் அனுப்புவது தான் இவற்றின் அடிப்படை. இந்த கருவி ஒரு மாஸ்டர் கணினியுடன் இணைக்கப்பட்டு தகவல்கள் சேமிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவற்றின் முதல் அங்கீகரிக்கப்பட்ட நியமம் உருவானது 1996ம் ஆண்டு. OPES எனும் இந்த நியமத்தை மைக்ரோசாஃப்ட், எப்ஸன், என்.சி.ஆர் கார்பரேஷன், ஃபுஜிஸ்டு போன்ற பெரிய நிறுவனங்களெல்லாம் ஒன்று கூடி உருவாக்கின. 1996ம் ஆண்டு இதன் முதல் பாதம் மண்ணில் பதிந்தது ! OPES வேறொன்றுமில்லை (OLE – Object Linking and Embedding for POS ) பி.ஓ.எஸ் கருவிகளுக்கான இணைப்பு என்பது தான் பொருள். அதற்குப் பிறகு சன் மைக்ரோசிஸ்டம்ஸ், ஐ.பி.எம் மற்றும் என்.சி.ஆர் கார்பரேஷன் இணைந்து ஜாவா பி.ஓ.எஸ் உருவாக்கினார்கள். கருவி சாரா தொழில் நுட்பம் இது ! இது 1999ல் வெளியானது. பி.ஓ.எஸ் கருவி வழியாகச் அனுப்பப்படும் ஒவ்வொரு தகவலையும் டிரான்ஸாக்சன் ( Transaction) என்று பொதுப்படையாக சொல்வார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்தது தான். இந்த தகவல்கள் ஒரு பி.ஓ.எஸ் கருவியிலிரிந்து இன்னொரு நெட்வர்க் வழியாக சுவிட்ச் நோக்கிப் போகும் இடம் பாதுகாப்புப் பிரச்சினை உடையது ! திருட்டுப் பயல்களால் திருடப்பட்டுவிடும் அபாயம் உண்டு. அதற்காக பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை அமைத்திருப்பார்கள். டெஸ், டபிள் டெஸ், டிரிப்பிள் டெஸ்( DES, Double DES, Tripple DES ) போன்றவையெல்லாம் பிரபலமானவை . DES என்பது Data Encryption Standard என்பதன் சுருக்கம். பி.ஓ.எஸ் கருவி தகவல்களை சங்கேத முறையில் அனுப்புவதும், மறுமுனையில் அந்த செய்தி மீண்டும் சரியான படி வாசிக்கப்படுவதும் தான் இதன் அடிப்படை. அதை எத்தனை அடுக்கு சங்கேதமாக்குகிறார்கள் என்பதன் அடிப்படையில் அதை டபிள், டிரிப்பிள் என்றெல்லாம் அழைக்கிறார்கள். இன்னொரு பாதுகாப்பு முறை உண்டு. அது தான் இப்போது மிகப் பிரபலம். அதாவது ஒவ்வொரு செய்தியுடனும் ஒரு சங்கேதக் குறியீடு இருக்கும். எனவே திருடுவது ரொம்பக் கஷ்டம். அப்படியே தகவலைத் திருடினாலும் பியூஸ் போன பல்ப் போல அவர்களால் அதைப் பயன்படுத்த முடிவதில்லை. இந்த முறையை டக்பிட் ( DUKPT – Derived Unique Key Per Transaction) என்கின்றார்கள். சில கடைகளுக்கு பல மாடிகள் இருக்கும். ஒவ்வொரு மாடியிலும் சிலப் பல பி.ஓ.எஸ் டிவைஸ் கள் இருக்கும். அவற்றில் எல்லாம் மொத்தம் என்னென்ன விற்பனை நடந்திருக்கின்றன என்பதை எளிதில் அறிந்து கொள்ளும் வசதியையும் “பி.ஓ.எஸ்” மென்பொருட்கள் தருகின்றன. அதே போல நாட்டின் பல இடங்களில் இருக்கும் தொடர் கடைகளின் பி.ஓ.எஸ் டிவைஸ் கள் எல்லாவற்றையும் கூட்டிக் கழித்து கணக்கு பார்க்கும் வசதியும் மிக எளிதிலேயே கிடைக்கும் ! இவை வெப் பேஸ்ட் கருவி இணைப்பாய் இருக்க வேண்டும் என்பது மட்டுமே ஒரே நிபந்தனை ! பி.ஓ.எஸ் டிவைஸ் கள் பல வகை உண்டு. சில கருவிகள் மானிடர், பண டிராயர் போன்றவற்றுடன் இணைக்கப்பட்டிருக்கும். சிலவற்றில் “கையொப்பம்” போடும் வசதி இருக்கும். சிலவற்றில் கிரடிட் கார்ட், டெபிட் கார்ட், ஸ்மார்ட் கார்ட் என எல்லா வகைகளையும் பயன்படுத்த முடியும், சிலவற்றில் செக்களைக் கூட ஸ்கேன் செய்ய முடியும். சில பி.ஓ.எஸ் டிவைஸ்களில் டிஸ்கவுண்ட் கூப்பன் போன்றவைகளைப் பயன்படுத்த முடியும் ! தேவைக்குத் தக்கபடி கிடைக்கும் என்பதே சுருக்கமாய் சொல்ல வந்த விஷயம். அடுத்த முறை கடைக்காரர் கார்டை ஸ்வைப் செய்யும்போ, “சார் இதுல என்ன செக்யூரிடி செக் யூஸ்பண்றீங்க ? டெஸ்ஸா ? இல்லை டக்பிட்டா ?” என கேட்டு அவரை மிரளச் செய்யுங்கள் ! ஃ நன்றி : தினத்தந்தி – மவுஸ் பையன். Share this: Facebook Twitter Email More Print LinkedIn WhatsApp Skype Like this: Like Loading... By சேவியர் • Posted in ALL POSTS • Tagged அறிவியல், இலக்கியம், கட்டுரை, குடும்பம், சமூகம், சேவியர், விமர்சனம், Point of Sale, POS, review 3 Jan 17 2011 BLACK SWAN : எனது பார்வையில் அதென்னமோ தெரியல, என்ன மாயமோ தெரியல. சமீபகாலமா பார்க்கும் படங்கள் ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரேஞ்சுக்கு இருக்கிறது. பொதுவாகவே அதிக சினிமா விமர்சனம் எழுதுவதில்லை. சொல்ல வேண்டும் எனத் தோன்றும் படங்களைப் பற்றி மட்டுமே எழுதுகிறேன். முதல்ல சொன்னது மாதிரி, சமீப காலமா பார்க்கும் படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரேஞ்சில் இருப்பதால் நிறைய விமர்சனங்கள் எழுதுகிறேன் நண்பர்கள் மன்னிப்பார்களாக. பிளாக் ஸ்வான், பாலே நடனத்தின் பின்னணியில் விரியும் ஒரு அழகிய உளவியல் திரில்லர். பொதுவாகவே கலை, விளையாட்டுகளைப் பின்னணியாகக் கொண்டு கட்டப்படும் படங்கள் மீது எனக்கு தனிப் பிரியம் உண்டு. முழுக்க முழுக்க புனைவுகளின் அடிப்படையில் நகர்ந்தாலும் விளையாட்டின் நுணுக்கங்கள், வியூகங்கள், சிக்கல்கள், பயிற்சிகள் என பல விஷயங்கள் சுவாரஸ்யமாக இருக்கும். இந்தப் படமும் பாலே நடனத்தைக் குறித்த பல்வேறு விஷயங்களை அழகாக விவரிக்கிறது. நியூயார்க் ஸ்வான் லேக் பாலே குழுவினரின் பாலே நிகழ்ச்சியில் ஸ்வான் குயீனாக தேர்வு செய்யப்படுகிறார் கதா நாயகி நீனா சாயர்ஸ் ( நடாலி போர்ட்மேன்). கதையில் வெள்ளை ஸ்வான் மற்றும் கருப்பு ஸ்வான் என இரண்டு கதாபாத்திரங்கள். இரண்டையும் செய்யப் போவது நீனா தான். ஆனால் அவரோ இளகிய மனம் படைத்த இளம் பெண். வெள்ளை அன்னத்துக்கு அச்சு அசலாகப் பொருந்திப் போனாலும், கருப்பு அன்னத்துக்கான ஏரியாவில் வீக் ஆகவே இருக்கிறார். அந்த குறைபாடே அவருக்கு உளவியல் ரீதியான தோற்ற மயக்கங்களையும், காட்சிப் பிழைகளையும் உருவாக்குகிறது. தனது வாய்ப்பைத் தட்டிப் பறிக்கும் தோழிகள், தன்னைத் துரத்தும் அமானுஷ்ய உருவம் என அவர் தனது மனசுக்குள்ளேயே கற்பனை நிகழ்வுகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியில் கற்பனைகள் கழன்று கொள்ள நடப்பது நிஜத்தின் கிளைமேக்ஸ். நடனம், காதல், துரோகம், அச்சம், செக்ஸ் என கலவைகளின் நிறமடிக்கிறது படத்தில். இயக்குனர் டேரன் அர்னோஃப்ஸ்கி, ஹாலிவுட் திரைப்படங்களின் பிரியர்களுக்கு ரொம்பவே பரிச்சயமானவர் தான். அவருடைய துணிச்சலான திரைப்படங்களின் தொடர்ச்சியாய் பிளாக் ஸ்வானும் நிலை பெற்றிருக்கிறது. “உனக்கு எதிரி வேறு யாருமல்ல, நீ தான்” என பயிற்சியாளர் ஒரு காட்சியில் பேசும்போது பார்வையாளர்கள் புரிந்து கொள்ளும் அர்த்தமும், கடைசியில் அந்த வார்த்தை கொண்டு வரும் புது விதமான அர்த்தமும் நேர்த்தியான திரைக்கதைக்கான ஒரு சோறு பதம் ! மென்மையாக, மெதுவாக நகரும் திரைப்படம் போகப் போக வேகமெடுத்து ஓடுகிறது. கதாநாயகியின் பார்வையில் நகரும் படம் உண்மையையும், நாயகியின் கற்பனைக் காட்சிகளையும் படம் பிடித்துக் கொண்டே செல்கிறது. இதில் சுவாரஸ்யமும், சிக்கலும் என்னவென்றால் எது உண்மை, எது கற்பனை என்பது பார்வையாளனுக்குக் கடைசி வரை தெரியவே தெரியாது என்பது தான். இன்சப்ஷனிலாவது ஒரு பம்பரத்தைச் சுத்த வுட்டாங்க, இங்கே அது கூட லேது ! இசை, அற்புதம் டாட் என்று எந்திரன் ஸ்டைலில் சொல்லி விடுவது சிறப்பு. அதைப் பற்றி அதிகம் பேச எனக்கு இசை ஞானம் இல்லை என்பது ஒரு விஷயம், அந்த அளவுக்கு மார்ஷல் டுவிஸ்ட் வசீகரிக்கிறார் என்பது இன்னொரு விஷயம். வாய்ப்புக் கிடைத்தால் பாருங்கள். பிடித்திருந்தால் வாக்களியுங்கள் Share this: Facebook Twitter Email More Print LinkedIn WhatsApp Skype Like this: Like Loading... By சேவியர் • Posted in ALL POSTS • Tagged சினிமா, பிளாக் ஸ்வான், விமர்சனம், ஹாலிவுட், Black Swan, cinema, hollywood, review 8 Jan 11 2011 BURIED : எனது பார்வையில் கண் விழித்துப் பார்க்கும்போது உங்களைச் சுற்றிலும் கும்மிருட்டாய் இருந்தால் எப்படி இருக்கும் ? கைகால்களை நீட்ட முடியாமல், எழ முடியாமல் இருந்தால் எப்படி இருக்கும் ? நீங்கள் ஒரு சவப்பெட்டிக்குள் அடைக்கப்பட்டு பாலைவனத்தில் ஏதோ ஒரு இடத்தில் புதைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று தெரிந்தால் எப்படி இருக்கும் ? நினைத்து பார்க்கவே திகிலூட்டும் இந்தச் சூழலை பரீட் திரைப்படம் திரையில் விரிக்கிறது. கும்மிருட்டில் கண் விழித்து தான் எங்கே இருக்கிறோம் என்று தெரியாமலேயே அச்சத்தில் கூச்சலிடும் ஹீரோ, தான் ஒரு சவப்பெட்டிக்குள் அடைத்து எங்கோ புதைக்கப்பட்டிருப்பதை லைட்டர் வெளிச்சத்தில் உணர்கிறார். அந்த நிமிடங்கள் அவனை அதிர்ச்சியின் பள்ளத்தாக்கில் புதைத்து விடுகின்றன. எதுவும் செய்ய இயலாதவனாய், யாரேனும் காப்பாற்றினால் தான் வெளியே வர முடியும் எனும் நிலையில் அவனுடைய மரண பயத்தை படம் அட்சர சுத்தமாய் அள்ளிக் கொண்டு வந்திருக்கிறது. ஈராக்கில் டிரக் ஓட்டுவதற்காக வந்த ஒரு ஏழை அமெரிக்கப் பிரஜை அவன். ஈராக்கியர்களிடம் பிடிபடுகிறான். அவர்கள் அவனை சவப்பெட்டியில் போட்டு புதைத்து விடுகிறார்கள். 9/11 க்கு சற்றும் சம்பந்தமில்லாத ஈராக்கியர்கள் அமெரிக்கப் படைகளால் பாதிக்கப்பட்டது போல, போருக்குச் சற்றும் சம்பந்தமில்லாத இந்த டிரைவரும் பாதிக்கப்படுகிறான். சவப்பெட்டிக்குள் ஒரு செல்போன் இருக்கிறது. அந்த செல்போன் மூலம் வெளியுலகைத் தொடர்பு கொள்ள அவன் முயல்வதும், அவன் தொடர்பு கொள்ளும் இடங்களிலெல்லாம் பொய்களும், தப்பித்தல்களும், சால்ஜாப்புகளும் நிரம்பியிருப்பதும் பதட்டத்தை அதிகரிக்கிறது. போதாக்குறைக்கு மணல் பாம்பு ஒன்றும் திடீரென சிறு ஓட்டை வழியே உள்ளே நுழைந்து விட பரபரப்பு எகிறுகிறது. எப்படியாவது வெளியேறி விடவேண்டுமே எனும் ஹீரோவின் தவிப்பில் பார்வையாளனுக்கு மூச்சு முட்டுகிறது. மரணம் நெருங்கும்போது தானே வாழ்க்கை உன்னதமாய்த் தெரிய ஆரம்பிக்கிறது. சவப்பெட்டியில் அடைபட்டவனும் அந்த நிலைக்கு வருகிறான். எப்படியேனும் வாழ இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்காதா என தவிக்கிறான். ஏறக்குறைய மறந்துவிட்டிருந்த தாயை அழைப்பது, மகனைக் காப்பாற்ற சொந்த விரலை வெட்டுவது, மனைவியுடன் உருகுவது என கலங்கடிக்கும் காட்சிகளால் பின்னப்பட்டிருக்கிறது திரைக்கதை. அடைபட்டவனைக் காப்பாற்றுவதை விட, இதிலிருந்து கைகழுவி விடவேண்டுமென துடிக்கும் நிறுவனங்களின், அரசு அதிகாரிகளின் சுயநல, மனிதாபினானமற்ற உரையாடல்கள் மனிதத்தின் மீதான கேள்வியை மிக ஆழமாகவே எழுதியிருக்கின்றன. கடைசியில் சவப்பெட்டியை உடைத்துக் கொண்டு மணல் உள்ளே வர ஆரம்பிக்க பின் நடப்பது உறைய வைக்கும் கிளைமேக்ஸ். தீவிரவாதிகளால் கடத்தில் செல்லப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டார் என்று எட்டாம் பக்கம் பெட்டிச் செய்தியில் வரும் ஒரு செய்தி, உண்மையில் எத்தனை வலிமிகுந்தது என்பதைப் பொட்டில் அறைந்தாற்போல் சொல்கிறது படம். ஒவ்வொர் நிகழ்வுக்குப் பின்னாலும் உறைந்து கிடக்கும் துயரங்களில் கடலை திரைப்படம் காட்சிப்படுத்தியிருக்கிறது. ரசிகனுக்குப் போரடிக்கும் என தமிழ் டைரக்டர்கள் உலகெங்கும் பறந்து பாடல்காட்சிகளை படமெடுத்துக் கொண்டிருக்கையில், ஒரே ஒரு சவப்பெட்டியை மட்டுமே 90 நிமிடங்கள் காட்டி படத்தை வினாடி நேரம் கூட போரடிக்காமல் படத்தைக் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் ரோர்டிகோ கார்டெஸ். படத்தில் நடித்திருக்கும் ஒரே நடிகர் ரயன் ரெய்னாட்ஸ். விருதுகளை அள்ளித் தரக்கூடிய அற்புதமான உணர்வுகளை லைட்டர் வெளிச்சத்திலும், செல்போன் வெளிச்சத்திலும் அவர் வெளிப்படுத்தியிருப்பது பிரமிக்க வைக்கிறது. படத்தில் வேறு யாருமே இல்லை. வெறும் தொலைபேசிக் குரல்கள் மட்டுமே ! ஆறடிக்கு நான்கடி அளவுள்ள சவப்பெட்டியை மட்டுமே 90 நிமிடம் காட்டியிருப்பதில் ஒளிப்பதிவும், டைரக்ஷனும் வியக்க வைக்கின்றன. இன்னொரு குறிப்பிடவேண்டிய அம்சம் இசை. காட்சிகளைக் கட்சிதமாய் உள்வாங்கி பார்வையாளனை இருக்கையில் ஆணி போல அறைந்து வைக்கிறது. கர்ப்பிணிகளும், பலவீன இதயமுடையவர்களும் பார்க்க வேண்டாம் என டைட்டில் கார்ட் போடக்கூடிய அளவுக்கு இரத்த அழுத்தத்தை ஏற்றி இறக்கும் காட்சிகள் தான் ஒன்றரை மணி நேரமும் ! சமீபத்தில் பார்த்த படங்களில் மனதை உலுக்கிய படங்களில் ஒன்று இது ! வாய்ப்புக் கிடைத்தால் பாருங்கள். பிடித்திருந்தால் வாக்களியுங்கள்… Share this: Facebook Twitter Email More Print LinkedIn WhatsApp Skype Like this: Like Loading... By சேவியர் • Posted in ALL POSTS • Tagged சினிமா, சேவியர், பரீட், விமர்சனம், ஹாலிவுட், buried, Hollywodd, Movie Review 6 Jan 9 2011 DEVIL : திரைப்படம் எனது பார்வையில் ஒரு லிப்ட்டில் பயணிக்கிறார்கள் ஐந்து பேர். இரண்டு பெண்கள் மூன்று ஆண்கள். லிஃப்ட் அமானுஷ்யமான விதமாக இருபத்தோராவது மாடியில் நின்று விடுகிறது. அந்த லிஃப்டில் நடக்கும் திக் திக் திகில் மர்ம நிகழ்வுகள் தான் ஒன்றரை மணி நேரம் பரபரப்பாய் ஓடும் டெவில் திரைப்படம் ! படம் துவங்கியதும் அந்த உயரமான கட்டிடத்தின் முப்பத்து ஐந்தாவது மாடியிலிருந்து ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொள்கிறார். பின்னணியில் ஒரு குரல் கதை சொல்கிறது. “டெவில் உலகத்துக்கு வரும்போது ஒரு தற்கொலையைப் பிள்ளையார் சுழியாய்ப் போட்டு விடுகிறது ! பின்னர் அது நரகத்துக்கு இழுத்துச் செல்ல வேண்டிய ஆளை குறி வைக்கிறது. அதன் ஆட்டம் அங்கே ஆரம்பமாகிறது ” அந்தத் தற்கொலையை விசாரிக்க வருகிறார் ஒரு டிடெக்டிவ். அவர் தன்னுடைய மனைவியையும் மகனையும் ஒரு விபத்தில் பறிகொடுத்து சோகத்தில் சுற்றிக் கொண்டிருப்பவர். அந்த விபத்தை ஏற்படுத்தியவன் இன்னும் சிக்கவில்லை. அந்த குறிப்பிட்ட லிஃப்டில் ஐந்து பேர் ஒவ்வொருவராக வந்து நுழைகிறார்கள். அவர்கள் ஐந்து பேருமே குற்றப் பின்னணி உடையவர்கள். உடனே அரசியல் வாதிகள் என்று நினைத்து விடாமல் இருப்பீர்களாக. லிஃப்ட் இருபத்து ஒன்றாவது மாடியில் சிக்கிக் கொள்கிறது. லிஃப்டில் என்ன நடக்கிறது என்பதை கேமரா மூலம் பார்த்துக் கொண்டிருக்கும் செக்யூரிடி ஆபீசர்கள் மெக்கானிக்கை அனுப்புகிறார்கள். ஆனால் நடப்பது டெக்னிகல் பிரச்சினையல்ல. பேய் விளையாட்டு என்பது போகப் போகத் தெரிந்து விடுகிறது. லிஃப்டில் இருப்பவர்கள் பேசுவது செக்யூரிடி ஆபீசர்களுக்குக் கேட்காது என்பது டென்ஷனை அதிகரிக்க பயன்படுகிறது. லிப்டில் சிக்கியிருக்கும் இந்த ஐந்து பேரில் ஒருவர் தான் பேயாம். லிஃப்டில் திடீர் திடீரென டர்ர்ர்…டர்ர்…. என கரண்ட் போய்விடுகிறது. கரண்ட் கட் ஆனதும் யாரோ ஒருவருக்கு ஏதோ ஒரு விபரீதம் நடந்து விடுகிறது. கேமராவில் திடீர் திடீரென பேய் உருவம் வந்து போக, திகில் பரவுகிறது. காவல்துறை, தீயணைப்புப் படை, ஹோட்டல் நிர்வாகம் என எல்லாரும் பரபரப்பாய் லிஃப்டில் சிக்கியிருப்பவர்களை மீட்கப் போராடுகிறது. ஆனால் லிஃப்டில் விஷயம் கை மீறிப் போய்விடுகிறது. மரணம் லிஃப்டை ஆக்கிரமித்துக் கொள்கிறது. அந்த லிஃப்டில் சிக்கிக் கொண்டிருக்கும் ஒருவன் தான் டிடெக்டிவின் மனைவி, மகனை விபத்தில் சாகடித்து விட்டு குற்ற உணர்வோடு ஓடிப் போனவன் ! இப்படி சின்னச் சின்ன டுவிஸ்ட்களால் கட்டப்பட்டிருக்கிறது டெவில். நம்ம ஊர் விஜய் போல தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த நைட் ஷியாமளனுக்கு கொஞ்சம் மூச்சு விட வாய்ப்புக் கொடுத்திருக்கிறது இந்தப் படம். இந்தப் படத்தின் கதையை எழுதியிருப்பவர் இவர் தான். வழக்கம் போலவே சஸ்பென்ஸ், திகில், ஆவி, அமானுஷ்யம் என கலந்து கட்டியிருக்கிறார். எதேச்சையாய் நடக்கும் நிகழ்வுகள் உண்மையில் எதேச்சையாய் நடப்பதில்லை. அது மிகக் கவனமான திட்டமிடலில் நடக்கிறது. ஒவ்வோர் செயலுக்கும் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது என்பதை ஆழமாக நம்பும் நைட் தன்னுடைய எல்லா படங்களிலும் அந்தக் கான்சப்டை நுழைத்து விடுவார். த சைன்ஸ் படத்தில் ரொம்பவே பளீர் என அதைச் சொன்னவர், இந்தப் படத்திலும் அதை பளிச் எனச் சொல்லியிருக்கிறார். கடைசியில் கிறிஸ்தவத்தின் அடிப்படைப் போதனைகளில் ஒன்றான மன்னிப்புடன் படம் முடிவடைகிறது. படத்தின் பலம் ஒன்றே கால் மணி நேரத்தில் முடிந்து விடுவது. மிகவும் குறைந்த செலவில் ஒரு லிஃப்டை மட்டுமே காட்டிக் காட்டி படமெடுத்திருக்கிறார்கள். ஏன் என தலையைப் பிய்த்துக் கொள்பவர்களுக்கு யாம் தரும் செய்தி, இதைத் தயாரித்திருப்பவர் நைட் ஷாமளான் என்பதாகும் ! இவர் அடுத்து தயாரிக்கும் படம் மறுபிறவி பற்றியதாம் ! இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் நைட் அல்ல. ஜான் எரிக் டோடில் என்பவர். சிக்ஸ்த் சென்ஸ் போல இது ஒரு அசத்தல் திகில் படம் என்று நினைத்து விடாதீர்கள். இது இரண்டாம் தர திகில் படங்களின் வரிசையில் கொஞ்சம் டீசண்டாய் வந்திருக்கும் படம் அவ்ளோ தான். பொழுது போகாதவர்கள் பாருங்க, பயப்பட மாட்டீங்க ! பிடித்திருந்தால் வாக்களியுங்கள் Share this: Facebook Twitter Email More Print LinkedIn WhatsApp Skype Like this: Like Loading... By சேவியர் • Posted in ALL POSTS • Tagged சினிமா, டெவில், நைட் ஷாமளன், விமர்சனம், ஹாலிவுட், Devil, hollywood, Movie Review, Night 12 Jan 4 2011 நந்தலாலாவா ? கிகுஜிரோவா ? : எது பெஸ்ட் ? நந்தலாலாவைப் பற்றி எழுதாவிட்டால் உம்மாச்சி கண்ணைக் குத்தி விடும் என்று கனவில் எச்சரிக்கப்பட்டேன். இருந்தாலும் கிகுஜிரோவைப் பார்க்கும் முன் நந்தலாலா குறித்து ஏதும் எழுதக் கூடாது என்று பிடிவாதமாய் இருந்தேன். காரணம் ஜப்பானிய கிகுஜிரோ சூப்பர் என்றும், தமிழ் நந்தலாலா அதன் ஈயடிச்சான் காப்பி என்றும் வடிவேலு பாணியில் ஷடடடடாஆ… என சலிக்குமளவுக்கு விமர்சனங்களும், மோதல்களும், சண்டைகளும், இத்யாதிகளும். இன்று தான் கிகுஜிரோவை அமைதியாக அமர்ந்து பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அற்புதமான படம். தாயின் அன்புக்காக ஏங்கும் சிறுவனின் உணர்வுகளை மிக அற்புதமாகப் படம்பிடித்திருந்த படம். மனதை வசீகரிக்கும் பின்னணி இசையில், கண்களை இதமாக்கும் ஒளிப்பதிவில், மென்மையாய் நம்மை அறியாமலேயே மூழ்கடித்து விடும் இயக்கத்தில் கிகுஜிரோ சபாஷ் போட வைக்கிறது. முதலில் மிஷ்கினுக்கு ஒரு மிகப்பெரிய நன்றியைச் சொல்ல வேண்டும். கிகுஜிரா என்றொரு படம் இருப்பதே நந்தலாலா வராமல் இருந்திருந்தால் யாருக்கும் தெரிந்திருக்காது. ஒரு நல்ல ஜப்பானியப் படத்தை தமிழ் கூறும் நல்லுலகுக்கு காட்டிக் கொடுத்தாரே, அதுக்கு முதல் நன்றி. கிகுஜிரோவின் தாக்கத்தில் உருவான தமிழ்ப்படம் நந்தலாலா அவ்வளவு தான். இரண்டு படங்களுக்குமிடையே ஒப்பிடக்கூடிய காட்சியமைப்புகளும், சிந்தனையும் இருந்தாலும் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடுகள் இரண்டு படத்திலும் உண்டு. ஒரு படத்தின் கருவை எப்படி மொழிக்கும், கலாச்சாரத்துக்கும், வாழ்க்கை முறைக்கும் ஏற்ப உருவாக்க வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக நந்தலாலாவைச் சொல்லலாம். நந்தலாலாவின் படம் முழுக்க வரும் காட்சியமைப்புகளும், மாந்தர்களும், அவர்களுடைய நுட்பமான உணர்வுகளும் கிகுஜிரோவில் இல்லை. ஜப்பானிய திரைப்படத்தில் விரியும் கலாச்சார மனிதர்கள் நந்தலாலாவில் இல்லை. நாலு ஐட்டம் ஒரே மாதிரி இருக்குங்கறதுக்காக “அதே” சாப்பாடு என்பது கொஞ்சம் ஓவர் தான். இசைஞானியைப் பற்றிப் பேசாமல் நந்தலாலாவைப் பேசமுடியாது. சேதுவின் சாயல் ஆங்காங்கே இசையில் தெரிந்தாலும் உணர்வுகளின் அடிப்படையில் இசைஞானி இசையை விளையாட விட்டிருப்பது பிரமிக்க வைக்கிறது. பல காட்சிகளை அதன் உணர்வுகளின் அடிப்படையில் ஒரே இசைச் சங்கிலி பிணைத்து வைப்பது விவரிக்க முடியாத இன்பம். ஹாலிவுட் திரைப்படங்களின் பின்னணி இசை தனியே சிடிகளாக வெளியிடுவார்கள். அப்படிப்பட்ட சிறந்த பின்னணி இசை சிடிகளின் மேல் எனக்கொரு அதீத காதல் உண்டு. இன்னும் கிளாடியேட்டர் பின்னணி என் பேவரிட் லிஸ்டில் கம்பீரமாய் இருக்கிறது. அவ்வப்போது இசையைத் தவழ விட்டு கண்மூடிக் கிடப்பது ஒரு சோம்பேறிச் சுகம். அப்படி ஒரு பின்னணி இசை சிடி நந்தலாலாவுக்கு வரவேண்டும். அப்படி வந்தால் நாலு காப்பி வாங்க வேண்டும். இசைஞானியைப் பேசவிட்டு வசனங்கள் மௌனித்திருப்பது நந்தலாலாவின் இன்னொரு வசீகரம். கிகுஜிரோவில் பாதிப் படத்திலேயே சிறுவனுக்கு தாயைக் குறித்த உண்மை தெரிந்து விடுகிறது. அதன் பின் தவழும் காட்சிகள் சிறுவனின் சோகத்தையும் சுமந்தே பயணிக்கிறது. நந்தலாலாவோ மாறுபட்ட காட்சியமைப்பினால் ஆழமாகி விடுகிறது. கிகுஜிரோவில் இறுதியில் தன் பாட்டியிடம் வந்து விடுகிறான் சிறுவன். தமிழில் அனியாயமாகப் பாட்டியை தனியே விட்டு விட்டு பாவம் சம்பாதித்து விட்டார் இயக்குனர். இருந்தாலும் வலிந்து திணிக்கப்படும் சுப்ரமணியபுரக் குப்பை வன்முறைகள், அங்காடித் தெருச் செயற்கைச் சோகங்கள் ஏதும் இல்லாமல் நிறைவாய் படத்தை முடித்திருப்பதில் மனம் நெகிழ்ந்து விடுகிறது. இதொன்றும் புதுசில்லை. இருவர் சேர்ந்து பயணிக்கும் திரைப்படங்கள் ஹாலிவுட்டிலும் பிற மொழிகளிலும் நிறையவே உண்டு. அதில் கிகுஜிரோவும் ஒன்று. கிகுஜிரோவின் அதே தொனியில், அதே காட்சி மொழியில் நந்தலாலாவை மிஷ்கின் எடுத்திருந்தாலும் நந்தலாலா, ஒரிஜினல் படத்தை விட பல மடங்கு உயரமாய் இருக்கிறது என்பது எனது கருத்து. தவமாய் தவமிருந்து படத்துக்குப் பின் என் மனதில் உயரமாய் வந்து அமர்ந்து கொண்ட இரண்டாவது தமிழ்ப்படம் நந்தலாலா ! நன்றி மிஷ்கின். பிடித்திருந்தால் வாக்களியுங்கள். Share this: Facebook Twitter Email More Print LinkedIn WhatsApp Skype Like this: Like Loading... By சேவியர் • Posted in ALL POSTS • Tagged கிகுஜிரோ, சினிமா, நந்தலாலா, மிஷ்கின், விமர்சனம், kikujiro, mishkin, nandalala 17 Jan 3 2011 ITயில் வேலை வேண்டுமா : எனது புதிய நூல். நூலில் எனது முன்னுரை சினிமாவில் வருவது போல நடுவில் ஒரு புள்ளி அதிலிருந்து தோன்றும் வட்டங்கள் என ஒரு பிளாஷ்பேக்கை நினைத்துப் பார்க்கிறேன். பதினைந்து ஆண்டுகளுக்கு முன் கிராமத்திலிருந்து சென்னை நோக்கி ஆரம்பமாகிறது என்னுடைய பயணம். படித்தது கணினி பயன்பாட்டு அறிவியலில் முதுகலைப் பட்டம். ஆனால் வெளி உலகைப் பற்றி எதுவுமே தெரியாது. “இண்டர்நெட் கால்கிலோ என்ன விலை?” எனுமளவுக்கு தான் என்னுடைய பொது அறிவு இருந்தது. எந்த நிறுவனத்தில் போய் எப்படி வேலை கேட்பது ? யாரை அணுகுவது ? ஊஹூம். ஒன்றும் தெரியவில்லை. சென்னையில் வேலையைத் தேடோ தேடென்று தேடி அலைந்தும் ஒன்றும் தேறவில்லை. பதினைந்து பைசா போஸ்ட் கார்டில் “வேலை இருக்கிறது வாருங்கள்..” என்று கூப்பிட்டு பணம் பறிக்க முயன்ற சம்பவங்கள் நிறைய நடந்தன. கிராமத்திலிருந்து சென்னை வந்து மிரள மிரள விழித்தவனுக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தது அக்கா வீடு. அக்காவின் கணவர் தன்னுடைய சைக்கிளின் பின்னால் என்னை அமர வைத்து சென்னை முழுவதும் சுற்றி வருவார். “இவனுக்கு எப்படா வேலை கிடைக்கும், நான் எப்போ சைக்கிள் மிதிப்பதை நிறுத்துவேன்” என்று நினைத்திருக்கலாம். ஆனால் சொன்னதில்லை ! “பெங்களூர் போனா உடனே வேலை” ஏதோ பாஸ்ட் புட் ரேஞ்சுக்கு நண்பர்கள் உசுப்பேற்ற பெங்களூருக்குப் போனேன். அங்கே அவர்களுடைய பாஷை புரியாமல், இந்தி தெரியாமல் முழி பிதுங்கிய போது தான் ஒரு விஷயம் எனக்கு தெளிவாய்ப் புரிந்தது. “எனக்கு இங்கிலீஷ் கூட தெரியாது” !. அப்புறமென்ன ? அக்கா வீட்டில் சாப்பாடாவது சாப்பிடுவோம் என சென்னைக்கே திரும்பினேன். என்னிடம் ஒரு இ-மெயில் ஐடி கூட கிடையாதென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். எந்த பேப்பரிலெல்லாம் “ஆள் தேவை” என வருகிறதோ எல்லாவற்றுக்கும் விண்ணப்பிப்பேன். ஒரு பயனும் இல்லை. விண்ணப்பித்தும் ஒரு வழியும் இல்லை. தேர்வில் வெற்றி பெற்றால் குரூப் டிஷ்கஷனில் அவுட். இல்லையேல் இண்டர்வியூவில் அவுட். ஒன்றும் இல்லையேல் ஹைச்.ஆர் இண்டர்வியூவிலாவது வெளியேற்றி விடுவார்கள் என்பது தான் எனது நிலமை. ஒரு கட்டத்தில் “பேசாமல் ஊருக்குப் போய் அப்பா அம்மாவைப் போல ஸ்கூலில் ஆசிரியராகலாம்” என நினைத்ததுண்டு. என்னால் மாணவர்களுடைய எதிர்காலம் பாதிக்கப்பட வேண்டாம் என கடவுள் நினைத்தாரோ என்னவோ, ஏதோ ஒரு சுக்ர திசையில் ஒரு வேலை கிடைத்தது. ஐ.டி என்றால் என்ன என்னும் அகரமே அப்போது தான் தெரிய ஆரம்பித்தது. நீண்ட நெடிய இந்த பதினைந்து ஆண்டு காலங்கள் ஐ.டி நிறுவனம் குறித்தான முழுமையான புரிதலைத் தந்து விட்டது. ஐந்தாறு ஆண்டுகாலம் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா என வேலை பார்த்ததில் உலக அளவிலான ஐ.டி பார்வைகளும், கலாச்சாரங்களும் புரிந்து விட்டன. இந்தக் கால இடைவெளியில் பல ஆயிரக்கணக்கான ஊழியர்களை நேர்முகத் தேர்வு மூலமாகவும், கேம்பஸ் இண்டர்வியூ மூலமாகவும் நிறுவனத்துக்கு எடுத்த அனுபவமும் உண்டு. இப்போதும் கூட கிராமத்து மஞ்சள் பையுடனும், மானின் மிரட்சியுடனும் என் முன் வரும் மாணவர்களிடம் என்னுடைய பழைய முகத்தையும், பதட்டத்தையும், அறியாமையையும் தெளிவாய்ப் பார்க்கிறேன். கல்லூரிகளுக்குச் சென்று அங்குள்ள மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தும் போது “இன்னும் அவர்கள் ஐ.டி துறை குறித்து முழுமையான புரிதல் இல்லாமல் தான் இருக்கிறார்கள்” என்பதையும் புரிந்து கொள்கிறேன். ஐடியில் வேலை வாங்க வேண்டும் எனும் ஆர்வமும் உத்வேகமும் எல்லோரிடமும் இருக்கிறது. ஆனால் வழிகாட்ட சரியான ஆள் இல்லை. “ஐடியில் வேலை வாங்குவது எப்படி?” என்பது குறித்து ஒரு நூல் எழுதுங்களேன் என பிளாக் ஹோல் மீடியா இயக்குனர் யாணன் அவர்கள் என்னிடம் சொன்னபோது மறுக்கவில்லை. “இவ்ளோ நாள் இது எனக்குத் தோணாம போயிடுச்சே” என்று தான் நினைத்தேன். ஐ.டி வேலையைக் குறி வைக்கும் மாணவர்களுக்கான மிகச் சிறந்த வழிகாட்டியாய் இந்த நூலை எழுத வேண்டுமென முடிவெடுத்தேன். இந்த தலைப்புக்காகவும், வாய்ப்புக்காகவும் இயக்குனர் யாணன் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். மனோஜ் குமார், பென் கிருபா, சாய்ரமணன் எனும் மூன்று கணினி மென்பொருள் மேலாளர்கள் உதவ முன் வந்தார்கள். அவர்கள் கணினி துறையில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக “பழம் தின்று கொட்டை போட்டவர்கள்”. அவர்களுடனான உரையாடல் இந்த நூலுக்கான வடிவத்தைத் தந்தது. அவர்களுக்கு இந்த நேரத்தில் என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரபல கணினி நிறுவனங்களின் கேள்வித் தாள் மாடல்களைக் கொண்டு அற்புதமான கேள்விகள் தயாரிக்க உதவிய மனோஜ் குமாருக்கும், மணிகண்டன் பால்பாண்டிக்கும் ஸ்பெஷல் நன்றி. ஐ.டியில் நுழையத் துடிக்கும் இளைஞர்களுக்கு இந்த நூல் சிறந்த வழிகாட்டியாய் இருக்கும் எனும் நம்பிக்கை எனக்குண்டு. இந்த நூல் குறித்த கருத்துக்களைப் பகிந்து கொள்ளுங்கள். நீங்கள் வெல்ல வேண்டும் என்பதே என் நோக்கம் ! வெல்வீர்கள் என்பது நிச்சயம் வாழ்த்துக்களுடன் சேவியர் வெளியீடு : பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடட். செல் : 9600123146 admin@blackholemedia.in www.blackholemedia.in பிடித்திருந்தால் வாக்களியுங்கள் Share this: Facebook Twitter Email More Print LinkedIn WhatsApp Skype Like this: Like Loading... By சேவியர் • Posted in ALL POSTS • Tagged இண்டர்வியூ, ஐ.டி, கணினி, கேம்பஸ், நூல், நேர்முகத் தேர்வு, மென்பொருள், விமர்சனம், வேலை, Book fair, Campus, IT, job, Recruitment, Software 14 Dec 20 2010 UNSTOPPABLE : எனது பார்வையில். ஆளில்லாமல் மெதுவாக ஓட ஆரம்பிக்கும் ஒரு இரயில் வண்டி மெல்ல மெல்ல வேகமெடுத்து தறிகெட்டு ஓடுகிறது. அதை நிறுத்துவது எப்படி என வழி தெரியாமல் விழிக்கிறது நிர்வாகம். சின்ன ரயிலெனில் பரவாயில்லை. இது பத்து டன் எடையுள்ள வண்டி. போதாக்குறைக்கு அதில் இருப்பது ஊரையே கபளீகரம் செய்துவிடக் கூடிய ரசாயனங்கள், எரிபொருள்கள், நச்சுப் பொருள் இத்யாதி இத்யாதி. சட்டென ஊரே பதட்டத்துக்குள் தள்ளப்பட்டு விடுகிறது. இதை எப்படியாவது நிறுத்தியே ஆகவேண்டும் என நினைக்கும் நிர்வாகத்துக்கு தோல்வி. எதேச்சையாக அதே டிராக்கில் பயணிக்கும் ஹீரோ டென்ஸல் வாஷிங்டனும், கிரிஸ் பைனும் இதை நிறுத்த முயல்கிறார்கள். ரயிலை நிறுத்திக் காட்டுவோம் என அவர்கள் தங்கள் வீர தீர பராக்கிரமங்களை டிராக்கில் நிகழ்த்துவதே அன்ஸ்டாப்பபிள் படத்தின் கதை. இந்த கடுகு விதைக் கதையை வைத்துக் கொண்டு வித்தை காட்ட முடியும் என நிரூபித்திருக்கிறார் இயக்குனர் டோனி ஸ்காட். கடந்த ஆண்டு டேக்கிங் ஆஃப் பெல்ம் படத்தில் ஏகக் கடுப்படித்த இந்த இயக்குனர் அதற்கு நஷ்ட ஈடாக இந்தப் படத்தை பரபரப்பின் உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறார். ரயிலில் விட்ட இமேஜை ரயிலிலேயே பிடித்திருப்பதில் அவருடைய திறமை தெரிகிறது ! நகம் கடித்து, பரபரத்து, திக் திக் நிமிடங்களுடன் என பொதுவாகச் சொல்லும் எல்லா வார்த்தைகளுக்கும் இந்தப் படம் பொருந்தும். வயசாச்சு என வீட்டுக்கு அனுப்பப்படப் போகிறவர் டென்ஸல். பாதி பென்ஷனோடு கிளம்ப வேண்டிய அவருக்கு மிச்சமிருக்கும் வேலை நாட்கள் சில வாரங்கள் தான். இருந்தாலும் தனது கடைசி நிமிடம் வரை உண்மையாய் உழைப்பது எனும் “ஹீரோ இலக்கணத்தை” மீறாமல் இருக்கிறார் ! ஏற்கனவே ஆயிரத்து ஓரு படங்களில் பார்த்த அதே ஹாலிவுட் ஆக்ஷன் பட காட்சிகள் இதிலும் அப்படியே உண்டு. பரபரக்கும் தொலைக்காட்சித் தலைப்புச் செய்தி. நகம் கடித்தபடி நிகழ்ச்சியைப் பார்க்கும் குடும்பத்தினர். ஹீரோவுடையை ஐடியா சரியில்லை எனச் சொல்லும் மேலதிகாரி. ஹீரோவை நம்பும் ஒரு அதிகாரி. அங்கும் இங்கும் பரபரத்துக் கொண்டிருக்கும் அலுவலகம். சிணுங்கும் தொலைபேசி, வட்டமிடும் ஹெலிகாப்டர் இப்படி எல்லா படங்களிலும் பார்க்கக் கூடிய அதே அக்மார்க் காட்சிகள் ஆனாலும் அதை மிகச் சரியாக மீண்டும் ஒரு முறை அரைத்ததில் கமர்ஷியல் வெற்றி பெற்றிருக்கிறார்கள். டென்ஸல் எந்த கெட்டப்பில் வந்தாலும் ஜொலிக்கிறார். த போர்ன் கலக்டர் படத்தில் படுக்கையில் படுத்துக் கொண்டே நடித்து பின்னிப் பெடலெடுத்தது போல, இந்தப் படத்தில் பெரும்பாலும் டிரெயின் டிரைவர் சீட்டில் இருந்து கொண்டே கலக்கியிருக்கிறார் ! அதனால் தான் இயக்குனரும் டென்ஸலை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்பதில் ஐயமில்லை ! எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிய, மீண்டும் அசுர வேகமெடுத்து ஓடுகிறது ரயில். ரயிலின் மீது ஓடி டிரைவர் இருக்கைக்கு வர முயல்கிறார் ஹீரோ அதுவும் முடியவில்லை. கடைசியில் ரயிலுக்குப் பக்கவாட்டில் வேகமாய் ஒரு காரில் கிரிஸ் பைன் பயணித்து அங்கிருந்து அப்படியே டிரைவர் சீட்டுக்கு அலேக்காக விஜயகாந்த் போலத் தாவி ரயிலை நிறுத்துகிறார். இது தான் அல்டிமேட் கிளைமாக்ஸ் எனில் எதுக்கு இத்தனை ஆர்ப்பாட்டம் ? முதலிலேயே ரயிலுக்குப் பக்கத்தில் ஒருவர் வண்டியை ஓட்டி ஒருவர் குதித்து ரயிலை நிறுத்தியிருக்கலாமே எனும் மில்லியன் டாலர் கேள்வியும் எழாமலில்லை. எப்படியோ ஒன்றரை மணி நேரம் பரபரப்பில் ரசிகர்களைக் கட்டிப் போட்ட வகையில் வெற்றி பெற்றிருக்கிறது அன்ஸ்டாப்பபிள் திரைப்படம். பிடித்திருந்தால் வாக்களியுங்கள். Share this: Facebook Twitter Email More Print LinkedIn WhatsApp Skype Like this: Like Loading... By சேவியர் • Posted in ALL POSTS • Tagged அன்ஸ்டாப்பபிள், சினிமா, டென்ஸல் வாஷிங்டன், விமர்சனம், ஹாலிவுட், denzel, hollywood, movie, review, unstoppable 6 Dec 5 2010 நூல் பார்வை : பாலியல் – இன்றைய ஆய்வுகள் கூறுவது என்ன ? பாலியல் எனும் வார்த்தையை பலரும் பல விதமான கண்ணோட்டங்களில் அணுகுகின்றனர். சிலருக்கு பாலியல் என்றாலே மிட் நைட் கேள்வி – பதில் நிகழ்ச்சி தான் ஞாபகத்துக்கு வரும். கல் தோன்றி மண்தோன்றாக் காலத்திலேயே பேசப்படும் “சுய இன்பத்தால ஆண்மை போயிடுமா டாக்டர்” டைப் கேள்விகள் தான் சிலரைப் பொறுத்தவரை பாலியல் விழிப்புணர்வு விஷயங்கள். வார இதழ்களுக்குக் கல்லா கட்டும் முக்கிய விஷயங்களில் இதுவும் ஒன்று. இன்னும் சிலருக்கு பாலியல் என்பது படுக்கையறைப் புரபசர் வாத்சாயனாரின் வழிமுறைகளை விளக்குவது. பாலியல் கல்வி என்றாலே பலரும் பதட்டப்படுவதற்கு இது தான் காரணம். “ஸ்கூல்ல தியரி சொல்லிக் குடுப்பீங்க. பிள்ளைங்க போய் பிராக்டிக்கல் கத்துகிட்டா என்ன பண்றது ?” என்பது சிலருடைய அங்கலாய்ப்பு ! இன்னும் சிலருக்கு பாலியல் என்பது பழுப்பேறிப் போன காகிதத்தில் கடைகளின் உள்பக்கமாய்த் தொங்கும் “சரோஜா தேவிக் கதைகள்”. யாருக்கும் தெரியாமல் வாங்கி, படித்து பொழுதைப் போக்கும் சமாச்சாரம். “எங்கும் நிறைந்திருக்கும். ஆனால் யார் கண்ணுக்கும் தெரியாது” எனும் புதிருக்கு கடவுள் என்பது மட்டுமல்ல விடை. இத்தகைய புத்தகங்களும் தான். இப்போது டெக்னாலஜியும், பிராட்பேண்டும், ஹைடெக் செல்பேசியும் வந்தபிறகு சரோஜா தேவி இ-புக் வடிவம் எடுத்திருக்கிறது. அது ஒன்று தான் வித்தியாசம். கடலின் கரையில் அலைகள் அதிகமாய் இருக்கும். ஆனால் அலைகளே கடலல்ல என்பதைச் சொல்லும் நூல்கள் தமிழில் மிக மிக அரிது. அந்த வெற்றிடத்தை கன கட்சிதமாக நிரப்பியிருக்கிறது எழுத்தாளர், சகபதிவர், நண்பர் பத்மஹரி அவர்களுடைய “பாலியல் – இன்றைய ஆய்வுகள் கூறுவது என்ன?” எனும் நூல். தேவையற்ற, அதிகம் அலசப்பட்ட விஷயங்களை லாவகமாய்த் தாண்டி பாலியல் குறித்துத் தெரியாத விஷயங்களை அறிவியல் பூர்வமாக அணுகியதில் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்திருக்கிறார் ஆசிரியர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். படித்தது உயிரி தொழில்நுட்பவியல். இப்போது ஜப்பானில் பி.ஹைச்.டி க்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதுவும் ஸ்டெம் செல் குறித்த ஆராய்ச்சி. ஏதோ ஒரு நரைத்த தலை பேராசிரியர் அடையவேண்டிய இடத்தை இந்தச் சின்ன வயதிலேயே அடைந்திருக்கும் எழுத்தாளருக்கு, தமிழும் கைவந்திருப்பது தமிழ் கூறும் நல்லுலகிற்குக் கிடைத்த பாக்கியம் என்று சொல்லலாம். ஏதோ பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்காரே, வாசிச்சா புரியுமா ? எனும் சந்தேகத்துடன் தான் இவருடைய எழுத்தை வாசிக்கத் துவங்கினேன். சரளமாய் ஓடித் திரியும் இவருடைய தமிழ் ஒரு இனிய ஆச்சரியம். அறிவியல் விஷயங்களை ஜஸ்ட் லைக் தேட், தமிழில் விதைத்து விட்டுப் போவதில் வெற்றி கண்டிருக்கிறார். ஃபீடோ பீலியா எனும் குழந்தைகள் மீதான வன்முறை, கள்ள உறவுகள், ஓரினச் சேர்க்கையாளர்கள், விலங்குகளோடான உறவுகள் – போன்ற பல விஷயங்கள் இதுவரை அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் அலசப்பட்டதில்லை. அல்லது அதுகுறித்துத் தமிழில் நான் வாசித்ததில்லை. பத்மஹரியின் நூல் அந்த பணியை சிறப்பாகச் செய்திருக்கிறது. முதல் நூலையே பாலியல் சார்ந்து எழுதியிருப்பதில் பாலியல் குறித்த புரிதல் சமூகத்துக்குத் தேவை எனும் அவருடைய அக்கறை புலப்படுகிறது. தொடரும் அவருடைய நூல்களில் சமூகம் மேலும் பயனடையும் எனும் நம்பிக்கை பலப்படுகிறது ! வாழ்த்துக்கள் ஹரி ! தொடர்க உங்கள் பயணம். நூல் விலை : 130/; – கிடைக்குமிடம் : Blackhole Media Publication Limited, No.7/1, 3-rd Avenue, Ashok nagar, Chennai-600 083. India Cell: (+91) 9600086474, 9600123146 Email: admin@blackholemedia.in Website: http://blackholemedia.in/ பிடித்திருந்தால் வாக்களியுங்கள்… Share this: Facebook Twitter Email More Print LinkedIn WhatsApp Skype Like this: Like Loading... By சேவியர் • Posted in ALL POSTS • Tagged செக்ஸ், பாலியல், மருத்துவம், விமர்சனம், book review, medical, Padmahari, sex 9 Oct 1 2010 எந்திரன் : எனது பார்வையில் எந்திரன் படத்தைப் பார்க்க வேண்டும் எனும் ஆவல் ஒருவழியாக நிறைவேறிவிட்டது ! பொதுவாகவே படம் வருவதற்கு முன் ஏகப்பட்ட பில்டப் களைக் கொடுத்தால் படம் கால் நீட்டிப் படுத்துவிடும் என்பது ஐதீகம் ! கந்தசாமி, இராவணன் என சமீபத்திய உதாரணங்கள் எக்கச் சக்கம். ஆனால் எந்த உதாரணத்திலும் சிக்காதவர் தான் ரஜினி. அதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது எந்திரன். கிராபிக்ஸ், அது இது என ஏகப்பட்ட கதைகள் உலவியபோது படம் நல்லா இருக்குமா என ஒரு சந்தேகம் இருந்தது. அந்த சந்தேகங்களுக்கெல்லாம் படத்தில் பதில் சொல்லியிருக்கிறார் இயக்குனர். உண்மையிலேயே படத்தில் ஷங்கர் மிரட்டியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஹாலிவுட் படங்களிலேயே லாஜிக் பாக்காத நமக்கு இதுல ஆங்காங்கே லாஜிக் பாக்காம இருக்கிறதொண்ணும் பெரிய விஷயமில்லை. ரஜினி விரும்பிக் கேட்டுக் கொண்டதாலயா என்று தெரியாது, வழக்கத்துக்கு மாறாக படத்தில் ஏகப்பட்ட முத்தக் காட்சிகள். அழகாக இருந்த ஐஸ்வர்யா ராய், இந்தப் படத்தில் கொள்ளை அழகாகத் தெரிகிறார். ஆனால் அந்த உலக அழகையே சில இடங்களில் மிஞ்சுமளவுக்கு ரஜினியின் மேக்கப் அசத்தலாய் வசீகரிக்கிறது. குறிப்பாக காதல் காட்சிகளில் நீண்ட இடைவெளிக்குப் பின் ரஜினியின் நடிப்பு கவித்துவமாய் சாரலடிக்கிறது. வில்லனாய் வரும் ரஜினி மனதில் அமர்க்களமாய் வந்து அமர்ந்து கொள்கிறார். அடேங்கப்பா என வியக்கவைக்கும் அளவுக்கு ரஜினியின் வில்லத்தனமான விஷயங்கள் பிரமிப்பூட்டுகின்றன. “கருப்பு ஆடு” காட்சியில் கைத்தட்டல் அடங்க வெகு நேரமாகிறது. “என்னை யாராலும் அழிக்க முடியாது” எனும் சாதாரண வாசகத்தையே பஞ்ச் டயலாக் ரேஞ்சுக்கு சொல்ல ரஜினியால் மட்டும் தான் முடியும். சொல்லப்போனால் ஹீரோவை விட வில்லன் நடிப்பில் பொளந்து கட்டுவேன் என இன்னொரு முறை சொல்லியிருக்கிறார். இசை அமர்க்களம். பின்னணி இசையிலும் ரஹ்மானின் இசை புகுந்து விளையாடியிருக்கிறது. ஹாலிவுட் ஐகான் ஆகிவிட்டதான் இனிமேல் ஹாலிவுட் காரர்களும் இந்த படத்தைப் பார்க்கக் கூடும் எனும் அதீத சிரத்தையாய் இருக்கலாம். அல்லது ஷங்கர் ரஹ்மானை துரத்தித் துரத்தி வேலை வாங்கியிருக்கலாம். எப்படியோ இசை ரொம்பவே மிரட்டுகிறது. பாடல் காட்சிகளைச் சொல்லவே வேண்டாம். ஷங்கரின் படத்தில் பாடல் காட்சிகள் அற்புதமாகத் தான் இருக்கும். இதில் கிளிமஞ்சாரோ, காதல் அணுக்கள் பாடல்களில் வியப்பூட்டுகிறார் மனுஷன். கிளிமஞ்சாரோ கடைசிப் பாடலாய் இருக்கும் என நினைத்தேன்… அரிமா..அரிமா அந்த இடத்தில் அமர்ந்திருக்கிறது அமர்க்களமாய்… ! இரும்பிலே ஒரு இதயம் பாடலை இன்னும் கொஞ்சம் செதுக்கியிருக்கலாம். ஒளிப்பதிவு, லொக்கேஷன், காஸ்ட்யூம் என எல்லா விஷயங்களும் நன்றாக இருக்கின்றன. முதல் பாதி செதுக்கி வைத்தது போல கன கட்சிதம். இரண்டாம் பாதி இடையில் கொஞ்சம் நீஈஈண்டு அப்புறம் மறுபடியும் பரபரப்பில் முடிந்திருக்கிறது. வாத்தியாரின் வசனங்கள் அசத்தல். எளிமையாய், கூர்மையாய் வசீகரிக்கிறது. ஒரு சின்ன உதாரணம்… ரோபோ – மனித காதல் பற்றிப் பேசுகையில்… “இது இயற்கைக்கு முரணானது என்கிறார்களே….”, “இல்லை.. இது இயற்கைக்குப் புதுசு ” ! வாவ் ! இனிமேல் இத்தகைய வசனங்களைத் தர அவர் இல்லையே எனும் ஏக்கம் கனமாய் வந்து அமர்கிறது. ஷங்கருக்கு இது ஒரு மைல் கல் ! அடுத்து தைரியமாய் ஹாலிவுட் படம் இயக்கலாம். சூப்பர் ஸ்டாரின் மகுடத்தில் இது ஒரு சிகரக் கல் ! ஷங்கரின் கனவை நனவாக்கிய கலா நிதி மாறன் அடுத்து கமலை வைத்து மர்மயோகி படத்தை எடுத்து கமலின் கனவையும் நனவாக்குவாராக… எந்திரனை மிஸ் பண்ணிடாதீங்க ! டையமாச்சு எந்தி…RUN பிடித்திருந்தால் வாக்களியுங்களேன்…. Share this: Facebook Twitter Email More Print LinkedIn WhatsApp Skype Like this: Like Loading... By சேவியர் • Posted in ALL POSTS • Tagged எந்திரன், ஐஸ்வர்யாராய், சினிமா, ரஜினி, விமர்சனம், ஷங்கர், endhiran, rajini, review 23 Post navigation ← Older posts Newer posts → Social View writerxavier’s profile on Twitter View josephxavierdasaian’s profile on LinkedIn View writerxavier’s profile on YouTube Twitter RT @mkkwnss: LALISA รายการเกาหลีใช้หลายรายการแล้ว แต่ลิซ่าเจ้าของเพลงนั้น หมดโปรโมทโซโล่ใดๆในเกาหลี หอบ MONEY ซบวิทยุเมกา ลุคนี้สวยมากเลยแ… 4 days ago RT @ZKHN22: ตลกคนต่างชาติเขาบอกพูดภาษาไทยจะแทนตัวเองว่าอะไร555555555555555555 https://t.co/AqtZx4NxhB 4 days ago Follow @writerxavier ரொம்ப நன்றிங்க ! 1,519,255 வருகைகள் CHRISTIANITY உயிர்ப்பின் அனுபவம் லாயல்டி Untitled இயேசுவின் குடும்பம் திருப்பு முனை Email Subscription Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email. Join 3,188 other followers Email Address: Sign me up! புதியவை A Love Song ! Rayil தாயே ! Telephonic Interview (தொலைபேசி இன்டர்வியூ) Tips – In Tamil ஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து ! பைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர் பைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர் பைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி பைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு பைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு பைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு பைபிள் மாந்தர்கள் 94 (தினத்தந்தி) நத்தானியேல் பைபிள் மாந்தர்கள் 93 (தினத்தந்தி) யாக்கோபு பைபிள் மாந்தர்கள் 92 (தினத்தந்தி) கானானியனாகிய சீமோன் பைபிள் மாந்தர்கள் 91 (தினத்தந்தி) அந்திரேயா பைபிள் மாந்தர்கள் 90 (தினத்தந்தி) யூதாசு இஸ்காரியோத்து பைபிள் மாந்தர்கள் 89 (தினத்தந்தி) தோமா பைபிள் மாந்தர்கள் 88 (தினத்தந்தி) சீமோன் பேதுரு பைபிள் மாந்தர்கள் 87 (தினத்தந்தி) யோவான் பைபிள் மாந்தர்கள் 86 (தினத்தந்தி) ஏரோது பைபிள் மாந்தர்கள் 85 (தினத்தந்தி) திருமுழுக்கு யோவான் SEARCH/ தேடல் Search ரசித்தவை ஒளியின் விடிவு, இருளின் முடிவு : Christmas Special தொலைபேசியில் ஆபாசப் பேச்சு ஐயா vs அய்யா : இது அரசியல் பதிவல்ல ! ஊனம் தடையல்ல பொறுமை கடலினும் பெரிது. உங்க கணவர் அம்மா பிள்ளையா.. ? பைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு பைபிள் மாந்தர்கள் 90 (தினத்தந்தி) யூதாசு இஸ்காரியோத்து குழந்தைக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கணுமா ? வாடகை மனைவி...கார்ப்பரேட் காமம் ! கவிதைச் சாலை மாணவர்களின் கவனத்துக்கு… கீழ்ப்படிதல் -a Christian skit புராஜக்ட் மேனேஜ்மெண்ட் 18 : மீட்டிங் புராஜக்ட் மேனேஜ்மெண்ட் 17 : எழுத்து முக்கியம் புராஜக்ட் மேனேஜ்மெண்ட் 16 : கம்யூனிகேஷன் புராஜக்ட் மேனேஜ்மெண்ட் – 15 – மீண்டும்…. புராஜக்ட் மேனேஜ்மெண்ட் 14 – கவனித்தல் புராஜக்ட் மேனேஜ்மெண்ட் – மைக்ரோ கவனிப்பு புராஜக்ட் மேனேஜ்மெண்ட் 12 : பணியைப் பகிர். புராஜக்ட் மேனேஜ்மெண்ட் 11 : Follow on WordPress.com பிரிவுகள் பிரிவுகள் Select Category ALL POSTS (663) அரசியல் (30) அறிவியல் தகவல்கள் (106) ஆண்களுக்கானவை (6) இயேசு (6) இளமை (30) உடல் நலம் (67) ஊடகம் (19) கட்டுரைகள் (27) கிறிஸ்தவம் (2) குழந்தைகள் சார்ந்தவ (12) சமூகம் (81) சினிமா (38) சிறுகதை (1) சுவையானவை (49) சேவியர் (2) நகைச்சுவை (4) பகிர்கிறேன் (11) படங்கள் (29) பாடல்கள் (1) பாலியல் (11) பெண்களுக்கானவை (12) பைபிள் (2) பைபிள் கதைகள் (2) பைபிள் மனிதர்கள் (22) மருத்துவம் (72) வித்தியாசமானவை (25) விமர்சனங்கள் (9) விளையாட்டு (7) வீடியோக்கள் (2) Bible Maantharhal (76) Uncategorized (10) கவிதைச் சாலைக்கு வாங்க !!! சொன்னவை Ramesh kanna on பைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்… Anonymous on பொறுமை கடலினும் பெரிது. Varadarajan on குழந்தைக்குப் பாடம் சொல்லிக் க… Arun on தாயே ! Stephen raj.A on ஜி.பி.எஸ் : தெரியும்.. ஆனா,… Sabapathi on இட்லி, தோசை சுட இயந்திரம்… M on மறுமணம் செய்யப் போகிறீர்களா… சேகர் on தயக்கம், வெட்கம், கூச்சம், பயம… சேவியர் on நெகடிவ் சிந்தனையும் தேவை சேவியர் on நெகடிவ் சிந்தனையும் தேவை கருவூலம் கருவூலம் Select Month August 2018 (1) January 2018 (1) October 2017 (1) January 2017 (21) January 2016 (1) December 2015 (13) October 2015 (51) September 2015 (81) June 2014 (5) May 2014 (18) February 2014 (11) September 2013 (1) March 2013 (1) December 2012 (1) June 2012 (1) May 2012 (3) April 2012 (9) March 2012 (2) February 2012 (1) November 2011 (1) April 2011 (1) March 2011 (4) February 2011 (10) January 2011 (8) December 2010 (6) November 2010 (5) October 2010 (6) September 2010 (6) August 2010 (10) July 2010 (8) June 2010 (6) May 2010 (2) April 2010 (2) March 2010 (4) February 2010 (15) January 2010 (11) December 2009 (9) November 2009 (2) October 2009 (9) September 2009 (1) August 2009 (4) July 2009 (9) June 2009 (4) May 2009 (11) April 2009 (10) March 2009 (13) February 2009 (14) January 2009 (8) October 2008 (10) September 2008 (14) August 2008 (20) July 2008 (17) June 2008 (20) May 2008 (19) April 2008 (21) March 2008 (17) February 2008 (19) January 2008 (22) December 2007 (4) November 2007 (8) October 2007 (2) September 2007 (12) August 2007 (15) July 2007 (18) June 2007 (17) May 2007 (45) April 2007 (24) March 2007 (28) February 2007 (25) January 2007 (7) November 2006 (6) October 2006 (3) Click and Read article christianity daily thanthi Jesus xavier இயேசு கிறிஸ்தவம் சமூகம் சேவியர் பைபிள் கதைகள் December 2021 S M T W T F S 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 « Aug Follow me on Twitter My Tweets TOP கட்டுரைகள் கட்டுரைகள் அறிவியல் தகவல்கள் சமூகம் மருத்துவம் உடல் நலம் சுவையானவை சினிமா அரசியல் இளமை பாலியல் வித்தியாசமானவை பெண்களுக்கானவை ஆண்களுக்கானவை குழந்தைகள் சார்ந்தவ மருத்துவம் விமர்சனங்கள் விளையாட்டு ஊடகம் கிறிஸ்தவம் Bible Maantharhal இயேசு பைபிள் கதைகள் பைபிள் மனிதர்கள் பைபிள் கிறிஸ்தவம் படைப்புகள் எனது நூல்கள் சேவியர் பாடல்கள் படங்கள் வீடியோக்கள் பகிர்கிறேன் நகைச்சுவை அன்பால் இணைவோம் Enter your email address to follow this blog and receive notifications of new posts by email. Join 3,188 other followers Email Address: தொடருங்களேன்... My Pages எனது நூல்கள் என்னைப் பற்றி கட்டுரைகள் தொடர்புக்கு… வீடியோக்கள் Create a free website or blog at WordPress.com. Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
விஜய் சேதுபதியை தொடர்ந்து சூர்யாவுக்கு சிக்கல்..! சூர்யாவை உதைப்பவருக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவித்த பாமக.! வன்னிய சமுதாய மக்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு எதிராக செயல்படுவதை போல ஜெய் பீம் படத்தில் கதாப்பாத்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. உண்மை நிகழ்வுகள் அப்பட்டமாக மறைக்கப்பட்டுள்ளது. manimegalai a Mayiladuthurai, First Published Nov 14, 2021, 6:50 PM IST வன்னிய சமுதாய மக்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு எதிராக செயல்படுவதை போல ஜெய் பீம் படத்தில் கதாப்பாத்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. உண்மை நிகழ்வுகள் அப்பட்டமாக மறைக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் என பலராலும் பாராட்டப்ட்ட ஜெய் பீம் படத்தால் தற்போது நாளொறு பிரச்சினை வெடித்துக் கொண்டிருக்கிருக்கிறது. படத்தில் வன்னியர்களை திட்டமிட்டு அவதூறு செய்துள்ளதாக பா.ம.க.-வினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் முதல் கடைமட்ட தொண்டன் வரை ஜெய் பீம் படக்குழு அதனை தயாரித்த சூர்யா, ஜோதிகா உள்ளிட்டோருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். Jai Bhim படத்தில் வில்லனுக்கு காடுவெட்டி குருவின் பெயரை நினைவுபடுத்துவது போல குருமூர்த்தி என்று பெயர் வைக்கப்பட்டதற்கு அவரது மகன் மற்றும் மருமகன் கண்டனம் தெரிவித்துள்ளனர். சூர்யா நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களை வெளியிடும் தியேட்டர்களை கொளுத்துவோம் என்றும் வன்னியர்கள் பகிரகங்கமாக மிரட்டல் விடுத்து வருகின்றனர். இந்த மிரட்டல்களுக்கு சூர்யா தரப்பு அஞ்சுவது போல் காட்டிக்கொள்ளவில்லை. மேலும் விசிக உள்ளிட்டோர் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து வருவதும் பா.ம.க-வினரை கொதிப்படைய வைத்துள்ளது. இந்தநிலையில் ஜெய் பீம் படத்தில் வன்னியர்களை களங்கப்படுத்தியதற்காக நடிகர் சூர்யா, படத்தை தயாரித்த அவரது மனைவி ஜோதிகா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங்கிடம் பா.ம.க-வினர் புகார் மனு அளித்துள்ளனர். பா.ம.க. மாவட்ட செயலாளர் பழனிசாமி தலைமையில் நூற்றுக்கணக்கான பா.ம.க.-வினர் சென்று புகார் மனுவை வழங்கி இருக்கின்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பழனிசாமி, ஜெய் பீம் படத்தில் வன்னியர்கள் திட்டமிட்டு அவதூறு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், வன்னியர்கள் புனித சின்னம், தலைவர் காடுவெட்டி குருவை இழிவுபடுத்தியுள்ளனர். வன்னியர் சமூக மக்கள், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானவர்கள் போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதற்காக சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார். முத்துராமலிங்க தேவரின் குரு பூஜை நிகழ்வு குறித்து தெரியாது என்று பதிலளித்த நடிகர் விஜய் சேதுபதியை பெங்களூருவில் ஒரு இளைஞர் காலால் எட்டி உதைத்தார். அதைப்போலவே வன்னியர்களை இழிவுபடுத்திய சூர்யாவை எட்டி உதைப்போம். சூர்யா எங்கு சென்றாலும் அவரை சும்மா விட மாட்டோம். சூர்யாவை உதைக்கும் நபருக்கு மயிலாடுதுறை மாவட்ட பா.ம.க. சார்பில் ஒரு லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்றும் பழனிசாமி தெரிவித்தார். சில தினங்களுக்கு முன்னர் கன்னட நடிகர் புனீத் குமார் மறைவிற்கு அஞ்சலி செலுத்த சென்ற நடிகர் விஜய் சேதுபதியை விமான நிலையத்தில் வைத்து ஒரு இளைஞர் காலா எட்டி உதைத்தார். இதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். விஜய் சேதுபதியிடம் தேவர் குரு பூஜைக்கு சென்றீர்களா என்று கேட்டதாகவும், அதற்கு யார் குரு என்று விஜய் சேதுபதி கூறியதால் அந்த நபர் எட்டி உதைத்ததாகவும் கூறப்படுகிறது. இப்பிரச்சினை தொடர்பாக விஜய் சேதுபதிக்கு முக்குலத்தோர் அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் விஜய் சேதுபதியை உதைப்பவர்களுக்கு இந்து மக்கள் கட்சி பரிசும் அறிவித்தது. இந்தநிலையில் விஜய் சேதுபதி உதை வாங்கியதை சுட்டிக் காட்டி, நடிகர் சூர்யாவையும் அதேபோல் உதைப்போம் என்று பா.ம.க.-வினர் அறிவித்துள்ளது பரபரபபி கிளப்பியிருக்கிறது. நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்காத வரை ஜெய் பீம் மோதல் முடிவுக்கு வராது என்று பா.ம.க.-வினர் கூறியுள்ளனர். Last Updated Nov 14, 2021, 8:10 PM IST Jai bhim Surya Follow Us: Download App: RELATED STORIES அதிர்ச்சியில் திரையுலகம்... கால் தவறி கீழே விழுந்த பிரபல நடிகர் கோமாவிற்கு சென்ற பரிதாபம்..! Viral Video : ”நடிகையை அரசியலுக்கு வர சொன்ன மம்தா..” யார் அந்த நடிகை...? Tamannaah: ஸ்ட்ராப் லெஸ் மேலாடை... அந்த இடத்தை ஹைலைட் செய்து காட்டி... இளம் நெஞ்சங்களை பக் பக் ஆக்கிய தமன்னா! பாம்பு டாட்டூ குத்தி பதற வைத்த ஓவியா..! வேற இடமே கிடைக்கல போல... வைரலாகும் வீடியோ!! BiggBoss Isaivani: திருமணம் குறித்து பேசாதத்துக்கு இது தான் காரணம்! உண்மையை போட்டுடைத்த இசைவாணி.! Top Stories மீண்டும் ஊரடங்கா..? பாமக ராமதாஸ் சொல்லும் ஷாக் தகவல்..! தங்கள் உயிரைகூட பெரிதாக நினைக்காமல் உழைக்கும் இவர்களுக்கு ரூ.5,000 கொடுங்க முதல்வரே.. ஓபிஎஸ் அதிரடி சரவெடி.! Omicron : ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த 30 பேர் “மாயம் ? “ அய்யய்யோ..தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார்…
திராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -"விடுதலை",12-7-1969 , 11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள் counter மின் மடலில் எமது படைப்புகளை பெற... மின்மடல் முகவரி முன் தோற்றம் இன்றைய சிந்தனை சுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன ? 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே! திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே! தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே! பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி? தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்? ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்? நடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா? குழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்? ஏன்? எல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்? எல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்? ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்? அவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்? அன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு? முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்? ஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்? மயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்? நோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்? எல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா? தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை? அய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே! தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்? அக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்? பச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா? சிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா? ஜாதி ஒழிப்புத் திலகம் (?) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...! - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்!) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா? அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா? - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா? -----"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே! தந்தைபெரியார் - "விடுதலை" 15-2-1973 பழைய பதிவுகள் Search This Blog 19.7.13 இலங்கையிடம் இன்னும் இந்தியா எவ்வளவு அவமானங்களைத் தாங்குவது? டெசோவின் தீர்மானங்கள் (1) நேற்று (16.7.2013) சென்னை அண்ணா அறிவால யத்தில் டெசோ தலைவர் மானமிகு கலைஞர் அவர் களின் தலைமையில் நடைபெற்ற டெசோ கூட்டத்தில் நான்கு நறுக்கான தீர்மானங்களும் அவற்றை நிறை வேற்றிட மத்திய அரசை வலியுறுத்தும் வண்ணம் அய்ந்தாவதாக போராட்ட வடிவ தீர்மானமும் நிறைவேற்றப்பட்டன. 2012 ஏப்ரல் 30 ஆம் தேதி இரண்டாவது முறையாக டெசோ புது வடிவம் பெற்று செயல்பட்ட இந்தக் காலகட்டம் மிகவும் முக்கியமானது. போருக்கு முன் டெசோவின் பணி என்பது ஒரு வகையானது; போருக்குப் பின் டெசோவின் பணி இன்னொரு வகையானது. போரினால் பெரும் பாதிப்புக்கு ஆளான ஈழத் தமிழர்களின் - சுயமரியாதை வாழ்வு மீள்குடியேற்றம் - வாழ்வுரிமை, அரசியல் தீர்வுகளை உள்ளடக்கமாகக் கொண்டதாகும். இந்திய அளவிலும் சரி உலகளவிலும் சரி டெசோ வின் எழுச்சிக்குப் பிறகு தேக்க நிலைகள் உடைக்கப்பட்டன. இலங்கை அரசைப் பொறுத்தவரை ஏதோ பெரும் போரில் வெற்றி பெற்றுவிட்டது போன்ற மனப்பான்மை யுடன் வெறிபிடித்துத் திரிகிறது - எந்த வகையிலும் ஈழத் தமிழர்கள் மீண்டும் தலையெடுத்துவிடக் கூடாது என்பதில் திடமாக உள்ளது. இந்திய அரசின் உறுதியற்ற தன்மை அதற்கு இலகுவாகப் போய்விட்டது. சீனா, ருசியா, கியூபா போன்ற இடதுசாரி நாடுகளும், பாகிஸ்தான் போன்ற நாடுகளும் தன்பக்கம் இருக்கும் இறுமாப்பில் இந்தியாவின் வார்த்தைகளுக்கு உரிய மதிப்பும் கொடுப்பதில்லை. ஈழப் பிரச்சினைக்காக இருமுறை ஆட்சியை இழந்த தி.மு.க. அதே பிரச்சினைக்காகவே இப்பொழுது காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலிருந்து விலகிக் கொண்டு விட்டது. கொஞ்ச நஞ்சம் இருந்த தர்மசங்கடமும் பறந்து ஓடிவிட்டது. இந்திய அரசு எதைச் செய்யவேண்டும் என்று வலியுறுத்துவதில், போராடுவதில் டெசோதான் முன்னணி அமைப்பாக இருந்து வருகிறது. நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மிகவும் செறிவானவை. ஈழத் தமிழர்ப் பிரச்சினையாகவிருந் தாலும், தமிழக மீனவர் பிரச்சினையாகவிருந்தாலும் சரி இந்தத் தீர்மானங்களின் உள்ளடக்கத்தைத் தவிர, விடுபட்டது ஒன்றும் இருக்க முடியாது, என்கிற அளவுக்குத் தெளிவானவையும், திட்டவட்டமானவையு மாகும். குறிப்பாக, முதல் தீர்மானம் அரசியல் தீர்வு என்று பேசப்படும் 13 ஆவது சட்டத் திருத்தம்பற்றியதாகும். 1987 இல் ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் அடிப்படையிலான சட்டத் திருத்தம் அது. இலங்கை என்றால் ஒரே அரசு (ருவையசல ளுவயவந) என்ற நிலைக்குப் பதிலாக மாநிலங்களுக்கும் சற்றுப் பரவலான அதிகாரங்களை அளிக்கும் சட்டத் திருத்தம் அது. 26 ஆண்டுகள் ஓடிய நிலையிலும், அதனைச் செயல்படுத்தவேண்டும் என்று இலங்கை அரசை வற்புறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது என்றால், இலங்கை அரசின் நேர்மையற்ற போக்கை எளிதில் தெரிந்துகொள் ளலாமே! அந்தப் பிரிவில் அடங்கியுள்ள மாநிலங்களுக்கான உரிமைகளை நீர்த்துப் போகச் செய்வதற்கான முயற்சி யில் இப்பொழுது இலங்கை அரசு இறங்கியுள்ளது. இரண்டு நாடுகள் செய்துகொண்ட ஒப்பந்தத்தைத் தன்னிச்சையாக மாற்றிக் கொள்ளக்கூடிய அதிகாரம் இலங்கைக்கு உண்டா என்பது முக்கியமான கேள்வி யாகும். வடக்கு - கிழக்கு மாநிலங்கள் இணைப்பு என்பது அந்த ஒப்பந்தத்தில் காணப்படும் முக்கிய அம்சமாகும். இலங்கை ஆளும் கட்சியின் கூட்டணியான ஜெவிபி (கம்யூனிஸ்டு என்னும் போர்வை வேறு!) மூலம் இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு, சாதகமான தீர்வினையும் பெற்றுக்கொண்ட வஞ்சகத்தை என்னென்று சொல்லுவது! இலங்கை அரசு பாம்புக்குத் தலையும், மீனுக்கு வாலும் காட்டிக்கொள்ளும் விலாங்குத் தன்மையில் நடந்துகொண்டு வருகிறது. நியாயமாக இந்தப் பிரச்சினையில் இந்திய அரசுக்குக் கூடுதலான பொறுப்புண்டு. இந்திய அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை அவமதிக்கிறது, தூக்கி எறிகிறது இலங்கை அரசு என்றால் - திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் நேற்றைய தொலைக்காட்சிப் பேட்டியில் குறிப்பிட்டதுபோல, இந்தியாவின் சுயமரியாதைக்கு விடப்பட்ட சவால் அல்லவா இது! அந்த வகையில் டெசோவின் தீர்மானம் ஈழத் தமிழர் களின் வாழ்வுரிமைக்கு மட்டுமல்ல; இந்திய அரசின் சுயமரியாதைக்குக்கூட தேவையானதாகும். இன்னும் சொல்லப்போனால், அய்.நா. மற்றும் உலக நாடுகளின் மரியாதையும், மனித உரிமையின் அடையாள மும்கூட டெசோவின் தீர்மானங்களில் உள்ளடக்கமாக இடம்பெற்றுள்ளன. எனவே, இந்தத் தீர்மானங்களைக் கட்சிக் கண்ணோட்டத்துடன் பார்க்கத் தேவையில்லை. இந்திய அரசு இதுவரை எப்படி நடந்துகொண்டு இருந்தாலும், இனியாவது விழித்துக்கொண்டு, மூடுமந்திரமில்லாமல் செயல்படட்டும்! --------------------------"விடுதலை” தலையங்கம் 17-7-2013 இந்தியாவின் சுயமரியாதை? இலங்கையில் போர் முடிந்த நிலையில் குடிபெயர்ந்த தமிழர்களுக்கு அளிக்கப்படும் மறுவாழ்வு திட்டங்களைப் பார்வையிட பிஜேபி - மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் 12 பேர் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சென்றது (2012 ஏப்ரலில்) 21.4.2012 அன்று அதிபர் ராஜபக்சேவைச் சந்தித்தது குழு. தமிழர்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கும் 13ஆவது அரசமைப்புச் சாசன ஒப்பந்தம், 1987ஆம் ஆண்டு ஜூலையில் ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனை விரைவில் நிறைவேற்றித் தருவதாக அதிபர் ராஜபக்சே தங்களிடம் கூறியதாக குழுவின் தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறினார்; ஏடுகளிலும் விரிவாக வெளிவந்தது. இலங்கை அரசின் ஆதரவு ஏடான தி அய்லண்ட் இந்தத் தகவலை மறுத்துவிட்டது. 13ஆவது சட்டத் திருத்தம் குறித்து உறுதி அளிக்கவில்லை என்று கூறி விட்டார்களே! அதோடு அந்த ஏடு நிற்கவில்லை. இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளிலிருந்து இராணுவத்தை விலக்கிக் கொள்வது சாத்தியம் இல்லை என்று இந்தியக் குழுவிடம் ராஜபக்சே கூறியதாகவும் அந்த ஏடு செய்தி வெளியிட்டதே! இதன்மீது இந்திய தரப்பில் கருத்துத் தெரிவிக்கப்படவில்லையே ஏன்? அதற்குப்பிறகு 2012 ஜனவரியில் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இலங்கை சென்று அதிபரைச் சந்தித்தார். சந்திப்புக்குப் பின் கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.எம். கிருஷ்ணா சுஷ்மா சுவராஜ் சொன்னது போலவே சொன்னார். இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகர்வு அளிக்கும் 13ஆவது அரசியல் சாசன சட்டத் திருத்தத்தை செயல்படுத்துவோம் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே தம்மிடம் கூறியதாகக் கூறினாரே! 18 மாதங்கள் ஓடிய பிறகும் நிலைமை என்ன? 13ஆவது சாசனத்தில் கண்டுள்ள உரிமைகளைப் பறிக்கும் வேலையில் இலங்கை அரசு முனைந்துள்ளதே! போருக்குப்பின் இலங்கையில் நடந்துள்ள மறு சீரமைப்புப் பணிகள்பற்றி விசாரணை நடத்திட கற்ற பாடங்கள் மற்றும் இணக்கத்திற்கான (LLRC) குழு ஒன்றை இலங்கை அரசு தனக்குத்தானே அமைத்துக் கொள்ள அய்.நா.வின் மனித உரிமைக் குழுவின் வழி காட்டுதல்படி அனுமதிக்கப்பட்டது. அந்த இலங்கைக் குழுக்கூட சில பரிந்துரைகளைச் செய்ததுண்டு. அரசியல் தீர்வு உடனடியாக தேவை. தமிழர் பகுதியிலிருந்து இராணுவம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்; சிவில் நிர்வாக உரிமைகள் அளிக்கப்பட வேண்டும் என்று இலங்கை அரசு அமைத்த அந்தக் குழு அளித்த பரிந்துரைகளைக்கூட இலங்கை அரசு செயல்படுத்தவில்லையே! அமெரிக்கா இரண்டாவது தடவையாகவும் ஒரு வரைவுத் தீர்மானத்தை 2013 பிப்ரவரியில் தாக்கல் செய்தது. அதில் எல்.எல்.ஆர்.சி. அளித்த அறிக்கையில் கண்டுள்ளவை நிறைவேற்றப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டதே - எதையும் கண்டு கொள்ளாத ஒரு கண் மூடி நிலையைத்தான் இலங்கை சிங்கள இனவாத பாசிச அரசு கடைப்பிடித்து வருகிறது. இந்த இடத்தில் இன்னொரு முக்கியமான தகவல் உண்டு. மக்களவையில் எடுத்து வைக்கப்பட்ட தகவலும் கருத்தும் அது. தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு அவர்கள் மக்களவையில் பேசியது அது (26.8.2011). என்னுடைய நண்பர் நிதி அமைச்சர் முன்பு வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி (இன்றைய குடியரசு தலைவர்) கூறினார்; அவரின் அனுமதியின் பேரில் அவரது கடிதத்தைப் படிக்க விரும்புகிறேன். அன்பார்ந்த பாலு, இலங்கையில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து உங்களிடம் விளக்க விரும்புகிறேன். இலங்கைக்குள் அனைத்துச் சமுதாயத்தினரும், குறிப்பாக தமிழினத்தைச் சேர்ந்தவர்கள் வசதியாகவும், ஒன்றுபட்ட இலங்கையின் அரசியல் சாசனத்துக்குட் பட்டும், உரிமைகளைப் பெற அரசியல் தீர்வு ஒன்றைக் காண வேண்டும் என்பதற்கு நமது இந்திய அரசு தொடர்ந்து முயற்சியை மேற்கொண்டு வருவதை நீங்கள் அறிவீர்கள். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக 1987ஆம் ஆண்டின் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப் படையில் இலங்கையின் அரசியல் சாசனத்தில் 13ஆவது திருத்தத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்தினோம் - இதன் விளைவாக 2009ஆம் ஆண்டு ஜனவரி 16,17 ஆகிய தேதிகளில் நமது வெளியுறவு செயலாளர் கொழும்புக்குச் சென்று இலங்கை அரசைத் தொடர்பு கொண்டார். தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் தேர்ந் தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு உண்மையான அதிகாரப் பகிர்வு வரும் திசையில் அடுத்த சில மாதங்களில் இதுபற்றிய முன்னேற்றத்தை நாம் எதிர்பார்க்கலாம் என்று நான் நம்புகிறேன் (இதை அவர் ஜனவரியில் கூறினார்) என்று அந்தக் கடிதம் கூறுகிறது. அதிபரின் நடவடிக்கை என்ன என்று நேருக்கு நேர் டி.ஆர். பாலு அவர்கள் கேட்டாரே - அப்படிப் பேசியும் இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டனவே. கடிதம் எழுதியவர் இப்பொழுது குடியரசு தலைவராகவும் ஆகி விட்டார். காரியம் மட்டும் இலங்கை அரசு தரப்பில் நடக்கவில்லையே! ஒரு குட்டித் தீவிடம் இன்னும் இந்தியா எவ்வளவு அவமானங்களைத் தாங்குவது? டெசோ தீர்மானத்தில் 120 கோடி மக்களைக் கொண்ட பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் சுயமரியாதை அடங்கவில்லையா? ---------------------------------"விடுதலை” தலையங்கம் 18-7-2013 Posted by தமிழ் ஓவியா Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Labels: அரசியல்-சமூகம்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை 51 comments: தமிழ் ஓவியா said... அருகதையற்றவர்கள் பேத அமைப்பு உள்ள சாத்திர சம்பிரதாய முறைகளையும், ஸ்தாப னங்களையும், அரசாங்கங்களையும் மாற்ற, ஒழிக்கத் துணிவு கொள்ள வேண்டும். இந்தத் துணிவு கொள் ளாத எவரும் சமதர்ம முயற்சிக்கு அருகதை அற்றவர்களே ஆவார்கள். (விடுதலை, 7.7.1965) July 19, 2013 at 6:06 AM தமிழ் ஓவியா said... ஆசிரியர் தகுதித் தேர்வில் தமிழக அரசு வீண் பிடிவாதம் காட்டக் கூடாது! அரசாணை எண் 181அய் திருத்துக! 252அய் ரத்து செய்க! சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் எழுச்சியுரை சென்னை, ஜூலை 18- ஆசிரியர் தகுதித் தேர் வில் ஆந்திரம், பீகார், ஒடிசா மாநிலங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு, முன்னேறிய பிரிவின ருக்கு தனித்தனியே மதிப் பெண்கள் நிர்ணயிக்கப் பட்டுள்ளது போல் தமி ழகத்தில் பின்பற்றப்பட வேண்டும் என சென் னையில் இன்று நடை பெற்ற ஆர்ப்பாட்டத் தில் தமிழர் தலைவர் தமிழக அரசைக் கேட் டுக் கொண்டார். அரசாணை எண் 181அய் திருத்தியும் 252அய் ரத்து செய்தும் ஆணை பிறப் பிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொண்டார். சென்னையில் இன்று (18.7.2013) காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திராவிடர் கழ கத்தின் சார்பில் ஆசிரி யர் தகுதித் தேர்வு: பணி நியமனத்தில் சமூக நீதி கோரி மாபெரும் ஆர்ப் பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத் திற்கு தலைமையேற்று பேசிய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் கி.வீரமணி அவர்கள் பேசியதாவது: ஆசிரியர் தகுதித் தேர்வில் எல்லோருக்கும் ஒரே அளவுகோல்தான் எனத் தமிழக அரசு பிடிவாதம் காட்ட கூடாது. இது சமூக அநீதியாகும் தேசிய ஆசி ரியர் கல்விக் கழகத்தின் அறிவுறுத்தலில் தாழ்த் தப்பட்டோர், பிற்படுத் தப்பட்டோர், முன் னேறிய வகுப்பினர்க்குத் தகுதி மதிப்பெண்கள் தனித்தனியே நிர்ணயிக் கப்படுவது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட் டுள்ளது. ஆந்திராவைப் பாரீர்! அதன்படி ஆந்திர மாநிலத்தில் முன்னேறிய பிரிவினருக்கு 60 சதவீத மதிப்பெண்களும் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத மதிப்பெண் களும், தாழ்த்தப்பட் டோருக்கு 40 சதவீத மதிப்பெண்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பீகாரில் முன்னேறிய பிரிவினருக்கு 60 சதவீத மதிப்பெண்களும், பிற்படுத்தப்பட்டோருக்கும் மற்றவர்களுக்கும் 55 சத வீத மதிப்பெண்களும், ஒடிசா மாநிலத்தில் முன் னேறிய பிரிவினருக்கு 60 சதவீத மதிப்பெண் களும், மற்ற பிரிவின ருக்கு 50 சதவீத மதிப் பெண்களும் தனித் தனியே நிர்ணயிக்கப்பட் டுள்ளன. எனவே ஆந்திர மாநிலத்தில் இருப்பது போன்ற அதே அளவு கோல்தான் தமிழகத்தில் இருக்க வேண்டும். பொறியியல் கல்லூரி யில் காட்டப்பட்ட சமூக நீதி எங்கே போனது? பொறியியல் கல்லூரி யில் கடைப்பிடிக்கப் பட்ட அந்த சமூக நீதிக் கண்ணோட்டம் தமிழ்நாடு அரசின் ஆசி ரியர் தகுதித் தேர்வில் இல்லாமல் போனது ஆச்சரியத்தை அளிக் கிறது. தமிழகத்தில் ஆசி ரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண்கள் நிர்ண யிப்பதில் இடஒதுக் கீட்டு முறை கடைப் பிடிக்கப்பட வேண்டும் என திராவிடர் கழகம், தி.மு.க. கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தை கட்சி மற்ற அனைத்து கட்சிகளும் ஒரே குரலில் வலியுறுத்தி வருகின்றன. தமிழகத்தில் நடத் தப்பட்டு வரும் ஆசிரி யர் தகுதித் தேர்வில் மாற்றுத் திறனாளி களும் போராடும் நிலை வந்திருப்பது வேதனை அளிக்கிறது. எனவே அனைத்துப் பிரிவினருக் கும் ஒரே தகுதி மதிப் பெண் (60 சதவீதம்) என்று நிர்ணயிக்கப்பட் டுள்ள தமிழ்நாடு அரசு ஆணை எண் 181 திருத் தப்பட்டு ஆந்திர மாநி லம் போன்று தனித் தனியே தகுதி மதிப்பெண் நிர்ணயிக்கப்பட ஆவன செய்ய வேண்டும் என முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறோம். வெயிட் டேஜ் முறையும் கூடவே கூடாது! அதுபோலவே தமிழ் நாடு அரசு ஆணை எண் 252இல் கூறப்பட்டுள்ள பணி நியமனத்தில் வெயிட்டேஜ் முறை என்பதும் சமூக நீதிக்கு எதிரானதாகும். எனவே இந்த ஆணையை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டு கோள் வைக்கிறோம். இதை அலட்சியம் செய் தால் நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு தொடுக் கும் நிலை வரும். July 19, 2013 at 6:07 AM தமிழ் ஓவியா said... இது முதற்கட்டப் போராட்டம்தான் - வெற்றி கிட்டும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றார். சென்னை ஆர்ப்பாட்டத்தில் தொல்.திருமாவளவன், கல்வியாளர் கஜேந்திரன் கருத்துரை இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னிலை வகித்து பேசிய திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேசுகையில்:- ஆசிரியர் தகுதி தேர் வில் இடஒதுக் கீட்டை புறக்கணித்திருப்பதை கண்டிக்கிறோம். இதில் சமூக நீதி கடைப்பிடிக் கப்பட வேண்டும் என் பதை வலியுறுத்தியே இந்த போராட்டம் நடைபெறுகிறது என தெரிவித்தார். ஆந்திரா, அசாம் பின் பற்றும் முறைகளைத் தமிழ்நாட்டிலும் பின் பற்ற வேண்டும் என்று கூறிய எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன் தமிழகத்தில் சமூக நீதிக்கு பாதிப்பு வரும் போதெல்லாம், உடனே போராட்டக் களத்தில் இறங்கும் களப் போராளி யாக நமது ஆசிரியர் தமி ழர் தலைவர் விளங் குகிறார். ஆசிரியர் தகுதி தேர்வில் மதிப்பெண்கள் நிர்ணயிப்பதில் பொத்தாம் பொதுவாக உயர் ஜாதியினருக்கும் ஏழை எளிய மக்களுக் கும் ஒரே அளவுகோல் வைத்திருப்பது சமூக நீதிக்கு சவக்குழி தோண் டும் நிலையாகும். முதலமைச்சர் அவர்கள் உடனடியாக ஆந்திரா - பீகார் மாநிலத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண்கள் நிர்ண யிப்பதில் கடைப் பிடிக்கும் அளவு கோலைப் போல் தமிழகத் திலும் பின்பற்றப்பட வேண்டும். அதற்கான அரசாணையை போட வேண்டும். சமமின்மை நிலவும் நாட்டில் அதற் கேற்றாற் போல் தகுதி மதிப்பெண்கள் மாற்றி அமைக் கப்பட வேண்டாமா. அனைத்து பிரிவினருக்கும் ஒரே தகுதி மதிப்பெண் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு ஆணை எண் 181 அய் திரும்பப் பெற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் பங் கேற்று பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர், எழுச்சி தமிழர் தொல். திருமாவளவன் வலியுறுத்தினார். பிரின்ஸ் கஜேந்திரபாபு காலம்காலமாக யாருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதோ, அவர்களுக்கு பிரதிநிதித் துவம் கேட்கிறோம். தற்போது நடத்தப்பட்டு வருவது தகுதிக்கான தேர்வு அல்ல, வேலை வாய்ப்புக்கான தேர்வு. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நிர்ணயிக்கப்பட்டு மதிப்பெண்கள் மூலம் கிராமப்புறத்தில் இருந்து வரும் ஏழை எளிய தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர் களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே அவர்களுக்கு இழைக்கும் சமூக அநீதியாகும் இது. எனவே அனைத்து பிரிவினருக்கும் ஒரே தகுதி மதிப் பெண் (60 சதவிகிதம்) என்று நிர்ணயிக்கப் பட்டுள்ள தமிழ் நாடு அரசு ஆணை எண் 181 யை திருத்தப்பட வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டத் தில் பேசிய கல்வி யாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பேசினார். முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரி யார் களம் இறைவி, தென்சென்னை மாவட்ட இணைச் செயலாளர் கோ.வி.இராகவன் ஆகி யோர் ஒலி முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் முன்னிலை வகித்தார். மாநில மாணவரணி செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார் வரவேற்புரை யாற்றினார். திருவொற்றியூர் செல்வராஜ் நன்றி யுரை கூறினார். July 19, 2013 at 6:08 AM தமிழ் ஓவியா said... சென்னையில் (18.7.2013) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட ஒலி முழக்கங்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு பணி: நியமனத்தில் சமூகநீதிகோரி சென்னையில் (18.7.2013) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட ஒலி முழக்கங்கள் (1) வாழ்க வாழ்க வாழ்கவே தந்தை பெரியார் வாழ்கவே! (2) வாழ்க வாழ்க வாழ்கவே அண்ணல் அம்பேத்கர் வாழ்கவே! (3) காப்போம், காப்போம்! சமூக நீதியை சமூக நீதியை காப்போம் - காப்போம்! (4) தமிழ்நாடு அரசே தமிழ்நாடு அரசே ஆசிரியர் தகுதித் தேர்வில் ஆசிரியர் தகுதித் தேர்வில் சமூக நீதி சமூக நீதி தேவை, தேவை! கட்டாயம் தேவை - கட்டாயம் தேவை! (5) உயர் ஜாதி பார்ப்பனர்களுக்கும் உயர் ஜாதி பார்ப்பனர்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் ஒரே அளவுகோலா? ஒரே அளவுகோலா? மதிப்பெண்ணில் மதிப்பெண்ணில் ஒரே அளவுகோலா? ஒரே அளவுகோலா? (6) உயர் ஜாதி பார்ப்பனர்களுக்கும் உயர் ஜாதி பார்ப்பனர்களுக்கும் மாற்றுத் திறனாளிக்கும் மாற்றுத் திறனாளிக்கும் ஒரே அளவுகோலா? ஒரே அளவுகோலா? மதிப்பெண்ணில் மதிப்பெண்ணில் ஒரே அளவுகோலா? ஒரே அளவுகோலா? (7) உயர் ஜாதி பார்ப்பனர்களுக்கும் உயர் ஜாதி பார்ப்பனர்களுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் ஒரே அளவு கோலா? ஒரே அளவுகோலா? மதிப்பெண்ணில் மதிப்பெண்ணில் ஒரே அளவுகோலா? ஒரே அளவுகோலா? (8) பீகாரிலும் ஆந்திராவிலும் பீகாரிலும் ஆந்திராவிலும் சமூக நீதிக் கொடி சமூக நீதிக் கொடி பறக்குது! பறக்குது!! பெரியார் பிறந்த மண்ணிலே பெரியார் பிறந்த மண்ணிலே சமூக நீதிக்கு சமூக நீதிக்கு சவக்குழியா? சவக்குழியா? (9) அனுமதியோம் - அனுமதியோம்! சமூக அநீதியை சமூக அநீதியை அனுமதியோம் - அனுமதியோம்! (10) போராடுவோம் - போராடுவோம் வெற்றி கிட்டும் வரை வெற்றி கிட்டும் வரை போராடுவோம் - போராடுவோம்! (11) தந்தை பெரியார் தந்தை பெரியார் பெரும்படையும் பெரும்படையும் அண்ணல் அம்பேத்கர் அண்ணல் அம்பேத்கர் பெரும்படையும் பெரும்படையும் புறப்பட்டோம் - புறப்பட்டோம்! (12) தமிழக அரசே தமிழக அரசே அமல்படுத்து அமல்படுத்து! சமூக நீதியை சமூக நீதியை அமல்படுத்து அமல்படுத்து! (13) பணி முடிப்போம் - பணி முடிப்போம! தமிழர் தலைவர் தலைமையிலே தமிழர் தலைவர் தலைமையிலே பணி முடிப்போம்! பணி முடிப்போம்! தந்தை பெரியார் தந்தை பெரியார் பணி முடிப்போம்! பணி முடிப்போம்! July 19, 2013 at 6:08 AM தமிழ் ஓவியா said... உச்சநீதிமன்றத்தின் அரிய தீர்ப்பு! மருத்துவக் கல்லூரி சேர்க்கை: நீண்ட நாள் கழகக் கோரிக்கைக்கு வெற்றி! அகில இந்திய நுழைவுத் தேர்வு தேவையில்லை உச்சநீதிமன்றத்தின் அரிய தீர்ப்பு! புதுடில்லி, ஜூலை 18- அகில இந்திய அளவில் மருத்துவக் கல்லூரி சேர்க் கைக்கு (எம்.பி.பி.எஸ்.,) ஒரே நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்துக்கு உச்சநீதி மன்றம் மறுப்புத் தெரிவித்து ஆணை பிறப்பித்து விட்டது. அகில இந்திய மருத் துவக் கவுன்சிலின் முடிவை, தொடர்ந்து எதிர்த்து வருவது திராவிடர் கழகமே என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் ஒரே மருத்துவ நுழைவுத் தேர்வு கொண்டு வரும் மருத் துவ கவுன்சிலின் முடிவுக்கு உச்சநீதி மன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. இதனால் அந்தந்த மாநிலங்களே மருத்துவ படிப்புக் கான நுழைவுத் தேர்வை முடிவு செய்து கொள்ள லாம் என்றும் தீர்ப்பளித்துள்ளது. நாடு முழுவதும் மருத்துவ மாண வர்கள் தேசிய அளவிலான மருத்துவ தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ( என்.இ. இ.டி) மருத்துவ கவுன்சில் கொண்டு வர வேண்டும் என விரும்பியது. மேலும் தகுதி இல்லாத நபர்கள் பணம் பெற்று சேர்க்கப்படுவதாகவும் தனது மனுவில் தெரிவித்திருந்தது. ஆனால் இதற்கு பல்வேறு மாநிலங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவானது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள தேர்வு முறையே பின்பற்ற லாம் என இடைக்கால தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்த வழக்கில் இன்று இறுதித் தீர்ப்பு வழங்கப் பட்டது. அல்டாமஸ் கபீர் தலைமையிலான மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது. இதன்படி நாட்டில் ஒரே மாதிரியான தகுதி நுழைவுத்தேர்வு தேவையில்லை என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர், அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம். இதில் 2 நீதிபதிகள் மருத்துவ கவுன்சிலின் முடிவை எதிர்த்தனர்.