புதுவை சிவம் புதுவை சிவம் (1908 அக்டோபர் 13 – 1989 ஆகத்து 31) என்னும் புதுச்சேரி சண்முக வேலாயுத சிவப்பிரகாசம் கவிஞர்; இதழாளர்; நாடக ஆசிரியர்; அரசியல்வாணர்; சமூகச் சீர்திருத்தக்காரர்; பள்ளி ஆசிரியர்; பதிப்பாளர்; சொற்பொழிவாளர்; கட்டுரையாளர். புதுச்சேரி முத்தியாலுபேட்டையில் வாழ்ந்த வேலாயுதம் – விசாலாட்சி இணையரின் தலைமகனாக 1908 அக்டோபர் 13 ஆம் நாள் புதுவை சிவம் பிறந்தார். புதுவை சிவம் திண்ணைப் பள்ளியில் தொடக்கக் கல்வியைப் பெற்றார். உயர்நிலைப் பள்ளியில் பிரஞ்சும் தமிழும் பயின்றார். இவருக்கு 1926 ஆம் ஆண்டில் பாரதிதாசன் என்னும் கனக. சுப்புரத்தினத்தின் அறிமுகம் கிடைத்தது. அவரிடம் சிவம் தமிழ் யாப்பு இலக்கணங்களைக் கற்று கவிதைகள் எழுதத் தொடங்கினார். புதுச்சேரிக்கு பெரியார் ஈ. வே. இரா 1926 ஆம் ஆண்டு வருகை தந்து உரையாற்றினார். அவ்வுரையால் ஈர்க்கப்பட்ட புதுவை சிவம் பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தில் இணைந்தார். 1945 சூலை 22 ஆம் நாள் பெரியார், கா. ந. அண்ணாதுரை, பட்டுக்கோட்டை அழகிரி ஆகியோரை அழைத்து புதுவையில் திராவிடர் கழகத்தைத் தொடங்கினார். பின்னர் அக்கழகத்தின் செயலாளரானார். சுயமரியாதை இயக்கத்தில் இணைந்து தீவிரமாக இயங்கத் தொடங்கிய சிவம், அவ்வியக்கக் கொள்கைகளைப் பரப்புவதற்காக 1930ஆம் ஆண்டில் நோயல் என்பவரால் தொடங்கப்பட்ட புதுவை முரசு இதழின் பதிப்பாசிரியராகப் பணியாற்றினார். இவ்விதழில் புதுவை சிவம், பாரதிதாசன், குத்தூசி குருசாமி உள்ளிட்ட பலரும் கட்டுரை, கவிதை, கதை ஆகியவற்றை எழுதினர். அதில் புதுவை சிவம் கிறித்துவ துறவிகளைப் பற்றி கட்டுரை எழுதினார். அதன் காரணமாக அவ்விதழின் மீது வழக்குத் தொடரப்பட்டு 1932 ஆம் ஆண்டில் புதுவை சிவத்திற்கு 550 பிராங்க் (பிரெஞ்சு நாணயம்) தண்டமும் மூன்று மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. பின்னர் பிரான்சு நீதிமன்றத்தில் அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. பொருளாதார நெருக்கடி காரணமாக இவ்விதழ் சில ஆண்டுகளில் நிறுத்தப்பட்டது. புதுவை சிவம், பாரதிதாசனை ஆசிரியராகக்கொண்டு பாரதி கவிதா மண்டலம் என்னும் இதழை 1935 ஆம் ஆண்டில் தொடங்கினார். இவ்விதழ் முற்றிலும் கவிதை இதழாக வெளிவந்தது. இது ஓராண்டுக்கு மேல் வெளிவரவில்லை. புதுவை சிவம் சுயமரியாதை இயக்கத்தவர்களான பாரதிதாசன், குத்தூசி குருசாமி, குஞ்சிதம் குருசாமி ஆகியோருடனும் சோசலிச இயக்கத்தவரான எசு. ஆர். சுப்பிரமணியத்துடனும், பொதுவுடைமை இயக்கத்தவரான வ. சுப்பையாவுடனும் நெருங்கிப் பழகினார். இதனால் இம்மூன்று கருத்துகளின் தாக்கத்திலும் தனது படைப்புகளை கவிதை, கதை, நாடகம், கட்டுரையென பல்வேறு வடிவங்களில் உருவாக்கினார். அப்படைப்புகள் புதுவை முரசு, குடியரசு, நகர தூதன், சண்டமாருதம், விடுதலை, புதுஉலகம், பொன்னி, போர்வாள், திராவிடநாடு, முரசொலி, தமிழரசு, தென்றல், மன்றம், கழகக்குரல், திராவிடன், தொழிலாளர்மித்திரன், நம்நாடு, அறிவுக்கொடி உள்ளிட்ட பல இதழ்களில் வெளிவந்தன. அவை பின்வரும் நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன: புதுவை சிவம் இயற்றிய கவிதைகள் அனைத்தும் தொகுத்து 1993 ஆம் ஆண்டில் முல்லைப் பதிப்பகம் வெளியிட்டு உள்ளது. அவரின் ஒன்பது கவிதை நூல்களைத் தொகுத்து புதுவை சிவம் கவிதைகள் என்னும் தலைப்பில் புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத் துறை 1997 ஆம் ஆண்டில் வெளியிட்டு இருக்கிறது. அவருடைய நாடகங்களைத் தொகுத்து புதுவை சிவம் நாடகங்கள் என்னும் தலைப்பில் புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத் துறை 2000 ஆம் ஆண்டில் வெளியிட்டு இருக்கிறது. பெரியார் விழாவும் நாமும் என்னும் தலைப்பில் ஆற்றிய உரையை, புதுவை சிவம் நூலாக தனது ஞாயிறு நூற்பதிப்பகத்தின் வழியாக வெளியிட்டார். மேலும் அப்பதிப்பகத்தின் வழியாக பல்வேறு திராவிட இயக்கம் சார்ந்த எழுத்தாளர்களின் நூல்களை வெளியிட்டார். அவ்வகையில் அண்ணாவின் தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட நூலான ஆரியமாயை நூலைப் பிரஞ்சு இந்தியாவில் வெளியிட்டார். மேலும் பாவேந்தரின் புரட்சிக்கவி, மகாகவி பாரதியார் முதலான நூல்களையும் வெளியிட்டார். சுயமரியாதை இயக்கத்தவரான புதுவை சிவம் அவ்வியக்கத்தின் கொள்கைப்படி வேள்வி வளர்க்காமல், மறையோதாமல் பாரதிதாசன் தலைமையில் 1940 செப்டம்பர் 15 ஆம் நாள் ஜெகதாம்பாள் என்பவரை சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்டார். புதுவை சிவம் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1949 ஆம் ஆண்டில் அண்ணாதுரை திராவிடர் கழகத்தில் இருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கியபொழுது, புதுவை சிவமும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார். பின்னர் அக்கழகத்தின் சார்பில் புதுச்சேரி நகர்மன்றத் தேர்தலில் முத்தியாலுப்பேட்டைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். பின்னர் புதுச்சேரி நகர மன்றத் துணை மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு புதுவையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, 1969-ஆம் ஆண்டு முதல் 1975-ஆம் ஆண்டு வரை அதன் உறுப்பினராகப் பதவி வகித்தார். தமிழக அரசு, புதுவை சிவத்துக்கு 1983 ஆம் ஆண்டில் பாரதிதாசன் விருது வழங்கிச் சிறப்பித்தது. புதுவை சிவம் 1989-ஆம் ஆண்டு ஆகஸ்டு 31-ஆம் தேதி காலமானார். புதுவை சிவத்தின் நூற்றாண்டு விழாவை புதுச்சேரி அரசு சிறப்பாகக் கொண்டாடி, "நூற்றாண்டு பாமாலை' என்ற நூலை வெளியிட்டும் உருவச்சிலையை நிறுவியும் ஆண்டுதோறும் பிறந்தநாள் கொண்டாடியும் அவரது நினைவைப் போற்றுகிறது. அத்வைத வேதாந்த ஆசிரியர்கள் அத்வைத வேதாந்த ஆசிரியர்கள் அல்லது அத்வைத சித்தாந்திகள் (List of teachers of Advaita Vedanta) எனப்படுவோர் இறைவனும், சீவனும் ”இரண்டற்றது” அத்வைதம் எனும் கொள்கை உடையவர்கள் ஆவர். மேலும் இறைவன் சத்-சித்-ஆனந்தமயமானவர் என்றும், இறைவன் (பிரம்மம்) பெயர், உருவம், குணங்கள் அற்றவராக இருப்பவர், பிரம்மமே பிரபஞ்சமாகவும், சீவராசிகளுமாக உள்ளது என்ற கொள்கை உடையவர்கள். ” ஈஸ்வரன் ஜெகத்காரணம் ”, பார்க்கப்படும் இந்த ” ஜெகத் மித்யா ” (நிலையற்றது), ஜெகத்தை படைத்த ”பிரம்மம் சத்யம்” என்பது இவர்களின் சித்தாந்தம். இவர்களுடைய சித்தாந்தங்கள், உபநிடதங்கள் மற்றும் பிரம்ம சூத்திரம் போன்ற வேதாந்த சாத்திரங்களில் அதிகமாக காணப்படுகிறது. அத்வைத சித்தாந்தங்கள், வேத காலத்திலிருந்து தற்காலம் வரை குருகுலத்தில், குரு - சீடர் பரம்பரையில் அத்வைத வேதாந்த சாத்திரங்கள் உபதேசிக்கப்பட்டு வருகிறது. நங்காஞ்சி ஆறு நல்காசி ஆறு அல்லது நங்காஞ்சி ஆறு, அமராவதி ஆற்றின் துணையாறு ஆகும். தமிழ்நாடு, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம் வடகாடு கிராம மலைப்பகுதியில் உருவாகும் சிற்றாறுகள் பரப்பலாறு அணையில் தேங்கி, தேங்கும் நீர் மற்றும் உபரி நீர் சிறு ஆறாக நங்காஞ்சி ஆறு எனும் பெயரில் விருப்பாட்சி கிராமத்திற்கு அருகில் தலையூத்து என்ற இடத்தில் சிற்றருவியாக விழுந்து வடகிழக்காக விருப்பாச்சி, அரசப்பபிள்ளைபட்டி, தங்கச்சியம்மாபட்டி, சவ்வாதுபட்டி, இடையகோட்டை, கோவிந்தாபுரம் ஆகிய ஊர்களின் வழியாக ஓடி குடகனாற்றில் கலந்து, பின் அமராவதி ஆற்றோடு கலக்கிறது. இந்த ஆறுக்கு சங்க காலத்தில் ”நல்காசி” என்ற பெயர் வழங்கி வந்துள்ளது. விருப்பாச்சி பாளையம் இந்த ஆற்றின் கரையில் அமைந்து இருந்தது. குதிரையாறு அணை கொடைக்கானல் மலைப் பகுதியில் கூக்கால் என்ற மலைக் கிராமத்தின் தெற்கு பகுதியில் உருவாகும் சிறு, சிறு ஓடைகள் ஒன்றாகி வடக்கு நோக்கி ஓடி, பழனி வட்டம், ஆண்டிப்பட்டி கிராமத்தில் சிற்றருவியாக விழும் குதிரையாற்றின் குறுக்காக கட்டப்பட்ட அணை தான் குதிரை ஆறு அணையாகும். சிவம் (தொலைக்காட்சித் தொடர்) சிவம் என்பது சைவ சமயக் கடவுளான சிவபெருமானின் பெருமைகளை விளக்கும் தொடராக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு மொழிமாற்றுத் தொடர் ஆகும். இத்தொடரானது 'தேவோன் கே தேவ்... மகாதேவ்' என்ற பெயரில் லைப் ஓகே தொலைக்காட்சியில் திசம்பர் 18, 2013 முதல் திசம்பர் 14, 2014 வரை ஒளிபரப்பாகி 820 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது. 2018 முதல் இந்த தொடர் இலங்கையில் உள்ள சக்தி தொலைக்காட்சியில் சிவம் என்ற பெயரில் ஒளிபரப்பாகிறது. ஸ்டார் பாரத் என்ற இந்தி தொலைக்காட்சியில் ஆகஸ்ட் 5, 2018 முதல் மறு ஒளிபரப்பு ஒளிபரப்பப்படுகின்றது. சிவம் தொடரின் தொடக்கம் சிவபெருமான் சதியின் திருமணத்திலிருந்து தொடங்குகிறது. அண்ட சராசரங்களை படைத்தப் பின்பு, உலக உயிர்களை தோற்றுவிக்க பிரம்மா முயன்றார். எனினும் அவரால் சக்தியில்லாமல் இயலவில்லை. அதனால் சிவபெருமானிடமிருந்து சக்தியை பிரிக்க கடுந்தவம் புரிந்தார். தவத்தில் மகி்ழ்ந்த சிவபெருமான் தன்னில் பாதியாக இருந்த சக்தியை தனியே பிரித்தார். அதலிருந்து சக்தியும் சிவனும் தனித்தே இருந்தார்கள். மீண்டும் சக்தியை சிவனுடன் இணைக்க எண்ணம் கொண்ட திருமாலும் பிரம்மதேவனும் சக்தியை பிரஜாபதி தட்சனின் குமாரியாக பிறக்க வைத்தார்கள். தட்சன் தன் தந்தையான பிரம்மாவின் தலையை கொய்து, பூசை இல்லாமல் போக சாபமளித்த சிவபெருமான் மீது கோபம் கொண்டிருக்கிறார். அதனால் தன்னுடைய சாம்ராஜ்யத்தில் சிவபெருமான் வணங்குவதையும், அவரைப் பற்றி பெருமையாக பேசுவதையும் தடை செய்துள்ளார். தாட்சாயினி சிவபெருமான் என்றால் யார் என்றே அறியாமல் வளர்கிறார். ஒரு நாள் சிவபெருமானின் ருத்திராட்சம் தாட்சாயினி நீர் எடுக்க செல்லும் போது கண்ணில் படுகிறது. அதை கையில் எடுக்கும் தாட்சாயினியை அவரின் சகோதரிகள் எச்சரிக்கை செய்கின்றார்கள். அந்நிகழ்விலிருந்து சிவபெருமானை பல சம்பங்கள் மூலம் அறிகிறார். ததிசி முனிவர், மாதங்கி துணையுடன் சிவபெருமான் மீது தான் காதல் கொண்டிருப்பதை உணர்கிறார். இத்தொடர் நாடகம் ஏஷ்யாநெட் தொலைக்காட்சியில் கைலாசநாதன் என்ற பெயரில் மலையாளத்திலும், மா தொலைக்காட்சியில் ஹர ஹர மகாதேவா என்ற பெயரில் தெலுங்கிலும், பெங்காலி, ஓடியா, மராத்தி போன்ற மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பட்டது. 2013 மே 10 சூரிய கிரகணம் 2013 மே 9-10 ஆந் திகதிகளில் (ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்) (), 2013 பரிமாணங் கொண்ட கங்கண சூரிய கிரகணம் நிகழ்ந்தது. சூரிய கிரகணம் நிகழ்வது சந்திரன் புவிக்கும் சூரியனுக்குமிடையில் குறுக்கிடும்போது புவியிலிருப்போருக்குத் தோன்றும் ஒரு நிழல் தோற்றப்பாடு ஆகும். கங்கண சூரிய கிரகணம் என்பது சந்திரனின் தோற்றவிட்டம் சூரியனின் விட்டத்தை விட சிறிதாக இருக்கும்போது அது சூரியனின் நடுப்பகுதியை மறைப்பதால் நிகழ்வதாகும். இதனால் கிரகணம் ஒரு கங்கண (மோதிர) வடிவில் தோன்றும். இதனால் இது நெருப்பு வளையம் எனவும் அழைக்கப்படும். ஆஸ்திரேலியா, கிழக்கு பப்புவா நியூ கினி, சொலமன் தீவுகள், மற்றும் கில்பேர்ட் தீவுகள் உள்ளிட்டதான பசிபிக் பெருங்கடலின் கிழக்கு பிரெஞ்சு பொலினீசியாவில் இருந்து 171 - 225 கிலோகீட்டர் அகலப்பட்டையான பகுதியில் இக் கங்கணாகிரகணாம் தோற்றும். தோற்றும் காலம் 6 நிமிடம் 3 வினாடி வரையாக இருக்கும். இலங்கை மற்றும் இந்தியாவில் உள்நாட்டு நேரப்படி அதிகாலை 2:05 முதல் முற்பகல் 8:55 வரை நிகழும். ஆயினும் பார்க்கமுடியாது. கையெறி விளையாட்டு கையெறி விளையாட்டு என்பது காதலி காதலனைக் மடக்கிய கையால் குத்தி விளையாடும் ஒருவகை இன்ப விளையாட்டு. இதில் போட்டி இல்லை. இது ஒருவகைத் திளைப்பு. சிற்றில் விளையாட்டு சிறுவர் சிறுமியர் மணல்வீடு கட்டி விளையாடும் பொழுதுபோக்குத் திளைப்பு ஆட்டத்தைச் சிற்றில் விளையாட்டு என்பர். தாய்தந்தையர் வீட்டில் வாழும் பாங்கை விளையாட்டாக நடித்துக்கொண்டு சிறுவர் சிறுமியர் சிற்றில் ஆடுவர். யில் எழுதிப் பழகுவது போல, வாழ்வியல் பாங்குகளை விளையாடிப் பழகும் விளையாட்டு இது. சமைத்தல், உணவு படைத்தல், குழந்தை வளர்த்தல், வயலுக்குச் சென்றுவருதல் முதலான பணிகளைச் செய்வது போல நடிப்பர். தெருமண்ணில் கட்டிய கரை அவர்களுக்கு வீடு. இதுதான் சிற்றில். சிறுவர் சிறுமியர் கட்டிய சிற்றிலைச் சிதைப்பதும் ஒரு விளையாட்டு. அண்பால் பிள்ளைத்தமிழ் நூல்களில் சிற்றில் சிதையேலே எனச் சிறுமியர் கெஞ்சுவது போல இந்தச் சிற்றில் பருவ விளையாட்டு வரும். சங்ககாலத்தில் இது விளையாடப்பட்ட பாங்கைப் பல பாடல்கள் தெருவிக்கின்றன. பு. இரா. புருடோத்தமர் புவனகிரி இராசகோபால் புருடோத்தமர் (1901 நவம்பர் 15 - 1976 சூன் 28) என்னும் பு. ரா. புருஷோத்தம நாயுடு வைணவக் குடும்பத்தில் பிறந்து, ஒருங்கே தமிழ்த் தொண்டும் வைணவத் தொண்டும் செய்தவர். வீர வைணவப் பரம்பரையைச் சேர்ந்தவர். இவர் முன்னோர்களுக்கும் பாம்பன் குமரகுருதாச சுவாமிகளுக்கும் நடந்த சித்தாந்தப் போர் அந்த நாள் தத்துவ உலகில் புகழ்பெற்ற நிகழ்வு ஆகும். புருடோத்தமர் புவனகிரியில் வாழ்ந்த இராசகோபால் – ஆண்டாளம்மாள் இணையருக்கு 1901 - நவம்பர் - 15ஆம் நாள் மூன்றாவது மகனாகவும் நான்காவது மகவாகவும் பிறந்தார். இவருக்கு அண்ணன்கள் இருவர், அக்காள் ஒருவர், தம்பியர் இருவர், தங்கையர் இருவர் என ஏழு உடன்பிறந்தோர்கள் இருந்தனர். திருவரங்கத்தில் இருந்து சிதம்பரத்திற்கு மாற்றப்பட்ட ஸ்ரீ இராமானுஜ தர்சன வித்தியாசாலையின் கிளை அமைப்பான வரவர முனி பாடசாலையிலும் மற்றொரு பாடசாலையிலும் புருடோத்தமர் பள்ளிக் கல்வி பெற்றார். மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் அ. நாராயண ஐயங்கார், சேற்றூர் கவிராயர் ஆகியோரைப் போன்ற பெரும்புலவர்களிடம் தமிழ் கற்று வித்துவான் பட்டம் பெற்றார். புருடோத்தமர் தன் பெரிய தந்தையும் வைணவ அறிஞரும் அழகிய மணவாள இராமானுஜ ஏகாங்கி ஸ்வாமிகளிடம் வைணவத்தின் அடிப்படை நூல்களை எல்லாம் கற்றுத் தேர்ந்தார். வித்துவான் பு. இரா. புருடோத்தமர் பல்வேறு உயர்நிலைப் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். சிதம்பரத்தில் அமைந்த பள்ளி ஒன்றில் இவர் தமிழாசிரியராகப் பணியாற்றிய பொழுது சிதம்பரத்தை அடுத்த அண்ணாமலை நகரில் அமைந்திருந்த மீனாட்சி தமிழ்க் கல்லூரியில் உ. வே. சாமிநாதையர் முதல்வராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரின் அழைப்பை ஏற்று புருடோத்தமர் அக்கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியை ஏற்றார். 1935 ஆம் ஆண்டில் திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியை ஏற்றார். 1948 ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழாராய்ச்சித் துறையில் விரிவுரையாளராகப் பணியேற்றார். 1961ஆம் ஆண்டில் அப்பணியிலிருந்து ஓய்வுபெற்றார். பின்னர் பல்கலைக்கழக நல்கைக் குழுவின் மானியம் பெற்று நான்காண்டுகள் ஆய்வுப்பணியில் ஈடுபட்டார். புருடோத்தமர், மணிப்பிரளவ நடையில் இருந்த வைணவ விளக்கங்களை (வியாக்யானங்கள்) தமிழ்படுத்தி வெளியிட்டார். அவை வருமாறு: புருடோத்தமர் பணியிலிருத்து ஓய்வுபெற்ற பின்னர், தன் மனைவி, மகள்கள் மூவர், மகன்கள் இருவர் ஆகியோருடன், கடலூரில் வாழ்ந்தார். தனது 75ஆவது அகவையில் 1976 சூன் 28 ஆம் நாள் காலமானார். பு. இரா. புருடோத்தமரின் வாழ்க்கை வரலாற்றை அவர் மாணவர் ஆர். ஆள்வந்தார் என்பவர் புருஷோத்தம நாயுடுவின் தமிழ் - வைணவத் தொண்டு என்னும் நூலில் பதிவுசெய்திருக்கிறார். பெரிய கப்பற் பறவை பெரிய கப்பற் பறவை ("Great Frigatebird", ""Fregata minor"") என்பது கப்பற்பறவை குடும்பத்தைச் சேர்ந்த ஓர் கடற்பறவையாகும். கலாபகசுத் தீவுகள் உட்பட்ட பசுபிக், இந்தியப் பெருங்கடல் மற்றும் தென் அத்திலாந்திக் பகுதிகளில் இவை கூடுகட்டும்.பெரிய கப்பற் பறவை 105 செ.மீ. நீளமுடைய பெரிய கூடுகளைக் கட்டும். கன்னியாகுமரி திவ்ய தேசங்கள் கன்னியாகுமரி மாவட்ட திவ்ய தேசங்கள் கன்னியாகுமரியில் உள்ள ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடல்) செய்யப்பட்ட வைணவத் திருத்தலங்கள். திருப்பதிசாரம்;.கன்னியாகுமாரி மாவட்டம் ,தோவாளை வட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு சிற்றூர். நாகர்கோவிலிலிருந்து ஆரல்வாய் மொழிக்குச் செல்லும் முக்கிய சாலையில் சற்று ஒதுங்கி ,5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 108 திவ்ய தலங்களில் இதுவும் ஒன்று. மூலவர் திருவாழிமார்பன் ஆவார். கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த வைணவமா முனிவர் நம்மாழ்வார் இத்திருத் தலத்தில் பிறந்த்தால், இவ்விடம் பெரும் புகழ்பெற்றது.’வான்பரிசாரத்து இருந்த என் திருவாழ்மார்பர்’. வைணவ நூல்களில் இவ்வூர் திருவாம்பரிசாரம்’ என்றே குறிக்கப்படுகிறது. திரு என்கிற இலக்குமியை மார்பில் கொண்டுள்ளதால் இங்கு தாயாருக்கு தனி சந்நிதி இல்லை. ஊர்மக்களின் முக்கிய தொழில் பயிர்தொழிலேயாகும். வயலும் தென்னந்தோப்புகளும் அதிகம் காணப்படும். திருவட்டாறு ;கன்னியாகுமாரி மாவட்டம் கல்குளம் வட்டத்தில் திருவட்டாறு அமைந்துள்ளது.இவ்வூர் நாகர்கோவிலிலிருந்து 23 கி.மீ. தொலைவிலுள்ளது.குழித்துறை அருகிலுள்ள்ள ரயில் நிலையமாகும். பறளியாறு, திருவட்டாற்றினை மூன்று பக்கமாக சுற்றி வருவதால் திருவட்டாறு என பெயர்பெற்றது.அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் தலத்தின் மூலவராவார்.நிலமடந்தையும் திருமடந்தையும் தேவியராவர். புனித நீர்- வாட்டாறு இராமதீர்த்தம் , தலமரம்-செண்பக மரம். அருமையான கோவில்.புரட்டாசி மாதம் 3 முதல் 9 ஆம் நாள்வரையிலும் பங்குனி மாதம் 3 முதல் 9 நாள் வரையிலும் சூரியன் மறையுமுன் கருவறை நோக்கி தன் கதிர்களைப் பரப்பி அஞ்சலிப்பது சிறப்பாகும். நம்மாழ்வரால் பாடப்பெற்ற திருத்தலமாகும்.சைதன்யமகா பிரபு இத்தலத்திலிருந்து பிரம்மசம்கிதைக்கு உரை எழுதினார். இன்னொரு சிறப்பு இவ்விடத்தினைச் சுற்றி 12 சிறப்புமிக்க சிவாலயங்கள் உள்ளன. தூய்மையாகப் பராமரிக்கப்படும் இக் கோவிலில் அநேக சிற்ப வேலைப்பாடுகள் உள்ளன. வயல்களும் சோலைகளும் அழகு சேர்கின்றன. ஆடி, தை இரு மாதங்களில் 108 பதார்தங்களுடன் பூசை செய்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. தங்கும் வசதிகளும் உள்ளது. வைணவர்களின் 108 திவ்யதேசங்களில் இரு தேசங்கள் இம்மாவட்டத்திலுள்ளன. பயோனிர் குமாரசாமி பயோனிர் குமாரசாமி (12-8-1887_18-8-1960) கன்னியாகுமாரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவிலின் வடக்குபகுதியில் அமைந்துள்ள வடசேரி பகுதியில் ஏழை நெசவாளர் குடும்பத்தில் பிறந்தார்.ஏழ்மை காரணமாக அவரால் நான்காம் வகுப்புவரை மட்டுமே பள்ளியில் படிக்க முடிந்தது. சிறுகடைகளில் பணிசெய்தார்கள்.சென்னையில் வாழ்க்கை_ அந்த இளம் வயதிலேயே தாயாரின் ஆசியுடன் சென்னை சென்று, பல இன்னலுக்கிடையே ,சென்னை பல்கலைக் கழகத் தழிழ் பேரறிஞர் கே.என். சிவராஜபிள்ளை அவர்களின் துணையுடன் அடிசன் போக்குவரத்து நிறுவனத்தில் கம்மியராக சேர்ந்து வாகனவியலில் தேர்ச்சி பெற்றார்.அவர் பேருந்து ஓட்டுனர் உரிமமும் பெற்றார். நான்கு ஆண்டுகளுக்குப் பின் நாகர்கோவில் திரும்பி அங்கு தனியார் நிறுவனம் ஒன்றில் சிலகாலம் ஓட்டுநராக பணியில் இருந்தார். அப்போது மதுக்கடை ஒன்றினை தொடங்கினார். கடின உழைப்பு- சிறுகச்சிறுக பொருள் சேர்த்து ஒரு பேருந்தை வாங்கினார்.அதனை நாகர்கோவில்- திருவனந்தபுரம் வழித்தடத்தில் அவரே ஓட்டுநராக இருந்து நடத்தினார். பல பேருந்துகளை வாங்கி தன் நிறுவனத்தை விரிவு படுத்தி அதற்கு பயோனிர் மோட்டார் சர்வீசு என பெயரிட்டார். அன்று முதல் அவர் பயோனிர் குமாரசாமி என அழைக்கப் பட்டார். அந்நிறுவனம் பெரியதாக வளர்ந்தது. அவரது திறமை யும் வெளிப்பட்டது.இல்லறம் தக்க வயதில் நாகம்மையார் எனும் மங்கை நல்லாளை தன் வாழ்க்கை துணையாக ஏற்று நான்கு பெண் மக்களைப் பெற்றார். அவரது நிறுவனம் இரயில் போக்குவரத்திற்கு பயணச்சீட்டு வழங்கும் உரிம்ம் பெற்று இருந்த்து. தபால் போக்கு வரத்திற்கும் உதவுவதாக திகழ்ந்த்து.விடாமுய்றசி - 1929-ல் மலைத் தோட்டங்களை வாங்கி, காடுகளை வளம் கொழிக்கும் நிலங்களாக மாற்றினார். இரப்பர், பழவகைகள்,மரவள்ளிக் கிழங்கு,என பயிரிட்டு வளர்ந்தார்.சில இடங்களில் அரிசி ஆலைகளை நிறுவினார்.தரமான ஓடுகளை தந்தார்.1942-ல் இராஜகமங்கலத்தில் உப்பளம் அமைத்தார்.நாகர்கோவிலில் முதன்முதலாக சினிமா திரைஅரங்கம ஏற்ப்படுத்தினார். நாகர்கோவில் நகருக்கு முதலில் மின்சாரம் கொண்டு வந்தார்.பயோனிர் பவர் ஹவுஸ் என பெயரிட்டார்.பார்வதிபுரத்தில் அவரது மனைவியின் பெயரில் ஒரு நூர்பாலையினை நிறுவினார்.பல கல்வி நிறுவனங்களுக்கு தாராளமாக நிதி உதவி உள்ளார்.ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து தன் முயற்சியால் இன்றைய இளைய சமூகத்திற்கு ஓர் எடுத்துக் காட்டாக அவர் திகழ்கிறார். அவர்1960 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18 ஆம் நாள் இவ் உலக வாழ்க்கையை நீத்தார்.நாகம்கோவிலில் அரசு உதவிபெறும் பயோனிர் குமாரசாமி கல்லூரி ஒன்றினை அவரது குடும்பத்தினர் நடத்திவருகிறார்கள். பிரசிடென்ட் நாயனார் பிரசிடென்ட் நாயனார் (1889-1954) குமரிமாவட்டத் தலைநகர் நாகர்கோவிலின் வடசேரி பகுதியில் ஆறுமுகப்பெருமாள்-கேசவம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். தமது 14 வயதில் பள்ளிபடிப்பை சிறப்பாக முடித்து, திருவனந்தபுரத்தில் கல்லூரிப் படிப்பினைத் தொடர்ந்தார்கள். பட்டப் படிப்பினை முடித்து பின் சட்டப் படிப்பினையும் முடித்தார். அப்போதைய திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்தில் உயர்பதவியில் அமர்ந்தார். நூலகங்களை நன்கு பயன்படுத்தி தன் அறிவுத் திறனை வளர்த்துக் கொண்டார். இந்த காலத்தில் அவருக்குத் திருமணம் நடந்தது.அவரது மணவாழ்க்கை சிறிது காலமே. துணை இழந்த அவர் தமது பதவியை விடுத்து நாகர்கோவிலுக்கே வந்து மறுமணம் செய்து கொள்ளா மலே பொது வாழ்வில் தம்மை அர்பணித்துக் கொண்டார். அவர் பிறந்த வடசேரிப் பகுதியில் தொடக்கப்பள்ளிகூடம் இல்லாத நிலை.பள்ளிக்கூடம் அமைக்க ஒருகுழு அமைக்கப்பட்டது. அதற்கு தலைவராக இருந்து,பல எதிர்ப்புகளுக்கிடையே இன்று சிறப்பாக நடைபெறும் எஸ்.எம்.ஆர். வி.மேல்நிலைப் பள்ளி உருவாக பெரிதும் காரணமாக இருந்தார். இப்பள்ளி 1919 ல் தொடங்கப்பட்டது முதல் 1943 வரை அதன் மேலாளராக இருந்து அதன் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவினார். அவர் பெயரில் பெரிய நினைவுக் கட்டிடம் ஒன்று எழுப்ப பட்டுள்ளது. வளர்ந்து வரும் நாகர்கோவில் பகுதியினை சிறப்பாக நடத்த அரசு நகர மேம்ம்பாட்டுக் குழுவினை ஏற்படுத்தியது.அதன் தலைவராக நீதிபதி திரு.சிவசங்கரன் பிள்ளையும் துணைத் தலைவராக திரு.நாயனார் அவர்களும் அரசால் நியமிக்கப் பட்டார்கள். தலைவர் மாற்றலாகி செல்லவே நாயனார் அவர்களே பொறுப்பினை ஏற்றார். 1920-ல் நகரசபையாக ஆனது .நடைபெற்ற தேர்தலில் போட்டி இன்றி தலைவரானார்.அவரது பணியினைக் கண்ட மக்கள் மூன்றுமுறை அவரை தலைவராக தேர்ந்து எடுத்தனர். அப்போது தலைவர் பதவி பிரசிடென்ட் என்று அறியப்பட்டது.அதுமுதல் பிரசிடென்று நாயனார் என்றே அறியப்படலானார். அவரது பணிகாலத்தில் பல துறைகளிலும் முன்னேற்றம் கண்டது.வடசேரி பகுதியில் குழந்தைகள் நல மையத்தினை ஏற்படுத்தினார்கள். சாலைகளிலும் வீதிகளிலும் தெருவிளக்கு அமைத்தார்கள். நகரைச் சுத்தமாக வைக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். பலசமயங்களிலும் தன் கைப்பொருளை செலவிட்டார். அனைத்து இன மக்களிடமும் நல்லுறவு நிலவியது. கவிமணி தேசியவிநாயகம்பிள்ளை அவரது நண்பராவார். தனது விடாமுயற்சியால் பொதுமக்களின் ஒத்துளைப்புடன் அவருக்கு வடசேரிப்பகுதியில் ஒரு மணிமண்டபம் அமைத்தார்கள். இன்று அது மாவட்ட மைய நூலகமாக சிறப்பாக செயல் படுகிறது. கல்விப் பணிக்காகவும் பொது நலனுக்காகவும் தன் வாழ்க்கையை ஒப்படைத்தவர். ஓசையில்லாமல் பணியாற்றிய அவரை இன்று பலர்அறியமாட்டார்கள். ஆதாரம் வெள்ளிவிழா மலர்-சாலியர் மகாஜன சங்கம், நாகர்கோவில் 1999 அவரை நேரில் அறிந்தவர்கள் மூலம். பெரியவர் முத்துசாமி பெரியவர் முத்துசாமி- எழில் கொஞ்சும் நாஞ்சில் நாட்டின் தலைநகர் நாகர்கோவிலின் வடசேரிப் பகுதியில் சுப்பிரமணியன்-பொன்னம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்..இளமையில் வடசேரி அரசுத் தொடக்கப்பள்ளியிலும்,கோட்டார் அரசு உயர்நிலைப் பள்ளியிலும் நாகர்கோவில் இசுகாட் கிருத்துவக் கல்லூரியிலும் அதன்பின் மதுரை அமேரிக்கன் கல்லூரியும் படிப்பைத் தொடர்ந்தார்கள்.படிப்பை முடித்ததும் புதிதாகத் தொடங்கப்பட்ட எஸ.எம். ஆர் வி.பள்ளியில் ஆசிரியப் பணியினைத் தொடங்கினார். வள்ளியம்மையை கரம்பற்றி இல்லறம் தொடங்கினார். கணவரின் பாங்கறிந்து ஒழுகும் அவர்,கணவருக்கு அனைத்து வகையிலும் உதவினார்.அவர்களுக்கு 5 ஆண் ,4 பெண் மக்கள். பெரிய குடும்பப் பொறுப்புடன் சமூகப் பொறுப்பையும் ஏற்றார் முத்துசாமி. திருவிதாங்கூர் மாநிலக் கைத்தறிஆலோசனைக் குழுத் தலைவர், தி. மா. நூல்-ஜவுளி வியாபாரிகள் சங்கத் தலைவர், நாகர்கோவில் நூல் வியாபாரிகள் சங்க செயலர் ,நாகர்கோவில் நகர் மன்ற உறுப்பினர், பகுதி கைத்தறி நெசவாளர் கூட்டுறவுசங்கத் தலைவர், வடசேரி கூட்டுறவுச் வங்கி நிறுவனர், மேலாளர், எஸ. எம் ஆர் வி . பள்ளி என பலபல பொறுப்புகளை ஏற்று மிகத்திறம்பட செயல் பட்டார். வடசேரிப் பகுதியில் தனித்தனியாகப் பிரிந்து இருந்த சாலியர் சமூக மக்களை ஒற்றுமையுடன் இணைத்தார்.அவர்கள் அனைவரும் வாழ்வில் முன்னேற பல உதவிகளைச் செய்தார். இதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் அவருக்குக் கிடைத்தது.அவரது பெரும் பணியினை பாராட்டி பொன்னாடைப் போர்த்தி பொற்கிழி அளித்து 4-9-1981 விழா எடுத்தனர் மக்கள்.இவரது சீரிய முயற்சியால் எஸ. எம். ஆர். வி. பள்ளியில் பிரசிடென்ட் நாயனார் நினைவு கட்டிடம் எழுந்த்து. தனது தள்ளாத வயதிலும் சமுதாயத்திற்காக உழைத்தார். அவர் 2-2-1988 இயற்கை எய்தினார். மனோகர் பாரிக்கர் மனோகர் கோபாலக்கிருஷ்ண பிரபு பாரிக்கர் ("Manohar Parrikar", திசம்பர் 13, 1955 - மார்ச் 17, 2019) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கோவா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஆவார். இவர் 2000 ஆம் ஆண்டு முதல் 2005 வரையிலும், பின்னர் 2012 முதல் 2014 வரையிலும், 2017 முதல் 2019 வரை கோவா மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார். 2017 கோவா சட்டமன்றத் தேர்தலில் குறைந்த தொகுதிகளில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சி, மனோகர் பாரிக்கர் தலைமையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் கோவாவில் ஆட்சி அமைத்தார். பாரிக்கர் கோவா மாநிலத்தின் மப்பூசாவில் பிறந்தவர். இவர் மார்கோவாவில் உள்ள லயோலா உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். மராத்தியில் தனது இடைநிலை கல்வியை நிறைவு செய்தவர். 1978இல் பம்பாயிலுள்ள ஐஐடி யில் உலோகவியலில் பொறியியல் படித்தார். இந்திய வரலாற்றிலேயே "ஐஐடி"யில் படித்த முதல் மாநில முதல்வர் ஆவார். மனோகர் பாரிக்கரும், நந்தன் நிலெக்கணியும் 1978 ஆம் ஆண்டில் ஐஐடியில் இருந்து ஒன்றாக பட்டம் பெற்றவர்கள். பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினரான பாரிக்கர் அக்கட்சியின் முதல் கோவா முதல்வர் ஆவார். பாரிக்கர் முதலில் 1994 ஆம் ஆண்டு கோவா மாநிலத்தின் இரண்டாவது சட்டமன்றத்தில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் ஜூன் 1999 முதல் நவம்பர் 1999 வரை எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தார். பாரிக்கர் அக்டோபர் 24, 2000 ஆம் ஆண்டில் முதல் முறையாக கோவாவின் முதல்வர் ஆனார். ஆனால் அவரது பதவிக்காலம் பிப்ரவரி 27, 2002 வரை மட்டுமே நீடித்தது. பின்பு ஜூன் 5, 2002இல் இவர் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 29 ஜனவரி 2005இல், நான்கு பா.ஜ.க உறுப்பினர்கள் பதவி விலகியதன் காரணமாக இவரது அரசாங்கம் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது. எனினும் பிப்ரவரி 2005இல் பெரும்பான்மையை நிரூபித்தார். 2007 ஆம் ஆண்டில், பாரிக்கர் தலைமையிலான பா.ஜ.க அரசை, திகம்பர் காமத் தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் கோவா மாநில தேர்தலில் தோற்கடித்தது. மீண்டும் பா.ஜ.க மார்ச் 2012 இல் நடைபெற்ற கோவா சட்டசபை தேர்தலில் 24 இடங்களை வென்று மீண்டும் வெற்றி பெற்றது. 2014 ஆம் ஆண்டின் இந்தியப் பொதுத் தேர்தலில், கோவாவின் இரு மக்களவைத் தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி வெற்றிப்பெற்றது. பாரிக்கர், உத்திரப் பிரதேசத்திலிருந்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் நரேந்திர மோதியின் அமைச்சரவையின் முதல் விரிவாக்கத்தின் போது பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பதவியேற்றார். பின்னர் மார்சு 14, 2017 ஆம் ஆண்டு மீண்டும் கோவா மாநில முதலமைச்சராக மூன்றாவது முறையாக பதவி ஏற்றார். கணையப் புற்றுநோய் பாதிப்பால், சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி மார்ச் 17, 2019 அன்று காலமானார். சா. தர்மராசு சற்குணர் சாமுவேல் தர்மராசு சற்குணர் (1877 மே 25 - 1952 திசம்பர் 23) தமிழ்க் கல்வியைப் பரப்புவதற்காகச் சென்னையில் தென்னிந்தியத் தமிழ்க் கல்விச் சங்கம் அமைத்த முன்னோடி; தமிழர்களுக்குத் தமிழ்மட்டும் போதாது, பல மொழி அறிவும் இருந்தால்தான் தமிழின் சிறப்பைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியும் என்று பல மொழி கற்றுத்தேர்ந்த மேதை. எளிய நடையில் தமிழை எழுதவும் சொல்லிக் கொடுக்கவும் வேண்டும் என்று வலியுறுத்தியவர். சா. தர்மராசு சற்குணர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாசரேத் என்னும் சிற்றூரில் வாழ்ந்த தமிழறிஞர் சாமுவேல் என்பவருக்கு மகனாக 1877 மே 25 ஆம் நாள் பிறந்தார். சற்குணர் தாய்மொழியாகிய தமிழோடு வடமொழி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். சற்குணர் தன்னுடைய பணிவாழ்க்கையை ஆங்கில ஆசிரியராகத் தொடங்கினார். பின்னர் சென்னை கிறித்துவக் கல்லூரியில் தமிழாசிரியராகச் சேர்ந்து, பேராசிரியராக உயர்ந்தார். கல்லூரிப் பணிக்கு அப்பாலும் தொண்டு செய்ய விரும்பிய சற்குணர், அதே எண்ணத்தைக் கொண்டிருந்த அ. கி. பரந்தாமனாருடன் இணைந்து 1925 சனவரி 15 ஆம் நாள் சென்னையில் தென்னியந்தியத் தமிழ்க் கல்விச் சங்கம் என்னும் அமைப்பை நிறுவினார். சற்குணர் தலைவராகவும் அ.கி.பரந்தாமனார் செயலாளராகவும் பணியாற்றினர். அச்சங்கத்தில் சென்னை பல்கலைக்கழக வித்துவான் தேர்விற்கு பயிற்சி அளிக்கப்பட்டது. முழுக்க முழுக்க கற்பிக்கும் பணியிலேயே தன்னை ஈடுபடுத்திக் கொண்டதால், சற்குணர் எழுத்துப் பணியில் அதிகம் ஈடுபடவில்லை. ஆனால் இவர் தம் காலத்தில் சிறந்த ஆராய்ச்சியாளராகத் திகழ்ந்தார். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்க்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். தர்மராசு சற்குணரின் மணிவிழா 1937 ஆம் ஆண்டில் அ.கி.பரந்தாமனார் முயற்சியால் உ. வே. சாமிநாதையர் தலைமையில் சென்னையில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பல தமிழறிஞர்கள் கலந்து கொண்டு அவருடைய பன்முக ஆளுமையை எடுத்துக் கூறினர். சற்குணர் மலரும் சற்குணீயமும் என்ற அரிய சிறப்பு மலரும் அப்போது வெளியிடப்பட்டது. தமிழுக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட சற்குணர் 1952 திசம்பர் 23 ஆம் நாள் இயற்கை எய்தினார். அரங்கசாமி நாயக்கர் அரங்கசாமி நாயக்கர் (1884 பிப்ரவரி 6 – 1943 சனவரி 6) பிரெஞ்சிந்தியா என அழைக்கப்பட்ட இன்றைய புதுச்சேரி மாநிலத்தின் விடுதலைக்காகப் போராடிய வீரர்; தமிழறிஞர். ‘பிரெஞ்சிந்திய காந்தி’ என்று அழைக்கப்பட்டவர். அரங்கசாமி நாயக்கர் 1884 பிப்ரவரி 6 ஆம் நாள் பிறந்தார். அவர் பெற்றோரைப் பற்றி அறிய இயலவில்லை. இவர் புதுச்சேரி மாநிலம் திருநள்ளாறு வட்டத்தில் உள்ள இளையான்குடி என்னும் சிற்றூரில் வாழ்ந்தார். பிரஞ்சு நாட்டிடம் அடிமைப்பட்டிருந்த புதுச்சேரியின் விடுதலைக்காகப் போராடினார். திருநள்ளாறு நகர்மன்றத் தலைவராகப் பணியாற்றினார். சுயமரியாதை இயக்க ஈடுபாட்டால் தனது வீட்டிலேயே தாழ்த்தப்பட்டோருக்கு சமபந்தி உணவளித்தவர். அரங்கசாமி நாயக்கரும் அவர்தம் நண்பர்களும் இணைந்து பிரெஞ்சிந்தியக் குடியரசுப் பத்திரிக்கை என்னும் இதழை வெளியிட்டனர். அதில் விடுதலைப் போராட்டச் செய்திகளும் தமிழ்மொழி பற்றிய கட்டுரைகளும் இடம்பெற்றன. அரங்கசாமியார் அவ்விதழில் தமிழிலக்கணம் பற்றிய பல கட்டுரைகளை எழுதினார். காரைக்கால் வ. பொன்னையா, திருநள்ளாறு தேனூர் பாலசுப்பிரமணியம் என்னும் இருவரும் அக்கட்டுரைகளைத் தொகுத்து குடியரசு தமிழ் ஆரம்ப இலக்கணம் என்னும் நூலாக 1944 பிப்ரவரி 3 ஆம் நாள் வெளியிட்டனர். இவர் 1943 சனவரி 6 ஆம் நாள் காலமானார். அரங்கசாமியாரின் வாழ்க்கை வரலாற்றை அவர் மருமகள் சியாமளா சவுந்திரசாமி நான்கு ஆண்டுகள் உழைத்து, பிரெஞ்ச் இந்திய காந்தி அரங்கசாமி நாயக்கர் என்னும் நூலாக எழுதி உள்ளார். இனப்பாகுபாட்டுக் குற்றம் இனப்பாகுபாட்டுக் குற்றம் என்பது, "ஆட்சி அதிகாரத்தைப் பேணிக்கொள்ளும் நோக்குடன், ஒரு இனக் குழுவினரால், பிற இனக் குழுவிற்கு அல்லது இனக் குழுக்களுக்கு எதிராகத் திட்டமிட்டு நடத்தப்படும் அடக்குமுறை, மேலாதிக்கம் என்பவை சார்ந்த நிறுவனமயப்படுத்திய ஆட்சிச் சூழலில் இழைக்கப்படும்", மனித குலத்துக்கு எதிரான பிற குற்றங்களை ஒத்த மனிதாபிமானம் அற்ற செயல்கள் என 2002 ஆம் ஆண்டின் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் உரோம் சட்டம் வரைவிலக்கணம் கூறுகிறது. இது பொதுவாக 1948 ஆம் ஆண்டுக்குப் பின் தென்னாப்பிரிக்காவில் நிலவிய இனப்பாகுபாடு சார்ந்தது. இந்த இனப்பாகுபாட்டு முறைமை குறித்த குற்றச் சாட்டுகள் 1948 ஆம் ஆண்டு யூலை 12 ஆம் தேதியே ஐக்கிய நாடுகளின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. தென்னாப்பிரிக்க ஒன்றியத்தில் இந்திய இனத்தவர் நடத்தப்படும் முறை குறித்துக் கவலை தெரிவித்து ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலருக்கு எழுதிய கடிதம் ஒன்றை அப்போதைய இந்தியப் பேராளர் முனைவர். பத்மநாபபிள்ளை வெளியிட்டார். இந்த நீதியற்றதும் இனவாதம் சார்ந்ததுமான இந்த முறைமைக்குப் பன்னாட்டு அளவில் கண்டனங்கள் எழுந்ததுடன், தென்னாப்பிரிக்க அரசின் மீது அழுத்தங்களைக் கொண்டுவருவதற்கு, முறையான சட்டக் கட்டமைப்பு ஒன்று அவசியம் எனப் பலரும் வலியுறுத்தினர். 1971 ஆம் ஆண்டில், இனப்பாகுபாட்டை ஒடுக்குவதற்கும், அதற்குத் தண்டனை அளிப்பதற்குமான ஒழுக்காற்று வரைவு ஒன்றை சோவியத் ஒன்றியமும், கினியாவும் கூட்டாகச் சமர்ப்பித்தன. 1973 ஆம் ஆண்டில் இனப்பாகுபாட்டுக் குற்றத்தை அடக்குவதற்கும் தண்டனை அளிப்பதற்குமான பன்னாட்டு மரபொழுங்குக்கான உரையை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஏற்றுக்கொண்டது. இதற்கு 31 நாடுகள் கையொப்பம் இட்டதுடன், 107 நாடுகள் பங்காளர்களாகவும் இருந்தனர். இவ்வாறாக, இனப்பாகுபாடு மனிதகுலத்துக்கு எதிரான குற்றம் என ஏற்றுக்கொண்டபோது அதன் செயற்பாட்டு எல்லை தென்னாப்பிரிக்காவையும் தாண்டி விரிந்ததாக இருந்தது. பொதுவாக இனப்பாகுபாட்டுக் குற்றம் என்னும் தொடர் தென்னாப்பிரிக்காவுடன் தொடர்புடையதாக எண்ணப்பட்டபோதும், இத்தொடர் எந்த நாட்டிலும் இருக்கக்கூடிய இனப்பாகுபாட்டுக் கொள்கைகளைக் குறிக்கும் பின்னர் மேலும் எழுபத்தாறு நாடுகள் இந்த மரபொழுங்குக்கு ஆதரவாகக் கையொப்பம் இட்டன. ஆனாலும் பல நாடுகள் இதில் கையொப்பம் இடவோ அதனை ஏற்றுக்கொள்ளவோ இல்லை. கனடா, பிரான்சு, செருமனி, இசுரேல், இத்தாலி, நெதர்லாந்து, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா என்பவை கையொப்பம் இடாத நாடுகளுள் அடங்குவன. தாம் இதற்கு எதிராக வாக்களித்தது குறித்து விளக்கம் அளித்த ஐக்கிய அமெரிக்கப் பிரதிநிதியான இளைய கிளரென்சு கிளைய்ட் பெர்கூசன், இந்த முறையில் இனப்பாகுபாடு மனித குலத்துக்கு எதிரான ஒரு குற்றமாக்கப்படலாம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மோசமானவை, அதனால் மிகக் கவனமாக அவை விவரிக்கப்படுவதுடன், ஏற்கெனவே இருக்கும் அனைத்துலகச் சட்டங்களின் அடிப்படையில் பொருள் கொள்ளப்பட வேண்டியன என்றும் கூறினார் அகவூர் நாராயணன் அகவூர் நாராயணன் என்பவர் பிரபலமான மலையாள எழுத்தாளர் ஆவார். இவர் அகவூரில் 1929 ஆம் ஆண்டு பிறந்தவர். இளமைக் காலத்தில் வேதமும், சமசுகிருதமும் கற்றார். ஆலுவ யுசி கல்லூரியிலும், பின்னர் திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் வேதியியலும் பயின்றார். பின்னர், மலையாள எழுத்துலகில் பிரபலமாகினார். ஓ. அப்துர் ரகுமான் ஓ. அப்துர் ரகுமான் என்பவர் ஓர் மலையாள எழுத்தாளரும் இதழாளரும் ஆவார். இவர் மத்தியமம் என்ற மலையாள இதழின் முதன்மை ஆசிரியராகப் பணிபுரிகிறார். இசுலாம் சமயம் தொடர்பான நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார். இசுலாமியர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் தொடர்பாக கேரள அரசு இவரிடம் ஆலோசிக்கிறது. சிறுபாடு விளையாட்டுகள் ஓடியும், ஆடியும், பாடியும் விளையாடும் ஆட்டங்களை விளையாட்டு என்றும், ஓடியாடாமல் உட்கார்ந்துகொண்டு விளையாடும் ஆட்டங்களைச் சிறுபாடு என்றும் தமிழர் பாகுபடுத்திக் கொண்டிருந்தனர். அவர்கள் கருத்துப்படி வங்கம் போலக் கோடு வரையப்பட்ட ஆடுபுலி ஆட்ட விளையாட்டு சிறுபாடு விளையாட்டு. அரங்கில் வட்டுநா விளையாட்டு விளையாட்டு. சிறுபாடு விளையாட்டில் சலிப்பு தோன்றியபோது ஓடியாடும் விளையாட்டில் ஈடுபடுவார்களாம். ஆய் ஆய் என்பது ஆயர் குல மன்னர்களையும் மற்றும் அவர்கள் ஆண்ட நாட்டையும் குறிக்கும் பெயர். கி.பி 866 ஆம் ஆண்டு ஆய்குல அரசன் ஸ்ரீவல்லபனின் பார்த்திவசேகரபுரச் சாசனம் மற்றும் பாலியத்துச் சாசனம் ஆகியவற்றின் வடமொழி பகுதியில் இவர்கள் சந்திர வம்ச யாதவ மரபினர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளனர். ஆயர் ஆயர் என்னும் பெயரில் உள்ள கட்டுரைகள். சமயத் துன்புறுத்தல் சமயத் துன்புறுத்தல் என்பது ஒரு குழுவால் தனி நபர் அல்லது குழு மீது அவர்களின் நம்பிக்கை அல்லது சமய நம்பிக்கை இன்மைக்காக மேற்கொள்ளப்படும் ஒழுங்குபடுத்தப்பட்ட மோசமாக நடந்து கொள்ளும் ஓர் செயற்பாடாகும். சமயத் துன்புறுத்தல் மதவெறியால் அல்லது அரசினால் தன் பாதுகாப்பு அல்லது விருப்பத்திற்கு எதிராக குறித்த சமயக் குழுவைக் கருதும்போது ஏற்படலாம். பல நாடுகளில் சமயத் துன்புறுத்தல் பெரும் வன்முறையினைத் தோற்றுவித்து மனித உரிமை பிரச்சனையாக கருதப்பட்டுள்ளது. சமயத் துன்புறுத்தல் சமயச் சுதந்திரத்திற்கு எதிரிடையானதாகக் கருதப்படலாம். சமயத் துன்புறுத்தல் இறைமறுப்பாளர்களைக் கூட, அவர்கள் கடவுளைக் கொண்டிராதவர்கள் என்பதற்காக சமய நம்பிக்கையாளர்களால் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இது பொதுவாக ஒரு குழுவினுள் தங்கள் சமய நம்பிக்கையை நிலை நிறுத்த முயற்சித்ததற்காக குற்றஞ் சாட்டப்பட்டு துன்புறுத்தப்படலாம். அல்லது தனி அல்லது நிறுவன வல்லமை ஓர் குறித்த சமயக் குழு அங்கத்தவர்களை துன்பத்திற்குள்ளாக்கலாம். துன்புறுத்தல் சொத்துக்களை அழித்தல், வெறுப்பிற்குத் தூண்டி விடுதல், கைது, சிறை வைத்தல், அடித்தல், சித்திரவதை, மரண தண்ணடனை ஆகிய வடிவங்களில் நிகழலாம். சமயத்தின் அடிப்படை மீதான சிவில் உரிமை மறுப்பு சமயத் துன்புறுத்தல் என்பதைவிட சமயப் பாரபட்சம் என விபரிக்கப்படுகின்றது. பொ. வே. சோமசுந்தரனார் பொ. வே. சோமசுந்தரனார் (1909 செப்டம்பர் 5 – 1972 சனவரி 3) தற்கால உரையாசிரியர்; நாடகாசிரியர். வாழ்க்கை வரலாற்று ஆசிரியர். மேலப்பெருமழை என்னும் ஊரில் பிறந்ததால் பெருமழைப் புலவர் என அழைக்கப்பட்டார். பொ. வே. சோமசுந்தரனார் 1909 செப்டம்பர் 5 ஆம் நாள் திருவாரூர் மாவட்டம் மேலப்பெருமழை என்னும் சிற்றூரில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தார். சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையில் விபுலானந்த அடிகள், பண்டிதமணி கதிரேசச் செட்டியார், சோமசுந்தர பாரதியார் ஆகியோரிடம் தமிழ் பயின்றார். அதனால் ஆழ்ந்த தமிழ்ப்புலமை பெற்றார். பொ. வே. சோமசுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற்றிருப்பினும் தான் பிறந்த சிற்றூரிலேயே வேளாண்மைத் தொழிலை மேற்கொண்டார். சோமசுந்தரனாரின் மகன்கள் பசுபதி மற்றும் மாரிமுத்து ஆவர். இவர்கள் இருவரும் தத்தம் குடும்பத்தினருடன் மேலப்பெருமழை கிராமத்தில் வசித்து வருகின்றனர். பொ. வே. மோ. பழந்தமிழ் இலக்கிய, இலக்கணங்களுக்கு உரை, நாடகம், வாழ்க்கை வரலாறு என 24 நூல்களைப் படைத்துள்ளார். அவை வருமாறு:, சோமசுந்தரனார் 1972 சனவரி 3 ஆம் நாள் காலமானார். சமயக் கட்டுமீறல் சமயக் கட்டுமீறல் அல்லது சமயத் துஷ்பிரயோகம் என்பது சமயத்தின் பெயரால் அதனால் நடத்தப்படும் கட்டுமீறல் அல்லது தவறான செயற்பாடு ஆகும். இது உள ரீதியான உளக்காயம், தொந்தரவு, அவமதிப்பு ஆகியனவாக அமையலாம். இது சுயதேவைக்காக சமயத்தை தவறாகப் பாவித்தல், மதச் சார்பின்மை, சமயக் குரு நிலையிலிருந்து குற்றமிக்க கட்டுமீறலை மேற்கொள்ளல், கத்தோலிக்க பாலியல் கட்டுமீறல் வழக்குப் போன்று அமையலாம். நக்ன கபாலிக விரதம் நக்ன கபாலிக விரதம் அல்லது காபாலிக விரதம் என்பது இறைவனான ருத்திரனுக்காக பக்தர்கள் கடைபிடிக்கும் மூன்று வகையான விரத முறைகளுள் ஒன்றாகும். இவையன்றி "பாப்ரவ்யவிரதம்", "சுத்த சைவ விரதம்" என்பன மற்ற இரு விரதங்கள். நக்னம் என்பதற்கு நிர்வாணம் என்ற பொருளுண்டு. பிரம்மாவின் தலையை கொய்ததால் ஏற்பட்ட பிரம்மஹஸ்தி தோசம் நீங்க ருத்திரன் சிவபெருமானை நோக்கி இருந்த விரத முறையாக இது கருதப்படுகிறது. இந்த விரதமுறையைப் பற்றிய செய்திகள் மகாபுராணங்களில் ஒன்றான வராக புராணத்தில் உள்ளன. வராக புராணம் பாலூர் து. கண்ணப்பர் பாலூர் துரைச்சாமி கண்ணப்பர் (1908 திசம்பர் 14 – 1971 மார்ச் 29) என்னும் பாலூர் கண்ணப்ப முதலியார் தமிழ்ப் பேராசிரியர்; எழுத்தாளர்; உரையாசிரியர். கண்ணப்பர், செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள பாலூரில் 1908 திசம்பர் 14 ஆம் நாள் துரைச்சாமி – மாணிக்கம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். கண்ணப்பர் பள்ளிக் கல்வியைக் கற்ற பின்னர், டி. என். சேசாசலம் என்பவரிடம் ஆங்கிலமும் மே. வீ. வேணுகோபாலனார், கோ. வடிவேலர், சூளை வைத்தியலிங்கனார் ஆகிய தமிழறிஞர்களிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களையும் கற்று வித்துவான் பட்டம் பெற்றார். 1956 ஆம் ஆண்டில் கீழ்த்திசை மொழியியல் இளவர் (பி.ஓ.எல்) பட்டமும் 1964 ஆம் ஆண்டில் கலை முதுவர் (எம். ஏ.) பட்டமும் பெற்றார். கண்ணப்பர், தெய்வானையம்மை என்பவரை மணந்து ஏழு பெண்மக்களைப் பெற்றார். தமிழ்க் கல்வியை முடித்த கண்ணப்பர் தமிழாசிரியப் பயிற்சி பெற்று சென்னை புரசைவாக்கத்தில் உள்ள லூதரன் மிசன் உயர்நிலைப் பள்ளியில், 1926 சூன் முதல் 1934 மே வரை, எட்டாண்டுகளும் முத்தியால்பேட்டை உயர்நிலைப் பள்ளியில், 1934 சூன் முதல் 1938 மே வரை, நான்காண்டுகளும் திருவல்லிக்கேணி கெல்லட் உயர்நிலைப் பள்ளியில், 1938 சூன் முதல் 1952 மே வரை, பதினான்கு ஆண்டுகளும் தமிழாசிரியராகப் பணியாற்றினார். பின்னர் சென்னை இராயப்பேட்டையில் அமைந்துள்ள புதுக்கல்லூரியில் 1952 சூன் திங்கள் தமிழ் துணை விரிவுரையாளராகப் பணியேற்றார். 1954ஆம் ஆண்டில் தமிழ் விரிவுரையாளராகவும் 1955ஆம் ஆண்டில் தமிழ்ப் பேராசிரியராகவும் தமிழ்த் துறைத் தலைவராகவும் பதவி உயர்வுபெற்றார். பதினாறாண்டுகள் அக்கல்லூரியில் பணியாற்றி 1968 சூன் திங்கள் ஓய்வுபெற்றார். கண்ணப்பர் பள்ளி, கல்லூரி வளாகங்களுக்கு அப்பாலும் தமிழ்ப் பணியாற்ற விரும்பி சென்னை சைவ சித்தாந்த சமாஜம், சென்னை எழுத்தாளர் சங்கம், செங்கை மாவட்ட எழுத்தாளர் சங்கம் ஆகியவற்றில் உறுப்பினராகி உழைத்தார். சென்னை பல்கலைக்கழக பாடத் திட்டக்குழுவில் இடம்பெற்று பணியாற்றினார். கண்ணப்பர் தமிழ்மொழியை மாணவர்களுக்கு கற்பிப்பதோடு நின்றுவிடாமல், பின்வரும் நூல்களை எழுதினார். கண்ணப்பர் செய்த தமிழ்த் தொண்டினையும் சைவத் தொண்டினையும் பாராட்டி செந்தமிழ்ச் செல்வர், சைவ சமய சிரோமணி என்னும் பட்டங்கள் வழங்கப்பட்டன. சென்னைப் பல்கலைக் கழகத்தில் அப்பரடிகள் திருமுறை பற்றிய ஆராய்ச்சிப்பணியில் ஈடுபட்டிருந்த கண்ணப்பர், அப்பணி நிறைவுறும் முன்னரே 1971 மார்ச்சு 29 ஆம் நாள் இயற்கை எய்தினார். பகாசுரன் பகாசுரன் மகாபாரதத்தின் உப கதை ஒன்றின் நாயகன். ஏகசக்கரம் என்ற கிராமத்தை அடுத்த காட்டில் வசித்து வந்த அரக்கன். குந்தியும், பாண்டவர்களும் தங்கியிருந்த அரக்கு மாளிகை எரிந்த பிறகு தப்பிப் பழைத்து ஏகசக்கரம் என்ற கிராமத்தில் பிராமணர்கள் போல் வேடமிட்டு வசித்து வந்த போது பாண்டவர்களில் பலவானான பீமனால் கொல்லப்பட்டான். ஏகசக்கரம் என்ற கிராமத்தை அடுத்த காட்டில் வசித்து வந்த அரக்கன் பகாசுரன், அவனுக்கு பசி எடுக்கும் போது ஏகசக்கரம் கிராமத்தில் நுழைந்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் அடித்து நொறுக்கி,சாப்பிட்டு வந்தான்.இவனது அட்டகாசத்தைக் குறைப்பதற்காக அவனுடன் கிராமத்தினர் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர், அதன் படி மாதம் இரு முறை அவனுக்கு ஒரு வண்டி நிறைய உணவை அனுப்பி வைப்பார்கள். வண்டி உணவு முழுவதும் சாப்பிட்டுவிட்டு, மாடுகளையும், வண்டி ஓட்டியையும் சாப்பிட்டு விடுவான். ஒவ்வொரு குடும்பமும் அவனுடையத் தேவைக்காக பதினைந்து நாட்களுக்கு ஒரு தடவை உணவை கொடுத்து வந்தனர். குந்தியும், பாண்டவர்களும் தங்கியிருந்த அரக்கு மாளிகை எரிந்த பிறகு தப்பிப் பழைத்து பஞ்சத்தில் அடிபட்ட பிராமணர்கள் போல வேடமிட்டு ஓரிடத்தில் தங்காமல் காடுகளில் அலைந்து திரிந்தார்கள்.குந்தி எப்போதும் அழுதுகொண்டே இருந்தாள்,காட்டில் இருக்கும் போது உணவுக்காக காட்டை அடுத்துள்ள கிராமங்களில் பிச்சை எடுத்து மாலையில் உணவைப் பிரித்துக் கொள்வார்கள். ஏகசக்கரம் கிராமத்தில் குந்திக்கும், பாண்டவர்களுக்கும் தங்குவதற்காக ஓர் இளம் பிராமணன் உதவி செய்தான், ஒரு நாள் இரவு அந்த இளம் பிராமணரின் மனைவி "அந்த அரக்கனுக்கு உணவு தருவது இந்த முறை நம் முறை,நீங்கள் போய்விட்டால் நான் விதவையாகி, நம் மகளுக்கும் எந்த உதவியும்,ஆதரவும் இல்லாமல் தன்னந்தனியாக விடப் படுவோமே" என்று அழுதாள். தனக்கு உதவி செய்த பிராமணருக்கு துன்பம் என்று உணர்ந்த குந்தி பிராமணரை அழைத்து விசாரித்தாள். அரக்கன் செய்த கொடுமையும், ஏற்பட்ட ஒப்பந்தத்தையும் கூறினாள். "பயப்படாதீர்கள்! வீட்டில் தங்க எங்களுக்கு இடம் கொடுத்திருக்கிறீர்கள், குறைந்தபட்சம் நாங்கள் செய்யக்கூடியது உங்களைக் காப்பதுதான். உன் கணவருக்குப் பதிலாக உன் பிள்ளைகளில் ஒருவனை அரக்கனிடம் போகட்டும், என்னால் ஒருவனை தியாகம் செய்ய முடியும்" என்று அவர்களிடம் குந்தி கூறினாள். "ஆனால் நீங்கள் எங்கள் விருந்தாளிகள்" என்று கூறி அதை ஏற்க மறுத்தார்கள். குந்தி தீர்மானமாக பீமனை உணவு வண்டியை ஓட்டிக்கொண்டு போகும்படி சொன்னாள்.இந்த செயலைக் கண்டு தம்பதியர் மனம் உருகிப்போனார்கள், பீமனுக்கு குந்தி விடைகொடுத்து அனுப்பியது மற்ற சகோதரர்களுக்கு சிரிப்பை உண்டாக்கியது. குந்தி பீமனை அனுப்பியது புத்திசாலித்தனமானது, ஒன்று அந்த அரக்கனால் கிராமத்திற்கு இனி தொல்லையே இருக்காது, இரண்டு ஏதோ கிடைத்ததைச் சாப்பிட்டு வந்தவனுக்கு ஒரு வண்டி நிறைய வகை வகையான உணவு கிடைக்கும். காட்டிற்குள் நுழைந்தவுடன் பீமன் வண்டுயை நிறுத்தினான், அரக்கனுக்குக் கொண்டுவந்த உணவைச் சாப்பிடத் தொடங்கினான். பீமன் உணவை சப்புக்கொட்டி, ருசித்துச் சாப்பிடும் சத்தம் அரக்கனின் காதில் விழுந்ததும் அவன் பயங்கரக் கோபத்துடன் வந்து, உணவு வண்டியை பார்த்ததும் பீமன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பது புரிந்துவிட்டது. உடனே பீமனை தாக்கத்தொடங்கினான், பீமன் அரக்கனின் கழுத்தை ஒரு கையால் பிடித்து, அவனைத் தூக்கி வண்டியோடு சேர்த்துக் கீழே தள்ளி அமுக்கிப் பிடித்துக்கொண்டே இன்னொரு கையால் உணவை அள்ளி உண்ணத் தொடங்கி உணவு முழுவதையும் திருப்தியுடன் உண்டு முடித்தான். பிறகு இருவரும் இரண்டு மலைகள் மோதிக்கொண்டது போல் மோதிக் கொண்டார்கள். மரங்களை பிடுங்கி ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டார்கள், அவர்கள் சண்டையிட்டது பூமி அதிர்ந்தது.அந்த காட்டில் இருந்த மிருகங்கள் பயந்து ஓட்டமெடுத்தன. இறுதியில் பகாசுரனின் கழுத்தை முறித்தான் பீமன். தியோ வன் கோ (திரைப்பட இயக்குநர்) தியோ வன் கோ (Theodoor "Theo" van Gogh; 23 சூலை 1957 - 2 நவம்பர் 2004) ஒரு டச்சு திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர், நடிகர். இவர் அயான் கேர்சி அலியுடன் இணைந்து இசுலாமில் பெண்களின் நிலையை விமர்சித்து சர்ச்சைக்குரிய "அடிப்பணிதல்" (Submission) என்ற திரைப்படத்தைத் தயாரித்தார். இவர் 2 நவம்பர் 2004 முகமட் போயுயேரி (Mohammed Bouyeri) என்ற டச்சு-மொராக்கன் முசுலிமால் படுகொலை செய்யப்பட்டார். சங்ககால ஆடவர் பந்தாட்டம் சங்ககால ஆடவர் பந்தாட்டத்தில் குறிப்பிடத் தக்கவை இரண்டு. குணிலால் அடிக்கப்பட்ட வட்டு குணில்வட்டு. மணிவட்டு உருண்டுகொண்டிருந்தது. அதனைக் குணிலால் அடித்தனர். அதனால் அந்த மணிவட்டு மேலும் வேகமாக உருண்டோடியது. இதுதான் இந்த விளையாட்டைப் பற்றிச் சொல்லப்படும் செய்தி. குணில் என்பது நுனி வளைந்திருக்கும் தடி. துரத்தல் என்பது தட்டி ஓட்டுதல். வளைந்த தடியால் உருளும் பந்தை அடித்தனர். இது இக்கால ஹாக்கி விளையாட்டைப் போல அக்காலத்தில் ஆடப்பட்ட விளையாட்டு. சேர மன்னர் இமயத்தில் வில் பொறித்த செய்தியை, ஆரிய மன்னர் இழிவுபடுத்திப் பேசிய செய்தியைக் கேட்ட செங்குட்டுவன் அவர்களுக்குப் பாடம் புகட்ட வடநாட்டின்மீது படையெடுத்துச் செல்லத் திட்டமிட்டிருந்தான். கண்ணகிக்குக் கல் இமயமலையிலிருந்து கொண்டுவரலாம் என்று கூறக் கேட்டதும் அவன் எண்ணத்துடிப்பு மேலும் வேகமாகப் பாய்ந்தது. இது உருள்கின்ற மணிவட்டைக் குணில் கொண்டு துரந்தாற் போல் வேகமாகச் சென்றது எனக் கூறப்பட்டுள்ளது. வட்டைக் குணிலால் அடித்த குணில்வட்டு விளையாட்டைப் போல நாக்குப் போன்ற தடியால் வட்டை அடித்த விளையாட்டு நாவட்டு விளையாட்டு அல்லது வட்டுநா விளையாட்டு. குணில் விளையாட்டில் மணிவட்டை அடித்தனர். இந்த விளையாட்டில் அரக்கினால் சிவப்புப் புள்ளிகள் வைக்கப்பட்டிருந்த வட்டை அடித்தனர். குணில் விளையாட்டில் அடிக்கும் கோலாகக் குணில் பயன்படுத்தப்பட்டது. இந்த விளையாட்டில் நாக்கு போன்ற தடி பயன்படுத்தப்பட்டது. இக்காலக் கோல்ப் விளையாட்டில் இதுவோன்ற தடி பயன்படுத்தப்படுகிறது. இது சங்ககால நாத்தடி விளையாட்டு. வங்கம் போலக் கோடு வரையப்பட்ட ஆடுபுலி ஆட்ட விளையாட்டு சிறுபாடு விளையாட்டு. அரக்குப்புள்ளிப் பந்தை வட்டுநாவால் அடிப்பது ஓர் உடல்திற விளையாட்டு. இந்த விளையாட்டுகளைக் குறிப்பிட்ட அரங்கில் விளையாடுவர். அரங்கு இல்லாமல் வட்டு விளையாட முடியாது எனத் திருக்குறள் குறிப்பிடுகிறது. எனவே இந்த இரு விளையாட்டுகளும் வரையப்பட்ட அரங்கில் விளையாடப்பட்டது எனத் தெரிகிறது. நங்காஞ்சி ஆறு அணை தமிழ்நாடு, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம் வடகாடு கிராம மலைப்பகுதியில் உருவாகும் சிற்றாறுகள் பரப்பலாறு அணையில் தேங்கி, தேங்கும் நீர் மற்றும் உபரி நீர், விருப்பாட்சி என்ற கிராமத்திற்கு அருகில் தலையூத்து என்ற இடத்தில் சிற்றருவியாக விழுந்து சிறு ஆறாக நங்காஞ்சி ஆறு என்ற பெயரில் வடகிழக்காக விருப்பாச்சி, அரசப்பபிள்ளைபட்டி, தங்கச்சியம்மாபட்டி, சவ்வாதுபட்டி ஆகிய ஊர்களின் வழியாக ஓடி இடையகோட்டை ஊரின் அருகில் சுமார் 24.00.00 ஹெக்டேர் (60.00ஏக்கர்) நிலப் பரப்பில் நீர் தேக்கி வைக்கப்பட்டு விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. கூக்கால் கூக்கால் (Kookal) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு மலைக் கிராமம்(ஊர்). கொடைக்கானல் வருவாய் வட்டத்தின் முதல் வருவாய் (கிராம எண்:1)கிராமம் ஆகும். இங்கு மலைத் தோட்டப் பயிர்களான பூண்டு, மிளகு, காபி, காரட், முள்ளங்கி, பீட்ரூட், உருளைக் கிழங்கு விளைகின்றன. வெனிசுவேலாவில் தொழிலாளர் சட்டம் வெனிசுவேலாவில் தொழிலாளர் சட்டம் ("Labour Law in Venezuela") திருத்தப்பட்டு புதிய சட்டம் 2013 மே 7 இல் நடைமுறைக்கு வந்தது. வெனிசுவேலாவில் தொழிலாளர் சட்டத்தில் மிகப்பெரிய திருத்தம் செய்யப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம் தொழிலாளர்களின் வேலை நேரம் குறைப்பு உத்தரவாதம், நீண்ட மகப்பேறு விடுப்பு உத்தரவாதம், அனைவருக்கும் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த சட்டத்தின் மூலம் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளன. பத்தாண்டுகளுக்கு மேலாக, தொழிற்சங்கங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டதன் விளைவாக இந்த புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது. தொழிலாளர்களுக்கான தொழிலாளர் சட்டம் என்ற அடிப்படையில் நாட்டில் உள்ள செல்வத்தின் பயனை தொழிலாளர்களுக்கும் பகிர்ந்தளிக்கும் விதத்தில் இந்த சட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. சங்ககால நீச்சல் பந்தாட்டம் சங்ககாலத்தில் ஆடப்பட்ட நீச்சல் பந்தாட்டம் ஒரு திளைப்பு விளையாட்டு. நீர்ப் பந்தாட்டம் அன்று. நீராடும் காதலர் ஒருவர்மீது ஒருவர் பந்தை வீசிக்கொண்டனர். பூநீர் பெய் வட்டம் என்று அந்தப் பந்து கூறப்படுகிறது. பலவகை வண்ண நீர்களைத் தனித்தனிப் பந்துகளில் அடைத்து ஒருவர்மீது ஒருவர் வீசிக்கொள்வர். பந்து வீச்சு மோதியதும் உடையும் தன்மை உடையதாக இருக்கும். உடைந்ததும் உள்ளிருக்கும் வண்ணநீர் பந்து பட்டவர்மீது ஒழுகும். அதைப் கண்டு மகிழ்வர். இக்காலத்தில் ஹோலிப் பண்டிகையின்போது வட இந்தியாவில் வண்ணப் பொடிகளைத் தூவி விளையாடுவர். தமிழ்நாட்டில் தேர்த்திருவிழா முடிந்ததும் சாமியைக் குடி விடும் நாளில் மஞ்சள் நீரை முறைமாமன், முறைமாமன் மகள் முதலானோர் மீது ஊற்றி விளையாடும் வழக்கம் இன்றும் உண்டு. இது இந்தப் பண்டைய விளையாட்டோடு ஒப்புநோக்கத் தக்கது. கிறித்தவம் குறித்த விமர்சனங்கள் கிறித்தவம் குறித்த விமர்சனங்கள் ("Criticism of Christianity") என்னும் பொதுத் தலைப்பின் கீழ் வரலாற்றில் கிறித்தவம், கிறித்தவ சபை, கிறித்தவர்கள் குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் பதியப்படுகின்றன. இத்தகைய விமர்சனங்களுள் சில கிறித்தவ நம்பிக்கைகள் பற்றியும், மறைநூலில் அடங்கியுள்ள போதனைகள் பற்றியும், மறைநூலை விளக்கியுரைப்பது பற்றியும் அமைந்தவை. இத்தகைய விமர்சனங்களுக்கு ஒழுங்குமுறையான பதில் வழங்குகின்ற சிறப்பு இயல் கிறித்தவ தன்விளக்கம் ("Christian Apologetics") என்று அழைக்கப்படுகிறது. மேலும் கிறித்தவம் பற்றி விமர்சிக்கப்படும் பொருள்கள் இவை: மறைநூலில் அடங்கியுள்ள சில கொள்கைகள்; வரலாற்றில் சில அணுகுமுறைகள் மற்றும் நடத்தைகளை அறவியல் பார்வையில் நியாயப்படுத்துகின்ற சில விவிலிய விளக்கங்கள்; கிறித்தவம் அறிவியலோடு ஒத்துப் போக இயலுமா என்னும் கேள்வி; சில கிறித்தவக் கொள்கைகள். விவிலியத் திறனாய்வு ("Biblical criticism") என்பது, விவிலியத்தை வரலாற்றில் பல கட்டங்களில் எழுதப்பட்ட நூல்களின் தொகுப்பாகக் கொண்டு, பிற இலக்கிய மற்றும் மெய்யியல் ஆவணங்களை ஆய்வதற்குப் பயன்படுத்துகின்ற கருவிகளை விவிலிய ஆய்வுக்கும் பயன்படுத்தி விமர்சிக்கின்ற துறை ஆகும். இத்தகைய திறனாய்வு முறை 18ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் எழுந்த அறிவொளிக் காலத்தின் தாக்கத்தைக் கொண்டுள்ளது. விவிலியம் கூறுகின்ற செய்தியை ஆழமாக அறிவதற்குப் பொதுவாக மையநீரோட்ட கிறித்தவ சபைகளும் ஆய்வாளர்களும் பயன்படுத்துகின்ற பல்வேறு உத்திகளின் தொகுப்பே விவிலியத் திறனாய்வு ஆகும். இதில் பொதுவான வரலாற்றுத் தத்துவங்கள் பயன்படுகின்றன. விவிலியம் கடவுளால் வெளிப்படுத்தப்பட்ட நூல் தொகுப்பு என்னும் கருத்தை முதன்மைப்படுத்தாமல், வரலாற்றில் வாழ்ந்த மனிதர்களே அதனைத் தொகுத்தார்கள் என்னும் அடிப்படையில் விவிலிய நூல்களை ஆய்வுக்கு உட்படுத்துவது இப்பார்வையின் தனித்தன்மை ஆகும். விவிலியத் திறனாய்வில் நான்கு முக்கிய வகைகள் உண்டு. அவை கீழ்வருவன: ஆய்வாளர்களும் ஐயவாதிகளும் ("skeptics") விவிலியத்தில் முரண்பாடான கூற்றுகள் உள்ளதைச் சுட்டிக் காட்டுகின்றனர். ஒரே நிகழ்வை எடுத்துக் கூறுவதில் பெயர், எண்ணிக்கை, இடம், சூழ்நிலை போன்றவற்றில் வேறுபாடுகள் உள்ளதும் சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த விமர்சனத்திற்கு பொதுவாகத் தரப்படுகின்ற பதில் இது: விவிலிய நூல்கள் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு ஆசிரியர்களால் வெவ்வேறு இலக்கியப் பாணிகளில் எழுதப்பட்டவை. எனவே ஒவ்வொரு ஆசிரியரும் பயன்படுத்திய மூல ஏடு/ஏடுகள், வாய்மொழி மரபு/மரபுகள் வேறுபாடுகளைக் கொண்டிருந்திருக்கலாம் ("documentalry hypothesis"). அந்த வேறுபாடுகள் காரணமாக முரண்பாடுகள் எழக்கூடும். இயேசுவின் வரலாற்றைப் பொறுத்தமட்டில் நான்கு நற்செய்தியாளர்கள் எழுதிய நூல்கள் புதிய ஏற்பாட்டில் உள்ளன (மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான்). மேற்கூறிய நான்கு நற்செய்தி நூல்களும் ஒரே இயேசுவைப் பற்றிப் பேசினாலும் இயேசுவின் வாழ்வு, போதனை, சாவு, உயிர்த்தெழுதல் பற்றி விவரிக்கும்போது அந்நூல்களுக்கிடையே ஒரு சில முரண்பாடுகளைக் காண முடிகிறது. அவற்றைத் தம்முள்ளே இசைவுற இணைப்பது கடினமாகவும் உள்ளது. இதை விவிலிய அறிஞர் ஈ.