சித்தார்த் சித்தார்த் என அழைக்கப்படும் சித்தார்த் சூரியநாராயண் (பிறப்பு: ஏப்ரல் 17, 1979) திரைப்பட நடிகர், பின்னணிப் பாடகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். தமிழ்நாடு, சென்னையில் பிறந்த இவர் தனது இளமைக்கால பள்ளிப்படிப்பை சென்னையில் படித்தார். தனது முதல் படமான பாய்ஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக மட்டுமில்லாமல் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தார். நகுல் நகுல் (பிறப்பு: சூன் 15, 1984) தமிழ் நடிகர் மற்றும் பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் நடிகை தேவயானியின் உடன்பிறந்த தம்பி ஆவார். இயக்குனர் சங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தில் முன்னனி கதாநாயகனாக நடித்த இவர், அந்த படத்தில் பாடலும் பாடியுள்ளார். ரோசா ஒட்டுன்பாயெவா ரோசா இசகோவ்னா ஒட்டுன்பாயெவா ("Roza Isakovna Otunbayeva", கிர்கீசிய மொழி: Роза Исаковна Отунбаева, பிறப்பு: ஆகஸ்ட் 23, 1950) கிர்கிஸ்தானின் அரசுத்தலைவரும், கிர்கிஸ்தான் சமூக மக்களாட்சிக் கட்சியின் தலைவரும் ஆவார். ஏப்ரல் 2010 முன்னாள் அரசுத்தலைவர் குர்மான்பெக் பாக்கியெவிற்கு எதிராக இடம்பெற்ற புரட்சியை அடுத்து ஒட்டுன்பாயெவா இடைக்காலத் தலைவராகத் தன்னை அறிவித்திருந்தார். முன்னாளில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார். ஓஷ் என்ற நகரத்தில் பிறந்தவர் ஒட்டுன்பாயெவா. இவரது தந்தை இசாக் ஒட்டுன்பாயெவ் முன்னாள் சோவியத் குடியரசின் உச்சநீதிமன்ற உறுப்பினராக இருந்தவர். 1972 ஆம் ஆண்டில் மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் பயின்று மெய்யியலில் பட்டதாரியானார். பின்னர் ஆறு ஆண்டுகள் கிர்கிஸ்தான் அரசு தேசியப் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1975 இல் முனைவர் பட்டத்தையும் பெற்றார். திருமணமான இவருக்கு இரண்டு பிள்ளைகள் உண்டு. இவர் கிர்கீசிய மொழி, ரஷ்ய மொழி, ஆங்கிலம், ஜெர்மானிய மொழி, மற்றும் பிரெஞ்சு மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். 1981 இல் பொதுவுடமைக் கட்சியில் இணைந்தார். 80களின் இறுதியில் பாரிசில் யுனெஸ்கோவின் சோவியத் பிரதிநிதியாகவும், பின்னர் மலேசியாவின் சோவியத் தூதுவராகவும் பணியாற்றினார். 1992 இல் கிர்கிஸ்தான் சோவியத்தில் இருந்து விடுதலை பெற்றதும், புதிய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சராகவும், உதவிப் பிரதமராகவும் ஆனார். பின்னர் ஐக்கிய அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் தூதுவராகப் பணியாற்றினார். 1994 இல் மீண்டும் வெளியுறவுத்துறை அமைச்சராக 3 ஆண்டுகள் பணியாற்றினார். 1998-2001 காலப்பகுதியில் ஐக்கிய இராச்சியத்துக்கான தூதுவரானார். தோமா முல்லர் தோமா முல்லர் ("Thomas Müller", மாற்று ஒலிப்பு:"தாமஸ் முல்லர்"; பிறப்பு: செப்டம்பர் 13, 1989) செருமனியின் தேசிய அணியில் விளையாடும் ஒரு கால்பந்து விளையாட்டு வீரர் ஆவார். இவர் பேயேர்ன் மியூனிக்கு கால்பந்தாட்டக் கழகத்தில் ஒரு முக்கிய அங்கம் ஆவார். முல்லர் நடுக்கள அல்லது முன்னணி வரிசையில் பந்தைத் தாக்கும் நிலையில் விளையாடி வருகிறார். இருபுறத்திலிருந்தும் விளையாடக்கூடிய திறனுடையவர். ஆட்டக்களத்தின் எந்த இடத்திலும் ஆடக்கூடிய திறன், அணியுடன் ஒருங்கிசைவு, நெடுநேரம் ஆடக்கூடிய உடற்றிறன் ஆகியவற்றிற்காக பாராட்டப்படுகிறார். கோல்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதிலும் கோலடிப்பதிலும் நிலைத்த தன்மையைக் காட்டி வருகிறார். பேயர்ன் மியூனிக் கழகத்தில் இளஞர் அணியில் துவங்கிய இவரது விளையாட்டு அங்கு பதப்படுத்தப்பட்டுள்ளது. 2009-10 ஆண்டு பருவத்தில் நடந்த அனைத்து கழக ஆட்டங்களிலும் பங்கேற்று அவ்வாண்டில் பேயர்ன் மியூனிக்கு புன்டசுலீகா மற்றும் செருமானிய காற்பந்துக் கழகத்தின் "போகல் கோப்பை"யையும் வென்று இரட்டை எய்த உதவினார். 2010இல் பேயர்ன் மியூனிக்கு வாகையர் கூட்டிணைவு இறுதியாட்டத்திற்கு எய்தவும் காரணமாக இருந்தார். இச்சாதனைகளால் இவர் 2010 உலகக்கோப்பைக்கான தேசிய அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இந்தப் போட்டியில் ஆறு ஆட்டங்களில் ஐந்து கோல்கள் அடித்து செருமானிய அணி மூன்றாமிடம் எட்ட உறுதுணையாக இருந்தார். "ஃபிஃபாவின் சிறந்த இளைய காற்பந்தாட்டக்காரர்" என்ற விருதையும் பெற்றார். மேலும் இப்போட்டிகளில் மிகக் கூடுதலான கோல்கள் அடித்தமையால் "தங்கக் காலணி" விருதையும் வென்றார். சூன் 16, 2014இல் 2014 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளில் போர்த்துக்கல்லுடனான செருமனியின் துவக்க ஆட்டத்தில், முல்லர் "ஆட்ரிக்கு" -ஒரே ஆட்டத்தில் மூன்று கோல்கள் - அடித்து 4-0 என்ற கணக்கில் செருமனி வெல்லக் காரணமானார். தவிரவும் இந்த ஆட்டத்தின் 37வது நிமிடத்தில் போர்த்துக்கேய வீரர் பேப்பிக்கு இவரை தலையால் முட்டியதால் சிவப்பு அட்டை வழங்கப்பட்டது. இவரே இந்த ஆட்டத்தின் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். புகைப்படம் (திரைப்படம்) புகைப்படம், பாயிஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் 1/01/2010 அன்று வெளிவந்த தமிழ்ப் படமாகும். புது இயக்குனர் ராஜேஷ் லிங்கம் இயக்கத்தில் வாமணன் படைப்புகள் பிரியா ஆனந்த் நடிப்பில், அம்சத் , ஹரிஷ் , நந்தா , மிருனாளினி , யாமினி போன்றோர் நடித்துள்ளனர். துணிச்சல் (திரைப்படம்) துணிச்சல், அம்ப்ரிஷி ஆர்ட்ஸ் தயாரிப்பில் 1/01/2010 அன்று வெளிவந்த தமிழ் படமாகும். புது இயக்குனர் சிவா மஞ்சள் இயக்கத்தில் மஜீத், அருண் விஜய், சுவாதிக்கா மற்றும் பலர் நடித்துள்ளனர். குட்டி (2010 திரைப்படம்) குட்டி, ஜெமினி பிலிம் சர்குட் தயாரிப்பில் 14/01/2010 அன்று வெளிவந்த தமிழ்ப் படமாகும். இயக்குனர் மித்திரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக, ஷ்ரீய சரண், சமீர் தட்டானி மற்றும் பலர் நடித்துள்ளனர். ராதா ரவி அவர்களும் ஒரு முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார். நாணயம் (திரைப்படம்) நாணயம், எஸ். பி. பி. சரணின், கேபிடல் பிலிம் வொர்க்ஸ் தயாரிப்பில் 14/01/2010 அன்று வெளிவந்த தமிழ் படமாகும். இயக்குனர் சக்தி. ச. ராஜன் இயக்கத்தில், பிரசன்னா, சிபிராஜ், ரம்யா ராஜ், எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பலர் நடித்துள்ளனர். போர்க்களம் (திரைப்படம்) போர்க்களம், பரணி மினரல்ஸ் தயாரிப்பில் 14/01/2010 அன்று வெளிவந்த தமிழ் படமாகும். புது இயக்குனர் பாண்டி சரோஜ் குமார் இயக்கத்தில், டினு ஆனந்த், நகைச்சுவை நடிகர் சத்யன், ஸ்மிதா மற்றும் பலர் நடித்துள்ளனர். கண. மகேஸ்வரன் கண. மகேஸ்வரன் ஈழத்துப் புதின எழுத்தாளர். இவர் 1970களில் இருந்து எழுதி வருகிறார். சிறுகதை, கவிதை, கட்டுரை, குறுநாவல் போன்ற துறைகளிலும் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. சொந்தப் பெயரிலும், வீகேயெம், மணிமணாளன் போன்ற புனை பெயர்களிலும் எழுதி வருகிறார். கண. மகேஸ்வரன் யாழ்ப்பாண மாவட்டம், வடமராட்சி, கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அரச எழுது வினைஞர் சேவையில் பணிபுரிந்த இவர் தற்போது சேவையிலிருந்து இளைப்பாறியுள்ளார். இவரது ஆக்கங்கள் ஈழநாடு, ஈழநாதம், மித்திரன், வீரகேசரி, தினகரன், தினக்குரல், உதயன், சிந்தாமணி ஆகிய பத்திரிகைகளிலும் மல்லிகை, ஞானம், சிரித்திரன் போன்ற சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன. முன்னர் வெளிவந்த "தாரகை' சஞ்சிகையின் ஆசிரியராக இருந்த இவர் சிரித்திரன் சஞ்சிகையிலும் பணிபுரிந்தார். "எல்லை வேம்பு' என்ற பெயரில் இவரது சிறுகதைத் தொகுதி வெளிவந்தது. பாக்கர் பாக்கர் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவரும் விண் தொலைக்காட்சியின் இயக்குநர்களில் ஒருவரும் ஆவார். இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த இவர் முதுநிலை கலை பட்டம் பெற்றவர். சென்னையில் தற்போது வசித்து வருகின்றார். தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் நிறுவனர்களில் இவரும் ஒருவர், தமுமுகவின் மாநில பொருளாளராக செயல்பட்டவர். தமுமுக அமைப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக ஜெய்னுல் ஆபிதீன் மற்றும் சிலரோடு தனியாக பிரிந்து 16-05-2004 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை நிறுவினார். பின்னர் அதிலிருந்து விலகி, 2009ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் நாள் இந்திய தவ்ஹீத் ஜமாத்தை நிறுவி அதன் தலைவராக பொறுப்பு வகிக்கிறார். பாஸ்தியான் இசுவைன்சுடைகர் பாஸ்தியான் ஷ்வைன்ஷ்டைகர் - Bastian Schweinsteiger - ( பி. 1 ஆகஸ்ட் 1984 - பவேரியா ), ஒரு செருமானியக் கால்பந்தாட்ட வீரர் ஆவார்; இவர் செருமானியத் தேசிய அணியிலும் பயான் மியூனிக் அணியிலும் தற்போது நடுக்களவீரராக ஆடுபவர்; முன்னர் இடதுவோர வீரராக ( left winger ) விளையாடி வந்தவர். முதன்முதலாக சூன் 2004-இல் அங்கேரியை எதிர்த்து செருமன் அணியில் விளையாடினார். இதுவரை 78 அனைத்துலக ஆட்டங்களில் விளையாடியுள்ளார்; அடித்துள்ள இலக்குகளின் எண்ணிக்கை 21. அறநெறிப் பாடசாலை அறநெறிப் பாடசாலை என்பது வாழ்க்கைக்கான நல்லறத்தைப் போதிக்கும் வகையிலான இந்துநெறி சார்ந்த அறவொழுக்கங்களைப் போதிக்கும் பாடசாலைகள் ஆகும். இலங்கையில் இந்து சமய, இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கீழ்ப்பதிவு செய்யப்பட்ட ஆலயங்கள் மற்றும் மத நிறுவனங்கள் இவற்றை நடத்தி வருகின்றன. கத்தோலிக்க மதத்தவர்களின் ஞாயிறு பாடசாலைகளுக்கு ஒப்பாகவும், பௌத்தர்களின் 'தகம் பாசல' க்கு சமமாகவும் இசுலாமியர்களின் மதரசாக்களுக்கு ஒப்பாகவும் இது கொள்ளப்படுகிறது. இப்பாடசாலை மாணவர்கள் இந்து ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்கவும் சமய சாதனங்களை மேற்கொள்ளவும் தூண்டப்படுகின்றார்கள். நிகழ்த்து கலை நிகழ்த்து கலை ("performing art") என்பது அரங்கொன்றில் கலைஞர், ஒருவர் அல்லது பலர், தமது முகம், உடல் அல்லது இருப்பு கொண்டு நிகழ்த்துவதற்குரியதான கலை வடிவம் ஆகும். இது ஓவியம், சிலைவடிப்பு, சிற்பம் மற்றும் எழுத்து போன்ற பிற ஊடகங்களில் தமது கலைத்திறமையை வடிப்பதிலிருந்து வேறுபட்டதாகும். இத்தகைய பாகுபாடு ஆங்கில வழக்கில் 1711 முதல் இருந்து வருகிறது. இது பல்வேறு துறைகளை உள்ளடக்கியதாயினும் பார்வையாளர்கள் முன்னிலையில் நேரடியாக நிகழ்த்திக் காட்டும் கலைவடிவையே குறிக்கும். நுண்மையான உறுப்புகளையும், நுண்ணிய திறன்களையும், நுண்ணிய உணர்வுகளையும் கொண்டது நுண்கலை. கவிதை, இசை, ஆடல், ஓவியம் முதலியன இதனுள் அடங்கும். ஒரு கலைஞனின் நுண்கலை வடிவின் சிறப்புக் கூறுகள் பார்வையாளர்களின் மத்தியில் வெளிப்படுத்தப்படும்போது அது நிகழ்த்து கலையாக வடிவம் கொள்கிறதெனலாம். பல்வேறு நிகழ்த்து கலைகள் நெகிழ்தன்மை கொண்ட கலைகளாக அறியப்படுகின்றன. அரங்கினில் நிகழ்த்தப்படும் கலைவடிவங்கள் இவ்வகையில் அடங்குகின்றன. நடனம் நவீன நடன சகாப்தத்தில் நெகிழ்தன்மை கொண்ட கலையாகவே சில நேரங்களில் குறிப்பிடப்படுகிறது. நிகழ்த்து கலை என்பது கீழ்க்காண்பவைகளை உள்ளடக்கிய ஒன்றாகும். பார்வையாளர்களின் முன்னால் கலைகளை நிகழ்த்திக் காட்டும் நடிகர் அல்லது கலைஞர் 'நிகழ்த்து கலைஞர்' எனப்படுகிறார். நடிகர், நகைச்சுவையாளர், நடனமாடுவோர், மாயவித்தைக்காரர், இசைக்கலைஞர், பாடகர், பலகுரல் கலைஞர், பேச்சாளர் போன்றோர் இவ்வகையினர் ஆவர்.கலை நிகழ்த்துவோர் ஏற்கும் பாத்திரத்திற்கேற்ப தனது உடல் மொழி, உடை, ஒப்பனை இன்னபிறவற்றை அமைத்துக் கொள்வர். கலை நிகழ்த்துவோர் மட்டுமன்றி அவர்களுக்குப் பக்கத் துணையாயிருக்கும் பாடலாசிரியர், மேடை அமைப்பாளர் ஆகியோரும் நிகழ்த்துகலைக்குத் தேவை. அரங்கம் என்பது கலைவடிவின் ஓர் அங்கமாகும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஓர் கலைஞர் தனது நுண்கலைத்திறன் மூலம் கற்பனையான ஒரு நிகழ்வை உயிரோட்டமுள்ளதாக அங்கிருக்கும் பார்வையாளர்களின் முன்னர் அரங்கேற்றும் இடமாகும். நடிப்பு, பார்வையாளர்களின் முன் கதையை வெளிப்படுத்தும் திறன், பேச்சு, குறிப்பு, இசை, நடனம், ஒலி மற்றும் காட்சிக்கலவை ஆகியவையும் நிகழ்த்துகலையின் முக்கிய அங்கங்களாகும். இவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவைகள் நிகழ்த்து கலைக் கூறுகளாகும். மேலும் கூடுதலாக நாடகங்களின் நிலையான பாணி கொண்ட கதைவசனங்களையும் கொள்ளலாம். இவற்றுடன் கூட்டாக அரங்கு என்பது நிகழ்த்து கலையின் ஓர் முக்கிய அங்கமாக அரங்கம் அமைகிறது. இசையரங்கு, ஓபரா, பாலே நடன அரங்கு, மாயவித்தை அரங்கு, இந்திய பரத நாட்டிய அரங்கம், நகைச்சுவையரங்கம், தற்காலிக அரங்கம், நிலையான அரங்கம், நவீன அரங்கமென நிகழ்த்தும் கலைக்கேற்ப அரங்கங்கள் வடிவம் கொள்கின்றன. சில நேரங்களில் தெருவோரங்களில் அல்லது தெருக்கள் கூடுமிடங்களில் நிகழ்த்து கலைகளில் ஏதேனுமொன்று நிகழ்த்தப்பட்டால் அவ்விடமே அரங்கமாக அமைகிறது. நடனம் என்பதைக் குறிக்க ஆங்கிலத்தில் 'டான்ஸ்' என்ற பழம் பிரெஞ்சுச் சொல் பயன்படுத்தப்படுகிறது. இது சமூகம் அல்லது ஆன்மீகம் அல்லது நிகழ்த்திக் காட்டப்படும் கலைவடிவங்களில் வழங்கப்படும் அல்லது வெளிப்படும் மனித இயக்கத்தினை அல்லது அசைவினைப் பொதுவாகக் குறிக்கப் பயன்படும் 'டான்சியர்' என்ற பிரெஞ்சு மொழியிலிருந்து பெறப்பட்டதாகும். மேலும் நடனம் என்பது மனிதர்களுக்கிடையே அல்லது விலங்குகளுக்கிடையே வாய்மொழியாக வெளிப்படுத்த முடியாதவைகளை உடல்மொழியின் மூலம் வெளிப்படுத்துவதற்காகப் பயன்படும் ஒரு வழிமுறையாகும். நடன அமைப்பு(Choreography) என்பது நடனத்தைக் கரு அல்லது கதைக்கேற்ப அமைப்பதைக் குறிக்கும். இவ்விதம் நடனம் அமைத்துத் தருபவர் நடன அமைப்பாளர் எனப்படுவார். நடனம் என்பதன் வரையறையானது, சமூகம், கலாச்சாரம், அழகியல், கலை, தார்மீக நெறிமுறைகள் மற்றும் சில வாழ்வியல் இயக்கங்கள் ஆகிவற்றைச் சார்ந்தே அமைகின்றது. சில நாட்டுப்புற நடனங்கள் முறைப்படுத்தப்பட்டு, சில கலை நுணுக்கத் திறன் நுட்பங்கள் இணைக்கப்பட்டு நடனங்களாகின்றன. எடுத்துக்காட்டாகப் பாலே நடனத்தைக் குறிப்பிடலாம். விளையாட்டுகளில் ஜிம்னாஸ்டிக், சறுக்கு விளையாட்டு, நடனத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட நீச்சல் ஆகியவையும் நடன வகையுள் அடங்கும். சில ஒழுங்குகளுடன் கூடிய தற்காப்புக் கலைகளான சிலம்பம், கடா போன்றவையும் சில நேரங்களில் நடனத்துடன் ஒப்பிடப்படுகின்றன. கி.பி. ஆறாம் நூற்றாண்டில் செவ்வியல் காலத்தில் கிரேக்கத்தில்நிகழ்த்து கலை தொடங்கியதாகக் குறிப்பிடப்படுகிறது . சாஃப்போக்ளீசு என்ற துயரக் கவியெழுதும் கவிஞனால் இது அறிமுகப்படுத்தப்பட்டது. இவர் சில நேரங்களில் நடனத்துடன் கூடிய கவிதை வடிவங்களைத் தந்தார். பின்னர் வந்த காலங்களில் இது நகைச்சுவையுடன் கூடியதாகப் பரவலாக்கப்பட்டு நிகழ்த்தப்பட்டது. ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னர் வரலாற்றில் கருப்புகாலம் எனப்பட்ட காலங்களில் பெரும்பாலும் இக்கலை முடிவுக்கு வந்ததெனக் கூறலாம். பின்னர் 9ஆம் நூற்றாண்டு முதல் 14ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இக்கலையானது ரோமன் கத்தோலிக்கச் சபையினரால் சில வரையறைகளுக்குட்படுத்தப்பட்டுப் புனித நாட்கள் அல்லது சில முக்கிய நிகழ்வுகளில் இது நிகழ்த்தப்பட்டது. பதினைந்தாம் நூற்றாண்டில் நிகழ்த்துகலையானது மற்ற கலை வடிவங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுப் புத்துணர்வு பெற்றது. இத்தாலியில் தொடங்கிய இதன் மறுமலர்ச்சி ஐரோப்பாவெங்கும் பரவியது. இதன் கூறுகள் சில நடனங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுப் புதிய நடன வடிவங்கள் தோற்றம் பெற்றன. 1581 இல 'டொமினிக்கோ டெ பியாசின்சா'என்பவர் முதன் முதலாக நடனம் என்ற சொல்லுக்குப் பதிலாகப் பாலே என்ற சொல்லாட்சியினைப் பயன்படுத்தினார். இதன்பிறகு பாலே நடனம் முறையாகக் கற்பிக்கப்பட்டது. பதினாறாம் நூற்றாண்டின் மத்தியில் முன் முயற்சியின்றித் தயார் செய்யும் இக்கலை ஐரோப்பாவில் மிகவும் புகழ்பெற்றது. இக்கால கட்டத்தில் இங்கிலாந்தில் இசை, நடனம், நவீன உடையலங்காரங்களுடன் அரங்குகளில் நிகழ்த்திக்காட்டும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. வில்லியம் ஷேக்ஸ்பியர் நாடகங்களில் பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இவ்வாறு முறைப்படுத்தப்பட்ட நிகழ்த்து கலையானது வளர்ச்சியடைந்தது. 1597 களில் முதன் முறையாக ஓபெரா எனப்படும் நிகழ்த்து கலை உருவாக்கப்பட்டது. 17 ஆம் நூற்றாண்டு முழுவதும் ஓபெரா பெரும்பாலும் ஐரோப்பாவில் பிரபுத்துவம் கொண்டோருக்கான ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக நிகழ்த்தப்பட்டது. பின்னர் அது நகரங்களில் வாழும் மிகப்பரவலான மக்கள் மத்தியில் ஐரோப்பா முழுவதும் பரவியது. பதினேழாம் நூற்றாண்டில் இத்தாலியில் புராசீனியம் வளைவுகள் கொண்ட பாரம்பரிய வடிவமைப்புடைய அரங்குகள் அமைக்கப்பட்டன. இவ்வடிவுடைய அரங்கங்களே இன்றளவிலும் உள்ளன. இதற்கிடையில் இங்கிலாந்தில் பூரித்தான்கள் நடிப்புக்குத் தடை விதித்தனர். இதனால் 1660 வரை நிகழ்த்துகலைகளுக்குத் தடை நீடித்தது. அதன் பிறகு பிரெஞ்சு மற்றும் ஆங்கில நாடகங்களில் பெண்கள் பங்கேற்று நடிக்கத் துவங்கினார்கள். பிரான்சில் பதினேழாம் நூற்றாண்டுகளில் நடனக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. இதே நேரத்தில் அமெரிக்கக் காலனி நாடுகளில் முதல் முதலாக நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன. பதினெட்டாம் நூற்றாண்டில் ஓபெரா எனப்படும் இசை நாடகங்கள் உருவாக்கம் பெற்று அறிமுகப்படுத்தப்பட்டன. இவ்வகை நாடகங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. மொசார்ட், தி மேரியேஜ் ஆப் ஃபிகாரோ, டான் கியோவணி ஆகியவை பதினெட்டாம் நூற்றாண்டில் குறிப்பிடத் தக்க ஓபெரா நாடகங்களாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் லுட்விக் வான் பீத்தோவன், ரொமான்டிக் மூவ்மெண்ட் ஆகியவை முதன் முதலாக மிகப்பிரம்மாண்ட அளவில் உருவாக்கம் பெற்ற இசை நாடகங்களாகும். இருபதாம் நூற்றாண்டில் ரிச்சர்ட் வானரின் சில இசை நாடகங்கள கலையில் முழுவடிவமாகக் கருதப்பட்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டினைப் பொதுவாக நிகழ்த்து கலையின் வளர்ச்சிக் காலமாகக் கொள்ளலாம். சமுதாயத்தின் அனைத்துப் பிரிவுகளிலும், தொழினுட்பத்திலும் இக்கலைகள் வளர்ச்சிபெற்றதெனலாம். திரையரங்குகளில் வாயுவிளக்குகளின் பயன்பாடு, கேலி நாடகங்கள், பாடியபடியே ஆடுதல், பல்வேறுபட்ட திரையரங்குகள், பாலே நடனம், ஆண்களே நிகழ்த்திக்கொண்டிருந்த இவ்வித கலைகளில் பெண்களும் ஈடுபட்டு முன்னேறியமை ஆகியவற்றினை இதற்கு எடுத்துக் காட்டாகக் கொள்ளலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் பாலே நடனத்திற்கான சில விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் தோன்றியதால் நவீன நடனங்கள் தோற்றம் பெற்றன.இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் 'கான்ஸ்டண்டைன் ஸ்டானிச்லாவ்ஸ்கி' என்பவர் சில நவீன முறைகளைப் புகுத்தி நடிப்பில் ஒரு புரட்சியைத் தோற்றுவித்தார். திரைகளிலும் மேடைகளிலும் நடிக்கும் நடிகர்களிடம் இதன் தாக்கம் இன்றுவரை காணப்படுகிறது. இக்காலத்தில் மேடை நாடகங்களில் தோன்றும் பொருட்களின் அல்லது நடிகர்களின் மீது ஒளியைப் பாய்ச்சும் உத்தியும் புனைவுகள் எதுவுமற்ற உண்மைச் சம்பவங்களைக் கூறும் நாடகங்களும் மேடைகளில் அரங்கேற்றப்பட்டன. 1909-1929 களில் செர்ஜி டியாகிலேவ் என்பவரால் புதிய நடன உத்திகள் புகுத்தப்பட்டு தோற்றம்பெற்ற ரூசேஸ் பாலே நடனத்தால் நிகழ்த்துகலைகளில் ஒரு புரட்சி ஏற்பட்டது. முக்கியமாக நடன வடிவமைப்பாளர்கள், நடனக் கலைஞர்கள், அரங்க வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள் ஆகியோரின் கூட்டு முயற்சியால் இக்கலை புத்துணர்ச்சியும் புதுவாழ்வும் பெற்றது. இதனால் மேற்கத்திய உலகில் பாலே நடனம் மட்டுமல்லாமல் பிற நிகழ்த்துகலைகளும் பரவலாக்கப்பட்டதெனலாம். தாமஸ் ஆல்வா எடிசன் அசையும் படத்தைப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கண்டறிந்தார். இது ஹாலிவுட்டில் திரைப்படத் தொழில் வளர்ச்சிக்ககுக் காரணமாக அமைந்தது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் இருபத்தொன்றாம் நூற்றாண்டு வரை இன்றளவும் திரைப்படங்கள் நிகழ்த்துகலைகளில் ஒரு முக்கிய இடத்தை ஆக்கிரமித்துள்ளன எனலாம். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 'ரிதம் அன்ட் புளூஸ்' எனப்பட்ட துள்ளலுடன் கூடிய ஆப்பிரிக்க-அமெரிக்க பாரம்பரிய இசையானது மிகப்பரந்த அளவில் உலகெங்கும் புகழ்பெற்றது. இது இசையில் ஒரு புதிய பாணியைத் தோற்றுவித்தது, 1930 களில் 'ஜீன் ரொசென்தல்' மேடைகளில் நவீன ஒளி வடிவத்தை அறிமுகப்படுத்தினார். இது மேடையில் இயற்கையாகத் தோன்றும் ஒளியை மாற்றிப் புதிய உத்திகளைத் தந்தது. ஐக்கிய அமெரிக்காவின் பிராடுவே அரங்கு இதனால் அமெரிக்காவின் ஒரு முக்கிய நினைவுச்சின்னமாகக் கருதப்பட்டது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் மேற்கத்திய உலகில் பாலே, ஓபெரா ஆகிய கலை வடிவங்கள் எழுச்சி பெற்று உயர்ந்த இடத்தைப் பெற்றன. 1960 களில் நிகழ்த்துகலைகளில் நவீனத்துவம் புகுத்தப்பட்டு பேரளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியது. 1950 களில் ராக் அன்ட் ரோல், ரிதம் அன்ட் புளூஸ் ஆகியவை இசையுலகில் அசைக்கமுடியாத பொழுதுபோக்கு இசைகளாக மாறின. இதன் பின்னர் பல்வேறு இசைவடிவங்கள் உருவாக்கப்பட்டு அனைத்துத் தரப்பு மக்களும் கேட்டு இரசிக்கும்படியாக மாறியது. பண்டைய எகிப்திய நாகரிகத்தில் கி.மு. 2000 முதலே அரங்க நிகழ்வுகள் பதியப் பட்டு வந்துள்ளது. இந்நாகரிகத்தில் திருவிழாக் காலங்களில் 'ஓசிரிஸ்' எனப்படும் கடவுளின் வரலாறு நாடகமாக நடித்துக் காண்பிக்கப்பட்டதாக அறிய முடிகிறது. இதனால் நாடகங்களுக்கும் சமயங்களுக்கும் உள்ள நீண்ட கால உறவினை இதன் மூலம் அறியலாம். மத்திய இசுலாமிய நாடுகளில் பொம்மலாட்டம் எனப்பட்ட நிகழ்த்துகலை வடிவங்கள் மிகம் புகழ் பெற்றிருந்தன. கைகளில் பொம்மையை வைத்து ஆட்டும் கைப்பாவைக் கூத்து திரையில் பின்புறம் பொம்மைகளை வைத்து ஆட்டும் 'நிழற்பாவைக் கூத்து பொம்மலாட்ட பொம்மைத் தயாரிப்பு மற்றும் ' தாஜியா என அழைக்கப்பட்ட நேரலை உணர்ச்சி மிகு நாடகங்கள் புகழ்பெற்றிருந்தன.இசுலாமிய வரலாற்று நாயகர்களைப் பற்றிய தாஜியா நாடகங்கள் மீண்டும் மீண்டும் பலமுறை நடத்தப்பட்டன. குறிப்பாக ஷியா இசுலாமிய நாடகங்கள் ஷாகீத், தியாகமே உருவான அலியின் மகன்களாகிய ஹசன் இபின் அலி, ஹுசைன் இபின் அலி ஆகியோரைப் பற்றிய வரலாற்றினைக் கொண்டதாகவே இருந்தன. மத்திய இசுலாமிய நீதி இலக்கியங்களில் அகார்ஜா' எனப்படும் மத சார்பற்ற நாடகங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஆயினும் இவை பொம்மலாட்டம் மற்றும் தாஜியா நாடகங்களை விட மிகக் குறைந்த அளவே நிகழ்த்தப்பட்டன. ஈரானில் நிகழ்த்து கலைகள் அரங்குகளில் பல்வேறு வடிவங்களில் நிகழ்த்தப்பட்டன. 'நகாலி' எனப்படும் கதை கூறுதல், ருஹவுசி, ஷியா-பாசி, பர்தேகானி, மரெகெ கிரி(வெறும் கரங்களாள் கல்லுடைத்தல், தோள்களால் சங்கிலியை அறுத்தல், பாம்புகளைக் கொண்டு வித்தைக் காட்டுதல் முதலிய நிகழ்த்து கலைகள் மரெகெ கிரி என்றழைக்கப்படுகின்றன) ஆகியன அவற்றுள் சிலவாகும். கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பு இந்தியாவில் வேதகால மக்களின் மத நம்பிக்கைகளே அக்கால நாட்டுப்புறக் கலைகள் மற்றும் நாடகங்களின் ஒரு முக்கியக் கூறாக இடம்பெற்றிருந்தது. இந்த நாட்டுப்புற நிகழ்த்து கலைகள் அம்மக்களின் நடனம், உணவு, மத நம்பிக்கை மற்றும் அன்றாட வாழ்வின் ஒரு முக்கிய அம்சமாக இருந்தன. இதுவே பின்னர் வளர்ச்சி பெற்ற செவ்வியல் கலைகளிலும் பிரதி பலித்தது. இந்தோ-ஆரியப் பழங்குடியினர் மத்தியில் பரவியிருந்த சில சமய நம்பிக்கைகள் அவர்களின் கலைகளில் வெளிப்பட்டதாகப் புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர்களான டி.டி. கோசாம்பி, தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, ஆத்ய ரங்காச்சார்யா ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அவர்களுள் சிலர் விலங்குகளைப் போலவும் சிலர் வேட்டைக்காரர்கள் போலவும் சித்தரித்துக் கொண்டனர். அவர்கள் ஆடு, எருமை, மான், குரங்கு போன்ற பாலூட்டிகளாகப் பாவனை செய்து கொண்டும் அவர்களை வேட்டைக்காரர்கள் துரத்துவது போலவும் நடித்துள்ளனர். கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு- இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பரதமுனி எழுதிய "பரத நாட்டிய சாஸ்திரம்" இந்தியாவில் நாடகம், நடனம், நடிப்பு, மற்றும் இசை ஆகியவற்றை ஆய்வு செய்து எழுதப்பட்ட நூலாகும். இந்து இந்திய நிகழ்த்து கலைகளின் இலக்கணமாகத் திகழ்கிறது. அரிஸ்டாட்டில் எழுதிய பொயடிக்ஸ் என்ற நூலுடன் ஒப்பிடப்படுகிறது. பரதமுனி 'இந்திய நாடகக் கலையில் தந்தை' என அழைக்கப்படுகிறார். இவருடைய நாட்டிய சாஸ்திரம் என்ற நூல் ஒரு நாடகத்தின் முறையான விதிமுறைகளுடன் கூடிய கலை நுணுக்கங்களைப் பற்றிய விரிவான ஆய்வின் ஒரு முதல் முயற்சியாக அமைகிறது. ஒரு நாடகத்தில் என்ன அமைய வேண்டும் என்பதை விட ஒரு நாடகத்தை எவ்வாறு சிறந்த முறையில் சித்தரிக்கலாம் என அந்நூல் எடுத்தியம்புகிறது. பரத முனியின் கூற்றுப்படி ஒரு நாடகம் என்பது மனிதன் மற்றும் அவனுடைய செயல்பாடுகள்(லோக விருத்தி) "போலச் செய்தல்"முறையில் நாடகத்தில் அமைய வேண்டும். மனிதன் மற்றும் அவனுடைய செயல்பாடுகள் அரங்குகளில் மதிப்பிடத் தக்க வகையில் அமைய வேண்டும். நாடகம் என்பது சம்ஸ்கிருதத்தில் " ரூபகா" எனக் குறிப்பிடப்படுகிறது. இதன் பொருள் 'சித்தரித்தல்' என்பதாகும். இந்திய இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் ஆகியவை இந்தியாவில் உருவான முதல் நாடகங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவ்விதிகாசங்கள் இன்றளவும் இந்திய நாடகக் கலைகளுக்கு உத்வேகம் அளிக்கின்றன. இவ்விதிகாசகங்களில் கூறப்பட்டுள்ள கதைகள் மற்றும் கிளைக்கதைகள் இன்றைய நாடகங்களின் கருவாகத் தொடந்து வருகின்றன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த 'பாசா' என்பவரது நாடகங்களுக்கு இராமாயண மகாபாரத இதிகாசங்களே பெரிதும் உத்வேகம் அளித்துள்ளன. கி.மு. முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த காளிதாசர் இந்தியாவின் சிறந்த நாடகாசிரியராகக் கருதப்படுகிறார். "மாளவிக்காக்னி மித்ரம்"(மாளவிகாவும் அக்னிமித்ரரும்), "விக்ரமூர்வசியா"(விக்ரமாதித்யனுக்கும் ஊர்வசியும்), "சாகுந்தலம்" "ரகுவம்சம்"ஆகியன இவரது புகழ்பெற்ற இன்பியல் நாடகமாகும். இதில் சாகுந்தலம் என்பது மகாபாரததில் வரும் ஒரு புகழ்பெற்ற கிளைக்கதையாகும். இநாடகம் ஆங்கிலம் மற்றும் ஜெர்மனி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பாசாவுடன் ஒப்பிடுகையில் காளிதாசரை ஒரு சிறந்த நாடகாசிரியர் என்றே கூறலாம். ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த 'பாவாபூதி' என்பவர் ஒரு சிறந்த நாடகாசிரியராக அறியப்படுகிறார். மாலதி-மாதவன், மகாவீரசரித்திரம், உத்தர ராமசரித்திரம் ஆகியன இவரது படைப்புகளில் குறிப்பிடத் தக்கன. இவற்றில் பின்னிரண்டும் ஒன்றுக்கொண்டு தொடர்புடைய, இராமாயணக் கதையைத் தழுவிய நாடகங்களாகும். 606-648 களில் இந்தியாவின் தலைசிறந்த மன்னனாக விளங்கிய ஹர்ஷவர்த்தனன் நகைச்சுவை நாடகமான 'ரதனாவளி', 'பிரியதர்ஷிகா', புத்தசமய நாடகமான 'நாகநந்தனா' ஆகிய மூன்று நாடகங்களை எழுதியுள்ளார். இடைக்கால இந்தியாவில் நிறைய நாடகங்கள் தோற்றம் பெற்று புத்துயிர் கொண்டன எனலாம். இந்தியாவில் பல நிகழ்த்து கலைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக மணிப்புரி, கதக், ஒடிசி, பரதநாட்டியம், மோகினியாட்டம், கதகளி ஆகிய ஏழும் செவ்வியல் நடனங்களாகப் புகழ்பெற்றவையாகும். குறிப்பாகத் தென்னிந்தியாவில் கேரளாவில், கதகளி, சாக்கைக் கூத்துஆகியனவும், ஆந்திராவில் குச்சுப்புடி, தமிழகத்தில் பரத நாட்டியம், தெருக்கூத்து, கரகாட்டம் போன்ற கலைகளும் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இக்கலைகளில் புகழ்பெற்ற கலைஞர்கள் பங்கேற்கின்றனர். சீனாவில் கி.மு.1500 களின் தொடக்க காலத்தில் சாங் வமிச காலத்தில் சீனர்கள் இசை மற்றும் கழைக்கூத்து போன்ற நிகழ்த்துகலைகளை பொழுதுபோக்கிற்காக நிகழ்த்திய குறிப்புகள் உள்ளன. டாங் வமிசம் " ஆயிரம் பொழுதுபோக்குகளின் காலம்" எனச் சிலசமயங்களில் அறியப்படுகிறது. இச்சகாப்தத்தில் டாங் வமிச அரசர் 'யுவான்சாங்' சீனாவில் நடிப்புக்காக ஒரு பள்ளியை நிறுவினார். 'பியர் கார்டன் என்றழைக்கப்பட்ட இப்பள்ளி நாடகம் குறிப்பாக இசையைப் பிரதானமாகக் கொண்ட நடிப்புக்கலையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது. ஹான் வமிச காலத்தில் முதன் முதலாக அரங்குகளில் நிழற்பாவைக் கூத்து என்ற நிகழ்த்து கலை சீனாவில் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. இந்நிழற்பாவைக் கூத்து இரு வேறுபட்ட வடிவங்களில் நிகழ்த்தப்பட்டன. அவை தென்கண்டனீயக் கலை, வடபீகிங் கலை ஆகியனவாகும். இவ்விரண்டு வடிவங்களும் பொம்மைகள் உருவாக்குதல், இயக்குதல் ஆகியவற்றில் மாறுபட்டவைகளாகும். இரண்டும் சாகசங்களும் கற்பனைகளும் நிறைந்த ஒரு பொதுவான பாணியில் நிகழ்த்தப்பட்டன. அரிதாக இவை அரசியல் பிரசாரத்திற்காகப் பயன்படுத்தப்பட்டன. கண்டனீய பொம்மைகள் அளவில் பெரியவை. அடர்ந்த நிழல்களை உருவாக்குவதற்காக இவை தடித்த தோல்களால் செய்யப்படுகின்றன. குறிப்பிட்ட சில வண்ணங்களை அடையாளத்திற்காகப் பயன்படுத்துகின்றனர். கருப்பு நேர்மையையும், சிவப்பு வண்ணம் வலிமையையும் குறிப்பிடுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. கண்டனீய பொம்மைகளின் தலைப்பகுதியில் கம்பிகள் செங்குத்தாக இணைக்கப்பட்டு இயக்கப்படுகின்றன. அதனால் இவை இயக்கப்பட்டு நிழல்கள் உருவாக்கப்படும்போது பார்வையாளர்களின் கண்களுக்கு இக்கம்பிகள் தெரிவதில்லை. பீகிங்ஸ் பொம்மைகள் சிறியனவாகவும் மிகவும் நேர்த்தியாகவும் தயாரிக்கப்படுவன. இவை மெல்லிய தோலால் ஒளிபுகும் வகையில் உருவாக்கப்படுகின்றன. வழக்கமாகக் கழுதையில் அடிவயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட தோலால் செய்யப்படுகின்றன. வண்ணமயமான நிழல்களை உருவாக்குவதற்காக இவற்றுக்குத் துடிப்பான நிறங்களில் வண்ணமடிக்கப்படுகிறது. மிகவும் மெல்லிய ஒரு கம்பியின் மூலம் பொம்மைகள் இயக்கப்படுகின்றன. இவை பொம்மையின் கழுத்துப்பகுதியில் பொம்மைகளுக்கு இணையாகக் காலர் மூலம் 90° க்கு இணைக்கப்படுவதால் எளிதாக இயக்க முடிகிறது. எனவே இவை நிழல்களை உருவாக்கும்போது பார்வையாளர்களின் கண்களுக்குப் புலப்படுமாயினும் பொம்மைகளின் நிழல்களில் எந்த விதமான இடையூறாகவும் இராது. பொம்மைகளின் கழுத்துப்பகுதியில் இவை இணைக்கப்படுவதால் ஒரே உடலில் பலவேறு தலைப்பகுதியை இணைத்துப் பயன்படுத்திக்கொள்ள முடியும். இத்தலைகள் பயன்படுத்தப் படாத நேரங்களில் அவை ஒரு மெல்லிய மஸ்லின் துணியால் செய்யப்பட்ட புத்தகம் போன்ற அமைப்பிலோ துணியால் செய்யப்பட்ட பெட்டியிலோ பாதுகாக்கப்படுகின்றன. பொம்மைகளின் தலைகள் எப்பொழுதும் இரவில் தனியாகக் கழற்றி வைக்கப்படுகின்றன, ஏனெனில் பொம்மைகளை அப்படியே விட்டுவிட்டால் அவை இரவில் உயிர்பெற்று எழுந்துவிடும் என்பது சீனர்களின் நம்பிக்கையாகும். இன்னும் சிலர் இப்பொம்மைகள் மீண்டும் உயிர்பெற்று வராமலிருக்கும் பொருட்டு அதன் தலைகளை ஓரிடத்திலும் அதன் உடல்களைத் தொலைவில் உள்ள மற்றோரிடத்திலும் பாதுகாத்து வைக்கின்றனர். பதினோறாம் நூற்றாண்டில் நிழற்பாவைக் கூத்தானது சீனாவில் கலைகளின் உச்ச நிலையை அடைந்து அரசாங்கத்தின் ஓர் இன்றியமையாதக் கருவியாக மாறியது. சாங் வமிச காலத்தில் கழைக்கூத்து வித்தைகளும், இசையும் புகழ்பெற்றிருந்தன. யுவான் வமிச ஆட்சியில் இவை மேலும் வளர்ச்சியடைந்தன. இக்காலத்தில் இவை ஐந்து அல்லது ஆறு கலையமைப்புகளுடன் அதிநவீனப்படுத்தப்பட்டது. யுவான் நாடகம் சீனா முழுவதும் பரவி அதன் பிராந்தியக் கலைகளுடன் இணைந்து எண்ணற்ற வடிவங்களில் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. பீகிங் ஓபரா என அறியப்படும் இன்றளவும் புகழ்பெற்ற நிகழ்த்துகலை இவற்றுள் ஒன்றாகும். தாய்லாந்தில் நிகழ்த்துகலையானது இடைக்காலத்தில் அதன் பாரம்பரிய வடிவங்களுடன் இந்தியக் காப்பியங்களை அடிப்படையாகக் கொண்டு மேடை நாடகமாக உருப்பெற்றதெனலாம். தாய்லாந்தின் தேசியக் காப்பியமாக "ராமகீன்" என்பது இந்திய இதிகாசமான இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். இது இன்றளவும் தாய்லாந்தில் மிகவும் புகழ்பெற்றதாகும் கம்போடியாவின் பழைமையான தலைநகரமான அங்கோர் வாட்டில் உள்ள ஆலயத்தில் இந்திய இதிகாசமான இராமாயணம், மகாபாரதம் ஆகிய காப்பிய நிகழ்வுகள் அவ்வாலயத்தின் சுவர்களிலும் அதன் வளாகத்திலும் பொறிக்கப்பட்டுள்ளன. இதேபோன்று நினைவுச் சின்னங்கள் இந்தோனேசியாவின் போராபுதூரிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பதினான்காம் நூற்றாண்டில் ஜப்பானில் சிறு மற்றும் மோசமான நகைச்சுவை நிகழ்வுகளை நடத்துவதற்காகச் சிறு நாடக நிறுவனங்கள் இருந்தன. இந்நிறுவனங்கள் ஒன்றின் இயக்குநராக இருந்த 'கான் அமி'(1333-1384) என்பவரது மகன் 'ஜிஅமி மொட்டோக்கியோ' (1358-1443) என்பவர் ஒரு மிகச்சிறந்த குழந்தை நட்சத்திரமாகக் கருதப்படுகிறார். கான் அமியினுடைய நிறுவனமானது ஜப்பானின் சோகன் எனப்படும் பாரம்பரியப் படைத்தளபதியான 'அஷிககா யோஷிமிட்சு' (1358-1408) என்பவருக்காக நிகழ்ச்சிகளை வழங்கி வந்தது. அச்சமயத்தில் அவர் ஜிஅமியிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க தனது கலைக்கான ஒரு கல்விச் சபையை அவர் நிறுவினார். தனது தந்தைக்குப் பிறகு ஜிஅமி இக்கலையை தனக்கே உரித்தான ஒரு தனியான பாணியில் நிகழ்த்தி வந்தார். இதுவே இன்று ஜப்பானில் 'நோஹ்'அல்லது "நொஹாகு" என்றழைக்கப்படும் கலையாகும். இது முகபாவனைகளில் நடிப்புக்கலையை வெளிப்படுத்தும் பாண்டமைம் எனப்படும் கலையும் இசையுக்திகளும் கலந்து வழங்கப்படும் பல நூறாண்டுகளாகப் புகழ்பெற்ற ஜப்பானிய நிகழ்த்துகலையாகும். ஜப்பானில் நீண்ட காலத்துக்குப் பிறகு உள்நாட்டுப் போர்களுக்கும், அரசியல் சீர்குலைவுகளுக்கும் முடிவுகட்டி ஒன்றுபட்ட ஜப்பான் உருவாகப் படைத்தளபதி "டொகுகவாஇயாசு"(1600-1668)காரணமாக அமைந்தார். ஜப்பானில் தீவிரமாக வளர்ந்துவரும் கிறிஸ்துவ மததிற்கு முடிவுகட்ட வேண்டி எச்சரிக்கையாக ஜப்பானுக்கும் ஐரோப்பா மற்றும் சீனாவுக்குமான அனைத்து தொடர்புகளையும் துண்டித்து, ஜப்பானில் கிறிஸ்துவ மதத்தைத் தடை செய்தார். நாட்டில் அமைதி திரும்பியதும் கலாச்சாரமும் பண்பாடும் கலந்த பொழுதுபோக்குகளை நடுத்தர மக்கள் நாட ஆரம்பித்தனர். ஜப்பானில் 'புன்ராகு' என்றழைக்கப்படும் நிஞ்யோ ஜொரூரி என்ற நிகழ்த்துகலையானது முதல் முதலில் நிகழ்த்தப்பட்டது. நிஞ்யோ ஜொரூரி எனப்படும் கலையின் நிறுவனரும் முதன்மைப் பங்களிப்பாளருமான சிக்காமட்சு மான்சீமான் (1653-1725) என்பவர் இக்கலையை ஓர் உயிரோட்டமானதாக மாற்றியமைத்தார். நிஞ்யோ ஜொரூரி என்பது பொம்மலாட்டப் பொம்மைகளால் நிகழ்த்தப்படும் உயர்தரமான பாணியுள்ள ஓர் நிகழ்த்துகலையாகும். இன்றைய காலத்தில் இப்பொம்மைகள் மனித வடிவில் மூன்றில் ஒருபங்கு உடையவையாகத் தயாரிக்கப்படுகின்றன. இப்பொம்மைகளை இயக்குபவர் இதற்காகவே தனது வாழ்நாளை முழுவதும் அர்ப்பணிப்பவராக இருப்பார். பொம்மைகளின் தலை மற்றும் வலது கைகளை இயக்குபவர் இந்நிகழ்ச்சியின் முதன்மைக் கலைஞராவார். இவர் நிகழ்வின்போது தனது முகத்தைப் பார்வையாளர்களுக்குக் காட்டலாம். ஆனால் பொம்மைகளின் மற்ற பாகங்களை இயக்கும் கலைஞர்கள் தங்களை ஒரு கருப்பு உடையால் மறைத்துக்கொள்ள வேண்டும். இவர்கள் பார்வையாளர்களின் கண்களுக்குத் தெரியமாட்டார்கள். மேலும் நிகழ்வின் உரையாடல் முழுமையும் ஒருவரால் மட்டுமே நிகழ்த்தப்படுகிறது. இவர் வெவ்வேறு பாத்திரங்களுக்கு ஏற்றாற்போலத் தனது குரலை மற்றும் பாவனைகளை வெவ்வேறு விதமாக வெளிப்படுத்துவார். சிக்காமட்சு தனது வாழ்நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார். இவை இன்றளவும் ஜப்பானில் நிகழ்த்தப்படுகின்றன. புன்ராக்குவுக்குப் பிறகு குறுகிய காலத்தில் உருவானது கபுக்கி எனப்படும் கலையாகும். பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த ஓகுனி என்பவர் இக்கலையில் மிகவும் புகழ்பெற்று அதன் இலக்கணமாகத் திகழ்ந்த நடிகை ஆவார். கபூக்கியின் பாடுபொருள் நோஹ் மற்றும் புன்ராகுவிலிருந்து தோற்றம் பெற்றதாகும். இதனுடைய துடிப்பான நடன அசைவுகள் புன்ராகுவிலிருந்து எடுக்கப்பட்டன. கபூக்கி சிறிதளவு நோஹ் போலவும் புன்ராக்குவிலிருந்து பெரிதளவு வேறுபட்டும் உள்ள கலையாகும். இக்கலைஞர்கள் நடனம், பாட்டு, முகபாவணை, மற்றும் உடல் வளைவு வித்தைகள் ஆகியவற்றில் பயிற்சியளிக்கப்படுகின்றனர். கபுக்கி முதன் முதலில் இளம்பெண்கள் மட்டும் பங்கு கொண்ட கலையாகும். அதன்பின்னர் இளைஞர்களாலும் பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் அனைவராலும் நிகழ்த்தப்பட்டன. மேடையில் பெண் வேடம் தரிக்கும் ஆணுக்கு ஒரு பெண்ணுக்கான நளினம், முகபாவனை மற்றும் அங்க அசைவுகள் மிகச்சரியாக அமைய சிறப்புப் பயிற்சிகள் தரப்படுகின்றன. பரார்த்தக் கிரியை பரார்த்தக் கிரியை என்பது சிவாகமங்களில் சொல்லப்பட்ட விதிமுறைகளுக்கேற்ப நடைபெறும் சைவக் கிரியைகளின் பிரதான இரு பிரிவுகளில் ஒன்று. எல்லா உயிர்களினதும் நன்மை கருதி இறைவனை வழிபடுவதற்காகத் திருக்கோவில் அமைத்தல் முதலான கிரியைகளைக் குறிக்கும். இது கர்ஷணாதி பிரதிஷ்டாந்தம், பிரதிஷ்டாதி உற்சவாந்தம், உற்சவாதி பிராயச்சித்தாந்தம் என மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்படும். கர்ஷணாதி பிரதிஷ்டாந்தம் என்பது திருக்கோவில் அமைப்பதற்குரிய இடத்தை ஆராய்ந்து தெர்ந்தெடுத்து பரிசோதித்து பண்படுத்தி நாட்கல் நாட்டித் திருக்கோவில் அமைத்து, மூர்த்தியை அமைத்து பிரதிஷ்டை செய்து முடிக்கும் வரையுள்ள கிரியைகளின் தொகுதியாகும். பிரதிஷ்டாதி உற்சவாந்தம் என்பது பிரதிஷ்டை நடைபெற்றபின் நாள்தோறும் செய்ய வேண்டிய நித்திய பூசை, அவற்றின் காலங்கள், நித்திய பூசை முடிவில் செய்யப்படும் உற்சவங்கள் முதலிய கிரியைகளின் தொகுப்பாகும். உற்சவாதி பிராயச்சித்தாந்தம் என்பது நித்திய பூஜை முதலியவற்றில் ஏற்படும் குற்றம் குறைகளை நீக்குவதற்காக செய்யப்படும் நைமித்திய உற்சவங்கள் அவற்றின் வகைகள் தொடங்கும் முறைகள் என்பவற்றின் தொகுதியாகும். பரார்த்தக் கிரியைகளை நித்தியக் கிரியை, நைமித்தியக் கிரியை என இரு வகையாகப் பிரிக்கலாம். நித்தியக் கிரியை என்பது ஆலயத்தில் தினமும் நடைபெறும் கிரியைகளைக் குறிக்கும். உதாரணமாக நித்திய பூஜை, நித்திய அக்கினிகார்யம், நித்திய பலி, நித்திய உற்சவம் என்பனவாகும். நைமித்தியக் கிரியை என்பது நித்திய பூசையில் உண்டாகும் குறைகளை நீக்குதல் முதலான காரணங்கள் கொண்டு செய்யப்படும் விஷேட பூசைகள், உற்சவங்கள் என்பன நைமித்தியக் கிரியை என அழைக்கப்படும். உதாரணமாக மகோற்சவம், கும்பாபிஷேகம், நவராத்திரி என்பவற்றைக் குறிக்கும். தாம் விரும்பிய பலனை எதிர்பார்த்து செய்யப்படும் கிரியைகளாகிய அபிஷேகம், அர்ச்சனை முதலியன காமியக் கிரியை எனப்படும். சென்குடு வான்சேவை நிறுவனம் சென்குடு வான்சேவை நிறுவனம் ("Chengdu Airlines") என்பது சிகுவான் வான்சேவை நிறுவனத்தின் துணை வான்சேவை நிறுவனயாகும். இதன் தலைமையகம் சீனாவில் செங்டூவில் அமைந்துள்ளது. இது உள்ளூர் விமான சேவைகளை சென்குடு சிகுவான்ங்லியூ விமான நிலையத்திருந்து நடத்துகிறது. சனவரி 23 இந்த விமான நிறுவனம் சென்குடு எயர்லைன்ஸ் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. முன்னைய பெயர் யுனைட்டட் ஈகிள் எயர்லைன்ஸ் ஆகும். 2004 இல் இந்த நிறுவனம் நிறுவப்பட்டது. இதன் முதலாவது விமானம் எயர்பஸ் ஏ320 சூலை 2005 இல் வழங்கப்பட்டது. மார்ச் 2009 இல், சிகுவான் வான்சேவை நிறுவனம் 200 மில்லியன் ரென்மின்பி பணத்தை யுனைட்டன் ஈகிள் எயர்லைன்சில் முதலிட்டதுடன், மொத்த பங்குகளில் 76 வீதத்தை தன்வசமாக்கிக்கொண்டது. 2009 இன் கடைசிகளில் சிகுவான் வான்சேவை நிறுவன குழுமம் யுனைட்டட் எயர்லைன்சில் தான் வைத்திருந்த பங்குகளைக் குறைக்குமுகமாக, தனது பங்குகளை வேறு குழுமத்திற்கு இற்கு விற்றது. இந்த புதிய கைமாற்றத்தின் மூலம் யுனைட்டட் எயர்லைன்ஸ் தன்னைத் திடமாகப் பதித்துக் கொண்டதுடன் "ARJ21s" விமானத்தை கொள்வனவு செய்யவும் ஆயத்தம் செய்தது. தற்போது செங்குடு வான்சேவை நிறுவனம் எயர்பஸ் ஏ320 இரக விமானங்களை வைத்திருப்பதுடன் அவற்றை உள்ளூர் பாதைகளில் செங்டூவில் இருந்து இயக்குகின்றது. தமிழ் திரைப்படங்களில் பாரதியார் பாடல்கள் தமிழ் திரைப்படங்களில் பாரதியார் பாடல்கள் மகாகவி சுப்ரமணிய பாரதியின் பாடல்கள் பலவற்றை தமிழ் திரைப்படங்களில் வெகு நேர்த்தியாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.இறை உணர்வு,தேச உணர்வு, விடுதலை வேட்கை,சமூக எழுச்சி,காதல் என பல சூழல்களில் தமிழ்த் திரைப்படங்களில் இடம்பெற்ற பாரதியின் பாடல்கள் பட்டியல் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. =திரைப்படம் : நாம் இருவர்= =திரைப்படம் : வேதாள உலகம்= =திரைப்படம் : ஏழாவது மனிதன் 1981 இசை: L.வைத்தியநாதன்= =திரைப்படம் : கப்பலோட்டிய தமிழன் 1961 இசை: G.ராமநாதன்= =திரைப்படம் : பாரதி இசை : இளையராஜா= =பிற படங்களில் இடம்பெற்ற பாடல்கள்= ஆசுகவி ஆசுகவி எனப்படுவோர் கொடுத்த பொருளில் அடுத்த பொழுதில் கவிதையாகப் பாடக்கூடிய திறமை படைத்த புலவர். ஆசுகவி, மதுரகவி, சித்திரக் கவி, வித்தார கவி என்னும் நான்கு வகையான கவிதைப் பாகுபாட்டில் ஒன்று. மரண வாக்குமூலம் மரண வாக்குமூலம் ("Dying Declaration") எனப்படுவது சட்டத்திற்குப் புறம்பான செயலின் விளைவால் இறக்கும் நிலையிலுள்ள மனிதரிடமிருந்து அவர் இறப்புக்குக் காரணமான தகவல்களை எழுத்து மூலமாகவோ, வாய்மூலமாகவோ பெறுவது ஆகும். யார் வேண்டுமானாலும் மரண வாக்கு மூலம் பெறலாம். ஆனால் மருத்துவரால் பெறப்படும் மரணவாக்கு மூலத்திற்கு அதிக மதிப்பு உண்டு. மனிதர் இறக்க நேரமாகும் எனத் தெரியுமாயின் உடனடியாக நீதிபதியை (magistrate) அழைக்க வேண்டும். நீதிபதியால் பெறப்படும் மரணவாக்கு மூலத்திற்கு அதிகபட்ச மதிப்பு உண்டு.குறுகிய காலமே இருக்கும் வேளையில், நீதிபதியை அழைக்க முடியாத நிலையில் மருத்துவரே இரண்டு சாட்சிகளின் முன்னிலையில் மரண வாக்குமூலம் பெறலாம். ஒருவர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் தரும் போது சத்தியப் பிரமாணம் (oath) எடுத்துக் கொள்வது வழக்கம். ஆனால் மரண வாக்குமூலம் தருபவர் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஏனென்றால் மரணத் தருவாயில் இருக்கும் மனிதன் பொய்யன்றி மெய்யே பேசுவான் என்று சட்டம் நம்புகிறது. முதலில் வாக்குமூலம் தருபவர் தெளிந்த மனநிலையில் (compos mentis) தான் இருக்கிறார் என மருத்துவர் சான்றளிக்க வேண்டும். எழுதும் நிலையில் இருந்தால் வாக்குமூலம் அளிப்பவரே வாக்குமூலத்தை எழுதலாம். இல்லாத நிலையில் மருத்துவரே எழுதலாம். வாக்குமூலம் தருபவரின் சொந்த வார்த்தைகளில் தான் வாக்குமூலம் எழுதப்பட வேண்டும். வாக்குமூலம் பெறுபவர் எவ்வித மாற்றங்களையும் செய்யக் கூடாது. ஆம் இல்லை என விடைவரும் கேள்விகளையும் (leading questions) கேட்கக் கூடாது. ஒரு விடயம் தெளிவாக இல்லையென்றால் அதைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்கான கேள்விகளைக் கேட்கலாம். ஆனால் கேட்கப்பட்ட கேள்வியையும் பெறப்பட்ட விடையையும் அப்படியே பதிவு செய்ய வேண்டும். இறுதியாக வாக்குமூலத்தை உரக்கப் படித்துக் காட்டி வாக்குமூலம் அளித்தவரின் பெருவிரல் ரேகை அல்லது கையெழுத்தைப் பெற வேண்டும். மருத்துவரும் இரு சாட்சிகளும் கையொப்பமிட வேண்டும். பெறப்பட்ட வாக்குமூலத்தை உடனடடியாக உறையிலிட்டு முத்திரையிட்டு நீதிபதிக்கு அனுப்பப்பட வேண்டும். வாக்குமூலத்தில் இது நடந்தது என்ற தகவல்களே இடம் பெற வேண்டும். இது நடந்திருக்கலாம் எனும் ஊகக்கருத்து கூடாது. வாக்களிப்பவருக்கு அப்படி ஓர் ஊகம் இருக்குமாயின் அவ்வூகம் ஏற்படக் காரணத்தையும் பதிவு செய்ய வேண்டும். வாய் பேச இயலாதவரும் வாக்கு மூலம் அளிக்கலாம். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் சைகையில் (gestures) அளித்த பதில்களும் அப்படியே பதிவு செய்யப்பட வேண்டும். மரணவாக்கு மூலம் அளித்தவர் உயிர் பிழைத்திருப்பாராயின் அவர் நீதிமன்றத்திற்கு வந்து தன்னுடைய நேரடி சாட்சியத்தை அளிக்க வேண்டும். மகாலக்ஷ்மி கோவில், கோலாப்பூர் ஸ்ரீ மகாலட்சுமி கோவில் (Mahalakshmi Temple, Kolhapur) இந்தியா, மகாராட்டிர மாநிலத்தில் நிலை கொண்ட கோலாப்பூர் என்ற இடத்தில் இந்து மத புராணங்களில் உரைத்துள்ள படி, இந்தியாவில் பற்பல இடங்களில் நிறுவியுள்ள சக்தி பீடங்களில் ஒன்றாகும். இந்து புராணங்களில் எழுதிய படி, சக்தி பீடம் என்பது சக்திக்கே உறைவிடமாக திகழும் தேவியான அம்மன் சக்தியுடன் தொடர்புடையதாகும். கோலாப்பூர் சக்தி பீடம் ஆனது இந்துக்களுக்கு ஒரு மிகவும் சிறப்புபெற்ற ஆறு சக்தி பீடங்களில் ஒன்றாகும், இந்த இடத்தின் சிறப்பு இங்கே ஒருவன் வந்து தேவி அன்னையை வழிபடுவதால் அவன் அவனுடைய விருப்பங்கள் அனைத்தையும் துறந்து இறைவனடி அடைந்து முக்தி பெறுவான் அல்லது அவனது அனைத்து விருப்பங்களையும் அன்னை நிறைவேற்றி வைப்பாள் என்று இந்துக்கள் நம்புவதேயாகும். இந்தக் கோவிலின் பெயர் திருமால் விஷ்ணுவின் மனைவியாக விளங்கும் மகாலக்ஷ்மியின் பெயரில் இருந்து வந்ததாகும், மேலும் இவ்விடத்தில் திருமால் அவருடைய தேவியுடன் வசிப்பதாக மக்கள் நம்புகிறார்கள். இந்த கோவில் கன்னடத்து சாளுக்கிய சாம்ராஜ்ஜிய மன்னர்கள் கி.பி. 700 ஆண்டுகளில் ஆட்சிபுரிந்த பொழுது, முதல் முதலாக கட்டிய கோவில்களில் ஒன்றாகும். கருங்கல்லில் அமைந்த ஒரு அடித்தளத்தின் மீது நான்கு கரங்களுடன் கூடிய மகுடம் தரித்த தேவியின் உருவச்சிலை நிறுவப் பெற்றுள்ளது, மேலும் இந்தச்சிலை மணிக்கற்ககளால் வடிவமைத்ததாகும் மேலும் அதன் எடை சுமார் 40 கிலோக்ராம் அளவாகும். மகாலக்ஷ்மியின் வடிவம் கறுப்புக் கல்லில் செதுக்கியதாகும் மேலும் அதன் உயரம் சுமார் மூன்று அடிகளாகும். இந்தக் கோவிலில் உள்ள ஒரு சுவரில் தேவியின் ஸ்ரீ யந்திரம் பொறித்துள்ளது. சிலையின் பின்னால் இறைவியின் வாகனம் ஆன ஒரு கல்லால் செதுக்கிய சிங்கத்தின் உருவச்சிலை நிலைகொண்டுள்ளது. மேலும் மகுடத்தில் இறைவன் விஷ்ணுவின் நாகப் பாம்பு — சேஷ நாகத்தின் உருவமும் செதுக்கப் பெற்றுள்ளது. தேவி மகாலக்ஷ்மியின் நான்கு கரங்களில் இந்துக்கள் புனிதமாகக் கருதும் பொருட்கள் இடம் பெறுகின்றன. கீழ் வலது கரத்தில் ஒரு கிச்சிலி பழத்தையும், வலது மேல் கரத்தில் ஒரு கௌமோதகி என்ற தண்டாயுதம் ஒன்றையும், அதன் தலை கீழே நிலத்தை தொட்டுள்ளபடி உள்ளது, இடது மேல் கரத்தில் ஒரு கேடகம் என்ற கவசத்தையும் மற்றும் கீழ் இடதுகரத்தில் ஒரு பானபாத்திரம் என்ற கிண்ணத்தையும் வைத்துக் காணப்படுகிறாள். இதர இந்து கோவில் சிலைகள் போல் அல்லாமல், அங்கெல்லாம் சிலைகள் வடக்கு அல்லது கிழக்கு முகமாக அமைந்திருக்கும், இங்கே இந்தக் கோவிலில் இந்த தேவியின் உருவச்சிலை மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. மேற்கு சுவர்ப்பகுதியில் ஒரு திறந்த ஜன்னல் அமைந்துள்ளது, அதன் வழியாக கதிரவனின் ஒளிக்கீற்று வருடத்தில் இரு முறை தேவியின் பாதங்களை தொட்டு திருமுகத்தை பளிச்சிடும், தோராயமாக மார்ச் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் 21 தேதி வாக்கில் மூன்று நாட்களுக்கு இவ்வாறு ஆண்டு தோறும் நடைபெறும். இந்தக் கோவிலின் வெளிப் பிராகாரத்தில் நவக்கிரகங்கள், சூரியன், மகிஷாசுர மர்த்தினி, விட்டல்-ரக்மாயி, சிவர், விஷ்ணு, துளஜா பவானி மற்றும் பல இதர தைவங்களை வழிபடுவதற்கான தளங்களும் அமைந்துள்ளன. இவற்றில் சில சிலை வடிவங்கள் 11 ஆம் நூற்றாண்டை சார்ந்தவையாகும், மற்றும் சில சமீபத்தில் நிறுவியவை ஆகும். மேலும் இந்தக் கோவிலின் வளாகத்தில் மணிகர்ணிகா குண்டம் எனும் கோவில்-குளமும் உள்ளது, இந்தக் குளக்கரையில் விஷ்வேஷ்வர் மகாதேவருக்கான ஒரு கோவிலும் நிலை கொண்டுள்ளது. ஒவ்வொரு நாளும் கோவிலில் ஐந்து விதமான சேவைகள் மற்றும் பூஜைகள் நடைபெறுகின்றன. முதல் சேவை விடியற்காலை 5 மணிக்கே தொடங்குவதாகும், அப்பொழுது ஒரு காக்கடா தீப்பந்தத்தை வைத்துக்கொண்டு, தெய்வீகப் பாடல்கள் பாடிக்கொண்டு, துயிலும் தேவியை எழுப்பும் சடங்காகும். இரண்டாவது சேவை, காலை 8 மணிக்கு, தேவிக்கு 16 மூலகங்கள் கொண்ட சோடோபசார பூஜைகள் செய்து வணங்குவதாகும். இதைத் தொடர்ந்து மதிய மற்றும் மாலை வேலை சேவைகள் நடைபெறும் மற்றும் இரவில் ஷேஜாரதி பூஜைகள் நடைபெறும். தேவியின் உற்சவச்சிலை கோவில் பிரகாரத்தை சுற்றி ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும், பௌர்ணமி நாட்கள் அன்றும், மேள தாளங்களுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப் பெறும். மனித வாழ்க்கை ஒளியூட்டம் மற்றும் செழிப்பை நமக்கு வழங்கும் இறைவி மகாலக்ஷ்மியை சார்ந்து இருப்பதைப் போலவே, சூரியனின் கிரணங்களும் தேவி மகாலட்சுமிக்கு அஞ்சலி செலுத்துவதில் வியப்பேதுமில்லை. இருந்தாலும் அந்தக் காலத்தில் இந்த கோவிலை கட்டிய கட்டிடக் கலைஞர்கள் மிகவும் ஆச்சரியப்படும் வகையில் கோவிலை அமைத்துள்ளார்கள், சூரியனின் ஒளிக் கீற்றுக்கள் கொல்ஹாபூரில் அமைந்த மகாலக்ஷ்மியின் கோவிலில் அமைந்த ஒரு ஜன்னல் வழியாக தேவியின் பாதங்களை தொட்டு வணங்கி, பின்னர் மறைவது ஒரு கண்கொள்ளாக் காட்சியாகும். இந்த சிறப்பு நிகழ்ச்சியை ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான மக்கள் 'கிரண் உற்சவம்' என்ற உற்சவ தினங்களில் கண்டு களிக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் : 31 ஜனவரி, 1 பெப்ரவரி, 2 பெப்ரவரி, 9 நவம்பர், 10 நவம்பர், 11 நவம்பர் ஆகிய நாட்களில் மாலையில் இந்த விழா கொண்டாடுகிறார்கள். வருடத்தில் மூன்று நாட்கள் சூரியக் கடவுள் தேவி மகாலக்ஷ்மி அவர்களுக்கு மரியாதை வழங்குவதாக கூறப் படுகிறது. பொதுவாக இது ரத சப்தமி என்ற சடங்கை ஒட்டி வருவதாகும், இந்த பண்டிகை ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் வருகிறது. இது மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. முதல் நாளன்று, சூரியனின் கிரணங்கள் தேவியின் பாதத்திலும், இரண்டாம் நாளன்று தேவியின் இடைப் பாகத்திலும், மூன்றாம் நாள் தேவியின் முக மண்டலத்திலும் விழுகின்றன. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, இது போன்று இந்தக் கோவிலை கட்டிய கட்டிடக் கலைஞர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டு இவ்வாறு உருவாக்கியுள்ளார்கள், இது மிகவும் பெருமை சேர்ப்பதாகும், மேலும் இன்றும் நாம் அந்த அற்புதத்தை கண்டு களிக்கலாம். பிறகு, பேஷாவர் வம்சத்து ஆட்சியாளர்கள், இந்தக் கோவிலை பழுது பார்த்து புதுப்பித்தார்கள். இந்தக் கோவிலை சுற்றி பல அழகான சிற்பங்கள் உள்ளன, ஆனால் இந்தியாவில் இதை சார்ந்த இடங்களை பல மன்னர்கள் போர் தொடுத்து சூறையாடியதால், சில சிற்பங்கள் அதனால் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. விராலிமலை முருகன் கோயில் விராலிமலை, திருச்சி - மதுரை வழித்தடத்தில் திருச்சியிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர்கள் தொலைவிலும், புதுக்கோட்டைக்கு வடமேற்காக சுமார் 40 கிலோமீட்டரிலும் அமைந்துள்ள, முருகப்பெருமானின் ஒரு பாடல் பெற்ற தலம். தற்போது கோயில் இருக்குமிடத்தில் குரா மரம் ஒன்றிருந்ததாகவும், வேடன் ஒருவன் துரத்தி வந்த வேங்கை அக்குரா மரத்தினுள் மறைந்து விட்டதாகவும், அவ்விடமே ஆறுமுகனாரின் உறைவிடமாகக் கொண்டு வழிபடத்துவங்கியதாகவும் கூறுவர். முனிவர்களும், சித்தர்களுமே அக்குரா மரவடிவில் தவமியற்றி வந்தனர் என்றும் கூறுவதுண்டு. அருணகிரிநாதரைத் தடுத்தாட்கொண்ட முருகப்பெம்மான், அவருக்கு விராலிமலை இருக்குமிடத்தைக் காட்டவே இவ்வாறு வேடன் வேடம் பூண்டு வேங்கையைத் துரத்தி வந்ததாகவும் கூறுவர். பிள்ளைச் செல்வம் வேண்டுவோருக்கு நேர்த்திக் கடன் கழிக்கும் பழக்கம் இங்கு உள்ளது. பிள்ளை பிறந்ததும், அதை ஆறுமுகனாரிடமே அவரது பிள்ளையாகக் கொடுத்து விட்டுப் பிறகு பிள்ளையின் மாமன் அல்லது சிற்றப்பன்மார்கள் ஆறுமுகனாருக்குத் தவிட்டைக் கொடுத்துப் பிள்ளையை பெற்றுச் செல்லும் சடங்கு இங்கு பிரபலமானது. எந்த ஒரு முருகன் கோயிலிலும் அல்லாத ஒரு விசித்திர வழக்கம், சுருட்டை நிவேதனமாகப் படைக்கும் வழக்கம் ஒன்று இக்கோயிலில் உண்டு. இதற்குப் பின்னால் ஒரு கதையும் உண்டு. சூறாவளிக் காற்றிலும், வெள்ளத்திலும் துன்புற்று வீடு செல்ல இயலாது கருப்பமுத்து என்னும் அடியவர் நிற்கையில், அருகையில் மற்றொருவர் குளிரில் நடுங்கி நிற்பதைக் கண்டு, குளிருக்கு இதமாக இருக்கட்டும் என்று சுருட்டு ஒன்றைக் கொடுத்தாராம். பின்னர் இருவருமாக ஆற்றைக் கடந்து செல்கையில் அவர் காணாமற் போய்விட்டது கண்டு வியப்புற்ற கருப்பமுத்து, கோயிலை அடைந்ததும் அங்கு முருகனாருக்கு முன்னர் சுருட்டு இருப்பதைக் கண்டு, தம்மிடம் சுருட்டு பெற்றவர் எம்பிரானே என உணர்ந்தார் எனவும், அன்று முதல் சுருட்டு படைக்கும் பழக்கம் உருவானதாகவும் கூறுவர். ஒரு முறை, இதற்கு புதுக்கோட்டையை மன்னர் தடையிடவும், பெம்மான் அவர் கனவில் தோன்றி சுருட்டு நிவேதனம் பிறர் துன்பம் கண்டு அன்பை வளர்க்கும் குறியீடுதான் எனவும், புகைப் பழக்கத்தை ஊக்குவிப்பது அல்ல எனவும் கூறியதாகவும், மன்னர் தமது தடையை நீக்கிக் கொண்டதாகவும் கூறுவர். திருப்புகழ் தொகுப்பினில், 58ஆம் எண் கொண்ட பாடலும், 69 முதல் 83ஆம் எண்வரை கொண்ட பாடல்களும், விராலிமலையில் வீற்றிருக்கும் பெம்மானைக் குறித்து அருணகிரியார் பாடிய பாடல்கள். அவற்றில் ஒரு பாடலின் ஒரு பகுதி கீழே: "மாயா சொரூப முழுச்ச மத்திகள்" "ஓயா வுபாய மனப்ப சப்பிகள்" "வாணா ளையீரும் விழிக்க டைச்சிகள் முநிவோரும்" "மாலா கிவாட நகைத்து ருக்கிகள்" "ஏகா சமீது தனத்தி றப்பிகள்" "வாரீ ரிரீரென் முழுப்பு ரட்டிகள் வெகுமோகம்" "ஆயா தவாசை யெழுப்பு மெத்திகள்" "ஈயா தபோதி லறப்பி ணக்கிகள்" "ஆவே சநீருண் மதப்பொ றிச்சிகள் பழிபாவம்" "ஆமா றெணாத திருட்டு மட்டைகள்" "கோமா ளமான குறிக்க ழுத்திகள்" "ஆசா ரவீன விலைத்த னத்திய ருறவாமோ" லாக்டுலோஸ் லக்டுலோஸ் () ஒரு நீராற் பகுக்கவியலாத இரட்டைச் சர்க்கரை இது மனிதக் குடலில் உறிஞ்சப்படாது. எனவே குடலில் உள்ள பாக்டீரியங்களால் இது நொதித்தலுக்குள்ளாகிறது. இதனால் உருவாகும் அமிலங்கள் அம்மோனியாவை அம்மோனியமாக மாற்றி குடலில் உறிஞ்சப்படாமல் தடுக்கின்றன. அத்தோடு மட்டுமன்றி அம்மோனியாவை உண்டாக்கக் கூடிய பாக்டீரியங்களையும் அமிலங்கள் அழித்து விடுகின்றன. இது கல்லீரல் செயலிழந்தவர்களுக்கு மிகப் பயனுள்ளதாகிறது.ஏனெனில் கல்லீரல் பாதிக்கப்படும் போது புரதச் சிதைப்பின் இறுதி விளைபொருளான அம்மோனியாவை யூரியாவாக மாற்ற முடியாமல் போகிறது. இந்த அம்மோனியா நரம்பு மண்டலத்தைப்ப பாதிக்கிறது. ஆகவே கல்லீரல் செயலிழந்த நோயர்களின் உடலில் அம்மோனியா உருவாதலையும் குடலில் உறிஞ்சப்படுதலையும் தடுக்க வேண்டியது அவசியம். 10 மில்லி லிட்டர் லாக்டுலோஸ் ஒரு நாளைக்கு மூன்று வேளை தரப்பட வேண்டும். மலமிளக்கி விளைவு நன்கு தென்படும். நாடி ஆக்சிஜன் அளப்பான் தமனி இரத்த ஆக்சிஸஜன் நிரம்பலை அளக்க உதவும் கருவியான ("Pulse oximetry") இது அறுவை அரங்குகள், அவசர சிகிச்சை பிரிவு, சுவாச சிகிச்சை பிரிவு போன்றவற்றில் அவசியமாக இருக்க வேண்டிய ஒரு கருவி ஆகும். இக் கருவியை கை விரல் நுனியிலோ காது மடல்களிலே பொருத்த வேண்டும். இது சிவப்பு ஒளிக்கதிர்களையும் அகச்சிவப்புக் கதிர்களையும் வெளியிடும். இக்கதிர்கள் ஆக்ஸி உறீமொகுளோபினையும் டி-ஆக்சி உறீமோ குளோபினையும் வேறுபடுத்தி அளவிடுகின்றன. இதன் சிறப்பம்சம் உடலைத் துளையிடாமை (non-invasive) மற்றும் விரைவாகச் செயல்படுதல் ஆகும். இந்த அலைநீளங்களால் கார்பாக்சி உறீமோ குளோபின் (CO-Hb), மெட்-உறீமோ குளோபின் (met-Hb) போன்ற உறீமோகுளோபின் பிறழ்வுகளைக் கண்டறிய முடியாது. எனவே இந்நிலைகளினால் நீலம் பாரித்த (Cyanosed) நோயாளிகளிலும் உயிர்வளி நிரம்பல் (oxygen saturation) நூறு விழுக்காடு எனத் தவறாகக் காட்டும். ஆகவே இந்நிலைகளில் இரத்த வாயு பகுப்பாய்வே (Blood Gas Analysis) சரியான முடிவைக் காட்டும். அது மட்டுமின்றி குளிர் காரணமாகவோ மருந்துகள் காரணமாகவோ நோயரின் விரல் இரத்தக் குழாய்கள் சுருங்கியிருப்பின் (Vasoconstriction) ஆக்சிஸன் நிரம்பல் சரியான அளவு இருப்பினும் இது குறைவாகக் காட்டும். பசுமைக் கழுத்துப் பட்டைப் பணியாளர் பொருளாதாரத்தில் சுற்றுச்சூழல் பிரிவில் பணிபுரிவோர் பசுமைக் கழுத்துப் பட்டைப் பணியாளர் (Green Collar worker) எனப்படுகின்றனர். எனப் பலர். பிளாங்க் (விண்கலம்) பிளாங்க் ("Planck") என்பது பெரு வெடிப்பின் எச்சக் கதிர்வீச்சை (relic radiation) ஆராய்ந்திட ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தினால் (ஈசா) உருவாக்கப்பட்ட முதல் வானாய்வுத் திட்டம் ஆகும்.பிளாங்க் விண்கலம் 2009 மே 14 ஆம் நாள் விண்ணுக்கு ஏவப்பட்டது. அண்டத்தின் தோற்றம், பரிணாமம் குறித்த வானியலர்களின் கருத்துகளைச் சரிபார்க்க பிளாங்க் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பியர் தலைமையில் அமைந்த ஆய்வாளர் குழு பிளாங்க் திட்டத்தின் பகுதியாக, அண்டத்தில் நுண்ணலை பரவியிருக்கும் பின்னணியில் உருவாக்கப்பட்ட விண்வெளி அமைப்புப் படம் ("all-sky map") ஒன்றினை மார்ச்சு 21, 2013இல் வெளியிட்டது. இந்தப் படத்தை நோக்கும்போது, அண்டம், இதுவரை அறிவியலார் நினைத்ததைவிட சற்றே கூடுதல் பழைமையானதாக இருக்கலாம் என்று தெரிகிறது. இப்படத்தின்படி, அண்டம் தோன்றி 370,000 ஆண்டுகள் ஆனபோது ஆழ்விண்வெளியில் தட்பவெப்ப நிலையின் துல்லியமான மாற்றங்கள் பதிவாயின. அண்டம் தோன்றி ஒரு வினாடியின் டிரில்லியன் பகுதியை விடவும் குறைந்த நேரத்தில் (10) எழுந்த அலைகளின் பதிவுகளை மேற்கூறிய மாற்றங்கள் பிரதிபலிக்கின்றன. அந்த அலைத் துகள்களிலிருந்துதான் இன்று நாம் காணக்கூடிய விண்மீன் பேரடைகளும் ("galaxy clusters") கரும்பொருளும் ("dark matter") உருவாயின என்று தெரிகிறது. பிளாங்க் திட்டத்தின் ஆய்வாளர்களின் கணிப்புப்படி, அண்டத்தின் வயது 13.8 பில்லியன் ஆண்டுகள் ஆகும். இதுவரையிலும் அண்டம் 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பெருவெடிப்பு அல்லது பெருவிரிவு ("Big Bang") என்னும் நிகழ்விலிருந்து தோன்றியது என்று அறிவியலார் கணக்கிட்டிருந்தனர். துல்லியமாகக் கூறப்போனால், அண்டம் 13.798 ± 0.037 பில்லியன் ஆண்டுகளுக்குமுன் தோன்றியது. மேலும் அண்டத்தின் 4.9% பகுதி பருப்பொருளாக உள்ளது; 26.8% பகுதி கரும்பொருளாக உள்ளது; எஞ்சிய 68.3% பகுதி கருப்பு ஆற்றலாக ("dark energy") உள்ளது. மேலும், அண்டம் விரிந்துகொண்டே செல்கின்றது என்று அறிவியலார் கண்டுபிடித்து, அது எந்த வேகத்தில் விரிந்து செல்கின்றது என்பதையும் கணித்துள்ளார்கள். இந்தக் கணிப்பையும் பிளாங்க் ஆய்வாளர்கள் இப்போது மாற்றிக் கூறுகின்றார்கள். ஹபிள் விதி கூறுவதில் ஹபிள் மாறிலி உள்ளது. அந்த மாறிலி இதுவரையிலும் 69.32 ± 0.80 (km/s)/Mpc என்று கணிக்கப்பட்டது. பிளாங்க் ஆய்வாளர்களின் கண்டுபிடிப்புப்படி, ஹபிள் மாறிலி 67.80 ± 0.77 (km/s)/Mpc என்றிருக்க வேண்டும் என்று கணிக்கப்படுகிறது. இந்த மிகத் துல்லியமான சிறிய மாற்றம் வானியல் ஆய்வாளர்களுக்கு ஒரு பெரிய அதிசயச் செய்தியாக இருந்தது. சாலியர் தமிழ்நாட்டில் நெசவுத் தொழில் செய்து வரும் இந்த சாதியினர் தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், இராசபாளையம், சத்திரப்பட்டி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளிலும், தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி-சக்கம்பட்டி பகுதியிலும், அருகிலுள்ள டி.