அஞ்சற்குறி அஞ்சற்குறி (Postmark) என்பது, ஒரு கடிதம், பொதி, அஞ்சலட்டை போன்றவை அஞ்சல் சேவையின் பாதுகாப்பில் எடுத்துக்கொள்ளப்பட்ட தேதி, நேரம் ஆகியவற்றைக் குறிப்பதற்காக அவற்றின்மீது இடப்படும் குறியீட்டைக் குறிக்கும். தற்காலத்தில் அஞ்சல்குறியும், ஒட்டப்பட்டுள்ள அஞ்சல்தலைகள் பயன்படுத்துவிட்டதைக் குறிக்க இடப்படும் பயனழிப்பு முத்திரையும் (cancellation stamp) ஒன்றாகவே இடப்படுகின்றன. இவ்வேளைகளில், அஞ்சல்குறி மட்டுமோ அல்லது அஞ்சல்குறியும் பயனழிப்புக் குறியும் இடம்பெறும் ஒரே முத்திரையோ பயனழிப்பதற்குப் பயன்படும். அஞ்சல் குறியீடுகளைக் கையால் அல்லது இதற்கான பொறிகளைப் பயன்படுத்தி இடுவர். இறப்பர் முத்திரைகள், உருளைகள், மைத்தாரைகள் என்பன அஞ்சல்குறிகளை இடுவதற்குப் பயன்படும் கருவிகள். அண்மைக்காலத்தில் எண்ம அஞ்சல்குறிகள் பயன்படுகின்றன. பல வேளைகளில் அஞ்சற்குறிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் வருமான வரி விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்ட தேதியாக அஞ்சல்குறியில் காணப்படும் தேதி எடுத்துக்கொள்ளப்படுவது உண்டு. முதல் அஞ்சல்குறியை ஆங்கிலேய அஞ்சலதிபர் நாயகமான என்றி பிசப் (Henry Bishop) என்பவர் 1661 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தினார். அஞ்சல் காவுனர்கள் அஞ்சல்களை எடுத்துச் செல்வதைத் தாமதப்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக இக் குறியில் தேதியும், மாதமும் மட்டும் குறிக்கப்பட்டிருந்தன. 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தேதி, மாதம் என்பவற்றுடன் அவ்வஞ்சல்களைப் பெற்றுக்கொண்ட அல்லது அவற்றைக் கொண்டு செல்வதில் ஈடுபட்ட அஞ்சல் நிலையத்தின் பெயரும் கொண்ட பல அஞ்சல் குறிகள் அஞ்சல்களில் இடப்பட்டன. குறைந்த அளவிலாயினும் தற்காலத்திலும் இவ்வழக்கம் உள்ளது. ஏறத்தாழ எல்லாத் தற்கால அஞ்சல்குறிகளிலும், தேதியும் இடமும் இடம்பெறுகின்றன. எனினும் சில விதிவிலக்குகளும் உள்ளன. எடுத்துக்காட்டாக நியூசிலாந்து அஞ்சல் அஞ்சல்குறிகளில் இடத்தின் பெயரைக் குறிப்பதைத் தவிர்க்கப்போவதாக 2004 ஆம் ஆண்டில் அறிவித்தது. எனினும், அக்குறிகளில் காணும் மூன்று இலக்க அடையாளத்திலிருந்து குறியிடப்பட்ட இடத்தை அறிந்துகொள்ள முடியும். பலவகையான அஞ்சற்குறிகளுள், தொடர்வண்டி அஞ்சலக அஞ்சல்குறிகள், கடல்சார் அஞ்சல்குறிகள் என்பவையும் குறிப்பிடத்தக்கவை. போர்க் காலங்களில் கடற்படைக் கப்பல்களில் இடப்பட்ட அஞ்சல்குறிகளில் வழக்கத்தைவிடக் குறைவான தகவல்களே இருந்தன. இது அக்கப்பல்களில் பாதை பற்றிய தகவல்களை எதிரிகள் அறிந்து கொள்வதைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கை ஆகும். "தணிக்கை செய்யப்பட்ட அஞ்சல்குறிகள்" என்பனவும் இது போன்ற நோக்கத்தைக் கொண்டவையே. இவற்றில் ஏற்கனவே இடப்பட்ட அஞ்சல் குறிகளில் இருக்கும் தகவல்கள் கருநிற மையிட்டு அழித்திருப்பர். பொதுவாக அஞ்சற்குறிகள் அரசுசார்பான அல்லது அரசினால் அதிகாரம் அளிக்கப்பட்ட அமைப்புக்களினால் அல்லது அவற்றினால் அதிகாரம் அழிக்கப்பட்ட முகவரகங்களினால் இடப்படுவதே உலகெங்கிலும் வழக்கமாக உள்ளது. எனினும் சில நாடுகளில், சிறப்பு அனுமதி பெற்று அஞ்சல் அனுப்புபவர்களே தமது அஞ்சற்குறிகளை இட்டுக்கொள்ளும் முறைகளும் உள்ளன. இது ஐக்கிய அமெரிக்காவில் அனுப்புனர் அனுமதி அஞ்சல்குறி (Mailer's Permit Postmark) என வழங்கப்படுகிறது. முதன்முதலில் ஐக்கிய இராச்சியத்தில் பென்னி பிளாக் என்னும் அஞ்சல்தலையுடன் கூடிய அஞ்சல் முறைமையை அறிமுகப்படுத்தியபோது கருநிற அஞ்சல்தலைகளின்மீது தெளிவாகத் தெரிவதற்காக சிவப்பு நிற மையைப் பயன்படுத்தினர். இது வெற்றியளிக்காததால், கறுப்பு நிற மையைப் பயன்படுத்துவதற்காக அஞ்சல்தலைகளைக் கறுப்பு அல்லாத பிற நிறங்களில் வெளியிட்டனர். பொது வாகத் தற்கால அஞ்சல்குறிகளுள் பெரும்பாலானவற்றில் கருநிற மையையே பயன்படுத்துகின்றனர். இதற்கு அடுத்தபடியாகச் சிவப்பு நிற மையையும் காணமுடியும். சிலவேளைகளில், குறிப்பாகப் படங்களுடன்கூடிய அஞ்சல்குறிகளுக்குப் பிற நிற மைகளும் பயன்படுவது உண்டு. சிறப்பு அல்லது அரிய அஞ்சற்குறிகள் அவற்றைக் கொண்டுள்ள அஞ்சல் தலைகள் அல்லது கடித உறைகளுக்குக் கூடிய பெறுமதியைக் கொடுக்கக்கூடியன. வழமையான அஞ்சல்குறிகளுக்குப் புறம்பாக முதல்நாள் உறைகளில் இடப்படும் அஞ்சல்குறிகள் கூடிய பெறுமதி கொண்டவை. இவற்றைவிட நிகழ்வுகளை நினைவு கூரும் வகையிலான படங்களுடன் கூடிய அஞ்சற்குறிகள், விளம்பர நோக்கம்கொண்ட அல்லது மக்களுக்குச் சில விடயங்களை அறிவிக்கும் "குறிக்கோள் தொடர் அஞ்சற்குறிகள்" என்பனவும் இவ்வாறான சிறப்பு அஞ்சற்குறிகள் ஆகும். அஞ்சலட்டை அஞ்சலட்டை என்பது தகவல்களை எழுதி, உறை எதுவும் இல்லாமலேயே சேரவேண்டியவருக்கு அஞ்சல் மூலம் அனுப்புவதற்கான செவ்வக வடிவத்தில் வெளியிடப்படும் தடித்த தாள் அல்லது மெல்லிய அட்டை ஆகும். இதை அஞ்சல் மூலம் அனுப்புவதற்கான அஞ்சல் கட்டணம், உறையில் இட்டு அனுப்பும் கடிதங்களுக்கு ஆகும் கட்டணத்தை விடக் குறைவு. சில அஞ்சல் அட்டைகளில் அஞ்சல் கட்டணம் செலுத்தப்பட்டதைக் குறிக்கும் அஞ்சல்தலை போன்ற வடிவம் அச்சிடப்பட்டிருக்கும். சில அட்டைகளில் இது இருக்காது. அனுப்புபவர் தனியாக அதற்குரிய அஞ்சல்தலையைத் தனியாக வாங்கி ஒட்டவேண்டும். கட்டணம் அச்சிடப்படாத அட்டைகளைத் தனியார் நிறுவனங்களோ, பிற அமைப்புக்களோ, தனியாட்களோகூட அச்சடித்துக்கொள்ள முடியும். ஆனால், அஞ்சல் கட்டணத்தோடு கூடிய அட்டைகளை அதிகாரம் அளிக்கப்பட்ட அஞ்சல்சேவை அமைப்புக்களே வெளியிடுகின்றன. ஐக்கிய அமெரிக்க அஞ்சல் சேவை தபாலட்டை, குறைந்தது 3-½ அங்குல உயரம் x 5 அங்குல நீளம் x .007 அங்குலத் தடிப்புக் கொண்டதாகவும், 4-¼ அங்குல உயரம் x 6 அங்குல நீளம் x .016 அங்குலத் தடிப்புக்கு மேற்படாத அளவு கொண்டதாகவும் உள்ள செவ்வக வடிவமானது என வரையறுக்கின்றது. எனினும் சில அஞ்சலட்டைகள் இவ்வரையறைகளில் இருந்து விலகியும் காணப்படுகின்றன. பிலடெல்பியாவைச் சேர்ந்த ஜான் பி. சார்ல்ட்டன் (John P. Charlton) என்பவர் 1861 ஆம் ஆண்டில் அஞ்சலட்டைக்குக் காப்புரிமை பெற்றுகொண்டார். இவ்வுரிமையை அவர் எச். எல். லிப்மன் என்பவருக்கு விற்றார். "லிப்மனின் அஞ்சலட்டை" என்னும் பெயரில் அழகூட்டப்பட்ட கரைகளுடன் கூடிய அஞ்சலட்டைகளை இவர் வெளியிட்டார். 9 ஆண்டுகளுக்குப் பின்னர் ஐரோப்பிய நாடுகளும் அஞ்சலட்டைகளை வெளியிடத் தொடங்கின. அமெரிக்காவின் முதல் அஞ்சல் அட்டை, மசச்சூசெட்சின் இசுப்பிரிங்ஃபீல்டில் இருந்த மோர்கன் கடித உறைத் தொழிலகத்தால் 1873ல் வெளியிடப்பட்டது. அந்த அஞ்சல் அட்டையில் சிக்காகோவில் நடைபெற்ற பல மாநிலக் கைத்தொழில் கண்காட்சியின் படம் அச்சிடப்பட்டிருந்தது. ஐக்கிய அமெரிக்க அஞ்சலகம் அஞ்சல்தலையிடப்பட்ட அட்டைகளை 1873 ஆம் ஆண்டில் வெளியிடத் தொடங்கியது. மக்கள் விரைவான குறிப்புக்களை இலகுவாக அனுப்புவதற்கான வழிகளை விரும்பியதன் காரணமாகவே அஞ்சலட்டைகள் வெளியிடப்பட்டன. அஞ்சலகம் மட்டுமே அஞ்சலட்டைகளை வெளியிட அனுமதிக்கப்பட்டது. இத் தனியுரிமை 1898 ஆம் ஆண்டு வரையில் நடைமுறையில் இருந்தது. 1998 ஆம் ஆண்டில் அமெரிக்கக் காங்கிரசு, தனியார் நிறுவனங்களும் அஞ்சல் அட்டைகளை வெளியிடும் வகையில் "தனியார் அஞ்சல் அட்டைச் சட்டமூலம்" என்னும் ஒரு சட்டமூலத்தை நிறைவேற்றியது. தொடக்கத்தில் ஐக்கிய அமெரிக்க அரசு, தனியார் நிறுவனங்கள் தமது அட்டைகளை "அஞ்சலட்டைகள்" என அழைப்பதைத் தடை செய்திருந்தது. இதனால் அவை "நினைவு அட்டைகள்" என அழைக்கப்பட்டுவந்தன. 1901 ஆம் ஆண்டில் இத்தடை நீக்கப்பட்டது. 1893ல் சிக்காகோவில் நடைபெற்ற "உலக கொலம்பியக் கண்காட்சி"யை விளம்பரப்படுத்துவதற்காக ஐக்கிய அமெரிக்காவில் அஞ்சலட்டைகள் வெளியிடப்பட்டன. சில காலத்தின் பின்னர், அமெரிக்க அரசு, ஐக்கிய அமெரிக்க அஞ்சலகத் திணைக்களம் மூலம் ஒரு சதம் பெறுமதி கொண்ட அஞ்சலட்டைகளைத் தனியாரும் வெளியிட அனுமதித்தது. அக்காலத்தில் அட்டைகளின் முன்பக்கத்தில் மட்டுமே அனுப்புபவர்கள் விடயங்களை எழுதலாம் என்னும் கட்டுப்பாடு இருந்தது. 1908 ஆம் ஆண்டிலேயே முகவரி எழுதும் பக்கத்திலும் தகவல்களை எழுத மக்கள் அனுமதிக்கப்பட்டனர். 1893 ஆம் ஆண்டின் கொலம்பியக் கண்காட்சியின் விளைவாக அரசு வெளியிட்ட அஞ்சல் அட்டைகளும், தனியார் வெளியிட்ட நினைவு அட்டைகளும் பெரும் வரவேற்புப் பெற்றன. கட்டிடங்களின் படம் அச்சிடப்பட்ட இவ்வாறான அட்டைகள் கண்காட்சியின்போது மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. 1908 ஆம் ஆண்டில் 677 மில்லியன்களுக்கு மேற்பட்ட அஞ்சலட்டைகள் அஞ்சல் செய்யப்பட்டிருந்தன. 1901 ஆம் ஆண்டில் அஞ்சல் அட்டை என்னும் பொருள் தரும் "Post Card" என்னும் சொல் அட்டையின் பின்புறத்தில் அச்சிடப்பட்ட அஞ்சல் அட்டைகள் வெளியிடப்பட்டன. இப்பக்கத்தில் முகவரி எழுதுவதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டது. பிற்காலத்தில் தகவல்களைப் பின்புறத்திலும் எழுத அனுமதிக்கப்பட்ட பின்னர் அட்டையின் பின்புறத்திலும் ஒரு பகுதியைப் பிரித்து அதற்காக ஒதுக்கினர். இது "பிரிக்கப்பட்ட பின்புற" அட்டைகள் எனப்பட்டன. எனவே பிரிக்கப்படாத பின்புறம் கொண்ட முந்தியகால அட்டைகள், "பிரிக்கப்படாத பின்புற" அட்டைகள் எனப்படுகின்றன. அஞ்சலட்டை வரலாற்றில் இவ்விரு வகை அட்டைகளின் பெயர்களும் அவை பயன்பாட்டிலிருந்த காலப்பகுதிகளைக் குறிக்கப் பயன்படுகின்றன. இவை "பிரிக்கப்படாத பின்புறக் காலம்", "பிரிக்கப்பட்ட பின்புறக் காலம்" எனப்படுகின்றன. பிரிக்கப்பட்ட பின்புறக் காலம் 1907 ஆம் ஆண்டு தொடங்கியது. இது அமெரிக்க அஞ்சலட்டைகளின் பொற்காலம் எனவும் குறிப்பிடப்படுவதுண்டு. முதலாம் உலகப் போர்க் காலத்தில் செருமனியில் அச்சிடப்பட்ட சிறந்த அட்டைகளின் இறக்குமதி தடைப்பட்டதுடன் இக் காலகட்டம் முடிவுக்கு வந்தது. 1907க்கும் 1910க்கும் இடைப்பட்ட காலத்தில் அஞ்சலட்டைக்குப் பெரும் வரவேற்பு இருந்தது. வட ஐக்கிய அமெரிக்காவில் நாட்டுப்புறப் பெண்களும், சிறிய நகரப் பெண்களும் அஞ்சல் அட்டைகளை விரும்பினர். 1916 ஆம் ஆண்டுக்கும் 1930 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலம் "வெண்கரைக் காலம்" எனவும், 1931 தொடக்கம் 1950 வரையான காலப்பகுதி "துணி அட்டைக் காலம்" எனவும் அழைக்கப்படுகின்றன. கடைசியாகக் குறிப்பிட்ட காலப்பகுதியில், அட்டைகளின் மேற்பரப்பு துணிகளைப் போன்ற பரப்புத்தன்மை கொண்டிருந்ததால் அதற்கு அப்பெயர் வழங்கப்பட்டது. அதற்குப் பின் வருவதும் இன்றுவரை நிலைத்திருப்பதுமான காலப்பகுதி "குரோம் காலம்" எனப்படுகிறது. இக் காலத்தைச் சேர்ந்த அட்டைகள் பளபளப்பான மேற்பரப்பைக் உடையனவாக இருந்தன. இவற்றின்மீது அச்சிடப்படும் படங்கள் நிற நிழற்படங்களை அடிப்படையாகக் கொண்டவை. இத்தகைய அட்டைகள் 1939 ஆம் ஆண்டு வாக்கிலேயே அறிமுகமாகி இருந்தபோதும் 1950க்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கின. 1894 ஆம் ஆண்டில் பிரித்தானியாவின் "ராயல் மெயில்" எனப்படும் அரச அஞ்சல் சேவை, அஞ்சல் மூலம் அனுப்பப்படக்கூடிய படம் தாங்கிய அஞ்சலட்டைகளை வெளியிடுவதற்குத் தனியாருக்கு அனுமதி வழங்கியது. முதல் இவ்வாறான அஞ்சல் அட்டைகள் எடின்பரோவைச் சேர்ந்த இசுட்டெவார்ட்சு என்னும் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. தொடக்கத்தில் இத்தகைய அஞ்சலட்டைகளில், புகழ்பெற்ற கட்டிடங்கள், இயற்கைக் காட்சிகள், பெயர்பெற்றவர்களின் நிழற்படங்கள் அல்லது வரைதல்கள் போன்றவை இடம்பெற்றன. நீராவித் தொடர்வண்டிகளின் அறிமுகத்துடன் போக்குவரத்து இலகுவானதாகவும் கட்டுப்படியானதாகவும் ஆனதால், கடற்கரைகள் சுற்றுலாவுக்கான முக்கிய இடங்களாக மாறின. இவை தமக்கேயுரிய நினைவுப் பொருட்கள் உற்பத்தித் துறையை உருவாக்கின. படந்தாங்கிய அஞ்சல் அட்டைகள் இவற்றுள் முக்கியமான இடத்தை வகித்தன. 1930களின் தொடக்கத்தில் கேலிச் சித்திரப் பாணியிலான "கண்ணியக் குறைவான" உள்ளடக்கங்களைக் கொண்ட அஞ்சலட்டைகள் வெளிவரத் தொடங்கின. இவற்றை அக்காலத்தில் மக்கள் விரும்பி வாங்கினர். அத்தகைய அட்டைகள் புகழின் உச்சியில் இருந்தபோது, ஆண்டொன்றுக்கு 16 மில்லியன் அட்டைகள் விற்கப்பட்டதாம். இவை பொதுவாக பாதிரிமார்கள், பருத்த பெண்கள், பரிதாபத்துக்குரிய கணவன்மார்கள் போன்ற பாத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட கீழ்த்தரமானவையாக இருந்தன. 1950களின் தொடக்கத்தில் புதிதாகத் தேர்வான பழமைவாதக் கட்சி அரசு, ஒழுக்கத்துக்குக் கேடு விளைவிப்பதாகக் கூறி இத்தகைய அஞ்சலட்டைகள் மீது நடவடிக்கை எடுத்தது. குறிப்பாக, டொனால்ட் மக்கில் என்னும் புகழ்பெற்ற அஞ்சலட்டைக் கலைஞர் அரசின் முக்கியமான இலக்காக இருந்தார். சற்றுத் தாராளத் தன்மை கொண்ட 60களில் இத்தகைய அஞ்சலட்டைகள் மீண்டும் ஓரளவு புத்துயிர் பெறத்தொடங்கின. இதை ஒருவகைக் கலை வடிவமாகவும் சிலர் கருதலாயினர். மீண்டும் இது ஒரு தொழிலாக உருவெடுத்தது. எனினும் 70களிலும், 80களிலும், இவ்வாறான அஞ்சலட்டைகளின், உள்ளடக்கத் தரமும், ஓவியத் தரமும் மிகவும் குறைந்துவிட்டதனாலும், அஞ்சலட்டைகளின் உள்ளடக்கம் குறித்த புதிய மனப்போக்குகளினாலும் இப்பாணி அஞ்சலட்டைகள் முற்றாகவே மறைந்துவிட்டன. தற்காலத்தில் சேகரிப்பாளரிடையே இவற்றுக்குப் பெரும் மதிப்பு உண்டு. பெரும்பாலும் இவை கிடைத்தற்கு அரிதாக உள்ளன. அரிய வகையிலானவை ஏலவிற்பனைகளில் கூடிய விலைக்கு வாங்கப்படுகின்றன. படா பள்ளத்தாக்கு நாப்பு பள்ளத்தாக்கு (அல்லது படா பள்ளத்தாக்கு), இந்தோனேசியா நாட்டில் உள்ள சுலாவெசி தீவின் நடுவில் உள்ள லோரே லிண்டு தேசிய வனத்தில் உள்ளது. இந்தப் பள்ளத்தாக்கு பதினான்காம் நூற்றண்டைச் சேர்ந்த பல கற்களால் ஆனா வடிவங்களைக் கொண்டுள்ளது. இந்த கற்களால் ஆன வடிவங்கள் கட்டப்பட்டதற்கான நோக்கமும் அதனை கட்டியவரும் தெரியவில்லை. கடித உறை கடித உறை என்பது ஒரு பொதி செய்யும் பொருள் ஆகும். இது தாள் அல்லது அட்டை போன்ற தட்டையான பொருள்களால், வேறு தட்டையான பொருள்களை உள்ளடக்கக் கூடியவாறு உருவாக்கப்படுகின்றது. இவற்றுள் கடிதம், வாழ்த்து அட்டை மற்றும் இது போன்றவற்றை வைத்து மூடி அனுப்புவது வழக்கம். வழமையான கடித உறைகள், சாய்சதுரம், குறுங்கைச் சிலுவை, பட்டம் ஆகிய வடிவங்களில் வெட்டப்பட்ட தாள்களிலிருந்து செய்யப்படுகின்றன. மேற்படி வடிவத் தாள்களை உரிய முறையில் மடித்து வேண்டிய விளிம்புகளைச் சேர்த்து ஒட்டும்போது செவ்வக வடிவிலான கடித உறைகள் கிடைக்கின்றன. 1876 ஆம் ஆண்டில் இர்வின் மார்ட்டின் என்பார் "எழுதுபொருள் விற்பனையாளர் கையேடு ஒன்றை வெளியிட்டார். இவர் நியூ யார்க்கில் இருந்த சாமுவேல் ரெயினர் அண்ட் கம்பனி என்னும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரே முதன் முதலில் கடித உறைகளுக்கான வணிக அளவுகளை உருவாக்கியவர். இந்த அளவுகளுக்கு அவர் 0 தொடக்கம் 12 வரை எண்ணிட்டு இருந்தார். முன் குறிப்பிட்ட வடிவங்களில் வெட்டப்பட்ட தாள்களைப் பயன்படுத்திக் கடித உறைகளை உருவாக்கும்போது கடைசியாக மடித்து ஒட்டுவதற்காக விடப்படும் மடிப்பு நீளப் பக்கத்தில் அல்லது அகலப் பக்கத்தில் இருக்கலாம். இவ்வாறு இரண்டு வகையாகவும் செய்யப்படும் உறைகள் வெவ்வேறு தேவைகளுக்கு வசதியாக அமைகின்றன. உள்ளடக்க வேண்டிய பொருளை வைத்துக் கடைசி மடிப்பை மடித்து அது பிற மடிப்புக்களுடன் பொருந்தும் இடத்தில் பிசின் கொண்டு ஒட்டுவது வழக்கம். சில வேளைகளில் கடைசி மடிப்பை ஒட்டாமல், உட்புறமாகச் செருகி மூடுவதும் உண்டு. இவ்வாறு ஒட்டாமல் அனுப்பப்படும் அஞ்சல்களைக் குறைந்த கட்டணத்தில் அனுப்ப முடியும். வாழ்த்து அட்டைகள், அச்சிட்ட அறிவித்தல்கள் முதலியவற்றை இவ்வாறு மூடாமல் அனுப்புவது உண்டு. "சாளரக் கடித உறை" என்னும் ஒருவகைக் கடித உறையில் அதன் முன் புறத்தில் செவ்வக வடிவத்தில் ஒரு பகுதி வெட்டப்பட்டு இருக்கும். உள்ளே வைக்கப்படும் கடிதத்தில் அழுதப்பட்டிருக்கும் பெறுனரின் முகவரியை இதனூடாகப் பார்ப்பதற்காகவே இந்த ஒழுங்கு. இதன் மூலம், அனுப்புபவர் பெறுனரின் முகவரியை மீண்டும் உறையின் மீது எழுதுவதைத் தவிர்க்கலாம். பெருமளவில் கடிதங்களை அனுப்பும் வங்கிகள் போன்ற நிறுவனங்கள் இவ்வாற உறைகளைப் பயன்படுத்துகின்றன. உள்ளிருக்கும் கடிதங்களைப் பாதுகாப்பதற்காக, வெட்டப்பட்ட பகுதியை மூடி ஒளிபுகும் அல்லது ஒளி கசியவிடும் தாளை ஒட்டுவது வழக்கம். அமெரிக்கசு எஃப் கலகன் என்பார் முதலில் 1901 ஆம் ஆண்டில் இவ்வுறையை வடிவமைத்து, அடுத்த ஆண்டில் இதற்கான காப்புரிமையைப் பெற்றார். 1905ல் ஐரோப்பாவில் இது போன்ற இன்னொரு முறை கண்டுபிடிக்கப்பட்டது. இதில் கடித உறையின் ஒரு குறிப்பிட்ட பகுதியில், சூடான எண்ணெயை ஊறச் செய்து அப் பகுதியூடாக உள்ளே எழுதப்பட்ட முகவரி தெரியும் அளவுக்கு ஒளி கசியக்கூடியதாக ஆக்குவர். கடித உறையொன்றில் இரண்டு பக்கங்கள் உள்ளன. பொருத்துக்கள் எதுவும் இல்லாத பக்கம் "முன்பக்கம்" என்றும், பொருத்துக்களுடன் கூடிய பக்கம் "பின் பக்கம்" எனவும் கூறப்படும். கடித உறை செய்யப்படும் போதும், பின்னர் அதனை மூடி ஒட்டும்போதும் மடிக்கப்படும் பகுதிகள் மூடிகள் (flaps) எனப்படும். பொதுவான கடித உறைகளில் மூன்று விதமான மூடிகள் காணப்படுகின்றன. இவை "கீழ் மூடி", "பக்க மூடி", "மேல் மூடி" என்பனவாகும். ஒரு உறையில் மேல் மூடி கீழ் மூடி என்பன தலா ஒவ்வொன்று இருக்கும். பக்க மூடிகள் இரண்டு இருக்கும். கீழ் மூடியும் பக்க மூடிகளும் உற்பத்தியின்போதே மடித்து ஒட்டப்பட்டிருக்கும். மேல் மூடி திறந்து இருக்கும். உறையைப் பயன்படுத்துபவர்கள் வேண்டியவற்றை உள்ளே வைத்தபின் மடித்து ஒட்டுவார்கள். மூடிகள் மடிக்கப்படும் இடம் மடிப்புகள் எனப்படுகின்றன. ஒவ்வொரு மூடிக்கும் ஒரு மடிப்பு இருக்கும். மூடியின் பெயருக்கு ஏற்றாற்போல் மடிப்புக்களும் "மேல் மடிப்பு", "கீழ் மடிப்பு", "பக்க மடிப்பு" எனப்படுகின்றன. ஏதாவது இரண்டு மூடிகள் ஒன்றுடன் ஒன்று பொருந்தி ஒட்டப்பட்டிருக்கும் இடம் "பொருத்து" ஆகும். மேல் மடிப்புக்கும், கீழ் மூடியின் மேல் விளிம்புக்கும் இடைப்பட்ட பகுதி "கழுத்து" எனப்படும். கழுத்துப் பகுதியோடு பொருந்திவரும் பக்க மூடிகளின் பகுதி "தோள்" என்று அழைக்கப்படுகின்றது. கடித உறைகள் எந்த அளவிலும் எவ்வடிவிலும் செய்யப்படலாம். எனினும், பொதுவாக விற்பனைக்கு இருக்கும் உறைகள் குறிப்பிட்ட சில பாணிகளிலும் அவ்வப் பாணிகளுக்கு உரிய தரப்படுத்திய அளவுகளிலும் காணப்படுகின்றன. பொதுப் பயன்பாட்டுக்கு உரிய கடித உறைகள் அவற்றின் மூடிகளின் வடிவம், பொருத்துக்களின் வகை என்பவற்றைப் பொறுத்து ஆறு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன: பன்னாட்டு அஞ்சல் தரவிதிகளின்படி ஒரு கடிதம் அனுப்புவதற்கான உறை குறைந்தது 90 x 140 சமீ அள்வு இருக்கவேண்டும். அஞ்சலட்டை, வான்தாள்கடிதங்கள் என்பவற்றின் நீளம் அவற்றின் அகலத்தை 2 இன் வர்க்கமூலத்தால் பெருக்கிவரும் அளவுக்குச் சமமாக இருக்க வேண்டும். இத் தேவைகள் அஞ்சல்களைத் தரம் பிரிப்பதை இலகுவாக்குவதற்காக ஏற்பட்டவை. இதே விதிகள், கடித உறைகளில், முகவரி, அஞ்சல்தலைகள், தரம்பிரிக்கும் பொறிகள் இடும் குறிகள் என்பவற்றுக்கான இடங்களையும் ஒதுக்கியுள்ளது. அஞ்சல் குறிகளைப் பயன்படுத்துன் நாடுகள் சிலவற்றில், இந்த அஞ்சல் குறிகள் எல்லாக் கடித உறைகளிலும் ஒரே இடத்தில் எழுதப்படுவதை உறுதி செய்வதற்காக கடித உறைகளில் அவற்றை எழுதுவதற்கு உரிய கோடுகள் அல்லது பெட்டிகளை அச்சிட்டு விற்பனை செய்கிறார்கள். ஆசுத்திரேலியாவின் அஞ்சல்துறை, அஞ்சல் குறிகளை எழுதுவதற்காக உறைகளின் கீழ் வலதுபக்க மூலையில், செம்மஞ்சள் நிறத்தில் நான்கு பெட்டிகளை அச்சிடுமாறு ஊக்குவிக்கிறது. இது எழுத்துக்களை அடையாளம் காணும் மென்பொருட்களைப் பயன்படுத்தித் தரம்பிரிப்பதற்கு இலகுவாக உள்ளது. பன்னாட்டுத் தரம் ஐ.எசு.ஓ 269, 'ஐ.எசு.ஓ 216 குறிப்பிடும் தாள்களின் தர அளவுகளுடன் பயன்படுத்துவதற்காக உறைகளின் பல்வேறு தர அளவுகளை வரையறுக்கின்றது. காரை சுந்தரம்பிள்ளை முனைவர் காரை செ.சுந்தரம்பிள்ளை (மே 20, 1938 - செப்டம்பர் 21, 2005) ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். யாழ்ப்பாண மாவட்டம், காரைநகரின் களபூமி என்ற ஊரில் செல்லர், தங்கம் ஆகியோருக்கு பிறந்த சுந்தரம்பிள்ளை ஆரம்பக் கல்வியை ஊரி காரைநகர் தமிழ்க் கலவன் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியிலும் உயர்நிலைக் கல்வியை சுழிபுரம் விக்டோரியா கல்லூரியிலும் பயின்றார். கொழும்பு அக்குவெனெஸ் பல்கலைக்கழகக் கல்லூரியில் கலைமாணி, கல்வித்துறையில் முதுமாணிப் பட்டத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றார். தமிழ் மொழிப் பயிற்சியில் முக்கிய ஆசான்களாக பண்டித வித்வான் க.கி.நடரஜன், வித்துவான் பொன் முத்துக்குமாரன், வித்துவான் க. வேந்தனார், பண்டிதர் ஆ.பொன்னுத்துரை ஆகியோரும், தமிழ் இலக்கண இலக்கியத்தில் தமிழ்த் தாத்தா கந்த முருகேசனார், ஆ.சபாரத்தினம் ஆகியோர் விளங்கினர். தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கில மொழி, சமஸ்கிருத மொழி, பாளி மொழி, சிங்கள மொழி ஆகியவற்றிலும் புலமை பெற்றார். 1960 ஆம் ஆண்டில் இருந்து கொழும்பு, சென் யோசேப் கல்லூரி, கேகாலை, ஹெம்மாதகம முஸ்லிம் மகா வித்தியாலயம், கே/மாவனல்ல சாகிரா கல்லூரி, யாழ்ப்பாணம், தேவரையாளி இந்துக் கல்லூரி, ஒஸ்மானியாக் கல்லூரி, யாழ் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியராகவும், காரைநகர் இந்துக் கல்லூரியில் அதிபராகவும், பின்னர், பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆகியவற்றில் விரிவுரையாளராகவும், தலைவாக்கெலை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆகியவற்றில் அதிபராகவும் பணியாற்றினார். இவற்றைவிட திறந்தவெளிப் பல்கலைக்கழகம் (உளவியல்), யாழ் பல்கலைக்கழகம் (நாடகமும் அரங்கியலும்), யாழ்ப்பாணக் கல்லூரி (இந்து நாகரிகம்) ஆகியவற்றில் இடைவரவு விரிவுரையாளராகவும் பணியாற்றினார். மொத்தம் 37 ஆண்டுகள் ஆசிரிய சேவையில் பணியாற்றினார். இவற்றுள் 15 ஆண்டுகள் கல்வி நிருவாக சேவையும் அடங்கும். புகைவண்டி என்ற இவரது முதலாவது கவிதை அழ. வள்ளியப்பாவில் பூஞ்சோலை என்ற இதழில் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து 'பூஞ்சோலை'யிலும் 'கண்ணன்' எனும் சிறுவர் சஞ்சிகையிலும் பல கவிதைகள் வெளிவரத்தொடங்கின. அதனைத் தொடர்ந்து இலங்கைப் பத்திரிகைகளிலும் கவிதைகளும் கட்டுரைகளும் வெளிவரலாயின. யாழ்ப்பாண மாநகரசபை மன்றக்கீதத்தை எழுதியதற்காக இவருக்குக் கேடயமும், சான்றிதழும், பொற்கிழியும் வழங்கப்பட்டன. பொற்கிழியை எரிந்த யாழ் நூலகத்திற்கு அன்பளிப்புச் செய்தார். இது தவிர யாழ் போதனா வைத்தியசாலையில் அமைந்துள்ள தாதியர் பயிற்சிக் கல்லூரிக் கீதமும் இவரால் ஆக்கப்பட்டதாகும். புளியங்குளம் புளியங்குளம் வவுனியாவில் இருந்து வடக்காக யாழ்வீதியில் (A9) ஏழத்தாழ 24 கி.மீ தூரத்திலுள்ள இடமாகும். இப்பகுதியூடாக ஒருவீதி மாங்குளத்திற்கும் மற்றைய வீதி கிழக்காக நெடுங்கேணியிற்கும் அப்பகுதியூடாகத் தண்ணீர் ஊற்று முள்ளியவளைக்கும் செல்கின்றது. தற்போதய யுத்தத்தில் இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் மீளக்குடியமரவில்லை. இப்பகுதியில் கண்ணிவெடிகள் தொடர்பான ஆய்வினை ஹொரைசோன் என்கின்ற இந்திய கண்ணிவெடியகற்றும் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். பின் தொடரும் நிழலின் குரல் (நூல்) பின் தொடரும் நிழலின் குரல் ஜெயமோகன் எழுதிய மூன்றாவது புதினம். தமிழினி பதிப்பக வெளியீடாக 1999 ஆம் ஆண்டு இது வெளிவந்தது. ஏறத்தாழ எழுநூறு பக்கங்கள் கொண்டது இந்த நாவல். இது ஓர் அரசியல் நாவல்; சோவியத் ஒன்றியத்தில் கம்யூனிசம் வீழ்ச்சி அடைந்து அந்த நாடு சிதறியதன் பின்னணியில் அரசியலுக்கும் அறத்துக்கும் இடையேயான உறவை விவாதிக்கிறது. கரு அருணாச்சலம் தொழிற்சங்க ஊழியன். சங்கத்தில் இருந்து பழைய ஸ்டாலினிஸ்டுகளை கட்சி களைகிறது. அதற்கு அருணாச்சலத்தை கருவியாக்குகிறது. அவன் தன் குருவான கெ.கெ.எம் என்பவரை வெளியேற்றுகிறான். அந்தக்குற்ற உணர்ச்சியால் அவன் ஒரு நூல் எழுத ஆரம்பிக்கிறான். அது கட்சியில் இருந்து கெ.கெ.எம் காலகட்டத்தில் வெளியேற்றப்பட்டு மறைந்துபோன வீரபத்ரபிள்ளை என்ற பழைய தோழரைப்பற்றிய நூல் அப்போதுதான் வீரபத்ரபிள்ளை ஏன் விலக்கப்பட்டார் என தெரிகிறது. 1935ல் சோவியத் ருஷ்யாவால் கொல்லப்பட்ட புகாரின் என்ற கம்ய்டூனிஸ்டுத்தலைவரைப்பற்றி எழுதியதனால்தான் அவர் விலக்கப்பட்டார். அருணாச்சலத்தை நூல் எழுதவேண்டாம் என கட்சி எச்சரிக்கிறது. அவன் பிடிவாதமாக எழுதுகிறான். அருணாச்சலம் ஆழமான தார்மீகபிரச்சினைகளை அடைகிறான். ஒரு கருத்தியலை நம்பி கொலைகளை செய்யும் ஒருவன் பின்னர் அந்த கருத்தியலே பொய் என ஆனால் என்ன செய்வது? ஒரு கொள்கைக்காக பல லட்சம்பேர் செத்தபின் அக்கொள்கை முற்றிலும் பிழை என ஆனால் உயிர்களுக்கு யார் பதில் சொல்வது? கொஞ்சம்சம்கொஞ்சமாக மனநிலை பிறழ்வு அடையும் அருணாச்சலம் அந்த மனப்பிறழ்வுநிலையில் புகாரினையும் ஏசுவையும் கண்டடைகிறான். அந்த தத்துவக் கேள்விக்கு ஏசுவே பதில் சொல்கிறார் அவன் மனச்சிக்கல் அழிகிறது வரவேற்பு தமிழில் எழுதப்பட்ட அரசியல்நூல்களிலேயே தலையாயது என விமர்சகர் ராஜமார்த்தாண்டன் இந்நூலை குறிப்பிட்டிருக்கிறார் காடு (புதினம்) காடு ஜெயமோகன் எழுதிய ஐந்தாவது நாவல். இதை 2003-ல் தமிழினி பதிப்பகம் வெளியிட்டது. ஏறத்தாழ நாநூறு பக்கங்கள் கொண்ட நாவல் இது. மழைக்கால இளவெயில்போல வாழ்க்கையில் அபூர்வமாக வந்து உடனேயே இல்லாமலாகும் முதற்காதலை இக்கதையில் சொல்லியிருப்பதாக ஆசிரியர் சொல்கிறார். இதன் இரண்டாவது பதிப்பு இப்போது கிடைக்கிறது. காடு நாவலின் கதாநாயகன் கிரிதரன். இவன் அப்பா எதிலும் பிடிப்பில்லாத மனிதர். அம்மா மிகவும் பரபரப்பும் பதற்றமும் கொண்டவள். மகனை முன்னேற்றவேண்டும் என்பதற்காக தன் அண்ணாவிடம் அவனை ஒப்படைக்கிறாள். அண்ணா மலையில் காடுகளை வெட்டுவதை குத்தகை எடுத்துச் செய்துவருகிறார். அவரது மனைவி அழகானவள். அவளுக்கும் அந்த வீட்டில் வேலைசெய்பவருக்கும் தொடர்பு இருக்கிறது. அந்த தொடர்பில் பிறந்த மகள் அவருக்கு இருக்கிறாள். அவலட்சணமான பெண் அவள் கிரிதரன் மாமாவின் ஊழியனாக காட்டுவேலையை மேற்பார்வையிட காட்டுக்குச் செல்கிறான். அங்கே குட்டப்பன் என்ற ஒருவனை அறிமுகம்செய்துகொள்கிறான்.குட்டப்பன் காட்டைப்பற்றி எல்லாமே தெரிந்தவன். சாகஸக்காரன். மிகநகைச்சுவையாக பேசுவான். அவனைத்தவிர அங்கே ரெசாலம் குரிசு போன்றவர்களும் இருக்கிறார்கள் காட்டில் கிரிதரன் அய்யர் என்ற எஞ்சீனியரை சந்திக்கிறான். பேசிக்கொண்டே இருக்கும் இயல்புள்ள அய்யர் ஒரு அறிவுஜீவி. காட்டுக்கு வேலைக்கு வந்து காடு மீது காதல்கொண்டவர். அவரது தொடர்பால் கிரிதரன் இலக்கியம் இசை எல்லாவற்றையும் அறிகிறான் காட்டில் கிரிதரன் அழகான கரியநிறமுள்ள ஒரு பெண்ணைப் பார்க்கிறான். அவள் ஒரு ஆதிவாசிபெண்.நீலி என்று அவளுக்குப் பெயர். அவள்மேல் அவன் தீவிரமான காதல் கொள்கிறான். அவளைச் சந்திக்கச் சென்று இரவெல்லாம் காட்டில் அவள் வீட்டுமுன் நிற்கிறான். அவள் மெல்லமெல்ல அவனை விரும்புகிறாள் நீலியை ஒரு மலைதெய்வமாகிய நீலி அம்மனாகவே கிரிதரன் மயங்குகிறான். அவள்மேல் காதலும் அச்சமும் கலந்த உணர்ச்சியே அவனுக்கு இருக்கிறது. ஆகவே அவன் அவளை தீண்டுவதே இல்லை. இந்நிலையில் பெரும் மழை வருகிறது. மழையில் அவன் நீலியுடன் மலையுச்சிக்குச் சென்று குறிஞ்சி மலரை பார்க்கிறான். அந்த மலருக்கு அழகோ மணமோ இல்லை. அது 12 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் என்ற அபூர்வம் தவிர. அந்த மலரைப் பார்க்கும்போது ஏமாற்றம் ஏற்படுகிறது காட்டுக்குள் கடுமையான விஷக்காய்ச்சல் பரவுகிறது. காட்டில் இருக்கும் மிஷனரி டாக்டர் நோயாளிகளைக் காப்பாற்றுகிறார். ஊருக்குள் சென்று மருந்து வாங்கி வரும் கிரிதரன் அப்போது நீலி காய்ச்சலில் இறந்துவிட்ட சேதியை கேட்கிறான். அவன் மனம் உடைகிறான் அப்போது அவனுக்கு ஏற்கனவே அறிமுகமான புதிய எஞ்சீனியர் மேனனின் மனைவி அவனை தன் காமத்துக்கு பயன்படுத்திக்கொள்கிறாள். அவனது அந்த முதல் அனுபவம் நடக்கும்போது அவன் அந்த வீட்டுக்கு வெளியே நீலி அழுதுகொண்டு நிற்பதாக உணர்கிறான். இந்த இடத்தில் நாவல் முடிகிறது. ஆனால் கிரிதரன் முதிர்ந்து கிழவனாகி மகள் வீட்டுக்குச் செல்லும்போது அப்போது நாகரீக ஊராக ஆகிவிட்டிருந்த அந்த காட்டுப்பகுதியில் இறங்கி பார்க்கும்காட்சியில் கதை தொடங்குகிறது. நினைவுகள் முன்னும் பின்னும் கலந்து ஓடும் பாதையில் கதை செல்கிறது. கிரிதரன் அந்த உறவுக்குப் பின் காட்டைவிட்டு வந்து விடுகிறான். அதன்பின் வியாபாரம்செய்து தோற்கிறான்.வேணியை திருமணம் செய்து கசப்பான மணவாழ்க்கையை வாழ்கிறான். பலவகையான சரிவுகளுக்குப் பின்னர் அவன் ஒருவகையில் வாழ்க்கையில் சமனம் அடைகிறான். அவனது மொத்த வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்த நாட்கள் காட்டில் இருந்த அந்தச் சில நாட்கள் மட்டுமே. மிச்ச வாழ்நாள் முழுக்க அவன் அந்நாட்களை எண்ணி ஏங்கி ஏங்கி வாழ்ந்துகொண்டிருக்கிறான். பசுமை மாறாக் காட்டின் மிகஅழகான சித்திரத்தை உருவாக்கி அளிக்கும் நாவல் இது. அதற்காகவே இது விரும்பப்படுகிறது. வர்ணனைகள் மிகவும் புதியனவாகவும் நுட்பமான காட்சிகளை உருவாக்கக் கூடியனவாகவும் உள்ளன. மிருகங்களும் அழுத்தமான கதாபாத்திரங்களாக காட்டபட்டிருக்கின்றன. குறிப்பாக இதில் வரும் யானைகள் . குட்டப்பன் இந்நாவலின் உண்மையான கதாநாயகன் என்று சொல்பவர்கள் உண்டு ஜெயமோகன் நாவல்களில் அதிகமான வாசகர்க¨ள்க் கவர்ந்தது இதுதான். காரணம் இதில் உள்ள மென்மையான கவித்துவம் அழகர் குறவஞ்சி தமிழ் இலக்கியத்தில் அழகர் குறவஞ்சி என்பது இசை, நாடகத் தமிழில் தனிச்சிறப்பு பெற்ற குறவஞ்சி வகைகளில் ஒன்று. இலக்கியம், இசை இரண்டும் அமைந்த ஒன்று. இக்குறவஞ்சி நாடக ஆசிரியர் சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த கவிகுஞ்சர பாரதி. சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகியோரின் சமகாலத்தவர். இவரது படைப்புகளில் அழகர் குறவஞ்சி தனிச்சிறப்புப்பெற்றது. அழகர் குறவஞ்சியில் பாட்டுடைத்தலைவன் சோலைமலை மாலழகர், தலைவி மோகனவல்லி. இக்குறவஞ்சி வெண்பா, விருத்தம், கீர்த்தனம், சிந்து, திபதை, அடிமடக்குத்திபதை, கும்மிக்கண்ணிகள், ஓரடி கீர்த்தனம் முதலிய பிரிவுகளில் அமைந்துள்ளன. சொல் நயமான ஓசையின்பம் மற்றும் பொருட்செறிவு இப்படைப்பில் நிரம்பியுள்ளன. அத்துடன் எண்ணிலடங்காத உவமைகள், பழமொழிகள் உள்ளன. சிறப்பு மிகுந்த இந்நூலில் இசைக்கருவிகள் பெயர்களான வீணை, மத்தளம், தாளம், துந்தி, தம்புரு, மேளம், பேரி, முரசு, டமாரம், உடுக்கு, வேய், துடி முதலிய பெயர்கள் காணப்படுகின்றன. நாட்டுப்பாடல் இசையான நொண்டிச் சிந்து, கும்மி, திபதை முதலியவை மிக்க சுவை வாய்ந்த இசையமைப்புக் கொண்டவை. கே. டி. காந்திராசன் இந்திய-மரபு ஓவியமீட்டெடுப்பில் முக்கிய பணிகளைச் செய்து வருபவர் கே.டீ.காந்திராசன் . இவர் ஒரு ஓவியர் , கலை, வரலாற்று ஆய்வாளர்,தொல்பொருள் கண்டறிவாளர். இந்தியாவின் கோவில் நகரங்களிலும் மலைப்பகுதிகளிலும் குகைப் புறங்களிலும் உள்ள சுவரோவியங்களையும் பாறை ஓவியங்களையும் ஆதி பழங்குடி ஓவியங்களையும் நிறைய மீட்டெடுப்பு செய்துள்ளார். விழுப்புரத்திலிருந்து 35 கி.மீ. தொலைவில் திருக்கோயிலூருக்கு அருகிலுள்ள கொல்லூரில் ஒரு பெரிய டாவுல்மன் அமைப்பைக் கண்டறிந்துள்ளார் காந்திராசன். பாறை ஓவியங்கள் (petroglyph) வரையப்பட்டுள்ள டாவுல்மன் தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே இரண்டாவது முறை. கொல்லூர் டோல்மனில் மொத்தம் நான்கு பாறை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டம் மோயாறு நதியை ஒட்டிய கள்ளம்பாளையத்தின் அருகிலுள்ள பேருதொரப்பட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட டோல்மன் வகை நினைவுக்கல்லில் பாறை ஓவியங்கள் செதுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. கி.மு. 1000 முதல் கி.மு.300 வரையிலான கற்கால கட்டத்தில் (megalithic period) செதுக்கப்பட்டதாகக் கருதப்படும் இந்த நினைவுக்கல் வட்ட வடிவத்தில் இருப்பது சிறப்பு; பொதுவாக டோல்மன்கள் செவ்வக வடிவில் உள்ளவை. இது ஒரு அரிய, அசாத்தியமான கண்டுபிடிப்பு என்று கூறுகிறார் இந்த மீட்பு-ஆராய்ச்சியைத் தலைமையேற்று நடத்தி வரும் கே.டி.காந்திராஜன். பரோனியல் கடித உறை பரோனியல் கடித உறை என்பது பல கடித உறை வகைகளுள் ஒன்று. இக் கடித உறை ஏறத்தாழச் சதுர வடிவம் கொண்டது எனினும், முழுமையான சதுர வடிவம் அல்ல. ஒட்டுவதற்கான இதன் மூடி உறையின் நீளப் பக்கத்தில் அமைந்திருக்கும். இம்மூடி முக்கோண வடிவில் கூரான முனையுடன் காணப்படும். இவ்வுறையின் பொருத்துக்கள் மூலைவிட்டப் பொருத்து வகையைச் சேர்ந்தவை. "பரோனியல்" என்னும் பெயர் ஐரோப்பிய நாடுகளில் ஒரு குறிப்பிட்ட தரத்தில் உள்ள பிரபுக்களைக் குறிக்கும் "பாரன்" என்னும் சொல்லில் இருந்து உருவானது. இதனால் இவ்வகை உறைகள் உயர் சமூக மதிப்புக்குரிய தேவைகளுக்கே பயன்படுத்தப் பட்டதாகச் சொல்லப்படுகின்றது. பரோனியல் கடித உறைகள் பொதுவாக முறையான அழைப்பிதழ்கள், அறிவித்தல்கள், வாழ்த்து அட்டைகள் போன்றவற்றை வைத்து அனுப்புவதற்குப் பயன்படுகின்றது. இது சில வேளைகளில் உள்ளுறை, வெளியுறை என இரண்டு உறைகள் ஒன்றுள் இன்னொன்று வைக்கத்தக்க வகையில் உற்பத்தி செய்யப்படுவது உண்டு. இதற்காக உள்ளுறை, வெளியுறையிலும் சற்றுச் சிறிதாகச் செய்யப்படும். இவ்வகைக் கடித உறைகள் பல்வேறு அளவுகளைக் கொண்டனவாகவும், வேறுபட்ட அளவு விகிதங்களைக் கொண்டனவாகவும் செய்யப்படுகின்றன. இவ் வேறுபாடுகளுக்கு பெயர்கள் அல்லது எண் குறியீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. 4 பரோனியல், 5 பரோனியல், 5.5 பரோனியல், 6 பரோனியல், கிளாட்சுட்டன், அசுட்டர், லீ என்பன இவற்றுட் சிலவாகும். மேல் தரப்பட்டுள்ள அளவுகள் அனைத்தும் அங்குலத்தில் உள்ளன. இவை ஐக்கிய அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் அளவுகள் ஆகும். இவற்றுள் "கிளாசுட்டன்" மிகவும் சிறியது. அஞ்சல் செய்வதற்கு இது பயன்படுத்தப்படுவது இல்லை. உலகத் தமிழாராய்ச்சி மாநாடு உலகத் தமிழாராய்ச்சி மாநாடு என்பது உலகில் பல்வேறு நாடுகளில் பணியாற்றி வரும் தமிழறிஞர்களை ஒருங்கிணைத்து தமிழ் ஆராய்ச்சியை ஒருமுகப்படுத்தவும், வளப்படுத்தவும் தமிழறிஞர்கள் கூடி நடத்தும் உலக மாநாடு ஆகும். தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் முயற்சியால் 1964-ம் ஆண்டு, தில்லியில் ஆரம்பிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி மன்றம் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் மாநாடு நடத்த வேண்டுமென்று வரையறுத்துக் கொண்டது. 1964 சனவரியின் ஆரம்பத்தில் புதுதில்லியில் நடந்த 26வது அகில உலகக் கீழைத்தேயக் கல்வி ஆய்வாளர் மாநாட்டின்போதுதான் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம் உருவாகியது. தமிழ், திராவிட ஆய்வுகளில் ஈடுபாடுள்ளவரும் மாநாட்டிற் கலந்து கொண்டவர்களுமான இருபத்தாறு பேர், பேராசிரியர் தனிநாயக அடிகளாரும் பேராசிரியர் வ. ஐ. சுப்பிரமணியமும் விடுத்த அழைப்பினை ஏற்றுச் ஜனவரி 7 ஆம் நாள் உத்தியோகப் பற்றற்ற முறையிலே புதுதில்லியிற் கூடி அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தினை தோற்றுவித்தனர். தனிநாயக அடிகளார் அப்பொழுது (1961-1970) மலேசியப் பல்கலைக்கழகத்திலே இந்தியக் கல்வியாய்வுகள் துறையிலே தலைமை வகுத்துக் கொண்டிருந்தார். அவர் ஏற்கனவே தனது 'தமிழ் கல்ச்சர்' எனும் இதழ் மூலம் உலகம் முழுவதிலுமுள்ள தமிழ், திராவிட ஆர்வலரை ஒன்றுசேர்க்க முற்பட்டு ஓரளவு வெற்றியும் கண்டவர். அவர் மலேசிய அரசு தமிழ்ச் சமூகத்திற்கு அளித்த ஆதரவின் துணையோடு பிரம்மாண்டமான முறையிலே முதல் மாநாடு கோலாலம்பூரிலே 1966 ஏப்ரல் 16-23 தேதிகளில் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் அன்று தமிழியல் ஆய்வில் பங்கெடுத்த பல்லின ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் கலந்து சிறப்பித்தனர். 1967 இல் சி.என்.அண்ணாத்துரை தலைமையிலான திமுக வெற்றிபெற்றுத் தமிழ்நாட்டிலே அரசமைத்தது. எம். பக்தவத்சலம் முன்பு கோலாலம்பூரிலே விடுத்த அழைப்பினை ஏற்றுச் சென்னையிலே திமுக இரண்டாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை நடத்த முன்வந்தது. அது 1968 ஆம் ஆண்டு சனவரி 3-10ஆம் நாட்களில் சென்னையிலே நடந்தது. அதேகாலத்திலே 'பூம்புகார்' பொதுமக்கள் விழாவும் முக்கியத்துவம் பெற்றது. பேராசிரியர் ஜீன் பிலியோசா பாரிசிலே மூன்றாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை 1970 இலே நடத்தினார். முன்னைய இரு மாநாடுகளுக்கும் பாரீஸ் மாநாட்டிற்கும் பெரும் வித்தியாசம். சலசலப்பின்றி வழமை போல் நடைபெறும் கருத்தரங்கு போன்று அது அமைந்திருந்தது. இம்மாநாடு 1970 சனவரி 15-18 காலப்பகுதியில் நடைபெற்றது. இம்மூன்று மாநாடுகளும் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை திட்டமிட்டபடி நடைபெற்றன. 1972 இலே நான்காவது மாநாடு இலங்கையிலே நடைபெற வேண்டியிருந்தது. ஆனாலும் 1970 ஆம் ஆண்டில் ஐக்கிய முன்னணி என்ற சோசலிசக் கூட்டணி அரசு ஆட்சியமைத்த போது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மீண்டும் தழைத்து அரச ஆசிகளோடு வலம் வந்து கொண்டிருந்தவர்களை முகாமைச் சபையிலே சேர்த்துத் தமிழாராய்ச்சி மாநாட்டினை நடாத்த முடிவு கட்டினர். ஆனால் அத்திட்டம் தடம் புரண்டு போயிற்று. அரசு சார்பு பிரதிநிதிகள் கொழும்பில் மாநாட்டை நடத்தத் திட்டமிட்டனர். ஆனாலும் அரசின் பலத்த எதிர்ப்பின் மத்தியிலும் மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு பேராசிரியர் சு. வித்தியானந்தன் தலைமையிலான குழு தீர்மானித்து அதன் படி 1974 சனவரி 3-9 காலப்பகுதியில் மாநாட்டை யாழ்ப்பாணத்தில் வெகு விமரிசையாக நடத்தியது. மாநாடும் கருத்தரங்குகளும் நிறைவேறிய மறுநாள், சனவரி 10 ஆம் நாள், பரிசளிப்பும் விருந்தினருக்கு உபசாரமும் செய்ய ஒழுங்கான பொதுக்கூட்டத்தில் காவல்துறையினரும் குண்டர்களும் பொதுமக்களைத் தாக்கியதில் 11 பேர் கொல்லப்பட்டனர். முதலில் நடைபெற்ற 4 மாநாடுகள் தனிநாயகம் அடிகளாரின் முயற்சியால் நடைபெற்றவை. அவரது மறைவுக்குப் பிறகு, 5-வது மாநாட்டைத் தொடர்ந்து நடத்தப் போதிய வசதியில்லாமல் மன்றத்தின் வேகம் குறையைத் தொடங்கியது. பிற நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வரும் தமிழறிஞர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க முடியாததே இதற்குக் காரணமாகத் தெரிகிறது. ஐந்தாவது மாநாடு 7 ஆண்டுகளுக்குப் பிறகு 1981-ம் ஆண்டு சனவரி 4-10 இல் மதுரையில் நடத்தப் பெற்றது. பின்னர் கோலாலம்பூரில் 6-வது மாநாடு 1987 நவம்பர் 15-19 இலும், ஆப்பிரிக்காவில் மொரீசியசில் 7-வது மாநாடு 1989 டிசம்பர் 1-8 இலும், எட்டாவது மாநாடு தஞ்சாவூரில் 1995 சனவரி 1-5 இலும் நடத்தப் பெற்றன. எட்டாவது மாநாடு இடம்பெற்று 14 ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையில் ஒன்பதாவது மாநாடு பெப்ரவரி 2010 இல் கோவையில் நடத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி சென்னை தலைமைச் செயலகத்தில் 2009 செப்டம்பர் 17 ஆம் நாள் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் அறிவித்தார். பின்னர் உலகத் தமிழராய்ச்சி மாநாட்டை நடத்தப் போதிய கால அவகாசம் இல்லை என்று கூறி உலகத் தமிழாராய்ச்சி மன்றம் ஒப்புதல் தர மறுத்து விட்டது. இதனால் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்று பெயர் மாற்றப்பட்ட ஒரு மாநாடு 2010 சூலையில் கோவையில் நடைபெற்றது. அதிகாரபூர்வமான 9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 2015 சனவரி 29 முதல் பிப்ரவரி 1 வரை மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் நடைபெற்றது. கோலாலம்பூரில் உள்ள மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலேசிய உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை ஆகியவை கூட்டாக ஒழுங்கு செய்திருந்தன. இம்மாநாட்டுக்கான கருப்பொருள் "உலகமயக் காலக்கட்டத்தில் தமிழாய்வுக்கு வளம் சேர்த்தல்" என்பதாகும்.. பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 2019 சூலை 3 முதல் 7 வரை ஐக்கிய அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகத் தமிழாராய்ச்சி மன்றம் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, சிகாகோ தமிழ்ச் சங்கம் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து இம்மாநாட்டை நடத்தவிருக்கின்றது. 2010 2010 (MMX) கிரெகோரியன் நாட்காட்டியில் ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும். சீன நாட்காட்டியில் 2010 பெப்ரவரி 14 முதல் 2011 பிப்ரவரி 2 வரை நீடித்த இவ்வாண்டு தங்கப்புலி ஆண்டு எனப்படுகிறது. பீ. எம். புன்னியாமீன் பீ. எம். புன்னியாமீன் (நவம்பர் 11, 1960 - 10 மார்ச் 2016) இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர், நூலாசிரியர், வெளியீட்டாளர், ஊடகவியலாளர் எனப் பல கோணங்களில் தமிழ் இலக்கியத்துக்குப் பங்காற்றியவர். இலங்கையின் மத்திய மலைநாட்டின் தலைநகர் கண்டி மாநகருக்கு அருகேயுள்ள உடதலவின்ன எனும் ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர் பீர் முகம்மது புன்னியாமீன். இவர் சைதா, உம்மா தம்பதியினரின் புதல்வர். இவர், கண்டி உடதலவின்ன ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரி, கண்டி மடவளை மதீனா தேசியக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர். பேராதனைப் பல்கலைக்கழக இளங்கலைப் பட்டதாரியான இவர், ஊடகவியல் துறையில் டிப்ளோமா பட்டத்தினைப் பெற்றார். மாணவப் பருவத்திலிருந்தே வாசிப்புத்துறையில் தீவிர ஆர்வம் காட்டி வந்த இவரின் சுய ஆக்கமான முதல் உருவகக் கதை ‘அரியணை ஏறிய அரசமரம்’ எனும் தலைப்பில் 1978 சூலை 2ஆம் திகதி தினகரன் வாரமஞ்சரியில் பிரசுரமானது. அதிலிருந்து 162 சிறுகதைகளையும், 5000க்கும் மேற்பட்ட சமூக, இலக்கிய, அரசியல், திறனாய்வு, கல்விசார் கட்டுரைகளையும் எழுதினார். இத்தகைய ஆக்கங்கள் இந்தியாவில் கலைமகள், தீபம், தாமரை உட்பட பல புலம்பெயர் இலக்கிய சஞ்சிகைகளிலும், ஈழத்து தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகளிலும் பிரசுரமாகின. தொழில் ரீதியாக 1983ஆம் ஆண்டில் இலங்கை ஆசிரியர் சேவையில் இணைந்த புன்னியாமீன், பின்பு கல்லூரி அதிபராகவும், மத்திய மாகாண சபையின் கல்வி, கலாசார அமைச்சின் இணைப்பதிகாரியாகவும், மத்திய மாகாண கலாசார அமைச்சின் உதவிப் பணிப்பாளராகவும் சேவையாற்றி 2004ஆம் ஆண்டில் சுயவிருப்பின் பேரில் ஓய்வுபெற்றார். வரையறுக்கப்பட்ட “சிந்தனைவட்டம்” தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராகக் கடமையாற்றிக் கொண்டு முழுநேர ஊடகவியலாளராகவும், தமிழ் இலக்கிய ஆய்வாளராகவும் செயலாற்றினார். 170 நூல்களை தமிழ்மொழி மூலம் எழுதி வெளியிட்டார். 'இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரத்திரட்டு’ எனும் தலைப்பில் இவரது 15 தொகுதிகளிலும் இலங்கையைச் சேர்ந்த 350 ஈழத்து எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் விபரங்களும், புலம்பெயர் நாடுகளைச் சேர்ந்த 44 எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரங்களும் பதிவாக்கப்பட்டது. இவரால் எழுதப்பட்ட முதல் 110 நூல்களும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து ந. செல்வராஜாவினால் தொகுத்து வெளியிடப்பட்டுவரும் ஈழத்துத் தமிழ் நூல்களின் பன்னாட்டு ஆவணக் களஞ்சியமான நூல் தேட்டத்தில் பதிவாக்கப்பட்டுள்ளன. இவரின் 340க்கும் மேற்பட்ட ஆக்கங்கள் இணையத்தளங்களில் வெளிவந்துள்ளன. இலங்கையில் அரசியல் பற்றிய ஆய்வுகள், இலங்கை அரசியல் சிறுபான்மை இனத்தவர்கள் பற்றிய ஆய்வுகள், அறிவியல், வரலாறு, நவீன தொழில்நுட்பங்கள் உள்ளடங்கலாக பன்னாட்டு நினைவுதினங்கள் பற்றி விரிவான ஆய்வுக்குறிப்புகள், இலக்கிய ஆய்வுக்குறிப்புகள் என பல்வேறு துறைகளிலும் இவர் எழுதினார். 