text
stringlengths
1
15.6k
"மூலம்:" www.statistics.gov.lk - கணக்கெடுப்பு ஆண்டு 2001
இலங்கையில் புத்த சமயத்தை அறிமுகப்படுத்திய இந்தியாவின் அசோகச் சக்கரவர்த்தி, பௌத்த பிக்குணியாக இருந்த தன்னுடய மகளான சங்கமித்தை மூலம் அனுப்பிய, புத்தர் ஞானம் பெற்ற வெள்ளரசு மரத்தின் கிளையொன்று, அனுராதபுரத்திலேயே நடப்பட்டது. தற்பொழுது உலகின் மிகப் பழைய மரங்களிலொன்றாகக் கருதப்படும் இம் மரம், பௌத்தர்களின் வழிபாட்டுக்குரியதாக இன்னும் இருந்து வருகிறது.
இந்த நகரைச் சுற்றி, 5 பெரிய நீர்ப்பாசனக் குளங்கள் மிகப் பழைய காலம் முதலே இருந்து வருகின்றன. அனுராதபுரத்திலே வாழ்ந்த பெருந்தொகையான மக்களின் உணவுத்தேவைகளுக்காக, சுற்றியுள்ள பரந்த பிரதேசத்தில் விவசாயம் செய்வதற்கு இக் குளங்கள் பயன்பட்டன. சுமார் 2500 ஆண்டுகளுக்குப் பின்னரும் இக் குளங்கள் இன்னும் பயன்பாட்டில் உள்ளன. நகருக்கு அணித்தாக அதனைச் சுற்றிப் பல பாரிய பௌத்த விகாரைகளும் இருந்தன.
கைவிடப்பட்ட பின்னர், பாழடைந்து, காடடர்ந்து, மறக்கப்பட்டுக் கிடந்த இப் பண்டைய நகரின் அழிபாடுகள், 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், தொல்பொருளாய்வாளர்களினால் வெளிக்கொணரப்பட்டது. அரண்மனைகள், வழிபாட்டிடங்கள், பௌத்த பிக்குகளுக்கான வசிப்பிடங்கள், வைத்தியசாலைகள், பயணிகள் தங்குமிடங்கள், மற்றும் அலங்காரத் தடாகங்கள் முதலியவற்றின் இடிபாடுகள், நகரின் அக்கால வளத்துக்குச் சாட்சியாக உள்ளன.
இந்தியா
இந்தியா ("India"), அதிகாரபூர்வமாக இந்தியக் குடியரசு ("Republic of India") தெற்காசியாவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இந்திய துணைக்கண்டத்தின் பெரும் பகுதியைத் தன்னுள் அடக்கியுள்ளது. இந்தியா என்ற பெயர் சிந்து நதியின் பெயரிலிருந்து பெறப்பட்டது. இந்தியப் பெருநிலம் தெற்கே இந்தியப் பெருங்கடல், மேற்கே அரபிக் கடல், கிழக்கே வங்காள விரிகுடா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் எல்லை நாடுகளாக மேற்கே பாக்கிஸ்தான், வடக்கே பூட்டான், மக்கள் சீனக் குடியரசு, நேபாளம், கிழக்கே வங்காளதேசம், மியான்மர் ஆகியவை அமைந்துள்ளன. இலங்கை, மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகள் இந்தியப் பெருங்கடலில் இந்தியப் பெருநிலம், மற்றும் இலட்சத்தீவுகளுக்கு அண்மையில் அமைந்துள்ளன. இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகள், தாய்லாந்து, இந்தோனேசியாவின் சுமாத்திரா ஆகியவற்றுடன் அந்தமான் கடலில் கடல் எல்லையைக் கொண்டுள்ளன.
பரப்பளவில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ள நாடு. இந்தியா மொத்தம் 7,517 கிமீ (4,700 மைல்) நீளக் கடல் எல்லைக் கொண்டது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி நூற்று இருபத்தியொரு கோடி மக்கள் தொகையைக் கொண்டு உலகின் இரண்டாமிடத்தில் இந்தியா உள்ளது. பொருளாதாரத்தில் பொருள் வாங்குதிறன் சமநிலை அடிப்படையில் நான்காவது இடத்தில் இருக்கின்றது. உலகின் பண்டைய நாகரிகங்களில் இந்தியாவும் ஒன்று ஆகும். சிந்து சமவெளி நாகரிகம் அல்லது ஹரப்பா-மொகஞ்சதாரோ என்று அழைக்கப்படும் நாகரிகம் இங்கு தோன்றியது ஆகும். இந்து சமயம், புத்தம், சமணம், மற்றும் சீக்கியம் ஆகிய நான்கு தலைமை மதங்கள் இந்தியாவிலேயே தோன்றின. பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளினால் கைப்பற்றப்பட்டு, 1947, ஆகத்து 15 அன்று விடுதலை பெற்றது. பின்னர் 1950, சனவரி 26 அன்று குடியரசாக அறிவிக்கப்பட்டு உலகின் மிகப்பெரிய குடியரசு நாடாகத் திகழ்கிறது.
கி.மு.300 இல் அசோகரால் கட்டப்பட்டு, மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள சாஞ்சி ஸ்தூபம் போன்று 40,000 ஆண்டுகளுக்கு முந்திய, பழைய கற்காலத்தைச் சேர்ந்த பாறை ஓவிய மரபு, நடு இந்தியாவிலுள்ள பீம்பேட்கா என்னுமிடத்திலும் வேறு இடங்களிலும் கண்டறியப்பட்டுள்ளது. தெற்காசியாவின், முதல் நிரந்தரக் குடியிருப்புகள் சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் தோன்றின. இப் பகுதி சார் பண்பாடு, உலகின் மிகப் பழைய நாகரிகங்களுள் ஒன்றாக, கி.மு 6000 தொடக்கம் கி.மு 1900 வரை உச்ச நிலையிலிருந்த, சிந்துவெளி நாகரீகமாக வளர்ச்சியடைந்தது.
கி.மு 1500 அளவில், இந்தியாவின் வடமேற்கிலிருந்து ஏற்பட்ட ஆரிய இனக்குழுக்களின் உள்வரவாலும், ஓரளவுக்கு உள்ளூர் வாசிகளுடனான கலப்பினாலும் வேதகாலப் பண்பாடு உருவானதாக ஒரு கருத்து உண்டு. காலப்போக்கில் ஆரியரின் பண்பாடு, மொழி மற்றும் சமயம் என்பன இந்நாட்டில் மிக தலைமைத்துத்துவம் பெற்றவையாகின என்று இக்கருத்து கூறகிறது. முந்தைய, பரவலான நோக்கில், இவ்வுள்வரவானது, திடீரென ஏற்பட்ட வன்முறை குடிபெயர்ப்பாகும். எனினும், அண்மைக்காலச் சிந்தனைகள், இது ஒரு படிப்படியான உள்வரவாக இருந்திருக்கக் கூடும் என்ற கருத்துக்கு ஆதரவாக இருப்பது போல் தெரிகிறது. (ஆரிய ஆக்கிரமிப்புக் கோட்பாட்டைப் பார்க்கவும்). வடமேற்கிலிருந்து எந்தப் பிரிவினரும் வரவில்லை என்றும், சிந்து சமவெளி நாகரிகமும் வேத நாகரிகமும் ஒன்று என்ற கருத்தும். சிந்து சமவெளி நாகரித்தினரும், தமிழ் சங்க இலக்கியங்களில் கூறப்படும் மூழ்கிய குமரிக் கண்டத்தைச் சேர்ந்த தென்னகத்தாரும் இன்றைய இந்தியரின் முன்னோர்கள் என்ற மற்றொரு கருத்து உண்டு. எனினும் இதில் எந்தக் கருத்தும் முழுமையாகவும் திட்டவட்டமாகவும் மெய்ப்பிக்கப் படவில்லை. இதுபற்றி ஆராய்ச்சியாளர்களிடையே பல கருத்து வேறுபாடுகள் உண்டு.
மூன்றாம் நூற்றாண்டில் தொடங்கிய குப்தர்களின் ஆட்சிக்காலமானது பண்டைய இந்தியாவின் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. சேர, சோழ, பாண்டிய, பல்லவ, சாளுக்கிய, கடம்பப் பேரரசுகள் தென்னிந்தியாவை பல்வேறு காலகட்டங்களில் ஆண்டன.
அராபியர் வருகை எட்டாம் நூற்றாண்டில் தொடங்கியது. துருக்கியர் 12ஆம் நூற்றாண்டில் வரத்தொடங்கினர். இவர்களைத் தொடர்ந்து ஐரோப்பிய வணிகர்கள் 15ஆம் நூற்றாண்டின் இறுதியில் வரத்தொடங்கினர்.
முகலாயப் பேரரசை அடிபணிய வைத்ததன் மூலம், 19ஆம் நூற்றாண்டில், கிட்டத்தட்ட முழு இந்தியாவினதும் அரசியல் கட்டுப்பாடு ஆங்கிலேயப் பேரரசிடம் போய்ச் சேர்ந்தது. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி தலைமையேற்று நடத்திய வன்முறையற்ற அகிம்சைப் போராட்டம் 1947-இல் கிடைத்த இந்திய விடுதலைக்கு வித்திட்டது. இந்திய துணைக்கண்டம் மதச்சார்பற்ற இந்தியாவாகவும் இசுலாமிய நாடான பாகிஸ்தானாகவும் பிரிந்தது. பின்னர் 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி இந்தியா குடியரசு ஆனது. தொடர்ச்சியற்ற நிலப் பகுதிகளான மேற்கு மற்றும் கிழக்கு பாகிசுதானிடையே 1971-இல் உள்நாட்டுப் போர் மூண்டதற்குப் பிறகு இந்தியத் தலையீட்டின் பேரில் கிழக்கு பாகிசுதான் வங்காள தேசம் என்ற தன்னாட்சி பெற்ற நாடாகப் பிரிந்தது. 1991-ல் நடைமுறைப்படுத்தப்பட்ட தாராளமயமாக்கலுக்குப் பிறகு இந்தியப்பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி பெறத்தொடங்கியது.
இயற்கை வளம், மனித வளம் மற்றும் பாதுகாப்பிற்கு உகந்த நில அமைப்பு ஆகியவை இந்தியாவின் தலைமை பலங்களில் சிலவாகும். பாகிசுதானுடனான காஷ்மீர் பிரச்சினை, கவலை தரும் மக்கள் தொகை பெருக்கம், சுற்றுச் சூழல் சீர் கேடு, ஊழல் ஆகியவை இந்தியா எதிர் நோக்கும் சவால்களில் சிலவாகும்.