சுப்புலாபுரம் பகுதியிலும் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பான்மையாக நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இவர்களின் இன்னொரு பிரிவு பத்மசாலியர் என்று அழைக்கப்படுகிறது. பத்மசாலியர் தங்களை பத்மபிராமின் என்று அழைக்கிறார்கள். மேலும் தமிழக சாலியர் காஞ்சிபுரத்தில் இருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள். அதற்கும் முன்பாக ஆந்திரத்திலிருந்து வந்தவர்கள். ஆனால் இவர்களின் பூர்வீகம் காசி எனப்படும் வாரணாசி ஆகும். பிறகு பஞ்சாப்பில் உள்ள சாலியன்வாலாபாக் நகரில் வசித்தனர். பின்பு அப்பெயர் ஜாலியன்வாலா பாக் என மருவிற்று. இந்த நகரில் இன்றும் சாலியர் பெயரில் வீதி உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இஸ்லாமிய படையெடுப்பின் போது தெற்கில் இடம்பெயர்ந்தனர். இலங்கையிலுள்ள சிங்களவர்களிலும் சாலியர் என்னும் ஒரு சாதியினர் உள்ளனர். இவர்களின் முன்னோர்கள் தமிழகத்திலிருந்து வந்து இலங்கையில் குடியேறிய சாலியர் ஆவர். சிங்கள மொழியையே முதன்மொழியாகப் பேசும் இவர்கள் சிங்கள இனத்துக்குள் முழுமையாக உள்வாங்கப்பட்டுவிட்ட தமிழர்கள் ஆவர். இலங்கையிலுள்ள பேருவளைப் பகுதியைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் வர்த்தகரின் உதவியினாலேயே இவர்களின் குடியேற்றம் நிகழ்ந்தது. கி.பி 400 முதல் 1000 வரையுள்ள ஆண்டுகளில் தமிழ் நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்கள் சிலர் நாயன்மார்கள் எனப் போற்றப்படுகின்றார்கள். இந்த அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான நேச நாயனார் சாலியர் ஆவார். தமிழர் முன்னேற்றக் கழகம் தமிழர் முன்னேற்றக் கழகம் (Thamizh Munnetra Kazhagam of South Africa) என்பது தென்னாபிரிக்காவில் இயங்கும் ஓர் இலாப நோக்கமற்ற அமைப்பாகும். இந்த அமைப்பின் நோக்கம் தமிழ் மொழியை, பண்பாட்டையும், தமிழரையும் பாதுகாத்தல் ஆகும். குவாசூலு நெட்டால் தமிழர் கூட்டிணைப்புக் கழகம் குவாசூலு நெட்டால் தமிழர் கூட்டிணைப்புக் கழகம் குவாசூலு நெட்டால் உள்ள ஒரு இலாப நோக்கமற்ற தமிழர் அமைப்பாகும். இது தமிழர் மொழியையும், பண்பாட்டையும், அரசியல் உரிமைகளையும் பேணுவதை நோக்காக் கொண்டது. தென்னாபிரிக்கத் தமிழர் வரலாற்றுக் காலக்கோடு தென்னாபிரிக்கத் தமிழர் அமைப்புகள் பட்டியல் புன்செய் தானியங்கள் பழந்தமிழர் பயிர் வகைகளை நன்செய், புன்செய் என்ற இரு பெரும் பிரிவுகளாக பிரித்து வைத்துள்ளனர். அவை இன்றளவும் வழக்கத்தில் உண்டு. பொதுவாக நீர் அதிகம் தேவைப்படும் பயிர்களுக்கு நன்செய் என்றும், மானாவரி அல்லது குறைந்த நீர் தேவையுள்ள பயிர்களுக்கு புன்செய் பயிர்கள் என்றும் பாகுபடுத்தியுள்ளனர். புன்செய் பயிர்கள் பொதுவாக இயற்கை மழையில் தங்கியிருப்பனவாக இருக்கும். இவ்வகைப் பயிர்ச்செய்கையானது ஓரளவு குறைவான ஈரலிப்புடன் செய்ய முடியுமாதலினால், எனப்படும். கீழ்கண்ட தானியங்களுக்குரிய பொதுவான தமிழ்ப்பெயர் புன்செய் தானியங்கள் ஆகும். கம்பு உருண்டை, உளுத்தங்களி, கேப்பைக் களி போன்றவை புன்செய் தானியங்களால் செய்யப்படும் சில உணவுகள். கம்பங்கூழ், வரகரிசிச் சோறு, கம்பு தோசை, தேன் கலந்த தினைமாவு போன்றவை முற்காலத்தில் தமிழர்களின் உணவுகளாக இருந்தன. ஆனால் தற்காலத்தில் சிறுதானியங்களைக் கொண்டு விதவிதமான உணவுப் பொருட்களை சமைக்கும் பழக்கம் குன்றி விட்டது. புஞ்சை தானியங்களுக்கு பஞ்சம் தீர்க்கும் பஞ்சை தானியம் என்று பெயருண்டு. நெல் அரிசியை 2 மாதம் சேமிக்கலாம். நெல்லை ஓராண்டு சேமிக்கலாம். ஆனால் புஞ்சை தானியங்களை 5 அல்லது 6 ஆண்டுகளுக்குச் சேமிக்கலாம். நெல் அரிசியை பயன்படுத்தும் போது, அதில் உள்ள உயிர் சத்துக்கள் பலவிதங்களில் நீக்கப்பட்டுவிடுகிறது. ஆனால், சிறுதானியங்களை பயன்படுத்தும் போது அதில் உள்ள உயிர் சத்துக்கள் காக்கப்படுகிறது. சத்து நிறைந்த புன்செய் தானியங்கள் ஆறு மாதமான குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை யாவரும் உண்ண உகந்தவை. இத்தானியங்களில் இரும்பு, மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம் போன்ற தனிமங்கள் மிகுந்திருக்கின்றன. புன்செய் தானியங்களால் ஆன உணவு குளுகோஸை சிறிது, சிறிதாக நீண்ட நேரத்துக்கு வெளியிடுவதால் உடலில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. க்ளுட்டன் எனும் புரோட்டீன் மாவுச்சத்து இத்தானியங்களில் அறவே இல்லை. எனவே க்ளுட்டன் நிறைந்த நெல்லரிசி, கோதுமை போன்ற தானியங்களால் தயாரிக்கப்பட்ட உணவை உண்ணும்போது உண்டாகும் களைப்பு, அசிடிட்டி, உடல்பருமன், புற்று நோய், வயிற்றுப்போக்கு போன்றவை புன்செய் தானிய உணவை உண்ணும்போது ஏற்படுவதில்லை. ராகி, கம்பு போன்ற தானியங்கள் குருதியில் உள்ள ட்ரைகிளிசிரைட்ஸ் மற்றும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஆஸ்துமா நோய் உள்ளவர்களுக்கு இளைப்பைக் குறைக்க உதவுகின்றன. உணவுச் செரிமானம் எளிதில் நடைபெறுகிறது. ஒவ்வொரு 100 கிராம் தானியத்திலும் உள்ள சத்துகள் கீழே அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. மதிய உணவுத் திட்ட சத்துணவை உண்மையிலேயே சத்தான உணவாக்க மத்திய அரசின் வேளாண் துறை அமைச்சகம், அனைத்து மாநில அரசுகளுக்கும் தங்களுடைய மதிய உணவுத் திட்டத்தில் சிறுதானியங்களைச் சேர்க்க வேண்டும் என சுற்றறிக்கை மூலம் அறிவுருத்தியுள்ளது. இந்தியாவின் மொத்த சாகுபடிப் பரப்பளவான 141.0 மில்லியன் ஹெக்டேரில் மானாவாரி சாகுபடியின் அளவு பரப்பளவு 44 சதவீதமான 85 மில்லியன் ஹெக்டேர் ஆகும். கடந்த 50 ஆண்டுகளில் பசுமைப் புரட்சி காலந்தொட்டு சிறுதானியங்கள் பயிரடப்படும் பரப்பளவு குறைந்து வருகிறது. புன்செய் தானிய சாகுபடியில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடமாகவும் கர்நாடக மாநிலம் இரண்டாவது இடமாகவும் உள்ளன. இந்தியாவிலேயே புன்செய் தானிய உணவு மகாராட்டிர கிராமங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டுமே மானாவாரி புன்செய் தானிய சாகுபடி விரிந்த அளவில் எஞ்சியுள்ளதுடன் அவ்வளவையும் சொந்த உணவு உபயோகத்துக்குப் பயன்படுத்துகின்றனர். தமிழ்நாட்டில் தற்போது காணக் கிடைக்காத பல வகையான சாமை, குதிரை வாலி, தினை வகைகள், வரகு எல்லாவற்றையும் மராட்டிய மாநிலத்தில் பயன்பாட்டில் உள்ளன. பாரம்பரிய விவசாயத்தில் பட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஒரு பயிர் சாகுபடி செய்த நிலத்தில் தொடர்ந்து மீண்டும் அதே பயிரைச் சாகுபடி செய்யவும் மாட்டார்கள். வருடத்தில் எந்தெந்தப் பட்டத்தில் என்னென்ன பயிர் சாகுபடி செய்ய வேண்டுமோ அந்தந்தப்பட்டத்தில் அந்தந்தப் பயிர்தான் சாகுபடி செய்வார்கள். ஆடிப்பட்டத்தில் தானியப் பயிர்கள் அனைத்தும் சாகுபடி செய்வார்கள், தவிரக் காய்கறிப் பயிர்களும் பெரும்பாலானவைற்றைச் சாகுபடி செய்வார்கள். மார்கழிப்பட்டம், மாசிப்பட்டம், சித்திரைப்பட்டம் என்றும் தமிழ் மாதங்களைக் கணக்கிட்டும் அந்தந்தப் பட்டத்துக்கு ஏற்ற பயிர்களைச் சாகுபடி செய்வார்கள். ஆடிப்பட்டத்தில் பாதி நிலத்தில் மானாவாரியாகச் சாமை விதைத்து கார்த்திகை, மார்கழி மாதங்களில் அறுவடை செய்யலாம். மீதிப் பாதி நிலத்தில் மாசி, பங்குனி மாதங்களில் சோளம் விதைத்து ஆனி மாதவாக்கில் அறுவடை செய்யலாம். மறு வருடம் சாகுபடி செய்யும்போது முந்தைய வருடம் சாமை விவசாயம் செய்த நிலத்தில் சோளமும், சோளம் விவசாயம் செய்த நிலத்தில் சாமையும்தான் சாகுபடி செய்வர். நிலத்தில் ஒரு பயிர் செய்தால் அந்தப் பயிரின் ஆயுளுக்குப் பின்னால் அவற்றின் கழிவுகளும் அவற்றில் அண்டி வாழ்ந்து வந்த நோய்க் கிருமிகளும், அடுத்து அதே பயிர் செய்யும்போது புதிதாகச் செய்யும் பயிரையும் பாதிக்க ஏதுவாகிறது. மாற்றுப் பயிர் செய்யும்போது மாற்றுப் பயிர்களுக்கு முந்தைய பயிரின் கழிவுகள் எருவாகப் பயன்படுவதோடு முந்தைய பயிரில் தங்கி வாழ்ந்த நோய்க்கிருமிகளும் புதுப்பயிரைத் தாக்குவது இல்லை. நோய்களும் நோய்க்கிருமிகளும் பயிருக்குப் பயிர் வேறுபடுகின்றன. அதனால் பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை. மாறாக கிருமிகளை அழிகின்றன. குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின்னால் வேறெரு பயிர் செய்தபின்னால் மீண்டும் பழைய பயிர் சாகுபடி செய்வதால் எந்தப் பாதிப்பும் ஏற்படுவது இல்லை. இடைக்காலத்தில் அவை பெரும்பாலும் அழிந்து விடுகின்றன. கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் சிறுதானியங்கள் துறை கேழ்வரகு- 14, தினை- 7, சாமை-4, வரகு-3, பனி வரகு -5, சோளம்-28, கம்பு-9 என நிறைய ரக விதைகளை உருவாக்கி வெளியிட்டிருக்கிறது. நாற்சதுரமனை நாற்சதுரமனை பண்டைக்காலத்தில் தமிழரிடம் புழக்கத்திலிருந்த ஒரு வகை வீட்டின் அமைப்பு முறையாகும். இவ் வீடுகளின் பிரதான நுழைவாயில் வெளிப்புற வாயில்களுக்கு நெருங்கியதாக இருக்கும். சில வீடுகளில் சிறிய வெளிமுற்றம் இருக்கலாம். ஆனால் பிரதாக முற்றம் வீட்டின் உட்புறம் அமையத்தக்கதாக நாற்புறமும் சுவர்களால் அமைக்கப் பட்டிருக்கும் உள் முற்றத்தை மூடியதாக நிலாப்பந்தல் காணப்படும். எல்லப்பிரகத சுப்பாராவ் எல்லப்பிரகத சுப்பாராவ் ("Yellapragada Subbarao", தெலுங்கு: యెల్లప్రగడ సుబ్బారావు, சனவரி 12, 1895 - ஆகஸ்டு 9, 1948) இந்தியாவில் பிறந்து சென்னை மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படித்து ஐக்கிய அமெரிக்காவில் குடியேறியவர். அமெரிக்காவில் வாழ்ந்த காலம் முழுதும் பச்சை அட்டை இல்லாமலேயே வாழ்ந்தவர். இவரது அளவுகடந்த அடக்கப் பண்பால் இவரது பெருமை பலராலும் முழுதும் அறியப்படாமல் போனது. இவர் அப்போதைய சென்னை மாகாணத்தில் இருந்த பீமாவரம் (தற்போதைய ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ளது) எனும் ஊரில் ஏழை பிராமணக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். அவரின் நெருங்கிய உறவினர்கள் பலர் நோயால் இளமையி‌லேயே இறந்ததால் பள்ளிப் பருவம் அவருக்குக் கசப்பான அனுபவங்க‌ளையே தந்தது. இந்து உயர்நிலைப் பள்ளியில் ஒருவழியாக மூன்றாவது முயற்சியில் மெட்ரிக்குலேசன் தேறினார். சென்னை மாநிலக் கல்லூரியில் (Presidency College) இடைநிலைத் தேர்ச்சி பெற்று உயர்கல்வி கற்க ‌சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். நண்பர்கள் மற்றும் கஸ்தூரி சூரியநாராயண மூர்த்தி போன்றோரின் பொருளாதார உதவியுடன் மருத்துவம் படித்தார். இந்த சூரியநாராயண மூர்த்தியே இவருக்குப் பின்னாளில் மாமானாரானார். பிரித்தானியப் பொருட்களைப் புறக்கணித்து சுதேசி பொருட்களையே பயன்படுத்த வேண்டுமென காந்தியடிகள் வைத்த கோரிக்கையை ஏற்ற சுப்பாராவ் காதி ஆடைகளை அணிய அது அறுவையியல் பேராசிரியர் M.C.‌பிராட்ஃபீல்டு என்பவரின் ஆத்திரத்தைத் தூண்டியது. இதனால் எழுத்துத் தேர்வுகளில் நன்றாக எழுதியும் சுப்பாராவுக்கு அந்தக் காலத்தில் எம்.பி.,பி.எஸ்., க்கும் குறைவான எல்.எம்.எஸ் எனும் பட்டமே கிடைத்தது. அரசு மருத்துவப் பணி கிடைக்காததால் சென்னையிலிருந்த மருத்துவர் இலக்குமிபதி ஆயுர்வேதக் கல்லூரியில் உடலியங்கியல் விரிவுரையாளராய்ப் பணியேற்றார். ஆயுர்வேத மருந்துகளின் குணப்படுத்தும் திறனால் கவரப்பட்ட அவர் அம்மருந்துகளுக்கு நவீன வடிவம் கொடுப்பதிலான ஆராய்ச்சியில் இறங்கினார். அமெரிக்கா செல்ல வேண்டுமென்ற இவரின் விருப்பம் சத்தியலிங்க நாயக்கர் அறக்கட்டளை, மல்லாடி அறக்கட்டளை மற்றும் இவரது மாமனார் திரட்டிய உதவிகள் ஆகியவற்றின் மூலம் சாத்தியமானது. 1922 அக்டோபர் 26 ஆம் பாஸ்டன் நகரில் இவர் முதன் முதலாக அமெரிக்க மண்ணில் காலடி எடுத்து வைத்தார். ஹார்வர்டு வெப்பமண்டல நோய்கள் மருத்துவப் (tropical medicine) பள்ளியில் பட்டயப் (diplamo) படிப்பு படித்து முடித்து அங்கேயே இளநிலை தொழில்முறைப் பணியாளர் தொகுதியில் (junior faculty member) உறுப்பினரானார். சைரஸ் ஃபிஸ்க் என்பவருடன் இணைந்து உடல்திரவங்களிலும் திசுக்களிலும் உள்ள ஃபாஸ்பரசை அளவிடும் முறையை உருவாக்கினார். தசை இயக்கத்தில் அடினோசின் ட்ரை பாஸ்ஃபேட்டு (ATP) மற்றும் கிரியாட்டின் பாஸ்ஃபேட்டு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை கண்டறிந்தார். அதே வருடத்தில் முனைவர் (PhD) பட்டத்தையும் பெற்றார். ஹார்வர்டில் அவருக்கு நிலையான இடம் கிடைக்காமல் போகவே அமெரிக்கன் சயனமிடின் (American Cyanamid) ஒரு பிரிவான லெடர்ள் (Lederle Laboratories) ஆய்வகத்தில் இணைந்தார். அங்கே அவர் ஃபோலிக் அமிலத்தைத் தயாரிக்கும் முறையைக் கண்டறித்தார். அதன்பின் மரு. சிட்னி ஃபார்பர் உதவியுடன் மீத்தோ ட்ரெக்சேட் (Methotrexate) எனும் இன்றியமையாத புற்றுநோய்க்கான மருந்தைக் கண்டறிந்தார். அத்தோடு ஃபைலேரியா (filaria) நோயை ஆரம்ப கட்டத்தில் குணப்படுத்தும் மிக மிக முக்கியமான மருந்தான டை எத்தில் கார்பமசினைக் (DEC) கண்டறிந்தார். இவரின் வழிகாட்டுதலில் பெஞ்சமின் டக்கர் உலகின் முதல் டெட்ராசைக்ளின் மருந்தான ஆரியோமைசினைக் (Aureomycin) கண்டறிந்தார். இந்தக் கண்டுபிடிப்பு உலகில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அறிவியல் ஆய்வுகளிலேயே மிகப் பரந்த (extensive) ஆய்வின் விளைவாக நிகழ்த்தப்பட்டது. தன்னலமற்ற அவரின் அளவுகடந்த அடக்கப் பண்பால் அவர் புரிந்த சாதனைகள் யாவும் குடத்திலிட்ட விளக்கென ஆயின. தன் கண்டுபிடிப்புகளை அவர் சந்தைப்படுத்திப் பணமாக்க முயன்றதில்லை. பத்திரிக்கைகளுக்குப் பேட்டி அளித்ததில்லை. மற்ற அறிவியலாளர்களைப் போல் தன் கண்டுபிடிப்புகளை உலகெங்கும் பரப்பும் வகையில் விரிவுரை உலா சென்றதுமில்லை. இவரைச் சிறப்பிக்கும் வகையில் இவர் பணிபுரிந்த அமெரிக்க நிறுவனமான அமெரிக்கன் சயனமிட் தான் புதிதாகக் கண்டறிந்த பூஞ்சைக்கு இவரது பெயரை வைத்தது. (Subbaromyces splendens) ஒகஸ்டஸ் சீபே ஒகஸ்டஸ் சீபே அல்லது கிஸ்டியன் அகஸ்டஸ் சீபே ("Christian Augustus Siebe"; 1788 – ஏப்ரல் 15, 1872) என்பவர் செருமனியில் பிறந்த ஒரு பிரித்தானிய பொறியியளாளர் ஆவார். இவரது நீராடிக் கருவிக்கான பங்களிப்பானது முக்கியமானது. சக்சொனி நகரில் 1788 இல் பிறந்தார். இவரது ஆரம்ப கால வாழ்க்கை பற்றி மிகச் சிறிய அளவே அறியப்பட்டுள்ளது. 1830 களில், டீன் சகோதரர்கள் இவரை நீர் அடியில் பயன்படும் புகை தலைக்கவசத்தின் வித்தியாசமான வடிவத்தை அமைக்குமாறு பணித்தனர். பின்னர் இவரையே அவர்கள் நிரிற்கு அடியில் பயன்படும் பல்வேறு தலைக் கவசங்களை அமைக்குமாற வேண்டிக்கொண்டனர். ஜேர்ஜ் எட்வாட் என்பவர் செய்த கருவியை மேலும் மெருகூட்டி சீபே தன்னுடைய வடிவமைப்பைத் தயாரித்துக்கொண்டார். 1851, 1855 இல் நடந்த கண்காட்சிகளில் சீபே பல பதக்கங்களை வென்றார். ஏப்ரல் 15, 1872 இல் நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோயால் இலண்டனில் உள்ள அவரது வீட்டில் மரணமடைந்தார். மாங்குடி மருதனார் மாங்குடி மருதனார் என்பவர் சங்ககால நல்லிசைப் புலவர்களில் ஒருவர். இவர் பத்துப்பாட்டு எனும் பெயரில் தொகுக்கப்பட்ட பத்து செய்யுள் நூல்களுள் ஒன்றாகிய மதுரைக் காஞ்சியை இயற்றியவர். மதுரைக் காஞ்சியில் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடியுள்ளார். சங்ககாலப் புலவர்கள் மட்டும் மன்னர்களைப் பாடவில்லை. மன்னர்களும் புலவோரை மதித்துப் பாடினர். ”...மாங்குடி மருதனைத் தலைமையாகக் கொண்ட நல்லிசைப் புலவர்கள் எனைப் பாடாமல் போவார்களாக...” எனும் வஞ்சினக் கூற்றாகிய மன்னனின் வரிகளே இதற்குச் சான்று பகர்கின்றன. இவர் தமது பாடலில் பல அரசர்களையும் குடிமக்களையும் பற்றிய செய்திகளைத் தந்துள்ளார். நெட்டிமையார் நெட்டிமையார் சங்க காலப் பெண் புலவர்களில் ஒருவர். நீண்ட இமைகளை உடையவர் என்ற ‌காரணத்தால் நெட்டிமையார் எனும் பெயர் அமைந்திருக்கலாம். பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியை இவர் பாடிய பாடல்கள் புறநானூற்றில் 9, 12, 15 ஆம் எண்வரிசையில் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன. போர் தொடங்குவதற்கு முன்பு பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி மக்களுக்கு அறிவிக்கிறான். போரில் சாகக் கூடாது என்று அவன் சிலரை எண்ணுகிறான். அவர்கள்: பசுவினம், பசுப்போன்ற பார்ப்பன மக்கள், பெண்டிர், பிணியாளர், குழந்தை இல்லாத ஆடவர் - ஆகியோர். நெடியோன் என்னும் பாண்டிய அரசன் 'முந்நீர் விழா' கொண்டாடினான். அதனால் அவன் முந்நீர் விழவின் நெடியோன் என்று போற்றப்பட்டான். அது பஃறுளி என்னும் ஆறு கடலோடு கலக்குமிடத்தில் நடைபெற்றது. பஃறுளியாறு இந்தியப் பெருங்கடலில் கலக்குமிடத்தில் குடிநீருக்காக ஊற்றுநீரைப் பறித்துக்கொண்டு அவன் கொண்டாடியது முந்நீர் விழா. முந்நீர் என்னும் கடலில் இக்காலத்துப் பாய்மரப் படகுப்போட்டி போன்று அக்காலத்து மரக்கலக் கப்பல்போட்டி நடத்தி விழாக் கொண்டாடினான் என்று இதனைச் சில அறிஞர் பெருமக்கள் கூறுகின்றனர். பாண்டியன் பாண்டியன் என்ற தலைப்பில் உள்ள கட்டுரைகள்: லோங்யுவான் பவர் சீனா லோங்யுவான் பவர் குரூப் லிமிட்டெட் அல்லது லோங்யுவான் பவர் என்று அழைக்கப்படும் நிறுவனம் சீனா, மற்றும் ஆசியாவின் மிகப்பெரிய காற்றுத் திறன் தயாரிக்கும் நிறுவனமாகும்.. இந்த நிறுவனம் பிரதானமாக காற்றாலைகளை வடிவமைத்தல், தயாரித்தல், மேலாண்மை செய்தல் மற்றும் இயக்குதல், போன்ற பணிகளுடன் காற்றாலைகளின் மூலம் தயாரிக்கப்பட்ட மின்சாரத்தைப் உபயோகிப்பாளர்களுக்கு விற்பனையும் செய்கின்றது. லோங்யுவான் பவர் சீன அரசிற்குச் சொந்தமான சைனா கோடியன் கூட்டுத்தாபனத்தின் மானியத்தைப் பெற்றுக்கொள்கின்றது. 2008 இன் முடிவில் இந்த நிறுவனம் சீனாவின் காற்றாலை சக்தியாக்கத்தில் 24 சதவீதத்தை தன்வசம் வைத்திருந்தது. இந்த நிறுவனம் ஹாங்காங் பங்குச் சந்தையில் டிசம்பர் 2009 முதல் ஒரு பங்கு HK$8.16 என பட்டியலிடப்பட்டது. புகைபிடிப்பவரின் இருமல் புகைப்பழக்கம் உள்ளோரிடம் மட்டுமே காணப்படும் ஒருவகை இருமல் புகைபிடிப்பவரின் இருமல் (Smoker's Cough) எனப்படுகிறது. மனித மூச்சுக்குழாய் (trachea) சிறிய முடி போன்ற சிலியாக்கள் கொண்ட எபிதீலியத்தாலானது. இவற்றின் ஒருங்கிணைந்த இயக்கமானது சுவாசப் பாதையில் நுழையும் அந்நியப் பொருட்களை மேல் நோக்கித் தள்ளும். இவ்வாறாக சளி காறித் துப்பப்படும் அல்லது விழுங்கப்படும். புகைக்குழல் (cigarette) புகை இந்த முக்கியத்துவம் வாய்ந்த சிலியாக்களை செயலிழக்கச் செய்கிறது. ஆகவே இருமினால் மட்டுமே சளி வெளியே வரும். நாளடைவில் நிரந்தரமான இருமலாய் இது மாறிவிடும். சளி கிட்டத்தட்ட பச்சை நிறத்திலிருக்கும். முரண்பாடான உடையவிழ்ப்பு அதிக குளிரால் மரணமடைவோரில் ஐந்தில் ஒருவர் முரண்பாடான உடையவிழ்ப்பு ("paradoxical undressing") என்ற நிலை ஏற்பட்டு தன் ஆடைகளைக் அவிழ்த்துக் கொள்வார். பொதுவாக குளிரால் வாடும் ஒருவர் கம்பளி போன்ற உடைகளை அணிவார். கம்பளி போன்றவை இல்லாத பட்சத்தில் ஒன்றின் மேல் ஒன்றாக அதிக ஆடைகளை அணிவார். ஆனால் இந்நிலையிலோ குளிரால் வாடுபவர் உடைகளை அவிழ்த்துக் கொள்வார். இது முரண்பாடான ஒன்றாதலால் இந்நிலை முரண்பாடான உடையவிழ்ப்பு எனப் பெயர் பெற்றது. இரண்டு காரணங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. அவை, இந்‌நிலை அதிக சட்டஞ்சார் (legal) மதிப்புடையது. ஏனெனில் இது பார்க்க கற்பழிப்பு மரணத்தை ஒத்திருக்கும். முரண்பாடான தவளை முரண்பாடான தவளை ("Pseudis paradoxa", ஆங்கிலம்: "Paradoxical frog" அல்லது "shrinking frog") என்பது குளம், குட்டை, ஏரி போன்ற நீர் நிலைகளில் வாழக்கூடிய ஒரு தவளை ஆகும். பெண் தவளைகள் இடும் முட்டைகளில் இருந்து தாய்த் தவளையை விட நான்கு மடங்கு பெரிய தலைப்பிரட்டைகள் உருவாகும். பின்னர் இவை த‌வளையாக உருமாறியவுடன் (metamorphosis) இவற்றின் உடல் பழைய அளவில் கால் பங்காகச் சுருங்கி விடும். பொதுவாக மற்ற இனத் தலைப்பிரட்டைகள் சிறிதாக இருந்து வளர வளரப் பெரிதாகும். ஆனால் இத் தவளை இனத்திலோ வளர வளரச் சிறிதாகும் முரண்பாடான நிகழ்வு காணப்படுகிறது. விலங்குலத்தில் இந்த முரண்பாடு மிக அதிசயமாகக் காணப்படும் ஒன்றாகும். தாய் ஆண் - பெண் என இருபாலினருக்கிடையிலான பாலுறவின் மூலம் பிறக்கும் குழந்தைக்கு பெண் பாலினமாக இருப்பவர் தாய் எனப்படுகிறார். உயிரியல் அல்லது சமூக நோக்கில் ஒரு குழந்தையைப் ஈன்றெடுக்கும் பெண் தாய் ("mother") அல்லது அன்னை எனப்படுவார். தமிழில் அம்மா, அன்னை, ஆய் போன்ற சொற்கள் தாயைக் குறிக்கப் பயன்படுகின்றன. மனிதனைப் போன்ற பாலூட்டிகளில் தாய், கரு உண்டாவதில் இருந்து கரு குழந்தையாக வளர்ச்சி பெறும் வரை தன் கருப்பையில் தாங்கியிருக்கிறாள். குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் இருவருக்கும் மற்ற உறவினர்களுக்கும் பங்குகள் இருந்தாலும், தாய்க்கு சிறப்பான பங்கு உண்டு. யானைகளில், யானைக்குட்டிக்கு அத்தியாவசியத் தேவைகள் உணவு, பாதுகாப்பு, மற்றும் தாயன்பு தான். ஒரு வேளை தாய்ப்பால் கிடைக்காத நிலை ஏற்பட்டால் குட்டியின் வாழும் வாய்ப்பு குறைகிறது. ஆயினும் ஒரு யானைக்குட்டி மிக மோசமாக பாதிக்கப்படுவது தனிமையால் தான். தமிழ்மொழியில் உள்ள சொற்கள் தோன்றிய விதம் பற்றி ஆராயும் பொழுது அம்மா என்னும் சொல் எவ்வாறு உருவாகியிருக்கலாம் என்பதை இங்கே காணலாம். தமிழ்ச் சொற்கள் பெரும்பாலும் எழுப்பப்பட்ட ஓசைகளின் சொற்களாகவே காணப்படுகின்றன. கூ கூ என்று கூவிய கூகை, குர்குர் என ஒலித்த குரங்கு, கர் கர் என உறுமிய கரடி, சர சரவென ஓடிய சாரை என பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். இவ்வகையில் அம்மா என்ற சொல்லும் இயற்கையில் தோன்றிய ஒன்றாகும். பிறந்த குழந்தை அழுவதும், சிரிப்பதுமாக வாயை மூடி மூடித் திறக்கின்றது. குழந்தை வாயைத் திறக்கும் போது அ என்ற ஒலி எழுகின்றது. வாயை மூடும் போது ம் என்ற ஒலி எழுகின்றது. ம்+அ. ம்ம -ம்ம -என்ற ஒலி மீண்டும் மீண்டும் வெளிவரும் போது அது அம்மா என்ற சொல்லைத் தருகின்றது. அம்மா இயற்கையாகவே தோன்றிய சொல்லாகும். அம்ம, அம்மு, அம்மை போன்ற சொற்கள் அம்மா என்ற சொல்லுக்குப் பிறகு தோன்றியவைகள். தாய் என்ற சொல் ஆய் என்ற சொல்லின் நீட்சியாகும். ஆய்=அம்மா பாட்டி, பாலமுதைத் தந்த ஆய் தாய் எனப்பட்டாள். குழந்தையை அள்ளி எடுத்து அணைக்கும் தாய் அன்னையெனப்பட்டாள். தமிழகத்தில் சில கிராமங்களில் அம்மா எனும் சொல்லை ஆத்தா எனவும் குறிப்பிடுவர். ஆய், தாய், அன்னை, அம்மை ஆகியவைகள் யாவும் பிற்காலச் சொற்களே. அம்மா+ஆய்ச்சி=அம்மாச்சி. அம்மா என்ற தமிழ்ச் சொல் மா - மாதா -மதத்ரு என்றவாறு வடமொழியில் திரிந்தது எனலாம். சுவடி 2014 உலகக்கோப்பை காற்பந்து 2014 உலகக்கோப்பை காற்பந்து ("2014 FIFA World Cup") அல்லது 20 ஆவது ஃபீஃபா உலகக்கிண்ணக் கால்பந்து போட்டித்தொடரின் இறுதிப்போட்டிகள் பிரேசிலில் 2014 ஜூன் 12 முதல் ஜூலை 13 வரை நடைபெற்றன. இரண்டாவது தடவையாக பிரேசிலில் இறுதிப் போட்டிகள் இடம்பெற்றன. முதற்தடவை 1950 உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் இங்கு நடைபெற்றன. தென் அமெரிக்காவில் இடம்பெறும் இரண்டாவது உலகக்கோப்பை போட்டி இதுவாகும். முன்னதாக 1978 ஆம் ஆண்டில் அர்ஜென்டினாவில் இடம்பெற்றது. 2007 இல் பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு இந்தப் போட்டிகளை ஏற்று நடத்தும் நாடாக பிரேசிலைத் தேர்ந்தெடுத்தது. சூன் 2011இல் துவங்கிய 2014 உலகக்கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்று 31 நாடுகள் இப்போட்டியில் நுழைந்தன. ஏற்று நடத்தும் நாடான பிரேசிலையும் சேர்த்து 32 அணிகள் மோதின. மொத்தம் 64 ஆட்டங்கள் பிரேசிலின் 12 நகரங்களில் நடைபெற்றன. இந்த 12 நகரங்களிலிலும் விளையாட்டரங்கங்கள் புதியதாகவோ புதுப்பிக்கப்பட்டதாகவோ கட்டமைக்கப்பட்டன. இம்முறையே முதன்முதலாகப் புதிய கோல்-கோடு தொழினுட்பம் பயன்படுத்தப்பட்டது. 1930 இலிருந்து உலகக்கோப்பையை வென்ற உலக வாகையாளர்களான உருகுவை, பிரேசில், இத்தாலி, செருமனி, இங்கிலாந்து, அர்கெந்தீனா, பிரான்சு மற்றும் எசுப்பானியா ஆகியன 2014 போட்டிகளில் பங்கேற்றன. 2010 உலகக்கோப்பை வாகையாளரான எசுப்பானியா அணி, மற்றும் இங்கிலாந்து, இத்தாலி ஆகியன குழுநிலை ஆட்டங்களில் தோல்வியுற்று வெளியேறின. உருகுவாய் 16 அணிகளின் சுற்றிலும், பிரான்சு காலிறுதியிலும் தோல்வியுற்று வெளியேறின. பிரேசில் அணி அரையிறுதியில் தோல்வியடைந்ததை அடுத்து இறுதிப் போட்டியில் அர்கெந்தீனாவும், செருமனியும் போட்டியிட்டன. இதுவரை அமெரிக்கக் கண்டங்களில் இடம்பெற்ற ஏழு உலகக்கிண்ணப் போட்டிகளிலும் தென் அமெரிக்க அணிகளே வென்றுள்ளன. இறுதியாட்டத்தில் செருமனி அர்கெந்தீனாவை கூடுதல் நேரத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று அமெரிக்கக் கண்டங்களில் உலகக்கோப்பையை வென்ற முதல் ஐரோப்பிய அணி என்ற பெருமையைப் பெற்றது. மார்ச்சு 7, 2003இல் பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு ஒவ்வொரு கண்டத்திலும் போட்டிகளை சுழற்றுவது என்ற கொள்கைக்கேற்ப 2014ஆம் ஆண்டுக்கான போட்டிகள் தென் அமெரிக்காவில் நடைபெறும் என அறிவித்தது. இந்த முடிவு முதன்முறையாக அடுத்தடுத்த இரு உலகக்கோப்பைகள் ஐரோப்பாவிற்கு வெளியே நடத்தப்பட வாய்ப்பளித்தது. சூன் 3, 2003இல் தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு அர்கெந்தீனா, பிரேசில்,கொலாம்பியா இந்தப் போட்டிகளை நடத்த விரும்பியது. ஆனால், மார்ச்சு 2004இல் கூடிய தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு சங்கங்கள் ஒருமனதாக பிரேசில் இந்தப் போட்டிகளை தங்கள் சார்பில் நடத்த தெரிவு செய்தன. இடைக்காலத்தில் கொலம்பியா தான் ஏற்று நடத்த ஏலக்கோரிக்கையை அனுப்ப முடிவு செய்து அலுவல்பூர்வமாக திசம்பர் 2006இல் தனது கோரிக்கையை அறிவித்தது. இதற்கு ஒரு வாரம் முன்னதாக பிரேசிலும் தனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தது. பின்னதாக, கொலம்பியா அலுவல்பூர்வமாக ஏப்ரல் 2007இல் தனது ஏலக்கோரிக்கையை மீட்டுக் கொண்டதால் மீண்டும் பிரேசிலே ஒரே கோரிக்கையாளராக அமைந்தது. 2007ஆம் ஆண்டு அக்டோபர் 30 இல் ஃபிபா முறையாக பிரேசிலை இந்நிகழ்வை ஏற்று நடத்தும் நாடாக உறுதி செய்தது. இறுதிப் போட்டிகளில் விளையாடும் அணிகளுக்கான இடங்கள் மார்ச் 3, 2011 அன்று முடிவாயின; 31 இடங்களுக்கான பகிர்வு முந்தையப் போட்டியைப் போன்றே தகுதிப் போட்டிகளின் மூலம் முடிவு செய்ய திட்டமிடப்பட்டது. சூலை 30, 2011 அன்று இரியோ டி செனீரோவில் உள்ள மரீனா ட குளோரியா தங்குவிடுதியில் 2014 உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்றுக்கான நிரல் வரையப்பட்டது. ஏற்று நடத்தும் நாடாக, பிரேசில் தானியக்கமாக போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றது. 208 ஃபிஃபா தேசிய அணிகளில் 203 தகுதிச் சுற்றுக்களில் பங்கேற்றன. இந்தப் போட்டிகள் சூன் 15, 2011 முதல் நவம்பர் 20, 2013 வரை நடைபெற்றன. தகுதிபெற்ற 32 அணிகளில் 24 அணிகள் முந்தைய போட்டியிலும் தகுதி பெற்றிருந்தனர். புதியவர்களாக பொசுனியா எர்செகோவினா, முதல்முறையாக தனிநாடாக, தகுதி பெற்றுள்ளனர். பிஃபா உலகத் தரவரிசைப்படி உயர்ந்த தரவரிசையில் இருந்து பங்குபெறாத நாடாக உக்ரைன் உள்ளது. 2002க்குப் பிறகு முதன்முறையாக ஓசியானா கால்பந்துக் கூட்டமைப்பிலிருந்து எந்த அணியும் இந்த உலகக்கோப்பையில் தகுதிபெறவில்லை. கீழ்வரும் 32 அணிகள் இறுதிப் போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றுள்ளன. போட்டி ஆட்டங்களின் நிரலை வரைவதற்கான அவற்றின் போட்டி தரவரிசைகளுக்கு பிஃபா தரவரிசைப் பட்டியல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பனிரெண்டு இடங்கள் (ஏழு புதிய மற்றும் ஐந்து புணரமைக்கப்பட்ட இடங்கள்) பனிரெண்டு நகர்களில் இருந்து போட்டிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன. பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு மார்ச்சு 2013இல் முன்தெரிவாக 52 நடுவர்களின் பட்டியலை வெளியிட்டது. ஆறு காற்பந்து கூட்டமைப்புக்களிலிலிருந்தும் ஒரு நடுவருக்கு இரு துணை நடுவர்கள் கூட்டாக இந்தப் பட்டியல் அமைந்திருந்தது. 2014 சனவரி 14 அன்று பிஃபாவின் நடுவர் குழு 25 மூன்று நபர் நடுவர் அணிகளையும் ஆதரவாக எட்டு இரட்டையர் அணிகளையும் 43 வெவ்வேறு நாடுகளிலிலிருந்து அறிவித்தது. உலகக்கோப்பை காற்பந்தின் இறுதிப்போட்டிகளில் முதன்முறையாக நடுவர்களுக்குத் துணையாக கோல்-கோடு தொழினுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. இதற்கான உந்துதலாக முந்தைய உலகக்கோப்பை அமைந்தது; 2010ஆம் ஆண்டுப் போட்டியில் பதினாறுவர் சுற்றில் செருமனிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்திற்கு கோல் வழங்க தவறுதலாக மறுக்கப்பட்டது. இந்தப் பிழையை அடுத்து பிஃபா தலைவர் செப் பிளாட்டர் "கோல்-கோடு தொழினுட்பத்தைக் கருத்தில் எடுக்காதிருப்பது முட்டாள்தனம்" எனக் கடுமையாகச் சாடினார். இதனையடுத்து 2012இல் பன்னாட்டுக் கால்பந்துச் சங்க வாரியம் இதன் பயன்பாட்டிற்கு ஏற்பளித்தது. இந்த மாற்றத்திற்கு பின்பு இந்தத் தொழினுட்பம் பிஃபாவின் 2012, 2013 கழக உலகக்கோப்பை போட்டிகளிலும் 2013 கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டியிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. நான்காம் முறையாக 2014 உலகக்கோப்பையில் பயன்படுத்தப்படவுள்ளது. அக்டோபர் 2013இல் செருமனி நிறுவனத்தின் "கோல்கன்ட்ரோல்" இந்தப் போட்டியில் அலுவல்முறையாகப் பயன்படுத்தவிருக்கும் தொழினுட்பமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த 2014 ஆம் ஆண்டு உலகக்கோபை காற்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி மற்றும் ஹாண்டூரஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின் 48 ஆவது நிமிடத்தில் பென்சமா அடித்த கோல் அடிக்க முயற்சி செய்தபோது, பந்து கோல் கம்பத்தில் பட்டு திரும்பும் வேளையில், அந்த கோலைத் தடுக்க முயற்சித்த ஹாண்டூரஸ் அணியின் கோல் கீப்பர் நோயல் வெலாட்ரஸின் கைகளில் உரசி கோல் எல்லைக் கோட்டைக் கடந்தது என்று முறைப்பாடு எழ, 'கோல்-கோடு தொழினுட்பம்' மூலம் பந்து கோல் வலையின் கோட்டைக் கடந்தது என்று முடிவு செய்யப்பட்டது. உலகக்கோப்பை இறுதியாட்டங்களில் முதன்முறையாக "மறைகின்ற தெளிப்பு" பயன்படுத்தப்படவிருக்கின்றது; நீரை அடிப்படையாகக் கொண்ட இந்த தெளிப்பு சில நிமிடங்களிலேயே மறைகின்ற தன்மை உடையதாக உள்ளது. தடங்கலற்ற உதையின்போது தடுக்கும் அணிக்கான பத்து கஜ கோட்டையும் பந்தை எங்கு வைப்பது என்பதையும் குறிக்க இது பயன்படுத்தப்படுகிறது. 2013 "பிஃபா 20-கீழ் உலகக்கோப்பை"யிலும் 2013 "பிஃபா 17-கீழ் உலகக்கோப்பை"யிலும் 2013 "பிஃபா கழகங்களுக்கான உலகக்கோப்பை"யிலும் வெற்றிகரமான சோதனையோட்டங்களுக்குப் பிறகு இதன் பயன்பாட்டிற்கு பிஃபா அனுமதி வழங்கியுள்ளது. குழுவில் வெற்றி பெற்ற அணிகளும் அதற்கடுத்து வரும் அணிகளும் சுற்று 16க்கு முன்னேறும். குழுவிலுள்ள ஓவ்வொரு அணிகளின் தரவரிசை பின்வருமாறு உறதி செய்யப்படும்: மூலம்: thesoccerworldcups.com இவ்விளையாட்டுப் போட்டிக்கு பீபாவினால் உறுதி செய்யப்பட்ட மொத்தத் தொகை $ 576 மில்லியனாகும். இது 2010 உலகக்கோப்பை காற்பந்து போட்டிக்கு கொடுக்கப்பட்டதிலிருந்து 37 வீதம் அதிகரித்துள்ளது. போட்டிக்கு முன்பாக 32 நாட்டு அணிகளும் தலா $1.5 மில்லியனை ஆயத்த செவுக்காகப் பெறும். போட்டிக்காக பின்வரும் பரிசுத் தொகை வழங்கப்படும்: இந்த இறுதிப் போட்டிகளின் சின்னமான "அகவெழுச்சி"யை "ஆபிரிக்கா" எனப்படும் பிரேசிலிய நிறுவனம் உருவாக்கியுள்ளது. மூன்று வெற்றிக்கரங்கள் கூட்டாக உலகக்கோப்பையை தூக்குவது போன்ற ஒளிப்படத்தை ஒட்டி இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மஞ்சள் மற்றும் பச்சை வண்ணங்கள் பிரேசில் உலகநாடுகளை வரவேற்பதாக அமைந்துள்ளது. ஜோகானஸ்பேர்க்கில் நடந்த 2010 உலகக்கோப்பையின் போது ஒரு நிகழ்ச்சியில் இச்சின்னம் வெளியிடப்பட்டது. இந்த வடிவமைப்பு 25 பிரேசிலிய நிறுவனங்களுக்கிடையேயான போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டது. இத்தேர்விற்கான நடுவர் குழாமில் தொழில்முறை கணினி பக்கவடிவமைப்பாளர் எவரும் இல்லை என்றும் இச்சின்னம் முகத்தில் கையை வைத்திருப்பது போல இருப்பதாகவும் பிரேசிலின் வரைகலை வடிவமைப்பாளர் அலெக்சாண்டர் வொல்னர் குறை கூறியுள்ளார். பிஃபா சனவரி 2013இல் பிரேசிலிய கலைநிறுவனம் கிராமா உருவாக்கிய ஓர் அலுவல்முறை சுவரொட்டியை வெளியிட்டது. அலுவல்முறை சுலோகமாக "அனைவரும் ஒரே தாளத்தில் " (போர்த்துக்கேயம்: "Juntos num só ritmo") தெரிந்தெடுக்கப்பட்டுள்ளது. 1962ஆம் ஆண்டுமுதல் ஒவ்வொரு உலகக்கோப்பைக்கும் ஒரு அலுவல்முறை பாடல் உருவாக்கப்பட்டு வருகிறது. On 24 January 2014, பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பும் சோனி இசை நிறுவனமும் சனவரி 24, 2014 அன்று சொல்லிசைக் கலைஞர் பிட்புல், ஜெனிஃபர் லோபஸ் மற்றும் கிளாடியா லெயிட் பாடிய "நாங்கள் ஒருவரே (ஒலே ஒலா)" என்ற பாடலை அலுவல்முறையான பாடலாக அறிவித்தனர். மேலும் சோனி உலகளவில் "சூப்பர்சாங்" என்றழைக்கப்படும் பாடலுக்கான போட்டியை அறிவித்தது. இது "ஒரே விருப்பு, ஒரே தாளம்" என்ற அலுவல்முறை இசைக்கோவையில் இடம் பெறும். பெப்ரவரி 10, 2014 அமெரிக்க எலிஜா கிங்கின் "விடா" ("வாழ்வு") என்ற பாடல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.இதனை எசுப்பானியர் ரிக்கி மாட்டின் பாடியுள்ளார். "வாக்கா வாக்கா (இது ஆபிரிக்காவின் நேரம்)" என்ற முந்தைய உலகக்கோப்பைக்கான அலுவல்முறை பாடலைப் பாடிய சக்கீரா "டேர் (ல ல லா)" என்ற பாடலை இதற்கேற்ப மாற்றிப் பாடியுள்ளார். இது இரண்டாம்நிலை அலுவல்முறைப் பாடலாக கொள்ளப்படுகிறது. மார்ச்சு மாத இறுதியில் பிஃபா "டர் உம் ஜெய்தோ (வழி காணுவோம்)" என்ற பாடலை 2014 உலகக்கோப்பைக்கான அலுவல்முறைப் பண்ணாக தேர்ந்தெடுத்துள்ளது. 2014 உலகக்கோப்பைக்கான அலுவல்முறை பந்தாக அடிடாசு பிராசுகா விளங்கும்.1970 முதல் உலகக்கோப்பை ஆட்டப் பந்தை வழங்கிவரும் அடிடாசு நிறுவனம், பிரேசிலின் பண்பாட்டுக் கூறுகளை வெளிப்படுத்தும் விதமாக மூன்று பெயர்களை குறும்பட்டியலிட்டிருந்தது. இதிலிருந்து 1 மில்லியனுக்கும் கூடுதலான பிரேசிலிய காற்பந்து விசிறிகள் இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்தனர். தொடர்ந்து நான்காம் முறையாக பிஃபா உலகக்கோப்பை இறுதியாட்டங்களின் காட்சிகளை "இன்பிரண்ட் இசுபோர்ட்சு & மீடியா" நிறுவனத்தின் துணைநிறுவனமான "ஹோஸ்ட் பிராட்காஸ்ட் சர்வீசஸ்" (HBS) வழங்குகிறது. இந்த விளையாட்டுக்களை திரைபிடிக்கும் கருவிகளுக்கான அதிகாரபூர்வ நிறுவனமாக சோனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மீயுயர் வரையறை ஒளிதத் தயாரிப்பு திறனுள்ள பன்னிரெண்டு 40-அடி-நீள பெட்டிகளை சோனி உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு ஆட்டக்களத்திற்கும் ஒன்றாக இவற்றில் மிகவிரிவான கருவிகள் அமைக்கப்பெற்றுள்ளன. ஒவ்வொரு ஆட்டமும் 37 சீர்தர ஒளிப்பிடிப்புக் கருவிகளையும் இரண்டு மிகவிரைவு நகர்வு ஒளிப்பிடிப்புக் கருவிகளையும் நேர்காணல்களுக்கான பிரத்யேக ஒளிப்பிடிப்பு சாதனங்களையும் பயன்படுத்தும். மேலும் வான்வழி ஒளிப்பிடிப்புக் கருவியும் கம்பி மூலமாக ஆட்டக்களத்தில் இயங்கும் ஒளிப்பிடிப்புக் கருவியும் இவற்றில் அடங்கும். இந்தப் போட்டியைக் குறித்தான அதிகாரபூர்வ திரைப்படமும் மூன்று ஆட்டங்களும் மீயுயர் வரையறைத் தொலைக்காட்சித் தொழினுட்பத்தில், (4K வரையறை), படம் பிடிக்கப்படும். பரப்புகை உரிமங்கள் – தொலைக்காட்சி, வானொலி, இணையம் மற்றும் நகர்பேசி பரப்புகை – பிஃபாவால் நேரடியாகவோ அல்லது உரிமம் பெற்ற நிறுவனங்களாலோ தனித்தனி பகுதிகளில் விற்கப்பட்டுள்ளன. உலகக்கோப்பை நடத்துவதால் பிஃபா பெரும் வருமானத்தில் இந்த விற்பனை 60% ஆக மதிப்பிடப்படுள்ளது. பன்னாட்டு பரப்புகை மையம் இரியோ டி செனீரோவின் புறநகரில் பர்ரா டா டியுகாவில் "ரியோசென்ட்ரோ"வில் அமைக்கப்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டிகளின் துவக்கவிழாவிற்கு முன்னதாகவே பிரேசிலியா தேசிய விளையாட்டரங்கத்தின் முன்பாக உலகக்கோப்பை ஆட்டங்களை ஏற்று நடத்த செலவிடப்படும் பொதுமக்கள் வரிப்பணத்தை எதிர்த்து ஆர்பாட்டங்கள் நடைபெற்றன. இந்த போட்டிகளின் துவக்கவிழாவில் பிரேசிலியத் தலைவர் டில்மா ரூசெஃப் மற்றும் பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் செப் பிளாட்டர் பேச வந்தபோது அவர்களைப் பேசவிடாது கூக்குரல் எழுப்பினர். இதன் விளைவாக 2014 உலகக் கோப்பை திறப்புவிழாவில் எந்தவித உரையாற்றலும் இருக்காது என பிஃபா அறிவித்துள்ளது. இந்த ஆர்பாட்டங்களும் மனக்குறைகளும் பிரேசில் அரசின் பொருளியல் மேலாண்மையை எதிர்த்து எழுந்த பரந்த ஆர்பாட்டங்களின் அங்கங்களாகும். பொது போக்குவரத்தில் உயர்த்தப்பட்ட கட்டணங்களும் இவற்றிற்கு காரணமாயின. மேலும் கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டிகளின் மற்ற ஆட்டங்களின்போதும் அரங்கங்களுக்கு வெளியே இந்தப் போராட்டங்கள் தொடர்ந்தன. பிளாட்டர் "தங்கள் மனக்குறைகளை வெளிப்படுத்த காற்பந்தை பயன்படுத்தக் கூடாது" எனவும் இந்த விளையாட்டுகளுக்காக செலவிடப்படும் பொதுப்பணம் "உலகக்கோப்பைக்கானது மட்டுமல்ல, வருங்காலத்திற்கானவை" எனவும் கூறினார். பொதுமக்களுக்கு ஆற்றிய உரையில் ரூசெஃப் கூறினார்: "இந்த விளையாட்டரங்கங்களுக்காக அரசு செலவழித்த பணம் ஓர் நிதி முதலீடு; இவற்றைப் பயன்படுத்தும் பின்னாள் அரசுகளும் நிறுவனங்களும் செலுத்தும் கட்டணங்களால் இது முறையே மீட்கப்படும்". சூன் 18 அன்று எசுப்பானியாவிற்கும் சிலிக்கும் நடந்த பி குழு ஆட்டத்தின்போது 100 சிலியின் ஆதரவாளர்கள் மரக்கானா விளையாட்டரங்கதினுள் அத்துமீறி உட்புகுந்தார்கள். ஒருவர் உடல்நலக்கேடுடன் இருப்பதாக நடித்து காவலரின் கவனத்தை திசை திருப்ப, மற்றுவர்கள் இரு தடுப்புச் சுவர்களை உடைத்தும் ஊடக மையத்தின் கண்ணாடிக் கதவை உடைத்தும் விளையாட்டரங்கினுள் நுழைந்தார்கள். முன்னதாக சூன் 15 அன்றும் இத்தகைய அத்துமீறலை அர்கெந்தீனர்கள் எஃப் குழு ஆட்ட தினத்தன்று நடத்தினர். 2014 உலகக்கோப்பை போட்டிகளில் டி குழுவில் உருகுவைக்கும் இத்தாலிக்குமான இறுதியாட்டத்தின் 79வது நிமிடத்தில் உருகுவையின் ஆட்டக்காரர் லூயிசு சுவாரெசு இத்தாலிய ஆட்டக்காரர் ஜியார்ஜியோ சில்லினியின் இடது தோள்பட்டைக் கடித்தார்; உடனேயே செல்லினி ஆட்டநடுவருக்கு தமது கடிக் காயத்தைக் காண்பித்தார். இத்தாலிக்கு "தடங்கலில்லா உதை" வழங்கப்பட்டபோதும் அப்போது சுவாரெசிற்கு எந்த தண்டனைச் சீட்டும் வழங்கப்படவில்லை. இத்தாலிய வீரர்கள் நடுவரிடம் முறையிட்டிருக்கையில் உருகுவைக்கு கோண உதை வாய்ப்பு கிட்டியது. இதில் உருகுவையின் டியாகோ கோடின் கோலடித்து ஆட்டத்தை உருகுவை 1-0இல் வென்றது. இதனால் டி குழுவில் இரண்டாமிடத்தை எட்டி அடுத்த நிலைக்கு தகுதி பெற்றது. ஆட்டத்திற்குப் பின்னர் சுவாரெசு "செல்லினியின் தோள் மீது தொடர்பு ஏற்பட்டதாகவும் வேறேதும் இல்லை எனவும்" "இவை நிகழ்வது இயல்பே" என்றும் கூறினார். இவ்வாறு ஓர் எதிராளியைக் கடிப்பது சுவாரெசிற்கு மூன்றாம் முறையாகும். சூன் 26 அன்று பிஃபாவின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு சுவாரெசை ஒன்பது பன்னாட்டு ஆட்டங்களிலில் பங்கேற்பதை உடனடியாகத் தடை செய்தது. இதனால் உலகக்கோப்பையில் மேலும் பங்கேற்க இயலாது போயிற்று. மேலும் காற்பந்து தொடர்புடைய, விளையாட்டரங்கினுள் நுழைவது உட்பட, எந்தவொரு செயற்பாட்டிலும் நான்கு மாதங்கள் அவர் பங்கேற்க தடை விதித்தது. இக்குழு அபராதத் தொகையாகவும் சுவிசு பிராங்க்100,000 (ஏறத்தாழ. US$112,000 அல்லது £65,700) விதித்தது. இந்தத் தீர்ப்பு அவர் கழக மாற்றலுக்கு இடையூறாக இருக்காது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உருகுவை கால்பந்துச் சங்கம் (AUF) மேல்முறையீடு செய்யவிருப்பதாகக் கூறியுள்ளது. கொலம்பியாவுடனான காலிறுதிப் போட்டியில் பந்தைத் தடுக்க முயலும்போது நெய்மாரின் முதுகில் பின்னாலிருந்து கொலம்பிய ஆட்டக்காரர் யுவான் கேமிலோ சுனிகா காலால் முட்டினார்; இதனால் காயமடைந்த நெய்மாரை தூக்குப் படுக்கையில் களத்தை விட்டு எடுத்துவர வேண்டியதாயிற்று. மருத்துவமனையில் பரிசோதனைகளுக்குப் பிறகு நெய்மாரின் முதுகுத்தண்டில் ஓர் முள்ளெலும்பு உடைந்துள்ளதாகவும் அதனால் அவரால் மேற்கொண்டு உலகக்கோப்பை ஆட்டங்களில் பங்கேற்க இயலாது என்றும் அறிவிக்கப்பட்டது. விலங்கு-வலுப் போக்குவரத்து விலங்கினங்களின் உடல்சக்தியை உந்தும் வலுவாகப் பயன்படுத்தி போக்குவரத்து வண்டிகளைச் செலுத்துதல் விலங்கு-வலுப் போக்குவரத்து ஆகும். விலங்கு வலுப்போக்குவரத்தில் பல்வேறு விலங்குகள் பண்டைதொட்டுப் பயன்படுத்தப் பட்டுவருகின்றன. கோவேறு கழுதை கோவேறு கழுதை ("mule") என்பது கழுதையும் குதிரையும் தம்மிடையில் இனவிருத்தி செய்வதன் மூலம் பெறும் தனியன்கள் ("individuals") ஆகும். இவை தம்முள் இனக்கருக்கட்டல் செய்து எச்சங்களைத் தரமாட்டா. ஆகவே மலட்டு எச்சங்களாகும். இவை பெண் குதிரைக்கும், ஆண் கழுதைக்கும் செயற்கைக் கருவூட்டல் முறையில் தோன்றும் ஒரு இனமே இது. இதனால் இவை கழுதையை விட தோற்றத்தின் பெரியனவாகவும், குதிரையை விட சிறினவாகவும் உடலைப் பெற்றிருக்கும். ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில் திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோயில் ("Avudaiyarkoil") இந்திய மாநிலமான தமிழ் நாடு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆவுடையார்கோயில் வட்டத்தில், திருப்பெருந்துறை ஊரில் அமைந்த தேவார பாடல் பெற்ற சிவன் கோயில் ஆகும். . இங்குதான் மாணிக்கவாசகர் திருவாசகம் இயற்றினார். என்றும் என்றும் கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெருமகனார் பாடிவைத்த தெற்கு கரை பெரு வெள்ளாறு வெள்ளாறு வடக்காம் என்று வருகின்ற சோழ நாட்டின் தெற்கு எல்லையாகவும் பாண்டிய நாட்டின் வடக்கு எல்லையாகவும் இருந்து சிறப்புப் பெற்ற அந்த வெள்ளாறு இன்றளவும் குன்றாச் சிறப்போடு விளங்குகிறது. அதற்குக் காரணம் கவிச்சக்கரவர்த்தி கம்பனால் பாண்டிய நாட்டின் எல்லையென கூறப்பட்டுள்ள வெள்ளாற்றின் தென்கரையிலே பாண்டிய நாட்டு மன்னனாகிய அரிமர்த்தன பாண்டியரின் அமைச்சராக இருந்த மாணிக்கவாசகரால் எழுப்பப் பெற்ற திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோயில் இன்றளவும் வாழ்வாங்கு வாழ்ந்து வளரும் தமிழ்கலைக்குக் கட்டியம் கூறுவது போல அமைந்திருப்பதே ஆகும். ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே எழுப்பப்பட்ட இந்தக் கவிபாடும் கலைக் கூடத்தின் சிறப்புகளை ஒன்றிரண்டு வரிகளிலே சொல்லி அடக்கி விட முடியாது. அடங்காமை என்று கூறுவார்களே அந்த அடங்காமை இந்த ஆவுடையார்கோயிலுக்கு மிகவும் பொருந்தும். புதிதாகக் கோயில்கள் கட்டுகிற ஸ்தபதியார்கள் கூட ஆவுடையார்கோயில் சிற்ப அடங்கலுக்குப் புறம்பாக என்று தங்களது ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு எழுதுவதிலிருந்தே இந்தக் கோயிலின் கலைத்திறன் வேறு எந்தக் கோயிலிலும் அடங்காது என்பது தெளிவாகும். இங்குள்ள தேர் தமிழகத்திலுள்ள பெரிய தேர்கள் சிலவற்றில் ஒன்றாகும். [[] [[திருநெல்வேலி]] [[திருவாரூர்]] ஆவுடையார்கோயில் ஆகிய ஊர்களில் உள்ள தேர்கள்தான் தமிழகத்தில் உள்ள கோயில்களின் தேர்களில் மிகவும் பெரிய தேராகும். இந்த தேர்ச் சக்கரத்தின் குறுக்களவு மட்டும் 90 அங்குலம் ஆகும். சக்கரத்தின் அகலம் 36 அங்குலமாகும். 50 முதல் 500 பேர் வரை கூடினால் எந்தத் தேரையும் இழுத்து விடலாம். ஆனால் இந்த ஆவுடையார்கோயில் தேரை இழுக்க சுமார் 5000 பேர் கூடினால்தான் இழுக்க முடியுமாம். இதிலும் அதன் அடங்காத் தன்மை வெளிப்படுகிறது. 50 ஆண்டுகள் ஆகியும் இந்த ஆவுடையார்கோயில் தேர் அப்படியே நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. இந்த ஆவுடையார்கோயிலுக்குள் என்னென்ன அதியற்புத வினைத்திறன் கொண்ட [[கற்சிலைகள்]] இருக்கின்றனவோ அவை அனைத்துமே மரத்திலும் செய்து இந்தத் தேரில் எட்டுத் திசையும் பொருத்தி இருப்பதைக் கண்ணுறும்போது இந்தச் சிலைகள் கல்லோ மரமோ என வியக்கத் தோன்றும். இந்தத் தேரை இழுப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட வடக்கயிற்றை நமது இரு கைகளாலும் இணைத்துப் பிடித்தால்கூட ஒரு கையின் விரல் இன்னொரு கையின் விரலைத் தொடாது. இரு கைகளால் பிடிக்கும் போது வடக்கயிறு நமது கைக்குள் அடங்காது. இதிலும் அதன் அடங்காத்தன்மை பளிச்செனத் தெரியும். தமிழகத்திலுள்ள ஆலயங்கள் எல்லாவற்றிலுமே உருவ வழிபாடுதான் நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்த ஆத்மநாதர் ஆலயத்தில் மட்டுந்தான் அருவ வழிபாடு நடைபெற்று வருகிறது. மூலஸ்தானத்தில் எந்த விதச் சிலையும் கிடையாது. அப்படிப் பார்த்தாலும் இது மற்ற கோவில்களில் அடங்காத கோயில் என்பது சொல்லாமலே விளங்கும். ஆவுடையார் கோயிலை பூதம்தான் கட்டிற்று என்று இவ்வட்டார மக்களின் நம்பிக்கை. பெரிய பாறைகளைக் கொண்டு வந்து தூண்கள் அமைத்தும் சிலைகள் வடித்தும் கொடுங்கைக் கூரைகள் இணைத்தும் மதில் சுவர்கள் கோபுரங்கள் எழுப்பியும் வைக்கப்பட்டுள்ளது. கோயிலின் தாழ்வாரத்திலுள்ள கொடுங்கைகள் கல்லை தேக்கு மரச்சட்டம் போல் இழைத்து அதில் (கம்பிகளை இணைத்துச் சேர்த்து அதிலே குமிழ் ஆணிப்பட்டை ஆணிகள் அறைந்திருப்பது போல) எல்லாமே கல்லில் செய்து அதன் மீது மெல்லிய ஓடு வேய்ந்திருப்பது போல செய்திருப்பது சிற்பக்கலை வியக்கத் தக்க ஒப்பற்ற திறனாகும். [[திருவலஞ்சுழி வெள்ளைவிநாயகர் கோயில்|திருவலஞ்சுழி பலகணி]], திருவீழிமழலை வௌவால்நத்தி மண்டபம், ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயில் கொடுங்கை போன்ற கட்டிடப்பணி தவிர்த்து பிற வகையிலான கட்டட அமைப்புகளை கட்டித்தருவதாக கட்டிடக்கலைஞர்கள் உறுதி கூறுவதாகக் கூறுவதுண்டு. இதன்மூலமாக கட்டிடக்கலை நுட்பத்தை உணர முடியும். திருவலஞ்சுழி பலகணி (சன்னல்) மிகவும் நேர்த்தியாகவும் நுட்பமானதாகவும் அமைக்கப்பட்டிருக்கும். திருவீழிமிழலை வௌவால்நத்தி மண்டபத்தில் வௌவால்களால் தொங்க முடியாது. ஆவுடையார்கோயில் கொடுங்கை மிகவும் மெல்லியதாக இருக்கும். [[File:AVUDAIYAR KOVIL STONERINGS.JPG|thumb|right|250px|கல் வளையங்களாலான சங்கிலி]] இதே மண்டபத்தில் 10-15 வளையங்கள் கொண்ட ஒரே கல்லிலான கற்சங்கிலி செதுக்கப்பட்டு உயரத்தில் பொறுத்தித் தொங்க விடப்பட்டுள்ளது. இதே போல இக்கோயிலின் சிறப்புக்களைக் கூறத்தலைப்பட்டால் அது ஏட்டில் அடங்காது. இங்கே மூலஸ்தானத்தில் அமுது மண்டபத்திலே படைகல் என்கிற ஒரு திட்டுக்கல் இருக்கிறது. இந்தத் திட்டுக்கல் 3 அடி உயரம் 7 அடி நீளம் 6 அடி அகலம் கொண்ட ஒரே பாறைக்கல்லாகும். இந்தத் திட்டுக்கல்லில்தான் 6 கால பூசைகளுக்கும் உரிய அமுதினை வடித்துப் படைத்து ஆற வைக்கிறார்கள். எல்லா ஆலயங்களிலும் பூசை நடைபெறும்போது பச்சை அரிசியிலே அமுது படைத்து நெய்வேத்தியம் செய்வார்கள். ஆனால் இந்த ஆவுடையார் கோயிலிலே 6 காலத்திற்குமே புழுங்கல் அரிசியால்தான் அமுது படைக்கப்படுகிறது. அதோடு பாகற்காய் கறியும் கீரையும் சேர்த்துப் படைக்கப் படுவது இங்கு மட்டும்தான். 6 கால பூசைக்கும் தொடர்ந்து அமுது படைத்துக் கொண்டிருப்பதனால் ஆயிரக்கணக்கான வருடங்களாக இங்கு உள்ள அமுது படைக்கும் அடுப்பின் நெருப்பு அணைந்ததேயில்லை. இந்தக் கோயிலில் ஆனந்தசபை தேவசபை கனகசபை சிற்சபை நடனசபை பஞ்சாட்சரம் போன்ற மண்டப அமைப்புகள் உள்ளன. இக்கோயிலினுள் கருவறைப் பகுதியை மட்டும் மாணிக்கவாசகர் கட்டியதாகவும் அதைத் தொடர்ந்து விக்ரம சோழபாண்டியர் (பார்த்திபன் கனவு என்கிற சரித்திர நாவலில் சொல்லப்படுகிற அதே விக்ரமாதித்யசோழன் தான்) மற்றும் சோழ மன்னர்கள் தஞ்சையை ஆண்ட நாயக்கர் மன்னர்கள் மகாராஷ்டிர மன்னர்கள் இராமனாதபுரம் சேதுபதி மன்னர் சிவகங்கை மன்னர் புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர் பாலைவன ஜமீன்தார் ஆகியோரால் ஆறு மண்டபங்கள் இணைத்துக் கோவிலாக கட்டப்பட்டுளது . தமிழகத்திலே மற்றதொரு உருவமற்ற அருவக் கோயிலான தில்லையம்பல சிதம்பர நடராசர் ஆலயத்திலே பொன்னோடு வேயப்பட்ட விமானம் உள்ளது. அதேபோல இங்கு செப்போடு வேயப்பட்ட விமானம் இருக்கிறது. இந்த செப்போடு விமானத்தின் இணைப்பையும் வடிவையும் நாளெல்லாம் பார்த்து ரசிக்கலாம். இந்த விமானத்திலுள்ள மரங்கள் எல்லாமே தேவதாரு மரத்தால் ஆனவையாகும். மரங்களில் உறுதி வாய்ந்தது தேக்கு மரம் என்பதும் தேக்கு மரங்கள் நூற்றாண்டுக் கணக்கில் கெட்டுப் போகாமல் தாங்கும் சக்தி படைத்தது என்பது நமக்குத் தெரியும். ஆனால் இக்கோயிலில் பயன்படுத்தியுள்ள தேவதாரு மரங்களோ ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தாங்கும் சக்தி பெற்றதாகும். இந்த தேவதாரு மரங்கள் இந்தியாவில் இல்லை என்றும் பர்மாவில் உள்ளது என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் சிவபெருமான் வாசஸ்தலமான கைலாயத்தில் தேவதாரு மரம் இருப்பதாக புராணங்கள் வாயிலாக நாம் அறிய முடிகிறது. அந்தத் தேவதாரு மரத்தின் மீது இந்தச் செப்போடு வேயப்பட்ட விமானம் உள்ளது. இந்த தேவதாரு மரத்தின் பலகைச் சட்டத்தை இன்று பார்த்தாலும் நேற்று அறுத்து இன்று வழவழப்பேற்றி பலகையாக்கி இணைக்கப்பட்டது போல எண்ணெய் செறிந்துள்ள பளபளப்பைக் காணலாம். இது 5 ஆயிரம் ஆண்டுகள் தாங்கும் சக்தியை படைத்தது என்றும் கூறப்படுகிறது. இங்கு திருத்தமம் பொய்கை எனப்படும் வற்றாத திருக்குளமும் மூல விருட்சமான குருந்த மரமும் 96 அடி உயரம் 51 அடி அகலம் உடைய ராஜகோபுரம் ஆகியவையும் உள்ளன. இந்தக் கோவிலுக்குள் கருவறைக்கு மிக அருகில் 2 கிணறுகள் உள்ளன. இதில் 5 அடி ஆழத்தில் இன்றும் தண்ணீர் ஊறுவது அதிசயத்திலும் அதிசயம். உயிர்த்துடிப்பு ஒன்றைத் தவிர மற்ற எல்லா அம்சங்களும் இங்குள்ள சிலைகளில் உள்ளன என்று கூறியுள்ளார்கள். அந்த அளவிற்கு ஈடு இணையற்ற கவிபாடும் கற்சிலைகள் இங்கே ஒவ்வொரு தூண்களிலும் நிறைந்து விளங்குகின்றன. அங்குலம் உயரம் உள்ள ஆயிரங்கால் மண்டபம் முதல் 12 அடி உயரம் உள்ள அகோர வீரபத்திரர் ரணவீரபத்திரர் சிலை வரை சிற்பக்கலை தேனடை போல செறிந்து கிடக்கிறது. இங்குள்ள எல்லா உருவச்சிலைகளிலேயும் காலில் உள்ள நரம்பு கூட வெளியே தெரிகின்றன. சிலைகளின் தலைமுடி கூட சன்னமாக அளந்து நீவி விடப்பட்டுள்ளன. தற்காலிக நவநாகரீக நகைகள் கல்லூரி மாணவிகளும் உயர்தர குடும்பப் பெண்களும் அணிகின்ற நவீன அணிகலன்கள் தங்க நகைகள் சங்கிலிகள் போன்ற எந்த ரக நகையானாலும் அவையனைத்தும் 1000 ஆண்டுகளுக்கு முன்னமேயே இங்குள்ள சிலைகளிலே வழங்கப்பட்டுள்ளதை இன்றும் காணலாம். ʽFile:Avudayar Kovil.jpeg|கருவறை கோபுரக்காட்சிʼ நரியைப் பரியாக்கியது இத் தல புராணத்தின் பெருமையாகும் . இந்த ஆவுடையார் கோயிலிலே தாவும்பரி என்று ஒரு குதிரை கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. அந்தக் குதிரை மீது சிவபெருமான் அமர்ந்து வருவது போல செய்யப்பட்டுள்ளது. குதிரையின் அமைப்பு ஒவ்வொன்றாய்ப் பார்த்தால் உயிர்க்குதிரையோ என்று தோன்றும். குதிரைகளிலே சிறந்ததும் அழகு வாய்ந்ததும் பஞ்ச கல்யாணிக் குதிரையாகும். பஞ்ச கல்யாணி என்றால் அந்தக் குதிரையின் நான்கு கால்களிலும் அதன் கனுக்காலிலும் வெள்ளை நிறம் இருக்கும். நெற்றியிலும் பொட்டு வைத்தாற்போல வெள்ளை நிறம் இருக்கும். இவ்வாறு ஐந்து இடத்தில் வெள்ளை நிறம் இருக்கும் குதிரை பஞ்ச கல்யாணி குதிரையாகும். சிவபெருமான் தாங்கி நிற்கின்ற இங்குள்ள குதிரைச் சிலையிலும் மேற்சொன்ன ஐந்து இடங்களிலும் வெள்ளை நிறம் இருக்கின்றன. அது மட்டுமல்ல அந்தக் குதிரையின் பற்களும் வெண்மையான கற்களால் செதுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலுக்குள் வேடுவச்சி எனப்படும் மலைக்குறத்தியின் சிலை ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஓலையினால் செய்யப்பட்டது போன்ற ஒரு கூடையினை இடுப்பில் வைத்து கையில் இடுக்கிக் கொண்டு குறி சொல்ல வருகின்ற குறத்தி போல அமைந்துள்ளது அச் சிலை. இந்தச் சிலையை இந்தக் கோயிலின் செக் போஸ்ட் என்று சொன்னால் கூட பொருந்தும். இந்தச் சிலையை யார் பார்த்தாலும் பார்த்தவர்கள் அந்த இடத்தை விட்டு எளிதில் அகல மாட்டார்கள். தன்னிலை மறந்து அந்தச் சிலையையே சுற்றி வருவார்கள். தோள் கண்டார் தோளே கண்டார் என்று கம்பர் கூறியதைப் போல இந்த சிலை அழகில் மயங்கியவர்கள் ஆடைகண்டார் ஆடையே கண்டார் கூடை கண்டார் கூடையே கண்டார் என்று அச்சிலையின் ஒவ்வொரு அங்குலத்தையும் ரசிப்பதிலேயே மனம் பறிகொடுப்பார். இந்த ஆவுடையார்கோயில் ஆத்மநாதர் ஆலயத்தில் 1000 ஆண்டுகளுக்கு முந்திய [[திருவாசகம்]] மற்றும் [[திருக்கோவையார்]] [[ஓலைச்சுவடிகள்]] மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. [[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்]] [[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள்]] கடியலூர் உருத்திரங்கண்ணனார் கடியலூர் உருத்திரங்கண்ணனார் சங்ககால நல்லிசைப் புலவர்களுள் ஒருவர் ஆவார். இவர் பாடிய பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை ஆகிய இருபாட்டுக்களும் பத்துப்பாட்டு எனும் பத்து பாட்டுக்களின்‌ தொகுதியில் இடம்பெற்றுள்ளன. இது மட்டுமின்றி இவர் அகநானூற்றில் 167ஆவது பாடலையும் குறுந்தொகையில் 352ஆவது பாடலையும் இயற்றியவராவார். தொல்காப்பிய மரபியல் 629ஆம் சூத்திரவுரையில் இவர் அந்தணர் என்று சொல்லப்படுகிறார். தமிழ்நாடு வேலூர் மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் என்னும் ஊருக்கு மற்றொரு பெயர் திருக்கடிகை. இந்தக் கடிகையைக் கடியலூர் எனக் கொள்வது பொருத்தமாக உள்ளது. எனவே பாலை நிலத்தில் உருத்து இருக்கும் உருத்திரத்தைப் பாடிய புலவர் என்று காட்டக் கண்ணனாருக்கு உருத்திரம் என்னும் அடைமொழி தரப்பட்டுள்ளது. சொம்புமூக்கு முதலை சொம்புமூக்கு முதலை அல்லது கரியால் (ஆங்கிலம்: "Gharial", அறிவியல் பெயர்: "Gavialis gangeticus") என்பது இந்திய துணைக்கண்டத்தை தாயகமாகக் கொண்ட ஒரு முதலை இனம் ஆகும். இது ஜீராசிக் காலந்தொட்டு ‌பன்னெடுங்காலமாய் இப்புவியில் வாழ்ந்து வருகிறது. தற்போது இந்த இனம் மிகவும் அருகி வருகின்றது. முன்னொரு காலத்தில் இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள எல்லா ஆறுகளிலும் இவை காணப்பட்டன. தற்போது முன்னிருந்ததில் வெறும் 2 விழுக்காட்டுப் பரப்பில் தான் வாழ்கின்றன. ஓரி கடையெழு வள்ளல்களுள் ஒருவனான ஓரி சிறந்த வில்லாளி. கொல்லிமலைக்கும் அதைச் சார்ந்த நாட்டிற்கும் தலைவன். இவர் வல்வில் ஓரி எனவும் ஆதன் ஓரி எனவும் அழைக்கப்பெறுவார். ஒரு முறை வல்வில் ஓரி ஸ்ரீ ராஜபுரம் என்னும் பகுதியில் (தற்போது இராசிபுரம்) வேட்டையாட சொல்லும் போது அங்கு ஒரு பன்றியின் மீது அம்பினை செலுத்த, அப்பன்றியானது ஒரு புதரில் போய் மறைந்து விட, அந்த இடத்தில் வல்வில் ஓரி சென்று பார்க்கும் போது அங்கு பன்றிக்கு பதிலாக ஒரு சிவலிங்கமும், அச்சிவலிங்கத்தின் மீது வல்வில் ஓரி எய்த அம்பும், அந்த அம்புபட்டதால் அந்த சிவலிங்கத்தில் ரத்தமும் கசிந்தது. இதைக் கண்ட ஓரி சிவன்தான் தன்னை பன்றி வடிவில் வந்து சோத்திததாக எண்ணி அவ்விடத்திலேயே சிவ பெருமானுக்கு ஸ்ரீ கைலாச நாதர் திருக்கோயில் என்ற பெயரில் ஆலயம் எழுப்பினான். இதனை குறிக்கும் வகையில் அந்த ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயிலின் கொடிமரத்தில் சிவபெருமானை குறிக்கும் வகையில் முள் புதரின் முன் பன்றி வடிவமும், வல்வில் ஓரியை குறிக்கும் வகையில் வாளும் கேடயமும், பொறிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு இவ்வாலய கோபுரத்தின் பின்புறத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இவன் கடையெழு வள்ளல்களுள் மற்றொருவனான காரியோடு போரிட்டு மாண்டான். நாட்டை வென்ற காரி அதை சேரமான் பெருஞ்சேரலிரும்பொறைக்குக் கொடுத்தான். நற்றிணையில் இவன் பரணரால் சிறப்பிக்கப்பட்டுள்ளான். புறநானூற்றில் வன்பரணர், கழைதின் யானையார் என்போர் இவனைப் புகழ்ந்து பாடிய பாடல்கள் உள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/ ஆலங்குடி (சட்டமன்றத் தொகுதி) ஆலங்குடி, புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். முன்பு இத்தொகுதிபுதுக்கோட்டை மக்களவைத் தொகுதியில் இடம் பெற்று இருந்தது. தற்போது தொகுதி மறு சீரமைப்பின் கீழ் இத்தொகுதி சிவகங்கை மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றுள்ளது. மேலப்பட்டி ராசியமங்கலம்(உடையார்), பாச்சிக்கோட்டை, குழந்தைவிநாயகர்கோட்டை, புதுக்கோட்டை விடுதி, கீழப்பட்டி ராசியமங்கலம்(உடையார்), மேலாத்தூர், கீழாத்தூர், வடகாடு, மாங்காடு, புள்ளான்விடுதி, நெடுவாசல் மேல்பாதி, நெடுவாசல் கீழ்பாதி, ஆண்டவராயபுரம், செட்டியேந்தல், அணவயல் மி பிட், அணவயல் மிமி பிட், லெட்சுமிநரசிம்மபுரம், புளிச்சங்காடு, கறம்பக்காடு ஜமீன், கறம்பக்காடு ஐமீன் மிமிபிட், செரியலூர் இனாம் மி பிட் செரியலூர் இனம் மிமி பிட், பனங்குளம், குலமங்கலம் தெற்கு, குலமங்கலம் வடக்கு, கொத்தமங்கலம் தெற்கு, சேந்தன்குடி, நகரம், கொத்தமங்கலம் வடக்கு, ஆலங்காடு, சூரன்விடுதி, கல்லாலங்குடி, பள்ளத்திவிடுதி, பத்தம்பட்டி, குப்பாக்குடி, ஆயிப்பட்டி, கோவிலூர், தேவஸ்தானம், கோவிலூர், கொத்தக்கோட்டை, மாஞ்சன்விடுதி, காயம்பட்டி, வேப்பங்க்குடி, இம்னாம்பட்டி, திருவரங்குளம், திருக்கட்டளை, கைக்குறிச்சி, விஜயரெகுநாதபுரம், பூவரசக்குடி, மணியம்பலம், வண்டக்கோட்டை, வலத்திராக்கோட்டை, களங்க்குடி, கன்னியாபட்டி, நம்புக்குழி, கூடலூர், கத்தக்குறிச்சி, பாலையூர், முத்துப்பட்டிணம், குளவாய்ப்பட்டி, தட்சிணாபுரம், வெங்கிடகுளம், வெண்ணாவல்குடி, அரையப்பட்டி, கீழையூர், சேந்தாக்குடி, மாலக்குடி, கொத்தமங்கலம், எருக்கலக்கோட்டை,ராஜேந்திரபுரம்,மற்றும் இசுகுபட்டி கிராமங்கள். , 2016 அன்று "முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு" வெளியிட்ட பட்டியலின்படி, ஆபிரிக்க மெய்யியல் ஆபிரிக்கச் சூழலில் உருவாகிய, ஆபிரிக்கர்களால் உருவாக்கப்பட்ட, பயன்படுத்தப்பட்ட மெய்யியல் ஆபிரிக்க மெய்யியல் ஆகும். மிக விரிந்த ஆப்பிரிக்க நிலப்பரப்பில் வசிக்கும் பல்வேறு இன, மொழி, சமய மக்கள் அனைவருக்கும் பொருந்தும் அல்லது எடுத்தாளும் மெய்யியல் என்ற ஒன்று இல்லை. பல வகைப்பட்ட சிந்தனைகளை ஆபிரிக்க மெய்யியலில் உள்ளடக்குகின்றது. இன்று ஆப்பிரிக்கா என அறியப்படும் கண்டத்திலேயே பண்டைய எகிப்திய நாகரிகம் சிறப்புற்று இருந்தது. வட ஆபிரிக்காவில் இசுலாம் மிக விரைவாக பரவியது. எனினும் பெரும்பான்மை ஆபிரிக்கா இந்த நாகரிங்களிற்கு அப்பாலேயே வரலாற்றின் நீண்ட காலத்துக்கு இயங்கியது. பெரும்பான்மை ஆபிரிக்கா எழுத்து நுட்பத்தைப் பெற்றிருக்கவில்லை. இவர்களின் சிந்தனைகள், நம்பிக்கைகள், நுட்பங்கள் வாய்மொழி வழியாக, வழக்கங்கள் நடத்தைகள் வழியாக கற்கப்பட்டு வந்தன. இன்று ஆப்பிரிக்க மெய்யியல் என்று அறியப்படுவதில் ஒரு குறிப்பிடத்தக்க பகுதி இவ்வாறு வாய்மொழியாக வழங்கிவந்த சிந்தனைகள் ஆகும். இவை முதலில் ஐரோப்பியர்களாலேயே ஆவணப்படுத்தப்பட்டன. ஐரோப்பியர்கள் தமது மெய்யியல் முறையை வைத்து ஆபிரிக்க சிந்தனையைப் புரிந்து கொள்ள முற்பட்டார்கள். இதனால் இன்று ஆபிரிக்க மெய்யியல் என்று அறியப்படுவதில் பெரும் பகுதி ஐரோப்பிய சிந்தனை சட்டத்தின் ஊடாக, ஐரோப்பிய மொழிகளின் ஊடாக எமக்கு கிடைக்கின்ற ஆக்கங்கள் ஆகும். எ.