1987 நவம்பர் 11 இல் இவரால் உருவாக்கப்பட்ட வெளியீட்டு அமைப்பான “சிந்தனைவட்டம்” மூலம் 1988 முதல் 2010 நவம்பர் 11 வரை 330 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சிந்தனைவட்ட வெளியீட்டகத்தின் மூலமாக நாட்டளவிலும் பன்னாட்டளவிலும் புகழ்பெற்று விளங்கும் மூத்த எழுத்தாளர்களையும், கலைஞர்களையும், ஊடகவியலாளர்களையும் இனங்கண்டு விருது வழங்கி கௌரவித்து வந்தார். புன்னியாமீன் 1979ஆம் ஆண்டு ‘விடிவு’ எனும் இலக்கிய சஞ்சிகையையும், 1980களில் ‘அல்ஹிலால்’ எனும் பத்திரிகையையும் ஆசிரியராகவிருந்து நடத்தியவர். இலங்கையில் தேசிய பத்திரிகைகள் பலவற்றில் நிருபராக பணியாற்றினார். ஐக்கிய இராச்சியத்திலிருந்து வெளிவரும் ‘உதயன்’, ‘லண்டன் குரல்’ ஆகிய பத்திரிகைகளிலும், ‘தேசம்’ சஞ்சிகையினதும், ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்டியங்கும் முன்னணி இணையத்தளமொன்றினதும் இலங்கைச் செய்தியாளராகப் பணியாற்றினார். இவரது பல இலக்கியப் பேட்டிகள் இலங்கையில் ‘ஐ’ தொலைக்காட்சி, பிரித்தானியாவில் ‘தீபம்’ தொலைக்காட்சி, பிரித்தானியாவின் பன்னாட்டு ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ‘(ஐ.பி.சி.) வானொலி’, ‘இலண்டன் தமிழ் வானொலி’, ஜெர்மனியில் ‘ஐரோப்பியத் தமிழ் வானொலி’, Swiss Government FM Radio "Jeevan for U" தமிழ் வானொலி’ ஆகியவற்றில் நேரடி ஒளி / ஒலிபரப்பாக இடம்பெற்றன. இவரது பன்முகத்தன்மைகொண்ட இலக்கிய சேவையைக் கருத்திற்கொண்டு கிழக்கிலங்கையிலிருந்து வெளிவரும் ‘தடாகம்’ எனும் இலக்கியச் சஞ்சிகை 1999 நவம்பர்- டிசம்பர் இதழில் இவரின் புகைப்படத்தை முகப்பட்டையில் பிரசுரித்து கௌரவித்தது. இலங்கையிலிருந்து வெளிவரும் இலக்கிய சஞ்சிகையான மல்லிகை 2005 மார்ச்சு இதழிலும், மற்றொரு இலக்கிய சஞ்சிகையான ஞானம் சஞ்சிகை தனது 102வது (2008 நவம்பர்) இதழிலும் இவரின் புகைப்படத்தை முகப்பட்டையில் பிரசுரித்து கௌரவித்தன. கிழக்கிலங்கையிலிருந்து வெளிவரும் ‘சமாதானம்’ இலக்கிய சஞ்சிகையின் 2007 அக்டோபர் இதழும், இந்தியாவிலிருந்து வெளிவரும் ‘ஏழைதாசன்’ (இதழ் எண்:159) 2008 மே இதழும், கிழக்கிலங்கையிலிருந்து வெளிவரும் ‘செங்கதிர்’ இலக்கிய சஞ்சிகையின் [2009]ஆகஸ்ட் இதழும் இவரின் புகைப்படத்தை அட்டைப்படத்தில் தாங்கி வெளிவந்தன. 2010இல் சப்ரகமுவ பல்கலைக்கழகத் தமிழ்த்துறை சிறப்புக்கற்கை மாணவி எம்.ஐ.எப். நபீலா என்பவர் இவரின் சிறுகதைகளை ஆய்வுக்குட்படுத்தினார். புன்னியாமீன் 10 மார்ச் 2016 அன்று காலமானார். வணிகக் கடித உறை வணிகக் கடித உறை (Commercial envelope) என்பது, கடித உறை வகைகளுள் ஒன்று. நீண்ட செவ்வக வடிவில் அமைந்திருக்கும் இது வழமையான வணிக வகை ஒட்டுதற்குரிய மூடியையும், மூலைவிட்டப் பொருத்தையும் கொண்டிருப்பது உண்டு. இவ்வகை உறைகள் சில செங்கோண வடிவ மூடியையோ அல்லது கூர் முனை மூடியையோ கொண்டிருப்பதும் உண்டு. அத்துடன், பக்கப் பொருத்துக்களைக் கொண்ட வணிக வகை உறைகளும் உள்ளன. இதன் மூடி உறையின் நீளப் பக்கத்தில் அமைந்திருக்கும். இவ்வுறைகள் பொதுவாக வணிகக் கடிதத் தொடர்புகளுக்கும், தனிப்பட்ட கடிதத் தொடர்புகளுக்கும் பயன்படுகின்றன. இவை ஒன்று அல்லது இரண்டு சாளரங்களைக் கொண்டவையாகவும் உற்பத்தி செய்யப்படுவது உண்டு. இவற்றுட் பெரும்பாலானவற்றின் மேல் மூடியின் ஓரத்தில் ஈரமாக்கி ஒட்டத்தக்க வகையில் பிசின் பூசி உலர்த்தப்பட்டிருக்கும். தற்காலத்தில், இது தவிர உரித்துவிட்டு ஒட்டக்கூடிய வகையில் ஒட்டுபொருட்கள் பூசப்பட்டு, இன்னொரு ஒடுங்கிய தாள் பட்டியினால் மூடப்பட்டிருக்கும் மூடிகளுடன்கூடிய உறைகளும், தானே ஒட்டக்கூடிய ஒட்டுபொருள்கள் தடவப்பட்ட உறைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவ்வகைக் கடித உறைகள் பல அளவுகளிலும், அளவு விகிதங்களைக் கொண்டனவாகவும் விற்பனைக்கு உள்ளன. இவ்வேறுபாடுகள் அவற்றுக்குக் கொடுபட்டுள்ள எண்கள் அல்லது பெயர்களினால் குறிப்பிடப்படுகின்றன. இவற்றுள், #5, #6, #6 1/4, #6 1/2, #6 3/4, #7, #7 1/2, #7 3/4, மொனார்க், செக், #9, #10, #10 1/2, #11, #12, #14, #16 என்பனவும் அடங்கும். மேல் தரப்பட்டுள்ள அளவுகள் அனைத்தும் அங்குலத்தில் உள்ளன. இவை ஐக்கிய அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் அளவுகள் ஆகும். ரப்பர் (புதினம்) ரப்பர் ஜெயமோகன் எழுதிய முதல் புதினம். 1990ல் இது வெளிவந்தது. ஏறத்தாழ 200 பக்கமுள்ள இந்நாவலே ஜெயமோகனின் பிரசுரமான முதல் நூல். இது 1990 ஆம் வருடத்துக்கான அகிலன் நினைவு நாவல் போட்டியில் முதல்பரிசைப் பெற்றது. தமிழகத்தின் சுற்றுச்சூழல் அழிவைப்பற்றி எழுதப்பட்ட முக்கியமான நாவல் இது. ரப்பர் இந்நாவலில் ஒரு குறியீடாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ரப்பர் வாழையுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. ரப்பர் அன்னிய மரம். அதன் ரத்தத்தை உறிஞ்சி மக்கள் பொருட்களை தயாரிக்கிறார்கள். அது மண்ணின் ரத்தத்தை உறிஞ்சுகிறது. வாழை அப்படி அல்ல. ரப்பர் இங்கே வணிகப்பயிராகவும் வணிகமயமாதலின் அடையாளமாகவும் உள்ளது காட்டில் கூலி வேலைக்கு வந்த பொன்னு என்ற கதாபாத்திரம் மெல்ல மெல்ல காட்டை ஆக்ரமித்து ரப்பர் வேளாண்மை செய்து பொன்னு பெருவட்டன் ஆக மாருவதும் அவருக்கு அடுத்த தலைமுறையில் செல்வம் உருவாக்கும் சீரழிவுகளால் அக்குடும்பம் வீழ்ச்சி அடைவதும் அதில் ஒருவன் மட்டும் ஒரு மனசாட்சியின் விழிப்பை அடைந்து உண்மைகளை திரும்பிப்பார்க்க தயாராவதும்தான் கதை. ரப்பரின் ஆரம்பமே ஒரு பண்னை வீட்டுக்குள் கார் நுழைவதிலிருந்து ஆரம்பிக்கிறது.ஒரு மிகப்பெரிய குடும்பத்தின், மிகப் பணக்காரக் குடும்பத்தின் அழகை வர்ணித்துக்கொண்டே அது மியூசியம்போல இருக்கிறது என்கிறார் ஆசிரியர். அவர்கள் எப்படி பெருவட்டர்கள் ஆனார்கள்.. அதற்கு முன்பு அவர்களின் நிலை என்ன? அந்த சூழ்நிலையில் அங்கிருந்த நாடார்களுக்கு நிகழ்ந்ததென்ன?? யார் செய்தது?? அங்கு சமூகத்தில் நடந்த கிறிஸ்தவ மதமாற்றம் குறித்தும் அது அந்த சூழ்நிலையில் எப்படி ஏற்பட்டது என்பதையும் அது எப்படி அவர்களின் வாழ்க்கையில் அந்தஸ்தைக் கூட்டியது என்பதையும், வாழ்ந்து கெட்ட குடும்பங்களைப் பற்றியும் ஏன் அப்படி ஆனார்கள் என்பதையும் அந்த மாற்றங்களில் ரப்பரின் பங்கு என்ன என்பதையும் விவரிக்கிறார்.. பெருவட்டன் குடும்பத்தில் இருக்கும் லிவியும், பிரான்ஸிசும், பெருவட்டத்தியும் (பெருவட்டரின் மனைவி) எதிர் எதிர் துருவங்களாக இருக்க, பெருவட்டன் அரசியல் சதுரங்கத்தில் கானாமல் ஆக்கப்படுகிறார். அவரது வாழ்க்கை தகப்பனார் பெரிய பெருவட்டன் சம்பாத்தியத்தில் ஆரம்பித்து இறுதியில் எல்லாவற்றையும் இழப்பதுடன் முடிவடைந்து விடுகிறது. கங்காணி என ஒருவர் கதையில் பெரிய பெருவட்டரின் ஆரம்பகால நன்பனாக வருகிறார். அவரும், பெரிய பெருவட்டனும் இணைந்துதான் மலையை விவசாய பூமியாக்கி வளம் பெற்றனர். கங்காணி, பெரிய பெருவட்டர் மரணப்படுக்கையில் இருக்க அவரை வந்து சந்திக்கும்போது கங்காணியின் உடல்வலிமை கண்டு, பெருவட்டர் நாணத்தால் அவரை சந்திக்க அஞ்சுவதும், பெருவட்டரின் குடும்பத்தால் அவமரியாதையாக அவரை நடத்தும்போது புதுப்பணக்காரர்களின் வாழ்க்கையும், அதைப்பற்றிய எந்தப் பிரக்ஞையும் இல்லாமல் கங்காணியால் தாண்டிச்சென்றுவிட முடிகிறது, அவரது எளிய வாழ்க்கைமுறையினால், முதலாளியின் நிலைகண்டு வருந்துவதும், குழந்தைபோல அழுவதும் மிக இயல்பாய் சொல்லப்படுகிறது. பணக்காரர் ஆன வழியை இறுதிக்கலத்தில் நினைத்துப்பார்க்கிறார் கிழவர். எதற்கு இவ்வளவு கொள்ளையும், கொலையும் செய்து சம்பாதித்தோம், எதற்காக என்ற எண்ணம் அவரை ஆட்கொள்கிறது. வாழும் காலத்தில் முரடனாகவும், யாருடைய உதவியும் தேவைப்படாத வாழ்க்கையை வாழ்ந்து இருந்த பெரிய பெருவட்டர் இறுதிக்காலத்தில் தனது அடிப்படித் தேவைகளுக்குக் கூட அவரது உதவிக்காக அமர்த்தப்பட்ட குஞ்ஞியின் உதவியில் வாழநேர்வதை நினைத்து சுயபரிதாபம் கொண்டு தனக்கு விஷம் கொடுத்து கொன்றுவிடுமாறு வேண்டுகிறார். அவர் உயிரோடு இருப்பதால் வீட்டை விற்கத்தயங்குகிறார் பெருவட்டர். அதனால் பெரிய பெருவட்டர் இறக்க வேண்டும் என அவர் நினைக்கிறார். பெற்ற தகப்பன் சாகவேண்டும் என நினைத்த அந்த எண்ணமே அவரைக் கொல்கிறது. ஆனால் வியாபாரத்தில் தப்பிக்க வேறு வழியில்லை. சொத்தை விற்றால்தான் முடியும் என்ற நிலை..இல்லையெனில் மொத்தமாக முழுகுவதுடன் கடனும் இருக்கும். பெருவட்டத்திக்கு (பெருவட்டரின் மனைவி) பல தவறான தொடர்புகள்.பெருவட்டருக்கும், பிரான்ஸிசுக்கும் கூடத் தெரியும். பெருவட்டருக்கு அவளது அழகின்மேல் மோகமும், அவள் தன்னை அவமதிப்பதுகூட அவளது உரிமை எனவும் நம்பத்தலைப்படுகிறார். பெருவட்டரின் வீட்டில் வேலைசெய்யும், அறைக்கல் குடும்பத்து பெண்ணான தங்கம் பெருவட்டத்தியால் அவ்வப்போது அவமரியாதை செய்யப்பட்டும் லிவியால் அவ்வப்போது பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டும் அவள் அங்கேயே தொடர்ந்து வேலைசெய்வது அவளது தேவை கருதியே. பெருவட்டருக்கும் அவரை அவமதித்த பழைய எஜமானர்களை மீண்டும் அவமதிக்ககூடிய ஒரு வாய்ப்பாகவே கருதினார். அதை வெளியே சொல்லாவிட்டாலும் மனதில் அதுதான். வீட்டிற்கு வரும் ஒவ்வொருவரிடமும் அவளது அறைக்கல் ராஜவம்சத்தைப்பற்றியும், அது வீழ்ந்ததையும் சொல்லி இன்று வேலைக்காரியாய் தனது வீட்டில் இருப்பதை சொல்ல விரும்பாதவர்போல அனைவரிடமும் சொல்லி விடுவார். பலவிதமான குணாதிசயங்களைக் கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலரது வாழ்க்கையையும் நாவல் விவரிக்கிறது. பிரான்ஸிஸ், தாத்தாவின் செல்லப்பேரன். படிக்கும் காலத்தில் முரடணாகவும் படிப்பெதுவும் ஏறாமல் பள்ளிக்குச் செல்லாமலும் இருக்க தாத்தாவால் அரவணைக்கப்பட்டு அவனுக்கு ஒரு பாதுகாவலனாகவே விளங்குகிறார். ’படிக்க வேண்டாமா வேண்டாம், விவசாயம் செய்’ என்ற தாத்தாவின் அறிவுரையும் கேளாமல் தான் தோன்றித் தனமாக சுற்றும் பிரான்ஸிஸுக்கு தங்கத்தின் மீதான அனுதாபமும் அவளை லிவி உபயோகப்படுத்துவது தெரிந்தும் அவன்மீது எரிச்சல்படுகிறான். அவனை மதிப்பதாக இல்லை. இதே பிரான்ஸிஸ் தாத்தா படுக்கையில் கிடக்க யாரும் அவரை மதிக்காமல் இருப்பதை நினைத்து உள்ளம் புழுங்குகின்றான். அவனுக்கு உண்மையில் அந்த வீட்டில் எந்த பிடிப்புமில்லை தாத்தாவைத் தவிர. அவர் இறந்துவிட்டால் உடனே வெளியே சென்றுவிடவேண்டியதுதான் என்ற அளவில்தான் வீட்டின்மீதுள்ள அபிமானம். எல்லாக்கெட்ட பழக்கங்களும் கொண்டவன். கங்காணியின் பேரனாக வரும் லாரன்ஸ், தாத்தாவைப் போலவே எளிய வாழ்க்கை வாழ்ந்து தனது நாஞ்சில் பகுதியினுடைய சுற்றுப்புற சூழியல் கெடுதலுக்கு எதிராக தன்னாலான முயற்சிகளைத் தொடருகிறான். அதை மருத்துவர் ராமின் இடத்தில் வைத்து விவரிக்க தாத்தாவின் முடிவும் தொலைப்பேசியில் கிடைக்க லாரன்ஸ்-உடன் அவன் இணைவதாக கூறி முடிகிறது கதை. ’வல்லான் வகுத்ததே வாய்க்கால்’ என்பதைப் போல நாஞ்சில் நிலத்திற்கு சற்றும் பொருந்தாத ரப்பர் மரங்களை அதனால் கிடைக்கும் லாபத்திற்காக ’முதலாளிகள் ‘ பயிரிட வழக்கமான விவசாயம் நொடிய அதை எதிர்த்து களமிறங்குகிறான் லாரன்ஸ். ரப்பரால் கெட்டுப்போன சுற்றுப்புற சூழலையும் ரப்பரால் வளமடைந்த முதலாளிகளையும் அதன் பின்னிருக்கும் அரசியலையும் நாவல் காட்டுகிறது நாவல் முழுக்க நாஞ்சில் நாட்டு வட்டாரவழக்கு மொழி பயன்படுத்தப்பட்டிக்கிறது. ஏழாம் உலகம் (நூல்) ஜெயமோகன் எழுதிய ஆறாவது நாவல் ஏழாம் உலகம். 2004ல் இந்நாவல் வெளிவந்தது. ஏறத்தாழ இருநூறு பக்க அளவுகளைக் கொண்டது. தமிழினி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. மனிதர்களில் கடையர்களாக வாழும் பிச்சைக்காரர்களைப் பற்றிய நாவல் இது. மனிதர்களை எவ்வாறு பிச்சைக்காரர்களாக ஆக்கி விற்கவும் வாங்கவும் செய்கிறார்கள், மிருகங்களைப்போல வாழும் அவர்களுடைய வாழ்க்கையில் என்ன வகையான உணர்ச்சிகள் நிலவுகின்றன என்பதை இந்நாவல் காட்டுகிறது. பாலா இயக்கிய நான் கடவுள் என்ற படத்துக்கு இந்த நாவலே ஆதாரம். போத்திவேலுப் பண்டாரம் என்பவரே இந்நாவலின் கதாநாயகன். நடுவயதை தாண்டிய அவர் பிச்சைக்காரர்களை விலைக்கு வாங்கி உடைமையாக வைத்திருந்து கோயில் வாசல்களில் அவர்களைபோட்டு பிச்சையெடுக்கச் செய்து வாழ்கிறார். அதைப்பற்றிய குற்ற உணர்ச்சி ஏதும் அவருக்கு இல்லை. தன்னை ஒரு நல்ல மனிதர் என்றே எண்ணுகிறார். போத்திவேலுப்பண்டாரத்தின் சொந்த வாழ்க்கை ஒருபக்கமும் பிச்சைக்காரர்களின் அன்றாட வாழ்க்கை ஒருபக்கமுமாக நாவல் வளார்ந்து செல்கிறது. சாதாரண நடுத்தர வர்கத்தவனாகிய போத்திவேலு பண்டாரம் மகள்கள் மேல் உயிரையே வைத்திருக்கிறார். முதல் மகள் கல்யாணமான உடனேயே அப்பாவிடம் கணக்கு பேசி சொத்தை வாங்க ஆரம்பிக்கிறாள். இன்னொரு மகள் விபச்சார வணிகம் செய்யும் ஒருவனுடன் ஓடிப்போகிறாள். 'உருப்படிகள்' என்று பண்டாரம் சொல்லும் பிச்சைக்காரர்கள் அவர்களுக்குள் நகைச்சுவை பேச்சும் சுயநலம் இல்லாத அன்புமாகவே இருக்கிறார்கள். குய்யன் என்ற களங்கமில்லாத தொழு நோயாளி, விவேகம் கொண்டவரான ராமப்பன், ஆங்கிலம் பேசும் அகம்மது, ஒரு குடும்பப்பெண்ணாக வாழவேண்டும் என்ற கனவுடன் வாழும் எருக்கு என்று பலவகையான பிச்ச்சைக்காரர்கள் உள்ளார்கள். அவர்கள் நடுவே சித்தரான மாங்காண்டிச்சாமியும் பிச்சைக்காரராக அமர்ந்திருக்கிறார். இந்த இரு உலகங்களும் ஒப்பிடப்படுகின்றன. பண்டாரத்தின் அன்றாட உலகில் மாப்பிள்ளையை விலைக்கு வாங்கும்போது பிச்சைக்காரர் உலகில் பிச்சைக்காரர்கள் விலைக்கு வாங்கப்படுகிறார்கள். இரு இடத்திலும் உருப்படி என்ற சொல் புழங்குகிறது. முத்தம்மை என்ற ஊனமுற்ற பெண் ஒரு ஊனமுற்ற குழந்தையை பெறும்போது ஆரம்பிக்கும் நாவல் அவள் மேலும் ஊனமுற்ற குழந்தையைப் பெறுவதற்காக எப்படி இன்னொரு ஊனமுற்ற பிறவியுடன் குரூரமாக புணரவைக்கப்படுகிறாள் என்ற இடத்தில் முடிவுக்கு வருகிறது. தமிழில் அடித்தள மக்களைப் பற்றி எழுதப்பட்ட நாவல்களிலேயே குரூரமான தீவிரமான நாவல் இது. ஆனால் நல்ல நகைச்சுவையுடன் எழுதபப்ட்டிருக்கிறது. எந்த அடிநிலைக்குப் போனாலும் மனிதன் மனிதப்பண்புகளை இழப்பதில்லை என்று காட்டும் நாவல் இது. இது எளிமையான் நாவல்தான். என்றாலும் இது இரயில் வண்டியிலோ, தொலைக்காட்சி விளம்பர நேரத்திலோ, உங்கள் பிள்ளைகளை நாட்டிய வகுப்பிற்கு விட்டுவிட்டு காத்திருக்கும் சமயத்திலோ படிப்பதற்கான நாவல் அல்ல. உங்கள் முழுக்கவனிப்பும் அதற்கு தேவை. ஏனென்றால் சொல்ல வந்த விடயம் அப்படி. நண்பரிடம் சொன்னேன் நீங்கள் தனிமையான இடத்தை தேர்வு செய்யுங்கள். முதலில் 12வது அத்தியாயத்தை வாசியுங்கள். அதற்கு பிறகு எங்கே வேண்டுமென்றாலும் தொடங்கி நாவலை எப்படியும் படியுங்கள் என்றேன். அப்படியே செய்து அவர் நாவலை முடித்துவிட்டு, ‘ஆ, தமிழுக்கு இது முற்றிலும் புதிது; ஒரு கொடை' என்றார் - அ.முத்துலிங்கம். இந்த உலகம் இரக்கத்திற்கு உரிய ஏழைமையால் வதைக்கப்படும் உலகம் என்று மட்டும்தான் நாம் சாதாரணமாக அறிந்திருக்கிறோம். ஆனால், ஜெயமோகன் தன் சொந்த அனுபவத்தில் பார்த்து, பின் கேட்டு அறிந்த உலகம், கொடூரங்கள் நிறைந்தது. கொடுமைகள் நிறைந்தது. இப்படிக் கூட ஒரு உலகம் இருப்பது சாத்தியமா என்று நாம் திகைக்கக் கூடும். கேட்கவோ, படிக்கவோ கூட நம்மை உலுக்கி எடுக்கும் உலகம். கேட்பதற்குக் கூட நம் சகிப்புத் தன்மையை நிறைய சோதித்து விடும். மனிதன் தன் சகமனித ஜீவனை எவ்வளவு கேவலப்படுத்துவதன் மூலம் தன்னையும் கேவலப்படுத்தக் கூடியவன்; அது பற்றி பிரக்ஞையே இல்லாமல், பின் அதற்கு தார்மீக, அரசியல் சித்தாந்த ஜோடனைகளுடன் அலங்காரங்கள் செய்வான்; அவன் எவ்வளவு ஆபாசமானவன் என்பது தெரியும். ஆனால் முதலில் இதைப் படிக்கவேண்டுமே. - வெங்கட் சாமிநாதன் . 'ஏழாம் உலகம் ' என்பதை எங்கோ இருக்கிற பாதாள உலகத்தைச் சுட்டுவதாக நம்பிக்கொண்டிருக்கிற மானுட குலத்துக்கு நாம் வாழும் எதார்த்த உலகின் இருட்டுப் பகுதிக்கிடையிலேயே அது பரந்து விரிந்திருப்பதை அடையாளம் காட்டுகிறது இந்த நாவல். இருள் உலகின் குரூரங்கள் நாம் அறியாதவை அல்ல. ஏமாற்று, பித்தலாட்டம், பொய்கள், கொலை, கொள்ளை, கற்பழிப்பு எல்லாமே சகஜமான விஷயங்களாக இடம்பெறும் உலகம் அது. ஒரு ரூபாய் பணத்துக்கு ஆயிரம் சத்தியங்களை நாக்கு கூசாமல் சொல்பவர்கள் அங்கே உண்டு. அதே ஒரு ரூபாய்க்காக கொலைசெய்துவிட்டு எதுவுமே நடக்காததைப்போலவே அமைதியாகச் செல்லும் நிகழ்ச்சிகளும் நடப்பதுண்டு. எல்லாமே இருள் உலகத்தின் முகங்கள். இப்படித்தான் நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால் நம் நம்பிக்கைகளையும் கற்பனைகளையும் தாண்டி குரூரத்தின் உச்சகட்ட அம்சத்தையே குணமாகக்கொண்டு சதாகாலமும் இயங்குகிற இருள் உலகத்தின் இன்னொரு பக்கத்தை இந்த நாவலில் ஜெயமோகன் தீட்டிக்காட்டியுள்ளார். - பாவண்ணன் மிகவும் குரூரமான எழுத்து முறை என்பதாயும் இல்லாத ஒரு உலகத்தை எழுத்தாளர் கற்பனையில் கொண்டு வந்துள்ளார் என்றும் வைக்கப்பட்டிருந்தன. ஏழாம் உலகம் கற்பனை உலகமல்ல நாம் அறிந்திராத அறிய விரும்பாத அசட்டையாய் இருந்துவிட்ட உலகம். - சுமதி ரூபன் ஏழாம் உலகத்தில் அடித்து நொறுக்கப்பட்டு, முடக்கப்பட்ட காயங்களுடன், பேசா மடந்தைகளாக சமூகத்தின் அடித் தட்டிற்கும் கீழே -மனிதர்களாகவே பாவிக்கப்படாத - பாவப்பட்டவர்களாக - தன் மீதே கூட தான் உரிமை கொண்டாட முடியாத - அவல மனிதர்களிடையே வாழ்ந்த வலியை உணர முடிந்தது. இதில் கொடுமையின் உச்சம் அவர்களைச் சுற்றியிருக்கும் வியாபாரிகள் செய்யும் குரூரங்கள் கூட இல்லை. இந்தக் குரூரத்திற்குப் பலியாகும் இம்மனிதர்கள் - அவர்களது கதியே அதுதான் என்று ஏற்றுக்கொண்டு வாழ்க்கையை தொக்கி நிற்கும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நடத்தி வருவதுதான். அவர்களது மனதில் வன்மம் என்ற ஒரு உணர்வே இல்லாததுபோல் மரத்துப்போய் இருப்பதுதான் நெஞ்சை அறுக்கிறது. - வற்றாயிருப்பு சுந்தர் . யுவன் சந்திரசேகர் யுவன் சந்திரசேகர் (பிறப்பு: 1960) தமிழின் முக்கியமான கவிஞர், புதின எழுத்தாளர், சிறுகதை ஆசிரியர். பின் நவீனத்துவ பாணியிலான கதைகளை எழுதக்கூடியவர். நகைச்சுவைத் தன்மையும் விளையாட்டுத் தன்மையும் கொண்ட கதைகள் இவை. எல்லாவகையான வட்டார வழக்குகளையும் சிறப்பாக கலந்து எழுதுவார். ஒரேகதையை பல கதைகளின் தொகுப்பாக எழுதுபவர். இவரது இயற்பெயர் எம்.சந்திரசேகரன். 1960ல் மதுரை சோழவந்தான் அருகே உள்ள கரட்டுப்பட்டியில் பிறந்தவர். இவரது தந்தை ஒரு தேநீர்க் கடை நடத்திவந்தார். சிறு வயதிலேயே தந்தையை இழந்த சந்திரசேகரன் தன் மூத்த அண்ணாவுடன் வாழ்ந்தார். அவர் யுவன் சந்திரசேகரைவிட இருபது வயது மூத்தவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வணிகவியல் இளங்கலை படித்த யுவன் சந்திரசேகர் படிப்பு முடிந்ததுமே ராமநாதபுரத்தில் வங்கி ஊழியராக பணியில் சேர்ந்தார். யுவன் சந்திரசேகரின் மனைவிபெயர் உஷா. அவர் தபால்நிலைய ஊழியர். ஐந்து ஆண்டுகள் இவர் கோயில்பட்டியில் வாழ்ந்தார். அப்போது தேவதச்சனுடன் அறிமுகம் ஏற்பட்டது. கல்லூரி நாட்களிலேயே யுவன் சந்திரசேகர் இலக்கிய வாசகர். தேவதச்சனுடனான உரையாடல் வழியாக கவிதைகள் எழுத ஆரம்பித்தார். பின்னர் சிறுகதைகளும் புதினங்களும் எழுத ஆரம்பித்தார். சிறப்பாக உரையாடக்கூடியவர். மாற்று மெய்மை என்று யுவன் சந்திரசேகர் கூறும் ஒரு கருத்து அவரது படைப்புகளில் உண்டு. அதாவது நாம் காணும் இந்த உலக யதார்த்தம் இதன் ஒரு முகமே என்றும் இன்னும் நாம் அறியாத பல யதார்த்தங்கள் உள்ளன என்றும் அவர் சொல்கிறார். சித்தர்கள், மாயமந்திரவாதிகள், பலவகையான அபூர்வ நிகழ்ச்சிகள் ஆகியவற்றை யுவன் சந்திரசேகர் அவரது கதைகளில் விளக்குகிறார். அவற்றை சுவாரசியமான கதைகள் வழியாகச் சொல்கிறார். யுவன் சந்திரசேகர் இந்துஸ்தானி இசையில் ஆர்வம் கொண்டவர். சென் பௌத்தத்தில் ஈடுபாடுள்ளவர். ஜென் கவிதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார். ஒளிவிலகல் (காலச்சுவடுப் பதிப்பகம்) யுவன் சந்திரசேகர் பற்றி ஜெயமோகன் சொல்லிச்சொல்லி எஞ்சியவை மெகலித் மெகலித் (megalith) என்பது தனியாகவோ பிற கற்களுடன் சேர்ந்தோ வரலாற்று முற்காலங்களில் நினைவுச்சின்னங்களை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட மிகப்பெரிய (பாறைக்)கல்லாகும். பாறை ஓவியம் பாறை ஓவியம்(Rock art) அல்லது பாறைச் செதுக்கல்கள்(Petroglyph)என்பது வரலாற்று-முற்கால மனிதர்களால் செதுக்கிச் செய்யப்பட்ட (அ) வரையப்பட்ட வரி-வடிவ ஓவியத்தைக் குறிக்கும். வரலாற்றுக்கு முற்பட்ட கால மக்கள் விட்டுச் சென்ற பொருள்கள் மற்றும் அவர்கள், தாங்கள் வாழ்ந்த இடங்களில் உள்ள பாறைகளிலும், குகைகளிலும் வரைந்து வைத்துள்ள ஓவியங்கள் ஆகியவை இவ்வகையுள் அடங்கும். உலகின் பல நாடுகளில் இத்தகைய பாறை ஓவியங்கள் கிடைத்துள்ளன. உதாரணமாகப் பிரான்சு, ஸ்பெயின், இத்தாலி, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைக் கூறலாம். இந்நாடுகளில் கிடைத்துள்ள வரலாற்றுக்கு முற்பட்ட பாறை ஓவியங்களைப் போலவே இந்தியாவிலும் பல இடங்களில் இப்பாறை ஓவியங்கள் கிடைத்துள்ளன. முதல் முதலாக உலகில் பாறை ஓவியமானது ஸ்பெயின் நாட்டில் அல்டமிரா என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் இந்தியாவில் பீம்பேட்கா என்னுமிடத்திலும், தமிழகத்தில் மல்லபாடி என்னும் இடத்திலும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை ஐம்பது இடங்களுக்கு மேல் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை அறிவதற்கு இத்தகு பாறை ஓவியங்கள் பெரிதும் பயன்படுகின்றன. இவைகளுள் பல்வேறு கண்டங்களையும் தாண்டிய சில பொதுவான பண்புகளுடன் விளங்குகின்றன என்பதை அறிஞர்கள் இந்த ஓவியங்களை வைத்து நிறுவியுள்ளனர். பல்வேறு கண்டங்களிலும் கண்டறியப்பட்ட பாறை ஓவியங்களில், அவற்றின் தோற்றம், குறியீடுகள், அவை வெளிப்படுத்தும் சிந்தனைகள் ஆகியவை பொதுவானதாக அமைகின்றன." இதன் மூலம் வரலாற்றுக்கு முற்பட்ட மக்கள் ஓவியங்கள் மூலம் தங்களுக்குள் கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தினர் என்பதை அறிய முடிகிறது. ஜான் காலிங்வுட், ரொனால்டு மோரிஸ் ஆகியோர் இவ்வோவியங்கள் பற்றி ஆராய்ந்துள்ளனர். வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என்பதற்கு எழுத்துகளைப் பயன்படுத்துவதற்கு முந்தைய காலம் என வரலாற்று அறிஞர்கள் விளக்கம் தருவார்கள்.. வரலாற்றுக்கு உட்படும் காலத்தைவிடவும் பல மடங்கு அதிகமான கால எல்லைகளைக் கொண்டதாக வரலாற்றுக்கு முந்தைய காலச்சூழல் அமைந்திருக்கிறது. இன்றைய காலஅளவிற்கேற்ப சுமார் 20 இலட்சம் ஆண்டுகளிலிருந்து கி.மு 400 வரையிலான ஆண்டுகளை தொல்பழங்காலம் என உலக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இக்காலக்கட்ட சான்றுகள்தான் ஒரு சமூகத்தின் மிகக்கூடுதலான தொன்மையை, மூல கட்டமைப்பை வெளிப்படுத்த, விளக்க உதவுகின்றன. அவ்வகையில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் மிக நீண்டதாக இருப்பினும், அக்காலத்து, மனித எச்சங்கள், மக்கள் விட்டுச் சென்ற சின்னங்கள் மிகவும் குறைந்த அளவிலேயே கிடைக்கின்றன. அந்தவகையில் மிகத் தொன்மையான ஊழிக்கால மனித எச்சங்கள் ஆப்பிரிக்காவிலும் இந்தியாவில் சோன்பள்ளத்தாக்கிலும், பீக்கிங், ஜாவா ஆகிய பகுதிகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மனித இனத்தின் தோற்றம், வளர்ச்சி முதலியவற்றைக் குறித்து அறிய வரலாற்று அறிஞர்கள் அம்மக்களின் படைப்புகளைக் கொண்டும், தொழில் நுட்ப அடிப்படையிலும் பல்வேறு கால வரைமுறைகளையும் வகுத்துள்ளனர். சுருக்கமாக மனித இன வரலாற்றை, எனப் பகுப்பர். பழங்காலத்தில் மக்கள் இயற்கையான குகைத் தளங்களில் வாழ்ந்தனர். எனவே தாங்கள் வாழ்ந்த குகைகளில் ஓவியங்களை வரைந்தனர். குகைகளுக்கு அருகே இருந்த பாறைகளிலும் ஓவியங்களை வரைந்துள்ளனர். குகைகளில் இருட்டாக இருந்ததால் அதிக அளவில் பாறைகளில் ஓவியங்களை வரைந்துள்ளனர். எனவே இவ்வோவியங்களைக் குகை ஓவியங்கள் என்று அழைப்பதை விடப் பாறை ஓவியங்கள் என அழைப்பது பொருந்தும். அக்கால மக்கள் தங்களது வாழ்வின் நிகழ்வுகளைப் பதிவு செய்ய வேண்டுமென்று எண்ணியதால் ஓவியங்களை வரைந்திருக்கலாம். அவர்களுக்கு வேட்டையாடுதலே முக்கியத் தொழில். எனவே பல்வேறு மிருகங்களைத் தாம் வேட்டையாடுவது போல ஓவியங்களை வரைந்தால், வேட்டையாடும் போது அதிக மிருகங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலும், விலங்குகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பெறலாம் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலும் அவற்றை வரைந்திருக்கலாம் பாறை ஓவியங்கள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மனித இனத்தின் வாழ்க்கைச் சூழலைச் சித்திரிப்பனவாக அமைகின்றன. அவர்களது எண்ணங்கள் நம்பிக்கைகள் முதலியவற்றைப் பிரதிபலிப்பனவாக அமைகின்றன. வெவ்வேறு விதமான வடிவங்களிலும், வண்ணங்களிலும் அமைகின்றன. இந்த ஓவியங்களின் வடிவம் மற்றும் இந்த ஓவியங்களில் இடம் பெறுகின்ற உருவங்களை வைத்து அவற்றை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதல் நிலை ஓவியங்கள் தொல்பழங்காலத்தைச் சேர்ந்த மிகத் தொன்மையான ஓவியங்களாகும். இவற்றில் விலங்கின வடிவங்கள் மிகுதியும் இடம் பெற்றிருக்கும். இத்தகைய ஓவியங்கள் தமிழகத்தில் குறைவாகவே காணப்படுகின்றன. இரண்டாம் நிலை ஓவியங்களில் மிகுதியாக வேட்டைக் காட்சிகளே இடம் பெறும். இந்தியப் பாறை ஓவியங்களில், காண்டா மிருகம், சிங்கம், புலி போன்ற விலங்கினங்கள் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும். மான், ஆடு, பன்றி, மாடு முதலிய வேட்டைக்குரிய விலங்குகள் அதிகமாக இடம் பெறும். இவ்வகை ஓவியங்களில் மனித வடிவங்கள் அதிகமாக இடம் பெறும். போர்க் காட்சிகள் சிறப்பாக இடம் பெற்றிருக்கும். வேட்டைக் காட்சிகளாக இருப்பினும் மனித உருவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருக்கும். சடங்கு மற்றும் நடன நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருக்கும். முதல் நிலை ஓவியங்களில் கோடுகளாலான அமைப்பு மட்டுமின்றி அடர்த்தியான வண்ணப் பூச்சு அமைப்புக் காணப்படும். செந்நிறம் அதிக அளவில் பயன்படுத்தப் பட்டிருக்கும். இரண்டாம் நிலை ஓவியங்களில் செந்நிறம், வெள்ளை, கருப்பு ஆகிய நிறங்கள் இடம் பெறும். பாறை ஓவியங்களில் பயன்படுத்தப் பட்ட வண்ணக் கலவையினை இரசாயனச் சோதனை செய்து அவற்றின் காலத்தைக் கணிக்கலாம். மேலும் ஓவியங்களின் வரைவு முறையினை வைத்தும் அவற்றின் வடிவமைப்பைக் கொண்டும் காலம் கணிக்கப்படுகிறது. எடுத்துக் காட்டாக வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பாறை ஓவியங்கள் அடர்த்தியான வண்ணப் பூச்சு முறையில் வரையப்பட்டிருக்கும். இவைகளில் சிவப்பு நிறமோ அல்லது வெள்ளை நிறமோ அதிக அளவில் பயன்படுத்தப் பட்டிருக்கும். ஆனால் இரண்டு நிறங்கள் பயன்படுத்தப்பட்டிருக்காது. அடர்த்தியான வண்ணப் பூச்சு முறையைத் தொடர்ந்து வரும் வளர்ச்சி நிலை கோட்டோவியம் எனப்படும் சுற்று வரை கோட்டு முறை ஆகும். இரு வண்ண ஓவியங்கள் எனப்படுபவை மேற்கண்டவற்றுள் பிந்தைய காலத்தைச் சேர்ந்த ஓவியங்களாகக் கருதப்படுகின்றன. உருவம், வண்ணம், ஆகியவற்றைக் கொண்டு ஓவியத்தின் காலம் கணிக்கப்படுவதுடன் அவ்வோவியம் கிடைத்த இடத்தினருகில் கிடைக்கும் தொல்லியல் சான்றுகளை வைத்தும் காலம் கணிக்கப்படுகிறது. அவ்வகையில் தமிழகத்தில் இதுவரை கண்டறியப்பட்ட பாறை ஓவியங்களைத் தொல்பழங் காலத்தவை என்று கூற இயலாது. இவை மூன்றாம் நிலை எனக் கூறப்படும் பெருங் கற்காலத்தின் இறுதிக் காலத்தையும், வரலாற்றுக் காலத்தின் தொடக்கத்தினையும் சார்ந்தவையாகும். சுருங்கச் சொன்னால் சங்க காலத்தை ஒட்டியவை எனலாம். ஓவியங்களின் வடிவ அமைப்பைக் கொண்டு அவற்றை மூன்று வகையாகப் பிரிப்பர். அவை: பக்கவாட்டு முறை என்பது ஓவியத்தில் முகம் மற்றும் உடல் ஆகியவற்றின் ஒரு பக்கம் தெரியும்படி வரைவதாகும். வரலாற்றுக் காலத்திற்கு முன்னர் வரையப்பட்ட பாறை ஓவியங்கள் பக்க வாட்டு முறையில் அடர்த்தியான வண்ணக் கலவையால் வரையப்பட்டிருக்கும். நேர்வடிவ முறை என்பது ஓவியம் நம்மை நேராகப் பார்ப்பது போல அமைந்திருப்பதாகும். நேர் வடிவ முறை முக அமைப்பைச் சிறப்பாகக் காட்டும். உதாரணமாக மனித உருவங்களைக் கூறலாம். உடலைப் பக்கவாட்டு முறையில் அமைத்து முகத்தை மட்டும் திருப்பிக் கொண்டிருப்பது போல் அமைந்திருப்பதைத் திரும்பிக் காணும் முறை என்பர். மிகத் தொன்மையான ஓவியங்களில் பசு, மான் முதலியவை திரும்பிக் காணும் முறையில் வரையப்பட்டிருக்கும். சோம்தேவ் தேவ்வர்மன் சோம்தேவ் தேவ்வர்மன் (பிறப்பு குவகாத்தி 13 பிப்ரவரி 1985), அல்லது "சோம்தேவ் தேவ் வர்மன்", இந்திய டென்னிசு வீரராவார். அவர் ஐக்கிய அமெரிக்காவின் வர்சீனியா பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது அமெரிக்க தேசிய கல்லூரி விளையாட்டுக் கழகத்தின் (NCAA) ஒற்றையர் டென்னிசுப் போட்டிகளில் தொடர்ந்து இருமுறை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து புகழ்பெற்றார். 2010-இல் 2010 பொதுநலவாய விளையாட்டுக்களில் சோம்தேவ் தனிநபர் பிரிவில் தங்கமும் 2010 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தனிநபர் பிரிவில் தங்கமும் இரட்டையர் பிரிவில் சனம் சிங் என்ற வீரருடன் இணைந்து தங்கமும் வென்றுள்ளார். இவர் ரஞ்சனா மற்றும் பிரவஞ்சன் தேவ் வர்மன் தம்பதியினருக்குப் பிறந்தவர். சென்னையருகே வளர்ந்த இவர் 2005-08 ஆண்டுகளில் வர்சீனியா பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பட்டபடிப்பு படித்தார். 2008ஆம் ஆண்டு முதல் தொழில்முறையில் டென்னிசு ஆடிவரும் தேவ்வர்மன் ஆண்டு துவக்கத்தில் இருந்த தரவரிசை 1033இலிருந்து முன்னேறி ஆண்டின் இறுதியில் 204 தரவரிசை எண்ணில் உள்ளார். 2009ஆம் ஆண்டு சென்னை ஓப்பன் போட்டியில் இருமுறை சென்னை ஓப்பன் வெற்றியாளர் இசுப்பானிய கார்லோசு மாயாவையும் தரவரிசை எண் 25இல் இருந்த குரோசியாவின் இவோ கார்லோவிச்சையும் வென்று போட்டி இறுதிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் குரோசியாவின் மாரின் சிலிக்கிடம் 6–4, 7–6(3) என்ற கணக்கில் தோற்றார். தென்னாப்பிரிக்காவில் நடந்த டேவிசு கோப்பை 2009ஆம் ஆண்டுக்கான போட்டியில், சோம்தேவ் தேவ்வர்மன் முதல் ஒற்றையர் ஆட்டத்திலும் மாற்று ஒற்றையர் ஆட்டத்திலும் தென்னாப்பிரிக்கா வீரர்களை வென்று இந்திய அணி 11 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக உலக சுற்றுக்கு முன்னேற உதவினார். விபரப்பட்டியல் கடித உறை விபரப்பட்டியல் கடித உறை (Catalog Envelope) என்பது, கடித உறை வகைகளுள் ஒன்று. இது அகலப்பக்கம் திறந்துள்ள உறையாகும். பணப்பை மூடி எனப்படும் வகையைச் சேர்ந்த மூடியையும், நடுப் பொருத்தும் கொண்டது இவ்வுறை. பல பக்கங்களைக் கொண்ட தடித்த, எடை கூடிய ஆவணங்களை அனுப்புவதற்கு இதனைப் பயன்படுத்துவர். சஞ்சிகைகள், அறிக்கைகள், விபரப்பட்டியல்கள் போன்றவை இத்தகைய ஆவணங்களுள் அடங்கும். இவ்வகை உறைகளுள் "பாலிசி உறை" எனப்படும் ஒரு வகை உறை காப்புறுதிப் பத்திரங்கள், உயில்கள், ஈட்டுப் பத்திரம் மற்றும் அது போன்ற சட்டம் சார்ந்த ஆவணங்களை அனுப்புவதற்கான உறைகள், அவற்றின் முன்பக்கத்தில் முழு அளவுச் சாளரங்களைக் கொண்டிருப்பதும் உண்டு. இவ்வகை உள்ள உறைகள் அவற்றின் அளவைப் பொறுத்து எண்கள் மூலம் குறிக்கப்படுகின்றன. இவற்றுள், 1, 1-3/4, 2, 3, 6, 7, 8, 9, 9-1/2, 9-3/4, 10, 10-1/2, 11, 12, 12-1/2, 13-1/2, 14, 14-1/4, 14-1/2, 15, 15-1/2 என்பன அடங்கும். திக் நியாட் ஹன் உலகில் தற்போது மிகவும் அறியப்பட்ட சில ஜென் ஆசான்களுள் நியாட் ஹன் குறிப்பிடத்தக்கவர். இவர் மாணவர்களால் "ஆசான்" என்ற பொருளில் அமையும் தே (Thay) என்றும் அழைக்கப்படுகிறார். இவர் உலக அமைதிக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் போராடுபவர் மற்றும் கவிஞர். 1926 ஆம் ஆண்டு மத்திய வியட்நாமில் பிறந்த நியாட் ஹன் பதினாறாவது வயதில் துறவு மேற்கொண்டார். 1960- ஆம் ஆண்டில் சைகானில் சமூக நலப்பணிகளுக்கான இளைஞர் பள்ளியைத் (School of Youth for Social Services (SYSS)) தொடங்கினார். கசினியின் மகுமூது கசானவித்து வம்சம் கசினியின் மகுமூது அல்லது கஜினி முகமது (Mahmud of Ghazni) (02 அக்டோபர் 971 – 30 எப்ரல் 1030) முகமது தற்கால ஆப்கானித்தான் நாட்டில் உள்ள "கஜினி" என்ற நகரத்தில் பிறந்த காரணத்தினால், இவரை கசினியின் மகுமூது என்பர். கசானவித்து வம்சத்தில் பிறந்த கசினி மகுமூது தற்கால இந்தியாவை உள்ளடங்கிய பண்டைக் கால நாடுகளைப் பதினேழு முறை தாக்கி வெற்றி வாகை சூடியவர். இவரையே கசினி முகம்மது என்றும் குறிப்பிடப்படுகிறது. மங்கோலியர்களை ஆசியா மைனரிலிருந்து (Asia Minor) விரட்டி அடித்து பெருமை பெற்றவர். கசினியின் மகுமூது அக்கால நாடுகளைக் கைப்பற்றி ஆளும் நோக்கத்தில் இல்லாது, உருவ வழிபாட்டாளர்களை வெல்லும் நோக்கிலும், உருவ வழிபாட்டு இடங்களை தகர்க்கும் நோக்கிலும், கோயிலில்களில் உள்ள பெருஞ்செல்வங்களை கொள்ளை அடிக்கும் நோக்கிலும் மற்றும் இந்து, பௌத்தர், சமணர்களை, இசுலாமிய மதத்திற்கு மதம் மாற்றம் செய்யும் நோக்கிலும், இசுலாம் சமயத்தின் பெயரால் ஜிகாத் எனும், இசுலாமியர் அல்லாதவர்களுக்கு எதிரான போராகவே இருந்தது. கசினி முகமது தனது பேரரசை 998 முதல் 1030 வரை 32 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். இவரது வழித்தோன்றல்கள் கி.பி 1159 வரை 129 ஆண்டுகள் கஜினிப் பேரரசை ஆட்சி செய்தனர். கசினி மகுமூதின் இயற்பெயர் மகுமூது இப்னு சபுக்தசின். தந்தையின் பெயர் அபூ மன்சூர் சபுக்தசின் என்ற துருக்கிய மம்லூக் எனும் அடிமைப் போர் வீரன். இவரது தாய் ஒரு பாரசிகநாட்டு உயர்குடிப் பெண். மனைவியின் பெயர் கௌசரி செகான். பட்டத்து மகன்கள் பெயர்: சலால் முகமது உத் தெளலா, சிஆப்-உத்-தெளலா மசூத், அப்துல் ரசீத், சுலைமான், சூசா என்பன. கசினி மகுமூதின் தந்தை அபூ மன்சூர் சபுக்தசின், பாரசிக பேரரசின் கீழ் அடங்கிய ‘புகாரா’ எனும் நாட்டை ஆண்ட இரண்டாம் சாமானிய (Sammanid) குல மன்னரின், ஒரு துருக்கிய அடிமைப் போர் வீரர் ஆவார். சாமானிய அரசின் மன்னர் ’இரண்டாம் நூ’ காலத்தில் கசினி மகுமூது குராசான் பகுதியின் அமீர் பதவியில் ’சைப்-உத்-தௌலா’ என்ற பட்டப் பெயருடன் நியமிக்கப்ட்டார். பின்பு 997ல் கசினி முகமது, குவாரகானித்து (Qarakhanid) அரசின் சுல்தானாக தன்னைதானே அறிவித்துக் கொண்டார். சாமானிய அரசின் அமீர் மிகவும் பலவீனமாக இருந்த காலகட்டத்தில், கசினி மகுமூதும் அவரது தந்தையும் ஒன்று சேர்ந்து 998 இல் சாமானிய அமீரகத்தைக் கைப்பற்றி ஆளத் தொடங்கினர். பின்னர் கந்தகார், லச்கர்கா ஆகிய நகரங்களை கைப்பற்றி நாட்டை விரிவுபடுத்தியதுடன், நாட்டை இராணுவமய மாக்கினார். தன் நாட்டு பகுதிகளை நிர்வாகம் செய்ய ’சேவக் பால்” என்ற பெயருடன் நிர்வாகிகளை நியமித்தார். 1001 இல் பலமுறை வடமேற்கு இந்திய பகுதிகளில் ஊடுருவி 28. 11. 1001 இல் பெசாவரில் நடந்த போரில் இந்து அரசன் செயபாலனைத் தோற்கடித்தார். 1002 இல் சிசுட்டன் (Sistan) நாட்டின் மீது படையெடுத்து அந்நாட்டு அரசன் முதலாம் ‘காலப்’பை (Khalaf) வென்று சபாரித்து (Saffarid) அரச குலத்தை பூண்டோடு ஒழித்துக் கட்டினார். இசுலாமியக் கலீபாவின் நல்லாசியுடன் கசினி மகுமூது கசினியின் தெற்கு நோக்கி படை எடுத்து முல்தான் அரசகுல மன்னன் இசுமாயிலை வென்று முல்தான் நாட்டை, தன் நாட்டுடன் இணைத்துக் கொண்டார். மேலும் லாகூரை ஆண்ட இந்து அரசன் செயபாலனின் மகன் அனந்தபாலனை 1008 இல் வென்று தற்கால பஞ்சாப் பகுதி முழுவதும் தன் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். இசுலாம் சமயத்தின் பெயரால் ’ஜிகாத்’ எனும் புனிதப்போர்கள் மூலம் கசினி மகுமூது, கிழக்கு பாரசீகம், தற்கால ஆப்கானித்தான், பாகிசுத்தான், இந்தியாவின் வடமேற்கு பகுதிகள், பஞ்சாப் ஆகிய பகுதிகளை கி.பி., 997 முதல் 1030 இற்குள் கைப்பற்றி தனது ஆளுகையின் கீழ் ஆட்சி செய்தார். பெஷாவர், முல்தான், சிந்து ஆகிய பகுதிகளை ஆளும் மன்னர்களிடம் ஆண்டு தோறும் கப்பம் வசூலித்தார். தான் கைபற்றிய, தாக்கி அழித்த நாடுகளில் கொள்ளையடித்த பெருஞ்செல்வங்களைக் கொண்டு தனது பேரரசை செல்வச் செழிப்பாக்கினார். கசினி மகுமூது பஞ்சாபை மட்டும் தனது பேரரசில் இணைத்து கொண்டு, இராசபுத்திரகுல மன்னர்கள் ஆளும் நாடுகளை ஆண்டு தோறும் படையெடுத்து வெல்ல உறுதி பூண்டார். இந்து, பௌத்த, சமண சமய மன்னர்கள் ஆண்ட நாகர் கோட், தானேசுவரம், கன்னோசி, குவாலியர், கலிஞ்சர் கோட்டை மற்றும் உஜ்ஜைன் போன்ற நாடுகளை வென்று, அந்நாட்டு அரசர்கள் தனது பேரரசுக்கு அடங்கி, ஆண்டு தோறும் கப்பம் கட்டும்படி ஒப்பந்தம் செய்து கொண்டார். மேலும் தனது படைபலத்தை உயர்த்த, ஆயிக்கணக்கான படைவீரர்களையும், குதிரைகளையும் தனது படையில் சேர்த்துக் கொண்டதுடன் நில்லாது அந்நாட்டின் பெருஞ்செல்வங்களை கவர்ந்து சென்றார். ஒருவேளை துணைக் கண்ட மன்னர்கள் ஒன்று சேர்ந்து தனது அரசுக்கு எதிராக படை எடுக்கும் எண்ணத்தை அவர்களின் அடி மனதிலிருந்து அடியோடு ஒழித்துக்கட்டவும், தன் மீது பயத்தை ஏற்படுத்தி வைக்கவும், ஆண்டு தோறும் துணைக் கண்ட நாடுகளின் மீது படையெடுத்து, அவற்றை வென்று, மன்னர்களால் கோயில்களிற் பதுக்கி வைக்கப்பட்ட செல்வங்களுக்காக அவற்றை இடித்துக் கொள்ளை அடிக்க உறுதி எடுத்துக்கொண்டார் கசினி மகுமூது. கசினி மகுமூது இசுலாமிற்கு எதிரான, உருவ வழிபாட்டு இடங்களான காங்கிரா, (நாகர்கோட்) (இமாசல பிரதேசம்), தானேசுவரம், மதுரா, சோமநாதபுரம் (குசராத்து), துவாரகை, மகசுவரம், சுவாலாமுகி போன்ற இடங்களிலிருந்த இந்துக் கோயில்களை இடித்து தரை மட்டம் ஆக்கி இசுலாமிற்கு பெருமை சேர்த்தார். இசுலாமிய மதத்திற்கு மதம் மாற மறுத்த சிந்து நாட்டு இந்துக்களை நாட்டை விட்டு வெளியேற்றி, சிந்து நாட்டை தன் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். அங்கிருந்த ஐம்பதாயிரம் அப்பாவி மக்கள் எவ்வித காரணமின்றி படுகொலை செய்யப்பட்டனர். இருபதாயிரம் பேரை அடிமைகளாக இழுத்துச் செல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான இந்துக்களை கட்டாயமாக இசுலாமிய மதத்திற்கு மதம் மாற்றப்பட்டனர். மத மாற்றத்திற்கு உட்படாத மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். கசினி முகமதுவின் படைகளுக்கு அஞ்சி தப்பி ஓடிய 90 வயது முதியவர் கோகா இராணா என்ற அரசக் குலத் தலைவரை கொலை செய்தனர். சோமநாதபுர கோயிலின் சிவலிங்கத்தின் உடைந்த கற்களைக் கொண்டு, 1026ல் கசினியில் உள்ள ’ஜூம்மா மசூதியின்’ (வெள்ளிக்கிழமை தொழுகை மசூதி) வாசற் படிகளிலும் மற்றும் தனது அரண்மனை வாசற்படிகளிலும் பதித்து, இந்துக்களின் மனதை புண்படுத்தினார். கோயில் செல்வக் களஞ்சியங்களையும், தங்கம், வெள்ளி மற்றும் சந்தனக் கதவுகளையும், கசினி நகருக்கு அருகில் உள்ள கொரசான் நகருக்கு கொண்டு சென்றார். பின் துவாரகை நகரை சூறையாடி அங்குள்ள கிருட்டிணன் கோயிலில் உள்ள வெள்ளியால் ஆன இரண்டு அடி உயர கிருட்டிணன் சிலையை உடைத்தெறிந்தார். மேலும் சௌராட்டிர நாட்டில் இருந்த ஆயிரக்கணக்கான இந்து மற்றும் சமணர் கோயில்களை முகமதின் படைகள் இடித்து தள்ளினர். சோமநாதபுரத்தில் மட்டும் கொள்ளையடித்த செல்வங்களின் மதிப்பு இரண்டு மில்லியன் தினார்கள் என்று, கசினி முகமதுவின் படைகளுடன் இந்தியாவிற்கு வந்த இசுலாமிய வரலாற்று அறிஞர் அல்-பருணி தனது நூலில் குறித்துள்ளார். சௌராஷ்டிர நாட்டை தொடந்து ஆள, தனது குலத்தில் பிறந்த ஒருவனை, அரசனாக நியமித்துச் சென்றார். பிறகு தன் நாட்டிற்கு திரும்பிச் செல்கையில் இராசபுத்திரகுல அரசர்களுக்கு அஞ்சி, விரைவாக குறுக்கு வழியில் செல்ல, இராசபுதனத்தின் தார் பாலைவனம் வழியாக தனது நாட்டிற்கு திரும்பினார் கசினி முகமது. கஜினி முகமதுவின் படையெடுப்புகள் மத சகிப்புத் தன்மை அற்ற அடிப்படையிலேயே இருந்தது. இதனால் இசுலாமியர்களின் கொள்கைகளுக்கு புறம்பாக செயல்படும் மக்களுக்கு எதிராக ஜிகாத் எனும் இசுலாம் வகுத்த புனிதப்போர்களை தொடர்ந்து நடத்தினார். இசுலாமின் சன்னி பிரிவு முசுலிம்களைத் தவிர, இதர பிரிவு முசுலிம்களான ஷியா முஸ்லிம்கள், பையித் ஷியா முஸ்லிம்கள் மற்றும் இசுமாயிலி ஷியா முசுலிம்களையும் படுகொலை செய்தார். இறை உருவ வழிபாடு பழக்கம் உள்ள இந்துக்களையும், பௌத்த, சமணர்களையும் கடுமையாக வெறுத்தார். எனவே அவர்களது இறை உருவ வழிபாட்டு இடங்களை தகர்ப்பதில் குறியாக இருந்ததுடன், கோயில்கள், கல்விக்கூடங்கள், பல்கலைகழகங்கள் மற்றும் மடாலயங்களில் உள்ள செல்வங்களை கொள்ளையடித்தல் மற்றும் தீக்கிரையாக்குதல் போன்ற செயல்களில் ஈடுபட்டார். மேலும் இந்துக்களை கட்டாயமாக இசுலாமுக்கு மதம் மாற கட்டாயப்படுத்தப்பட்டனர். இசுலாமிற்கு மதம் மாறாத மக்களை அவர்கள் வாழும் பகுதிகளிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். வெளியேற விரும்பாத மக்களிடமிருந்து வரி விதிக்கப்பட்டனர். இராய் (Raay) மற்றும் இசபாகான் (Isfahan) பகுதியில் இருந்த மாபெரும் நூலகங்களை கஜினி நகரத்திற்கு மாற்றிக்கொண்டு வந்தார். இதனால் தனது நாட்டின் கல்வி வளத்தை பெருக்கி கொண்டதுடன், தனக்கு கல்வி கற்றுக் கொடுக்க அரசியல், மொழி தொடர்பான அறிஞர்களை நியமித்துக் கொண்டார். கி. பி. 