பி. சான்டெர்சு ("E. P. Sanders") என்பவர் சுட்டிக்காடுகிறார். விவிலிய நூல்கள் கடவுளின் கடவுளின் தூண்டுதலால் எழுதப்பட்டதால் அவற்றுள் எந்த வித தவறுகளும் அடங்கியிருக்கவில்லை என்று கிறித்தவர்கள் பொதுவாக நம்புகிறார்கள். இதை விவிலியத்தின் தவறாத் தன்மை ("inerrancy of the Bible") என்று கூறுவர். ஹாரொல்ட் லின்ட்செல் என்பவர், "விவிலியத்தில் தவறான கூற்றுகள் இருந்தாலும் அவற்றை விவிலியம் தவறாது எடுத்துரைக்கின்றது" என்று கூறுகின்றார்.. எடுத்துக்காட்டாக, சாத்தான் ஒரு பொய்யன். அப்பொய்யனின் கூற்று தன்னிலே பொய்யானதாக இருந்தாலும் அதை விவிலியம் அப்படியே எடுத்துரைக்கிறது. விவிலியத்தில் தவறு அடங்கியிருக்கவில்லை என்போர் விவிலியத்தில் அடங்கியிருக்கும் ஒவ்வொரு சொல்லையும் சொற்றொடரையும் கடவுள் அப்படியே எழுத்துக்கு எழுத்து என்று வெளிப்படுத்தினார் என்றோ, விவிலிய நூல்களின் ஆசிரியர்கள் கடவுளின் வார்த்தையை எழுத்துக்கு எழுத்து என்று எடுத்தெழுதினார்கள் என்றோ கூறுவதில்லை. மாறாக, கடவுள் மனித ஆசிரியர்களைப் பயன்படுத்தி, அவர்களது மொழி, நடை, பாணியிலும் தவறின்றியும் எழுதிட உதவினார் என்பர். கடவுளின் வார்த்தை என்ற வகையில் அதில் கடவுள் நமக்கு வெளிப்படுத்த விரும்பிய உண்மைகள் அப்படியே யாதொரு தவறுமின்றி நம்மை வந்தடைகின்றன. இருப்பினும், எந்த அளவுக்கு விவிலியம் தவறில்லாமல் உள்ளது என்பது குறித்து கருத்தொற்றுமை இல்லை. சிலர், விவிலியம் மனிதரின் மீட்புப் பற்றிய உண்மைகளை போதிப்பதாலும், அறிவியல் உண்மைகளை எடுத்துரைப்பது அதன் நோக்கமன்று என்பதாலும் அதில் அறிவியல் தொடர்பான தவறுகள் இருப்பதில் வியப்பில்லை என்பர். வேறு அறிஞரோ, விவிலியத்தில் அறிவியல் சம்பந்தமான தவறுகள் உண்டு என்பர். விவிலியத்தில் எந்தவொரு தவறுமே இல்லை என்போரும் உண்டு. விவிலியம் மனிதருக்கு போதனை வழங்குவதில் தவறுகளை அளிப்பதில்லை என்னும்போது, அது எழுதப்பட்ட மூல மொழியிலிருந்து பிற மொழிகளில் பெயர்க்கப்படுவதில் எழும் தவறுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஆயினும் பாட ஆய்வின் வழியாக மூல பாடம் எவ்வாறு இருந்திருக்கும் என்பதை இன்று அறிய முடிகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் விவிலிய பாடம் மீண்டும் மீண்டும் எடுத்து எழுதப்பட்ட போதும் மொழியாக்கம் செய்யப்பட்ட போதும் பெரிதும் சிதைந்து போனதை எடுத்துக் கூறுவர். இயேசு பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் யூத இறைவாக்கினர்கள், வருங்காலத்தில் மக்களுக்கு விடுதலை வழங்கும் மெசியா ஒருவர் யூத குலத்தினின்று பிறப்பார் என்று முன்னறிவித்தனர். யூத சமயப் பார்வையில் அந்த இறைவாக்குகள் இயேசு கிறித்துவில் நிறைவேறவில்லை. வேறு ஐயவாதிகள், அந்த இறைவாக்குகள் தெளிவின்றி உள்ளன என்றும், அவை நிறைவேறவில்லை என்றும் கூறுவர். பழைய ஏற்பாட்டு நூல்கள் புதிய ஏற்பாட்டு நூல்கள்மீது தாக்கம் கொணரவில்லை எனவும் கூறுவர். மேற்கூறியதற்கு மாறாக, கிறித்தவ தன்விளக்க அறிஞர்கள் மெசியா பற்றிய பழைய ஏற்பாட்டு இறைவாக்குகளை இயேசு தம் வாழ்வில் நிறைவேற்றினார் என்று கூறுவர். இயேசு மீண்டும் ஒரு முறை வருவார் என்றும், மெசியா பற்றிக் கூறப்பட்ட "இறுதித் தீர்ப்பு", "இறையாட்சி நிறுவுதல்", "மெசியா காலத்தை" தொடங்குதல் போன்ற இறைவாக்குகளை நிறைவேற்றுவார் என்றும் பல கிறித்தவர்கள் நம்புகின்றனர். புதிய ஏற்பாட்டின்படி இயேசு பிறந்தது தாவீதின் குலத்தில் ஆகும். இதை விமரிசிக்கும் வகையில் ஸ்டீபன் எல். ஹாரிசு ("Stephen L. Harris") என்பவர் கூறுவார்: "இயேசு பழைய ஏற்பாட்டு இறைவாக்குகளை நிறைவேற்றவில்லை. அவர் யூத மக்களைப் பிற இனத்தாரிடமிருந்து விடுவிக்கவுமில்லை, தாவீதின் ஆட்சியை நிலைநாட்டவோ உலக அமைதியைக் கொணரவோ செய்யவுமில்லை. மாறாக, அவர் இழிவான சிலுவை மரணத்தைச் சந்தித்தார்; ஒரு குற்றவாளியாக சிலுவையில் அறையப்பட்டார். இது யூதர்கள் இயேசு கிறித்துவைத் தமது மெசியாவாக ஏற்பதற்குப் பெரும் தடையாக உள்ளது. இதற்குப் பதில்மொழியாக, சில கிறித்தவ போதகர்கள் இயேசு இசுரயேலின் விடுதலையை நிறைவேற்றி ஆயிரம் ஆண்டு ஆட்சியைக் கொணர்வார் என்று கூறுகின்றனர். 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த யூத இறையியலாரான ஐசக் பென் ஆபிரகாம் ("Isaac ben Abraham") என்பவர் தாம் எழுதிய "Chizzuk Emunah" ("உறுதிபெற்ற நம்பிக்கை") என்னும் நூலில், இயேசு வாக்களிக்கப்பட்ட மெசியா அல்ல என்றும், அவர் புதிய உடன்படிக்கையை ஏற்படுத்தவில்லை என்றும் வாதிட்டார். மேலும் அவர் புதிய ஏற்பாட்டில் பல முரண்பாடுகள் உண்டென்றார். கிறித்தவர்கள் சனிக்கிழமைக்குப் பதில் ஞாயிற்றுக் கிழமையை ஓய்வுநாளாகக் கருதுவதையும் அவர் விமர்சித்தார். அந்நூலை அவர் யூதர்கள் கிறித்தவர்களாக மாறுவதை எதிர்த்து எழுதினார். அந்நூலுக்கு மறுப்பாக யோவான் கிறிஸ்தோஃப் வாகென்சைல் ("Johann Christoph Wagenseil") என்பவர் ஒரு நூலை இலத்தீனில் எழுதினார். இவ்வாறு அந்நூலில் கூறப்பட்ட கருத்துகள் மேலும் பல ஐரோப்பியர் அறிய வந்தனர். கிறித்தவ சமயத்தை வன்மையாக விமர்சித்த வோல்ட்டேர் ("Voltaire") என்பவர் ஐசக் பென் ஆபிரகாமின் நூலைப் பெரிதும் புகழ்ந்தார். பழைய ஏற்பாட்டு இறைவாக்குகள் இயேசுவின் வாழ்வில் நிறைவேறின என்று வாதிட்டவர்களுள் முக்கியமான ஒருவர் பிலேசு பாஸ்கால் ("Blaise Pascal") ஆவார். "இயேசு கிறித்து இறைத்தன்மை கொண்டவர் என்பதற்கு இறைவாக்குகளே மிக உறுதியான நிருபணம்" என்பது பாஸ்காலின் கூற்று. சுமார் நாலாயிரம் ஆண்டளவாக வந்த இறைவாக்குகள் இயேசுவின் வாழ்வில் நிறைவேறியதை அவரே எடுத்துக் கூறினார் என்பதை பாஸ்கால் சுட்டிக்காட்டினார். கிறித்தவ தன்விளக்க அறிஞர்களுள் ஒருவரான ஜாஷ் மெக்டோவல் ("Josh McDowell") என்பவரும் பழைய ஏற்பாட்டு இறைவாக்குகள் இயேசுவில் நிறைவேறியதை எடுத்துரைத்தார். இயேசு எக்குலத்தில் பிறப்பார், எங்கே பிறப்பார் என்பதையும், அவர் கன்னியிடமிருந்து பிறப்பார், புதுமைகள் புரிவார், துன்புற்று இறப்பார், உயிர்த்தெழுவார் போன்றவற்றையும் இறைவாக்குகள் முன்னறிவித்தபடியே இயேசு நிறைவேற்றினார். தாம் வலியுறுத்த விரும்புகின்ற கருத்துக்களை நிலைநாட்டும் வண்ணம் ஒரு சில விவிலியக் பகுதிகளை மட்டுமே தேர்ந்தெடுத்து விளக்கம் தருவது முறையானதன்று என்று சில விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குறிப்பாக, பெண்கள் மட்டிலும் ஓரினப் பால் ஈர்ப்புடையோர் மட்டிலும் வெறுப்புக் காட்டுவோர் இவ்வாறு செய்வதாக ஒரு குற்றச்சாட்டு. மோசே சட்டம் முழுவதுமே புதிய ஏற்பாட்டுச் சட்டம் வெளிப்படுத்தபின் செயலிழந்துவிட்டது என இந்த விமர்சகர்கள் கூறுகின்றனர். விருத்தசேதனம் பற்றிய சட்டம் புதிய ஏற்பாட்டிற்குப் பின்னர் செயலிழந்துவிட்டது சிலர் கூறுவர். ஆயினும் பழைய ஏற்பாட்டில் உள்ள முக்கிய சட்டமாகிய அன்புக் கட்டளை புதிய ஏற்பாட்டிலும் வலியுறுத்தப்படுகிறது. கிறித்தவர்களிடையே பொதுவாக ஏற்கப்படுகின்ற கருத்து இது: பழைய ஏற்பாட்டு சட்டங்களுள் முக்கியமாக மூன்று வகைகள் உள்ளன. அவை அறநெறிச் சட்டம், சமயச் சடங்குச் சட்டம், தூய்மை பற்றிய சட்டம் என்பவை ஆகும். இவற்றுள் அறநெறிச் சட்டம் எக்காலத்திற்கும் எல்லா மனிதருக்கும் பொருந்துவன. எனவே, இறைவன் மட்டிலும் பிறர் மட்டிலும் அன்பு காட்டுதல், நீதி நெறிக்கு ஏற்ப ஒழுகுதல், பிறர் சொத்தைக் கவராதிருத்தல் போன்ற பொதுவான அறநெறிச் சட்டங்கள் தொடர்கின்றன. பழைய ஏற்பாட்டில் பல சட்டங்கள் சமயச் சடங்குகள் பற்றியவை. பலி ஒப்புக்கொடுப்பதற்கான பலிப்பொருள் எப்படி இருக்க வேண்டும், எந்தெந்த வகையான பலிகள் உள்ளன போன்ற சட்டங்கள் புதிய ஏற்பாட்டுக் காலத்திற்குப் பின் செயலிழக்கின்றன. தூய்மை பற்றிய சட்டங்களும் பழைய ஏற்பாட்டில் உள்ளன. அவையும் அக்காலப் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டவை ஆதலால் இக்காலத்திற்குப் பொருந்துவன அல்ல. இவ்வாறு பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கும் இடையே வேறுபாடுகள் கற்பிப்பதில் இயேசு என்ன வழி காட்டினார் என்று கருதுவது முக்கியம். அதுபோன்றே தூய பவுல் போன்ற புதிய ஏற்பாட்டு நூலாசிரியர்கள் கிறித்தவ நடத்தையை எவ்வாறு விளக்கியுள்ளனர் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு கிறித்தவ தன்விளக்க அறிஞர்கள் பதிலிறுக்கின்றனர். ஒத்தையா, ரெட்டையா ஒத்தையா, ரெட்டையா என்பது சிறுவர்களால் விரும்பி விளையாடப்படும் விளையாட்டு. ஒத்தையா, ரெட்டையா எனும் பேச்சு வழக்குச் சொல் ஒற்றையா இரட்டையா எனும் எழுத்து வழக்குச் சொல்லை குறிக்கும். இவ்விளையாட்டு விரல்களை மடித்து நிமிர்த்துவதன் மூலம் விளையாடக்கூடிய ஒரு இலகுவான விளையாட்டாகும். இது சிறுவர்களின் கணித வல்லமையை கூட்ட வல்லது (கூட்டும் திறனை). இந்த விளையாட்டை இருவர் விளையாடுவர். ஒருவர் மற்றவரைப் பார்த்து ஒத்தையா, ரெட்டையா என வினாவுவார். மற்றவர் ஒத்தை அல்லது ரெட்டை என தனக்கு விரும்பியதை கூறுவார். விடை கூறுபவர் ஒற்றை என்றால் மற்றவர் ரெட்டையாகும். இதன் பிறகு விளையாட்டு ஆரம்பமாகும். ஒரு கையில் ஐந்து விரல்கள். ஐந்தையும் மடிக்காமல் எடுத்தால் ஐந்து என எண்ண வேண்டும். மடிக்கும் விரல்களை விட்டு எண்ண வேண்டும். ஒருவிரலை மட்டும் மடித்தால் நான்கு போல். இருவரும் ஒரே நேரத்தில் கையில் விரல்களை மடித்து எண்களை எடுப்பார். இருவர் எடுக்கும் எண்களையும் கூட்ட வேண்டும். கூட்டுத்தொகை ஒற்றை எண்ணாக வந்தால் ஒற்றை சொன்னவருக்கு வெற்றி. இரட்டை எண்ணாக வந்தால் ரெட்டை சொன்னவருக்கு வெற்றி. இவ்வாறு தொடர்ந்து விளையாடலாம். இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் முதலாம் ரிச்சார்டு ("Richard I", செப்டம்பர் 8 1157 - ஏப்ரல் 6 1199) சூலை 6, 1189 முதல் அவரது இறப்பு வரை இங்கிலாந்தின் அரசராக இருந்தவர். இவர் நார்மன்டியின் பிரபுவாகவும், அக்விடைனின் பிரபுவாகவும், காச்கோனியின் பிரபுவாகவும், சிப்ரசின் பிரபுவாகவும், இங்கிலாந்தின் அதிபராகவும் வெவ்வேறு பதவிகளில் ஒரே காலகட்டதில் ஆட்சி புரிந்தவர். சிலுவைப் போரோடு தொடர்புடைய இசுலாமிய மதத்தினர் இவரை "மெலெக்-ரிக்" அல்லது "மலெக் அல்-இங்கிடார்" எனவும் அழைத்தனர். விவேகானந்தர் பூங்கா, கோயம்புத்தூர் விவேகானந்தர் பூங்கா, தமிழ்நாட்டில் கோயம்புத்தூரிலுள்ள இராமகிருஷ்ண வித்யாலய வளாகத்துக்குள் மேட்டுப்பாளையம் சாலையோரமாக அமைந்துள்ளது. இப்பூங்கா இராமகிருஷ்ண வித்யாலத்தின் பவள ஆண்டு விழா நினைவாக பெப்ரவரி 3, 2006 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இயற்கைச் சூழலில் அமைந்துள்ள இப்பூங்காவில் பத்தரை அடி உயரத்தில் விவேகானந்தரின் வெண்கல உருவச்சிலை சாலையை நோக்கியபடி உள்ளது. இப்பூங்காவையொட்டி குழந்தைகள் விளையாடுவதற்கு இராமயணப் பூங்கா எனப் பெயரிடப்பட்ட கருத்துப் பூங்கா ஒன்று உள்ளது. இச்சிறுவர் பூங்காவில் இராமாயணக் கதாபாத்திரங்களை அடையாளப்படுத்தும் விதத்தில் ஒவ்வொரு விளையாட்டுச் சாதனமும் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பாகும். ஐதரேய உபநிடதம் ஐதரேய உபநிடதம் ரிக் வேதத்தில் அமைந்துள்ள ஒரே உபநிடதம். இந்த உபநிடதத்திற்கு ஆதிசங்கரர் மற்றும் மத்வர் ஆகியோர் விளக்க உரை எழுதி உள்ளனர். இதுவே மிகப் பழமையான உபநிடதம் ஆகும். இந்த உபநிடதம் ’ஐதரேயர்’ என்ற முனிவர் மூலம் வெளிப்பட்டக் காரணத்தினால் ‘ஐதரேய உபநிடதம்’ என்று அழைக்கப்படுகிறது. ’இதரா’ எனும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெண்னின் மகனாக பிறந்த காரணத்தினால் இந்த முனிவருக்கு "மகிதாசு ஐதரேயர்" எனப் பெயராயிற்று. ஐதரேய பிரமாணத்தின் ரிஷியும் இவரே. மற்ற உபநிடதங்கள் போல் அல்லாமல் இந்த உபநிடதம் பத்தி பத்தியாக உள்ளது. இதனால் ஆதிசங்கரர் இந்த உபநிடதத்தை மூன்று அத்தியாயங்களாக பிரித்து முதல் அத்தியாயத்தில் மூன்று பகுதிகளும், இரண்டாம் அத்தியாயத்தில் ஒரு பகுதியும், மூன்றாம் அத்தியாத்தில் ஒரு பகுதியுமாக பிரித்து அமைத்துள்ளார். ஆதிசங்கரர் இந்த உபநிடதத்திற்கு மட்டும் நீண்ட முகவுரை எழுதியுள்ளார். ஞான யோகம் மற்றும் சந்நியாசம் குறித்து தனது முகவுரையில் விரிவாக விளக்கியுள்ளார். மேலும் இந்த உபநிடதத்தில் ”ப்ரக்ஞானம் பிரம்மம்” , ”ஆத்மாவை இதம்” எனும் இரண்டு மகா வாக்கியங்கள் அமைந்துள்ளன. இருக்கு வேதத்தின் சாந்தி மந்திரமே ஐதரேய உபநிடதத்திற்கும் அமைந்துள்ளது. “ஓம் வாங்மே மனஸி எனத் துவங்கி...அவது மாமவது வக்தா மவது வக்தாரம்” என முடியும் சாந்தி மந்திரத்தின் பொருள்: “எனது வாக்கு, மனதில் நிலைபெறட்டும். மனம், வாக்கில் நிலைபெறட்டும். ஒளிமயமான பரம்பொருளே! நீ என்னுள் ஒளிர்வாயாக. மனமே, வாக்கே நீங்கள் இருவரும் ஒன்று சேர்ந்து வேதங்களின் உண்மையை எனக்குக் அருள்வீர்களாக. என்னால் கேட்கப்படுகின்றவை என்னை விட்டு விலகாதிருக்கட்டும். நான் கற்றவற்றைப் பகலும் இரவும் சிந்திப்பேனாக. நான் உலகியல் உண்மைகளைச் அறிவேனாக. பிரம்மத்தைப் பற்றிய உண்மையை அறிவேனாக. அந்த இறைவன் என்னைக் காக்கட்டும். எனது குருவையும் காக்கட்டும். எனக்கும் குருவுக்கும் ஆரோக்கியத்தை தர வேண்டும். சீடனாகிய எனக்கு (வேதத்தை) நன்கு கேட்கும் சக்தியும், குருவுக்கு அதனை நன்கு கற்றுத்தரும் சக்தியும் அருள வேண்டும். ஓம் சாந்தி சாந்தி சாந்தி”. வேதாந்த சாத்திரங்கள் கேட்கும் போது நமக்கு வரும் தடைகளான சூழ்நிலைகளிலிருந்து வரும் தடை, இயற்கையிலிருந்து வரும் தடை, நம்மிடருந்து நமக்கே வரும் தடை ஆகிய மூன்று தடைகளை அமைதிப் படுத்துவதின் மூலம் நம்மை நாம் காத்துக்கொள்வதற்கு இறைவனிடம் வேண்டுவதே சாந்தி மந்திரம சொல்வதின் உட்பொருள். இறைவன் எந்த ஒரு உதவியும் இன்றி தன்னிடமிருந்த சக்தியால் இந்த உலகை படைத்தார். படைத்த எல்லாவற்றுக்குள்ளும் அவர் ஊடுருவி இருந்தார். உடல், உயிர் மனம், பிராணன், ஆன்மா ஆகியவைகளின் தொகுதியே மனிதன்; அவன் செய்யும் நல்வினை, தீவினைப் பயன்களுக்கேற்ப உடல்களை மாற்றிச் செல்வது ஒரு உயிரின் பயணம்; உயிர் பழைய உடலை விடுவது மரணம்; புதிய உடலை ஏற்றுக்கொள்வது பிறப்பு; உடல் தாயிடமிருந்து கிடைக்கிறது; உயிர் தந்தையின் வழியாக வருகிறது; இதன் பிறகு ஆன்மா கருவுக்குள் புகுந்து கொள்கிறது; ஒரு பெண் கருவை சுமப்பது முதல் குழந்தை பிறக்கும் வரை நடைபெறும் நிகழ்வுகள் விரிவாக இவ்வுபநிடதத்தில் கூறப்பட்டுள்ளன. நாம் யாரால் பார்க்கிறோமோ, கேட்கிறோமோ, மணங்களை முகர்கிறோமோ, இனிப்பு-கசப்பு என்று எதை என்று எதை உணர்கின்றோமோ அவரே ஆத்மா. உலகின் இயக்கங்கள் கதிரவனால் நடைபெறுகிறது. ஆனால் கதிரவன் எதிலும் நேரிடையாக ஈடுபடுவதில்லை. அவனுடைய முன்னிலையில் தான் எல்லாம் நடைபெறுகிறது. அது போல ஆத்மா என்பது ஒரு சாட்சியே. ஆத்மா அனைத்தையும் கடந்ததாக இருந்தாலும், எல்லாமாக விளங்குவதும் அதுவே. அந்த ஆத்மாவே புத்தியாகவும், மனமாகவும் விளங்குகிறது. உணர்வு, ஆளும் தன்மை, உலக அறிவு, பகுத்தறிவு, அறிவுக்கூர்மை, மனோதிடம், சிந்தனை ஆற்றல், மனத்தெளிவு, மனக்கலக்கம், நினைவு, உறுதியான புத்தி, தீர்மானம், பிராண சக்தி, ஆசை, இன்ப நுகர்ச்சி என்பவை ஆத்மாவின் பல பெயர்கள். உடல் இயக்கம், மன இயக்கம் இரண்டும் அதுவே. இறுதியாக பிரக்ஞானம் பிரம்ம என்ற மகா வாக்கியத்தின் மூலம், இந்த பிரக்ஞானமே உண்மையில் ஆத்மா அல்லது பிரம்மம், அதனை உண்ர்ந்தே வாமதேவர் முக்தி அடைந்தார். ஆத்மா, சீவன் இரண்டும் பிரம்மமாக உள்ளது. ஆத்மாவே அனைத்தையும் படைக்கும் தலைவனான இறைவன். பூமி, காற்று, ஆகாயம், நீர், நெருப்பு ஆகிய ஐந்து பஞ்ச பூதங்களும் ஆத்மாவே. சிறிய உயிரினங்களும் அதுவே. விதைகளும் அதுவே. முட்டையில் தோன்றுபவையும் அதுவே. கருப்பையில் தோன்றுவதும் அதுவே. விதைகளிருந்து முளைப்பதும் அதுவே. அசையும் பொருள், அசையாப் பொருள், பறப்பவை எல்லாம் அந்த ஆத்மாவே. அனைத்தும் அந்த ஆத்மாவால் வழி நடத்தப்படுகின்றன. பிரபஞ்சமே ஆத்மாவினால் வழி நடத்தப்படுகிறது. ஆத்மாவே அனைத்திற்கும் காரணம். அந்த ஆத்மாவே இறைவன். சந்தியாவந்தன மந்திரம் இந்த உபநிடதத்தில் வருகின்றது. ஞாயிற்றை தினமும் போற்றி வழிபடும் கௌஷீதகி முனிவர் பகலில் ஒளிரும் ஞாயிறை, மாலையில் விழும் ஞாயிறைத் தினமும் தோத்திரம் செய்பவர். அத்துவித வெண்பா அத்துவித வெண்பா என்பது அத்துவிதம் கொள்கையை விளக்கம் ஒரு தமிழ் வெண்பா நூல். இதில் 218 வெண்பாக்கள் உள்ளன. இதன் ஆசிரியர் சித்தர் சிவப்பிரகாசர். இதற்கு துறையூர் ஆதிதனத்தின் பத்தாம் தலைவர் நன்னூற் சிவப்பரகாசர் உரை எழுதியுள்ளார். அந்தாளக் குறிஞ்சி அந்தாளக் குறிஞ்சி என்பது பண்டைத் தமிழிசையின் 108 பண்களில் ஒன்றாகும். இது தேவாரப் பண்கள் இருபத்தி மூன்றில் ஒன்றும் ஆகும். இதனை அந்தாழி, அந்தாளிர் என்றும் குறிப்பிடுவர். "இவ் அந்தாளக் குறிஞ்சி குறிஞ்சிப் பண்ணின் நைவளம் (நட்டபாடை) என்னும் திறத்தின் புறநிலையாக அமையும். அரும்பாலையிற் பிறந்தது, பண்ணியற்றிய வகையைச் சேர்ந்தது." தமிழ் இலக்கியங்கள் வகைப்படுத்தும் சமயங்கள் தமிழ் மெய்யியல், இலக்கிய, சமய வழக்கில் நீண்ட காலமாக சமயங்கள், கொள்கைநிலைகள் பட்டியல்படுத்தப்பட்டு, வகைப்படுத்தப்பட்டுள்ளன. இங்கு அவை தொகுக்கப்படுகின்றன. அண்ட்டிலோப் செங்குத்துப் பள்ளத்தாக்கு அண்ட்டிலோப் செங்குத்துப் பள்ளத்தாக்கு என்பது தென்மேற்கு ஐக்கிய அமெரிக்காவில் உள்ள ஓர் சரிவு செங்குத்துப் பள்ளத்தாக்கும் அதிகம் பார்வையிடப்பட்டதும், அதிகம் ஒளிப்படம் எடுக்கப்பட்ட இடமுமாகும். இது அரிசோனாவிலுள்ள நவயோ நேசன் எனுமிடத்தில் அமைந்துள்ளது. இது இரண்டு வேறுபட்ட ஒளிப்படம் எடுக்கவல்ல துளைகளைக் கொண்டுள்ளது. அவை "மேல் அண்ட்டிலோப் செங்குத்துப் பள்ளத்தாக்கு" அல்லது "வெடிப்பு" எனவும் "கீழ் அண்ட்டிலோப் செங்குத்துப் பள்ளத்தாக்கு" அல்லது "தக்கை திருகாணி" எனவும் அழைக்கப்படும். காமா தோட்டம் காமா தோட்டம் (Gama garden) என்பது மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் அமைந்துள்ள ஓர் சிறப்பு ஆய்வகமாகும். பயிர் தொழிலில் எக்சு மற்றும் காமா கதிர்கள் விளைச்சலை எவ்வாறெல்லாம் பெருக்கக் கூடும் என்பதை வரிவாக ஆராயும் துறை. விதைகளுக்குக் கதிரூட்டி சிறந்த அதிக விளைச்சலைக் கொடுக்கும் விதைகளைத் தேர்ந்து எடுப்பது என்று ஆய்வதும் மேற்கொள்ளப்பட்டுள்ள பணியாகும். இவ்வாறு கதிரூட்டி பழங்களை அழுகிவிடாமல் நீண்ட நாட்கள் பாதுகாப்பது, பாதுகாக்கும் காலத்தில் அவைகளில் முளைவிடுவதைத் தாமதப்படுத்துதல், மருந்துகளையும் பிற மருத்துவப் பொருட்களையும் நச்சு நீக்கம் செய்வது போன்ற பயனுள்ள ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக 500 கியூரி கோபால்ட்-60 ஐசோடோப்பு பயன்படுகிறது இது அமைந்துள்ள இடமே காமா தோட்டம் எனப்படுகிறது. வளர்ந்த நாடுகளிலும் இதுபோன்ற ஆய்வகங்கள் உள்ளன. அணுவைப் பற்றி----பம்பாய்த் தமிழ்ச் சங்கம் திருவாய்மொழித் திருவிழா அத்யயணோற்சவம் அல்லது திருவாய்மொழித் திருவிழா அல்லது நாலாயிர திவ்யப்பிரபந்தத் திருவிழா என்பது வைணவத் திருத்தலங்களான திவ்வியதேசங்களில் கொண்டாப்பெறும் விழாவாகும். சமஸ்கிருத வேதங்களுக்கு நிகராக ஆழ்வார்கள் இயற்றிய திராவிட வேதம் எனப்படும் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தை முன்நிறுத்த இராமானுஜர் அவர்களால் இவ்விழா திருவரங்கத்தில் முதன்முதலாக தொடங்கப்பெற்றது. பின்பு அனைத்து திவ்ய தேசங்களிலும் இவ்விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழா மார்கழி மாதத்தில் பத்து நாள் விழாவாக கொண்டாப்படுகிறது. வைகுண்ட ஏகாதசிக்கு முதல் பத்து நாட்கள் கொண்டாடப்படுவது 'பகல் பத்து' அல்லது 'திருமொழித் திருநாள்' எனவும் வைகுண்ட ஏகாதசியை அடுத்த பத்து நாட்கள் கொண்டாடப்படுவது 'இராப் பத்து' அல்லது 'திருவாய்மொழித் திருநாள் எனவும் அழைக்கபப்டுகிறது. அயணங்களில் உத்தராயணம் தேவருலகின் பகற்பொழுதாகவும், தட்சிணாயணம் இரவுப்பொழுதாகவும் கணக்கிடப்படும். தை முதல் ஆனி முடிய உள்ள 6 மாத காலம் உத்திராயணமாகும். இதில் நமது ஒரு வருடம் தேவர்கட்கு ஒரு நாளாகும். உத்திராயணம் தை மாதம் துவக்கம் என்பதால் அதற்கு முதல் மாதமான மார்கழி மாதம் (பகல் பொழுதுக்கு முன்பாக உள்ள) பிரம்ம முகூர்த்தம் எனப்படும் முழுத்த நேரம் தேவர்களின் அதிகாலைப் பொழுதாகும். எனவே இந்த தேவர்களின் அதிகாலைப் பொழுதான மார்கழி மாதத்தில் நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தைத் தாள சேர்ந்த இன்னிசையுடன் இசைப்பது பலன் கொடுக்கக் கூடியது என்பதனால் இவ்விழா மார்கழி மாதம் கொண்டாடப்படுகிறது. இவ்வயண காலத்தில் இசைக்கப்படுவதால் இது அத்யயண உற்சவம் என அழைக்கப்பட்டது. 23 நாட்கள் கொண்டாடப்படும் இவ்விழாவில் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசிக்கு முன்பு வரும் வளர்பிறை முதல்நாள் தொடங்கி முதல் பத்தாம் நாள்(தசமி) முடிய 10 நாள் விழாவிற்கு பகல் பத்து என்று பெயர். இதில் திருப்பல்லாண்டு முதலாயிரம், மதுரகவியாழ்வார் இயற்றிய கண்ணிநுண் சிறுத்தாம்பு, திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், ஆகிய இரண்டாயிரம் பாசுரங்கள் இசைக்கப்படும். தசமிக்கு மறுநாளான வளர்பிறையின் ஏகாதசி திதி முதல் தேய்பிறையின் பஞ்சமி திதி முடிய 10 நாள் விழாவிற்கு இராப் பத்து என்று பெயர். இதில் நம்மாழ்வார் இயற்றிய திருவாய் மொழி ஆயிரம் பாசுரம் இசைக்கப்படும். இதற்கு மறுநாளான இருபத்தியோராவது நாள் ஏனை ஆழ்வார்கள் இயற்றிய முதல், இரண்டு, மூன்று, நான்காம் திருவந்தாதிகள், திருவிருத்தம், திரு ஆசிரியம், பெரிய திருவந்தாதி, பெரிய திருமடல், சிறிய திருமடல், இராமானுச நூற்றந்தாதி முதலானவை அடங்கிய இயற்பா ஆயிரமும் இசைக்கப்படும். துலுக்க நாச்சியார் துலுக்க நாச்சியார் என்பவர் அரங்கநாதரின் மேல் காதல் கொண்ட சுரதானி என்ற இயற்பெயர் கொண்ட இசுலாமியப் பெண்ணாவார். இவருடைய வரலாற்றை மையமாகக் கொண்டு துலுக்க நாச்சியார் நாட்டிய நாடகம் அமைக்கப் பெற்றுள்ளது. இவருக்கு திருவரங்கத்தில் இரண்டாம் பிரகாரத்தில் ஈசான மூலையில் தனி சந்நிதி உள்ளது. இசுலாமிய வழக்கப்படி அகிலும், சந்தனமும் கலந்த தூப்புகை போடுவது இச்சந்நிதியில் நடைபெறுகிறது. . இவருக்கு அரங்கநாதர் இசுலாமியர்களைப் போல கைலி ஆடையுடன் காட்சியளிக்கிறார். திருவரங்கத்தினை டில்லி பாதுசா படையெடுத்து கொள்ளையடித்த போது, டில்லிக்கு அரங்கநாதர் விக்ரகத்தினையும் கொண்டு சென்றார்கள். பாதுசாவின் மகளான சுரதானி என்பவர் அந்த விக்ரகத்தினை கண்டு மனதை பறிகொடுத்தார். அரங்கநாதரை மீண்டும் திருவரங்கத்திற்கு மீட்டுக் கொண்டு வந்தபோது, இளவரசியான சுரதானி அரங்கநாதரை பிரிய மனமின்றி திருவரங்கத்தினை அடைந்தார். இவரை அரங்கனின் ஏழு மனைவிகளுள் ஒருவராக குறிப்பிடுகிறார்கள். வேதாந்த ஆசிரியர்களின் பட்டியல் இது இந்து சமய வேதாந்த ஆசிரியர்களின் பட்டியலாகும். கரிச்சான் குஞ்சு ஆர். நாராயணசாமி என்ற இயற்பெயர் கொண்ட கரிச்சான் குஞ்சு (ஜூலை 10, 1919 - 1992) ஒரு தமிழ் எழுத்தாளர். நாராயணசாமி தஞ்சாவூர் மாவட்டம் நன்னிலம் வட்டம், சேதனீபுரத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் ராமாமிருத சாஸ்திரி- ஈஸ்வரியம்மாள். எட்டு வயது முதல் பதினைந்து வயது வரை பெங்களூரில் வேதமும் வடமொழியும் கற்றார். மதுரை ராமேஸ்வர தேவஸ்தான பாடசாலையில் ஐந்தாண்டுகள் (17 முதல் 22 வயது வரை) தமிழ் பயின்றார். நாராயணசாமியின்21வது வயதில் (1940இல்) அவர் எழுதிய சிறுகதையான “மகிழ்ச்சி”, “ஏகாநதி” என்ற புனைப்பெயரில் "கலைமகள்" இதழில் வெளியானது. கு. ப. ராஜகோபாலனின் (கு.ப.ரா) சீடர்களுள் ஒருவராக இருந்த நாராயணசாமி அவர் மீது கொண்ட பற்றால் “கரிச்சான் குஞ்சு” என்ற பெயரில் எழுதத் தொடங்கினார். (கு.ப.ராவின் புனைப்பெயர் “கரிச்சான்”). 160 சிறுகதைகள், பத்துக்கும் மேற்பட்ட தொகுதிகளாக வந்துள்ளன திருவரங்கன் உலா திருவரங்கன் உலா என்பது மாலிக் கபூர் தலைமையிலான தில்லி சுல்தான் முகம்மது பின் துக்ளக்கின் படைகள் திருவரங்கத்தினை கொள்ளையடித்த வரலாற்று உண்மை சம்பவத்தினை அடிப்படையாக் கொண்டு ஸ்ரீவேணுகோபாலன் என்பவர் எழுதிய நாவலாகும். நாவலின் முதல் பாகம் திருவரங்கன் உலா என்றும், இரண்டாம் பாகம் மதுரா விஜயம் என்றும் வெளிவந்துள்ளது. இசுலாமிய படையெடுப்பில் கொள்ளையடிக்கப்படாமல் காக்க அரங்கநாதரின் உற்சவர் சிலையை வைணவர்கள் பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று பாதுகாத்தனர். இவ்வாறு, திருவரங்கத்திலிருந்து சென்ற அரங்கனின் சிலை மீண்டும் திருவரங்கத்தினை அடைந்ததை திருவரங்கன் உலா என்று நாவலுக்குப் பெயரி்டடுள்ளார். கி.பி.1325-1351 முகம்மதுபின் துக்ளக் திருவரங்கத்தில் உள்ள ரங்கநாதரின் கோவிலை இக்கொள்ளையிட முனைந்தான். பெரும்படையை எதிர்த்து கோவிலையும், கோவிலுள் உள்ள சிலைகள், ஆபரனங்கள் போன்றவற்றையும் காக்க திருவரங்க நகர மக்களும், ஆச்சாரியர்களும், தேவதாசிகளும் போராடினார்கள். நகர வாசிகள் ஆயுதமேந்தி போராடியதாகவும், தேவதாசிகள் இசுலாமிய படையினரை மயக்கி போராடியதாகவும் கருத்துண்டு. இப்போரில் பல வைணவர்கள் கொல்லப்பட்டார்கள். இசுலாமியர்களிடமிருந்து காக்க திருவரங்கத்தினை விட்டு பிற இடங்களுக்கு விலையுயர்ந்த ஆபரணங்கள், விக்ரகங்கள் போன்றவற்றை கொண்டு சென்று மறைத்தார்கள். உற்சவப் பெருமாளை திருக்கோட்டியூர், காளையார் கோவில், அழகர் மலை என்று பல இடங்களில் பதுக்கி வைத்திருந்து, இறுதியில் திருப்பதியில் பல காலம் பாதுகாப்பாக வைத்துள்ளார்கள். பின் கி.பி. 1371ல் உற்சவர் விக்ரகம் திருவரங்கத்திற்கு கொண்டுவரப்பெற்றது. நீலக் கடற்காயல் (ஐஸ்லாந்து) நீலக் கடற்காயல் (ஐஸ்லாந்து) (Blue Lagoon (geothermal spa)) ஐஸ்லாந்தின் மிக சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்று. இது ஒரு எரிமலை மூலம் உருவான ஒரு சூடான நீராவி பகுதியாகும். இந்த இடம் தென்மேற்கு ஐஸ்லாந்திலுள்ள ரேக்ஜேன்ஸ் தீபகற்பத்தில் கிரின்ட்விக் (Grindvik) என்னும் இடத்தில் ஒரு லாவா நிலத்தில் அமைந்துள்ளது. இது கெஃப்லாவிக் (Keflavik) விமான நிலையத்திலிருந்து 13 கிமீ (8 மைல்) தூரத்திலும், ரேக்ஜாவிக் நகரிலிருந்து 39 கிமீ (24 மைல்) தூரத்திலும் அமைந்துள்ளது. இதனருகில் ஒரு புவிவெப்ப மின் உற்பத்தி நிலையம் உள்ளது. இவ்விடம் செயற்கையாக உருவாக்கப்பட்டதாகும். சூடான நீரில் சிலிக்கா மற்றும் சல்பர் போன்ற கனிமங்கள் அதிகமாக உள்ளன. எனவே சொரியாசிஸ் எனப்படும் தோல் நோயை இதன் நீர் குணப்படுத்த உதவுகிறது. இதன் வெப்ப நிலை சராசரியாக 40 டிகிரி செல்சியஸ் உள்ளது. இது ஆண்டு முழுவதும் உறைபனி நிலையிலும் அதே வெப்பத்துடன் இருக்கும். நாரத்தம் தமிழகத்தில் நாரத்தை, நாரத்தம்பழம், நார்த்தங்காய் என்ற நிலைகளில் பயன்பாட்டில் உள்ளது. இது ஆரஞ்சு இனம். இது ஊறுகாய் செய்யவும் சித்த மருத்துவம் மற்றும் உணவிலும் பயன்படுகிறது. எலுமிச்சை அன்று. அதை விடப் பெரியதாக தோல் தடிப்புடனும் உள்ளே வெண்சுளைகளுடன் புளிப்பாக இருக்கும். டெனாலி தேசியப் பூங்கா டெனாலி தேசிய பூங்கா என்பது ஐக்கிய அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள தேசியப் பூங்காவாகும். டெனாலி தேசிய பூங்கா ஜார்ஜ் பார்க்ஸ் தேசிய நெடுஞ்சாலையில் அன்கொரஜிற்கு 250 மைல் வடக்கே உள்ளது. இந்த தேசிய பூங்காவின் பரப்பளவு சுமார் 9500 சதுர மைல்கள் (6 மில்லியன் ஏக்கர்). இந்தப் பகுதி ஆர்க்டிக் வட்டத்தின் அருகில் இருக்கும் ஓர் உறைபனிப் பிரதேசமாகும். இங்கு மிகவும் குளிராக இருந்தாலும் கோடை காலத்தில், வெப்பம் மிதமாக இருக்கும். டெனாலி பூங்காவின் நுழைவு கட்டணம் 50 டாலர் ஆகும். பெரும்பாலான உணவு சேவைகள் கோடை காலத்தில் மட்டுமே திறந்திருக்கும். டெனாலி பூங்காவில் 650 மேற்பட்ட வகையான பூக்கக் கூடிய செடி இனங்கள் உள்ளன. இந்த பூங்காவில் 20320 அடி உயரமான மவுண்ட் மெக் கின்லி மலை உள்ளது. மெக்கின்லி மலை வட அமெரிக்காவின் மிகவும் உயரமான மலையாகும். இம்மலையைச் சுற்றியே டெனாலி தேசியப் பூங்கா அமைந்துள்ளது. பகல் பத்து பகல் பத்து அல்லது திருமொழித் திருநாள் என்பது மார்கழி மாதத்தின் வளர்பிறை பிரதமை திதி முதல் தசமி திதி வரையான பத்து (10) நாட்களுக்கு நடைபெறும் உற்சவர் திருவிழாவாகும். இவ்விழா வைணவ தலங்களான திவ்ய தேசங்களில் கொண்டாடப் படுகிறது. இவ்விழாவின் போது திருமால் விதவிதமான அலங்காரங்களிலும், விதவித வாகனங்களில் காட்சிதருவார். மேலும் இவ்விழாவின் போது, முதல் ஆயிரம் திருப்பல்லாண்டு, கண்ணி நுண் சிறுத்தாம்பு, திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் என இரண்டாயிரம் திருப்பல்லாண்டு பாடப்பெறுகிறது. இராப் பத்து இராப் பத்து அல்லது திருவாய்மொழித் திருநாள் என்பது தசமிக்கு மறுநாளான வளர்பிறையின் ஏகாதசி திதி முதல் தேய்பிறையின் பஞ்சமி திதி வரையான பத்து (10) நாட்கள் நடைபெரும் உற்சவத் திருவிழாவாகும். இக்காலத்தில் திருமால் விதவித அலங்கார வாகனத்தில் காட்சிதருகிறார். இவ்விழாவது வைணவ தலங்களான திவ்ய தேசங்களில் கொண்டாடப்படுகிறது. மேலும் இவ்விழாவின் போது திருவாய் மொழி ஆயிரம் பாசுரம் பாடப்பெறுகிறது. பகற் பத்து 4ஜி 4ஜி ("4G") என்பது கையடக்க தொலைபேசி தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் 4ஆம் தலைமுறை என அழைக்கப்படுகின்றது. 3ஜி என்னும் மூன்றாம் தலைமுறை நடமாடும் தொலைத்தொடர்பு தொழினுட்பத்தைத் தொடர்ந்து, மேம்பாட்டுடன் 4ஜி அறிமுகப்படுத்தப்பட்டது. 4ஆம் தலைமுறை தொழினுட்பம் பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியத்தினால் வரையறுக்கப்பட்ட திறன்களை வழங்க வேண்டும். இத்தொழினுட்பம் திருத்தப்பட்ட கையடக்க வலை அணுகல், இணையவழி ஒலி பரிமாற்றம், விளையாட்டு சேவைகள், உயர்-வரையறு கையடக்கத் தொலைக்காட்சி, காணொளிக்காட்சி, முப்பரிமாணத் தொலைக்காட்சி, மற்றும் மேகக் கணிமை போன்ற சேவைகளுக்கு பொருந்துவதாகவும், இவ்வசதிகள் தற்பொழுது வழங்கப்படும் நிலையிலும், இதனின் மேமபடுத்தப்பட்ட நிலையிலும் வழங்க ஏதுவாகவும் உள்ளது. 4ஜி முதல் முறையாக மொபைல் வை மேக்ஸ் (WiMax) சேவை 2006இல் தென் கொரியாவிலும் மற்றும் எல்.டி.ஈ சேவை நோர்வே, சுவீடன் நாடுகளில் வணிக நோக்கம் கருதி ஆரம்பிக்கபட்டது. 19 பிப்ரவரி 2013 எடிசலாட் ஆப்கானிஸ்தான் 4ஜி (எல்.டி.ஈ) தொழிநுட்பத்தின் பரீட்சாத்த சேவையை தொடங்குவதாக அறிவித்தது. சபரி கொம் (Safaricom) கிழக்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவில் உள்ள ஒரு தொலைத்தொடர்பு நிறுவனம் 2010 அக்டோபரில் 4ஜி சேவையை வழங்குவதாக அறிவித்து பின் 2012 இல் தனது சேவையை வழங்கியது. டெல்ஸ்டிரா 4ஜி எல்.டி.ஈ (LTE) சேவையை 2011 இறுதிக்குள் அனைத்து ஆஸ்திரேலிய தலைநகர் நகரங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிராந்திய மையங்கள் மத்திய வர்த்தக மாவட்டங்களில் 4 ஜி யை மேம்படுத்த விரும்புகிறது என்று, 15 பிப்ரவரி 2011இல் அறிவித்தது. பின் செப்டம்பர் 2011இல் நாட்டின் முதல் 4ஜி எஃப்டி-எல்.டி.ஈ (FD-LTE) சேவை தொடங்கப்பட்டது. 28 ஜூன் 2011 அன்று 4ஜி சேவையை வழங்க தீர்மானித்தது. 2012, ஜூலை 3ஆம் நாள் இந்த நுட்பம் 5 முக்கிய நகரங்களில் தனது பரீட்சாத்த சேவையை தொடங்கியது பின் 2012 ஆண்டின் இறுதியில் சேவை வணிகமக்கபட்டது. 27 ஏப்ரல் 2012, பிரேசில் டெலிகாம் 4ஜி சேவை ஆரம்பிப்பதாக அறிவித்து 2013 ஆரம்பத்தில் 6 நகரங்களில் 4ஜி சேவையை தொடங்கியது. தெலுஸ்(Telus) மற்றும் பெல் கனடா நிறுவனங்கள் 4ஜி வயர்லெஸ் பிராட்பேண்ட் கனடாவில் தொடங்கியது. 22 நவம்பர் 2012 ஆரஞ்சு (Orange) நிறுவனம் 4ஜி திட்டம் தொடங்கப்பட்டது.பின்னர், 29 நவம்பர் 2012 எஸ்.எப்.ஆர்( SFR) 4ஜி சேவை தொடங்கப்பட்டது. இது பிரான்சில் முதல் 4ஜி வர்த்தக வெளியீட்டு இருந்தது. ஜூன் 2011 4 இந்தியாவில் பிஎஸ்என்எல் இந்தியாவின் முதல் 4ஜி வைமேக்ஸ் பிராட்பேண்ட் சேவைகளை கொச்சி கேரளா தொடங்கப்பட்டது. பார்தி ஏர்டெல் ஏப்ரல் 10, 2012 இல் கொல்கத்தாவில் டீ.டி எல்.டி.ஈ (TD-LTE) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியாவின் முதல் 4ஜி டீ.டி எல்.டி.ஈ (TD-LTE) சேவையை தொடங்கியது. டிசம்பர் 2012 முதல் பாதி முதல் இத்தாலியின் முக்கிய நகரங்களில் சிலவற்றில் 4ஜி சேவையை அறிமுகபடுத்தபட்டது. 2012 இறுதியில் தேசிய தொலைத்தொடர்பு ஆணைக்குழு 4 ஜி சேவைகளை தொடங்கியது.2013 இறுதியில் சேவையை முழு நாடு முழுவதும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 2011 இல் சவுதி அரேபியாவின் மொபிலி நிறுவனம் சோதனைக்கு பின் 4ஜி சேவைக்கு தயார் என அறிவித்தது. 2012 இல் ஆல்ஃபா மற்றும் டச் நிறுவனங்கள் லெபனானில் சில மாதங்களுக்கு பிறகு 4ஜி தயாராக இருக்கும் அறிவித்தது.அதிகாரப்பூர்வமாக ஏப்ரல் 2013 இல் தொடங்கப்பட்டது. டிசம்பர் 2011 இல் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் எடிசலாட் நாட்டின் நகர்ப்புற பகுதிகளில் சிலவற்றில் 4ஜி சேவையை வழங்கியது. பிப்ரவரி 2013 இல் ஓமன் நாட்டின் நவ்ராஸ் (Nawras) வணிகரீதியாக 4ஜி தொடங்கியது. ஏப்ரல் 2013 இல் க்யு டெல் (Qtel) (இப்போத ஊரெடூ (Ooredoo) அழைக்கப்படுகிறது) கத்தார்ரில் வணிக ரீதியில் அதன் 4ஜி நடத்த அமைக்கப்படுகிறது. 4ஜி எனப்படும் புதிய நான்காவது தலைமுறை உயர் வேக மொபைல் நெட்வொர்க் சேவை, விரைவில் இங்கிலாந்து கிடைக்க வேண்டும். அதை ரோல் அவுட் ஆரம்பத்தில் 2012 இறுதியில் இங்கிலாந்து முழுவதும் 10 நகரங்களில், பிளஸ் மேலும் ஆறு நகரங்களில் இலக்கு 20 செப்டம்பர் 2007 அன்று வெரிசோன் வயர்லெஸ் நிறுவனம் வோடபோன் குழுவுடன் இணைந்து ஒரு கூட்டு முயற்சி திட்டத்தினை அறிவித்தது.4ஜி தரமான எல் டி ஈ(LTE) வலையமைப்பு தொடர்பாக.அவர்கள் 2010 இறுதிக்குள் தங்களது சேவை தொடங்கும் என்று கூறினார்கள். ரிச்சர்டு டீடிகைண்டு ரிச்சர்டு டெடிகைண்டு ("Richard Dedekind", 1831-1916) ஓர் ஜெர்மானிய கணிதவியலாளர் ஆவார். இவர் இயற்கணிதம், இயற்கணித எண் கோட்பாடு, மெய்யெண் ஆகியவற்றில் முக்கியப் பங்காற்றியுள்ளார். இவர் கணக் கோட்பாட்டில் ஆற்றிய பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. சைவ நூல்களின் பட்டியல் இது சைவ சமய நூல்களின் பட்டியல் கட்டுரையாகும். சிவ தாண்டவங்களின் பட்டியல் இது சிவ தாண்டவங்களின் பட்டியல் கட்டுரையாகும். நாதன் கோயில் நாதன் கோயில் என்ற திருநந்திபுரவிண்ணகரம் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட (மங்களாசாசனம் ) இத்தலம் கும்பகோணத்திற்கு தெற்கே சுமார் 3 மைல் தொலைவில் உள்ளது. பழங்காலத்தில் இவ்விடம் செண்பகாரண்யம் என அழைக்கப்பட்டது. மன்னார்குடி தொடங்கி இந்த நாதன் கோயில் முடிய உள்ள பகுதிக்கே செண்பகாரண்யம் என்று பெயர். இக்கோவிலின் மூலவர் ஜெகந்நாதன் (வீற்றிருந்த திருக்கோலம்) இறைவி செண்பகவல்லி ஆவார். இக்கோயிலின் தீர்த்தம் நந்தி தீர்த்த புஷ்கரிணி ஆகும். இக்கோயிலின் விமானம் மந்தார விமானம் என்ற அமைப்பினைச் சேர்ந்தது. காளமேகப் புலவர் பிறந்த ஊர். இத்திருக்கோயில் தக்ஷிண ஜகந்நாதம் என்று அழைக்கப்படுகின்றது. சிவபெருமானின் வாகனமாகவும், கயிலாய மலையில் வாயிற்போக்கனாகவும், பூதகணங்களின் தலைவராகவும் உள்ளவர் நந்தி தேவர். சிவ பக்தியில் சிறந்தவர் இவர். இவருடைய அனுமதி பெற்றுவிட்டுத் தான் சிவாலயங்களில் நாம் தரிசனம் செய்ய முடியும். கயிலை மலைக்குள் அனுமதி இல்லாமல் இராவணன் நுழைய முற்பட்டபோது அவனுக்கும், நந்தி தேவருக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது. அப்போது குரங்கு ஒன்றால் உன் நாடு இலங்கை அழிந்து போகும் என்று சாபமிட்டார். சிவனை அவமதிக்கும் வகையில் தாட்சாயணியின் தந்தை தட்சன் ஒரு யாகம் நடத்தினான். அந்த யாக சாலையில் பூத கணங்களுடன் புகுந்து அதகளம் செய்தார். தட்சனின் தலை அறுபட்டு விழவும், யாகத்துக்கு துணை போன தேவர்கள் சூரபதுமனால் வதைபடவும் சாபம் கொடுத்தவர் நந்தி தேவர் தான். இத்தகைய நந்தி தேவர் திருவைகுண்டம் வந்த பொழுது, அங்கு காவலாக இருந்த துவாரபாலகர்களின் அனுமதி பெறாமல் உள்ளே நுழைய முயன்றார். அவர்கள் தடுத்தபோது அதை பொருட்படுத்தாமல் உள்ளே சென்றார். இதனால் கோபமடைந்த துவாரபாலகர்கள், நந்தி தேவரின் உடல் முழுதும் வெப்பம் ஏறி சூட்டினால் துன்பமுறுவாய் என்று சாபமிட்டனர். அவர் துடித்துப் போனார். பலரிடமும் உபாயம் கேட்டார். எரிச்சல் தீரவில்லை. இறுதியில் சிவனிடம் இதைச் சொல்லி தீர்வு கேட்டார். அதற்கு இறைவன், 'சகல விதமான பாவங்களையும் போக்கும் செண்பகாரண்யம் எனும் தலம் கும்பகோணத்திற்குத் தெற்கே அமைந்துள்ளது. அங்கு போய் மகாவிஷ்ணுவை நோக்கி தவம் செய்து விமோசனம் பெற்றுக்கொள்' என்றார். அதன்படி நந்தி தேவர் இங்கு வந்து தவம் செய்து, சாப நிவர்த்தி பெற்றார். அத்துடன், தான் இங்கு வந்து தவம் செய்து பேறு பெற்றமையால், தன் பெயராலேயே இத்தலம் விளங்க வேண்டும் என்று அருள் பெற்றார்.அதன் பிறகு நந்திபுரம் என்றும், நந்திபுர விண்ணகரம் என்றும் பெயர் பெற்றது. திருமாலின் திருமார்பில் திருமகள் உறையும் பாக்கியம் பெற்றதும் இங்குதான். திருப்பாற்கடலில் பரந்தாமனின் பாதங்களையே பற்றி எந்நேரமும் அவரது திருவடியிலேயே இருந்த அன்னை, ஒளி வீசும் அவர் மார்பைப் பார்த்து ஒரு முறை பிரமித்தார். தான் எந்நேரமும் அங்கேயே வாசம் செய்யவேண்டும் என்று விரும்பினார். அதற்காக, செண்பகாரண்யம் எனப்படும் இந்த தலம் வந்து திருமாலை வேண்டி கடும் தவம் செய்தார். பாற்கடலில் திருமகளைப் பிரிந்து தனித்திருந்த திருமாலும் ஓர் ஐப்பசி மாத சுக்லபட்ச வெள்ளிக்கிழமையில் அலைமகளுக்குக் காட்சி அளித்தார். அன்னை மனம் மகிழ்ந்தாள். 'உன் விருப்பப்படி நீ எம் மார்பில் இனி உறையும்' என்று ஆசிர்வதித்தார். கிழக்கு நோக்கி திருமகளை எதிர்கொண்டு ஏற்றமையால் இங்கு பெருமாள் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். திருமாலைப் பிரிந்து தவம் இருந்து மீண்டும் தரிசனம் பெற்று இணைந்தமையால் திருமணப் பிரார்த்தனைக்கு இது உகந்த தலமாகும். தாயாருக்கு ஒன்பது வெள்ளிக்கிழமைகளில் தொடர்ந்து அர்ச்சனை செய்து, பாசிப்பயறு சுண்டல் வைத்து பிரார்த்தித்து வர நினைத்த காரியம் கைகூடும். சிபிச் சக்கரவர்த்திக்குப் பெருமாள் காட்சி தந்து அருளிய தலமாகும். தன்னிடம் வந்து அடைக்கலமான புறாவின் எடைக்குச் சமமாக, தானே தராசின் மறு தட்டில் அமர்ந்து தன்னை காணிக்கை ஆக்கிய சிபிச் சக்கரவர்த்தியைக் காண பெருமாள் அவருக்கு காட்சி அளித்தார். இதற்காக கிழக்கு நோக்கி இருந்த பெருமாள் மேற்கு நோக்கி திரும்பினார். விஜயரங்க சொக்கப்ப நாயக்கர் என்னும் நாயக்க மன்னர் தன் அன்னைக்குத் தோன்றிய காரணம் காண இயலா (குணமநோய்) நோயை நீக்க வேண்டி இப்பெருமானிடம் இரைந்து நிற்க, அவ்விதமே நோய் நீங்கியதால் இக்கோவிலுக்கு பல அரிய திருப்பணிகள் செய்தார். ஒரு ராஜா அணிய வேண்டிய சகல ஆபரண அணிகலன்களுடன் நாயக்க மன்னர் தமது இரண்டு மனைவியருடனும், தாயுடனும் இங்கு நின்றுள்ள (சிற்பங்கள்) கோலம் மிகவும் அழகானதாகும். நாதன் கோயில் காளமேகப் புலவரின் பிறப்பிடம் ஆகும். கதிரச்சம் கதிரச்சம் ("radiophobia") என்பது எக்சு-கதிர் போன்ற அயனாக்கும் கதிர்வீச்சுக்கள் பற்றிய அச்சத்தைக் குறிக்கும். இச்சொல் பொதுவாக மருத்துவ நோக்கில் அல்லாது அணுக்கரு ஆற்றல் குறித்த பொதுவான எதிர்ப்பலை பற்றியதே. சிலருக்கு அதிக உயரத்தையோ பூச்சிகளையோ இருட்டையோ இப்படி பலபல பொருட்களைப் பற்றிய அச்சம் உள்ளது. அதுபோல் சிலருக்கு கதிர் வீச்சினைப் பற்றிய அச்சம் உள்ளது. இதற்கு காரணம் இல்லாமலில்லை. ஆனாலும் இது மிகைப்படுத்தப் பட்டுள்ளது. போதிய கவனம் எடுத்துக் கொண்டால் இந்த அச்சம் தேவையற்ற ஒன்று எனத் தெரியும். அணு உலைகளை அடுத்து காணப்படும் கதிர் வீச்சு இயற்கைப் பின்புல அளவைவிடக் குறைவானதே. நமது உடலில் பொட்டாசியம் 40, கரி 14, மிகவும் குறைந்த அளவு பிற கதிரியக்கம் உடைய தனிமங்களும் காணப்படுகின்றன. திருஅரிமேய விண்ணகரம் திருஅரிமேய விண்ணகரம் அல்லது குடமாடு கூத்தன் கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் சீர்காழிக்கு கிழக்கே ஐந்து மைல் தொலைவில் திருநாங்கூரில் அமைந்துள்ளது. கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து ஆடிய இறைவன் என்பதால் குடமாடு கூத்தன் என்ற பெயர். உதங்க முனிவர் இறைவனைக் குறித்து தவம் புரிந்து, கோபால கண்ணனாக இத்தலத்தில் பெருமாளைத் தரிசித்ததாக ஒரு வரலாறும் உண்டு. தை அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூரில் நடைபெறும் கருடசேவைக்கு இவரும் எழுந்தருள்வார். திருமங்கையாழ்வார் இத்தலத்தினை 10 பாக்களில் பாடியுள்ளார். ஆதித்தமிழன் ஆதித்தமிழன் என்னும் இதழ் தமிழ் நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி என்னும் நகரில் இருந்து திங்கள்தோறும் வெளிவருகிறது. இது சு. நடராசன் என்பவரால் 2011 பிப்ரவரி திங்களில் தொடங்கப்பட்டது. ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தின் கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் பரப்புவதற்காக இவ்விதழ் வெளியிடப்படுகிறது. "வஞ்சிக்கப்பட்டோரின் வாழ்வுரிமைப் போராளி!" என்பது இவ்விதழின் முத்திரைத்தொடர் ஆகும். ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளரான அ. வினோத் என்பவரே இவ்விதழின் ஆசிரியர் ஆவார். சு. நடராசன் என்பவர் இதழின் பதிப்பாசிரியராகவும் கா. சா. சரவணன், யாக்கன் என்போர் ஆசிரியர் குழு உறுபினர்களாகவும் பணியாற்றுகின்றனர். தமிழ் முழக்கம் தமிழ் முழக்கம் என்னும் இதழ் தமிழ் நாட்டில் சென்னை நகரில் இருந்து வெளிவரும் திங்களிருமுறை இதழாகும். தமிழ் முழக்கம் பதிப்பகத்தின் உரிமையாளரான சாகுல் அமீது என்பவரால் 2010 திசம்பர் 1 ஆம் நாள் தொடங்கப்பட்டது. சீமான் தலைமையில் இயங்கும் நாம் தமிழர் என்னும் இயக்கத்தின் கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் பரப்புவதற்காக இவ்விதழ் வெளியிடப்படுகிறது. இவ்விதழில் சாகுல் அமீது ஆசிரியராகவும் பேராசிரியர் மருதமுத்து சிறப்பாசிரியராகவும் அன்புத்தென்னரசன் பொறுப்பாசிரியராகவும் ம. போர்க்கொடி, மணி செந்தில், சிபி சந்தர், மு. ப. செ. நாதன் ஆகியோர் உதவி ஆசிரியர்களாகவும் பணியாற்றுகின்றனர். வேற்றுரு விலங்கு வேற்றுரு விலங்கு (monster) என்பது திகில் புனைவு மற்றும் சாகசப் புராணங்களில் விபரிக்கப்படும் அச்சமூட்டக்கூடிய அல்லது மாற்றுப் பலங்கொண்ட படைப்புகளாகும். திருத்தேவனார்த் தொகை திருத்தேவனார்த் தொகை என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளுள் ஒன்று. இதனைக் கீழ்ச்சாலை என்றும் குறிப்பிடுவர். திருநாங்கூரிலிருந்து சுமார் 1 மைல் தொலைவில் மன்னியாற்றின் தென்கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. திரு நாங்கூரில் பதினொரு திருப்பதிகளிலும் கோயில் கொண்டுள்ள நாராயணனைச் சேவிக்க தேவர்கள் வந்த போது தேவர்கள் இந்த இடத்தில் கூட்டம் கூட்டமாய் அவை கூடி நின்றதால் தேவனார்த் தொகை ஆயிற்று. தன்னம்பிக்கை (இதழ்) தன்னம்பிக்கை என்னும் இதழ் தமிழ் நாட்டின் கோயமுத்தூர் நகரில் இருந்து வெளிவரும் சுயமுன்னேற்ற திங்கள் இதழாகும். கோயமுத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றிய முனைவர் இல. செ. கந்தசாமி என்பவரால் 1989 ஆம் ஆண்டில் இவ்விதழ் தொடங்கப்பட்டது. அவரது மறைவிற்குப் பின்னர் இல. செ. க.வின் தன்னம்பிக்கை என்னும் பெயரில் வெளிவரும் இதழ் முத்திரைத்தொடர் முன்னேற்றத்தின் மூலதனம் என்பது ஆகும். இவ்விதழில் டாக்டர் க. கலைச்செல்வி ஆசிரியராகவும் டாக்டர் பெரு. மதியழகன் கெளரவ ஆசிரியராகவும் என். செல்வராஜ் இணை ஆசிரியராகவும் பணியாற்றுகின்றனர். திருநாங்கூர் பதினொரு திருப்பதிகள் திருநாங்கூர் பதினொரு திருப்பதிகள் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் சோழநாட்டுத் திருப்பதிகளுள் திருநாங்கூர் என்னும் ஊரிலுள்ள ஆறு திவ்ய தேசங்களையும் இவ்வூரைச் சுற்றி அருகருகே, ஒன்று அல்லது ஒன்றரை மைல் தூரங்களில் உள்ள 5 திவ்ய தேசங்களையும் சேர்த்து வழங்கப்படும் பெயராகும். ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூரில் திருமணிமாடக் கோயில் என்று அழைக்கப்படும் நாராயணப் பெருமாள் சன்னதியில் ஆண்டுதோறும் நடைபெறும் கருடசேவை திருவிழாவுக்கு இந்த 11 கோயில்களின் உற்சவர் சிலைகளும் எடுத்துவரப்படும். இந்த 11 பெருமாள்களையும் திருமங்கையாழ்வார் பாசுரத்தால் ஒருவருக்கு அடுத்து ஒருவராக மங்களாசாசனம் செய்வார்கள். அதன்பின் திருமங்கையாழ்வாரை மணவாள மாமுனிகள் பாசுரத்தால் மங்களாசாசனம் செய்வார். இந்தக் கருட சேவையை காண்பதற்கு இந்தியாவெங்கிலும் உள்ள பக்தர்கள் கூடுவர். (திருநாங்கூருக்கு வெளியே இருக்கும் கோயில்கள்) ஆண்டுதோறும் இந்த பெருமாள்களை மங்களாசாசனம் செய்ய, திருமங்கையாழ்வார் இங்கு வருவதாக பக்தர்களின் நம்பிக்கை. திருநாங்கூர் சுற்றி உள்ள வயல் வெளிகளில் கருடசேவைக்கு (முதல்நாள் நள்ளிரவில்) காற்றினால் நெற்பயிர்கள் சலசல என்று இரிய அந்த சத்தத்தைக் கேட்ட உடன் திருமங்கையாழ்வார் பிரவேசித்துவிட்டதாக பக்தர்கள் கூத்தாடுவதும், திருமங்கையாழ்வாரால் மிதிக்கப்பட்ட வயல்வெளிகளில் மிகுந்த நெல் விளையும் என்பதும் இப்பகுதியில் நிலவும் நம்பிக்கையாகும். வால்ட் டிஸ்னி உலகம் வால்ட் டிஸ்னி உலகம் ("Walt Disney World") அல்லது வோல்ட் டிஸ்னி உலக ஓய்விடம் சுருக்கமாக டிஸ்னி உலகம் என்பது உலகின் மிக அதிகமானோர் செல்லும் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு ஓய்விடமாகும். இது அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள பியூனா விஸ்டா என்ற ஏரியில் அமைந்துள்ளது. வால்ட் டிஸ்னி நிறுவனத்தால் பராமரிக்கப்படும் இவ்விடத்தின் பரப்பளவு 30,080 ஏக்கர் (12,173 ஹெக்டயர்; 47 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டது. வால்ட் டிஸ்னி உலகில் நான்கு கேளிக்கைப் பூங்காக்களும் மற்றும் இரண்டு நீர்ப் பூங்காக்களும், இருப்பத்து நான்கு ஓய்வு விடுதிகளும் மற்றும் இரு ஆரோக்கிய நீரூற்று மற்றம் உடற்பயிற்சி நிலையங்கள், ஐந்து கோல்ப் விளையாட்டிடங்கள் மற்றும் பிற பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன. குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம் குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் நூலின் மதுரைக் காண்டத்தில் வருகின்ற எழாவது படலமாகும். இப்படலத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வர் திருமண விருந்தில் மீனாட்சிக்கு ஏற்பட்ட கர்வத்தினை சிவபெருமான் குண்டோதரன் என்ற தனது பூதகனத்தினை வைத்து தீர்த்தமை இடம்பெற்றுள்ளது. சுந்தரர் மீனாட்சி திருமணம் மதுரையில் நடந்தது. அதன் பின் லட்சக்கணக்கான மக்கள் சாப்பிட்ட பின்னும் மடப்பள்ளியில் உணவு அப்படியே இருந்தது. மணமகளான மீனாட்சியிடம் அரண்மனை ஆட்கள் இதைப் பற்றி கூறினார்கள். மீனாட்சிக்கு இத்தனை மக்கள் உண்டபின்னும் தன் அரண்மனை உணவு தீராமல் இருப்பது கண்டு, கர்வம் வந்தது. சுந்தரேசரிடம் மணமகன் வீட்டில் சாப்பிடாமல் யாரேனும் உள்ளார்களா? என்று மீனாட்சி வினவினார். சுந்தரேசர் தனது பூதகணங்களை அழைத்து உணவருந்தாதவர் யாரென வினவினார். குண்டோதரன் என்ற பூதம் மட்டும் திருமண வேலைகளில் மூழ்கியிருந்தமையால் உணவருந்தாமல் இருந்தார். அதை அறிந்த சிவபெருமான் குண்டோதரனை உணவருந்தி விட்டு வரும்படி கூறினார். அத்துடன் வடவைத்தீ எனும் பசியை உண்டாக்கினார். மடப்பள்ளியில் உள்ள அனைத்து உணவுகளையும் குண்டோதரன் உண்டார். அதன் பிறகும் பசி அடங்கவில்லை. மீண்டும் சமையல் செய்து உணவிட்டனர், அதையும் குண்டோதரன் உண்டார். இதையறிந்த மீனாட்சி சுந்தரேசரின் லீலை என்பதை அறிந்தார். ஈசனை சரணடைந்தார். குண்டோதரனின் பசியை நீக்க சுந்தரர் அன்னப்பூரணியை அழைத்தார். குண்டோதரனின் பசியடங்கியது, ஆனால் நீர் நிலைகள் அனைத்திலும் உள்ள நீரைக் குடித்தாலும், தாகம் மட்டும் அடங்கவில்லை. இதனால் சிவபெருமான் தனது ஜடாமுடியில் இருந்த கங்கையை குண்டோதரனின் தாகம் தீர்க்குமாறு கூறினார். மதுரையில் நதியாக ஓடிய கங்கையை வைகை என்று அழைக்கின்றனர். இதுபற்றி அன்னக் குழியும் வைகையும் அழைத்த படலம் என்பதில் செய்தியுள்ளது. செருமானிய ஒருங்கிணைப்பு செருமானிய ஒருங்கிணைப்பு ("unification of Germany") என்பது, 19 ஆம் நூற்றாண்டிலே 1871 ஆம் ஆண்டு சனவரி 18 ஆம் தேதி, பிரான்சில் உள்ள வெர்சாய் அரண்மனையில் அரசியல் அடிப்படையிலும், நிர்வாக அடிப்படையிலும் ஒருங்கிணைந்த செருமன் தேசிய அரசு உருவானதைக் குறிக்கும். பிரெஞ்சு-பிரசியப் போரில் பிரான்சு தோல்வியுற்றதைத் தொடர்ந்து, இங்கு கூடிய செருமானிய அரசுகளின் இளவரசர்கள் பிரசியாவின் வில்லியமை செருமன் பேரரசின் பேரரசராக அறிவித்தனர். ஆனால் அதிகார பூர்வமற்ற வகையில் பெரும்பாலான செருமன் மொழி பேசும் மக்களுடைய நாடுகளின் கூட்டமைப்புக்கான மாற்றம் முன்னரே ஏற்பட்டுவிட்டது. இந்த மாற்றம் பிரபுக்கள் தமிடையே எற்படுத்திக்கொண்ட முறையானதும், முறை சாராததுமான பல்வேறு கூட்டணிகளூடாக உருவானது. ஆனாலும், சில தரப்பினரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் காரணமாக கூட்டிணைப்பு முயற்சி நீண்டகாலமாகத் தடைப்பட்டிருந்தது. இந்த ஒருங்கிணைப்பு, புதிய நாட்டின் குடிமக்களிடையே இருந்த பல்வேறு மத, மொழி, சமூக, பண்பாட்டு வேறுபாடுகளை வெளிக்கொணரலாயிற்று. இதனால், 1871 ஆம் ஆண்டானது பெரிய ஒருங்கிணைப்புக்கான தொடர் முயற்சிகளின் ஒரு கட்டத்தையே குறித்து நின்றது எனலாம். இல. செ. கந்தசாமி இல. செ. கந்தசாமி (திசம்பர் 24, 1939 – ஏப்ரல் 6, 1992), தமிழ்ப் பேராசிரியரும் எழுத்தாளரும் இதழாளரும் ஆவார். இவர் தனது வாழ்க்கையை பள்ளி ஆசிரியராகத் தொடங்கி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையின் தலைவராக உயர்ந்தவர். இவர் புதினங்கள், புதுக்கவிதைகள், தன்முன்னேற்ற நூல்கள், உழவு குறித்த நூல்களை எழுதியுள்ளார். இல. செ. கந்தசாமி 1939 திசம்பர் 24 ஆம் நாள் இராசிபுரத்திற்கு அருகில் உள்ள இலக்கபுரம் என்னும் சிற்றூரில் பிறந்தார். கந்தசாமி பள்ளிக் கல்வியை தனது ஊரிலேயே பெற்றார். 1957 ஆம் ஆண்டு முதல் 1961 ஆம் ஆண்டு வரை கல்லூரியில் பயின்று தமிழ்ப் புலவர் பட்டம் பெற்றார். பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றிக்கொண்டே தனியே பயின்று கலை முதுவர் பட்டத்தில் பல்கலைக் கழக அளவில் முதன்மையானராகத் தேறினார். 1978 ஆம் ஆண்டில் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆய்விற்காகப் பதிவு செய்தார். 1985 நவம்பர் 13 ஆம் நாள் முனைவர் பட்டம் பெற்றார். கமலம் என்பவரை கந்தசாமி 1967 ஆகத்து 21 ஆம் நாள் மணந்தார். 1961ஆம் ஆண்டில் தமிழாசிரியராக உயர்நிலைப் பள்ளியொன்றில் பணியாற்றினார். 1972ஆம் ஆண்டில் கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகப் பணியேற்றார். கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகம் வெளியிட்ட ஏர் உழவன் என்னும் இதழின் ஆசிரியராக 1975ஆம் ஆண்டில் கந்தசாமி பொறுப்பேற்றார். பின்னர் வளரும் வேளாணமை என்னும் இதழின் ஆசிரியப் பொறுப்பையும் ஏற்றார். 1988 ஆம் ஆண்டில் தன்முன்னேற்றத்தை வலியுறுத்தும் தன்னம்பிக்கை என்ற மாத இதழைத் தொடங்கினார். அவரது மறைவுக்குப் பிறகு அவரது உறவினர்களும் நண்பர்களும் இவ்விதழைத் தொடர்ந்து நடத்தி வருகின் கந்தசாமி 1986ஆம் ஆண்டில் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்சு ஆகிய நாடுகளுக்கு 40 நாள்கள் பயணமாகச் சென்று திரும்பினார். 