ஒரு நீதிபதி மட்டும் ஆதரித்தார். கிராமப்புற, நகர்ப்புற மாணவர்கள் மத்தியில் பாதிப்பு, வேறுபாடுகளை ஏற்படுத்தும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த முடிவை பல்வேறு அரசுகள் மற்றும் தனியார் கல்லூரிகள் வரவேற்றுள்ளன. July 19, 2013 at 6:09 AM தமிழ் ஓவியா said... சேலம் இரயில்வே கோட்டத்தை மங்களூருவுடன் இணைப்பதா? தடுத்து நிறுத்துக! தென்னகத்தில் ரயில்வேக்கள் விரிவாக்கம் - அகல இரயில் பாதை போன்ற முயற்சிகள் தி.மு.க. தலைவர் கலைஞர், தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு, உறுப்பினர்கள், முந்தைய மத்திய அமைச்சர் பெருமக்கள் மற்றும் சேலம் வீரபாண்டிய ஆறுமுகம் ஆகியோர்களின் சீரிய முயற்சிகள் காரணமாக, சில டிவிஷன் களைத் தனியே உருவாக்கியதன் மூலம் வளர்ச்சிக்கும், புதிய வேலை வாய்ப்புக்கும் பெரிதும் வழி வகுத்தன. மங்களூருவோடு இணைக்க திட்டமா? எடுத்துக்காட்டாக கேரள மாநிலம், பாலக் காட்டோடு இணைக்கப்பட்ட டிவிஷன்களி லிருந்து ஒரு பெரும் பகுதியைப் பிரித்து சேலம் தனி ரயில்வே கோட்டம் - ரயில்வே டிவிஷன் அமைக்க அரும்பாடுபட்ட பிறகே, லாலு பிரசாத் அவர்கள் ரயில்வே அமைச்சராக இருந்த காலத்தில், சேலம் டிவிஷன் என்று தனியே சேலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு புது டிவிஷன் உருவாக்கப்பட்டது. அப்படி உருவான பிறகும்கூட அதை முழு அளவில் வளர்ச்சியடைய வைக்க மனமின்றி. கேரளத்துச் செல்வாக்கு, மத்தியில் அதிகமாக இருப்பதன் காரணமாக, பெயரளவில் தனி அலுவலகம் போல சில ஆண்டுகள் இயங்க விட்டு, ஓரளவு வளர்ந்து வரும் நிலையில் திடீரென்று இப்போது இந்த சேலம் டிவிஷனை மங்களூருவுடன் (கர்நாடகத் துடன்) இணைக்க ரகசியமாகப் பல முயற்சிகள் நடைபெற்று வருவது குறித்து சேலத்துப் பெரு மக்களும், ரயில்வே தொழிலாளர் தோழர்களும் மிகவும் கவலை அடைந்துள்ளனர். அவர்களது நியாயமான இந்த அச்சத்தைப் போக்கி, வெகுவாகப் பாடுபட்டு, வராது வந்த சேலம் ரயில்வே கோட்டம் மீண்டும் காணாமற் போகும் அவலநிலை ஏற்பட்டு விடக் கூடாது! கூடவே கூடாது!! தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்துக்கு.. இதுபற்றி ரயில்வே நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவர் திரு. டி.ஆர். பாலு அவர்களும், நமது தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் பெரு மக்களும், காங்கிரஸ் மத்திய அமைச்சர்களும் இதில் தனி அக்கறை செலுத்தி, சேலம் டிவிஷன் வழமைபோல் தனித்தியங்குவதோடு அதை மேலும் பலப்படுத்தவும் ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இன்றேல் மக்கள் கிளர்ச்சி வெடிப்பது உறுதி! உறுதி!! கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் சென்னை 18.7.2013 July 19, 2013 at 6:10 AM தமிழ் ஓவியா said... டெசோ பயணம் தொய்வின்றி தொடரும்! டெசோ தலைவர் கலைஞர் கடிதம் சென்னை, ஜூலை 18- டெசோவின் பயணம் தொய்வின்றி தொடரும் என்று தலைவர் கலைஞர் அவர்கள் விடுத்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கடிதம் வருமாறு:- உடன்பிறப்பே, ஈழத் தமிழர்கள் ஜனநாயக ரீதியாக அனைத்து வகை உரிமைகளையும் பெற்று, சுயமரி யாதையோடும், கண்ணியத் தோடும் வாழ்ந்திட வேண்டும் என்பதற்காக நாம் மேற் கொண்டு வரும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, 16-7-2013 அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் டெசோ அமைப்பின் கூட்டம் நடைபெற்று, அய்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அந்தத் தீர்மானங்கள் எல்லாம் ஏடுகளில் வெளிவந் திருப்பதைப் படித்திருப்பாய்! இடையறாத இன்னல்களுக்குத் தொடர்ந்து ஆளாகிவரும் இலங்கைத் தமிழர்தம் வாழ்வில் ஒளி காண வேண்டும் என்ப தற்காக திராவிட முன்னேற்றக் கழகமும், தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் தலைமையிலான திராவிடர் கழகமும், மதுரை நெடுமாறன் தலைமையில் இருந்த காமராஜ் காங்கிரஸ் இயக்கமும் சேர்ந்து தான் தமிழ் ஈழ ஆதரவாளர் இயக்கம் என்ற டெசோ அமைப்பு சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு தோற்றுவிக் கப்பட்டது. 26-4-1985 அன்று திருவள் ளூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு (டெசோ) உருவாக்கப்படுவதைப் பற்றி அறிவித்தேன். டெசோ அமைப் புக்கு தலைவராக நானும், உறுப்பினர்களாக கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர், தமிழர் தலைவர் கி. வீரமணி, பழ. நெடுமாறன், அய்யணன் அம்பலம் ஆகியோரும் அப்போது இடம் பெற்றோம். July 19, 2013 at 6:14 AM தமிழ் ஓவியா said... ஈழத் தமிழருக்கு ஆதரவாக 29-4-1985 அன்று சென்னையில் நடைபெற்ற மறியலில் 4002 பேரும், 30ஆம் தேதி திருச்சியில் 3000 பேரும், மே 3ஆம் தேதி தர்மபுரியில் 1000 பேரும், 6ஆம் தேதி சேலத்தில் 3000 பேரும், 7ஆம் தேதி தஞ்சை யில் 6000 பேரும், 8ஆம் தேதி வட ஆர்க்காட்டில் 2500 பேரும், 13ஆம்தேதி தென் ஆர்க்காட்டில் 3000 பேரும், 15ஆம் தேதி பெரியார் மாவட்டத்தில் 1500 பேரும், 16ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3000 பேரும், 17ஆம் தேதி கோவை, நீலகிரி மாவட்டங்களில் 3500 பேரும், 18ஆம் தேதி ராமனாதபுரம், பசும்பொன், காமராஜர் மாவட்டங்களில் 3000 பேரும், 20ஆம் தேதி மதுரை மாவட்டத் தில் 5000 பேரும், 22ஆம் தேதி நெல்லை, குமரி, புதுவை யில் 5500 பேரும் ஈடுபட்டு கைது ஆயினர். காஞ்சியில் கலைஞர் கைது இலங்கைத் தமிழர்களின் நலன் காக்க 16-5-1985 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற என்னையும் மற்றும் ஆயிரம் பேரையும் கைது செய்து சிறைச்சாலையில் அடைத்தனர். நீதிபதி என்னைப் பார்த்து குற்றச்சாட்டை ஒப்புக் கொள்கிறீர்களா என்று கேட்டபோது, நீதிமன்றத்தின் கண்ணோட்டத்தில் சட்டப்படி நான் குற்றவாளியாக இருக்கலாம், ஆனால் எனது தமிழ் இன உணர்வு அடிப்படையில் என் மனசாட்சிப்படி நான் குற்றவாளி அல்ல என்று கூறினேன். 1986ஆம் ஆண்டு பிப்ரவரி, மார்ச் திங்களில் இலங்கையில் சிங்கள இராணுவத்தின் கொடுமை கள் அதிகரித்தன. அம்பாறை மாவட்டத்தில் தங்கவேலாயுதபுரம் என்ற கிராமத்தில் ஒரு நாள் இலங்கை இராணுவம் நுழைந்து கண்ணில் பட்ட பெண்களையும், வயதானவர்களையும், குழந்தை களையும் குருவிகளைச் சுடுவது போலச் சுட்டுக் கொன்றார்கள். ஒரே நாளில் அறுபதுக்கும் மேற்பட்ட தமிழர்கள் மடிந்தனர். தொடர்ந்து இப்படிப்பட்ட துயரச் செய்திகள் தமிழகத்திற்கு வந்து கொண்டே யிருந்ததால், சென்னையில் டெசோவின் அமைப்புக் கூட்டம் என் தலைமையிலே கூடி, மாவட்டந்தோறும் பேரணிகளை நடத்துவதென்றும், மதுரை மாநகரில் டெசோ சார்பில் அனைத்திந்தியாவில் உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்களை எல்லாம் அழைத்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டினை நடத்துவதென்றும் முடிவெடுத்தோம். இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை குறித்து டெசோ அமைப்பின் சார்பில் 3-10-1985 அன்று கோவையிலும், 4-10-1985 அன்று திண்டுக்கல் லிலும், 5-10-1985 அன்று தூத்துக்குடியிலும், 6-10-1985 அன்று திருச்சியிலும், 7-10-1985 அன்று சேலத்திலும், 13-10-1985 அன்று வேலூரிலும் மிகப் பெரிய பேரணிகள் நடத்தப் பட்டன. July 19, 2013 at 6:14 AM தமிழ் ஓவியா said... 1986 - மதுரை மாநாடு 4-5-1986 அன்று மதுரையில் ஈழத் தமிழர் ஆதரவு மாநாட்டுக்கு டி.யு.எல்.எப். சார்பாக அமிர்தலிங்கம், எல்.டி.டி.ஈ. (விடுதலைப் புலிகள்) சார்பாக திலகர், டெலோ சார்பாக மதி, புரோடெக் சார்பாக சந்திரகாசன், ஈராஸ் சார்பாக ரத்தின சபாபதி, டி.இ.எல்.எப். சார்பாக ஈழவேந்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பாக வரதராஜப்பெருமாள், பிளாட் சார்பாக வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பதும், அந்த மாநாட்டில் அகில இந்திய ரீதியில் என்.டி. ராமராவ், வாஜ்பய், பகுகுணா, ராமுவாலியா, உபேந்திரா, உன்னிகிருஷ்ணன், ஜஸ்வந்த் சிங், கர்நாடக உள்துறை அமைச்சர் ராச்சையா மற்றும் தமிழகத் தலைவர்கள் பேராசிரியர் அன்பழகன், தமிழர் தலைவர் வீரமணி, பழ. நெடுமாறன், அய்யணன் அம்பலம், அப்துல் சமத், சுப்பிரமணியம் சுவாமி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போதும் இலங்கைத் தமிழர் வாழ்வில் நிரந்தர விடியல் ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான் அந்த மாநாட்டினை டெசோ அமைப்பின் சார்பில் நடத்தினோம். எனவே டெசோ இயக்கத்தின் சார்பில் நாங்கள் நடத்துகின்ற எந்த நிகழ்ச்சியும் சில உளறுவாயர்கள் கூறுவது போன்ற எந்த உள்நோக்கத் தோடும் நடத்தப்படுவதில்லை. ஏன், கடந்த ஆண்டு 12-8-2012 அன்று சென்னையில் டெசோ இயக்கத்தின் சார்பில் நடத்திய ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாடும் எந்த உள்நோக்கத்திற்கும் இடம் தராமல் நடத்தப்பட்ட மாநாடுதான். அந்த மாநாட்டினை அ.தி.மு.க. அரசின் தடைகளையெல்லாம் கடந்து நாங்கள் நடத்திய போதும், மாலையில் நடைபெற்ற டெசோ மாநாடும், அதனையொட்டி காலையில் நடைபெற்ற ஆய்வரங்கமும் நடைபெறவே நடைபெறாது என்றும், அப்படியே நடைபெற்றாலும் வெளிநாட்டிலிருந்தோ, இலங்கையிலிருந்தோ, வட மாநிலங்களிலிருந்தோ இலங்கைத் தமிழர் பிரச்சினைகளில் ஆர்வமும் அக்கறையும் உடைய யாருமே கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும், கருணாநிதி ஏமாறப் போகிறார் என்றும் மனப்பால் குடித்தவர்களின் முகத்தில் எல்லாம் கரியை அள்ளிப் பூசுகின்ற அளவிற்கு அந்த டெசோ மாநாடு மிகவும் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் ஈழத்தமிழர்களுக்குப் பயனுள்ள வகையிலும் நடைபெற்று முடிந்தது. July 19, 2013 at 6:14 AM தமிழ் ஓவியா said... சென்னையில் டெசோ மாநாடு டெசோ இயக்கத்தின் சார்பில், அன்று காலையில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற ஆய்வரங்கத்தில் இந்தியாவின் வட மாநிலங்களிலிருந்தும், அமெரிக்கா, பிரிட்டன், சுவிட்சர்லாந்த், சுவீடன், மொராக்கோ, சிங்கப்பூர், மலேசியா, நைஜீரியா மற்றும் இலங்கை நாடு களிலிருந்தும்; மாநாட்டுக்கு வந்தால் இலங்கை கொடுங்கோல் அரசு என்ன செய்யுமோ என்ற அச்சத்தால் வராத ஒரு சிலர் தவிர்த்து; வந்திருந்த 30க்கு மேற்பட்ட பன்னாட்டுப் பிரதிநிதிகள், தமிழார்வலர்கள், ஈழத் தமிழர் பிரச்சினைகளில் தொடர்ந்து ஈடுபாடு காட்டி வருவோர், வரைவுத் தீர்மானங்களாக தயாரிக்கப்பட்டிருந்த 11 தீர்மானங் களின் மீது விரிவாக தங்கள் ஆழ்ந்த கருத்துக் களையும், திருத்தங்களையும் எடுத்து வைத்து இறுதித் தீர்மானங்களை வடிவமைத்து உருவாக்கிய தோடு மட்டுமின்றி, புதிதாக மூன்று தீர்மானங் களையும் முன்மொழிந்து அவையும் விவாதிக்கப் பட்டு மாநாட்டிலே நிறைவேற்றப்பட வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டது. குறிப்பாக கடைசித் தீர்மானமான டெசோ மாநாட்டிற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று ஆணை பிறப்பித்த தமிழக அ.தி.மு.க. அரசுக்குக் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென்று கூறி, அந்தத் தீர்மானத்தை முன்மொழிந்ததே லோக் ஜனசக்தி தலைவரும், மத்திய அரசின் முன்னாள் அமைச்சரும், இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினரு மான அருமை நண்பர் ராம் விலாஸ் பஸ்வான் அவர்கள்தான். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மாநாட்டோடும் டெசோ பணி களை நாங்கள் முடித்திடவில்லை. 19-11-2012 அன்று அண்ணா அறிவாலயத்தில் டெசோ அமைப்பின் கூட்டம் என்னுடைய தலைமையிலே நடைபெற்றது. பொதுச் செயலாளர் பேராசிரியரும், இளவல் கி. வீரமணி, தொல். திருமாவளவன், பேராசிரியர் சுப. வீரபாண்டியன், திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோரும், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக அய்.நா.விற்குச் சென்று தேவையான விளக்கங்கள் அளித்து வந்த தளபதி மு.க.ஸ்டாலின், நாடாளு மன்றக் கழகக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு, லண்டன் மாநாட்டில் கலந்து கொண்ட அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங் கோவன், வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் மற்றும் ரவிக்குமார், அசன் முகமது ஜின்னா ஆகியோரும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு; நான்கு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. டெசோ சார்பில் கணடன ஆர்ப்பாட்டம் July 19, 2013 at 6:15 AM தமிழ் ஓவியா said... 4-2-2013 அன்று மீண்டும் டெசோ அமைப்பின் கூட்டம் சென்னையில், அண்ணா அறிவாலயத்தில் என் தலைமையில் நடைபெற்று 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த மாநாட்டில்தான், இலங்கையில் தமிழர்கள் வாழும் 89 கிராமங்களின் பெயர்கள் சிங்களப் பெயர்களாக மாற்றப் பட்டதைப் பற்றியும், தமிழர்கள் வழிபடும் 367 இந்துக் கோயில்கள் மற்றும் மசூதிகள், தேவாலயங்கள் அழிக்கப்பட்டு வருவதைப் பற்றியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக மீனவர் களை இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து துன் புறுத்தி வருவதைக் கண்டித்து 18-2-2013 அன்று ராமேஸ் வரத்திலும், 19-2-2013 அன்று நாகப்பட்டினத்திலும், டெசோ இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அவ்வாறே அந்த அறவழி ஆர்ப்பாட்டங்களும் தமிழ் மக்களின் பேராதரவோடு நடை பெற்றுள்ளன. மீண்டும் 25-2-2013 அன்று டெசோ அமைப்பின் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் என் தலைமையில் நடை பெற்றது. அந்தக் கூட்டத்திற்குப் பின், என் சார்பில், செய்தியாளர் களைச் சந்தித்த தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள், மனித உரிமைகளை மீறிய போர்க் குற்றவாளியான இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்திடும் வகையில் மார்ச் 5ஆம் தேதியன்று டெசோ இயக் கத்தின் சார்பில் சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடை பெறும் என்றும், அதே நாளில் டெல்லி நாடாளு மன்றம் முன்பு தி.மு.கழக நாடாளுமன்ற உறுப்பினர் களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நாடாளு மன்ற உறுப்பினர், தொல். திருமாவளவனும் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என்றும் அறிவித்தார். மேலும் மார்ச் 7ஆம் தேதியன்று டெசோ இயக்கத்தின் சார்பில் டெல்லியில் நடைபெறும் சிறப்பு மாநாடு மற்றும் கருத்தரங்கில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர் களும், பல்வேறு மனிதநேய அமைப் பினரும் கலந்து கொள்ள விருக்கிறார்கள் என்றும் கூறினார். அவ்வாறே இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் சிறப்பாக நடைபெற்றன. July 19, 2013 at 6:15 AM தமிழ் ஓவியா said... கச்சத்தீவை மீட்போம்! 5-3-2013 அன்று டெசோ அமைப்பின் சார்பில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் டெசோ உறுப்பினர்களின் கூட்டத்தில் இலங்கை அரசின் இனப் படுகொலையைக் கண்டித்து அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 12-3-2013 அன்று தமிழகம் முழுவதும் பொது வேலை நிறுத்தம் நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது. 15-4-2013 அன்று நடைபெற்ற டெசோ கூட்டத்தில், கச்சத் தீவினை இலங்கைக்கு ஒப்பந்தத்தின் மூலம் விட்டுக் கொடுத்தது அரசியல் சட்ட ரீதியாகச் செல்லுபடி ஆகாது என்பதுதான் உண்மை என்றும், எனவே 1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், கச்சத் தீவு இந்தியா வின் ஒரு பகுதிதான் என்பதைப் பிரகடனப்படுத்தவும், டெசோ அமைப்பின் மூலம் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதென முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. அவ்வாறே உச்ச நீதிமன்றத்தில் என் பெயரிலேயே வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, அந்த வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. ஆகஸ்டு 8ஆம் தேதி தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் இந்த வரிசையில்தான் நேற்றையதினம் 16-7-2013 அன்று டெசோ கூட்டம் நடைபெற்று, அதிலே இலங்கை அரசமைப்புச் சட்டத் தின் 13வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தியும், இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பதை வற்புறுத்தியும், தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டியும், இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றத்தைத் தடுக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த தீர்மானங்களின் மீது இந்திய மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், சிங்கள ஆதிக்க வெறிக்கு எதிராக தமிழர் எழுச்சியை ஒன்று திரட்டவும், டெசோ இயக்கத்தின் சார்பில் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதியன்று தமிழகம் முழுதும் மாவட்டத் தலைநகரங்களில் தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவ தென முடிவு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. அறவழிப் பயணம் தொடரும்! உடன்பிறப்பே, நமது இயக்கத்தில் சார்பில் இவ்வாறு இலங்கைப் பிரச்சினைக்காகவும், சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவும், ஏனைய பொதுமக்கள் பிரச்சினைகளுக்காகவும் ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டு மென்று தலைமையின் சார்பில் முடிவெடுத்து அறிவித்து வருகிறோம். இத்தகைய நிகழ்ச்சிகளை இன்றுள்ள அரசியல் சூழலில் நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதை நீங்கள் எல்லாம் உணர்ந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இலங்கைத் தமிழர் உறவு என்பது நம்முடைய தொப்புள் கொடி உறவாகும். அவர்களுக்காக டெசோ இயக்கத்தின் சார்பில் ஆகஸ்ட் 8ஆம் தேதி நடத்த வேண்டிய ஆர்ப்பாட்டத்தை எப்போதும் போல் சிறப்பாகவும், வெற்றிகர மாகவும் நடத்திடுவாய் என்ற நம்பிக்கை எனக்கு நிரம்பவே இருக்கிறது. சென்னை மாநகரில் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நான் தலைமை தாங்கவிருக்கிறேன் என்கிற போது, நீயும் இந்த ஆர்ப்பாட்டத்தைச் சிறப்பாக ஆக்கிடுவாய்; ஆக்கிட வேண்டும்! ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைத்திடும் வரை, நமது அறவழிப் பயணம் நிற்காது! அன்புள்ள, மு.க. July 19, 2013 at 6:15 AM தமிழ் ஓவியா said... உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் எஸ்.சி., எஸ்.டி., பி.சி. மற்றும் பெண் நீதிபதிகள் உரிய எண்ணிக்கையில் வருவதை நான் வரவேற்கிறேன்! நீதியரசர் ப.சதாசிவம் பேட்டி புதுடில்லி, ஜூன் 19- மேல் மட்ட நீதிமன்றங் களில் தாழ்த்தப்பட் டோர், மலை வாழ் மக்கள் பிற்படுத்தப்பட் டோர் மற்றும் பெண்கள் உரிய எண்ணிக்கையில் நீதிபதிகளாக வர வேண் டும்; அதனை நான் வரவேற்கிறேன் என்று உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக இன்று (ஜூலை 19) பதவி யேற்ற நீதியரசர் ப. சதா சிவம் நேற்று முன்தினம் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏட்டுக்கு அளித்த பேட் டியில் கூறினார். பேட்டியில் கூறியதாவது: மேல் நிலை நீதி மன்றங்களில் நீதிபதி பதவிகள் நிரப்புவதில், நிலவி வரும் முறை களிலிருந்து சற்று தளர்வு ஏற்படுத்தி, உச்சநீதி மன்றத்திலும், உயர்நீதி மன்றங்களிலும் பெண் களிடமிருந்தும், தாழ்த் தப்பட்டவர்களிடமிருந்தும், பழங்குடியினரிடமிருந்தும், மற்றுமுள்ள பிற்படுத்தப் பட்ட மக்களிடமிருந் தும் மேல் நிலை நீதி மன்றங்களுக்குத் தேர்ந் தெடுக்கப்படுவதை தான் வரவேற்பதாக கூறியுள் ளார். மேல் நிலை நீதி மன்றங்களில் பெண் களுக்கோ இதர பிற் படுத்தப்பட்டோர் களுக்கோ நீதிபதிகளாக நியமிக்கப்படுவதற்கு இடஒதுக்கீடு இல்லை. நீண்ட நாட்களாகவே உயர்நிலை நீதிமன்றங் களில், பெண்கள், பிற்படுத்தப்பட் டோர் ஆகியோர்க்கான இடம் மிகக் குறைவு. அவர் களை உச்சநீதிமன்றத் திலும், உயர்நீதிமன்றங் களிலும், அடிப்படை தகுதி உரிமையை சமரசம் செய்து கொள் ளாமல் நியமனம் செய் தால், நாட்டின் பன்முக சமுதாய வேறுபாடுகள் பிரதிபலிக்கப்படுவதோடு, சமுதாயத்தில் பெரு மளவிற்கு ஒருவளமான அடையாளத்தை அளிக்கும். தேர்வு முறைகளில் மாற்றம் செய்ய நான் விரும்புகிறேன். பிற்படுத் தப்பட்ட மக்களுக்கு ஒரு சிறு உதவியாக, பிற் படுத்தப்பட்ட வகுப்பு களில் உள்ள நற்றகுதி பெற்றுள்ளவர்கள் தேர்வு பெறுவதற்கு மேல் நீதிமன்றத் தேர் வாளர்களை ஒத்துக் கொள்ள வைப்பதற் கான பொறுப்பு அடுத்த தலைமை நீதிபதி என்ற முறையில் எனக்கிருக் கிறது. பிற்படுத்தப்பட்ட வகுப்பு உறுப்பினர்கள், சட்டத்தைப் படித்து விட்டு நீதிபதியாக விரும் புபவர்கள் தங்கள் அடிப்படைத் தேவை களை நிறைவுபடுத்திக் கொள்ள தாங்களே முன் வர வேண்டும். அது உயர்நீதிமன்ற அதிகாரி கள் முன் தங்கள் பற்றிய தகவல்களை எடுத் துரைக்க, தங்களுக்குண் டான வேலைப் பகு தியைக் கேட்டுப் பெற உச்சநீதிமன்ற தேர்வுக் குழு நீதிபதிகளிடம் சில கொள்கைகள் சில இணக்கங்களை ஏற் படுத்தித் தர உதவும் என்று விளக்கினார். உச்சநீதிமன்றத்தில், 63 ஆண்டுக் காலத்தில், பெண் நீதியரசர்களுக் குப் பற்றாக் குறை நிலவு கிறது. அமர்ந்து இருக் கும் இரண்டு பெண் நீதிபதிகளையும் சேர்த்து, குயான் சுதா மிஸ்ரா, ரஞ் சனா பி. தேசாய் ஆகியோ ரையும் சேர்த்து 5 பேர் தான் இருக்கிறார்கள். இந்தியாவின் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி யாக முதல் தாழ்த்தப் பட்ட இனம் சேர்ந்த கே.ஜி. பாலகிருஷ்ணன் 2007இல் பதவி ஏற்றார். ஆனால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடமிருந்து நீதிபதிகள் தேர்ந்தெடுப் பது மிக மிக அபூர்வம். நீதியரசர் சதாசிவம், நீதிபதிகளின் அரசியல் சார்புகளையும், கடுமை யாகப் பேசினார். அவர் கள் அரசியல் தொடர்பு களைத் தவிர்த்து, சார்பு நிலைகளையும் நீக்கிக் கொள்ள வேண்டும். அவர் அரசியலுடன் இணைக்கப்பட்டிருக்க லாகாது என்று நீதியர சர்களாக விரும்புபவர் களுக்குச் சொன்னார். July 20, 2013 at 6:00 AM தமிழ் ஓவியா said... மற்றொரு திவ்யா - இளவரசன் இணை காவல்துறை என்ன செய்கிறது? - நமது சிறப்புச் செய்தியாளர் தருமபுரி, ஜூலை 19- தருமபுரி மாவட்டம் பொம்மிடி காவல் சரகத் திற்குட்பட்ட வேப்ப மரத்தூர் கிராமத்தில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த கோபால் மகன் சுரேஷ் என்பவரும் அரூர் வட்டம் பறையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்ப வரின் மகள் சுதா என்ப வரும் (தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்) காதலித்து கடந்த மூன் றாண்டுகளுக்கு முன் 21.4.2010-ஆம் தேதி சின்ன திருப்பதி கோயிலில் திரு மணம் செய்து கொண்டு அரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டுள்ள னர். கடந்த 3 ஆண்டு களாக சுரேஷ் பெற்றோ ருடன் கூட்டுக் குடும்ப மாக வாழ்ந்து வந்ததோடு ஜாதி மறுப்புத் திரு மணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு ஒன்றரை வயதில் காதலின் சாட்சி யாக ஒரு அழகான ஆண் குழந்தையும் உள்ளது. மூன்றாண்டுகளுக்குப் பிறகும்... இந்த நிலையில் இவர் கள் செய்து கொண்டது. காதல் திருமணம் என்று நம்பிய ஊரார். காலப் போக்கில் சுதாவின் சமூகம் தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிடர் சமூ கத்தை சார்ந்தவர் என்று தெரிய வரவே ஜாதியின் கோர முகம் தெரிய வந்தது. 3 ஆண்டுகளாக வேப்பமரத்தூரில் கூட்டுக்குடும்பமாக மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்த நிலையில் நத்தம் இளவரசன் - திவ்யா காதல் விவகாரத்தில் ஜாதி வெறியர்களின் பிடி இறுகியது. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநா தன் (ஊர் கவுண்டர்) பெரியசாமி கோல்கரை (கவுண்டர்) தங்கராஜ் உட்பட்டோர் தலைமை யின் கீழ் ஊர் பஞ்சாயத் தினர் ஒன்றுகூடி வன் னிய இனத்தை சேர்ந்த பையன் தாழ்த்தப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொண்டு ஊரில் வசிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது ஜாதிக்கு ஏற்பட்ட இழுக்காகும் எனவே அந்தப் பெண்ணைத் துரத்திவிட்டு வரவும். அப்படி ஜாதி கெட்டு கீழ் ஜாதிப் பெண்ணு டன் வாழ்ந்தால் உங்கள் குடும்பத்தின் மீது ஊர் கட்டுப்பாடு கொண்டு வருவோம் என கூறி ஊர் திருவிழாவுக்கு கொடுத்த பணத்தையும் திருப்பி கொடுத்து ஊர்நிதியில் இருந்து சுரேஷ் வாங்கி இருந்த பணத்தையும் கட்டவைத்ததுடன், ஊர்திருவிழாவில், ஊரில் நடக்கும் திருமணம், சாவு போன்ற நிகழ்வு களில் குடும்பத்தினர் யாரும் கலந்து கொள் ளக் கூடாது. ஊராரும் இவர்களை சேர்க்கக் கூடாது. பொதுகுழாயில் தண்ணீர் எடுக்கக் கூடாது கடைகளில் பொருள் வாங்கவோ கொடுக் கவோ கூடாது என ஊர் (கட்ட) பஞ்சாயத்து பேசி சுரேசு குடும்பத்தை ஒதுக்கி வைத்துள்ளதாக ஜாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் தெரிவித் தனர். அதிலும் வேறு எந்த ஜாதிப்பெண்ணாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று உறுதியாக தெரி வித்துள்ளதாக கூறியது டன் இளவரசன் - திவ்யா வாழ்க்கை மாதிரி ஆக்கி விடுவோம் என்று மிரட் டியதாகவும் செய்தியா ளர்களிடம் தெரிவித்தனர். காவல்துறை என்ன செய்கிறது? இந்த ஜாதி வெறி பிடித்தவர்களின் மிரட் டலுக்கு பயந்து சுரேஷ் - சுதா ஆகியோர் 22.6.2013-இல் பொம்மிடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர் (குற்ற எண் 234/2013) இருந்தும் இதன் மீது காவல் துறை யின் நடவடிக்கை ஏதும் இல்லாததால் தினம் தினம் எங்கள் குடும்பத்தி னரை மிரட்டி வருகிறார் கள். ஒரு மாதம் ஆகியும் நடவடிக்கை எடுக்காத தால் 17.7.2013-இல் உயி ருக்கு பயந்து மாவட்ட காவல்துறைக் கண்கா ணிப்பாளரிடம் (2ஆவது முறையாக) புகார் மனு கொடுக்க வந்துள்ளோம் என்று தம்பதிகள் தெரி வித்தனர் எங்களது வாழ்க்கை இன்னொரு நத்தம் இளவரசன் - திவ்யா வாழ்வைபோல ஆகிவிடக் கூடாது என்றனர். July 20, 2013 at 6:01 AM தமிழ் ஓவியா said... 13ஆவது சட்டத் திருத்தம் 1987 ஜூலை 29ஆம் தேதி ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தம் வாராது வந்த - தமிழர்களைக் காப்பாற்றக்கூடிய பெரு ஒப்பந்தம் என்றெல்லாம்கூட பேசப்பட்டதுண்டு. உண்மை என்னவென்றால் பாதிக்கப்பட்ட தமிழர் களின் பிரதிநிதிகள் - போராளிகளின் பிரதிநிதிகளின் கருத்துக்களைக் கேட்டுத் தயாரிக்கப்பட்ட ஒப்பந்தம் அல்ல அது! குறைந்தபட்ச சலுகைகளைத் தமிழர்களுக்கு அளிப்பதாகக் கருதப்பட்ட அந்த ஒப்பந்தத்தைக்கூட ஜெயவர்த்தனேயின் அமைச்சரவைத் தலைமை அமைச்சர் பிரேமதாசா முதல், பாதுகாப்புத்துறை அமைச்சர் அதுலத் முதலி வரையுள்ள 11 அமைச்சர்களும் ஏற்கவில்லை; ஒப்பந்தத்தில் கையொப்பமிட வந்த இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியை வரவேற்க வராமல் புறக்கணித்தனர்; புத்த பிக்குகள் எல்லாம் எதிர்ப்புக் குரல் கொடுத்தனர்! ஜூலை 29ஆம் தேதி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட இலங்கை அதிபர் ஜூனியஸ் ரிச்சர்ட் ஜெயவர்த்தனே அடுத்த ஒரு வார காலத்துக்குள்ளாகவே (6.8.1987) அதிபர் ஜெயவர்த்தனே இலங்கை வானொலி தொலைக் காட்சிகளில் நாட்டு மக்களுக்கு விடுத்த செய்தி என்ன தெரியுமா? வடக்கு - கிழக்கு மாகாணங்களில் இணைப்பு தற்காலிகமானதுதான். இதுகண்டு எதற்காக எதிர்ப்பைத் தெரிவிக்கிறீர்கள்? நானே இந்த இணைப்பிற்கு எதிராகப் பிரச்சாரம் செய்ய இருக்கி றேன். தற்காலிகமான இந்த ஏற்பாட்டிற்கு என்னைப் புரிந்து கொள்ளாது சிங்களச் சோதரர்கள் ஏன் ரகளை செய்ய வேண்டும்? என்று பேசினார் என்றால், ஒப்பந்தத் தில் கையொப்பமிட்ட ஒரு நாட்டு அதிபரின் அறிவு நாணயம் எத்தகையது என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாமே! வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இணைப்பு என்று வசீகரமாக அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளதே - அது எந்த அடிப்படையில் தெரியுமா? இணைப்புக்கான வாக்கெடுப்பு என்று வரும் பொழுது அந்த இரண்டு மாகாணங்களிலும் தானே வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்? அதுதான் இல்லை; கிழக்கு மாகாணத்தில் மட்டுமே தான் வாக்கெடுப்பு; ஏன் அந்த ஏற்பாடு தெரியுமா? அம்மாநிலத்தில் 60 விழுக்காட்டினர் சிங்களவர்களாக ஆக்கப்பட்டதுதான். 26 ஆண்டுகளுக்குப் பிறகும் இரு மாநிலங்களும் இணைக்கப்படவில்லை என்பதை எண்ணும்பொழுது இலங்கையில் எந்தக் கட்சி ஆட்சி அதிகாரம் அமைந்தாலும் தமிழர்களை ஒடுக்குவது என்பதில் மட்டும் ஒரே கொள்கைதான் ஒரே செயல்பாடுதான்! July 20, 2013 at 6:03 AM தமிழ் ஓவியா said... இப்பொழுது நிலை என்னவென்றால், ஆளும் கட்சியின் மிக முக்கிய கூட்டாளிக் கட்சியான ஜெ.வி.பி. மூலம் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு, இணைப்பு, நீதிமன்ற தீர்ப்பு ரீதியாகவே வாய்ப்பு இல்லாமல் ஆக்கப்பட்டு விட்டதே! இவ்வளவையும் கடந்து 13ஆவது சட்டத் திருத்தத்தில் கண்டுள்ளவைகளைச் செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் நிலைமைதான்! அதையும்கூட ஏற்றுக் கொள்ளாமல் அதில் ஏ என்ற ஒரு பிரிவை உண்டாக்கி நீர்த்துப் போகச் செய்யும் குள்ள நரித் தந்திரத்தில் சிங்கள இனவெறிப் பாசிச அரசு இறங்கிவிட்டது. காவல்துறை அதிகாரங்களை தமிழ்ப் பகுதி மாகாணங்களுக்குக் கொடுத்தால் பிற மாகாணங் களிலும் அதே கோரிக்கைகளை வைப்பார்கள். அது இலங்கையின் பாதுகாப்புக்கே குந்தகமாக ஆகி விடும். இலங்கை அரசின் அதிகாரங்களை அது குறைத்துவிடும் என்று கருதுகிறதாம் ராஜபக்சே அரசு! அதற்காக என்ன செய்துள்ளார்கள்? 13ஆவது சட்டத் திருத்தத்தை மறுபரிசீலனை செய்வதற்காக நாடாளு மன்றத் தேர்வுக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு இன்றுதான் (19.7.2013) கூடுகிறது. அந்தக் குழு கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (டி.என்.ஏ.) கூறிவிட்டது. இன்றைய சூழலில் தனி நாட்டை வற்புறுத்தப் போவதில்லை; அதே நேரத்தில் நல்ல அளவுக்கு அதிகாரப் பகிர்வுடன் கூடிய மாகாண சபை அமைந்திட இந்தியா உதவ வேண்டும் என்று தான் கூறியுள்ளனர். 16ஆம் தேதி கூடிய டெசோ கூட்டத்தின் தீர்மானத் தில் காணப்படும் இந்த ஒரு பகுதி முக்கியமானது. 13ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம், ஈழத் தமிழர் பிரச்சினைக்கு முழு அரசியல் தீர்வாக அமையாது என்பதும்; இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் வாழும் ஈழத் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தி, அவர்களுடைய கருத்தினைக் கேட்டுத் தீர்வு காண்பதுதான் ஈழத் தமிழர்களின் நலனுக்கு உகந்த தீர்வாக இருக்கும் என்பதுதான் டெசோ அமைப்பின் நிலைப்பாடாகும். இருப்பினும் தற்காலிகத் தீர்வாகவாவது ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தம் பயன்பட வேண்டும் என்று டெசோ அமைப்பு கருதுகிறது. மேலும் இலங்கை அதிபர் மற்றும் அவருடைய அமைச்சரவையில் உள்ளவர்கள் தெரிவித்து வரும் கருத்துகள் இந்த ஒப்பந்தத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே இந்திய அரசு அந்த ஒப்பந்தத்தில் கண்டுள்ளவாறு, எந்தவிதத் திருத்தங் களும் இல்லாமல் 1987 ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று டெசோ அமைப்பின் இந்த கூட்டம் வலியுறுத்துகிறது என்ற தீர்மானம் நடைமுறைக் கண்ணோட்டத்தோடு இன்றைய சூழலில் நிறைவேற்றப்பட்டு இருப்பது மிகச் சரியானதேயாகும். July 20, 2013 at 6:03 AM தமிழ் ஓவியா said... திராவிடர்கள்தான் பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிடர் கள்தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான். இதை அவர்கள் பின்பற்றுகிற கலாச்சாரப் படிக் கூறுகிறோம். - (விடுதலை, 24.2.1954) July 20, 2013 at 6:03 AM தமிழ் ஓவியா said... ஆசிரியருக்குக் கடிதம் என்றும் தேவை சுயமரியாதைத் திருமணம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்! ஜூன்26 குடந்தை மாவட்ட கழக வரலாற்றில் மட்டுமல்ல, கழகத் தோழர்களின் குடும்ப வரலாற்றிலும் மறக்க முடியாத, கோலாகல ஒரு கொள்கைத் திருநாள்! ஆம்! குடந்தை கழக மாவட்டத்தில் தோழர்கள் வரவேற்பு - சந்திப்பு என்று தாங்களே மகிழ்ச்சி பொங்க எழுதியும் பாசமிகு கழகக் குடும்பத் தினரைச் சந்தித்து உரையாடி மகிழ்ந்த பொன்னாள்! தாங்கள் குறிப்பிட்டி ருந்தபடி ஒவ்வொரு கழகக் குடும்பத் தினருக்கும் ஒவ்வொரு தியாக வர லாறு இருக்கிறது!! மலரும் நினைவுகளாக அவை களை நினைவு கூர்வதற்கும் ஏஞ்சிய காலத்தில் உறுதியோடும் உற்சாகத் தோடும் பணியாற்றுவதற்கும் கழகக் குடும்பங்களுக்கிடையே ஒரு பாசப் பிணைப்பை ஏற்படுத்துவதற்கும் இளைஞர்களிடையே ஒரு எழுச்சி யையும், விழிப்புணர்ச்சியையும் உருவாக்குவதற்கும் தங்களின் இந்த வருகை மிகவும் பயன்பட்டிருக்கிறது! கொள்கை உறுதி படைத்த வர்களுக்கு கொடிய பாம்பும், கொடியில் தொங்கும் புடலங்காயே என்ற திண்ணிய உள்ளம் படைத்த கொள்கை மறவர்களின் அறப்போர் பாசறையே அய்யா வளர்த்த அன்புப் பாசறை என்பதை அன்று அனைவரும் உணர்ந்தனர்! 1963-ஆம் ஆண்டில் தாலி கூட அணிவிக்காமல் ஒரு சுயமரியாதைத் திருமணத்தை செய்து கொள்வ தென்றால் எத்தகைய எதிர்ப்புகளை எண்ணங்களை எதிர்கொள்ள வேண் டியிருக்கும் என்பதையும், அதை யெல்லாம் தாண்டி, எப்படி வெற்றி கரமாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதையும் என் இணையரும் நானும் முடிவெடுத்து கடந்த 50 ஆண்டு காலமாக இகழ்ந்திட்ட உள்ளத்தினரும் இறுதியில் இன்று கை குலுக்கி வாழ்த்துகின்ற நிலையைப் பெற்றிருக்கிறோ மென்றால்... அதற்கு, சுயமரியாதைக் கொள்கை மீது கொண்ட உறுதியும் அய்யா, அண்ணா, கலைஞர் தாங்கள் தந்த துணிவும், தொண்டறமுமே காரணம்! தாங்கள் எங்களுக்கு சால்வை அணிவித்தபோது... இதுவரை நாங்கள் அனுபவித்த தொல்லைகள் துயரங்கள் அத்தனையும் எங்கோ ஓடிமறைந்தன! பணியாற்றிய காலங்களில் நாங் கள் இருவருமே நேர்மையானவர் கள்... ஒழுக்கமுள்ளவர்கள்... நாணய மானவர்கள், கொள்கை உறுதி படைத்தவர்கள் என்ற பாராட்டைப் பெற்றிருக்கிறோமென்றால் இது ஒரு சுயமரியாதைக் குடும்பத்திற்குக் கிடைத்ததாகவே கருதுகிறோம்! இது தற்புகழ்ச்சிக்காக அல்ல; வருங்கால வீறுகொண்ட இளைய சமுதாயமும் சுயமரியாதைப் பாதை யிலே வெற்றி நடைபோட வேண்டும் என்ற அளவற்ற ஆசையினாலே தான்! வேண்டும் என்பதற்காகத் தான்!! தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் போல் இன்று, தாங் களும் முத்தமிழறிஞர் கலைஞரும் தமிழினத்தின் இருகண்கள்!... ஆனால் பார்வை ஒன்றே! சுயமரியாதைப் பார்வை!! அந்தப்பார்வை காட்டும் வழியே இறுதி வரை போராடுவோம்! எங்களை எனது 80-ஆவது அகவையில் பாராட்டி பயனாடை அணிவித்த தங்களுக்கும், அம்மாவுக்கும், கழகத்திற்கும் என்றென் றும் நம்பிக்கைக்குரியவர்களாக இருப் போம் என்ற உறுதியையும் தெரி வித்துக்கொள்வோம்!. நன்றி! நன்றி!! வணக்கம். வாழ்க பெரியார்!. - நெய்வேலி தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர் July 20, 2013 at 6:05 AM தமிழ் ஓவியா said... ஆகாயத்தில்... ஆகாயத்தில் எங்கோ அந்தர உலகத்தில் கடவுள் என்ற ஒருவன் உட்கார்ந்து கொண்டு இவ்விதமாக வெல் லாம் சிருஷ்டி செய்கின்றார் என்று சொல்லப் படுமானால் அத்தகைய பட்சாதாபமுடைய கடவுளை கஷ்டப்படுகிற உலகினர் கழுத்தை பிடித்துக் கீழே தள்ளி மிதித்து விடுவார்கள். அத்தகைய கடவுள் இப்படி மிதிபடுவதற்குத் தகுதியானவரே! புதிதாகச் சிருஷ்டிக்கும் ஜீவனை அவலட்சணமாக, அறிவீன னாக ஆரோக்கிய ஹீனமாக சிருஷ்டிக்கும் கடவுள் கொடுங்கோலர் அல்லவா? (சுப்பிரமணிய சிவா எழுதிய மோட்ச சாதன ரகசியம் என்ற நூலிலிருந்து) July 20, 2013 at 6:12 AM தமிழ் ஓவியா said... ஒரு பார்ப்பனரின் கணிப்பு தீண்டாமை என்பது சமய சம் பந்தப்பட்டிருக்கிறது. அதை சமய சம்பந்தத்தினால் தான் தீர்க்க முடியும். நான் ஒரு பிராமணன் என்ற முறையிலும் ஒடுக்கப்பட்ட மக் களுக்கு தலைவன் என்ற முறை யிலும் உங்களிடம் பேசுகிறேன். நல்ல ஒழுக்கமுள்ள அரிஜன் எப்பொழுது சங்கராச்சாரி பீடத்தில் அமருகின்றாரோ அப்பொழுது தான் தீண்டாமை ஒழிந்த தாகக் கருதமுடியும். (காகா கலேல்கார், ஆதாரம்: பெரியார் படைக்க விரும்பிய புதிய மனிதன் என்ற நூல்.) July 20, 2013 at 6:12 AM தமிழ் ஓவியா said... பார்ப்பனர் பற்றி பாரதியார் தமிழ்நாட்டில் சாஸ்திரங்கள் இல்லை. உண்மை யான சாஸ்திரங்களை வளர்க்காமல் இருப்பனவற்றையும் மறந்து விட்டு, தமிழ்நாட்டு பார்ப்பனர் பொய்க் கதைகளை மூடரிடம் காட்டி வயிறு பிழைத்து வருகிறார்கள். - காற்று என்ற பாட்டில் பாரதியார் கூறியுள்ளது July 20, 2013 at 6:13 AM தமிழ் ஓவியா said... கடவுள் தோழர்களே! நபி அவர்களை நான் ஒரு மகான் என்றோ, அமானுஷ்ய சக்தி படைத்தவர் என்றோ கருதவில்லை. என்னைப் பொறுத்தவரையில், நபி அவர்களை ஒரு மனிதத் தன்மை படைத்த சிறந்த மனிதராகத்தான் கருதுகிறேனேயல்லாமல், அதற்கு மேற்பட்டதாகச் சொல்லப்படும் நிலையில் கருதவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். முகமது நபி அவர்களுடைய முக்கியமான கருத்துகளிலே தெய்வீகத் தன்மை என்பதை ஒப்புக் கொள்ள முடியாத நம் போன்றவர்களும் மற்றும் பல மதங்களைச் சேர்ந்த சீர்திருத்தவாதிகளும் ஆதரவு கொடுப்பதற்கும் ஒப்புக் கொள்வதற்கும் மேற்கொள்வதாக எடுத்துக் காட்டுவதற்கும் பல கருத்துக்கள் இருக்கின்றன. அவர் என்ன சொன்னார்? ஒரு கடவுள்தான் உண்டு. பல கடவுள்கள் இல்லை என் றார். நீங்கள் கேட்கலாம், நபி அப்படி அதாவது ஒரு கடவுள் என்று சொன்னார்; இதைப் பற்றி உன் கருத்து என்ன? என்று என்னை பொறுத்தவரையில் நான் சொல்கிறேன்; கடவுள் என்று மக்கள், ஆயிரக்கணக்கான கடவுள்களைக் கட்டி அழுகிறவர்களைவிட நபி அவர்கள் எவ்வளவோ மேலானவர் என்பேன். தந்தை பெரியார், 20.12.1953 July 20, 2013 at 6:17 AM தமிழ் ஓவியா said... திதி மந்திரமும் - அதன் பொருளும் மந்திரம்: என்மே மாதா ப்ரலுலோபசரதி அன்னவ் வ்ரதா தன்மே ரேதஹா பிதா வ்ருந்த்தாம் ஆபுரண்யஹா அவபத்யநாம... பொருள்: நான் யாருக்குப் பிறந்தேன். என் அப்பா யாரென தெரியாது. மற்ற வர்கள் சொல்வதால் நான் இன்னா ருக்குத்தான் பிறந்தேன் என்பதை நம்ப வேண்டியுள்ளது. அது அம்மாவுக்குத்தான் தெரியும். அப்படிப்பட்ட அம்மாவுக்கு என் அஞ்சலியை கொண்டு போய் சேர்ப்பீர் என்பது இதன் பொருள். இம்மந்திரத்தின் வெளிப்படையான அர்த்தமென்ன? தன் தாயானவள் சந்தேகத்திற்கு உரியவள். தன் கணவனுக்கு உண்மையாக நடக்காதவள். மாற்றானிடம் உடல் தொடர்பு வைத்திருந்தவள் என்ற அடிப்படையில் இந்த மந்திரம் சொல்லப் படுகின்றது. இதைத்தான் மந்திரம் ஓதும் புரோகிதர் சொல்ல திதி கொடுக்கும் மகன் திருப்பி சொல்கின்றான். ஆதாரம்: அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாத்தாசாரியார் எழுதிய இந்து மதம் எங்கே போகிறது... பாகம் -1 - பக்கம் 157, நக்கீரன் வெளியீடு. எனவே இந்துமதப்படி பெற்றோர் களுக்கு நீ திதி கொடுத்தால் உன் தாய் ஒரு விபச்சாரி என்று பொருள். இதைத் தான் இந்து மதம் கூறுகிறது. July 20, 2013 at 6:18 AM தமிழ் ஓவியா said... மந்திர நீரும் - முடிவெட்டுவோர் நீரும் பொதுமக்களே! நீங்கள் பார்ப்பனர்களுக்கு பொன்னும் பொருளும் தருகின்றீர்கள். அந்த பார்ப்பனர்கள் உங்களிடம் பொருள் பெற்று தம் கல்வியை பெருக்கி கொள்கின்றனர். பொது மக்கள் அனைவருக்கும் கல்வி அறிவையும் மெய்ப்பொருள் தெளிவையும் கற்றுத் தருவார் களானால், நீங்கள் அவர்களுக்கு பொன்னும் பொருளும் தருவது தகும். தெய்வத்தன்மை பொருந்திய நீர் நிலை களிலும், ஆறுகளிலும், வேள்விகளின் போது தலையை மொட்டை அடித்துக் கொள்கின் றீர்கள். அதனால் என்ன பலன்? நீர் நிலை களில் நீராடியதால் தீவினை அகன்றிருந்தால் மொட்டையடித்துக் கொள்வது தேவை இல்லை. மொட்டை அடிப்பவன் கையால் தெளிக்கும் நீரால் அவர்கள் செய்த தீவினை அகல்வதாக இருக்கும் நிலையைப் பார்த்தால் போற்றத்தக்க நீர்நிலைகளைவிட தலை மழிப்பவனின் கையில் உள்ள நீரே பெருமையுடையதாகிறது. மந்திர நீரைவிட முடி மழிப்பவனின்கை நீர் மேன்மையானது. தலை மொட்டையானாலும், தாழ்வான எண்ணங்களும் ஜாதி வேறுபாட்டு உணர்வுகளும் மொட்டையடிக்கப் படுவதில்லை அல்லவா? ஆந்திர சீர்திருத்த ஞானி வேமண்ணா July 20, 2013 at 6:18 AM தமிழ் ஓவியா said... காசியில் இறக்க முக்தி சில தொண தொண பேர் வழிகள் எதையாவது எழுதிக் கொண்டு வந்து தங் களது அந்தக் கவிதையை சரிபார்த்துத் தரும்படியோ அல்லது அதற்கு மதிப்புரை தரும்படியோ புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களிடம் தொல்லை தருவார்கள். காசியில் இறக்க முக்தி, கைலையில் பிறக்க முக்தி என்று இப்படியாக 3 அடிகள் எழுதிய ஒருவர், 4ஆவது அடி தமக்கு வரவில்லை என்றும் அதை முடித்துத் தரவேண்டும் என்று ஒருவர் புரட்சி கவிஞரிடம் வேண்டினார். கவிஞர் தமக்குள் சிரித்துக் கொண்டே எனும் புராணக்கூற்றினை ஏற்பதில் இல்லை புத்தி என்று கடைசி வரியை முடித்துக் கவிதையை வந்தவன் கையில் கொடுத்தார். வந்தவன் முகத்தில் வழிந்த அசட்டுத் தனத்தைப் பார்க்க வேண்டுமே! July 20, 2013 at 6:19 AM தமிழ் ஓவியா said... அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஆகஸ்டு முதல் தேதி ஆர்ப்பாட்டம்! முக்கிய அறிவிப்பு கழகப் பொறுப்பாளர்களே, தோழர்களே, ஆகஸ்டு முதல் தேதி, ஆர்ப்பாட்டம் அனைத்து மக்களின் ஆதரவையும் ஒருங்கே பெற்றுள்ளது. இதனை எதிர்ப்பார் குறிப்பிடத்தக்க வகையில் எவரும் இலர். 1.8.2013 காலை 11 மணிக்கு எங்கும் நடைபெற வேண்டும். நடக்க அனுமதிக்கப்பட்ட இடங்களில் நடத்திடக் காவல்துறைக்கு இன்றே அனுமதி கேட்டு எழுதிக் கொடுக்க வேண்டும். கழகம் முன்னின்று நடத்தும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பேராதரவு அளிக்க முன் வந்துள்ள தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் ஆதரவு தருவோர்களை முன்னிலை என்றும், தொடக்கவுரை என்றும் குறிப்பிட்டு, துண்டறிக்கைகளை, விளம்பரப் பதாகைகளை, சுவர் எழுத்துகளைத் துவக்கி விட்டீர்களா? தந்தை பெரியார் அறிவித்த மரண சாசனம் போன்ற போராட்டம் தமிழர் சமுதாய இன இழிவை ஒழிக்கும் போராட்டம்! மிகுந்த உணர்வோடு, கொள்கைத் தாகத்தோடு முனைந்து செயல்படுவீர்! அனைத்துக் கழக மாவட்டங்களிலும் இது நடைபெற வேண்டும். கழகத் தோழர்கள் அத்தனைப் பேரும் (விடுபடவே கூடாது) குடும்பம் குடும்பமாகப் பங்கேற்க வேண்டும். ஆதரவுக் கரம் நீட்டும் அன்புத் தோழர்களை பிற அமைப்புகளை அணுகுங்கள் - முக்கியம்! முக்கியம்!! July 21, 2013 at 5:39 AM தமிழ் ஓவியா said... பகுத்தறிவைப் பரப்பிடுவோம் பகுத்தறிவை பக்குவமாய் பரப்பிடுவோம்! பார்முழுக்க பிரச்சாரம் செய்திடுவோம்! மக்களுக்கு, கருத்துக்கள் போய்ச் சேர்ந்திடவே! மனிதநேயத்தை வளர்த்திடுவோம்! வன்முறை இன்றி கருத்துக்களை நன்முறையில் விளக்கிக் கூறிடுவோம்! பெரியாரின் நல்ல பண்புகளை பெரிதும் கடைப்பிடித்தே வாழ்ந்திடுவோம்! பெண்ணடிமை ஒழித்து இவ்வுலகில் தன்மானத்துடன் வாழச் செய்திடுவோம்! நமது வீட்டு குழந்தைகளை நன்றாக பகுத்தறிவுவாதி ஆக்கிடுவோம்! - கவிஞர் கணக்கப்பா July 21, 2013 at 5:42 AM தமிழ் ஓவியா said... என்னடா வெங்கட்ட நாயக்கா! நம் இனம் இந்த உலகில் இருக்கிற வரை இழிவும் நீங்கப் போவது கிடையாது. இந்த இழிவோடு ரோடு வழியாகப் போகிற பில் கலெக்டர் பார்ப்பான் வருவான். என்ன வெங்கட்ட நாயக்கா இன்னக்கி ஒரு பேப்பர் பார்க்கணும்டா சாய்ந்தரம் வாரியா என்று டா போட்டுத்தான் சொல்வான். அதற்கு என் தகப்பனார் எழுந்து நின்று ஆகட்டும் சாமி, அவசியம் வருகிறேன் என்று சொல்வார். இத்தனைக்கும் அவன் சாதாரண பில் கலெக்டர். பார்ப்பான் என்கிற ஒன்றைத் தவிர, மற்றபடி அவன் எதிலும் உயர்ந்தவன் அல்லன். (குடிஅரசு தொகுதி 17 பக்கம் 267) க. பழநிசாமி, தெ. புதுப்பட்டி July 21, 2013 at 5:43 AM தமிழ் ஓவியா said... குப்பை மேடான கடவுள்! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த குளமங்கலத்தில் உள்ள அய்யனார்கோயில் குதிரைச் சிலைக்கு அணிவிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் மாலைகள் புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி அருகில் உள்ள குளமங்கலத்தில் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் என்று ஒரு கோயில் உள்ளது. இக்கோயில் கட்டப் பட்டது கி.பி.1400-வாக்கில் என்று சொல்லப்படுகிறது. மற்றகோயில்களைப் போல்தான் இங்கும் வேலைவெட்டி எதுவும் இல்லாமல் ஒரு குதிரைச்சிலையைக் கட்டி வைத்திருக் கிறார்கள் என்று சொல்லப்பட்டாலும் அதில் இன்னொன்றும் இருக்கிறது. பார்ப்பனக்கோயில்கள் எப்படி இருக்கும் பார்ப்பனச் சாமிகளும் கடவுள் கடவுளச்சிகளின் சிலைகளும் எப்படி எல்லாம் இருக்கும் என்பதை திராவிடர் கழகம் மட்டும் மேடைக்கு மேடை முழங்கி தமிழர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் பார்த்தால் இந்த பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயிலில் கோயி லுக்கோ சாமி சிலைக்கோ முக்கியத்துவம் தராமல் குதிரைச்சிலைக்கு மட்டும் மக்கள் முக்கியத்துவம் தருகிறார்கள். காரணம் என்னவென்றால் இக்குதிரைச்சிலையின் அமைப்பு ஒரு குதிரை வானத்தில் தாவிப் பாய்வது போன்ற ஒரு தோற்றம் அச்சுப் பிசகாமல் நரம்பு புடைத்து துடிக்கும் அத்தனையும் துல்லியமாகத் தெரியும் வகையில் தமிழனின் கலைத் திறமையை உலகுக்குக் காண்பிக்கும் வகையில் இச்சிலை அமைக் கப் பட்டிருக்கிறது. ஆசியாவிலேயே மிகப் பெரிய குதிரைச்சிலை இதுதான் என்று சொல்லப் படுகிறது. அதனால் ஒரு தமிழனின் கலைவண்ணம் உலகுக்குத் தெரிகிறது என்று சொல்லிக் கொள்ளலாம். அது வேறு விஷயம். (ஒரு கோயிலுக்குள் ஒரு பார்ப்பான் புகுந்தால் மற்றவர்களை வெளியேற்றி விடுவான் என்பதற்கு இந்தக்கோயிலும் ஒரு உதாரணம். இக்கோயிலின் பூசகர்கள் என்று சொல்லக்கூடிய படிமாத்தார்கள் பரம்பரை குடியிருப்பே இருந்தும் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளூரில் ஆடுமாடுகள் மேய்த்துக் கொண்டும் விவசாயம் செய்து கொண்டும் சென்னைக்குச் சென்று பிழைப்பு நடத்தியும் வருகிறார்கள். ஆனால் இந்தக் கோயிலுக்குள் அர்ச்சகர் என்று சொல்லிக் கொண்டு உட்புகுந்த பார்ப்பான் சில விதிமுறைகளை வகுத் துக் கொண்டு கோயில் நிலத்திலேயே பலலட்ச மதிப்பில் வீடும் கட்டிக் கொண்டு இப்போதைய நிலைக்கு கோடீசுவரனாகி விட்டான் என்பதை இன்றளவும் இந்தக் கிராம மக்களே உணரவில்லை.) இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் மாசிமகத் திருவிழாவின்போது சுமார் ரூபாய் 20-ஆயிரம் முதல் 50-ஆயிரம்வரை செலவு செய்து காகிதப்பூமாலை கட்டிக் கொண்டு வந்து குதிரைச் சிலைக்கு அணிவித்து வணங்கி மகிழ்வார்கள். இது வேறு எங்கும் நடக்காத ஒரு செயலாகும். நம் தமிழர்கள் எதைத்தான் விட்டு வைத்திருக்கிறார்கள் குதிரைச்சிலையை விட்டு வைப்பதற்கு? இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவுப்படி இப்போது பிளாஸ்டிக் ஒழிப்பில் முனைப்பைக் காட்டி வரும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மனோகரன் இக்கோயில் குதிரைச் சிலைக்கு அணிவிக்கப் பட்டிருக்கும் பிளாஸ்டிக் மாலைகள் மற்றும் ஜிகினா மாலைக்கும் தடாபோட்டு விட்ட தோடு குதிரைச்சிலைக்கு இந்த ஆண்டு பக்தர்களால் அணிவிக்கப்பட்ட சுமார் 1200-மாலைகளையும் அப்புறப் படுத்தி மாவட்ட குப்பைக்கிடங்குக்கு அள்ளி வரச் செய்து உத்தரவு பிறப்பித்து விட்டார். ஒவ்வொரு மாலைக்கும் ஒவ்வொரு லாரி பிடித்து பக்தர்களால் பெரிதும் போற்றப் பட்டுக் கொண்டு வரப்பட்ட மாலைகள் ஒரே லாரியில் மற்ற குப்பைகளோடு குப்பையாக்கப் பட்டு விட்டது. மேலும் கடந்த ஆண்டுகளில் போடப் பட்ட மாலைகள் அருகில் உள்ள வில்லுணி ஆற்றங்கரையில் அப்படியே மட்காமல் கிடப்பதையும் சுட்டிக் காட்டிய மாவட்ட ஆட்சியர் அனைத்தையும் அக்கிராமத்தை விட்டே அகற்றச் சொல்லி விட்டார். மேலும் வரும் ஆண்டுகளில் ஜிகினா மாலையோ, பிளாஸ்டிக் மாலையோ போடக்கூடாது என்றும் சொல்லி விட்டார். அதனால் அய்யனார் கோபித்துக் கொள்ள மாட்டார் என்பதோடு அவருக்கு பேசும் திறனிருந்தால் மட்காத குப் பையைக் கொண்டு வந்து என் தலையில் கொட்டுகிறீர்களே மக்கான மக்களே என்று வேதனைப் பட்டி ருப்பார். அவர்தான் பேசமாட்டாரே! - ம.மு.கண்ணன், புதுக்கோட்டை July 21, 2013 at 5:45 AM தமிழ் ஓவியா said... அர்ச்சகப் பார்ப்பானும் மகனும் உரையாடல் கோவில் அர்ச்சகரான தந்தையிடம் பார்ப்பன சிறுவன் அப்பா நம்மை நாடி வரும் பக்தர்களுக்காக பூஜை செய்து கடவுளிடம் வேண்டிக் கொள்கிறீர்கள். நானும் என் முன்னேற்றம் குறித்து கடவுளிடம் பேச வேண்டும் கடவுள்இருக்கின்றாரா, பேச முடியுமா? அர்ச்சகப் பார்ப்பான் மகனிடம் கவிதை வடிவில் பதில் கூறுகிறார். கவிதை கவலை கொள்ளாதே கவலை கொள்ளாதே நம் முன்னேற்றம் பற்றி கவலை கொள்ளாதே நம் ஆரிய முன்னோர் செய்த சதியால் இம்மக்கள் முட்டாள்களாக உலவுகிறார்கள் சூத்திரன் அறியாமையால் ஆரியன் வீட்டில் அடுப்பெரிகிறது இவர்களின் முட்டாள் தனமே நம் மூலதனம் கடவுள் ஒருவன் இருந்தால் - நாம் களவு செய்யலாகுமா? சாதரண அறிவு கூட இல்லாத சந்தைக் கூட்டமடா? முட்டாள்கள் இருக்கும் வரை முன்னேற்றம் பற்றி கவலை கொள்ளாதே. நோகாமல் நுங்கு திங்கும் வித்தை நாம் காலம் காலமாக கற்ற வித்தை அறியாமை சூத்திரன் உள்ளவரை - அரிசி தானியத்திற்குப் பஞ்சமில்லை ஒரறிவு கூட அற்ற (கடவுளை) கல்லை நட்டு ஆறறிவு கொண்ட மக்களை அல்லாட வைக்கும் ஆற்றலை அல்லவா பெற்றுள்ளோம். முட்டாள்கள் உள்ளவரை முன்னேற்றம் பற்றி கவலை கொள்ளாதே! கடன் வாங்கி காவடி எடுத்து - நம் கண்ணீர் துடைப்பான் பால்குடம் எடுத்து நம் வயிற்றில் பாலும் வார்ப்பான். அவன் சாமி ஆடிக் கொண்டாலும் நம்மைத்தானே ஆடாமல் அல்லல் படாமல் வாழவைக்கும் (சூத்திரதாரிகள்) எங்கு கிடைக்குமடா? இப்படியொரு அடிமைகள் உழைத்து தேய்ந்து உடல் கறுத்து சேர்த்த காசெல்லாம் நம் ஆரியத்தின் சேமிப்புக்குத் தானே இடுகின்றான். பாமரக் கூட்டத்தால் பஞ்சம் நமக்கு இல்லை. காட்டு மிராண்டிகள் உள்ள வரை (கடவுள்) கல்லும் சாம்பலும் ஆரியக் கூட்டத்தை காக்கும் அற்புத தொழில் நுட்பம் கருவிலே கூட களங்கத்தை வைத்தோம் மதிகெட்டு மானமிழந்தாலும் - ஆரியரை மணத்தோடு நயம் பட வைக்கிறான் முன்னேற்றம் பற்றி கவலை கொள்ளாதே! கவலை கொள்ளாதே! தொடாதே தீட்டு என்றாலும் தொடர் காணிக்கை தரும் தொலை நோக்கு மந்தைகள் அல்லவா, மங்கையர் அணிவகுப்பு மல்லிகை மலர்களின் சரம் தொடுப்பு மதிமயங்கும் நறு மணங்கள் மங்கையர் மூச்சின் மோகம் - உனக்கு வயது வந்தால் வாழ்வின் ரகசியம் புரியும் கல்லை காட்டியே கல்லாவை நிரப்பும் சாணக்யம் மந்தைகள் நிறைந்த மன்றத்தில் - ஆரியர்கள் மேதாவியே சூடு சொரணை இல்லையென்றாலும் - நமக்கு சோறிடும் பண்பு மாற மடமைகள் பால் பழம் நெய் பல வகை - பட்சணங்கள் பகலவன் படாத தேகம் - பகட்டு வாழ்க்கை சல்லாபம் உல்லாசம் மலர்மணம் - சுகபோகம் முன்னேற்றம் பற்றி கவலை கொள்ளாதே! கவலை கொள்ளாதே! எல்லாம் இருப்பினும் எதிரிக்கூட்டம் உண்டென்று சொல்வேன் உள்ளத்தில் வைத்துக் கொள் - கொடும் உணர்வுடன் பகைத்துக் கொள் ஈரோட்டுச் சிங்கமொன்று - இடைவிடாது சிந்தித்ததால் விடையின்றி கிடந்தவன் வீறு கொண்டு எழுந்தான் - கிழவரின் பல் முனைத்தாக்குதலால் - ஆரியக் கூட்டம் பரிதவித்து நின்றோம். பூசைகள் யாகங்கள் எத்தனை செய்தாலும் அக்கிழவன் புத்திக்கு பதில் சொல்ல இயலாது அவரது நகல்கள் என்றுமே அசாத்திய சாதனைகளின் பிறப்பிடம். எச்சரிக்கை கொள் இருப்பினும் கவலை கொள்ளாதே! வாழ்வு பற்றி கவலை கொள்ளாதே! - இராமகிருட்டிணன், திருநெல்வேலி July 21, 2013 at 5:46 AM தமிழ் ஓவியா said... எத்தனை முட்டாள்கள்? இந்தக் கூட்டத்தில் உள்ளவர்களில் இன்னமும் எத்தனை முட்டாள்கள் திவசம் செய்கிறீர்கள். உன் அப்பன் செத்தான். நீதானே குழியில் போட்டுப் புதைத்தாய்? தீயிட்டுக் கொளுத்தினாய்? அதன்பின் எதற்காக உன் அப்பனுக்குத் திவசம் கொடுக்கிறாய்? செத்தவன் நரகத்திற்குப் போகிறான். சொர்க்கத்திற்குப் போகிறான் என்கிறபோது மறுபிறப்பு, பிதிர்லோகம் என்பது பித்தலாட்டந்தானே? இதன் மூலம் காசு கொடுப்பவன், நாமாகவும், காசு பெறுபவன் பார்ப்பான் தானே? - தந்தை பெரியார் (பெரியார் களஞ்சியம் தொகுதி 19 300ஆம் பக்கத்தில் இருப்பது) July 21, 2013 at 5:47 AM தமிழ் ஓவியா said... அட, பைத்தியங்களே! உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் பக்தர்கள் பல்லாயிரக்கணக்கில் பரிதாபகரமாகப் பலியானார்கள். அதே நேரத்தில் புனித கோயில் களுக்கு எந்த சேதாரமும் இல்லை என்று ஒரு பிரச்சாரத்தை முடுக்கி விட்டனர். (கடவுளைக் காப்பாற்று கிறார்களாம்) அதே நேரத்தில் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாகத் தகவல்கள் வெளிவர ஆரம்பித்து விட்டன. கேதார் நாத் கோயில் பெரும் சேதத்துக்கு ஆளாகி விட்டதாம். ஆனாலும் கருவறைக்குப் பாதிப்பு இல்லையாம். அப்படியானால் கருவறை மட்டும் தான் கோயிலா? கோயில் என்று இப்பொழுது சொல்கிறார்களே. அதன் வடிவங்கள் _- அவை எல்லாம் வெறும் பில்டப் தானா? July 21, 2013 at 5:48 AM தமிழ் ஓவியா said... தந்தை பெரியார் கணவன் - மனைவி என்பது கிடையாது. ஒருவருக்கொருவர் துணைவர்கள்; கூட்டாளிகள் என்பது தான் உண்மை. - தந்தை பெரியார் July 21, 2013 at 5:48 AM தமிழ் ஓவியா said... சு.சாமியே நில்! சொல்! அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதற்காக நமக்கு சனாதன தர்மம் வர்ணசிரமத்தை அளித்துள்ளது. அது பிறப்பின் அடிப்படையில் இருந்தது இல்லை. சந்திரகுப்த மன்னன் தன் - செயல்களால் க்ஷத்திரியனாகத் திகழ்ந்தான்; பிறப்பினால் அல்ல. பாரத் வர்ஷா (ஆர்யா வர்த்தம்) என்ற, எப்பொழுதும் இருந்திராத, ஒரு தேசத்தை வலுவான தேசத்தை உருவாக்கினான். அன்னியப் படையெடுப் பாளர்கள் நம்மிடையே உள்ள துரோகிகளைக் கொண்டு அதை ஒரு கடுமையான சாதி அமைப்புகளைக் கொண்டதாக மாற்றி விட்டார்கள் (அது மேலை நாட்டினரால் நம்மீது திணிக்கப்பட்டது) அதன் மூலம் இன்று நாம் பார்க்கும் இந்திய சமூகத்தின் சீர்குலைவுகள் ஆரம்பமாகின. இந்தக் கடுமையான நிலையிலிருந்து விடுதலை பெற வீர இந்துவாக ஒன்று படுவோம் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் வருங்காலப் பத்தாண்டுகளில் நாம் அழிந்து போகத் தயாராக இருக்க வேண்டும். நாம் நமது தேசத்தைச் சீர் செய்ய வேண்டுமென்றால், சனாதன வீர இந்துத்துவாதான் எதிரே நிற்கும் ஒரே வழி. இவ்வாறு சு.சாமி திருவாய் மலர்ந்துள்ளார். பிறப்பின் அடிப்படையில் வருணாசிரமம் இல்லை _ - கிடையாது என்று சு.சாமி அறிவு நாணயத்துடன் நம்புவாரேயானால், சங்கர மடத்தில் சங்கராச்சாரியார் வருவது பிறப்பின் அடிப்படையிலா இல்லையா? கோயில் அர்ச்சகர்களாகப் பார்ப்பனர்கள் வருவது பிறப்பின் அடிப்படையிலா இல்லையா? இவற்றை மாற்ற வேண்டும் என்று சு.சாமி அய்யர் சங்கரமடத்தின் முன் மறியல் நடத்துவாரா? கற்பகாம்பாள் கோயில் முன் கண்டனக் கூட்டம் நடத்துவாரா? சு.சாமி பூணூல் போட்டு இருப்பது பிறப்பின் அடிப்படையிலா? - குணத்தின் அடிப்படையிலா? நாணயமாகப் பதில் சொல்லட்டும் பார்க்கலாம்! July 21, 2013 at 5:53 AM தமிழ் ஓவியா said... நன்றி மணக்கும் கடிதமும், நன்கொடையும் ஈரோடு-18-07-2013 வியாழன் அன்று பிரபல எலும்பு முறிவு மருத்துவர் டாக்டர் பி.டி.சக்திவேல்-மகப்பேறு மருத்துவர் சவுந்திரம் சக்திவேல் இணையரின் மகன் பிரதீப்குமார் அவர்களுக்கு இந்த ஆண்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிக்க இடம் கிடைத்துள்ளது. சமஸ்கிருதம் படித்தால்தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலையை மாற்றி ஒடுக்கப்பட்ட ,பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வாய்ப்புக் கதவைநீதிக்கட்சி ஆட்சி மருத்துவப் படிப்பிற்குத் திறந்தது. அதற்கும் தந்தைபெரியார் தான் காரணம்,அதனைத் தொடர்ந்து இட ஒதுக்கீட்டிற்காக போராடி, இட ஒதுக்கீடு பெற்றுத்தந்ததும் தந்தைபெரியார்தான் இன்றுவரை தந்தைபெரியாரின் இயக்கமான திராவிடர்கழகம் சமூக நீதிக்காக பல்வேறு களங்களைக்கண்டு மாபெரும் வெற்றிகளைத் தமிழ் சமுதாய ஒடுக்கப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பெற்றுத்தந்துள்ளது.குறிப்பாக தமிழர்தலைவர் ஆசிரியர் அவர்களின் பணி அளப்பரியது.தந்தை பெரியார், விடுதலை, ஆசிரியர் கி.வீரமணி இவர்களது உழைப்பால் இடஒதுக்கீடு (கல்வி,வேலை வாய்ப்பு) தமிழ்நாட்டிலும்,மண்டல்கமிசன் மூலம் இந்தியாவெங்கும் சிறப்பான முறையில் நடைமுறைக்கு வந்துள்ளது. இட ஒதுக்கீட்டு முறையில்தான் நானும்,எனது இணையர் சவுந்திரம் அவர்களும் மருத்துவர்களாக படித்து பயன்பெற்றோம்,அதனால் நாங்களும் இச்சமூகத்திற்கு பயன்படுகிறோம். அந்த வகையில் எங்களது மகன் பிரதீப்குமாருக்கு கோவை அரசு மருத்துவக்கல்லூரி யில் 2013-இந்த ஆண்டு இடஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.எனவே வாழையடி வாழையாக தமிழ் சமூகம் உயர்வதற்கு உழைத்துவரும் விடுதலை" வளர்ச்சிக்கு நன்றியுடன் ரூபாய் 10000/.(பத்தாயிரம்) வங்கிவரையோலையாக வழங்கி மகிழ்கிறோம். நன்றி. நன்றியுடன் மருத்துவர் பி.டி.சக்திவேல் எம்.பி.பி.எஸ். எம்.எஸ்.ஆர்த்தோ, ஈரோடு. சக்தி நர்சிங்ஹோம், எலும்பு முறிவு மருத்துவமனை, பைபாஸ் சாலை, கொல்லம்பாளையம், ஈரோடு-638002. 18-07-2013 அன்றுமாலை 6 மணியளவில் மருத்துவர் பி.டி.சக்திவேல் அவர்கள் வங்கிவரையோலையை மண்டல தி.க.செயலாளர் ஈரோடுசண்முகம் அவர்களிடம் ஒப்படைத்தார் உடன் மாநகர தலைவர் கு.சிற்றரசு, மாவட்ட சு.ம.திருமண அமைப்பாளர் ப.சத்தியமூர்த்தி,மாநகர இளைஞரணித் தலைவர் ஜெபராசுசெல்லத்துரை. July 21, 2013 at 5:55 AM தமிழ் ஓவியா said... காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கலாமா? இம்மாதம் 16ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற டெசோ கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களில் இரண்டாவது தீர்மானம் - இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதாகும். 54 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டது இந்தக் காமன் வெல்த்தாகும். சுழற்சி முறையில் இந்தக் காமன்வெல்த் மாநாடு ஒவ்வொரு நாட்டிலும் நடைபெறுகிறது. இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்று குரல் உலக நாடுகளில் ஓங்கி ஒலிப்பதற்கு என்ன காரணம் என்பது சிந்திக்கப்பட வேண்டாமா? காரணம் - அங்கே மிகப் பெரிய இனப்படு கொலை நடந்திருக்கிறது. இனப்படுகொலை செய்ததோடு மட்டுமல்லாமல், அவ்வாறு செய்தி ருப்பதை இன்றுவரை நியாயப்படுத்திக் கொண்டும் இருக்கிறது. குறிப்பாக இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று அழுத்தம் கொடுப்பதற்கு அதிகமான காரணங்களும், நியாயங்களும் இருக்கின்றன. 1983 ஆகஸ்டு 16ஆம் தேதியன்று இந்திய நாடாளுமன்றத்திலேயே அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் இலங்கையில் நடப்பது இனப் படுகொலையே என்பதைத் தெரிவித்திருக்கிறார் என்பதை இந்திய அரசு அறியும் பட்சத்தில் அது எப்படி இனப்படுகொலைக்குக் காரணமாகவிருந்த அதிபரின் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்? கலந்து கொள்ளவும் முடியும்? இந்த அடிப்படையான கேள்விக்கு இந்தியா பதில் சொல்லக் கடமைப்படவில்லையா? வெளிநாட்டில் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருந்த பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் ஒரு பேட்டியில் இலங்கையில் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அங்கு தமிழர்களில் மிதவாதிகள்கூட தீவிரவாதிகளாகும் விபரீதம் ஏற்படும் என்று கூறியுள்ளாரே! (23.9.1984) இந்திரா காந்தி அவர்களைத் தலைவராகவும், கட்சியின் வழிகாட்டியாகவும் கருதக் கூடிய இன்றைய மத்திய அரசு, அவரின் குரலை - குரலில் அடங்கியுள்ள நியாயத்தை ஆழமாகப் புரிந்து கொண்டு நேர்மையாக நடந்து கொள்ள வேண்டாமா? இனப்படுகொலை நடைபெறும் எந்த நாட்டிலும் மனிதாபிமானம் உள்ள எந்த நாடும் தலையிடுவதற்கு உரிமை உண்டு என்று (ழுநநேஎய ஊடிஎநவேடி - 1948) அய்.நா.வின் சட்ட விதி கூறியிருக்கிறதே. இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்க விதிமுறைகளும், நியாயங்களும் ஏராளமான அளவில் குவிந்து கிடக்க, இந்தியா வேறு மாதிரி நடந்து கொள்வது உலக நாடுகள் மத்தியிலும், குறிப்பாக மனித உரிமை விரும்பிகள் மத்தியிலும் அவப் பெயரைத் தேடிக் கொள்வதாகும். இது 120 கோடி இந்திய மக்களுக்கு ஏற்படும் தலைக்குனிவும் ஆகும். 16ஆம் தேதி டெசோ கூட்டத்தில் பல முக்கிய மான தகவல்கள் எடுத்துக்காட்டவும் பட்டுள்ளன. கனடா நாடு இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிப்பதாக கூறியுள்ளது. பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் குறிப்பாக காமன்வெல்த் மனித உரிமை அமைப்பு, ஆஸ்திரேலியாவின் மனித உரிமைச் சட்ட மய்யம் முதலியவை இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளனவே! காமன்வெல்த் நாடுகளின் தலைமை நீதிபதிகள் 27 பேர் ஒருமனதாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளனரே! டெசோ கூட்ட தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலும், கருத்தும் மிக மிக முக்கியமானவை. இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடை பெறுவது உறுதியாகி விட்ட நிலையில், காமன் வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெற்றால், அதன் காரணமாகவே அடுத்த இரண்டாண்டு களுக்கு காமன்வெல்த் மாநாட்டின் அவைத் தலைவராக ராஜபக்சே இருப்பாரென்றும், அதனால் 54 நாடு களைக் கொண்ட அமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ள ஒருவரை நீதி விசாரணைக்கு உட்படுத்துவது இக்கட்டாக ஆகிவிடக் கூடுமென்றும், வலிமையான கருத் துகள் முன் வைக்கப்படுவதால், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா நட்பு நாடு என்று கூறிக் கொண்டு அதிலே கலந்து கொள் ளுமேயானால் அங்கே நடைபெற்ற இனப்படு கொலைகளை இந்தியா ஏற்றுக் கொள்வது போலாகி விடும் என்று டெசோ கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் வரிகள் மிக மிக முக்கியமானவை அல்லவா! இந்தியா காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப் பதன் மூலம் ஈழப் பிரச்சினையில் இதுவரை சம்பாதித்து வைத்துள்ள அவப் பெயரை - பழியைப் பெரும் அளவில் துடைத்துக் கொள்ள நல்லதோர் வாய்ப்பாக அமையுமே! இந்தியா சிந்திக்குமாக! July 21, 2013 at 5:57 AM தமிழ் ஓவியா said... பாடுபடுவான் இந்த நாட்டில் மனிதன் மற்றொரு மனிதனால் எவ்வளவு இழிவாகக் கருதப்படுகிறான் என்பதை ஒரு மனிதன் உணருவானானால், அவனுக்குக் கடுகளவு சுயமரியாதையாவது இருக்குமானால், அவன் மனித இழிவைப் போக்கத்தான் முதலில் பாடுபடுவான். (குடிஅரசு, 3.5.1936) July 21, 2013 at 5:57 AM தமிழ் ஓவியா said... குடிஅரசு வாசகர்களுக்கு ஓர் உண்மையான முன்னறிவிப்பு அன்புள்ள வாசகர்களே! இதுசமயம் நமது குடி அரசு வாரா வாரம் 4000 பிரதிகள் வரை போய்க் கொண்டிருந்தாலும், சட்டசபைத் தேர்தல் தீர்ந்த அடுத்த வாரம் முதல் கொண்டே சுமார் 1000 அல்லது 1500 பிரதிகள் திடீரென்று குறைந்து சுமார் 2500 பிரதிகள் போலத் தான் போக நேரிடும். ஏனெனில், சட்டசபைத் தேர்தலின் பொருட்டு நமது பார்ப்பனர் செய்துவரும் பொய்ப் பிரசாரத்தை வெளிப்படுத்த வேண்டி `குடிஅரசுக்கு முன்பணமாக சந்தா வந்தாலும் வராவிட்டாலும் இதுவரை அனுப்பிக் கொண்டே வந்தோம். இதனால் பெருத்த நஷ்டமும் நேரிட்டிருக்குமென்று சொல்லத் தேவையில்லை. ஆதலால் சில பாக்கிதாரருக்கு மாத்திரம் வி.பி.பி மூலம் அனுப்பி பார்க்கவிருக்கிறோம். தேர்தல் முடிந்தவுடன் வி.பி.பி. திருப்பியவர்களுக்கும் சந்தா பாக்கிதாரர்களுக்கும், முன்பணமனுப்பாதவர் களுக்கும் பத்திரிகைகள் அனுப்பப்படமாட்டா. நிற்க, தேர்தல் முடிந்த பின்னர் நமது `குடிஅரசு அரசி யலையே முக்கியமாய்க் கருதாமல் மக்களின் சுயமரியாதையைக் கெடுக்கும் பார்ப்பனியத்திற்கு ஆதாரமான வேதம், சாஸ்திரம், மிருதி, இதிகாசம், புராணம் என்று சொல்லப்பட்ட ஆரிய சம்பந்தமான நூல்களிலும், செயல்களிலுமுள்ள தந்திரங்களையும், புரட்டுகளையும், பட்சபாதகங்களையும், வஞ்சனைகளையும் தெள்ளத்தெளிய விளக்குவதோடு அந்நூல்களிலுள்ள விஷயங்களை நமது பார்ப்பனர்கள் தங்கள் சுயநலத்திற்காக எப்படி மறைத்தும், திருத்தியும், தப்பு வியாக்யானப் படுத்திக் கூறியும், நம்மை ஏமாற்றி வருகிறார்கள் என்பதையும் முறையே வெளியிடுதலையே பிரதானமாய்க் கருதி தக்க ஏற்பாடுகள் செய்துள் ளோம். ஆதலால் சந்தா பாக்கியுள்ளவர்கள் சந்தாத் தொகையை அனுப்பியும் மற்றவர்கள் புது சந்தாதாரர்களாக சேர்ந்தும் `குடிஅரசை ஆதரித்து அடுத்த மாத ஆரம்பத்திலிருந்தே வாசித்து வர வேண்டுமென நாம் மனப்பூர்வ விநயமாய்க் கேட்டுக் கொள்ளுகிறோம். - குடிஅரசு - ஆசிரியர் அறிவிப்பு, 17.10.1926 July 21, 2013 at 6:02 AM தமிழ் ஓவியா said... தமிழ் நாட்டிலிருந்து `மற்றொரு இந்தியத் தலைவர் பண்டித மோதிலால் நேரு அவர்கள் தனக்கு அசவுகரியம் ஏற்படும் போதெல்லாம் நம் தமிழ் நாட்டுப் பார்ப்பனர்களில் ஒருவரைத் தான் பதில் (ஆக்டிங்) தலைவராய் நியமிப்பது வழக்கம். அதுபோலவே சென்ற வாரமும் தனக்கு லாகூரில் இருக்க சவுகரியமில் லாததால் ஸ்ரீமான் எஸ். சத்திய மூர்த்தி சாஸ்திரிகளை வந்து தனது தானத்தை ஒப்புக்கொள்ள அழைத்து இருக்கிறார். முதல் தடவை ஸ்ரீமான் சீனிவாசய்யங்காருக்கு அழைப்பு வந்தது. மறுதடவை ஸ்ரீமான் எ. ரெங்கசாமி அய்யங்காருக்கு அழைப்பு வந்தது. மூன்றாம் தடவை ஸ்ரீமான் எஸ். சத்தியமூர்த்தி சாஸ்திரிகளுக்கு அழைப்பு வந்திருக்கிறது. இனி நான்காந்தடவை கும்பகோணம் சக்கரவர்த்தி அய்யங்காருக்கு அழைப்பு வருமென்று எண்ணுகிறோம். இந்தியாவின் பாக்கியமே பாக்கியம். அதிலும் தமிழ்நாட்டின் பாக்கியமே பாக்கியம். - குடிஅரசு - செய்திக்குறிப்பு, 10.10.1926 July 21, 2013 at 6:02 AM தமிழ் ஓவியா said... செந்தமிழ்ச் செல்வி (மாத வெளியீடு) நாகரிகத்தில் சிறந்து விளங்கும் நாடுகளில் பத்திரிகைகள் தலைசிறந்து நிற்கும். மேனாடுகளை நோக்க நமது நாட்டில் பத்திரிகைகளின் தொகையும் செல்வாக்கும் குறைவுதான். பல அறிஞர்களின் உள்ளக் கருத்துக்களை ஒருங்கு திரட்டி உணர்த்தலால் மக்கள் அறிவைப் பண்படுத்துதலில் பத்திரிகைகள் வல்லன. நமது நாட்டில் தினசரி, வாரப் பத்திரிகைகள் அரசியல் கிளர்ச்சியில் பாய்ந்து செல்லும் வேகத்தில் சமூக சீர்திருத்த விஷயத்தில் அசிரத்தை காட்ட வேண்டிய நிலையில் இருக்கின்றன. கல்வி, சமயம், தத்துவம், சமத்துவ உணர்ச்சி ஆகிய விஷயங்களில் எல்லோருக்கும் பயன்படத்தக்க ஒரு திறமான திருத்தம் ஏற்பட்டால்தான் நமது சமூகத்தை பிணித் திருக்கும் குருட்டு நம்பிக்கைகள் ஒழியும். இத்துறையில் வேலை செய்யவல்லன மாத வெளியீடு களே யாகும். ஏனெனில் அறிஞர்கள் சாவதானமாக ஆராய்ந்து கண்ட முடிவுகளே அவற்றில் வெளிவர இயலும். தமிழ்நாட்டில் அத்தகைய திங்கள் வெளியீடுகளிற் சிறந்தது நமது செந்தமிழ் செல்வி எனத் துணிந்து கூறலாம். இதில் பெரும்பாலும் ஆங்கிலத்திலும் தமிழிலும் வல்லவர்களான பேரறிஞர்களின் ஆராய்ச்சி உரைகளே வெளிவருகின்றன. பார்ப்பனியத்தின் மாயப்புரட்டுகள் வெளியாக்கப்படுகின்றன. தமிழர் நாகரிகம் தெள்ளத்தெளிய விளக்கப்படுகிறது. பண்டைய இலக்கிய இலக்கண ஆராய்ச்சிகளும் புதிய மேனாட்டுச் சாஸ்திர முறைகளும் ஆராய்ச்சி வல்லு நரால் பொருத்தமாய் எழுதப்படுகின்றன. மதுரைத் தமிழ்ச் சங்கத்தினின்றும் மாதம்தோறும் வெளியாகும் செந்தமிழ் வெளியீடு பார்ப்பன கோஷ்டி கையிலகப்பட்டுப் பார்ப்பனமயமாகிக் கொண்டிருக்கிறது. அதைத் தோற்றுவித்த ஸ்ரீமான் பாண்டித்துரைத் தேவரவர்களின் உத்தேசம் அடியோடு புறக்கணிக்கப் படுகிறது. பார்ப்பனரல்லாதார் பொருள் ஏராளமாயிருந் தும் சேதுபதி மகாராஜா தலைவராயிருந்தும் தமிழ்ச் சங்கத்தையும் அதைச் சார்ந்த கலாசாலையையும் `செந்தமிழ் மாத சஞ்சிகையையும் பார்ப்பனராதிக்கத்தில் ஒப்படைத்திருப்பது பரிதபிக்கத்தக்கது. இக்குறை களைக் கண்டே பல தமிழபிமானிகள் தென் இந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் என்னும் பெயரால் மற்றொரு உண்மை தமிழ்க் கழகம் கண்டனர். மதுரை தமிழ்ச் சங்கத்தைப் போல் தென் இந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகத்துக்கு புதுக்கோட்டை மகாராஜா, ராமநாதபுரம் மகாராஜா, ஏனைய ஜமீன்தார்கள், நாட்டுக் கோட்டை, நகரத்தார், பிரபுக்கள் முதலியோருடைய நன்கொடைகளும் ஆதரவும் இல்லையாயினும் அது தோன்றிய குறுகிய காலத்துள் நாவலர் பதிப்பு, சங்கப் பதிப்பு ஆகியவைகளையும் தோற்கடிக்கத்தக்க நிலைமையில் பல பழைய புதிய நூல்களை அது வெளியேற்றியிருக்கிறது. ஒரு சிறு பிழையுங்காண முடியாது. பெரும்பாலும் புத்தக கட்டடங்களும் நவீன முறையில் கண்கவர் வனப்பின வாயிருக்கும். நாம் தலைப்பிற் குறித்த `செந்தமிழ்ச் செல்வியும் இக்கழகத்தினின்றும் வெளிவருவதுதான். உயர்திரு வாளர்கள் கா. சுப்பிரமணியப் பிள்ளையவர்கள், எம்.ஏ., எம்.எல்., பா.வே. மாணிக்க நாயக்கர் போன்ற இரு மொழிப் புலவர்களின் பேராதரவு பெற்ற நமது, `செந்தமிழ்ச் செல்வியின் மாட்சியை விளக்கவும் வேண்டுமோ? தமிழ் மக்களின் முன்னேற்றங் கருதி உழைக்கும் சென்னை பச்சையப்பன் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் மணி, திருநாவுக்கரசு முதலியாரவர்களே நமது செல்வியின் ஆசிரியராவார்கள். வடமொழிக் கலப்பில்லாத `தனிச் செந்தமிழ் நடை படிக்கப் படிக்க இனிக்கும். ஒவ்வொரு தமிழ் மகனும் தமிழ் மகளும் அன்புடன் வரவேற்று ஆதரிப்பாராக. வருட சந்தா உள்நாடு ரூ.3-0-0 வெளிநாடு ரூ.3-8-0 கிடைக்குமிடம் திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் (லிமிடெட்), 306 லிங்கி செட்டி தெரு, சென்னை. - குடிஅரசு - நூல்மதிப்புரை - 10.10.1926 July 21, 2013 at 6:03 AM தமிழ் ஓவியா said... உங்களுக்குத் தெரியுமா? 1921 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் - இரண்டு பார்ப்பனர்கல் விவசாய வேலை செய்தார்கள் என்பதற்காக, அவர்கள் ஜாதி நீக்கம் செய்யப்பட்டார்கள் என்பதும், இதற்கு சங்கராச்சாரியும் உடந்தை எனபதும் உங்களுக்குத் தெரியுமா? July 21, 2013 at 7:42 AM தமிழ் ஓவியா said... தற்கொலை விலைமதிப்பற்ற மனித உயிரைத் தற்கொலை செய்து போக்கிக் கொண்டோர் எண்ணிக்கையில் 2012ஆம் ஆண்டில் (19,927) தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தேசிய அளவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குடும்பப் பிரச்சினை, நோய், காதல் பிரச்சினை, வருமானமின்மை, வரதட்சணைக் கொடுமை போன்ற பல்வேறு பிரச்சினைகள் காரணமாக மனிதர்கள் தற்கொலை முடிவுக்கு வருகின்றனர். இதில் இரண்டாம் இடத்தில் (16,112) மகாராஷ்டிராவும், மூன்றாம் இடத்தில் மேற்கு வங்கமும் (14,957) உள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை உடல்நலக் குறைவால் 3,663 பேர்களும் குடும்பப் பிரச்சினையால் 4,842 பேர்களும் தற்கொலை செய்துள்ளனர். உடல்நலக் குறைவு அடிப்படையில் தேசிய அளவில் மூன்றாம் இடத்தையும் குடும்பப் பிரச்சினை அடிப்படையில் இரண்டாம் இடத்தையும் தமிழகம் பெற்றுள்ளது. 19 வயதிலிருந்து 29 வயதுக்குட்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டதில் மணிப்பூர் (46,635) முதலிடத்தில் இருக்கிறது. 15லிருந்து 29 வயதுக்கு உட்பட்டவர்களில் 43.8 சதவிகிதம் குடும்பப் பெண்களும் 78.8 சதவிகிதம் மாணவர்களும், 30லிருந்து 44 வயதுவரை உள்ளவர்களில் 36.7 சதவிகிதம் விவசாயிகளும் 35.2 சதவிகிதம் வேலைவாய்ப்பற்றவர்களும் தற்கொலை செய்துள்ளனர். திருமணமானவர்களே அதிக அளவில் தற்கொலை செய்துள்ளனர் என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிவித்துள்ளது. July 21, 2013 at 7:51 AM தமிழ் ஓவியா said... முருகன் ஆலயத்தில் பெரியார் 1942-ஆம் ஆண்டு டி.கே.சி.யிடம் செயலராகப் பணிபுரிந்த எஸ்.வேங்கட சுப்பிரமணியம் (எஸ்.வி.எஸ்.) குற்றாலத்தில் டி.கே.சி.யின் இல்லத்தில் தங்கி இருந்தார். ஒருநாள் நண்பகலில் பெரியார் ராமசாமி மாட்டு வண்டியில் டி.கே.சி.யின் இல்லத்தைக் கடந்து சென்றதை எஸ்.வி.எஸ். கண்ணுற்றார். இதனை டி.கே.சி.யிடம் தெரிவித்தார். உடனே டி.கே.சி. எஸ்.வி.எஸ்ஸிடம் பெரியார் எவ்விடத்தில் தங்குகிறார் என்பதனை அறிந்து வருமாறு பணித்தார். எஸ்.வி.எஸ். அதனை ஏற்று அருகில் உள்ள பங்களாவில் பெரியார் தங்கியிருக்கிற செய்தியினை டி.கே.சி.யிடம் தெரிவித்தார். மீண்டும் டி.கே.சி. எஸ்.வி.எஸ்ஸை நோக்கி, பெரியாரிடம் சென்று மதிய உணவு உண்டுவிட்டாரா? இல்லையெனில் தமது இல்லத்தில் இருந்து அனுப்பி வைக்கலாமா? என்பதை அறிந்துவருமாறு கூறினார். பெரியார் கடந்து சென்றதை ஏன்தான் டி.கே.சி.யிடம் சொன்னோமோ என்று எஸ்.வி.எஸ். தமக்குள்ளேயே முணு முணுத்தார். பெரியார் பிராமண குலத்துக்குப் பரமவைரி; காங்கிரஸ் கொள்கைகளை அறவே பிடிக்காதவர். கம்ப ராமாயணத்தையே தீயிட்டுக் கொளுத்தியவர். இச்செயல்களால் அவருக்குப் பெரியாரைச் சிறிதும் பிடிக்காது. தமக்குப் பிடிக்காத கொள்கைகளைக் கொண்ட பெரியார் மீது கம்ப ராமாயணத்தை உயிர் மூச்சாகக் கொண்ட டி.கே.சி. எல்லையற்ற பாசத்தைக் கொட்டுகிறாரே! நல் உபசரிப்பையும் நல்குகிறாரே என நினைத்துப் பெரிதும் வேதனையுற்றார். இதனைக் குறிப்பால் உணர்ந்த டி.கே.சி. பெரியாரின் கொள்கைகளைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. அவர் ஒரு லட்சியவாதி. சீர்திருத்தச் செம்மல். தள்ளாத வயதிலும் நாடெங்கிலும் அயராது தம் கொள்கைகளைப் பரப்பி வருகிறார். இத்தகு பெரியாரை நாம் உபசரிப்பதில் என்ன தவறு? என்று கூறி உணவு வழங்க ஏற்பாடு செய்தார். வேறு வழியின்றி வேண்டா வெறுப்புடன் எஸ்.வி.எஸ். பெரியாரிடம் சென்று டி.கே.சி. கூறிய விபரத்தைச் சொன்னார். பெரியாரும் மதியம் வீட்டிலிருந்து உணவு அனுப்புங்கள் என்றார். அதற்கிணங்க டி.கே.சி. வீட்டிலிருந்து அறுசுவை உணவு பெரியாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பசியுடன் இருந்த பெரியாரும் உணவைச் சுவைத்து உண்டு மகிழ்ந்தார். அதே ஆண்டு மற்றொரு சமயம் பெரியார் ராமசாமி குற்றாலத்தின்கண் அமைந்த டி.கே.சி.யின் இல்லத்திற்கு வருகை தந்தார். டி.கே.சி. தமது மணிவிழாவினைக் கொண்டாட அவ்வமயம் திருவிலஞ்சிக் குமரன் கோவிலுக்குச் சென்றுள்ளதை அறிந்தார். உடனே தமது வண்டியை நேராகத் திருவிலஞ்சிக் குமரன் கோவிலுக்கு ஓட்டிச் செல்லுமாறு பணித்தார். உடன் இருந்த பெரியாரின் நாத்திகத் தொண்டர்கள் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாயினர். அவர்கள் பெரும் எதிர்ப்புத் தெரிவித்தும்கூட பெரியார் அதனைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை. நேராகத் திருவிலஞ்சிக் குமரன் ஆலயத்திற்குள்ளேயே சென்றார். பெரியார் பெரிய நாத்திகவாதி. கடவுள் நம்பிக்கை அறவே இல்லாதவர். இருப்பினும் டி.கே.சி. மீது கொண்ட அளப்பரிய அன்பினாலும், மட்டற்ற மதிப்பினாலும் ஆலயத்திற்குள்ளேயே சென்று அவரைக் கட்டித் தழுவி வாழ்த்துக் கூறி அக மகிழ்ந்தார். உடனிருந்த நாத்திகத் தொண்டர்கள் பெரியாரிடம் தணிந்த குரலில், அய்யா, தாங்கள் முருகன் ஆலயத்திற்குள் பிரவேசிக்கலாமா? என வினவினர். உடனே பெரியாரும், அறுபதாம் கல்யாணம் முருகனுக்கு இல்லையப்பா! நம்ம முதலியார்வாளுக்குத்தானே! அதுல நான் கலந்துக்கறதல என்னப்பா தவறு? என மறுத்துரைத்தார். பின்பு பெரியார் டி.கே.சி.யோடும், நண்பர் களோடும் பந்தியில் அமர்ந்து சித்திரான்னங்களை விரும்பி ருசித்து உண்டுவிட்டுப் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். பெரியார் தெய்வ மறுப்புக் கொள்கை உடையவராயினும், டி.கே.சி.யின் நட்புக்கு அதிக மதிப்புக் கொடுத்தார் என்பதை உணர்ந்து, உடன்வந்தோர் அனைவரும் ஆறுதல் அடைந்தனர். July 21, 2013 at 7:54 AM தமிழ் ஓவியா said... யாகம் நடத்துவது அறநிலையத்துறையின் வேலையா? இந்த ஆண்டு, சரியான மழை _- காலத்தே பெய்யும் பருவ மழை போதிய அளவு இல்லை என்பதால் வறட்சி நிலவுகிறது. வடமாநிலங்களில் அபரிமிதமான மழை, வெள்ளக்காடு _- பல்லாயிரம் பேர்களைப் பலி கொள்ளும் அளவுக்கு அங்கே! இந்நிலையில், மழையை வரவழைக்க இந்து அறநிலையத் துறை தன்கீழ் உள்ள கோவில்களில் யாகம் நடத்தியும், வருண ஜெபம் நடத்தியும் சில கோவில் குளங்களில் (அங்கேயே பல குளங்கள் _- தீர்த்தங்களில் தண்ணீரே இல்லை) முழங்கால் அளவு, அரை நிர்வாணக் கோலத்துடன் திடசரீரம் உள்ள பார்ப்பனர்கள் தங்கள் ஜாதிச் சின்னமான பூணூலைக் காட்டிக் கொண்டு, சமஸ்கிருத மொழியில் வேத மந்திரங்களைக் கூவிக் கொண்டு, யாகம் என்ற பெயரில் புது வருவாய்க்கு வழிதேடும் வழியை வகுத்துக் கொடுத்திருக்கிறது! இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் மழை வேண்டி யாகம் என்றால், உலகத்தின் பகுத்தறிவுள்ள மக்கள் கை கொட்டிச் சிரிக்க மாட்டார்களா? இந்த மூடநம்பிக்கைகளை _- பக்தி வேஷம் போட்டு பரதக் கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் பார்ப்பனர்களுக்கு தொழில் வளம் ஏற்படுத்த தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை துணை போவது மிக மிகக் கண்டனத்திற்குரியதாகும்! இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மதச் சார்பின்மை (Secular) கொள்கைக்கும் 51A(h) பிரிவில் உள்ள அடிப்படைக் கடமைகளைப் பரப்புதல் என்ற தலைப்பில், ஒவ்வொரு குடிமகனும் அறிவியல் மனப்பான்மையை (Scientific Temper) கேள்வி கேட்கும் அறிவை மனித நேயத்தை, சீர்திருத்தத்தைப் பரப்புவது அடிப்படைக் கடமை என்று இருக்கும்போது,அதைச் செய்யத் தவறுவதைவிட பெருங் குற்றமும் உண்டோ? அரசுத் துறையே அறிவியல் மனப்போக்குக்கும், சீர்திருத்தத்திற்கும் முரணாக இப்படி மழை வேண்டி யாகம் செய்ய அதன் நிதியைச் செலவிட்டு, மூடநம்பிக்கையைப் பரப்பும் மோசமான எதிர்மறைச் செயலில் ஈடுபடலாமா? இதைவிட (அரசியல்) சட்ட விரோத நடவடிக்கை வேறு என்ன? மழை வேண்டி _ -பருவக் காற்று துவங்கும் காலத்தில் மிகச் சாமர்த்தியமாக யாகம் நடத்துவது வருண ஜெபம் நடத்துவது, என்பது யாரை ஏமாற்ற? சில கேள்விகளை அத்தகைய பெரும் உலக மகா யாக அறிவாளிகளுக்கு நாம் வைக்கிறோம். 