text
stringlengths
0
6.49k
ஒளி ஊடுருவும் வகையில் மெல்லியதாக உள்ள இழைத்து பக்குவப்படுத்தப்பட்ட மிருகங்களின் தோல்களில் வண்ண உருவங்களை வரைந்து, அவற்றை ஒளி உமிழும் விளக்குக்கும், வெண்திரைக்கும் நடுவில் அசைய செய்து, அதன் மூலம் பாவைக்கூத்து கலை நிகழ்ச்சியை நடத்தினார்கள்.கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களையும், விளக்கங்களையும் உண்மையான மனிதர்கள் தங்கள் குரலில்,திரைக்குப்பின் நின்று கொண்டு, அந்த கதாபாத்திரங்களுக்காக பேசினார்கள்.இவறின் முக்கிய அம்சம் பொழுதுபோக்கு ஆகும்.
திரைப்படம் எடுக்கப் பயன்படும் படச்சுருள், செலுலாய்டு எனும் பொருளால் ஆனது. படம் எடுக்கப் பயன்படும் சுருளானது எதிர்ச்சுருள் ஆகும். தனித்தனிப் படச்சுருள்களில் ஒலி மற்றும் ஒளிப்பதிவுகள் எடுக்கப்படும்.
திரைப்படத்தில் ஒளிப்பதிவு செய்யும் கருவிக்குப் படம்பிடிக்கும் கருவி என்று பெயர். இக்கருவியில் ஓரடி நீளமுள்ள படச்சுருளில் 16 படங்கள் வீதம் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ச்சியாகப் படம்பிடிக்கப்படும்.
திரைப்படத்துக்கான பாடல்கள் மற்றும் உரையாடல்களில் எழும் ஒலியலைகளை நுண்ணொலிப் பெருக்கியானது மின் அதிர்வுகளாக்கும். இவை பெருக்கப்பட்டு ஒளியாக்கப்படுகின்றன. இவ்வொளி படச்சுருளின் விளிம்புப் பகுதியில் படிந்து ஒலிப்பாதையாகக் காணப்பெறும்.
ஒளி ஊடுருவும் பிலிமில் படங்களை பிரிண்ட் செய்து வேகமாக இயக்குவதன் மூலம் ஒரு காட்சிப்பொருளாக மாற்ற முடியும் என்று முதன்முதலில், பெல்ஜியம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய ஜோசப் பிளாட்டே கண்டறிந்தார். படங்களை ஒன்றிணைத்து சலனமடைய செய்த முறையும், படம் பிடிக்க செலுலாயிட் பிலிமையும் கண்டுபிடித்தனர். இதை வைத்து ஒருவர் மட்டுமே பார்க்கக்கூடிய ‘கினிட்டோஸ்கோப்’ என்ற கருவியை தாமஸ் ஆல்வா எடிசன் 1893 வருடம் கண்டுபிடித்தார். சி. பிரான்சிஸ் ஜென்கின்ஸ் என்ற அமெரிக்கர் அசையும் படத்தை பலரும் பார்க்கும் வகையில் திரையில் விழச்செய்யும் கருவி ஒன்றை முதன்முதலாக வடிவமைத்தார். இவருடைய கண்டுபிடிப்பின் அடிப்படையிலேயே தற்போதைய சினிமா புரொஜக்டர்கள் இயங்குகின்றன. இவ்விரண்டு கருவிகளையும் ஒன்றிணைத்து லூமியேர் சகோதரர்கள், சலனப்படம் கண்டுபிடிப்பதில் தீவிர கவனம் செலுத்தினார்கள். அதன் பயணாக அவர்கள் நவீன திரைப்படத்திற்கு வித்திட்டனர்.