1987 ஆம் ஆண்டில் தாய்லாந்து, ஆங்காங்கு, தென்கொரியா, சப்பான், பிலிப்பைன்சு, சிங்கப்பூர் ஆகிய தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் சென்று திரும்பினார். 1988 ஆம் ஆண்டில் ஆறாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கலந்துகொள்ள மலேசியா சென்றார். பின்னர் அங்கிருந்து சிங்கப்பூர் சென்று திரும்பினார். 1990 ஆம் ஆண்டில் இசுரேல், சோர்டான், எகிப்து ஆகிய நாடுகளுக்குச் சென்று திரும்பினார். இல. செ. கந்தசாமி 1992 ஏப்ரல் 6 ஆம் நாள் கோயமுத்தூரில் மரணமடைந்தார். வல்லு வல்லு என்பது சங்ககால விளையாட்டுகளில் ஒன்று. இதில் பல வகை உண்டு. எல்லாம் பொழுதுபோக்குக்காக விளையாடப்படுபவை. இது ஓர் ஊழ்த்திற விளையாட்டு. இந்த விளையாட்டில் வல்லநாய் என்னும் உருட்டுகாய் உருட்டப்படும். அதில் வரும் எண்ணுக்கு ஏற்ப அரங்குக்கட்டங்களில் கட்டுகாய்கள் கட்டப்படும். கட்டுகாய்களைக் கட்டுவது உத்தித்திறன். இதுபோன்ற ஆட்டங்களில் வெற்றி பெற்றவர்களை இக்காலத்தில் 'பழம் பெற்றவர்' எனக் கூறுகின்றனர். இந்த விளையாட்டைப்பற்றித் தொல்காப்பியமும், சங்கநூல்களும் குறிப்பிடுகின்றன. வல்லநாய் எனப்பட்ட வல்லுக்காயின் அளவு பருவ மகள் முலை அளவினது என்று குற்றாலக் குறவஞ்சி நூல் குறிப்பிடுகிறது. வீளை வீளை என்பது வாயால் எழுப்பப்படும் ஒருவகை இசை. உல்லாசமாக உலவும் காலத்தில் சிறுவர் வீளை ஒலியை இசையுடன் எழுப்பி மகிழ்வர். வாயைக் குவித்து எழுப்பும்போது அது இன்னிசையாக வரும். வாயில் கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் சேர்த்து வைத்தோ, ஆள்காட்டி விரலை மட்டும் மடித்து வைத்தோ எழுப்பப்படும் வீளை ஒலி பேரொலியாக இருக்கும். விரல் வைத்து ஒலிக்கும் வீளையைச் சங்கப்பாடல்கள் மடிவிடு வீளை எனக் குறிப்பிடுகின்றன. காதலன் காதலியின் கவனத்தை ஈர்க்க வீளையிசையைப் பயன்படுத்துவதும் உண்டு. தொழிலுக்குப் பயன்படும் வீளையிசை பற்றிச் சங்கப்பாடல்கள் சுவையான செய்திகளைத் தருகின்றன. ஆண்பருந்து பெண்பருந்தை அழைக்கும் ஒலி அம்பு பாயும் ஒலி, ஆகியவை வீளை ஒலிக்கு உவமைகள். காக்கைச் சிறகினிலே (இதழ்) காக்கைச் சிறகினிலே என்னும் இதழ் தமிழ் நாட்டின் சென்னை நகரில் இருந்து வெளிவரும் இலக்கியத் திங்கள் இதழ் ஆகும். இவ்விதழ் வி. முத்தையா என்பவரால் 2011 அக்டோபர் 1 ஆம் நாள் சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள இக்சா அரங்கில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்டது. முதல் மூன்று இதழ்கள் (2011 அக்டோபர், நவம்பர் திசம்பர்) மாதிரி இதழ்களாக வெளியிடப்பட்டன. 2012 சனவரி திங்கள் முதல் பதிவுபெற்ற இதழாக வெளியிடப்படுகிறது. இவ்விதழிற்கு வி. முத்தையா ஆசிரியராகவும் வெளியிடுபவராகவும் இருக்கிறார். வைகறை இதழாசிரியராக இருக்கிறார். அழகிய பெரியவன், இரா. எட்வின், ச. முகில்நிலா, ச. மேகனா ஆகியோர் ஆசிரியர் குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர். உயிர் எழுத்து (இதழ்) உயிர் எழுத்து என்னும் இதழ் தமிழ் நாட்டில் திருச்சி நகரில் இருந்து வெளிவரும் திங்கள் இதழாகும். சுதீர் செந்தில் என்பவரால் 2007 செப்டம்பர் திங்கள் தொடங்கப்பட்டது. இவ்விதழில் சுதீர் செந்தில் ஆசிரியராகவும் சிபிச் செல்வன் நிர்வாக ஆசிரியராகவும் பணியாற்றுகின்றனர். யூமா வாசுகி, கரிகாலன், இந்திரா, வெ. சுப்பிரமணிய பாரதி, நரேந்திரன் ஆகியோர் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றுள்ளனர். . புதிய தரிசனம் புதிய தரிசனம் என்னும் இதழ் தமிழ் நாட்டின் சென்னை நகரில் இருந்து வெளிவரும் திங்கள் இருமுறை இதழாகும். இவ்விதழ் எசு. செயக்குமார் என்பவரால் 2012 செப்டம்பர் 1 ஆம் நாள் தொடங்கப்பட்டது. இவ்விதழில் எசு. செபக்குமார் ஆசிரியராகவும் செந்தில் பொறுப்பாசிரியராகவும் ப. திருமலை சிறப்பாசிரியராகவும் பணியாற்றுகின்றனர். பூங்காற்று தனசேகர், பொன்மூர்த்தி ஆகியோர் ஆசிரியர் குழுவில் இடம்பெற்று உள்ளனர். வெர்சாய் அரண்மனை வெர்சாய் அரண்மனை அல்லது வேர்சாய் அரண்மனை ("Palace of Versailles", அல்லது ), அல்லது வெர்சய் எனப்படுவது பிரான்சில் வேர்சாய் நகரில் அமைந்துள்ள ஓர் அரச மாளிகையாகும். இது ஒரு அழகான அரண்மனை. இது 1682 முதல் 1789 வரை அதிகார மையமாக இருந்தது. இந்த அரண்மனையைக் கட்டுவதற்கு 50 ஆண்டுகள் ஆனது. இந்த அரண்மனை முழுமையான மன்னராட்சி முறைக்கு அடையாளமாக உள்ளது. இந்த அரண்மனையை உருவாக்க 2 பில்லியன் டாலர்கள் செலவானது. அரசர்கள் மற்றும் அரசிகள் மூன்று தலைமுறையாக இங்கு வாழ்ந்து வந்தனர். அரண்மனையைச் சுற்றி 2000 ஏக்கரில் அழகான பசுமையான தோட்டங்கள் உள்ளது . ஒவ்வொரு வருடமும் 210,000 மலர்கள் இந்த தோட்டத்தில் பயிரிடப்படும். மிக்கேல் (அதிதூதர்) மிக்கேல் (, ஒலிப்பு: மிக்காயேல், "Micha'el" அல்லது "Mîkhā'ēl"; , "Mikhaḗl"; , , "Mīkhā'īl, ") எனப்படுவர் யூதம், கிறித்தவம், இசுலாம் ஆகிய சமயங்களின் நம்பிக்கையின் படி ஓர் தேவதூதர் ஆவார். கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, அங்கிலிக்கம், லூதரனியம் ஆகிய சபைகள் இவரை புனிதராகவும், அதிதூதராகவும் கொள்கின்றன. இவரை தலைமை தூதர் என விவிலியம் குறிக்கின்றது. எபிரேயத்தில் மிக்கேல் என்னும் பெயருக்கு "கடவுளுக்கு நிகர் யார்?" என்று பொருள். பழைய ஏற்படான எபிரேய விவிலியத்தில், தானியேல் நூலில் மிக்கேல் பற்றி தானியேல் (தானியேல் 10:13-21) குறிப்பிடுகின்றார். அவர் உண்ணா நோன்புடன் ஓர் காட்சி காண்கிறார். அதில் ஒரு தூதர் மிக்கேல் இஸ்ரயேலின் பாதுகாப்பாளர் என மிக்கேல் அழைக்கப்படுகின்றார். தானியேல் மிக்கேலை "தலைமைக் காவலர்" என்று அழைக்கிறார். பின்னர் அதே காட்சியில் (தானியேல் 12:1) ""கடைசி காலத்தில்" பின்வரும் நிகழ்ச்சிகள் மிக்கேலின் பங்கு பற்றி தானியேலுக்கு அறிவுறுத்தபடுகிறது வெளிப்படுத்துதல் நூலில் விண்ணகத்தில் நடந்த போர் பற்றி குறிப்பிடப்படுகிறது. பின்வரும் விவிலிய வசனங்கள் அதை குறிக்கின்றது (வெளி 12 அதிகாரம் ) 7. பின்னர் விண்ணகத்தில் போர் மூண்டது. மிக்கேலும் அவருடைய தூதர்களும் அரக்கப் பாம்போடு போர் தொடுத்தார்கள்: அரக்கப் பாம்பும் அதன் தூதர்களும் அவர்களை எதிர்த்துப் போரிட்டார்கள். 8 அரக்கப் பாம்பு தோல்வியுற்றது. விண்ணகத்தில் அதற்கும் அதன் தூதர்களுக்கும் இடமே இல்லாது போயிற்று. 9 அப்பெரிய அரக்கப் பாம்பு வெளியே தள்ளப்பட்டது. அலகை என்றும் சாத்தான் என்றும் அழைக்கப் பெற்ற அதுவே தொடக்கத்தில் தோன்றிய பாம்பு. உலகு முழுவதையும் ஏமாற்றிய அது மண்ணுலகுக்குத் தள்ளப்பட்டது: அதன் தூதர்களும் அதனுடன் வெளியே தள்ளப்பட்டார்கள். யூதா 1 ஆம் அதிகாரம் ஒன்பதாம் வசனத்தில், மிக்கேல் பற்றி குறிப்பிடப்படுகின்றது 9. தலைமைத் தூதரான மிக்கேல், மோசேயின் உடலைக் குறித்து அலகையோடு வழக்காடியபோது அதனைப் பழித்துரைத்துக் கண்டனம் செய்யத் துணியவில்லை. மாறாக, ஆண்டவர் உன்னைக் கடிந்து கொள்வாராக என்று மட்டும் சொன்னார். மிக்கேல் (அரபு மொழி: ميخائيل, Mīkhā'īl) குரான்னில் குறிப்பிட பட்ட இரண்டு ஆதிதூதாதரில் ஒருவர் ஆவார். (மற்றவர் கிப்ரில் என்று அழைக்க பட்ட கபிரியேல்). குரானில் ஸுரா 2:98 இல் மிக்கேல் பற்றி குறிப்பிடப்படுகிறது எவன் அல்லாஹ்வுக்கும், அவனுடைய மலக்குகளுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீக்காயிலுக்கும் பகைவனாக இருக்கிறானோ, நிச்சயமாக (அவ்வாறு நிராகரிக்கும்) காஃபிர்களுக்கு அல்லாஹ் பகைவனாகவே இருக்கிறான். சில இஸ்லாமியர் ஸுரா 11:69 இல் குறிப்பிடபட்டது போல், இப்ராஹிம் அவர்களை சந்தித்த மூன்று தூதரில் ஒருவர் என்று நம்புகிறார்கள் திருமணிமாடக் கோயில் திருமணிமாடக் கோயில் அல்லது மணிமாடக் கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநாங்கூரில் அமைந்துள்ளது. அழகிய உப்பரிகைகளுடன் கூடிய மாடங்களைக் கொண்ட வீடுகள் நிறைந்து இங்கு இறைவன் எழுந்தருளியிருக்கின்ற காரணத்தால் திருமணிமாடக் கோயில் எனப்பெயர் வந்ததாகக் கூறுவர். பத்ரிகாசிரமத்தில் இருக்கும் நாராயணனே அதேபோன்ற அமர்ந்த கோலத்தில் இருப்பதாக நம்பிக்கையாகும். திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளின் இறைவர்களும் இங்கு எழுந்தருளும் திருநாங்கூர் கருடசேவைத் திருவிழா இந்தக் கோயிலின் முன்புதான் நடைபெறுகிறது. இராமானுஜருக்கு நாராயண மந்திரத்தை உபதேசித்த திருக்கோட்டியூர் நம்பி இங்கு வந்து சென்றுள்ளார். இக்கோவில் மாடக்கோவில் என்பதற்கேற்ப மிகச்சிறந்த வடிவமைப்புடன் பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது. திருமங்கையாழ்வாரால் மட்டும் 12 பாசுரங்களில் இத்தலம் பாடல் பெற்றுள்ளது. திருவண்புருடோத்தமம் திருவண்புருடோத்தமம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் சீர்காழிக்கு கிழக்கே ஐந்து மைல் தொலைவில் திருநாங்கூரில் அமைந்துள்ளது. இறைவன் பெயர் புருடோத்தமன். தமிழ்நாட்டில் உள்ள வைணவத் திருத்தலங்களில் புருடோத்தமன் (புருஷோத்தமன்) என்ற பெயரில் இறைவன் எழுந்தருளியிருப்பது இங்கு மட்டுமே ஆகும். இவ்விறைவனின் வள்ளல் தன்மையை உயர்வுபடுத்திக் காட்ட வண் புருடோத்தமன் என அழைக்கப்படுகிறார். எனவே இத்தலம் வண்புருடோத்தமம் ஆயிற்று. திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களால் பாடல்பெற்றது இக்கோயில். மணவாள மாமுனிகள் இங்கு வந்து சென்றுள்ளார். திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளின் இறைவர்களும் இங்கு எழுந்தருளும் தை அமாவாசைக்கு மறுநாளான திருநாங்கூர் கருடசேவைத் திருவிழாவுக்கு இவ்விறைவனையும் எடுத்துச் செல்வர். வியாக்ரபாத முனிவர் எனப்படும் புலிக்கால் முனிவர் என்பவர் எம்பெருமானுக்கு பூமாலை கட்டிச் சூட்டும் வேலையை மேற்கொண்டிருந்தார். இக்கோவிலில் எம்பெருமானுக்கு மாலை கட்ட வந்தவர் தனது குழந்தை உபமன்யுவை உட்கார வைத்துவிட்டுப் பூப்பறிக்கச் சென்றார். குழந்தை பசியால் அழுதது. புருடோத்தம நாயகி தூண்ட வண்புருடோத்தமன் திருப்பாற்கடலை வரவழைத்து. குழந்தைக்குப் பாலைப் புகட்டி அருள் புரிந்து வியாக்ரபாத முனிவருக்கும் காட்சி தந்தார் என்பது இத்தலத்தோடு பேசப்படும் வரலாறாகும். திருக்காவளம்பாடி திருக்காவளம்பாடி என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் சீர்காழியிலிருந்து பூம்புகார் செல்லும் சாலையில் உள்ளது. திருநாங்கூரிலிருந்து 1 1/2 மைல் தொலைவில் அமைந்துள்ளது. திருநகரியிலிருந்து நடைப்பயணமாகவும் வரலாம். திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளுள் இத்தலமும் ஒன்றாகும். கண்ணன் சத்தியபாமாவுடன் சேர்ந்து நரகாசுரனையழித்தான். இந்திரன்,வருணன் ஆகியோரிடமிருந்து நரகாசுரன் அபகரித்த பொருட்களை அவர்கட்கே மீட்டுக்கொடுத்தான். வெகுநாளைக்குப் பின்பு, இந்திரனின் தோட்டத்தில் உள்ள பாரிஜாத மலரை சத்தியபாமா கேட்க கண்ணன் இந்திரனிடம் அம்மலரைக் கேட்டான். இந்திரன் கொடுக்க மறுக்க, சினங் கொண்ட கண்ணன் அவனோடு போரிட்டு அவனது காவளத்தை (பூம்பொழிலை) அழித்தான். 11 எம்பெருமான்களில் ஒருவனாக துவாரகாவிலிருந்து வந்த கண்ணபிரான் தான் இருக்க காவளம் போன்ற ஒரு பொழிலைத் தேடி, இந்தக் காவளம்பாடியில் கோயில் கொண்டான் என தல வரலாறு கூறுகிறது. இறைவிக்குத் தனிக் கோயில் இல்லை. திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களில் பாடல் பெற்றது. திருமங்கையாழ்வாரின் பிறந்த இடமான குறையலூர் மற்றும் அவர் வைணவ அடியார்க்கு அன்னதானம் நடத்திய மங்கை மடம் இந்த தலத்திற்கு மிகவும் அருகாமையிலேயே அமைந்துள்ளது. மரின்ஸ்கி அரங்கு மரின்ஸ்கி அரங்கு ("Mariinsky Theatre", ) என்பது உருசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் அமைந்துள்ள வரலாற்று பலட் நடன மற்றும் இசை நடன அரங்காகும். 1860 இல் திறக்கப்பட்ட இது 19ம் நூற்றாண்டு பிற்பட்ட உருசியாவின் சிறந்த இசை அரங்காகவும், பியோத்தர் இலீச் சாய்க்கோவ்சுக்கி ஆகியோரின் தலைசிறந்த படைப்புக்களை அரங்கேற்றிய இடமுமாகும். சோவியற் காலத்தில் இது கிரோவ் அரங்கு என அறியப்பட்டது. இன்று இது மரின்ஸ்கி பலட் நடனம், மரின்ஸ்கி இசை நடனம், மரின்ஸ்கி சேர்ந்திசை என்பவற்றுக்கு முக்கியத்துவம் உள்ள இடமாகும். திருச்செம்பொன் செய்கோயில் திருச்செம்பொன் செய்கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநாங்கூரின் நடுவில் அமைந்துள்ளது. இராவணனை அழித்தபின் இராமபிரான் இந்த தலத்தில் இருந்த திருடநேத்திரர் என்ற முனிவரின் குடிலில் தங்கி அவர் கூறியவாறு தங்கத்தினால் ஒரு பசு செய்து அங்கு நான்கு நாட்கள் தங்கி பின்னர் அப்பசுவை ஒரு அந்தணர்க்குத் தானம் செய்தார். அந்தப் பொன்னைக் கொண்டு இந்தக் கோவிலை கட்டியபடியால் இதற்கு செம்பொன் செய்கோவில் என்று பெயர் வந்ததாக இக்கோயிலின் தலவரலாறு கூறுகிறது. திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளின் இறைவர்களும் இங்கு எழுந்தருளும் தை அமாவாசைக்கு மறுநாளான திருநாங்கூர் கருடசேவைத் திருவிழாவுக்கு இவ்விறைவனும் எழுந்தருளுவார். திருத்தெற்றியம்பலம் திருத்தெற்றியம்பலம் எனப்படும் பள்ளிகொண்ட பெருமாள் சன்னதி என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநாங்கூருக்கருகில் அமைந்துள்ளது. இக்கோயில் திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளுள் ஒன்று. 108 வைணவ திருத் தலங்களில் இத்தலம் ஒன்றிற்கு மட்டுமே அம்பலம் என்னும் சொல் வழங்கப்படுகிறது. திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களால் பாடல்பெற்றது இக்கோயில். மணவாள மாமுனிகள் இங்கு வந்து சென்றுள்ளார். திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளின் இறைவர்களும் எழுந்தருளும் தை அமாவாசைக்கு மறுநாளான திருநாங்கூர் கருடசேவைத் திருவிழாவுக்கு இவ்விறைவனும் எழுந்தருளுவார். திருமணிக்கூடம் திருமணிக்கூடம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநாங்கூரிலிருந்து கிழக்கே 4 பர்லாங் தொலைவில் அமைந்துள்ளது. திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளுள் இக்கோயிலும் ஒன்றாகும். திருமணிக்கூடம் என்ற சொல்லுக்கேற்ப இத்தலம் மணிக்கூடம் போன்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளின் இறைவர்களும் எழுந்தருளும் தை அமாவாசைக்கு மறுநாளான திருநாங்கூர் கருடசேவைத் திருவிழாவுக்கு இவ்விறைவனையும் எடுத்துச் செல்வர். போரா போரா போரா போரா ("Bora Bora") என்பது பிரான்சின் வெளியிடத்தில் அமைந்துள்ள பிரெஞ்சு பொலினீசியாவிலுள்ள ஓர் தீவாகும். இத்தீவு வாவிகளாலும் பவளப் பாறைகளாலும் சூழப்பட்டு அமைந்துள்ளது. திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோயில் திருவெள்ளக்குளம் அல்லது அண்ணன் கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் சீர்காழியிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் சீர்காழி - தரங்கம்பாடிச் சாலையில் அமைந்துள்ளது. திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளில் இதுவும் ஒன்று. திருவெள்ளக்குளம் என்ற சொல் இத்தலத்தின் முன்புறம் அமைந்துள்ள ஸ்வேத புஷ்கரணி தீர்த்தத்தால் உண்டாயிற்று. வடமொழியில் ஸ்வேதம் என்றால் வெண்மை. எனவே ஸ்வேத புஷ்கரணி வெள்ளைக்குளமாகி, வெள்ளக்குளமாயிற்று. திருமங்கையாழ்வார் இத்தலத்து இறைவனை அண்ணா என அழைத்துப் பாடியமையால் இது அண்ணன் கோயில் என்று அழைக்கப்படுகிறது. திருமங்கையாழ்வாரால் மட்டும் பத்துப் பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம். பிள்ளைப் பெருமாளையங்காரும் இத்தலம் பற்றி பாடியுள்ளார். அழகிய மணவாள மாமுனிக்கு இறைவன் இங்கு காட்சி கொடுத்ததாக நம்பிக்கை. 108 வைணவத் திருத்தலங்களில் திருமலையில் வழங்கப்படும் இறைவனின் அதே பெயர்களால் (ஸ்ரீநிவாசன் - அலர்மேல் மங்கைத் தாயார்) வழங்கப்படும் ஒரே தலம் இது ஒன்றே ஆகும். திருவேங்கடத்தானுக்கு வெள்ளக்குளத்தான் அண்ணன் என்பது நம்பிக்கையாதலால் திருப்பதிக்கு வேண்டிக் கொண்ட வேண்டுதலை இங்கே செலுத்துவது ஒரு மரபாகவே விளங்கி வருகிறது. எனவே இதனைத் தென்திருப்பதி என்றும் அழைப்பர். திருமங்கையாழ்வார் மணந்த குமுதவல்லியின் அவதாரத் தலமும் நீலன் என்ற பெயரில் படைத்தளபதியாக விளங்கிய திருமங்கையாழ்வாரை ஆழ்வாராக மாற்றிய தலம் இதுவாகும். ஒரு மங்கையால் ஆழ்வாராக மாறினமையால் மங்கையாழ்வாராகி திருமங்கை ஆழ்வாரானார். திருவைகுந்த விண்ணகரம் திருவைகுந்த விண்ணகரம் அல்லது வைகுந்த விண்ணகரம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநாங்கூரில் அமைந்துள்ளது. இக்கோயில் திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளுள் ஒன்று. வைகுண்டமான பரமபதத்தில் சங்கு சக்கரங்களுடன் எழுந்தருளியுள்ள வைகுண்டநாதனே இந்த வைகுந்த விண்ணகரத்தில் உள்ளான் என்பதும் சிவனின் ருத்ர தாண்டவத்தை நிறுத்த பரமபத நாதன் புறப்பட்டு வர அவரைப் பின்பற்றி 10 பெருமாள்களும் இவ்விடம் (திருநாங்கூர்) வந்தனர் என்பதும் தொன்நம்பிக்கை. பரமபதத்தில் இருந்து வந்ததால் அதே தோற்றத்தில் இங்கும் காணப்படுகிறார். திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளின் இறைவர்களும் எழுந்தருளும் தை அமாவாசைக்கு மறுநாளான திருநாங்கூர் கருடசேவைத் திருவிழாவுக்கு இவ்விறைவனும் எழுந்தருளுவார். திருப்பார்த்தன் பள்ளி திருப்பார்த்தன் பள்ளி என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் சீர்காழிக்கு அருகிலும் திருவெண்காட்டிலிருந்து சுமார் 2 மைல் தூரத்திலும் அமைந்துள்ளது. திருவெண்காட்டிலிருந்து நடந்தே செல்லலாம். திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளில் இதுவும் ஒன்று. பார்த்தனுக்காக (அர்ஜுனன்) உண்டான கோவிலானதால் பார்த்தன் பள்ளியாயிற்று. பார்த்தனாகிய அர்ஜூனனுக்கு இவ்விடத்து ஒரு கோவில் உண்டு. வருணன் இவ்விடத்து திருமாலைக்குறித்து கடுந்தவமியற்றித் தனக்கு பார்த்தசாரதியாக காட்சியளிக்குமாறு வேண்ட அவ்விதமே நடந்தபடியால் பார்த்தசாரதி பள்ளியென வழங்கிப் பிறகு பார்த்தன் பள்ளியாயிற்றென்பர்.திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளின் இறைவர்களும் இங்கு எழுந்தருளும் தை அமாவாசைக்கு மறுநாளான திருநாங்கூர் கருடசேவைத் திருவிழாவுக்கு இவ்விறைவனையும் எடுத்துச் செல்வர். தனியாக யாத்திரை மேற்கொண்ட அர்சுனன் தென்னாட்டில் பூம்புகார் சங்கம முகத்திற்கு நீராட வந்த போது அங்கிருந்த புரசங்காடு எனும் வனப்பகுதியினை அடைந்தார். வனப்பகுதியில் தாகம் எழ, நீர் தேடிச் சென்ற போது அகத்தியர் ஆசிரமம் சேர்ந்து, அவரிடம் தாகம் தீர கமண்டலத்திலிருந்து நீரைப்பருக அளிக்க வேண்ட, அகத்தியரும் தந்தார்.ஆனால் அர்சுனனால் அருந்த இயலாதபடி நீர் மறையவே வருந்தி காரணம் வேண்ட, அகத்தியரும் ஞானதிருஷ்டி மூலம் காரணத்தைக் கண்டு தெரிவித்தார். பல்வேறு சோதனையிலும் காத்த கண்ணனை நினையாது என்னிடம் நீர் கேட்டது பொறுக்காததால் கண்ணன் செய்த லீலை இது என்று கூற, அர்சுனன், கண்ணனை நினைத்து வேண்ட, அங்கு தரிசனம் தந்த கண்ணன், அர்சுனனின் கத்தியால் பூமியை கீறச்சொல்ல, அதிலிருந்து நீர் வந்தது. அத்தீர்த்த நீரைப் பருகி தாகம் தீர்ந்தான் அர்சுனன். அகத்தியரின் வேண்டுகோளுக்கிணங்க அங்கேயே கண்ணன் தங்கிவிட்ட தலம் பார்த்தன்பள்ளி என்றாயிற்று. ஆடி அமாவாசை தினத்தில் பூம்புகார் காவிரி சங்கமத்திற்கு எழுந்தருளச் செல்லும் போது அவ்விழாவை சோழ மன்னர்களே முன்னிற்று தீர்த்தவாரி உற்சவத்தை சிறப்பாக நடத்தியது பற்றிய குறிப்பு அடையாறு தமிழாராய்ச்சி நிறுவனம் (International Institute of Tamil Studies) வெளியிட்டுள்ள ’சங்க கால வரலாறு’ நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோயில் மிகவும் பழுதுபட்டதால், புனர்நிர்மாணக்குழு அமைக்கப்பட்டு சீரமைப்பு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. சீரமைக்க சுமார் ஒரு கோடி ரூபாய் தேவைப்படும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. சீர்காழியிலிருந்து 15 கி.மீ தூரத்திலும் திருவெண்காட்டிலிருந்து 4 கி.மீ தொலைவிலும் திருப்பார்த்தன்பள்ளி அமைந்துள்ளது. சிர்க்கோனியம் சிர்க்கோனியம் "(Zirconium)" என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். மேலும் இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியசு ,4371 பாகை செல்சியசு ஆகும் . மற்றும் இதன் இணைதிறன் 4. ஆகும். இயற்கையில் தனித்த நிலையில் சிர்க்கோனியம் கிடைப்பதில்லை. தாதுக்களுடன் சேர்ந்தே இது கிடைக்கிறது. சிர்கான் என்ற கனிமத்தின் பெயரிலிருந்தே சிர்க்கோனியம் என்ற பெயர் எடுக்கப்பட்டுள்ளது. இதுவே சிர்க்கோனியத்தின் மிக முக்கியமான தாதுவாகும். தங்க நிறம் என்ற பொருள் கொண்ட சார்கன் என்ற பாரசீக மொழிச் சொல்லிலிருந்து சிர்கான் என்ற பெயர் வந்துள்ளதாக கூறப்படுகிறது. 1789 ல் ஜெர்மன் நாட்டின் கலாப் ரோத், சிர்கான் எனும் கனிமத்திலிருந்து சிர்கோனியத்தைப் பிரித்தெடுத்தார். இதன் கனிமம் பொன்னிறம், ஆரஞ்சு, கத்திரிப்பூ ஊதா போன்று பல நிறங்களுடன் காணப்பட்டதால் அதை விலை மதிப்புள்ள கற்களாகக் கருதினார். அரேபிய மொழியில் ஜார்கன் என்றால் “பொன் போன்ற” என்று பொருள் .இதிலிருந்தே சிர்கோனியம் வருவிக்கப்பட்டது. இதற்கு இலக்கியங்களில் பல பெயர்கள் காணப்படுகின்றன. ஹயா சிந்த், ஜாசிந்த், ஜார்கன் போன்ற சொற்கள் சிர்கோனியக் கனிமத்தைக் குறிப்பிடுவதாகும். பழங்காலத்தில் இதை நகை செய்யப் பயன்படுத்தினார்கள். சிர்கான் என்பது சிர்கோனியம் சிலிகான் ஆக்சைடாகும். சிகோனியத் தனிமங்கள் உலகில் ஓரளவு மிகுதியாகக் கிடைக்கப்பெறினும் அதிலிருந்து சிர்கோனியத்தைப் பிரித்தெடுப்பது மிகவும் சிக்கலானதாக இருக்கின்றது. இதற்குக் காரணம் உயர் உருகு நிலையும், உருகிய நிலையில் வளிமங்களை உட்கிரகித்துக் கொள்ளும் பண்பையும் சிர்கோனியம் பெற்றிருப்பதே ஆகும். 1824 ல் சுவீடன் நாட்டு அறிவியலாளர் பெர்சியஸ் இத் தனிமத்தைப் பிரித்தெடுத்தார். சிர்கோனியம், சிர்கான் மணலாகவும் சிர்கோனியம் ஆர்த்தோ சிலிகேட்டாகவும் இயற்கையில் அதிகம் கிடைக்கின்றது. இதன் செழுமை நிக்கல், செம்பு, ஈயம், துத்தநாகம், டின் மற்றும் பாதரசத்தின் செழுமையை விட அதிகமாக இருக்கின்றது. சிர்கானில் சிர்கோனியத்தின் செறிவு 61-67 % ஆகும். சிர்கோனியம் சூரியன் மற்றும் ஐந்து வகை விண்மீன்களிலும் எரிகற்களிலும் காணப்படுகின்றது. நிலவின் மண்ணில் சிர்கோனிய ஆக்சைடின் செழுமை பூமியைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. புவியின் மேலோட்டிற்குள் சிர்க்கோனியம் 130 மி.கி/கி.கி என்ற அடர்த்தியில் காணப்படுகிறது. கடல்நீரில் 0.026 μகி/லி என்ற அடர்த்தியில் உள்ளது. இயற்கையில் இது சிர்க்கோனியம் உலோகமாகக் கிடைப்பதில்லை. நீரின் இயல்புக்கு ஏற்ப இது தன்னுடைய உள்ளார்ந்த நிலையின்மையை பிரதிபலிக்கிறது. சிர்க்கோனியத்தின் சிலிக்கேட்டு கனிமமான சிர்கான் (ZrSiO4) ஒரு முக்கியமான வர்த்தக மாதிரியாகும். ஆத்திரேலியா, பிரேசில், இந்தியா, உருசியா, தென் ஆபிரிக்கா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் சிர்கான் பெருமளவிலும் மற்ற நாடுகளில் சிறிய அளவிலும் கிடைக்கிறது. 2013 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி மூன்றில் இரண்டுபாகம் சிர்க்கோனியம் ஆத்திரேலியா மற்றும் தென் ஆபிரிக்காவில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள சிர்க்கோன் இருப்பு 60 மில்லியன் டன்களாகும். மேலும் உலகில் ஆண்டுக்கு 9,00,000 டன்கள் சிர்க்கோனியம் உற்பத்தி செய்யப்படுகிறது. பேடிலைட்டு, கோசுனரைட்டு உள்ளிட்ட கனிமங்களுடன் 140 வகையான கனிமங்களுடன் சேர்ந்து சிர்க்கோனியம் காணப்படுகிறது. சிர்க்கோனியம் எசு- வகை நட்சத்திரங்களில் ஒப்பீட்டளவில் ஏராளமாக உள்ளது, மேலும் இது சூரியன் மற்றும் விண்கற்களிலும் கண்டறியப்பட்டுள்ளது. சந்திரனுக்கு பல அப்பல்லோ திட்டங்கள் மூலம் கொண்டுவரப்பட்ட சந்திர பாறை மாதிரிகளில் புவிப்பாறைகள் போல உயர் சிர்கோனியம் ஆக்சைடு உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கின்றன சிர்க்கோனியம் வெள்ளியைப் போன்றதொரு வெண்மையான உலோகமாகும். வெண்மை கலந்த சாம்பல் நிறத்தில் வலிமையான இடைநிலைத் தனிமமாக இது காணப்படுகிறது. அதிகமாக ஆஃபினியம் தனிமத்தைப் போலவும் தைட்டானியம் போல குறைந்த அளவிலும் சிர்க்கோனியம் காணப்படுகிறது . தீச்செங்கல்லாகவும் ஒளிச்சிதறலை தரும் ஒளித்தடுப்புப் பொருளாகவும் பயன்படுகிறது. எஃகை விட இலேசானது என்றாலும் அதைப் போல் உறுதியானது ஆகும். உடையக்கூடியதாகவும் கடினமானதாகவும் இருந்தால் கூட அறை வெப்பநிலையில் இதை கம்பியாக எளிதில் நீட்டிக் கொள்ள முடிகிறது. தைட்டானியம் போலத் தீவிரமான அரிப்புத் தடுப்பியாகச் செயல்படுகிறது. ஐதரோபுளூரிக் அமிலம் மட்டும் இவ்வுலோகத்தை அரிக்கின்றது. டான்டலம், டைட்டானியம், நையோபியம் போல சிர்கோனியம் அரிப்பெதிர்ப்பைக் கொடுத்தாலும் அவற்றைவிட மேலானது. ஏனெனில் சிர்கோனியம் காரங்கள், அமிலங்கள், உப்புநீர் மற்றும் இதர அரிக்கும் முகவர்களால் அரிக்கப்படுவதில்லை. இதனால் சிர்கோனியம் அறுவைச் சிகிச்சைக் கருவிகளுக்கு ஏற்புடையதாக இருக்கின்றது. திண்ம சிர்கோனியம் எளிதில் பற்றி எரிவதில்லை. ஆனால் பொடி செய்யப்பட்ட சிர்கோனியம் காற்று வெளியில் குறிப்பாக உயர் வெப்ப நிலையில் தானாக எரிகின்றது. சிர்க்கோனியம் டையாக்சைடு, சிர்க்கனோசின் டைகுளோரைடு போன்ற பல்வேறு வகையான கனிமச் சேர்மங்களையும் கரிம உலோகச் சேர்மங்களையும் சிர்க்கோனியம் உருவாக்குகிறது. துத்தநாகத்துடன் சேர்ந்து சிர்க்கோனியம் உருவாக்கும் கலப்புலோகங்கள் 35 கெல்வின் வெப்பநிலைக்கு கீழ் காந்ததன்மையைப் பெற்றுள்ளன. இயற்கையாக ஐந்து ஐசோடோப்புகள் தோன்றுகின்றன. இவற்றில் மூன்று மட்டுமே நிலைப்புத் தன்மை கொண்டவையாகும். சிர்க்கோனியம் சேர்மங்களின் உயிரியல் பயன்கள் ஏதும் அறியப்படவில்லை. அறை வெப்பநிலையில் ஆல்பா சிர்க்கோனியம் அறுங்கோண நெருக்கப் பொதிவு படிகக் கட்டமைப்பில் காணப்படுகிறது. 863 பாகை செல்சியசு வெப்பநிலையில் இவ்வடிவம் β-Zr வடிவமான பொருள் மைய கனசதுர படிகக் கட்டமைப்பிற்கு மாறுகிறது. உருகு நிலையை அடையும் வரை β-கட்டம் நீடிக்கிறது . இயற்கையாகத் தோன்றும் சிர்க்கோனியத்திற்கு ஐந்து ஐசோடோப்புகள் உண்டு. 90Zr, 91Zr, 92Zr மற்றும் 94Zr ஐசோடோப்புகள் நிலைப்புத் தன்மை கொண்டவையாகும். 94Zr ஐசோடோப்பு 1.10×1017 ஆண்டுகள் அரைவாழ்வுக் காலத்தைக் கொண்டு இரட்டைப் பீட்டா சிதைவு அடையுமென ஊகிக்கப்படுகிறது. 96Zr ஐசோடோப்பு 2.4×1019 ஆண்டுகள் என்ற மிக நீண்ட அரைவாழ்வுக் காலத்தைப் பெற்ற கதிரியக்க ஐசோடோப்பு என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. இயற்கையாகத் தோன்றும் ஐசோடோப்புகளில் , 90Zr பொதுவானதாகும். அனைத்து ஐசோடோப்புகளிலும் 51.45% அளவுக்கு இது காணப்படுகிறது. 96Zr ஐசோடோப்பு அரிதானதாக வெறும் 2.80% சிர்க்கோனியம் அளவுக்கு மட்டுமே காணப்படுகிறது. 78 முதல் 110 வரை அணுநிறைகள் கொண்ட 28 செயற்கை ஐசோடோப்புகள் உருவாக்கப்படுகின்றன. இவற்றில் 1.53×106 ஆண்டுகள் அரைவாழ்வுக் காலம் கொண்ட 93Zr ஐசோடோப்பு அதிக நிலைப்புத் தன்மை கொண்டதாகக் கருதப்படுகிறது. 110Zr ஐசோடோப்பு சிர்க்கோனியத்தின் மிகக்கனமான ஐசோடோப்பு ஆகும். இது அதிகமான கதிரியக்கத் தன்மையையும் கொண்டுள்ளது. 93 மற்றும் இதற்கு அதிகமான அணுநிறை கொண்ட கதிரியக்க ஐசோடோப்புகள் எலக்ட்ரான்களை உமிழ்கின்றன. 89 மற்றும் இதற்கு அதிகமான அணுநிறை கொண்ட கதிரியக்க ஐசோடோப்புகள் பாசிட்ரானை உமிழ்கின்றன. 88Zr ஐசோடோப்பு ஒன்று மட்டும் விதிவிலக்காக எலக்ட்ரான் பிடிப்பு எனப்படும் எலக்ட்ரான் நியூட்ரினோ இழப்பு மூலம் சிதைவடைகிறது. சிர்க்கோனியத்தின் ஐந்து ஐசோடோப்புகளும் 83mZr, 85mZr, 89mZr, 90m1Zr, 90m2Zr and 91mZr எனப்படும் சிற்றுறுதி மாற்றியங்களாகவும் காணப்படுகின்றன. இவற்றில் 90m2Zr ஐசோடோப்பு 131 நானோ வினாடிகள் என்ற மிகக் குறைவான அரைவாழ்வுக் காலத்தைக் கொண்டுள்ளது. 89mZr ஐசோடோப்பு 4.161 நிமிடங்கள் என்ற அரைவாழ்வுக் காலத்தைக் கொண்டு மிக நீண்ட நிலைப்புத்தன்மை கொண்டதாக அறியப்படுகிறது. தைட்டானியத்தின் கனிமங்களான இல்மெனைட்டு, உருட்டைல் போன்றவற்றிலிருந்து தைட்டானியம் தயாரிக்கும் போதும் வெள்ளீயம் தயாரிக்கும் போதும் உடன் விளைபொருளாக சிர்க்கோனியம் கிடைக்கிறது. 2003 முதல் 2007 வரையிலான காலத்தில் சிர்கான் கனிமத்தின் விலை நிலையாக டன்னுக்கு $360 முதல் $840 வரை அதிகரித்துக் காணப்பட்டது. பதப்படுத்தப்படாத சிர்க்கோனியத்தின் விலை டன்னுக்கு $39,900 இலிருந்து $22,700 ஆக வீழ்ச்சியடைந்தும் காணப்பட்டது. சிர்கானை விட சிர்க்கோனியம் உலோகம் அதிக விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஏனெனில் ஒடுக்கும் செயல்முறைக்கு அதிக செலவு பிடிக்கிறது. கரையோரக் கடலில் இருந்து சேகரிக்கப்பட்ட, சிர்கான் கொண்டுள்ள மணல் சுழற்சி செறிவூட்டிகளால் சுத்தப்படுத்தப்படுகிறது, இம்முறையில் இலகுவான மாசுப் பொருட்கள் அகற்றப்படுகின்றன. கடற்கரை மணலின் இயற்கை கூறுகளாக இருப்பதால் இவை மீண்டும் தண்ணீருக்கு திரும்புகிறது. காந்த பிரிப்பு முறையைப் பயன்படுத்தி, டைட்டானியம் தாதுக்களான இல்மெனைட்டும் உருட்டைலும் நீக்கப்படுகின்றன. பெரும்பாலான சிர்கான் வர்த்தக பயன்பாடுகளில் நேரடியாக பயன்படுத்தப்படுகிறது, ஆனால் ஒரு சிறிய சதவீதம் மட்டுமே உலோகமாக மாற்றப்படுகிறது. பெரும்பாலான சிர்க்கோனியம், சிர்கோனியம்(IV) குளோரைடை மாங்கனீசுடன் சேர்த்து ஒடுக்கும் கிரோல் செயல்முறை மூலம் தயாரிக்கப்படுகிறது. விளையும் உலோகம் கம்பியாக நீட்டிக்கத் தேவையான அளவுக்கு வெப்பப்படுத்தப்பட்டு தயாரித்துக் கொள்ளப்படுகிறது நன்கு தூளாக்கப்பட்ட சிர்கான் தாதுவானது அடர்ப்பிக்கப்பட்டு அதனுடன் சுண்ணாம்பு மற்றும் கார்பன் சேர்த்து வினை கலவை தயாரிக்கப்படுகிறது. இக்கலவையை உயர்வெப்பநிலையில் சூடாக்கி சிர்க்கோனியம் கார்பைடு தயாரிக்கப்படுகிறது. இதை நீரால் கழுவி பின்னர் ஐதரோகுளோரிக் அமிலம் சேர்த்து சாறு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதை 600 கெல்வின் வெப்பநிலையில் குளோரினுடன் வினைப்படுத்தி சிர்க்கோனியம் டெட்ரா குளோரைடு தயாரித்துக் கொள்ளப்படுகிறது. சிர்க்கோனியம் டெட்ரா குளோரைடுடன் அமோனியம் ஐதராக்சைடைச் சேர்க்கும் போது சிர்க்கோனியம் ஐதராக்சைடும் இதை காய்ச்சும்போது சிர்க்கோனியம் டை ஆக்சைடும் கிடைக்கின்றன. இவ்வாறு பெறப்பட்ட சிர்க்கோனியம் டை ஆக்சைடுடன் கால்சியம் கலக்கப்பட்டு 900 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்கினால் சிர்க்கோனியம் கிடைக்கிறது. வெப்பநிலையை மேலும் அதிகரித்தால் உடன் விளைபொருளான கால்சியம் சிர்க்கோனேட்டு ஒடுக்கமடைந்தும் சிர்க்கோனியம் கிடைக்கிறது. சிர்க்கோனியம் நீர், ஐதரோகுளோரிக் அமிலம் ஆகியவற்றில் கழுவப்பட்டும் வான் ஆர்க்கல் முறையிலும் தூய்மைப்படுத்தப்பட்டு பின்னர் பயன்படுத்தப்படுகிறது. ஒடுக்குதலுக்கு கால்சியத்திற்குப் பதிலாக அலுமினியத்தையும் பயன்படுத்துவர். மற்றொரு தாதுவான பேடிலைட்டிலிருந்தும் சிர்க்கோனியம் தயாரிக்கப்படுகிறது. இம்முறையில் அடர்பிக்கப்பட்ட தாதுவுடன் KHF2 சேர்த்து உருக்கப்படுகிறது. உருவாகும் K2ZrF6 உடன் நீரைச் சேர்த்து கொதிக்கவைத்து பின்னர் குளிரச்செய்து K2ZrF6 படிகங்களாகத் தயாரிக்கப்படுகின்றன. உலர்ந்த படிகத்துடன் பொட்டாசியம் சேர்த்து குரைவான வெப்பநிலைக்குச் சூடாக்கி சிர்க்கோனியம் பெறப்படுகிறது. பின்னர் தூய்மைப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. சிர்கோனியம் சிறிதும் துர்ப்பிடிக்கக் கூடாத கருவிகளான அறுவைச் சிகிச்சைக் கருவிகள்,வேதிப் பொருள் உற்பத்திக் கலங்கள், நுட்பமான இயந்திரப் பொறிகள் போன்றவற்றைத் தயாரிக்கப் பயன்படுகின்றது .அறுவைச் சிகிச்சைக்குப் பின் உடம்பில் தையல் போடுவதற்கு சிர்கோனிய இழைகள் நன்மை தருகின்றன ..அணு உலைகளில் நீர் ஒரு குளிர்விப்பானாகப் (coolant ) பயன்படுத்தப்படுகின்றது.இதன் அரிப்பிலிருந்து அணு உலையின் கட்டுமானத்தைக் காக்க சிர்கோனியப் பூச்சிடுவார்கள் .இதற்குத் தூய சிர்கோனியத்தைவிட சிர்கோனியக் கலப்பு உலோகங்கள் - சிர்கலாய் (zircalloy ) மற்றும் சிர்கோனியம் .செம்பு ,நையோபியக் கலப்பு உலோகம் பயனுறு திறம் கொண்டதாய் விளங்குகின்றன . சிர்கோனியத்தின் மற்றொரு முக்கியமான பண்பு குறைவேக நியூட்ரான்களை உட்கிரகித்துக் கொள்ளப்படுவதைத் தவிர்க்கின்றது . சிர்கோனியத்தின் இப் பண்பும் அணு உலைகளில் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றது அணு உலைகளில் சிர்கோனியம் அணு எரிபொருளான யுரேனியத் தண்டிற்கு உலோகக் காப்புப் பொருளாக (Cladding ) பயன்படுத்தப் படுகின்றது .ஏனெனில் சிர்கோனியம் நீரால் ஏற்படக் கூடிய அரிப்பைத் தடுத்தாலும் நியூட்ரான்கள் உட்புகுந்து செல்ல அனுமதிக்கின்றது .இத்தகைய பண்பு மக்னீசியம்,அலுமினியம் ,டின் போன்ற உலோகங்களில் காணப்பட்டாலும் அவை யாவும் தாழ்ந்த உருகு நிலை உடையவை . இயற்கைச் சிர்கோனியத்தில் குடும்பத்தைச் சார்ந்த அணு எண் 72 யைக் கொண்டுள்ள ஹாப்னியம் 2 % கலந்துள்ளது . சிர்கோனியமும் ஹாப்னியமும் ஒத்த வேதியியல் பண்புகளைப் பெற்றிருந்த பெற்றிருந்த போதும் ஹாப்னியம் மிக அதிகமாகக் குறைவேக நியூட்ரான்களை உட்கிரகித்துக் கொள்கிறது(சிர்கோனியத்தை விட 700 மடங்கு ) எனவே சிர்கோனியத்தை அணு உலைகளில் பயன்படுத்த வேண்டுமானால் அதில் உள்ள ஹாப்னியத்தின் செழுமையைப் பெரிதும் குறைக்க வேண்டும். பற்றி எரியும் பொருளுடன் சிர்கோனியப் பொடியைக் கலந்து மிகவும் பிரகாசமான ஒளி தரக் கூடிய வெடிகளை உற்பத்தி செய்கின்றார்கள் .தூய சிர்கோனியப் பொடி எளிதில் தீப்பற்றிக் கொள்ளக் கூடியது சிர்கோனியம் சில சிறப்புக் கலப்பின உலோகங்களை உற்பத்தி செய்யப் பயன்படுகின்றது.எஃகில் சிறிதளவு சேர்க்க அதன் பண்புகள் மேம்படுகின்றன எஃகின் வலிமையையும் ,கடினத் தன்மையும் அதிகரிப்பதுடன் அதன் பட்டறைப் பயனும் உறுதியும் ,பற்றவைப்புத் தன்மையும் சிறப்படைகின்றன ..சிர்கோனிய எஃகை உயர் வெப்பநிலையில் சிறிதும் பாதிப்பின்றிப் பயன்படுத்த முடிகிறது .சிர்கோனிய எஃகால் பொருட்களை வார்க்கும் போது அதன் சிறுமத் தடிப்பைத் குறைத்துக் கொள்ள முடிவதால் மூலப் பொருள் ஆதாயம் கிடைக்கின்றது காந்தமற்ற உலோகங்களுடன் சிர்கோனியத்தைச் சேர்த்து தயாரிக்கப்பட்ட செம்பு-சிர்கோனியம், காட்மியம் -சிர்கோனியக் கலப்பு உலோகத்தில் மின் கடத்தும் திறன் சிறுதும் பாதிக்கப்படாமல் வலிமை மட்டும் அதிகரிக்கின்றது .அலுமினியத்தோடு சிர்கோனியத்தைச் சேர்க்க நீட்சித் திறன்,வலிமை,அரிப்பெதிர்ப்பு ,வெப்பத் தடை ஆகியவை அதிகரிக்கின்றன. குண்டு துளைக்காத எஃகுத் தகடுகளை உறபத்தி செய்ய இதனாலான கலப்பு உலோகம் பயன் தருகின்றது சிர்கோனிய உப்புக்கள் வண்ணவண்ண அச்சுப் பதிப்புகளில் பயன் தருகின்றன .சிர்கோனிய சேர்மங்கள் உயர் திறனுடன் கூடிய இயந்திர எரிபொருளான ஆக்டேனை (Octane ) உற்பத்தி செய்யும் வழிமுறையில் ஒரு வினையூக்கியாகச் செயல்படுகின்றது .தோல் பதனிடும் முறையில் பயன்படுத்தப்பட்டு தோலின் தோற்றப் பொலிவை அதிகரிக்கப் உதவுகின்றது . சிர்கோனியம் டெட்ரா குளோரைடின் மின் கடத்தும் திறன் அதன் மீது செயல்படும் அழுத்தத்திற்கு ஏற்ப மாறுபடுகின்றது .இப்பண்பு ஆற்றல் வகை மாற்றிகளில் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றது ஈய சிர்கோனேட் ஒரு பீசோ(pizo) படிகமாகும்.கேளா ஒலிகளை (Ultrasonic) உற்பத்தி செய்ய இது பயன்படுகின்றது .இப் படிகம் 300o C வெப்பநிலையில் கூட பாதிக்கப் படுவதில்லை . சிர்கோனியம் போரைடு மற்றும் சிர்கோனியம் டை ஆக்சைடு போன்றவைகள் உயர் வெப்பநிலையைத் தாங்கக் கூடிய கூட்டுப் பொருளாகும் .இதன் உருகு நிலை 2700 C .இது உயர் வெப்ப நிலைகளைத் தாக்குப்பிடிக்கக் கூடிய கண்ணாடி மற்றும் எனாமல்களைத் தயாரிக்கப் பயன்படுகின்றது .காந்தப் புலவிடைப் பாய்ம இயக்கமுறையில் (Magneto Hydro dynamics )சிர்கோனியத்தாலான உலோகத் தண்டுகள் மின் முனையாகக் கொள்கின்றார்கள் .சிர்கோனியா கால்சியம் ஆக்சைடு வெப்ப அதிர்வுகளைத் தாக்குப் பிடிக்கின்றது .இதனால் உலோகங்களை உருக்கி வார்க்கப் பயன்படும் வார்ப்பச்சுக்களைத் தயாரிக்க இது பயன்படுகின்றது . சிர்கோனிய ஆக்சைடுகள் ,டைட்டானிய ஆக்சைடு போல வெள்ளை நிறமிகளாகக் கொள்ளப் படுகின்றன .இது நீரில் கரைவதில்லை .சிர்கான் மணல் சில இரத்தினங்களுக்குரிய மூலப் பொருளாக விளங்குகின்றது .செயற்கை இரத்தினங்களைத் தயாரிக்க இது பயனுள்ளதாக இருக்கின்றது .பீங்கான் தொழிலில் சிர்கான் மணல் பயன்தருகின்றது .அலுமினா -சிர்கோனியத் தேய்ப்புப் பொருளை உற்பத்தி செய்து உலோகப் பரப்புக்களைத் தேய்த்து மெருகேற்றவும் ,மென்மையூட்டவும் பயன்படுத்தப்படுகின்றது . நயோபியம் சிர்கோனியம் கலப்பு உலோகம் ஒரு மீக்கடத்தியாகும் .இது மீக் கடத்து காந்தங்களில் பயன்படுகின்றது. ஸ்டான்லி பூங்கா, வான்கூவர் ஸ்டான்லி பூங்கா ("Stanley Park") கனடாவில் வான்கூவர் நகரில் உள்ள ஒரு பூங்கா. இது உலகின் மிகப் பிரபலமான பூங்காக்களில் ஒன்றாகும். ஸ்டான்லி பார்க் ஆண்டு முழுவதும் பச்சை இலைகள் கொண்ட பாலைவனச் சோலையாகத் திகழ்கிறது. இது 405 எக்டேர் பரப்பளவு கொண்ட பூங்காவாகும். ஸ்டான்லி பார்க்கில் “இழந்த குளம்” மற்றும் “பீவர் ஏரி” போன்ற பல அடையாளங்கள் உள்ளன. பூங்கா உள்ளே “ஸ்டான்லி பார்க் விண்கலம்” மூலம் பயணிக்க முடியும். பூங்காவின் உள்ளே தொடருந்துகள், விளையாட்டு மைதானங்கள், மற்றும் முழுக் குடும்பத்துடன் ரசிக்கக் கூடிய பல இடங்கள் உள்ளன. ஸ்டான்லி பார்க்கில் உள்ள “மால்கின் பௌல்” என்ற இடத்தில் இசை நிகழ்ச்சிகள் மற்றும் பல கலாச்சார நிகழ்வுகள் நடைபெறும். ஸ்டான்லி பார்க்கில் கண்கவர் கடற்கரைகள் உள்ளன. ஸ்டான்லி பார்க் செல்ல நுழைவு கட்டணம் ஏதும் கிடையாது. இருப்பினும் அங்கு உள்ள மீன் தொட்டி (Aquarium) பார்க்க நுழைவுக் கட்டணம் உண்டு. உலகக் குடும்ப நாள் உலக குடும்ப நாள் (Global Family Day) ஒவ்வொரு ஆண்டும் சனவரி முதலாம் திகதி கொண்டாடப்படுகின்றது. ஐக்கிய அமெரிக்காவில் வாழும் மக்கள் இதை அமைதிக்கும், பகிர்தலுக்கும் ஏற்ற நாளாகக் கொண்டாடுகின்றனர். பீப்புள்ஸ் டெய்லி பீப்புள்ஸ் டெய்லி என்பது சீன மக்கள் குடியரசில் வெளியாகும் செய்தித்தாள்களுள் ஒன்று. சீன கம்யூனிசக் கட்சியின் முதன்மை உறுப்பாக செயல்படுகிறது. உலகளவில் இதன் வெளியீட்டு எண்ணிக்கை 3 - 4 மில்லியன் இருக்கக் கூடும். இதன் முதன்மை பதிப்பு சீன மொழியில் வெளியாகிறது., இது ஆங்கிலம், சப்பானியம், பிரெஞ்சு, எசுப்பானியம், உருசியம், அரபி மொழி, கொரியம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. ஜைக் என்ற தேடுபொறியையும் இது நிறுவியுள்ளது. கொகினேனி ரங்க நாயுகுலு கொகினேனி ரங்க நாயகுலு (என். ஜி. ரங்கா நவம்பர் 7, 1909--சூன் 9, 1995) என்பவர் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். இந்திய விவசாயிகள் இயக்கத்திலும் முக்கியப் பங்காற்றினார். அறுபதாண்டுகளாகத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினராகப் பணி ஆற்றிய காரணத்தால் கின்னஸ் புத்தகத்தில் இவர் பெயர் இடம் பெற்றுள்ளது. ஆந்திரப் பிரதேசம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள நிடுபிரலு என்னும் சிற்றூரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். தொடக்கக் கல்வியைத் தம் சொந்த ஊரிலும் பின்னர் குண்டூரில் ஆந்திர கிறித்தவக் கல்லூரியில் பட்டப்படிப்பையும் கற்று முடித்தார். பிறகு இங்கிலாந்துக்குச் சென்று ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் ஆய்வுப்பட்டம் பெற்றார். இந்தியா திரும்பியதும் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பொருளியல் துறைப் பேராசிரியராகப் பணி ஆற்றினார். 1930 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி சென்னைக்கு வந்தபோது என்.ஜி. ரங்கா அவரைச் சந்தித்தார். அச்சந்திப்பின் விளைவாக இந்திய விடுதலை உணர்ச்சிப் பெற்றார். சட்டமறுப்பு இயக்கம் போன்ற போராட்டங்களில் கலந்து கொண்டார். 1933 ஆம் ஆண்டில் ஆந்திராவில் உழவர்கள் போராட்டத்தைத் தலைமைத் தாங்கி நடத்தினார். இந்திய விடுதலைப் போராட்டத்துடன் விவசாயிகள் உரிமைகளுக்காகவும் அனைத்திந்திய அளவில் போராடினார். பன்னாட்டுத் தொழிலாளர் கழகம், உணவு மற்றும் வேளாண்மைக் கழகம் ஆகியவற்றின் மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்து கொண்டார். என்.ஜி. ரங்காவுக்கு 1991 ஆம் ஆண்டில் பத்ம விபூசண் விருது வழங்கப்பட்டது. 2001 இல் இவருடைய உருவம் பொறிக்கப்பட்ட அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. இவர் பெயரில் விவசாயத்துக்கான விருது ஒன்று புதியதாக நிறுவப்பட்டது. மேலும் குண்டூரில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்திற்கு இவர் பெயர் சூட்டப்பட்டு கவுரவித்தார்கள். http://www.gandhitopia.org/profiles/blogs/professor-n-g-ranga-a-great http://zolaleila.blogspot.in/2010/10/ngranga1900-1995-critical-profile.html மரண வரி மரண வரி ("Marâla" அல்லது "Maral") அல்லது இறப்பு வரி என்பது போர்த்துக்கேயர் இலங்கையை ஆண்ட காலத்தில் இருந்த வரி முறையாகும். போர்த்துக்கேயரின் ஆட்சிக்குட்பட்ட இலங்கையின் கரையோரப்பிரதேசத்தில் வாழ்ந்த ஒருவர் இறந்தாராயின் அவரது சொத்துக்கள் போர்த்துக்கேயருக்கு சேர வேண்டும் என்பதே இவ்வரியாகும். இறப்பின் பின்னர் இறந்தவருக்கு ஆண் வாரிசு இருந்தால், மூன்றில் ஒரு பங்கு அரசுக்கு சென்றடையும், ஆண் வாரிசு எவரும் இல்லை எனில் சொத்து முழுவதும் அரசுக்குச் சென்றடையும். இந்த வரி காரணமாக மக்கள் பெரும் துன்பத்திற்கு உள்ளானார்கள். போர்த்துக்கேயர் தமது சமயமான கிறிஸ்தவத்தை பரப்பும் முகமாக கிறிஸ்தவ சமயத்திற்கு மாறுவோருக்கு இவ்வரி விலக்கு அளித்தனர். இதன் காரணமாக பல இலங்கை மக்கள் மதம் மாறினர். கண்டி இராச்சியத்தில் இவ்வரியில் இருந்து பெண்களுக்கு விலக்களிக்கப்பட்டது. இங்கு இவ்வரி 18ம் நூற்றாண்டின் மத்தியில் முற்றாக ஒழிக்கப்பட்டது. ஆனாலும், கண்டியின் கடைசி அரசர் விக்கிரம ராஜசிங்கன் (1798-1815) இவ்வரியை மீண்டும் மிகக் கடுமையான முறையில் அறிமுகப்படுத்தினார். அன் விகுதி முறைமை அன் விகுதி முறைமை என்பது பிராமி எழுத்துமுறை கல்வெட்டுகளின் மொழி தமிழில் எழுதப்பட்டதா என கண்டறியும் முறையாகும். பெரும்பாலும் பிராகிருத மொழிகளின் பிராமி எழுத்துக்களும் தமிழி எழுத்துக்களும் வடிவளவில் பெருமளவு ஒத்துப் போவதால் இந்தியாவிலும் இலங்கையிலும் கிடைக்கும் கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்கள் தமிழா பிராகிருதமா என்று அறிவதில் இடர் நேரும். அப்போது அதில் காணப்படும் நபரின் பெயர் ஏதாவது "அன்" என விகுதியை கொண்டு முடிந்திருந்தால் அதை தமிழி எழுத்துக்கள் என எளிதாக அடையாளம் காணுவர் தமிழ் ஆய்வாளர்கள். வானமாமலை திருவரமங்கை என்னும் வானமாமலை என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். 108 திவ்ய தேசங்களில் சுயம்பு மூர்த்தியாக பெருமாள் உள்ள எட்டு தலங்களில் இதுவும் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநெல்வேலியிலிருந்து திருக்குறுங்குடி செல்லும் சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீவரமங்கை என்னும் இத்தலத்திற்கு வானமாமலை, நாங்குநேரி, தோத்தாத்ரி, ஸ்ரீவரமங்கை நகர் என்ற பல்வேறு பெயர்களும் உண்டு. பிரம்மாண்ட புராணம், ஸ்கந்த புராணம், நரசிம்ம புராணம் போன்றவற்றில் இத்தலம் பேசப்படுகிறது. உரோம(ரிஷி) முனிவர் தவஞ்செய்து திருமாலைக் கண்டதால் உரோமசேத்திரம் என்றும், ஸ்ரீவரமங்கையாக திருமகள் இவ்விடத்தில் வந்து வளர்ந்து பிறகு எம்பெருமானை மணந்து கொண்டதால் ஸ்ரீவரமங்கை (சீரிவரமங்கல நகர்) எனவும், ஆதிசேடன் இங்கு தவமியற்றி திருமாலுக்கு அணையாக இருக்கும் பேறு பெற்றதால் நாகணை சேரி எனவும், மரங்கள் நிறைந்த வனமும் மலையும் சூழ்ந்த இடமாதலின் வானமாமலை எனவும் இங்குள்ள திருக்குளத்தை நான்கு ஏரிகளாக வெட்டியதால் நான்கு + ஏரி= நான்குநேரிஎனவும், அந்த நான்கு ஏரிகளின் கூர்மையான முனைகள் சந்திக்கும் மையப் பகுதியில் அமைந்ததால் நான் + கூர் + நேரி என்பது காலப்போக்கில் நாங்குநேரி என பேச்சு வழக்காயிற்று. இங்கு இறைவனுக்கு தினந்தோறும் தைல அபிடேகம் நடைபெறும். அந்த எண்ணையை எடுத்து இங்குள்ள நாழிக்கிணற்றில் ஊற்றி வருகின்றனர். இந்த நாழிக்கிணற்றில் உள்ள எண்ணையை நம்பிக்கையுடன் உண்டால் நோய் தீரும் என்பது நம்பிக்கை ஆகும். ஆழ்வார் திருநகரியை ஆண்ட மன்னரான காரிக்கு குழந்தேப் பேறு இல்லாததால், திருக்குறுங்குடிக்குச் சென்று வேண்டினார். மன்னரின் கனவில் தோன்றிய நம்பிராயர் எப்படிபட்ட குழந்தைவேண்டும் என்று வினவினார். அதற்கு காரி தங்களைப்போன்ற ஒரு ஆண்பிள்ளை வேண்டுமென்றார். அவ்வறே ஆகும் என உரைத்த நம்பிராயர், "இங்கிருந்து கிழக்கே சென்றால் நான்கு ஏரிகள் சூழ்ந்த இடத்தில் எறும்புகள் சாரைசாரையாகச் செல்லும். அதற்கு நேர் மேலே கருடன் வட்டமிட்டுக்கொண்டிருப்பான். அந்த இடத்தில் அகழ்ந்தால் வானமாமலை தென்படுவான். அவன் கேட்டதை அருளுவான்" என்றார். அதன்படி அந்த இடத்தைக் கண்டறிந்து அங்கே மன்னன் அகழ்ந்தபோது, அங்கே வானமாமலைப் பெருமாள் கிடைத்தார். நாங்குநேரி என்ற அவ்வூரிலேயே அவரை நிலையாட்டி அவருக்கு கோயில்கட்டி அவரை வழிபட்டார். அதன்பிறகு நம்பிராயர் அருளியபடியே காரி மன்னருக்கு மகனாக நம்மாழ்வார் பிறந்தார். கோயில் கருவறையில் ஆதிசேடன் குடையாய் இருக்க, வானமாமலைப் பெருமாள் வைகுண்டபதியாக அமர்ந்த திருக்கோலத்தில் இருக்கிறார். அவருக்கு இருபுறமும் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி தாயார்கள் காட்சி தருகிறனர். இவர்களுக்கு ஊர்வசியும் திலோத்தமையும் சாமரம் வீசுகின்றனர். பிருகு முனிவர், மார்க்கண்டேய முனிவர், சூரியன், சந்திரன் ஆகியோர் பெருமாளை சேவித்தபடி, கருவறையில் வீற்றிருக்கின்றனர். அர்த்த மண்டபத்தில் கருடாழ்வார், விஷ்வக்சேனர் இருக்கிறார். இந்த 13 விக்கிரகங்களும் சுயம்புகள் என்றும். வைகுண்டத்தில் பெருமாள் எப்படி வீற்றிருப்பாரோ அத்தகைய கோலத்திலேயே சுவாமி இங்கு இருப்பதாக நம்பிக்கை உள்ளது. மேலும் கோயிலில் ஞானப்பிரான், லட்சுமி நாராயணர், வேணுகோபாலன், தசாவதார மூர்த்திகள், ராமர், கண்ண பிரான், சக்கரத்தாழ்வார் ஆகியோர் தனிச் சன்னிகளில் உள்ளனர். குலசேகர மண்டபத்தில் நம்மாழ்வாரைத் தவிர 11 ஆழ்வார்களும், கருவறைப் பிரகாரத்தில் 32 ரிஷிகள், தும்பிக்கை ஆழ்வார் ஆகியோரும் உள்ளனர். இத்தலத்தில் உள்ள சேற்றுத் தாமரை தீர்த்தமானது திருப்பாற்கடலின் அம்சமாகவும் சாபம் நீக்கக்கூடியதாகவும் கருதப்படுகிறது. ஸ்ரீவானமாமலை மடத்துக்கு இதுவே தலைமைப்பீடமாகும். இத்தலம் நம்மாழ்வாரால் மட்டும் 11 பாக்களில் பாடப்பெற்றது. இத்தலத்தில் மட்டுமே சடாரியில் நம்மாழ்வாரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. திருப்புமுனை திருப்புமுனை என்னும் இதழ் தமிழ் நாட்டின் சென்னை நகரில் இருந்து வெளிவரும் திங்கள் இதழ் ஆகும். இவ்விதழ் ஜா. பிரிசில்லா பாண்டியன் என்பவரால் 2013 மே 1 ஆம் நாள் வெளியிடப்பட்டது. இவ்விதழிற்கு ஜா. பிரிசில்லா பாண்டியன் ஆசிரியராகவும் வெளியிடுபவராகவும் இருக்கிறார். நெல்லை சா. அசரியா இணை ஆசிரியராகவும் ச. சுதாகர் துணை ஆசிரியராகவும் ச. மோகன் சிறப்பாசிரியராகவும் பணியாற்றுகின்றனர். அந்திமழை அந்திமழை என்னும் இதழ் தமிழ் நாட்டில் சென்னை நகரில் இருந்து வெளிவரும் திங்கள் இதழாகும். இரா. கெளதமன் என்பவரால் 2012 செப்டம்பர் திங்கள் தொடங்கப்பட்டது. இவ்விதழில் சுகுமாரன் சிறப்பாசிரியராகவும் என். அசோகன் நிர்வாக ஆசிரியராகவும் இர. கெளதமன் ஆசிரியராகவும் பணியாற்றுகின்றனர். பருவம் 1 மழை 1 (26 ஆகத்து – 25 செப்டம்பர் 2012) பருவம் 1 மழை 1 (26 செப்டம்பர் – 25 அக்டோபர் 2012) சிற்பி (இதழ்) சிற்பி என்னும் சிறுவர் சித்திரப் பத்திரிகை தமிழ் நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் நகரில் இருந்து வெளிவந்த திங்கள் இதழாகும். இவ்விதழ் இரா. செயக்குமார் என்பவரால் 1990 செப்டம்பர் 1 ஆம் நாள் தொடங்கப்பட்டது. இவ்விதழின் ஆசிரியர், ஓவியர், வெளியிடுநர் என்னும் முப்பொறுப்புகளையும் இரா. செயக்குமார் ஏற்று வெளியிட்டார். சிறுவர்களுக்கான ஓவிய இதழாக வெளிவந்த சிற்பி இதழ் சில மாதங்களே வெளிவந்து நின்றுவிட்டது. ஒவ்வொரு இதழும் 16 பக்கங்களைக் கொண்டதாக இருந்தது. அரைநிமிட அரட்டை என்னும் தலையங்கம், சுட்டிச் சிம்பு என்னும் ஓவிய நகைச்சுவைத் தொடர், அறிவியல் செய்திகள், அறிவியற் சோதனைக் குறிப்புகள், பொது அறிவுத் துணுக்குகள், நகைச்சுவை துணுக்குகள், பேனா நண்பர்களின் முகவரி, தாவீது ராஜா என்னும் ஓவியக்கதைத் தொடர், ஒன்று + ஒன்று = 1 என்னும் தலைப்பில் சமூகத் தொண்டர் ஒருவரைப் பற்றிய குறிப்பு, ஓவியச் சிறுகதை, சிறுவர் பாடல்கள், பூங்கா என்னும் பல்சுவைப் பகுதி, பைபிள் மேற்கோள்கள் ஆகியவற்றைக் கொண்டதாக இவ்விதழ் வெளிவந்தது. பரப்பலாறு அணை திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியில் ஒட்டன்சத்திரத்திலிருந்து பாச்சலூர் செல்லும் மலைப் பாதையில் வடகாடு என்ற கிராமத்திற்கு முன்பாக தமுக்குப் பாறைக்கும், தட்டைப்பாறைக்கும் இடையே பரப்பலாறு அணை சுமார் 81.08 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ளது. வடகாடு, சிறுவாட்டுக்காடு, பாச்சலூர், பன்றிமலை ஆகிய பகுதியில் உள்ள சிறு ஓடைகள், பெத்தானியாபுரம் அருகே சிறு ஆறாக மாறி பரப்பலாறு அணைக்கு வருகின்றன. பரப்பலாறு அணை 1971க்கு முன்பு கட்டப்பட்ட தடுப்பு அணையிலிருந்து சுமார் 1373 ஏக்கர் மட்டுமே நீர் ஆதாரம் பெற்று வேளாண்மை செய்யப்பட்டது. நீர் உபரியை முறையாக பயன்படுத்திட தமிழக அரசு சுமார் 10.40 லட்சம் செலவில் சுமார் 2500 ஏக்கர் நிலம் வேளாண்மை செய்யத்தக்க வகையில் 1971ல் தொடங்கப்பட்டு 1974ல் முடிக்கப்பட்டது. அணை முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. அணையின் மொத்த நீரின் கொள்ளளவு உயரம் 27.44 மீட்டர் வடகாடு (ஒட்டன்சத்திரம் வட்டம்) வடகாடு (VADAKADU) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு மலைக் கிராமம்(ஊர்). ஒட்டன்சத்திரம் வருவாய் வட்டத்தின் 59 வருவாய் (கிராம எண்:59)கிராமம் ஆகும். இங்கு மலைத் தோட்டப் பயிர்களான பீன்ஸ், அவரை, சோளம், காலிபிளவர், மிளகாய், தக்காளி, கத்தரிக்காய், எலுமிச்சை, மாங்காய், தேங்காய், வாழைப்பழம், பூசணி, நார்த்தங்காய், பூண்டு,முள்ளங்கி, பீட்ரூட், உருளைக் கிழங்கு விளைகின்றன. ஒட்டன்சத்திரத்திலிருந்து பாச்சலூர் செல்லும் மலைப்பாதையில் ஒட்டன்சத்திரத்திலிருந்து சுமார் 7 கி.மீ.தூரத்தில் அமைந்து உள்ளது.கடல் மட்டத்திலிருந்து 1550மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த கிராமத்திலிருந்து சுமார் ஒரு 7கி.மீ தூரத்தில் பரப்பலாறு அணை அமைந்துள்ளது. தொளசம்பட்டி தொளசம்பட்டி (Tholasampatti) இது தமிழ்நாட்டின், சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டத்திலுள்ள வருவாய் கிராமம் ஆகும்.. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தொளசம்பட்டியில் 4151 மக்கள் வசிக்கின்றார்கள். பாலின விகிதம் 852. எழுத்தறிவு பெற்றவர்கள் 2306 பேர். இதில் 1384 பேர் ஆண்கள்; 922 பேர் பெண்கள். எழுத்தறிவு பெற்றுள்ளோர் சதவீதம் 63.67. ஆறு வயதுக்குட்பட்டோர் 14.61 சதவீதம் ஆவர். ஒலிம்பிக் பட்டயம் ஒலிம்பிக் சாசனம் ("Olympic Charter") என்பது ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்கான கட்டமைப்பிற்கான விதிமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் கொண்ட தொகுப்பாகும். இது கடைசியாக சூலை 8, 2011இல் முறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இது ஒலிம்பிக் இயக்கத்தை மேலாண்மை செய்ய உதவும் ஆவணமாகும். அடிப்படைக் கொள்கைகள், விதிகள் மற்றும் துணை விதிகளை ஆவணப்படுத்தியும் தொகுத்தும் பன்னாட்டு ஒலிம்பிக் குழு இதனை வெளியிடுகிறது. இந்த சாசனம் அலுவல்முறையாக ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் வெளியிடப்படுகிறது. இவை இரண்டிற்கும் முரண் காணப்பட்டால், பிரெஞ்சுப் பதிப்பில் உள்ளதே எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஒலிம்பிக்கின் வரலாற்றில் எவ்வப்போது சர்ச்சைகள் எழுந்தாலும் ஒலிம்பிக் சாசனம் மூலமே தீர்வு காணப்படுகிறது. இத்தொகுப்பின் முகவுரையில் தெரிவிக்கப்பட்டபடி இதற்கு மூன்று முதன்மை நோக்கங்கள் உள்ளன: ஐந்து அத்தியாயங்களையும் 61 அமைப்புவிதிகளையும் கொண்டுள்ள இத்தொகுப்பு பல வழிகாட்டல்களையும் விதிமுறைகளையும் விவரமாக வரையறுக்கிறது. முதல் அத்தியாயத்தில் ஒலிம்பிக் இயக்கம் குறித்தும் செயற்பாடு குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது. இதில் பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் நோக்கமாக ஒலிம்பிக் இயக்கத்தை உலகெங்கும் வளர்த்தெடுப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விளையாட்டுக்களில் நன்னெறிப் பண்புகளை வளர்த்தல், பங்கேற்றலைக் கூட்டுதல், குறிப்பிட்ட காலவெளியில் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நிகழ்வதை உறுதி செய்தல், ஒலிம்பிக் இயக்கத்தைக் காபாற்றுதல், விளையாட்டுக்களை வளர்ப்பதும் ஆதரவளிப்பதும் என இதனை அமைப்புவிதி 2 விவரிக்கிறது. அமைப்புவிதி 8 ஒலிம்பிக் கொடி ஒன்றுடன் ஒன்று பிணைந்த ஐந்து வளையங்களைக் கொண்டதாயும் இந்த வளையங்களின் வண்ணம் இடமிருந்து வலமாக நீலம், மஞ்சள், கருப்பு, பச்சை, சிவப்பாக இருக்க வேண்டும் என்றும் வரையறுக்கிறது. இரண்டாம் அத்தியாயத்தில் பன்னாட்டு ஒலிம்பிக் குழு "அரசு சார்பில்லா இலாபநோக்கமற்ற பன்னாட்டு அமைப்பாக" விவரிக்கப்படுகிறது. ஒலிம்பிக் பட்டயத்தில் காணும் பொறுப்புக்களையும் பங்கையும் நிறைவேற்ற இது சுவிட்சர்லாந்தின் லோசான் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாம் அத்தியாயம் பன்னாட்டளவில் விளையாட்டுக்களை கட்டுப்படுத்தும் குறிப்பிட்ட விளையாட்டுச் சார்ந்த பன்னாட்டு கூட்டமைப்புக்கள் குறித்தும் அவற்றின் செயற்பாடுகள் குறித்தும் விவரிக்கிறது. இந்தக் கூட்டமைப்புக்கள் அந்த விளையாட்டு விதிமுறைகளை நெறிப்படுத்துவதுடன் ஒலிம்பிக் இயக்கம் வளரவும் துணை நிற்கின்றன. நான்காம் அத்தியாயம் தேசிய ஒலிம்பிக் குழுக்களைக் குறித்தான விதிமுறைகளையும் செயற்பாட்டையும் விளக்குகின்றது. ஐந்தாம் அத்தியாயம் ஒலிம்பிக் விளையாட்டுக்களை நடத்துவது குறித்த செயல்முறைகளை விவரிக்கிறது. எவ்வாறு விளையாட்டுக்களை நடத்தும் நகரம்/நாடு தீர்மானிக்கப்படுகிறது, விளையாட்டுக்களில் பங்கேற்பதற்கான தகுதிநிலைகள், எந்தெந்த விளையாட்டுக்கள் சேர்க்கப்படுகின்றன போன்றவை இங்கு நெறிப்படுத்தப்படுகின்றன. மேலும் விளையாட்டுக்களின் போது நடைபெறும் விழாக்களையும் பதக்கம் வழங்கும் நிகழ்ச்சிகளையும் குறித்த நெறிமுறையும் கொடுக்கப்பட்டுள்ளது. அன்னக் குழியும் வைகையையும் அழைத்த படலம் அன்னக் குழியும் வைகையையும் அழைத்த படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் நூலின் மதுரைக் காண்டத்தில் வருகின்ற எட்டாவது படலமாகும். இப்படலம் குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலத்தின் தொடர்ச்சியாக வருகிறது. இப்படலத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமண விருந்தினை குண்டோதரன் உண்டும் பசியடங்காமல் தவித்ததை தொடர்ந்து, சிவபெருமான் அன்னக்குழியை உண்டாக்கி பசிதீர்த்தமையும், கங்கையை வைகை நதியாக பெருக்கெடுக்கச் செய்து குண்டோதரனின் தாகம் தீர்த்தமையும் இடம்பெற்றுள்ளது. லூயிஸ் ஹாம்மெட் லூயிஸ் பிளாக் ஹாம்மெட் (Louis Plack Hammett: ஏப்ரல் 7, 1894 – பிப்ரவரி 9, 1987)) ஐக்கிய அமெரிக்க வேதியியலாளர். ஹாம்மேட் சமன்பாட்டிற்காக அறியப்படுபவர். கரிம வேதியியலில் ஒருங்கிணைந்த பகுப்பாய்வுக்கு அடித்தளம் அமைத்தவர். 