text
stringlengths
0
5.49k
“உக்காரப்பா, ஒங்க மொதலாளி நியூலயனுக்குப் போயிருக்காக. அவுகள்ளாம் அங்கெ, நம்ம கடையில இருப்பாக. விளக்கு வைக்கிறதுக்கு முன்னாடி வந்திருவாக. உக்காரு செல்லையா.”
சுவரோரம் கிடந்த நாற்காலியில் உட்கார்ந்தான். கண்கள் உள்கட்டுப் பக்கம் சென்றன. கதவுக்குப் பின்னால் உடலை மறைத்தவாறு அவனைக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த குளிர்ந்த முகம் தெரிந்தது; மறுவிநாடி மறைந்துவிட்டது.
“நீ போயி ரெண்டு வருஷமாச்சே, ஒரு கடிதாசி போடக்கூடாதா? என்னமோ ஏதோன்னு நினைச்சிக்கினே இருந்தேன்... கருப்பையாண்ணே! காப்பி போட்டாங்க”
வாயைப் பிளந்தவாறு செல்லையாவின் சராய், பிஸ்டல், பூட்ஸ் முதலியவற்றைப் பார்த்து நின்ற கருப்பையா உள்ளே ஓடினார்.
“அதிகமாகக் கடிதம் எழுதக்கூடாதென்று உத்தரவு. உங்க எல்லோரையும் பற்றி அடிக்கடி விசாரித்துக்கொள்வேன்.”
உள்ளே மரகதமும் கருப்பையாவும் கிசுகிசுவென்று பேசிக் கொண்டிருந்தனர். செல்லையா பேச்சோடு பேச்சாகப் பார்வையை உள்ளே திருப்பினான். கருப்பையா காபித் தம்ளருடன் நிலைப்படியைத் தாண்டினார். பின்னால் மரகதத்தின் முழு நிலவு வட்ட முகம் மின்னியது. இதென்ன பழைய மரகதம்தானா அல்லது தேவலோகத்துப் பெண்ணா?
“காப்பியக் குடி, செல்லையா” காமாட்சியம்மாளின் குரல் சொல்லிற்று.
திடுக்கிட்டுத் திரும்பியவன், காபித் தம்ளரை வாங்கினான்.
“ஏனப்பா, திக்குத் தெரியாத சீமையில வந்து அகப்பட்டுக்கிணு முழிக்கிறமே, எங்களை விட்டுப்பிட்டு இப்படிப் போகலாமா? நீ இங்கின இருந்தாக்கா மனசுக்கு எம்புட்டுத் தெம்பாயிருக்கும்... வடிவேலுதான் போயிட்டான்.” குண்டு வீச்சில் பலியான மகன் நினைவு வந்ததும் காமாட்சியம்மாளின் குரல் கம்மியது; கண்களில் நீர் சுரந்தது.
“இனிமேல் ஒன்றும் பயமில்லை. சண்டை சீக்கிரம் முடிந்துவிடும்”
“வெள்ளைக்காரன் வந்திருவானா?”
“யார் வந்தாலும் நமக்கு ஒன்றுதான். சண்டை நின்று, கப்பல் விட்டால் சரி.”
“ம்ம்... ஆமா, அங்க ஒனக்கு என்ன வேலையப்பா? இடுப்பிலே இருக்கே அதென்ன டுப்பாக்கியா?”
“ஆமா, பிஸ்டல். ராணுவத்தில் அதிகாரி, லெப்டினன்ட்.”
“அப்படீன்னா?”
“பட்டாளத்தில் ஆபீசர் வேலைன்னு சொல்றாங்கள்ள, அது.”
“ஆப்சரா!” காமாட்சியம்மாளின் வியப்பு, கண்களில் தெரிந்தது. எல்லோரும் சிப்பாயி வேலைக்கிப் போயிருக்கியன்னுல நினச்சென். நம்ம பிள்ளைக ஆப்சர் வேலையிலயும் இருக்காகளா?”
“ஆமா, கொஞ்சம் பேர், ரொம்ப இல்லை.”
“ம் ஆமாஅ, நம்ம கடையிலிருந்துபோன முத்துலிங்கம், சேது எல்லாம் எங்கப்பா இருக்காக? ஒண்ணும் தெரியலையே... எங்கெ போயி என்ன அவதிப்படுதுகளோ! ம்... காப்பியக் குடி ஆறுது.”
“சேது பாலர் சேனையில் இருப்பதாகச் சொன்னார்கள். முத்துலிங்கம் சங்கதி தெரியவில்லை.”
பர்மாப் போர்க்களத்தில் முத்துலிங்கம் பலியான செய்தியைச் சொல்ல விரும்பவில்லை. காப்பியைக் குடித்துவிட்டு தம்ளரைக் கீழே வைத்தான்.
“ஆமாஅ, பர்மாச் சண்டைக்குப்போன நம்ம பிள்ளையக கணக்கு வழக்கில்லாமல் செத்துப் போச்சுதுகளாமே, அதுகளைப் பெத்தவுகளுக்கு யாரு பிள்ளை கொடுக்கிறது? இதெல்லாம் நமக்கெதுக்கு? சப்பான்காரனும் வெள்ளைக்காரனும் சண்டை பிடிச்சுக் கெட்டுக் குட்டிச்சுவராய்ப் போகட்டும்; அரசழிஞ்சு அடியோட தொலையட்டும். நமக்கென்ன?” பேச்சு படபடப்பாக வந்தது.