1. மழை எப்படி வருகிறது என்பது 4,5ஆவது வகுப்பு மாணவனுக்கு வகுப்பில் விஞ்ஞானம் சொல்லிக் கொடுத்துவிட்டு, இப்படி யாகம் செய்தால் அது இரட்டை வேடம் _- மோசடி அல்லவா? 2. யாகம் நடத்தும் எவராவது கையில் குடையோடு சென்றுள்ளார்களா? உத்தரவாதம் தருவார்களா? 3. மழை வேண்டி வருண ஜெபம், யாகம், பூஜை புனஸ்காரம், முழங்கால் தண்ணீரில் நின்று சமஸ்கிருத வேத மந்திரங்கள், அல்லது அமிர்தவர்ஷணி ராகம் பாடுவதாலோ! ஆனந்த பைரவி வாசிப்பதாலோ மழை வரும் என்றால், கச்சேரி மூலமே மழைப் பிரச்சினையைத் தீர்த்து விடலாமே! _- எதற்காக உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டும் காவிரி நீருக்காக? உத்தரகாண்ட், இமாச்சல பிரதேச மாநிலங்கள் நிவாரண உதவிகளைத் தடுக்கும் வகையில் மீண்டும் மிரட்டும் மழையைத் தடுக்க எந்த யாகம்? எந்த பூஜை? எந்த ஜெபம்? _- சொல்லட்டுமே பார்க்கலாம்! அறியாமையைவிட மிகப் பெரிய நோய் மனித குலத்திற்கு வேறு இல்லை என்றார் அமெரிக்க நாட்டுப் பகுத்தறிவாளர் ராபர்ட் ஜி. இங்கர்சால்! இந்த அறியாமையைத் தமிழக அரசே ஊக்குவிக்கலாமா? பரப்பலாமா? அதுவும் அண்ணா பெயரில் உள்ள அரசு? இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்தை நீதிக்கட்சி ஆட்சிதான் 1924 வாக்கில் உருவாக்கியது. அதன் விவாதங்கள் சட்ட-மன்றத்தின் நூலகத்தில் உள்ளதை இந்து அறநிலையத் துறை அதிகாரிகளும், அமைச்சரும், முதல் அமைச்சரும் படிக்க வேண்டும். கணக்குத் தணிக்கை (Audit) தான் அதன் பிரதான நோக்கமே தவிர, பக்தி பரப்பும் இலாகாவாக இந்து அறநிலையத் துறை செயல்படுவது அச்சட்ட விரோதமே! சாயமடிப்பதோ, கும்பாபிஷேகம் செய்வதோ, தேர் இழுப்பதோ இத்துறை அதிகாரிகளின் வேலை அல்ல! இப்போது மதச் சார்பின்மையைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு, பல மாவட்டங்களில் ஆட்சியாளர்களும், (Collector), மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர்களும் (போலீஸ் எஸ்.பி.க்களும்) தேருக்கு வடம் பிடிப்பது, கும்பாபிஷேகத்தில் பக்தி வேஷம் போட்டுக் காட்டிக் கொள்ளுவது, என்பது பகிரங்கமான சட்ட விரோதச் செயல்! இது உடனடியாக நிறுத்தப்படாவிட்டால் அறப் போர்கள் ஒருமுனையிலும், பொது நல வழக்கு மறுமுனையிலும், பிரச்சாரங்கள் மூன்றாவது முனையிலும் நடத்தப்படும் என்பதை அறிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம். கி.வீரமணி, ஆசிரியர் July 21, 2013 at 7:57 AM தமிழ் ஓவியா said... நாம் இன்னும் சூத்திரர்களா? அமெரிக்காவிலிருந்து ஒரு குரல்! அனைவரும் அர்ச்சகர் போராட்டம் மிகவும் முக்கியம் வாய்ந்தது ! இதில் அனைவரையும் பங்கேற்க வைக்க வேண்டும். தந்தை பெரியார் அவர்கள் ஆழமாகச் சிந்தித்துச் செயல்படுத்துபவர். தமிழனின் சூத்திரப் பட்டத்தை அடியோடு ஒழிக்கும் செயல் இந்தப் போராட்டம். அனைவரும் சமம் என்று பேசித் திரிந்தால் போதாது. பேசுவோர் அனைவரையும் பங்கேற்க செய்ய வேண்டும். கிராமத்துக் குழந்தைகள் முதல் கல்லூரிப் பேராசிரியர்கள் ,மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியியல் மற்றும் பல்துறை வல்லுநர்களைப் பங்கேற்கச் செய்ய வே ண்டும். அனைவரும் மானமுள்ள மனிதர்களாக வாழ வேண்டுமா அல்லது சூத்திரர்களாக வாழ வேண்டுமா? இது கடவுள் எதிர்ப்புப் போராட்டமல்ல. இந்தப் போராட்டம் பக்தியை எதிர்த்தல்ல. புத்திக்கானப் போராட்டம். நீ எவ்வளவு பெரிய மனிதனாகப், படித்துப் பட்டம் பெற்ற அறிஞனாக இருந்தாலும், கோவில் கட்ட வாரி வழங்கியிருந் தாலும் உன்னைச் சார்ந்தோர் அர்ச்சகர் ஆக முடியுமா? உலகில் இந்தக் கொடுமை வேறு எங்காவது உண்டா? தென் அமெரிக்காவிலே பிறந்தவர் உலக கத்தோலிக்கர்களின் போப்பாண்டவர். தஞ்சையிலே பிறந்த தமிழன்! தஞ்சைக் கோவிலில் சூத்திரன். மதுரையிலே பல்லாயிரம் ஆண்டுகளாக உள்ள தமிழன் மதுரையிலேயே சூத்திரன்! பொங்க வேண்டாமா உள்ளம்? யார் செய்த வேலை என்பதைவிட இப்பொழுது நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதுதான் மிகவும் முக்கியம். இதில் பங்கேற்காதவர்கள் தங்களைச் சூத்திரன் என்று ஒப்புக்கொள்கின்றார்களா ?. அனைவரும் தயவு செய்து சிந்தியுங்கள். உங்கள் குழந்தைகளைச் சூத்திரனாக இருக்கச் சொல்லலாமா?அதற்காகத்தான் இந்தப் போராட்டம். ஆயிரமாண்டு அசிங்கத்தை இன்று களை வோம். நாம் கட்டிய கோவில்களில் நாம்தான் உரிமையுடையவர்கள். இது திராவிடர் கழகப் போராட்டம் என்றிருக்கலாமா? அனைத்துத் தமிழர்களின் போராட்டம். தமிழன், தமிழ் என்று பேசிப் பயனில்லை. மான முள்ள தமிழனாக வாழவேண்டுமென்கிற போராட்டம். நீங்கள் மானமுள்ள தமிழன் என்பதைப் பறைசாற்றும் போராட்டம். அனைவரும் சமம் என்று அகிலமே பாடும்; பொது அடிமைப் புத்தியை அகற்றிடும் போராட் டம். அடிமைத்தளை உடையட்டும் . அனைவரும் அர்ச்சகராக அரசு செயல்படட்டும்! வாழ்க பெரியார் ! - சோம.இளங்கோவன், சிகாகோ July 22, 2013 at 6:18 AM தமிழ் ஓவியா said... சாமி கும்பிட கட்டணமா? இந்து அமைப்புகள் போர்க்கொடி! சென்னை, ஜூலை 21- கோவில்களில், தரிசன கட்டணம் வசூலிப்ப தற்கு எதிராக, தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட் டம் நடத்த, பல்வேறு இந்து இயக்கங்கள் முடிவு செய்துள்ளன. அதற்கான முதற்கட்ட போராட்டம், இன்று (21ஆம் தேதி) துவங்குகிறது. தமிழகத்தில், இந்து சமய அறநிலையத் துறை யின் கட்டுப்பாட்டில், 39 ஆயிரம் கோவில்கள் உள் ளன. இக்கோவில்கள், மாத வருவாயின் அடிப் படையில் பிரிக்கப்பட்டு, நிர்வகிக்கப்படுகின்றன. இக்கோவில்களில், பண் டிகை, சிறப்பு நாட்களில், கட்டண அடிப்படை யில், தரிசனத்துக்கான வரிசை பிரிக்கப்படு கிறது. 1,000 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை கட் டணம் நிர்ணயிக்கப் படுகிறது. இக்கட்டணத்துக்கு, பக்தர்களிடையே பலத்த எதிர்ப்பு வந்த போதும், அறநிலையத் துறை தரிசன கட்டண முறையை, தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்நிலையில், கடந்த சில ஆண்டு களாக, பல்வேறு இந்து இயக்கங்கள், இதற்கு எதிராக போராடி வரு கின்றன. அதன் ஒரு பகுதியாக, கையெழுத்து இயக்கம் நடந்து வரு கிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும், இன்று போராட்டம் நடத்த, இந்து முன்னணி உள்ளிட்ட, பல்வேறு இந்து இயக்கங்கள் போராட்டம் நடத்து கின்றன. இதுகுறித்து, இந்து இயக்கங்களின் நிர்வாகி கள் கூறியதாவது: இறை வனுக்கு முன், அனை வரும் சமம். இறைவனை தரிசிக்க கட்டணம் நிர்ணயித்தால், காசு உள்ளவனுக்கு மட்டுமே, கடவுளின் தரிசனம் என்ற நிலை வந்துவிடும். இது, இந்து மதத்தின் அடிப்படை தத்து வத்தையே தகர்த்து விடும். இதனால், மேலும் ஏற்றத் தாழ்வுகள் உரு வாகும். தமிழகத்தில், "டாஸ்மாக்' நிறுவனத் துக்கு பின், அதிக அளவி லான வருமானம், கோவில்களில் இருந்தே வருகிறது என்று கூறி யுள்ளனர். பக்தி ஒரு பிசினஸ் என்று ஏற்கெனவே சங்க ராச்சாரியார் கிருபானந் தவாரியார் போன்றவர் களே சொல்லி விட்டார்கள். ஆங்கிலப் புத்தாண் டுக்கே இரவு நேரத்தில் கூட கோயில்களைத் திறந்து வைத்துக் கட்டா யம் வசூலிக்கிறார்கள். திருப்பதி போன்ற கோயில்களில் அதிக கட் டணம் செலுத்த செலுத்த வெகு வெகு சீக்கிரத்தில் தரிசனம் கிடைக்க ஏற் பாடு செய்யப்பட்டுள் ளது. காசேதான் கடவு ளப்பா என்பது இது தானோ! July 22, 2013 at 6:19 AM தமிழ் ஓவியா said... இதோ, பாரம்பரிய அர்ச்சகரின் வன்முறை பக்திப் பரவசம்! - ஊசி மிளகாய் தகுதி, திறமை பேசும் பார்ப்பனர்களுக்கு, ஏனோ அர்ச்சகரைத் தகுதி, திறமைக்கு உரியவர்களாக்கி, முறைப்படி, ஆகமங்கள் அதுவும்கூட சிவன் கோயிலுக்கு சிவாகமம், வைஷ்ணவ கோயிலுக்கு வைகனாச ஆகமங்கள் மற்றும் பஞ்சாராத்திரம் போன்றவைகளையும், (சம்பிரதாய நடைமுறை களையும்) அர்ச்சனை பற்றிய முழுக் கல்வியைக் கற்றுத் தேர்வு செய்தவர்களையும் ஏன் இன்னும் கோயில் கருவறைக்குள் விடு வதைத் தடுக்க வேண்டும்? பார்ப்பன அர்ச்சகர்களின் பரம்பரைக் கொள்ளை, சுவாகா சுய தொழில் தடையின்றி நடைபெற வேண்டும் என்ற பேராசைதானே ஒரே காரணம்? உச்சநீதிமன்றத்தின் இரண்டு முக்கிய தீர்ப்புகள் (பல நீதிபதிகள் அமர்வுகள் அதில் உண்டு) - அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆவது அரசியல் சட்ட விரோதமல்ல; மத விஷயங்களில் குறுக்கீடு ஆகாது; அரசியல் சட்ட விதிகள் 25, 26ஆவது பிரிவுக்குட்பட்ட சட்ட பூர்வ நடவடிக்கைகளே என்று தெளிவான தீர்ப்புகள் 1971-லும் 2002லும் வந்து விட்டன! இரண்டு ஆட்சிகளில் (எம்.ஜி.ஆர். கலைஞர் ஆட்சிகளில் - அதிமுக, திமுக ஆட்சிகளில்) இரண்டு உயர்நீதிமன்ற நீதியரசர்களின் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அவர்கள் பரிந்துரையும் இதை ஏற்றுக் கொண்டு விட்டது! அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் முறையான பாட திட்டத்தின்கீழ், 69 சதவிகித தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு சட்டப் படியே பயிற்சி பெற்று 206 பேர்கள் உள்ளனரே! பிறகு ஏன் இன்னமும் இந்த முட்டுக்கட்டை முயற்சிகள்? பாரம்பரிய அர்ச்சகர், பார்ப்பனர்களின் ஒழுக்கம் என்பது எப்படிப்பட்டது? ஆச்சாரம் போச்சு, அனுஷ்டானம் போச்சு என்று ஒப்பாரி வைக்கும் துக்ளக் துருவாச முனிவர்களின் துருப்பிடித்த சாபம் எல்லாம் பொருள் உள்ளதா? இந்த அர்ச்சகர்கள் எப்படிப்பட்டவர்கள்? இந்திய அரசு டாக்டர் சர். சி.பி. இராமசாமி அய்யர் தலைமையில் அமைத்த இந்து அறநிலைய ஆய்வுக் கமிட்டி அறிக்கை முதல் துவங்கி, ஜஸ்டிஸ் மகராஜன் தலைமையில் (எம்.ஜி.ஆர். அரசு) போட்ட கமிஷன் அறிக்கையும் சரி, நடைமுறையில் காஞ்சிபுரம் கோயில் கருவறையை விபச்சார கேந்திரமாகப் பயன்படுத்தி, பல குடும்பப் பெண்களை எல்லாம் செல்போன் அருளால் படம் எடுத்து பயமுறுத்தி தொடர் கற்பழிப்புத் திருப்பணி செய்த அர்ச்சகர் தேவநாதன் வரை ஏராளம் சொல்ல முடியும் சம்பவங்கள் வரை எத்தனைத் திருப்பணிகள்! சி.பி. ராமசாமி அய்யர் கமிஷன் அறிக்கைகள் அரைபாட்டில் சாராயத்திற்கு சாமி சிலையை விற்ற அர்ச்சகர்கள் கதையெல்லாம் கூறப்பட்டுள்ளதே! நேற்று சுடச்சுட - ஒரு சம்பவம் பூரி ஜெகன்நாதர் தேரோட்டம் நடை பெறுகிறது ஒடிசாவில். அங்கு சென்ற இத்தாலிய நாட்டு நாட்டிய மாதுவின் தோளை தொட்டுப் பார்த்துள்ளனர். டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏடு விரிவான செய்தியாக இன்று முதல் பக்கத்தில் வெளியிட் டுள்ளது! அந்த அம்மையாரிடம் 1000 ரூபாய் தட்சணை கேட்டுள்ளார் அந்த அர்ச்சகர்; இவர் மிக அதிகம் என்று கூறி மறுத்துள்ளார்! அதற்காக அவரை ஓங்கிக் கன்னத்தில் அறைந் துள்ளார் அந்தப் பார்ப்பன அர்ச்சகர்! அந்த அம்மையாரின் கையைப் பிடித்து முறுக்கி, தோள் பட்டையை அழுத்தி ஆபாச வார்த்தைகளில் அந்த அம்மையாரை அர்ச்சனை செய்துள்ளார் அந்தப் பார்ப்பனர். ஆத்திரம் பொங்க, காவல்துறை அதிகாரி களிடம் ஆங்கிலத்தில் புகார் கொடுத்துள்ள அந்த அம்மையார் இத்தாலிய நாட்டுக்காரர்; பெரிய பிரபல நாட்டியப் பயிற்சியாளரும்கூட! எப்படிப் போகிறது பார்த்தீர்களா? அர்ச்சகர் பக்தி, ஒழுக்கம் எல்லாம்! பக்திப் பரசவம் இதுதானோ? பேராசைக் காரனடா பார்ப்பான் - நம்மைப் பிச்சுப் பணங்கொடெனத் தின்பான் என்ற (பார்ப்பன) பாரதியின் கவிதைக்கு ஒடிசாவும் எடுத்துக்காட்டு போலும்! July 23, 2013 at 5:58 AM தமிழ் ஓவியா said... சிங்களமயமாக்கல்! ஜூலை 16ஆம் தேதி டெசோ கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் 4ஆவது தீர்மானம் தமிழர் பகுதிகளில் சிங்களவர் களுக்கு உருவாக்கப்பட்டுள்ள புது மாவட்டம் பற்றியதாகும். வடக்கு மாகாணத்தில் உள்ள வவுனியா மாவட்டத்திற்கும், கிழக்கு மாகாணத்தில் உள்ள திரிகோணமலை மாவட்டத்திற்கும் இடையே வரலாற்று ரீதியாக இருந்த இணைப்பைத் துண்டிக்கும் வகையிலும், சிங்களப் பகுதியான அனுராதபுரம் மாவட்டத்தோடு இணைந் திருக்கும் வகையிலும் வெளி ஓயா என்ற சிங்களப் பெயரிலேயே ஒரு புதிய மாவட்டத்தை சிங்கள அரசு உருவாக்கி, அங்கே சிங்கள வர்களை மட்டுமே குடியேற்றி வருகின்ற நிகழ்வுகளும் தற்போது நடைபெற்று வருவதை டெசோ இயக்கம் சுட்டிக்காட்டி அய்.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் நிறைவேற்றப் பட்டுள்ள தீர்மானத்தின்படி பொதுத் தேர் தல்கள் நடைபெறும் காலத்தில் இது போன்ற மாவட்டங்களை உருவாக்குவதோ, எல்லை களை மாற்றுவதோ, புதிய குடியேற்றத்தை ஊக்குவிப்பதோ கூடாது என்று திட்டவட்டமாக கூறப்பட்ட போதிலும்; அதை மீறுகின்ற வகையில் சிங்கள அரசு ஈடுபடுவதையும் இந்திய அரசு கவனத்தில் கொண்டு, இதனை உலக நாடுகள் மற்றும் அய்.நா. மனித உரிமைகள் ஆணையம் ஆகியவற்றின் கவனத் திற்கு எடுத்துச் சென்று, உடனடியாகத் தடுத்து நிறுத்திட ஆவன செய்ய வேண்டுமென்று இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள் கிறது என்ற டெசோவின் 4ஆம் தீர்மானம், இலங்கையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் தமிழினத்தின் அடையாளத்தையே முற்றிலுமாக அழிக்கும் பேராபத்தைச் சுட்டிக் காட்டியுள்ளது. தொடர்ந்து 1948ஆம் ஆண்டு முதலே கிழக்கு மாகாணத்தில் மிகப் பெரிய அளவில் தமிழ் ஈழத்தில் 9 ஆயிரம் சதுர மைல்களில் 2000 சதுர மைல்களை ஆக்கிரமித்துள்ளது. தமிழர்கள் வீடுகளிலேயேகூட சிங்கள வர்கள் குடியேறிய கொடுமையை இலங்கையில் அப்பொழுது இருந்த இந்திய அமைதிப் படை (ஐ.ஞ.மு.கு.) நிருவாகிகளிடம் புகார் செய்யப்பட்டது. ஆனாலும் எந்தப் பரிகாரமும் கிட்டவில்லை. இப்பொழுது 89 தமிழ் ஊர்களின் பெயர்கள் சிங்கள மயமாக்கப்பட்டுள்ளன. (தமிழ்நாட்டில் தமிழ் ஊர்கள் சமஸ்கிருத மயம் ஆக்கப் பட்டதையும் நினைவில் கொண்டால் சிங்கள வர்கள் ஆரியர்களே என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும்போது அவர்களின் அணுகுமுறைகள் ஒன்றாகவே இருப்பதைப் புரிந்து கொள்ளலாம்) இலங்கையில் தமிழர் பகுதிகள் ஆக்கிர மிக்கப்படுவதை எதிர்த்தும், சர்வதேச அளவில் இந்தப் பிரச்சினையைக் கொண்டு சேர்க்கவும் தமிழக மக்கள் பேரவைத் தலைவர் திருச்சேத்தி தலைமையில் பிரான்சு நாட்டு தமிழீழ மக்கள் பேரவை சார்பில் பாரீசில் அந்நாட்டின் நாடாளுமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டதும் உண்டு (ஜூன் - 2012) வாரா வாரம் பல வாரங்கள் அப்படி நடத்தினர். நியாயமான இந்த அறவழிப் போராட்டங் களையெல்லாம் இலங்கைப் பாசிச அரசு கிஞ்சிற்றும் பொருட்படுத்தவில்லை. தான் நினைத்த - விரும்பிய தமிழீழ அழிப்பை மூர்க்கத் தனமாகவே செய்து கொண்டு இருக்கிறது. அதனைத் தடுத்து நிறுத்தும் கடமை இந்திய அரசுக்கு இல்லையா? அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக இப்படிப் பச்சையாக இலங்கை அரசு நடந்து கொண்டுள்ளதே - இதன்மீது நடவடிக்கை என்ன? டெசோ இதனைத்தான் சுட்டிக் காட்டு கிறது; உலக நாடுகள் மத்தியில் இவற்றைக் கொண்டு செல்ல வரும் ஆகஸ்டு 8ஆம் தேதி தமிழ்நாடு தழுவிய அளவில் டெசோ நடத்த இருக்கும் அறவழி ஆர்ப்பாட்டம் நல்ல அளவுக் குத் திருப்பத்தைத் தரும் என்று எதிர் பார்ப்போம்! July 23, 2013 at 6:01 AM தமிழ் ஓவியா said... முன்னாள் அமைச்சர் வி.வி. சாமிநாதன் எழுதுகிறார் தந்தை பெரியாரின் பிரதிநிதி தி.க. தலைவர் கி.வீரமணி ஆகஸ்ட் முதல் நாள் அனைத்து சாதியினரும் அர்ச்சக ராகலாம் என்று தமிழ்நாட்டில் அரசு அமல்படுத்த அறிவித்த போராட்டம் ஆகஸ்ட் சுதந்திர போராட்டத்திற்கு ஒப்பானது. உண்மையில் சாதி பேதம் உயர்வு தாழ்வு கூடாது என்பதை உளமார நம்பினால் தி.மு.க. ஆதரவு தந்தது போல் காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க., இடதுசாரி கம்யூனிஸ்ட்டுகளும் திரு. கி.வீரமணி அவர்களின் ஆகஸ்ட் போராட்டத்தை ஆதரிக்க முன் வர வேண்டும். மாநில மனித உரிமை பாதுகாப்பு அமைப்பு தமிழ் எழுத்தாளர் முற்போக்கு சங்கம் போன்ற அமைப் புகளும், திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரிஅனந்தன், சேகர் முதலியவர்கள் கை கோக்க வேண்டும். மண் விடுதலையடைந்தால் போதாது. மூடப் பழக்க வழக்கங்களிலிருந்து மனம் விடுதலையடைய வேண்டும். வைக்கம் போராட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து சென்ற தந்தை பெரியார் போராட் டத்தை தொடர்ந்து தீண்டாமை ஒழிய சிறை சென்று வெற்றி பெற்று வைக்கம் வீரர் என்ற பட்டத்துடன் தமிழகம் திரும்பினார். ஆனால், அதே மலை யாள நாட்டில் எர்ணாகுளம் மாவட்டம் ஆரங்காடு என்ற கிராமத்தில் 1993இல் ஒரு சிவன் கோயில் கருவறைக்குள் திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியம் நடத்தும் பயிற்சிப் பள்ளியில் மந்திரம் கற்றுத் தேர்ந்த திறமையான ஆனால் பார்ப்பனரல்லாத ஈழ வகுப்பு அர்ச் சகரை கருவறைக்குள் நுழைய நம் பூதிரி பார்ப்பனர்கள் மறுத்து விட்டனர். கேரள நாட்டு அரசும், அறநிலையத் துறையும், பொது மக்களும், தாழ்ந்த குலமானாலும் தகுதியுடைய அர்ச்சகர் ஆதித்தியன் நியமனத்தை ஆதரித் தன. இருந்தாலும் வேந்தனும், வேதி யர்களுக்கு துரும்பு என்று உயர்சாதி வெறி பிடித்த நம்பூதிரி பிராமணர்கள் கேரள உயர்நீதிமன்ற புல்பெஞ்ச் சட்டப்படி செல்லும் என்று சொல்லியும் அரசை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு போன வழக்கு வரலாற்று சிறப்பு மிக்க வழக்கு; ஆதித்தியன் கே. திருவிதாங்கூர் சமஸ்தானம் என்ற வழக்கில் 3.10.2002இல் இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் அது சட்டப்படி செல்லும் நியாயமானதே என தீர்ப்பளித்தது. தமிழர்களுக்கு முன்பே அதிகம் படித்த அய்யர், அய்யங்கார், அர்ச்சகர்களுக்கு இது தெரியாது என்று சொல்ல முடியாது. தந்தை பெரியார் உயிருடன் இருக்கும் போதே கோயில் நுழைவுப் போராட்டம் அரசியல் சாசன சட்டம் போன்றவை களால் அரசு கோயில்களில் உள்ள கருவறைகளுக்குள் ஒளிந்து கொண்டு இருக்கும் தீண்டாமையை ஒழிக்க ஆன்மீகவாதிகளோ ஆ.ஞ., ஆ.டு.ஹ., ஆக போட்டியிடும் அரசியல் கட்சிகளோ வாய் திறக்கவே இல்லை. எனவே பெரியார் 26.1.1970 ராஜமன்னார்குடி ராஜகோபால சாமி பெருமாள் கோயில் கர்ப்பக்கிரக நுழைவு போராட்டத்தை துவக்கப் போவ தாக அறிவித்து விட்டார்கள். அன்று தி.மு.க.வின் முதல் முதலமைச்சராக இருந்த அறிஞர் அண்ணா இறந்து கலைஞர் முதலமைச்சராக இருந்த காலம் அண்ணாவால் நியமிக்கப்பட்ட அற நிலையத்துறை அமைச்சர் கே.வி. சுப்பைய்யா மூலம் அனைத்து சாதி யினரும் அர்ச்சகராகலாம் என சட்ட சபையில் ஒருமனதாக தீர்மானம் நிறை வேற்றியதால் பெரியார் 26.1.1970இல் அறப் போராட்டத்தை ஓத்தி வைத்தார்கள். ஆனால் அரசியலில் ஏற்பட்ட சுனாமி யால் சட்டம் ஏட்டுச் சுரைக்காயாகவே இருந்ததால் 5ஆவது தடவை முதலமைச் சரானவுடன் கலைஞர் 2006இல் பெரியாரின் கொள்கையை அமல்படுத்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராக லாம் என சட்டத்தை மீண்டும் நிறைவேற்றினார். கேரள நாட்டில் 2002இல் நம் பூதிரி பிராமணர்கள் கொட்டம் அடங்கியும் 2006இல் கூட தமிழ்நாட்டில் உள்ள ஸ்மார்த்த பிராமண அய்யர் மற்றும் அய்யங்கார் அர்ச்சகர்கள் உயர் ஜாதி வெறி தலைதூக்கி ஆடியது. மரபு, பழைய பழக்க வழக்கங்கள் என கூறி 2006இல் நேரிடையாகவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து சமூக நீதி சட்டம் அமல் செய்ய முடியாமல் இடைக்கால தடை வாங்கி இன்று வரை ஏழு ஆண்டு களாக பார்ப்பனரல்லாத எல்லா தகுதி களும் உடைய வகுப்பினர்கள் தமிழ் நாட்டில் அரசு ஆலயங்களில் கருவறை கதவுகளைத் தட்டினாலும் திறக்காமல் பார்ப்பன அர்ச்சகர்கள் தடுத்துக் கொண்டு வருகிறார்கள். தமிழ் மடாதி பதிகளுக்கு வெட்கமில்லை தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கு போட்டியிடு வதில் அரசியல் கட்சிகள் மும்முரமாக இருக்கிறார்கள். July 23, 2013 at 6:03 AM தமிழ் ஓவியா said... தமிழ் பல்கலைக் கழகங்கள் தோன்றி அதை அலங்கரிக்கும் முன்னாள் இந்நாள் துணைவேந்தர்கள் கவலையில்லாமல் இருக்கிறார்கள். ஆன்மீகத்திற்கு அவ மானம் மனித உரிமைகள் மதிக்கப்பட வில்லை. இந்திய அரசியல் சாசன அடிப் படை உரிமை ஷரத்துக்கள் 13,14,15,16 மற்றும் 17 மீறப்படுகின்றன. தீண்டாமைத் தடுப்பு தண்டனை தரும் சட்டம் செத்த பாம்பாகி விட்டது. விவேகானந்தர் தினம் கொண்டாடும்போது கோயிலில் கருவ றைக்குள் கடைப்பிடிக்கும் தீண் டாமையை ஏன் பேச விவேகிகள் மறுக்கிறார்கள்? ஆலயங்களில் இலவச அன்னதான திட்டம் கோயில்களுக்கு கொடிக் கம்பங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தி கோயிலுக்குள் கடவுள்கள் வாழும் கருவறைக்குள் பொது புனித மண் வழிபாட்டு இடத்தில் சாதி வேற்றுமை தாண்டவமாடுவதை மறைக்கப் பார்ப்பது மன்னிக்க முடியாத குற்றம் மக்களை ஏமாற்ற முடியாது யாரும். மாது தீட்டானால் கங்கையில் குளிக் கலாம் கங்கைக்கே தீட்டாகியிருக்கிறதே 3.10.2002-ஆம் தேதியன்று உச்சநீதி மன்றம் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் கடைப்பிடிக்கப்படும் பழக்க வழக்கமா னாலும், மரபு ஆனாலும், அரசு உத்தரவே ஆனாலும் அது கோயிலானாலும் சரி அவை மக்கள் சமத்துவம் சகோதரத் துவம், நாகரிகம், முன்னேற்றம் முதலிய கொள்கைகளுக்கு முரணாக இருந்தால் அவை சட்டப்படி செல்லாது என உச்சநீதிமன்றமே 3.10.2002ஆம் தேதி கொடுத்த தீர்ப்பை அவமதிப்பது போல் இருக்கும்போது 2006இல் இடைக்காலத் தடை பார்ப்பன அர்ச்சகர்களுக்கு கொடுத்தது அதிசயம்! அதைவிட அதி சயம் 7 ஆண்டுகள் ஆகியும் தடையை நீக்கி இறுதித் தீர்ப்பு வழங்காமல் இருப் பதுதான். நீதி வழங்க தாமதமானால் நீதி வழங்க மறுப்பதற்கு சமமென்ற பழமொழி தெரியாதா? எனவே 1.8.2013ஆம் தேதியன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகராக லாம் என்ற பெரியார் கொள்கையை தமிழ்நாடு அரசு பெரியார் பிறந்த தினத்திற்குள் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி தி.க. தலைவர் கி.வீரமணி நடத்தும் போராட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும். பெரியார், தீண்டாமையை பூரணமாக ஒழிக்க ஏற்றிய தீபத்தை அணையாமல் ஏந்தும் கி.வீரமணி வாழ்க! July 23, 2013 at 6:03 AM தமிழ் ஓவியா said... தகுதியானதா தகுதித் தேர்வு? ஆசிரியர் பணிக்கு உரியவர்களைத் தேர்ந்தெடுக்க நடத்தப்படும் தகுதித் தேர்வு குறித்து பல்வேறு கருத்துகள் கூறப்பட்டும் கல்வித் துறை அசைந்து கொடுப்பதாக இல்லை. எனினும் மீண்டும் ஒரு முறை பரிசீலித்தால் நல்லது. ஆசிரியர் பணிக்கு வருகிறவர் பாட அறிவைவிட கற்பித்தலில் சிறந்து விளங்க வேண்டும். அதாவது தனது பாட அறிவை, சரியான முறையில் கற்பித்தால்தான் மாணவர்களின் புரிந்து கொள்ளும் ஆற்றலை வளர்க்க முடியும். மாணவர்களுக்குப் பாடங்களைச் சரியாகப் புரிய வைப்பதில்தான் ஆசிரியரின் வெற்றியே இருக்கிறது. அவ்வாறெனில் தகுதித் தேர்வு, போதனை முறைக் குத்தான் முக்கியத்துவம் தரவேண்டும். அதைவிடுத்து மீண்டும் மீண்டும் பாட அறிவையே சோதிப்பதால் எப்படி தகுதியான ஆசிரியர் கிடைத்துவிடுவார்? உதாரணமாக ஆங்கில மொழிப் பாடத்தில் மொத்த முள்ள 30 வினாக்களில் 29 வினாக்கள் இலக்கண அறிவைச் சோதிப்பதாகவே உள்ளன. கற்பித்தல் முறையைச் சோதிக்கும் கேள்வி ஒன்றே ஒன்று தான். கற்பித்தல் முறைகளான புரிந்துகொள்ளும் திறன், எழுத்தாற்றல், வாக்கியங்களை அமைக்கும் திறன், பேச்சுத் திறன், பல்வேறு கற்பித்தல் முறைகளில் திறன், உச்சரிக்கும் திறன் ஆகியவற்றைச் சோதிக்கும் கேள்வி கள் அந்தத் தாள்களில் இல்லையே? ஆசிரியர்களின் கற்பித்தல் ஆற்றலையும், மாணவர்களின் கற்கும் ஆற்றலையும் எவ்வாறு கணக்கிடுவது? இடைநிலை ஆசிரியர்களுக்கு முதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரையுள்ள பாடத் திட்டத்திலி ருந்தும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 6 முதல் 10ஆம் வகுப்பு வரையிலுள்ள பாடத்திட்டத்திலிருந்தும்தானே கேள்விகள் இடம் பெற வேண்டும்? இதைக் கவனத்தில் கொள்ளாமல் பாடத்திட்டத்தில் இல்லாத கேள்வி களைக் கேட்டால் என்னாவது? இப்படிக் கேட்பது ஆசிரியர்களின் தரத்தைச் சோதிப்பதைவிட வேலைவாய்ப்பில் வடிகட்ட மட்டுமே உதவும். சிறந்த முறையில் ஆசிரியப் பயிற்சி பெற்றவர்களுக்கு மீண்டும் தகுதித் தேர்வு தேவையில்லை. வேலை வாய்ப்பை மனதில் கொண்டு தேர்வு வைப்பதானால் சிறந்த கற்பித்தல் திறன்பெற்ற ஆசிரிய வல்லுநர்களைக் கொண்டு வினாத்தாள் தயாரிக்கட்டும். அதுவும் அந்தந்த நிலை பாடத்திட்டத்திலிருந்து கற்பித்தல் முறை குறித்து அதிக வினாக்கள் இருக்க வேண்டும். இத்தகைய தேர்வு முறையே ஆசிரியர் தகுதித் தேர்வின் தீர்வாக இருக்க முடியும் - கலைப்பித்தன், கடலூர் நன்றி: தினமணி, 22.7.2013 July 23, 2013 at 6:06 AM Post a Comment Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) பதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா பதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-20 இல் பதிமூன்றாம் ஆண்டுகள் முடித்து பதிநான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ பதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா பதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2019 இல் பனிரெண்டாம் ஆண்டுகள் முடித்து பதிமூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ பனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ பனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2018 இல் பதினொன்றாம் ஆண்டுகள் முடித்து பனிரெண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 389 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 121024 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி பதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ 19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. பத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா 19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா 19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி எட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா 19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி Blog Archive ► 2021 (14) ► May (10) ► March (1) ► February (1) ► January (2) ► 2020 (1) ► March (1) ► 2019 (1) ► January (1) ► 2018 (29) ► December (4) ► September (5) ► July (1) ► May (1) ► April (1) ► March (3) ► February (3) ► January (11) ► 2017 (4) ► December (1) ► August (2) ► January (1) ► 2016 (27) ► December (1) ► November (2) ► September (2) ► August (3) ► July (4) ► June (4) ► May (1) ► April (2) ► March (1) ► February (4) ► January (3) ► 2015 (298) ► November (3) ► October (14) ► September (28) ► August (16) ► July (32) ► June (37) ► May (25) ► April (35) ► March (37) ► February (29) ► January (42) ► 2014 (564) ► December (45) ► November (42) ► October (58) ► September (47) ► August (42) ► July (48) ► June (53) ► May (46) ► April (55) ► March (41) ► February (45) ► January (42) ▼ 2013 (466) ► December (39) ► November (47) ► October (50) ► September (38) ► August (39) ▼ July (35) 69 சதவீத இடஒதுக்கீடில் குளறுபடி நடந்தால் நாடு அமைத... சோ ராமசாமிக்கு சர்.சி.பி. ராமசாமி அய்யர் பதிலடி! கடவுளும் மதமும் - தந்தை பெரியார் இந்துத்துவா - நேற்று - இன்று - நாளை - ஹிந்துராஷ்டி... சங்கராச்சாரியாரா அரசியல்வாதியா? ஜெயேந்திரர் ஆர்.எஸ... மன்னிப்புக் கேட்கவேண்டும் பா.ஜ.க.! - கி.வீரமணி பூரி ஜெகந்நாதர் கோவில் அர்ச்சகப் பார்ப்பனர்களின் ய... காசேதான் கடவுளப்பா என்ற பழமொழி சும்மாவா வந்தது? நமது கடவுளும் மதமும் -- பெரியார் பழனி முருகன் கோயில் பார்ப்பனர் கைக்கு மாறியது எப்ப... ஆரியர்களே கொக்கரியுங்கள்! கொக்கரியுங்கள்! பழனி முருகன் கோயில் பார்ப்பனர் கைக்கு மாறியது எப்படி? இலங்கையிடம் இன்னும் இந்தியா எவ்வளவு அவமானங்களைத் ... அர்ச்சகர்களா - அசல் தற்குறிகளா? கடவுளைக் காப்பாற்றிட மனிதர்கள் செய்யும் தந்திரங்கள் கிறித்துவத்தில் இப்படி ஒரு கொடுமையா? அர்ச்சகர்களின் யோக்கியதை இதுதான்! அர்ச்சனை செய்ய தகுதிகள் - காமவெறி, குடிவெறி குத்தா... ஓம் என்றால் என்ன பொருள் என்று தெரியுமா? சீதை எத்தகையவள்? இலங்கையில் சீதைக்குக் கோயிலாம்! அர்ச்சகர் பிரச்சினை: தாத்தாச்சாரியார் என்ன கூறுகிற... திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறை... பயிர்ப்பு என்றால் என்ன பொருள்? கீதையையும், கிருஷ்ணனையும் செருப்பால் அடிக்காவிட்டா... முதல் அமைச்சர் அவர்களின் கவனத்துக்கு ஒரு திறந்த மட... நீதிமன்றங்கள் தந்தை பெரியாருக்குச் சூட்டும் வெற்றி... உ.வே.சாமிநாதய்யர் தமிழ்த்தாத்தாவா? பார்ப்பன தாத்தாவா? அய்யர் என்பது பார்ப்பனர்களைக் குறிக்காதா? திருமணம்... பார்ப்பனர்கள் பற்றி பார்ப்பனர் இது தானா தேசியம்? -பெரியார் கழிவிரக்கமற்றவர்கள் பார்ப்பனர்கள்! மழையை வரவழைக்க யாகமா? நிறுத்தாவிட்டால் பிரச்சாரம்,... மருத்துவர் பற்றாக் குறையும் தந்தை பெரியார் கூறும் ... உலக மருத்துவர் நாளில் உரத்த சிந்தனை தேவை! சாஸ்திரங்கள் நம்மைத் திட்டுகிற அளவு நாம் மதத்தை - ... ► June (36) ► May (35) ► April (44) ► March (32) ► February (32) ► January (39) ► 2012 (506) ► December (34) ► November (40) ► October (43) ► September (42) ► August (42) ► July (43) ► June (38) ► May (48) ► April (44) ► March (48) ► February (38) ► January (46) ► 2011 (622) ► December (40) ► November (41) ► October (48) ► September (68) ► August (59) ► July (59) ► June (54) ► May (56) ► April (41) ► March (52) ► February (57) ► January (47) ► 2010 (827) ► December (42) ► November (55) ► October (52) ► September (73) ► August (66) ► July (85) ► June (79) ► May (56) ► April (63) ► March (79) ► February (75) ► January (102) ► 2009 (1381) ► December (84) ► November (102) ► October (76) ► September (111) ► August (147) ► July (145) ► June (143) ► May (90) ► April (135) ► March (112) ► February (117) ► January (119) ► 2008 (1129) ► December (118) ► November (144) ► October (135) ► September (88) ► August (130) ► July (125) ► June (99) ► May (94) ► April (100) ► March (42) ► February (42) ► January (12) ► 2007 (34) ► December (34) ஆங்கிலம் கற்க Popular Posts திமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல் கேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன? கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம... அண்ணாவின் பொன்மொழிகள் இன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ... ஒரு ரஞ்சிதா போனால் என்ன? எத்தனை குஞ்சிதாக்கள் கிடைப்பார்கள்? கப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப... என் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன் நம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத... பாண்டேவுக்கு பதிலடி! ஊன்றிப்படித்து உண்மைகளை அறியுங்கள்!! அன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ... அம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத... இதுதான் அய்யப்பன் உண்மை கதை அய்யோ அப்பா அய்யப்பா! இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன... பறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன? இன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்... மாணவர்களும் பொதுநலத் தொண்டும்! - பெரியார் தோழர்களே! இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப... ஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன? நியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந... Powered by Blogger. குறி சொற்கள் அண்ணா (102) அம்பேத்கர் (38) அய்யத்தெளிவு (18) அரசியல்-சமூகம்-இடஒதுக்கீடு (24) அரசியல்-சமூகம்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை (623) இடஒதுக்கீடு (4) உலக நாடுகள் (79) கடவுள்-மதம் (37) கலைஞர் (50) கலைவாணர் (7) காணொளி (3) காமராசர் (6) திராவிடர் இயக்கம் (757) நேர்காணல் (25) பதிலடி (17) பாரதியார் (14) பார்ப்பனியம் (234) பார்ப்பனியம் -மூடநம்பிக்கை-அரசியல்-சமூகம் (8) பார்ப்பனியம்-மூடநம்பிக்கை (36) பார்ப்பனியம்-மூடநம்பிக்கை-அரசியல்-சமூகம் (101) பார்ப்பனியம்-மூடநம்பிக்கை-ஜோதிடம் (23) புரட்சிக்கவிஞர் (20) பெரிய (1) பெரியார் (1715) பெரியார்-காமராசர் (2) பெரியார்-தலித் (51) பெரியார்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை (14) பெரியார்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை-புத்தகம் (59) பெரியார்-பெண்ணியம் (5) பெரியார்-மயிலாடன் -மூடநம்பிக்கை-பார்ப்பனியம் (332) பெரியார்-மயிலாடன்-மூடநம்பிக்கை- பார்ப்பனியம் (90) பெரியார்-மற்றவர்கள் (87) பெரியார்-மின்சாரம் (362) பொதுவானவை (69) மூடநம்பிக்கை (92) விவேகானந்தர்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை-அரசியல்-சமூகம் (9) வீரமணி (757) ஜோதிடம் (11) ஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ ஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.
திராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -"விடுதலை",12-7-1969 , 11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள் counter மின் மடலில் எமது படைப்புகளை பெற... மின்மடல் முகவரி முன் தோற்றம் இன்றைய சிந்தனை சுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன ? 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே! திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே! தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே! பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி? தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்? ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்? நடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா? குழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்? ஏன்? எல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்? எல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்? ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்? அவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்? அன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு? முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்? ஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்? மயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்? நோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்? எல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா? தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை? அய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே! தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்? அக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்? பச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா? சிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா? ஜாதி ஒழிப்புத் திலகம் (?) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...! - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்!) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா? அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா? - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா? -----"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே! தந்தைபெரியார் - "விடுதலை" 15-2-1973 பழைய பதிவுகள் Search This Blog 24.3.14 பகவத் சிங், ராஜகுரு, சுகதேவ் தூக்கிலிடப்பட்டபோது பெரியார் எழுதியது என்ன? இன்று பகவத் சிங், ராஜகுரு, சுகதேவ் தூக்கிலிடப்பட்ட நாள் அன்று குடிஅரசில் தந்தை பெரியார் எழுதியது என்ன? இதோ! திரு. பகத்சிங் தூக்கிலிடப்பட்டதைப் பற்றி அனுதாபங்காட்டாதவர்கள் யாருமே இல்லை. அவரைத் தூக்கிலிட்ட காரியத் திற்காக சர்க்காரைத் தண்டிக்காதவர்களும் யாரும் இல்லை. அதோடு மாத்திரம் அல்லாமல் இந்தக் காரியம் நடந்து விட்டதற்காக திரு. காந்தியவர்களைவும் அநேக தேசபக்தர்கள் என்பவர்களும், தேசிய வீரர்கள் என்பவர்களும் இப்போது வைகின்றதையும் பார்க்கின்றோம். இவை ஒரு புறம் நடக்க, இதே கூட்டத்தாரால் மற்றொரு புறத்தில் என்ன நடக்கின்றது என்று பார்ப்போமானால் சர்க்கார் தலைவரான ராஜபிரதிநிதி திரு.இர்வின் பிரபுவை பாராட்டுவதும், அவ ரிடம் ராஜி பேசி முடிவு செய்து கொண்ட திரு.காந்தியவர்களைப் புகழ்வதும் பகத்சிங்கை தூக்கிலிடக் கூடாது என்கின்ற நிபந்தனையில்லாத ராஜி ஒப்பந்தத்தைப் பற்றி மிக்க திருப்தியடைந்திருப்பதோடு அல்லாமல் அதை ஒரு பெரிய வெற்றி யாய்க் கருதி வெற்றிக் கொண்டாட்டங்கள் கொண்டாடுவதுமான காரியங்கள் நடை பெறுகின்றன. இவ்வளவோடு மாத்திரம் அல்லாமல் திரு. காந்தியவர்கள் திரு. இர்வின் பிரபுவை மகாத்மா என்று கூறி அந்தப்படியே அழைக்கும்படியாக தேச மகா ஜனங்களுக்கும் கட்டளையிடுவதும் திரு. இர்வின் பிரபு அவர்கள் திரு. காந்தி அவர்களை ஒரு பெரிய மகான் என்றும் தெய்வத்தன்மை பொருந்தியவர் என்றும் வெள்ளைக்காரர் அறிய விளம்பரம் செய் வதுமான காரியங்களும் நடைபெற்றன. ஆனால், இப்போது வெகுசீக்கிரத்தில் அதே மக்களால் காந்தியம் வீழ்க, காங் கிரஸ் அழிக, காந்தி ஒழிக என்கின்ற கூச்சல் களும், திரு. காந்தி அவர்கள் செல்லுகின்ற பக்கம் கருப்புக் கொடிகளும், அவர் பேசும் கூட்டங்களில் குழப்பங்களும் ஏற்படுவதும் சகஜமாகிவிட்டன. இவைகளையெல்லாம் பார்க்கும்போது அரசியல், விஷயமாய் பொது ஜனங் களுடைய அபிப்பிராயம் என்ன? கொள்கை என்ன? என்பதைக் கண்டு பிடிக்கவே முடியாமல் இருப்பதோடு அப்படி ஏதாவதொரு கொள்கை யாருக் காவது உண்டா? என்று சந்தேகிக்க வேண் டியதாகவும் இருக்கின்றது. எது எப்படி யிருந்த போதிலும் திரு. காந்தி அவர்களின் உப்புச்சத்தியாக்கிரக கிளர்ச்சி ஆரம்பித்த காலத்திலேயே இக்கிளர்ச்சி மக்களுக்கோ. தேசத்திற்கோ சிறிதும் பயன்படாது என்றும், பயன்படாமல் போவதோடு அல்லாமல். தேசத்தின் முற்போக்குக்கும் கஷ்டப்படும் மக்களின் விடுதலைக்கும் விரோதமானது என்றும், எவ்வளவோ தூரம் எடுத்துச் சொன்னோம். நாம் மாத்திரம் அல்லாமல் திரு. காந்தி அவர்களே இக்கிளர்ச்சி ஆரம் பிப்பதற்குக் காரணமே பதக்சிங் போன்ற வர்கள் காரியங்களை கெடுப்பதற்கும் ஒழிப்பதற்குமே என்று கருத்துப்பட நன்றாய் வெளிப்படையாக எடுத்துச் சொல்லியும் இருக்கின்றார். போதாக்குறைக்கு அக்கம் பக்கத்து தேசத்தவர்களின் உண்மையான சமதர்மக் கொள்கையுடைய தேசத்தார் களும் திரு. காந்தி அவர்கள் ஏழைகளை வஞ்சித்துவிட்டார். சமதர்மக் கொள்கைகள் ஒழிக்கவே இக்காரியங்களை செய்கின்றார். திரு. காந்தி ஒழிய வேண்டும், காங்கிரஸ் அழிய வேண்டும் என்று ஆகாயம் முட்ட கூப்பாடு போட்டுக் கொண்டே இருந்தார் கள். ஆனால், நமது தேசிய வீரர்கள் தேசபக்தர்கள் என்பவர்கள் ஒன்றையும் கவனியாமல் பலா பலனையும் உணராமல் விளக்கைப் பிடித்துக்கொண்டு கிணற்றில் விழுவது போலவும், பந்தயம் கூறிக் கொண்டு பாறையில் முட்டிக் கொள்வது போலவும். தலை கிறுகிறுத்து கண் தெரியாமல் கூத்தாடினார்கள். அதன் பயனாய்ச் சிறை சென்று வீரர்களாய் வாகைமாலை சூடி திரும்பி வந்தார்கள். அதன் பெருமைகளையும் அடைந்து கொண்டார்கள். பிறகு இப்போது பகத்சிங் தூக்கிலிடப்படுவதைப் பார்த்து விட்டு காந்தியம் வீழ்க காங்கிரஸ் அழிக காந்தி ஒழிக என்று கூப்பாடு போடுகின்றார்கள். இதனால் என்ன பயன் ஏற்பட்டு விடும் நமக்கு விளங்கவில்லை. நிற்க, நம்மைப் பொறுத்தவரை நாம் உண்மையைச் சொல்ல வேண்டுமானால் பகத்சிங் அவர்கள் இந்தமாதிரி பொறுப்பும், கவலையும் அற்ற மூடமக்களும், மட மக்களும், பலாபலனை எதிர்பாராமல் எப்படியாவது தங்களுக்குக் கவுரவம் கிடைத்தால் போதும் என்கின்ற சுயநலமக் களும் உள்ள நாட்டில் வெகுகாலம் உயிருடன் இருந்து கொண்டு இவர்களது நடவடிக்கைகளை பார்த்துக்கொண்டு விநாடி தோறும் வேதனைப்பட்டு இவர் களது முட்டுக்கட்டைகளை அனுபவித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிலும் அவர்தம் உயிரைவிட்டு மறைய நேர்ந்தது. பகத்சிங் கிற்கு மெத்த சாந்தி என்றும், நன்மை என்றுமே கருதுகின்றோம். அந்தப் பேற்றை நாம் அடையமுடியவில்லையே என்றுதான் கவலைப்படுகின்றோம். ஏனெனில் ஒரு மனிதன் தன் கட மையைச் செய்தானா? இல்லையா? என்பது தான் கேள்வியே தவிர, பலன் என்ன ஆச்சுது என்பது இங்கு நமது கேள்வி அல்ல. ஆனாலும் காலமறிந்து, இடமறிந்து கடமையைச் செலுத்தவேண்டும் என்பதை நாம் ஒப்புக் கொள்ளுகின்றோமாயினும் பகத்சிங் கொள்கைக்குக் காலமும், இடமும் நடப்பும் விரோதமாயில்லை என்றேச் சொல்லுவோம். ஆனால் அவர் தனது கொள்கையை நிறைவேற்றக் கைக் கொண்ட முறைகளில் சிறிது தவறு நேர்ந்து விட்டது என்பதாக நம் புத்திக்குத் தோன்றிய போதிலும் அவரது கொள்கை குற்ற முடையது என்று சொல்ல நாம் ஒருக்காலும் துணியவே மாட்டோம். அதுவேதான் உலகத்தின் சாந்த நிலைக் கொள்கையாகும். நிற்க, உண்மையிலேயே பகத்சிங் அவர் கள் தனது கொள்கைகள் முழுவதையும் சரி என்று மனப்பூர்த்தியாய் நிச்சயித்துக் கொண்டு அதை நிறைவேற்ற அவர் நடந்து கொண்ட மாதிரிகள் தான் சரியான மார்க்கம் என்று அவர் முடிவும் செய்துகொண்டு இருப்பாரேயானால் கண்டிப்பாக அவர் நடந்து கொண்ட படியேதான் நடந்து இருக்க வேண்டிய தென்று நாம் சொல்லு வதோடு அந்தப்படி அவர் நடக்காமல் இருந்திருந்தால் அவர் யோக்கியமான மனிதரென்று சொல்லமுடி யாது என்றும் சொல்லுவோம். ஆதலால் இப்போது நாம் அவரை ஓர் உண்மையான மனிதர் என்று சொல்லுவோம். இந்தியா வுக்கு பகத்சிங் கொள்கைதான் உண்மை யாக வேண்டியது என்பது நமது பலமான அபிப்பிராயமாகும். ஏனெனில் நாமறிந்த வரை திரு. பகத்சிங் கிற்கு சமதர்மமும், பொது உடைமையும் தான் அவரது கொள்கையென்று கருதி இருக்கின்றோம். இதற்கு உதாரணம் என்னவென்றால் திரு. பகத்சிங் பஞ்சாப் கவர்னருக்கு எழுதிய கடிதத்தில் கீழ்க் கண்ட வாக்கியம் காணப்படுகிறது. அதாவது : பொது உடைமைகட்சி அதிகாரம் பெற்று ஜனங்களுக்குள் வித்தியாசமான அந்தஸ்துகள் இல்லாமல் இருக்கும்வரை எங்கள் யுத்தம் நடந்து கொண்டுத னிருக்கும்; எங்களைக் கொல்வதோடு இந்த யுத்தம் முடிந்து விடாது, அது பகிரங்கமாகவும் ரகசியமாகவும் நடந்துதான் தீரும் என்று குறிப்பிட்டிருக் கிறார். அன்றியும் அவர் கடவுள் விஷயத் திலோ எல்லாம் கடவுள் செயல் என்ப திலோ நம்பிக்கை இல்லாத தன்னம்பிக் கையுடைவர் என்றும் கருதிக் கொண்டி ருக்கின்றோம். ஆகவே இந்தக் கொள்கை யானது எந்தச் சட்டத்தின்படியும் குற்ற மாக்கக் கூடியது அல்லவென்றும் ஆவதா யிருந்தாலும் கூட யாரும் பயப்பட வேண் டியதில்லையென்றும் சொல்லுவோம். ஏனென்றால் அதனால் பொது மக்களுக்கு எவ்வித நஷ்டமோ, கஷ்டமோ ஏற்பட்டு விடாது என்று உறுதி கொண்டிருக்கின் றோம். அந்தப்படி ஒரு சமயம் ஏதாவது ஏற்படுவதாயிருந்தாலும் நாம் நம் மனப் பூர்வமாய் யாதொரு தனி மனிதனிடமாவது, தனி வகுப்பினிடமாவது தனி தேசத்தானிட மாவது துவேஷம் இல்லாமலும், எந்த தனி மனிதனுடைய திரேகத்திற்கும், துன்பம் உண்டு பண்ணாமலும் நம்மை எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் கஷ்டப்படுத்திக் கொள்ளவும் சம்மதிக்கின்றதான தியாகத் தன்மையுடன் இருந்துகொண்டு அக்கொள் கையை நிறைவேற்ற முயற்சிக்கின்றோம். ஆதலால் நாம் எதற்கும் கவலைப்படவோ. பயப்படவோ வேண்டியதில்லை என்று சொல்லுகிறோம். இன்னும் விளக்கமாகச் சொல்லவேண்டுமானால் சாதாரணமாக நாம் தீண்டாமை ஒழிய வேண்டும் என்று சொல்லுவதில் என்ன தத்துவம் அடங்கியி ருக்கின்றதோ அதுதான் மக்களின் ஏழ்மைத் தன்மை ஒழிய வேண்டுமென்பதிலும் அடங்கியிருகின்றது. தீண்டாமை ஒழிவதாய் இருந்தால் எப்படி மேல்ஜாதி, கீழ்ஜாதி தத்துவம் அழிந்துதான் ஆக வேண்டுமோ. அதுபோலவேத்தான் ஏழ்மைத்தன்மை ஒழிவதாய் இருந்தால் முதலாளித்தன்மை, கூலிக்காரத்தன்மை ஒழிந்துதான் ஆக வேண்டும். ஆகவே இந்த தன்மைகள் மறைபடுவதுதான் சமதர்மத் தன்மை பொது உடைமைத்தன்மை என்பவைகளே ஒழிய வேறில்லை. இந்த கொள்கைகள் தான் திரு. பகத்சிங் போன்றவர்களின் கொள்கைகள் ஆதலால் இக்கொள்கைகளை நியாய மானவை என்றும் அவசியமானவை என் றும் கருதுகின்ற ஒருவன் காங்கிரஸ் ஒழிக! காந்தியம் அழிக!! என்று சொல்லுவதில் நமக்கு ஆச்சரியமோ, குற்றமோ ஒன்றுமே யில்லை. ஆனால் அந்தக் கொள்கைக் காரர்கள் காங்கிரசுக்கு ஜே. காந்திக்கு ஜே. என்று சொல்லுவதுதான் நமக்கு மிக ஆச்சரியமாய் இருக்கின்றது. திரு. காந்தி அவர்கள் என்றையதினம் கடவுள்தான் தன்னை நடத்துகின்றார் என்றும், வருணா சிரமந்தான் உலக நடப்புக்கு மேலான தென்றும், எல்லாம் கடவுள் செயல் என்றும் சொன்னாரோ அன்றே பார்ப்பனியத் திற்கும், காந்தியத்திற்கும் வித்தியாசமில்லை என்று கருதியதுடன் அத்தத்துவம் கொண்ட காங்கிரசு ஒழிந்தாலொழிய நாட்டுக்கு நன்மை இல்லையென்றும் கருதிவிட்டோம். ஆனால், அந்த உண்மை இன்றுதான் மக் களில் சிலராவது கண்டுபிடித்து காந்தியம் அழிக என்று சொல்லத்தக்க அறிவையும், துணிவையும் அடைந்திருக்கின்றார்கள். இது நமது கொள்கைகளுக்கு ஒரு பெரிய வெற்றியேயாகும். திரு. பகத்சிங் தூக்கி லிடப்பட்டு உயிர் துறந்திருக்காவிட்டால் இந்த வெற்றி இவ்வளவு பிரபலத்தில் ஏற்படுத்துவதற்கு ஆதாரமே இருந் திருக்காது. அன்றியும் பகத்சிங்கைத் தூக்கிலிடாமல் இருந்திருந்தால் காந்தியத் திற்கும், இன்னமும் ஆக்கம் ஏற்பட்டு இருக்கும் என்று கூடச் சொல்லுவோம். சும்மா தானாகவோ நோய்கொண்டு அவஸ்தைப்பட்டு செத்துச் சாம்பலாகி இருக்கவேண்டிய பகத்சிங்குக்கு இந்திய மக்களுக்கு ஏன் உலக மக்களுக்கே உண்மையான சமத்துவமும், சாந்தியும் அளிக்கத்தக்க பாதையைக் காட்டுவதற்குப் பயன்படத் தக்கதாய் தனது உயிரை விட நேர்ந்தது. சாதாரணத்தில் வேறு யாரும் அடைய முடியாத பெரும்பேறு என்றே சொல்லி பகத்சிங்கை மனமார, வாயார, கையார பாராட்டுகின்றோம்! பாராட்டு கின்றோம்!! பாராட்டுகின்றோம்!!! இதே சமயத்தில் நமது அரசாங்கத்தாரையும் இனியும் இப்படிப்பட்ட உண்மையான எண்ணமுடைய வர்களாகப் பார்த்து மாகா ணத்திற்கு 4-பேர் வீதமாவது தூக்கி லிட வேண்டுமென்று மனமார வேண்டுகிறோம். -------------------- தந்தை பெரியார் -"குடிஅரசு" - தலையங்கம் - 29.03.1931 Posted by தமிழ் ஓவியா Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Labels: பெரியார் 52 comments: தமிழ் ஓவியா said... அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகித்தபோது தி.மு.க. சாதித்தது என்ன என்று கேட்கும் முதல் அமைச்சரின் கவனத்துக்கு! மத்திய கல்வி நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு தி.மு.க.வின் மகத்தான சாதனைதானே! தமிழர் தலைவர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அங்கம் வகித்த தி.மு.க. சாதித்தது என்ன என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா கூறிவரும் குற்றச்சாற்றுக்குப் பதில் அளிக்கும் வகையில், மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கொண்டு வரப்படுவதற்குக் காரணமாக இருந்தது திமுகவே என்று ஆணித்தரமாக ஆதாரப் பூர்வமாக பதில் அளித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் தமிழக முதல் அமைச்சருமான அம்மையார் அவர்கள் தி.மு.க. - மத்தியில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகித்த போது என்ன பெரிய சாதனை செய்தது என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது கேட்டதோடு, தி.மு.க.வின் 100 அம்சங்களைக் கொண்ட தேர்தலில் கதாநாயகன் என்று பலராலும் வர்ணிக்கப்பட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மத்திய அரசின் துறைகளில் 27 சதவிகித இட ஒதுக்கீட்டை பல பதவிகளில் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதைச் சுட்டிக் காட்டி, மீண்டும் மத்திய ஆட்சியில் அதனை முழுமை அடையச் செய்ய வற்புறுத்துவோம் என்று கூறியதை சரியாகப் புரிந்து கொள்ளாமலோ, அல்லது (புரிந்து கொண்டிருந்தாலும்) தேர்தல் லாபத்திற்காக குழப்பி விடலாம், ஒன்றும் புரியாத அப்பாவிகளை என்று எண்ணி பிரச்சாரம் செய்துள்ளார். இதற்கு ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் தலைவர், தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் தெளிவான விரிவான பதிலை எழுதியுள்ளார். இந்தியாவிலேயே முதன் முதலாக பிற்படுத்தப்பட்டோருக்கு தனித்துறை - தி.மு.க. ஆட்சியில்தான் இந்தியாவின் மாநில அமைச்சரவைகளிலேயே முதன் முதலாக பிற்படுத்தப்பட்டவருக்கான துறை என்ற ஒரு துறையை தனியே ஏற்படுத்தி, அதற்கென தனியே அமைச்சரையும் நியமித்த வரலாற்றுப் பெருமைக்குரியவர் கலைஞர் அவர்கள் (1970-71களில்) பிறகு, தமிழ்நாட்டில் 1989-இல்தான் 50 சதவிகிதத்தில் பிற்படுத்தப்பட்டவர் என்பதில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவர் (B.C., MBC) என்று பிரித்து, வாய்ப்பற்ற பல வகுப்பினர் (வன்னியர் உட்பட) பயன் பெற்றனர். இது போல மத்திய அரசிலும்கூட அனைத்திந்தியா முழுவ திலும் தற்போதுள்ள OBC என்பதில் MBC என்ற மிகப் பிற்படுத்தப்பட்ட பிரிவையும் பிரித்து, சமூக நீதியை வாய்ப்பற்ற வகுப்பினர்களுக்கும் அளிக்க சட்டத் தடை ஏதும் இல்லாத நிலையில், (மண்டல் தீர்ப்பில் இதற்கு பச்சைக் கொடி காட்டப்பட்ட நிலையில்) அப்படி ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற ஒரு கருத்தை - எந்தக் கட்சியும் கூறாத கருத்தை தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது. March 24, 2014 at 4:59 AM தமிழ் ஓவியா said... இதை முதல் அமைச்சர் தெளிவாகப் புரிந்து கொள் ளுதல் நல்லது. மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு! மற்றொரு முக்கிய சரித்திர சாதனை! தி.மு.க. அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசை அமைத்து மத்திய அரசில் சமூக நீதிக் களத்தில் தமிழ்நாடு மட்டுமல்ல; அனைத்து (இந்திய) மாநிலங்களில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஒடுக்கப்பட்டோர் மத்தியக் கல்வி நிலையங்கள் (Central Educational Institutions like Central Universities IIT, IIMS ) போன்ற இதற்குமுன் கதவுகள் திறக்கப்படாத நிலை 1951 முதல் 2005 வரை 55 ஆண்டு கால சமூக அநீதிக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், 15(4) என்று முதலாவது அரசமைப்புச் சட்ட திருத்தத்தில் தந்தை பெரியார் தம் போராட்டத்தால் நேரு பிரதமராக அம்பேத்கர் சட்ட அமைச்சராக இருந்தபோது நிறைவேற்றிய மத்திய கல்வி நிலையங்கள், பிற்படுத்தப்பட்டோருக்கும் (தாழ்த்தப்பட் டோருக்கும்) திறக்கப்படவே இல்லை. அதை மாற்றி, அர்ஜூன் சிங் அவர்கள் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த நிலையில் நாடாளுமன்றத்தில் இந்திய அரசியல் சட்டத்தின் 93ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை 2005-இல் கொண்டு வந்து நிறைவேற்றி 20.1.2006இல் நடைமுறைக்கு அது வந்தது. இது 2004 தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் 40-க்கு 40 என்று வாக்களித்து, மத்தியில் தி.மு.க. பங்கேற்ற காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்ததால் தான் ஏற்பட்டது என்பதை மறுக்க முடியுமா? தி.மு.க. தொடர்ந்து வற்புறுத்தியதால் அதுவரை திறக்காத அய்.அய்.டி. அய்.அய்.எம் (IIT, IIM) போன்ற மத்திய பல்கலைக் கழகத்திலும் இடஒதுக்கீடு சட்டப்படி உரிமை ஆயிற்று - பிற்படுத்தப்பட்டவர்களுக்கு! புதிய சட்டத் திருத்தம் 15(5) இந்திய அரசியல் சட்டம் 15(4) என்பது 1951இல் தந்தை பெரியார் அவர்களால், திராவிடர் கழகம் மற்றும் தமிழ் மக்களின் வகுப்புரிமை கிளர்ச்சியால் ஏற்பட்டது. இந்த 2005-இல் நிறைவேற்றப்பட்ட 93ஆவது அரசியல் சட்ட திருத்தச் சட்டம் 15(5) என்ற ஒரு புதுப்பிரிவு அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. புதிதாகச் சேர்க்கப்பட்டது இதோ: [5. Nothing in this article or in sub-clause (g) of clause (1) of article 19 shall prevent the State from making any special provision, by law, for the advancement of any socially and educationally backward classes of citizens or for the Scheduled Castes or the Scheduled Tribes in so far as such special provisions relate to their admission to educational institutions including private educational institutions, whether aided or unaided by the State, other than the minority educational institutions referred to in clause (1) of article 30.] தனியார்க் கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு இதன்படி வேலை வாய்ப்பில் எப்படி மத்திய அரசுத் துறைகளில் இடஒதுக்கீடு கட்டாயமோ, அதுபோலவே மத்திய கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கையிலும், (தனியார் கல்வி நிறுவனங்கள் உட்பட) பிற்படுத்தப்பட் டோர், தாழ்த்தப்பட்டோருக்கும், மலைவாழ் மக்களுக்கு 50 சதவிகித பங்கை கடைப்பிடிப்பது சட்டக் கட்டாயம் ஆகும்! உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து பார்ப்பனர்களும், முன்னேறிய ஜாதிக்காரர்களும், இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களும் தகுதி, திறமை கூச்சல் போட்டும் இது நிறைவேறியது என்றால் அதற்கு மூல, முக்கிய காரணம் தி.மு.க.வின் 40 இடங்களில் வெற்றி என்ற (2004படி) பலம் அல்லவா? இரட்டைக் குழல் துப்பாக்கி தி.மு.க. அப்படிச் செயல்படக் காரணம் இரட்டைக் குழலான தாய்க் கழகமான திராவிடர் கழகம் என்பதும் வரலாற்றில் மறைக்கப்பட முடியாத உண்மை அல்லவா! அதுபோலவே 2005-ஆம் ஆண்டில் செய்த மற்றொரு பெரிய சமூகப் புரட்சி பெண்களுக்கு சமச் சொத்துரிமை! நாளை அதுபற்றி எழுதுவோம். சென்னை 23.3.2014 கி.வீரமணி தலைவர்,திராவிடர் கழகம் Read more: http://viduthalai.in/e-paper/77476.html#ixzz2wpcU3aA5 March 24, 2014 at 4:59 AM தமிழ் ஓவியா said... நடக்கப் போவது அழகுப் போட்டியா! அஇஅதிமுக வேட்பாளர் கோபால கிருஷ்ணன், அவரை அஇஅதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ எப்படி அறிமுகப்படுத்தினாராம்? செக்கச்செவல்னு பால்வடியும் முகத்தைப் பாருங்க. அதனால்தான் தம்பியை இங்கே நிப்பாட்டிருக்காங்க. பொண்ணு பார்க்கப்போனால் பொண்ணைப்பார்த்து மகாலட்சுமி மாதிரி இருக்கான்னு சொல்லுவோம். பையனை நல்லா முகலட்சணமாக இருக்கான்னு சொல்லுவோம். அப்படிதான் கோபாலகிருட்டிணனை அம்மா செலக்ட் செஞ்சு நிறுத்தியிருக்காங்க என்று மதுரைத்தொகுதி வேட்பாளரை அறிமுகப்படுத்தி பேசியுள்ளார் அமைச்சர். போறப்போக்கைப் பார்த்தால் நடக்கப் போவது தேர்தல் போட்டியா - அழகுப் போட்டியான்னு தெரியலை. எண்ணார்! புதுவைத் தொகுதியைப் பொறுத்தவரை என்.ஆர் காங்கிரஸ் இப்பொழுது எண்ணார் காங்கிரசாகி விட்டது. தமிழ்நாட்டில் கூட்டணி இருந்தாலும் அதற்குமாறாக புதுச்சேரித் தொகுதியில் என்ஆர் காங்கிரசு வேட்பாளரை எதிர்த்து பா.ம.க வேட்பாளரை அறிவித்திருக்கிறது. தேமுதிகவும் முறுக்குகிறது. என்ன தேர்தலோ - என்ன கூட்டணியோ! Read more: http://viduthalai.in/e-paper/77475.html#ixzz2wpch2DXv March 24, 2014 at 5:00 AM தமிழ் ஓவியா said... இன்னும் எத்தனை எத்தனை திருவிளையாடல்களோ! வாரணாசி தான் என் தொகுதி அங்கு நின்று தான் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறேன் - அதனை விட்டுக் கொடுக்க முடியாது என்று முரளிமனோகர் ஜோஷி சொன்னால், முடியாது - உமக்கு வாரணாசி தொகுதி கிடையவே கிடையாது. அது பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளரான நரேந்திர மோடிக்குத் தான். நீ வேறு தொகுதிக்கு நடையைக் கட்டு - கான்பூருக்கு மூட்டையைக் கட்டு என்று ஆர்.எஸ்.எஸ். உத்தர விடுகிறது. காந்திநகர் தொகுதி எனக்கு வேண்டாம்! போபாலில் நான் போட்டியிட விரும்புகிறேன் என்று சொன்னால். அதெல்லாம் கிடையாது - நீ மரியாதையாக ஏற்கெனவே நீ போட்டியிட்ட காந்தி நகர் தொகுதியிலே நின்றுதான் தீர வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். ஆணை பிறப்பிக்கிறது. அதிலும் அந்த மூத்த தலைவர் 2009 மக்களவைத் தேர்தலில் பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளர் என்றாலும் முதல் பொதுப் பட்டியலில் பெயர் இடம் பெறவில்லை. ஜஸ்வந்த் சிங் பி.ஜே.பி. ஆட்சியில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர். இப்பொழுது மேற்கு வங்காளம் டார்ஜிலிங் தொகுதி எம்.பி.யாக உள்ளார். இப்பொழுது தனது சொந்த மாகாணமான ராஜஸ்தானில் சொந்த ஊர் அடங்கிய பார்மர் தொகுதியில் போட்டியிட விரும்புகிறார். என்ன வேடிக்கை என்றால் அவர் போட்டியிட எந்தத் தொகுதியுமே ஒதுக்கப்படவில்லை. ஆசாமி மிகவும் ஆத்திரத்திற்கு ஆளாகி தாம் மிகப் பெரிய அளவில் அவமானப்படுத்தப்பட்டதாகக் கருதி கட்சிக்கே முழுக்குப் போட முடிவு செய்து விட்டார். பி.ஜே.பி.யின் தலைவராக இருக்கக் கூடிய ராஜ்நாத் சிங் தான் எம்.பி.யாக இப்போதுள்ள காசியாபாத்தை விட்டு லக்னோவுக்கு மாறுகிறார் அதற்குப் பச்சைக் கொடி காட்டி விட்டது ஆர்.எஸ்.எஸ். ஆக ஆர்.எஸ்.எஸ். ஆதிக்க சுனாமி கிளம்பி பெரிசுகளை தண்ணிக்காட்டி வருகிறது. அத்வானி, சுஷ்மா சுவராஜ் ஜஸ்வந்த் சிங் - இவர்கள் ஒரு அணியாகவும் ராஜ்நாத் சிங், அருண்ஜெட்லி, நரேந்திரமோடி என்பவர்கள் இன்னொரு அணியாகவும் பிரிந்து பிளந்து நிற்கிறார்கள். இதற்கிடையில் மகாராட்டிர மாநிலத்தில் சிவ சேனையின் தலைவர் உத்தவ் தாக்கரே அத்வானியின் சகாப்தம் முடிந்து விடவில்லை! என்று குரல் கொடுத்துள்ளார் பி.ஜே.பி.யில் ஏற்பட்டுள்ள இந்தப் பிளவு கூட்டணிக் கட்சிகள் வரை புரையோடி விட்டது! தேர்தலுக்கு ஒரு மாதம் இருக்கும் போதே இந்தக் கூத்து, நாள் நெருங்க நெருங்க இன்னும் என்னென்ன திருவிளையாடல்களோ - யார் கண்டது! Read more: http://viduthalai.in/e-paper/77471.html#ixzz2wpctEEsr March 24, 2014 at 5:00 AM தமிழ் ஓவியா said... தேர்தல் பிரச்சார பணிகளில் குழந்தைகளை ஈடுபடுத்த தடை மனித உரிமை ஆணையம் உத்தரவு புதுடில்லி, மார்ச் 23- மக் களவைத் தேர்தல் பிரச்சார பணிகளில் சிறுவர்களை பயன்படுத்தும் அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு தேசிய மனித உரிமை ஆணை யம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக 8 வாரத் துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஆணையம் கூறியுள்ளது. தேர்தல் பிரச்சாரங்கள், பேரணிகள், வாக்குசேக ரிப்பு பணிகளின்போது, சிறுவர்களை அரசியல் கட் சியினரும், வேட்பாளர் களும் பயன்படுத்துவது வாடிக்கையாக உள்ளது. துண்டு பிரசுரங்கள் விநி யோகம், முழக்கமிடுவது போடுவது, பட்டாசுகளை வெடிப்பது, கொடிகளை ஏந்திச் செல்வது போன்ற பணிகளுக்கு சிறுவர்களை பயன்படுத்திக் கொள்கின் றனர். சிறுவர்களை எந்த பணியிலும் ஈடுபடுத்தக் கூடாது என்று சட்டத்தில் கூறப்பட்டிருந்தாலும், அதைப்பற்றி அரசியல் கட் சிகளும், வேட்பாளர்களும் கவலைப்படுவதே இல்லை. இப்போது மக்களவை தேர் தல் பிரச்சாரம் தீவிரமாகி உள்ள நிலையில், நாடு முழுவதும் சிறுவர்களை பிரச்சாரங்களில் பயன்படுத் திக் கொள்வது சர்வசாதா ரணமாக நடக்கிறது. படிப்பு அல்லாத எந்த செயலிலும் சிறுவர்களை ஈடுபடுத்தக் கூடாது. அவ்வாறு செய் தால், அது அவர்களின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதால், குழந்தைத் தொழிலாளர் முறை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவ டிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. இந்நிலையில், தேர்தல் பிரச்சாரங்களில் சிறுவர் களை பயன்படுத்துவதை தடுப்பது தொடர்பாக, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் அகந்த் என்பவர், தேசிய மனித உரிமை ஆணையத் திடம் புகார் ஒன்றை அளித் தார். இந்த புகாரை, தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை செய்தது. இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி யுள்ள உத்தரவில் கூறப் பட்டுள்ளதாவது: தேர்தல் பிரச்சாரத்தில் சிறுவர்களை ஈடுபடுத்தும் அரசியல் கட்சியினர், வேட் பாளர்கள் மீது உரிய நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்க வேண் டும். இது தொடர்பாக என் னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து 8 வாரத்துக்குள் ஆணையத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு ஆணையத்தின் உத்தரவில் கூறப்பட் டுள்ளது. இது குறித்து வழக்கு தொடர்ந்த அகந்த், புவ னேஸ்வரில் அளித்த பேட்டியில், சிறுவர்களை பணத்தாசைக் காட்டி, பிரச் சார பணிகளில் ஈடுபடுத்து கின்றனர். அவர்களின் படிப்பு பாழாவதைப் பற்றி அரசியல் கட்சியினரோ அல்லது வேட்பாளர்களோ எந்த கவலையும் கொள்வது இல்லை. இப்படிப்பட்ட நிலையில், தேசிய மனித உரிமை ஆணையம் பிறப் பித்துள்ள இந்த உத்தரவு பெரும் வரவேற்புக்கு உரி யது என்றார். Read more: http://viduthalai.in/e-paper/77472.html#ixzz2wpd4wLXe March 24, 2014 at 5:01 AM தமிழ் ஓவியா said... அரசுத் துறை அலுவலகங்களில் ஃபேஸ்புக், டுவிட்டருக்கு தடை! சென்னை, மார்ச் 23- தலைமைச் செயலகம் உள்பட அரசுத் துறை அலு வலகங்களில் ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களுக்கு தடை விதிக் கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவைத் தொடர்ந்து, இந்த நடவடிக் கை எடுக்கப்பட்டுள்ள தாக அரசுத்துறை வட்டாரங் கள் தெரிவித்தன. அரசுத் துறை களின் பல்வேறு அலுவல கங்கள் தலைமைச் செயலகம் மற்றும் சென்னை சேப்பாக் கம் எழிலகம் ஆகிய வற்றில் இயங்கி வருகின்றன. இந்த அலுவலகங்களில் கணினி களுடன் இணையதள வசதி யும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த இணையதள வசதி யைப் பயன்படுத்தி, அரசுத் துறைகளின் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களை அதிகம் பயன்படுத்தி வருகி றார்கள். மக்களவைத் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அம லுக்கு வந்துள்ள நிலையில், சமூக ஊடகங்களை அலு வலக நேரங்களில் பார்க்க கட்டுப்பாடு விதிக்கப்பட் டுள்ளது. அரசுத் துறைகளின் அனைத்து கணினிகளிலும் ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங் களைப் பார்க்க முடியாதபடி அவற்றை தடை செய்ய தேர்தல் ஆணையம் நட வடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து தேர்தல் துறை அதி காரிகள் கூறியது: அரசுத் துறைகளில் உள்ளவர்களில் பலரும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சமூக ஊடகங்களில் அவர் கள் கருத்துகளைத் தெரிவிப் பதும், பதிவு செய்வதும், தேர்தல் பணியின்போது அவர்களது நடுநிலையை பாதிக்கச் செய்யும். எனவே, அலுவலக நேரங்களில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த முடியாதபடி அவை தடை செய்யப்பட்டுள்ளன என்றனர். Read more: http://viduthalai.in/page-3/77444.html#ixzz2wpdcdNaU March 24, 2014 at 5:03 AM தமிழ் ஓவியா said... கூடா நட்பு கேடா முடியும்! பி.ஜே.பி. அணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க வும் - பா.ம.க வும் எப்படி இடம் பெறமுடியும் என்ற கேள்வி எல்லாத் தரப்பிலும் கேட்கப்பட்டது; அப்படியே இடம் பெற்றாலும் அவர்கள் எப்படி ஒட்டி உறவாட முடியும் என்ற கேள்வியும் உள்ளது. இதற்கு வெகு நாட்கள் கூடத்தேவைப் படவில்லை. இடைப்பட்ட இரண்டே நாளில் உடைசல் ஏற்பட்டு விட்டது. பா.ம.க வின் சார்பில் ஏற்கெனவே வேட்பாளர்கள் அறிவிக் கப்பட்ட சேலம், கல்லக்குறிச்சி, விழுப்புரம் தொகுதிகளில் பா.ம.க வேட்பாளர்களும், தொண்டர்களும் தேர்தல் பணிகளைத் தொடங்கி விட்டனர். இந்த நிலையில் அத் தொகுதிகள் தே.மு.தி.க வுக்கு ஒதுக்கப்பட்டு விட்டன. கொந்தளித்து விட்டனர் பா.ம.க தோழர்கள். அதன் விளைவு எந்த உச்சத்தில் உஷ்ண மூச்சு வெளியேறுகிறது தெரியுமா? மயிலாடுதுறையில் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற மருத்துவர் ராமதாஸ், தொண்டர்களின் குமுறலைத் தாங்க முடியாமல், கும்பகோணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் தைலாபுரம் தோட்டத்திற்குத் திரும்பிவிட்டார். புதுச்சேரியிலும் பிரச்சினை! என்.ஆர். காங்கிரசிற்கு அத்தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் (பி.ஜே.பி) ஒதுக்கப்பட்டா யிற்று. பா.ம.க வும் அங்கு வேட்பாளரை அறிவித்து விட்டது. கூட்டணி என்பது தமிழ்நாட்டில் மட்டும் தான் - புதுச்சேரி வேறு மாநிலம் - அது இங்கு செல்லாது என்று மீசை முறுக்கி எழுந்து விட்டனர் பாட்டாளிகள். எந்த விலை கொடுத்தேனும், கட்சிக்கு சேதாரம் ஏற்பட்டாலும் பரவாயில்லை; கூட் டணி பலத்துடன் தருமபுரியில் போட்டியிட்டு, தான் மட்டுமாவது பெற்றிபெற்று மத்தியில் அமைச்சராகியே தீருவேன் என்பதில் எரி மலையாகத் தகித்து நிற்கிறார் - டாக்டர் அய்யா வின் மகன் டாக்டர் அன்புமணி ராமதாஸ். விஜயகாந்த் - டாக்டர் அன்புமணி ராமதாசு ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி நிற்கும் படத்தைப் பார்த்து புழுங்குகிறது பாட்டாளி வர்க்கம். ஒட்டுமா(ங்)கனி? என்று இரு பொருளில் தலைப்பைக் கொடுத்து தினமணி மூக்கைச் சொரிந்துவிடுகிற நிலைமை! தேமுதிக தலைவர் - விஜயகாந்த் பற்றி பா.ம.க வினர் செய்த விமர்சனம் விண்ணையும் தாண்டி வெடி மருந்து வீச்சாக அல்லவா நெடி ஏறியது! டாக்டர் ராமதாஸ் ஆனந்தவிகடனுக்கு (1.8.2012) அளித்த பேட்டியில் என்ன சொன்னார்? சட்ட மன்றத்தில் எதிர்க்கட்சினு ஒரு கட்சி. ஆனா அந்தக்கட்சித் தலைவருக்கு எதிர்க் கட்சித் தலைவருக்கான பொறுப்பும் கிடையாது, அந்த தகுதியும் கிடையாது. எந்தக் கொள்கை யுமே இல்லாத கட்சி அது. இருபத்தி நாலு மணிநேரமும் ஏதோ ஒரு மெதப்பிலயே இருக்கிற ஒருத்தர் ஒரு கட்சிக்குத் தலைவரா இருந்தா அப்புறம் அது விளங்குமா? என்று தேமுதிக தலைவரின் தனிப்பட்ட பழக்கத் தைக்கூட சுட்டிக்காட்டி சூடான வார்த்தை களைப் பரிமாறினார் மருத்துவர். இந்த நிலையில், இந்த இரு கட்சிகளும் ஒரு கூட்டணியில் இருந்தால் எப்படி விளங்கும்? ஒருவர் காலை இன்னொருவர் வாருவார் என்பது தான் நடக்கப் போகிறது. இது என்ன... இன்னும் இருக்குது - வேடிக் கையெல்லாம் - பார்க்கத்தானே போகிறோம்! Read more: http://viduthalai.in/page-8/77453.html#ixzz2wpeUAmLp March 24, 2014 at 5:07 AM மாசிலா said... காந்தி ஒரு அகில இந்திய பெரும் சீக்காளி என்பது அனைவரும் அறிந்ததுதான். இந்த ஆளு பேரை சொல்லி அகில இந்தியாவையும் முக்கியமாக ஏழைகள் மற்றும் பாழாயப்போன இந்து மதம் வடித்த 'தாழ்த்தப்பட்ட இனத்தவர்கள்' அனைவரையும் மேலும் குழிக்குள் தள்ளி அழித்தனர் ஆதிக்க இந்து மத மடையர்கள். March 24, 2014 at 4:46 PM தமிழ் ஓவியா said... ஊழலை ஒழிக்கும் இலட்சணத்தைப் பாரீர்! பல ஊழல் புகார்களில் சிக்கிய பாபாராம்தேவுடன் மோடி புதுடில்லி, மார்ச் 24- ஊழலை ஒழிக்கப் புறப் பட்டுள்ளார் மோடி என்று ஒரு பக்கத்தில் பிரச்சாரம்; மோடி ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழித்துக் கட்டியே தீருவார் என்று பல கட்சி கள் (தமிழ்நாடு உட்பட) அவ ரோடு கூட்டும் சேர்ந்துள் ளன. உண்மை நிலை என்ன? யோகா குரு பாபாராம்தேவ் என்ற சாமியாரிடம் டில்லி யிலே பிஜேபியின் பிரதம ருக்கான வேட்பாளர் நரேந் திர மோடி கொஞ்சிக் குலவு கிறார். யார் இந்த ராமதேவ் இதோ ஒரு நீண்ட பட்டியல். நான் நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன் என்று ராம் தேவ் பாபா மும்பையில் பத்திரிக்கை யாளர் சந்திப்பில் கூறினார். நரேந்திர மோடியை ஆதரிக்கும் பாபாவின் யோக்கியதை கடந்த வருடம் வந்த செய்திகள் மாத்திரம் ராம் தேவ் பாபாவின் மீது வருமான வரிஏய்ப்பு, அயல் நாடுகளில் உள்ள சொத் துக்கள் குறித்த விவரங்களை மறைத் தல், தக்க அனுமதி யின்றி பலரை வெளிநாடு கூட்டி சென்றது போன்ற வழக்குகள் உள்ளன. இவர்மீது உத்தரா கண்ட் மாநிலத்தில் பல இடங்களை ஆக்ரமித்த குற்றச்சாட்டு உள்ளது, இவரது பதஞ்சலி மருத்துவ நிறுவனத்தின் மீது மஹ ராஷ்டிரா, ஹரியானா மற் றும் உத்தராகண்ட் மாநி லத்தில் நிலங்களை அப கரித்த குற்றச்சாட்டும் உள்ளது. ஹரித்துவாரில் 2 ஏக்கர் நிலத்தை வன்முறை யாக அபகரித்து திவ்ய யோகா மந்திர் என்ற பெய ரில் போலிப்பத்திரம் தயார் செய்தது (நவம்பர் 29, 2013 பி.டி.அய்) ராம் தேவ்பாபா வின் பதஞ்சலி யோகா ஆயூர்வேதக் கல்லூரியில் தங்கி இருந்த 18 வயது மாணவி மர்மமான முறை யில் காணாமல் போனார் இது குறித்த வழக்கும் காவல்துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. (நவம் பர் 23 2013) பி.டி.அய். பாபா ராம் தேவ் பாபாவின் பதஞ்சலி நிறுவனத்தில் வருமானவரித்துறை ஆய்வு சுமார் 20 முதல் 25 கோடிக்கும் மேல் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித் துறை ஆணையர் ஆர் ஆர் சிங் தெரிவித்தார் (அக்டோ பர் 4. 2013) பி.டி.அய். யோகா பயிற்சி என்ற பெயரில் நாடெங்கும் நடத் தப்பட்ட முகாம் மூலம் ரூ 5 கோடிவரை வருமானம் பெற்று அதை அரசிடம் இருந்து மறைத்து வரி ஏய்ப்பு செய்தது. ராம் தேவ்பாபாவின் சகோதரன் ராம்பரத் தேவ் மீது ஆட்கடத்தல் வழக்கு அக்டோபர் 22. 2013 (டெக் கான் குரானிகள் செய்தி) மேலும் சில சாதனைகள்! போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு சென்ற வழக்கில் பாபாராம்தே வின் செயலாளர் பால கிருஷ்ணன் மீது சி.பி.அய் வழக்கு, இவர் மீது வெளி நாடுகளுக்கு ஆள் கடத்தல் மற்றும் பண மோசடி வழக் கும் உள்ளது. 2009-ஆம் ஆண்டு ஸ்காட்லாண்டில் சுமார் 200 கோடி மதிப் புள்ள (2மில்லியன் பிரிட் டன் பவுண்ட்) உள்ள ஒரு தீவை 2009 ஆம் ஆண்டு விலைக்கு வாங்கினார் (Glasgow, யூகே டைம்ஸ் September 28, 2009.) இந்த தகவல் பத்திரிக் கையில் வெளியான உடன் 2011 ஆம் ஆண்டு இங்கி லாந்தைச் சேர்ந்த ஒரு பக்தை தனக்கு தானமாக வழங்கியதாகவும் அதை உலக நலனுக்காக மாத் திரம் பயன்படுத்துவதாக வும் தனக்கு சொந்தமான எந்த ஒரு காரியத்தையும் அந்தத் தீவில் செய்ய வில்லை என்று புளுகுமூட் டையை அவிழ்த்துவிட்டார். (June 1, 2011 ஹிந் துஸ்தான் டைம்ஸ், மும்பை பதிப்பு) இவ்வளவு பராக்கிர மங்கள் செய்த சாமியா ருக்கு ஆபத்பாந்தவனாக மோடி இல்லாமல் வேறு யார் இருக்கமுடியும் ஆகை யால் தான் இவருக்கு மோடி பிரதமராக வேண் டும் என்ற ஆவல் இருக் கிறது, இந்து முன்னணி செய்தி நிறுவனங்கள் பல இவரின் ஸ்பான்சரில் தான் இயங்குகிறது, ஆகையால் மோடி மேற்குவங்கத்தில் பொதுக்கூட்டத்தில் பேசி னால் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து சேனல் களிலும் நேரடி ஒளிபரப்பு மாத்திரமின்றி அன்றும் முழுவதும் அது பற்றிய செய்திகளையே மீண்டும் மீண்டும் ஒளிபரப்புவார்கள். Read more: http://viduthalai.in/e-paper/77487.html#ixzz2wvpXZu00 March 25, 2014 at 6:20 AM தமிழ் ஓவியா said... பரிதாபத்திற்குரிய வைகோ பரிதாபத்திற்குரிய வைகோ பி.ஜே.பியுடன் ஏன் கூட்டு என்றால் ஈழம் பெறு வதற்காக என்றார் வைகோ- பி.ஜே.பி.யின் முக்கிய தலை வரான வெங்கையா நாயு டுவோ - தனியீழம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சென்னைக்கு வந்தே கூறி விட்டார். மதிமுக தேர்தல் அறிக் கையில் இந்திய அய்க்கிய நாடுகள் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள் ளது. தமிழக பி.ஜே.பி. தலை வர் பொன். ராதாகிருஷ் ணன் அதனைக் கண்டு கொள்ளாமல் விடவில்லை. அப்படி மாற்றம் விரும்பி னால் பாரதம் என்றுதான் மாற்ற வேண்டும் என்று கூறி விட்டாரே! இதற்குப் பெயர் தான் வேற்றுமையுள் ஒற் றுமையோ! Read more: http://viduthalai.in/e-paper/77483.html#ixzz2wvpmyHT1 March 25, 2014 at 6:21 AM தமிழ் ஓவியா said... எச்சரிக்கை! நம் கைகளை சோப்புப் போட்டு கழுவாத காரணத் தால் ஸ்வைன் ப்ளூ போன்ற உலகமே அஞ்சும் பல நோய்கள் வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். Read more: http://viduthalai.in/e-paper/77483.html#ixzz2wvpyLfMp March 25, 2014 at 6:22 AM தமிழ் ஓவியா said... மோடியின் ஆட்சியில் தற்கொலைகள் அதிகரிப்பு குஜராத்தில் தற்கொலைகளும் அதிகரித்து வருகின்றன. 2011ஆம் ஆண்டில் 6382 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2012ஆம் ஆண்டில் தற்கொலைகள் 7110 ஆக அதாவது 11.4 விழுக்காடு அதிகரித்துள்ளதாக தேசிய குற்றவியல் பதிவுகள் வாரியம் இந்தியாவில் விபத்து மரணங் களும், தற்கொலைகளும் - 2012 என்ற தலைப்பிடப் பட்ட தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அகமதாபாத்தில் மட்டும் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 30 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று அது சுட்டிக்காட்டுகிறது. குஜராத்தின் வளர்ச்சி விகிதமும் இதுதான் என்பது வேதனைக்குரிய ஒன்றாகும். 2011ஆம் ஆண்டில் 470 பேர் தற்கொலை செய்துள்ளனர். 2012ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 614 ஆக உயர்ந்துள்ளது. அவர் களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்பது கவலை தரும் விஷயமாகும். ராஜ்கோட் நகரம் தற் கொலைகளின் தலைநகரமாக திகழ்கிறது. இந்தியா வில் தற்கொலைகள் நடந்த நகரங்களின் பட்டியலில் அது மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. அங்கு நடந்த மரணங்களில் 30.5 விழுக்காடு தற்கொலை மரணங்களாகும்.குஜராத்தில் தற் கொலை செய்து கொண்டவர்களில் நாற்பது விழுக் காட்டினர் 15 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள். இங்கும் அகமதாபாத் முன்னுக்கு நிற்கிறது. அங்கு 44 விழுக்காடு தற்கொலை மரணங்கள் இளை ஞர்கள் மத்தியில் நடந்தவை. Read more: http://viduthalai.in/e-paper/77492.html#ixzz2wvq62poi March 25, 2014 at 6:22 AM தமிழ் ஓவியா said... குஜராத் - மோடி ஆட்சியில் விபச்சாரத்துக்கு உடன்படாத பெண்ணின் மார்பகங்கள் அறுப்பு! தானே.மார்ச்.24- குஜராத் மாநிலத்திலிருந்து 24 வயது பெண், பெற்றவர்களாலேயே விற்பனை செய்யப்பட்டுள்ளார். இதற்கு உடந்தையாக அவளின் சகோதரர்களும் இருந்துள்ள கொடுமை குஜராத்தில் நிகழ்ந்துள்ளது. தானேவை அடுத்த பிவண்டி பகுதியில் அனுமான் தேக்தி என்கிற இடத்தில் உள்ள விபச்சார விடுதியில் விற்பனை செய்யப்பட்ட அப்பெண், விபச்சாரத் தொழிலுக்கு உடன்படாததால் தொடர்ந்து சித்தரவதைகளுக்கு உள்ளானார். விபச்சார விடுதியின் நிர்வாகி 24 வயதுள்ள அப்பெண்ணை தனி அறையில் அடைத்து சிகரெட்டால் சுட்டு துன் புறுத்தி உள்ளார். அவரிடம் தன்னை மருத்துவ மனைக்கு அழைத்து செல்லுமாறு அப்பெண் வேண்டியும், மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு செல்ல மறுத்துள்ளார். மேலும் இரண்டு நாளில் அப்பெண்ணின் மார்பகங்களையும் அறுத்தும் உள்ளார். அப்பெண்ணின் கதறல் அந்த தெரு வழியே சென்றவர்களுக்கு எட்டியதால் காவல் துறையினருக்கு தகவல் சென்றுள்ளது. காவல்துறை யினர் அந்த இடத்திற்கு சென்று அப்பெண்ணை மீட்டு இந்திரா காந்தி மருத்துவமனையில் சிகிச் சைக்கு சேர்த்துள்ளனர். ஆனால், அப்பெண்ணின் நிலைமை மோசமாக இருப்பதாகக் கூறிய மருத் துவர்கள் உடனடியாக, தானே பொது மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர். பாதிக்கப்பட்ட அப்பெண் அதிர்ச்சியில் எதுவும் பேச முடியாதவராக உள்ளார். பிவண்டி காவல் நிலைய ஆய்வாளர் இச்சம்பவம் குறித்து கூறும் போது, பாதிக்கப்பட்ட பெண் பேச முடியாமல் அதிர்ச்சியில் இருக்கிறார். இதற்கு காரணமான ரூபி முன்ஷி என்கிற பெண் கைது செய்யப்பட்டுள்ளார் என்றார். இவ்வழக்கில் அப்பெண்ணின் சகோதரர் களான ஆலம், அப்சல் உட்பட மேலும் இருவர் தலைமறைவாகி உள்ளனர். இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் 325,326,370 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவானவர்களை யும் காவல்துறை தேடி வருகிறது. Read more: http://viduthalai.in/e-paper/77492.html#ixzz2wvqEA8PS March 25, 2014 at 6:23 AM தமிழ் ஓவியா said... சேது சமுத்திரத் திட்டம் - ஜெயலலிதாவின் முரண்பாடு கலைஞர் அம்பலப்படுத்துகிறார் சென்னை, மார்ச் 24- திமுகவிற்கு ஒரு கொள் கையும் கிடையாது என்று தேர்தல் பிரச்சாரக் கூட்டங் களில் பேசிவரும் முதல் அமைச்சர் ஜெயலலிதா வுக்கு சேது சமுத்திரத் திட்டம் என்பதில் அவர் எப்படியெல்லாம் முரண் பட்டு நிற்கிறார் என்பதை விளக்கியுள்ளார் திமுக தலைவர் கலைஞர். ஜெயலலிதா எவ்வாறு ஒரே கொள்கையோடும், கோட்பாட்டோடும் நடந்து கொள்கிறார் என்பதற்கு ஒரே ஒரு உதாரணம் கூறுகி றேன். 2001 அ.தி.மு.க. தேர் தல் அறிக்கையில், சேது சமுத் திரத் திட்டத்தால் நம் நாடு மட்டும் அல்ல, தென் கிழக்கு ஆசிய நாடுகளும் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள நாடுகள் அனைத்தும் பயன் அடை யும். வாணிபமும் தொழி லும் பெருகும். அந்நிய முத லீடு அதிகரிக்கும். அந்நியச் செலாவணி அதிகம் கிடைக் கும். கப்பலின் பயணத் தூரம் பெருமளவுக்குக் குறையும். எரிபொருளும் பயண நேரமும் மிச்சமா கும். ஏற்றுமதி, இறக்குமதி அதி கரிக்கும். குறிப்பாக, ராமநாதபுரம் போன்ற மிகப் பிற்பட்ட தமிழக தென் பகுதி மக் களின் வாழ்க்கைத்தரம் மேம் படும். வேலை வாய்ப்பு பெருகும். தூத்துக்குடி துறைமுகம் சர்வ தேச அள வில் விரிவடையும். சுற் றுலா வளர்ச்சி அடையும். இன்ன பிற நன்மைகளைத் தர இருக்கும் இத்திட்டத் தின் தேவையை முக்கியத்து வத்தை உணர்ந்து, நிதி நெருக்கடியை ஒரு சாக் காகக் கூறிக் கொண்டிருக் காமல், உலக வங்கி போன்ற சர்வ தேச நிறுவனங்களுடன் மத் திய அரசு தொடர்பு கொண்டு வேண்டிய நிதி யைத் தேடி இத்திட்டத்திற்கு முன்னு ரிமை கொடுத்து ஒரு காலக் கெடுவுக்குள் இத் திட்டத்தை நிறைவேற்றும் படி மைய அரசை விடாது தொடர்ந்து வலியுறுத்தும் என்று சொன் னார்கள். அது மாத்திரமல்ல; 10.5.2004 அன்று வெளியிடப் பட்ட அ.