1961 இல் 'பிரீஸ்ட்லீ பதக்கம்' பெற்றவர். 'கர்டின்-ஹாம்மெட் விதிகள்'(Curtin–Hammett principle) இவர் பெயரால் வழங்கப்படுகிறது. போர்ட்லாந்து என்ற இடத்தில் தனது இளமையைக் கழித்த இவர் சுவிட்சர்லாந்து மற்றும் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் பயின்றார். தனது முனைவர் பட்ட ஆய்வை கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டார். கரிம வேதியியல் பற்றிய 'ஃபிசிக்கல் ஆர்கானிக் கெமிஸ்ட்ரி' என்ற நூலை எழுதினார். நிறை குறைவு நிறை குறைவு (Mass defect) என்பது ஓர் அணுகருவின் நிறைக்கும் கருவிலுள்ள புரோட்டான் மற்றும் நியூட்ரான்களின் தனித்தனி நிறையின் கூட்டுத்தொகைகும் உள்ள மாறுபாடாகும். இந்த குறைபாடு Δm ஆற்றலாக மாறி அணுக்கருத் துகள்களைப் பிணைக்கப் பயன்படுகின்றது. Δm.c²=E என்ற சமன்பாடு பிணைப்பாற்றலின் (Binding energy) அளவைக் கொடுக்கும். ஒலிம்பிக் சின்னங்கள் ஒலிம்பிக் சின்னங்கள் ("Olympic symbols") என்று ஒலிம்பிக் விளையாட்டுக்களை விளம்பரப்படுத்த பன்னாட்டு ஒலிம்பிக் குழு பயன்படுத்தும் கொடிகள், பிற சின்னங்கள் அழைக்கப்படுகின்றன. இவற்றில் சில, ஒலிம்பிக் தீச்சுடர், நற்பேறு சின்னங்கள் அல்லது முகடிகள் மற்றும் கருத்தாக்கம் குறிப்பிட்ட போட்டிக் காலத்தில் மட்டுமே புழக்கத்தில் இருக்கும். கொடிகள் போன்ற மற்ற பிற ஆண்டு முழுமையும் காணக்கூடியதாயிருக்கும். in olympic flag have five rings and contain the white background. Because the five ring contain five contenant. And the five ring colors indicate the five country and also that five color red,blue,black.yellow.green contain all flags. பிரான்சிஸ்கோ மரியா கிரிமால்டி பிரான்சிஸ்கோ மரியா கில்மாடி (Francesco Maria Grimaldi: 2 ஏப்ரல் 1618 – 28 டிசம்பர் 1663) இத்தாலியக் கிறித்துவ மதபோதகரும் அறிவியலறிஞரும் கணிவியலாளரும் இயற்பியளாலரும் ஆவார். இத்தாலியின் போலோக்னாவில் பிறந்தவர். 1640 - 1650 களில் ஜியோவானி ரிக்கியொலி என்பவருடன் இணைந்து கீழே விழும் பொருளின் தூரமானது அதற்காகும் நேரத்தின் வர்க்கத்திற்கு நேர் விகிதத்தில் அமையும் எனக் கண்டறிந்தார். மெல்லிய துளை ஒன்றின் வழியே ஒளி செல்லும்போது அது சுற்றிலும் விரவிப் பரவுகிறது என்றும் அதன் பெயர் "விளிம்பு விளைவு" என்றும் கண்டறிந்தார். இதை முதன் முதலாகக் கண்டறிந்தவர் இவரே ஆவார். நேப்பியர் ஷா வில்லியம் நேப்பியர் ஷா (Sir William Napier Shaw FRS, மார்ச் 4, 1854 - மார்ச் 23, 1945), ஆங்கிலேய வானியலாளர். இங்கிலாந்தின் பர்மிங்காமில் பிறந்த இவர் மேல் வளிமண்டலம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டவர். 1909 இல் அழுத்தத்தின் அலகான மில்லிபார் என்ற அலகை அறிமுகப்படுத்தியவர். ஆட்டுச் சண்டை ஆட்டுச் சண்டை அல்லது கிடாகட்டு (Ram fighting) என்பது ஆடுகளை மோதவிட்டு நடத்தும் ஒரு தமிழர் விளையாட்டாகும். இது உலகின் பல பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் விலங்குகள் துன்புறுத்தப்படுவதாக புகார் உள்ளதால் இந்தியாவில் நடத்த இயலாத சூழல் நிலவுகிறது. இதனால் சில இடங்களில் மறைமுகமாக இவ்விளையாட்டு நடத்தப்படுகிறது. இந்த ஆடுகளின் வெற்றியை மையமாக கொண்ட சூதாட்டமும் சில இடங்களில் நடக்கிறது. வெள்ளாட்டு வகையறா ஆடுகள் இந்த சண்டை இனத்தில் சேராது. செம்பறி, குரும்பை ஆட்டினத்தின் சில வகைகள் மட்டும் இதற்கென்றே சிறப்பு கவனத்தில் வளர்க்கப்படுகின்றன. இவற்றை தயார்படுத்தப் படுத்தும் விதமாக ஆடுகளை குட்டியாக இருக்கும்போதே வாங்கி வளர்க்கும்போது, ஆட்டுக் கொம்பின் மூலகுருத்தை விட்டுவிட்டு மேலோட்டைமட்டும் உடைத்து விடுவார்கள். பின் மறுகொம்பு சற்று பெரியதாக வளர்ந்ததும் மீண்டும் உடைத்து எடுப்பார்கள் அதன் கொம்புகளை இவ்வாறு மூன்று முதல் ஐந்து முறை பிடுங்கிவிடுவர். இதன்பிறகு முளைக்கும் கொம்பு பெரியதாகவும் உறுதியாகவும் முரட்டுத்தனமாகவும் இருக்கும். இந்த ஆட்டை உயர் தரமுள்ள உணவைக் கொடுத்து நல்ல வலிமை உள்ளதாக வளர்ப்பர். போட்டியில் கலந்து கொள்ளும் ஆடுகளை மோதவிடுவர். அதிகபட்சம் 50 முட்டல்கள் நடக்கும். மோதலில் ஈடுபடும் ஆடு பின்வாங்கி ஓடிவிட்டாலோ அல்லது இறந்துவிட்டாலோ தோற்றுவிட்டதாக அறிவிக்கப்படும். 50 முட்டலையும் தாண்டி இரண்டும் சமபலத்துடன் களத்தில் நின்றிருந்தால் அவைகளை நடுவர்கள் பிரித்து சற்று தொலைவாக மைதானத்தின் இரு எதிர்முனைகளுக்கு கொண்டுசென்று விடுவித்து மோத விடுவார்கள். அந்த இறுதி ஒற்றை மோதலில் தடுமாறிய கிடா தோற்றதாக அறிவிக்கப்படும். பழந்தமிழகத்தில் ஆட்டுச் சண்டையானது தகர்ச்சணை்டை என அழைக்கப்பட்டது. தகர் என்பது செம்மறியாடு. செம்மறி ஆட்டுக் கடாக்கள் இரண்டினை மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் விளையாடாக இது இருந்தது. விலங்குகளில் ஆணைக் குறிக்க வழங்கப்படும் மரபுச் சொற்களில் ஒன்று தகர் என்னும் சொல். இவற்றில் ஆண்-ஆட்டைக் குறிக்கும் செற்களில் ஒன்று தகர். போரிடும்போது தகர் பின்வாங்கிப் பின்வாங்கித் தாக்கும். தகரின் மலையிலுள்ள கொம்புகள் வேல் நுனி போலக் கூர்மையாக இருக்கும். அவை முறுக்கிக்கொண்டிருக்கும். மலைச்சாரல்களில் வாழும் இவற்றின் ஒர் இனம் வருடை. வருடையாட்டுக் குட்டிகள் யாழிசைக்கு ஏற்ப வயிரியர் மகளிர் துள்ளிக் குதித்து ஆட்டம் காட்டுவது போலத் துள்ளி விளையாடும். துருவை என்னும் வெண்ணிறச் செம்மறி ஆடுகளோடு சேர்ந்து வருடையாடு மேய்வதும் உண்டு. ஏழகத்தகர் என்னும் அதன் இனம் நீர்ப்பெயற்று என்னும் கீழைக்கடற்கரைத் துறைமுகப் பட்டினத்தில் அக்காலத்தில் எகினம் போலச் சுழன்று விளையாடியது. இந்த இனம் காவிரிப்பூம்பட்டினம் கீழைக் கடற்கரைத் துறைமுகப் பகுதியில் ஞமலி என்னும் வேட்டைநாய்களோடு சேர்ந்து இணக்கமாகத் தகர் விளையாடியது. போரிடப் பயன்படுத்தப்படும் தகரை மேழகத்தகர் என்பர். காவிரிப்பூம்பட்டினத்தின் உறைக்கிணற்றுப் புறஞ்சேரியில் மேழகத்தகர் விளையாட்டும், சிவல் விளையாட்டும் நடந்தன. பின்புல கதிர்வீச்சு பின்புலக் கதிர்வீச்சு ("Background radiation") என்பது மனித இனமும் பிற உயிரினங்களும் இவ்வுலகில் தோன்றிய நாள்முதல் உட்பட்டுவரும் இயற்கை மற்றும் செயற்கைக் கதிர்வீச்சு ஆகும். இவ்வகை கதிர்வீச்சு பேரண்டத்திலிருந்தும் (Cosmic radiation) புவிப்பரப்பிலிருந்தும் (terestrial radiation) உடலில் காணப்படும் (Internal radiation) சில கதிர் தனிமங்களிலிருந்தும் தோன்றுகின்றன. இவை கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டன. தனிநபர் பெறும் பின்புலக் கதிர்வீச்சு, அவர் வாழும் இடம், உணவுப் பழக்கம் ஆகியவைகளைப் பொறுத்திருக்கிறது. உலக சைவப் பேரவை உலக சைவப் பேரவை என்பது லண்டனில் சிவநந்தியடிகள் என்பாரால் தோற்றுவிக்கப்பட்ட அமைப்பாகும். இந்த பேரவை மூலம் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை உலக சைவ மாநாடு பல்வேறு நாடுகளில் நடத்தப்படுகிறது. இம்மாநாடு உலக சைவப் பேரவை மாநாடு என்றும் அழைப்பெறுகிறது. இதுவரை பன்னிரெண்டு முறை உலக சைவ மாநாடுகளை இப்பேரவை நடத்தியுள்ளது. ஏழுகடல் அழைத்த படலம் ஏழுகடல் அழைத்த படலம் உருவாக்கம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் நூலின் மதுரைக் காண்டத்தில் வருகின்ற ஒன்பதாவது படலமாகும். இப்படலத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணத்திற்குப் பிறகு, மீனாட்சியின் அன்னை காஞ்சனை மாலை கௌதம மகரிஷியின் மூலம் ஆறும், கடலும் இருக்குமிடத்தில் நீராடல் புண்ணியம் என்று அறிதலும், அன்னையின் ஆசையை நிறைவேற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரிடம் வேண்டுதலும், மனைவியின் வேண்டுகோளுக்கு இசைந்து சிவபெருமான் மதுரைக்கு ஏழுகடல்களை வருவித்தலும் இடம்பெற்றுள்ளது. மலயத்துவசனை அழைத்த படலம் மலயத்துவசனை அழைத்த படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் நூலின் மதுரைக் காண்டத்தில் வருகின்ற பத்தாவது படலமாகும். இப்படலம் ஏழுகடல் அழைத்த படலத்தின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது. மீனாட்சியின் அன்னை காஞ்சனை மாலைக்கு ஏழுகடல்களை வருவத்து தந்தபின், கணவனை இழந்தவள் என்பதால் சாஸ்திரப்படி கணவனுடன் நீராட இயலாமல் இருந்தவளுக்கு சிவபெருமான் சொர்க்கத்திலிருந்து மலயத்துவ பாண்டியனை வருவித்தலை இப்படலம் விளக்குகிறது. உக்கிரபாண்டியன் திருவவதாரப் படலம் உக்கிரபாண்டியன் திருவவதாரப் படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் நூலின் மதுரைக் காண்டத்தில் வருகின்ற பதினொன்றாவது படலமாகும். இப்படலம் மலயத்துவசனை அழைத்த படலத்தின் தொடர்ச்சியாக வருகிறது. இப்படலத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணத்திற்குப் பிறகு முருகப்பெருமானை மீனாட்சியின் வயிற்றில் மகனாக பிறக்க சிவன் வேண்டுவதும், கர்ப்பமுற்ற மீனாட்சிக்கு சிறப்புற நடந்த சீமந்தமும், பின் முருகப்பெருமான் உக்கிரபாண்டியனாக அவதரித்தமையையும் விளக்கப்பட்டுள்ளது. பாலாறு-பொருந்தலாறு அணை பாலாறு-பொருந்தலாறு அணை தமிழ்நாடு திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்தில் பழனியிலிருந்து தெற்கே சுமார் 7 கி.மீ. தொலைவில் ரெங்க மலைக்கும், குட்டிக்கரடுக்கும் இடையே பாலாறு, பொருந்தலாறு ஆகிய இரு ஆறுகளுக்கும் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. கொடைக்கானல் ஏரியின் உபரி நீர், வில்பட்டி, வடகவுஞ்சி ஆகிய கிராமப் பகுதியில் உருவாகும் இந்த ஆறு பாலாறு அணைப்பகுதியிலும், கொடைக்கானல் வட்டம் மன்னவனூர், கிளாவரை, பூம்பாறை, வில்பட்டி ஆகிய மலைக் கிராமங்களின் பகுதியில் உருவாகும் ஆறு பொருந்தலாறு அணைப்பகுதியிலும் வந்து தேங்குகிறது. இந்த இரு அணைப் பகுதியையும் இணைத்து ஒரே அணையாக பாலாறு-பொருந்தலாறு அணை கட்டப்பட்டுள்ளது. பாலாறு அணையில்மா அனுமர் கோவில் மற்றும் மாமன் பள்ளி தர்ஹா உள்ளது சிறப்பாகும். குறைவெப்ப மருத்துவம் குறைவெப்ப மருத்துவம் அல்லது அறுவை மருத்துவம் (Cryotherapy or surgery) ) என்பது புற்றை உறையவைத்து நோயினைக் குணப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் மேற்கொள்ளப்படும் சிகிச்சைமுறை. முலைப்புற்று வந்த சில நோயாளிகள் அறுவைச் சிகிச்சைக்கு மறுக்கும்போது, அவர்களுக்கு மிகக் குறைந்த வெப்ப மருத்துவம் மேற்கொள்ளப்பட்டது. ஐந்து வருடங்களுக்குப் பிறகும் அவர்களிடம் நோய் அறிகுறி ஏதுமில்லை. மிகவும் குறைந்த வெப்பநிலையிலுள்ள வளிமத்தை சிறு ஊசிமூலம் புற்றுநோய் கண்ட திசுக்களைச் சுற்றி செலுத்தி மருத்துவம் செய்யப்பட்டது. இம்முறையில் நோயாளி எந்தவிதமான துன்பமும் அடைவதில்லை. மேலும் இம் முறை காப்பானதும் நல்ல பயனுள்ளதாகவும் உள்ளது. மார்பக இழப்பில்லாமலும் மருத்துவம் செய்யமுடியும். தீச்சுணக்கு தீச்சுணக்கு (Fire-retardant) என்பது எரியும் தீயினை மேலும் பரவவிடாமல் செய்வதற்காக மரப்பொருட்கள் மற்றும் பிற வீட்டு உபயோகப்பொருட்களின் மீது பூச வேதிப்பொருட்களால் உருவாக்கப்பட்ட ஒரு திரவம் அல்லது மை ஆகும். குரூன்லான் ஆய்வகத்தைச் சேர்ந்த கலினா லாபர் மற்றும் அவரது குழுவினர் இணைந்து ஒரு புதியத் தீச்சுணக்கு பூச்சைக் கண்டறிந்ததாக அறிக்கை ஏப்பிரல் 22, 2013 அன்று ஏசிஎஸ் மேக்ரோ லெட்டர்ஸ் ஆய்விதழில் வெளியிடப்பட்டது. எசு. எம். கமால் சேக்-உசைன் முகமது கமால் என்னும் எசு. எம். கமால் (1928 அக்டோபர் 15 – 2007 மே 31) வரலாற்று ஆய்வாளர். நூலாசிரியர், பதிப்பாளர், இதழாசிரியர், வானொலி வடிவ எழுத்தாளர், சமுதாயத் தொண்டர். பல வரலாற்றுக் கருத்தரங்குகளில் இலக்கியம், வரலாறு, கல்வெட்டு, செப்பேடு, நாணவியல் பற்றி பல ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியவர். இராமநாதபுரம், சிவகங்கைப் பகுதியில் நடைபெற்ற விடுதலைப் போர்களை ஆவணப்படுத்தியவர். வரலாறுப் பேரவைகள் பலவற்றில் உறுப்ப்பினராக இருந்தவர். தான் ஆற்றிய வரலாற்றுப் பணிக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றவர். முகமது கமால் இராமநாதபுரம் நகரில் வாழ்ந்த சேக் உசைன் (ஷேக்ஹூசன்) – காதர் அம்மாள் என்னும் இணையருக்கு மகனாக 1928 அக்டோபர் 15 ஆம் நாள் பிறந்தார். வெவ்வேறு கல்வி நிறுவனங்களில் பயின்று கலை இளவர் (Bachelor of Arts) பட்டம் பெற்றார். தமிழ்நாட்டு அரசின் வருவாய்த் துறையில் நாற்பதாண்டுகள் பணியாற்றினார். எழுத்தராகப் பணியில் இணைந்து வட்டாட்சியர் நிலைவரை உயர்ந்து ஓய்வு பெற்றார். கமால், நூர்சகான் என்பவரை மணந்தார். இவர்களுக்கு சர்மிளா என்னும் மகளும் இரு மகன்களும் உள்ளனர். முகமது கமால் பின்வரும் நூல்களை எழுதியிருக்கிறார் இவை தவிர 7 நூல்கள் அச்சேறாமல், கையெழுத்துப்படிகளாக, இருக்கின்றன. இந்நூல்கள் அனைத்தும் 2010 ஆம் ஆண்டில் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. கமால், தமிழ் அருவி என்னும் இசுலாமிய இலக்கிய இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். இவ்விதழ் இருதிங்களுக்கு ஒரு முறை வெளிவந்தது. இதன் முதல் இதழ் நவம்பர் 94 ஆம் ஆண்டில் வெளிவந்தது. வரலாற்று ஆய்வாளரான கமால் பின்வரும் அமைப்புகளில் வானாள் உறுப்பினராக இருந்தார். . கமால் வரலாற்று இலக்கியப் பணியைப் பாராட்டி பல்வேறு அமைப்புகள் பின்வரும் விருதுகளை வழங்கி உள்ளன:, கிளாக்கோமா என்ற கண் நீரழுத்த நோயால் கமால் 2002 ஆம் ஆண்டில் தன்னிரு கண்களின் பார்வையையும் இழந்தார். அதன் பின்னரும் உதவியாளர்களின் உதவியோடு ஆறு நூல்களை எழுதினார். 2007 மே 31ஆம் நாள் இராமநாதபுரத்தில் காலமானார். திருநகரி திருநகரி தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி வட்டம், சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஒரு கிராமம். இவ்வூரும் இதற்கு அருகிலுள்ள திருவாலியும் இணைந்து 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திருவாலி, திருநகரி என அழைக்கப்படுகின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, திருநகரியில் 3890 மக்கள் வசிக்கின்றார்கள். பாலின சதவிகிதம் 1013. எழுத்தறிவு பெற்றவர்கள் 1991 பேர். இதில் 1108 பேர் ஆண்கள்; 883 பேர் பெண்கள். எழுத்தறிவு பெற்றுள்ளோர் சதவீதம் 59.4. 16.05 சதவீதம் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவர். திருவாலி திருவாலி தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி வட்டம், சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஒரு கிராமம். இவ்வூரும் இதற்கு 5 கிமீ தொலைவிலுள்ள திருநகரியும் இணைந்து 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திருவாலி, திருநகரி என அழைக்கப்படுகின்றது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, திருவாலியில் 3003 மக்கள் வசிக்கின்றார்கள். பாலின விகிதம் 1011. எழுத்தறிவு பெற்றவர்கள் 1943 பேர். இதில் 1089 பேர் ஆண்கள்; 854 பேர் பெண்கள். எழுத்தறிவு பெற்றுள்ளோர் சதவீதம் 73.91. ஆறு வயதுக்குட்பட்டோர் 14.23 சதவீதம் ஆவர். வன்னியும் கிணறும் இலிங்கமும் அழைத்த படலம் வன்னியும் கிணறும் இலிங்கமும் அழைத்த படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் திருவிளையாடல் புராணம் நூலின் இறுதி படலமாகும். இப்படலத்தில் மதுரை வணிகன் ஒருவனுக்கு பெற்றோர் இல்லாத பெண்ணை ஞானசம்மந்தர் செய்து வைத்த திருமணமும், அத்திருமணத்தினை ஏற்காத வணிகனின் முதல் மனைவிக்கு திருமண சாட்சியாக வன்னி மரமும், கிணரும், இலிங்கமும் எழுந்தருளியது இடம்பெற்றுள்ளது. திருவெண்காடு திருவெண்காடு தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டம் , சீர்காழி வட்டம், சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஒரு கிராமம். இங்குள்ள சுவேதாரண்யேசுவரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவராலும் பாடப்பெற்றுள்ளது. இக்கோயில் நவக்கிரகத் தலங்களில் புதனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது. சைவ சித்தாந்த முதல் சந்தான ஆசாரியார் மெய்கண்டார் பிறந்த ஊர். சைவ எல்லப்ப நாவலர் பிறந்த இராதா நல்லூர் இந்த ஊரிரிருந்து நான்கு மைல் தொலைவில் உள்ளது. திருவெண்காட்டுப் புராணம் என்னும் நூல் இவ்வூர் இறைவன்மீது பாடப்பட்டது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, திருவெண்காட்டில் 7403 மக்கள் வசிக்கின்றார்கள். பாலின விகிதம் 1005. எழுத்தறிவு பெற்றவர்கள் 4948 பேர். இதில் 2733 பேர் ஆண்கள்; 2215 பேர் பெண்கள். எழுத்தறிவு பெற்றுள்ளோர் சதவீதம் 75.67. 13.21 சதவீதம் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவர். துருவை துருவை என்பது வெண்ணிறச் செம்மறி ஆடு. ஞமலி ஞமலி என்பது நாயின் இனங்களில் ஒன்று. இது வேட்டையாடவும், இரவில் வீட்டுக்குக் காவலாகவும் பயன்பட்டது. இதனைப் பற்றியும் இதன் பயன் பற்றியும் சங்கப்பாடல்கள் பல சுவையான செய்திகளைக் குறிப்பிடுகின்றன. பிஆர்சிஏ1 பிஆர்சிஏ1 (BRCA1, , பிரெக்கா; மார்பகப் புற்றுநோய் 1, முன்னதான துவக்கம்) என்பது மனிதரில் டி. என். ஏ.வை சீராக்கும் மார்பகப் புற்றுநோய் வகை 1 ஏற்குமை புரதம் எனப்படும் புரதத்தை உருவாக்குகின்ற கண்காணிப்பு மரபணு ஆகும். இத்தகைய மரபணு இருப்பதற்கான முதற்சான்றை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பெர்க்லி வளாகத்திலுள்ள மேரி-கிளையர் கிங் ஆய்வகம் 1990இல் வழங்கியது. நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், உலகெங்கும் நிகழ்ந்த தேடல் போட்டியின் விளைவாக 1994இல் உடா பல்கலைக்கழகத்தின் "தேசிய சுற்றுசூழல் உடல்நல அறிவியல் கழகமும்" (NIEHS) "மைரியட் ஜெனடிக்சு" என்ற நிறுவனமும் இணைந்து இம்மரபணுப்படியை உருவாக்கின. பிரெக்கா1 மார்பகம் மற்றும் பிறத் திசுக்களில் உள்ள உயிரணுக்களில் காணப்படுகிறது; சிதைந்த டி. என். ஏ.க்களை சீராக்கவும், அவ்வாறு சீராக்க இயலாத உயிரணுக்களை அழிக்கவும் இது துணை புரிகிறது. பிரெக்கா1 மரபணுவே சேதமுற்றால் சிதைந்த டிஎன்ஏக்கள் சரியாக சீராக்கப்படுவதில்லை; இது புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை கூட்டுகின்றது. பிரெக்கா1 அல்லது பிரெக்கா2 மரபணு மாற்றமடைந்த நோயாளிகளுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புக்களை கண்டறியும் காப்புரிமைகள் மைரியட் ஜெனடிக்சு நிறுவனத்திடம் உள்ளது. இந்த சோதனைகளை தான் மட்டுமே வழங்கும் வணிக அமைப்பினால் 1994இல் சிறிய நிறுவனமாக இருந்த மைரியட் 2012இல் ஆண்டுக்கு $500மில்லியன் வருமானமுள்ள பொதுப்பங்கு நிறுவனமாக உயர்ந்துள்ளது. இச்சோதனைக்கான மிக உயரிய விலை சர்ச்சையைக் கிளப்பியுள்ளது; மேலும் இதன் சோதனை முடிவுகளை மற்ற ஆய்வகங்கள் மூலமாக சரிபார்க்கும் தன்மை இல்லாத குறைகளும் எழுந்தன. இவற்றையடுத்து இந்த நிறுவனத்தை எதிர்த்து "மூலக்கூற்று நோய்க்குறியியல் சங்கம்" வழக்கு தொடுத்துள்ளது. அடுக்கு (தரவுக் கட்டமைப்பு) கணினியியலில், அக்க்கு என்பது ஒரு நுண்புல தரவுக் கட்டமைப்பு ஆகும். இதன் சேகரிப்பில் உள்ள தரவுகள் மீது இரண்டு செயற்பாடுகளை மட்டுமே மேற்கொள்ள முடியும். ஒன்று புதிய தரவு ஒன்றைச் அடக்கில் தள்ளுதல் (push) அல்லது சேர்த்தல். மற்றையது அடக்கில் இருக்கும் தரவை மீளுதல் அல்லது நீக்குதல் ஆகும். எது கடைசியாக சேர்க்கப்பட்டதோ அதுவே முதலில் நீக்கப்படும். இதனால் இது ஒரு கடைசி-உள்-முதலில்-வெளியே (Last-In-First-Out (LIFO)) வகைத் தரவுக் கட்டமைப்பு. பிஆர்சிஏ2 பிஆர்சிஏ2 (BRCA2, , பிரெக்கா; மார்பகப் புற்றுநோய் 2, முன்னதான துவக்கம்) என்பது மனிதரில் டி. என். ஏ.வை சீராக்கும் மார்பகப் புற்றுநோய் வகை 1 ஏற்குமை புரதம் எனப்படும் புரதத்தை உருவாக்குகின்ற கண்காணிப்பு மரபணு ஆகும். "பிரெக்கா2" புற்றுக்கட்டி அடக்கும் மரபணுக் குடும்பத்தைச் சார்ந்ததாகும். முழுமையான மரபணுத்தொகைத் தரவுகள் கண்டறியப்பட்டுள்ள பெரும்பாலான பாலூட்டிகளில் இவற்றின் ஒத்துருக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த மரபணுத் தொடர்பான புரதம் நிறப்புரி சிதைவுகளை சீராக்குவதில் பங்கு பற்றுகின்றன. பிரெக்கா2 மரபணு மனிதரில் 13ஆம் நிறப்புரியின் நீளமான பகுதியில் உள்ள (q) 12.3 (13q12.3)இல் அமைந்துள்ளது. இதன் முதல் படியாக்கத்தை மைரியட் ஜெனடிக்சு அறிவியலாளர்கள் உருவாக்கினர். பிரெக்கா1 அல்லது பிரெக்கா2 மரபணு மாற்றமடைந்த நோயாளிகளுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புக்களை கண்டறியும் காப்புரிமைகள் மைரியட் ஜெனடிக்சு நிறுவனத்திடம் உள்ளது. இந்த சோதனைகளை தான் மட்டுமே வழங்கும் வணிக அமைப்பினால் 1994இல் சிறிய நிறுவனமாக இருந்த மைரியட் 2012இல் ஆண்டுக்கு $500மில்லியன் வருமானமுள்ள பொதுப்பங்கு நிறுவனமாக உயர்ந்துள்ளது. இச்சோதனைக்கான மிக உயரிய விலை சர்ச்சையைக் கிளப்பியுள்ளது; மேலும் இதன் சோதனை முடிவுகளை மற்ற ஆய்வகங்கள் மூலமாக சரிபார்க்கும் தன்மை இல்லாத குறைகளும் எழுந்தன. இவற்றையடுத்து இந்த நிறுவனத்தை எதிர்த்து "மூலக்கூற்று நோய்க்குறியியல் சங்கம்" வழக்கு தொடுத்துள்ளது. மலேசியாவின் 13வது நாடாளுமன்றத்தின் அமைச்சரவை மலேசியாவின் 13வது நாடாளுமன்றத்தின் அமைச்சரவையைப் பிரதமர் நஜீப் துன் ரசாக், 2013 மே 15 மாலை 5.15க்கு அறிவித்தார். 2013 மே 5 இல் நடைபெற்ற மலேசியப் பொதுத் தேர்தலில் பிரதமர் நஜீப் துன் ரசாக் தலைமையிலான ஆளும் தேசிய முன்னணி நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. இருப்பினும், எதிர்க் கட்சிக் கூட்டணியான பாக்காத்தான் ராக்யாட், 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலைக் காட்டிலும், இந்தத் தேர்தலில் ஏழு இடங்களைக் கூடுதலாகக் கைப்பற்றியது. மலேசியப் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி 133 இடங்களையும், அன்வார் இப்ராகிம் தலைமையிலான பாக்காத்தான் ராக்யாட் 89 இடங்களையும் கைப்பற்றின. இந்த அமைச்சரவையில் மலேசிய சீனர் சங்கத்தைச் சார்ந்த எவரும் பிரதிநிதிக்கப்படவில்லை. 2008 ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் மலேசிய சீனர் சங்கம் மிக மோசமான தோல்வியைக் கண்டது. அதனால், மலேசியப் பொதுத் தேர்தலில் அந்தக் கட்சி, மேலும் குறைவான இடங்களைப் பெறுமானால், மலேசிய சீனர் சங்கத்தைச் சார்ந்தவர்கள் எவரும் அரசாங்கப் பதவிகளை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று, தேர்தலுக்கு முன்னரே அக்கட்சியின் தலைமைத்துவம் அறிவிப்பு செய்து இருந்தது. இந்தப் பொதுத் தேர்தலிலும் அக்கட்சி மிக மோசமான தோல்வியைக் கண்டது. அதனால், நடுவண் அரசாங்கத்திலும் மாநில அரசாங்கத்திலும், மலேசிய சீனர்கள் எவரும் அரசுப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளவில்லை. ஜொகூர் மாநில மன்னரின் வேண்டுகோளுக்கு இணங்கி ஒரே ஒரு சட்டசபை உறுப்பினர் மட்டும் ஜொகூர் மாநில ஆட்சிக்குழுவில் இடம்பெற்றுள்ளார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று மலேசிய சீனர் சங்கத்தின் உச்சமன்றக்குழு அறிவித்துள்ளது. சபா, சரவாக் மாநிலங்களுக்கு கூடுதலான அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தேசிய முன்னணிக்கு அந்த மாநிலங்களின் மக்கள் முழுமையான ஆதரவை வழங்கியதால், அந்த மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூடுதலான அமைச்சரவை பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளன. மலேசியாவின் புது அமைச்சரவையில் இந்தியர்கள் இருவர் முழு அமைச்சர்களாகவும், நால்வர் துணை அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விவரங்கள்: சாந்தலிங்க சுவாமிகள் சாந்தலிங்க சுவாமிகள் என்பவர் பேரூரில் வீரசைவ மடத்தை நிறுவியவர் ஆவார். இவர் அவிரோத உந்தியார், கொலை மறுத்தல், நெஞ்சுவிடு தூது, வைராக்ய சதகம், வைராக்ய தீபம் போன்ற வீரசைவ நூல்களை எழுதியுள்ளார். மேலும் இவர் சிவப்பிரகாச சுவாமிகளின் தங்கை ஞானாம்பிகையின் கணவராவார். இவருடைய சீடர் சிதம்பர சுவாமிகள் என்பவர் வைராக்கிய சதகம், வைராக்கிய தீபம், அவிரோதவுந்தியார், கொலை மறுத்தல், நெஞ்சுவிடு தூது போன்ற இவரது நூல்களுக்கு உரை நூல்களை எழுதியுள்ளார். உரையாசிரியர்கள் - மு.வை.அரவிந்தன் சிதம்பர சுவாமிகள் சிதம்பர சுவாமிகள் என்பவர் சாந்தலிங்க சுவாமிகளின் சீடராவர். இவர் சாந்தலிங்க சுவாமிகள் வைராக்கிய சதகம், வைராக்கிய தீபம், அவிரோதவுந்தியார், கொலை மறுத்தல், நெஞ்சுவிடு தூது போன்ற நூல்களுக்கு உரை நூல்களை எழுதியுள்ளார். இவரை சிதம்பரதேவர் என்றும் அழைக்கின்றனர். மதுரை மீனாட்சியம்மை கலிவெண்பா, நெஞ்சு விடு தூது, திருப்போரூர்ச் சன்னதிமுறை, பஞ்சாதிகார விளக்கம் போன்ற நூல்களை எழுதியுள்ளார். இவரது சரித்திரம் புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியார் என்ரவரால் எழுதப்பெற்றுள்ளது. மேலும் இவர் உபதேச உண்மை, உபதேசக் கட்டளை, திருப்போரூர் சந்நிதி முறை, தோத்திர மாலை, திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம், கிளிப்பாட்டு, குயில்பாட்டு, தாலாட்டு, திருப்பள்ளி எழுச்சி, ஊசல், தூது போன்றவற்றையும் எழுதியுள்ளார். உரையாசிரியர்கள் - மு.வை.அரவிந்தன் குமாரதேவர் குமாரதேவர் என்பவர் சாந்தலிங்க அடிகளின் சீடராவர். இவர் அத்வைத உண்மை, ஆகம நெறியகவல், உபதேச சித்தாந்தக் கட்டளை, சகச நிட்டை, சிவதரிசன அகவல் போன்ற நூல்களை எழுதியுள்ளார். இவர் இயற்றிய மகாராஜா துறவு எனும் நூல் பெரும்புகழ் பெற்றது. இவர் கர்நாடக வீர சைவ மரபினைச் சார்ந்தவர். கச்சியப்ப முனிவர் கச்சியப்ப முனிவர் என்பவர் சிவஞான முனிவரின் சீடராவார். இலக்கணம், இலக்கியம், சைவ சித்தாந்தம் ஆகியவற்றில் வல்லவராக விளங்கிய இவர், திருத்தணிகைப் புராணம், பூவாளூர்ப் புராணம், பேரூர்ப் புராணம், விநாயக புராணம், திருவானைக்காப் புராணம், காஞ்சிப் புராணப் பிற்பகுதி, சென்னை விநாயகர் பிள்ளைத் தமிழ், கச்சியானந்த ருத்ரேசர் வண்டு விடு தூது, பதிற்றுப் பத்தாந்தாதி, திருத்தணிகையாற்றுப் படை, பஞ்சாக்கர அந்தாதி போன்ற நூல்களை இயற்றியுள்ளார். இவருக்கு கவிராட்சதர் என்ற சிறப்பு பெயரும் உண்டு. சைவ சமய இலக்கியம் அம்பலவாண தேசிகர் அம்பலவாண தேசிகர் என்பவர் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சார்ந்த சைவ சமய நூலாசிரியர் ஆவார். அதிசய மாலை, உபதேச வெண்பா, சன்மார்க்க சித்தியார், சித்தாந்த சிகாமணி, சித்தாந்தப் பஃறொடை, தசகாரியம் முதலிய பத்து சைவ சாத்திர நூல்களை இயற்றியுள்ளார். மேலும் அனுபோக வெண்பா, பாஷண்ட நிராகரணம், பூப்பிள்ளை யட்டவணை போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார். சைவ சமய இலக்கியம் சதாசிவ ரூபம் - மூலமும் உரையும்” சதாசிவ ரூபம் - மூலமும் உரையும் என்பது சீகாழி - சட்டநாத வள்ளலார் எழுதிய சதாசிவ ரூபம் எனும் சிவ ஆகம தமிழ் மொழிப்பெயர்ப்பின் உரை நூலாகும். இதனை பூவை கல்யாண சுந்தர முதலியார் மற்றும் அவரது சீடர் வல்லை சண்முகசுந்தரமுதலியாரும் இணைந்து தந்துள்ளனர். இந்நூலில் சிவபெருமானின் சதாசிவ ரூபத்தினைப் பற்றியும், சதாசிவ தோற்றம் பற்றியும் விரிவாக விளக்குகிறது. சைவ சமய இலக்கியம் சைவச் சிற்றிலக்கியங்கள் சைவச் சிற்றிலக்கியங்கள் என்பவை சைவ சமயக் கடவுள்களின் மீது பாடப்பெற்ற சிற்றிலக்கிய நூல்களாகும். கோவை, தூது, உலா, பரணி, பிள்ளைத்தமிழ் போன்ற சிற்றிலக்கிய வகைகள் சிவபெருமான், உமை, விநாயகன், முருகன் போன்றோர் மீது பாடல்பெற்றவை தமிழில் நூல்களாகவும், தனிப்பாடல்களாகவும் உள்ளன. தமிழ் சிற்றிலக்கிய நூல்கள் சைவ சமயத்தினைச் சார்ந்தே முதன் முதலாக இயற்றிப்பட்டுள்ளன. அவற்றுள் பலவும் கோவை, உலா, கலம்பகம், பிள்ளைத்தமிழ், அந்தாதி, சதகம், பரணி, பல்வேறு பாவகைகளில் எண்ணிக்கைக் குறித்து எழுந்த மாலைகள், பள்ளு, குறவஞ்சி போன்ற இலக்கிய வகைகளுள் எழுதப்பெற்றுள்ளன. சைவச் சிற்றிலக்கியங்களுள் அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்து, பாம்பன் சுவாமிகள், வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள், திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் ஆகியோர் பாடிய முருகனை பற்றிவை சில எடுத்துக்காட்டுகளாகும். சைவ சமயம் சார்ந்த தமிழ் மொழி வளர்ச்சிக்கு இவ்வகை சைவச் சிற்றிலக்கியங்கள் பெரும் தொண்டாற்றின. ஒட்டக்கூத்தர் எழுதிய குலோத்துங்கசோழன் பிள்ளைத்தமிழ் என்ற சிற்றிலக்கியமே முதல் தமிழ் சிற்றிலக்கியம் என்று கூறுகின்றனர். அந்தகக்கவி வீரராகவ முதலியார் இயற்றியுள்ள திருக்கழுக்குன்றப் புராணம், திருக்கழுக்குன்ற மாலை, சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ், திருவாரூர் உலா, சந்திரவாணன் கோவை மற்றும் பல தனிப்பாடல்களை சைவச் சிற்றிலக்கிய வகையைச் சார்ந்ததாகும். சைவ சமய இலக்கியம் தழல் தழல் என்பது ஒரு விளையாட்டுக் கருவி. வளைத்து இசை எழுப்பும் கருவி. சங்ககாலத்தில் காதலன் தன் காதலிக்குத் தரும் விளையாட்டுக் கருவி இது. தழல், தட்டை, குளிர், முறி என்பன அவன் தந்த விளையாட்டுப் பொருள்கள் எனச் சங்ககாலப் பாடல்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் தட்டை, குளிர் ஆகியன விளையாட்டுப் பொருள்கள் எனபது வெளிப்படை. முறி என்பது காதலி உடுத்திக்கொள்ளத் தந்த தழையாடை. தட்டையைத் தட்டிக் குறமகள் தினை கவர வரும் பறவைகளை ஓட்டினாள் எனக் கூறும் பாடல் தழலை வளைத்துப் பறவைகளை ஓட்டினாள் எனவும் குறிப்பிடுகிறது. 'தழங்கு குரல்' என்னும் தொடர் இடி முழக்கத்தையும், முரசு முழக்கத்தையும், நாத் தழுதழுக்கும் பேச்சையும் உணர்த்துவதைச் சங்கப் பாடல்கள் தெரிவிக்கின்றன. இவற்றால் தழங்கும் ஓசை எழுப்புவது தழல் என்னும் கருவி என்பது தெரியவருகிறது. ஆண்பால் பிள்ளைத்தமிழ் பாடல்களில் வரும் சிறுபறை போல இந்தத் தழல் மகளிர் முழக்கும் பறை என உணரமுடிகிறது. ஆண்டாள் முழக்கிய பறை இந்தக் கருத்தோட்டத்தில் நினைவுக்கு வருகிறது. இயேசு மத நிராகரணம் இயேசு மத நிராகரணம் என்பது சிவப்பிரகாசர் பதினேழாம் நூற்றாண்டில் கிறித்தவ மத கருத்துக்களை எதிர்த்து செய்யுள் வடிவில் எழுதப்பட்ட நூலாகும். சதுரகராதி எழுதிய வீரமாமுனிவர் காலத்திய இந்நூல் கிறித்தவத்தை முற்றிலுமாக நிராகரிக்கும் விதமாகவும் அதன் கருத்துக்களை எதிர்க்கும் விதமாகவும் படைக்கப்பட்டுள்ளது. சிவப்பிரகாசர், "கற்பனைக் களஞ்சியம்" என்று தமிழ் அறிஞர்களால் போற்றப்படும் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் சிற்றிலக்கியப் புலவர். இவர், "கவி சார்வ பெளமா", "நன்னெறி சிவப்பிரகாசர்", "துறைமங்கலம சிவப்பிரகாசர்" என்று பலவாறாக அழைக்கப்பட்டார். தமிழகத்தில் சைவ வளர்ச்சிக்கு வித்திட்ட சமய குரவர்களான சம்மந்தர்,சுந்தரர், அப்பர்,மற்றும் மாணிக்கவாசகர் ஆகிய நால்வருக்கும் "நால்வர் நான்மணி மாலை" என்ற கவிதை நூலை இவர் எழுதினார். இவர் முப்பத்து நான்கிற்கும் மேற்பட்ட சைவ சமயச் சார்புள்ள நூல்களை இயற்றியுள்ளார். சிவப்பிரகாசர் எடுத்துக்காட்டுக்களுடன் கிறித்தவத்துக்கு எதிரான கருத்துக்களுடன் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். வரலாற்றின் படி இராபர்ட் தெ நோபிலி உடன் இந்துத்துவம் மற்றும் கிறித்துவம் ஆகியவற்றின் வேறுபாடுகளைப்பற்றி சமயவாதம் புரிந்ததாக கூறுவார். ஆனால் வேறுசிலரோ "கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி" என்று அழைக்கப்படும் வீரமாமுனிவர் உடன்தான் வாதம் புரிந்தார் என்று கூறுவர். தற்போது இப்புத்தகத்தின் எந்த பிரதியும் எங்குமே இருப்பதாக அறியப்படவில்லை. சில எழுத்தாளர்கள் அந்நூல் சிலரால் முற்றிலுமாக எரிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர். சிவப்பிரகாசரின் சகோதரர் வேலையர் அவர்களின் வழிவந்த ஆசிரியராக பணியாற்றி பின்பு பெஞ்ச் மாஜிஸ்ரேட் ஆக சமூக பணியாற்றிய எஸ். வி. எஸ் இரத்தினம் தனது தன்வரலாற்று நூலான "நான் உங்கள் தோனி" என்ற நூலில் இயேசு மத நிராகரணம் குறித்து எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் தனது தாத்தாவும், சுந்தரேசனார்ன் மகனுமான சூசை என்கிற சாமிநாத தேசிகர்இடம் "இயேசு மத நிராகரணம்" நூலின் பிரதி பனையோலையில் இருந்ததாகவும் பின்னர் சிலகாலத்தில் காணமற்போனதாகவும் குறிப்பிட்டுள்ளார். வீர சைவம் சிவநாம மகிமை சிவநாம மகிமை என்பது சிவப்பிரகாச சுவாமிகள் எழுதிய நூல்களில் ஒன்றாகும். இந்நூலில் சிவநாமமான "சிவ சிவ" என்பதனை மகிமையைப் பற்றி சிவப்பிரகாசர் கூறியுள்ளார். இந்நூல் பத்து கலிவிருத்த பாடல்களை கொண்டுள்ளது. சிவநாம மகிமை நூலினை சிவனிரவு என்று அழைக்கப்பெறும் சிவராத்தியன்று பதினாறு முறை படிப்பவர்களுக்கு இந்த நூலில் சொல்லப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சைவ நூல்கள் பட்டியல் சைவப் பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் சைவப் பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் என்பவை சிவபெருமான் மீதும், அவருடைய உறவுகள்(விநாயகன், முருகன், உமை), தொண்டர்கள் மீதும் பாடல்பெற்ற பிள்ளைத்தமிழ் இலக்கிய நூல்களாகும். விண்டோஸ் போன் விண்டோஸ் போன் ("Windows Phone") என்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்படும் விண்டோஸ் இயங்குதளத்தின் கைபேசி பதிப்பு ஆகும். இதன் முதல் பதிப்பு 7.5 "மாங்கோ" அக்டோபர் 21, 2010ல் வெளியிடப்பட்டது. தற்போதைய இரண்டாவது பதிப்பு விண்டோஸ் போன் 8 அக்டோபர் 29, 2012ல் வெளியிடப்பட்டது. அதி வேகமான இன்டெர்னெட் எக்ஸ்ப்லோரர் 10 இதனுடன் வழங்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளம் போலல்லாமல் சொந்தமான கெர்னல் கொண்டு இயங்குகிறது. புகழ்பெற்ற MS அலுவலகத் தொகுப்பு கொடுக்கப்பட்டு இருப்பினும், இதனால் ஆண்டிராய்டு வகை கைபேசி களுடன் போட்டியிட முடியவில்லை. ஆண்டிராய்டு இயங்குதளத்தை அதிகம் உபயோகிக்கும் சாம்சங், சென்ற வருடம் கொண்டுவந்த விண்டோஸ் இயங்குதளத்துடன் கூடிய நான்காம் தலைமுறை தொழில்நுட்பக் கைபேசி படு வீழ்ச்சியை சந்தித்தது. ஆண்டிராய்டு கைபேசிகள் அதிகம் விற்றாலும், இதில் தங்களின் எதிர்காலம் இல்லாததை உணர்ந்த சாம்சங் தன்னுடைய படா இயங்குதளத்தில் கவனம் செலுத்தி வருகிறது. நோக்கியாவின் லூமியா ("Lumia") வகை கைபேசிகள் இந்த விண்டோஸ் இயங்குதளத்துடனேயே வெளிவருகின்றன ("Lumia 510, Lumia 520, Lumia 610, Lumia 620, Lumia 710, Lumia 720, Lumia 800, Lumia 810, 820, Lumia 900, Lumia 920") ஹச்.டி.சி (HTC) போன்ற நிறுவனங்களும், சோதனை முயற்சியாக இந்த விண்டோஸ் இயங்குதளத்துடன் கூடிய கைபேசிகளை வெளியிட்டு உள்ளன. மெல்வின் கால்வின் மெல்வின் கால்வின் (Melvin Ellis Calvin:ஏப்ரல் 8, 1911 – ஜனவரி 8, 1997) ஐக்கிய அமெரிக்க வேதியலாளர். ஒளிச்சேர்க்கை குறித்த ஆய்வுகளில் 'கால்வின் சுழற்சி'யைக் கண்டறிந்ததற்காக அறியப்படுகிறார். இதற்காக ஆண்ட்ரூ பென்சான் (Andrew Benson) மற்றும் ஜேம்ஸ் பேஷாம் (James Bassham) ஆகியோருடன் இணைந்து 1961 இல் வேதியலுக்கான நோபல் பரிசினைப் பகிர்ந்துகொண்டவர். மாசிடோனியோ மெலோனி மாசிடோனியோ மெலோனி ("Macedonio Melloni", 11 ஏப்ரல் 1798 – 11 ஆகஸ்ட் 1854) ஓர் இத்தாலிய இயற்பியலாளர். அகச்சிவப்புக் கதிர்வீச்சு அல்லது வெப்பக் கதிர்வீச்சு பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டவர். வெப்ப மின்னிரட்டையின் அமைப்பின் வடிவத்தை மாற்றி அமைத்தவர். பாறை உப்பைப் பயன்படுத்தி வில்லைகளை உருவாக்கியவர். இதன் மூலம் கண்ணுறு ஒளி போல வெப்பக் கதிர்களையும் குவிக்கவும் பிரதிபலிக்கவும் இயலும் என்பதை மெய்ப்பித்தார். யூகின் மெல்ச்சியர் பெலிகாட் யூகின் பெலிகாட் அல்லது யூகின் மெல்ச்சியர் பெலிகாட் (Eugène-Melchior Péligot: 1811,பாரிஸ் - 1890,பாரிஸ் ); பிரெஞ்சு வேதியலாளர்; 1841 இல் யுரேனியம் என்ற தனிமத்தை முதன் முதலில் தனிமைப்படுத்திக் கண்டறிந்தவர். மார்ட்டின் ஹென்ரிச் க்ளாப்ராத் என்பவர் கண்டறிந்த கருந்தூள் (black powder) உணமையில் தூய தனிமம் அல்லவென்றும் அது யுரேனியத்தின் ஓர் ஆக்சைடு என்பதைக் கண்டறிந்து கூறினார்.பொட்டாசியம் உலோகத்தில் கூட்டாக உள்ள யுரேனியம் டெட்ராக்சைடை பிரிந்த்தெடுப்பதிலும் வெற்றி கண்டார். தற்காலத்தில் யுரேனியம் பிரித்தெடுப்பதில் பல நவீன முறைகள் கண்டறியப்பட்டுள்ளன. பெலிகாட் உப்பு இவரால் பெயர் பெற்றதாகும். முகத்தல் அளவை பொருட்களை முகந்து அளக்கும் அளவை முகத்தல் அளவையாகும்.தொடர்பு காரணமாக பெய்து அளத்தலும் முகத்தலுள் அடங்குகிறது.மரக்காலைக் கொண்டு நெல் முகந்து அளக்கப்பட, பால் நாழியுள் பெய்து அளக்கப்படுகிறது.இக்காலத்தில் பெய்து அளத்தலையும் முகந்து அளக்கின்றனர்.இது பிற நிறுத்தல்,நீட்டல் அளவைகளை விட சிறப்பும் செல்வாக்கும் பெற்ற அளவையாகும்.உணவுப்பொருட்களை அளக்கும் நிலை காரணமாக இவற்றின் பயன்பாடு மக்களிடத்தில் செல்வாக்குப் பெற்றது.தொல்காப்பியர் இவ் அளவையை 'பனையென அளவும்' என்று சுட்டுகின்றனர். தொல்காப்பியர் கலம்,பதக்கு,தூணி,உரி,நாழி,உழக்கு,பனை போன்றவற்றை வெளிப்படையாகக் கூறினர். இவற்றைவிட பிற பல அளவைகளும் உண்டு என்பதை இப்பாடல் மூலம் அறியலாம். ஜியோவானி ரிக்கியொலி ஜியோவானி ரிக்கியொலி அல்லது ஜியோவானி பாத்திஸ்டா ரிக்கியொலி (Giovanni Battista Riccioli:17 ஏப்ரல் 1598 – 25 ஜூன் 1671); ஓர் இத்தாலிய வானவியலாளரும் கத்தோலிக்க பாதிரியாரும் ஆவார். சந்திரனின் தன்மைகளைப் பற்றிய ஆய்வு செய்தவர். சந்திரனில் காணப்படும் மலை மற்றும் பல பகுதிகளுக்கும் பெயர் சூட்டியவர். தனிஊசல் மற்றும் கீழே விழும் பொருள்களின் தூரம் அதற்கான நேரத்தின் வர்க்கத்திற்கு நேர் விகிதத்தில் இருக்கும் என்பதை பிரான்சிஸ்கோ மரியா கிரிமால்டிஎன்பவருடன் இணைந்து கண்டறிந்தார். க. பாசுக்கரன் கணபதி பாசுக்கரன் (Ganapathy Baskaran) இந்தியாவின் கொள்கைய இயற்பியல் அறிவியலாளர்களுள் ஒருவர். இவர் திண்மநிலை இயற்பியலில் புகழ் பெற்றவர். குறிப்பாக சிலவகைப் பொருள்களில் எதிர்மின்னிகளைத் தனித்து இயங்கும் உருப்படிகளாகக் கருதாமல் அவற்றிடையே வலுவான ஒத்தியங்கும் நுண்பிணைப்பு கொண்ட தன்மை உடையதாகக் கருதப்படும் அமைப்புகள் பற்றிய ஆய்வில் முன்னணியில் இருப்பவர்களுள் ஒருவர். பாசுக்கரன் சென்னையில் இருக்கும் கணித அறிவியல கல்விக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கனடாவில் வாட்டர்லூவில் இருக்கும் கொள்கைய இயற்பியலுக்கான பெரிமீட்டர் கல்விக்கழகத்தில் பெருமைமிகு ஆய்வுத்தலைவராக இருக்கின்றார். 1990 இல் இவருக்கு இந்தியாவின் உயர் விருதாகிய சாந்தி சொரூப்பு பட்னாகர் விருது வழங்கப்பட்டது. பாசுக்கரன் மதுரையில் உள்ள தியாகராசர் பொறியியற் கல்லூரியிலும் அமெரிக்கன் கல்லூரியிலும் தன் பல்கலைக்கழகப் பட்டக் கல்வியைப் பெற்றார். பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கல்விக்கழகத்தில் 1975 ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார். 1987-88 ஆகிய காலப்பகுதியில் பாசுக்கரன் பிரின்சிட்டன் பல்கலைக்கழகத்தில் நோபல் பரிசாளர் பி.வா. ஆண்டர்சனுடன் கூட்டாக உழைத்து "ஒத்ததிர்வு இணைதிறன் பிணைப்புக் கொள்கை" அல்லது ஒத்தியங்கு இணைதிறன் பிணைப்புக் கொள்கை என்று அறியப்படும் கருத்தை உருவாக்கினார். இக்கொள்கையில் அடிப்படையில் உயர் வெப்பநிலையில் இயங்கும் மீகடத்திப் பொருள்களின் இயக்கத்தை விளக்க முடிந்தது. பாசுக்கரன், வலுவான ஒத்தியங்கும் நுண்பிணைப்பு அமைப்புகளுக்கான புதிய மாறாமுகப் புலங்கள் (gauge fields) கண்டுபிடித்ததற்காகவும், இசுற்றோன்சியம் உருத்தனேட்டு என்னும் பொருளில் வழக்கத்துக்கு மாறான பி.அலை மீகடத்துமை பற்றிய முற்கூற்றுகளுக்காகவும், கிராபீனின் உயர்வெப்ப மீகடத்துமை பற்றிய கருத்துகளுக்காகவும் நன்கு அறியப்படுபவர். இவர் முற்கூறியவை பின்னர் செய்முறைப்படி செய்து சரிபார்த்து உறுதிசெய்யப்பட்டன. இத்தாலியில் உள்ள திரீசித்தே (Trieste) நகரில் இருக்கும் கொள்கைய இயற்பியலுக்கான அனைத்துலக நடுவம் வழங்கும் கொள்கைய இயற்பியலுக்கான அனைத்துலக நடுவப் பரிசு(ICTP Prize) இவருக்கு 1983 இல் வழங்கப்பட்டது. இதுவே முதன்முதல் வழங்கப்பட்ட கொள்கைய இயற்பியலுக்கான அனைத்துலக நடுவம் தரும் பரிசாகும். இவரே இப்பரிசை முதலில் வென்றவர். இப்பரிசு வளரும் நாடுகளில் இயற்பியல் கணிதத்துறையில் அரிய முன்னேற்றத்திற்கு வழி வகுத்த இளைஞர் ஒருவருக்கு வழங்கப்படுகின்றது. இவர் பிரின்சிட்டனில் உள்ள முன்னேகிய ஆய்வுகளுக்கான கல்விக்கழகத்தில் (Institute for Advanced Study) 1996 இல் வருகை அறிஞராக இருந்தார். புருனோ ரோசி புருனோ ரோசி என்றழைக்கப்படும் புரூனோ பெனிடெட்டோ ரோசி(Bruno Benedetto Rossi: ஏப்ரல் 13, 1905 – நவம்பர்21, 1993) ஓர் இத்தாலிய அமெரிக்க இயற்பியலாளர். காஸ்மிக் கதிர்கள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டு அவை பெரும்பாலும் நேர் மின்னூட்டமுள்ள துகள்களால் ஆனவை என்பதனைக் கண்டறிந்தார். எக்ஸ் கதிர்விண்வெளி(X-ray astronomy)யிலும் பிளாஸ்மா இயற்பியலிலும் தனது ஆய்வை மேற்கொண்டவர். ஓட்டோ பிரிட்சு மேயெர்ஹோப் ஓட்டோ பிரிட்சு மேயெர்ஹோப் (Otto Fritz Meyerhof :ஏப்ரல் 12, 1884 – அக்டோபர்6, 1951) ஒரு ஜெர்மானிய உயிரி வேதியலறிஞர் ஆவார். தசைத் திசுக்கள் ஆக்சிஜனை எவ்வாறு உறிஞ்சி அதை லேக்டிக் அமிலமாக மாற்றுகிறது என்ற இவரின் கண்டுபிடிப்பிற்காக 1922 இல் மருந்தியல் நோபல் பரிசு பெற்றார். தசைகள் சுருங்கும்போது கிளைகோஜன்கள் எவ்வாறு லாக்டிக் அமிலமாக மாறுகிறது என்பதைக் கண்டறிந்தார். சண்முகா நதி தமிழ்நாடு,திண்டுக்கல் மாவட்டம்,பழனி வட்டம்,பெரியம்மா பட்டி கிராமத்தில் பொந்துப்புளி பகுதியில் உருவாகும் பச்சையாறும், கொடைக்கானல் வட்டம், வடகவுஞ்சி கிராமம் பொய்யாவெளிப் பகுதியில் உருவாகும் ஆறு, பழனி வட்டம் ஆயக்குடி வனப் பகுதியில் உள்ள வரதமா நதி அணையில் இடைத் தேக்கம் ஆகி பின் அதன் உபரி நீர் வரதமா நதி ஆறும், கொடைக்கானல் வட்டம், வில்பட்டி ஒதுக்க வனப் பகுதியில் பாலாறும், கொடைக்கானல் வட்டம், பூம்பாறை மற்றும் வடகவுஞ்சி மேற்கு ஒதுக்க வனப் பகுதில் உருவாகும் பொருந்தலாறும், தாமரைக்குளம் பகுதியில் உருவாகும் கல்லாறும், பழனி வட்டம்,பெரியம்மாபட்டி கிராமம் பொந்துபுளி வனப்பகுதியில் உருவாகி,கரிக்காரன் புதூர்,இரவிமங்கலம் ஆகிய ஊர்களின் வழியே ஓடும் பச்சையாறும்,இடும்பன் ஏரியில் தேங்கி பின் உபரி நீர் ஆறாகும் முள்ளாறும் ஆகிய ஆறு நதிகளும் சங்கமிக்கும் இடத்தில் ஒன்றாகி சண்முகா நதி உருவாகிறது. தமிழ் கடவுள் முருகனின் ஆறு அவதாரத்தைக் குறிக்கும் ஆறு நதிகளும், முருகனின் பெயர்களில் ஒன்றான சண்முகர் என்ற பெயருடன் இணைத்து சண்முகா நதி என உருவாகிறது. இந்த ஆறு வடக்கு நோக்கி மானூர்,அக்கரைப்பட்டி,கீரனூர்,அலங்கியம்,ஆகிய கிராமங்களின் வழியே ஓடி அலங்கியத்திற்கும்,தாராபுரத்திற்கும் இடையே காவிரி ஆற்றின் துணை ஆறான அமராவதி ஆற்றோடு கலந்துவிடுகிறது. ஹேன்ஸ் ஸ்லோன் ஹேன்ஸ் ஸ்லோன் (Sir Hans Sloane, 1st Baronet, PRS;16 ஏப்ரல் 1660 – 11 ஜனவரி 1753) ஓர் அயர்லாந்து (பிரித்தானியா இயற்பியலாளரும் சேகரிப்பாளரும் பிரித்தானிய அருங்காட்சியகத்தை அமைக்க உதவியவரும் ஆவார். லண்டனில் இவர் பிறந்த இடமன கில்லிலீக் 'ஸ்லோனா ஸ்கொயர்' என்று இவருடைய பெயரால் அழைக்கப்படுகிறது. இவர் சேகரித்த புத்தகங்கள், ஓவியங்கள், நாணயங்கள், தாவரங்கள், விலங்குகள் மற்றும் பலவகையான சேகரிப்புகளே பிரித்தானிய அருங்காட்சியகம் அமைக்க உதவின. சப்த சிவத் தலங்கள் சப்த சிவத் தலங்கள் என்பவை காஞ்சிபுரத்தின் சேய் ஆற்றில் (செய்யாறு) கரைகளில் அமைந்துள்ள ஏழு சிவத்தலங்களாகும். செய்யாற்றின் வடகரையில் அமைந்துள்ள ஏழு சிவாலயங்கள் சப்த கரை கண்ட சிவாலயங்கள் எனவும், தென் கரையில் அமைந்துள்ளவை சப்த கைலாயங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. காஞ்சிபுரத்தில் உமையம்மை(பார்வதி) சிவலிங்கம் அமைத்து வழிபட்டு,சிவபெருமானின் இடப்பாகம் வேண்டினார். இறைவனும் உமையம்மை முன் தோன்றி திருவண்ணாமலைக்கு வந்து பெறும்படி அருளினார். இறைவனிடம் இடப்பாகம் பெறும் பொருட்டு திருவண்ணாமலைக்கு புறப்பட்டார்,வழியில் வாழைப் பந்தல் என்ற ஊர் அருகே வந்த போது மாலைப் பொழுதாகிவிட லிங்க பூசை செய்ய வேண்டுமென முருகனிடம் கேட்டார். வாழைப்பந்தல் அருகே முருகன் தனது சக்தி வேலாயுதத்தை கையில் எடுத்து எரிந்தார், அந்த வேல் சவ்வாது மலைத் தொடரில் உள்ள ஏழு சிகரங்களில் தவம் செய்த அந்தணர்கள் 1). புத்திராண்டன். 2). புருகூதன்,3). போதன், 4). போதவான், 5).பாண்டரங்கன், 6).வாமன், 7).சோமன் ஆகியோரை மாய்த்து மலையை துளைத்தது. அதிலிருத்து நீர், பெருகி ஆறாக வந்தது சேய்(சேய்= மகன் ) தோற்று வித்ததால் சேய் ஆறு என்பது நாளடைவில் செய்யாறு என்றும் ஆகிவிட்டது. தவம் செய்த ஏழு அந்தணர்களை மாய்த்ததால் முருகப் பெருமானுக்குக் கொலைபாதக தீவினை (பிரம்மஹத்தி தோஷம்) தொற்றிக் கொள்ள உமாதேவியார் சேய் ஆற்றின் வட கரையில் ஏழு சிவ ஆலயங்களையும்,தென்கரையில் ஏழு சிவ ஆலயங்களையும் நிறுவி தொழுதால்,தோசம் நீங்கும் என்று கூற அதன்படி செய்து தோசம் நீங்கியது எனபது நெடுங்கால நம்பிக்கை. சேய் ஆற்றின் (செய்யாறு) வட கரையில் அமைந்த சிவாலயங்கள் சப்த கரை கண்ட சிவத் தலங்கள் ஆகும்,அவை சேய் ஆற்றின் (செய்யாறு) தென் கரையில் அமைந்த சிவாலயங்கள் சப்த கைலாயங்கள் ஆகும்,அவை தனித்தமிழ் எழுத்து முறைமை தனித்தமிழ் எழுத்து முறைமை என்பது பிராமி எழுத்துமுறை கல்வெட்டுகளின் மொழி தமிழில் எழுதப்பட்டதா என கண்டறியும் முறையாகும். பெரும்பாலும் பிராகிருத மொழிகளின் பிராமி எழுத்துக்களும் தமிழி எழுத்துக்களும் வடிவளவில் பெருமளவு ஒத்துப் போவதால் இந்தியாவிலும் இலங்கையிலும் கிடைக்கும் கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்கள் தமிழா பிராகிருதமா என்று அறிவதில் இடர் நேரும். ஆனால் ழ, ள, ற, ன போன்ற தமிழ் மொழிக்கே உரிய எழுத்துக்கள் கல்வெட்டுகளிலோ அல்லது தமிழ் பிராமி பொறிப்புகளிலோ காணப்படுமாயின் அதை தமிழ் பிராமி எழுத்து என எளிமையாக அடையாளம் காணுவர். தழை தழை என்பது சங்ககால மகளிரின் அணிகலன். உடுத்திக்கொள்ளும்போது அது தழையாடை. தொடுக்கும்போது அது தழையாடை தைக்கும் விளையாட்டு. உடலில் பூணும்போது அது தழையணி. தலையில் செருகிக்கொள்ளும்போது அது தழைப்பூ. 'தழையை'க் காதலன் தன் காதலிக்கு விலையாக நல்குவான். நெய்தல் நில மகளிர் தழையாடையைப் பெரிதும் வரும்புவர். கழியில் பூத்த பூவைத் தலையிலும், ஞாழல் தழையாடையை இடுப்பிலும் ஒருத்தி அணிந்திருந்தாள். மகளிர் இடையில் அணிந்துகொண்ட ஆடை தழையாடை. சங்ககால மகளிர் தாம் உடுத்தியிருந்த ஆடைக்கு மேல் ஒப்பனை ஆடையாகத் தழையாடையை உடுத்திக்கொண்டனர். இது ஆடைக்கு மேல் இடுப்பில் அணிந்துகொள்ளும் மணிமேகலை போன்றதோர் அணியாடை. தழையாடையை 'முறி' எனவும் வழங்கினர். தழையும், தளிர்முறியும், பூங்கொத்துகளும் தழையாடையை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டன. காதலன் காதலிக்குப் பரிசாக வழங்கிய தழல், தட்டை, குளிர் என்னும் விளையாட்டுப் பொருள்கள். அவள் தினைப்புனம் காக்கும்போது பறவைகளை ஓட்டப் பயன்பட்டன. அவன் தந்த 'முறி' அவள் ஒப்பனை செய்துகொள்ளப் பயன்பட்டது. மகளிர் மலர் இல்லாத காலத்தில் ஞாழல் தழையைத் தலையில் அணிந்து ஒப்பனை செய்துகொள்வர். தலைவன் தலைவிக்கு பரிச விலையாகத் தழையாடை நல்கும் வழக்கம் உண்டு. காவி நெய்தல் முதலான தழைகள் தழையாடை தைக்கப் பயன்படுத்தப்பட்டன. காதலன் தைத்துக் காதலிக்குத் தருவான். மகளிர் தாமே தளிர்களைப் பறித்துத் தழையாடை தைத்து இடுப்பில் அணிந்துகொள்வர். பழையர் இனத்தவர் தழையாடையுடன் காணப்பட்டனர். பரதவர் மகளிர் உண்டாட்டு விழாவின்போது தழையாடை உடுத்திக்கொண்டனர். கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை என்பது கல்முனை இல் உள்ள இலங்கை நடுவண் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அரச வைத்தியசாலை ஆகும். இது பொது வழகில் கல்முனை வடக்கு வைத்திய சாலை என அழைக்கப்படுகின்றது. 2010 கணக்கீட்டின் படி இவ் வைத்தியசாலையில்it 413 படுக்கைகள் காணப்பட்டது. இவ் வைத்தியசாலை 1882 காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது. மட்டக்களப்பிலிருந்து கிறித்தவ சமயக் கன்னியாஸ்திகள் கலமுனை வந்து குறிப்பாக குட்டரோக நோயாளர்களுக்கு பணியாற்றினர். தெள்விளி தெள்விளி என்பது ஒருவகையான விளையாட்டு ஓசையும், தொழிலோசையும் ஆகும். குலவை, வீளை முதலான நாவோசைகள் இதன் வகைகள். அழைப்பு அடுக்கு அழைப்பு அடுக்கு (call stack) என்பது ஒரு நிரல் இயங்கும் போது அது பயன்படுத்தும் செயலிகளைப் பற்றிய தகவல்களை நினைவகத்தில் சேமிக்கும் ஒர் அடுக்கு தரவுக் கட்டமைப்பு ஆகும். குறிப்பாக ஒரு செயலி எங்கு பதில் அனுப்ப வேண்டும் என்பதன் முகவரி, செயலியின் உள்ளூர் மாறிகள் ஆகியவற்றை இது சேமிக்கும். ஒரு செயலியின் தொழிற்பாடு முடிந்தவுடன் அல்லது அது செயற்பரப்பில் இருந்து விலகியவுடன் ("goes out of scope") அது பற்றி அடுக்கில் இருக்கும் தகவல்கள் நீக்கப்பட்டு விடும். எவ்வாறு அழைப்பு அடுக்கு தொழிற்படும் என்பது நிரல் மொழி, compiler, இயக்கு தளம் ஆகியவற்றால் தீர்மானிக்கப்படுகிறது. ஜி. யு. போப் விருது (தமிழ்நாடு அரசு) ஜி. யு. போப் விருது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்படும் விருது ஆகும். இவ்விருது 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் கொண்டாடப்படும் சித்திரைத் திருநாள் தொடங்கி ஒவ்வோராண்டும் வழங்கப்படும். ஜி. யு. போப் என்னும் ஆங்கிலேயர், தமிழகத்திற்கு வந்து தமிழைக் கற்றவர். தமிழ் மொழியில் உள்ள திருக்குறள், நாலாடியார், திருவாசகம் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இதனால் அந்நூல்களின் கருத்துகளும் பெருமைகளும் பிற நாடுகளில் பரவின. எனவே ஜி. யு. போப்பின் தமிழ்த் தொண்டைப் போற்றும்வகையில் ஜி. யு. போப்பின் பெயரால் விருது உருவாக்கப்பட்டு இருக்கிறது. தமிழ் மொழியில் இருக்கும் இலக்கியங்களை பிற மொழிகளில் மொழிபெயர்க்கும் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. ஜி. யு. போப் விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக ஒரு இலட்சம் ரூபாயும் தங்கப் பதக்கம், தகுதியுரை, பொன்னாடை ஆகியவையும் வழங்கப்படுகின்றன. இதற்கென ஆண்டுதோறும் 1.50 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஜி. யு. போப் விருது ஒவ்வோராண்டும் ஏப்ரல் திங்களில் நடைபெறும் சித்திரைத் திருநாளில் வழங்கப்படுகிறது. ஐசோடோன் இரண்டு அணுக்கருக்கள் ஒரே நியூத்திரன் எண்ணையும், ஆனால், வெவ்வேறு அணு எண்ணையும் கொண்டிருக்குமானால், அவை சமப்போக்கு ("Isotones") அல்லது ஐசடோன்கள் என அழைக்கப்படும். எடுத்துக்காட்டாக அணுக்கள் போரான்-12 இனையும் கார்பன்-13 இனையும் எடுத்துக் கொண்டால், போரானில் 5 புரோத்தன்களும், 7 நியூத்திரன்களும் உள்ளன, கார்பனில் 6 புரோத்தன்களும், 7 நியூத்திரன்களும் உள்ளன. எனவே போரான்-12 உம் கார்பன்-13 உம் ஐசோடோன்களாகும். மேலும் குளோரின்-37, ஆர்கான்-38, பொட்டாசியம்-39, கால்சியம்-40 முதலிய அணுக்களும் ஐசோடோன்களாகும் இவைகளில் முறையே 20 நியூட்ரான்களுள்ளன. செருமானிய இயற்பியலாளர் கே. கூகன்கெய்மர் சமதானியில் உள்ள புரோத்தனை அகற்றிவிட்டு நியூத்திரனைச் சேர்த்து ஐசோடோன் என முதலில் குறித்தார். பாசுபேட் கண்ணாடி பாசுபேட் கண்ணாடி ("Phosphate glass") என்பது பல்வேறு உலோகங்களின் மெட்டாபாசுபேட்டுகள் கலந்து தயாரிக்கப்படும் ஒரு வகை ஒளியியற் கண்ணாடி ஆகும். கண்ணாடிகளில் சிலிக்கா (SiO) இற்குப் பதிலாக, இங்கு கண்ணாடியைத் தோற்றுவுவிக்கும் அடிமூலக்கூறாக பாசுபரசு பென்டாக்சைடு (PO) உள்ளது. பாசுபேட் கண்ணாடி கதிரேற்பு அளவுமானி கதிர்வீச்சினை அளவிடப் பயன்படும். இப்படிப் பட்ட கண்ணாடிச் சில்லுகள் கதிர்வீச்சிற்கு ஆட்படுத்தப்பட்டு, பின் இந்தச் சில்லுகளை புற ஊதாக் கதிர்களால் தாக்கும் போது அவைகள் ஒளிக்கதிர்களை வெளியிடுகின்றன. இவ்வொளியின் அளவு ஏற்றுக் கொண்ட கதிர்வீச்சளவிற்கு நேர்வீதத்தில் இருக்கிறது. இப் பண்பைப் பயன்படுத்தி கதிர்வீச்சளவினை அளவிடலாம். ஏற்பளவினையு்ம் கணக்கிடலாம். அதற்காக தனிக் கருவிகளுள்ளன. சூறாவளி மகாசென் (2013) சூறாவளிப் புயல் மகாசென் ("Cyclone Mahasen") என்பது ஒப்பீட்டளவில் பலங்குறைந்த அயனமண்டலச் சூறாவளி ஆகும். இது தெற்காசிய மற்றும் தென் கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த ஆறு நாடுகளில் சேதங்களை உண்டுபண்ணியுள்ளது. வங்காள விரிகுடாவின் கிழக்காக குறைந்த காற்றழுத்தத்துடன் சிறயளவில் உருவாகி, தாழமுக்கமாக மே 10 உருவாகி முன்னோக்கி நகர்ந்தது. படிப்படியாக தாழமுக்கம் வலுத்து மே 11 மகாசென் சூறவளிப் புரல் உருவெடுத்தது. இந்தியாவின் கிழக்குக் கரை நோக்கி அண்மித்து பாதகமான வளிமண்டல நிலைமைகளைத் தோற்றுவித்தது. மே 14, மகாசென் வடகிழக்கு நோக்கி திசைதிரும்பியது. மறுநாள் புயல் வேகம் அதிகரித்தது. மே 16, சூறாவளி 85 km/h (50 mph) வேகத்துடனும், வளிமண்டல அழுத்தம் 988 பார் (பாசுக்கல்; 29.18 பாதரச அங்குலம்) அதன் உச்சத்தை அடைந்தது. அதன்பிறகு மகாசென் வங்காளதேசத்தின் பதுவாக்காலி கடற்கரையை வியாழக்கிழமை தாக்கியபின் சிட்டகொங் நகருக்கு அணமியில் உள்ள சிகணடுவைத் தாக்கிப் பின் கொக்சு நகரை நோக்கி 100 km/h வேகத்தில் நகர்ந்தது. உமறுப் புலவர் விருது உமறுப் புலவர் விருது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்படும் விருது ஆகும். இவ்விருது 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் கொண்டாடப்படும் சித்திரைத் திருநாள் தொடங்கி ஒவ்வோராண்டும் வழங்கப்படும். உமறுப் புலவர் சீறாப் புராணம் என்னும் இசுலாமியக் காப்பியத்தை இயற்றியவர். எனவே அவரின் தமிழ்த் தொண்டைப் போற்றும்வகையில் உமறுப் புலவரின் பெயரால் விருது உருவாக்கப்பட்டு இருக்கிறது. தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் தொண்டாற்றி வரும் தமிழ் அறிஞருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. உமறுப் புலவர் விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக ஒரு இலட்சம் ரூபாயும் தங்கப் பதக்கம், தகுதியுரை, பொன்னாடை ஆகியவையும் வழங்கப்படுகின்றன. இதற்கென ஆண்டுதோறும் 1.50 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. உமறுப்புலவர் விருது ஒவ்வோராண்டும் ஏப்ரல் திங்களில் நடைபெறும் சித்திரைத் திருநாளில் வழங்கப்படுகிறது. முதலமைச்சர் கணினித் தமிழ் விருது முதலமைச்சர் கணினித் தமிழ் விருது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்படும் விருது ஆகும். கணினி வழியில தமிழ் மொழி உலகெங்கும் பரவும் வகையில் கணினித்தமிழ் வளர்ச்சிக்காகச் சிறந்த தமிழ் மென்பொருள்களை உருவாக்குபவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. முதலமைச்சர் கணினித் தமிழ் விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக ஒரு இலட்சம் ரூபாயும் தங்கப் பதக்கம், தகுதியுரை, பொன்னாடை ஆகியவையும் வழங்கப்படுகின்றன. இதற்கென ஆண்டுதோறும் 1.85 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தகவல் தொழில்நுட்பம் நாள்தோறும் பெருகிவருகிறது. இதனால் கணினிப் பயன்பாடும் பெருகிக்கொண்டே இருக்கிறது. தமிழர்கள் உலகெங்கும் பரந்து வாழ்கிறார்கள். எனவே கணினி வழியாகத் தமிழ்மொழியைப் பரப்பும்வகையில் தமிழில் மென்பொருள்கள் உருவாக வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது. ஆகவே தமிழ்மொழியில் மென்பொருள்களை உருவாக்குபவர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்தும் நோக்குடன் முதலமைச்சர் கணினித் தமிழ் விருது வழங்கப்படுகிறது. பிரிக்கே கதிர் ஏற்பளவுமானி பிரிக்கே கதிர் ஏற்பளவுமானி ("Fricke dosimeter") கதிர்வீச்சின் ஏற்பளவைக் கணிக்கப் பயன்படும் கருவி. இது 1927 ஆம் ஆண்டு ஹுயுகொ பிரிக்கே எனும் அறிவியல் ஆய்வாளரால் அறிமுகப்படுத்தப்பட்டது. கதிர் மருத்துவம் புற்றுத் திசுக்கள் ஏற்று கொண்ட கதிர் ஏற்பளவினை அடிப்படையாகக் கொண்டது. நேரடியாக இது அளவிடப்பட முடியாது. வளியில் அயனியாக்கம் தான் கதிர் வீச்சின் அளவினை அளவிடப் பயன்படுகிறது. கதிர்வீச்சின் ஏற்பளவைக் காணும் பிறமுறைகளில் வேதியியல் முறையும் ஒன்று. பொருட்களிலுள்ள அணுக்களுக்கு இடையே உள்ள வேதிப் பிணைப்புகளைக் கதிர்வீச்சு தாக்க வல்லது. இதற்குக் காரணம் அயனியாக்கமும் கிளர்தலும் (Ionisation and excitation) தான். வேதியியல் பிணைப்புகள் மாறுவதால் அயனிகளை ஏற்று ஃபெரசு சல்பேட் கரைசலில், சிறிது ஃபெரிக் சல்பேட்டும் கிடைக்கிறது: FeSO4→Fe2(SO4)3. அவ்வாறு தோற்றுவிக்கப்படும் ஃபெரிக் அயனிகளின் எண்ணிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்ட கதிர் ஏற்பளவினைப் பொறுத்திருக்கிறது. 