1017ல் கசினி முகமதுடன் சேர்ந்து இந்தியா வந்த அறிஞர் அல்-பரூணியைக் கொண்டு, ’இந்திய மக்களும் அவர்தம் நம்பிக்கைகளும்’ என்ற நூலை எழுத ஊக்கமளித்தார். இந்தியாவில் கொள்ளை அடித்த செல்வக் களஞ்சியங்களைக் கொண்டு தனது பேரரசை வலுப்படுத்திக் கொண்டார். அப்பாசித் கலிபா, அல்-காதிர்-பில்லாவிடமிருந்து தனது பேரரசை விடுதலை அடைந்த நாடு என்ற தகுதியை கேட்டுப் பெற்றுக் கொண்டார். இசுலாமுக்கு எதிரான "காபிர்கள்" (இறை உருவ வழிபாட்டாளர்கள்) மீது புனிதப் போர் மேற்கொண்டதற்காக இசுலாமிய தலைமை மதத் தலைவரான கலிபாவிடமிருந்து ‘ ’யாமின் –உத் – தௌலா’ என்ற மாபெரும் விருது கசினி பெற்றார். உருவ வழிபாட்டாளர்களான இந்துக்கள் மீதான ஜிகாத் எனும் புனிதப்போர்களின் (Jihad) போது, கசினி முகமது உடன் வந்த அரபு வரலாற்று அறிஞர் அல்-பரூணி தனது நூலில் கசினி முகமது பற்றிய செய்திகள்: கசினி முகமது மற்றும் அவரது மகன்களுக்கும அல்லாவின் அருள் இருந்தபடியால், தனது வழித்தோண்றல்களின் நலனுக்காகவும், தனது பேரரசின் நலனுக்காகவும், கசினி நகரத்தின் எல்லைப்புறத்தில் இருந்த இந்து, பௌத்த சமய அரசுகளான, தற்கால கந்தஹார், தற்கால பாக்கித்தான், வடமேற்கு இந்தியா, மதுரா, கன்னோசி, சௌராட்டிர தேசம் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளையும் கசினி முகமதுவும் அவரது மகன்களும் நடத்திய முப்பது வருட தொடர் தாக்குதல்கள் காரணமாக, இந்திய நாட்டின் செல்வங்களை கொள்ளை அடித்தும், இந்து, சமண, பௌத்த உருவ வழிபாட்டு இடங்களை இடித்தும், இந்துக்கள், பௌத்தர்கள், சமணர்ககளை கட்டாய மதம் மாற்றம் செய்யப்பட்டனர். மத மாற்றத்தை விரும்பாத இந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் சமணர்கள் தற்கால ஆப்கானித்தான் மற்றும் பாகிசுத்தான் பகுதிகளில் இருந்து வெளியேறி தற்கால மகாராட்டிரம், உத்திரப் பிரதேசம், பீகார், வங்காளம் மற்றும் தென்னிந்தியா போன்ற பகுதிகளில் குடியேறினர். கஜினி முகமதின் இந்திய படையெடுப்புகளின் தொடர் வெற்றியால், துருக்கியர்களுக்கும், அரேபியர்களுக்கும் இந்தியாவை எளிதாக வெற்றி கொள்ள முடியும் எண்ணம் மனதில் விதைக்கப்பட்டது. இந்தியாவில் இருந்த அறிவியல், மருத்துவம், சமயம், வானவியல், சோதிடம் தொடர்பான நூல்களை பாரசீக மொழியில் மொழியாக்கம் செய்து தங்கள் நாட்டிற்கு கொண்டு சென்றனர். கஜினியின் தொடர் படையெடுப்புகளால் ஆப்கானித்தான் இசுலாமிய மயமானது. பத்தாம் நூற்றாண்டில் பாரசீக மொழி, பண்பாடு, நாகரிகம் ஆப்கானித்தான் முழுவதும் பரவியது. காந்தார நாட்டு இந்து மன்னன் சாகியை (Shahi) வெற்றி கொண்டு, தட்சசீலத்தில் (பண்டைய கால நாளந்தா பல்கலைக்கழத்திற்கு இணயானது) இருந்த மாபெரும் பல்கலைக் கழகத்தை தாக்கி அழித்தார் கசினி முகமது. காந்தாரா நாட்டு இந்துக்களை நாட்டை விட்டு வெளியேற்றினார். கி. பி., 998 முதல் 1030 வரை ஆட்சி புரிந்த கசினி முகமது இந்தியா மீது 17 முறை படையெடுத்தார். தற்கால பாக்கிஸ்தானிலும், ஆப்கானிசுதானிலும், இசுலாமிய மக்கள் இன்று வரை, கசினி முகமதுவை மாபெரும் வெற்றி வீரனாக கொண்டாடுகிறார்கள். பாகிசுதான் நாடு, தான் தயாரித்த ஏவுகணைக்கு ’கசினி’ எனும் பெயர் சூட்டி, கசினிமுகமதுவின் நினைவை பாராட்டினர். மேலும் பாகிசுதான் நாட்டு இராணுவம், தனது ஒரு படைப் பிரிவுக்கு ‘கசினி’ என்ற பெயர் சூட்டி கசினி முகமதை பெருமைப்படுத்தினர். ஆனால் இந்தியாவில் உள்ள இந்துக்கள் மனதில் கசினி முகமது ஒரு மனிதாபமற்ற, கொடுமைக்கார, கொள்ளைக்கார படையெடுப்பாளர் என்றும், ஈவு இரக்கமற்றவர் என்றும், சோமநாதபுரம் (குசராத்து), சிவன் கோயில், மதுராவில் உள்ள , ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த இடத்தையும், துவாரகை கிருட்டிணர் கோயிலையும், தட்சசீலத்தில் இருந்த மிகப்பெரிய பல்கலைக்கழகத்தை அழித்ததையும், காந்தாரம், பெசாவர், முல்தான், காங்கிரா மற்றும் லாகூரில் இருந்த பௌத்தர், சமணர் மற்றும் இந்துக் கோயில்களும், மடாலயங்களும், உயர் கல்விகூடங்களையும் கஜினி முகமது இடித்து தரை மட்டம் ஆக்கி, கோயில் செல்வங்களை கொள்ளை அடித்துச் சென்ற நிகழ்வுகள் குறித்து வட இந்திய வரலாற்றில் நீங்காத துயர நினைவாக இந்திய மக்கள் கருதுகிறார்கள். இந்தியாவில் கொள்ளையடித்த பெருஞ்செல்வங்களைக்கொண்டு தனது பேரரசின் தலைநகரான கசினியை அனைத்து துறைகளிலும் வளப்படுத்தினார். பாரசீக மொழி இலக்கியத்தை வளர்த்தார். உயர் கல்வி நிறுவனங்களை நிறுவினார். மத்திய ஆசியாவில் இருந்த அறிஞர்களை ஊக்குவித்து பரிசில்கள் வழங்கினார். இந்திய சமூக மக்கள் மற்றும் அவர்களது நம்பிக்கைகள் குறித்தும், தனது இந்திய படையெடுப்புகள் குறித்தும் அல்பருணி என்ற வரலாற்று அறிஞரைக் கொண்டு ‘தாரிக்-அல்-இந்த்’ என்ற நூலை எழுதச் செய்தார். கசினி முகமதுவின் புகழ் பாடி, ‘ ஷா நாமா’ எனும் நூலை இயற்றிய கவிஞர் ‘பிர்தௌசி’ ( Ferdowsi) என்பவருக்கு 200 தினார்கள் வெகுமதி அளித்துப் பாராட்டினார் கசினி முகமது. உயர்நிலை கல்விக்கூடங்களில் கணக்கு, மருத்துவம், அறிவியல், இசுலாமிய மதம், மற்றும் மொழிகள் பற்றிய பாடங்கள் கற்க ஏற்பாடு செய்தார். தனது பேரரசு ஒரு இசுலாமிய பேரரசு என்றும், தனது பேரரசின் ஆட்சி மொழியாக பாரசீக மொழியை அறிவித்தார். ” யாமின் உத் தௌலா அபுல் காசிம் முகமது பின் செபுக்தெசின் “ என்ற மாபெரும் பட்டப் பெயருடன் தனது பேரரசை திறம்பட 32 ஆண்டுகள் ஆட்சி செய்தார். கி. பி. 1159ன் இறுதியில் கசினி பேரரசு நலிவடைந்த நிலையில் இருந்த போது, எல்லைப்புற பகை மன்னர்கள், பேரரசின் பல பகுதிகளை கைப்பற்றிக்கொண்டனர். இறுதியாக தற்கால ஆப்கானிசுதானில் உள்ள ’கோரி’ என்ற நகரத்து முகமது என்பவர் கசினி பேரரசை கைப்பற்றினார். அத்துடன் கசினி பேரரசு 1159ல் வீழ்ந்தது. நூல் சேகரிப்பு நூல் சேகரிப்பு என்பது, ஒருவர் தனக்கு ஆர்வமுள்ள நூல்களைச் சேகரித்தலைக் குறிக்கும். இது, நூல்களைத் தேடுதல், அவை இருக்கும் இடத்தை அறிதல், அவற்றைப் பெறுதல், ஒழுங்குபடுத்தல், விபரப்பட்டியல் தயாரித்தல், காட்சிக்கு வைத்தல், களஞ்சியப்படுத்தல், பேணுதல் என்பவற்றை உள்ளடக்கியது ஆகும். உண்மையான நூல் சேகரிப்பு, வாசிப்பதற்காக நூல்களை வாங்குவதினின்றும் வேறுபட்டது. 15 ஆம் நூற்றாண்டில் பிரான்சு, பர்கண்டிப் பிரபுக்களிடையே இருந்த படங்களோடு கூடிய கையெழுத்துப்படிகளைச் சேகரிக்கும் பழக்கத்திலிருந்தே நூல் சேகரிப்புத் தொடங்கி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அக்காலத்தில் அவர்கள் பழைய பிரதிகளை வாங்கியோ அல்லது புதிதாகப் படி எடுப்பித்தோ நூல்களைச் சேகரித்தனர். பர்கண்டியின் டியூக்கான பிலிப் என்பவருடைய சேகரிப்பே அவரது காலத்தில் மிகப்பெரிய தனிப்பட்ட சேகரிப்பாக இருந்ததாகத் தெரிகிறது. இவரது சேகரிப்பில் 600 க்கு மேற்பட்ட நூல்கள் இருந்தனவாம். அச்சிடும் முறைகளின் அறிமுகத்தைத் தொடர்ந்து, நூல்களின் விலைகள் பெருமளவு குறையலாயின. சீர்திருத்தக் காலத்தில் இங்கிலாந்திலும் பிற இடங்களிலும் நூல் சேகரிப்புக்கு பெரும் ஊக்கம் கிடைத்தது. அக்காலத்தில் பல துறவி மடங்களில் இருந்த நூலகங்கள் பிரிக்கப்பட்டதுடன் அவற்றிலிருந்த நூல்கள் பெரும்பாலும் அழிக்கப்பட்டன. ஆறாம் எட்வார்டின் அதிகாரிகள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், துறவிமடங்கள் ஆகியவற்றில் இருந்த நூலகங்களைக் குலைத்து அங்கிருந்த நூல்களை அகற்றினர். நூல்களைக் காப்பாற்றுவதற்காக, வசதியுள்ளவர்கள் அவற்றைச் சேகரிக்கத் தொடங்கினர். நூல் சேகரிப்பை இலகுவாகவும், அதிகம் செலவு இல்லாமலும்கூடச் செய்ய முடியும். பல கோடிக்கணக்கான பழையனவும் புதியனவுமான சேகரிப்புக்கு உகந்த நூல்கள் விற்பனைக்கு உள்ளன. ஆயிரக்காணக்கான நூல் விற்பனையாளர்கள் இவற்றை விற்பனை செய்கின்றனர். இணையவழியிலும் நூல்களை அபேபுக்சு, அலிபிரிசு, அமேசான் போன்ற விற்பனையாளர்களிடம் இருந்து வாங்க முடியும். மிகவும் அரிதான நூல்களைப் பணம்படைத்தவர்கள் மட்டுமே சேகரிக்க முடியும். "குட்டன்பர்க் பைபிள்", "திரு வில்லியம் சேக்சுப்பியரின் நகைக்க்சுவைகள், வரலாறுகள், துன்பியல்கள்" போன்ற நூல்கள் இத்தகைய நூல்களுக்கு எடுத்துக் காட்டுகள். இவை மிகவும் பெறுமதி வாய்ந்தவை. நடுத்தர வசதி உள்ளவர்கள், தமக்குப் பிடித்த ஆக்கியோன் ஒருவரின் நூல்களையோ, தற்கால எழுத்தாளர்களின் முதல் பதிப்புக்களையோ, குறித்த தலைப்புச் சார்ந்த எல்லா நூல்களையுமோ சேகரிக்க முயலலாம். இவ்வாறான நூல்களின் விலைகள் அவற்றுக்கு இருக்கும் மதிப்பிலும், கிடைக்கக்கூடிய படிகளின் எண்ணிக்கையிலும், அவற்றின் நிலையிலும் தங்கியுள்ளன. கோடிக்கணக்கில் புத்தகங்கள் இருப்பதால் எல்லாவற்றையும் ஒருவர் சேர்த்துவிட முடியாது. அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சேர்த்தாலும் அதற்கு மதிப்பு இருக்காது. ஆதலால் நூல் சேகரிப்பவர்கள், ஒரு குறித்தவகை அல்லது அதன் ஒரு துணை வகையைச் சேர்ந்த நூல்களைச் சேகரிப்பது உண்டு. கதைகள் வாசிப்பவர்கள் தமக்குப் பிடித்த எழுத்தாளர் ஒருவரின் எல்லா முதற் பதிப்புக்களையும் சேகரிக்கலாம். கவிதைகள் மீது ஆர்வம் கொண்டவர்கள் பாரதியார், கண்ணதாசன் போன்ற ஒருவரைத் தெரிவு செய்து அவர் எழுதிய நூல்கள் அனைத்தையும் சேகரிப்பதை நோக்கமாகக் கொள்ளலாம். குறித்த ஒரு நகரம் அல்லது ஒரு பகுதி பற்றி வெளிவந்த நூல்கள், ஒரு இனம் பற்றி வெளிவந்த நூல்கள் ஒரு குறித்த காலப்பகுதியில் வெளிவந்த நூல்கள் என பலவற்றைக் கருப்பொருளாகக்கொண்டு நூல் சேகரிக்க முடியும். மேலும் சில சேகரிப்புக்கான கருப்பொருள்கள்: இரு வாழ் பரப்பி இரு வாழ் பரப்பி (Binary vector) என்பது தனது இழை வரிசையில் (DNA sequence) இரண்டு தொடக்க புள்ளிகள் (Ori or Origin) கொண்டுள்ளதால், இவைகளால் இரு வெவ்வேறு வாழ்யிடத்தில் இருக்க அல்லது பல்கி பெருக முடியும். எடுத்துக்காட்டாக பயிர் உருமாற்றத்தில் பயன்படும் அக்ரோ பரப்பிகள் (Ex.pGA vectors or pCAMBIA) இ.கோலியிலும் , பயிர்நோய்கோலுயிரிலும் (Agrobacterium) பல்கி பெருகும் தன்மையெய் கொண்டுள்ளன. ஈசுட்-இரு கலப்பின முறையில் (Yeast-two hybrid system) பயன்படுத்தப்படும் அனைத்து பரப்பிகளும் இதனில் அடங்கும். மேலும் ஈசுட்-இரு கலப்பின முறையில் பாவிக்கப்படும் பரப்பிகளுக்கு "சட்டில்" பரப்பிகள் (Shuttle vectors) எனவும் அழைக்கப்படும். ஏனெனில் இவைகள் ஈசுடின் உட்கருவுக்குள் சென்று வெளியில் வருவதால் அல்லது வெளியில் இருந்து உட்கருவுக்குள் செல்லும் தன்மை உள்ளதால் "சட்டில்" பரப்பிகள் எனப்பெயர். எம்டனின் மதராசுக் குண்டுத் தாக்குதல் மதராசு குண்டுத் தாக்குதல் ("Bombardment of Madras") என்பது முதலாம் உலகப் போரில் இந்தியாவின் மதராஸ் (இன்றைய சென்னை) நகரம் மீது இடம்பெற்ற தாக்குதலைக் குறிக்கும். "எம்டன்" என்ற ஜெர்மனிய போர்க்கப்பல் இத்தாக்குதலை ஆரம்பித்தது. கடற்படைக் கப்பல் கப்டன் கார்ல் வான் முல்லர் தலைமையில் 1914, செப்டம்பர் 22 ஆம் நாள் இரவு இந்தியாவின் தென்கிழக்குக் கரையோரமாக மதராஸ் நகரை அண்மித்தது "எம்டன்". மதராஸ் துறைமுகப் பகுதியை அண்மித்தவுடன், சிறிது நேரம் நிலைமையை கண்காணித்த பின்னர் சரியாக இரவு 09:30 மணிக்கு தாக்குதலை நடத்த வான் முல்லர் ஆணையிட்டார். மின்சார பயன்பாடு இல்லாத காலம் என்பதால் சென்னை நகரமே இருளில் அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தது. யாரும் எதிர்பாராத அந்தநேரத்தில், சென்னை கடற்கரையில் இருந்து சில ஆயிரம் அடி தூரத்தில் நின்று கொண்டு, குண்டுகளைப் பொழிந்தது "எம்டன்". முதலில் "எம்டன்" பர்மா எண்ணெய்க் கம்பனிக்குச் சொந்தமான எண்ணெய்த் தாங்கிகள் மீது குண்டுகளை வீசியது. முதல் 30 சுற்றுத் தாக்குதல்களில் பல தாங்கிகள் தீப்பற்றி எரியத் தொடங்கின. அடுத்ததாக "எம்டன்" துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய சரக்குக் கப்பல் ஒன்றைத் தாக்கி மூழ்கடித்தது. அக்கப்பலில் இருந்த 26 மாலுமிகள் இத்தாக்குதலில் காயமடைந்தனர். குறைந்தது 5 மாலுமிகள் உடனேயோ அல்லது காயமடைந்த பின்னரோ உயிரிழந்தனர். இரவு 10:00 மணி வரை இத்தாக்குதல் இடம்பெற்றது. அதன் பின்னரே பிரித்தானியக் கரையோரக் காவல் படையினர் பதில் தாக்குதலை ஆரம்பித்தனர். ஆனாலும், அதற்குள் வெற்றிகரமாக தனது தாக்குதலை முடித்தவுடன் "எம்டன்" திரும்பி விட்டது. மொத்தம் 125 குண்டுகளை "எம்டன்" அன்றையை இரவு வீசியிருந்தது. ஒரு சில நிமிடங்கள் மட்டுமே நீடித்த தாக்குதலால் அப்போதைய மெட்ராஸ் நகரமே கதிகலங்கிப்போனது. எம்டன் மீண்டும் தாக்கும் என்ற அச்சத்தில் நகரை விட்டு பலர் வெளியேறினார்கள். இத் தாக்குதலில் பலத்த சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக ஆட்சிபுரிந்து வந்த வெள்ளையர்களின் கவுரவத்துக்கு கிடைத்த பேரிடியாக இது அமைந்தது. முதலாம் உலகப் போரின் போது இந்தியாவில் மதராஸ் நகரம் மட்டுமே மைய சக்திகளின் தாக்குதலுக்கிலக்கான நகரம் ஆகும். லேக் வலேசா லேக் வலேன்சா (Lech Walesa) (போலியம்: "Lech Wałęsa", அல்லது பிறப்பு: செப்டம்பர் 29, 1943) போலந்து நாட்டின் துறைமுகத் தொழிலாளராக இருந்து சோலிடாரிடி என்ற தொழிற்சங்க இயக்கத்தின் தலைவராக போராட்டங்கள் நடத்தி போலந்து நாட்டின் அதிபராக உயர்ந்தவர். இவர் 1983 ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றவர். பனிமனிதன் (புதினம்) பனிமனிதன் என்பது ஜெயமோகன் எழுதிய சிறுவர் புதினம். இது தினமணி நாளிதழின் இலவச இணைபபான் சிறுவர் மணியில் தொடர்கதையாக 2001 ல் வெளிவந்தது. கவிதாபதிப்பகம் இந்த நாவலை நூலாக வெளியிட்டிருக்கிறது. ஜெயமோகனின் "பனி மனிதன்" தமிழ் சிறுவர் இலக்கியங்களில் முக்கியமான முயற்சியும் முன்னகர்வும் ஆகும். சாகசக்கதை, அறிவியல், அதீத கற்பனை, மர்மம், மதிப்பீடுகள் ஆகிய அனைத்தையும் இணைத்து படைக்கப்பட்ட ஒரு சிறுவர் இலக்கியமாக பனிமனிதன் விளங்குகிறது. யதி எனப்படும் பனிமனிதன் இமயமலை சார்ந்த பகுதிகளில் வழங்கப்படும் ஒரு புராண மனிதன். உண்மைக்கும் கற்பனைக்கும் இடைப்பட்டதோர் வெளியில் இருக்கும் அவிழ்க்கப்படாத புதிர் என்றே பலர் கருதும் ஓர் மர்ம புதிர். மலைப்பனியில் தெரியும் சில விநோத இராட்சத காலடித்தடங்களை குறித்து அறிந்து வர பணிக்கப்படுகிறான் பாண்டியன் எனும் இராணுவ வீரன். கிராமவாசிகளால் மிகைப்படுத்தப்பட்ட சாதாரண இயற்கை விளைவாக இருக்கும் என நினைத்து புறப்படும் பாண்டியன் விரைவில் விநோத நிகழ்வுகளையும், பனிமனிதன் குறித்த உள்ளூர் வழக்குகளையும் அதன் பின் இருக்கும் அதிசய உண்மைகளையும் சந்திக்கிறான். ஆனால் இப்பயணம் வெறும் சாகசப்பயணம் மாத்திரமல்லாது ஒரு புனிதப்பயணத்தின் தன்மையும் கூடவே எடுத்து வளர்கிறது. கதை படிக்கும் குழந்தைகள் வளருகையில் கூடவே வளர முடிந்த நூல் இது. பாண்டியனால் காப்பாற்றப்படும் கிம் எனும் இச்சிறுவனுடன் இந்த சாகஸ குழுவில் ஒரு டாக்டரும் கலந்து கொள்கிறார். இராணுவத்தினனான பாண்டியன், பெளத்த மலைவாசி கிராம சிறுவனான கிம், மேற்கத்திய அறிவியல் பார்வை கொண்ட டாக்டர் ஆகியோர் பனிமனிதனை தேடி புறப்படுகிறார்கள். பனிமனிதனை ? டாக்டர் வெளிப்படையாகவே அறிவிக்கிறார், ‘நான் பனிமனிதனைப்பற்றி ஆராய்ச்சி செய்கிறேன். ஆனால் அது உண்மையில் மனிதனைப் பற்றிய ஆராய்ச்சிதான். ‘ (பக். 40) பாதையில் டாக்டர் பாண்டியனுக்கு இயற்கை உலகின் செயல்பாடுகளையும், பரிணாம அறிவியலையும் விளக்குகிறார். தகவமைவுதான் பரிணாமத்தின் முக்கிய இயக்கு சக்தியாக டார்வின் கண்டறிந்ததாக டாக்டர் குறிப்பிடுகிறார். விடுபட்ட கண்ணியாக பனிமனிதனை ஊகிக்கிறார் டாக்டர். ஆனால் பனி மனிதனை கண்டவனான கிம் டாக்டர் காட்டும் எந்த பேரினக் குரங்கை போலவும் பனிமனிதன் இருப்பதாக கூறவில்லை. பின்னர் ஹோமோ எரெக்டஸை போல இருப்பதாக கூறுகிறான். பாண்டியன் சிறுவன் கிம் யோகசுவாசம் எனும் யோகப்பயிற்சி செய்வதை பார்க்கிறான். ‘பாண்டியனுக்கு வியப்பாக இருந்தது. பனிமலையில் வாழும் பழங்குடி மக்கள் அத்தனை சிறப்பாக யோகப்பயிற்சி பெற்றிருப்பார்கள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. ‘ (பக். 59) இயற்கை, மானுடம் ஆகியவை குறித்த பல பார்வைகள் கதையினூடே குழந்தைகள் முன்வைக்கப்படுகின்றன. இரு உதாரணங்கள். ஒன்று இயற்கை விளைவு பற்றியது. ‘பனிச்சமவெளி ஒரு பிரம்மாண்டமான கண்ணாடி போன்றது. சூரிய ஒளியை அது பிரதிபலிக்கிறது. ‘ என்றார் டாக்டர்…… ‘…பனிமலை புத்தரின் மனம் அல்லவா ? இங்கு வருவது பெரிய பாக்கியம் என்று என் அப்பா சொல்வார் என்றான் கிம். ‘ஏன் இதை புத்தரின் மனம் என்கிறார்கள் ? ‘ என்றான் பாண்டியன். ‘ஏனென்றால் இங்கு எல்லாமே தூய்மையாக உள்ளன. தூய்மையாக இருக்கும்போது பூமியும் வானம் போல ஆகிவிடும். இங்கு எந்த ஒலியும் இல்லை. தியானம் செய்யும் புத்தரின் மனம் போல இந்த இடம் அமைதியாக இருக்கிறது ‘ என்றான் கிம் ‘ (பக் 64௬5) பரிணாமத்தில் மனிதனின் இடம் குறித்தது. மனிதனிலிருந்து குரங்கின் பரிணாமத்தை விளக்குகிறார் டாக்டர் ஏங்கல்ஸின் தத்துவத்தை விளக்குகிறார். அச்சமயம் கிம் அவர்கள் ஊர் பிட்சுவின் கோட்பாட்டினை கூறுகிறான். ‘திருஷ்ணை ‘ எனும் உள்ளார்ந்த ஓர் அதிருப்தியே மானுட நாகரிகத்தினை முன்னகர்த்தும் சக்தி என்றும் அதுவே அவனை திருப்தியற்று மேலும் மேலும் செயல்பட வைப்பதாகவும் கூறுகிறான்.(பக் 89) திருஷ்ணையை வெல்ல வேண்டும் என்கிறான் கிம். திருஷ்ணையே மானுடத்தின் முன்னேற்றத்துக்கு அடிப்படை எனவே அதை இழக்கலாகாது என்கிறார் டாக்டர். பனிமனிதனை தேட காரணமே அந்த திருஷ்ணைதானே என சுட்டிக்காட்டுகிறார் டாக்டர். கிம்மின் எதிர்வினை சொல்லப்படவில்லை. அது மெளனமாகத்தான் இருந்திருக்க வேண்டும் அடுத்த பக்கங்களில் திருஷ்ணையின் செயல்பாட்டினை ஆசிரியர் காட்டுகிறார். கதையின் ஒரு முக்கிய உச்சம் இங்கு தொடப்படுகிறது. முக்கியமான மதிப்பீட்டு நிகழ்வாக அடுத்த நிகழ்ச்சிகள் அமைகின்றன. பின்னர் வழியில் அவர்கள் தங்கள் லாமாவை தேடும் ஒரு பிட்சு கூட்டத்தை சந்திக்கின்றனர். மீண்டும் வேறுபட்ட உலகங்கள் மோதுகின்றன. இப்போது அந்த பிட்சுக்கள் பனிமனிதனை குறித்து மேலும் கூறுகின்றனர். அவன் விடுபட்ட கண்ணி அல்ல. மாறாக அவன் மற்றொரு பரிணாம சாத்தியகூறு. திருஷ்ணை அற்ற பரிணாமத்தின் பூரணத்துவம் என அவர்கள் கூறுகின்றனர். இறுதியில் நம் சாகஸக்குழு பனிமனித சமுதாயத்தை சந்திக்கிறது. ஒருவிதத்தில் விவிலியத்தின் ஆதிதோட்டத்தை நினைவு படுத்தும் அனைத்து உயிர்களும் இசைந்து வாழும் உலகினை நாம் நம் சாகஸக்குழுவுடன் சந்திக்கிறோம். இந்நிலையில் மீண்டும் டாக்டரும் பாண்டியனுக்குமான பேச்சுக்கள் மூலம் மனம், பரிணாமம் ஆகியவை குறித்த பலவித கருத்துக்கள் முன்வைக்கப் படுகின்றன. இதற்கிடையில் கிம்மின் மூலம் மற்றொரு உண்மை தெரிய வருகிறது. அவர்கள் அனைவருமே பனிமனிதர்களான யதிகளால் அங்கு வரவழைக்கப்பட்டவர்கள். தற்செயலான நிகழ்ச்சிகள் அனைத்துமே ஓர் பெரும் தூய கூட்டுமனத்தின் பெரும் இயக்க பகுதிகள் என அவர்கள் அறிகின்றனர்.கிம் மட்டுமே இப்பெரும் மனத்தின் செயலியக்கம் குறித்த பிரக்ஞயுடன் இருந்தவன். அனைவரும் அந்த பூமியை விட்டு மீண்டும் செல்கின்றனர். திரும்புகையில் தற்செயலாக ஒரு மலரை பாண்டியன் கிம் கையில் கொடுக்கிறான். அவர்கள் மீண்டும் தம் தலைமை லாமாவைத் தேடும் பிட்சுக்களை காண்கின்றனர். கிம்மின் கையில் இருக்கும் மலர்தான் அவர்கள் தேடும் லாமாவுக்கான அடையாளம். கிம் லாமா ஆகிறான். டாக்டர் அவனை காலில் விழுந்து வணங்குகிறார். பாண்டியனும் அவனை கை கூப்பி வணங்குகிறான் அவர்கள் இறுதியாக மற்றொரு ஆச்சரியத்தையும் அடைகின்றனர். பனிமனிதனே இனி வரும் மைத்ரேய புத்தர் என்பதே அது. டாக்டர் கூறியதற்கும் அப்பால் பனிமனிதனை தேடல் அக்குழுவில் ஒவ்வொருவருக்கும் அகத்தேடலாகவே மாறியிருப்பதை நம்மால் உணர முடிகிறது. இறுதியாக பனிமனிதன் குறித்த இரகசியம் இரகசியமாகவே காக்கப்படுகிறது. இயற்கையினை அறிய அறிவியல் மாத்திரமே ஒரே வழியல்ல என்கிற உண்மையையும் அதேசமயம் அறிவியலின் அழகினையும், புராண மொழியின் அழகினையும் அவை இயங்கும் தளங்களின் இயற்கையையும் ஒரு சேர குழந்தைகளுக்கு தரும் முயற்சி பனிமனிதன். சிறுவர்களுக்கு புரியக்கூடிய எளிய மொழியில் அமைந்திருக்கிறது இந்நாவல். ஆறு சொற்களுக்கு மிகாத சொற்றொடர்களால் ஆனது இது. மூன்றாயிரம் சொற்களுக்குள்தான் இந்நாவலில் பயன்படுத்தப்பட்டுள்ளன. நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம் நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எழுதிய அங்கதக் கவிதைநூலாகும். இது நாஞ்சில்நாட்டில் நிலவி வந்த 'மருமக்கள் வழி' சொத்துரிமை முறையின் தீங்குகளை அந்த முறையால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் சொல்வதுபோல பாடப்பட்டிருக்கின்றது. 1916ல் "ஒரு பழைய சுவடி" என்ற பேரில் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையவர்களால் திருவனந்தபுரத்தில் இருந்து வெளி வந்த தமிழன் என்ற பத்திரிகை இதழில் தொடராக வெளிவந்தது. 1942ல் புதுமைப்பதிப்பகம் முதன் முதலில் இந்நூலைப் புத்தகமாக வெளியிட்டது. தமிழன் பத்திரிக்கை ஆசிரியர் எஸ். முத்துசாமிப் பிள்ளை அவர்களால் மறுபதிப்பு செய்யப்பட்டு காலச்சுவடு நிறுவனத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. வெட்டம் மாணி வெட்டம் மாணி கேரள எழுத்தாளர். இவர் தொகுத்த புராண கலைக்களஞ்சியம் போல இந்திய மொழிகளில் பிறிதொன்று இல்லை. எல்லா இந்து புராணங்களையும் ஒரு பெருநூலில் அகரவரிசையில் அமைக்கபப்ட்டிருக்கிறது. இது புகழ்பெற்ற ஒரு குறிப்புதவி நூல் 1964 ல் வெளிவந்த புராணக் கலைக்களஞ்சியம் ஒருவகையில் இந்திய மொழிகளில் உள்ள எந்த ஒரு புராணக்கலைக்களஞ்சியத்தை விடவும் மேலானது, முழுமையானது என்று அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்தியாவின் பிரம்மாண்டமான புராண மரபை மூல சம்ஸ்கிருத,பாலி , பிராகிருத மொழிகளில் இருந்து விரிவாக தொகுத்து படிப்பதற்கு இனிய மொழியில் எழுதப்பட்டது இந்த கலைக்களஞ்சியம். மலையாளமொழியின் எக்காலத்திலும் பெரிய வணிக வெற்றிகளில் ஒன்று இந்நூல். இதுவரை இருபத்தைந்து பதிப்புகளிலாக ஒன்றரை லட்சம் பிரதிகள் விற்கப்பட்டுள்ளது இந்த மாபெரும் நூல். அனேகமாக படிக்கும்பழக்கமுள்ள மலையாளிகள் அனைவருமே இந்நூலை அறிந்திருப்பார்கள். இது இல்லாத நூலகம் இல்லை. பலவகையிலும் இந்நூலுடன் ஒப்பிடத்தக்க அபிதான சிந்தாமணி . புராணக் கலைக்களஞ்சியம் ஆசிரியரான வெட்டம் மாணி ஒரு சிரியன் கிறித்தவர். கோட்டயத்துக்கு அருகே உள்ள கொச்சுமற்றம் என்ற சிற்றூரில் 1927 ல் ஒரு வேளாண் குடும்பத்தில் பிறந்தார். அப்பா பெயர் புதுப்பள்ளி வெட்டம் உலஹன்னான். அம்மா அன்னம்மா. ஆங்கிலப்பள்ளியில் மெட்ரிகுலேஷன் படித்தாலும் அதை முழுமைப்படுத்த முடியவில்லை. கோட்டயம் அருகே பாம்பாடி என்ற ஊரில் உள்ள விஞ்ஞான சம்வர்த்தினி சம்ஸ்கிருதப் பள்ளியில் ஆசிரியரானார். அப்பள்ளியில் போதிய ஊதியம் கிடைக்கவில்லை என்று சண்டைபோட்டு ராஜினாமாசெய்துவிட்டு ராணுவத்தில் சேர்வதற்காக பெங்களூர் சென்றார். அங்கேதான் ராணுவ வாழ்க்கையின் கொடுமைகளை அறிந்து ராணுவத்தில் பயிற்சியை முடிக்காமல் வெளியேறி ஊர் ஊராகச் சுற்றும் நடோடியானார். பல வருடம் அவர் இந்திய நிலப்பகுதியில் அலைந்து திரிந்தார். அப்போது பதினைந்துக்கும் மேற்பட்ட மொழிகளை கற்றார். பின்னர் ஊர்திரும்பி கறுகச்சால் என்.எஸ்.எஸ் ஆசிரியர் பயிற்சிபப்ள்ளியில் ஆசிரியரானார். பயிற்சிக்குப் பின்னர் பலவருடங்கள் ஆரம்பப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். புதுப்பள்ளி தறயில் ஆரம்பப்பள்ளி, அரயன்னூர் நடுநிலைப்பள்ளி, கோட்டயம் சி.எம்.எஸ் பள்ளி போன்றவற்றில் ஆசிரியராக இருந்தார். வெட்டம் மாணி கவிதைகள் எழுதினார். அவரது முதல் தொகுதி ‘அந்தியபாஷ்பம்’. அதன் பின் தொடர்ச்சியாக கதைகளும் கவிதைகளும் எழுதினார். கதாபிரஸங்கம் என்ற கலையில் [தனிநபர் நடிப்பும் பாடல்களுமாக ஒருவரே ஒரு கதையை மேடையில் நிகழ்த்துவது]புகழ்பெற்று நிறைய பணம் சம்பாதித்தார். நன்றாகப் பாடுவார். பைபிளில் ஒரு நிபுணர். ஆகவே கிறித்தவப்பேருரைகள் செய்வார். அறிவியலில் பெரும் ஆர்வம் உண்டு. இதன் நடுவே பள்ளிகள் மாறிக்கொண்டே இருந்தார். மூன்றுவருடத்துக்குமேல் அவர் ஒரு நிறுவனத்தில் வேலைபார்த்தது இல்லை. வேலையைவிடுவதில் அவருக்கு அதிகமான உற்சாகம் இருந்தது. கோட்டயம் எம்.டி பள்ளி,மணார்காடு தேவலாயப்பள்ளி என்று மாறிக்கொண்டே இருந்தார். நடுவே இந்திபயில்வதில் ஆர்வம் எழுந்து முதல் தகுதியில் ராஷ்ட்ர பாஷா விஸாரத் பட்டம்பெற்றார். அதன்பின் ஹிந்தி கற்பிக்க ஒரு தனியார் பயிற்சிப்பள்ளியை ஆரம்பித்து அதை வெற்றிகரமாக நடத்தினார். பின்னர் அதை ஒரு பெரிய தனியார் கல்வி நிறுவனமாக வளர்த்தார் வெட்டம் மாணி . பிரகாஷ் கல்வி நிறுவனங்கள் என்ற பேரில் அவர் நடத்திய அந்த அமைப்பு பல கிளைகளுடன் வளர்ந்து ஒரு கட்டத்தில் அதில் இரண்டாயிரம் மாணவர்கள் படித்தார்கள். இந்த காலகட்டத்தில் அவர் ஆங்கிலம் மலையாளம் சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் முதுகலைப் பட்டங்கள் பெற்றார். அக்காலத்தில் மிகமிகப்புகழ்வாய்ந்த ஆசிரியராக அவர் கருதபப்ட்டார். ஆகவே அவரிடம் கற்க மாணவர்கள் குவிந்தார்கள். அவரது பள்ளி வெற்றிகரமாக நடந்தகாலத்தில் வெட்டம் மாணி புராணக் கலைக்களஞ்சியத்தின் பணியை ஆரம்பித்தார். ஏறத்தாழ 9 வருடம் கடுமையாக உழைத்தார். தினம் இரண்டுமணிநேரம் மட்டுமே அவர் தூங்குவது வழக்கம். பகலில் பன்னிரண்டு மணிநேரம் வரை வகுப்புகள். இரவில் எட்டுமணிநேரம் வரை புராண ஆராய்ச்சி. ஒருகட்டத்தில் முற்றிலும் தூக்கமிழந்து தூக்கமின்மைநோய்க்கு ஆளானார். அது அவரது உடலை பாதித்தாலும் சிந்தனை தெளிவாகவே இருந்தது. 1964ல் புராணக் கலைக்களஞ்சியத்தின் முதல் பதிப்பு அவராலேயே பிரசுரிக்கப்பட்டது. 1967ல் இரண்டாம் பதிப்பையும் அவரே பிரசுரித்தார். ஆரம்பத்தில் கவனிக்கபப்டாதுபோன இந்த பெருநூல் மெல்லமெல்ல அறிஞர் மத்தியில் புகழ்பெற்றது. பின்னர் இதன் பகுதிகள் இதழ்களில் பிரசுரமாக ஆரம்பித்த போது இதன் இனிய வாசிப்புத்தன்மை பொதுவாசகர்களைக் கவர்ந்தது. இந்நூல் ஒரு வெற்றிகரமான நிறுவனமாகவே வளர்ந்தது. இன்று வருடம்தோறும் லட்சகணக்கில் பதிப்புரிமை வருமானம் ஈட்டும் ஒரு நூலாக உள்ளது. 1971ல் வெட்டம் மாணி ‘பாவனா’ என்ற இலக்கிய வார இதழை ஆரம்பித்தார். 20 இதழ்களுக்குமேல் அதை நடத்த முடியவில்லை. புராணக் கலைக்களஞ்சியம் தவிர 10 நூல்கள் அவரால் எழுதப்பட்டன.1987 மேமாதம் 29 ஆம் தேதி வெட்டம் மாணி மறைந்தார். வெட்டம் மாணியின் மனைவிபெயர் சி.வி.அன்னம்மா. சி.வி.ஜோணப்பா,ஜார்ஜ் வெட்டம், டைட்டஸ் மாணி ஆகிய மூன்று மைந்தர்கள். மூவருமே புகழ்பெற்றவர்கள். சி.வி.ஜோணப்பா,ஜார்ஜ் வெட்டம் இருவரும் கல்லூரி ஆசிரியர்கள், வரலாற்று இலக்கிய ஆய்வாளர்கள்.டைட்டஸ் மாணி கேரளத்தின் முதன்மையான வழக்கறிஞர்களில் ஒருவர். வெட்டம் மாணியின் கலைக்களஞ்சியம் இவ்விரு நூல்களின் வழிநூல். ஆனால் முழுமையானது. ஒவ்வொரு புராண கதைமாந்தருக்கும் கொடுக்கபப்ட்டுள்ள கட்டுரையில் அக்கதாபாத்திரம் முதன்முதலில் எந்த புராணத்தில் தோன்றுகிறது, எந்தெந்த புராணங்களில் அந்தக் கதாபாத்திரம் எவ்விதமெல்லாம் வளர்ச்சி கொள்கிறது, அதன் பல்வேறு தோற்றநிலைகள் என்ன, அந்த பெயரில் வேறு எந்தெந்த புராணக் கதாபாத்திரங்கள் உள்ளன என்றெல்லாம் வரிசையாக விரிவான தகவல்கள் காணபப்டும். சொல்லப்போனால் அத்தலைப்பு பற்றிய முழுமையான ஓர் ஆய்வுக்கட்டுரையாகவே அது இருக்கும். வெட்டம் மானியின் ஒரு தலைப்பையே முனைவர் பட்ட ஆய்வேடாக எழுதிவிடலாம் என்பார்கள். உதாரணமாக இந்திரன். இந்திரன் என்ற தலைப்பின் கீழ் முதல் உபதலைப்பு ‘தோற்றம்’ அடுத்தது ‘வம்சாவலி’ அதன் பின் ‘இந்திரனும் கருடனும்’ என்ற தலைப்பில் இந்திரனைப்பற்றிய முதல் தொல்கதை. அதன்பின் கலைக்களஞ்சிய அளவில் 16 பக்கங்களில் இரு பத்திகளில் நுண்ணிய எழுத்தில் 96 உபதலைப்புகளில் இந்திரனைப் பற்றிய மிகவிரிவான தகவல்கள் உள்ளன. அதை ஒரு சிறு நூலாகவே வெளியிடலாம். உடனே அடுத்த தலைப்பு. இந்திரகீலம். ‘இமாலயத்துக்கும் கந்தமாலனுக்கும் முன்னால் உள்ள ஒரு மலை. இந்த மலையின் அதிபன் குபேரனின் உபாஸகன். மகாபாரதம் வனபர்வம் 37 ஆம் அத்தியாயம்’ என்ற ரத்தினச்சுருக்கமான குறிப்பு. அடுத்தது இந்திரஜித் என்ற தலைப்பில் மிக விரிவான கட்டுரை வெட்டம் மாணியின் இன்னொரு பெரும் நூல் ராமசரிதம் என்ற பிரபலமான கதகளி ஆட்டக்கதைக் காவியத்துக்கு அவர் எழுதிய பேருரை, இரண்டு பகுதிகளிலாக இது வெளியாகியது. கிருஷ்ணகாதை என்ற தொன்மையான நூலுக்கும் அவர் விரிவான விரிவுரை எழுதியிருக்கிறார். காந்தியைப்பற்றி சிறுவர்களுக்காக ‘குழந்தைகளின் காந்தி’ என்றநூலை எழுதியிருக்கிறார்.கம்பராமாயணத்தின் சுந்தரகாண்டத்தை மலையாளத்தில் எழுதியிருக்கிறார் கேரள் இலக்கியவரலாற்றை விரிவாக எழுதியிருக்கிறார். எனினும் வாழ்ந்தபோது வெட்டம் மாணிக்கு அதிக வருமானத்தை அளித்தது அவர் எழுதிய பல ஆங்கில வழிகாட்டி நூல்களே. வெட்டம் மாணி அடிப்படையில் மத பக்தி கொண்ட கிறித்தவர். பைபிளில் அவருக்கு ஆழமான ஈடுபாடும் படிப்பும் இருந்தது. இந்து புராணங்களை அவர் இந்திய நாட்டின் கலாச்சார அடித்தளமாகவே காண்கிறார், மதநூல்களாக அல்ல. ”எந்த ஒரு பண்பாடும் அது உருவாக்கி எடுத்திருக்கும் புராண இதிகாசங்களின் மீது வேரூன்றியபடித்தான் வளர முடியும். இந்திய இலக்கியமும் அப்படித்தான். மகத்தான மகாபாரதம், ராமாயணம், புராணங்கள், ஸ்மிருதிகள் போன்றவை நம் பண்பாட்டை உருவாக்கும் சக்திகள் ”என்று தன் முன்னுரையில் வெட்டம் மாணி குறிப்பிடுகிறார். ”உலக இதிஹாச நாயகர்களான ஹோமர் போன்றவர்களையெல்லாம் வாமனர்களாக சிறுத்து காலடியில் கைகூப்பி நிற்கச்செய்யும் பேருருவமான வியாசனைப் புறக்கணித்து என்ன நவீன இலக்கியம் உருவாக முடியும்?” என்று சொல்லும் வெட்டம் மாணி அதன்பொருட்டே இந்த பெருநூலை உருவாக்கினார். ஒரு மொழியின் இலக்கியம் அப்பண்பாட்டிற்கே உரிய படிமங்களால்தான் உருவாக முடியும். அவையே இலக்கிய ஆக்கத்துக்கான மூலமொழி [Proto language] யை கட்டமைக்கின்றன. இந்திய இலக்கியத்துக்கு அது புராண இதிஹாசங்களே என்கிறார் வெட்டம் மாணி பன்மொழி அறிஞரும், செவ்விலக்கியங்களில் ஊறியவருமான வெட்டம் மாணி ”மானுடகுலத்தின் அனைத்து தளங்களையும் தெளிவுபடுத்தும் தன்மையை வைத்துப்பார்த்தால் மகாபாரதத்தைவிட மேலான ஒரு இலக்கிய ஆக்கம் இந்த புவிமீது இதுவரை உருவானதில்லை என்று நான் உறுதியாக எண்ணுகிறேன். இவ்விஷயத்தில் ஆதிகவிஞரான வான்மீகி கூட வியாஸனுக்கு மிகமிகப் பின்னால் வரக்கூடியவனே. பிறகல்லவா ஹோமர்? வியாஸனுக்கு மானுட இலக்கிய வரலாற்றில் அளிக்கப்படவேண்டிய இடம் இன்றுவரை நம்மால் பெறபப்டவில்லை. வியாஸசரஸ்வதியின் தாய்ப்பால் குடித்து வளர்ந்த பாரத மக்கள் அடுத்த தலைமுறையிலாவது அந்த உரிமையை நிலைநாட்டுவார்கள். இலக்கியத்துக்கு ஒரு நீதிமன்றம் உள்ளது என்றால் இப்புவியில் இதுவரை பிறந்த கவிஞர்களில் வியாசனே முதன்மையானவரென்று அது தீர்மானிக்கவே செய்யும்” என்கிறார். தன் முன்னுரையில் வெட்டம் மாணி புராணங்களின் முக்கியத்துவத்தை விரிவாகவே விளக்குகிறார்.இந்தியாவில் உள்ள இலக்கியநூல்களில் எல்லாமே புராணத்தின் செய்திகளே பல்வேறுவகைகளில் படிமங்களாகவும் உருவகங்களாகவும் மறு ஆக்கங்களாகவும் இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் செவ்வியல்கலைகள் மட்டுமல்ல நாட்டுப்புறக் கலைகள்கூட புராண இதிஹாசங்களை அடிப்படையாகக் கொண்டவையே. நவீன இலக்கியங்களில்கூட முக்கியமான ஆக்கங்களில் இதிகாச,புராணக் கதைகளின் நேரடியான பாதிப்பைக் காணலாம். ஆகவே ஏதாவது ஒரு வகையில் இலக்கியத்தில்செயல்படும் ஒவ்வொருவருக்கும் புராண இதிகாசப் பயிற்சி இன்றியமையாதது’ என்கிறார் வெட்டம் மாணி 1955ல் இந்நூலை எழுத ஆரம்பித்ததாகச் சொல்லும் வெட்டம் மாணி இதிலுள்ள தலைப்புகளை உருவாக்கிமுடிக்கவே இரண்டுவருடம் ஆயிற்று என்கிறார். பின்னர் ஏழுவருட உழைப்பினால் நூலை எழுதி முடித்து வெளியிட்டார். ஏராளமான மூலநூல்களையும் சுவடிகளையும் இதற்காகப் படிக்கவேண்டியிருந்தது. ஒரு புராண கதாபாத்திரத்தின் வம்சாவலியை முழுமைசெய்ய குறைந்தது பத்து நூல்களை ஆராயவேண்டியிருந்தது என்கிறார். இந்நூல் உண்மையில் இந்திய இலக்கியத்தின் படைப்புமொழியைப் புரிந்துகொள்வதற்கான ஒரு அகராதி என்றுகூடச் சொல்லலாம். குறுநூல் குறுநூல் (Miniature book) என்பது சிறிய அளவு கொண்ட நூலாகும். இவை அரை அங்குல சதுர வடிவில் இருந்து 2 x 3 அங்குல அளவு வரையான நூல்கள் இவ்வகையைச் சேரும். இவற்றின் உயரம், அகலம் அல்லது தடிப்பு 3 அங்குலத்துக்கு மேற்படுவது இல்லை. சுலபமாக இடத்துக்கிடம் எடுத்துச் செல்லலாம் என்பதாலும், மறைத்து வைப்பது இலகு என்பதாலும், 19 ஆம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் இவ்வாறான நூல்களுக்குப் பெரும் மதிப்பு இருந்தது. அக்காலத்துக் குறுநூல்களில் பல மொரோக்கோ நாட்டுத் தோலில் கட்டப்பட்டு, சரிகை வேலைப்பாடுகள் முதலியன செய்யப்பட்டு அழகுற அமைந்தன. அகரமுதலிகள், மொழி பெயர்ப்பிகள், சமயக் கதைகள், சில வேளைகளில் சுற்றுலாக் கையேடுகளும் கூட இவ்வடிவத்தில் உருவாக்கப்பட்டன. பைபிள், கலைக்களஞ்சியங்கள், இசை நூல்கள், கதைகள், குழந்தைப் பாடல்கள், புகழ்பெற்ற பேச்சுக்கள் போன்றவையும் குறுநூல் வடிவில் வெளியிடப்பட்டன. பல புகழ் பெற்ற நூல்கள் குறுநூல் வடிவிலும் பதிப்பிக்கப் பட்டன. இவற்றுட் பல இன்று சேகரிப்போர் உருப்படிகளாக உள்ளன. இவை சில நூறு டாலர்களிலிருந்து பல ஆயிரம் டாலர்கள் வரை விலை போகின்றன. லாரி பேக்கர் லாரி பேக்கர் (Laurence Wilfred "Laurie" Baker) (மார்ச் 2, 1917 - ஏப்ரல் 1, 2007) ஒரு புகழ் ஈட்டிய இந்தியக் கட்டிடச் சிற்பி (கட்டடக் கலைஞர்). இந்தியாவில் கட்டிட வடிவமைப்பாளாராக பணியாற்றினார். உள்ளூர் பொருட்களைக் கொண்டு உள்ளூர் சூழல்களுக்கு ஏற்ப செலவு குறைவான வீடுகளைக் கட்டும் முறையை உருவாக்கினார். இவ்வீடுகளின் உள்வெளியையும் இடத்தையும் தனித்தன்மையுடன் திறம்பட வகுத்துப் பயன்படுத்தினார். அது "பேக்கர் பாணி வீடு" என்று சொல்லபப்டுகிறது. லாரன்ஸ் வில்ப்ரட் பேக்கர் ["Laurence Wilfred Baker"] 1917ல் பிரிட்டனில் பிறந்தார். சிறுவயதிலேயே அவரது ஆர்வம் ஓவியங்களில் குறிப்பாகக் கோட்டோவியங்களில் இருந்தது. ஆரம்பத்தில் அவர் வாழ்ந்த லண்டனின் கட்டிடங்களை கோட்டோவியங்களாக வரைந்திருக்கிறார். அவரது குடும்பம் கிறித்தவ மெதடிஸ்ட் பிரிவைச் சார்ந்தது. பிரிமிங்ஹாம் வரைகலைக் கல்லூரியில் [ "Birmingham Institute of Art and Design"] கட்டிட வரைகலையைப் படித்தார் பேக்கர். இளமையிலேயே அவருக்கு கிறித்தவ மதத்தின் இறுக்கமான நம்பிக்கை சார்ந்த வழிபாட்டுமுறைகள் அலுப்பூட்டின. அக்காலத்தில் முன்னோக்கு கருத்துடைய குவாக்கர்கள் ("Quakers") என்ற மத அமைப்பில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. அவர்கள் ஒரு சுதந்திரமான கிறித்தவ சபையினர். நண்பர்களின் சமயக் குமுகாயம் ("Religious Society of Friends") என்று அவர்களின் அமைப்புக்குப் பெயர். மாதம் ஒருமுறை கூடிப் பொது வழிபாடுகளையும் சொற்பொழிவுகளையும் நிகழ்த்துவார்கள். பட்டம் பெற்றபின்னர் பேக்கர் குவார்க்கர் அமைப்புடன் இணைந்து மருத்துவசேவைகளில் ஈடுபட்டார். அந்நாட்களில் ஐரோப்பாவில் உலகப்போருக்கானத் தொடக்கங்கள் நிகழ்ந்தன. லாரி பேக்கர் ராணுவத்தில் சீனாவிலும் பர்மாவிலும் மருத்துவகளப் பணியாற்றினார். போர் அவருக்கு ஐரோப்பிய தொழில்மயமாக்கல் மேலும் அறிவியலை வழிபட்ட நவீனத்துவத்துவம் மேலும் ஆழமான அவநம்பிக்கையை உருவாக்கியது. ஐரோப்பாவில் வாழக்கூடாது என்று முடிவெடுத்தார். 1944ல் பர்மாவில் இருந்து லண்டனுக்குச் செல்ல கப்பலுக்காக கல்கத்தாவில் காத்திருக்கும்போது அவர் அங்கிருந்த குவாக்கர்களின் சந்திப்புக்குச் சென்றார். அப்போதுதான் அவருக்கு காந்தியைப்பற்றிய தகவல் கிடைத்தது. காந்தி அப்போது கல்கத்தாவில் இருந்தார். சிரித்தபடி பேக்கர் சொன்னார் ”காந்தியின் காது விபரீதமாக இருக்கும் என்றார்கள். எனக்குச் சொன்ன நண்பர் ‘கெட்டில் பிடிக்காதுள்ள மனிதர்’ என்று சொல்லி கேலிச்சித்திரம் வரைவதற்கென்றே உருவாக்கப்பட்டவை அவை என்றார். அதுதான் என்னை அவரிடம் செல்லவைத்தது…” பேக்கருக்கு கேலிச்சித்திரங்கள் ஒரு பொழுதுபோக்கு. அவை நூலாக வந்துள்ளன. கேலிச்சித்திரம் வரைவதற்காக அவர் காந்தியைப் பார்க்கச்சென்றார். காந்தியைச் சந்திக்கும்வரை அது ஒரு முக்கியமான சந்திப்பாக இருக்கும் என்ற ஐயமே அவருக்கு இருக்கவில்லை. பேக்கரிடம் காந்தி அவரது துறையைப் பற்றிக் கேட்டார். பேக்கர் அவர் எளிமையான வீடுகளை உருவாகக் விரும்புவதாகச் சொன்னார். காந்தி சொன்ன இரு விஷயங்கள் பேக்கரைப் பின்னர் ஐம்பது வருடம் பின் தொடர்ந்து வந்தன. ஒன்று, உணவு உடை வீடு ஆகிய மூன்றுமே மனிதனுக்கு எளிமையாகக் கிடைக்கவேண்டும். அவற்றுக்காக அவன் வாழ்நாள்முழுக்கப் போராடக்கூடாது. இரண்டு, நவீன வீடுகளின் மிகப்பெரிய சிக்கல் அவற்றில் பெரும்பகுதிச் செலவு போக்குவரத்துக்கு ஆகிறது என்பதே. லண்டன் திரும்பிய பேக்கர் காந்தியின் வரிகளில் இருந்து மீண்டும் மீண்டும் முளைத்துக்கொண்டே இருந்தார். காந்தி சொன்னதன்படி ‘இந்தியாவின் கிராமங்களை தரிசிக்க’ அவர் கிளம்பி இந்தியா வந்தார். அது அவரது வாழ்க்கையின் திருப்புமுனை. 1945ல் உலகத் தொழுநோய் பணிக்கழகம் என்ற அமைப்புக்காகக் கட்டிட வரைகலையாளராக பேக்கர் இந்தியாவுக்கு வந்தார். ஆனால் மீண்டும் அவர் காந்தியைச் சந்திக்கவில்லை. வீட்டின் கட்டுமானப் பொருட்களின் விலையில் அறுபதுசதவீதம் வரை அந்தப் பொருட்களை கொண்டுவந்து சேர்க்கும் செலவாக இருக்கிறது. ‘ஒருபிராந்தியத்தில் கிடைக்கும் பொருட்களையும் திறமையையும் மட்டுமே பயன்படுத்தி அங்கே வீடுகளைக் கட்டுவது’ — ஒற்றை வரியில் இதுதான் லாரி பேக்கரின் கட்டுமானக் கொள்கை. கேரளம் உயர்தரமான களிமண் கிடைக்கும் இடம். நல்ல கிளிஞ்சல் சுண்ணாம்பும் கிடைக்கிறது. மரம் தேவைக்கு உள்ளது. இவையே தரமான கட்டுமானத்துக்குப் போதும். சிமெண்ட், இரும்பு ஆகியவை கேரளத்துக்கு வெளியே இருந்து வருகின்றன. அவற்றைக் கூடுமானவரை தவிர்க்கலாம். இதற்காக பேக்கர் உருவாக்கிய கட்டிட மாதிரி சுவருக்குச் செங்கற்களை நடுவே கொஞ்சம் சிமிண்ட் சேர்த்த காரை 'சுண்ணாம்பு மணல் கலவை' வைத்து கட்டி மேலே சிமிண்ட் பூச்சு இல்லாமல் அப்படியே விட்டுவிடுவதாகும். கூரைப்பரப்பை கொஞ்சமாக கம்பி வைத்து அவற்றின் மீது ஓடுகளை பரப்பி அவற்றுக்கு மேலே கொஞ்சம் சிமிண்ட் சேர்த்த காரை பூசி உருவாக்குவார்கள். செங்கல்லால் சாத்தியமான எல்லா இடங்களிலும் வளைவுகளை அமைத்தால் அவை கூரையின் எடையை அற்புதமாக தாங்கும். ஆகவே அதிகமான இரும்பின் உபயோகம் இல்லை. மரபார்ந்த வீடுகளில் இருந்து உத்திகளைக் கற்றுக்கொள்வது பேக்கர் வீடுகளின் பாணி. உதாரணமாக கேரளம் அதிக மழையுள்ள பகுதி. ஆகவே கூரைகளை மிகச்சரிவாக அமைப்பது அங்குள்ள வழக்கம். பேக்கர் கூரைகளில் நிறைய கூம்புகளை பயன்படுத்தினார். வெக்கை கொண்ட கேரளச் சூழலுக்கு அதிக காற்று வரும்படி திறந்த பகுதிகள் அமைந்த வீடுகளை அவர் வடிவமைத்தார். பேக்கரின் கொள்கைப்படி வீட்டுக்கு பகலில் எந்தவிதமான ஆற்றலும் தேவையாகக் கூடாது. காற்றும் ஒளியும் இயல்பாகவே இருக்க வேண்டும். பேக்கர் வீடுகளின் மிக முக்கியமான சிறப்பம்சம் அவை உட்கார்வதற்கான பலவகையான திண்ணைகளைக் கொண்டவை என்பதே. பேக்கரைப் பொறுத்தவரை இந்தியச் சூழலில் அமர்வதற்கு திண்ணைகளே மிகவும் ஏற்றவை. குளிர்நாடுகளுக்காக உருவாக்கப்பட்ட சோபாக்கள் இங்கே மிக மிக வசதிக்குறைவானவை. சில்லென்ற திண்ணைகள் பல கோணங்களில் அமைந்த பேக்கர் வீடுகள் சட்டென்று பிரபலம் அடைந்தன. இந்தியா சுதந்திரம்பெற்றபின் பேக்கர் கேரள அரசியல்வாதியான டாக்டர் பி.ஜெ.சாண்டியின் ஆதரவுடன் கேரளா வந்தார். 1948ல் சாண்டியின் சகோதரியான மருத்துவர் எலிஸபெத் ஜேக்கப்பை மணம் புரிந்துகொண்டார். அவர்கள் இருவரும் உத்தரபிரதேசத்தில் உள்ள பிதோராகர் என்ற ஊருக்குச் சென்று குடியேறினார்கள். பதினாறு ஆண்டுகள் அங்கே வாழ்ந்த பேக்கர் அப்பகுதியில் தன் செலவு குறைவான சுதேசி வீடுகளை பலவகையிலும் பரிசோதனை செய்து பார்த்தார். குறிப்பாக சிமிண்ட் கூரைப்பரப்பை 'டெரஸ்' போடுவதற்கு இரும்புக்கம்பிகளுக்குப் பதில் மூங்கில்களை பயன்படுத்த முடியும் என்று அவர் கண்டுபிடித்தார். 1966இல் பேக்கர் பீர்மேட்டுக்கு வந்து தங்கி அங்கே பழங்குடிகளுக்கான வீடுகளை வடிவமைத்தார். 1970 இல் அவர் திருவனந்தபுரத்துக்கு குடியேறினார். பேக்கரின் வீடுகள் மேல் மக்களுக்கு ஓர் ஐயம் இருந்துகொண்டே இருந்தது, அவை உறுதியானவைதானா என்று. அதைப்போக்கும் வகையில் பேக்கர் பெரிய கட்டிடங்களை உருவாக்க ஆரம்பித்தார். 1971ல் அவர் திருவனந்தபுரத்தில் அமைத்த வளர்ச்சி ஆய்வுகளுக்கான மையம் 'Central for Development Studies' அவருக்கு பெரும் புகழை பெற்றுத்தந்தது. திருவனந்தபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள இந்தியன் காபி ஹவுஸ் பேக்கர் பாணி கட்டிடத்துக்குச் சிறந்த உதாரணமாகும். லாரி பேக்கரின் கட்டிடங்கள் சட்டென்று பலவகையிலும் புகழ்பெற்றன. ஒன்று அவை மாறுபட்ட காட்சியழகை உருவாக்கின. தேவன் போன்ற ஓவியக்கலைஞர்கள் அவரிடம் பயிற்சி பெற்றபின் உயர்தர விடுதிகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவநிலையங்கள் போன்றவை அவரது பாணியில் கட்டிடங்களை அமைக்க ஆரம்பித்தன. குறிப்பாக மருத்துவர்கள் அவரது கட்டிடங்கள் நோயாளிகளுக்கு ஆறுதலானவையாக இருப்பதாக உணர்ந்தார்கள். லாரி பேக்கரின் கட்டிடங்கள் மரங்கள் அடர்ந்த கேரளச் சூழலுடன் இணைந்து கண்ணுக்குத் தெரிபவை. ஆடம்பரம் இல்லாமல் அழகுடன் திகழ்பவை. பேக்கர் கட்டிடக்கலையின் பல சிறப்பம்சங்களை சொல்லலாம். அவற்றில் ஒன்று கட்டிடங்களுக்காக தரையை சமப்படுத்தாமல் இருப்பது. தரை எப்படி இருக்கிறதோ அதற்கேற்ப கட்டிடத்தை வடிவமைத்துக்கொள்வது. பெரிய மரங்களை வெட்டாமல் அவற்றையும் தக்கவைத்துக்கொண்டு கட்டிடங்களை உருவாக்குவது. குளிரூட்டும் வசதிக்காக பேக்கர் உருவாக்கிய உத்தியும் புகழ்பெற்றது. வீட்டுக்குள் சிறிய குளம் ஒன்றை உருவாக்குவதுதான் அது. அதனருகே நீரில் தொட்டுக்கொண்டு சுட்டசெங்கல்லால் ஆன சுவர் இருக்கும். அது நீரை உறிஞ்சி குளிர்ந்து வெளிவிட்டு குளிரூட்டும் பணியைச் செய்யும்! பேக்கருக்கு களிமண்- சுண்ணாம்பு- கருங்கல் மேல் அபாரமான பிரேமை இருந்தது. அவர் திரும்பத் திரும்ப அதைப்பற்றிப் பேசினார். அவை சுற்றுச்சூழலுக்கு சாதகமானவை. ஒருபோதும் அவை பூமியை மலினப்படுத்தும் குப்பை ஆக ஆவதில்லை. ஒரு வீட்டை இடிக்க நேர்ந்தால் அவற்றை நாம் திரும்ப பயன்படுத்திக் கொள்ளலாம். அவை நம் மண்ணில் இருந்து உருவாகின்றவை ஆதலால் நம் சூழலுடனும் நம் உடலுடனும் மிக மிக ஒத்துப்போகின்றவை. ஒருபோதும் தீங்கு செய்யாதவை. இத்தனை தரமான களிமண் கிடைக்கும் ஒரு தேசம் அதை மிகக்குறைவாகவே பயன்படுத்துவது ஒரு பெரும் பொருளியல் குற்றம் என்றார் பேக்கர். சிமென்ட் மேலைநாடுகளில்கூட குறைவாகவே பயன்படுத்தப்படுகிறது. இந்தியா மிக அதிகமாக சிமெண்டை பயன்படுத்துகிறது. அதன்மூலம் இயற்கை வளங்களை, ஆற்றலை, உழைப்பை அது வீணடிக்கிறது. சரியான வகையில் வடிவமைக்கப்பட்ட செங்கல் கட்டிடம் சிமிண்ட் கட்டிடங்களை விட பலமானது. சொல்லப்போனால் சிமெண்ட் இந்தியாவின் வெப்பநிலையில் நீடிக்கக்கூடிய தொழில்நுட்பம் அல்ல என்று அவர் எண்ணினார். கடற்கரைப் பகுதிகளில் சிமெண்ட் மேலும் அழியக்கூடியதாக உள்ளது. உற்பத்தி நுகர்வு இரண்டும் ஒரே இடத்தில் நிகழ வேண்டும் என்பதே காந்தியின் பொருளியல் கோட்பாட்டின் அடிப்படை. அவற்றுக்கு இடையே தூரம் அதிகமாகும்தோறும் செலவு அதிகரிக்கும். அதைவிட நுகர்வின் தேவைகள் உற்பத்தியை கட்டுப்படுத்தாமல் ஆகும். அடிப்படையில் காந்திய தரிசனம் என்பது ‘மையப்படுத்தலுக்கு நேர் எதிரானது’ எனலாம். அனைத்தையும் அது பரவலாக்க விழைகிறது. அதிகாரம், நிர்வாகம், உற்பத்தி எல்லாவற்றையும் பேக்கரின் கட்டிடக்கலை அந்த சாராம்சத்தை ஏற்றுக்கொண்டது. அவரது வீடு என்பது ஒரு பிராந்திய மக்கள் தங்கள் சூழலுக்கு ஏற்ப அங்கே கிடைக்கும் பொருட்களால் அவர்களே உருவாக்கிக் கொள்வது மட்டுமே. லாரிபேக்கரின் வாழ்க்கை ஒரு ஆன்மீகத்தேடல் என்று சொல்லலாம். அவரது தியானம் களிமண்ணிலும் கல்லிலும் சுண்ணாம்பிலும் அமைந்திருந்தது. ஒவ்வொரு மனிதனும் சமூகத்துக்கு தான் அளிக்கும் பங்களிப்பின் மூலம் தன்னைக் கண்டடையவும் முழுமைசெய்துகொள்ளவும் முடியும் என்ற காந்திய தரிசனம் அவரை கடைசிவரை வழிநடத்திச் சென்றது. 1990ல் அவரது சேவைகளுக்காக இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருதை அளித்துக் கௌரவித்தது. பேக்கர் தன் 90 ஆவது வயதில் 2007 ஏப்ரல் மாதம் உயிர்துறந்தார். பேக்கரின் வாழ்க்கையை கௌதம் பாட்டியா ஒரு குறிப்பிடத்தக்க நூலாக எழுதியிருக்கிறார். [Laurie Baker - Life, Works & Writings . Gautam Bhatia] கணிமி யோசுவா லீடர்பெர்க் (Yoshuva Leaderberg) என்னும் அமெரிக்க மூலக்கூற்று உயிரியலாளர் கணிமி (Plasmid, "பிளாசுமிடு") என்ற சொல்லை முதன் முதலில் 1952 இல் ஆய்வு முறைக்கு அறிமுகப்படுத்தினார். கணிமி என்பது ஒரு கூடுதலான நிறப்புரி ஆகும். இவை பொதுவாக வட்ட வளைய வடிவமுடன் ஈரிழை கொண்டவையாக இருக்கும். நிலைக்கருவற்ற உயிரிகளில் நிறைந்து காணப்படும். பின்னாளில் நிலைக்கரு உயிரினமான ஓர் உயரணு இயீசுட்டில் (yeast) 2 மைக்ரோன் (2 micron) கணிமி கண்டுபிடிக்கப்பட்டது. இவை தாம் சார்ந்துள்ள உயிரினத்தின் நிறப்புரியைச் சாரமால் தன்னிச்சையாக பல்கிப் பெருகும் தன்மையை உடையவை. கணிமிகள் குழலிணைவு (conjugation) என்னும் நிகழ்வு மூலம் ஒரு உயிரணுவில் இருந்து மற்றொன்றுக்கு கடத்தப்படுகின்றன. இவ்வாறு இன உயிரணுக்கள் இல்லாமல் அல்லது பாலுறவு இல்லாமல் மரபணு கடத்தப்படும் நிகழ்வுக்கு பாலுறவு சாரா மரபணு கடத்தல் (horizontal gene transfer) எனப்பெயர். கணிமிகள் தாம் இருக்கும் உயிரினத்துக்கு ஓர் எதிப்புத் தன்மையை அல்லது குழலிணைவு என்னும் நிகழ்வுக்கு உதவி புரிபவையாக இருக்கின்றன. இதனின் வகைப்பாட்டியலை இவ்விணையத் தளத்தில் காணலாம். கணிமிகள், மரபு தொழில்நுட்பத்தில் அல்லது உயிர் தொழில்நுட்பத்தில் பரப்பிகள் என அழைக்கப்படும். இவைகளைக் கொண்டு ஒரு மரபணுவை பயிரிலோ அல்லது விலங்குகளிலோ வெளிப்படுத்தலாம். மேலும் நாம் விரும்பும் புரதத்தை மிகைபடுத்தலாம். மேலும் மேலும் பரப்பிகளை பாவித்து பயிர்நோய்க் கோலுயிரி உட்செலுத்தல் மற்றும் தற்காலிக மரபணு வெளிப்படுதல் என்னும் நுட்பம் மூலம் புரத அளவுகளை மிகைப்படுத்த என பல்வேறு ஆய்வுகளில் பரப்பிகள் அல்லது கணிமிகள் பயன்படுகின்றன. கணிமிகளை தான் இருக்கும் உயிரினத்துக்கு கொடுக்கும் நன்மை கொண்டு பல வகையாகப் பிரிக்கலாம். வழமையான அல்லது செழிப்பு கணிமிகள் (Fertility or F-Plasmid) : இவைகள் குழலிணைவு என்னும் நிகழ்வு மூலம் ஒரு செல்லில் இருந்து மற்ற உயிரணுக்களுக்கு கணிமிகளை மாற்றும் தன்மை கொண்டவை. எதிர்ப்பு கணிமிகள் (R or Resistance plasmid): இவைகள் தான் சார்ந்த உயிரினத்துக்கு மருந்துகளை அல்லது நஞ்சுகளை எதிர்த்து வாழும் தன்மை கொடுக்கும். கோல்-கணிமிகள் (Col-Plasmid): இவைகள் சில வகையான நஞ்சு பொருள்களை உற்பத்தி செய்யும் தன்மை கொண்டுள்ளதால் மற்ற உயிரிகளை கொல்லும் தன்மையைக் கொடுக்க வல்லன. மக்கும் கணிமிகள்: (Degradative plasmid) இவைகள் சில அழிக்க முடியாத வேதிப் பொருள்களை மக்கும் தன்மை அல்லது சூழலுக்கு உகந்தவையாக மாற்றும் தன்மை கொடுக்கின்றன. எ.