தி.மு.க. நாடாளு மன்றத் தேர்தல் அறிக்கை யில் தமிழகத்தின் பொரு ளாதார வளர்ச்சியிலும், நாட்டின் ஒட்டுமொத்தத் தொழில் மேம்பாட்டிலும் முக்கியப் பங்காற்றவிருக் கும் சேது சமுத்திரத் திட் டத்தினை நிறைவேற்றுவ தற்கு உரிய நடவடிக்கை களை எடுக்க, மய்ய ஆட்சியில், அமைச்சுப் பொறுப்பில் அய்ந்தாண்டு காலம் இருந்த தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. கட்சிகள் தவறிவிட்டதை இந்த நாடு நன்கறியும். இத்திட்டத்திற் குப் போதிய நிதியினை உட னடியாக ஒதுக்கி, ஒரு குறிப் பிட்ட காலவரையறைக்குள் இந்தத் திட்டத்தை நிறை வேற்றிட வேண்டுமென்று, அமைய இருக்கும் மய்ய அரசை அ.தி.மு.க. வலி யுறுத்தும் என்று சொன் னார்கள். தற்போது வெளி யிட்டுள்ள அ.தி.மு.க. அறிக் கையிலே இந்தத் திட்டம் பற்றிய அறி விப்பு என்ன ஆயிற்று? அப்போது சிறப் பான திட்டம் என்று தேர்தல் அறிக்கையிலே கூறிவிட்டு தற்போது அந்தத் திட்டமே வேண்டாமென்று உச்ச நீதிமன்றத்திலேயே வழக் குத் தொடுத்திருக்கிறார் ஜெயலலிதா! அன்று செழிக்க வைக்கும் திட்ட மாக இருந்த சேதுத் திட்டம், இன்று செல்லாக் காசுத் திட்டமாக மாறிவிட்டதா? இதுதான் ஒரே கொள்கை, ஒரே கோட்பாட்டிற்கான அடையாளமா? Read more: http://viduthalai.in/e-paper/77488.html#ixzz2wvqMlYqD March 25, 2014 at 6:24 AM தமிழ் ஓவியா said... பெண்களுக்குச் சொத்துரிமை என்னும் புரட்சி செங்கற்பட்டுத் தீர்மானம் தி.மு.க.வினால் மத்தியில் நிறைவேறியது பெண்களுக்குச் சொத்துரிமை என்னும் புரட்சி செங்கற்பட்டுத் தீர்மானம் தி.மு.க.வினால் மத்தியில் நிறைவேறியது மக்களிடத்தில் எடுத்துச் சொல்லுவது அவசியம் தமிழர் தலைவர் அறிக்கை மத்திய கல்வி நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு தி.மு.க.வின் மகத்தான சாதனைதானே! பெண்களுக்குச் சொத்துரிமை - இந்து சாஸ்திர எதிர்ப்பு - அண்ணல் அம்பேத்கர் முயற்சி தோல்வி - 1929இல் செங்கற்பட்டு முதல் மாகாண சுயமரியாதை மாநாட்டுத் தீர்மானம் மத்திய ஆட்சியில் தி.மு.க.வின் முயற்சியில் நிறைவேற்றம் உள்ளிட்ட முக்கிய தகவல்களை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விளக்கி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: இந்துமதத் தர்மப்படி, பெண்களுக்குச் சொத்துரிமை இல்லாமல் துவக்கத்தில் செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம். அவர்கள் தங்கள் தந்தையர்க்கு பிண்டம் பிடித்துப் போடும் உரிமை இல்லாதவர்கள் என்பதால்தான்! ஆண் பிள்ளைகள் மட்டுமே அதனை சாஸ்திர சடங்காச்சாரப்படி செய்ய முடியும் என்பது இந்து தர்மம்! முன் நிபந்தனையோடு அன்று ஒரு சட்டம் எனவே இந்துக் கூட்டுக் குடும்பத்தில் (அவிபக்த குடும்பம்) என்பதில் உள்ள பெண்ணுக்குத் தந்தையின் சொத்தில், மகனுக்குள்ளதைப் போல மகள் உரிமை கொண்டாட வழியில்லாமல் இருந்தது. ஏன் கணவன் சொத்தில், கணவன் முன்பே இறந்து மனைவி விதவையான பிறகுகூட அந்த சொத்தில் மனைவிக்கு உரிமை இல்லாமல் முன்பு இருந்தது; பிறகு சற்று மாற்றம் வந்தது - அநேகமாக 1937 வாக்கில்; ஆனால் அதற்கொரு முன் நிபந்தனை வைக்கப்பட்டு விதவைக்கு இறந்த கணவனின் சொத்துரிமை கிடைத்தது. அந்த முன் நிபந்தனை அந்த விதவை கற்பு இழக்காத வராக இருக்க வேண்டும்! Ramnad Case கற்பிழந்த விதவை வழக்கு Widow’s Case என்பது பிரபலமான வழக்காகும். இதுபடிப்படியாக பல கட்டங்களில் மாறுதல் அடைந்தது. அம்பேத்கர் கொண்டு வந்த சட்டம் - எதிர்ப்பினால் பதவி விலகிய கொடுமை! இது ஒருபுறமிருக்க, மகளிருக்குச் சொத்துரிமை ஏற்படுத்த இந்து சட்டத்தை திருத்தி, ஆண்களைப் போல் (மகன்களுக்குள்ள உரிமை மகள்களுக்கும்) பெண்களுக் கும் வரவே இந்து சட்டத் திருத்த மசோதா (Hindu Code Bill) என்ற பெரும் சீர்திருத்த மசோதாவை அண்ணல் அம் பேத்கர் சட்ட அமைச்சராக இருந்த போது கொணர்ந்தார். சில சில பகுதிகளைப் பிரித்து சட்டமாக்கினர்; இந்த மகளுக்கு சொத்துரிமை - ஹிந்து தர்மத்தின் அடிப் படையைக் குலைக்கிறது என்று காரணம் காட்டி, ஹிந்து சனாதனிகள் கடும் எதிர்ப்பை, முதல் குடியரசுத் தலைவ ரான பாபு இராஜேந்திர பிரசாத் மூலம் காட்டி, அம்பேத்கரின் முயற்சி வெற்றி பெறாமல் தடுத்தார்கள். அதன் காரணமாகவே டாக்டர் அம்பேத்கர் பதவி விலகி வெளியேறினார். அவரது முயற்சி பிறகு தி.மு.க. பங்கு பெற்ற பிறகு நிறைவேற்றியதே! தி.மு.க. செய்த புரட்சி ஆனால் தி.மு.க. இடம் பெற்று 2004 தேர்தலுக்குப் பிறகு அமைந்த அய்க்கிய முற்போக்கு முன்னணி அமைச்சரவை 2005-இல் மகளுக்குச் சொத்துரிமைக்கு இருந்த தடையை நீக்கி ஏற்கெனவே இருந்த 1956ஆம் ஆண்டு சட்டத் திருத்தமாக நிறைவேற்றி 2006 செப்டம்பர் 9ஆம் தேதி முதல் அதை அமலாக்கி வைத்து வரலாறு படைத்தது. இதைவிட மகளிருக்கான சமூகப் புரட்சி வேறு உண்டா? 1929 செங்கற்பட்டு முதல் சுயமரியாதை மாகாண மாநாட் டின் தீர்மானம் இது! கலைஞர் தலைமையில் அமைந்த இயக்கம், மத்தியில் மக்களாதரவுடன் வெற்றி பெற்ற, நிகழ்த்திய சாதனை, பன்னூறு ஆண்டானாலும் வரலாற்றில் அழிக்கப்படாத மிகப் பெரிய அறிவுப் புரட்சி - அமைதிப் புரட்சி சாதனை அல்லவா? மக்களிடம் எடுத்துச் சொல்லுவோம்! இதை மக்களிடம் எடுத்துச் சொல்லி, திசை திருப்புவோர் தம் பொய்ப் பிரச்சாரத் திரையைக் கிழிப்பது இப்போதைய தேவை அல்லவா? கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் சென்னை 24.3.2014 Read more: http://viduthalai.in/e-paper/77482.html#ixzz2wvqVg3WA March 25, 2014 at 6:24 AM தமிழ் ஓவியா said... உண்டியலைப் பறி கொடுத்த பெருமாள் சென்னை, மார்ச் 24-மாதவரம் அடுத்த மூலச் சத்திரம் பெருமாள் கோயில் தெருவில் மிக பழமையான வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு பூசாரியாக நரசிம்மன் என் பவரும், துப்புரவு தொழி லாளியாக எல்லப்பன் என் பவரும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு கோயி லில் பூசைகள் முடிந்ததும், நரசிம்மன், கோயிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை கோயிலை சுத்தம் செய்ய எல்லப்பன் வந்தார். கோயில் உள்ளே சென்று பார்த்தபோது, நள்ளிரவில் கோயிலுக்குள் நுழைந்த சில நபர்கள் 5 அடி உயர உண்டியலை பெயர்த்து கொண்டு சென் றதை கண்டு, எல்லப்பன் அதிர்ச்சியடைந்தார். உடனே கோயில் நிர்வாகி களுக்கு தகவல் தெரிவித் தார். நிர்வாகி சங்கர் மாதவரம் பால் பண்ணை காவல்துறையில் புகார் செய்தார். காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். கோயில் பின்பக்கம் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் உண்டியல் உடைந்து கிடப் பது தெரியவந்தது. அதில் இருந்த பணத்தை சில நபர்கள் கொள்ளை யடித்து சென்றுள்ளனர். உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் ரூ.1 லட்சம் இருக்க லாம் என்று நிர்வாகி கூறி னார். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக் குப்பதிவு செய்து அந்த சில நபர்களை தேடி வருகின்ற னர். கோயில் உண்டியலை பெயர்த்து எடுத்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களி டம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read more: http://viduthalai.in/e-paper/77491.html#ixzz2wvqg6AZc March 25, 2014 at 6:25 AM தமிழ் ஓவியா said... கலைஞர் மாடல் என்பதே சரி! சிறுபான்மையினர்க்கு இடஒதுக்கீடு வழங்குவதில், கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு மிகவும் சாதுர்யத்தோடு, சட்டச் சிக்கலுக்கு இடமின்றி, மிகச் சரியாக நடந்து கொண்டது. ஆந்திர மாநிலத்தில் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு நீதிமன்றத்தில் அடி வாங்கியது. அதே தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. எதிலும் நிதானமும், வைக்கும் அடியில் உறுதியும், எடுத்துக் கொண்ட பிரச்சினையில் உண்மையான ஈடுபாடும் இருக்க வேண்டும். பேருக்கு நாம் செய்ததாக இருக்கட்டும் - நீதிமன்றம் செல்லாது என்று சொன்னால், அதைக் காரணம் காட்டித் தப்பித்துக் கொள்ளலாம் என்பது சிலரின் அணுகுமுறையாகும். கிராமப்புறங்களில் முதல் தலைமுறையைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கு 15 சதவீதம் இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்தார் கலைஞர். எதிர்த்து நீதிமன்றம் சென்ற போதுகூட, செல்லுபடியானது. கலைஞரைவிட தான் தீவிரமாக இருப்பதாகக் காட்டிக் கொள்வதற்காக 25 சதவீதமாக உயர்த்தினார் ஜெயலலிதா அம்மையார்; அதன் விளைவு - உள்ளதும் போச்சு என்ற நிலையில் நீதிமன்றத்தில் அடி வாங்கியது. நுழைவுத் தேர்வை ரத்து செய்து ஆணை பிறப்பித்தார் செல்வி ஜெயலலிதா அம்மையார்; அப்பொழுதே திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் சொன்னார். ஒரு நிபுணர் குழுவை அமைத்து அவர்களின் சிபார்சு அடிப்படையில் நுழைவுத் தேர்வை செயல்படுத்தினால் சட்டச் சிக்கல் வராது - நீதிமன்றமும் - ஏற்றுக் கொள்ளும் என்று சொன்னார். நல்லது சொன்னாலும் அதனை ஏற்றுக் கொள்ளும் ஒரு மனப்பக்குவம் இருக்க வேண்டுமே. எடுத்தேன் - கவிழ்த்தேன் என்று நுழைவுத் தேர்வை ரத்து செய்தார் முதல்வர் ஜெயலலிதா விளைவு நீதிமன்றத்தில் - அடிவாங்கியது தான் மிச்சம்! அதே நேரத்தில் அடுத்து ஆட்சிக்கு வந்த மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் கல்வியாளர் முனைவர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார்; அந்தக் குழு தந்த பரிந்துரையின் அடிப்படையில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அப்பொழுதும் அதனை எதிர்த்து நீதிமன்றம் சென்றனர். அரசு நுழைவுத் தேர்வு ரத்து செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது எடுத்துக் கொண்ட பிரச்சினையின்மீது நல்லெண்ணமும், ஈடுபாடும், நிதானமும் இருந்தால் எதிலும் வெற்றி கிடைக்கும். கலைஞர் அவர்கள் அப்படித்தான் நிருவாகத்தில் வெற்றி பெற்று வந்தார்! இந்தியாவிலேயே கலைஞர் மாடல் என்று சொல்லும் அளவுக்கு அவரின் நிருவாகம் கொடி கட்டிப் பறந்தது. சி.என்.என் - அய்.பி.என். என்னும் முன்னணி செய்தி நிறுவனம் தேசிய அளவில் வளர்ச்சி, சட்டம், ஒழுங்கு, அடிப்படைக் கட்டமைப்புப் போன்ற பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் தகுந்த நடுவர்கள் மூலம் அனைத்து மாநிலங்களையும் மதிப்பீடு செய்து, சிறந்த மாநிலத்தைத் தேர்வு செய்து வைர மாநில விருதினை வழங்கி வருகிறது; சிறிய மாநிலங்கள், பெரிய மாநிலங்கள் என்று வளர்ச்சி கணக்கிடப்பட்டு, தனித்தனியாக விருதுகள் வழங்கப்படும். அந்த வகையில் கலைஞர்ஆட்சியில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் என்ற வைர விருதினைப் பெற்றதே! புதுடில்லியில் நடைபெற்ற விழாவில் (23.2.2011) குடியரசுத் துணைத் தலைவர் மேதகு அமீத் அன்சாரி அவர்களிடம் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு பெற்றாரே, அந்த நிலை எல்லாம் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் உண்டா? சிறுபான்மை மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக் கப்பட்ட நிலையில் அம்மக்களின் வளர்ச்சி எந்த வகையில் சிறந்தது என்பது மிகவும் முக்கியம். முஸ்லீம்கள் தனி இடஒதுக்கீடு பெறுவதற்கு முன் மருத்துவக் கல்லூரிகளில் 2006-2007இல் பெற்ற இடங்கள் வெறும் 46. தனி இடஒதுக்கீடு என்ற நிலையில் 2007-2008இல் பெற்ற இடங்கள் 57; 2008-2009 இல் பெற்ற இடங்களோ 80; 74 சதவீத இடங்கள் முஸ்லிம்கள் கூடுதலாகப் பெற்றனர் என்றால் கல்வியில் வெகு காலமாக ஒதுக்கப்பட்ட சிறுபான்மை மக்கள், இந்தத் தனி இடஒதுக்கீட்டால் எத்தகைய மகத்தான வளர்ச்சியைப் பெற்றனர் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அதே போல பொறியியல் கல்லூரிகளில் இடஒதுக்கீடு இல்லாத கால கட்டத்தில் (2007-2008) பெற்ற இடங்கள் 2125. கலைஞர் ஆட்சியில் முஸ்லீம்களுக்குத் தனி ஒதுக்கீடு வழங்கப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டே (2008-2009இல்) அவர்கள் பெற்ற இடம் 3288; 2009-2010இல் அது 3655ஆக உயர்ந்தது! மோடி மாடல் என்பதெல்லாம் காற்றடைக்கப்பட்டு பொய்யாக வானத்தில் பறக்க விடப்பட்ட பலூன் - அப்படி சொல்ல வேண்டுமானால் கலைஞர் மாடல் என்பதுதான் மிகச் சரியானதாக இருக்க முடியும். நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும்; இப்பொழுது நன்றாகவே தெரிய ஆரம்பித்து விட்டதே! Read more: http://viduthalai.in/page-2/77498.html#ixzz2wvqpAdPR March 25, 2014 at 6:26 AM தமிழ் ஓவியா said... கலாச்சாரப்படி... பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிடர்கள்தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான். இதை அவர்கள் பின்பற்றுகிற கலாச்சாரப்படிக் கூறுகிறோம். (விடுதலை, 24.2.1954) Read more: http://viduthalai.in/page-2/77494.html#ixzz2wvr5Hgog March 25, 2014 at 6:26 AM தமிழ் ஓவியா said... தீய பழக்கங்களிலிருந்து விடுதலை அவசியம் நேற்று 23.3.2014 வெளியான தீக்கதிர் நாளேட்டின் இணைப்பாக வரும் வண்ணக்கதிரில் வெளிவந்த ஒரு சிறப்பான செய்தியை வாசக நேயர்களுக்காக அப்படியே தருகி றோம்: அவுரங்காபாத்தில் மகாத்மா காந்தி மிஷன் அறக்கட்டளை மருத்துவ மனையில் ஊடுகதிர் தொழில்நுட்ப வல்லுநர் (41, வயது) சர்தார் சஞ்சித் சிங். 2014 பிப்ரவரி 2ஆம் தேதி, பணியில் இருக்கும்போது அவருக்கு நெஞ்சு வலி, மயக்கம், வியர்த்தல் ஆகியவை ஏற்பட்டது. பரிசோதித்தபோது அவ ருக்கு ஹார்ட் அட்டாக் வந்திருப்பது தெரிய வந்தது. உடனடியாக அனைத்து மருத்துவ உதவிகளும் கொடுக்கப் பட்டன. அவசரப் பிரிவில் சேர்க்கப் படும்பொழுது இதயத் துடிப்பும், இரத்த அழுத்தமும், மிகவும் குறைந்திருந்தது. சிறிது நேரத்தில் இதயம் துடிப்பதும், நாடி துடிப்பும் நின்று விட்டது. இசிஜி திரையில் இதயம் செயலற்று விட்டதற்கான நேர் கோடு சமிக்ஞையே வந்தது. உடனடியாக செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. அவரது இதயத்தை மீண்டும் துடிக்க வைக்கும் முயற்சியாக பேசர் நுழைக்கப்பட்டது. அப்பொழுதும் இதயம் துடிக்காததால் செயற்கையான முறையை கையாண்டனர். மூளைக்கும் மற்ற முக்கிய உறுப்புகளுக்கும் இரத்தம் செல்வது உறுதி செய்யப்பட்டது. சுமார் 100 முறைக்கு செயற்கையான முயற்சிவிட்டு விட்டு மேற்கொள்ளப்பட்டது. 11/2 மணி நேர முயற்சிக்குப் பின் அவரது இதயம் மீண்டும் துடிக்க ஆரம்பித்தது. 4 நாள் களில் அவருக்கு முழு நினைவு திரும்பி யது. செயற்கை சுவாசம் அகற்றப்பட்டது. மூளையில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் அதிசயிக்கும் வகையில் விரைவாக முழு குணம் அடைந்தார். மருத்துவப்படி 90 நிமிடம் இறந்தவர் மீண்டும் உயிர் பிழைத்தது எப்படி? அவருடைய இளம் வயதும் அவருக்கு வேறு எந்த உடல் பாதிப்பும் இல்லாமல் இருந்ததே முக்கிய காரணமாக கருதப் படுகிறது. அதைவிடவும் மருத்துவர்கள் தங்கள் முயற்சியை தொடர்ந்து மேற் கொண்டதும் இந்த அரிய நிகழ்வுக்கு மற்றொரு காரணமாகும். உடலுக்குத் தீங்கு ஏற்படுத்தும் பழக்கங்களைப் பழகாமல் இருப்பது எவ்வளவு முக்கிய மானது என்பதையும் விடா முயற்சியுள்ள மருத்துவர்கள் அமைவது எவ்வளவு அருமையானது என்பதையுமே இது காட்டுகிறது. இதிலிருந்து மனிதர்கள் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் பல உள்ளன அல்லவா! நம் வாழ்வில் நாம் தேவையற்ற தீய பழக்க வழக்கங்களுக்கு ஒரு போதும் ஆளாகக் கூடாது. சில நல்ல நண்பர்கள்கூட நண்பர் களின் சகவாசதோஷத்தின் காரணமாக, புகைப்பிடித்தல், மது குடித்தல் - இதை ஒரு வாழ்க்கையின் அந்தஸ்தை உயர்த்திக் காட்டும் பழக்கம் என்று தவறான பழக்கத்தில் ஈடுபடுதல், மகளிரிடம் பண்பற்ற முறையில் நடந்து கொள்ளுதல், அதைப் பெருமையாகப் பேசி தமது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல் போன்றவற்றில் ஈடுபட் டால், பின்னால் அது நோய்களின் தாக்குதலுக்கு ஆளாகும்போது உதவி செய்யக்கூட வாய்ப்பிருக்காது என்ப தால் உங்கள் வாழ்வைப் பாதுகாக்கவா வது தனி மனித ஒழுக்கம் தேவை! தேவை!! தீய பழக்கங்களைப் புறந்தள்ளுவீர்! Read more: http://viduthalai.in/page-2/77501.html#ixzz2wvrEaNqP March 25, 2014 at 6:28 AM தமிழ் ஓவியா said... கூட்டணி அல்ல; சீட்டணி நேற்று சென்னையில் பேசிய, பாஜகவின் மூத்த தலைவர் வெங் கையா, தனி ஈழம் என்பதை பாஜக ஏற்கவில்லை; ஒன்றுபட்ட இலங்கை யில் தமிழ் மக்களுக்கு, ராஜீவ் ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தில் உள்ள 13-ஆவது திருத்தத்தின்படி, நடவ டிக்கை பாஜக வற்புறுத்தும் என ஓங்கி ஒலித்து விட்டார். கூடங்குளம் மின் உலையை மூடுவதற்கு பாஜக ஆதரவு இல்லை என்றும் சொல்லி விட்டார். இதற்கு முதல் நாள் தான், மதிமுக வின் தேர்தல் அறிக்கை வெளியிடப் பட்டது. அதில், மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் தமிழ் ஈழம் மலர வற்புறுத்துவோம் எனக் கூறப்பட்டுள் ளது. வைகோவை பொறுத்தவரை, தமிழ் ஈழப் பிரச்சினையை முன்னி றுத்தி அரசியல் நடத்துகிறார். அதன் அடிப்படையில் தான் காங்கிரசையும், திமுகவையும் விமர்சிக்கிறார். அண் மையில் புதுடில்லியில் மோடி பேசிய கூட்டத்தில் கலந்து கொண்டு பேசு கையிலும் ஈழத் தமிழர்களின் பிரச் சினையைப் பற்றி பேசினார். ஆனால், மோடி அது குறித்து ஒன்றும் பதில் தரவில்லை என்பது வேறு செய்தி. தங்கள் கட்சியில் முதன்மை விஷயமாகக் கருதப்படும், தமிழ் ஈழம் என்பதை ஏற்றுக் கொள்ளும் கட்சிகளோடு மட்டும் தான் கூட்டணி என்று சொல்வதற்கு, வைகோவிற்கு எது தடையாக இருக்கிறது? பாஜக தமிழ் ஈழப்பிரச்சினையில், காங்கிரசு என்ன நிலைப்பாடோ, அதே நிலைப்பாடு தான், பாஜகவிற்கும். அய்.நா. மன்றத்தில், இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என நாடாளுமன்றத் தில், திமுக கோரிக்கை வைத்து வாதாடிய போது, பாஜகவின் சார்பில் யஸ்வந்த் சின்கா என்ன சொன்னார்? அப்படி எல்லாம் ஒரு நாட்டிற்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டு வர முடியாது என நெத்தியில் அடித்தாற்போல் சொன்னாரே? இப்போது, பாஜக கூட்டணி, மோடி பிரதமர் என குதூகலமிடும், வைகோ, தனது முதன்மைப் பிரச் சினையாகக் கருதும் ஈழப் பிரச்சினை யில், காங்கிரசின் அதே நிலைப் பாட்டைக் கொண்டுள்ள பாஜகவிடம், ஈழப் பிரச்சினையில் ஆதரவு தந்தால் தான் கூட்டு சேருவோம் என சொல் லியிருக்க வேண்டாமா? அவ்வாறு செய்யாமல், பாஜக வந்தால் ஈழப் பிரச்சினை தீர்க்கப்பட்டு விடும் என்று சொல்வது, யாரை ஏமாற்ற? திராவிடர் கழகத் தலைவர் திரு.கி.வீரமணி அவர்கள் சொன்னது போல், இவர்கள் அணி, கூட்டணி அல்ல; வெறும் சீட் டணி தான் என்பதை மக்கள் புரிந்து கொண்டு, தக்க பாடம் அளிப்பார்கள். - குடந்தை கருணா Read more: http://viduthalai.in/page-2/77507.html#ixzz2wvrdRefj March 25, 2014 at 6:29 AM தமிழ் ஓவியா said... அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் மத்திய அரசுக்கு கலைஞர் வலியுறுத்தல் சென்னை, மார்ச் 24- அய்.நா. மனித உரிமை ஆணையத் தில் நடைபெறவுள்ள விவாதத்தின்போது ஈழத் தமிழர் களின்பால் அக்கறையோடு சர்வதேச சுதந்திரமான விசார ணையை வலியுறுத்தி அமெரிக்கா கொண்டுவரும் தீர் மானத்தை இந்தியா ஆத ரிக்க வேண்டுமென்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதாக தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் வேண்டு கோள் விடுத்துள்ளார். இதுகுறித்து கலைஞர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து, அய்.நா. மனித உரிமை ஆணையத்தில், சுதந்திரமான, நம்பகத்தன்மையுடன் கூடிய, சர்வதேச அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென்பதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டுமென்று டெசோ அமைப்பின் சார்பிலும், தி.மு. கழகத்தின் சார்பிலும் பலமுறை வலியுறுத்திக் கேட்டு வருகிறோம். அமெரிக்கா ஒரு தீர்மானத்தை தாக் கல் செய்துள்ளபோதிலும், அது உலகத் தமிழர்களின் விருப் பத்தை முழுவதுமாக நிறைவேற்றுகின்ற அளவிற்கு இல்லை என்ற குறைபாடுள்ளது. இதற்கிடையே அந்தத் தீர்மானத்தின்மீதான விவாதம் ஜெனீவாவில், மனித உரிமை ஆணையத்தில் மார்ச் 24 அல்லது 25 அன்றும், அதன் மீதான வாக்கெடுப்பு 26.3.2014 அன்றும் நடை பெற வுள்ளது. இந்த விவாதத்தில் இந்திய அரசு பங்கேற்று, சர்வதேச, சுதந்திரமான, நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணை வேண்டுமென்பதை வலியுறுத்த வேண்டும் என்பது அனைத்துத் தமிழர்களின் வேண்டுகோளாகும். ஏற்கெனவே இரண்டுமுறை தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டபோது, அதனை நீர்த்துப் போகச் செய்கின்ற வகையில்தான் இந்திய அரசு முயற்சிகளை மேற்கொண் டது. இப்போதும், அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் உள்ள இந்தியப் பொறுப் பாளர்கள், இலங்கை அரசுக்கு ஆதரவு திரட்டுவதாகச் சொல்லப்படுகிறது. இன்றைக்கும் இலங்கை ராணுவம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அச்சத்தை உண்டாக்கும் செயல்களில் ஈடுபட்டு வரு வதாகவும் செய்திகள் வருகின்றன. சிங்களர் கள், தமிழர்களுடைய நிலங்களை அபகரித்து, தமிழ் இனத்தின் அடையாளங்களை முற்றிலும் அழித்திடும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இந்த இன அழிப்பை முற்றிலும் நிறுத்திடவும், ஈழத்தில் வாழும் தமிழர்கள் நிம்மதியாக இருக்கவும், சர்வதேச சுதந்திரமான நீதி விசாரணை நிச்சயம் நடத்தப்பட வேண்டும். இந்திய அரசு அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் நடைபெற வுள்ள விவாதத்தின்போது, ஈழத் தமிழர்களின்பால் அக் கறையோடு, சர்வதேச சுதந்திரமான விசாரணையை வலியுறுத்தி, அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமென்று மீண்டும் மீண்டும் வலியுறுத்து கிறேன். - இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கையில் கூறியுள்ளார். Read more: http://viduthalai.in/page-8/77506.html#ixzz2wvsc3Ogm March 25, 2014 at 6:33 AM தமிழ் ஓவியா said... அந்தோ! டாக்டர் பூ.பழனியப்பன் மறைந்தாரே! நாட்டின் தலைசிறந்த மகப் பேறு மருத்துவரும், சீரிய பகுத்தறிவாளரும், சமூகநீதியில் ஆழ்ந்த பற்றுடையவருமான பேராசிரியர் டாக்டர் பூ.பழனி யப்பன் (வயது 84) அவர்கள் நேற்று (23.3.2014) இரவு 8 மணி யளவில் சென்னை -அண்ணா நகர் இல்லத்தில் காலமானார் என்ற செய்தி, நம்மை மிகப்பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. பரம்பரையான சுயமரியாதைக் குடும்பமான பதி வாளர் நளம்புத்தூர் (கொள்ளிடம் கரையில் உள்ள பழைய தென்னாற்காடு மாவட்டம்) பூவராகன் அவர்களது மூன்றாவது மகன் ஆவார். மறைந்த நிலவு பூ.கணேசன் எம்.ஏ., என்று அறியப்பட்ட செய்தித் துறை, குடும்ப நலத்துறை இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றவர் இவரது மூத்த அண்ணன். விடுதலையில் தொண்டாற்றியவர். அடுத்த சகோதரர் வேளாண்துறை அதிகாரியாக இருந்த திரு.பூ.சோலையப்பன் அவர்கள் ஆவார்கள். பெரியார் பெருந்தொண்டரான பதிவாளர் பூவ ராகன் அவர்கள் வழியிலேயே இம்மூவரும் சுயமரி யாதை வாழ்வே சுகவாழ்வு என்று வாழ்ந்தவர்கள். டாக்டர் பூ.பழனியப்பன் அவர்கள், முன்பு மருத் துவப் படிப்புத் துறைக்கு தி.மு.க. அரசால் தேர்வுக்குழு உறுப்பினராக பல ஆண்டுகள் இருந்தபோது, சமூக நீதிக் கண்ணோட்டத்தில், வாய்ப்பற்ற முதல் தலை முறைக் குடும்பத்து ஒடுக்கப்பட்ட சமூக மாணவ - மாணவிகள் பலருக்கும் வாய்ப்பு தந்து, சமூகநீதியை நடைமுறைப்படுத்தியவர். டாக்டர் பி.சி.ராய் விருது பெற்றவர் (1997). எஃப்.ஆர்.சி.எஸ். பட்டமும் பெற்று, மகப்பேறு மருத்துவத் துறையில் மிகவும் புகழ் பெற்றவர். இந்திய மகப்பேறு மற்றும் மகளிர் நோயியல் சங்கங் களின் கூட்டமைப்பின் தலைவராகவும் விளங்கி யவர். மருத்துவ மாணவர்களாலும், சக மருத்துவர்களா லும் பெரிதும் ஈர்க்கப்பட்டவர். நகைச்சுவை உணர்வு மிக்கவர்; நிறைய படித்து பொதுத் தகவல் களஞ்சிய மாகத் திகழ்ந்த பண்பாளர். முதுமையினால் வீட்டில் இருந்த அவரை சில மாதங்களுக்கு முன்பு நேரில் சென்று பார்த்து, கவிஞரும், நானும் நலம் விசாரித்துத் திரும்பினோம். வரும் 28 ஆம் தேதி அவர் எழுதி, முதல் பதிப்புடன் நின்று போன பல முக்கிய நோய்கள்பற்றி மக்கள் தெரிந்துகொள்ளவேண்டிய ஒரு நூலை, நாம் அவரு டைய அனுமதியோடு மறுபதிப்பிட்டு, சென்னை பெரியார் திடலில் (28.3.2014), மறு அறிமுக வெளியீட்டு விழா நடத்த ஏற்பாடு செய்து, அதில் அவரைப் பெருமைப்படுத்தத் திட்டமிட்டிருந்தோம்; அதற்கு அவரின் ஒப்புதலும் பெற்றோம். இயற்கையின் கோணல் புத்தி என்று தந்தை பெரியார் அவர்கள் கூறுவார்கள். அது இங்கே நடந்துவிட்டது. அவரை இழந்துவாடும் அவரது வாழ்விணையர், மகன் சேரலாதன், மகள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங் கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்னை 24.3.2014 கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் கழகத் தலைவர் மரியாதை மறைந்த டாக்டர் பூ.பழனியப்பன் உடலுக்கு கழகத் தலைவர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். டாக்டரின் துணைவியார், மகன் சேர லாதன் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.பார்வதி, திருமகள் மற்றும் மு.ந.மதியழன், விடுதலை ராதா, சி.வெற்றிச்செல்வி, திராவிடன் நலநிதி இயக்குநர் த.க.நடராசன் ஆகியோர் உடன் சென்று மரியாதை செலுத்தினர். Read more: http://viduthalai.in/page-8/77509.html#ixzz2wvtK0C8B March 25, 2014 at 6:35 AM தமிழ் ஓவியா said... உடலைப் பாதுகாக்க சில வழிமுறைகள் நாள்தோறும் பல் மட்டும் தேய்த்தால் போதாது. பல் தேய்த்த பின் நாக்கையும் வழித்து சுத்தம் செய்ய வேண்டும். உப்புத் தூளை நாக்கில் தேய்த்தும் சுத்தம் செய்யலாம். நாக்கு சுத்தமாக இருந்தால் ஆரோக்கியம்தான். சோற்றுக்கற்றா ழையை கண்ணாடி போல அலசி வெறும் வயிற்றில் விழுங்க, உடல் சூடு தணியும். வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். தலைமுடி உதிரத் தொடங்குகிறதா.. 25 கிராம் குன்றிமணியுடன் ஒரு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து பொடியுங்கள். அதை தேங்காய் எண்ணெயில் போட்டு ஒரு வாரம் ஊற வைத்து வடிகட்டுங்கள். தினமும் அதை தலைக்கு தடவி வந்தால் முடி உதிராது. பத்து சீத்தாப்பழ இலைகளை கொதிக்கும் வெந்நீரில் போட்டு வைத்து, மறுநாள் காலை அந்த தண்ணீரைக் குடித்து வர, சர்க்கரை கட்டுக்குள் வரும். சின்ன வயசிலேயே ஒரு முடி நரைத்து விட்டாலும் அது இளநரைக்கு அறிகுறிதான். கருவேப்பிலைதான் அதுக்கு மருந்து. கருவேப்பிலையை அரைத்து வடை போல் தட்டி காய வையுங்கள். பின்னர் அதை தேங்காய் எண்ணெயில் போட்டு கொஞ்சம் சூடுபடுத்துங்கள். அதில் ஒரு ஸ்பூன் பச்சை கற்பூரம் போடுங்கள். அந்த எண்ணெய்யை தினமும் தலைக்கு தேய்த்து வந்தால் இளநரை வராது. சின்ன துண்டு இஞ்சியை அரைத்து ஒரு டம்ளர் வெந்நீரில் கலக்கி அரை மணி நேரம் கழித்து, தண்ணீரை வடிகட்டுகள். அதில் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் தேன் கலந்து தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். இதயக்கோளாறு வரவே வராது. கண்களை ஒரு நாளைக்கு இரு வேளை சுத்தம் செய்ய வேண்டும். கண்ணாடி அணியாமல் பைக்கில் செல்வோர் வீட்டுக்குள் வந்ததும் கண்ணை கழுவ வேண்டும். கண்ணை திறந்து பல முறை தண்ணீரை அடித்து கழுவினால் தூசி நீங்கி விடும். காய்ச்சிய பாலில் நுங்குகளை நறுக்கிப் போட்டு தேவையான அளவு சர்க்கரை சேர்த்து ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிட சோர்வு நீங்கும். புழுங்கல் அரிசி சாதத்தில் முதல் நாளே தண்ணீர் ஊற்றி வைத்து, அந்த நீரை மறுநாள் உப்பு கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட களைப்பு நீங்கும். சீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் முடி உதிராது. Read more: http://viduthalai.in/page-7/77495.html#ixzz2wvtexqvC March 25, 2014 at 6:37 AM தமிழ் ஓவியா said... மருத்துவ குணம் கொண்ட தாழம்பூ தாழம் பூவின் மனம் மனதை மயக்கும் தன்மை கொண்டது. மனிதர்களை மட்டுமல்ல கொடிய விஷம் கொண்ட பாம்புகளையும் தன் வசம் ஈர்க்கும் சக்தியு டையது. தாழம்பூவை தலையில் வைத்துக்கொள்ள விரும்ப மாட்டார்கள். தாழம்பூ மணத்தை மட்டுமல்ல மருத்துவ குணத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. தாழம்பூவின் நறுமணம் உடலுக்கு புத்துணர்ச்சியை தரக்கூடியது. ரத்தம் சுத்தமடைய: உடலில் உள்ள அதிகப்பினால் சில சமயங்களில் பித்த நீர் இரத்தத்தில் கலந்துவிடுகிறது. இதனால் ரத்தம் அசுத்தம் அடைகிறது. அசுத்தம் அடைந்த ரத்தத்தை சுத்தப்படுத்த காயவைத்து பொடி செய்து நீரில் ஊறவைத்து அருந்தி வந்தால் ரத்தம் சுத்தமடையும். பசியை தூண்ட: என்னமோ தெரியல பசியே எடுக்கமாட்டங்குது ஏதோ நேரத்திற்கு சாப்பிடுகின்றேன் என்று சிலர் சொல்லி நாம் கேள்வி பட்டிருப்போம். இவர் கள் உடல் நிலையை பார்த்தால் மிகவும் மெலிந்து காணப் படுவார்கள் இவர்கள் தாழம்பூவை நிழலில் காயவைத்து பொடி செய்து தினமும் ஒரு ஸ்பூன் அளவு பொடியை நீரில் இட்டு கொதிக்க வைத்து அருந்தி வந்தால் நன்கு பசி எடுக்கும். வயிற்றுப் பெருமல் நீங்க: உணவின் மாறுபாட் டாலும் ரேநம், காலம் கடந்து உணவு உண்பதாலும் வயிற்றில் வாயுக்களின் சீற்றம் அதிகமாகி வயிற்று பெரு மலை உண்டாக்குகிறது. இதை போக்க நிழலில் உலர்த்தி அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால்வயிற்று பெருமல் குணமாகும்.. ரத்த சோகை நீங்க: ரத்த சோகையால் பாதிக்கப் பட்டவர்கள் உடல் மெலிந்து காணப்படுவார்கள். சுறு சுறுப்பு இல்லாமல் எப்போதும் சோம்பி திரிவார்கள். இந்தக் குறையை போக்க தாழம்பூவை தீநீர்(சித்த மருத்துவபடி எடுக்கப்படும் நீர்) எடுத்து அருந்தினால் குணமாகும். உடல்சூடு தணிய : உடல் சூடானால் வெப்ப நோய்களின் தாக்கம் அதிகரிக்கும். உடல் சூட்டை தடுக்க தாழம்பூவை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் பனைவெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் சூடு தணியும். Read more: http://viduthalai.in/page-7/77495.html#ixzz2wvtnPgLH March 25, 2014 at 6:37 AM தமிழ் ஓவியா said... வயிற்றுப்பூச்சிகளை அகற்றும் மிளகு அனைத்து வீடுகளின் அஞ்சறைப் பெட்டியிலும் அவசியம் இருக்க வேண்டியவை. சாதாரண சமையலில் கூட இவை இரண்டும் சேரும் போது, அதன் ருசியும் மணமும் பன்மடங்கு கூடுவதை உணரலாம். பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்று மிளகுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறது ஒரு பழமொழி அத்தகைய சிறப்புடையவை மிளகு. அதிக அளவு வியர்வையைத் தந்து, உடலிலுள்ள நச்சுப் பொருட்களை நீக்கக்கூடிய சக்தி கொண்டது. வயிறு மற்றும் குடல் புண்களை ஆற்றும். அல்சர் பிரச்சினை உள்ள வர்களுக்கு காரத்துக்கு மிளகு சேர்க்க அறிவுறுத்தப் படுவதன் பின்னணி இதுதான். மிளகு வீக்கத்தைக் குறைக்கும். வாய்ப்புண்களையும் ஆற்றும். அம்மை வந்தவர்களுக்கு சமையலில் மிளகுதான் பிரதானமாகச் சேர்க்கப்படும். நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு அவதிப்படுவோருக்கும் மிளகு அருமையான மருந்து. நாள்பட்ட இருமல், அதனால் ஏற்படும் தொண்டை வலிக்கும் மிளகு மருந்தாகும். முன்பு குழந்தைகளுக்கு வயிற்றுப்பூச்சிகள் அழிய கை மருந்துகள் கொடுக்கும் பழக்கம் இருந்தது. இன்று அதைப் பற்றி யெல்லாம் யாரும் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. பூச்சி மருந்து கொடுப்பதை மெனக்கெட்டு செய்ய நேரமில்லா தவர்கள், மிளகு அதிகம் சேர்த்த சூப் வைத்துக் கொடுத் தாலே, வயிற்றுப்பூச்சிகள் செத்துவிடும். இதைப் பெரியவர் களும் எடுத்துக் கொள்ளலாம். மிளகு மிகச்சிறந்த ஆன்ட்டிபயாடிக். அடிபட்டு, ரத்தம் கசிந்தால், அந்த இடத் தில் சிறிது மிளகுப்பொடி வைத்து அழுத்தினால் கசிவு உடனே நிற்கும். மிளகில் வெள்ளை மிளகு, கருப்பு மிளகு என இரண்டு வகை உண்டு. துரித உணவு போன்ற சில உணவுகளுக்கு வெள்ளை மிளகு உபயோகிக்கிறோம். உணவின் நிறம் மாறாமலிருக்க வேண்டும் என்பதே காரணம். வெள்ளை மிளகு என்பது தோல் நீக்கப்பட்டது... அவ்வளவுதான்! உண்மையான சுவை மற்றும் ஆரோக்கியம் எதில்? அவ்வப்போது தேவைக்கேற்ப கரகரப்பாகப் பொடித்து உபயோகிக்கிற கருப்பு மிளகில்தான்! அந்தந்த வேளைத் தேவைக்கு கொஞ்சமாக இடித்து உபயோகித்தால், அதன் மணமும் பலனும் முழுமையாகக் கிடைக்கும். Read more: http://viduthalai.in/page-7/77493.html#ixzz2wvtx21Cj March 25, 2014 at 6:38 AM தமிழ் ஓவியா said... இதய ஆரோக்கியம் மிகவும் அவசியம் இதயம் மனித உறுப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.. 24 மணிநேரமும் உறங்காமல் இயங்குவதால் தான் நம்மால் நிம்மதியாக உறங்கி மீண்டும் எழுந்து அன்றாட பணிகளை நாம் செய்து முடிக்கிறோம்.. நமக்காக ஓய்வே இல்லாமல் உழைத்துக்கொண்டி ருக்கும் இதயத்தின் ஆரோக்கியத்தை பற்றி நாம் கண்டுகொள்வதே இல்லை. காரணமே இல்லாமல் துன்பப்பட்டு இதயத்திற்கு பாரத்தை தருகிறோம். இவ்வாறு துன்பங்களை சேர்பதனால் மாரடைப்பு, இதயநோய் போன்றவை ஏற்படுகிறது. இதயத்தை பாதுகாக்க தடையாக இருக்கும் மன அழுத்தம், வேண்டாத உணவுகள், புகை பிடித்தல் போன்றவற்றை நீக்கி நல்ல முறையில் இதயத்தை பாதுகாக்க வேண்டும். மனஅழுத்தம்: உடல் பருமன், அதிக ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் இருப்பது, ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரிவது போன்ற பிரச்சினை உள்ளவர்களுக்கு மாரடைப்பு வர அதிக வாய்ப்பு இருக்கிறது என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். பெரும்பாலான நோய்களின் நிவாரணியே மவுனம், தியானம், நிதானம் தான்! எப்போதும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியம். இன்றைய பணிசூழலில் மனஅழுத்தம் மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணமாகிறது. முறையற்ற உணவுப் பழக்கம்: முறையற்ற உணவு பழக்கம் உள்ளவர்கள் உணவுப் பழக்கங்களை மாற்றி, உணவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தால் மாரடைப்பு வராமல் தடுக்கப்படுவதுடன், மாரடைப்பு வந்தவர்களுக்கு மீண்டும் ஏற்படாமல் தடுத்து நிறுத்தவும் முடியும். இதயத்தை காக்க மற்ற உணவு வகைகளைவிட, புரோட்டீன் வகை உணவுகள் இதயத்துக்கு இதம் தரு கின்றன. புரோட்டீன் இதயத்துக்கு நண்பன். முட்டையில் பி விட்டமின் இருக்கிறது. மீன் உணவுகளில் ஒமேகா3 , பேட்டி ஆசிட் இருக்கிறது. தோல் நீக்கிய சிக்கன் போன்ற வற்றை உணவில் சேர்த்து வந்தால் இதயத்துக்கு தேவை யான புரோட்டினைத் தந்து காக்கும். பருப்பு வகைகள், ஆலிவ் எண்ணை இவைகளில் குறைந்த கொழுப்பு உள்ளது. பட்டானி, பீர்க்கன்காய், வால்நட் முதலியன இதயத்தை காக்கும் உணவுகள்.. Read more: http://viduthalai.in/page-7/77493.html#ixzz2wvu6ghol March 25, 2014 at 6:38 AM தமிழ் ஓவியா said... ஒரே கல்லால் இரு காய்கள்! அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ்நாடு முதல் அமைச்சருமான மாண்புமிகு செல்வி ஜெ. ஜெயலலிதாவை நோக்கி எண்டிசையி லிருந்தும் ஓர் கணை ஏவப்படுகிறது. எல்லோரையும் சகட்டுமேனிக்கு, தரக் குறைவாக - எடுத்தேன் கவிழ்த்தேன் என்று விமர்சிக்கும் அம்மை யார் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பி.ஜே.பி.யைப் பற்றியோ, அக்கட்சியின் பிரதமருக்கான வேட்பாளர் திருவாளர் நரேந்திர மோடியைப்பற்றியோ ஒரே ஒரு வரி கூட மருந்துக்காகவாவது விமர்சிக்காதது ஏன்? என்ற வினாக்கணைகள்தான் அவை. திராவிடர் கழகத் தலைவரோ, திமுக பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களோ வினா எழுப்புவது ஒருபுறம் இருக்கட்டும். அ.இ.அ.தி.மு.க.வுடன் கடைசி நேரம் வரை கூட்டணிக்காக அளவு கடந்த சகிப்புத் தன்மை யுடன் நடந்து கொண்ட இடதுசாரிகள் கூட்டணி இல்லை என்ற நிலையில் அவர்களும் இந்த வினாவை எழுப்பி வருகிறார்கள்! இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் தா. பாண்டியன், இந்தியக் கம்யூ னிஸ்டு கட்சி (மார்க்சிஸ்டு)யின் மாநிலச் செயலாளர் தோழர் ஜி. இராமகிருஷ்ணன் ஆகியோர் இந்த வினாக் கணைகளைத் தொடுத்துள்ளனர். இவற்றிற்குப் பிறகும்கூட அம்மையார் ஜெயலலிதா வாய் திறக்கவில்லை; பதில் சொல்லவில்லை என்பதன் பொருள் என்ன? மவுனம் சம்மதத்துக்கு அடையாளம் என்றுதான் பொருள். இந்த நிலையைக் கணக்கில் கொண்டால் வாக்காளர் கள் முன் உள்ள ஒரே ஒரு பிரச்சினை மதவாதத்தை எதிர்ப்பது என்பது மட்டும் தான். அப்படிச் சொல்லும் பொழுது ஒரே கல்லால் இரண்டு காய்களை வீழ்த்து வதுபோல மதவாத எதிர்ப்பு என்று சொன்னாலே அது பி.ஜே.பி. அணிக்கும் பொருந்தும் அ.இ.அ.தி.மு.க.வுக் கும் பொருந்தும். ஆக தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஒரே பிரச்சினை - எளிதாக அனைவராலும் புரிந்து கொள்ளக் கூடியது- மதவாத எதிர்ப்பு என்ற ஒற்றை முழக்கமே போதுமானதாகும். பி.ஜே.பி.க்கு வாக்களிப்பதும் ஒன்றுதான் - அ.இ.அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான். இதில் பிரித்து பார்ப்பதற்கு இடம் இல்லை. தேசிய ஒருமைப்பாட்டுக் குழுக் கூட்டத்தில் கரசேவையை ஆதரித்து பேசியவர் (23.11.1992) தானே இவர். இந்தச் செய்தியைத் தினமணி வெளியிட்டுள் ளதே. ஃப்ரண்ட் லைன் இதழ் வெளியிட்டுள்ளதே. டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறி இருக்கிறதே! அப்பொழுது மறுக்காமல் இப்பொழுது மறுப்பது அசல் சந்தர்ப்பவாதம் தானே! மக்களுக்கு இதை நினை வூட்டுவதுதான் நமது கடமை. அதோடு விட்டாரா? அயோத்தியில் இராமன் கோயில் கட்டுவதை ஆதரிக்கிறீர்களா என்ற கேள்விக்கு ஜெயலலிதா என்ன சொன்னார்? ஆமாம்; ஆதரிக்கிறேன் இந்தியாவில் ஒரு ராமர் கோயில் கட்ட முடியவில்லை என்றால், வேறு எங்கே கட்ட முடியும்? (29.7.2003) என்று பதில் சொன்னவர் தானே? 150 ஆண்டு காலமாக தமிழர்கள் எதிர் பார்க்கும் திட்டம் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம். அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்று ஆட்சியிலும் பங்கேற்ற திமுக முயற்சியின் காரணமாக, கப்பல் துறை அமைச்சராகவிருந்த ஆற்றல்மிகு செயல் வீரர் மாண்புமிகு டி.ஆர். பாலு அவர்கள் இருந்த நிலையில் (ரூ.2427 கோடித்திட்டம்) அத்திட்டத்தில் பெரும் பகுதி முடிந்து , இந்நாளில் கப்பல் ஓடிக் கொண்டிருக்க வேண்டிய நிலையில், உச்சநீதிமன்றம் சென்று இடைக் காலத் தடை வாங்கி இருக்கிறாரே முதல் அமைச்சர் ஜெயலலிதா, என்ன காரணம் சொல்லித் தடுத்துள்ளார்? ராமன் பாலத்தை இடித்து இந்துக்களின் மனதைப் புண்படுத்துகிறார்கள் என்று சொன்னாரே - இதன் பொருள் என்ன? ராமன் கோயிலை அயோத்தியில் கட்டுவோம் - ராம ராஜ்ஜியத்தை உருவாக்குவோம் என்று சொல்லும் பி.ஜே.பி.க்கும் அ.இ.அ.தி.மு.க.வுக்கும் என்ன வேறுபாடு? இந்த நிலையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முகவுரையில் கூறப்பட்டுள்ள மதச் சார்பின்மையைக் (Secular State) காப்பாற்றும் வகையில் பல இனங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள், பல மதங்கள், மத நம்பிக்கை இல்லாதவர்கள் - 120 கோடி எண்ணிக் கையில் வாழும் இந்திய மக்கள் நல்லிணக்கத்துடன், சகோதரத்துவத்துடனும், அமைதியுடனும் நல்வாழ்வு வாழ வகை செய்யும் - மதச்சார்பின்மையை வீழ்த்தத் துடிக்கும் இரட்டைக் குழல் துப்பாக்கியான பி.ஜே.பி. அணி, அ.இ.அ.தி.மு.க. அணியைத் தோற்கடிப்பீர் வாக்காளர்ப் பெரு மக்களே! Read more: http://viduthalai.in/page-2/77541.html#ixzz2x1jmbPUL March 26, 2014 at 6:35 AM தமிழ் ஓவியா said... ஒன்றுமே இல்லை பார்ப்பனரின் பதவிக் கொள்கையெல்லாம், தனக்கு வராதவை தமிழனுக்குப் போகக்கூடாது - கீழே கொட்டி விடுவோம். அதாவது தமிழன் என்கின்ற உணர்ச்சி இல்லாத எவனுக்கோ போகட்டும் என்பதைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை. - (விடுதலை, 17.10.1954) Read more: http://viduthalai.in/page-2/77540.html#ixzz2x1k3qXWA March 26, 2014 at 6:36 AM தமிழ் ஓவியா said... என்ன செய்யப் போகிறது மதிமுக - பாமக வ(ச)கயறாக்கள்! ராமன் கோவில் கட்டியே தீருவோம் கர்ச்சிக்கிறார் கல்யாண் சிங்! புலந்தசாகர் மார்ச் 25: ராமன் கோவில் கட்டுவது எங்கள் கட்சியின் அறிக்கை அல்ல; மக்களின் மனநிலையைச்சார்ந்தது, கோடானகோடி இந்துக் களின் ஒருமித்த கருத்து ராமன் கோவில் கட்டு வது தான் என கல்யாண் சிங் பத்திரிகையாளர்களிடம் கூறினார். ராமன் கோவில் விவகாரத்தில் இதுவரை மவுனம் காத்துவந்த காவிகள் மெல்ல மெல்ல தங்களின் உண்மை முகத்தை வெளிகாட்டத் துவங்கியுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு மனோகர் ஜோஷி பொதுசிவில் சட்டம், மற்றும் அரசியலமைப்பு சட்டம் 370 குறித்து கருத்து தெரிவித்து இருந்தார். அப்போது ராமன் கோவில் குறித்து தன்னுடைய கருத்தை கூறியபோது இது எங்கள் கட்சியின் தலை யாய குறிக்கோள் என்று கூறினார். இதனிடையே அரசியலில் இருந்து விலகி இருந்த கல்யாண் சிங் மீண்டும் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தார். தற்போது அவருக்கு உத்தரப்பிரதேசத்தில் புலந்த்சாகர் தொகுதி வழங்கப்பட உள்ளது. பாரதீய ஜனதாவில் இணைந்த உடன் மீண்டும் புலந்தசாகர் நகருக்கு வருகை புரிந்த கல்யாண் சிங்கிடம் ராமன் கோவில் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பபட்டது. இதற்கு பதில் கூறிய கல்யாண் சிங் ராமன் கோவில் விவகாரம் பாரதீய ஜனதாகட்சியின் தனிப்பட்ட முடிவிற்குட்பட்டது அல்ல, அது நாட்டில் உள்ள கோடான கோடி இந்துக்களின் மனம் சார்ந்த பிரச் சினை, மக்களின் கருத்துப்படியே எங்களின் திட்டங் கள் அமையும் அதில் ராமன் கோவில் கட்ட வேண்டும் என்ற திட்டம் முதன்மையானது. ராமன் கோவில் விவகாரத்தில் பாரதீய ஜனதா கட்சி எந்த ஒரு சமாதானமும் செய்துகொள்ளாது என்று கூறினார். Read more: http://viduthalai.in/e-paper/77548.html#ixzz2x1kXWdQq March 26, 2014 at 6:38 AM தமிழ் ஓவியா said... பி.ஜே.பி.யின் தரம் இவ்வளவுதான்! சிறீராம் சேனா தலைவர் முத்தலிக்கை கட்சியில் காலையில் சேர்த்து மாலையில் நீக்கிய மர்மம் என்ன? திடுக்கிடும் தகவல்கள்! தேர்தல் சமயத்தில் வாக் குகளைப்பெற்று வெற்றி யுடன் தங்களது கட்சி வேட் பாளர்களை நாடாளுமன் றம் செல்ல பல கட்சிகள் உள்ளூர்பிரமுகர்களை வலிய சேர்த்துக்கொள்ளும், ஆனால், தற்போது பாரதீய ஜனதா கட்சி புதிய உத்தியைக் கடைபிடித்து வருகிறது. அதாவது உள்ளூரில் பிரபல ரவுடிகள் மற்றும் குற்றவாளிகளை எல்லாம் பிடித்து வந்து தன்னுடைய கட்சிபிரமுகர்களாகவும், சிலரை வேட்பாளராகவும் நிற்க வைக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு கருநாடகாவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட குவாரி ஊழல் புகழ் ரெட்டி சகோதரர்களுள் ஒருவரான சிறிராமுலுவை மீண்டும் பாரதீய ஜனதா கட்சியில் சேர்த்ததற்குக் கடு மையாக எதிர்ப்பு தெரிவித் தனர். ஆனால், கட்சிக்குப் போதுமான அளவு நிதி கொடுப்பதில் முன்னணி வகிக் கும் ரெட்டி சகோதரர்களை நீக்க தலைமை ஒப்புக் கொள்ளவில்லை. (ரெட்டி சகோதரர்கள் ஊழல் புகா ரில் சிக்கியபோது, விமர் சனம் செய்த சுஸ்மா சுவ ராஜை இந்த சிறீராமுலு ஒருமையில் திட்டியதாக கன்னட நாளிதழான விஜய வாகினி செய்தி வெளியிட் டிருந்தது. காவிகளில் கூடா ரத்தில் பெண்களுக்கு மரி யாதையை எதிர்பார்ப்பது சேற்றில் கரைத்துவிட்ட சந்தனத்தின் வாசனையைத் தேடுவது போன்றுதான்) யார் இந்த முத்தலிக்? அதே போல் சிறீராம் சேனா தலைவர் முத்தலிக் கின் விவகாரத்திலும் காவிக் கட்சி நடந்துகொண்டது. யார் இந்த முத்தலிக் என்று பார்க்கலாம். 1. இந்திய கலாச்ச ரத்தை காக்கிறோம் என்ற போர்வையில் பெண் களைத் தாக்கி பாலியல் ரீதியாக சித்திரவதை செய்த கலாச்சார காவலர்கள் ராம் சேனா அமைப்பினர் இவர் களின் தலைவன் தான் இந்த முத்தலிக் இவனைப்பற்றி சில அறிமுக உரை... 2. பல லட்சம் தந் தால் வெற்றிகரமாக வகுப் புக் கலவரத்தை நடத்தி முடிப்பேன் என்று ஸ்ட்ரிங் ஆப்பரேசனில் கூறி சிக்கியவன்.. 3. கருநாடகாவில்20-க்கும் மேற்பட்ட தேவாலயங் களைத் தாக்கியதில் இந்த முத்தலிக்கின் தலைமையி னால் ஆன ராம் சேனாவின் பங்கு உண்டு .. 4. சில ஆண்டுகளுக்கு முன்னர் கருநாடகாவின் அரசு கட்டடத்தில் பாகிஸ் தான் கொடியை இவர்களே ஏற்றி இனக்கலவரத்தை உருவாக்க முனைந்தனர்... இவன் மீது மொத்தம் 21 வழக்குகள் உள்ளன. இதில் 9 வழக்குகள் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத் திய வழக்குகள். காலையில் சேர்ப்பு மாலையில் நீக்கம்! கருநாடகா ஷிமோகா மற்றும் உத்தர்கன்னடா, சிக்மகளூர் உடுப்பி மாவட் டங்களில் இவருக்குப் பெரும் புகழ்??? நிலவுகிறதாம். ஆகையால் இவரை கட்சி யில் இணைத்துக் கொண் டால் அந்தப்பகுதி வாக் காளர்களை மிரட்டியே தங் களது கட்சி வேட்பாளர் களை வெற்றி பெற வைத்து விடுவார்கள் என்ற நினைப் பில் இவரை ஞாயிற்றுக் கிழமை காலையில் சேர்த் துக் கொண்டார்கள். ஆனால், இவரை கட்சியில் இணைத்த உடன் மங்களூர் மற்றும் உடுப்பியில் பெண்கள் வீதி யில் இறங்கி போராட்டம் நடத்தும் நிலை உருவானது. கருநாடகாவில் பெரு நகரங்களைத்தவிர மற்ற இடங்களில் அதிகம் பெண் களின் ஓட்டுதான் அங்குள்ள வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை முடிவு செய்கிறது, ஆகையால் பெண்களின் எதிர்ப்பு வெளிக் கிளம்பும் முன்பு டில்லி தலைமையிடம் அறிவித்து கட்சியில் சேர்ந்த 4 மணி நேரத்திற்குள் பாரதீய ஜனதா கட்சியில் இருந்து நீக்கிவிட்டார்கள். இதிலும் ஒரு உள் ஒப் பந்தம் போடப்பட்டுள்ள தாம், அதாவது தேர்தல் முடி யும் வரை காத்திருங்கள், நரேந்திர மோடி பிரதமர் ஆன பிறகு உங்களுக்குச் சிறப்பு கவனிப்பு உண்டு என்று கருநாடக பாரதீய ஜனதா பிரமோத் முத்தலிக் கிடம் கூறினார்களாம். ஆமாம் மோடி அதிகா ரத்திற்கு வந்த பிறகு நாட்டு நடப்பை தனது கைக்குள் வைக்க அமித்ஷா, பிரமோத் முத்தலிக் போன்ற சமூக சேவகர்கள் தேவைதானே! - ஹிந்துஸ்தான் டைம்ஸ் 24.3.2014 Read more: http://viduthalai.in/e-paper/77547.html#ixzz2x1kh7wmM March 26, 2014 at 6:39 AM தமிழ் ஓவியா said... ஆர்.எஸ்.எஸ். நேரடி அரசியல் ஈடுபாடு ஆர்.எஸ்.எஸ். நேரடி அரசியல் ஈடுபாடு பாஞ்ச் ஜன்யா என்கிற அரசியல் செய்தித்தாளை, ஆர்.எஸ்.எஸ். புதுடில்லி யில் மீண்டும் துவக்குகிறது. ஆர்.எஸ்.எஸ். நேரிடை யாக இந்தத் தேர்தலை மோடியை வைத்து நடத்து கிறது. இங்குள்ள மாநிலக் கட்சிகள் புரிந்து கொள் ளட்டும். வெற்றி யார் கையில்? எல்லோரும் தேர்தல் வெற்றிபற்றி பேசிக் கொண்டு இருக்கையில் சினிமா ரசிகர்களுக்கோ வேறு கவலை. ரஜினியின் கோச்சடையான் படம் வெற்றி பெறுவதற்கு ரசிகர் கள் திருப்பதிக்குப் பாத யாத்திரையாம்! படத்தின் வெற்றி அதன் சிறப்புகளால் அல்ல; ஏழு மலையான் அருள் பாலித்தால்தான் வெற்றியாம்! ரஜினியின் திறமையை இப்படியா அவமதிக்க வேண்டும்? மூன்று வழக்குகள் ஆளும் அ.இ.அ.தி. மு.க.வின் மீது கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மூன்று வழக்குகளைப் பதிவு செய்துள்ளார். அதில் ஒன்று முதல் அமைச்சர் கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டத்துக்கு மின் கம்பத்திலிருந்து கொக்கிப் போட்டு மின்சாரத்தைத் திருடியதாம். Read more: http://viduthalai.in/e-paper/77546.html#ixzz2x1kpju85 March 26, 2014 at 6:39 AM தமிழ் ஓவியா said... என்ன செய்யப் போகிறது மதிமுக - பாமக வ(ச)கயறாக்கள்! ராமன் கோவில் கட்டியே தீருவோம் கர்ச்சிக்கிறார் கல்யாண் சிங்! புலந்தசாகர் மார்ச் 25: ராமன் கோவில் கட்டுவது எங்கள் கட்சியின் அறிக்கை அல்ல; மக்களின் மனநிலையைச்சார்ந்தது, கோடானகோடி இந்துக் களின் ஒருமித்த கருத்து ராமன் கோவில் கட்டு வது தான் என கல்யாண் சிங் பத்திரிகையாளர்களிடம் கூறினார். ராமன் கோவில் விவகாரத்தில் இதுவரை மவுனம் காத்துவந்த காவிகள் மெல்ல மெல்ல தங்களின் உண்மை முகத்தை வெளிகாட்டத் துவங்கியுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு மனோகர் ஜோஷி பொதுசிவில் சட்டம், மற்றும் அரசியலமைப்பு சட்டம் 370 குறித்து கருத்து தெரிவித்து இருந்தார். அப்போது ராமன் கோவில் குறித்து தன்னுடைய கருத்தை கூறியபோது இது எங்கள் கட்சியின் தலை யாய குறிக்கோள் என்று கூறினார். இதனிடையே அரசியலில் இருந்து விலகி இருந்த கல்யாண் சிங் மீண்டும் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தார். தற்போது அவருக்கு உத்தரப்பிரதேசத்தில் புலந்த்சாகர் தொகுதி வழங்கப்பட உள்ளது. பாரதீய ஜனதாவில் இணைந்த உடன் மீண்டும் புலந்தசாகர் நகருக்கு வருகை புரிந்த கல்யாண் சிங்கிடம் ராமன் கோவில் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பபட்டது. இதற்கு பதில் கூறிய கல்யாண் சிங் ராமன் கோவில் விவகாரம் பாரதீய ஜனதாகட்சியின் தனிப்பட்ட முடிவிற்குட்பட்டது அல்ல, அது நாட்டில் உள்ள கோடான கோடி இந்துக்களின் மனம் சார்ந்த பிரச் சினை, மக்களின் கருத்துப்படியே எங்களின் திட்டங் கள் அமையும் அதில் ராமன் கோவில் கட்ட வேண்டும் என்ற திட்டம் முதன்மையானது. ராமன் கோவில் விவகாரத்தில் பாரதீய ஜனதா கட்சி எந்த ஒரு சமாதானமும் செய்துகொள்ளாது என்று கூறினார். Read more: http://viduthalai.in/e-paper/77548.html#ixzz2x1l7Ua00 March 26, 2014 at 6:40 AM தமிழ் ஓவியா said... ஒடுக்கப்பட்ட மக்களே மீண்டும் இந்து மதத்திற்கு வராதீர்கள் மாயாவதி வேண்டுகோள் புவனேசுவரம், மார்ச் 25 நலிவடைந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் மதம் மாறு வதற்கு பதிலாக அரசை மாற்ற வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலை வர் மாயாவதி கூறியுள்ளார். ஒடிஷா மாநிலம் புவ னேசுவரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள், ஒடிசா மாநி லத்தில் தலித் மற்றும் ஆதி வாசிகள் வசிக்கும் பகுதிக் குச் சென்று மீண்டும் இந்து மதத்திற்கு வரச்சொல்லி பாத பூஜைகள் செய்து வருகின்றனர். இவர்களின் பேச்சை நம்பி மக்கள் மதம் மாறுவதற்குப் பதிலாக மத்திய அரசையும் மாநில அரசையும் மாற்றவேண் டும். நாடு சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகளாகியும், தலித் மற்றும் பழங்குடியின மக் களிடம் எந்த முன்னேற் றமும் இல்லை. வெளிநாட்டு வங்கி களில் கோடிக்கணக்கில் கருப்புப் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றை மீட்டுக் கொண்டுவர தற்போதைய காங்கிரஸ் தலைமையி லான அரசும், முந்தைய பாஜக தலைமையிலான அரசும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஏனெனில் இரு அரசின் பொருளா தாரக் கொள்கைகளும் ஒரே மாதிரிதான் இருக்கின்றன. கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வந்தால், அவற்றை வைத்து ஏழை மக்களின் பெரும்பாலான சிக்கல் களைத் தீர்த்து விடலாம். வறுமையும் வேலை யில்லாத் திண்டாட்டமும் தீவிரவாதம் துளிர்ப்பதற்கு முக்கியக் காரணங்களாகும். அடித்தட்டு மக்களின் சிக் கல் தீர்க்கப்படும்போது மாவோயிஸ்ட் தீவிரவாதம் குறையும் என்றும் மாயா வதி பேசினார். - (தைனிக் ஜாகரன் 25.3.2014-இந்தி இதழ்) Read more: http://viduthalai.in/e-paper/77552.html#ixzz2x1lFhHfn March 26, 2014 at 6:41 AM தமிழ் ஓவியா said... நடப்பது எமர்ஜன்சியா? இப்பொழுது நடப்பது எமர்ஜன்சியா! அந்தக் கால கட்டத்தில்தான் தனி நபர் வழிபாடு உச்சக் கட்டத்தில் இருந்தது. இப்பொழுது அது பி.ஜே.பி.யில் தொற்றிக் கொண்டு வந்து விட்டது - நமோ வழிபாடு தொடங்கி விட்டது. இதுதான் இன்றைய பி.ஜே.பி. இப்படி சொல்லி இருப்பவர் பி.ஜே.பி.யின் முக்கிய தலைவரும், முன்னாள் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை (பிஜேபி ஆட்சியில்) அமைச்ச ராகவும் இருந்து - இன்றைக்கு மோடியின் தயவால் ஓரங் கட்டப்படும் பெரிசுகளின் பட்டியலில் உள்ள ஜஸ்வந்த்சிங். ஊடகங்களின் போக்கு அன்னா அசாரே இயக்கத்தையும் ஆம் ஆத்மியையும் அதன் தொடக்கக் காலத்தில் எந்த விமர்சனங்களும் இன்றி மிகப் பெருமளவில் ஆதரித்த சில தொலைக்காட்சிகள், ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி வெற்றிக்குப் பிறகு - குறிப்பாக பா.ஜ.க. மோடி முகேஷ் அம்பானி ஆகியோரை ஆம் ஆத்மி கட்சி கடுமையாகத் தாக்கத் தொடங்கிய பின்னர், தங்கள் நிலைப்பாட்டை (80 டிகிரி) மாற்றிக் கொண்டதைப் பார்த்தோம்; அய்க்கிய முற் போக்குக் கூட்டணியின் ஊழல்களை ஆம் ஆத்மி கட்சி தாக்கியபோது அதை ஆர்ப்பரித்து ஆதரவளித்த இந்த சில ஊடக நிறுவனங்கள் தாக்குதலின் மய்யம் மோடி மற்றும் அம்பானி என்று ஆனபோது விழித்துக் கொண்டன. - தி இந்து விமர்சனக் கட்டுரை (25.3.2014) கருப்புக்கொடி! கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பெத் தான் பேட்டை கிராமப் பகுதியில் குடிநீர் வசதி, சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சற்றும் இல்லாத நிலையில் அப்பகுதிக்கு வாக்குக் கேட்க வந்த அத்தொகுதி மக்களவை உறுப்பினரும், இந்நாளில் அதிமுக வேட்பாள ருமான தம்பித்துரைக்கு கிராமத்தினர் கறுப்புக் கொடி களைக் கட்டி தங்கள் எதிர்ப்பினை, வெறுப்பினை வெளிப்படுத்தினர். இனம் இனத்தோடு... நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் அ.இ.அ.தி. மு.க.வை ஆதரிப்போம் என்று பார்ப்பன சங்கம் அறிவித் துள்ளது. சரி தானே! இனம் இனத்தோடு சேர்கிறது.. தயார்! தயார்!! தேர்தலில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட நான் தயார் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக் விஜய்சிங் கூறியுள்ளார். தேர்தல் கணிப்பின் பின்னணியில் பெரும் பணம் புரள்கிறது - எனவே தேர்தல் கணிப்பை நான் எப்பொழுதுமே பொருட்படுத்துவதில்லை என்றார் அவர். Read more: http://viduthalai.in/e-paper/77549.html#ixzz2x1lP7Cuj March 26, 2014 at 6:42 AM தமிழ் ஓவியா said... பாஜகவை நோக்கிப் பாயும் அம்புகள் ஜஸ்வந்த்சிங் தாக்கு பாரதீய ஜனதா மூத்த தலைவர் ஜஸ்வந்த்சிங்குக்கு, அவர் விரும்பிய படி ராஜஸ்தான் மாநிலம், பார்மரில் போட்டியிட டிக்கெட் வழங்கப்படா தது, அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.அதனை தொடர்ந்து இந் நிலையில் பார்மர் தொகுதியில் ஜஸ் வந்த்சிங் வேட்பு மனு தாக்கல் செய் துள்ளார். பாரதீய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும் முன் னாள் மத்திய அமைச்சருமான ஜஸ்வந்த்சிங். செய்தியாளர் களிடம் கூறியதாவது; சித்தாந்தங்களுக்கு பெயர் போன தனது கட்சி, இப்போது போலிகளின் வசம் போய் விட்டதாக விமர்சித்தார்.இபோது பாரதீய ஜனதா இரண்டு வகையாக உள்ளது ஒன்று உண்மையானது மற்றொன்று போலியானது என்று கூறினார். இது ஒரு நமோ நாடகம் என்றும் இது பாஜகவை அழிவு பாதையில் இட்டு செல்லும் என்று கூறினார். பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த எந்த தலைவரும் ஏன் கட்சியில் இருந்து விலகி உள்ளீர்கள் என்று யாரும் என்னை கேட்க வில்லை என்று கூறினார். பாரதீய ஜனதா கட்சி மக்களிடம் தொடர்புகள் வைத்து கொள்ளவில்லை அது ஒரு பகுதியாகதான் உள்ளது என்று ஐஸ்வந்த் சிங் கூறினார். பிருந்தா காரத் தொடுப்பு நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது என்று பொய்ப்பிரச்சாரம் செய்து வரும் பாரதீய ஜனதா கட்சி, உண்மையில் தோல்வி அச்சத்தின் உச்சத்தில் நிற்கிறது என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அர சியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் கூறினார். பாஜகவின் தோல்விபயம் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அதன் நடவடிக்கை களில் இருந்தே பளிச்சென தெரிய வருகிறது. அக்கட்சி தனது சொந்த மூத்த தலைவர்களை ஏமாற்றி தெருவில் நிற்கச் செய்கிறது. ஆனால் முசாபர் நகரில் முஸ்லிம் மக்க ளை கொன்றுகுவிக்க காரணமான வன்முறைக் குற்றவாளி களுக்கு தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கிறது; குஜ ராத்தில் போலி என்கவுண்ட்டர் படு கொலை வழக்கில் குற்றவாளியான அமித் ஷாவையும், மங்களூரில் பெண் களை இழிவுபடுத்தி வெறித்தாக்குதல் நடத்திய மதவெறியன் பிரமோத் முத்தலிக் போன்றவர்களுக்கு கட்சியில் இடம் கொடுக்கிறது என்று பிருந்தா காரத் கடுமையாக சாடினார். குறிப்பாக பாஜகவின் மதவெறி நடவடிக்கைகள் குறித்தும், குஜராத் மாநிலத்தில் மோடி முன்வைக்கும் வளர்ச்சி யாருக்கானது என்பது குறித்தும் ஏராளமான உண்மை விவரங்களோடு உருவாகியுள்ள இந்த பிரசுரங் களை திங்களன்று கட்சியின் மத்தியக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் வெளியிட்டார்.இந்த நிகழ்ச்சி யின்போது கட்சியின் குஜராத் மாநிலத் தலைவர்களில் ஒருவரான அருண்மேத்தாவும் கலந்து கொண்டு செய்தியாளர் களிடம் பேசினார். அப்போது அவர் கூறு கையில், மோடியும் அவரது ஆதரவு ஊடகங்களும் பிரச்சாரம் செய்கிற குஜராத் மாடல் என்பது ஏழைத் தொழிலாளர்களை அப்பட்டமாகச் சுரண்டுகிற கொடூரமான மாடல்; குஜராத் உழைப்பாளி மக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்காக செலவு செய்கிற தொகை மிகமிகக்குறைவாக மாறியிருக்கிறது; ஊட்டச்சத்தின்மை நாட்டிலேயே அதிகமாக நிலவுகிற மாநிலம் குஜராத்; பள்ளிகளிலிருந்து குழந்தைகள் மிக அதிகமாக இடைநின்றி யிருக்கும் மாநிலமும் குஜ ராத்; நாட்டிலேயே கல்விக்கும் சுகாதாரத்திற்கும் குறைவான தொகை யை செலவழித் திருப்பதும் மோடியின் குஜராத் என்று அம்பலப்படுத் தினார். முன்னதாக பிரசுரங்களை வெளியிட்டுப் பேசிய பிருந்தா காரத் கூறுகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் இந்த சிறு நூல்களில் இடம்பெற்றுள்ள அனைத்துப் புள்ளிவிபரங் களும் அரசு நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ புள்ளி விபரங் களே என்று தெளிவு படுத்தினார். மோடியின் குஜராத் மாடல் என்பது முழுக்க முழுக்க கார்ப்பரேட் கம்பெனிகளுக்கானது மட்டுமேயன்றி எளிய மக்களுக்கானது அல்ல என்றும் பிருந்தா காரத் விமர்சித்தார். ஒமர் அப்துல்லா பிஜேபி மேலிடம் ஜஸ்வந்த் சிங் போன்ற, ஜென்டில்மேன்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கொடுக்காமல் குண்டர்கள், ஊழல் பேர்வழிகளுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்து அவர்களைக் கட்சியில் சேர்த்துக் கொள்கிறது. இது எந்த மாதிரியான அரசியல் என்று எனக்குப் புரியவில்லை. Read more: http://viduthalai.in/page-8/77580.html#ixzz2x1mT0BBI March 26, 2014 at 6:46 AM தமிழ் ஓவியா said... பி.ஜே.பி.,க்குள் நடக்கும் பனிப்போர் வீதிக்கு வந்த கேலிக் கூத்து! போபால், மார்ச் 26- பி.ஜே.பி.க்குள் நடக்கும் பனிப்போர் இப்பொழுது வீதிக்கும் வந்து சந்தி சிரிக் கிறது. பா.ஜ.க., பிரதமர் வேட் பாளர், நரேந்திர மோடிக் கும், கட்சியின், முக்கிய தலைவர்களில் ஒருவரான, சுஷ்மா சுவராஜுக்கும் இடையே மோதல் ஏற்பட் டுள்ளதாக வெளியாகும் தக வல்களால், பா.ஜ.க.,வினர் இடையே கலக்கம் நிலவு கிறது. தேர்தல் பிரச்சார கூட் டங்களில், சுஷ்மா சுவராஜ், நரேந்திர மோடியின் பெயரை உச்சரிப்பதில்லை என, தகவல் வெளியாகியுள் ளது. வேட்புமனு தாக்கல் பா.ஜ.க.வின் மூத்த தலை வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, ஜஸ்வந்த் சிங்கிற்கு, ராஜஸ்தான் மாநி லம், பார்மர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட, வாய்ப்பு மறுக்கப்பட்டது. பா.ஜ.க., தலைவர்கள், தனக்குத் துரோகம் செய்து விட்டதாக கூறிய ஜஸ்வந்த் சிங், அந்தத் தொகுதியில், சுயேச்சை வேட்பாளராக போட்டியிட, வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஜஸ் வந்த்சிங்கிற்கு வாய்ப்பு அளிக்கப்படாததற்கு, பா.ஜ.க., மூத்த தலைவர் களில் ஒருவரான, மக்க ளவை எதிர்க்கட்சித் தலை வர், சுஷ்மா சுவராஜ் கண் டனம் தெரிவித்திருந்தார். பாரதீய ஜனதாவைச் சேர்ந்த, முதல்வர் சிவராஜ்சிங் சவு கான் தலைமையிலான, மத்திய பிரதேச மாநிலம், விதிஷா மக்களவைத் தொகு தியில், சுஷ்மா சுவராஜ் போட்டியிடுகிறார். இதற் காக அவர், அங்கு, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள் ளார். ஆனால், அவர் பங் கேற்கும் கூட்டங்களில், மறந்தும்கூட, பா.ஜ.க., பிர தமர் வேட்பாளர், நரேந்திர மோடியின் பெயரை, அவர் உச்சரிப்பதில்லை. கட்சி யின் மற்ற தலைவர்கள், மோடியை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்யும் நிலை யில், சுஷ்மா, தனி ஆவர்த் தனம் செய்வது, பா.ஜ.க., வினரிடையே, அதிர்ச்சி யையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. கலக்கம் மோடிக்கும், அவருக் கும் இடையே, பனிப்போர் நிகழ்வதாகவும், இதனால், பா.ஜ.க.,வின் வெற்றி பாதிக் கப்படும் என்றும், அந்தக் கட்சியினர் கலக்கம் அடைந் துள்ளனர். மத்திய பிரதேசத் தின் 29 மக்களவைத் தொகு திகளுக்கு, மூன்று கட்டங் களாக தேர்தல் நடக்கிறது. சுஷ்மா போட்டியிடும், விதிஷா தொகுதிக்கு, அடுத்த மாதம், 24 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. அந்த தொகுதியின் இப்போதைய எம்.பி.,யும் அவர் தான். ஜஸ்வந்த் சிங் ஏற்கெ னவே அதிருப்தியில் உள் ளார். மூத்த பி.ஜே.பி. தலை வரான அவருக்குத் தேர்த லில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்த நிலையில், அவர் சுயேச்சையாக நிற்க முடிவு செய்துள்ளார். அத்வானிக்கும், அவர் கேட்ட தொகுதி கொடுக்கப் படாததால் சிக்கல் ஏற்பட் டது. தொடர்ந்து பா.ஜ.க. தேர்தல் அறிக்கைத் தயாரிப் புக் குழுவின் தலைவரான முரளிமனோகர் ஜோஷி வழக்கமாக நிற்கும் வார ணாசி தொகுதி மறுக்கப் பட்டு, அந்தத் தொகுதியை மோடி பெற்றுக்கொண் டுள்ளார். மூத்த தலைவர் கள் பி.ஜே.பி.யில் ஒதுக்கப் படுவதாகக் குற்றச்சாற்று எழுந்து, கட்சியை ஒரு கலக்குக் கலக்குகிறது. இதற் கெல்லாம் காரணம், பின் னணியில் இருந்து பி.ஜே. பி.யை இயக்கும் ஆர்.எஸ். எஸ்.தான். 2014 இல் சுஷ்மா படம் இல்லை கடந்த தேர்தல் அறிக்கை யில் பி.ஜே.பி.யின் முக்கிய தலைவராகக் கருதப்பட்டு, அட்டைப் படத்திலும் இடம்பெற்றிருந்த சுஷ்மா சுவராஜின் படம் 2014 ஆம் ஆண்டு தேர்தலில் திட்ட மிட்டு நீக்கப்பட்டுள்ளது. இவ்வளவுக்கும் அக்கட் சியில் முன்னணியில் இருக் கும் ஒரே பெண்மணி சுஷ்மாதான்! ஏற்கெனவே உமாபாரதி ஒதுக்கப்பட்டு விட்டார் என்பது தெரிந் ததே! Read more: http://viduthalai.in/e-paper/77603.html#ixzz2x7Y96hEt March 27, 2014 at 6:27 AM தமிழ் ஓவியா said... குஜராத் கலவரம்: மோடி பொறுப்பாளியல்லவாம்! புதுடில்லி, மார்ச் 26- 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரச் சம்ப வங்களுக்காக வருத்தப்படு கிறேன். ஆனால் அந்த சம்ப வங்களுக்கு நான் பொறுப் பாளி அல்ல என்று தனது வாழ்க்கை வரலாற்று நூலில் குஜராத் முதல்வரும், பிரத மர் பதவிக்கான பாஜகவின் வேட்பாளருமான நரேந்திர மோடி கூறியுள்ளார். நரேந்திர மோடி: ஓர் அரசியல் வாழ்க்கை வர லாறு தலைப்பில் பிரிட்டன் நாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளரும், எழுத்தாளருமான ஆண்டி மரீனோ எழுதிய நூலை பிரபல ஹார்ப்பர் காலின்ஸ் பதிப்பகம் அண்மையில் வெளியிட்டு விற்பனையாகி வருகிறது. இந்த நூல் குறித்து செய் தியாளர்களிடம் ஆண்டி மரீனோ செவ் வாய்க் கிழமை கூறியதாவது: 310 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தில் குஜராத் கலவரச் சம்பவம் குறித்து இதுவரை வெளிவராத, அதி காரப்பூர்வமான தகவல்கள் ஏராளமாக இடம் பெற்றுள் ளன. மோடி அரசியல் பொதுக் கூட்டங்களில் பங்கேற்க ஹெலிகாப்டரில் செல்லும் போது அவருடன் பல வாரங் களாகத் தொடர்ந்து சென்று அந்தத் தகவல்களைப் பதிவு செய்தேன். பேட்டியின்போது ஒரு முறை, குஜராத் கலவரச் சம்பவத்துக்குப் பிறகு முதல் வர் பதவியில் தொடர்ந்து நீடிக்க எனக்கு விருப்ப மில்லை. என்னைக் காரணம் காட்டி எனது மாநில மக்கள் தாக்குதலுக்கு ஆளான நிலையில் அப்படியொரு முடிவை எடுத்தேன். இருப்பினும், எனது கட்சி (பாஜக) அதற்கு இட மளிக்காததால் (நான்) பதவி யில் தொடர்ந்து நீடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது. எனது பதவி வில கலையும் மக்களும் விரும் பவில்லை. இந்தத் தகவலை முதன் முறையாக பதிவு செய்த நிகழ்வாக இது (பேட்டி) இருக்கும் என பாஜகவின் ஜாம்பவானாகக் கருதப் படும் மோடியே வெளிப்ப டையாகக் கூறினார் என்று ஆண்டி மரீனோ தெரிவித்தார். Read more: http://viduthalai.in/e-paper/77604.html#ixzz2x7YLeaau March 27, 2014 at 6:27 AM தமிழ் ஓவியா said... பல்நோக்கு மருத்துவமனை எப்படி இருக்கிறது? கலைஞர் பதில் சென்னை, மார்ச் 26- சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் திமுக ஆட்சி யில் கட்டப்பட்ட புதிய சட்டமன்றத்தில், அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட் டுள்ள பல்நோக்கு மருத்து வமனை எப்படி இருக்கி றது என்ற கேள்விக்கு திமுக தலைவர் கலைஞர் அளித் துள்ள பதில் வருமாறு: கேள்வி: சென்னையில் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்த பல் நோக்கு மருத்துவமனை எவ்வாறு செயல்படுகிறது? கலைஞர்: ஓமந்தூரார் வளாகத்தில் எழிலோடு கட்டப்பட்ட மாளிகையில் நெருக்கடி இல்லாமல் தலைமைச் செயலகமும், சட்டப்பேரவையும் இயங்கி வந்தது. அதன் திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமரும், சோனியா காந்தி அம்மையாரும் சுற்றிப் பார்த்துவிட்டு சிறப்பாக இருப்பதாகப் பாராட்டி னார்கள். ஆனால் முதல மைச்சர் ஜெயலலிதா மூன் றாண்டு காலம் அதனை மூடி வைத்தார். தலைமைச் செயலகமும், சட்டப்பேர வையும் பழைய இடத்தி லேயே தொடர்ந்து நடை பெறும் என்று அறிவித்து, தற்போது அங்கேதான் நடைபெறுகிறது. பல பகுதிகளில் அவ்வப்போது அந்த கட்டடம் இடிந்து விழுந்து கொண்டிருக்கிறது. இட நெருக்கடியோ கேட்க வேண்டியதே இல்லை. பல அலுவலர்கள் வராந்தாவில் தான் காலம் தள்ளுகிறார் கள். முதலமைச்சர் அறை யைத் தவிர மற்ற அமைச் சர்களுக்கும் நெருக்கடி தான். ஆனால், ஓமந்தூரார் வளாகத்திலே உள்ள மாளி கையில், பல்நோக்கு மருத் துவமனையை, ஒரு கிலோ மீட்டர் தொலைவிலிருந்து முதலமைச்சர் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத் தார். 2016 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வேறொரு முதலமைச்சர் வந்து, இந்த பல்நோக்கு மருத்துவமனையில் வேறொரு அலுவலகத்தை அமைக்கப் போவதாக கூறுவார்! இப்படிப்பட்ட வேடிக்கைகள் எல்லாம் நடக்கும். தற்போது ஜெய லலிதா தொடங்கி வைத்த பல்நோக்கு மருத்துவம னையில் பத்து நாட்களில் வந்த நோயாளிகள் எத் தனை ஆயிரம் பேர் தெரி யுமா? பல்நோக்கு மருத்து வமனை செயல்பாட்டிற்கு வந்து, பத்து நாட்கள் ஆன பிறகு, புற்றுநோய், இதய நோய், நீரிழிவு நோய் என்று பல்வேறு பிரிவுகளில் 40 பேர்தான் அனுமதிக்கப் பட்டார்களாம்! அறிவிப்பு ஒன்றுதான் அதிமுக ஆட்சியின் இரண்டாண்டுகால சாதனை! கேள்வி: தொலை நோக்குத் திட்டம் பற்றி முதலமைச்சர் அடிக்கடி பேசி வருகிறாரே? கலைஞர்: அதைப் பற்றி அண்மையில் வெளி வந்த ஒரு செய்தியைக் கூறுகிறேன். 2012-2013 இல் தமிழக அரசு வெளியிட்ட முதல் தொலை நோக்குத் திட்ட ஆவணத்தில் 104 அணைகளைப் புனரமைக் கப் போவதாக அறிவித் தார்கள். இந்தத் திட்டத்திற் கான மதிப்பீடு 745 கோடி ரூபாய். இதில் 80 சதவிகிதம் உலக வங்கி கடனாகவும் 20 சதவிகிதம் மாநில அரசின் பங்களிப்பாகவும் இருக் குமென உலக வங்கியுடன் ஒப்பந்தம் போடப்பட்டது. திட்டப் பணிகளை 2012 இல் துவங்கி, 2018 க்குள் நிறைவேற்றப்போவதாகச் சொன்னார்கள். பணிகளில், பல்வேறு துறைகளின் பங் களிப்புகளை ஒருங்கி ணைக்க தலைமைச் செய லாளரின் தலைமையில் மாநிலத்திட்ட மேலாண் மைக்குழுவும் உருவாக்கப் பட்டது. முதல் கட்டப் பணிகளுக்கான விரிவான மதிப்பீட்டிற்கு, இந்தக் குழு ஒப்புதல் அளித்த தோடு சரி மேற்கொண்டு எந்தப் பணியும் நடக்க வில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளிலும் பருவ மழை பொய்த்ததால், பெரும்பா லான அணைகள் வறண்டு கிடந்தன. அந்த நேரத்தில் சுலபமாக அணை களை மேம்படுத்தி இருக்க வேண் டும். ஆனால் தற்போது வரை திட்டப் பணிகள் துவங்கவில்லை. 2012 இல் வெளியிடப்பட்ட தொலை நோக்குத்திட்ட ஆவணத் தில் இந்தத் திட்டத்திற்காக 745 கோடி ரூபாய் செல வாகும் என தெரிவிக்கப் பட்டது. இந்த ஆண்டு வெளியிடப்பட்ட இரண் டாவது ஆவணத்தில் 750 கோடி ரூபாயாக மதிப்பீடு மாற்றப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஒன்றுதான் அதி முக ஆட்சியின் இரண் டாண்டு காலச்சாதனை! (முரசொலி, 26.3.2014) Read more: http://viduthalai.in/e-paper/77608.html#ixzz2x7YVA8W4 March 27, 2014 at 6:28 AM தமிழ் ஓவியா said... தேர்தல் துணுக்குகள்! காப்புத் தொகை? 2009 மக்களவைத் தேர் தலில் போட்டியிட்ட 8070 வேட்பாளர்களில் 6829 (84%) பேர் காப்புத் தொகை இழந்தனர். தேவை நட்சத்திர சின்னம் தேர்தலில் தங்களுக்கு நட்சத்திர சின்னம் ஒதுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் எம்.முகம் மது யூசுப் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். விதிமீறல் சென்னை மாவட்டத் தில் நேற்றுவரை தேர்தல் விதிமீறல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கு களின் எண்ணிக்கை 1964. பணப் பட்டுவாடா தொடர் பாக 20-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளனவாம். சரண்! கருநாடகத்தில் பிரபல சுரங்க ஊழல் புகார் பேர் வழி சிறீராமுலு மீண்டும் பி.ஜே.பி.யில் சேர்க்கப் பட்டு தேர்தலில் நிற்கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள் ளது. தேர்தலில் விதி மீறல் தொடர்பாக அவர்மீது ஒரு வழக்கு நடந்து வந்தது. நீதிமன்றத்தில் ஆஜரா காததால், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலை யில், நீதிமன்றத்தில் சரண டைந்துள்ளார். பறிமுதல் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட வாகனச் சோதனைகளில் இதுவரை ரூ.12 கோடி அளவுக்கு ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. தலைகீழ் கட்டை விரல் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பவர் களுக்கு தலைகீழ் கட்டை விரல் சின்னம் வழங்கிட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. ராகுல் காந்தி காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந் தால், மக்களின் ஆரோக்கி யத்தை அடிப்படை உரி மையாக்கும் சட்டம் கொண்டு வரப்படும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். மீதிப் பணம் எங்கே? திண்டுக்கல்லில் பேசு வதற்காக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் நேற்று வந்தார். கூட்டம் முடிந்த தும், அ.தி. மு.க. ஒன்றிய செயலாளரி டம் பெண்கள் பிரச்சி னையை எழுப்பியுள்ளனர். 200 ரூபாய் கொடுப்பதாகக் கூட்டத்துக்கு அழைத்து வந்தீர்கள்; இப்பொழுது நூறு ரூபாய்தானே கொடுத் துள்ளீர்கள். மீதி நூறு ரூபாய் எங்கே? என்று சண்டை போட்டனர். சாப்பாடு, பிஸ் கெட், தண்ணீருக்கு நூறு ரூபாய் சரியாகி விட்டது போ என்று அ.தி. மு.க. பொறுப் பாளர் கூறியுள்ளார். ஓ, கூட்டம் கூடுகிறதா? கூட்டப்படுகிறதா? கேள் விக்கு விடை கிடைத்து விட்டது. Read more: http://viduthalai.in/e-paper/77606.html#ixzz2x7Ye8s9k March 27, 2014 at 6:29 AM தமிழ் ஓவியா said... மேலான ஆட்சி தந்திரத்திலும், வஞ்சகத்திலும் மக்களின் அறியாமையினாலும் ஆட்சி செய்யும் அரசாங்கத்தைவிட, துப்பாக்கியாலும், பீரங்கியினாலும் ஆட்சி செய்யும் அரசாங்கம் மேலானது. - (குடிஅரசு, 3.11.1929) Read more: http://viduthalai.in/e-paper/77595.html#ixzz2x7Z0e1If March 27, 2014 at 6:30 AM தமிழ் ஓவியா said... இதுதான் பாஜக சொல்லும் மாற்றம்? பாஜக சார்பில் விளம்பரம் வெளி யிட்டுள்ளார்கள். மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது. அது பாஜகவிற் கான நேரம்; மோடிக்கான நேரம் என விளம்பரம் வந்துள்ளது. நாமும் ஏதோ பெரிய மாற்றம் வருகிறது எனப் பார்த்தால், மாற்றம் வந்துள்ளது. எப்படி? மோடியை வளர்த்த அத்வானிக்கு மூக்குடைப்பு; மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கிற்குக் கல்தா; நாடாளுமன்ற மக்களவைத் தலைவராக இருந்த சுஷ்மா சுவராஜ் கருத்தைக் கேட்காமல் புறக்கணிப்பு. சரி, இது அவர்கள் உட்கட்சி விஷயம். எக்கேடும் கெட்டுப் போகட்டும். பிரமோத் முத்தாலிக் என்பவர் கருநாடகாவில் ராம் சேனா என்கிற அமைப்பின் செயலாளர். சங் பரி வாரத்தின் ஒரு அமைப்பு. 2009 இல் மங்களூரில், இந்து கலாச்சார பாது காப்பு என்கிற பெயரில், விடுதியில் இருந்த பெண்களை, கேளிக்கையில் ஈடுபட்டார்கள் என்று கூறி, சாலை யில் விரட்டி அடித்த கொடுமைக்குச் சொந்தக்காரர். அவர் மீது பல வழக் குகள் உள்ளன. அவர் பிஜேபியில் காலையில் சேர்க்கப்பட்டார். பிஜேபி ஆட்சி செய்யும் கோவா முதல்வர் மனோகர் பரிகார், முத்தாலிக் சேர்க் கப்பட்டதற்கு தனது கடும் எதிர்ப் பைத் தெரிவித்தார். கோவாவில் பாஜகவிற்கு ஒரு வாக்குக்கூட கிடைக் காது எனக் கூறியதும், அன்று மாலையே, முத்தாலிக், பாஜகவி லிருந்து விலக்கப்பட்டார். பிரமோத் முத்தாலிக் போன்ற ரவுடிகளைச் சேர்க்கும் நிலையில் இன்று பாஜக இருப்பது நல்ல மாற்றம் தானே? இது மட்டுமா? உ.பி.யில், முசாபர்நகரில் 2013 ஆகஸ்டில் கலவரம் ஏற்பட்டு, சிறு பான்மை மக்கள் கொல்லப்பட்ட னர்; வீட்டை விட்டு விரட்டப்பட்டு, இன்றுவரை, ஏறத்தாழ 360 குடும் பங்கள் முகாம்களில் இருக்கின்றனர். அந்த கலவரத்தின் போது, பெண்கள் பலர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகினர். இத்தனையும் செய்தது, சங் பரிவார் கும்பல் தான். அந்த கலவரத்தில் ஈடுபட்டு குற்றம் சாட் டப்பட்ட பாஜகவின் சட்ட மன்ற உறுப்பினர்கள் ஹீக்கும் சிங், சஞ்சீவ் பலியான் இருவரையும், பாஜக நாடா ளுமன்ற வேட்பாளராக அறிவித் துள்ளது. அதுவும், கலவரம் நடந்த முசாபர் நகர் மற்றும் கைரானா தொகுதிகளுக்கு. உ.பி. கலவரத்தில் ஈடுபட்ட கிரி மினல்கள், வேட்பாளர்களாக அறி விப்பு; குஜராத் கலவரத்தின்போது, முதல்வராக இருந்த நரேந்திர மோடி, பிரதமர் வேட்பாளர். இதைத்தான் மாற்றம் என பாஜக கூறுகிறது. நம்மூரில் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள வைகோவும், மற்ற தலைவர்களும், மோடி தலைமை யில் இந்தியா முழுவதும் இந்த மாற் றம் கொண்டுவர ஆசைப்படுகிறார் கள். ஆனால், தமிழகம் பெரியார் பிறந்த மண்; அது மட்டுமல்ல; பெரி யாரால் பண்படுத்தப்பட்ட மண். மக்கள், தகுந்த பாடத்தை பாஜகவிற் கும், அதற்குத் துணை போவோருக் கும் தருவார்கள். - குடந்தை கருணா Read more: http://viduthalai.in/e-paper/77601.html#ixzz2x7Z97Zeh March 27, 2014 at 6:31 AM தமிழ் ஓவியா said... பாலிமர் தொலைக்காட்சியில் தலைவர் நேர்காணல் பாலிமர் தொலைக்காட்சியில் உங்கள் (ஆசிரியர்) நேர்காணல் ஞாயிறு அன்று மிகச்சிறப்பாக இருந்தது. அது பெரியார் எதிர்ப்பலைகளை தவிடு பொடியாக்கியது. இதை விட மிகச் சிறப்பாக யாரும் பதில் கூறி இருக்க முடியாது. தாங்கள் எடுத்தது, பெரியார் தந்தது என்பது மிகச் சரியான விளக்கம். சிறிய கோடுக்கு முன் அதைவிட சிறிய கோடு போட்டால், சிறியது, பெரியது ஆகி விடுகிறது. அதைப்போல், ஜெயாவின் குற்றங்கள் மற்ற ஜெயாவின் குற்றங்களால் மறக்கடிக்கப்படுகிறது. ஆனால் மக்கள் ஜெயாவின் குறைகளை எளிதில் மறந்து விடுவதை நாம் தொடர்ந்து பார்த்து வரு கிறோம். எத்தனையோ குறைகள் ஜெயா மீது கூறினாலும் அடுத்தடுத்த குறை களைக் கூறி மறக்கச் செய்து விடுகிறது. எனவே நாம் மக்களை அதிகம் பாதிக்கக் கூடிய குறைகளைத் தேர்வு செய்து மக்களை ஜெயாவுக்கு எதிராக நிறுத்த வேண்டும். தலைவலியும், காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும் என்பார்கள். இன்றைய சூழ்நிலையில் மின்வெட்டு ஒவ்வொருவரையும் பாதித்துக் கொண்டு இருக்கும் ஒன்று. எனவே ஜெயா சொன்ன 3 மாதத் தீர்வு இன்றுவரை நடக்க வில்லை. மூன்று ஆண்டுகள் ஆகி விட்டது. தேர்தல் முடியும் வரை அதில் எந்த மாற்றமும் வராது. எனவே திரு.ஸ்டாலின் கேட்பதற்குப் பதில் - பொது மக்கள் ஜெயாவிடம் கேள்வி கேட்டு அதை தொலைக்காட்சியிலோ அல் லது பத்திரிகைகளிலோ தேர்தல் முடியும் வரை கேட்டுக் கொண்டே இருக்கவேண்டும். உதாரணமாக: i.e. General Public Vs Jayalalitha மூன்று மாதத்தில் மின்வெட்டு நீங்கும் என்று உறுதி அளித்த அம்மா அவர்களே - இன்று வரை நீங்கள் உறுதியை காற்றில் பறக்கவிட்டீர்கள், என்று தீரும் என்று தேர்தலுக்கு முன் சொல்லுங்கள்? நீங்கள் பதில் சொல்லும்வரை உங்களை நாங்கள் விட மாட்டோம். நீங்கள் பதில் கூற இன்னும் 24 நாள்கள் உள்ளன. - பொது மக்கள் மறுநாள் 23 நாள்கள் அடுத்த நாள் 22 நாள்கள் அடுத்து 21 நாள்கள் . . . . என்று தேர்தல் முடியும் வரை எண்ணிக் கொண்டே, நாள்தோறும் தொலைக்காட்சி யிலும் பத்திரிகைகளிலும் கூறிக் கொண்டே வந்தால், மின் வெட்டு என்பது மக்கள் மனதில் நிலைத்து நிற்பதோடு, தேர்தலிலும் ஜெயாவுக்கு எதிராக வாக்குகள் தி.மு.க. வினருக்குக் கிடைக்கும். இதனால் ஜெயா வினால் தப்பவே முடியாது. பதில் கூறியே ஆக வேண்டும். மின்வெட்டு மாணவர் களையும், பெண்களையும், தொழிலாளர் களையும் மிகவும் பாதிப்பதால், நல்ல பலன் கிடைக்கும். முதல்வரை, பொது மக்கள்முன் கொண்டுவந்தால், வெற்றி நமதே! - ரம்யா சீனிவாசன் Read more: http://viduthalai.in/e-paper/77599.html#ixzz2x7ZSlqNi March 27, 2014 at 6:32 AM தமிழ் ஓவியா said... இரட்டை இலை நீக்கம், மு.