நவீன திரையரங்குகளில் திரைப்படம் காட்ட ஒளி, ஒலிப்படக் கருவி பயன்படுகிறது. இக்கருவியின் மேலும் அடியிலும் வட்டவடிவில் இரு பெட்டிகள் அமையப்பெற்றிருக்கும். காட்டவேண்டிய படச்சுருள் மேல் பெட்டியில் பொருத்தப்படும். இதில் பல பற்சக்கரங்களும் சக்கரங்களும் காணப்படும். படச்சுருளைப் பற்சக்கரங்களுக்கிடையில் செலுத்தி அடிப்பக்கம் உள்ள பெட்டியில் மீளவும் சுற்றிக் கொள்ளும்படி அமைத்துக் கொள்ளப்படும். இவ்வாறு படச்சுருள் பிரிந்து மீண்டும் பழையபடி சுருளாகிக் கொள்ளும்.ஒளிமிகு விளக்குகளுக்கும் உருப்பெருக்கிகளுக்கும் இடையே படம் வரும்.முன்புறமுள்ள மூடிக்கு இரு கைகள் உண்டு.நொடிக்கு எட்டு முறை வீதம் அவை பதினாறு முறை சுழலும். அப்படிச் சுழலும்போது, அதன் கைகள் ஒளியை மறைக்கும். அந்த நேரம் படச்சுருள் நழுவி, அடுத்த படம் வந்து நிற்கும். அதற்குள் மூடியானது திறந்துவிட, பதிவு செய்யப்பட்ட படமானது திரையில் விழுந்து காட்சியாகும்.
வால்ட் டிஸ்னி என்பவர் முதன்முதலில் கருத்துப்படம் உருவாக்கியவராவார். அடிப்படையில் அவர் ஓர் ஓவியராக இருந்தமையால் ஒன்றுக்கொன்று சிறிது சிறிதாக மாறும்படியான பல்லாயிரக்கணக்கான படங்களை வரைந்துகொண்டு இப்படங்களை வரிசைப்படி அடுக்கி மிகவேகமாகப் புரட்டி ஒரே நிகழ்வாகத் தோன்றும் கருத்துப்படங்களை வடிவமைத்தார். ஒவ்வொரு காட்சியிலும் வரும் விவரங்களையும் பின்னணியையும் தனித்தனியாக எழுதியும், ஒளிபுகும் செல்லுலாய்ட் தகட்டில் தீட்டியும் திரைப்படப் படப்பிடிப்புக் கருவியைக்கொண்டும் கருத்துப்படம் எடுக்கப்படும். கதைக்கேற்ப ஒலிப்பதிவு செய்யப்படும். நவீன கருத்துப்படங்கள் பொம்மைகளைக் கொண்டு உருவாக்கப்படுகின்றன.
உலகின் பல்வேறு பகுதிகளில் நிகழும் நிகழ்ச்சிகளைப் படமாக்கிக் காட்டுவது செய்திப்படமாகும்.செய்திப்படம் தயாரிப்பதென்பது எளிய காரியமல்ல.
விளக்கப்படம் என்பது ஒரு நிகழ்வை மட்டும் எடுத்துக்கொண்டு, அதுகுறித்து முழு விளக்கத்தையும் தருவதாகும்.
கற்போர் எளிதில் கல்வி கற்க எடுக்கப்படும் படங்கள் கல்விப்படங்களாகும்.
1895–ம் வருடம், டிசம்பர் மாதம் 28–ந்தேதி முதன் முதலில் மாலை நேரத்தில் பாரீஸ் நகரில் உள்ள கிராண்ட் கபே என்ற ஓட்டலின் கீழ்தளத்தில் முதல் திரைப்படம் திரையிடப்பட்டது. அப்படத்திற்கு ஒரு பிராங்க் கட்டணம் வசூலிக்கப்பட்டது. முதல் திரைப்படத்தை அரங்கேற்றியவர்கள் லூமியேர் மற்றும் லூயி லூமியேர் என்ற பிரான்சு நாட்டை சேர்ந்த இரட்டையர்கள் ஆவர்.
1903ஆம் வருடம் காட்டப்பட்ட இரயில்கொள்ளை என்ற எட்டு நிமிடம் ஓடிய படம்தான் முதல் சினிமா என்கின்றனர்.
லூமியர் சகோதரர்கள் காட்டியதை இயங்கும் படமென்றாலும் கதையம்சத்துடன் திகழ்ந்த முதல் திரைப்படமாக ரயில்கொள்ளை உள்ளது. தொடர்ந்து படம் எடுக்க லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் படப்படிப்புத் தளங்கள் தோன்றின.இதனால் புதிய நடிகர்கள் உருவாயினர்.கிரிபித் என்பார் 1915இல் மூன்று மணி நேரம் ஓடக்கூடிய ஒரு நாட்டின் தோற்றம் என்ற படத்தை பல்வேறு புது உத்திகளைப் பயன்படுத்தி எடுத்திருந்தார். இப்படத்தில் முதன்முதலாக 75 பேர் கொண்ட இசைக்குழு இசையமைத்திருந்தது. இதைத்தொடர்ந்து பல ஊமைப்படங்கள் தயாரிக்கப்பட்டன.1927இல் முதல் பேசும் படம் வார்னர் பிரதர்ஸால் ஜான்சிங்கர் என்னும் பெயரில் எடுக்கப்பட்டது.இதில் உரையாடலுடன் பாடல்களும் இடம்பெற்றிருந்தது.நாளடைவில் வண்ணத் திரைப்படங்கள் வெளிவரத்தொடங்கின.