100 எலக்ட்ரான் வோல்ட்டானது 15 ஃபெரிக் அயனிகளைத் தோற்றுவிக்கின்றது என்று கண்டு கொள்ளப்பட்டுள்ளது. எனவே இந்த ஃபெரிக் அயனிகளின் செறிவினை அளவிட்டு, ஏற்றுக் கொள்ளப்பட்ட கதிர் அளவினைத் தெரிந்து கொள்ளமுடியும். இந்த மாதிரியான வேதியியல் அளவுமானிகள் பிற திட்ட அளவுமானிகளுடன் ஒப்பிட்டுப் பின் பயன்படுத்தலாம். இது வளியில் அயனியாக்கும் முறையை ஒத்தது. இம்முறையே ஃபிரிக்கே அளவுமானி எனப்படுகிறது. ஹுயுகொ பிரிக்கே இதனை முதலில் பயன்படுத்தினார். பொதுவாக உயர் ஏற்பளவினை அளவிடவே இம்முறை பயன்படுத்தப்படுகிறது. இதில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் மிக தூயநிலையில் இருத்தல் அவசியம். நொபொரு காராசிமா நொபொரு காரசிமா ("Noboru Karashima", 辛島昇, 24 ஏப்ரல் 1933 - 26 நவம்பர் 2015) சப்பானிய வரலாற்றாசிரியரும், எழுத்தாளரும், தமிழறிஞரும் ஆவார். இவர் சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின்(IATR) முன்னாள் தலைவர் (1989-2010) ஆவார். நொபொரு கராஷிமா 1995 ல் தஞ்சாவூரில் நடைபெற்ற 8 வது உலகத்தமிழ் மாநாட்டை முன்னின்று நடத்தியவர். இவர் 2010ல் கோயம்புத்தூரில் நடைபெற்ற 9வது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை புறக்கணித்தார்; தமிழ் மாநாடுகளில் அரசியல் தலையீடுகள் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் புறக்கணிப்பதாக கூறினார். 2013ஆம் ஆண்டு இவருக்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது. உலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் தலைவராக 1989-ஆம் ஆண்டு முதல் 2010 வரை பணியாற்றிய நொபுரு கரஷிமா தனது 82-ஆவது வயதில் ஜப்பானில், 26 நவம்பர் 2015 அன்று (வியாழக்கிழமை) மறைந்தார் திருப்புளிங்குடி திருப்புளிங்குடி என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தூத்துக்குடி மாவட்டத்தில் வரகுணமங்கையிலிருந்து கிழக்கே சுமார் ஒரு மைல் தொலைவில் உள்ளது. இத்தலத்தைப் பற்றி பிரம்மாண்ட புராணத்திலும், தாமிரபரணி தல புராணத்திலும் குறிக்கப்பெற்றுள்ளது. இத்தல இறைவன் காய்சின வேந்தர் (காசினி வேந்தர்), பூமிபாலர் என்ற பெயர்களில் பள்ளி கொண்ட நிலையில் கிழக்கு நோக்கிய கோலத்துடன் காணப்படுகிறார். இறைவியின் பெயர் மலர்மகள் நாச்சியார், பூமிப்பிராட்டி; தீர்த்தம் இந்திர தீர்த்தம், நிர்ருதி தீர்த்தம் ஆகியன. விமானம்: வேதசார விமானம் வகையைச் சேர்ந்தது.நவக்கிரகங்களில் வியாழனொடு சம்பந்தப்பட்ட தலம் இதுவாகும். இத்தலம் நம்மாழ்வாரால் மட்டும் 12 பாசுரங்களால் பாடல் பெற்றுள்ளது இத்தலத்திலுள்ள இலக்குமி தேவி, பூமிப்பிராட்டி, நாச்சியார்களின் திருவுருவங்கள் வேறெங்கும் காணமுடியாத அளவிற்கு மிகமிகப் பெரியவைகள். வேறு கோயில்களில் காணவியலாத காட்சியாக பெருமாளின் திருவயிற்றிலிருந்து செல்லும் தாமரைக் கொடி, சுவற்றில் உள்ள பிரம்மாவின் தாமரையோடு சேர்ந்து கொள்வது போன்ற அரியகாட்சியாக அமைக்கப்பட்டுள்ளது. சயன திருக்கோலத்தில் உள்ள திருமாலின் ஒரு பாதத்தை கருவறையைச் சுற்றி வருகையில் வடக்குப்புற சுவற்றின் வெளிப்புறமுள்ள ஒரு சன்னலின் வழியாகச் சேவிப்பதற்கு ஏற்றாற்போல் அமைந்துள்ள இக்கட்டிட அமைப்பு பிற தலங்களில் அமையப் பெறாத ஒன்றாகும். துர்கம் துர்கம் இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிற்றூராகும். துர்கம், திமிரி ஒன்றியத்தின் கீழ் வரும் 55 சிற்றூராட்சிகளில் ஒன்று. இங்கு உழவுத் தொழிலே முதன்மையான தொழிலாக விளங்குகிறது. இவ்வூர் திமிரியிலிருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. திருப்பேரை திருப்பேரை அல்லது தென்திருப்பேரை என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநகரியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 3 மைல் தொலைவில் தென்கிழக்கே அமைந்துள்ளது. திருக்கோளூரில் இருந்தும் இவ்வூருக்கு பேருந்து வசதியுள்ளது. ஸ்ரீபேரை (இலக்குமியின் உடல்) என்ற பெயரில் பூமிதேவி இங்கு தவம் செய்ததால் திருப்பேரை என்றே இத்தலத்திற்குப் பெயருண்டாயிற்று. 108 வைணவ திவ்ய தேசங்களில் சோழநாட்டில் திருச்சிக்கு அண்மையில் திருப்பேர் நகர் என்ற திருத்தலம் ஒன்றிருப்பதால் இத்தலத்தை தென்திருப்பேரை என்று அழைத்தனர். இறைவன் கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறான். இறைவன் பெயர்கள்: மகர நெடுங்குழைக்காதன். நிகரில் முகில் வண்ணன். இறைவி பெயர்கள்: குழைக்காதுவல்லி, திருப்பேரை நாச்சியார்; தீர்த்தம் : சுக்ர புஷ்கரணி, சங்க தீர்த்தம், மகர தீர்த்தம் ஆகியன. விமானம்: பத்ர விமானம் என்ற வகையைச் சேர்ந்தது. ஆழ்வார்களில் நம்மாழ்வாரால் மட்டும் 11 பாசுரங்களால் பாடல் பெற்றது. மணவாள மாமுனிகளும் இத்தலத்தைப் பாடியுள்ளார். திருவரகுணமங்கை நத்தம் என்றழைக்கப்படும் திருவரகுணமங்கை என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கிழக்கே சுமார் ஒரு மைல் தொலைவில் உள்ளது. இறைவர்: கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில் ஆதிசேடனால் குடை பிடிக்கப்பட்ட விஜயாசனப் பெருமாள். இறைவி: வரகுணவல்லித்தாயார், வரகுணமங்கைத் தாயார். தீர்த்தம்: அகநாச தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகியன: இதன் விமானம் விஜயகோடி விமானம் என்ற வகையைச் சேர்ந்தது. இத்தலம் நம்மாழ்வாரால் மட்டும் பாடல் பெற்றுள்ளது. திருக்குளந்தை பெருங்குளம் பெருமாள் கோவில் என்றழைக்கப்படும் திருக்குளந்தை என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இறைவன் கிழக்கு நோக்கி நின்ற நிலையில் மாயக் கூத்தன் என்ற பெயரில் அறியப்படுகிறார். இவருக்கு சோர நாதன், சீனிவாசன் என்ற பெயர்களும் உள்ளன. இறைவி குளந்தை வல்லித் தாயார் என்றும் கமலாதேவி என்றும் அறியப்படுகிறார். இவருடன் அலமேலு மங்கைத் தாயாரும் உள்ளார். இக்கோவிலின் தீர்த்தம் பெருங்குளம் என்றும் அறியப்படுகிறது. இக்கோவிலின் விமானம் ஆனந்த நிலய விமானம் எனும் அமைப்பைச் சார்ந்தது. ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் இத்தலம் குறித்து பாடியுள்ளார். அதனால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமாக புகழப்படுகிறது. திருவயிந்திபுரம் தேவநாதப் பெருமாள் கோயில் திருவயிந்திபுரம் தேவநாதப் பெருமாள் கோயில் ஆழ்வார்களால் மங்காளசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருவஹீந்திபுரம் அல்லது திருவயிந்திபுரம் என்பது திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இக்கோயில் கடலூர் மாவட்டம் கடலூரிலிருந்து பண்ருட்டி செல்லும் வழியில் சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவஹிந்திரபுரம் என்று அழைக்கப்பட்ட இத்தலம் தற்காலத்தில் அயிந்தை என்று வழங்கப்படுகிறது. நடு நாட்டுத் திருப்பதிகள் இரண்டில் இது ஒன்றாகும். இக்கோயிலில் தேவநாத சுவாமி , அயக்கிரீவர் சன்னதிகள் அமைந்துள்ளன. பாண்டிச்சேரியிலிருந்து 25 கி.மீ தூரத்திலும், கடலூரிலிருந்து 3 கி.மீ. தூரத்திலும் உள்ள திருவந்திபுரம் அருகே ஓடும் கெடிலம் ஆறு வடக்கில் இருந்து தெற்கு நோக்கி ஓடுகிறது. இது ஒரு சிறப்பு அம்சமாகக் கருதப்படுகிறது. இத்தலத்தைப் பற்றி பிரம்மாண்ட புராணம், ஸ்காந்த புராணம், பிருகன் நாரதீய புராணம் ஆகிய புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இறைவன்: கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் தேவ நாதன் என்றும் தெய்வநாயகன் என்றும் அழைக்கப்படுகிறார்.இறைவி: வைகுண்ட நாயகி, ஹேமாம்புஜ வல்லித்தாயார்(பார்க்கவி). விமானம்: சந்திர விமானம், சுத்தசத்துவ விமானம்.திருமங்கையாழ்வாரால் மட்டும் பத்துப் பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம். இவ்விறைவன் மீது வேதாந்த தேசிகன் மும்மணிக் கோவை என்ற நூலை இயற்றியுள்ளார். மணவாள மாமுனிகளாலும் இத்தலம் பாடல்பெற்றுள்ளது. வடமொழியில் தேவநாயக பஞ்சாசத்து என்னும் தோத்திரப் பாடலும், பிராக்ருத மொழியில் அச்யுத சதகம் என்ற தோத்திரப் பாக்களடங்கிய நூலும் இத்தலத்தைப் பற்றிப் பேசுகின்றன. இங்கு திருமணம் செய்வோர் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே வழங்கப்படுவதால் இத்திருத்தலத்தில் சுபமுகூர்த்த நாளில் 50 திருமணங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயில் திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயில் என்பது ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றும், நவதிருப்பதியில் மூன்றாவது திருப்பதியுமாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் ஆழ்வார்திருநகரியிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. பிரம்மாண்ட புராணத்தில் இத்தலத்தைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இறைவன்: கிழக்கு நோக்கிய சயனக் கோலத்தில் நிசேபவித்தன், வைத்தமா நிதிப்பெருமான். இறைவி: குமுதவல்லி, கோளுர் வள்ளி. தீர்த்தம்: குபேர தீர்த்தம், நிதித் தீர்த்தம்(தாமிரபரணி). விமானம்: ஸ்ரீகர விமானம் என்ற அமைப்பைச் சேர்ந்தது. நம்மாழ்வார் மட்டும் 12 பாடல்களாலும் மணவாள மாமுனிகளும் மங்களாசாசனம் செய்துள்ளனர். இவ்வூர் மதுரகவியாழ்வார் பிறந்த தலமாகும். இறைவன் செல்வத்தைப் பாதுகாத்து அளந்ததால் மரக்காலைத் தலைக்கு வைத்து பள்ளி கொண்ட கோலத்தில் இங்கும், சோழ நாட்டு வைணவத் திருத்தலமான திரு ஆதனூரில் ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் கோயிலில் மட்டுமே காணப்படுகிறார். பார்வதியின் சாபத்தால் குபேரனிடமிருந்து நவநிதிகள் எனப்படும் செல்வங்கள் விலககின. அவை திருமாலிடம் சென்று சரணடைந்தன. இதனால் திருமால் வைத்தமாநிதி என்று அழைக்கப்படுகிறார். பின்பு குபேரன் திருமாலை இத்தலத்தில் வழிபட்டு நவநிதிகளைப் பெற்றுக்கொண்டார். பெண்ணியம் (இதழ்) பெண்ணியம் என்னும் பெண்ணிய அரசியல் இதழ் தமிழ் நாட்டில் சென்னையில் இருந்து தனிச் சுற்று இதழாக வெளிவந்தது. "வீட்டுக் கதவின் படியைத் தாண்டி வருவதே கேடு – என்ற விதி உடைத்துப் படிக்க வேணும் புதியதோர் நாடு!" என்னும் பாடலடிகளை தனது முத்திரைத் தொடராகக்கொண்டு வெளிவந்தது இந்த இதழ். பெண்ணியம் இதழானது 1970 ஆம் ஆண்டில் வெளிவந்த கவிஞர் ஏவியன் எழுதிய பெண்ணுரிமை என்னும் கதையின் உந்துதலால் 2006 ஆகத்துத் திங்கள் முதல் சென்னையில் வெளியிடப்பட்டது. . பெண்ணியம் இதழானது பின்வரும் நோக்கத்திற்காக வெளியிடப்படுகிறது: “ஒடுக்கப்பட்டோருக்கென்றே படைக்கப்பட்ட மார்க்சியப் பெண்ணியம், பெரியாரியப் பெண்ணியம் என்னுமிரு கோட்பாடுகளிலும் உள்ள செழுமையான செயற்பாடுகளை முழுமையாகத் தன்வயப்படுத்தியும் தமிழ்ச் சமூகத்தில் அவ்வக்காலத்தில் முன்னெழுந்துவரும் பெண்விடுதலைச் சிந்தனைகளை ஆய்ந்தறிந்து உள்வாங்கியும் பெண்ணியத்தை வளர்ப்பதொன்றே பெண்ணினத்தின் விடுதலைத் துரிதப்படுத்தும் என்ற புரிதலையே பெண்ணியம் இதழ் தனது திசைவழியாகக் கொண்டுள்ளது.” பெண்ணியம் இதழில் லலிதா என்பவர் ஆசிரியராகவும் இளையராஜா என்பவர் பொறுப்பாசிரியராகவும் நிர்மலா என்பவர் இணை ஆசிரியராகவும் பணியாற்றினர். தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழர் கண்ணோட்டம் என்னும் திங்கள் இதழ் தமிழ்நாட்டில் சென்னை நகரில் இருந்து வெளிவருகிறது. தமிழ்த் தேசிய அரசியல் இவ்விதழின் பாடுபொருளாக இருக்கிறது. இந்த இதழ் 1988 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2011 வரை தமிழர் கண்ணோட்டம் என்ற பெயரில் வந்த இந்த இதழ் 2012ஆம் ஆண்டு முதல் மாதமிருமுறை தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் என்னும் பெயரில் வெளிவருகிறது. 2003 முதல் 2007 வரை வெளியிடப்பட்ட இதழ்கள் அனைத்தும் வலைபூவில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்டு 2009 ஆம் ஆண்டிலிருந்து வெளிவந்த தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் கீற்று இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன தமிழ் இன நலன் காக்கும் பொதுவுடைமைத் தமிழ்த் தேசக் குடியரசை உருவாக்க வேண்டும் என்னும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் கொள்கைகளையும் செயல்திட்டங்களையும் நடவடிக்கைகளையும் வெளிப்படுத்துவதோடு, தமிழ்நாட்டுத் தமிழர்களின் உரிமைச் சிக்கல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே தமிழர் கண்ணோட்டம் இதழின் நோக்கம் ஆகும். தமிழர் கண்ணோட்டம் இதழுக்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ. மணியரசன் ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் இருக்கிறார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன் இணை ஆசிரியராகவும், க.அருணபாரதி, கவிபாஸ்கர், பொன்னுசாமி, நா. வைகறை ஆகியோர் ஆசிரியர் குழு உறுப்பினர்களாகவும் இருக்கின்றனர். பன்னாட்டு அருங்காட்சியக நாள் பன்னாட்டு அருங்காட்சியக நாள் ("International Museum Day", IMD) ஆண்டுதோறும் மே 18 அல்லது அதற்குக்கிட்டவான நாட்களில் பன்னாட்டு ரீதியாக நடத்தப்படும் நிகழ்வு ஆகும். இந்நிகழ்வுகள் அருங்காட்சியகங்களின் பன்னாட்டுப் பேரவையினால் (International Council of Museums, ICOM) ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்படுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளில் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்படுகின்றன. அருங்காட்சியக வல்லுனர்கள் பொதுமக்களை சந்திக்கவும், அருங்காட்சியகங்கள் இன்று எதிர்நோக்கும் பிரச்சினைகளை அவர்களுக்கு விளக்கவும் சமூக வளர்ச்சியில் அருங்காட்சியகங்களின் பங்களிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வைக் கொண்டு வரவும் பன்னாட்டு அருங்காட்சியக நாள் உதவுகிறது. 1977 ஆம் ஆண்டு முதன் முதலில் கொண்டாடப்பட்ட நாள் தொடக்கம் பன்னாட்டு அருங்காட்சியக நாள் பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. 2009 ஆம் ஆண்டில், 90 நாடுகளில் இருந்து 20,000 அருங்காட்சியகங்கள் நிகழ்வுகளில் பங்குபற்றியிருந்தன. 2010 ஆம் ஆண்டில் 98 நாடுகளும், 2011 இல் 100 நாடுகளும், 2012 இல் 129 நாடுகளில் இருந்து 30,000 அருங்காட்சியகங்கள் பங்குபற்றியிருந்தன. அசித் சாண்டிலா அசித் சாண்டிலா (Ajit Chandila, பிறப்பு 5 திசம்பர் 1983) இந்தியாவின் அரியானா மாநிலத்தின் பரீதாபாத் நகரைச் சேர்ந்த புறச்சுழல் பந்து வீச்சாளர் ஆவார். முன்பு வட மண்டல துடுப்பாட்ட அணிக்கு விளையாடிய இவர் தற்போது இந்தியன் பிரீமியர் லீக்கில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விளையாடுகிறார். 2011இல் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். 2012இல் ஏப்ரல் 23 அன்று ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தனது முதல் ஆட்டத்தில் பங்கேற்றார். இவருக்கு முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் நரேந்திர ஹிர்வானி பயிற்சியாளராக இருந்துள்ளார். தனது முதல் ஐபிஎல் பருவத்திலேயே மூன்று அடுத்தடுத்த இலக்குகளை [ஆட்ரிக்) எடுத்தார். ஐபிஎல்லின் வரலாற்றில் ஆட்ரிக் எடுத்த ஏழு பந்து வீச்சாளர்களில் ஒருவரானார். மே 16, 2013 அன்று ஐபிஎல் ஆறாம் பருவத்து விளையாட்டில் குறிப்பிட்ட பந்து பரிமாற்றத்தில் முன்கூட்டியே தீர்மானித்தபடி பந்து வீசியதாக குற்றம் சாட்டப்பட்டு இவரையும் இவரது அணித்தோழர்களான சிறிசாந்த் மற்றும் அங்கீத் சவானையும் தில்லி காவல்துறை கைது செய்தது.. இவர்கள் மூன்று பேரின் மீதும் இந்தியக் குற்றவியல் சட்டம் 420 மற்றும் 120(பி) கீழ் மும்பை மரைன் டிரைவ் காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. சாண்டிலா மே 5, 2013 அன்று புனே வாரியர்சு இந்தியா எதிரான தனது ஆட்டத்தில் முன்குறித்து நிகழ்த்துவதற்காக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். கைதானபிறகு இவர் பணியாற்றும் ஏர் இந்தியா நிறுவனம் இவரை பணியிடைநீக்கம் செய்துள்ளது. வடசேரி, கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி ("Vadasery") தமிழ்நாடு, கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவிலின் ஒரு பகுதியாகும். முன்பு நல்ல ரக பருத்தி ஆடைகளைத் தயாரிக்கும் மையமாக திகழ்ந்தது. கைத்தறி நெசவு தேங்கிவிட்டது. மாவட்டத்திலேயே பெரிய சந்தை இங்குள்ளது. காய்கறி, பழவகைகள் மற்றும் பிறப் பொருட்களும் விற்பனைக்கு வருகின்றன. தினமும் பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் இங்கு கூடுகின்றனர். கால்நடைகள், குறிப்பாக உழவுமாடுகள் வாங்க மக்கள் இங்கு கூடுகிறார்கள். ஏராளமான வாழைப் பழவகைகள் வருவது சிறப்பாகும். கேரள மாநிலத்திற்கு அதிகம் ஏற்றுமதியாகிறது. மேல்நிலைப் பள்ளிகள், திரையரங்குகள், பெரிய விளையாட்டு அரங்கம், பெரிய சந்தை, வணிகக் களமாகத் திகழ்கிறது. வடசேரியினை அடுத்து வடக்குப் பகுதியில் காத்தரின் பூத் மருத்துவமனையம் தென்பகுதியில் நாகராசா கோவிலும், வடசேரியில் காமாட்சி அம்மன் கோவிலும் பக்கத்திலேயே சிவன் கோவிலும், மேற்குப்பக்கம் பெரிய கிருட்டிணன் கோயிலுள்ளது.மாவட்டத்தின் பெரிய கிறிஸ்டோபர் பேருந்து நிலையம் வடசேரில் உள்ளது. வடசேரியில் நான்கு தெருக்களில் பல தலைமுறையாக கோயில் நகைகள் செய்யும் தொழில் செய்ப்பட்டு வருகிறது. வழக்கமான தங்க நகைகளை விட, இவ்வகை நகைகள் சில விஷயங்களில் மாறுபடுகிறது. இதனால் இந்தத் தொழிலானது கைவினைக் கலைகள் பட்டியலில் இருக்கிறது. இந்த நகைகளுக்கு புவிசார் குறியீடும் பெறப்பட்டுள்ளது. இத்தொழிலில் வடசேரியில் இருநூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருக்கிறார்கள். வடசேரியில் இருந்து தமிழக கோயில்கள் மற்றும், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் இருக்கும் கோயில்களுக்கும் நகைகள் போகின்றன. பரத நாட்டியக் கலைஞர்களும் கோயில் நகைகளைப் போல் செய்துது பயன்படுத்துவதால் அவர்களுக்கும் இங்கிருந்து நகைகள் செய்யப்படுகின்றன. அங்கீத் சவான் அங்கீத் சவான் ("Ankeet Chavan", பிறப்பு அக்டோபர் 28, 1985, மும்பை, மகாராட்டிரம், இந்தியா) இந்தியாவின் உள்நாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் மும்பைக்காக ஆடுகின்ற ஓர் முன்னாள் துடுப்பாட்டக்காரர் ஆவார். அனைத்துத் துறை வல்லுநரான இவர் இடக்கை மட்டையாளரும் இடதுகை மரபுவழா சுழல் பந்து வீச்சாளரும் ஆவார். இந்தியன் பிரீமியர் லீக்கில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடி வருகிறார்.. 2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பையில் இவர் மும்பை அணி சார்பாகா விளையாடினார். டிசம்பர் 12 இல் கட்டாக்கில் நடைபெற்ற ஒடிசா மாநிலத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 40 பந்துகளில் 20 ஓட்டங்களை எடுத்து மொஹந்தியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் பந்துவீச்சில் 5 ஓவர்கள் வீசி 1 ஓவரை மெய்டனாக வீசி 27 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் பின் பந்துவீச்சில் 11 ஓவர்கள் வீசி 3 ஓவரை மெய்டனாக வீசி 19 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். 2 இலக்கினைக் கைபப்ற்றினார். இந்தப் போட்டியில் மும்பை அணி 315 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பையில் இவர் மும்பை அணி சார்பாகா விளையாடினார். பெப்ரவரி 6 இல் மும்பையில் நடைபெற்ற "ரெஸ்ட் ஆஃப் இந்தியா" துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 89 பந்துகளில் 49 ஓட்டங்களை எடுத்து மிதுனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் பந்துவீச்சில் 10 ஓவர்கள் வீசி 1 ஓவரை மெய்டனாக வீசி 56 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். இதில் சுரேஷ் ரைனா உள்ளிட்ட 3 இலக்குகளைக் கைப்பற்றினார்.பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் பின் பந்துவீச்சில் 38 ஓவர்கள் வீசி 4 ஓவரை மெய்டனாக வீசி 126 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். இலக்கினைக் கைப்பற்றவில்லை. இந்தப் போட்டி சமனில் முடிந்தது. 2009 ஆம் ஆண்டில் சைஅயது முஷ்தாக் அலி கோப்பைக்கான இருபது20 போட்டியில் மகாராட்டிரம் அணிக்கு எதிரான இருபது20 போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 1 ஓவர்கள் வீசி 17 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். பின் மட்டையாட்டத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 21 பந்துகளில் 23 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 2நான்குகளும் 1 ஆறு ஓட்டமும் அடங்கும். இந்தப் போட்டியில் மகாராட்டிரம் அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பின் 2013 ஆம் ஆண்டில் புனேவில் நடைபெற்ற போட்டியில் சய்ராட்டிர அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி சார்பாக இவர் விளையாடினார். இந்தப் போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 18* ஓட்டங்களை எடுத்தார். பின் பந்துவீச்சில் 4 ஓவர்கள் வீசி 24 ஒட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. பின் 2013 ஆம் ஆண்டில் அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் குசராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி சார்பாக இவர் விளையாடினார். இந்தப் போட்டியில் 15 ஓட்டங்களை எடுத்தார். பின் பந்துவீச்சில் 4 ஓவர்கள் வீசி 17 ஒட்டங்களை விட்டுக் கொடுத்தார். இதில் 2 இலக்குகளைக் கைப்பற்றினார். 2013 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். மே 15 இல் இந்தத் தொடரில் 66 ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடினார். இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில்வெற்றி பெற்றது. மே 16, 2013 அன்று ஐபிஎல் ஆறாம் பருவத்து விளையாட்டில் குறிப்பிட்ட பந்து பரிமாற்றத்தில் முன்கூட்டியே தீர்மானித்தபடி பந்து வீசியதாக குற்றம் சாட்டப்பட்டு இவரையும் இவரது அணித்தோழர்களான சிறிசாந்த் மற்றும் அசித் சாண்டிலாவையும் தில்லி காவல்துறை கைது செய்தது.. இவர்கள் மூன்று பேரின் மீதும் இந்தியக் குற்றவியல் சட்டம் 420 மற்றும் 120(பி) கீழ் மும்பை மரைன் டிரைவ் காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. காவல்துறை குற்றச்சாட்டில் இவர் மே 15,2013 அன்று மும்பை இந்தியன்ஸ் அணியுடனான ஆட்டத்தில் தனது ஒரு பந்துப் பரிமாற்றத்தில் 14 ஓட்டங்கள் கொடுக்க உறுதி வழங்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது..இவர் பணியாற்றும் நிறுவனமான ஏர் இந்தியா இவரை பணியிடை நீக்கம் செய்துள்ளது. காவல்துறையின் விசாரணையின்போது தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனையம்பட்டி எஸ். கணேசன் ஆனையம்பட்டி எஸ் கணேசன் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜலதரங்க இசைக் கலைஞர் ஆவார். இவர் கருநாடக இசைப் பாடகராகவும், வயலின் இசைக் கலைஞராகவும் விளங்குகிறார். தென்னிந்தியா முழுவதும் ஜலதரங்க இசை நிகழ்ச்சிகளை இவர் நிகழ்த்தியுள்ளார். 2005-2006 சென்னை இசை விழாவில் இவர் ஒருவரே ஜலதரங்க இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். இவர் தமது கருவியாகப் பயன்படுத்தும் சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 19 போர்சிலியன் கிண்ணங்கள், 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவையாகும். இராமாயணப் பூங்கா, கோயம்புத்தூர் இராமயணப் பூங்கா, தமிழ்நாட்டில் கோயம்புத்தூரிலுள்ள இராமகிருஷ்ண வித்யாலய வளாகத்துக்குள் மேட்டுப்பாளையம் சாலையோரம் அமைந்துள்ளது. இது சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட இராமயண கருத்துப் பூங்கா. இங்கு இராமாயணக் கதாபாத்திரங்களை அடையாளப்படுத்தும் விதத்தில் விளையாட்டுச் சாதனங்களும், அவற்றின் அருகில் அந்தந்தக் கதாபாத்திரங்கள் பற்றிய விளக்கத்தினைத் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தரும் தகவற்பலகைகளும் உள்ளன. இப்பூங்கா விவேகானந்தர் பூங்காவினை ஒட்டி கட்டப்பட்டுள்ளது. இராமகிருஷ்ணா மிஷின் வித்யாலய நிறுவனத்தினரால் உருவாக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வரும் இப்பூங்கா 2009 ஆம் ஆண்டு, டிசம்பர் 27 ஆம் தேதியன்று, இராமகிருஷ்ண மடத்தின் துணைத்தலைவராக இருந்த சுவாமி ஸ்மாரனந்தானந்தா மகராஜால் திறந்து வைக்கப்பட்டது. 2 வயது முதல் 15 வயதுவரையுள்ள சிறுவர், சிறுமியருக்கும் அவர்களுக்குத் துணையாக வரும் பெரியவர்களுக்கும் மட்டுமே இப்பூங்காவிற்குள் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. தற்போதைய அனுமதிக் கட்டணம் ஒரு நபருக்கு ரூபாய் 5. பூங்காவினுள் உணவுப்பொருட்கள் எடுத்துச்செல்லக் கூடாதென்ற நிபந்தனை அமுலிலுள்ளது. இப் பூங்காவில் இராமாயணக் கதாபாத்திரங்கள் வடிவில் அமைக்கப்பட்டுள்ள சில விளையாட்டுச் சாதனங்களின் படிமங்கள் இங்கு தரப்பட்டுள்ளன: சைவ இலக்கிய வரலாறு (நூல்) சைவ இலக்கிய வரலாறு என்பது ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் எழுதிய நூலாகும். இந்நூலில் பக்தி இலக்கிய காலம் என்று சிறப்பிக்கப்பெறும் கி.பி 7ம் நூற்றாண்டு முதல் கி.பி 12ம் நூற்றாண்டு வரையான சைவ நூலாசிரியர்களைப் பற்றி ஆய்வு செய்து எழுத நினைத்த ஆசிரியர், காலச்சூழலின் காரணமாக கி.பி 10ம் நூற்றாண்டு வரையான நூலாசிரியர்களைப் பற்றி ஆய்வு செய்து நூலாக வெளியிட்டுள்ளார். இந்நூலை அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. அத்துடன் அண்ணாமலைப் பல்கலைக் கழக துணைவேந்தர் டி. எம். நாராயணசாமி பிள்ளை இந்நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ளார். கிபி 700-1000 வரையான தமிழ் நாட்டு வரலாறும், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் (அப்பர்), சுந்தரர், மாணிக்கவாசகர், சேரமான் பெருமான், ஐயடிகள் காடவர்கோன், பட்டினத்தடிகள், சேந்தனார், ஒüவையார், முதற் கண்டராதித்தர், நம்பியாண்டார் நம்பி, வேம்பையர்கோன் நாராயணன் ஆகியோரின் வரலாறும் இடம்பெற்றுள்ளது. வரதமா நதி அணை வரதமா நதி அணை தமிழ்நாடு, திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம்,பழனியிலிருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் அமைந்துள்ளது . கொடைக்கானல் வட்டத்திலுள்ள வடகவுஞ்சி மலைக்கிராமத்தின் கிழக்கு பகுதியில் உள்ள பொய்யா வெளிப்பகுதியிலும், வடகவுஞ்சி மலைக் கிராமத்தின் வடபகுதியில் உள்ள மேல் பள்ளம் பகுதியிலும் உருவாகும் ஒடைகள் (இணையும்) கூட்டாறு என்ற இடத்தில் இணைந்து நதியாகி மேற்கு நோக்கி சுமார் 19 கி.மீ.தூரம் ஓடி வரதா பட்டிணம் என்ற இடத்தில் சவரி குன்றுக்கும், தட்டைப்பாறைக்கும் இடையில் வரதமா நதியின் குறுக்கே 1978ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது வரதமா நதி அணை. இந்த அணை அய்யம்புள்ளி, ஆயக்குடி, பழனி, பாலசமுத்திரம் ஆகிய கிராமங்களின் சுமார் 1750 ஹெக்டேர் (4325 ஏக்கர்) நிலங்களுக்கு பாய்ச்சல் ஆதாரமாகிறது. இந்த அணையின் உபரி நீர் வரத்தாறு என்ற பெயரில் வடக்காக ஓடி சண்முகா நதியுடன் கலக்கிறது. இந்த அணையிலிருந்து பழனி நகருக்கு குடிநீர் வழங்கும் குடிநீர் சேமிப்புக் கிடங்கில் தேக்கி வைத்து குடிநீர் வினியோகிக்கப் படுகிறது. சைவ நூலாசிரியர்கள் பட்டியல் இப்பக்கம் சைவ நூலாசிரியர்களை பட்டியல் செய்துள்ளது. சைவ இலக்கிய வரலாறு - துரைசாமிப் பிள்ளை சைவ சித்தாந்த சாத்திர வரலாறு (நூல்) சைவ சித்தாந்த சாத்திர வரலாறு என்பது க.வெள்ளைவாரணனார் அவர்களால் இயற்றப்பெற்ற நூலாகும். இந்நூலை தஞ்சை தமிழப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் இ.சுந்தரமூர்த்தி அணிந்துரை எழுதியுள்ளார். இந்நூலில் சிவவழிபாட்டின் தொன்மையும் உலகளாவிய விரிவும், தொல்காப்பியர் கூறும் வழிபாட்டு நெறிகளும், தத்துவக் கொள்ளைகளும், சங்கச் செய்யுட்கலில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாட்டு தத்துவக் கொள்கைகளும், சங்கவிலக்கியத்தில் சிவன் வழிபாடும் சைவ சமயத் தத்துவ உண்மைகளும் இடம்பெற்றுள்ள. அத்துடன் திருவள்ளுவர் கூறும் வாழ்வியல் நெறிகளும், தத்துவ உண்மைகளும், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள சிவநெறிக் கோட்பாடுகளும், திருமந்தரம் கூறும் சைவ சித்தாந்தக் கொள்கைகளும், திருமுறையில் இடம்பெற்றுள்ள சிவநெறிக் கொள்கைகளும் ஆய்வு செய்து வெளியிடப்பட்டுள்ளன. அகில மலேசிய இஸ்லாமிய முன்னணி அகில மலேசிய இஸ்லாமிய முன்னணி ("Pan-Malaysian Islamic Front", , ஜாவி: "باريسن جماعه اسلاميه سمليسا" என்பது மேற்கு மலேசியா, கிளாந்தான் மாநிலத்தைத் தளமாகக் கொண்ட ஒரு சமய அரசியல் கட்சியாகும். 1977 ஆம் ஆண்டு, கிளாந்தான் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த [[டத்தோ[[ ஹாஜி முகமட் நாசிர், [[மலேசிய இஸ்லாமிய கட்சி|பாஸ் கட்சி]]யில் இருந்து வெளியேற்றப்ப்ட்டதும், இந்த அகில மலேசிய இஸ்லாமிய முன்னணி எனும் அரசியல் கட்சியை உருவாக்கினார். அகில மலேசிய இஸ்லாமிய முன்னணி உருவாக்கம் பெறுவதில் [[அம்னோ]] முக்கிய பங்கு வகித்தது. 1970களில் மலேசிய இஸ்லாமிய கட்சி, [[பாரிசான் நேசனல்]] கூட்டணியுடன் இணைந்து இருந்த போது, அதிகப்படியான சலுகைகளை எதிர்பார்த்தது. மலேசிய இஸ்லாமிய கட்சியின் எதிர்பார்ப்புகளுக்கு இணங்கிப் போக முடியாத [[பாரிசான் நேசனல்]] கூட்டணி, அகில மலேசிய இஸ்லாமிய முன்னணியைத் தோற்றுவிப்பதில் வெற்றி கண்டது. மலேசிய இஸ்லாமிய கட்சியும் [[பாரிசான் நேசனல்]] கூட்டணியில் இருந்து விலகிக் கொண்டது. [[1978]] ஆம் ஆண்டு நடைபெற்ற மலேசியப் பொதுத் தேர்தலில், [[மலேசிய இஸ்லாமிய கட்சி|பாஸ் கட்சி]] மிகவும் மோசமான தோல்வியைக் கண்டது. [[கிளாந்தான்]] மாநிலத்தின் 36 சட்டமன்றத் தொகுதிகளில், [[அம்னோ]]விற்கு 23 இடங்கள், அகில மலேசிய இஸ்லாமிய முன்னணிக்கு 11 இடங்கள், [[மலேசிய இஸ்லாமிய கட்சி|பாஸ் கட்சி]]க்கு இரு இடங்கள் கிடைத்தன. அதன் பின்னர் அகில மலேசிய இஸ்லாமிய முன்னணி, ஆளும் [[பாரிசான் நேசனல்]] கூட்டணியுடன் இணைந்தது. இருப்பினும், அடுத்து வந்த தேர்தல்களில் அக்கட்சி தோல்விகளையே கண்டு வந்தது. [[மலேசியப் பொதுத் தேர்தல், 2013|2013 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில்]] "மலேசிய முஸ்லிமின் கூட்டமைப்பு" எனும் அரசியல் கட்சி, அகில மலேசிய இஸ்லாமிய முன்னணியின் சார்பில் போட்டியிட்டது. ஆனால், அத்தேர்தலில் போட்டியிட்ட அனைவரும் தோல்வி அடைந்தனர். [[பகுப்பு:மலேசிய அரசியல் கட்சிகள்]] [[பகுப்பு:மலேசியாவில் இசுலாம்]] சம அளவு அலுமினியம் சம அளவு அலுமினியம் (Alluminium equivalent ) எக்சு கதிர் குழாய் அதற்குண்டான கூண்டில்(Housing) நிலையாக வைக்கப்பட்டுள்ளது. கருவியை இயக்கும் போது தோற்றுவிக்கப்படும் கதிர்கள் முதலில் குழாயின் கண்ணாடிச் சுவரைக் கடந்து வெளிப்படுகிறது.கூண்டில் குழாயினைச் சுற்றி எண்ணெய் உள்ளது.இவ் எண்ணெய் ஓரளவு வெப்பத்தினை அகற்றவும் மின்கடவாப் பொருளாகவும் பயன்படுகிறது.இதிலும் சிறிது கதிர்கள் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. மேலும் கதிர்கள் வெளிப்பட கூண்டில் அமைக்கப்பட்டுள்ள தடித்த நெகிளி( Plastic) வழியாக வெளிப்படுகிறது. அங்கும் கதிர்கள் ஏற்கப்படுகின்றன.இவ்வாறு கருவியைவிட்டு வெளிப்படும் முன், கண்ணாடிச்சுவர், எண்ணெய் ,நெகிளி என்று பல்வேறு பட்ட பொருட்களில் ஏற்கப்பட்டு செறிவு குறைகிறது.இது வடிகட்டி போல் செயல்படுகிறு.இதனை கட்டுப்படுத்த முடியாது. எனவே இது உள்ளார்ந்த வடிகட்டி (Inherent filter ) எனப்படும்.மேலும் வடிகட்ட கூடுதல் அலுமினியத் தகடுகள் சேர்த்து (Added filter ) மென்கதிர்கள் அகற்றப்படுகின்றன. உள்ளார்ந்த வடிகட்டி கதிர்களின் செறிவினை எவ்வளவு குறைக்கிறதோ அதே அளவு செறிவினைக் குறைக்க தேவைப்படும் அலுமினியத் தகட்டின் கன அளவு, சம அளவு அலுமினியம் எனப்படுகிறது. உள்ளார்ந்த வடிகட்டி + கூடுதல் வடிகட்டி= பயனுறு வடிகட்டி(.Effective filter) ஆகும். பொதுவாக சம அளவு அலுமினியம் என்பது , ஒரு குறிப்பிட்ட கனளவுள்ள பொருள் எக்சு கதிர்களின் செறிவினை எவ்வளவு குறைகுகிறதோ அதேஅளவு செறிவினைக் குறைக்க தேவைப்படும் அலுமினியத்தின் கன அளவு ஆகும். மலேசிய மக்கள் பொதுநலக் கட்சி மலேசிய மக்கள் பொதுநலக் கட்சி ("Malaysian People's Welfare Party"), என்பது மேற்கு மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தைத் தளமாகக் கொண்ட ஒரு மதச் சார்பற்ற அரசியல் கட்சியாகும். இக்கட்சி அமைக்கப்பட்ட போது "அக்கிம்" என்று அழைக்கப்பட்டது. () இப்போது "கித்தா" என பரவலாக அழைக்கப்படுகின்றது. 1995 ஆம் ஆண்டு பாஸ் கட்சியில் ஏற்பட்ட சில உட்பூசல்களினால், இந்தக் கட்சி உருவாக்கம் பெற்றது. அத்துடன், 1996 இல், செமாங்காட் 46 எனும் அரசியல் அமைப்பில் ஏற்பட்ட பிரச்னைகளின் காரணமாகவும், பலர் இந்த மலேசிய மக்கள் பொதுநலக் கட்சியில் உறுப்பினர்களாகச் சேர்ந்தனர். 1999 ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் இக்கட்சி, கிளாந்தான் மாநிலத்தில் உள்ள பாசீர் பூத்தே, கோத்தா பாரு நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வி அடைந்தது. 1999 ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில், இக்கட்சியின் தலைவர் ஹனாபி மாமாட், பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தலில் கல்ந்து கொண்டார். ஆனால், 98 வாக்குகள் மட்டுமே பெற்றார். தேர்தல் வைப்புக் தொகையான 15,000 மலேசிய ரிங்கிட்டையும் இழந்தார். இருப்பினும் அத்தேர்தலின் மூலமாகக் கட்சிக்கு அறிமுகம் கிடைத்தது என்று தலைவர் ஹனாபி மாமாட் கூறினார். 2010 டிசம்பர் 13 ஆம் தேதி, டத்தோ சாயிட் இப்ராஹிம் கட்சியில் ஓர் உறுப்பினராகச் சேர்ந்ததாக மலேசிய மக்கள் பொதுநலக் கட்சி அறிவித்தது. டத்தோ சாயிட் இப்ராஹிம் என்பவர், மலேசிய அரசியலில் நன்கு அறிமுகமானவர். மகாதீர் பின் முகமது பிரதமராக இருந்த போது, மலேசிய அமைச்சரவையில் மூத்த அமைச்சராகச் சேவை செய்தவர். பிரதமர் மகாதீர் பின் முகமதுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாக அவர் அமைச்சரவையில் இருந்து விலகிக் கொண்டார். பின்னர், அவர் பாக்காத்தான் ராக்யாட் கூட்டணியில் சேர்ந்தார். அங்கேயும் ஒரு சுமுக நிலை ஏற்படவில்லை. அதனால், அங்கிருந்தும் விலகி, பின்னர் மலேசிய மக்கள் பொதுநலக் கட்சியில் இணைந்து கொண்டார். 2010 டிசம்பர் 15 இல் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், அதுவரையில் தலைவராக இருந்த ஜக்காரியா சாலே என்பவர் பதவி விலகிக் கொண்டார். டத்தோ சாயிட் இப்ராஹிம் கட்சியின் புதுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். கட்சிக்கு மலேசிய மக்கள் பொதுநலக் கட்சி ( (KITA)) என்று புதுப் பெயரும் வைக்கப்பட்டது. அக்கூட்டத்தில் மலேசிய மக்கள் பொதுநலக் கட்சி ஒரு சிறிய கட்சியாக இருந்தாலும், அது பல்லின ஜனநாயகக் கட்சியாகச் செயல்படும் என்று டத்தோ சாயிட் இப்ராஹிம் அறிவித்தார். கட்சியின் புதிய சட்டதிட்டங்கள், செயல்திட்டங்கள், சின்னம் ஆகியவை 2011 ஜனவரி 19 இல் அறிவிக்கப்படும் என்றும் அறிவித்தார். இராமகிருஷ்ண மிசன் வித்தியாலயம், கோயம்புத்தூர் இராமகிருஷ்ண மிசன் வித்தியாலயம், கோயம்புத்தூர் என்பது பாலர் பள்ளி முதல் ஆய்வுப் படிப்பு வரை மொத்தம் 19 கல்வி நிறுவனங்கள் கொண்ட குழுமம். இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள கோயம்புத்தூரின் புறநகர்ப் பகுதியில் வித்தியாலயம் 1930 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர் 1934 ஆம் ஆண்டு இராமகிருஷ்ண மிசனின் கீழிணைக்கப்பட்டது. ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் ஆகியோரின் கல்வி மற்றும் ஆன்மீக கருத்துக்களை மாணவர்களின் தினசரி வாழ்வில் வேரூன்றச் செய்யும் நோக்கினைக் கொண்டது வித்யாலயம். இங்கு சுயக்கட்டுப்பாடு, தன்னிறைவு, தேச பக்தி, கடமையுணர்வு போன்ற கருத்துக்கள் வாழ்வியலோடு இணைந்து நடைமுறைக் கல்வியாக அளிக்கப்படுகிறது. இந்நிறுவனம் இராமகிருஷ்ணா மடத்தினைச் சேர்ந்த சுவாமிகளின் மேற்பார்வையில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத அலுவலர்களின் உதவியுடன் செயல்பட்டு வருகிறது. இராமகிருஷ்ண மிசன் வித்தியாலயம், 1930 ஆம் ஆண்டு தி. சு. அவினாசிலிங்கம் செட்டியாரால் 5.75 ரூபாய் முதலீட்டுடன் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒரேயொரு மாணவனோடு தொடங்கப்பட்டது. இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான சுவாமி சிவானந்தாவுடனான சந்திப்புதான் தான் கல்விப்பணியில் ஈடுபடக் காரணமென அவினாசிலிங்கம் கூறியுள்ளார். 1934 ஆம் ஆண்டு, மகாத்மா காந்தியால் வித்யாலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதே ஆண்டு வித்யாலயம் இராமகிருஷ்ண மிசனின் கீழிணைக்கப்பட்டது. இந்நிறுவனம் கோயம்புத்தூரிலிருந்து சுமார் 19 கிமீ தொலைவில் அதன் புறநகர்ப் பகுதியில் மேட்டுப்பாளையம் சாலையோரமாக அமைந்துள்ளது. இவ்வளாகம் கிட்டத்தட்ட 300 ஏக்கர் நிலப்பரப்புடையது. 2002 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சுவாமி அகானந்தா கிராமப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் (The Swami Akhandananda Rural Development Scheme) அறிவொளி நகர் உள்ளிட்ட கிராமப்புறப் பகுதிகளில் மருத்துவம், தனிவகுப்பு போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஸ்ரீ இராமகிருஷ்ணரின் பிறந்த நாள் "குருபூஜை" என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாத முதல் ஞாயிறன்று இவ்விழா நடைபெறுகிறது. ஒரு நாள் முழுவதும் கொண்டாடப்படும் இவ்விழாவில் பஜனைகள், சிறப்புச் சொற்பொழிவுகள், நாடகங்கள், கல்விக் கண்காட்சி, இசை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறும். மகேஸ்வர பூஜையும் அன்னதானமும் இவ்விழாவின் சிறப்பு நிகழ்ச்சிகளாகும். இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் மூன்று நாட்கள் நடைபெறும் வண்ணம் இளைஞர் மாநாடு 2009 ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாத முதல் வாரத்தில் இம்மாநாடு நடைபெறுகிறது. எழுச்சிமிக்க சொற்பொழிவுகள், காட்சியளிப்புகள், தியானம், யோகா, விளையாட்டுகள், கலைநிகழ்ச்சிகள் ஆகியவை இதன் முக்கிய நிகவுகளாகும். விளையாட்டு விழா ஆண்டுதோறும் பெப்ரவரி மாதம் நடத்தப்படுகிறது. இதில் கடவுள் மற்றும் தேசபக்திப் பாடல்களின் தாளப் பின்னணியில் 45 தொடக்கப்பள்ளிகளிலிருந்து கிட்டத்தட்ட 4000 மாணவ, மாணவியர் பங்குபெறும் யோகா, உடல் வலிமை மற்றும் அழகிற்கான உடற்பயிற்கள் (calisthenic exercises) நடைபெறும். கலை, இலக்கியம், இசை, நாடகத்திற்காக கலைமகள் விழா மூன்றுநாள் நிகழ்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர்/அக்டோபர் மாதத்தில் விஜய தசமிக்கு முன்பாக நடத்தப்படுகிறது. வடகவுஞ்சி வடகவுஞ்சி (Vadagounchi) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு மலைக் கிராமம்(ஊர்). கொடைக்கானல் வருவாய் வட்டத்தின் 15 ஆவது எண்கொண்ட வருவாய் கிராமம் (கிராம எண்:15) ஆகும். இங்கு மலைத் தோட்டப் பயிர்களான மலைவாழை, பூண்டு, முள்ளங்கி, கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, காபி, பழங்கள் அதிகமாக விளைகின்றன. பழனியிலிருந்து கொடைக்கானல் செல்லும் மலைப்பாதையில் பழனியிலிருந்து சுமார் 39 கி.மீ.தூரத்திலும், கொடைக்கானலில் இருந்து 22 கி.மீ.தூரத்திலும் அமைந்து உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1025 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த கிராமத்திலிருந்து சுமார் 2 கி.மீ தூரத்தில் கொடைக்கானல் மலைகளில் மிக உயரமான மலைச் சிகரம் பெருமாள் மலைச் சிகரம் (உயரம்.2066 மீட்டர்) அமைந்துள்ளது. இந்திரா காந்தி தேசிய வன விலங்கு சரணாலயம் இக்கிராமத்தின் கிழக்கு எல்லையோடு முடிகிறது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, வடகவுஞ்சியில் 3838 பேர் வசிக்கின்றார்கள். பாலின விகிதம் 960. எழுத்தறிவு பெற்றவர்கள் 2141 பேர். இதில் 1244 பேர் ஆண்கள்; 897 பேர் பெண்கள். எழுத்தறிவு பெற்றுள்ளோர் சதவீதம் 64.03. ஆறு வயதுக்குட்பட்டோர் 14.77 சதவீதம் ஆவர். இக்கிராமத்தின் வட கிழக்குப் பகுதியில் செம்பரான்குளம் பகுதியில் குள்ள மனிதர்களின் மூன்று அடி உயரமுள்ள குகைவீடுகள் உள்ளது. வீடுகள் முழுவதும் கருங்கற்களால் ஒரு ஒழுங்கமைவோடு கட்டப்பட்டுள்ளது. வீட்டினுள் இருவர் மட்டுமே தங்கும் இடவசதியுடன் அமைக்கப்பட்டும், மேற்கூரைகள் ஒர் அடி கனமுள்ள கருங்கற் பலகைகளால் மூடப்பட்டும் உள்ளது. சேக் சின்ன மௌலானா சேக் சின்ன மௌலானா (மே 12, 1924 - ஏப்ரல் 13, 1999) தென்னிந்தியாவைச் சேர்ந்த நாதசுவர இசைக் கலைஞர் ஆவார். ‘சேக்’ என நேயர்களால் அழைக்கப்பட்ட இவர், தனது இராக ஆலாபனைக்காக பெரிதும் புகழப்பட்டார். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்திலுள்ள கரவடி எனும் சிற்றூரில் பிறந்தவர் சேக் சின்ன மௌலானா. ஆரம்பத்தில் தனது தந்தையார் சேக் காசிம் சாகிப்பிடமும் பின்னர் சேக் அதம் சாகிப் எனும் பிரபல கலைஞரிடமும் நாதசுவர இசையினைக் கற்றார். ‘தஞ்சாவூர் பாணி’ எனச் சொல்லப்படும் வாசிப்பு முறையின் மீது ஆவல் கொண்ட சேக், நாச்சியார்கோவிலைச் சார்ந்த ராஜம்-துரைக்கண்ணு சகோதரர்களிடம் சில வருடங்கள் நாதசுவர இசையினைப் பயின்றார். பிரபல நாதசுவர இசைக் கலைஞர் டி. என். ராஜரத்தினம் பிள்ளையை தனது மானசீக குருவாக ஏற்றவர், சேக் சின்ன மௌலானா. ராஜரத்தினம் பிள்ளையின் வாசிப்பு முறையினை தனது சிறு வயது முதல் நன்கு கவனித்து வந்து தன்னுடைய வாசிப்பு முறையில் அந்த நுட்பங்களை இணைத்துக் கொண்டார் சேக். சேக் சின்ன மௌலானா தனது முதலாவது இசை நிகழ்ச்சியை 1960 களில் தமிழ்நாட்டில் நிகழ்த்தினார். ரெங்கநாத கடவுள்மீது கொண்டிருந்த ஆழ்ந்த பக்தி காரணமாக சிறீரங்கத்தை தனது வசிப்பிடமாகக் கொண்டார். காவிரியாற்றங்கரையில் ’சாரதா நாதஸ்வர சங்கீத ஆஸ்ரமத்தை’ ஏற்படுத்தினார். இந்த ஆசிரமம் பல திறமையான கலைஞர்களை உருவாக்கியுள்ளது. இவரது பாரம்பரியத்தை இவரது பேரன்கள் காசிம், பாபு ஆகியோர் பாதுகாத்து வருகின்றனர். சில நாட்கள் உடல் நலம் குன்றியிருந்த சேக் சின்ன மௌலானா, 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் நாள் சிறீரங்கத்தில் காலமானார். பிரகதாரண்யக உபநிடதம் பிரகதாரண்யக உபநிடதம் (' Upanishad, ) சுக்ல யசுர் வேதத்தில் அமைந்துள்ள ஓர் உபநிடதம். இதனை யசுர் வேத சாரம் என்றும் அழைப்பர். இவ்வுபநிடதத்திற்கு ஆதிசங்கரர், இராமானுஜர், மற்றும் மத்வர் ஆகியோர் விளக்க உரை எழுதியுள்ளனர். இது மற்ற அனைத்து உபநிடதங்களை விட மிகப் பெரியது. இது மூன்று காண்டங்களும், ஆறு அத்தியாயங்களையும் கொண்டது. இந்த உபநிடதத்தில் அதிக பிரம்ம (ஆத்ம) தத்துவங்கள் அடங்கிய கதைகள் கொண்டுள்ளது. ’பிரகதாரண்யகம்’ எனும் சமற்கிருத சொல்லுக்கு மிகப்பெரிய அடர்ந்த காடு என்று பொருள். பெயருக்கு ஏற்ப இவ்வுபநிடதம் ஆத்மதத்துவ விசாரணை, நன்னெறிகள், வேள்விகள், சடங்குகள், தியானம், உபாசனை, ஒரு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும், பிரம்மத்தை அடையும் வழிகள் மற்றும் சீவ - பிரம்ம ஐக்கியத்தைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறது. இவ்வுபநிடதத்தில் அஹம் பிரம்மாஸ்மி எனும் மகா வாக்கியம் அமைந்துள்ளது. ’நான் பிரம்மாக இருக்கிறேன்’. (நானே இறைவனாக இருக்கிறேன்) என்ற மெய்ப்பொருள் தத்துவத்தை இந்த உபநிடதம் விளக்குகிறது. இதில் ‘ஆத்ம விசாரணை’ அதாவது, ஆத்மா தொடர்பான பல இரகசியங்களை சொல்லப்பட்டு இருக்கிறது. மேலும் ‘த’ என்ற எழுத்திற்கு பலவகையான சிறப்பான தத்துவங்கள் கூறப்பட்டுள்ளது. இவ்வுபநிடதம் சுக்ல யசூர் வேதத்தில் அமைந்துள்ளதால், அதன் சாந்தி மந்திர பாடமே இவ்வுபநிடத்திற்கும் சாந்தி மந்திர பாடமாக அமைந்துள்ளது. அந்த ஈச்வரன் பூர்ண சொரூபமானவர், இந்த சீவன் பூர்ண சொரூபமானவன், பூர்ணமான ஈச்வரனிடமிருந்து பூர்ணமான சீவன் தோண்றியுள்ளான். பூர்ணமான சீவனுடைய பூர்ணமான சொரூபத்தை எடுத்துவிட்டால் பூர்ணம் மட்டும் எஞ்சியுள்ளது.(பூர்ணம் என்ற சொல்லுக்கு வரையறுக்கப்படாதது என்பது பொருள்). காலத்தாலும் இடத்தாலும் குணத்தாலும் வரையறுக்கப்படாததாக உள்ளது. பூர்ணம் என்றும் பிரம்மம் என்றும் கூறப்படுகிறது. ஈச்வரனும் ஜீவனும் உண்மையில் பூர்ணமான தன்மையையுடையவர்களே, வெளித்தோற்றத்தில் வேற்றுமையே தவிர சொரூபத்தில் வேற்றுமை இல்லை. கடலும் அலைகளும் நீர் சொரூபமாக இருப்பது போல், ஈச்வரனும் ஜீவனும் பூர்ண சொரூபமானவர்கள். அதாவது பிரம்ம சொரூபமானவர்கள். இறுதியாக மூன்று முறை ஓம் ’சாந்தி’ என்று சொல்வதற்கு மூன்று காரணங்கள் உள்ளது. அது மனிதர்களுக்கு மூன்று வழிகளிலிருந்து தடைகள் வருகிறது. அவைகள் 1.ஆதிபெளதிகம் (Physical), 2. ஆதிதெய்விகம் (Divine), 3. ஆதிஅத்யாத்மிகம் (Internal) என்பன. ஆதிபெளதிகம் என்பது வெளிச்சூழ்நிலைகளிருந்து, குறிப்பாக இயற்கைச் சீற்றங்கள், மனிதர்கள் மற்றும் விலங்குகளிடருந்து நமக்கு வரும் தடைகள், ஆதிதெய்விகம் என்பது துர்தேவதைகள், பேய் பிசாசுகள், ஆவிகள் போன்றவற்றிடமிருந்து நமக்கு வரும் தடைகள். ஆதிஅத்யாத்மிகம் என்பது நம்மிடருந்தே நமக்கு வரும் தடைகளான, நோய்கள், வலிகள், சோம்பேறித்தனம் மற்றும் ஞாபகமறதி. இது போன்ற தடைகளிருந்து நம்மை நாம் காப்பாற்றிக் கொள்வதற்கு இந்த சாந்தி மந்திரம் மூன்று முறை ஜெபித்தால், எவ்வித தடைகள் இன்றி வேதாந்த சாத்திரங்களை நன்கு கேட்டு நாம் மனதில் இருத்திக் கொள்ள முடியும். முதல் இரண்டு அத்தியாயங்களில், இறைவன் பற்பல வடிவாக இருப்பினும், இறைவன் ஒருவனே என்று விளக்கப்படுகிறது. ’மெய்ப்பொருளை’ வெவ்வாறாக பிரித்து உபாசிக்கின்றவன், அவன் அறிய வேண்டியது ஆத்மதத்துவம் எனும் பிரம்ம தத்துவத்தைத் தான். அது எல்லாவற்றை விட மேலானது. ஆத்மாவை தியானிப்பவர்கள் அதுவாகவே மாறி விடுகின்றனர். எவன் தன்னை இறைவன் என்று (அஹம் பிரம்மாஸ்மி) அறிகிறானோ, அவனுடைய பெருமையைக் குறைக்க தேவர்களாலும் முடியாது.(இங்கு இறைவனை மெய்ப்பொருள், ஆத்மா, பிரம்மம், பரப்பிரம்மம், பரம்பொருள், பரமாத்மா என்றும் அழைப்பர்). இவ்வாறு இறையறிவு என்ற பிரம்மக் ஞானம் அல்லது ஆத்ம ஞானம் விளக்கப்படுகிறது. ’யாக்யவல்கியர்’ தனது இரண்டு மனைவிகளில் ஒருவரான ’"மைத்திரேயி"’ வேண்டியவாறு, அவருக்கு ’பிரம்ம வித்தை’ எனும் ‘மெய்ப்பொருளின்’ தத்துவத்தை உபதேசிக்கிறார். சீவன் இந்த உலகை விட்ட பின் சட உடலில் குடிகொண்டிருந்த சீவாத்மா, பரமாத்மாவிடம் இலயித்த பின்னர், தனியே நிற்கும் உலகமும் இல்லை. நானும் இல்லை. அறிபவனும் (பரமாத்மா) அறியப்படுபவனும் ஜீவாத்மா ஒன்றேயான பிறகு, அறிதல் என்பது ஏது? பிரம்ம தத்துவத்தை அறிந்து கொள்வதற்கு, வேதாந்த சாத்திரங்களிலும் குருவிடத்திலும் முழு நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். மேலும் புலனடக்கம், மனவடக்கம், தியாகம், அகிம்சை, பொறுமை, விவேகம், வைராக்கியம், தவம், சாத்திரங்களை கேட்டல், கேட்டதை மனனம் செய்தல் (படித்த சாத்திரங்களை தொடர்ந்து நினைவில் அசைபோடுதல்), பரம்பொருளை அறியும் ஆவல், நிதித்யாசனம், எப்பொழுதும் பரம்பொருளை தியானித்துக் கொண்டு இருத்தல் (முமுச்சுத்துவம்) போன்ற (சாதன சதுஷ்டிய சம்பத்தி) குணங்களைக் கொண்டவர்கள் பிரம்ம நிஷ்டை அடைந்து ஆத்ம ஞானம் பெற்று பிரம்மமாகவே மாறிவிடுவர். மேலும் பிரம்ம தத்துவத்தினை அறிந்து கொண்டதின் பலனாக சீவன் பிரம்மத்தில் ஐக்கியம் அடைவதை இவ்வுபநிடதம் போதிக்கிறது. மூன்றாவது முதல் நான்காவது அத்தியாயம் முடிய, மகரிசியான [[யாக்யவல்க்கியர்], ராஜரிசியான [[சனகன்|சனகரின்]] அரசவையில் கூடி இருந்த வித்வான்களிடம் பிரம்மத்தைப் பற்றி விவாதித்ததை இந்த அத்தியாயங்களில் விளக்கப்படுகிறது. விதேக நாட்டு அரசர் சனகர் வேள்வி செய்து கொண்டு இருந்த போது பல முனிவர்கள் கூடினர். சனகர் ஆயிரம் பசுக்களின் கொம்புகளில் பத்துப் பத்து பொற்காசுகளைக் கட்டிவிட்டு, அக்கூட்ட்த்தில் இருந்த முனிவர்களைப் பார்த்து, “பிரம்ம வித்தையில் யார் சிறந்தவரோ அவரே இந்த ஆயிரம் பசுக்களை ஓட்டிச் செல்லலாம் “ என்று அறிவித்தார். அனைத்து முனிவர்களும் தயங்கிய போது, யாக்யவல்கியர் மட்டும் தனது சீடனை அழைத்து, சனக மன்னரின் அந்த ஆயிரம் யாகப்பசுக்களை ஓட்டிச் செல்ல உத்தரவு இட்டார். அப்போது சனக மன்னரின் ராஜகுருவான ஆசுவல ரிசி குறுக்கிட்டு, நமக்குள் நீர் தான் பிரம்ம நிஷ்டரோ என்று கேட்டார். ஆசுவல ரிசி அவரிடம் பிரம்மத்தைப் பற்றி கேள்வி கேட்டார். அதற்கு யாக்யவல்கியர், அக்னி என் வாக்கில் உள்ளது, வாக்கு மனதில் உள்ளது, மனம் என்னிடத்தில் உள்ளது, நான் அமுதத்தில் உள்ளேன், அமுதம் பிரம்மத்தில். விசயப்பற்றே மரணம். அதிலிருந்து விடுதலையே முக்தி, என்று ஆசுவல ரிசிக்கு பிரம்மத்தைப் பற்றி விளக்கினார் யாக்யவல்கியர். பின் உஷஸ்தர் என்ற சாக்ராயணர், எந்தப் [[பிரம்மம்]], தனக்குத்தானே நேரில் காணக்கூடியதாகவும், வேறு ஒன்றை வேண்டாததாகவும், அனைத்திலும் நிறைந்து, அனைத்திலும் உறையும் ஆத்மாவாகவும் உள்ளதோ, அதை விளக்கிக்கூறும் என்றார். மேலும் எந்த ஆத்மா அனைத்திலும் உறைவது என்று கேட்டார். அதற்கு யாக்ஞவலகியர் “ஒரு காட்சியைக் காண்பவனைக் காணமுடியாது. அறிவை அறிபவனை அறிய முடியாது. இந்த ஆத்மா அனைத்திலும் உறைவது. இதற்கு மாறானதெல்லாம் அழிவுக்கு உட்பட்டவை” என்றார். மேலும் உலகின் இன்பமே, துன்பமே ஆத்மாவை பாதிப்பதில்லை. பசி, தாகம், சோகம், மோகம், மூப்பு, மரணம் இவையெல்லாம் கடந்து எது இருக்கிறதோ, அதுதான் இந்த [[ஆத்மா]]. கஹோலர் என்ற முனிவரின் கேள்விக்கு, [[யாக்யவல்க்கியர்]] கூறிய பதில்: நம்மில் உறையும் இந்த ஆத்மாதான் அனைத்திலும் இலயித்திருக்கிறது. மேலும் ஞானிகளுக்கு கர்மம் இல்லை. கர்ம சாதனமும் இல்லை. இவைகளைத் தாண்டிச் சென்ற ஞானிகள் அடையாளம் இல்லாதவன். ஞானியிடம் காமம், கபடம், குரோதம், விரோதம், பொய் முதலியன கலந்த துர்நடத்தை முதலியவைகள் இருக்காது. அப்படி இருந்தால் அவன் ஞானி அல்ல. தயிரைக் கடைந்து வெண்ணெயை எடுத்த பின், அதனை நீரிலோ, மோரிலோ போட்டு வைத்தாலும்கூட அது எதிலும் ஒட்டாது, கலக்காது. தனியே மிதக்கும். மேலேயே மிதக்கும். அது போலப் [[ஆத்ம ஞானி|ஆத்ம ஞானியின்]] மனம் தன்னைச் சுற்றியுள்ள பொருள்களுடன் கலக்காமல், பிரம்மத்தில் மட்டும் நிலைத்து நிற்கும். நம் எல்லோருக்கும் ஒரு சமயம் உள்ளே உறையும் பரம்பொருளின் ஒளி ஒன்றையே நாடிச் செல்லும் மனோநிலை வந்துதான் தீரும். அந்த நிலை வரும் பொழுது அவன் தீரனாகிறான். அவன் ஸ்திரப் பிரக்ஞன் எனும் சலனமற்ற புத்தி உள்ளவனாகிறான். இகத்தையும் பரத்தையும், எல்லா உயிர்களையும் உள்ளிருந்து ஆட்டி வைக்கும் அந்தர்யாமியை (கண்களுக்கு தெரியாதவரை) பற்றி கூறும் என்று கேட்ட உத்தாலக ஆருணி முனிவருக்கு யாக்யவல்க்கியர் பதில் கூறுகிறார்: ”எவர் பூமியில் இருந்துகொண்டு பூமியினுள் உறைகிறாரோ, எவரைப் பூமி அறிந்து கொள்ளவில்லையோ, எவருக்குப் பூமி உடலாகிறதோ, எவர் பூமியின் உள் நின்று அதனை ஆள்கிறாறோ, அவர்தான் ஆத்மா. அந்தர்யாமியான அவர் அழிவற்றவர்”. ஐந்தாம் மற்றும் ஆறாவது அத்தியாயத்தில் மனிதர்களிடையே மன அடக்கம், புலனடக்கம் மற்றும் கருணை போதிக்கப்படுகிறது. தவத்தால் அகந்தையை [[தியாகம்]] செய்ய வேண்டும். அகந்தையை ஒரு மனிதன் தன்னிடமிருந்து நீக்கா விட்டால் இயற்கை அவனை தவிர்க்க, ”நான்” “எனது” என்ற அவன் போற்றியவைகள் எல்லாம் அவனிடமிருந்து கவர்ந்து கொள்கிறது. பின்பு பிராண உபாசனையும், பஞ்சாக்னி வித்தையும் விளக்கப்படுகிறது. தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்கள் பிரசாபதியிடம் சென்று “த” என்ற ஒரு எழுத்தையே மந்திர உபதேசமாக பெற்று வந்தனர். இந்த மந்திரத்தின் படி தாங்கள் புலனடக்கமற்றவர்களாக இருப்பதாக கருதிய தேவர்கள், பிரசாபதி தங்களை ’புலனடக்கத்துடன்’ இருக்க வேண்டும் உபதேசித்ததாக கருதிக் கொண்டனர். தாங்கள் மற்றவர்களை துன்புறுத்தும் இயல்பினராக கருதிய அசுரர்களோ, பிரசாபதி தங்களை ’தயை’ உடையவர்களாக இருங்கள் என்று பிரசாபதி உபதேசித்ததாக கருதிக்கொண்டனர். தாங்கள் பேராசையுடையவர்கள் என்று உணர்ந்த கொண்ட மனிதர்களோ, பிரசாபதி தங்களை ’தானம்’ செய்யும்படி உபதேசித்ததாக கருதிக் கொண்டனர். ஒருவனுக்கு தன் குறை தெரியாத போது, அதனை குறிப்பால் உணர்த்த இயலும் என்பது இக்கதையால் உணர்த்தப்படுகிறது. தேவர்கள் இயற்கையாகவே புலனடக்கமற்றவர்கள் என்றும், அசுரர்கள் பிறரை துன்புறுத்தும் குணம் கொண்டவர்கள் என்றும், மனிதர்கள் மற்றவர்களுக்கு தானம் வழங்காத கருமிகள் என்றும் அவரவர்கள் உணர்ந்திருந்தார்கள். [[பகுப்பு:உபநிடதங்கள்]] [[பகுப்பு: இந்துத் தத்துவங்கள்]] [[பகுப்பு:சமசுகிருத நூல்கள்]] மலேசிய ஐக்கிய ஆதரவு கட்சி மலேசிய ஐக்கிய ஆதரவு கட்சி (), அல்லது () என்பது கிழக்கு மலேசியா, சபா மாநிலத்தைத் தளமாகக் கொண்ட ஒரு தேசியவாத அரசியல் கட்சியாகும். முன்பு இந்தக் கட்சி () என்று அழைக்கப்பட்டது. கட்சி தொடங்கப்பட்டதில் இருந்து அதன் பெயர் இரு முறைகள் மாற்றம் அடைந்துள்ளன. இந்தக் கட்சி, 1994 ஆம் ஆண்டு, சுஹாய்டின் லங்காப் என்பவரால் சபா மாநிலத்தில் தோற்றுவிக்கப்பட்டது. தேசியவாத அரசியல் கட்சியாக இருந்தாலும் பல்லின மக்கள் உறுப்பியம் பெறுவதற்கு கட்சியின் சட்டவிதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. சபா மாநிலத் தேர்தல்களில் எதிரணிக் கட்சியாக விளங்கியுள்ளது. 