க. அழகிரி நீக்கம் பற்றி கலைஞர் சென்னை, மார்ச் 26- இரட்டை இலை நீக்கம், மு.க.அழகிரி நீக்கம் பற்றி செய்தியாளர்களிடம் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் (நேற்று) குறிப்பிட்டதாவது: செய்தியாளர் :- இரட்டைஇலை சின்னங்கள் சிறிய பேருந்துகள் போன்றவற்றில் மறைக்கப்பட வேண்டு மென்றுபொருளாளர் மு.க. ஸ்டாலின் தொடுத்தவழக்கில் உயர்நீதிமன்றம் இன்றையதினம் தீர்ப்பு அளித்திருப்பதைப் பற்றி? கலைஞர் :- தேர்தல்ஆணையத்தின் செயல்பாடுகளை நாங்கள்கவனித்துக் கொண்டிருக்கிறோம். நீதிமன்றத் தீர்ப்புக்குத் தலைவணங்கி அனைவரும் நடந்துகொள்ள வேண்டும். குறிப்பாகதேர்தல்ஆணையம் ஜனநாயகரீதியில் நடைபெறுகிறதுஎன்பதற்குஅடையாளமாக, ஏற்கெனவே இந்த இரட்டைஇலை சின்னங்களைமறைக்க வேண்டு மென்றுகூறியிருந்தது. அந்தத் தீர்ப்பைமதித்து, கட்சிசின்னங் களை, அரசுசார்புடையஎந்தநிகழ்விலும் அறிமுகப்படுத்தக் கூடாது, பயன்படுத்தக் கூடாதுஎன்பதைநானும் கண்டிப் பாகஎடுத்துக் கூற விரும்புகிறேன். இது தான் உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பாகவும் அமைந்திருக்கிறது. செய்தியாளர் :- தி.மு.கழகத்திலிருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்ட மு.க.அழகிரி, ம.தி.மு.க. பொதுச் செயலாளரையும், மற்றகட்சிகளின் தலைவர்களையும் சந்தித்துகட்சியின் மீது அவதூறு கூறி வருகிறாரே? கலைஞர்:- அவர் தற்காலிகமாக நீக்கி வைக்கப் பட்டதற்குப் பிறகுஉரியவிளக்கங்களை அதற்கு அளிக் காமல், மேலும் மேலும் தி.மு. கழகத்தை விமர்சிப்ப தாலும், தி.மு.கழகத் தலைவர்களைப் பற்றி அவதூறு கூறி வருவ தாலும், அவர் வெளியிடுகின்ற கருத்துகள் தி.மு.கழகத் திற்கு ஊறு விளைவிக்கும் வகையிலும், களங்கம் கற்பிக்கும் வகையிலும் இருப்பதாலும், நானும், பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களும் இன்றைக்கு கலந்துபேசி, அவர் கட்சியிலிருந்து நிரந்தரமாக அறவேநீக்கப்படுகிறார் என்று தெரிவித்திருக்கிறோம். செய்தியாளர் :- ஜெயலலிதா நான்காயிரம் கோடி ரூபாய்க்குச் சொத்து சேர்த்திருப்பதாக நேற்றையதினம் பெங்களூருவில் நடைபெற்றசொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறாரே? கலைஞர் :- இந்தச் செய்தி பத்திரிகைகளில் வந்தி ருக்கிறது. பத்திரிகைகள்என்றால், அனைத்துப் பத்திரிகை களிலும் அல்ல. முரசொலியில்வந்திருக்கிறது, தினகரனில் வந்திருக்கிறது. மற்றபத்திரிகைகள்இந்தச் செய்தியை ஜெயலலிதாவை ஆதரிக்கும் வகையில்இருட்டடிப்பு செய் திருக்கின்றன. ஏறத்தாழநான்காயிரம் கோடி ரூபாய் ஊழல் சொத்து ஜெயலலிதா தரப்பினரிடம் இருப்பதாகநேற்றைய தினம் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில்அரசுவழக்கறிஞர் எடுத்துத் தெரிவித்திருக்கிறார். இந்தச் செய்திப் பற்றி தமிழ் நாட்டுப் பத்திரிகைகள் குறிப்பாக சென்னையி லிருந்து வெளிவருகின்ற பத்திரிகைகள், நடுநிலைஏடுகள் என்றுதங் களைச் சொல்லிக் கொள்கின்ற பத்திரிகைகள் வெளியிடாத தின் காரணம் என்ன? சூட்சுமம் என்ன? ரகசியம் என்ன? நடந்த பேரம்தான் என்ன? இவ்வாறு கலைஞர் அவர்கள்செய்தியாளர்களுக்கு பேட்டி அளித் துள்ளார். (முரசொலி, 26.3.2014) Read more: http://viduthalai.in/e-paper/77613.html#ixzz2x7Zj2yid March 27, 2014 at 6:33 AM தமிழ் ஓவியா said... பா.ஜ.க.வின் கேவலமான அரசியல்! பா.ஜ.க.வின் கேவலமான அரசியல்! வழி நெடுகிலும் கெஜ்ரிவால் மீது முட்டை, மை வீச்சு வாரணாசி, மார்ச் 26- வார ணாசியில் ஆம் ஆத்மி கட்சி யின் தேசிய அமைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் மீது முட்டை, மை வீசப்பட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதிகளில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிட அர்விந்த் கெஜ்ரி வால் முடிவு செய்துள்ளார். தொகுதி மக்களின் கருத்தை அறிந்து, இதற்கான அறி விப்பை வெளியிடுவதற்காக அவர் வாரணாசி சென்ற போது பாஜகவினர் கேவல மாக நடந்து கொண்டனர். டில்லியில் இருந்து புறப் படும் முன் அவர் செய்தி யாளர்களிடம் கூறுகையில், எனக்கு வெற்றி, தோல்வி முக்கியமில்லை. இந்த நாடு வெற்றி பெறவேண்டும். இதற் காக மோடியுடம், ராகுலும் தோற்கடிக்கப்பட வேண் டும். மோடியை போலவே வாரணா சிக்கு நானும் வெளி ஆள்தான் என்றார். டில்லியில் இருந்து தனது குடும்பத்தினருடன் சிவ கங்கா விரைவு ரயில் மூலம் செவ்வாய்க்கிழமை காலை வாரணாசிக்கு போய் சேர்ந் தார் கெஜ்ரிவால். இவருடன் ஆம் ஆத்மியின் மூத்த தலை வர் மணீஷ் சிசோதியா, கட் சியின் உ.பி. பொறுப்பாளர் சஞ்சய்சிங் வந்தனர். கங்கையில் நீராடிய கெஜ் ரிவால் அங் குள்ள காலபை ரவர் கோயிலில் வழிபட்டார். வாரணாசியின் புகழ்பெற்ற சிவன் கோயில், சங்கத் மோட்சன் உட்பட பல்வேறு கோயில்களுக்குச் சென்று தரிசனம் மற்றும் சிறப்பு பூஜை செய்தார். பாஜகவினர் கேவலம் அவருக்கு வழிநெடுகி லும் பாஜகவினர் கூடிநின்று எதிர்ப்பு தெரிவித்தனர். கெஜ் ரிவால் ஒழிக,கெஜ்ரிவாலே திரும்பி போ என முழங் கினர். பலர் கறுப்புக் கொடி காட்டினர். கெஜ்ரிவால் பயணம் செய்த வாகனம் மீது கருப்பு மை வீசினர். ஒரு சமயத்தில் அவர் மீது அழுகிய முட்டை வீசப்பட்டது. இதி லிருந்து நூலிழையில் தப்பி னார் கெஜ்ரிவால். கெஜ்ரி வாலுக்கு எதிராக போராட் டம் நடத்தியவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி விரட்டினர். வாரணாசியின் முஸ்லிம் தலைவர்களையும் கெஜ்ரி வால் சந்தித்தது, அந்த சமு தாயத்தினரின் வாக்குகளை யும் அவர் குறி வைத்துள்ள தாகக் கருதப்படுகிறது. இங்கு நடந்த பொதுக்கூட் டம் ஒன்றில், கெஜ்ரிவாலுக்கு முஸ்லிம் பிரமுகர் ஒருவர் தனது குல்லாவை அணிவித் தார். அதை ஏற்றுக்கொண்ட கேஜ்ரிவால் தனது ஆம் ஆத்மி தொப்பியை அவருக்கு அணிவித்தார். வாரணாசியில் கெஜ்ரிவாலுடன் சேர்த்து 6 முனைப் போட்டி நிலவு கிறது. காங்கிரஸ் இன்னும் வேட்பாளரை அறிவிக்க வில்லை. ராகுல், மோடியை தோற்கடிப்போம்: கெஜ்ரிவால் ராகுல் காந்தியையும், நரேந்திர மோடியையும் தோற்கடிப்பதுதான் எங்களின் முன்னுரிமைப் பணி என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப் பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறினார். வாரணாசியில் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டி யிடுவதை அறிவிக்கும் வகை யில், இங்குள்ள ராஜ்நாரா யண் பூங்கா மைதானத்தில் கெஜ்ரிவால் பேசினார். அவர் பேசுகையில், குஜராத் விவசாயிகளின் நிலங்களை அபகரித்து பல தொழிலதிபர் களுக்கு மிக மலிவான விலை யில் கொடுத்து வருகிறார் மோடி. விவசாயிகளுக்குக் கிடைத்து வந்த பல மானி யங்கள் நிறுத்தப்பட்டு விட் டன. குஜராத்தில் கடந்த 5 ஆண்டுகளாக 5,874 விவசாயி கள் தற்கொலை செய்துள்ள னர். குஜராத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆயிரக்கணக் கான சிறுதொழில் நிறுவனங் கள் மூடப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின் றன. இதைத்தான் வாரணாசி யிலும் செய்வார் மோடி. நேரடி அந்நிய முதலீடுகளை கொண்டு வருவதில் காங் கிரசை, பாஜகவும் ஆதரிக் கிறது. எனவே, இருவருக்குள் எந்த வித்தியாசமும் இல்லை என்றார் கெஜ்ரிவால். கெஜ்ரி வால் தனது உரையில் சமாஜ் வாதி கட்சி பற்றியோ, பகு ஜன் சமாஜ் கட்சி பற்றி எது வுமே குறிப்பிடவில்லை. Read more: http://viduthalai.in/e-paper/77642.html#ixzz2x7aCMH2Y March 27, 2014 at 6:35 AM தமிழ் ஓவியா said... ஈழத் தமிழர் வாழ்வுரிமை உறுதி செய்யப்பட உலக நாடுகளின் கவனம் - கடமை தேவை! இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் (2008-2009) பற்றிய அய்.நா. விசாரணைக் குழுவின் அறிக்கை அடிப்படையில் மேலும் விசாரணைக்குட்படுத்தி, மனித உரிமை மீறல்களுக்கு நடவடிக்கை எடுக்க வற்புறுத் திடும், அய்.நா. மனித உரிமை ஆணையக் குழுத் தலைவர் நவநீதம் பிள்ளை அவர்கள் இதுபற்றி ஒரு சர்வதேச (சுதந்திர) விசாரணை தேவை என்பதை வலியுறுத்தியுள்ளார். அதை வரவேற்கிறோம். அய்.நா.வில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் எதிர்பார்த்த முறையில் அமையவில்லை என்ற போதிலும், அது நிறைவேற்றப்பட இந்திய அரசு தனது பங்களிப்பை உலகத் தமிழர்கள் பாராட்டும் அளவுக்குச் செய்யவேண்டியது அவசர அவசிய மாகும்! இனப்படுகொலை (நிமீஸீஷீநீவீபீமீ) என்பது தீர்மானத்தில் இடம்பெறுவதே நியாயமாகும். இலங்கை அரசு, எங்களை யார் - என்ன செய்துவிட முடியும்? என்று சவால் விடுகிறது; காரணம், சீனா போன்ற நாடுகள் தங்களுக்கு ஆதரவு அளிக்கும் என்ற ஒரு குருட்டுத் தைரியம்தான் போலும்! இதை இந்திய அரசு கவனத்தில் கொள்வது அவசியம். உலக நாடுகளின் கவனம் - கடமை - ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைப் பாதுகாப்பை உறுதி செய்வது! இது தேவை - கட்டாயம் தேவைப்படுகிறதே! கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம். சென்னை, 27.3.2014 Read more: http://viduthalai.in/e-paper/77655.html#ixzz2xDDm5Ce2 March 28, 2014 at 5:43 AM தமிழ் ஓவியா said... தேர்தல் துணுக்குகள்! ஆள் தெரியாமல்... திருநெல்வேலியில் அ.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அக் கூட்டத்தில் பேசிய முசுலிம் பிரமுகர் ஒரு வர் மோடி மீது தாக்குதல் தொடுத்த நிலை யில், எல்லோருக்கும் அதிர்ச்சி! கலைவாணர் ஒரு திரைப்படத்தில் கூறியதுபோல, ஆள் தெரியாமல் கூப்பிட்டு வந்துவிட் டோமே என்று ஒருவர் முகத்தை இன் னொருவர் பார்த்துக் கொண்டனராம். முகத்தைக் கண்ணாடியில் பார்க்கக்கூடாதா? ஊழல் பேர்வழிகளுக்குக் காங்கிரஸ், தேர்தலில் நிற்க வாய்ப்புக் கொடுத்துள் ளது; ஆதர்ஷ் ஊழலில் சிக்கிய அசோக் சவானுக்கும், ரயில்வே ஊழலில் சிக்கிய பவன்குமார் பன்சாலுக்கும் காங்கிரஸ் வாய்ப்புக் கொடுத் துள்ளது என்று பி.ஜே.பி. யின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் குற்றம் சொல்லி இருக்கிறார். அது சரி, கருநாடகா வின் எடியூரப்பா வுக்கும், சுரங்க ஊழல் புகார் சிறீரா முலு வுக்கும் பி.ஜே.பி. டிக் கெட் கொடுத்துள் ளதே - அது எப்படியாம்? அம்மையார் தம் முகத்தைக் கண்ணாடியில் பார்க்கட்டும்! ஆரம்பமாகிவிட்டது காஞ்சிபுரத்தில் பி.ஜே.பி. கூட்டணியில் ம.தி.மு.க. நிற் கிறது - தே.மு.தி.க. தலைவர் காஞ்சிபுரத்துக்கு இன்று பிரச்சாரம் செய்வ தாகத் திட்டம். அதற்குள் காஞ்சிபுரம் பி.ஜே.பி.யினர் எங்கள் கட்சித் தலைமை யில் தானே கூட்டணி - எங்களிடம் அனு மதி பெற்றுதான் தொகுதிக்கு வரவேண் டும் என்று குரல் எழுப்பியுள்ளனர். ஆரம்பமாகிவிட்டது, ஆரம்பத்தி லேயே கூட்டணி இடியாப்பச் சிக்கல். எலியும் - தவளையும் கூட்டுச் சேர்ந் தால் அப்படித்தான்! காம்ரேடு கேட்கிறார் மனித உரிமை மீறப் பட்ட விஷயத்தில் இலங் கைக்கும் - குஜராத்துக்கும் என்ன வேறுபாடு என்பதை மோடியோடு கைகோக்கும் வைகோ சொல்லவேண்டும். குஜராத்தில் அரசே திட்டமிட்டு கலவரத் தைத் தூண்டியது. கலவரத்தில் அப்பாவி கள் கொல்லப்பட்டனர். 32 அய்.ஏ.எஸ். அதி காரிகள் சிறையில் உள்ளனர். - இப்படிக்கு ஏ.சவுந்தரராசன், சி.பி.எம். சட்டமன்ற உறுப்பினர் காலை வாரும் பி.ஜே.பி. பி.ஜே.பி.யின் மாநிலத் துணைத் தலை வரும், சிவகங்கைத் தொகுதியில் அக் கட்சி வேட்பாளருமான எச்.ராஜா என்ப வர், மாநிலக் கட்சிகளுக்கு வாக்களிக்க மக்கள் தயாராக இல்லை என்று திருவாய் மலர்ந்துள்ளார். அந்தோ பரிதாபம்! பி.ஜே.பி.யுடன் கூட்டணி சேர்ந்துள்ள மாநிலக் கட்சிகள் ம.தி.மு.க., பா.ம.க, தே.மு.தி.க. கட்சிகளுக்கு நமது அனுதாபங்கள்! தொடக்கத்திலேயே இப்படி காலை வார ஆரம்பித்துவிட்டனர் (சேம்சைடு கோல்) போகப்போக காலை வாரும் சர்க்கஸ் காட்சிகளை நாடு பார்க்கத் தானே போகிறது! சட்டம் ஒழுங்கென்று ஒன்று இருக்கிறதா? சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னரில் பட்டப்பக லில் வாலிபர் தமிழ்ச்செல்வன் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். அது போலவே, சென்னை திரு.வி.க. நகரில் தனியாக இருந்த பெண் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். 15 பவுன் நகைகளும் கொள்ளை அடிக் கப்பட்டுள்ளன. அ.தி.மு.க. ஆட்சியில் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் நடக்கும் கொலை கொலைக்கா முந்திரிக்கா இது! தேர்தல் நெருங்கினால் சாலை வசதிகள் குதிக்கும் சென்னை செனாய் நகர்ப் பகுதியில் அவசர அவசரமாக சாலைகள் போடப்படு கின்றன. சாலை போட்டு முடிந்த மறுநாளே அ.தி.மு.க.வினர் வாக்கு சேகரிக்க அந்தப் பகுதிக் குச் செல்கின்றனர். தேர்தல் வந்தால்தான் சாலை வசதி களா? தேர்தல் ஆணையத்தின் கண்கள் ஆளும் கட்சி என்றால் மூடிக் கொள்ளுமா? பொதுமக்கள் கேட்கும் கேள்வி இது. Read more: http://viduthalai.in/e-paper/77664.html#ixzz2xDDwa1qU March 28, 2014 at 5:44 AM தமிழ் ஓவியா said... பக்தி காட்டும் ஒழுக்கம்! திருப்பதி கோவிலில் உண்டியல் எண்ணும்போது நகை திருட்டு நகரி, மார்ச்.27-திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வசூலாகும் உண்டியல் பணத்தை பறக்காமணி என்ற இடத்தில் தன்னார் வலர்கள் மற்றும் தேவஸ் தான ஊழியர்கள் எண்ணும் பணியில் ஈடுபட்டு வரு கின்றனர். அவர்களைப் பறக்கும் படை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காணிக்கை எண்ணும் கண் காணிப்பு பணியை முடித் துக் கொண்டு சீனிவாசலு என்ற ஊழியர் வெளியே வந்தார்- அவரது ஆடை களைக் களைந்து சோதனை செய்தனர். அவரது நடவடிக்கை யில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் சீனிவாசலுவை வாயை திறந்து காண்பிக் கும்படி கூறினர். அப்போது ஊழியர் சீனிவாசலுவின் 2 தாடைக்குள்ளும் இரண்டு தங்க நகைகள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந் தது. அதைத் தொடர்ந்து பறக்கும் படை அதிகாரி சீனிவாசலுவிடம் தீவிர விசாரணை நடத்தினார். அப்போது அவர் திருடி யதை ஒப்புக் கொண்டார். அதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த திருட்டை ஊழியர் சீனிவாசலு மட்டுமே செய் தாரா? அல்லது இந்த திருட் டில் மேலும் யாருக்காவது தொடர்பு உண்டா? என்பது குறித்தும் எத்தனை காலமாக இந்த திருட்டு நடந்து வரு கிறது என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. Read more: http://viduthalai.in/e-paper/77660.html#ixzz2xDE6X1u3 March 28, 2014 at 5:45 AM தமிழ் ஓவியா said... ஆட்சியின் சீர்திருத்தம் ஆட்சியின் சமுதாய சீர்திருத்தப் பணியென்பது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் தகுதி யின்மை என்று சொல்லும்படியான எந்தத் தன்மையையும் ஒழித்து உச்சத் தகுதிக்கு அருகர்களாக ஆக்குவதையே முதல் பணியாகக் கொள்வதுதான். _ (விடுதலை, 24.1.1969) Read more: http://viduthalai.in/page-2/77665.html#ixzz2xDJIwasP March 28, 2014 at 6:05 AM தமிழ் ஓவியா said... பி.ஜே.பி. தலைமையில் கூட்டணியும் - தினமணியும்! 21.3.2014 நாளிட்ட தினமணி ஏட்டில், மாற்று அல்ல, மாற்றமும்கூட! என்ற தலைப்பில் தலையங்கம் ஒன்று தீட்டப்பட்டுள்ளது. 1962 ஆம் ஆண்டிலிருந்து இந்தத் தேர்தல்வரை தமிழ்நாட்டில் தேர்தலில் தேசியக் கட்சிகள் தலைமை தாங்கவில்லை; இப்பொழுதுதான் தேசியக் கட்சி யான பி.ஜே.பி. தலைமையில் ஓர் கூட்டணி ஏற்பட்டுள்ளது. தேசியக் கட்சி தமிழ்நாட்டில் தலைமை தாங்காததால் தான் காவிரி நீர், முல்லைப் பெரியாறு போன்ற பிரச் சினைகளில் தமிழ்நாட்டுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்ற ஒரு குற்றச்சாற்றையும் தினமணி வைத்துள்ளது. இந்த இடத்தில் ஒன்றை குறிப்பிட்டாகவேண்டும்; தமிழ்நாட்டில் இப்பொழுதைய தேர்தலில் பி.ஜே.பி. என்ற தேசியக் கட்சி தலைமை தாங்குவதாக தினமணி கூறியிருப்பது கடைந்தெடுத்த நகைச்சுவையாகும். ஒரு கட்சி தலைமை தாங்குகிறது என்றால், அந்தக் கட்சிதான் அதிகமான இடங்களில் போட்டிப் போடுவதாக இருக்கவேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் பி.ஜே.பி.யின் நிலை என்ன? முதல் இடத்தில் தே.மு.தி.க. என்ற மாநிலக் கட்சிதான் இருக் கிறது. மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்ள தேசிய கட்சியான பி.ஜே.பி. என்ன பாடுபட்டது - மாநிலக் கட்சிகளின் தயவுக்காக எப்படியெல்லாம் ஊசி முனையில் தவம் இருந்தது என்பது நாடே அறிந்த உண்மை! இதனைத் தினமணி திரையிட்டு மறைக்கும் தந்திரத்தை ரசிக்க முடிகிறது. தேசியக் கட்சி தலைமை தாங்கவில்லை என்று சொல் லுவதற்குமுன் தேசியக் கட்சிகள் தமிழ்நாட்டில் ஏன் தலை யெடுக்கவில்லை என்பதைப்பற்றிச் சிந்திக்கவேண்டாமா? தமிழ், தமிழன், தமிழ்நாட்டு உரிமை இவற்றில் பற்று வைப்பது - இவற்றுக்காகப் பாடுபடுவது - இந்தப் பிரச்சினைகளுக்குக் குந்தகம் ஏற்படும்பொழுது அதனை எதிர்த்துக் குரல் கொடுப்பது, போராடுவது - தேசியத்துக்கு விரோதமானது என்ற சிந்தனை இருக்குமட்டும் தமிழ் நாட்டில் காங்கிரஸ் மட்டுமல்ல - எந்தத் தேசியக் கட்சியும் கால் ஊன்ற முடியாது. காரணம், தமிழ் மண் தந்தை பெரி யார் அவர்களாலும், திராவிட இயக்கத்தாலும் மேலே கூறப் பட்டுள்ள உணர்வுகளால் செழுமைப்படுத்தப்பட்ட மண்! இப்பொழுதுகூட பி.ஜே.பி. என்ற தேசிய கட்சி - தேர்தலில் போட்டியிட தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநிலக் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்தாலும்கூட - இது ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டணியாகத்தான் இருக்க முடியும். ஈழத் தமிழர் பிரச்சினைபற்றி ம.தி.மு.க. பொதுச்செய லாளர் ஒன்று கூறுகிறார் என்றால், மறுநாளே பி.ஜே.பி. சார்பில் உடனே மறுக்கப்படுகிறது - இந்த நிலையில் உள்ள வர்கள் எத்தனை நாள்களுக்கு கைகோத்து நிற்பார்கள்? தவளை - எலி கால்களைக் கட்டிக்கொண்டு குளத்தில் குதித்த கதைதானே! காங்கிரசின் அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்த தி.மு.க. ஏன் விலக நேரிட்டது? ஈழத் தமிழர்ப் பிரச்சி னையில் காங்கிரஸ் நடந்துகொள்ளும் எதிர்மறையான அணுகுமுறைதானே அதற்குக் காரணம்! இன்னொன்றையும் இதில் கவனிக்கவேண்டிய ஒன்று; தேசியக் கட்சிகள் என்பவை மாநிலத்தில் தங்கள் கட்சி ஆட்சியில் இருந்தால் ஒரு அணுகுமுறை - வேறு கட்சி ஆட்சியில் இருந்தால் மாறுபட்ட அணுகுமுறை கொண் டவை என்பதைத் தினமணி ஏற்றுக் கொண்டிருக்கிறது. இது எந்த வகை நேர்மையைச் சார்ந்தது? இந்தத் தன்மையில் உள்ள தேசியக் கட்சிகள் மாநிலத் தில் தலைமை தாங்கவேண்டும் என்று கூறுவது நல்லெண் ணத்தின் அடிப்படையில் இல்லை என்பது நிதர்சனமாகும். சந்தடி சாக்கில் கந்தப்பொடி தூவுவது என்பதுபோல தினமணி தலையங்கம் எடுத்த எடுப்பிலேயே ஒன்றைக் கூறுகிறது. தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியின் தலைமையில் தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., இந்திய ஜனநாயகக் கட்சி, புதுவை என்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட ஏழு கட்சிகள் உள்ளடக்கிய கூட்டணி அமைந்திருப்பது தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சரித்திர நிகழ்வு என்று தினமணி குறிப்பிட்டுள்ளது. இப்படி ஒரு கூட்டணி அமைந்து, அது தொடர்ந்தால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் கால் ஊன்ற முடியாத பி.ஜே.பி.,க்குப் பலன் கொடுக்கும் என்ற தந்திரத்தில் கூறப்பட்ட கருத்து இது. பல நேரங்களில் பி.ஜே.பி.யுடன் கூட்டணி சேர்ந்த தமிழ்நாட்டுக் கட்சிகள், அடுத்த கட்டத்தில் அதனால் பலன் இல்லை என்று கைவிடப்பட்டதுண்டு; அதன் காரணமாக கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பி.ஜே.பி. போட்டி யிட்ட அத்தனை இடங்களிலும் கட்டிய பணத்தைக்கூட (டெபாசிட்) திரும்பப் பெறவில்லை என்ற உண்மையைத் தெரிந்துகொண்டால், தினமணி எழுதிய தலையங்கத்தின் தந்திரமும், உள்நோக்கமும் என்ன என்பது எளிதில் விளங்கிவிடுமே! Read more: http://viduthalai.in/page-2/77666.html#ixzz2xDJSKYZ9 March 28, 2014 at 6:06 AM தமிழ் ஓவியா said... சொத்துக் குவிப்பு ஊழலை ஒழிப்பேன் என புறப் பட்டுள்ள ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு பற்றி, பெங்களூரு நீதிமன் றத்தில் அரசு வழக்குரைஞர் பவானி சிங் ஆதாரப்பூர்வ வாதம். ஜெயலலிதா சுமார் ரூ.4000 கோடி அளவிற்கு சொத்து வைத்துள்ளார். 1. அதிகாரிகளைப் பயன்படுத்தி, மிகக் குறைந்த விலையில் நிலங் களை வாங்கியுள்ளார். 2. அவருடைய பொருளாதார நிலைக்கும், வாங்கிய நிலங்களுக் கும் சம்பந்தம் இல்லை. ஜெயலலிதாவின் சொத்துக்குவிப் புப்பற்றி, அரசு வழக்குரைஞர் பவானி சிங் வெளியிட்ட பட்டியல் வருமாறு: 1. வாலாஜாபாத் அருகே 600 ஏக்கர் நிலம். 2. கொட நாடு - 800 ஏக்கர் நிலம் மற்றும் பங்களா 3. சிறுதாவூர் 25 ஏக்கர் அளவில் பங்களா 4. நீலாங்கரையில் 2 ஏக்கர் நிலம் 5. கன்னியாகுமரி அருகே, மீனங் குளம், சிவரங்குளம், வெள்ளங் குளம், அருகே 1190 ஏக்கர் நிலம் 6. காஞ்சிபுரம் அருகே 200 ஏக்கர் நிலம் 7. தூத்துக்குடி அருகே வைகுண்டம் பகுதியில் 200 ஏக்கர் நிலம் 8. ரெவரோ அக்ரோ பார்ம் பெயரில் 100 ஏக்கர் நிலம். 9. ஜெயலலிதாவுக்கு 30 கார்கள், டிரக்கர்கள் உள்ளன. 10. அய்தராபாத்தில் திராட்சைத் தோட்டம். 25.3.2014 அன்று அரசு வழக்கு ரைஞர் பவானி சிங் வெளியிட்ட இந்த ஆதாரங்களை, இன்றைக்கு எந்த செய்தித்தாளும் வெளியிட வில்லையே. அரசுக்கு நட்டம் என தணிக்கையாளர் சொன்னதை வைத்து, ரூ. 1,7,6000 கோடி ஊழல் என நாள் தோறும் ஊளையிடும் ஊடகங்கள், ரூ.4000 கோடி அளவில் சொத்துக் குவிப்பை ஜெயலலிதா சேர்த்துள்ளார் என ஆதாரப்பூர்வமாகத் தெரிவித்ததை ஏன் ஊடகங்கள் மறைக் கின்றன? சூத்திரனுக்கு ஒரு நீதி; தண்டச் சோறுண்ணும் பார்ப்பனனுக்கு ஒரு நீதி. இதுதான் ஊடக தர்மமா? - - குடந்தை கருணா Read more: http://viduthalai.in/page-2/77670.html#ixzz2xDJd8xEl March 28, 2014 at 6:07 AM தமிழ் ஓவியா said... நம் கடமை நாளைய ஆட்சியாளர்களாக மாறத் துடிக்கும் ஆர்எஸ்எஸ் பாஜக வகையறா கா(லி)விக் கும்பலின் இப்போதைய நடவடிக்கைகளை பார்த்தாலே போதும். நாட்டை இவர்களிடம் ஒப்படைத்தால் என்ன நடக்குமென்று. போன வாரத்தில் பீகாரில் சத்ருகன் சின்கா என்னும் இந்தித்திரைப்பட நடிகர் பாஜக சார்பில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்யச் சென்ற பொழுது, எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவருக்கு கருப்புக்கொடி காட்டிய இளைஞர்களை நையப்புடைத்து மிதிமிதியென்று மிதித்து எறிந்ததை பாஜக ஆதரவு செய்தித் தாள் கள் கூட மறைக்க முடியாமல் அந்தக் கொடுமையை நிழற்படமாக வெளியிட்டன. இதே போல் வாரணாசியில் நரேந்திர மோ(ச)டியை எதிர்த்துபோட்டியிட முடிவு செய்து வந்திருந்த ஆம் ஆத்மி கட்சி அமைப்பாளர் அர்விந்த கெஜ்ரிவால் அவர்களை இதே காவி ஆதரவுக்கூட்டம் அழுகிய முட்டைகளையும், கறுப்பு மய்யையும் வீசி தங்களது வழக்கமான இயல்பை வெளிப்படுத்தியுள்ளன. ஜனநாயக நாட்டில் பொது வாழ்க்கை யில் ஈடுபடுபவர்கள், நம்முடைய கொள் கைக்கு எதிரானவர்களாக இருந்தாலும் சகிப்புத்தன்மையுடன் மதிக்க கற்றிருக்க வேண்டும். ஆனால் இவர்களுக்கு வழி காட்ட வேண்டியவர்களே மசூதியை இடிப் பதற்கும் மதக்கலவரங்களை தூண்டி நடத் துவதற்கு காரணமானவர்களாக இருக்கும் பொழுது அவர்களை தலைவர்களாக ஏற்று பின்பற்றும் தொண்டர்கள் எப்படியிருப் பார்கள்? காவி வேடதாரிகளின் 2 ஆம் கட்ட, 3 ஆம் கட்டத் தலைவர்கள் செய்தி ஊடகங் களின் விவாத அரங்குகளில் பங்கேற்கும் பொழுது மாற்றுக்கருத்து கொண்டவர்களை பேசவிடாமல் தாங்களே ஆக்கிரமித்து கொண்டு கத்துவதும் மற்றவர்கள் மதிக்கும் தலைவர்களை, சிந்தனையாளர்களைப் பற்றி தரம் தாழ்ந்த சொற்களைப் பயன்படுத்தும் இவர்கள் ஒழுக்கம் என்றால் என்னவென்று அறியாதவர்களோ என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது. தங்களை எதிர்த்து யாரும், எதுவும் சொல்லக்கூடாது, செய்யக்கூடாது, அப்படிச் செய்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று அடாவடித்தனம் செய் வது கடைந்தெடுத்த பாசிசம் அல்லவா? எதிர்கால இந்தியாவை வழிநடத்தும் ஆட்சி அதிகாரத்தை இவர்களிடம் ஒப் படைத்தால் நாடு என்னென்ன அவலங் களைச் சந்திக்க நேரிடும் என்பதை வாக் காளர்கள் நன்கு உணர்ந்து தங்களின் தேர்தல் கடமையை ஆற்றிடவேண்டும். தங்களிடம் உள்ள வலிமையான வாக்குச் சீட்டை வீண் ஆடம்பரங்களுக்கும், விளம் பரங்களுக்கும், மெய்போல் தோன்றிடும் மிகைப்படுத்தப்பட்ட பொய்களுக்கும் மதவெறியைத் தூண்டும் வீண் உணர்ச்சி களுக்கும் மயங்கித் தவறாகப் பயன் படுத்தாமல், நாட்டின் நாளைய வளர்ச்சிக்கு உறுதுணையாக சமூகநீதியை, உண்மை யான மதச்சார்பின்மையை கட்டிக்காப் பாற்றும் அணிக்கு ஆதரவாக தவறாது பயன்படுத்துங்கள். - இசையின்பன், சென்னை Read more: http://viduthalai.in/page-2/77669.html#ixzz2xDJwMGLI March 28, 2014 at 6:08 AM தமிழ் ஓவியா said... சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூடத்தில் ஒருநாள் சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூட விண்வெளி வீரர்களுக்கு, நேர நேரத்திற்கு என்ன செய்யவேண்டும் என்பது பூமியில் இருந்தே தரை கட்டுப்பாட்டு நிலையத்தால் நிர்வாகிக்கப்படுகிறது. அதாவது அவர்களின் கை கடிகாரம் இயக்கம் பூமியின் நிர்வாக கட்டுப்பாட்டில் இருக்கும் என்று சொல்லலாம். (அவர்களும் தான்) அவர்களுக்கான வேலை பட்டியல்கள் தினமும் அறிவிக்கப்பட்டு விடும். தினம் ஒன்பது மணிநேரம், அய்ந்து நாள் மட்டும் வேலை. ஓய்வில் அவர்களுக்கு பிடித்த செயலில் ஈடுபடலாம். ஆனால், பெரும்பாலும் சுத்தம் செய்வது ஏதேனும் பழுது நீக்கும் பணி செய்து கொண்டிருப்பார்கள். * காலை 6 மணி: நாளின் துவக்கம். பூமியை போல அவர்களுக்கு காலை 6 மணிக்கு சூரிய உதயம் கிடையாது. ஏனெனில் ஒருநாளில் அவர்களுக்கு 16 தடவை சூரிய உதயம் தோன்றும். (அதாவது அய்.எஸ்.எஸ் ஒரு நாளுக்கு 16 முறை பூமியை சுற்றும்.) காலை ஆறு மணிக்கு அலாரம் அடித்துவிடும். எழுந்து கொள்ள வேண்டும். * காலை 7 மணி: உடல் நலம் பேணல், காலை உணவு, பல் துலக்குதல். பற்பசையால் பல் துலக்கியபின் அப்படியே விழுங்கிக்கொள்ளலாம். அதிக நுரைவராத சாம்பு தலைக்கு போட்டு கொள்ளலாம். தலை குளித்தல் (தினமும் இது தேவையில்லை) வைப்பர் மற்றும் டிரையர் கொண்டு உலர வைத்துக்கொள்கிறார்கள். * காலை 7.30 மணி: கான்பெரன்ஸ் அய்.எஸ்.எஸ் இல் எல்லோரும் ஒரே இடத்தில் கூடி தரை கட்டுப்பாட்டு நிலையத்தில் தொடர்பு கொண்டு அன்றைய வேலைக் கான கட்டளையை பெறுகிறார்கள். தங்களின் பிரச்சி னைகளை தெரிவிக்கலாம். நண்பர்கள் மற்றும் உறவினர் களிடம் இருந்து அவர்களுக்கு வந்த தகவல்கள் அளிக்கப் படுகின்றன. * காலை 8 மணி: பயிற்சி நேரம் எடையற்ற நிலையில் உடல் பல பிரச்சினைகளை சந்திக்கும். அதனால் கட்டாயம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். காலின் கீழிருக்கும் ஸ்ராப்பினால் தங்கள் உடலை இணைத்துக்கொண்டு நிலையான சைக்கிள் ஓட்டி பயிற்சி செய்கிறார்கள். இதேபோல் ட்ரட்மில் துரித நடையோட்ட பயிற்சியும் செய்கிறார்கள். இப்படி தினமும் இரவு 10 மணி வரையில் பல்வேறு வேலைகளில் ஈடுபடுகிறார்கள். Read more: http://viduthalai.in/page-7/77686.html#ixzz2xDL7az79 March 28, 2014 at 6:12 AM Post a Comment Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) பதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா பதினான்காம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-20 இல் பதிமூன்றாம் ஆண்டுகள் முடித்து பதிநான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ பதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா பதிமூன்றாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2019 இல் பனிரெண்டாம் ஆண்டுகள் முடித்து பதிமூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ பனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ பனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2018 இல் பதினொன்றாம் ஆண்டுகள் முடித்து பனிரெண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 389 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 121024 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி பதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ 19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. பத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா 19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா 19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி எட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா 19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி Blog Archive ► 2021 (14) ► May (10) ► March (1) ► February (1) ► January (2) ► 2020 (1) ► March (1) ► 2019 (1) ► January (1) ► 2018 (29) ► December (4) ► September (5) ► July (1) ► May (1) ► April (1) ► March (3) ► February (3) ► January (11) ► 2017 (4) ► December (1) ► August (2) ► January (1) ► 2016 (27) ► December (1) ► November (2) ► September (2) ► August (3) ► July (4) ► June (4) ► May (1) ► April (2) ► March (1) ► February (4) ► January (3) ► 2015 (298) ► November (3) ► October (14) ► September (28) ► August (16) ► July (32) ► June (37) ► May (25) ► April (35) ► March (37) ► February (29) ► January (42) ▼ 2014 (564) ► December (45) ► November (42) ► October (58) ► September (47) ► August (42) ► July (48) ► June (53) ► May (46) ► April (55) ▼ March (41) மரணப் பதிவு நிலையம் தொடங்கப்படும்! ஏன்?எதற்கு? -- ... ஹிட்லரும்-மோடியும்!நரோடா பாட்டியா நினைவிருக்கிறதா? ஈழத்தமிழர்களுக்கு மற்றொருமுறை துரோகம்!காங்கிரஸ் தன... கருப்பு காங்கிரஸ்வாதிக்கும் வெள்ளை காங்கிரஸ்வாதிக்... காசி விசுவநாதன் ஆதரவு யாருக்கு?நரேந்திர மோடிக்கா?ஆ... பெண்களுக்கு சுயமரியாதை உணர்ச்சி வந்திருந்தால் அருத... மதச்சார்பின்மை என்றால் என்ன?அரசுக்கு மதம் உண்டா? பகவத் சிங், ராஜகுரு, சுகதேவ் தூக்கிலிடப்பட்டபோது ... ஹிந்துத்துவா: பி.ஜே.பி.யும் - அதிமுகவும் இரட்டைக் ... சோ எனும் அரசியல் புரோக்கர்! - சிங்கங்கள் நரிகளான க... ஹிந்து ராஷ்டிரம் வந்தால்... சிந்திப்பீர் ஹிந்துத்துவா ஆட்சிக்கு வந்தால்... சிந்திப்பீர்! திரவுபதை கர்ணன் மீது ஆசைப்பட்டது ஏன்?மகாபாரதமா/ மா... பெரியார் பார்வையில் நாகரிகம் கம்பனுக்கு சிபார்சா? தமிழர் நாகரிகம் பொருந்தக் கம்... தேர்தலில் யாருக்கு வாக்களிக்கவேண்டும்? கடவுளை நம்புகிறவர்களை முட்டாள் என்று சொல்வதற்கு யா... கோட்சே ஆர்.எஸ்.எஸ்.காரரா? நீதிமன்றத் தீர்ப்பு என்ன? மாலேகான் உட்பட பல்வேறு சதிகளில் பிஜேபி - ஆர்.எஸ்.எ... தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை ஒரு பகுத்தறிவுப் பார்வை மனித ஜாதி ஒன்றாகித்தான் தீரவேண்டும்!-பெரியார் சுயமரியாதை திருமணம் என்றால் என்ன? மோடி அலை வீசுகிறதா? மதமே சோம்பேறி வாழ்க்கைக்கு ஆதரவு! பொது உடைகள் பற்றி பெரியார் புறநானூற்றுத் தாய்! - வாழ்க்கைச் சுவடுகள்... தாழ்த்தப்பட்ட மக்கள் மாநாட்டில் பெரியார் உலக மகளிர் நாளில் பெரியார்தம் சிந்தனைகள் ஜாதி பற்றி பெரியார் பெண்கள் எப்படி இருக்க வேண்டும்? - பெரியார் கிறித்தவர்கள் சிந்தனைக்கு.... ஏன் சுயமரியாதை இயக்கத்தில் சேரவேண்டும்?-பெரியார் குருக்களின் புரட்டு - பெரியார் பகத்சிங் புரட்சி வீரனா? வன்முறையாளனா? தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டால் உங்களுடைய ... சோதிடம் - அறிவியலல்ல! - அப்துல்கலாம் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் இரட்டை வேடத்தைப் புரிந்த... பேராசையும் சோம்பேறித்தனமுமே பிரார்த்தனையின் அடிப்படை காலித்தனம் காங்கிரஸ் காப்பிரைட்டா? பெரியார் மண்ணின் உளவியல் குணம் தேர்தலில் சுயமரியாதைக்காரர்கள் எப்படி நடந்துகொள்ள ... ► February (45) ► January (42) ► 2013 (466) ► December (39) ► November (47) ► October (50) ► September (38) ► August (39) ► July (35) ► June (36) ► May (35) ► April (44) ► March (32) ► February (32) ► January (39) ► 2012 (506) ► December (34) ► November (40) ► October (43) ► September (42) ► August (42) ► July (43) ► June (38) ► May (48) ► April (44) ► March (48) ► February (38) ► January (46) ► 2011 (622) ► December (40) ► November (41) ► October (48) ► September (68) ► August (59) ► July (59) ► June (54) ► May (56) ► April (41) ► March (52) ► February (57) ► January (47) ► 2010 (827) ► December (42) ► November (55) ► October (52) ► September (73) ► August (66) ► July (85) ► June (79) ► May (56) ► April (63) ► March (79) ► February (75) ► January (102) ► 2009 (1381) ► December (84) ► November (102) ► October (76) ► September (111) ► August (147) ► July (145) ► June (143) ► May (90) ► April (135) ► March (112) ► February (117) ► January (119) ► 2008 (1129) ► December (118) ► November (144) ► October (135) ► September (88) ► August (130) ► July (125) ► June (99) ► May (94) ► April (100) ► March (42) ► February (42) ► January (12) ► 2007 (34) ► December (34) ஆங்கிலம் கற்க Popular Posts திமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல் கேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன? கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம... அண்ணாவின் பொன்மொழிகள் இன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ... ஒரு ரஞ்சிதா போனால் என்ன? எத்தனை குஞ்சிதாக்கள் கிடைப்பார்கள்? கப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப... என் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன் நம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத... பாண்டேவுக்கு பதிலடி! ஊன்றிப்படித்து உண்மைகளை அறியுங்கள்!! அன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ... அம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத... இதுதான் அய்யப்பன் உண்மை கதை அய்யோ அப்பா அய்யப்பா! இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன... பறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன? இன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்... மாணவர்களும் பொதுநலத் தொண்டும்! - பெரியார் தோழர்களே! இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப... ஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன? நியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந... Powered by Blogger. குறி சொற்கள் அண்ணா (102) அம்பேத்கர் (38) அய்யத்தெளிவு (18) அரசியல்-சமூகம்-இடஒதுக்கீடு (24) அரசியல்-சமூகம்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை (623) இடஒதுக்கீடு (4) உலக நாடுகள் (79) கடவுள்-மதம் (37) கலைஞர் (50) கலைவாணர் (7) காணொளி (3) காமராசர் (6) திராவிடர் இயக்கம் (757) நேர்காணல் (25) பதிலடி (17) பாரதியார் (14) பார்ப்பனியம் (234) பார்ப்பனியம் -மூடநம்பிக்கை-அரசியல்-சமூகம் (8) பார்ப்பனியம்-மூடநம்பிக்கை (36) பார்ப்பனியம்-மூடநம்பிக்கை-அரசியல்-சமூகம் (101) பார்ப்பனியம்-மூடநம்பிக்கை-ஜோதிடம் (23) புரட்சிக்கவிஞர் (20) பெரிய (1) பெரியார் (1715) பெரியார்-காமராசர் (2) பெரியார்-தலித் (51) பெரியார்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை (14) பெரியார்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை-புத்தகம் (59) பெரியார்-பெண்ணியம் (5) பெரியார்-மயிலாடன் -மூடநம்பிக்கை-பார்ப்பனியம் (332) பெரியார்-மயிலாடன்-மூடநம்பிக்கை- பார்ப்பனியம் (90) பெரியார்-மற்றவர்கள் (87) பெரியார்-மின்சாரம் (362) பொதுவானவை (69) மூடநம்பிக்கை (92) விவேகானந்தர்-பார்ப்பனியம்-மூடநம்பிக்கை-அரசியல்-சமூகம் (9) வீரமணி (757) ஜோதிடம் (11) ஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ ஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.
Sorry, you have Javascript Disabled! To see this page as it is meant to appear, please enable your Javascript! Sign in Join Forum New Posts Completed Novels Ongoing Novels Shop Account details Cart Orders Checkout Youtube Kindle Post your story Login Dashboard Account Sign in Welcome!Log into your account your username your password Forgot your password? Create an account Privacy policy Sign up Welcome!Register for an account your email your username A password will be e-mailed to you. Privacy policy Password recovery Recover your password your email Search Sign in Welcome! Log into your account your username your password Forgot your password? Get help Create an account Privacy policy Create an account Welcome! Register for an account your email your username A password will be e-mailed to you. Privacy policy Password recovery Recover your password your email A password will be e-mailed to you. SMTamilNovels Forum New Posts Completed Novels Ongoing Novels Shop Account details Cart Orders Checkout Youtube Kindle Post your story Login Dashboard Account jeevanathiyaaga_nee-7 Akila Kannan ஜீவநதியாக நீ… அத்தியாயம் – 7 அதிகாலை பொழுது. மஞ்சள் நிறத்தில் வானம் பொலிவாக காட்சியளிக்க அதை வெறித்தபடி நின்று கொண்டிருந்தான் ஜீவா. அவன் நண்பர்கள் மூலமாக தன் பெற்றோர் ஊரை காலி செய்துவிட்டதாக அறிந்து கொண்ட தகவலில் அவனுக்கு சுருக்கென்று வலித்தது. ‘சீக்கிரம் கல்யாணத்தை முடிச்சிட்டு வீட்டுக்கு போகணும்னு பார்த்தால், இந்த கல்யாணத்தை ரிஜிஸ்டர் பண்ண இத்தனை நாள் ஆகுதே. அப்பா, அம்மாவையும் கீதாவையும் திட்டியே கொன்னுடுவாங்களே’ ஜீவா யோசனையோடு நிற்க, அவனை அசைத்தது மெல்லிய விசும்பல் சத்தம். தலையணையில் முகம் புதைத்திருக்க, தாரிணியின் முதுகு பகுதி அவள் விசும்பலை உணர்த்தும் விதமாக ஏறி ஏறி இறங்கியது. அவன் அவளை ஆறுதலாக நீவ, “ஜீவா…” அவன் மேல் சாய்ந்து கொண்டாள். “என்ன ஆச்சு தாரிணி?” அவன் அவள் தலை கோத, “எனக்கு ரொம்ப பயமா இருக்க ஜீவா.” என்றாள் விசும்பலோடு. ” ஜீவா, உன் முகமே சரி இல்லையே. ஏதோ பிரச்சனை தானே?” அவன் நெஞ்சோரத்தில் சாய்ந்து தலை தூக்கி அவள் கேட்க, “பிரச்சனை எல்லாம் இல்லை தாரிணி. எல்லாம் சரியா நடக்கணும் இல்லையா? நான் வீட்டில் யார் கிட்டயும் பேசலை. எல்லாரும் எப்படி இருக்காங்கன்னு தெரியலை. நம்ம கல்யாணத்தை ரிஜிஸ்டர் பண்ண இவ்வளவு நேரம் எடுக்கும்முனு நான் நினைக்கலை.” அவன் பேச, “உங்க வீட்டில் என்னை ஏத்துப்பாங்களா?” தாரிணி கேட்க, “தெரியலை” அவன் பதில் கூற, “அப்ப என்ன பண்ணுவ?” அவள் விழிகளில் கவலையோடு கேட்க, அவன் அவள் விழிகளில் இதழ் பதித்தான். “நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு ஜீவா.” அவள் சிணுங்க, அவன் இதழ்கள் அவள் கன்னத்தில் பதில் கொடுக்க, “நீ என்ன பண்ணுவேன்னு கேட்டேன்?” அவள் கோபமாக கேட்க, “நான் என்ன பண்ணுவேன்னு நான் தான் செய்து காட்டினேனே” அவன் குறும்பாக சிரித்தான். “ஜீவா…” அவன் சட்டையை கொத்தாக பிடித்து, அவள் அவனை முறைக்க, “…” அவன் உதட்டை பிதுக்கினான். “என்ன ஜீவா?” அவள் அவன் கழுத்தை கட்டிக்கொண்டு மென்மையாக கேட்டாள். “நீ ஜீவான்னு கூப்பிட்ட வேகத்துக்கு நான் என்னன்னவோ எதிர்பார்த்தேன்.” அவன் கண்களில் குறும்பு மின்ன காதல் பளபளத்தது. “என்ன எதிர்பார்த்த?” அவள் விழிகள் அப்பாவியாக விரிந்தன. அவன் உயரத்திற்கு எம்பி, அவன் கழுத்தை சுற்றி வளைத்த அவள் கரங்களுக்கு சுமை கொடுக்காமல் முன்னே சரிந்து, அவள் இடையை சுற்றி வளைத்து அவள் கழுத்தில் தன் உரிமையை நிலைநாட்டி, “என்ன எதிர்பார்த்தேன்னு சொல்லட்டுமா?” அவன் அவள் செவியோரமாக கிசுகிசுத்தான். அவன் தீண்டலில் அவள் தன்வசம் இழந்தாள். அவன் மூச்சுக்காற்று தேகத்தை தீண்ட அவள் தன் சுவாசத்தை மறந்தாள். “…” அவள் முகம் சிவந்து, அவள் வார்த்தைகள் வெட்கத்தில் சிக்கி கொள்ள, “என்ன எதிர்பார்த்தேன்னு சொல்லட்டுமா?” அவன் குரலில் காதல் வழிய புருவங்களை உயர்த்த, “ஜீவா… என்னை எப்பவும் இப்படி நல்லா பார்த்துப்ப தானே?” அவள் ஆழமான குரலில் கேட்டாள். அவன் அவள் தோள்களை தொட்டு தூர நிறுத்தினான். அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தான். “இப்படி பார்த்தா போதுமா?” அவன் கேட்க, அவள் அவன் நெஞ்சில் குத்த கையொங்க, அவள் கைகளை பிடித்து, அவளை பின்னோடு சுற்றி தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். “நெஞ்சில் என் காதலி இருக்கா… நான் அவளை வாழ்க்கை முழுக்க தங்கத்தட்டில் தாங்கணுமுன்னு நினைக்குறேன். நீ இப்படி அடிக்கிற?” அவன் அவளை பரிவோடு கண்டிக்க, அவள் அவன் மீது சாய்ந்து கொண்டாள். “தாரிணி” அவன் குரல் கண்டிப்போடு ஒலித்தது. “இனி, இப்படி சந்தேக கேள்வி எல்லாம் வர கூடாது. கொஞ்ச நேரத்தில் நம்ம கல்யாணமும் ரிஜிஸ்டர் ஆகிரும். இனி, நம்மளை யாராலும் பிரிக்க முடியாது. ஆனால், நமக்கு பலர் பல பிரச்சனைகள் கொடுக்கலாம். நம்ம காதலும், நாம ஒருத்தர் மேல ஒருத்தர் வச்சிருக்கிற நம்பிக்கை மட்டுந்தான் நம்ம வாழ்வில் அஸ்திவாரம்” அவன் கூற, அவள் தலை அசைத்தாள். அவளை தன் பக்கம் திருப்பினான். தன் ஆள் காட்டி விரலால் அவள் முகத்தை தூக்கினான். “புரியுதா?” அவன் குரலில் எவ்வளவு அன்பும், பரிவும் இருந்ததோ அதே அளவு அழுத்தமும் கண்டிப்பும் இருந்தது. சற்று நேரத்தில் ஜீவா தாரிணி இருவரும் நண்பர்களோடு கிளம்பினர். ரிஜிஸ்டர் அலுவலகம். கரகோஷம்… கரகோஷம்… நண்பர்கள் முன்னிலையில் ஜீவா, தாரிணியின் திருமணம் பதிவு செய்யப்பட்டது. நண்பர்கள் முன்னிலையில் அவர்கள் இருவரும் மாலை மாற்றிக்கொண்டனர். நண்பன் ஒருவன் தன் மனைவியோடு வந்திருந்தான். அவர்கள் குங்குமத்தை நீட்ட, ஜீவா அவள் நெற்றியில் குங்குமமிட, தாரிணி கண்களில் விழிநீர் வெளிவர துடிக்க, ஜீவா மறுப்பாக தலை அசைக்க அவள் விழிமூடி தன் விழி நீரை உள்ளிழுத்துக் கொண்டாள். அவன் தான் வாழ்க்கை, அவன் சொற்கள் தான் வாழ்வு என்பது போல்! *** *** *** *** அவசர அவசரமாக ஏற்பாடு செய்த திருமணம் என்று சொல்ல முடியாதபடி, அந்த திருமண மண்டபம் கோலாகலமாக காட்சி அளித்தது. கெட்டிமேளம்… கெட்டிமேளம்… சுற்றத்தார் படை சூழ பெற்றோர் ஆசிர்வாதத்துடன் ரவி கீதா கழுத்தில் தாலி கட்டினான். அவன் தீண்டல், அவன் அருகாமை அவளை எதுவும் செய்யவில்லை. அவள் வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். “குங்குமம் இடுங்கோ” ஐயர் கூற, ரவி அவளை சுற்றி வளைத்து அவள் நடுவகிட்டில் குங்குமமிட, அவள் அவனின் முழு அணைப்பில் இருந்தாள். அவன் கதகதப்பில் அரங்கேறிய சம்பவம் புரிய, அவள் நக்கலாக சிரித்தாள். அவளின் விருப்பமின்மை, கோபம் அனைத்தும் அவன் அறிந்ததே. அவனுக்கும் பிடிக்கவில்லை. ஆனால், அவர்கள் இருவருக்கும் விருப்பும் வெறுப்பும் தெரிவிக்க யாரும் இடம் தரவில்லையே. அவள் வெறித்த பார்வை… அவள் வெறுப்பை எதிர்பார்த்திருந்த அவன், அவள் சிரிப்பில் புருவத்தை உயர்த்தினான். “என்ன சிரிப்பு?” அவள் செவியோரம் சாய, அவள் படக்கென்று விலக எத்தனிக்க, “ம்…” அவன் கர்ஜனையில் அசையாமல் இருந்தாள். “மொத்த மண்டபமும் நம்மளை பார்த்துகிட்டு இருக்கு. என் அம்மா, அப்பாவும், உன் அம்மா அப்பாவும் பார்த்திட்டு இருக்காங்க. யாரும் வருத்தப்பட கூடாது. நானும் உன்னை விரும்பி கல்யாணம் செய்யலை. நம்ம இந்த ஊரை பொறுத்தவரை மனமொத்து வாழற புருஷன் பொண்டாட்டி தான்.” அவன் குரலில் ஆணை இருக்க, அவள் இப்பொழுதும் சிரித்தாள். அவள் சிரிப்பில் அவன் மனம் மயங்க, அதை ஒதுக்கி, “என்ன சிரிப்புன்னு கேட்டேன்?” அவன் கேள்வியோடு நிறுத்தினான். “கல்யாணம் கிணற்றில் விழுந்து சாகுற மாதிரி, காதல் கல்யாணம் சூசைட், நிச்சியக்கப்படுற கல்யாணம் மர்டர் … இப்படின்னு நான் பல இடத்தில படிச்சிருக்கேன். எங்க அண்ணன் கிணற்றில் விழுத்திட்டான்னு, என்னை எங்க அம்மா அப்பா கிணற்றில் தள்ளிட்டாங்க” அவள் நக்கலாக கூற, அவனும் சிரித்தான். “என்ன சிரிப்பு?” இப்பொழுது கேட்பது, அவள் முறையாயிற்று. “கிணற்றில் கல்லை கட்டி தள்ளி விட்டா தான் தப்பு. வெளிய வர முடியாது. என் தங்கை கல்லை கட்டிக்கிட்டு இறங்கிருக்கா. அவ வெளிய வரவே முடியாது. நியாயம், கொள்கை, சட்டம்முனு வாழ்க்கைக்கு ஒத்து வராத ஒருத்தனை நம்பி குதிச்சிருக்கா” ரவி கூற, கீதாவின் பார்வை கனல் பார்வையாக மாறியது. “ஆனால், உங்க வீட்டில், என்னை மாதிரி ஒரு கெட்டிக்காரனோடு தான் தள்ளி விட்டிருக்காங்க. இந்த உலகத்தில் பிழைக்க தெரிந்தவன். உன் பாஷையில் சொல்லணுமுன்னா இந்த கிணற்றில் நீந்த தெரிந்தவன். உன் வாழ்க்கை நல்லாருக்கும்.” அவன் அவளை விட, ஒரு படி அதிகமான நக்கலோடு கூறினான். பொண்ணு மாப்பிள்ளை அப்புறம் பேசிக்கலாம். “மாப்பிள்ளை பொண்ணுக்கு மெட்டி போடுங்க” என்று ஒரு குரல் வர, இருவரும் எழுந்தனர். ரவி முன்னே செல்ல, கீதாவை அவள் உறவு முறையினர் அழைத்து வந்தனர். ‘எனக்கு இந்த ரவியை சுத்தமா பிடிக்கலை. அதுவும் எப்பப்பாரு, அண்ணனை ஏதாவது சொல்லிகிட்டே இருக்கான். இதுல நல்லவன் மாதிரி பேச்சு வேற.’ அவள் கடுப்பாக தன் முகத்தை திருப்பிக் கொண்டாள். முகத்தை எங்கோ திருப்பியபடி, அவள் கால்களை அம்மி மேல் வைக்க, அவள் பெருவிரல் அம்மியை வேகமாக இடிக்க எத்தனித்தது. மெட்டி அணிய அவள் பாதங்களை பார்த்தபடி அங்கு அமர்ந்திருந்த ரவி பதறியபடி அவள் பாதங்களை பிடித்தான். அவன் பிடியில் சட்டென்று தன் பார்வையை அங்கு திருப்பினாள் கீதா. நொடிக்குள் அங்கு என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்தும் கொண்டாள். இருந்தும், அவனை காண பிடிக்காமல் தன் முகத்தை வெறுப்போடு திருப்பிக்கொண்டாள் கீதா. அவன் மென்மையாக அவள் பாதங்களை தன் இடது கைகளில் ஏந்தினான். அவன் தீண்டலில் அவளுள் மெல்லிய நடுக்கம். அவன் விரல்கள், அவள் பாதத்தில் உரிமை கொண்டாடியது. அவன் தீண்டலில், அவன் உரிமையில் அவளுள் மின்சாரம். அவன் தீண்டலில் அவளிடம் சொல்லில் வடிக்க முடியாத உணர்வு. ஆனால், ஏற்றுக்கொள்ள முடியாத தகிப்பு. அவன் கண்கள் மருதாணியிட்ட அவள் பாதங்களை ரசித்தது. வழவழப்பான அவள் கால்களை தழுவிய அவள் கொலுசு அவன் கண்களை பறித்தது. தன் வலது கையை மெட்டியோடு அவள் விரல் அருகே அவன் எடுத்து செல்ல, அவன் மனம் அவளிடம் எதையோ விழைய, அவன் அவளை நிமிர்ந்து பார்த்தான். அவள் காட்டிய அசூயை அவனிடம் சினத்தை கிளப்ப, அவனுள் ஒரு வீராப்பு எட்டி பார்த்தது. அவன் கைகள் அவள் பாதத்தை அழுத்தியது. அவன் தீண்டலில் தவித்த அவள் பாதங்கள், அவன் அழுத்தத்தில் மருதாணியில் சிவந்த அவள் பாதங்கள் இப்பொழுது ரத்தம் சுண்ட சிவந்தது. அவன் விழிகள், அவள் பார்வைக்காக ஏங்கி அவளை பார்த்தது. வெறுப்போடு திரும்பிய அவள் முகம் இப்பொழுது வலியில் சுருங்கியது. அவள் இன்னும் அவன் பக்கம் திரும்பாமல் ஒற்றை காலில் தொடர்ந்து நிற்கவும் முடியாமல், பாரத்தை பாதத்தை அவன் கைகளில் இறக்க, அவன் அழுத்தம் இன்னும் கூடியது முகத்தில் கடினத்தோடு. “என்ன மாப்பிள்ளை, மெட்டியை போடுங்க?” ஒரு குரல் வர, “பொண்ணு என் முகத்தை பார்த்தால் தான் மெட்டி” அவன் சிரிப்பினோடு வம்பு வளர்க்க, அவள் பட்டென்று கோபமாக திரும்பி பார்த்தாள். வலியில் கண்ணீர் வடிக்க, அவள் விழிகள் விரும்பினாலும் அவள் இறுமாப்பு அவளை அழுத்தமாக நிற்க வைத்தது. வலியில் சுருங்கிய அவள் முகம், பல மொழி பேசிட அவன் தன் அழுத்தத்தை குறைத்து கொண்டு, அவள் பாதத்தை மென்மையாக வருடினான். மெட்டியை அணிவித்துவிட்டு அவன் புன்னகையோடு எழுந்தான். “நீ எப்படி இருக்கியோ? நான் அப்படி இருப்பேன். என் கிட்ட வெறுப்பை காட்டணும்னு நினைச்ச, நான் உனக்கு வலியை தான் காட்டுவேன்” மனதிற்குள் அவனுக்கு ஆயிரம் எண்ணங்கள் ஓடினாலும், அவன் அவளை அழுத்தமாக மிரட்டினான். அவள் இப்பொழுதும் நக்கலாக சிரித்தாள். “என்ன சிரிப்பு?” அவன் புரியாமல் கேட்க, “இல்ல, என் அண்ணனை கைக்குள் வைக்க, என்னை கல்யாணம் பண்ணிருக்கீங்க. அதே மாதிரி, உங்க தங்கை என் அண்ணன் கிட்ட இருக்கான்னு மறந்துடீங்களே?” அவள் ஏளனமாக கூறினாள். “உங்க அண்ணன் தான் என் தங்கையை காதலிச்சு கல்யாணம் பண்ணிருக்கானே” ரவி கேலியாக கூற, “அதுவும் சரி தான். எங்க அண்ணன் நல்லவன். காதலிச்ச பெண்ணை கல்யாணம் பண்ணுவான். உங்க தங்கையை நல்லா பார்த்துப்பான்னு சொல்லறீங்க? ஆனா நீ…” கீதா இப்பொழுது கண்சிமிட்டி அப்பாவியாக கேட்க, அவன் முகம் இறுகியது. ‘அண்ணனுக்கு தங்கை கொஞ்சம் கூட சளைத்தவள் இல்லை. இவளை வைத்து தான் நான் என் ஆட்டத்தை ஆரம்பிக்கணும்’ அவன் சூளுரைத்துக் கொண்டான்.
பொது கோரிக்கைகளுக்கு இணைய வழியில் ஆதரவு திரட்டி மனு அளிக்கும் (Online Petition) வசதியை முகநூல் (Facebook) இணையதளம் நாளை முதல் அமேரிக்கா முழுவதும் அறிமுகம் செய்ய இருக்கிறது. தற்போது இணையவெளியில் மனு உருவாக்க Change.org / Amnesty போன்ற…
Series Navigation நூல் மதிப்புரை: எங்கும் ஒலிக்கிறது காற்று! கூர் 2011 கலை இலக்கிய மலர்!கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரு கதைகளுக்கு இடையே (கவிதை -40 பாகம் -2) 10 ஜூலை 2011 இழவு வீடு முடிச்சிட்டுக் கொள்ளும் நாளங்கள்.. வேஷங்கள் பயணம் வேடிக்கை “கானுறை வேங்கை” விமர்சனம் பெண்பால் ஒவ்வாமை தாய் மனசு தூசு தட்டப் படுகிறது! மூன்று கன்னங்களில், மூன்று விரல்கள் என்னைச் சுற்றிப் பெண்கள்: நூல் அறிமுகம் அந்த ஒருவன்… பிரியாவிடை: அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் மகுடி கேட்ட மயக்கத்தின் ஆட்டம் எதிர் வரும் நிறம் அவள் …. ஸ்வரதாளங்கள்.. வலி வட்டத்துக்குள் சதுரம் 2011 ஜப்பான் சுனாமியில் நேர்ந்த புகுஷிமா விபத்துகள் போல் கூடங்குள ரஷ்ய அணு உலையில் நிகழுமா ? கட்டுரை 7 அபியும் அப்பாவும் எனது இலக்கிய அனுபவங்கள் – 6 பத்திரிகை சந்தா நினைவுகளின் தடத்தில் – (72) ஜென் – ஒரு புரிதல் பகுதி (1) பூமராங் ராணி., பெண்ணாதிக்கம் இரு கவிதைகள். “தமிழ்ச் சிறுகதையின் தந்தை “ ஓரிடம்நோக்கி… சோ.சுப்புராஜ் கவிதைகள் நூல் மதிப்புரை: எங்கும் ஒலிக்கிறது காற்று! கூர் 2011 கலை இலக்கிய மலர்! அழையா விருந்தாளிகள் கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரு கதைகளுக்கு இடையே (கவிதை -40 பாகம் -2) கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -4) தூரிகையின் முத்தம். விழிப்பு ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 8 பகுப்பாய்வின் நிறைவு TOPICS Previous:நூல் மதிப்புரை: எங்கும் ஒலிக்கிறது காற்று! கூர் 2011 கலை இலக்கிய மலர்! Next: கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரு கதைகளுக்கு இடையே (கவிதை -40 பாகம் -2) Leave a Reply Cancel reply Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. திண்ணை பற்றி திண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை உங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள். ஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம். பழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன. தேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள் சமஸ்கிருதம் தொடர் முழுவதும் இந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif ட்விட்டரில் பின் தொடர இதழ்கள் Select Series 1 அக்டோபர் 2017 (10) 1 ஆகஸ்ட் 2021 (15) 1 ஏப்ரல் 2012 (40) 1 ஏப்ரல் 2018 (22) 1 செப்டம்பர் 2013 (15) 1 செப்டம்பர் 2019 (5) 1 ஜனவரி 2012 (42) 1 ஜூன் 2014 (26) 1 ஜூலை 2012 (32) 1 ஜூலை 2018 (9) 1 டிசம்பர் 2013 (29) 1 டிசம்பர் 2019 (4) 1 நவம்பர் 2015 (24) 1 நவம்பர் 2020 (19) 1 பெப்ருவரி 2015 (17) 1 மார்ச் 2015 (15) 1 மார்ச் 2020 (8) 10 அக்டோபர் 2021 (13) 10 ஆகஸ்ட் 2014 (23) 10 ஏப்ரல் 2016 (17) 10 செப்டம்பர் 2017 (12) 10 ஜனவரி 2016 (12) 10 ஜனவரி 2021 (13) 10 ஜூன் 2012 (41) 10 ஜூன் 2018 (8) 10 ஜூலை 2011 (38) 10 ஜூலை 2016 (21) 10 டிசம்பர் 2017 (13) 10 நவம்பர் 2013 (34) 10 நவம்பர் 2019 (10) 10 பெப்ருவரி 2013 (31) 10 பெப்ருவரி 2019 (8) 10 மார்ச் 2013 (28) 10 மார்ச் 2019 (9) 10 மே 2015 (26) 10 மே 2020 (11) 11 அக்டோபர் 2015 (23) 11 அக்டோபர் 2020 (17) 11 ஆகஸ்ட் 2013 (30) 11 ஆகஸ்ட் 2019 (11) 11 ஏப்ரல் 2021 (13) 11 செப்டம்பர் 2011 (33) 11 செப்டம்பர் 2016 (12) 11 ஜனவரி 2015 (31) 11 ஜூன் 2017 (11) 11 ஜூலை 2021 (18) 11 டிசம்பர் 2011 (48) 11 டிசம்பர் 2016 (17) 11 நவம்பர் 2012 (33) 11 நவம்பர் 2018 (6) 11 பெப்ருவரி 2018 (20) 11 மார்ச் 2012 (35) 11 மார்ச் 2018 (10) 12 அக்டோபர் 2014 (23) 12 ஆகஸ்ட் 2012 (36) 12 ஆகஸ்ட் 2018 (7) 12 ஏப்ரல் 2015 (28) 12 ஏப்ரல் 2020 (10) 12 செப்டம்பர் 2021 (12) 12 ஜனவரி 2014 (29) 12 ஜனவரி 2020 (11) 12 ஜூன் 2011 (33) 12 ஜூன் 2016 (17) 12 ஜூலை 2015 (17) 12 ஜூலை 2020 (11) 12 நவம்பர் 2017 (11) 12 பிப்ரவரி 2012 (40) 12 பெப்ருவரி 2017 (18) 12 மார்ச் 2017 (12) 12 மே 2013 (29) 12 மே 2014 (33) 12 மே 2019 (12) 13 அக்டோபர் 2013 (31) 13 அக்டோபர் 2019 (4) 13 ஆகஸ்ட் 2017 (10) 13 ஏப்ரல் 2014 (19) 13 செப்டம்பர் 2015 (24) 13 செப்டம்பர் 2020 (11) 13 ஜனவரி 2013 (32) 13 ஜனவரி 2019 (4) 13 ஜூன் 2021 (13) 13 ஜூலை 2014 (26) 13 டிசம்பர் 2015 (14) 13 டிசம்பர் 2020 (15) 13 நவம்பர் 2011 (41) 13 நவம்பர் 2016 (17) 13 மார்ச் 2016 (12) 13 மே 2012 (41) 13 மே 2018 (13) 14 அக்டோபர் 2012 (23) 14 அக்டோபர் 2018 (10) 14 ஆகஸ்ட் 2011 (43) 14 ஆகஸ்ட் 2016 (14) 14 ஏப்ரல் 2013 (33) 14 ஏப்ரல் 2019 (7) 14 செப்டம்பர் 2014 (25) 14 ஜனவரி 2018 (15) 14 ஜூன் 2015 (23) 14 ஜூன் 2020 (7) 14 ஜூலை 2013 (18) 14 ஜூலை 2019 (6) 14 டிசம்பர் 2014 (23) 14 நவம்பர் 2021 (13) 14 பெப்ருவரி 2016 (18) 14 பெப்ருவரி 2021 (13) 14 மார்ச் 2021 (7) 14 மே 2017 (11) 15 அக்டோபர் 2017 (11) 15 ஆகஸ்ட் 2021 (13) 15 ஏப்ரல் 2012 (44) 15 ஏப்ரல் 2018 (19) 15 செப்டம்பர் 2013 (22) 15 செப்டம்பர் 2019 (10) 15 ஜனவரி 2012 (30) 15 ஜனவரி 2017 (14) 15 ஜூன் 2014 (21) 15 ஜூலை 2012 (32) 15 ஜூலை 2018 (8) 15 டிசம்பர் 2013 (32) 15 டிசம்பர் 2019 (8) 15 நவம்பர் 2015 (18) 15 நவம்பர் 2020 (14) 15 பெப்ருவரி 2015 (23) 15 மார்ச் 2015 (25) 15 மார்ச் 2020 (12) 15 மே 2011 (48) 15 மே 2016 (11) 16 அக்டோபர் 2011 (44) 16 அக்டோபர் 2016 (21) 16 ஆகஸ்ட் 2015 (16) 16 ஆகஸ்ட் 2020 (14) 16 ஏப்ரல் 2017 (11) 16 செப்டம்பர் 2012 (31) 16 செப்டம்பர் 2018 (9) 16 ஜூன் 2013 (23) 16 ஜூன் 2019 (9) 16 ஜூலை 2017 (12) 16 டிசம்பர் 2012 (31) 16 டிசம்பர் 2018 (5) 16 நவம்பர் 2014 (22) 16 பெப்ருவரி 2014 (20) 16 பெப்ருவரி 2020 (6) 16 மார்ச் 2014 (23) 16 மே 2021 (15) 17 அக்டோபர் 2021 (15) 17 ஆகஸ்ட் 2014 (26) 17 ஏப்ரல் 2016 (10) 17 செப்டம்பர் 2017 (10) 17 ஜனவரி 2016 (16) 17 ஜனவரி 2021 (12) 17 ஜூன் 2012 (43) 17 ஜூன் 2018 (7) 17 ஜூலை 2011 (34) 17 டிசம்பர் 2017 (20) 17 நவம்பர் 2013 (28) 17 நவம்பர் 2019 (7) 17 பிப்ரவரி 2013 (30) 17 பெப்ருவரி 2019 (7) 17 மார்ச் 2013 (26) 17 மார்ச் 2019 (10) 17 மே 2015 (25) 17 மே 2020 (8) 18 அக்டோபர் 2015 (18) 18 அக்டோபர் 2020 (14) 18 ஆகஸ்ட் 2013 (30) 18 ஆகஸ்ட் 2019 (10) 18 ஏப்ரல் 2021 (9) 18 செப்டம்பர் 2011 (37) 18 செப்டம்பர் 2016 (17) 18 ஜனவரி 2015 (23) 18 ஜூன் 2017 (14) 18 ஜூலை 2021 (22) 18 டிசம்பர் 2011 (39) 18 டிசம்பர் 2016 (13) 18 நவம்பர் 2012 (28) 18 நவம்பர் 2018 (4) 18 பெப்ருவரி 2018 (14) 18 மார்ச் 2012 (36) 18 மார்ச் 2018 (15) 18 மே 2014 (22) 19 அக்டோபர் 2014 (21) 19 ஆகஸ்ட் 2012 (39) 19 ஆகஸ்ட் 2018 (6) 19 ஏப்ரல் 2015 (19) 19 ஏப்ரல் 2020 (22) 19 செப்டம்பர் 2021 (19) 19 ஜனவரி 2014 (27) 19 ஜனவரி 2020 (6) 19 ஜூன் 2011 (46) 19 ஜூலை 2015 (29) 19 ஜூலை 2020 (20) 19 நவம்பர் 2017 (14) 19 பிப்ரவரி 2012 (31) 19 பெப்ருவரி 2017 (9) 19 மார்ச் 2017 (17) 19 மே 2013 (33) 19 மே 2019 (14) 2 அக்டோபர் 2011 (45) 2 அக்டோபர் 2016 (19) 2 ஆகஸ்ட் 2015 (25) 2 ஆகஸ்ட் 2020 (21) 2 ஏப்ரல் 2017 (13) 2 செப்டம்பர் 2012 (37) 2 செப்டம்பர் 2018 (6) 2 ஜூன் 2013 (21) 2 ஜூன் 2019 (9) 2 ஜூலை 2017 (18) 2 டிசம்பர் 2012 (31) 2 டிசம்பர் 2018 (9) 2 நவம்பர் 2014 (19) 2 பெப்ருவரி 2014 (22) 2 பெப்ருவரி 2020 (20) 2 மார்ச் 2014 (22) 2 மே 2021 (17) 20 அக்டோபர் 2013 (31) 20 அக்டோபர் 2019 (6) 20 ஆகஸ்ட் 2017 (13) 20 ஏப்ரல் 2014 (25) 20 செப்டம்பர் 2015 (16) 20 செப்டம்பர் 2020 (16) 20 ஜனவரி 2013 (30) 20 ஜனவரி 2019 (10) 20 ஜூன் 2016 (13) 20 ஜூன் 2021 (11) 20 ஜூலை 2014 (20) 20 டிசம்பர் 2015 (23) 20 டிசம்பர் 2020 (9) 20 நவம்பர் 2011 (38) 20 நவம்பர் 2016 (19) 20 மார்ச் 2016 (14) 20 மே 2012 (29) 20 மே 2018 (13) 21 அக்டோபர் 2012 (21) 21 அக்டோபர் 2018 (7) 21 ஆகஸ்ட் 2011 (47) 21 ஆகஸ்ட் 2016 (14) 21 ஏப்ரல் 2019 (8) 21 செப்டம்பர் 2014 (27) 21 ஜனவரி 2018 (10) 21 ஜூன் 2015 (23) 21 ஜூன் 2020 (18) 21 ஜூலை 2013 (20) 21 ஜூலை 2019 (8) 21 டிசம்பர் 2014 (23) 21 நவம்பர் 2021 (11) 21 பெப்ருவரி 2016 (16) 21 பெப்ருவரி 2021 (13) 21 மார்ச் 2021 (7) 21 மே 2017 (15) 22 அக்டோபர் 2017 (5) 22 ஆகஸ்ட் 2021 (17) 22 ஏப்ரல் 2012 (44) 22 ஏப்ரல் 2018 (22) 22 செப்டம்பர் 2013 (26) 22 செப்டம்பர் 2019 (8) 22 ஜனவரி 2012 (30) 22 ஜனவரி 2017 (13) 22 ஜூன் 2014 (23) 22 ஜூலை 2012 (37) 22 ஜூலை 2018 (9) 22 டிசம்பர் 2013 (24) 22 டிசம்பர் 2019 (5) 22 நவம்பர் 2015 (16) 22 நவம்பர் 2020 (10) 22 பெப்ருவரி 2015 (26) 22 மார்ச் 2015 (28) 22 மார்ச் 2020 (13) 22 மே 2011 (42) 22 மே 2016 (12) 23 அக்டோபர் 2011 (37) 23 அக்டோபர் 2016 (15) 23 ஆகஸ்ட் 2015 (26) 23 ஆகஸ்ட் 2020 (18) 23 ஏப்ரல் 2017 (18) 23 செப்டம்பர் 2012 (41) 23 செப்டம்பர் 2018 (9) 23 ஜூன் 2013 (29) 23 ஜூன் 2019 (4) 23 ஜூலை 2017 (15) 23 டிசம்பர் 2012 (27) 23 டிசம்பர் 2018 (6) 23 நவம்பர் 2014 (21) 23 பெப்ருவரி 2014 (20) 23 பெப்ருவரி 2020 (7) 23 மார்ச் 2014 (23) 23 மே 2021 (20) 24 அக்டோபர் 2021 (16) 24 ஆகஸ்ட் 2014 (30) 24 ஏப்ரல் 2016 (16) 24 செப்டம்பர் 2017 (13) 24 ஜனவரி 2016 (22) 24 ஜனவரி 2021 (14) 24 ஜூன் 2012 (43) 24 ஜூன் 2018 (8) 24 ஜூலை 2011 (32) 24 ஜூலை 2016 (23) 24 டிசம்பர் 2017 (10) 24 நவம்பர் 2013 (24) 24 நவம்பர் 2019 (7) 24 பிப்ரவரி 2013 (26) 24 பெப்ருவரி 2019 (9) 24 மார்ச் 2013 (29) 24 மார்ச் 2019 (8) 24 மே 2015 (19) 24 மே 2020 (12) 25 அக்டோபர் 2015 (24) 25 அக்டோபர் 2020 (13) 25 ஆகஸ்ட் 2013 (25) 25 ஆகஸ்ட் 2019 (4) 25 செப்டம்பர் 2011 (41) 25 செப்டம்பர் 2016 (15) 25 ஜனவரி 2015 (19) 25 ஜூன் 2017 (13) 25 ஜூலை 2021 (11) 25 டிசம்பர் 2011 (29) 25 டிசம்பர் 2016 (11) 25 நவம்பர் 2012 (42) 25 பெப்ருவரி 2018 (20) 25 மார்ச் 2012 (42) 25 மார்ச் 2018 (13) 25 மே 2014 (29) 26 அக்டோபர் 2014 (16) 26 ஆகஸ்ட் 2012 (28) 26 ஆகஸ்ட் 2018 (7) 26 ஏப்ரல் 2015 (26) 26 ஏப்ரல் 2020 (14) 26 செப்டம்பர் 2021 (10) 26 ஜனவரி 2014 (18) 26 ஜனவரி 2020 (11) 26 ஜூன் 2011 (46) 26 ஜூலை 2015 (20) 26 ஜூலை 2020 (23) 26 நவம்பர் 2017 (11) 26 பிப்ரவரி 2012 (45) 26 பெப்ருவரி 2017 (14) 26 மார்ச் 2017 (14) 26 மே 2013 (40) 26 மே 2019 (7) 27 அக்டோபர் 2013 (26) 27 அக்டோபர் 2019 (9) 27 ஆகஸ்ட் 2017 (9) 27 ஏப்ரல் 2014 (25) 27 செப்டம்பர் 2015 (22) 27 செப்டம்பர் 2020 (17) 27 ஜனவரி 2013 (28) 27 ஜனவரி 2019 (5) 27 ஜூன் 2016 (21) 27 ஜூன் 2021 (10) 27 ஜூலை 2014 (28) 27 டிசம்பர் 2015 (18) 27 டிசம்பர் 2020 (12) 27 நவம்பர் 2011 (37) 27 நவம்பர் 2016 (23) 27 மே 2012 (33) 27 மே 2018 (15) 27-மார்ச்-2016 (10) 28 அக்டோபர் 2018 (7) 28 ஆகஸ்ட் 2011 (46) 28 ஆகஸ்ட் 2016 (16) 28 ஏப்ரல் 2013 (29) 28 ஏப்ரல் 2019 (10) 28 செப்டம்பர் 2014 (25) 28 ஜனவரி 2018 (13) 28 ஜூன் 2015 (19) 28 ஜூன் 2020 (14) 28 ஜூலை 2013 (30) 28 டிசம்பர் 2014 (22) 28 நவம்பர் 2021 (14) 28 பெப்ருவரி 2016 (13) 28 பெப்ருவரி 2021 (12) 28 மார்ச் 2021 (8) 28 மே 2017 (19) 28அக்டோபர் 2012 (34) 29 அக்டோபர் 2017 (9) 29 ஆகஸ்ட் 2021 (18) 29 ஏப்ரல் 2012 (28) 29 ஏப்ரல் 2018 (14) 29 செப்டம்பர் 2013 (27) 29 செப்டம்பர் 2019 (8) 29 ஜனவரி 2012 (42) 29 ஜனவரி 2017 (12) 29 ஜூன் 2014 (23) 29 ஜூலை 2012 (35) 29 ஜூலை 2018 (10) 29 டிசம்பர் 2013 (26) 29 டிசம்பர் 2019 (10) 29 நவம்பர் 2015 (15) 29 நவம்பர் 2020 (8) 29 மார்ச் 2015 (32) 29 மார்ச் 2020 (13) 29 மே 2011 (43) 29 மே 2016 (14) 3 அக்டோபர் 2021 (19) 3 ஆகஸ்ட் 2014 (25) 3 ஏப்ரல் 2016 (16) 3 செப்டம்பர் 2017 (10) 3 ஜனவரி 2016 (18) 3 ஜனவரி 2021 (11) 3 ஜூன் 2012 (28) 3 ஜூன் 2018 (15) 3 ஜூலை 2011 (51) 3 டிசம்பர் 2017 (11) 3 நவம்பர் 2013 (29) 3 நவம்பர் 2019 (7) 3 பிப்ரவரி 2013 (32) 3 பெப்ருவரி 2019 (9) 3 மார்ச் 2013 (33) 3 மார்ச் 2018 (12) 3 மார்ச் 2019 (8) 3 மே 2015 (25) 3 மே 2020 (13) 30 அக்டோபர் 2011 (44) 30 அக்டோபர் 2016 (19) 30 ஆகஸ்ட் 2015 (13) 30 ஆகஸ்ட் 2020 (9) 30 ஏப்ரல் 2017 (14) 30 செப்டம்பர் 2012 (36) 30 செப்டம்பர் 2018 (8) 30 ஜூன் 2013 (27) 30 ஜூன் 2019 (8) 30 ஜூலை 2017 (6) 30 டிசம்பர் 2012 (26) 30 டிசம்பர் 2018 (6) 30 நவம்பர் 2014 (23) 30 மார்ச் 2014 (22) 30 மே 2021 (19) 31 அக்டோபர் 2021 (18) 31 ஆகஸ்ட் 2014 (24) 31 ஜனவரி 2016 (19) 31 ஜனவரி 2021 (16) 31 ஜூலை 2011 (47) 31 ஜூலை 2016 (12) 31 டிசம்பர் 2017 (19) 31 மார்ச் 2013 (31) 31 மார்ச் 2019 (7) 31 மே 2015 (21) 31 மே 2020 (9) 4 அக்டோபர் 2015 (23) 4 அக்டோபர் 2020 (12) 4 ஆகஸ்ட் 2013 (27) 4 ஆகஸ்ட் 2019 (12) 4 செப்டம்பர் 2011 (54) 4 செப்டம்பர் 2016 (20) 4 ஜனவரி 2015 (33) 4 ஜூன் 2017 (11) 4 ஜூலை 2016 (12) 4 ஜூலை 2021 (11) 4 டிசம்பர் 2011 (39) 4 டிசம்பர் 2016 (22) 4 நவம்பர் 2012 (31) 4 நவம்பர் 2018 (10) 4 பெப்ருவரி 2018 (13) 4 மார்ச் 2012 (45) 4 மே 2014 (31) 5 அக்டோபர் 2014 (25) 5 ஆகஸ்ட் 2012 (38) 5 ஆகஸ்ட் 2018 (7) 5 ஏப்ரல் 2015 (14) 5 ஏப்ரல் 2020 (7) 5 செப்டம்பர் 2021 (12) 5 ஜனவரி 2014 (29) 5 ஜனவரி 2020 (4) 5 ஜூன் 2011 (46) 5 ஜூன் 2016 (15) 5 ஜூலை 2015 (19) 5 ஜூலை 2020 (11) 5 டிசம்பர் 2021 (15) 5 நவம்பர் 2017 (15) 5 பிப்ரவரி 2012 (31) 5 பெப்ருவரி 2017 (14) 5 மார்ச் 2017 (14) 5 மே 2013 (28) 5 மே 2019 (8) 6 அக்டோபர் 2013 (33) 6 அக்டோபர் 2019 (9) 6 ஆகஸ்ட் 2017 (10) 6 ஏப்ரல் 2014 (24) 6 செப்டம்பர் 2015 (27) 6 செப்டம்பர் 2020 (13) 6 ஜனவரி 2013 (34) 6 ஜனவரி 2019 (8) 6 ஜூன் 2021 (23) 6 ஜூலை 2014 (19) 6 டிசம்பர் 2015 (17) 6 டிசம்பர் 2020 (10) 6 நவம்பர் 2011 (53) 6 நவம்பர் 2016 (14) 6 மார்ச் 2016 (16) 6 மே 2012 (40) 6 மே 2018 (16) 7 அக்டோபர் 2012 (23) 7 அக்டோபர் 2018 (9) 7 ஆகஸ்ட் 2011 (41) 7 ஆகஸ்ட் 2016 (17) 7 ஏப்ரல் 2013 (31) 7 ஏப்ரல் 2019 (5) 7 செப்டம்பர் 2014 (26) 7 ஜனவரி 2018 (12) 7 ஜூன் 2015 (24) 7 ஜூன் 2020 (9) 7 ஜூலை 2013 (25) 7 ஜூலை 2019 (4) 7 டிசம்பர் 2014 (23) 7 நவம்பர் 2021 (17) 7 பெப்ருவரி 2016 (19) 7 பெப்ருவரி 2021 (8) 7 மார்ச் 2021 (15) 7 மே 2017 (14) 8 அக்டோபர் 2017 (5) 8 ஆகஸ்ட் 2021 (21) 8 ஏப்ரல் 2012 (41) 8 ஏப்ரல் 2018 (19) 8 செப்டம்பர் 2013 (24) 8 செப்டம்பர் 2019 (11) 8 ஜனவரி 2012 (40) 8 ஜனவரி 2017 (12) 8 ஜூன் 2014 (24) 8 ஜூலை 2012 (41) 8 ஜூலை 2018 (7) 8 டிசம்பர் 2013 (26) 8 டிசம்பர் 2019 (5) 8 நவம்பர் 2015 (14) 8 நவம்பர் 2020 (13) 8 பெப்ருவரி 2015 (24) 8 மார்ச் 2015 (22) 8 மார்ச் 2020 (1) 8 மே 2016 (10) 9 அக்டோபர் 2011 (45) 9 அக்டோபர் 2016 (29) 9 ஆகஸ்ட் 2015 (24) 9 ஆகஸ்ட் 2020 (16) 9 ஏப்ரல் 2017 (12) 9 செப்டம்பர் 2012 (28) 9 செப்டம்பர் 2018 (8) 9 ஜூன் 2013 (24) 9 ஜூன் 2019 (6) 9 ஜூலை 2017 (16) 9 டிசம்பர் 2012 (26) 9 டிசம்பர் 2018 (5) 9 நவம்பர் 2014 (14) 9 பெப்ருவரி 2014 (24) 9 பெப்ருவரி 2020 (6) 9 மார்ச் 2014 (24) 9 மே 2021 (8) Other posts in series: இழவு வீடு முடிச்சிட்டுக் கொள்ளும் நாளங்கள்.. வேஷங்கள் பயணம் வேடிக்கை “கானுறை வேங்கை” விமர்சனம் பெண்பால் ஒவ்வாமை தாய் மனசு தூசு தட்டப் படுகிறது! மூன்று கன்னங்களில், மூன்று விரல்கள் என்னைச் சுற்றிப் பெண்கள்: நூல் அறிமுகம் அந்த ஒருவன்… பிரியாவிடை: அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் மகுடி கேட்ட மயக்கத்தின் ஆட்டம் எதிர் வரும் நிறம் அவள் …. ஸ்வரதாளங்கள்.. வலி வட்டத்துக்குள் சதுரம் 2011 ஜப்பான் சுனாமியில் நேர்ந்த புகுஷிமா விபத்துகள் போல் கூடங்குள ரஷ்ய அணு உலையில் நிகழுமா ? கட்டுரை 7 அபியும் அப்பாவும் எனது இலக்கிய அனுபவங்கள் – 6 பத்திரிகை சந்தா நினைவுகளின் தடத்தில் – (72) ஜென் – ஒரு புரிதல் பகுதி (1) பூமராங் ராணி., பெண்ணாதிக்கம் இரு கவிதைகள். “தமிழ்ச் சிறுகதையின் தந்தை “ ஓரிடம்நோக்கி… சோ.சுப்புராஜ் கவிதைகள் நூல் மதிப்புரை: எங்கும் ஒலிக்கிறது காற்று! கூர் 2011 கலை இலக்கிய மலர்! அழையா விருந்தாளிகள் கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரு கதைகளுக்கு இடையே (கவிதை -40 பாகம் -2) கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -4) தூரிகையின் முத்தம். விழிப்பு ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 8 பகுப்பாய்வின் நிறைவு பின்னூட்டங்கள் S.SIVA KUMAR on இலக்கியம் படைக்கும் கவிஞர்கள் இலக்கியம் படிக்க வேண்டுமா? K Balakumar on முகங்கள்… (இரயில் பயணங்களில்) Ahamed Nizar on சிறை கழட்டல்.. Selva on முகங்கள்… (இரயில் பயணங்களில்) Ram on முகங்கள்… (இரயில் பயணங்களில்) Jeyadas.m on நெய்தல் வெளி – தமிழ்நாடு கடற்கரை எழுத்தாளர்கள் வாசகர் சந்திப்பு S. Jayabarathan on என் பயணத்தின் முடிவு Moulana SAK on சிறை கழட்டல்.. S. Jayabarathan on வெப்ப யுகக் கீதை சுரேஷ் ராஜகோபால் on கவிதையும் ரசனையும் – 23 – சுரேஷ் ராஜகோபாலின் என்பா கவிதைகள் …… ஸ்ரீதர் on திருமந்திர சிந்தனைகள்: பெருவுடையாரின் மூலமும் ஸ்ரீஅரவிந்தரின் குறிப்பும் S. Jayabarathan on நாமென்ன செய்யலாம் பூமிக்கு? uppili on திருமந்திர சிந்தனைகள்: பார்ப்பானும், வெறித்தோடும் பசுக்களும் M.Kannan Malusekaran on திருமந்திர சிந்தனைகள்: பார்ப்பானும், வெறித்தோடும் பசுக்களும் Geethanjali on மலர்களின் துயரம் Siragu ravichandran on கவிஞர் வைதீஸ்வரனின் புதிய நூல் குறித்து…… balaiyer on பாரதி தரிசனம் – யாழ்ப்பாணத்திலிருந்து மாஸ்கோ வரையில் ! S. Jayabarathan on சாணி யுகம் மீளுது S. Jayabarathan on ஜெர்மனி தூய செயற்கை கெரோசின் ஜெட் விமான எரித்திரவம் தயாரிக்கும் உலக முதன்மையான தொழிற்சாலை நிறுவகம் S. Jayabarathan on கனேரித் தீவில் திடீரென எழுந்த தீக்குழம்பு எரிமலைக் காட்சி Popular Posts ஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 2
விவசாயிகள் மீதோ மக்கள் மீதோ அழுத்தங்களைப் பிரயோகித்து இம்மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நான்எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். சுபீட்சத்தின் நோக்கம் கொள்கை திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படி புரட்சிகரமான மாற்றத்தை நான் நிச்சயம் ஏற்படுத்துவேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். புரட்சிகரமான மாற்றத்தை மக்கள் வேண்டி நின்றனர். அதனைச் செய்யும்போது ஏற்படும் தடங்கல்கள் மற்றும் தடைகளுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்படும். ஆனாலும் அச்சவாலை வெற்றிகொள்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். புனர்நிர்மாணம் செய்யப்பட்ட 1500 வீதிகளை ஒரே நாளில் மக்கள் பாவனைக்குக் கையளிக்கும் நிகழ்வு மண்டாடுவ பொது விளையாட்டரங்கில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். உலகில் ஏனைய நாடுகளைப் போன்று இலங்கையும் கொவிட் தொற்றுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டது. வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரத்தின் முன்னே அடையாளம் காணமுடியாத தொற்றுநோயுடன் பாரிய சவால்களுக்கு முகங்கொடுத்து மக்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பதற்காக பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. அன்று தாம் வழங்கிய வாக்குறுதியை அவ்வாறே நிறைவுசெய்ய முடியவில்லை. ஆனாலும் அதில் எந்தவொரு குறையையும் வைக்காது மக்கள் தம்மீது வைத்த நம்பிக்கையைப் பாதுகாப்பதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். கொவிட் நோய்த்தொற்று காரணமாகச் சுற்றுலா கைத்தொழில் வீழ்ச்சி கண்டுள்ளது. அதன்மூலம் இழக்கப்பட்ட நேரடி மற்றும் மறைமுக தொழில்கள் கிட்டத்தட்ட 03 மில்லியன்கள் ஆகும். ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் அதிகமானோர் வெளிநாட்டுத் தொழில் வாய்ப்புகளை இழக்க நேரிட்டதோடு உயர்மட்டத்தில் இருந்து கீழ் மட்டும் வரையான வியாபாரிகள் வரை அனைவரதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. அத்துடன் ஏற்பட்ட பாரிய பொருளாதார வீழ்ச்சியுடனும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றன. அனைத்து அரச ஊழியர்களுக்கும் குறித்த தினத்தில் ஊதியம் வழங்கப்பட்டது. 04 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுக் கடன் தவணைகளை உரியவாறு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. கொவிட் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் தனிமைப்படுத்தப்பட்ட அனைவருக்கும் நிவாரண நிதி வழங்கப்பட்டன. நெல்லுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவை அனைத்தையும் பாரிய பொருளாதார சிக்கல்களுடனேயே நிறைவேற்றியதாகவும் ஜனாதிபதி அவர்கள் இங்கு நினைவுகூர்ந்தார். சேதன விவசாயம் போன்று மீள்பிறப்பாக்கச் சக்திவலு உற்பத்திக்கான மாற்றத்தை ஏற்படுத்துவதையும் தாம் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். பயறு கௌப்பி உளுந்து மஞ்சள் உட்பட 16 வகையான உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வது முழுமையாக நிறுத்தப்பட்டது. இன்று அதன் பிரதிபலனை விவசாயிகள் அனுபவித்து வருகின்றனர். கறுவா மிளகு மஞ்சளுக்கான உயர் விலையை விவசாயிகள் பெற்றுக்கொள்கின்றனர். விவசாயிகளின் கைகளுக்குக் கிடைக்கின்ற அந்த வருமானத்தைக் குறைக்காமல் இருப்பதற்கும் நுகர்வோரைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அவர்கள் இங்கு தெளிவுபடுத்தினார். இந்நிலைமையைப் புரிந்துகொண்டு பசுமை விவசாயச் சவாலை வெற்றிகொள்வதற்கு ஒன்றிணையுமாறு அனைத்து விவசாயிகளிடமும் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி அவர்கள் விவசாயிகள் மீதோ மக்கள் மீதோ அழுத்தங்களைப் பிரயோகித்து இம்மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தாம் எதிர்பார்க்கவில்லை என்றும் குறிப்பிட்டார். தாம் அதிகாரத்துக்கு வந்தவுடன் மதில்களில் சித்திரங்களை வரைந்த இளைஞர்கள் மாற்றத்தை ஆரம்பித்தனர். மேலும் பலர் கைவிடப்பட்டிருந்த வயல்களில் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டனர். அன்று வைத்த நம்பிக்கையுடன் புரட்சிகரமான மாற்றத்துக்காக மீண்டும் முன்வருமாறு ஜனாதிபதி அவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.
வைத்தீஸ்வரன் கோவில் கீழ வீதியில் ஆம்புலன்ஸ் சேவையை துவங்கி வைத்த தருமையாதீனம் 27 வது குருமகா சன்னிதானம்! - Mayilai Guru Skip to content 8th December 2021 Instagram Facebook Twitter Youtube Mayilai Guru மயிலாடுதுறை மாவட்ட செய்திகள் Primary Menu Mayilai Guru மயிலாடுதுறை தமிழகம் இந்தியா பொது செய்திகள் வேலைவாய்ப்பு விளையாட்டு சினிமா சமையல் குறிப்பு Search for: Mayiladuthurai வைத்தீஸ்வரன் கோவில் கீழ வீதியில் ஆம்புலன்ஸ் சேவையை துவங்கி வைத்த தருமையாதீனம் 27 வது குருமகா சன்னிதானம்! 4 months ago மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவில் பகுதிகளில் 2000 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் இயங்கி வரும் 108 அவசர ஊர்தி சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெறும் அவசர தேவைகளுக்கு சென்று விடுவதால் பேரூராட்சிகளில் நடைபெறும் அவசர தேவைகளுக்கு தாமதமாக செல்லும் சூழல் நிலவி வந்தது. இதனையடுத்து பேரூராட்சி சார்பில் அவசர ஊர்தி ஏற்பாடு செய்ய பேரூராட்சி தலைவர் குகன் கோரிக்கை விடுத்தார். இதனால் அப்குதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் மற்றும் மேலையூர் சீனிவாச பள்ளி 86ம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் இணைந்து புதிய அவசர ஊர்தியை பொதுமக்களுக்கு அவசர தேவைக்காக வாங்கி கொடுத்தனர். இதனை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழா என நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்டு நல்லாசி வழங்கிய தருமபுரம் ஆதீனம் 27வது சன்னிதானம் அவசர ஊர்தி சேவையை துவங்கி வைத்தார். பேரூராட்சி தேவைக்காக சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்த முன்னாள் செயல் அலுவலர் முயற்சியே ஒரே மாதத்தில் செயல்பாட்டுக்கு வந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிகழ்ச்சியில் வைத்தீஸ்வரன் கோவில் அரிமா சங்க தலைவர் அகோரம், செயலாளர் ராஜசேகர், பொருளாளர் சீனிவாசன், வைத்தீஸ்வரன் கோவில் செயல் அலுவலர் பிரகாஷ், தலைஞாயிறு செயல் அலுவலர் குகன், அரிமா சங்க மண்டல தலைவர் மதியரசன், செந்தில் பைரவன், ஒருங்கிணைப்பாளர் சுதாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். Advertisement More News மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள 12 அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன! admin See author's posts Read more ஸ்பீட் என்ஜினுக்கு தடை விதிக்காவிட்டால் போராட்டம்-நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்கள் அறிவிப்பு! admin See author's posts Read more மயிலாடுதுறையை சேர்ந்த மாணவி அருண் பிரியா சென்னையில் நடைபெற்ற மாநில கராத்தே போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார்! admin See author's posts Read more மயிலாடுதுறை அருகே அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தற்கொலை முயற்சி! admin See author's posts Read more மயிலாடுதுறை: நெல் ஜெயராமன் நினைவு தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு பாரம்பரிய விதை நெல் வழங்கப்பட்டது! admin See author's posts Read more மயிலாடுதுறை: ஆக்கூரில் சிறப்புலி நாயனார் கோவில் குருபூஜை சிறப்பு வழிபாடு! admin See author's posts Read more திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்! admin See author's posts Read more மயிலாடுதுறை: ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனத்தை ஆட்சியர் இரா.லலிதா வழங்கினார்! admin See author's posts Read more மயிலாடுதுறை: பட்டவர்த்தியில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்து கலவரம் ! admin See author's posts Read more மயிலாடுதுறை அருகே நிச்சயித்த பெண் கிடைக்காததால் இளைஞர் தற்கொலை முயற்சி! admin See author's posts Read more admin See author's posts Continue Reading Previous திருக்கடையூர் புகழ்பெற்ற அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிக்கு ஆயுள் ஹோமம் நடைபெற்றது! Next சீர்காழி நகராட்சி அலுவலகம் முன்பு தனியார் ஒப்பந்த துப்புரவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் Facebook You may have missed Mayiladuthurai மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள 12 அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன! 10 hours ago Mayiladuthurai ஸ்பீட் என்ஜினுக்கு தடை விதிக்காவிட்டால் போராட்டம்-நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்கள் அறிவிப்பு! 11 hours ago Mayiladuthurai மயிலாடுதுறையை சேர்ந்த மாணவி அருண் பிரியா சென்னையில் நடைபெற்ற மாநில கராத்தே போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார்! 11 hours ago Mayiladuthurai மயிலாடுதுறை அருகே அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தற்கொலை முயற்சி! 12 hours ago Mayiladuthurai மயிலாடுதுறை: நெல் ஜெயராமன் நினைவு தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு பாரம்பரிய விதை நெல் வழங்கப்பட்டது!