கா. Toluene or Salicylic acid வீரிய கணிமிகள்: Virulence Plasmid இவைகள் பக்டீரியாவுக்கு நோய் தூண்டும் தன்மை கொடுக்கின்றன. மேலும் சில கணிமிகள் நைட்ரசென் நிலைப்படுத்தும் (Nitrogen fixation) தன்மையை சில பக்டீரியாவிற்கு அளிக்கின்றன. மூலக்கூற்று உயிரியலில் கணிமி பிரித்தெடுத்தல் (plasmid extraction) என்னும் முறை இன்றியமையாத ஒன்றாகும். கணிமியை அல்லது பரப்பியை பிரித்தெடுக்க பல்வேறு முறைகளும், தற்காலத்தில் கிட் (kit) என்னும் தனியார் நிறுவனத்தாரின் ஆயத்த பொருள்களும் பாவிக்கப்படுகின்றன. ஏறக்குறைய அனைத்து ஆயத்த பொருள்களும் டோல்லி மற்றும் பெல்போயின் முறையைப் பின்பற்றி கணிமியை அல்லது பரப்பியை ஈ.கோலியில் இருந்து பிரிக்க பயன்படுகிறது. பரப்பியல்லாத கணிமியை பண்படுத்தப்படாத கணிமி அல்லது க்ரிப்டிக் (cryptic) கணிமி எனலாம். பின்னாளில் இவ்வகை பண்படுத்தப்படாத கணிமிகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு, எ. கா. பல் படிவாக்க இடம் (Multiple cloning site), தேர்ந்தெடுக்கும் முகவரை (selectable marker) எதிர்த்து வாழும் தன்மை என பல பகுதிகள் இணைக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு உள்ள பரப்பி உருவாக்கப்பட்டது. கணிமி பிரித்தெடுக்கும் முறையில் பின்வரும் நிலைகள் மிக முக்கியமாகும். இந்நிலையில் செல்களை உடைக்கும் நொதி அல்லது இலைசொசோம் பாவிக்கப்படும். இந்நொதி இல்லையெனில் பின்வரும் வேதி பொருள்கள் மூலம் உயிரணுக்களை (இ.கோலி) உடைத்து செல்லில் உள்ள பொருள்களை வெளிக்கொண்டு வரலாம். திரிசு(tris) இ.டி.ரீ.ஏ (EDTA) குளுக்கோசு (Glucose) இவைகள் செல்லுக்கு வெளியே மற்றும் உள்ளே உள்ள அழுத்த வேறுப்பாட்டை (osmotic pressure) உருவாக்குவதால் , உயிரணுக்கள் உடைக்கப்பட்டு அதனில் உள்ள கணிமி, நிறப்புரி, ஆர்.என்.ஏ மற்றும் புரதம் வெளிப்படுத்தப்படும். தற்காலத்தில் இந்நிலையில் ஆர்என்ஏசு (RNse) என்னும் நொதி சேர்க்கப்பட்டு ஆர்.என்.ஏ மாசு வரமால் தடுக்கப்படுகிறது. இந் நொதி ஆர்.என்.ஏ வை மட்டும் அழிக்க வல்லவை. கணிமி பிரித்தெடுக்கும் இந் நிலையில் மிக கவனமாக செயல்பட வேண்டிய நிலையாகும். இந்நிலையில் (SDS, NaOH) சேர்க்கும் பொழுது , நீர்மத்தில் ஏற்படும் pH(Alkaline like 12-13) மாற்றங்களால் நிறப்புரி மற்றும் கணிமிகளின் அமைப்புகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு (denaturation) பிரிக்கப்படும். பின் (CHCOONA. sodium acetate) சேர்க்கும் போது , நீர்மத்தின் நடுவமான pH (7) வருவதால் பிரிக்கப்பட்ட கணிமி மற்றும் நிறப்புரி இணைவதற்கான சூழ்நிலைகள் உருவாக்கப்படும். கணிமி நிறப்புரியை விட மிகக்குறைவான அளவு (size) இருப்பதால், விரைவாக இணைக்கப்பட்டு ஈரிழையாக மாற்றப்படும். பின் இவைகள் உயர் நிலையில் சுழற்றப்படும் (12,000 rpm for 14 min (RPM- rotation per minute) (centrifuge) போது, நிறப்புரி மற்ற புரதங்களோடு படிந்து படிவமாக மாற்றப்படும். மாறாக கணிமிகள் நீர்மத்தில் நிலைநிறுத்தப்படும். பின் இவைகள் (Alcohol or iso-propanol) சேர்க்கப்பட்டு வீழ்படிவமாக ஆக்கப்படும். புரத மாசுக்களை பீனால் (phenol) மூலம் நீக்கலாம். பீனால் நச்சுத் தன்மையுடையதாகவும், மற்றும் அதனின் சிறு துகள்கள் மேற்கொண்டு நாம் செய்யும் மேற்பணிகளை தடுக்கவும் கூடும். பீனால் மாசு வரமால் தடுக்க (CHCL) பயன்படுத்தி, உயர் நிலையில் சுற்ற (12,000 rpm for 5 min) (Spin or centrifuge) வேண்டும். CHCL பயன்படுத்தி சுற்றி முடிக்கும் போது, நீர்மம் இரு பகுப்புகளாக பிரிக்கப்படும். CHCL கீழ் பகுப்பிலும் , நாம் பிரிக்க விருப்பும் கணிமிகள் மேல் நிலையிலும் இருக்கும். மேல் நிலையில் இருக்கும் பகுப்பை புதிய சிறு குழாய்க்கு (tube) மாற்றி விட வேண்டும். பீனால் இட்டு சுழற்றும் போது, மூன்று பகு நிலைகளை காணலாம். கீழ் நிலையில் பீனாலும், நடுவத்தில் புரதம் வெள்ளையாக காணப்படும். மேல் பகு நிலையில் நாம் பிரிக்க விருப்பும் கணிமிகள் இருக்கும். பின் இவைகளுடன் சரி நிகர் ஆல்ககால் அல்லது இசோ-புரப்பனால் (Iso-propanol) உடன், பத்தில் ஒரு பகுதி சோடியம் அசெடட் அல்லது பொட்டாசியம் அசெடட் சேர்க்கப்பட்டு மிக குளிரில் (-20 0r -70) ஒரு மணிநேரம் அல்லது இரவு முழுவதும் வைக்கப்படும். இந்நிகழ்வின் போது டி.என்.ஏ க்களில் உள்ள நீர் மூலக்கூறுகள் வெளி இழுக்கப்பட்டு , டி.என். ஏ வை வீழ்படிவமாக (precipitation) ஆக்கப்படும். இவ்விடத்தில் மிக குறைந்த அளவு உப்பு (சோடியம் அல்லது பொட்டாசியம்) இடப்படுவதால் இந்நிகழ்வு மிகையாக்கப்படுகிறது. இவ் நிகழ்விற்கு உப்பு உள்ளிடுதல் (Salting In) எனப்பெயர். மற்றொரு நிகழ்வான உப்பு வெளிழுத்தலில் (salting out), உப்புக்கள் வெளியேற்றப்படுவதால் டி.என்.ஏ, ஆர்.என்.ஏ அல்லது புரதங்களின் கரையும் தன்மை (solubility) கூட்டப்பட்டு கரைசயலாக மாற்றப்படும். மேலும் உப்பு உள்ளிடுதல் (salting in) நிகழ்வில் கூடுதலாக இடப்படும் உப்புகளால், நாம் மேற்கொள்ளும் மேற்பணிகள் பாதிக்கப்படக்கூடும். இவ் உப்புகளை 70% ஆல்ககால் கொண்டு கழுவும்போது, அதனில் உள்ள 30% நீரில் அவ் உப்புகள் வெளியேற்றப்பட்டு தூய்மையான டி.என்.ஏ க்கள் பெறப்படும். தற்காலத்தில் ஆயத்த (kit) பொருள்கள் மூலம், மிக எளிதாக கணிமிகள் பிரிக்கப்படுகின்றன. இம்முறையில் பீனால் போன்ற பொருள்கள் பாவிக்கப்படுவதில்லை. மேலும் மிகக் (30 min) குறைந்த நேரத்தில் அதிகளவிலான கணிமிகளை பிரிக்கலாம். கணிமிகள் தான் இருக்கும் உயிரினத்தில் அச்செடுக்கப்படுவதால் (replication) அவைகள் பல்கி பெருகும் தன்மை கொண்டுள்ளன. இவ்வாறு டி. என். ஏ பாலிமரேசு மூலம், உருள் வட்ட நகலாக்கம் (rolling circle replication) என்னும் முறையில் மூலம் அச்செடுக்கப்படுவதால், அச்செடுக்கும் நிலையில் பல வகையான வடிவமைப்பு நிலைகளில் கணிமிகள் காணப்படும். ௧. இறுக்கப்பட்ட கணிமிகள்- super coiled plasmid கணிமிகளின் ஈரிழைகள் மிக்க இறுக்கப்பட்டு சுருளாக மாற்றப்படும். இவைகள் டி.என்.ஏ. கூழ்ம மின்புலத் தூள்நகர்ச்சி என்னும் நுட்பம் மூலம் நகர்த்தப்படும் போது, விரைவாக நகரும் தன்மையைக் கொண்டுள்ளன. ௨. தளர்ந்த வட்டமான கணிமிகள்- relaxed circular இவைகள் சுருளாக இருந்த போதிலும், நொதிகளின் செயலால் தளர்வாக காணப்படும். டி.என்.ஏ. கூழ்ம மின்புலத் தூள்நகர்ச்சி இறுக்கப்பட்ட கணிமிகளுக்கு மேலாக இருக்கும் . ௩. துளையிடப்பட்ட வட்டமான கணிமிகள்:- Nicked open circular ஈரிழையில் ஒரு இழை துளையுடப்பட்டு இருப்பதால் டி.என்.ஏ. கூழ்ம மின்புலத் தூள்நகர்ச்சி நகர்த்தலின் போது மெதுவாக கடக்கும் தன்மை கொண்டுள்ளது. ௪. நேராக்கப்பட்ட கணிமிகள்: - Linearized plasmid ஈரிழையும் வெட்டப்பட்ட நிலையில் இருப்பதால், மின்புல நகர்த்தலின் போது குறைவாக நகரும். இவ்விடத்தில் ஏன் நேராக்கப்பட்ட அல்லது நொதியால் வெட்டப்பட்ட கணிமிகள் மின்புல நகர்த்தலின் போது விரைவாக கடக்காதா? என்ற வினா எழுக்கூடும். ஒரு நேரான கயிறையும், நன்கு சுற்றப்பட்ட வட்ட வடிவிலான கயிறையும் நினைவில் கொள்ளுங்கள். இவ்விரு கயிறையும் நீரில் வீசினால், எவ்வொன்று துரிதமாக ஆழத்தில் சென்று தரையை அடையும் என்பதை கவனியுங்கள். நன்றாக சுற்றப்பட்ட கயிறு விரைவில் தரையில் சேரும், ஏனெனில் அவைகள் நேர்த்தியாக சுற்றப்பட்டு கனமாக இருக்கும். மாறாக நேரான கயிறு நீரில் மிதக்கும். வெட்டப்பட்ட நேரான கணிமிகள் அல்லது பரப்பிகள், கூழ்மத்தில் உள்ள துளைகளில் மெதுவாக நுழைக்கப்பட்டு குறைவாக நகரும். யாமம் (புதினம்) யாமம், எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய நான்காவது தமிழ் நாவல். இந்நாவல் பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்த சென்னை நகரத்தை பின்புலமாக கொண்டு அமைந்துள்ளது . இந்தக் காலகட்டத்தில் இங்கே வாழ்ந்த ஒரு முஸ்லீம் வணிகர், யாமம் என்ற பெயரில் ஒரு வாசனை திரவியத்தை உருவாக்கி விற்பனைசெய்கிறார். இது பல்வேறு மனிதர்களின் வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது என்பதே இந்நாவல். இந்நாவலில் யாமம் என்பது காமம் என்ற அடிப்படை இச்சையின் குறியீடு. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வாழ்க்கையிலும் யாமம் ஒவ்வொரு வகையில் பாதிப்புச் செலுத்துகிறது அத்தர் என்ற அற்புதப் பொருளைப்பற்றிய ஒரு புனைகதை இந்த நாவல். அத்தர் தயாரிக்கும் கலையை ஒரு சூ·பி ஞானியிடமிருந்து வரமாகப் பெற்ற இஸ்லாமியக் குடும்பம் ஒன்றின் கதையாக இது ஆரம்பமாகிறது. அந்த அத்தரின் பெயர் யாமம். மதராஸ் பட்டினம் அமீர் சாகிப் தெருவில் அத்தர் வணிகம் செய்துவந்த அப்துல் கரீமின் கனவில் அல் அசர் முஸாபர் என்ற ·பக்கீர் சொன்ன ஆரூடத்திலிருந்து தொடங்குகிறது இந்நாவல். இரவை ஒரு சுகந்தமென உருவாக்கும் கலை அவன் குடும்பத்திற்கு சித்தியாகிறது. அந்த சுகந்தத்தால் ஆட்கொள்ளப்படும் பலவகை மனிதர்களைப் பற்றிய தனிக்கதைச்சரடுகள் பின்னி உருவாகின்றது நாவல். செல்வத்தில் கொழிக்கிறார் அத்தர் வணிகரான கரீம். அவர் பாரம்பரியமாக தயாரிக்கும் ‘யாமம்’ என்ற நறுமணத் தைலத்தை உயர்குடியினரும் பிறரும் விரும்பி வாங்கிப் பூசிக் கொள்கிறார்கள். உடலில் பூக்கள் மலர்வதுபோல காமத்தை அரும்பச் செய்யும் அத்தராகிய யாமத்தை அவர் மனைவியருக்கு அறிமுகம் செய்கிறார். புதுப்பெண் ஒருத்தியை மணந்து கொள்கிறார் கரீம். ஆனால் மெல்ல அவரது வாழ்க்கை சிதைகிறது. ‘எப்படியோ’ அவருக்குக் குதிரைச் சூதாட்ட மோகம் பற்றிக் கொள்கிறது. சொத்துக்கள் அழிய அவர் நாடோடியாக மறைய அரசிகளாக வாழ்ந்த அவரது மனைவியர் தெருவில் மீன் விற்கும் நிலைக்கு ஆளாகிறார்கள் இந்நாவலின் இன்னொரு கதை பத்ரகிரியுடையது. அவன் மனைவி விசாலா. குரூரமான தந்தையால் புறக்கணிக்கப்பட்டு அணுவணுவாகச் செத்த அன்னையின் நினைவோடு சித்தியுடன் சென்று வாழ்ந்த இளமைப்பருவம் கொண்டவன் அவன். அப்போது அவனது தம்பிக்கு நான்குமாதம். தம்பிக்கும் பத்ரகிரிக்குமான உறவு நுட்பமான சிக்கலுடன் சொல்லப்பட்டிருக்கிறது. கைக்குழந்தையாக அவனை பத்ரகிரியின் மடியில் சித்தி போடும்போது அழும் குழந்தையை இறக்கிவிட்டுவிட்டு வெளியே சென்றவன் பத்ரகிரி. ஆனால் மெல்லத் தம்பிக்குத் தந்தையின் இடத்தில் அவன் வந்து சேர்கிறான். சிறுவயதிலேயே நட்சத்திரங்களை காணும் மோகம் கொண்டிருந்த பத்ரகிரி லாம்டனின் முதல் நிலஅளவைக் குழுவில் பணியாற்றுகிறான். பத்ரகிரியின் தம்பி திருச்சிற்றம்பலம் படிப்பாளி. அவன் தன் இளம் மனைவி தையல்நாயகியை விட்டுவிட்டு லண்டனுக்குப் படிக்கச் செல்கிறான். தையல்நாயகி கணவனின் நல்ல தோழியாக இருந்தும்கூட ‘எப்படியோ’ பத்ரகிரிக்கும் அவளுக்கும் உறவு உருவாகிறது. திரும்பிவரும் திருச்சிற்றம்பலம் காண்பது காம உறவுகளால் சிதைந்துப்போன குடும்பத்தையும் உடைந்த மனிதர்களையும் மட்டுமே. வழக்குகள் மூலம் மொத்த சொத்துக்களையும் இழந்து பஞ்சையாக ஆகும் கிருஷ்ணப்ப கரையாளர் தன் விருப்பத்திற்குரிய முதிய தாசி எலிசபெத்துடன் தன் கடைசிச் சொத்தான மலை ஏறிச் செல்கிறார். காட்டில் எலிசபெத்தின் நோய் மறைகிறது. காமத்தில் தொடங்கி ஒவ்வொன்றும் ‘எப்படியோ’ புதிதாக தளிர்விட்டு விடுகிறது. சதாசிவப்பண்டாரத்தை இட்டுச்செல்லும் நீலகண்டம் என்ற நாய் போல மனிதர்களை அறியாத திசைகளுக்கு அவர்களுடைய உள்ளுணர்வுகள் இட்டுச்செல்கின்றன. அர்த்தமில்லாத ஒரு ஆட்டக்களத்தில் புதிரான அகக் காரணங்களுக்காக அலையும் காய்கள் போல இருக்கின்றனர் இம்மனிதர்கள். காமம் போலவே கசப்புக்கும் விளக்கம் இல்லை. அனைத்தையும் பணயம் வைத்து பத்ரகிரியுடன் கூடும் தையல்நாயகிக்கு விரைவிலேயே அவன் மீது கடும் துவேஷம் உருவாகிவிடுகிறது. ஆம், ‘எப்படியோ’தான். இவ்வாறு பலதிக்குகளில் விரியும் கதைகளில் மர்மமாக நிகழும் ‘எப்படியோ’க்களில் எல்லாமே அந்த நறுமணம் ஒரு நுண்ணிய பங்கை வகிக்கிறது என்பதே இந்நாவலின் மையச் சரடாகும். அதாவது தன் சுய இயல்புகளால் வழிநடத்தப்படாத மனிதர்களின் கதை இது. ஒவ்வொருவரும் இயல்பாக அவர்கள் எதைச் செய்வார்களோ அதற்கு நேர் மாறான ஒன்றை மிக ஆழத்திலிருந்து எழும் ஒன்றின் மூலம் தூண்டப்பட்டு செய்கிறார்கள். மனிதர்களை அலைக்கழிக்கும் , ஆட்கொள்ளும், வழிநடத்தும், வெறுக்கவும் விரும்பவும் வைக்கும் அறிய முடியாமையைப்பற்றிய நாவல் ‘யாமம்’. ஒரே வரியில் இந்நாவலை விளக்கவேண்டுமென்றால் தங்கள் ஆளுமையின் இரவுகளால் அலைக்கழிக்கபப்ட்ட ஆளுமைகளின் கதை இது. யாமம் என்றால் இரவு. ‘பிரபஞ்சம் என்ற பசுவின் அகிடில் இருந்து சொட்டும் துளிகளே இரவுகள்’ என்பது ஒரு சூ·பி அறிஞரின் வாக்கு. பகல் எளியது நேரடியானது. இரவு எட்டமுடியாத ஆழம் கொண்டது. ஒவ்வொரு உயிரும் தன்னை புதிதாகக் கண்டடையச் செய்யும் வெளி அது. பகல் நமது அறிந்த தளங்களின் பின்னல். இரவு நாம் அறியாத நம் ஆழங்களின் பெருவலை.இந்நாவலின் முகப்பில் பலவகையான சொற்களின் வழியாக இரவை ஒரு கவியுருவகமாக ஆக்க நாவலாசிரியர் முனைகிறார். அந்த மைய உருவகத்தின் சரடில் இந்நாவல் கோக்கப்பட்டுள்ளது. இரவை நாம் ஒரு பெரும்படிமமாக வளர்த்துக் கொண்டோமென்றால் இந்நாவல் அதன் உட்குறிப்புத்தளத்துக்கு நம்மை எளிதில் எடுத்துச் செல்லும். அவ்விரவில் தூங்கும் மிருகங்களைத் துயிலுணர்த்தும் அழைப்பாக இருக்கிறது ‘யாமம்’ மிக விரிவான தகவல் சார்ந்த ஆராய்ச்சிக்குப்பின் எழுதப்பட்ட ஆக்கம் இது. நுண்ணிய சித்தரிப்புகள் ஒரு நவீன வரலாற்று நாவலுக்குரிய தகுதியை இதற்கு அளிக்கின்றன. ஒன்றுடன் ஒன்று நேரடித் தொடர்பில்லாது ஒன்றை ஒன்று தீர்மானித்தபடி பின்னிச் செல்லும் வாழ்க்கையின் வலையைக் காட்டுவது ஆசிரியரின் நோக்கம். நானூறு வருடங்களுக்கு முன்பு லண்டன் கூடிய வணிகர்கள் சிலர் குறுமிளகு வணிகத்தின் பொருட்டு ஒரு வணிக நிறுவனத்தை உருவாக்க திட்டமிடும் இடத்தில் நாவல் தொடங்குகிறது. அவர்கள் ஷாஜஹான் அரசவைக்கு வருகிறார்கள். விதை ஊன்றப்படுகிறது. அது முளைத்தெழும்போது சர்.ஃபிரான்ஸிஸ் டே கடலருகே இருந்த அரை சதுப்புநிலம் விலைக்கு வாங்கப்பட்டு கோட்டை கட்டப்படுகிறது. அதைச்சூழ்ந்து மதராஸ் பட்டினம் என்ற கடற்பாக்கம் படிப்படியாக உருவாகி வருகிறது. அதைத்தான் நாவல் மனித அகத்தின் இரவு என்கிறது.”யாவரின் சுகதுக்கங்களும் அறிந்த இரவு ஒரு ரகசிய நதியைப்போல முடிவற்று எல்லா பக்கங்களிலும் ஓடிக்கொண்டே இருந்தது .அதன் சுகந்தம் எப்போதும்போல உலகமெங்கும் நிரம்பியிருந்தது” என முடிகிறது இந்நாவல். பகடையாட்டம் (புதினம்) பகடையாட்டம் யுவன் சந்திரசேகர் எழுதிய இரண்டாவது தமிழ் நாவல். 2003ல் தமிழினி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இது 200 பக்கங்களைக் கொண்டது. இந்தியாவின் வட எல்லையில் இமையமலையடுக்குகளுக்குள் கதை நிகழ்வதாகப் புனையப்பட்டுள்ளது. திபெத்தின் அருகே உள்ள ஒரு கற்பனை நகரத்தில் (திபெத்தை நினைவுறுத்தும் சோமிட்சியா என்ற சிறிய நாடு) கதை நடப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அங்குள்ள மலைப்பகுதியில் ஒரு மடாலயம் உள்ளது. அதன் மதத் தலைவரும் அரசியல் அதிபருமாக புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட சிறுவர் சோமிட்சு (லாமா) இந்தியாவுக்குத் தப்பிவருவதன் பின்னணிதான் கதை. அவரது அமைச்சரும் காவலருமான ஈனோங் தன் மீது ஆதிக்கம் செலுத்துவதிலிருந்து தப்பி இந்தியாவரும் சோமிட்சு இமையமலைச்சாரலில் இந்திய ராணுவ முகாமில் இருக்கும் மேஜர் கிருஷ் முன் சரணடைகிறார். அன்றிரவு மர்மமான முறையில் அவர் காணாமல் போகிறார். மேஜர் கிருஷ் அதன் விளைவுகளால் பதவி இழந்து மனம் உடைந்து ஊர் திரும்புகிறார். எளிமையாகச் சொல்லப்போனால் இந்நாவலின் கதை இதுதான். சில வருடங்களுக்கு முன்பு சிறுவனான பஞ்சன்லாமா திபெத்தில் இருந்து தப்பி இந்தியா வந்த உண்மைச் சம்பவத்தை ஒட்டி உருவாக்கப்பட்ட கற்பனைக் கதை இது. சோமிட்சு தப்பி ஓடியது ஒரு சிறிய ஆனால் முக்கியமான அரசியல் நிகழ்வு. ஏராளமான மனிதர்கள் அதனுடன் மிகப்பெரிய வலையொன்றால் பிணைக்கப்பட்டவர்கள் போலத் தொடர்புகொண்டுள்ளனர். அவ்வரசியல் நிகழ்வு அவர்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொருவிதமாகப் பாதிக்கிறது. இந்நாவலின் நோக்கம் அதன் வடிவில்தான் வெளிப்படுகிறது. இந்நாவல் எதையும் முடித்துச் சொல்ல முயலவில்லை. உண்மையில் ஒன்றோடொன்றுச் சிக்கிச்சிக்கி விரியும் நிகழ்ச்சிகளின் இயக்கத்தை மட்டும் சித்தரித்துக் காட்டிவிட்டு நின்றுவிடுகிறது. இதன் அனுபவமும் செய்தியும் இவ்வடிவில்தான் உள்ளது. இது வாசகனுடன் பகடையாட விழையும் நாவல். நாவலுக்குள் நிகழ்ச்சிகளின் பின்னலுக்குள் உள்ள அதே பகடையாட்டத்தை நாவலாசிரியனும் வாசகனுடன் ஆடுகிறான். பல்வேறு கதைக்கோடுகள் இதில் உள்ளன. மேஜர்கிருஷின் கதை ஒருகோடு. அதை மீட்டுச்சொல்லும் சந்திரசேகரின் நோக்கு ஒரு கோடு. சூலியசு லுமும்பா, வேய்சு முல்லர் போன்ற பயணிகளின் கதைகள் தனிக்கோடுகள். நேரடியாகச் சொல்லப்படும் சோமிட்சியாவின் நிகழ்வுகள் ஒரு கோடு. இவற்றைத் தன் வசீகரமான மர்ம மொழியில் குறுக்காக ஊடுருவும் சொமிட்சிய மத- சோதிட மூலநூலின் தத்துவமும் தொன்மமும் கலந்தச் சொற்களினாலான ஒரு கோடு. பின்னிபின்னி வண்ணப்பூக்களும் கொடிச்சுருள்களுமாக விரியும் காஷ்மீர் கம்பளம் போன்றது இதன் கதை. இக்கோடுகளின் பின்னலை நிகழ்த்த வேண்டிய பொறுப்பு வாசகனின் கற்பனைக்கு விடப்பட்டிருப்பதே இந்நாவலின் கலையனுபவமாகும். பல்வேறு கோணங்களில் பல கதைகளைச் சொல்லி அவற்றை இணைத்து இந்த நாவலை எழுதியிருக்கிறார் யுவ சந்திரசேகர். மாற்று யதார்த்தம் என அவர் சொல்லும் ஓர் உண்மையை இந்நாவலிலும் அவர் சொல்லியிருக்கிறார். மர்ம, திகில் கதைகளுக்கு உரிய வடிவத்தை இதற்கு யுவன் தெரிவுசெய்துள்ளார். உத்வேகமான வாசிப்பனுபவத்தைக் கடைசி வரை அளிக்கக் கூடியதாக உள்ளது இந்த வடிவம். யுவனின் இந்நாவலில் குறைந்தது ஐந்து வகையான வேறுபட்ட மொழிநடைகளின் அழகிய பின்னலைக் காணலாம். புராதன நூல் ஒன்றின் எளிமையும் மர்மமும் கொண்ட சோமிட்சிய மதநூலின் மொழி. நேரடியாகக் கதைசொல்லும் ஹெமிங்வேதனமான மொழி. கிராமத்து நிகழ்வுகளை எளிய மதுரை வட்டாரக்கொச்சை உரையாடலுடன் சொல்லும் மொழி. ஐரோப்பிய மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டவை என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் பகுதிகள், லுமும்பாவின் பழமொழிகள் மண்டிய ஆப்ரிக்க மொழி என இந்நாவல் உருவாக்கும் அனுபவத்தை நம்பகமாக நிறுவுவதில் இம்மொழி உத்திகள் முக்கியமான வெற்றியை அடைந்துள்ளன. இந்நாவலின் முக்கியமான இன்னொரு கூறு மெல்லிய நகைச்சுவையுடன் கச்சிதமான மொழியில் ஆங்காங்கே மின்னிச்செல்லும் தத்துவார்த்தமான அவதானிப்புகள் எனலாம். அவை நாவலின் பகடையாட்டத்தைத் தத்துவதளத்துக்கு நகர்த்தி வாசகனைப் புதிய இடங்களுக்குக் கொண்டுசெல்ல உதவுகின்றன. இவை, வாசிப்பை ஆர்வமூட்டும் அனுபவமாக்கும் துளிகளாக நாவலெங்கும் பரந்துகிடக்கின்றன. வேடிக்கையான ஆனால் ஒருவகையான முழுமை கொண்ட தர்க்கத்துடன் முன்வைக்கப்படும் இந்தச் சோமிட்சியப் பிரபஞ்சத் தரிசனம் நாவல் முழுக்க விரிந்து அந்தத் தத்துவச் சிந்தனைகளையும் வேடிக்கையாக மாற்றிக் காட்டுவது இந்நாவலின் குறிப்பிடத்தக்க அனுபவங்களுள் ஒன்று எனலாம். பசங்க (திரைப்படம்) பசங்க, 2009ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை சசிகுமார் தயாரிக்க, அறிமுக இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தின் கதாநாயகன் விமல் ஒரு புதுமுகம். கதாநாயகி வேகா. இவர் சரோஜா என்ற படத்தில் நடித்தவர். இவர்கள் தவிர சில குழந்தைகள் முக்கிய வேடங்களிலும் மற்றும் துணை கதாபாத்திரங்களில் சிலரும் நடித்து உள்ளனர். இந்த திரைப்படம் மே 1, 2009 அன்று வெளியானது. இந்த திரைப்படத்தில் 4 பாடல்கள் இடம் பெற்று உள்ளன. சசிகுமாரின் சுப்ரமணியபுரம் திரைப்படத்திற்கு இசையமைத்த ஜேம்ஸ் வசந்தன் இந்த படத்திற்கும் இசை அமைத்து உள்ளார். பாடல்களை தாமரை, யுகபாரதி மற்றும் ஜேம்ஸ் வசந்தன் ஆகியோர் எழுதி உள்ளனர். ஒரு பாடலை புகழ் பெற்ற இசை மேதை டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் பாடி உள்ளார். கமல்ஹாசன் அவர்கள் இந்த படத்தின் பாடல்களை வெளியிட்டது சிறப்பம்சம். எஸ். வரலட்சுமி எஸ். வரலட்சுமி, (ஆகத்து 13, 1927 - செப்டம்பர் 22, 2009) தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் புகழ்பெற்ற பழம்பெரும் நடிகை மற்றும் பின்னணிப் பாடகியாவார். அவரது பாடல்கள் மற்றும் வேடங்களுக்காக தமிழில் வீரபாண்டிய கட்டபொம்மன், சவாலே சமாளி மற்றும் தெலுங்கில் மகாமந்திரி திம்மரசு, வேங்கடேசுவர மகாத்மியம் ஆகிய திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கன. வரலட்சுமி ஆந்திராவில் உள்ள ஜக்கம்பேட்டையில் பிறந்தவர். சிறுவயதிலிலேயே பாலயோகினி என்ற திரைப்படத்தில் நடிக்க துவங்கினார். எஸ். வரலட்சுமி 1938-ம் ஆண்டு கே. சுப்பிரமணியம் (நடன கலைஞர் பத்மா சுப்பிரமணியத்தின் தந்தை) தயாரித்த "சேவாசதனம்' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தெலுங்கில் நாகேஸ்வரராவ் உடன் "பால்ராஜ்' படத்தில் அறிமுகமானார். ஏவிஎம்-ன் "ஜீவிதம்' உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். திரைப்படத் தயாரிப்பாளரும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவருமான ஏ.எல். சீனிவாசனை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு முருகன் மற்றும் நளினி என இரு குழந்தைகள் உள்ளனர். ஒரு பேரனும் ஒரு பேத்தியும் உள்ளனர். திருமணத்திற்கு பின்னரும் தமிழ்,தெலுங்கு திரைப்படங்களில் வயதான வேடங்களில் நடித்து வந்தார். தான் நடித்த அனைத்து படங்களிலும் சொந்தக் குரலிலேயே பேசி, பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. குணா, கந்தன் கருணை, வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகிய திரைப்படங்களில் பாடல்களும் பாடினார். சென்னை மகாலிங்கபுரத்தில் வசித்து வந்த வரலட்சுமி, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு 6 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2009, செப்டம்பர் 22 செவ்வாய்க்கிழமை மதியம் மூச்சுத்திணறல் ஏற்பட்டதில் மருத்துவமனையில் அன்று இரவு 8.20 மணிக்கு தமது 82 ஆம் அகவையில் காலமானார். இவருக்கு முருகன் என்ற மகனும், நளினி என்ற மகள், ஒரு பேரன், ஒரு பேத்தி உள்ளனர். அரியாங்குப்பம் அரியாங்குப்பம் (Ariyankuppam) என்பது இந்தியாவின், புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்தின், உள்ள ஓர் கிராமம் ஆகும். இது "அரியநகர்" எனவும் அழைக்கப்படுகிறது. இந்நகர் அரியாங்குப்பம் ஒன்றியத்தின் தலைநகராகவும் விளங்குகிறது. புதுச்சேரி நகரத்தை போலவே அரியநகர் சாலைகள் நேர்கோட்டில் அமைந்துள்ளன. அரிக்கமேடு என்ற பழமையான தொல்லியல் இடமே அரியாங்குப்பம் என இன்று அழைக்கப்படுகிறது. பழங்காலத்தில் அரிக்கமேடு ஒரு சர்வதேச வாணிப மையமாகவும் மற்றும் துறைமுகமாகவும் செயல்பட்டிருந்தது. ரோமானிய நாடுடன் வாணிப தொடர்பு கொண்டதற்கான சான்றுகள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 47,021 மக்கள் இங்கு வசிக்கின்றனர். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். அரியாங்குப்பம் மக்களின் சராசரி கல்வியறிவு 81.49% ஆகும். இவ்வூரின் அமைவிடம் 11.54° N 79.48°E ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 1 மீட்டர் (3 அடி) உயரத்தில் இருக்கின்றது. அரியாங்குப்பம் புதுச்சேரி - கடலூர் சாலையில் தெற்கே 5 கி.மீ தொலைவில் உள்ளது. அரிக்கமேடு என்னும் தொல்லியல் இடம், புதுச்சேரிக்குத் தெற்கே 6 கிலோ மீட்டர் தூரத்தில் அரியாங்குப்பம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. புதுச்சேரியிலிருந்து அங்கு செல்ல விரும்புபவர்கள் கடலூர் சாலை வழியாக அரியாங்குப்பம் சென்று அங்கிருந்து வீராம்பட்டினம் செல்லும் சாலையில் "காக்காயன்தோப்பு" என்னும் சிற்றூருக்குச் செல்லவேண்டும். அரியாங்குப்பம் ஆற்றின் வலது கரையில் அரிக்கமேடு அமைந்துள்ளது. அங்கு ஒரு தொல்லியல் அருங்கட்சியமும் உள்ளது. பதினாறாம் நூற்றாண்டு சக்தி தலம் பெரிய வீராம்பட்டினதில் அமைத்துள்ளது. இங்கு வீற்றிருக்கும் அம்மன் பெயர் "செங்கழுநீர் அம்மன்" ஆகும். பெரிய வீராம்பட்டினம் அரியாங்குப்பத்திலிருந்து கிழக்கில் 2.5 கி.மீ தொலைவில் உள்ளது. அரியாங்குப்பதிலிருந்து RC -26 சாலை பெரிய வீராம்பட்டினத்திற்க்கு செல்கிறது. ஆடி வெள்ளி திருவிழா இங்கு பெரும்விழாவாக கொண்டாடப்படுகிறது. பிரெஞ்சு காலம் முதல் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அவர்களால் தேர் வடம் இழுக்க ஆடி ஐந்தாம் வெள்ளி பெரும்விழா கொண்டாடப்படுகிறது. புதுச்சேரி அரசு அன்றைய தினம் அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் திருவிழா காண பெரிய வீராம்பட்டினம் கூடுவதால், புதுச்சேரி-கடலூர் தடத்திலுள்ள பெரும்பாலான பேருந்துகள் அன்றைய தினம் பெரிய வீராம்பட்டினம் செல்கிறது. சுணாம்பாறு படகு குழாம் புதுச்சேரியிலிருந்து கடலூர் சாலையில் 6 கிலோ மீட்டர் தொலைவில் அரியாங்குப்பம் (மேற்கு) ஊராட்சி அமைத்துள்ளது. சுணாம்பாறு படகு குழாமத்திலிருந்து படகு மூலம் பேரடைஸ் (Paraside) கடற்கரைக்கு செல்லலாம். பச்சைவாழி அம்மன் இடம்கொண்ட மன்ணாதசுவாமி திருக்கோவில் அரியாங்குப்பத்திலுள்ள ஒரு பழமையான கோவில் ஆகும். பொங்கல் அன்று இங்கு பெரும்விழா கொண்டாடப்படுகிறது. இக்கோவில் அரியாங்குப்பத்திலிருந்து சுன்னாம்பாறு படகு குழாம் செல்லும் வழியில் டோல்கேட்டில் அமைத்துள்ளது. புனித அரோக்கிய அன்னை ஆலயம் 1690இல் கட்டப்பட்டது. பலமுறை மாற்றங்கள் கண்ட இவ்வாலயம், இன்று புது பொலிவுடன் காணப்படுகிறது. இவ்வாலயம் புதுச்சேரில் உள்ள பழமையான ஆலயங்களில் ஒன்றாகும். புதுச்சேரி புதிய துறைமுகம், பெரிய வீராம்பட்டினத்தில் அமைத்துள்ளது. இங்கிருந்து புதிய கலங்கரை விளக்கம் போன்ற சுற்றுல சின்னகளை பார்க்கமுடியும். சுணாம்பாறு படகு குழாமத்திற்கு சொந்தமான பேரடைஸ் (Paraside) இல்லம் சின்ன வீராம்பட்டினம் கடற்கரையில் உள்ளது. கடற்கரை கைபந்து விளையாட ஏதுவான இடமாக சின்ன வீராம்பட்டினம் கடற்கரை உள்ளது. அரியாங்குப்பம் ஒன்றியதில் உள்ள ஊர்களின் பட்டியல் பித்தப்பை பித்தப்பை என்பது கல்லீரலின் கீழே அமைந்துள்ள ஒரு சிறிய பை போன்ற அமைப்பாகும். இது கல்லீரலில் உற்பத்தியாகும் பித்தநீரை எடுத்துச் செல்லும் பித்த நாளத்துடன் இணைந்துள்ளது. கொழுப்பு வகை உணவின் சமிபாட்டுக்குத் தேவையான பித்தநீரைச் சேமித்து வைத்திருந்து தேவையான வேளையில் குடலுக்குள் விடுகின்றது. உணவு உண்டதும், பித்தப்பை சுருங்குகிறது. இந்தப் பித்தப்பை இல்லாமல் மாந்தர் உயிர் வாழமுடியும். அறுவைச் சிகிச்சை மூலம் பித்தப்பை அகற்றப்படல் பித்தப்பை நீக்கம் எனப்படும். பித்தப்பை பை போன்ற அமைப்புடைய அங்கமாகும். இது ஈரலின் வலது பக்கச் சோணையின் கீழாக மேலமிழ்ந்து காணப்படும்.நரை நீல நிறம் கொண்டது. வளர்ந்தவர்களில் இது கிட்டதட்ட நீளமும் விட்டமும் கொண்டதாயிருக்கும் இதன் கொள்ளளவு ஆகும். பித்தப்பை பேரிப்பழத்தின் வடிவத்தை ஒத்ததாகக் காணப்படும். அதன் முனை பித்தக்கானில் திறக்கும். பித்தப்பை மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படும்: மேற்பகுதி, உடல், கழுத்து என்பவையாகும். மேற்பகுதி வட்ட அடியையும் வளைந்த அமைப்பு வயிற்றறைச் சுவருடனும் ஈரலில் புதையுண்டு காணப்படும். பித்தப்பையின் முதன்மையான தொழிற்பாடு பித்தத்தைச் சேமித்தல் ஆகும். இது உணவிலுள்ள கொழுப்புக்களின் சமிபாட்டுக்கு தேவையானது.ஈரலால் சுரக்கப்பட்டு கல்லீரல் நாளத்தின் ஊடாக அனுப்பப்பட்டு பித்தப்பையில் சேமிக்கப்படும்.குறித்த நேரத்தில் பித்தப்பையில்பித்தம் சேமிக்கப்படும் கொழுப்பைக் கொண்ட உணவுப் பதார்த்தம் உணவுக்கால்வாயினை அடையும் போது அது முன்சிறுகுடல் மற்றும் இடைச் சிறுகுடலிலிருந்து முன்கொலிசிஸ்டொகைனினின் சுரப்பைத் தூண்டும். இச்சுரப்பின் காரணமாக பித்தப்பை சந்தம் பொருந்தியவகையில் இறுக்கமுற்று அதன் உள்ளடக்கத்தை பொது பித்தக் குழாயில் வெளியிட அது இறுதியில் முன்சிறுகுடலை வந்தடையும். பித்தம் கொழுப்பைப் பகுதியளவு சமிபாடடையச் செய்து அதன் அகத்துறுஞ்சலை அதிகரிக்கும். பித்தம் பித்த உப்புக்களையும், நீரையும் முதன்மையாக கொண்டிருக்கும். ஈமோக்குளொபின் அனுசேபத்தின் போது வெளியேறும் விளைபொருளான பிலிரூபின் இனப்படும் பித்த நிறப்பொருள் வெளியேற்றப்படும். ஈரலால் சுரக்கப்பட்டு பித்தப்பையில் சேமிக்கப்படும் பித்தம் பித்தப்பையில் இருந்து வெளிவிடப்படும் பித்தத்தின் அமைப்பில் இருந்து மாறுபட்டது. அதாவது,சேமிக்கபடும் போது நீர் அகற்றப்படுவதுடன் பகுப்புக்கும் உட்படும். கடத்தப்படுதலின் போது பித்தப்பையின் மேற்றோல் கலங்களில் இருந்து வெளியேறும் சோடியம் அயனிகள் பிரசாரண அமுக்கத்தை அதிகரிக்கும் இதனால் நீர் மற்றும் குளோரைட்டு மீள் அகத்துஞ்சப்படும். பித்தப்பைக்கல் பித்தம் நிரம்பலடைவதாலோ, பொதுவாக கொலஸ்திரோல் மற்றும் பிலுரூபின் காரணமாக ஏற்படும். பெரும்பாலான பித்தப்பைகற்கள் பித்தப்பையில் இருக்கும் போதோ அல்லது பித்தத் தொகுதி ஊடாக செல்லும் போதோ அறிகுறிகள் எதையும் காட்டாது. அறிகுறிகள் தென்படும் போது அடி வயிற்றில் கடுமையான வயிற்றுவலி அடிக்கடி உணரப்படும். கற்கள் பித்தப்பையை தடைப்படுத்தும் போது கொலிசிஸ்டைட்டிஸ் எனப்படும் அழற்சி ஏற்படும். கற்கள் பித்தத் தொகுதியை தடப்படுத்தும் போது மஞ்சள் காமாலை ஏற்படும்,கணைய நாளாத்தில் அடைப்பு ஏற்படுமாயின் கணைய அழற்சி ஏற்படும். பித்தப்பைகள் நோயினை மீயொலி மூலம் கண்டறிய முடியும். அறிகுறிகளுடன் கூடிய பித்தப்பைக்கல் கண்டறியப்படும் போது இயற்கையாக வெளியேறும் வகையில் விடப்படும். அடிக்கடி ஏற்படும் பித்தப்பைக் கல்லுக்கு பித்தப்பையைசத்திரசிகிச்சை மூலம் முழுமையாக அகற்றுவது பொதுவாக செய்யப்படுகின்றது. உள்ளூர் எஸ். பரமேசுவர அய்யர் உள்ளூர் எஸ். பரமேசுவர அய்யர் (சூன் 6, 1877-சூன் 15,1949) () உள்ளூர் என அறியப்படுபவர், மலையாள இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட புகழ்பெற்ற கவிஞரும் வரலாற்றாளரும் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் முதற்பகுதியில் மலையாள நவீன கவியுலகின் மும்மூர்த்திகள் எனப் போற்றப்படும் மூவரில் ஒருவர். மற்றவர்கள் குமரன் ஆசான் மற்றும் வள்ளத்தோள் நாராயண மேனன் ஆவர். உள்ளூர் பரமேசுவரன் மலையாள மரபுக்கவிதையின் மறுமலர்ச்சிக்கு உதவினார். கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சங்கணாசேரியை அடுத்த பெருண்ணாவில் தாமரைச்சேரி இல்லத்தில் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார்.. இவரது தந்தை, ஆசிரியராக பணிபுரிந்து வந்த சுப்பிரமண்ய அய்யர். தாய் பகவதியம்மை. தந்தையின் இளவயது இறப்பினை அடுத்து அன்னையுடன் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த உள்ளூர் என்ற கிராமத்தில் வாழத்துவங்கினார். 1897இல் திருவனந்தபுரம் மகாராசா கல்லூரியில் மெய்யியல் துறையில் பட்டம் பெற்றார். அரசு ஊழியராக பணிபுரியத்துவங்கி பல பதவிகளை வகித்து திருவிதாங்கூர் அரசின் தலைமைச் செயலராக பணியாற்றியவர். அவரது துவக்க கால கவிதைகளில் சமசுகிருத மொழியின் தாக்கம் கூடுதலாக இருந்தது. பிரேமசங்கீதம் என்ற அவரது முதன்மை கவிதை மலையாள இலக்கியத்தின் வரலாற்றை தொகுத்திருந்தது. காதலே உண்மையான சமயம் என விவரித்திருந்தார். மனிதருக்கும் இயற்கைக்கும் இடையே நிகழும் ஒருங்கிசைவை நிலைநிறுத்தினார். 1914ஆம் ஆண்டு வெளியிட்ட "உமாகேரளம்" என்ற புத்தகம் மகாகாவியம் என புகழப்பட்டது. இது 17ஆம் நூற்றாண்டு திருவிதாங்கூர் அரசியலை முன்வைத்து எழுதப்பட்ட நீண்ட பாடலாகும். "பிங்களா", "கர்ணபூசணம்", "பக்திதீபிகா" மற்றும் "சித்திரசால" என்பன அவரது சிறந்த பிற படைப்புகளாகும். கேரள இலக்கியத்தின் வரலாற்றை ஐந்து பாகங்கள் கொண்ட கேரள சாகித்திய சரிதம் என்னும் நூலாக எழுதினார். குமரன் ஆசான் என். குமரன் ஆசான் (1873 - 1924) என்பவர் "மகாகவி குமரன் ஆசான்" என்றும் அறியப்படும் கவிஞராவார். இவருக்கு "மகாகவி" என்ற பட்டம் 1922 ஆம் ஆண்டு மதராசு பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டது. “மகாகவி” என்றால் “பெரும் கவிஞர்" என்ற பொருளும் “ஆசான்” என்றால் “ஆசிரியர்” என்ற பொருளும் கொண்டவை. கேரளாவில் திருவனந்தபுரம் அருகிலுள்ள காயிக்கரை எனுமிடத்தில் ஈழவர் சமுதாயத்தில் பிறந்த இவர், இருபதாம் நூற்றாண்டின் முதற்பகுதியில் மலையாள நவீன கவியுலகின் மும்மூர்த்திகள் எனப் போற்றப்படும் மூவரில் ஒருவர். மற்றவர்கள் உள்ளூர் பரமேசுவர அய்யர் மற்றும் வள்ளத்தோள் நாராயண மேனன் ஆவர். ஸ்ரீ நாராயணகுருவின் முதன்மைச் சீடரான இவர் ஓர் மெய்யியலாளரும் சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். இவரது பாடல்களில் மெய்யியலும் ஆன்மீகமும் அதிகம் இடம் பெற்றிருக்கும். ஸ்ரீ நாராயணகுரு இவர் 1873 ஏப்ரல் 12ஆம் நாளில் பிறந்தார். இவர் பிறந்த ஊர் சிறையின்கீழ்‌]] வட்டத்தில் உள்ள காயிக்கரை ஆகும். இவரது தந்தையான நாராயணன் பெருங்ஙாடி, மலையாளத்திலும் தமிழிலும் வல்லவராகத் திகழ்ந்தவர். இவரது அம்மாவின் பெயர் காளியம்மை ஆகும். ஒன்பது மக்களைப் பெற்ற குடும்பத்தில் இரண்டாவது மகனாய் பிறந்தவர். இவருக்கு ஏழு வயதாக இருந்தபோது பள்ளியில் சேர்த்தனர். இவரது ஆசிரியரின் பெயர் ”துண்டத்தில் பெருமாளாசான்” ஆகும். பின்னர், சமசுகிருதப் பாடங்களை படித்தார். பின்னர், வேறொரு பள்ளியில் பயின்றார். அதே பள்ளியில் ஆசிரியராகவும் சேர்ந்தார். பின்னர், ஆங்கிலமும் கற்றார். சில காலம், கடைகளில் கணக்கெழுதிக் கொண்டிருந்தார். அப்போது, கவிதைகள் எழுதத் தொடங்கினார். பரவூரில் கேசவனாசான் என்பவர் நடத்திய சுஜனாநந்தினி என்ற இதழில் இவரது கவிதைகள் வெளியாயின. குமாரு, என். குமாரன், காயிக்கரை என். குமாரன் என்ற பெயர்களில் கவிதைகளை எழுதியிருந்தார். இவரது அறிவுத் திறனை உணர்ந்த இவரது முதலாளியான ”கொச்சார்யன் வைத்யன்”, இவரை மேலும் கல்வி கற்குமாறு தூண்டினார். மணம்பூர் கோவிந்தனாசான் என்ற பெரிய புலவரிடம் கல்வி கற்றார். பாட்டுகளும் சுலோகங்களும் எழுதுவதில் வல்லவராகத் திகழ்ந்தார். அங்கு படித்தபோது, “வள்ளி விவாகம்”, “அம்மானைப்பாட்டு“, “உஷாகல்யாணம்“ ஆகியவற்றை எழுதினார். “சுப்ரமண்ய சதகம்” என்ற நூலையும் எழுதினார். இது அச்சுப்பதிப்பாகவும் வெளிவந்துள்ளது. தமிழில் ”வீழ்ந்த” என்ற சொல் மலையாளத்தில் “வீண” எனத் திரியும். இவர் எழுதிய வீண பூவ் என்ற கவிதை, 1907 டிசம்பரில் மிதவாதி என்ற இதழில் வெளியானது. வீணப் பூவ் என்றால் விழுந்த பூ என்று பொருள். என்று தொடங்குகிறது. பூ பூக்கத் தொடங்கியது முதல் வாடுவது வரையுள்ள காலகட்டத்துடன், மனிதனின் வாழ்க்கையை ஒப்பிட்டு எழுதியுள்ளார். இது நாற்பத்தியொன்று சுலோகங்களைக் கொண்டுள்ளது. அப்போதைய பிரபல இலக்கிய இதழான பாஷாபோஷிணியிலும் வெளியானது. இது நளினிக்கும் திவாகரனுக்கும் இருந்த அசாதாரண நட்புறவைப் பற்றியது. துர்+அவஸ்தை=துரவஸ்தை. காலங்காலமாக சமூகத்தில் இருந்த கெட்ட ஆசாராங்களால் உண்டான தீங்குகளைப் பற்றியது. நூல் வடிவமைப்பு நூல் வடிவமைப்பு என்பது, ஒரு நூலின் உள்ளடக்கம், பாணி, அமைப்பு, வடிவமைப்பு, அதன் பல்வேறு கூறுகளின் ஒழுங்கு ஆகியவற்றை உட்படுத்தி அவையனைத்தும் ஒத்திசைவான முழுமையைத் தரும்வகையில் ஒன்றாக ஆக்கும் வழிமுறை ஆகும். முன் அட்டை, பின் அட்டை, முன் அட்டைக்குப் பின்னும், பின் அட்டைக்கு முன்னும் வரும் இரண்டு வெற்றுத் தாள்களையும் தவிர்த்து ஒரு நூலின் எஞ்சிய கூறுகளை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். இவை, எனலாம். மேற்படி ஒவ்வொரு பகுதிகளிலும் பல உட் கூறுகள் உள்ளன. எல்லா நூல்களிலும் எல்லாக் கூறுகளும் இல்லாவிட்டாலும், இவற்றில் பெரும்பாலானகூறுகள் ஒரு நூலில் காணப்படலாம். அவ்வாறான கூறுகளின் பட்டியல் பின்வருமாறு: ஆர். பாலச்சந்திரன் கவிஞர் பாலா என அழைக்கப்பெறும் பேராசிரியர் ஆர். பாலச்சந்திரன் (சனவரி 13, 1946 - செப்டம்பர் 22, 2009, அகவை 63), கல்வியாளர், விமரிசகர், கவிஞர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறைத் தலைவரும் பேராசிரியருமாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்; சாகித்திய அகாதெமியின் நிர்வாக் குழு உறுப்பினராக இருந்தார். தமிழ் சாகித்திய அகாதெமியின் தமிழ் ஆலோசனைக் குழுவின் அமைப்பாளராகவும் திகழ்ந்தார். "வானம்பாடி" என்ற தமிழ்ப் புதுக்கவிதைக் குழுவில் முக்கிய பங்காற்றியவர். "சர்ரியலிசம்", "பாரதியும் கீட்சும்" ஆகிய புத்தகங்கள் தமிழ் இலக்கியத்திற்கு அவரின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் ஆகும். கவிஞர்கள் மீரா, மு. மேத்தா, ராஜம் கிருஷ்ணன் உள்ளிட்டோரின் ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். இவை தவிர சிறு பத்திரிகைகளும் நடத்தியிருக்கிறார். http://commons.wikimedia.org/wiki/File%3A%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE.jpg சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பயனின்றி, 2009, செப்.22 மாலை 4 மணிக்கு காலமானார். பாலாவுக்கு மஞ்சுளா என்ற மனைவியும் பிரியா என்ற மகளும் கார்த்திக் என்ற மகனும் உள்ளனர். புழுதிப் புயல் புழுதிப் புயல் ("dust storm") அல்லது மணற்புயல் ("sandstorm") எனப்படுவது வறண்ட அல்லது பகுதி-வறண்ட பகுதிகளில் ஏற்படும் ஒரு வானியல் நிகழ்வாகும். இது காற்று மண்டலத்தின் வேகம் ஒரு குறிப்பிட்ட வேகத்தை விட அதிகரிக்கும் போது மணல் மற்றும் தூசிகளை வறண்ட நிலங்களில் இருந்து அகற்றி தன்னுடன் எடுத்துச் செல்வதால் ஏற்படுகிறது. இந்நிகழ்வின் போது மணல் துணிக்கைகள் ஓரிடத்தில் இருந்து அகற்றப்பட்டு வேறோர் இடத்தில் குவிக்கப்படுகின்றன. அராபியத் தீபகற்பத்தை அண்டியுள்ள சகாரா மற்றும் பாலைவனங்கள் புழுதிப்புயலை உருவாக்கும் முக்கிய பகுதிகளாகும். இவற்றைவிட அரபிக்கடலை அண்டியுள்ள ஈரான், பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளின் பகுதிகளிலும், மற்றும் சீனாவிலும் குறைந்த அளவில் புழுதிப்புயல் ஏற்படுகின்றன. இவ்வாறான புழுதிப் புயல் ஏற்பட்டால் நிலம் தரிசாக மாறிவிடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அண்மைய ஆய்வுகளின்படி, தரிசு நிலங்கள் முறையாகப் பாதுகாக்கப்படாமை போன்ற பூமியின் வறண்ட பகுதிகளின் மேலாண்மைக் குறைபாடுகளே, புழுதிப்புயல் ஏற்படக் காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. ஜெனவீவ் நாஜி ஜெனவீவ் நாஜி ("Genevieve Nnaji", பிறப்பு: மே 3, 1979 என்பவர் புகழ் பெற்ற நொலிவுட் நடிகை. 2005 ஆம் ஆண்டில் சிறந்த நடிகைக்கான ஆப்பிரிக்க திரைப்பட அக்காதெமி விருதைப் பெற்றவர். ஜெனவீவ் நாஜி நைஜீரியாவின் லேகோஸ் நகரில் பிறந்தவர். நடுத்தரக் குடும்பம் ஒன்றில் எட்டுப் பிள்ளைகளில் நான்காவதாகப் பிறந்தார். தந்தை ஒரு பொறியாளர், தாயார் ஆசிரியை. யாபா மெதடிஸ்த பெண்கள் கல்லூரியில் கல்வி கற்ற ஜெனவீவ் லாகோஸ் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தார். தனது 8 வயதிலேயே தொலைக்காட்சி நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார் நாஜி. பல தொலைக்காட்சி வணிக விளம்பரங்களில் தோன்றினார். 1998 இல் தனது 19வது அகவையில் நைஜீரியத் திரைப்படத்துறையில் நுழைந்து "மோஸ்ட் வாண்டட்" என்ற திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தவர் இப்போது மொத்தம் 80 நொலிவுட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போது நொலிவுட் திரையுலகில் அதிக ஊதியம் பெறும் நடிகைகளில் இவரும் ஒருவர். வேகா வேகா (பிறப்பு: மே 7, 1985)) ஒரு திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் இந்தியாவில் உள்ள சட்டீஸ்கர் மாநிலத்தில் பிறந்தவர். ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரத்தில் வளர்ந்தவர். சிட்னி நகரத்தில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைகழகத்திலும் அதன் தொடர்ச்சியாய் இரு பல்கலைகழகங்குளுக்கிடையே மாணவர்களை பரிமாற்றம் செய்து கொள்ளும் ஒப்பந்தந்தின் படி பெங்களூர் நகரத்தில் உள்ள ஐ.ஐ.எம். மிலும் பொருளாதாரத்தில் பட்டப்படிப்பு படித்து இருக்கிறார். தமிழ், இந்தி, தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார். வள்ளத்தோள் நாராயண மேனன் வள்ளத்தோல் நாராயண மேனன் இருபதாம் நூற்றாண்டின் முதற்பகுதியில் மலையாள நவீன கவியுலகின் மும்மூர்த்திகள் எனப் போற்றப்படும் மூவரில் ஒருவர். மற்றவர்கள் உள்ளூர் பரமேசுவர அய்யர் மற்றும் குமரன் ஆசான் ஆவர். கேரள கலாமண்டலத்தை நிறுவியவர். இந்திய அரசின் பத்ம பூசண் விருது 1955ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது. 1878 அக்டோபர் 16-அன்று கேரளத்தின் மலப்புரம் மாவட்டத்திலுள்ள திரூர் அருகே சென்னாரா என்றவிடத்தில் பிறந்தார். சமசுகிருதம் மற்றும் ஏரணம் படித்தார். 1905-இல் துவங்கிய வால்மீகி இராமாயண மொழிபெயர்ப்பை 1907-இல் முடித்தார். 1915-இல் "சித்திரயோகம்" வெளியிட்டார். இக்காவியத்தைப் பாராட்டி இவருக்கு "மகாகவி" என்ற பட்டப்பெயர் வழங்கப்பட்டது. அந்த ஆண்டே கேரளோதயம் இதழின் அதிபரானார். கதக்களியின் மறுமலர்ச்சிக்காக மிகவும் பாடுபட்டார். 1958 மார்ச் 13-அன்று தமது 79ஆம் அகவையில் மரணமடைந்தார். அவரது பாடல்கள் நாட்டுப்பற்று மற்றும் சமூகநீதியை வலியுறுத்தி அமைந்திருந்தன. காதுகேளாமையால் தாமடைந்த இன்னல்களையும் கவிதையாக வடிவெடுத்தார். குறிப்பிடத்தக்க சில: வள்ளத்தோலின் படைப்புகள் ஆங்கிலம்,உருசியன் மற்றும் இந்தி மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. வள்ளத்தோல் நாராயணமேனன் மலையாள தொன்ம கலைகளை வளர்த்தெடுக்க ஆற்றிய முதன்மையான பணி கேரளகலாமண்டலம் என்னும் கலாசாலையை நிறுவியதுதான். தமது 49ஆம் அகவையில் தாம் பார்த்த கதக்களி நாட்டிய நாடகத்தின் குறைந்த தரம் அவரை பழங்கலைகளை வளர்த்தெடுக்க வேண்டியதன் தேவையை உணர்த்தியது. உடன்கருத்துக் கொண்டவர்களின் துணையுடன் 1927ஆம் ஆண்டு கோழிக்கோட்டில் கேரள கலாமண்டலம் என்ற நிறுவனத்தை பதிவு செய்தார். இதனை வளர்க்க நிதிவேண்டி மிகுந்த முயற்சிகள் மேற்கொண்டார். கேரள அரசின் உதவியோடு லாட்டரியும் நடத்தி பணம் திரட்டினார். பின்னர் தமது நண்பர் மணக்குளம் முகுந்தராசா வழங்கிய பாரதப்புழை ஆற்றின் கரையில் செருதுருத்தி என்ற இடத்தில் இக்கலாசாலையை அமைத்தார். தாமும் அங்கேயே வசிக்கத் துவங்கினார். இவரது நினைவாக இவ்விடம் தற்போது வள்ளத்தோல் நகர் என்று மறுபெயரிடப்பட்டுள்ளது. நூல் அட்டை நூல் அட்டை என்பது நூலின் பக்கங்களுக்குப் பாதுகாப்பாக முன்னும் பின்னும் வைத்துக் கட்டப்படும் அட்டைகள் ஆகும். முன்பக்கத்தில் வைத்துக் கட்டப்படும் அட்டை முன் அட்டை என்றும் பின்பக்கத்தில் வைத்துக் கட்டப்படுவது பின் அட்டை என்றும் குறிப்பிடப்படும். இவை பல வகையாக உள்ளன. தடித்த அட்டை, மெல்லிய அட்டை, என்பவற்றோடு, தூசியுறை, வளையக்கட்டு போன்றவை இவற்றுட் சில. 19 ஆம் நூற்றாண்டுக்கு முன், நூல்கள் மரப்பலகை, தோல், பொன் தகடு, வெள்ளித் தகடு போன்ற தடித்த பொருள்களைப் பயன்படுத்திக் கையால் கட்டப்பட்டன. பல நூறு ஆண்டுகளாக அட்டை கட்டுதல் தொழில், விலையுயர்ந்தனவும், கையால் எழுதப்பட்டனவுமான நூல்களின் பக்கங்களுக்குப் பாதுகாப்பு அழிக்கும் பயன்பாட்டுக்காகவும், அவற்றின் பண்பாட்டு ஆழுமைக்கு அழகூட்டல் மூலம் மதிப்பளிப்பதற்கு ஆகவும் செய்யப்பட்டு வந்தது. 