text
stringlengths
0
5.49k
கடலுக்கு அப்பால்
ப. சிங்காரம்
உள்ளடக்கம்
முன்னுரை
ஒன்று
1. லெப்டினன்ட் செல்லையா
2. மரகதம்
3. மலேயா ராமாயணம்
4. வானாயீனா
5. மாணிக்கம்
6. ஈப்போ கூட்டம்
7. நள்ளிரவில் வெடிமுழக்கம்
8. வெளியேற்றம்
9. வடதிசை யாத்திரை
10. சிம்பாங் தீகா பாலம்
11. வழியில் ஒரு யுத்தம்
12. ஐந்து ஜாத்தி மரங்கள்
இரண்டு
1. யூனியன் ஜாக்
2. ஒரு வேட்டி
3. முதலில் பிழைப்பு
4. அன்று நடந்தது
5. முதலாளி வீடு
6. அழகி மின்லிங்
7. இன்ஸ்பெக்டர் குப்புசாமி
8. தொழில்துறை
9. தாயும் மகளும்
10. செட்டித் தெரு
மூன்று
1. தோதான மாப்பிள்ளை
2. கருப்பையாவின் தூது
3. அக்கினி மைந்தன்
4. பழைய நண்பர்கள்
5. தண்ணீர் மலையான் கோயில்
6. மனமெனும் புதிர்
7. ஒரு பரிசு
8. எது கடமை
9. அமைதி
முன்னுரை
கடலுக்கு அப்பால் கதை 1956ல் எழுதி முடிக்கப்பட்டது. அது முதல் இதைப் படித்துப் பார்த்த பிரசுர கர்த்தர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், கதை எழுத்தாளர்கள் பலப்பலர். ஆயினும் நாராயணசாமி ஐயர் நாவல் போட்டியில் பரிசு பெறும் வரை இதற்கு அச்சேறும் வாய்ப்புக் கிட்டவில்லை.
குறிப்பிட்டதொரு காலவரையறையை மனத்திற்கொண்டு அவசர அவசரமாக எழுதியதாலும், பிற்பாடு தேவையெனக் கருதிய திருத்தங்களைச் செய்வதற்குப் போதிய அளவில் தொடர்ச்சியாக ஓய்வு கிடைக்காததாலும் விரும்பும் அளவுக்கு நிறைவாய்க் கதை அமையவில்லை என்று இப்போது என் மனத்தில் படுகிறது. இது இயல்பே.
இரண்டாவது உலப்போர்க் காலத்தில் நிகழ்வதாக உள்ள கற்பனைப் படைப்பு கடலுக்கு அப்பால் கதை என்பதை வாசகர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அப்போது தமிழ்ச் சினிமாக் கொட்டகையாக இருந்த வின்சர் இப்போது புத்துருப்பெற்று ஆங்கிலப் படங்களை மட்டுமே திரையிடும் காப்பிட்டல் ஆக மாறிவிட்டது என்று அறிகிறேன். செட்டி தெருவையும் சூளியா தெருவையும் பினாங்கு ரோட்டையும் பர்மா ரோட்டையும் பழைய உருவில் பார்க்க முடியாது என்பது திண்ணம்.
பினாங்கில் ஓடுவது டிராம் அல்ல; டிராலி. ஆயினும் அனைவரும் டிராம் என்றே அழைப்பதால் அந்தப் பெயரையே உபயோகித்துள்ளேன். பினாங் செட்டி தெரு கிட்டங்கி வர்ணனை அப்படியே அப்பட்டமாக இல்லாமல் எல்லா ஊர்ச் செட்டி தெருக் கிட்டங்கிகளுக்கும் பொருந்தும் வகையில் மாற்றப்பட்டிருக்கிறது. செட்டிய வீட்டு ஆள் என்பது ஜாதியைக் குறிக்காது. லேவா தேவித் தொழிலில் சம்பந்தப்பட்டவர் என்பதே அதன் அர்த்தம். இன்னொன்று லேவாதேவித் தொழிலில் ஈடுபட்ட தமிழர்கள் அனைவரும் - இந்தோனேசியாவைப் பொறுத்தவரை வேட்டி கட்டுவோரெல்லாம் செட்டியார்கள் என்பது சீனர், மலாய்க்காரர்களின் நம்பிக்கையாகும்.
காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு என்பது உண்மையாகலின், இந்தக் கதைபற்றி நான் விமர்சிப்பது ஒருகால் தற்புகழ்ச்சியாக முடியக்கூடும். ஆகவே அந்த வேலையைப் பிறருக்கு விட்டு வைக்கிறேன்.
நாவலைப் பிரசுரிப்பதற்காக மேற்கொண்ட முயற்சிகள் தோற்றதன் விளைவாகப் பிரசுரிக்கும் எண்ணத்தையே மனத்திலிருந்து அகற்றிவிட்ட என்னைக் கடைசி முயற்சியாக நாராயணசாமி ஐயர் நாவல் போட்டிக்கு அனுப்பிப் பார்க்குமாறு வற்புறுத்தி அவ்வாறே செய்ய வைத்தவரான எனது நண்பர் திரு.நா.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு எனது அன்பார்ந்த நன்றியை இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்.​