பாரா ஒலிம்பிக்சில் இந்தியர் ஒருவர் பதக்கம் வெல்லப்போவது இதுவே முதன்முறையாகும் - தங்கத்தை நெருங்கிய பவினாபென் படேல்! - Mayilai Guru Skip to content 8th December 2021 Instagram Facebook Twitter Youtube Mayilai Guru மயிலாடுதுறை மாவட்ட செய்திகள் Primary Menu Mayilai Guru மயிலாடுதுறை தமிழகம் இந்தியா பொது செய்திகள் வேலைவாய்ப்பு விளையாட்டு சினிமா சமையல் குறிப்பு Search for: India பாரா ஒலிம்பிக்சில் இந்தியர் ஒருவர் பதக்கம் வெல்லப்போவது இதுவே முதன்முறையாகும் – தங்கத்தை நெருங்கிய பவினாபென் படேல்! 3 months ago ஒலிம்பிக்ஸ் போட்டிகளைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கடந்த 24ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகின்றன. இதில் நேற்று (27.08.2021) இந்தியாவின் பவினாபென் படேல், மகளிருக்கான கிளாஸ் 4 டேபிள் டென்னிஸ் அரையிறுதிக்கு முன்னேறியதோடு பதக்கத்தையும் உறுதிசெய்தார். இந்தநிலையில், இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் பவினாபென் படேல், சீனாவின் ஜாங் மியாவோவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் இந்தியாவிற்கு குறைந்தபட்சம் வெள்ளி உறுதியாகியுள்ளது. பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸில் இந்தியர் ஒருவர் பதக்கம் வெல்லப்போவது இதுவே முதன்முறையாகும். இதற்கு முன்னர் பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸில் எந்த இந்தியரும் காலிறுதிவரை முன்னேறியதில்லை. அரையிறுதிப் போட்டியில் வென்ற பின்னர் பேசிய பவினாபென் படேல், “நான் என்னை மாற்றுத்திறனாளி என கருதியதே இல்லை. இன்று நான், முடியாதது எதுவுமில்லை என நிரூபித்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார். Advertisement More News மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள 12 அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன! admin See author's posts Read more ஸ்பீட் என்ஜினுக்கு தடை விதிக்காவிட்டால் போராட்டம்-நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்கள் அறிவிப்பு! admin See author's posts Read more மயிலாடுதுறையை சேர்ந்த மாணவி அருண் பிரியா சென்னையில் நடைபெற்ற மாநில கராத்தே போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார்! admin See author's posts Read more மயிலாடுதுறை அருகே அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தற்கொலை முயற்சி! admin See author's posts Read more மயிலாடுதுறை: நெல் ஜெயராமன் நினைவு தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு பாரம்பரிய விதை நெல் வழங்கப்பட்டது! admin See author's posts Read more மயிலாடுதுறை: ஆக்கூரில் சிறப்புலி நாயனார் கோவில் குருபூஜை சிறப்பு வழிபாடு! admin See author's posts Read more திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்! admin See author's posts Read more மயிலாடுதுறை: ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனத்தை ஆட்சியர் இரா.லலிதா வழங்கினார்! admin See author's posts Read more மயிலாடுதுறை: பட்டவர்த்தியில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்து கலவரம் ! admin See author's posts Read more மயிலாடுதுறை அருகே நிச்சயித்த பெண் கிடைக்காததால் இளைஞர் தற்கொலை முயற்சி! admin See author's posts Read more admin See author's posts Continue Reading Previous பாராலிம்பிக்கில் காலிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் பாவினா படேல் Next செப்.,ல் 12 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை: ஆர்.பி.ஐ., Facebook You may have missed Mayiladuthurai மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள 12 அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன! 3 hours ago Mayiladuthurai ஸ்பீட் என்ஜினுக்கு தடை விதிக்காவிட்டால் போராட்டம்-நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்கள் அறிவிப்பு! 4 hours ago Mayiladuthurai மயிலாடுதுறையை சேர்ந்த மாணவி அருண் பிரியா சென்னையில் நடைபெற்ற மாநில கராத்தே போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார்! 5 hours ago Mayiladuthurai மயிலாடுதுறை அருகே அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தற்கொலை முயற்சி! 5 hours ago Mayiladuthurai மயிலாடுதுறை: நெல் ஜெயராமன் நினைவு தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு பாரம்பரிய விதை நெல் வழங்கப்பட்டது!
முறையுடன் தந்திடின் எத்துணை எழில் கிடைக்கிறது என்பதைத் தம்பி, இதோ இந்தப் பள்ளு எடுத்துக் காட்டுகிறது – பார். வானக் குரிசில் வள்ளலாய் – வரைக் கோனைப் பரிசு கொள்ளலாய் வழங்கு மாறும் புறப்பட்டே – புனல் முழங்கு மாறும் தலைப்பட்டே தானக் களிறு படிந்திடக் – கொலை ஏனக் களிறு மடிந்திடத் தழையின் ஆரம் உந்தியும் – பசும் கரையின் ஆரம் சிந்தியும் கானக் குளவி அலையவே – மது பானக் குளவி கலையவே முக்கூடற்பள்ளு தரும் ஓசை நயம் இங்ஙனம் அமைந்திருக்கிறது. எனவே ஓசை நயம் எற்றுக்கு என்று கேட்போர் பற்றி நாம் கவலைப்படுவதற்கில்லை. ஆனால் முறையற்ற ஓசை நயம் கூடாது என்ற எண்ணம் நமக்கு எப்போதும் துணை நிற்க வேண்டும், இல்லை என்றால், பள்ளாம் பள்ளு தள்ளு தூரத் தள்ளு என்று “விளையாட’த் தோன்றும் – துவக்கத்தில் அது விலை போகவும் செய்யும். பிறகோ மொழியின் அழகுக்கு நாமே ஊறு செய்கிறோம் என்ற உணர்வு வந்து தாக்கும். “கூட்டுப் புருவம்’ சில குமரிகளுக்கு இருந்திடக் கண்டிருப்பாய் – புருவமே இப்போது அருமையாக மட்டுமே காணக் கிடைக்கும் காட்சியாக இருக்கிறது – எனவே “கூட்டுப் புருவம்’ நிரம்பக் கிடைத்திடாது; ஆனால் அது இயற்கையாக அமைந்தாலோ அந்த அணங்குக்கு அது தனியானதோர் அணியாகவே விளங்கிடும் – ஆனால் அதனைக் கண்டு, சரி, சரி, கூட்டுப் புருவம் அழகளிக்கிறது, எனவே இரு புருவங்களையும் மை கொண்டு இணைத்து, கூட்டுப் புருவம் ஆக்கிக் காட்டுவோம் என்று செய்தால் தூரத்துப் பார்வைக்கு அழகளிக்கக் கூடச் செய்யும். அருகே செல்லச் செல்ல, “மைவண்ணம்’, காண்போம், கண்டு, இவ்வளவுதானா! என்போம்; ஏளனம் கூடச் செய்யத் தோன்றும், நமக்கு ஏற்படுவதைவிட அதிகச் சங்கடம் கூட்டுப் புருவம் தீட்டிக் கொண்ட குமரிக்கு ஏற்படும், வண்ணம் எப்போது கைபட்டுக் கலைந்து விடுகிறதோ என்ற அச்சம் குடையும். மொழியின் ஓசை நயம் குறித்தும், இதே கதிதான். தம்பி! சினிமாக்களில் ஒரு முறையைக் கையாளுகிறார்கள். அங்குக் கதைகட்டு ஏற்றவகையில் புருவங்கள் தேவைப் படுகின்றன! குனித்த புருவம், கூட்டுப் புருவம், நெரித்த புருவம், படர்ந்த புருவம், வில்லுப் புருவம் – இப்படிப் பலப்பல. நல்ல பெண்மணியின் புருவம் வில்போல் வளைந்து இருக்கும் – இருக்க வேண்டும். காதகிக்குப் புருவம் அரவம்போல அச்சமூட்டுவதாக அமைதல் வேண்டும். அப்படி அங்கு ஒரு முறை!! எந்த ஏந்திழையிடம் இத்தனை புருவங்கள் கிடைக்க முடியும். எனவே அங்கு முதலில், ஏந்திழையின் இயற்கைப் புருவத்தை எடுத்து விடுகிறார்கள், வழித்தெடுத்து விடுகிறார்கள் – இயற்கை பறிக்கப்பட்டான பிறகு, எழில் காட்டும் கலைஞன் தன் இச்சைக்கு ஏற்ப, புருவங்கள் அமைக்கிறான் – காதளவு வளர்ந்த கண்ணினை என்னென்பேன், காமன் தன் கருப்புவில் போன்ற புருவத்தைக் கண்டேன்’ அதன் அழகை எவ்வாறு, கூறுவேன் என்றெல்லாம் பிறகு திரைக் காதலன் பாடம் படிக்கிறான். கொட்டகைக் கோமான்கள் குதூகலமடை கிறார்கள். ஆனால் உண்மையில் இயற்கையாக இருந்த “புருவம்’ பறிபோய் விட்டது, இரவல் புருவம் பிறர் காணும்போது எழில் காட்டும் வகையில் அமைக்கப்படுகிறது. தமிழ் மொழியிலும், தம்பி, அதற்கென்று இயற்கையாக அமைந்துள்ள, எழில் முறைகளைக் களைந்தெறிந்துவிட்டு, பிறமொழிச் சொற்களையும் முறைகளையும் கலந்து புதிய எழில் காட்டுகிறோம் என்று கூறுவாருளர். சினிமாக்களுக்குச் சிதைத்தலும், சேர்த்தலும், கூட்டலும், குறைத்தலும், மறைத்தலும் மிகுத்தளித்தலும் தேவைப்படுகிறது; அந்த உலகத்து இலக்கணம் அது; குறை கூறுவதற்கில்லை; ஆனால், மொழித் துறையில் இந்த துறையைப் புகுத்தி, உள்ள எழிலை உருக் குலையச் செய்து, பாழ்படுத்துவது அடாத செயலாகும். ஆனால் “மேதை’கள் பலர், பிற மொழிச் சேர்க்கையும், பிற முறைகளின் சேர்க்கையும், தமிழ் மொழியை வளமாக்கும் என்று காரணம் காட்டி, இந்தத் தீய செயலைச் செய்து வருகின்றனர். இதனை அறிந்து, தடுத்திட வேண்டும் என்ற எண்ணம் கொண்டு பணியாற்றும் நம்மாலேயே கூட, (சற்று அதிகமாகவே என்னால்!) பிறமொழிச் சேர்க்கையையும் பிற முறைகளின் சேர்க்கையையும் நீக்கிப் பேசவும் எழுதவும் முடியாமலாகி விட்டிருக்கிறது – ஏனெனில், நாம் தூய தனித் தமிழ் சித்திரவதை செய்யப்பட்டுப் பிறமொழியும் பிற முறையும் கலந்து பேச்சும் எழுத்தும் “மணிப் பிரவாளம்’ என்ற வடிவு கொண்டு, தமிழும் வடமொழியும் குழைத்து வழங்கப்பட்ட நாட்களில் பயின்றவர்கள். எனினும், புலவர் பெருமக்களின் அறிவுரை கேட்டதால், இந்தக் “கலவை’ தீது பயப்பது என்று தெரிந்து, தமிழ் மொழிக்கு மீண்டும் தனியானதோர் ஏற்றம் தேவை என்ற தூய நோக்குடன் பணியாற்றி வருகிறோம். எனவே, நம்மாலே முற்றிலும் “தனித் தமிழ்’ எழிலைக் காட்ட இயலவில்லை. நானே, பல தடவைகளில், பேசியான பிறகும், எழுதியான பிறகும். இன்னின்ன சொற்களுக்கு இன்னின்ன தமிழ்ச் சொற்களைக் கையாண்டிருக்கலாமே – தவறிவிட்டோமே என்று எண்ணி வருத்தமுறுவதுண்டு. எனினும், தம்பி, எங்கள் மூலம் நீ இவ்வளவுதான் பெறலாம் – அதிகம் எதிர்பார்க்காதே – ஆனால் உன்னாலே முடியும் இந்தக் குறைகளையும் களைய – நாடு உன்னிடம் நிச்சயமாக அதிகம் எதிர்பார்க்கிறது. ஆரிய மதக் கற்பனைகளுக்கு நிரம்ப இடமளித்து விட்டதால், தமிழ் மொழிக்குரிய இயல்பு எத்துணை கெட்டொழிந்தது என்பதளை அறிய, வேறெந்தத் துறையினையும் விட “உவமை’ கூறுகிறோமே, அந்தத் துறையினைப் பார்த்தால், மிக மிக விளக்கமாகத் தெரிந்து விடும். சனியனே! உயிரை வாங்காதே. எமன் போல வந்து தொலைத்தான். பெரிய அரிச்சந்திரன்தான், வாயை மூடடா! துர்வாசர் போலச் சீறுகிறான். போதும், போய்ப் படுத்துத் தூங்கடா, அனுமாரே! துரோபதை போலக் கதறுகிறாள். கலியுக பீமசேனன் என்று அவனுக்குப் பெயர். ஆசாமி, அர்ஜுனன் தான்! அவள் ரம்பையேதான். அமிர்தம் போல இனிப்பான பானம். குபேர பட்டினம் போலக் காட்சி அளித்தது. நிரம்பப் பேசுகிறோம், இதுபோல மேடைகளிலும், வீடுகளிலும், பழமை விரும்பிகள் மட்டுமல்ல, நாம் கூட. கொல்லிமலைப் பாவை! என்று கூற நமக்கும் தோன்றுவதில்லை; கூறிடின் புரிந்துகொள்வோரும் புலவர் அவையிலே மட்டுமே கிடைப்பர்; மக்கள் மன்றம் மறந்தேவிட்டது. கொல்லிமலையில் ஓர் சித்திரப் பாவை செதுக்கப்பட்டிருந்ததாம். அத்துணை எழிலாம், அப்பாவைக்கு. தொலைவிலிருந்து காண்போர், அழகால் ஈர்க்கப்பட்டு, அருகே செல்வராம், காண்பராம், உள்ளத்தைப் பறி கொடுத்து விட்டு நிற்பராம், நிற்பராம், அந்த அழகு அவர்தம் உயிர் குடித்திடும் வரையில் நிற்பராம். மயக்கி மாய்த்திடும் பொலிவு, கொல்லிமலைப் பாவைக்கு! ஆனால், நாம் இதனை “உவமைக்கு’க் கையாண்டதுண்டோ? இல்லை; ஏன்? நமது எண்ணத்திலேயே, பிறமொழிக் கருத்துக் கலக்கப்பட்டு விட்டதால், அழகு பற்றியோ, அதனால் வந்துறும் அவதிபற்றியோ எடுத்துரைக்க நினைக்கும் போதெல்லாம் மேனகை, ரம்பை, ஊர்வசி, திலோத்தமை, இவர்களே நமது நாவில் நின்றுவிடுகிறார்கள். தமிழ் மொழியில் காணக் கிடக்கும் கொல்லிமலைப் பாவையை மறந்தே விட்டோம். இயற்கைப் புருவத்தை எடுத்தான பிறகு, கூட்டுப் புருவம், மிரட்டும் புருவம், எல்லாம் அமைத்துக் கொள்கிறோம். எனவேதான், தம்பி! தமிழ் மொழியில் காணக் கிடைக்கும், “ஓசை நயம்’ போன்ற எந்த எழிலையும் இழந்துவிடக் கூடாது என்று கூறிவருகிறோம்; அதேபோது, அந்த எழில் வேண்டும் என்பதற்காகவே, “இட்டுக் கட்டியும்’ “இழுத்துக் குழைத்தும்’ தரக்குறைவு ஏற்பட்டு விடும்படியும் செய்துவிடக் கூடாது என்கிறோம். தமிழ், எழிலும் பயனும் அளித்திடும் இன் மொழியாகத் திகழ்வதன் பொருட்டு முந்தை நாளில் புலவர் பெருமக்கள் எடுத்துக் கொண்ட சீரிய முயற்சிகள் பலப்பல. செதுமொழி சீத்த செவி செறுவாக முதுமொழி நீராப் புலன் நாஉழவர் புதுமொழி கூட்டுண்ணும் புரிசைசூழ் புனலூர செவியில் பொல்லாத சொற்களே புகுவதில்லை செவிகளின் வழி பாய்வது சான்றோர் செய்யுட்களாம்! நாவினையே ஏராகக் கொண்டு புலவர் உழுதுண்டனர். அவர்தம் மொழிகள் பழங்கதைகளாக இல்லை; புது மொழிகள் தந்தனர் – அவைதமை மக்கள் கொள்ளைகொண்டு உண்டனர். இத்துணைச் சிறப்புடன் புலவரும் அவர்தம் உழவின் பலனை உண்டு களித்த மக்களும் வாழ்ந்திருந்ததனால், நாம் இன்று ஓர் உயர்தனிச் செம்மொழிக்கு உரிமையாளரானோம். உலகிலே எத்துணையோ தேயங்கள், இத்தகு மொழி பெற்றோமில்லையே என்று வாடிக் கிடந்திடுவதனையும், பிறமொழிகளின் துணையினைத் தேடி அலைவதனையும் காண்கிறோம். கள்ளக் கடத்தலைக் குறித்திட “இந்தி’யில் சொல்லொன்று கிடைக்காது திகைத்தனர் ஆட்சியாளர் என்றோர் செய்தி, கண்டோமல்லவா சின்னாட்களுக்கு முன்பு. இயலாமையை இந்த அளவுக்குப் பெற்றுக் கிடக்கும் “இந்தி’ மொழிக்கு ஏற்றம் கிடைக்கிறது; தமிழ் இனத்துதித்தோரில் சிலர் அம்மொழி எம்மொழி என்றும் பேசிடக் கேட்கிறோம். கருத்தினை விளக்கிட எழுத்து ஒன்று போதும், ஈரெழுத்து மட்டும் போதும் பொருளளிக்க, சிறு சிறு எழுத்து மாற்றங்கள் மூலமே, பொருள் மாற்றம் பெரிதும் காட்டிட இயலும், அதனையும் அழகுபட, ஓசை நயத்துடன் எடுத்துக் கூற முடியும் என்ற இத்துணைச் சிறப்புடன் தமிழ்மொழி இருந்திடக் காண்கிறோம், எனினும் அதற்கென்று ஓர் தனி இடம், உயரிய இடம், உரிமையான இடம், பெற்றளிக்கும் திறனுமற்றுக் கிடக்கிறோம். கானவன் யானைமீது வீசிய கவண்கல் வேங்கையின் பூவைச் சிதறி, ஆசினிமென்பழத்தை உதிர்த்து, தேனின் இறாலைத் துளைப்படுத்தி, மாவின் குலையை உழக்கி, வாழையின் மடலைக் கிழித்து, பலாவின் பழத்துட் சென்று தங்கும். குறிஞ்சிக் காட்சியினைக் கூறுகிறார் புலவர். இவ்வளவுதானே, உமது புலவர் பெருமகனாரால் கூற முடிகிறது; இதோ கேளும் எமது புராணீகர் கூறுவதை, எம் பெருமான் ஸ்ரீராமச்சந்திரருடைய கோதண்டத்திலிருந்து கிளம்பிய “அஸ்திர’மானது புயற்காற்றெனக் கிளம்பிச் சென்று, இராவணன் மார்பைத் துளைத்து, உயிரைக்குடித்து, அவன் உள்ளத்தில் எங்கெங்கும், சீதாதேவி மீது காமக் கருத்து இருக்கிறது என்று தேடிப்பார்ப்பது போல உள்ளத்தைச் சல்லடையாகத் துளைத்து, பிறகு காரியம் வெற்றிகரமாக முடித்தான களிப்புடன், கடலிற் சென்று குளித்துக் கறை போக்கிக் கொண்டு, மீண்டும் பறந்து வந்து காகுத்தன் அம்பறாத் தூணியில் சேர்ந்தது, என்கிறார் நம்பெருமாள் ஜயங்கார்! மொழி, வரிவடிவத்தால் மட்டுமல்ல, மொழி மூலம் தரப் படும் கருத்துக்களின் வகை மூலம், ஒன்றுக்கொன்று எவ்வளவு மாறுபட்டன என்பது, குறிஞ்சியைக் காட்டிய நந்தமிழ்ப் புலவர் தரும் பாவுடன், இராமனின் வீரத்தை விளக்கிடப் புராணீகன் தரும் ஆரியத்தினை ஒப்பிட்டுப் பார்த்தாலே விளங்கிவிடும். புராணீகனின் கருத்தினை மறுத்திடாமல், ஆய்ந்து பாராமல், ஏற்றுக் கொள்வதாயினும், இராமனுடைய “தெய்வீகம்’ வேண்டுமானால் விளங்குமே தவிர, பா நயமோ, இயற்கை உண்மையின் அழகோ அதிலே துளியும் கிடைக்காது. இராமனுடைய “அஸ்திரம்’ மட்டுமே புராணீகன் சொன்னபடி செய்ய முடியும்! குறிஞ்சி குறித்துப் பாடிய புலவன் காட்டும் கவண்கல் இருக்கிறதே தம்பி, அது நீயும் நானும், எடுத்து வீசினாலும், செய்யுளிலே காட்டப்படும் செயலைத்தான் முறைப்படி செய்யும்; அவ்வளவு இயற்கையோடு ஒட்டியதாகக் கருத்தினைத் தந்துள்ளார் புலவர். பெரிதும், கண்டகாட்சிகளைக் காண்பதால் ஏற்படும் கருத்துடன் இணைத்துத் தருவதற்கே பண்டைத் தமிழ்ப் புலவர்கள் விரும்பினர். காடுகளையும் கானாறுகளையும், ஓடைகளையும் அவை தமில் துள்ளும் மீன்களையும், குவளையையும் தாழையையும், யானையையும் பெடையையும், செங்கால் நாரையையும் கருங்குயிலையும், கடுவனையும் மந்தியையும், உதிர்ந்த பூக்களையும் உலர்ந்த தருக்களையும், பாய்ந்தோடும் அருவிகளையும் பட்டுப்போன மொட்டுக்களையும் காணும் போதெல்லாம் அவர்கட்குக் கருத்து ஊற்றெடுத்திருக்கிறது, அத்துணைக் கருத்தும், உண்மையோடு ஒட்டியவையாக, கேட்போர் மறுக்கொணா வகையினதாக, கேட்டு இன்புறத் தக்கதாக அமைகின்றன. இந்தச் சிறப்பு புலவர் தேடித் தந்தது; புராணிகன் தேடித் தருவது அஃதன்று. கானவன் கவண் வீசுகிறான் தம்பி! துவக்கத்திலேயே, புலவர் கானவனைக் கவண் வீசச் சொல்கிறார், ஏனெனில் வீச வேண்டிய முறைப்படி அதற்கேற்ற பயிற்சிபெற்ற நிலையிலுள்ளவன் வீசினாலல்லவா, கவண்கல் செய்ய வேண்டியதைச் செம்மையுறச் செய்யும். தாக்க வந்தவனை, ஆட்டுக் குட்டியைத் தூக்கி எறிவது போல எறிந்தான் – என்ற கருத்தை அளிக்க முற்பட்டால் மல்லன் என்ற சொல்லைக் கோத்தாக வேண்டுமல்லவா, ஏனெனில் மல்லன் செய்யக் கூடிய காரியமல்லவா, அது; அது போலத்தான், யானைமீது வீசவேண்டும் கல்லினை – எனவே புலவர், கானவனைத்தான் காட்டுகிறார். கானவன், கவண்கல் வீசுகிறான் யானைமீது! புராணீகனுடைய கல் அல்ல அது; எனவே யானை சாகவில்லை, மிரண்டோடி விட்டது; வீசப்பட்ட கல்லோ வேங்கை மரத்தின் மீது உராய்ந்து செல்கிறது. வேகமாகச் செல்வதால், பூத்துக் கிடக்கும் பூ சிதறுகிறது. கல் சென்று கொண்டிருக்கிறது, ஆசினிப் பழத்தை உதிர்க்கிறது, தேன் அடை துளைக்கப் படுகிறது, மாவின் குலை தாக்கப்படுகிறது, வாழை மடலைக் கிழிக்கிறது, இறுதியாகப் பலாப் பழத்துட் சென்று தங்கி விடுகிறது. கல் செல்லும் வழியெலாம் ஒரு முறை கருத்தைச் செலுத்திப் பார் தம்பி, சுவையுள்ள இடம் சேருவாய், கல்லே, சுவை மிகும் பலாப் பழத்தை அல்லவா சென்று சேருகிறது. வீசப்பட்ட கல்லின் வேகம், படிப்படியாகக் குறையும், வேகம் குறையக் குறைய, அதன் செயல்படும் வலிவும் குறையும் என்ற உண்மையை, யானைமீது வீசப்பட்ட கல், வேங்கை மரத்துப் பூக்களைச் சிதறச் செய்து, ஆசினிப் பழத்தை உதிரச் செய்து, தேன் அடையைத் துளைத்து, வாழை மடலைக் கிழித்து, இறுதியில் பலாவிடம் அடைக்கலம் புகுந்து விடுவதாகக் கூறி விளக்கும் அழகினைப் பார். யானை மீதே கல் பட்டிருந்தால், கல் பிறகு யானை மீது மோதுண்ட காரணத்தால், மேலால் செல்லாது, கீழே “தடும்’ என விழும்; பிறகு வேங்கையும், ஆசினியும், மாவும், பிறவும், புலவர்தம் பாவினிலே வரத் தேவை ஏற்பட்டிராது. வேங்கையின் மலர், ஆசினிப் பழம் இவற்றினைச் சிதறவும் விழவும் செய்தாரே தவிர, இதற்குள் கல்லின் வேகம் குறைந்து போயிருக்கும் என்ற இயற்கை உண்மையை உணர்ந்தவராதலால், மாங்குலையின் மீது கல் பட்டபோது, உலுக்கி விடும் அளவுக்கும், பிறகு வேகத்தால் கிடைக்கும் வலிவு கல்லுக்குக் குறைந்து விடுவதால், வாழை மடலைக் கிழித்திட மட்டுமே இயலுமாகையால், அதனை மட்டும் கூறி, வேங்கை உயரத்துக்கு வேகமாக மேலெழும்பிய கவண்கல், பிறகு ஆசினி, மா, வாழை என்ற அளவுக்குக் கீழே இறங்கி, கடைசியில் பலாவில் சென்று தங்குகிறது – பழம், எனவே, கல் புக முடிந்தது; பலாப்பழம் எனவே அதற்குள்ளேயே ஒட்டிக்கொண்டு விட்டது என்றார். தம்பி! இவ்வளவு இயற்கையோடிணைந்ததாகக் கவிதை தருகிறார்; செய்யுட் சுவையுடன் கூடவே நெந்தமிழ் நாட்டு வளம் தெரிந்திடச் செய்கிறார். யானை உலவும் காடுகள்; அங்குத் துணிவுடன் உலவும் கானவர்; அவர்கள் கவண் வீசும் திறம்; ஓங்கி வளர்ந்த வேங்கை மரம்; கனிதரும் மாவும் வாழையும் பலாவும், கானகத்தில்! இவ்வளவு வளம் தமிழகத்தில்; குறிஞ்சிமட்டுமல்ல, எந்த நிலம் பற்றிப் பாடினாலும், இதே முறை – உண்மையை அழகுபட உரைத்திடுவது; இல்லை, தம்பி, உண்மையை உரைக்கிறார், அதிலே அழகு தவழ்ந்து வருகிறது! இந்தத் “தமிழ்’ இனிமை பெற, “இரவல்’ எற்றுக்குப் பெற வேண்டும்? புள்ளிக் கலாபம் படைத்த மயிலுக்கு, வான்கோழிச் சிறகாலான தோகை தரவேண்டுமா?! கிளி அழகு பெற, அதற்குப் பச்சை வண்ணம் பூச வேண்டுமா? கேட்க வேண்டாம் தம்பி! கோபிப்பர்! எண்ணிப் பார், அது போதும்!!
பாப்லோ பிகாஸோ 1881 அக்டோபர் 25ந்தேதி ஸ்பெயினில் உள்ள மாலாகா நகரில் பிறந்தார். இவரது தந்தை ஒரு ஓவிய ஆசிரியர். இளம் வயதிலேயே பிகாஸோ ஒரு புத்திசாலியான மாணவராக இருந்தார். தனது 14வது வயதில் பார்சிலோனா ஸ்கூல் ஆப் பைன் ஆர்ட்ஸ் பள்ளியில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்றார் பிகாஸோ. தேர்வை சிறப்பாக எழுதியதற்காக, முதல் இரு வகுப்புகளை கடந்து மூன்றாவது வகுப்பில் நேரடியாக சேர்வதற்கு அனுமதிக்கப்பட் டார். தனது மகனின் திறனைப்பார்த்து வியந்த பிகாஸோவின் தந்தை, தனது து£ரிகையையும் வண்ணங்களையும் அவருக்கு கொடுத்தார். அதன்பிறகு பிகாஸோவின் தந்தை து£ரிகையை தொடவே இல்லை. பிகாஸோ தனது 75 ஆண்டுகால வாழ்க்கையில் சித்திரங்கள், சிற்பங்கள் என ஆயிரக்கணக்கான படைப்புகளை உருவாக்கி யுள்ளார். 20ம் நு£ற்றாண்டின் மகத்தான ஓவிய மேதை என பிகாஸோவை ஒருதரப்பினர் புகழ்கின்றனர். அவர் ஒரு ஏமாற்றுக்காரர், போலி அறிவாளி என்று மற்றொரு தரப்பினர் விமர்சிக்கின்றனர். ஆனாலும் இருபதாம் நு£ற்றாண்டில் உருவான மாடர்ன் ஆர்ட் கலையில் பிகாஸோ வைப் போல செல்வாக்கு செலுத்திய கலைஞன் வேறு யாருமில்லை என அடித்துக் கூறலாம். பிகாஸோ பல்வேறு விதமான பாணியில் ஓவியங்களை வரைந்தார். ஒவ்வொரு விதமான பாணியையும் ஒவ்வொரு பெயர் கொண்டு அழைக்கின்றனர். 1900லிருந்து 1904ம் ஆண்டுவரையில் பிகாஸோ வரைந்த ஓவியங்களின் பாணி ஒரு விதமாக அமைந்தது. இந்த காலகட்டத்தை பிகாஸோவின் நீலக் காலகட்டம் என்று அழைக்கின்றனர். இந்தக் காலகட்டத்தில் வரையப்பட்ட ஓவியங்களில் பிகாஸோ நீல வண்ண நிழலை பயன்படுத்தியி ருந்தார். பிற்காலத்தில் பிகாஸோ மாடர்ன் ஸ்டைலில் வரைந்த ஓவியங்களை விமர்சித்தவர்கள் கூட இந்த நீலக்காலகட்டத்தில் அவர் வரைந்த ஓவியங்களை பெரிதும் பாராட்டினர். 1905ம் ஆண்டிலிருந்து 06 வரையிலான காலகட்டத்தை பிகாஸோ வின் ரோஜா காலகட்டம் என்கிறார்கள். இந்தக் காலகட்டத் தில் அவரது ஓவியங்களில் இருந்த நீல வண்ணங்கள் சிறிது சிறிதாக மறைந்து பிங்க் நிறம் இடம்பெற தொடங்கியது. அடிக்கடி பாரீசுக்கு சென்று வந்து கொண்டிருந்த பிகாஸோ, கடைசியாக ஓவியங்களின் தலைநகரம் எனப்படும் அந்த நகரில் 1904ல் நிரந்தரமாக குடியேறினார். அங்கு அவர் ஹென்ரி மாட்டிசி, ஜோன் மிரோ, ஜார்ஜ் ப்ராக்யூஸ் போன்ற பிரபலமான ஓவியர்களை சந்தித்தார். ஹென்ரி மாட்டிசியின் ஓவியங்கள் பிகாஸோவை பெரிதும் கவர்ந்தன. பிரெஞ்சு ஃபாவிசத்தின் தந்தை எனப் போற்றப்பட்ட ஹென்ரி மாட்டிசியுடன் வாழ்நாள் முழுவதும் நட்போடு இருந்தார் பிகாஸோ. பவுல் ஸெசன்னேயின் படைப்புகளால் கவரப்பட்ட பிகாஸோ ஜார்ஜ் ப்ரா£க்யூஸ், ஜான் க்ரீஸ் போன்ற ஓவியர்களுடன் சேர்ந்து ஓவியங்களில் கியூபிச பாணியை வளர்த்துக் கொண்டார். கியூபிசத்தில் வரையப்படும் கருப்பொருட்கள் ஜியோமெட்ரிகல் வடிவத்திற்கு உருமாற்றப் படும். அதன்பிறகு இதே கியூபிசம் சிந்த்தெட்டிக் கியூபிசம் என்ற புதிய வடிவமாக வளர்ந்தது. இந்த வடிவத்தில் ஒரே நபர் அல்லது பொருள் பல்வேறு வடிவங்களில் ஒரே ஓவியத் தில் வரையப்படும். பிகாஸோவின் ஓவிய வாழ்க்கையில் மைல்கல் எனப்படும் ஓவியம் குவெர்னிகா. 1937ல் இந்த ஓவியத்தை வரைந்தார். ஸ்பெயினில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது பாஸ்கு கிராமத்தின் மீது விமானப்படைத் தாக்குதல் நடைபெற்றது. கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட இந்த காட்டுமிராண்டித் தனமான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் குவெர் னிகா ஓவியத்தை வரைந்தார். 1937ல் பாரீஸ் உலகக் கண்காட்சிக்காக அவர் அந்த ஓவியத்தை வரைந்தார். இந்த ஓவியத்தில் இறந்து கொண்டிருக்கும் ஒரு குதிரையையும் அழுதுகொண்டிருக்கும் பெண்ணையும் பூடகமாகப்(சிம்பாலிக்)படைத்திருந்தார். அதன்பிறகு அவர் வரைந்த பல படைப்புகளில் இந்தக் குதிரையும் அந்தப் பெண்ணும் தொடர்ந்து இடம் பெற்று வந்தனர். 1981 வரையில் நியூயார்க்கில் உள்ள மாடர்ன் ஆர்ட் அருங்காட்சியகத்தில் குவெர்னிகா தொடர்ந்து இடம் பெற்றது. பின்னர், அது ஸ்பெயினில் உள்ள ப்ராடோ அருங்காட்சியகத் திற்கு மாற்றப்பட்டது. அதன்பிறகு 1992ல் மாட்ரிட்டில் உள்ள ராணி சோபியா சென்ட்டர் ஆப் ஆர்ட் அருங்காட்சியகத் திற்கு மாற்றப்பட்டது. ஸ்பெயினில் ஜெனரல் பிரான்கோவின் பாசிச ஆட்சி நடைபெறும் வரையில் குவெர்னிகா ஓவியத்தை ஸ்பெயினுக்கு திரும்பக் கொண்டுவர அனுமதிக்கவே இல்லை. பிகாஸோ அடிக்கடி தனது காதலிகளை மாற்றிக்கொண்டே இருந்தார். அவரது ஓவிய பாணி மாறிக் கொண்டிருந்தது போலவே அவரது பெண் துணைகளும் மாறிக்கொண்டே இருந்தனர். நீலக் காலகட்டத்தில் இருந்து ரோஜாக்கால கட்டத்திற்கு பிகாசோ மாறிய நேரத்தில் பெர்னாண்டே ஆலிவர் எனும் பெண்ணை சந்தித்தார். இவர்தான் பிகாசோ வின் முதல் காதலி. பிகாஸோ தனது காதலிகள், மனைவிகள் மற்றும் குழந்தைகளை நிறைய உருவப்படங்களாக வரைந்துள் ளார். பெர்னாண்டேயுடன் அவர் ஏழு வருடங்கள் வாழ்ந்தார். 1914லில் இருந்து 18 வரையில் முதல் உலகப் போரின் போது பிகாஸோ ரோமில் இருந்தார். அப்போது அவர் ஓல்கா கொக்லோவா எனும் ரஷ்ய பெண்மணியை திருமணம் செய்து கொண்டார். அவர் ஒரு நாட்டியமாடும் பெண். அதன்பிறகு, 1927ல் மேரி தெரெசி வால்டேர் எனும் 17 வயது பெண்ணோடு பழக்கம் ஏற்பட்டது. 1936ல் டோரா மார் எனும் பெண்ணோடு தொடர்பு. இந்தப் பெண் ஒரு புகைப்படக் கலைஞர். 1943ல் ஃப்ரான்கோய்ஸ் கிலோட் எனும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். கடைசியாக திருமணம் செய்து கொண்ட பெண் ஜாக்குலின் ரோக்யூ. 1953ல் பிகாஸோ ஜாக்குலினை சந்தித்தார். 61ல் திருமணம் செய்து கொண்டார். பிகாஸோவுக்கு நான்கு குழந்தைகள். அவர்கள் ஒரே மனைவிக்கு பிறந்தவர்கள் அல்ல. 1965ல் பிகாஸோவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. சிறிது கால ஓய்வுக்கு பிறகு மீண்டும் தொடர்ந்து ஓவியப்பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் 347 உலோக ஓவியங்களை செதுக்கினார். தனது வாழ்நாளின் கடைசி காலகட்டத்தில் உடல் நலம் குன்றியிருந்தபோதும், ஏராளமான ஓவியங்களை தீட்டினார். அவர் 1973, ஏப்ரல் 8 ஆம் தேதி இறந்தார். அப்போது அவருக்கு வயது 91. “மரணத்தைப்பற்றி நான் எப்போதும் சிந்தித்துக்கொண்டி ருக்கிறேன். அந்தப் பெண் ஒருத்திதான் என்னைவிட்டு எப்போதும் நீங்காதவள்.” என்றார் பிகாஸோ. தனது படைப்புகளில் விதவிதமான பாணிகளை கையாண்டார். கற்களில் ஓவியம், உலோகத்தில் ஓவியம், மரத்தில் ஓவியம் என பல்வேறு செதுக்கோவியங்களை உருவாக்கினார். புதிதாக எதையேனும் தேடிக்கொண்டே இருந் தார். இதன் காரணமாக அவரது படைப்புகளில் விதவிதமான உத்திகள் வெளிப்பட்டன. பிகாஸோவின் கிராபிக் படைப்புகள் பல்வேறு உத்திகளின் ஒருங்கிணைந்த வடிவமாக அமைந்தன. பிகாஸோவின் பேட்டிகள் உட்பட ஏராளமான புத்தகங்கள் அவரைப்பற்றி வெளிவந்துள்ளன. அவற்றில் எது உண்மை எது பொய் என்பதை கண்டுபிடிப்பது கடினம். ஏனெனில் பிகாஸோ பத்திரிகைகளில் தன்னைப்பற்றி வரும் செய்திகளை எப்போதும் கண்டு கொள்வதே இல்லை. அவர் தனது மேதைமையை, பிரபலத்தை, அவரே திட்டமிட்டு உருவாக்கிக் கொண்டார். பிகாஸோ பிழைக்கத் தெரிந்தவர். யாருக்காவது சிறு தொகை கொடுக்க வேண்டியிருந்தாலும் கூட அதையும் காசோலையாகத்தான் தருவார். இது ஏன் என்று கேட்டால், ‘அவர்கள் காசோலையில் இருக்கும் எனது கையெழுத்துக்காக அதை வங்கியில் கொடுத்து பணமாக மாற்ற மாட்டார்கள்’ என்பார். பிகாஸோவுக்கு பணம் கொடுத்த மாதிரியும் இருக்கும். அதேசமயத்தில் வங்கியில் பணம் அப்படியேவும் இருக்கும். பிகாஸோ பிரபலமானவராகவும் பணக்காரராகவும் வாழ்ந்தார். பிகாசோவுக்கு வேடிக்கை உணர்வு அதிகம். ஒருமுறை குழந்தைகள் வரைந்த ஓவியங்கள் இடம் பெற்ற கண்காட்சி ஒன்றுக்கு சென்றிருந்தார். கண்காட்சியை விட்டு வெளியே வந்த அவர் கூறினார், “நான் அவர்கள் வயதில் இருந்தபோது, ரபேல் போலக்கூட என்னால் வரைய முடிந்திருக்கும். ஆனால் இந்த குழந்தைகளைப் போல வரைவதற்கு நான் வாழ்நாள் பூராவும் கற்றுக்கொள்ள வேண்டும் போலிருக்கிறதே.” கலையைப்பற்றி அவர், “கலை என்றால் என்ன என்று நான் சொல்ல வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள். அது எனக்கு தெரிந்திருந்தால், எனக்குள்ளேயே அதை ரகசியமாக வைத்துக்கொள்ள மாட்டேனா?” என்றார்.
இவான் பீட்டர்ஸ் (ஆங்கில மொழி: Evan Peters) (பிறப்பு: ஜனவரி 20, 1987) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், திரைக்கதையாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் அமெரிக்கன் திகில் கதை என்ற தொடரில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார். இவர் எக்ஸ்-மென் 7 போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம். தில்லி சுல்தானகம் என்பது 1206 ஆம் ஆண்டு முதல் 1526 ஆம் ஆண்டு வரை இந்தியாவை ஆண்ட பல்வேறு அரசுகளைக் குறிக்கும். பல்வேறு துருக்கிய, பஸ்தூனிய வம்சத்தினர் தில்லியில் இருந்து இந்தியாவை ஆண்டனர். இவற்றுள் மம்லுக் வம்சம் (1206-90), கில்சி வம்சம் (1290-1320), துக்ளக் வம்சம் (1320-1413), சையிது வம்சம் (1414-51), லோடி வம்சம் (1451-1526) என்பன அடங்கும். 1526 இல் முகலாயப் பேரரசு சுல்தானகத்தைத் தன்னுள் அடக்கிக்கொண்டது.[1] தில்லி சுல்தானகம் دلی سلطنت दिल्ली सलतनत ← 1206–1527 → தில்லி சுல்தானகத்தின் வரலாற்று நிலப்படம் தலைநகரம் தில்லி சமயம் சன்னி இசுலாம் அரசாங்கம் முடியாட்சி சுல்தான் - 1206-1210 குதுப்புத்தீன் ஐபாக் - 1517-1526 இப்ராகிம் லோடி வரலாற்றுக் காலம் பிந்திய மத்தியகாலம் - உருவாக்கம் 1206 - குலைவு 1527 பொருளடக்கம் 1 மம்லுக் 2 கில்ஜி 3 துக்ளக் 4 நாணய முறைமை 5 பெண் ஆட்சியாளர் 6 மங்கோலியர் ஆக்கிரமிப்புகள் 7 சுல்தானகத்தின் வீழ்ச்சி 8 வெளி இணைப்புகள் 9 மேற்கோள்கள் 10 புத்தகங்கள் 11 வெளியிணைப்புக்கள் மம்லுக்தொகு குதுப் மினார் மம்லுக் சுல்தானகக் காலத்தில் கட்டப்பட்டது. முதன்மைக் கட்டுரை: மம்லுக் சுல்தானகம் (தில்லி) இந்தியாவின் இரண்டாவது முசுலிம் ஆக்கிரமிப்பாளர் முகம்மது கோரி அரசியல் நோக்கங்களைக் கொண்டிருந்தார். இவர் 1191 மற்றும் 1192 ஆண்டுகளில் பிரித்திவிராஜ் சௌகானுடன் ந்டைபெற்ற முதல் தாரைன் போர் மற்றும் இரண்டாம் தாரைன் போர்களில் ஈடுபட்டார். இரண்டாவது போரில் வெற்றிபெற்ற "முகம்மது கோரி" அப்பகுதியில் தனது கட்டுப்பாட்டை நிலை நிறுத்தினார். இந்த வம்சத்தின் பெரும்பாலான ஆட்சியாளர் தொடக்கத்தில் கோரியின் அடிமைகளாகவே இருந்ததால் இவ்வம்சம் அடிமை வம்சம் எனவும் அழைக்கப்படுவது உண்டு. "கோரி" குத்புத்தீன் ஐபக் என்பவரை இந்தியப் பகுதிகளுக்கு ஆளுநாக நியமித்தார். இவர் தில்லியில் குதுப் மினாரையும் கட்டத் துவக்கினார். எனினும் இது குதுப்புதீனுக்குப் பின் வந்த இல்துமிசு என்பவராலேயே கட்டி முடிக்கப்பட்டது. இல்துமிசுக்குப் பின்னர் ஆட்சியில் அமர்ந்தவர் பால்பன் என்பவர். இவருக்குப் பின்னர் இல்துமிசின் மகளான ரசியா பேகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார் இவர் திறமை வாய்ந்த நிர்வாகியாகத் திகழ்ந்ததுடன், முசுலிம் உலகின் முதலாவது பெண் ஆட்சியாளராகவும் விளங்கினார். எனினும் துருக்கியப் பிரபுக்களின் எதிர்ப்புக் காரணமாக இவர் பதவி விலக நேரிட்டது. இதற்குப் பின்னர் பல திறமையற்ற, விரும்பப்படாத பல ஆட்சியாளர்கள் வந்து போயினர். ஆட்சிப் பகுதிகளில் ஏற்பட்ட புரட்சிகளாலும், பிரபுத்துவக் குடும்பங்களுக்கு இடையேயான எதிர்ப்பு உணர்ச்சிகளாலும் மம்லுக் எனும் அடிமை வம்ச ஆட்சி 1290 இல் முடிவுற்றது. கில்ஜிதொகு முதன்மைக் கட்டுரை: கில்ஜி வம்சம் கில்ஜி வம்சம் என அழைக்கப்படும் இவ்வம்சம் முகம்மது கோரியின் காலத்தில் தம்மை வங்காளத்தின் ஆட்சியாளர்களாக நிலைநிறுத்திக் கொண்டனர். இவர்கள் சதிப் புரட்சி மூலம் மம்லுக் வம்ச ஆட்சியாளரை வெளியேற்றி தில்லிப் பேரரசைக் கைப்பற்றினர். கில்ஜிகள் குசராத்தையும், மால்வாவையும் கைப்பற்றியதுடன், முதன்முதலாக நர்மதை ஆற்றுக்குத் தெற்கே தமிழ் நாடு வரையும் படை நடத்திச் சென்றனர். தில்லி சுல்தானகத்தின் ஆட்சி தொடர்ந்து தென்னிந்தியாவுக்குள் விரிவடைந்தது. முதலில் தில்லி சுல்தானகமும், பின்னர் அதிலிருந்து பிரிந்த குல்பர்கா பாமனி சுல்தானகமும், பகுமானி சுல்தானகம் பிளவுபட்டு ஐந்து தனித்தனியான தக்காணச் சுல்தானகங்களாக ஆனபின் அவையும் தென்னிந்தியாவுக்குள் ஆட்சி நடத்தின. இக் காலத்தில் ஒன்றுபட்ட தென்னிந்தியா விசயநகரப் பேரரசின் தலைமையில் சில காலம் சுல்தானகங்களின் விரிவாக்கத்தைத் தடுத்து நிறுத்தியது. எனினும் இறுதியில் விசயநகரப் பேரரசும் 1565 இல் தக்காணச் சுல்தானகங்களிடம் வீழ்ச்சியடைந்தது. துக்ளக்தொகு துக்ளக்காபாத்தில் உள்ள கியாத் அல்-தீன் துக்ளக்கின் சமாதி துக்ளக் வம்சம் "காசி மாலிக்" எனவும் அறியப்பட்ட கியாசுத்தீன் துக்ளக் என்பவரால் நிறுவப்பட்டது. இவர் கால்சிகளின் கீழ் படைத் தளபதியாக இருந்தார். துக்ளக்குகள் ஆப்கானிசுத்தானைச் சேர்ந்த துருக்கிய இன மரபினர். எனினும் இவர்கள் நீண்ட காலம் இந்தியாவில் வாழ்ந்து பஞ்சாப் பகுதியின் ராசபுத்திரர், சாட்டுகள் போன்றோரோடு மண உறவும் கொண்டிருந்தனர். கியாசுத்தீனைத் தொடர்ந்து முகம்மது பின் துக்ளக் ஆட்சிக்கு வந்தார். இவர் உயர்ச்சியில் ஆர்வம் கொண்ட ஒருவர். பல வளர்ச்சித் திட்டங்களுக்கு இவரே மூல காரணமாக இருந்தார். எனினும் அதிட்டமின்மையாலும், சரியான திட்டம் இன்மையாலும் இவற்றுட்பல தோல்வியடைய நேரிட்டது. மத விடயங்களில் தாராண்மையை இவர் கடைப்பிடித்தார். சமூகத்தின் மரபுவாதம் சாராத, துருக்கியச் சார்பற்ற பிரிவுகளை இவர் விரும்பினார். இவரது ஆட்சிக் காலத்தின் தாயக முசுலிம்கள் பலம் வாய்ந்த பதவிகளுக்கு உயர்ந்தனர். இவரது வாரிசான ஃபைரூசு கான் சா முகம்மது பின் துக்ளக்கின் கொள்கைகளை முற்றாக மாற்றினார். இவர் மரபுவாத சுன்னி முசுலிமாகவும், மதம் தொடர்பில் குருட்டுப் பிடிவாதம் கொண்டவராகவும் இருந்தார். இந்துக்களையும், சியா முசுலிம்களையும் ஒடுக்கினார். தாயக முசுலிம்கள் மீது எதிர்ப்புணர்ச்சி கொண்டவராகவும் இவர் இருந்ததுடன், அரச பதவிகள் பரம்பரை வழி தொடர்வதற்கும் ஏற்பாடு செய்தார். இதனால், ஒடுக்கப்பட்ட சமூகங்களிலிருக்கும் முசுலிம்கள் உயர் பதவிகளுக்கு வருவது முடியாமல் போனது. இவரது இறப்புக்குப் பின் பேரரசின் வலு பெருமளவு குறைந்து போனது. நாணய முறைமைதொகு MALWAR SULTHAN 1 முகமது பின் துக்ளக்கினால் வெளியிடப்பட்ட ஒரு நாணயம் 14 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் சுல்தானகம் நாணயப் பொருளாதாரத்தை மாகாணங்களிலும், மாவட்டங்களிலும் அறிமுகப் படுத்தியது. நாட்டுப்புறப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும், அவற்றிலிருந்து பயன்பெறுவதற்கும் அவற்றைப் பரந்த பண்பாட்டுப் புலத்துக்குள் கொண்டுவருவதற்கும் சந்தை மையங்கள் வலைப்பின்னல்களாக நிறுவப்பட்டன. அரச வருமானம் வெற்றிகரமான வேளாண்மையிலேயே பெரிதும் தங்கியிருந்தது. இதுவே, ஊர்களில் கிணறுகளை வெட்டுதல், விவசாயிகளுக்கு விதைகளை வழங்குதல், கரும்பு போன்ற வணிகப் பயிர்களை உற்பத்தி செய்வதற்கு ஊக்குவித்தல் போன்ற முகம்மது பின் துக்ளக்கின் திட்டங்களுக்குத் தூண்டுகோலாக இருந்தது. பெண் ஆட்சியாளர்தொகு தில்லி சுல்தானகமே பெண் ஆட்சியாளர் ஒருவரைக் கொண்டிருந்த சுல்தானகம் ஆகும். ராசியா சுல்தானா (1236-1240) என்னும் இவர் இந்தியாவின் மிகக் குறைவான பெண் ஆட்சியாளர்களில் ஒருவர். இவரது ஆட்சிக்காலம் மிகக் குறுகியதாக இருந்தாலும் வரலாற்றாளர்கள் இவரை மதிப்புடனேயே நோக்குகிறார்கள். இளவரசி ராசியா சுல்தானா பெயர் பெற்றவராகவும் அவரது உடன்பிறந்தோரிலும் புத்திக் கூர்மை உடையவராகவும் விளங்கினார். இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றில் முதல் முசுலிம் பெண் ஆட்சியாளராக விளங்கியவர் இவரே. கிழக்கே தில்லியிலிருந்து மேற்கே பெசாவர் வரையும், வடக்கே காசுமீரில் இருந்து தெற்கே முல்தான் வரையும் இவரது நாடு பரந்திருந்தது. இவரது அரசுக்குள் இருந்த இவரது எதிர்ப்பாளர்கள் இவரையும் இவரது கணவரையும் கொன்று தில்லிக்கு வெளியே புதைத்துவிட்டனர். மங்கோலியர் ஆக்கிரமிப்புகள்தொகு தில்லி சுல்தான்கள் அண்மைக் கிழக்கில் உள்ள முசுலிம் ஆட்சியாளர்களுடன் நல்ல உறவுகளைக் கொண்டிருந்தபோதும் அவர்களுடன் கூட்டு எதுவும் வைத்துக்கொள்ளவில்லை. சுல்தானகங்களின் சட்டங்கள் குரானையும், சரீயத்தையும் அடிப்படையாகக் கொண்டிருந்தன. முசுலிம் அல்லாத குடிமக்கள் தமது மதத்தைப் பின்பற்றுவதற்குத்தடை இருக்கவில்லை எனினும், பிற மதங்களைப் பின்பற்றுபவர்களுக்குத் தலை வரி விதிக்கப்பட்டது. சுல்தான்கள் நகர மையங்களிலிருந்து ஆட்சி செய்தனர். அதேவேளை நாட்டுப்புறங்களில் உருவாகிய நகரங்களுக்கான மையங்களாகப் படைமுகாம்களும், வணிகப் பகுதிகளும் விளங்கின. சுல்தானகங்களின் மிகப்பெரிய பங்களிப்பு, துணைக்கண்டத்தை, 13 ஆம் நூற்றாண்டில், தற்காலிகமாக மத்திய ஆசிய மங்கோலியர்களின் படையெடுப்பில் இருந்து பாதுகாத்தமை ஆகும். எனினும், 1398 ஆம் ஆண்டின் தைமூரின் ஆக்கிரமிப்பு தில்லி சுல்தானகத்தின் வலிமையைப் பெரிதும் பாதித்தது. சுல்தானகத்தின் வீழ்ச்சிதொகு சுல்தானகத்தை ஆண்ட கடைசி வம்சம் லோடி வம்சம் ஆகும். இந்த வம்சத்தின் கடைசி ஆட்சியாளரான இப்ராகிம் லோடி அவரது அரசைச் சேர்ந்தோராலும், குடிமக்களாலும் பெரிதும் வெறுக்கப்பட்டார். இதனால், பஞ்சாப்பின் ஆளுனராக இருந்த தௌலத் கானும், அவரது மாமனாரான ஆலம் கானும் இந்தியாவைக் கைப்பற்றும்படி காபுலை ஆண்டுவந்த பாபருக்கு அழைப்பு விடுத்தனர். ஏப்ரல் 1526 இல் இடம்பெற்ற முதலாவது பானிப்பட் போரில் பாபர் வெற்றிபெற்றார். இப்ராகிம் லோடி போர்க்களத்தில் கொல்லப்பட்டார். பாபர் ஆக்ராவையும், தில்லியையும் கைப்பற்றிக் கொண்டார். இதன் மூலம் பின்னர் 300 ஆண்டுகள் இந்தியாவில் ஆட்சி நடத்திய முகலாய வம்சத்தையும் தொடக்கி வைத்தார். தில்லி சுல்தானகத்தின் காலப்பகுதி இந்தியாவின் பண்பாட்டு எழுச்சியின் காலப் பகுதி ஆகும். இந்து-முஸ்லிம் பண்பாட்டுக் கலப்பு நிலைத்த விளைவுகளைக் கட்டிடக்கலை, இசை, இலக்கியம், மதம் ஆகியவற்றில் ஏற்படுத்தியது. 1398 ஆம் ஆண்டின் தைமூரின் படையெடுப்புக்குப் பின் சுல்தானகத்தின் வலு குறைந்துபோனது. அவத், வங்காளம், சவுன்பூர், குசராத், மால்வா ஆகிய இடங்களில் சுதந்திரமான சுல்தானகங்கள் நிறுவப்பட்டன. எனினும், முகலாயர்களால் கைப்பற்றப்படுவதற்கு முன், லோடி வம்சத்தினரின் கீழ் தில்லி சுல்தானகம் சிறிதுகாலம் நல்ல நிலையில் இருந்தது. வெளி இணைப்புகள்தொகு தில்லி சுல்தானக வரலாறு- பகுதி 1 காணொளி தில்லி சுல்தானக வரலாறு- பகுதி 2 காணொளி மேற்கோள்கள்தொகு ↑ "Arabic and Persian Epigraphical Studies - Archaeological Survey of India". மூல முகவரியிலிருந்து 29 September 2011 அன்று பரணிடப்பட்டது. இந்தக் கட்டுரையில் Library of Congress Country Studies ஆய்விலிருந்து விதயங்கள் பெறப்பட்டுள்ளன, இவை ஐக்கிய அமெரிக்க கூட்டாட்சி அரசின் பொது பரப்பில் உள்ள பிரசுரங்கள். பார்க்க நாடு ஆய்வு, பாகிஸ்தான் Fernand Braudel, The perspective of the World, vol III of Civilization and Capitalism 1984 (original French ed. 1979) புத்தகங்கள்தொகு Peter Jackson The Delhi Sultanate. A Political and Military History (Cambridge) 1999 Majumdar, R. C. (ed.), The History and Culture of the Indian People, Volume VI, The Delhi Sultanate, (Bombay) 1960; Volume VII, The Mughal Empire, (Bombay) 1973. Nizami, Khaliq Ahmad Some Aspects of Religion and Politics in India in the Thirteenth Century (Delhi) 1961 (Revised Edition Delhi 2002) Memoir of the Emperor Timur (Malfuzat-i Timuri) Timur's memoirs on his invasion of India. Compiled in the book: "The History of India, as Told by Its Own Historians. The Muhammadan Period", by Sir H. M. Elliot, Edited by John Dowson; London, Trubner Company; 1867–1877 Dietmar Rothermund, Geschichte Indiens Vom Mittelalter bis zur Gegenwart, C.H. Beck. Elliot, Sir H. M., Edited by Dowson, John. The History of India, as Told by Its Own Historians. The Muhammadan Period; published by London Trubner Company 1867–1877. (Online Copy: The History of India, as Told by Its Own Historians. The Muhammadan Period; by Sir H. M. Elliot; Edited by John Dowson; London Trubner Company 1867–1877 பரணிடப்பட்டது 2007-09-29 at the வந்தவழி இயந்திரம் - This online Copy has been posted by: The Packard Humanities Institute; Persian Texts in Translation; Also find other historical books: Author List and Title List பரணிடப்பட்டது 2007-09-29 at the வந்தவழி இயந்திரம்) வெளியிணைப்புக்கள்தொகு தில்லி சுல்தானக வம்சம் தில்லியின் ஆட்சியாளர் பட்டியல் "https://ta.wikipedia.org/w/index.php?title=தில்லி_சுல்தானகம்&oldid=3216704" இருந்து மீள்விக்கப்பட்டது
புது தில்லி: ஹரியாணாவின் பிவானி மாவட்டத்தில் உள்ள சுய் கிராமத்துக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் புதன்கிழமை சென்றாா். அங்கு மக்களுக்கான பல்வேறு பொது வசதிகளை திறந்து வைத்தாா். ஹரியாணா அரசின் ஸ்வா-பிரெரீத் ஆதா்ஷ் கிராம் யோஜனா திட்டத்தின் கீழ் மகாதேவி பரமேஸ்வரிதாஸ் ஜிண்டால் அறக்கட்டளை மூலம் இந்த கிராமம் ‘மாதிரி கிராமம்’ ஆக உருவாக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவா், ‘சுய் கிராமத்தை முன்மாதிரி கிராமமாக மாற்றுவதில் ஜிண்டால் மற்றும் அவரது குடும்பத்தினா் மகத்தான பங்களிப்பைச் செய்துள்ளனா். நமது தாய்நாட்டின் மீதுள்ள பற்றுக்கும் நன்றிக்கும் சிறந்த உதாரணம் இது. இக்கிராமத்தில் உருவாக்கப்பட்டுள்ள பள்ளி, நூலகம், குடிநீா் மற்றும் இதர வசதிகளை நன்கு பயன்படுத்திக் கொண்டு, கிராமத்தைச் சோ்ந்த குழந்தைகள் மற்றும் இளைஞா்கள் கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைப்பாா்கள். கிராமம் சாா்ந்த நமது பொருளாதாரத்தில் கிராமிய வளா்ச்சியே தேசிய வளா்ச்சியின் அடிப்படையாகும். ஆதா்ஷ் கிராம் யோஜனா திட்டத்தை உருவாக்கிய ஹரியாணா அரசுக்கு பாராட்டுகள். நாம் அனைவரும் நமது கிராமங்களின் வளா்ச்சிக்காக உழைத்தால், நமது நாடு வளா்ந்த நாடாக மாறும். இதுபோன்ற உதாரணங்களிலிருந்து மற்றவா்களும் உத்வேகம் பெற்று கிராமங்களின் வளா்ச்சிக்கு பங்காற்ற முன்வருவாா்கள் என்று ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை தெரிவித்தாா். O P E N ADVERTISEMENT அதிகம் படிக்கப்பட்டவை அதிகம் பகிரப்பட்டவை ADVERTISEMENT உங்கள் கருத்துகள் Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines. The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time. ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT புகைப்படங்கள் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரில் விபின் ராவத் அழகில் ஜொலிக்கும் பவித்ரா லட்சுமி - புகைப்படங்கள் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில்: பகல்பத்து நான்காம் நாள் உற்சவம் நாகலாந்து வன்முறை - புகைப்படங்கள் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள் ஸ்ரீரங்கம்: பகல் பத்து 3ம் நாள் உற்சவம் வீடியோக்கள் 'ஜெயில்' படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு புஷ்பா படத்தின் டிரைலர் வெளியீடு ரைட்டர் படத்தின் டீசர் வெளியீடு காதலை சொல்ல முடியாதா வீடியோ பாடல் வெளியீடு மின்னல் முரளி படத்தின் டிரெய்லர் வெளியீடு கரோனாவைவிட ஆபத்தானது ஒமைக்ரான்? ADVERTISEMENT அதிகம் படிக்கப்பட்டவை அதிகம் பகிரப்பட்டவை ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT ADVERTISEMENT NEWS LETTER FOLLOW US Copyright - dinamani.com 2021 The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress
கடவுள் அருளால், பஞ்சாபில் பா.ஜனதா மற்றும் சுக்தேவ்சிங் திண்ட்சா தலைமையிலான அகாலிதள பிரிவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்போம் என்று அமரீந்தர் சிங் கூறினார். நவம்பர் 30, 2021 04:28 காங்கிரஸ் காரிய கமிட்டி கூடுகிறது- எதிர்ப்பாளர்கள் கோரிக்கையை சோனியா ஏற்றார் பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரி அம்ரீந்தர்சிங் காங்கிரசில் இருந்து விலகுவதை தடுக்க காங்கிரஸ் மூத்த தலைவர்களில் சிலர் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளனர். அக்டோபர் 01, 2021 12:11 அடுத்த கட்ட நகர்வு என்ன ? சொல்கிறார் அமரீந்தர் சிங் பஞ்சாப்பில் ஒவ்வொரு காங்கிரஸ் தலைவரும் முதல் மந்திரியாக விரும்புகின்றனர் என டெல்லி முதல் மந்திரி அரவிந்த கெஜ்ரிவால் கூறியுள்ளார். செப்டம்பர் 30, 2021 20:57 நான் அவன் இல்லை - அமரீந்தர் சிங்கிற்கு அம்ரீந்தர் சிங்கை குழப்பிக் கொண்ட ஊடகங்கள் பஞ்சாப் மாநில முதல் மந்திரி கேப்டன் அமரீந்தர் சிங்கை டுவிட்டரில் டேக் செய்வதற்கு பதிலாக இந்திய ஹாக்கி அணி வீரர் அம்ரீந்தர் சிங்கை ஊடகங்கள் டேக் செய்துள்ளன. செப்டம்பர் 30, 2021 17:00 மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் அமரீந்தர் சிங் திடீர் சந்திப்பு - பாஜகவில் இணைகிறாரா? காங்கிரஸ் கட்சி தலைமை யாரை நம்புகிறதோ, அவரை முதல்வர் ஆக்கட்டும். இப்போதும் நான் காங்கிரஸ் கட்சியில்தான் இருக்கிறேன். செப்டம்பர் 29, 2021 18:43 அமரீந்தர்சிங் தனது கருத்துகளை மறுபரிசீலனை செய்வார் - காங்கிரஸ் கட்சி நம்பிக்கை ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா பற்றிய கருத்துகளை அமரீந்தர் சிங் மறுபரிசீலனை செய்வார் என்று காங்கிரஸ் கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது. செப்டம்பர் 25, 2021 02:26 அவங்க சின்ன பசங்க, ஒன்னும் தெரியாது - ராகுல், பிரியங்கா குறித்து அமரீந்தர் சிங் விமர்சனம் முதல் மந்திரி பதவியிலிருந்து விலகியதை அடுத்து அமரீந்தர் சிங் தொடர்ந்து காங்கிரஸ் தலைமையை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். செப்டம்பர் 24, 2021 00:26 சித்து திறமையற்றவர், அவரை முதல்வராக ஏற்க மாட்டேன் -அமரீந்தர் சிங் சித்துவுக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு உள்ளதாகவும், இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் அமரீந்தர் சிங் கூறினார். செப்டம்பர் 18, 2021 19:24 என்னை அவமானப்படுத்திவிட்டார்கள்... முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அமரீந்தர் சிங் பேட்டி தனது ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்து எதிர்கால திட்டம் குறித்து முடிவு செய்ய உள்ளதாக அமரீந்தர் சிங் தெரிவித்தார். செப்டம்பர் 18, 2021 18:53 0 அதிகம் வாசிக்கப்பட்டவை கமலுக்கு தமிழக மருத்துவத்துறை நோட்டீஸ் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் முப்படை தலைமை தளபதி பிபின்ராவத்- நிலை என்ன? 2 நாட்கள் வங்கிகள் நாடு முழுவதும் வேலைநிறுத்தம் திட்டுவதற்கு வாய்ப்பே தரவில்லை - பாரதிராஜா வரவேற்பு முடிந்ததும் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அஷ்வினுக்கு வாய்ப்பு கொடுக்காதது குறித்து விராட் கோலி பதில் அளிக்க வேண்டும்- முன்னாள் கேப்டன் சொல்கிறார் ஆசிரியரின் தேர்வுகள்... டிசம்பர் 08, 2021 08:30 IST குளிர்கால ஒலிம்பிக்கில் இருந்து விலகல்: ஆஸ்திரேலிய பிரதமர் டிசம்பர் 08, 2021 08:11 IST வாரத்தில் 4½ நாட்கள் மட்டுமே வேலை: ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு டிசம்பர் 08, 2021 07:39 IST தொடர்ந்து உயரும் தக்காளி விலை: இன்று சென்னையில் 130 ரூபாய்க்கு விற்பனை டிசம்பர் 08, 2021 07:34 IST ரூ.2,000 நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தம்: மத்திய மந்திரி தகவல் டிசம்பர் 08, 2021 07:26 IST பாம்புக்கு பயந்து ரூ.12 கோடி வீட்டை கொளுத்திய தொழிலதிபர் டிசம்பர் 07, 2021 16:46 IST முடியாதது என்று எதுவுமில்லை என்பதை புதிய இந்தியா நிரூபித்துள்ளது: பிரதமர் மோடி பெருமிதம் டிசம்பர் 07, 2021 16:26 IST ரஜினியை சந்தித்து பேசினார் சசிகலா Top Tamil News Breaking News India News World News Tamilnadu News District News Sports News Puducherry News Sirappu Katturaigal Tamil Cinema Tamil Cinema Review Tamil Cinema Preview Tamil Cinema News Tamil Cinema Gossip Star Profiles History of Tamil Cinema Tamil Movies Top Tamil Movies Spirituality Dosha pariharangal Virathangal Weekly Special Slogans Temples Worship Thirupaavai Islam Christianity Wellbeing Fitness and Yoga Home Remedies Health Food Recipe Child care Tips Natural Beauty Tips Medicine for Womens Safety Tips for Women Cookery Receipes Latest Technology Latest Tech News Latest Mobile Tabs & Computers Latest Gadgets Tech Tips Automobile Automobile News Bike Car News New Launch Auto Tips/Leaks Specials T20 WorldCup World Test Championship Tokyo Olympics India vs England TNPL Cricket IPL 2021 India vs New Zealand மற்றவை ஜோதிடம் உண்மை எது MM Apps இந்தியா vs நியூசிலாந்து தேர்தல் 2016 What’s in store for you? Maalaimalar brings you: The Latest Tamil News | Tamil Cinema News and | Reviews | Kollywood gossips | astrology in Tamil. Maalaimalar Tamil brings you the latest Tamil news from India and rest of the World. You Also Get Top Breaking News | Political News from Tamil Nadu and India. Get In-depth Coverage of National and International Politics | Business | Sports | Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these. We also focus on Tamil Spiritual News | Astrology | Technology | Traditional Tamil Food Recipes | Tamil Cinema Entertainment i.e. Tamil Cinema News | About Tamil Top Actors such as | Rajinikanth | Kamalhasan | Vijay | Ajith etc. Further Latest Tamil movie reviews with ranking of Top Tamil Movies | Top Tamil Actor and Actress | Photo Gallery | History of Tamil Cinema | Tamil Movie Video Reviews. Catch the Start Interviews and latest events on our site as and when it happens If you are looking for news from your home town, trust Maalaimalar.com Tamil to get you all the latest happenings not only from districts of Tamil Nadu Ariyalur News in Tamil | Chennai News in Tamil | Coimbatore News in Tamil | Cuddalore News in Tamil | Dharmapuri News in Tamil | Dindigul News in Tamil | Erode News in Tamil | Kanchipuram News in Tamil | Kanyakumari News in Tamil | Karur News in Tamil | Krishnagiri News in Tamil | Madurai News in Tamil | Nagapattinam News in Tamil | Namakkal News in Tamil | Nilgiris (Ooty) News in Tamil | Perambalur News in Tamil | Pudukkottai News in Tamil | Ramanathapuram News in Tamil | Salem News in Tamil | Sivagangai News in Tamil | Thanjavur (Tanjore) News in Tamil | Theni News in Tamil | Thoothukudi (Tuticorin) News in Tamil | Tiruchirappalli (Trichy) News in Tamil | Tirunelveli (Nellai) News in Tamil | Tirupur News in Tamil | Tiruvallur News in Tamil | Tiruvannamalai News in Tamil | Tiruvarur News in Tamil | Vellore News in Tamil | Viluppuram News in Tamil | Virudhunagar News in Tamil | But also from Puducherry (Pondycherry) News in Tamil. Others Other than News and Entertainment in Tamil we also provide Astrology predictions | Daily Tamil Rasi palan for your star Mesham rasi palan | Rishabam rasi palan | Midhunam rasi palan | Kadagam rasi palan | Simmam rasi palan | Kanni rasi palan | Thulam rasi palan | Viruchagam rasi palan | Dhanusu rasi palan | Magaram rasi palan | Kumbam rasi palan | Meenam rasi palan everyday also we publish Tamil New year palan, Guru Peyarchi palan and Sani Peyarchi Palangal etc. We do care about your wellbeing. We provide health tips such as simple | exercise | Yoga | Home Medicine | Health food recipe rasi palan | Child care | Natural beauty tips | Medicine for Woman | Safety tips for Woman Technology and Automobile is part of our busy life, we provide tech news in Tamil about latest mobile phone | computers and gadgets. Cars | Bikes and automobile news in Tamil are well appreciated by our readers. If you are looking for Tamil News and entertainment in video format then Maalaimalar video [video.maalaimalar.com] is the right choice. We bring the latest Tamil movie trailers | Tamil Cinema events | Cinema gossips. | Special star interviews and | Tamil news in video format. To stay updated, all you need to do is just one thing - get the latest Tamil News on the go.. just download Maalaimalar Tamil News APP from Apple App store or Google Play Store
பள்ளி, கல்லூரிகள், சினிமா தியேட்டர்கள், விளையாட்டு, கலாசார நிகழ்ச்சிகள், அரசியல் மற்றும் மதம் சார்ந்த திறக்க தடை நீடிக்கிறது. திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கும், துக்க நிகழ்ச்சிகளில் 20 பேருக்கு மட்டும் அனுமதி அளித்து அறிவிப்பு. இணைப்பைப் பெறுக Facebook Twitter Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் கருத்துகள் கருத்துரையிடுக இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள் அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள் - ஆகஸ்ட் 21, 2020 நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக் மேலும் படிக்கவும் நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை - ஆகஸ்ட் 06, 2020 ​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு மேலும் படிக்கவும் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா - ஜூலை 27, 2021 முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காரைக்குடி தாலுகா வெற்றியூர் கிராமம் காரைக்குடியிலிருந்து 30 கி.மீ தொலைவிலும், சிவகங்கையிவிலிருந்து 28 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. வெற்றியூர் ஒரு கிராமப் பஞ்சாயத்து மொத்தப் பரப்பளவு 1205.06 ஹெக்டேராகும். 1,411 மக்கள் தொகை கொண்ட கிராமத்தில் 417 வீடுகள் உள்ளன. சிவகங்கை சட்டசபை மற்றும் நாடாளுமன்றத் தொகுதியில் வருகிறது. மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் வரலாற்றுப் புகழ் கொண்ட அரண்மனை சிறுவயல் மற்றும் நட்டரசன்கோட்டை உள்ளிட்ட ஊர்கள் வெற்றியூருக்கருகிலுள்ளது இங்கு டாக்டர் கலாம் இலட்சிய இந்தியா மற்றும் புதுக்கோட்டை மரம் அறக்கட்டளையின் சார்பாக வெற்றியூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியின் வளாகத்தில் 101 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக , வெற்றியூர் ஊராட்சி மன்ற தலைவர் மரம் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் வாழும் அசோகர் புதுக்கோட்டை. மரம் இராஜா, மதர் சிறப்புப் பள்ளி, நிர்வாக இயக்குனர் அருன் குமார் காரைக்குடி. மதர் தொண்டு நிறுவனப் பொருளாளர் பரமசிவம். உதவி தலைமை ஆசிரிய
SP Muthuraman is a person who has directed lots of movies starring Thanga Thalaivar Super Star Rajinikanth, its even the fact that he was in lime light just because he has directed lots of Rajini/Kamal Movies. Enjoy my review of the classic movie "Netrikkan" starring Rajinikanth in dual role (Father and Son). Others include homely "Old" aunty Lakshmi, "Amruthanjan commercial fame" Saritha, Gowndamani, Menaka and great Goluttu female Super fighter Vijayashanthi as Super Star's Sister. Sarath Babu and Thengai Srinivasan have acted in "Gowrava Vedam" guys you know what Gourava vendam means - acting without taking any money!!! Directed by SP Muthuraman, Story and Dialogs Visu SCREEN PLAY BY K.B. the great. Lyrics by "Kavi Arasar" and Isai @ Ilayaraja. Produced by K.B's Kavithalayam (now rechristened Kavithalaya). STORY: The story is about the weakness (what else gals) of a very successful Enterpreneur/Multi Milloinaire Chakaravarthy (Father Rajini) with a little bit of self pride on his achievements who is the Bill Gates of yester years in the Textile City of Tamil Nadu (Coimbatore). He is a great womeniser (perhaps his only weakness) a typical Sabala Case who is capable of picking up any cute chicks. At heart he is too good a person he treats his employees well, highly charitable. He has a son (Santhosh Chakaravarthy) and a daughter Sangeetha (who else the great goluttu super fighter (Vijayashanthi) and an OFFICIAL wife Meenakshi (Lakshmi). Radha (Saritha) gets introduced as a candidate for PRO (Public Relations Officer) interview and eventually gets selected and she is sent to Hong Kong for training. Our Sabala Chakaravarthy goes to hong kong and rapes her. In the meanwhile his son gets to know his weakness and starts reforming him. Later Radha joins Santhosh and his mother in this "Critical" mission. The rest of the story is how they reform chakaravarthy a highly perverted, influencial person with little bit of typical Tamil Movie Masala!!!! Rajinikanth He has done a great job as ever in this movie. Both father and son are either extremes and performing the character of the Perverted Sabala case in the previous shot and the same person doing the character of a pious person in the next shot is extremely difficult job. I would say he has lived the father role. The peak performance of the super star is exhibited in every inch of the movie and the self pride he shows is at its best when he says "Nee Yuvarajana nan chakaravarthy da" and accomplishes What he wanted. Saritha She has done a great job as a person got raped by her boss. But in the last scene too much of sentiments and cries which was irritating to some extent. Lakshmi As usual lots of cries for her in this movie as every one knows she is too good at doing it. So it requires no special comments. Goundamani OOOOPs.... no one to get beaten by him in this movie so he had to show some real stuff in comedy and he did a great job in doing it. Dominating others many a times irritates the viewers. In this movie he has acted without his usual slang and beating senthil for no reason. His performance was at its peak when he corners charavarthy and says samandhi nan kilabukku(club) poi pillieeeds (Billiyards) veladaporen. Thengai Though he comes for only one scene as a doctor he did a great job he comes as Dr. "Kopparai Thengai Srinivasan" with a large pattai on his forehead a striped shirt and tie with a panja dhothy. The way he delivers dialogs and they way he responds to Rajini and the way he drives Rajini out of his clinic was really great. His performance was simply superb and its worth mentioning. Sarath Babu Though his character demanded some amount of acting he failed to do. It was a just a come and go for him. Menaka I am sure no body will be knowing this female to my knowledge she has acted as a heroine only in this movie. For those who want to findout who she is watch "Ramanin Moganam Song". Just she comes and goes with little bit of weeping and nail biting here and there of course on her fingers. COMMENTS: Punching Scenes In our view every scene Charavarthy appears is a punching scene. OOOOPs then the whole movie sans the songs/Typical Tamil Cinema Masala and romance becomes a punching scene. Anyway to highlight few good ones. 1. The time chakaravarthy gets up is 7:30 in the morning (with an alarm clock) as soon as he opens his eyes, sees a porn poster in his room, Kalailla muzhikkaradhe oru two piece ponnoda poster. One servant comes with a variety of juices (bed juice have u ever heard of) on a trolly and the tray on the trolly contains porn poster, the way he keeps the empty glass back on the tray....it was really excellent then another servant comes with a tray full of cigars and another guy comes and crackles his knuckles (Kalla sodakku eduthu vida oru aal!!). He exhibited a great style when he flicks his left knee and the pillow which was on his leg falls on the bed!!!!! One has to see the number of desses/shoes/watches/googles Charavarthy has in his room. I was shocked to see that. 2. On the other hand his son gets up at 5 in the morning as soon as he wakes up, sees Thiruppathi Venki (Those who don't know Venki he is Ammu's husband) very rich god. He has a very simple life style, not venki our Hero Santhosh. நெற்றிக்கண் - திரை விமர்சனம் அப்பா சக்ரவர்த்தி, மகன் சந்தோஷ் என இருவருமாக நடிகர் ரஜினிகாந்த். ரஜினிக்கு நெற்றிக்கண் படத்தில் நடிக்கும் போது வயது 30. சக்கரவர்த்திக்கு வயது 60, சந்தோஷுக்கு வயசு 24. இரண்டு பேருக்கும் தோற்றம் வேறு. உடை அலங்காரம் வேறு. நடை உடை வேறு. கொள்கை இரண்டு. படத்தின் மொத்த கனத்தையும் தாங்கி நிற்பது இந்த இரண்டு பாத்திரங்களும் தான். இந்த இரண்டு கனமான வேடங்களையும் ஏற்று நின்றது ரஜினிகாந்த். படத்திற்கு கதை- விசு திரைக்கதை – கே. பாலசந்தர் தயாரிப்பு – கவிதாலயா இயக்கம் – எஸ் பி முத்துராமன் ரஜினியை சூப்பர் ஹீரோவாகப் பார்த்துப் பழகிய 1990 மற்றும் 2000 -ஆவது வருடத்துத் தலைமுறையினருக்கு நடிகர் ரஜினியின் சாகசங்களை ரசிக்க நெற்றிக்கண் ஒரு சிறந்த வாய்ப்பு. சக்கரவர்த்தி கோயம்புத்தூரைச் சேர்ந்த பெரும் கோடீஸ்வரத் தொழிலதிபர். அளவான குடும்பம். கணவனைக் கண் கண்ட தெய்வம் என வணங்கி வாழும் மனைவி சக்கரவர்த்திக்கு. மனைவி வேடத்தில் நடிகை லட்சுமி. படையப்பாவில் ரஜினிக்கு அம்மா வேடம் போட்டிருப்பதும் இவரே. பணக்கார மகள் சங்கீதாவாகப் பின்னாளில் சூப்பர் ஸ்டார் ரஜினியோடு மன்னன் படத்தில் ஜோடியாக நடித்த லேடி சூப்பர் ஸ்டார் என்று பெயர் பெற்ற விஜயசாந்தி. இவருக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை பையனாக வருகிறார் சரத் பாபு. கொஞ்சமே வந்தாலும் இவர் வேடம் படத்தில் சுவாரஸ்யம் சேர்க்கும் வகையில் அமைகிறது. ஒரு முழுப் பாடலே இந்தப் பாத்திரத்தைச் சுற்றி கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்றால் பாருங்களேன். மகன் சந்தோஷ் கல்லூரி மாணவன். ஒரு வெற்றிகரமான தொழில் அதிபராகவும், குடும்பத் தலைவராகவும் வளைய வருகிறார் சக்கரவர்த்தி. சக்கரவர்த்திக்கு அது தவிர இன்னொரு சுயநலமான வாழ்க்கையும் இருக்கிறது. சந்தோஷ் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும் கல்லூரி மாணவன். இந்தப் பாத்திரப் படைப்புக்களின் குணாதியசங்களை அறிமுகக் காட்சியிலேயே இயக்குனர் பார்வையாளர்களின் மனத்தில் ஆழமாகப் பதிக்கிறார். காலையில் எழும் சக்கரவர்த்தி கண் முன் இருப்பது ஒரு கவர்ச்சிப் படம், மகன் சந்தோஷ் முன் இருப்பது சாமி படம். இந்தப் புள்ளியில் துவங்கித் தந்தைக்கும் மகனுக்குமான வேறுபாடுகளைத் திரைக்கதையை விரிவு படுத்திக் காட்டி முன்னேறுகிறது. சக்ரவர்த்தியின் பாத்திரம் குறித்த தெளிவுரை, பொழிப்புரை எல்லாம் தீராத விளையாட்டு பிள்ளை பாட்டு மூலம் படம் பிடித்துக் காட்டும் இயக்குனர். சந்தோஷின் சிந்தாந்தங்களைக் கல்லூரி காட்சிகள் மூலம் நிர்மாணிக்கிறார். கல்லூரியில் சந்தோஷுக்கு ஒரு சின்னக் காதல் கதையும் வைத்திருக்கிறார்கள். நாயகனும் நாயகியும் அதிகம் பேசாமலே உள்ளங்கையில் எழுதிய எழுத்துக்களால் காதல் பரிமாறிக் கொள்ளும் கொஞ்சம் கவித்துவமான காதல் கதை. மேனகா தான் சந்தோஷின் காதல் நாயகியாகப் படத்தில் தோன்றி இருக்கிறார். வந்து போகும் வேடம் தான். ஆனால், ஒற்றைப் பாடலால் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்து விட்டார். பாட்டைப் பற்றிப் பின்னால் பார்ப்போம். கணவனின் தீராத விளையாட்டுக்களை அறிந்தும், அது குறித்து அவனைத் தட்டிக் கேட்க இயலாத நிலையில் சக்கரவர்த்தியின் மனைவி. மனைவியின் மௌனமான பொறுமையைத் தன் களியாட்டங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தித் துள்ளாட்டம் போடுகிறார் சக்கரவர்த்தி. சக்கரவர்த்தி தன் அந்தரங்க லீலைகளுக்கென மதனமாளிகை என்று ஒரு தனி பங்களாவே கட்டி வைத்திருக்கிறார்.மதன மாளிகைக்கும் மற்றும் அங்கு நடக்கும் விளையாட்டுகளுக்கும் சக்கரவர்த்திக்கு உடன் இருக்கும் சிங்காரம் என்ற கார் டிரைவர் வேடத்தில் கவுண்டமணி. ஒரு கட்டத்தில் சக்கரவர்த்தியின் மகன் சந்தோஷுக்குத் தந்தையின் ஆட்டம் தெரிய வருகிறது. அவரது ஆட்டக்களமான மதன மாளிகையிலே எதிர் கொள்ளக் கிளம்புகிறான். சிங்காரத்தைச் சுற்றி வளைத்துத் தன் பக்கம் சேர்த்துக் கொள்கிறான் சந்தோஷ். தந்தையை மகன் எதிர்கொள்ளும் அந்தக் காட்சி மதன மாளிகையில் தான் படமாக்கப்பட்டிருக்கும். மதன மாளிகை செட் பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும். கண்ணாடி சூழ் சூழல் படுக்கை சகிதம் இருக்கும் அந்த மாளிகை ரசனையாக அமைக்கப்பட்டிருக்கும். அங்கு தந்தைக்கும் மகனுக்கும் நடக்கும் அந்த உரையாடல் வெகு பிரசித்தம். “இது விளக்கு…இது ஊதுபத்தி… இது கட்டில்… இது படுக்கை…நீ பொண்ணு நான் பையன்…” சக்கரவர்த்தியின் குரல் குழைவு வசனத்தின் வீரியத்தை உச்சப்படுத்தி இருக்கும். அதே வசனத்தைச் சற்றே மாற்றித் தந்தைக்கு மகன் திருப்பிச் சொல்லும் இடம் சபாஷ் சொல்ல வைக்கிறது. காட்சியின் அழகு மற்றும் வசனத்தின் தீவிரம் இரண்டையும் கூட்டுவதில் அந்த செட்டிற்க்கு பெரும் பங்கு இருந்தது என்று சொன்னால் அதை நிச்சயம் ஏற்று கொள்ளலாம். அது துவங்கி தந்தைக்கும் மகனுக்கும் பனிப்போர் ஏற்படுகிறது. தந்தையின் இருட்டு நடவடிக்கைகளுக்கு மகன் பூட்டுப் போடுகிறான். ருசி கண்ட பூனை பசியில் சிக்கிச் சீற்றம் கொள்கிறது. தந்தையைத் திருத்துவதைத் தன் கடமையாக ஏற்றுச் செயல் படுகிறான் சந்தோஷ். சந்தோஷிடம் சிக்கிக் கூண்டுக்குள் மாட்டிய புலியாக சக்கரவர்த்தி திணறுகிறார். இந்த நகர்வுகளை சுவாரஸ்யமாக நகர்த்தி இருப்பார் இயக்குனர். ரசிப்பும் சிரிப்புமாக பார்வையாளர்கள் உற்சாகம் கொள்ள வைக்கும் காட்சிகள். மகனின் தடுப்பாட்டத்தை சமாளிக்க சிரமப்பட்டு சக்கரவர்த்தி ஓய்வு எடுக்க வெளிநாடு பறக்கிறார். உள்ளூரில் சதா கண்காணிக்கப்பட்டுக் கிட்டத்தட்ட மகனின் கட்டுப்பாட்டில் தள்ளப்பட்டு இருந்த நிலையில் இருந்து விடுதலை உணர்வடைகிறார் சக்கரவர்த்தி. ஹாங்காங் நகரில் சக்ரவர்த்திக்கு அவர் நண்பர் ஒரு வினோதமான கண்ணாடியொன்றை பரிசளிக்கிறார். அந்த கண்ணாடி ஒரு எக்ஸ் ரே திறன் பெற்றது. ஆடை களைந்து மேனி காட்டும் குணம் வாய்ந்தது என நண்பர் கூறுகிறார். பசித்திருக்கும் புலி ஆன சக்கரவர்த்தி பாய்ச்சலுக்கு தயார் ஆகிறார். இந்நிலையில், அவரது கம்பெனியில் ஏற்கனவே அவரால் பணியில் அமர்த்தப்பட்ட ராதா என்ற பெண் அவரை வெளிநாட்டில் சந்திக்கிறாள். சக்கரவர்த்தி தன் பசிக்கு அவளை இரையாக்கி கொள்கிறார். அது மட்டுமின்றி தன்னை எதிர்க்க நினைத்தால் ஒழித்து விடுவதாக மிரட்டலும் விடுக்கிறார். ராதா வேடத்தில் நடிகை சரிதா. படத்தின் பிற்பாதி ராதா பாத்திரத்தை சுற்றியே பெருமளவில் வளைய வரும். கொஞ்சம் கனமான வேடம். அமைதியான தோற்றம் அடக்கமான பேச்சு ஆனாலும், அழுத்தமான உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டிய பாத்திரம். சரிதா சரி தான் என சொல்லும் அளவுக்கு பிரகாசித்திருக்கிறார். சக்கரவர்த்தி சென்னை திரும்பும் போது அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. தன் குடும்பம் தனக்கு எதிராக திசை திருப்பப்பட்டு இருக்கிறதை தெரிந்து கொள்கிறார். ராதா தன் நிறுவனத்தின் உச்ச பதவியில் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறார். அது அவருக்கு அதிர்ச்சி அளிக்கிறது. அதே ராதா மருமகளாய் தன் மகனுக்கு மனைவியாய் தன் வீட்டுக்குள்ளும் நுழைந்ததைக் காண்கிறார். இது அவருக்கு பேரதிர்ச்சி அளிக்கிறது. தந்தை, மகன் குரல் மாற்றங்கள் ரஜினியின் அட்டகாசக் கச்சேரி. தன்னைச் சுற்றி எதோ ஒரு சதி வலை பின்னப்படுவதை உணர்கிறார் சக்கரவர்த்தி. அதன் பின்னால் இருப்பது தன் மகன் சந்தோஷ் என்பதையும் புரிந்து கொள்கிறார். சந்தோஷ் பின்னால் தன் குடும்பமே இருப்பதையும் உணர்கிறார். தந்தையைத் திருத்த என்னவானாலும் சரி எனக் கோதாவில் குதிக்கும் மகன் ! நீ யாருடா என்னைத் திருத்த என பதிலுக்கு எகிறி நிற்கும் தந்தை! அறுபதுக்கும் இருபதுக்கும் நடக்கும் சூடான மோதல் இரண்டாம் பாதியின் பெரும் பகுதி காட்சிகளை கவர்ந்து கொள்கிறது. சந்தோஷ் ராதா திருமண நாடகம் குறித்த உண்மையை சக்கரவர்த்தி ஒரு கட்டத்தில் தெரிந்து கொள்ளுகிறார். இதன் பின் அவரது நகர்வுகள் இன்னும் பலம் பெறுகின்றன. சந்தோஷ் தன் முயற்சிகளில் பின்னடைவு கொள்கிறான். மகனால் தந்தையை நல்வழி படுத்த முடிந்ததா? அந்தக் குடும்பத்தின் நிலை என்ன? சக்கரவர்த்தியால் வாழ்வை இழந்த ராதாவின் நிலை என்ன? இப்படி அடுக்கு அடுக்கான கேள்விகளுக்கு திரைக்கதையாசிரியரும் இயக்குனரும் நாம் ஏற்று கொள்ளும் படியான முடிவைக் கொடுத்து இருக்கிறீர்களா என்பதைப் படத்தில் பார்த்து ரசித்து உணர்வது தான் சிறந்த அனுபவம். அதனால் அது குறித்து மேலும் சொல்லப் போவதில்லை. இசை இளையராஜா. பாடல்கள் கவியரசு கண்ணதாசன் பாடல்கள் அனைத்தும் காலம் தாண்டி இசை ரசிகர்களை இன்றும் வசியம் செய்து வைத்திருக்கும் வல்லமை கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக “ராமனின் மோகனம்” என்ற பாடல், ராஜா-ரஜினி இணைந்த ஹிட் வரிசையைத் தொகுத்தால் நிச்சயம் முதல் பத்து இடங்களுக்குள் கண்டிப்பாக வரும். “தீராத விளையாட்டு பிள்ளை” வார்த்தையிலும் சரி, காட்சியிலும் சரி, இசையிலும் சரி, எஸ்.பி.பி குரலிலும் சரி, ரஜினிகாந்த் நடிப்பிலும் சரி, எள்ளலும் துள்ளலும் கலந்து செழித்து ஒரு இனிய திரை அனுபவத்தை ரசிகனுக்கு வழங்கியது என்றால் மிகையாகாது. “மாப்பிள்ளைக்கு மாமன் மனசு மாமனுக்கோ காமன் மனசு ” பாடல், கவியரசு கண்ணதாசன் கவிஞர் மட்டுமல்ல நல்ல கதை சொல்லி என்பதையும் நிரூபணம் செய்த எத்தனையோ பாடல்களில் இதுவும் ஒன்று. மாப்பிள்ளையாக வரும் சரத் பாபு பாத்திரத்தைக் கொண்டு சக்கரவர்த்தியை அழுத்தும் இந்த பாடலும் சரி, சரத் பாபு ரஜினி சந்திக்கும் காட்சியும் சரி பாலச்சந்தர் திரைக்கதை உயரங்கள். சக்கரவர்த்தி வரும் போது ஒலிக்கும் பின்னணி இசையானது இன்றளவும் பலரது செல்போன் ரிங் டோன் களாக ஒலித்துக் கொண்டிருப்பது அதன் வெற்றி வீச்சுக்குச் சான்று. இன்றளவும் பேசப்படும் இசைஞானியின் தீம் இசை ராஜாவின் பின்னணி இசை குறித்துக் குறிப்பிட்டு சொல்லும் படியான இன்னொரு காட்சி, மனைவியிடம் மகன் திருமணம் பற்றி சக்கரவர்த்தி விசாரிக்கும் காட்சியை சொல்லலாம். கதவை தாளிட்டு விட்டு மிடுக்காய் ரஜினி உள்ளே வரும் போது சக்கரவர்த்திக்கான இசை ஒலிக்கும். விசாரணையின் முதல் கேள்வி ஆரம்பிக்கும் போது இசையற்ற நிலையில் பிரேம் நின்று விடும். மனைவியை சக்கரவர்த்தி ஓங்கி அறையும் போது வேறு ஒரு மெல்லிய இசையை ராஜா காட்சியில் பரவ விட்டிருப்பார். இசை அசுரன் நான் என ராஜா மார் தட்டும் தருணம் அது என்றால் மிகையாகாது. அதே கதவை மூடும் காட்சிக்கு நம்மை இன்னொரு முறை பார்க்க வருமாறு அழைப்பு விடுப்பது ரஜினிகாந்த் என்ற ஒப்பற்ற கலைஞனின் ராட்சச நடிப்பு. கேமராவை உள் வாங்கியபடி படு நளினமாக அந்தக் கதவை கை உயர்த்தி தாளிட்டு கொஞ்சல் குரலில் மனைவியிடம் பேசியவாறு வந்து எதையோ தேடும் சாக்கில் பேச்சின் குரல் தொனியை மாற்றி, அதில் அழுத்தம் கூட்டி, கொஞ்சலைக் குறைத்து, கோபத்தை மெல்ல மெல்ல ஏற்றி கேள்வி கேட்கும் அந்த காட்சி இருக்கிறதே… ரஜினி ரசிகன் மட்டுமல்ல நடிப்பு என்னும் கலை மீது மதிப்புக் கொண்ட யாராக இருந்தாலும் ரஜினியை ஒரு நடிகனாகக் கொண்டாடுவார்கள். தந்தைக்கும் மகனுக்கும் மோதல் துவங்கும் காட்சிகளில் அப்பாவாகக் காயும் அனலையும், மகனாக பாயும் புனலையும் ரஜினி காட்டியிருக்கும் நடிப்பு அம்சம்பின்னர் மோதல் வலுக்கும் கட்டங்களில் காட்டம் குறைத்து அனுபவக் கெத்து கூட்டி எள்ளல் நடிப்பை அள்ளி பொழியும் இடத்தில் ரஜினி ஒட்டு மொத்த பார்வையாளர்களைத் தன்னோடு சேர்த்து கொண்டு “ஆஹான்! ” சொல்ல வைக்கிறார். இன்றைய மீம்ஸ்களின் பிரபலச் சொல் ஆன “ஆஹான்” உருவான கருவறை நெற்றிக்கண் படம் என்பதும் அதன் பிதாமகன் ரஜினிகாந்த் என்பதும் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். “நான் சிங்கம் என் முன்னாலே நீ எல்லாம் ஒரு கொசு. சிங்கம் வந்தா அது தான் வலைக்குள் சிக்கும் ஆனா கொசு வந்தா நாமே வலைக்குள் போய் ஒளிஞ்சிக்க வேண்டி வரும் “ ‘கோயிலுக்கு நிதி கேட்டு வருவோரிடம் கடவுள் தான் நமக்கு கொடுக்கணும் நாம் கடவுளுக்குக் கொடுக்கக் கூடாது.” “யாரை வேணும்ன்னா பகைச்சுக்கலாம் ஆனா அரசியல்வாதியைப் பகைக்க கூடாது “ “நீ சொல்ற உபதேசத்த கேக்குறதுக்கு நான் ஒன்னும் அந்த ஈஸ்வரன் இல்ல டா, நான் கோடிஸ்வரன்” என்பது போன்று ரசிக்கும் படியான வசனங்களும் படத்தில் ஏராளம். ரஜினியின் வசனத்தை இங்கே கேளுங்கள் “பொடி பீடி குடி லேடி அதாண்டா உன் டாடி” என அகங்காரம் கொண்டு மகனிடம் கொதிக்கும் சக்கரவர்த்தி. “இளமை பொறுமை கடமை இது தான் என் வலிமை ” என இனிமை குறையாமல் புன்னகை பூக்கும் சந்தோஷ். இருவரும் இரு வேறு மனிதர்களாகத் தான் பார்வையாளர்களாகிய நமக்குத் தெரிகிறார்கள். அதுவே ரஜினியின் நடிப்புக்கு கிடைத்த மகத்தான வெற்றி. ஒரே படத்தில் நாயகனாவும் வில்லனாகவும் நடித்து வெற்றியை சுவைத்த முதல் தமிழ் நடிகர் ரஜினியாகத் தான் இருப்பார். நெற்றிக்கண் கதையின் பலத்தாலும், ரஜினியின் பன்முக நடிப்பாற்றலாலும், வெற்றிக்கண் திறந்தபடம். பெண்ணாசை பிடித்த பெரிய மனிதனாக கத்தி மேல் நடக்கும் பாத்திரம் சக்கரவர்த்தி, கொஞ்சம் சறுக்கினாலும் ஜனங்கள் முகம் சுழித்து விட வாய்ப்புகள் மிக அதிகம். அதுவும் மக்கள் விரும்பும் ஒரு மாஸ் ஹீரோவாக வளர்ந்து வரும் நேரத்தில் இப்படி ஒரு முயற்சி ஆபத்தில் முடிந்தால் நடிப்புத் தொழிலே பின்னடையலாம், ஆனாலும், அந்த வேடத்தைத் துணிச்சலோடு ஏற்று ஜனங்கள் கொண்டாடும் விதத்தில் நடித்து “நான் இனி தமிழ் நாட்டின் சூப்பர் ஸ்டார்” என ரஜினி அறிவித்துக் கொண்டார். பின்குறிப்பு: புராணத்தில் வந்த நக்கீரர் கதையில் வரும் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற கருத்தே படத்தின் தலைப்புக்கான பெயர்க்காரணம்.