1820களில், நூல்களுக்கு அட்டை கட்டுவதில் பெரும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கிப் படிப்படியாக பொறிகள் மூலம் அட்டை கட்டும் தொழில்நுட்பம் அறிமுகமானது. நீராவி ஆற்றலில் இயங்கும் அச்சியந்திரங்களின் பயன்பாடு நூல்களின் விலைகளைப் பெருமளவில் குறைத்தபோது, துணியும், பின்னர் கடதாசியும் அட்டை கட்டுவதற்கான முக்கியமான பொருட்கள் ஆயின. பொறிகள் மூலம் கடதாசி உற்பத்தி செய்யப்பட்டதும் இதற்கு வாய்ப்பாக அமைந்தது. மேற் கூறிய மாற்றங்கள், நூல் அட்டைகளை உற்பத்தி செய்வதை மலிவாக ஆக்கியது மட்டுமன்றி, அட்டைகள் மீது நிறங்களைப் பயன்படுத்திப் படங்களையும் எழுத்துக்களையும் அச்சிடுவதற்கும் வழிவகுத்தன. 19 ஆம் நூற்றாண்டின் சுவரொட்டிக் கலைஞர்களிடமிருந்து கற்றுக்கொண்ட தொழில்நுட்பங்கள் நூல் அட்டை கட்டுவதிலும் பயன்படலாயின. அட்டைகள், நூலுக்குப் பாதுகாப்பளிப்பதுடன் நில்லாது, நூலின் விளம்பரத்துக்கும், அந்நூலின் உள்ளடக்கம் சம்பந்தமான தகவல்களை உணர்த்துவதற்கும் பயன்படலாயிற்று. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கலை இயக்கங்களான "ஆர்ட்சு அண்ட் கிராஃப்ட்" (கலையும் கைப்பணியும்), "ஆர்ட் நொவ்வூ" போன்றவை நூல் அட்டை வடிவமைப்புக்கு உந்து சக்திகளாக அமைந்தன. இவ்வாறு வளர்ச்சி பெற்ற அட்டை வடிவமைப்புக் கலை வெகு விரைவிலேயே ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் இருந்த முற்போக்கான நூல் பதிப்பாளரூடாக பெரும்படி நூல் உற்பத்தித் துறையிலும் நுழைந்து கொண்டது. அக்காலத்தின் தீவிர புதுமியத் (நவீன) தன்மை கொண்ட நூல் உறைகளில் சில 1920 களில் சோவியத் ஒன்றியத்தில் வடிவமைக்கப்பட்டன. "அவந்த் கார்டிய"க் கலைஞர்களான அலெக்சாண்டர் ரொட்சென்கோவும், எல் லிசிட்சுக்கியும் (El Lissitzky) இவ்வாறான அட்டைகளை வடிவமைத்த வடிவமைப்பாளர்களில் இருவர். ஆபிரே பியர்ட்சிலி (Aubrey Beardsley) என்பாரும் அக்கால நூல் அட்டை வடிவமைப்புத்துறையில் செல்வாக்குச் செலுத்தியவர் ஆவார். இவர் 1894-95 காலப்பகுதியில் இலண்டனில் இருந்து வெளியான "யெலோ நூல்" (Yellow Book) எனப்படும் இலக்கிய சஞ்சிகையின் முதல் நான்கு இதழ்களுக்கு அட்டை வடிவமைத்தார். போருக்குப் பிந்திய காலங்களில் நூல் உற்பத்தித் துறையில் வணிகப் போட்டிகள் கூடுதலானதால் அட்டை வடிவமைப்பு மிகவும் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக மாறியது. அக்காலத்து நூல்களின் உள்ளடக்கம், அதன் பாணி, அதன் வகை, என்பன குறித்து ஓரளவுக்குத் தெரிந்து கொள்ள அவற்றின் அட்டைகள் உதவின. இணைய வழி விற்பனை சிறப்புப் பெற்றுள்ள தற்காலத்திலும் நூல் அட்டைகளில் முக்கியத்துவம் குறைவடையவில்லை. நூல் அட்டைகளின் "எண்ணிய" வடிவங்கள் நூல் விளம்பரத்தில் சிறப்பிடம் பெறுகின்றன. கல்பாத்திப்புழா கல்பாத்திப் புழா கேரளத்தில் பாயும் பாரதப்புழாவின் முக்கியமான துணையாறுகளுள் ஒன்று. இந்த ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையில் பாலக்காடு மாவட்டப் பகுதியில் உற்பத்தியாகிறது. மலம்புழா, வாளையாறு, வரட்டாறு, கோரையாறு ஆகிய நான்கு ஓடைகள் இணைந்து இந்த ஆறு உருவாகிறது. இந்த ஆறு பாலக்காட்டில் கல்பாத்தி சிவன் கோவிலின் பெயரைத் தொட்டு கல்பாத்திப் புழா எனப்படுகிறது. மலம்புழா ஆறு மலம்புழா கல்பாத்திப்புழாவின் துணையாறுகளுள் ஒன்று. இது கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் பாய்கிறது. இதன் குறுக்கே மலம்புழா அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணை 1949-இல் துவங்கப்பட்டு 1955-இல் கட்டி முடிக்கப்பட்டது. இடுக்கி நீர்த்தேக்கத்திற்கு அடுத்து மலம்புழா நீர்த்தேக்கமே கேரளத்தின் இரண்டாவது பெரிய நீர்த்தேக்கமாகும். இதன் பரப்பு 23.13 சதுர கிலோமீட்டர்கள். இசுட்டாக் ஓவர்ஃபுலோ இசுடாக் ஓவர்ஃபுலோ (Stack Overflow) என்பது நிரலாக்கம் தொடர்பான கேள்வி பதில் வழங்கும் ஆங்கில வலைத்தளம். இத் தளத்தில் பயனர்கள் நிரலாக்கம் தொடர்பான கேள்விகளைக் கேட்கலாம், கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் வழங்கலாம். இச்சேவை இலவசமாக வழங்கப்படுகிறது. எனினும் இது ஒரு கட்டற்ற மென்பொருள் இல்லை. பயனர்கள் பதிவு செய்யாமலே கேள்விகளைக் கேட்கலாம், எனினும் பதிவு செய்யம் பயனர்கள் கூடிய அணுகூலங்களை தளத்தில் பெறுகின்றார்கள். பயனர்கள் எவ்வாறு செயற்படுகிறார்கள் என்பதைப் பொறுத்து அவர்களின் செல்வாக்கு அத்தளத்தில் கூடும். டெட் (மாநாடு) டெட் (மாநாடு) (TED – Technology, Entertainment, Design) என்பது தொழில்நுட்பம், பொழுதுப்போக்கு மற்றும் வடிவமைப்பு என்று பொருள்படும் ஆங்கிலச் சொற்களின் முதல் எழுத்துகளின் கூட்டுச் சொல் ஆகும். இது தொழில்நுட்பம், மகிழ்கலைகள், வடிவமைப்பு ஆகிய துறைகளில் கவனம் செலுத்தும் அமைப்பு. இதன் டெட் மாநாடு புகழ் பெற்றது. அழைப்பின் பேரில் மட்டுமே கலந்து கொள்ள முடியும். இந்த மாநாட்டில் முதல் தர நுட்பவியலாளர்கள், அறிவியலாளர்கள், சமூகச் சேவையாளர்கள், அரசியல்வாதிகள் கலந்து கொண்டு 20 நிமிடத்துக்குள்ளே முக்கிய கருத்துருக்களைப் பற்றி உரையாற்றுவார்கள். இந்த உரைகள் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. "மக்களிடையே சேரவேண்டிய மதிப்புமிக்க யோசனைகள்" தமிழகத்தில் சென்னை மாநகரில் சாய்ராம் பொறியிற் கல்லூரியில் டெட்எக்க்ஸ் (TEDX)எனப்படும் மாநாடு டிசம்பர் 28ஆம் தேதி 2016ல் நடந்தது. இதில் 11 பேர் பங்குபெற்று உரையாற்றினர். . ஆய்லர் திட்டம் ஆய்லர் திட்டம் ("Project Euler") என்பது கணினியில் நிரல் எழுதி தீர்க்க கூடிய கணித சிக்கல்களைக் கொண்ட வலைத்தளம் ஆகும். இத் திட்டம் கணித்ததில், நிரலாக்கத்தில் ஈடுபாடுள்ள மாணவர்களுக்கும் மற்றோருக்கும் ஏற்ற பல நிலைகளைக் கொண்ட சிக்கல்களைக் கொண்டுள்ளன. பல புள்ளி நிலைகளைக் கொண்டு இத் தளத்தின் அனுமதி கிடைக்கிறது. தலைப்புப் பக்கம் தலைப்புப் பக்கம் என்பது, ஒரு நூல், ஆய்வுக் கட்டுரை அல்லது பிற எழுத்தாக்கங்களின் முதலில் அல்லது முன்புறத்துக்கு அண்மையில் காணப்படும் ஒரு பக்கம். இப் பக்கத்தில், குறித்த ஆக்கத்தின் தலைப்பு, ஆக்குனர் போன்ற தகவல்களோடு மற்றும் சில தகவல்களும் உள்ளடக்கப்பட்டு இருக்கும். பொதுவாக அட்டையிலும், அரைத்தலைப்புப் பக்கத்திலும் இருக்கும் தகவல்களோடு நூல் பற்றிய கூடுதல் தகவல்கள் இதில் காணப்படும். தொடக்ககாலத்தில் அச்சிடப்பட்ட நூல்கள் சிலவற்றில் தலைப்புப் பக்கம் காணப்படவில்லை. முதல் பக்கத்திலேயே உரைப்பகுதி அச்சிடப்பட்டது. தலைப்புப் பக்கம் நூலொன்றின் முன்பகுதியில் ஒரு உறுப்பு. நூல்களின் தலைப்புப் பக்கம்; முதலிய தகவல் உள்ளடங்கியிருக்கும். சில நூல்களுக்கு குறித்த துறையில் புகழ் பெற்றவர்கள் அணிந்துரை வழங்குவதுண்டு அவ்வாறான அணிந்துரைகள் இடம்பெறும்போது அவர்களது பெயர்களையும் தலைப்புப் பக்கத்தில் குறிப்பிடுவது உண்டு. சில நூல்களில் காப்புரிமை ஐ.எசு.பி.என் குறியீடு போன்ற தகவல்களும் அடங்கியிருப்பது உண்டு. எனினும் பெரும்பாலும் இத் தகவல்கள் தலைப்புப் பக்கத்தில் பின் பக்கத்திலேயே தரப்படுவது வழக்கு. சிலவகையான நூல்களில் நூலின் அட்டைகளில் தரப்படும் தகவல்களிலும் குறைந்த தகவல்களே தலைப்புப் பக்கத்தில் இடம்பெறுவது உண்டு. இதனால் அவ்வாறான நூல்களில் தலைப்புப் பக்கங்களில் பயன்பாடு குறைவாகவே உள்ளது எனவே சில நூல் பதிப்பகங்கள் இவ்வாறான நூல்களில் தலைப்புப் பக்கங்களை நீக்கிவிடுவது உண்டு. முற்காலத்தில் தலைப்புப் பக்கங்கள் மிகவும் நுணுக்கமான அலங்கார வேலைப்பாடுகளுடன் அல்லது படங்களுடன் அமைவது உண்டு. இத்தகைய பக்கங்களில் எழுத்துக்களுக்காக ஒரு பகுதி ஒதுக்கப்பட்டிருக்கும். இப்பகுதி அழகூட்டல் வேலைப்பாடுகளிடையே வட்டம், நீள்வட்டம் முதலிய பல்வேறு வடிவங்களிலான ஒரு வரையறுக்கப்பட்ட பகுதியாக இருப்பதும் உண்டு. எனினும் தற்காலத்தில் தலைப்புப் பக்கங்கள் எழுத்துக்களை மட்டும் கொண்டவையாகக் காணப்படுகின்றன. இவ்வெழுத்துக்கள் முழுப்பக்கத்தையும் அடக்கும்படி அமைந்திருக்கும். பக்கத்தின் மேற்பகுதியில் முதன்மைத் தலைப்பு அச்சிடப்பட்டிருக்கும். அதற்குக் கீழே துணைத்தலைப்புக்கள் அல்லது விளக்கங்கள் இருப்பின் அவை இடம்பெறும். அவற்றுக்குக் கீழ் ஏறத்தாழப் பக்கத்தின் நடுப் பகுதியில் ஆக்குனரின் அல்லது ஆக்குனர்களின் பெயர் கொடுக்கப்படும். தொகுப்பு நூல்களில் அல்லது தொடர் நூல்களில் இவ்விடத்தில் பதிப்பாசிரியரின் பெயரே காணப்படும். ஆக்குனரின் பெயருடன் அவருடைய கல்வித் தகைமைகள், அவருடைய பதவி போன்ற விபரங்களும் இடம்பெறுவது உண்டு. பக்கத்தின் கீழ்ப் பகுதியில் நூலைப் பதிப்பித்த பதிப்பகத்தின் பெயரும், சில வேளைகளில் முகவரி போன்ற விபரங்களும், வணிகச் சின்னமும் இடம்பெறும். இதற்குச் சற்றுக் கீழ் பதிப்பித்த ஆண்டு அச்சிடப்படுவது உண்டு. தலைப்புப் பக்கத்தில் உள்ளடங்கும் மேற்குறித்த கூறுகளின் முக்கியத்துவத்தைப் பொறுத்து, எழுத்துக்களி.ன் அளவு, அவற்றின் தடிப்பு என்பவை தெரிவு செய்யப்படும். பொதுவாக முதன்மைத் தலைப்புக்குப் பெரிய எழுத்துக்களைப் பயன்படுத்துவர். அதற்கு அடுத்தபடியான பெரிய எழுத்துக்கள் ஆக்குனரின் பெயருக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும். பதிப்பகத்தின் பெயரும் தெளிவாக அமையக்கூடிய வகையில் எழுத்தின் அளவும், தடிப்பும் தெரிவு செய்யப்படும். இன்றைய தமிழ் நூல்கள் அனைத்துலக வழிமுறைகளைப் பின்பற்றியே பதிப்பிக்கப் படுவதனால் பிற மொழி நூல்களைப்போலவே தமிழ் நூல்களின் தலைப்புப் பக்கங்களும் அமைகின்றன. எனினும் 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பதிப்பிக்கப்பட்ட நூல்கள் சிலவற்றிலுள்ள தலைப்புப் பக்கங்களின் அமைப்பும், எழுதப்பட்டுள்ள முறைகளும் கவனிக்கத்தக்கவை. 1918 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பதிப்பிக்கப்பட்ட யாழ்ப்பாண வைபவ கௌமுதி என்னும் தமிழ் நூலில் தகவல்களின் அமைவிடங்கள் தற்போதைய முறையை ஒட்டியே காணப்படுகின்றன. ஆனால், பக்கத்தின் மேற்பகுதியில் இந்துக்களின் அக்கால வழக்கத்தையொட்டி பிள்ளையார் சுழியும், அதன் கீழ் "சிவமயம்" என்னும் சொல்லும் காணப்படுகின்றன. அதன் கீழ் நூலின் தலைப்பு இரண்டு வரிகளில் தரப்பட்டுள்ளது. அதன் கீழ் தகவல்கள் பல வரிகளில் வழமையான இடங்களிலேயே காணப்படினும், என முழுத்தகவலும் ஒரே சொற்றொடராக அமைந்திருப்பதைக் காணலாம். இத்தகவல்கள் அனைத்தும் அலங்காரப் பெட்டி அமைப்புக்குள் அடக்கப்பட்டுள்ளன. சென்னையில் பதிப்பிக்கப்பட்ட தமிழ் நூலான மனையடி சாஸ்திரம் என்னும் நூலின் தலைப்புப் பக்கமும் முன் காட்டிய யாழ்ப்பாணத்து நூலைப்போலவே பிள்ளையார் சுழியுடனும் "கடவுள் துணை" என்னும் இறை வணக்கத்துடனும் தொடங்குகிறது. இதிலும் தகவல்கள் ஒரு அலங்காரப் பெட்டி அமைப்புக்குள் தரப்பட்டுள்ளன. ஆனால், இப் பண்டைய நூலின் ஆக்கியோன் பெயர் தலைப்பு, துணைத்தலைப்பு என்பவற்றுடன் "மயனென்பவர் அருளிய சிற்பநூல் என்னும் மனையடி சாஸ்திரம்" என ஒரே சொற்றொடராகத் தரப்பட்டுள்ளது. பதிப்பகத்தின் பெயர், அச்சகப் பெயர், பதிப்பித்த இடம் என்பவை பக்கத்தின் கீழ்ப் பகுதியில் தரப்பட்டுள்ன. இவற்றின் கீழ் நூலின் விலை குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பதிப்பாசிரியரின் அல்லது தொகுத்தவரின் பெயர், பதிப்பித்த ஆண்டு என்பன தலைப்புப் பக்கத்தில் தரப்படவில்லை. பக்கத்தின் நடுப்பகுதியில் மயனைக் குறிக்கும் படம் அச்சிடப்பட்டுள்ளது. அமைப்பிலும் உள்ளடக்கத்திலும் இத் தலைப்புப் பக்கம் ஏறத்தாள நூலின் அட்டையை ஒத்துள்ளது. எழுத்துப் பகுதியைச் சுற்றியுள்ள பெட்டி கூடுதல் அலங்காரத்துடன் இருப்பதும், அட்டையில் பிள்ளையார் சுழி, "கடவுள் துணை" என்பனவும், "மயனென்பவர் அருளிச்செய்த" என்ற தொடர் இல்லாமல் இருப்பதுவுமே வேறுபாடு ஆகும். துஞ்சத்து இராமானுசன் எழுத்தச்சன் துஞ்சத்து இராமானுசன் எழுத்தச்சன்(மலையாளம்: തുഞ്ചത്തു രാമാനുജന്‍ എഴുത്തച്ഛന്‍),நவீன மலையாளத்தின் தந்தை என அறியப்படும் கவிஞர். இன்று வழங்கும் மலையாள எழுத்துக்கள் இவரால் ஒழுங்குபடுத்தப்பட்டவை. இவர் கி.பி பதினைந்தாம் நூற்றாண்டிற்கும் பதினாறாம் நூற்றாண்டிற்கும் இடையே வாழ்ந்திருந்ததாக கருதப்படுகிறது. எழுத்தச்சன் என்பது குலப்பெயர் அல்லவென்றும் இவரது இயற்பெயர் இராமானுசன் எனவும் சில வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள். எழுத்தச்சன் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள திரூர் நகரை அடுத்துள்ள இடத்தில் பிறந்தார். இவ்விடம் தற்காலம் இவரது நினைவைப் போற்றி "துஞ்சன்பரம்பு" என அழைக்கப்படுகிறது.பிராமணராக இல்லாதபோதும் வேதங்களையும் சமசுகிருதத்தையும் கற்றறிந்த எழுத்தச்சன் பல நாடுகளையும் சுற்றிவந்து இறுதியில் "திருக்கண்டியூர்" என்னுமிடத்தில் தங்கினார் என அறியப்படுகிறது. இராமானுசன் எழுத்தச்சன் இராமாயணத்தின் பல்வேறு வடிவங்களை ஒருங்கிணைத்து "அத்யாத்மராமாயணம்" என்ற காவியத்தைப் படைத்தார்.மகாபாரத்தையும் மொழிபெயர்த்து "மகாபாரதம்" என்னும் நூலை எழுதினார். இவை தவிர இவர் எழுதிய பிற நூல்கள்: எழுத்தச்சன் காலம் வரை மலையாள மொழியில் பலரும் தனித்தனி எழுத்து அமைப்புகளை கொண்டிருந்தனர். அவற்றில் சில: இவ்வாறான பல்வேறு எழுத்து வகைகளால் பள்ளிகளிலும் அறிஞர்களிடத்தும் மிகுந்த குழப்பம் நிலவியது.சமசுகிருதத்தின் தாக்கத்தால் சமசுகிருத ஆக்கங்களை மலையாளத்தில் எழுத வட்டெழுத்துகளும் இடையிடையே கிரந்த எழுத்துக்களும் கொண்டு எழுதப் பட்டன. இவற்றை சரிசெய்ய ஓர் புதிய அரிச்சுவடியை ஏற்படுத்தினாலும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளுதல் கடினமாகும். ஆதலினால் எழுத்தச்சன் அரிநாம கீர்த்தனையை தான் உருவாக்கிய 51 எழுத்துகள் கொண்ட அரிச்சுவடியை பயன்படுத்தி எழுதினார். அவரது பாடல் பிரபலமானதால், அவர் அமைத்த எழுத்துமுறையும் பிரபலமாயிற்று.31 எழுத்துகள் கொண்ட வட்டெழுத்துகள் பள்ளிகளில் கற்பிக்கப்பட்டு வந்தபோதும், பிரித்தானிய அரசு பத்திரங்களையும் பிற ஆவணங்களையும் பதிய கொண்டுவந்த ஆணைகள் மூலம் எழுத்தச்சனின் எழுத்துமுறை சீர்தரமாக்கப் பட்டது. "ஹரி ஸ்ரீ கணபதியே நமஹ" என்பது மலையாள மொழியில் 51 எழுத்துக்களைக் கொண்டதாக உள்ளது. இவ்வாசகத்தைக் கொண்டே சிறார்களுக்கு அரிச்சுவடி பாடத்தை துவங்கும் வழக்கத்தையும் எழுத்தச்சன் தொடங்கி வைத்தார்.இன்றைய கேரளத்தில் விசயதசமி அன்று அவர் வசித்த துஞ்சன்பரம்பு வந்து அங்குள்ள மண்ணைக் கொண்டு அனைத்து சமயத்தினரும் இவ்வாசகம் கொண்டு தங்கள் குழந்தைகளின் கல்வியைத் துவக்குகிறார்கள். "அம்பத்தோரக்சரமும் ஓரோண்ணிதென்மொழியில் அன்போடு சேர்க்க ஹரி நாராயண நம" - அரி நாம கீர்த்தனம் 14ஆம் பத்தி சில ஆண்டுகளுக்கு முன்னர் எழுத்தச்சனுக்கு திரூரில் சிலை எழுப்ப முயற்சி மேற்கொள்ளப்பட்டு எதிர்ப்புகளால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. நாத்திகம் பி. இராமசாமி "நாத்திகம்" பி. இராமசாமி (1932 - செப்டம்பர் 24, 2009) தந்தை பெரியாரின் கொள்கையை ஏற்று மிகச் சிறந்த பகுத்தறிவுப் பிரச்சாரகராகவும், காமராசரின் தலைமையில் இருந்த காங்கிரஸ் கட்சியின் தலை சிறந்த பேச்சாளராகவும் இருந்தவர். நாத்திகம் என்ற பத்திரிகையை நடத்தி வந்தவர். 1932ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தைச் சேர்ந்த மேல்ஆழ்வார் தோப்பில் பிச்சைக்கனி – பூவம்மாள் தம்பதியின் முதல் மகனாகப் பிறந்தவர் இராமசாமி. 17 வயதில் சென்னைக்கு வந்த இராமசாமி பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவரது இயக்கத்தில் சேர்ந்தார். பெரியார் நடத்திய பல போராட்டங்களிலும் பங்கு பெற்று சிறை சென்றிருக்கிறார். நாத்திகம் இராமசாமிக்கு ஆறு மகன்கள், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் சுயமரியாதை திருமணம் செய்து வைத்தார். இதில் இரண்டு திருமணங்கள் சாதி மறுப்பு திருமணமும் கூட. 1958 செப்டம்பர் 18 ஆம் நாளன்று பெரியாரின் கொள்கைகளை பரப்புவதற்காக நாத்திகம் பத்திரிகையை துவங்கினார். ஆரம்பத்தில் தினசரியாக இருந்து, பின்னர் பத்திரிகை வார இதழாக தொடர்ந்து வெளிவந்திருக்கிறது. 51 ஆண்டுகளாக நாத்திகம் பத்திரிகையை அவர் பல நட்டங்களுக்கிடையில் விடாது நடத்தி வந்தார். மூடநம்பிக்கை எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு, அனைத்து மதங்களையும் விடாது அம்பலப்படுத்துதல், திரைப்படம், தொலைக்காட்சி, பண்பாட்டு சீரழிவுகளை சாடுதல் போன்றவற்றை உள்ளடக்கிய அவரது இந்த எழுத்துப்பணி இறக்கும் வரை வரை இடைவெளியில்லாமல் நிறைவேறியது. பெரியாரின் தொண்டனாக விளங்கிய இவர் பிறகு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். தலைவர் காமராசரின் சாதனைகளையும், பகுத்தறிவுக் கட்டுரைகளையும் தான் நடத்திவந்த நாத்திகம் இதழில் வெளியிட்டு வந்தார். சிறந்த இலக்கிய வாதியாகவும் திகழ்ந்தார், நாத்திக சிங்கம் பகத் சிங், இதுதான் பார்பன ஆட்சி, ஜெயலலிதா ஆட்சி கொடுமைகள், RRS இந்து பாசிசம், சங்கர மடத்துக்கு சவுக்கடி 1,2,3, சங்கர மடம் பற்றிய உண்மைகள், பெரியார் சிறு கதை தொகுப்பு, சு.சமுத்திரமும் கடலூர் வீரமணியும் போன்ற எண்ணற்ற புத்தகங்களை எழுதியுள்ளார். இலங்கை தமிழருக்காக இலக்கிய வழியிலும் கொள்கை வழியிலும் நம்பிக்கையாக இருந்தார். தமிழக அரசின் பெரியார் விருது, இலக்கிய விருது போன்றவற்றை பெற்றுள்ளார். இவர் நாத்திகம் பிக்சர் என்ற சினிமா நிறுவனம் தொடக்கி மாதவி வந்தாள் என்ற படத்தை எடுத்தார். இதய நோயால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு 2009, செப்டம்பர் 24 மாலை காலமானார். கடவுள் கடவுள் என்பவர் அண்டம் முழுவதையும் படைத்துக் காப்பவர் என்றும், அவர் எல்லாச் சக்திகளும் பொருந்தியவர் என்றும், இறப்பு, பிறப்பு, இரவு, பகல், இன்பம், துன்பம் போன்ற உலக வாழ்வில் தொடர்புடைய அனைத்தையும் கடந்து நிற்கும் ஏகாந்த (மறைபொருள்) நிலை என்றும் கடவுள் இருப்பதை நம்புபவர்கள் கருதுகின்றனர். உலகம் முழுவதிலும் பரந்திருக்கின்ற பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் கடவுள் பற்றிப் பல விதமான கருத்துக்களைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். அன்பு, புனிதம், கருணை என்பவற்றின் மறு பொருள் கடவுள் என கூறுகின்றனர். சில மதங்கள் கடவுள் ஒருவரே என்று நம்புகின்றன. வேறு சில மதங்களைச் சேர்ந்தவர்கள் பல கடவுள்களை வணங்குகின்றனர். சில மதங்களில் கடவுளைப் பல்வேறு வடிவங்களாக உருவகப்படுத்திச் சிலைகளை அமைத்து வழிபடுகின்றனர். வேறு சில சமயங்கள் சிலை வணக்கத்தை முற்றாக எதிர்க்கின்றன. கடவுளை இறைவன் அல்லது ஆண்டவன் எனவும் அழைக்கிறார்கள். கடவுள் நம்பிக்கையுடையவர்களின் எண்ணத்தின் படி, கடவுள் பிரபஞ்சத்தின் படைப்பாளியாகவும், பாதுகாப்பாளராகவும் இருக்கிறார். இயற்கையே கடவுள் என கூறுவோருக்கு கடவுள் பிரபஞ்சத்தின் படைப்பாளராக மட்டுமே இருக்கிறார், ஆனால் பிரபஞ்சத்தை காப்பாவராக அல்ல. கடவுள் அனைத்திலும் உள்ளதாவராய் இருக்கிறார் என்னும் கோட்பாடு உள்ளவர்களின் கருத்து கடவுளே தான் பிரபஞ்சம். நாத்திகத்தில், கடவுள் இருக்கிறார் என நம்பப்படுவதில்லை, கடவுள் தெரியாதவராகவோ அல்லது அறிய முடியாதவராகவோ கருதப்படுகிறார். பல குறிப்பிடத்தக்க தத்துவவாதிகள் கடவுளின் இருப்பிற்கும் இல்லையில் அதற்கு எதிராகவும் வாதங்களை உருவாக்கியுள்ளனர். கடவுளை அறிவதற்கான வழியில் மனித ஆன்மா கடந்து செல்லும் வெவ்வேறு படிகளாக ஒவ்வொரு மதமும் உள்ளன என்றும் எந்தப் படியும் அபாயகரமானதோ, தீமையானதோ அல்ல என்றும் வளர்வதற்கு மறுத்து முன்னேறாமல் கட்டுப்பெட்டியாக நின்றுவிடும் போதுதான் ஒரு மதம் அபாயகரமானதாகின்றது என்றும் சுவாமி விவேகானந்தர் குறிப்பிடுகின்றார். மதம் - மனிதன் கடவுள் நிலையை அடைவதற்கான வழியினை வாழ்ந்துகாட்டினார்கள் (இறைவன், ஆண்டவன், யோகிகள், ஞானிகள், மகான்கள்). இவர்களை பின்பற்றி வாழ்ந்த மக்கள் காலம் செல்ல செல்ல அவர்கள் கூறியதை "அனைவரும் ஒன்றே" என்பதை மறந்து மற்றவர்களிலிருந்து தங்களை வேறுபடுத்திக்காட்டப் பயன்படுத்த ஆரம்பித்தனர். இந்து சமயம் இந்தியாவில் தோன்றிய, காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்றெனக் கருதப்படுகிறது. ஏறக்குறைய 850 மில்லியன் இந்துக்களைக் கொண்டு உலகின் மூன்றாவது பெரிய சமயமாக இருக்கின்றது. பெரும்பாலான இந்துக்கள் இந்தியாவிலும், நேபாளத்திலும் வசிக்கின்றார்கள். இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், சுரினாம், பிஜி தீவுகள், அமெரிக்கா, கனடா மற்றும் பிற பல நாடுகளிலும் இந்துக்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வசிக்கின்றார்கள். நம்பிக்கை, அன்பு, உறுதி என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட எல்லாவிதமான சமயச் செயற்பாடுகளும், இறுதியாக ஒரே தன்னுணர்வு நிலைக்கே இட்டுச் செல்கின்றன. அதனால்தான் இந்து சமயச் சிந்தனைகள் பல்வேறுபட்ட நம்பிக்கைகள் தொடர்பில் சகிப்புத் தன்மையைக் கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கின்றன. இயற்கையின் நிகழ்வுகளான இடி, மின்னல், காட்டுநெருப்பு போன்றவற்றினைக் கண்ட ஆதி மனிதன், அவற்றைக் கடவுள்களாக வழிபடத்தொடங்கினார்கள். சூரிய தேவன், சந்திர தேவன், அக்னி தேவன், வருண தேவன் என இயற்கையே முதல் கடவுளாகவும், இவற்றை இயக்குகின்ற சக்தியான பரம்பொருளாகவும் உணரப்பட்டது. இந்து சமயத்தவர் கடவுளைப் பல உருவங்களிலும், பெயர்களிலும் வணங்குகிறார்கள். இவ்வாறு வணங்கப்படும் இந்துக் கடவுள்கள் காலத்துக்குக் காலமும் இடத்துக்கு இடமும், பல வேறுபாடுகளுடன் காணப்படினும், இவை அனைத்தையும் ஒரே நெறிக்குள் அடக்கி வைத்திருப்பது இந்து சமயத்தின் சிறப்பியல்பாகும். வேதங்கள் முப்பத்து மூன்று கடவுள்களைப் பற்றிச் சிறப்பாகக் குறிப்பிடுகின்றன. சிவன், திருமால், பிரம்மன், சக்தி, லட்சுமி, சரஸ்வதி முதலிய ஏராளமான கடவுள்கள் இந்துகளால் வணங்கப்படுகின்றனர். இசுலாம் என்பது ஒரிறைக் கொள்கையைக் கொண்ட ஓர் ஆபிரகாமிய மதமாகும். உலகம் முழுவதும் 1.57 பில்லியன் மக்கள் இம்மதத்தை பின்பற்றுகிறார்கள். இது உலகின் மொத்த மக்கள்தொகையில் 23 சதவீதமாகும். இசுலாம், கிறித்தவத்துக்கு அடுத்தபடியாக உலகில் இரண்டாவது பெரியதும் அதி வேகமாக வளர்ந்து வரும் மதங்களில் ஒன்றும் ஆகும். இது இறைவனால் முகம்மது நபிக்கு சொல்லப்பட்ட செய்திகளின் தொகுப்பான திருக்குர்ஆன் எனப்படும் வேதத்தின் அடிப்படையில் இயங்குகின்றது. இறப்பிற்குப் பிறகான மறுமை வாழ்வை இது குறிக்கோளாகக் கொண்டது. இறைவனை நம்புவது, அவனது கட்டளைப்படி நடப்பது என்பதன் மூலம் முடிவற்ற மறுமை வாழ்வின் சுகங்களை பெற முடியும் என்பது இசுலாமின் நம்பிக்கை. இறை நம்பிக்கை, இறை வணக்கம், நோன்பு, கட்டாய பொருள்தானம், மெக்காவை நோக்கிய புனிதப்பயணம் ஆகிய ஐந்தும் இசுலாமின் கட்டாயக் கடமைகளாகும். இசுலாம் இரண்டு அடிப்படை மூலாதாரங்களை மட்டும் கொண்டு அமைந்தது. 1. அல்லாஹ்வின் வேதம். (குர் ஆன்) 2. அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் மார்க்கம் என்ற ரீதியில் அமுல்படுத்தியவைகள். (ஹதீஸ்). “கடவுள் ஒருவனே. அவனே அல்லாஹ். அவனைத் தவிர வேறு கடவுள் இல்லை” என்பது இசுலாமின் அடிப்படை நம்பிக்கை ஆகும். அல்லாஹ் என்பது கடவுள் என்ற பொருள் கொண்ட பால்வேறுபாடு காட்டாத ஒரு படர்க்கைச் சொல். இது அரேபிய நாடோடிக் குழுக்கள், தங்கள் தெய்வத்தை குறிக்க பயன்படுத்திய சொல் ஆகும். அல்லாஹ் ஒருவனே இருக்கிறான். படைத்துப் பரிபாலிக்கும் ஆற்றல் அவனுக்குரியது. அவனுக்கு நிகராகவோ, துணையாகவோ யாரும் இல்லை. வணக்கத்துக்குத் தகுதியானவன் அவன் ஒருவன் தான். அவனுக்குச் சொந்தமான திருநாமங்கள் பண்பாடுகள் உள்ளன (என்ற இறைநம்பிக்கை) எனும் பிரதான நுழைவாயில் ஊடாக இஸ்லாத்தின்பால் பிரவேசிக்க வேண்டும். அவனைப் பற்றி அல்குர்ஆன் பல இடங்களில் மிகச்சிறந்த அறிமுகம் தருகின்றது. அவனுடைய ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொள்ளும் அளவுக்கு அவனுடைய அடியார்களில் யாருக்கும் தகுதியில்லை. கிறிஸ்தவம் ஓரிறைக் கொள்கையுடைய சமயமாகும். நாசரேத்தூர் இயேசுவின் வாழ்வையும் அவரது போதனைகளையும் மையப்படுத்தி விவிலிய புதிய ஏற்பாட்டின்படி செயற்படுகிறது. கிறிஸ்தவர் இயேசுவை மெசியா மற்றும் கிறிஸ்து என்னும் அடைமொழிகளாலும் அழைப்பதுண்டு. இவ்விரு சொற்களின் பொருளும் “திருப்பொழிவு பெற்றவர்” (”அபிஷேகம் செய்யப்பட்டவர்”) என்பதாகும். மெசியா என்னும் சொல் எபிரேய மொழியிலிருந்தும் கிறிஸ்து என்னும் சொல் கிரேக்க மொழியிலிருந்தும் பிறந்தவை (கிரேக்கம்: Χριστός, Christos; מָשִׁיחַ, Māšîăḥ -Messiah என்ற எபிரேயச் சொல்லின் மொழிபெயர்ப்பு). சுமார் 2.4 பில்லியன் உறுப்பினர்களைக் கொண்டு (உலக மக்கள் தொகையில் 33.3%) உலகின் பெரிய சமயமாகக் காணப்படுகிறது. கிறிஸ்தவம் பல உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது. இதில் கத்தோலிக்க திருச்சபை மிகப்பெரியதாகும். கிறிஸ்தவம் கி.பி. முதலாம் நூற்றாண்டில் யூத மதத்தின் உட்பிரிவாக இருந்ததாலும், யூதர்கள் எதிர்பார்த்த மீட்பர் கிறிஸ்து என கிறிஸ்தவர்கள் நம்புவதாலும் யூத புனித நூலை பழைய ஏற்பாடு என்னும் பெயரில் விவிலியத்தின் ஒரு பகுதியாக ஏற்கின்றனர். யூதம் மற்றும் இசுலாம் போலவே கிறிஸ்தவமும் தன்னை ஆபிரகாம் வழி வந்த சமய நம்பிக்கையாகக் கொள்வதால் அது ஆபிரகாமிய சமயங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இயேசு கிறிஸ்து கடவுளின் மகன், கடவுளால் திருப்பொழிவு பெற்றவர் (மெசியா) என்ற நம்பிக்கை கிறிஸ்தவ சமயத்தின் மையக் கொள்கை ஆகும். உலக மக்கள் அனைவரையும் பாவத்திலிருந்து மீட்கும் பொருட்டு கடவுள் தம் மகன் இயேசுவை அபிடேகம் செய்தார் என்றும், இவ்வகையில் இயேசு கிறிஸ்து பழைய ஏற்பாட்டில் முன் கூறப்பட்ட இறைவாக்குகளை நிறைவேற்றினார் எனவும் கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். மெசியா குறித்து கிறிஸ்தவர்கள் கொண்டுள்ள புரிதல் அக்கால யூதர்களின் புரிதல்களிலிருந்து வேறுபட்டுள்ளது. மனிதரின் பாவங்களைப் போக்கி, அவர்களை இறைவனோடு ஒப்புரவாக்கி, அவர்களுக்கு மீட்பையும் முடிவில்லா நிலைவாழ்வையும் வழங்கவந்தவரே இயேசு; மீட்பளிக்கின்ற அந்த இயேசுவின் சாவையும் உயிர்த்தெழுதலையும் நம்பி ஏற்றிட மக்கள் அழைக்கப்படுகிறார்கள் என்பது கிறிஸ்தவரின் நம்பிக்கை. கிறிஸ்தவ வரலாற்றின் துவக்க நூற்றாண்டுகளில் இயேசுவின் தன்மை குறித்து பல இறையியல் சர்ச்சைகள் எழுந்துள்ளபோதும் கிறிஸ்தவர்கள் பொதுவாக இயேசுவை கடவுளின் அவதாரமாகவும் "உண்மையான கடவுளும் உண்மையான மனிதரும்" ஆனவராக நம்புகின்றனர். இயேசு, முழுமையும் மனிதராக இருந்தமையால் சாதாரண மனிதர் உணரும் வலிகளையும் ஆசைகளையும் உணர்ந்தார்; ஆனால் எந்த விலக்கப்பட்டச் செயலையும் (பாவம்) செய்யவில்லை. கடவுளாக உயிர்த்தெழுந்தார். விவிலியத்தின்படி, "கடவுள் இறந்தோரிடமிருந்து அவரை எழுப்பினார்",அவர் விண்ணகத்திற்கு ஏறிச்சென்று "தந்தையின் வலது பக்கம் அமர்ந்தார்"; மற்ற மெசியா பணிகளை ஆற்றிட மீண்டும் திரும்பிActs 1:9–11 இறந்தோரை உயிர்ப்பிப்பது, கடைசி தீர்ப்பு மற்றும் இறையரசை இறுதியாக நிறுவுதல் ஆகியப் பணிகளை மேற்கொள்வார். பௌத்தம் அல்லது பௌத்த சமயம் என்பது கௌதம புத்தரின் போதனைகளின் அடிப்படையிலான ஒரு சமயமும், தத்துவமுமாகும். பௌத்த மரபின் படி, புத்தர் பொஊ 6ம் ஆம், 4 ஆம் நூற்றாண்டுகளுக்கிடையே இந்தியத் துணைக்கண்டத்தின் கிழக்குப் பகுதியில் வாழ்ந்தவர் ஆவார்.பௌத்த சமயத்தில் முக்கியமான இரண்டு பிரிவுகள் பொதுவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன: தேரவாத பௌத்தம் ("முதியோர் பள்ளி"), மற்றும் மகாயான பௌத்தம் ("பெரும் வாகனம்"). தேரவாதம் இலங்கை, மற்றும் தென்கிழக்காசியாவில் கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து, பர்மா போன்ற நாடுகளில் பின்பற்றப்படுகின்றது. மகாயானம் சீனா, கொரியா, சப்பான், வியட்நாம், சிங்கப்பூர், தாய்வான் போன்ற கிழக்காசிய நாடுகளில் பின்பற்றப்படுகிறது. இந்த இரண்டை விட திபெத்து, மற்றும் மங்கோலியாவில் பின்பற்றப்படும் வச்சிரயான பௌத்தம் மூன்றாவது வகையாகக் குறிக்கப்படுகிறது. பௌத்த சமயம் முக்கியமாக ஆசியாவிலேயே பின்பற்றப்பட்டாலும், உலகெங்கும் இந்த இரண்டு பிரிவுகளும் உலகெங்கும் காணப்படுகிறது. உலகெங்கும் தற்போது 350 மில்லியன் முதல் 1.6 பில்லியன் பௌத்தர்கள் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. (350–550 மில்லியன் என்பது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட எண்ணிக்கை). அத்துடன் உலகில் மிக வேகமாகப் பரவி வரும் சமயங்களில் பௌத்தமும் ஒன்றாகும். பெளத்த உலகப் பார்வையில் கடவுள் இருப்பதை அனுமானிக்கவில்லை, அப்படி இருந்தாலும் அதற்கான தேவை அங்கு இல்லை. கர்ம விதிகளுக்கு அமையவே உலகம் இயங்குகின்றது, அதை மீறிய மீவியிற்கை ஒன்றிருப்பதைப் பெளத்தம் மறுக்கின்றது. அனைத்தையும் உருவாக்கும், நிர்வாகிக்கும், அழிக்கும் குணங்களைக் கொண்ட ஒருமிய சக்தி போன்ற கடவுள் என்ற ஒன்று உண்டு என்பதைப் புத்தர் மறுத்தார். எனினும் பெளத்தத்தில் தேவர்கள் என்ற ஒரு வகைப் பிறவிகள் இருக்கின்றார்கள். அவர்கள் ஒரு உயர்ந்த நிலையில் அல்லது வேறு பரிணாமத்தில் கர்ம விதிகளைப் புரியக் கூடியவர்கள் அல்லது அனுபவங்களைப் பெற அல்லது அனுபவிக்கக் கூடியவர்கள், ஆனால் அவர்களும் கர்ம விதிகளுக்குக் கட்டுபட்டவர்களே. புத்தர் கடவுள் இல்லை. அவர் ஒரு விடுதலை பெற்ற மனிதர். பெளத்தர்கள் புத்தரை வழிபடுவதில்லை, மரியாதை செலுத்துகின்றார்கள் அல்லது நினைவு கொள்கின்றார்கள். தெய்வம் தெய்வம் என்பது இயற்கைக்கு அப்பாற்பட்டு தெய்வீகமாக அல்லது புனிதமானதாகக் கருதப்படுவதாகும். ஆக்சுபோர்டு ஆங்கில அகராதி தெய்வம் என்பது "ஒரு இறைவன் அல்லது இறைவி (ஒரு பலதெய்வ நம்பிக்கை கொண்ட மதத்தில்)" அல்லது தெய்வீகமாக மதிக்கப்படும் எதையும் குறிப்பது என்கிறது. சி. ஸ்காட் லிட்டில்டன் என்பவர் தெய்வம் என்பது "சாதாரண மனிதர்களை விட அதிக சக்தியுடன் இருப்பது, ஆனால் மனிதர்களுடன், சாதாரண வாழ்க்கையின் அடிப்படையான மனோபாவங்களைத் தாண்டி மனிதர்களை புதிய உணர்வு நிலைகளுக்கு கொண்டு செல்லும் வழிகளில் சாதகமாக அல்லது எதிர்மறையாக தொடர்பு கொள்வது" என்கிறார். ஆண் தெய்வம் இறைவன் என்றும், பெண் தெய்வம் இறைவி என்றும் அழைக்கப்படுகின்றனர்.  வணங்கும் தெய்வங்கள் எத்தனை என்பதன் அடிப்படையில் மதங்களை வகைப்படுத்தலாம். ஒரு கடவுட் கொள்கை சமயங்கள் ஒரே ஒரு தெய்வத்தை மட்டுமே ஏற்றுக்கொள்கின்றன (பொதுவாக கடவுள் என குறிப்பிடப்படுகிறார்), பல கடவுட் கொள்கை சமயங்கள் பல தெய்வங்களை ஏற்றுக்கொள்கின்றன. கெனோதெயிச (பல கடவுள்களில் ஒரு கடவுளை வணங்கும் கோட்பாடு) சமயங்கள் ஒரு உயர் தெய்வத்தை ஏற்றுக்கொள்கின்றன. அதேநேரத்தில் மற்ற தெய்வங்களை மறுப்பதில்லை. மற்ற தெய்வங்களையும் அதே தெய்வீக கொள்கைக்கு சமமான அம்சங்களாக கருதுகின்றன. தெய்வம் நமக்குள், நம்மோடு இருப்பது. கடவுள் நம்மைக் கடந்து உள்ளது. கடவுள் என்னும் சொல் திருக்குறளில் இல்லை. தெய்வம் என்னும் சொல் திருக்குறளில் ஆறு இடங்களில் பயின்றுவருகிறது. அந்தலைத்தாள் அந்தலைத்தாள் என்பது ஒரு நூலின், முன்புறத்திலும், பின்புறத்திலும் காணப்படும் இரண்டு பக்கங்களைக் குறிக்கும். இவை நூலை விரித்த அளவிலான தாள்கள் ஆகும். இது இரண்டாக மடிக்கப்பட்டிருக்கும். முன்புற அந்தலைத்தாளில் இரண்டாக மடித்த ஒருபகுதி முன் அட்டையின் உட்புறத்தில் முழுமையாக ஒட்டப்பட்டிருக்கும். அடுத்த பகுதியின் மடிப்பை அண்டிய ஓரம் தலைப்புப் பக்கத்தின், அல்லது குறைத் தலைப்புப் பக்கம் இருப்பின் அதன் கட்டிய ஓரத்துடன் இறுக்கமாக ஒட்டப்பட்டிருக்கும். இது போன்றே பின்புற அந்தலைத் தாளின் ஒருபகுதி பின் அட்டையுடனும், மற்றப் பகுதியின் மடிப்பை அண்டிய ஓரம் நூலின் கடைசிப் பக்கத்தின் கட்டிய ஓரத்துடனும் ஒட்டப்பட்டிருக்கும். உண்மையில் இந்த அந்தலைத் தாள்கள் நூலையும் அதன் அட்டையையும் ஒன்றாக இணைத்து வைத்திருக்கின்றன. இவற்றின் மேற்படி செயற்பாடு காரணமாக இத் தாள்கள் நூலின் ஏனைய பக்கங்களை விடத் தடிப்பாக இருப்பதுண்டு. பெரும்பாலும் இவை வெறுமையாகவே இருக்கும். சில வேளைகளில் இத்தாள்கள் கறுப்பு, மற்றும் பிற நிறங்களிலும் இருப்பதுண்டு. நூற்பதிப்பின் செலவைக் குறைக்க விரும்பும் பதிப்பகங்கள் சில இத் தாளின் முதற் பக்கத்திலேயே குறைத் தலைப்பை அச்சிடுவதும் உண்டு. முன்படப்பக்கம் முன்படப்பக்கம் என்பது ஒரு நூலில், தலைப்புப் பக்கத்துக்கு எதிர்ப் பக்கத்தில் காணப்படும் படத்துடன் கூடிய ஒரு பக்கம் ஆகும். தலைப்புப் பக்கத்தை விரிக்கும்போது பொதுவாகத் தலைப்புப் பக்கம் வலப்பக்கத்திலும், முன்படப்பக்கம் இடப்பக்கத்திலும் இருக்கும். பைபிள் போன்ற மதிப்புமிக்க பழைய நூல்களில் இப் பக்கம் நுணுக்கமான அழகூட்டல்களுடன் கூடிய பக்கமாக அமையும். இவ்வாறான பல படங்கள் புகழ்பெற்ற வரைகலை உருப்படிகளாகவும் உள்ளன. நூலின் உள்ளடக்க விடயத்துடன் தொடர்புள்ள படங்களே இப்பக்கத்தில் அமைவது வழக்கம். இது நூலில் விவரிக்கப்படும் ஒரு காட்சியாகவோ அல்லது ஒளிப்படங்களாகவோ இருக்கலாம். தற்கால நூல்களில் இப்பக்கம் காணப்படுவது குறைவு. குறைத் தலைப்புப் பக்கம் குறைத் தலைப்புப் பக்கம் அல்லது அரைத் தலைப்புப் பக்கம் என்பது, நூலொன்றின் முன் பகுதியின் ஒரு கூறு ஆகும். இப் பக்கம் இருப்பின் இது, தலைப்புப் பக்கத்துக்கு முன் காணப்படும். இப்பக்கம், நூலின் தலைப்பு, ஆக்குனர், பதிப்பகம் போன்ற பல தகவல்களைத் தரும் தலைப்புப் பக்கத்தைத் போலன்றி, நூலின் தலைப்பை மட்டுமே கொண்டிருக்கும். இன்றும் நூல்கள் குறைத்தலைப்புப் பக்கத்தைக் கொண்டிப்பினும், செலவைக் குறைப்பதற்காகச் சில பதிப்பகங்கள் இப்பக்கத்தைத் தவிர்த்து விடுவதும் உண்டு. இது தலைப்புப் பக்கம் உள்ள விரிப்புக்கு முதல் விரிப்பில் வலப்புறம் அமைவதனால், முன்படப்பக்கத்தைக் கொண்டுள்ள நூல்களில் இப் பக்கத்தின் பின்புறத்தில் முன்படப்பக்கம் இருக்கும். முன்படப்பக்கம் இல்லாவிட்டால் பெரும்பாலும் இதன் பின்புறத்தில் எதுவும் இல்லாமல் வெறுமையாகவே காணப்படுவது உண்டு. அகோபிலம் அகோபிலம் என்ற திவ்ய தேசம் ஆந்திரா கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. "அஹோ' என்றால் "சிங்கம்'. "பிலம்' என்றால் "குகை'. இது 108 திவ்யதேசத்தில் 97 வது திவ்யதேசமாகும். திருமங்கை ஆள்வார் அவர்களால் மங்களாசாசனம் (பாடல்) பாடப்பெற்றது. இந்த கோயிலுக்கு ஆலகட்டா (23 கீ.மி.) மற்றும் கடப்பாவில் (70 கி.மீ) இருந்து பேருந்து வசதி உள்ளது. நந்தியால் மற்றும் கர்நூல் ரயில் நிலையங்கள் அருகில்அமைந்துள்ளன. சென்னையில் இருந்து வடமேற்காக சுமார்400 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது நரசிம்ம அவதாரம் நிகழ்ந்த தலமாக கருதப்படுகிறது. இங்கு பிரகலாதனுக்கு காட்சி கொடுத்ததால் மூலவர் பிரகலாத வரதன் எனப்படுகிறார். மலைக்கோயிலில் பிரகலாதனுக்காக நரசிம்மர் வெளிப்பட்ட "உக்கிர ஸ்தம்பம்' (தூண்) உள்ளது. திருமாலின் நரசிம்ம அவதாரத்தைத் தரிசிக்க விரும்புவதாக கருடன் கேட்க, பகவான் அகோபிலத்தில் ஒன்பது நரசிம்ம வடிவங்களில் கருடனுக்குக் காட்சி கொடுத்தார். கருட பகவான் அந்த நரசிம்ம மூர்த்தங்களைப் பூஜித்து வழிபட்டதாக தல புராணம் கூறுகிறது. அகோபிலத்தில் கீழ்கண்ட ஒன்பது நரசிம்மர் ஆலயங்கள் உள்ளன. 1) பார்கவ நரசிம்மர் 2) யோகானன்த நரசிம்மர் 3) ஷக்ரவாஹ நரசிம்மர் 4) அகோபில நரசிம்மர் 5) குரொதகார (வராஹ) நரசிம்மர் 6) கரன்ஜ்ஜ நரசிம்மர் 7) மாலோல நரசிம்மர் 8) ஜ்வால நரசிம்மர் 9) பாவன நரசிம்மர் இவை யாவும் 5 கி.மீ சுற்றளவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு மாதம் சுவாதி நட்ஷத்திரம் அன்று 9 நரசிம்மர்களுக்கும் அபிஷெகம் நடைபெறும். ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் பிரமோர்சவம் நடைபெரும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இத் திருவிழா நடக்கும் நாட்களில் மக்கள் ஆயிரக்கணக்கில் பகவானை தரிசிப்பார்கள். இங்குள்ள அகோபில மடம் ஆதிவண் சடகோப மகாதேசிகரால் நிறுவப்பட்டது. இதுவே தென்னிந்தியாவின் மிகப்பெரிய வைணவ மடமாகும். இந்த மடத்தின் முதல் ஜீயரான இவருக்கு ‘அழகிய சிங்கர்’ என்ற பட்டம் உண்டு. உள்ளடக்க அட்டவணை உள்ளடக்க அட்டவணை என்பது, ஒரு நூலின் அல்லது பிற ஆவணங்களின் பகுதிகளை அவை அந்த நூலில் அல்லது ஆவணத்தில் காணப்படும் ஒழுங்கில் காட்டும் ஒரு பட்டியல் ஆகும். இது சில வேளைகளில் வெறுமனே "உள்ளடக்கம்" என்றும் அழைக்கப்படுவது உண்டு. நூலின் உள் அமைப்பைப் பொறுத்தும், அதன் நீளத்தைப் பொறுத்தும் உள்ளடக்கம் பல மட்டங்களிலுள்ள தலைப்புக்களைப் பட்டியல் இடுவது உண்டு. உள்ளடக்கம் நீளம் குறைவாக இருக்கவேண்டின் அத்தியாயங்களின் தலைப்புக்களை அதாவது முதல் மட்டத் தலைப்புக்களை மட்டும் பட்டியல் இடலாம். அத்தியாயம் ஒவ்வொன்றும் நீளமாக இருந்து அது பல பிரிவுகளைக் கொண்டிருப்பின் இந்த இரண்டாம் மட்டத் தலைப்புக்களையும் உள்ளடக்கத்தில் பட்டியல் இடுவது நூலில் என்னென்ன விடயங்கள் கையாளப்பட்டு உள்ளன என்பதை அறிந்து கொள்வதற்கு இலகுவாக இருக்கும். பிரிவுகளுக்கும் பல துணைப் பிரிவுகள் இருந்து அவையும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருப்பின் அவற்றையும் பட்டியலில் சேர்த்துக்கொள்வது உண்டு. எனினும், உள்ளடக்கங்கள் நீளமாக இருப்பது வசதியாக இருக்காது. இதனால், பல அத்தியாயங்கள், பிரிவுகள், துணைப்பிரிவுகள் என்பவற்றைக் கொண்ட நூல்கள், ஆவணங்கள் முதலியவற்றில் உள்ளடக்கத்தின் நீளத்தைக் குறைப்பதற்காக, ஒரு மட்டத் தலைப்புக்களைப் பட்டியல் இடுவதோடு நிறுத்திக் கொள்வது உண்டு. தகவல்களைத் தெரிந்து கொள்வதை இலகு ஆக்குவதற்காகச் சில எழுத்துமுறைக் கையேடுகள் உள்ளடக்கம் மூன்று பக்க நீளத்துக்குக் குறைவாக இருப்பது நல்லது எனப் பரிந்துரை செய்கின்றன. நூல்களில், உள்ளடக்கம் பொதுவாக, குறைத் தலைப்புப் பக்கம், முன்படப்பக்கம், தலைப்புப் பக்கம், பதிப்பு அறிவிப்பு உரித்தாக்கம், அணிந்துரை, என்பவற்றுக்குப் பின்னர் வைக்கப்படுகின்றது. படிமங்கள், அட்டவணைகள் ஆகியவற்றின் பட்டியல்கள், முன்னுரை போன்றவை இதன் பின்னர் வைக்கப்படுகின்றன. அச்சிடப்படும் நூல்களின் உள்ளடக்கத்தில் பட்டியல் இடப்பட்டுள்ள தலைப்புகளுக்கு எதிரில், அத் தலைப்புக்கள் தொடங்கும் பக்க எண்கள் குறிப்பிடப்படும். இணைய வழி நூல்களில், பக்கங்கள் குறிப்பிடப்படுவதற்குப் பதிலாக அத்தலைப்புக்களில் இருந்து உரிய இடத்துக்கு இணைப்புகள் கொடுக்கப்படுகின்றன. அணிந்துரை அணிந்துரை என்பது, ஒரு நூலை அல்லது வேறு இலக்கிய ஆக்கங்களை அறிமுகப்படுத்தி ஆக்குனர் அல்லாத இன்னொருவர் கொடுக்கும் அறிமுகம் ஆகும். அணிந்துரை கொடுப்பவர் குறித்த ஆக்கம் தொடர்பான துறையில் அறிவும் அனுபவமும் பெற்றவராயும், அத்துறை சார்ந்தோரிடையே மதிப்புப் பெற்றவராகவும் இருப்பது வழக்கம். பொதுவாக அணிந்துரை சுருக்கமாகவே இருக்கும். எனினும் சில வேளைகளில் அணிந்துரைகள் கட்டுரை நீளத்துக்கு நீண்டு விடுவதும் உண்டு. அணிந்துரைகள், பெரும்பாலும் அணிந்துரை எழுதுபவருக்கும் ஆக்குனருக்கும் இடையேயான தொடர்புகள், இத்தகைய நூலொன்றை எழுத்துவதற்கு அவருக்கு உள்ள தகைமைகள், நூல் தொடர்பில் ஆக்குனரின் முயற்சி, நூலின் முக்கியத்துவம், குறித்த துறைக்கு அதன் பங்களிப்பு போன்ற விடயங்களைத் தருவதுடன், அணிந்துரை கொடுப்பவர் சில சமயங்களில் நூலில் காணும் சிலவற்றைத் திறனாய்வுக் கண்ணோட்டத்துடன் பார்த்து எழுதுவதும் உண்டு. ”கட்டட வேலைப்பாடுகளுடன் மாளிகை அமைந்திருந்தாலும் அதற்குப் பொலிவூட்ட அழகிய ஓவியங்கள் இன்றியமையாததனவாகும். ஒரு நகரம் மிகப்பெரியதாக விரிந்து பரந்து அமைந்திருந்தாலும் அந்நகருக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் தலைவாயில் அவசியமானது.இயற்கையிலேயே பெண்கள் அழகுடையவர்கள் என்றாலும் அவர்களுக்கு மேலும் எழிலூட்ட அணிகலன்கள் இன்றியமையாதது. அதுபோல ஒரு நூல் சிறப்புடையதாக இருந்தாலும் அதற்கோர் அணிந்துரை அவசியமானது” என்று அணிந்துரையின் இன்றியமையாமையை நன்னூல் விளக்கியுள்ளது. மாடக்குச் சித்திரமு மாநகர்க்குக் கோபுரமும்
ஆடமைத்தோ ணல்லார்க் கணியும்போல்- நாடிமுன்
ஐதுரை நின்ற வணிந்துரையை யெந்நூற்கும்
பெய்துரையா வைத்தார் பெரிது. - நன்னூல் (55) >