"இவற்றையும் பார்க்க": இந்திய வரலாற்று காலக் கோடு
இந்தியா 29 மாநிலங்களையும் 7 ஒன்றியப் பகுதிகளையும் கொண்ட ஒரு கூட்டமைப்பு ஆகும். இக்கூட்டமைப்பு ஆற்றல்பூர்வமாக இந்திய சுதந்திர சமூகவுடமை சமய சார்பற்ற மக்களாட்சிக் குடியரசு என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரச நிர்வாகம் சட்டப் பேரவை, செயலாற்றுப் பேரவை, சுதந்திர நீதியமைப்பு ஆகிய மூன்று கூறுகளால் பேணப்படுகின்றது. இவை கூட்டாகவும், அதேவேளை ஒவ்வொரு கூறும் மற்றதன் நடவடிக்கைகளை, தவறான ஆற்றல் பயன்பாடுகளை, ஊழலைக் கண்காணிக்ககூடிய வகையில் ஆங்கிலேய நிர்வாக அமைப்புகளைப் பின்பற்றிக் கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்திய நாட்டின் தலைவராகக் குடியரசுத் தலைவர் இருக்கின்றார் எனினும் இவரது கடமைகள் பெரும்பாலும் மரபுவழிச்சடங்குகள் அடிப்படையிலேயே அமைகின்றன. குடியரசுத் தலைவரும் குடியரசுத் துணைத்தலைவரும் பாராளுமன்ற மற்றும் மாநில, நாட்டு சட்டமன்றங்களின் (ஈரவை அமைப்பாயின் கீழவை) உறுப்பினர்களால் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.
செயல் அதிகாரம் பிரதமரிடமும் அவரின் தலைமையின் கீழ் இயங்கும் அமைச்சரவையிடமும் இருக்கின்றது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ள கட்சி அல்லது கூட்டணியின் தலைவரைக் குடியரசுத் தலைவர் பிரதமாராக நியமிப்பார். பிரதமரின் ஆலோசனைக்கேற்ப பிற அமைச்சர்களைக் குடியரசுத் தலைவர் அங்கீகரிப்பார்.
இந்திய பாராளுமன்றம் இரு சட்ட அவைகளை கொண்டு உள்ளது. அவை மாநிலங்களவை மற்றும் மக்களவை ஆகும். இவை இரண்டும் இந்திய கட்டமைப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டவை. அமைச்சரவை பாராளுமன்றத்திற்கு, அதிலும் குறிப்பாக மக்களவைக்கு, கடமையுற்றது.
மாநிலங்களவையின் 233 உறுப்பினர்கள் மாநில-நாட்டு சட்டப்பேரவைகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்கள். இவர்கள் ஆறு ஆண்டுகளுக்குப் பணிபுரிவார்கள். மூன்றில் ஒரு பகுதி மாநிலங்களவை உறுப்பினர்கள் இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தலுக்குச் செல்ல வேண்டியிருக்கும். இந்திய மக்களவைக்கு அதிகமாக 552 உறுப்பினர்கள் வரை இருக்கலாம் என்று இந்திய அரசியல் சாசனம் வழிமுறை காட்டுகிறது. இதில் 530 உறுப்பினர்கள் மாநிலங்களில் இருந்தும் 20 உறுப்பினர்கள் நடுவணரசு பகுதிகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படலாம். குடியரசுத்தலைவர் விரும்பினால் இரண்டு ஆங்கிலோ-இந்தியர்களையும் நியமிக்கலாம். இவ்வாறாக இந்தியா மக்களவைக்கு அதிகமாக 552 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கப்படலாம். ஆனால் தற்போது மதிய ஆளுமைப் பகுதிகளிலிருந்து 13 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதனால் மக்களவையின் தற்போதைய உறுப்பினர்கள் 545 ஆகும். மக்களவைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும்.
இந்திய சட்ட கட்டமைப்பின் மிக உயர் ஆற்றல் உச்ச நீதிமன்றத்திடம் உள்ளது. உயர் நீதிமன்றம் அரசியலமைப்பின் பாதுகாவலனாகச் செயல் படுகிறது. உயர் நீதிமன்றம் மாநிலங்களுக்கும் நடுவணரசிற்கும் இடையான சிக்கல்கள் தொடர்பாக ஆள் வரை உண்டு. மேலும் மேன் முறையீடு ஆள் வரையும் உயர் நீதிமன்றங்கள்மீது உண்டு. பெரிய மாநிலங்களுக்கு ஒன்றும் சிறிய மாநிலங்களுக்குப் பொதுவாகவும் 18 உயர் நீதி மன்றங்கள் இயங்குகின்றன. அதற்கு அடுத்த நிலைகளில் மாவட்ட நீதிமன்றங்கள் உள்ளன. இவை அனைத்திலும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது.
இந்தியாவில் பல கட்சி ஆட்சி முறை பின்பற்றப்படுவதால் எண்ணற்ற கட்சிகள் உள்ளன. இவை இந்தியாவின் தேர்தல் ஆணையத்தால், குறிப்பிட்ட சில அடிப்படைகளுக்கு அமைய, நாட்டுக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் என இரண்டு பிரிவுகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் விடுதலைக்குப் பிறகு, மத்தியில் பெரும்பாலும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியே ஆண்டு வந்திருக்கிறது. மாநில அளவில் பல்வேறு மாநிலக் கட்சிகள் செல்வாக்கு உள்ளவையாக விளங்குகின்றன. மற்ற பெரிய நாட்டுக் கட்சிகள் பாரதிய ஜனதா கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), ஜனதா தளம் ஆகியவை ஆகும். குறுகிய இரண்டு காலப் பகுதிகளைத் தவிர்த்து 1950 முதல் 1990 வரையான காலம் முழுவதும் இந்திய காங்கிரசு கட்சியே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக் கட்சியாக விளங்கியது. 1977 க்கு முன் காங்கிரசு அரசு காலத்தில் கொண்டுவரப்பட்ட அவசரநிலைச் சட்டத்தின் மீது மக்களுக்கு ஏற்பட்ட திருப்தியின்மையினால் 1977 ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசு தோல்வியுற்றது. பல கட்சிகள் சேர்ந்து உருவாக்கிய ஜனதாக் கட்சியும், இடதுசாரிகள் உட்பட்ட பிற கட்சிகள் சிலவும் சேர்ந்து உருவாக்கிய தேசிய முன்னணி என்னும் அமைப்பு காங்கிரசைத் தோற்கடித்து ஆட்சியமைத்தது. எனினும் இக் கூட்டணியால் நீண்டகாலம் நீடித்து ஆள முடியவில்லை. இரண்டு ஆண்டுக் காலத்திலேயே அரசு கவிழ்ந்தது.
1996 ஆம் ஆண்டுக்கும் 1998 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலம் நடுவணரசைப் பொறுத்தவரை ஒரு குழப்பமான காலமாகும். இக்காலத்தில் முதலில் பாரதீய ஜனதாக் கட்சியும், பின்னர் சில மாதங்கள் ஐக்கிய முன்னணி என்னும் பல கட்சிக் கூட்டணியும் ஆட்சி நடத்தின. தொடர்ந்து 1998 இல் நடை பெற்ற தேர்தலில் பாரதீய ஜனதாக்கட்சி தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியது. இந்த அரசு, நாடாளுமன்றத்தின் முழு ஐந்தாண்டுக் காலமும் பதவியில் இருந்த முதல் காங்கிரசு அல்லாத அரசு என்னும் பெயரையும் பெற்றது.
2004 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் எக்கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும், நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்டிருந்த காங்கிரசு கட்சி, இடதுசாரிகள், பிற மாநிலக் கட்சிகள் ஆகியவற்றையும் சேர்த்துக்கொண்டு உருவாக்கிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்ற அமைப்பின் சார்பில் ஆட்சியில் அமர்ந்தது. காங்கிரஸ் கட்சியால் அமைக்கப்பட்ட முதலாவது கூட்டணி அரசு இது.
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று தனிபெரும்பான்மையுடன் ஆட்சி பொறுப்பேற்றது. நரேந்திர மோதி பிரதமராகப் பதவியேற்றார்.
1947 ஆம் ஆண்டில் விடுதலை பெற்றதிலிருந்து இந்தியா பெரும்பாலான பிற நாடுகளுடன் நல்லுறவையே கொண்டுள்ளது. 1950களில், ஐரோப்பிய நாடுகளின் பிடியிலிருந்து ஆசிய ஆபிரிக்கக் குடியேற்ற நாடுகளின் விடுதலைக்காகக் குரல் கொடுத்து வந்தது. இந்தியா பொதுநலவாய நாடுகள் குழுவின் ஒரு உறுப்பு நாடும், அணிசேரா நாடுகள் இயக்கத்தின் தொடக்க உறுப்பு நாடும் ஆகும். சீன -இந்தியப் போருக்கும், 1965 இல் இடம்பெற்ற இந்திய-பாகிஸ்தான் போருக்கும் பின்னர் இந்தியா சோவியத் ஒன்றியத்துடன் நல்லுறவைப் பேண முயன்றது. இதனால், அமெரிக்காவுடனான உறவு பாதிக்கப்பட்டது. இந்நிலை சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்து, பனிப்போர் முடியும் வரை நீடித்தது. இந்தியாவும், பாகிஸ்தானும் முக்கியமாக, காஷ்மீர்ப் பிணக்குக் காரணமாக மூன்று போர்களில் ஈடுபட்டன. இவற்றைவிட அவ்வப்போது சிறு சிறு சண்டைகளும் இடம்பெற்ற வண்ணமே இருக்கின்றன.குறிப்பாக, 1984 ல் இடம்பெற்ற சியாச்சென் பனியாற்றுப் போரையும், 1999 ஆம் ஆண்டில் இடம்பெற்ற கார்கில் போரையும் குறிப்பிடலாம்.
அண்மைக் காலங்களில் இந்தியா "ஆசியான்" எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பிலும், "சார்க்" எனப்படும் பிரதேச ஒத்துழைப்புக்கான தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பிலும் முக்கியமான பங்களிப்புக்களைச் செய்து வருகிறது. ஐக்கிய நாடுகள் அவையின் தீவிரமான ஆதரவு நாடும், தொடக்ககால உறுப்பு நாடுமான இந்தியா, இச் சபையின் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்காக 55,000க்கு மேற்பட்ட படையினரையும், காவல் துறையினரையும், நான்கு கண்டங்களில் சேவையாற்றுவதற்கு அனுப்பியுள்ளது. எனினும், பல விமர்சனங்களையும், இராணுவத் தேவைகள் தொடர்பான தடைகளையும் சந்தித்தபோதிலும், அணுவாற்றல் திட்டங்களில் தனது இறைமையைப் பேணிக்கொள்ளும் விருப்பினால், முழுமையான அணுகுண்டு சோதனைத் தடை ஒப்பந்தம், அணுவாயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம் போன்ற ஒப்பந்தங்களில் கையெழுத்திட மறுத்து வருகின்றது. இந்தியாவின் அண்மைக்கால நடவடிக்கைகளினால் அது ஐக்கிய அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் உறவுகளை மேம்படுத்தி வருகின்றது. பொருளியல் அடிப்படையில், இந்தியா ஆசியா, தென்னமெரிக்கா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களைச் சேர்ந்த பிற வளரும் நாடுகளுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளது.