கா Placide Tempels, Lucien Lévy-Bruhl, Marcel Griaule ஆகியோருடைய ஆக்கங்கள். ஆபிரிக்க மெய்யியல் பற்றிய ஆபிரிக்கர்களின் ஆக்கங்கள் முதலில் ஐரோப்பிய கல்வி பெற்ற ஆபிரிக்கர்களாலேயே பெரும்பாலும் மேற்கொள்ளப்படுகின்றது. இவர்களின் ஆக்கங்கள் ஐரோப்பியர்களுடன் கருத்து மோதலிலும், சமரசத்திலும் ஈடுபடுகின்றன. Kwasi Wiredu, Paulin J. Hountondji, Segun Gbadegesin, D. A. Masolo, Kwame Gyekye ஆகியோருடைய ஆக்கங்கள் இந்த நிலையைச் சார்ந்தவை. 1950 களில் 1960 களில் பெரும்பாலான ஆபிரிக்க நாடுகள் சுதந்திரம் பெற்றன. எனினும் இந்த நாட்டு பலகலைக்கழகங்களில் ஆபிரிக்க மெய்யியல் துறை அக்காலத்தில் தொடங்கப்படவில்லை. ஆபிரிக்க மெய்யியல் என்ற ஒன்று உண்டா என்பதே ஆபிரிக்க மெய்யியலில் ஒரு முக்கிய கேள்வியாக இருக்கிறது. எழுதப்பட்ட ஆதாரங்கள் இல்லாத நிலையில், மேற்கத்தைய மெய்யியலுக்கு ஒத்த முறையியல் இல்லாத நிலையில் இக் கேள்வி எழுகின்றது. வாய்மொழி ஆதாரங்கள், ஆபிரிக்கர்களின் சிந்தனைக் களங்களும் முறைகளும், தற்கால வளர்ச்சிகள் ஆகியவை ஆபிரிக்க மெய்யியல் ஒன்று உண்டு என்று சுட்டி நிற்கின்றன. திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில் திருவானைக்காவல், அல்லது திருஆனைக்காவல் எனப்படும் திருவானைக்கோவில் திருச்சிக்கு அருகே அமைந்துள்ள காவேரி ஆற்றின் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் மாபெரும் சிவன் கோவில் நகரமாகும். இதனை திருவானைக்காவல் என்றும் அழைப்பர். சிலர் திருவானைக்கா என்றும் அழைக்கின்றனர். அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்றதால் இதை பாடல் பெற்ற தலம் என்பர். இச்சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துளள 60வது சிவத்தலமாகும். புராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இத்தலம் இருந்தது. அங்கே ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவகணங்களில் இருவர் தாங்கள் பெற்ற சாபம் காரணமாக இக்காட்டில் ஒரு யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர். சிவலிங்கம் கூரையில்லாமல் வெயில், மழையில் கிடந்தது. சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெய்யில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் காத்தது. யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும் பூவும் கொண்டுவந்து வழிபட்டது. யானை சிலந்தி பின்னிய வலையை தேவையற்றதாக கருதி அதை அழித்துவிட்டுச் செல்லும். சிலந்தி மறுபடியும் வலைபின்னி தன் வழிபாட்டைத் தொடரும். தினந்தோறும் இது தொடர, யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் துதிக்கையில் புக, யானையும், சிலந்தியும் போராட கடைசியில் இரண்டும் மடிந்தன. இவைகளின் சிவபக்திக்கு மெச்சி சிவபெருமான் யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார். சிலந்தி மறு பிறவியில் கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறந்தது. பூர்வஜென்ம வாசனையால் கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலைமீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோவில்கள் கட்டினான். அவை யாவும் மாடக்கோவில் என்று அழைக்கப்படுகின்றன. கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோவில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயமாகும். இத்தலத்தின் நான்காவது திருச்சுற்று மதிலை இறைவனே நேரில் ஒரு சித்தரைப் போல் வந்து மதில் சுவர் எழுப்பிய பணியாளர்களுக்கு திருநீறை கூலியாகக் கொடுத்ததாக தலவரலாறு கூறுகிறது. பணியாளர்களின் உழைப்புக்கேற்ப திருநீறு தங்கமாக மாறியதாகவும் தலவரலாறு கூறுகிறது. இதனால் இம்மதிலை திருநீற்றான் மதில் என்று அழைக்கிறார்கள். இங்கு இருக்கும் ஜம்பு லிங்கம் அன்னையால் செய்யப்பட்டது. ஒரு முறை பூமிக்கு வந்த அம்பிகை சிவனை வழிபட சித்தம் கொண்டார். அழகிய காவேரியில் சிறிது நீர் எடுத்து லிங்கம் வடித்தார். அம்பிகையின் திருக்கரங்களிலிருந்த நீர் லிங்கமாக மாறியது. அம்பிகை அந்த லிங்கத்தை வழிபட்டு ஆனந்தம் அடைந்தார். நீரால் செய்யப்பட்டதால், லிங்கம் ஜம்புகேஸ்வரர் என வழங்கப்படுகிறது. மற்றொரு சந்நிதியில் குபேர லிங்கம் உள்ளது. மிகப்பெரிய வடிவாகவும், பலமுக ருத்திராட்சம் தாங்கியும் உள்ளது. இந்த குபேர லிங்கத்தை குபேரன் வழிபட்டதால் தான் சிவன் அருள் பெற்று செல்வந்தன் ஆனார் என்ற வரலாறு எல்லோருக்கும் தெரிந்ததே. இப்போது மக்கள் அதிகம் வழிபாடு செய்யும் இடங்களில் ஒன்றாக குபேர லிங்க சன்னதி ஆகிப்போனது. பல அரிய சிற்பங்களும் இத்தலத்தில் காணக் கிடைக்கின்றன. அதில் முக்கியமானது மூன்று கால் முனிவர் சிலை. சிவலிங்க சன்னதிக்கு இடதுபுறம் அமைந்துள்ள வெளிப்பிரகாரத்தூண்களில் இந்த சிற்பம் காணக் கிடைக்கின்றது. அது மட்டுமின்றி ஏகநாதர் திருவுருவம் அன்னையின் சன்னதிக்கு வெளியே உள்ள தூணில் காணக் கிடைக்கிறது. ஏகநாதர் என்பது மும்மூர்த்திகளும் சமமானவர் என்றும், எல்லோரும் ஒருவரே என்ற மாபெரும் தத்துவத்தை விளக்கவும் வல்லது. அது மட்டுமின்றி நான்கு கால் தூணில் உள்ள மங்கைகள் எல்லோர் மனதையும் கவருகின்றார்கள். அவர்களின் கூந்தல் அலங்காரம் பிரம்மிக்க வைப்பதாக உள்ளது. அதிலும் ஒரு சிறு குழந்தையை ஏந்திக்கொண்டு இருக்கும் பெண் மிக தத்ரூபமாக செதுக்கப்பற்றுள்ளாள். பல்வேறு சோழ மன்னர்கள் இக்கோயிலுக்கு பல கொடைகளை வழங்கியுள்ளனர், இதை இதுவரை இங்கு கிடைத்துள்ள 156 கல்வெட்டுகள் மூலம் அறியலாம். இவற்றுள் பராந்தக சோழன் பற்றிய கல்வெட்டுகளே மிக தொன்மையானவை. இத்தலப் பெருமை அறிந்து தமிழ் நாட்டைச் சார்ந்த சோழ பாண்டியர்கள் மட்டும் அன்றி, போசளப் பேரரசர்கள், விஜயநகர அரசர்கள், மதுரை நாயக்கர்கள் போன்றோரும் ஆற்றிய திருப்பணிகளை சுமார் நூற்று ஐம்பத்து நான்கு கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன. திருவானைக்கா நாயன்மார்கள் மற்றும் தாயுமானவரின் பாடல் பெற்ற ஒரு தலம். திருநாவுக்கரசர் அருளிய ஒரு தேவாரப் பதிகம் கீழே: "துன்பம் இன்றித் துயரின்றி என்றும்நீர்" "இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்துமின்" "எம்பொன் ஈசன் இறைவன் என்று உள்குவார்க்கு" "அன்பன் ஆயிடும் ஆனைக்கா அண்ணலே." காவேரி நதியோடு சென்று விட்ட சோழனின் மணியாரம், திருமஞ்சனக் குடத்தில் சிக்கிக் கொண்டு எம்பிரானுக்கு ஆபரணமாக விளைந்த அற்புதத்தை சுந்தரமூர்த்தி நாயனார் இவ்வாறு வடிக்கிறார்: "தாரமாகிய பொன்னித் தண்டுறையாடி விழுத்து" "நீரினின்றடி போற்றி நின்மலாக் கொள்ளென வாங்கே" "ஆரங்கொண்ட வெம்மானைக் காவுடையாதியைநாளும்" "எனவும் , திருஞானசம்பந்தப்பெருமான்" "ஆரம் நீரோ டேந்தினா னானைக்காவு சேர்மினே" சைவ ஆகமமாம் பெரிய புராணத்தில் ஏயர்கோன் கலிக்காமநாயனார் வரலாற்றினில், சேக்கிழார் தலத்தின் பெருமையை இவ்வாறு உரைக்கிறார்: "வளவர் பெருமான் திருவாரஞ் சாத்திக் கொண்டு வரும் பொன்னிக்" "கிளருந் திரைநீர் மூழ்குதலும் வழுவிப் போகக் கேதமுற" அளவில் திருமஞ் சனக்குடத்தி லதுபுக்காட்ட வணிந்தருளி "தளரு மவனுக் கருள்புரிந்த தன்மை சிறக்கச் சாற்றினார்" தலப் பெருமையைப் பறைசாற்றும் பழந்தமிழ்ப் பாடலொன்று: "மேதகைய பயன்விழைவோர் ஞானதலத் துறைகுவது மேவாதாயின்" "ஓதுக அத்தலப்பெயரை யாங்கதுவு முற்றாதே லுரைப்பக்கேட்க" "காதலொடு கேட்டவரு மூவகைய பாதகமுங் கடந்துமேலாம்" "போதமுணர்ந் தெமதடியிற் புக்கிருப்ப ரிஃதுண்மை பொலங்கொம்பன்னாய்" குடமுழுக்கு நடைபெற்று 16 ஆண்டுகள் ஆன நிலையில், இரண்டு கட்டமாக குடமுழுக்கு செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, பாலாலயம் அமைக்கப்பட்டது. முதற்கட்ட குடமுழுக்கு கோயிலில் உள்ள ராஜகோபுர விநாயகர், மல்லப்பா கோபுரம் அருகிலுள்ள விநாயகர் சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி சன்னதி, 108 சிவலிங்க சன்னதி ஆகிய 45 சன்னதிகளின் விமானங்கள், உற்சவமூர்த்திகளுக்கு 9 டிசம்பர் 2018இல் நடைபெற்றது. இரண்டாவது கட்ட குடமுழுக்கு ராச கோபுரங்களுக்கு 12 டிசம்பர் 2018இல் நடைபெற்றது. கூகுள் நிகழ்படங்கள் கூகுள் வீடியோஸ் என்பது இலவசமாக வீடியோவைப் பங்கிட்டு அளிக்கும் வலைத்தளமாகும். மேலும் கூகுள் இன்க்கில் இருந்து வீடியோ தேடு பொறியாகவும் இது வேலை செய்கிறது. கூகுள் வீடியோஸ் மற்ற வலைத்தளங்களில் தொலைதூரத்தில் உள்ளிணைக்கப்பட்டு வீடியோக்களை தேர்வு செய்ய இடமளிக்கிறது. மேலும் ஊடகத்தில் தேவையான HTML குறியீட்டை யூ ட்யூப் போன்றே வழங்குகிறது. இது பட்டையகலத்தின் ஓட்டம் அல்லது சேமிப்புக் கொள்ளளவு பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் எண்ணற்ற வீடியோக்களை தொலைதூரத்தில் இருந்து கூகுள் வீடியோஸ் மூலமாக வலைத்தளங்களில் வைத்திருக்க உதவுகிறது. ஜனவரி 25, 2005 அன்று இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. அக்டோபர் 9, 2006 அன்று கூகுள், அதன் முந்தைய போட்டியாளரான யூ ட்யூபை வாங்கியது. ஜூன் 13, 2007 அன்றில் இருந்து கூகுள் வீடியோஸின் தேடல் முடிவுகளானது யூ ட்யூப் மற்றும் பயனர் பதிவேற்றங்களில் பிற பொழுதுபோக்கு சேவைகளின் மீது அவர்களின் தேடல் நகர்வுகளில் கண்டுபிடிக்கப்படும் வீடியோக்களில் இருந்து ஆரம்பிக்கும் என கூகுள் அறிவித்தது. தேடுதல் முடிவு இணைப்புகளானது தற்போது கூகுள் வீடியோஸ் ஹெட்டருடன் ஒரு படத்தொகுப்பைத் திரையின் மேலே திறக்கிறது. மேலும் அதற்குக் கீழ் உண்மையான பிளேயர் பக்கமும் திறக்கிறது. கூகுள் இமேஜஸ் தேடுதல் முடிவுகள் தோன்றுவது போலவே இது இருக்கிறது. 2009 ஆம் ஆண்டில் கூகுள்இன் வலை சேவையகங்களில் வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் திறனை கூகுள் இடை நிறுத்தம் செய்தது. போட்டி சேவைகளின் பட்டியலுக்கு வீடியோ ஹோஸ்டிங் வலைதளங்களின் பட்டியலைப் பார்க்கவும். இலவசமாகத் தேடப்படும் வீடியோக்களுடைய அதிகமான ஆவணங்களை வழங்கும் பொருட்டு துணைக்கருவியாக கூகுள் வீடியோஸ் செயல்படுகிறது. அமெச்சூர் ஊடகம், இணைய வீடியோக்கள், வைரல் விளம்பரங்கள் மற்றும் திரைப்பட வெள்ளோட்டங்கள் போன்றவைத் தவிர தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பொருளடக்கம் மற்றும் திரைப்படங்கள் போன்ற வணிகரீதியான தொழில் ஊடகத்தையும் விநியோகிக்க இந்த சேவை முயற்சித்து வருகிறது. கூகுள் பணியாளர்களால் எண்ணற்ற கல்வி சார் சொற்பொழிவுகள் பதிவுசெய்யப்பட்டு கூகுள் வீடியோஸ் வழியாகப் பார்ப்பதற்கு வழிசெய்யப்பட்டுள்ளது. முக்கியமாக பணியாளர்களின் முந்தைய பல்கலைக்கழகங்களில் இந்த சொற்பொழிவுகள் ஆற்றப்படுகின்றன. இந்தத் தலைப்புகளானது கூகுள் தொழில்நுட்பங்கள் மற்றும் மென்பொருள் பொறியியல் போன்றவற்றைக் கொண்டுள்ளது. ஆனால் மென்பொருள் பொறியியல் துறையின் பெரும் அறிஞர்களைக் கொண்டு பிற முன்னோட்ட முயற்சிகளும் இதில் உள்ளடக்கப்படுகிறது. CBS நிகழ்ச்சிகள், NBA, மியூசிக் வீடியோஸ், மற்றும் சார்பற்ற திரைப்படம் உள்ளிட்ட கூகுள் வீடியோஸின் பொருளடக்கங்களை பல்வேறு ஊடக நிறுவனங்கள் வாங்க விருப்பம் தெரிவித்தன. தொடக்கத்தில் ஒளிபரப்பு நிறுவனங்களின் எண்ணற்ற பொருளடக்கத்தில் (ABC, NBC, CNNபோன்ற) இலவசமாகக் கிடைக்கப்பட்ட பொருளடக்கம் தரம் பிரிக்கப்பட்டவையாக அல்லது இன்றும் மூடப்பட்ட படவிளக்கத்துடனேயே இருந்தன. கூடுதலாக அமெரிக்க தேசிய ஆவணக்காப்பகம் ஆன்லைனில் கிடைக்கப்பெறும் வரலாற்றுத் திரைப்படங்களை எடுக்க கூகுள் வீடியோஸைப் பயன்படுத்தியது. ஆனால் அந்த செயல்திட்டம் பிறகு இடைநிறுத்தம் செய்யப்பட்டது. கூகுள் வீடியோஸ் வலை நகர்வுகளில் இருந்து இணைக்கப்படாத பிற வீடியோ தளங்களில் இருந்தும் தேடுகிறது. கூகுள் வீடியோஸால் நிகழ்த்தப்படும் வலைகளின் தேடலானது அவர்களது சொந்த வீடியோக்கள் மற்றும் யூ ட்யூப் ஆகியவற்றுடன் கூடுதலாக கோபிஷ், எக்ஸ்போசர்ரூம், விமியோ, மைஸ்பேஸ், பிக்கு மற்றும் யாஹூ! வீடியோ உள்ளிட்ட தளங்களிலும் தேடுதலை நிகழ்த்துகிறது. அவர்களது வலை மற்றும் உருவப்படத் தேடுதல்களைப் போன்றே கூகுள் வீடியோஸ் ஆன்லைன் வீடியோ ஆவணங்களில் இருந்து வீடியோக்களுக்கான தேடு பொறியை நோக்கி நகர்ந்து செல்வதைப் போல தோற்றத்தைக் கொடுக்கிறது. ஆகஸ்ட் 2007 இல் இருந்து DTO/DTR (சொந்த/வாடகைக்கு பதிவிறக்கம்) நிரல் நிறுத்தப்பட்டது. இதனால் ஏற்கனவே கூகுள் வீடியோஸில் பயனர்கள் வாங்கிய வீடியோவை அவர்களால் பார்க்க இயலாமல் போனது. கூகுள் செக்அவுட்டுக்கான விலைகளாக 60 நாள்கள் செல்லுபடியாகும் பயனர்களுக்கான கணக்குகள் கிடைக்கப்பெற்றன. 2009 ஆம் ஆண்டில் கூகுள் வீடியோஸில் வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் பயனர்களின் திறனை கூகுள் முடிவுக்கு கொண்டு வந்தது. ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்கள் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டன. 2009 ஆம் ஆண்டு வரை கூகுள் வீடியோஸ் வலைத்தளம் மூலமாகவோ (ஒவ்வொரு கோப்புக்கும் 100MB வரம்பிடப்பட்டு இருந்தது) அல்லது மாற்றுவழியாக விண்டோஸ், Mac OS X மற்றும் லினக்சுக்காக கிடைக்ககூடிய கூகுள் வீடியோ அப்லோடர் வழியாகவோ பயனர்கள் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடிந்தது. ஆயிரம் அல்லது அதற்கும் அதிக மணிநேர வீடியோவுடன் பெருமளவான தயாரிப்பாளர்கள் கூகுளின் கட்டண செயல்திட்டத்தில் சேர்க்கப்பட்டு வீடியோக்களின் பதிவேற்றத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டனர். வீடியோ அப்லோடர் பயன்பாடு மூன்று தனி பதிவிறக்கங்களுக்கு கிடைக்கக்கூடியதாக இருந்தபோதும் லினக்ஸ் பதிப்பானது க்ராஸ்-பிளாட்ஃபாம் நிரலாக்க மொழியான ஜாவாவில் எழுதப்பட்டிருந்தது. இதனால் எந்த மாறுதல்களும் செய்யப்படாமல் பிற இயக்க அமைப்புகளிலும் வேலை செய்யமுடியும் வகையில் ஜாவா ரன்டைம் என்விரான்மெண்ட் (JRE) நிறுவப்பட்டிருந்தது. இது ஜாவா இயக்கக்கூடிய (.jar) கோப்பு நிறுவுதல் தேவைப்படாத ஒரு சார்பற்ற பயன்படாகும். எனவே USB ஃப்ளாஷ் டிரைவ்கள், CD-ROMகள், நெட்வொர்க் சேமிப்பான் போன்ற அகற்றப்படக்கூடிய ஊடகத்தில் இருந்தே இதை வேலை செய்ய வைக்க முடியும். பொது நூலகக் கணினி போன்ற நிரல்களை நிறுவமுடியாத பயனர்கள் வேலை செய்யும் கணினி முனையத்தில் கூட வீடியோவை பதிவேற்றம் செய்ய இது அனுமதிக்கிறது. பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்கள் .gvi கோப்புகளாக "மை வீடியோஸில்" உள்ள "கூகுள் வீடியோஸ்" கோப்புறையின் கீழ் சேமிக்கப்படுகிறது. மேலும் வீடியோ(க்கள்) விவரங்களின் அறிக்கைகள் பயனர் கணக்கில் ஏற்றப்பதிவு செய்யப்பட்டு சேமிக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் ஓவ்வொரு பயனரும் வீடியோக்களை பார்க்கும்போதும் பதிவிறக்கம் செய்யும் போதும் இந்த அறிக்கை ஏராளமான முறை சுருக்கப்பட்டு பட்டியலிடப்படுகிறது. இதில் முந்தைய நாள், வாரம், மாதம் அல்லது முழு நேரத்திற்குமான எல்லைகளில் வீடியோக்கள் கிடைக்கின்றன. இதன் மொத்தவிவரங்கள் கணக்கிடப்பட்டு காட்சிக்கு கொணரப்படுகிறது. மேலும் இதன் தகவலானது ஸ்ப்ரட்சீட் வடிவம் அல்லது அச்சிடப்பட்ட வடிவமாகவோ பதிவிறக்கம் செய்யப்படுகிறது. கூகுள் வீடியோஸானது இலவச சேவைகள் மற்றும் வணிகரீதியான வீடியோக்கள் இரண்டையுமே அளிக்கிறது. வணிகரீதியான வீடியோக்கள் டிஜிட்டல் உரிமைகள் மேலாண்மையினால் கட்டுப்படுத்தப்படுகின்றன. கூகுள் வீடியோஸ் வலைத்தளமான video.google.com மூலமாக வீடியோக்களைப் பார்க்கலாம். ஒவ்வொரு வீடியோவும் ஒரு தனித்துவ வலை முகவரியான codice_1 என்ற வடிவத்தைக் கொண்டிருக்கும். மேலும் அந்தப் பக்கமானது உள்ளிணைக்கப்பட்ட ஃப்ளாஷ் வீடியோ கோப்பைக் கொண்டிருக்கும். இதனை எந்த ஃப்ளாஷ்-இயங்கும் உலவியின் வழியாகவும் பார்க்க முடியும். codice_1 வடிவத்தில் வீடியோவின் ஒரு குறிப்பிட்ட புள்ளியின் வலைஇணைப்புகளும் சாத்தியமாகும் (அதாவது பகுதி அடையாளங்காட்டியுடன் அது ஒரு டைம்ஸ்டாம்பைக் கொண்டிருக்கும்). ஃப்ளாஷ் கோப்பு இயக்கப்படும் போது உலவியானது அந்தக் கோப்பைத் தானாகவே பதுக்கிக் வைக்கிறது. மேலும் அது முழுமையாக இயங்கிய பிறகு அது உலவி பதுக்கியில் இருந்து திரும்பப் பெறப்படுகிறது. இந்தக் கோப்பை பதிவிறக்கம் செய்ய பல்வேறு கருவிகளும் உலவி நீட்சிகளும் உள்ளன. எடுத்துக்காட்டாக மீடியா பிளேயர் கிளாசிக் (ffdshowஉடன் நிறுவப்பட்டது), எம்.பிளேயர் அல்லது விம்பி போன்ற ஃப்ளாஷைக் கையாளும் வீடியோ பிளேயர்களில் இந்தக் கோப்பைப் பார்க்க முடியும். கூகுள் வீடியோ பிளேயர் , கூகுள் வீடியோஸைப் பார்ப்பதற்கு மற்றொரு வழியாகும்; இது விண்டோஸ் மற்றும் Mac OS X இல் இயங்குகிறது. கூகுள் வீடியோ பிளேயரானது பின் கோப்புகளை கூகுளின் சொந்த கூகுள் வீடியோ கோப்பு (.gvi) ஊடக வடிவத்தில் இயக்குகிறது. மேலும் "கூகுள் வீடியோ பாயிண்டர்" (.gvp) வடிவத்தில் அதன் ப்ளேலிஸ்டுக்கு ஆதரவளிக்கிறது. பயனர்கள் அவர்களது கணினிகளில் பதிவிறக்கம் செய்யும் போது அதன் விளைவாக வரும் கோப்பானது .gvi கோப்புக்குப் பதிலாக சிறிய .gvp (சுட்டி) கோப்பை பயன்படுத்தி இருக்கும். அதை இயக்கும் போது அந்த .gvp கோப்பு பயனரின் இயல்புநிலை கோப்பகத்தில் ஒரு .gvi (திரைப்படம்) கோப்பை பதிவிறக்கம் செய்கிறது. 2007 ஆம் ஆண்டு ஆகஸ்டு 17 ஆம் தேதியில் இருந்து கூகுள் வீடியோ பிளேயர் இடைநிறுத்தம் செய்யப்பட்டு கூகுள் வீடியோஸ் வலைதளத்தில் இருந்து அதை பதிவிறக்கம் செய்யமுடியாமல் நிறுத்தப்பட்டது. வீடியோக்களை GVIஇன் வடிவத்தில் பதிவிறக்கம் செய்யும் விருப்பத்தேர்வும் நீக்கப்பட்டு iPod/PSP (MP4 வடிவம்) போன்ற வடிவங்கள் மட்டுமே கிடைக்க வழிவகுக்கப்பட்டது. கூகுளின் முந்தைய பதிப்புகளான உள்-உலவி வீடியோ பிளேயரின் குறியீடானது, ஓப்பன் சோர்ஸ் வி.எல்.சி மீடியா பிளேயரை அடிப்படையாகக் கொண்டிருந்தது. கூகுள் வீடியோ பிளேயரின் கடைசி பதிப்பானது அதன் ரீடுமீ கோப்பைப் பொறுத்தவரை வி.எல்.சியை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. எனினும் இது ஓபன்.எஸ்.எஸ்.எல் தகவல்மறைக்கப்பட்ட கருவித்தொகுப்பையும், Qt விட்ஜெட் கருவித்தொகுப்பில் இருந்து சில லைப்ரரீஸையும் உள்ளடக்கியிருந்தது. கூகுள் வீடியோ கோப்புகள் (.gvi) மற்றும் அதன் இறுதியான .avi கோப்புகள், ஆடியோ வீடியோ இண்டெர்லீவ் (.avi) கோப்புகளாக திருத்தம் செய்யப்பட்டன. இவை ஹெட்டரைத் தொடர்ந்து உடனடியாக ஃபோர்.சி.சி "goog"ஐ இதன் கூடுதல் பட்டியலில் கொண்டிருக்கின்றன. பல்வேறு வீடியோ பிளேயர்களின் இயக்கத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தவிர்க்க இந்த பட்டியலை ஹெக்ஸ் தொகுப்பானுடன் நீக்கமுடியும். MP3 ஆடியோ ஸ்ட்ரீமுடன் சேர்த்து, வீடியோ MPEG-4 ASP இல் மறையிடப்படுகிறது. MPEG-4 வீடியோ பிளேயர்களால் .gvi கூகுள் வீடியோ கோப்புகளை எந்த வடிவமாற்றமும் செய்யப்படாமல் இயக்க முடிகிறது (.gvi இல் இருந்து .aviக்கு நீட்சி மாற்றம் செய்யப்பட்ட பிறகு உரிமைபெறாத பிரதிகளையிடுவதைத் தடுப்பதற்காக DRM உடன் வாங்கப்பட்ட வீடியோக்களுடன் கோப்பு நீட்சியின் பெயர் மட்டும் திருத்தப்படும் இந்த வகை வேலை செய்வது இல்லை. பிற மென்பொருள்கள் பலவற்றுள் வெர்ச்சுவல் டப் மென்பொருளால் .gvi கோப்புகளை படிக்க முடியும். மேலும் இது பயனரை அவர்கள் விருப்பத்திற்கேற்ப பல்வேறு வடிவங்களில் மாற்றுவதற்கும் இடமளிக்கிறது. GVideo Fix போன்ற தனிப்பட்ட முறையில் உருவாக்கப்பட்ட மென்பொருள் தீர்வுகளும் உள்ளன. இவைகளால் மறுநெரித்தல் செய்யப்படாமலே கோப்புகளை .avi வடிவத்திற்கு மாற்ற இயலும். அளவுறுவாக "-oac காபி -ovc காபி" உடன் Mஎன்கோடர் போதுமானதாகவும் இருக்கிறது. GVI மற்றும் ஃப்ளாஷ் வீடியோ மட்டுமல்லாமல் கூகுள் அதன் பொருளடக்கத்தை ஆடியோ வீடியோ இண்டெர்லீவ் (.avi) மற்றும் MPEG-4 (.mp4) வீடியோ கோப்புகளாக பதிவிறக்கத்தின் வழியாக வழங்குகிறது. வலைத்தளங்களில் இடைமுகத்தின் வழியாக அனைத்து வடிவங்களும் கிடைப்பதில்லை. அது பயனர்களின் இயக்க அமைப்பையும் சார்ந்துள்ளது. iPod மற்றும் PSP போன்றவை "சேவ் அஸ்" செயல்பாட்டை .mp4 கோப்பாக உருவாக்கிக்கொண்டிருக்கும் போதும் Windows/Mac க்கில் .avi கோப்பை உருவாக்குவதற்கான கூகுளின் "சேவ் அஸ்" செயல்பாடு இங்கு கிடைக்கிறது. இந்த .avi கோப்பானது தரமான AVI வடிவத்தில் இல்லை. வின்ஆம்ப் அல்லது விண்டோஸ் மீடியா பிளேயர் போன்ற பிரபலமான மீடியா பிளேயரில் அந்தக் கோப்பை இயக்கும் போது கோப்பு ஹெட்டரின் முதல் பட்டியல் தொகுதியை அழிப்பதற்காக அந்தக் கோப்பானது கண்டிப்பாக முதலில் ஹெக்ஸ் திருத்தியைப் பயன்படுத்தி திருத்தப்பட வேண்டும். இது பைட்டு 12 இல் தொடங்கி (000C ஹெக்ஸ், கோப்பின் முதல் பைட்டானது, பைட் 0 ஆகும்) பைட்டு 63 இல் முடிவுறுகிறது (003F ஹெக்ஸ்). விருப்புரிமையில் இந்தக் கோப்பின் நீளம் (லிட்டில் எண்டியன் பைட்டுகளில் 4 முதல் 7 வரை) 52 ஆல் கழிக்கப்படுவதால் திருத்தப்பட வேண்டும் (3F ஹெக்ஸ் - 0C ஹெக்ஸ் = 33 ஹெக்ஸ்). வின்ஆம்ப் மற்றும் விண்டோஸ் மீடியா பிளேயரால் திருத்தப்படாத .avi கோப்பை இயக்க முடிவதில்லை. ஏனெனில் தரமற்ற கோப்பு ஹெட்டர் கோப்பை பிழைபடுத்திவிடும். எனினும் மீடியா பிளேயர் கிளாசிக், எம்பிளேயர் மற்றும் வி.எல்.சி மீடியா பிளேயர் போன்ற பிளேயர்களால் திருத்தம் செய்யப்படாத .avi கோப்பு மற்றும் கூகுள் .mp4 கோப்பை இயக்க முடியும். மீடியா பிளேயர் கிளாசிக்கானது. ffdshow போன்ற MPEG-4 டைரக்ட்ஷோ வடிகட்டி நிறுவப்பட்டு இருந்தால் மட்டுமே அந்தக் கோப்பை இயக்குகிறது. பெரும்பாலான லினக்ஸ் மீடியா பிளேயர்களான எக்ஸின், டோடெம் மற்றும் வி.எல்.சி மீடியா பிளேயர் மற்றும் கஃப்பிஇன் உடைய லினக்ஸ் பதிப்பில் கூகுலின் .avi கோப்புக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ffdshow போன்ற MPEG-4/H.264 டைரக்ட்ஷோ வடிகட்டி இருந்தாலும், ஹாலி நிறுவப்பட்டு இருத்தல் போன்ற MP4 பிரிப்பான் இருந்தாலும், வின்ஆம்ப் டைரக்ட்ஷோ மறைநீக்கி உள்கட்டமைப்பில் நீட்சிப் பட்டியலுக்கு MP4 நீட்சி இணைக்கப்பட்டு இருந்தாலும் வின்ஆம்பில் ஒரு .mp4 கோப்பை இயக்கலாம். 2008 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் இருந்து கோப்புகளை பதிவிறக்கம் செய்யும் விருப்பத்தில் .AVI வடிவம் நீக்கப்பட்டது. மேலும் கோப்புகளானது ஃப்ளாஷ் வீடியோ அல்லது .MP4 வடிவத்தில் மட்டுமே கிடைத்தது. சக YouTube.com தளத்தின் வழியாக அதே வீடியோக்களை அணுகும் போதும் ஃப்ளாஷ் வீடியோ வடிவத்தில் மட்டுமே கிடைக்கும்படி வழிவகுக்கப்பட்டது. கூகுள் பயனர்கள் சில வீடியோக்களை மட்டுமே அவர்களது தளத்தில் சேமிக்க முடியும். பெரும்பாலும் பதிப்புரிமை காரணங்களுக்காக இவ்வாறு செய்யப்பட்டது. அதன் காரணமாக அவர்களது ஆவணங்களில் இந்த வீடியோக்களை பதிவிறக்கம் மட்டுமே செய்ய முடியும் என்பதாக வலியுறுத்தப்பட்டு இருந்தது. எனினும் வீடியோவைப் பார்க்க கணினியில் வீடியோவை பதிவிறக்கம் செய்ய வேண்டியிருந்தாலும், அவர்களது மென்பொருளானது பதிவிறக்கம் செய்த வீடியோக்களை கணினியில் சேமிக்கும் வசதி குறைவாக இருந்தது. வெளிப்புற மென்பொருள் மற்றும் புக்மார்க்லெட்ஸ் உள்ளிட்ட மென்பொருளின் மூலம் இந்த பிரச்சனைக்கு எண்ணற்ற தீர்வுகள் கண்டுபிடிக்கப்பட்டன. கூகுள் வீடியோஸின் தேடல் முடிவுகளை RSS ஃபீடில் பார்க்க முடியும். அதை செயல்படுத்த முடிவுகள் எண்ணிக்கையின் வலதுபுறத்தில் உள்ள RSS இணைப்பை சொடுக்குவதாலோ அல்லது "&output=rss" என உங்களது வலை உலவியின் முகவரி பாகத்தின் URL இன் முடிவில் சேர்ப்பதாலோ பார்க்கலாம். URL இன் பகுதியை "&num=20" இல் இருந்து "&num=100" என மாற்றுவதால் RSS ஃபீடில் 20 முடிவுகளுக்குப் பதிலாக 100 முடிவுகளைக் காணலாம். பல்வகை வடிவங்களில் பதிவிறக்கம் செய்யும் வாய்ப்பு இருந்த போதிலும் வீடியோ பதிவேற்றங்களில் மிகவும் குறைந்த அளவே கட்டுப்படுத்தி, கூகுள் ஆனது யாவரும் அறிந்த வல்லமைமிக்கதாக உள்ளது. கூகுள் வீடியோஸ் ஆல்லைன் வீடியோ சந்தையில் இருந்து குறைவான பங்கை மட்டுமே கொண்டுள்ளது. தொடக்கத்தில் அமெரிக்காவில் மட்டுமே கிடைக்கக்கூடியதாக இருந்தபோதும் படிப்படியாக கூகுள் வீடியோஸ் பல நாடுகளில் பயனர்களுக்கு கிடைக்கக்கூடியதாக உருமாறியது. இப்போது ஐக்கிய இராஜ்ஜியம், பிரான்சு, ஜெர்மனி, இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து இதனைப் பயன்படுத்தலாம். இது பொதுவாகக் கிடைக்கக்கூடியதாக இருந்தாலும் வீடியோ கோப்புகளின் அதிக வரம்புடைய அணுகலைப் பெறும் வாய்ப்பானது குறிப்பிட்ட நாடுகளின் பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது. எனினும் புவியியல் எல்லை வடிகட்டியை நுணுக்கமாக வெல்லும் யுக்திகளும் உள்ளன. கூகுள் வீடியோஸ் பின்வரும் பல்வேறு நாடுகளில் கிடைக்கக்கூடியதாக உள்ளது: கூகுள் வீடியோஸ் சிறிதளவு பொருளடக்கத்தை மட்டுமே கொண்டுள்ளாதால் அதில் பாராட்டத்தகுந்ததாக ஏதும் இல்லை. எனினும் பணம் செலுத்திப்பெறும் பொருளடக்கத்தில் (தற்போது அமெரிக்காவில் மட்டுமே கிடைக்கிறது) சில வகைகள் பட்டியலிடப்பட்டு உள்ளன. வீடியோவிற்கு தரவரிசைக்கு சிறந்த 100 அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் அதிகாரப்பூர்வ கூகுள் வீடியோ வலைப்பதிவான "கூகுள் பிக்ஸை" (கூகுளில் குறிப்பிடும் படியான வீடியோக்களாக கருதப்படும்) நிரந்தரமாகக் கொண்டுள்ளது. தற்போது கூகுள் வீடியோஸ் முகப்புபக்கத்தின் வழியாகவும் "கூகுள் பிக்ஸ்" கிடைக்கக்கூடியதாக உள்ளது. கூகுள் வீடியோஸின் யுக்தியானது, கூகுள் புத்தகத்தேடுதல் போன்ற ஆஃப்லைன் பொருளடக்கத்தை டிஜிட்டைஸிங் செய்வதில் தொடங்கி ஐடியூன்ஸ் போன்ற பணம்செலுத்திப் பெறும் பதிவிறக்கத்தில் கவனம் செலுத்தியது. பின்னர் யூ ட்யூப் போன்ற சமுதாய வலையமைப்புகளில் கவனம் செலுத்தியது வரையிலான குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. நிலையான உற்பத்திப்பொருள் முன்னேற்றம் மற்றும் தொழில் முன்னேற்றங்களைப் பெற்றிருந்தபோதும் கூகுள் நிறுவனம் யூ ட்யூபை கையகப்படுத்திய நேரத்தில் கூகுள் வீடியோஸ் அதற்கு முன்பு ஆன்லைன் வீடியோ வெளியில் சந்தை முன்னணியை பெற்று இருக்கவில்லை. பல பயனர்களுக்கு "தற்போது இந்த வீடியோ கிடைக்கக்கூடியதாக இல்லை" என்ற பிழையுடனான எச்சரிக்கை விடுத்தபோது 2008இல் மறுஇயக்க பிரச்சினைகள் தோன்றின. காணொளி புராணம் புராணங்கள் என்பவை வேதங்களில் உள்ள கருத்துகளை தெளிவாக கூறுவதாகும். புராணம் என்ற சொல்லிற்கு பழமை வாய்ந்தது என்று பொருள். நெடுங்காலமாக செவிவழியாகவே கற்பிக்கப்பட்டு வந்த புராணங்கள் வேதவியாசர் என்பவரால் நூல்களாக தொகுப்பட்டுள்ளன. இவற்றில் வேதவியாசரே தொகுத்த பதினெட்டு புராணங்கள் மகாபுராணங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவையல்லாத உபபுராணங்கள் பதினெட்டும் புராணங்களாகக் கொள்ளப்படுகின்றன. இப்புராணங்களில் வேதத்தில் கூறப்பட்டுள்ளவைகளின் சாரங்கள் கதைகளின் வடிவில் ஸ்லோகங்களாக இயற்றப்பட்டுள்ளன. அவை பேரண்டங்களின் தோற்றம், அவற்றின் பிரளயம், மும்மூர்த்திகள் தோற்றம் மற்றும் அவர்களின் அவதாரங்கள், தேவர் -அரக்கர்களின் போர்கள் போன்றவைகள் பலவற்றினையும் விவரிக்கின்றன. புராணம் என்கிற சமஸ்கிருத சொல்லானது "புரா-நவ" என்ற இருவேர்களில் இருந்து பிறந்தது. இதன் பொருள் பழமைக்குப் பழமையாய்ப் புதுமைக்குப் புதுமையாய் உள்ளது என்பர். புராதனம் என்ற சொல் "புராணம்" என்று வந்ததெனவும் கூறுவர். புராணத்திற்கு இணையாக ஆங்கிலத்தில் "Myth" என்ற சொல் வழங்கப்படுகிறது. 'Mythos' என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து இச்சொல் பிறந்துள்ளது. புராணம் என்ற சொல் தமிழ் இலக்கியத்தில் மணிமேகலையில் முதன்முதலில் வருகிறது. சமயக் கணக்கர்தம் திறம் கேட்ட காதையில் வைணவவாதியைக் குறிப்பிடும் போது, "காதல் கொண்டு கடல்வணன் புராணம் ஓதினான்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், புராணம் என்ற சொல், தமிழ் மொழியில் மணிமேகலை தோன்றிய காலத்திலேயே வழங்கப் பெற்றுள்ளது என அறிய முடிகிறது. "புராணவித், புராணி போன்ற சொற்கள் ரிக் வேதத்திலும் அதர்வன வேதத்திலும் காணப்படுகின்றன. எனினும் இச் சொற்கள் புராணத்தைக் குறிக்கவில்லை. பழமையானவன், பழமையைப் பரப்புகிறவன் என்ற பொருளிலேயே இச்சொற்கள் வழங்கியிருக்கின்றன. திருவாசகத்திலே மாணிக்கவாசகர் முதலில் பாடியது சிவபுராணம். அங்கே புராணம் என்பதில் இறைவனுடைய பழமையைச் சொல்கிறார்கள். ஆகவே புராணம் என்ற சொல்லுக்குப் பழமை என்பது பொருள். சேக்கிழாரின் பெரியபுராணம் புகழ்பெற்றது. மகாபுராணங்கள் கடவுள்களாலும், தேவர்களாலும், முனிவர்களாலும் முதன் முதலாக கூறப்பட்டுள்ளன. அவைகள் மற்றவர்களுக்கு கூறப்பட்டு இறுதியாக வேதவியாசரை அடைந்து எழுத்துவடிவம் பெற்றுள்ளன. புராணங்களின் தொடக்கத்தில் இந்த புராணங்கள் எவருக்காக மறுபடியும் கூறப்பட்டன, யாரால் கூறப்பட்டன என்பதையும் கூறப்பட்டுள்ளன. அவற்றின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வேதவியாசரின் மகன் சுகரிடமிருந்து கற்ற புராணங்கள் மற்றும் இதிகாசங்களை வைசம்பாயனர், அத்தினாபுரத்து மன்னன் பரிட்சித்திற்கு எடுத்துக் கூறும் போது அங்கிருந்த சூத முனிவரும் அவைகளை நன்கு கேட்டார். அப்புராண இதிகாசங்களை, கோமதி ஆற்றாங்கரையில் அமைந்திருந்த நைமிசாரண்யம் எனப்படும் இடத்தில் உள்ள குலபதி சௌகனர் முதலான முனிவர்களுக்கு எடுத்துரைத்தார் என மகாபாரத்தில் குறிப்படப்பட்டுள்ளது. இந்த நைமிசாரண்யம் திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் (பத்துப் பாசுரங்கள்) செய்யப்பட்ட நூற்றியெட்டு(108) வைணவத் தலங்களில் ஒன்றாக உள்ளது. புராணங்கள் எழுதப் பெற்ற காலத்தைக் கணக்கிட்டுக் கூறுவதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. எனவே புராணங்கள் கூறப்பட்ட காலத்தைக் துல்லியமாகக் கணித்துக் கூறுவது இன்றளவும் இயலாததாகவே உள்ளது. இந்தியத் துணைக் கண்டத்தில் தோன்றிய நான்கு வேதங்களும் பதினெட்டுப் புராணங்களும் மிகவும் பழமையானவை. உலக அளவில் மிகவும் பழமையான நூல்களாக இவை கருதப் படுகின்றன. தொல்காப்பியத்தை எழுதிய புலவரும், திருக்குறளை இயற்றிய புலவரும் தங்களது பெயர், ஊர், வாழ்ந்த காலம், நூலை இயற்றிய ஆண்டு, ஆட்சி செய்த மன்னர் இவை எதையுமே குறிப்பிடவில்லை. இவர்களைப் போன்றே, புராணத்தை எழுதிய முனிகளும் தங்களது பெயர், வாழ்ந்த காலம், ஆட்சி செய்த மன்னன் இவைபற்றி எதையும் புராணங்களில் குறிப்பிடவில்லை. வேதவியாசர் வாழ்ந்த காலத்தைக் கருத்திற் கொண்டு, புராணங்களின் காலம் கி.மு.6 அல்லது கி.மு. 7-ஆம் நூற்றாண்டு என்று சமய நூல் விற்பன்னர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். கி. பி., 300-600 காலகட்டங்களில் வடநாட்டை ஆண்ட குப்தர்கள் வடமொழியை நன்கு போற்றி வளர்த்துள்ளனர். இந்து சமயமும் வடமொழி இலக்கியமும் புராணங்களும் நன்கு வளர்ச்சி பெற்றன. இவர்கள் காலத்தில் வடமொழியிலுள்ள தொன்மையான புராணங்கள் ஒழுங்குபடுத்தித் தொகுக்கப் பெற்றன என்பர். அதனால் குப்தர்கள் காலத்தை இந்து சமயத்தின் பொற்காலம் என்று அழைக்கின்றனர். எனவே வடமொழியில் புராணங்கள் தோன்றிய காலம் கி.பி.300 க்கும் முற்பட்டதாகக் கருத இயலும். திருப்பூவணப் புராணத்தில், சுச்சோதி தீர்த்த யாத்திரைச் சருக்கம், சுச்சோதி பிதிர்களை முத்தியடைவித்த சருக்கம், மற்றும் நளன் கலிமோசனச் சருக்கம் ஆகிய சருக்கங்கள் பாடப்பெற்றுள்ளன. இதனால், திருப்பூவணப் புராணம் அடங்கிய பிரமகைவர்த்த புராணம் எழுதப்பட்ட காலம், சுச்சோதி மற்றும் நளன் காலத்திற்குப் பிற்பட்ட காலம் என்பது உறுதி. திருப்பூவணப் புராணத்தில் நளன்கலிமோசனச் சருக்கத்திலே, என்று கூறப்பட்டுள்ளது. எனவே கலியுகம் தோன்றிய பின்னரே நளன் ஆட்சி செய்தான் என்பதும், அவனது ஆட்சிக்காலத்திற்குப் பிறகே பிரமகைவர்த்த புராணக்கதைகள் கூறப்பட்டுள்ளன என்பதும் உறுதி. கலியுகம் தோன்றி 5108 ஆண்டுகள் ஆகின்றன. எனவே பிரமகைவர்த்த புராணம் எழுதப் பெற்ற காலம் (கலி5108 - கி.மு.2008 - 3100) கி.மு.3100க்குப் பிற்பட்டகாலம் எனத் திருப்பூவணப் புராணத்தின் வழியாக அறியமுடிகிறது. இந்நூல் பல்வேறு வகைகளில் கம்ப இராமாயணத்துடன் ஒப்பு நோக்கிப் பார்க்கப்படுகிறது. முதன்மைக்கடவுள்களின் அடிப்படையில் பதினெட்டு புராணங்களும் வருமாறு பிரிக்கப்படுகின்றன. சில இடங்களில் வாயு புராணத்துக்குப் பதிலாக சிவமகாபுராணம் கருதப்படுகின்றது. மகா புராணங்கள் சத்துவம், ராஜசம், தாமசம் என்ற அடிப்படையில் மூன்றாகப் பிரிக்கப்படுகின்றது. சைவர்கள் தமது பத்து புராணங்களுமே சத்துவ புராணங்கள் என்றும், வைணவர்கள் தமது புராணங்களே சத்துவ புராணங்கள் என்றும் கூறிக்கொள்கிறார்கள். பதினெட்டுப் புராணங்களுக்கு மாறாக, உபபுராணங்கள் என்று சொல்லப்படும் பட்டியலில் அடங்குகின்ற புராணங்கள் வருமாறு:
சூரிய புராணம், கணேச புராணம், காளிகா புராணம், கல்கி புராணம், சனத்குமார புராணம், நரசிங்க புராணம், துர்வாச புராணம், வசிட்ட புராணம், பார்க்கவ புராணம், கபில புராணம், பராசர புராணம், சாம்ப புராணம், நந்தி புராணம், பிருகத்தர்ம புராணம், பரான புராணம், பசுபதி புராணம், மானவ புராணம், முத்கலா புராணம் என்பனவாகும்.
திருப்பூவணம் புராணம் வடமொழியில் உள்ள பிரமகைவர்த்த புராணத்தின் தமிழ் மொழிபெயர்ப்பாகத் திருப்பூவணப் புராணம் உள்ளது. பதினெண் புராணங்களில், பிரமகைவர்த்த புராணமும் ஒன்று. " ... முந்த மறைநான்கினொடு புராண மூவாறு முழுதுல கமிறைஞ்ச வன்பின் மொழிந்த வியாதன்..." (பாடல் எண் 60) கூறிய பதினெண் புராணங்களில் பிரமகைவர்த்த புராணமும் ஒன்று. இதில் 70 முதல் 84முடிய உள்ள அத்தியாயங்களில் திருப்பூவணப் புராணம் கூறப்பெற்றுள்ளது. பிரமகைவர்த்த புராணத்தில் திருப்பூவணப் புராணத்தைத் தவிர மற்றபிற திருத்தலங்களின் புராணங்களும் கூறப்பட்டுள்ளன. அவற்றின் பட்டியல் கீழே கொடுக்கப் பட்டுள்ளது. புராணக் கதைகளை முதலில் முருகப் பெருமானே நந்திதேவருக்கு உரைத்தார். நந்தி தேவர் அவற்றைச் சனகாதி முனிவர்களுக்கு எடுத்து உரைக்க, அம்முனிவர்கள் வியாசருக்கு விரித்துக் கூறினர் என்றும், வியாச முனிவர் அவற்றைச் சூதமுனிவருக்குத் தொகுத்துக் கூறினார் என்றும் பாடப் பெற்றுள்ளது. (பாடல் 858) என்ற இப்பாடல் அமைந்துள்ளது. திருநந்தி தேவரே ​நேரில் வந்தாலும் அனைத்துப் பலன்களையும் விடுதலின்றி எடுத்துக் கூறிடுவது அரிதாகும் என்று பாடப்பெற்றுள்ளது. அவ்வளவிற்குப் பலன்கள் அதிகமாக உள்ளன என்பது இதனால் பொருளாகிறது. தலபுராண நூல்களில், அத்தலம் ​தேவாரப் பாடல் பெற்ற தலமாக இருந்தால், முதலில் அத்தலத்திற்கு உரிய தேவாரப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அதன் பின்னர் தலபுராணப் பாடல்கள் உள்ளன. கி.பி.1897ஆம் ஆண்டு அச்சடிக்கப்பட்ட திருப்பூவணப் புராணப் புத்தகத்திலும் முதலில் தேவாரப் பாடல்களும் அடுத்து புராணப் பாடல்களும் அச்சடிக்கப்பெற்றுள்ளன. முதலில், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் முதலாம் திருமுறையில் அமைந்துள்ள தேவாரப் பாடல்களும், அடுத்து மூன்றாம் திருமுறையில் உள்ள பாடல்களும் இடம் பெற்றுள்ளன. அடுத்து திருநாவுக்கரசு நாயனார் பாடல்களும், சுந்தரமூர்த்தி நாயனார் பாடல்களும், கருவூர்த் தேவர் திருவிசைப்பா பாடல்களும் உள்ளன. அருணகிரி நாதரின் பாடல்கள் மூன்று உள்ளன. ஆனால் இம் மூன்று பாடல்களும் இடம் பெறவில்லை. திருப்பூவணப் புராணம் பாடப்பெற்ற காலம் கி.பி. 1620 ஆகும். திருப்பூவணப் புராணத்தில், கடவுள் வாழ்த்து என்று தனிப் பகுதியும், பின்னர் பாயிரம் என்று ஒரு தனிப்பகுதியும் அமைந்துள்ளது. கடவுள் வாழ்த்தில் திருப்பூணக் கோயிலில் உள்ள தெய்வங்களின் பெயர்களே இடம் பெற்றுள்ளன. வேறுபிற தெய்வங்களின் பெயர்களேதும் இடம் பெறவில்லை. கடவுள் வாழ்த்திற்கும் பாயிரத்திற்கும் இடையே கீழ்க்கண்டபடி சருக்கங்கள் அமைக்கப் பெற்றுள்ளன. மேலும், முதற் பாடல் விநாயகர் துதி என்று இல்லாமல் காப்பு என்று உள்ளது. திருப்பூவணப் புராணத்​தைத் தமிழில் ​மொழி​பெயர்த்து எழுதியவர் கந்தசாமிப் புலவர் ஆவார், இவரது காலம் கி,பி, 1620 ஆகும், சிம்பிள் ஆப்ஜக்ட் ஆக்சஸ் புரோட்டாக்கால் "சிம்பிள் ஆப்ஜக்ட் ஆக்சஸ் புரோட்டாக்கால்" என உண்மையில் விரிவாக்கப்படும் SOAP என்பது கணினி நெட்வொர்க்குகளின் வலை சேவைகளின் செயல்படுத்தலில் பரிமாற்றக் கட்டமைப்புத் தகவலுக்கான ஒரு நெறிமுறை விவரக்கூற்று ஆகும். இது அதன் செய்தி வடிவத்தில் எக்ஸ்டென்சிபில் மார்க்கப் லாங்வேஜைச் (XML) சார்ந்திருக்கிறது, மேலும் இது பொதுவாக செய்தி ஒப்பந்தம் மற்றும் பரிமாற்றத்துக்காக மற்ற பயன்பாட்டு அடுக்கு நெறிமுறைகளைச் (மிகவும் குறிப்பாக தொலை செயல்முறை அழைப்பு (RPC) மற்றும் HTTP) சார்ந்திருக்கிறது. SOAP வலை சேவைகள் நெறிமுறை அடுக்கின் அடித்தள அடுக்கை உருவாக்கலாம், இது உருவாக்க முடிந்த வலை சேவைகளின் மேல் அடிப்படைச் செய்திக் கட்டமைப்பை வழங்குகிறது. இந்த XML சார்ந்த நெறிமுறை பின்வரும் மூன்று பகுதிகள் கொண்டது: செய்தியில் என்ன இருக்கிறது மற்றும் எப்படி அதைச் செயல்படுத்துவது என்பதை விவரிக்கும் ஒரு என்வலெப், பயன்பாடு-விவரிக்கப்பட்ட தரவுவகைகளின் வெளிப்படுத்தப்பட்ட எடுத்துக்காட்டுகளுக்கான குறியீடுடுதல் விதிகளின் தொகுப்பு மற்றும் செயல்முறை அழைப்புகள் மற்றும் பதில்களைக் குறிப்பிடுவதற்கான மரபு ஆகியவை. எப்படி SOAP செயல்முறைகளைப் பயன்படுத்தலாம் என்பதற்கான லேமனின் எடுத்துக்காட்டாக, SOAP செய்தி தேடுவதற்கு தேவைப்படும் துணையலகுடன் வலை சேவை இயங்கும் வலைதளத்துக்கு அனுப்பப்படலாம் (எடுத்துக்காட்டாக, வீட்டு விலை தரவுத்தளம்). இந்தத் தளமானது பின்னர் முடிவுத் தரவுடன் (விலைகள், இடம், சிறப்பியல்புகள் மற்றும் பல) XML-வடிவ ஆவணத்தைத் திரும்ப அனுப்பும். ஏனெனில் தரவானது தரப்படுத்தப்பட்ட இயந்திர-சொல்லாக்க வடிவமாகக் திரும்பக் கிடைக்கும், இதனைப் பின்னர் மூன்றாம் தரப்பு வலைத்தளத்தால் நேரடியகா உள்ளிணைக்க முடியும். செய்தி வடிவம், செய்திப் பரிமாற்ற உருமாதிரிகள் (MEP), அடிப்படைப் போக்குவரத்து நெறிமுறை கட்டமைவுகள், செய்தி செயல்பாட்டு மாதிரிகள் மற்றும் நெறிமுறை நீள்-திறன் ஆகியவற்றுக்கான விவரக்கூற்றின் பல்வேறு அடுக்குகளைக் கொண்டதாக SOAP கட்டமைப்பு இருக்கிறது. SOAP என்பது XML-RPCயின் அடுத்த வந்ததாகும், இருப்பினும் இது வேறோர் இடத்தில் இருந்து (பெரும்பாலும் WDDX இலிருந்து) அதன் போக்குவரத்தையும் இடைவினை நடுநிலைத்தன்மையையும் மற்றும் என்வலெப்/ஹெட்டர்/உடல்பகுதி ஆகியவற்றையும் கடனாகப் பெறுகிறது. SOAP என்பது முன்னர் 'சிம்பிள் ஆப்ஜக்ட் ஆக்சஸ் புரோட்டோகால்' என அழைக்கப்பட்டது, ஆனால் இந்த விரிவுப்பெயர், தரத்தின் பதிப்பு 1.2 உடன் கைவிடப்பட்டது. பதிப்பு 1.2 ஜூன் 24, 2003 இல் W3C பரிந்துரையைப் பெற்றது. இந்த விரிவுப்பெயர் சிலநேரங்களில் சர்வீஸ்-ஓரியன்டட் ஆர்கிடெக்ச்சர் எனப்படும் SOA உடன் குழப்பத்தை ஏற்படுத்துகிறது; எனினும் SOAP என்பது SOA இலிருந்து முற்றிலும் மாறுபட்டது. SOAP, டேவ் ஒயினர், டான் பாக்ஸ், பால் ஆட்கின்சன் மற்றும் மோசன் ஆல்-கோசியன் ஆகியோரால் 1998 இல் மைக்ரோசாஃப்டின் (அந்த நேரத்தில் ஆட்கின்சன் அங்கு பணிபுரிந்தார்) ஆதரவுடன் முதன்முதலில் பொருள்-அணுகல் நெறிமுறையாக வடிவமைக்கப்பட்டது. SOAP விவரக்கூற்று வேர்ல்ட் வைடு வலை கூட்டமைப்பின் XML நெறிமுறைப் பணிக் குழு மூலமாகத் தற்போது பராமரிக்கப்படுகிறது. SOAP, போக்குவரத்து நெறிமுறையாக இணையப் பயன்பாட்டு அடுக்கு நெறிமுறையைப் பயன்படுத்துகிறது. இதில் சில நெறிமுறைகள் அவற்றின் திட்டமிடப்படாதப் நோக்கமாகத் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என விமர்சகர்கள் வாதிடுகிறார்கள், மேலும் ஆகையால் அதன் பங்கை அவை நன்றாக நிறைவு செய்யவில்லை. SOAP இன் ஆதரவாளர்கள் மற்ற நெறிமுறைகளின் நுழைவுவழிக்கான பல்வேறு நிலைகளில் நெறிமுறைகளின் வெற்றிகரமான பயன்பாட்டுக்கு இணையானவைகளாக இதனை விவரிக்கிறார்கள். SMTP மற்றும் HTTP இரண்டும் SOAPக்கான போக்குவரத்தாக பயன்படுத்தக்கூடிய ஏற்கத்தக்க பயன்பாட்டு அடுக்கு நெறிமுறைகளாக இருக்கின்றன, ஆனால் HTTP இன்றைய இணைய உட்கட்டமைப்புடன் நன்றாகச் செயல்படுவதன் மூலமாக பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது; குறிப்பாக, நெட்வொர்க் ஃபயர்வால்களுடன் HTTP நன்றாகச் செயல்படுகிறது. எளிமையான அல்லது பரஸ்பர உறுதிப்பாட்டுடன் HTTPSஇன் (இது பயன்பாட்டு நிலையில் HTTP ஆக அதே நெறிமுறையாக இருக்கிறது, ஆனால் மறையிடப்பட்ட போக்குவரத்து நெறிமுறையின் கீழ் பயன்படுத்துகிறது) மேலும் SOAP பயன்படுத்தப்படலாம்; இது வலை சேவைப் பாதுகாப்பு வழங்குவதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட WS-I முறை என WS-I பேசிக் புரொஃபைல் 1.1 இல் குறிக்கப்பட்டிருக்கிறது. இது பொதுவாக ஃபயர்வால்கள் மூலமாக வடிகட்டப்படும் GIOP/IIOP அல்லது DCOM போன்ற மற்ற பங்கிடப்பட்ட நெறிமுறைகளின் மேல் முக்கியமாக நன்மையளிப்பதாக இருக்கிறது. "SOAP ஓவர் AMQP" சில செயல்படுத்தல் ஆதரவுக்கான மற்ற சாத்தியக்கூறும் கொண்டு இருக்கிறது. XML பெரும்பாலான கார்ப்பரேசன்கள் மற்றும் திறந்த மூல மேம்பாட்டு முயற்சிகள் மூலமாக அதன் பரவலான பயன்பாடு காரணமாக தரமான செய்தி வடிவமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. கூடுதலாக, பரவலான பல்வேறு வகைகளில் இலவசமாகக் கிடைக்கக்கூடிய கருவிகள், SOAP-சார்ந்த செயல்படுத்தலுக்கு நிலைமாற்றத்தைக் கணிசமான அளவில் எளிதாக்குகின்றன. ஓரளவு நீண்ட தொடரியல் உடைய XML, நன்மைகள், குறைபாடுகள் இரண்டையும் கொண்டிருக்கின்றன. இது மனிதர்கள் படிக்கக்கூடிய திறன், பிழை கண்டறிதல் மற்றும் பைட்-வரிசை (என்டீயன்னஸ்) போன்ற உள்ளியக்கத்திறன் பிரச்சினைகளைத் தவிர்த்தல் போன்றவற்றை ஊக்குவித்த போதும், இது செயல்பாட்டு வேகத்தைத் தாமதப்படுத்தலாம் மற்றும் சிக்கலாக்கலாம். எடுத்துக்காட்டாக, CORBA, GIOP, ICE மற்றும் DCOM போன்றவை மிகவும் குறுகிய பைனரி செய்தி வடிவத்தைப் பயன்படுத்துகின்றன. மற்றொரு வகையில், வன்பொருள் சாதனங்கள், XML செய்திகளின் செயல்பாட்டைத் துரிதப்படுத்தும் வகையில் கிடைக்கின்றன. பைனரி XML என்பது XML இன் செயல்வீதத் தேவைகளை ஒழுங்குபடுத்துவதற்கான வழிவகையாகவும் ஆராயப்படுகிறது. கணினி பிணையமாக்கம் தலைப்புகள் பட்டியல் கடையெழு வள்ளல்கள் சிறுபாணாற்றுப் படையைப் பாடிய நல்லூர் நத்தத்தனார், ஏழு வள்ளல்கள் பற்றியும் அவர்களின் கொடைமடச் செயல்கள் பற்றியும் கூறியுள்ளார். கொடைமடச் செயல்கள் என்றால், பகுத்தறியாது மடமையோடு கொடையளித்த செயல்கள் என்று கூறலாம். இத்தகைய செயல்களே அவ்வள்ளல்களுக்குச் சிறப்பைச் சேர்த்தன என்பதும் உண்மையாகும். இந்த வள்ளல்களைப் பற்றிய செய்திகளை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றுப் பாடல்களும் கூறுகின்றன; இதுவே கடையெழு வள்ளல்கள் ஆகும். சிறுபாணாற்றுப்படையில் அதிகன் எழுவரில் ஒருவனாகத் தொகுக்கப்பட்டுள்ளான். புறநானூற்றில் எழினி எழுவரில் ஒருவனாகத் தொகுக்கப்பட்டுள்ளான். குமணன் , சகரன் , சகாரன் , செம்பியன் , துந்துமாரி , நளன் , நிருதி ஆகிய எழுவரைத் தலையெழு வள்ளல்கள் எனத் தொகுத்துக் காட்டுவர். இந்தத் தொகுப்பு வரலாற்றுக்கு முரணானது. குமணன் கடையெழு வள்ளல்களின் காலத்துக்குப் பிற்பட்டவன். செம்பியன் எனக் குறிப்பிடப்படுபவன் சிபிச் சக்கரவர்த்தி எனப் பேசப்படுபவன். தந்துமாறன் என்னும் வள்ளலைச் சங்கவருணர் என்னும் நாகரியர் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றில் உள்ளது. நிடத-நாட்டு நளன் பற்றிய இலக்கியம் உள்ளது. பிற மூவர் புராணக் கதை மாந்தர். முரண்பாடான சிரிப்பு முரண்பாடான சிரிப்பு என்பது பொருந்தாத இடத்தில் பொருந்தாத காரணத்தினால் உருவாகும் அளவிறந்த நகைப்பு ஆகும். இது அசாதாராண மனநிலையோடு தொடர்புடையது. கஞ்சா போன்ற போதைப்பொருள் பயன்பாட்டிலும் மற்றும் சில மனநோய்களிலும் இது நிகழலாம். முரண்பாடான நோக்கம் உளவியல் மருத்துவத்தில் முரண்பாடான நோக்கம் ("Paradoxical intention") அல்லது முரண்பாடான எண்ணம் என்பது மனநோய் எண்ணத்தை ("neurotic thought") தாராளமாக எண்ணுதல் ஆகும். இதனால் அந்த எண்ணம் எவ்வளவு தவறானது என்றும் அதை நீக்க வேண்டுமென்றும் நோயாளி உணர முடியும். அடால்ஃப் மேயர் (மனநல மருத்துவர்) அடால்ஃப் மேயர் ("Adolf Meyer") சுவிட்சர்லாந்தில் பிறந்தவர். இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் மனநல மருத்துவத் துறையில் கலங்கரை விளக்கமாய் விளக்கியவர். அமெரிக்க மனநல மருத்துவர் கூட்டமைப்பின் தலைவராய் உயர்ந்தவர். இவர் மனநோய்களைப் புரிந்து கொள்வதில் அறிவியல் பூர்வமான அணுகுமுறையை வலியுறுத்தினார். நடத்தை மாறுபாடுகளுக்கு ("behavioral abnormalities") தொற்றுக்கிருமிகள் காரணமாக இருக்கலாமோ எனும் வாதத்தை முன் வைத்தார். இவர் எந்தப் புத்தகமும் எழுதியதில்லை. ஆனாலும் இவர் எழுதிய கட்டுரைகள், இவரின் பண்புநலன்கள், இவரது மாணவர்கள் ஆகியவற்றின் மூலமாக இவர் புகழ் பெருகியது. இருப்புக் கொள்ளாமை இருப்புக் கொள்ளாமை ("Akathisia", "acathisia") என்பது அக ஓய்வின்மையினால் உண்டாகும் நோய்க்குறித் தொகுதியாகும். இதனால் நோயரால் ஓர் இடத்தில் அமர்ந்திருக்கவோ அசையாமல் இருக்கவோ முடியாது. பெரும்பாலும் மருந்துகளால் தான் உண்டாகிறது. புணர்ச்சிப் பரவசநிலையின்மை புணர்ச்சிப் பரவச நிலையின்மை ("Anorgasmia") என்பது போதுமான தூண்டல் தரப்பட்டும் புணர்ச்சியின் போது பரவசநிலையை எய்த இயலாமை ஆகும். இது மனநல நோய்களுள் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டாலும் பெரும்பாலும் இது மருத்துவ காரணங்களாலேயே ("medical causes") உண்டாகிறது. வாழ்நாளில் ஒரு முறை கூட உச்ச கட்டமாகிய பரவச நிலையை எய்தாதவர்கள். பெண்களில் அதிகம் காணப்படும் இது ஆண்களில் அதுவும் இளம் ஆண்களில் மிக அரிதான ஒன்று. இவர்கள் முன்னம் பரவசநிலை அனுபவித்தவர்கள். சில காரணங்களால் தற்போது அனுபவிக்க இயலாதவர்கள். இவர்கள் சில குறிப்பிட்ட சூழல்களில் (situational) மட்டும் பரவசமெய்த இயலாதவர்கள். எடுத்துக்காட்டாக சில ஆண்கள் "(quad honc)" மனைவியைத் தவிர பிற பெண்களிடம் பரவசமெய்துவார்கள். வேலுத்தம்பி தளவாய் வேலாயுதன் செண்பகராமன் தம்பி (1765–1809) திருவிதாங்கூர் நாட்டில் மகராஜா பலராம வர்மா குலசேகரப் பெருமாள் மன்னராக வீற்றிருந்த காலத்தில் தளவாய் மற்றும் படை தளபதியாக இருந்தவர். வேலுத்தம்பி என அறியப்பட்ட இவர் ஒரு தமிழர் ஆவார். பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தை எதிர்த்துப் போரிட்டவர். வேலாயுதன் செண்பகராமன் தம்பி (வேலுதம்பி) 1765-ம் ஆண்டு மே மாதம் 6-ம் நாள் அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் நாஞ்சில் நாட்டில் (இன்றைய தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம்) நாகர்கோவில், கல்குளம் தாலுக்காவிற்கு உட்பட்ட இரணியல் தேசத்து தலக்குளம் வலிய வீட்டில் பிறந்தார். இவரது பெற்றோர்கள் திரு.குஞ்சு மயிற்றி பிள்ளை, திருமதி.வள்ளியம்மை பிள்ளை தங்கச்சி. திருவிதாங்கூர் மாமன்னர் மார்த்தாண்ட வர்மா ஆட்சி காலத்தில் "செண்பகராமன்" பட்டம் பெற்ற உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர் வேலுதம்பி. இவர், "இடப்பிரபு குலோத்துங்க கதிர்குலத்து முளப்படை அரசனான இறையாண்ட தலக்குளத்து வலிய வீட்டில் தம்பி செண்பகராமன் வேலாயுதன்" (தலக்குளத்து வேலுதம்பி) என அறியப்பட்டார்... யாருக்கும் அஞ்சாத வீரம், எந்த ஒரு செயலையும் தனியே நின்று துணிந்து செய்யும் தைரியம்,  இளம்வயதிலேயே களரி கலை திறமை கொண்டு சுற்றுவட்டார பகுதிகளில் எவரும் வெல்ல முடியாத தலக்குளம் மண்ணின் வீரனாக காணப்பட்டார். 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி, மாமன்னன் மார்த்தாண்ட வர்மா ஆட்சி காலம் முடிந்து  மன்னர் தர்ம ராஜா கார்த்திகை திருநாள் ராம வர்மா ஆட்சி புரிந்த காலம்... ஒரு நாள் தர்ம ராஜா ராம வர்மா மன்னரின் ராமேஸ்வர பயணத்தில் அவருடைய உடைமைகள் களவு செய்யப்பட்டது.  அரசவை வீரர்கள் எவ்வளவோ முயன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர்.நாட்டின் தெற்கு பகுதியான தலக்குளத்தில் ஒரு திறமையான வீரன் இருப்பதை அமைச்சர்கள் அறிந்தனர். அந்த வீரன் மன்னரை சந்திக்க அரசு ஆணை வந்தது. அதன் பிறகு களவு பொருட்களை கண்டுபிடிக்கும் பொறுப்பு இருபது வயது களரி வீரனாக இருந்த தலக்குளத்து வேலுதம்பியிடம் ஒப்படைக்கப்பட்டது. தன்னுடைய தலக்குளம் படையுடன் புறப்பட்ட வேலுதம்பி, மூன்று நாட்களில் களவு போன பொருட்களுடன் மன்னர் முன் வந்து நின்றார். வேலுதம்பியின் வீரத்தை கண்ட மன்னர் தர்ம ராஜா, வேலுதம்பியை மாவேலிக்கர எனும் இடத்தில் அரசு காரியக்காராய் (தாசில்தார்) நியமித்தார்... திருவிதாங்கூரின் அடுத்த மன்னராக மகாராஜா அவிட்டம் திருநாள் பலராம வர்மா குலசேகரப் பெருமாள் பதவியேற்றார். இவருடைய ஆட்சி காலத்தில், தளவாய் ஆக இருந்தவர் ஜெயந்தன் சங்கரன் நம்பூதிரி.   சர்வாதிகார ஆட்சி புரிந்த சங்கரன் நம்பூதிரியும் அவரது ஆதரவு அமைச்சர்களான தக்கலை சங்கர நாரயணன் செட்டி மற்றும் மாத்தூதரகன் ஆகியோர் மக்களுக்கு ஏதிராக செயல்பட்டனர். அதிக வரி வசூலித்து மக்களை கொடுமைபடுத்தினர். ஆங்கில அரசுக்கு முழு ஆதரவாக செயல்பட்டனர். தளவாய் சங்கரன் நம்பூதிரி திருவிதாங்கூர் அரசின் கஜானாவை நிரப்புவதற்காக, அனைத்து தாசில்தாரர்களையும் அழைத்து மூன்றாயிரம் ரூபாய் அரசுக்கு நிதி கட்டுமாறு ஆணையிட்டார். ஆனால் மாவேலிக்கர தாசில்தாரான வேலுதம்பி மறுத்தார். நான் நாஞ்சில் நாடு சென்று நிதி திரட்டி கொண்டு வருகிறேன் என்று மூன்று நாட்கள் அவகாசம் கேட்டு மாவேலிக்கரையில் இருந்து தலக்குளம் வந்து சேர்ந்தார். தளவாய் சங்கரன் நம்பூதிரி மற்றும் அவரது இணை அமைச்சர்கள் சேர்ந்து நடத்தும் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்ட எண்ணினார். நிதி கட்டாமல் கால தாமதம் செய்த வேலுதம்பியை கைது செய்ய அரசு ஆணை பிறப்பித்தார் தளவாய் சங்கரன் நம்பூதிரி. கோபம் கொண்ட வேலுதம்பி தலக்குளம், இரணியல் மற்றும் தக்கலையில் இருந்து ஆயுதம் தாங்கிய ஒரு பெரும் படையை திரட்டி திருவனந்தபுரம் கோட்டையை முற்றுகையிட்டு மன்னருக்கு எதிராக கலகம் செய்தார். மக்களுக்கு கொடுக்கப்பட்ட வரியை குறைக்க வேண்டும் என்றும், கொடுங்கோல் ஆட்சி புரியும் சங்கரன் நம்பூதிரியை தளவாய் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், ஊழல் அமைச்சர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று மன்னருக்கு கோரிக்கை விடுத்தார் வேலுதம்பி. வேலுதம்பியின் எதிர்ப்பை கண்ட மன்னர் உண்மை அறிந்து சங்கரன் நம்பூதிரியை தளவாய் பதவியில் இருந்து நீக்க உத்தரவிட்டார். ஊழல் அமைச்சர்களான சங்கர நாரயணன் செட்டி மற்றும் மாத்தூதரகன் ஆகிய இருவருக்கும் பொதுமக்கள் முன்னிலையில் சவுக்கடி கொடுக்கப்பட்டு, காதுகள் அறுக்கப்பட்டு திருவனந்தபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர். தளவாய் சங்கரன் நம்பூதிரி நாடு கடத்தப்பட்டார். அதன் பிறகு, மன்னர் பலராம வர்மா திருவிதாங்கூர் அரசின் புதிய தளவாய் ஆக ஐயப்பன் செண்பகராமன் பிள்ளை என்பவரை  நியமித்தார். வேலுதம்பியை முளகு மடிசீல காரியக்காராய் (நிதி அமைச்சர்) நியமனம் செய்தார். 1802-ம் ஆண்டு வீரமும், திறமையும் கொண்ட  தலக்குளத்து வேலாயுதன் செண்பகராமன் தம்பி என்ற வேலுதம்பி திருவிதாங்கூர் அரசின் புதிய தளவாய் ஆக நியமிக்கப்பட்டார். வேலுதம்பி திருவிதாங்கூரின் தளவாய் பதவியை ஏற்ற பிறகு, நாட்டின் நலனுக்காகவும், மக்களின் நலனுக்காகவும் ஆங்கில அரசுடன் ஒத்துழைத்து போவது என்று முடிவு செய்தார். மக்களுக்கு நியாயமான வரியை விதித்தார். ஆங்கில அரசுக்கு முறையான கப்ப தொகையும் செலுத்தி வந்தார். ஆலப்புழை, கொல்லம், திருவனந்தபுரம், நாகர்கோவில் ஆகிய இடங்களில் பல சிறப்பு திட்டங்களை கொண்டு வந்தார். பத்மனாபபுரம் கோட்டை, உதயகிரி கோட்டை மற்றும் இரணியல் கோட்டைகளை பலப்படுத்தி திருவிதாங்கூரின் இரண்டாம் நிர்வாக இடமாக மாற்றினார். கிராமங்களில் ஆயுத பயிற்சி மையங்களை நிறுவினார். பல ஆலயங்களை கட்டினார். வேலுதம்பி தளவாயின் ஆட்சி நேர்மையாகவும் அதே சமயம் மிகவும் கடுமையாகவும், கடினமாகவும் இருந்தது. குற்றம் புரிபவர்களுக்கு கொடுமையான தண்டனைகளை வழங்கினார். அரசுக்கு எதிராக செயல்படுபவரின் வலது கையின் விரல்கள் துண்டிக்கப்பட்டது. களவு மற்றும் குற்ற செயல்கள் செய்பவரின் காது மற்றும் மூக்கு அறுக்கப்பட்டது. மக்களை துன்புறுத்தினாலோ, பெண்களை மானபங்க படுத்தினாலோ சவுக்கடி மற்றும் உயிரோடு மரத்தில் ஆணி அறைந்து தலை துண்டிக்கப்பட்டு கடலில் வீசப்பட்டது ஒருமுறை தன்னுடைய தலக்குளம் வலிய வீட்டின் வரியை குறைத்த காரணத்தினால் அரசு ஊழியரின் வலது கையின் விரல்களை வெட்டினார். தலக்குளத்து வேலுதம்பி தளவாய் என்ற பெயரை கேட்டாலே திருவிதாங்கூர் சமஸ்தானமே நடுங்கியது. வேலுதம்பி தளவாயின் இந்த கடுமையான ஆட்சியை கண்டு சில ஆங்கில அதிகாரிகளே மிரண்டனர். வேலுதம்பி தளவாயின் ஆட்சி திருவிதாங்கூர் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. நாட்டில் களவும், குற்ற செயல்களும் குறைந்தன. மக்கள் தைரியமாக வெளியில் நடமாட தொடங்கினர். பெண்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் இருந்தனர். ஆனால் வேலுதம்பியின் நேர்மையான மற்றும் கடுமையான ஆட்சியை மற்ற அமைச்சர்களான குஞ்சு நீலம் பிள்ளை, உம்மிணி தம்பி எதிர்த்தனர். வேலுதம்பியை கவிழ்க்க ஆங்கில அரசுடன் கைகோர்த்து சதி திட்டம் தீட்டினர். இதே நேரத்தில் திருவிதாங்கூரின் ஆங்கில அரசு அதிகாரியாக பதவி வகித்தவர் கர்னல் மெக்காலே எனும் ஆங்கில தளபதி, இவர் திருவிதாங்கூரின் முழு கட்டுபாட்டையும் கைப்பற்றும் நோக்கில் ஒரு புதிய உடன்படிக்கையை தாக்கல் செய்தார். அதன்படி திருவிதாங்கூரில் நாயர் படைகள் அவசியம் இல்லை என்றும், பிரிஷ்டிஷ் ஆங்கில படைகள் மன்னருக்கும், நாட்டிற்கும் பாதுகாப்பு அளிக்கும் என்றும், வருடத்திற்கு எட்டு லட்சம் ரூபாய் கப்ப தொகை கட்ட வேண்டும் என்று அறிவித்தார். இதனை மன்னரும், வேலுதம்பி தளவாயும் கடுமையாக மறுத்தனர். ஆனால் ஆங்கில அரசு நேமம் எனும் இடம் வரை தங்களுடைய படையை அமைத்த பிறகு தான் இந்த உடன்படிக்கையை தாக்கல் செய்தது. வேறு வழியின்றி மன்னரும், வேலுதம்பி தளவாயும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். மன்னர் பாலராம வர்மா, ஆங்கில அரசு அதிகாரியான மெக்காலேவை பணி இடமாற்றம் செய்ய மதராஸ் மகாணத்தின் ஆங்கில அரசின் தலைமை அதிகாரிக்கு கடிதம் எழுதினார். ஆனால், அது நிராகரிக்கப்பட்டது. இதனால் மன்னர்  ஆங்கில அரசு கேட்ட எட்டு லட்ச ரூபாய் கப்ப தொகை கட்டாமல் இருந்தால் ஆங்கில அரசுடன் பகை ஏற்படகூடும் என்று எண்ணினார். தளவாய் வேலுதம்பியிடம் ஆங்கில அரசு கேட்ட கப்ப தொகையை உடனே செலுத்துமாறு உத்தரவிட்டார். நாட்டு மக்களிடம் அதிகமான வரி வசூலித்து, அதை ஆங்கில அரசுக்கு  கப்பமாக கட்ட வேலுதம்பி தளவாய் கடுமையாக மறுத்தார். ஆனால், மன்னரின் உத்தரவிற்கு கட்டுபட்டு ஆங்கில அரசிடம் அதிக கப்பம் கட்ட மூன்று மாதம் அவகாசம் கேட்டார். ஆரம்பத்தில் தங்களுடன் ஒத்துழைத்த போன ஆங்கில அதிகாரி கர்னல் மெக்காலே தற்போது எதிர்மறையாக செயல்படுவது நாட்டை கைப்பற்றுவதற்கே என்று வேலுதம்பி தளவாய் எண்ணினார். நாட்டையும், மக்களையும் காப்பாற்ற ஆங்கில அரசை எதிர்ப்பதே ஒரே வழி என்று முடிவு செய்தார். பல மாதங்கள் ஆகியும் கப்பம் கட்டாமல் கால தாமதம் செய்தார். இதனால் கோபம் கொண்ட ஆங்கில அதிகாரி மெக்காலே திருவனந்தபுரம் வந்து மன்னரை சந்தித்து உடனே கப்பம் கட்டுமாறு கூறினார். இல்லையென்றால் திருவிதாங்கூர் மீது போர் புரிந்து நாட்டை கைப்பற்றுவோம் என்று மிரட்டினார். ஆங்கில அரசுக்கு எதிராக செயல்படும் உங்கள் தளவாய் சிறை செல்ல நேரிடும் என்று கூறினார். ஆனால் வேலுதம்பி தளவாய், இனி மேல் ஒரு ரூபாய் கூட கப்பம் கட்ட முடியாது என்று மறுத்தார். நாட்டிற்கு எதிராக செயல்படும் ஆங்கில அரசை வேரோடு வெட்டி எடுத்து அரபிக் கடலில் வீசுவேன் என்று கூறினார். அதிகமான கப்ப தொகை மற்றும் நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடும் ஆங்கில அரசு அதிகாரி மெக்காலே மீது கடுமையான கோபம் கொண்டார். திருவாங்கூர் அரசின் திவானாக இருந்த இவர், கொச்சியில் அமைச்சராக இருந்த பலியாத்தச்சன் ஆதரவுடன் கொல்லத்தை அடுத்த குந்தாராவில் (திருவனந்தபுரத்திற்கும் ஆல்வாயிக்கும் இடையில் உள்ள ஊர்) தமது முகாமை அமைத்து, ஆல்வாயில் இருந்த ஆங்கிலேய அதிகாரிகளைக் கொன்று அவர்களது ஆக்ரமிப்புகளை அகற்றினார். பீரங்கி பலம் வாய்ந்த ஆங்கில அரசை எதிர்க்க நாட்டு மக்களின் ஆதரவை பெற எண்ணினார் தளவாய் வேலுதம்பி. 1809-ம் ஆண்டு ஐனவரி மாதம் 11-ம் தேதி கொல்லம் அருகே குண்டறை எனும் இடத்தில் ஆங்கில அரசுக்கு எதிராக மக்கள் முன் ஒரு வீர உரையை நிகழ்த்தினார். இதில் ஆங்கில அரசை அவர் கடுமையாக விமர்சித்தார். நம் நாட்டிற்கு வந்த வெள்ளையர்கள் நாட்டை ஆள முயற்சிப்பதும், நம்மை அடிமையாக்கி அதிக வரி வசூலித்து சித்ரவதை செய்வதையும் தடுக்க ஆங்கில அரசுக்கு எதிராக போர் செய்ய வருமாறு நாட்டு மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். மக்கள் மனதில் இருந்த அடிமை உணர்வை தகர்த்தெறிந்த இந்த வீர உரை பிற்காலத்தில் "குண்டறை விளம்பரம்" என சரித்திர வரலாறு படைத்தது. குண்டறை விளம்பரம் நாட்டு மக்களின் ஆழ் மனதின் வீரத்தை தட்டி எழுப்பியது. அடிமை சங்கிலியை அறுத்தெறிய மக்கள் வெள்ளம் போருக்கு தயாராகியது.முறுக்கேறிய இளைஞர்கள் மற்றும் வலிமையான பெரியவர்கள் என மூன்றாயிரத்திற்கு மேற்பட்ட வீரர்கள் வேலுதம்பி தளவாயின் தலைமையின் கீழ் அணி திரண்டனர். மீண்டும் படை பலம் அதிகரித்தது. ஆங்கில அரசுக்கு எதிராக பல வன்முறை செயல்கள் நடைபெற்றது. பல  ஆங்கில வீரர்கள் வெட்டி கொல்லப்பட்டனர். ஆங்கில ராணுவ தளங்கள் பல  சிதைக்கப்பட்டன. ஆங்கில அரசின் மேல் வேலுதம்பிக்கு இருந்த வெறித்தனத்தை ஆங்கில அதிகாரிகள் புரிந்து கொண்டனர். கர்னல் லீஜர் தலைமையில் வந்த ஆங்கிலேயப் படை உதயகிரி மற்றும் பத்மநாபபுரம் கோட்டையை வெற்றி கொண்டு பாப்னாம்கோடு என்ற ஊருக்கு வந்தது. அச்சத்தில் திருவாங்கூர் மன்னன் பிரிட்டிஷ் கம்பெனியுடன் அமைதி ஒப்பந்தம் செய்து அடிபணிந்தார். இதன் விளைவாக தளவாய் வேலுத்தம்பியைக் கைது செய்ய திருவாங்கூர் மன்னரே உத்தரவிட்டார். இதனை அறிந்த வேலுத்தம்பி தமது சகோதரர் பாப்புத் தம்பியுடன் தப்பி மன்னாட்டியிலுள்ள கோவில் பூசாரி வீட்டில் தஞ்சமடைந்தனர்.இதற்கு மேல் போராட முடியாது ஆங்கிலேயரிடம் கைதாக நேரும் என்று உணர்ந்த வேலுத்தம்பி சகோதரரிடம் தன்னைக் கொல்ல வேண்டினார். அவர் மறுக்கவே கத்தியால் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டார். ஆங்கிலேயரால் அவரது உடல் கண்ணன் மூலா என்ற ஊரின் முச்சந்தியில் தொங்கவிடப்பட்டது. தளவாய் வேலுத்தம்பியின் சிலை கேரள அரசின் தலைமைச் செயலக வளாகத்தில் உள்ளது. சுதந்திரப் போராட்ட வரலாறும் தியாகசீலர்களும்; வி.வி.வி.