சுட்டி (நூல்) சுட்டி என்பது, ஒரு நூலில் அல்லது வேறு ஆவணங்களில், குறிப்பிட்ட சில சொற்கள் அல்லது சொற்றொடர்கள் தொடர்பான தகவல்கள் இருக்கும் இடங்களை அறிந்து கொள்ளும் பொருட்டு அச்சொற்களையும் அவற்றுக்கான இடக் குறிகளையும் கொண்ட ஒரு பட்டியல் ஆகும். இது பொதுவாக அகர வரிசையில் கொடுக்கப்பட்டிருக்கும். நூல்களின் இறுதியில் கொடுக்கப்படும் இத்தகைய சுட்டிகளில், நூலை வாசிப்பவர்களின் ஆர்வத்துக்கு உரியவை எனக்கருதப்படும் மக்கள், இடங்கள், நிகழ்வுகள், கருத்துருக்கள் போன்றவற்றின் பெயர்கள் இடம்பெற்றிருக்கும். இவற்றுக்கு அருகில் இவை பற்றிய தகவல்கள் இருக்கும் இடங்களை அறிந்துகொள்ள உதவக்கூடிய இடக்குறிகள் இருக்கும். நூல்களைப் பொறுத்தவரை இவை பொதுவாகப் பக்க எண்களாக இருக்கலாம். சில தொழில்சார் அறிக்கைகள், சட்டம் தொடர்பான ஆவணங்கள் போன்றவற்றில் இடக்குறிகள் பிரிவு எண்களாக இருக்கக்கூடும். காணிக்கை (நூல்) பதிப்பியல் தொடர்பில் காணிக்கை என்பது, ஒருவருடைய நூலாக்கத்தை அவர் இன்னொருவருக்கோ பலருக்கோ காணிக்கை ஆக்குவது ஆகும். பல தமிழ் நூல்களில் இதனைச் "சமர்ப்பணம்" என்னும் வட மொழிச் சொல்லாலும் குறிப்பிடுவர். நூலொன்றில் பொதுவாக இதற்கெனத் தனியான பக்கம் ஒதுக்கப்பட்டிருக்கும். ஓரிரு வரிகளை மட்டுமே கொண்டிருக்கும் இந்தக் காணிக்கைப் பக்கத்தில் யாருக்குக் காணிக்கை ஆக்கப்படுகிறது என்பதும், அதற்கான காரணமும் இருக்கும். சில வேளைகளில் காரணம் எதுவும் குறிப்பிடப்படாமலேயே யாருக்குக் காணிக்கை என்பது மட்டும் குறிப்பிடப்படும். நூல்கள் பல வகையானோருக்குக் காணிக்கையாக்கப் படுகின்றது. இவற்றுட் சில வகையினர் பின்வருமாறு: காணிக்கையாக்குவதற்கான காரணங்களும் மிகப்பல. பதிப்பு அறிவித்தல் ஒரு நூல் தொடர்பில் பதிப்பு அறிவித்தல் என்பது அந்த நூலின் பதிப்புக் குறித்த தகவல்களை உள்ளடக்கிய பக்கத்தைக் குறிக்கும். இது காப்புரிமைப் பக்கம் எனவும் அழைக்கப்படுவது உண்டு. இது பெரும்பாலும் தலைப்புப் பக்கத்தின் பின்புறத்தில் காணப்படும். இப் பக்கத்தில், காப்புரிமை அறிவிப்பு, பிற சட்டம்சார் அறிவிப்புகள், பதிப்பாளர் தகவல்கள், நூலின் பதிப்பு வரலாறு, நூலக காங்கிரசு விபரப்பட்டியல் தகவல்கள், அனைத்துலகத் தரப்பாட்டு நூல் எண் (ஐ.எசு.பி.என்) என்பன தரப்பட்டிருக்கும். இப்பக்கத்தில் காணப்படும் தகவல்கள் அந் நூலைக் குறிப்பாக அடையாளம் காண உதவுகின்றன. இப்பக்கத்தில் காணப்படும் காப்புரிமை அறிவிப்பில் பொதுவாக மூன்று பகுதிகள் காணப்படும். இவை காப்புரிமை தொடர்பான மூன்று விடயங்களைக் கூறுகின்றன. இவை: இதன் கீழ் பதிப்பாளருடைய பெயர், அஞ்சல் முகவரி, இணையதள முகவரி, தொலைபேசி எண் போன்ற தொடர்புக்குரிய தகவல்கள் தரப்படும். இப் பகுதியில், நூலின் முதற்பதிப்புக் குறித்த தகவல்கள், தற்போதைய பதிப்புக் குறித்த தகவல்கள், பதிப்பு மீள் பதிப்பா அல்லது திருத்திய பதிப்பா என்பது போன்ற தகவல்கள் காணப்படும். இது, வெளிவரவிருக்கும் நூல்கள் தொடர்பிலான விபரப்பட்டியல் பதிவுகள் ஆகும். இத்தரவுகள், நூலகங்கள் தமக்கு வேண்டிய நூல்களை வாங்குவதற்கும், அவற்றைப் பட்டியலிடுவதற்கும் உதவுகின்றன. இது நூலுக்குரிய அடையாள எண் ஆகும். பொதுவாக எல்லா நூல் தொடர்பான தரவுத் தளங்களும் நூல்களைத் தேடுவதற்கு இந்த எண்ணைப் பயன்படுத்துகின்றன. முன்னுரை ஒரு நூல் தொடர்பில் முன்னுரை என்பது நூலை ஆக்கியவர் எழுதும் ஒரு அறிமுகம் ஆகும். இது ஆக்கியோன் தவிர்ந்த இன்னொருவர் எழுதும் நூலின் அறிமுகமான அணிந்துரையில் இருந்தும் வேறுபட்டது. முன்னுரைகளில், நூலை உருவாக்குவதற்கான எண்ணம் எவ்வாறு தோன்றியது, நூல் உருவான வரலாறு போன்ற விபரங்களும், சில சமயங்களில் நூல் உருவாவதற்குப் பங்களிப்பும், உதவிகளும் செய்தவர்களுக்கு நன்றி செலுத்தலும் முன்னுரைகளின் காணப்படும். நூலில் நன்றியுரைக்குத் தனிப்பகுதி இருப்பின் முன்னுரையில் இது இடம்பெறாது. முன்னுரையின் இறுதியில் பொதுவாக ஆக்கியோனின் பெயரும், முன்னுரை எழுதப்பட்ட இடம், தேதி என்பனவும் இருக்கும். தமிழ் எழுதும் முறைமை உலகின் தொன்மொழிகளிலும், செம்மொழிகளிலும் ஒன்றாகத் தமிழ் கருதப்படுகிறது. இதன் மொத்த எழுத்துக்கள் 247என்றாலும், அதனை பிழையற எழுதக் கற்க வெறும் 37குறியீடுகள் போதுமானது.தமிழ் எழுதும் முறைமை மூலம், நீங்கள் அடிப்படைத் தமிழ் எழுத்துக்களை எழுதப் பழகலாம். பிறரைப் பழக்கலாம். நீங்கள் விரும்பும் கோப்பினை, உங்கள் கணினியிலேயே தரவிறக்கம் செய்து கொண்டு, இணைய இணைப்பு இல்லாமலேயே பயன்படுத்தலாம். இம்முறைமை மூலம், நீங்கள் அடிப்படைத் தமிழ் எழுத்துக்களை எழுதப் பழகலாம். பிறரைப் பழக்கலாம். ஒவ்வொரு கோப்பும், ஏறத்தாழ 6kb அளவிலேயே இருக்கிறது. 6 நன்றியுரை (நூல்) நூலாக்கத்துறையில் நன்றியுரை என்பது, குறித்த நூலை அல்லது ஆக்கத்தை உருவாக்குவதில் உதவியோருக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு உரை ஆகும். இதற்காக நூல்களில் ஒரு பகுதி ஒதுக்கப்படுவது உண்டு. சில வேளைகளில் நன்றி தெரிவித்தல் ஆக்கியோனின் முன்னுரையின் ஒரு பகுதியாக அமைவதும் உண்டு. நூல் உருவாக்கத்தில் நேரடியான ஈடுபாடு இல்லாமல், நிதியுதவி, திறனாய்வு உதவி, ஆலோசனைகள், ஊக்குவிப்பு போன்றவற்றினூடாகச் செய்யப்படும் உதவி செய்பவர்களுக்கே நன்றியுரைப் பகுதியில் நன்றி தெரிவிப்பது வழக்கு. நன்றி தெரிவித்தலை வகைப்படுத்துவதற்குப் பல முறைகள் உள்ளன. கைல்சும், கவுன்சிலும் (2004) பின்வரும் ஆறு வகைகளைக் குறிப்பிடுகின்றனர். எடுத்தாளப்படும் அறிவுசார் ஆழத்தை எடுத்துக்காட்டும் மேற்கோள்களைப் போலவே கருத்தியல் தொடர்பாடல்களும் நூலின் ஆழத்திற்கு மிகவும் முக்கியமானவை. மேற்கோள் மூலங்களை நன்றியுரையில் குறிப்பிடுவது வழக்கமில்லை எனினும் கருத்தியல் ஆதரவு வழங்கியவர்களை நன்றியுரையில் குறிப்பிடுவது வழக்கம். சில வகையான நிதியுதவிகள் பற்றி நன்றியுரையில் குறிப்பிட வேண்டியது நிதிவழங்கும் அமைப்புக்கள் முன்வைக்கும் சட்ட அடிப்படையிலான தேவையாகவும் உள்ளன. அந்தமான் அந்தமான் என்ற தலைப்பில் உள்ள கட்டுரைகள்: பிழை திருத்தம் (நூல்) அச்சிடப்படும் நூல் தொடர்பில் பிழை திருத்தம் என்பது, நூலை உருவாக்கும் போது ஏற்பட்ட பிழைகளையும் அவற்றுக்கான திருத்தத்தையும் கொண்ட ஒரு பட்டியல் ஆகும். இது பொதுவாக நூலின் உரைப்பகுதிக்குப் பின்னால் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும். நூலின் பக்கங்கள் அச்சிடப்பட்ட பின்னர் அல்லது திருத்துவதற்கு அதிக நேரம் அல்லது செலவு ஏற்படக்கூடும் என்னும் நிலையில் கண்டுபிடிக்கப்படும் பிழைகளையும் அதற்கான திருத்தங்களையும் இன்னொரு தாளில் அச்சிட்டு நூலுடன் சேர்த்து விடுவது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முறையாகும். இப் பிழை திருத்தப் பக்கத்தில் பிழை ஏற்பட்டிருக்கும் பக்கமும், பிழையான பகுதியும், அதற்கெதிரே திருத்தப்பட்ட பகுதியும் ஒரு அட்டவணை வடிவில் தரப்பட்டிருக்கும். ஒன்கே மக்கள் ஒன்கே மக்கள் ("Onge") எனப்படுவோர் அந்தமான் தீவுகளில் வசிக்கும் அந்தமான் மக்களின் ஒரு குறிப்பிட்ட பழங்குடிகள் ஆவர். இவர்கள் "நெகிரிட்டோக்கள்" எனவும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் பொதுவாக சிறிய அந்தமான் தீவு மற்றும் அதனைச் சூழவுள்ள தீவுத் திடல்களிலும் வாழ்ந்து வருகிறார்கள். அத்துடன் ரட்லண்ட் தீவு மற்றும் தெற்கு அந்தமான் தீவின் தென்முனையின் பகுதிகளிலும் சில கூடாரங்களில் வசிக்கின்றனர். இவர்கள் வேட்டையாடியே தமது உணவைத் தேடுகின்றனர். ஓன்கே மக்கள் தொன்மையான வட இந்தியர்கள் மற்றும் தென் இந்தியர்களிடம் இருந்து தனித்து காணப்பட்டாலும், தொன்மையான தென் இந்தியர்களோடு சிறிது இணக்கமாக உள்ளனர் என்று அண்மைய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், தொன்மையான தென் இந்தியர்களும், அந்தமான் பழங்குடியின மக்களும் ஒரே மூதாதையரிடம் இருந்து 50,000 முதல் 60,000 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து இருக்கக் கூடும் என்பதும் இந்த ஆராய்ச்சியாளர்களின் கருத்து. கிபி 672 முதல் 1901 காலப்பகுதி வரை அந்தமானில் இடம்பெற்று வந்த குடியேற்றங்கள் காரணமாக ஒன்கே மக்களின் தொகை கணிசமான அளவு குறைந்து வந்தது. தற்போதுள்ள மக்கள் சிறிய அந்தமான் தீவில் இரண்டு சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெளியின மக்களுடனான தொடர்பு, மற்றும் உணவுப் பழக்க வழக்க மாற்றங்களே இவர்களின் மக்கள்தொகைக் குறைப்பிற்கு முக்கிய காரணிகளாகக் கூறப்படுகின்றன. 1901 இல் இவர்களின் தொகை 672 ஆகவும், 1911 இல் 631 ஆகவும் 1921 இல் 346 ஆகவும்; 1931 இல் 250 ஆகவும், 1951 இல் (இந்திய விடுதலைக்கு கிட்டவாக) 150 ஆகவும் இருந்தது. தற்போது (2008 இல்) இவர்களின் தொகை ஆக 100 மட்டுமே உள்ளது. டிசம்பர் 2008 இல் நச்சு திரவத்தை அருந்தியதால் இவ்வினத்தின் 8 ஆண்கள் இறந்தனர். ஆல்ககோல் என நினைத்து மெத்தனால் என்ற நச்சுத் திரவத்தை அருந்தியதால் இவர்கள் இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும் 15 ஒன்கே இனத்தவர் இந்நிகழ்வில் சுகவீனமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 2009 இல் நான்கு ஒன்கே இனப் பெண்கள் மீளத் திருமணம் செய்ய சட்டப்படி அனுமதி அளிக்கப்பட்டனர். இவ்வினத்தில் பெண்கள் மீளத்திருமணம் புரிவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிறிய அந்தமான் சிறிய அந்தமான் ("Little Andaman") தீவு (ஒன்கே: "கௌபொலாம்பே", "Gaubolambe")அந்தமான் தீவுகளின் நான்காவது பெரிய தீவாகும். இதன் பரப்பளவு 739 கிமீ². அந்தமான் தீவுக்கூட்டத்தில் தென்முனையில் அமைந்திருக்கிறது. ஒன்கே என்ற பழங்குடியினர் வாழும் இத்தீவு 1957 ஆம் ஆண்டு முதல் பழங்குடி மக்களுக்கான சிறப்புப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாழ்பகுதித் தீவான இதில் மழைக்காடுகள் நிறைந்திருக்கின்றன. அத்துடன் மிக அரிதான கடல் ஆமைகள் பல உள்ளன. 1960களில் இந்திய அரசு இங்குள்ள காடுகளைச் சுற்றி குடியேற்றத்திட்டத்தை ஆரம்பித்திருந்தது. ஆனாலும் இது பின்னர் ந்றுத்தப்பட்டு 2002 ஆண்டில் இருந்து பாதுகாக்கப்பட்ட வலயமாக அறிவிக்கப்பட்டது. சிறிய அந்தமான் பொதுவாக பெரிய அந்தமான் தீவுக்கூட்டத்தின் ஒத்தபகுதியாகக் கருதப்படுகிறது. ஒன்கே மொழி ஒன்கே மொழி ("Önge language") என்பது சிறிய அந்தமான் தீவில் உள்ள ஒன்கே மக்களினால் பேசப்படும் மொழி. இது அந்தமான் மொழிக்குடும்பத்தின் ஒரு பிரிவான ஒங்கன் மொழிகளின் இரண்டு மொழிகளில் ஒன்றாகும். ஒன்கே மொழி சிறிய அந்தமானிலும், வடக்கேயுள்ள சில சிறிய தீவுகளிலும் பேசப்படுகிறது. அத்துடன் தெற்கு அந்தமான் தீவின் தென் முனையிலும் சிலர் பேசுகின்றனர். 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து, அந்தமானில் பிரித்தானியரின் வருகையுடன், அத்துடன், இந்திய விடுதலைக்குப் பின்னரும், பெரும்பரப்பில் இருந்து சிறிய அந்தமான் தீவுக்கு பெருமளவு குடியேற்றம் இடம்பெற்றதன் காரணமாக, ஒன்கே மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை பெரிதும் குறைய ஆரம்பித்தது, ஆனாலும் அண்மைய காலங்களில் இவ்வெண்ணிக்கையில் சிறிதளவு ஏற்றம் அவதானிக்கப்பட்டுள்ளது. தற்போது இம்மொழி பேசும் பழங்குடிகளின் எண்ணிக்கை 95 ஆகும். இவர்களும் இப்போது சிறிய அந்தமானின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஒரேயொரு குடியேற்றப் பகுதியில் மட்டும் வாழ்ந்து வரும் நிலையில், இம்மொழி உலகின் மிக அரிதான மொழியாகக் கணிக்கப்படுகிறது. அறிமுகம் (நூல்) நூல், கட்டுரை போன்ற ஆக்கங்களில் அறிமுகம் என்பது, தொடக்கப் பகுதியாக அமைகின்றது. இது அதற்குப் பின்னர் வருகின்ற பகுதிகளின் குறிக்கோள் என்ன, அவற்றை வாசிப்பதன் மூலம் கிடைக்கக்கூடிய பயன் என்ன என்பது போன்றவற்றுடன், நூலில் அல்லது கட்டுரையின் உட்பொருளின் ஒரு முன்னோட்டமாகவும் அமைகின்றது. இதனை வாசிப்பதன் மூலம் என்ன விடயத்தைச் சொல்ல விழைகிறது என்பதைச் சுருக்கமாக அறிந்துகொள்ள முடிவதுடன் அது நூலில் விளக்கப்படும் விடயங்களைத் தொடராகப் புரிந்து கொள்வதற்கான அடிப்படையாகவும் அமைகின்றது. சிலர் அறிமுகப் பகுதியை நூலை எழுதி முடித்த பின் எழுத விரும்புவர். இது நூலிற் சொன்னவிடயங்களை முறையாகச் சொல்வதற்கு வசதியாக அமையும். வேறு சிலரோ அறிமுகத்தை முதலில் எழுதுவர். இது நூலை எழுதுவதற்கான ஒரு சட்டகமாக அமைவதுடன், நூல் எழுதும்போது நோக்கம் சிதறிவிடாமல் இருக்கவும் உதவுகிறது. முன்னரே அறிமுகத்தை எழுதுபவர்கள் நூலின் உள்ளடக்கத்தையும் அதன் போக்கையும் முன்னரே தெளிவாகத் திட்டமிட்டுக் கொள்வர். நூற்பட்டியல் நூல் ஆக்கம், ஆய்வு முதலிய துறைகளில் நூற்பட்டியல் எனும்போது, நூல்கள், சஞ்சிகைகள், கட்டுரைகள் என்பவற்றின் முறைப்படியான பட்டியலைக் குறிக்கிறது. நூற்பட்டியல்கள், துணைநூல்களின் பட்டியல்களாக நூல்களினதும், கட்டுரைகளினதும் பகுதியாகவோ அல்லது துறை அடிப்படையில் பட்டியலிடப்பட்ட தனியான தொகுதிகளாகவோ இருக்கலாம். தனியான நூற்பட்டியல் தொகுப்புக்கள், அச்சு வடிவில் பல தொகுதிகளை உள்ளடக்கியவையாகவோ அல்லது "எண்ணிய" வடிவிலான தரவுகளாகவோ இருக்கும். நூலக விபரப் பட்டியல்கள் பொதுவாக நூற்பட்டியல்களாகக் கொள்ளப்படாவிட்டாலும் அவையும் நூற்பட்டியல் இயல்புகளைக் கொண்டவையே. முடிவுரை முடிவுரை நூல், கட்டுரை போன்ற ஆக்கங்களின் இறுதிப் பகுதியாக அமைகின்றது. முடிவுரைகள், நூலில் அல்லது கட்டுரையில் எடுத்துரைக்கப்பட்ட வாதங்களை, தருக்க அடிப்படையிலான முடிவுக்குக் கொண்டுவருகின்றன. ஆக்குனர் வாசகர்களோடு தொடர்பு கொள்ளும் இறுதிச் சந்தர்ப்பமாக இப்பகுதி இருப்பதால் ஒரு ஆக்கத்தில் முடிவுரை முக்கியத்துவம் பெற்ற ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆக்கத்தின் அறிமுகப் பகுதி வாசகர்களை நூலுக்குள் இழுத்து அதனை வாசிக்கச் செய்வதுபோல், நூலை வாசித்து முடிக்கும்போது வாசகர்கள் நூலின் கருத்துக்களைச் சரியாக உள்வாங்கிச் செல்வதற்கு முடிவுரைகள் உதவுகின்றன. முடிவுரைகளை நூலில் அல்லது கட்டுரையில் எடுத்துக்கொள்ளப்பட்ட விடயங்களுக்குள் மட்டும் கட்டுப்படுத்த வேண்டும் என்பதில்லை. குறித்த விடயத்துக்கு வெளியிலும் அவ்விடயத்துடன் தொடர்புள்ள பரந்த அம்சங்களைப் பற்றியும் முடிவுரையில் குறிப்பிடுவதுண்டு. இணைய ஆவணகம் இணைய ஆவணகம் ("Internet Archive") அல்லது இணைய ஆவணக் காப்பகம் என்பது இலவச, திறந்த கணினிவழி மின்னூலகம் மற்றும் உலகளாவிய இணைய தள ஆவணப்படுத்தல் ஆகியவற்றை கட்டமைத்து பேணும் ஓர் இலாப நோக்கமில்லா நிறுவனமாகும். இதன் அலுவலகம் ஐக்கிய அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலம், சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள பிரிசிடியோ எனுமிடத்தில் உள்ளது. இணைய ஆவணகத்தின் தகவல் தொகுப்பு மையங்கள் சான் பிரான்சிஸ்கோ, ரெட்வுட் நகரம், மவுன்டன் வியூ ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. இணைய ஆவணகத்தில் உலகளாவிய இணையத்தின் கண நேரப் படிமங்கள் (Snapshots) (பல்வேறு நேரங்களில் எடுக்கப்பட்ட பக்கங்களின் படிம ஆவணம்), மென்பொருட்கள், திரைப்படங்கள், நூல்கள், ஒலிப்பேழைகள் ஆகியவை சேமிக்கப்படும். இணைய ஆவணகத்தின் நிலைத் தன்மையை உறுதிப்படுத்தும் பொருட்டு அதன் சேகரிப்புகள் அனைத்தும் எகிப்து நாட்டில் உள்ள பிபிலியோதெகா அலெக்சாண்டிரினா (Bibliotheca Alexandrina) எனும் நூலகத்தில் ஆடிவிம்பம் (mirror) செய்யப்படுகிறது. உலகில் ஆடிவிம்பம் செய்யப்பட்ட ஒரே நூலகம் இதுவாகும். இணைய ஆவணகத்தின் சேகரிப்புகள் ஆய்வாளர்கள், வரலாற்றாசிரியர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்த அமைப்பு அமெரிக்க நூலகக் கூட்டமைப்பின் உறுப்பினராகவும் உள்ளது. இணைய ஆவணகத்தை ஒரு நூலகம் என்று கலிஃபோர்னியா மாநிலம் அலுவல் நிலையில் அங்கீகரித்துள்ளது. பிரெவஸ்டர் காலே (Brewster Kahle) என்பாரால் 1996-ஆம் ஆண்டு இணைய ஆவணகம் தொடங்கப்பட்டது. கலாச்சார, பண்பாட்டு படிவங்களைக் காப்பதற்கு உலகின் பெரும்பாலான சமூகங்கள் மிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. அந்த படிவங்கள் நினைவில் இல்லாவிட்டால் எந்தவொரு நாகரிகமும் தனது வெற்றி, தோல்விகளில் இருந்து கற்றுக் கொள்ள முடியாது. நமது கலாச்சாரம் தற்போது மிக அதிகளவிலான கலாச்சாரப் படிவங்களை எண்ம வடிவில் உருவாக்குகிறது. அவ்வாறு உருவாக்கப்படும் படிவங்களைப் பாதுகாத்தலோடு, ஆய்வாளர்களுக்கும், வரலாற்றாசிரியர்களுக்கும், அறிஞர்களுக்கும் அளித்து உதவுவதே இணைய ஆவணகத்தின் நோக்கமாகும் என்று அந்த இணையத்தளம் தனது குறிக்கோள் பற்றிக் கூறுகிறது. வந்தவழிப் பொறி (Wayback Machine) என்பது இணைய ஆவணகத்தால் உருவாக்கப்பட்ட எண்முறைக் காலங்காட்டி ஆகும். இது அலெக்ஸா இணையத்தின் (Alexa Internet) உள்ளடக்கத்தால் பேணப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்தில் ஆவணப்படுத்தப்பட்ட இணையப் பக்கங்களை பயனர்கள் பார்க்கும் வாய்ப்பை அளிக்கிறது. இதை முப்பரிமாண பொருளடக்கம் (3-D Index) என்று இணைய ஆவணகம் அழைக்கிறது. முன்னரே ஆணையிடப்பட்ட இணையதளங்களில் இருந்து கணநேரப் படிமங்கள் (Snapshots) ஆவணப்படுத்தப்பட்ட பிறகு 6 முதல் 18 மாதங்கள் வரை இதில் இருப்பிருக்கும். கணநேரப் படிம ஆவணப்படுத்தலானது வெவ்வேறுபட்ட கால நேரத்தில் எடுக்கப்படுவதால் இணையப் பக்கங்களில் செய்யப்படும் அனைத்து இற்றைப்படுத்தல்களும் சேமிக்கப்படுவதில்லை. சில நேரங்களில் பல வார இடைவெளி கூட ஏற்படுவது உண்டு. 2009-ஆம் ஆண்டு கணக்கின்படி வந்தவழிப் பொறியில் 3 பெடாபைட் அளவு தகவல்கள் உள்ளன. இது மாதத்துக்கு 100 டெராபைட் அளவுக்கு வளர்ந்து வருகிறது. அதே வேளை, 2003-ஆம் ஆண்டு மாதத்துக்கு 12 டெராபைட் தகவல்களே சேமிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 2009-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதக் கணக்கின் படி 150 பில்லியன் பக்கங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகவல்கள் அனைத்தும் கேப்ரிகார்ன் டெக்னாலசிசு நிறுவன உருவாக்கமான பெடாபாக்சு (Petabox) எனும் ஒருங்கியத்தில் சேகரம் செய்யப்படுகின்றன. 2009-ஆம் ஆண்டு இணைய ஆவணகம் தன்னுடைய தகவல் சேமிப்பு ஒருங்கியத்தை கலிஃபோர்னியாவில் சன் மைக்ரோ சிச்டம்சு (Sun Microsystems) வளாகத்தில் உள்ள சன் மாடுலர் டேட்டா சென்டர் என்ற புதிய தகவல் மையத்துக்கு மாற்றியது. ஜனவரி 1, 1996-ஆம் ஆண்டு முதல் வந்தவழிப் பொறியில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் விக்கிப்பீடியாவைப் பொருத்தவரை இத் தேடல் பொறியில் 2003-ஆம் ஆண்டு முதல்தான் ஆவணப்படுத்தப்படுகிறது. இதில் 2003-ல் இரண்டு பக்கங்களும், 2004-ல் ஒன்பது பக்கங்களும், 2005-ல் 15 பக்கங்களும், 2006-ல் 28 பக்கங்களும், 2007-ல் 6 பக்கங்களும் உள்ளன. 2008, 2009-ஆம் ஆண்டுகளுக்கான ஆவணத் தரவுகள் அதில் இல்லை. தி ராக்கி அன்டு புல்வின்கில் சோ (The Rocky and Bullwinkle Show) எனும் நாடகத்தில் பீபாடி மற்றும் செர்மான் ஆகியோர் பயன்படுத்தும் காலப் பொறியின் பெயர் "WABAC machine" என்பதாகும். வரலாற்றில் நிகழும் இன்றியமையாத நிகழ்வுகளினை ஒரு சான்றாளனாக இருந்து அவற்றை மாற்றாமல் காப்பது என்பது இதன் பொருள். அதிலிருந்தே வந்தவழிப் பொறி (Wayback Machine) என்ற பெயரை இணைய ஆவணகம் உருவாக்கியது. தகவல்களை நிலையாகவும் உடனடியாகவும் ஆவணப்படுத்த விரும்பும் பயனர்கள் கட்டண அடிப்படையில் செயல்படும் இதை-ஆவணமாக்கு (Archive-It) ஒருங்கியத்தைப் பயன்படுத்தலாம். இதில் சேகரிக்கப்படும் தகவல்கள் அவ்வப்போது வந்தவழிப் பொறியில் திருப்பல் (Indexed) செய்யப்படும். 2009-ஆம் ஆண்டு அக்டோபர் 2 வரை, 905 அரசு அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், கலாசார நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களினது சார்பாக 1,165,398,781 வலைதள முகவரிகளில் இருந்து பக்கங்களை இதை-ஆவணமாக்கு ஆவணப்படுத்தி உள்ளது. மின்னிலக்கிய அமைப்பு (Electronic Literature Organization), வட கரோலினா மாநில ஆவணகம், டெக்சஸ் மாநில நூலகம் மற்றும் ஆவணக ஆணையம், இசுடான்ஃபர்ட் பல்கலைக்கழகம் (Stanford University), ஆஸ்திரேலிய நாட்டு நூலகம், ஆய்வு நூலகக் குழு (Research Libraries Group) உள்ளிட்டவை இதை-ஆவணமாக்கு திட்டத்தில் பங்குபெறும் அமைப்புகளில் சிலவாகும். வலைதளப் பக்கங்களைக் காப்பதோடு அல்லாமல், அமெரிக்காவில் பொது டொமைன் என்று அறிவிக்கப்பட்ட அல்லது கிரியேட்டிவ் காமன்ஸ் போன்ற அளிப்புரிமை அளிக்கப்பட்ட பல்லூடகப் படிமம், நகர்படம், ஒலி, ஒளிக் குறிப்புகள் ஆகிய எண்ம உள்ளடக்கங்களையும் இணைய ஆவணகம் சேகரிக்கிறது. ஒவ்வொரு பிரிவிலும் சேமிக்கப்படும் உள்ளடக்கங்கள் திறமூல வகையைச் சேர்ந்தவை ஆதலால் பொதுமக்களும் தங்கள் பங்களிப்புகளைச் செய்வதன் மூலம் அதில் மேலும் பல எண்ம உள்ளடக்கங்களைச் சேர்க்க முடியும். திரைப்படங்கள் மட்டுமின்றி, செய்தித் தொகுப்புகள், பழமையான கேலிச்சித்திரங்கள் (Cartoon) போருக்கு ஆதரவான, எதிர்ப்பான பரப்புரைகள், விளம்பரப் படங்கள், கல்வி, தொழில் தொடர்பான நகர்படங்கள், வீட்டில் எடுக்கப்பட்ட குறும்படங்கள் ஆகியவையும் இணைய ஆவணகம் தன்னகத்தே கொண்டுள்ளது. 2004-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்த நகர்படம் இந்த ஆவணகத்தில் இருந்து அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டது. அதே போல 2004-ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் பற்றிய விளக்கப்படம் அதிகளவில் பதிவிறக்கம் செய்யப்பட்டது. உலக வர்த்தக மையம் அமைந்த இரட்டைக் கோபுரங்கள் மீது செப்டம்பர் 11, 2001-ஆம் ஆண்டு பயங்கரவாதிகள் தாக்குதல் தொடுத்தது குறித்து உலகின் மிகக் கவனம் பெறக்கூடிய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு படங்கள் செப்டம்பர் 11 தொலைக்காட்சி ஆவணம் எனும் தலைப்பின் கீழ் சேமிக்கப்பட்டுள்ளது. இதில் இசை, ஒலி நூல்கள், செய்தி ஒலிபரப்புகள், பழைய வானொலி ஒலிபரப்புத் தொகுப்புகள் உட்பட பல்வேறு ஒலித் தொகுப்புகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு நிகழிசை ஆவணகம் (Live Music Archive) என்று பெயர். இதில் தனிப்பட்ட கலைஞர்களின் 50 ஆயிரத்திற்கும் அதிகமான இசை நிகழ்வுகளின் தொகுப்புகள் அடங்கியுள்ளன. இவை தவிர, அனுமதி பெற்றுச் சேர்க்கப்பட்ட பல்வேறு இசைத் தொகுப்புகளும் உள்ளன. சென்னையில், கிழக்கு மொட்டைமாடி உரையாடலில் விக்கிப்பீடியா ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் விக்கி நிர்வாகி ரவிசங்கர் ஆற்றிய உரையின் ஒலித் தொகுப்பு இணைய ஆவணகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு நூலகங்களிலிருந்து பெறப்பட்ட எண்மயமாக்கப்பட்ட நூல்களின் தொகுப்பும் இதில் உள்ளன. 2008-ஆம் ஆண்டு அக்டோபர் மாதக் கணக்கீட்டின்படி இணைய ஆவணகத்துக்கு ஐந்து நாடுகளில் பதினெட்டு மேவுதல் (scanning) மையங்கள் உள்ளன. இதில் நாளொன்றுக்கு ஆயிரம் நூல்கள் மேவுதல் மூலம் எண்மயப்படுத்தப்படுகின்றன. இவை பல்வேறு நூலக, தன்னார்வ நிறுவனங்களின் நிதியுதவியால் செயல்படுகின்றன. 2008-ஆம் ஆண்டு நவம்பர் மாதக் கணக்கீட்டின்படி 10 இலட்சம் நூல்கள் இணைய ஆவணகத்தில் இருந்தன. இவை 0.5 பெடாபைட்டுகள் அளவிற்கு உள்ளன. இதில் ஒளிப்படிமங்கள், வெட்டப்பட்ட படிமங்கள், பிடிஎஃப் படிவங்கள், முதன்மைத் தகவல்கள் ஆகியவை உள்ளடங்கும். 2006 மற்றும் 2008-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில், மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது நிகழ் நூல் தேடி (Live Search Books) திட்டத்துக்காக இணைய ஆவணகத்துடன் தொடர்பேற்படுத்தியது. பொருளுதவி, கருவியுதவி வழங்கியதன் மூலம் மூன்று இலட்சம் நூல்கள் எண்மயப்படுத்தப்பட்டன. 2008-ஆம் ஆண்டு மே 23-ஆம் தேதி தனது திட்டத்தை நிறுத்திக் கொள்வதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்தது. 2007-ஆம் ஆண்டு அக்டோபர் மாதவாக்கில் கூகிள் நூல் தேடி இடமிருந்து நூல்களைப் பெற்றது. இணைய ஆவணகத்தில் 2008-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இருந்த மொத்த நூற்தொகுப்புகளில் பாதியளவு கூகிள் நூல் தேடியிலிருந்து பெறப்பட்டவையாக இருந்தன. கூகிளில் உள்ளது போன்றே இணைய ஆவணகத்தில் உள்ள நூல்களும் உள்ளன. =நடமாடும் இணைய ஆவணகம்= இணைய ஆவணகத்தை பயனர்களின் இடங்களுக்கே நேரடியாகக் கொண்டு செல்ல செப்டெம்பர் 30, 2002-ஆம் ஆண்டு துவங்கப்பட்டதே நடமாடும் இணைய ஆவணகம் ("Internet Archive Bookmobile") ஆகும். அமெரிக்கா முழுவதும் பயணம் மேற்கொள்ளும் இவ்வாகனம், பொது மக்கள் கூடும் இடங்களான நூலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் நிறுத்தப்படும். இணைய ஆவணகத்தில் உள்ள நூல்களை இந்த வாகனத்தில் இருந்தபடி தேர்ந்தெடுத்து படிக்கலாம். அதை வேண்டுதல்களின் அடிப்படையில் அச்சடித்தும் நூல்களாகவும் பெறலாம். இதற்காக இதில் செயற்கைக்கோள் தொடர்பு வசதியும் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அச்சடிக்கப்படும் நூல்களின் பட்டியல் மூலம் மக்களுக்கு மிகத் தேவையான நூல்கள், ஆவணங்கள் எவை என்பதை அறிய இயலும். அதன் மூலம் அது தொடர்பான உள்ளடக்கங்களை இணைய ஆவணகத்தில் மேலும் அதிகமாக்க முடியும். =திறந்த நூலகம்= இணைய ஆவணகத்தின் மற்றொரு திட்டம் திறந்த நூலகம் (Open Library) ஆகும். பீட்டா நிலையில் உள்ள இத்திட்டத்தில், உலகில் வெளியான நூல்களின் பட்டியல், தகவல் தொகுப்புகள் இடம்பெறும். திறமூல அமைப்பில் உள்ள இது உலகப் பட்டியல் (WorldCat) எனப்படும். இதில் ஏறத்தாழ இரண்டு கோடி நூல்களின் பட்டியலும், பத்து இலட்சம் முழுமையான நூல்களின் தேடத்தகுந்த பட்டியலும் இடம்பெற்றுள்ளது. திறமூல மென்பொருள் (Open Source Software) திட்டமான இதன் மூல நிரல் திறந்த நூலகத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. =மேற்கோள்கள்= =இவற்றையும் பார்க்க= =அடிக்குறிப்புகள்= =வெளி இணைப்புகள்= கடல் கொவிஞ்சி மன்னார் வளைகுடாவில் உள்ள தடை செய்யப்பட்ட கடல்வாழ் உயிரினங்களில் உயர் ரகமாக கருதப்படுவது "கடல் கொவிஞ்சி'கள். இந்தியாவில் மன்னார் வளைகுடா பகுதியில் தான் அதிகம் உள்ளன. இதிலும் 12 வகைகள் உள்ளன. மீன் இனத்தை சேர்ந்த இவை கடல் குதிரையின் ரகமாகும். இவற்றின் முக அமைப்பு கடல் குதிரை போல இருப்பதால் அதன் ரகத்தை சேர்ந்ததாக கருதப்படுகிறது. இதன் இரண்டு தாடைகளும் ஒன்றோடு ஒன்று இணைந்திருப்பதால் உணவுகளை உறிஞ்சி உண்ணும் தன்மை கொண்டது. பவள பாறைகள், கடல்புற்கள் மத்தியில் வசிக்கும் இவைகள் ,அங்குள்ள கழிவுகள், மிதவை உயிரினங்களை உண்டு வாழ்கின்றன. கடல்குதிரை ரகத்தை சேர்ந்திருந்தாலும் படுக்கை வசமாக மீன்களை போல நீந்தி செல்லும். மன்னார் வளைகுடாவில் இந்த உயிரினத்தை பிடித்தால் , வனஉயிரின பாதுகாப்பு சட்டத்தில் மூன்று முதல் ஏழு ஆண்டுகள் சிறை, 25 ஆயிரம் ரூபாய் அபாரம் என கடுமையான தண்டனைகள் உள்ளன. தெற்காசிய நாடுகளில் இதை ஆண்மை ஊக்கியாக கருதி பொடியாக்கி "சூப்' வைத்து குடித்து வருகின்றனர். நல்ல விலை கிடைக்கும் என்பதால் இந்த இனம் தடையை மீறி தொடர்ந்து கடத்தப்படுகிறது. உடல் முழுவதும் எலும்புகளால் ஆன இவற்றை காய வைத்து கருவாடாக மாற்றுகின்றனர். தசைகள் இல்லாததால் கருவாடாக ஆன பிறகும் உருவம் மாறுவதில்லை. வெளிநாடுகளுக்கும் அதிகம் ஏற்றுமதியாகிறது. இதனால் இவற்றின் அழிவு தவிர்க்க முடியாததாக மாறிவருகிறது. தைலம் (மரம்) தைல மரம் ("Eucalyptus", யூகலிப்டஸ் மரம்) என்பது மிர்டேசியே (Myrtaceae) என்ற குடும்பவகையைச் சேர்ந்த தாவரமாகும். ஆஸ்திரேலியா, டாஸ்மானியா ஆகிய நாடுகளைத் தாயகமாகக் கொண்ட இத்தாவரம் ஆங்கிலேயர்களால் 1843 ஆம் ஆண்டு அதிக விளைச்சலைத் தரும், எரிபொருள்மரவகை சோதனைக்காக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் மரக்கூழ் தொழிற்சாலைத் தேவைகளுக்காக பலரால் பெரிதும் விரும்பிப் பயிரிப்பட்டது. தைலமரங்களில் 700-க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. இம்மரங்கள் 330 மி.மீ லிருந்து 1500 மி.மீ. வரை மழையளவு உள்ள பகுதிகளில் செழித்து வளரும் இயல்புடையவை. வறண்ட மற்றும் சமவெளிப்பகுதிகளில் வளரும் யூகலிப்டஸ் டெரிடிகார்னிஸ், யூக்கலிப்டஸ் கமால்டுலென்ஸிஸ் ஆகிய வகைகள் தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு மிகவும் ஏற்றவை. இம்மரம் 8 மணி நேரத்திற்கு தேவையான நீரைதானே உறிஞ்சி எடுத்து ஆவியாக்கி விடுகிறது. இந்த மரம் நிலத்தின் அடி ஆழத்தில் உள்ள நிலத்தடி நீரையும் கணிசமான அளவு குறைத்து விடுகிறது. தைல மரம் விரைவாகவும், உயரமாகவும் ( 20 முதல் 50 மீ வரை) வளரக்கூடியது. மேலும் 2 மீ சுற்றளவு கொண்ட இம்மரமானது மண்ணின் நீரையும் மற்ற சத்துக்களையும் நன்றாக உறிஞ்சி வளரக்கூடிய வேர் வகையினைக் கொண்டது. இதன் இலைகள் கடினத் தன்மையும், நேர்குத்தாகத் தொங்கும் இயல்பையும் உடையவை. இம்மரமானது சூலை - ஆகத்து மாதங்களில் பூக்கும் பருவத்திற்கு வரும். தைலமரம் பல்வேறு வகையான மண் மற்றும் காலநிலைகளுக்கேற்ப வேகமாக வளரக்கூடிய, அதிக மறுதாம்பு வாய்ப்புள்ள மர வகையாகும். தைல மரம் வறட்சிதாங்கும் தன்மையுடையதாக அறியப்பட்டாலும் இம்மரத்தின் வளர்ச்சிக்கு ஆண்டு மழையளவு குறைந்த பட்சம் 800 மி.மீ. தேவை. இம்மரமானது வண்டல், சரளை, சிவப்பு மண் வகைகளில் நன்றாக வளரக்கூடியது. மண்ணின் ஆழம் ஒரு மீற்றருக்குக் குறைவாக இருக்கக்கூடாது. அதிக உவர் மற்றும் களர் நிலங்களிலும் வளராது அதே போல் மண்ணின் அமிலகாரத்தன்மை 6 லிருந்து 8 வரை இருக்க வேண்டும். அதிக மண் அரிப்பு மற்றும் நீர் தேக்க நிலங்கள் கூடாது. ஆரஞ்செரி ஆரஞ்செரி என்பது ஒரு வகை பச்சை மாளிகை. இந்த "மார்க்கம் கோட்டை' 1787 - 93ல் கட்டப்பட்டது. இங்கு வெவ்வேறு வகையான ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை மரங்களால் இந்த பச்சை மாளிகை கட்டப்பட்டது. 327 அடி நீளம் கொண்ட நீண்ட தோட்டம் உள்ளது. இதுவே உலகின் முதன் முதலில் கோட்டைக்குள் செடிகள் வளர்த்து பராமரிக்கப்பட்ட கட்டடமாகும். இந்த மாளிகை இங்கிலாந்தில் உள்ளது. கிரெய்கின் பட்டியல் கிரெய்கின் பட்டியல் அல்லது கிரெய்க்ஸ்லிஸ்ட் ("Craigslist") என்பது ஒரு விளம்பர அறிவிப்பு ஆகியவற்றைக் கொண்ட ஒரு இணையச் சமூக வலைத்தளம். ஒரு இடத்தில் கிடைக்கும் தொழில்வாய்ப்பு, பொருட்கள், சேவைகள் என பல தரப்பட்டவை இங்கு பதியப்படுகிறன. இந்த வலைத்தளம் 1995 தொடங்கி, 2000 விரிவு பெற்று, தற்போது பல மில்லியன் பயனர்களைக் கொண்டு, 500 மேற்பட்ட நகரங்களில் இதில் இடம்பெறுகின்றன. இந்தியாவில் தானுந்துத் தொழிற்றுறை இந்தியாவின் தானுந்துத் தொழிற்றுறை ("Automobile industry in India") உலகின் ஒன்பதாவது பெரிய தானுந்துத் தொழிற்றுறை ஆகும். 2008 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உற்பத்தி 2.3 மில்லியன் தானுந்துகள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டில் இந்தியா ஆசியாவின் நான்காவது பெரிய தானுந்து ஏற்றுமதி செய்யும் நாடாக ஆகியுள்ளது. இவ்வகையில் சப்பான், தென்கொரியா, தாய்லாந்து என்பன இந்தியாவுக்கு முந்திய நிலைகளில் உள்ளன. 1991 ஆம் ஆண்டுக்குப் பின் இந்தியாவின் தாராளமயக் கொள்கை காரணமாக இந்தியாவின் தானுந்துத் தொழில் தொடர்ச்சியாக வளர்ச்சி கண்டு வருகிறது. அதிகரித்த போட்டியும், கட்டுப்பாட்டுகள் தளர்த்தப்பட்டதும் இதற்கு முக்கியமான காரணங்கள் எனலாம். டாட்டா மோட்டர்சு, மாருதி சுசுக்கி, மகிந்திரா அன்ட் மகிந்திரா போன்ற பல இந்தியத் தானுந்து உற்பத்தியாளர்கள் தமது உள் நாட்டுச் செயற்பாடுகளையும், வெளிநாட்டுச் செயற்பாடுகளையும் விரிவாக்கியுள்ளனர். இந்தியாவின் உறுதியான பொருளாதார வளர்ச்சி அதன் உள் நாட்டுத் தானுந்துச் சந்தையை விரிவடையச் செய்ததுடன், பல பன்னாட்டுத் தானுந்து உற்பத்தியாளர்களையும் இந்தியாவில் முதலீடு செய்யத் தூண்டியது. 2009 ஆம் ஆண்டு பெப்ரவரியில், இந்தியாவின் ஒரு மாதத்துக்கான தானுந்து விற்பனை 100,000 ஐத் தாண்டியது. 1940களில் ஒரு தொடக்கத் தானுந்துத் தொழில்துறை இந்தியாவில் உருவானது. விடுதலைக்குப் பின்னர், இந்திய அரசும், தனியாரும், இந்தியாவின் தானுந்துத் தொழிலுக்குத் தேவையான உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். தேசியமயமாக்கம், அனுமதிப்பத்திர முறை என்பன காரணமாகத் தனியார் முயற்சிகள் பாதிப்படைந்ததுடன், 1950 களிலும், 1960 களிலும் இத் தொழிலின் வளர்ச்சி மிக மெதுவாகவே இருந்தது. 1970க்குப் பின்னர் தானுந்துத் தொழில் வளரத் தொடங்கியது. எனினும் இவ்வளர்ச்சி, உழவு இயந்திரங்கள், வணிக வண்டிகள், ஈருருளிஉந்துகள் ஆகியவை தொடர்பிலேயே காணப்பட்டது. மகிழுந்து உற்பத்தி இன்னமும் முன்னேற்றம் அடையவில்லை. சப்பானிய உற்பத்தியாளர்களின் வருகையினால் இந்தியாவில் ஒரு கூட்டுமுயற்சியில் மாரிதி உத்யோக் என்னும் நிறுவனம் உருவானது. மேலும் பல வெளிநாட்டு நிறுவனங்களும் இந்திய நிறுவனங்களுடன் கூட்டு முயற்சியில் இறங்கின. 1980களில் பல சப்பானிய உற்பத்தியாளர்கள், மோட்டாரீருருளிகள், இலகு வணிக வண்டிகள் என்பவற்றை உற்பத்தி செய்வதற்காகக் கூட்டு முயற்சியில் இறங்கின. இக் காலத்திலேயே, இந்திய அரசு, அதன் சிறிய மகிழுந்துகளின் உற்பத்திக்காக சுசுக்கியுடன் கூட்டு முயற்சி ஒன்றை ஏற்படுத்தியது. 1991 ஆம் ஆண்டின் பொருளாதாரத் தாராளமயத்துக்குப் பின்னர் பல இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் தமது உற்பத்திகளை இந்தியாவில் தொடங்கின. அக்காலத்திலிருந்து, இந்தியாவின் தானுந்து உதிரிப்பாகங்களினதும், தானுந்துகளினதும் உற்பத்தி உள்நாட்டுத் தேவைகளையும், ஏற்றுமதித் தேவைகளையும் நிறைவேற்றுவதற்காக வேகமாக வளர்ந்தது. பீமன் சிலந்தி பீமன் சிலந்தி ("golden silk orb-weavers", பேரினம்: "நெபீலா", "Nephila") ஓர் அபூர்வ வகை பெரிய சிலந்திகள் ஆகும். 165 மில்லியன் ஆண்டுகட்கு முன் வாழ்ந்த நெஃபிலியா ஜீராசிக்கா எனும் சிற்றினம் இது வரை கிடைத்த சிலந்தி புதைபடிமங்களிலேயே பெரியது. நான்கு முதல் ஆறு அங்குலம் வரை நீளமும் இரண்டு அங்குல அகலமும் உள்ள இச்சிலந்தியின் உடல் நடுவில் மஞ்சள் நிற கோடுகளும், புள்ளிகளும் நிறைந்து காணப்படும். தரையில் இருந்து குறைந்தது ஆறு மீட்டர் வரை உயரத்திற்கு இவை வலை பின்னும். அவ்வாறான வலைகளின் விஸ்தீரணமும், 2 மீட்டர் வரை இருக்கும். இவ்வலைகள் பிற வகை சிலந்திகளின் வலைகளைக் காட்டிலும் நீண்ட நாள் நீடித்து நிற்கக் கூடியவை. சில வெளிநாடுகளில் இந்த வலைகளை கொண்டு சிறிய மீன்களை பிடித்து வருகின்றனர். இவ்வலைகளை சேகரித்து, அவற்றை சுருட்டி அதில் இரைகளை வைத்து மீன்களை பிடிப்பதாகத் தெரிகிறது. வனங்கள் செயற்கையாக அழிக்கப்படுவது, தீயில் எரிந்து நாசமாதல் போன்ற பல்வேறு காரணங்களால், இவ்வகை சிலந்தி இனம் அழிந்து வருகிறது. இதன் உடலில் விஷக்கிருமிகள் இருந்தாலும், மனிதர்களை இவ்வகை சிலந்திகள் தீண்டுவதில்லை. இவ்வகை சிலந்திகளில், பெண் சிலந்திகள் தரையில் குழி தோண்டி அதில் முட்டையிடுகின்றன. இவைகள் இனப்பெருக்கத்திற்காக 15 மணி நேரம் வரை சேர்ந்திருக்கும். அடர்ந்த வனங்களில் மட்டுமே இவ்வகை சிலந்திகள் காணப்படும். மனித நடமாட்டம் உள்ள பகுதிகளில் தென்படாது. உலோக ரப்பர் உலோக ரப்பர் ("metal rubber") என்பது உலோகம், ரப்பர் இரண்டும் கலந்த கலவையில் உருவான புதிய தயாரிப்பு. இதை "ஸ்மார்ட் ஸ்கின்" ("smart skin") என்று அழைக்கிறார்கள். மெல்லிய தோல் போன்று இருக்கும் இந்த உலோக ரப்பர் வெகுஜால வேலைகளை செய்யுமாம். ஒரு சிறு மில்லிமீட்டர் தடிமன் அளவிலான இந்த உலோக ரப்பர் பளபளப்பான காகிதம் போன்ற தோற்றம் கொண்டது. இதை சுருட்டலாம், மடக்கலாம், இரண்டாக மடித்து பைக்குள் வைத்துக்கொள்ளலாம். சுமார் 200 பாகை செண்டிகிரேடு வெப்ப அளவுகொண்ட நெருப்பில் அல்லது கொதிக்கும் நீரில் போடலாம். அதன்மீது பெட்ரோல் தீ வைக்கலாம். தனது இயல்புநிலையை இழக்காது; கருகாது; உருகாது; உடையாது. அதே நேரத்தில் மின்சார கடத்தியாகவும் செயல்படக்கூடியது. தீயில் கருகும்பொருள் அல்லது பல துண்டுகளாக மடக்கப்படும் பொருள் மின்கடத்தியாக இருக்கமுடியாது. மாறாக இந்த உலோக ரப்பர் மின்சாரத்தைக்கடத்தும் தன்மையைக்கொண்டுள்ளது. அற்புதமான சக்திகள் நிறைந்த இந்த இரப்பர் செயற்கைத்தசைகள், இறக்கை விமானம், ஆடைகள், கணினி பாகங்கள் போன்றவை செய்யும் நவீன தொழில்நுட்பத்தில் பயன்படுகிறது. அபாயகரமான பணிகளில் ஈடுபடும் எந்திர மனிதனை தயாரிக்கமுடியும். கம்ப்யூட்டர் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை சிறிய அளவில், குறைந்த எடையில் தயாரிக்கமுடியும். ஆனால் உலோக இரப்பர் தயாரிக்கும் பணி மிகவும் கடுமையானது. இந்தப்பணியை பெரும்பாலும் ரோபாட்டுகள்தான் செய்கின்றன. நேர் மின்னூட்டம் செய்யப்பட்ட உலோகத்தின் அயனிகலவை, எதிர் மின்னூட்டம் செய்யப்பட்ட எலாஸ்டிக் பாலிமர் கலவை இவற்றுடன் அச்சாக கண்ணாடி தகட்டினையும் பயன்படுத்துகிறார்கள். வட்டக்கச்சி வட்டக்கச்சி ("Vaddakkachchi") இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வேளாண்மைக் கிராமம் ஆகும். கரைச்சி உதவி அரச அதிபர் பிரிவுக்குட்பட்ட 4 கிராமசேவையாளர் பிரிவுகள் "வட்டக்கச்சி" பிரதேசத்தில் உள்ளடக்கப்படுகின்றன. இலங்கை அரசின் 1948 ஆண்டு சட்டக்கோவையின் 464 ஆம் அத்தியாயமான காணி அபிவிருத்திக் கட்டளை சட்டத்தின் 19(2)ஆம் பிரிவின் கீழ் வட்டக்கச்சி பிரதேசத்தின் நிலப்பரப்பு (மேட்டுநிலம், வயல்நிலம்) ஒழுங்குபடுத்தப்பட்டு 1952 ஆம் ஆண்டளவில் ஒரு குடும்பத்திற்கு 2 ஏக்கர் மேட்டுநிலம், 3 ஏக்கர் வயல் நிலம் என நிலப்பகிர்வு செய்து அளிக்கப்பட்டதுடன் 1969 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க சட்டத்தின் படியும், 1981ஆம் ஆண்டின் 27 இலக்க திருத்தப்பட்டவாறான சட்டபிரிவின் மூலமாகவும் காணி பயன்பாடு அனுமதிப்பத்திரங்களும் (Permit), உறுதிகளும் வழங்கப்பட்டுள்ளன. இலங்கையின் மத்திய நகரமான கண்டியையும், யாழ்ப்பாணத்தையும் இணைப்பது ஏ-9 நெடுஞ்சாலை. இலங்கையை பொறுத்தவரையில் பொருளாதார ரீதியாகவும்,அமைப்பு ரீதியாகவும் இன் நெடுஞ்சாலை முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு முக்கிய நகர் கிளிநொச்சி ஆகும். இந்நகருக்கு கிழக்கே 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கிராமம் வட்டக்கச்சி ஆகும். இது வடக்கே பத்துவீடு, கிழக்கே இராமநாதபுரம், தெற்கே இரனைமடு மேற்கே திருவையாறு போன்ற கிராமங்களை கொண்டுள்ளது. இப்பிரதேசத்தின் தரைத்தோற்றமானது விவசாயம் (பயிர்ச்செய்கை, கால்நடை) ,கைத்தொழில், போக்குவரத்து, போன்றவற்றுக்கு ஏதுவான சமவெளியாக காணப்படுகின்றது. இப்பிரதேசத்தின் அபிவிருத்தி,பொருளாதாரததை தீர்மானிக்கும் முக்கியமானதொரு வளமாக நீர் வளம் காணப்படுகிறது. இக்கிராமத்தின்மே ற்கே கனகராயன் ஆற்றின் கிளையாறு ஓடுகின்றது, மற்றும் தரைக்கீழ் நீர் வருடம் முழுவதும் கிடைக்கின்றது. இங்கு நெற்செய்கைக்கு ஏற்ற களிமண் மற்றும் இருவாட்டிமண்ணும் பரவலாக காணப்படுகின்றது. இவை விவசாய செய்கைக்கு மிகவும் பங்களிக்கின்றன. இங்கு களிமண், இருவாட்டிமண். சேம்பாட்டுமண், கபிலநிறமண் மற்றும் மணல்மண் போன்றவற்றை காணக்கூடியதாக இருக்கும். இங்கு வாழும் மக்களின் பிரதான தொழில் வேளாண்மையாக இருந்தபோதிலும் அனைவருமே கல்விகற்பதில் ஆர்வமும், அறிவுத்தேடலும் உடையவர்களாவர். மாவட்ட ரீதியில் வெளிவரும் புள்ளிவிபரங்களை எடுத்து நோக்கும் போது இப்பிரதேச மாணவர்களே அரச பொதுப்பரீட்சைகளில் அதிக புள்ளிகளை பெற்று தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர். கல்வியில் மாவட்ட, மாகாண, தேசிய மட்ட ரீதியில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டடுள்ளன. அத்தோடு உயர் பதவிகளிலும் இருக்கின்றனர். இங்குள்ள பாடசாலைகள்: இங்குள்ள முன்பள்ளிகள்: வட்டக்கச்சி மக்களின் பிரதான தொழில் விவசாயமாகும். இங்கு இருபோக நெற்செய்கை (சிறுபோகம்,பெரும்போகம்) நடைபெறுகிறது. தெங்குப் பயிர்ச்செய்கையும் இங்கு முக்கியமானது. கால்நடை வளர்ப்பும், வீட்டுத்தோட்ட பயிர்செய்கையும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. இங்கு நடைபெறும் சிறுபோக நெற்செய்கை இலங்கையின் மூன்றாவது பெரிய நீர்த்தேக்கம் என்று கூறப்படும் இரணைமடு நீர்த்தேக்கத்திலிருந்து செய்யப்படும் நீர்ப்பாசனத்தின் மூலமும், பெரும்போக நெற்செய்கை மழையை நம்பியும் மேற்கொள்ளப்படுகின்றது. பருவமழை அற்ற காலங்களில் சிறு நீர்நிலைகள் மூலமும் நீரை பெற்று வேளாண்மை செய்யப்படுகின்றது. இங்கு இந்து, கிறித்தவம் ஆகிய சமயங்கள் பின்பற்றப்படுகின்றன. இந்துக்களே பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். 1990ஆம் ஆண்டுக்கு முன்னர் இசுலாமியர்களும் வசித்துள்ளனர். 1990அக்டோபரில் இங்கு வாழ்ந்த முஸ்லிம்கள் சில அசாதாரண அரசியல் காரணங்களால் இலங்கையின் பிற பகுதிகளுக்கு குறிப்பாக தென்னிலங்கைக்கு இடம்பெர்ந்தனர். அதன்பின் யுத்த முடிவுக்கு பின்னரான காலப்பதகுதிகளில் குறிப்பாக 2010, 2011 இல் மீண்டும் குடியேறியுள்ளனர். தற்பொழுது இந்து,கிறித்தவம்,இசுலாம் ஆகிய மதங்கள் காணப்படுகின்றன. இங்கு அமைய பெற்றுள்ள வழிபாட்டுத்தலங்கள் இந்து கோயில்கள் தேவாலயங்கள் பள்ளிவாசல்கள் இங்கு திட்டமிட்ட குடியிருப்புக்களே காணப்படுகின்றன, இப்பிரதேசத்திலும் இதனைச்சூழவுள்ள பிரதேசத்திலும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய அனைத்து வசதிகளும் காணப்படுவதால் இப்பகுதியில் மக்கள் அதிகம் செறிந்து வாழ்கின்றனர். இங்கு போக்குவரத்து வீதிகள் அதிகம் காணப்படுகின்றது, எனினும் பெரும்பாலான பகுதி சீர் அற்ற நிலையில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. கிளிெநொச்சியில் இருந்து வரும் பிரதானவீதி வட்டக்கச்சி ஊடாக வந்து வட்டக்கச்சி சந்தையடியில் இரண்டு பிரதானவீதியாக பிரிகின்றது, அதில் ஒன்று தர்மபுரத்திலும், மற்றயது புளியம்பொக்கணை சந்தியிலும் வந்து முல்லைவீதியில் சங்கமிக்கின்றது. மற்றும் கிராமத்தின் உள்ளே பல வீதிகள் காணப்படுகின்றன. விசையாள்சில்லு விசையாள்சில்லு என்பது குறிப்பிடத்தக்க அளவு சடத்துவத் திருப்புதிறன் கொண்டதும், சுழற்சி ஆற்றலைச் சேமிக்க உதவுவதுமான ஒரு எந்திரவியல் கருவி ஆகும். விசையாள்சில்லுகள் அவற்றின் சுழற்சி வேகத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்களை எதிர்த்து நிற்கக்கூடியவை. இந்த இயல்பு ஆடுதண்டு இயந்திரங்களால் உருவாக்கப்படும் ஏற்றத்தாழ்வு கொண்ட முறுக்கு விசையை வலுமூலமாகக் கொண்டு இயங்கும் சுழல் அச்சுக்களின் சுழற்சிவேகத்தை, உறுதிப்படுத்த உதவுகின்றது. அண்மைக்காலங்களில், வண்டிகளிலும், மின்னுற்பத்தி இயந்திரங்களிலும் ஆற்றல் சேமிப்புக் கருவியாகப் பயன்படுத்துவதற்காக விசையாள்சில்லு தொடர்பான ஆய்வுகள் பரவலாக நடைபெறுகின்றன. விசையாள்சில்லுகள் பண்டைக்காலம் முதலே பயன்பாட்டில் இருந்துவருகின்றன. மட்பாண்டம் வனைதற்சில்லு இதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு ஆகும். தொழில் புரட்சியின்போது ஜேம்சு வாட் தனது நீராவி எந்திரத்தில் பயன்படுதியதன் மூலம் விசையாள்சில்லின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்தார். இவரது சம காலத்தைச் சேர்ந்தவரான ஜேம்சு பிக்கார்ட் விசையாள்சில்லை மாற்றச்சு ஒன்றுடன் சேர்த்துப் பயன்படுத்தியதன் மூலம், இடுவழி இயக்கத்தை சுழற்சி இயக்கமாக மாற்றினார். விசையாள்சில்லுகள், துளையிடு எந்திரங்களிலும், தறையும் எந்திரங்களிலும் பயன்படுகின்றன. இவற்றில் விசையாள்சில்லுகள் மோட்டாரிலிருந்து கிடைக்கும் ஆற்றலைச் சேமித்துப் பின்னர் வெளிவிடுகின்றன. சுழல் காட்டி சுழல் காட்டி என்பது, திசையமைவை அளப்பதற்கு அல்லது அதனை உள்ளவாறு பேணுவதற்குப் பயன்படும் ஒரு கருவியாகும். இது கோண உந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் செயற்படுகின்றது. இது ஒரு சுழலும் சில்லு அல்லது தட்டு வடிவில் அமைந்தது. இதன் அச்சு எந்தத் திசையமைவையும் எடுக்கும் வகையில் கட்டற்ற வகையில் அமைந்துள்ளது. வெளி முறுக்கு விசைகளின் தாக்கங்கள் உயர்ந்த வேகத்தில் சுழலும் இதன் திசையமைவில் மிகக்குறைந்த மாற்றத்தையே ஏற்படுத்துகின்றன. இது கட்டாத்தாங்கியில் பொருத்தப்படுவதால் வெளி முறுக்குவிசைகளின் தாக்கம் இதில் இருப்பதில்லை. எனவே இது வைக்கப்பட்டுள்ள தளம் எவ்வாறு நகர்ந்தாலும், சுழல் காட்டியின் திசையமைவு ஏறத்தாழ நிலையாகவே இருக்கும். எனவே திசையமைவை அளப்பதற்கு அல்லது அதனை உள்ளவாறு பேணுவதற்கு பயன்படுகிறது. காந்தத் திசையறிகருவிகளைப் பயன்படுத்த முடியாத இடங்களில், திசையை அறிவதற்கு இதனைப் பயன்படுத்துகின்றனர். இக் காரணத்துக்காகவே ஹபிள் தொலைநோக்கியில் சுழல் காட்டி பயன்படுகின்றது. மார்ச் 0 மார்ச் 0 என்பது சாதாரண ஆண்டுகளில் பிப்ரவரி 28ஐயும் லீப் ஆண்டுகளில் பிப்ரவரி 29ஐயும் குறிக்க பயன்படுத்தப்படும் ஓர் புனை நாளாகும். கொடுக்கப்பட்ட நாளின் வாரத்தின் கிழமைகளை கண்டிட ஜான் ஆர்டன் கான்வே என்பவர் கண்டுபிடித்த இறுதிநாள் நெறிமுறை (டூம்ஸ்டே கொள்கை)யின்படி கணக்கிடும் முறையில் இவ்வாறு பாவிக்கப்படுகிறது. இந்நெறிமுறை கிரெகொரியின் நாட்காட்டி 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழல்வதை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டது. எந்தவொரு ஆண்டின் நாட்காட்டியிலும் 4/4, 6/6, 8/8, 10/10, 12/12, மற்றும் பிப்ரவரியின் இறுதிநாள் (மார்ச் 0) எப்போதும் ஒரே கிழமையில் (இதுவே "இறுதிநாள்" என இந்நெறிமுறையில் குறிக்கப்படுகிறது) வருவதையும் இச்சோடிகள் 5/9 & 9/5 7/11 & 11/7 இந்தக்கிழமையில் அமைவதையும் கொண்டு ஏற்படுத்தப்பட்ட நினைவுமொழி கொண்டு மனதாலேயே நாளின் கிழமையை கண்டுபிடிக்க முடியும். இந்த நெறிமுறைப்படி ஓர் நாளின் கிழமையைக்காண மூன்று படிகள் உள்ளன. இதனை அமைத்த கான்வே வாரநாட்களை ஏழின் அடிப்படையில் அமைந்த எண்களமைப்பில் எண்ணலானார். இதன்படி சூன்யநாள், முதல்நாள், இரண்டாம் நாள், மூன்றாம் நாள்...