இந்தியா உலகின் மூன்றாவது பெரிய இராணுவத்தைக் கொண்டுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பிற்காக தரைப்படை, கடற்படை, வான்படை ஆகியவைகள் இந்தியப் பாதுகாப்புத் துறையின் இயங்குகிறது. இவற்றுடன் எல்லைப் பாதுகாப்புப் படை, இந்திய - திபெத் எல்லைக் காவல்படை, மத்திய சேமக் காவல் படை, மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை, கரையோரக் காவல்படை என்பன இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்தியக் குடியரசுத் தலைவரே, இந்தியப் படைகளின் உயர் தளபதி ஆவார். 1974 ஆம் ஆண்டில், நடத்தப்பட்ட "சிரிக்கும் புத்தர் நடவடிக்கை" ("Operation Smiling Buddha") எனப் பெயரிடப்பட்ட தொடக்க அணுக்கருச் சோதனை, பின்னர் 1998 இல் இடம் பெற்ற "நிலத்துக்கு அடியிலான சோதனைகள்" என்பவற்றின் மூலம் இந்தியா ஒரு அணு வல்லரசு என்னும் இடத்தைப் பிடித்தது. 1998 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து உலக நாடுகள் இந்தியாவுக்கான இராணுவத் தேவைகள் வழங்குவதைத் தடை செய்தன. எனினும் படிப்படியாக இவை திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டன. இந்தியா தான் முதலாவதாக அணுவாயுதத்தைப் பயன்படுத்துவதில்லை என்ற கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது.
இந்திய நாடு ஒரு கூட்டாட்சிக் குடியரசு. இதில் 29 மாநிலங்களும் ஆறு ஒன்றியப் பகுதிகளும் ஒரு தலைநகரப் பகுதியும் அடங்கியுள்ளன. எல்லா மாநிலங்களிலும், ஒன்றியப் பகுதிகளான பாண்டிச்சேரி, டெல்லி தலைநகரப் பகுதி ஆகியவற்றிலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் உள்ளன. ஏனைய ஒன்றியப் பகுதிகள் நடுவண் அரசினால் நியமிக்கப்படும் ஆளுனர்களைக் கொண்ட, குடியரசுத்தலைவரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகும். 1956 ஆம் ஆண்டில், மாநிலங்கள் மீளமைப்புச் சட்டத்தின் கீழ் மொழி வழி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அதன் பின்னர், வட இந்தியப் பகுதிகளில் சில புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டது தவிர, அதிகம் மாற்றம் எதுவும் இல்லாமலேயே இம் முறைமை இயங்கிவருகிறது. மாநிலங்களும், ஒன்றியப் பகுதிகளும், சிறிய நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை மாவட்டங்கள் எனப்படுகின்றன. இந்தியாவில் ஏறத்தாழ 600 மாவட்டங்கள் உள்ளன.
இந்த ஏழு ஒன்றியப் பகுதிகளில் புதுச்சேரியும், தில்லியும் மட்டும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சிறப்பு இசைவின் பேரில் ஏனைய மாநிலங்களைப் போலத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட அவைகள் அமைத்துக் கொள்ளும் உரிமை பெற்றுள்ளன.
இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370-இன் படி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் தற்காலிகமாகச் சில சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.
பரப்பளவில் இந்தியா உலகில் ஏழாவது பெரிய நாடாகும்.இந்தியத் துணைக்கண்டத்தின் ஒரு பகுதியான இந்தியாவில் புவியியல் அடிப்படையில் மூன்று உட்பகுதிகள் உள்ளன. அவை, வடக்கே இமயமலைத்தொடர்கள் (உயரமான சிகரம் கஞ்சன்சுங்கா 8,598 மீ), இந்து-கங்கை சமவெளி (மேற்கில் தார் பாலைவனம்) மற்றும் தக்காணப் பீடபூமி. தக்காணப் பீடபூமி மூன்று திசைகளில் முறையே கிழக்கே வங்காள விரிகுடாக் கடல், தெற்கே இந்துமாக்கடல் மற்றும் மேற்கே அரபுக்கடல் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது.
இமய மலையில் தோன்றி இந்தியாவுக்குள் பாயும் ஆறுகளில் கங்கை ஆறும், பிரமபுத்திராவும் முக்கியமானவை. இவை இரண்டுமே வங்காள விரிகுடாவில் கலக்கின்றன. யமுனா, கோசி என்பன கங்கை நதியின் துணை நதிகள். கோசி ஆறு பாயும் நிலப்பகுதி மிகக் குறைவான சரிவைக் கொண்டிருப்பதால் ஆண்டுதோறும் பெரும் அழிவைக் கொடுக்கும் வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது. தீவக்குறைப் பகுதியில் பாயும் கோதாவரி, மகாநதி, காவிரி, கிருஷ்ணா போன்ற ஆறுகள் சரிவு கூடிய பகுதியில் அமைந்திருப்பதால் வெள்ளப்பெருக்கு அபாயம் குறைவாகவே காணப்படுகின்றது. இந்த ஆறுகளும் வங்காள விரிகுடாவிலேயே கலக்கின்றன. நர்மதா, தாபி போன்ற முக்கிய ஆறுகள் இந்தியாவின் மேற்குக் கரையூடாக அரபிக் கடலில் கலக்கின்றன. இந்தியா என்ற பெயர் ஏற்படக் காரணமாக இருந்தது சிந்து நதியாகும். இந்திய எல்லைக்குள் இரண்டு தீவுக்கூட்டங்கள் உள்ளன. பவளப்பாறைத் தீவுகளான லட்சத்தீவுகள் இந்தியத் தீவக்குறையின் மேற்குக் கடற்கரைக்கு அப்பாலும், எரிமலைச் சங்கிலியான அந்தமான்-நிக்கோபார் தீவுக்கூட்டம் கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் அந்தமான் கடலிலும் அமைந்துள்ளன.
இந்தியாவின் தட்ப வெட்பம் தெற்கே வெப்பம் மிகுந்த பருவ மழை சார்ந்ததாகவும், வடக்கே மட்டான தட்பவெப்பமுள்ள காலநிலை ஆகவும் ஏனைய பகுதிகளில் பல்வேறு இடைப்பட்ட தட்ப வெட்ப நிலைகளாகவும் நிலவுகிறது.
இந்தியாவில் கடற்கரை 7,517 கிலோமீட்டர்கள் (4,671 மைல்கள்) நீளமானது. இதில் 5,423 கிலோமீட்டர்கள் (3,370 மைல்கள்) இந்தியத் தீவக்குறைப் பகுதியையும், 2,094 கிமீ (1,301 மை) அந்தமான், நிக்கோபார், லட்சத்தீவுகள் ஆகியவற்றையும் சேர்ந்தவை. இந்தியத் தலைநிலப் பகுதியைச் சேர்ந்த கரைகளில், 43% மணற்பாங்கானவை, 11% பாறைகளைக் கொண்டவையாகவும், 46% சேற்று நிலங்கள் அல்லது சதுப்பு நிலங்களாகவும் காணப்படுகின்றன. குஜராத், மகாராஷ்டிர, கோவா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, ஒரிசா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் கடல் எல்லைகளைக் கொண்டுள்ளன. இந்த மாநிலங்களின் கடற்கரைகளில் பெரிய மற்றும் சிறிய துறைமுகங்கள் அமைந்துள்ளன. இவற்றில் பல இயற்கையாகவே அமைந்த துறைமுகங்கள் ஆகும்.
இந்தோமாலய சூழ்நிலைவலயத்துள் அமைந்துள்ள இந்தியாவில் குறிப்பிடத்தக்க உயிரியல் பல்வகைமை காணப்படுகின்றது. 18 பெரும்பல்வகைமை நாடுகளுள் இதுவும் ஒன்று. உலகிலுள்ள மொத்த இனங்களுடன் ஒப்பிடும்போது, பாலூட்டி இனங்களில் 7.6%, பறவை இனங்களில் 12.6%, ஊர்வனவற்றில் 6.2%, ஈரூடகவாழிகளில் 4.4%, மீன்களில் 11.7%, பூக்கும் தாவரங்களில் 6.0% இந்தியாவிலே காணப்படுகின்றன. இங்குள்ள சோலாக் காடுகள் போன்ற பல சூழ்நிலைவலயங்கள், உயர்ந்த விழுக்காட்டிலான பகுதிக்குரிய ("endemic") இனங்களைக் கொண்டவையாக உள்ளன. ஏறத்தாழ 33 விழுக்காடு இந்தியத் தாவரங்கள் பகுதிக்குரியவை. இந்தியாவின் காடுகள், அந்தமான், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள், வடகிழக்கு இந்தியா ஆகியவற்றின் வெப்பவலய மழைக் காடுகள் தொடக்கம் இமயமலைப் பகுதிகளின் ஊசியிலைக் காடுகள் வரை பல்வேறுபட்டு அமைந்துள்ளன.
இந்த எல்லைகளிடையே, ஆச்சா மரங்களை அதிகமாகக் கொண்ட கிழக்கு இந்தியாவின் ஈரவலய இலையுதிர் காடுகள், தேக்கு மரங்களைக் கூடுதலாகக் கொண்ட நடு இந்தியா, தென்னிந்தியா ஆகிய பகுதிகளில் காணும் இலையுதிர் காடுகள், கருவேல மரம்|கருவேல மரங்களைப் பெருமளவில் கொண்ட நடுத் தக்காணத்தினதும், மேற்குக் கங்கைச் சமவெளியினதும் முட்காடுகள் என்பன உள்ளன. முக்கியமான இந்தியத் தாவரங்களுள், நாட்டுப்புறங்களிலே மருத்துவத் தேவைகளுக்காகப் பயன்படும் வேம்பு, மொஹெஞ்சதாரோவின் முத்திரைகளில் காணப்படுவதும், புத்தர் அறிவு பெற்றதுமான அரச மரம் என்பவை குறிப்பிடத்தக்கவை.
பல இந்தியத் தாவர, விலங்கு இனங்கள் தொடக்கத்தில் இந்தியாவின் அமைவிடமான கோண்ட்வானாவில் உருவான வகைகளின் வழிவந்தவை. பின்னர், இந்தியத் தீவக்குறை நகர்ந்து, லோரேசிய நிலத்திணிவுடன் மோதியபோது, பெருந் தொகையான உயிரினங்கள் இடம் மாறுவதற்கு வழியேற்பட்டது. எனினும், 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த, எரிமலை வெடிப்புக்களினாலும், காலநிலை மாற்றங்களினாலும் பெருமளவு இந்தியப் பகுதிக்குரிய இனங்கள் அழிந்து போயின. இதன் பின்னர், ஆசியப் பகுதிகளிலிருந்து, உருவாகிவந்த இமயமலையின் இரு பக்கங்களிலும் இருந்த விலங்குப்புவியில் கணவாய்கள் வழியாகப் பாலூட்டிகள் இந்தியாவுக்குள் வந்தன. முடிவில், இந்திய இனங்களில், 12.6% பாலூட்டிகளும், 4.5% பறவைகளும் மட்டுமே இந்தியப் பகுதிக்குரியவையாக இருக்கின்றன. இது, 45.8% ஊர்வனவும், 55.8% ஈரூடகவாழிகளும் இந்தியாவுக்கு உரியனவாக இருப்பதுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவாகும். குறிப்பிடத்தக்க ஊள்ளூர் இனங்கள், சோலை மந்தி ("Trachypithecus johnii"), புபோ பெதோமீ ("Bufo beddomii") என்னும் ஒருவகைத் தவளை இனம் என்பனவாகும். இயற்கைப் பாதுகாப்புக்கான அனைத்துலக ஒன்றியம் அழியும் வாய்ப்புள்ளவையாகக் குறிப்பிட்டுள்ள இனங்களில் 2,9% இனங்கள் இந்தியாவில் உள்ளவை. இவற்றுள் ஆசியச் சிங்கம், வங்காளப் புலி என்பவை அடங்கும்.