மிகுந்த கௌரவம் பார்க்கும் ஒருவர், அதற்கு எந்தவிதமான பங்கமும் வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாய், அதே சமயம் தன் சபலத்தை விட முடியாதவராய், யாருக்கும் தெரிந்துவிடலாகாதே என்பதில் மிகுந்த ஜாக்கிரதை உணர்வு கொண்டவராய் நின்று அலைக்கழியும் ஒரு பெரிய மனிதனின் கதை இது. நூல் மேல் நடப்பது போலான எழுத்து. கொஞ்சம் அப்படி இப்படி நகர்ந்தால் கூட விரசம் தட்டிவிடும். …இவ்வளவு ஆபாசமா…? என்று எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொள்ளக் கூடும். அதற்கெல்லாம் இடம் கொடுக்காது, தன் ஆழ்ந்த ரசனையின்பாற்பட்டு, பல்லாண்டு கால வாசிப்பு அனுபவத்தின்பாற்பட்டு, ரொம்பவும் அநாயாசமாய் இக்கதையின் கருவைக் கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார் வண்ணநிலவன். வாசிக்க வேண்டும் என்ற மாளாத ஆசை என்னை சதா இயக்கியது, கதைகளின் மீது இருந்த தீராத கவர்ச்சி என்னை இழுத்துச் சென்றது என்கிறார். எழுதிப் பார்த்தால் என்ன என்று ஆரம்பித்து அவரது எழுத்து பல படைப்புகளில் நம்மை பிரமிக்க வைப்பதாக அமைந்து விடுகிறது என்பதுதான் சத்தியமான உண்மை. “சிகரங்களைத் தொட்ட சிறுகதைகள்” என்ற தலைப்பில் அந்நாளைய தாய் வார இதழில் கவிஞர் பழனிபாரதி அவர்கள் தொகுத்தளித்த பல அற்புதமான சிறுகதைகளில் வண்ணநிலவனின் இந்த “மனைவியின் நண்பர்“ என்ற சிறுகதை முக்கிய இடம் பெறுகிறது. வரிக்கு வரி தன் எழுத்துத் திறமையால் விளையாடியிருக்கிறார் ஆசிரியர்.. கதையின் ஆரம்பம் முதல் கடைசி வரி வரை அந்த ரங்கராஜூவின் நடவடிக்கைகளில் ஒளிந்திருக்கும் சபலம், திருட்டுத்தனம், போலித்தனம், அதை மறைக்க முயலும் பெரியமனிதத் தனம், அதைப் பறைசாற்றிக் கொண்டேயிருக்கும். அவர்தான் அந்தக் கடைக்காரனின் மனையாள் மேல் தவிர்க்க முடியாத மோகம் கொண்டு தனக்குள் தவியாய்த் தவித்துக் கொண்டிருக்கிறாரே…! அவளைப் பார்ப்பதற்காகத் தினமும் வந்து வந்து அவர் தனக்குள் அவமானப்படும் அந்தச் சுய பச்சாதாபம் நம்மையே சங்கடப் படுத்த வைக்கும். எதுக்கு இந்த மனுஷன் இப்டி அலையறாரு? என்று தோன்றும். ஆனாலும் என்னதான் செய்றார் பார்ப்போம் … என்று நகர வைக்கும். ஒரு பெண்ணை ரசிப்பதிலும், அவளுக்காக ஏங்குவதிலும்தான் வரிக்கு வரி எத்தனை விதமான நுட்பங்களை நுழைத்திருக்கிறார் ஆசிரியர். முறையற்ற செயலில் என்னதான் ஒரு ஒழுங்கைக் கடைப்பிடித்தாலும் அது தன்னை மீறி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தும் என்பதை எத்தனை சூட்சுமமாக வெளிப்படுத்துகிறார். அவரின் தேவை அவர்களுக்கு இருந்தது. பொருளாதாரத் தேவை. கொடுக்கல் வாங்கல். குறிப்பாக அவளின் கணவனுக்கு. ஈடு செய்து வியாபாரத்தை மேலெடுத்துச் செல்ல. தேவைப்படும் நிலையில், மனைவியின் அவர்பாலான நெருக்கத்தையும், அது வரம்பு மீறிப் போகாமல் கழிகிறதா என்கிற கவனத்தையும் கொள்கிறது. குறிப்பிட்ட அளவிலான பழக்கமானால் இருந்து தொலைத்துவிட்டுப் போகட்டும் என்கிற தவிர்க்க முடியா நிலையில் அவரின் சுதந்திரமான வரவு அவர்கள் இருவரையுமே தடுக்க விடாமல் செய்து விடுகிறது. அது அவருக்குப் பயனளிக்கும் விதமாய், லாபகரமானதாய், அதிக சுதந்திரம் எடுத்துக் கொள்ளும் அதிகாரமாய் நாளுக்கு நாள் மாறி விடுகிறது. சிவகாமி, சிவகாமி என்று மனதுக்குள் ஏற்படுத்திக் கொண்ட நெருக்கத்தை நேரில் சென்று அனுதினமும் கண்டு, களித்து, அடைய தவியாய்த் தவிக்கும் அந்தப் பொழுதுகள் வயதுக்கு மீறிய வெட்கங்கெட்ட செயலாயினும், விட முடியாமல் மையலில் கொள்ளும் தவிப்பு, விடாத பதற்றத்தை அவருக்குள் ஏற்படுத்தும் தருணங்கள் நம்மையே அவருக்கு நிழலாய் மாற்றிக் கொண்டு உருமாறி நின்று கதை முழுக்க அவரோடு வலம் வரச்செய்கிறது. அவளைப் பார்ப்பதும், கிளம்பி வருவதும்தான் கதை என்று கொண்டாலும், அந்த அரிய சந்திப்பிற்காக ஒருவன் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு எச்சில் வழிய வழிய அலைந்து எடுத்துக் கொள்ளும் எத்தனங்கள் இந்தப் பித்துப் பிடித்தவனுக்கு எதுவுமே வெட்கமாய்த் தோன்றாது என்கின்ற முனை மழுங்கிய உண்மையை நம் முன்னே உரித்துப் போட்டு விடுகிறது. அடப் பாவமே என்று பரிதாபம் கொள்ளும் நிலைக்குக் கூட வாசகனைத் தள்ளும் இரக்கச் சிந்தையை மனதில் ஊட்டி விடுகிறது. ஆழ்ந்த ரசனையோடு படிப்பது என்பது வேறு. படிப்பவர்களின் ரசனையைத் தன் எழுத்துத் திறத்தின் மூலம் வளர்ப்பது என்பது வேறு. வண்ணநிலவனின் எழுத்து இரண்டாம் வகையினைச் சேர்ந்ததாக இருக்கிறது. .பச்சை வண்ண ராலே வண்டியில் வந்து இறங்குகிறார் ரங்கராஜூ. புத்தம் புதியதாய்த் துடைத்துப் பராமரிக்கும் அதை அவரின் கௌரவத்தின் அடையாளமாய்க் கொண்டு கடைக்கு முன்னே நிறுத்துகிறார். அந்தக் காலத்தில் சைக்கிள் வைத்திருப்பவர்கள் அதிலும் அதிக விலையுள்ள ராலே வண்டி வைத்திருப்பவர்கள் பெருமைக்குரியவர்கள்…வசதியானவர்கள்….அது அவரின் அடையாளமாய்க் காட்டப்படுகிறது.. அவர் அவனைக் (அந்தக் கடைக்காரனை…அதாவது சிவகாமியின் கணவனை) கண்டுகொண்ட மாதிரியே தெரியவில்லை. அதுதானே எடுத்துக் கொண்ட உரிமை. அவசரத்துக்கு செய்யும் பண உதவி, இந்த உரிமையைத் தந்து விடுகிறது.அவனை மீறி அவன் மனைவியோடு பழகும் உரிமையையும் தருகிறது. அடிக்கடி வந்தாலும், தற்செயலாய் வந்ததுபோல் வருவதும், நிதானமாய் வண்டியை நிறுத்துவதும், தெருக்கோடி வரை பார்வையை ஓட விடுவதும், அவசரமோ, பதட்டமோ இல்லாதது போலத் தன்னைக் காட்டிக் கொள்வதும், அவரின் கௌரவத்தின் அடையாளமாய் நாடகமாடினாலும், விசேஷ அர்த்தம் என்று அவனுக்கும், ஏன் அவருக்குமே ஏதுமில்லாவிடினும், கடையில் உட்கார்ந்திருக்கும் அந்த அவனுக்கு அவரது செய்கைகள் அருவருப்பூட்டுவதாகவே அமைகிறது.. எதிர்க்க முடியாத நிலையில், வாய் விட்டுச் சொல்ல முடியாத இயலாமையில், மனதுக்குள் நினைத்துக் கொள்ளத் தடையில்லையே…! இவனெல்லாம் ஒரு பெரிய மனுஷன்….! வெட்கங்கெட்ட ஆளு…. கடைக்கு வெளியே கிடக்கும் ஸ்டூலில், கழுத்திலிருந்து கைக்குட்டையை உருவி அலட்சியமாய்த் தூசி தட்டிவிட்டு உட்கார்ந்த பிறகும் அவனைப் பார்த்ததாகக் காட்டிக் கொள்ளாதது….தவறேயாயினும் அதையும் கௌரவமுள்ளவனாய் நின்றுதான் செய்ய முடியும் என்கிற அவரது மிதப்பான போக்கு….இத்தனையும் சேர்ந்து அந்த இடத்திலான சகஜத் தன்மையைப் போக்கி விடுவதானது….அவர்களுக்குள்ளே நிகழும் உள்ளார்ந்த நாடகமாகப் பரிணமிக்கிறது. அங்கு வருவதும், அப்படி சுதந்திரமாய்த் தன் இடத்தைப் பிடித்துக் கொண்டு இருப்பதுவும் தன் உரிமை என்று சொல்லாமல் சொல்லப்படுகிறது. தடுக்க முடியாத நிலையில் அவரின் அவ்வப்போதைய உதவியை வேண்டி நிற்கும் அவன், அதற்காக இந்த அளவிலான உரிமையை ஒருவர் தானே எடுத்துக் கொள்வது எப்படிச் சரி என்று தட்டிக் கேட்க முடியாதவனாய் மனதுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கும் அவன், அவரின் ஒவ்வொரு செய்கைகளையும் கண்டு கண்டு வெறுக்கிறான். விட்டு உதற முடியாமல் தவிக்கிறான். உதவி என்ற ஒன்று தேவைப்படுகிறதே…! எட்டு முழு வேட்டியின் ஒரு தட்டை மட்டும் மடித்துக் கட்டிக் கொண்டிருப்போரைப் பார்த்தால் முன்பெல்லாம் பிடிக்கும்தான் அவனுக்கு, ஆனால் அவர் அவ்வாறு கட்டிக் கொண்டு அநாயாசமய் நிற்பது பார்க்கப் பிடிக்காமல் போகிறது. அது போக்கிரிப் பயல்களின் செயலாய்த் தோன்றுகிறது. மனதுக்குள் வெறுப்பை ஏற்படுத்த, அதை உணர்ந்து தன்னை மீறிய சிந்தனையில் “போக்கிரி” என்று சொல்லி விடுகிறான். காதில் விழுந்து விடுகிறது அவருக்கு. இரண்டு குழந்தைகளோடு ஒரு குடும்பம் என்று உள்ள அவர், கொடுக்கல் வாங்கல் வசதி படைத்த அவர், ஒரு நாணயச் சங்கத்தின் தலைவராக இருந்து அதன் மூலம் தன் கௌரவத்தை உலகுக்குக் காட்டிக் கொண்டிருக்கும் அவர், கழுத்தில் சட்டைக் காலர் அழுக்காகி விடக் கூடாது என்று மட்டுமே கைக்குட்டை செருகி வைத்திருப்பது என்பதான அடையாளங்களை வைத்து அவரை அப்படி அழைத்து விட முடியுமாயின் அவர் அப்படித்தான் என்று ஒரு நீண்ட சிந்தனைச் சரத்தில் அவன் மூழ்கியிருக்கும்போது “போக்கிரிதான்” என்று தன்னை மீறி உளறிவிடுகிறான். தீர்மானமாய் விழுகிறது அந்த வார்த்தை. சந்தேகத்தோடும் புதிரோடும் அவர் அவனையே உற்றுப் பார்ப்பதும்….அவரை சற்றே அதிர வைக்கும் அற்புதமான இடங்கள். கௌரவத்தைப் பாதுகாக்கும் இவர், அந்த வார்த்தையை அவன் வாயால் கேட்டால், கேட்க நேர்ந்தால் என்னாவது? என்னது… என்று கேட்பதோடு நிறுத்திக் கொள்கிறார். அதற்குமேல் போனால் அவருக்குத்தானே அசிங்கம்…என்பதை நாம் உணர்ந்து கொள்கிறோம். இது வெளி நடவடிக்கைகள். ஆனால் வந்த காரியம் அதுவல்லவே. அவளையல்லவா பார்க்க வேண்டி அப்படி வந்து காத்திருக்கிறார்! இந்தச் சத்தத்திற்கு அவள் இந்நேரம் வெளிப்பட்டிருக்க வேண்டும்….அப்படி அவள் வந்து நிற்பதுதானே அவருக்குக் கௌரவம். வந்து அவரை வரவேற்றால்தானே கௌரவமாய் உள்ளே நுழைய முடியும்? தடம் மாறாமல் நிலைத்து நிற்கும் கௌரவ நிலை அதுதானே….! ஆட்டுவிக்கும் சபலம்…தன் தடத்தை உணர்ந்து தடுமாறுகிறதுதான்…நேரம் வீணாகிறதே…! தன்னியல்பாக வந்ததுபோல் “இப்பத்தான் வந்தீகளா…” என்றவள்…தான் ரொம்பவும் இயல்பாக இருப்பதுபோல் காண்பித்துக் கொள்ள கடையிலிருந்த ஒன்றிரண்டு பொருட்களைச் சரி செய்து வைப்பதுபோல் இடம் மாற்றி வைத்து பாவனை செய்கிறாள். அவளால் அவரை அழைக்காமல் இருக்க முடியாது. அவனும் அதற்கு மறுப்பு சொல்ல ஏலாது. ஏதோவொரு வகையிலான தேவையும் இருக்கிறது…தவிர்க்க முடியாமலும் நிற்கிறது. இது அவளின் வழக்கமான வெளிப்பாடு. அன்று ரங்கராஜூ வந்து காத்திருப்பதில் குட்டிகூரா பவுடர் மணம் அவரை வரவேற்று அவளின் வெளி வரவை அறிவிக்கிறது. தொடர்ந்து கொலுசுச் சத்தமும் கேட்கிறது. காதில் விழுகிறதுதான். ஆனால் அவரால் அந்த மகிழ்ச்சியைப் பட்டவர்த்தனமாய் வெளிப்படுத்திவிட முடியாது. அந்த நாசிச் சுகத்தைக் கண்மூடி வெளிப்படையாய் அனுபவித்து விட முடியாது, உடையவன் ஒருவன் முன்னே அத்தனை சாத்தியமல்ல. அது அத்தனை கௌரவமாயும் அமையாது. காட்டிக் கொள்ளாமல் யதார்த்தமாய் இருப்பதுதான், இருந்து தொலைப்பதுதான் ரங்கராஜூவின் அவஸ்தை. இத்தனை உதவிகள் செய்தும் வர போக என்று ஒரு சுதந்திரமில்லையே…! அவளின் அந்த வருகை மனதுக்குள் குதூகலம் என்றாலும் வெளியில் காட்டிக் கொள்ள முடியாத தர்ம சங்கடம். அது வேறு இடம் என்பதில் அவருக்கிருக்கும் லஜ்ஜை, அதை மறைக்க அவரின் தவிர்க்க முடியாத கள்ளத்தனத்தை மீறிய கௌரவத்தின் திரை..அநியாயம்…இவனுக்கெல்லாம் இப்டி ஒரு அழகியா? கடவுள் ரொம்பவும் இரக்கமற்றவன். எங்கு கொண்டு எதை வைத்திருக்கிறான்? அவள் கண்ணெதிரே வந்துவிட்ட பிறகு அவனோடு பேசுவது என்பது சாத்தியமில்லாமலும், ,அத்தனை அவசியமில்லாததும்தான் எனினும் அவனை வைத்துதான் அவள் என்கிற தவிர்க்க முடியாத உண்மையின் வெளிப்பாடாய், அவனையும் மதித்தது போலாகட்டும் என்று “மணி நாலு ஆவப் போவுது…இன்னும் வெயில் இறங்கலியே…” என்று அவர் கேட்க…“வந்து ரொம்ப நேரமாச்சுதா…?” என்று அவளும் அதே சமயம் வினவ….அவர் அவனிடம் கேட்ட கேள்விக்கு அங்கே பதில் இனித் தேவையில்லை என்று ஆகிப் போகிறது., …இப்பத்தான் வந்தேன்…என்று சிரிப்புடன் அவர் சொல்வதும்…அவள் பளிச்சென்று வந்து நிற்பதைப் பார்த்து…இப்பத்தான் குளிச்சீங்களா? என்று கேட்டுவிட்டு பவுடர் எல்லாம் ரொம்பப் பெலமா இருக்கே….? என்று அவர் வழிவதை எழுதுகிறார் வண்ணநிலவன். பலமா இருக்கே…இல்லை “பெலமா“….அந்த வார்த்தையைப் போடும் அழகைப் பாருங்கள்…. அதுவே நாக்கு வெளித் தெரியும் ஆசையின் அடையாளம். ஒரு அழகியிடம் தன் கௌரவத்தைப் பொருட்படுத்தாது வலியச் சென்று இளித்து நிற்பதான துர்லபம். சபலம் படுத்தும்பாடு நீ என்று ஒருமையில்தான் அழைக்க அவருக்கு ஆசை என்றாலும் என்னவோ ஒரு கௌரவம் தடுக்கிறது. ஒரு சகஜ பாவத்தை, அந்நியோன்யத்தை, நெருக்கத்தை பின் எப்படித்தான் ஏற்படுத்திக் கொள்வது? இவ்வளவு தூரம் ஒருத்தன் வந்து உட்கார்ந்திருக்கானே…ஒரு வாய் காப்பித் தண்ணி கொடுப்போம்னு தோணுதா உங்களுக்கு? என்று கேட்கிறார். அப்படிக் கேட்பதன் மூலம் தன் சகஜபாவத்தையும், நெருக்கத்தையும் உணர்த்தும் கட்டம் அது. தன்னை அந்த வீட்டுக்கு ரொம்பவும் பழகியவனாய்க் காட்டிக் கொள்வதன் மூலம் மறை முகமாய் அந்த ஆசையை வெளிப்படுத்திக் கொள்வது. அவரின் செல்லப் பேச்சுக்கள் அவளுக்கு அலுத்துவிட்டனதான். என்றாலும் என்ன அப்படி யாரோ எவரோ மாதிரிப் பேசுறீங்க…உள்ளே வாங்களேன்…” என்று கண்களை ஒரு வெட்டு வெட்டி அழைக்கிறாள். அதுவே போதும் அவர் கிறங்கிப் போயிருப்பார் என்று தோன்றுகிறது அவளுக்கு. மையல் கொண்ட ஒருவன் எதில் விழுவான் என்று யார் கண்டது? அது அவருக்கே தெரியாதே. அவர் வயதுக்கு சொல்லவும் வேண்டுமா? ரங்கராஜூவை வீட்டுக்குள் வரச்சொல்லிவிட்டு உள்ளே போகும் அவள் கடையிலிருக்கும் அவன் மூக்கைச் செல்லமாக நிமிண்டிவிட்டுப் போகிறாள். வலிய அவன்பால் ஒரு நெருக்கத்தை அப்படி ஏன் அவள் காட்டிக் கொள்ள வேண்டும்? அவளின் அந்தச் செயலுக்கு, அவன் கொடுத்த சுதந்திரத்தின் அடையாளமா அது? அந்தச் செயல் அவனுக்கு சற்று சந்தோஷத்தைக் கொடுத்தாலும், அவர் முன்னால் தனக்கும், தன் மனைவிக்கும் இருக்கும் நெருக்கத்தை வெளிப்படையாய் எப்படிச் சுட்டி விட்டாள் என்று அவன் உணர்ந்து மகிழ்ந்தாலும், வீட்டிற்குள் அவரிடமும் அவள் இப்படித்தான் நடந்து கொள்வாளோ என்று அவனுக்குத் தோன்றுகிறது. பாவம் அவன் நிலை அப்படி.நோய் நாடி…நோய் முதல் நாடி…என்பது போல்…பணம் நாடி…பணத்தால் உந்திய மனம் நாடி….. ஆனால் அவர் ஒருபோதும் சிவகாமியிடம் ரசாபாசமாக நடந்து கொள்பவரல்ல என்று நம்புகிறான் அவன். அது அவருக்கு அவள் கொடுத்த சமிக்ஞை. நிமிண்டும்போதான பார்வை இவர் மீது இருந்திருக்கிறதே…! பெண்கள் வசீகரம் பண்ண என்னவெல்லாம் முறையைக் கையாள்வார்கள் என்பதற்கு ஒரு பொருத்தமான இடமாக இது அமைவதும், ரங்கராஜூ அவளின் அந்தச் செய்கையில் தன்னை மறந்து ஏக்கப் பெருமூச்சு விடுவதும்….நம்மைத் தவிக்க வைக்கிறது. போயேன்யா உள்ளே…அதான் கூப்பிட்டாச்சுல்ல….! சிவகாமி அத்தனை அழகாய் இல்லாவிட்டால் ரங்கராஜூ அவளைப் பார்க்க இப்படி அடிக்கடி வரமாட்டார்தான். அவரை மீறிய ஒரு சபலம் அப்படி ஆட்டிப் படைக்கிறது. அவர் லேவாதேவி செய்யும் பிற இடங்களில் இம்மாதிரி அவர் நடந்து கொள்வதில்லை. சிரித்துச் சிரித்துப் பேசும் சிவகாமியை அவரால் தவிர்க்க முடியவில்லை. நாலு முறை முகத்தை முறித்துக் கொண்டால் இப்படி அவர் நாய்போல் வருவாரா? வாலை ஆட்டிக் கொண்டு அலைவாரா? நாற்பது வயதிலும் அவளின் அழகும், வனப்பும் அவரைக் கிறங்கடிக்கிறது. கடையைச் சுற்றிக் கொண்டு வீட்டுக்குள் செல்கிறார். உள்ளே போய் காபியை ஒரு கை பார்த்திட்டு வாரேன் என்று சிரிக்கிறார். உள்ளே போவதற்கு ஏதாவது காரணம் வேண்டுமே? வெறுமே எழுந்து திறந்த வீட்டுக்குள் ஏதோ போல் நுழைந்து விட முடியாதே? அவனுக்கு அவர் இளித்தது போலிருக்கிறது. இப்டியே போக வேண்டிதானே என்று கடைவழியாக உள்ளே நுழையச் சொல்லியிருக்கிறான் அவன். அது அவரது வருகை எரிச்சல் தராத காலம். அவரால் கிடைத்த ஆரம்ப கால உதவிகள் மகிழ்ச்சி தந்த காலம். சீதேவியை, கல்லாப் பெட்டியைத் தாண்டக் கூடாது….என்று சொல்லி விடுகிறார். தனது செய்கைகளில் அவ்வப்போது ஒரு ஒழுங்கைக் கடைப்பிடித்துக் கொண்டேயிருப்பது, அதை மற்றவர்களுக்கு, குறிப்பாக அவர்களுக்குப் பரைசாற்றிக் கொண்டேயிருப்பது அவசியமாகிறது அவருக்கு. அவரின் தவிர்க்க முடியாத அடையாளமாய், அந்த சபலப் புத்திக்குப் போடும் பலமான திரையாக அமைந்து விடுகிறது. ஒன்றைப் பலமாக ஸ்தாபித்துக் கொண்டால்தான் இன்னொன்றை அறியாமல் செய்ய முடியும்…என்பது அவரின் கணிப்பாக இருக்கிறது. எனக்கான கௌரவத்தை அத்தனை எளிதில் யாரும் நெருங்கி விட முடியாது, கூடாது என்பதற்கு அவரின் எச்சரிக்கைகளே பொருத்தமான சமிக்ஞைகளாக நிற்கிறது. உள்ளே இடப் பக்க அறையில் ஃபேன் ஓடும் சத்தம். சரோஜா…படிக்கிறியாம்மா….என்று கேட்கிறார். யார் உள்ளே என்று அதன் மூலம் உறுதிப் படுத்திக் கொள்கிறார். ஒருவரா, பலரா என்ற கேள்வியும் அங்கே மறைந்து நிற்கிறது. சற்றுப் பொறுத்து பதில் வருகிறது. யாரு மாமாவா…? நான் ஜாக்கெட்டுக்கு துணி வெட்டிக்கிட்டிருக்கேன்..என்று. அப்படியாம்மா…நடக்கட்டும்…நடக்கட்டும் என்ற அவரது கண்கள் சிவகாமியைத் தேடுகிறது. பதில் சொல்வதில் இருக்கும் பெரிய மனுஷத் தன்மை செய்யும் செயலில் ஒளிந்து கொள்கிறது. ஒப்புக்குக் கேட்ட கேள்விதான் அது. அவரின் தேவை சிவகாமி மட்டும்தான். நடு வீட்டுக்குள் வந்து அமர்ந்து விட்டதனால் ஏற்பட்ட பாதுகாப்பில், சிவகாமி என்று ஆசையாய் அழைக்க மனம் விழைகிறது. அடுப்படியில் இருக்கும் சிவகாமிக்கு அவர் உள்ளே வந்திருப்பது தெரிகிறதாயினும் சற்றுத் தாமதித்தே வெளிப்படுகிறாள். மகள் பக்கத்து அறையில் இருப்பதிலே, அவளின் அந்தத் தாமதம் அர்த்தபூர்வமாகிறது. அதே சமயம் அவளுக்கும் ஒரு கௌரவம் இருக்கிறதுதானே? அத்தனை சுலபமாய் விலையில்லாமல் போய் விட முடியுமா? அங்கே சற்று நேரம் அமைதி உலாவுகிறது. என்ன பேசாம இருக்கீங்க? என்று முகத்துக்கு நெருக்கமாக வந்து கேட்கிறாள் அவள். அந்த அந்நியோன்யம் தந்த மதுரம் அவரைக் கிறங்கடிக்கிறது. குனிந்தவாறே இருக்கும் அவரின் பார்வை அவளின் அர்த்த சந்திர வடிவில் சதைக்குள் பொருந்தி இருக்கும் அவள் பாத விரல் நகங்களையே நோக்குகிறது. வேற ஒண்ணுமில்லே…உங்க வீட்லயும் சமைஞ்ச பொண்ணு இருக்குது…என் வீட்லயும் கல்யாணத்துக்கு ஒண்ணு நிக்குது…நான் அடிக்கடி இங்க வந்து போறதுனால ரெண்டு வீடுகளுக்கும் அகௌரவம் வந்திருமோன்னு…..என்று இழுக்கிறார். பதிலுக்கு அவள் தன் சதைப்பற்றான கைகளால் முடிகள் நிறைந்த அவர் கைகளைப் பற்றிக் கொள்கிறாள். அந்த நெருக்கம் தந்த மதுரத்தில் தன்னை இழக்கிறார் அவர். ஆனாலும், தன்னைப் புனிதனாய்க் காட்டிக் கொள்வதிலும், கௌரவத்தை நாட்டிக் கொள்வதிலும், அப்போதும் அவரது கவனம்….சரியான கள்ளன்யா….என்றுதான் நினைக்க வைக்கிறது. ஏது சாமியாராப் போறாப்பலே இருக்கு..? என்று அவள் கேட்க…ஏதோ தோணிச்சு…அதே நேரம் உங்களைப் பார்க்காமலும் இருக்க முடில…என்று பரிதாபமாய் ஏக்கத்துடன் கூறுகிறார்….உங்களுக்கே உங்க மேலே நம்பிக்கை இல்ல போலிருக்கு…என்று ஒரு போடு போடுகிறாள் அவள். நா ஏதாச்சும் தப்பா சொல்லிட்டனா? என்க…இதிலே தப்பு எங்கிருந்து வந்தது…என்னானாலும் நாம அன்னிய ஆட்கள்தானே…என்று சொல்லிவிடுகிறாள். இருவருமே பயந்ததுபோல் பேசிக் கொள்ளும் இக்கணமே இக்கதைக்கான முடிவான தருணமாக அமைகிறது. சற்று நேரத்தில்…. பூனை போல் கிளம்பி வெளியே வந்து விடுகிறார் ரங்கராஜூ. வெறுமே பார்த்துப் பேசுறதே தப்பாயிடுமோன்னு…என்று நினைக்க…அதுவும் தங்கள் செயலுக்குப் போட்டுக் கொள்ளும் திரையாக நிற்க…ஏதாச்சும் தப்பு நடந்திடுச்சின்னா….? என்று தொடர்ந்து நினைக்க வைக்க…. என்ன எந்திரிச்சு வந்திட்டீங்க…? என்று அவள் கேட்கிறாள். உள்ளே ஒரே புழுக்கமா இருந்திச்சு…அதான் என்று சொல்லிவிட்டு சைக்கிளை எடுக்கிறார் அவர். அவன் ஒன்றும் புரியாமல் அவள் முகத்தைப் பார்க்க, கண்கள் கலங்கியிருக்கிறது அவளுக்கு. ஏதோ கோபமாப் போறார் போல்ருக்கே? என்ற அவன் கேட்க…அதுக்கு நா என்ன பண்ண முடியும்? இனி வரமாட்டார்…என்றுவிட்டு விருட்டென்று உள்ளே போய் விடுகிறாள். இனியும் அங்கிருந்தால் அழுதுவிடுவோமோ என்று தோன்றிவிடுகிறது அவளுக்கு. தான் காணாத ஒரு உலகத்தைக் கண்டடைந்ததை வாசகனுக்கு படைப்பாளி சொல்லும்போது, தனது தேர்ந்த வாசிப்பு அனுபவத்தினால், தீவிர ஆழமான மெனக்கெடலினால், வாசிப்பை ஒரு உழைப்பாய்க் கருதி தன்னை மேம்படுத்திக் கொண்ட வாசகனால் படைப்பாளி தனக்குத் தெரிவிக்க முனைந்த சொல்லப்படாத புதிய உலகத்தைப் உய்த்துணர முடியுமாயின் அது அந்தப் படைப்பிற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்று கொள்ளலாம். வாசிப்பிற்கான கௌரவம் என்று அடையாளப்படுத்தலாம். அந்தப் புதிய உலகத்தை சிருஷ்டித்திருக்கிறார் வண்ணநிலவன். கதாபாத்திரங்களின் விவரணைகள், எழுத்தாளன் சுவைபடக் கோர்த்துக் கோர்த்துச் சொல்லும் சம்பவங்கள், அவற்றின் நுட்பங்கள் அதன் மூலமாக வாசகன் படைப்பினை உணர்ந்து உள்வாங்கும் பயிற்சி….சொல்லப்பட்டிருப்பவைகளை வைத்து சொல்லப்படாதவைகளை ஆய்ந்து உணரும் தன்மை….இவையெல்லாம் ஒரு நவீனத் தமிழ் இலக்கிய வாசகனின் தீவிர லட்சணமாக அமைகிறது. கலை கலைக்காகவே என்கிற கோட்பாட்டின் கீழ் அடங்குகிறது. படைப்பினைப் பொறுத்து அந்த இலக்கணம் பூரணத்துவம் பெறுகிறது. அப்படியான பல கதைகள் வண்ணநிலவனின் இந்த முழுத் தொகுப்பில் விரவிக் கிடக்கின்றன. ஒரு சோறு பதம் போதும் என்று மிகச் சிறப்பான சிகரங்களைத் தொட்ட சிறுகதை ஒன்றினைத் தேர்வு செய்து இங்கே விவரித்திருப்பதே இத்தொகுதிக்கு நாம் அளிக்கும் கௌரவம் மிகுந்த மதிப்பீடாக அமையும் என்பது திண்ணம். ------------------------------------------------- இடுகையிட்டது ushadeepan நேரம் பிற்பகல் 6:50 கருத்துகள் இல்லை: கருத்துரையிடுக புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom) என்னைப் பற்றி ushadeepan எனது முழு சுயவிவரத்தைக் காண்க my books வலைப்பதிவு காப்பகம் ► 2021 (75) ► நவம்பர் (8) ► அக்டோபர் (13) ► செப்டம்பர் (6) ► ஆகஸ்ட் (3) ► ஜூலை (4) ► ஜூன் (6) ► மே (1) ► ஏப்ரல் (5) ► மார்ச் (10) ► பிப்ரவரி (4) ► ஜனவரி (15) ► 2020 (117) ► டிசம்பர் (7) ► நவம்பர் (18) ► அக்டோபர் (18) ► செப்டம்பர் (3) ► ஆகஸ்ட் (13) ► ஜூலை (15) ► ஜூன் (10) ► மே (21) ► ஏப்ரல் (4) ► மார்ச் (5) ► பிப்ரவரி (1) ► ஜனவரி (2) ► 2019 (128) ► டிசம்பர் (7) ► நவம்பர் (3) ► அக்டோபர் (18) ► செப்டம்பர் (15) ► ஆகஸ்ட் (9) ► ஜூலை (30) ► ஜூன் (15) ► மே (13) ► ஏப்ரல் (2) ► மார்ச் (5) ► பிப்ரவரி (4) ► ஜனவரி (7) ▼ 2018 (132) ► டிசம்பர் (22) ► நவம்பர் (8) ▼ அக்டோபர் (67) தினமணி கதிர் (21.10.2018) ல் என் சிறுகதை "என்ன பயன்?" வண்ணநிலவனின் ”எம்.எல்.“ நாவல் வாசிப்பனுபவம் வண்ணநிலவன் சிறுகதைகள் ... வண்ணநிலவன் சிறுகதைகள்-வாசிப்பு அனுபவம்-இலக்கியவேல்... “எதிர்பாராதது“ நாவல் - “இப்படியும் நடக்கும்” - சிறுகதை - இளந்தமிழன் மாத ... “பவுனு பவுனுதான்“ - சிறுகதை - தினமணி கதிர் 2017 தில்லையாடி ராஜா-சிறுகதை திறனாய்வுகள் “ஆளும் வளரணும்-பொது அறிவும் வளரணும்”-அரங்கம்-நாடகம... “அமுதம் விரித்த வலை - குறுந்தொடர் - பிரம்(ம)பு நாயகம் - சிறுகதை - கணையாழி - 2018 “வாழ்க்கை வாழ்வதற்கே”-சிறுகதை - தினமணி கதிர் “வெள்ளைத்தாளில் ஒரு கரும்புள்ளி” - சிறுகதை - இளந்த... “மழித்தலும் நீட்டலும்” - சிறுகதை சிறுகதை - பின் புத்தி - இலக்கியவேல் - மாத இதழ் “பிஞ்சு மனசு” - சிறுகதை - தினமணி - சிறுவர் மணி “நாய் புத்தி“ - உயிர் எழுத்து - ஆகஸ்ட் 2018 தண்ணீர் - கண்ணீர் - கட்டுரை - கைத்தடி மாத இதழ் சிறுகதை ... “கட்டறுத்த சுதந்திரம்” - கட்டுரை - தினமணி நாளிதழ் “நிலா டீம்” - அரங்கம் - நாடகம் - தினமணி சிறுவர் மணி வாழ்க்கைக் கல்வி - அரங்கம் - நாடகம் - தினமணி சிறுவ... "”வீட்டு டீச்சர்” - அரங்கம் - நாடகம் - தினமணி சிறு... கல்விக் கண்-அரங்கம்-நாடகம் - தினமணி சிறுவர் மணி வெ... திருவாசகம் - மாறாடுதி பிண நெஞ்சே...! - பத்தி எழுத்து அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே.....!! யோகப் பயிற்சியில் சூரிய நமஸ்காரம் ... ”துணையிிலி பிணநெஞ்சே…..” ... “கறை“ - கட்டுரை - கைத்தடி இதழில் வந்தது “ஏனிந்த அவலம்“ நமதுநாட்டின் முக்கிய உ... வாசிப்பனுபவம் ... “விடுதலை” - சிறுகதை - தினமணி கதிர் 2015 “வாழ்க்கை வாழ்வதற்கே - சிறுகதை - தினமணிகதிர் 2015 “மனசு” - செம்மலர் - 2016 “மகா நடிகன்“ சிறுகதை - தேவியின் கண்மணி மாத இதழ் “பிசிறு” - சிறுகதை - தினமணிகதிர் - 2016 “பாலு சாரும் சைக்கிளும்” - சிறுகதை - கணையாழி 2017 “நாய்புத்தி” சிறுகதை - ஆகஸ்ட் 2018 - உயிர் எழுத்து “நாக்கு” சிறுகதை - தினமணிகதிர் - 2017 “தீர்வு “ - சிறுகதை - தினமணி கதிர் - 2016 “தருணம்” - காக்கைச் சிறகினிலே - மாத இதழ் -இருவாட்ச... “டென்ட் கொட்டாய்” கட்டுரை - படச்சுருள் - மாத இதழில... “சூழல்” சிறுகதை - தினமணிகதிர் -2017 “சந்தோஷம்“ - கணையாழி - மாத இதழ் - 2017 “சத்யாவைத் தேடி” சிறுகதை - தினமணிகதிர் - 2017 “எளைச்சவன்“ - சிறுகதை - உயிர் எழுத்து மாத இதழ் “அவர் அப்படித்தான்“-சிறுகதை - காவ்யா வெளியீடு - வை... “ஆற்றாமை ” சிறுகதை - நவீன விருட்சம் - அக்டோபர் 2018 “நெஞ்சம் மறப்பதில்லை” - சிறுகதை - தினமணிகதிர் - 24... 13-ம் நம்பர் பார்சல் - - நெடுங்கதை “இது பயணிகள் பாடு” - தினமணி நாளிதழ் துணைக் கட்டுரை “முழு மனிதன்” - சிறுகதை - “காணிநிலம்” காலாண்டு இதழ... “புகைச்சல்” - அந்தி மழை - மே 2018 ல் வெளி வந்த சிற... “இதுதான் உலகமடா” சிறுகதை- தினமணிகதிர்-12.11.2017 20.5.2018 கல்கி இதழில் வெளி வந்த சிறுகதை ”ஆதங்கம்” அம்மாவின் அப்பா - செம்மலர் ஜூன் 2018 ல் வெளியான சி... அப்பாவின் சுதந்திரம் - தினமணி கதிரில் (27.5.2018) ... உஷாதீபன் - தன் குறிப்பு இ.பா. சிறுகதைகள் கட்டுரை - 2 இலக்கியவேல் மார்ச் 2018 Ushadeepan Sruthi Ramani chevron-right· ந.சிதம்ப... ..நடிகையல்லாத பத்மினியைப் பாருங்கள். என்னவொரு பொரு... வாஸந்தியின் நாவல் “வேர் பிடிக்கும் மண்” உங்கள் நூலகம் இதழில் கட்டுரை இ.பா.வின் “வெந்து தணிந்த காடுகள்” நாவல் நின்று ஒளிரும் சுடர்கள் - கவிதா பதிப்பக வெளியீடு -... நடந்தாய் வாழி காவேரி - பயண நூல் - படியுங்கள் இந்திரா பார்த்தசாரதியின் சிறுகதைகள்-இலக்கியவேல் ஏப... ► செப்டம்பர் (35) ► 2017 (9) ► மே (2) ► பிப்ரவரி (2) ► ஜனவரி (5) ► 2016 (38) ► டிசம்பர் (1) ► நவம்பர் (7) ► அக்டோபர் (11) ► செப்டம்பர் (4) ► ஜூலை (2) ► ஜூன் (11) ► மே (2) ► 2015 (20) ► நவம்பர் (1) ► அக்டோபர் (2) ► செப்டம்பர் (1) ► ஆகஸ்ட் (2) ► ஜூலை (1) ► ஜூன் (3) ► மே (4) ► ஜனவரி (6) ► 2014 (42) ► டிசம்பர் (7) ► நவம்பர் (5) ► அக்டோபர் (5) ► செப்டம்பர் (1) ► ஜூலை (3) ► ஜூன் (5) ► மே (3) ► மார்ச் (1) ► பிப்ரவரி (5) ► ஜனவரி (7) ► 2013 (45) ► டிசம்பர் (3) ► நவம்பர் (5) ► அக்டோபர் (1) ► செப்டம்பர் (3) ► ஆகஸ்ட் (1) ► ஜூலை (6) ► ஜூன் (2) ► மே (7) ► ஏப்ரல் (2) ► மார்ச் (6) ► பிப்ரவரி (8) ► ஜனவரி (1) ► 2012 (40) ► டிசம்பர் (4) ► நவம்பர் (1) ► செப்டம்பர் (6) ► ஆகஸ்ட் (2) ► ஜூலை (7) ► ஜூன் (7) ► மே (1) ► ஏப்ரல் (3) ► மார்ச் (5) ► பிப்ரவரி (2) ► ஜனவரி (2) ► 2011 (48) ► டிசம்பர் (10) ► நவம்பர் (8) ► அக்டோபர் (8) ► செப்டம்பர் (8) ► ஆகஸ்ட் (14) ► 2009 (1) ► ஏப்ரல் (1) பிரபலமான இடுகைகள் தேவியின் கண்மணி நாவல் இதழில் 25.6.2014 இதழில் எனது “என்னவளே அடி என்னவளே” – நாவல் “விடியுமா?” - கு.ப.ராஜகோபாலன் சிறுகதை - வாசிப்பனுபவம் - “விடியுமா?” - கு.ப.ராஜகோபாலன் சிறுகதை - வாசிப்பனுபவம் - உஷாதீபன் வெளியீடு:- அடையாளம் பதிப்பக... “மின்னல்“ – சிறுகதை – கி.ராஜநாராயணன் = உஷாதீபன் வாசிப்பனுபவம் “மின்னல்“ – சிறுகதை – கி.ராஜநாராயணன் *************************************************************************************... “எதிர்பாராதது“ நாவல் - நாவல் “ எ திர்... “அவரிடத்தை நிரப்ப யாருமில்லை” – ஜூலை 2014 காட்சிப்பிழை இதழில் வெளிவந்துள்ள எனது நடிகர்திலகத்தைப் பற்றிய கட்டுரை “அவர் இடத்தை நிரப்ப யாருமில்லை…!” ____________________________________________ மி கை நடிப்பு, மெலோ ட்ராமா எ... கண்மணி, ராணிமுத்து, மேகலா, ரம்யா, மதுமிதா ஆகிய மாத நாவல் இதழ்களின் வரிசையில் இது என்னுடைய 10-வது மாத நாவல். “இவளும் ஒரு தொடர்கதைதான்” - பிப்ரவரி 2014. நகுலன் (தேர்ந்தெடுத்த கவிதைகள்)தொகுப்பு-யுவன் சந்திரசேகர் (காலச்சுவடு க்ளாசிக் வெளியீடு) காலச்சுவடு க்ளாசிக் கவிதை வரிசையில் நான் படித்தது நகுலன் (தேர்ந்தெடுத்த கவிதைகள்) யுவன் சந்திரசேகர் தொகுத்தது. காகிதத்தில் என்ன இருக்கிறத... எனது “நான் அதுவல்ல” சிறுகதைத் தொகுதிக்கு ஜூன் 2014 “உங்கள் நூலகம்” மாத இதழில் வெளிவந்த விமர்சனம். வழங்குபவர் – திரு.கி.மீனாட்சி சுந்தரம், தொழிலாளர் துணை ஆய்வர் (ஓய்வு) நெல்லை. ஒ ரு சிறுகதை என்பது சிறந்த படைப்பு என்பதை... கவிஞர் ஞானக்கூத்தன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் 2014விருது கவிஞர் ஞானக்கூத்தன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் 2014 விருது வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியான செய்தி. இந்த விருது ... கி.ராஜநாராயணன் சிறுகதை-புறப்பாடு-வாசிப்பனுபவம்-மாயமான்-காலச்சுவடு க்ளாசிக்தொகுதி --------------------------------------------------------------------------------------------------------------------...
***- எம்பெருமான் ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு நிறத்தைக் கொள்வன், கிருதயுதத்திலுள்ளவர்கள் ஸத்வகுணம் நிறைந்தவர்களாய் சுத்தமான நிறத்தை உகக்குமவர்களாகையாலே அவர்கட்காகப் பால்போன்ற வெண்ணிறத்தைக் கொள்வன், அந்த நிறமே இங்கு வெள்ளியான் என்று அநுஸந்திக்கப்பட்டது. கலியுகத்தில் எந்த நிறங்கொண்டாலும் ஈடுபடுவாரில்லாமையாலே இயற்கையான கரியநிறத்தைக் கொள்வன், அந்தநிறமே இங்கு ‘கரியான்’ என்று அநுஸந்திக்கப்பட்டது. த்வாபரயுகத்தில் பசுமைநிறத்தைக் கொள்வன், அந்த நிறமே இங்கு மணிநிறவண்ணன் என்று அநுஸந்திக்கப்ட்டது. அயர்வறு ம்மரர்களதிபதியாய் ஸர்வஸ்மாத்பரனாயிருந்துவைத்து எனக்கு வைத்தகண் வாங்கவொண்ணாதபடி தன்வடிவழகைக் காட்டியருள்பவன் உலகங்களை யெல்லாம் பிரளயாபத்துக்குத் தப்பிப்பிழைக்கச் செய்தருளியது போலவே நம்மை ஸம்ஸாரப்ரளயத்துக்குத் தப்பவைப்பதற்காகத் திருக்கோட்டியூரிலே வந்து ஸந்திஹிதனாயிராநின்றான். சாமரைக் கற்றை, சந்தநவ்ருக்ஷம் முதலிய சீரிய பொருள்களைக் கொழித்துக் கொண்டு பிரவஹிக்கின்ற மணிமுத்தாறு அருகே விளங்கப்பெற்றதாம் இத்தலம். English Translation The spotless one, the dark one, the gem-hued one, the Lord of celestials, the transcendent Lord, reveals himself to us. He swallowed the seven worlds and brought them out, He resides in Tirukkottiyur where streams in groves bring Sandal-wood and whisk-hair in heaps
***- தாம் மனோரதித்தபடியே தன் பாரிகரங்கனோடே கூடவந்து தம்மோட கலக்கையாலே எம்பெருமானுக்குப் பிறந்த புகரைப் பேசுகிறார். இவர் தாம் கீழ்த்திருவாய் மொழியில் “ஒளிக்கொண்ட சொதியுமாய் அடியார்கள் குழாங்களை உடன் கூடுவதென்றுகொலோ” என்று திருநாட்டிலே சென்று அங்கு நித்யமுக்தர்களின் திரளிலே இருந்து அநுபவிக்ப்பெறுவதைப் பாரித்தாராகிலும் அஸ்மதாதிகளின் உஜ்ஜீவநத்திற்காக எம்பெருமான் ஆழ்வாரை இந்நிரத்திலே இன்றும் சில நாளைக்கு வைத்திருக்கத் ஒருவாறு இந்நிலத்திலேயே காட்டி ஆச்வஸிப்பிக்கின்ற னென்றுணர்க பரமபதத்திலுள்ளாரெல்லார்திறத்திலும் பண்ணும் ஆதரத்தை என்பக்கலிலே பண்ணி என்னோடேவந்து கலந்த பெருமானுக்கு அழகிய மாலையும் ஒளி பொருந்திய திருவபிஷேகமும் திருவாழி திருச்சங்குகளும் யஸ்ஞோபவிதமும திவ்யஹாரமும் உள்ளன; திருக்கண்களோ சிவந்த தாமரைத் தடாகமாயிராநின்றன; சிவந்து கனிந்த திருவதரமும் தாமரையா யிராநின்றது; திருவடிகளும் செந்தாமரையாகவே நின்றன; திருவுடம்போ செம்பொன்னாயிராநின்றது. என்னோடு கலந்த பின்பு அவனுடைய திருமேனியில் பிறந்த புகர் இங்ஙனே யிராநின்றது. அந்தாமத்து ஸ்ரீ தாம என்னும் வடசொல் இங்குத் தாமமெனத் திரிந்தது. ஸ்தாநம் என்று பொருள். ஆகு பெயரால் பரமபத ஸ்தாநத்திலுள்ளவாகளான நித்யமுக்தர்களைச் சொல்லுகிறது. அவர்களிடத்துப் பண்ணும் அன்பை என்னிடத்தே பண்ணினானென்கிறது. இரண்டாமடியில் அந்தாமம் என்ற விடத்து தாம என்ற வடசொல்லே திரிந்ததாகவுங் கொள்ளலாம் அப்போது ஒளி என்று பொருள். அச்சொல் வடநூல் நிகண்டுகளில் பலபொருளுடையது. ‘வாள்முடி’ என்றும் ‘வாழ்முடி’ என்றும் பாடபேதமுண்டு. இரண்டாமடி மழுதும் நித்யஸூரிகளைச் சொல்லி யிருப்பதால், அடியார்கள் குழாய்களை உடன்கூடுவதென்றுகொலோ என்று இவர் ஆசைபட்டபடியே நித்யஸூரிகளோடே வந்து கலந்தான் என்று ஆளவந்தாரருளிச் செய்தாராகத் திருமாலையாண்டான் பணித்தாரம். எம்பெருமானாரருளிச்செய்ததாவது-ஆழ்வாரோடு வந்து கலப்பதற்கு முன்பு அவனோடொக்க இந்த திவ்ய பூசண திவ்யாயுதங்களும் ஒளிமழுங்கி அஸத்கல்பமாயிருந்தன; இவரோடு கலந்த பூஷண த்வ்யாயுதங்களும் ஒளிமழுங்கி அஸத்கல்பமாயிருந்தன; இவரோடு கலந்த பின்பு உஜ்ஜவல்மாய் ஸத்தை பெற்றன; அது சொல்லப்படுகிறது இங்கும் -- என்றாம். இப்பாட்டுக்கு மற்றொருவகையான நிர்வாஹமுமுண்டு அந்தராதித்யவித்யையில் சொன்ன ஹிரண்மய விக்ரஹயோகத்தையும் புண்டாரிகாகூஷத்வம் முதலிய அவயவசோபையையும் கிரிடமகுடாதி ஆபரண சோபையையும் சொல்லி, இப்படி ஆதிதியமண்டலத்திலே திகழுமவன் ஆதித்யமண்டலத்தில் பண்ணும்விருப்பத்தை என்னெஞ்சிலே பண்ணிப்புகுந்து மிகவும் உஜ்ஜ்வலனாயிராநின்றான்--என்பதாம். English Translation My Lord bears a garland, crown, conch and discus, thread and necklace, in a beautiful spot he made love to me, and blended with my soul. His big eyes are like lotus peals, his coral lips are like lotus flowers, his feet are like red lotus, his body glows like red gold.
GSP+ வரிச்சலுகை அடுத்த மாதம் 15 ஆம் திகதிக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன் - ஹர்ஷ டி சில்வா - Newsfirst Toggle navigation சமீபத்திய தொகுப்பு உள்ளூர் உலகம் விளையாட்டு வணிகம் பொழுதுபோக்கு LIVE TV Live TV සිංහල English °C English සිංහල GSP+ வரிச்சலுகை அடுத்த மாதம் 15 ஆம் திகதிக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன் – ஹர்ஷ டி சில்வா GSP+ வரிச்சலுகை அடுத்த மாதம் 15 ஆம் திகதிக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன் – ஹர்ஷ டி சில்வா எழுத்தாளர் Staff Writer 28 Apr, 2017 | 7:32 pm எழுத்தாளர் Staff Writer 28 Apr, 2017 | 7:32 pm பகிர்தல்: GSP+ வரிச்சலுகை அடுத்த மாதம் 15 ஆம் திகதிக்குள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். இந்த வரிச்சலுகையை நாட்டிற்கு மீள பெற்றுக் கொள்வதற்கு வெளிவிவகார பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா பாரிய பிரயதனங்களை மேற்கொண்டிருந்தார். இதன்போது கருத்து தெரிவத்த பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா… [quote]நமது நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு உலக நாடுகளுடன் ஒன்றிணைய வேண்டும் என்பதை நாம் அறிவோம். அப்படியென்றால் ஏற்றுமதியை தவிர்த்து நாட்டிற்குள் அபிவிருத்தியை காண முடியாது.எமக்கு GSP+ வரிச்சலுகை கிடைக்காது என பலர் தெரிவித்தனர்.இதற்கு நிபந்தனைகள் இடப்பட்டிருப்பதாக சிலர் தெரிவித்தனர்.நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு நாடுகள் மேற்கொள்ளும் முயற்சிகளின் அடிப்படையிலேயே GSP+ வரிச்சலுகை வழங்கப்படுகின்றது.[/quote]
Home / இலங்கை / ஈழம் / கூட்டமைப்பு / தமிழர் / போரில் சிறிலங்காவுக்கு உதவிய நாடுகள் ஜெனிவாவில் கைவிட்டது ஏன்? போரில் சிறிலங்காவுக்கு உதவிய நாடுகள் ஜெனிவாவில் கைவிட்டது ஏன்? Unknown Wednesday, April 04, 2012 இலங்கை , ஈழம் , கூட்டமைப்பு , தமிழர் Edit அமெரிக்காவின் பின்புலத்துடன் ஜெனிவாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேலை தான் என்று, கோமாவில் இருந்து எழுந்து வந்தவர்கள் போல சில அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடிக்கிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன். ஜெனிவா தீர்மானம் தொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில், உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “தேசியப் பிரச்சினைக்கு சிறிலங்கா அரசாங்கங்கள் தீர்வு காணத் தவறியதன் விளைவே ஜெனிவா தீர்மானம். பண்டா - செல்வா உடன்பாடு, டட்லி- செல்வா உடன்பாடு, சிறிலங்கா - இந்திய உடன்பாடு, 13 வது அரசியலமைப்புத் திருத்தம், சிறிலங்கா அரசு - கூட்டமைப்பு பேச்சுக்கள் ஆகியவற்றை முறையாக நிறைவேற்றியிருந்தால், இன்று சிறிலங்கா அரசு இந்தப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்காது. இந்திய அரசாங்கத்தின் அழுத்தத்தின் பேரிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சு இடம்பெற்றது. அந்தப் பேச்சுக்கள் ஒரு ஆண்டுக்கு நீடித்த போதிலும் எந்தவொரு தீர்வும் வந்து விடவில்லை. போரின்போது மருத்துவமனைகள் மீது பீரங்கித் தாக்குதல் நடத்தப்படுவதை, பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை நாம் இங்கு சுட்டிக்காட்டிய போது சிறிலங்கா அரசாங்கம் அதுபற்றிக் கண்டு கொள்ளாமல் இருந்தது. இங்கிருந்த அமைச்சர்கள் எவராவது, அது தவறென்று கூறினரா? இறுதிக்கட்டப் போரின் போது பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு விட்டதாக அனைத்துலக அமைப்புக்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு இலட்சத்து 40 ஆயிரம் பேருக்கு என்ன நடந்தது என்று தெரியாதுள்ளது. போரின் போது சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான விடுதலைப் புலிகள் பற்றிய சரியான எண்ணிக்கை விபரம் ஏதும் இல்லை. ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போதே, இங்கு ஆட்கடத்தல்கள் இடம்பெற்றன. தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் உறுப்பினர்கள் தேசிய விவகாரங்கள் குறித்துப் பேசினால், இனவாதிகள் என்று முத்திரை குத்தப்படுகிறது. கிழக்கைப் பொறுத்தவரை காணிகள் அபகரிக்கப்படுகின்றன. அத்துமீறிய குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இராணுவ ஆக்கிரமிப்புக்கள் தொடர்கின்றன. புத்தர்சிலைகள் முளைக்கின்றன. வடக்கில் அரச சேவையில் தமிழ் பேசும் ஒருவருக்காவது நியமனம் வழங்கப்படவில்லை. ஒவ்வொரு காலகட்டத்திலும் எமது மக்கள் விரட்டியடிக்கப்பட்டனர். இதுபற்றி இங்கு கூறினால், எம்மை இனவாதிகள் என்று கூறுகின்றீர்கள். சிங்கள சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக சிறிலங்கா அதிபரும் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் தான் முதலில் ஜெனிவாவுக்குச் சென்றனர். சிறிலங்காவுக்கு ஆதரவாக - ஜெனிவா தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த கியூபா சிறிலங்காவில் இடம்பெற்ற போருக்கு அமெரிக்காவின் 60 வீத ஆயுத உதவி இருந்ததாக கூறியுள்ளது. அதேபோன்று இந்தியாவும் உதவியிருப்பதாக கூறியிருக்கின்றது. இந்தநிலையில் சிறிலங்கா அரசுக்கு உதவி செய்த நாடுகள் மனிதஉரிமை பேரவையில் எதிராக செயற்பட்டமை தொடர்பாகச் சிந்திக்க வேண்டியுள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தின் முட்டாள்தனமான செயற்பாடுகளால் தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றும் படியே கூறுகிறது. அதில் வேறு எதுவும் கூறப்படவில்லை. இருந்தபோதிலும் இந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் அரசாங்கத்திடம் இல்லை. வடக்கு,கிழக்கில் இதே நிலைமை மேலும் நீடிக்குமேயானால் அது நல்லிணக்கத்துக்கு பதிலாக மேலும் பாரிய பிரச்சினைகளையை எதிர்காலத்தில் தோற்றுவிக்கும்“ என்று குறிப்பிட்டுள்ளார். Share on Facebook Share on Twitter Share on Google Plus About Unknown This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel. RELATED POSTS Blogger Comment Facebook Comment 0 கருத்துரைகள் : Post a Comment Newer Post Older Post Home Subscribe to: Post Comments ( Atom ) Popular Post Video Category முக்கியசெய்திகள் தமிழீழம் தமிழருக்கு உரித்துடையதா? ஒரு குறுக்கு வெட்டு முகப்பார்வை "வரலாற்றை அறியாதவன் சமூகம் அழிந்துவிடும்" -கவிஞர் இக்பால்- ஒரு உடமையின்பால் உரிமை கொண்டாடுகையில் அவ்வுடமையின் உரிமைத்துவம் சார்... திலீபன் அண்ணையைப்பற்றி......! ஊரெழு யாழ் நகரிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள செழிப்புமிக்க கிராமம். இக்கிராமத்தை பலாலி வீதி ஊடறுத்து கிழக்கு,மேற்கு... விடுதலைத் தீப்பொறி (காணொளிகள்) தமிழீழ விடுதலைக்கான அரசியல் விடுதலைப்போராட்டம் ஆயுதப்போராட்டமாக பண்பு மாற்றம் பெற்றபோது,அதை தீவிரமாக முன்னெடுத்தவர் தலைவர் பிரபாகரன் ... தலைவரின் உபாயம் 2001 ம் ஆண்டு முகமாலைப்பகுதியில் சிங்களத்தின் பாரிய படைநகர்வை எதிர்கொள்ள படையணிகள் தயாராகிக் கொண்டிருந்தன. விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரை... வலிகளை மட்டும் சுமந்து திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர்ப்பிரதேசம் விடுதலைப்போராட்டத்திற்கு மிக முக்கிய பங்காற்றிய பிரதேசங்களில் ஒன்றாகும். மேஜர் கணேஸ், லெப் கே... போராட்டப்பாதையில் புகுந்தபுலிகளும் விழுந்த துரையப்பாவும் – பகுதி 5 துரையப்பாவின் வரவை எதிர்பார்த்து காத்திருந்த இவ்விடைக்காலத்தில் யாழ்பஸ்நிலையத்தில் கிருபாகரன் வேண்டிவந்த மேலாடைஅட்டையில் தன்னிடம் இருந்... மாவீரர் நாளில் தேசியத் தலைவருக்காக......! கார்த்திகை 27, தமிழ்மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய உன்னதமான மாவீரர்களை நினைவு கூர்ந்து உறுதியெடுக்கும் தேச... தேசியத்தலைவர் பற்றி ......! - 03 தலைவர் பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவத்தைப்பற்றிய பல விடயங்களைக் கேள்விப்பட்டிருக்கின்றோம். அதேவேளை சிறு சிறு விடயங்களைக் கூட தலைவர் எ... தேசியத்தலைவர் பற்றி.........! தலைவர் பிரபாகரன் அவர்களின் தலைமை, ஆளுமை, உறுதி, கொள்கை வழுவாத்தன்மை பற்றி எவருக்கும் தெரியாமலிருக்காது. அதற்கு அப்பால் அவர் சிறந்த பண்... பிரபாகரனும் தமிழீழமும் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரும்பான்மை தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக மக்கள் ஆணை பெற்ற தீர்மானமே 'சுதந்திரமும் இ... காணொளி அதிகம் வாசிக்கபட்டவை 'விடுதலைப்படைப்பாளி' கப்டன் மலரவன் போர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரிய... சிறுநீர் கழிக்கச் சென்ற பெண்களின் உடலங்கள் புதர்களுக்குள் கிடந்தது- சாந்தி கூறும் முள்ளிவாய்க்கால் அவலம் என்ன? யுத்தத்தின் காரணமாக பல தடவைகள் இடம்பெயர்ந்த பிள்ளை ஒன்றுக்கு தாயான 42 வயதுடைய சாந்தி, தனது கணவனை யுத்தத்தில் இழந்து வாழ்கிறார். இ... இந்தியப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.வைத்தியசாலை ஊழியர்களின் 26ம் ஆண்டு நினைவு நாள் அமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவத்தவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, ... மாவீரர் நாளில் தேசியத் தலைவருக்காக......! கார்த்திகை 27, தமிழ்மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய உன்னதமான மாவீரர்களை நினைவு கூர்ந்து உறுதியெடுக்கும் தேச... ஈழத்து விடுதலைப்போராட்டத்தை தனது படைப்பினூடாகத் தாங்கும் ஓவியப் போராளி ஓவியர் புகழேந்தி அவர்கள்! ஈழப்போராட்டத்தில் ஓவியர் புகழேந்தி அவர்களின் ஓவியங்கள் ஒரு உயிரோட்டமான படைப்புக்களாக விளங்குகின்றன. அவரது ஓவியங்களைப் பார்க்கவேண்டும் என... தேசியத்தலைவரைப்பற்றி ...........!-05 சண்டைகளின் ஒவ்வொரு படியையும் உன்னிப்பாகச் செதுக்கி, வழிநடத்துபவர் தலைவர் பிரபாகரன் அவர்கள். இங்கே தளபதிகள் தலைவரின் போரியல் சிந்தனையி... ஈழத்தமிழர்களை ஒருங்கிணைத்திருப்பது 'தமிழீழம்' என்ற கொள்கையும் 'பிரபாகரன்' என்ற நாமமுமே! ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரும்பான்மை தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக மக்கள் ஆணை பெற்ற தீர்மானமே 'சுதந்திரமும் இற... தேசியத்தலைவரைப்பற்றி .......! - 04 2001 ம் ஆண்டு தமிழீழத் தேசியத்துணைப்படையணி மணலாறு சேமமடுப்பகுதி முன்னணிக் காவலரண் வரிசையில் பாதுகாப்புக் கடமையில் இருந்தது . எதிரியின்... கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள்! கேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிக... தேசியத்தலைவர் பற்றி ......! - 03 தலைவர் பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவத்தைப்பற்றிய பல விடயங்களைக் கேள்விப்பட்டிருக்கின்றோம். அதேவேளை சிறு சிறு விடயங்களைக் கூட தலைவர் எ... வலைப்பூக்கள் லியோ - 1985 ஆம் ஆண்டு வைகாசி நடுப்பகுதி , குமுதினிப்படுகொலைக்கு அடுத்தநாள் நான் முதன் முதலாய் இரத்ததானம் வழங்க யாழ் மருத்துவமனைக்கு போயிருந்தேன். எதிர்பாராதவித... 5 weeks ago தீபம் காணமல் போன பூனைக்குட்டி - குழந்தைகள்தான் உன்னை கடத்தியிருக்க வேண்டும் அவர்கள் மீண்டும் துவக்குகளை நீட்டத் தொடங்கியுள்ளனர் பீரங்கிகளை திருப்பி விட்டனர் சோதனைச்சாவடிகளை திறந்து கொண்... 2 years ago முத்து நிலவு (கவிதைகள்) - சு.ராஜசெல்வி- - நிலவு (கவிதைகள்) - சு.ராஜசெல்வி- (1) வண்ண வண்ண பூச்சி வண்ணாத்திப்பூச்சி உண்ண உண்ண பறந்து பூ மீது மென்மையாக இருந்து எண...
காலச்சுவடு செப்டம்பர் 2005 இதழ் தமிழர் உணவுச் சிறப்பிதழாக வெளிவந்தது. இன்றுவரை வெளிவந்த காலச்சுவடு இதழ்களிலேயே பெரும் கவனத்தையும் வரவேற்பையும் பெற்ற இதழ் என்று அவ்விதழைச் சொல்லலாம். … மேலும் கார்ட்டில் சேர்க்க  வகைமைகள்: விற்பனையில் சிறந்தவை | உணவு பற்றிய கட்டுரைகள் | பகிர்: About Detail காலச்சுவடு செப்டம்பர் 2005 இதழ் தமிழர் உணவுச் சிறப்பிதழாக வெளிவந்தது. இன்றுவரை வெளிவந்த காலச்சுவடு இதழ்களிலேயே பெரும் கவனத்தையும் வரவேற்பையும் பெற்ற இதழ் என்று அவ்விதழைச் சொல்லலாம். அச்சிறப்பிதழில் உள்ள கட்டுரைகளை விரிவுபடுத்தி மேலும் சில கட்டுரைகளை இணைத்து நூலாக்கும் பணியை பேரா. பக்தவத்சல பாரதி ஏற்றுக்கொண்டார். அவரின் ஐந்து ஆண்டுகால உழைப்பு இந்நூல். தமிழகச் சமையல் முறைகளுடன் ஈழம், புலம்பெயர் உணவு முறைகளும் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. படைப்பாளிகள், ஆய்வாளர்கள் பலரும் நுட்பமான பார்வையுடன் தமிழர் உணவின் பல்வேறு பரிமாணங்களை அணுகியிருக்கிறார்கள். தமிழ்ச் சமூகத்திற்கென தனித்துவமான உணவு முறைகளும் உணவு விலக்குகளும் உண்டு. ஏனைய பண்பாடுகளுடன் உறவாடி, கொண்டு கொடுத்தல் செய்து பலவகை தானியங்கள், பயிர்வகைகள், காய்கறிவகைகள் தமிழ்ச் சமூகத்திற்கு அறிமுகமாகியுள்ளன. இந்த தனித்துவமும் பொதுத்தன்மையும் கொண்ட மரபு உலகமயமாக்கலினால் பெரும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. உணவு, உணவு முறை, உணவுப் பண்பாடு குறுகிய காலத்தில் பலத்த மாற்றத்திற்கு ஆட்பட்டு வருகின்றது. இந்தப் பின்னணியில் பல சுவாரசியமான தகவல்கள், உணவு வகைகள், பண்பாட்டுக் குறிப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்நூல் தனி முக்கியத்துவம் பெறுகிறது. ISBN : 9789381969205 SIZE : 13.8 X 2.1 X 21.5 cm WEIGHT : 452.0 grams நீங்கள் விரும்பும் புத்தகங்கள் சிறகு முறைத்த பெண் ₹100.00  எழுதித் தீராப் பக்கங்கள் ₹275.00  நூல்கள் நூலகங்கள் நூலகர்கள் ₹200.00  கலாச்சாரக் கவனிப்புகள் ₹300.00  சமூகவியலும் இலக்கியமும் ₹240.00  சில ஆசிரியர்கள் சில நூல்கள் ₹175.00  படைப்புக்கலை ₹180.00  மெட்ராஸ் 1726 ₹250.00  இரண்டாம் வீராநாய்க்கர் நாட்குறிப்பு ₹395.00  தருநிழல் ₹190.00  ஒரு பாடகி ஒரு மாயப்பிறவி ₹150.00  யாத்திரை ₹175.00  வீழ்ச்சி ₹140.00  அந்த நாளின் கசடுகள் ₹160.00  பேரீச்சை ₹160.00  × சிறகு முறைத்த பெண் ₹100.00 சமூகம், மதம், அரசியல், நன்னெறிகள் மூலம் ஒடுக்கப்படும் பெண்மனம் தளைகளைக் களைந்து எறியும் ஓசையின் எ மேலும் பகிர்: கார்ட்டில் சேர்க்க × எழுதித் தீராப் பக்கங்கள் ₹275.00 மூன்று பதிற்றாண்டுகளாக ஈழத்தில் நடந்து முடிந்த இனப் போராட்டம் உருவாக்கிய பெருங் கொடுமைகளில் ஒன்று மேலும் பகிர்: கார்ட்டில் சேர்க்க × நூல்கள் நூலகங்கள் நூலகர்கள் ₹200.00 அபூர்வமான தகவல்களும் மென் நகைச்சுவையும் இழைந்தோடும் சச்சிதானந்தன் சுகிர்தராஜாவின் பத்திகள் சரள நட மேலும் பகிர்: கார்ட்டில் சேர்க்க × கலாச்சாரக் கவனிப்புகள் ₹300.00 யாழ்ப்பாணக் கச்சேரியடியில் ‘இவ்விடத்தில் துப்பாதீர்கள்’ என்று அறிவிப்பு எழுதிவைத்தால் ‘எந்த மானமு மேலும் பகிர்: கார்ட்டில் சேர்க்க × சமூகவியலும் இலக்கியமும் ₹240.00 பேராசிரியர் க. கைலாசபதியின் சரளமான தமிழில் அரை நூற்றாண்டுக்குப் பின்னும் புதுமை குன்றாத இலக்கியச் மேலும் பகிர்: கார்ட்டில் சேர்க்க × சில ஆசிரியர்கள் சில நூல்கள் ₹175.00 மதிப்புரைகள், விமர்சனங்கள் என்பவையாக அல்லாமல் நூலை அறிமுகப்படுத்துதல், வாசிப்பு அனுபவத்தைப் பகிர் மேலும் பகிர்: கார்ட்டில் சேர்க்க × படைப்புக்கலை ₹180.00 அசோகமித்திரனின் அதிகம் அறியப்படாத சில பரிமாணங்களை வெளிப்படுத்துகிறது இந்த நூல். உணர்ச்சிகளை அதிகம மேலும் பகிர்: கார்ட்டில் சேர்க்க × மெட்ராஸ் 1726 ₹250.00 காலனித்துவக் கால ஐரோப்பியரது ஆவணங்கள் கடந்த 600 ஆண்டு காலத் தமிழ்நாட்டு வரலாற்றை அறிந்துகொள்ள உதவ மேலும் பகிர்: கார்ட்டில் சேர்க்க × இரண்டாம் வீராநாய்க்கர் நாட்குறிப்பு ₹395.00 பதினெட்டாம் நூற்றாண்டின் பின்பாதியில் சூன் 1778 முதல் சூலை 1792வரை புதுச்சேரியில் பிரெஞ்சுக் கும் மேலும் பகிர்: கார்ட்டில் சேர்க்க × தருநிழல் ₹190.00 பிறமொழிப் படைப்புகளின் நம்பகமான தமிழாக்கங்கள் வாயிலாகச் சீரிய வாசகர்களிடையில் தனிக் கவனம் பெற்றிர மேலும் பகிர்: கார்ட்டில் சேர்க்க × ஒரு பாடகி ஒரு மாயப்பிறவி ₹150.00 இந்த நாவலின் களம் தற்செயல் நிகழ்வுகளின் சூதாட்டம். சூதாட்டத்தில் சாதகமும் பாதகமும் நடக்கலாம். பெரும மேலும் பகிர்: கார்ட்டில் சேர்க்க × யாத்திரை ₹175.00 கடலோர மக்கள் வாழ்விலிருந்து பெற்ற பூர்வீக அறிவை அழித்து அதன் மேல் இறுகியதும் சுரண்டல் குணம் கொண்ட மேலும் பகிர்: கார்ட்டில் சேர்க்க × வீழ்ச்சி ₹140.00 காம்யூ (கமுய்) உயிருடன் இருந்தபோதே வெளியான கடைசிப் படைப்பான இப்புதினம், மனிதர்கள் எதிர்கொள்ளும் வ மேலும் பகிர்: கார்ட்டில் சேர்க்க × அந்த நாளின் கசடுகள் ₹160.00 துச்சமாக எண்ணும் உறவும் பகைமைகொண்ட நகரமும் இறந்த மனைவியை அடக்கம் செய்ய வேண்டிய கடமையும் அதற்கான ப மேலும் பகிர்: கார்ட்டில் சேர்க்க × பேரீச்சை ₹160.00 ‘ஈழத்துத் தமிழ் இலக்கியம்’ என்னும் தனி ஒதுக்கீட்டை உடைத்துத் தமிழ் நவீன இலக்கியத்தின் பொதுப்போக்கிற் மேலும் பகிர்: கார்ட்டில் சேர்க்க தொடர்புக்கு 1995இல் தொடங்கப்பட்ட காலச்சுவடு பதிப்பகம் இன்று தமிழின் முன்னணி இலக்கியப் பதிப்பகம். 1995இலிருந்து, தமிழ் நவீன இலக்கியத்தின் தற்காலப் போக்குகள் காலச்சுவடு பதிப்பகத்தின் நூல்களிலும் இதழிலும் உருப்பெற்றும் மெருகேற்றப்பட்டும் வருகின்றன. உலக இலக்கியத்தில் சிறந்த படைப்புகளைத் தேர்ந்த தமிழ் வாசகருக்காக காலச்சுவடு தொடர்ந்து மொழிபெயர்த்து வருகிறது. இதுவரை ஆயிரம் தலைப்புகளில் நூல்களை வெளியிட்டுள்ள காலச்சுவடு பதிப்பகம் முன்னணி தமிழ்ப் பதிப்பகங்களின் வரிசையில் இடம்பெற்றுள்ளது.
மேலும் தனக்குக் குழந்தை பிறக்க வேண்டாம் என முடிவெடுத்துவிட்ட ஒருத்தி, ஏற்கனவே ஒருமுறை வெற்றிகரமாகக் கருக்கலைப்பு செய்துகொண்ட மருத்துவ மனைக்கே சென்று, மீண்டும் கருக்கலைப்பு செய்துகொண்டு மிகவும் நிம்மதியாக தன் வீட்டிற்குச் செல்கிறாள். ஆனால் ஐந்துமாதங்கள் ஆனபிறகே, தன் கரு கலையாமல் இன்னும் வயிற்றிலேயே வளர்ந்து வருவதை உணர ஆரம்பிக்கிறாள். இனி ஒன்றும் செய்வதற்கு இல்லை எனச் சொல்லி விட்டார்கள். இந்தமுறை சமீபத்தில் கருக்கலைப்பு செய்தவர்கள், ஏதோவொரு அவசரத்திலும் அலட்சியத்திலும், சரியான முறையில் அதனைச் செய்யாமல், அரைகுறையாக அவசரத்தில் செய்து சொதப்பியுள்ளனர். தினமும் கூட்டம் கூட்டமாக, இதே வேலைகளுக்காக அங்கு பல பெண்மணிகள் வந்து க்யூவில் நிற்கும்போது, மருத்துவமனையில் உள்ள அவர்களும் என்னதான் செய்வார்கள்? இதுபோன்ற ஓரிரு தவறுகள் எப்போதாவது நடப்பதும் சகஜம்தானே! இதனால் மிகவும் பாதிப்புகளுக்கு உள்ளாகி அவளின் வயிற்றுக்குள்ளிருந்து நம்முடன் பேசுபவரே மிஸ்டர் Y. ஹனி மேடம் நன்கு யோசித்து, மிகவும் நன்றாக எழுதியுள்ளார்கள் இந்தக்கதையை. நம் சிந்தனைக்காக .... கதையில் வரும் ஒருசில வரிகள்: உனக்கு மட்டுமல்ல, உன்னைப்போன்ற அறியாத தாய்களுக்கும், தகப்பன்களுக்கும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். மாங்கலாய்டு, ஆட்டிசம், மெண்டல் டிஸ்ஸார்டர், ஸ்பாஸ்டிக், செரிப்ரல் பால்சியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் வாழ உரிமையில்லையா .... எங்களை அழித்தொழிக்கவோ, அறுத்தெரியவோ உங்களுக்கு உரிமையில்லை. விதைத்தது நீங்கள் தானே .... அல்லது உங்களின் முன்னோர் ஒருவரின் மரபணுத் தொடரின் மிச்சங்கள்தானே நாங்கள். விரும்பினால் பெற்றெடுங்கள். விரும்பாவிட்டால் பாழ்வெளியில் விதைக்காதீர்கள். தரிசாகக் கிடப்பது தவறல்ல. வயலிலேயே கருக அடிப்பதுதான் கொடுமை. வளர்ந்த பின் வெட்டியெறிய நாங்கள் எல்லை மீறிய கிளைகள் அல்ல. நீங்கள் விதைத்த விதைகள். விருட்சமாகியே தீருவோம். [தினமலர் பெண்கள் மலரில் 28.06.2013 வெளியாகியுள்ள கதை இது] 8) சொர்க்கத்தின் எல்லை நரகம் இது மிகவும் அழகான எனக்குப் பிடித்தமான கதை. ஏற்கனவே நம் ஹனி மேடம் பதிவினிலேயே படித்த ஞாபகமும் உள்ளது. மீண்டும் படிக்க அலுக்காத கதை. குழந்தைத் தொழிலாளிகளை வேலைக்கு வைத்துக்கொள்ளவே கூடாது என சட்டம் சொல்கிறது. ஆனால் பலர் வீடுகளில் சின்னச்சின்னக் குழந்தைகளை வேலைக்கு அமர்த்திக்கொள்கிறார்கள். அவர்களும் ஏதோ வறுமையினாலும், கொடுமையினாலும், ஆதரவற்ற நிலையிலும், வயிற்றுப் பசிக்காகவும், வீட்டு வேலைக்கு வந்துவிட நேரிடுகிறது. அது போல வருவோரில் எத்தனையோ பிஞ்சு உள்ளங்களும் உண்டு. அந்தப்பிஞ்சு உள்ளங்களாகிய அவர்கள் மனதிலும் குழந்தைகளுக்கே உரிய ஆயிரம் ஆயிரம் ஆசைகளும் இருக்கத்தான் செய்யும். அவ்வாறான ஒரு சின்னப் பெண் குழந்தையைப் பற்றிய கதை இது. உதாரணமாக கும்மென்ற வாஸனையுடன் கூடிய ஒரு புத்தம் புதிய முழு குளியல் சோப்பினைக் கண்டால், அது தேயும்வரை அதனை நன்கு தேய்த்து நாமும் என்றாவது ஒருநாள் ஆசைதீரக் குளிக்க மாட்டோமா எனத்தோன்றும் ஓர் குழந்தைக்கு. அதுபோல வாஸனையுள்ள ஹேர் ஆயில், ஸ்நோ போன்ற க்ரீம்கள், வாஸனையுள்ள ஃபேஸ் பவுடர், ரோஸ் பவுடர், நறுமணம் கமழும் செண்ட், கண்ணுக்கு இட்டுக்கொள்ளும் மை முதலியவற்றை உபயோகிக்க ஓர் ஆசை ஏற்படத்தான் செய்யும். இவையெல்லாம் பெண் குழந்தைகளுக்கே உள்ள சின்னச்சின்ன, மிகவும் இயல்பான இயற்கையான ஆசைகள் மட்டுமே. மிகவும் அழகாக, தனக்கே உரிய தனிப் பாணியில், இந்தக் கதையைத் தத்ரூபமாக எழுதி நமக்கு ஓர் மாபெரும் விருந்தே அளித்துள்ளார்கள், நம் ஹனி மேடம். அந்தச் சின்னஞ்சிறு குழந்தைத்தொழிலாளியாகிய பெண், தான் வேலைசெய்யும் அந்த வீட்டில், தனிமையில் இருந்து, தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தபோது, என்னதான் தப்பு செய்திருக்கட்டுமே, இப்படியா அந்தக்குழந்தையை அடித்து நொறுக்குவாள் அந்த எஜமானியம்மாள் என்ற அந்த ராட்சசி. :( இந்தக் கதையைப் படித்து முடித்ததும் யாருக்குமே, கண்களில் கண்ணீர் வரப்போவது நிச்சயம். நம் சிந்தனைக்காக .... கதையில் வரும் ஒருசில வரிகள்: காலையில் கிளம்பி வெளியே ஆபீஸ் போன, வீட்டு எஜமானியம்மாள் மாலையில் வீட்டுக்குத் திரும்பி விட்டாள். தன் வீட்டில், தண்ணீர் நிரப்பி வைப்பது, துணி துவைத்து வைப்பது, களைந்து வைத்துள்ள அரிசியை இட்லி மாவாக அரைத்து வைப்பது போன்ற எந்த ஒரு வேலைகளும் செய்து முடிக்கப்படவில்லை. சமையல் கட்டில் தான் சாப்பிட வைத்திருந்த டிபன் பாக்ஸும் காலியாகியுள்ளது. வேலைக்கு வைத்துள்ள அந்தச்சின்னப் பெண்ணின் அலங்கோலமான அலங்காரங்களைப் பார்க்கிறாள். கோபத்தில் பாய்ந்தாள் ... அந்தக் குட்டியின் தலையில் ஒழக்கு இரத்தம் வர்றாப் போலக் கொட்டினாள். அவளின் தலைக்குஞ்சலம் எங்கோ ஒரு மூலையில் போய் விழுந்தது. தொடையைத்திருகி முதுகில் சாத்துப்படி வைத்தாள். மடேர், மடேரென்று சும்மா ஒன்னா ரெண்டா வரிசையா ஏராளமான அடிகள். அந்தக் குட்டி, ஸ்ப்ரிங் மாதிரி ஒரு மூலையில் போய் சுருண்டு விழுந்தது. பயத்திலே பாவாடையிலே ஒண்ணுக்குப் போய்விட்டது. மூக்கில் சளி. பாவாடையால் தொடைத்துச்சுக்கிட்டது. குட்டி கத்தலை. ஆர்பாட்டம் பண்ணலை. ஒருநாள் சந்தோஷத்தை நெனைச்சுக்கிட்டது. சோப்பும் மையும் பட்ட கண் எரிஞ்சுது. குட்டி மனசுல கண்ணீர் வழிஞ்சுது. வெரி வெரி எக்ஸலண்ட் ரைட்டிங் ...... என் ஸ்பெஷல் பாராட்டுகள், ஹனி மேடம். [மேரிலாண்ட் எக்கோஸ் 1985 - வெளியானது] 9) அப்பத்தா மரணம் என்றால் என்னவென்றே இதுவரை அறியாத ஓர் சின்னப்பெண் குழந்தையின் மன உணர்வுகளைச் சொல்லிச் செல்லும் மிகவும் அழகானதோர் கதை. அடிக்கடி வருவது போல, தன் ஆயா வீட்டிலிருந்து, தன் அப்பத்தா வீட்டுக்கு அந்தப்பெண் குழந்தை இப்போதும் வந்திருக்கிறாள். கண்டிப்பும் கறாருமாக, ஒருவித அதிகார தோரணையுடன், தான் உள்பட அனைவரையும் ஆட்டிப்படைத்து வந்துகொண்டிருந்த தன் அப்பத்தா, இப்போது அசையால் இப்படிக் கிடப்பதைப் பார்த்து ..... என்ன நடந்துகொண்டு இருக்கிறது இந்த வீட்டில் எனத் தெரியாமல் தவிக்கும் குழந்தை. டாக்டர் உள்பட யார் யாரோ வருகிறார்கள் .... போகிறார்கள். யாரும் எதுவும் இவளிடம் சொல்லாமலேயே இருக்கிறார்கள். இவளின் அப்பாவை உடனடியாக வரவழைக்க தந்தி கொடுக்க யாரிடமோ பணம் கொடுத்து யாரோ அனுப்பி வைக்கிறார்கள். அவளுக்கும் சந்தோஷம் .... தன் அப்பாவே இங்கு வரப்போகிறார் என்று. அதிகார ஆளுமைகளுடன் இருந்துகொண்டு, அந்த வீட்டில் ஆட்சி செலுத்தி வந்துள்ள அப்பத்தாவைப் பற்றிய வர்ணனைகளும், அந்த வீட்டில் அன்று நடக்கும் கூத்துக்களும் மிக அழகாக, மிகவும் சூப்பராக வர்ணிக்கப்பட்டுள்ளன. வெரி எக்ஸலண்ட் ரைட்டிங் ! நம் சிந்தனைக்காக .... கதையில் வரும் ஒருசில வரிகள்: சாப்பாட்டுப் பந்தில சமையக்காரனைக் கூப்பிட்டு இன்னொரு அல்வா கேட்டா கண்ணால முழுச்சே எழுந்திரிக்க வைக்குற அப்பத்தாவா இப்படிக் கிடக்குறாங்க....? சமையல்காரன் கிட்ட கணக்குப் பண்ணி அளவாச் சாமான் எடுத்துக் குடுத்து சமைக்கச் சொல்லுற அப்பத்தாவா இது....? ஏன் இப்படிப் படுத்துருக்காக... என்ன ஆச்சு... ஹூம்... அங்கு வந்த யாரோ சின்னப் பிள்ளைகளை ஓட்டிக்கொண்டு போய் பந்தியில் வரிசையாக உட்கார வைத்தார்கள். ஆல் வீட்டில் பந்தி, வாழையிலையுடன் கனஜோராய் நடந்து கொண்டிருந்தது. இவளையும் உட்கார வைத்தார்கள். சீயம் போட்டிருந்தார்கள். இவள் இட்லியை விட்டுப்புட்டுச் சீயத்தைத் தின்றாள். பந்திக்காரனைக் கூப்பிட்டு இன்னொரு சீயம் கேட்கத்தான் ஆசை. ஆனால் அப்பத்தா அந்தப் பக்கம் வந்து பார்த்துவிட்டால்....? பந்திக்காரன் பக்கத்து இலை ஆயாவுக்குச் சீயத்தை வைக்க வந்தவன் இவள் திருதிருப்பதைப் பார்த்துவிட்டு, “என்ன, இன்னொரு சீயம் வேணுமா” என்று கேட்டுவிட்டு இவளுக்கு மேலும் ஒரு சீயம் போட்டுவிட்டுப்போனான். அப்பத்தா வந்து கேட்டால் “நான் கேட்கவில்லை. அவன் தான் என் இலையில் இன்னொரு சீயத்தை வைத்துவிட்டுப் போனான்” என்று சொல்லிக்கொள்ளலாம் என்று ஒரு நம்பிக்கை மனதில். திடீரென்று வெளியே ஒரே அலறல். எல்லோரும் தலையில் அடித்துக்கொண்டு அழுது புலம்பி ஒப்பாரி வைக்கின்றனர். அப்பத்தாவைச் சுற்றி நின்று ஏதேதோ சடங்குகள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. ஆனால் தன் அப்பத்தா மட்டும் எதற்குமே அசைந்து கொடுக்காமல் படுத்துக்கொண்டே இருப்பது இந்தச் சின்னப்பெண்குட்டிக்கு மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. கடைசியில் ஓர் ஓலைப்பாயில் படுக்க வைத்து, எல்லோரும் அழுதபடி அப்பத்தாவை எங்கோ எதற்கோ சிலர் தூக்கிச் செல்கிறார்கள். அவளும் தெருமுக்கு வரை கூடவே ஓடிப்போய்ப் பார்த்தாள். அதற்குள் ஒரு ஐயா அவளைத் திரும்பி வீட்டுக்கு ஓடிவிடும்படி அதட்டினார்கள். வீட்டிற்கு ஓடிவந்தால், எல்லோரும் வீட்டைக்கழுவிக்கொண்டும், தலை முழுகிக் குளித்துக் கொண்டும் இருக்கிறார்கள். இரவு நேரத்திலும் வீட்டில் உள்ள எல்லா ட்யூப் லைட்களும் எரிந்துகொண்டிருந்தன. அவளையும் அழைத்துக்கொண்டுபோய் யாரோ ஒரு அயித்தை (அத்தை) அவள் தலையிலும் தண்ணீரைக் கொட்டினாள். மறுநாள் காலை ஜன்னல் வழியே எட்டிப்பார்த்து தெருவில் பள்ளிக்குப் போகும் யாரோ ஒரு பெண்ணைப் பார்த்து “ஏய், எங்க வூட்டுக்கு விளையாட வர்றியா” எனக் கேட்கிறாள் இந்தக்குட்டி. “அது செத்த வீடு .....செத்துப்போன வீட்டுக்கு நா வரமாட்டேன்” என்று அந்தக்குட்டி சொன்னதும் இந்தக் குட்டிக்குக் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. அதைவிட தன்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் செத்துப்போய் விட்ட அப்பத்தாவிடம் முதல் முறையாகக் கோபம் வந்தது, அந்தக்குட்டிக்கு. இந்த என் தொடரின் அடுத்தடுத்த பகுதிகள் 36 மணி நேர இடைவெளிகளில் வெளியிட திட்டமிட்டுள்ள உத்தேச நேர அட்டவணை: பகுதி-5 .... 28.09.2016 புதன் .............. இரவு 10 மணிக்கு பகுதி-6 .... 30.09.2016 வெள்ளி ......... பகல் 10 மணிக்கு தொடரும் என்றும் அன்புடன் தங்கள், [ வை. கோபாலகிருஷ்ணன் ] இடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 9:45 AM லேபிள்கள்: ’ஹனி’ .... நூல் அறிமுகம் 97 comments: பூந்தளிர் September 27, 2016 at 10:40 AM இன்றும் வித்தியாசமான மூன்று தலைப்புகள்.. சிந்தனைக்கு சிலவரிகள் ஓரளவு கதையை புரிந்துகொள்ள முடிகிறது. ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் September 27, 2016 at 4:26 PM பூந்தளிர் September 27, 2016 at 10:40 AM //இன்றும் வித்தியாசமான மூன்று தலைப்புகள்.. சிந்தனைக்கு சிலவரிகள் ஓரளவு கதையை புரிந்துகொள்ள முடிகிறது.// வாங்கோ ரோஜா, வணக்கம். இந்த என் இன்றைய பதிவுக்கு உன் முதல் வருகை எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. Delete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் September 27, 2016 at 4:29 PM 2011 முதல் 2015 வரை நான் வெளியிட்டுள்ள பெரும்பாலான பதிவுகளுக்கு, முதல் பின்னூட்டமாக ஓர் தாமரை மட்டுமே மலர்வது வழக்கம். அதை ஏனோ இப்போது நினைத்துப் பார்த்தேன் .... என் கண்களில் என்னையுமறியாமல் இரண்டு சொட்டுக் கண்ணீர் வந்தது. :((((( அப்பத்தா கதையில் கடைசி இரண்டு வரிகளில், அந்தப்பெண்குட்டிக்கு தன் அப்பத்தா மீது கோபம் வந்துள்ளது போலவே, எனக்கும் அந்தத் தங்கத் தாமரை மீது கோபம் வருகிறது ..... ’இப்படி என்னிடம்கூட சொல்லாமல் கொள்ளாமல் போய் விட்டாங்களே’ என்று. Delete Replies Reply Thenammai Lakshmanan October 26, 2016 at 4:34 PM நன்றி பூந்தளிர். ஆம் விஜிகே சார் ராஜியை நானும் மிஸ் பண்றேன். :( Delete Replies Reply Reply கோமதி அரசு September 27, 2016 at 11:18 AM மூன்று கதைகளும் நல் முத்துக்கள். அருமையான மாலையாக தொடுத்து கொடுத்து விட்டீர்கள். அருமை. மூன்று கதைகளுக்கும் எடுத்துக் கொண்ட கரு அருமை. வரும் முன் காத்து இருக்கலாம், வந்தபின் அழிப்பது பாவம். குழந்தையை அன்பாய் சொல்லி திருத்தி இருக்கலாம், இப்படியும் சிலர் தங்கள் கோபத்தை பிஞ்சிடம் காட்டுவது பாவம். அப்பத்தாவின் மேல் பாசம் , பக்தி, பயம் எல்லாம் இருந்தாலும் பாசமும் அன்பும் தான் அதிகம் தன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் போய்விட்ட அப்பத்தா மேல் கோபம் வந்தது இயல்பு. பாசம் உள்ள இடத்தில் தான் கோபபட முடியும். நெகிழ்வான கதை. உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள். ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் September 27, 2016 at 6:52 PM கோமதி அரசு September 27, 2016 at 11:18 AM வாங்கோ மேடம், வணக்கம். //மூன்று கதைகளும் நல் முத்துக்கள். அருமையான மாலையாக தொடுத்து கொடுத்து விட்டீர்கள். அருமை.// மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பான வருகைக்கும், மூன்று கதைகளைப்பற்றியும் விரிவாகச் சொல்லியுள்ள கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். Delete Replies Reply Thenammai Lakshmanan October 26, 2016 at 4:34 PM மிக்க நன்றி கோமதி மேம் & விஜிகே சார். Delete Replies Reply Reply ஸ்ரீராம். September 27, 2016 at 12:07 PM நன்முத்துகள் மூன்று. தொடர்கிறேன். ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் September 27, 2016 at 6:53 PM ஸ்ரீராம். September 27, 2016 at 12:07 PM வாங்கோ, ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம். //நன்முத்துகள் மூன்று. தொடர்கிறேன்.// மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸ்ரீராம். Delete Replies Reply Thenammai Lakshmanan October 26, 2016 at 4:35 PM நன்றி ஸ்ரீராம். & விஜிகே சார் :) Delete Replies Reply Reply UmayalGayathri September 27, 2016 at 12:27 PM மூன்று கதைகளும் அருமை முதல் கதை, Y...? ஏன் இப்படி செய்கிறீகள்.... என செய்பவர்களை பார்த்து கேட்க தோணுகிறது... கோமதி அம்மா சொல்லியது போல் // வரும் முன் காத்து இருக்கலாம், வந்தபின் அழிப்பது பாவம்.// 2வது கதையை அவர்கள் பக்கம் வாசித்து இருக்கிறேன்...குட்டியின் கதை மனத்தை வலிக்கச் செய்து விட்டது புரியாத வயதில் இறப்பை குழந்தைகள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என தங்களின் எடுத்துக்காட்டல் கதைப் பகுதி உணர்த்துகிறது. வாழ்த்துகள், பாராட்டுகள்....2 பேருக்கும். டாண்ணு இன்னைக்கு வந்துட்டேன்.... ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் September 27, 2016 at 6:57 PM R.Umayal Gayathri September 27, 2016 at 12:27 PM வாங்கோ மேடம், வணக்கம். //வாழ்த்துகள், பாராட்டுகள்....2 பேருக்கும்.// தங்களின் அன்பான வருகைக்கும், மூன்று கதைகளைப்பற்றியும் விரிவாகச் சொல்லியுள்ள கருத்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். //டாண்ணு இன்னைக்கு வந்துட்டேன்....// அதானே ! ஒரே ஆச்சர்யமாக உள்ளது. (மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டுமோன்னு ஆகாயத்தை அன்னாந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன்.) டாண்ணு (இன்னைக்கு மட்டும்) வந்ததற்கும் என் நன்றிகள். Delete Replies Reply Thenammai Lakshmanan October 26, 2016 at 4:35 PM அஹா உமா விரிவா பின்னூட்டம் போட்டிருக்கீங்க. அப்ப நீங்களும் பாஸ். பின்னூட்டம் போடுவதில் நாந்தான் பெயில் :( நன்றி உமா & விஜிகே சார் :) Delete Replies Reply Reply Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University September 27, 2016 at 1:20 PM மதிப்புரையே நூலைப் போல. அருமை. ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் September 27, 2016 at 7:00 PM Dr B Jambulingam September 27, 2016 at 1:20 PM வாங்கோ முனைவர் ஐயா, வணக்கம். //மதிப்புரையே நூலைப் போல. அருமை.// ஆஹா, மதிப்புரையின் மதிப்பை உணர்ந்து அருமையாகச் சொல்லியுள்ள தங்களின் கருத்துக்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா. Delete Replies Reply Thenammai Lakshmanan October 26, 2016 at 4:36 PM சரியா சொன்னீங்க ஜம்பு சார். ! மதிப்புரையே நூலைப் போல.. அட்சரலட்சம் பெறும் பின்னூட்டம் :) Delete Replies Reply Reply S.P.SENTHIL KUMAR September 27, 2016 at 1:48 PM கொஞ்சம் கதை, கொஞ்சம் மதிப்புரை என்ற தங்களது பாணி பின்னி பெடலெடுக்கிறது. தேர்ந்த விமர்சகரின் விமர்சனம் ஒரு படைப்பை கட்டாயம் படிக்க வைத்துவிடும். தங்கள் எழுத்துக்கும் அந்த வல்லமை ஏராளமாய் உண்டு. தொடர்கிறேன் அய்யா! ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் September 27, 2016 at 8:26 PM S.P.SENTHIL KUMAR September 27, 2016 at 1:48 PM வாங்கோ, வணக்கம். //கொஞ்சம் கதை, கொஞ்சம் மதிப்புரை என்ற தங்களது பாணி பின்னி பெடலெடுக்கிறது. தேர்ந்த விமர்சகரின் விமர்சனம் ஒரு படைப்பை கட்டாயம் படிக்க வைத்துவிடும். தங்கள் எழுத்துக்கும் அந்த வல்லமை ஏராளமாய் உண்டு.// ஒரு பிரபல இளம் பதிவரும், பத்திரிகை ஆசிரியரும், எழுத்துத்துறையிலேயே பலமுகங்களுடன் பணியாற்றி வருபவரும், அற்புதமான எழுத்துக்களால் என்னைக் கவர்ந்துள்ளவருமான தங்களின் வாயால் இதனைக் கேட்க தன்யனானேன். என் ஸ்பெஷல் நன்றிகள். //தொடர்கிறேன் ஐயா!// தங்களின் அன்பான வருகைக்கும், ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் மிகச் சிறப்பான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஸார். Delete Replies Reply Thenammai Lakshmanan October 26, 2016 at 4:37 PM மெய்யாலுமே பின்னிப் பெடல் எடுக்கிறது. பின்னூட்டத்தையே பார்ட் பார்டாக போடுகிறேன் அதனால்தான். செந்தில் சகோ . நன்றி விஜிகே சார் :) Delete Replies Reply Reply ஜீவி September 27, 2016 at 2:34 PM ஆண் குரோமோசோன் Y மிஸ்டர் Y -- பலே! சொர்க்கத்தின் எல்லை நரகம்-- நானும் ஏற்கனவே படித்த நினைவு இருக்கிறது. நரகத்தின் எல்லையும் சொர்க்கம் தான் போலிருக்கு. உயிருடன் அப்பத்தா வாழ்ந்த பொழுது பார்த்துப் பழகியிருந்த உணர்வுகளை கொட்டிய கதை என்று தெரிகிறது. ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் September 27, 2016 at 9:26 PM ஜீவி September 27, 2016 at 2:34 PM //ஆண் குரோமோசோன் Y மிஸ்டர் Y -- பலே!// WHY இதுபோல என்னைச்சித்திரவதை செய்கிறீர்கள் என மிஸ்டர் Y கேட்பதுபோல தலைப்பு வைத்திருக்கும், கதாசிரியர் தங்கத் தலைவிக்கு நானும் உங்களுடன் சேர்ந்து ஒரு ‘பலே’ சொல்லிக்கொள்கிறேன். :) //சொர்க்கத்தின் எல்லை நரகம்-- நானும் ஏற்கனவே படித்த நினைவு இருக்கிறது.// அதில் அவர்களின் எழுத்துப்பாணி, ஒரு சின்ன பெண் குழந்தை செய்யக்கூடிய குழந்தைத்தனத்தினை அப்படியே தத்ரூபமாக பிரதிபலிப்பதாகப் படா ஜோராக இருந்தது. என்னை மிகவும் கவர்ந்தது. :) //நரகத்தின் எல்லையும் சொர்க்கம் தான் போலிருக்கு.// தாங்கள் சொல்வது போலவும் இருக்கலாம்தான். சொர்க்கம் நரகம் இரண்டிலேயுமே நான் இன்னும் எல்லைகளைத் தொட்டது இல்லை என்பதால் எனக்கு இதுபற்றி சரிவரத் தெரியாமல் உள்ளது :) //உயிருடன் அப்பத்தா வாழ்ந்த பொழுது பார்த்துப் பழகியிருந்த உணர்வுகளை கொட்டிய கதை என்று தெரிகிறது.// கரெக்ட். நிச்சயம் அப்படித்தான் இருக்கணும். ’அப்பத்தா’ என்றால் அப்பாவின் அம்மாவாகத்தான் இருக்கும் என்று படிக்கும்போதே புரிந்துகொள்ள முடிந்தது என்னால். எதற்கும் *‘ஆச்சி’* என்ற என் நட்பான வேறொரு பதிவரிடமும் கேட்டு இதனை நான் கன்ஃபார்ம் செய்துகொண்டேன். *’ஆச்சி’* க்கான இணைப்புகள் http://gopu1949.blogspot.in/2015/01/20.html http://gopu1949.blogspot.in/2014/06/blog-post_3053.html பொதுவாக அப்பாவையோ, அம்மாவையோ பெற்றவளை நாம் ‘ பாட்டி’ என்று மட்டுமே சொல்லுவோம். அப்பாவைப் பெத்த ஆத்தா என்பதால் ’அப்பத்தா’ என இவர்கள் தன் கதையில் அழகாகச் சொல்லியிருக்கிறார்கள். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஸார். Delete Replies Reply Thenammai Lakshmanan October 26, 2016 at 4:38 PM உண்மைதான் ஜிவி சார் & விஜிகே சார் :) அழகான புரிதலுக்கு மிக்க நன்றி இருவருக்கும் :) Delete Replies Reply Reply நெல்லைத் தமிழன் September 27, 2016 at 4:48 PM மூன்று கதைகளையும் நன்றாக விமரிசனம் பண்ணியுள்ளீர்கள். நிறைவாகப் பாராட்டியுள்ளீர்கள். அது வெறும் முகஸ்துதிக்காகச் சொன்னதல்ல என்பதை, ஒவ்வொரு கதையிலும் வரும் முக்கியமான வரிகளைப் படித்தபோது தெரிந்துவிட்டது. தான் அடைந்த பாதிப்பை, அப்படியே கதைமூலம் வாசகர்களுக்குக் கடத்தும் வித்தை பெற்றவர்கள்தான் சிறந்த கதை எழுத்தாளர்களாக ஆக முடியும். இரண்டாவது (சொர்க்கத்தின் எல்லை) துன்பியல் என்றால், மூன்றாவது (அப்பத்தா) செட்டி'நாட்டை நினைவுபடுத்தியது. ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் September 27, 2016 at 9:40 PM 'நெல்லைத் தமிழன் September 27, 2016 at 4:48 PM வாங்கோ, வணக்கம். //மூன்று கதைகளையும் நன்றாக விமரிசனம் பண்ணியுள்ளீர்கள். நிறைவாகப் பாராட்டியுள்ளீர்கள். அது வெறும் முகஸ்துதிக்காகச் சொன்னதல்ல என்பதை, ஒவ்வொரு கதையிலும் வரும் முக்கியமான வரிகளைப் படித்தபோது தெரிந்துவிட்டது.// மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. உங்களைப்போல யாராலும் பின்னூட்டமே கொடுக்க இயலாது. நானும் இதனை வெறும் முகஸ்துதிக்காக மட்டும் சொல்லவில்லை. உண்மையாக என் மனம் திறந்து பெரும் மகிழ்ச்சியுடன் சொல்லியுள்ளேனாக்கும். :) //தான் அடைந்த பாதிப்பை, அப்படியே கதைமூலம் வாசகர்களுக்குக் கடத்தும் வித்தை பெற்றவர்கள்தான் சிறந்த கதை எழுத்தாளர்களாக ஆக முடியும்.// அதே.... அதே.... எங்கட ஹனி மேடமும் அதே போலத்தானாக்கும். :) //இரண்டாவது (சொர்க்கத்தின் எல்லை) துன்பியல் என்றால், மூன்றாவது (அப்பத்தா) செட்டி'நாட்டை நினைவுபடுத்தியது.// கதாசிரியர் அவர்களும் ஒருவேளை செட்டிநாட்டுக்காரர்களாக இருக்கக்கூடுமோ என்பது என் யூகம். :))))) தங்களின் அன்பான வருகைக்கும், ஊக்கமும், உற்சாகமும் அளித்திடும் ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். Delete Replies Reply Thenammai Lakshmanan October 26, 2016 at 4:39 PM அஹா மிக்க நன்றி நெல்லைத் தமிழன் & விஜிகே சார் ! Delete Replies Reply Reply ஸ்ரத்தா, ஸபுரி... September 27, 2016 at 5:23 PM மூன்றுமே முத்தான பகிர்வுகள்.... ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் September 27, 2016 at 9:46 PM ஸ்ரத்தா, ஸபுரி... September 27, 2016 at 5:23 PM //மூன்றுமே முத்தான பகிர்வுகள்....// வழக்கமாக இங்கு வருகைதந்து விரிவாக கருத்துச் சொல்லிவந்த எங்கட ஒரிஜினல் ஸ்ரத்தா, ஸபுரி... எங்கே?????????? :( எனினும் மூன்று வரிகளை மட்டும் எழுதியிருக்கும் டூப்ளிகேட் ஸ்ரத்தா, ஸபுரி... அவர்களுக்கும் என் நன்றிகள். Delete Replies Reply ஸ்ரத்தா, ஸபுரி... September 28, 2016 at 10:03 AM //விரும்பினால் பெற்றெடுங்கள். விரும்பாவிட்டால் பாழ்வெளியில் விதைக்காதீர்கள். தரிசாகக் கிடப்பது தவறல்ல. வயலிலேயே கருக அடிப்பதுதான் கொடுமை. வளர்ந்த பின் வெட்டியெறிய நாங்கள் எல்லை மீறிய கிளைகள் அல்ல. நீங்கள் விதைத்த விதைகள். விருட்சமாகியே தீருவோம். // ஹா ஹா.. சந்தடி சாக்குல என்னை டூப்ளிகேட்டுனு சொல்லிட்டீங்களே.. பரவால்ல எங்கட கோபால் ஸார்தானே சொன்னாங்க.. அதுவும் என்னை மீண்டும் இங்கு வரவழக்கவேதான் சொல்லி இருக்காங்கனு நல்லாவே புரியுது...))) இந்தக்கதையில் மிஸ்டர்ஒய்...சொல்லியிருப்பதுபோல கற்பனை பண்ணி இருப்பது. சிறப்பு Delete Replies Reply ஸ்ரத்தா, ஸபுரி... September 28, 2016 at 10:06 AM சொர்க்கத்தின் எல்லை...நகரம்.... குழந்தை தொழிலாளிகள் பற்றிய கதை என்று புரியமுடிகிறது.. //அந்தப்பிஞ்சு உள்ளங்களாகிய அவர்கள் மனதிலும் குழந்தைகளுக்கே உரிய ஆயிரம் ஆயிரம் ஆசைகளும் இருக்கத்தான் செய்யும். அவ்வாறான ஒரு சின்னப் பெண் குழந்தையைப் பற்றிய கதை இது. // மேடம் வித்தியாசமாகத்தான் யோசிக்குறாங்க.. Delete Replies Reply ஸ்ரத்தா, ஸபுரி... September 28, 2016 at 10:12 AM அப்பத்தா கதைபோலவே தோணல உண்மைசம்பவம்போலவே தோணுது //அதைவிட தன்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் செத்துப்போய் விட்ட அப்பத்தாவிடம் முதல் முறையாகக் கோபம் வந்தது, அந்தக்குட்டிக்கு// அப்பத்தாவுக்கே தன் சாவு பற்றி தெரிந்திருக்காதோ..