2011 மார்ச் 23 இல் இக்கட்சியின் "செத்தியா" எனும் அழைப்புப் பெயர் "பெர்சாமா" என்று மாற்றப்பட்டது. பிரதீப் ரவட் பிரதீப் சிங் ரவட் இந்திய நடிகர். இவர் பெரும்பாலும் கதைநாயகனுக்கு எதிர் பாத்திரத்தில் நடிப்பவர். இவர் தமிழ் தெலுங்கு இந்தி மலையாளம் கன்னடம் ஒரிய மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் மத்தியப்பிரதேசத்தில் உள்ள ஜபல்பூரில் பிறந்தார், அங்கு உள்ள யூகோ வங்கியில் பணி புரிந்தார். மகாபாரத தொடரில் துரோணாச்சாரியாரின் மகன் அசுவத்தாமனாக நடித்ததே இவரின் முதல் திரை அறிமுகமாகும். தமிழ் கஜினி திரைப்படத்தில் ராம் , லட்சுமணன் என இரு பாத்திரத்தில் நடித்தார். இந்தி கஜினி திரைப்படத்தில் கஜினி என்ற பாத்திரத்தில் நடித்தார். இராஜமௌலியின் சை என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரைஉலகுக்கு அறிமுகமானார். 2005ம் ஆண்டிற்கான பிலிம்பேர், சந்தோசம், நந்தி விருதுகளை சை படத்தில் சிறந்த எதிர் நாயகனாக நடித்ததற்காக பெற்றார் பிரமாணம் இந்திய தத்துவத்தில் பிரமாணங்கள் (சமசுக்கிருதம்: प्रमाण, ) என்பது "சான்று", "அறிவுக்கான வழிமுறை" ஆகிய நேரடிப் பொருளுடையது. பண்டைக் காலத்திலிருந்தே இந்து, பௌத்தம், சமணம் ஆகிய சமயங்களில் பெரிய அளவில் விவாதிக்கப்பட்ட ஆய்வுத் துறையாக இது உள்ளது. இது ஒரு அறிவுக் கோட்பாடு என்பதுடன், மனிதர்கள் துல்லியமானதும் உண்மையானதுமான அறிவைப் பெற்றுக்கொள்வதற்கு நம்பத் தகுந்ததும் ஏற்புடையதுமான வழிமுறைகளை இது உள்ளடக்குகின்றது. சரியான அறிவைப் பெற்றுக்கொள்வது எப்படி, எவ்வாறு ஒருவர் அறிகிறார் அல்லது அறியாமல் இருக்கிறார், எந்த அளவுக்கு ஒருவர் அல்லது ஒரு பொருள் தொடர்பான அறிவைப் பெற்றுக்கொள்ள முடியும் போன்றவற்றுக்கான விடை காண்பதே பிரமாணத்தின் குறிக்கோள் ஆகும். ஆறு வகையான இத்தகைய வழி முறைகளைப் பற்றி இந்திய தத்துவ நூல்கள் பேசுகின்றன. எல்லாத் தத்துவப் பிரிவுகளுமே இந்த ஆறு முறைகளையும் ஏற்றுக் கொள்வதில்லை. பல தத்துவப் பிரிவுகள் இவற்றுள் சிலவற்றை மட்டும் ஏற்றுக்கொள்கின்றன. தத்துவப் பிரிவுகளிடையே வேறுபாடுகள் காணப்படுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும். புலனுணர்வு அல்லது பிரத்தியட்சம் என்பது நேரடியாகப் புலன்களினால் பார்த்து, கேட்டு, முகர்ந்து, தொட்டு அறிந்துகொள்வதைக் குறிக்கின்றது. மேரி அண்ட் மக்சு மேரி அண்ட் மக்சு (ஆங்கிலம்: Mary and Max) என்பது 2009 இல் வெளிவந்த அசுத்திரேலிய களி-இயங்குபட முழு நீள ஆங்கிலத் திரைப்படம் ஆகும். இத் திரைப்படத்தை அடம் ஏலியற் எழுதி இயக்கினார். இது இரண்டு தொலைதூர கடித நண்பர்களுக்கு இடையேயான நட்பைப் பற்றியது ஆகும். இதன் மூலம் ஒர் உண்மைக் கதை ஆகும். இதில் நட்பு, தனிமை, கேலி, மனத்தளர்ச்சி, உடற் பருமன், மனக்கலக்கம், மதியிறுக்கம், வாழ்க்கையின் தெளிவற்ற நிலை, வாழ்வோட்டம் போன்ற கருப்பொருள்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. முலை நீக்க அறுவை சிகிச்சை முலை நீக்க அறுவை சிகிச்சை (கிரேக்கம்: மாசுடெக்டமி, "Mastectomy", பொருள்: முலை + நீக்கம்) முலைகளை அறுவை மூலம் நீக்குகின்ற சிகிச்சை ஆகும். இது ஒரு பெண் அல்லது ஆணின் ஒரு அல்லது இரு முலைகளையோ அவற்றின் பகுதியையோ அல்லது முழுமையாகவோ நீக்குவதைக் குறிக்கும். இந்த அறுவைச் சிகிச்சை பொதுவாக மார்பகப் புற்றுநோய் சிகிச்சையின் அங்கமாக உள்ளது; சில நேரங்களில் புற்றுநோய் வருவதற்கு கூடிய தீவாய்ப்பு உள்ளதாக கருதப்படும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வருமுன் சிகிச்சையாக இந்த அறுவை செய்யப்படுகிறது. இதற்கு மாற்றாக சில நோயாளிகள், "கட்டி நீக்க அறுவை சிகிச்சை" எனப்படும் அறுவை மூலம் புற்றுக்கட்டி உள்ள முலைத் திசுக்களையும் அதைச் சுற்றியுள்ள சிறிதளவு நல்ல திசுக்களையும் மட்டுமே நீக்கிக் கொள்வர். இவை இரண்டுமே மார்பகப் புற்றுநோய்க்கான, புற்றுள்ள பகுதியை மட்டுமே தாக்கும், "உள்ளிட சிகிச்சைகளாக" கருதப்படுகின்றன. இவற்றிற்கு எதிராக உடலியக்கவியல் சார்ந்த வேதிச்சிகிச்சை, இயக்கநீர் சீர்சிகிச்சை, அல்லது நோயெதிர்ப்பியல் சிக்கிச்சை முறைகள் உள்ளன. முலை நீக்கம் அல்லது கட்டி நீக்கத்துடன் துணை சிகிச்சையாக கதிரியக்க மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. ஆய்வுகளின்படி மார்பகப் புற்றுநோயை கண்டறிந்து சிகிச்சை எடுக்கும் முன்னரே மிகச்சிறு புற்றுநோய் இடமாறல் நேர்ந்துள்ள நோயாளிகளுக்கு முலை நீக்கமோ கட்டி நீக்கமோ பின்னாளில் இரண்டாம் நிலை புற்றுநோய்ப் பரவலைத் தடுக்க இயலாது எனக் கண்டறியப்பட்டுள்ளது. மழு மழு என்பது சிவபெருமானின் ஆயுதங்களுள் ஒன்றாகும். தருகாவனத்து ரிஷிகளின் செருக்கினை அகற்ற, சிவபெருமான் சென்ற போது ரிஷிகள் தவவலிமையால் ஏவிய புலியை உரித்து ஆடை அணிந்து கொண்டதாகவும், கொல்ல ஏவிய மழுவினை தனது ஆயுதமாக ஏற்றுக்கொண்டதாகவும் சைவ நூல்கள் கூறுகின்றன. மழுவை ஏந்துதல் சிவனுடைய அடையாளமாகவும், சிவவடிவங்களான வீரபத்தரர், பைரவர் போன்றோரின் அடையாளமாகவும் கூறப்பெறுகின்றன. சிவபெருமானின் உருவத் திருமேனிகளில் பின் இருகைகளில் ஒன்றில் இந்த ஆயுதத்தினை வைத்துள்ளார். சிவ வடிவங்களை அடையாளம் காண்பதற்கு இந்த ஆயுதம் பயன்படுகிறது. சிவபெருமானின் ஆடைக்கும், பூசைப் பொருள்களுக்கும் உரியவரான சண்டிகேசுவரர் இந்த ஆயுதத்தினை கொண்டுள்ளார். சூரிய குலம் சூரிய குலம் அல்லது ரகுவம்சம் என்பது கலியுக அரச பரம்பரைகளில் ஒன்றாக பவிஷ்ய புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்து தொன்மவியலின் அடிப்படையில் வைவஷ்த மனு என்பவர் சூரியனின் மகனாவார். இவரே, முதல் மனிதனாகவும் அறியப்பெறுகிறார். இவருடைய மகனான இச்வாகுவின் வம்சம் சூரிய வம்சமாக அறியப்பெறுகிறது. இந்த வம்சத்தில் பிறந்தவராக பகீரதனும், ராமரும் அறியப்பெறுகின்றனர். மகாபாரதப் போரில் பிரகதபாலன் என்பவரை அபிமன்யு கொல்ல இவ்வம்சம் அழிந்ததாக கூறுகின்றனர். சிலர் இவ்வம்சத்தில் மருத் என்பவர் பிழைத்து அவரால் வம்சம் தளைத்ததாகவும் நம்புவதுண்டு. சூரியனின் மறுபெயரான ரகு என்பதிலிருந்து ரகு வம்சம் என்று இந்த வம்சம் அழைக்கப்பட்டிருக்கலாம் எனவும், தசரதனின் தாத்தாவான ரகு என்பவரின் வம்சம் என அடையாளம் செய்ய ரகு வம்சம் என்று அழைக்கப்படுக்கலாமெனவும் நம்பப்படுகிறது. தமிழகத்தில் வரலாற்று கால மெய்கீர்த்திகள் சோழரை சூர்ய வம்சம் என்றாலும் இந்து மத புராணங்களோ சேரர், சோழர், பாண்டியர் போன்ற மூவேந்தர்களையும் சந்திர வம்சம் என்றே கூருகின்றன. ஆனால் கலிங்கத்துப்பரணியில் வரும் சோழர் வம்ச வர்ணனை சோழர்களின் முன்னோர்களாக சூர்ய வம்ச மன்னர்களையே குறிப்பிடுகின்றன. எம்மெலீ டெ ஃபாரஸ்ட் எம்மெலீ சார்லட்-விக்டோரியா டெ ஃபாரஸ்ட் ("Emmelie Charlotte-Victoria de Forest", பிறப்பு 28 பெப்ரவரி 1993; இயற்பெயர் எம்மெலீ கங்ஸ்ட்ரோம், "Emmelie Engström"), ஒரு டேனியப் பாடகி ஆவார். 2013இல் சுவீடனின் மால்மொவில் நடந்த "யூரோவிசன் பாடல் போட்டி"யில் டென்மார்க் சார்பாக பங்கேற்று "கண்ணீர்த்துளிகள் மட்டுமே" எனப்பொருள்படும் "ஒன்லி டியர்டிராப்சு" என்ற பாடலின் மூலம் போட்டியில் வெற்றி பெற்றார். புகழ்பெற்ற யூனிவர்சல் மியூசிக் நிறுவனத்தில் மார்ச்சு 25, 2013இல் இணைந்த ஃபாரஸ்டின் முதற்தொகுப்பு "ஒன்லி டியர்டிராப்ஸ்" மே மாதம் வெளிவரவுள்ளது. பசுமைக்குடில் தாவரங்கள் பயிரிடப்பட்டு, வெளிச் சூழலினால் பாதிக்கப்படாமல், பாதுகாப்பாக வளர்வதற்காக வெப்பநிலை, ஈரப்பதனை ஒரு கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கக்கூடியதாக, கண்ணாடி அல்லது நெகிழியைக் கொண்டு அமைக்கப்படும் கட்டடங்கள் அல்லது அமைப்புக்கள் பசுமைக்குடில்கள் எனப்படுகின்றன. சுவர்கள், கூரைகள் ஒளிபுகவிடும் தன்மை கொண்ட கண்ணாடி அல்லது நெகிழியைக் கொண்டு பசுமைக்குடில்கள் அமைக்கப்படுவதனால், தாவரத்தின் வளர்ச்சிக்குத் தேவையான ஒளியை வழங்கவும், கட்டட அமைப்பின் தன்மையால் தாவரத்திற்குச் சாதகமான ஈரப்பதனை வழங்கக் கூடியதாகவும் இவை அமைக்கப்படுகின்றன. கண்ணாடி அல்லது நெகிழியினால் மூடப்பட்ட நிலையில் வைத்திருக்கப்படுவதனால், உள்ளே இருந்து வெப்பம் வெளியேறாது தவிர்க்கப்பட்டு, குளிரான வெளிச்சூழல் இருக்கையில் தாவரங்கள் உள்ளாக பாதுகாக்கப்படுகின்றன. அத்துடன் முக்கியமாக சூழலினால் இலகுவில் பாதிப்படையக் கூடிய இளம்தாவரங்களான நாற்றுக்களைப் பாதுகாக்கவும், சாதகமற்ற பருவகாலங்களிலும் தாவர உற்பத்தி, விருத்தியைச் செய்யவும் இந்த பசுமைக்குடில்கள் உதவுகின்றன. அத்துடன் பலத்த காற்று போன்ற பாதகமான சூழல்களைத் தவிர்க்கவும் உதவுகின்றன.. பசுமைக்குடிலை மூடியுள்ள ஒளிபுகவிடும் தன்மை கொண்ட பொருட்களினூடாக கண்ணுக்குப் புலப்படும் சூரியக் கதிர்வீச்சு உள்ளே வரும்போது, அங்கிருக்கும் தாவரங்கள், மண் மற்றும் ஏனைய அனைத்துப் பொருட்களாலும் உறிஞ்சப்பட்டு, வெப்ப ஆற்றலாக மாறும். அவ்வாறு வெப்பமான பொருட்களால் அவற்றைச் சுற்றியுள்ள காற்றும் வெப்பமடையும். அந்த வெப்பம் வெளியேறாது அதனை மூடியுள்ள சுவர், கூரை பாதுகாக்கும். அத்துடன், வெப்பமடைந்த தாவரம், மற்றும் ஏனைய பொருட்களிலிருந்து ஒரு பகுதி வெப்ப ஆற்றலானது, அதிர்வெண் கூடிய அகச்சிவப்புக் கதிர் அலைக்கற்றை கொண்ட வெப்பக் கதிர்வீச்சாக வெளியேறும். மூடப்பட்ட அமைப்பினுள் இருப்பதனால், அவ்வாறு வெளியேறும் ஆற்றலின் ஒரு பகுதியும் சுற்றியுள்ள காற்றில் பிடிக்கப்படும். சுற்றியுள்ள காற்றில் தாவரங்களின் ஒளிச்சேர்க்கையால் பெறப்படும் காபனீரொக்சைட்டு அதிகளவில் இருக்கும். இந்த வளிமம் அகச்சிவப்புக் கதிர் அலைக்கற்றையை உறிஞ்சி, பல திசைகளிலும் வெளிவிடும் ஆற்றல் கொண்டதாக இருப்பதனால் இது பைங்குடில் வளிமங்களில் ஒன்றாக இருக்கின்றது. இது போன்ற ஒரு செயற்பாடு, பூமியைச் சுற்றியிருக்கும் வளிமண்டலத்திலும் நிகழ்ந்து வெப்பம் அதிகரித்தலையே பைங்குடில் விளைவு என்கின்றோம். இவை வேறுபட்ட அளவுகளில் அமைக்கப்படுகின்றன. சிறிய குடிசைகளாகவோ, அல்லது வணிக நோக்கில் மிகப்பெரிய அளவிலான கட்டடங்களாகவோ, அல்லது வீட்டினுள்ளேயே தனிப்பட்டவர்கள் தமது தேவைக்காக அமைக்கும் மிகச் சிறிய பெட்டிகள் வடிவிலானவையாகவோ இருக்கலாம். மிகச் சிறியவற்றை என அழைக்கப்படும். திருவண்பரிசாரம் திருவண்பரிசாரம் அல்லது திருப்பதிசாரம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் நாகர்கோவிலிலிருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் சுமார் 2 மைல் தூரத்தில் உள்ளது. இத்தலத்தின் இறைவன் ஏழு முனிவர்களால் சூழப்பட்டு காட்சி தருகிறார். இலக்குமிதேவி ஆனந்தமடைந்து திருமாலின் திருமார்பில் நித்திய வாசம் செய்ததால் இத்தலத்தில் திருமாள் திருவாழ்மார்பன் என்றழைக்கப்படுகிறார் என்பது ஐதீகம். திருவாகிய இலக்குமி பதியாகிய திருமாலை சார்ந்து இந்த ஊரில் தங்கியதால் இவ்வூர் 'திருப்பதிசாரம்' என அழைக்கப்படுகிறது. இதனால் இக்கோவிலில் இறைவிக்குத் தனிக் கோயில் இல்லை. இறைவன்:திருவாழ்மார்பன். இறைவி கமலவல்லி நாச்சியார். தீர்த்தம்:லட்சுமி தீர்த்தம். விமானம்:இந்திர கல்யாண விமானம் என்ற அமைப்பினைச் சேர்ந்தது. இங்கு கருவறையில் திருவாழ்மார்பன் ஏழு அடி உயரத்தில் நான்கு கரங்களுடன் சங்குசக்கர தாரியாக வலது காலை மடக்கியும் இடதுகாலை தொங்க விட்டும் அமர்ந்த கோலத்தில் கிழக்கு நோக்கி கழுத்தில் லட்சுமி உருவம் பொறிக்கப்பட்ட பதக்கத்தடன் காட்சியளிக்கிறார். இத்தலத்தின் மூலவர் கடுகு, சர்க்கரை மற்றும் மலைதேசத்து மூலிகைகளால் செய்யப்பட்டுள்ளதால் (சூடிப்புனையப் பட்டுள்ளதால்) இவருக்கு திருமஞ்சனம் (அபிசேகம்) கிடையாது. இத்தலம் நம்மாழ்வாரின் தாய் திருவுடையநங்கை பிறந்த தலமாகும். குலசேகர ஆழ்வார் கி. பி. 8 ஆம் நூற்றாண்டில் இத்தலத்தைப் புதுப்பித்து இறைவனுக்கு வாகனம். கோயில் மதில் போன்ற திருப்பணிகள் பலவும் செய்து, கொடிக்கம்பத்தையும் நிர்மாணித்து விழா செய்துள்ளார். நம்மாழ்வார் குழந்தையாகத் தவழ்ந்துள்ளது போன்ற மிக அழகிய சிலை ஒன்று இத்தலத்தில் உள்ளது. நம்மாழ்வாரால் மட்டும் ஒரே ஒரு பாசுரத்தில் பாடல் பெற்ற தலமாகும். இக்கோயிலில் கருவறை அர்த்தமண்டபம், மகாமண்டபம், ஒற்றைக் கல்மண்டபம் ஆகிய மண்டபங்களைக் கொண்டு உள்ளது. இங்கு விமானம் இந்திர கல்யாண விமான அமைப்பைச் சார்ந்தது. கோயில் கருவறையின் வலது பக்கம் இராமர், சீதை, அனுமன், இலட்சுமணன் ஆகியோருக்கு தனிச் சன்னிதிகள் அமைக்கப் பட்டுள்ளன. கருவறைச் சுற்றில் கன்னி மூல விநாயகர் உள்ளார். கோயிலுக்கு வெளியே 40 அடி உயரமுள்ள கொடிமரம் உள்ளது. கொடிமரத்தின் பக்கத்தில் பெரிய பலிபீடமும், கோயிலுக்கு வெளியே சோமதீர்த்தம் உள்ளது. கோயிலின் வெளியே வடக்குப்பகுதியில் உடையநங்கையார் அவதரித்த பகுதியுள்ளது. நம்மாழ்வாரின் தாயாரின் இந்த வீடானது இப்போது ஒரு பஜனை மடமாக உள்ளது். திருமூழிக்களம் திருமூழிக்களம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரள மாநிலத்தில் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அரித மகரிசி என்பவர் திருமாலைக் குறித்து இவ்விடத்தில் தவமிருந்து வேண்ட, மக்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை போதிக்கும் ‘ஸ்ரீ ஸுக்தியை’ என்ற திருமொழியை இறைவன் அம்முனிவர்க்கு வழங்கினான். எனவே இவ்விடத்திற்கு திருமொழிக்களம் என்றும் எம்பெருமானுக்கு திருமொழிக்களத்தான் என்பதும் பெயராயிற்று. திருமொழிக்களம் என்பதே காலப்போக்கில் திருமூழிக்களமாயிற்று. இப்பெயரே தொன்னெடுங்காலமாய் விளங்கி வந்தபடியால் ஆழ்வார் பாசுரங்களிலும் திருமூழிக்களம் என்றே பயின்று வந்துள்ளது. இங்குள்ள இறைவன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் திருமூழிக்களத்தான், அப்பன் ஸ்ரீஸுக்திநாதன் என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறான். இறைவி: மதுரவேணி நாச்சியார்.தீர்த்தம்: கபில தீர்த்தம்,பூர்ண நதி ஆகியன. விமானம்:சௌந்தர்ய விமானம் என்ற அமைப்பினைச் சேர்ந்தது. நம்மாழ்வாராலும், திருமங்கை ஆழ்வாராலும் 14 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகும். இராமாயணத்தில் இலக்குவனுடன் பரதனும் சேர்ந்து வழிபட்ட தலமாகும். இத்தலத்திற்கு இலக்குவன் கோபுரம், மண்டபம் போன்றவற்றை எழுப்பி பல திருப்பணிகள் செய்தான். இலட்சுமணனின் திருப்பணிக்குப் பிறகு இலட்சுமணனையே மூலவராக வைத்து வழிபாடியற்றத் தொடங்கினர் என்பது இங்கு சொல் வழக்கு. திருப்புலியூர் திருப்புலியூர் அல்லது புலியூர் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வாரால் பாடல்பெற்ற இத்தலம் கேரள மாநிலத்தில், ஆலப்புழா மாவட்டத்தில் (குட்டநாடு) அமைந்துள்ளது. இறைவன் மாயபிரான் என்ற பெயருடன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இறைவி: பொற்கொடி நாச்சியார். தீர்த்தம்: பிரஞ்ஞா சரசு எனப்படும் பூண்சுனைத் தீர்த்தம். விமானம் புருசோத்தம விமானம் எனும் அமைப்பைச் சேர்ந்தது. இத்தலம் பஞ்ச பாண்டவர்களுள் பீமனால் புதுப்பிக்கப்பட்டது. இவ்விடத்திலிருந்து பீமன் திருமாலைக் குறித்து தவம் புரிந்த்தால் இத்தலம் பீமச் சேத்திரம் எனவும் அழைக்கப்படுகிறது. இதன் கருவறை வட்டவடிவமான அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. ஏ. கன்யாகுமாரி கன்யாகுமாரி தென்னிந்தியாவைச் சேர்ந்த வயலின் இசைக் கலைஞர் ஆவார். கர்நாடக இசையில் உள்ள 72 மேளகர்த்தா ராகங்களின் ஜன்ய ராகங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. அன்னமைய்யா என்பவரின் இதுவரை இசை வடிவம் பெறாத ஏழு பாடல்களுக்கு, இசை அமைத்தபோது புதிய ஏழு ஜன்ய ராகங்களைக் கண்டுபிடித்துள்ளார். திருமலையில் உள்ள ஏழுமலைகளும் சப்தகிரி என்று அழைக்கப்படுவதால் அதன் மீது பற்று கொண்ட கன்யாகுமாரி தான் கண்டுபிடித்த புதிய ஏழு ஜன்ய ராகங்களுக்கு அம்மலைகளின் பெயரையே வைத்துவிட்டதாக அறியப்படுகிறது. இவரின் சொந்த ஊர், ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள விஜயநகரம் எனும் நகரமாகும். பெற்றோர்: அவசரள இராமரத்னம், ஜெயலக்ஷ்மி. புகழ்பெற்ற இசைக் கலைஞர்களாகிய இவதுரி விஜேச்வர ராவ், எம். சந்திரசேகரன் மற்றும் எம். எல். வசந்தகுமாரி ஆகியோரிடம் கன்யாகுமாரி இசையினைக் கற்றார். கன்யாகுமாரி 40 ஆண்டுகளுக்கும் மேலாக இசைப் பணியாற்றி வருகிறார். தான் தனியாக வாசிக்கும்போதும், மற்ற வயலின் இசைக் கலைஞர்களுடன் இணைந்து வாசிக்கும்போதும் புதுமைகள் பலவற்றை புகுத்தி இசை நிகழ்ச்சிகளை வழங்குகிறார் கன்யாகுமாரி. கன்யாகுமாரி இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் எண்ணற்ற மாணவர்களை உருவாக்கியுள்ளார். பயிற்றுவிப்பு காணொளிக் குறுந்தகடுகளையும் இவர் வெளியிட்டுள்ளார். திருச்செங்குன்றூர் திருச்செங்குன்றுர் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் "திருச்சிற்றாற்று மகாவிஷ்ணு கோயில்" எனவும் அழைக்கப்படுகிறது. கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் அமைந்துள்ள இத்தலம் மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்களுள் தருமரால் கட்டப்பட்ட தலம் எனக் கருதப்படுகிறது. மகாபாரதப் போரில் துரோணாச்சாரியாரைக் கொல்வதற்காகத் தருமன் பொய் சொன்னதை எண்ணி, மனம் வருந்தி போர்முடிந்த பிறகு இத்தலத்தில் வந்து மன அமைதிக்காக தவமிருந்ததாகவும், அப்போது சிதலமடைந்திருந்த இத்தலத்தை தருமன் புதுப்பித்ததால் இத்தலத்தையும் இங்குள்ள எம்பெருமானையும் தர்மனே நிர்மாணம் செய்தாரெனவும் கருதப்படுகிறது. இக்கோயிலின் இறைவன் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் இமையவரப்பன் என்ற பெயருடன் காட்சி தருகிறார். தருமன் இங்கு வருவதற்குப் பல்லாண்டு முன்பே இத்தலம் சிறப்புற்றிருந்தது எனலாம். இமையவர்கள் (தேவர்கள்) இங்கே குழுமியிருந்து திருமாலைக் குறித்து தவம் புரிந்தனர் என்றும் அவர்களுக்கு திருமால் இவ்விடத்து காட்சி தந்ததால் “இமையவரப்பன்” என்ற பெயர் இறைவனுக்கு உண்டாயிற்றென்றும் செவிவழிச் செய்திகளாகவே அறியமுடிகிறது. இறைவி:செங்கமலவல்லி. தீர்த்தம்: சிற்றாறு. விமானம்: ஜெகஜோதி விமானம் என்ற அமைப்பினைச் சேர்ந்தது. நம்மாழ்வாரால் மட்டும் 10 பாசுரங்களில் பாடல்பெற்றுள்ளது. திருநாவாய் திருநாவாய் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.திருமங்கையாழ்வார் மற்றும் நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் திருமாலைக் குறித்து 9 யோகிகள் தவம் செய்ததாகவும் அதனால் இந்த தலம் நவ யோகித்தலம் என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் நாவாய் தலம் என்றாகி தற்போது திருநாவாய் என்றழைக்கப்படுகிறது. இறைவன் நவ முகுந்தன் என்ற பெயரில் கிழக்கு நோக்கிய திருக்கோலத்தில் முழங்காலுக்கு கீழான பகுதிகள் பூமிக்கடியில் சென்ற நிலையில் வேறெங்கும் காண முடியாத கோலத்தில் காட்சி தருகிறார். இறைவி: மலர்மங்கை நாச்சியார். விமானம் வேதவிமானம் என்ற வகையைச் சேர்ந்தது. இக்கோவிலில் மாமாங்கத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. 18 ஆம் நூற்றாண்டில் திப்பு சுல்தானாலும் 1921 இல் மாப்பிள்ளைக் கலகம் நடந்த போதும் இக்கோவில் தாக்குதலுக்கு உள்ளானது. இத்தலம் கஜேந்திரனால் வழிபடப்பட்ட தலமாகும். திருமங்கையாழ்வாரால் 2 பாசுரங்களாலும், நம்மாழ்வாரால் 11 பாசுரங்களாலும் பாடல் பெற்ற தலமாகும். துவாபர யுகத்தில் கிருஷ்ணர் பஞ்சபாண்டவருடன் சேர்ந்து இத்திருத்தலத்தில் பித்ரு பூஜை செய்துள்ளார். ஆடி அமாவாசையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு அருகிலுள்ள பாரத புழை நதியில் நீராடி பித்ரு பூஜைகளைச் செய்கின்றனர். பழைமையான பல ஓவியங்கள் இத்திருத்தலத்தில் உள்ளன சென்னை - கள்ளிக்கோட்டை ரயில் மார்க்கத்தில் திருநாவாய் ரயில் நிலையம் அமைந்துள்ளது. கேரளாவின் பாலக்காட்டிலிருந்தும் திருநாவாய் செல்ல பேருந்துகள் உள்ளன. அதிகாயன் அதிகாயன் என்பவர் இராவணன், தான்யமாலினி தம்பதிகளின் மகனாவார். இராமன் - இராவணன் போரில் முன்னணித் தளபதிகளான திரிசிரன், மகோதரன், நராந்தகன், தேவாந்தகன் போன்றோர் மாண்ட பிறகு அதிகாயனே இராவணப் படைக்கு தலைமையேற்றான். பிரம்மாவை நோக்கி தவமிருந்து கவசமும், தங்க ரதமும் பெற்றான். இவன் இலட்சுமணன் எய்த பிரம்மாஸ்திரத்தினால் இறந்தான். சமதா கட்சி சமதா கட்சி என்பது இந்திய அரசியல் கட்சிகளுள் ஒன்றாகும். 1994 ஆம் ஆண்டில் ஜனதா தளம் கட்சியில் இருந்து பிரிந்த ஜார்ஜ் பெர்னான்டஸ் மற்றும் நிதீஷ் குமார் ஆகியோர் இக்கட்சியைத் தொடங்கினர். 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய மக்களவைக்கான பொதுத்தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட இக்கட்சிக்கு பீகார் மாநிலத்தில் இருந்து ஆறு மக்களவை உறுப்பினர்களும், உத்தரப்பிரதேசம் மாநிலத்திருந்து ஒரு மக்களவை உறுப்பினரும், ஒடிசா மாநிலத்திலிருந்து ஒரு மக்களவை உறுப்பினரும் என எட்டு மக்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பீகார் மாநிலத்தில் ஓரளவு செல்வாக்கு பெற்ற இக்கட்சி 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய மக்களவைக்கான பொதுத் தேர்தலில் பீகார் மாநிலத்திலிருந்து பத்து மக்களவை உறுப்பினர்களும், உத்தரப்பிரதேசம் மாநிலத்திலிருந்து இரண்டு மக்களவை உறுப்பினர்களும் என பன்னிரண்டு மக்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப் பெற்றனர். 2003 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் சமதா கட்சி ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் இணைக்கப்பட்டதாக அதன் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அறிவித்தார். ஆனால், பிரமானந்த மண்டல் தலைமையிலான இக்கட்சியின் ஒரு குழுவினர் இந்த இணைப்பை ஏற்க மறுத்தனர். அவர்கள் சமதா கட்சி எனும் பெயரில் செயல்படத் தொடங்கினர். 2007 ஆம் ஆண்டில் சமதா கட்சியின் நிறுவனர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் ஜெயா ஜெட்லி ஆகியோர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து வெளியேறி மீண்டும் சமதா கட்சிக்கு வந்தனர். சமதா கட்சி எனும் பெயரில் பல்வேறு குழுக்கள் தங்களுக்கென்று தனித் தலைமையைக் கொண்டு இயங்கி வருகின்றன. பிரமானந்த மண்டல் தலைமையிலான சமதா கட்சியினை இந்தியத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இக்கட்சியின் சின்னமாக எரியும் தீப்பந்தம் உள்ளது. பிரம்மாஸ்திரம் பிரம்மாஸ்திரம் என்பது இந்து தொன்மவியலில் வலிமைமிக்க ஆயுதமாக சொல்லப்படுவதாகும். இந்த ஆயுதம் படைப்பின் கடவுளான பிரம்மனை நோக்கி தவமிருந்து பெறுவதாகவும் நம்பப்படுகிறது. இந்த வகை ஆயுதமானது எய்யும் நபர்கள் மந்திரங்களை உச்சரித்து சாதாரண அம்பினை பிரம்மாஸ்திரமாக மாற்றி எய்வதாகவும், தர்பை புல்லைக் கூட பிரம்மாஸ்திர மந்திரத்தினால் பிரம்மாஸ்திரமாக மாற்றாலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. இராவணனின் மகன் அதிகாயனை இலக்குமணன் பிரம்மாஸ்திரம் எய்தி கொன்றதாக இராமாயணம் கூறுகிறது. அத்துடன் இராவணனின் மகனான இந்திரஜித் பிரம்மாஸ்திரம் எய்து அனுமனை கட்டுட்டு இராவண சபைக்கு கொண்டுவந்ததாகவும் இராமாயணம் கூறுகிறது. மகாபாரத இதிகாசத்தில், குருச்சேத்திரப் போரின் இறுதியில் அசுவத்தாமன், அபிமன்யு மனைவியின் கருப்பையில் குடியிருந்த, பாண்டவர்களின் குலக்கொழந்தான பரிட்சித்துவை கொல்ல வேண்டி பிரம்மாஸ்திரத்தை செலுத்தினான். பிரம்மாஸ்திரத்தை செலுத்த தெரிந்தவர்கள், அதனை மீண்டும் திருப்பி அழைக்கும் மந்திரம் தெரிந்திருக்க வேண்டும். அருச்சுனனுக்கு தெரிந்த இம்மந்திரம், அசுவத்தாமனுக்கு தெரியாத காரணத்தினால், தனது நெற்றியில் இருந்த மணியை இழந்தான். பிநாகம் பிநாகம் என்பது சிவபெருமானுடைய வில்லின் பெயராகும். இதனால் சிவபெருமான் "பிநாகபாணி" என்று வழங்கப்பெறுகிறார். இவ்வில்லானது திரிபுர சம்ஹாரத்தில் மேருமலையை வில்லாக வளைத்து மாற்றியதாக நம்பப்படுகிறது. சாரங்கம் சாரங்கம் என்பது திருமால் வில்லின் பெயராகும். இதனை ஏந்தியமையால் திருமால் சாரங்கன் என்றும், சாரங்கபாணியென்றும் அறியப்பெறுகிறார். ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வார் சாரங்கத்தின் அம்சமாக அறியப்பெறுகிறார். சார்ங்கம் என்பது மஹாவிஷ்ணுவின் கையில் உள்ள வில். சங்க-சக்ர-கதா-பத்ம ஆயுதங்களைச் சதுர்புஜங்களில் தரித்தவர் இந்த நாலோடு ஐந்தாக வில்லும் சேர்த்தே பஞ்சாயுத ஸ்தோத்ரம் மற்றும் தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் என ஆண்டாள் திருப்பாவையிலும் குறிப்பிடப்படுகின்றது. கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில் மடப்புரம் (சிவகங்கை) மடப்புரம் (Madappuram) இது தமிழ்நாடு சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். பத்திர காளியம்மன் திருக்கோயில் கபால மோட்சம் கபாலம் எனில் தலை. மோட்சம் எனில் வாழ்கை எனும் தொடர் சக்கரத்திலிருந்து விடுதலை பெற்று, மீண்டும் பிறப்பில்லா பெருவாழ்வு எனும் வீடுபேறு அடைதல். இந்துத் தொன்மவியலில் இவ்வுலக வாழ்விலிருந்து வெளியேற முடிவு செய்த துறவிகள், யோகிகள், ஞானிகள் மற்றும் தவசிகள் தங்களின் சட உடலை இவ்வுலகிலே விட்டுவிட்டு, தங்களின் உயிர் சக்தி என்ற பிராணனை (ஆத்மா) உச்சந்தலையில் உள்ள "பிரம்மரந்திரம்"என்ற துவாரம் வழியாக வெளியேற்றுவதே கபால மோட்சம் எனப்படும். இந்த நிகழ்வின் போது கபாலம் வெடித்து பிரம்மரந்திரம் என்ற துவாரம் திறந்து கொண்டு பிராணசக்தி வெளியேறி, ஞானியின் பிராணன் பிரம்மத்திடம் ஐக்கியமாகி விடுகிறது. இதனை விதேக முக்தி என்பர். பின் ஞானிக்கு பிறப்பில்லை, என்றும் பேரானந்தத்துடன் பிரம்ம நிலையை (பிரம்ம சாயுட்சம்) அடைந்து விடுகிறார். மூலாதார சக்கரத்திலிருந்து, சுசும்ன நாடி மேலே எழுந்து கபாலத்தினை துளைத்துக் கொண்டு பிராணசக்தி என்ற உயிர்ச்சக்தி பிரம்மரந்திரம் வழியாக மேலே வெளியேறிச் செல்வதே கபால மோட்சம் என சுவாமி சின்மயானந்தா கூறுவார். கபால மோட்சம் குறித்து கடோபநிடதம் விரிவாக கூறுகிறது. ஒரு சீவன் பிறக்கும் போது பிராணன் உச்சந்தலையில் உள்ள பிரம்மரந்திரம் எனும் துளை வழியாக சட உடலில் குடிகொண்டதால், பிராணன் இந்த சட உடலை விட்டு நீங்கும் போது, அது முன்னர் வந்த வழியான உச்சந்தலையில் உள்ள பிரம்மந்திரம் வழியாக மீண்டும் வெளியேற வேண்டும். உடலின் வேறு துவாரங்கள் வழியாக பிராண சக்தி வெளியேறினால், அந்த சீவன் மீண்டும் மறு பிறப்பு எடுத்து வாழ்க்கை எனும் துன்பக் கடலில் உழன்று கொண்டே இருக்க வேண்டியது என கடோபநிடதம் கூறுகிறது. பல ஞானிகள் தங்களின் உயிர் பிரியும் காலத்தை நாள் மற்றும் நேரத்துடன் முன் கூட்டியே சொல்லும் திறன் உடையவர்கள். உடலிருந்து உயிர் பிரியும் நேரத்தில் தியானநிலையில் அமர்ந்து கொண்டு, பிராணசக்தியை கபாலத்தில் உள்ள “பிரம்மரந்திரம்” எனும் உள்ள துவாரம் வழியாக மேலே கொண்டு வந்து வெளியே விட்டு விடுவார்கள். மரபுப்படி, நோய்வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில் உள்ள துறவிகளின் தலையில் தேங்காயைகள் உடைத்து, பிராண சக்தியை ”பிரம்மந்திரம்” வழியாக வெளியேற்றுவார்கள். சட உடலை விட்ட ஞானியின் உடலை தியானநிலையில் அமர வைத்து சமாதி எழுப்பி, சமாதியின் மீது சிவலிங்கம் பிரதிட்டை செயவர். வைணவ துறவி என்றால் துளசி செடியை நட்டு வளர்ப்பர். மேலும் சமாதியைச் சுற்றி பூந்தோட்டம் அமைப்பர். துறவி சமாதி அடைந்த நாளை நினைவு கூறும் வகையில் குருபூசை விழா நடத்துவர். மேலும் துறவிகளின் சட உடலை எரிப்பதில்லை, படுக்கை நிலையில் கிடத்தி புதைப்பதும் இல்லை, தியான நிலையில் அமர்த்தி சமாதி கட்டுவர். மூலிகைப் பூச்சி விரட்டிகள் உழவுத் தொழிலில் பயிர்களை அழிக்கும் ஒரு சில பூச்சிகளைக் கட்டுப்படுத்த இயற்கை முறையில் சில இயற்கை பூச்சி விரட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை இயற்கைப் பூச்சி விரட்டிகள் அல்லது மூலிகைப் பூச்சி விரட்டிகள் எனப்படுகிறது. இயற்கை/மூலிகை பூச்சி விரட்டி மருந்துகள் வகைகள் கீழே தரப்பட்டுள்ளது: மூலிகைப் பூச்சிவிரட்டி நெய்வேலி காட்டாமணக்கு, நொச்சி. ஆடாதொடா, வேம்பு போன்ற இலை தழைகளை 5 கிலோ அளவுக்கு எடுத்து, ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு 10 லிட்டா; மாட்டுச் சிறுநீர் கலந்து ஏழு நாள்களுக்கு ஊற வைத்தால் பூச்சிவிரட்டி தயார்.   அதன் பிறகு வடி கட்டி பயிர்களுக்குத் தெளிக்கலாம்.   மாட்டுச் சிறுநீர் கிடைக்காவிட்டால் தண்ணீர் சேர்த்தும் தயாரிக்கலாம்.  10 லிட்டா; நீருடன், ஒரு லிட்டர் புச்சி விரட்டியைக் கலந்து பயிர்களுக்குத் தெளிக்கலாம்.   ஏழு நாள்களுக்கு மேல் ஊற வைத்தால் பயிர் வளர்ச்சி ஊக்கியாக இது மாறிவிடும்.  அதை வீணடிக்காமல் பயிருக்குத் தெளிக்கலாம். சுயோய் தீன் கேளிக்கைப் பூங்கா சுயோய் தீன் கேளிக்கைப் பூங்கா ("Suối Tiên Amusement Park") என்பது ஹோ சி மின் நகரில் அமைந்துள்ள கேளிக்கைப் பூங்கா ஆகும். இது உலகின் முதல் பௌத்த மத கேளிக்கைப் பூங்கா ஆகும். இது வியட்நாமின் வரலாறு மற்றும் நாட்டுப்புறகலைகளை மனதில் கொண்டு கட்டப்பட்டது. இது இயற்கை மற்றும் புத்தமதத் தத்துவத்தை வலியுறுத்துகிறது. குழந்தைகளுக்கான பல சவாரிகள் இங்கு உள்ளன. சீடர் பாயிண்ட் கேளிக்கைப் பூங்கா சீடர் பாயிண்ட், ஐக்கிய அமெரிக்காவின் ஒகையோ மாநிலத்திலுள்ள கேளிக்கைப் பூங்கா ஆகும். 1870 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பூங்கா அமெரிக்காவின் இரண்டாவது பழமையான கேளிக்கைப் பூங்கா. "அமெரிக்காவின் ரோலர் கோஸ்ட்" என அறியப்படும் சீடர் பாயிண்டில் நிறைய பரபரப்பூட்டுகின்ற சவாரிகள் உள்ளன. உலக சாதனையாக 72 சவாரிகள் உள்ளன. இங்குள்ள 16 ரோலர் கோஸ்டர்கள், இப்பூங்காவை ரோலர் கோஸ்டர்கள் நிலையில் உலகில் மூன்றாவது தரத்தில் முன்னிறுத்துகின்றன. இதன் 16 வது ரோலர் கோஸ்டர் "கேட் கீப்பர்", மே மாதம் 2013 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மே மாத நடுவிலிருந்து லேபர் தினம் (செப்படம்பர்) வரை சீடர் பாயிண்ட் தினமும் திறந்திருக்கும். அதன்பிறகு அக்டோபர் மாத இறுதிவரை அதாவது ஹாலோவின் வார இறுதிவரை வாரத்தின் இறுதிநாட்களில் மட்டுமே திறந்திருக்கும். புரோசுட்டேட் சுரப்பி நீக்கம் புரோசுட்டேட் சுரப்பி நீக்கம், அல்லது முன்னிற்குஞ்சுரப்பி நீக்கம் ("prostatectomy") என்பது அறுவைச் சிகிச்சை மூலம் புரோசுடேட் சுரப்பியை முழுமையாகவோ பகுதியாகவோ நீக்குதலாகும். பெரும்பாலும் தீதிலி முன்னிற்குஞ்சுரப்பி மிகைப்பெருக்கம் (BPH), அல்லது சிலநேரங்களில் வழமையில்லா கட்டிகள், அல்லது பிற காரணங்களால் ஏற்படும் இச்சுரப்பியின் பெருக்கம் சிறுநீர்வழியில் வழமையான சிறுநீர்ப் போக்கிற்கு தடை ஏற்படுத்துவதால் நோயாளிக்கு சிறுநீர் முழுமையாக வெளியேறாமல் சிரமம் உண்டாகிறது. இதற்கான வேதி மருந்துகள் துவக்கநிலையிலேயே தரப்பட்டால் இந்த அறுவை சிகிச்சை தேவையிராது. ஆனால் சிறுநீர்ப்போக்கு பெரிதும் தடைபடும்போது இதனால் கடுமையான சிறுநீரகக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இத்தகைய நேரங்களில் மருத்துவரீதியாக இச்சுரப்பி நீக்கப்படுகிறது. இச்சுரப்பியில் புற்றுநோய் வருவதற்கான தீவாய்ப்புள்ள நோயாளிகளுக்கும் புரோசுட்டேட் புற்றுநோய் உள்ளவர்களுக்கும் இச்சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளிகள் இரண்டு மூன்று நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டியிருக்கும். "கத்தீட்டர்" எனப்படும் குழாய் நோயாளியின் தேங்குப்பையிலிருந்து இரண்டு மூன்று வாரங்களுக்கு சிறுநீர் வெளியேற்ற இணைக்கப்படும். இதனால் சிறுநீர் கழிப்பதை கட்டுப்படுத்த நோயாளி சிறிதுகாலம் தடுமாறலாம். மான்செஸ்டர் தொழிலாளர் போராட்டம் 18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த முதலாளித்துவ வர்க்கம், நவீன பாட்டாளிகளுக்கு புதிய அடிமை விலங்கை மாட்டியதோடு, ஈவிரக்கமற்ற சுரண்டலுக்கும் உள்ளாக்கியது. 24 மணி நேரமும் சுழலும் பெரும் ஆலைச் சக்கரங்களோடு தொழிலாளிகளை போட்டியிட வைத்தது. உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளிகள் சக்கையாய் பிழியப்பட்டனர்; 1845 ம் ஆண்டு, பிரெடெரிக் ஏங்கெல்ஸ் ‘பிரிட்டனின் தொழிலாளர் வர்க்கம்' பற்றி மான்செஸ்டரில் நீண்ட காலமாக பயணம் செய்து ஆய்வின் அடிப்படையில் புத்தகம் ஒன்றை எழுதினார். உழைக்கும் மக்கள் கடும் துயரங்களை அனுபவிக்கிறார்கள். அவர்கள் வாழ்நிலை மோசமாக இருக்கிறது. முதலாளிகளால் அவர்கள் கடுமையாக ஒடுக்கப்படுகிறார்கள். இதில் சந்தேகம் எதுவும் இல்லை. அதே சமயம், உழைப்பாளி வர்க்கம் துன்புறும் ஒரு வர்க்கம் மட்டுமல்ல. அந்தத் துன்பத்தை எதிர்த்து போராடக்கூடிய போர்க்குணம் கொண்ட ஒரு வர்க்கமும் கூட. தொழிலாளர்கள் என்பதை ஏங்கெல்ஸ் ஆய்வின் முடிவில் தெரிந்து கொண்டார். முதலாளித்துவ சீர்திருத்தவாதிகள் அவ்வபோது தொழிலாளர் நலன் சார்ந்த சில சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தால் போதும், எல்லாம் சரியாகிவிடும் என்பதே அவர்களுடைய வாதமாக இருந்தது. மான்செஸ்டரில் அயர்லாந்து மக்கள் பரவலாகக் குடியேறியிருந்தனர். பிழைப்புக்காக தங்கள் நாட்டைவிட்டு இவர்கள் வெளியேறி பிரிட்டனை வந்தடைந்திருந்தனர். பெரும்பாலானோர் தொழிலாளர்கள். உழைப்புக்கு அஞ்சாதவர்கள். பெரும் தொழில் நகரமாக அறியப்பட்டிருந்த மான்செஸ்டரை நோக்கி எறும்பு வரிசை போல் சாரைச் சாரையாக வந்து குவிந்துகொண்டிருந்தனர். இவர்கள் பிரிட்டனைக் கடவுளாகப் பார்த்தனர். கடுமையான பணி, மோசமான குடியிருப்பு, இரண்டாம்தர வாழ்விடம் எதுவும் இவர்களை அசைக்கவில்லை. முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய் புரோசுட்டேட் புற்றுநோய் அல்லது முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய் ("Prostate cancer") ஆண் இனப்பெருக்கத் தொகுதியின் ஒரு சுரப்பியான முன்னிற்கும் சுரப்பியில் உருவாகும் புற்றுநோய் ஆகும். பெரும்பாலான புரோசுட்டேட் புற்றுநோய்கள் மிக மெதுவாக வளரக்கூடியவை; இருப்பினும், மிக விரைவாகப் பெருகும் புரோசுட்டேட் புற்றுநோயும் கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் புற்று உயிரணுக்கள் முன்னிற்குஞ்சுரப்பியிலிருந்து உடலின் பிற பகுதிகளுக்கும், குறிப்பாக எலும்புகளுக்கும் நிணநீர்க்கணுக்களுக்கும், மாற்றிடம் புகும் (பரவும்) தன்மை உடையது. இப்புற்றுநோயால் வலி, சிறுநீர் கழிப்பதில் சிரமம், பாலுறவின்போது சிக்கல்கள், விறைக்க முடியாமை போன்ற அறிகுறிகள் உருவாகின்றன. இந்தப் புற்றுநோய் புரோசுட்டேட் சுரப்பி நீக்கம், கதிர் மருத்துவம், அல்லது இயக்குநீர் சிகிச்சை மூலம் மேலாளப்படுகிறது. விரைவாக வளரும் முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய்க்கு மரபியல் காரணங்கள் அடிப்படையாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. பிஆர்சிஏ2 மரபணு உள்ள ஆண்கள் இந்தப் புற்றுநோய்க்கு ஆளாகும் வாய்ப்பு கூடுதலாக உள்ளதாகவும் அத்தகைய புற்றுநோய் மிக விரைவாக வளரும் எனவும் அறியப்பட்டுள்ளது. வெப்ப ஒளிர்வு கதிர் ஏற்பளவுமானி வெப்ப ஒளிர்வு கதிர் ஏற்பளவுமானி (Thermoluminescence dosimeter), என்பது கதிர் வீச்சின் அளவினை கண்டறிய உதவும் ஒரு கருவியாகும். லித்தியம் புளூரைட் ((Lithium fluoride), கால்சியம் சல்பேட்டு போன்ற சில படிகங்கள் அயனியாக்கும் கதிர் வீச்சிற்கு ஆட்படும் போது, அக்கதிரிலிருந்து ஆற்றலை ஏற்றுக் கொள்கிறது. இப்படிகங்களை பின்னால் சூடாக்கும் போது அவைகள் ஒளியை வெளியிடுகின்றன. வெளிப்படும் ஒளியின் அளவு ஏற்றுக் கொண்ட கதிர் வீச்சிற்கு நேர்விகிதத்தில் உள்ளது. குறைந்த ஏற்பளவு, குறைந்த அளவு ஒளியினையும்; அதிக ஏற்பளவு, அதிக ஒளியினையும் கொடுக்கும். படிகங்களைச் சூடேற்றுவதால் பெறப்படும் ஒளியினை ஒளிபெருக்கியின்(Photo multiplier tube) மூலம் அதிகரிக்கலாம். இன்றைய அறிவியல் இவ்வொளியினை கதிர் ஏற்பளவாக கொடுத்து விடுகிறது. கதிர்வீச்சுப் புலங்களில் பணிபுரிகிறவர்கள், பணியின் போது பெறும் அளவினைக் காண இதனைப் பயன் படுத்துகிறார்கள். புற்றுதிசுக்களிலும் பிற முக்கியமான உடலுறுப்புகளிலும் கதிர் ஏற்பளவினைக் காணப்பயன்படுகிறது. ஓ. ஏ. இராமையா ஓ. ஏ. இராமையா (சூலை 24, 1938 - மே 18, 2013) இலங்கையின் மூத்த தொழிற்சங்கவாதியும், பொதுவுடமைவாதியும் ஆவார். இலங்கை மலையகம் தலவாக்கலை பூண்டுலோயா டன்சீனன் தோட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இளம் வயது முதலே சமூக பிரச்சினைக‌ளில் அக்கறை கொண்டிருந்த இராமையா 1950களின் இறுதியில் சனநாயகத் தொழிலாளர் காங்கிரசில் தமது 19 ஆவது வயதில் தொழிற்சங்கப் பணியை ஆரம்பித்தார். 1960களில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கும்போது, அரசியல், தொழிற்சங்கக் கற்கை நெறிகளை கிழக்கு செருமனியில் தொடர்ந்தார். 1964 இல் சீன-உருசிய முரண்பாட்டின் காரணமாக என். சண்முகதாசன் தலைமையில் செங்கொடிச் சங்கம் உருவாக்கப்பட்டபோது அதில் முக்கிய பதவியை வகித்தார். 1971 இல் இலங்கையில் மக்கள் விடுதலை முன்னணியினர் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்ட போது, என். சண்முகதாசனுடன் இவரும் கைது செய்யப்பட்டு, ஓராண்டுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து திரும்பிய பின், 1983 முதல் செங்கொடிச் சங்கத்தின் தலைவராக ரொசாரியோ பெர்னாண்டோவும், பொதுச் செயலாளராக ஓ.ஏ. இராமையாவும் செயற்பட்டார்கள். 1984 இல் செங்கொடிச் சங்கம் மீண்டும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைக்கப்பட்டது. இராமையா சர்வதேச தொழிற்சங்க சம்மேளனம், கம்யூனிஸ்ட் கட்சியின் சம்மேளனம் ஆகியவற்றின் உறுப்பினராகவும், கம்யூனிஸ்ட் மத்திய குழு உறுப்பினராகவும், தொழிற்சங்க சம்மேளனத்தின் துணைத் தலைவராகவும், பெருந்தோட்டத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராகவும், பெருந்தோட்ட சமூக மாமன்றத்தின் தலைவராகவும் இறுதிவரை பதவி வகித்துள்ளார். இலங்கை வாழ் மலையாளிகளையும், இலங்கை வாழ் தெலுங்கர்களையும் ஒன்றிணைத்து 1970ல் 'இந்திய வம்சாவளி மக்கள் கூட்டமைப்பு' என்ற புதிய அமைப்பை உருவாக்கினார். இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதைக் கண்டித்து இந்த அமைப்பின் மூலம் போராட்டங்களை நடத்தினார். செருமனி, உருசியா, பெல்ஜியம், தென்னாப்பிரிக்கா, இத்தாலி, ஒங்கொங், வங்காளதேசம் முதலான பல நாடுகளில் நடைபெற்ற தொழிற்சங்க கருத்தரங்குகளில் கலந்து கொண்டுள்ளார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஓ. ஏ. இராமையா அட்டனில் 2013 மே 18 சனிக்கிழமை காலமானார். இராமையா இராமையா என்ற தலைப்பில் உள்ள கட்டுரைகள்: அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் அல்லது குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் என்பது சிவஞான முனிவரால் இயற்றப்பட்ட பிள்ளைத்தமிழ் நூலாகும். இந்நூல் குளத்தூர்ப் பிள்ளைத்தமிழ் எனவும் அறியப்பெறுகிறது. காப்புப் பருவம், செங்கீரைப் பருவம், தாலப் பருவம், சப்பாணிப்பருவம், முத்தப் பருவம், வாரானைப் பருவம், அம்புலிப் பருவம், அம்மானைப் பருவம், நீராடற் பருவம், ஊசற் பருவம் என பத்து பருவங்களையும், நூற்றிமூன்று (103) செய்யுள்களையும் கொண்டது. இந்நூலை திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் எனும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்பு திட்டத்தின் மூலம் இணையப்படுத்தப்பட்டுள்ளது. http://www.projectmadurai.org.vt.edu/pm_etexts/utf8/pmuni0310.html அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் மலேசிய அன்புக் கட்சி மலேசிய அன்புக் கட்சி (), அல்லது () என்பது மேற்கு மலேசியா, பினாங்கு மாநிலத்தைத் தளமாகக் கொண்ட ஓர் அரசியல் கட்சியாகும். இந்தக் கட்சி, 6 ஆகஸ்டு 2009 இல் தோற்றுவிக்கப்பட்டது. கெராக்கான் கட்சியின் உதவித் தலைவராக இருந்த ஹுவான் செங் குவான், சரவாக் மாநிலத்தின் முன்னாள் சட்டசபை உறுப்பினர் கேபிரியல் அடிட் டிமோங் போன்றோர், மலேசிய அன்புக் கட்சியின் உறுப்பினர்களாக இணைந்தனர். 2011 ஆம் ஆண்டு சரவாக் மாநிலத் தேர்தலில், நிகேமா, சிமுஞ்சான், பாலாய் ரிங்கின், மாச்சான், பேகெனு ஆகிய ஐந்து இடங்களில் இக்கட்சி போட்டியிட்டது. அத்தேர்தலில் அனைத்து இடங்களிலும் அக்கட்சி தோல்வி அடைந்தது. மலேசிய அன்புக் கட்சியின் சரவாக் மாநிலத் தலைவராக இருந்த கேபிரியல் அடிட் டிமோங், 995 வாக்குகள் வித்தியாசத்தில் நிகேமா சட்டமன்றத் தொகுதியில் தோல்வி அடைந்தார். 2013இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மலேசிய அன்புக் கட்சி போட்டியிட்ட எல்லா இடங்களிலும் தோல்வி அடைந்தது. அதனால், பினாங்கு மாநிலத்தில் இருந்த தனது 13 சேவை மையங்களையும் மலேசிய அன்புக் கட்சி மூடிவிட்டது. சேயோன் சேயோன் என்பவன் தமிழர் வகுத்த ஐந்திணைகளில் குறிஞ்சிக்கு கடவுள் ஆவான். சேயோன் என்ற பெயர் சிவந்தவன் என்ற பொருளை தரும் என்பதால் சிவன், முருகன் இரண்டு பேருமே சேயோன் என்று கூறப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சேயோன் குன்றில் மேல் அமர்ந்தவனாகவும் அழிக்கும் தொழிலை செய்யும் கடவுளாக முறையே தமிழ் சங்க இலக்கியங்களும் தமிழ் நாட்டார் கூத்துகளும் எடுத்து இயம்புகின்றன. சேயோன் என்பது குழந்தை எனும் பொருளில்வரும் . தமிழரின் முதல் பெண்தெய்வமான கொற்றவையின் மகன். இதனை திருமுருகாற்றுப்படையில் " கொற்றவை சிறுவ" "பழையோள் குழவி"குறிப்பிட்டுள்ளதைக் காணலாம். கர்பால் சிங் கர்பால் சிங் (; சூன் 28, 1940 - ஏப்ரல் 17, 2014) என்பவர் மலேசியாவில் ஒரு மூத்த அரசியல்வாதி; ஒரு பிரபலமான வழக்குரைஞர். 1978 இல் இருந்து 1999 வரை ஜோர்ஜ் டவுன், பினாங்கு ஜெலுத்தோங் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், 2004 ஆம் ஆண்டில் இருந்து, புக்கிட் குளுகோர் ஜோர்ஜ் டவுன், பினாங்கு நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினராகவும், 29 ஆண்டுகளாகச் சேவையாற்றி வந்தார். இவர் ஜனநாயக செயல் கட்சியின் முன்னாள் தேசியத்தலைவர் அவார். கர்பால் சிங் 17 ஏப்ரல் 2014 அதிகாலையில் நடந்த ஒரு கோர சாலை விபத்தில் கொல்லப்பட்டார். மலேசிய நாடாளுமன்றத்திலும், மலேசிய நீதிமன்றங்களிலும் வாதத்துக்கிடமான மனிதராகப் பெயர் பெற்ற இவர், பலமுறை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளார். அரசாங்க விரோதக் கருத்துகள் எனக் கருதப்படும் காரணங்களுக்காக, இவர் 1987 ஆம் ஆண்டு, மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் கமுந்திங் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். மலேசியாவில் இவருக்கு "ஜெலுத்தோங் புலி" எனும் அடைமொழிப் பெயரும் உண்டு. மலேசியாவில் பல பிரபலமான உயர்மட்ட அரசியல், போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் வாதாடியுள்ள இவர், அன்வர் இப்ராகிம் பாற்புணர்ச்சி வழக்கில் எதிர்த்தரப்பின் தலைமை வழக்குரைஞராகவும் பொறுப்பேற்று இருந்தார். மலேசியாவில் போதைப் பொருள் கடத்தலுக்கு மரண தண்டனை வழங்கப்படுவதை இவர் எதிர்த்துப் போராடி வந்தார். கர்பால் சிங், பினாங்கு, ஜோர்ஜ் டவுன் புறநகர்ப் பகுதியில் ஓர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய தந்தையாரின் பெயர் ராம் சிங். இவர் இந்தியா, பஞ்சாப், அம்ரித்சர் நகருக்கு அருகில் உள்ள சாம்னா பிந்த் எனும் இடத்தில் இருந்து, மலாயாவுக்கு வந்தவர். அவர் பினாங்கில் ஒரு தொழிற்சாலையில் பாதுகாவலராக வேலை செய்து வந்தார். குடும்ப வருமானம் குறைவாக இருந்ததால், சில பசுமாடுகளையும் வளர்த்து வந்தார். பினாங்கு செயிண்ட் சேவியர் பள்ளியில், கர்பால் சிங் தன் கல்வியைத் தொடங்கினார். பள்ளி விட்டு வந்ததும் அவர் மாடு மேய்க்கப் போய்விடுவார். அப்படி மாடுகளை மேய்ச்சலுக்குக் கொண்டு செல்லும் போதுதான், அவருடைய மனைவி குர்மிட் கவுரையும் சந்தித்தார். சின்ன வயதிலேயே இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. பினாங்கில் தன் உயர்நிலைப்பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்ட கர்பால் சிங், பல்கலைக்கழகப் படிப்பிற்காக சிங்கப்பூர் சென்றார். அங்கு சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் சேர்ந்து பட்டப்படிப்பை மேற்கொண்டார். சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது மாணவர் சங்கத்தின் தலைவராகவும் சேவை செய்தார். அந்தக் காலக்கட்டத்தில் மாணவர்கள் அரசியலில் அணி சேரக்கூடாது என்று பணிக்கப்பட்டதால், அதற்கு கர்பால் சிங் எதிர்ப்பு தெரிவித்தார். அதனால், அவர் பல்கலைக்கழக மாணவர்களின் தங்கும் விடுதிகளில் நுழைவதில் இருந்து தடை செய்யப்பட்டார். 1969 ஆம் ஆண்டு, பினாங்கு வழக்கறிஞர் மன்றத்தில் சேர்க்கப்பட்டார். பின்னர், கெடா, அலோர் ஸ்டார் நகரில் ஒரு வழக்குரைஞர் நிறுவனத்தில் சேவை செய்யத் தொடங்கினார். 1970 இல் தன் சொந்த நிறுவனத்தையும் தொடங்கினார். கர்பால் சிங், பல சிக்கலான வழக்குகளிலும் மனித உரிமைகளுக்காகப் போராடுவதிலும் தன் திறமைகளைக் காட்டி பொது மக்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார். அரசாங்கம் மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை அதிகமாகப் பயன்படுத்தி வருவதற்கு கர்பால் சிங் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் 14 வயது சிறுவன் தூக்கிலிடப்படுவதைத் தன் வாதத் திறமையாலும் தடுத்து நிறுத்தியுள்ளார். 1987 இல் மலேசியப் பிரதமராக இருந்த மகாதீர் பின் முகமது, நாடு தழுவிய நிலையில் "லாலாங் நடவடிக்கை" எனும் கைது நடவடிக்கையை மேற்கொண்டார். அதற்கு கர்பால் சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கடைசியில் அவரையும் மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தார்கள், 1989 ஆம் ஆண்டு வரை இரண்டு ஆண்டுகளுக்கு அவர் கமுந்திங் சிறையில் வைக்கப்பட்டார். அவர் கமுந்திங் சிறையில் இருக்கும் போது, அவரை விடுதலை செய்யக் கோரி மலேசிய உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. ஆனால், அவர் விடுதலை பெற்ற சில மணி நேரங்களில் மறுபடியும் கைது செய்யப்பட்டார். அவரை மனச்சான்று சுதந்திரம் பெற்ற மனிதர் என்று பன்னாட்டு பொதுமன்னிப்பு அமைப்பு அறிவித்தது. மலேசிய அரசாங்கத்திடம் பகிங்கரமான கண்டனத்தையும் தெரிவித்தது. கமுந்திங் சிறைச்சாலையில் அவர் வெளியுலகத்தில் இருந்து தனிமை படுத்தப்பட்டார். ஒரு சின்ன அறையில் அவருடைய வாழ்க்கை நகர்ந்தது. அவருக்கு உணவாகக் கொடுக்கப்படும் நாசி லெமாக் பொட்டலத்தில், சுற்றப்பட்டிருக்கும் பழைய நாளிதழ்களே அவருடைய வாசிப்பிற்குத் துணையாக அமைந்தன. பழைய செய்திகளாக இருந்தாலும் அவை அவருடைய தனிமையைப் போக்கும் தற்காலிக நிவாரணிகளாக அமைந்தன. கர்பால் சிங் பழைய செய்தித்தாட்களைப் படிப்பதைப் பார்த்த பாதுகாவலர்கள், அவர் இனிமேல் 60 நாட்களுக்கு எதையும் படிக்கக்கூடாது என்று தண்டனை விதித்தனர். ஒரு மனிதனின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவது என்பது அதுவே அவனுக்கு வழங்கப்படும் கொடூரத் தண்டனையாகும் என்று கர்பால் சிங் சொல்கிறார். நாடு தளாவிய நிலையில் நடைபெற்ற லாலாங் நடவடிக்கையில் (), 106 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஜனநாயக செயல் கட்சியைச் சார்ந்த, மலேசிய நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளின் தலைவர் லிம் கிட் சியாங், மலேசிய மண்ணின் மைந்தர்கள் அமைப்பின் () தலைவர் இப்ராகிம் அலி போன்றவர்களும் அடங்குவர். முகச்சவரம் செய்ய அவருக்கு ஒரு வள்ளேடையும் "(blade)" கொடுக்க சிறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர். தொண்டையை வெட்டிக் கொள்ளும் அபாயம் இருப்பதால் பிளேடுகள் கொடுக்க முடியாது என்று காரணம் கூறினர். அதற்கு அவர் “முகச்சவரம் செய்ய ஒரு பிளேடைக் கொடுங்கள். இல்லை என்றால், உங்களுடைய தொண்டையை நான் அறுத்துவிடுவேன்” என்று சொல்லி இருக்கிறார். தனிமையில் சிறை வைக்கப்படுவது என்பது மிக மிகக் கொடுமையானது என்று கர்பால் சிங் கூறுகிறார். எவ்விதக் குற்றச்சாட்டுகளும் இல்லாமல், தனிமனிதர் ஒருவரைச் சந்தேகத்தின் பேரில், விசாரணை இல்லாமல் இரண்டு ஆண்டுகள் தடுத்து வைக்க மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் வகை செய்கிறது. கர்பால் சிங் சிறையில் இருக்கும் போது, அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட மலாயா கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த இருவரின் நட்பு கிடைத்தது. விடுதலையான பின்னர், அவர்களின் ஒருவரின் திருமணத்திலும் கர்பால் சிங் கலந்து கொண்டார். மலேசியாவில் மரண தண்டனை வழங்கப்படுவதை எதிர்த்துப் போராடி வரும் இவர், இதுவரையில் வெளிநாட்டவர்களில் குறைந்தது பத்து பேரையாவது, தூக்குத்தண்டனையில் இருந்து காப்பாற்றி இருக்கிறார். மரண தண்டனையை எதிர்க்கும் இவர் ஜூலை 2010 இல், பத்து வயது குழந்தையைக் கற்பழித்த ஒரு குற்றவாளிக்கு கண்டிப்பாக தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார். அது ஒரு சர்ச்சைக்குரிய வழக்காகும். இவர் வழக்காடிய பல உயர்மட்ட வழக்குகளில் ஆஸ்திரேலிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கெவின் பார்லோ; பிரியான் சேம்பர்ஸ் என்பவர்களின் வழக்கு மிக முக்கியமான ஒன்றாகும். ஜூலை 1985, பினாங்கு உயர்நீதிமன்றத்தில் அந்த வழக்கு நடைபெற்றது. 1986 ஜூலை 7 இல் இருவரும் புடு சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டனர். இவர்கள் தூக்கிலிடப்பட்ட பின்னரும் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கலாம் என்று கர்பால் சிங் குரல் கொடுத்து வந்தார். அதே போல லோரேன் கோகன் (44); ஆரோன் கோகன் (20) எனும் நியூசிலாந்துகாரர்களின் போதைப் பொருள் கடத்தல் வழக்கும் பிரசித்தி பெற்றதாகும். அவர்கள் இருவரும் தாய், மகன் ஆகும். 1985 பிப்ரவரி 9 இல், 140.76 கிராம் கஞ்சா போதைப் பொருளைக் கடத்தியதற்காக அவர்களுக்கு பினாங்கு உயர்நீதிமன்றத்தில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் கர்பால் சிங் ஆஜரானார். பல போராட்டங்களுக்குப் பின்னர் இவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ஆயுள்தண்டனையாகக் குறைக்கப்பட்டது. 1996 இல், பதினோர் ஆண்டுகளுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டு நியூசிலாந்திற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். 1997 இல், ஒரு பதினான்கு வயது சீனச் சிறுவன், சுடும் ஆயுதங்களை வைத்திருந்ததற்காக, மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அவனுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அவனுக்காக வாதாடிய கர்பால் சிங், அந்தச் சிறுவனைத் தூக்கிலிட்டால், அந்த நிகழ்ச்சி உள்நாட்டில் ஓர் அரசியல் கொந்தளிப்பை உண்டாக்கலாம் என்று கருத்து தெரிவித்தார். பின்னர், மலேசிய மாமன்னரிடம் இருந்து அந்தச் சிறுவனுக்கு மன்னிப்பு கிடைத்தது. 1998 இல், மலேசியாவின் முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் இப்ராகிம் பாற்புணர்ச்சி வழக்கில் எதிர்த்தரப்பின் தலைமை வழக்குரைஞராகப் பொறுப்பேற்று வாதாடியுள்ளார். 1999 செப்டம்பர் மாதம் நடைபெற்ற முதல் வழக்கில் அன்வார் இப்ராகிமின் உடலில் அளவுக்கு அதிகமான விஷம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என மருத்துவச் சான்றுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். கீழ்க்காணும் வாசகங்களைச் சொல்லி நீதிமன்றத்தில் ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அப்படி சொன்னதற்காக கர்பால் சிங், ஜனவரி 2000 இல் மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். சில நாட்களுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும், அவர் மீதான குற்றச்சாட்டு எவ்வித காரணங்களும் காட்டப்படாமல் ஜனவரி 2012 இல் மீட்டுக் கொள்ளப்பட்டது. அன்வார் இப்ராகிமின் இரண்டாவது வழக்கு 2008 இல் நடைபெற்றது. அந்த வழக்கிலும் கர்பால் சிங் எதிர்தரப்பின் பிரதான வழக்குரைஞராக வழக்காடினார். இந்த வழக்கு இரண்டு ஆண்டுகள் நடைபெற்றது. பின்னர், 2012 ஜனவரி 10 இல் அன்வார் இப்ராகிம் விடுதலை செய்யப்பட்டார். ஜனநாயக செயல் கட்சி என்பது ஒரு பல்லின அரசியல் கட்சியாகக் கொள்கை கொண்டிருந்தது. அதனால், 13 மே இனக்கலவரத்திற்குப் பின்னர், 1970 ஆம் ஆண்டு ஜனநாயக செயல் கட்சியில் ஓர் உறுப்பினராகக் கர்பால் சிங் சேர்ந்தார். 