1897இல் திரைப்படக்கலையானது லூமியர் சகோதரர்களால் சென்னை வந்தடைந்தது. 1900இல் மேஜர் வார்விக், மின் திரையரங்கம் என்னும் முதல் அரங்கத்தைத் தோற்றுவித்தார். பின், ரகுபதி வெங்கையா, திருச்சி சாமிக்கண்ணு வின்சென்ட் ஆகிய இருவரும் திரையரங்கு அமைத்தனர். ஆர். நடராஜ முதலியார் புரசைவாக்கம் மில்லர்ஸ் வீதியில் கட்டிய திரையரங்கில் தென்னிந்தியாவில் முதல் முறையாகத் தயாரிக்கப்பட்ட அவரது கீசக வதம் 1916 இல் வெளியிடப்பட்டது.தமிழ் சினிமாவின் வரலாற்றின் தொடக்கமாக இது கருதப்பட்டு வருகிறது. பிரகாஷ் என்பவர் பீஷ்மப் பிரதிகளும் கஜேந்திர மோட்சம் போன்ற புராணப் படங்களைத் தயாரித்து வெளியிட்டார். தமிழில் முதல் பேசும்படம் காளிதாஸ் 1931இல் வெளியானது. ஹெச். எம். ரெட்டி என்பார் இதை இயக்கியிருந்தார். இதில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உரையாடல்கள் காணப்பட்டன. பாடல்கள் அதிகம் இடம்பெற்றன.
எல்லிஸ் ஆர்.டங்கன்(1909-2001)அமெக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள பார்டன் நகரில் பிறந்தவர்.தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சினிமாடோகிராபியில் பட்டம் பெற்று,1935ல் இந்தியா வந்து சேர்ந்தார்.அதற்குக் காரணமானவர் அவரோடு அமெரிக்காவில் சினிமாவைப் பயின்ற மணிலால் டான்டன் என்ற மும்பையைச் சேர்ந்த இந்தியராவார். டங்கனுடன் அவரது வகுப்புத் தோழன் மைக்கேல் ஆர்மலேவ் என்பவரும் உடன் வந்தார்.கொல்கத்தாவில் நந்தனார்படத்தை எடுத்துக்கொண்டிருந்த டான்டன் குழுவினர் மூலமாக சதிலீலாவதிபடத்தின் தயாரிப்பாளருடன் அறிமுகமானார் டங்கன்.அப்போது சதிலீலாவதியை இயக்க டங்கன் ஒப்பந்தமானார்.டங்கனின் அந்த நுழைவு தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்தது.
எல்லிஸ் ஆர்.டங்கன் இயக்கிய சதிலீலாவதியில் எம்.கே.ராதா, எம்.எஸ்.ஞானாம்பாள், எம்.ஜி.ராமச்சந்திரன், என்.எஸ்.கிருஷ்ணன்,டி.எஸ்.பாலையா முதலான நட்சத்திரங்கள் அறிமுகமாயினர்.எம்.கே.ராதாவின் தந்தையும் முன்னணி நாடகக்காரருமான எம்.கந்தசாமி முதலியார் இப்படத்திற்கு வசனம் எழுதினார். பாடல்களை சுந்தர வாத்தியார் இயற்றினார். ஆனந்த விகடன் இதழில் தொடராக எழுதி வந்த எஸ்.எஸ்.வாசனின் புதினமே இப்படத்தின் கதையாகும்.இந்தப் படத்தின் தயாரிப்பை கோவை மருதாசலம் செட்டியார் என்பவர் ஏற்றிருந்தார்.18ஆயிரம் அடி மொத்த நீளம் கொண்ட இந்தப் படத்தின் ஓரிரு காட்சிகள் இலங்கையில் படம்பிடிக்கப்பட்டன.
மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வைத் தூண்டும் படமாக சதி லீலாவதி இருந்தது.அத்துடன் இலங்கைத் தீவில் வாழும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் இது படம்பிடித்துக் காட்டியிருந்தது.1936 இல் வெளிநாடு சென்று படப்பிடிப்பு நடத்தி சதிலீலாவதி முன்னுதாரணமாகத் திகழ்ந்தது.புராணங்களை மையப்படுத்திக் காட்சிப்படுத்திக் கொண்டிருந்த தமிழ்ச் சினிமா முதன்முறையாக சமூகப் பிரச்சினையைப் பேசிய காரணத்தால் ஆடல்பாடல் எனும் சினிமா பத்திரிகை தனது 1937ஜனவரி மாத இதழில் சதி லீலாவதி படத்தைப் பாராட்டி எழுதியிருந்தது.
எல்லிஸ் ஆர்.டங்கன் தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் இந்தியிலும் படங்களை இயக்கி இந்திய திரைப்பட வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றினார்.சதி லீலாவதியைத் தொடர்ந்து சீமந்தினி (1936),இரு சகோதரர்கள்(1936),அம்பிகாபதி(1937), சூர்யபுத்திரி(1940),சகுந்தலா(1940), காளமேகம்(1940),தாசிப் பெண்(1943), வால்மீகி(1945),மீரா(1945),பொன்முடி(1950),
மந்திரிகுமாரி(1950) ஆகிய படங்களைத் தமிழில் எடுத்தார்.பின்னர் 1947இல் மீராவை இந்தியிலும் இயக்கினார்.மேலும்,டங்கன் தி ஜங்கிள்(1952),தி பிக் ஹன்ட், ஹாரி பிளாக் அண்ட் தி டைகர்(1958),வீல்ஸ் டு ப்ராகிரஸ்(1959),டார்ஜான் கோஸ் டு இன்டியா(இரண்டாவது யூனிட் தயாரிப்பாளர்) (1962),ஃபார் லிபர்ட்டி அண்ட் யூனியன் (1977),ஜேசையாஃபாக்ஸ் (1987) போன்ற படங்களை ஆங்கிலத்திலும் உருவாக்கினார்.இதுதவிர,அவர் ஆன்டிஸ் கேங்(1955-1960)எனும் தொலைக்காட்சித் தொடர் நிகழ்ச்சியையும் இயக்கி வழிகாட்டினார்.
இந்தியாவின் தரம்மிக்க கலைப்படைப்பாக மீரா மற்றும் சகுந்தலை ஆகிய படங்கள் அமைந்திருந்தன.அவற்றில் இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்துப் பெருமைப்படுத்தியிருந்தார்.1945இல் வெளியான மீரா படத்தைப் பார்த்த பண்டித ஜவகர்லால் நேரு,மௌண்ட்பேட்டன் பிரபு,கவிக்குயில் சரோஜினி நாயுடு ஆகியோர் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நடிப்பின் திறத்தைக் கண்டு வியந்து போயினர்.
அடிப்படையில் நிழற்படக் கருவியும்(கேமரா),ஆடியும்(லென்ஸ்)தான் சினிமாவை உருவாக்குகிறது.எனினும்,அது கலைப்படைப்பாகவோ அல்லது தொழில்நுட்பமாகவோ உருவாகவில்லை. மாறாக,சினிமா என்பது ஒரு கிளர்ச்சியூட்டும் புதிராக நோக்கப்படுவதால் சினிமா,மற்ற கலைகளிலிருந்து வேறுபட்டு காணப்படுகிறது.சினிமாவின் இரண்டாவது நூற்றாண்டில்,டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாகப் பல்வேறு அடுக்குகளைக் கொண்ட எளிய காட்சி ஊடகமாகிவிட்டது.
அடிப்படையில் திரைப்பட படிப்பிடிப்பு என்பது கேமரா வைப்புமுறை,ஒளியமைப்பு,சூரிய ஒளித்தன்மை பற்றிய தெளிவு,ஒலியமைப்பு,லென்ஸ் குறித்த அறிவு என்று தொழில் நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.
படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்ததும்,பட பின் தயாரிப்புப் பணிகள்(Post Production Works)தொடங்கும்.இப்பணிகளின்போது, படத்தொகுப்பு மற்றும் ஒலிச் சேர்க்கைப் பணிகள் அடங்கும்.இந்த ஒலிச் சேர்க்கையின் போது பின்னணி இசைக் கோர்ப்புகளும் பாடல்களும் சேர்க்கப்படும்.இவையனைத்தும் தொழில்நுட்பம் சார்ந்தவையாகும்.