ஆறாம் நாள் (Noneday, Oneday, Twosday, Treblesday, Foursday, Fiveday, and Six-a-day). பெப்ரவரி 31 பெப்ரவரி 31 ("February 31") தற்போது பாவனையில் உள்ள கிரெகொரியின் நாட்காட்டியில் ஓர் கற்பனைநாளாகும். இதனை எடுத்துக்காட்டுகளுக்காக தரவுகளில் பாவிப்பது உண்டு. பெப்ரவரி 30ஐயும் இவ்வாறு பாவித்தாலும் சில நாட்காட்டிகளில் பெப்ரவரி 30 நடைமுறையில் உள்ள நாளாகும். சனவரி 0 ஜனவரி 0 வான்வெளியில் உள்ள கிரகநிலைகளைக் குறிக்கும் பஞ்சாங்க பட்டியல்களில் சனவரி 1க்கு முந்தைய நாளைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. முந்தைய ஆண்டை குறிப்பிடாமல் அதே ஆண்டில் திசம்பர் 31 நாளைக் குறிக்க உதவுகிறது. இறுதிநாள் நெறிமுறையில் காணும் புனைநாள் மார்ச் 0 நாளுக்கு ஒப்பானது. தற்கால நேர அளவுகளில் வினாடியை 1956 இல் புவி கதிரை சுற்றிவரும் நேரத்தைக்கொண்டு வரையறுக்கையில், அது 1900 வான்வெளிநிலையை அடிப்படையாக எடுத்துக்கொண்டது. வினாடி இவ்வாறு வரையறுக்கப்பட்டுள்ளது: the fraction 1/31,556,925.9747 of the tropical year for 1900 January 0 at 12 hours ephemeris time. "1900 ஜனவரி 0 12மணிக்கிருந்த ஆண்டின் 1/31,556,925.9747 பாகமாகும்" மைக்ரோசாப்ட் எக்செல் மென்பொருளில் 0 நாள் என எடுத்துக்கொள்ளப்பட்டது சனவரி 0,1900 ஆகும். முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி 1268 முதல் கி.பி 1311 வரை அரசாண்ட பாண்டிய மன்னனாவான். முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியனை அடுத்து முடி சூடியவனான இவன் தன் இறப்பு வரை ஆட்சி புரிந்தான். மாறவர்மன் குலசேகரன் 'எம் மண்டலமும் கொண்டருளிய', 'கோனேரின்மை கொண்டான்', 'கொல்லங்கொண்டான்' என்ற விருதுகளை ஏற்றான். கேரளம், கொங்குநாடு, சோழமண்டலம், சிங்களம் ஆகிய நாடுகளை வெற்றிகொண்டான் என்று கல்வெட்டுகள் மூலம் அறிய வருகிறது. மூன்றாம் இராசேந்திரன் மற்றும் போசள இராமநாதனை கி.பி 1279 இல் வென்றான். சிங்களத்தில் உண்டான அரசியல் கலவரத்தை வாய்ப்பாக கொண்டு கி.பி 1284 இல் தனது படைத்தலைவன் ஆரியச் சக்கரவர்த்தி மூலம் சிங்களத்தின் மீது போர் தொடுத்தான். புத்தரின் பல் சின்னமொன்றை கைப்பற்றி வந்தான் கி.பி 1302-1310 காலத்தில் சிங்கள வேந்தன் மதுரைக்கு வந்து பாண்டியனுக்கு அடிபணிந்து அப்புனித சின்னத்தை மீட்டு சென்றான். மாறவர்மன் குலசேகர பாண்டியனின் மறைவிற்கு பிறகு அவனது இரு மகன்கள் சுந்தர பாண்டியன், வீரபாண்டியன் ஆகியோரிடையே எழுந்த உரிமைச் சண்டையைப் பயன்படுத்தி தில்லி சுல்தான்கள் ஆட்சியை கைப்பற்றினர். குலசேகரன் அரசவையில் தகியுத்தீன் அப்துர் ரகுமான் என்பவர் முதன்மை மந்திரியாக இருந்து ஆட்சிக்கு துணை புரிந்தமைக்காக காயல் பட்டினம், பிடான், மாலி பிடான் என்ற கடலோர நகரங்கள் அளிக்கப்பட்டதாக அப்துல்லா வசாப் எனும் அரபிய வரலாற்றாளர் குறிப்பிட்டுள்ளார்..இந்த காலகட்டத்தில் வருகை புரிந்த பயணி மார்க்கோ போலோ உலகின் புனிதம் வாய்ந்த நகராக குறிப்பிடுகிறார். மணப்பாறையையடுத்த பொன்முச்சந்தி என்ற இடத்தில் அமைந்துள்ள கோவிலில் இரண்டாம் பாண்டியர் காலத்தைச் சார்ந்த கல்வெட்டில் இவர் கோவிலுக்கு நிலங்களை பரிசாக வழங்கிய வரலாறுகுறிப்பிடப்பட்டுள்ளது. நாசர் (நடிகர்) நாசர் (பிறப்பு - மார்ச் 05, 1958, செங்கல்பட்டு), புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் அண்மைய ஆண்டுகளில் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். திரைக்கதை, வசனம், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் பணியாற்றி உள்ளார். நாசர், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நாசர் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். தமிழ்நாட்டில் செங்கல்பட்டு என்னும் ஊரில் எளிமையான குடும்பத்தில் பிறந்த நாசர், செங்கல்பட்டிலுள்ள புனித யோசப் உயர்நிலைப்பள்ளியில் படித்தவர். பல்கலைக்கழக நுழைவுக்கல்வி (P.U.C.)யை பாதியிலேயே விட்டுவிட்டு கலைத்துறை ஆர்வத்தில் சென்னைக்குக் குடிபுகுந்தார். சென்னை கிருத்துவக் கல்லூரியில் இளங்கலை தாவரவியல் பட்டப்படிப்பு படித்தார். இவர் இந்திய விமான படையில் சிறிது காலம் பணியாற்றினார். தமது நாடக பட்டறிவை முன்வைத்து திரையுலகில் கால் பதிக்க முயன்றவர். வறுமை தாங்காது தாஜ் கோரமண்டல் விடுதியின் சேவைப்பகுதியில் சேர்ந்து பணியாற்றியிருக்கிறார். திரைத்துறைக்கு முயன்ற அதே நேரம் கதை, கவிதைகள் எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பி வந்தார். அவற்றில் சில பிரசுரமானது. சென்னை திரைப்படக் கல்லூரியில் பயின்று நடிப்புத்துறையில் பட்டயம் பெற்றார். இதன் முன்னர், தென்னிந்திய திரைப்பட சங்கத்தின் நடிப்புப் பயிற்சி மையத்திலும் பயிற்சி பெற்றார். இவரது ஆர்வத்தினால் இயக்குனர் கே. பாலசந்தர் "கல்யாண அகதிகள்" என்ற படத்தில் வாய்ப்பளித்தார். அன்று துவங்கி 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சித் தொடரிலும் நடித்துள்ளார். மகேந்திரனின் தொலைக்காட்சிப் படம் காட்டுப்பூக்கள் மற்றும் சேனாதிபதி இயக்கிய "பனகாடு" இவரது நடிப்புத்திறனை உலகிற்கு பறை சாற்றியது. 1995இல் அவதாரம் என்ற திரைப்படத்தை தாமே இயக்கி நடித்தார். "தேவதை" என்ற படத்தை 1997இல் இயக்கி நடித்தார். அவரது குறிப்பிடத்தகுந்த படங்கள்: சுழிதிசைகாட்டி சுழிதிசைகாட்டி என்பது சுழல் காட்டியைப் போன்றது. ஆனால் இது உண்மை வடக்கைக் காட்டும் ஒரு திசைகாட்டி ஆகும். சுழிதிசைகாட்டி, மின்னாற்றலில் இயங்கும் வேகமாகச் சுழலும் சில்லொன்றைப் பயன்படுத்துகிறது. பெரும்பாலும் கப்பல்களில் பயன்படும் இச் சுழிதிசைகாட்டிகள் காந்தத் திசைகாட்டிகளை விட இரண்டு சாதகமான அம்சங்களைக் கொண்டுள்ளன. சுழிதிசைகாட்டி உண்மையில் ஒரு சுழல் காட்டியே. இது கட்டாத்தாங்கி ஒன்றில் பொருத்தப்பட்டுள்ள சில்லொன்றைக் கொண்டது. கட்டாத்தாங்கியில் பொருத்தப்பட்டிருப்பதால், சில்லின் அச்சு எந்தத் திசையிலும் திரும்புவதற்கு முடியும். இதன் அச்சு விண்துருவம் அல்லாத இன்னொரு திசையை நோக்கி இருக்கும்படி வேகமாகச் சுலழச்செய்யும்போது கோண உந்தக் காப்பு விதிக்கு அமைய அச்சின் திசை மாறாமல் இருக்கும். ஆனால் புவி சுழல்வதனால், புவியில் நிலையாக நின்று பார்க்கும் ஒருவருக்கு சுழிதிசைகாட்டியின் அச்சு 24 மணிகளுக்கு ஒருமுறை சுழல்வதுபோலக் காட்சி தரும். இவ்வாறு சுழலும் சுழிதிசைகாட்டி வழிகாட்டுவதற்குப் பயன்படாது. எனவே, இதன் அச்சு வடக்கைக் காட்டாமல் இருக்கும்போது அதன்மீது ஒரு முறுக்கு விசையைக் கொடுக்கக்கூடிய ஒரு பொறிமுறை தேவைப்படுகிறது. ஒரு முறையில் உராய்வு விசை பயன்படுத்தப்படுகிறது. இம்முறையில், சுழிதிசைகாட்டியில் இருக்கும் சுழல் காட்டி வேண்டியபடி அதன் திசையை மாற்றிக்கொள்ள முடியாது. இராஜராஜேஸ்வரி கோயில், மலேசியா ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி கோயில் மலேசியாவின் அம்பாங் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கோயில். சிறிய குன்று மேல், ஆற்றின் கரையோரம் அமைந்திருக்கிறது. ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆலயத்தின் நுழைவாயிலில் இருபத்தைந்து படிகள் ஏறி மேலே வந்தால் பளிச்சென்று காற்றோட்டத்துடன் விசாலமான பிரார்த்தனை மண்டபம்! (உள்ளே நுழைந்தவுடன் மனதில் ஏற்படும் அந்த உணர்வு! வந்து பாருங்கள் தெ(பு)ரியும்) கோயிலின் அடித்தளத்தில் கல்யாண மண்டபம் அதன் மேல் தளத்தில் தான் ஆலயம் அமைந்திருக்கிறது. மண்டபத்தின் உள்ளே ஆலயத்தின் பிரதான கருவறையின் இடப்பக்கத்தில் சித்தி விநாயகராக வீற்றிருக்கிறார் ஐந்து கரப் பெருமான். ஆலயத்தின் மற்ற திருமேனிகளைப் போலவே இந்தத் திருமேனியும் தமிழகத்தின் புகழ் பெற்ற சிற்பி தேவகோட்டை முத்துக் கருப்பரால் ஒற்றைக் கருங்கல்லில் செதுக்கப் பட்டதாகும்! 1977ல் நிகழ்ந்த முதல் திருக்குட நன்னீராட்டு மங்கள விழாவில் இத்திருமேனி பிரதிஷ்டை செய்யப் பட்டது. சித்திவிநாயகரைச் சுற்றி வலம் வரும்போது முதலில் காட்சி அளிப்பவர் விஷ்ணு துர்கை என வழங்கப்படும் அன்னை துர்காதேவி, தொடர்ந்து வலம் வர (பிரதானக் கருவறையின் வலப்பக்கம்) இங்கு காட்சி அளிப்பவர் (பாலசுப்பிரமணியனாக அருள்பாலிக்கும்) திருமுருகப்பெருமான் ஆவார். அடுத்து பிரார்த்தனை மண்டபத்திற்கு வரும் படிக்கட்டுகளின் எதிரே மூலஸ்தானம், வாயிலில் துவாரபாலகர்கள் (தூய வெண்கற்களில்) இருவருடனும், எதிரே ஏற்றமுடன் காட்சியளிப்பது பொற்றாமரையின் மேல் அமர்ந்த நிலையில் சௌந்தரவல்லியாக உலகநாயகி ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரித் தாயார். பிரார்த்தனை மண்டபத்தின் இருபுறமும் இரு சிறிய மண்டபங்கள் உள்ளன, மூலஸ்தானத்தின் இடப்புறம் உள்ள ராஜேஸ்வரி மண்டபத்தில் ஸ்ரீகணேசர், ஸ்ரீதுர்கை, வள்ளி தெய்வானை சமேதரராய் ஸ்ரீ முருகப்பெருமான் வீற்றிருக்கின்றனர். வலப்புறம் உள்ள நடராஜ மண்டபத்தில் சண்டிகேஸ்வரராக சிவபெருமான், சிவகாமி சமேதரராய் நடராஜர், நாயன்மார்கள் நால்வர் ஆகியோர் வீற்றிருக்கின்றனர். கீழே ஆலயத்தின் இடப்பக்கம் வெளிப் பிரகாரத்தில் ஆற்றின் ஓரத்தில் நவக்கிரக நாயகர்களுக்கென்று தனி திருக்கோயில் அமைந்திருக்கிறது. நவக்கிரக சந்நிதிக்கும் ஆற்றுக்கும் இடையில் அரசமரம் ஒன்று ஆலயத்தின் மேல் குளு குளுவென்று தன் நிழலைப் பரப்பிக் கொண்டு கம்பீரமாக நிற்பது, ஆற்றின் இருபக்கமும் (கோயிலின் உள்ளே) செண்பக மரங்களும், கரும்பும், நவக்கிரக மூலஸ்தானத்திற்கு வலப்புறம் பெரி(ய்)யநாவல் மரம் ஒன்று(!) மஞ்சள் பூக்களுடன் பழங்களுடன் பசுமையாக கிளை பரப்பி நிற்பதும் (கொட்டிக் கிடக்கும் பழங்களைப் பொறுக்கி ஒட்டியிருக்கும் மண்ணை ஊதும் போது ஔவையும், ஆடுமேய்க்கும் முருக(சிறுவ)னும் நினைவில் வருவது!) கருவறையின் முன்புறம் வில்வமரம் ஒன்று உயர்ந்து அடர்ந்த கிளைகளுடன், கோவிலின் உட்புறம் வன்னி மரங்களும், ஆலயத்தின் இடப்பக்க நுழைவாயிலுக்கும் கோயிலின் வெளிப்பிரகாரத் துக்கும் இடையில் இரு வேப்ப மரங்கள் இம்மரங்களின் கிளைகள் அம்பாளின் மூலஸ்தானத்திற்கு மேல் குடைபோல் படர்ந்து இருப்பதும் அதிசயம்! ம.இ.க.அம்பாங் கிளையின் அன்றைய தலைவரும், அம்பாங் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான திரு சுப்பையா அவர்கள் 19.11.1956 அன்று இராஜராஜேஸ்வரி ஆலயம் எழுப்ப அம்பாங் சாலையில் நான்காம் மைலில் இருந்த நிலத்தை வழங்கக் கோரி அம்பாங் மாவட்டத் துணையதிகாரிக்கு எழுதிய கடிதம்தான் ஆலயம் உருவாகக் காரணம்! ஆனால் அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டது, ஆனாலும் ஒரு மாற்று நிலத்தை அடையாளங்காட்டி மூன்று வருடங்கள் விடாது தொடர்ந்து செய்த அவரின் பெரு முயற்சி வெற்றியளித்தது!மாநில முதல்வர் நிலம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளார் என்ற செய்தி 1.6.1959 தேதியிட்டு கோலலம்பூர் நில அலுவலகத்தில் இருந்து அனுப்பிய கடிதம் மூலம் உறுதியானது. அதன் பிறகு மூன்று வருடங்களில் ஜாலான்(ரோடு) உலுகிளாங்-கில் இருந்த 1/3ஏக்கர் நிலம் 5.11.1962 அன்று முறையாகப் பதிவு செய்யப்பட்டது. அதுவே இன்று ஆலயம் அமைந்திருக்கும் நிலமாகும். அதன் பிறகு பத்து வருடங்கள் கழித்து 1972ல் ஆலயக் கட்டடக் குழு அமைக்கப் பட்டு பதிவு செய்யப்பட்டது, அன்னை மாரியம்மன் பெயரில் ஆலயம் எழுப்ப1973ல் நிதி வசூல் செய்து, பின்னர் மலாயாப் பல்கலைக்கழக இந்தியத் துறையின் அன்றைய பேராசியர் கோ.சுந்தரமூர்த்தி அவர்களின் ஆலோசனைக்கிணங்க ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி ஆலயம் எனும் பெயரோடு, தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ் பெற்ற ஸ்தபதி திரு.இராமசாமி அவர்களின் தலைமையில் நிர்மாணிப்புப் பணி தொடங்கியது. அன்றே சுற்று சூழல் அழகுற அமைய பயன்தரும் மரங்கள் பூச்செடிகள் நடப்பட்டு அவை இன்று சோலையின் நடுவே அமைந்த ஆலயமாகப் புகழ் பெற்றுவிட்டது! 15.11.74 அன்று ம.இ.கவின் அன்றைய தேசியத் தலைவரும் தொழில் அமைச்சருமான டான்ஸ்ரீ டத்தோ வே.மாணிக்கவாசகம் அவர்கள் அடிக்கல் நாட்ட கட்டடவேலை தொடங்கி டத்தோ டாக்டர் பி.டி.அரசு, டத்தோ வி.எல்.காந்தன் ஆகியோரின் முயற்சியில் சிலாங்கூர் மாநில முதல்வர்களின் நிதியுதவியாலும், பலவிதமான முயற்சிகள் எடுத்து நிதிதிரட்டி ஆலயம் திருக்குட நன்னீராட்டு மங்கள விழாவுக்கு தயாராகி 26.6.1977 அன்று காலை முதலாவது கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. அரசு நிலம் வழங்கி பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு திரு.சுப்பையா அவர்களின் கனவு நனவாகியது! 1982ல் (ஆலய வளாகத்தில் அமைந்துள்ள) நவக்கிரக சந்நிதி நிர்மாணிக்கபட்டு 9.7.1982ல் நவக்கிரகப் பிரதிஷ்ட மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 9.7.1989ல் இரண்டாவது கும்பாபிஷேகம் சைவத்திரு சாம்ப மூர்த்தி சிவாச்சாரியாரால் நடத்தப் பட்டது. அதுபோது ஆலய வளாகத்தினுள் மகாலட்சுமி தடாகம் ஒன்றும் நிறுவப்பட்டது. அதன் பிறகு டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலு அவர்களின் யோசனையின் பேரில் அவர்களாலேயே செயல்வடிவம் பெற்று பல மாற்றங்களுடன், மேலும் சில சீரமைப்புகள் செய்து ஆலயத்தை அழகுற அமைத்து, பக்தர்களின் நன்கொடையினாலும் வங்கி கடன் பெற்றும் 24.12.1998ல் ஆலயத்திற்கு அடுத்துள்ள இடத்தையும் ஒப்பந்தம் செய்து துப்புரவு செய்து நில வாஸ்து பூஜை 28.10.1999ல் நடத்தி, மூன்றாவது கும்பாபிஷேக விழாவின் யாகசாலை பிரம்மாண்டமாக அமைத்து 3.6.2001 அன்று கும்பாபிஷேகமும் வெகு விமரிசையாகப் பெரிய விழாவாக நடந்தேறியது. இன்றளவும் மறக்க முடியாதது . இந்திரா காந்தி அமைதிப் பரிசு இந்திரா காந்தி அமைதிப் பரிசு அல்லது இந்திரா காந்தி பரிசு அல்லது அமைதி, ஆயுதத்துறப்பு மற்றும் வளர்ச்சிக்கான இந்திரா காந்தி பரிசு இந்தியாவால் ஆண்டுதோறும் தனிநபர் அல்லது நிறுவனங்களுக்கு பன்னாட்டு அமைதி, வளர்ச்சி மற்றும் புதிய பொருளியல் அமைப்பு, அறிவியல் கண்டுபிடிப்புகள் மக்கள்நலனுக்கு பயன்படுத்துதல் மற்றும் தனிநபர் சுதந்திரத்தை விரிவுபடுத்தல் போன்றவற்றிற்கு அவர்களது பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக வழங்கப்படும் பரிசாகும். இந்திய ரூபாய்கள் 25 இலட்சம் ரொக்கத் தொகையும் பாராட்டிதழும் பரிசாக கொடுக்கப்படுகிறது. 2009 ஆம் ஆண்டுவரை 23 நபர்கள் இப்பரிசினைப் பெற்றுள்ளனர். இந்திராகாந்தி நினைவு அறக்கட்டளையினால் அமைக்கப்படும் பன்னாட்டுக்குழு பரிசினுக்கு உரியவர்களை தேர்ந்தெடுக்கிறது. நாட்டு ஒற்றுமைக்கான இந்திரா காந்தி விருது நாட்டு ஒற்றுமைக்கான இந்திரா காந்தி விருது இந்திய தேசிய காங்கிரசு கட்சியினால் 1985ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் விருதாகும். இது நாட்டின் ஒற்றுமைக்காகவும் இந்தியாவின் பல்வேறு சமய,மொழி,சாதி மற்றும் குமுகக்குழுக்களிடையே புரிந்துணர்வையும் நல்லிணக்கத்தையும் வளர்க்கும் தனிநபர் அல்லது நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. கலை,அறிவியல்,பண்பாடு,கல்வி,இலக்கியம்,இதழியல் மற்றும் பொதுவாழ்வில் முதன்மையானவர்களைக் கொண்ட பரிந்துரை குழுவினால் விருது பெறுவோர் தெரிந்தெடுக்கப்படுகின்றனர். விருது இந்திய ரூபாய்கள் 1.51இலக்கமும் பாராட்டிதழும் கொண்டது. இந்திராகாந்தி இறந்த நாளான 31 அக்டோபர் அன்று இவ்விருது வழங்கப்படுகிறது. கலைமாமணி விருது கலைமாமணி விருது இந்தியாவின் தமிழக அரசினால் ஆண்டுதோறும் கலை மற்றும் பண்பாட்டினை வளர்த்தெடுக்கவும் தொன்மையான கலைவடிவங்களை பேணவும் கலைஞர்களுக்கு வழங்கப்படும் விருதாகும்.இந்த விருது தமிழ்நாடு அரசின் கலை மற்றும் பண்பாடு இயக்ககத்தின் கீழ் இயங்கும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தினால் 1954 முதல்இ லக்கியம்,இசை மற்றும் நாடகத்துறையில் சிறப்பு மிக்கவர்கள் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. தனியாக அறிவிப்பு இல்லை. தனியாக அறிவிப்பு இல்லை. தனியாக அறிவிப்பு இல்லை. தனியாக அறிவிப்பு இல்லை. கோடீஸ்வர ஐயர் கோடீஸ்வர ஐயர் (1870-1936) மிகவும் கருநாடக இசைப்புலமை வாய்ந்தவர். 72 மேளகர்த்தா இராகங்களிலும் இவர் பாடல்கள் இயற்றியிருக்கிறார். இவர் இயற்றிய 'மோகன கர முத்துக்குமரா' பாடல் மிகவும் புகழ் பெற்ற பாடல். முருகன் மீதும், மயிலை கற்பகாம்பாள் மீதும் இவருக்கு அளவு கடந்த பக்தியுடன் அவர்கள் மீது எண்ணற்ற பாடல்களை இயற்றியுள்ளார். கவிகுஞ்சர பாரதியாரின் பேரன். இவரது பாடல்களின் முத்திரையாக "கவிகுஞ்சரதாசன்" என்று தன் தாத்தாவின் பெயரோடு 'தாசன்' என சேர்த்துக் கொண்டார். இவரது பல பாடல்களில் இராக முத்திரையும் இடம் பெறுகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக பணி புரிந்துள்ளார். இசைக்கச்சேரிகளில் தமிழில் கீர்த்தனைகளைப் பாட ஆர்வம் கொண்டவர். ஓவியரும் இசைக்கலைஞருமான எஸ்.ராஜம் அவர்கள் இவரது கீர்த்தனைகளைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட்டுள்ளார். சிறு வயதிலேயே தந்தையை இழந்துவிட்ட இவர், தனது பாட்டனாரால் வளர்க்கபெற்றார். அவர் கோடீஸ்வரருக்கு இசை, வடமொழி மற்றும் தமிழில் புலமை பெறுமளவிற்கு நன்கு கற்றுக் கொடுத்தார். பின்னாளில் இசை நுணுக்கங்களை பட்டிணம் சுப்ரமணிய ஐயர், ராமநாதபுரம் ஸ்ரீநிவாச அயங்கார் ஆகியோரிடம் கற்றுத் தேர்ந்தார். கவிநயமும், இசைநயமும் ஊற்றுபோல இயற்கையாகவும் எளிதாகவும் வெளிப்படுத்தப் பெறும் திறன் பெற்றார். மாணவனாக இருக்கும் காலத்திலேயே தமிழில் சித்தி விநாயகர் பதிகம், சண்முக மாலை, சுந்தரேஸ்வர பதிகம், கயற்கண்ணி பதிற்றுப்பத்து, மீனாட்சி அந்தாதி போன்ற இசைப் படைப்புகளை இயற்றினார். கந்த புராணத்தை கதாகாலட்சேபமும் செய்திருக்கிறார். சென்னை உயர்நீதி மன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக சில காலம் பணியாற்றியதில் ஈட்டிய வருவாயில் தனது பாட்டனாரின் இசைப் படைப்புகளை பதிப்பித்து இருக்கிறார். இவரின் பேரன் கே. வீரமணி, ஒரு சிறந்த பக்தியிசைப் பாடகராக விளங்கியவராவார். இவருக்கு முன்பே, மகா வைத்தியநாத சிவன் அவர்கள், 72 மேளகர்த்தா ராகங்களிலும் பாடல்கள் இயற்றியிருந்தாலும், தமிழிலேயே அனைத்து பாடல்களும் அமையுமாறு அனைத்து மேளகர்த்தா இராகங்களிலும் பாடல்களை இயற்றியது கோடீஸ்வரர் தான். தனது குலதெய்வமான முருகப் பெருமானின் மீது இயற்றிய இப்பாடல் தொகுப்பிற்கு "கந்த கானமுதம்" எனப்பெயர் வழங்கினார். கவித்துவம் நிறைந்த இப்பாடல்களில் ஸ்வரக்ஷர சந்திகளும், அழகான சங்கதிகளும், இராக பாவமும் நிறைந்திருப்பதைக் காணலாம். இவரது பாடல்களும் தூய தமிழில் இல்லாவிட்டாலும், மேளராக கிருதிகளாக இவர் பாடல்களை இயற்றியுள்ளதால், கச்சேரியின் முக்கிய பகுதியில் பாடப்படும் பங்கினைப் பெற்றுள்ளன. பாடல்களுக்கு பதவுரையும் கூடவே சேர்த்து எழுதியுள்ளது மாணவர்களுக்கு பெறும் பேறாகும்.
கந்த கானமிர்த தொகுப்பின் கடவுள் வாழ்த்துப்பாடலாக அமைந்துள்ள பாடல் "வாரண முகவா துணை வருவாய்" எனத் தொடங்கும் விநாயகரைத் துதிக்கும் பாடல். இப்பாடலில் இவரது புலமையும் அவையடக்கமும் ஒரு சேர பரிமளிப்பதைக் காணலாம். ஹம்சத்வனி இராகத்தில் அமைந்துள்ள இப்பாடலில் "கந்த கானமுதம் இயற்றும் பெரும் பணியைத் துவக்கியுள்ளேன். எனக்கோ இன்னிசை, இயல், இலக்கியம், ஆரியம்,தமிழ் இவையனைத்திலும் பெரும் அறிவேதும் இல்லை. இருப்பினும் முன்னவனே, யானை முகத்தவனே, உன்னை முன் நிறுத்தி தொடங்குகிறேன். நீ முன் நின்றால், முடியாதது என்று ஒன்றும் இல்லை" என்று வேண்டிக்கொண்டு இப்பெரும் பணியினைத் துவங்குகிறார்.
நக்கீர தேவ நாயனார் நக்கீர தேவ நாயனார் என்பவர் பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ள பாடல்களைப் பாடிய நக்கீரர் ஆவர். பதினொன்றாம் திருமுறையில் உள்ள பிரபந்தங்களை அருளிச்செய்த ஆசிரியர்கள் திருவாலவாயுடையார், காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், சேரமான் பெருமாள் நாயனார், நக்கீரதேவர், கல்லாட தேவர், கபிலதேவர், பரணதேவர், இளம் பெருமான் அடிகள், அதிரா அடிகள், பட்டினத்து அடிகள் நம்பியாண்டார் நம்பிகள் ஆகிய பன்னிருவராவர். இவர்களுள் திருவாலவாயுடையார் மதுரைத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சோமசுந்தரக் கடவுள் ஆவார். ஏனையோருள் காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர் கோன் நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் ஆகிய மூவர் சுந்தரமூர்த்தி சுவாமிகளால் திருத்தொண்டத் தொகையில் போற்றப்பெற்ற நாயன்மார்கள் ஆவர். இவர்கள் வரலாறு பெரிய புராணத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. சங்கப்புலவரும் சங்கப்புலவர் பெயர் தாங்கியவர்களுமாக நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர் ஆகிய நால்வர் உள்ளனர். ஏனையோராக இளம் பெருமான் அடிகள், அதிரா அடிகள், திருவெண்காட்டு அடிகள் எனப்படும் பட்டினத்தார், நம்பியாண்டார் நம்பிகள் ஆகிய நால்வர் விளங்குகின்றனர். இத்திருமுறையில் கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி, திருஈங்கோய்மலை எழுபது, திருவலஞ்சுழி மும்மணிக்கோவை, திருஎழுகூற்றிருக்கை, பெருந்தேவபாணி, கோபப்பிரசாதம், கார் எட்டு, போற்றித்திருக்கலி வெண்பா, திருமுருகாற்றுப் படை, திருக்கண்ணப்ப தேவர் திருமறம் ஆகிய பத்துப் பிரபந்தங்கள் நக்கீர தேவர் அருளியனவாக உள்ளன. இப்பிரபந்தங்களில் ஒன்பதாவதாக அமைந்துள்ள திரு முருகாற்றுப்படை சங்க நூலாகிய பத்துப் பாட்டில் முதலாவதாக அமைந்துள்ளது. இதனைப் பாடியவர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்று குறிக்கப்பெற்றுள்ளது. கடைச்சங்கப் புலவராகிய இவரது காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டாகும். ஏனைய பிரபந்தங்கள் சொல் வழக்கு முதலியவற்றாலும் பொருள் அமைதியாலும், தேவார திருவாசகக் கருத்துக்களும் சொற் றொடர்களும் இடம் பெற்றிருப்பதாலும் சமய குரவர்க்குப்பின் கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நக்கீரர் பெயர் தாங்கிய ஒருவரால் செய்யப் பெற்றனவாதல் வேண்டும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும். நக்கீரர் என்ற பெயரில் கீரன் என்பது இயற்பெயர். ந, சிறப்புப் பொருள்தரும் இடைச்சொல் . இப்பெயரை நல் கீரன் என்பதன் திரி பாகக் கொள்வாரும் உளர். பதினொன்றாம் திருமுறையில் சமயஞ் சார்ந்த அருளாளர் நிலையில் நக்கீரதேவ நாயனார் என இவர் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. பெரும்பற்றப்புலியூர்நம்பி, பரஞ்சோதி முனிவர் ஆகியோர் இயற்றிய திருவிளையாடற் புராணங்களில் கூறப்படும் நக்கீரர் வரலாறே இன்றைய சமய உலகில் பெரு வழக்காயுள்ளது. பாண்டிய மன்னன் அகப்பொருள் நூல் கிடைக்கவில்லையே என மனங்கவன்ற காலத்தில் திருஆலவாய் இறைவன் `அன்பின் ஐந்திணை` எனத் தொடங்கி அகப்பொருள் நூல் ஒன்றை எழுதி அவன்பால் சேர்ப்பித்து அம்மன்னன் மனக் கவலையைப் போக்கி யருளினார். அந்நூலைச் சங்கப்புலவர் அனைவரும் பாராட்டிப் போற்றினர். நக்கீரர் மட்டும் அந்நூலைக் குறைகூற இறைவன் தானே தமிழ்ப்புலவராய்த் தோன்றி நக்கீரரின் மன மருட்சியை நீக்கி அவருக்குத் தெளிவு ஏற்படுத்தி மறைந்தருளினார். சண்பகமாறன் என்னும் பெயரினனாகிய பாண்டிய மன்னன் தன் தேவியோடு தனித்து உலாவியபோது அவள் கூந்தலிலிருந்து தோன்றிய நறுமணத்தை நுகர்ந்து அம்மணம் பூவொடு இணைந்ததால் உண்டான செயற்கை மணமா? அல்லது இயல்பான கூந்தலின் மணமா என ஐயுற்று அவ்வையத்தை வெளிப்படுத்தாது புலவர்களை அழைப் பித்து `என் மனத்திடை எழுந்ததோர் ஐயத்தைத் தெளிவிப்பார்க்கு ஆயிரம் பொன்` என அறிவித்துப் பொற்கிழியைச் சங்கமண்டபத்தே தொங்கவிடச் செய்தான். பெரும் புலவர்கள் பலர் முயன்றும் அவ்வையத்தைப் போக்கிப் பொற்கிழியைப் பெற இயலவில்லை. இஃது இங்ஙனமாக மதுரைத் திருக்கோயிலில் சிவபிரானை வழிபடும் பிரமசாரியாகிய தருமி என்பவன் தான் திருமணம் செய்து கொள்ள விரும்பிப் பெருமானிடம் தன் வறிய நிலையை எடுத் துரைத்துத் தனக்குப் பொருள் அருளுமாறு வேண்டிக் கொண்டான். ஆலவாய் இறைவன் அவனது வேண்டுகோளை நிறைவேற்றக் கருதி, `கொங்குதேர் வாழ்க்கை` என்னும் செய்யுளை இயற்றித் தந்து அதனைச் சங்கப் புலவரிடம் காட்டிப் பொற்கிழியைப் பெற்றுக் கொள்க என்றும், இப்பாடலை யாரேனும் குறைகூறின் நாமே வந்து விளக்கம் கூறி உதவுவோம் எனவும் உரைத்தருளினார்.சொற்போர் அப்பாடலைப் பெற்றுக்கொண்ட தருமி சங்கப் புலவர்களிடம் காட்டினான். அவர்கள் அதனைப் படித்தறிந்து ஒன்றும் கூறாதிருத் தலைக் கண்டு அதனை வாங்கிச் சென்று பாண்டிய மன்னனிடம் காட்டினான். மன்னன் தன் மனத்தெழுந்த ஐயத்தை அகற்றிய அச் செய்யுளைப் படித்துப் பாராட்டிப் பொற்கிழியை எடுத்துச் செல்லுமாறு கூறினான். நக்கீரர் இப்பாடல் பொருட் குற்றம் உடையது எனத் தருமியைத் தடுத்து நிறுத்தி இப்பாடலைப் பாடி அனுப்பியவரையே அழைத்து வருமாறு கூறித் தருமியை அனுப்பியருளினார். இதனைத் தெரிவிக்கக் கேட்ட ஆலவாய் அவிர்சடைக் கடவுள் தானே தமிழ்ப் புலவராய் வெளிப்பட்டுத் தருமியுடன் சங்க மண்டபத்தை அடைந்து `இப்பாடலில் குற்றம் கண்டவன் யாவன்?` என வினவியருளினார். நக்கீரர் நானே குற்றம் கூறியவன் எனக் கூறக்கேட்ட இறைவன்; எனக் கேட்ட அளவில் நக்கீரர் அதற்கு மறுமொழியாக; என்ற செய்யுளால் விடையிறுத்தார். தாம்பாடிய பாடலில் என்ன குற்றம் கண்டீர் என இறைவர் கேட்க நக்கீரர் `மகளிர் கூந்தல் மலர் முதலியவற்றாலும் நறுமணம் ஊட்டுவதாலும் செயற்கையான மணம் பெறுவதேயன்றி இயற்கை யான மணம் உடையதன்று ஆதலின் இச்செய்யுள் பொருட் குற்றம் உடையது என்றார். பெருமான் உத்தம சாதிப் பெண்டிர், தேவமாதர், உமையம்மை முதலானோர் கூந்தலுக்கும் அப்படித்தானோ? எனக் கேட்டார். நக்கீரர் தான் கூறியதையே சாதிக்கும் முறையில் அவையும் அப்படியே என்றார். சிவபிரான் தன்னை அடையாளம் காட்டும் குறிப்பில் தன் சடைமுடியை வெளிப்படுத்தினார். நக்கீரர் தமிழ் வல்ல என்னைச் சடைமுடி காட்டி வெருட்ட வேண்டாம் என்றார். பெருமான் சினந்து தன் நெற்றி விழியைத் திறந்தார். அவ்விழி அழலால் வெதுப்புற்ற நிலையிலும் நக்கீரர் நெற்றிவிழி காட்டினும் குற்றம் குற்றமே எனப் பிடிவாதமாகக் கூறக் கேட்ட பெருமான் அவரைத் தன் விழி வெம்மையால் வாடுமாறு செய்ய நக்கீரர் அதனைப் பொறுக்கலாற்றாதவராய்ப் பொற்றாமரைத் தடாகத்தில் வீழ்ந்தார். இறைவன் மறைந்தருளினார். தருமி தனக்குரிய பொற்கிழியை மன்னன் பால் பெற்றுச் சென்றான். நக்கீரர் தன் பிழை உணர்ந்து வருந்தி கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதியால் இறைவனைப் போற்ற அதனைக் கேட்டு மகிழ்ந்த இறைவன் அவரைக் கரையேற்றி அகத்தியரைக் கொண்டு அவருக்குத் தமிழின் நுட்பங்களை உணர்த்தச் செய்தருளினார். நக்கீரர் கோபப்பிரசாதம், பெருந்தேவபாணி திருஎழு கூற்றிருக்கை முதலிய பிரபந்தங்களால் சிவபிரானைப் போற்றிப் பரவினார். இறையனார் அருளிய அகப்பொருள் நூலுக்கு நல்லுரை தருமாறு அவ்விறைவரையே புலவர்கள் வேண்ட பெருமான் உருத்திரசன்மர் மூலம் நக்கீரர் கபிலர் பரணர் ஆகியோர் உரைகளே சிறந்தவை என உணர்த்துமாறு செய்தருளினார். இவை நக்கீரர் பற்றித் திருவிளையாடற் புராணத்துட் கூறப்படும் வரலாறாகும். பொற்றாமரைக் குளத்திலுருந்து நக்கீரர் கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி பாடியதைக் கல்லாடம், அருந்தமிழ்க் கீரன் பெருந்தமிழ்ப் பனுவல் பாவியிற் கேட்ட காவியங் களத்தினன் எனக் குறிப்பிடுகிறது. இறைவன் `கொங்குதேர் வாழ்க்கை` என்னும் பாடல் பாடி தருமிக்குப் பொற்கிழி பெற்றளித்ததை, பொதியப் பொருப்பன் மதியக் கருத்தினைக் கொங்குதேர் வாழ்க்கைச் செந்தமிழ்க் கூறிப் பொற்குவை தருமிக்கு அற்புடன் உதவி எனக் குறிப்பிடுகிறது. அப்பர் சுவாமிகள், நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி நற்கனகக் கிழிதருமிக்கு அருளினோன்காண் எனப் போற்றியருள்கிறார். சீகாளத்திப் புராணத்தில் நக்கீரர் திருமுருகாற்றுப்படை பாடிய வரலாறு சீகாளத்திப் புராணத்திலும் திருப்பரங்கிரிப் புராணத்திலும் சில வேறுபாடுகளுடன் காணப்படுகிறது. நக்கீரர் கயிலையை காணும் பெருவிருப்போடு யாத்திரை மேற் கொண்டு வழியிடையே தடாகம் ஒன்றைக் கண்டு நீர் பருகி, ஆலமர நிழல் ஒன்றில் இளைப்பாறியிருந்தார். அவ்வேளையில் அம்மரத்தின் இலையொன்று நீரில் பாதியும் நிலத்தில் பாதியுமாக கீழே உதிர்ந்து விழுந்தது. நீரில் படிந்த இலையின் பாகம் மீனாகவும், நிலத்தில் கிடந்த இலையின் பாகம் பறவையாகவும் உருமாறி ஒன்றை ஒன்று இழுத் தலைக் கண்டு அதிசயித்துத் தன்னை மறந்தார் நக்கீரர். அவ்வேளை யில் பூதம் ஒன்று அவரைப் பற்றிச் சென்று சிறையில் அடைத்தது. அச்சிறையில் அதற்கு முன்னர் தொளாயிரத்து தொண்ணூற்றொன்பது பேர் அடைக்கப்பட்டிருந்தனர். நக்கீரரைச் சிறையில் அடைத்ததனால் சிறை வாசிகள் ஆயிரம் ஆயினர். பூதம் ஆயிரம் பேரையும் ஒருங்கே உண்ணும் கருத்தில் நீராடச் சென்றது. அங்கிருந்தோர் நக்கீரர் வாராதி ருந்தால் இன்னும் சில நாள் தாங்கள் உயிரோடிருந்திருக்கலாம் அவர் வரவால் இறக்க நேரிட்டு விட்டதே எனக் கூறக் கேட்டுத் தமிழ்த் தெய்வமாகிய முருகப்பெருமானை வேண்டித் திருமுருகாற்றுப்படை பாடிப் போற்றினார். முருகப்பெருமான் அவருக்குக் காட்சியளித்து அனைவரையும் சிறையிலிருந்து விடுவித்ததுடன் நக்கீரரைத் `திருக்காளத்தி தரிசனம் செய்தால் போதும் அதுவே திருக் கயிலையைத் தரிசித்த பலனைத் தரும்` எனக்கூறி அருள் புரிந்தார். நக்கீரர் கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி பாடி இறையருள் பெற்றார். இவ்வரலாறு திருப்பரங்குன்றத்தில் நிகழ்ந்ததாகத் திருப் பரங்கிரிப் புராணம் கூறுகிறது. சிவப்பிரகாச சுவாமிகள் முருகப் பெருமான் நக்கீரனைப் பொய்கை ஒன்றில் மூழ்கச் செய்து திருக் காளத்தியில் எழச் செய்து கயிலைக் காட்சியை அவருக்குக் காட்டியருளினார் எனக் கூறுகிறார். நக்கீரர் பாடியனவாகப் பதினொன்றாந் திருமுறையில் இடம் பெற்றுள்ள பத்துப் பிரபந்தங்களில் ஒன்பதாவதாக அமைந்த திரு முருகாற்றுப்படை, பத்துப்பாட்டில் முதற் பாட்டாக அமைந்து சங்ககால நூலாக விளங்குகிறது. கடைச்சங்கப் புலவராகிய இவரது காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டாகும். பதினொன்றாம் திருமுறையில் திருமுருகாற்றுப்படை தவிர்ந்த ஏனைய நூல்கள் சொல் வழக்கு முதலியவற்றாலும் பொருள் அமைதியாலும் தேவார திருவாசகக் கருத்துக்கள் சொற்றொடர்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளதாலும் இந்நக்கீரதேவர் தேவார திருவாசக ஆசிரியர்களின் காலத்திற்குப்பின் கி.பி. 9-ஆம் நூற்றாண் டில் வாழ்ந்தவர் ஆகலாம் எனப் பேராசிரியர் திரு.க. வெள்ளை வாரணனார் பன்னிரு திருமுறை வரலாற்றில் ஆராய்ந்து நிறுவியுள்ளார். நக்கீரதேவர் திருஈங்கோய்மலை எழுபது பாடிய காரணத்தால் அத்தலத்தில் தேவாரமூவர் திருவுருவங்களோடு நக்கீரர் திரு வுருவமும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கட்கு அபிடேகம் வழிபாடு செய்வித்தற்கு மூன்றாங் குலோத்துங்க சோழ மன்னன் நிலம் அளித்துள்ள செய்தி அங்குள்ள கல்வெட்டில் காணப்படுகிறது. இவற்றைக் காணுங்கால் தேவார மூவர்க்குப்பின் வாழ்ந்த பெரும் புலவர் ஒருவர் நக்கீரர் பெயரோடு வாழ்ந்தார் எனவும், அப்புலவரே இந்நூல்களை இயற்றியுள்ளார் எனவும் கொள்வதில் தவறில்லை எனலாம். மேலும் சங்கப்புலவராகிய திருமுருகாற்றுப்படை ஆசிரியர் பெயர் நக்கீரர் என்று மட்டுமே உள்ளது. இந்நூல்களை அருளிய புலவர் பெயரோ நக்கீர தேவர் என்பதாலும் இருவரும் வேறு வேறானவர் எனக் கருதலாம். நக்கீரர் பற்றிய கதை வழக்கிற்குக் காரணமாகக் கூறும் சான்று, நக்கீரர் பாடிய பெருந்தேவபாணியில் என்பதாகும். இப்பாடலில் வரும் பழிச்சினன் என்ற சொல்லுக்கு போற்றித் துதித்தேன் எனப் பொருள் காணாது பழித்தனன் என்று பொருள் கொண்டதால் ஏற்பட்ட விபரீதமே நக்கீரர் இறைவன் பாடலில் பிழை கண்டு பின் அவர் அருள் வேண்டிப் பல பிரபந்தங் களால் போற்றினார். என்னும் புனைவுக் கதைகட்குக் காரணமாயிற்று எனவும் கூறுவர். உண்மை வடக்கு உண்மை வடக்கு என்பது, புவியின் மேற்பரப்பு வழியே புவியியல் வடமுனையை நோக்கிய திசை ஆகும். உண்மை வடக்கு, காந்த வடக்கு, வலையமைப்பு வடக்கு என்பவற்றினின்றும் வேறானது. காந்தவடக்கு காந்த வடமுனையை நோக்கிய திசையாகும். காந்தத் திசைகாட்டி காட்டும் திசை இதுவேயாகும். வலையமைப்பு வடக்கு என்பது, நிலப்பட எறியத்தில் காட்டப்படும் வடக்கு நோக்கிய கோடுகள் வழியேயான திசையாகும். உண்மை வடக்குத் திசை விண்ணில், வட விண்முனையால் குறிக்கப்படும். பெரும்பாலான நடைமுறை நோக்கங்களுக்கு துருவ விண்மீனை நோக்கிய திசையே இத் திசையாகும். எனினும், புவியின் அச்சுத் திசைமாற்றம் காரணமாக உண்மை வடக்கு ஒரு வில்வடிவத்தில் சுழல்கிறது. இந்த ஒழுக்கு முழுமை அடைய ஏறத்தாழ 25,000 ஆண்டுகள் செல்லும். 2102 ஆம் ஆண்டில், துருவ விண்மீன், விண் வடமுனைக்கு மிகக் குறுகிய தூரத்தில் வரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்க நிலவியல் அளவையகத்தாலும், ஐக்கிய அமெரிக்கப் படைத்துறையாலும் வெளியிடப்படும் நிலப்படங்களில், உண்மை வடக்கு ஐந்துமுனை விண்மீன் வடிவத்தில் முடிவடையும் கோடொன்றினால் குறிக்கப்படுகின்றது. ஐக்கிய இராச்சியப் படைத்துறை அளவையகம் வெளியிடும் நிலப்படங்களில் மூன்று வகை வடக்கையும் வேறுபடுத்திக் காட்டும் சிறிய வரைபடம் ஒன்று ஓரிடத்தில் காணப்படும். விண்முனை விண்முனைஎன்பது, வட விண்முனை அல்லது தென் விண்முனையைக் குறிக்கும். புவியின் சுழற்சி அச்சை முடிவில்லாமல் நீட்டும்போது, விண்கோளம் எனப்படும் கற்பனையான சுழலும் விண்மீன்களைக் கொண்ட கோளத்தை அது வெட்டும் இரண்டு புள்ளிகளே இவ்விரு விண்முனைகளும் ஆகும். வடமுனையிலும் தென் முனையிலும் நின்று பார்ப்பவர்களின் தலைக்கு நேர் மேலாக முறையே வட விண்முனையும், தென் விண்முனையும் இருக்கும். இரவில், வானில் தெரியும் விண்மீன்கள் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகர்வதாகத் தோற்றம் அளிக்கும். இதே இயக்கம் பகலிலும் நிகழ்ந்தாலும், விண்மீன்களைப் பகலில் பார்க்க முடிவதில்லை ஆதலால் இந்த இயக்கத்தைக் கவனிக்க முடிவதில்லை. இந்த இயக்கம் முழுச்சுற்றைச் சுற்றி முடிப்பதற்கு 24 சூரிய மணிகள் எடுக்கும். விண்மீன்கள் சுழல்வது போல் தோன்றும் இந்தத் தோற்றப்பாடு புவி அதன் அச்சில் சுழல்வதினால் ஏற்படுவது ஆகும். புவி சுழலும்போது, விண்முனைகள் நிலையாக இருப்பதாகவும், விண்ணில் உள்ள ஏனைய புள்ளிகள் அவற்றைச் சுற்றி சுற்றுவது போலவும் தோன்றும். தாண்டிக்குளம் கந்தசுவாமி கோவில் வவுனியா, தாண்டிக்குளம் அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி கோவில் யாழ் கண்டி ஏ9 நெடுஞ்சாலையில் வவுனியா கச்சேரியில் இருந்து வடக்காக சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் தாண்டிக்குளம் புகையிரத (தொடருந்து) நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் கும்பாபிஷேகம் ஆவணிமாதம் 2001 இல் நடைபெற்றது. ஆலயத்தில் தினமும் காலை மாலை என இரண்டு நேரப் பூசை நடைபெறுகின்றது. வருடாந்த அலங்கார உற்சவம் ஆவணிமாத கார்த்திகை நட்சத்திரத்தில் (ஒரு மாதத்தில் இரண்டு காத்திகை வந்தால் இரண்டாவது கார்த்திகை) தீர்த்தோற்சவம் உடனான பத்துநாட்கள் திருவிழா நடைபெறும். விசேட உற்சவங்களாக வருடாந்த உற்சவம், கந்தசஷ்டி, கேதாரகௌரி விரதம் ஆகியன இடம்பெறுகின்றன. தாண்டிக்குளம் கந்தசுவாமி கோவிலின் முப்பரிமாணப்பார்வை மன்னா தே மன்னா தே ("Manna Dey", ) என்று பெரிதும் அறியப்பட்ட,பிரபோத் சந்திர தே (1 மே, 1919 - 24 அக்டோபர் 2013), இந்தி மற்றும் வங்காள திரைப்படங்களில் 1950 - 1970 காலகட்டங்களில் மக்களால் மிகவும் விருப்பப்பட்ட பின்னணி பாடகராவார். தமது வாழ்நாளில் 3500 பாடல்களுக்கும் கூடுதலாக பாடல்களை பதிவு செய்துள்ளார். 2007ஆம் ஆண்டுக்கான தாதாசாஹெப் பால்கே விருது பெற்றவர்.பத்மஸ்ரீ.பத்மபூசண் விருதுகள் பெற்றவர். பூர்ண சந்திர தே மற்றும் மகாமாயா தே தம்பதியினருக்கு பிறந்தார். தமது தந்தையின் உடன்பிறப்பான இசையாசிரியர் கே சி தேயின் தாக்கத்தால் இசையின்பால் ஆர்வமிக்கவரானார். இந்து பாபர் பாடசாலையில் துவக்கக் கல்வியும்,ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரி பள்ளியிலும் பின் கல்லூரியிலும் உயர்கல்வியும் பெற்றார். வித்யாசாகர் கல்லூரியில் பட்டப்படிப்பு மேற்கொண்டார். கே சி தே மற்றும் உசுதாது தாபீர் கான் இவர்களிடம் இந்துஸ்தானி இசையை முறையாக பயின்றார். கல்லூரிகளுக்கிடையேயான இசைப்போட்டிகளில் முதல் பரிசுகள் பெற்று வந்தார். 1942ஆம் ஆண்டு மும்பை சென்று இசையமைப்பாளர் சச்சின் தேவ் பர்மனிடம் உதவியாளராகச் சேர்ந்தார். பின்னர் மற்ற இசையமைப்பாளர்களிடமும் உதவியாளராக பணி புரிந்தார். அப்போது இணையாக தமது இந்துஸ்தானி பயிற்சியை உசுதாது அமன் அலி கான் மற்றும் உசுதாது அப்துல் ரகுமான் கானிடம் தொடர்ந்து வந்தார். 1943ஆம் ஆண்டு "தமன்னா" என்ற திரைப்படத்தில் பின்னணிப் பாடகராக தமது திரையிசைவாழ்க்கையை துவங்கினார். பின்னர் இந்தி,வங்காள மொழி திரைப்படங்களில் பல நினைவு நீங்கா பாடல்களைப் பாடி முதன்மைநிலை எய்தினார். மலையாளத்தில் "செம்மீன்" என்ற திரைப்படத்தில் "மானச மஞ்யு வரூ" என்ற பாடல் தென்னிந்திய திரையுலகிற்கு இவரை அறிமுகம் செய்தது. கேரளாவின் சுலோசனா குமாரனை திசம்பர் 18, 1953இல் திருமணம் செய்து கொண்டார். சுரோமா,சுமிதா என இரு மகள்கள் உள்ளனர். மும்பையில் ஐம்பது ஆண்டுகள் வாழ்ந்தபிறகு தற்போது பெங்களூருவில் கல்யாண்நகர் பகுதியில் வசித்து வருகிறார். இன்றும் உலகெங்கும் இசைப்பயணங்கள் மேற்கொள்கிறார். இவரது சுயசரிதை வங்காளத்தில் "ஜீபோனேர் ஜல்சகோரே" என்றும், இந்தியில் "யாதேன் ஜீ உதி" என்றும், மராத்தியில் "ஜீபோனேர் ஜல்சகோரே" என்றும் ஆங்கிலத்தில் "மெமொரீஸ் கம் அலைவ்" என்றும் பதிப்பிக்கப்பட்டுள்ளன. பொது உரிமைப் பரப்பு பொது உரிமைப் பரப்பு எனக்குறிப்பிடப்படுவது, அறிவுத்திறன் உடமை என்றும் கூறப்படும் எவராலும் கட்டுப்படுத்தப்படாத அல்லது உடமை கொள்ளாத எண்ணக்கரு தொகுப்பு ஆகும்.இச்சொற்றொடர் மூலம் இக்கருக்கள் "பொது உடமை" என்றும் எவரும் எக்காரணத்திற்காகவும் பயன்படுத்தலாம் எனவும் அறியலாம்.பலதரப்பட்ட அறிவுத்திறன் உடமைப் போலன்றி பொது உரிமைப்பரப்பினை வரையறுக்க இயலும்.பல்வேறு நாடுகளின் சட்டங்கள் பொது உரிமைப் பரப்பின் வீச்செல்லையை வெவ்வேறாக வரையறுத்துள்ளன.ஆகவே நாம் பொது உரிமைப் பரப்பினை விவாதிக்கையில் எந்த அதிகார பரப்பில் குறிப்பிடுகிறோம் என்பது முக்கியமானது. பொது உரிமைப் பரப்பில் உள்ள ஆக்கங்களை காப்புரிமை பெற்ற ஆக்கங்களுடன் ஒப்பிடுவது வழக்கம். தற்கால சட்டங்களின்படி, ஓவியம்,காவியம்,இசை போன்ற எந்தவொரு மூல ஆக்கமும் அவை உருவாக்கப்பட்ட நேரத்திலிருந்தே சில காலம் (கால அளவு நாட்டிற்கெற்ப மாறும்) காப்புரிமை பெறுகின்றன.அக்கால அளவு முடிவுறும் வேளையில் அவ்வாக்கங்கள் பொது உரிமைப் பரப்பில் உள்ளதாகக் கருதப்படும்.ஓர் மதிப்பீட்டின்படி,உலகிலுள்ள அனைத்துப்புத்தகங்களிலும் 15% அளவே பொது உரிமைப் பரப்பில் உள்ளது;10% இன்னும் அச்சகத்தில் இருக்க, 75% புத்தகங்கள் காப்புரிமையால் பாதுகாக்கப்பட்டுள்ளன. வணிகக் குறிகள் ஓர் நிறுவனத்தின் வணிக நோக்கத்திற்காக தாம் மட்டுமே பயன்படுத்தும் பெயர்.சின்னங்கள் மற்றும் பிற அடையாளங்கள்.இவை காலக்கெடு எதுவுமின்றி பயன்படுத்தப் படலாம்;அவையும் புறக்கணிப்பு,பயன்பாடின்மை அல்லது தவறான பயன்பாடு என பொதுஉரிமைப் பரப்பில் வரலாம்.அதேபோல பயன்படாதிருந்து பொதுப்பரப்பில் உள்ள வணிகக்குறியை அந்நிறுவனம் மீண்டும் மீட்கலாம். ஆக்கவுரிமை என்பது ஓர் கண்டுபிடிப்பாளர் தமது கண்டுபிடிப்பை பதிந்து கொண்டு வேறெவரும் அதனை பாவிப்பதை தடை செய்வதாகும்.காப்புரிமைகள் போலவே ஆக்கவுரிமைகளும் குறிப்பிட்ட காலாளவிற்கே செல்லும்;அதன்பிறகு அவை எவரும் பாவிக்கும் வண்ணம் பொது உரிமைப்பரப்பைச் சாரும். வட காந்தமுனை புவியின் வட காந்தமுனை ("North Magnetic Pole") என்பது புவியின் காந்தப்புலம் நிலைக்குத்தாகக் கீழ் நோக்கி இருக்கும்படியான புவி மேற்பரப்பில் உள்ள ஒரு இடம் ஆகும். காலத்தைப் பொறுத்து இப்புள்ளி படிப்படியாக மாறுகிறது. உண்மையில் வட காந்தமுனை காந்தப்புலத்தின் தென்முனை ஆகும். 2001 ஆம் ஆண்டில் வட காந்தமுனையின் அமைவிடம் வட கனடாவில் உள்ள எல்லெசுமியர் தீவுக்கு அண்மையில் ஆல் குறிக்கப்படும் புள்ளியில் இருப்பதாக கனடா நிலவியல் அளவையகத்தினால் கணிக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டில் இதன் அமைவிடம் என மதிப்பிடப்பட்டுள்ளது. தென் அரைக்கோளத்தில் உள்ள இதனை ஒத்த புள்ளி தென் காந்தமுனை ஆகும். புவியின் காந்தப்புலம் சமச்சீர்த் தன்மை கொண்டதல்ல ஆதலால் வட காந்தமுனையும், தென் காந்தமுனையும் ஒன்றுக்கொன்று நேரெதிராக அமைந்திருப்பதில்லை. அதாவது வட காந்தமுனையையும், தென் காந்தமுனையையும் இணைத்து வரையப்படும் கோடு புவிக் கோளத்தின் மையத்தினூடாகச் செல்லாது. உண்மையில் இம் மையம் மேற்குறிப்பிட்ட கோட்டில் இருந்து 530 கிமீ (329.3 மைல்) தொலைவில் உள்ளது. எல்லெசுமியர் தீவு எல்லெசுமியர் தீவு கனடாவின் ஆட்சிப்பகுதியான நுனாவுத்தைச் சேர்ந்த கிக்கிக்தாலுக் பிரதேசத்தின் ஒரு பகுதி ஆகும். கனடாவின் ஆக்டிக் தீவுக்கூட்டங்களுக்குள் அடங்கிய இது, குயீன் எலிசபெத் தீவுகளின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. 196,235 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இத் தீவு உலகின் பத்தாவது பெரிய தீவும், கனடாவின் மூன்றாவது பெரிய தீவும் ஆகும். ஆர்க்கிட் மலைத்தொடர்த் தொகுதி எல்லெசுமியர் தீவின் பெரும்பகுதியை மூடியுள்ளது. இதனால் கனடாவின் ஆர்க்டிக் தீவுக்கூட்டங்களில் உள்ள தீவுகளில் கூடிய மலைப்பாங்கான தீவு இதுவாக உள்ளது. "ஆர்க்டிக் வில்லோ" எனப்படும் மரவகையே இத்தீவில் வளரும் ஒரே மரவகை ஆகும். இப்னு பதூதா இப்னு பதூதா ("Ibn Battuta") என்றழைக்கப்படும் அபு அப்துல்லா முகமது இபின் பதூதா மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த கல்வியாளரும் ஒரு நாடுகாண் பயணியும் ஆவார். "ரிகிலா" எனப்படும் இவரது பயணங்களைப் பற்றிய விபரங்கள் பெயர்பெற்றவை. இவரது பயணங்கள் ஏறத்தாழ 30 ஆண்டுகள் நீடித்ததுடன், அறியப்பட்ட இசுலாமிய உலகம் முழுவதையும், அதற்கும் அப்பாலுள்ள நாடுகளையும் உள்ளடக்கி இருந்தன.