1974 மலேசியப் பொதுத் தேர்தலில், கர்பால் சிங் பினாங்கில் போட்டியிடுவதாக இருந்தது. அந்தக் கட்டத்தில் அவருடைய தந்தையார் மரணமடைந்தார். அதனால், கர்பால் சிங் தேர்தலில் இருந்து பின்வாங்கிக் கொண்டார். எனினும், அப்போது ஜனநாயக செயல் கட்சியின் அமைப்புச் செயலாளராக இருந்த பான் இயூ தெங்கின் வேண்டுகோளுக்கு இணங்கி அலோர் ஸ்டார் நாடாளுமன்றத் தொகுதியிலும், கெடா அலோர் ஸ்டார் நகரச் சட்டமன்றத் தொகுதியிலும் கர்பால் சிங் போட்டியிட்டார். அத்தேர்தலில் நாடாளுமன்றத் தொகுதியில் அவர் தோல்வி கண்டார். சட்டமன்றத் தொகுதியில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. கெடா மாநிலத் தேர்தலில் ஜனநாயக செயல் கட்சி வெற்றி பெற்றது அதுவே முதல் முறையாகும். 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவர் வெற்றி பெற முடியவில்லை. மற்றபடி 1978 ஆம் ஆண்டில் இருந்து அனைத்து தேர்தல்களிலும் வெற்றி வாகைகள் சூடி வந்துள்ளார். 1978 இல் இருந்து 1999 வரை பினாங்கு ஜெலுத்தோங் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும், 2004 ஆம் ஆண்டில் இருந்து, பினாங்கு புக்கிட் குளுகோர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார். 2013 ஆம் ஆண்டு வரையில், 29 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகச் சேவையாற்றி இருக்கிறார். 1999 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், ஜனநாயக செயல் கட்சி, மலேசிய இஸ்லாமிய கட்சியுடன் அரசியல் கூட்டு வைத்துக் கொண்டது. அதை மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள் பலர் ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் விளைவாக, 1999 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஜனநாயக செயல் கட்சி கடுமையான தோல்வியைக் கண்டது. அந்த வகையில் கர்பால் சிங்கும் முதல் முறையாகத் தோல்வி கண்டார். 1989 ஆம் ஆண்டில் மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவைத் துணைச் சபாநாயகராக டி.பி. விஜேந்திரன் என்பவர் இருந்தார். அவர்தான் அந்தப் பதவி வகித்த முதல் இந்தியர். நாடறிந்த ஒரு வழக்கறிஞரான இவர், பாலுணர்வு படங்களில் "நடித்து" இருந்தார் என கர்பால் சிங் வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார். அந்தக் குற்றச்சாட்டு ஒட்டு மொத்த மலேசிய மக்களையே அதிர்ச்சி அடையச் செய்தது. பின்னர், ஆதாரங்கள் இல்லாததால் அந்தக் குற்றச்சாட்டுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து, மக்களவைத் துணைச் சபாநாயகர் பதவியை டி.பி. விஜேந்திரன் ராஜிநாமா செய்தார். டி.பி.விஜேந்திரனின் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையானவை என்பதை கர்பால் சிங் நிரூபிக்க, பாலுணர்வு காணொளிப் படங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அந்தச் சமயத்தில் மக்களவைத் துணைச் சபாநாயகராக ஓங் தீ கியாட் இருந்தார். ஆக, பொய்யான தகவல்களைச் சமர்ப்பித்தார் எனும் குற்றச்சாட்டின் பேரில், 1994 மே மாதம் டி.பி.விஜேந்திரனின் மீது வேறு ஒரு சட்டப் பிரிவில் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. தொடர்ந்து 1998 இல் தன் மீதான குற்றச்சாட்டைத் தள்ளுபடி செய்யக் கோரி டி.பி.விஜேந்திரன் கோலாலம்பூர் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்தத் தாக்கல் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவர் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் தள்ளுபடி செய்யப்பட்டன. 1999 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தோல்வி கண்ட கர்பால் சிங், 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் புக்கிட் குளுகோர் தொகுதியில் 1,261 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் மறுபடியும் காலடி எடுத்து வைத்தார். அந்தத் தேர்தலில் ஜனநாயக செயல் கட்சி 20 இடங்களைப் பெற்று, தலையாய எதிர்க்கட்சியாகத் தன் தகுதியை மறுபடியும் நிலைநாட்டிக் கொண்டது. 2004 செப்டம்பர் 4 இல், ஜனநாயக செயல் கட்சியின் தேசியத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். 2004 செப்டம்பர் 7 இல், கர்பால் சிங் மறுபடியும் ஒரு நாடாளுமன்றச் சர்ச்சையில் சிக்கிக் கொண்டார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தியபிரமாணம் எடுக்கும் போது வலது கையை உயர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கர்பால் சிங் நாடாளுமன்ற சிறப்புரிமைகளை மீறி அப்படி பேசி இருக்கக்கூடாது என்றும், மூன்று நாட்களுக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால், அவர் நாடாளுமன்றத்தில் இருந்து ஆறு மாதங்களுக்கு தற்காலிகமாக இடை நீக்கம் செய்யப்படுவார் என்றும் நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குழு முடிவு செய்தது. கர்பால் சிங்கை ஒரு மூத்த அரசியல்வாதியாக மதித்துப் பழகி வந்த நாடாளுமன்றத்தின் பாரிசான் நேசனல், பாக்காத்தான் ராக்யாட் உறுப்பினர்கள் மன்னிப்பு கேட்கச் சொல்லி வலியுறுத்தினர். ஆனால், கர்பால் சிங் கடைசி வரை மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். 2010 ஏப்ரல் மாதம், மலேசிய நாடாளுமன்ற சபாநாயகரை "சர்வாதிகாரி" என்று அழைத்ததால், பத்து நாட்களுக்கு கர்பால் சிங் நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்வதில் இருந்து தடை செய்யப்பட்டார். அதே ஆண்டு டிசம்பர் மாதம், சக எதிர்க்கட்சி உறுப்பினர்களான அன்வார் இப்ராகிம், அஸ்மின் அலி, சிவராசா ராசையா ஆகியோருடன் இவரையும் சேர்த்து நான்கு உறுப்பினர்கள் நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்து கொள்வதில் இருந்து தடை செய்யப்பட்டனர். அப்கோ நிறுவனத்திற்கும் () மலேசிய அரசாங்கத்திற்கும் இடையே சர்ச்சைகளைத் தூண்டிவிட்டதற்காக அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். 2011 டிசம்பர் மாதம், கர்பால் சிங்கிற்கும், பினாங்கு மாநிலத் துணை முதல்வர் இராமசாமி பழனிச்சாமிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. ஜனநாயக செயல் கட்சியில் சிலர் தமக்கு எதிராகக் கீழறுப்பு வேலைகளில் ஈடுபட்டிருப்பதாக இராமசாமி பழனிச்சாமி கருத்துக் கூறினார். அதைக் கண்டித்த கர்பால் சிங், துணை முதல்வர் இராமசாமியை ஒரு இராணுவத் தலைவர் என்று வர்ணித்தார். மாநிலத் துணை முதல்வர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்யுமாறும் கேட்டுக் கொண்டார். பின்னர், இருவருக்குமான இந்த உட்பூசல் ஜனவரி 2012 இல் ஒரு முடிவிற்கு வந்தது. மகாத்மா காந்தி, ஜான் எப் கென்னடி ஆகிய இருவரும் தம்முடைய வழிகாட்டிகள் என்று சொல்லி வரும் கர்பால் சிங்கிற்கும், ம.இ.காவின் முன்னாள் தலைவர் ச. சாமிவேலுவிற்கும் சில சமயங்களில் கருத்து மோதல்கள் ஏற்படுவதும் உண்டு. ஒரு முறை கர்பால் சிங் சொன்ன வாசகங்கள். மலேசிய நாடாளுமன்றத்திலும், பினாங்கு மாநிலச் சட்டமன்றத்திலும் கூட்டங்கள் நடைபெறும் போது கர்பால் சிங் வாக்கு விவாதங்களில் ஈடுபட்டு பெரும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தி இருக்கிறார். பினாங்கு மாநிலச் சட்டமன்றத்தில், கர்பால் சிங்கை வெளியேற்றுவதற்கு காவல்துறையினர் இருமுறை அழைக்கப்பட்டது உண்டு. சட்டமன்றத்திற்குள் நுழைந்த காவல் அதிகாரிகளை வெளியே போகச் சொல்லி குரல் எழுப்பிய இருக்கிறார். சட்ட அவைக்குள் நுழைவதற்கு, காவல் துறையினருக்கு உரிமையில்லை என்று கூறிய பின்னர், அவராகவே சட்டமன்றத்தில் இருந்து வெளியேறியும் இருக்கிறார். ஒரு முறை மலேசிய மாமன்னருடனும் கர்பால் சிங் சர்ச்சையை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். 1986 இல், தன் அரண்மனையில் இருவர் மீது மாமன்னர் தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது என்று கர்பால் சிங் நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கர்பால் சிங்கின் அந்தக் குறைகூறல் ஆளும் கட்சியினரிடையே பலத்த கண்டனத்திற்கு உள்ளானது. அவர் மாமன்னரிடம் பகிங்கரமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டார். மன்னிப்பு கேட்க மறுத்த கர்பால் சிங், மாறாக மாமன்னர் சுல்தான் இஸ்கந்தர் மீதே நீதிமன்றத்தில் ஒரு வழக்கையும் தொடுத்தார். அந்த வழக்கில் கர்பால் சிங் வெற்றி பெறவில்லை. கர்பாலின் மீது கோபம் அடைந்த மாமன்னர், தான் வளர்த்த நாய்க்கு கர்பாலின் பெயரையே வைத்து திருப்தி அடைந்தார். கர்பால் சிங், நாடாளுமன்றத்தின் ஆறு மாத கால தடையுத்தரவை இருமுறை பெற்றுள்ளார். முதல் முறையாக செப்டம்பர் 2004 இல், நாடாளுமன்றத்தைத் தவறான முறையில் வழியிட்டுச் சென்றதற்காகவும், டிசம்பர் 2010 இல் நாடாளுமன்றத்தை அவமதித்ததற்காகவும் அந்தத் தடையுத்தரவுகளைப் பெற்றார். இரண்டாவது முறை, பாக்காத்தான் ராக்யாட் தலைவர் அன்வார் இப்ராகிம், சிவராசா ராசையாவுடன் வெளியேற்றம் செய்யப்பட்டார். 2008 மே மாத நாடாளுமன்றக் கூட்டத்தில், சபா, கினாபாத்தாங்கான் நாடாளுமன்ற உறுப்பினர் புங் மொக்தார் ராடினைப் பார்த்து "பிக்பூட்" என்று கர்பால் சிங் அழைத்தார். உடனே மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான இப்ராகிம் அலி, எழுந்து கர்பால் சிங்கைப் பார்த்து, பேசும் போது எழுந்து நின்று பேச வேண்டும் என்று கிண்டல் செய்தார். (இந்தக் கட்டத்தில் கர்பால் சிங், ஒரு சாலை விபத்தில் சிக்கி தள்ளுவண்டியில் அமர்ந்தவாறு நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்து கொண்டிருந்தார்) அந்தக் கிண்டலான சொற்களைக் கேட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொதிப்படைந்து போயினர். கர்பால் சிங்கின் நாடாளுமன்ற உரிமைகள் காக்கப்படவில்லை என்று ஒட்டு மொத்த 32 எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். நாடாளுமன்றத்திற்கு வெளியே பொது மக்களும் கூடினர். அந்தக் காலக்கட்டத்தில் நாடாளுமன்ற விவாதங்கள், மலேசியத் தொலைகாட்சிகளில் நேரடியாக ஓளிபரப்பு செய்யப்பட்டன. 2008 ஜூன் மாதம், கர்பால் சிங் ஒரு கொலை மிரட்டல் கடிதத்தைப் பெற்றார். ஒரு துப்பாக்கி ரவையுடன் அவருடைய அலுவலகத்திற்கு அந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. நான்கு மாதங்கள் கழித்து, அதாவது 2008 அக்டோபர் மாதத்தில், நாடாளுமன்ற சபாநாயகர் பண்டிக்கார் அமின் மூலியாவைக் கவனக்குறைவானவர் என்றும் விளையாட்டுத்தனமாக நடந்து கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். அந்தச் சொற்கள் நாடாளுமன்றத்தை அவமதிப்பதாகக் கருதி கர்பால் சிங் இரு நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார். அதற்கு முன், ஜூன் மாதம் 30 ஆம் தேதி, கர்பால் சிங்கின் மகன் கோபிந்த் சிங் டியோ, இரு நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார். கோபிந்த் சிங் டியோ, சிலாங்கூர், பூச்சோங் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகும். 2009 ஆம் ஆண்டு, பேராக் அரசியல் சாசன நெருக்கடி ஏற்பட்டது. அப்போது, பேராக் சுல்தான் அஸ்லான் ஷாவின் மீது வழக்குத் தொடரப் போவதாகக் கர்பால் சிங் அச்சுறுத்தல் செய்தார் அது ஓர் அரச நிந்தனை என கர்பால் சிங் மீது வழக்கு தொடரப்பட்டது. சாம்ரி அப்துல் காதிர் என்பவரை பேராக் மாநிலத்தின் முதலமைச்சராக நியமனம் செய்வதில் அரசமைப்புச் சட்ட அதிகாரத்தைத் தாண்டி சுல்தான் செயல்பட்டுள்ளார் என்று கர்பால் சிங் வாதிட்டார். 2010 ஜூன் 11 இல் கர்பால் சிங் மீது அரச நிந்தனை வழக்கு கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டது. எனினும் அந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன் பின்னர், 2012 ஜனவரி 20 இல், மலேசிய மேல் முறையீட்டு மன்றம் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதைப் பற்றி விசாரணை செய்தது. பேச்சு சுதந்திரத்திற்கும் ஒரு வரையறை உள்ளது எனக் கூறிய மலேசிய மேல் முறையீட்டு மன்றம், கர்பால் சிங்கிற்கு எதிராகத் தீர்ப்பு கூறியது. 1970 ஜூலை 30 இல் குர்மிட் கவுர் என்பவரை கர்பால் சிங் திருமணம் செய்து கொண்டார். குர்மிட் கவுருக்கு ஏழு வயதாக இருக்கும் போது அவருடைய குடும்பம் தாய்லாந்து நாராதிவாட் பகுதியில் இருந்து பினாங்கிற்கு குடியேறியது. இவர்களுக்கு ஐந்து பிள்ளைகளும், பத்து பேரப் பிள்ளைகளும் உள்ளனர். கர்பால் சிங்கின் மூத்த மகன் ஜக்டீப் சிங் டியோ, பினாங்கு மாநிலத்தில் டத்தோ கிராமாட் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். இரண்டாவது மகன் கோவிந்த் சிங் தியோ, சிலாங்கூர், பூச்சோங் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். மூன்றாவது மகன் ராம் கர்பால் என்பவரும், மகள் சங்கீத் கவுரும் கர்பால் சிங்கின் வழக்கறிஞர் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். கர்பால் சிங்கின் நான்கு பிள்ளைகள் வழக்குரைஞர்களாகும். அவருடைய கடைசி மகன் மான் கர்பால் என்பவர் மட்டும் காப்பீட்டுத் துறையில் () ஈடுபட்டுள்ளார். கர்பால் சிங், தன் மனைவியுடன் 1994 ஆம் ஆண்டில் இருந்து கோலாலம்பூர் மாநகரின் டமான்சாரா பகுதியில் வாழ்ந்து வருகிறார் 2005 ஜனவரி 28 இல் ஒரு கார் விபத்தில் சிக்கிய கர்பால் சிங், முதுகெலும்பு பாதிக்கப்பட்டு, சக்கரவண்டியைப் பயன்படுத்தி வருகிறார். ஒரு வாடகைக்காரில், பின் இருக்கையில் அமர்ந்து பயணிக்கும் போது, பின்னால் இருந்து வந்த கார் மோதியதால் விபத்து ஏற்பட்டது. அவர் சக்கரவண்டியைப் பயன்படுத்துவதால், மலேசிய நாடாளுமன்றத்தில் அவருக்கு ஆகப் பின்வரிசையில் இடம் ஒதுக்கித் தரப்பட்டுள்ளது. கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களிலும் அவர் சக்கரவண்டியில் அமர்ந்தவாறே பிரசாரம் செய்து வெற்றி பெற்றார். விபத்தின் காரணமாக அவருக்கு ரிங்கிட் 2 மில்லியன் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டது. கர்பால் சிங் 17 ஏப்ரல் 2014 அதிகாலையில் நடந்த கோர சாலை விபத்தில் கொல்லப்பட்டார். அதிகாலை மணி 1.10 க்கு வடக்கு தெற்கு நெஞ்சாலை(வடக்கு பாதை), 301.6 கிமீ, பேராக் அருகே இந்த கோர சாலை விபத்து நடந்தது. ஜோர்ஜ் டவுனில் நடைபெறவிருக்கும் வழக்கு ஒன்றில் கலந்து கொள்வதற்கு கர்பாலும் அவர் மகன், அவர் உதவியாளர் மற்றும் பணிப்பெண்ணும் சென்று கொண்டிருந்த தானுந்து முன்னாள் சென்ற சுமையுந்துவை மோதி இவ்விபத்து நடந்தது. கர்பால் மற்றும் அவரின் உதவியாளர் விபத்து நடந்த இடத்திலேயே உயிர் துறந்தனர். அவரின் மகன், தானுந்து ஒட்டுநர், மற்றும் பணிப்பெண் இந்த விபத்திலிருந்து தப்பினர். சுமையுந்து ஒட்டுநர், அவர் மனைவி மற்றும் மகள் விபத்திலிருந்து தப்பினர். அந்த சுமையுந்து ஒட்டுநர் கஞ்சா போதையில் இருந்ததாக நம்பட்டது. பம்மனேந்தல் பம்மனேந்தல் (ஆங்கிலம்:PAMMANENDAL) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு சிற்றூர். கமுதி வருவாய் வட்டத்தின் 37 ஆவது எண்கொண்ட வருவாய் கிராமம் (கிராம எண்:37) ஆகும். இங்கு நெல் (பாரம்பரிய நெல் ரகங்கள்), பருத்தி, மிளகாய் அதிகமாக விளைகின்றன. இது வறட்சி மாவட்டம் என்பதால் இங்கு சீமைக் கருவேல மரம் (விறகுகளால் தயாரிக்கப்படும் அடுப்புக்கரி தயாரிக்கும் பொருட்டு) முகனையாக வளர்க்கப்படுகிறது. கமுதியிலிருந்து பெருநாழி செல்லும் வழியில் கமுதியிலிருந்து சுமார் 19 கி.மீ.தூரத்திலும், பெருநாழியிலில் இருந்து 7 கி.மீ.தூரத்திலும் அமைந்து உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 325 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த கிராமத்திலிருந்து வட கிழக்கே சுமார் 6 கி.மீ தூரத்தில் பறவைகளின் சரணாலயம் காஞ்சிரங்குளம் கண்மாய் அமைந்துள்ளது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பம்மனேந்தல் கிராமத்தில் 828 பேர் வசிக்கின்றார்கள்.இதில் ஆண்கள் 403,பெண்கள்425 பாலின விகிதம் 960. எழுத்தறிவு பெற்றவர்கள் 372 பேர். இதில் 271 பேர் ஆண்கள்; 101 பேர் பெண்கள். எழுத்தறிவு பெற்றுள்ளோர் சதவீதம் 53.22. ஆறு வயதுக்குட்பட்டோர் மொத்தம் 129 ஆண் குழந்தைகள் 66,பெண் குழந்தைகள் 63 ஆவர். அட்டபுயக்கரம் ஆதிகேசவப் பெருமாள் கோயில் அட்டபுயக்கரம்அல்லது அஷ்டபுஜகரம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் காஞ்சிபுரத்தில் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்து சுமார் ஒரு மைல் தூரத்தில் உள்ளது.ரங்கசாமி குளத்திற்கு தெற்கோ அமைந்துள்ளது. ஹாட்சன் பேட்டை என்னுமிடத்திற்கு அருகில் அமைந்துள்ளது. ஒரு சமயம் பிரம்மன் செய்யும் யாகத்தை நிலைநிறுத்த திருமால் உதவி புரிந்தபோது யாகத்தைத் தடுக்க எண்ணிய கலைமகள் காளியைப் படைத்து அவளுடன் கொடிய அரக்கர்களை அனுப்பி அதைக் கலைக்க முற்பட்டாள். திருமால் எட்டு கரங்களுடன் தோன்றி காளியை அடக்கி அரக்கர்களை அழித்தார். எனவே இறைவன் அட்டபுயக்கரத்தோன் ஆனார். இவ்விடத்தில் ஆதிகேசவப் பெருமாள் என்னும் பெயரில் பெருமாள் எழுந்தருளியிருந்ததாகவும் அவரே அட்ட புயக்கரமாக வந்தாரென்றும் ஒரு வரலாறும் உண்டு. மேலும் இத்தலத்திலே தான் கஜேந்திரனுக்கு முக்தி அளிக்க எட்டுகைகளுடன் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. வைரமேகன் என்னும் தொண்டை நாட்டு மன்னன் இப்பெருமாளுக்கு தொண்டு புரியும் பொருட்டு தற்போதுள்ள வடிவமைப்பில் இக்கோவிலைக்கட்டினான் என்றும் அறியமுடிகிறது. மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் வலப்புறம் நான்கு கைகளுடனும் இடப்புறம் நான்கு கைகளுடனும் காட்சி தருகிறார். ஆதிகேசவப் பெருமாள், கஜேந்திரவரதன் என்பன இறைவனின் பெயர்கள் திருமங்கையாழ்வாரின் பாடல் பெற்ற பிறகு அட்டபுயக்கரத்தான் ஆனார். அலர்மேல் மங்கை, பத்மாசனி கஜேந்திர புஷ்கரணி இக்கோயிலின் விமானம் ககநாக்ருதி, சக்ராக்ருதி விமானமென்றும், வியோமாகர விமானமென்றும் அழைக்கப்படுகிறது. 108 வைணவத் திருத்தலங்களில் இங்கு மட்டுமே திருமால் எட்டுக்கரங்களுடன் காட்சியளிக்கிறார். வலப்புறமுள்ள கரங்களில் சக்கரம், வாள், மலர், அம்பு ஆகியவற்றையும் இடப்புறாம் சங்கு, வில், கேடயம், தண்டாயுதம் ஆகியவற்றையும் தாங்கியுள்ளார். இத்தலத்தின் தலவரலாறு படி சித்திரை மாதம் ரோகிணி நட்சத்திரத்தன்று பெருமாள் காளியை இவ்விடத்தே அடக்கினார். இதற்குச் சான்றாக இச்சன்னதியின் அருகே கருங்காளியம்மன் கோவிலொன்றுள்ளது. தொண்டை மண்டலத்து வைணவத் திருத்தலங்களில் இங்கு மட்டுமே பரமபத வாயில் உள்ளது. திருமங்கையாழ்வாராலும், பேயாழ்வாராலும் பாடல் பெற்றது இத்தலம். மணவாள மாமுனிகளும், சுவாமி தேசிகனும் இத்தலத்தைப் பாடியுள்ளனர். அத்திக்கோம்பை அத்திக்கோம்பை (Athikombai) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு கிராமம்(ஊர்). ஒட்டன்சத்திரம் வருவாய் வட்டத்தின் 13 வருவாய் (கிராம எண்:13)கிராமம் ஆகும். இங்கு தோட்டப் பயிர்களான முள்ளங்கி, பீட்ரூட், பீன்ஸ் விளைகின்றன. ஒட்டன்சத்திரத்திலிருந்து வேடசந்தூர் செல்லும் பாதையில் ஒட்டன்சத்திரத்திலிருந்து சுமார் 1.5 கி.மீ.தூரத்தில் அமைந்து உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 435 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த கிராமத்திலிருந்து சுமார் 16 கி.மீ தூரத்தில் பரப்பலாறு அணை அமைந்துள்ளது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அத்திக்கோம்பையில் 3015 பேர் வசிக்கின்றார்கள். பாலின விகிதம் 1005 எழுத்தறிவு பெற்றவர்கள் 1742 பேர். இதில் 996 பேர் ஆண்கள்; 746 பேர் பெண்கள். எழுத்தறிவு பெற்றுள்ளோர் சதவீதம் 65.37. ஆறு வயதுக்குட்பட்டோர் (350 பேர்)11.61 சதவீதம் ஆவர். பாலக்காடு ஆர். ரகு பாலக்காடு ஆர். ரகு (1928 - 2009) தென்னிந்தியாவைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர் ஆவார். பாலக்காடு ரகு 1928ஆம் ஆண்டு சனவரி 9 அன்று பர்மாவின் (இப்போதைய மியன்மார்) ரங்கூன் நகரில் பிறந்தார். பெற்றோர்: பாலக்காடு இராமசாமி ஐயர், அனந்தலட்சுமி அம்மாள். ஆரம்பத்தில் திண்ணியம் வெங்கடராம ஐயரிடமும், திருச்சி ராகவா ஐயரிடம் மிருதங்க இசையினைக் கற்றார் ரகு. பின்னர் பிரபல மிருதங்க இசைக் கலைஞர் பாலக்காடு டி. எஸ். மணி ஐயரிடம் பயிற்சி பெற்றார். மணி ஐயரின் உறவுக்கார பெண்மணியாகிய ஸ்வர்ணாம்பாளை திருமணம் செய்துகொண்ட ரகு, கணிதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். இவரின் பேரன் அபிசேக் ரகுராம், கருநாடக இசைப் பாடகராவார். பாலக்காடு ரகு ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கும் மேலாக மிருதங்க இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். இவரின் தனி ஆவார்த்தனம் நேயர்களிடையே பெரிதும் விரும்பப்பட்டது. ஹரிசங்கர், நாகராஜன் (கஞ்சிரா), ஆலங்குடி ராமச்சந்திரன் (கடம்), ‘விக்கு’ விநாயக்ராம் (கடம்), சுபாஷ் சந்திரன் (கடம்) இவர்களுடன் ரகு தனி ஆவர்த்தனம் நிகழ்த்தியுள்ளார். ஐரோப்பா, ஐக்கிய அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். வடஇந்திய இசைக் கலைஞர்களான பண்டிட் ரவி சங்கர் (சித்தார்), ஹரிப்ரசாத் சௌரசியா (புல்லாங்குழல்), சிவ்குமார் ஷர்மா (சந்தூர்), அல்லா ரக்ஹா (தபேலா) இவர்களுடன் இணைந்து இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் 'வாத்திய விருந்து' இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். கிழக்கு-மேற்கு ஒருங்கிணைந்த இசையிலும் தனது பங்களிப்பினைத் தந்துள்ளார். மங்களேசுவரி பிள்ளைத்தமிழ் மங்களேசுவரி பிள்ளைத்தமிழ் அல்லது உத்தரகோச மங்கை மங்களேசுவரி பிள்ளைத்தமிழ் என்பது சைவ சமய பிள்ளைத்தமிழ் நூலாகும். இதனை கி.பி.1901ல் பரிதிமாற் கலைஞர் பதிப்பித்துள்ளார். இந்நூலை இயற்றியவர் பெயர் தெரியவில்லை. பசுக்கார் ஃபசுகார் ("Buzzcar") என்பது பிரான்சில் இயங்கும் ஒரு சகா-சகா தானுந்து வாடகைத் தளம் ஆகும். இது தானுந்தை வாடகைக்கு எடுக்க விரும்புவோரை தானுந்தை வாடகைக்கு விட விரும்புவர்களோடு இணையம் ஊடாக நிகழ் நேரத்தில் தொடர்புபடுத்துகிறது. இந்த நிறுவனம் காப்புறுதி, சாலை ஓர உதவி போன்ற சேவைகளையும் வழங்குகிறது. வாடகைப் பணம் விடுபவரும் எடுப்பவரும் தீர்மானிப்பது. இதில் 30% தனது சேவைகளுக்கு கட்டணமாக அறவிடுகிறது. மாற்றிடம் புகல் மாற்றிடம் புகல் அல்லது மருத்துவ வழக்கில் மெடாஸ்டாசிஸ் ("Metastasis") மாற்றிடம் புகல் நோய், என்பது ஒரு உள்ளுறுப்பிலிருந்து அல்லது அதன் பாகத்திலிருந்து அதற்கு அடுத்து இல்லாத மற்றொரு உள்ளுறுப்பிற்கோ அதன் பகுதிக்கோ புற்றுநோய் பரவுவதாகும். இவ்வாறு இரண்டாமிடத்தில் உருவாகும் புற்றுநோய் "மெடாஸ்டாசிசஸ்" என்று (சிலநேரங்களில் சுருக்கமாக மெட்சு) மருத்துவ உலகில் குறிப்பிடப்படுகிறது. முன்னதாக புற்றுநோய் கட்டிகளும் நோய்த்தொற்றுக்களுமே இவ்வாறு மாற்றிடம் புகுவனவாகக் கருதப்பட்டன; தற்போதைய புதிய ஆய்வுகளின்படி, இது மறுபரிசீலனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளது. இச்சொல் மூலமான "மெடாஸ்டாசிஸ்" என்ற கிரேக்கச் சொல் "இடம் பெயரல்", μετά, "மெடா", "அடுத்த", στάσις, "இசுடாசிசு", "இடம்" எனப் பொருள்படும். இதன் பன்மை மெடாஸ்டாசிசஸ் ஆகும். ஒரு இழையத்தின் ஒற்றை உயிரணு படிப்படியாக மரபியல் சேதமடைந்து கட்டுப்படுத்தவியலா இனப்பெருக்கத் தன்மை உடைய உயிரணுக்கள் உருவாவதால் புற்றுநோய் ஏற்படுகிறது. இந்த கட்டுப்படுத்தவியலா இனப்பெருக்கம், இழையுருப்பிரிவு, முதன்மை புற்றுக்கட்டியை உருவாக்குகிறது. இந்தப் புற்றுக்கட்டியி உள்ள உயிரணுக்கள் அடுத்தடுத்து மாற்றுப்பெருக்கம் (metaplasia), பிறழ்ந்த வளர்ச்சி (dysplasia), விஞ்சு பெருக்கம் (anaplasia) அடைந்து புற்று மெய்வகையாக மாறுகிறது. இந்த புற்று மெய்வகைகள் குருதி அல்லது நிணநீர் ஓட்டங்கள் மூலமாக பிற இடங்களுக்கு இடம் பெயர்ந்து அங்கு கட்டி உருவாக்குகிறது. இவை நிணநீர் கலங்கள் அல்லது குருதிக்குழல்களின் சுவற்றை உடைத்து சுற்றோட்டத் தொகுதி மூலம் (சுற்றோடும் புற்றணுக்கள்) உடலின் பிற இடங்களுக்கும் திசுக்களுக்கும் பரவுகிறது. இவை முறையே "நீணநீர்சார் பரவல்" அல்லது "குருதிசார் பரவல்" எனப்படுகின்றன. மற்றொரு இடத்திற்கு வந்தபிறகு புற்றணுக்கள் கலங்களை அல்லது சுவர்களை உடைத்து உட்சென்று பெருகத் தொடங்குகின்றன; இவ்வாறாக மருத்துவ முறைமையில் கண்டறியக்கூடிய மற்றொரு புற்றுக்கட்டி உருவாகிறது. இந்தப் புற்றுக்கட்டி மாற்றிடம் புகுந்த (அல்லது "இரண்டாம் நிலை") புற்றுக்கட்டியாக அறியப்படுகிறது. இவ்வாறு இடம் பெயரலே புற்றுள்ள கட்டிகளை (எதிர் தீதிலாக் கட்டிகள்) அடையாளப்படுத்தும் மூன்று பண்புகளில் ஒன்றாகும். பெரும்பாலான திசுக்குவிப்புகள் மாற்றிடம் புகுவனவாம்; அவற்றின் பரவுத்தன்மையின் பண்பு வேறுபடலாம். புற்றுக்கட்டிகள் மாற்றிடம் புகுந்து ஏற்படும் புற்றுக்கட்டிகள் "இரண்டாம் நிலை" அல்லது "மாற்றிடம் புகுந்த" கட்டி எனப்படுகின்றன; இவற்றின் உயிரணுக்கள் முதலில் தோன்றிய கட்டியினுடையதாக இருக்கும். அதாவது, எடுத்துக்காட்டாக, மார்பகப் புற்றுநோய் மாற்றிடம் புகுந்து நுரையீரலில் புற்றுக்கட்டி உருவாக்குமானால், இரண்டாம்நிலை புற்றுக்கட்டி வழமையிலா நுரையீரல் உயிரணுக்களால் அல்லாது வழமையிலா மார்பக உயிரணுக்களால் உருவாகியிருக்கும். இது "மாற்றிடம் புகுந்த மார்பகப் புற்றுநோய்" எனப்படும்; "நுரையீரல் புற்றுநோய்" என்றல்ல. விருப்பாச்சி (பாளையம்) விருப்பாச்சி (Viruppachi) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு கிராமம்(ஊர்). ஒட்டன்சத்திரம் வருவாய் வட்டத்தின் 17 வருவாய் (கிராம எண்:17)கிராமம் ஆகும். இங்கு தோட்டப் பயிர்களான முள்ளங்கி, பீட்ரூட்,பீன்ஸ்,மக்காசோளம் முட்டைக்கோஸ்,வெங்காயம், விளைகின்றன. ஒட்டன்சத்திரத்திலிருந்து பழனி செல்லும் (எண்.209ல்) தேசிய நெடுஞ்சாலையில் ஒட்டன்சத்திரத்திலிருந்து சுமார் 9.5 கி.மீ.தூரத்தில் அமைந்து உள்ளது.கடல் மட்டத்திலிருந்து 531 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த கிராமத்திலிருந்து சுமார் 1.6 கி.மீ தூரத்தில் பரப்பலாறு அணை யிலிருந்து விழும் தலைக்குத்து அருவி அமைந்துள்ளது. ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரப்போர் புரிந்த விருப்பாச்சி கோபால் நாயக்கர் பிறந்த ஊர்.அவர் ஆட்சிசெய்த விருப்பாச்சி பாளையமே தற்போது விருப்பாட்சி என உள்ளது.விடுதலை வீரர் விருப்பாச்சி கோபால் நாயக்கருக்கு மணி மண்டபத்தை தமிழக அரசு அமைத்து உள்ளது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, விருப்பாட்சியில் 1579 குடியிருப்புகள் உள்ளது.இதில் 5897 பேர் வசிக்கின்றார்கள். பாலின விகிதம் 1039. எழுத்தறிவு பெற்றவர்கள் 3482 பேர். இதில் 2032 பேர் ஆண்கள்; 1450 பேர் பெண்கள். எழுத்தறிவு பெற்றுள்ளோர் சதவீதம் 65.96. ஆறு வயதுக்குட்பட்டோர் (618 பேர்)10.48 சதவீதம் ஆவர். கொண்றங்கி கீரனூர் கொண்றங்கி கீரனூர் (K Keeranur) இது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு (கிராமம்)ஊர். ஒட்டன்சத்திரம் வருவாய் வட்டத்தின் 6 வது வருவாய் கிராமம் (கிராம எண்:6)ஆகும். ஒட்டன்சத்திரத்திலிருந்து மூலனூர் செல்லும் வழியில் ஒட்டன்சத்திரத்திலிருந்து சுமார் 19.5 கி.மீ.தூரத்தில் அமைந்து உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 461 மீட்டர் உயரத்தில் உள்ளது. வடக்கு எல்லையாக ஈரோடு மாவட்டமும், ஐ.வாடிப்பட்டி கிராமம் கிழக்கு எல்லையாகவும், தெற்கு எல்லையாக மண்டைவாடி கிராமமும், மேற்கு எல்லையாக கள்ளிமந்தையம் கிராமமும் உள்ளது. இந்த கிராமத்திலிருந்து சுமார் 1 கி.மீ தூரத்தில் உயரமான மலையில் அருள்மிகு மல்லீஸ்வரர் சுயம்பு இலிங்க (குகையில்) சிவதலம் உள்ளது. அருள்மிகு மல்லீஸ்வரர் சுயம்பு இலிங்க சிவதலத்திற்கு மேலே மேகங்கள் (கொண்டல்) இறங்கி தவழ்ந்து செல்வதால் கொண்டல் இறங்கியை காரணப் பெயராகக் கொண்டுள்ளது. கொண்டல்+இறங்கி = கொண்டலிறங்கி என்பது நாளடைவில் கொண்றங்கிஆகியது. இதனால் கிராமத்தின் பெயரான கீரனூர் என்பது கொண்றங்கி கீரனூர் என்று அழைக்கப்படுகிறது. இந்த மலையின் உச்சியில் (கடல் மட்டத்திலிருந்து சுமார் 748 மீட்டர் உயரம்) தேசிய முக்கோண நில அளவை குறியீடு (Lamb-ton's Great Trigonometrical Survey station) உள்ளது. இங்கு தோட்டப் பயிர்களான முள்ளங்கி, மிளகாய், பீன்ஸ், பீட்ரூட், மக்காசோளம், முட்டைக்கோஸ், வெங்காயம் விளைகின்றன. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, விருப்பாட்சியில் 872 குடியிருப்புகள் உள்ளது.இதில் 2885 பேர் வசிக்கின்றார்கள். இதில் ஆண்கள்-1475, பெண்கள்-1410, பாலின விகிதம் 956. எழுத்தறிவு பெற்றவர்கள் 1716 பேர். இதில் 1066பேர் ஆண்கள்; 650 பேர் பெண்கள். எழுத்தறிவு பெற்றுள்ளோர் சதவீதம் 64.9 ஆகும், ஆறு வயதுக்குட்பட்டோர் (241 பேர்) 10.48 சதவீதம் ஆவர். சங்கம் - முச்சங்கம் (அடியார்க்கு நல்லார் உரைச் செய்திகள்) முச்சங்க வரலாறு பற்றித் தொகுத்துக் கூறும் நால் இறையனார் களவியல் உரை இது 8 ஆம் நூற்றாண்டில் தோன்றிப் 10 ஆம் நூற்றாண்டில் பதிவேறியது. இந்த மூன்று சங்கங்கள் பற்றிய செய்திகளோடு இசை, நாடகத் தமிழ் நூல்களுக்கு முதன்மை தந்து விளக்கம் கூறும் நூல் சிலப்பதிகாரத்துக்கு அடியார்க்கு நல்லார் எழுதியுள்ள உரையில் சிலப்பதிகாரம் உரைப்பாயிரத்துக்கு அவர் தரும் உரையின் பகுதி ஆகும். இப்பகுதியில் இவர் தரும் செய்திகள் இவை. இடைச்சங்கத்தில் இருந்த புலவர்கள் தலைச்சங்கம் இடைச்சஙம் கடைச்சங்கம் இந்தத் தொகுப்பில் வரலாற்றுக்கு முரண்பாடான புலவர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இலக்கணம் இலக்கியம் இசைத்தமிழ் நூல்கள் நாடகத் தமிழ் நூல் கவனகம் கவனகம் என்பது ஒருவர் ஒரே வேளையில் ஒன்றிற்கு மேற்பட்ட செயல்களில் தனது கவனத்தைக் குவிக்கும் நினைவாற்றல் கலை ஆகும். இதனை வடமொழியில் "அவதானம்" என்பர். இக்கலையை நிகழ்த்தும் கலைஞர் கவனகர் எனப்படுகிறார். இவரை வடமொழியில் "அவதானி" என்பர். ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படும் செயல்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கவனகம் வகைப்படும். அவை வருமாறு: கதிரியலில் வெப்பம் கதிரியலில் வெப்பம் ("Heat in radiology") என்ற கருத்துரு, எக்சு-கதிர்க் குழாயில் வேக வளர்ச்சி பெற்ற எலக்ட்ரான்கள் நேர்முனையிலுள்ள இலக்கைத் தாக்கும் போது, எலக்ட்ரான்களின் ஆற்றலில் 99% வெப்பமாகவும் மீதமுள்ள 1% எக்சு கதிர்களாகவும் வெளிப்படுவதையும், இலக்கில் தோன்றும் வெப்பம் உடனுக்குடன் அகற்றப்படாவிடில் இலக்கு அதிக வெப்பத்தால் உருகிவிடக் கூடும் என்பதையும், எனவே வெப்பம் அகற்றப்பட வேண்டுவது கட்டாயமாகும் என்பதையும் குறிப்பிடுகிறது. முதலில் இலக்கில் தோன்றும் வெப்பத்தின் ஒருபகுதி நேர்முனைத் தண்டினால் குழாயினுக்கு வெளியே கடத்தப்படுகிறது. மறுபகுதி கதிர் வீச்சு (Radiation) மூலம் குழாய் சுவற்றினை அடைகிறது. அங்கு வெப்பக் கடத்தல்முறையில் கூண்டிலுள்ள எண்ணெயை அடைகிறது. வெப்பச் சலனம் காரணமாக எண்ணெய் முழுவதும் வெப்பம் சீராகப் பரவி பின்பு கடத்தல் மூலம் கூண்டிற்கு வெளியே பரவுகிறது. குளிர்ந்த காற்றை வேகமாக செலுத்துவது, நீரை பயன்படுத்துவது என்று பிற முறைகளுள்ளன. இவ்வாறு அதிக வெப்பத்தால் கருவி பழுதாகாமல் காக்கப்படுகிறது. ஏ. கே. எஸ். விஜயன் ஏ. கே. எஸ். விஜயன் (ஆங்கிலம்:A.K.S. Vijayan) (பிறப்பு 15 டிசம்பர், 1961) இந்தியாவின் நாகப்பட்டிணம் தொகுதியில் இருந்துதிராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மூன்று முறை வெற்றி பெற்று மக்களவையில் உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.நாகப்பட்டிணம் மாவட்டதி.மு.க செயலாளராக பணியாற்றியுள்ளார். தற்போது திமுகவின் விவசாய அணி செயலாளராக உள்ளார். நீல்சு போரின் கோட்பாடு நீல்சு போரின் கோட்பாடு ("Neils Bohr's principle") அடிப்படையான கோட்பாடாகும். அணுக்கருவைச் சுற்றி பல வரையறுக்கப்பட்ட சுற்றுப் பாதைகளில் எலக்ட்ரான்கள் தொடர்ந்து சுற்றி வருகின்றன. போரின் கோட்பாட்டின்படி, சர்க்கரைக்கட்டி மலை, பிரேசில் சுகர்லோப் மலை ("Sugarloaf Mountain", போர்த்துகல்: "Pão de Açúcar", தமிழில் "சர்க்கரைக்கட்டி மலை" என்று அர்த்தம்) என்பது பிரேசிலில் ரியோ டி ஜனேரோவில் அமைந்துள்ள சிகரமாகும். இது அத்திலாந்திக்குப் பெருங்கடலில் உள்ள தீபகற்பத்தின் குவான்பராக் குடாவின் வாய்ப்பகுதியில் அமைந்துள்ளது. துறைமுகத்திலிருந்து 396 மீட்டர் (1,299 அடி) உயரத்திலுள்ளது. இதன் அமைப்பு சர்க்கரைக்கட்டி அமைப்பில் இருப்பதால் இதன் பெயர் "சர்க்கரைக்கட்டி மலை" எனும் அர்த்தத்தில் அமைந்துள்ளது. ஒரு கண்ணாடிச்சுவர் கேபிள்கார், 20 நிமிடங்களுக்கு ஒரு முறை மலைச்சிகரங்களை சுற்றி இயங்கும். கிரானைட் மற்றும் குவார்ட்ஸ் போன்ற கனிமங்களால் உருவானது இந்த மலை. இது உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரபலமான மலையேறும் இடங்களில் ஒன்றாகும். இது பிரேசில் நாட்டில் மிக பிரசித்திப்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். உலகின் பல நாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள், இதுவரை 37 மில்லியன் மக்கள் இந்த இடத்திற்கு வந்து சென்றுள்ளார்கள். மேம்படுத்தப்பட்ட புஜித்தா ஒப்பளவு மேம்படுத்தப்பட்ட புஜித்தா ஒப்பளவு ("Enhanced Fujita scale") அல்லது ஈஎப் ஒப்பளவு ("EF scale") ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும் சுழல் காற்றுக்களின் வலிமையை அவை ஏற்படுத்தும் சேதங்களைக் கொண்டு மதிப்பிடுவதாகும். தெத்துசுயா தியோடர் புஜித்தா 1971இல் அறிமுகப்படுத்திய புஜித்தா ஒப்பளவிற்கு மாற்றாக அமெரிக்காவில் பெப்ரவரி 1, 2007இலும் கனடாவில் ஏப்ரல் 18, 2013இலிருந்தும் இது செயற்பாட்டுக்கு வந்தது. புஜித்தா ஒப்பளவைப் போன்றே அடிப்படை வடிவமைப்பைக் கொண்டுள்ளது: சூன்யத்திலிருந்து சேதம் கூடக்கூட அடுத்த எண்ணாக ஐந்து வரையிலும் ஆறு வகைப்பாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன. முன்னதாக அகநிலையாகவும் தெளிவற்றும் இருந்தவற்றை மேம்பட்ட சீர்தரத்துடனும் தெளிவாகவும் இதில் வரையறுக்கப்பட்டுள்ளது. கீழ்வரும் ஆறு வகைகளில், சேதங்கள் உயரும் வரிசையில், ஈஎப் ஒப்பளவு பட்டியலிடப்பட்டுள்ளது. காற்றின் வேகமும் சேதங்களின் ஒளிப்பட காட்டுகளும் இற்றைப்படுத்தப்பட்டபோதும் சேத விவரங்கள் புஜித்தா ஒப்பளவை ஒட்டியே கொடுக்கப்பட்டுள்ளன. உண்மையான ஈஎப் ஒப்பளவு மதிபீட்டில் சேதக் குறியீடுகள் (எந்த வகையான கட்டமைப்பு சேதப்படுத்தப்பட்டுள்ளது) முக்கிய பங்காற்றுகின்றன. ஈஎப் ஒப்பளவில் தற்போது 28 சேதக் குறியீடுகளும் (டிஐ), அல்லது கட்டமைப்பு மற்றும் வனாந்தர வகைகளும், அவை ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு சேத மதிப்புநிலைகளையும் (டிஓடி) வரையறுக்கப்பட்டுள்ளன. நொசிகுறங்கு லிதிதோருகம் அல்லது லலிதோருகம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது மூன்றாவது கரணமாகும். கிளி மூக்கினைப்போல் கையை மடக்கி அவற்றை உட்புறமாக இருபக்கமும் வளைத்து, தொடைகளையும் வளைத்து நிற்கும் நிலை லலிதோருகமாகும். அபவித்தம் அபவித்தம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது நான்காவது கரணமாகும். சதுரஸ்ரமாக நின்று,கைகளைத் திருப்பிக் கொண்டு சமகாலத்தில் எடுத்து வைக்கப்பெற்ற சாரியைச் செய்து, கையையும் சுகதுண்டமாகச் செய்து தொடையின் பின்புறம் வைப்பதும், இடது கையைக் கடகாமுகமாகச் செய்து மார்பின் மேல் வைப்பது அபவித்தமாகும். சமநகம் சமநகம் அல்லது ஸமானதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது ஐந்தாவது கரணமாகும். கால்களை நகங்கள் நேராகத் தெரியும்படி வைத்து கொடிபோலத் துவண்டு தொங்குகிற கைகளுடன்,உடல் வளையாமலும் நிமிராமலும் இயல்பாக இருப்பது சமநகமாகும். கதிர்மூலம்-புறப்பரப்பு தொலைவு கதிர்மூலம்-புறப்பரப்பு தொலைவு (Source surface distance- SSD ) அல்லது கதிர்மூலம்-தோல் தொலைவு (Source -skin distance) ; தொலைக் கதிர் மருத்துவத்தில் கதிர் மூலம் பொதுவாக 80 முதல் 100 செ.மீ. தொலைவில் இருக்கும். இத் தொலைவு கோபால்ட் கருவியானால் அதன் கீழ்பகுதியிலிருந்து நோயாளியின் தோல் பகுதிவரை தேர்ந்த தொலைவு இருக்குமாறு ஒளித்தொலைவு காட்டி (Optical distance indicator ) மூலம் அல்லது அதற்குண்டான அளவுகோல் துணையுடன் அளந்து பெறலாம். நேர்கோட்டு வேக வளர்த்தியானால் (Clinac) இலக்கிலிருந்து இத்தொலைவு அளவிடப்படுகிறது. இவ்வளவு மிகத் துல்லியமாக அளவிடப்பட வேண்டியது மிக மிக முக்கியமாகும். இவ்வளவில் ஏற்படும் பிழை புற்றுத் திசுவில் ஏற்பளவினை பாதிக்கும். ஆனைக்கோட்டை தொல்லியல் களம் ஆனைக்கோட்டை தொல்லியல் களம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண நகருக்கு வடமேற்கே ஆறு மைல் தொலைவில் நாவாந்துறை கடற்பகுதிக்கு அண்மையில் அமைந்துள்ளது. இங்கு இரண்டு சதுர மைல் பரப்பில் ஆறு குடியிருப்பு மையங்களும், இரண்டு ஏக்கர் பரப்பில் பெருங்கற்கால ஈமச்சின்னங்களும் அடையாளங் காணப்பட்டுள்ளன. 1980களின் ஆரம்பத்தில் நடத்தப்பட்ட மேற்பரப்பு ஆய்வுகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் களங்களில் ஆனைக்கோட்டை தொல்லியல் களமும் ஒன்று. இங்கே காணப்பட்ட பெருங்கற்காலத் திட்டுக்கள் பல அயலில் உள்ள தாழ்வான பகுதிகளை நிரப்பி வீடமைக்கும் திட்டத்துக்காக மண் அள்ளப்பட்டதனால் குழப்பப்பட்டு இருந்தது. பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட ஆய்வுக்கொடை மூலம், அப்பல்கலைக்கழகத்தின் வராலாற்றுத் துறையினர் ஆனைக்கோட்டையில் அகழ்வாய்வுகளை மேற்கொண்டனர். பேராசிரியர். கா. இந்திரபாலா, பேராசிரியர் சி. க. சிற்றம்பலம், முனைவர். பொ. இரகுபதி ஆகியோர் பல்கலைக்கழக மாணவர்களின் உதவியுடன் இந்த ஆய்வுகளை நடத்தினர். இங்கே ஒரு அடக்கக் குழியும் பல தொல்பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டன. அடக்கக் குழிக்குள் காணப்பட்ட எலும்புக்கூட்டின் மண்டையோட்டுக்கு அருகில் காணப்பட்ட மட்பாண்டம் ஒன்றில் காணப்பட்ட பொருட்களுள் "ஆனைக்கோட்டை முத்திரையும்" ஒன்று. லீனம் லீனம் அல்லது ஸமானதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது ஆறாவது கரணமாகும். கழுத்தையும் தலையையும் முன்பக்கம் நீட்டி வளைக்கப்பட்ட தோல்பட்டையோடு பதாகாஸ்தத்தை மார்பின் நேரே பிடிப்பது லீனமாகும். ஸ்வஸ்திக ரேசிதம் ஸ்வஸ்திகரேசிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது ஏழாவது கரணமாகும். ஸ்வஸ்திககரத்தை வீசியும்,இடுப்பில் வைத்தும் நடிப்பது ஸ்வஸ்திகரேசிதமாகும். கதிர்மூலம் அச்சுத் தொலைவு கதிர்மூலம்- அச்சுத் தொலைவு ("Source- axis distance-SAD") என்பது தொலைக்கதிர் மருத்துவத்தின் போது கதிர்மூலத்திற்கும் கருவியின் சுழல் அச்சிற்கும் உள்ளத் தூரமாகும். கதிர்புலத்தின் மைய அச்சு கருவியின் சுழல் அச்சு, நோயாளி இருக்கும் மேசையின் சுழல் அச்சு ஆகிய மூன்றும் ஒரே புள்ளியில் கூடுகின்றன. இப்புள்ளி "ஒரேமையப்புள்ளி" (Isocenter ) எனப்படுகிறது. கதிர் மூலத்திற்கும் ஒரேமையப் புள்ளிக்கும் இடைப்பட்ட தூரம் கதிர்மூலம் அச்சுத் தொலைவு எனப்படுகிறது. ஒரேமையப் புள்ளியில் புற்று இருக்குமாறு செய்து சுழல் மருத்துவம், வில் மருத்துவம் போன்ற முறைகளை எளிதில் மேற்கொள்ளலாம். மண்டல ஸ்வஸ்திகம் மண்டல ஸ்வஸ்திகம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது எட்டாவது கரணமாகும். சதுரஸ்ரகாலில் நின்று, முன்நோக்கி உத்வேஷ்டித வர்த்தனையாற் சென்று ஊர்த்துவமண்டலி வர்த்தனையால் ஸ்வஸ்திகம் அமைய நடிப்பது மண்டல ஸ்வஸ்திகமாகும். நிருட்டகம் நிருட்டகம் அல்லது நிருட்டகம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது ஒன்பதாவது கரணமாகும். தோளுக்கும் தலைக்கும் இடையில் கைகளைத் தூக்கியும் தாழ்த்தியும், கால்களையும் அவ்வாறே செய்தலும், கைகளால் செய்யப்பெறும் நிருட்டகம் அலபல்லவ முத்திரையோடு கூடிய கையில் சிறுவிரலைத் தூக்குதலும், தாழ்த்தலுமாகிய முறையும், கால்களுக்கோ உத்கடித பாதத்தால் அடையாளம் செய்யப் பெற்ற முறையில் நிற்பது நிருட்டகமாகும் அர்த்த நிகுட்டகம் அர்த்த நிகுட்டகம் அல்லது அர்தத நிகுட்டம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது பத்தாவது கரணமாகும். கைகளைச்சிரத்தின் மேல் வைத்து, கைகளை விரலுக்கு விரல் நேராகக் குவித்து, பாதி வளைய இருப்பது அர்த்த நிகுட்டகமாகும் கடிச்சின்னம் கடிச்சின்னம் அல்லது கடிச்சன்னம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது பதினொராவது கரணமாகும். வண்டு போன்ற சாரியால், இருபக்கமும் சுழன்று, மண்டல ஸ்தானத்தில் நின்று, தோள்பட்டையின் உச்சியில் பல்லவ முத்திரைக் கையை வைத்தலாம் கடிச்சின்னமாகும் அர்த்தரேசிதகம் அர்த்தரேசிதகம் அல்லது அர்த்த ரேசிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது பனிரெண்டாவது கரணமாகும். அலபத்ம முத்திரையோடு கூடிய இரு கைகளையும் சுழற்றி இடது பக்கம் இடக்கையைச் சூசிஹஸ்தமாக நீட்டி, கால்களைச் சிறிது பார்சுவமாக வளைப்பது அர்த்தரேசிதகமாகும் வக்ஷஸ்வஸ்திகம் வக்ஷஸ்வஸ்திகம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது பதிமூன்றாவது கரணமாகும். கால்களை ஸ்வஸ்திகமாக வைத்து, கைகளையும் மார்பிற்கு மேல் ஸ்வஸ்திகமாக வைப்பது வக்ஷஸ்வஸ்திகமாகும் உன்மத்தம் உன்மத்தம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது பதிமூன்றாவது கரணமாகும். கால்களைத் தொட்டிபோல் வளைத்து கைகளையும் நன்றாக நீட்டி, மணிக்கட்டிலிருந்து முன்கையைத் தொங்கவிட்டு நடிப்பது உன்மத்தமாகும் ஸ்வஸ்திகம் ஸ்வஸ்திகம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டுக் கரணங்களில் இது பதிமூன்றாவது கரணமாகும். கை,கால்களைச் சுவத்திகம்போல அமைத்து நடிப்பது ஸ்வஸ்திகமாகும். திருவல்லவாழ் ஸ்ரீவல்லப கோயில் திருவல்லவாழ் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது திருவல்லா, ஸ்ரீவல்லப ஷேத்ரம் எனவும் அழைக்கப்படுகின்றது. கருடபுராணம், மத்ஸ்யபுராணம் போன்றவற்றில் இத்தலத்தைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இறைவர் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் திருவாழ்மார்பன், ஸ்ரீவல்லபன், கோலப்பிரான் என அழைக்கப்படுகிறார். இறைவி செல்வத் திருக்கொழுந்துநாச்சியார், வாத்சல்ய தேவி என அழைக்கப்படுகிறார். இத்தல தீர்த்தம் கண்டகர்ண தீர்த்தம், பம்பை தீர்த்தம் ஆகியனவாகும். இதன் விமானம் சதுரங்க கோல விமானம் எனும் அமைப்பைச் சேர்ந்தது. திருவண்வண்டூர் திருவண்வண்டூர் (Thiruvanvandoor Mahavishnu Temple) என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ளது. திருவமுண்டூர் என்றும் வண்வண்டூர் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலத்தின் இறைவன் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் பாம்பனையப்பன், கமலநாதன் என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார். இறைவி கமலவல்லி நாச்சியார். தீர்த்தம் பம்பை தீர்த்தம். விமானம் வேதாலய விமானம் எனும் அமைப்பைச் சேர்ந்தது. மகாபாரதத்தின் படி பஞ்ச பாண்டவர்கள் கேரள தேசத்திற்கு வந்தபோது மிகவும் சிதலமடைந்திருந்த இத்தலத்தை நகுலன் புதுப்பித்து சீர்படுத்தியதால் நகுலனால் உண்டாக்கப்பட்ட தலம் என்றே இப்பகுதியில் வழங்கப்படுகிறது. இத்தலம் வட்டவடிவான கருவறை அமைப்புடன் காணப்படுகிறது. நம்மாழ்வார் 10 பாசுரங்களில் இத்தலத்தினைப் பாடியுள்ளார். பிரசின உபநிடதம் பிரச்ன உபநிடதம் :- ‘பிரச்ன’ எனும் சமற்கிருத சொல்லுக்கு ‘கேள்வி’ என்று பொருள். இவ்வுபநிடதம் அதர்வண வேதத்தைச் சார்ந்தது. அறிவை அடைய விரும்பும் அறுவர் பிப்பிலாத முனிவரை அணுகி ஆறு கேள்விகள் கேட்டனர். எனவே இவ்வுபநிடதத்திற்கு பிரச்ன உபநிடதம் என்று பெயர் வழங்கலாயிற்று. இறையுணர்வில் நிலை பெற்ற ஆறு மாணவர்களான சுகேசன், சத்ய காமன், கார்க்கியன், கௌசல்யன், பார்க்கவன் மற்றும் கபந்தி ஆகியோர், வேள்விக்கான விறகுகளுடன், உலக உற்பத்தி, மனிதனை இயக்கும் சக்திகள், பிராணன் எவ்வாறு செயல்படுகிறது, ஓங்கார தியானம், ஆன்மா எங்குள்ளது என்பது பற்றி பிப்பிலாத முனிவரை அணுகி கேட்ட கேள்விகளால், இவ்வுபநிடதம் ஆறு அத்தியாயங்களாக உள்ளது. இவ்வுபநிடதம் பிரம்ம(ஆத்மவித்யா) மற்றும் ஓங்கார தியானத்தைப் பற்றியும் விரிவாக கூறுகிறது. அதர்வண வேதத்தில் இந்த உபநிடதம் இருப்பதால், அதர்வண வேதத்தின் சாந்தி மந்திரமே இவ்வுபநிடதத்திற்கும் பொருந்துகிறது. “பத்ரம் கர்ணேபி: ச்ருணுயாம தேவா:|...எனத் தொடங்கும், சாந்தி மந்திரத்தின் பொருள், தேவர்களே, செவிகளால் நல்லதைக் கேட்போமாக, கண்களால் நல்லதைப் பார்ப்போமாக, உறுதியான உறுப்புக்களுடன் வேதங்களால் உங்களை நாங்கள் புகழ்ந்து கொண்டு எவ்வளவு ஆயுள் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதோ அதை அனுபவிப்போமாக. ஓங்கிய புகழையடைந்த இந்திரன் எங்களுக்கு நன்மையை அருளட்டும். அனைத்தையும் அறிகின்ற சூர்ய தேவர் எங்களுக்கு நன்மையை அருளட்டும். தடையின்றிச் செல்லும் கருடதேவர் எங்களுக்கு நன்மையை அருளட்டும். பேரறிவுடைய பிரகசுபதி எங்களுக்கு நன்மையை அருளட்டும். ஓம் சாந்தி சாந்தி சாந்தி. (இங்கு சாந்தி என்ற சொல்லிற்கு தடைகள் நீங்கட்டும் என்று பொருள். இயற்கை, சூழ்நிலை, உடல் முதலிய மூன்று இடங்களிருந்து நமக்கு வரும் தடைகள் அமைதி அடைய வேண்டும். அதாவது நீங்கவேண்டும் என்று மும்முறை கூறப்படுகிறது). முதல் கேள்வியும் அதற்கான பதிலும்: உயிரினங்கள் எங்கிருந்து தோன்றின? பதில்: உயிரினங்களைப் படைக்கக் கடவுள் விரும்பினார். அதற்காகத் தவத்தில் ஈடுபட்டார். அதன்பின் வானத்தையும் பிராணனையும் படைத்து இந்த அனைத்து உலகங்களையும் அதனில் பொருத்தினார். உயிர்களை உற்பத்திச் செய்வதற்காக காற்று, நெருப்பு, நீர், பூமி படைத்தார். இரண்டாம் கேள்வியும் பதிலும்: மனிதனை இயக்குபவர்கள் யார் யார்? பதில்:வானம், காற்று, நெருப்பு, நீர், பூமி, பேச்சு, மனம், பார்வை, கேட்கும் திறன் ஆகிய தேவதைகளே மனிதனை இயக்குகின்றது. மூன்றாம் கேள்வியும் பதிலும்: பிராணன் எவ்வாறு செயல்படுகிறது? பதில்; பிராணன் ஆன்மாவிலிருந்து தோண்றுகிறது. மனிதனும் அவனுடைய நிழல் போல ஆன்மாவில் பிராணன் பரவியுள்ளது. மனதின் செயல்பாடுகளால் அது இந்த உடலில் வருகிறது. நான்காவதான கேள்வியில் ஐந்து துணைக் கேள்விகளும் அதற்கான பதில்களும் : மனிதன் எத்தனை நிலைகளில் இருக்கிறான் அதன் தன்மைகள் என்ன? பதில்: ஒரு மனிதன் மூன்று நிலைகளில் வாழ்கிறான். அவைகள் 1.உறக்க நிலை 2. விழிப்பு நிலை 3.கனவு நிலை. 1. உறக்க நிலையில் மனிதனின் புலன்கள் அனைத்தும் மனதில் ஒடுங்கிவிடுகிறது. அப்போது அவன் கேட்பதில்லை, பார்பதில்லை, முகர்வதில்லை, உணர்வதில்லை, சுவைப்பதில்லை, பேசுவதில்லை(அதாவது நினைவுடன்), மகிழ்வதில்லை. உறக்க நிலையில் பிராணசக்தியாகிய மூச்சுக்காற்று மட்டும் விழித்திருக்கின்றது. 2. கனவு நிலையில் ஒரு மனிதன் தன் பெருமையை தானே அனுபவிக்கிறான். விழிப்பு நிலையில் பார்த்தவைகள், கேட்டவைகள், அனுபவித்தவைகளை கனவு நிலையில் சில நேரங்களில் அனுபவிக்கிறான். கனவு நிலையில் காண்கின்ற மனிதர்களையும், மற்றவைகளையும் உண்மையில் இல்லை. மனமே அனைத்துமாகி மீண்டும் அவற்றை அனுபவிக்கிறது. 3. உறக்க நிலையில் இன்பத்தை அனுபவிப்பது யார் எனில், ஒளியால் ஆக்கிரமிக்கப்படுகின்ற மனமே இந்த இன்பத்தை அனுபவிக்கிறது. 4. ஒளியால் அடக்கப்படுகின்ற மனம் என்பது என்ன, என்பதற்கு உறக்க நிலையில் புலன்கள், மனம் ஆழ்மனம் ஆகியவைகள் ஒடுங்கி விடுவதால், இங்கே வெளி உலக அனுபவங்கள் மற்றும் மனவுலக அனுபவங்களான கனவுகளும் இல்லை. மேலும் புத்தி சித்தம் கூட ஒடுங்கி விடுகிறது. ஆனால் “நான்” என்ற உணர்வு மட்டும் விழித்து இருக்கிறது. ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்ததும் ஆனந்தமாகக் உறங்கினேன் என்கிறான். இங்கு மனம் உணர்வுத் திரளில், உணர்வுக் குவியலில் ஒடுங்கி விடுகிறது என்று பொருள். 5. அனைத்திற்கும் ஆன்மா ஆதாரமாக எவ்வாறு செயல்படுகிறது என்ற கேள்விக்கு, பிப்பலாத முனிவர் கூறுகிறார்: கர்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள், மனம், அறிவு, சித்தம், “நான்” என்ற உணர்வு, பிராணன் ஆகிய அனைத்தும் ஆன்மாவில் அடங்கி விடுகிறது. 6. ஐந்தாவது கேள்வியை சத்யகாமன் என்ற மாணவன், ஓங்காரத்தின் பெருமை மற்றும் ஓங்கார மந்திரத்தை ஆழ்ந்து தியானிப்பவன் அடையும் நிலைப் பற்றி கேட்கிறான். பிப்பலாத முனிவரின் பதில்: இறைவனை குறிக்க ஒரு சொல் இருக்குமானால் அது ஓம் என்ற ஒலியே என்று பதஞ்சலி முனிவர் குறிப்பிடுகிறார். இறைவனை உருவ வடிவில் தியானிப்பவன் சாதாரண நிலையில் இருப்பவன். உயர்நிலையில் இருப்பவன் இறைவனை உருவமற்ற நிலையில் தியானிப்பவன். ஓங்கார மந்திரம் ’அ’ ‘உ’ ‘ம’ என்ற எழத்துக்களின் சேர்கையால் உருவானது. இதுதான் முதன்முதலாகப் படைக்கப்பட்ட மந்திரம். இந்த மந்திரத்தின் விரிவே காயத்திரி மந்திரம். ஓங்கார மந்திரத்தை தியானிப்பதால் உணர்வில் ஒளி பெறுகிறான், மனம் பலம் பெறுகிறது, இறுதியாக பிரம்மத்தில் ஐக்கியம் அடைகிறான். 7. ஆறாவதாக பரத்துவாசரின் மகன் சுகேசன், பிப்பிலாத முனிவரிடம் ’ஆத்மா’ வைப் பற்றி கேட்டதற்கு, ஆத்மா என்பது பிரம்மத்தின் பிரதிபிம்பமாக நம் இருதய குகையில் உள்ளது. ஆத்மாவிடமிருந்து உடலில் கர்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள், மனம், புத்தி, சித்தம், அகங்காரம், பிராணன், உயிர் என்ற 16 அம்சங்கள் தோண்றின. இந்த 16 அம்சங்களால் உருவான சட உடல் அழிந்தாலும் ஆத்மா அழிவதில்லை. எனவே ஆத்மாவை அறிந்து மரணத்தை வெல்லுங்கள் என்று கூறி முடிக்கிறார் பிப்பிலாத முனிவர். பைங்குடில் வளிமம் பைங்குடில் வளிமங்கள் அல்லது பைங்குடில் வாயுக்கள் என்பவை வளிமண்டலத்தில் உள்ள வெப்பக்கதிர்வீச்சைக் கொடுக்கும் அகச்சிவப்புக் கதிரை உறிஞ்சி, பின் வெளிவிடும் தன்மை கொண்ட வளிமங்களாகும். இவ்வாறு அவை வெப்பத்தை வெளியேற்றும்போது ஏற்படும் விளைவே பைங்குடில் விளைவு க்கான அடிப்படைக் காரணமாகும். பூமியின் வளிமண்டலத்தில் உள்ள முக்கியமான பைங்குடில் வளிமங்கள் நீராவி, காபனீரொக்சைட்டு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, ஓசோன், மற்றும் க்ளோரோஃப்ளூரோகார்பன்கள் ஆகியவையாகும். நம்முடைய சூரிய மண்டலத்தில், வெள்ளி, செவ்வாய் மற்றும் டைடன் ()ஆகியவற்றின் வளிமண்டலங்களிலும் பைங்குடில் விளைவுகளுக்குக் காரணமான வாயுக்கள் உள்ளன. பைங்குடில் வளிமங்கள் புவி வெப்பத்தை அதிகமாக பாதிக்கிறது. அவை இல்லாமலிருந்தால், புவியின் மேற்பரப்பு வெப்பநிலை இப்போது உள்ளதைவிட சராசரி 33°செ (59°பா) குறைவாக இருக்கும். தற்போதைய மேற்பரப்பு சராசரி வெப்பநிலை ஏறக்குறைய 14 °செ (57 °பா) ஆகும் தொழில் புரட்சி தோன்றியதிலிருந்து தொல்படிவ எரிபொருட்கள் எரிக்கப்படுவதால் வளிமண்டலத்தில் உள்ள காபனீரொக்சைட்டின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளது. வளிமண்டலத்திலுள்ள காபனீரொக்சைட்டின் பெரும்பகுதி கார்பன் சுழற்சியின் மூலம் பயன்படுத்தப்பட்டாலும் கூட, வளிமண்டலத்தில் 40% காபனீரொக்சைட்டு செறிவு அதிகரித்துள்ளது. பைங்குடில் வளிமங்கள் வளிமண்டலத்தில் உள்ள கண்ணுக்குப் புலப்படும் ஒளி அலைகளையன்றி, அதிர்வெண் கூடிய வெப்பக்கதிர்வீச்சைக் கொடுக்கும் அகச்சிவப்புக் கதிரை உறிஞ்சி, பின் வெளிவிடும் தன்மை கொண்ட வளிமங்களாகும். புவியின் வளிமண்டலத்தில் அதிகளவில் இருக்கும் வரிசைப்படி பைங்குடில் வாயுக்கள் கீழே: இந்த வளிமங்களின் செறிவானது, இயற்கைச் சூழல் மண்டலம் மற்றும் மனிதனின் தொழிற்பாட்டால் ஏற்படும் வளிம வெளியேற்றத்திற்கும், வெவ்வேறு வேதிப்பொருட்களாக அந்த வளிமங்கள் மாற்றப்படுவதிற்குமான சமநிலையில் தங்கியிருக்கும். மனிதத் தொழிற்பாட்டால் ஒரு வளிம வெளியேற்றம் அதிகரிக்கும்போது, வளிமண்டலத்தில் குறிப்பிட்ட வளிமத்தின் செறிவும் அதிகரிக்கும். சில பைங்குடில் விளைவைத் தரக்கூடிய வளிமங்கள் இந்தப் பட்டியலில் குறிப்பிடப்படுவதில்லை. எடுத்துக்காட்டாக மிக உயர்ந்த புவி சூடாதலுக்கான தன்மையைக் கொண்டிருந்தாலும், மிகச் சிறிய அளவிலேயே வளி மண்டலத்தில் இருப்பதனால், அத் பட்டியலில் இணைக்கப்படவில்லை. வளிமண்டலத்தில் அதிகமாக உள்ள நைட்ரசன் (N2), ஆக்சிசன் (O2), ஆர்கான் (Ar), போன்ற வளிமங்கள் வேறு பல இயற்பியல், வேதியியல் தாக்கங்களில் பங்கெடுத்தாலும், பைங்குடில் விளைவைக் கொடுப்பதில்லையாதலால், அவை பங்குடில் வளிமங்களில் அடங்காதவையாகும். இது ஏனெனில், N மற்றும் O போன்ற ஒரே தனிமத்தின் இரு அணுக்களைக் கொண்டுள்ள மூலக்கூறுகள் மற்றும் ஆர்கான் போன்ற ஓரணு மூலக்கூறுகள் அதிரும்போது அவற்றின் இருமுனையியில் எவ்வித மாற்றமும் அடையாததால் கிட்டத்தட்ட முழுவதுமாக அகச்சிவப்பு ஒளியால் பாதிக்கப்படாததே காரணமாகும். இவை அகச்சிவப்புக் கதிரினால் எந்த மாற்றங்களுக்கும் உட்படாமல் இருப்பவையாகும். கார்பன் மோனாக்சைடு (CO), Hydrogen chloride (HCl) போன்றவை ஓரளவு அகச்சிவப்புக் கதிரை உறிஞ்சினாலும், இவற்றின் வினைதிறன் மற்றும் கரையுந்திறனால், வளிமண்டலத்தில் மிகக் குறுகிய காலம் மட்டுமே இருக்கும். இதனால் இவையும் பைங்குடில் வளிமங்களினுள் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இருந்தாலும், CO வானது வேறு வகையில் புவி சூடாதலில் பங்கெடுக்கின்றது. சில வளிமங்கள் பைங்குடில் விளைவை நேரடியாகக் கொடுக்கா விட்டாலும், மறைமுகமாக அந்த விளைவைக் கொடுக்கின்றன. பைங்குடில் வளிமம் இல்லாதிருப்பினும், முகில் அகச்சிவப்புக் கதிரை உறிஞ்சுவதால், கதிர்வீச்சு இயல்புகளைக் கொண்டிருந்து, பைங்குடில் விளைவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தைக் கொடுக்கின்றது. முகில்கள் வளிமண்டலத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் நீர்த் துளிகள் அல்லது பனிப்படிகங்களேயாகும் ஒரு வளிமத்தின் பைங்குடில் விளைவுக்கான பங்களிப்பானது, வளிமத்தின் பண்புகள், வளிமண்டலத்தில் அதன் அளவு, அதன் மறைமுகமான தாக்கங்களின் அளவு என்பதைப் பொறுத்தாகும். உதாரணத்திற்கு, ஒரு 20 ஆண்டுகள் காலவரையில், குறிப்பிட்ட திணிவு காபனீரொக்சைட்டைவிட, அதே திணிவுள்ள மீத்தேனின் கதிர்வீச்சத் திறன் 72 மடங்காகும். ஆனால் மீத்தேன் வளிமண்டலத்தில் குறுகிய காலமே நிலைத்திருப்பதனால், இதன் செறிவு குறைவாகவே இருக்கும். அதனால், இதன் பைங்குடில் விளைவுக்கான பங்களிப்பும் குறைவாகவே இருக்கும். ஆனாலும், மீத்தேனானது ஓசோன் உருவாக்கத்தில் பங்கெடுப்பதனால், மீத்தேனின் மறைமுகமான பைங்குடில் விளைவின் பங்களிப்பு மிக அதிகமாகவே இருக்கின்றது. இந்த மறைமுக பங்களிப்பின் காரணமாக, மீத்தேனின் தாக்கமானது முன்பு அறியப்பட்டைருந்ததை விட இரு மடங்காவது அதிகமாக இருக்கும் எனக் 2005 இல் கூறப்பட்டது. இந்த பைங்குடில் வளிமங்களை அவைகளின் மிக முக்கியமான பைங்குடில் விளைவுக்கான பங்களிப்பின் அடிப்படையில் வரிசைப்படுத்தும்போது, அவற்றின் வரிசை கீழ்வருமாறு இருக்கும் மேலே பட்டியலிடப்பட்டுள்ள முக்கியமான பைங்குடில் வளிமங்களுடன், ஸல்ஃபர் ஹெக்ஸாஃப்ளோரைடு, ஹைட்ரோஃப்ளோரோகார்பன்கள் மற்றும் பெர்ஃப்ளோரோகார்பன்கள் எனும் மற்ற பைங்குடில் வளிமங்களும் அடங்கும். ஐபிசிசி பைங்குடில் வாயுக்கள் பட்டியலையும் ) பார்க்கவும். புவி வெப்பமடைதல் சார்ந்த அர்ரேனியஸ் தேற்றத்தை விரிவுபடுத்திய அறிவியலறிஞர்கள், வளிமண்டலத்தில் உள்ள பைங்குடில் வளிமங்களின் செறிவு, சுற்றுச்சூழலுக்கும் மனித ஆரோக்கியத்திற்கும் கணிசமான அளவு தீங்கு விளைவிக்கும் அளவுக்கு முன்பு எப்போதுமில்லாத அளவில் புவி வெப்ப உயர்வுக்கு காரணமாகிறது என்கின்றனர். 