</doc>
<doc id="594" url="https://ta.wikipedia.org/wiki?curid=594" title="தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்">
தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்
</doc>
<doc id="595" url="https://ta.wikipedia.org/wiki?curid=595" title="சிவாஜி கணேசன்">
சிவாஜி கணேசன்
சிவாஜி கணேசன் (அக்டோபர் 1, 1928 - சூலை 21, 2001) புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையா மன்றாயர் கணேசமூர்த்தி ஆகும். இவர், பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.
'சிவாஜி' கணேசன், சின்னையா மன்றாயர் - ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவர் மனைவி கமலா மற்றும் மகன்கள் இராம்குமார், பிரபு மற்றும் மகள்கள் சாந்தி, தேன்மொழி ஆகியோர்கள் ஆவார்.
"சிவாஜி" கணேசன், திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். "சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்" என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது.
'சிவாஜி' கணேசன் 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், இரண்டு ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். நல்ல குரல்வளம், தெளிவான, உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, சிறந்த நடிப்புத் திறன் ஆகியவை இவரின் சிறப்புகளாகும். "நடிகர் திலகம்", "நடிப்புச் சக்கரவர்த்தி" என்று பெரும்பாலான மக்களால் அழைக்கப்பட்டார். எனினும், நாடகத்தின் மூலம் திரைப்படங்களுக்கு அறிமுகமானதாலோ என்னவோ, இவருடைய நடிப்பில் நாடகத்துக்குரிய தன்மைகள் அதிக அளவில் தென்படுவதாகக் குறை கூறுவோரும் உண்டு. குறிப்பாக, அக்கால மேடை நாடகங்களில் தொழில்நுட்பக் குறைபாடுகளின் காரணமாக உணர்ச்சிகளை மிகைப்படுத்திக் காட்டினால் தான் பார்ப்பவர்களுக்குப் புரியும்.
இவர் நடித்த "மனோகரா", "வீரபாண்டிய கட்டபொம்மன்" போன்ற திரைப்படங்கள் வசனத்திற்காகப் பெயர் பெற்றவை. இராஜராஜ சோழன், கப்பலோட்டிய தமிழன் போன்ற வீரர்களினதும் தேசத் தலைவர்களினதும் பாத்திரங்களை ஏற்றுத் திறம்படச் செய்தார். "பாசமலர்", "வசந்த மாளிகை" போன்ற திரைப்படங்கள் மற்றும் பல பக்திப் படங்கள் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்புக்காகப் பேசப்பட்டவை.
தாம் ஒரு முன்னணிக் கதாநாயகனாக இருந்தபோதும், பிற நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க சிவாஜி தயங்கியவர் அல்லர். சிவாஜி கணேசன் முதன்மைப் பாத்திரம் ஏற்றிருந்த பல படங்களில் "பாசமலர்", "பாவ மன்னிப்பு", "பார்த்தால் பசி தீரும்", "வீரபாண்டியக் கட்டபொம்மன்" போன்ற பல படங்களில் ஜெமினி கணேசன் நடித்துள்ளார். மேலும் சிவாஜியுடன் மேஜர் சுந்தரராஜன் பல குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். சிவாஜி கணேசன் கூண்டுக்கிளி எனும் ஒரு திரைப்படத்தில் மட்டுமே எம்ஜிஆருடன் இணைந்து நடித்துள்ளார்.
1955 வரை திராவிட இயக்க அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த இவர், 1961 முதல், காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். 1982ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் ஆனார். 1987ல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, அதை விட்டு விலகி, தமிழக முன்னேற்ற முன்னணி என்ற புதிய கட்சியொன்றை தொடங்கினார். எனினும் நடிகனாக அவருக்குக் கிடைத்த செல்வாக்கு அரசியலுக்குத் துணைவரவில்லை. இறுதிக்காலத்தில் அவர் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார்.