ஆனந்தம்; கங்கை புத்தகநிலையம்; பக்கம் 80, 81 உருத்திராட்சம் உருத்திராக்கம் ("Elacocarpus Ganitrus Roxb", Rudraksha) என்றழைக்கப்படும் உருத்திராக்க மரங்களிலிருந்து உருத்திராக்க மணிகள் பெறப்படுகிறன. இவை தென்கிழக்காசியாவில் குறிப்பிட்ட சில இடங்களில், ஜாவா, கொரியா, மலேசியாவின் சில பகுதிகள், தைவான், சீனா, தெற்காசியாவிலும் வளர்கின்றன. நேபாளத்தில் அதிகம் விளைகின்றன. அதன் உயர்ந்த மலைகளும், கண்டகி, பாக்மதிகளின் குளிர் தண்ணீரும், மிதமான இதமான சூழ்நிலையும் ருத்ராட்ச மரங்களைச் செழிக்க வைக்கின்றன. உருத்திராட்சம் எனும் உருத்திராக்கம் என்ற பெயர் நேரடிப் பொருளில் சிவனின் "கண்களைக்" குறித்தாலும், அவருடைய அருளைக் குறிப்பதாகவே இப்பெயர் அமைந்துள்ளது. பகவான் சிவனின் கண்ணீரே உருத்திராக்கத்தின் தோற்றம் என சிவபுராணம் கூறுகிறது. உலகத்திலுள்ள எல்லா உயிரினங்களினத்தின் நன்மைக்காகச் சிவன் பல்லாண்டு காலம் தியானம் செய்தார். தியானத்தினின்று கண்ணை விழித்ததும், சூடான கண்ணீர்த் துளிகள் உருண்டோடின. அவற்றை பூமித்தாய் உருத்திராக்கமாக ஈன்றெடுத்தாள். பல்லாயிரம் ஆண்டுகளாக நல்ல உடல் நலம், ஜபம், சக்தி ஆகியன வழியாகச் சமய ஈடேற்றம், அச்சமற்ற வாழ்க்கை ஆகியன வேண்டி, மனித குலத்தால் உருத்திராக்க மணிகள் அணியப்பட்டு வந்தன. கடவுண்மணி, சிவமணி, தெய்வமணி, நாயகமணி, கண்மணி, கண்டம், கண்டி, கண்டிகை, முண்மணி என்பன அக்கமணியின் மறு பெயர்கள். இவற்றுள் முதல் நான்கொழிந்த ஏனைய வெல்லாம், அக்கு அல்லது அக்கம் என்னும் பெயரைப் போன்று, கூர் முனைகளைக் கொண்டதென்றே பொருள் படுவன. முண்மணி என்பது வெளிப்படை. கடவுளையே ஒருசார் தமிழர் சிவன் என்னும் பெயரால் வழிபடுவதால், 'கடவுண்மணி' முதலிய நாற்பெயரும் ஒருபொருட் சொற்களே. கடவுள் மணி, முள் மணி என்பன கடவுண்மணி. முண்மணி என்று புணர்ந்தது போன்றே, கள் மணி என்பதும் கண்மணி என்று புணரும். மேலும், சிவன் சிவமாகி வடமொழியால் சைவமானது போல், விண்ணவனை அடையாளங் காண வைணவத்திலிருந்து தலை கீழாகப் போக வேண்டும். விண்ணவன் = விண்ணு --> விஷ்ணு - வைஷ்ணவம் - வைணவம். இதனால் தான் ஆழ்வார்களால் விண்ணகரம் என்ற சொல்லைப் பெருமாள் கோயிலுக்குப் பயன் படுத்துவதைப் பார்க்கிறோம். உண்ணம் --> உஷ்ணம் (இதிலும் தலை கீழாக நாம் புரிந்து வைத்திருக்கிறோம்.) உண்ணம்தான் முதல்; உஷ்ணம் அல்ல. உண்ணம் என்பதோடு பொருளால் தொடர்பு கொண்ட பல தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன. இன்றையத் தமிழர்க்குப் பொதுவாக மதத்துறையிற் பகுத்தறிவின்மையால், கண்மணி என்பது சிவன் கண்ணினின்று தோன்றிய மணியே என்றும், அக்கம் என்பது அக்ஷ என்னும் வடசொற் திரிபே என்றும், ஆரியப் புராணப் புரட்டையெல்லாம் முழு உண்மை என்றும், அதை ஆராய்தல் இறைவனுக்கு மாறான அறங்கடை (பாவம்) என்றும் நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆரிய வேதக் காற்றுத் தெய்வமாகிய உருத்திரனுக்கும் சிவனுக்கும் யாதொரு தொடர்புமில்லை. மங்கலம் என்று பொருள்படும் சிவ என்னும் ஆரிய அடைமொழி இந்திரன், அக்கினி, உருத்திரன் என்னும் ஆரிய வேத முச்சிறு தெய்வங்கட்கும் பொதுவாக வழங்கப் பட்டுள்ளது. அதற்குச் சிவந்தவன் என்று பொருள்படும் சிவன் என்னும் செந்தமிழ்ப் பெயர்ச் சொல்லோடு எள்ளளவும் தொடர்பில்லை. அந்தி வண்ணன், அழல் வண்ணன், செம்மேனியன், மாணிக்கக் கூத்தன் முதலிய சிவன் பெயர்களை நோக்குக. சிவ நெறி குமரி நாட்டிலேயே தோன்றி வளர்ச்சியடைந்து விட்ட தூய தமிழ் மதமாதலாலும், அக்கமணி மேனாடுகளில் விளையாமையாலும், கிரேக்கத்திற்கு இனமான ஒரு மொழியைப் பேசிக் கொண்டிருந்த மேலையாசிய ஆரிய வகுப்பார் இந்தியாவிற்குள் புகும் முன்னரே, தமிழர் இந்தியா முழுதும் பரவி வட இந்தியத் தமிழர் முன்பு திராவிடராயும், பின்பு பிராகிருதராயும் மாறியதனாலும், அக்கமணியைச் சிவனியர் குமரி நாட்டுக் காலந்தொட்டு அணிந்து வந்ததனாலும், அம்மணிக்கு அப்பெயரே உலக வழக்கில் வழங்கியதனாலும், தமிழ் முறைப்படி முண்மணி என்பதே அப்பெயர்ப் பொருளாம். அக்கு என்பதே முதன் முதல் தோன்றிய இயற்கையான பெயர். அது 'அம்' என்னும் பெருமைப் பொருட் பின்னொட்டுப் பெற்று அக்கம் என்றானது. முத்து -->முத்தம் (பரு முத்து) அக்கம் = பருத்த சிவ மணி. சைவருக்குரிய சிவ சின்னங்கள் மூன்றில் ஒன்று உத்திராட்சம்; மற்றவை திருநீறும்; திருவைதெழுத்தும்." சாமியார்களைப் பற்றி ஒரு அடையாளம் காட்டும் போது "நெற்றியில் பட்டை", "காவிச் சட்டை", "கழுத்தில் கொட்டை" என்று வேடிக்கையாகவும், சில சமயங்களில் வினையாகவும் சொல்வதுண்டு. உருத்திராக்கம் சுய ஆற்றலையும், சுய அன்பையும் மேம்படுத்த உதவும். அணிவோரின் உள் ஒளியை இது மேலோங்கச் செய்கிறது. இது பெரியம்மை, காக்காய் வலிப்பு, கக்குவான் போன்ற பல்வேறு அபாயகரமான நோய்களைக் குணப்படுத்த வல்லது. குறிப்பிட்ட முறையில், மருத்துவ விதி முறைகளைக்கேற்பக் கையாளப்பட்டால் இது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த புண்களையும் கூடக் குணப்படுத்தும். இது அணிவோருக்கு மன அமைதியையும், மன ஊக்கத்தையும், புத்திக் கூர்மையும் அளிக்கிறது. 38 வகையான உருத்திராக்கத்தில், 21 வகை மிக பிரசித்தம். முகத்தைப் பொறுத்தே ஒரு முகம், இரு முகம் என்று வரிசைப் படுத்தப்படுகிறது. ஒவ்வொரு முகத்திற்கும் ஒவ்வொரு பலன் உண்டு. ஒரு முகமுடைய உருத்திராக்கம் சூரியனால் ஆளப்படுகிறது. இந்த உருத்திராக்கம் ஏனைய எல்லா முகங்களையுடைய உருத்திராக்கங்களுக்கும் அரசனாகையால்,இது தூய உணர்வைக் (Pure consciousness) குறிக்கிறது. அணிபவருக்குப் போகமும் மோட்சமும் கிட்டும். இவர் ராஜா ஜனகர் போன்று வாழ்வர். இவர் வேண்டும் போது எல்லா சுகங்களையும் அனுபவிப்பர். எனினும் பற்றற்றவராய் இருப்பர். ஒரு முகத்து உருத்திராக்கம், நோய்களைச் சரியாகக் கண்டறிவதற்கும், அறுவை சிகிச்சையில் வெற்றி பெறுவதற்கும் உதவுவதால் மருத்துவர்களுக்கு இது மிகவும் உகந்ததாகும். இரு முகமுடைய உருத்திராக்கத்தை ஆளும் கோள் சந்திரன். இது பகவான் சிவனும், தேவி பார்வதியும் (சக்தி) இணைந்த உருவமான அர்த்த நாரீஸ்வரரைக் குறிக்கிறது. (மாதொரு பாகன்) இந்த உருத்திராக்கம் அணிவோருக்கு 'ஒற்றுமை' (unity) உணர்வை அளிக்கும். இந்த ஒற்றுமை குரு-சிஷ்யன், பெற்றோர்-குழந்தைகள், கணவன்-மனைவி, நண்பர்களிடையே உள்ள தொடர்பைக் குறிக்கலாம். ஒருமைத் தன்மையை நிலை பெறச் செய்வது இதன் தனித்தன்மையாகும். இந்த மும்முகமுள்ள உருத்திராக்கதை ஆளும் கோள் செவ்வாய்.இது தீக்கடவுளை குறிக்கிறது. எல்லாப் பொருட்களையும் உண்ட பின்னரும் தீ தூய்மையாக இருப்பது போல் மூன்று முகமுள்ள உருத்திராக்கத்தை அணியவரும் அருள் கிட்டிய போது, தனது வாழ்க்கையில் பாவங்களில், தவறுகளிலிருந்து விடுபட்டுத் தூய நிலையை அடைகின்றார். இந்த மூன்று முக உருத்திரக்கம் தாழ்வு மனப்பான்மை (Inferiority Complex) உள்ளார்ந்த பயம் (Subjective fear) குற்ற உணர்வு (Guilt) மனச்சோர்வு போன்றவற்றால் துன்பப்படுபவர்களுக்கும் உகந்ததாகும். இந்த நான்கு முகமுள்ள உருத்திராக்கத்தை ஆளும் கோள் புதன். இது பிரம்மனைக் குறிக்கிறது. அணிவோருக்கு அருள் கிடைத்த போது ஆக்க சக்தி கிட்டுகிறது. மாணவர்கள், அறிவியலாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு நற்பயன் அளிக்க வல்லது. ஞாபகசக்தி, கூர்ந்த மதி புத்தி சாதுர்யம் ஆகியவற்றை மேம்படுத்துகிறது. நான்முக உருத்திராக்கங்கள் மூன்றினை வலது கையில் கட்டினால் அவர் முன் யாரும் எதிர்த்து நிற்க முடியாது. ஐந்து முகங்களுடைய உருத்திராட்சத்தின் ஆளும் கோள் வியாழன். இது மங்களகரத்தின் குறியீடான சிவனை குறிக்கும். இந்த ஐந்து முகமுடைய உருத்திராட்ச மாலை அணிந்தோருக்கு உடல் நலம், அமைதி ஆகியன கிட்டும். இது ஒருவரின் இரத்த அழுத்தம், இதய நோய்கள் ஆகியவற்றைக் கண்காணிக்கிறது. இந்த உருத்திராட்ச மாலையை ஜபம் செய்வதற்கும் பயன்படுத்துவர். இந்த மாலையை அணிவோருடைய மனம் அமைதியாக இருக்கும். அத்துடன் இதை அணிபவர்களுக்கு அகால மரணம் ஏற்படாது என்பதில் சந்தேகம் ஏதுவுமில்லை. இந்த ஆறு முக உருத்திராக்கத்தை ஆளும் கோள் வெள்ளி. இந்த உருத்திராக்கம் சிவனின் இரண்டாவது மகனான கார்த்திகேயக் கடவுளைக் குறிக்கும். இதை அணிந்து வேண்டியோருக்கு அறிவு, மேம்படுத்தப்பட்ட புத்தி, மனத்திட்பம், திடமான மனம் ஆகியவை அருளப்படும். இந்த ஆறு முக உருத்திராக்கம், மேலாளர்கள், வணிகர்கள், நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள், ஆகியோருக்கு உகந்தது. இது ஒருவரின் பிறப்புறுப்புகளை ஆள்கிறது. இந்த ஏழு முக உருத்திராக்கத்தை ஆளும் கோள் சனி. இது தேவி திருமகளைக் குறிக்கும். இதை அணிவோருக்கு நல்ல உடல் நலம் அருள் பாலிக்கப்படும். உடல் தொடர்பான துன்பங்கள், நிதித் தொல்லைகள், மனத் துன்பங்கள் ஆகியவற்றால் வருத்த முற்றிருப்போர் இந்த உருத்திராக்கத்தை அணிதல் வேண்டும். இந்த ஏழு முக உருத்திராக்கத்தை ஒருவர் அணிவதால் அவருக்கு வணிகம், பணி ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்படுத்துவதுடன் அவர் மகிழ்வாகக் கழிக்க முடிகிறது. இந்த எட்டு முகமுடைய உருத்திராக்கத்தின் ஆளும் கோள் இராகு. இது பகவான் கணேசரைக் குறிக்கிறது. இது முயற்சிகளிலும் தடைகளை நீக்கி வெற்றியைத் தருகிறது. அணிவோருக்கு ரித்திகள் (Riddhis), சித்திகள் (Siddhies) ஆகிய எல்லாப் பேறுகளையும் அளிக்கும். இதை அணிவோரின் எதிரிகள் அழிந்து போவார்கள். அதாவது இவர்கள் எதிரிகளின் மனத்தையும், நோக்கங்களையும் இந்த உருத்திராக்கம் மாற்றி விடும். இந்த ஒன்பது முக உருத்திராக்கத்தை ஆளும் கோள் கேது. இது தேவி துர்க்கையைக் (சக்தி) குறிக்கிறது. இதை அணிந்து வணங்குபவர்களுக்கு அன்னைக் கடவுள் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்வதற்கு அதிக சக்தி, ஆற்றல், செயல் திறம், அச்சமின்மை ஆகியவற்றை அளிப்பாள். இந்த பத்து முகமுள்ள உருத்திராக்கத்திற்கு ஆளும் கோள் என்று ஒன்றுமில்லை. கோள்களினால் ஏற்படும் தீய பலன்களையும் இது சாந்தப்படுத்தும். பத்துத் திசைகளினதும், பத்து அவதாரங்களிலும் செல்வாக்கு இந்தப் பத்துமுக உருத்திராக்கத்தில் உண்டு. ஒருவரின் உடலுக்கு இது கேடயம் போல் செயல்பட்டு, எல்லாத் தீய சக்திகளையும் விரட்டுகிறது. இதை அணிந்து வணங்குவோர்களுடைய குடும்பம் பரம்பரை பரம்பரையாகச் செழிப்புற்று வாழும். இது பகவான் அனுமானைக் குறிக்கும். இது வணங்கி வேண்டியோருக்கு அறிவு, நேர்மையான நீதி ஆற்றல் மிக்க சொல்லாட்சி, துணிவுள்ள வாழ்க்கை, வெற்றி ஆகியனவற்றை அருளும். எல்லாவற்றிற்கும் மேலாக, விபத்தினால் மரணம் ஏற்படுவதை இது தடுக்கும். இதை அணிவோர் அச்சமற்றவராக ஆவார். தியானத்திற்கும் இது உதவும். இது சூரியக் கடவுளைக் குறிக்கும். இதை அணிவோர் அளவற்ற நிர்வாகத் திறனைப் பெறுவர். அத்துடன் சூரியனின் குணங்களையும் பெறுவர். இக்குணங்களால் ஒருவர் என்றும் பிரகாசிக்கும் ஒளியுடனும், பலத்துடன், பிறரை ஆட்சி செய்து வருவர். இந்தப் பன்னிரண்டு முக உருத்திராக்கம் மந்திரிகள், அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள், வணிகர்கள், நிர்வாகிகள் போன்றோருக்கு உகந்தது. இது வியக்கத்தக்க வகையில் பயனளிக்க வல்லது. இது இந்திரனைக் குறிக்கும். தொழுது வேண்டியவர்களுக்கு மனிதன் விரும்பத்தக்க எல்லா சுகங்களையும் இது அளிக்கும். செல்வம், மாட்சிமை ஆகியவற்றை அளிப்பதுடன் உலகத்து ஆசைகள் அனைத்தும் இது நிறைவேற்றும். அத்துடன் அஷ்டமா சித்திகளையும் இது அளிக்க வல்லது. இதை அணிவோரை காமக்கடவுள் விரும்புவர். மகிழ்ச்சி அடைந்த காமக்கடவுள், அணிவோருக்கு உலகத்து ஆசைகள் எல்லாவற்றையும் நிறைவேற்றுவார். இந்தப் பதினான்கு முகமுடைய உருத்திராக்கமே அதி உயர்ந்த விலை மதிப்பற்ற தெய்வீக மணியாகும். அதுவே தேவ மணியுமாகும். இந்த உருத்திராக்கம் அணிவோருடைய ஆறாவது புலனை விழிக்கச் செய்கிறது. அதனால் அவர் எதிர்கால நிகழ்வுகளை முன் கூட்டியே அறிகின்றார். இதை அணிவோர் தாம் எடுத்த முடிவுகளில் ஒரு போதும் தோல்வியடைவதில்லை. இதை அணிவோர் இடர்கள், துன்பங்கள், கவலைகள் எல்லாவற்றையும் கடந்து விட முடிகிறது.மேலும், அணிவோருக்குப் பாதுகாப்பையும் எல்லாச் செல்வங்களையும் இது கொடுக்கிறது. பண்டையக் கால முனிவர்கள் இந்த உருத்திராக்க மணிகளை பூஜை மேடையில் வைக்கும்படியும் அதன் வழி முழுக் குடும்பத்திற்கும் செழிப்பைக் கொடுக்கின்றன. பகவான் உருத்திரனின் அருளைப் பெறும்படியும் அறிவுரை கூறியுள்ளனர். இப்படி ஒவ்வொரு முகத்திற்கும் ஒவ்வொரு பலன் உண்டு. இயல்பாகவே ஒன்றாக இணைந்த இரு உருத்திராக்கங்கள் கௌரி சங்கர் என அழைக்கப் படுகின்றன. இது சிவனும் பார்வதியும் சேர்ந்த உருவானதாகக் கொள்ளப் படுகின்றது. இது கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள உதவுகிறது. எனவே இந்த உருத்திராக்கம் குடும்பத்தில் அமைதியும் சுகமும் விளங்க வைக்கும் சிறந்த பொருளாக கருதப்படுகிறது. கௌரி சங்கர் உருத்திராக்கத்தை ஒருவர் வழிப்படும் இடத்தில் வைத்துத் தொழுது வந்தால் அவருக்கு ஏற்படும் துன்பம், வேதனை, உலகியல் தடைகள் எல்லாம் அழிகின்றன. குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் மேலோங்குகின்றன. உருத்திராக்கத்தை 3, 4, 5, 6, எண்ணிகையில் வளையமாகக் கோர்த்து அணிவர். கழுத்தில் அணியும் மாலைகள் 27, 54, 108 என்ற கணக்கில் இருக்கும். கழுத்தில், கையில் அணியும் உருத்திராக்கம் அங்குபங்சர் போல் செயல்பட்டு பயன் அளிக்கும். பெரும்பாலும் இப்போது பலரும் மிகச் சிறிய அளவுடைய மணிகளையே விரும்பிப் பூணுகிறார்கள். எனினும் உருத்திராக்க விசிட்டம் என்னும் நூலில் எந்த அளவு உருத்திராக்க மணி சிறப்புடையது என்று கூறப் பெற்றுள்ளது. இதனைப் பின்வரும் வெண்பா ; இரண்டு முகமுடையதும் மூன்று முகமுடையதும் செபமாலைக்கு உரியது அன்று; பத்து முகமும் பதின்மூன்று முகமும் பழுதுடையது ; மற்றனைத்தும் உத்தமம். இதனைக் கூறும் பாடல்: அங்குஷ்டத்தினால் மோட்சமும், தர்ச்சனியால் சத்துரு நாசம், மத்திமையால் பொருட்பேறும், அனாமிகையால் சாந்தியும், கனிஷ்டையால் இரட்சைணையும் . [அங்குஷ்ட- கட்டை விரல்; தர்ச்சனி- ஆள்காட்டி விரல்; மத்திமை-நடு விரல்; அனாகிகை- மோதிர விரல் ; கனிஷ்டை- சுண்டு விரல்.] செபிக்குங்கால் மானதம் மந்தம் ஒலி என மூன்று விதமுண்டு. மானதமாக உச்சிப்பது உத்தமம்; மானதம் முத்திக்கு ஏது; மந்தம் புத்தி சித்திக்கும்; இழிதொழிலரே ஒலித்து உச்சரிப்பர். 1008 செபித்தல் உத்தமம்; அதிற்பாதி மத்திமம்; 108 செபித்தல் அதமம் "வலது கரத்தில் ஜப மாலை கொண்டு - துணியால் மறைத்துக் கொள்க; தனது குருவும் அதனைக் காண்டல் கூடாது" என்பது விதி. செபிக்கும் காலம் உருத்திராக்க மாலை கைதவறிக் கீழே வீழின், ஜபமாலைக் கண்ணில் ஒற்றிக் கொண்டு, நன்னீராட்டி, 108 முறை காயத்திரி எண்ண வேண்டும். செபமாலை அறுந்து வீழின், குறைவற முன்போல் கோவையாக்கி, முறையே நீராட்டி. அகோரம் ஒரு நூறு உச்சரிக்க வேண்டும். தெய்வமணி என்னும் உருத்திராக்கம் – ருத்திராக்ஷம். கடவுள்களின் சின்னங்களில் மிக முக்கியமானது உருத்திராக்கம். இது சிவபெருமான், பிரம்மா, விஷ்ணு, முருகன், பார்வதி, லட்சுமி, வருணன், சரஸ்வதி, நரசிம்மர், அனுமான், இந்திரன், கருடன், அய்யப்பன், சனீசுவரன், வெங்கடாச்சலபதி, மாடசாமி, துர்கா, பைரவி, புவனேஷ்வரி, பவானி, குபேரன், குருவாயூரப்பன், பிள்ளையார் வடிவம் ஆகும். உருத்திராட்சம் என்பது சிவபெருமானின் திருக்கண், சிவபெருமானின் மணி எனப் பொருள். சிவபக்தருக்குக் உருத்திராக்க தானம் செய்வது சிறப்புடையது. உருத்திராக்கம் அணிந்தவரை பணிவதும் சிவ புண்ணியம். மேற்கண்டபவைகளைக் கூறியவை சிதம்பரம் மறையான சம்பந்தர் பாடி அருளிய 'உருத்திராக்க விசிட்டம் " என்னும் வெண்பா நூலில் கண்டனவாகும்.( திருவாடுவடுதுறை ஆதீனம் 1954- வெளியீடு.) அறுபத்து மூன்று நாயன்மார்களூள் ஒருவர் மூர்த்தி நாயனார். அவரைச் சுந்தரர் திருத்தொண்டர்த் தொகையில் " மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன் " என்று துதிப்பர். தன் பொருள் "மும்மை " என்பது உருத்திராக்கம், ஜடை, திருநீறு .இந்த மூன்றையே உண்மைப் பொருள் என மதித்து வாழ்ந்தவர் மூர்த்தி நாயனார். பல்லவ அரசர்களில் பெரும்பாலோர் சைவ சமயச் சார்பும் பற்றும் உடையவர்கள். இதனை அவர்கள் இயற்பெயராலும் சிறப்புப் பெயர்களானும் அறியவரும். திருநாவுக்கரசரால் சைவம் சார்ந்தவனாகிய மகேந்திரன் மகன், வாதாபி கொண்ட முதலாம் நரசிம்ம வர்மன், காஞ்சிக்கு அண்மையில் கூரம் என்ற ஊரில் வித்யாவிநீத பல்லவேசுவரக்கிருதம் என்ற சிவாலயத்தைக் கட்டினான். காஞ்சி புரத்தில் கைலாச நாதர் கோயிலைக் கட்டியவன் இராசசிம்மன் என்னும் பல்லவ அரசனின் தந்தையாகிய பரமேசுவரவர்மன் மகா பலிபுரத்தில் 'கணேசர்' கோவில் என்ற சிவாலாயத்தை அமைத்தவன். இக்கோவிலில் பதினொரு வடமொழிச் சுலோங்ககள் கல் வெட்டில் இருக்கிறது. அவை அரசனுக்கும் சிவனுக்கும் பொருள் பொருந்தும் வண்ணம் சிலேடையாக உள்ளது. அதில் இரண்டாவது, ஆறாவது சுலோகங்களில் அவ்வரசன் உருத்திராக்க மணிகளாலான சிவலிங்கத்தைத் தலைமுடியாக அணிந்தவன் என்று அறிய வருகிறது. கருவறையில் சிவலிங்கத் திருமேனிக்கு மேல் உச்சியில் மேற்கட்டி இருப்பது காணலாம்; பெரும்பாலான தலங்களில் பட்டாடையால் அமைக்கப் பெற்றிருக்கும் திருவாரூரில் பூங்கோயிலில் "முத்து விதானம்" அமைந்திருந்ததாகத் திருநாவுக்கரசர் கூறுவர். இங்கு கண்ட முத்து உருத்திராக்க மணியாகவும் இருக்கலாம் ஆகவே கருவறையில் சிவலிங்கத் திருமேனிக்கு மேல் உச்சியில் அமைய வேண்டுவது 'உருத்திராக்க விதானம்' இதை உணர்ந்த திருப்பனந்தாள் மட ஸ்ரீகாசி வாசி நந்தித் தம்பிரான் சுவாமிகள் பல சிவ தலங்களில் அமைக்க உதவினார். அப்படி அமைந்தவற்றுள் திருவண்ணாமலையில் அருணாசலேசுவரர் காணலாம். ஒருவரின் ஆளுமையை மாற்றவும், அவருக்கு நேரான நன்நோக்கு உண்டாக்கவும் வல்ல பலவேறு ஆற்றல் மிக்க பண்புகள் உத்திராக்க மணிகளுக்கு உண்டு. உருத்திராக்கத்தின் ஆற்றல் மிக்க பண்புகள் உருத்திராக்க மணிகளுக்கு உண்டு. உருத்திராக்கத்தின் ஆற்றல் பல காலமாக மக்களுக்குத் தெரிந்திருந்த போதும், எண்பதுகளின் பிற்பகுதியில் தான் இது மேலும் பிரபல்யம் அடைந்தது. குறிப்பாக, இந்தியாவிலுள்ள வாரணாசிப் பல்கலைக் கழகத்திலுள்ள தொழில்நுட்ப நிறுவனத்தில் டாக்டர். கஹாஸ் ராய் தலைமையிலான அறிவியலாளர்களின் ஆய்விற்குப் பின்னரே உருத்திராக்கம் புகழ்பெற்றது. இவர்கள் உயிர் வேதியியல் துறை (Bio-chemistry) மின் தொழில் நுட்பத்தின் மனநோய் மருத்துவத் துறை (Psychiatry) பொது மருத்துவத் துறை, உளவியல் துறை ஆகிய துறைகளுடன் இணைந்து உத்திராக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். இவர்கள் உருத்திராக்கத்தின் ஆற்றலை அறிவியல் நோக்கில் நிறுவியதுடன், தாம் கண்ட முடிவுகளை மீண்டும் செய்து காட்ட இவர்களுக்கு முடிந்தது. உருத்திராக்கத்திற்கு, சக்தி மிக்க மின்காந்தப் பண்புகள் (Electromagnetic) காந்த முனைகளால் ஈர்க்கப்படும் தன்மை (Pargmagnetic) அணுக்க நிலை மின்பாய்வுள்ள தன்மை (Inductive) ஆகியன உள்ளன என்பதை இவர்கள் நிலை நிறுவினர். மேற்கூறிய ஆற்றல்கள் உருத்திராக்கத்தின் முகப்புகள் அல்லது முகங்கள் மேற்பரப்பிலுள்ள பகுப்புகளின் எண்ணிக்கை பொறுத்து அமையும். ஒரு குறிப்பிட்ட முகத்தையுடைய உருத்திராக்கத்தையோ அன்றேல் ஒரு தொகுதி முகங்கள் கொண்ட உருத்திராக்க மணிகளையோ அணிவோருக்கு, ஒரு குறிப்பிட்ட வகை மின் துடிப்புகள் (Transformation in the personality) வாழ்க்கையை நோக்கும் தன்மை, தன் ஆர்வம், மனத்திட்பம் ஆகியன மாற்றம் பெறுகின்றன. மேலும் இந்த ஆய்வாளர்கள், உருத்திராக்க மணிகளை அணிவதால் இதயத்துடிப்புக் கட்டுப்படுத்தப்பட்டு, அதன் வழியாக மூளைக்குச் செல்லும் இரத்த அளவு சம சீராக்கப்படுகிறது என்பதையும் நிறுவினர். உயர்ந்த மன அழுத்தம் கூர்ந்த மனக்குவிவு ஆகியவை ஒருவருக்கு ஏற்படும் போது, மூளைக்கும் மூளையிலிருந்து இரத்த ஓட்டம் பீறிட்டும் செல்வது நோக்கத் தக்கது. இந்த மணிகளின் துணையுடன் ஒருவகைச் சாந்தம் ஒரு முகக்குவிவு, கூர்ந்த குவிவு ஆகியவற்றை எளிதில் பெறமுடிகிறது. அத்துடன் உருத்திராக்கம் அணிவோருக்கு குறிப்பிடத்தக்க அளவு மனத்திடத்தையும், உள்ளார்ந்த பலத்தையும் அளிப்பதாகக் கண்டு கொள்ளப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாட்டிற்கான உருத்திராக்க மணிகளைவிட, ஒன்றிலிருந்து இருபத்தொரு முகங்கள் வரை உள்ள அதிக ஆற்றலுள்ள உருத்திராக்க மணிகளுமுண்டு. இவை ஒவ்வொன்றும் நமது மனதையும், நம்மைச் சுற்றியுள்ள ஆக்கபூர்வமான சக்திகளையும் ஒரு நிலைப்படுத்தி, செழிப்பு, ஆக்கம், உள்ளுணர்வுத் திறன், எதிர்கால நிகழ்வுகள் குறித்து ஆய்தல், பாலின ஒத்திசைவு போன்ற சிறப்புப் பண்புகளை அளிக்கின்றன. உறுதியாக, உருத்திராக்கங்கள் நாம் இன்னும் திறம்படச் செயலாற்றவும், இன்னும் வெற்றி காணும் வாழ்க்கையை வாழவும் உதவுகின்ற வியத்தகு மணிகளாகும். உருத்திராக்க மணிகள் அணிபவர்களுக்கு மன அழுத்தம் குறைந்துள்ளதையும் அவர்கள் கண்டனர். இவ்வாறு மன அழுத்த நிலை குறைவது, தொடர்ச்சியாகச் சாந்தப்படுத்தும் மருந்துகளை அதிக அளவில் உட்கொள்வதால் மட்டுமே செய்ய முடிந்துள்ளது. உருத்திராக்க மணிகள் ஆக்கப்பூர்வமான அதிர்வலைகளை வெளிக் கொணர்ந்து ஒருவருக்கு உடலிலும் மனதிலுமுள்ள எதிர்மறை உணர்வுகளை வெளியேற்றுகின்றன. இந்த ஆய்வாளர்களால் நரம்பு மாற்றிகள் (Neuro Transmiters) டொபமைன் (Dopamine), செறொரின் (Serotinin), போன்ற செயல்பாடுகளில் உருத்திராக்க மணிகளை அணிவதால் ஏற்படும் தாக்கங்களையும் நிலைநாட்ட முடிந்தது. இத்தகைய தாக்கங்களினால் ஒருவரது ஆளுமையிலும் மனப்பாங்கிலும் ஆக்கபூர்வமான மாற்றங்கள் நிகழ்கின்றன. உருத்திராக்கத்தை அணிவோர், தமக்கு ஏற்படும் ஏனைய நன்மைகளுடன், அவர்களுடைய மன அழுத்த நிலை எதிர்பாராத அளவு குறைந்திருப்பதையும் கண்டனர். இத்தகைய மன அழுத்த நிலைகுறைவு, இதுவரை சாந்தப்படுத்தும் மருந்துகளை அதிக அளவில் தொடர்ந்து உட்கொள்வதால் பெறப்பட்டுள்ளது மட்டுமே உருத்திராக்க மணிகள், ஆக்கபூர்வமான அதிர்வலைகளை வெளிக்கொணர்ந்து ஒருவருக்கு உடலிலும், மனதிலுமுள்ள எதிர்மறை உணர்வுகளை வெளியேற்றுகின்றன. உருத்திராக்க மணிகள் ஒருவரை 'அல்பா மன நிலைக்கு' (Alpha state of mind) இட்டுச் செல்கின்றன. யோகிகள் வியத்தகு வகையில், மனதைக் கட்டுப்படுத்தக் கூடியவர்களாக இருந்திருக்கின்றனர். அதாவது உடலில் தன்முனைப்புடன் கூடிய செயல்கள், தன்முனைப்பற்றுச் செய்யும் செயல்கள் இரண்டையும், குறிப்பாக உருத்திராக்க மணிகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தக் கூடியவர்களாக இருந்தனர். இவர்கள், உடலின் பாதுகாப்பிற்கு எந்த விதத் துணிகளும் அணியாமலேயே இமாலய மலையின் கடுங்குளிரைத் தாங்கினார்கள். இவர்கள் தமது உடலிலுள்ள வெப்பத்தை வெளிக் கொணரும் போது அதைக் கட்டுப்படுத்தி அதன் வழி குளிரைத் தாங்கினார்கள். இது சாதாரணமாக செய்யத்தக்க செயல் அல்ல. உருத்திராக்க மணிகளுக்குச் சில விளக்க முடியாத, ஆனால் வியக்கத்தக்க மின்காந்தப் பண்புகளும், ஊசி அடுத்த முறைப் பண்புகளும் [Acupressure] உண்டு என்பதைப் ஆய்வாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளார்கள். கழுத்தைச் சுற்றி உருத்திராக்கத்தை அணிவதால், அது இரத்தச் சுற்றோட்டத்தைக் கட்டுப்படுவதுடன் நமக்கு உகந்ததாகவும் ஆகிறது. நமது இதயத் துடிப்புகளை கட்டுப்படுத்துவதால் சாத்தியமாகிறது. உடலில் அல்லது மனதில் அசாதாரண நிலையோ அன்றேல் ஏதாவது நோயோ இருந்தால் அவற்றைச் சுட்டிக் காட்டும் இரத்தச் சுற்றோட்டம் விளங்குகிறது. எடுத்தக்காட்டாக ஒருவர் உயர்ந்த மன அழுத்த நிலையையோ அன்றேல் உறுப்பு உறுப்புகளில் சீர்கேட்டையோ உணரும் நேரத்தில் அவருடைய இரத்தச் சுற்றோட்ட வீதம் அதிகமாகிறது.இதற்கு மாறாக இரத்தச் சுற்றோட்டத்தைக் கட்டுப்படுத்துவதால் அவருடைய மன அழுத்த நிலை குறைகிறது. சோமடைசேசன் (Somatisation) அதாவது சீரற்ற சுவாசமும் இரத்தச் சுற்றோட்டமும் கட்டுப்படுத்தப்பட்டவுடன் அதற்கான காரணி அதன் முக்கியத்துவத்தை இழந்து விடுகிறது. இந்த அடிபப்டை விதிமுறையைக் கொண்டே எல்லா சைகோ பார்மகோலொஜின் (Psycho pharmacological) மருந்துகளும் செயல்படுகின்றன். இரத்தச் சுற்றோட்டம் சாதாரண நிலைக்கு வந்ததும், ஒருவருக்கு மனத்தெளிவு ஏற்படுத்துவதுடன், உடல் மனம் ஆகிய இரண்டின் செயல்பாடுகளிலும் கூர்ந்த நோக்கு உண்டாகின்றது. உருத்திராக்கம் நமக்கு, உடலில் இலேசாக இருக்கும் உணர்வையும் சாந்தத்தை அளிக்கிறது. அத்துடன் அது நமது ஒட்டு மொத்த நலத்தையும் திறனையும் மேம்படுத்துகிறது. உருத்திராக்க மணிகளை அணிவதால் மட்டும் ஏற்படும் வியத்தகு விளைவுகளைக் கண்ட பலர், இம்மணிகள் தெய்வீகமானவை இறைவனால் அனுப்பப்பட்டவை எனக் கருதி அவற்றை வணங்கினர். உண்மையான உருத்திராக்க மணிகளை அணிந்த ஆயிரக்கணக்கான் மக்கள், அவை தமக்கு இரத்த அழுத்தம், மனச்சோர்வு, மற்றும் நரம்புக் கோளாறு உட்பட்ட மனத்துடன் தொடர்பான தொல்லைகள் ஆகியவற்றிலிருந்து குறிப்பிடத்தக்க நிவாரனம் கிடைத்ததாக அறிகிறார்கள். அதை அணிவோருக்குத் தன்னம்பிக்கை, உள்ளார்ந்த பலம் (Inner Strength) இரண்டையும் குறிப்பிடத்தக்க அளவில் மேலோங்கச் செய்வதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. சாதாரண பயன்பாட்டிலுள்ள உருத்திராக்க மணிகளை விட, மிகச் சக்தி வாய்ந்த ஒன்று முதல் இருபத்தொரு உருத்திராக்க மணிகளும் உண்டு. இவை ஒவ்வொன்றும் நமது மனதையும், நம்மைச் சுற்றியுள்ள ஆக்கப்பூர்வமான சக்திகளையும் நேர்ப்படுத்தி, அவற்றைச் செழிப்பு (Prosperity) படைக்கும் ஆற்றல் (Creativity) உள்ளுணர்வுத் திறன் (Inductivity) எதிர்காலத்தில் வரக்கூடிய நன்மை, தீமை பற்றி ஆய்ந்து நோக்கும் திறன், பாலின ஒத்திசைவு போன்றவை செயல்படவும், மேலும் வெற்றியுள்ள வாழ்க்கையை நாம் வாழவும் உதவுகின்றன. தமிழ் இலக்கிய விமர்சனக் கலைக்களஞ்சியம் தமிழ் இலக்கிய விமர்சனக் கலைக்களஞ்சியம் என்பது தமிழ் இலக்கியம், இலக்கியப் போக்குகள், விமர்சனங்கள், விமர்சகர்கள் போன்ற பொருட் பரப்பை உள்ளடக்கிய ஒரு கலைக்களஞ்சியம் ஆகும். இது இணையத்தில் www.encyclopediatamilcriticism.com என்ற முகவரியில் உள்ளது. பயனர்கள் இதை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது நூல் வடிவமாகவும் வெளி வந்துள்ளது. இதை ம. வேதசகாயகுமார் சு. இராஜேந்திரன் ஆகியோர் முதன்மையாகப் பங்களித்து உருவாக்கி உள்ளனர். மலேசியத் தமிழ் எழுத்துலகம் மலேசியத் தமிழ் எழுத்துலகம் மலேசியத் தமிழ் ஆக்கங்கள், ஆக்கர்கள், சூழல் பற்றிய விபரங்களை உள்ளடக்கிய வலைத்தளம் ஆகும். மலேசியத் தமிழர்கள் அல்லது மலையகத் தமிழர்கள் தமிழ் மொழிக்கு வழங்கி உள்ள பங்களிப்பைப் பற்றி இத் தளம் சிறப்பாக விளக்குகிறது. சங்கதம் (வலைத்தளம்) சங்கதம் என்பது சமசுகிருத மொழி பற்றிய ஒரு தமிழ் வலைத்தளம் ஆகும். "வடமொழிக்கு ஒரு தமிழ்த் தளம்" என்பது இந்த வலைத்தளத்தில் கோசமாக அமைகிறது. "சங்கதத்தில் (சமசுகிருதம்) ஆர்வம் கொண்டவர்களுக்காக அது குறித்த செய்திகளை தொகுத்து வழங்குவதும், கற்றுக்கொள்ள உதவுவதும், இதனைப் பற்றிய கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சிறு குறிப்புகள் ஆகியவற்றை தமிழில் எளிமையாக வழங்குவதே இந்த வலைப் பதிவின் நோக்கம்" என்று அந்த வலைத்தளத்தில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்க முதற்குடிமக்கள் தற்கால வட, தென் அமெரிக்க நாடுகளில் தோற்றம் கடந்த 400 ஆண்டுகளில் நிகழ்ந்த நிகழ்வாகும். அவர்களுக்கு முன்பு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வட, தென் அமெரிக்காக்களில் பல குழுக்களை அல்லது இனங்களைச் சார்ந்த மக்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இவற்றில் சில பெரிய நாகரிங்களாக வளர்ச்சி பெற்றிருந்தன. இந்த மக்களே அமெரிக்க முதற்குடிமக்கள் என்று அறியப்படுகிறார்கள். இரண்டு கண்டங்களில் பரந்து வாழ்ந்த இந்த மக்கள் பல குழுக்களாக அல்லது நாடுகளாக வாழ்தனர். இவர்களுக்கு இடையேயான சூழலிய, மொழி, பண்பாட்டு, வரலாற்று, வாழ்விய வேறுபாடுகள் மிகப் பல. எனினும் ஐரோப்பிய அரசுகளால் தோற்கடிக்கப்பட்டு, அடக்கப்பட்ட வரலாறு இவர்கள் எல்லோருக்கும் உள்ளது. ஆசிய, ஆபிரிக்க நாடுகள் போல் அல்லாமல் இந்த நாடுகள் அல்லது இனக் குழுக்கள் என்றும் அரசியல் விடுதலை பெறவில்லை. ஐரோப்பியர்கள் ஏற்படுத்திய நாடுகளுக்குள்ளே தமது சுதந்திரத்தை, உரிமைகளை இவர்கள் நிலைநாட்ட முயற்சி செய்கிறார்கள். அமெரிக்க முதற்குடிமக்கள் மெய்யியல் அமெரிக்க முதற்குடிமக்கள் மெய்யியல் என்பது அமெரிக்க முதற்குடிமக்கள் கூறிய, எழுதிய, வெளிப்படுத்திய மெய்யியல் ஆகும். அமெரிக்க முதற்குடிமக்கள் பல்வகைப்பட்டவர்கள். எனவே அவர்கள் எல்லோரும் ஒரே மெய்யியலைக் கொண்டிருக்கவில்லை. எனினும், இவர்களின் பல மெய்யியல் கருத்துக்கள் பல ஐரோப்பிய, ஆசிய மெய்யியல் கருத்துக்களில் இருந்து பல வழிகளில் வேறுபட்டவை. குறிப்பாக சொத்து, சூழலியல், முடிவெடுக்கும் முறை, ஆன்மிகம் ஆகிய துறைகளில் பல முதற்குடிக் குழுக்கள் கொண்டிருந்த மெய்யியல் மிகவும் மாறுபட்டதாகும். பீட்டாபைட்டு பீட்டாபைட் ("Petabyte") என்பது அனைத்துலக முறை அலகுகளின் பீட்டா என்னும் முன்னொட்டை பைட் என்பதோடு சேர்ப்பதால் உருவானதாகும். இது கணினிகளின் தகவல் அளவு மற்றும் சேமிப்பளவைக் குறிப்பதற்காகப் பயன்படுகின்றது. பொதுவாக 1000 அல்லது 1024 டெராபைட் என்றவாறு கையாளப்படுகின்றது. பல்வேறு துறைகளில் பீட்டாபைட்டின் பயன்பாடுகள்; isohunt என்ற டொரண்ட் தளம் சூன் 2010-ல் 10.8 பீட்டாபைட் (அளவுள்ள?) கோப்புகளை வரிசைப்படுத்தியுள்ளது. பரிவேடம் பரிவேடம் ("halo") என்பது பரிதியையோ நிலவையோ சுற்றிக் காணப்படும் ஒளிவட்டமாகும். இது மெல்லிய, வெண்ணிறங் கொண்ட குருள் மேகங்களில் ("cirrus clouds") காணப்படும் பனிப்படிகங்களால் தோற்றுவிக்கப்படுகிறது. இப்படிகங்கள் சிறு அறுங்கோணப் பட்டகங்களைப் போலச் செயல்பட்டு வெண்ணிற அல்லது வண்ணப் பரிவேடத்தை உருவாக்குகின்றன. கதிரவனைச் சுற்றிக் காணப்படும் பெரிய பரிவேடத்திற்கு அகல்வட்டம் என்றொரு பெயரும் உண்டு ("அகல்வட்டம் பகல்மழை" என்பர்). இவ்வகை ஒளிவட்டங்கள் அரிதானவையே அல்ல; உலகின் வெவ்வேறு பகுதிகளில் வருடம் முழுவதும் இவை ஏற்படுகின்றன. வானில் பொதுவாகத் தென்படும் பரிவேடம் 22 பரிவேடம் என்று அழைக்கப்படுகின்றது. ஏனெனில், இப்பரிவேடம் கதிரவனிலிருந்து (அல்லது நிலவிலிருந்து) 22 தொலைவில் இருக்கிறது. கதிரவன், நிலவு இவ்விரண்டும் வானத்தின் 1/2 அளவிலான பகுதியை மறைப்பவை; எனவே, 22 அளவானது கதிரவன் அல்லது நிலவு இவற்றை விட 44 மடங்கு பெரியதாக இருக்கும். அகல்வட்டத்தை நேரடியாக வெற்றுக் கண்ணாலோ, குளிர்க்கண்ணாடியினாலோ, தண்ணீரில் / கலங்கிய நீரில் எதிரொளிப்பிலோ, இன்னபிற கருவிகளைக் கொண்டோ காணக்கூடாது; சூரியன்-தொடர்பான எந்தவொரு வானியல் நிகழ்வையும் காண விரும்புவோர், போதிய பாதுகாப்பு முறைகளை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். "காண்க".சூரிய கிரகணங்களைப் பாதுகாப்பான முறையில் காண்பது எவ்வாறு? மரண விறைப்பு (சட்டஞ்சார் மருத்துவம்) சட்டம்சார் மருத்துவத்தில், மரண விறைப்பு ("Death erection") எனப்படுவது இறப்பிற்குப் பின் ஏற்படும் ஆண்குறி விறைப்பு ஆகும். இது இறுதி விறைப்பு ("terminal erection" எனவும் அழைக்கப்படும். பெரும்பாலும் இது தூக்கு தண்டனை தரப்பட்ட ஆண் பிணங்களில் காணப்பட்டுள்ளது. கயிற்று முடிச்சு சிறுமூளையில் (cerebellum) தரும் அழுத்தத்தால் இது உண்டாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஆண்கள் மட்டுமின்றி பெண்களிலும் இது காணப்படுகிறது. சிறுநீர், கோழை, சுக்கில நீர் வெளித்தள்ளல் ஆகியவற்றுடன் கூடிய முழுவதுமான ஆண்குறி விறைப்பு காணப்படும். மரண விறைப்பு காணப்பட்டால் இறந்தவர் வன்முறையான மரணத்தை அடைந்துள்ளார் என ஊகித்து உணரலாம். உழிஞைத் திணை பகைவர் நாட்டின் மீது படையோடு சென்று மதிலை வளைத்துப் போரிடுவது உழிஞைத் திணையாகும். இவ்வாறு போரிடும் வீரர்கள் உழிஞைக் கொடியாலான மாலையைச் சூடிக்கொண்டு போரிடுவர். பகைவன் ஒளிந்த அரணததைக் கைப்பற்ற எண்ணிய மன்னன் அம்மதிலை வளைப்பான். இவ்வாறு வளைக்குங்கால் குடை, வாள் ஆகியவற்றில் ஒன்றைப் புற வீடு விடுதலும், மதிலின் புறத்தே சென்று தங்குதலும், தோற்படை பெருக்கம் பேசுதலும், காவற்காட்டைக் கடத்தலும், கிடங்கில் போரிடுதலும், மதில்மேது ஏணி சார்த்திப் போரிடுதலும் நடைபெறும். பின்னர் மதிலின் உள்ளே குதித்து அகத்தோரை வென்று அரணம் கைப்பற்றப்படும். மதிலை அழித்துக் கழுதை ஏர் கொண்டு உழுது காவடி விதைத்தலும் (வரகு, எள், கொள்ளு முதலியன விதைத்தல்) , வாளைக்கழுவுதலும், முடிசூடிக் கொள்வதும் நடைபெறும். அகத்தோன் நிறையளிக்க அதனைப் பெற்று மதிலை அழிக்காமல் திரும்புவதும் உண்டு. ஒரு மதிலை அழித்தவுடன் மற்ற மதிலகத்துள்ளோரும் தத்தம் முரண் அவிதலும் உண்டு. இதுவே உழிஞைத் திணைஆகும். வெட்சி நிரை கவர்தல்; மீட்டல் கரந்தையாம் வட்கார் மேல் செல்வது வஞ்சி ; உட்காது எதிர்ஊன்றல் காஞ்சி ; எயில்காத்தல் நொச்சி அது வளைத்தல் ஆகும் உழிஞை - அதிரப் பொருவது தும்பையாம் ; போர்க்களத்து மிக்கோர் செரு வென்றது வாகையாம் புறத்திணைகளின் செய்திகளை கூறும் இந்தப் பழம்பாடல் மூலம் இத்திணையை அழகாக விளக்கலாம். நொச்சித் திணை மதிலை வளைத்துப் போர் செய்யும் உழிஞைத் திணை வீரர்கள் மதிலுள் புகாமல் தடுத்துப் போரிடுபவர். நொச்சித் திணை வீரராவர். இவர்கள் சிந்துவாரம் என்றறியப்படும் நொச்சிப் பூமாலையைச் சூடிப் போர் செய்வர். நொச்சி திணை மற்றும் துறைகளை புறப்பொருள் வெண்பாமாலை சூத்திரம் பின்வருமாறு தொகுத்தளிக்கிறது: இப்பாடல் கூறுவது, "நொச்சி" என்பது திணை என்றும், பின்வரும் எட்டும் நொச்சியின் துறைகள்: உழிஞை வீரரோடு போரிடும் வேளையில் வீரமரணம் அடைந்து சுவர்க்கம் அடைவதினைக்குறிக்கும் திணை. மதிலைச்சுற்றி அகழிகள் மதிலைப்பிடிக்க வரும் வீரர்களின் முன்னேற்றத்தை தடுக்கும் விதமாக அமைந்திருக்கும். எனவே, இவ்வகழிகளை உழிஞை வீரர்கள் அழிக்காது போரிடுவதைக்குறிக்கும் திணை. அகழிகளைக்காக்கும் நொச்சி வீரர்கள் உழிஞை வீரரோடு போராடி வெற்றி கொள்வதை குறிக்கும் திணை. மதிலைக்காக்க வேண்டி பெரிய மதில்களின் மீது பாய்ந்தோடும் குதிரையின் (பரி) திரத்தைக்கூறும் திணை. எயில் என்பது மதிலைக்குறிக்கும். இத்திணை மதில் மீதிருந்து உழிஞை வீரர்களோடு போரிடுவதைக்குறிக்கும் திணை. மதிலைக்காக்கும் வீரர்கள் வீரமரணம் அடைந்து வானிலிருந்து தேவமகளிர் வந்து அவர்களை அழைத்து செல்வதனை குறிக்கும் திணை. மதிலின் மீது கூட்டமாக வீரர்கள் இல்லாவிடினும் ஒவ்வொரு நொச்சி வீரரும் தனியே நின்று உழிஞை வீரரோடு போரிடும் பெருந்திறத்தை உரைக்கும் திணை. மதிலை சுற்றியும் தன் உழிஞை வீரப்படைகளை நிறுத்திய மன்னர், நொச்சி வேந்தரின் மகளை மணமுடிக்க வேண்டுதலும், அதனை நொச்சி மன்னர் ஏற்க மறுத்தலையும் விளக்கும் திணை. புறத்திணைகளின் செய்திகளை கூறும் இந்தப் பழம்பாடல் மூலம் இத்திணையை அழகாக விளக்கலாம். தும்பைத் திணை இருபெரும் வேந்தர்களும் நாள் குறித்து, பொதுவிடத்தில் போர் செய்தல் தும்பைத் திணை ஆகும். இவ்வீரர் இரு பக்கத்தவர்களும் தும்பைப் பூமாலை சூடிப் போர் செய்வர். புறத்திணைகளின் செய்திகளை கூறும் இந்தப் பழம்பாடல் மூலம் இத்திணையை அழகாக விளக்கலாம். பொதுவியல் திணை பொதுவியல் திணை புறத்திணைகள் ஒன்பதிலும் வகைப்படுத்த முடியாத பாடல்களான அறம் கூறும் பாடல்களையும், அறிவு கூறும் பாடல்களையும் உள்ளடக்கியது. புறத்திணைகளுள் வெட்சி, கரந்தைத் திணைகள் பசுக்களை கவர்தல், அவற்றை மீட்டல் எனவும், வஞ்சி, காஞ்சித் திணைகள் பகைவர் நாட்டின்மேல் படையெடுத்தல், அவர்களை நாட்டுள் விடாமல் தடுத்தல் எனவும், உழிஞை, நொச்சித்திணைகள் மதிலை வளைத்தல், அதைக் காத்தல் என அமைந்து எதிர் எதிர் திணைகளாக அமைந்திருத்தல் சிறப்புடையது. அடுத்துக் கூறப்படும்தும்பைப் போர்முறை, இடம், நாள், நேரம் குறித்துச் செய்யப்படும் அறப்போராக வீரம் விளைய நின்றது என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றியைப் பாராட்டுதல் வாகை என்பதோடு அமையாமல், தோற்றவர் பக்கத்தும் வீரம் வெளிப்பட போர் செய்தவர்களையும் சிறப்பித்து, பொதுவான வீரம், கொடை இவற்றைப் பேசும் பாடாண் திணை. தமிழர் நாகரிகத்திற்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது. சௌரம் EZHAL ARSAN சூரியனை முழு முதற் வழிபடுகடவுளாகக் கொள்வது சௌர சமயமாகும். பேரொளி வடிவினனாக அவனை வழிபட வேண்டும் என்று கூறுவது இச்சம கருத்தாகும். சிலர் நான்முகனான பிரம்மனை வழிபடுவது "சௌரம்" என்றும் கூறுகின்றனை. காரணம் சௌரம் என்றால் நான்கு என ஒரு பொருள் உண்டு. அனால் சௌரம் என்பது சூரியனைக் குறிக்கும். ஏனெனில் பஞ்சாங்களில் சூரியனின் சஞ்சாரத்தை வைத்துக் கணக்கிடுவதை சௌரமானம் என்றும் சந்திரனின் நிலையை வைத்துக் கணக்கிடுவதை சாந்திரமானம் என்று கூறுவார்கள். நா.கதிரை வேற்பிள்ளை தமிழ் மொழி அகராதியிலும் சௌரம் என்ற வார்த்தைக்கு சூரியன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சூரியனுக்கு உள்ள கோவில்களில் குறிப்பிடத்தகுந்தது கும்பகோணம் அருகில் உள்ள சூரியனார் கோவில் தலம்.  இந்த ஆலயத்தை கட்டுவித்தவர் முதலாம் குலோத்துங்க சோழ மன்னர் (1079 -1120).  சூரியக் கடவுள் " கொடிநிலை"  என்ற பெயரால் அழைக்கப்பட்டதாக தொல்காப்பியத்தில் குறிக்கப்பட்டிருக்கிறது.  சிலப்பதிகாரத்தில் சூரிய கோவில் " உச்சி கிழான் கோட்டம் " என்ற பெயரால் குறிக்கப் பெறுகிறது.  உலகில் எழுந்த பழமையான நூலான ரிக் வேதத்தில் சூரிய வழிபாடு குறிக்கப் பட்டிருக்கிறது.  சௌராஷ்டிரம் என்ற பாரத வர்ஷத்தின் ஐம்பத்தி இரண்டு நாடுகளில் ஒன்று சூரிய வழிபாட்டின் அடிப்படையில் எழுந்த பெயராகும். ஐரோப்பா, தென் அமெரிக்கா, சீனா முதலிய நாடுகளில் சிதைந்த நிலையில் சூரியனார் கோவில்கள் உள்ளன பிட் பிட் அல்லது "துணுக்கு" என்பது கணினி மற்றும் தொலைதொடர்பு இயலின் அடிப்படை தகவல் அளவு கோல். எந்த ஒரு கருவி வெறும் இரண்டு நிலையை (binary state) வைத்து இயங்குமோ அங்கு மட்டுமே இந்த பிட் அளவுகோல் பயன்படுத்தமுடியும். உதரணத்திற்கு கணினி, லக்கமுறை சுற்றுபலகை ( டிஜிட்டல் சிர்கிட் போர்டு ) உபயோகிக்கும் கருவிகளில் இந்த முறையான தகவல் சேமிப்பை உபயோகிக்கலாம். ஒரு பிட் என்பது 'பூஜ்யம்' ( 0 - zero ) அல்லது 'ஒன்று' ( 1 - one ) என்ற என்னை குறிக்கும். இது ரும கணக்கீடு ( binary arithmetic) முறையை சார்ந்தது ஆகும். இதை நிலைமாற்றி ( switch ) என்றும் சொல்லுவார்கள் ( 0 அல்லது 1 ). இந்த பிட் எனப்படும் அளவுகோல் கணினி உலகில் ரூப என் எனவும் குறிபிடுவர்கள். அதே போல இதனை ஏரண மதிப்பு அ.த மெய் ,பொய் ( logical value ) போலவும் பயன்படுத்துவார்கள், அதுபோல செயற்பாடு நிலைபோலவும் ( Activation State ) அதாவது on / off போல உபயோகிபர்ர்கள். =வரலாறு= 1984ல் கிளைடே எ. ஷன்னன் ( Claude E. Shannon ) என்பவர் தன்னுடிய ஆய்வு கட்டுரை 'A mathematical theory of computation' யின் மூலம் முதன் முதலில் 'பிட்' என்ற வார்த்தையை பயன்படுத்தினர். பின்னர் கொணரத் சுசே ( Konrad Zuse ) என்பவர் முதன் முதலில் இந்த பிட் கணிதத்தை வைத்து முதல் நிரலாக்க கணினிய கண்டுபிடித்தார். பிட்டை பல வடிவங்களில் உபயோகிகிரர்கள். பைடு ( 8 பிட் = 1துண்டு - byte ) , கிலோ பைடு ( 1024 பிட் = 1 கிலோ பைடு) , மெகா பைடு ( 1024 கிலோ பைடு = 1 மெகா பைடு ). கணினி தகவலை ஒரு குழுவாக செயல்படுத்தும். பெரும்பாலும் உபயோகிக்க கூடிய சில குழுக்கள்: அரை பைடு ( nibble ) , பைடு (byte), வார்த்தை ( word = 16 பிட் , 32 பிட் , 64 பிட் ) கௌமாரம் கௌமாரம் முருகனை முழு முதற் கடவுளாக கொண்ட சமயமாகும். குமாரனாகிய முருகனே கடவுள். பேரின்ப வடிவினனாக அவனை வழிபட வேண்டும் என்ற சமயக் கோட்பாட்டை உடையது. ஆதிசங்கரர் உருவாக்கிய (6)ஷண்மதங்களில் இதுவும் ஒன்றும். (6) ஷண்மதங்களாவன: கணபதி வழிபாடு காணாபத்தியம், சிவ வழிபாடு சைவம், விஷ்ணு வழிபாடு வைணவம், சூரிய வழிபாடு சௌரம், அம்மன் வழிபாடு சாக்தம், முருக வழிபாடு கெளமாரம். கௌ என்ற எழுத்துக்கு மயில் என்று பொருள். முருகன் மயில்வாகனன் என்பதால் இச்சமயம் கௌமாரம் எனப் பெயர் பெற்றது. சாக்தம் சாக்தம் சக்தியை வழிபடு கடவுளாகக் கொள்ளும் சமயம் ஆகும். சக்தியே தெய்வம், அவரைத் தாயாக வழிபட வேண்டும் என்ற கோட்பாட்டை உடையது.இச்சமயத்தினர் தங்களை சக்தி தாசர்கள் என்றும் அழைத்துக் கொள்வர். செவ்வாடை,குங்குமமும் அணியும் வழக்கம் இவர்களிடம் உண்டு. சக்தியே முழு முதற் கடவுள் என்றும் அனைத்திலும் உள்ளும் புறமும் கலந்து இருக்கும் சக்தி அனைத்துலகத்தையும் படைத்து,காத்து,தன்னுள் ஒடுக்குகிறாள் என்பது இவர்களின் கருத்து ஆகும். சாக்தர்களில் இரண்டு வகையான பிரிவுகள் உள்ளன. வாமாசாரர்கள் கெளலிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.இவர்கள் வேதங்கள் கூறும் வழிபாட்டுவிதிகளை பின்பற்றாமல் , தங்கள் வாழ்க்கை முறைக்கு ஏற்ப விதிகளை உருவாக்கிக் கொள்வர். இவர்கள் ஸ்ரீ வித்யோபாசகர்கள் அல்லது வைதிகர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் வேதத்தினை பின்பற்றுபவர்கள் ஆவர்.சந்தியாவந்தனம் , மூதாதயர்களுக்கு கடன் செலுத்துதல் , வேள்விகள் செய்தல் போன்றவற்றை பின்பறுபவர்கள் ஆவர். சதி தேவியான தாட்சாயிணியின் உடல் பாகங்கள் விழுந்த 51 சக்தி பீடங்கள் சக்தி வழிபாட்டில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அருள் நிலையம் பதிப்பில் வெளிவந்த இந்தியாவில் சமயங்கள் நூல்.ஆசிரியர்-முனைவர் பெ.சுயம்பு. ஈனயானம் ஹீனயானம் என்பது பௌத்த சமயத்தின் பெரிய உட்பிரிவாகும். இதனை குறுகிய பாதை என்றும் கூறுவர். மற்றொன்று மகாயானம். மாற்றம் மிகாத திரிபிடகத்தை பின்பற்றுவர்கள் ஈனயானர்கள். துவக்கத்தில் இவர்கள் பாலி மொழியில் தங்கள் சமய நூல்களை எழுதியவர்கள். ஈனயான பிரிவை பின்பற்றுபவர்கள் துறவறத்தை வாழ்க்கை நெறியாக கொண்டவர்கள். புத்தரால் அருளப்பட்ட நெறி முறைகளை அவ்வாறே ஏற்றுக்கொள்வது இவர்களது கொள்கை. இச்சமயத்தின்படி புத்தர் சாதாரண மனிதராக மதிக்கப்பட்டார். புத்தரின் நல்லொழுக்க நெறிகளை கடைப்பிடிப்பதன் மூலம் பரிநிர்வாணம் அடையலாம் என்பதை வலியுறுத்துவது ஹீனயான புத்த சமயமாகும். இப்பிரிவு அசோகர் காலத்தில் கிளைத்தது. ஈனயான பௌத்த சமயத்தில் பின்னர் பல உட்பிரிவுகள் சௌத்திராந்திகம், வைபாடிகம் போன்ற பிரிவுகள் தோன்றியிருந்தாலும், தற்போது தேரவாதப் பிரிவே நிலைத்துள்ளது. ஆரிய சமாஜம் ஆரிய சமாஜம் கி.பி. 1875ல் தோற்றுவிக்கப்பட்டது. இதைத் தோற்றுவித்தவர் சுவாமி தயானந்த சரஸ்வதி ஆவார். ‘ஆரியா’ என்பதன் பொருள் கடவுளின் குழந்தை என்பதாகும்.அனைத்து ஆன்மாக்களும், கடவுளின் குழந்தைகள் என்றும், அவை கடவுளுக்கு கீழ்படிதல் உள்ளவையாக இருக்க வேண்டும் என்பதும் தயானந்தரின் கருத்துகளாகும். தயானந்தரின் இயற்பெயர் மூலசங்கரன். கி.பி. 1824ல் குஜராத்தில் வசதியுள்ள பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் அம்பா சங்கரர் ஆகும். இவரது 20வது வயதில் திருமணம் முடிக்க இவரது தந்தை விரும்பினார். அதில் விருப்பம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறினார். உண்மையைத் தேடி இந்தியா முழுமைக்கும் சுற்றி பல இடங்களில் கல்வி கற்றார். 15 ஆண்டுகள் அலைந்து, திரிந்து இறுதியாக மதுராபுரிக்குச் சென்றார். அங்கு சுவாமிஜி வீராஜானந்தரிடம் சீடராக ஆனார். அதன் பின்பு ‘சத்தியார்த்த பிரகாசம்’ என்ற நூலை எழுதினார். தயானந்த சரஸ்வதி சுவாமிகள் தம் வாழ்நாளை வேத சமயத்தைப் பரப்புவதிலும் இந்து, சமய, சமுதாயப் பணிகளிலும் கழித்தார். ஐந்தாண்டுகளுக்குள் பல்லாயிரக் கணக்கானோர் இவரைப் பின்பற்றத் தலைப்பட்டனர். உருவ வழிபாட்டை எதிர்த்த இவர், வேதங்களை நம்பினார். ஆரிய சமாஜம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் மனித சமுதாய மேம்பாட்டிற்கு பல சமுதாயப் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளது. இந்து சமயத்தில் இருந்து வரும் தீமைகளைக் களையவும் வேத சமயத்திற்கு புத்துயிர் அளிக்கவும் முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. ஜாதிக்கொடுமை, பெண்கள் மீதான அடக்குமுறை ஆகியவற்றைக் கடுமையாக எதிர்த்தது. மும்பையில் இந்த சமாஜம் ஆற்றல் பெற்றிருந்தது. பிரம்ம சமாஜம் பிரம்ம சமாஜத்தை அடிப்படையான பிரம்ம சபையை நிறுவியவர் இராசாராம் மோகன் ராய் ஆவார். இவரைப் புதிய இந்தியாவை நிறுவியர் என்னும் புதிய மறுமலர்ச்சியை தொடங்கி வைத்தவர் என்றும் கூறுவர். பிரம்ம சபை கி.பி. 1828ல் நிறுவப்பட்டது. இதுவே முதல் சீர்திருத்த இயக்கமாகும். 19ஆம் நூற்றாண்டிலேயே பல பிரிவுகளாக பிரம்ம சமாஜம் பிரிந்திருந்தது. 1861 ஆம் ஆண்டு நவீன் சந்திர ராய் தற்போதுள்ள பிரம்ம சமாஜத்தை ஆரம்பித்தார். இராசாராம் மோகன்ராய் கி.பி. 1772ல் பிறந்தார். வங்காளத்திலுள்ள வசதி படைத்த வைதிக பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் கற்றறிந்த மொழிகள் ஆங்கிலம், பிரஞ்சு, இலத்தீன், ஹீபிரு, கிரேக்கம், சமஸ்கிருதம் மற்றும் இந்தி போன்றவைகளாகும். இந்து சமய தரும சாத்திரங்கள், வேதங்கள், உபநிடதங்கள் போன்ற பிறவற்றையும் ஆழ்ந்து பயின்றிருந்தார். ஆங்கில நாகரிகத்தில் அதிக நாட்டம் கொண்டதால் பலமுறை இங்கிலாந்து சென்று திரும்பினார். அவர் தமது நாற்பதாவது வயதில் வேலையை விட்டு விலகினார். எஞ்சிய வாழ்நாளைச் சமுதாயப் பணிக்காக அர்ப்பணித்தார். அவர் இந்து சமுதாயத்தில் இருந்த மூடநம்பிக்கை களுக்கும் மற்றும் ஏனைய தீமைகளுக்கும் எதிராகக் குரல் எழுப்பினார். இந்த நிறுவனத்தை நிறுவியதன் மூலம் அவர் ஒரு புதிய சமயத்தைப் பரப்ப விரும்பவில்லை. மாறாக இந்த அமைப்பில் அனைத்துச் சமயங்களின் அரிய கோட்பாடுகள் அமைந்திருந்தன. எல்லா மக்களும் சாதி, சமய பாகுபாடின்றி ஒன்றாக சேர்ந்து ஒரே இறைவனை வழிபட இந்நிறுவனம் வழிவகுத்துக் கொடுத்தது. ‘ஒரு தெய்வ’ வழிபாட்டைத் தான் இந்நிறுவனத்தை சார்ந்தோர் பின்பற்ற வேண்டும். இதனை பிரம சமாஜ பொறுப்பாவணத்தில் இராசாராம் மோகன்ராய் தெளிவுபடுத்தியுள்ளார். இறைவனை இரு கைகளால் மட்டுமின்றி இதயத்தாலும் வழிபட வேண்டும். ‘தான்’என்ற அகந்தையை அழித்து விட்டு தனது ஆத்மாவை இறைவனுக்குத் திருப்படையல் செய்ய வேண்டும். "ஒன்றே குலம்,ஒருவனே தேவன்" என்பதையும் மக்கள் அனைவரும் சகோதரர்களே என்பதையும் இவர் வலியுறுத்திக் கூறினார். எல்லாச் சமயங்களையும் அவற்றின் சமய இலக்கியங்களையும் நன்மதிப்புடன் போற்றினார். இந்த இயக்கத்தின் கதவுகள் எப்பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் திறந்து விடப்பட்டிருந்தன. இந்து சமயத்தை விட்டு விலகாமல் அதே நேரத்தில் மேலைநாட்டுத் தாக்கத்தால் தோன்றிய நல்ல கருத்துகளையும் தன்வயப்படுத்திக் கொண்டு விரிந்த பரந்த உணர்வுடன் செயல்பட விரும்பியது இந்த இயக்கம். பிரம்ம சமாஜத்தைத் தோற்றுவித்தவராக இராசாரா மோகன் ராயும் இருந்தபோதிலும் ஒரு சமாஜமாக உருவாக்கியவர் மகரிஷி தேவேந்திர நாத் தாகூர்(1817-1905). உருவ வழிபாட்டை எதிர்த்த தேவேந்திர நாத் தாகூர் உபநிடதங்களை ஏற்றுக் கொண்டார். அதே சமயம் இசுலாமிய மற்றும் கிறித்தவக் கருத்துக்கள் சமாஜத்தில் ஊடுருவாமல் இருப்பதில் கவனமாக இருந்தார். தேவேந்திர நாத் தாகூருக்குப் பின்னர் பிரம்ம சமாஜத்தின் தலைவராக வந்தவர் கேசப் சந்திர சென்(1838-1884). ஆங்கிலக் கல்வி பயின்ற இவரால் சமஸ்கிருதத்தைக் கற்றுக் கொள்ள இயலவில்லை. ஆங்கிலக் கல்வி காரணமாக கிறித்துவ மதத்தில் ஈடுபாடு கொண்டு ஏசுவை பிரம்ம சமாஜத்தில் புகுத்த முயற்சி செய்தார். இதனால், தேவேந்திர நாத் தாகூருக்கும் கேசப் சந்திர சென்னுக்கும் கருத்து வேறுபாடு தோன்றியது. கேசவர் தமது கருத்தை ஏற்போருடன் இணைந்து இந்திய பிரம்ம சமாஜத்தைத் தோற்றுவித்தார். முன்பிருந்த பிரம்ம சமாஜம், ஆதி பிரம்ம சமாஜம் என்று விளங்கியது. கேசவர், ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரிடம் தொடர்பு கொள்ள ஆரம்பித்த பிறகு அவரது கருத்துக்கள் பல மாறின. சமயசமரசம் அவரது முக்கியக் கருத்தாயிற்று. இவையும் பல்வேறு சமய சமரசக் கருத்துக்களும் சேர்ந்து இந்திய பிரம்ம சமாஜம், ’நவவிதானம்’ என்று மாறியது. சமாஜம் விதித்திருந்த பெண்களுக்கான வயது வரம்பை தமது மகளின் திருமணத்தில் கேசவர் மீறியதற்காக விஜய கிருஷ்ண கோசுவாமி, சிவநாத் சாஸ்திரி போன்றோர் பிரிந்து சென்று ’சாதாரண பிரம்ம சமாஜம்’ என்ற அமைப்பை உருவாக்கினர். கேசன் நோய் கேசன் நோய் செலினியம் குறைபாட்டால் ஏற்படும் ஒரு நோய். செலினியம் மனித உடலில் மிக முக்கியமான ஆக்சிஜனேற்ற எதிர்ப்பி ஆகும். இதன் குறைவால் செல்களில் ஆக்சிஸிஜனேற்ற பாதிப்பு ஏற்பட்டு செல் இறப்பு உண்டாகி விடும். சீனாவில் உள்ள கேசன் மாகாணப் பகுதியில் இந்நோயின் அறிகுறிகள் முதன்முதலில் காணப்பட்டதால் இப் பெயர் ஏற்பட்டது. பின்னர் சீனாவின் வடகிழக்கு முதல் தென்மேற்கு வரை பெரும்பாலான பகுதிகளில் மண்ணில் செலினியம் குறைவாக இருப்பதால் அங்கெல்லாம் இந்நோய் ஏற்பட்டு 1960-1970 வாக்கில் பல்லாயிரக் கணக்கான உயிர்களைப் பலி கொண்டது. இது குழந்தைகளையும் குழந்தை பெறும் வயதில் உள்ள பெண்களையும் பெரிதும் பாதிக்கிறது. இந்நோயால் இதயத் தசைகள் செயலிழந்து அவற்றால் குருதியை உடல் முழுதும் செலுத்த இயலாத ஒரு தேக்கநிலை (congestive cardiomyopaty) உண்டாகிறது. இதயம் செயலிழப்பதால் நுரையீரல் நீர்த்தேக்கம் (pulmonary edema) ஏற்படும். செலினியத்தைத் தருவதன் மூலம் இந்நோய் பெரிதும் தடுக்கப்பட்டுள்ளது. நாளமில்லாச் சுரப்பி நாளமில்லாச் சுரப்பிகள் அல்லது நாளமில் சுரப்பிகள் (இலங்கை வழக்கு: கானில் சுரப்பிகள் அல்லது அகஞ்சுரக்கும் சுரப்பிகள், ஆங்கிலம்: endocrine glands) என்பவை தாம் சுரக்கும் இயக்குநீர்களை, நாளங்களினூடாகக் கடத்தாமல், நேரடியாக இரத்தத்தில் கலக்க விட்டு உடலின் பல பகுதிகளுக்கும் அனுப்பும் சுரப்பிகளாகும். இவை அகச்சுரப்பித் தொகுதி யின் அங்கங்களாகும். கூம்புச் சுரப்பி, கபச் சுரப்பி, கணையம், சூலகம், விந்தகம், கேடயச் சுரப்பி, இணைகேடயச் சுரப்பி, ஐப்போத்தலாமசு, அண்ணீரகச் சுரப்பி ஆகியன நம் உடலில் உள்ள முக்கிய நாளமில்லாச் சுரப்பிகள் ஆகும். கபச் சுரப்பி மற்றும் ஐப்போத்தலாமசு ஆகியவை நரம்புசார் நாளமில்லாச் (neuroendocrine) சுரப்பிகள் ஆகும். வளர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்றங்கள் போன்ற உடற் தொழிற்பாடுகளை நாளமில்லாச் சுரப்பிகள் சுரக்கும் இயக்குநீர் கட்டுப்படுத்துகின்றது. இயக்குநீரின் அளவு கூடினாலோ குறைந்தாலோ நாளமில்லாச் சுரப்பி நோய்கள் உருவாகின்றன. மூளையின் அடிப்பகுதியில் ஒரு சிறிய தண்டு நீட்டமாக எலும்புகளால் சூழப்பட்ட எலும்புக் குழியில் அமைந்துள்ளது. இது இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது: இயக்குநீர் உற்பத்தி செய்யும் சுரப்புப்பகுதி (முன்கபச்சுரப்பி அல்லது சுரப்பியக் கபச்சுரப்பி), ஐப்போத்தலாமசின் தொடர்ச்சியான நரம்பியப் பகுதி (பின்கபச்சுரப்பி அல்லது நரம்பியக் கபச்சுரப்பி). கபச் சுரப்பி முதன்மைச் சுரப்பி என்று அழைக்கப்படுகின்றது, எனினும் கபச் சுரப்பியைக் கட்டுப்படுத்துவது ஐப்போத்தலாமசு ஆகும். ஐப்போத்தலாமசால் உற்பத்தி செய்யப்பட்ட ஒக்சிடோசின் மற்றும் வாசோபிரெசின் ஆகிய இயக்குநீர்களை நரம்பியக் கபச்சுரப்பி குருதியுள் வெளிவிடுகின்றது, இங்கு இயக்குநீர் உற்பத்தி செய்யப்படுவதில்லை. ஆனால் முன்கபச்சுரப்பி உடலின் ஏனைய சில இயக்குநீர்களின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் நான்கு இயக்குநீர்களை உற்பத்தி செய்து சுரக்கின்றது. ஏனைய நாளமில்லாச் சுரப்பிகளைக் கட்டுப்படுத்தும் இயக்குநீர், சுரப்பூக்கி இயக்குநீர் என அழைக்கப்படுகின்றது. பெரும்பான்மை முன்கபச்சுரப்பி இயக்குநீர்கள் நித்தமும் சீரான ஒழுங்கில் பகற்பொழுது சுரக்கப்படுகின்றன என்றாலும் அதன் சீர்மை ஐப்போத்தலாமசு தூண்டப்படல் மூலம் மாற்றியமைக்கப்படுகின்றது. முன்கபச்சுரப்பியின் இயக்குநீர்கள்: வளர்ச்சி இயக்குநீர், கேடயச் சுரப்பூக்கி இயக்குநீர், அண்ணீரகப்புறணி சுரப்பூக்கி இயக்குநீர், மூலவுயிரணுத் தூண்டும் இயக்குநீர், மஞ்சள் உடலமாக்கு இயக்குநீர், புரோலாக்டின். வளர்ச்சி இயக்குநீர் உடலின் இழையங்களின், குறிப்பாக வன்கூட்டுத்தசை, எலும்பு போன்றனவற்றின் வளர்ச்சியைத் தூண்டும் ஒரு வளர்மாற்ற இயக்குநீர் ஆகும். இது நேரடியாகவோ அல்லது இன்சுலின்-போன்ற வளர்சிக் காரணி மூலம் மறைமுகமாகவோ செயற்படலாம். கொழுப்பு நகர்மை, புரதத்தொகுப்புத் தூண்டல், குளுக்கோசு உள்ளெடுப்பைத் தடுத்தல் ஆகிய செயல்களை வளர்ச்சி இயக்குநீர் மேற்கொள்கின்றது. ஐப்போத்தலாமசு இயக்குநீரான வளர்ச்சி இயக்குநீர் வெளிவிடும் இயக்குநீர் மற்றும் வளர்ச்சி இயக்குநீர் தடுப்பு இயக்குநீர் ஆகியன வளர்ச்சி இயக்குநீர் சுரத்தலைக் கட்டுப்படுத்துகின்றன. கழுத்தின் முன் பகுதியை அமைவிடமாகக் கொண்டுள்ளது. இது பட்டாம்பூச்சியின் வடிவமைப்பைப் பெற்றுள்ளது. இரு புற இறகுகள், ஒரு சந்தியுடன் (isthmus) இணைக்கப்பட்டுள்ளது. கேடயச் சுரப்பியின் நுண்குமிழில் தைரோகுளோபுளின் (thyroglobulin) என்ற புரதம் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. கேடயச் சுரப்பியின் இயக்குநீர் உடலின் வளர்சிதைமாற்றத்திற்கு பெரிதும் உதவுகிறது. கேடயச் சுரப்பியின் இயக்குநீர்களில் முக்கியமானவை தைராக்சின் (thyroxine) (T4) மற்றும் டிரையோடோதைரோநின் (thyroxine) (T3) ஆகும். இதிலுள்ள கால்சிடோனின் என்ற இயக்குநீர் இரத்ததிலுள்ள சுண்ணாம்பு சத்து அதிகரிக்கும் போது, செயல்பட்டு எலும்புகளில் அவற்றை படிய வைக்க உதவுகிறது. அதாவது உடலில் சுண்ணாம்பு சத்து சமநிலையைப் பேண உதவுகின்றது. தைராக்சின் வளர்சிதை மாற்றத்தை நெறிப்படுத்துவதுடன், உடலின் மொத்த வளர்ச்சியையும், செயல்படும் திறனையும் பாதிக்கின்றது. (T), (T) ஆகிய இரு வளரூக்கிகளின் செயற்பாட்டை அதிகரிக்க அயடீன் முக்கிய கூறாக செயல்படுகிறது. இணைகேடயச் சுரப்பிகள் பொதுவாக 4 முதல் 6 வரை காணப்படும். இவை கேடயச் சுரப்பியின் பின்புறம் அமைந்துள்ளது. (PTH) எனப்படும் இணைகேடயச் சுரப்பி இயக்குநீர் கால்சிடோனின் இயக்குநீருக்கு எதிராகச் செயல்பட்டு இரத்ததிலுள்ள சுண்ணாம்பு சத்தை அதிகரிக்கச் செய்கிறது. அண்ணீரகச் சுரப்பி, மனிதர்களுக்கு சிறுநீரகத்தின் மேலேயும், மற்ற விலங்கினங்களுக்கு சிறுநீரகத்தின் முன்பும் அமைந்துள்ளது. எபிநெப்ரின் அல்லது அட்ரனலீன், அல்டோஸ்டீரோன் மற்றும் கார்ட்டிசால் போன்ற இயக்குநீர்களை உருவாக்குகிறது. ஆபத்து மற்றும் மனவெழுச்சி காலங்களிலும் இச் சுரப்பி செயல்படுகிறது. இது இதயத்தைத் தூண்டி உடலின் பிற பாகங்கள் வேகமாகச் செயல்பட உதவுகிறது. இது வயிற்றின் நடுப்பகுதியில் இரைப்பைக்குக் கீழே காணப்படுகிறது. இது நாளமுள்ள சுரப்பி மற்றும் நாளமற்ற சுரப்பி என இரு வகையையும் சார்ந்தது. கணைய திட்டுக்களிலிருந்து இன்சுலின் மற்றும் குளூக்கொகான் போன்ற முக்கிய இயக்குநீர்கள் சுரக்கப்படுகின்றன. இவை இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது. உடல் செல்கள், இரத்தத்திலுள்ள சர்க்கரையை அதிகம் எடுத்துக் கொள்ள இன்சுலின் உதவுகிறது. பெண்ணின் இனப் பெருக்க உறுப்பினுள் காணப்படும் இச் சுரப்பி ஈத்திரோசன் என்ற இயக்குநீரை சுரக்கிறது. பெண் பூப்பெய்தும் காலத்தில் தொடங்கி, இனப் பெருக்க உறுப்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மாதவிடாய் காலத்தை நிலைநாட்டுகிறது. ஆணின் இனப் பெருக்க உறுப்பினுள் காணப்படும் இச் சுரப்பி ஆண்மையியக்குநீரைச் சுரக்கிறது. ஆண் பருவமடையவும், ஆணின் இனப் பெருக்க உறுப்புகளின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. கூம்புச் சுரப்பி முதுகுநாணி மற்றும் மூளையில் இரு பெரும் பகுதிகளுக்கு இடையே, மூளையின் நடுப்பகுதியில் காணப்படும் மிகச் சிறிய அளவுள்ள சுரப்பி ஆகும். இது உடல் செயற்பாட்டில் பெரும் பங்கினை வகிக்கிறது. இது தூக்கத்தினைத் தூண்டும் செரட்டோனினின் வழிப்பொருளான மெலட்டோனினைச் சுரக்கிறது கீரனூர் (புதுக்கோட்டை) கீரனூர் (ஆங்கிலம்:Keeranur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 12,089 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 16.50 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும் கொண்டது. இது கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கும், திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,509 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 5,370 ஆண்கள், 5,109 பெண்கள் ஆவார்கள். கீரனூர் மக்களின் சராசரி கல்வியறிவு 85.59% ஆகும். கீரனூர் மக்கள் தொகையில் 14.62% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். எக்சாபைட்டு எக்சாபைட் ("Exabyte") என்பது அனைத்துலக முறை அலகுகளின் "எக்சா" என்னும் முன்னொட்டை பைட் என்பதோடு சேர்ப்பதால் உருவானதாகும். இது கணினிகளின் தகவல் அளவு மற்றும் சேமிப்பளவைக் குறிப்பதற்காகப் பயன்படுகின்றது. பொதுவாக 1000 அல்லது 1024 பீட்டாபைட் என்றவாறு கையாளப்படுகின்றது. நெதர்லாந்து தேசிய காற்பந்து அணி நெதர்லாந்து தேசிய கால்பந்து அணி ("Netherlands national football team", ) பன்னாட்டு காற்பந்தாட்டத்தில் நெதர்லாந்து சார்பாக விளையாடும் தேசிய அணியாகும். இதனை நெதர்லாந்தில் காற்பந்தாட்டத்தை ஒழுங்குபடுத்தும் டச்சு அரச கால்பந்துச் சங்கம் (KNVB) நிர்வகித்து வருகின்றது. இந்த அணியை "ஆரஞ்சு" என்றும் "டச்சு பதினொருவர்" (Het Nederlands Elftal) என்றும் கால்பந்து இரசிகர்கள் குறிப்பிடுகின்றனர். மிகுதியான உலகக்கோப்பை இறுதியாட்டங்களில் பங்கேற்று ஒருமுறையும் இறுதியாட்டத்தில் வெல்லாத பெருமை டச்சு அணிக்கு உள்ளது. இவர்கள் இரண்டாமவர்களாக 1974, 1978 மற்றும் 2010 உலகக்கோப்பைகளில் வந்துள்ளனர்; இந்த இறுதியாட்டங்களில் முறையே, மேற்கு செருமனி, அர்கெந்தீனா மற்றும் எசுப்பானியா வென்றனர். ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டியில் 1988இல் வெற்றி கண்டுள்ளனர். 1970களில் இவர்களது அணி தனது உச்சத்தை எட்டியிருந்தது. டார்வினின் தவளை டார்வினின் தவளை (R. darwinii) என்பது அர்ஜென்டினா மற்றும் சிலி காடுகளின் நீரோடைகளைத் தாயகமாகக் கொண்ட ஒரு சிறிய தவளை ஆகும். HMS பீகிள் பயணத்தின் போது சார்லஸ் டார்வின் இத்தவளையைக் கண்டறிந்தார். இத்தவளை 2.5 முதல் 3.5 செ.மீ நீளமே உடையது. உடல் முழுதும் அடர் மஞ்சள் நிறமும், பச்சை அல்லது பழுப்பு நிறப் புள்ளிகளும் கொண்டு காணப்படும். பெண் தவளை 40 முட்டைகள் வரை இடும். அந்த முட்டைகளை ஆண் தவளை பாதுகாப்பாகக் கவனித்துக் கொள்ளும். தலைப்பிரட்டைகள் பொரிந்து வந்ததும் அவற்றைத் தன் நாக்கினால் எடுத்து தன் குரல் பையில் (vocal sac) போட்டுக் கொள்ளும். தலைப்பிரட்டைகளின் உருமாற்ற வளர்ச்சி தந்தையின் குரல்பையில் தொடர்ந்து நடைபெறும். அவை சுமார் 1 செ.