அண்மைப் பத்தாண்டுகளில், மனித ஊடுருவல் காட்டுயிர்களுக்கு ஆபத்தாக அமைந்தன. இதனால், நாட்டு பூங்காக்களும், 1935 ஆம் ஆண்டில் முதன் முதலாக அமைக்கப்பட்டுப் பின்னர் விரிவாக்கப்பட்டன. 1972 இல் இந்தியாவில் காட்டுயிர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இந்தியாவில் ஐநூற்றுக்கும் மேற்பட்ட காப்பகங்களும், 13 உயிர்க்கோள ஒதுக்ககங்களும், 25 ஈர நிலங்களும் ராம்சார் ஒபந்தம் எனும் அனைத்துலக ஒப்பந்தத்தின்படி பதிவு செய்யப்பட்டுள்ளன.
விடுதலைக்குப் பிற்பட்ட காலத்தின் பெரும் பகுதியில் இந்தியா, தனியார் தொழில் முயற்சிகளிலும், வெளிநாட்டு வணிகம், வெளிநாட்டு நேரடி முதலீடு போன்ற துறைகளிலும் இறுக்கமான அரசுக் கட்டுப்பாடுகளைக் கொண்டு ஒரு சோசலிசம் சார்ந்த அணுகு முறையையே கடைப்பிடித்து வந்தது. ஆயினும், 1991 ஆம் ஆண்டு முதல், பொருளாதாரச் சீர்திருத்தங்கள்மூலம் படிப்படியாக அதன் சந்தைகளைத் திறந்துவிட்டதோடு, வெளிநாட்டு வணிகம், முதலீடு என்பவற்றின் மீதான கட்டுப்பாடுகளையும் தளர்த்தி வந்தது. மத்திய, மாநில அரசிகளின் வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறை குறைந்துள்ளதோடு, 1991 மார்ச் மாதத்தில் 5.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த வெளிநாட்டு நாணயமாற்று ஒதுக்கம், 2008 ஜூலையில் 308 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது. பல்வேறு அரசியல் சர்ச்சைகளுக்கு மத்தியிலும், அரச நிறுவனங்களைத் தனியார்மயப்படுத்தலும், சில துறைகளைத் தனியார் மற்றும் வெளிநாட்டுப் பங்களிப்புக்காகத் திறந்து விடுவதும் தொடர்ந்து வருகிறது.
இந்தியப் பொருளாதாரம் மரபுவழி வேளாண்மை, தற்கால வேளாண்மை, கைவினைப் பொருள் தயாரிப்பு, பல தரப்பட்ட புதிய தொழில்கள் மற்றும் மென்பொருள் உட்பட்ட பல துணைச் சேவைகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. 2003-ஆம் ஆண்டு நிலவரத்தின் படி மென்பொருள் ஏற்றுமதி மட்டும் சுமார் 1000 கோடி டாலர் என்ற அளவில் இருந்தது. இருப்பினும் மக்கள் தொகையில் கால் பங்கு வகிப்பவர்கள் சரியான உணவின்றி வறுமையில் வாழ்கின்றனர்.
இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு மற்றும் நாணய மதிப்பு 2001 மற்றும் பின் வரும் ஆண்டுகளில் மிகவும் நல்ல நிலையில் இருந்தன. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி $1.089 டிரில்லியன் டாலர்கள் அளவை எட்டியுள்ளது. பொருள் வாங்குதிறன் சமநிலை அடிப்படையில் $4.726 டிரில்லியன் (2,66,000 கோடி டாலர்) அளவுடன் உலகில் நான்காவது இடத்தில் இருக்கிறது. கடந்த இரு பத்தாண்டுகளாக 5.5% சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியுடன் இந்தியா உலகின் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளது. 516.3 மில்லியன் அளவான இந்தியாவின் தொழிலாளர்படை உலகின் இரண்டாவது பெரிய தொழிலாளர்படை ஆகும். இவர்களில் 60 விழுக்காட்டினர் வேளாண்மை அல்லது அது சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். 28 விழுக்காட்டினர் சேவைத்தொழில்கள் அல்லது அது சார்ந்த துறைகளிலும், 12 விழுக்காட்டினர் தொழில்துறைகளிலும் பணிபுரிகின்றனர். இந்தியாவின் முதன்மை வேளாண்மைப் பயிர்கள் அரிசி, எண்ணெய்விதை, பருத்தி, சணல், தேயிலை, கரும்பு, உருளைக்கிழங்கு என்பனவாகும். வேளாண்மைத் துறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 28% ஐ வழங்குகிறது. சேவைத்துறையும், தொழில்துறையும் முறையே 54%, 18% பங்களிப்பைச் செய்கின்றன. முக்கியமான தொழில்துறைகளில், தானுந்து, சிமெந்து, வேதிப்பொருட்கள், நுகர்வோர் மின்னணுவியல் பொருட்கள், உணவு பதனிடல், இயந்திரங்கள், சுரங்கத்தொழில், பெட்ரோலியம், மருந்துவகை, உருக்கு, போக்குவரத்துச் சாதனங்கள், உடைகள் என்பன அடங்குகின்றன. விரைவாக வளரும் பொருளாதாரத்துடன் கூடவே, ஆற்றல் தேவையும் அதிகரித்து வருகின்றது. ஆற்றல் தகவல் நிர்வாகத்தின் ("Energy Information Administration") கணக்கீட்டின் படி, எண்ணெய் நுகர்வில் இந்தியா ஆறாவது இடத்திலும், நிலக்கரி நுகர்வில் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
இந்தியா வளர்ச்சியடைந்து வரும் ஒரு நாடு. ஆயினும், 350–400 மில்லியன் மக்கள் வறுமை கோட்டின் கீழேயே வாழ்கின்றார்கள். உலக வங்கியின் உலக வளர்ச்சி அளவீடுகளின் அடிப்படையில் 35% இந்தியர்கள் $1 வருமானத்திலேயே வாழ்கின்றார்கள். இவர்களுக்குரிய அடிப்படை உணவு, உறைவிட, கல்வி, மருத்துவ வசதிகள் மிகவும் குறைவு. மேலும், 40% மக்களுக்கு எழுதவோ வாசிக்கவோ தெரியாது. இந்தியாவின் பொருளாதர பகிர்வு மிகவும் சமனற்றது. குறிப்பாக, தலித்துக்கள், ஒடுக்கப்பட்டோருக்கும் மற்றவருக்கும், நகர வாசிகளுக்கும், கிராம வாசிகளுக்குமான பொருளாதார நிலை வேறுபாடுகள் மிகவும் பெரியதாக காணப்படுகிறது.
2011-ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மக்கட்தொகை 121 கோடியே 19 இலட்சத்து மூவாயிரத்தி நானூற்று இருபத்தி இரண்டு பேர் (1,210,193,422) உள்ளனர். மக்கட்தொகை கடந்த பத்தாண்டுகளின் (2001–2011) வளர்ச்சி விகிதம் 17.70% ஆக உயர்ந்துள்ளது. அதிக மக்கட்தொகை (199,812,341) கொண்ட மாநிலமாக உத்தரப்பிரதேசமும், குறைந்த மக்கட் தொகை (610,577) கொண்ட மாநிலமாக சிக்கிம் உள்ளது.
படிப்பறிவு வீதம் 74.04% ஆக உயர்ந்துள்ளது (ஆண்கள் 82.14%; பெண்கள் 65.46%).
2011ஆம் ஆண்டைய மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, இந்திய மக்கள் தொகை ஆணையம் 27 ஆகஸ்டு 2015 அன்று வெளியிட்டுள்ள சமயவாரி மக்கட்தொகை கணக்கீட்டின்படி, இந்தியாவின் மொத்த மக்கட்தொகையான 121.09 கோடியில், இந்துக்களின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 0.7% ஆக குறைந்து, 96.63 கோடியாகவும் (79.08%), முஸ்லிம்களின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 0.8% உயர்ந்து, 17.22 கோடியாகவும் (14.2%), கிறித்தவர் மக்கட்தொகை 2.78 கோடியாகவும் (2.3%), சீக்கியர்கள் மக்கட்தொகை 2.08 கோடியாகவும் (1.7%), சமணர்கள் மக்கட்தொகை 45 இலட்சமாகவும் (0.4%), புத்த மதத்தினரின் மக்கட்தொகை 84 இலட்சமாகவும் (0.8%), சமயம் குறிப்பிடாதோர் 29 இலட்சமாகவும் (0.4%) உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக "சமயம் குறிப்பிடாதோர்" என்ற பிரிவு 2011 கணக்கீட்டில் சேர்க்கப்பட்டது.
மேற்படி அட்டவனையின் படி, 1951ல் 84.1% ஆக இருந்த இந்துக்களின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 60 ஆண்டுகளில் படிப்படியாக 4.30% வீழ்ச்சியடைந்து, 2011ல் 79.80%ஆக குறைந்துள்ளது. அதே சமயத்தில் 1951ல் 9.8%ஆக இருந்த இசுலாமியர்களின் மக்கள் தொகை, படிப்படியாக 4.40% வளர்ச்சியடைந்து, 2011ல் 14.23% ஆக உயர்ந்துள்ளது. மற்ற சமயங்களைப் பொறுத்தவரையில் மக்கள் தொகை வளர்ச்சி அதிக ஏற்ற-இறக்கம் இல்லாது உள்ளது.
மக்கள் தொகையில் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் மற்றும் ஒன்றியப் பகுதியான இலட்சத்தீவுகளில் இசுலாமியர்கள் பெரும்பான்மை சமூகத்தவர்களாக உள்ளனர். அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், நாகாலாந்து மற்றும் மேகாலயா என நான்கு மாநிலங்களில் கிறித்தவர்கள் பெரும்பான்மை சமூகத்தவர்களாக உள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்கள் பெரும்பான்மை மக்களாக உள்ளனர். இந்துக்கள் அல்லோதோர் பெரும்பான்மையாக வாழும் மாநிலங்களில், சிறுபான்மை இன இந்துக்களுக்கு சிறுபான்மையினர் என்ற தகுதி இந்திய அரசால் வழங்கப்படவில்லை. இம்மாநிலங்களின் சிறுபான்மை இந்து மக்களுக்கு கல்விநிலையங்களில் இடஒதுக்கீடு மற்றும் கல்வி உதவிகள் இந்திய அரசாலும்; மாநில அரசுகளால் தொடர்ந்து மறுக்கப்படுகிறது.