“சாகப் பயந்தால் முடியுமா? வீட்டில் இருந்தவர்கள் குண்டு வீச்சில் சாகவில்லையா?”
“ஏனப்பா, உன்னையவும் பர்மாச் சண்டைக்கிப் போகச் சொல்வாரா நேத்தாசி?”
“உத்தரவு வந்தால் போகவேண்டியதுதான்.”
“நீ போக வேணாமப்பா, ஒண்ணு ஆனாப் போனால், உங்க ஆத்தாளுக்கு யார் பதில் சொல்றது?”
“பர்மாவுக்குப் போக வேண்டியிருக்காது. ரெண்டு மாசத்தில் சண்டை முடிந்துவிடும்.”
“சரி, இதையெல்லாம் கழட்டிப் போட்டுப்பிட்டு வேட்டிய எடுத்துக் கட்டிக்ய. ஒன் டவுசரையும் தொப்பியவும் பாத்தாப் பயமாயிருக்கு. ஒங்க மொதலாளி பாத்தா அரண்டு போவாரு” காமாட்சியம்மாளின் முகத்தில் சிரிப்பு அரும்பியது.
“காலையில் முகாமுக்குத் திரும்ப வேண்டும். இங்கு நிறைய வேலையிருக்கிறது. இப்போ கிளம்பினால்தான் சரியாயிருக்கும்” எழுந்தான்.
“நல்லாயிருக்கே, உக்காரு. ரெண்டு வருஷம் காட்ல இருந்த பிள்ளை, நாலு நாளைக்கி வாய்க்கி ருசியாகச் சாப்பிட்டுப் பிட்டுப் போ.”
“ஒரு நாள்தான் லீவு. இன்னொரு முறை வர்றென்.” வயிர முத்துப்பிள்ளை வருவதற்குள் புறப்படுவதென்று தீர்மானம் செய்துவிட்டான்.
“காலையில போறதுக்கு இப்ப என்ன? வேலைகளை முடிச்சிக்கிணு சாப்பிட வா. ஒங்க மொதலாளியும் அதுக்குள்ள வந்திருவாரு.”
“நேரமில்லை. நிறைய வேலையிருக்கிறது” கும்பிட்டான். “முதலாளியிடம் சொல்லுங்கள்.”
“மகராசனாய்ப் போய்ட்டு வா. பத்திரமா இருந்துக்க. எங்களை மறந்திராதையப்பா!”
“கருப்பையாண்ணே, வரட்டுமா?” செல்லையா உள் கதவைப் பார்த்தான். மரகதத்தின் முழு உருவம் தெரிந்தது.
“ஆகட்டும், போய்த்து வாங்கண்ணே.”
“வருகிறேன்.” தொப்பியைத் தலையில் வைத்துக்கொண்டு படிக்கட்டில் இறங்கிச் சென்றான்.
3. மலேயா ராமாயணம்
முன் ஹாலில் கிடந்த வட்ட மேசையைச் சுற்றி நான்கு பேர் உட்கார்ந்திருந்தார்கள். மேலே, கறுப்பு முகமூடி போட்ட விளக்கு தொங்கிற்று. எஸ்.எஸ். லெப்டினன்ட் மாணிக்கத்தின் கால்கள் மேசைமீது கிடந்தன. இடப்புறத்தில் ‘சுதந்திர இந்தியா’ படித்துக் கொண்டிருந்தான் செகண்ட் லெப்டினன்ட் பழனியப்பன். மற்ற இருவரும் மாணிக்கத்துடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.
“செல்லையா!” எல்லோரும் ஒருமித்து வரவேற்றார்கள்.
“எங்கே போய்த் தொலைந்தீர்கள்? ஏதாவது வேட்டையோ? சாமி! நெல்சன்! எப்போது வந்தீர்கள்?”
“மூன்று நாள் லீவ், தாயாருக்கு நிமோனியா. திங்கட்கிழமை திரும்ப வேண்டும்.” ஜித்ரா முகாம் 6வது ரெஜிமென்டைச் சேர்ந்த லெப்டினன்ட் சாமி சொன்னான்.
“இப்போதுதான் வந்தேன். நாளைக்குத் திரும்ப வேண்டும்.” தைப்பிங் 5வது கொரில்லாப் படை லெப்டினன்ட் நெல்சன் ஆங்கிலத்தில் தெரிவித்தான். அவனுக்குத் தமிழ் சரியாக வராது.
“இங்கே வந்து பார்த்தேன். யாரையும் காணோம்... டத்தோ கிராமட் ரோடுக்குப் போயிருந்தேன்.” ஜன்னலோரம் கிடந்த நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தான்.
“தெரியும், தெரியும். வேறு எங்க போகப் போகிறாய்? காந்தம் இருக்கும் திக்கில் இரும்பு. என்ன, மரகத தரிசனம் கிட்டியதா, அல்லது தந்தையெனும் நந்தி வழிமறித்து...”
செல்லையா இடது கையை ஓங்கி, மாணிக்கத்தின முதுகில் அடித்தான்.