மீ அளவு பெரிதாக வளர்ந்ததும் தந்தையின் குரல் பையை விட்டு வெளியேறும். அப்படி வெளியேறும் சில தலைப்பிரட்டைகளை தான் நீண்டநாட்களாக உணவுண்ணாத காரணத்தினால் ஆண்தவளை தின்றுவிடும். இது பூச்சிகள், சிலந்திகள் மற்றும் சிறு புழுக்களை உணவாகக் கொள்ளும். வேட்டையாடும் இதுவே வேட்டையாடப் படலாம் என்பதால் எதிரியைக் கண்டால் உலர்ந்த இலைகளுக்கிடையில் இலை போல மறைந்து கொள்ளும். முரண்பாடான தவளை ஆசிரம முறை மனிதனின் நிறை வாழ்வு என்பது இந்து சமய முறைப்படி நூறு ஆண்டுகளாக கருதப்பட்டது. அதனாலேயே பெரியோர்கள் ஆசீர்வதிக்கும் போது சமஸ்கிருதத்தில் “ஸதமானம் பவது” சதம் என்றால் நூறு. நூறாண்டுகள் வாழ்வாயாக! என்று வாழ்த்துகின்றனர். இந்நூற்றாண்டுகால வாழ்வு நான்கு பகுதிகளாக அல்லது நிலைகளாக பிரிக்கப்படுகிறது. இதனை ஆசிரமம் என்று குறிப்பிட்டனர். அவை முறையே 1). பிரம்மச்சர்யம் 2). கிரஹஸ்தம் 3). வனப் பிரஸ்தம் 4). சந்நியாசம் என்பனவாகும். பிரம்மச்சர்யம் பிரம்மச்சரியம் மனித வாழ்வில் முதல் நிலையாகும். இது தன்னடக்க நிலை அல்லது மாணவப் பருவமாகும். ஆசிரியர்களுக்குக் கட்டுபட்டு அவர்களுக்கு பணிவிடைகளை செய்து பயின்று சமயச் சடங்குகளை செய்து நன்னடத்தை உடையவராய் திகழும் மாணவப் பருவமே பிரம்மச்சரியம். முதல் நிலையான பிரம்மச்சரியத்தில் மாணவனுக்கு (சீடனுக்கு) பணிவு, மன அடக்கம், புலனடக்கம் கொண்ட பருவம். குரு குல மாணவன் எத்தகைய இன்பங்களிலும் ஈடுபடகூடாது. குருவின் இல்லத்திலேயே இருந்து வேதங்களையும், வேதாங்தங்களையும் மற்றும் உபவேதங்களையும் கற்றுக் கொள்கிறான். அவன் தன் குருமார்களுக்கு தொண்டு செய்வதில் தானகவே ஈடுபடுகிறான். மாணவ வாழ்க்கை முடிந்ததும், தன் தகுதிக்கேற்ற ஓர் தட்சணையை குருதேவருக்கு தட்சணை வழங்கி விடைபெறுகிறான். குருதேவர் சீடனுக்கு உபதேசம் அளித்து அடுத்த ஆசிரமமான கிரகஸ்தம் செல்ல ஆசிர்வதித்து வழியனுப்பி வைக்கின்றார். கிரஹஸ்தம் இந்து சமயத்தில் கிரஹஸ்தம் என்பது மனித வாழ்வில் இரண்டாம் நிலையாகும். இல்லற வாழ்வில் ஈடுபட்டு அறம் பிறழாமல் தான தர்மங்களைச் செய்து வாழ்தல், மக்களைப் பெற்றெடுத்து கல்வி புகட்டி, நன்னிலை அடையச் செய்தல். அவர்களுக்கு மணம் செய்வித்து நல்வாழ்வு வாழச் செய்வதுமான காலம். இருபத்தைந்துக்கு மேற்பட்டு ஐம்பதுக்கு உட்பட்ட காலம். ஒரு கிரஹஸ்தன் அறவழியில் பணம் ஈட்டி, இல்லறத்தை நல்லறமாக நடத்த வேண்டும். இவர்கள் பஞ்ச மகா யக்ஞங்கள் செய்வது சிறந்தது என இந்து சமயம் கூறுகிறது. வானப்பிரஸ்தம் வானப்பிரஸ்தம் என்பது வர்ணாசிரம தர்மத்தின்படி மனித வாழ்வில் மூன்றாம் நிலையாகும். இல்லற வாழ்வில் கடமைகளை முறையாகச் செய்து முடித்தபின் மனைவியுடன் காட்டிற்கு சென்று தவ வாழ்வினை மேற்கொள்ளுதல். பொருளாசையை முற்றும் துறத்தலும் பாச பந்தங்களிலிருந்து படிப்படியாக விடுபடுதலுமே இக்காலத்தில் ஆற்ற வேண்டிய கடமைகளாகும். சுருங்கக் கூறின் வானப்பிரஸ்த வாழ்க்கை, துறவறத்திற்கு ஆயத்தப்படுத்துதல் ஆகும். இது அறுபது வயதிற்கு மேல் எழுபத்தைந்து வயதுக்கு உட்பட்ட காலமாகும். வானப்பிரஸ்தனின் முதன்மையான தர்மம் தவம், இறைபக்தி மட்டுமே. வானப் பிரத்த தர்மத்தில் வாழ்பவர்கள், மரவுரி, இலைகள், புற்கள், மான் தோல் ஆகியவற்றை உடையாகக் கொண்டு, காட்டில் கிடைக்கும் கிழங்குகள் - பழங்கள் உண்டு வாழ வேண்டும். தாடி, மீசை முடிகளை நீக்கக் கூடாது. தினமும் மூன்று முறை குளிக்க வேண்டும். தரையில் படுக்க வேண்டும். கோடை காலத்தில் நாற்புரமும் நெருப்பு மூட்டிக் கொண்டு, கண்களால் சூரியனை நோக்கிக் கொண்டும், மழைக்காலத்தில் வெட்ட வெளியில் நின்றும், குளிர் காலத்தில் கழுத்துவரை நீரில் நின்று கொண்டும் தவம் செய்ய வேண்டும். மிருகங்களை கொன்று உண்ணக் கூடாது. காட்டில் கிடைக்கும் நீவாரம் போன்ற சரு, புரோடாசம் முதலிய ’ஹவிஸ்’ (தேவர்களுக்கான உணவு) செய்து அந்தந்த காலத்திற்குரிய இஷ்டிகள் (யாகங்கள்) செய்ய வேண்டும். மேலும் அக்னி ஹோத்திரம், தர்சபூர்ணமாஸங்கள், சாதுர்மாஸ்ய விரதம் போன்ற விரதங்களை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு தவம் செய்வதால் அதன் பலனாக, அந்த வானப்பிரஸ்தன் மகர் லோகத்தை அடைந்து, பின்னர் இறைவனை வந்தடைவான். கர்மபலனில் பற்றுக் கொண்டு கர்மாக்களைச் செய்பவனுக்கு சுவர்க்கம் கிடைப்பினும் கூட அது நரகம் போல் துக்கத்தை தருவன என்ற பெரும் உண்மையை உணர்ந்து நிறைவான வைராக்கியம் அடைந்து, சந்நியாச ஆசிரமத்தை ஏற்க வேண்டும். சந்நியாசம் சந்நியாசம் அல்லது துறவறம், மனித வாழ்வில் நான்காம் ஆசிரம நிலையாகும். பந்த பாசங்களினின்று விடுபட்டு தன்னை வருத்தி துறவு மேற்கொள்ளுதல். இக்காலத்தில் இடம் விட்டு இடம் சென்று, உடல் சுகத்தைத் துறந்து கடவுளை தியானிப்பதும், தான் அறிந்த உண்மைகளையும் நீதிகளையும் மக்களுக்கு கூறுதலும் ஆகும். சமய வாழ்வில் மக்களை ஈடுபடச் செய்தல். ‘முற்றும் துறந்த நிலையே’ சந்நியாசமாகும். எழுபத்தைந்து வயதிற்கு மேற்பட்ட காலம். 16-ஆம் நூற்றாண்டில் பார்ப்பன சுமார்த்தருக்கும், பார்ப்பனர் அல்லாத சைவர்க்கும் இடையே சந்நியாசம் கொள்வதில் கருத்து வேறுபாடுகள் முற்றி வாக்குவாதம் நிகழ்ந்தது. சைவர்கள் சந்நியாசம் மேற்கொள்ளக்கூடாது எனச் சுமர்த்தர்கள் கூறினர். இல்லை, சைவர்களும் மேற்கொள்ளலாம் என அரசன் முன்னிலையில் வடமொழி நூல்களிலிருந்து மேற்கோள்களைக் காட்டி சிவாக்கிர யோகிகள் நிறுவினார். அரசன் வேண்டுகோளின்படி அவரது நிருபனங்கள் சைவ சந்நியாச பத்ததி என்னும் நூலாக உருவாயிற்று. கர்மங்களினால் (சாத்திரத்தில் கூறிய செயல்களால்) கிடைக்கும் நல்லுலகங்கள் கூடத் துயரத்தைத் தரும் என்ற பேருண்மையை உணர்ந்தவர்கள், செயல்களைத் துறந்து சந்நியாச தர்மத்தை ஏற்க வேண்டும். துறவி கௌபீனம் (கோவணம்) அணிந்து கொண்டு, கையில் கமண்டலம், தண்டு வைத்து கொள்ளலாம். சத்தியமான சொற்களை பேச வேண்டும். மௌனம் வாக்கின் தண்டம்; பலனில் பற்றுக்கொண்டு செயல்களைச் செய்யாமல் இருப்பது, உடலின் தண்டம்; பிராணாயாமம் செய்வது, மனதின் தண்டம். இந்த மூன்று தண்டங்களைக் (திரி தண்டி) கைக் கொள்ளாத துறவி, வெறும் மூங்கில் தடியைச் சுமப்பதால் மட்டும் சந்நியாசியாக மாட்டான். நான்கு வர்ணத்தவர்களின் ஏழு வீடுகளில் மட்டுமே சமைத்த உணவை பிட்சை எடுத்து, அதில் கிடைப்பதில் மகிழ்ச்சி கொள்ள வேண்டும். துறவிக்கு, உரிய காலத்தில் பிட்சை உணவு கிடைக்கா விட்டாலும் வருத்தப்பட மாட்டான். அதேபோல், நல்ல உணவு கிடைத்தாலும் மகிழ்ச்சி அடையமாட்டான். துறவி எதனிடத்திலும் பற்றுக் கொள்ளாமல், புலன்களை அடக்கி, ஆத்மாவுடன் விளையாடிக் கொண்டு (தன்னிலேயே மனநிறைவு அடைந்தவனாக), எல்லா சீவராசிகளையும் சமமாகப் பார்த்து, தனியாகப் பூவுலகில் ஒரிடத்தில் தொடர்ந்து தங்காமல், நிலையின்றி திரிந்து வாழவேண்டும். மோட்சத்தில் விருப்பு-வெறுப்பற்ற துறவி, ஆத்மாவில் நிலைகொண்டவன் (ஞானநிஷ்டன்), வைராக்கியம் அடைந்தவன், ஆசிரம நியமங்களுக்கு (விதிகள்) கட்டுப்பட்டவன் அல்லன். தர்ம சாத்திரங்களில் கூறப்பட்ட செய்யத் தக்கவை, தகாதவை என்ற விதிகளை கடந்து, சந்நியாசி (துறவி) சுதந்திரமாக உலகம் சுற்றலாம். துறவி அனைத்தையும் அறிந்தவனானாலும், சிறுவனைப் போல் விளையாடுவான்; ஆற்றல் உள்ளவனானாலும், ஏதும் அறியாதவன் போல் இருப்பான்; பண்டிதனானாலும் பைத்தியம் போல் பேசுவான்; வேதாந்தங்கள் கற்றறிந்தவனானாலும் ஆசார – ஆசிரம நியமங்களை கடைப்பிடிக்காதவனாக இருப்பான். துறவிக்கு வேதம் கூறியுள்ள அக்னி காரியம் கிடையாது; யார் தூற்றினாலும் பொறுத்துக் கொள்வான்; எவரையும் அவமதிக்க மாட்டான்; மற்றவர்களிடம் விரோதம் கொள்ள மாட்டான். ஞானத்தில் நிலை பெற்ற துறவியிடம் இருமை (இன்ப- துன்பம், மான-அவமானம், குளிர்-வெப்பம்) போன்ற உணர்வுகள் காண முடியாது. எந்தத் துறவிடம், ஞானமும் வைராக்கியமும் இல்லையோ, அவன் மூங்கில் தண்டத்தை சுமந்து வயிற்றை நிரப்பிக் கொள்பவனாக இருப்பானே தவிர, உண்மையான துறவியாக மாட்டான். துறவியின் முதன்மையான தர்மம் – அமைதியும், அகிம்சைமே. இவ்வாறாக ஒருவன் தன்னுடைய தர்மங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் அந்தக்கரணம் (மனம்) தூய்மை அடைந்து, பட்டறிவு - மெய்யறிவு (ஞான-விக்ஞானம்) பெற்று இறுதியில் பிரம்மத்தை அடைகிறான். ஆரண்யகம் ஆரண்யகங்கள் வேதங்களின் ஒரு பகுதியாக அமைந்தவை. வேதச் சடங்குகளின் பின்னாலுள்ள மெய்யியல் பற்றிக் கூறுபவை. அமைதியாகக் காட்டிற்குச் சென்று அங்கு கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளைக் கொண்டமையால் ஆரண்யகங்கள் என்ற பெயர் பெற்றன. வேள்விகளைச் செய்ய இயலாத முதியவர்கள், துறவிகள் ஓய்வு பெற்று காட்டிற்குச் சென்று பின்னர் கற்பதற்காக உருவானவை. இவற்றில் வேள்வியை விட அமைதியான தியானமே மிகவும் மேலானது என்று வலியுறுத்தப்படுகிறது. அநுபூதி நெறிகள் மற்றும் உபநிடதம் போன்ற மெய்யறிவுத் தொடர்பான தத்துவக் கருத்துகள் அடங்கிய கருத்துப் பெட்டகம் எனலாம். ஆரியர்கள் ஆன்மிகத் துறையில் அடைந்த பண்பாட்டின் உன்னத நிலையை எடுத்துக்காட்டுவனவாகும். சம்ஹிதைகள் சம்ஹிதைகள் ஒரு வகை இந்து சமய நூல்கள் ஆகும். சம்ஹிதைகளை மந்திரங்கள் என்றும் கூறுவர். குறிப்பிட்ட தேவதைகளுக்கான மந்திரங்கள், வழிபாட்டு முறைகள், வேள்விகளுக்கான சூத்திரங்கள், ஆகியவற்றைக் கொண்ட தொகுப்பாகும். வேள்விக் காலங்களில் இவை முழுமையாக பயன்பட்டன. அதர்வண வேத சம்ஹிதை மட்டும் பில்லி, சூனியம், பிசாசு, மந்திரக் கட்டு என்பனவற்றைக் கூறுகிறது. அதர்வண வேதம் அதர்வண வேதம் பிரம்மவேதம் எனப்படும். இது 731 பாடல்களைக் கொண்டு 20 பகுதிகளாக உள்ளது. இது உச்சாடனம் மாந்ரீகம் போன்றவற்றால் தீயசக்திகளையும் எதிரிகளையும் வென்று உலகத்தில் வெற்றி பெறும் வழிகளைக் கூறுவது எனலாம்.சில்ப வேதம் அதர்வண வேதத்தின் உபவேதமாகும் . இது கட்டடக் கலையை விவரிக்கின்றது. தமிழ்ப் பண்பாட்டின் கூறுகள் தமிழர் காதலை அன்பின் ஐந்திணை என்றனர். இஃது ஒருவனும் ஒருத்தியும் கொண்ட உளமொத்தத் தூயகாதல் வாழ்க்கையாகும். இது களவு, கற்பு என இரண்டாக அமையும். ஐந்திணை ஒழுக்கத்தில் தலைமக்களாக விளங்குபவர்கள். அறிவும், செல்வமும் உடைய நல்லகுலத்தில் பிறந்தவர்கள். இக்காதல் நாடகத்தில் தலைவன், தலைவி நற்றாய், செவிலித்தாய், தோழி, பாணன், பாடினி போன்றோரும் ஊர் மக்களும் பாத்திரங்களாக வருவர். இக்காதல் வாழ்வு அறத்திலிருந்து மாறுபடாமல் அன்பின் வழிப்பாட்டாக அமையும். மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு என்று வள்ளுவரும் காதல்வழிவந்த மனை மாட்சியைச் சிறப்பிக்கின்றார். பண்டைய தமிழர்கள் வீரத்தைத் தொல்காப்பியப் புறத்திணை இயல் எடுத்துக் கூறுகின்றது. பெரும்பாலும் தற்காப்பு முறையில் தான் போர் நடைபெற்றது. தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்ற நால்வகைப் படைகளும் போரில் ஈடுபட்டன. வெட்சி, வஞ்சி, உழிகை, தும்பை என்ற நான்கு புறத்திணை பகுதிகளிலும் தமிழர்களின் போர்முறைகள் தொல்காப்பியத்தில் காணப்படுகின்றன. மேலும் வீரர் அல்லாதவர்கள், புறங்காட்ட ஓடுவார், புண்பட்டார், முதியோர், இளையோர், இவர்கள் மீது படைக்கலம் செலுத்தலாகாது என்பதும் புறநானூற்றால் அறிய முடிகிறது. சங்ககாலத் தமிழர் நட்பினை பெரிதும் மதித்து வாழ்ந்தனர். திருவள்ளுவரும் உண்மையான நட்புக்கு இலக்கணம் கூறியுள்ளார். முகம்ந்து’ என்றனர் தமிழர். அறியாதவர்களையும் அழைத்து உணவளித்து இடமளித்து உபசரித்து மகிழ்ந்தனர் தமிழர். செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் "நல்விருந்து வானத் தவர்க்கு"'” என்கிறார் திருவள்ளுவர். விருந்தினர்களை வெளியில் இருக்கச் செய்து தான் மட்டும் வீட்டின் உள்ளே உண்ணுதல் சாவாமைக்கு மருந்தாகிய அமிர்தமாக இருந்தாலும் வேண்டப்படுவதில்லை என்பதை வள்ளுவர், விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று” என்று கூறுவதிலிருந்து விருந்தோம்பல் சங்க கால மக்களின் பண்பாக இருந்தமை அறிய முடிகிறது. இவை மட்டுமன்றி ஈகை,கொடை,கற்புடைமை,உலக ஒருமைப்பாடு ஆகியவற்றையும் தமிழ்ப் பண்பாட்டின் கூறுகளாகக் கொள்ளலாம். கொடை சங்க காலத்தில் அரசர்கள் கொடை வள்ளல்களாக இருந்திருக்கிறார்கள். தம்மைப் பாடி வரும் புலவர்களுக்கும் மற்றவருக்கும் பொன்னையும் பொருளையும் வரையாது கொடுத்து மகிழ்ந்தமை சங்க இலக்கியங்களால் உணர முடிகிறது. பாரி, ஓரி,காரி, பேகன் போன்றோர் கடையேழு வள்ளல்கள் என்று போற்றப்பட்டனர். பாரி முல்லைக்குத் தேரையும் பேகன் மயிலுக்குப் போர்வையையும் அளித்து அழியாப் புகழ் பெற்றனர். ஆற்றுப்படை இலக்கியங்கள் மன்னர்களின் கொடைத் தன்மையைக் கூறுவனவாக இருத்தலைக் காண்கிறோம். கல்வெட்டுக்கள், செப்பேடுகள் மூலமும் மன்னர்களின் கொடைத்தன்மை அறிய முடிகிறது. தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்காா்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு” . என்று நாம் ஈட்டும் செல்வம் மற்றவருக்கும் கொடுப்பதற்கே என்கிறாா் வள்ளுவா். “கொள்ளெனக் கொடுத்தல் உயா்ந்தன்று”. வாங்கிக்கொள் என்று நாமே மனமுவந்து கொடுப்பது மிகச் சிறந்தது என்கிறது சங்க இலக்கிய நூலான புறநானுறு. பாாி வள்ளல் மாாிக்கு ( மழை) நிகராகக் கொடுக்கக் கூடியவன் என்பதைப் பின்வரும் சங்க இலக்கியப் பாடல் உணா்த்துகிறது. “பாாி பாாி என்று பலஏத்தி ஒருவா் புகழ்வா் செந்நாப் புலவா் பாாி ஒருவனு மல்லன் மாாியும் உண்டீண் டுலகு புறப்பதுவே”. ஈகை கொடையிலிருந்து வேறுபட்டது ஈகை (). திருவள்ளுவர் ஈகைக்கு இலக்கணம் வகுத்துள்ளார். "வறியார்க்குஒன்று ஈவதேஈகை; மற்று எல்லாம்" "குறியெதிர்ப்பை நீரது உடைத்து" என்னும் குறளில் பதில் உதவி செய்ய முடியாத ஏழைகளுக்குக் கொடுப்பதே ஈகையாகும்; பிற கொடைகள் யாவும் பயன் எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மையை உடையது என்கிறார். இதிலிருந்து ஈகை என்பது வறியவர்களுக்கு பதில் உதவி எதிர்பாராது கொடுக்கும் சிறு உதவியே ஈகை எனக் கொள்ளலாம். வறியோர் பசி தீர்த்தலே ஒருவன் தான் செல்வத்தைச் சேர்த்து வைக்கும் இடமென்று சங்ககால மக்கள் எண்ணி வாழ்ந்தனர்.முகம்மது நபி காலத்தில் ஈகைப் பெருநாள் கொண்டாடப்பட்டுள்ளது. முப்பது நாட்கள் நோன்பிருந்து சிறப்பிக்கும் திருநாளாகும். உலக ஒருமைப்பாடு பண்டைத் தமிழர்கள் நாகரிகம் பண்பாட்டில் சிறந்து இருந்தனர். தமிழ்நாட்டில் உழவு, நெசவு, வாணிகம் போன்ற தொழில்களும் அவற்றின் சார்பு தொழில்களும் சிறந்திருந்தன. கடல்கடந்து வெளிநாடுகளுக்கும் சென்று தமிழர் வணிகம் செய்து சிறந்தனர். நமது பண்பாடு, நாகரிகம், மொழி யாவும் வெளிநாடுகளில் சிறக்கக் காரணம் பண்டைத் தமிழர்களே. கணியன் பூங்குன்றனார் என்னும் புலவரின் புறப்பாடல் ஒன்றே நம் தமிழரின் உலக ஒற்றுமைக் கொள்கையை உலகுக்குப் பறைசாற்றும். யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா உலக மக்கள் யாவரையும் உறவாக எண்ணும் பண்டைத் தமிழரின் உள்ளம் உயர்ந்ததேயாகும். விழுப்புரம் (சட்டமன்றத் தொகுதி) விழுப்புரம் விழுப்புரம் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். விழுப்புரம் வட்டம் (பகுதி) அய்யன்கோவில்பட்டு, காகுப்பம், பொய்யப்பாக்கம், மாதிரிமங்கலம், செங்காடு, வடுகநாதன்குப்பம், மேல்பாதி, மகாராஜபுரம், எருமந்தாங்கல், சாலை அகரம், கோலியனூர், கல்லப்பட்டு, பெத்துரெட்டிக்குப்பம், இளங்காடு, வி.புதூர், முதலியார்குப்பம், குமுளம், மனக்குப்பம், மலராஜம்குப்பம், குடுமியாங்குப்பம், நரையூர், பனங்குப்பம், தொடந்தனூர், பானாம்பட்டு, வி.மருதூர், பூந்தோட்டம், நன்னாடு, வேடம்பட்டும் பெரும்பாக்கம், கோனூர், தேனி, வெண்மணியாத்தூர், கொத்தமங்கலம், வெங்கடேசபுரம், சட்டிப்பட்டு, ஒருகோடி, தோக்கவாடி, கொண்டங்கி, வழுதரெட்டி, சாலமேடு, ஆனங்கூர், நன்னட்டாம்பாளையம், மலவராயனூர், சாலையாம்பாளையம் (கிழக்கு), கெங்கராம்பாளையம், அர்பிசம்பாளையம், வெங்கடாத்திரி அகரம், பில்லூர், காவணிப்பாக்கம், குளத்தூர், கண்டமானடி, கண்டம்பாக்கம், கப்பூர், மரகதபுரம், கண்டியமடை, பெடாகம், அரியலூர் (விழுப்புரம்), சித்தாத்தூர் (திருக்கை), அத்தியூர் (திருவடி), வேலியாம்பாக்கம், கொங்கரகொண்டான், தளவானூர் (திருவடி), திருப்பாச்சனூர், சேர்ந்தனூர், பஞ்சமாதேவி, சிறுவந்தாடு, மோட்சகுளம், பரசுரெட்டிப்பாளையம், பூவரடன்குப்பம், அரசமங்கலம், தென் குச்சிப்பாளையம், கள்ளிப்பட்டு, மற்றும் வடவாம்பலம் கிராமங்கள். விழுப்புரம் (நகராட்சி) மற்றும் வளவனூர் (பேரூராட்சி). , 2016 அன்று "முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு" வெளியிட்ட பட்டியலின்படி, ஒரத்தநாடு (சட்டமன்றத் தொகுதி) ஒரத்தநாடு தஞ்சாவூர் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இது பாராளுமன்றத் தேர்தலுக்கு தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது. இந்த தொகுதியில் கீழ்க்காணும் பகுதிகள் உள்ளன. விளார், கண்டிதம்பட்டு, சூரக்கோட்டை, குளிச்சப்பட்டு, வாளமிரான்கோட்டை, காட்டூர், மடிகை, புதூர், கொல்லங்கரை, கொல்லங்கரை வல்லுண்டான்பட்டு, இனாத்துக்கான்பட்டி, நாஞ்சிக்கோட்டை, வல்லுண்டான்பட்டு, திருக்கானூர்பட்டி, சென்னம்பட்டி, குருங்குளம் மேல்பாதி, குருங்குளம் கீழ்பாதி மற்றும் மருங்குளம் கிராமங்கள். கரைமீண்டார்கோட்டை, வாண்டையாரிருப்பு, ராகவாம்பாள்புரம் பகுதி, ராகவாம்பாள்புரம் (சடையார்கோயில்), மூர்த்தியம்பாள்புரம், மூர்த்தியம்பாள்புரம் (பணையக்கோட்டை), நெய்வாசல் தெற்கு (எஸ்) (அரசப்பட்டு), நெய்வாசல் தெற்கு, பொன்னாப்பூர் (கிழக்கு)-மி, பொன்னாப்பூர் (கிழக்கு)-மிமி, கீழ உளூர், உளூர் மேற்கு, காட்டுக்குறிச்சி, நடுவூர், கருக்காக்கோட்டை, பஞ்சநதிக்கோட்டை, ஆழிவாய்க்கால், பருத்திக்கோட்டை, பருத்தியப்பர்கோயில், பொன்னாப்பூர் மேற்கு, தலையாமங்கலம், குலமங்கலம், காவாரப்பட்டு. ஓக்கநாடு கீழையூர் முதன்மை, ஒக்கநாடு கீழையூர் கூடுதல், ஒக்கநாடுமேலையூர் (பகுதி), ஒக்கநாடு மேலையூர், சமையன்குடிக்காடு, கண்ணந்தங்குடி கிழக்கு, கண்ணந்தங்குடி கிழக்கு கூடுதல், கண்ணந்தங்குடி மேற்கு கூடுதல், கண்ணந்தங்குடி மேற்கு, தென்னமநாடு வடக்கு, தென்னமநாடு தெற்கு, ஈச்சங்கோட்டை, சாமிப்பட்டி, பொய்யுண்டார்கோட்டை-மி, பழங்கண்டார்குடிக்காடு, வடக்கூர் வடக்கு, வடக்கூர் தெற்கு, சோழபுரம், வடக்குக்கோட்டை, ஆயங்குடி, மண்டலக்கோட்டை, கோவிலூர், புதூர், பாளம்புதூர், கக்கரை, பூவத்தூர், பூவத்தூர் (புதுநகர்), கீழவன்னிப்பட்டு, அருமுளை, திருமங்கலக்கோட்டை கிழக்கு, திருமங்கலக்கோட்டை கிழக்கு (காலனி), திருமங்கலக்கோட்டை மேற்கு, திருமங்கலக்கோட்டை மேற்கு (காலனி), பேய்க்கரும்பன்கோட்டை, புலவன்காடு, தெலுங்கன் குடிக்காடு, பின்னையூர் கிழக்கு, பின்னையூர் மேற்கு, கக்கரைக்கோட்டை, தெக்கூர், ஆதனக்கோட்டை, பச்சியூர், கிருஷ்ணாபுரம் , புகழ்சில்லத்தூர், திருநல்லூர், பொய்யுண்டார் குடிக்காடு, வெள்ளூர், தொண்டராம்பட்டு மேற்கு, தொண்டாரம்பட்டு கிழக்கு, கண்ணுகுடி (மேற்கு) முதன்மை, கண்ணுகுடி (மேற்கு) கூடுதல், கொடியாளம், வடசேரி வடக்கு, வடசேரி தெற்கு, பரவத்தூர், கண்ணுகுடி கிழக்கு, வேதவிஜயபுரம், ஆவிடநல்லவிஜயபுரம், நெமிலி, திப்பியக்குடி, சங்கரனார்குடிக்காடு, வடக்குக்கோட்டை, கிருஷ்ணபுரம், சின்ன அம்மங்குடி, இலுப்பைவிடுதி, அம்மங்குடி, தோப்புவிடுதி, அக்கரைவட்டம், சூரியமூர்த்திபுரம் (அக்கரைவட்டம்), தெற்குக்கோட்டை, சோழகன்குடிக்காடு, வேதநாயகிபுரம், ஆம்பலாப்பட்டு வடக்கு, ஆம்பலாப்பட்டு தெற்கு, ஆம்பலாப்பட்டு தெற்கு சிவக்கொல்லை, முள்ளூர் பட்டிக்காடு, கோபாலபுரம், ராமாபுரம், மேடையக்கொல்லை, கீழமங்கலம், யோகநாயகிபுரம், உஞ்சியவிடுதி மற்றும் பணிகொண்டான்விடுதி கிராமங்கள், , 2016 அன்று "முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு" வெளியிட்ட பட்டியலின்படி, நுண்தூக்கம் நுண்தூக்கம் ("microsleep") என்பது ஒருவர் விழித்திருக்கும் வேளையிலே வந்து போகும் கணப்பொழுதுகளே நீடிக்கும் மிகச் சிறிய தூக்கமாகும். இது ஒரு நொடி முதல் அரை விநாடி வரை நீடிக்கலாம். ஒருவர் சாலையில் வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கும் வேளையிலோ, ஆபத்தான இயந்திரத்தை இயக்கி கொண்டிருக்கும் வேளையிலோ நுண்துயில் வருமாயின் விளைவுகள் விபரீதமாகி விடும். நுண்துயிலுற்றோர் அதை அறியாதிருப்பர். பெரும்பாலானோர் தாங்கள் விழித்திருந்ததாகவே நம்புவர். பட்டுக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி) பட்டுக்கோட்டை தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. நெம்மேலி, கீழக்குறிச்சி மேற்கு, கீழக்குறிச்சி கிழக்கு, ஆவிக்கோட்டை, பாவாஜிக்கோட்டை, பாலாஜிரகுராமசமுத்திரம், கழிச்சாங்கோட்டை, கனியாக்குறிச்சி, ஓலையக்குன்னம், மோகூர், அண்டமி, கருப்பூர், புலவஞ்சி, மகாதேவபுரம், முசிறி, ஆலத்தூர், வடுகன்குத்தகை, செம்பளூர், எட்டுபுலிக்காடு, கரம்பையம், வேப்பங்காடு, உக்கடை, வேப்பங்காடு ஏனாதி, பாலமுக்தி, ஆலடிக்குமுளை,நல்வழிகொல்லை சுக்கிரன்பட்டி, வீரக்குறிச்சி, செண்டாங்காடு, திட்டக்குடி, தளிக்கோட்டை, ஆலம்பள்ளம், வேப்பங்குளம்,மதுக்கூர் வடக்கு, மதுக்கூர், கோபாலசமுத்திரம், பெரியகோட்டை, சொக்கனாவூர், புளியக்குடி, காடதங்குடி, மதுரபாசாணிபுரம், விக்கிரமம், வாடியக்க்காடு, மூத்தாக்குறிச்சி, நாட்டுச்சாலை, அத்த ஆத்திக்கோட்டை, சூரப்பள்ளம், சாந்தான்காடு, கரகவாயல், நைநான்குளம், முதல்சேரி, அணைக்காடு, பொன்னவராயன்கோட்டை, பொன்னவராயன்கோட்டை உக்கடை, வெண்டாக்கோட்டை, காசாங்காடு, ரெகுநாதபுரம்,வாட்டக்குடி உக்கடை, வட்டாக்குடி. அத்திவெட்டி மேற்கு, அத்திவெட்டி கிழக்கு, பொன்குண்டு, இளங்காடு, கரப்பங்காடு, சிரமேல்குடி, ரெகுராமசமுத்திரம், பாலாயிஅக்ரஹாரம்,கல்யாணஓடை, பழவேறிக்காடு மன்னங்காடு, துவரங்குறிச்சி வடக்கு, துவரங்குறிச்சி தெற்கு, பள்ளிக்கொண்டான், சேண்டாக்கோட்டை, புதுக்கோட்டை உள்ளூர், பழஞ்சூர், தாமரங்கோட்டை வடக்கு,தாமரங்கோட்டை மதுக்கூர் (பேரூராட்சி), பட்டுக்கோட்டை (நகராட்சி) மற்றும் அதிராம்பட்டினம் (பேரூராட்சி). , 2016 அன்று "முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு" வெளியிட்ட பட்டியலின்படி, எம். ஜி. ஆர். திரை வரலாறு எம். ஜி. ராமச்சந்திரன் 1936 தொடங்கி 1987 வரை திரைப்பட உலகில் நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றினார். அவர் நடித்த, இயக்கிய திரைப்படங்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. துயில் வாதம் தூக்க வாதம் அல்லது துயில் வாதம் "(sleep paralysis)" எனும் இந்நிலையில் தூங்கி முடித்து விழித்தவர்கள் எழுந்திருக்க முயலும் போதும், தூங்க முற்படும் போதும் தாங்கள் அசைய முடியாததை உணர்வார்கள். எவ்வளவோ முயன்றும் கை கால்களை அசைக்க முடியாதிருப்பதைக் காண்பார்கள். இந்த நிலை பொதுவாக விழித்திருத்தலுக்கும் ஓய்விற்கும் இடையிலான ஒரு பரிமாட்றம். பொதுவாக இது சில நிமிடங்களுக்கு மட்டுமே இருக்கும். ஒவ்வொரு மனிதரும் தன் வாணாளில் ஒரு முறையேனும் இந்நிகழ்வை உணர்ந்திருப்பர். பாலின்பக் கலைகள் பாலின்பக் கலைகள் என்பது பாலுணர்வை தூண்டும் கலையம்சம் கொண்ட கலைகளைக் குறிக்கிறது. ஓவியம், இலக்கியம், ஒளிப்படம், திரைப்படம் என எல்லா கலைவடிவங்களிலேயும் பாலின்பம் வெளிப்படுத்தப்படுகிறது. ஆனால் இவை பாலுணர்வுக் கிளர்ச்சியை உண்டு பண்ணும் வணிகப் படைப்புகள் அல்ல. பொதுவாக இவை பாலுணர்வுக் கிளர்சிக்காக உணர்ச்சி நோக்கில் செய்யாமல் பாலுணர்வை கலை வடிவில் புரிந்து கொள்ளும்படியாக வெளிப்படுத்துபவை ஆகும். இந்து மதக் கோயிலின் நிர்வாண உடலுறவுச் சிற்பங்கள் பாலின்பக் கலைகளுக்கான ஓர் எடுத்துக்காட்டு ஆகும். மாக் லாபர்ட் மாக் லாபர்ட் (Mac Leopard) என்பது மாக் ஓ.எசு இயங்கு தளத்தின் அதி நவீன இயங்கு தளம் ஆகும். இது மாக்_ஓ.எசு பின்னர் வெளிவந்த இயங்கு தளம். இது ஆறாவது பதிப்பு (Version 10 .5) ஆகும். இது ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் மேசை கணினி மற்றும் சேவையகம் அமைப்பு உள்ள கணினிகளுக்கு உபயோகிக்கும் ஒரு இயங்கு தளம். இதற்கு முந்திய பதிப்பு மாக் ஓ.எசு டைகர் ஆகும் ( பதிப்பு 10.4 ). மாக் லாபர்ட் இயங்கு தளம், முந்திய பதிப்பைவிட தலா 300 மாற்றங்கள் மற்றும் மேம்பாடுகள் கொண்டது. மாக் லாபர்ட் ஆனது மேம்படுத்தப்பட்ட மேசை மென்பொருள் , மேம்படுத்தப்பட்ட டாக் ( dock ) மென்பொருள், அடுக்கு (stacks) மென்பொருள் போன்ற பல மேம்படுத்தப்பட்ட மென்பொருளை உள்ள அடக்கியது. மாக் லாபர்ட் இயங்கு தளம் பல மேம்படுத்தப்பட்ட மற்றும் புதிய கருவி மற்றும் சாதனங்களை உள்ளடக்கியது. மேசைக் கணினி மேசைக் கணினி அல்லது தனியாள் கணிப்பொறி என்பது ஒரு மேசையின் மீது வைத்து பயன்படுத்தும் ஒரு வகையான கணிப்பொறி ஆகும். கணிப்பொறி என்பது முன்பு ஒரு வீட்டில் இருக்கும் பெரிய அறையின் அளவிற்கு இருந்தது. பின்னர் ஒரு பெரிய குளிர்சாதனப் பெட்டி அளவிற்குக் குறைக்கப்பட்டது. அதன் பிறகு சுமார் 1970ல் எச்.பி (H.P) என்ற கணினி நிறுவனம் "எச்.பி 9800" எனும் மேசைக் கணினிகளை உருவாக்கிப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தது. இந்து சமய மெய்யியலாளர்கள் இந்து சமய மெய்யியலாளர்கள் பட்டியல் பின்வருமாறு: பசவர் பசவர் ("Basava" அல்லது "Basavanna") கன்னட மாநிலத்தில் தோன்றியவர். சாளுக்கிய மன்னரிடம் அமைச்சராகப் பணியாற்றியவர். இந்நெறி சிவனை மட்டுமே கடவுளெனக் கருதியது. சிவவழிபாட்டின் மூலம் வீடு பேற்றை அடையலாம் என்பது இவரது ஆழ்ந்த நம்பிக்கை. சாதிப்பாகுபாடு, சடங்கு, உருவ வழிபாடு இவற்றை களைவதில் பெரிதும் ஈடுபட்டார். தம்மைப் பின்பற்றுபவர்கள் புலால் உண்பதையும், கள் குடிப்பதையும் கைவிட வேண்டும் என்ற கடுமையான நிபந்தனை விதித்தார். சமூக சீர்திருத்த வாதியாக விதவை மறுமணத்தை ஆதரித்தும், குழந்தை திருமணத்தை எதிர்த்தும் செயல்பட்டார். இவரைப் பின்பற்றுவோர் வீர சைவர்கள் (லிங்காயத்துகள்) என்றழைக்கப்படுகின்றனர். நிம்பர்க்கர் நிம்பர்க்கர் தென்னிந்தியாவில் கோதாவரி நதிக் கரையில் சிறு கிராமத்தில் பிறந்தார். வட இந்தியாவில் மதுராவிற்கருகேயுள்ள பிரஜா என்ற இடத்தில் வாழ்ந்தார். இவரது பக்தி நெறியைச் சேர்ந்தோர் இராதா கிருஷ்ண வழிபாட்டில் நம்பிக்கை கொண்டிருந்தனர். இவரும் ‘சரணாகதி’ நெறியை வலியுறுத்தினார். இவரது கொள்கை "பேதா அபேதம்" என்றழைக்கப்படுகிறது. தத்துவமசி என்ற மகாவாக்கியத்திற்கு பேதா அபேதம் (துவைதாத்வைதம்) கொள்கைப்படி விளக்கம் அளித்துள்ளார். இராமாநந்தர் இராமானந்தரது முயற்சியால் வைணவம் வடக்கே பரவியது.இவர் இராமானுஜரின் சீடர் ஆவார். இராமர் சீதை வழிபாட்டை பரப்பினார். சாதிப் பாகுபாட்டினை அறவே வெறுத்தார். இறைவன் முன் அனைவரும் சமம் எனக் கூறினார். சமயக் கருத்துகளை முதன் முதலில் இந்தி மொழியில் பரப்பியவரும் இவரே ஆவார். நாம்தேவ் துறவி நாம்தேவ் (29 அக்டோபர், 1270 - 1350) (மராத்தி: संत नामदेव) அல்லது பகத் நாம்தேவ் (குருமுகி: ਭਗਤ ਨਾਮਦੇਵ) ஒரு வர்க்காரித் துறவி. இவர் மகாராட்டிர மாநிலத்தில் உள்ள இங்கோலி மாவட்டத்தில் (தற்போது நர்சி நாம்தேவ் மாவட்டம்) நர்சி-பாமனி என்னும் கிராமத்தில் பிறந்தார். இவருடைய தந்தை தாம்சேட் ஒரு தையற்கலைஞர், இவருடைய தாயார் கோனாபாய். இவருடைய சமயக்கருத்துக்கள், வாழ்க்கையை வாழும் முறை பற்றியும்(गृहस्थ जीवन), திருமணத்தின் மூலமும் குடும்ப பொறுப்பு ஏற்பதின் மூலமும் ஒருவர் வாழ்க்கையில் தெளிவு பெறலாம் என்னும் கருத்தை வலியுறுத்தின. தேசிய உறுமி மேள போட்டி (மலேசியா) மலேசியத் தேசிய உறுமி மேள போட்டி என்பது உறுமி மேளக் குழுக்களுக்கிடையே ஆண்டுதோறும் மலேசியாவில் நடைபெறும் போட்டியாகும். மலேசியாவைச் சார்ந்த பல்வேறு இளையோர் குழுக்கள் இதில் பங்கு கொள்ளும். இப் போட்டி மலேசியாவில் தமிழர் பண்பாட்டுக்கும், இசைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். வல்லபாச்சார்யா வல்லபாச்சாரியார் ("Vallabhacharya", 1479 – 1531 இந்து மெய்யியலாளர். இவர் காசியில் பிறந்தார். தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்து பெற்றோருடன் வாழ்ந்தார். தம் இளம் வயதிலேயே கற்றுத் தேர்ந்தார். புண்ணியத் தலங்களுக்கு சென்றார். இல்வாழ்வில் ஈடுபட்டு இரு புதல்வர்களைப் பெற்றார். வடமொழியிலும், பிரிஜ் மொழியிலும் நூல்களை எழுதினார். இவரது கோட்பாடு சுத்த அத்வைதக் கோட்பாடு ஆகும். இதனை தூய ஒரு பொருள் கோட்பாடு என்பர். கிருஷ்ணனே உயர்ந்த பிரம்மம், ஆத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் வேறுபாடில்லை. பக்தியின் மூலம் முக்தி அடைந்து பரமாத்மாவுடன் ஆத்மா கலந்து கொள்ளலாம் என்பது இவரது கோட்பாடு. தூக்க விறைப்பு தூக்க விறைப்பு அல்லது இரவுத் தூக்க ஆண்குறி விறைப்பு ("Nocturnal penile tumescence" (NPT)) என்பது ஆண்கள் உறங்கும் வேளையில் இயல்பாகவே ஏற்படும் ஆண்குறி விறைப்பு ஆகும். உடலியக்க விறைப்புக் கோளாறு இல்லாத எல்லா ஆண்களுக்கும் பொதுவாக இரவில் இரண்டு அல்லது மூன்று முறை இது நேரும். பெரும்பாலும் இது விரைந்த கண் இயக்க நிலைத் (REM - Rapid Eye Movement) தூக்கத்தில் தான் நிகழும். இரவில் ஆண்குறி விறைப்பது அவமானப்படத்தக்க ஒன்றோ அல்லது அஞ்சத்தக்க ஒன்றோ அன்று. இது ஒரு ஆண்மகனின் ஆண்மைத்தன்மைக்குக் கட்டியங் கூறுவதும் பாலியல் நலத்தை (sexual health) உறுதிபடுத்துவதுமான நிகழ்வாகும். விறைப்புக் கோளாறுகள் ("erectile dysfunctions") இருவகைப்படும். அவை, இவ்விரண்டையும் வேறுபடுத்தினால் தான் உரிய மருத்துவம் தர முடியும். இதற்கு உறக்க விறைப்பு உதவுகிறது. உடலியக்க விறைப்புக் கோளாறு ("physiological erectile dysfunction") இருக்குமாயின் உறக்க விறைப்பும் இருக்காது. உடலுறவின் போதும் விறைப்பு இருக்காது. உளவியல் விறைப்புக் கோளாறு இருப்பின் ("psychological erectile dysfunction") உடலுறவின் போது பதட்டம், பயம் போன்ற காரணங்களால் விறைப்பு இருக்காது. ஆனால் உறங்கும் போது இயல்பான விறைப்பு இருக்கும். இரு வகை விறைப்புக் கோளாறுகளையும் வேறுபடுத்த வேண்டுமாயின் உறக்க விறைப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியம். இதன் பொருட்டு மீள்தன்மை (elastic) உள்ள கருவி ஒன்றை நோயரின் ஆண்குறியைச் சுற்றி உறங்கும் முன் பொருத்துவர். இக் கருவி ஆண்குறியின் சுற்றகல (girth) வேறுபாட்டை கணிணிக்குத் தெரிவிக்கும். இத்தகவலை ஆய்வதன் மூலம் உறக்க விறைப்பை உறுதி செய்யலாம். பான்கிராஃப்ட (Bancroft (2005)) என்பவரின் கருதுகோளின் படி மூளையின் நீலப்பகுதி (locus ceruleus) என்ற இடத்தில் உள்ள நார்அட்ரினலின் (noradrenergic) சுரக்கும் நரம்பு செல்கள் மனிதன் விழிப்போடிருக்கும் போது ஆண்குறி விறைப்பைத் தடைசெய்கின்றன. விரைந்த கண் இயக்கத் துயில் நிலையில் (REM sleep) இந்த நரம்பு செல்கள் நார்அட்ரினலினை வெளியேற்றுவது தடைபடுகிறது. ஆகவே டெஸ்டோஸ்டீரோன் தொடர்புடைய கிளர் செயலால் தூண்டப்பட்டு ஆண்குறி விறைப்படைகிறது. சிறுநீர்ப்பை (urinary bladder) நிரம்பியிருப்பதுவும் உறக்க விறைப்பிற்கு ஒரு காரணமாகக் கருதப்பட்டது. இரசவாதம் செய்த படலம் பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணத்தில் முப்பத்தாறாவது படலமாக இரசவாதஞ் செய்த படலம் 36 வது படலமாக (செய்யுள் பத்திகள்: 1856 -1885) உள்ளது. இதில் திருப்பூவணத்து இறைவன் திருமேனியைச் செய்திடத் தேவையான தங்கத்தை இரசவாதம் மூலமாகப் பெற்றிடும் முறையை மதுரை ஈசன் சித்தர் வடிவில் நேரில் வந்து அருளியுள்ளார். முன்பு, திருப்பூவணத்தில் பொன்னனையாள் என்ற சிவபக்தை இருந்தாள். இவள் சிறந்த நடன மாது. நாட்டிய இலக்கணப்படித் தினமும் இறைவன் முன் நடனமாடுவது இவளது வழக்கம். தனக்குக் கிடைக்கும் வருமானத்தை எல்லாம் அன்னதானத்திற்குச் செலவு செய்தாள். தினமும் சிவனடியார் பலரும் வந்து உணவருந்திச் செல்வதைக் கண்டு மகிழ்ந்தாள். அப்படியிருக்கையில் அவளுக்குத் திருப்பூவணம் கோயிலில் வைத்துப் பூசிப்பதற்கு இறைவனின் திருமேனியைத் தங்கத்தில் செய்து கொடுக்க வேண்டும் என்று பேராவல் பூவணநாதரின் அருளாசியினால் உண்டானது. ஆனால் கிடைக்கும் பொருள் எல்லாம் அன்னதானத்திற்கே செலவானது. தங்கத்திற்கு எங்கே போவது. குலபூடண பாண்டியனுக்கு எடுக்க எடுக்கக் குறையாத பொற்கிழியை வழங்கிய மதுரை சோமசுந்தரக் கடவுளை மனதில் நினைந்து வேண்டினாள். இந்த பக்தையின் விருப்பத்தை அறிந்த மதுரை சோமசுந்தரப் பெருமான். அதனைப் பூர்த்தி செய்ய திருவுள்ளம்கொண்டு சித்தர் வடிவில் திருப்பூவணத்தில். பொன்னனையாள் வீட்டிற்கு எழுந்தருளினார். அங்கு, அன்னதானம் நடைபெற்றுக் கொண்டிருந்தது, தாதியர்கள் உணவு உண்ண வாருங்கள் எனச் சித்தரையும் அழைத்தனர், அதற்கு சித்தர் பெருமான். உங்களது தலைவியை இங்கே அழையுங்கள் எனக் கூறினார், பொன்னனையாள் வந்தாள். சித்தரது பாதங்களில் தனது தலை பதியுமாறு பணிந்து உணவு உண்ண அழைத்தாள், அதற்குச் சித்தர். உனது முகம் வாட்டத்துடன் காணப்படுகின்றதே! உனது மனக் கவலைதான் என்ன? என்று கேட்டார், பொன்னனையாளும், எங்கள் தலைவனாம் திருப்பூவணத்து இறைவனது திருவுருவினைச் செய்வதற்கு உள்ளத்தில் பெருவிருப்பம் கொண்டு மெழுகினால் கருக்கட்டி வைத்துள்ளேன், அதனைப் பொன்னினால் செய்து முடிக்கக் கருதிய எனக்கு நாள்தோறும் கையில் வரும் பொருள் முழுவதும் அடியார்களுக்கு அன்னம் இடுவதிலேயே செலவாகி விடுகின்றது, நான் என்ன செய்வேன்? என்று தனது கவலையை கூறினாள், அதற்குச் சித்தரும். நீ தானத்துள் சிறந்த அன்னதானத்தை நாள்தோறும் செய்து வருகின்றாய், உன் பெயருக்கு ஏற்றவாறு அழிவில்லாத இறைவனின் திருவுருவத்தைத் தங்கத்தினால் செய்யப் பெறுவாயாக என வாழ்த்தினார். பின்னர். அனைத்து உலோகப் பாத்திரங்களையும் கொண்டு வரச்செய்து. திருநீற்றினைத் தூவினார், இவற்றைத் தீயிலிட்டுக் காய்ச்சுங்கள் தங்கம் கிடைக்குமெனக் கூறி அருளினார், பொன்னனையாள் அச்சித்தர் சுவாமியை வணங்கி இன்றைய இரவு இங்கேயே தங்கித் திருவமுது செய்து இரசவாதம் செய்து முடித்தபின்னர் அதிகாலை எழுந்து செல்லலாம் என வேண்டினாள், மீனாட்சி அம்மையைப் பிரியாத சோமசுந்தரரே சித்தர் வடிவில் வந்துள்ளதால் அவர் யாம் மதுரையில் விளங்கும் சித்தராவோம் எனக் கூறி மறைந்தார், சித்தர் கூறிய சொற்களும். மறைந்தருளிய தன்மையையும் கண்ட பொன்னனையாள். வந்தவர் மதுரை வெள்ளியம்பலத்தில் கால்மாறி ஆடியருளும் அம்பலவாணரே எனக் கண்டு பக்தியால் நெகிழ்ந்து. தனது கவலையை இறைவனே நேரில் வந்து நீக்கினார் எனக் களிப்புற்றவளாகிச் சித்தர் கூறியபடியே செய்ய உலோகப் பாத்திரங்களைத் தீயிலிட்டுப் புடம் செய்தனள், ஆணவமலம் கெட்டு இறைவனின் திருவடியை அடைந்தவர் சிவமாக விளங்குதல் போல உலோகங்களின் களிம்பு நீங்கிப் பொன்னாக மாறின, அப்பொன்னைக் கொண்டு இறைவனுக்குத் திருவுருவம் வார்ப்பித்தாள், கிடைத்த தங்கத்தைக் கொண்டு வடிவே இல்லாத இறைவனின் திருவுருவத்தைச் செய்திட்டார், இறைவனின் அழகான திருவுருவத்தைக் கண்டு அச்சோ! அழகிய பிரனோ இவன்!! என்று இறைவனின் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டாள், அதனால் இறைவனின் திருமேனியில் தழும்பு உண்டானது, இத் திருவுருவத்தை இன்றும் கோயிலில் தரிசித்திடலாம், பொன்னனையாள் இறைவனின் கன்னத்தைக் கிள்ளுவது போன்ற சிற்பம் கோயில்; மகா மண்டபத்தில் உள்ள கல்தூணில் செதுக்கப்பட்டுள்ளது, திருப்பூவணம் கோயில் இறைவனின் திருமேனியைச் செய்திட மதுரை ஈசனே நேரில் சித்தர் வடிவில் வந்து. இரசவாதம் செய்து தங்கம் தயாரித்துக் கொடுத்தது இத்திருத்தலத்தின் தனிச் சிறப்பாகும், இறைவனது திருவுள்ளத்தில். அடியவர்களில் அடிமையென்றும் ஆடிப்பிழைப்பவர் என்றும் பேதங்கள் ஏதும் இருப்பதில்லை, இறைவன் மனம் விரும்புவதெல்லாம் அன்பும். தொண்டும் பக்தியும் தான் என்பதை அறியுமாறு கூறப்பட்டுள்ளது, மேலும் சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்வதால் நமது பாவங்கள் அனைத்தும் ஒழிந்து நமக்கு இறைவன் நேரில் காட்சி தந்து அருளுவான் என்பதும் கூறப்பட்டுள்ளது, பொன்னனையாள் தங்கத்தினால் ஆன இறைவனது திருவடிவத்தைப் பிரதிட்டை செய்து தேர்த்திருவிழா முதலியன நடத்தி இனிது வாழ்ந்தாள், சிலகாலம் சென்ற பின்னர் வீடுபேறு அடைந்தாள், மதுரையில் திருவிளையாடற் புராணக்கதைத் தொடர்பான விழாக்கள் இன்றும் நடைபெற்று வருகின்றன, அவ்வாறாக நடைபெறும்போது இரசவாதம் செய்த படலம் நடைபெறும் நாளில் சோமசுந்தரக் கடவுள் மதுரையிலிருந்து திருப்பூவணத்திற்கு எழுந்தருளி வந்தார், பல ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வாறு திருப்பூவணம் வந்த சோமசுந்தரக் கடவுளைக் குறிப்பிட்ட நேரத்தில் மீண்டும் மதுரை ஆலயத்திற்குக் கொண்டு சேர்ப்பது முடியாததாகிவிட்டது, இக்காரணத்தினால் அதற்கு அடுத்த ஆண்டுகளில் இத்திருவிளையாடற் தொடர்பான விழாவினை மதுரைக் கோயிலிலேயே வைத்து நடத்தி வருகின்றனர், இப்போது வாகன வசதிகளும். நவீன தொலைத்தொடர்பு வசதிகளும் கூடியுள்ளதால் முன்புபோல் இப்போது காலதாமதம் ஏற்பட வாய்ப்பில்லை, எனவே இரசவாதம் செய்த படலம் தொடர்பான திருவிழாவினை மீண்டும் திருப்பூவணத்தில் நடத்திடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. 1856 வரதன் மீனவன் படையிடை வந்துநீர்ப் பந்தர் விரத னாகிநீ ரருத்திய வினையுரை செய்தும் பரத நூலிய னாடகப் பாவையா ளொருத்திக் கிரத வாதஞ்செய் தருளிய வாடலை யிசைப்பாம். 1857 பருங்கை மால்வரைப் பூழியன் பைந்தமிழ் நாட்டின் இரங்கு தெண்டிரைக் கரங்களா லீர்ம்புனல் வையை மருங்கின னந்தன மலர்ந்தபன் மலர்க?ய்ப் பணியப் புரங்க டந்தவ னிருப்பது பூவண நகரம். 1858 எண்ணி லங்குறை சராசர மிலிங்கமென் றெண்ணி விண்ணி னாள்களும் கோள்களும் விலங்குவ தியாக்கைக் கண்ணி னான்கதிர் முதற்பல கடவுளர் பூசை பண்ணி வேண்டிய நல்வர மடைந்ததப் பதியில். 1859 கிளியு ளார்பொழிற் பூவணக் கிழவர்தங் கோயில் றளியு ளார்தவப் பேறனா டாதுகு பூந்தார் அளியு ளார்குழ லணங்கனா ளந்தரத் தவர்க்குங் களியு ளார்தர மயக்குறு}உங் கடலமு தனையாள். 1860 நரம்பி னேழிசை யாழிசைப் பாடலு நடநூல் நிரம்பு மாடலும் பெண்ணல நீர்மையும் பிறவும் அரம்பை மாதரை யொத்தன ளறனெறி யொழுகும் வரம்பி னாலவர் தமக்குமே லாயினாண் மன்னோ. 1861 ஆய மாதர்பேர் பொன்னனை யாளென்ப வவடன் நேய வாயமோ டிரவிரு ணீங்குமு னெழுந்து தூய நீர்குடைந் துயிர்புரை சுடர்மதிக் கண்ணி நாய னாரடி யருச்சனை நியமமு நடாத்தி. 1862 திருத்தர் பூவண வாணவரைச் சேவித்துச் சுத்த நிருத்த மாடிவந் தடியரைப் பொருளென நினையுங் கருத்த ளாயருச் சித்தவர் களிப்பவின் சுவையூண் அருத்தி யெஞ்சிய தருந்துவா ளமூதவ ணியமம். 1863 மாத ரிந்நெறி வழங்குநாண் மற்றவ ளன்பைப் பூத லத்திடைத் தெருட்டுவான் பொன்மலை வல்லி காத னாயகன் றிருவுருக் காணிய வுள்ளத் தாத ரங்கொடுத் தருளினார் பூவணத் தையர். 1864 ஐயர் தந்தபே ரன்புரு வாயினாண் மழுமான் கையர் தந்திரு வுருவினைக் கருவினாற் கண்டு மைய கண்ணினாள் வைகலும் வருபொரு ளெல்லாம் பொய்யி ;லன்புகொண் டன்பர்தம் பூசையி னேர்வாள். 1865 அடியர் பூசனைக் கன்றியெஞ் சாமையா லடிகள் வடிவு காண்பதெப் படியென்று மடியிலச் செழியற் கொடிவில் பொற்கிழி நல்கிய வள்ளலை யுன்னிப் பிடிய னாளிருந் தாளமூ தறிந்தனன் பெருமான். 1866 துய்ய நீறணி மெய்யினர் கட்டங்கந் தொட்ட கையர் யோகபட் டத்திடைக் கட்டினர் பூதிப் பையர் கோவண மிசையசை யுடையினர் பவளச் செய்ய வேணிய ரங்கொரு சித்தராய் வருவார் 1867 வந்து பொன்னனை யாண்மணி மாளிகை குறுகி அந்த மின்றிவந் தமுதுசெய் வாரொடு மணுகிச் சிந்தை வேறுகொண் டடைந்தவர் திருவமு தருந்தா துந்து மாளிகைப் புறங்கடை யொருசிறை யிருந்தார் 1868 அமுது செய்தருந் தவரெல்லா மகலவே றிருந்த அமுத வாரியை யடிபணிந் தடிச்சிய ரைய அமுது செய்வதற் குள்ளெழுந் தருள்கென வுங்கள் அமுத னாளையிங் கழைமினென் றருளலு மனையார் 1869 முத்த ராமுகிழ் வாணகை யல்குலாய் முக்கண் அத்த ரானவர் தமரெலா மமுசெய் தகன்றார் சித்த ராயொரு தம்பிரான் சிறுநகை யினராய் இத்த ராதலத் தரியரா யிருக்கின்றா ரென்றார் 1870 நவம ணிக்கலன் பூத்தபூங் கொம்பாp னடந்து துவரி தழ்க்கனி வாயினாள் சுவாகதங் கிலாவன் றுவமை யற்றவர்க் கருக்கிய மாசன முதவிப் பவம கற்றிய வடிமலர் முடியுறப் பணிந்தாள் 1871 எத்த வஞ்செய்தே னிங்கெழுந் தருளுதற் கென்னாச் சித்தர் மேனியும் படிவெழிற் செல்வமு நோக்கி முத்த வாணகை யரும்பநின் றஞ்சலி முகிழ்ப்ப அத்தர் நோக்கினா ரருட்கணா லருள்வலைப் பட்டாள் 1872 ஐய உள்ளெழுந் தருளுக வடிகணீர் ரடியேன் உய்ய வேண்டிய பணிதிரு வுளத்தினுக் கிசையச் செய்ய வல்லனென் றஞ்சலி செய்யவுண் ணகையா மைய னோக்கியை நோக்கிமீ னோக்கிதன் மணாளன் 1873 வடியை நேர்விழி யாய்பெரு வனப்பினை சிறிதுன் கொடியை நேரிடை யெனவிளைத் தனையெனக் கொன்றை முடியி னானடி யாரமென் முகிழ்முலைக் கொடிதாழ்ந் தடிய னேற்குவே றாயொரு மெலிவிலை யையா 1874 எங்க ணாயகர் திருவுருக் காண்பதற் கிதயந் தங்கு மாசையாற் கருவுருச் சமைத்தனன் முடிப்பேற்கு கிங்கு நாடொறு மென்கையில் வரும்பொரு ளெல்லாம் உங்கள் பூசைக்கே யல்லதை யொழிந்தில வென்றாள் 1875 அருந்து நல்லமு தனையவ ளன்புதித் திக்கத் திருந்து தேனென விரங்குசொற் செவிமடுத் தையர் முருந்து மூரலாய் செல்வமெய் யிளமைநீர் மொக்குள் இருந்த வெல்லையு நிலையில வென்பது துணிந்தாய் 1876 அதிக நல்லற நிற்பதென் றாpந்தனை யறத்துள் அதிக மாஞ்சிவ புண்ணியஞ் சிவார்ச்சனை யவற்றுள் அதிக மாஞ்சிவ பூசையு ளடியவர் பூசை அதிக மென்றாpந் தன்பரை யருச்சனை செய்வாய் 1877 உறுதி யெய்தினை யிருமையு முன்பெயர்க் கேற்ப இறுதி யில்லவன் றிருவுரு வீகையாற் காணப் பெறுதி யாகநின் மனைக்கிடைப் பித்தளை யீயம் அறுதி யானபல் கலன்களுங் கொணர்தியென் றறைந்தார் 1878 ஈயஞ் செம்பிரும் பிரசிதங் மென்பவும் புணர்ப்பாற் றோயம் பித்தளை வெண்கலந் தராமுதற் றெhடக்கத் தாயும் பல்வகை யுலோகமுங் கல்லென வலம்பத் தேயுஞ் சிற்றிடை கொண்டுபோய்ச் சித்தர்முன் வைத்தாள் 1879 வைத்த வேறுவே றுலோகமு மழுவுழை கரந்த சித்த சாமிக ணீற்றினைச் சிதறினர் பாவித் தித்தை நீயிரா வொpயிலிட் டெடுக்கினன் பொன்னாம் அத்தை நாயகன் றிருவுருக் கொள்கென வறைந்தார் 1880 மங்கை பாகரை மடந்தையு மிங்குநீர் வதிந்து கங்குல் வாயமு தருந்தியிக் காரிய முடித்துப் பொங்கு காரிருள் புலருமுன் போமெனப் புகன்றாள் அங்க யற்கணா டனைப்பிரி யாரதற் கிசையார் 1881 சிறந்த மாடநீண் மதுரையிற் சித்தர்யா மென்று மறைந்து போயினார் மறைந்தபின் சித்தராய் வந்தார் அறைந்த வார்கழ லலம்பிட வெள்ளிமன் றாடி நிறைந்த பேரொளி யாயுறை நிருத்தரென்று அறிந்தாள் 1882 மறைந்து போயினா ரெனச்சிறி தயர்ச்சியு மனத்தில் நிறைந்த தோர்பெருங் கவற்சியை நீக்கினா ரென்னச் சிறந்த தோர்பெரு மகிழ்ச்சியு முடையளாய்ச் சித்தர் அறைந்த வாறுதீப் பெய்தன ளுலோகங்க ளனைத்தும் 1883 அழல டைந்தபி னிருண்மல வலிதிரிந் தரன்றாள் நிழல டைந்தவர் காட்சிபோ னீப்பருங் களங்கங் கழல வாடக மானதா லதுகொண்டு கனிந்த மழலை யீர்ஞ்சொலாள் கண்டனள் வடிவிலான் வடிவம் 1884 மழவிடை யுடையான் மேனி வனப்பினை நோக்கி யச்சோ அழகிய பிரானோ வென்னா வள்ளிமுத் தங்கொண் டன்பிற் பழகிய பிரானை யானாப் பாpவினாற் பதிட்டை செய்து விழவுதேர் நடாத்திச் சின்னாள் கழிந்தபின் வீடு பெற்றாள் 1885 நையநு[ண் ணிடையி னாளந் நாயகன் கபோலத் திட்ட கையுகிர்க் குறியுஞ் சொன்ன காரணக் குறியுங் கொண்டு வெய்யவெங் கதிர்கால் செம்பொன் மேனிவே றாகி நாலாம் பொய்யுகத் தவர்க்குத் தக்க பொருந்துரு வாகி மன்னும் இரசவாதம் செய்த படலம் முற்றிற்று, வேசமுற விருந்த கழு திரைமுடிந்த வடமின்றும் பூசுரர்கள் பணிந்தேத்தும் பூவணநன்னகர் மருங்கிற் காசின் மேல் விளங்கியது கழுவர் படைவீடெனவே - செல்லிநகர்ப் பெரும்பற்றப் புலியூர் நம்பி. திருவாலவாயுடையார் - பாடல் எண்,50 இரசவாதம் செய்த திருவிளையாடற் புராண வரலாறு. திருவிளையாடற்பயகர மாலையில். என்று பாடப்பெற்றுள்ளது, பொன்னனையாளுக்கு அருள் புரிந்த திருவிளையாடல் கடம்பவன புராணத்திலும் (கடம்பவன புராணம். இரவாதஞ் செய்த படலம். பாடல் எண் - 39 ) என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறாக திருப்பூவணத் தலபுராணம். திருவிளையாடற் புராணம். திருவிளையாடற் பயகரமாலை. கடம்பவன புராணம். பெரியபுராணம் ஆகிய புராணங்களில் திருப்பூவணத்திருத் தலத்தின் பெருமைகள் எடுத்துரைக்கப் பெற்றுள்ளன. அனுமன் சாலிசா அனுமன் சாலிசா ( ""அனுமன் மீது பாடப்பட்ட நாற்பது பாடல்கள்"") என்பது இறைவன் அனுமன் மீது பாடப்பட்ட பக்திப் பாடல் ஆகும். துளசிதாசரால் அவாதி மொழியில் இந்தப் பாடல் எழுதப்பட்டுள்ளது, மேலும் அவரால் பாடப்பட்ட ராமசரிதமனசாவை விட இதுவே சிறந்த இந்து உரையாகும். கடவுள் அனுமன் ஒரு பிரம்மச்சாரி தெய்வம் மேலும் ஸ்ரீ அனுமனின் அருளைப்பெற கோடிக்கணக்கானவர்கள் சாலிசாவைப் பாடுகிறார்கள். தற்போதைய இந்துக்களிடையே ஹனுமன் சாலிசா அதிமாகப் பிரபலமடைந்துள்ளது. பலர் இதை தினமும் அல்லது எல்லா வாரங்களும், பொதுவாக செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் இறைவணக்கத்தின் போது துதிக்கின்றனர். அனுமன் சாலிசாவின் ஒவ்வொரு 40 பாடல்களும் ஒரு குறிப்பிட்ட வரத்தை வழங்குகின்றது, பக்தரின் "பக்தி" அல்லது "சிரத்தை" யைப் பொறுத்து, ஒவ்வொரு பாடலின் பலனையும் பெறுவார்கள் எனக் குறிப்பிடுகின்றது. அனுமன் சாலிசாவின் 38 ஆம் பாடலில், "யார் அனுமன் சாலிசாவை 100 நாட்கள் தினமும் 100 தடவை சொல்கிறார்களோ அவர்கள் பிறப்பு மற்றும் இறப்பு சக்கரத்திலிருந்து விடுபட்டு அதிக ஆனந்தத்தை அடைவார்கள்" எனக் குறிப்பிடப்படுகின்றது. மந்த வளிமம் பொதுவாக இவ்வுலகிலும் அண்டத்திலும் உள்ள எல்லா தனிமங்களும் ஒன்றுடன் ஒன்று வினைபட்டு பல்வேறு வகையான சேர்மங்களைத் தருகின்றன. ஆனால் மந்த வளிமங்கள் (மந்த வாயுக்கள், "Inert gases") எனப்படுபவை பிற தனிமங்களுடன் மிகமிகப்பெரும்பாலும் சேர்ந்து வினை புரிவதில்லை. இவை உறழ் வளிமம், செயலறு வளிமம், சடத்துவ வாயு, மந்த வளிமம் எனப் பல்வேறு பெயர்களால் அறியப்படுகின்றன. ஈலியம், ஆர்கான், நியான் முதலான தனிமங்களில் மந்த வளிமமாக இருப்பனவற்றின் அணுக்களின் அமைப்பைப் பார்த்தால், அவற்றின் அணுக்கருவைச் சுற்றியுள்ள சுற்றுப்பாதைகளில் உலாவரும் எதிர்மின்னிகள், அந்த அந்த சுற்றுப்பாதைகளில் இருக்கக்கூடிய, உச்ச எண்ணிக்கையான அளவில் நிறைந்து இருப்பதால், வேதி வினைக்குத் தேவைப்படும் எதிர்மின்னிக் குறைவோ, தனித்து நிற்கும் எதிர்மின்னிகளோ இல்லாததால், வேதி வினைகளில் பங்கு கொள்ளாத வளிமங்களாக இவை இருக்கின்றன. கீழ்க்காணும் அட்டவணையில் அணுவினுக்குள் உள்ள எதிர்மின்னி வலயங்களில் ஒவ்வொரு வலயத்திலும் உச்ச எண்ணிக்கையாக எவ்வளவு எதிர்மின்னிகள் இருக்கலாமோ அவ்வளவு எதிர்மின்னிகள் இந்த மந்த வளிமங்களில் இருப்பதைப் பார்க்கலாம். மந்த வளிமங்கள் தனிமங்களாக மட்டும் இருக்க வேண்டும் என்றில்லை. இவை சேர்மங்களாகவும் இருக்கலாம். இவை பலதரப்பட்ட பயன்களை விளைவிக்கின்றன. இவை மற்ற பொருட்களுடன் வினைபுரியாத் தன்மை கொண்டிருப்பதால் எங்கெல்லாம் வேதிவினைகள் தவிர்க்ப்பட வேண்டுமோ அங்கெல்லாம் பயன்படுகின்றன. அட்டை அட்டைகள் ஈரமான பகுதியில் வாழக் கூடிய ஒட்டுண்ணிப் புழுக்களாம். அட்டைப் பூச்சி என்ற பொதுவழக்கு தவறானது. ஏனெனில் அட்டை மண்புழுவோடு தொடர்புடைய ஒரு வளையப் புழு (annelid) ஆகும். சில இனங்கள் குருதி குடிக்கும் ஒட்டுண்ணிகளாகச் (haemophagic parasite) செயல்படுகின்றன. அட்டைப் பூச்சி ஒரே நேரத்தில் தனது உடல் எடையைக் காட்டிலும் எட்டு மடங்கு அதிக அளவு ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் திறன் கொண்டது. இந்த நன்னீர் அட்டைகளின் உமிழ்நீரில் இருந்து சுரக்கும் இருடின் என்னும் நொதியானது பாலூட்டிகளின் இரத்தம் உறைவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. இதன் மூலம் அட்டைகள் பாலூட்டிகளின் குருதியை எளிதாக உறிஞ்சிக் குடிக்கின்றன. 2800 ஆண்டுகளுக்கு முன் எகிப்து நாட்டில் அட்டைப் பூச்சியை மருத்துவத்தில் பயன்படுத்தினர்.அட்டைப் பூச்சி மருத்துவச் சிகிச்சைக்கு ஹிருடோதெரபி என்பர். இந்தியாவில் குறிப்பாக கேரள மாநிலத்தில் ஆயுர்வேத மருத்துவச் சிகிச்சையில் அட்டைப் பூச்சிகளை பயன்படுத்துகின்றனர். உடலில் உள்ள இரத்தக்கட்டிகளை கரைப்பதற்கும், முகப்பருக்களை நீக்கப் பயன்படுத்தப்படுகிறது. அட்டைபூச்சியின் எச்சில் இரத்தத்தின் அடர்த்தியை குறைக்கிறது. ஆறாத காயங்களை குணப்படுத்துகிறது. முக்கியமாக அறுவை சிகிச்சைக்கு பின் உண்டாகும் ரணங்களை வெகுவிரைவில் ஆற்றுகிறது. தோல் வியாதிகள் ( Psoriasis), வெளி மூலம், மூட்டு வலி குணப்படுத்தவும் அட்டைபூச்சி பயன்படுத்தப்படுகின்றன அட்டைப்பூச்சியின் எச்சிலில் புரோடியேஸ் தடுப்பு என்ற என்சைம் மற்றும் ரத்த உறைதலை எதிர்க்கும் மூலக்கூறுகள் உள்ளதால், அட்டைகளைப் புற்று நோய் மருந்துகளாக மருத்துவத்துறையில் பயன்படுகின்றன. அட்டைப்பூச்சியின் எச்சிலில் இருக்கும் கிலான்டென் என்ற பொருள் பல்வேறு புற்றுநோய்கள் உருவாவதை தடுக்கின்றன என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும் அட்டைப்பூச்சியில் ஹிருடின் என்ற புரதம், புற்று நோயை எதிர்க்கும் மருந்தாக செயல்படுகிறது. விசிட்டாத்துவைதம் விசிட்டாத்துவைதம் (விசிஷ்டாத்வைதம்) என்பது காலத்தால் பழமைவாய்ந்து, பின்னர் வந்த வைணவ மகாச்சாரியராகிய இராமானுசரால் புகழ்ப்பெற்ற தத்துவம் ஆகும். பிரம்ம சூத்திரம், பகவத் கீதை முதலியவற்றிற்கு தமது விசிட்டாத்துவைதக் கொள்கைப்படி உரை எழுதினார். சிறப்புநிலையான அத்வைதம் (இரண்டன்மைக் கொள்கை) என்பது இதன் பொருள் (விசிஷ்ட (சிறப்பு) + அத்வைதம் (இரண்டன்மை) = விசிஷ்டாத்வைதம்= விசிட்டாத்துவைதம்). வேதாத்திரி மகரிசி விளக்கம் விசிட்டாத்துவைதமானது சீவாத்மாவும் பரமாத்மாவும் ஒரே பொருளாலானவை என்றும் சீவாத்மா பரமாத்மாவிலிருந்து வெளிப்பட்டது என்றும் கூறுகிறது. சித்து, அசித்துச் சேர்க்கையால் விளங்கும் இரண்டற்றதான பிரம்மம் உண்டென்பதே உட்கருத்து. பிரம்மம் ஒருவரே. அவர் சத்து என்றும் பிரம்மம் என்றும் ஈசுவரன் என்றும் திருமால் என்றும் பெயர் பெறுகிறார். அவர் சித்து என்னும் ஆத்மாவுடனும் அசித்து எனப்படும் சடத்தோடும் எப்போதும் சேர்ந்திருக்கிறார். பரமாத்மாவே நிலையானவர். சுதந்திரம் உடையவர் சித்தும் அசித்தும் அவரைச் சார்ந்திருப்பவை. ஆசாரிய அன்பு, சுருதி, சுமிருதி, நம்பிக்கை, மோட்ச விருப்பம், உலக ஆசை அறுதல், தரும சிந்தனை, வேத பாராயணம், சாது சங்கமச் சேர்க்கை முதலானவற்றால் கர்மபந்தத்தை விட்டு முக்தி பெறலாம். துவைதம் துவைதம் த்வி என்றால் இரண்டு. இறைவன் ஒருவனே சுதந்திரமானவன், உலகு உயிர் ( பரதந்திரமானவை ) வேறானவை. இறைவன் தனி, மற்றவை அதில் சேராதவை, பரமாத்மா, ஜீவாத்மா, ஜட உலகம்-இவை எவராலும் உண்டாக்கப்படாத நித்தியப் பொருள்கள். உலகம் ஒரு தோற்றம் அன்று. சுதந்திரம் இறைவனுக்கு மட்டும் உண்டு. கர்மத்தை நீக்கினால் வீடுபேற்றை அடையலாம். துவைத தத்துவத்தை தோற்றுவித்தவர் மத்வர் ஆவார். திகம்பரர் சமண சமயத் துறவிகள் இரு வகையினர். ஒருவர் திகம்பரர். எவன் திசைகளை ஆடையாகக் கொண்டு வாழ்கிறானோ அவன் திகம்பரன் ஆவான்.திகம்பரர் = திக் + அம்பரம், திக்-திசை, அம்பரம்-ஆடை திகம்பரர் என்றால் ஆடை அணியாதோர் என பொருள்படும். மற்றொரு வகையினர். சுவேதாம்பரர். சுவேதம்பர தேராபந்த் சுவேதாம்பர சமண சமயத்தின் சுவேதம்பர தேராபந்த் ஒரு பிரிவாகும். இப்பிரிவு ஆச்சாரியர் பிட்சு என்பவரால் 28 சூன் 1760 அன்று தொடங்கப்பட்டது. இவர் முன்பு "சுதனக்வாசி" பிரிவை பின்பற்றிக் கொண்டிருந்தார். ஆனால் அங்கு அவர் குரு ஆச்சார்யா ரகுநாதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் தனியே வந்து இப்பிரிவை தொடங்கினார். சுதனக்வாசி பிரிவைப் போலவே, கடவுளுக்கு உருவம் இல்லை என்று முழங்கிய இப்பிரிவினர் சிலை வழிபாட்டினை எதிர்த்தனர். முர்டிபுஜக சமண சமயத்தில் முர்டிபுஜக ஒரு பிரிவாகும். இப்பிரிவினர் சுதனக்வாசிகல் போலல்லாமல் சமணக் கோவில்களுக்கு செல்வர். உருவ வழிபாட்டை ஆதரிக்கும் இவர்களே இந்தியாவில் மற்றப் பிரிவினரைக் காட்டிலும் அதிகம் வாழ்கின்றனர். இவர்கள் மற்ற சமண சமயத்தினரைப் போன்று எப்பொழுதும் முகப்பட்டை அணிய மாட்டார்கள். சைதன்யர் மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவில் வைணவ பக்தி நெறியைப் பரப்பிய இவர் ‘ஸ்ரீசைதன்ய மகா பிரபு’ என்று அழைக்கப்பட்டார். இல்வாழ்வில் ஈடுபட்ட இவர் தம் 25ம் வயதில் இல்வாழ்வைத் துறந்து இறைவன் திருப்பணிக்கு தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். கிருஷ்ணன் அல்லது ஹரி என அழைக்கப்படும் புருஷோத்தமன் மேல் ஆழ்ந்த நம்பிக்கையும் அன்பும் கொள்ள வேண்டும் என்பது இவரது கருத்து. "சடங்குகளிலிருந்து விடுபட்டு, ஆடிப்பாடி உணர்வுப் பிழம்பாய் இறைவனின் அருள் வெள்ளத்தில் திளைக்க வேண்டும். கண்ணனை வழிபட்டு, குருவைப் பணிந்து பணிபுரிந்து வந்தால் மாயையில் இருந்து விடுபட்டு இறைவனின் திருவடிகளை அடையலாம்" என்றார். சைதன்யர் புரி ஜெகன்நாதர் மீது ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தார். http://srkvijayam.com/2014/04/29/சைதன்ய-மகாபிரபு/ சோழிங்கநல்லூர் (சட்டமன்றத் தொகுதி) சோளிங்கநல்லூர் காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். தொகுதி மறுசீரமைப்பில் சோளிங்கநல்லூர் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. தாம்பரம் தொகுதியில் இருந்த பகுதிகளைப் பிரித்து சோளிங்கநல்லூர் தொகுதி உருவானது. தாம்பரம் வட்டம் நன்மங்கலம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், காரப்பாக்கம், பெரும்பாக்கம், வேங்கைவாசல், சிட்லப்பாக்கம், ஒட்டியம்பாக்கம், அரசன்கழனி, செம்மஞ்சேரி மற்றும் உத்தண்டி கிராமங்கள். புழுதிவாக்கம் (உள்ளகரம்) (நகராட்சி), பெருங்குடி (பேரூராட்சி), கொட்டிவாக்கம் (சென்சஸ் டவுன்), ஈஞ்சம்பாக்கம் (சென்சஸ் டவுன்), பாலவாக்கம் (சென்சஸ் டவுன்), நீலாங்கரை (செசன்ஸ் டவுன்), ஒக்கியம்துரைப்பாக்கம் (சென்சஸ் டவுன்), பள்ளிக்கரணை (பேரூராட்சி), மடிப்பாக்கம் (செசன்ஸ் டவுன்), ஜல்லடியன்பேட்டை (செசன்ஸ் டவுன்) மற்றும் சோளிங்கநல்லூர் (பேரூராட்சி). , 2016 அன்று "முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு" வெளியிட்ட பட்டியலின்படி, 6,24,405 வாக்காளர்கள் உள்ளனர் துக்காராம் இவர் ஆன்மீக ஞானியும் சமய சீர்திருத்தவாதியும் ஆவார். இவர் இந்திய மாநிலமாகிய மகாராஷ்டிராவில் பிறந்தவர். இல்வாழ்வைத் துறந்து பக்தனாகவும், சீர்திருத்தவாதியாகவும் செயல்பட்டார். மராட்டிய மக்களிடம் நாட்டுப் பற்றை வளர்க்க, சிவாஜி காலத்தில் வாழ்ந்த இவரது போதனைகள் உதவின. கடவுள் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவர், வரம்பில்லா ஆற்றல் உடையவர் என்பது இவரது கருத்து. பேரரசர் சிவாஜி இவர் சீடர்களில் ஒருவர். சைதன்யரைப் போன்று பக்திப் பாடல்களை இயற்றியுள்ளார். இவர் விஷ்ணுவின் அவதாரமான விட்டலனின் பக்தர். இவரது பாடல்கள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நாம்தேவ் மகராஜ் என்பவரைத் தம் குருவாக ஏற்றுக் கொண்டார். இவரைப் போற்றி, "சந்த் துக்காராம்" என்ற திரைப்படம் 1937இல் தயாரிக்கப்பட்டது. இதில் இவரது வாழ்க்கை வரலாறு திரையிடப்பட்டது. 1938இல் துகாராம் என்ற பெயரில் தமிழ்த் திரைப்படம் வெளியானது. 2012 ஆம் ஆண்டிலும், மராத்திய மொழியில் துக்காராம் என்ற பெயரில் திரைப்படம் வெளியானது. 1973இல், தெலுங்கில் பக்த துக்காராம் என்ற பெயரில், இவரைப் பற்றிய திரைப்படம் உருவானது. சந்த துக்காராமா என்ற பெயரில் 1963இல் கன்னடத் திரைப்படம் வெளியானது. பல்லாவரம் (சட்டமன்றத் தொகுதி) பல்லாவரம் காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். தொகுதி மறுசீரமைப்பில் பல்லாவரம் தொகுதி புதிதாக உருவானது. ஆலந்தூர் தொகுதியில் இருந்த பகுதிகளை பிரித்து பல்லாவரம் தொகுதி ஏற்படுத்தப்பட்டது. தாம்பரம் வட்டம் (பகுதி) பொழிச்சலூர் (செசன்ஸ் டவுன்), அனகாபுத்தூர் (பேரூராட்சி), பம்மல் (பேரூராட்சி) திரிசூலம் (செசன்ஸ் டவுன்),பல்லாவரம் (நகராட்சி), திருநீர்மலை (பேரூராட்சி) மற்றும் மீனம்பாக்கம் (பேரூராட்சி) , 2016 அன்று "முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு" வெளியிட்ட பட்டியலின்படி, ஏகநாதர் இவர் மஹாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர். பைத்தான் என்னும் ஊரில் பிறந்தார். சிறு வயதிலேயே இவரது உள்ளத்தில் பக்தி, கனல் விட்டு எரிந்தது. இல்வாழ்வில் ஈடுபட்ட இவர் தீண்டத்தகாதோரிடம் எல்லையற்ற அன்புடையவரானார். கண்ணனை அனைத்திலும் கண்டார். கண்ணனின் தீவிர பக்தர், பெரிய பாகவத புருஷர், சிறந்த இல்லற நெறியாளர், பெரிய ஞானி. இன்றும் மக்களுக்கு உயரிய எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றார். பதினாராம் நூற்றாண்டில் துக்காராம் என்பவரின் விவசாய குடம்பத்தில் பிறந்தார். அனைவரிலும் மிகச் சிறந்த பக்தர் இவர். பைதான் பிராம்மணராகிய ஏகநாத் ஞானேஸ்வரி என்ற நூல் (கி.பி. 1590) தற்போது நமக்கு கிடைக்கப்பட்டதற்கு இவரே காரணம். பல மராத்தி பாடல்களை இவர் கண்டுபிடித்து கொடுத்துள்ளார். நாட்டில் பஞ்சம் ஏற்பட்டபொழுது அதில் இருந்து தப்பி பிழைத்தார். இவர் தீண்டாமைக்கு எதிராகவும் செயல்பட்டார். இதனால் பிராமணர்களால் இவர் வெறுக்கப்பட்டார். இறுதியில் இவர் ஓர் ஆற்றில் மூழ்கி இறந்தார். சூர்தாசர் இவர் உயர்ந்த ஞானி, நல்ல சமயபரப்புநர், சிறந்த சீர்திருத்தவாதியாவார்.