எப்படி அந்த குட்டியிடம் சொல்லி இருக்கமுடியும்.. Delete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் September 28, 2016 at 10:43 AM ஸ்ரத்தா, ஸபுரி... September 28, 2016 at 10:12 AM வாங்கோ, வாங்கோ, வாங்கோ .... வணக்கம். //ஹா ஹா.. சந்தடி சாக்குல என்னை டூப்ளிகேட்டுனு சொல்லிட்டீங்களே.. பரவால்ல எங்கட கோபால் ஸார்தானே சொன்னாங்க.. அதுவும் என்னை மீண்டும் இங்கு வரவழக்கவேதான் சொல்லி இருக்காங்கனு நல்லாவே புரியுது...)))// ஜஸ்ட் மூன்று வார்த்தைகளுடன் முடித்திருந்த டூப்ளிகேட் ’ஸ்ர்த்தா, ஸபுரி’யைத் தேடிக் கண்டு பிடித்துக் கண்டித்துவிட்டு, மேலும் மூன்று விரிவான பின்னூட்டங்கள் கொடுத்துள்ள ’ஒரிஜினல் ஸ்ரத்தா, ஸபுரி...’ வாழ்க ! //இந்தக்கதையில் மிஸ்டர் ஒய் ... சொல்லியிருப்பதுபோல கற்பனை பண்ணி இருப்பது. சிறப்பு// ஆமாம். அவர்களின் எழுத்தும் தலைப்பும் சிறப்பாகவே உள்ளன. //மேடம் வித்தியாசமாகத்தான் யோசிக்குறாங்க..// ஆமாம். அழகாக வித்யாசமாக யோசித்து எழுதி இருக்காங்க. :) //அப்பத்தாவுக்கே தன் சாவு பற்றி தெரிந்திருக்காதே.. எப்படி அந்த குட்டியிடம் சொல்லி இருக்கமுடியும்..// இந்தக்கதையில் அந்தக்குட்டிக்கு முதன்முதலாகத் தன் அப்பத்தா மீது கோபம் வந்ததாகச் சொல்லும் அந்த வரிகள்தான் முத்திரை வரிகளாகத் தோன்றி என்னை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. -=-=-=- தங்களின் மீண்டும் மீண்டும் வருகைக்கும், அனைத்துக் கருத்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. அன்புடன் VGK Delete Replies Reply Thenammai Lakshmanan October 26, 2016 at 4:40 PM குழந்தைதானே மன்னித்துவிடுங்கள் ஸ்ரத்தா ஸபுரி. :) நன்றி விரிவான பின்னூட்டத்துக்கு. நன்றி விஜிகே சார். :) Delete Replies Reply Thenammai Lakshmanan October 26, 2016 at 4:41 PM முத்திரை வரிகள் என்று சொல்லி அக்கதையைச் சிறப்பித்துள்ளீர்கள். நன்றி நன்றி விஜிகே சார் :) Delete Replies Reply Reply ஆல் இஸ் வெல்....... September 27, 2016 at 5:26 PM விரும்பினால் பெற்றெடுங்கள். விரும்பாவிட்டால் பாழ்வெளியில் விதைக்காதீர்கள். தரிசாகக் கிடப்பது தவறல்ல. வயலிலேயே கருக அடிப்பதுதான் கொடுமை. வளர்ந்த பின் வெட்டியெறிய நாங்கள் எல்லை மீறிய கிளைகள் அல்ல. நீங்கள் விதைத்த விதைகள். விருட்சமாகியே தீருவோம். // என்ன ஆணித்தரமான வார்த்தைகள் ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் September 27, 2016 at 9:50 PM ஆல் இஸ் வெல்....... September 27, 2016 at 5:26 PM வாங்கோ, வண்க்கம். **விரும்பினால் பெற்றெடுங்கள். விரும்பாவிட்டால் பாழ்வெளியில் விதைக்காதீர்கள். தரிசாகக் கிடப்பது தவறல்ல. வயலிலேயே கருக அடிப்பதுதான் கொடுமை. வளர்ந்த பின் வெட்டியெறிய நாங்கள் எல்லை மீறிய கிளைகள் அல்ல. நீங்கள் விதைத்த விதைகள். விருட்சமாகியே தீருவோம்.** //என்ன ஆணித்தரமான வார்த்தைகள்// ஆம். இருப்பினும், இவை பசுமரத்தாணி போல அனைவர் மனதிலும் பதிய வேண்டும். தங்களின் அன்பான வருகைக்கும், ஆணித்தரமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். Delete Replies Reply Thenammai Lakshmanan October 26, 2016 at 4:42 PM நன்றி ஆல் இஸ் வெல். என்ன சொல்றதுன்னு தெரில. நன்றி விஜிகே சார் Delete Replies Reply Reply Unknown September 27, 2016 at 5:34 PM தொடர் பதிவுகள் சுவாரசியமாக போய்க்கொண்டிருக்கிறது... வாழ்த்துகள் ஸார். ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் September 27, 2016 at 9:51 PM ஸ்ரீனி வாசன் September 27, 2016 at 5:34 PM வாங்கோ, வணக்கம். //தொடர் பதிவுகள் சுவாரசியமாக போய்க்கொண்டிருக்கிறது... வாழ்த்துகள் ஸார்.// அப்படியா! மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. Delete Replies Reply Thenammai Lakshmanan October 26, 2016 at 4:42 PM நன்றி ஸ்ரீனிவாசன் சார் & விஜிகே சார் Delete Replies Reply Reply ப்ராப்தம் September 27, 2016 at 5:37 PM புது புது கண்ணோட்டத்தில் வித்யாசமான கதைகளை மேலோட்டமாக தெரிந்து கொள்ள முடிகிறது... ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் September 27, 2016 at 9:56 PM ப்ராப்தம் September 27, 2016 at 5:37 PM வாங்கோ சாரூஊஊஊ, வணக்கம். //புது புது கண்ணோட்டத்தில் வித்யாசமான கதைகளை மேலோட்டமாக தெரிந்து கொள்ள முடிகிறது...// புரிகிறது. நீ இப்போது என்னிடம் என்ன சொல்ல வருகிறாய் என்பது, எனக்கு எல்லாமே நல்லாவே புரிகிறது. :) உன் அன்பான வருகைக்கும், புதுப்புதுக் கண்ணோட்டத்தில் வித்யாசமான கதைகளை மேலோட்டமாகத் தெரிந்து கொள்ள முடிந்ததற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சாரூ. Delete Replies Reply Thenammai Lakshmanan October 26, 2016 at 4:43 PM சாரு சாரிடம் புக் வாங்கி வாசியுங்கள் முழுமையாகப் புரிந்து கொள்ளலாம். :) வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி ப்ராப்தம் & விஜிகே சார் :) Delete Replies Reply Reply happy September 27, 2016 at 5:41 PM கோபு பெரிப்பா இவ்வளவு வேக வேகமா ஒருநா விட்டு ஒருநா எப்படி பதிவு போட முடியறது... அதுமட்டுமில்லை.. கமெண்ட் போட்றவா எல்லாருக்குமே பெரிய பெரிய பதிலா எப்படி எழுதறேள்...உங்க சுறுசுறப்ப பாத்தா பொறாமையா இருக்கு . ReplyDelete Replies Thenammai Lakshmanan September 27, 2016 at 7:52 PM அத சொல்லுங்க ஹேப்பி. நானும் உங்க பெரியப்பா பின்னாடியும் - எங்க விஜிகே சார் - மத்த வலைத்தள நட்புகள் பின்னேயும் தொடர்ந்து ஓட முடில. யப்பா கமெண்ட்ஸ் ல என்னா வேகம் என்னா வேகம். அசத்துறாங்க. பொறாமையா இருக்கு. இவ்ளோ பாசத்துக்கும் என்ன கைமாறு பண்ணப் போறேனோ. கடனாளியாத்தான் திரியப் போறேன் :) Delete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் September 27, 2016 at 11:12 PM happy September 27, 2016 at 5:41 PM வாம்மா, என் செல்லக்குழந்தாய் ஹாப்பி, வணக்கம். //கோபு பெரிப்பா இவ்வளவு வேக வேகமா ஒருநா விட்டு ஒருநா எப்படி பதிவு போட முடியறது... அதுமட்டுமில்லை.. கமெண்ட் போட்றவா எல்லாருக்குமே பெரிய பெரிய பதிலா எப்படி எழுதறேள்...// எல்லாம் உன்னால் மட்டும்தான்..டா க்கண்ணு. குழந்தைபோன்ற பால் வடியும் உன் சிரித்த முகத்தை அடிக்கடி என் மனதில் நினைத்துக்கொள்வேன். உடனே எனக்குப் பேரெழுச்சியும், புதுத்தெம்பும் ஏற்பட்டு விடுகிறது. அதனால் மட்டுமே இந்த மிகச் சாதாரணமானவனால், கொஞ்சமாவது இதுபோன்ற சாதனைகளை எட்ட முடிகிறது. //உங்க சுறுசுறப்ப பாத்தா பொறாமையா இருக்கு// இப்போ உன்னைப்பார்த்தால்தான் எனக்கு மிகவும் பொறாமையாக உள்ளது. என்னே உன் அதிர்ஷ்டம் பாரு .... மஹா மஹா அதிர்ஷ்டமான பெண்குட்டி நீ. இந்தப்பதிவினில் யாருக்குமே பதில் அளிக்காத நம் ஹனி மேடம், உனக்கு மட்டும், ஸ்பெஷலாக பதில் அளித்துள்ளார்கள் பாரு. இதுபோன்ற அதிர்ஷ்டம் யாருக்குக் கிடைக்கும்? >>>>> Delete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் September 27, 2016 at 11:15 PM கோபு >>>>> குழந்தை ஹாப்பி (2) ஹனி மேடம் என்ன நம்மைப்போல சாதாரணமானவர்களா? பரம்பரைப் பணக்காரக் கோடீஸ்வரியாக்கும். செட்டிநாட்டில் மிகப்பெரிய மாளிகை பங்களா போன்ற, அவர்கள் வீட்டின் கலை நுணுக்கங்கள் மிக்க, அசல் தேக்கினால் ஆன ஒவ்வொரு கதவும், ஒவ்வொரு தூணும், ஒவ்வொரு ஜன்னல்களும் பல லக்ஷ ரூபாய்களுக்கு மேல் இருக்கும். கொல்லையோடு வாசல் மிகப் பிரும்மாண்டமான வீடாக்கும். செட்டிநாட்டு வீடுகளைப்பற்றியே இவர்கள் நிறைய பதிவுகள் கொடுத்திருக்காங்கோ. உனக்குச் சந்தேகமானால் இதோ இந்த ஒரிரு பதிவுகளை மட்டுமாவது போய்ப்பாரு: http://honeylaksh.blogspot.in/2014/12/chettinadu-houses.html http://honeylaksh.blogspot.in/2015/02/blog-post_10.html அப்படியே பிரமித்துப்போய் விடுவாய். >>>>> Delete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் September 27, 2016 at 11:20 PM கோபு >>>>> குழந்தை ஹாப்பி (3) அது மட்டுமா, நம் ஹனி மேடம் மிகவும் படித்தவர்கள். மஹா மஹா கெட்டிக்காரங்க. சகலகலா வல்லி. கவிதை, கதை, கட்டுரை, கோலங்கள், பக்தி பற்றிய ஆன்மிக விஷயங்கள், கலை, கட்டடம், ஷேர் மார்க்கெட், சமையல் குறிப்புகள் என எல்லாவற்றையும் பற்றித் தெரிஞ்சவங்க. பல வார/மாத இதழ்களிலும் எழுதியிருக்காங்க. வலைத்தளம், ஃபேஸ்புக், ட்விட்டர், மற்ற இணைய இதழ்கள், சமூக வலைத்தளங்கள் போன்ற அனைத்திலும் ஏராளமாக எழுதிக்கொண்டே இருக்காங்க. இதுவரை ஐந்து நூல்களும் வெளியிட்டுள்ளார்கள். ஹனி மேடம், சாதாரணப் பெண்மணியே அல்ல. சாதிக்கப் பிறந்தவங்க. அனைத்திலும் ஆர்வமுள்ள அதி அற்புதமான திறமைசாலியாக்கும். அனைவருடனும் நட்புடன் பழகும் நல்ல குணங்கள் உள்ளவரும்கூட. மொத்தத்தில் நிமிர்ந்த நடை + நேர்கொண்ட பார்வை + தெளிந்த அறிவு + அசாத்ய துணிச்சல் + ஆளுமை சக்தி + அன்பான உள்ளம் = நம் ஹனி மேடம். இவ்வளவு பெருமைகள் வாய்ந்த இவர்கள் இன்று உன் ஒருத்தியின் பின்னூட்டத்திற்கு மட்டுமே பதில் அளித்துள்ளார்கள் என்றால், என் செல்லக்குழந்தையாகிய நீ எத்தனை பெரிய அதிர்ஷ்டசாலியாக இருக்கணும். :))))) உன்னைக்கண்டால் எனக்கும் தான் மிகவும் பொறாமையாக இருக்குது...டா செல்லம். -=-=-=-=- உன் வருகைக்கு நன்றி....டா ஹாப்பி. Delete Replies Reply happy September 28, 2016 at 9:56 AM கோபு பெரிப்பா... தேனம்மை அவர்கள் என்கமெண்டுக்கு மட்டுமே பதில் சொல்லி இருக்காங்க. என்னை யாருக்குமே தெரியாதே பெரிப்பா..உங்க பதிவுக்கு மட்டும்தானே வந்துண்டிருக்கேன்.. உங்களால் கிடைச்சிருக்கு பெருமைதான்இது.. தேனம்மை மேடம் நன்றிகள் பெரிப்பாவுக்கு நன்றி தாங்க்ஸெல்லாம் சொல்லலாமா...தெரியலியே.. Delete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் September 28, 2016 at 10:30 AM happy September 28, 2016 at 9:56 AM வாடா .... கண்ணு, ஹாப்பி. உன் மீண்டும் மீண்டும் வருகை எனக்கு ஒரே ஹாப்பியாக உள்ளது...டா. //கோபு பெரிப்பா... தேனம்மை அவர்கள் என்கமெண்டுக்கு மட்டுமே பதில் சொல்லி இருக்காங்க.// யூ ஆர் ஒன்லி தி லக்கியெஸ்ட் ஆஃப் ஆல், ஹியர். //என்னை யாருக்குமே தெரியாதே பெரிப்பா..// அதனால் என்ன? உன்னை நான் அறிவேன் ... என்னை நீ அறிவாய் ... நம்மை நாம் அறிவோம் ... அதுவே போதுமேடா செல்லம். //உங்க பதிவுக்கு மட்டும்தானே வந்துண்டிருக்கேன்.. உங்களால் கிடைச்சிருக்கும் பெருமைதான் இது..// அப்படியெல்லாம் நினைக்காதே .... சொல்லாதே. நான் உன் நலம் விரும்பியாக இருப்பதால், என் மனம் நிறைந்த ஆசிகளால், உனக்கு அடுத்தடுத்து அனைத்துப் பெருமைகளும் ஆட்டோமேடிக் ஆக வந்து சேரும். கவலையே படாதே. ஸ்ரீ பெருமாள் அருளால் விரைவில் நமக்கான அந்த சொர்க்க வாசலும் திறக்கும். :) //தேனம்மை மேடம் நன்றிகள்.// ஹனி மேடம் சார்பில் உன் நன்றிகளுக்கு என் நன்றிகள்.....டா, செல்லம். //பெரிப்பாவுக்கு நன்றி தாங்க்ஸெல்லாம் சொல்லலாமா...தெரியலியே..// எனக்கு அதெல்லாம் சொல்ல வேண்டாம். சீக்கரமாக நல்லதொரு இனிய செய்தியினை மெயில் மூலம் சொல்லு .... அதுவே எனக்குப்போதும்....டா. Delete Replies Reply Thenammai Lakshmanan October 26, 2016 at 4:48 PM அஹா ! ஹேப்பி இன்று முதல் ஹேப்பி. இல்ல அன்னிலேருந்தே ஹேப்பி. திரும்ப வர தாமதமாயிடுச்சு மன்னிச்சுக்கோம்மா. விஜிகே சார் நான் மதியதர வர்க்கத்தைச் சேர்ந்த சாதரணப் பெண். எல்லாம் முன்னோர் கொடுத்தது. என்னுதுன்னு எதுவும் இல்ல.எழுதணும்கிற ஆர்வமும் திறமையும் விடாமுயற்சியுமே நமது சொத்து.அது கூட அவங்ககிட்டேருந்து ஜீன்ஸ்ல வந்ததா இருக்கலாம். :) பெரிய பெரிய புகழ் வார்த்தைகளுக்கு நான் தகுதியானவளா தெரியல. உங்க பேரன்புக்கும் என் மேல் வைத்திருக்கும் மதிப்புக்கும் நன்றி சார். :) Delete Replies Reply Reply Yaathoramani.blogspot.com September 27, 2016 at 9:05 PM எப்படித் தேனம்மை அவர்களால் இவ்வளவு பதிவுகள் எழுத முடிகிறது இந்தத் தொடர்ப்பதிவின் முடிவில் அவர்களிடம் அவர்களிடன் அன்றாடநேர நிர்வாகம் குறித்து ஒரு விரிவான பேட்டி எடுத்துப் போட்டால் கூட என் போன்றவர்களுக்குப் பயன்படுமே ? ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் September 27, 2016 at 11:35 PM Ramani S September 27, 2016 at 9:05 PM வாங்கோ Mr. RAMANI Sir, வணக்கம். //எப்படித் தேனம்மை அவர்களால் இவ்வளவு பதிவுகள் எழுத முடிகிறது? இந்தத் தொடர்ப்பதிவின் முடிவில் அவர்களிடம் அவர்களிடன் அன்றாடநேர நிர்வாகம் குறித்து ஒரு விரிவான பேட்டி எடுத்துப் போட்டால் கூட என் போன்றவர்களுக்குப் பயன்படுமே ?// இதையேதான் நான் எனக்குள் நினைச்சேன். நீங்க அதையே இங்கு சொல்லிட்டீங்க. நீங்களே அவர்களைப் பேட்டி கண்டு உங்கள் பதிவினில் வெளியிட்டால், அது நிறைய பேர்களைச் சென்றடையும் வாய்ப்பு உண்டு. இதனால் உங்களுக்கு மட்டுமல்ல .. நம் எல்லோருக்குமே மிகவும் பயன்படும், ஸார். தயவுசெய்து செய்யுங்கோ, ப்ளீஸ். Delete Replies Reply Thenammai Lakshmanan October 26, 2016 at 4:50 PM ரமணி சார். ஓரிரு நாள் இரவில் தூங்குவதில்லை. ப்ரீ போஸ்ட் போட்டு வைச்சிட்டு இருப்பேன் :) மேலும் எல்லாப் பதிவும் செறிவானதல்ல. சில ஃபுட் ஃபோட்டோகிராஃபி, சில விநாயகர், சில பூக்கள், சில குழந்தைகள், சில கவிதைகள், சில விமர்சனம், சிலது சாட்டர்டே போஸ்ட், சிலது உணவுக் குறிப்புகள் , சில சிறுகதை, கட்டுரை , போட்டி பற்றிய பகிர்வுகள் என்று கலந்து கட்டி அடிக்கிறேன். மொத்தத்தில் நான் ஒரு ப்லாக் அடிக்ட். அவ்ளோதான் :) நன்றி ரமணிசார் & விஜிகே சார் :) Delete Replies Reply Reply Yaathoramani.blogspot.com September 27, 2016 at 9:09 PM மூன்றும் குழ்ந்தைகள் குறித்தானதுதான் என்றாலும் கூட மூன்று நிலைகள் குறித்தும் அந்த நிலைகளுக்கேயான பிரச்சனைகளை மிகச் சரியாகத் தொட்டுச் சென்றவிதம் அருமை விமர்சித்த விதமும்... பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள் ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் September 27, 2016 at 11:38 PM Ramani S September 27, 2016 at 9:09 PM //மூன்றும் குழ்ந்தைகள் குறித்தானதுதான் என்றாலும் கூட மூன்று நிலைகள் குறித்தும் அந்த நிலைகளுக்கேயான பிரச்சனைகளை மிகச் சரியாகத் தொட்டுச் சென்றவிதம் அருமை. விமர்சித்த விதமும்... பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்// தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும், நல்வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஸார். Delete Replies Reply Thenammai Lakshmanan October 26, 2016 at 4:52 PM ஆம் ரமணி சார். பிறக்கப் போகும் குழந்தை, குழந்தைத் தொழிலாளியான குழந்தை, மற்றும் பள்ளி செல்லும் பருவத்தில் அறிந்தும் அறியாமலும் வீட்டில் நிகழும் நிகழ்வுக்கு சாட்சியாக நிற்கும் ஒரு குழந்தை - பற்றிய பதிவுகள் இவை. நன்றி கருத்துக்கு :) நன்றி விஜிகே சார் Delete Replies Reply Reply வை.கோபாலகிருஷ்ணன் September 28, 2016 at 8:31 AM அன்புடையீர், அனைவருக்கும் வணக்கம். மொத்தம் ஆறு பகுதிகள் கொண்ட இந்த என் மிகச்சிறிய தொடரில், இதுவரை என்னால் வெளியிடப்பட்டுள்ள நான்கு பகுதிகளில், ஏதேனும் ஒருசில பகுதிகளுக்காவது அன்புடன் வருகை தந்துள்ள கீழ்க்கண்ட உங்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். Position as on 28.09.2016 ..... 8 AM (IST) ============================================ திருவாளர்கள்: ================= 01) எஸ். ரமணி அவர்கள் 02) ப. கந்தசாமி அவர்கள் 03) தி. தமிழ் இளங்கோ அவர்கள் 04) ஸ்ரீராம் அவர்கள் 05) முனைவர் ஜம்புலிங்கம் அவர்கள் 06) வே. நடன சபாபதி அவர்கள் 07) ஜீவ.யாழ்.காசி.லிங்கம் அவர்கள் 08) ஜீவி அவர்கள் 09) துளசிதரன் தில்லையக்காது அவர்கள் 10) ‘தளிர்’ சுரேஷ் அவர்கள் 11) யாதவன் நம்பி அவர்கள் 12) ஸ்ரத்தா, ஸபுரி... அவர்கள் 13) ஆல்-இஸ்-வெல் அவர்கள் 14) ஸ்ரீனி வாசன் அவர்கள் 15) வெங்கட் நாகராஜ் அவர்கள் 16) நெல்லைத்தமிழன் அவர்கள் 17) பரிவை சே. குமார் அவர்கள் 18) S P செந்தில் குமார் அவர்கள் திருமதிகள்: ================= 19) மனோ சுவாமிநாதன் அவர்கள் 20) கோமதி அரசு அவர்கள் 21) ஜெயந்தி ஜெயா அவர்கள் 22) ‘பூந்தளிர்’ ராஜாத்தி-ரோஜாப்பூ அவர்கள் 23) ஷாமைன் பாஸ்கோ அவர்கள் 24) ‘ப்ராப்தம்’ சாரூஜி அவர்கள் 25) காமாக்ஷி மாமி அவர்கள் 26) உமையாள் காயத்ரி அவர்கள் 27) ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள் 28) ஞா. கலையரசி அவர்கள் 29) தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள் செல்வி: ================= 30) ‘ஹாப்பி’ அவர்கள் -oOo- நன்றியுடன் VGK ReplyDelete Replies Thenammai Lakshmanan October 26, 2016 at 4:56 PM நன்றி ரமணி சார், கந்தசாமி சார், இளங்கோ சார், ஸ்ரீராம், ஜம்பு சார், நடன சபாபதி சார், யாழ் சகோ, ஜிவி சார், துளசி சகோ, கீத்ஸ், சுரேஷ் சகோ, யாதவன் சகோ,ஸ்ரத்தா ஸபுரி, ஆல் இஸ் வெல், ஸ்ரீனிவாசன் சார், வெங்கட் சகோ, நெல்லைத் தமிழன் சார், குமார் சகோ,செந்தில் சகோ, மனோ மேம், கோமதி மேம், ஜெயந்தி, பூந்தளிர், ஷாமைன் மேம், ப்ராப்தம், காமாக்ஷி மேம், உமா, ராஜலெக்ஷ்மி மேம், கலையரசி, ஹேப்பி :) & விஜிகே சார் :) Delete Replies Reply Reply வை.கோபாலகிருஷ்ணன் September 28, 2016 at 8:37 AM Position as on 28.09.2016 ..... 8 AM (IST) =============================================== மொத்தம் ஆறு பகுதிகள் கொண்ட இந்த என் மிகச்சிறிய தொடரில், இதுவரை என்னால் வெளியிடப்பட்டுள்ள நான்கு பகுதிகளுக்கும் (100%) அன்புடன் வருகை தந்துள்ள திருவாளர்கள்:- ================ 1) S. ரமணி அவர்கள் 2) ஸ்ரீராம் அவர்கள் 3) ஜீவி அவர்கள் 4) ஸ்ரத்தா, ஸபுரி அவர்கள் 5) ஆல் இஸ் வெல் அவர்கள் திருமதிகள்:- ================ 6) ’ப்ராப்தம்’ சாரூஜி அவர்கள் 7) ‘பூந்தளிர்’ ராஜாத்தி-ரோஜாப்பூ அவர்கள் 8) கோமதி அரசு அவர்கள் 9) உமையாள் காயத்ரி அவர்கள் செல்வி:- ================ 10) கொழுகொழு மொழுமொழு, அமுல் பேபி சிரித்தமுகச் சிங்காரி, ’ஹாப்பி’ அவர்கள் ஆகியோருக்கு என் கூடுதல் ஸ்பெஷல் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தத் தொடரின் நிறைவுப்பகுதியில் மீண்டும் ஒருமுறை இதுபோல புள்ளி விபரங்கள் தரப்படும். அன்புடன் VGK ReplyDelete Replies Thenammai Lakshmanan October 26, 2016 at 4:57 PM மிக்க நன்றி மீண்டும் அனைவருக்கும் :) அன்பு வாழ்த்துகள். தொடர்ந்த ஊக்குவிப்புக்கு நன்றி விஜிகே சார் :) Delete Replies Reply Reply Unknown September 28, 2016 at 10:24 AM தேனம்மை மேடம் பற்றி நிறைய தகவல்கள் தெரிஞ்சுக்கணுமே முடிஞ்சது. வித்தியாசமான தலைப்புகளில் வித்தியாசமான கதைகளையும் எழுதிவறாங்க. வாழ்த்துகளும் பாராட்டுகளையும் ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் September 28, 2016 at 11:00 AM shamaine bosco September 28, 2016 at 10:24 AM வாங்கோ மேடம், வணக்கம். நல்லா இருக்கீங்களா? பிள்ளைகளுக்கெல்லாம் இப்போ எக்ஸாம் டயமா? //தேனம்மை மேடம் பற்றி நிறைய தகவல்கள் தெரிஞ்சுக்க முடிஞ்சுது.// மிகவும் சந்தோஷம். //வித்தியாசமான தலைப்புகளில் வித்தியாசமான கதைகளையும் எழுதிவறாங்க. வாழ்த்துகளும் பாராட்டுகளையும் சொல்லிக்கொள்கிறேன்// தங்களின் அன்பான வருகைக்கும், ஹனி மேடத்தை வாழ்த்திப் பாராட்டியுள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். - அன்புடன் கிருஷ்ணா(ஜா)ஜி. :) Delete Replies Reply Thenammai Lakshmanan October 26, 2016 at 4:57 PM நன்றி ஷாமைன் மேம் & விஜிகே சார் Delete Replies Reply Reply காமாட்சி September 28, 2016 at 6:43 PM இன்றுதான் இப்பதிவைப் பார்க்க முடிந்தது. அப்பத்தா கதை படிக்கும்போது என் பாட்டியின் நினைவு வந்தது. பிஞ்சுக்குழந்தையைப் படுத்தியது மனதில் துயரமாகிவிட்டது. கதைகளானாலும் கம்மெதிரில் நடப்பதுபோல ஒரு பிரமை. அன்புடன் ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் September 28, 2016 at 7:07 PM காமாட்சி September 28, 2016 at 6:43 PM வாங்கோ மாமி, நமஸ்காரங்கள். //இன்றுதான் இப்பதிவைப் பார்க்க முடிந்தது.// அதனால் என்ன? பரவாயில்லை. //அப்பத்தா கதை படிக்கும்போது என் பாட்டியின் நினைவு வந்தது.// எனக்கு என் பெரியம்மா (அம்மாவின் அக்கா) ஞாபகம் வந்தது. //பிஞ்சுக்குழந்தையைப் படுத்தியது மனதில் துயரமாகிவிட்டது. கதைகளானாலும் நம்மெதிரில் நடப்பதுபோல ஒரு பிரமை. அன்புடன்// ஆமாம். தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மாமி. Delete Replies Reply Thenammai Lakshmanan October 26, 2016 at 4:58 PM நன்றி காமாட்சி மேம் & விஜிகே சார் ! Delete Replies Reply Thenammai Lakshmanan October 26, 2016 at 4:58 PM நன்றி காமாட்சி மேம் & விஜிகே சார் Delete Replies Reply Reply வெங்கட் நாகராஜ் September 28, 2016 at 8:14 PM இப்பதிவில் குறிப்பிட்டு இருக்கும் இரண்டாவது கதை படித்த நினைவு..... மற்ற கதைகளையும் படிக்க வேண்டும். ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் September 28, 2016 at 8:21 PM வெங்கட் நாகராஜ் September 28, 2016 at 8:14 PM வாங்கோ வெங்கட்ஜி, வணக்கம். //இப்பதிவில் குறிப்பிட்டு இருக்கும் இரண்டாவது கதை படித்த நினைவு..... மற்ற கதைகளையும் படிக்க வேண்டும்.// மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. Delete Replies Reply Thenammai Lakshmanan October 26, 2016 at 4:59 PM நன்றி வெங்கட் சகோ & விஜிகே சார். Delete Replies Reply Reply வே.நடனசபாபதி September 29, 2016 at 12:42 PM வழக்கம் போலவே நூலாசிரியரின் கதைகளை சுருக்கி சாரு பிழிந்து தந்திருக்கிறீர்கள். ‘நான் மிஸ்டர் Y’ என்ற கதையில் கருக்கலைப்பு செய்பவர்களின் மன நிலையிலிருந்து பார்க்காமல் கலைக்கப்படும் கரு வின் கோணத்திலிருந்து அதுவே பேசுவதுபோல் கதையை சொல்லியிருப்பது புதிய உத்தி. // எங்களை அழித்தொழிக்கவோ, அறுத்தெரியவோ உங்களுக்கு உரிமையில்லை. விதைத்தது நீங்கள் தானே .... அல்லது உங்களின் முன்னோர் ஒருவரின் மரபணுத் தொடரின் மிச்சங்கள்தானே நாங்கள். // என்று அந்த Y சொல்வது சிந்திக்க வைக்கிறது. ‘ஆக்கபட்ட பொருள் அனைத்தும் அரசாங்கத்துக்கு சொந்தம்’ என்ற பராசக்தியின் உரையாடல் இங்கே நினைவுக்கு வருகிறது. சொர்க்கத்தின் எல்லை நரகம் என்ற கதையில் தப்பு செய்த அந்த குழந்தையை அந்த வீட்டு எஜமானி இப்படியா அடித்து நொறுக்குவாள் என்று நீங்கள் சொல்லும்போது கதையை படிக்காமலே கண்ணீர் வருகிறது. // குட்டி கத்தலை. ஆர்பாட்டம் பண்ணலை. ஒருநாள் சந்தோஷத்தை நெனைச்சுக்கிட்டது.// என்ற வரிகள் அந்த தற்காலிக ‘சந்தோஷத்தை’ பெற அந்த குழந்தை தொழிலாளி இந்த துன்பம் படவேண்டுமா என்ற எண்ணத்தை தூண்டுகின்றன. அப்பத்தாவைப் பற்றிய வர்ணனைகளும், அந்த வீட்டில் அன்று நடக்கும் கூத்துக்களும் மிக அழகாக, மிகவும் சூப்பராக வர்ணிக்கப்பட்டுள்ளன. வெரி எக்ஸலண்ட் ரைட்டிங் ! என்று கதையின் எழுத்து நடைக்கு தரும் தாங்கள் தந்திருக்கும் சான்றிதழ். ஒன்றே அதை படிக்கும் ஆவலை தூண்டியுள்ளது என்பதுதான் உண்மை. //பந்திக்காரனைக் கூப்பிட்டு இன்னொரு சீயம் கேட்கத்தான் ஆசை. ஆனால் அப்பத்தா அந்தப் பக்கம் வந்து பார்த்துவிட்டால்....? // // அப்பத்தா வந்து கேட்டால் “நான் கேட்கவில்லை. அவன் தான் என் இலையில் இன்னொரு சீயத்தை வைத்துவிட்டுப் போனான்” என்று சொல்லிக்கொள்ளலாம் என்று ஒரு நம்பிக்கை மனதில்.// போன்ற வரிகள் இறப்பைப் பற்றி அறியாத ஒரு குழந்தையின் வெள்ளந்தியான நிலையை உண்மையிலே தாங்கள் சொல்லியிருப்பது போல் ‘மிகவும் சூப்பராக வர்ணித்திருக்கிறார்’ திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள். அவருக்கும் அவரது கதைகளை திறனாய்வு செய்து இரசிக்க வைத்த தங்களுக்கும் பாராட்டுக்கள்! ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் September 29, 2016 at 1:44 PM வே.நடனசபாபதி September 29, 2016 at 12:42 PM வாங்கோ ஸார், வணக்கம் ஸார். //வழக்கம் போலவே நூலாசிரியரின் கதைகளை சுருக்கி (சாரு) சாறு பிழிந்து தந்திருக்கிறீர்கள். // மிக்க மகிழ்ச்சி, ஸார். என் நெருங்கிய நட்பு வட்டத்தில் ’சாரு’ என்று ஒருத்தி இருக்கிறாள். அவளை நான் சாரூஊஊஊ எனச் செல்லமாக நீட்டி முழக்கி அழைப்பதும் உண்டு. அவளின் நற்குணங்களையும், நற்செயல்களையும் நினைக்கும் போதெல்லாம் எனக்கு கரும்புச்சாறு அருந்துவதுபோல இனிமையான நினைவலைகள் என் மனதில் ஏற்படுவது உண்டு. அதனால் என்னைப்பொறுத்தவரை சாரு/சாறு ஆகிய இரண்டுமே ஒன்றுதான். :) >>>>> Delete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் September 29, 2016 at 1:47 PM VGK >>>>> வே.நடனசபாபதி (2) //‘நான் மிஸ்டர் Y’ என்ற கதையில் கருக்கலைப்பு செய்பவர்களின் மன நிலையிலிருந்து பார்க்காமல் கலைக்கப்படும் கரு வின் கோணத்திலிருந்து அதுவே பேசுவதுபோல் கதையை சொல்லியிருப்பது புதிய உத்தி. // ஆம். அதுதான் இந்தக்கதையில் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. மேலும் அந்த மிஸ்டர் Y தனக்கு முன் இதே வீட்டினில் (கருவறையினில்) இருந்து கொல்லப்பட்டு மடிந்துள்ள தன் அக்கா பட்ட கஷ்டங்களையும் மிக அருமையாகவே வர்ணிக்கிறான். நான் அவற்றையெல்லாம் என் மதிப்புரையில் விரிவாகச் சொல்லவில்லை. **எங்களை அழித்தொழிக்கவோ, அறுத்தெரியவோ உங்களுக்கு உரிமையில்லை. விதைத்தது நீங்கள் தானே .... அல்லது உங்களின் முன்னோர் ஒருவரின் மரபணுத் தொடரின் மிச்சங்கள்தானே நாங்கள்.** என்று அந்த Y சொல்வது சிந்திக்க வைக்கிறது. ‘ஆக்கபட்ட பொருள் அனைத்தும் அரசாங்கத்துக்கு சொந்தம்’ என்ற பராசக்தியின் உரையாடல் இங்கே நினைவுக்கு வருகிறது. // ஆம். எனக்கும் அந்த பராசக்தி படத்தின் வசனங்களே நினைவுக்கு வந்தன. நம் இருவரின் எண்ணங்களும் இதில் ஒரே மாதிரியான நேர்க்கோட்டில் அமைந்துள்ளதை நினைக்க ஆச்சர்யமாக உள்ளது. :) >>>>> Delete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் September 29, 2016 at 1:49 PM VGK >>>>> வே.நடனசபாபதி (3) சொர்க்கத்தின் எல்லை நரகம் என்ற கதையில் தப்பு செய்த அந்த குழந்தையை அந்த வீட்டு எஜமானி இப்படியா அடித்து நொறுக்குவாள் என்று நீங்கள் சொல்லும்போது கதையை படிக்காமலே கண்ணீர் வருகிறது. ஆமாம் ஸார். எனக்கும் என் சின்ன வயதில், என் குழந்தைப்பருவத்தில் சிற்சில நிறைவேறாத ஆசைகள் இதுபோலவே ஆனால் வேறுவிதமாக இருந்தது உண்டு. அதனாலோ என்னவோ, என்னையும் என் மனதையும் இந்தக்கதை மிகவும் பாதித்து விட்டது. >>>>> Delete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் September 29, 2016 at 1:55 PM VGK >>>>> வே.நடனசபாபதி (4) **குட்டி கத்தலை. ஆர்பாட்டம் பண்ணலை. ஒருநாள் சந்தோஷத்தை நெனைச்சுக்கிட்டது.** என்ற வரிகள் அந்த தற்காலிக ‘சந்தோஷத்தை’ பெற அந்த குழந்தை தொழிலாளி இந்த துன்பம் படவேண்டுமா என்ற எண்ணத்தை தூண்டுகின்றன. இவை என்னை மிகவும் கண்கலங்க வைத்த வரிகள். பின் விளைவுகள் ஏதும் தெரியாமல், யோசிக்காமல், அது தன் குழந்தை குணத்தையும் குழந்தைத் தனத்தையும் காட்டிவிட்டது, என்றுதான் நாமும் இங்கு எடுத்துக்கொள்ள வேண்டும். >>>>> Delete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் September 29, 2016 at 1:58 PM VGK >>>>> வே.நடனசபாபதி (5) ****அப்பத்தாவைப் பற்றிய வர்ணனைகளும், அந்த வீட்டில் அன்று நடக்கும் கூத்துக்களும் மிக அழகாக, மிகவும் சூப்பராக வர்ணிக்கப்பட்டுள்ளன. வெரி எக்ஸலண்ட் ரைட்டிங் !**** என்று கதையின் எழுத்து நடைக்கு தரும், தாங்கள் தந்திருக்கும், சான்றிதழ் ஒன்றே அதை படிக்கும் ஆவலை தூண்டியுள்ளது என்பதுதான் உண்மை.// ஆமாம், ஸார். கதையை ஒரு எழுத்தாளர் எப்படி வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம். அது நமக்கு முக்கியமே இல்லை. அந்தக்கதையை எப்படி அழகாக ஆங்காங்கே தகுந்த வர்ணனைகளுடனும், நாமும் அந்த இடத்தில் இருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்துமாறும், எழுதிக் கொண்டு செல்கிறார்கள் என்பது மட்டுமே நான் மிகவும் ரஸித்து மகிழ்வதாகும். **பந்திக்காரனைக் கூப்பிட்டு இன்னொரு சீயம் கேட்கத்தான் ஆசை. ஆனால் அப்பத்தா அந்தப் பக்கம் வந்து பார்த்துவிட்டால்....?** **அப்பத்தா வந்து கேட்டால் “நான் கேட்கவில்லை. அவன் தான் என் இலையில் இன்னொரு சீயத்தை வைத்துவிட்டுப் போனான்” என்று சொல்லிக்கொள்ளலாம் என்று ஒரு நம்பிக்கை மனதில்.** போன்ற வரிகள் இறப்பைப் பற்றி அறியாத ஒரு குழந்தையின் வெள்ளந்தியான நிலையை உண்மையிலே தாங்கள் சொல்லியிருப்பது போல் ‘மிகவும் சூப்பராக வர்ணித்திருக்கிறார்’ திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள். // இந்த இடத்தில் அவர்களின் எழுத்தில் நான் அப்படியே சொக்கிப்போய் விட்டேன். மீண்டும் மீண்டும் இதே வரிகளைப் படித்து மகிழ்ந்ததோடு அல்லாமல், மிகத் தீவிரமாக தொலைகாட்சிப் பெட்டியில் மூழ்கியிருந்த என் மேலிடத்தையும் (மனைவியையும்) தொந்தரவு செய்து அழைத்து இதனைச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தேன். இதுபோன்ற மிகச்சுவையான எழுத்துக்களை உடனே யாரிடமாவது பகிர்ந்துகொள்ளாவிட்டால் என் மண்டையே வெடித்து விடும். :) >>>>> Delete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் September 29, 2016 at 2:00 PM VGK >>>>> வே.நடனசபாபதி (6) //அவருக்கும் அவரது கதைகளை திறனாய்வு செய்து இரசிக்க வைத்த தங்களுக்கும் பாராட்டுக்கள்! // தங்களின் அன்பான வருகைக்கும், எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் விதமாக தாங்கள் எழுதியுள்ள அழகான விரிவான கருத்துக்களுக்கும், மனமார்ந்த பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார். அன்புடன் VGK Delete Replies Reply Thenammai Lakshmanan October 26, 2016 at 5:03 PM அஹா ! இவ்ளோ பின்னூட்டமா. ! திகைக்க வைக்கின்றீர்கள் விஜிகே சார். மிக விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி நடனசபாபதி சார். மேலிடத்தை எல்லாம் ஏன் என்மேல் கோபம் கொள்ளச் செய்கின்றீர்கள் விஜிகே சார் :)செட்டிநாட்டில் என்னையும் பாதித்தது இந்த குழந்தைத் தொழிலாளி நிலை . அதுதான் எழுதினேன் சார். Delete Replies Reply Reply Thulasidharan V Thillaiakathu September 29, 2016 at 5:17 PM இந்தப் பதிவில் வரும் இரண்டாவது கதை சொர்கத்தின் எல்லை நரகம் வாசித்த நினைவு இருக்கிறதே! அருமையான கதை அது. மனதைத் தொட்டக் கதை...இப்போது உங்கள் விமர்சனத்தில் வரிகள்...தொடர்கின்றோம் சார்.. ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் September 29, 2016 at 6:11 PM Thulasidharan V Thillaiakathu September 29, 2016 at 5:17 PM வாங்கோ, வணக்கம். //இந்தப் பதிவில் வரும் இரண்டாவது கதை சொர்கத்தின் எல்லை நரகம் வாசித்த நினைவு இருக்கிறதே! அருமையான கதை அது. மனதைத் தொட்டக் கதை...// ஹனி மேடம் அவர்களின் வலைத்தளத்தில் ஒருவேளை நீங்கள் வாசித்திருக்கலாமோ என்னவோ. //இப்போது உங்கள் விமர்சனத்தில் வரிகள்... தொடர்கின்றோம் சார்..// மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. Delete Replies Reply Thenammai Lakshmanan October 26, 2016 at 5:04 PM நன்றி கீத்ஸ் & துளசி சகோ & விஜிகே சார் Delete Replies Reply Reply ஞா கலையரசி September 30, 2016 at 7:30 PM திரு கோபு சார் அவர்களுக்கு வணக்கம். தங்கள் முதல் பின்னூட்டத்தைப் படித்தவுடன் மனம் கலங்கிவிட்டது. பதிவு எழுதியவுடன் முதல் ஆளாய் வந்து பின்னூட்டம் எழுதிய திருமதி ராஜேஸ்வரி மேடத்தை நினைக்கும் போது வருத்தமாய்த் தான் உள்ளது. மரணத்தையும் முதல் ஆளாய்த் தழுவி விட்டார். "வளர்ந்த பின் வெட்டியெறிய நாங்கள் எல்லை மீறிய கிளைகள் அல்ல. நீங்கள் விதைத்த விதைகள். விருட்சமாகியே தீருவோம்." என்று மிஸ்டர் Y சொல்வது சூப்பர்! குழந்தைத் தொழிலாளியின் பரிதாப நிலைமை, குழந்தை எதிர்கொள்ளும் முதல் மரணம் எனத் தேனம்மை கையாண்டிருக்கும் கருக்கள் அனைத்துமே வாசிப்போரைச் சிந்திக்கத் தூண்டுவன. கதையின் முக்கிய அம்சங்களைக் கோடி காட்டிப் படிக்கத் தூண்டும் தங்கள் விமர்சனம் மிக நன்று. எழுத்தாளர், விமர்சகர் இருவருக்கும் என் பாராட்டுக்கள்! ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் September 30, 2016 at 8:40 PM ஞா. கலையரசி September 30, 2016 at 7:30 PM //திரு கோபு சார் அவர்களுக்கு வணக்கம்.// வாங்கோ மேடம், வணக்கம். //தங்கள் முதல் பின்னூட்டத்தைப் படித்தவுடன் மனம் கலங்கிவிட்டது. பதிவு எழுதியவுடன் முதல் ஆளாய் வந்து பின்னூட்டம் எழுதிய திருமதி ராஜேஸ்வரி மேடத்தை நினைக்கும் போது வருத்தமாய்த் தான் உள்ளது. மரணத்தையும் முதல் ஆளாய்த் தழுவி விட்டார்.// ஆமாம் மேடம். அவர்களின் பிரிவு என்னை மிகவும் பாதித்து விட்டது என்பது என் வீட்டில் உள்ளோர் அனைவருக்குமே தெரியும். நம் ஜீவி ஸார், நம் தமிழ் இளங்கோ ஸார் போன்ற ஒருசில பதிவர்களுக்கும் மிகவும் நன்றாகத் தெரியும். இந்த ஆண்டின் (2016) என் முதல் பதிவே அவர்களின் மறைவுச் செய்தியைப் பற்றியதாக அமைந்து விட்டது. http://gopu1949.blogspot.in/2016/03/blog-post.html இன்- ஃபாக்ட், அவர்கள் இனி பின்னூட்டமிட வரப்போவது இல்லை என்று எனக்குத் தெரிந்ததுமே, நான் புதிய பதிவுகள் எழுதுவதை முற்றிலுமாக நிறுத்திக்கொண்டு விட்டேன். அந்தச் செய்தி எனக்குக் கிடைப்பதற்கு முன்பாகவே நம் ஜீவி ஸார் அவர்களின் நூல் அறிமுகம் பற்றிய இருபது பகுதிகளையும், நான் கம்ப்போஸ் செய்து ட்ராஃப்ட் ஆக என்னிடம் தயார் நிலையில் வைத்திருந்தேன். அவற்றை வெளியிட ஏனோ ஆர்வமில்லாமல்தான் நானும் இருந்து வந்தேன். பிறகு நம் ஜீவி ஸாருடனும் இது பற்றி தொலைபேசியில் பேசினேன். அவர் ”தனக்கும் அவர்களின் மறைவு மிகவும் வருத்தமளிப்பதாகத்தான் உள்ளது” என்று சொல்லியதுடன் எனக்கும் மிகவும் ஆறுதல் கூறினார். பிறகு ஏற்கனவே கம்ப்போஸ் செய்து வைத்துள்ள அந்தப் பதிவுகளை மட்டும் நான் வெளியிடும்படியாக நேர்ந்தது. அதன் பிறகு, அதன் தொடர்ச்சியாக, அதில் ஓர் பகுதியில் பின்னூட்டமிட்டு என்னிடம் கேட்டுக்கொண்டிருந்த ’சிட்டுக்குருவி விமலன்’ அவர்களின் நூலினையும் படித்து, இரண்டே இரண்டு பகுதிகளாக அறிமுகம் செய்ய நேர்ந்தது. இப்போது நம் தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களின் நூல் அறிமுகம் ஆறு பகுதிகளாக வெளியிடும்படியாக நேர்ந்துள்ளது. மொத்தத்தில் நான் இந்த ஆண்டு படிக்க நேர்ந்துள்ள ஒருசில 2-3 நூல்களைப்பற்றி மட்டுமே, நூல் அறிமுகப் பதிவுகளாக மட்டுமே கொடுத்துள்ளேன். இந்த ஆண்டு நான் கொடுத்துள்ள மொத்தப்பதிவுகளின் எண்ணிக்கை வெறும் 30 மட்டுமே. 1* + 20@ + 2@ + 1$ + 6@ = 30 அதன் விபரம்:- ஒரு மறைவுச் செய்தி* + 28 நூல் அறிமுகங்கள்@ + ஒரு பதிவர் சந்திப்பு$. இவை தவிர என்னால் ஏனோ முன்புபோல மற்ற பதிவுகள் ஏதும் கொடுக்க ஆர்வமில்லாமல் இருந்து வருகிறது என்பதே உண்மை. அந்த அளவுக்கு நான் அவர்களின் மறைவினால் பாதிக்கப்பட்டுள்ளேன். காலம் ஒன்றினால்தான், இதுபோன்ற நம் கவலைகளையும், வருத்தங்களையும் மறக்கடிக்க முடியும். பார்ப்போம். >>>>> Delete Replies Reply வை.கோபாலகிருஷ்ணன் September 30, 2016 at 8:43 PM கோபு >>>>> ஞா. கலையரசி (2) // "வளர்ந்த பின் வெட்டியெறிய நாங்கள் எல்லை மீறிய கிளைகள் அல்ல. நீங்கள் விதைத்த விதைகள். விருட்சமாகியே தீருவோம்." என்று மிஸ்டர் Y சொல்வது சூப்பர்! குழந்தைத் தொழிலாளியின் பரிதாப நிலைமை, குழந்தை எதிர்கொள்ளும் முதல் மரணம் எனத் தேனம்மை கையாண்டிருக்கும் கருக்கள் அனைத்துமே வாசிப்போரைச் சிந்திக்கத் தூண்டுவன. கதையின் முக்கிய அம்சங்களைக் கோடி காட்டிப் படிக்கத் தூண்டும் தங்கள் விமர்சனம் மிக நன்று. எழுத்தாளர், விமர்சகர் இருவருக்கும் என் பாராட்டுக்கள்!// தங்களின் அன்பான வருகைக்கும், வித்யாசமான, ஆழமான, ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். Delete Replies Reply Thenammai Lakshmanan October 26, 2016 at 5:09 PM ராஜியின் மறைவும் உடனடியாகத் தெரியாமல் பல நாள் கழித்துத் தெரிந்ததும் எனக்கு மிக அதிர்ச்சி. வருவார்கள் பிபி அதிகமாகிவிட்டது போல அதுதான் பதிவெழுதவில்லை என்று நினைத்திருந்தேன். ஆனா இப்பிடி சொல்லிக்காம கொள்ளிக்காம போவாங்கன்னு நினைக்கவே இல்லை. எனக்கும் ஆத்துப் போச்சு. இப்பல்லாம் எதையும் முழுமையா செய்ய இயல்வதில்லை. சோகத்தை வெளிப்படுத்துவது கூட. என் பதிவுகளிலேயே பார்க்கலாம். எல்லாம் அவசரத்தனம். இந்த ஃபாஸ்ட் உலகத்தில் மறைந்த நட்பை எண்ணி மனம் கலங்கி மௌனமாய் ஓரத்தில் அமர்ந்து அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கும் உங்களுக்கு எனது ஆத்மார்த்தமான வணக்கங்கள் விஜிகே சார். Delete Replies Reply Thenammai Lakshmanan October 26, 2016 at 5:09 PM நன்றி கலையரசி & விஜிகே சார் Delete Replies Reply Reply சிப்பிக்குள் முத்து. October 3, 2016 at 10:58 AM ஒவ்வொரு பதிவிலும் மூன்று கதை தலைப்பு... கதை சுருக்கம்... ( சுருக்கம்னுகூட சொல்ல முடியாது).... அவுட் லைன் சொல்லி இருக்கீங்க.. அதுவே இன்ட்ரஸ்டிங்கா இருக்குது. முழு கதையும் படிச்சா இன்னும் நல்லா இருக்குமே... ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் October 3, 2016 at 11:57 AM சிப்பிக்குள் முத்து. October 3, 2016 at 10:58 AM வா ..... மீனா, வணக்கம். //ஒவ்வொரு பதிவிலும் மூன்று கதை தலைப்பு... கதை சுருக்கம்... ( சுருக்கம்னுகூட சொல்ல முடியாது).... அவுட் லைன் சொல்லி இருக்கீங்க.. அதுவே இன்ட்ரஸ்டிங்கா இருக்குது.// மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. //முழு கதையும் படிச்சா இன்னும் நல்லா இருக்குமே...// நூலினை வாங்கிப் படியுங்கோ. நல்லாத்தான் இருக்கும். நானே இங்கு முழுக்கதைகளையும் சொல்லிவிட்டால், பிறகு அந்த நூலின் விற்பனை பாதிக்கப்படும் அல்லவா. அதனால் உங்கள் அனைவரையும் அந்த நூலை வாங்கிப் படிக்குமாறு நான் இங்கு தூண்டி மட்டும் விட்டுள்ளேன். Delete Replies Reply Thenammai Lakshmanan October 26, 2016 at 5:10 PM நன்றி சிப்பிக்குள் முத்து & விஜிகே சார் :) Delete Replies Reply Reply கீதமஞ்சரி October 4, 2016 at 9:50 AM இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று கதைகளுமே குழந்தைகளின் மனநிலையைப் பிரதிபலிக்கும் அருமையான கதைகள்.. அதுவும் கருவில் உள்ள குழந்தையின் மனநிலையைப் பிரதிபலிக்கும் வரிகள் அபாரம்.. இரண்டாவது கதையின் முடிவு மனத்தை மிகவும் பாதித்தது. ஒருநாள் சந்தோஷத்துக்காக அக்குழந்தை கொடுத்த விலை மிக அதிகம். வளர்ந்தபெண்ணாகி என்றைக்கு நினைத்துப் பார்த்தாலும் இன்பத்தோடு இந்த துன்பமும் அல்லவா நினைவுக்கு வந்து வெட்கச்செய்யும்.. அப்பத்தா கதையிலும் அறியாக்குழந்தையின் மன உணர்வுகளை அழகாக்க் காட்டுகிறார்… ஐந்தாம் வகுப்பு படிக்கையில்.. என் அப்பாவைப் பெற்ற ஆத்தா இறந்துபோன அன்று நானும் இப்படிதான்… சூழ்நிலை சரியாகப் புரியாமல் அரையாண்டுத் தேர்வுக்குப் போயே தீருவேன் என்று அடம்பிடித்துப்போய் தேர்வெழுதிவிட்டு வந்த நாட்கள் நினைவில்… வாசக சிந்தனைக்குத் தேர்ந்தெடுத்துத் தரும் வரிகள் அற்புதம்.. நன்றி கோபு சார். ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் October 4, 2016 at 5:02 PM கீதமஞ்சரி October 4, 2016 at 9:50 AM வாங்கோ மேடம். வணக்கம். //இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று கதைகளுமே குழந்தைகளின் மனநிலையைப் பிரதிபலிக்கும் அருமையான கதைகள்..// ஆமாம். //அதுவும் கருவில் உள்ள குழந்தையின் மனநிலையைப் பிரதிபலிக்கும் வரிகள் அபாரம்..// ’அபாரம்’ என்ற அபாரமான சொல்லுக்கு மிக்க மகிழ்ச்சி. :) //இரண்டாவது கதையின் முடிவு மனத்தை மிகவும் பாதித்தது. ஒருநாள் சந்தோஷத்துக்காக அக்குழந்தை கொடுத்த விலை மிக அதிகம். வளர்ந்தபெண்ணாகி என்றைக்கு நினைத்துப் பார்த்தாலும் இன்பத்தோடு இந்த துன்பமும் அல்லவா நினைவுக்கு வந்து வெட்கச்செய்யும்..// ஆமாம். பாவம் .... சின்னக்குழந்தை அவள். ஏதோ தெரியாமல் தன் உள்மன ஆசைகளாலும், குழந்தைகளுக்கே உள்ள குறும்புத்தனங்களாலும், தன்னையுமறியாமல் அவ்வாறு நடந்து கொண்டுவிட்டாள். அவளால் அதனை என்றைக்குமே மறக்க முடியாமல்தான் இருக்கும். //அப்பத்தா கதையிலும் அறியாக்குழந்தையின் மன உணர்வுகளை அழகாக்க் காட்டுகிறார்… ஐந்தாம் வகுப்பு படிக்கையில்.. என் அப்பாவைப் பெற்ற ஆத்தா இறந்துபோன அன்று நானும் இப்படிதான்… சூழ்நிலை சரியாகப் புரியாமல் அரையாண்டுத் தேர்வுக்குப் போயே தீருவேன் என்று அடம்பிடித்துப்போய் தேர்வெழுதிவிட்டு வந்த நாட்கள் நினைவில்…// பொதுவாக .... நாட்டு நடப்புக்களே கதையாக மலர்கின்றன, என்பதை நம்மால் நன்கு புரிந்துகொள்ள முடிகிறது. :) //வாசக சிந்தனைக்குத் தேர்ந்தெடுத்துத் தரும் வரிகள் அற்புதம்.. நன்றி கோபு சார். // தங்களின் அன்பான வருகைக்கும், ’அற்புதம்’ என்ற அற்புதமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். Delete Replies Reply Thenammai Lakshmanan October 26, 2016 at 5:11 PM மிக்க நன்றிடா கீத்ஸ் & விஜிகே சார் Delete Replies Reply Reply வை.கோபாலகிருஷ்ணன் October 6, 2016 at 12:50 PM http://honeylaksh.blogspot.in/2016/10/blog-post_6.html மேற்படி இணைப்பினில் ‘சிவப்பு பட்டுக் கயிறு’ நூலாசிரியர் திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள், இந்த என் நூல் அறிமுக + மதிப்புரைத் தொடரினைப் பற்றி சிறப்பித்து நன்றிகூறி ஓர் தனிப்பதிவு வெளியிட்டுள்ளார்கள். அவர்களுக்கு என் இனிய அன்பு நன்றிகள். இது தங்கள் அனைவரின் தகவலுக்காக மட்டுமே. ReplyDelete Replies Thenammai Lakshmanan October 26, 2016 at 5:12 PM அகா தொகுத்து அளிப்பதற்கும் சிறப்பிடம் கொடுப்பதற்கும் மீண்டும் நன்றிகள் விஜிகே சார். எவ்ளோ நன்றிக்கடன் பட்டிருக்கேன்னு தெரியலையே :) Delete Replies Reply Reply ஆன்மீக மணம் வீசும் October 18, 2016 at 12:01 PM தேன், தேனாய் தித்திக்கும் சிறுகதைகளுக்கு வாழ்த்துக்கள். இந்தக் கதைகளை அறிமுகப் படுத்தி வைத்த கோபு அண்ணாவிற்கு ஒரு சல்யூட் ReplyDelete Replies வை.கோபாலகிருஷ்ணன் October 18, 2016 at 4:54 PM Jayanthi Jaya October 18, 2016 at 12:01 PM வாங்கோ ஜெயா, வணக்கம். //தேன், தேனாய் தித்திக்கும் சிறுகதைகளுக்கு வாழ்த்துக்கள். இந்தக் கதைகளை அறிமுகப் படுத்தி வைத்த கோபு அண்ணாவிற்கு ஒரு சல்யூட்// தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் ஓர் ராயல் சல்யூட் ! :) Delete Replies Reply Thenammai Lakshmanan October 26, 2016 at 7:29 PM மிக்க நன்றி ஜெயா & விஜிகே சார் :) Delete Replies Reply Reply Add comment Load more... Newer Post Older Post Home Subscribe to: Post Comments (Atom) Popular Posts ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அஷ்டகம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் [ஸ்ரீ ஆதிசங்கரர் அருளியது] 1 அம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி காளி ஹைமவதி ஸிவா த்ரிநயன... ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு!’ அன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். சமீபத்தில் வந்து சென்ற 30.12.2017 ஓர் மறக்க முடியாத விசேஷமான நாள். அன்று சனிக்க... 38] தனக்கு மிஞ்சி தான தர்மம் ! ;) 2 ஸ்ரீராமஜயம் தீபத்தின் ஒளி எப்படி வேறுபாடு பார்க்காமல் .. உயர்ந்தவன், தாழ்ந்தவன், புழு, பறவை, மரம் மற்ற நீர் வாழ்பிராணிகள், ந... வெண்ணிலவைத்தொட்டு ....... முத்தமிட ஆசை ! மிளகாய்ப்பொடி கொஞ்சம் ....... தொட்டுக்கொள்ள ஆசை !! இட்லி / தோசைக்குத் தொட்டுக்கொள்ளும் காரசாரமான மிளகாய்ப்பொடி By வை. கோபாலகிருஷ்ணன் இட்லி, தோசை, அடை போன்ற சிற்றுண்டிகள் செய்த ... உணவு உண்ணும் முன் ஒரு நிமிஷம் .... //மனோ, வாக், காயம் என்கிறபடி மனஸால் பகவத் ஸ்மரணம், வாக்கினால் மந்த்ரம், காயத்தால் (தேகத்தால்) கார்யம் மூன்றையும் சேர்த்துத்தான் ஆசாரங்கள் ஏ... 31] போதும் என்ற மனம் ! 2 ஸ்ரீராமஜயம் கோர்ட்டுகள் அதிகமாகின்றன என்றால் குற்றங்கள் அதிகமாகின்றன என்பதே அர்த்தம். இதற்கு பதில் கோயில்கள் அதிகமான... யானை வரும் பின்னே .... மணி ஓசை வரும் முன்னே ! அன்புடையீர் ! அனைவருக்கும் வணக்கம். வரும் ஞாயிறு 01/01/2017 ஆங்கிலப்புத்தாண்டு பிறக்க உள்ளது. புத்தாண்டு பிறப்பதற்கு ஒ... VGK 11 ] நாவினால் சுட்ட வடு இது ’சிறுகதை விமர்சனப்போட்டி’ க்கான கதை விமர்சனங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 03.04.2014 வியாழக்கிழமை இந்திய நேரம்... 73 ] சக்தி மிக்க பஞ்சகவ்யம் ! 2 ஸ்ரீராமஜயம் பால், தயிர், நெய் இவற்றின் பிரயோஜனத்தைத் தெரிந்து கொண்டது மட்டுமின்றி நம் பூர்வீகர்கள், சாணி. பசுமூத்திரம் இவற்றின்... ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ! ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ! ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...
கட்டட வடிவமைப்பாளர். கியோட்டோவில் பிறந்தார். 1928 இல் கியோட்டோ உயர்நிலை கலை மற்றும் அறிவியல் பள்ளியில் பட்டம் பெற்ற பிறகு, ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகத்தில் கென்யா ஜாஸ்பர்ஸ் கருத்தரங்கைப் பார்வையிட்ட பின... கிஷோ குரோகாவா கட்டட வடிவமைப்பாளர். நாகோயா நகரத்தின் கட்டிடக் கலைஞரின் வீட்டில் பிறந்தார். கியோட்டோ கட்டிடக்கலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு, டோக்கியோ பல்கலைக்கழக பட்டதாரி டாங்கே கென்சோ ஆய்வகத்தில் படித்தார்... இகேஹரா யோஷிரோ கட்டட வடிவமைப்பாளர். டோக்கியோவில் பிறந்தார். வசேடா பல்கலைக்கழக பட்டதாரிப் பள்ளியை முடித்த பிறகு, தோஷிரோ யமாஷிதா கட்டிடக்கலை வடிவமைப்பு அலுவலகத்தில் பணிபுரிந்தார். 1956-ல் நான் Gaudi மற்றும் ஸ்டெய்னர்... ஹிகோசுனா தகேஷி கட்டட வடிவமைப்பாளர். ஹொக்கைடோவின் குஷிரோ நகரில் பிறந்து வளர்ந்தவர். கோபி கட்டிடக்கலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். 1972 இல் அவர் தனது தாயின் இல்லத்தை அறிவித்தார். சதுர கண்ணாடி மற்றும் கான்கிரீட்... டோயோ இடோ கட்டட வடிவமைப்பாளர். கொரியாவின் சியோலில் பிறந்தார். டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். 1971 ஆம் ஆண்டில், கியோடகே கியோடகாவின் அலுவலகம் மூலம் நகர்ப்புற ரோபோ நிறுவப்பட்டது (1979 இல் டொயோ இடோ கட்... ஷின் தகாமட்சு கட்டட வடிவமைப்பாளர். ஷிமானே மாகாணத்தில் பிறந்தார். கியோட்டோ யூனிவிலிருந்து பட்டம் பெற்றார். கட்டிடக்கலை மற்றும் அவரது பட்டதாரி பள்ளியை முடித்தார். 1980 ஷின் தகாமட்சு கட்டடக்கலை வடிவமைப்பு அலுவலகம் நிற... புமிஹிகோ மக்கி கட்டட வடிவமைப்பாளர். டோக்கியோவில் பிறந்தார். டோக்கியோ பல்கலைக்கழகத்தில் கென்சோ டாங்கேவிடம் கற்றல். 1952 இல் பட்டம் பெற்ற பிறகு, நான் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் போன்றவற்றில் கற்றுக்கொண்டேன், நான் ஒரு SOM... இட்சுகோ ஹசெகாவா கட்டட வடிவமைப்பாளர். ஷிஜுயோகா மாகாணத்தில் பிறந்தார். கான்டோ காகுயின் யூனிவிலிருந்து பட்டம் பெற்றார். கட்டிடக்கலை. கியுடகே கியோடன் கட்டடக்கலை வடிவமைப்பு அலுவலகம், டோக்கியோ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி த... ஷோஜி ஹயாஷி கட்டட வடிவமைப்பாளர். டோக்கியோவில் பிறந்தார். டோக்கியோ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆர்கிடெக்சர் துறையில் கியோஷி கியோஷியில் படித்தார். 1953 1980 இன் துணைத் தலைவரான நிக்கன் செக்கேயில் சேர்ந்தார். <பால... தடாவ் ஆண்டோ கட்டட வடிவமைப்பாளர். ஒசாகாவில் பிறந்தார். பெப்பு சிட்டி ஸ்கூல் ஆஃப் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார். உள்துறை வேலை மற்றும் ஐரோப்பிய கட்டிடக்கலை ஆகியவற்றைக் கவனிக்கும்போது, சுய ஆய்வு மூலம் கட... தகமாசா யோஷிசாகா கட்டட வடிவமைப்பாளர். டோக்கியோவில் பிறந்தார். நான் ஜப்பானுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையில் முன்னும் பின்னுமாக சென்று என் குழந்தைப்பருவத்தை செலவிடுகிறேன். 1933 ஜெனீவாவின் எக்கோல்-அன்னே நேஷனல், வசேடா யூனிவ... Molino இத்தாலிய கட்டிடக் கலைஞர், உள்துறை வடிவமைப்பாளர், புகைப்படக் கலைஞர். குறிப்பாக 1930 மற்றும் 1950 களில், இது பல்வேறு படைப்புகளை விட்டுச் சென்றது. டொரினோ பிறந்தார். <டுரின் குதிரை பந்தய சங்கம் கட்டிடம... டாய்சர் வெர்க்பண்ட் டாய்சர் வெர்க்பண்ட். 1907 ஆம் ஆண்டில் அவர் பிரஸ்ஸியாவின் வர்த்தக வர்த்தகத் துறையில் கலை மற்றும் கலைத் தலைவராக இருந்த கட்டிடக் கலைஞர் ஹெர்மன் முத்தீசியஸால் உருவாக்கப்பட்டது. தொழில்துறை தயாரிப்பு வடிவமை... மாரிஸ் மெர்லியோ-பாண்டி இத்தாலிய கட்டிடக் கலைஞர், தயாரிப்பு வடிவமைப்பாளர். 20 ஆம் நூற்றாண்டின் இத்தாலி · வடிவமைப்பு உலகில் மிகவும் செல்வாக்கு செலுத்தியவர்களில் ஒருவர். மிலனின் பிறப்பு. மிலன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் ப... யானை வடிவமைப்பு குழு கட்டடக்கலை வடிவமைப்பு அலுவலகம். 1971 ரெய்கோ டொமிட்டா [1938-], ஹிரோயாசு ஹிகுச்சி [1939-], யசுகிச்சி ஓடேக் [1938-1983] முக்கியமாக தகாமாசா யோஷிஹிசா மாணவர்களால் நிறுவப்பட்டது. நவீனத்துவத்தின் கட்டிடக்கலைக... Brange இத்தாலிய வடிவமைப்பாளர், கட்டிடக் கலைஞர். புளோரன்ஸ் பிறப்பு. 1966 ஆம் ஆண்டில், பாவ்லோ டெகனெல்லோவும் மற்றவர்களும் சேர்ந்து அவாண்ட்-கார்ட் கட்டடக் கலைஞர்களின் குழுவை உருவாக்கினர். அதே ஆண்டில் உருவாக்கப்ப... மக்கிண்டோஷ் பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர், தளபாடங்கள் வடிவமைப்பாளர், ஓவியர். கிளாஸ்கோவில் பிறந்தார். ஒரு வடிவமைப்பு அலுவலகத்தில் பணிபுரிந்தபோது, கிளாஸ்கோ ஸ்கூல் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸில் கட்டிடக்கலை பயின்றார். 1890 களின்... ஐசோகி ஷின் கட்டட வடிவமைப்பாளர். ஓய்தா நகரில் பிறந்தார். டோக்கியோ கட்டிடக்கலை பல்கலைக்கழகத்தில் 1954 இல் பட்டம் பெற்ற பிறகு, நான் கென்சோ டாங்கேவின் பட்டதாரி பள்ளியில் படித்தேன். 1963 ஐசோசாகி நியூ அட்லியர் நிறுவப்... சாக்ரடா ஃபேமிலியா தேவாலயம் ஸ்பெயின் கட்டிடக் கலைஞர் க ud டி பார்சிலோனாவுக்கு விட்டுச் சென்ற முடிக்கப்படாத தேவாலய கட்டிடம். புனித குடும்பத்திற்கு (சாக்ரடா ஃபேமிலியா) அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பாவநிவாரண (குழப்பம்) தேவாலயமாக 1882 ஆம்... மலை கோட்டை ஒரு வகையான இடைக்கால கட்டடக்கலை பாணி. மலைகளைப் பயன்படுத்திய கோட்டை . காலங்களுடன் ஒரு மாற்றம் உள்ளது, ஒற்றை-குவோ சூத்திரத்திலிருந்து ஷுகுருவாவை உச்சிமாநாட்டிற்கு மட்டுமே வைக்கவும், பக்கவாட்டாக ஃபுகுகுரு...
வைகோவுடன் புகைப்படம் எடுக்க விரும்புவோர் இனி ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும் என மதிமுக அறிவித்துள்ளது. மேலும் வைகோவிற்கு சால்வை அணிவிக்க விரும்புவோர் அதற்கு பதிலாக கழகத்திற்கு நிதி அளிக்கலாம் என்றும் அக்கட்சியின் மேலிடம் அறிவித்துள்ளது ஒரு கட்சியின் தொண்டர் தனது தலைவருடன் ஆசையாக புகைப்படம் எடுக்க வரும் நிலையில் அவரிடம் இருந்து கட்டணம் வசூலித்து இதையும் வியாபாரமாக்குவதா? என மதிமுக தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
வேலூர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் உள்ள வாக்குகள் 14,32,555. இதில் தேர்தலில் பதிவான வாக்குகள் 10,24,352. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்...
நடிகர் சூர்யா தயாரிப்பில் வெளியான திரைப்படம் ஒன்று கதைத் திருட்டு சர்ச்சையில் சிக்கிய விவகாரம் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சூர்யா Advertising Advertising தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, படத் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அவரது தயாரிப்பில் உருவான படம் தான் ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’. கடந்த மாதம் நேரடியாக ஓடிடி-யில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை புதுமுக இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கி இருந்தார். சமீபத்தில் இப்படம் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியது. இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் படத்தின் போஸ்டர் கடந்த 2016-ம் ஆண்டு மராத்தி மொழியில் வெளியான ‘ரங்கா படாங்கா’ படத்தின் கதையை தழுவி தான் ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ படம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இந்த விஷயம் சூர்யா கவனத்திற்கு சென்றதும், அவர் இயக்குனரை அழைத்து விசாரித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்மந்தப்பட்ட மராத்தி படத்தின் குழுவினரை அழைத்து அவர்களுக்கு உரிய தொகையை நஷ்ட ஈடாக கொடுத்து இருக்கிறார் சூர்யா.
பரிசுத்த பாப்பரசர் முற்பகல் 9 மணிக்கு வருகை தந்தார். பின்னர் 9.45 வரை அரச வரவேற்பு நிகழ்வு இடம்பெறவுள்ளதாக கத்தோலிக்க ஊடக நிலையத்தின் பணிப்பார்ள அருட்தந்தை சிறில் காமினி கூறினார். அதன் பின்னர் வாகனத் தொடரணியில் கட்டுநாயக்க, சீதுவை, ஜாஎல, கந்தானை, வத்தளை ,நவலோக சுற்றுவட்டம், ஜப்பான் நட்புறவு பாலம், இங்குறுக்கடை சந்தி, ஆமர் வீ்தி, சங்கராஜ மாவத்தை சந்தி,மருதானை சந்தி, மருதானை வீதி, புஞ்சி பொரளை,பொரளை கனத்தை சுற்றுவட்டம், பொளத்தாலோக மாவத்தை வரை பயணிக்கவுள்ளார். இன்று மாலை ஆறு மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சுமார் ஒரு மணித்தியாலம் மதத் தலைவர்களுடன் பரிசுத்த பாப்பரசர் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.
நாடாளுமன்ற அரசியலில் இருந்து விலகுவதாக முன்னாள் நிதி அமைச்சர் அதிரடி அறிவிப்பு - CBC Tamil News - Latest Sril Lanka, World, Entertainment and Business News Home உள்ளூர் உலகம் விளையாட்டு வணிகம் சினிமா editors-pick Local-News நாடாளுமன்ற அரசியலில் இருந்து விலகுவதாக முன்னாள் நிதி அமைச்சர் அதிரடி அறிவிப்பு June 09, 2020 Read ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக எதிர்வரும் பொதுத் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார். மேலும் நாடாளுமன்ற அரசியலில் இருந்து தான் விலக தீர்மானித்துள்ளதாகவும் எனவே எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனக்கு வாக்களிப்பதை தவிர்க்குமாறும் அவர் மாத்தறை மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே மேற்கண்ட அறிவிப்பை விடுத்துள்ளார். நாடாளுமன்ற அரசியலில் இருந்து விலகுவதாக முன்னாள் நிதி அமைச்சர் அதிரடி அறிவிப்பு Reviewed by EDITOR on June 09, 2020 Rating: 5
* சிவப்பு அரிசி ஓர் அற்புதமான அரிய உணவு. இதன் மருத்துவ விசேஷங்களைப் பற்றி கி.மு. 700-ல் சரகரும், கி.மு.400-ல் சுசு(ஸ்)ருதரும் நிறையக் குறிப்பிட்டுள்ளார்கள். இவர்கள் இந்திய ஆயுர்வேத மருத்துவத்தின் முன்னோடிகள். * வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளில் ஏற்படும் மாற்றங்கள் தான் சகல நோய்களுக்கும் காரணம் என்பது ஆயுர்வேத சித்தாந்தம். * இந்த மூன்று நாடிகளின் தோசங்களையும் அறவே நீக்கும் ஆற்றல்... சிவப்பு அரிசிக்கு உண்டு என்று இவர்கள் கூறியுள்ளார்கள். * சீனாவில் 3,000 ஆண்டுகளாக செந்நெல் பயிரிடப்படுகிறது. ஜப்பான், கொரியா, பிலிப்பைன்சு, இலங்கை, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சிவப்பு நெல் பயிராகிறது. கொரியாவில் உள்ள சில புத்தர் சிலைகளின் உள்ளே சிவப்பு நெல் விதைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. * தமிழ்நாட்டில் மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் போன்ற மருத நிலங்களில் செந்நெல் அமோகமாக விளைந்தது. அதேபோல கரிசல் மண்ணிலும் நீர்வரத்து அதிகமில்லாத பூமியிலும் இந்நெல் நன்றாக விளைந்தது. * 'மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று, ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென் மதுரை’ என்ற பழம் பாடலே இதற்கு சாட்சி. * சிவப்பு நெல், விவசாய முறையில் மட்டுமின்றி தானாகவே காடுகளிலும் மலைகளிலும் மானாவாரியாக விளைந்தது. ஆகவே, இதை, 'காட்டு அரிசி’ (Wild Rice) என்று சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன. * அதனால்தானோ என்னவோ, சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களே பெரும்பாலும் இதை உணவாகப் பயன்படுத்தினர். நம் நாட்டில் கர்நாடகா, பீகார், ஒடிசா, மத்தியப் பிரதேசம், வங்காளம் முதலிய மாநிலங்களில் இது பயிரிடப்பட்டாலும், கேரளாவில் இந்த அரிசி மிகவும் பிரசித்தம். இந்த அரிசிக்கு அவர்கள் கொடுத்துள்ள பெயர் - 'மட்டை அரிசி’. * சபரிமலை செல்லும்போது அங்குள்ள ஹோட்டல்களில் சிவப்பு அரிசி சாதம் பரிமாறப்படும்.அங்கு வரும் தமிழ்மக்கள் சிலர் முகம் சுளித்து, ''வேண்டாம், .. வெள்ளைச் சோறு போடுங்கள்...'' என்று சொல்வதையும், பக்கத்து மேசையில் அமர்ந்திருக்கும் கேரளவாசிகள் பச்சரிசி சாதம் பரிமாறப்பட்டால் முகம் சுளித்து, ''மட்ட அரிசி போடு...'' என்று சொல்வதையும் காணலாம். * இமாச்சல பிரதேசத்தில் குலு பள்ளத்தாக்கில் மட்டலி என்ற சிவப்பு நெல் பயிராகிறது. ஆங்கிலேய ஆட்சியில் அங்கிருந்த ஒரு கவர்னர் இந்த அரிசியை மிகவும் விரும்பி சாப்பிட்டதோடு, லண்டனில் உள்ள அவர் வீட்டுக்கு இந்த அரிசியைத் தவறாமல் அனுப்பி வந்தார் என்ற செய்திக் குறிப்புகள் உள்ளன. * நீங்கள் யாரும் இதை இதுவரை சாப்பிடாவிட்டாலும், இப்போது நான் பட்டியலிடப்போகும் சிவப்பு அரிசியின் மருத்துவச் சிறப்புகள், உங்களை அதை சாப்பிட வைக்கும்! * பொதுவாக நெல்லில் நான்கு பகுதிகள் உண்டு - வெளியே இருக்கும் உமி (Husk); உள்ளே இருக்கும் தவிடு (Bran), கரு (EMbryo); கடைசியாக வெகு உள்ளே இருக்கும் மாவுப்பொருள் (Starch). * இவற்றுள் நல்ல சத்துக்கள் அனைத்தும் வெளிப்பகுதியிலும், வெறும் சக்கை மட்டும் உள்பகுதியிலும் இருக்கின்றன. சத்துப்பகுதியை மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுத்துவிட்டு, சக்கையை மட்டுமே சாப்பிடும் விநோதப் பிறவிகள் நாம்! சிவப்பு நெல் மட்டும் இந்த அமைப்பில் விசேஷமானது. இதன் சத்துக்கள் அனைத்தும் மாவுப்பகுதி வரை உட்சென்று சேமிக்கப்படுவதால், இது தீட்டப்பட்ட பின்பும் அதை நாம் பெற முடியும். * மேலும் எந்த அரிசியிலும் இல்லாத அளவுக்கு பி-1, பி-3, பி-6 ஆகிய வைட்டமின்கள் - எந்த அரிசியிலும் காணமுடியாத அளவுக்கு இரும்புச் சத்து - ஜிங்க் (Zinc), மாங்கனீசு(ஸ்), மெக்னீஷியம், செலினியம், பாஸ்பரஸ் போன்ற கனிமங்கள் - மிகுதியான நார்ச்சத்து (Fibre) என சிவப்பரிசியில் அடங்கியிருக்கின்றன. * தன்னிடம் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும் ஆன்த்தோசயனின், பாலிஃபீனால் போன்ற வேதிப்பொருட்களும் இதில் சங்கமித்திருக்கின்றன. * இதையெல்லாம்விட, சிவப்பு அரிசியில் மானோகோலின் - கே (Monacolin K) என்கிற அற்புத வேதிப்பொருள் உள்ளது. இதைத்தான் மருத்துவத்துறையில் இப்போதும் 'லோவாஸ்டேடி ன்' (Lovastatin) என்ற பெயரில் ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதற்காக உலகெங்கும் கொடுத்து வருகிறோம். * செந்நெல்லின் மீது வளரும் ஒரு வகை பூஞ்சணம்தான் (Yeast), இந்த லோவாஸ்டேடினை உற்பத்தி செய்கிறது. அதனால் சீனாவில், செந்நெல் மீது இந்த பூஞ்சணத்தை இவர்களாகவே வளர்க்கிறார்கள். * 'சிவப்பு பூஞ்சண அரிசி' (Red yeast rice) என்று இதற்குப் பெயர். இதைத் தவிர, சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ஈரல் வியாதிகள், பித்தப்பை கற்கள், ஆஸ்துமா மற்றும் பலவித ஒவ்வாமைக்கும் (Allergy) சிவப்பு அரிசி நல்ல மருந்து. இவ்வளவு பெருமைகள் வாய்ந்த சிவப்பு அரிசி. இப்போது காணாமல் போன மர்மம் என்ன? * சிவப்பு நெல்லுக்கு உரம் இட்டாலும் சரி, இடாவிட்டாலும் சரி, பூச்சிக்கொல்லி மருந்துகள் எதுவுமே இல்லாமல், பூச்சிகளை அண்டவிடாமல் அமோகமாக வளரும் தன்மை உண்டு. * ஆங்கிலேயர்கள், குறிப்பாக அமெரிக்கர்கள், பல சத்துகள் நிறைந்த இந்த அரிசியை களைப்பயிர் (Weed) என்றார்கள். சிவப்பு நெல்லை சிவப்பு அரக்கன் (Red Menace) என்றும், கொழுத்த பிச்சைக்காரர்கள் (Fat beggers) என்றும் அழைத்தார்கள். ஏன்..? * ரசாயன உரங்கள் மூலமும், பூச்சிக்கொல்லி மருந்துகள் மூலமும், விவசாயத்துறையில் உலகெங்கும் ஒரு ராட்சத பொருளாதார சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியுள்ள அமெரிக்கர்களுக்கு, எந்த உரங்கள், பூச்சிக்கொல்லிகளின் தேவையும் இன்றி வளர்ந்த இந்த செந்நெல் பிடிக்கவில்லை. * தங்கள் தொழிலை தக்கவைத்துக் கொள்ள இதை எப்படியாவது அழிக்க வேண்டும் என்றும், சிவப்பு நிறத்தை எப்படியாவது திட்டியே தீர்ப்பதென்றும் முடிவெடுத்தனர். 'பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசி’ என்ற கவர்ச்சியை மக்களிடம் ஏற்படுத்தினர். * நம் ஊர் மக்களும் வெள்ளை அரிசியின் நிறத்திலும், மணத்திலும் சுவையிலும் மயங்கி, சிவப்பு நெல் விவசாயத்தை 1930-க்குப் பிறகு பெருமளவில் கைவிட்டனர். * தண்ணீர் அதிகம் தேவையில்லாத, உரம் தேவையில்லாத, பூச்சிக்கொல்லிகள் தேவையில்லாத, பல்வேறு அற்புத மருத்துவ குணங்களை உடைய,
தயிர் இதய ஆரோக்கியத்தினை மேம்படுத்துவதாகவும், மேலும் பக்கவாதப் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாகவும் இருந்து வருகின்றது. மேலும் தயிரில் உள்ள நன்மை விளைவிக்கும் பாக்டீரியாவானது செரிமானத்தை அதிகரிக்கச் செய்கின்றது. தயிரில் புரோட்டீன், ரிபோப்லாவின், கால்சியம், உயிர்ச்சத்து பி6, மற்றும் உயிர்ச்சத்து பி12 போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. பாலில் உள்ள புரோட்டீனை விட பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிருக்கு புரோட்டின் சக்தி அதிகம் உள்ளது. வறண்ட சருமம் உள்ளவர்கள் எந்த அளவு தயிரினை எடுத்துக் கொள்கிறார்களோ அந்த அளவு சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும். மேலும் தயிர் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பொருமல், ஒவ்வாமை போன்ற நோய்களுக்கு சிறந்த தீர்வாகவும் உள்ளது. தயிர் மஞ்சள்காமாலைக்கு மிகச் சிறந்த தீர்வினைக் கொடுப்பதாகவும் உள்ளது. மேலும் மலக்குடலில் ஏற்படும் எரிச்சல், அல்சர் என்னும் குடற்புண் போன்றவற்றிற்கு மிகச் சிறந்த ரிசல்ட்டினைக் கொடுப்பதாய் இருக்கும். தயிரானது செரிமான சக்தியினை மேம்படுத்துவதாக உள்ளது. இதனால்தான் கடைசியாக தயிரினைச் சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு குடலில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தயிரினைக் கொடுத்தால் உடனடியாக நிவாரணம் பெறுவார்கள். தயிர் எலும்புகள் மற்றும் பற்களை வலிமையாக்குவதாகவும் சிறப்பானதாக உள்ளது. மேலும் தயிரானது, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. கால்சியம் சத்து குறைபாட்டினால் எலும்புகளும், பற்களும் பாதிப்படையும். சிலருக்கு எலும்பு தேய்மானம் மூலம் மூட்டுவலி, நடக்கவே முடியாத அளவிற்கு இருக்கும். சிலருக்கு கால்சியம் சத்துக் குறைவினால் பற்களில் உறுதியற்ற தன்மை இருக்கும். இதனை சரிசெய்ய தினமும் நம் உணவில் தயிரினை சேர்த்துக்கொள்ளலாம்.
மகளையும் மருமகனையும் மும்பையில் தனிக்குடித்தனம் வைத்துவிட்டு, ஊருக்குப் புறப்பட்டுக்கொண்டிருந்தார்கள் ரேவதியைப் பெற்றவர்கள். மருமகனின் பெற்றோரும் அவர்களோடு புறப்படவே, அன்றைக்குத் தானே சமைப்பதாகச் சொல்லி, மும்முரமாய்ச் சமைத்துக்கொண்டிருந்தாள் மகள் ரேவதி. "இன்னுமா பெட்டியில சாமான்களை எடுத்து வைச்சுமுடிக்கல...இதெல்லாம் காலையில எழுந்ததுமே சுறுசுறுப்பா செய்யிறதில்லையா? வாத்தியாரம்மாவே இப்படி சோம்பேறியாயிருந்தா, படிக்கிற பிள்ளைகளெல்லாம் என்னத்தப் படிச்சு என்னத்த முன்னேறப்போகுதுகளோ?" என்றபடி, குளித்துவிட்டுவந்து ஈரத்துண்டை மனைவியின் தோளில் போட்டுவிட்டு, அவள் எடுத்துவைத்திருந்த உடைகளை உடுத்த ஆரம்பித்தார் ரேவதியின் தந்தை. அங்கிருந்து விலகி, அடுக்களைக்குள் நுழைந்தாள் ரேவதியின் அம்மா சிவகாமி. மதியத்துக்கும் இரவுப் பயணத்துக்குமாகச் சேர்த்து சமைத்துக்கொண்டிருந்தாள் மகள் ரேவதி. கல்யாணமாகிற வரைக்கும் தன் தலைப்பையே பிடித்துக்கொண்டு சுற்றிவந்த மகள், கல்யாணமானதும் பெரியமனுஷிபோலப் பக்குவமாக நடந்துகொள்வது சிவகாமிக்குப் பெருமையாக இருந்தாலும், வியப்பாகவும் இல்லாமலில்லை. உள்ளே வந்த அம்மாவைப் பார்த்தவள், "என்னம்மா, எப்பவும்போல அப்பா ஆரம்பிச்சிட்டாரா?" என்று நிமிராமலே கேட்டாள். அன்றைக்குக் காலையிலிருந்தே, கூடியமட்டும் அம்மாவை நேரடியாகப் பார்ப்பதைத் தவிர்த்துவந்தாள் ரேவதி. எங்கே அழுகை வந்துவிடுமோ என்ற அச்சம் அவளுக்கு. மகளின் மனசு புரிந்த விசாலத்துக்கும் அவளைப் பார்த்துக் கண்கள் கலங்கியது. இந்தப் பெண்குழந்தைகளே இப்படித்தான்...பெற்றவர்கள்மேல் பாசத்தைக் கொட்டிவிட்டு, கல்யாணமானதும் எட்டப்போய் இருந்து கஷ்டப்படுத்துவார்கள் என்று நினைக்கும்போதே, தனக்குக் கல்யாணமாகிக் கணவர் வீட்டுக்கு அனுப்பும்போது கண்ணீர்விட்டு அழுத தன் தந்தையின் நினைவுவந்து சிவகாமியின் கண்களை முழுவதுமாய் நிறைத்தது. சாதாரணக் கல்யாணமா அது? ஒண்ணாம் நம்பர் கலாட்டாக் கல்யாணம். சொன்னபடி வரதட்சணை தரவில்லையென்று, மாமியார் ஆத்திரத்தில் கத்த, வந்தவர்களெல்லாம் வேடிக்கை பார்க்க, வெட்கத்தில் குறுகிப்போன அப்பாவைக் காணச் சகிக்காமல், வடிவேல் சித்தப்பா, தன்னுடைய மைனர் செயினை அடகுவைத்துக் கொண்டுவந்து பணம்கொடுக்க, வெறுப்பும் வேதனையுமாய்த்தான் தொடங்கியது அவள் கல்யாண வாழ்க்கை. பீறிட்டு எழுந்த நினைவுகளைப் பின்னுக்குத்தள்ள முயற்சித்தவளாய், "நான் வேணும்னா சாப்பாட்டை இலையில கட்டட்டுமாடா..." என்று மகளிடம் கேட்டபடி, இலையை எடுத்து நறுக்க ஆரம்பித்தாள் சிவகாமி. மதியம் சாப்பாட்டுவேளையில், "அண்ணி, நம்ம ரேவதிக்கு தங்கக்கொலுசு எங்க பண்ணினீங்க? அதோட டிசைன் ரொம்ப நல்லாருக்கு. அதைமாதிரியே எங்க ரம்யாவுக்கு ஒண்ணு பண்ணனும்" என்று சம்பந்தியம்மாள் ஜெயம் கேட்க, நெல்லையிலுள்ள அந்தப் பிரபலமான கடையின் பேரைச் சொன்னார் ரேவதியின் தந்தை. "நாம ஊருக்குப்போனதும் ஆர்டர் குடுத்தா ஒரே வாரத்தில் செய்துடுவாங்க சம்பந்தியம்மா" என்றார் அவர். "நானெல்லாம் அப்ப, நடந்தா கலீர் கலீர்ன்னு சத்தம்கேட்கிற மாதிரி வெள்ளியில பட்டைக்கொலுசு போட்டுட்டிருந்தேன். ஆனா, இப்ப உள்ள பிள்ளைகள் சத்தமில்லாம ஆனா, தங்கத்துல போட்டுக்கணும்னு ஆசைப்படுதுங்க..." என்று சம்பந்தியம்மாள் ஜெயம் சொல்ல, "ஆமா அண்ணி, நான்கூட, வாங்கினா வரிவரியா சங்கிலி கோர்த்து, ஏழெட்டு இடத்தில் முத்துவச்ச கெட்டிக்கொலுசுதான் வாங்கிக்குவேன்னு அடம்பிடிச்சு, என் கல்யாணத்தப்ப வாங்கிக்கிட்டேன். அறுந்திருந்தாலும், அதை இப்பவும் பத்திரமா பாதுகாத்துவச்சிருக்கேன்" என்று சொன்னாள் சிவகாமி. "அட, ஆமா அண்ணி, அதெல்லாம் எவ்வளவு அருமையான நாட்கள். 'ஜல் ஜல்' ன்னு அந்தக் கொலுசைப் போட்டுட்டு நடக்கும்போதே நமக்கு மனசுக்குள்ள ஒரு உற்சாகம் வரும் பாருங்க... நான் அடுத்ததடவை உங்க வீட்டுக்கு வரும்போது, கட்டாயம் உங்க கொலுசையும் பார்க்கணும்" என்று சம்பந்தி ஜெயம் சொல்ல, "கட்டாயம் காட்டறேன் அண்ணி" என்றபடி சிரித்தாள் சிவகாமி. அதற்குள், "ஏதோ, இவ அப்பா வீட்டுச் சொத்துல அதுவும் ஒண்ணுங்கிறமாதிரி சொல்றா பாருங்க சம்பந்தி... இவ, அவங்க அப்பா வீட்லருந்து சொந்தமாப் போட்டுட்டு வந்தது அது ஒண்ணைமட்டும்தான்...மத்ததெல்லாம் அவ அக்காவோட இரவல் நகையைப்போட்டே எங்களை ஏமாத்திட்டாரு அவங்க அப்பா. என்னதான் சொல்லுங்க சம்பந்தி, நாம கல்யாணத்துக்கப்புறம் எத்தனை பவுன் வாங்கிக்கொடுத்தாலும், அப்பா போட்டுவிட்ட அம்பதுரூவா நகையைத்தான் இந்தப் பொம்பளைங்க பெருசா பேசுவாங்க" என்று ரேவதியின் தந்தை நடேசன், சந்தடிசாக்கில் கிண்டலாய்ச் சொல்ல, கண்ணீர் கூடியது சிவகாமியின் கண்களில். எரிச்சலுடன் அப்பாவைப் பார்த்தாள் மகள் ரேவதி. எப்பவுமே உங்க நாக்குல விஷம்தானாப்பா? என்ற வார்த்தைகள் எழுந்தது அவள் மனசுக்குள். பேச்சு திசைமாறுவதை உணர்ந்து, தானும் தன் மனைவியைச் சங்கடத்துடன் பார்த்தார் மாப்பிள்ளையின் தந்தை பரமசிவம். அட, அதை விடுங்க சம்பந்தி...இதேமாதிரிதான் நாளைக்கு நம்ம பொண்ணுங்களும் நம்மைப்பத்திப் பெருமையா பேசுவாங்க. அப்ப, அதைக் கேட்கும்போது நமக்கு சந்தோஷமா இருக்குமில்ல, என்று அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பரமசிவம். சிவகாமி எழுந்து உள்ளே அடுக்களைக்குள் நுழைந்தாள். மகளும் மருமகனும் என்னசொல்வதென்று தெரியாமல் அவளைப் பார்ப்பதைப் புரிந்தவளாய், வருத்தத்தை மறைத்துச் சிரித்தபடியே சாப்பாட்டுத்தட்டுகளை எடுத்துச்சென்று கழுவ ஆரம்பித்தாள். பின்னால் வந்த ரேவதி, அம்மாவின் தோளைப்பிடித்து அழுத்தியபடியே, "அப்பா ஏம்மா இங்கவந்துகூட இப்படியெல்லாம் பேசுறாங்க? விடும்மா, இதெல்லாம் நமக்குப் பழகிப்போனதுதானே? ஊருக்குப்போற நேரத்தில் நீ வருத்தமா இருந்தா, இங்க எனக்கு நிம்மதியாவே இருக்காது" என்று சொல்ல, மகளுக்காக மௌனமாய்ச் சிரித்தாள் சிவகாமி. ஸ்டேஷனுக்குக் கிளம்பும்வரை அங்கே யாரும் ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கொள்ளவில்லை. ஸ்டேஷனில் மகளிடம் விடைபெறும்போதுகூட, கணவன்பேசிய பேச்சுத்தான் மனசில் நிறைந்திருந்தது அவளுக்கு. கல்யாணமாகி இருபத்தைந்து வருஷங்கள், அப்பா கொடுத்த படிப்பில், ஆசிரியை வேலை பார்த்துச் சம்பாதித்துக் கொடுத்திருந்தாலும், அப்போ இருந்த அவளது குடும்ப நிலைமை, இப்போதுவரைக்கும் சபையில் கேலி பேசப்படுவது அவளுக்கு வேதனையாகவே இருந்தது. சாதாரணமாக மற்ற விஷயங்களில், அவள் கணவரொன்றும் அத்தனை மோசமாக நடந்துகொள்ளக்கூடியவரில்லையென்றாலும், நாலுபேர் கூடுகையில் நாக்கில் விஷம் ஏறிவிடும் அவருக்கு. இளக்காரமாய்ப் பேசி யாரையாவது சங்கடப்படுத்திவிடுவோமோ என்ற எண்ணமெல்லாம் பேசும்போது எழுவதில்லை அவருக்கு. அதிலும் மனைவியைப் பழித்துப் பேசுவது அவருக்கு மிகவும் பிடித்துப்போன ஒன்று. நெல்லை சந்திப்பில் இறங்கியபோது, மகன் ரகு வந்திருந்தான். அவனிடம், பிளாட்பாரத்தில் தண்ணீர் பாட்டில் வாங்கிவரச்சொல்லிக் குடித்துவிட்டு, ஒன்றிரண்டு வார்த்தைகள்தான் பேசியிருப்பாள். அதற்குள், "ஏதோ காணாத மகனைக் கண்டுட்டமாதிரி, அவனைப் பாத்துக்கிட்டு 'மசமச'ன்னு நின்னாப் போதுமா? பெட்டியை எடுத்துக்கிட்டு வீட்டுக்குப் போகவேண்டாமா?" என்று அவர் பல்லைக் கடிக்க, இன்னும் எத்தனை வருஷம் இப்படி இடிசொற்களைக் கேட்கவேண்டுமோ என்ற எண்ணத்துடன், மகனின் கையை ஆறுதலாகப் பிடித்துக்கொண்டு நடந்தாள் சிவகாமி. ஆட்டோவில் ஏறியபின்னும் அவன் கைகளை விட மனசில்லை அவளுக்கு. கண்களை இறுக மூடிக்கொண்டாள். மூடிய இமைகளினூடே கண்ணீர் வழிந்ததைப் பார்த்தான் மகன். வீட்டிற்குப்போய் விசாரித்துவிட்டு, அம்மாவிடம் நாலுவார்த்தை ஆறுதலாய்ப் பேசவேண்டுமென்ற எண்ணம் ஓடியது அவனுக்குள். ரயில்வே கேட்டைத்தாண்டி வீட்டுச் சந்தில் ஆட்டோ திரும்பியது. "அம்மா, வீடு வந்திருச்சு" என்று அவள் தோளைத் தொட்டான் ரகு. அவளிடம் அசைவில்லை. ஆட்டோவின் குலுங்கலில், அவன் தோளில் மெல்லச்சரிந்தது சிவகாமியின் தலை. அம்மா, அம்மா, என்று உலுக்கியும் அவள் எழுந்திருக்காமல்போகவே, பதற்றத்துடன், ஆட்டோவை அருகிலிருந்த மருத்துவமனைக்குத் திருப்பச்சொன்னான் அவன். அவசர சிகிச்சைக்குக் கொண்டுப்போனார்கள். அங்கே சிவகாமியைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, "முடிஞ்சுபோச்சு" என்று உதட்டைப் பிதுக்கினார் மருத்துவர். "அம்மா..." என்று அலறியபடியே அவளுடைய கைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான் ரகு. அப்பாவைப் பார்த்து, "இப்போ திருப்திதானே உங்களுக்கு?" என்று கேட்டது அவனது பார்வை. அழுதபடியே அம்மாவின் முகத்தைப் பார்த்தான். அவள் சொல்லால் காயப்பட்ட கதைகளைச் சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தது அவள் கண்களில் வழிந்துகொண்டிருந்த கண்ணீர். at ஜூன் 15, 2011 கருத்துகள் இல்லை: இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர் Labels: குடும்பம், சிறுகதை, சுடுசொல், tamil, tamil short story, tamil sirukathai, tamil stories, tamil story புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom) பதிவுகள் ► 2021 (1) ► மார்ச் (1) ► 2020 (5) ► செப்டம்பர் (2) ► ஆகஸ்ட் (1) ► ஏப்ரல் (1) ► மார்ச் (1) ► 2019 (4) ► நவம்பர் (2) ► அக்டோபர் (1) ► பிப்ரவரி (1) ► 2018 (8) ► டிசம்பர் (6) ► அக்டோபர் (1) ► செப்டம்பர் (1) ► 2017 (1) ► ஜனவரி (1) ► 2016 (1) ► ஜூன் (1) ► 2015 (4) ► டிசம்பர் (1) ► செப்டம்பர் (2) ► ஜனவரி (1) ► 2014 (13) ► ஆகஸ்ட் (2) ► மார்ச் (3) ► பிப்ரவரி (8) ▼ 2011 (11) ► நவம்பர் (1) ► அக்டோபர் (1) ► செப்டம்பர் (1) ▼ ஜூன் (1) சொல்லும் கொல்லும்! ► மார்ச் (3) ► பிப்ரவரி (1) ► ஜனவரி (3) ► 2010 (35) ► டிசம்பர் (6) ► நவம்பர் (4) ► அக்டோபர் (7) ► செப்டம்பர் (8) ► ஜூன் (1) ► மே (3) ► மார்ச் (1) ► பிப்ரவரி (1) ► ஜனவரி (4) ► 2009 (29) ► டிசம்பர் (2) ► நவம்பர் (4) ► அக்டோபர் (3) ► செப்டம்பர் (4) ► ஜூலை (2) ► ஜூன் (10) ► பிப்ரவரி (3) ► ஜனவரி (1) ► 2008 (15) ► டிசம்பர் (3) ► நவம்பர் (7) ► அக்டோபர் (1) ► மே (4) Popular Posts குடைமிளகாய் பொரியல் குடைமிளகாயைப் பலவிதங்களில் சமையலில் பயன்படுத்துவோம். ஆனால் இந்த வகை பொரியல் மிக எளிதானதும், மிகச் சுவையானதும் கூட... சாம்பார், தயிர் சாதத்... பிறவிக்குணங்கள் எவை எவை? | ஔவையார் தனிப்பாடல் திரட்டு பிறவிக்குணங்கள் எவை எவையென்று ஔவை மூதாட்டி ஒரு அழகான பாடலில் சொல்லியிருக்கிறார். ஔவையாரின் தனிப்பாடல் திரட்டு என்னும் நூலில் இடம்பெற்றிருக்க... பாசக்காரி சிறுகதை நிறுத்தத்திலிருந்து பஸ் கிளம்பியபிறகும், "அக்கா காசு குடுங்கக்கா, அண்ணே காசுகுடுங்கண்ணே..." என்று சத்தமாய்க் கேட்டுக்கொண்டே தான... சிக்கிலிங்கிராமம் திருச்செந்தூர் பாஸஞ்சர் நெல்லை சந்திப்பில் வந்து நின்றது. விலுக்கென்று ஆடி நின்றதில் ஜன்னல் கம்பியில் சாய்ந்து கண்ணை மூடியிருந்த பெரியவர் கண... தேவாரம் - கூற்றாயினவாறு விலக்ககலீர் | திருநாவுக்கரசர் தேவாரம் வயிற்று நோய்களைத் தீர்க்கும் அப்பரின் (திருநாவுக்கரசரின்) தேவாரப்பாடலும் அதன் விளக்கமும். இளம் வயதில் தருமசேனர் என்ற பெயருடன் சமண மதத்தைச் ...