எகிப்து அதிபர் கமால் அப்தெல் நாசர் இந்தியாவிற்கு வருகை தந்த போது, அப்போதைய இந்திய பிரதமர், ஜவகர்லால் நேரு அனுமதி வழங்கப்பட்ட தனி நபர் சிவாஜி கணேசன் ஆவார். 1962 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் அமெரிக்க அரசாங்கத்தின் கலாச்சார பரிமாற்றம் திட்டத்தின் கீழ் அமெரிக்கா சென்ற இந்தியாவில் இருந்து முதல் கலைஞர், இருந்தது. சிவாஜி கணேசன், இந்திய கலாச்சார தூதர் பாத்திரத்தில் அங்கு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப் கென்னடியை சந்தித்தார். அப்போது அவரை கவுரவப்படுத்தும் விதமாக அவரை ஒரு நாள் நயாகரா நீர்வீழ்ச்சியின் கௌரவ மேயராக நியமித்து அவரிடம் அதற்கான சாவியையும் கொடுத்தனர்.
</doc>
<doc id="596" url="https://ta.wikipedia.org/wiki?curid=596" title="ஐக்கிய அரபு அமீரகம்">
ஐக்கிய அரபு அமீரகம்
ஐக்கிய அரபு அமீரகம் ("United Arab Emirates", ஐக்கிய அரபு எமிரேட்ஸ், "UAE" '), சுருக்கமாக அமீரகம் அல்லது எமிரேட்சு என்பது பாரசீக வளைகுடாவில் அராபியத் தீபகற்பத்தின் தென்கிழக்கு முனையில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இதன் எல்லைகளாக கிழக்கே ஓமான், தெற்கே சவூதி அரேபியா ஆகிய நாடுகளும், உள்ளன. கத்தார், ஈரான் ஆகியவை கடல் எல்லைகளைக் கொண்டுள்ளன. 2013 ஆம் ஆன்டில் இதன் மக்கள்தொகை 9.2 மில்லியன்கள் ஆகும். இவர்களில் 1.4 மில். பேர் அமீரகத்தினரும், 7.8 மில்லியன் பேர் வெளிநாட்டினரும் ஆவார்.
1971 டிசம்பரில் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்று நிறுவப்பட்ட இந்நாடு அபுதாபி (தலைநகரமாக செயல்படுகிறது),அல் ஐன், அஜ்மான், துபாய், புஜைரா, ரஃஸ் அல்-கைமா, சார்ஜா, உம் அல்-குவைன் ஆகிய ஏழு அமீரகங்களைக் கொண்ட ஒரு கூட்டரசாகும். தனி முடியாட்சிகளைக் கொண்ட ஒவ்வொரு அமீரகமும் நடுவண் உச்சப் பேரவி ஒன்றின் மூலம் கூட்டாக நிருவகிக்கப்படுகிறது. ஏழு முடியாட்சிகளில் ஒருவர் அமீரகத்தின் சனாதிபதியாக இருப்பார். அமீரகத்தின் அதிகாரபூர்வ சமயம் இசுலாம் ஆகும், அதிகாரபூர்வ மொழி அரபி (அரபு) ஆகும். ஆனாலும், ஆங்கிலம் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
அமீரகத்தின் எண்ணெய் வளம் உலகின் நான்காவது-பெரியதாகும். அதேவேளையில், இதன் இயற்கை வாயு வளம் உலகின் 17-வது பெரியதாகும். அமீரகத்தின் ஆரசுத்தலைவரும் அபுதாபியின் ஆட்சியாளருமான காலஞ்சென்ற சேக் சயத் பின் சுல்தான் அல் நகியான் அமீரகத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு எண்ணெய் வருவாயை சுகாதாரம், கல்வி, உட்கட்டமைப்பு ஆகியவற்றுக்கு செலவிட்டார். அமீரகத்தின் பொருளாதாரம் வளைகுடா நாடுகளிலேயே அதிகம் பல்வகைப்படுத்தப்பட்டதாக உள்ளது. அதிக மக்கள்தொகையைக் கொண்ட துபாய் நகரம் பன்னாட்டு வணிக, மற்றும் போக்குவரத்துக்கு உகந்த இடமாக மாறியுள்ளது. ஆனாலும், நாட்டின் பொருளாதாரம் அதன் எண்ணெய், இயற்கை வாயு வளத்திலேயே பெரிதும் தங்கியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் அரபியக் குடாநாட்டில் பாரசீகக் குடாவின் தெற்குக் கரையோரத்திலும், ஓமான் குடாவின் வடமேற்குக் கரைப்பகுதியிலும் இருந்த இனக்குழு அமைப்பைக் கொண்ட சேக்ககங்கள் இணைந்து உருவானது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இப் பகுதியில் கடலோடிகளான மக்கள் வாழ்ந்து வந்தனர். 7 ஆம் நூற்றாண்டில் இவர்கள் இசுலாம் மதத்தைத் தழுவினர்.