இவர் மதுரா அருகில் 1478ல் பிறந்து 1581 வரை வாழ்ந்தார். இந்தியில் மிகச் சிறந்த நூல்களை எழுதியுள்ளார். இந்நூல்கள் அனைத்தும் தான் விரும்பும் தெய்வத்தின் பால் செலுத்த வேண்டிய அன்பையும் பக்தியையும் விளக்குகின்றார். இவர் எழுதிய சூர்சாகர் என்ற நூல் அன்பு, பக்தி இவற்றின் மேன்மையையும் கண்ணனைக் குழந்தையாய் கருதி சித்தரிக்கும் அற்புத நிலையையும் விளக்குகிறது. இவர் “வாழ்வு ஒரு விளையாட்டு, வீர தீரச் செயல், ஆனால் போராட்டமன்று; ஏமாற்றம் மிக்க கதையும் அன்று” என்கிறார். இவரது கவிதைகள் மனித இனத்தின் பால் வியத்தகு விளைவை ஏற்படுத்தியதுடன் பக்தி நெறியின் வழிகாட்டியாகவும் திகழ்ந்தன. மாதவரம் (சட்டமன்றத் தொகுதி) மாதவரம் திருவள்ளூர் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். தொகுதி மறுசீரமைப்பில் மாதவரம் தொகுதி 2011 தேர்தலில் புதிதாக உருவாக்கப்பட்டது. அம்பத்தூர் வட்டம் கீழ்கொண்டையூர், ஆலந்தூர், பாண்டேஸ்வரம், அரக்கம்பாக்கம், மோரை, மேல்பாக்கம், கதவூர், வெள்ளச்சேரி, பாலவேடு, வெள்ளானூர், பொத்தூர், பம்மதுகுளம், தீர்க்ககிரியம்பட்டு, பாலவயல், விளாங்காடு பாக்கம், சிறுகாவூர், அரியலூர், கடப்பாக்கம், சடையன்குப்பம், எலந்தஞ்சேரி, மாத்தூர், மஞ்சம்பாக்கம், கொசப்பூர், செட்டி மேடு, வடம்பெரும்பாக்கம், லயான், பாயசம்பாக்கம், கிராண்ட் லயான், அழிஞ்சிவாக்கம், அத்திவாக்கம்ம், வடகரை, சூரப்பட்டு, கதிர்வேடு மற்றும் புத்தகரம் கிராமங்கள். நாரவாரிக்குப்பம் பேரூராட்சி, புழல் பேரூராட்சி மற்றும் மாதவரம் நகராட்சி. பொன்னேரி வட்டம் நெற்குன்றம், செக்கஞ்சேரி, சூரப்பட்டு, சோத்துபெரும்பேடு, காரனோடை, ஆத்தூர், புது எருமை, வெட்டிப்பாளையம், பழைய எருமைவெட்டிப்பாளையம், சோழவரம், ஒரக்காடு, புதூர், கண்டிகை, மாரம்பேடு, கும்மனூர், ஆங்காடு, சிருணியம், செம்புலிவரம், நல்லூர், அலமாதி, ஆட்டந்தாங்கல், விஜயநல்லூர் மற்றும் பெருங்காவூர் கிராமங்கள். பாடியநல்லூர் சென்சஸ் டவுன். , 2016 அன்று "முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு" வெளியிட்ட பட்டியலின்படி, மதுரவாயல் (சட்டமன்றத் தொகுதி) மதுரவாயல் திருவள்ளூர் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். தொகுதி மறுசீரமைப்பில் மதுரவாயல் தொகுதி 2011 தேர்தலில் புதிதாக உருவாக்கப்பட்டது. அயம்பாக்கம், நொளம்பூர், அடையாளம்பட்டு மற்றும் வானகரம் கிராமங்கள். வார்டு எண் - 35, 36 மற்றும் 52, நெற்குன்றம் செசன்ஸ் டவுன், மதுரவாயல் பேரூராட்சி, வளசரவாக்கம் பேரூராட்சி, காரம்பாக்கம் செசன்ஸ் டவுன், போரூர் பேரூராட்சி மற்றும் ராமாபுரம் சென்சஸ் டவுன். , 2016 அன்று "முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு" வெளியிட்ட பட்டியலின்படி, அம்பத்தூர் (சட்டமன்றத் தொகுதி) அம்பத்தூர் திருவள்ளூர் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இதன் தொகுதி எண் 21. தொகுதி மறுசீரமைப்பில் அம்பத்தூர் தொகுதி 2011 சட்டமன்றத் தேர்தலின்போது புதிதாக உருவாக்கப்பட்டது. அம்பத்தூர் நகராட்சி வார்டு எண் 1 முதல் 34 வரை மற்றும் 37 முதல் 51 வரை. , 2016 அன்று "முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு" வெளியிட்ட பட்டியலின்படி, ஆவடி (சட்டமன்றத் தொகுதி) ஆவடி திருவள்ளூர் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். தொகுதி மறுசீரமைப்பில் ஆவடி தொகுதி 2011 தேர்தலில் புதிதாக உருவாக்கப்பட்டது. ஆவடி நகராட்சி, திருநின்றவூர் பேரூராட்சி, திருவேற்காடு பேரூராட்சி மற்றும் பூந்தமல்லி வட்டம் நடுகுத்தகை, நெமிலிச்சேரி மற்றும் கருணாகரச்சேரி கிராமங்கள். , 2016 அன்று "முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு" வெளியிட்ட பட்டியலின்படி, எறும்புத் தொடர்வட்டம் படை வீரர் எறும்புகளில் (army ants) ஒரு சிறு குழுவை மற்றவற்றிடமிருந்து தனியே பிரிக்கும் போது அவை முக்கிய ஃபெரமோன் (Pheromone) பாதையிலிருந்து தவறி விடுகின்றன. ஆனாலும் வழக்கம் போல அவை ஒன்றையொன்று பின் தொடர்கின்றன. இவ்வாறு வழி தவறிய இக்குழுவில் ஒவ்வோர் எறும்பும் மற்றதைப் பின்தொடரும். இதன் விளைவாக வட்ட வடிவிலான ஓர் எறும்பு வட்டம் உருவாகும். இதையே எறும்புத் தொடர்வட்டம் (ant mill) என்றழைப்பர். இறுதியில் வழியறியாத இவ்வெறும்புகள் வட்டமடித்து அடித்துக் களைப்புற்று மாண்டு போகும். எறும்புகளின் இந்த நடத்தை ஆய்வகங்களிலும் அவற்றின் இயற்கையான வாழிடங்களிலும் பார்த்து அறியப்பட்டுள்ளது. இது மிகவும் மோசமானது தான் என்றாலும் எறும்புகள் தங்களின் மிகச் சிறப்பான தற்கட்டுப்பாட்டு அமைப்பிற்கு (self organization) இது போன்றதொரு விலையைத் தர வேண்டியுள்ளது. சில கம்பளிப்புழுக்களிலும் இதையொத்த நிகழ்வு காணப்படுகிறது. அமெரிக்க இயற்கையியலாளரான வில்லியம் பீப் என்பவர் தான் முதன் முதலாக 1921 ஆம் ஆண்டு கயானாவில் தான் கண்ட ஓர் எறும்பு ஆலையை விவரித்தார். வேளச்சேரி (சட்டமன்றத் தொகுதி) வேளச்சேரி சென்னை மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். தொகுதி மறுசீரமைப்பில் வேளச்சேரி தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. சென்னை மாநகராட்சியின் வார்டு எண் 151 முதல் 155 வரையுள்ள பகுதிகள். , 2016 அன்று "முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு" வெளியிட்ட பட்டியலின்படி, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி (சட்டமன்றத் தொகுதி) சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சென்னை மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். தமிழகத்திலேயே சிறிய தொகுதியாக இருந்த சேப்பாக்கம் தொகுதியில் திருவல்லிக்கேணி தொகுதியின் பகுதிகளை இணைத்து சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி உருவாக்கப்பட்டது. சென்னை மாநகராட்சியின் வார்டு 79, 81 முதல் 93 வரை, 95 மற்றும் 111. , 2016 அன்று "முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு" வெளியிட்ட பட்டியலின்படி, இசுடுட்சாட் ஸ்டுட்சாட் (STUDSAT) என்பது மாணவர்களின் செயற்கைக்கோள்; இது இந்தியாவில் உருவாக்கப்படும் முதல் பீகோ-செயற்கைக்கோள் ஆகும். கர்நாடக, ஆந்திர மாநிலப் பொறியியல் கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்பட்ட ஸ்டுட்சாட் 1 கிகி-இற்கும் குறைவான நிறையே உடையது. இத்திட்டத்திற்கு நிதியுதவியும் மாணவர்களையும் அளித்த கல்லூரிகள் பின்வருமாறு: நல்லதங்காள் நல்லதங்காள் கதை தமிழகத்தில் பிரபலமான ஒரு சோகக் கதையாகும். இது தொடர்பான சம்பவம் கதையாகவே சொல்லப்பட்டு வந்தாலும், அவள் உண்மையிலேயே வாழ்ந்தாள் எனவும் நம்பப்படுகிறது. நல்லதங்காள் வறுமையின் காரணமாகவும் தனது அண்ணியின் சுடுசொல் தாளாமலும் தான் பெற்ற பிள்ளைகளைக் கிணற்றில் வீசிக் கொன்று விட்டு, பின் தானும் அக்கிணற்றில் விழுந்து இறந்ததாக அவளது கதை சொல்லப்படுகிறது. அவளது மரணத்தைத் தாளாத அவளது அண்ணன் நல்லதம்பியும் அதே கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டான். நல்லதம்பி-நல்ல தங்காள் வாழ்க்கை சிறந்த அண்ணன் - தங்கை பாசத்துக்கு எடுத்துக்காட்டாக சொல்லப்படுகிறது. தற்போது நல்லதங்காள் சிறுதெய்வமாக வழிபடப்படுகிறாள். திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள அர்ச்சுனாபுரத்தில் நல்ல தங்காளுக்கு கோவில் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் திருவிழாவும் நடக்கிறது. அர்ச்சுனாபுரம் மற்றும் அந்த கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதியை ராமலிங்க சேதுபதி, இந்திராணி தம்பதியினர் ஆட்சி செய்து வந்தனர். இவர்களுக்கு நல்ல தம்பி, நல்லதங்காள் என இரண்டு குழந்தைகள். இவர்கள் தாய், தந்தையை இளம் வயதிலேயே இழந்தனர். இருந்த போதிலும், அந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்த நல்லதம்பி, தன் தங்கை நல்லதங்காளைச் சீராட்டி வளர்த்து தற்போதைய சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் வாழ்ந்த ராஜ வம்சத்தைச் சேர்ந்த காசிராஜா என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார். திருமணம் ஆன இளம் வயதிலேயே நல்ல தங்காள் ஏழு குழந்தைகளுக்குத் தாய் ஆனாள். இதில் நான்கு ஆண் குழந்தைகள், மூன்று பெண் குழந்தைகள். இந்நிலையில், மானாமதுரையில் மழை பொய்த்ததால் பஞ்சம் தலைவிரித்தாடியது. தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் மழையே இல்லை. உண்ண உணவு இன்றி மக்கள் பலரும் மாண்டனர். நல்ல தங்காள் குடும்பமும் அந்நிலைக்கு ஆளானது. அவள், அண்ணன் கொடுத்தனுப்பிய சீதனப் பொருட்களை ஒவ்வொன்றாக விற்றாள். ஒரு கட்டத்தில் வீட்டில் எதுவுமே இல்லை என்ற நிலை வந்தது. சாப்பாட்டிற்கும் வழியில்லாமல் போனது. மனம் உடைந்த நல்ல தங்காள் தன் ஏழு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தான் பிறந்த அர்ச்சுனாபுரம் கிராமத்துக்கு வந்தாள். அப்போது அவளது அண்ணன் நல்லதம்பி வேட்டையாடக் காட்டுக்கு சென்று இருந்தார். அண்ணன் வரும்வரை அரண்மனையில் தங்கி இருக்கலாம் என்று எண்ணிய நல்ல தங்காள் அங்கு சென்றாள். ஆனால் நல்ல தம்பியின் மனைவி மூளியலங்காரியோ, பல நாட்கள் பட்டினி கிடந்த நல்லதங்காளையும், அவளது பிள்ளைகளையும் உண்ண உணவு கூட கொடுக்காமல் அரண்மனையை விட்டே துரத்தினாள். மூளியலங்காரியின் கடும் சொற்களால் மனம் உடைந்த நல்லதங்காள் குழந்தைகளுடன் வந்த வழியே திரும்பினாள். "எந்த உதவியும் இல்லாமல் இப்படி பரிதாப நிலைக்கு ஆளாகிவிட்டேனே... இனி, யாரை நம்பி நான் வாழப்போகிறேன்? என் பிள்ளைகள் எப்படி வாழப்போகிறார்கள்?" என்று பலவாறு யோசித்தாள். அப்போது, அவளது குழந்தைகள், ‘அம்மா பசிக்குது... ஏதாவது வாங்கிக் கொடும்மா...’ என்று அழ ஆரம்பித்து விட்டனர். அவளது கையிலோ பணமோ அல்லது பொருளோ எதுவும் இல்லை. குழந்தைகளின் பசியைப் போக்க வழி தெரியாமல் தவித்த அவளுக்கு அங்கிருந்த ஒரு பாழடைந்த கிணறு கண்ணில் பட்டது. நேராகக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு அங்கு சென்றாள். பசியால் துடித்து அழுத குழந்தைகளை ஒவ்வொன்றாகக் கிணற்றுக்குள் தூக்கிப் போட்டாள். ஏழு குழந்தைகளையும் கிணற்றில் தூக்கிப் போட்டு கொன்ற பிறகு, தானும் அதே கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள். மனைவியின் உதாசீனத்தால் தனது தங்கை, பிள்ளைகளுடன் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த நல்லதம்பி துடிதுடித்தான். அந்த கவலையில் அவனும் இறந்து போனான். அண்ணன் - தங்கை பாசம் என்றால் இதுவல்லவா? என்று மெச்சிய சிவனும், பார்வதியும் அங்கே தோன்றினர். தற்கொலை செய்த நல்லதங்காள், அவளது பிள்ளைகளை உயிர் பெறச் செய்ததோடு, நல்ல தம்பியையும் உயிர்ப்பித்தனர். அப்போது நல்ல தங்காளும், நல்லதம்பியும், “நாங்கள் இறந்தது, இறந்ததாகவே இருக்கட்டும். மனிதப் பிறவி எடுத்து மாண்டவர்கள் மீண்டும் உயிர் பெற்றார்கள் என்ற வரலாறு ஏற்பட வேண்டாம். எனவே நாங்கள் இறந்ததாக கருதி அருள் புரிய வேண்டும்” என கூறினார்கள். சிவனும் அவ்வாறே அவர்களின் வேண்டுகோளை ஏற்றுகொண்டார். இந்த ஒரே காரணத்துக்காக நல்லதங்காள் தெய்வமாகிவிட்டாள். நல்லதங்காள் வாழ்ந்ததாகக் கருதப்படும் ஊர் விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் வத்திராயிருப்பு பக்கத்தில் அமைந்துள்ளது. இந்த ஊரின் பெயர் அர்ச்சுனாபுரம். பச்சை ஆடை போர்த்திய வயல்வெளிகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது அர்ச்சுனாபுரம். அங்கே வயல்வெளிக்கு மத்தியிலேயே கோவில் கொண்டுள்ளாள் நல்லதங்காள். நல்லதங்காள் கோவில் அமைப்பு மற்ற கோயில்களைப் போல் அல்லாமல் வித்தியாசமாகக் கட்டப்பட்டுள்ளது. கோவில் கருவறையில் நல்லதங்காள் சிலை கம்பீரமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஏழு குழந்தைகளின் சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டு தனியே இன்னொரு சன்னதியில் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்தக் கோவிலுக்குச் சற்று தொலைவில் ஒரு பாழடைந்த கிணறு சிதைந்து போய்க் காணப்படுகிறது. நல்ல தங்காள் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டது இங்கேதான் என்று சொல்கிறார்கள். இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. மேலும், ஒவ்வொரு ஆடி மாதமும் நடைபெறும் பொங்கல் விழாவில் நல்லதங்காளின் உறவினர் வழித் தோன்றல்களாக வந்தவர்கள், மானாமதுரையில் இருந்து இங்கு வந்து விழாவில் கலந்து கொள்கின்றனர். இந்தத் திருவிழா நான்கு நாட்கள் நடைபெறுகிறது. அத்துடன், மாதம்தோறும் பவுர்ணமி பூஜையும் சிறப்பாக நடக்கிறது. இந்தக் கோவிலுக்கு வந்து வேண்டினால் குடும்ப உறவு பலப்படும், திருமணமாகாத பெண்கள் வந்து மஞ்சள் கயிறு வாங்கி கட்டினால் திருமணம் கைகூடும், வாழ்வில் நலம் ஏற்படும் என்பது இக்கோயில் பக்தர்களின் நம்பிக்கை. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இந்த கிராமத்திற்குச் செல்ல நேரடியாகப் பேருந்து வசதி இல்லை. ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து வத்திராயிருப்புக்குச் சென்று, அங்கிருந்து சிற்றுந்து மூலமாக அர்ச்சுனாபுரம் செல்ல முடியும். சிவ சின்னங்கள் சிவ சின்னங்கள் என்பவை சைவ சமய முழுமுதற் கடவுளான சிவபெருமானின் சின்னங்களாக கருத்தப்படுபவன ஆகும். இச்சின்னங்களின் எண்ணிக்கை குறித்தான பல்வேறு கருத்துகள் உள்ளன. இரு வகையாக சிவ சின்னங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. 1) அக சிவசின்னங்கள் 2) புற சிவசின்னங்கள் அக சிவசின்னம் என்பது திருவைந்தெழுத்தாகும். புறம் என்றால் வெளியே என்று பொருளாகும். எனவே உடலில் அணியக்கூடிய சிவ சின்னங்களை புற சிவசின்னங்கள் என்பர். சிவபெருமானின் சின்னங்களாக எண்ணிக்கை அடிப்படியில் ஏழு சிவ சின்னங்கள் பட்டியலிடப்படுகின்றன. அவையாவன. சில சிவ சின்னங்களை சைவ சமயிகளில் தரித்துக் கொள்ளுங்கின்றார்கள். அவையாவன. வேர்த்துசா வேர்த்துசா என்பது அமெரிக்காவை மையமாகக் கொண்ட ஒரு தகவல் தொழில்நுட்ப தீர்வுகளை வழங்கும் ஒரு நிறுவனமாகும். வேர்த்துசா ஐ.பி.எம், மைக்ரோசாப்ட், ஒராக்கிள், ஓபின் டெக்ஸ்ட் போன்ற நிறுவனங்களுடன் வர்த்தகத் தொடர்புகளைப் பேணும் ஒரு நிறுவனம் என்பதையும் குறிப்பிட வேண்டும். 1996 இல் தாபிக்கப்பட்ட இந்த நிறுவனத்தில் கிளைகள் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், இலங்கை, இந்தியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ளது. 1996ம் ஆண்டு கம்பனி நிறுவனர் கிரிஸ் கனகரட்னத்தின் கொழும்பு, இலங்கையில் உள்ள வீட்டு வாகனத்தரிப்பிடத்தில் ஒரு சிறிய நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டது. நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டபோது நிறுவனத்தில் வெறும் மூன்று மென்பொருள் வல்லுனர்கள் மட்டுமே பணியாற்றினர். ஆகஸ்ட் 3, 2007 இல் இந்த நிறுவனம் அமெரிக்காவின் நஸ்டாக்கில் பட்டியலிடப்பட்டது. கிண்ணியா கிண்ணியா ("Kinniya") இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். திருகோணமலை நகரில் இருந்து கிட்டத்தட்ட 20 கிமீ தூரத்திலும், தலைநகர் கொழும்பில் இருந்து சுமார் 240 கிமீ தொலைவிலும் இந்த நகரம் அமையப் பெற்றுள்ளது. இது சுமார் 350 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றைக் கொண்டதொரு பிரதேசமாகும். மூன்று பக்கங்களும் கடலால் சூழப்பட்டு இயற்கை எழில் கொண்டது இந்நகர். இலங்கையிலேயே மிக நீளமான கடல் மேல் பாலம் கிண்ணியாவிலேயே அமைந்துள்ளது. ஏறக்குறைய 35,000 பேர் இங்கு வாழ்கின்றனர். இவர்களில் 97% தமிழ் பேசும் முஸ்லிம்களும், ஏனையோர் தமிழர்களும் ஆவர். 2004 ஆழிப்பேரலையின் போது இந்நகர் பெரும் அழிவைச் சந்தித்தது. ஜென்டில்மேன் (திரைப்படம்) ஜென்டில்மேன் 1993-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை ஷங்கர் இயக்கினார். இது அவரின் முதல் படம்.தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன். இப்படத்தில் அர்ஜூன்,மதுபாலா,கவுண்டமணி,செந்தில் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் அந்த ஆண்டு வெளிவந்த இந்தியப் படங்களில் மிகவும் செலவு செய்து எடுக்கப்பட்ட படம் என்ற பெருமைக்குரியது.இது தமிழின் மிகப்பெரிய வெற்றிப் படங்களுள் ஒன்று ஆகும். லென்சின் விதி லென்சின் விதி (Lenz's law) தூண்டு மின்னோட்டத்தின் திசையை அறிவதற்குப் பயன்படும் விதியாகும். இது, மின்காந்தத் தூண்டலின் மூலம் தூண்டப்படும் மின்னியக்க விசையின் திசையை வரையறுக்கிறது. இவ்விதி, ஆற்றல் அழிவின்மைத் தத்துவம்யின் அடிப்படையில் உள்ளது. லென்சின் விதி, ஏன்ரிக் எமில் லென்சு என்ற எசுத்தோனிய இயற்பியலாரால் உருவாக்கப்பட்டது. இது ஜெர்மானிய பௌதிகவியலாளரான ஹைன்ரிக் லென்ஸ் (Heinrich Lenz) என்பவரின் பெயரினால் 1834 ஆம் ஆண்டு முதல் குறிப்பிடப்படுகிறது. லென்சு விதியின் கூற்று பின்வருமாறு: லென்சின் விதி ஃபரடேயின் விதியின் மூலம் நிறுவப்படும். இரண்டு விதிகளையும் இணைத்தால், இங்கு, லென்சின் விதி இங்கு (-) குறியினாற் தரப்படுகிறது. லென்சு விதி ஆற்றல் அழிவின்மை விதிக்கு ("law of conservation of energy") உட்பட்டு உள்ளது.Schmitt, Ron. "Electromagnetics explained". 2002. Retrieved 16 July 2010. தூண்டல் மின்னியக்க விசை எந்திர ஆற்றலின் விளைவால் தோன்றுகிறது. ஒரு காந்தத்தைக் கம்பிச் சுருளுக்குள் எடுத்துச் செல்லும்போது லென்சின் விதிப்படி, காந்தம் எடுத்துச் செல்லும் விசையின் திசைக்கு எதிர்த் திசையில் ஒரு விசை தோன்றி, காந்தத்தின் மீது வேலை செய்கிறது. இந்த வேலையே மின்னாற்றலாக மாறி மின்னோட்டமாகச் செல்லுகிறது. இந்த மின்னாற்றல் கம்பிச் சுருளில் வெப்பமாக மாறி, மறைகிறது. மாறாக, காந்தத்தை எடுத்துச் செல்லும் விசையின் திசையில் விசை தோன்றியிருப்பதாகக் கொண்டால், இவ்விசை காந்தத்தின் இயக்கத்துக்குத் துணையாக இருந்து, காந்தம் வேகமாக கம்பிச்சுருளை நோக்கி நகர துணை புரியும். அதனால் மின்னோட்டம் முடிவிலியாக வளரும். மேலும் இயக்க ஆற்றலும் மின்னாற்றலும் புறவேலையின்றி தோன்றுவதாக அமையும்; ஆனால் இது நடைபெறமுடியாத ஒரு நிகழ்வு என்பதால் தூண்டல் மின்னோட்டம் அதைத் தோற்றுவிக்கும் செயலை எதிர்க்கும் திசையில் இருக்கும் என்பது உண்மையாகிறது. ஜூன்னார் ஜூன்னார் ஆயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த நகரங்களில் ஒன்று. இந்திய மாநிலமான மகாராட்டிரத்தின், புனே மாவட்டதில் இந்த நகரம் அமைந்துள்ளது. இதுவே ஜூன்னார் தாலுகாவின் தலைநகரும் இதுவே. மேலும் இது சக்யத்ரி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. மும்பையில் இருந்து 100கி.மீ கிழக்கிலும், புனேவில் இருந்து 94கி.மீ வடக்கிலும் அமைந்துள்ளது. ஜூன்னார் அருகே லெண்யாத்திரி எனும் அஷ்ட விநாயகர் கோயில்களில் ஒன்றும், பௌத்த குடைவரைக் கோயில்களும் உள்ளது. சாரநாத் சாரநாத் ("Sarnath") என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் வாரணாசிக்கு 10 கிமீ வட-கிழக்கே அமைந்துள்ள ஒரு வரலாற்றுப் புகழ் மிக்க நகரம் ஆகும். இவ்வூரில் அமைந்துள்ள மான் பூங்காவிலேயே கௌதம புத்தர் தனது முதல் போதனையான தர்மம் என்பதைப் போதித்தார். இங்கிருந்து ஒரு கிமீ தொலைவில் உள்ள சிங்பூர் என்ற இடத்திலேயே சைன மதத்தின் 11வது தீர்த்தங்கரர் என அழைக்கப்படும் சிரேயனசனாதரர் பிறந்த இடமாகும். இங்குள்ள அவரது கோவில் ஓர் ஆன்மிக சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. சாரநாத் ("மான்களின் கடவுள்") என்ற இந்நகரம் சாமாத, மிரிகதாவ (மான் பூங்கா), மிகதாய, ரிசிபட்டணம், இசிபத்தான (ரிசிகள் தரையிறங்கிய இடம்) எனப் பல பெயர்களில் வழங்கி வருகின்றது. புத்தரால் குறிப்பிடப்பட்டுள்ள இசிப்பத்தான என்ற பெயர் பௌத்தர்கள் தரிசிக்க வேண்டிய நான்கு பௌத்த தலங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது. குப்தர்கள் காலத்தில் சாரநாத் குன்றில் எண்கோண வடிவ சௌகந்தி தூபி நிறுவப்பட்டது. உபுண்டு (மெய்யியல்) உபுண்டு ஒரு அறவிய மனிதவிய மெய்யியல். மனிதர்களுக்கு இடையே இருக்கும் பிணைப்பை, மனிதர்கள் தாம் பகிர்ந்து கொள்ளும் மனிதத்தை, ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்ளும் பண்பை முதன்மைப்படுத்தும் மெய்யியல் ஆகும். இது ஒரு ஆபிரிக்க மெய்யியல் ஆகும். சபாரி உலாவி சபாரி உலாவி ஆப்பிள் நிறுவனத்தின் வணிக உரிமம் பெற்ற ஒரு உயர்ந்த உலாவி ஆகும். சபாரி உலாவியின் ஐந்தாவது பதிப்பை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது மாக் இயங்கு தளத்துடன் இணைந்து வரும் ஒரு மென்பொருள். சபாரி உலாவி முதன் முதலில் ஜனவரி 7 , 2003ல் வெளியிட்டு , பின்னர் மாக் 10.3 பந்தர் பதிப்புடன் கோட நிலை (default) உலாவியாக மாறியது. மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்ககூடிய சபாரி உலாவியும் 2007 ஜூன் மாதம் வெளியிட்டது. இணையத்தளத்தில் மிகவும் பிரபலமான உலாவியில் சபாரி நான்காம் இடத்தில உள்ளது. = வரலாறு = 1997 வரையில் ஆப்பிள் நிறுவனம் மசிண்டோஷ் கணினிகளில் நெட்ஸ்கேப் நாவிகடோர் மற்றும் சைபர்டாக் என்ற உலாவிகளை மட்டுமே உள்ளடிகியதாக வியாபாரம் செய்தது. பின்னர் மைக்ரோசாப்ட் ஆப்பிள் நிறுவனத்திற்கு இடையில் இருந்த ஒப்புதல் மூலம் இன்டர்நெட் எக்ஸ்ப்லோரேர் மாக் இயங்குதளத்தில் கோடநிலை உலாவியாக சுமார் ஐந்து வருடத்திற்கு இருந்தது. இருந்தாலும் ஆப்பிள் நிறுவனம் நெட்ஸ்கேப் நாவிகடோர் உலாவியை பதிலீடாக வைத்திருந்தது, பின்னர் அதுவே கோடநிலை உலாவியாக மாறியது. ஜனவரி 2003ல், சான் பிரான்சிஸ்கோ நகரில் நடந்த மாக் வேர்ல்ட் என்ற ஆண்டு மாட்நாட்டில் ஸ்டீவ் ஜொப்ஸ், அந்நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி, ஆப்பிள் நிறுவனம் சுயமாக தயாரித்த சபாரி உலவியை அறிமுகப்படுத்தினார். சபாரி உலாவி மாக் 10.3 பதிப்பில் கோடநிலை உலாவியாக மாற்றப்பட்டது, அதே சமயம் இண்டர்நெட் எக்சுபுளோரர் பதிலீடு உலாவியாக சேர்த்துகொண்டது . கௌதமர் கௌதம முனிவர் சப்தரிஷிகளுள் ஒருவர். வேத கால மகாரிஷிகளுள் இவரும் ஒருவர். பல மந்திரங்களை இவர் உருவாக்கியுள்ளார். இவர் பேரைக்கொண்ட பல சுலோகங்கள் ரிக் வேதத்தில் உள்ளது. தேவி பாகவதத்தில் கோதாவரி நதிக்கு அப்பெயர் இவராலேயே வந்தது என்று கூறப்பட்டுள்ளது. இவரது மனையாளின் பெயர் அகலிகை. இவர்களுக்கு வாமதேவ முனிவர், நோதாஸ், சதானந்தர் என்ற புதல்வர்கள் இருந்தனர். அவர்களும் வேதத்தில் பல சுலோகங்களை இயற்றயுள்ளனர். ரிக் வேதத்தில் இவர்களது குடும்பத்தை விவரிக்கிறது. பாரத்வாஜ மகரிஷியும், கௌதமருடன் அங்கரிசர் குலத்தில் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன. ரிக்வேதத்தில் 20 சூக்தங்களைச் செய்துள்ளார். அகலிகை இந்து தொன்மவியலின் அடிப்படையில் அகலிகை (சமஸ்கிருதம்: अहल्या, அகல்யா) என்பவர் கௌதம மகரிஷியின் ரிஷிபத்தினி ஆவார். தேவர்களின் தலைவனான இந்திரன் இவர் மேல் ஆசை கொண்டு, வன்புணர்வு செய்திட, அதனை அறிந்த கௌதமர் அகலிகையை கல்லாக மாற சாபமிட்டார். இவ்வாறு கல்லாக மாறிய அகலியை ராமனின் கால்பட்டதால் மீண்டும் மனிதவுருவம் பெற்றதாக இந்து சமய நூல்கள் பல சொல்லுகின்றன. இவர் அகல்யா, அகல்யை என்றும் அழைக்கப்பெறுகிறார். அகலிகை (அகல்யை) என்ற பெயர் களங்கமற்றவள் என்று பொருள்படக் கூடியது. இவர் பிரம்ம தேவரின் மானசீக மகளாவர். திருமாலின் மோகினி அவதாரத்தில் அழகான உடலைப் பெற்று அசுரர்களை மயக்கி தேவர்களுக்கு அமுதம் கிடைக்க வழிவகை செய்தார். இந்த செயலில் அழகென்பது காமத்தினால் மயக்குவதற்காக பயன்பட்டமையால், அழகென்பது தவத்திற்காக பயன்படுமாறு மாற்ற பிரம்மன் எண்ணினார். அதற்காக அழகு நிறைந்த பெண்ணை படைத்தார். அவளுக்கு அகலிகை என்று பெயரிட்டார். புராணங்களின் படி உலகை முதலில் சுற்றி வருபவருக்குத் தன் மகளை மணமுடித்துத் தருவதாக பிரம்மா கூறியதாகவும், அதன்படி கௌதமர் ஒரு பசுவை வலம் வந்து அகலிகையை மணந்ததாகச் சொல்லப்படுகிறது. இத்தம்பதியருக்கு சதானந்தன் என்ற மகன் பிறந்ததார். அவர் பிற்காலத்தில் ஜனகரின் புரோகிதர் ஆகி, உபா கர்மச் செயல்களுக்குத் துணை நின்றார். அகல்யைக்கு அஞ்சனை மகள் இருந்ததாகவும் சில கதைகள் கூறுகின்றன. அழகில் மிக உயர்ந்தவளாக இருக்கின்ற அகலிகை மேல் இந்திரனுக்கு ஆசை உண்டாகிறது. அவள் ஆற்றங்கரையில் இருக்கும் சமயம் தன்னுடைய விருப்பத்தினை வெளியிட்டு அகலிகையின் கோபத்திற்கு ஆளாகிறான். தன் கணவனைத் தவிற பிறரை நினையாமல் வாழும் கற்புக்கரசியாக அகலிகை இருந்ததால், ஒருநாள் கௌதமர் ஆற்றங்கரைக்கு செல்லும் நேரம், கௌதமராக உருமாறி அகலியை வன்புணர்வு செய்கிறான். குடிலுக்கு திரும்பிய கௌதமர், இந்திரனோடு அகலிகை இன்பமாக இருப்பதைக் கண்டு கோபம் கொள்கிறார். இந்திரனுக்கும் சாபமிட்டுவிட்டு, அகலிகையை கல்லாக மாறும் படி சபிக்கிறார். அவள் இந்திரன் கௌதமாராக மாறி வந்தமையால்தான் இவ்வாறு நிகழ்ந்தது என்று விளக்கம் கூற, மனமிறங்கிய கௌதமர் இராமரின் கால்பட்டு சாபம் நீங்கும் என்று கூறுகிறார். பின்பு, இராமாயணக் கதையின்படி இராமனின் பாதம்பட்டு இவர் சாபவிமோசனம் பெற்றார் என்று தெரிகிறது. அகலிகை வெண்பா என்பது அகலிகையைப் பற்றிய வெண்பா நூலாகும். இந்நூலை தமிழ்ச்செம்மல் வெ.ப.சுப்பிரமணிய முதலியார் இயற்றியுள்ளார். இந்நூலில் அகலிகையின் கதையானது வெண்பா பாடல்களால் பாடல்பெற்றுள்ளது. இந்து தொன்மவியலில் ஐந்து புராணப் பெண்கள் பஞ்சகன்னிகைகள் என்று அழைக்கப்பெறுகின்றார்கள். இவர்களே மிகச்சிறந்த தர்மப்பத்தினிகளாகவும், இல்லற வழிகாட்டிகளாகவும் குறிக்கப்பெறுகிறார்கள். ஜெகம் புகழும் புண்ணிய கதை அனுமனின் கதயே - இந்திரா சௌந்திரராஜன் அங்கரிசர் ஆங்கிரீசர் வேத கால மகரிஷிகளுள் ஒருவர். இவர் அதர்வண மகரிஷியுடன் இணைந்து அதர்வண வேதத்தை உருவாக்கியதாக கூறப்படுகிறது. மற்ற வேதங்களிலும் இவரைப் பற்றிய குறிப்புக்கள் இடம்பெற்று உள்ளன. இவரது மனைவியின் பெயர் "சுருபா" . இவர்களுக்கு கண்வர், உதத்யா, சம்வர்தனா, பிரகஸ்பதி என்று நான்கு மகன்கள் இருந்தனர். பிரம்மாவின் மானசீகப் புத்திரரென்று கூறப்படும் இவர் பரம்பரையில் பல ரிஷிகளும், மன்னர்களும் தோன்றியதாகக் கூறப்படுகிறது. புத்தர் இவர் வழி வந்தவர் என்ற குறிப்புகளும் உண்டு. அதர்வண மகரிஷி அதர்வண மகரிஷி வேத கால மகாரிஷிகளுள் ஒருவர். இவர் அங்கரிச மகரிஷியுடன் இணைந்து அதர்வண வேதத்தை உருவாகியதாக கூறப்படுகிறது. யாகம் வளர்க்கும் முறையை இவரே உருவாகியதாக புராணங்கள் கூறுகின்றன. இவரது மனைவியின் பெயர் சிட்டி. மகரிஷி தாதிசி இவர்களின் புதல்வரே. பிரம்மா தேவரின் மானசீகப் புத்திரரே என்றும் இவரே முதல் புதல்வர் என்றும் கூறப்படுகிறது. ததீசி முனிவர் ததீசி முனிவர் வேத கால மகாரிசிகளுள் ஒருவர். இவர் அதர்வண மகரிஷி மற்றும் சிட்டி தேவி ஆகியோரின் மகனாவார். இவரது மனைவியின் பெயர் சுவர்ச்சா. ததீசி - சுவர்ச்சா தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் பிப்பலாத மகரிஷி ஆவார். விருத்திராசூரனை வதைக்க இந்திரன் ஆயுதம் செய்ய முனைந்த பொழுது, அவன் வேண்டுகோளுக்கு இணங்கி இவர் தனது உயிரை துறந்து, தன் முதுகெலும்பை கொடுத்ததாகவும், அதில் செய்த வஜ்ராயுதத்தைக் கொண்டே இந்திரன் போரில் வென்றதாகவும் புராணங்கள் கூறுகின்றன. இந்திய அரசின் உயர் விருதான பரம் வீர் சக்ராவின் மேல் இவரது முதுகெலும்பின் படமே உள்ளதென்பது சிறப்பான செய்தியாகும். ததீசி புராணம் - திருமலைநாதர் என்பவரால் 16ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழில் எழுதப்பட்ட நூல். ததீசி முனிவரின் வரலாற்றைக் கூறுவது. வடமொழி சிவபுராணத்தின் பகுதியாகத் ததீசி புராணம் வருகிறது. பிப்பலாத மகரிசி பிப்பலாத மகரிசி புராணங்களின் கூற்றின்படி வேத ஆசிரியராவார்.இவர் அதர்வண வேதத்தில் கைதேர்ந்தவர். இவரது பெற்றோர் ததீசி முனிவர் மற்றும் சுவர்ச்சா தேவியாவர். இவரது பெற்றோர் இவரை பிப்பல மரத்தின் அடியில் விட்டு விட்டு இயற்கை எய்தினர். இதன் காரணமாகவே இவருக்கு இப்பெயர் வந்தது. புத்தரும் பிப்பல மரத்தடியிலேயே ஞானம் பெற்றது குறிப்பிடத்தக்கது. பிரஸ்ன உபநிடதத்தில் கூறப்படும் ரிஷிகளில் பிப்பலாத ரிஷியும் ஒருவராவார். பாரத்துவாசர் பாரத்துவாசர் அல்லது பாரத்துவஜர் (Bharadwaja) சப்தரிஷிகளுள் ஒருவர். ஆங்கிரச குலத்தைச் சார்ந்தவர். ரிக்வேத கால முனிவர்களில் ரிக்வேதத்தில் அதிக சூக்தங்கள் இயற்றியவர். இவர் பெரும் புலமை பெற்றவர். பல மந்திரங்களை இவர் உருவாகியுள்ளார். இராமாயணத்தில் இராமர் வனவாசத்தின் போது இம்முனிவரின் குடிலில் தங்கி சில நாட்கள் தங்கி இருந்தார். துரோணாச்சாரியர் இவரது புதல்வரே. இவரது தவ வலிமையை பல புராணங்கள் எடுத்துக் கூறுகின்றன.. கோத்திரம் கோத்திரம் (Gotra) என்பது குடும்பப் பெயர் போன்றதாகும். வர்ணாச்ரம தர்மப்படி முதல் மூன்று ஆசிரமத்தினர்க்கு கோத்திரங்கள் உண்டு. வேதகால ரிஷிகளின் வழிவந்தமையால், அவர்களின் பெயர்களைக் கொண்டே கோத்திரங்களின் பெயர்களும் அமைந்த்துள்ளது. ஜாபாலி கோத்திரம், சௌனக கோத்திரம், பாரத்துவாஜ கோத்திரம், மார்க்கண்டேய கோத்திரம் போன்றவை சில எடுத்துக்காட்டுகளாகும் . வேதங்களின் படி ஒரே கோத்திரத்தில் பிறந்த ஆணும் பெண்ணும் சகோதர சகோதரிகளாவர். மனுதரும சாத்திரப்படி ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்வது சமயப்படி குற்றமாகும். கோத்திரம் என்ற சொல்லுக்கு பசு-எழுத்தாணி என்று பொருளாகும். அக்காலத்தில் பசுக்கள் ஒரு குடும்பத்தின் விலைமதிக்கமுடியாத சொத்தாக கருதியதால் குடும்பப் பெயர் என்ற சொல்லுக்கு கோத்திரம் என்ற பெயர் வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தமிழகத்தின் கொங்கு வேளாளர் மத்தியில் நிலவும் கூட்டம் என்ற பிரிவும், தமிழகத்தின் சிலபகுதிகளில் நிலவும் "வகையறா" என்ற பிரிவும், நகரத்தார் மத்தியில் நிலவும் கோவில்கள் சார்ந்த பிரிவும் கோத்திம் போன்றதே. ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்களைப் போலவே இந்த கூட்டம், வகையறா, கோயில் சார்ந்த பிரிவினரும் சகோதர உறவு முறை உடையவர்களாக கருதப்படுவதால் அவர்களுக்குள் திருமண உறவு என்பது பெரும்பாலும் இருப்பதில்லை. இலங்கையின் இதழியல் வரலாறு இலங்கையின் இதழியல் வரலாறு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தை தொடக்கமாய்க் கொண்டது. 1802 ஆம் ஆண்டில் "த கவர்மென்ட் கெசற்" என்ற ஆங்கில வார இதழினை இலங்கையின் ஆள்பதி நிர்வாகம் வெளியிட்டது. அரச அறிவித்தல்கள், அரசு விளம்பரங்களைக் கொண்ட வர்த்தமானிப் பத்திரிகையாகவே இது அமைந்தது. கோல்புறூக் சிபார்சுகளில் காணப்பட்ட குறைகளைச் சுட்டிக்காட்டித் தம் அதிருப்தியை வெளிகாட்டும் வகையில் கொழும்பு வாழ் ஆங்கில வர்த்தகர் குழுவியால் 1834 இல் வெளியிடப்பட்ட "Observer and commercial advetiser" எனும் இதழே இலங்கையில் வெளிவந்த முதலாவது சுதந்திர இதழாகும். ஜோர்ச் வின்டர் இதன் முதல் ஆசிரியராயிருந்தார். இவ்விதழே தற்போது லேக் ஹவுஸ் ("Lake House") நிறுவனத்தால் வெளியிடப்படும் The Ceylon observer, Sunday Obsrver ஆகிய இதழ்களின் முன்னோடி இதழ்களாகும். 1836 ஆம் ஆண்டு "The Colombo Journal" எனும் ஆங்கில இதழ் ஆள்பதி சேர் ரோபேர்ட் வில்மட் கோட்டலின் அவர்களின் நிருவாகத்தில் அரச அச்சகத்தில் மூலம் வெளியிடப்பட்டது. ஜோர்ச் லீ இதன் ஆசிரியராயிருந்தார். 'ஓப்சேவர்' இதழ் மூலம் அரசுக்கு எதிராக வெளியிடப்பட்ட அதிருப்திக்கு எதிர்க் குரலாக இது வெளிவந்தது. சிறிது காலத்தில் நின்று விட்டது. அதன் தொடர்ச்சி போல ஆள்பதி நிருவாகத்தின் அனுசரனையுடன் 1837 இல் "Ceylon Chronicle" ஆங்கில வார இதழ் வெளிவந்தது. 1838 இல் இதுவும் நின்று போய் விட்டது. அமெரிக்க மிஷனரி யாழ்ப்பாணம் மானிப்பாயிலிருந்து 1841 சனவரியில் உதயதாரகை Mornig Star என தமிழ்,ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இரு இதழ்களை வெளியிட்டது. இவையே முதலில் வெளிவந்த சுதேசிய இதழ்களாகக் கொள்ளக்கூடியவை. இவை சமயப் பிரசாரத்தையே நோக்காகக் கொண்டமைந்தன. 1864 இல்ரொபேர்ட் நியூட்டன் 'Lanka Guardian' எனும் ஆங்கில இதழினை கொழும்பிலிருந்து வெளியிட்டார்.1913 இல் சேர்.பொன்.இராமநாதனின் அனுசரனையில் "சிலோனிஸ்" என்ற ஆங்கில இதழ் வெளிவந்தது. அருளானந்தம் க, 'இலங்கையின் இதழியலின் வரவாறும் மதிப்பீடும்'(2003),இலங்கை. கந்தளாய் கந்தளாய் நகரம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது. கொழும்பில் இருந்து திருகோணமலை செல்லும் நெடுஞ்சாலையை ஒட்டி இந்த நகரம் அமைந்துள்ளது. நெல் விவசாயத்திற்கு பெயர் பெற்ற இந்த நகரத்தில் தற்போது சிங்கள இனத்தவரே அதிகமாகவுள்ளனர். குளக்கோட்டனால் கட்டப்பட்டது என்று அறியப்படும் கந்தளாய்க் குளம் இன்றும் நிலைத்திருந்து இந்தப் பிரதேசத்தின் விவசாய நடவடிக்கைக்குப் பெரிதும் உதவி புரிகின்றது. கொடி தமிழ் விக்கிபீடியாவில் கொடி எனத்தொடங்கும் அல்லது அதனுடன் தொடர்புடைய கட்டுரைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன பொருத்தமான சுட்டியில் சொடுக்குவதன் மூலம் கட்டுரைப் பக்கங்களை அடையலாம்: மின்னோட்டமானி மின்னோட்டமானி அல்லது ஆம்ப்பியர்மானி அல்லது அம்பியர்மானி ("ammeter")என்பது ஒரு மின்சுற்றில் பாயும் மின்னோட்டத்தை அளந்திடப் பயன்படும் கருவி. அளக்கப்படவேண்டிய மின்னோட்டத்தின் அளவைப் பொறுத்து இது மில்லி மின்னோட்டமானி, மைக்ரோ மின்னோட்டமானி எனவும் வகைப்படுத்தப்படும். மின்னோட்டமானி மின்சுற்றில் தொடரிணைப்பிலேயே இணைக்கப்பட வேண்டும். மேலும் மின்னோட்டமானியின் மின்தடை மிகக்குறைவாக இருத்தல் வேண்டும்; அப்போதுதான் சுற்றில் பாயும் மின்னோட்டத்தின் அளவு மாறாது. குறைவான மின்தடை கொண்ட மின்தடையாக்கி ஒன்றை இயங்குசுருள் கால்வனாமீட்டருடன் பக்க இணைப்பாக இணைத்தால், அது நேர்த்திசை மின்னோட்டமானி எனப்படும். குறைந்த மின்தடையுடைய மின்தடையாக்கி இணைத்தடம் (shunt) எனப்படும். இணைத்தடத்தின் மின் தடை குறையக் குறைய மின்னோட்டமானியின் மின்னோட்ட-நெடுக்கம் (range) அதிகரிக்கும். நேர்த்திசை மின்னோட்டமானியை மாறுதிசை மின்னோட்டத்தை அளவிடப் பயன்படுத்த முடியாது. ஏனெனில், மாறுதிசை மின்னோட்டத்தின் திசைமாறும் இயல்பு நேர்த்திசை மின்னோட்டமானியின் குறிமுள்ளை அலைவுறச் செய்து கொண்டே இருக்கும்; எனவே, குறிப்பிட்டு ஒரு அளவீட்டினை அளவிடவே முடியாது. எனவே தான், மாறுதிசை மின்னோட்டமானி தேவைப்படுகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள கருவிகள் மாறுதிசை மின்னோட்டத்தை அளவிடப் பயன்படுத்தப் படுகின்றன: 500Hz அதிர்வெண்ணிற்கு மேல் கொண்ட மாறுதிசை மின்னோட்டத்தை இயல்பான மாறுதிசை மின்னோட்டமானியின் உதவியால் அளந்திட முடியாது; எனவே, வெப்ப வகைக் கருவிகள் (thermal type instruments) மூலம் கேள் அதிர்வெண் (AF), வானொலி அதிர்வெண் (RF) மின்னோட்டங்களை அளவிடலாம். மோகினித்தீவு மோகினித்தீவு தமிழில் பிரபலமான புதினங்களை எழுதிய கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களினால் எழுதப்பட்ட ஒரு குறு நாவலாகும். திரைப்படக் கொட்டகையில் ஆங்கிலத் திரைப்படத்தைப் பார்த்து வெறுத்து இருக்கும் ஒருவருக்கு, பிழைப்புத் தேடி பர்மா சென்ற அவரது நண்பர் ஒருவர் சொல்வது போல அமையும் கதையே இந்த நாவலாகும். பிழைப்புத் தேடி தமிழகத்தில் இருந்து பர்மா செல்லும் ஒருவர் பழைய சரக்குக் கப்பல் ஒன்றில் மிகுந்த பிரயாசத்துடன் பயணம் செய்கின்றார். உலக யுத்த காலத்தில் பயணம் செய்யும் இந்தக் கப்பல் இடையில் ஒரு விபத்தைச் சந்திக்கின்றது. விபத்தில் சிக்கிய நண்பர் உயிர் பிழைத்து ஒரு தீவை அடைகின்றார். அந்தத் தீவில் மனித நடமாட்டம் எதுவும் இல்லாத போதும் ஒரு ஆடவனும், பெண்ணும் இருக்கின்றார்கள். அவர்கள் தமிழில் கூடப் பேசுகின்றார்கள். இந்த தீவில் நடைபெறும் கதையையே இந்த நாவல் வடித்திருக்கின்றது. சோழ நாட்டினை உத்தம சோழன் எனும் மன்னன் ஆண்டு வருகிறான். அவனுக்கு (உத்தம சோழனுக்கு) ஆதித்தன், சுகுமாறன் என இருமகன்கள். அதில் சுகுமாறன் பட்டத்து இளவரசன். ஆதித்தன் அவன் தம்பி. இவர்கள் காலத்தில் சோழ நாடு தஞ்சையைச் சுற்றியுள்ள சில நகரங்களை மட்டுமே கொண்டு மிகவும் சுருங்கிய அரசாக இருந்தது. இருப்பினும் முன்னோர்களின் பெருமையைக் கொண்டுள்ள தொன்மையான குடியாக இருந்தது. பாண்டிய நாட்டினைப் பராக்கிரம பாண்டியன் எனும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் குமரி முதல் திருச்சிராப்பள்ளி வரையான பெரும் அரசை நிர்வகித்தான். அவனுக்கு மகன் இல்லை. புவனமோகினி என்ற ஒரே ஒரு மகள் மட்டும் இருந்தாள். பாண்டியன் என்று பட்டமிட்டிருந்தாலும், பராக்கிரமன் தொன்மையான பாண்டிய வம்சத்தில் வந்தவன் இல்லை. எனவே உத்தம சோழரின் மகனொருவனுக்கு தன்னுடைய மகளை திருமணம் செய்துவைக்க எண்ணி தஞ்சை சென்று அவரிடம் தன்னுடைய எண்ணத்தினை தெரிவித்தான். சோழன் அவனுடைய குலத்தினை இகழ்ந்ததோடு, அவன் மகள் சோழ அரசில் வேலைக்காரியாக இருக்க மட்டுமே தகுதியானவள் என்று கேலி செய்தான். அதனால் கோபம் கொண்டு பெரும் படையெடுத்து சோழ அரசை கைப்பற்றினான். இளவரசர்கள் அங்கிருந்து தப்பித்து கொல்லிமலையில் தலைமறைவாக வாழ்ந்தார்கள். சிறைபிடித்த உத்தம சோழனை தன்னுடைய தேர்சக்கரத்தில் கட்டி ஊர்வலமாக இழுத்துச்சென்றான். அதைக் கண்டு புவனமோகினி வருத்தம் கொண்டாள். உத்தம சோழனை காப்பாற்ற சுகுமாறன் மதுரை வந்தான். அங்கு கோவில் சிற்பங்களை செய்யும் தேவேந்திர சிற்பியிடம் மாணவனாக சேர்கிறான். சிற்பக் கூடத்திற்கு அடிக்கடி வரும் புவனமோகினியும் சுகுமாறனும் தங்களின் நிஜ அடையாளத்தினை மறைத்து பழகுகிறார்கள். காதல் கொள்கிறார்கள். உத்தம சோழரிடம் செப்பு சிலை செய்யும் வித்தையை அறிவதாக பொய்யுரைத்து முத்திரை மோதிரத்தினை புவனமோகினியிடமிருந்து பெற்றுக் கொள்கிறான். அதை வைத்து சிறையிலிருந்து உத்தம சோழரை மீட்கிறான். பாண்டிய நாட்டின் மீது படையெடுக்கிறான். பராக்கிரம பாண்டியன் உடல்நலக் குறைவால் இறந்துவிட சுகுமாறன் போரை நிறுத்துகிறான். இளவரசனாக அல்லாமல் சிற்பியாக இருந்தால் புவனமோகினி தன்னை ஏற்றுக் கொள்வாள் என்பதால் ஆதித்தனுக்கு பட்டம் கட்டிவிட்டு, படைவீரர்கள், தேவேந்திரன் முதலிய சிற்ப கலைஞர்களோடு கப்பலில் புறப்படுகிறான். கல்கியின் நூற்றாண்டு விழா ஆண்டான 1999 ல் மோகினித்தீவு கதையைச் சித்திரக்கதை வடிவில் பூந்தளிர் இதழ் வெளியிட்டது. கல்கியின் கதையைச் சித்திரக்கதைக்கு ஏற்றவாறு சுருக்கித் தந்தவர் அவருடைய புதல்வி ஆனந்தி. சித்திரக் கதையாக வரைந்தவர் ஓவியர் வினு. ஐகன்சு–பிரனெல் தத்துவம் ஐகன்சு–பிரனெல் தத்துவம் அல்லது ஃகைகன்சு–விரனெல் கொள்கை (ஹைகன்ஸ்–ப்ரனெல் கொள்கை, "Huygens–Fresnel principle") (நெதர்லாந்திய இயற்பியலாளர் கிறித்தியான் ஐகன்சு மற்றும் பிரான்சிய இயற்பியலாளர் அகசுட்டின்-இழான் விரனெல் ஆகியோரின் நினைவாக பெயரிடப்பட்டது) என்பது அலைப்பரவல் பற்றிய பகுப்பாய்வுக் கொள்கை. இது (தொலைவுபுல எல்லை மற்றும் அருகாமைப்புல எல்லை விளைவு ஆகிய இரண்டு நிகழ்விலுமான) அலை பரப்பல் தொடர்பான கணக்கீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் பகுப்பபாய்வு முறையாகும். இக் கருத்தியம் அல்லது தத்துவம், முன்னேகும் அலை முகப்பு ஒன்றின் ஒவ்வொரு புள்ளியும் உண்மையில் புதிய குறுக்கீட்டுப் புள்ளியும் புதிய அலைகளுக்கான மூலமுமாக உள்ளது எனக் கொள்கிறது. இந்தக் கருத்தியத்தின் படி, மேலும் ஊடகத்தில் முன்னரே அலை கடந்து வந்த புள்ளிகளிலிருந்து புதிதாக உருவாகி முன்னேறி வரும் எல்லா இரண்டாம் நிலை அலைகளின் தொகுப்பே முன்னேறும் ஒரு முழு அலையாகும். அலை பரப்பல் பற்றிய இக்கருத்துக் கண்ணோட்டம் விளிம்பு விளைவு பல வகை அலை நிகழ்வுகளைப் பற்றிப் புரிந்துகொள்ள உதவுகிறது. எடுத்துக்காட்டுக்கு, இரண்டு அறைகள் ஒரு பொதுவான திறந்த கதவினால் இணைக்கப்பட்டுள்ளதாகக் கருதுவோம். அதில் ஓர் அறையின் தொலைவிலுள்ள ஒரு மூலையில் ஒலி உண்டாக்கினால் அடுத்த அறையில் உள்ள ஒரு நபருக்கு அந்த ஒலி அந்தக் கதவு இருக்கும் இடத்தில் உருவாக்கிய ஒலி போலவே தோன்றும். இரண்டாம் அறையில் உள்ளவரைப் பொறுத்தமட்டில், கதவினருகில் அதிர்வுக்குள்ளாகும் காற்றே ஒலி மூலமாகும். ஒளி ஒரு தடையின் விளிம்பைக் கடந்து செல்லும் நிகழ்விலும் இதுவே உண்மையாகும். ஆனால் கட்புலனாகும் ஒளியின் அலைநீளம் மிகக் குறைவாக இருப்பதால் இதை உணர முடிவதில்லை. ஒரு சைன் அலை (வழக்கமாக, ஒளி, ரேடியோ அலைகள், புதிர்க்கதிர்கள் (x-கதிர்கள்) அல்லது எதிர்மின்னிகள் (எலக்ட்ரான்கள்)) ஆகியவை ஒழுங்கற்ற வடிவமுள்ள ஒரு துளையின் மீது விழுதல் போன்ற நிகழ்வுகளில் ஃகைகன்சு கருத்தியம் (தத்துவம்) பயன்படுகிறது. துளையிலுள்ள ஒவ்வொரு புள்ளியும் ஒரு புள்ளி மூலமாகச் செயல்படுகிறது என ஃகைகன்சின் தத்துவம் கூறுகிறது. ஒரு புள்ளி மூலம் எல்லாத் திசைகளிலும் கோள வடிவில் (குளத்தில் ஒரு கல்லைப் போடும்போது உருவாகும் வட்ட வடிவிலான அலைகளைப் போன்ற) பரவும் அலைகளை உருவாக்குகிறது. துளைக்கு அப்பாலுள்ள ஏதேனும் ஒரு புள்ளியில் உள்ள எல்லாப் புள்ளி மூலங்களிலிருந்தும் உருவாகி வரும் அலைகளின் கூடுதலை தொகையிடுதல் அல்லது எண்ணியல் மாதிரியாக்கல் மூலம் கணக்கிடலாம். ஒற்றைப் பிளவு விளிம்பு விளைவைக் கருதுவோம். இதில் ஒரு பிளவின் வழியாக மின்னும் ஒளி சென்று தொலைவிலுள்ள திரையில் விழுகிறது. திரையிலுள்ள எந்தப் புள்ளியில் குறைந்தபட்ச குறுக்கீட்டு விளைவு (கருப்புப் பட்டைகள்) ஏற்படுகிறது எனக் கணக்கிட வேண்டும் என்க. அதற்கு நாம் அந்தப் பிளவுக்கு பதிலாக அதனை விடக் குறுகலாக உள்ள பல பிளவுகளைப் (துணைப் பிளவுகள்) பயன்படுத்த வேண்டும். அப்போது அவை ஒவ்வொன்றினாலும் உருவாகும் அலைகளின் கூடுதலைக் காண வேண்டும். இரண்டு சிறிய பிளவுகளின் பாதை வேறுபாடானது formula_1 (180 பாகை கட்ட வேறுபாடு) என்ற நிலையில் அவை அழிவுக் குறுக்கீட்டு விளைவை ஏற்படுத்துகின்றன. இதிலிருந்து (ஃபேசர்கள் (phasors "முகனிகள்") அல்லது ஒத்த அலைக் கூடுதல் கணக்கீடுகளைப் பயன்படுத்தி) மூன்று புள்ளிகளிலிருந்து உருவான மூன்று அலைகளும் ஒன்றையொன்று விலக்க (அழிக்க) வேண்டுமானால் அவற்றுக்கிடையேயான கட்ட வேறுபாடு 120 பாகைகளாகவும் திரையிலிருந்து பிளவுகளுக்கு உள்ள பாதை வேறுபாடு formula_2 எனவும் இருக்க வேண்டும் எனக் கணக்கிடலாம். அகலமான ஒற்றைப் பிளவை எண்ணற்ற துணைப் பிளவுகளுடன் தோராயமாக்கும் வரம்பில், பிளவின் விளிம்புகளுக்கு இடையே உள்ள பாதை வேறுபாடானது சரியாக formula_3 ஆக இருந்தால் மட்டுமே அழிவுக் குறுக்கீட்டு விளைவு (இதனாலேயே திரையில் கருப்புப் பட்டை ஏற்படும்) ஏற்படும். ஃகைகன்சின் தத்துவத்தை மட்டும் பயன்படுத்தி, ஒற்றைப் பிளவு விளிம்பு விளைவை அடைய நாம் பயன்படுத்திய பண்பு ரீதியான விவாதங்களை உண்மையில் ஒழுங்கற்ற வடிவங்களைக் கொண்டுள்ள துளைகளுக்குப் பய்ன்படுத்துவது கடினமாகும். ஒரு புள்ளி மூலத்திலிருந்து உருவாகி வரும் அலைக்கு r எனும் இடத்தில் அதன் வீச்சு formula_4 ஆனது ஒரு புள்ளி மூலத்திற்கான அதிர்வெண் கள அலைச் சமன்பாட்டின் (எல்ம்ஃகோல்ட்ஃசுச் சமன்பாடு (Helmholtz Equation) தீர்விலிருந்து பெறப்படுகிறது, இதில் formula_6 என்பது முத்திரட்சி (முப்பரிமாண) டெல்டா சார்பாகும். டெல்டா சார்புக்கு ஆரவழிச் சார்புத் தன்மையே உள்ளது, ஆகவே கோள ஆய அச்சு அமைப்பிலுள்ள லாப்ளாசு ஆப்பரேட்டர் ("பருமைய இலாப்லாசின்" (இசுக்கேலார் லப்ளாசியன்) எனவும் அழைக்கப்படுவது) பின்வருமாறு சுருங்குகிறது (உருளை மற்றும் கோள ஆய அச்சுகளில் டெல் என்பதைக் காண்க) நேரடியாகப் பகரீடு (பதிலீடு) செய்கையில் இந்தச் சமன்பாட்டின் தீர்வு பருமையனாக (ஸ்கேலார்) கிரீன் சார்பாக இருப்பதைக் காணலாம். அது கோள ஆய அச்சு அமைப்பில் (மற்றும் இயற்பியல் கால மரபைப் பயன்படுத்தி formula_8) பின்வருமாறு காணப்படும்: இந்தத் தீர்வு டெல்டா சார்பு மூலமானது தொடக்கப் புள்ளியில் உள்ளதாகக் கருதுகிறது. மூலமானது formula_10 என்ற திசையனால் (வெக்டரால்) குறிக்கப்படும் ஒழுங்கற்ற ஒரு மூலப் புள்ளியிலும் புலப் புள்ளியானது formula_11 இலும் அமைந்திருந்தால் நாம் (ஒழுங்கற்ற மூல அமைவிடத்திற்கான) பருமையன் (ஸ்கேலார்) கிரீன் சார்பை பின்வருமாறு எழுதுவோம்: ஆகவே மின் புலம் E("x" ,"y" ) துளையின் மீது விழுந்து, அந்தத் துளை விரவலினால் உருவாகும் புலமானது மேற்பரப்பு தொகையிடுதல் மூலம் பெறப்படுகிறது: இங்கு துளையிலுள்ள மூலப் புள்ளியானது பின்வரும் திசையனால் (வெக்டரால்) பெறப்படுகிறது இணைக் கதிர்களின் தோராயமாக்கலைப் பயன்படுத்தக்கூடிய தொலைப் புலத்தில், கிரீன் சார்பு பின்வருமாறு: இதைச் சுருக்கினால், இதை வலப்புறம் உள்ள படத்தில் காணலாம் (பெரிதாக்க சொடுக்கவும்). தொலை-பகுதிக்கான கோவை (விரௌன்ஃகோவர் (Fraunhofer) பகுதி) புலமானது: இதில், மற்றும் என்ற அளவில், தள வடிவத் துளையிலிருந்து உருவாகும் விரௌன்ஃகோவர் பகுதிப் புலத்திற்கான கோவை பின்வருமாறு அமைகிறது: இதில், மற்றும் எனக் கொண்டால், அந்த தள வடிவ துளையின் விரௌன்ஃகோவர் பகுதியின் பூரியே உருமாற்றம் பின்வருமாறு அமையும்: தொலைப்புலம் / விரௌன்ஃகோவர் பகுதியில் இது துளை விரவலின் இடவியல் பூரியே உருமாற்றமாக மாறுகிறது. ஒரு துளைக்கு ஃகைகன்சின் கருத்தியத்தைப் (தத்துவத்தைப்) பயன்படுத்துகையில், தொலைப் புல விளிம்பு விளைவு வடிவத்தொகுப்பு என்பது துளையின் வடிவத்தின் இடவியல் பூரியே உருமாற்றமே ஆகும் என அது கூறுகிறது. மேலும் இணைக் கதிர்கள் தோராயமாக்கலைப் பயன்படுத்துவதனால் விளையும் ஒரு நேரடி உப விளைவாகும். இது துளைப் புலங்களின் தள அலை சிதைவாக்கங்களைச் செய்வதற்கு ஒத்ததாகும் (பூரியே ஒளியியல் என்பதைக் காண்க). Stratton, Julius Adams: "Electromagnetic Theory" , McGraw-Hill, 1941. (Reissued by Wiley - IEEE Press, ISBN 978-0-470-13153-4). மராட்டியப் பேரரசு மராட்டியப் பேரரசு அல்லது மராத்தியப் பேரரசு ("Maratha Empire") தற்போதைய இந்தியாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்திருந்தது. இதன் காலம் 1674 முதல் 1818 வரை. இந்த சாம்ராஜ்ஜியத்தின் கீழ் தெற்கு ஆசியாவின் பல பகுதிகள் 2.8 மில்லியன் சதுர கிமீ பரப்பளவிற்கு மேல் இருந்தன. சிவாஜியால் இந்தப் பேரரசு தோற்றுவிக்கப்பட்டது. முகலாயப் பேரரசன் அவுரங்கசீப்பின் இறப்பை அடுத்து, பேரரசின் தளபதிகளான பேஷ்வாக்களால் விரிவாக்கப்பட்டது. 1761 இல் பானிப்பட் நகரில் ஆப்கானிய மன்னன் அகமது ஷா அப்தாலியுடன் இடம்பெற்ற மூன்றாம் பானிபட் போரில் மராத்தியர்கள் தோல்வியடைந்ததை அடுத்து, மராட்டிய பேரரசின் விரிவாக்கம் நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் இப்பேரரசு மராத்திய நாடுகளின் கூட்டமைப்பாகப் பிரிந்தது. பின்னர் 1817 – 1818 ஆண்டில் நடந்த மூன்றாம் ஆங்கிலேய மராட்டியப் போரில் மராத்திய கூட்டமைப்பு அரசுகள், பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியிடம் வீழ்ந்தது. பதினேழாம் நூற்றாண்டில் மராத்தியர்கள் சிவாஜியின் தலைமையில் ஒன்று கூடி, தற்கால மகாராட்டிராவில் வலிமையான இந்துப் பேரரசை நிறுவ, தக்காண சுல்தான்கள் மற்றும் தில்லி முகலாயர்களுடன் போரிட்டனர். ராய்கட் மலைக்கோட்டை மராத்திய அரசின் தலைநகராக விளங்கியது. சிவாஜியின் மகன் சத்திரபதி சாகுஜி, அவுரங்கசீப்பின் மறைவிற்குப் பின்னர், தில்லி சிறைக்காவலிருந்து விடுபட்டு ராய்கட் வந்தார். அப்போது மராத்தியப் பேரரசை வழி நடத்தி கொண்டிருந்த அவரது சித்தி தாராபாயை நீக்கி விட்டு, தானே மராத்திய மன்னராக முடிசூட்டுக் கொண்டு, பாலாஜி விஸ்வநாத்தை தனது முதலமைச்சராக நியமித்துக் கொண்டார். பேஷ்வா பாலாஜி விஸ்வநாத் மற்றும் அவரது வழித்தோன்றல்கள் மராத்தியப் பேரரசின் வளர்ச்சிக்கு உதவ துணை நின்றனர். மராத்தியப் பேரரசு உச்சகட்டத்தில் இருந்த போது, தெற்கே தமிழ்நாடு முதல் வடக்கே தற்கால பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் வரையும், ), கிழக்கில் தற்கால மேற்கு வங்காளம் மற்றும் அந்தமான் வரையிலும், மேற்கே குஜராத் மற்றும் இராஜஸ்தான் வரையிலும் பரவியிருந்தது. 1761இல் நடந்த மூன்றாம் பானிபட் போரில் மராத்தியப் படைகள் துராணிப் பேரரசின் அகமது ஷா துரானியின் படைகளிடம் தோல்வியுற்றதால், மராத்தியப் பேரரசின் வளர்ச்சி அத்துடன் நிறைவடைந்தது. இப்போர் நடந்த பத்தாண்டுகளுக்குப் பின்னர் பேஷ்வா முதலாம் மாதவராவ், வட இந்தியாவில் மீண்டும் மராத்தியப் பேரரசை நிலைநிறுத்தினார். முதலாம் மாதவராவ் காலத்தில் பெரிய மராத்தியப் பேரரசை, சிறிதளவு தன்னாட்சியுடைய பகுதிகளாகப் பிரித்து வலிமைமிக்க படைத்தலவர்களால் மராத்திய சிற்றரசுகள் எனும் பெயரில் ஆளப்பட்டது. மராத்திய பேரரசின் பரோடா இராச்சியத்தை கெயிக்வாட்களும், மால்வா மற்றும் இந்தூர் இராச்சியத்தை ஓல்கர் வம்சத்தவர்களும், குவாலியர் இராச்சியத்தை சிந்தியாக்களும், |நாக்பூரை போன்சலேக்களும், பவார் குலத்தினர் "தார் இராச்சியம்" மற்றும் "தேவாஸ் இராச்சியஙகளை" ஆண்டனர். 1775ல் புனேயில் நடந்த பேஷ்வாக்களின் வாரிசுரிமைப் போராட்டத்தில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியினர் தலையிட்டதின் பேரில் நடந்த முதலாம் ஆங்கிலேய-மராத்தியப் போரின் முடிவில் 17 மே 1782ல் ஆங்கிலேயர்களுக்கும், மராத்தியர்களுக்கும் ஏற்பட்ட சல்பாய் ஒப்பந்தப்படி, சால்செட்டி தீவு மற்றும் பரூச் துறைமுகநகரங்கள் மீண்டும் ஆங்கிலேயேர்களுக்கு திருப்பி வழங்கப்பட்டது. . இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பரப்பின் பெரும் பகுதிகளைக் கொண்டிருந்த மராத்தியப் பேரரசின் கடற்படைத்தலைவரான கனோஜி ஆங்கரே போர்த்துகேயர் மற்றும் ஆங்கிலேயர் கடற்படைக்கு எதிராக போரிட்டார். கடற்கரைப் பகுதிகளில் காவல் மேடைகள் அமைக்கப்பட்டு, பெரிய நீளமான பீரங்கித் தளங்கள் நிறுவப்பட்டது. மராத்தியப் பேரரசர் சத்திரபதி சாகுஜி மற்றும் முதலாம் மாதவராவின் மறைவிற்குப் பின்னர் மராத்தியப் பேரரசு, தேசஸ்த் பிராமண குல பேஷ்வாக்களின் தலைமையில் பல சிற்றரசுகளாக ஆளப்பட்டது. போன்சலே எனும் சத்திரியக் குலத்தில் பிறந்த பேரரசர் சிவாஜி, தற்கால மகாராட்டிரா மாநிலத்தில் 1674ல் மராத்தியப் பேரரசை நிறுவினார். தக்கான சுல்தான் அடில் ஷாவிடமிருந்து மராத்தியப் பகுதிகளை விடுவித்து சுதந்திர இந்து மராத்திய நாட்டை நிறுவ உறுதி எடுத்துக் கொண்டார். ). மராத்தியப் பேரரசின் முதல் தலைநகராக ராய்கட் கோட்டை விளங்கியது. சிவாஜி தன் இராச்சியத்தை காத்துக் கொள்ள தொடர்ந்து முகலாயப் பேரரசு மற்றும் தக்கான சுல்தான்களின் படைகளும் மோதிக் கொண்டே இருந்தார். 1674ல் சிவாஜிக்கு, சத்திரபதி பட்டத்துடன் மராத்தியப் பேரரசின் பேரரசராக மணிமுடி சூட்டப்பட்டது. இந்தியத் துணைக்கண்டத்தின் புவிப்பரப்பில் 4.1% பகுதியை, மராத்தியப் பேரரசில் சிவாஜி கொண்டு வந்தார். சிவாஜியின் மறைவின் போது மராத்தியப் பேரரசில் 300 கோட்டைகளும், 40,000 குதிரைப்படை வீரர்களும், 50,000 தரைப்படை வீரர்களும் மற்றும் அரபுக்கடல் பகுதியில் கப்பற்படையும் இருந்தது. சிவாஜியின் பேரன் சாகுஜியின் காலத்திலும், பேஷ்வாக்களின் ஆட்சிக்காலத்திலும் மராத்தியப் பேரரசு, அனைத்துத் துறைகளில் முழு வளர்ச்சியடைந்த பேரரசாக விளங்கியது. சிவாஜியின் இரண்டு மகன்கள் சம்பாஜி மற்றும் இராஜாராம் ஆவர். மூத்தவரான சம்பாஜி 1681ல் தன்னைத் தானே மராத்தியப் பேரரசராக அறிவித்துக் கொண்டார். சம்பாஜி கோவாவை ஆண்ட போத்துக்கேயர்களையும், மைசூர் மன்னர் சிக்க தேவராச உடையாரையும் வென்று பேரரசின் எல்லைகளை விரிவாக்கினார். சம்பாஜி, இராசபுத்திரர்களுடன் இணைந்து போரில் பிஜப்பூர் மற்றும் கோல்கொண்டா போன்ற தக்காண சுல்தான்களை வென்றார். 1689ல் அவுரங்கசீப்பின் படைத்தலைவர் முபாரக் கானால், சங்கமேஸ்வரர் எனுமிடத்தில் சில வீரர்களுடன் தங்கியிருந்த சம்பாஜியை, 1 பிப்ரவரி 1689ல் கைது செய்து, பகதூர்காட் எனுமிடத்தில் வைத்து 11 மார்ச் 1689ல் தூக்கிலிடப்பட்டார். சம்பாஜியின் மறைவிற்குப் பின்னர் அவரின் ஒன்று விட்ட தம்பியும், தாராபாயின் கணவனுமான சத்திரபதி இராஜாராம் மராத்தியப் பேரரசின் பேரரசராக பட்டம் சூட்டப்பட்டார். முகலாயர்கள் ராய்கட் கோட்டையைக் கைப்பற்றியதால், தமிழ்நாட்டின் செஞ்சிக் கோட்டையில் தங்கியவாறு, மராத்தியப் பேரரசை நிர்வகித்தார். பின்னர் முகலாயர்கள் கைப்பற்றிய கோட்டைகளை கொரில்லாத் தாக்குதல் மூலம் இராஜாராம் கைப்பற்றினார். 1697ல் இராஜராம் விடுத்த நட்புறவு உடன்படிக்கையை அவுரங்கசீப் ஏற்கவில்லை. 1700ல் இராஜாராம் "சிங்காத்" எனுமிடத்தில் மறைந்தார். இராஜாராமின் விதவை மனைவி தாராபாய், தன் சிறு மகன் இரண்டாம் சிவாஜியின் பெயரில் மராத்திய பேரரசை நிர்வகித்தார். 1707ல் அவுரங்கசீப்பின் மரணித்திற்குப் பின் சம்பாஜியின் மகனும், சிவாஜியின் பேரனுமான சாகுஜியை, தில்லியின் புதிய முகலாயப் பேரரசர் முதலாம் பகதூர் ஷா, சில நிபந்தனைகளின் கீழ், தில்லி சிறையிலிருந்து விடுவித்தார். தில்லி சிறையிலிருந்து மீண்டு வந்த சாகுஜி, தன் சித்தி தாராபாய் மற்றும் அவரது இரண்டாம் சிவாஜியையும் ஆட்சி அதிகாரத்திலிருந்து நீக்கி விட்டு, தன்னை மராத்தியப் பேரரசின் சத்திரபதியாக முடிசூட்டிக் கொண்டார். பாலாஜி விஸ்வநாத் என்பவரை மராத்தியப் பேரரசர் சாகுஜி தனது முதலமைச்சராக நியமித்துக் கொண்டார். சாகுஜியின் ஆட்சிக் காலத்தில் மராத்தியப் பேரரசு, கிழக்கில் தற்கால மேற்கு வங்காளம் வரை விரிவாக்கம் பெற்றது. மராத்திய பிரதம அமைச்சரும், தலைமைப் படைத்தலைவருமான பேஷ்வா பாஜிராவ், மேற்கு இந்தியப் பகுதிகளை வென்றார். பாஜிராவ் மற்றும் அவரது படைத்தலைவர்களான பேஷ்வா குலத்தின் கிளைக் குலங்களான பவார், ஹோல்கர், கெயிக்வாட் மற்றும் சிந்தியா குலத்தினர் ஆகியோர் இந்தூர், குவாலியர், பரோடா பகுதிகளை கைப்பற்றி ஆண்டனர். மராத்திய பேரரசின் படைத்துறைகளை நிர்வகித்த சித்பவன் பட் குலத்தை பேஷ்வாக்கள், பின்னாளில் சாகுஜியின் காலத்திற்குப் பின்னர் மராத்தியப் பேரரசர்களாக அறிவித்துக் கொண்டனர். பேஷ்வாக்களின் ஆட்சிக் காலத்தில் மராத்தியப் பேரரசு, இந்தியத் துணைக்கண்டத்தில் பெரும் பகுதிகளுடன் செல்வாக்குடன் விளங்கியது. 1713ல் மராத்திய பேரரசர் சாகுஜி, பாலாஜி விஸ்வநாத்தை பேஷ்வா ஆக நியமித்தார். 1720ல் பாலாஜி விஸ்வநாத் இறப்பிற்குப் பின்னர் அவரது மகன் பாஜிராவ் மராத்தியப் பேஷ்வாவாக, மராத்தியப் பேரரசர் சாகுஜி நியமித்தார். பாஜிராவ் 1720-1740 வரை மராத்தியப் பேரரசை புதிய இந்தியப் பகுதிகளில் 3 முதல் 30% வரை விரிவாக்கம் செய்தார். ஏப்ரல் 1740ல் மறைந்த பாஜிராவ், தனது இறப்பிற்கு முன்னர் 41 போர்க்களங்களைக் கண்டவர். எப்போர்களத்திலும் தோல்வியை கண்டிராதவர். பாஜிராவின் மறைவிற்குப் பின்னர் அவரது மகன் பாலாஜி பாஜி ராவை மராத்தியப் பேரரசின் பேஷ்வாவாக, மராத்தியப் பேரரசர் சத்திரபதி சாகுஜி நியமித்தார். வங்காள நவாப் அலிவர்த்தி கான், 1751ல் மராத்தியப் படைத்தலைவர் பாலாஜி பாஜி ராவுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டு, சுவர்ணரேகா ஆறு வரையிலுள்ள கட்டக் பகுதிகளை விட்டுக் கொடுத்ததுடன், ரூபாய் 1.2 மில்லியன் ஆண்டுதோறும் மராத்தியப் பேரரசுக்கு கப்பம் செலுத்த ஒப்புக் கொண்டார். மூன்றாம் பானிபட் போருக்கு முன்னர் மராத்தியப் படைகள், தில்லி செங்கோட்டையில் உள்ள முகாலயப் பேரரசர்களின் அரசவைக்களமான "திவானி காஸை" சூறையாடினர். 1750ல் தற்கால உத்தரப்பிரதேசத்தின் ரோகில்கண்ட் பகுதிகளை மராத்தியப் படைகள் கைப்பற்றியது. ஆப்கானிய மன்னர் அகமது ஷா துரானி தலைமையிலான பெரும் படைகளை எதிர்கொள்ள, 14 ஜனவரி 1761ல் மராத்திய தலைமைப்படைத்தலைவர் சதாசிவராவ் பாகு தலைமையிலான, மராத்தியப் படைகள் ஹோல்கர், சிந்தியா, கெயிக்வாட், பவார் போன்ற தளபதிகள் முன்னின்று பானிபட் போரை எதிர்கொண்டனர். இப்போரில் சீக்கிய, இராஜபுத்திர மற்றும் ஜாட் இனப் படைகள் மராத்தியர்களுக்கு உதவ இல்லை என்பதாலும், ஆப்கானிய ரோகில்லாக்களும், மற்றும் அவத் நவாப்பும் அகமது ஷா துரானிக்குஅ உதவியதாலும், மராத்தியப் படைகள் மூன்றாம் பானிபட் போரில் மராத்தியர்கள் தோற்க நேரிட்டது. போரில் வெற்றி பெற்ற ஆப்கானியர்களுக்கு, பஞ்சாப், சம்மு காசுமீர் மற்றும் கங்கைச் சமவெளி பகுதிகளை மராத்தியர்கள் விட்டுக் கொடுக்கப்பட்டது. முதலாம் மாதவராவ் மராத்தியப் பேரரசின் நான்காம் பேஷ்வா ஆக மகுடம் சூட்டப்பட்டார். இவரது ஆட்சிக்காலம் மராத்தியப் பேரரசின் மீட்டெழுச்சி காலமாக அமைந்தது. இவரது ஆட்சிக்காலத்தில் ஐதராபாத் நிசாம் மற்றும் மைசூர் அரசுகள், மராத்தியர்களுக்கு பணிந்தது. மூன்றாம் பானிபட் போருக்கு முன் வரை வட இந்தியாவின் பெரும் பகுதிகள் மராத்தியப் பேரரசின் கீழ் வந்தன. மூன்றாம் பானிபட் போரில் மராத்தியர்களுக்கு ஏற்பட்ட பெருந்தோல்வியால், மராத்தியப் பேரரசை மேலும் விரிவாக்கம் செய்ய இயலாததால் பேரரசுக்கு பெரும் பின்னடைவாகவே கருதப்பட்டது. மராத்தியப் பேரரசின் பேஷ்வா மாதவராவ், மராத்தியப் பேரரசின் பெரும் படைத்தலைவர்களுக்கு, பேரரசின் சில பகுதிகளை சிறிது தன்னாட்சியுடன் ஆள அனுமதித்தார். அவைகள்: சதாரா அரசு: கோல்ஹாப்பூர் அரசு: தஞ்சாவூர் பகுதிகளை மராத்தியர்கள், 1674ல், தஞ்சை நாயக்கர்களிடமிருந்து கைப்பற்றி 1855 முடிய அரசாண்டனர். பின்னர் 1855இல் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்கள் தஞ்சாவூர் மராத்திய அரசை கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியுடன் இணைத்துக் கொண்டனர். தஞ்சாவூர் மராத்திய மன்னர்களில் புகழ் பெற்றவர்கள் முள்ளியவளை முள்ளியவளை இலங்கையின் வடகீழ்பால் இலங்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒரு புராதன ஊராகும். வன்னியரசர்கள், யாழப்பாண அரசர்கள் காலம் தொட்டு இருந்துவரும் ஒரு நீண்ட வரலாறுடைய இடமான இவ்வூர் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் அமைந்துள்ளது.இங்கு கலையும் பண்பாடும் கல்வியும் பாங்கோடு வளர்ந்துவருவது அவதானிக்கத்தக்கது. இங்கு வாழும் மக்கள் குறிப்பாக அன்றி பல்வகைப்பட்ட தொழில்களை ஆற்றி வருகின்றனர். அண்மைக்காலமாக கல்வியில் குறித்த முன்னேற்றம் கண்டுவருவது குறிப்பிடத்தக்கது. இதற்கு இங்கு உள்ள முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரி முக்கிய பங்கு ஆற்றுவது மறக்க முடியாத உண்மையாகும். முள்ளியவளை பற்றி யாழ்ப்பாணவைபவ கௌமுதியில் "முள்ளியவளை அக்காலத்தில் 'வலடிடி' , 'வற்கம','மேற்பற்று' என பிரிக்கப்பட்டிருந்தததுடன்,வன்னி பிரிவுகளில் அதி விஷேசமானதும் செழிப்பான இராச்சியமுமாகும்" என குறிப்பிடப்படுகிறது. வே. சுப்பிரமணியம் வே. சுப்பிரமணியம் (இறப்பு: திசம்பர் 13, 2016) எழுத்துலகில் நாடகம், சிறுகதை, நாவல், கவிதை, வரலாற்று ஆய்வுகள், இலக்கிய திறனாய்வு என பல்வேறு துறைகளில் தனது புலமையை ஆழமாக பதித்துவந்தவர். முல்லைமணி என்ற புனைபெயரில் பல நூல்களை எழுதியுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளியவளையில் பிறந்தவர். இலங்கை பல்கலைக்கழக தமிழில் சிறப்பு கலைமாணி பட்டம் பெற்றவர். இவரது கலை இலக்கிய ஆய்வுப்பணிகளை அங்கீகரித்து 2005இல் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதி (முனைவர்) பட்டம் வழங்கி கௌரவித்தது. பாடசாலை அதிபர், ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர், கொத்தணி அதிபர், பிரதம கல்வி அதிகாரி, மாவட்ட கல்விப்பணிப்பாளர் முதலான பதவிகளை வகித்து திறம்பட சேவை புரிந்தவர். இவரது 'பண்டாரவன்னியன்' வரலாற்று நாடகம் இதுவரை ஐந்து பதிப்புகள் கொண்டு வெளியாகியதுடன் இன்றுவரை நாடகமாகவும் கூத்தாகவும் பேணப்பட்டு வருகின்றது. இவரது கலை ஆக்கங்கள் இன்னும் தொடர்ந்து வந்தவண்ணமே உள்ளன. சுப்பிரமணியனின் 65 ஆண்டுகால எழுத்துலகப் பங்களிப்பை பாராட்டி, 2016ஆம் ஆண்டு சாகித்திய ரத்னா என்ற அதியுயர் விருதை இலங்கை அரசு வழங்கி கௌரவித்தது. மனத்தை குடியேற்றவாதத்தில் இருந்து விடுவித்தல்: ஆபிரிக்க இலக்கியத்தின் அரசியல் மனத்தை குடியேற்றவாதத்தில் இருந்து விடுவித்தல்: ஆபிரிக்க இலக்கியத்தின் அரசியல் அல்லது Decolonising the Mind: The Politics of Language in African Literature என்பது அறியப்பெற்ற ஆபிரிக்க எழுத்தாளரான நுகுகி வா தியங்கோ அவர்களான் எழுதப்பட்ட ஆங்கில நூல் ஆகும். இது ஆபிரிக்காவில் கல்வி, இலக்கிய மொழியாக காலனித்துவ மொழிகள் ஆதிக்கம் செலுத்தி வருவதை விமர்சித்து, ஆபிரிக்க ஆக்கர்கள் ஆபிரிக்க மொழிகளில் ஆக்கங்களை வழங்க முன்வர வேண்டும் என்று கோரிக்க விடுத்து எழுதப்பட்ட நூல் ஆகும். இந்த நூலுக்குப் பெறகு நுகுகி தனது தாய் மொழியான கிகூயூ பெரும்பாலும் எழுதத் தொடங்கினார். வசிட்டர் வசிட்டர் (वसिष्ठ, வசிஷ்டர்) பிரம்ம ரிஷி ஏழு புகழ்பெற்ற சப்தரிசிகளுள் ஒருவர். வேத காலத்தில் வாழ்ந்ததாகக் கூறப்படும் மாமுனிவர்களுள் இவரும் ஒருவர். வேதங்களின் பல மந்திரங்களை இவர் உருவாக்கியுள்ளார். இவர் பேரைக்கொண்ட பல சுலோகங்கள் இருக்கு வேதத்தின் ஏழாம் மண்டலத்தில் உள்ளது. இருக்கு வேதத்தில் இந்த ஏழாவது மண்டலத்தில் இருக்கு 7.33 இல், பத்து அரசர்களின் மாபெரும்போர் என்னும் நிகச்சியில் இவருடைய குடும்பத்தாரும் இவரும் ஆற்றிய பணியைப் போற்றப்படுகின்றது. மாந்தகுலத்தைச் சேர்ந்த ஒருவரைப் புகழும் ஒரே சுலோகம் இதுவே என்பர். இவர் பெயரால் வழங்கும் நூல் வசிட்ட சம்கிதை (Vasishta Samhita). இவரது மனையாளின் பெயர் அருந்ததி. தேவலோகப் பசுக்களான காமதேனு மற்றும் நந்தினி, இவையிரண்டையும் இவரே பராமரித்து வந்தார். மன்னர் [[[[விசுவாமித்திரர்| கௌசிகர்]] இப்பசுக்களைப் பறிக்க முயன்று அதில் தோற்று, பின்பு நோன்பிருந்து தன் தவ வலிமையால் [[பிரம்ம இருடி]] [[விசுவாமித்திரர்|விசுவாமித்ரர்]] என்று பெயர் பெற்றார். இராமாயணக் காவியத்தில் வசிஷ்டர், [[தசரதன்|தசரதனின்]] அரச குருவாக விளங்கியவர். [[விசுவாமித்திரர்|விசுவாமித்திரரின்]] வேண்டுகளின் படி, [[இராமன்]] மற்றும் இலக்குமணணை விசுவாமித்திரருடன் வனத்திற்குச் செல்ல வசிஷ்டர் தசரதனுக்கு ஆலோசனை கூறினார். [[மகாபாரதம்| மகாபாரத]] காவியத்தில், வசிட்டரின் மகனாக [[சக்தி மகரிஷி]] அறியப்படுகிறார். தன் மகன் சக்தியைக் கொன்ற [[இச்வாகு]] குல மன்னர் [[கல்மாஷ்பாதன்|கல்மாஷபாதனுக்கு]] வசிட்டர் புத்திரபேறு வழங்கியவர். வசிட்டரின் பெயர் அனைத்து புராணங்களிலும் அறியப்படுகிறது. [[பகுப்பு:இந்திய மெய்யியலாளர்கள்]] [[பகுப்பு:பிரம்ம குமாரர்கள்]] [[பகுப்பு:முனிவர்கள்]] அருந்ததி (இந்து சமயம்) அருந்ததி சப்தரிஷிகளுள் ஒருவரான வசிஷ்டரின் மனைவியாவர். இவரது தந்தை பதஞ்சலியும் ஒரு மகரிஷியே. அருந்ததி வானில் தோன்றும் ஒரு நட்சத்திரமாகவும் கருதப்படுகிறது. வானசாஸ்திரத்தின்படி மிஜார் விண்மீன் வசிட்டராகவும், ஆல்கர் விண்மீன் அருந்ததியாகவும் கருதப்படுகிறது. இந்து திருமணங்களில் அருந்ததி பார்த்தல் என்பது ஒரு சடங்காகும். வானவெளியில் உள்ள அருந்ததி நட்சத்திரம் சிறியது. எனவே இதனைக் காட்ட அருகிலுள்ள பெரிய நட்சத்திரங்களைக் காட்டி அதன் பின்னர் அதன் அருகிலுள்ள அருந்ததியைக் காட்டுவர். ஏதேனும் நுண்மையான கொள்கையைப் புரிய வைக்க இத்தகைய முறைகள் பயன்படுகின்றன. மடம் மடம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் கூத்தப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும். இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°07'27.5"N 77°53'11.1"E ஆகும். இங்கு மொத்த குடியிருப்புகள் 252, . நாணயக் குறியீடு சர்வதேச தரத்திலான நாணயங்கள் தமது நாணயத்தை வேறுபடுத்தி அடையாளப்படுத்துவதற்காக தனித்துவமான குறியீடுகளைப் பயன்படுத்தி வருகின்றன.