இந்தியா இரண்டு பெரிய மொழிக்குடும்பங்களின் இருப்பிடம் ஆகும். அவை 74% மக்களால் பேசப்படும் இந்தோ-ஆரிய மொழிக்குடும்பமும், 24% மக்களால் பேசப்படும் திராவிட மொழிக்குடும்பமும் ஆவை. இந்தியாவில் பேசப்படும் மற்ற மொழிகள், ஆஸ்திரோ-ஆசிய மற்றும் திபெத்தோ-பர்ம மொழிக்குடும்பங்களை சார்ந்தவை. இந்திய அரசியல் அமைப்போ, இந்திய சட்டங்களோ, தேசிய மொழியாக, எந்த ஒரு மொழியையும் விவரிக்கவில்லை. அதிகபட்ச பேச்சாளர்களைக் கொண்ட இந்தி மொழி, இந்திய அரசின் ஆட்சி மொழியாகும். ஆங்கிலம், உப ஆட்சி மொழியாக நிலைபெற்று, பெருமளவில், வேலையிடங்களிலும், நிர்வாக இடங்களிலும் பயன்படுத்தப் படுகிறது.' இந்தியாவில் கல்வி பெறுவதில், அதிலும் உயர்கல்வி (Department of Higher Education (India)) பெறுவதில் ஆங்கிலம் பெரும்பங்கு வகிக்கிறது. அதோடு, ஒவ்வொரு மாநிலமும் தனக்குத் தானே, அந்தந்த மாநிலங்களில் பரவலாகப் பேசப்படும் மொழியை ஆட்சி மொழியாகக் கொண்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு 21 மொழிகளை அடையாளம் கொள்கிறது. செம்மொழித் தகுதி பெற்ற முதல் இந்திய மொழி தமிழ் மொழியாகும். தமிழ் மொழியைத் தொடர்ந்து சமசுகிருதம் (2005), தெலுங்கு (2008), கன்னடம் (2008), மலையாளம் (2013), ஒடியா (2014) ஆகிய மொழிகள் செம்மொழிகள் என இந்திய அரசால் அறிவிக்கப்பட்டன. மரபாகச் செம்மொழிக்கு இருக்கும் வரையறையைப் பயன்படுத்தாமல் இந்தியா தானாகச் செம்மொழிக்கான வரையறையை வகுத்து உள்ளது
சாதிய அமைப்பே இந்திய சமூக கட்டமைப்பின் சமூக அதிகாரப் படிநிலை முறைமையின் அடித்தளம். சாதிய கட்டமைப்பு பிறப்பு, தொழில், பொருளாதாரம் மற்றும் சமயம் சார்ந்த கூறுகளால் ஆனது. இவ்வமைப்பின் தோற்றத்தை வேதங்களில் வலியுறுத்தப்படும் "நான்கு வர்ண" சாதி பெரும் பிரிவுகளில் காணலாம். இவற்றுள் பல்லாயிரக் கணக்கான உட்பிரிவுகளும் இருக்கின்றன. அவற்றிற்கு இடையேயான ஏற்றத்தாழ்வு நிலை ஒவ்வொறு பகுதியிலும் வெவ்வேறாக இருக்கின்றது. வேதங்களில் கூறப்படும் சாதி நெறிகளைத் தவறாகப் புரிந்து கொண்ட காரணத்தால் மத்திய காலங்களில் சமூகத்தில் சாதி அடிப்படையில் பாகுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் ஏற்பட்டன. தற்போது சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறைக்கு எதிரான பல சட்டங்கள் உள்ளன. இதுதவிர தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடும் உள்ளது. இருப்பினும் இந்நாட்டின் அரசியல் வாழ்விலும் திருமணம் உட்பட்ட பல சமூக வழக்கங்களிலும் சாதி ஒரு முக்கிய இடம் வகிக்கிறது.
இந்தியாவில் பெண்களின் சமூக நிலை என்றும் சம நிலமையுடையதாக இருக்கவில்லை. அரசியலில், தொழில் வாய்ப்பில், கல்வியில், பொருளாதார பங்கில் பெண்கள் புறக்கணிகப்பட்டோ தடுக்கப்பட்டோ வந்துள்ளார்கள். பெண் சிசுக் கொலை, சிறுவர் திருமணம், சீதனம், உடன்கட்டையேறுதல், மறுமண மறுப்பு, மணவிலக்கு மறுப்பு, உடமை மறுப்பு, கொத்தடிமை யாக்கல், தேவதாசி முறை எனப் பெண்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. சட்ட ரீதியாகப் பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன எனக் கூடச் சொல்ல இயலாது ஏனெனில் இந்தியாவில் சமய அடிப்படையிலான குடியியல் சட்டம் நடப்பில் இருக்கின்றது. எனினும், இந்திய வரலாற்றில் மற்ற நாடுகள்போல் அல்லாத ஒரு முரண்பாடும் உண்டு. அதாவது, பெண்கள் தெய்வங்களாக வழிபடப்படல், பெண்களைச் சிவனுடைய சரி பாதியாக, சக்தியாக அங்கீகரித்தல் போன்றவையாம். மேலும், நவீன இந்தியாவின் ஆளுமை படைத்த தலைவர்களாகப் பெண்களும் இடம் பெறுகின்றார்கள். இந்திரா காந்தி, ஜெயலலிதா, மம்தா பானர்ஜி ஆகியோர் சிறந்த எடுத்துக்காட்டுக்கள். இந்தியாவின் அனைத்து பாகங்களிலும் பெண்களின் நிலை ஒரே ரீதியில் அமைந்திருக்கின்றது என்றும் கூற முடியாது. குறிப்பாகக் கேரள மாநிலத்தில் பெண்களின் உரிமைகள் நன்கு பேணப்படுகின்றன.
சமீப காலங்களில் பெண்களின் நிலை குறிப்பிடத் தகுந்த அளவு முன்னேற்றம் கண்டுள்ளது. தகவல் தொடர்பு துறையின் வளர்ச்சி மற்றும் அதைத் தொடர்ந்த இந்திய பொருளாதார வளர்ச்சி பெண்களுக்குப் பல வாய்ப்புகளை வழங்கியுள்ளது.
இந்திய பண்பாடு உலகின் முக்கிய பண்பாட்டு ஊற்றுக்களில் ஒன்று. பல இன, மொழி, சமய, பண்பாட்டு தாக்கங்களை உள்வாங்கி இந்திய பண்பாடு வெளிப்பட்டு நிற்கின்றது. இப்பண்பாடு உயரிய, பலக்கிய ("complex"), பன்முக இசை, நடனம், இலக்கியம் எனப் பல கூறுகளைக் கொண்டது. இந்திய பண்பாட்டின் தன்மை, வெளிப்பாடு, ஆழம் பல நிலைகளைக் கொண்டது. பின் வருவன ஒரு சுருக்கமே.
கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை இரு முக்கிய செந்நெறி இசை மரபுகள் ஆகும். கர்நாடக இசை தெற்கிலும், இந்துஸ்தானி இசை வடக்கிலும் தோற்றம் கொண்டன. இந்துஸ்தானி இசை இஸ்லாமிய இசையின் தாக்கங்களை உள்வாங்கிய ஒரு மரபு. இவைதவிர நாட்டார் இசை, தமிழிசை எனப் பல வேறு இசை மரபுகளும் வெளிப்பாடுகளும் உண்டு. இந்திய நடனக்கலையில் பரத நாட்டியம், ஒடிசி, குச்சிப்புடி, கதக், கதகளி போன்று பல நடன வெளிப்பாடுகள் உண்டு. நடனம்மூலம் கதைகளும் சொல்லப்படுகின்றன. இவைத் தவிர நாட்டுப்புறக் கலைகளான நடனங்களும், பொம்மை நடனங்களும் உண்டு.
இசையின் வெளிப்படுத்தும் இசைக் கருவிகளில் வீணை, யாழ், புல்லாங்குழல், தம்புரா, மிருதங்கம், நாதசுவரம், மத்தளம், தவில், ஆகுளி, உறுமி, முரசு, தமுக்கு, பம்பை, கஞ்சிரா, ஐம்முக முழவம், கொடுகொட்டி (அல்லது) கிடிகிட்டி, கொம்பு, தாரை, சங்கு, முகவீணை, எக்காளம் மற்றும் தாளம் முதன்மையானவைகள் ஆகும்.
உலகின் மிக முக்கிய இலக்கிய உருவாக்கங்களை இந்தியா கொண்டுள்ளது. சமசுகிருதம், தமிழ், வங்காள மொழி, உருது போன்ற பல முக்கிய உலக மொழிகளின் இலக்கிய வெளிப்பாடுகள் இந்தியாவின் பண்பாட்டு கலவையில் வெளிப்பட்டு நிற்கின்றன. வேதம், வேதாந்தம், ஆகமங்கள், புத்தசமய படைப்புக்கள், காப்பியங்கள் (இராமாயணம், மகாபாரதம்), தமிழ் சங்க இலக்கியங்கள், ஐம்பெரும் தமிழ் காப்பியங்கள் எனப் பல கோணங்களில் இந்திய இலக்கியம் வெளிப்படுகின்றது.
கொண்டாட்டங்கள் இந்திய பண்பாட்டின், வாழ்வியலின் இணை பிரியா கூறுகள் ஆகும். பொங்கல், தீபாவளி, நவராத்திரி எனக் கொண்டாட்டங்கள் பல உண்டு. இந்திய சுதந்திர தினம், மகாத்மா காந்தி பிறந்த தினம் போன்றவையும் முக்கியத்துவம் வாய்ந்த தேசியக் கொண்டாட்டங்கள் ஆகும். மேலும், தனி மனித வாழ்வியல் நிகழ்வுகளை மையமாக வைத்தும் பல கொண்டாட்டங்கள் உண்டு.
பண்டைய இந்தியாவானது அறிவியலில் சிறந்து விளங்கியது. ஆரியபட்டர், பாஸ்கரர் ஆகியோர் கோள்களின் இயக்கங்களின் பற்றி ஆராய்ந்த அறிஞர்களில் முக்கியமானவர்களாவர். இன்று பொதுவாகப் பயன்படுத்தப்படும் கணித எண்கள், இந்து-அரபு எண்கள் ஆகும். இந்தியாவிலேயே 0 என்ற எண்ணக்கரு முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது என்பர்.
சேலை, வேட்டி, குர்தா, சல்வார் கமீஸ் போன்றவை, இந்தியாவில் தொன்று தொட்டு இருந்து வரும் உடைகளாகும். அரிசியும், கோதுமையும் இந்திய உணவு வகைகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தாளி, இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவை இந்தியர்கள் வழக்கமாக உட்கொள்ளும் உணவுகளில் சிலவாகும்.
இந்தியர்களின் முக்கியப் பொழுதுபோக்குகளில் ஒன்றாகத் திரைப்படங்கள் விளங்குகின்றன. இந்தி, தமிழ், தெலுங்குத் திரைப்படங்கள் அவற்றின் பொழுதுபோக்கு கூறுகளுக்காகவும் வங்காள மொழி மற்றும் மலையாளத் திரைப்படங்கள் அவற்றின் கலை நேர்த்திக்காகவும் விரும்பிப் பார்க்கப்படுகின்றன.