19ஆம் நூற்றாண்டுப் பிற்பகுதியில் வாழ்ந்த அறிவியலறிஞர்கள் சோதனை மூலம் N மற்றும் O அகச்சிவப்பு கதிர்வீச்சை உறிஞ்சவில்லை (அக்காலத்தில் "இருண்ட வெப்பக் கதிர்வீச்சு" என அழைக்கப்பட்டது) என்றும் ஆவி மற்றும் மேக வடிவில், CO தண்ணீரும் வேறு பல வாயுக்களும் இப்பேற்பட்ட வெப்பக்கதிர்வீச்சை உறிஞ்சுகின்றன என்றும் கண்டுபிடித்தனர். 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வளிமண்டலத்தில் உள்ள பைங்குடில் வாயுக்கள், அவை இல்லாமலிருந்தால் பூமியின் வெப்பநிலை எவ்வளவு இருக்குமோ அதைவிட அதிகமாக பூமியின் ஒட்டுமொத்த வெப்பநிலை அதிகமாக இருப்பதற்கு காரணமாகின்றன என கண்டறிந்தனர். மனிதனால் தயாரிக்கப்பட்ட செயற்கை ஹாலோகார்பன்களைத் தவிர்த்துப் பார்த்தால், அநேகமான பைங்குடில் வளிமங்கள் இயற்கை மற்றும் மனிதனால் உருவான மூலப் பொருட்களிலிருந்து பெறப்பட்டவையாக இருக்கின்றன. தொழிற்சாலைகள் ஏற்படுவதற்கு முன்னாட்களான ஹோலோசீன் () காலத்தில், வளிமண்டலத்தில் இருந்த வளிமங்களின் செறிவு ஏறக்குறைய நிலையானதாக இருந்தது. தொழிற்புரட்சிக் காலத்தில், முக்கியமாக தொல்படிவ எரிபொருட்களை எரிப்பதன் மூலமாகவும் மற்றும் காடுகளை அழிப்பதன் மூலமாகவும், மனிதச் செயல்கள் வளிமண்டலத்தில் உள்ள பைங்குடில் வளிமங்களின் அளவைக்கூட்டியுள்ளன. IPCC ஆல் தொகுக்கப்பட்ட 2007ஆம் ஆண்டின் நான்காம் மதிப்பீட்டு அறிக்கை (AR4) "வளிமண்டலத்தில் உள்ள பைங்குடில் வளிமங்கள், வளிமத் தொங்கல்கள் (Aerosols), பூமியை மூடியுள்ள பரப்பு மற்றும் சூரிய வெப்பக் கதிர்வீச்சு ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள், காலநிலையின் சமநிலைத் தன்மையை மாற்றிவிடுகின்றன" எனக் குறிப்பிடுவதுடன், "20ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்திலிருந்து ஏற்பட்டுள்ள கணிசமான சராசரி புவி வெப்ப உயர்வுக்கு முக்கிய காரணமாக, மனிதச்செயலால் நிகழ்ந்த பைங்குடில் வளிமங்களின் செறிவின் கூடுதல் அமைகிறது" என்ற முடிவுக்கும் வந்துள்ளது. AR4ல், "கணிசமான" என்பது 50%க்கு மேற்பட்டதென வரையறுக்கப்பட்டுள்ளது. ஆய்வு செய்யப்பட்ட பனி உள்ளகங்கள், கடந்த 800,000 ஆண்டுகளுக்கும் மேலாக பைங்குடில் வளிமங்களில் செறிவின் ஏற்பட்ட மாற்றங்களைக் எடுத்துக்காட்டும் சான்றுகளைத் தந்திருக்கின்றன. பனிக்கட்டி உள்ளக ஆய்வு முடிவுகளின்படி, உறைபனி மற்றும் உறைபனிப் படலங்களுக்கு இடையில் காணப்படும் , ஆகிய பைங்குடில் வளிமங்களின் செறிவில் வேறுபாடு காணப்படுகின்றது. இவ்விரு வளிமங்களின் செறிவும் வெப்பநிலையோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. பனிக்கட்டி உள்ளக ஆய்வு முடிவுகளால் பதிவு செய்யப்பட்ட விபரங்கள் தவிர, அதற்கு முன்னரான காலத்தைப் பற்றி அறிய நேரிடையான புள்ளிவிவரம் ஏதும் இல்லை. இதில் கூறப்பட்டுள்ள பதிவுகளின்படி, கடந்த 250 ஆண்டுகளில் ஏற்பட்ட CO செறிவு அதிகரிப்பைத் தவிர்த்துப் பார்த்தால், கடந்த 800,000 ஆண்டுகளாக CO இன் மோல் பின்னம் 180 ppm இலிருந்து 280 ppm என்ற வீச்சு எல்லைக்குள்ளேயே இருந்ததாக நம்பப்படுகின்றது. இருப்பினும், பல்வேறு மாதிரியமைப்புக்கள் மூலம் பெறப்பட்ட பதிவுகள், 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் தற்போதுள்ள நிலையைவிட ஓரளவு 10 மடங்கு அதிகமாக இருந்ததாகக் கூறுகின்றன. உண்மையில், ஃபனரோசோயிக் () எனப்படும் பேரூழிக் காலத்தின் () அதிக பகுதியும் செறிவு கணிசமான அளவில் அதிகமாக இருந்ததாகக் கூறப்படுகின்றது. இந்தப் பேரூழிக் காலத்தில் அடங்கும் மெசோசோயிக் () எனப்படும் ஊழிக் காலத்தில் () தற்போது இருப்பதைவிட நான்கிலிருந்து ஆறு மடங்கு அதிக செறிவு இருந்ததாகவும், பலேயோசோயிக் () ஊழிக் காலத்தின் முற்பகுதியில் இருந்து டெவோனியன் () ஊழிக் காலத்தின் நடுப்பகுதிவரை, தற்போது உள்ளதைப்போல் பத்திலிருந்து பதினைந்து மடங்கு அதிக செறிவு, இருந்ததாகவும் கூறப்படுகின்றது.. நிலத் தாவரப் பரவல் டெவோனியன் காலத்தின் பிற்பகுதியில் செறிவினைக் குறைத்ததாகக் கருதப்படுகிறது. செறிவினை அதிகரிக்கவும், குறைக்கவும் இந் நிலத் தாவரங்கள் செயல்படுவதனால், தாவரச்செயல்பாடுகள் செறிவில் நிலையான பின்னூட்டம் அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இன்னும் முன்னதாக, ஒரு 200-மில்லியன் ஆண்டு இடைக்காலத்தில், மிகப்பெரிய அளவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பிலிருந்து வெளிப்பட்ட வளிமங்களினால், செறிவில் ஏற்பட்ட 12% சடுதியான அதிகரிப்பானது, புவி நடுக்கோட்டுக்கு அருகேவரை வந்திருந்த பரவலான உறைபனிப்பரவலை திடீரென முடிவுக்கு வந்ததாகத் நம்பப்பப்டுகின்றது. இதனால் உச்ச அளவில் பைங்குடில் விளைவு நிலைமைகள் ஏற்பட்டதாகவும், நாளொன்றுக்கு 1 மி.மீ. என்ற வீதத்தில் சுண்ணக்கல் வடிவில் கார்பனேட் படிவுகள் ஏற்பட்டதாகவும் அறியப்படுகின்றது. இந்நிகழ்வு ப்ரிகேம்ப்ரியன் எனப்படும் பேரூழிக்காலத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, அதனைத் தொடர்ந்த ஃபனரோசோயிக் எனும் சூடான பேரூழிக் காலத்திற்குள் வந்தது. இக்காலத்திலேயே, பல்கல விலங்குகளும் தாவரங்களும் தோன்றின எனக் கூறப்படுகின்றது. அதற்குப் பின்னர், அந்நிகழ்வுடன் ஒப்பிட்டுக்கூறும் அளவுக்கு எரிமலை வெடிப்பு வெளிப்பாடு இருக்கவில்லை. தற்காலத்தில், எரிமலைகளிலிருந்து வளிமண்டலத்துக்கு உமிழப்படும் செறிவானது, மனித இனத்தால் வளிமண்டலத்துக்கு வெளிப்படுத்தப்படும் செறிவின் 1% மட்டுமே எனக் கூறப்படுகின்றது. ஏறக்குறைய 1750ஆம் ஆண்டிலிருந்து மனிதச்செயல் காபனீரொக்சைட்டுடன், ஏனைய பைங்குடில் வளிமங்களின் செறிவினை அதிகப்படுத்தியுள்ளது. தற்போது வளிமண்டலத்தில் உள்ள காபனீரொக்சைட்டின் செறிவு, தொழிற்துறை காலத்திற்கு (pre-industrial) முன்னராக இருந்ததைவிட தற்போது காபனீரொக்சைட்டின் செறிவு 100 ppm அதிகமாக உள்ளது. மனிதச்செயல் மூலம் கிடைக்கும் காபனீரொக்சைட்டைவிட இயற்கையாகக் கிடைக்கும் காபனீரொக்சைட்டு 20 மடங்கு அதிகம், ஆனால் சில ஆண்டுகளில் பொதுவாக அதிகரித்த காபனீரொக்சைட் செறிவானது, இயற்கை மூலங்கள், தாவரங்கள் மற்றும் கடல்வாழ் மிதவைவாழிகள் போன்றவற்றின் ஒளிச்சேர்க்கையால் நிகழும் கார்பன் கூட்டுப்பொருள் தயாரிப்பு போன்ற செயற்பாடுகளால் குறைக்கப்பட்டு சமநிலையாக்கப்படும். இச்சமநிலையின் விளைவாக, அதிகபட்ச உறைபனி காலத்தின் முடிவிற்கும், தொழிற்துறைக் காலத்தின் தொடக்கத்திற்கும் இடையிலான கிட்டத்தட்ட 10,000 ஆண்டுகளுக்கு காபனீரொக்சைட்டின் செறிவு 260ppm இற்கும், 280ppm இற்கும் இடையில் இருந்து வந்தது. பைங்குடில் வளிமங்களின் அளவினை அதிகரிப்பது போன்ற, மனிதச் செயல் மூலமான சூடேற்றல், பல இயற்பியல் மற்றும் உயிரியல் அமைப்புகளில் கவனிக்கத்தக்க விளைவினை ஏற்படுத்தியுள்ளது. இந்த புவி சூடாதலானது பல வேண்டத்தகாத விளைவுகளை எதிர்காலத்தில் ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகின்றது. கடல்மட்டம் உயர்தல், அதிகளவு பாதிப்புத் தரும் காலநிலை நிகழ்வுகள் நடைபெறுவதுடன், அவை அதிகளவிலும் நிகழ்தல், உயிரியல் பல்வகைமை இழப்பு, வேளாண்மை உற்பத்தியில் வீழ்ச்சி போன்ற பல பாதிப்புக்கள் ஏற்படலாம் என எதிர்வு கூறப்படுகின்றது. புதியநீர் ஆதாரங்கள், தொழிற்சாலை, உணவு மற்றும் உடல் நலன் போன்ற பல்வேறு விஷயங்களை சூடேற்றுதல் பாதிப்பதாக அமைகிறது. மனிதச் செயலால் விளையும் பைங்குடில் வளிமங்களின் முக்கிய மூலங்களாவன: தொல்படிவ எரிபொருள் எரிப்பதன் மூலம் கிடைக்கும் க்கான மூலங்கள் ஏழு, 2000–2004 ஆம் ஆண்டுகளில் அவற்றின் பங்களிப்பின் சதவீதத்தின் அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: ஐக்கிய அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் (EPA) பைங்குடில் வளிமங்களைப் பயன்படுத்தும் பிரிவுகளில் கீழ்க்குறிப்பிட்டுள்ளவற்றை வரிசைப்படுத்தியுள்ளது: தொழிற்சாலை, போக்குவரத்து, தங்குமிடம், வணிகம் மற்றும் விவசாயம். தனிபட்ட நபரின் பைங்குடில் வளிம வெளியேற்றத்திற்கான முக்கிய மூலங்களாக சூடேற்றுதல், குளிரூட்டுதல், மின் உபயோகம் மற்றும் போக்குவரத்து ஆகியவை அடங்கும். வீட்டு கட்டும்போது, கட்டட அமைப்பில் கடத்தாப் பொருள்கள் பயன்பாட்டை அதிகரித்தல், புவிவெப்ப உறிஞ்சு குழல்கள் மற்றும் குறுகிய ஒளிர் விளக்குகளை பொருத்துதல், மற்றும் ஆற்றல் சேமிக்கும் திறன்கொண்ட வாகனங்களைத் தேர்ந்தெடுத்தல் ஆகியவை, அதனையொத்த பாதுகாத்தல் முறைகளில் அடங்கும். காபனீரொக்சைட்டு, மீதேன், நைட்ரஸ் ஆக்சைடு மற்றும் புளோரின் கலந்த வளிமங்கள் (கந்தக ஹெக்சாஃப்ளோரைடு (SF), ஐதரோஃப்ளூரோகார்பன்கள் (), பெர்ஃப்ளூரோகார்பன்கள் ()) ஆகியவை மனிதச் செயற்பாட்டால் வெளிவிடப்படும் முக்கிய பைங்குடில் வளிமங்களாகும். இந்த வளிமங்களின் அளவு 2005ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த Kyoto Protocol international treaty யின் கீழ் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயற்சிக்கப்படுகின்றது. க்ளோரோஃப்ளூரோகார்பன்கள் () பைங்குடில் வளிமங்களாக இருப்பினும், அவை புவி வெப்பத்திற்கான நேரடிப் பங்களிப்பைவிட ஓசோன் குறைவுக்கு காரணமாக அமைவதனால், அதனைக் கட்டுப்படுத்தும் சீர்முறை Montreal Protocol இன் கீழ் வருகின்றது. ஊடகங்கள் ஓசோன் இழப்பினையும், பைங்குடில் விளைவினால் ஏற்படும் புவி சூடாதலையும் சேர்த்துக் குழப்பிக் கொண்டாலும், ஓசோன் இழப்பின் பங்கு இங்கு குறைவாகவே இருக்கின்றது என்பதைக் கருத்தில் கொள்ளல் வேண்டும். 2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7ஆம் நாள், ஐக்கிய அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் () "பைங்குடில் வளிமங்கள் பொது சுகாதாரத்தையும் அமெரிக்க மக்களின் நலனையும் பயமுறுத்துகிறது" எனக்கூறி, பைங்குடில் வளிமங்கள் பற்றிய சில கண்டுபிடிப்புகளை வெளியிட்டது. இக்கண்டுபிடிப்பு கையோடோ ப்ரோடோகாலில் குறிப்பிடப்பட்டுள்ள ஆறு பைங்குடில் வளிமங்களுக்கும் பொருந்தும்: காபனீரொக்சைட்டு, மீதேன், நைட்ரஸ் ஆக்சைடு, ஹைட்ரோஃப்ளுரோகார்பன்கள், பெர்ஃப்ளுரோகார்பன்கள், மற்றும் கந்தக ஹெக்சாஃப்ளோரைடு என்பவையே அந்த ஆறு பைங்குடில் வளிமங்களுமாகும். நீராவியானது பைங்குடில் விளைவில் முக்கிய பங்காற்றுகின்றது. இது முகில்களற்ற தெளிவான வானம் இருக்கையில் 36% முதல் 66% வரையான பைங்குடில் விளைவுக்கும், முகில்கள் இருக்கையில், 66% முதல் 85% வரையான பைங்குடில் விளைவுக்கும் காரணமாவதாக அறியப்பட்டுள்ளது. நீராவியின் செறிவு இடத்திற்கிடம் மாறுபட்டாலும், மனிதச் செயற்பாட்டால் நீராவியின் அளவில் பெரிய மாற்றம் ஏற்படுவதில்லை. நீர்ப்பாசன நிலங்கள் போன்ற ஒரு சில இடங்களில் மட்டுமே நீராவியின் இடம்சார் செறிவு மனிதச் செயற்பாட்டால் சிறிது மாற்றமடையலாம். வளிமண்டல நீராவியின் செறிவு மிகவும் மாறுபட்டுக் கொண்டிருக்கும். இந்த மாறுபாட்டுக்கு முக்கிய காரணம் வெப்பநிலையாகும். மிகவும் குளிரான இடங்களில்/நேரங்களில் நீராவியின் செறிவு மிகவும் குறைவாகவும், வெப்பநிலை கூடிய இடங்களில்/நேரங்களில் நீராவியின் செறிவு அதிகமாகவும் இருக்கும். குளிர் இடங்களில் 0.01 % வரையும், வெப்பநிலை 32C யில் நிரம்பல் நிலையில் இருக்கும் வளிமத்தில், 3 % வரையும் நீராவியின் செறிவு இருக்க முடியும். இருப்பினும்,மேக மூட்டத்தாலான பைங்குடில் விளைவால் ஏற்படும் வெப்பம், பகுதியாகவாவது, பூமியின் எதிரொளிதிறன் மாற்றத்தால் மட்டுப்படுத்தப்படுகிறது. NASA கூற்றின்படி, "வளிமண்டலத்தில் மேகங்கள் இல்லாமல் இருப்பின் அமையும் வெப்பநிலையைவிட அனைத்து மேகங்களாலும் ஏற்படும் விளைவால் பூமியின் மேற்பரப்பு குளிர்ச்சியாக உள்ளது." ({0}NASA மேகங்களும் வெப்பக்கதிர்வீச்சும்{/0} தொகுப்பிலிருந்து). சுற்றுச்சூழல் உடல்நல மைய தேசிய பாதுகாப்பு குழுவின் கூற்றுப்படி, நீராவி வளிமண்டலத்தில் 2% உள்ளது. காபனீரொக்சைட்டு, மீத்தேன் பல ஆண்டுகள் கூட வளிமண்டலத்தில் நிலைத்திருக்கையில், நீராவி மூலக்கூறுகள் ஒரு சில நாட்கள், சராசரியாக 9 நாட்கள், மட்டுமே வளிமண்டலத்தில் இருக்கும். நீராவியானது ஏனைய பைங்குடில் வளிமங்களின் அளவினை மாற்றுவதில் தொடர்புடையதாக இருக்கும். க்ளாசியஸ்-க்ளாபெய்ரான் தொடர்பு (), காற்று சூடாகும்போது, ஓரலகு கனவளவில் அதிக நீராவியை தக்கவைத்துகொள்ள முடியும் என நிறுவியுள்ளது. இதுவும் மற்ற அடிப்படைக் கருத்துக்களும், சாரீரப்பதன் மாறாமல் இருக்குமாயின் மற்ற பைங்குடில் வளிமங்களின் செறிவு அதிகரிக்கும்போது ஏற்படும் வெப்பம் காரணமாக, நீராவியின் செறிவையும் அதிகரிக்கும் என்பதைக் குறிக்கிறது. நீராவியும் ஒரு பைங்குடில் வளிமமாக இருப்பதனால், அது வெப்பநிலை மேலும் அதிகரிக்கும். வெப்பமாதல் போக்கு மேலும் வெப்பமாக்குதலில் முடியும்போது, அம்முறையானது "நேர் பின்னூட்டம்" என குறிப்பிடப்படுகிறது; அதாவது மூல வெப்பத்தை அதிகரிக்கிறது. வெப்பமாதல் போக்கு குளிர்விப்பதில் முடியுமாயின், அம்முறையானது "எதிர் பின்னூட்டம்" எனக் குறிப்பிடப்படுகிறது; அதாவது மூல வெப்பத்தைக் குறைக்கிறது. நீராவி ஒரு பைங்குடில் வளிமமாக இருப்பதாலும், குளிர்காற்றைவிட வெப்பக்காற்று அதிக நீராவியைத் தக்கவைத்துக்கொள்ளமுடியும் என்பதாலும், முக்கியமான நேர் பின்னூட்ட விளைவில் நீராவி பங்கேற்கிறது. வேறு சில எதிர் பின்னூட்டம் கொடுக்கும் செயற்பாடுகள், இதற்கு எதிராகச் செயற்படுவதனால், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் புவியின் வெப்பச் சராசரியை அதிகரிக்காமல் வைத்திருக்கின்றது. எனவே புவி வெப்பச் சராசரியானது, ஒரு புதிய அளவில் நிலைப்படுத்தப்படுகின்றது. (முக்கியமான ஒரு எதிர் பின்னூட்டமானது, அகச்சிவப்புக் கதிர் போன்ற அலைநீளம் கூடிய கதிர்வீச்சின் பின்னூட்ட விளைவாகும். இன்படி, ஒரு பொருளின் வெப்பம் அதிகரிக்கும்போது, வெளியாகும் கதிர்வீச்சு அதன் வெப்ப எண்ணின் நான்கு அடுக்காக உயர்கிறது. அதாவது E = σT; இங்கே E யானது ஓரலகு பரப்பிலிருந்து ஒரு நொடியில் வெளியேற்றப்படும் கதிர்வீச்சு வெப்ப ஆற்றல், σ யானது ஒரு மாறிலி, T பொருளின் வெப்பம் கெல்வின் அலகில்.ஏனவே புவியின் வெப்பம் உயரும்போது, அதனால் வெளியேற்றப்படும் கதிர்வீச்சும் அதிகரிக்கும். இந்தக் கதிர்வீச்சு புவியின் மேற்பரப்பை விட்டு வெளியேறுவதனால், புவியின் வெப்பம் குறையும். இதுவே எதிர்ப் பின்னூட்டம் எனப்படுகின்றது.) முக்கியமாகக் கருத்தில் கொள்ளவேண்டிய மற்றவற்றில், வளிமண்டலத்தில் வெளி மற்றும் நேரம் ஆகியவற்றில் மிக அதிகமாக வேறுபடும் செறிவைக் கொண்டுள்ள பைங்குடில் வளிமமும், திரவம் மற்றும் திண்மம் ஆகிய இரண்டு நிலைகளிலும் இருக்கும் ஒரே ஒரு பொருளும், மூன்று நிலைகளிலும் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு அடிக்கடி மாறியோ அல்லது நிலைகளில் கலந்தோ இருப்பதுமான பொருளும் நீராவி ஆகும். இவ்வகை நோக்கில் மேகங்கள், ஒரே அல்லது வேறுபட்ட வெப்ப நிலையில் இருக்கும்போது காற்று மற்றும் நீராவியின் அடர்த்தியின் அகச்செயல்கள், நீர் ஆவியாதல் மற்றும் ஆவியிலிருந்து உறைதல் நிகழ்வுகளின்போது உறிஞ்சுதல் மற்றும் வெளிவிடப்படும் இயங்கு சக்தி, மற்றும் ஆவியின் குறைவுபட்ட அழுத்தம் சார்ந்த செயல்பாடுகள் ஆகியவை உள்ளன. எடுத்துக்காட்டாக, ல் பெய்யும் மழையால் வெளியிடப்படும் உள்ளுறை வெப்பம் வளிமண்டல பரவலை வேகப்படுத்துகிறது, மேகங்கள் வளிமண்டலத்தின் எதிரொளிதிறன் நிலைகளை மாற்றுகின்றன, மற்றும் சமுத்திரங்கள் மதிப்பிடப்பட்டுள்ள மேற்பரப்பு வெப்பநிலை 67 °செ.க்கு பைங்குடில் விளைவைக் குறைக்கும் ஆவி குளிரூட்டலை கொடுக்கிறது. அண்டார்க்டிக்காவில் உள்ள பனி உள்ளகம் பயன்படுத்திப் பனிப் பிரதேசங்களில் எடுக்கப்பட்ட அளவுகள், தொழிற்சாலைகள் தோன்றுவதற்கு முன்னால், வளிமண்டல CO அளவு, கன அளவில் (ppmv) மில்லியனுக்கு 270-280 பாகங்கள் இருந்ததாகவும், கடந்த பத்தாயிரம் ஆண்டுகளாக 260க்கும் 280க்கும் இடையிலேயே இருந்தது எனவும் காட்டுகின்றது. வளிமண்டலத்தில் உள்ள CO செறிவு 1900 களிலிருந்து அண்ணளவாக 35 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும், 2009ஆம் ஆண்டில் கன அளவில் மில்லியனுக்கு 280 பங்கிலிருந்து, மில்லியனுக்கு 387 பங்காக உயர்ந்துள்ளது என்றும் கூறப்படுகின்றது. வழிக்காற்று பனிக்கட்டியில் பிடிக்கப்படுதல் (பனிக்கட்டியில் உள்ளத் துவாரங்கள் நிதானமாக மூடி நீர்க்குமிழிகளை அடைபனிக்குள் ஆழ்ந்து உருவாக்க) மற்றும் ஒவ்வொரு மாதிரி பனிக்கட்டியின் பகுத்தறியப்பட்ட கால அளவு ஆகியவற்றால் இவ்வளவுகள் ஆண்டு அல்லது பத்தாண்டுகள் நிலைகளைக் குறிப்பதற்கு மாறாக ஒரு சில நூற்றாண்டுகள்வரையிலான சுற்றுச்சூழல் செறிவு சராசரிகளைக் குறிக்கின்றன. இவ் வகையான கண்டுபிடிப்புகள் சரியான CO2 மாற்றங்களை அளவிடுதல் தவிர, மாசுபடுதல் பிரச்சினைகளைப் பிரதிபலிப்பதாக உள்ளது எனக் கூறியிருப்பினும், உயர் பகுதிறன் இலைத்துளைச் சுட்டெண் (SI) என்ற அளவீட்டைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட வேறொரு ஆய்வு, ஏழு முதல் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கார்பனீரொக்சைட்டு 300 ppmக்கு மேலான அளவில் இருந்ததாகக் கூறுகின்றது. தொழில் புரட்சி தொடங்கியதிலிருந்து, பெரும்பாலான பைங்குடில் வளிமங்களின் செறிவு அதிகரித்துள்ளது. எடுத்துக்காட்டாக, கார்பனீரொக்சைட்டின் செறிவு 36%அளவில் அதிகரித்து, 380 ppmv அளவிற்கு உயர்ந்துள்ளது. அதாவது தற்கால நிலையில், தொழில் காலத்திற்கு முன் நிலையைவிட 100 ppmv அதிகமாக கார்பனீரொக்சைட்டின் செறிவு உள்ளது. முதல் 50 ppmv அதிகரிப்பு, தொழில் புரட்சி ஆரம்ப காலத்திலிருந்து 1973ஆம் ஆண்டுவாக்கில் வரையான, சுமார் 200ஆண்டுகளில் ஏற்பட்டது என்றும், அடுத்த 50 ppmv அதிகரிப்பு, 1973ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரையிலான சுமார் 33 ஆண்டுகளில் ஏற்பட்டது என்றும் கூறப்படுகின்றது. சமீபத்திய புள்ளிவிவரம்கூட செறிவு மிக அதிக வேகத்தில் உயர்வதைக் காட்டுகிறது. 1960 ஆண்டுகளில், ஆண்டுச் சராசரி உயர்வு 2000ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டுவரை இருந்ததில் 37% மட்டுமே இருந்தது. மனிதச் செயல்பாட்டால் உற்பத்தியான, கார்பனீரொக்சைட்டு தவிர்ந்த ஏனைய பைங்குடில் வளிமங்களும் அவற்றின் அளவிலும் மற்றும் அவை அதிகரிக்கும் வேக வீதத்தில் இதுபோன்ற அதிகரிப்பினைக் காட்டுகின்றன. கணினி இணைப்பில் வளிமண்டல வேதியியல் நோக்கு அடிப்படை புள்ளிவிவரங்கள் பல வகையில் கிடைக்கின்றன. (ஆதாரம்: IPCC வெப்பக்கதிர்வீச்சு வேக அறிக்கை 1994 திருத்தப்பட்டது (1998வரை) IPCC TARஆல் அட்டவணை 6.1[88][89] ). ] 2000ஆம் ஆண்டிலிருந்து, CO உமிழ்வின் அதிவேக அதிகரிப்பு 1990ஆம் ஆண்டுகளிலிருந்த ஆண்டுக்கு 1.1% என்பதிலிருந்து ஆண்டுக்கு 3%க்கும் அதிகமாக உயர்ந்ததற்கான காரணம், வளரும் மற்றும் வளர்ந்த நாடுகள் கார்பன் செறிவில் போதிய கவனம் செலுத்தாதேயாகும். மனிதச்செயலாலான ஒட்டுமொத்த COல் 3/4 பங்குக்கு இப்போதும் வளர்ந்த நாடுகள் காரணமாகின்றன. சக்தி திறனில் ஏற்பட்டுள்ள நிலையான வளர்ச்சியின் காரணமாகவும், அதிவேக மின்சாரப் பயன்பாடு காரணமாகவும், நேரிடையாக தொழிற்சாலையிலிருந்து பெறப்படும் உமிழ்வுகள் குறைந்துள்ளது. மின்சார உற்பத்தி சார்ந்த மறைமுக உமிழ்வுகளை கணக்கில் கொண்டால் ஐரோப்பவில் தொழிற்சாலையிலிருந்து பெறப்படும் உமிழ்வுகள் 1994ஆம் ஆண்டிலிருந்து ஏறக்குறைய நிலையானதாக உள்ளது. சீனா முன்னோடியாக உள்ள ஆசிய பொருளாதாரத்தில் தொழில் வளர்ச்சியின் ஒரு அறிகுறியாக விளங்கும் வளிமண்டலத்தின் COன் அளவு அதிகரித்துக்கொண்டே உள்ளது. பின்தங்கிய உள் மாநிலங்களில் பழைய முறையிலான சக்தி ஆலைகளை வேகவேகமாக கட்டப்பட்டதன் காரணமாக, 2000–2010 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் சீனாவில் கார்பனீரொக்சைட்டின் உமிழ்வுகள் 600 மெ.ட.. அளவில், பெருமளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. "இதனையும் பார்க்க:" ஐக்கிய இராச்சியம் கார்பனீரொக்சைட்டு உமிழ்வுகளை 2010ஆம் ஆண்டில், 1990ஆம் ஆண்டில் இருந்ததைவிட 20% குறைப்பதாக இலக்கு வைத்தது. ஆனால் அந்நாட்டின் புள்ளிவிபரப்படி அந்த இலக்கிலிருந்து ஏறக்குறைய 4% குறையும் எனத் தெரிகிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகள் 1990ஆம் ஆண்டைவிட 2005ஆம் ஆண்டில் 16.3%அதிக அளவு பைங்குடில் வளிமங்களை உமிழச்செய்தது. நெதர்லாந்து சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஏஜென்சியின் ஆரம்பகால மதிப்பீட்டின்படி, மதிப்பிடப்பட்ட ஆண்டு உற்பத்தி 6200 மெகாடன்கள் என்ற அளவில் 2006ஆம் ஆண்டு முதல் CO உமிழ்வுகளை மிக அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடாக சீனா உள்ளது. 5,800 மெகாடன்கள் என்ற அளவில் சீனாவுக்கு அடுத்ததாக அமெரிக்க ஐக்கிய நாடுகள் வருகிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் CO உமிழ்வுகள் 2006ஆம் ஆண்டில் 1.4% குறைந்த அதே வேளையில், 2005ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, சீனாவின் தொல்பொருள் CO உமிழ்வுகள் 2006ஆம் ஆண்டில் 8.7% அதிகரித்தது. அதன் மதிப்பீடு நிச்சயமற்ற அளவிலான CO சில மூலாதாரங்களை உள்ளடக்கியதல்ல என அந்த ஏஜென்சி குறிப்பிடுகிறது. இப்புள்ளிவிவரங்கள், வான்வழிப் போக்குவரத்து சார்ந்த புள்ளிவிவரங்கள் சேராத தேசிய CO புள்ளிவிவரங்களைச் சார்ந்துள்ளன. பூமியின் வளிமண்டலத்தில் உள்ள COஐ ஒப்பிடும்போது இந்த டன்னேஜ்கள் குறைவாகும், அவை குறிப்பிடும் அளவுக்கு முன் தொழிற்கால அளவைவிட அதிகமாகும். "இதனையும் பார்க்க:" பைங்குடில் வாயுக்கள் பல்வேறு முறைகளில் வளிமண்டலத்திலிருந்து நீக்கப்படலாம்; ஒன்பது நாட்கள் தங்கக்கூடிய நீராவிமட்டுமல்லாது, பெரும்பாலான பைங்குடில் வாயுக்கள் நன்கு கலக்கப்படுகின்றன, வளிமண்டலத்திலிருந்து பிரிந்து செல்ல பல ஆண்டுகாலத்தை எடுத்துக்கொள்கின்றன. பைங்குடில் வாயுக்கள் வளிமண்டலத்திலிருந்து பிரிந்து செல்ல எவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளும் என்பதை மிகச்சரியாகத் தெரிந்துகொள்வது சுலபமானதல்ல என்றாலும், முக்கியமான பைங்குடில் வாயுக்களுக்கன கால மதிப்பீடுகள் உள்ளன. ஜேகப் (1999)[112], எக்ஸ் எனும் ஒரு வளிமண்டல உயிரியின் வாழ்நாளை, ஒருபெட்டி வடிவில், எக்ஸின் ஒரு மூலக்கூறு பெட்டியில் தங்கும் சராசரி நேரமாக வரையறுக்கிறார். (formula_1), Xன் இரசாயன இழப்பு L !! மற்றும் X ன் படிதல் D !! (அனைத்தும் கிகி/வினாடி):(அனைத்தும் கிகி/வினாடி): formula_2 எனவே வளிமண்டலத்தில் ஒருவகை உயிரிகளின், சுற்றுச்சூழலில் அதன் செறிவினை அதிகரிக்கும், வாழ்நாள் சமநிலையைத் திரும்ப ஏற்படுத்தத் தேவையான கால அளவை அளவிடுகிறது. மண், சமுத்திரங்கள் மற்றும் வேறு தண்ணீர், அல்லது தாவரங்கள் மற்றும் வேறு உயிரினங்கள் போன்ற உறிஞ்சு பொருள்களில், அதிகமாக உள்ளதை பின்னணிச் செறிவாகக் குறைக்கும், தனிப்பட்ட அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் இழக்கப்படலாம் அல்லது வீழ்படிவாகலாம். இதை அடைவதற்கு எடுத்துக்கொள்ளப்படும் சராசரி நேரம் வாழ்நாள் சராசரி எனப்படும். ஒன்றின் வளிமண்டல வாழ்நாள் பெரும்பாலும் ஒரு சில ஆண்டுகளாக தவறுதலாகக் குறிப்பிடப்படுகிறது, ஏனெனில் அது எந்தவொரு மூலக்கூறும், சமுத்திரம், ஒளிச்சேர்க்கை, அல்லது வேறு முறைகளில் கலந்து பிரிக்கப்படுவதற்கு முன்பாக வளிமண்டலத்தில் தங்குவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் என்பதாலாகும். . இருப்பினும், மற்ற தேக்கிகளிலிருந்து வளிமண்டலத்துக்கு சமநிலைப் படுத்துவதை இது கருத்தில் கொள்வதில்லை. அது, வெறும் நீக்குதல் முறைகளால் மட்டுமல்லாது வளிமண்டல வாழ்நாளை நிர்ணயிக்கும் "எல்லா ஆதாரங்கள் மற்றும் மூழ்கடிக்கும் பொருள்களால்" ஏற்படும் பல்வேறு பைங்குடில் வாயுக்களின் நிகர செறிவு மாற்றங்களாகும். புவி வெப்பமயமாதல் திறன் (GWP) ஒரு பைங்குடில் வாயுவாக மூலக்கூற்றின் திறன், அதனுடைய வளிமண்டல வாழ்நாள் ஆகிய இரண்டையும் சார்ந்துள்ளது. புவி வெப்பமயமாதல் திறன் (GWP) அதே பொருள்திணிவு ள்ள ஒன்றோடு ஒப்பிடப்பட்டு அளக்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு மதிப்பீடு செய்யப்படுகிறது. இவ்வாறாக, ஒரு வாயு குறைந்த கால அளவில் (20 ஆண்டுகள் என வைத்துக்கொள்வோம்) ஆனால் குறைந்த கால வாழ்நாளையேக்கொண்டு அதிக புவி வெப்பமயமாதல் திறனை (GWP) பெற்றிருந்தால், அவ்வாயு 20 ஆண்டு கால அளவில் அதிக அளவு புவி வெப்பமயமாதலையும், ஆனால் 100 ஆண்டு கால அளவில் குறைந்த அளவு புவி வெப்பமயமாதல் திறனையும் பெற்றிருக்கும். எதிர்மாறாக, ஒரு மூலக்கூறு COஐ விட அதிக சுற்றுச்சூழல் வாழ்நாளைப் பெற்றிருப்பின் அதன் GWP, கணக்கில் கொள்ளப்படும் கால அளவோடு அதிகரிக்கும். பல பைங்குடில் வாயுக்களின் சுற்றுச்சூழல் வாழ்நாள் மற்றும் புவி வெப்பமயமாதல் திறன் (GWP) ஆகியவற்றின் உதாரணங்களில் கீழ்வருவன அடங்கும்: CFC-12ன் உபயோகம் (சில அத்தியாவசியப் பயன்பாடுகள் தவிர), அதனுடைய ஓசோன் குறைதல் பண்புகள் காரணமாக, இல்லாமல் போய்விட்டது. குறைந்த செயலாற்றல் உடைய HCFC-கூட்டுப்பொருள்கள் இல்லாமல் போனது 2030ஆம் ஆண்டில் நிறைவு செய்யப்படும். வான் வழியாக நடைபெறும் பின்னம்(AF) என்பது (எ.கா. ) ஒருகுறிப்பிட்ட காலத்திற்குப்பின் வளிமண்டலத்தில் தங்கியிருக்கும் ஒரு உமிழ்வின் விகிதம் ஆகும். "கார்பனைப் பிடித்து தேக்கிவைத்துள்ள உயிர்சக்தி, கார்பன் டைஆக்சைடு காற்றை பிடித்து வைத்தல், புவிபொறியியல் மற்றும் பைங்குடில் வாயு குறைதீர்த்தல் ஆகியவற்றைப் பார்க்கவும். " பைங்குடில் வாயுக்களின் எதிர்மறை உமிழ்வுகளை உற்பத்தி செய்யும் எண்ணற்ற தொழில்நுட்பங்கள் உள்ளன. சுற்றுச்சூழலிலிருந்து கார்பன் டைஆக்சைடைப் பிரித்தெடுப்பனவற்றில் பரவலாகப் பகுத்தறியப்படுவது, நில அமைப்புகள் சார்ந்த கார்பனைப் பிடித்து தேக்கிவைத்துள்ள உயிர்சக்தி மற்றும் கார்பன் டைஆக்சைடு காற்றை பிடித்து வைத்தல் போன்றவை, அல்லது மண் சார்ந்த பையோகார் போன்றவையாகும். பல நீண்டகால சீதோஷ்ணநிலை அமைப்புகளில் கடுமையான சீதோஷ்ணநிலை மாற்றத்தைத் தவிர்க்க அதிக அளவிலான மனிதனால் உருவாக்கப்பட்ட எதிர்மறை உமிழ்வுகள் தேவை என்று IPCC குறிப்பிட்டுள்ளது. தூய்மைப்படுத்தப்பவில்லை என்றால் அவற்றை அழித்துவிடும் சுற்றுச்சூழலின் உட்பொருள்களைத் தூய்மைப்படுத்துவதன் வாயிலாக (எ.கா.,ஹைட்ரோக்சைல் ரேடிகல், OH ) மீதேன் மற்றும் ட்ரோபோஸ்ஃபெரிக் ஓசோன் செறிவினை உயர்த்துவதன் மூலம் கார்பன் மோனோக்சைடு மறைமுக கதிர்வீச்சு விளைவைக் கொண்டுள்ளது. கார்பன்(கரி) உள்ள எரிபொருள்கள் அரைகுறையாக எரிக்கப்படும்போது கார்பன் மோனோக்சைடு உற்பத்தியாகிறது. வளிமண்டலத்தின் இயற்கை முறைகள் மூலமாக, [[கார்பன் டைஆக்சைடு]] ஆக மாறுகிறது. கார்பன் மோனோக்சைடின் வளிமண்டல வாழ்நாள் ஒருசில மாதங்களேயாகும், அதன் விளைவாக நீண்டகாலம் வாழும் வாயுக்களைவிட அது விண்வெளியில் அதிக மாறுதல்களுக்கு உட்பட்டுள்ளது. மற்றொரு முக்கியமான மறைமுக விளைவைக் கொண்டுள்ளது நேரிடையான கதிர்வீச்சு விளைவோடு ஓசோன் உருவாக்கலுக்கும் காரணமான மீதேன் ஆகும். இதன் விளைவாக மீதேனால் ஏற்படும் சீதோஷ்ணநிலை மாற்றம் முன்பு மதிப்பிட்டதைவிட குறந்தபட்சம் இரண்டு மடங்காகியுள்ளது என ஷிண்டெல் "எட் அல்." (2005) வாதிடுகிறார். அரதைப்பெரும்பாழி திரு அரதைப் பெரும்பாழி அல்லது அரித்துவார மங்கலம் என்பது இந்தியாவின் தஞ்சாவூர் மாவட்டத்தில் காணப்படும் கோயில்களில் ஒன்றாகும். இது ஒரு சிவன் கோயிலாகும். இக்கோயிலின் இறைவன் பாதாளேசுவரர் ஆவார். இக்கோயிலின் இறைவி அலங்கார நாயகி ஆவார். கும்பகோணம்-அம்மாபேட்டை சாலை வழியில் உள்ள திரு அவளிவநல்லூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவத்தலத்தில் இருந்து கிழக்கே 2 கி.மீ. தொலைவில் இத்தலம் இருக்கிறது. திருவித்துவக்கோடு திருவித்துவக்கோடு என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். குலசேகராழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பட்டாம்பி என்னும் நகருக்கு அருகில் அமைந்துள்ளது. 'திருமிற்றக்கோடு', 'திருவீக்கோடு', 'ஐந்து மூர்த்தி திருக்கோவில்' என்றும் இதனை வழங்குவர். இந்துத் தொன்மங்களின்படி துவாபர யுகத்தில் பஞ்ச பாண்டவர்கள் வனவாச காலத்தில் தென்னிந்தியாவில் பயணம் செய்கையில் இங்குள்ள நீளா நதிக்கரையோரம் ஒரு அழகான இடத்தைக் கண்டனர். அங்கு நிலவிய தெய்வீகம் கலந்த அமைதியைக் கண்டதும் சில காலம் அங்கேயே தங்கி இருக்க எண்ணினர். நாள்வழிபாட்டிற்காக சிலைகளையும், ஆலயத்தையும் நிர்மானித்தனர். முதலில் அர்ஜுனன் மஹாவிஷ்ணுவின் சிலையையும் அதற்கு வடக்கே தருமர் ஒரு சிலையையும் தென்புறத்தில் பீமன் ஒரு சிலையையும் அதற்கு பின்புறம் (தென்புறத்திலே) நகுலனும் சகாதேவனும் ஒரு சிலையையும் நிர்மானித்தனர். அவர்களது வெகு காலத்திற்குப் பின்னால் பாண்டியமன்னன் ஒருவனால் மிகப்பெரிய சுற்றுமதில் கட்டப்பட்டது. நெடுங்காலம் 4 மூர்த்திகளால் ஆனதாகவே இக்கோவில் இருந்தது. சுமார் 2000 (1800) ஆண்டுகட்கு முன்பு தென்னாட்டைச் சேர்ந்த முனிவர் ஒருவர் காசிக்குச் சென்றிருந்தார். அங்கேயே வெகு காலம் தங்கி வாழ்ந்திருந்தார். அவரது அன்னையார் மரணத் தறுவாயில் இருப்பதாக செய்தி வந்ததையடுத்து அவர் திரும்பிவரும்போது அவரது பக்தி ஈடுபாட்டினால் காசி விசுவநாதரும் அம்முனிவரது குடையில் மறைந்து வந்ததாக கூறுவர். வரும் வழியில் இந்தச் சன்னதிக்கு வந்த முனிவர் நீளா நதியில் நீராடச் செல்லும்போது நான்கு மூர்த்திகட்கு முன்புறம் இருந்த ஒரு பலி பீடத்தில் தமது குடையை வைத்துவிட்டுச் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது அந்தப் பலி பீடம் நான்காக வெடித்து அவ்வெடிப்பிலிருந்து சுயம்புவாக சிவலிங்கம் ஒன்றும் தோன்றியிருந்ததாம். குடையும் மறைந்துவிட்டது. இவ்விதம் இது ஐந்து மூர்த்தி தலமாயிற்று. தற்போது இந்த சிவலிங்கத்தைச் சுற்றிலும் தனியே ஒரு கோவில் கட்டப்பட்டுவிட்டது. இத்தலத்தின் இறைவன் தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். உய்யவந்த பெருமாள், அபயப்ரதன் என அழைக்கபடுகிறார். இறைவியின் பெயர் வித்துவக்கோட்டு வல்லி, பதமாசனி நாச்சியார். என்பதாகும். இதலத்தீர்த்தம் சக்ர தீர்த்தம். விமானம் தத்வ காஞ்சன விமானம் என்ற அமைப்பினைச் சேர்ந்தது. கேரள நாட்டு ஆழ்வாரான குலசேகராழ்வாரால் மட்டும் 10 பாக்களில் பாடல் பெற்றது. திருமாலுக்கும் சிவனுக்கும் இங்கு ஒரே இடத்தில் சன்னதியிருப்பது சிறப்பானதாகும் திருமாலும் சிவனும் இணைந்திருக்கும் கோவில்கள் குறிப்பாக 108 வைணவத் திருத்தலங்களில்10க்கு மேற்பட்ட தலங்கள் உள்ளன. பாண்டவர்களின் வருகைக்கு முன்பே இத்தலம் இருந்ததென்பது ஆய்வாளர்களின் முடிவாகும். திருக்கடித்தானம் திருக்கடித்தானம் அல்லது திருக்கொடித்தானம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடப்பெற்ற இத்தலம் கேரள மாநிலம் கோட்டயத்திலிருந்து திருவல்லா செல்லும் சாலையில் அமைந்துள்ளது கடி என்ற சொல் கடிகை என்ற சொல்லிலிருந்து வந்ததாகும். 108 வைணவத் திருத்தலங்களில் கடி என்ற சொல்லைக்கொண்டு மூன்று தலங்கள் விளங்குகின்றன. அவைகள் திருக்கடிகை என்ற சோளிங்கபுரம், வடநாட்டுப் பகுதிகளுள் ஒன்றான கண்டமென்னும் கடிநகர், திருக்கடித்தானம் ஆகியன. கடிகை பொழுதில், ஒரு நாழிகையில் (நாழிகை என்பது 24 நிமிடம்] தூய்மையான கடுந்தவம் இந்தத் தலங்களில் மேற்கொண்டால் காரிய சித்தியும் வீடுபேறும் கிட்டும் என்பது நம்பிக்கையாகும். உருக்மாங்கதன் என்ற சூர்ய வம்சத்து மன்னன் ஆட்சி செய்த இடமென்றும் இவனது நந்த வனத்தில் பூத்திருந்த மிக அழகான புஷ்பங்களை யாருக்கும் தெரியாமல் தேவர்கள் வந்து பறித்துச் சென்று எம்பெருமானுக்கு சூட்டி மகிழ்ந்தனர் என்றும், இவ்வாறு மலர்கள் மறைவதை அறிய முற்பட்ட மன்னன் தன் தபோவலிமையால் தேவர்களையும் தேவ மகளிர்களையும் மலர்கொய்ய வந்த விடத்து பிடித்துக்கொள்ள, தேவர்கள் விண்ணுலகம் (தேவருலகம்) செல்ல இயலாத நிலை ஏற்பட இதற்குப் மாற்று கோரி நிற்க, ருக்மாங்கதன் வருடந்தவறாமல் ஏகாதசி விரதம் இருந்து பெரும் பேற்றை பெற்றுள்ளதால், அதன் பயனை தேவர்கட்குக் கொடுத்தால்தான் அவர்கள் மீண்டும் தேவருலகம் செல்ல முடியுமென்று அசரீரி ஒலித்தது. அதுபோலவே உருக்மாங்கத மன்னன் தேவர்களை அழைத்து வந்து இத்தலத்து எம்பெருமான் முன்னே நிறுத்தி தனது ஏகாதசி விரதத்தின் பலனை அவர்கட்கு கொடுக்கவே அவர்கள் தேவருலகெய்தினார். இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் ஒரு கடிகை நேரத்தில் இத்தானத்தில் (தலத்தில்) நடந்ததால் இத்தலத்திற்குத் திருக்கடித்தானம் என்ற பெயர் உண்டாயிற்று.ஆனால் ருக்மாங்கதன் வடநாட்டு மன்னன் ஆவான் ஆயின் தென்னாடு பெற்ற மலை நாட்டின் பதிகளுள் திருக்கடித்தானத்திற்கு இக்கதை தொடர்பு படுத்திக் கூறப்படுகிறது என்பது ஆராய்ச்சிக்குரியதாகும். இத்தலத்தின் இறைவன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அற்புத நாராயணன் பெயருடன் விளங்குகிறார்.இறைவியின் பெயர் கற்பகவல்லி என்பதாகும் இதலத் தீர்த்தம் பூமி தீர்த்தம். இதன் விமானம் புண்யகோடி விமானம் என்ற அமைப்பினைச் சேர்ந்தது. இத்தலத்தில் அமைந்துள்ள நரசிம்மன், கிருஷ்ணன், சந்திரன் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகளும் அமைந்துள்ளன.பஞ்ச பாண்டவர்களுள் சகாதேவனால் இத்தலம் புதுப்பிக்கப்பட்டது. இங்குள்ள கிருஷ்ணன் சன்னதியை சகாதேவனே கட்டி முடித்தான். எனவே இந்தத் தலம் சகாதேவன் கட்டிய தலம் என்றே இப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது. இந்தக் கோவிலின் மதில் சுவற்றில் காணப்படும் கல்வெட்டு ஒன்று வட்டெழுத்தில் உள்ளது. நம் தமிழ்மொழி வட்டெழுத்து நிலையில் இருந்த காலத்திலேயே இத்தலம் இருந்ததென்று அறியலாம். நினைத்த மாத்திரத்தில் முக்தி தரத்தக்க திருத்தலங்களில் இதுவும் ஒன்றாகும். காஷ்மீரத்து மொழியில் எழுதப்பட்ட நூலொன்றில் இந்தியாவிலேயே தலைசிறந்த 15 கிருஷ்ண சேத்திரங்களில் மூன்று ஷேத்திரங்கள் உடனடியாக முக்தியளிக்க வல்லதென்றும் அதில் இத்தலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தென்றும் கூறப்பட்டுள்ளது. நம்மாழ்வாரால் மட்டும் 11 பாசுரங்களில் இத்தலம் பாடல்பெற்றுள்ளது. இங்கு ஒரு காலத்தில் எம்பெருமானுக்கு நடைபெற்ற திருவிழாக்களில் ஒன்றில் பெண்கள் குடைபிடித்து நடனமிடும் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக இடம் பெற்றிருந்தது. இக்கோவிலைச் சுற்றி சிதலமடைந்த மண்டபம், மற்றும் வெளிப்புற வாயிற் கதவருகேயுள்ள சுவர்ச் சிற்பங்களில் பெண்கள் குடைபிடித்து நடன மிடுதல் போல உள்ள காட்சிகளும் ஆய்வுக்குரியதாகும். கைலாச வாகனம் கைலாச வாகனம் அல்லது கையிலாச வாகனம் என்பது திருவிழாக்களின் பொழுது உற்சவ சிவபெருமான் எழுந்தருளும் வாகனங்களில் ஒன்றாகும். இந்த வாகனம் ராவண வாகனம் என்றும் அழைக்கப்பெறுகிறது. இந்த வாகனத்தில் அதிகாரபீட ராவண வாகனம், கைலாசபீட ராவண வாகனம் என்ற இருவகை காணப்படுகிறது. பத்து தலைகளுடனும், இருபது கைகளுடனும் சிவ பக்தனான இராவணன் வீணையை மீட்டியபடி இருப்பதாக வடிவமைக்கப்பெறும் வாகனம் அதிகார பீட இராவண வாகனமென்றும், இராவணன் கயிலையை சுமந்து இருப்பது போல வடிவமைக்கப்படும் வாகனம் கைலாசபீட ராவண வாகனம் என்றும் அழைக்கப்பெறுகின்றன. திருவாறன்விளை திருவாறன்விளை அல்லது ஆறன்முளா (ஆரன்முளா) என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது. அர்ஜுனன் ஆறு மூங்கில் துண்டுகளாலான மிதவையில் இறைவன் சிலையைக் கொண்டு வந்ததினால் இத்தலம் திருவாறன்விளை (ஆறு மூங்கில் துண்டுகள்) என்று அழைக்கப்படுகிறது. பிரம்மன், வாமன அவதாரத்தில் பெருமாளை தரிசிக்க வேண்டுமென இத்தலத்தில் தவமிருந்து அது போன்றே எம்பெருமான் காட்சி கொடுத்தார் என ஒரு வரலாறும் உண்டு. பாண்டவர்கள் கேரள தேசத்தில் மறைந்து வாழும்போது மகாபாரத யுத்தத்தில் நிராயுத பாணியான கர்ணனைக் கொன்றதால் ஏற்பட்ட பாவத்தைப் போக்க அர்ஜுனனால் இத்தலம் புதுப்பிக்கப்பட்டது. இத்தலத்தின் இறைவன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் திருக்குறளப்பன் என்ற பெயருடன் விளங்குகிறார். இறைவியின் பெயர் பத்தமாஸனித்தாயார் என்பதாகும். இதலத்தின் தீர்த்தம் வேதவியாச தீர்த்தம், பம்பா தீர்த்தம் ஆகியன. விமானம் வாமன விமானம் என்ற வகையைச் சேர்ந்தது இங்கு உள்ள வன்னி மரத்திலிருந்து உதிரும் வன்னி மரக்காய்களை இத்தலத்தின் கொடிக்கம்பத்தின் முன்பு குவித்து வைத்து விற்கிறார்கள். இவைகள் அர்ஜு னன் ஆயுதங்களை மறைத்து வைத்த வன்னி மரத்திலிருந்து வந்ததால் குழந்தைகள் நோய்வாய்ப்பட்ட காலத்தில் இந்த வன்னிமரத்துக் காய்களை தலையைச் சுற்றி எறிந்தால் அர்ஜுனன் அம்பினால் எதிரிகளின் அம்பு சிதைவது போல், நோய் சிதையும் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை. குருவாயூரில் துலாபாரம் கொடுத்தல் போல் இங்கும் துலாபாரம் கொடுக்கும் முறை நடைமுறை உள்ளது. இங்கு துலாபாரமாக வன்னிமரத்துக் காய்களை கொடுப்பது பழக்கமாக உள்ளது. கேரளாவின் புகழ்பெற்ற பம்பா என்றழைக்கப்படும் பம்பை நதி இத்தலத்தின் வடக்கு வாசலைத் தொட்டுக்கொண்டுதான் செல்கிறது. இந்த தலத்தில்தான் ஸ்ரீசபரிமலை ஐயப்ப சுவாமியின் அணிகலன்கள் பத்திரமாக வைக்கப்பட்டு மகர ஜோதியின் போது ஊர்வலமாக சபரிமலைக்கு பக்தர்கள் புடைசூழ மேளதாளத்துடன் எடுத்துச் செல்லப்படுகிறது. நம்மாழ்வாரால் மட்டும் 11 பாசுரங்களால் இத்தலம் பாடல் பெற்றுள்ளது. ஆனந்த தாண்டவம் ஆனந்த தாண்டவம் என்பது சிவபெருமான் ஆடும் தாண்டவங்களில் ஒன்றாகவும். ஐம்பெரும் தாண்டவம், சப்த தாண்டவம், நவ தாண்டவம் மற்றும் பன்னிரு தாண்டவம் என்ற தாண்டவகைகளுள் முதன்மையானதாக இத்தாண்டவம் போற்றப்படுகிறது. இத்தாண்டவத்தினை காலை தொடங்கும் அதிகாலப் பொழுதினைக் குறிக்கும் அல்லியம் என்றும் குறிப்பிடப்படுகிறது. அல் என்றால் இருள் என்று பொருளாகும். இருள் விலகும் நேரத்தினை அல்லியம் என்று கூறுகின்றனர். சிவபெருமானின் ஆனந்த தாண்டவத்தினைக் காண சிதம்பரம் தலத்தில் பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதரும் தவமிருந்தனர். அவர்களின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆட இசைந்தார். புலித்தோல் உடுத்தி, உடுக்கை, அனல், மான், மழு, நாகாபரணம் அணிந்து, வலக்கையால் டமருகத்தை அடித்தும், இடக்கையில் அக்னி ஏந்தியும், ஒருகையால் அபயம் அளித்தும், மறுகையால் பாதத்தைக் காட்டியும் நடனமாடினார். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில்களை இயற்றும் தாண்டவமாகவும், பிரபஞ்ச இயக்க நடனமாகவும் போற்றப்படுகிறது. இந்நடனத்தினை சிதம்பரத்தில் சிவபெருமான் ஆடினார். ஆனந்த தாண்டவம் ஆடும் சிவபெருமானின் கோலம் நடராஜர் என்று அறியப்பெறுகிறது. திருத்தண்கா திருத்தண்கா விளக்கொளி பெருமாள் கோயில் அல்லது தூப்புல் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் காஞ்சிபுரத்தில் அட்டபுயக்கரம் கோவிலிலிருந்து மேற்கில் சுமார் அரை மைல் தொலைவில் உள்ளது.ஆச்சாரியர் "வேதாந்த தேசிகன்" அவதாரம் செய்த திருத்தலம். தண் என்றால் குளிர்ச்சி. கா என்றால் சோலை. குளிர்ச்சி பொருந்திய சோலையைத் தெரிவு செய்து பிரம்மன் வேள்விச்சாலை அமைத்த இடமாதலால் திருத்தண்கா என்றாயிற்று. இத்தலத்தைப் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் விரித்துரைக்கப்பட்டுள்ளது. ஒரு சமயம் பிரம்மன் செய்யும் யாகத்தை நிலைநிறுத்த திருமால் உதவி புரிந்தபோது யாகத்தைத் தடுக்க எண்ணிய கலைமகள் பிரம்மனின் யாகத்தை தொடரவிடாமல் அதனைத் தகர்க்க எத்தனையோ முயற்சிகள் செய்தும், அத்தனையும் பயனின்றிப் போகவே இனிமேல் என்ன செய்யலாம் என்று தீவிரமாகச் சிந்தித்து இந்த உலகத்தையே இருட்டில் மூழ்கடிக்க எண்ணினாள். உடனே சூரிய, சந்திரர்களின் ஒளியை இழக்கச் செய்து பூவுலகை இருளில் ஆழ்த்தினாள். திடீர் இருட்டிற்கான காரணத்தை தமது ஞானத்தால் உணர்ந்த பிரம்மன், உதவி வேண்டி மகாவிஷ்ணுவைத் துதித்தார். உடனே மஹாவிஷ்ணு (அன்றையதினமான சித்திரை மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று) ஜோதி மயமாய்த் தோன்றி பிரம்மனின் யாகத்தை தொடர்வதற்கு ஒளி கொடுத்து சூரிய சந்திரர்களின் ஒளியை மறைத்த தடையை நீக்கி உலகத்தை மீண்டும் வெளிச்சமாக்கினார். தன் சக்தி முழுவதையும் பிரயோகித்து அக்கினி வடிவில் மாய நலன் என்ற ஒரு கொடிய அரக்கனைப் படைத்தாள் சரஸ்வதி. அக்கினி வடிவில் யாகத்தை அழிக்க வந்த அசுரனை பெருமாள் தனது கையில் தீபம் போல் ஏந்தி யாகசாலைக்கு மேலும் வெளிச்சம் நல்கினார். இவ்வாறு அக்கினியைக் கையில் தீபம் போல் ஏந்தி நின்றதால் விளக்கொளிப் பெருமாள் (தீபப்பிரகாசர்) என அழைக்கப்படுகிறார். இத்தலத்தின் இறைவன் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் தீபப்பிரகாசர், விளக்கொளிப் பெருமாள், திவ்யப் பிரகாசர், என்னும் பெயர்களைக் கொண்டு விளங்குகிறார். இறைவி பெயர் மரகதவல்லி. இத்தலத் தீர்த்தம் சரஸ்வதி தீர்த்தம். விமானம் ஸ்ரீகர விமானம் எனும் அமைப்பைச் சேர்ந்தது. மேலும் இலக்குமி, ஆண்டாள், வேதாந்த தேசிகர் மற்றும் ஆழ்வார் சிலைகளும் இங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ஹயக்கிரீவருக்கு தனிக் கோயில் உண்டு. திருமங்கையாழ்வாரால் மட்டும் 2 பாக்களால் பாடல்பெற்ற தலமாகும். முகிலறை முகிலறை ("Wilson cloud chamber") என்பது மின்னூட்டமுடைய துகள்களில் நீராவி எளிதில் படிகிறது எனும் உண்மையை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் கருவி. அயனியாக்கும் கதிர்கள் தான் செல்லும் பாதையிலுள்ள வளியினை அயனியாக்கும் பண்புடையன. கதிர்களின் பாதையைக் காணவும் படம் எடுக்கவும் இக்கருவி பயன்படுகிறது. அயனிகளைத் தனியாகக் காண முடியாது, எனினும் நீர் திவலையின் அடுக்கு ஒரு கோடு போல், அயனியின் பாதையைக் காட்டும். மீ தெவிட்டிய ஆவியில் இது நிகழும். சார்ல்ஸ் தாம்சன் ரீசு வில்சன் என்னும் இசுக்கொட்லாந்தைச் சேர்ந்த இயற்பியலாளர் இதனை முதன் முதலில் வடிவமைத்ததால் இது வில்சன் முகிலறை எனப்படுகிறது. இக்கண்டுபிடிப்புக்காக வில்சனுக்கு 1927 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது. 1920கள் முதல் 1950கள் வரை குமிழறைகள் கண்டுபிடிக்கப்படும் வரை துகள் இயற்பியலில் முகிலறைகள் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்தன. குறிப்பாக, 1932 இல் பொசித்திரன், 1936 இல் மியூயான், 1947 இல் கேயான் போன்றவை முகிலறைகளைப் பயன்படுத்தியே கண்டுபிடிக்கப்பட்டன. பிருஷ்டஸ்வஸ்திகம் பிருஷ்டஸ்வஸ்திகம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது பதினாராவது கரணமாகும். முன்போலக் கைகளையும் கால்களையும்,ஸ்வஸ்திகமாக அமைத்துத் திருப்பி,முகத்தை மட்டும் சபைக்குக் குறுக்காக வைத்து நிற்பது பிருஷ்டஸ்வஸ்திகமாகும் திக்ஸ்வஸ்திகம் திக்ஸ்வஸ்திகம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது பதினேழாவது கரணமாகும். பிருஷ்டஸ்வஸ்திகமாக நின்று பக்கங்களிலும் முன்பும் அசைந்து நடக்கின் அது திக்ஸ்வஸ்திகமாகும் அலாதகம் அலாதகம் அல்லது அலாதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது பதினெட்டாவது கரணமாகும். அலாதபாதமாக நின்று,வலது கையை, அதன் மேல் வைத்து முழந்தாளைத் தூக்கி நின்று ஆடுவது அலாதகமாகும் கடீசமம் கடீசமம் அல்லது கடீஸமம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது பத்தொன்பதாவது கரணமாகும். ஸ்வஸ்திக நிலையிலிருந்து பிரிந்த பாதத்துடன் கைகளை உந்திக்கு நேராக இடுப்பில் வைத்து, பக்கநோக்காகச் சாய்ந்து நின்று ஆடுவது கடீஸமமாகும் திருவேளுக்கை அழகிய சிங்க பெருமாள் கோயில் திருவேளுக்கை ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற (பாடப்பட்ட) 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். பேயாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் திருத்தண்கா விளக்கொளி பெருமாள் கோவிலுக்குத் தெற்கில் அட்டபுயக்கரம் கோவிலுக்கு அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. வேள் என்ற சொல்லுக்கு ஆசை என்று பொருள். திருமாலின் அவதாரங்களில் ஓருவரான நரசிம்மர் இவ்விடத்தில் ஆசையுடன் இருக்க எண்ணியதால் வேளிருக்கை என்றாகி காலப் போக்கில் வேளுக்கை ஆகிவிட்டது. காமாட்சிகா நரசிம்ம சன்னதி என்றும் இதற்கொரு பெயருண்டு. திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்தபோது அஸ்திசைலம் என்னும் குகையிலிருந்து புறப்பட்டு இரண்யனது மாளிகையின் தூணிலிருந்து வெளிப்பட்டபோது வேறொரு நரசிம்ம வடிவங்கொண்டு தம்மைத் தாக்க வந்த அசுரர்களை விரட்டிக் கொண்டே செல்ல இவ்விடத்திற்கு வந்த சேர்ந்தார். இதனால் பயந்த அசுரக் கூட்டங்கள் கண்காணா இடத்திற்கு ஓடி ஒளிந்து கொண்டதால், இனி அசுரர்கள் வந்தாலும் அவர்களை எதிர்ப்பதற்கு இவ்விடமே பொருத்தமானது என்றெண்ணி, இவ்விடத்தின் எழிலில் பற்றுக் கொண்டு இங்கேயே இருக்க ஆசைப்பட்டார். இவ்விடத்திலேயே யோக நரசிம்மராகி அமர்ந்து விட்டார்.புராண வரலாற்றின்படி பிருகு மஹரிசிக்கு கனக விமானத்தின் கீழ் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி கொடுத்ததாக நம்பிக்கை. தற்போது நரசிம்மனாக யோக முத்திரையுடன் மேற்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இத்தலத்தில் இறைவன் யோக முத்திரையுடன் மேற்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில் அழகிய சிங்கர், நரசிம்மர், ஆள் அரி, முகுந்த நாயகன் என்னும் பெயர்கள் கொண்டு விளங்குகிறார். இறைவி வேளுக்கை வல்லி, அம்ருத வல்லி, தனிக் கோவில் நாச்சியார் என்ற பெயர்கொண்டு விளங்குகிறார். இத்தலத் தீர்த்தம் கனக சரஸ், ஹேம சரஸ் ஆகியன. விமானம் கனக விமானம் எனும் அமைப்பைச் சார்ந்தது. பேயாழ்வார் 3 பாசுரங்களிலும் திருமங்கையாழ்வாரும் இத்தலத்தைப் பாடியுள்ளனர். ஆஷிப்தரேசிதம் ஆஷிப்தரேசிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது இருபதாவது கரணமாகும். இடது கையை மடக்கி மார்ப்புக்கு நேராக வைத்து, வலது கையை ரேசித ஹஸ்தமாகத் தொங்கவி்ட்டு முழங்கால்களை மடக்கி நின்று ஆடுவது ஆஷிப்தரேசிதமாகும். லிடியா டேவிசு லிடியா டேவிஸ் ("Lydia Davis",பிறப்பு: 1947) தமது சிறு கதைகளின் மூலமாக புகழ்பெற்றிருக்கும் தற்கால அமெரிக்க எழுத்தாளர். டேவிஸ் சிறுகதைகளைத் தவிர புதினங்கள், கட்டுரைகள் மற்றும் பிரெஞ்சிலிருந்தும் பிற மொழிகளிலிருந்தும் மொழிமாற்றப் பட்ட நூல்கள் ஆகியவற்றையும் வெளியிட்டுள்ளார். பிரௌஸ்ட்டின் "இன் சர்ச் ஆஃப் லாஸ்ட் டைம்" மற்றும் பிளாபெர்ட்டின் "மேதம் போவரி" போன்ற பிரெஞ்சு இலக்கியக் காவியங்களுக்கு புதிய மொழிபெயர்ப்பும் ஆக்கியுள்ளார். மே 22, 2013 அன்று லிடியா டேவிசுக்கு 2013ஆம் ஆண்டின் மான் புக்கர் பன்னாட்டுப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இசுடோக் சமன்பாடு இசுடோக் சமன்பாடு ("Stokes' equation") உருண்டையான ஒரு பொருள் ஒரு பாய்மத்தினூடே விழும் போது சுழி இயக்கம் இல்லாத நிலையில், அப்பொருளின் இயக்கத்திற்கு இருக்கும் தடையைக் கணிக்கிறது. இத்தடை இழுவை விசை அல்லது தடை விசை என அறியப்படுகிறது. சமன்பாடு: இங்கு மான் புக்கர் பன்னாட்டுப் பரிசு மான் புக்கர் பன்னாட்டுப் பரிசு ("Man Booker International Prize") இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை பன்னாட்டளவில் வழங்கப்படும் ஒன்றாகும். இது எந்த நாட்டினராக இருப்பினும் ஆங்கிலத்தில் பதிப்பிக்கப்பட்ட அல்லது ஆங்கில மொழிபெயர்ப்பு பதிப்பிக்கப்பட்டுள்ள ஆக்கத்திற்காக வாழும் எழுத்தாளர் ஒருவருக்கு வழங்கப்படுகிறது. இந்தப் பன்னாட்டுப் பரிசு சூன் 2004ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. மான் குழுமத்தினால் வழங்கப்படும் இந்தப் பரிசு, மான் புக்கர் பரிசினை முழுமையாக்குவதோடு உலகளவில் ஒரு எழுத்தாளரின் "தொடர்ந்த புத்தாக்கம், புனைகதைக்குப் பங்காற்றல் மற்றும் வளர்ச்சிக்கு " பரிசளிக்கிறது. எனவே இது ஒரு எழுத்தாளரின் ஆக்கத்தொகுதிக்கான பரிசு; ஒரு புதினத்திற்கு அல்ல. நடுவர்கள் ஆண்டுக்கான தங்கள் தேர்வுப் பட்டியலைத் தாங்களே தொகுக்கின்றனர்;விண்ணப்பங்கள் அழைக்கப்படுவதில்லை. கத்ரி கோபால்நாத் கத்ரி கோபால்நாத் (, டிசம்பர் 11, 1949) தென்னிந்தியாவைச் சேர்ந்த சாக்சபோன் இசைக் கலைஞர் ஆவார். கத்ரி கோபால்நாத் 1949 ஆம் ஆண்டு மங்களூர் நகரத்தில் பிறந்தவர். பெற்றோர்: தனியப்பா, கங்கம்மா. கோபால்நாத்தின் தந்தை ஒரு நாதசுவரக் கலைஞர். ஒருமுறை மைசூர் அரண்மனையில் இசைக்குழு ஒன்று சாக்சபோனை வாசித்தபோது, கோபால்நாத் அந்த இசையால் ஈர்க்கப்பட்டார். மேலைநாட்டு காற்றுக் கருவியான சாக்சபோனைக் கற்றுத் தேர்ந்து ஒரு சிறந்த கலைஞனாக வேண்டும் என ஆசை கொண்டார். மங்களூரின் கலாநிகேதனாவைச் சேர்ந்த கோபாலகிருஷ்ண ஐயரிடமிருந்து சாக்சபோன் வாசிப்பதைக் கற்றார் கோபால்நாத்; பிறகு சென்னையில் பிரபல மிருதங்க இசைக் கலைஞர் டி. வி. கோபாலகிருஷ்ணனிடம் இசைப்பயிற்சி பெற்றார். கோபால்நாத் தனது முதலாவது இசை நிகழ்ச்சியை செம்பை நினைவு அறக்கட்டளையில் நிகழ்த்தினார். அதன்பிறகு 1980 ஆம் ஆண்டு நடந்த ‘பாம்பே ஜாஸ் இசைவிழா’ இவரின் இசை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. கலிபோர்னியாவிலிருந்து வந்திருந்த ஜான் ஹன்டி எனும் ஜாஸ் இசைக் கலைஞர், கோபால்நாத்தின் இசையால் ஈர்க்கப்பட்டு இருவரும் இணைந்து இசை வழங்க விரும்பினார். ஜாஸ்சும் கருநாடக இசையும் கலந்த இசைக்கோர்வை, இசை நேயர்களை பெரிதும் கவர்ந்தது. பராகுவேயில் நடந்த ‘ஜாஸ் இசைவிழா’, செருமனியில் நடந்த ‘பெர்லின் ஜாஸ் இசைவிழா’, மெக்சிகோவில் நடந்த அனைத்துலக செர்வான்டினோ இசைவிழா (International Cervantino Festival), பிரான்சின் பாரிசில் நடந்த ‘இசையரங்க இசைவிழா’ என நிகழ்ச்சிகளில் பங்குகொண்டார். தமிழ்த் திரைப்பட இயக்குனர் கே. பாலச்சந்தரின் முயற்சியால் ‘டூயட்’ எனும் தமிழ் திரைப்படத்தில் கோபால்நாத், ஏ. ஆர். ரகுமானுடன் இணைந்து பணியாற்றினார். அனைத்துப் பாடல்களிலும் சாக்சபோன் இசை பயன்படுத்தப்பட்டது; அப்பாடல்களில் பெரும்பாலும் 'கல்யாண வசந்தம்' எனும் இராகம் பயன்படுத்தப்பட்டது. செவ்வி ஒன்றில் கத்ரி கோபால்நாத் பகிர்ந்தது: "ரகுமானுக்கு சுமார் 30 இராகங்களை வாசித்துக் காட்டினேன். அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. கடைசியாக கல்யாண வசந்தம் வாசித்ததும் 'இதுதான்' என ரகுமான் மகிழ்ந்தார். இந்தப் படத்துக்குப் பிறகு எனக்குக் கிடைத்த வரவேற்பு என்னைப் பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியது." கருவாலி மரம் கருவாலி மரம் () ("Oak") என்பது குயெர்கஸ் என்ற இனத்தைச் சேர்ந்த குறுமரமாகும். இவ்வினத்தில் 600க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இவை பரவலாக ஆசியா மற்றும் அமேரிக்காவின் வடபகுதியில் காணப்படுகின்றன. இவை இலையுதிர் காடுகளிலும், பசுமைமாறாக் காடுகளிலும் காணப்படுகின்றன. திருக்கள்வனூர் கள்வப்பெருமாள் கோயில் திருக்கள்வனூர் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் 55 வது திவ்ய தேசம். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மன் கருவறைக்கு முன் ஒரு மூலையில் உள்ளது சைவக்கோவில்களுக்குள் பாடல்பெற்ற திருமால் கோவில் இருப்பது இக்கோவிலிலும் காஞ்சிபுரத்திலுள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்குள்ளும் மட்டுமே ஆகும். இத்தலத்தில் கிழக்கு நோக்கி நான்கு தோள்களுடன் இறைவன் ஆதிவராகப் பெருமாள், இறைவி அஞ்சிலை வல்லி நாச்சியார் ஆவார். இத்தலத் தீர்த்தம் நித்ய புஷ்கரணி. விமானம் வாமன விமானம் எனும் அமைப்பினைச் சேர்ந்தது. 108 வைணவத் திருத்தலங்களில் மிகச் சிறிய வடிவிலான இறைவனாக விளங்குவது இங்கு மட்டும்தான். இத்தலம் திருமங்கையாழ்வாரால் மட்டும் பாடல் பெற்றுள்ளது. தனியாக கோவில் உற்சவர் போன்றவர்கள் இல்லாததனால் உற்சவங்களும், விழாக்களும் இல்லை. தினசரி பூஜையும் காமாட்சியம்மன் கோவில் அர்ச்சகர்களாலேயே செய்யப்படுகிறது. இத்திருத்தலத்தில் அரூப ரூபத்தில் இருக்கும் ஒரு லட்சுமியை வணங்கினால் அழகின் மீது உள்ள மோகம் குறையும் என்பது நம்பிக்கை. திரு நிலாத்திங்கள் துண்டம் திரு நிலாத்திங்கள் துண்டம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்குள் உள்ளது சைவக்கோவில்களுக்குள் பாடல்பெற்ற திருமால் கோவில் இருப்பது இக்கோவிலிலும் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலிலும் (திருக்கள்வனூர்)ஆகும். இத்தலத்தில் பார்வதியின் வேண்டுகோளின் படி பெருமாள் குளிர்ந்த கிரணங்களை வழங்கிக் கொண்டே இவ்விடத்தில் எழுந்தருளியிருப்பதாக நம்பிக்கையாகும். மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் நிலாத்திங்கள் துண்டத்தான். சந்திரசூடப் பெருமாள் எனற பெயர்களால் அழைக்கப்படுகிறார். இறைவிக்கு நேரொருவர் இல்லா வல்லியென்றும், நிலாத்திங்கள் துண்டத்தாயார் என்றும் பெயர். இத்தலத் தீர்த்தம் சந்திர புஷ்கரணி விமானம் புருஷ ஷீக்த விமானம் (ஆர்ய விமானம்) என்ற வகையைச் சேர்ந்தது. காஞ்சியில் உள்ள ஏகாம்பரேசுவரர் கோவிலுக்குள் அமைந்துள்ள இந்த தலத்தில் சிவன் கோவில் குருக்களே பூஜை செய்து தீர்த்தம் கொடுக்கின்றார். தமிழ்நாட்டிலுள்ள வைணவத் திருத்தலங்களில் சிவனடியார்களால் பூஜை செய்யப்படும் பெருமாள் இவர் ஒருவர் தான். திருமங்கையாழ்வாரால் ஒரு பாடலில் மட்டும் பாடல் பெற்றது. சினட்ரா (மென்பொருள்) சினட்ரா ஒரு நுன்னிய திறந்த மூல இணைய மென்பொருள் கட்டமைப்பு, ரூபி மொழியில் எழுதப்பட்டுள்ளது. 2007ஆம் அண்டு அறிமுகமானது.