தனித்துவமான நாணயக்குறியீட்டுக்குப் பதிலாக சர்வதேச தரநிர்ணய நிறுவனத்தின் 1747 () க்கு அமைவான குறியீட்டு எழுத்துக்களையே பல நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. யூரோ நாணயக்குறியீடு (€)ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளான ஆஸ்திரியா, பெல்ஜியம், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், அயர்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், நெதர்லாந்து, போர்த்துகல், ஸ்பெயின் ஆகிய 12 நாடுகளில் பயன்படுத்தப்படும் நாணய முறையாகும். இந்திய நாணயத்திற்கான தனிக்குறியீடு இந்தியத் தேசியக் கொடி அதன் சர்வதேச தரம் என்பவற்றைச் சுட்டிக்காட்டுவதாக அமைக்கப்பட்டுள்ளது. வடிவமைத்தவர் ஐ.ஐ.டி மாணவரான உதயகுமார். அ. சிவசம்புப் புலவர் அ. சிவசம்புப் புலவர் (1830 - செப்டம்பர் 29, 1910) இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில் உடுப்பிட்டி என்னும் ஊரைச் சேர்ந்தவர். 1830 ஆம் ஆண்டு பிறந்தார். தந்தையார் அம்பலவாணர் அருளம்பல முதலியார். தாயார் கதிராசிப் பிள்ளை. இவர் நல்லூரைச் சேர்ந்த சரவணமுத்துப் புலவரிடமும், பின்னர் அவரது மாணவரான சம்பந்தப் புலவரிடமும் தமிழ் கற்றார். தமிழ் இலக்கண நூல்களையும், சங்க இலக்கியம், இதிகாசங்கள் முதலியவற்றையும் முறையாகக் கற்றுத்தேர்ந்தார். இவருக்கு இளமையிலேயே கவிபாடும் திறன் வாய்த்திருந்தது. ஆறுமுக நாவலர் காலத்தில் வாழ்ந்த இவர் யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி இந்தியாவிலும் தமிழ்நாட்டில் தமிழ்ப் பணி புரிந்துள்ளார். இவர் 1910 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 29 ஆம் தேதி காலமானார். இராமநாதபுரம் அரசர் இரவிகுல விஜய ரகுநாத பாஸ்கர சேதுபதி மீது கல்லாடக் கலித்துறை, நான்மணிமாலை, இரட்டை மணிமாலை போன்றவற்றையும், மதுரைத் தமிழ்ச் சங்கம் நிறுவிய பாண்டித்துரைத் தேவர் மீது நான்மணி மாலையும் பாடியுள்ளார். அறுபது பிரபந்தங்கள் உட்படப் பல செய்யுள்களையும், மறையசையந்தாதியுரை, யாப்பருங்கலக்காரிகையுரை, கந்தபுரான வள்ளியம்மை திருமணப்படலவுரை போன்ற உரை நூல்களையும் இவர் ஆக்கியுள்ளார். பாரசீக இளவரசன் (ஒளிக்காட்சி விளையாட்டு, 2008) "பாரசீக இளவரசன்" (Prince of Persia) மான்ட்ரியல் நகரின் யூபிசாஃப்ட் என்னும் நிறுவனம் உருவாக்கிய அதிரடி சாகசங்கள் நிறைந்த ஒரு ஒளிக்காட்சி விளையாட்டு (video game). இது 2008ஆம் ஆண்டு பல இணைய தளங்களிலும் வெளியானது. பின்னர் 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் சைடர் தேடற்பொறியின் வழி மாக் எக்ஸ் இயக்க இயந்திரத்தில் ஏற்றப்பட்டது. இந்த விளையாட்டு குறிப்பாக எந்த நூற்றாண்டினை ஒட்டியது என்பது புலப்படவில்லை எனினும், இதன் பின்புலம் பண்டைய பாரசீகமாக அமைந்துள்ளது. இந்த விளையாட்டில், விளையாடுபவர் இளவரசன் என்னும் பாத்திரத்தைத் தாங்குகிறார். இப்பாத்திரத்தின் பெயர் இந்த விளையாட்டில் காணப்பெறுவதில்லை. இளவரசனுடன் வரும் பெண்ணின் பெயர் எலைக்கா என்பதாகும். தன் பயணப் பாதையிலிருந்து தன்னைத் திசை திருப்பிய ஒரு பெரும் புழுதிப் புயலின் காரணமாக, ஒரு மர்மதேசத்தில் சிக்கிக் கொள்கையில் இளவரசன் இப்பெண்ணைச் சந்திக்கிறான். இந்த விளையாட்டை விளையாடுபவர்கள், இளவரசனின் சாகசக் கரணத் திறன்களைப் பயன்படுத்தி பல்வேறு சூழல்களையும் கடந்து செல்கின்றனர். இவற்றில் சுவர்களை ஏறித் தாண்டுவது முதல், கூரையில் தவழ்ந்து செல்வது வரை அனைத்தும் அடங்கும். இந்தப் பயணம் முழுவதிலும், விளையாடுபவர்கள் சீரழிந்த பகுதிகளைச் சீரமைப்பதான தங்களது முயற்சியில் பல்வேறு எதிரிகளைச் சந்திக்கின்றனர். இந்த விளையாட்டின் கதைக்கருவும், பின்புலத் தளமும் சொராஸ்திரிய மதத்திலிருந்து பெருமளவில் பெறப்பட்டுள்ளன. "பாரசீக இளவரசன்" விளையாட்டின் இயக்க முறைமைகளை பென் மேட்டஸ் "பாரசீக இளவரசன்" விளையாட்டின் தூண்கள் என வர்ணிக்கிறார். இவை ஒரு பாரசீக இளவரசன் தொடர் என்பதாக அமைந்துள்ளன. கரண வித்தையில் தேர்ந்த ஒரு கதாநாயகன், பாரசீகச் சூழலில் கரண வித்தை, போர், மற்றும் புதிர் விடுவித்தல் ஆகிய அனைத்திலும் முனைவதாக இது அமைந்துள்ளது. "பாரசீக இளவரசன்" என்னும் இந்த விளையாட்டினை விளையாடுபவர் முன்னதாகவே குறிக்கப்பட்ட இடங்களுக்கு விளையாட்டினூடே பயணப்படுதே இந்த விளையாட்டின் அடிப்படை ஆகும். ஒருவர் மட்டுமே விளையாடுவதாக இது அமைந்துள்ளது. ஆட்டக்காரர்தாம் இளவரசன். ஏஐ (AI) என்னும் கணினியின் செயற்கை அறிவினால் கட்டுப்படுத்தப்படும் எலைக்கா என்னும் துணைவியும் இதில் உண்டு. இளவரசனின் கரண வித்தை சாகசத் திறன்கள், கத்தி, கையுறை மற்றும் எலைக்காவின் மாய வித்தை ஆகியவற்றைப் பயன்படுத்தி விளையாட்டு முழுவதும் பல்வேறு சாகசங்களைப் புரியும் வாய்ப்பை விளையாடுபவர் பெறுகிறார். "பாரசீக இளவரசன்" விளையாட்டு, அதை விளையாடுபவர், இந்த விளையாட்டில் எந்த இடத்திற்கும் எப்போது வேண்டுமானாலும் செல்லும் வாய்ப்பினை அளிக்கிறது. மேலும், இதன் கதைக்கருவை அவர் தாம் விரும்பும் வகையில் அமைத்துக் கொள்வதும் சாத்தியமே. அவரது முன்னேற்றத்தைப் பொறுத்து, முன்னர் சென்றிருந்த இடங்கள் மறுமுறை செல்லும்போது மேலும் சவால் நிறைந்ததாக மாறிவிடும். இருப்பினும், அவர் குறிப்பிட்ட ஒரு இடத்தைச் சுத்தம் செய்த பிறகு அவ்விடம் பொறிகளற்றதாகி விடும். இப்பொறிகள் எதிரியான ஆரிமனின் தீங்குணத்தின் பல்வேறு வடிவங்களாக உருவெடுக்கலாம். இவை நிலத்தை மூடும் கருப்பு வண்ண பெரும்பந்துகளாக இருக்கலாம். இவை தொட்டால் விழுங்கி விடும் தன்மையும் கொண்டிருக்கும். இவை போன்ற பொறிகளைத் தவிர்க்க விளையாடுபவர் கரண வித்தைகளைப் பயன்படுத்த வேண்டும். பல்வேறு கரண வித்தைகளும் ஆட்டக்காரரின் வசம் கிடைக்கப் பெறும். எதிரிகளை தாண்டிக் குதிக்கவோ அல்லது அவர்களை ஒரு குத்தில் காற்றில் பறக்க விடவோ இவற்றைப் பயன்படுத்தலாம். சில நேரங்களில், இக்கரண வித்தைகளைச் செய்யும்போது விளையாடுபவருக்கு எலைக்காவின் உதவியும் கிட்டலாம். எலைக்காவின் பாத்திரத்தின் வழியாக மேலும் பல சாகசச் செயல்களை செய்யும் வாய்ப்பும் விளையாடுபவருக்குக் கிட்டும். எலைக்காவின் மந்திர சமிக்கையை விளையாடுபவர் பெறத்தவறி விட்டால், தளத்திலிருந்து அவர்கள் விழுந்து விடுவர். சில நேரங்களில் இது இறப்பையும் உண்டாக்கலாம். "பாரசீக இளவரசன்" விளையாட்டில், அதை விளையாடுபவர் மரபு வழியில் "சாக" இயலாது. மாறாக, எதிரி இறுதித் தாக்குதலை நிகழ்த்துகையில் அல்லது இளவரசன் தனது மரணத்தை எதிர்நோக்குகையில் எலைக்கா அவனைக் காப்பாற்றி விடுவாள். எத்தனை முறை அவ்வாறு எலைக்கா இளவரசனைக் காப்பாள் என்பதற்கு எல்லை ஏதும் இல்லை. விளையாடுபவரைக் காப்பது மட்டும் அல்லாது, எலைக்காவும் பல கரண வித்தைகளைச் செய்வாள் மற்றும் விளையாடுபவருடன் இணைந்து பல அற்புதங்களையும் நிகழ்த்துவாள். இந்த விளையாட்டை இணையத்திலிருந்து கணினியில் இறக்கிக் கொள்ளும் "பின்னூட்டம்" (epilogue) என்னும் பதிப்பில் மற்றொரு புதிய மாய வித்தையும் உள்ளது. இந்தப் பதிப்பில் அழிந்து பட்ட பொருட்களை மீண்டும் உருவாக்க எலைக்காவால் இயலும். விளையாடுபவருக்கான ஒரு புதிய போர் இயக்க முறைமையும் இந்தப் பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. "பாரசீக இளவரசன்" விளையாட்டு நடைபெறுவது ஒரு பண்டைய பாரசீக நகரில் ஆகும். இதன் அமைப்பானது, பெருமளவில், சொராஸ்திரிய மதத்தினைச் சார்ந்துள்ளது. இந்த விளையாட்டின் உள்ளீடாக உள்ள நிகழ்வுகள் நடைபெறுவதற்கு ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், ஆரிமன் மற்றும் ஆர்மஜட் ஆகிய கடவுளருக்கு இடையில் போர் மூண்டது. இப்போரின் விளைவாக, ஆர்மஜடும் மற்றும் ஆஹுரா எனப்படும் அவரது இன மக்களும் ஆரிமன் மற்றும் அவரது கேடுற்ற சீடர்களை ஒரு மரத்தில் சிறையிட்டு விடுகின்றனர். பிறகு ஆர்மஜட் உலகை விட்டுப் போய்விடுகிறார். ஆரிமன் பத்திரமாகக் கட்டுண்டு கிடப்பதை உறுதி செய்து கொள்வது ஆஹூராக்களின் பணியாகிறது. ஓராயிரம் ஆண்டுகள் வரை வெற்றிகரமாகவே இப்பணி நிறைவுறுகிறது. இக்கட்டத்தில், ஆர்மஜட் மற்றும் ஆரிமன் ஆகியவை கட்டுக்கதைகள் என ஆஹூரா இனம் நம்பத்துவங்குகிறது. காரணம், இவர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமதை இருப்பை அறிவிக்காமல் இருந்தமையே ஆகும். விளையாட்டின் நிகழ்வுகள் துவங்குவதற்குச் சற்று முன்னதாக, ஆரிமன் மீண்டும் விடுவிக்கப்படும் நிலையில் உள்ளார். "பாரசீக இளவரசன்" விளையாட்டின் முதன்மைப் பாத்திரம் இளவரசன் ஆகும். இது பெருஞ்ச்செல்வத்தைத் தேடிச் செல்லும் பெயரற்ற ஒரு பாத்திரமாகும். இளவரசனுடன் துணை வருவது ஆஹூரா இனத்தைச் சேர்ந்த எலைக்கா. இவளது இனம் ஒளிக்கடவுளான ஆர்மஜட் தங்களுக்கு அளித்த கடமையை மறந்து, முதன்மை எதிரியான ஆரிமனை மீண்டும் விடுதலையாக்கத் தலைப்படுகிறது. ஆர்மஜட் சிறையெடுத்திருந்த ஆரிமன் இருளின் அரசராவார். தான் விடுதலை பெற்றதை ஒட்டி அகிலம் முழுவதையுமே அவர் தன் கைப்பிடிக்குள் கொணர முயல்கிறார். புலம்புகிற அரசன் பாத்திரம் இதில் முதல் தீயவனாகத் தோன்றுகிறது. இவன் தனது மகள் எலைக்காவிற்கு மீண்டும் உயிரளிப்பதற்காக ஆரிமனுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்கிறான். ஆர்மஜடை வெல்வதற்கு ஆரிமன் தேர்ந்தெடுக்கும் கேடுற்ற நால்வரும் தீயோராகவே தோன்றுகின்றனர். அவர்களும் அவனுடனேயே ஆயிரம் வருடங்கள் சிறைப்பட்டிருந்தனர். இத்தகைய கேடுற்றோரில் வேட்டைக்காரனும் ஒருவன். அவன் வேட்டையை விரும்பும் ஒரு இளவரசனாக வாழ்ந்திருந்தான். ஆனால், விரைவில் வேட்டையில் மிக்க தேர்ச்சி பெற்று விட்டான். வேட்டைக்காரன், தனது ஆன்மாவிற்கு மாற்றாக, ஆரிமனுடன் வெற்றிகரமான ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்கிறான். இதன் வழி, வேட்டைக்காரன் முன்பு எப்போதையும் விடவும் தனக்கு மிகவும் திருப்தி அளிக்கும் வகையில் ஒரு விலங்கினை வேட்டையாட இயலும். கேடுற்ற பாத்திரங்களில் மற்றொருவன் ஒரு இரசவாதி. இவன் ஆஹூரா இனத்தில் ஒரு அறிவியலாளனாக இருந்தவன். இறவாமையை நிலை நிறுத்த முயல்கையில், இவனது உடல் நலம் சீரழிந்து விடுகிறது. தனக்கு நீண்ட வாழ்நாளை அளிக்குமாறு இந்த இரசவாதி ஆர்ஜமட்டை வேண்டுகிறான். இதற்கு ஆர்ஜமட் மறுக்கவே, நீண்ட ஆயுளுக்காக தனது ஆன்மாவையே ஆரிமனுக்குப் பணயம் வைப்பதற்கு இரசவாதி இணங்குகிறான். மூன்றாவதான கேடுற்ற பாத்திரம் ஒரு விலைமாது. ஆட்சியில் உள்ளோரைப் போற்றுகின்ற அரசியல் தந்திரங்களில் கை தேர்ந்த ஆளுமை பெற்றவள் இவள். இவள் ஒரு ஆணுடன் தொடர்புற்றிருந்தாள். ஆனால், இறுதியில் மற்றொரு பெண்ணால் தாக்கப்பட்டு தனது அழகு மற்றும் ஆளுமையை இழந்து விட்டாள். இந்த விலைமகள் மாயமுண்டாக்கும் சக்தி பெறுவதற்காக தனது ஆன்மாவை ஆரிமனிடம் பணயம் வைத்து விட்டாள். இறுதியான கேடுற்ற கதாபாத்திரம் ஒரு போர்வீரன் ஆகும். இவன் முற்றுகை இடப்பட்டிருந்த ஒரு நாட்டிற்கு அரசனாக விளங்கியவன். அமைதியை வேண்டுகிற இவன், ஆரிமனிடம் இருந்து சக்தியைப் பெற்று தனது எதிரிகளை அழிக்கிறான். இவ்வாறு அவன் தனது மக்களுக்கு அமைதியை அளிக்கிறான் போர் முடிவுற்றதும் அமைதியை விரும்பும் மக்கள் இப்போர்வீரனை நிராகரித்து விடுகின்றனர். காரணம், இவன் போர்க்கருவியாக மாறியதே. ஒரு புழுதிப் புயலின்போது இளவரசன் பாலைவனம் ஒன்றைக் கடக்கத் துணிவதுடன் "பாரசீக இளவரசன்" விளையாட்டு துவங்குகிறது. தப்பித்து ஓடிக் கொண்டிருக்கும் எலைக்காவை இளவரசன் சந்திக்கிறான். ஆரிமனையும் அவனது சீடர்களையும் சிறையிட்ட மரத்திற்கு அவளை அழைத்துச் செல்கிறான். ஆரிமானைப் பிடிக்க எலைக்கா முயல்கிறாள். ஆனால், புலம்பும் அரசன் இறுதியில் அவனை விடுவித்து விடுகிறான். இளவரசனின் பாத்திரமும் எலைக்காவும் பயணத்தைத் துவக்கி, வளமை நிலங்கள் எனப்படும் ஆர்ஜமட்டின் சக்தி வாய்ந்த இடங்களுக்குச் சென்று அவ்விடங்களின் சக்தியினை ஆரிமன் பெறுவதைத் தடுக்க முயல்கின்றனர். இவர்கள் இருவரும் அவ்வாறு அந்நிலங்களைக் களையெடுத்ததும், மரத்தினை மீண்டும் அடைகின்றனர். இங்கு எலைக்கா தனது உயிரை ஈந்து ஆரிமன் மீண்டும் மரத்தினுள் சிறைப்படுமாறு அதற்கு முத்திரையிட்டு விடுகிறாள். இளவரசன் அந்த மரத்தை வேருடன் சாய்த்து, தனது சக்தியினால் எலைக்காவிற்கு உயிரளிக்கிறான். ஆனால், இதனிடையே மரத்தில் சிறையுற்றிருந்த ஆரிமன் விடுதலையாகி விடுகிறான். "பாரசீக இளவரசன்" என்னும் விளையாட்டு உருவாக்கத்தில் உள்ளது என்பதற்கான சான்று 2006ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இணையத்திற்கு ஒரு கோப்பு கள்ளத்தனமாக வெளியிடப்பட்டதுடன் தெரிய வந்தது. 2008ஆம் ஆண்டு மே மாதம் வரையிலும் யூபிசாஃப்ட் நிறுவனம் இதை அறிவிக்காவிடினும், இந்த விளையாட்டின் கருத்தாக்கம் அந்தக் கோப்பில் கண்டறியப்பட்டு விட்டது. 2008ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் இந்த விளையாட்டு வெளியாகும் என்றும் மற்றும் இதன் மையக்கரு மற்றும் விளையாட்டு முறைமைகள் ஆகியவை பற்றியும் இது தெரிவித்தது. இந்த விளையாட்டின் முன்னோட்டங்களில் ஒன்று, இந்த விளையாட்டின் பொது விதிகள் தாம் உரைத்தவாறே இருப்பதாகவும், ஆயினும் பெரும் மாற்றங்களுக்கு அவை உள்ளாகியிருப்பதாகவும் தெரிவித்தன. இம்மாற்றங்கள் விளையாட்டின் தளம், போர் மற்றும் புதிர் விடுவித்தல் ஆகியவற்றின் மீதாக இருந்தன. போர் முறைமை ஒற்றைக்கு ஒற்றை என்பதாக இருக்கும் என்றும் இவை தெரிவித்தன. "காலத்தின் மணற்துகள்கள்" (Sands of Time) என்னும் தொடரில் பெரும்படையுடன் மோதுவதைப் போலன்றி, "பாரசீக இளவரசன்" விளையாட்டின் மூலமான முவிலக்கியம் போன்றே இது அமைவதாக இது விளங்கியது. இவ்வாறு போரின் தன்மையைப் பெருமளவில் மாற்றியதன் காரணம், எதிரி பிரத்தியேகமானவன் என்றும் அவனுடன் போர் புரிவது விளையாடுபவர்களுக்கு அற்புதமான ஒரு சாகச உணர்வை அளிக்க வேண்டும் என்பதனாலுமே என்று இதன் தயாரிப்பாளர் பென் மேட்டஸ் உரைத்தார். சிகிமிட்டார் தேடற்பொறியின் மிகுந்த அளவில் மாற்றமடைந்த ஒரு பதிப்பினை "பாரசீக இளவரசன்" பயன்படுத்துகிறது. "கொலையாளியின் நம்பிக்கை" (Assassin's Creed) என்னும் விளையாட்டிலும், இத்தேடற்பொறியே பயன்பட்டது. விளையாட்டு உருவாக்குனர்கள் இப்பொறியைத் தேர்ந்தெடுத்தமைக்குக் காரணம், இதன் மூலம் அவர்கள் பிரம்மாண்டமான உலகுகளை குறைந்த அளவிலான நேரோட்ட செயலாக்கத்துடன் விளையாட்டில் உருவாக்க இயலும் என்பதே. 2008ஆம் ஆண்டு மே மாதம், இள்வரசன் மற்றும் எலைக்கா ஆகிய இரு பாத்திரங்களின் கருத்துச் சித்திரங்களை இரு ஒளிக்காட்சிகளில் யூபிசாஃப்ட் நிறுவனம் வெளியிட்டது. ஒரு ஒளிக்காட்சி இளவரசனின் தோற்றம் வரையப்படுவதைக் காட்டுகிறது; மற்றொன்று எலைக்காவின் பட நுணுக்கங்களைக் காட்டுகிறது. 2008ஆம் ஆண்டு ஜூலை மாதம் மேலும் ஒரு கருத்துச் சித்திரம் வெளியானது. இது முதன்மை எதிரியான வேட்டைக்காரனை வரைந்து காட்டியது. யூபிசாஃப்ட்டின் முந்தைய விளையாட்டுக்களான "கொலையாளியின் நம்பிக்கை" போன்றவற்றைப் போலன்றி, "பாரசீக இளவரசன்" எண்ணியல் உரிமப் பாதுகாப்பு எதையும் கொண்டிருக்கவில்லை. இந்த விளையாட்டை முதலில் யூபிசாஃப்ட் நிறுவனம் உருவாக்குகையில், செயற்கை அறிவுத் துணையுடன் செயல்படும் பாத்திரம் ஒன்றை உருவாக்குவதிலேயே முதன்மையாக ஈடுபட்டிருந்ததாக மேட்டஸ் கூறினார். "காலத்தின் மணற்துகள்கள் என்னும் விளையாட்டின் இடத்தைப் பிடிக்கப் போவது, தோழமை கொண்ட செய்ற்கை அறிவூட்டப்பட்ட ஒரு பாத்திரத்தைக் கொண்ட ஒரு விளையாட்டு முறைமைதான் என்பதை முதல் நாள் துவங்கியே நாங்கள் அறிந்திருந்தோம்.." என்று மேட்டஸ் உரைத்தார். "அது எலைக்காதான் என்று நாங்கள் முதல் நாளே தீர்மானித்திருக்கவில்லை.ஒரு குழந்தை அல்லது ஒரு தந்தையைப் போன்ற ஒரு பாத்திரம் அல்லது ஒரு சகோதரன் அல்லது இவற்றைப் போன்ற ஏதாவது ஒன்று என பல்வேறு கருத்துருக்களையும் நாங்கள் ஆராய்ந்தோம். இவ்வாறு செயற்கை அறிவூட்டப்பட்ட முறைமைக்கான உத்தியின் மூலம் "Prince of Persia: The Sands of Time" ஆகும். ஃபரா மற்றும் இளவரசன் கதாபாத்திரம் ஆகியவற்றின் இடையிலான தொடர்பு ஒரு கதை என்னும் அளவில் மிகுந்த நன்முறையில் அமைந்ததாகவும், இதன் காரணமாக அதை மேலும் மேம்படுத்த உருவாக்கக் குழு தீர்மானித்ததாகவும் மேட்டஸ் உரைத்தார். "பாரசீக இளவரசன்" விளையாட்டை இணையத்திலிருந்து கீழிறக்கிக் கொள்வதற்கான உள்ளீட்டிற்கு "பின்னூட்டம்" எனப் பெயரிட்டுள்ளனர். ஐஜிஎன் அமைப்புடனான ஒரு நேர்காணலில் பென் மாட்டெஸ் இதை உறுதி செய்தார். இப்புதிய உள்ளீட்டில் இளவரசன் ஆராய்வதற்கான பல புதுமையான பகுதிகளும், போரிடுவதற்குப் பல புதிய எதிரிகளும், பல போர் முறைகளும், எலைக்காவின் பயன்பாட்டிற்காகவே பல புதிய வலிமைகளும் இருக்கும் என அவர் தெரிவித்தார். 2009ஆம் ஆண்டு ஃபிப்ரவரித் திங்கள் 26ஆம் நாளன்று எக்ஸ்பாக்ஸ் 360 மற்றும் பிளேஸ்டேஷன் 3 ஆகிய முனையங்களில் இப்புத்திய உள்ளீட்டினை வெளியிடத் திட்டமிட்டனர். ஆயினும், 2009ஆம் ஆண்டு மார்ச் ஐந்தாம் தேதி வரை இது தாமதமாகி விட்டது. இதற்கு வர்த்தகக் காரணங்களைச் சுட்டிக் காட்டிய யூனிசாஃப்ட் நிறுவனம் இந்த விளையாட்டிற்கான கணினிப் பதிப்பாக "பின்னூட்டம்" உள்ளீட்டை இன்னமும் வெளியிடாது உள்ளது. இந்த விளையாட்டு பெரும்பாலான விமர்சகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டு எக்ஸ்பாக்ஸ் 360 மற்றும் பிளேஸ்டேஷன் 3 ஆகிய முனையங்களில் முறையே 81 மற்றும் 85 மதிப்பெண்களும் மற்றும் பிசியில் 82 மதிப்பெண்களும் பெற்றது. இந்த விளையாட்டை அதன் எளிமைக்காகவும், பார்வைக்கு மிகவும் அற்புதமாகத் தோன்றும் இதன் கரண வித்தை சாகசங்கள் மற்றும் போர் உத்திகளுக்காகவும் ஐஜிஎன் எழுத்தாளர் ஹிலாரி கோல்ட்ஸ்டீன் மிகவும் பாராட்டினார். ஆயினும், "இத்தொடரில் ஒருவர் மிகுந்த ஈடுபாடு கொண்டால் மட்டுமே இவ்விளையாட்டைப் பெரிதும் இரசிக்க இயலும்" என்றும் அவர் குறிப்பிட்டார். எலைக்காவையும் அவர் மிகுந்த அளவில் புகழ்ந்தார். விளையாட்டின் இரண்டாம் நிலைப் பாத்திரமான இது, விளையாட்டு முறைமையில் முக்கியப் பங்கு கொண்டு பலருக்கும் விருப்பமான வகையில் அமைந்துள்ளதே இதன் காரணமாகும். கேம்ஸ்பாட் முனைய மறுஆய்வாளர் இதைப் போன்றே கருத்தொன்றைத் தெரிவித்தார். இந்த விளையாட்டின் அற்புதமான கலை வடிவமைப்பையும் அவர் புகழ்ந்துரைத்தார். இருப்பினும், இந்த விளையாட்டு மிகவும் எளிதாகவும், நுகர்வோர்- நட்பு கொண்டு இருப்பதாகவும் பலரும் விமர்சித்துள்ளனர். இதன் தளமும், போர்ப் பகுதிகளும் மிகவும் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக இவர்கள் கருதுகின்றனர். இதை ஒரு "மட்டமான விளையாட்டு" என யூரோகேமர் விமர்சித்தது. இதில் "மறு செய்கைகள் மிக அதிக அளவில் இருப்பதாக" இது கூறினும், "அற்புதமான தொழில் நுட்பத்தையும், சுவாரசியமான இயக்க முறைமைகளையும்" இது இணைத்திருப்பதாகவும் அது பாராட்டியது. ஒன்அப்.காம் (1UP.com) என்னும் வலைத்தளம் இந்த விளையாட்டு முறைமை, தவறிழைத்த பின்னர் மீளமை என்னும் ஒரு தன்மையினைக் கொண்டுள்ளது பற்றி விமர்சித்தது. இதன் கலை வடிவ்மைப்பு மற்றும் விளையாட்டு முறைமை ஆகியவை பிற ஒளிக்காட்சி விளையாட்டுக்களுடன் பலவாறு ஒப்பு நோக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கான எடுத்துக்காட்டுகளில் "கண்ணாடி விளிம்பு" (Mirror's Edge), யூபிசாஃப்ட் நிறுவனத்தின் சொந்தத் தயாரிப்பான ""கொலையாளியின் நம்பிக்கை" " ஆகியவற்றின் பிரத்தியேகமான தளங்கள் மற்றும் நேர உத்தியின் மீதான போர் அமைப்புகள் ஆகியவை உள்ளிடும். பெரும் அளவில் திறந்த சூழலில் நிகழும் தீவிரமான போர்களை, "ஐக்கோ" (Ico), "பிரம்மாண்டத்தின் நிழல்" (Shadow of the Colossus) மற்றும் நீர்வண்ணம் (watercolor) ஆகியவற்றுடன் ஒப்பிடுகின்றனர். இதன் தோற்றம் "ஒக்காமி" விளையாட்டுடன் ஒப்பு நோக்கப்படுகிறது. 2008ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிளே ஸ்டேஷன் 3 என்னும் முனையத்தில் மிகுந்த அளவில் விற்பனையாகும் விளையாட்டுக்களில் "பாரசீக இளவரசன்" நான்காவது இடம் பெற்றிருந்தது. ஆயினும், இது பிளே ஸ்டேஷன் 3 மற்றும் எக்ஸ்பாக்ஸ் 360 ஆகிய இரண்டிலுமாக 483,000 அலகுகளே விற்பனையானது. பின்னர் யூபிசாஃப்ட் வெளியிட்ட விற்பனை விபரங்களின்படி 2009ஆம் ஆண்டு ஜனவரி வரையில் "பாரசீக இளவரசன்" 2.2 மில்லியன் பிரதிகள் விற்றுள்ளதாக அறிய வந்துள்ளது. 2009ஆம் ஆண்டு ஃபிப்ரவரித் திங்கள் 19ஆம் நாள், 12ஆம் வருடாந்திர இடையூட்டு சாதனை விருதுகள் நிகழ்வில் (Annual Interactive Achievement Awards) "பாரசீக இளவரசன்" "அசைவூட்டத்தில் மிகப் பெரும் சாதனை" என்னும் விருது பெற்றது. நான்மணிமாலை நான்மணிமாலை என்பது தமிழில் உள்ள 90 பிரபந்த வகைகளுள் ஒன்று. அந்தாதியாக நாற்பது செய்யுள்களில் அமையும் இப் பிரபந்த வகையில் வெண்பா, கலித்துறை, அகவல், விருத்தம் என்னும் பாடல் வகைகள் மாறி மாறி அமைந்து வரும். இவ்வாறு நான்கு பா வகைகள் மாலை போல் கோர்வையாக அமைவதாலேயே இது நான்மணிமாலை எனப்படுகின்றது. சுப்பிரமணிய பாரதியார் பாடிய விநாயகர் நான்மணிமாலையில் இருந்து முதல் நான்கு பாடல்களும், ஐந்தாம் பாடலின் பகுதிகளும் எடுத்துக் காட்டாகத் தரப்பட்டுள்ளன. முதல் பாடல் முடியும் சொல்லில் இரண்டாம் பாடல் தொடங்குவதையும் அவ்வாறே இரண்டாம், மூன்றாம், நான்காம் பாடல் முடியும் சொற்களில் மூன்றாம், நான்காம், ஐந்தாம் பாடல்கள் தொடங்குவதையும் காணலாம். முதல் நான்கு பாடல்களும் வெண்பா, கலித்துறை, விருத்தம், அகவல் ஆகிய செய்யுள் வடிவில் அமைந்திருப்பதையும், ஐந்தாம் பாடல் மீண்டும் வெண்பாவாக அமைந்துள்ளதையும் காணலாம். வெண்பா கலித்துறை விருத்தம் அகவல் வெண்பா அந்தாதி அந்தாதி ( கடைமுதலி / ஈற்றுமுதலி )என்பது யாப்பியலில் ஒரு தொடை வகையையும், ஒரு பிரபந்த வகையையும் குறிக்கும். அந்தாதி என்னும் சொல் முடிவு என்னும் பொருள்படும் "அந்தம்", தொடக்கம் என்னும் பொருள்படும் "ஆதி" ஆகிய இரு சொற்களின் சேர்க்கையால் உருவானது. இதற்கேற்ப, ஒரு பாடல் முடிவில் உள்ள எழுத்து, அசை, சீர், சொல்சொல் அல்லது அடி அடுத்து வரும் பாடலின் தொடக்கமாக அமையும் பாடல்களால் ஆனது அந்தாதிச் செய்யுள் ஆகும். அடுத்தடுத்து வரும் அடிகள் அந்தாதியாக அமையும் போது அது அந்தாதித் தொடை (கடைமுதலி/ஈற்றுமுதலித் தொடை) எனப்படும். அந்தாதி (கடைமுதலி / ஈற்றுமுதலி ) அமைப்பு பாடல்களை வரிசையாக மனப்பாடம் செய்வதற்கு வசதியாக உள்ளது. சங்க இலக்கியங்களில் ஒன்றான பதிற்றுப்பத்தின் நான்காம் பத்தில் அந்தாதி அமைப்பு உண்டு. எனினும் அந்தாதி இலக்கியமாகத் தனியே அமைந்தவற்றில் இன்று கிடைக்கும் பழைய நூல் காரைக்கால் அம்மையாரின் அற்புதத் திருவந்தாதி ஆகும். தவிர பன்னிரு திருமுறைகளில் பதினோராம் திருமுறையில் உள்ள நூல்களில் எட்டு அந்தாதி வடிவில் அமைந்துள்ளன. மாணிக்கவாசகரின் திருவாசகம், திருமூலரின் திருமந்திரம், நம்மாழ்வாரின் திருவாய்மொழி ஆகியவற்றிலும் அந்தாதி வடிவில் அமைந்த பாடல்களைக் காண முடியும். இவை தவிர பிரபந்த வகையைச் சேர்ந்த நான்மணிமாலை, இரட்டைமணிமாலை, அட்டமங்கலம், நவமணிமாலை, ஒருபா ஒருபது, இருபா இருபது, மும்மணிக்கோவை, மும்மணிமாலை, கலம்பகம் என்பவை அந்தாதியாக அமைகின்றன. அந்தாதிகள் பல வகைகளாக உள்ளன; இவற்றுள் பின்வருவன அடங்கும்: பிரம்மரிஷி பிரம்மரிசி என்பது ரிசிகளின் தவவலிமைக்கு ஏற்றவாறு கொடுக்கப்படும் பட்டங்களில் மிக உயர்ந்தபட்டமாகும். இத்தகைய பட்டம் பெற்றவர்கள் மற்ற ரிசிகளில் உயர்ந்தவராக மதிக்கப்படுவார் என்கிறது இந்து தொன்மவியல் நூல்கள். ரிஷிகளுக்கேல்லாம் ரிஷி என்பவரை மகரிஷி என்றழைப்பர். மகரிஷிகளுக்கெல்லாம் ரிஷி என்பவரை பிரம்மரிஷி என்பர். வேதங்களின் படி எவர் ஒருவர் பிரம்மஞானம் பெற்றவராக கருதப்படுகிராரோ, அவரே பிரம்மரிஷி என்ற பட்டத்துடன் அழைக்கப்படுவார். இதுவரை பிருகு, அத்திரி, அங்கரிசர் , காச்யபர், விசுவாமித்ரர், வசிஷ்டர், சாண்டில்யர் ஆகிய எழு ரிஷிகள் மட்டுமே. பிரம்மரிஷி பட்டம் பெற்றுள்ளனர். இதில் விசுவாமித்ரர் மட்டும் சத்ரிய குலத்தில் தோன்றி தன் தவ வலிமையால் பிரம்மரிஷி பட்டம் பெற்றார். பிரம்மரிஷிகளுக்கு தேவர்களுக்கு நிகரான சக்தி இருப்பதாகவும் வேதங்கள் கூறுகின்றன. ரிஷிகள் விஞ்ஞானம் மருத்துவம் போன்ற பல துறைகளிலும் முன்னோடிகளாக இருந்து வந்ததை பல நூல்கள் குறிப்பிடுகின்றன. "ஊர்வசி பஞ்சரத்னம்" எனும் நூல் தாயின் வயிற்றில் கருவின் வளர்ச்சியை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ரிஷிகள் அறிந்திருந்ததைக் குறிப்பிடுகின்றது. விநாயகர் நான்மணிமாலை விநாயகர் நான்மணிமாலை சுப்பிரமணிய பாரதியாரால் பாடப்பட்டது. புதுவை மணக்குள விநாயகரை வேண்டிப் பாடப்பட்ட இந்நூல், நான்மணிமாலை எனப்படும் பிரபந்த வகையைச் சார்ந்தது. மேற்படி கோயிலின் உள் வீதியில் இப் பாடல்கள் சலவைக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன. இந்நூல் பாரதியார் இறந்த பின்னர் 1929 ஆம் ஆண்டில் முதல் பதிப்பைக் கண்டது. 1919 ஆம் ஆண்டில் பாரதியார் இருக்கும்போதே "விநாயகர் தோத்திரம்" என்னும் நூலொன்றை அச்சிடும் முயற்சியைப்பற்றி பாரதியார் சி. விசுவநாத ஐயர் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவே விநாயகர் நான்மணிமாலை என்னும் தலைப்பிட்டுப் பின்னர் அச்சிடப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகின்றது. இந்நூலின் கையெழுத்துப் பிரதியில் சில இடங்கள் பாரதியாரால் நிரப்பப் படாமல் இருந்தன என்றும் அவற்றைப் பின்னாளில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, சுத்தானந்த பாரதியார் ஆகியோர் பூர்த்தி செய்தனர் என்றும் சொல்லப்படுகிறது இந்நூல் வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரிய விருத்தம், அகவல் என்னும் நான்கு பாடல் வகைகளின் கோர்வையாக அமைந்து அந்தாதிச் செய்யுள் அமைப்பைக் கொண்டு விளங்குகிறது. இதில் 40 பாடல்கள் உள்ளன. பிற்காலத்தில் சினிமாப் பாடல்கள் மூலம் மக்களுக்குப் பழக்கமான வரிகள் பல இந்த நூலில் காணப்படுகின்றன. பாடல் ஒன்றில் வரும் கீழ்க்கண்ட, என்னும் வரிகளும், பாரதியின் ஆளுமையை வெளிப்படுத்துவதற்காகச் சினிமாவொன்றில் பயன்படுத்திய, ஆகிய வரிகளும் இதற்கு எடுத்துக்காட்டுகள். என்று தனக்காகவும் விநாயகரிடம் வரம் கேட்கும் பாரதியார், என்னும் வரிகள் மூலம் உலகில் உள்ள உயிரினங்கள் யாவும் இன்புற்று வாழச் செய்வதற்கான சக்தியைத் தனக்கு அருளுமாறும் இறைவனை வேண்டுகிறார். நால்வர் நான்மணிமாலை நால்வர் நான்மணிமாலை என்பது சைவ சமயக் குரவர்களான திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர் ஆகியோரின் சமயப் பணி பற்றிக் கூறும் நூலாகும். இது பிரபந்தம் எனப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான நான்மணிமாலை என்னும் வகையைச் சார்ந்தது. வெண்பா, கலித்துறை, விருத்தப்பா, அகவற்பா என்னும் என்னும் நான்கு பா வகைகள் மாறிமாறி அமைந்த 40 பாடல்களினால் இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. வெண்பாப் பாடல்கள் சம்பந்தர் பற்றியும், கலித்துறைப் பாடல்கள் திருநாவுக்கரசர் பற்றியும், விருத்தப்பாக்கள் சுந்தரர் பற்றியும், அகவற்பாக்கள் மாணிக்கவாசகர் பற்றியும் கூறுகின்றன. சைவசமயக் குரவர்கள் பற்றிய நூலாதலால் இதனைப் பெரிய புராணச் சுருக்கம் என்றும், குட்டிப் பெரியபுராணம் என்றும் குறிப்பிடுவதுண்டு. இந்நூல், காஞ்சீபுரத்தில் பிறந்து துறைமங்கலம் என்னும் ஊரில் வாழ்ந்தவரான சிவப்பிரகாசர் என்பவரால் இயற்றப்பட்டது. இது மிகவும் கருத்துச் செறிவு கொண்ட நூலாதலால் இதன் பொருளை விளக்கப் பிற்காலத்தில் ஏழு உரை நூல்கள் எழுதப்பட்டன. இவை, என்பனவாகும். மார்ட்டின் விக்கிரமசிங்க மார்ட்டின் விக்கிரமசிங்க ("Martin Wickramasinghe", மே 29, 1890 - ஜூலை 23, 1976) சிங்கள எழுத்தாளரும் பத்திரிகை ஆசிரியரும் ஆவார். புதினம், சிறுகதை கவிதை, நாடகம், விமர்சனம் ஆகிய அத்தனை துறையிலும் எழுதியுள்ளார். 1890, மே 29 இல் இலங்கையின் தென் மாகாணத்தில் ஹபரதுவ தேர்தல் தொகுதியிலுள்ள கொக்கலை என்னும் ஊரில் புஞ்சி எலிசார குடும்பத்தில் பத்துப் பேரில் ஒரே ஆண்மகனாகப் பிறந்தார். சொந்தக் கிராமத்திலே சிங்களக் கல்வியைப் பெற்ற மாட்டின் விக்கிரமசிங்க காலி உனவடுன பொனவிஸ்டா வித்தியாலயத்தில் ஆங்கிலக் கல்வியை பெற்றார். சிறு வயதிலே தந்தையை இழந்துவிட்டார். வளரும் பருவம்வரை தெற்கின் கடற்கரையோரத்தின் கிராமப் புறத்திலேயே வாழ்ந்தார். பின் கொழும்பில் ஒரு புத்தகசாலையில் எழுத்தராகச் சேர்ந்தார். ஆங்கிலப் புத்தகங்களை அதிகமாக வாசித்து பத்திரிகைகளுக்கு கட்டுரைகளை எழுதினார். அதன் மூலமே பிற்காலத்தில் தினமின, சிலுமின, லக்மின ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியராக வர முடிந்தது. 1946 ஆம் ஆண்டு வரை தினமின சிங்களப் பத்திரிகையில் பணிபுரிந்து எழுத்துத் துறையில் பல சாதனைகளை நிலைநாட்டினார். 1914 ஆம் ஆண்டு வெளியிட்ட லீ லா என்ற புதினத்தை எழுதினார். புதின இலக்கியத்தில் ஏற்படுத்திய புரட்சிகரமான மாற்றத்திற்காக வித்தியாலங்கார பல்கலைக்கழகம் இவருக்குக் கலாநிதிப் பட்டம் வழங்கியது. இவர் சோசலிசக் கொள்கையை விரிவாக ஆராய்ந்து பல ஆக்கங்கள் வெளியிட்டுள்ளார். பரிணாமவாதத்தை சிங்களத்திற்கு முதல் முதல் அறிமுகப்படுத்தியவரும் இவரே. கிராமப்புற மனிதனையும் கிராமப்புற சூழ்நிலைகளையும் அதிகமாக நேசித்தவர். இதனால் இவரின் சிறுகதைத் தொகுப்பில் அதிகமானவை இன்றும் காலத்தால் அழியாத தன்மையுடையனவாக இருக்கின்றன. கஹனியக் ‘பெண் ஒருத்தி’ என்ற கதைத் தொகுதி வஹல்லு ‘அடிமை’ என்ற கதைத் தொகுதி போன்றவை புகழ் வாய்ந்தவை. பல்வேறு உலக மொழிகளில் இவரது நூல்கள் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. உருசிய மொழியில் அநேக நூல்கள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. பிரெஞ்சு, சீன, ரூமேனிய, பல்கேரிய, தமிழ் ஆகிய மொழிகளில் இவருடைய நாவல்கள் சிறுகதைகள் மொழி பெயர்க்கப்பட்டு உலகின் பல பகுதிகளிலும் விற்கப்படுகின்றன. 1925 ஆம் ஆண்டு மாட்டின் விக்கிரமசிங்க சதபுவே பலகே பிரேமா விக்கிரமசிங்கா என்பவரைத் திருமணஞ் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று பெண் மக்களும் மூன்று ஆண் மக்களும் இருக்கின்றனர். ஆறு பேருமே பல்கலைக்கழகப் பட்டதாரிகளாவர்கள். இவரது அதிமுக்கிய, இறுதியான நூல் "ஸ்ரீபவத்தரன" ஆகும். புத்தரின் வாழ்க்கை வரலாற்றை ஒரு புதிய கண்ணோட்டத்தில் அவர் இந்த நூலில் எழுதியுள்ளார். சித்தார்ந்த குமாரன், புத்தராகும் வரையிலான வரலாற்றுக் காலத்தை குறிப்பிட்ட போது, புத்தரைச் சித்தார்த்த குமாரரின் கோலத்தில் நிறுத்திப் பக்திபூர்வமாக இல்லாது, மதிப்புக் குறைவாக எழுதிவிட்டார் என்றும், புத்தரை இழிவுப்படுத்திவிட்டார் என்றும் பலர் நாடெங்கும் சர்ச்சை சரமாரியான விமர்சனங்களை எழுதினர். இந்த நூலைச் சட்டவிரோதமாக்கக் கோரிக் கூட்டங்கள் கூட நடத்தினர். அத்தனை எதிர்ப்புக்களையும் சமாளித்தார். தன் கைப்பட எழுதிய ஒவ்வோர் எழுத்துக்கும் பூரண பொறுப்பேற்று விளக்கமும் தந்தார். இவர் ஒரு தத்துவவியலாளராக, கலைஞராக, சமூகவியல் ஆய்வாளராக என பல தளங்களில் கால் பதித்துள்ளார். இவர் 60 ஆண்டுகளாக சேகரித்து தனது சொந்த வாசிகசாலையில் வைத்திருந்த சுமார் 5000 அபூர்வ நூல்கள் மார்ட்டின் விக்கிரமசிங்க அறக்கட்டளை நிறுவனத்தால் தேசிய நூலகம் மற்றும் ஆவணவாக்கல் சேவை நூலகத்திற்கு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன. இவற்றை ஆய்வாளர்கள் பார்வையிடவும் உசாத்துணையாக பயன்படுத்தவும் முடியும். விபுலாநந்த அடிகளாரைத் தலைவராகக் கொண்டு 1947 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை எழுத்தாளர் சங்கத்தில் மார்ட்டின் விக்கிரமசிங்க உப தலைவராக இருந்தார். தற்போது மார்ட்டின் விக்கிரமசிங்க அறக்கட்டளை நிறுவனத்தினர் அவரது 94 நூல்களையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மாத்தறை பிரதேசத்தில் கொக்கலையில் அமைந்துள்ள இவரது பிறந்த இல்லம் கிராமிய கலை அரும்பொருட் காட்சி நிலையமாக அமைக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. விவசாயத் தகவல் ஊடகம் விவசாயத் தகவல் ஊடகம் என்பது இணையம் வழியாகப் பகிர்ந்து கொள்ளும் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணைய தளமாக செயல்பட்டு வருகிறது. வேளாண்மை சார்ந்த தகவல்களை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில்,விவசாயம் சார்ந்த கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு விடை அளித்தல், விவசாயம் குறித்த கருத்துப் பகிர்வு, விவசாயப் பொருட்கள் வாங்க விற்க உதவிகள், விவசாயச் செய்திகள், தொழில் நுட்பங்கள், சந்தை நிலவரம், விவசாய நிகழ்வுகள் குறித்த விபரங்கள் என முற்றிலும் விவசாயம் சார்ந்த தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு களமாக இந்த இதழ் உள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் விவசாய தகவல் ஊடக இணைய தளம் தனது முன்னோட்டத்தினை செயல்படுத்தத் துவங்கியது. 2010 ம் ஆண்டு ஜனவரி 16 முதல் தனது அதிகாரப் பூர்வ சேவையினை துவக்கியது. விவசாய தகவல் ஊடகம் எந்த வித இலாப நோக்கமும் இன்றி செயல்படும் கிராம கல்வி மற்றும் வேளாண் வளர்ச்சி தன்னார்வ நிறுவனத்துடன் இணைந்து உலக விவசாயி , ஹல்லோ அக்ரி போன்ற விவசாயிகளுக்கான திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. விவசாயிகள் குறித்து கணக்கீடு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்வதாக கடந்த 2009 ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியிட்டு அதற்கான செயல்பாடுகளில் முனைப்பு காட்டி வரும் இந்தத் தளம், விவசாயிகளின் பொருட்களை நேரடியாக விற்பனை செய்யும் நோக்கத்துடன் இலவசச் சேவைகளை அளிக்கிறது. குறிப்பாக, விவசாயிகள் மற்றும் விறபனையாளர்களுக்கான வணிகத் தொடர்பினை அமைத்து தருதல், வேளாண் பட்டதாரிகள் உதவியுடன் தொலைபேசி வழியான தகவல் அளிப்பு உட்பட பல தொலைப்பேசி வழி சேவைகளை இலவசமாக அளித்து வருகிறது. மேலும் விவசாயிகளுக்கான நேரடிக் கள உதவிக்கு என ஊராட்சி ஒன்றியம் வாரியாக ஒரு தனிக்குழு அமைத்து விவசாயிகளுக்கும், வேளாண்மைத் தொழில் சார்ந்த சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் உதவிட முனைந்து வருகிறது, எஸ் எம் எஸ் எனப்படும் குறுந்தகவல் மூலமாக விவசாயிகள் கேட்கும் தகவல்கள் குறித்த மாற்றங்கள் நிகழ்வுகளை அனுப்பும் சேவையும் இங்கே கிடைக்கிறது விளிம்புவிளைவுக் கீற்றணி விளிம்புவிளைவுக் கீற்றணி என்பது ஒளியின் நிறப்பிரிகையினால் நிறமாலையைப் பெற உதவும் ஓர் கருவி; இது அதிக எண்ணிக்கையிலான, சமதூரத்தில் அமைந்த, இணையான பிளவுகளால் ஆன ஓர் அமைப்பு. ஒளியின் விளிம்புவிளைவு பற்றி அறியப் பயன்படுகிறது. இவ்விளைவைக் காண கீற்றணியின் தளத்தில் படும் ஒளியின் அலைநீளமானது பிளவின் அகலத்திற்கு ஒப்பிடத்தக்கதாக இருத்தல் வேண்டும். கீற்றணி இரு வகைப்படும்: ஒளி ஊடுருவும் பொருளான கண்ணாடி அல்லது பெர்சுபெக்சினாலான (perspex) தகட்டில் வைர ஊசியின் உதவியால், ஒரு செ.மீ. அகலத்தில் பல்லாயிரம் வரிப்பள்ளங்கள் (கோடுகள்) கீறப்பட்டிருக்கும், ஒரு வகைக் கீற்றணி. கோடுகள் உள்ள பகுதி ஒளிபுகாத் தன்மையுடையதாயும் கோடுகளுக்கு இடைப்பட்ட பகுதி பிளவு போன்றும் செயல்படும். இதனுள் ஊடுருவும் ஒளி நிறமாலை வரிசைகளைத் தோற்றுவிக்கும். இந்நிறமாலையில் முதலில் ஊதா நிறமும் இறுதியில், அதாவது அதிகளவு விளக்கமடைந்து, சிவப்பு நிறமும் தோன்றும். ("முப்பட்டக நிறப்பிரிகையில் சிவப்பு சிறும விளக்கமும் ஊதா பெரும விளக்கமும் அடைகின்றன என்பதை நோக்குக"). ஓர் எதிரொளிப்புத் தளம் அல்லது எதிரொளிப்புப்பூச்சு இடப்பட்ட தள / குழிவான பரப்பின் மீது சம அகலமுடைய, இணையான வரிப்பள்ளங்கள் (கோடுகள்) வரையப்பட்ட அமைப்பு. இவ்வகைக் கீற்றணிகளின் சிறப்பு அகச்சிவப்பு, புற ஊதா ஒளிகளையும் நிறப்பிரிகைக்கு உட்படுத்தும் தன்மையே. (ஊடுறுவுக் கீற்றணிகளில் இவ்விரு ஒளிகளும் ஊடுருவ முடியாது). குறுவட்டு எதிரொளிப்புக் கீற்றணிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். ஒரு கீற்றணியின் தரம் அதில் வரையப்பட்ட கோடுகளின் நேர் கோட்டுத்தன்மை, இணைப்பண்பு, கோடுகளின் சமதூரம் ஆகியவற்றைப் பொறுத்தது. சிறந்த கீற்றணிகள் கருமையான பின்னணியில் தெளிவான விளிம்புவிளைவு நிகழ்வை ஏற்படுத்த வல்லவை. இங்கு, சைக்ளோட்டிரான் சைக்ளோட்ரான் என்பது மின்னூட்டம்-பெற்ற துகள்களான புரோட்டான்கள் அல்லது அதிகநிறை அணுக்களை முடுக்குவிக்கப் பயன்படும் ஒரு துகள் முடுக்கி. 1929-ஆம் ஆண்டு சைக்ளோட்ரானை முதலில் எண்ண அளவில் உருவாக்கியவர் எர்னசுடு லெளரன்சு என்ற அமெரிக்க இயற்பியலாளர். டுவோரக் விசைப்பலகை டுவோரக் விசைப்பலகை ("Dvorak Keyboard") 1936 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் டுவோரக், வில்லியம் டீலி ஆகியோரால் காப்புரிமை பெறப்பட்டது. நிலவும் ஆங்கில விசைப்பலகை வடிவமைப்பான குவர்ட்டி ("QWERTY") விசைப்பலகைக்கு ஒரு நிறுவப்பட்ட 'மாற்றாக' இது கருதப்படுகிறது. தட்டச்சில் அதிவேகம், குறைவான தட்டச்சுப் பிழைகள், தட்டச்சுகையில் தேவைப்படும் குறைவான 'விரல்களின் இயக்கம்' ஆகியவை டுவோரக் விசைப்பலகையின் சிறப்புகளாக அதன் ஆதரவாளர்கள் கருதுகின்றனர். டுவோரக் விசைப்பலகையின் வரலாற்றை அறியும் முன் குவர்ட்டி ("QWERTY") விசைப்பலகையின் வரலாற்றை அறிதல் இன்றியமையாததாகும். 1867 ஆம் ஆண்டு கிறிஸ்தோபர் சோல்ஸ் என்பவர் அகரவரிசைப்படி ஆங்கில எழுத்துக்கள் அமைந்த தட்டச்சு எந்திரத்தை அறிமுகம் செய்தார். சமகாலத்தில் ஏறத்தாழ 51 கண்டுபிடிப்பாளர்கள் தட்டச்சு எந்திரக் காப்புரிமை பெற்றிருந்தனர். அவர்களின் அனைத்து வடிவமைப்புகளின் பொதுக் கோளாறாக 'விசைக் கம்பிகள் பிணைந்து கொள்ளுதல்' இருந்தது. தட்டச்சு விரைவாகச் செய்யப்படுகையில் ஏற்பட்ட விசைக் கம்பிகள் பிணைந்து கொள்ளும் கோளாறைச் சரிசெய்ய கண்டறியப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டதே 'க்வர்ட்டி' விசையமைவு முறையாகும். எந்திரத்தொழில் நுட்பத்தில் மாற்றத்தைக் கோராமல் விசையமைவு முறையில் மேற்படி 'விசைக்கம்பிகள் பிணைந்துகொள்ளும்' கோளாறை சரிப்படுத்தும் முயற்சியில் அனைத்து விசைமைவு முறைகளையும் வெற்றிகண்டு தட்டச்சு எந்திர உற்பத்தியாளர்களிடம் க்வர்ட்டி முறை பரவியது. அன்றைய தொழில்நுட்ப வளரச்சியின் வரம்புக்குள் இரண்டு சிறப்புக் கூறுகள் 'க்வர்ட்டி' விசைமைவின் வெற்றிக்கு அடிகோலின. அவை, ஆகியனவாகும். முனைவர் ஆகஸ்ட் டுவோரக் அமெரிக்காவின் வாசிங்டன் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் பேராசிரியர் ஆவார். அவர் அப்பல்கலைக்கழகத்தில் ஜெர்ட்டூட் ஃபோர்டு என்பார் மேற்கொண்ட 'தட்டச்சுப் பிழைகள்' எனும் தலைப்பிலான ஆய்வுப்பணியில் ஆலோசகராக விளங்கிய காலகட்டத்தில் தட்டச்சு விசையமைவு முறைகளில் ஆர்வம் கொண்டார். 'தொடு தட்டச்சு' பரவலாகப் புழக்கத்தில் இருந்த அக்காலகட்டத்தில் முனைவர் டுவோரக் 'குவர்ட்டி' விசையமைவு முறையை ஆழ்ந்து ஆய்ந்து அது மாற்றியமைக்கப்படவேண்டும் எனும் முடிவை வந்தடைந்தார். பின் அவரும் அவரின் மைத்துனரான முனைவர் வில்லியம் டீலியும் இணைந்து தொடர் ஆய்வுகளை மேற்கொண்டனர். இருவரின் நோக்கம் மேலதிகத் தட்டச்சு வேகம், குறைந்த தட்டச்சுப்பிழைகள், தட்டச்சுகையில் குறைவான அயர்ச்சி ஆகியவற்றுக்கு உகந்த அறிவியல் வழிப்பட்ட முறையில் புதிய விசையமைவு முறையை உருவாக்குவதே. அவர்களின் முயற்சி ஆங்கில மொழியில் அதிகப் பயன்பாட்டுக்கான எழுத்துக்கள் மற்றும் எழுத்துச் சேர்க்கைகள் குறித்த ஆய்வுப் பணியிலிருந்து துவங்கியது. அவர்களின் ஆய்வுப் பொருளில் கைகளின் செயற்பாடு, விரல்களின் இயக்கம் ஆகியவற்றையும் பின்னர் இணைத்துக்கொண்டனர். இவ்வாய்வுகளின் விளைவாக 1932 இல் 'டுவோரக் எளிய விசைப்பலகை' தட்டச்சு உலகில் தோன்றியது. பின்னர் 1936 ஆம் ஆண்டு முனைவர் டுவோரக் மற்றும் முனைவர் வில்லியம் டீலி ஆகியோர் இணைந்து டுவோரக் விசைப்பலகையை 'அமெரிக்க எளிய விசைப்பலகை' எனும் பெயரில் காப்புரிமை பெற்றனர். 1933 இல் முதன்முறையாக 'நாட்டிடை தட்டச்சுப் போட்டி'களில் டுவோரக் வழித் தட்டச்சர்கள் கலந்துகொண்டனர். தட்டச்சு எந்திரங்கள் பெருவீத உருவாக்கத்தில் நாளும் சந்தைக்கு வந்துகொண்டிருந்த அக்காலகட்டத்தில் தட்டச்சுத் தயாரிப்பில் முன்னணியிலிருந்த பல நிறுவனங்கள் தத்தம் நிறுவன விளம்பரத்திற்கென இப்போட்டிகளை நிகழ்த்தினர். 1934-41 ஆகிய ஆண்டுகளின் இடைப்பட்ட காலத்தில் டுவோரக் தட்டச்சாளர்கள் பத்துமுறை மேற்படி உலகப்போட்டிகளில் வென்றனர். 1935 ஆம் ஆண்டின் 20 வெற்றியாளர்களில் 10 பேர் டுவோரக் தட்டச்சாளர்கள் ஆவர். பார்பரா பிளாக் பர்ன் எனும் பெண் உலகின் வேகமான தட்டச்சாளர் என கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றவர் ஆவார். ஒரு டுவோரக் தட்டச்சரான இவர் 50 நிமிடங்களில் நிமிடத்திற்கு 150 சொற்கள் (37,500 விசைத்தட்டல்கள்) தட்டச்சக் கூடியவர் ஆவார். மேலும் தொடர்ந்து 170 சொற்கள்வரை தட்டச்சக்கூடியவர். அவரது மீஉயர் வேகம் நிமிடத்திற்கு 212 சொற்கள் என கின்னஸ் புத்தகத்தில் பதிவு பெற்றுள்ளது. முனைவர் டுவோரக் தனது 'டுவோரக் எளிய விசைப்பலகையை' பின்வரும் புள்ளிகளிலிருந்து வடிவமைத்தார். முனைவர் டுவோரக் குவர்ட்டி விசைப்பலகையினை ஆழ்ந்து ஆய்ந்து பின்வரும் குறைபாடுகளைத் தொகுத்தார். 1982 ஆம் ஆண்டு அமெரிக்க தேசியத் தரப்படுத்தல் நிறுவனம் ANSI X4.22 எனும் டுவோரக் விசையமைவுத் தரப்படுத்தலைச் செய்தது. குவர்ட்டி விசைப்பலகையை நீக்கம் செய்யவோ அதன் பரவலைப் பெறவோ டுவோரக் விசைப்பலகையினால் இயலவில்லை. ஆயினும், 'குவர்ட்டி'க்கு நிறுவப்பட்ட மாற்றாக டுவோரக் அதிகாரப்பூர்வமாக நிலைகொண்டது. இன்று சற்றேறக்குறைய அனைத்துக் கணிணிகளும் டுவோரக் 'எளிய விசைப் பலகை' நிறுவல் வசதியைக் கொண்டிருக்கின்றன. மூன்று வகையான டுவோரக் விசைப்பலகை முறைகள் நிறுவப்பட்டுள்ளன. பொது டுவோரக் விசைப்பலகை, வலக்கையர்களுக்கான டுவோரக் விசைப்பலகை, இடக்கையர்களுக்கான டுவோரக் விசைப்பலகை ஆகியவையே அவை. குவர்ட்டியின் பரவலான புழக்கம் அதன் வெற்றியை உறுதி செய்துள்ளது. ஆகவே, அந்தப் பரவலாக்கமே டுவோரக்கின் மீதான விமர்சனமாகும். விண்டோஸ் இயங்குதளத்தில் குவர்ட்டி விசைப் பலகை முறையோடு டுவோரக் விசைப்பலகையைக் கூடுதலாக இணைத்துக் கொள்ளலாம். இதன்மூலம் தேவைப்படும் பொழுதில் குவர்ட்டி மற்றும் டுவோரக் விசைப்பலகைகளுக்கு எளிய குறுக்கு விசைகளைப் பயன்படுத்தி மாற்றிக் கொண்டு தட்டச்சு செய்யலாம். வழிமுறை control pane > Clock, Language, and Region > change keyboards or other input methods சொடுக்கவும். பின்தோன்றும் சாளரத்தில் keyboards and Languages என்ற தாவலின் கீழ் உள்ள change keyboards எனும் பொத்தானைச் சொடுக்கவும். தோன்றும் சாளரத்தில் General என்ற தாவலில் வலப்பக்கம் தெரியும் Add என்ற பொத்தானைச் சொடுக்கி விரியும் பட்டியலில் English(United States)> keyboard>United States-dvorak ஐ தேர்வுசெய்யவும்.அல்லது அதற்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள டுவோரக் விசைப்பலகையின் வலக்கை இடக்கை சிறப்பு விசைப்பலகை வாய்ப்புகளில் தேவையானதைத் தேர்வு செய்து கொள்ளலாம். பின் அதே சாளரத்தில் Advanced Key settings தாவலின்கீழ் தேவைப்படும் குறுக்குவிசைகளை அமைத்துக் கொள்ளவும். இனி எளிதாக குவர்ட்டி மற்றும் டுவோரக் விசைப்பலகைகளுக்கு எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொண்டு தட்டச்சு செய்யலாம். டுவோரக் விசைப்பலகை எவ்வாறு இலகுவானது என்பதை தமிழர்கள் மரபான யளன விசைப்பலகையையும் தமிழ்99 விசைப்பலகையையும் ஒப்பிட்டு அறியலாம். டுவோரக் விசைப்பலகையின் சிறப்புகளான குறைவான அயர்ச்சி, விரைவான வேகம், இருகைகளில் சமமாக நிகழும் விரலியக்கம் ஆகிய தமிழ்99 விசைப்பலகையின் சிறப்புகள் டுவோரக் விசைப்பலகையின் சிறப்புகளுக்கு ஒப்பானவையாகும். மேலும் குவர்ட்டி விசையமைப்பின் குறைபாடுகள் யாவும் மரபான தமிழ் தட்டச்சு இயந்திர வடிவமைப்பான ‘யளன’வடிவமைப்புக்கு பொருந்தியுள்ளன. ஆங்கிலத் தட்டச்சுக்கு டுவோரக் விசையமைவினையும் தமிழ்த்தட்டச்சுக்கு தமிழ்99 விசையமைப்பும் எளிமையான, நல்ல தேர்வாகக் கருதப்படுகின்றன. வெளி இணைப்புகள் சித்ராங்கி (திரைப்படம்) சித்ராங்கி 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். எஸ். மணியின் இயக்கத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், புஷ்பலதா, ஆர். எஸ். மனோகர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். கு. மா. பாலசுப்பிரமணியம், வாலி ஆகியோரின் பாடல்களுக்கு வேதா இசையமைத்திருந்தார். பாடல்களை டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, கே. ஜமுனா ராணி, பொன்னுசாமி, ரத்னமாலா ஆகியோர் பாடியிருந்தனர். உதயகிரி நாட்டின் மன்னனுக்கு ஒரு தம்பி ("ஏ.வி.எம்.ராஜன்"), முடிக்குரியவன். ஆட்சியைப் பிடிக்கச் சதியில் ஈடுபடும் நாட்டின் தானைத் தலைவர் ("ஆர். எஸ். மனோகர்"). வெளியூருக்குச் செல்லும் இளவரசன் வழியில் விபத்து ஒன்றைச் சந்திக்கிறான். இளவரசனைக் காப்பாற்றித் தன் வீட்டுக்குக் கொண்டு செல்கிறாள் ஓர் ஏழைப் பெண் ("புஷ்பலதா"). இருவருக்கும் இடையில் காதல் வளருகிறது. இளவரசனை யார் என்றறியாது அவனைத் திருமணம் புரிகிறாள். முதலிரவு முடியும் முன்னரே இளவரசன் அவளைத் தனியே விட்டுச் செல்கிறான். தனது கணவனைத் தேடிச் செல்லும் புஷ்பலதா கடைசியில் ஒரு நாட்டின் மன்னனாக தனது கணவனைக் காண்கிறாள். பல இடையூறுகள், கஷ்டங்களுக்குப் பின்னர் இருவரும் இணைகின்றனர். ராஜேஷ் ராஜேஷ் தமிழ்த் திரையுலகில் கதாநாயக நடிகராக, குணசித்திர நடிகராக விளங்கியவர். 1979ஆம் ஆண்டு வெளியான கன்னிப்பருவத்திலே என்னும் திரைப்படத்தில் இவர் அறிமுகமானார். காரைக்குடியில் பள்ளிப்படிப்பை முடித்து சென்னையில் ஆசிரியர் பயிற்சி வகுப்பில் சேர்ந்தார். சிறிது காலம் ராயபுரம் கண்ணப்ப நாயனார் கழகத்தில் இருந்து விட்டு புரசைவாக்கம் புனித பவுல் மேல் நிலைப்பள்ளியில் பணியாற்றினார். பின்னர் கெல்லட் மேல் நிலைப்பள்ளியில் ஏழு ஆண்டுகள் பணிபுரிந்தார். கோயில் நான்மணிமாலை கோயில் நான்மணிமாலை என்பது பிரபந்தம் எனப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான நான்மணிமாலை வகையில் அமைந்த ஒரு நூலாகும். இது சிதம்பரத்தில் உள்ள சிவன் கோயில் தொடர்பாகப் பாடப்பட்ட ஒரு நூல். சிதம்பரம் கோயில் பொதுவாகக் கோயில் என்று வழங்கப்படுவது ஆகையால் இந்நூலின் பெயரும் "கோயில் நான்மணிமாலை" என வழங்குகிறது. நான்மணிமாலையின் இலக்கணத்துக்கு அமைய இந்நூல், வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரிய விருத்தம், ஆசிரியப்பா என்ற நான்கு பாவகைகளில் மாறி மாறி வரும் 40 பாடல்களைக் கொண்டு அந்தாதியாக அமைந்துள்ளது. இந்த இலக்கிய வகையில் அமைந்த முதல் நூல் இதுவே ஆகும். இதனை இயற்றியவர் பட்டணத்துப் பிள்ளையார் எனப்படும் பட்டினத்தடிகள் ஆவார். இந்நூல், நம்பியாண்டார் நம்பியின் திருமுறைத் தொகுப்பில் பதினோராம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந் நூலில் நான்கு வகைக் கருப்பொருட்கள் அமைந்திருக்கக் காணலாம். இவை: என்பவை ஆகும். லோட்டஸ் கார்ஸ் லோட்டஸ் கார்ஸ் (ஆங்கிலம்:Lotus Cars) இங்கிலாந்தை சேர்ந்த ஒரு கார் (சிற்றுந்து) தயாரிக்கும் நிறுவனம் ஆகும். இதன் தலைமையிடம் ஹெதேல், நோர்போக்கில் உள்ளது. லோட்டசின் ஆலை இரண்டாம் உலக போரின் பொது பயன்படுத்த பட்ட வான்வெளிக்களத்தில் அமைக்கபட்டுள்ளது. லோட்டஸ் பந்தய கார்கள் செய்வதில் பெயர் போனது. தற்பொழுது மலேசியாவின் ப்ரோடான் நிறுவனத்தின் ஓர் அங்கமாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தை 1952 ஆம் ஆண்டு பொறியாளர் காலின் சாப்மன் லோட்டஸ் இன்ஜினியரிங் என்ற பெயரால் நிறுவினார். இவர் லண்டனின் யுனிவெர்சிடி காலேஜில் படித்தவர். மும்மணிக்கோவை மும்மணிக்கோவை என்பது பிரபந்தம் எனப்படும் சிற்றிலக்கிய வகைகளுள் ஒரு வகையாகும். இதில், ஆசிரியப்பா, வெண்பா, கட்டளைக் கலித்துறை என்னும் பாவகைகளில் அமைந்த பாடல்கள் மாறி மாறி வரும். 30 பாடல்களைக் கொண்டு அமையும் இந்தச் சிற்றிலக்கியவகையில் பாடல்கள் அந்தாதி வடிவிலும் இருக்கும். பட்டினத்துப் பிள்ளையார் இயற்றிய திருவிடைமருதூர் மும்மணிக்கோவையில் இருந்து முதற் பாடலின் ஒரு பகுதியும், இரண்டாம் மூன்றாம் பாடல்களும் நான்காம் பாடலின் ஒரு பகுதியும் கீழே எடுத்துக்காட்டுக்காகத் தரப்பட்டுள்ளன. முதற்பாடல் 74 வரிகளைக் கொண்டது. இது ஆசிரியப்பா வகைகளில் ஒன்றான இணைக்குறள் ஆசிரியப்பாவில் அமைய, இரண்டாம் பாடல் நேரிசை வெண்பாவிலும், மூன்றாம் பாடல் கட்டளைக் கலித்துறையிலும் அமைந்திருப்பதைக் காணலாம். நான்காம் பாடல் மீண்டும் இன்னொரு ஆசிரியப்பா வகையான நேரிசை ஆசிரியப்பாவாக உள்ளது. முதல் பாடல் "பொருட்டே" என்று முடிவதையும், இரண்டாம் பாடல் "பொருளும்" என்று தொடங்குவதையும் காண்க. இவ்வாறே இரண்டாம் பாடல் "வரும்" என்று முடிய மூன்றாம் பாடல் "வருந்தே" என்று தொடங்குகிறது. மூன்றாம்பாடலின் முடிவுச் சொல் "யாதொன்றுமே" என இருக்க நான்காம் பாடல் "ஒன்றினோ" என்று தொடங்குகிறது. இவ்வாறே இதன் முப்பது பாடல்களும் அந்தாதியாக அமைந்துள்ளன. இணைக்குறளாசிரியப்பா நேரிசைவெண்பா கட்டளைக்கலித்துறை நேரிசையாசிரியப்பா ஏப்பம் ஏப்பம் ("belching") அல்லது ஏவறை என்பது செரிமானப் பாதையிலிருந்து (பெரும்பாலும் இரைப்பை மற்றும் உணவுக் குழாயிலிருந்து) வாய் வழியாக காற்று வெளியேறுவது ஆகும். இது பெரும்பாலும் தனக்கே உரித்தான ஓசையுடன் வெளிப்படும். சில நேரங்களில் குறிப்பிட்ட மணத்துடனும் வெளிப்படும். உலகின் பெரும்பாலான பகுதிகளில் பொது இடங்களில் சத்தமாய் ஏப்பம் விடுவது மரியாதைக்குரிய செயலன்று. இந்தியா உள்ளிட்ட கீழை நாடுகளில் ஏப்பம் விடுவதென்பது வயிராற உணவுண்டதைக் குறிக்கும் நல்ல அறிகுறியாக பன்னெடுங்காலமாய்க் கருதப்படுகிறது. ஏப்பம் வளி விழுங்கலினால் (aerophagy) உண்டாகிறது. பொதுவாக மனிதர்கள் உண்ணும் போது சிறிதளவு காற்றையும் சேர்த்துத் தான் இரைப்பைக்குள் விழுங்குகிறோம். ஆனால் அவசர அவசரமாக உண்ணும் போதும் பேசிக்கொண்டே உண்ணும் போதும் இன்னும் அதிக காற்று உட்செல்லும். கார்பானிக் அமிலம் (HCO) கலந்த பானங்களான சோடா, பீர் முதலியவற்றை அருந்தும் போது கார்பானிக் அமிலம் நீராகவும் கார்பன் டை ஆக்சைடாகவும் (C0) பிரியும். இந்த கார்பன் டை ஆக்சைடு வாய் வழியாக ஏப்பமாக வெளியேறும். இரைப்பை அமிலச் சுரப்பு நோய் (acid peptic disease) போன்ற செரிமான மண்டல நோய்களின் அறிகுறியாகவும் ஏப்பம் இருக்கலாம். ஏப்பம் விடும் போது ஏற்படும் ஒலிக்கு காரணம் கீழ் உணவுக்குழாய்ச் சுருக்கு தசைகள் (lower esophageal sphincter) அதிர்வடைவது ஆகும். பச்சிளங் குழந்தைகளின் வயிற்றில் காற்று அதிகம் சேர வாய்ப்புண்டு. இதனால் குழந்தைக்கு வயிற்றுத் தொந்தரவு ஏற்படும். இதைத் தவிர்க்கும் பொருட்டு தாய்மார்கள் பால் கொடுத்து முடித்ததும் குழந்தையைத் தோளில் போட்டுத் தட்டிக் கொடுப்பது வழக்கம். அதாவது குழந்தையை நேராக வைத்துக் கொண்டு குழந்தையின் வயிறு தாயின் நெஞ்சின் மீது இருக்குமாறு வைத்துக் கொண்டு கீழ் முதுகை மிக இலேசாக அழுத்துவர். ஆடு, மாடு போன்ற கால்நடைகள், நாய்கள் ஆகிய விலங்குகளும் ஏப்பம் விடுகின்றன. அசை போடும் விலங்குகளான கால்நடைகள் செல்லுலோஸ் நிறைந்த தாவர உணவையே உண்ணுகின்றன. இவற்றைச் செரிக்கும் நொதிகள் விலங்குகளிடம் இல்லை. இந்த வேலையை அவற்றின் உணவுப் பாதையில் உள்ள பாக்டீரியங்கள் தான் செய்கின்றன. எ.கோலை (E.coli) போன்ற பாக்டீரியங்கள் நொதித்தல் மூலம் தாவர உணவைச் செரிக்கும் போது மீத்தேன் உண்டாகிறது. ஒரு பசு சராசரியாக ஒரு நாளில் சராசரியாக 500 முதல் 600 லிட்டர் மீத்தேன் வரை வெளிவிடுகிறது. ஏப்பம்-வயிற்றுப் பொருமல்-வாயு அட்ரினல் அழற்சி அட்ரினல் அழற்சி (adrenalitis, இலங்கை வழக்கு: அதிரினலின் அழற்சி) என்பது ஒன்று அல்லது இரண்டு அட்ரினல் சுரப்பிகளிலுமே (adrenaline glands or suprarenal glands) உண்டாகும் அழற்சி ஆகும். இதனால் எபிநெப்ரின் (அ) அட்ரினலின் (epinephrin or adrenaline) தட்டுப்பாடு ஏற்படும். விப்பிள் மும்மை விப்பிள் மும்மை (whipple's triad) என்பது நோயாளி இரத்த குளுக்கோஸ் குறைவினால் (hypoglycemia) பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை உணர்த்தும் மூன்று கட்டளை விதிகளின் (criteria) தொகுப்பாகும். அவையாவன, 1. இரத்தக் குளுக்கோஸ் குறைவின் அறிகுறிகள் - வியர்த்தல், படபடப்பு, கிறுகிறுப்பு 2. அறிகுறிகள் தோன்றும் போது அளவிடுகையில் இரத்த குளுக்கோசு குறைவாக இருத்தல் 3. குளுக்கோசை உடலுள் செலுத்த அறிகுறிகள் மறைதல் பாட்டியல் பாட்டியல் என்பது, பிரபந்த இலக்கியங்கள் எனப்படும் சிற்றிலக்கியங்கள் தொடர்பான இலக்கணத்தைக் குறிக்கும். பிரபந்தங்களின் வகை, அவற்றின் இலக்கணங்கள், அவற்றைப் பாடவேண்டிய முறை, வெவ்வேறு வருணத்தாருக்குரிய பாடல்கள், அவ்வருணத்தார் இயல்புகள், பாட்டுடைத்தலைவர் நூல் கேட்கவேண்டிய முறை, நூல் அரங்கேற்றம் செய்வதற்குரிய அவையின் இயல்பு, புலவர்களின் வகை போன்றவை பாட்டியலுள் அடங்குகின்றன. இதனால், செய்யுள்களின் உறுப்புக்களையும் அவற்றின் இனங்களையும் விளக்கும் யாப்பியலினின்றும் வேறுபடுகின்றது. பாட்டியல் என்னும் நூல் வகையானது பொதுவாக மூன்று வகையான செய்திகளைக் கூறும். புலம் எனத் தொல்காப்பியப் பாயிரம் கூறும் இலக்கம் மொழியை அறிவியல் பார்வையில் அணுகும். முன்னோர் பாடல்களில் அமைந்துகிடக்கும் மரபுநெறியைப் புலப்படுத்தும். தொல்காப்பியம், நன்னூல், இறையனார் களவியல், புறப்பொருள் வெண்பாமாலை, நம்பி அகப்பொருள் முதலானவை புலனெறி இலக்கணங்கள். பாட்டியல் இலக்கண நூல்கள் எழுத்து, சொல், நூல் எனப் பகுத்துக்கொண்டு வேறு வகையில் அணுகும். ஐங்குறு நூறு என்னும் நூல் ஐந்து அகத்திணை மேல் ஐந்து புவலர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு. பதிற்றுப்பத்து 10 அரசர்களைப் 10 புலவர்கள் 10, 10 பாடல்களாகப் பாடிய பாடல்களின் தொகுப்பு. இவை இலக்கியப் பாடல்களின் தொகுப்பு. பிரபந்த இலக்கியங்கள் தோன்றியபின்னரே அவற்றுக்கு இலக்கணம் வகுக்கப் பாட்டியல் நூல்கள் தோன்றின. தமிழில் பல பாட்டியல் நூல்கள் எழுதப்பட்டதாக அறியப்பட்டுள்ளன. அவற்றுள், என்பனவும் அடங்கும். இவற்றுள், முதலாவது நூல் இன்று இல்லை. பண்டாரப் பாட்டியலும் முழுமையாகக் கிடைக்கவில்லை. ஏனைய இன்று கிடைக்கக்கூடியதாக உள்ளன. புவியிணக்கச் சுற்றுப்பாதை புவியிணக்கச் சுற்றுப்பாதை ("geosynchronous orbit") என்பது புவியைச் சுற்றியுள்ளதொரு நேரான, வட்டவடிவ, குறைந்த-வாட்டமுள்ள ("low-inclination") சுற்றுப்பாதை. இதன் சுற்றுக்காலம் 23 மணி 56 நிமிடம் 4 வினாடி; இதன் குத்துயரம் 35,784 km. இத்தகைய சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட ஒரு செயற்கைக்கோள் ஒரே நிலநீள்கோட்டில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கும். இவ்வகைச் சுற்றுப்பாதையின் வாட்டம் சுழியமாக இருந்தால், புவிநிலைச் சுற்றுப்பாதை என்றழைக்கப்படும்; வாட்டம் சுழியமாக இல்லாவிடின், அப்பாதையில் உள்ள துணைக்கோளின் தரை-வரை எட்டு ( 8 ) வடிவத்தில் இருக்கும். daviddarling தீ நகர் தீ நகர் 2007 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். திருமலையின் கதை, திரைக்கதை, இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில், கரண், உதயதாரா (அறிமுகம்) மற்றும் பலர் நடித்திருந்தனர். சினேகன், ஆண்டாள் பிரியதர்ஷினி, கருணாநிதி ஆகியோரின் பாடல்களுக்கு ஜாசி கிஃப்ட் இசையமைத்திருந்தார். நேசம் சரவணமுத்து லூயிசா நேசம் சரவணமுத்து ("Luisa Naysum Saravanamuttu", 1897 - சனவரி 19, 1941) இலங்கை அரசாங்க சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட முதலாவது தமிழ்ப் பெண் ஆவார். 1932, 1936 ஆம் ஆண்டுகளில் அரசாங்க சபைக்கு இடம்பெற்ற தேர்தல்களில் இவர் கொழும்பு வடக்குத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். பொறியியலாளரான ஏ. அருணாசலம், எமிலி தங்கம்மா குக் ஆகியோரின் மகளான நேசம் 1897 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். வேம்படி மகளிர் கல்லூரியில் கல்வி கற்றவர். இவர் மருத்துவர் சேர் இரத்தினசோதி சரவணமுத்து என்பவரை 1915 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு சீதா சரவணமுத்து, வேதாரணியம் சரவணமுத்து, இரத்தினகுமார் சரவணமுத்து, சந்திரா சரவணமுத்து என நான்கு பிள்ளைகள். நேசத்தின் கணவர் இரத்தினசோதி சரவணமுத்து கொழும்பு வடக்குத் தொகுதியிலிருந்து இலங்கை அரசாங்க சபைக்கு 1931 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தெரிவு செய்யப்பட்டார். இவர் கொழும்பு மாநகரசபையின் முதலாவது மேயராகத் தெரிவு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தெரிவு செல்லுபடியற்றது எனவும் ஏழு ஆண்டுகளுக்குச் இவரது குடியியல் உரிமை ரத்துச் செய்யப்பட்டது. இதனையடுத்து 1932 மே 30ந் திகதி நடைபெற்ற இடைத்தேர்தலில் நேசம் சரவணமுத்து போட்டியிட்டார். இடைத்தேர்தலில் நேசம் சரவணமுத்துவுக்கு ஆதரவாகச் செயற்பட்டவர்களில் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க, சட்டசபையில் அப்போதைய உதவிச் சபாநாயகர் எஃப். ஏ. ஒபயசேகராவும் முக்கியமானவர்கள். நேசம் சரவணமுத்துவை எதிர்த்துப் போட்டியிட்டவர் எச். எம். பீரிஸ். நேசம் சரவணமுத்து 8681 மேலதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டார். அரசாங்க சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட முதலாவது தமிழ்ப் பெண் என்ற பெருமைக்கு உரியவரானார். இன்னொரு இடைத் தேர்தலைச் சந்திக்க வேண்டிய நிலை நேசம் சரவணமுத்துவுக்கு ஏற்பட்டது. அவரது தேர்தல் செல்லுபடியற்றது எனத் தேர்தல் ஆட்சேபனை வழக்கில் தீர்ப்பாகியது. எனினும் அவரது குடியியல் உரிமை பறிக்கப்படாததால் இரண்டாவது இடைத் தேர்தலிலும் அவர் போட்டியிட்டார். இரண்டாவது இடைத் தேர்தல் 1932 நவம்பர் 12 ஆம் நாள் நடைபெற்றது. தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட எச். வி. காசிச்செட்டியிலும் பார்க்க 8106 மேலதிக வாக்குகள் பெற்று நேசம் சரவணமுத்து தெரிவானார். இரண்டாவது அரசாங்க சபைத் தேர்தல் 1936ம் ஆண்டு நடைபெற்றது. நேசம் சரவணமுத்து மீண்டும் வெற்றி பெற்றார். நேசம் சரவணமுத்து சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்து 1941 ஜனவரி 19ந் திகதி தனது நாற்பத்தி நான்காவது வயதில் இறந்தார். கணவர் இரத்தினசோதி சரவணமுத்து கொழும்பு மேயராக இரண்டாவது தடவை தெரிவு செய்யப்பட்டதற்குப் பதினோராவது நாள் இவரது இறப்பு நிகழ்ந்தது. டையாப்ட்டர் டையாப்ட்டர் (diopter) அல்லது தையொத்தர் என்பது வில்லை அல்லது வளைந்த கண்ணாடியொன்றின் ஒளியின் வலுவை அளக்கப் பயன்படும் அலகு ஆகும். இதன் பெறுமானம் குவியத்தூரத்தின் தலைகீழ் அளவு மீற்றரில் அளக்கப்படுவதற்குச் சமமானதாகும். டையாப்ட்டரிற்கேன்று ஒரு சுருக்கக் குறியீடு அனைத்துலக முறை அலகுகள் பட்டியலில் சர்வதேச அளவில் இல்லை. பெர்டினாண்ட் மோனயர் எனும் பிரஞ்சு கண்நோய் நிபுணர் இந்த அலகை 872 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தார். குவியமில் குறைபாடுகளான கிட்டப் பார்வை, தூரப் பார்வை போன்றவற்றிற்கு கண் வைத்தியரால் எழுதப்படும் மருந்துக்குறிப்பில் டையாப்ட்டர் பயன்படுத்தப்படுகிறது. குழிவு வில்லைகள் "எதிர்" பெறுமானத்தை உடையது, கிட்டப் பார்வையைச் சரிசெய்ய பயன்படுத்தப்படுகிறது. குவிவு வில்லைகள் "நேர்" பெறுமானத்தை உடையது, தூரப்பார்வையை சரிசெய்யப் பயன்படுகிறது. மிதமான மையோபியா (கிட்டப் பார்வை) கண்ணிற்கான வில்லையின் பெறுமானம் -1.00 இலிருந்து -3.00 வரையாகும், அதேநேரத்தில் தூரப்பார்வைக்கு +1.00 - +3.00 ஆகும். மனிதக் கண்ணின் பார்வை வலு அதன் கருவிழிப்படலத்தின் ஒளிமுறிவு ஆற்றலிலும், வில்லையின் ஒளிமுறிவு ஆற்றலிலும் தங்கி உள்ளது. சாதாரண இளைப்பாறும் கண்ணுக்கான பார்வை வலு 60 டையாப்ட்டர்கள் ஆகும். அண்மையிலும் தூரத்திலும் கண் பொருட்களைப் பார்க்கும்போது இவை மாற்றி அமைக்கப் படும் இது விழியின் ஏற்பவமைவுத் தன்மை எனப்படும். மனித விழியின் பிசிர்த்தசை சுருங்கி விரிவடைதலால் அதனுடன் இணைக்கப்பட்டு உள்ள வில்லையும் சுருங்கி விரிகின்றது. வில்லை எவ்வளவு குவிவாகின்றதோ அவ்வளவு அதன் பார்வை வலு உயர்வடையும். மனிதன் வயதாக ஏற்பவமைவுத் தன்மையில் மாற்றம் ஏற்படுகின்றது. சிறுவர் பருவத்தில் 15 - 20 டையாப்ட்டர்கள் , 25 வயதளவில் 10 டையாப்ட்டர்கள் , 50 வயதளவில் 1 டையாப்ட்டர் என இவை மாறுபடுகின்றன. எஸ் எம் எஸ் எம்டன் 22/09/1914 (புதினம்) எஸ் எம் எஸ் எம்டன் 22/09/1914 என்பது திவாகரால் எழுதப்பட்ட ஒரு தமிழ் வரலாற்றுப் புதினம். இது முதலாம் உலகப் போரின் போது 1914 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 அன்று செருமனியப் போர்க்கப்பல் எஸ். எம். எஸ் எம்டன் (1906) சென்னை நகரின் மீது குண்டு போட்டதன் பின்னணியின் மீது எழுதப்பட்ட புதினம். 