இந்தியாவின் ஒவ்வொரு நிலப்பகுதியிலும் குறிப்பிடத்தக்க சில பண்பாட்டு வேறுபாடுகளைக் காண முடியும் என்றாலும் மாநில மற்றும் மொழி எல்லைகளைக் கடந்து பண்பாட்டுச் கூடல் நிகழும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்நிகழ்வுக்கான முக்கிய காரணிகளில் ஒன்று, பெருகி வரும் மக்கள் தொடர்பு சாதனங்கள் ஆகும். 1990களுக்குப் பிறகு நிகழ்ந்த உலக மயமாக்கலும், பொருளாதார தாராளமயமாக்கலும் இந்தியப் பண்பாட்டைக் குறிப்பிடத்தக்க அளவுமேல் நாட்டு பண்பாட்டின் ஆதிக்கத்திற்கு உட்படுத்தியுள்ளன. நவீன இந்திய இசை, திரைப்படங்கள், நாடகங்கள், ஊடகங்கள், மொழிகள், வர்த்தக முறைகள், அன்றாட வாழ்க்கை முறை, பணியிட நடத்தை முறைகள், ஆண்-பெண் நட்பு / உறவு ஆகியவற்றில் ஆங்கிலச் சொற்கள், மேல் நாட்டு சிந்தனைகள், மனப்போக்குகள் இடம் பெறத் தொடங்கியுள்ளன.
பல்வேறு காலக்கட்டங்களில் பலவாறு மாற்றங்களுக்கு உட்பட்டிருந்தாலும், இந்திய பண்பாட்டின் முக்கியக் கூறுகளான சகிப்புத்தன்மை, விருந்தோம்பல், குடும்ப உறவுகளுக்கான மதிப்பு, வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவை இன்னும் நீர்த்துப் போகாமல் இருப்பது அதன் சிறப்பாகும்.
சுற்றுலாத்துறை இந்தியாவின் மிகப் பெரிய சேவைத் துறையாகும். இது நாட்டின் தேசிய மொத்த உற்பத்தியில் 6.23 சதவீதம் பங்களிக்கிறது மொத்த வேலைவாய்ப்பில் 8.78% சதவீதத்தைக் கொண்டுள்ளது. ஆண்டுக்கு 5 மில்லியனுக்கும் மேலான அந்நிய சுற்றுலாப் பயணிகளின் வருகையையும் 562 மில்லியன் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையையும் கொண்டுள்ளது. இந்தியாவில் சுற்றுலாத் துறையானது 2008 ஆம் ஆண்டில் சுமார் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டியது. மேலும் இத்துறையானது 2018 இல் ஆண்டு வளர்ச்சி விகிதம் 9.4% சதவீதமாக அதிகரித்து 275.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுலாத்துறை அமைச்சகமானது இந்தியாவின் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான ஒருங்கிணைப்பு முகமையாக உள்ளது. மேலும் "இன்க்ரெடிபிள் இண்டியா" பிரச்சாரத்தையும் தொடர்ந்து நடத்துகின்றது.
இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் மற்றும் இந்தியன் இரயில்வே, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பல சுற்றுலாத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில்
பேலஸ் ஆன் வீல்ஸ் , மகாராஜா எக்ஸ்பிரஸ், ராயல் ஓரியன்ட் எக்ஸ்பிரஸ், "டெக்கான் ஒடிசி", ராயல், "ராசத்தான் ஆன் வீல்ஸ்" மற்றும் "கோல்டன் சாரியட்" (தங்க இரதம்), "டெக்கான் ஒடிசி", "புத்திஸ்ட் எக்ஸ்பிரஸ்" போன்ற பெயர்களில் நவீன சொகுசு தொடருந்துகள் வட இந்தியா மற்றும் தென்னிந்தியா மற்றும் கிழக்கிந்தியாவின் பண்பாட்டு கலாசார இடங்களைச் சுற்றிப் பார்க்கும் வகையில் சிறப்பு சொகுசு தொடருந்துகள் தில்லி, பெங்களூரு, மும்பை, கொல்கத்தாவிலிருந்து இயக்கப்படுகிறது.
இந்தியாவின் முதன்மையான சுற்றுலா இடங்களை குறைந்த கட்டணத்தில் காணத் தக்கவாறு "பாரத் தர்சன்" என்ற பெயரில் சிறப்பு தொடருந்துகளை இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் இந்தியா முழுவதும் இயக்குகிறது.
இந்தியாவில் தேசிய விளையாட்டு, ஹாக்கி இந்தியாவால் கையாளப்படும் வளைதடிப் பந்தாட்டம் ஆகும். இந்திய வளைதடிப் பந்தாட்ட அணி, 1975 வளைதடிப் பந்தாட்ட உலகக் கோப்பை மற்றும் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் 8 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் வென்று உலக அளவில் அதிக வெற்றி பெற்ற ஹாக்கி அணியாகத் திகழ்கிறது. இருப்பினும், மட்டைப்பந்து தாம் மக்களிடையே மிகவும் புகழ் பெற்ற விளையாட்டாகும். இந்தியத் துடுப்பாட்ட அணி, 1983 துடுப்பாட்ட உலகக் கிண்ணம், 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் மற்றும் 2007 ஐசிசி உலக இருபது ஓவர் கோப்பையை வென்று, அதோடு 2002 ஐசிசி சாம்பியன் கோப்பையை இலங்கையுடன் பங்கு கொண்டது. இந்தியாவில் மட்டைப்பந்து விளையாட்டை இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (பிசிசிஐ) நிர்வகித்து வருகிறது. உள்நாட்டுப் போட்டிகளான ரஞ்சிக் கோப்பை, துலீப் கோப்பை, இரானி கோப்பை மற்றும் என்.கே.பி. சால்வே சேலஞ்ஜர் கோப்பையையும் அது நிர்வகித்து வருகிறது. இவற்றோடு பிசிசிஐ, இந்தியன் பிரீமியர் லீக் என்ற இருபது ஓவர் மட்டைப்பந்து போட்டியையும் விமரிசையாக நடத்தி வருகிறது.
இந்தியா பல்வேறு வகையான பாரம்பரிய விளையாட்டுக்களின் துவக்க இடமாகவும் இருப்பிடமாகவும் திகழ்கிறது. அவை கபடி, சடுகுடு, பெகெல்வாணி, மற்றும் கில்லி தண்டா ஆகும். இந்திய வீர விளையாட்டுக் கலைகளான களரிப்பயிற்று, மல்யுத்தம், சிலம்பாட்டம், வர்மக்கலை ஆகியவற்றின் முற்கால வடிவங்கள் இந்தியாவில் தொடங்கின. ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மற்றும் அர்ஜுனா விருது இரண்டும் இந்தியாவில் விளையாட்டிற்காகக் கொடுக்கப்படும் உயர்ந்த பட்ச விருதுகளாகும். அதுபோல் துரோணாச்சார்யா விருது விளையாட்டு பயிற்சியாளர்களுக்கு இந்திய அரசால் கொடுக்கப் படும் உயர்ந்த பட்ச விருதாகும்.
இந்தியாவிலிருந்து ஆரம்பமானதாகக் கருதப்படும், சதுரங்கம், இந்திய பெருந்தலைவர்கள் எனப்படும் வெற்றி வீரர்களின் அதிக எண்ணிக்கை அதிகமாகி வருவதால், மீண்டும் பரவலான விளையாட்டாகத் தலைதூக்குகிறது. இந்திய டேவிஸ் கோப்பை அணி மற்றும் பல்வேறு டென்னிஸ் ஆட்டக்காரர்களின் வெற்றிகளாலும், டென்னிஸ் விளையாட்டும் புகழ்பெற்று வருகிறது. துப்பாக்கி சுடுதல் போட்டியில், ஒலிம்பிக் போட்டி, உலக துப்பாக்கி சுடுதல் போட்டி, மற்றும் பொதுநலவாய விளையாட்டுக்களில் பல்வேறு தங்கப் பதக்கங்களையும் வென்று, இந்தியா திடமான முன்னிலை வகிக்கிறது. இவற்றோடு இந்திய விளையாட்டாளர்கள் சர்வதேச அளவில் பூப்பந்தாட்டம், குத்துச்சண்டை மற்றும் மற்போர் விளையாட்டுக்களில் பல பதக்கங்களையும் பரிகளையும் வென்றுள்ளனர். காற்பந்தாட்டம், வடகிழக்கு இந்தியா, மேற்கு வங்காளம், கோவா, தமிழ் நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் புகழ்பெற்ற விளையாட்டாகும்.
இந்தியாவில் நான்கு நாட்கள் தேசிய விடுமுறை நாட்களாகும். அவை:
இவைதவிர விழாக்களுக்கென உள்ளூர் விடுமுறைகளும் உண்டு.
யாழ்ப்பாணம் (தொடர்புடைய பக்கம்)
யாழ்ப்பாணம் ("Jaffna") என்ற சொல் குறிக்கும் பொருள்கள் பற்றிய தனித்தனியான விபரங்களை அறிய கீழே பொருத்தமானவற்றைத் தெரியுங்கள்.
வரலாறு
வரலாறு "(History) (கிரேக்கம்: ἱστορία, historia பொருள்: "ஆய்வு மூலம் பெறப்பட்ட அறிவு")" என்பது இறந்த காலத்தைப் பற்றி படிக்கின்ற ஒரு பாடப்பிரிவு என எழுதப்பட்ட ஆவணங்களில் விவரிக்கப்பட்டுள்ளது . எழுதப்பட்ட பதிவுகளுக்கு முன்பாக நிகழ்ந்தவை அமைத்தும் வரலாற்றுக்கு முந்தைய நிகழ்வுகள் எனக் கருதப்படுகின்றன. இத்தலைப்பின்கீழ் கடந்த கால நிகழ்வுகள், நினைவுகள், கண்டுபிடிப்புகள், சேகரிப்புகள், அமைப்புகள், அன்பளிப்புகள், நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் ஆகியவை அனைத்தும் இடம்பெறுகின்றன. வரலாற்றைப் பற்றி ஆய்வு செய்கின்ற அறிஞர்கள் வரலாற்று அறிஞர்கள் எனப்படுகின்றனர்.
வரலாறு ஒரு பாடப்பிரிவாகக் கருதப்படுவது மட்டுமின்றி கடந்த கால நிகழ்வுகளின் வரிசைமுறையை ஆய்வு செய்வதற்கும், அவற்றை விளக்குகின்ற ஒரு விரிவுரையாகவும் பயன்படுகிறது. கடந்தகால நிகழ்வுகளுக்கான காரணங்களையும், விளைவுகளையும் உய்த்துணரவும் அவற்றை உறுதிப்படுத்தவும் வரலாறு பயன்படுகிறது .