16 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் போத்துக்கேயரின் விரிவாக்கம் ஏற்பட்டபோது பாரசீகக் குடாப்பகுதிகளிலும் அவர்கள் உதுமானியருடன் போர்களில் ஈடுபட்டனர். பாரசீகக் குடாப்பகுதி சுமார் 150 ஆண்டுகள் போத்துக்கேயரின் செல்வாக்குக்குள் இருந்தது. 16 ஆம் நூற்றாண்டில் இன்றைய ஐக்கிய அரபு அமீரகத்தின் சில பகுதிகள் உதுமானியப் பேரரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு இருந்தன.
பிற்காலத்தில் இப்பகுதிகளில் கடற் கொள்ளையர்களும் வாழ்ந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டில் இப்பகுதி இந்தியா சென்றுவரும் பிரித்தானியக் கப்பல்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்ததால், பிரித்தானியா இதிற் தலையிட்டது. 1820 இல் பிரித்தானியா இக் கரையோரத்தில் அமைந்திருந்த சேக்ககங்களுடன் ஒரு அரைகுறை அமைதி ஒப்பந்தம் ஒன்றைச் செய்திருந்தது. 1853 ல் இது ஒரு முழுமையான ஒப்பந்தமாகியது. இதன்படி அந் நாடுகள் அவற்றின் பாதுகாப்பு, வெளிவிவகாரங்களின் கட்டுப்பாட்டை ஐக்கிய இராச்சியத்துக்கு வழங்கின. இதன் பின் இவை அமைதி ஒப்பந்த நாடுகள் எனவும், இக் கரைப்பகுதி அமைதி ஒப்பந்தக் கரை எனவும் அழைக்கப்பட்டன. பிரித்தானியா இதில் தொடர்புள்ள 9 நாடுகளுக்கு பாதுகாப்பு வழங்கி வந்ததேயன்றி அவற்றைக் குடியேற்ற நாடுகளாக நிர்வாகம் செய்யவில்லை.
பிற ஐரோப்பிய நாடுகளும் இப்பகுதிகள் மீது கண் வைத்திருந்ததால் பிரித்தானியாவும், அமைதி ஒப்பந்த நாடுகளும் மேலும் நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் முகமாக 1892 ஆம் ஆண்டில் இன்னொரு ஒப்பந்தத்தைச் செய்துகொண்டன. இதன்படி சேக்குகள், தங்கள் ஆட்சிப்பகுதிகளைப் பயன்படுத்த வேறு நாடுகளை அனுமதிப்பதில்லை என்றும், பிரித்தானியாவின் அனுமதியின்றி வேறு நாடுகளுடன் உறவுகளை வைத்துக்கொள்வதில்லை என்றும் இணங்கினர். இதற்குப் பதிலாக கடல்வழியான எல்லாத் தாக்குதல்களிலுமிருந்து அமைதி ஒப்பந்த நாடுகளைப் பாதுகாப்பது எனவும், தரை வழித்தாக்குதல்கள் எதையும் முறியடிக்க அவர்களுக்கு உதவுவதெனவும் பிரித்தானியா ஒத்துக்கொண்டது.
1960களின் தொடக்கத்தில் அபூ ழபீயில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. இது கூட்டமைப்பு உருவாக்கும் கோரிக்கைக்கு வழி வகுத்தது. 1967 ஆம் ஆண்டில் சேக் சாயித் பின் சுல்தான் அல் நகியான் அபூ ழபீயின் ஆட்சியாளர் ஆனார். இதே வேளை பிரித்தானியர் அங்கே தமது எண்ணெய் முதலீடுகளை ஐக்கிய அமெரிக்காவிடம் இழந்து வந்தனர். பிரித்தானியா தமது கடல் கடந்த ஆட்சிப் பகுதிகள் பலவற்றை இழந்ததனாலும், பிற சிக்கல்களினாலும் பெரும் இழப்புக்களைச் சந்தித்தனர். அவர்களிடம் போதிய பலமோ, பணமோ இருக்கவில்லை.