2009 ஆம் ஆண்டில் இது வெளிவந்தது. எம்டன் கப்பல் சென்னையை 1914 செப்டெம்பர் மாதம் 22ஆம் நாள் இரவு தாக்கியது. 130 குண்டுகளை துறைமுகத்து எண்ணெய்த் தாங்கிகள் மீது வீசிவிட்டு, உடனே திரும்பிவிட்டது. இந்தப் பின்வாங்கலுக்கு காரணம் ஒரு இந்தியராக இருக்கலாமோ என்ற ஊகத்தை வைத்து இப்புதினம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்புதினத்தில் வரும் பாத்திரங்கள் சிவபக்தர்கள், ராதை, சிதம்பரம், துரைமார்கள், நோபிள், கப்பல் காப்டன் மூல்லர் மற்றும் மிக்கே முதலானோர். நவநீதப் பாட்டியல் நவநீதப் பாட்டியல் என்பது ஒரு தமிழ்ப் பாட்டியல் நூலாகும். பாட்டியல் என்பது தமிழில் உள்ள பிரபந்தங்களின் இலக்கணம் பற்றிக் கூறுவது. இதன்படி நவநீதப் பாட்டியலும், தமிழில் அமந்த பல்வேறு பிரபந்தங்களைப் பற்றிக் கூறுகிறது. இந்நூல் மூன்று உறுப்புக்களைக் கொண்டு அமைந்துள்ளது. இவை, என்பனவாகும். இந்நூல், கலித்துறை என்னும் பாவகையால் ஆக்கப்பட்டுள்ளது. இதனால் இதனைக் கலித்துறைப் பாட்டியல் என்னும் பெயராலும் குறிப்பிடுவது உண்டு. இந் நூலில் 108 கலித்துறைப் பாடல்கள் காணப்படுகின்றன. இந் நூலை எழுதியவர் நவநீத நடனார் என்பவர் ஆவார். அகத்தியர் எழுதிய பாட்டியல் நூலொன்றை அடியொற்றியே தாம் இந் நூலை எழுதியதாக நவநீத நடனார் அதன் சிறப்புப் பாயிரத்தில் கூறியுள்ளார். இந் நூலின் படிகளைச் சேகரித்த உ. வே சாமிநாத ஐயர், இதனை அச்சேற்ற முயன்றார் எனினும் இவ்வெண்ணம் நிறைவேறவில்லை. மூப்புப்பார்வை மூப்புப்பார்வை (presbyopia) அல்லது சாளேசுவரம் என்பது விழியின் அண்மைப் பார்வைக்கான குவிமையத்தன்மை ஆற்றலானது வயதுடன் குறைபட்டுச் செல்லுகின்ற ஒரு உடல் நலக்குறைபாடாகும் இதன் போது விழி ஏற்பமைவுத் தன்மையில் மாற்றம் ஏற்படுகிறது. இந்தக் குறைபாட்டிற்கான சரியான விளக்கம் திட்டவட்டமாகத் தெரியாவிடினும் ஆய்வுகளில் இருந்து கண்ணின் வில்லை மீட்சித்தன்மையை இழப்பது, வில்லையின் வடிவத்தை மாற்றி அமைக்கும் பிசிர்த்தசை வலுவிழப்பது, வில்லை பெரிதாகிக் கடினமாவது போன்றவை காரணமாகலாம் என அறியப்பட்டுள்ளது. வெள்ளை முடியும் சுருக்கங்களும் முதுமை அடைவதைக் காட்டுவதைப் போலவே மூப்புப்பார்வையும் (பிரஸ்பையோப்பியாவும்) முதுமை நிலைக்கான தொடக்கநிலையை நினைவு படுத்தும் ஓர் இயற்கையான குறைபாடாகும். குறைபாட்டின் முதல் அறிகுறி வழமையாக நாற்பதிற்கும் ஐம்பதிற்கும் இடைப்பட்ட வயதுக் காலத்தில் காணப்படுகிறது. வயது கூடக்கூட அண்மையில் இருக்கும் பொருட்களைப் பார்ப்பது குவியமின்மை இழத்தலால் கடினமாகிக்கொண்டே போகும். மூப்புப்பார்வை (பிரஸ்பையோப்பியா) எட்டப்பார்வை அல்லது தூரத்துப் பார்வை என்று அழைக்கப்படும் ஐப்பெர்மெட்ரோப்பியாவுடன் தவறுதலாக ஒப்பிடப்படலாம், இவை இரண்டும் வெவ்வேறு குறைபாடுகள் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும். பிரஸ்பையோப்பியாவில் குறைபாடானது வில்லையில் காணப்படுகையில் ஐப்பெர்மெட்ரோப்பியாவில் விழிக்கோளத்தில் ஏற்படும் ஒளிமுறிவுப் பிழை ஆகும் பிரஸ்பையோப்பியா என்ற சொல்லானது, “முதியவர்” என்னும் கருத்துத் தரும் கிரேக்கச் சொல்லான presbys (πρέσβυς) உடன் புதிய இலத்தின் விகுதியான -opia, என்னும் “பார்வைத் தன்மை” சேர்ந்து உருவாகியது. தமிழில் முதிய வயதுக்கான பார்வை என்று பொருள் படுத்தலாம் முதல் அறிகுறியாக, பாதிக்கப்பட்டவர் மிகச் சிறிய எழுத்துக்களை மங்கலான ஒளியில் படிக்கச் சிரமப்படுவார், தொடர்ச்சியாகப் படிக்கமுடியாது விழிக்களைப்பு, தலைவலி ஏற்படும், நாட்கள் செல்லச் செல்ல எழுத்துக்கள் மங்கலாகிக் கொண்டே செல்லும், இதனைத் தடுப்பதற்கு பாதிக்கப்பட்டவர் படிக்கும் புத்தகத்தை முகத்திலிருந்து நீட்டிக்கொண்டே செல்வார். கடைசியில் புத்தகத்தைப் படிப்பதற்குக் கையின் நீளம் போதாதென்ற நிலைமையும் வந்து சேரலாம். மூப்புப் பார்வை பிரகாசமான வெளிச்சத்தில் பெரிதாக அவதானிக்கப் படுவதில்லை. மேலும் குறிப்பிடத்தக்கதாக வேறு ஏதேனும் கடின வேலை செய்தால், அல்லது நீண்ட நேரம் கண்ணிற்கு வேலை தந்தால், அதாவது தொலைக்காட்சி, புத்தகம் நீண்ட நேர உபயோகத்தின் போது பிசிர்த்தசை களைப்படைந்து தற்காலிக மூப்புப்பார்வை ஏற்படும். இது எவ்வாறு நிகழ்கிறது என்பதை விளங்கிக் கொள்ள விழியின் அண்மைய, சேய்மை புள்ளிகளைப் பற்றித் தெரிந்திருக்கவேண்டியது அவசியம். ஒரு ஆரோக்கியமான சாதாரண கண்ணின் சேய்மைப்புள்ளி முடிவிலி ஆகும், அதாவது தொலைவில் இருக்கும் பொருட்களைப் பார்க்க தூர வரையறை இல்லை. அதேவேளை அண்மைப்புள்ளிக்கான தெளிவுப் பார்வையின் குறைந்த தூரம் சாதாரண கண்ணிற்கு 25 சென்ரி மீட்டர்கள் ஆகும், அதாவது விழியில் இருந்து 25 செ.மீ தொலைவில் உள்ள பொருட்களையே தெளிவாகப் பார்க்கமுடியும். அண்மைப்புள்ளி எல்லா வயதினருக்கும் ஓரே மாதிரி அமையாது, எடுத்துக்காட்டாக, ஒரு பத்து வயதுச் சிறுவனுடைய அண்மைப்புள்ளி ஏழு சென்ரி மீட்டர்களாக அமையும் அதே நேரத்தில் 45 வயதுடைய ஒரு வயது முதிர்ந்தவரினது அண்மைப்புள்ளி 33 செ,மீ. ஆகலாம். (5) ஏற்கனவே குறிப்பிட்டது போல வில்லையின் சுருங்கி விரிவடைதலுக்கு பிசிர்த்தசை உதவுகிறது, இதன் ஆற்றல் பாதிக்கப்படும் போது 25 செ.மீ. தூரத்தில் ஒரு பொருளைப் பார்க்கையில் அது விழித்திரையின் பின்னே உள்ள கற்பனைப் புள்ளியில் குவிவடையும். கிட்டப்பார்வை உள்ள பல மக்களில் மூப்புப்பார்வை வந்தும் அவர்கள் கண்ணாடி இல்லாமல் சமாளிக்கக் கூடியதாக இருக்கும், இவர்களில் கிட்டப்பார்வைக் குறைபாடு அவ்வாறே இருக்கும், தூரத்தில் உள்ள பொருட்களைப் பார்க்க சிரமப்படுவார்கள், ஆனால் மூப்புப்பார்வை இருந்தும் எழுத்துகளைப் படிக்கச் சிரமம் குறைவாக இருக்கும். 1) கண்ணாடி பயன்படுத்துதல் பொருத்தமான குவிவு வில்லை பயன்படுத்துதல். மேலெழுந்தவாரியாக • +1 டையாப்ட்டர் (D), 40 – 45 வயதானவருக்கு, • +1.5 D, 45 – 50, • +2 D, 50-55, • +2.5, 55-60 என்னும் ரீதியில் கண்ணாடி பயன்படுத்தப் படுகிறது இதன்படி ஒவ்வொரு வயதுப் பருவத்திலும் குவியத் தூரம் மாறுபடுவதைப் பொறுத்து கண்ணாடியின் வலு மாற்றப்படுகிறது. மூப்புப் பார்வையுடன் தூரப்பார்வை, கிட்டப்பார்வை, புள்ளிக்குவியமில் குறைபாடு போன்றவை இருக்கும் போது பெரும்பாலும் இருகுவிய கண்ணாடி பயன்படுத்தப்படுகிறது. இருகுவியகண்ணாடி இரு வெவ்வேறு வித வலுக்களைக் கொண்டிருக்கும், இதன் மூலம் இரு வெவ்வேறு கண்ணாடிகளைப் பயன்படுத்துதல் தவிர்க்கப் படுகின்றது. சில சந்தர்ப்பங்களில் தொடுவில்லை ஒரு பார்வைக்குறைபாட்டிற்கும், கண்ணாடி மற்றைய குறைபாட்டிற்கும் பயன்படுத்தப் படுகிறது, இதனை ஒற்றைப்பார்வை என்பர். இவற்றிற்கு மாறாக கண் பயிற்சி மூப்புப்பார்வையைத் தள்ளிப்போடும் என்று சில தகவல்கள் குறிக்கின்றன 2) அறுவைச்சிகிச்சை • உள் விழி வில்லை மாற்று அறுவைச்சிகிச்சை • சீரொளி (லேசர்) சிகிச்சை : கனடாவிலும் மெக்சிகோவிலும் இந்த முறை பயன்படுத்தப்பட்டாலும் ஐக்கிய அமெரிக்காவில் இதனைப் பற்றிய ஆராய்வுகள் தொடர்கின்றன குர்க்குமின் குர்க்குமின் ("curcumin")என்பது மஞ்சளில் காணப்படும் முதன்மை மஞ்சளகம் ("curcuminoid") ஆகும். மஞ்சளில் உள்ள மற்றவிரு மஞ்சளகங்கள் டீமெத்தாக்சிகுர்க்குமின், பைசுடீமெத்தாக்சிகுர்க்குமின் ஆகியன. மஞ்சளின் நிறத்திற்கு இவையே காரணமாகும். உயிர் வளியேற்ற எதிர்ப்பொருளாகத் தொழிற்பட்டு உயிர்வளியேற்றதை ஒடுக்குந்தன்மை ("anti-oxidant"), அழற்சி நீக்குந்தன்மை அல்லது அழற்சி எதிர்ப்பு ("anti-inflammatory"), தீநுண்மத்தை எதிர்க்குந்தன்மை ("anti-viral"), புற்றுநோய்க்கான வேதிச்சிகிச்சை ("chemopreventive") ஆகிய குணங்கள் குர்க்குமினுக்கு உள்ளன என்றும் மனிதர்களுக்கு இது நச்சல்ல என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மருத்துவப் பண்புகள் நிறைந்தவொரு வேதிப்பொருள் குர்க்குமின். எலும்பு மச்சைப் புற்றுநோய் ("multiple myeloma"), கணையப் புற்றுநோய் ("pancreatic cancer"), மையெலோடிசுபிலாசுடிக் சிண்டிரோம் ("myelodysplastic syndrome") எனும் ஒருவகை இரத்தப் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் ("colon cancer"), தடிப்புத் தோல் அழற்சி, ஆல்சைமர் நோய் ("Alzheimer's disease") ஆகிய நோய்களுக்கு மருந்தாக இதனை மனிதர்களிடையே மருத்துவத் தேர்வு/ஆய்வுக்கு - "human clinical trial" - உட்படுத்தியுள்ளனர். தம்பலகாமம் தம்பலகாமம் ("Thampalakamam") இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு விவசாயக் கிராமம் ஆகும். கொழும்பிலிருந்து திருகோணமலை செல்லும் நெடுஞ்சாலையில் கந்தளாய் மற்றும் திருகோணமலை நகர்களினிடையில் திருகோணமலையில் இருந்து 22 கிமீ தொலைவில் இது அமைந்துள்ளது. இங்கு ஆதிகோணேச்சரம் எனும் பெயரில் ஒரு சிவன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் சம்பந்தரால் பாடல் பெற்ற திருக்கோணேச்சரம் ஆலயத்தின் வரலாற்றுடன் தொடர்புடையது. ஒல்லாந்தர் திருக்கோணேச்சரம் ஆலயத்தை அழித்த போது சில நலன் விரும்பிகள் ஆலயத்தில் இருந்த சில விக்கிரகங்களை அகற்றி தம்பலகாமத்தில் பாதுகாத்தனர். பிற்காலத்தில் பாதுகாத்த விக்கிரகங்களைக் கொண்டு ஆதி கோணேஸ்வரம் ஆலயத்தை அமைத்தனர். முத்துமாரியம்மன் கோயில் தம்பலகமத்தில் கள்ளிமேடு, சம்மாந்துறையில் அமைந்துள்ளது. கந்தளாய் குளத்தில் இருந்து பெறும் நீர் மூலம் இங்கு விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. நெல் பெரும்படியாக இங்கே விவசாயம் செய்யப்படுகின்றது. விக்கல் விக்கல் ("hiccup" அல்லது "hiccough") ஓர் மறிவினை (அனிச்சைச்செயல்) ஆகும். பிரிமென்றகடு ஒரு நிமிடத்திற்குள்ளாகப் பலமுறை சுருங்குவதால் இது உண்டாகிறது. மூளை நரம்பியல் மட்டத்தில் மறிவினை வில்லின் இயக்கத்தினால் விக்கல் தூண்டப்படுகிறது. அத்தூண்டலால் பிரிமென்றகடு அழுந்தச் சுருங்குகிறது. அதைத் தொடர்ந்து 0.25 நொடிக்குப் பிறகு குரல்வளை நாண்கள் மூடுவதால் 'இக்கு' எனும் ஒலி ஏற்படுகிறது. தனியாக ஒருமுறை மட்டுமோ, தொடர்ந்து பலவாகவோ விக்கல் வரலாம். ஏற்ற இறக்கங்களும் இடைவெளியும் பொதுவாக ஒரே அளவில் இருக்கும். தொடர்ந்து விக்கல் ஏற்பட்டால் பொதுவாகச் சிறிது நேரம் கழிந்தபின் தானாகவே நின்றுவிடும். இருப்பினும் மக்கள் பொதுவாக சிலத்தீர்வுகளை நாடுவதுண்டு. அரிதாகச் சிலவேளைகளில் மருத்துவ உதவி தேவைப்படலாம். பெரும்பாலும் மைய மற்றும் புற நரம்பு மண்டல விளைவுகளால் உண்டாகிறது. கார்பானிக் அமிலம் (HCO) ஏற்றப்பட்ட பானங்களை அருந்துதல், சாராயம் குடித்தல், காரமான உணவு வகைகள் போன்றவற்றாலும் ஏற்படுகிறது. கட்டுங்கடங்காத விக்கல் பிரிமென்றகட்டின் நரம்பான ஃப்ரீனிக் நரம்பு உறுத்தப்படும் நிலைகளில் உண்டாகிறது. 2012-ஆம் ஆண்டு வெளிவந்த ஆய்வொன்றின்படி பாலூட்டிகளின் பிற மறிவினைகள் படிமாற்றத்தில் தோன்றியபடியே விக்கலும் தாய்ப்பால் குடிப்பதையொட்டியே தோன்றியிருக்குமெனக் கருதுகிறார்கள். குழந்தைகள் தாய்ப்பாலருந்துவதற்கும் மூச்சுவிடுவதற்கும் தேவையான தகவமைப்புக்களில் ஒன்றே விக்கல் என்கின்றனர். பாலூட்டிகளில் மட்டுமே விக்கல் ஏற்படுகிறது. அவற்றிலும் குழந்தைப் பருவத்தில் மிகுதியாகவும் வளர வளர விக்கல் ஏற்படுவது குறையவும் செய்கிறது. வயிற்றில் புகுந்துள்ள காற்று வெளியேறவும் விக்கல் உதவக்கூடும். இக்கருத்தின்படி வயிற்றில் இருக்கும் காற்றுக்குமிழி வயிறு, உணவுக்குழாய், பிரிமென்றகடு ஆகிய உறுப்புக்களிலுள்ள உணர்விகளைத் தூண்டுகிறது. இது விக்கலை ஏற்படுத்தி காற்றை வலுவுடன் வெளித்தள்ள உதவுகிறது. கனடாவில் உள்ள கல்காரி பல்கலைக்கழக மூச்சு ஆராய்ச்சிக் குழுவைச் (respiratory research group) சேர்ந்த கிறிஸ்டியன் ஸ்டிராஸ் (Christian Straus) மற்றும் அவரின் குழுவினர் விக்கல் குறித்து புதிய படிவளர்ச்சி மரபு வழிக் கருதுகோள் (phylogenetic theory) ஒன்றை முன்வைத்துள்ளனர். இதன்படி விக்கல் என்பது இருவாழ்விகளின் மூச்சு விடும் முறையின் எச்சம் ஆகும். தவளை போன்ற இருவாழ்விகள் விக்கலை ஒத்த முறையில் தான் நீரை விழுங்குகின்றன. இந்தக் கருதுகோளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக கீழ்கண்ட கண்டறிவுகள் உள்ளன. 1. மனிதக் கரு வளர்ச்சியின் போது விக்கலுக்கான நரம்புப் பாதைகள் நுரையீரல் சுவாசத்திற்கான நரம்புப் பாதைகள் உருவாதலுக்கு முன்னமே உருவாகி விடுகின்றன. 2. இருவாழ்களின் நீர் விழுங்கலும் விக்கலும் பாக்ளோஃபென் மருந்தால் தடை செய்யப்படுகின்றன. 3. குறைப்பிரசவக் குழந்தைகள் தங்களின் 2.5 விழுக்காட்டு நேரத்தை விக்கலெடுப்பதிலேயே செலவழிக்கின்றன. ஏனெனில் அவர்களின் நுரையீரலும் நரம்பு மண்டலமும் சரிவர வளர்ச்சியடையாததால் இருவாழ்விச் சுவாச முறையைப் பின்பற்றுகின்றன. "விக்கல்" எனும் சொல் "விக்கு" எனும் வினைச்சொல்லிலிருந்து பிறப்பது. விக்கு என்பது "இக்கு" எனும் ஒலிக்குறிப்பிலிருந்து பிறந்தது. ஆங்கிலத்திலும் விக்கலுக்கான சொல் "hiccup" அவ்வாறானதே. சிலாவிக்கு, பால்ட்டிக்கு, செருமானிய, அங்கேரிய, துருக்கிய, இந்திய பழங்கதைகளில் ஒருவரைப்பற்றி வேறெங்கோ பேசப்படும்போது விக்கல் ஏற்படுவதாகக் குறிப்பிடுகின்றனர். சார்லசு ஆசுபார்ன் எனும் அமெரிக்கருக்கு தொடர்ந்து 68 ஆண்டுகள் விக்கல் இருந்தது. 1922-ஆம் ஆண்டுமுதல் பிப்பிரவரி 1990 வரை ஏறத்தாழ 43 கோடிமுறை விக்கியிருப்பார் எனக்கணித்து கின்னசு புத்தகத்தில் குறித்துள்ளனர். 2007-இல் புளோரிடாவைச் சேர்ந்த பதின்ம வயதுப் பெண் செனிஃவர் மீ நிமிடத்துக்கு 50 முறை 5 வாரங்களுக்குத் தொடர்ந்து விக்கியிருக்கிறார்.  இங்கிலாந்தைச் சேர்ந்த கிறித்தோஃவர் சாண்டுசு 2007-இல் இருந்து 27 மாதங்கள் 1 கோடி முறை விக்கியிருக்கிறார். பின்னர் அவரது சிக்கல் மூளையிலிருந்த ஒரு கட்டி நரம்புகளை அழுத்துவதால் ஏற்பட்டது எனக் கண்டறிந்தனர். 2009-ஆம் ஆண்டு அறுவை மருத்துவத்துக்குப்பிறகு அவரது விக்கல் நின்றது. முதலாம் இசபெல்லா முதலாம் இசபெல்லா (ஸ்பானிய மொழி: Isabel I, Ysabel) இடைக்காலத்தில் இருந்த நாடான காஸ்டைலின் (தற்போதைய ஸ்பெயினின் பகுதி) அரசியாக இருந்தார். இவளே கொலம்பசை ஆதரித்த அரசியாவாள். இவளுக்கு 3 வயதாக இருக்கும் போதே இவளுக்கும் அரகானின் அரசனான இரண்டாம் ஜானின் மகன் ஃபெர்டினாண்டுக்கும் திருமண நிச்சயம் செய்யப்பட்டது. ஆனால் இவளின் தந்தை ஹென்றி ஆறு வருடம் கழித்து இந்த ஒப்பந்தத்தை இரத்து செய்தார். இவளுக்கு எத்தனையோ மணத்துணைவர்கள் பார்க்கப்பட்டார்கள். ஆனால் இறுதியில் பல தடைகளைத் தாண்டி ஃபெர்டினாண்டே இவளை மணந்து கொண்டார். கிறிஸ்டோஃபர் கொலம்பசின் நாடு காணும் திட்டத்தை ஆரம்பத்தில் எதிர்த்தாலும் ஓரிரு ஆண்டுகள் கழிந்ததும் ஒப்பந்தத்தின் படி பொருட்செலவை ஏற்றுக் கொண்டார். தன் துணைவருடன் புரிந்துணர்வுடனும் சம உரிமையுடனும் இவர் ஆட்சி நடத்தினார். கிரனடாவில் உள்ள அரண்மனையில் இவர்களின் சமஉரிமைச் சாசனம் பொறிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினை ஒருங்கிணைத்தது கொலம்பசை ஆதரித்தது அடுத்த நூற்றாண்டுக்கான இராணுவக் கட்டமைப்பை அமைத்து வைத்தது இசபெல்லாவிற்கு போப்பரசரால் கடவுளின் பணியாளர் (servant of god) பட்டம் வழங்கப்பட்டு விட்டது. ஆனால் யூத அமைப்புகளின் எதிர்ப்பால் புனிதர் பட்டம் வழங்கப்படவில்லை. அமெரிக்க அஞ்சல் தலையில் இடம் பெற்ற முதல் பெண் இசபெல்லா ஆவார். இவளின் படம் இடம் பெற்ற அஞ்சல் தலைகள் பல ஆயிரம் டாலர்களுக்கு ஏலம் போயின. அமெரிக்கா வெளியிட்ட நாணயத்தில் இடம் பெற்ற முதல் பெயரிடப்பட்ட பெண்மணியும் இவளே. பதடி வைகலார் பதடிவைகலார் சங்ககால நல்லிசைப் புலவர்களுள் ஒருவர். இவரின் இயற்பெயர் தெரிந்திலது. தலைவியுடன் பழகாத நாள் வீணான நாள் (பகடி வைகல்) எனும் பொருள் படி இவர் பாடிய குறுந்தொகைப் 323 ஆம் பாடலே இவருக்கு இப் பெயரைப் பெற்றத் தந்தது. பதடி என்றால் உமி (வீணானது) என்றும் வைகல் என்றால் நாள் என்றும் பொருள். பதடிவைகலார் சங்ககாலப் புலவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை 323. இவர் பாடல் தொடரால் பெயர் பெற்ற புலவர். தம் பாடலில் "பதடி வைகல்" என்னும் தொடரைப் பயன்படுத்தியுள்ளார். இவரது இயற்பெயர் தெரியாத நிலையில் குறுந்தொகை நூலைத் தொகுத்த ஆசிரியர் இவருக்குப் பதடிவைகலார் எனப் பெயர் சூட்டியுள்ளார். போர்வினை முடிந்தபின் இல்லம் மீளும் தலைவன் தன் செஞ்சுக்குச் சொல்கிறான். எல்லாம் செல்லி என்ன பயன்? இங்கு இருந்த ஒவ்வொரு நாளும் பதர்போல் சாவியாகிவிட்டது. இங்கு ஒவ்வொரு நாட்காலையிலும் பாணர் தம் எழால் பறையை முழக்கிப் படுமலைப்பண் பாடுகின்றனர். மழை பொழிந்து பூத்த முல்லைமணம் அவள் நெற்றியில் கமழ, அவள் கூந்தல் மெத்தையில் வாழாத நாட்கள் தானே இவை. (எனவே இவை பதடி வைகல்) வேதநாயகம் சாஸ்திரியார் வேதநாயகம் சாஸ்திரியார் (1774 -1864), தஞ்சைக் கவிஞரும் இரண்டாம் சர்போஜியின் பிரதான புலவரும் ஆவார். இவர் பெயரில் 133 புத்தகங்களும் 400க்கும் மேற்பட்ட பாடல்களும் உள்ளன. இவர் 1774 செப்டம்பர் 7 இல் ஒரு கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தார்.இவர் போதகனார் தேவசகாயம் (முன்னாள் அருணாச்சலம்) ஞானப்பூ ஆகியோரின் முதலாம் மகனாவார். இவரின் அக்கா தங்கைகளான சூசையம்மாளும் பாக்கியம்மாளும் தங்கள் தாயைச் சிறுவயதிலேயே இழந்தனர். இவர் பத்தாம் அகவையில் கிறித்துவின் சிலுவைத் தோற்றத்தைக் கண்டதாக கூறப்படுகிறது. புதிய ஏற்பாட்டின் பாதகத்தை அறிந்து, கிறித்தியான் ஃபிரீட்ரிக் சவார்சு என்ற ஒரு செருமனி நாட்டு ஊழியக்காரரை தேடி, தனது 12 ஆம் அகவையில் சீர்திருத்திய திருசபைக்கு மாறினார். சவாசின் கீழ் கல்வி பயின்றார். சவாசுக்கு, இளவரசர் சர்போஜி (பின்னாள் தஞ்சாவூரின் இரண்டாம் சர்போஜி) என்னும் மற்றொரு சீடர் இருந்தார். இவரது கல்வி, அந்நாளைய குரு-சீட மரபில் நிகழ்ந்தது. பின்னர், தரங்கம்பாடியில் தனது வேதவியல் பட்டத்தைப் பெற்றார். இவரது பேராசிரியர்களாக கலாநிதி ஜான், கலாநிதி காமரர், புனித ரோட்டிலர் ஆகியோர் வாய்த்தனர். இவர் 19ஆம் அகவையில் தஞ்சாவூரைச் சுற்றியுள்ள ஊர்களில் அற்செய்திப் பள்ளியாசிரியராக அமர்ந்து இலக்கியம், கணிதம் ஒழுக்கவியலைக் கற்பித்தார். பின்னர் தலமையாசிரியராக பணியேற்றார். அதற்பின், தனது பள்ளி நண்பரான இளவரசர் சர்போஜி மன்னராக முடிசூடியப்பின், இவர் அரசவையின் முதன்மைப் புலவரானார். முதலில் அரண்மனையில் யாவும் சமாதானமாக இருந்தது, அரசரே இவரை முதிய உடன்பிரப்பாகத் தான் அழைத்துள்ளார். எனினும் பின்னர், கிறித்தவத்தை வெறுத்த சில ஆற்றல்மிகு பிரபுக்கள் இருப்பினும் சாஸ்திரியார் அச்சமின்றித் தனது கிறித்தவ நம்பிக்கையை வெளிப்படுத்தினார்; மற்ற மதங்களை மதித்து தன் மதத்தை கைவிடாமலிருந்தார். கடைசி வரை இவர் பாடிய பஜனைகள் யாவும் இயேசு கிறித்துவைப் போற்றியே அமைந்தன. இவரின் நம்பிக்கை மற்றவர்பால் மிக ஆற்றலோடு திகழ்ந்தது. அந்நாளில் கடுஞ்சிறுவனான தரங்கம்பாடி சாமுவேலன் எனும் சரஸ்வதி மகால் நூலகத்தில் பணிபுரிந்த சாமுவேலன் அய்யனைக் கடும் விவாதத்தின் பின்னர் கிறித்தவத்திற்கு மதமாற்றினார். பழுப்புக் கொழுப்பு பழுப்புக் கொழுப்பு (brown fat) என்பது கொழுப்பிழையத்தின் இரு வகை இழையங்களுள் ஒன்றாகும்.கொழுப்பிழையத்தின் மற்றொரு வகை வெள்ளைக் கொழுப்பு இழையமாகும். இது பிறந்த குழந்தைகளிலும் குளிர்காலத் தூக்கம் (hibernation) மேற்கொள்ளும் விலங்குகளிலும் அதிகமாகக் காணப்படும். இதன் முக்கியப் பணி வெப்ப உற்பத்தி (thermogenesis) ஆகும். ஒரு தனித்த கொழுப்புத் துளியைக் கொண்ட வெள்ளைக் கொழுப்புடன் ஒப்பிடுகையில், பழுப்புக் கொழுப்பில் எண்ணற்ற சிறிய கொழுப்புத் துளிகளும் அதிக எண்ணிக்கையிலான இழைமணிகளும் உள்ளன. இதன் இழைமணிகளில் உள்ள இரும்பே (iron) இதன் பழுப்பு நிறத்திற்குக் காரணமாகும். பழுப்புக் கொழுப்பு இழையத்திற்கு அதிக ஆக்சிசன் தேவையிருப்பதால், வெள்ளைக் கொழுப்பு இழையத்தை விட பழுப்புக் கொழுப்பு இழையத்தில், அதிகளவிலான குருதி மயிர்க்குழாய்கள் (capillaries) இருக்கின்றன. இழைமணிகளில் நடக்கும் இலத்திரன் கடத்தல் சங்கிலி (electron transport chain) மூலமாக ஏ.டி.பி (ATP) உற்பத்தி ஆகிறது. இலத்திரன் கடத்தல் சங்கிலி இரண்டு கூறுகளை உடையது. அவை, ஆக்சிசனேற்றம் மற்றும் பாஸ்ஃபோ ஏற்றம் (phosphorylation) ஆகும். ஆக்சிசனேற்றத்தால் உண்டாகும் ஆற்றலைக் கொண்டே பாஸ்ஃபோ ஏற்றம் நடைபெறுகிறது. இவ்விரு கூறுகளையும் பிரிக்கும் போது (uncoupling) ஆக்சிசனேற்றத்தினால் உண்டாகும் ஆற்றலால் வெப்பம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தப் பிரிக்கும் வேலையைத் தான் பழுப்புக் கொழுப்பு இழையத்திலுள்ள தெர்மோஜெனின் (thermogenin) (வெப்ப உருவாக்கி) எனும் புரதம் செய்கிறது. புதிதாகப் பிறந்த குழந்தைகள் வெப்பத்தை வெகுவில் இழக்கக் கூடியவை. இதற்கான காரணங்களாவன: ஆகவே, வெப்ப உற்பத்திக்கான ஒரு வழியாக இயற்கை அளித்ததே பழுப்புக் கொழுப்புத் திசுவாகும். பிறந்த குழந்தையின் உடலளவில் ஐந்து விழுக்காடு பழுப்புக் கொழுப்பு இழையமே. இது குழந்தையின் பின் பகுதி, தோள்ப்பட்டைகள் ஆகியவற்றில் அதிகம் காணப்படும். குழந்தை வளர்ந்ததும் பழுப்பு நிறத்தை அளிக்கும் இழைமணிகள் மறைந்து அது வெள்ளைக் கொழுப்பு போல் மாறி விடுவதாக நம்பப்பட்டது. ஆனால் புதிய ஆராய்ச்சிகளின் முடிவுகள் இதை மறுக்கின்றன. பாசிட்ரான் வெளிவிடும் வெட்டுவரைவியன் (positron emission tomography) மூலம் ஆராய்ந்ததில் பெரியவர்களிலும் மேல் மார்பு மற்றும் கழுத்துப் பகுதியில் பழுப்புக் கொழுப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வெகு அபூர்வமாக இந்த பழுப்புக் கொழுப்பு ஹைபர்னோமா (hybernoma) எனும் கட்டியாக மாறலாம். பழுப்புக் கொழுப்புத் திசுவும் தசைத் திசுவும் ஒரே குருத்து திசுவில் (stem cell) இருந்து வளர்வதாகத் தெரிகிறது. பேராவூரணி (சட்டமன்றத் தொகுதி) பேராவூரணி தஞ்சாவூர் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இது தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. தளிகைவிடுதி, பாண்டிபழமவைக்காடு, வெட்டுவாக்கோட்டை-மிமி,வெட்டுவாக்கோட்டை-மி, சென்னியாவிடுதி, நெய்வேலிவடபாதி, நெய்வேலி தென்பாதி, வேங்கரை பெரியக்கோட்டைநாடு, வேங்கரை திப்பன்விடுதி மற்றும் வேங்கரை கிராமங்கள், நம்பிவயல், கொள்ளுக்காடு, அனந்தகோபாலபுரம் வடபாதி, அனந்தகோபாலபுரம் தென்பாதி, பாதிரங்கோட்டை தென்பாதி, பாத்ரங்கோட்டை வடபாதி, அதம்பை வடக்கு, அதம்பை தெற்கு, நடுவிக்கோட்டை, காயாவூர், பூவளூர், வழுதலைவட்டம், வாட்டாத்திக்கோட்டை கொள்ளுக்காடு, வாட்டாத்திக்கோட்டை உக்கடை பீமாபுரம், எடையாத்தி வடக்கு,எடையாத்தி தெற்கு, சூரியநாராயணபுரம், செருவாவிடுதி வடபாதி, கிருஷ்ணபுரம், செருவாவிடுதி தென்பாதி, மடத்திக்காடு, துறவிக்காடு, புனவாசல் மேற்கு, புனவாசல் கிழக்கு, குறிச்சி, நெய்வாவிடுதி, அனந்தீஸ்வரபுரம், அலிவலம், கொண்டிகுளம், மணவயல், துவரமடை, கழுகபுளிக்காடு, பில்லன்கிழி, பாலத்தளி, எண்ணெய்வயல், எழுத்தாணிவயல், பண்ணைவயல், பைங்காட்டுவயல், கூத்தடிவயல், சொக்கநாதபுரம், பூவணம், கட்டயன்காடு உக்கடை, மதன்பட்டவூர், ஓட்டங்காடு, திருச்சிற்றம்பலம் மேற்கு, திருச்சிற்றம்பலம் கிழக்கு, களத்தூர் மெற்கு, களத்தூர் கிழக்கு, ஒட்டங்காடு உக்கடை, நடுவிக்குறிச்சி, கட்டையங்காடு, புக்கரம்பை, பள்ளத்தூர், மருதங்காவயல், கொள்ளுக்காடு, வெளிவயல், புதுப்பட்டினம், ஆண்டிக்காடு, எட்டிவயல், உதயமுடையான், ஆலடிக்காடு, அழகிநாயகிபுரம், ஏரளிவயல், கரிசவயல், தண்டாமரைக்காடு, பள்ளிஓடைவயல், புதிரிவயல், ரெண்டாம்புளிக்காடு, அலமதிக்காடு, மறவன்வயல், கள்ளிவயல் மற்றூம் சரபேந்திரராஜன் பட்டினம் கிராமங்கள் , , 2016 அன்று "முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு" வெளியிட்ட பட்டியலின்படி, தத்தராய ராமச்சந்திர கப்ரேக்கர் தத்தராய ராமச்சந்திர கப்ரேக்கர் ("Dattaraya Ramchandra Kaprekar", 17 சனவரி 1905 - 1986), ஓர் இந்தியக் கணிதவியலாளார். 50 ஆண்டுகளுக்கு மேலாக எண்கள்பால் ஈடுபாடு கொண்டு கணிதத்தில் ஆராய்ச்சி செய்தவர். எண்ணியலில் இவர் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார். கப்ரேக்கர் மாறிலி, கப்ரேக்கர் எண் ஆகியவை இவரது கண்டறிதல்களே. முதுகலைப் பட்டம் பெறாதிருந்தும் இவர் எண்ணியலில் பல கட்டுரைகளையும் துண்டுப் பிரசுரங்களையும் வெளியிட்டார்; இவரது பல எண்ணியல் வித்தைகள் விளையாட்டுக் கணிதத்தில் இன்று பயன்படுத்தப் படுகின்றன. கப்ரேக்கர் 1905-ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் நாள் மஹாராட்டிர மாநிலத்தில் மும்பைக்கு அருகிலுள்ள தகானு என்னுமிடத்தில் பிறந்தவர். இராமச்சந்திரதேவ கப்ரேக்கர்-ஜானகிபாய் இணையருக்கு இளைய மகனாகப் பிறந்தார். இவருக்கு 3 சகோதரர்களும் 1 சகோதரியும் உண்டு. கப்ரேக்கரின் தந்தையார் 1908 -ல் தாணேயிக்கு மாற்றலாகிச் சென்றதால், அங்குள்ள நகராட்சிப் பள்ளியில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கினார். 8 வயாதன போது, அவர் தன் தாயை இழக்க நேரிட்டது. எனவே தாய்வழி மாமனான கிருஷ்ணாஜி என்பவரின் பராமரிப்பில் வளர்ந்தார். 1915-ல் தன் மாமாவையும் கொள்ளை நோய்க்குப் பலி கொடுக்க நேரிட்டது. எனவே அவர் மீண்டும் தாணேவுகுத் திரும்பி தன் தந்தையாருடன் தங்கி உயர் நிலைப் பள்ளிக் கல்வியைத் தொடர்ந்தார். பள்ளியில் அவர் ஒரு சராசரி மாணவனாக இருந்த போதிலும் எண்கள் உலகில் காணப்படும் வியப்பூட்டும் விந்தைகளைக் கண்டு மனதைப் பறிகொடுத்து சிந்திக்கவும் தொடங்கினார். கப்ரேக்கரின் கணக்குப் பேராசிரியரான கணபதி என்பார் சில சமயங்களில் கணக்குப் புதிர்களையும், பெருக்கல்களைப் போடச் சுருக்கு வழிமுறைகளையும் சொல்லிக் கொடுப்பார். இதுவே அவருக்குப் பெரிய தூண்டுகோலாக அமைந்தது எனலாம். இதன் பிறகு எண்களின் பலப்பல சிறப்பியல்புகளைத் தானே முனைந்து கண்டு பிடிக்கத் துவங்கினார். பள்ளிப் படிப்பை முடித்தபின், 1923 ஆம் ஆண்டு புனேயில் உள்ள பெர்குசன் கல்லூரியில் இன்டர்மிடியேட் மற்றும் இளங்கலை அறிவியல் பட்டப் படிப்பை முடித்தார். 1929 -ல் பம்பாய் பல்கலை கழகத்திலிருந்து இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். பின்னர் ஆசிரியர் பயிற்சிப் படிப்பை முடித்து தேவ்லாலி என்னும் ஊரிலுள்ள ஒரு பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். அங்கு 1930 முதல் 1962 வரை பணி புரிந்தார். 1932 -ல் இந்திரா பாய் என்பவரை மணம் புரிந்து கொண்டார். ஆசிரியரான கப்ரேக்கர் பள்ளியில் கணிதம், வானியல், சமற்கிருதம் ஆகியவற்றைக் கற்பித்தார். பள்ளியில் ஆசிரியராக இருந்து கொண்டே எண் பற்றிய ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொண்டர். தன் கண்டுபிடிப்புகளை அறிவியல் கழகக் கூட்டங்களிலும், இந்திய கணிதவியல் கழகத்தின் ஆண்டுக் கூட்டங்களிலும், நடைபெறும் கருத்தரங்குகளிலும் வெளிப்படுத்தினார். இந்திய கணிதவியல் கழகத்தில், 1937 -ஆம் ஆண்டில் ஆயுள் உறுப்பினராகச் சேர்ந்தார். தன் ஆராய்ச்சிக்காக உதவி வேண்டி, அவர் யாரையும் கேட்டுக் கொண்டதில்லை. பம்பாய் பல்கலைக் கழகம், அவருடைய டெம்லோ எண்கள் தொடர்பான ஆய்வுகளுக்கு 1939 முதல் 1941 வரை நிதி உதவி வழங்கியது. 1960 முதல் 1962 வரை புனே பல்கலைக்கழகம் அவருடைய பல்வேறு ஆராய்ச்சிகளுக்காக உதவித் தொகை வழங்கியது. 1962 முதல் 1967 வரை பல்கலைக் கழக மானியக் குழு உதவித் தொகை வழங்கி கப்ரேக்கரைப் பெருமைப்படுதியது. 1962 -ல் அவர் ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அதன் பின் பல பல்கலைக் கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் சென்று தன் கண்டுபிடிப்புகளைப் பற்றிச் சொற்பொழிவு நிகழ்த்தினார். மிகப்பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை இந்திய மற்றும் வெளிநாட்டு இதழ்களில் வெளியிட்டார். ஒரு சில நூல்களையும் இயற்றியுள்ளார். எண்கணிதக் குறிப்புகள் பலவற்றை 'சயின்ஸ் ரிப்போர்ட்டர்', 'சயின்ஸ் டுடே' போன்ற அறிவியல் இதழ்களில் வெளியிட்டார். அவருடைய மனைவி, குழந்தைப்பேறு ஏதுமின்றி இறந்து போனார். அதற்குப் பிறகு தன் முழு நேரத்தையும் எண்களைப் பற்றி ஆய்வு செய்வதிலேயே கப்ரேக்கர் செலவிட்டார். விளையாட்டுக் கணக்குகளையும் அதற்குச் சரியான தீர்வுகளை அறியும் முறைகளையும் கண்டறிவதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு துயரங்களை மறந்து மகிழ்வுற்றார். கப்ரேக்கரின் தந்தையார் ஒரு நல்ல சோதிடர் ஆதலால் கப்ரேக்கர் சோதிடத்தைப் பற்றியும் தெரிந்திருந்தார். விண்ணில் விண்மீன்களை இனங்கண்டு கொள்வதில் வல்லுநராக இருந்தார். 1937-க்குப் பிறகு தன் கண்டுபிடிப்புகளை அவ்வப்போது ஒரு குறிப்பேட்டில் குறித்து வைத்திருந்தார். கப்ரேக்கர் பல புதிய புதிய எண் இனங்களைக் கண்டறிந்து அவற்றை நுட்பமாக ஆய்வு செய்து அவற்றின் பொதுப்பண்புகளையும் சிறப்புப் பண்புகளையும் ஒருசேரக் கண்டறிந்துள்ளார். கப்ரேக்கர் பத்தாம் வகுப்பில் படிக்கும் போது 5-ல் முடியும் எண்களின் இருமடியைப் பற்றி கணக்கு ஆசிரியர் சொல்லிக் கொண்டிருந்தார். (10x + 5) என்பது 5-ல் முடியும் ஈரிலக்க எண் . ஆனால், அதன் இருமடி 100x*(x + 1) + 25 என்றவாறு அமையும் அதனால் இது போன்ற இருமடிகளை நொடிப் பொழுதில் கூறிவிடலாம். அதாவது 35 என்னும் எண்ணை எடுத்துக் கொண்டால், அதில் உள்ள 3 என்னும் எண்ணின் அடுத்த எண்ணாகிய 4 ஓடு பெருக்கி வரும் 12 என்னும் எண்ணின் அருகே 25 ஐ இடலாம் 1225 என்று (12*100 + 25 = 1225) கப்ரேக்கர் சிறுவயதிலேயே 45 மற்றும் 55 ன் இருமடிகள் சற்று மாறுபாடாக இருப்பதைக் கண்டறிந்தார். 45,55 -ன் இருமடிகளை இரு எண் கூறுகளாகப் பிரித்துக் கூட்ட அதே எண் கிடைக்கின்றது. கப்ரேக்கர் பின்னாளில் இது போல நூற்றுக்கணக்கான எண்களை இனங்கண்டறிந்தார். இவற்றை இன்றைக்கு கப்ரேக்கர் எண்கள் என அழைக்கின்றார்கள். 5-ல் மட்டுமன்றி பிற எண்களுடன் முடியும் எண்களின் இருமடியைச் சட்டெனக் கண்டறிய பல எளிய சுருக்கு வழிகளையும் இவர் கண்டறிந்து வெளியிட்டுள்ளார். இது "Ten cuts in Calculation" என்ற தலைப்பில் ஒரு நூலாக வெளி வந்துள்ளது. சான்று: இரு எண்களை ஓர் ஒழுங்கு முறையில் மாற்றிப் பெருக்கும் போது, அந்த மாற்றம் பெருக்குத்தொகையிலும் காணப்படுவதை கப்ரேக்கர் புலப்படுத்திக் காட்டியுள்ளார். சான்று: 91 லும் 819 லும் 9 ஐயும் சுழியையும் (பூச்சியம்), மாறி மாறி உட்புகுத்த அதே போல் பெருக்குத் தொகையான 74529 லும் 9ம் சுழியும் மாறி மாறி உட்புகுந்து வருவது இங்கு நோக்கத்தக்கதாகும். இவ்வாறே சேர்த்துக் கொள்ள வேண்டும். பெருக்குத் தொகையிலும் இதே மாதிரியான ஒழுங்கு முறையில் எண்கள் அமைவதைக் காணலாம். கப்ரேக்கர் தனக்குத் தானே எண்களின் இருமடி, மும்மடிகளின் பட்டியலை விரிவாகத் தயாரித்து வைத்திருந்தார். இதன் மூலம் அவர் எண்களின் புதிய இனங்களைப் பற்றி விரிவாகத் தெரிவிக்க முடிந்தது. குறிப்பாக போன்றவற்றைச் சொல்லலாம். கப்ரேக்கர் மாறிலி என்பது 6174 என்னும் எண்ணைக் குறிக்கும். இதனை இவர் 1949 இல் கண்டுபிடித்தார். . இந்த எண்ணின் சிறப்பு என்னவென்று அறிய கீழ்க்காணுமாறு செய்தல் வேண்டும். வெவ்வேறான இலக்கங்கள் கொண்ட ஒரு நான்கு இலக்க எண்ணை எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் அந்த நான்கு இலக்கங்களைக் கொண்டு அமையக்கூடிய மிகப் பெரிய நான்கு இலக்க எண்ணை உருவாக்க வேண்டும். பிறகு அதே நான்கு இலக்கங்களைக் கொண்டு அமையக்கூடிய மிகச் சிறிய நான்கு இலக்க எண்ணை உருவாக்க வேண்டும். இப்பொழுது முதலில் உருவாக்கிய பெரிய எண்ணிலிருந்து அடுத்து உருவாக்கிய சிறிய எண்ணைக் கழித்து வரும் எண்ணைக் குறித்துக் கொள்ள வேண்டும். இப்படிக் கிடைத்த எண்ணில் உள்ள இலக்கங்களைப் பயன்படுத்தி மீண்டும் முன்போலவே அவற்றால் அமையக்கூடிய மிகப்பெரிய எண், மிகச்சிறிய எண் இரண்டையும் உருவாக்கி அவற்றின் வித்தியாசத்தைக் கண்டறிய வேண்டும். இப்படியே செய்துகொண்டே போனால் கடைசியில் 6174 என்னும் மாறிலி கிட்டும். எடுத்துக்காட்டாக 1234 என்ற நான்கிலக்க எண்ணைக் கொண்டு தொடங்கினால்: முன்பு செய்ததுபோல் இருமுறை தொடர இந்நிலையில் மேலும் இதனைத் தொடர்ந்தால் அதே எண்ணே கிட்டும் (7641 − 1467 = 6174). எந்தவொரு நான்கு இலக்க எண்ணை எடுத்துக்கொண்டாலும் மிகப்பெரும்பாலும் 7 முறை இப்படிச் செய்தாலே விடை கிட்டிவிடும். எண்களின் உலகத்தில் பல புதிய கண்டுபிடிப்புகளைக் கண்ட கப்ரேக்கர் சிறுவர்களுக்கு விளையட்டுக் கணக்குளையும், புதிர்களையும் போட்டு அவர்களுக்கு கணக்கில் ஆர்வம் ஏற்படச் செய்தார். கப்ரேக்கர் 1988 -ல் இயற்கை எய்தினார். டாக்டர் மெ. மெய்யப்பன் .'விளையாட்டுக் கணக்குகள்' அறிவுப் பதிப்பகம். ஜூன்,2003. புவனகிரி (சட்டமன்றத் தொகுதி) புவனகிரி கடலூர் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். பொன்னேரி (கோ), கார்குடல் மாவைடந்தல், சாத்தமங்கலம், யு.கொளப்பாக்கம், அரசக்குழி, யு.அகரம், ஊத்தங்கல், கூணன்குறிச்சி, யு.மங்கலம், வடக்குவெள்ளுர், பெரியாக்குறிச்சி, சேப்ளாநத்தம், தோட்டகம், உய்யகொண்ராவி, கீழ்பாதி, மணகதி, மேல்பாதி, மேல்பாப்பணப்பட்டு, நெய்வேலி, வேப்பங்குறிச்சி, மும்முடிச்சோழகன், கம்மாபுரம், கீரனூர், கோபாலபுரம், குமாரமங்கலம், கோ.ஆதனூர், சொட்டவனம், கார்மாங்குடி, சக்கரமங்கலம், வல்லியம் மேலப்பாளையூர், கீரனூர், மருங்கூர், தொழூர், கொடுமனூர், கீழ்ப்பாளையூர், தேவங்குடி, க.புத்தூர், சிறுவரப்பூர், சாத்தப்பாடி, யு.ஆதனூர், தர்மநல்லூர், விளக்கப்பாடி, பெருவரப்பூர், கோட்டுமூளை, காவனூர், கீரமங்கலம், பெருந்துரை, பனழங்குடி, மற்றும் ஓட்டிமேடு கிராமங்கள். கங்கைகொண்டான் (பேரூராட்சி). கத்தாழை, வளையமாதேவி கீழ்பாதி, துறிஞ்சிக்கொல்லை, பின்னலூர், சொக்கங்கொல்லை, சாத்தப்பாடி, வடக்குத்திட்டை, வட கிருஷ்ணாபுரம். மருதூர், வட தலைக்குளம், பிரசன்னராமாபுரம், அம்பாள்புரம், நெல்லிக்கொல்லை, எரும்பூர், வளையமாதேவி, (மேஸ்பாதி), அகர ஆலம்ப்படி, ஆதனூர்(புவனகிரி), பெரிய நெற்குணம், சின்ன நெற்குணம், வீரமுடையாநத்தம், ஆணைவாரி, மிராளுர், மஞ்சக்கொல்லை, உளுத்தூர், தென் தலைத்திட்டை, பூதராயன்பேட்டை, ஆலம்பாடி(கஸ்பா), பு.ஊடையூர், சீயப்பாடி, சாத்தமங்கலம், வத்தாயந்தெத்து, கிளாவடிநத்தம், அழிச்சிக்குடி, வண்டராயன்பட்டு, வயலூர், கீரப்பாளையம், திருப்பணிநத்தம், வட ஹாரிராஜபுரம், தாதம்பேட்டை, ஆயிப்பேட்டை, கிளியனூர், ஓரத்தூர், பரதூர், பூதங்குடி, வெள்ளியங்குடி, பாளையஞ்சேர்ந்தங்குடி, சாக்காங்குடி, புளியங்குடி (ஹரிராஜபுரம்), தென் ஹரிராஜபுரம், சி.மேலவன்னியூர், எண்ணநகரம், கண்ணங்குடி, கீழ்நத்தம், இடையன்பாலச்சேரி, மதுராந்தகநல்லூர், பூந்தோட்டம், வாக்கூர், வடப்பாக்கம், வெய்யலூர், வாழக்கொல்லை, ஓடாக்கநல்லூர், தரசூர், தேவங்குடி, கே, ஆடூர், சி.வீரசேழகன், துனிசிரமேடு, பூங்கொடி, பண்ணப்பட்டு, அய்யனூர், அக்கரமங்கலம், மனக்குடியான் இருப்பு, விளகம், சேதியூர், கூளிப்பாடி, வடக்குவிருத்தாங்கம், டி.மணலூர், தெற்கு விருத்தாங்கன், டி.மடப்புரம் மற்றும் டி.நெடுஞ்சேரி கிராமங்கள். சேத்தியாத்தோப்பு (பேரூராட்சி) மற்றும் புவனகிரி (பேரூராட்சி). , 2016 அன்று "முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு" வெளியிட்ட பட்டியலின்படி, நவநீத நடனார் நவநீத நடனார் என்பவர், தமிழ்ப் பிரபந்தங்களைப் பற்றிக் கூறும் நவநீதப் பாட்டியல் என்னும் நூலை எழுதிய ஒரு புலவர் ஆவார். இவரது நூலுக்கு எழுதப்பட்ட உரை ஒன்றில் இவர் நவநீத நாட்டினர் என்று குறிக்கப்பட்டுள்ளது. எனினும் இவ்வாறான நாடு ஒன்று இருந்தது பற்றியோ அல்லது எங்கு இருந்தது என்பது பற்றியோ தகவல்கள் இல்லை. விட்டுணுவின் பக்தர் எனப் பொருள்படும் "அரிபத்தர்" என்னும் சொல்லினால் நவநீதப் பாட்டியலின் உரை இவரைக் குறிப்பிடுவதனாலும், நவநீதன் என்பது திருமாலின் ஒரு அவதாரமான கண்ணபிரானைக் குறித்து நிற்பதாலும், காப்புச் செய்யுள் விட்டுணுவைக் குறித்து இருப்பதாலும் இவர் வைணவர் என்று கருதப்படுகின்றது. இவரது நூலின் சிறப்புப் பாயிரத்தில், என்று வருகிறது. இதில், "நாட்டிய வேதத்தவன்" என்பதற்கு நிலை நிறுத்திய மறையவன் என்னும் பொருள் கொண்டு இவர் ஒரு பிராமணர் என்ற கருத்து உண்டு. அதே நேரம், "நாட்டிய வேதத்தவன்" என்பதற்கு "நாட்டியம் தொடர்பான வேதம் சார்ந்தவன்" எனப்பொருள் கொண்டு இவர் ஒரு நட்டுவராக (நட்டுவாங்கம் செய்பவராக) இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. கொள்முதல் ஆணை கொள்முதல் ஆணை என்பது வாங்குபவர் விற்பவருக்கு வழங்கும் ஒரு வணிக ஆவணம் ஆகும். வாங்குபவர் வாங்க விரும்பும் பொருட்கள், எண்ணிக்கை, ஒப்பந்த விலை ஆகியவற்றைக் இந்த ஆவணம் விபரிக்கும். கொள்முதல் ஆணையை வழங்கி, அதை விற்பவர் ஏற்றுக் கொண்டால் இது ஒரு சட்ட ஒப்பந்தம் ஆகும். அன்றாட வழக்கில் இந்த ஆவணம் இரு பகுதிக்கும் தமது வணிகத்தை நிர்வாகிக்கவும், இருப்புக் கணக்கும் பயன்படுகிறது. விற்பனை ஆணை விற்பனை ஆணை என்பது வாடிக்கையாளருக்கு வணிகத்தால் வழங்கப்படும் ஒரு வணிக ஆவணம் ஆகும். என்ன என்ன பொருட்களை அல்லது சேவைகளை, எந்த எந்த அளவுக்கும், என்ன விலைக்கு விற்க அல்லது வழங்குவதை விபரித்து இந்த ஆவணம் வரையப்படும். இது வாடிக்கையாளரிடம் இருந்து கொள்முதல் ஆணை பெற்ற பின் வழங்கப்படும். விலைச்சிட்டை விலைச்சிட்டை, விற்பனைச்சிட்டை, அல்லது விபரப்பட்டியல் என்பது விற்பனையாளர், வாடிக்கையாளருக்கும் வழங்கும் ஒரு வணிக ஆவணம் ஆகும். இதில் வாடிக்கையாளர் பெற்றுக் கொண்ட பொருட்கள் அல்லது சேவைகள், எண்ணிக்கை, விலை, வரி, மற்றும் பிற கட்டணங்கள் பற்றிய விபரம் பட்டியல் படுத்தப்பட்டிருக்கும். குறிப்பிட்ட நாட்களுக்குள் வாடிக்கையாளர் இதன் மொத்த தொகையைச் செலுத்த வேண்டும். இருப்புக் கணக்கு இருப்புக் கணக்கு என்பது ஒரு வணிகத்திடம் விற்க இருக்கும் விற்பனைப் பொருட்கள் அல்லது மூலப் பொருட்களின் விபரப் பட்டியல் ஆகும். கணக்கெடுத்தல் அல்லது இருப்பெடுத்தல் தொடர்ச்சியாக அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் வணிகங்களில் நடைபெறும். என்ன பொருட்கள், எந்த அளவு, எங்கே இருக்கின்றது என்று அறிந்து வைத்திருப்பது வணிகங்களுக்கு அவசியாகும். பிரன்சு ஃபனோன் பிரன்சு ஃபனோன் (Frantz Omar Fanon, யூலை 20, 1925 – டிசம்பர் 6, 1961) ஒரு பிரான்சிய-ஆப்பிரிக்க மனநோய் மருத்துவர், மெய்யியலாளர், புரட்சியாளர். இவரது ஆக்கங்கள் பின்குடியேற்றவாதம், விமர்சனக் கோட்பாடு, ஆப்பிரிக்கவியல் ஆகிய துறைகளில் செல்வாக்குச் செலுத்துகின்றன. இவர் சிறுவனாக இருக்கும் போது தாய் மொழி பாட்டுக்கள் கேக்க விருப்பம் கொண்டவர். ஆனால் இவரது தாயார் இவரை பிரான்சிய மொழிப் பாடுக்களை மட்டுமே கேட்கும் படி, பிரான்சிய மொழியையே படுக்கும் படி கட்டுப்படுத்தினார். பால்கோவா பால்கோவா என்பது பாலினால் செய்யப்படும் ஓர் இனிப்பு ஆகும். பாலினை நீண்ட நேரம் காய்ச்சிய பின்னர் சர்க்கரை சேர்க்கும் போது உருவாகும் பாகு நிலையில் உள்ள இனிப்பு ஆகும். தமிழ்நாட்டில் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா மிகவும் சிறப்பு பெற்றதாகும். பால் அல்வா என்பதும் பால்கோவா போன்று தயாரிக்கப்படும் மற்றோர் இனிப்பு ஆகும். ஹோ சி மின் நகர வானூர்தி நிலையம் ஹோ சி மின் நகர வானூர்தி நிலையம் (வியட்நாமிய மொழி: Sân bay quốc tế Tân Sơn Nhất, ஆங்கிலம்: Tan Son Nhat International Airport) வியட்நாம் ஹோ சி மின் நகரத்தின் முக்கியமான வானூர்தி நிலையம் ஆகும். டோங் கோய் வானூர்தி நிலையம் டோங் கோய் வானூர்தி நிலையம் வியட்நாம் நாட்டின் முக்கியமான வானூர்தி நிலையம் ஆகும். இதனை ஆங்கிலத்தில் : Dong Hoi Airport என்றும் வியட்நாமிய மொழியில்: Sân bay Đồng Hới என்றும் அழைப்பர். இது வியட்நாமின் மத்திய வடக்கு கடற்கரையில் உள்ள டோங் கோய் நகரத்தில் உள்ளது. இல்லத்தார் முன்னேற்றக் கழகம் இல்லத்தார் முன்னேற்றக் கழகம் என்பது தமிழ்நாடு இல்லத்துப்பிள்ளைமார்களின் ஒரு அரசியல் அமைப்பு ஆகும். இவ்வமைப்பின் மாநிலத் தலைவராக வி.பி.எம்.எம். கல்லூரிகளின் தலைவர் வி.பி.எம்.சங்கர் உள்ளார். விருத்தாச்சலம் (சட்டமன்றத் தொகுதி) விருத்தாச்சலம் கடலூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். சேதுவராயன்குப்பம், எ,மரூர், மாளிகைமேடு, கொத்தனூர் (பாந்தவன்பட்டு), ஆதியூர், கொளப்பாக்கம் (இரஞ்சி), ஐவதுகுடி, இலங்கியனூர், வலசை, சுருவம்பூர், டி.மாவீடந்தல், காட்டுப்பாரூர், விசலூர், கர்நத்தம், கோவிலானூர், பள்ளிபட்டு, ரூபநாராயணநல்லூர், கோ.பூவனூர், கட்டியநல்லூர், கோ.பவளங்குடி, புலியூர், பாலக்கொல்லை, நடியப்பட்டு, முடப்புளி, இருப்பு, இருளாக்குறிச்சி, மனக்கொல்லை, ஆலடி, மாத்தூர், பெரியவடவாடி, விஜயமாநகரம், அகரம், பரூர், இடைச்சித்தூர், பிஞ்சனூர், மேமாத்தூர், வண்ணாத்தூர், நல்லூர், நகர், சேப்ப்பாக்கம். காட்டுமயினூர், கீழக்குறிச்சி, மேலக்குறிச்சி, பெரியநெசலூர், சீறுநெசலூர், வேப்பூர், நாரயூர், திருப்பெயூர், கோ.கொத்தனூர், சித்தூர், சாத்தியம். கச்சிபெருமாநத்தம். சின்னபரூர், எருமனூர், சின்னவடவாடி, செம்பளாக்குறிச்சி, கவணை, சித்தேரிக்குப்பம், இருசாலக்குப்பம், பழையபட்டிணம். கோட்டேரி, பெரியகாப்பான்குளம். சின்னகாப்பான்குளம், கொல்லிருப்பு, அம்மேரி, முதனை, நரிமனம், கச்சிராயநத்தம், கோபுராபுரம். காணாதுகண்டான், சின்னபண்டாரன்குப்பம், குப்பநத்தம், புதுக்கூரைப்பேட்டை, மணவாளநல்லூர், கோமங்களம், பரவளுர், தொரவளுர், விளாங்காட்டூர், படுகளாநத்தம், கீரம்பூர், மன்னம்பாடி, டி.பௌடையூர், வரம்பனூர், கலியாமேடு, பூலம்பாடி, நிராமணி, எடையூர், பெரம்பலூர், கொடுக்கூர், முகுந்தநல்லூர், சாத்துக்குடல் (மேல்பாதி), சாத்துக்குடல் (கீழ்பாதி), கா.இனமங்களம், ஆலிச்சிக்குடி, நேமம், கருவேப்பிலங்குறிச்சி, பேரளையூர், ஆலந்துரைபட்டு, சத்தியவாடி, பி.கொல்லத்தன்குறிச்சி, தெற்குவடக்குபுத்தூர், வேட்டக்குடி, வண்ணான்குடிகாடு, ராஜேந்திரபட்டிணம் மற்றும் சின்னாத்துக்குறிச்சி கிராமங்கள். மங்களம்பேட்டை (பேரூராட்சி) மற்றும் விருத்தாச்சலம் (நகராட்சி). , 2016 அன்று "முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு" வெளியிட்ட பட்டியலின்படி, காட்டுமன்னார்கோயில் (சட்டமன்றத் தொகுதி) காட்டுமன்னார்கோயில் (தனி) கடலூர் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். காட்டுமன்னார்கோயில் வட்டம் , 2016 அன்று "முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு" வெளியிட்ட பட்டியலின்படி, பதஞ்சலி யோகசூத்திரம் பதஞ்சலி யோகசூத்திரம், பதஞ்சலி முனிவர் கி.மு. நாலாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பது பொதுவான ஊகம். கி மு இரண்டாம் நூற்றாண்டில் என்று சொல்பவர்களும் உண்டு. யோக சூத்திரங்கள் 1. சமாதி, 2. சாதனை, 3. விபூதி, 4. கைவல்யம் என்று நான்கு பாதங்களிலாக 196 சூத்திரங்கள் கொண்டது. யோக சூத்திரங்களின் முக்கியத்துவம் என்னவென்றால் பலகாலமாகவே ஒரு வழிமுறையாக கடைப்பிடிக்கப்பட்ட யோக முறைகளை வகுத்து தொகுத்து அளித்தமைதான் . அதைவிட முக்கியமானது ஒன்று உண்டு. யோக முறைகள் அவருக்கு முன்பாக ஏறத்தாழ எல்லா கருத்தியல்தரப்புகளாலும் பலவிதமாக கடைப்பிடிக்கப்பட்டன. பதஞ்சலியே அவற்றைத் தொகுத்து பொதுவான அம்சங்களை மட்டும் கொண்டு யோகம் என்ற தனித்த அமைப்பை உருவாக்கினார் . அம்மரபு எந்த மதத்துக்கும் சொந்தமில்லாமல், அதே சமயம் அனைத்து மதத்துக்கும் பொதுவானதாக இருக்கும்படி அமைத்தது அவரது சாதனையே. ஒற்றை வரியில் சொல்லப்போனால் 'மதசார்பற்ற புறவயமான நிர்ணயங்களாக' யோக சூத்திரங்களை அமைத்ததே பதஞ்சலி முனிவரின் பங்களிப்பாகும். பதஞ்சலி யோகத்துக்கு பல உரைகள் பண்டைக்காலம் முதல் உள்ளன. வியாச பாஷ்யமே முதல் உரை. அதுவே அடிப்படையானதுமாகும். இவ்வுரை சாங்கிய பிரவசன பாஷ்யம் எனப்படுகிறது. சாங்கிய சிந்தனையின் நீட்சியாக வியாசர் யோகத்தைக் காண்கிறார் . வாசஸ்பதி மிஸ்ரரின் 'விசாராதி ' என்ற உரையும் புகழ் பெற்றது . யோக சூத்திரம் குறித்த ஏற்கனவே இருந்த அறிவையும் விவரங்களையும் சேகரித்து உணர்ந்து கி மு 400 ஆண்டிற்கு முன்பே பதஞ்சலி முனிவர் தொகுத்து வழங்கியுள்ளார். 40 இந்திய மொழிகள், இரண்டு வேற்று மொழிகள் பழைய ஜாவா மற்றும் அரபிக் உட்பட 40க்கு மேற்பட்ட மொழிகளில் அதிகப்படியாக மொழி பெயர்க்கப்பட்ட நூல் பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரம் ஆகும். பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரம் 12ஆம் நூற்றாண்டிலிருந்து 19ஆம் நூற்றாண்டு வரை ஏறக்குறைய 700 ஆண்டுகள் வழக்கிலிருந்து மறைந்து போயிருந்தாலும், விவேகானந்தரின் முயற்சியாலும் தீசாபிகல் சங்கத்தின் முயற்சியாலும் 19ஆம் நூற்றாண்டு இறுதியில் புத்துயிர் பெற்று வழக்கத்திற்கு வந்தது என்று டேவிட் கோர்டன் குறிப்பிடுகிறார். 20ஆம் நூற்றாண்டிற்கு முன்பு இடைக்காலத்தில் பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரம் அல்லாமல் பல்வேறு யோகங்கள் குறிப்பாக பகவத் கீதை, யோக வசந்தம், ஹத யோகம், தஸ்த்ரிக் யோகம் போன்றவை நடைமுறையில் இருந்து வந்தன. 20ஆம் நூற்றாண்டில் யோகம் பயில்பவர்கள் பதஞ்சலியின் யோக சூத்திரத்திற்கு இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு தலையாய இடத்தைப் பெற்றுத் தந்தனர். இந்து ஆச்சார வழக்கத்தின்படி பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரம் யோக தத்துவத்தின் அடிப்படையாகக் கருதப்படுகிறது. இருந்தாலும் பிற்காலத்தில் யோக வழிமுறைகளின் மீது பதஞ்சலி முனிவரின் யோக சாத்திரத்தின் தாக்கம் குறித்து பல விதமான கருத்துக்கள் நிலவி வருவதாக டேவிட் கோர்டன் வைட் கூறுகிறார். யோக சூத்திரம் பதஞ்சலி முனிவரால் இயற்றப்பட்டது என்று கூறப்படுகிறது.பதஞ்சலி முனிவர் என்னும் பெயர் குறித்து பல மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வருகின்றன. சமஸ்கிருத மொழியில் இலக்கண நூல் ‘மகாபாஸ்யம்’ மும் பதஞ்சலி முனிவர் என்பவரால் எழுதப்பட்டது என்று கூறுவர். இருவரும் ஒருவரா அல்லது வேறு நபர்களா என்பது குறித்தும் கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன. பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரம், முதலாம் நூற்றாண்டில் இதற்கு எழுதிய உரையின் அடிப்படையிலும் மற்ற இலக்கியங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையிலும் கிமு 400 ஆண்டு வாக்கில் எழுதப் பட்டிருக்கலாம் என்று பிலிப் ஏ மாஸ் என்பவர் மதிப்பிடுகிறார்.. எட்வின் பிரயனட் இவை சுமார் பல வல்லுனர்களால் முதலாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப் பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டிருந்தாலும் கி பி நான்காம் நூற்றாண்டில் தான் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார். மிசலி டெஸ்மரிஸ் இந்த யோகசூத்திரம் கிமு 500 லிருந்து கிபி மூன்றாம் நூற்றாண்டிற்குள் எழுதப்பட்டிருக்கலாம் என்பது தான் சரியாக இருக்கும் என்று கருதுகிறார்." பதஞ்சலி முனிவர் முதல் சூத்திரத்தில் இந்நூலின் குறிக்கோளையும் இரண்டாவது சூத்திரத்தில் யோகம் என்பதற்கு விளக்கமும் கூறுகிறார்.விவேகானந்தர் சித்தத்தை பல எண்ணங்களில் சிதற விடாமல் ஒருமுகப் படுத்துவது யோகம் என்று குறிப்பிடுகிறார்." பதஞ்சலி முனிவர் வாழ்க்கையின் குறிக்கோளாக ‘சித்த விருத்தி நிரோதக யோகக’ என்று குறிப்பிடுகிறார். மனதில் உள்ள எண்ணங்களை நெறிப்படுத்துவதுதான் யோகம், இது தான் லட்சியம் என்று குறிப்பிடுகிறார். மனம் ஒரு கருவி இது பல காரியங்களைச் செய்கிறது. முதலில் ஐம்புலன்களின் பின் நின்று அவைகளின் மூலமாக அறிவைப் பெற கருவியாக அமைகிறது. பின் தானாகவே சிந்தித்தும் அறிவை வளர்த்துக் கொள்கிறது. தன்னையே சுத்தப் படுத்திக் கொள்ளவும் ஒரு கருவியாகவும் பயன்படுகிறது. தானே செயலைச் செய்பவனாகவும் (கர்த்தா), பலனை அனுபவிப்பவனுமாக ( போக்தா) அனுமானம் செய்து கொள்கின்றது. இப்படிப்பட்ட மனதை அஷ்டாங்க யோகத்தினால் நெறிப்படுத்துவதுதான் வாழ்க்கையின் நோக்கம் என்று பதஞ்சலி முனிவர் இன்னூலில் குறிப்பிடுகிறார். வணிகவியல் தலைப்புகள் பட்டியல் பிருகு மகரிஷி பிருகு, சப்தரிசிகளுள் ஒருவர். பிரம்மதேவரால் தன் படைக்கும் தொழிலில் உதவி புரிவதற்காக உருவாக்கப்பட்ட பிரஜாபதியில் ஒருவர். அவரது மானசபுத்திரராகவும் கருதப்படுகிறார். ஏறக்குறைய கி.மு 3000 ஆம் ஆண்டு, திரேதா யுகத்தில், இவர் எழுதிய பிருகு சம்ஹிதா எனும் நூலே சோதிட சாஸ்திரத்தின் முதல் நூலாகக்கருதப்படுகிறது. இவரது துணைவியின் பெயர் "கியாதி" ஆகும். இவர் தக்க்ஷனின் மகளாவார். இவர்களுக்கு ததா, விததா, சுக்ரன், சியவனர் என்ற மகன்களும், ஸ்ரீ என்ற மகளும் உண்டு. பிருகு மகரிஷி சிவபெருமான் பிரணவப் பொருள் மறக்கக் காரணமாக இருந்தவர். பிருகு மகரிஷி ஜீவன் முக்தனாக விரும்பி கடும்தவம் இருந்தபோது தம் தவத்திற்கு இடையூறு ஏற்படாமலிருக்க விரும்பினார். எனவே தம் தவத்தை தடுப்பவர்கள் பிரம்மஞானத்தை மறக்க வேண்டும் என்று சாபமிட்டுவிட்டு தவம் இயற்றினார். அவருடைய தவ அக்னி தேவர்களை தாக்கியது. தேவர்கள் திருமாலுடன் வந்து சிவபெருமானிடம் பிரார்த்திக்கவே, தமது திருக்கரத்தை பிருகு முனிவரின் சிரசில் வைத்து அவரது தவாக்னியை அடக்கினார் சிவபெருமான். சிவபெருமான் பிருகு முனிவரது விருப்பம் நிறைவேறும் என்று ஆசிர்வதித்தார். சிவ தரிசனம் பெற்று மகிழ்ந்த பிருகு முனிவர் தமது சாபத்தால் சிவபெருமான் பாதிக்கப்படுவாரே என்று வருந்தி தம்மை மன்னிக்க வேண்டினார். பிருகு முனிவரின் சாபத்தைத் தாம் மகிழ்வுடன் ஏற்பதாகக் கூறினார் சிவபெருமான்.இதனாலேயே பின்னர் சுவாமிமலையில் தமது புத்திரன் முருகரிடம் உபதேசம் பெற்றார் சிவபெருமான். பிருகு முனிவன் மனைவி கியாதி. இவள் அரக்கன் (தக்கன்) மகள். இவள் ஆவியைத் திருமால் கவர்ந்தார். பிருகு சம்ஹிதை மகரிஷி பிருகு, ஏறக்குறைய கி.மு3000 ஆம் ஆண்டு, திரேதா யுகத்தில் எழுதிய நூலே சோதிட சாஸ்திரத்தின் முதல் நூலாகக்கருதப்படுகிறது. ஆனால் தற்கால ஆய்வின்படி இது பல்வேறு காலக்கட்டங்களில் அவரது சீடர்களால் எழுதப்பட்டது என்று கூறப்படுகிறது. நவகிரகங்களின் இடத்தைப்பொறுத்து 5,௦௦,௦௦௦ ஜாதகங்களை இவர் கணித்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இவை அனைத்தும் தற்பொழுது அழிந்துவிட்டன. நாலந்தா பல்கலையில் இருந்த இவை முகலாய படையெடுப்பால் அழிந்து விட்டன. எனினும் ஒரு சில பகுதிகள் ராஜஸ்தான் மாநிலத்திலும், பஞ்சாப் மாநிலத்திலும் சில சோதிட வல்லுனர்களிடம் இருப்பதாக கூறப்படுகிறது. பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் ஸ்ரீ பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் (ஆங்கிலம்:Sri Perungaraiyadi Meenda Ayyanar Temple), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் கோவில்ஆகும். இங்கு மிகப்பெரிய குதிரை சிலை உள்ளது. இக்குதிரைச் சிலை 33 அடி உயரமுள்ள சிலை ஆகும்.இது ஆசியாவின் மிக உயரமான குதிரைச் சிலை என கருதப்படுகிறது. இங்கு ஆண்டு தோறும் மாசி மாதம் மகம் நட்சத்திரம் வரும் நாளில் நடைபெறும் மாசி மகம் எனப்படும் திருவிழா சிறப்புடையது.இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பர். தக்கன் தட்சன் பிரஜாபதிகளில் ஒருவர். இவர் பிரம்மாவின் மகனாவார். இவரது மனைவியின் பெயர் பிரசுதி. இவர்களுக்கு மகள்களாக பல பேரை வேதங்கள் கூறுகின்றன. அதில் குறிப்பிடத்தக்கவர்கள் அதிதி, திதி, தனு, கலா, தனயு, சின்ஹிகா, குரோதா, பிரதா, விஸ்வா, வினதா, கபிலா, முனி, கத்ரு, தாட்சாயினி, ரோகிணி, ரேவதி மற்றும் கார்த்திகை,கியாதி உள்ளிட்ட 27 நட்சத்திரங்கள், ரதி இன்னும் பல பேர். இதில் தாட்சாயினி இவரின் விருப்பத்திற்கு மாறாக சிவனை திருமணம் செய்துகொண்டமையால், தட்சன் செய்த மகா வேள்விக்கு இவர்களை அழைக்காமல் அவமதித்தான். அது மட்டுமன்றி சிவனுக்கு கொடுக்கவேண்டிய அவிர்பாகத்தையும் தர மறுத்தான். இதன் விளைவாக சிவனால் ஏவப்பட்ட வீரபத்திரனும், தேவியால் அனுப்பப்பட்ட பத்ரகாளியும் யாகசாலையை அழித்து தட்சனையும் கொன்றனர். மற்ற மகள்களான 27 நட்சத்திரங்களும் சந்திரனை மணந்தனர். ரதி, மன்மதனை மணந்தார். தக்கனுக்குப் பிறந்த அறுபது பெண்களில், தாட்சாயினியை சிவபெருமானுக்கும், பத்துப் பேரைத் எமதருமனுக்கும், பதின்மூன்று பேரை காசியப முனிவருக்கும், இருபத்தேழு பெண்களை சோமன் எனும் சந்திரனுக்கும், ரதியை மன்மதனுக்கும், மீதிப் பெண்களை அரிஷ்டநேமி, வாஹுபுத்திரர், ஆங்கீரஸர், கிரிசஷ்வர் ஆகிய முனிவர்களுக்கு மணம் செய்வித்தான். எமதர்மனுக்கு மணம் செய்வித்த பத்து மகள்களில் அருந்ததியின் மக்கள் உலகில் சிறப்பு பெற்றவர்கள். வாசுவின் மக்கள் வசுக்கள் என்பர். அவர்களில் அனலனின் மகன் குமரன். கிருத்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட குமரன் கார்த்திகேயன் எனப்பட்டான். பிரபசாவின் மகன் தேவலோக சிற்பி விசுவகர்மா. சாத்யாவின் மக்கள் சாத்திய தேவர்கள். விஸ்வாவின் மக்கள் விச்வதேவர்கள். சந்திரன் மனைவிகள் 27 பெண்கள், நக்ஷத்திரங்கள். அதிதி-காசிபர் தம்பதியரின் மக்கள் ஆதித்தர்கள் ஆவர். திதி -காசிபர் தம்பதியரின் மக்கள் இரணியன், இரணியகசிபு தைத்தியர்கள் போன்ற தைத்தியர்கள். தனுவின் புத்திரர்கள் தானவர்கள். அரிஷ்டாவின் புத்திரர்கள் கந்தர்வர்கள். காசாவின் மக்கள் யட்சினிகள் மற்றும் யட்சர்கள். சுரசையின் மக்கள் பசுக்கள், எருமைகள் வினிதாவின் மக்கள் அருணன் மற்றும் கருடன். தாம்ராவின் ஆறு பெண் மக்களிடமிருந்து ஆந்தைகள், கழுகுகள், ராஜாளிகள், காக்கைகள், நீர்ப்பறவைகள், குதிரைகள், ஒட்டகங்கள், கழுதைகள். குரோதவஷையின் ஆயிரக்கணக்கான மக்கள் பாம்புகள் தோன்றின. இளைக்கு மரம், கொடி, புதர் போன்றவை தோன்றின. கத்ருவின் மக்களாகிய நாகர்களில் அனந்தன், வாசுகி, தட்சகன், நஹுசன், ஆதிசேஷன், கார்க்கோடகன், குளிகன், சங்கபாலன், பத்மன் ஆகியோர் முக்கியமானவர்கள். முனிக்கு அரம்பையர்கள் பிறந்தனர். தட்சன் செய்த மகாயாகம் கேரளா மாநிலம் கண்ணூரில், கோட்டியூர் எனும் இடத்தில நடந்ததாக அவ்வூர் ஸ்தலபுராணம் சொல்கின்றது. அதிதி அதிதி ("aditi", ). (வரையறுக்கப்படாதவள் என்று பொருள்) தேவர்களின் தாய் என்பதால் அதிதியை தேவமாதா என்று விஷ்ணு புராணம் மற்றும் பாகவத புராணம் கூறுகிறது. ரிக் வேதத்தில் அதிதியின் பெயர் 80 முறை வருகிறது. இருக்கு வேதத்தில் இவர் 'மஹா' என்ற அடைமொழியுடனே அழைக்கப்படுகின்றார். அதிதி, தட்சப்பிரசாபதியின் மகள் ஆவார். காசியப முனிவரின் முதல் மனைவி. திதியின் மூத்த சகோதரி. ஆதித்தர்கள் ஆதித்தர்கள் என்பது வேதகாலத்தில் சிறப்பாக வணங்கப்பட்ட ஒரு கடவுளர் (தேவர்) குழுவைக் குறிக்கின்றது. இந்த அண்டத்தையும், மனித சமுதாயத்தையும் கட்டுப்படுத்துகின்ற விதிகளுக்குக் கொடுக்கப்பட்ட உருவகங்களே ஆதித்தர்கள் என இந்துத் தத்துவவியலாளர்கள் கூறுகின்றனர். காசிபர் - அதிதி இணையர்களின் புதல்வர்கள் ஆதித்யர்கள் என்று அழைக்கப்பட்டனர். ஆதித்தர்களின் எண்ணிக்கை என்றும் ஒரேயளவாகவே இருந்ததாகத் தெரியவில்லை. வேதங்களில் இவர்களை பற்றிய குறிப்புகள் குறைவாகவே உள்ளன. இந்துக்களின் மிகப் பழைய வேதமான ரிக் வேதம் ஆறு ஆதித்தர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. பிராமணங்கள் எட்டு வரையான ஆதித்தர்களைப் பற்றிக் கூறுகின்றன. இதற்குப் பின்வந்த நூல்களில் கூடிய அளவாகப் பன்னிரண்டு தேவர்கள் ஆதித்தர் குழுவில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளார்கள். இறுதியாக சதவாத பிராமனதின்படி மொத்தம் 33,000,000 ஆதித்யர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. விஷ்ணு புராணத்தின் படி 12 ஆதித்யர்கள் உள்ளனர். அவர்கள், அம்சன், ஆர்யமான், பாகன், துத்தி, மித்திரன், புஷன், சக்ரன், சாவித்திரன், துவச்த்திரன், வருணன், விஷ்ணு, விவஸ்வத் ஆகியோராகும். மற்ற புராணங்களில் யமன், வருணன், இந்திரன் போன்றோரும் ஆதித்யர்கள் என்று கூறப்பட்டுள்ளது. மூதூர் மூதூர் என்பது கிழக்கிலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாகும். கடல் சார்ந்து இருக்கும் இந்த நகரில் ஆரம்ப காலத்தில் முத்துக் குளிக்கும் தொழில் பிரபலமாக இருந்ததாகவும் இதனால் இவ்வூருக்கு முத்தூர் என்று பெயர் வழங்கியதாகவும் கூறப்படுகின்றது. ஆனாலும் காலவோட்டதில் பெயர் மருவி மூதூர் என்று ஆகியுள்ளது. இங்கு முஸ்லிம் மக்களும் மூதூரின் கிழ‌க்குப் பகுதியான சம்பூரில் தமிழ் மக்களும் வாழ்கின்றனர். பிரஜாபதி இந்து சமயத்தின் படி பிரஜாபதி என்பவர் பிரம்மாவால் படைப்புத்தொழிலில் உதவி புரிவதற்காக பிரம்மானால் படைக்கப்பட்ட வசிட்டர், மரீசி, அத்திரி, அங்கிரசர், புலஸ்தியர், புலகர் மற்றும் கிரது ஆகிய ஏழு ரிஷிகள் ஆவர். இவர்கள் பிரம்மாவின் மானசப் புத்திரர்களாகவும் கருதப்படுகின்றனர். மனுதரு சாத்திரம் 10 பிரஜாபதிகளை குறித்துப் பேசுகிறது. பவுனு பவுனுதான் பவுனு பவுனுதான் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாக்கியராஜ் இயக்கிய இத்திரைப்படத்தில் பாக்கியராஜ், ரோஹிணி, குலதெய்வம் ராஜகோபால் மற்றும் பலரும் நடித்திருந்தனர். புலமைப்பித்தன், வாலி, வைரமுத்து ஆகியோர் பாடல்களை எழுதியிருந்தனர்.