வரலாற்று வல்லுநர்கள் சில நேரங்களில் வரலாற்றின் இயல்பு மற்றும் அதன் பயன்பாடு பற்றி விவாதித்ததன் மூலம், வரலாறு என்பதற்கு அதுவே ஒரு முடிவு என்றும், தற்போதுள்ள பிரச்சினைகளைப் பற்றிய சரியான கண்ணொட்டத்தை வழங்குவதற்கான ஒரு வழிமுறையாகவும் வரலாற்றைக் கருதுகின்றனர்.
வெளிப்புற ஆதாரங்கள் ஏதுமில்லாத ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்திற்குரிய ஆர்தர் அரசனைச் சேர்ந்த கதைகள் போன்ற சில பொதுவான கதைகள் வழக்கமாக கலாச்சார பாரம்பரியங்கள் அல்லது புனைவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன, ஏனென்றால் வரலாற்றின் ஒழுங்குமுறை இலக்கணத்திற்குத் தேவையான தேடல் இல்லாமல் அவை உள்ளன . மேற்கத்திய பாரம்பரியத்தில் இரோட்டோடசு என்ற 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க வரலாற்று வல்லுநர் வரலாற்றின் தந்தை என்று கருதப்படுகிறார். மேலும் சமகால வரலாற்று வல்லுநரான ஏதென்சின் துசைடைட்சும் இவரும் சேர்ந்து மனித வரலாற்றின் நவீன ஆய்வுக்கான அடித்தளங்களை உருவாக்க உதவினர். இவ்விருவரின் படைப்புக்கள் யாவும் இன்றும் வாசிக்கப்பட்டு வருகின்றன. மேலும் கலாச்சாரம் சார்ந்த இரோட்டோடசுக்கும், இராணுவத் தளமான துசைடைட்சுக்கும் இடையேயான இடைவெளி நவீன வரலாற்று எழுத்துக்களின் கருத்துக்கு அல்லது அணுகுமுறைக்கு ஒரு முக்கியமான புள்ளியாக உள்ளது. ஆசியாவில், சிபிரிங் அண்டு ஆட்டம் ஆனல்சு என்ற வரலாற்று கலைக்களஞ்சியம் கி.மு. 722 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்டதாக அறியப்படுகிறது. ஆனால் கி.மு 2 ஆம் நூற்றாண்டுக்குரிய நூல்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன.
வரலாற்றின் தன்மை பற்றிய பல மாறுபட்ட விளக்கங்கள் பல நூற்றாண்டுகளாக உருவாகியுள்ளன மற்றும்
பண்டைய கிரேக்க மொழியிலிருந்து வரலாறு என்ற பொருள் கொண்ட ἱστορία, historia என்ற சொல் வரப்பெற்றுள்ளது. அரிசுடாட்டிலும் இதே பொருளில் விலங்குகள் குறித்த தேடல் என்ற பொருள் கொண்ட Περὶ Τὰ Ζῷα Ἱστορίαι என்ற படைப்பில் பயன்படுத்தியுள்ளார் . முன்னுரை சொல்லான ἵστωρ என்ற சொல் எராக்ளிப்டசின் பண்டைய சில வழிபாட்டுப் பாடல்களில், சில கல்வெட்டுகளில் இடம் பெற்று சான்றாக உள்ளது.
கிரேக்கச் சொல்லானது பாரம்பரிய இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்ட சொல்லாகும். கடந்த கால நிகழ்வுகள் தொடர்பான தேடல், விசாரணை, ஆய்வு, கணக்கு, விளக்கம், நிகழ்வுகளை எழுதுதல், கடந்தகால நிகழ்வுகளின் பதிவு செய்யப்பட்ட அறிவு என பல்வேறு பொருளையும் இச்சொல் தாங்கியுள்ளதாகக் கருதப்படுகிறது. History என்ற சொல் பண்டைய அயர்லாந்து அல்லது வேல்சு மொழியிலிருந்து ஆங்கிலந்திற்குள் வந்து பயன்படுத்தப்பட்டிருக்கிறது .
இதற்கிடையில் இலத்தீன் மொழியில் பண்டைய பிரெஞ்சு (ஆங்கிலோ-நார்மன்) மொழியில் வரலாற்றின் தன்மையானது ஒரு தனி நபரின் வாழ்க்கை நிகழ்வுகள் (12 ஆம் நூற்றாண்டின் தொடக்கம்), ஒரு குழு அல்லது மக்களின் புதிய முன்னேற்றங்கள், வரலாற்று நிகழ்வுகளின் வியத்தகு விளக்கம் அல்லது சித்தரிப்பு, மனித பரிணாம வளர்ச்சியுடன் தொடர்புடைய அறிவியல் அறிவு, உண்மையான அல்லது கற்பனை நிகழ்வுகளின் கதை போன்ற மேலும் பல பொருள்களைக் கொண்ட சொல்லாகவும் உருவானது ,
ஆங்கிலோ நார்மன் மொழியில் இருந்து வந்த history என்ற இச்சொல் மத்திய ஆங்கிலத்திற்கும் கடனாகப் பெறப்பட்டது. 13 ஆம் நூற்றாண்டில் காணப்படும் இச்சொல் பிற்கால 14 ஆம் நூற்றாண்டில் ஒரு பொதுச் சொல்லாகப் பயன்பாட்டில் இருந்துள்ளது. மத்திய காலஆங்கிலத்தில் வரலாற்றின் பொருள் பொதுவாக கதை என்று கருதப்பட்டது. கடந்த நிகழ்வுகள் பற்றி அறியும் அறிவின் கிளை, கடந்தகால நிகழ்வுகள் மற்றும் கடந்த மனித நிகழ்வுகளை ஆய்வு செய்தல் போன்ற அர்த்தம் பதினைந்தாம் நூற்றாண்டின் மத்தியில் எழுந்தது
பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரான்சிசு பேகன் "இயற்கை வரலாறு" என்று எழுதியபோது இந்த சொல்லின் பயன்பாடு கிரேக்க மொழிச் சொல்லின் அர்த்தத்தை எட்டியது. இச்சொல்லின் பல்வேறு அர்த்தங்கள் மறுமலர்ச்சியால் புத்துயிர் பெற்றன. அவரைப் பொறுத்தவரை வரலாறு என்பது விண்வெளி மற்றும் காலத்தினால் தீர்மானிக்கப்பட்ட பொருள்களின் அறிவு என்று கருதப்பட்டது .
மனித வரலாறு மற்றும் கதைசொல்லல் ஆகியவற்றிற்கான தனி வார்த்தைகள் மொழியியல் சிந்தனையுடன் பகுப்பாய்வு அல்லது தனிமைப்படுத்தல் அல்லது இருமை வெளிப்பாடு போன்றவை ஆங்கில சொல்லுக்கு நிகராக சீனசொற்களும் உருவாகியுள்ளன. நவீன செருமன், பிரஞ்சு மற்றும் பெரும்பாலான செருமானிய மொழிகளிலும் இதே சொல்லே உறுதியாகவும் செல்வாக்குடனும் வரலாறு மற்றும் கதை ஆகிய இரண்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது.
1661 களில் ஒரு பெயர் சொல்லாக இது மாற்றம் கண்டது .
வரலாற்றை ஆய்வு செய்பவர் வரலாற்று ஆய்வாளர் என்ற பொருள் 1531 ஆம் ஆண்டில் அங்கீகாரம் பெற்றுள்ளது. உண்மையான மனிதனின் வரலாறு, கடந்தகால நிகழ்வுகளின் ஆய்வு என்ற இரு நோக்குகளிலும் வரலாறு பொருள் கொள்ளப்படுகிறது.
வரலாற்றாசிரியர்கள் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். மற்றும் சில சமயங்களில் தங்களின் சொந்த சமுதாயத்திற்கான பாடங்களாகவும் இவர்கள் வரலாற்றை எழுதுகின்றனர். பெனிதெட்டோவின் வார்த்தைகளில் சொல்வதென்றால், அனைத்து வரலாறும் சமகால வரலாறு எனலாம். மனித இனம் தொடர்பான முந்தைய நிகழ்வுகளின் கதை மற்றும் பகுப்பாய்வை உண்மையான விளக்கத்தை உருவாக்குவதன் மூலம் வரலாறு எளிதாக்கப்படுகிறது. வரலாற்றின் நவீன விளக்கமானது இவ்விளக்கத்தின் அடிப்படையில் பல புதிய கோணங்களை உருவாக்குகிறது.
சில உண்மையான நினைவில் வைத்து பாதுகாக்கப்படுகிற அனைத்து நிகழ்வுகளும் வரலாற்றுப் பதிவுகள் எனப்படுகின்றன. கடந்த காலத்தின் துல்லியத்திற்கு மிகவும் பயனுள்ள வகையில் பங்களிப்பு செய்யும் ஆதாரங்களை அடையாளம் காண்பதே வரலாற்று ஆய்வின் பணியாகும். எனவே, வரலாற்றாளரின் காப்பகம் சில நூல்கள் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றை மிகச் சாதாரணமாகப் பயன்படுத்துவதை செல்லாததாக்குதல் மூலம் உருவாக்கப்படுகிறது.
வரலாற்று ஆய்வு சில நேரங்களில் சமூக அறிவியல் பகுதியாகவும் மற்ற நேரங்களில் மானுடவியலின் ஒரு பகுதியாகவும் வகைப்படுத்தப்படுகிறது It can also be seen as a bridge between those two broad areas, incorporating methodologies from both. Some individual historians strongly support one or the other classification.. இந்த இரு பரந்த துறைகளுக்கும் இடையே ஒரு பாலமாகவும், இரண்டின் வழிமுறைகளையும் உள்ளடக்கியும் வரலாற்று ஆய்வு காணப்படுகிறது. சில தனிப்பட்ட வரலாற்றாசிரியர்கள் ஒன்று அல்லது மற்றொரு வகைப்பாட்டை மட்டும் ஆதரிக்கிறார்கள். 20 ஆம் நூற்றாண்டில், பிரெஞ்சு வரலாற்றாசிரியரான பெர்னாண்ட் பிரேடால் உலக வரலாறு பற்றிய ஆய்வுகளில் பொருளாதாரம், மானுடவியல் மற்றும் புவியியல் போன்ற வெளிப்புற துறைகளைப் பயன்படுத்தி வரலாற்றை ஆய்வில் ஒரு புரட்சியை உண்டாக்கினார்.
பாரம்பரியமாக, கடந்த கால நிகழ்வுகளை எழுதி வைத்து அல்லது வாய்வழியாக ஒருவரிடமிருந்து மற்றவருக்கு கடத்திவந்து வரலாற்று கேள்விகளுக்கு பதிலளிக்க வரலாற்றாசிரியர்கள் முயன்றனர். தொடக்கத்தில் இருந்தே வரலாற்று வல்லுனர்கள் நினைவுச்சின்னங்கள், கல்வெட்டுக்கள் மற்றும் படங்கள் போன்ற ஆதாரங்களையும் பயன்படுத்தினர். பொதுவாக வரலாற்று அறிவின் ஆதாரங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்படுகின்றன: என்ன எழுதப்பட்டுள்ளது, எனன சொல்லப்படுகிறது, என்ன பாதுகாக்கப்பட்டுள்ளது என்பன அம்மூன்று வகைபாடுகளாகும் . வரலாற்றாளர்கள் பெரும்பாலும் இம்மூன்றையும் கணக்கில் கொள்கின்றனர். ஆனால் எழுத்து கடந்தகாலத்திலிருந்து என்னவெல்லாம் இருந்து வருகிறது என்பதைக் குறிப்பிட்டு வரலாற்றைச் சிறப்பாக்குகிறது.
புதையுண்ட தளங்கள் மற்றும் பொருள்களைக் கையாள்வதில் தொல்பொருளியல் துறை குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும் ஒரு துறையாகும் தொல்பொருளியல் தளங்களும் பொருட்களும் ஒருமுறை கண்டுபிடிக்கப்பட்டால் அவை வரலாற்றின் ஆய்வுக்கு பங்களிப்புச் செய்கின்றன. அரிதாக சில சமயங்களில் அதன் கண்டுபிடிப்பை நிறைவு செய்வதற்காக கதை மூலங்களைப் பயன்படுத்தி தொல்பொருளியல் ஒரு தனித்துறையாகவும் சிறப்படைகிறது. இருப்பினும் வரலாற்றில் இருந்து பிரிக்கப்பட்ட சில பகுப்பாய்வு முறைகள் மற்றும் அணுகுமுறைகளை தொல்பொருளியல் கொண்டுள்ளது. அதாவது, தொல்பொருளியல் என்பது உரை ஆதாரங்களில் இடைவெளிகளை நிரப்பும் என்று சொல்ல இயலாது. உண்மையில், "வரலாற்று தொல்லியல்" என்பது தொல்பொருளியலின் ஒரு குறிப்பிட்ட கிளையாகும், இத்துறை பெரும்பாலும் சமகால உரைகளின் ஆதாரங்களுக்கு எதிராக அதன் முடிவுகளுடன் வேறுபடுத்துகிறது. உதாரணமாக, அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தின் அனாபொலிசு நகரத்தைச் சேர்ந்த அகழ்வாராய்ச்சியாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளரான மார்க் லியோன் அவர்களின் ஆய்வினைக் குறிப்பிடலாம். உரை ஆவணங்கள் மற்றும் பொருட் பதிவுகள் ஆகியவற்றிற்கு இடையே உள்ள முரண்பாட்டை புரிந்து கொள்ள இவர் முயற்சித்தார். அந்த நேரத்தில் கிடைக்கப்பெற்ற எழுதப்பட்ட ஆவணங்களுக்கு அப்பாற்பட்டு ஒட்டுமொத்த வரலாற்றுச் சூழலையும் கணக்கில் கொண்டு அடிமைகள் தொடர்பான ஆய்வுக்கு இவர் பயன்படுத்தினார்.
காலவரிசைப்படியும், கலாச்சார ரீதியாகவும், பிராந்திய ரீதியாகவும், ஆய்வுப்பொருள் சார்ந்தும் வரலாறு பல்வேறு விதமான ஒழுங்கமைக்கப்பட்ட வழிகளால் ஆக்கப்படுகிறது. இந்தப் பிரிவுகள் அனைத்தும் முற்றிலும் தனிதன்மை கொண்டவையாக இல்லாமல் இவற்றினிடைல் குறிப்பிடத்தக்க கலப்பும் கொண்டுள்ளன. சில நடைமுறை அல்லது கோட்பாட்டு நோக்கத்துடன் வரலாறு பெரும்பாலும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது, ஆனாலும் எளிமையான அறிவார்ந்த ஆர்வம் இதில் முக்கியப்பங்கு வகிக்கிறது .
பொறியியல்
பொறியியல் ("Engineering") என்பது அறிவியல் கோட்பாடுகளைத் "திறமுடன்" பயன்படுத்தி தக்க முறையில் இயற்கை வளங்களை மனித பயன்பாட்டிற்காக மாற்றும் தொழிற் கலையாகும். இது இயற்பியல், கணிதம், வேதியியல், உயிரியல் ஆகிய அறிவியற்துறைகளையும், அவற்றின் சிறப்புத் துறைகளான பொருள் அறிவியல்(materials science), திண்ம / பாய்ம விசைப்பொறியியல் (Solid/Fluid Mechanics), வெப்ப இயக்கவியல் (Thermodynamics) போன்றவற்றை அடிப்படையாகக் கொள்கிறது. இத்துறையில் பயிற்சிபெற்றவர்கள் பொறியாளர்கள் எனப்படுவர். பொறியாளர்கள் ஆற்றல், பொருட்கள் எனும் இரண்டுவிதமான இயற்கை வளங்களைப் பயன்படுத்துகின்றனர்.
பொருட்களின் பயன்பாடு அவற்றின் தாங்கு திறன், முறைப்படுத்த உகந்ததாயிருத்தல், எடை குறைவாயிருத்தல், வெகுகாலம் சிதையாதிருத்தல், கடத்து திறன், வேதியியல், ஒலியியல், மின்னியல் பண்புகள் போன்ற பற்பல தன்மைகளைப் பொருத்து இருக்கும். ஆற்றலுக்கான முக்கிய மூலங்கள், படிம எரிபொருட்கள்(Fossil Fuels) (பெட்ரோலியம், நிலக்கரி, எரிவாயு (எரிவளி)), காற்று, சூரியன், நீர்வீழ்ச்சி, அணுக்கரு பிளவு போன்றவை.
பொறியியல் என்ற தமிழ்ச்சொல், "Engineering" என்பதற்கு இணையாக பயன்படுத்தும் ஒன்றாகும். பொறி (கருவிகள் ஆக்குவது, இயங்குவது பற்றியது)+அறிவியல் = பொறியியல். பொறியியல் என்னும் சொல் தமிழில் பயன்பாட்டுக்கு வருமுன்னர் யந்திரவியல், இயந்திரவியல், எந்திரவியல் போன்ற வடமொழி மூலங்களைக் கொண்ட சொற்களும் பயின்று வந்துள்ளன. மிகவும் பிற்காலத்தில் அறிமுகமான "Engineering" என்ற ஆங்கிலச் சொல் "Engineer" என்பதிலிருந்தும், இது, இயந்திரம் என்று பொருள்படும் "Engine" என்னும் சொல்லிலிருந்து உருவானதே. இதன் மூலம் இலத்தீன் மொழிச் சொல்லான "ingenium" என்பதாகும். "Engineer" என்பதைக் குறிக்கும் "engineour" என்னும் நடு ஆங்கிலச் சொல் 14 ஆவது நூற்றாண்டில் இருந்து ஆங்கில-பிரெஞ்ச் மொழிகளில் பயின்று வந்துள்ளது
பொறியியல் துறையின் அடிப்படைக்கூறுகள் பல்வேறு நாகரிகங்களில் தொன்று தொட்டே இருந்து வந்துள்ளது. சக்கரம் (ஆழி), நெம்புகோல், புல்லி (pulley, கப்பி), போன்ற கருவிகளை அக்காலத்து மக்கள் உருவாக்கியதிலிருந்தும், பயன்படுத்தியதிலிருந்தும் இதை அறியலாம். இத்தகைய கண்டு பிடிப்புக்கள் ஒவ்வொன்றும், அடிப்படையான பொறிமுறைக் கொள்கைகளை பயனுள்ள கருவிகளையும், பொருட்களையும் உருவாக்குவதில் பயன்படுத்துதல் என்னும் தற்கால வரைவிலக்கணங்களோடு ஒத்துப்போகின்றன. போர்க்கருவிகளை உருவாக்குவதிலும், கட்டிடக் கலைத்துறையிலும் பொறியியல் கூறுகள் அதிகம் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. தற்கால பொறியில்துறை ஐரோப்பாவில் இயந்திரமயமாக்கல் தொடங்கிய காலத்திலிருந்து (18-19 ஆவது நூற்றாண்டுகளில்) முக்கியத்துவம் அடைந்தது.
கிரீசில் உள்ள அக்ரோபோலிஸ், பந்தியன்; ரோமர்களின் நீர்காவிகள், கொலோசியம்; பபிலோனின் தொங்கு தோட்டம்; எகிப்தின் பிரமிட்டுக்கள்; மாயன் பிரமிட்டுக்கள்; சீனப் பெருஞ்சுவர் போன்ற அமைப்புக்கள் அக்காலத்து குடிசார் மற்றும் படைசார் பொறியாளர்களின் திறமைகளுக்குச் சான்றாக அமைகின்றன.
பெயர் குறிப்பிட்டு அறியப்படுகின்ற மிகப் பழைய காலத்துப் பொறியாளர் இம்ஹோட்டெப் (Imhotep) என்பவராகும். பாரோ ஜோசர் (Djosèr) என்பவரின் அலுவலரான இவரே எகிப்திலுள்ள சக்காரா என்னுமிடத்தில் உள்ள பாரோ ஜோசரின் பிரமிட்டான படிப் பிரமிட்டை வடிவமைத்துக் கட்டியிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இதன் காலம் கிமு 2630 - கிமு 2611 ஆகும். உலகக் கட்டிடக்கலையில் முதலில் அறியப்பட்ட தூண்களை வடிவமைத்தவரும் இவராகவே இருக்கக்கூடும்.
அல்-ஜசாரி என்னும் ஈராக்கியர் ஒருவர், 1174 க்கும் 1200க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் துருக்கிய ஆர்த்துஜிட் வம்சத்தைச் சேர்ந்த அரசர் ஒருவரது மாளிகைகளில் நீருயர்த்துவதற்கு தற்கால இயந்திரங்களைப் போன்ற இயந்திரங்களை உருவாக்கியதாகத் தெரிகிறது. இரட்டைச் செயற்பாட்டு முன்பின்னியக்க (reciprocating motion) ஆடுதண்டுப் பம்பிகள் பிற்காலப் பொறியியல் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தன. ஏனெனில், இதுவே இணைகோலையும் (connecting rod), மாற்றித்தண்டையும் (Crankshaft) உள்ளடக்கி, சுழல் இயக்கத்தை முன்பின் இயக்கமாக மாற்றும் வல்லமை கொண்ட முதல் இயந்திரமாகும். இன்றும் கூடச் சில விளையாட்டுப் பொருட்களில், அல் ஜசாரியின் கூட்டுப்பூட்டு (combination lock) தன்னியக்கப் பொறிகள் ஆகியவற்றில் காணப்படும் பற்கொம்பு – நெம்புகோல் (cam-lever) பொறிமுறை பயன்படுத்தப்பட்டு வருவதைக் காணலாம். ஐம்பதுக்கு மேற்பட்ட பொறியியல் கருவிகளைக் கண்டுபிடித்த அல்-ஜசாரி, துண்டுப் பல்லிணைகள் (segmental gears), பொறியியல் கட்டுப்பாடுகள், தப்பிப் (escapement) பொறிமுறைகள், மணிக்கூடு, வடிவமைப்பு மற்றும் உற்பத்தி முறைகளுக்கான நடபடிகள் போன்றவற்றை மேம்படுத்திப் புதுமைகளையும் புகுத்தியுள்ளார்.