இவர் வடக்கு ஆப்பிரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா, தெற்கு ஐரோப்பா. கிழக்கு ஐரோப்பா, மையக் கிழக்கு, இந்தியத் துணைக் கண்டம், நடு ஆசியா, தென்கிழக்கு ஆசியா, சீனா ஆகிய நான்கு திசைகளிலும் பரந்திருந்த பகுதிகளூடாகப் பயணம் செய்துள்ளார். இவர் கடந்த தூரம் இவருக்கும் முன் பயணம் செய்தவர்களும், இவரது கிட்டிய சமகாலத்தவரான மார்க்கோ போலோவும் கடந்த தூரங்களைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிகமானது. இவர் 44 நாடுகள் 11000 நாட்கள், 75,000 மைல்கள் நீண்ட பயணம் செய்துள்ளார். தான் சென்ற நாடுகளைப் பற்றியும் துல்லியமாக தனது நினைவுகளைத் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறார். மொராக்காவில் உள்ள டேன்ஜீர் என்ற சிறிய நகரத்தில் 1304 ஆம் ஆண்டில் ஒரு நீதிபதியின் மகனாகப் பிறந்தவர் இபின் பதூதா. சிறு வயதிலேயே மதக் கல்வியும் அரபி இலக்கணமும் பயின்றார். இஸ்லாமிய நெறிகளில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்த குடும்பம் என்பதால் அவரது கனவம் முழுமையும் இறையியல் மீதாகவே உருவானது. தனது 20 ஆம் அகவையில் இபின் பதூதா மெக்காவிற்குப் புனிதப் பயணம் துவங்கினார். புனிதக் கடமைகளை நிறைவேற்றுவதற்காகத் துவங்கிய இந்தப் பயணமே அவரை உலக நாடுகளுக்கு இட்டுச் சென்றது. இசுலாமிய மாலிகி மத்ஹப் பிரிவின் நீதிபதியாக அப்பிரிவு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இபின் பதூதா மெக்காவிற்குப் பயணம் மேற்கொள்ளும்போதே இதுவரை தான் அறியாத நிலப்பரப்புகளையும் பல்வேறு வகையான கலாச்சாரக் கூறுகளையும் அறிந்துகொள்ளத் துவங்கினார். புனிதப் பயணம் முடிந்து பயணிகள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பும்போது இபின் பதூதாவிற்கு மட்டும் இன்னும் சில காலம் அங்கே தங்கி அங்கு வழிபாட்டிற்கு வரும் மக்களைப் பற்றியும் மெக்காவின் தினசரி வாழ்க்கை பற்றியும் அறிய ஆர்வம் ஏற்பட்டது. இதற்காக இரண்டு ஆண்டுகள் அவர் மெக்காவில் தங்கியிருந்து அங்குள்ள கலாச்சாரக் கூறுகளை நுண்மையாக அறிந்து கொண்டார். மெக்காவில் தங்கியிருந்த இபின் பதூதாவிற்கு உலகம் முழுவதும் இருந்த இஸ்லாமிய அரசர்களை நேரில் கண்டு வரவேண்டும் என்ற ஆசை உருவானது. இதனை வெளிகாட்டாமல் மெக்காவில் தன்னோடு நெருக்கமாக இருந்த வணிகர்கள் மற்றும் கடலோடிகளோடு சேர்ந்துகொண்டு தனது பயணத்தைத் துவக்கினார். ஆறு ஆண்டுகாலம் அவர் தொடர்ந்து பயணம் செய்தார். இந்தப் பயணத்தின் நடுவே பாக்தாத்திலும் மெசபடோனியாவிலும் குபா என்ற பழமையான நகரிலும் சில மாதங்கள் தங்கிச் சென்றார். பாக்தாத் நகரில் இபின் பதூதா தங்கியிருந்த நாட்களில் அந்நகரைப் பற்றித் தனது குறிப்புகளில் பதிவு செய்துள்ளார். அங்குள்ள குளியல் அறைகள் பற்றியும் பாக்தாத் நகரின் தெருக்கள், அங்காடிகள், இசைக் கூடங்கள், வீதிகள், அங்கு நிலவும் தட்பவெப்பம், அங்கு தயாரிக்கப்படும் உணவு, அங்குள்ள மக்களின் பேச்சுவழக்கு, என்ன வகையான உடையணிந்திருந்தார்கள், அன்றைய செலாவணியில் இருந்த நாணயம், அங்கிருந்த மரங்கள், மக்களிடம் இருந்த கேளிக்கை விருப்பங்கள், அங்கிருந்த மக்களின் மத ஈடுபாடுகள் போன்ற செய்திகளைக் குறிப்பிட்டுள்ளார். இபின் பதூதா பாக்தாத் நகரில் உள்ள ஒரு பொது குளியலறை ஒன்றிற்குள் குளிப்பதற்காகச் சென்றார். உள்ளே நுழைந்த அவருக்கு மூன்று துண்டுகள் கொடுக்கப்பட்டன. ஒன்று உள்ளே நுழையும் போது தனது உடைகளைக் கழட்டிக்கொண்டு குளிப்பதற்காக இடுப்பில் கட்டிக்கொள்வதற்கு. மற்றொன்று, குளித்த பிறகு ஈரத்துண்டிற்கு மாற்றாகக் கட்டிக் கொள்வதற்கு. மூன்றாவது உடலைத் துவட்டிக் கொள்வதற்கு. குளியலை மக்கள் ஒரு கொண்டாட்டமாக மேற்கொண்டனர். இப்படி சுத்தமானதும் சுகாதாரமானதுமான குளியல் முறை நாடெங்கும் ஒரே சீராக இருந்தது என்று இபின் பதுதா தனது பயணக்குறிப்பில் குறிப்பிடுகிறார். தனது நீண்ட பயணத்தின் ஒரு பகுதியாக இபின்பதூதா இந்தியாவிற்கும் வருகை புரிந்துள்ளார். முகமது பின் துக்ளக் ஆட்சிக் காலத்தில் இவர் டெல்லிக்கு வருகை புரிந்த போது துக்ளக் ஒரு உள்நாட்டுக் குழப்பத்தை தீர்த்து வைப்பதற்காகத் தென்பகுதிக்குச் சென்றிருந்தார். ஆனாலும் அவருக்கு ஒரு வெளிநாட்டுப் பயணி தன்னைக் காண வந்திருப்பது தெரிவிக்கப்பட்டவுடன் ஐயாயிரம் தினார்கள் வெகுமானம் அளித்து தங்குமிடமும் சிறப்பு வசதிகளும் செய்து தந்தார். இபின் பதூதா தனது குறிப்பில் அப்போது இந்தியாவை ஆண்ட மன்னர் முகமது பின் துக்ளக் பற்றிய செய்திகளைப் பதிவு செய்துள்ளார். உள்நாட்டுக் குழப்பம் முடிந்து சில வரங்களின் பின்னர் டெல்லி வந்து சேர்ந்த முகமது பின் துக்ளக், இபின் பதூதாவைச் சந்திக்க அழைப்பு விடுத்தார். இபின் பதூதா துக்ளக்கின் விசித்திரமான மனப்போக்கு பற்றியும் குதர்க்கமான சிந்தனை பற்றியும் முன்னதாகவே அறிந்திருந்த காரணத்தால் அவர் தங்கத்தால் செய்த பரிசுப் பொருட்களுடன் துக்ளக்கைக் காண்பதற்காக காத்துக் கொண்டிருந்தார். துக்ளக் அவரை அருகில் அழைத்து பெர்சிய மொழியில் பேசிப் பாராட்டினார். ஒவ்வொரு முறை அவர் இபின் பதூதாவைப் பாராட்டும் போதும் துக்ளக்கின் கையில் இபின் பதூதா முத்தமிட்டு நன்றி தெரிவிக்க வேண்டியிருந்தது. அந்த ஒரு சந்திப்பில் மட்டும் ஏழுமுறை அவரது கையில் தான் முத்தமிட்டதாகவும் அந்த ஒரு நிகழ்ச்சியே துக்ளக்கின் மனப்போக்கைத் துல்லியமாக எடுத்துக் காட்டியதாகவும் இபின் பதூதா விவரிக்கிறார். துக்ளக் பெர்சிய மொழியில் நன்கு தேர்ச்சி பெற்றவர். அத்தோடு சிறந்த சித்திர எழுத்துக் கலை நிபுணர். சட்டம் மற்றும் மதம் குறித்த தீவிர சிந்தனையாளர். பெர்சிய மொழியில் கவிதைகள் எழுதுபவர். ஆனால் அவர் ஒரு முன்கோபி. சிறிய குற்றங்களுக்குக் கூட கடுமையான தண்டனைகள் வழங்கக்கூடியவர். ஒவ்வொரு நாளும் சபையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஏதேதோ காரணங்களுக்காகப் பிடித்துக் கொண்டுவரப்பட்டிருப்பார்கள். துக்ளக் குற்றங்களைப் பற்றி விசாரிப்பதற்கு முன்பாகவே தண்டனையைக் கொடுத்து விடுவார். கைகளை வெட்டி காலிலும் காலை வெட்டி கைகளிலும் தைத்துவிடுங்கள் என்பது போன்ற விசித்திரமான தண்டனைகள் அளிப்பார். ஒரு முறை மத அறிஞர் ஒருவர் துக்ளக் தெரிவித்த கருத்திற்கு மாற்றுக் கருத்து சொன்னதற்காக அவரது தாடி மயிரை ஒவ்வொன்றாகப் பிய்த்துக் கொல்லும்படியாக குரூர தண்டனை அளித்தார் துக்ளக் என இபின் பதூதா தனது குறிப்பில் கூறியுள்ளார். முகமது பின் துக்ளக் தனது நட்பினை வெளிப்படுத்தும் விதமாக இபின் பதூதாவிற்கு நீதிபதி பதவியைக் கொடுத்து, வருடம் ஐயாயிரம் தினார் ஊதியம் வழங்கினார். அன்றைய கால கட்டத்தில் ஒரு சராசரிக் குடும்பத்தின் மாத வருமானம் ஐந்து தினார்கள்தான். இதுமட்டுமல்லாது சில கிராமங்களில் வரி வசூல் செய்து அவரே எடுத்துக் கொள்வதற்கும் உரிமை வழங்கினார். இபின் பதூதா ஏழு ஆண்டுகாலம் துக்ளக்கின் அரசியல் பணியில் இருந்தார். முகமது பின் துக்ளக்கின் நிர்வாகச் சீர்கேடு இந்தியாவைச் சீர்குலையச் செய்தது. இதன் காரணமாக எதிர்ப்பு இயக்கங்கள் வலுக்கத் துவங்கின. துக்ளக் தனது எதிரிகளை ஒழிப்பதற்காக படையோடு டெல்லியை விட்டுச் சென்ற நாட்களில் மொத்த நீதி நிர்வாகமும் இபின் பதூதாவிடமே இருந்தது. அவர் இஸ்லாமிய சட்டங்களை இயற்ற வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகளை அளித்தார். இபின் பதூதாவின் காலத்தில் இந்தியாவில் சாதாரண மக்கள் தொடர்ந்து வரியாலும் அதிகார நெருக்கடியாலும் கசக்கிப் பிழியப்பட்ட நிகழ்ச்சிகள் அவரது பயணக் குறிப்புகளில் முழுமையாக விவரிக்கப்பட்டுள்ளன. இபின் பதூதா ஏழாண்டு காலம் அரசியல் பணிகளில் இருந்தபோது அவர் இந்தியா முழுவதும் பயணம் செய்துள்ளார்.ஒருமுறை தனது கடற்பயணத்தின்போது அவரது கப்பல் சிதைந்து போய்விடவே அவர் மலபார்ப் பகுதியில் சில மாதங்கள் தங்கியிருந்து தென்னிந்திய மக்களின் வாழ்க்கை முறைகளைக் கண்டறிந்துள்ளார். அப்போது அவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெரியபட்டினம் என்ற கடற்கரைத் துறைமுகத்திற்கு வந்து மூன்று மாதம் தங்கியிருந்ததாக ஒரு குறிப்பு எழுதியுள்ளார். தென்னிந்திய மக்கள் வெற்றிலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது பற்றி குறிப்பிட்டுள்ளார். விருந்தினர்களை வரவேற்று வெற்றிலை பாக்கு தருவது அவர்களுக்குத் தங்கமோ வெள்ளியோ தருவதை விடவும் உயர்வானதாகக் கருதப்பட்டதாக அவர் ஒரு குறிப்பில் தெரிவித்துள்ளார். துக்ளக்கிற்கு எதிரான புரட்சி நடவடிக்கைகள் ஒடுக்கப்பட்டதும் துக்ளக் தனது எதிரிகளோடு தொடர்புள்ளவர்கள் யார் என்ற ஒரு பட்டியலைத் தயாரித்தார். அதில் எதிரி ஒருவரின் வீட்டில் இருந்த சூபி தத்துவவாதி ஒருவருக்கும் இபின் பதூதாவிற்கும் தொடர்பு இருந்தது துக்ளக்கிற்கு தெரிய வந்தது. எங்கே துக்ளக் தன்னையும் கொன்றுவிடக் கூடுமோ என்று அஞ்சிய இபின் பதூதா ஒரு வார கலம் உண்ண நோன்பு இருந்து, பகலும் இரவும் பிரார்த்தனை செய்தபடியிருந்தார். துக்ளக் எப்போது என்ன செய்வார் என்று அவரால் அறிந்துகொள்ள முடியவில்லை. சில நாட்களில் பிச்சைக் காரர் போல வேடமணிந்து டெல்லி தெருக்களில் சுற்றியலைந்துள்ளார். ஒரு நாள் அரசரிடம் இருந்து அழைப்பு வந்தது. அரசரைக் கண்டதும் வணங்கி தான் திரும்பவும் ஹஜ் பயணம் மேற்கொள்ள இருப்பதாக இபின் பதூதா தெரிவித்தார். துக்ளக் அதை மறுத்து அவரை சீனாவிற்கான தூதுவராக நியமித்து, தேவையான பொருட்களும் வேலையாட்களும் கொடுத்து சீனாவிற்கு அனுப்பி வைத்தார். துக்ளக்கிடம் இருந்து தப்புவதற்காக அந்தப் பணியை ஒத்துக் கொண்ட இபின் பதூதா மார்க்கோபோலோவிற்குப் பிறகு சீனாவிற்குச் சென்ற வெளிநாட்டுப் பயணியாவார். சீனாவிற்குச் செல்வதற்காகப் புறப்பட்ட கடற்பயணத்திலும் கப்பல் விபத்திற்கு உள்ளாகி மீனவர்களால் காப்பாற்றப்பட்டு இலங்கை, மாலைதீவு போன்ற நாடுகளுக்கும் சென்ற இபின் பதூதா கடுமையான தடைகளைத் தாண்டிய பின்னரே சீனா சென்றடைந்தார். முப்பது ஆண்டுகள் பயணத்தில் பல நாடுகளில் நோயால் பீடிக்கப்பட்டும், சில அரசர்களினால் சிறைகளில் அடைக்கப்பட்டும், பயணம் செய்த கப்பல் விபத்திற்குள்ளாகியும் துன்புற்றார். மோசமான உடல்நலக் கேட்டிற்கு உள்ளான இபின் பதூதா முடிவாகத் தனது சொந்த நாடு திரும்பினார். அவருக்கு சுல்தான் சிறப்பான வரவேற்பு கொடுத்து பாஸ் என்ற நகரில் வசிப்பதற்கான உதவிகள் செய்தார். இபின் பதூதாவின் பயணக் குறிப்புகள் யாவும் அவரது இறுதிக் காலத்தில் மொராக்கோவின் சுல்தான் ஆணையின்படி, அவர் சொல்லச் சொல்ல இபின் சஜாயி என்ற கவிஞராய் எழுதப்பட்டது. இபின் பதூதா தனது வயதான காலத்தில் தான் கண்டும் கேட்டும் அறிந்திருந்த விவரங்களை இரண்டு வருட காலம் தினமும் அரச சபையில் தெரியப்படுத்தினார். இபின் சுஜாயி அவற்றைக் குறிப்புகளாக எடுத்துத் தொகுத்து நீண்ட பயண நூலாக்கி அதற்கு புத்தக வடிவம் கொடுத்துள்ளார். 'அறிவைத்தேடிச் செல்வது மனிதனின் முதற்கடமையாகும். எனது பயணம் முழுவதுமே அறிவைத்தேடி நான் மேற்கொண்ட முயற்சிகளே' என்று குறிப்பிடும் இபின் பதூதாவின் பயணக் குறிப்புகள் 14-ஆம் நூற்றாண்டின் இந்தியாவைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கும், அன்றைய அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளைப் பதிவு செய்வதிலும் முக்கிய பங்கு வகித்திருக்கின்றன. இந்த நூலில் இபின் பதூதா கண்ட இந்தியாவைப் பற்றிய நினைவுக் குறிப்புகள் ஏராளம் உள்ளன. குறிப்பாக துக்ளக்கின் குரூரமான தண்டனைகள் பற்றியும், இபின் பதூதா நீதிபதியாக பணியாற்றிய சம்பவங்களைப் பற்றியும் விவரித்திருக்கிறார். இபின் பதூதாவின் பயணக் குறிப்புகள் மூன்று தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. இந்தத் தொகுப்புகளை வாசிக்கும் போது முன்னுக்குப் பின் முரணான சில விவரங்களும் இடம் காலம் பற்றிய குழப்பங்களும் ஏற்படுகின்றன. அத்தோடு இபின் பதூதா எழுதியதற்கு மேலதிகமாக இடைச் செருகல்கள் இருந்திருக்கக்கூடும் எனவும் கருதப்படுகிறது. ஒரு மலையைத் தூக்கிக் கொண்டு பறவையொன்று பறந்து போனதைக் கண்டதாக அவர் எழுதியுள்ள ஒரு குறிப்பு, இபின் பதூதாவும் மற்ற பயணிகளைப் போலவே பல செவி வழிச் செய்திகளை உண்மை எனப் பதிவு செய்திருப்பதையே இது உணர்த்துகிறது. இன்றைய வரலாற்று அறிஞர்கள் சிலர், துக்ளக்கின் முட்டாள்தனமான செயல்களுக்குப் பின்னால் இபின் பதூதாவின் பங்கும் இருக்கிறது. இபின் பதூதாவும் குரூரமான தண்டனைகள் தரும் நீதிபதியாகவே பணியாற்றியிருக்கிறார். ஐந்து பெண்களை மணந்திருக்கிறார். மன்னரின் நண்பன் என்ற முறையில் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார் என்று கூறுகின்றனர். பாலுறவு சாரா மரபணு கடத்தல் உயிரினக்கள் தனது மரபு பண்புகளை தன்னிடம் இருந்து மற்ற உயிரினத்துக்கு கடத்தும் தன்மையெய் கொண்டுள்ளன (எ.கா. குட்டிகள் ஈனுவது அல்லது குஞ்சுகள் பொறிப்பது). இவ்வாறு கடத்தப்படும் மரபணுக்கள் இனச்செல்கள் (விந்து, அண்டகம் இணைந்து) அல்லது இனச்செல்கள் இல்லமால் மாற்றப்படும். இவ்வாறு இன உயிரணுக்கள் இல்லாமல் அல்லது பாலுறவு இல்லாமல் மரபணு கடத்தப்படும் நிகழ்வுக்கு பாலுறவு சாரா மரபணு கடத்தல் (horizontal gene transfer) எனப்பெயர். எ.கா. குழலிணைவு-(bacterial conjugation) பக்டிரியோபச்கள் இ. கோலியில் பெருகும் தன்மை (Transduction). குழலிணைவு குழலிணைவு என்பது நிலைகருவற்ற உயிர்களில் நடைபெறும் மரபணு கடத்தல் நிகழ்வு ஆகும். இணையும் இரு உயிரணுக்கள் சிறு குழல் அல்லது குழாய் போன்ற நீட்சிகள் மூலம் இணைக்கப்படுகின்றன. இச்சிறு குழலுக்கு பைலசு (Pilus) எனப்பெயர். இவைகளுக்கு வளமையான அல்லது செழிப்பு செயலிகள் (Fertility factors) இன்றியமையாத பங்காற்றுகின்றன. இவ் செயலிகள் வளமை அல்லது செழிப்பு கணிமிகளிடம் (F-plasmid) இருந்து பெறப்படுகின்றன. பைலசுகள், இணையும் இரு உயிரணுக்களை பிணைந்து அதனின் வழியாக கணிமிகள் ஒரு செல்லில் இருந்து மற்ற உயிரணுக்கு கடத்தும். இவ்வாறு இனச்செல்கள் இல்லமால் மரபணு கடத்தப்படுவதை பாலுறவு சாரா மரபணு கடத்தல் எனப்படும். கணிமிகள் ஒரு செல்லில் இருந்து மற்ற செல்லுக்கு கடத்தபடுவதற்கு டி. என். ஏ பாலிமரேசு முக்கியாமாகும். இவ்வாறு ஒரு செல்லில் இருந்து மற்ற செல்லுக்கு குழலிணைவு மூலம் கணிமிகள் மாற்றப்படுவதை உருமாற்றம் (transformation) எனவும் அழைக்கப்படும். எ.கா. Staphylococcus aurius என்னும் நிலைகருவற்ற உயிரில் இரு வகைகள் உள்ளன. ௧. வீரியம் உள்ளவை (virulence)- இவைகள் மாந்தருக்கு நோயெய் தூண்டுபவை. ௨. வீரியம் அற்றவை (Non- virulence) - இவைகளால் மாந்தருக்கு நோயெய் உண்டாக்க முடியாது. இவைகளுக்கு ஏற்படும் குழலிணைவு நிகழ்வால் வீரியம் உள்ள செல்லில் இருந்து மாற்றப்படும் கணிமிகளால் வீரியம் அற்ற செல்களும் நோயெய் தூண்டும் தன்மையெய் அடைகின்றன. சீனப் பண்பாட்டுப் புரட்சி பாட்டாளிகள் பண்பாட்டுப் பெரும் புரட்சி ("Proletarian Cultural Great Revolution") என்னும் விரிவான பெயர்கொண்ட பண்பாட்டுப் புரட்சி அல்லது சீனப் பண்பாட்டுப் புரட்சி என்பது, மக்கள் சீனக் குடியரசில், 1966 ஆம் ஆண்டுக்கும் 1976 ஆம் ஆண்டுக்கும் இடையில் இடம்பெற்ற சில நிகழ்வுகளைக் குறிக்கும். இக்காலத்தில் சீனாவில் பரவலான சமூக, அரசியல் கிளர்ச்சிகள் இடம்பெற்றன. இதனால் நாடு தழுவிய குழப்பநிலையும், பொருளாதார ஒழுங்கின்மையும் நிலவியது. சீனப் பொதுவுடைமைக் கட்சிக்குள்ளும், சமூகத்திலும் "தாராண்மையிய பூர்சுவாக்கள்" ஊடுருவி இருப்பதாகவும், அவர்கள் சீனாவில் மீண்டும் முதலாளித்துவத்தைக் கொண்டுவர முயல்வதாகவும் குற்றம் சாட்டிய சீனத்தலைவர் மாவோ சேடாங், 1966 ஆம் ஆண்டு மே 16 ஆம் நாள் பண்பாட்டுப் புரட்சியொன்றைத் தொடங்குவதாக அறிவித்தார். இது மாவோவின் அதிகாரத்திற்கு சவாலாக இருந்தவர்களை குறிவைத்து அமைந்தது. இத்தகையவர்களை புரட்சிக்குப் பிந்திய வகுப்புப் போராட்டம் மூலம் இனங்கண்டு நீக்க வேண்டும் என வலியுறுத்திய மாவோ, இதற்காகச் சீன இளைஞர்களின் சிந்தனைகளையும், செயற்பாடுகளையும் ஒன்று திரட்டுவதற்காக இளைஞர்களைக் கொண்ட செம்படை ஒன்றையும் அமைத்தார். இந்த இயக்கம் படைத்துறை, நகர்ப்புறத் தொழிலாளர், கட்சித் தலைமை போன்ற எல்லா இடங்களுக்கும் பரவியது. கலாச்சாரப் புரட்சி முற்றுப் பெற்றுவிட்டதாக 1969 ஆம் ஆண்டில் மாவோவே அறிவித்திருந்தாலும், 1966க்கும் 1976ல் "நால்வர் குழு" எனப்பட்டவர்கள் கைது செய்யப்படும்வரை இடம்பெற்ற அதிகாரப் போட்டி, அரசியல் உறுதியின்மை ஆகியவை அனைத்தும் இக் கலாச்சாரப் புரட்சியின் பகுதிகளாகவே தற்காலத்தில் கருதப்படுகின்றன. மாவோ இறந்த பின்னர், பண்பாட்டுப் புரட்சிக்கு எதிரான டெங் சியாவோபிங் தலைமையிலான குழுவினர் சீனப் பொதுவுடைமைக் கட்சியில் முன்னணிக்கு வந்தனர். இவர்கள் பண்பாட்டுப் புரட்சியின்போது கொண்டுவரப்பட்ட அரசியல், பொருளியல், கல்விச் சீர்திருத்தங்கள் எல்லாவற்றையும் முடிவுக்குக் கொண்டுவந்ததுடன், தொடக்கத்தில் இருந்தே பண்பாட்டுப் புரட்சி ஒரு எதிர்த் தோற்றப்பாடு எனவும் அறிவித்தனர். பண்பாட்டுப் புரட்சியின் கொள்கைகளை ஒழுங்கமைத்து நிறைவேற்றுவதற்குப் பொறுப்பாக இருந்தவர்கள்மீது விசாரணை நடத்தப்பட்டது. 1981 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட கட்சியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு, பண்பாட்டுப் புரட்சிக்கான பொறுப்பு காலஞ்சென்ற தலைவர் மாவோவின் மீதே சுமத்தினாலும், இதனால் ஏற்பட்ட கடும் விளைவுகளுக்காக லின் பியாவோவையும், நால்வர் குழுவையும் குற்றம்சாட்டியது. இக் குழுவின் தலைவர் சியாங் சிங் முக்கிய பொறுப்பாளி ஆக்கப்பட்டார். அப்பாசியக் கலீபகம் அப்பாசியக் கலீபகம் இசுலாமியப் பேரரசின் கலீபகங்களில் மூன்றாவது கலீபகம் ஆகும். இது, அப்பாசிய வம்சத்தைச் சேர்ந்த கலீபாக்களால் ஆளப்பட்டது. பக்தாத்தில் தமது தலைநகரத்தை நிறுவியிருந்த அப்பாசிய வம்சத்தினர், அல் அந்தலூசு தவிர்ந்த ஏனைய இடங்களிலிருந்து உமய்யா கலீபாக்களை நீக்கிவிட்டு ஆட்சியைக் கைப்பற்றினர். இவ்வம்சம் முகம்மது நபியின் இளைய சிறிய தந்தையாரின் வழிவந்தவரான அப்பாசு இபின் அப்துல் முத்தலிப் என்பவரால் உருவாக்கப்பட்டது. இது கிபி 750ல், ஹர்ரான் என்னும் இடத்தில் உருவாக்கப்பட்டுப் பின்னர் கிபி 762ல் பாக்தாத் தலைநகரம் ஆக்கப்பட்டு அங்கு மாற்றப்பட்டது. இரண்டு நூற்றாண்டுகள் சிறப்புடன் திகழ்ந்த இவ்வம்சத்தின் ஆட்சி, இவர்கள் உருவாக்கிய படைப்பிரிவான மம்லூக்குகளின் எழுச்சியுடன் வீழ்ச்சியடையத் தொடங்கியது. பாரசீகப் பகுதி முழுதும் ஆட்சியைக் கைப்பற்றிய 150 ஆண்டுகளுக்கு உள்ளாகவே தமது அதிகாரத்தை உள்ளூர் அமீர்களுக்குக் கையளிக்க வேண்டியதாயிற்று. இவ்வமீர்கள், அப்பாசியர்களின் மேலாண்மையைப் பெயரளவிலேயே ஏற்றுக்கொண்டனர். அத்துடன் அல் அந்தலூசுக்குத் தப்பிச் சென்ற உமய்யா அரச கு ன்றோரிடமும் இழந்தனர். மொங்கோலிய ஆக்கிரமிப்பாளராகிய ஃகுலாகு கான் பக்தாத்தைக் கைப்பற்றிய பின்னர் 1258 இலிருந்து மூன்றாண்டுகள் இவர்களுடைய ஆட்சி இல்லாதிருந்தது. ஆனால் 1261 ஆம் ஆண்டில் எகிப்தில் உள்ள மம்லூக்கியரால் மீண்டும் தொடங்கியது. 1519 ஆம் ஆண்டில் அதிகாரம் முறையாக உதுமானியப் பேரசிடம் கையளிக்கப்படும்வரை அப்பாசியர்கள் மத அலுவல்களிலான தமது அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொண்டிருந்தனர். செங்கிஸ் கான் (Genghis Khan) 1206 ஆம் ஆண்டில், மத்திய ஆசியாவில் மங்கோலியர்களிடையே ஒரு சக்திவாய்ந்த வம்சத்தை நிறுவினார். 13 ஆம் நூற்றாண்டில், கிழக்கில் சீனாவையும் மேற்கு பகுதியில் இஸ்லாமிய கலீபகங்களையும் வென்றது. ஹாலுக் கான் 1258 ல் பாக்தாத்தை அழித்தது மங்கோலியர்களின் பொற்காலத்தின் இறுதியாகக் கருதப்படுகிறது. முஹம்மதுவின் மாமா அல்-அபாஸ் இபின் அப்துல் முத்துலிபின் (Al-‘Abbas ibn ‘Abd al-Muttalib) நேரடி வம்சாவளியான அல்-முஸ்தாஸிமின் (Al-Musta'sim) இரத்தம் சிந்தினால் மாபெரும் இயற்கைச் சீரழிவு ஏற்படும் என்று மங்கோலியர்கள் அஞ்சினர். அரசனுக்கு பாதிப்பு ஏற்பட்டு இரத்தம் சிந்துவது மங்கோலியர்களுக்கு விலக்கப்பட்ட ஒரு செயலாக இருந்தது. எனவே 1258ஆம் ஆண்டு, பிப்ரவரி 20ஆம் நாள், ஹுலகு முன்னெச்சரிக்கையாக அல்-முஸ்தாஸிமை ஒரு கம்பளத்தில் மூடி, குதிரைகளால் மிதித்து மரணம் அடையச் செய்தார். கலீபாவின் குடும்பத்தினரும்  திட்டமிட்டு தூக்கிலிடப்பட்டனர். விதிவிலக்காக, அவரது இளைய மகன் மட்டும் மங்கோலியாவுக்கு அனுப்பப்பட்டார். அவரது ஒரு மகள் ஹுலுகுவின் மாளிகையிலும், அந்தப்புரத்திலும் வேலைக்காரியாகவும் அடிமையாகவும் ஆக்கப்பட்டார். 9 ஆம் நூற்றாண்டில், அப்பாசியத் தலைவர்கள் தங்கள் கலீபகத்திற்கு மட்டுமே விசுவாசமாக இருக்கக்கூடிய ஒரு இராணுவத்தை உருவாக்கினர். இந்த இராணுவத்தில் அரபியர் அல்லாத மாம்லுக்குகள் (Mamluks) எனப்படும் இனத்தவர் மட்டுமே இருந்தனர். இந்த படை அல் மாமுன் (al-Ma'mun) ஆட்சியை (813–33) உருவாக்கியது. மேலும் அடுத்து பதவி ஏற்ற அவருடைய சகோதரர் அல்-முத்தஸிம் (833-42), பேரரசின் சீர்குலைவுகளைத் தடுத்தனர். மாம்லூக்குகளின் ஆற்றல் அல்-ரேடி (al-Radi) (934-41) காலம் வரை சீராக வளர்ந்து வந்தது. இதனால் முஹம்மது இப்னு ரைக் (Muhammad ibn Ra'iq) தன்னுடைய அரசின் பெரும்பகுதியை மாம்லூக்குகளிடம் ஒப்படைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இறுதியில் 1261 இல் மாம்லூக்குகள் எகிப்தின் ஆட்சியைக் கைப்பற்றினர். அல்-முத்தவக்கில் (Al-Mutawakkil) III வரை கெய்ரோவின் அப்பாசியக் கலீபக ஆட்சி நீடித்தது. அல்-முத்தவக்கிலை, கான்ஸ்டன்டினோப்பிளில் உள்ள சிறைச்சாலையில் சலிம் (Selim) I அடைத்து வைத்தார். 1543 இல் கெய்ரோவிற்குத் திரும்பிய பின்னர், அல்-முத்தவக்கில் இறந்தார். அப்பாசியக் கலீபகத்தில் சமூகத்தின் மத்திய விவகாரங்கள் சார்ந்த எந்த செயற்களங்களிலும், செயற்றுறைகளிலும் பெண்கள் இடம் பெறவில்லை. அப்பாசியக் கலீபகப் பெண்கள் தனித்தனியாக ஒதுக்கி வைக்கப்பட்டனர். பிற நாட்டவர் மீது கொண்ட வெற்றிகள், அப்பாசியக் கலீபக உயர்ந்தோர் குழுவிற்கு மகத்தான செல்வத்தையும், பெரும் எண்ணிக்கையிலான அடிமைகளையும் கொண்டு வந்தன. அந்த அடிமைகளில் பெரும்பான்மையானவர்கள் பெண்களும் குழந்தைகளும் ஆவர். அவர்களில் பலர் தோற்கடிக்கப்பட்ட சாஸானிய (Sassanian) மேல்தட்டு சார்பாளர்களாகவோ அல்லது ஹரேம் உறுப்பினர்களாகவோ இருந்தனர். இஸ்லாமிய உலகில் இருந்து அறியப்பட்ட சிறந்த படைப்பு,"ஆயிரத்தொரு இரவுகள் பற்றிய புத்தகம்." இது அப்பாசியக் கலீபக காலகட்டத்தில் எழுதப்பட்ட அற்புதமான நாட்டுப்புற கதைகளையும், புனைவுகளையும், உவமைகளையும் கொண்ட முதன்மையான தொகுப்பு ஆகும். இத்தொகுப்பு சசானிய சகாப்தங்களிலிருந்தும், பாரசீக முன்மாதிரியிகளிலிருந்தும், இந்திய இலக்கிய மரபுகளிலிருந்தும் அரபு மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அரபு, பாரசீக, மெசொப்பொத்தமியன், மற்றும் எகிப்திய நாட்டுப்புற கலை, இலக்கியம் ஆகியவற்றிலிருந்து வந்த கதைகள் பின்னர் இணைக்கப்பட்டன. இந்த காவியமானது 10 ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டு 14 ஆம் நூற்றாண்டில் இறுதி வடிவம் அடைந்ததாக நம்பப்படுகிறது. கதைகளின் எண்ணிக்கைகளும், வகைகளும், ஒவ்வொறு கையெழுத்துப் பிரதியிலும் வேறுபட்டு உள்ளது. அனைத்து அரேபிய கற்பனை கதைகளும் "அரேபிய இரவுகள்" என்ற பெயரிலேயே வெளியிடப்பட்டன. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டபோது, இக்கதைகள்,"ஆயிரத்தொரு இரவுகள்" புத்தகத்தில் பதிப்பிடப்பட்டதை உறுதி செய்யவிலை. 18 ஆம் நூற்றாண்டில், அண்டோய்னெ கல்லண்டால் (Antoine Galland) மொழிபெயர்க்கப்பட்டது முதல், இந்த காவியம் மேற்கு நாடுகளில் மிகுந்த செல்வாக்கு பெற்றுள்ளது. பிரதிபலிப்புகள் குறிப்பாக பிரான்சில் பிரெஞ்சு மொழியில், இது போன்று பல போலியான கதைகள் எழுதப்பட்டன. இந்த காவியத்தின் கதாபாத்திரங்களான அலாதீன் (Aladdin), சின் பாட்(Sinbad), அலி பாபா (Ali Baba), பல்வேறு மேற்கத்திய கலாச்சாரங்களில் கலாச்சார அடையாளங்களாக இன்றும் வலம் வருகின்றனர். இஸ்லாமிய காதல் கவிதைக்கு மீது பிரபலமான ஒரு உதாரணம் "லைலாவும், மஜ்னூனும்." இது ஈரானியரால் ஈரானிய மொழியிலும், பிற கவிஞர்களால் பெர்சிய மொழியிலும் உருவாக்கப்பட்டது. இது 7 ஆம் நூற்றாண்டில் உமய்யாத் சகாப்தத்திற்கு முற்பட்டது. இது பிற்கால ரோமியோ (Romeo) ஜூலியட் (Juliet) போன்ற துயர் நிறைந்த அழியாத காதல் கவிதை ஆகும். அப்பாசியக் கலீபகம் மற்ற கலீபகங்களிலிருந்து மாறுபட்டது. இது மற்ற கலீபகங்கங்களைப் போன்று மாறாத எல்லைகளையும், இஸ்லாம் போன்ற பரிமாணங்களையும் பெற்றிருக்கவில்லை. குறிப்பாக, அப்பாசியக் கலீபகத்தின் மேற்குப் பகுதியில், பல சிறிய கலீபகங்கங்கள் இருந்தன. அவை அப்பாசியக் கலீபகத்துடன் ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் இருந்தன. தங்கள் பொது புவியியல் இருப்பிட அமைப்பின் அடிபடையில் அப்பாசியக் கலீபகத்திலிருந்து பிரிந்து வளர்ந்த இஸ்லாமிய வாரிசுகளின் பட்டியல் உம் குல்தூம் உம் குல்தூம் எனப் பரவலாக அறியப்படும் பாத்மா எப்ராகிம் எல்பெல்த்தாகி ஒரு எகிப்தியப் பாடகரும், பாடலாசிரியரும், நடிகையும் ஆவார். எல் சென்பெல்லாவெயின் என்னும் இடத்துக்கு அருகில் உள்ள தாமே எசு சகாய்ரா என்னும் இடத்தில் பிறந்த இவர் கிழக்கின் நட்சத்திரம் எனப் புகழப்படுகிறார். இறந்து மூப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆனபோதும் இன்றும் இவர் 20 ஆம் நூற்றாண்டின் மிகப் புகழ் பெற்ற அரபுலகப் பாடகிகளுள் ஒருவராகப் போற்றப்படுகிறார். இவர் பிறந்த தேதி குறித்துச் சரியான தகவல்கள் இல்லை. எகிப்தியத் தகவல் அமைச்சகமும் இவர் 1898 டிசம்பர் 31 ஆம் தேதி அல்லது 1904 டிசம்பர் 31 ஆம் திகதி பிறந்திருக்கலாம் எனக் கூறுகின்றது. இளமையிலேயே இவர் மிகச் சிறந்த பாடும் திறமையை வெளிக்காட்டினார். ஒரு இமாம் ஆன இவரது தந்தையார் திருக்குர்ஆனை ஓதுவதற்கு இவருக்குக் கற்றுக்கொடுத்தார். இவர் இந் நூல் முழுவதையுமே மனனம் செய்திருந்ததாகக் கூறப்படுகின்றது. இவருக்குப் 12 வயதாயிருந்தபோது இவரது தந்தையார் இயக்கிய நாடகம் ஒன்றில் நடிப்பதற்காக இவரை ஒரு பையன் போல வேடமிட்டுச் சேர்த்துக்கொண்டார். இவருடைய 16 ஆவது வயதில், அபோல் எலா மொகமத் என்னும் ஓரளவு பெயர் பெற்ற பாடகர் இவரது திறமையை உணர்ந்துகொண்டார். அத்துடன் புகழ் பெற்ற இசைக் கலைஞரான சக்காரியா அகமத் என்பவர் உம் குல்தூமை கெய்ரோவுக்கு வருமாறு அழைத்தார். எனினும் 1923 ஆம் ஆண்டிலேயே குல்தூம் இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு கெய்ரோவுக்குச் சென்றார். அமின் பே அல் மகிதி என்னும் இன்னொரு புகழ்பெற்ற இசைக்கலைஞர் இவரை அடிக்கடி வீட்டுக்கு அழைத்து "அவுட்" எனப்படும் இசைக் கருவியை வாசிக்கக் கற்றுக்கொடுத்தார். இக்காலத்தில் அல் மகிதியின் மகளான ரவ்கேயா அல் மகிதியுடன் நெருக்கமான நட்புப் பூண்டார். அமின் அல் மகிதி, குல்தூமை கெய்ரோவின் கலைஞர் வட்டத்துக்கு அறிமுகப்படுத்தினார். குல்தூம் அக்காலத்தில் பிரபலமாக இருந்த பொகீமிய வாழ்க்கை முறையைத் தவிர்த்து வந்ததுடன், எப்பொழுதும் தனது எளிமையான மூலத்தில் பெருமை கொண்டவராகவும், பழமையான விழுமியங்களைப் பாதுகாப்பதில் அக்கறை கொண்டவராகவும் இருந்தார். கிருஷ்ணன் ரஜினி கிருஷ்ணன் ரஜினி ("Rajini Krishnan", பிறப்பு: 13 சூலை, 1980) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு துள்ளுந்துப் பந்தய வீரர் ஆவார். அண்மையில் இருங்காட்டுக்கோட்டையில் நடந்த 600 க.செ.மீ பிரிவு ஆசிய-அளவிலான பெட்ரோனாசு துள்ளுந்து பந்தயப் போட்டியில் மூன்றாவதாக இடம் பிடித்துள்ளார். மேலும் இந்திய-அளவிலான துள்ளுந்து பந்தயப்போட்டிகளில் பல முறை வெற்றி பெற்றவர். 29 வயதாகும் ரஜினி, தானுந்து-வாகனங்களுக்கு அடித்துணி பொருத்தும் "தொழிலாளர்" ஆவார். பங்களூருவைச் சார்ந்த தினேஷ் ரெட்டி என்ற துள்ளுந்து ஆர்வலரின் உதவியால் 'ரெட் ரூசுட்டர் ரேசிங்' (RRR) என்ற குழுவிற்காக போட்டிகளில் பங்கேற்கும் ரஜினி, தன் 22-ஆவது வயதில் தான் துள்ளுந்து பந்தயப் போட்டிகளில் முதன்முறையாக பங்கேற்கத் தொடங்கினார். உலக மின்னூலகம் உலக மின்னூலகம் ("The World Digital Library") என்பது யுனெஸ்கோ மற்றும் அமெரிக்க காங்கிரசு நூலகம் ஆகியவற்றால் நடத்தப்படும் ஒரு பன்னாட்டு மின்னூலகம் ஆகும். அனைத்துலக மற்றும் பல்வேறு கலாசாரப் புரிதல்களை ஊக்குவித்தல், இணையத்தில் கிடைக்கும் கலசார உள்ளடக்கங்களை அளவிலும் வகையிலும் அதிகமாக்குதல், கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு அறிவுசார் வளங்களை அளித்தல், பங்குதாரராக உள்ள நிறுவனங்களில் அறிவுசார் வளங்களை அதிகரித்தல் அதன் மூலம் ஒரு நாட்டிற்குள்ளும் நாடுகளுக்கு இடையேயும் உள்ள எண்ம இடைவெளியைக் ("digital divide") குறைத்தல் ஆகியவற்றை தனது நோக்கமாக உலக மின்னூலகம் கொண்டுள்ளது. இணையத்தில் உள்ள ஆங்கிலம் அல்லாத மேற்குலகைச் சாராத உள்ளடக்கங்களை வளப்படுத்தி அதை அறிஞர்களின் ஆய்வுக்கு அளிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள கலாசாரங்களின் முதன்மைத் தகவல் ஆதாரங்களான வரைபடங்கள், அரிய நூல்கள், இசைக் கோர்வைகள், திரைப்படங்கள், அச்சு வடிவங்கள், ஒளிப்படங்கள், கட்டட வடிவியல் வரைபடங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை இலவசமாக இணையத்தில் கிடைக்கச் செய்வதில் முனைப்புடன் செயல்படுகிறது. உலக மின்னூலகம் துவங்கப்பட்ட போது அரபி, சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, போர்ச்சுகீசு, ருஷ்யன், இசுபானியம் ஆகிய மொழிகளில் கிடைத்த 1,170 உருப்படிகளைக் கொண்டிருந்தது. ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2003-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்புக்கான (யுனெஸ்கோ) தனது நிலையான பிரதிநிதிக் குழுவை ஐக்கிய அமெரிக்கா மீள அமைத்தது. அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரசின் நூலகர் முனைவர் ஜேம்சு எச். பில்லிங்டன், அந்நாட்டின் ஆணையாளராக யுனெஸ்கோவில் நியமிக்கப்பட்டார். ஜூன் 2005-ஆம் ஆண்டு யுனெஸ்கோ துவக்க நாள் கருத்தரங்கில் அழைப்பின் பேரில் சென்று, உலக மின்னூலகம் ஒரு பார்வை என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்போது, நிறுவனங்கள், நூலகங்கள், அருங்காட்சியகங்கள் சேகரித்து வைத்துள்ள அரிய உள்ளடக்கங்களை எளிதில் அணுகி இலவசமாகப் பெறக்கூடிய வகையில் புதிய வடிவில் திரும்ப இந்த உலகிற்கு அளிக்கத் தகுந்த அமைப்பாக உலக மின்னூலகம் செயல்பட வேண்டும் என்று விளக்கினார். அரசு - தனியார் பங்களிப்புடன் தொடங்கப்பட்ட உலக மின்னூலகத்தில், 2005-ஆம் ஆண்டு கூகிள் நிறுவனம் முதல் பங்குதாரராக சேர்ந்து 30 லட்சம் டாலர்களை உதவியாக வழங்கியது. பில்லிங்டனின் தொலைநோக்கை நிறைவேற்ற ஒரு செயற் திட்டத்தை காங்கிரசு நூலகத்தில் உள்ள உலக மின்னூலக முதுநிலை ஆலோசகர் முனைவர் ஜான் வான் ஒளடெனரேன் 2006-ஆம் ஆண்டு கருத்தரங்கில் வழங்கினார். உலக மின்னூலகமானது தனது பங்குதாரர்களை முதன்மையான நான்கு திட்டப்பணிகளில் ஊக்குவிக்க வேண்டும் என்றார். அவை தொழில்நுட்ப கட்டமைப்பு, தேர்வு செய்தல், நிர்வகித்தல், நிதியளித்தல். 2006-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாரிசில் நடைபெற்ற உலக மின்னூலக வளர்ச்சி குறித்த மாநாட்டில் இக் குறிக்கோள் எட்டப்பட்டது. நான்கு திட்டப் பணிகளில் உள்ள தனிப்பட்ட சிக்கல்களை ஆராய தனித்தனியான பணிக் குழுக்கள் (working groups) அமைக்கப்பட்டன. இந்தப் பணிக்குழுக்கள் 2007-ஆம் ஆண்டின் முதற்பகுதியில் ஒன்றுகூடி, மின்னூலகத் துறையில் உள்ள தொழில் வல்லுநர்களையும் சேர்த்துக் கொண்டது. இப் பணிக் குழுக்கள் தங்களது முடிவுகளை உலக மின்னூலக முதன்மைக் குழுவிடம் ஜூலை, 2007-ஆம் ஆண்டு வழங்கின. இந்த முடிவுகள் அக்டோபர், 2007-ஆம் ஆண்டு பாரிசில் நடைபெற்ற யுனெஸ்கோ பொது அவை 34-வது மாநாட்டில் அளிக்கப்பட்டன. செப்டம்பர், 2008-ஆம் ஆண்டு அமெரிக்க நாடுகளின் அமைப்பு காங்கிரசு நூலகத்துடன் இணைந்து உலக மின்னூலக வளர்ச்சிக்கு உதவ இணக்கம் தெரிவித்தது. இதற்கான பங்களிப்பாளர் உடன்பாட்டில் அமைப்பின் பொதுச் செயலாளர் ஜோசு மிகைல் இன்சுல்சா-வும் ஜேம்சு பில்லிங்டனும் கையெழுத்திட்டனர். இதையடுத்து, பிரான்சு நாட்டுத் தலைநகர் பாரிசில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் ஏப்ரல் 21, 2009-ஆம் ஆண்டு உலக மின்னூலகம் தொடங்கப்பட்டது. உலக மின்னூலகம் துவங்கப்பட்ட போது பல்வேறு காட்சிப்படுத்தல்கள் சேர்க்கப்பட்டன. அவற்றுள் சில: செஞ்சியின் கதை (Tale of Genji) 11-ஆம் நூற்றாண்டு சப்பானிய கதை. உலகில் முதன் முறையாக எழுதப்பட்ட புதினம் என்று கருதப்படுகிறது. குழந்தை ஏசுவின் முதல் அசுடெக் (Aztec) குறிப்புகள், அல்ஜீப்ரா கணித வடிவமைப்பில் பயன்படுத்தப்பட்ட பழமைவாய்ந்த அரபு மொழி நூல்கள் , எட்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆப்பிரிக்க ஓவியமான ரத்தம் சிந்தும் மான், அமெரிக்கா என்று முதன்முறையாகக் குறிப்பிட்டு உருவாக்கப்பட்ட வால்டுசீமுல்லர் வரைபடம் (Waldseemüller map) கோடெக்ஸ் கிகாஸ் (Codex Gigas) 101 வயதுடைய அமெரிக்க நாட்டு அடிமை ஒருவரின் பேச்சுப் பதிவு, முதலாம் உலகப்போர் ஆட்சேர்ப்பு பதாகை, ஸ்காண்டிநேவிய குடிவரவாளர்களுக்காக கனடா அரசு 1899-ஆம் ஆண்டு வெளியிட்ட கையேடு , முதன்முறையாக அச்சடிக்கப்பட்ட இசுபானிய மற்றும் டாகாலாக் மொழி புத்தகம், ருஷ்ய குருவால் அலூசியன் (Aleutian) மொழியில் பெயர்க்கப்பட்ட விவிலியம், மாலி நாட்டில் கிடைத்த இசுலாமிய கையெழுத்துப் பிரதி, சீனப் பேரரசு, ஒட்டாமன் பேரரசு, ரஷ்யாவின் ஜார் அரசில் எடுத்த அரிய ஒளிப்படங்கள், லா மார்செல்லியின் முதல் ஒலிப்பதிவு, லூமியர் சகோதரர்கள் உருவாக்கிய உலகின் முதல் திரைப்படம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கல்வெட்டு ஒளிப்படம், நியுரம்பர்க் குரோனிக்கில் உலக மின்னூலகத்துக்குப் பங்களிப்பு செய்யும் பங்குதாரர்களாக உள்ளோர்: நிக்கோபார் தீவுகள் நிக்கோபார் தீவுகள் ("Nicobar Islands") என்பது இந்தியப் பெருங்கடலின் கிழக்கே, இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஒன்றியப் பகுதியில் உள்ள தீவுக் கூட்டம் ஆகும். இவை இந்திய உபகண்டத்தின் தென்கிழக்கே வங்காள விரிகுடாவினால் 1,300 கிமீ தூரத்தில் பிரிக்கப்பட்டுள்ளது. நிக்கோபார் தீவுகள் அந்தமான் தீவுகளுக்கு தெற்கே, இந்தோனேசியத் தீவான சுமாத்திராவுக்கு வடமேற்கே ஏறத்தாழ 189 கிமீ தூரத்தில் அமைந்துள்ளன. மொத்தம் 22 தீவுகளை நிக்கோபார் தீவுகள் கொண்டுள்ளது. இவற்றில் பெரிய தீவு பெரும் நிக்கோபார் தீவு. இந்தியாவின் தென்கோடியான இந்திரா முனை பெரும் நிக்கோபாரிலேயே அமைந்துள்ளது. இத்தீவுக்கூட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 1841 கிமீ². அதிஉயர் புள்ளி பெரும் நிக்கோபார் தீவில் உள்ள துளியர் மலை. இதன் உயரம் 642 மீட்டர். 2001 ஆண்டு கணக்கெடுப்பின் படி இதன் மக்கள் தொகை 42,026. இவர்களில் 65 விழுக்காட்டினர் பழங்குடிகள் (நிக்கோபார் மக்கள் மற்றும் சோம்பென் மக்கள்). ஏனையோர் இந்தியாவின் பெருநிலப்பரப்பையும், இலங்கைத் தீவையும் சேர்ந்தவர்கள். நிக்கோபார் தீவுகளில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் குடியேற்றம் ஆரம்பித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஆறு பழங்குடி நிக்கோபார் மொழிகள் இத்தீவுகளில் பேசப்படுகின்றன. இவை ஆஸ்திர-ஆசிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொன்-கெமர் பிரிவைச் சேர்ந்தது. பெரும் நிக்கோபாரின் தென்கோடியில் வாழும் சோம்பென் என்ற பழங்குடிகள் தென்கிழக்காசிய இடைக் கற்கால இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். "நிக்கோபார்" என்ற பெயர் சோழர்கள் இத்தீவுக்கு வைத்த "நக்கவரம்" என்ற சொல்லில் இருந்து மருவியிருக்கிறது. இது தஞ்சாவூரில் இருந்து பெறப்பட்ட 1050 ஆண்டு கல்வெட்டுகளின் மூலம் அறியக்கிடக்கிறது. இத்தீவுகளில் ஐரோப்பியர்களின் திட்டமிடப்பட்ட குடியேற்றம் 1754/56 ஆம் ஆண்டுகளில் தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் வருகையுடன் ஆரம்பிக்கிறது. இக்கம்பனி அப்போது தரங்கம்பாடியில் "பிரெடெரிக்சோர்ன்" என்ற பெயரில் நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது. மரோவியன் திருச்சபையைச் சேர்ந்த மதப்பரப்புனர்கள் இத்தீவுகளின் நன்கவுரி என்ற இடத்தில் முதலில் குடியேறினர். ஆனாலும் மலேரியா மற்றும் பல்ல்வேறு தொற்று நோகளினால் இவர்களில் பலர் இறக்கவே இங்கு குடியேற்றம் பல முறை இடைநிறுத்தப்பட்டது. டென்மார்க் இங்கு குடியேற்றத்தை நிறுத்தி விட்டதாக தவறாக அனுமானித்து 1778 - 1783 காலப்பகுதியில் ஆஸ்திரியா இங்கு குடியேற முயற்சித்தது. கடைசியாக 1868 ஆம் ஆண்டு அக்டோபர் 16 இல் டென்மார்க்கின் காலனித்துவம் இங்கு முடிவுக்கு வந்தது. அப்போது தானியர்களின் உரிமை பிரித்தானியர்களுக்கு விற்கப்பட்டது. 1869 ஆம் ஆண்டில் இருந்து இத்தீவுகள் பிரித்தானிய இந்தியாவின் கீழ் ஆளப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது 1942 முதல் 1945 வரை இத்தீவுகள் சப்பானின் முற்றுகைக்கு உள்ளாயிருந்தது. 1950 இல் அந்தமான் தீவுகளுடன் சேர்த்து இந்தியாவின் ஒன்றியப் பகுதியாக ஆக்கப்பட்டது. 2004 டிசம்பர் 26 ஆம் நாள் இடம்பெற்ற இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கத்தின் போது எழுந்த ஆழிப்பேரலை காரணமாக நீக்கோபார் தீவுகளில் பலத்த சேதம் ஏற்படட்து. அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மட்டும் 6,000 பேர் வரை கொல்லப்பட்டனர். தெரேசா தீவு இரண்டாக பிரிந்தது. திரிங்கட் தீவு மூன்றாகப் பிளந்தது. 2005, ஜூலை 24 இல் இங்கு 7.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதியப்பட்டது. நிக்கோபார் தீவுகள் இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஒன்றியப் பகுதியின் கீழ் நிருவகிக்கப்பட்டு வருகிறது. அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகர் தெற்கு அந்தமான் தீவில் உள்ள போர்ட் பிளேர் நகரம். யூனியன் பகுதி வடக்கு மற்றும் நடு அந்தமான் மாவட்டம், தெற்கு அந்தமான் மாவட்டம், மற்றும் நிக்கோபார் மாவட்டம் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. நிக்கோபார் தீவுகளுக்குச் செல்பவர்கள் சிறப்பு அனுமதிச் சீட்டு ("Tribal Pass") பெற வேண்டும். பொதுவாக, இந்தியரல்லாதோர் கம்பெல் விரிகுடா தவிர நிக்கோபார் தீவுகளின் எப்பகுதிக்கும் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. சைரசு பேரரசர் சைரசு (Old Persian: 𐎤𐎢𐎽𐎢𐏁, , , Persian: کوروش بزرگ, ) (கிமு 600 அல்லது 576 டிசம்பர் கிமு 530) முதலாவது சொராஷ்டிரிய சமயப் பாரசீகப் பேரரசர் ஆவார். ஆக்கிமெனிட் வம்சத்தின் கீழ் அகாமனிசியப் பேரரசை நிறுவியவரும் இவரே. உலக அளவிலான இப்பேரரசு உலக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இவர் பாரசீகத்தின் இரண்டாவது சைரசு, மூத்த சைரசு போன்ற பெயர்களினாலும் அறியப்படுகின்றார். இவரது காலத்திலேயே இப் பேரரசு பண்டைய அண்மை கிழக்குப் பகுதிகளில் இருந்த நாகரிகமடைந்த நாடுகள் எல்லாவற்றையும் உள்ளடக்கி விரிவடைந்தது. பின்னர் இது தென்மேற்கு ஆசியாவின் பெரும்பகுதி; நடு ஆசியாவின் பெரும்பகுதி; மேற்கே [[எகிப்து], கிழக்கே [[சிந்து நதி]] வரையும் உள்ள பகுதிகளையும் கைப்பற்றி அக்காலம் வரை அறியப்பட்டவற்றிலும் மிகவும் பெரிதான பேரரசாக விளங்கியது. சைரசின் ஆட்சி 29 தொடக்கம் 30 ஆண்டுகள் வரை நீடித்தது. முதலில் சைரசு, [[மீடியாப் பேரரசு]], [[லிடியா|லிடியப் பேரரசு]], [[புது பாபிலோனியப் பேரரசு]] ஆகியவற்றை வரிசையாகக் கைப்பற்றியதன் மூலம் தனது பேரரசை நிறுவினார். பபிலோனியாவைக் கைப்பற்றுவதற்கு முன்னர் அல்லது பின்னர் நடு ஆசியாவுக்குப் படை நடத்திச் சென்று அப் பகுதிகளில் இருந்த எல்லா நாடுகளையும் சைரசு தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். சைரசு எகிப்துக்குள் நுழையவில்லை. கிமு 510 டிசம்பரில் நிகழ்ந்த போரில் சைரசு இறந்துவிட்டார். இவரைத் தொடர்ந்து இவரது மகன் [[இரண்டாம் கம்பிசசு]] ஆட்சிக்கு வந்தார். குறுகிய காலமே ஆட்சி செய்த இவர் தனது காலத்தில் எகிப்து, நூபியா, சைரனைக்கா ஆகிய நாடுகளையும் பேரரசில் இணைத்தார். மனித உரிமைகள், அரசியல் மற்றும் இராணுவ மூலோபாயம், அத்துடன் கிழக்கு மற்றும் மேற்கத்திய நாகரீகங்களின் மீதான அவரது பெருமளவான செல்வாக்கிற்கும் சைரஸ் தி கிரேட் நன்கு அறியப்பட்டவர். நவீன ஈரானிய மாகாணமான ஃபார்ஸுடன் ஒப்பிடப்பட்ட பெர்சியஸிலிருந்து தோற்றுவிக்கப்பட்ட நிலையில், நவீன ஈரானின் தேசிய அடையாளத்தை வரையறுப்பதில் அரசர் சைரஸ் ஒரு முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசர் சைரஸ் மற்றும் பண்டைய உலகில் உள்ள அக்கிமெனீடுகளின் செல்வாக்கு புகழ்பெற்ற கிரேக்க நகரமான ஏதென்ஸ் வரை நீட்டிக்கப்பட்டது, அங்கு பல ஏதெனியர்கள் [[அகாமனிசியப் பேரரசு|அக்கேமினிய பெர்சிய]] கலாச்சாரத்தின் அம்சங்களை தங்கள் சொந்தமாக, ஒரு பரஸ்பர கலாசார பரிமாற்றத்தில் ஏற்றுக்கொண்டனர். "நான் சைரஸ் தீ கிரேட், நான் ஆக்கிமெனிட் வம்சத்தினைச் சார்ந்தவன்." பழைய பெர்சியன், ஏலாமைட் மற்றும் அக்கேடியன் மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. இது பசர்கடையில் ஒரு பத்தியில் செதுக்கப்பட்டுள்ளது தான் இந்த வார்த்தைகள்.சைரஸ் என்ற பெயர் கிரேக்க Κῦρος, Kỹros இலிருந்து பெறப்பட்ட ஒரு லத்தீன் படிவமாகும். இந்த வார்த்தையானது பழைய பாரசீக வார்த்தை குரூஸ் என்பதிலிருந்து வந்தது. பெயர் மற்றும் அதன் பொருள் பல்வேறு மொழிகளில் பழமையான கல்வெட்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சூரியனைப் போன்ற சூரியன் என்ற பெயரில் பாரசீக பெயர்ச்சொல்லுக்கு அதன் தொடர்பைக் குறிப்பிடுவதன் மூலம், "சூரியனைப் போன்றது" (குர்வாஷ்) என பொருள்படும் கருத்தை சைரஸின் பெயர் சூரியன் என்று குறிப்பிடுவதாக பண்டைய கிரேக்க வரலாற்றாளர்களான ஸ்டெசியேஸ் மற்றும் ப்ளுடார்ச்ச் குறிப்பிடுகின்றார்கள். இப்பெயரால் பெர்சியாவின் "முதல் அரசனான" ஜாம்ஷீத் என்பவருக்கும் சைரஸுக்கும் ஒரு கவர்ச்சிகரமான உறவை சுட்டிக்காட்டலாம், இவரது பெயரும் "சூரியன்" என்ற கருப்பொருளை உள்ளடக்கியுள்ளது.கார்ல் ஹோஃப்மான் ஒரு இந்திய-ஐரோப்பிய-வேர் என்ற பொருளை அடிப்படையாகக் கொண்ட மொழிபெயர்ப்பு ஒன்றை பரிந்துரைத்துள்ளார், "இழிவுபடுத்துவதற்காக" மற்றும் "சைரஸ்" என்பது "வாய்மொழி போட்டியில் எதிரியின் அவமானம்" என்பதாகும். பாரசீக மொழியிலும், குறிப்பாக ஈரான் மொழியிலும், சைரஸ் என்ற பெயர் கோர்சோவ் [kʰuːɾoʃ] என உச்சரிக்கப்படுகிறது. பைபிளில், அவர் கொரேஷ் (எபிரேய: כורש) என்று அழைக்கப்படுகிறார். பசர்காடாவில் காணப்பட்ட, சைரஸ் தீ கிரெட்டின் சார்பாக நான்கு சிறகு பாதுகாவலர் உருவத்தில் மூன்று மொழியில் எழுதப்பட்ட வார்த்தைகள்: "நான் சைரஸ் தீ கிரேட், நான் ஆக்கிமெனிட் வம்சத்தினைச் சார்ந்தவன்.",இவை பழைய பெர்சியன், ஏலாமைட் மற்றும் அக்கேடியன் மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. ஈரானிய பீடபூமியில் பாரசீக ஆதிக்கமும் இராச்சியமும் அகாமினிய வம்சத்தின் விரிவாக்கத்தால் தொடங்கி, கி.மு. 9 ஆம் நூற்றாண்டு முதல் அவர்களின் முந்தைய ஆதிக்கத்தை விரிவாக்கியது. இந்த வம்சத்தின் பெயரளவிலான நிறுவனர் ஆக்காமேனேஸ் (பழைய பாரசீக ஹாக்ஸாமனிஸ்) என்பவர் ஆவார். அக்கிமெனியர்கள் "ஆக்காமேனேஸுடைய சந்ததியினர்", என வம்சத்தின் 9 வது அரசரான தாரியுஸ் என்பவராலும், அவரது வம்சாவளியைக் குறிப்பிடும் "இந்த காரணத்திற்காக தான் நாம் ஆக்கிமெனியப் பேரரசர்கள் என அழைக்கப்படுகிறோம்" என்று அறிவித்தார் அவர்.ஈரான் தென்-வடக்கே உள்ள மாகாணமான பர்ஷுமாஸை அரசனான ஆக்காமேனேஸ் கட்டினார். அரசர் ஆக்காமேனேஸுக்கு பிறகு அரசனானவர் டேய்ஸ்பெஸ்.அன்ஷான் நகரத்தை கைப்பற்றி, பார்ஸிற்கு வரை அவரது ராஜ்யத்தை விரிவுபடுத்தியபின், டேய்ஸ்பெஸ் "அன்ஷான் மன்னர்" என்ற பட்டத்தை எடுத்துக் கொண்டார். டேய்ஸ்பெஸுக்கு முதலாம் சைரஸ் என்று ஒரு மகன் இருந்ததாக பண்டைய ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.முதலாம் சைரஸும் தனது தந்தைக்குப் பிறகு "அன்ஷான் மன்னர்" என்ற பட்டத்தை எடுத்துக் கொண்டார்.சைரஸுக்கு ஒரு சகோதரன் இருந்தார் எனவும், அவரது பெயர் அரியாரன்ஸ் எனவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.கி.மு 600 ல், முதலாம் சைரஸுக்கு பின் அவருடைய மகனான முதலாம் காம்பிசஸ் ஆட்சிக்கு வந்தார், இவர் கிமு 559 வரை ஆட்சி செய்தார்.சைரஸ் தீ கிரேட், முதலாம் காம்பிசஸ்ஸின் ஒரு மகன் ஆவார். காம்பிசஸ் அவருடைய தந்தையான முதலாம் சைரஸ்ஸின் பெயரையே தனது மகனுக்கு சூட்டினார். மகா அரசர் சைரஸ் மற்றும் அவரது வழித்தோன்றல்களும் உருவாக்கிய கல்வெட்டுகள் மற்றும் குறிப்புகள் முதலாம் காம்பிசஸ்ஸை மகா அரசர் என்றும் "அன்ஷான் மன்னர்" என்றும் குறிப்பிடுகின்றன. இவற்றில் சைரஸ் உருளையில் சில பத்திகளில் மகா அரசரான சைரஸ் "தான் முதலாம் காம்பிசஸின் மகன், மாபெரும் மன்னர், அன்ஷானின் மன்னர்" என்று தன்னை குறிப்பிட்டுள்ளார். தொல்பொருள் ஆராய்ச்சி மற்றும் பெஹிஸ்டன் கல்வெட்டுகளில் கொடுக்கப்பட்ட மரபுவழியின் அடிப்படையிலும் பாரம்பரிய பார்வையின் படியும் மற்றும் ஹிரோடோட்டஸின் பார்வைப்படிய்ம் சைரஸ் மகா அரசர் ஆக்கிமெனியர் என்பதை உறுதி செய்கிறது. கி.மு. 600-599 காலப்பகுதியில் அன்ஷானின் மன்னனான காம்பிசிஸ் I மற்றும் மாண்டேன் (மீடியா நாட்டின் மன்னனான ஆஸ்டீயாகேஸின் மகள்) ஆகியோருக்கு ம்கா அரசர் சைரஸ் பிறந்தார். அவரது சொந்த கணக்குப்படி, பொதுவாக துல்லியமாக இப்போது நம்பப்படுகிறது- சைரஸ் தனது தந்தையான முதலாம் காம்பிசிஸ் , தாத்தா முதலாம் சைரஸ் மற்றும் பெரிய தாத்தா ஆகியோருக்கு பின்னர் முடிசூட்டப்பட்டார். >சைரஸ், கஸ்ஸாண்டனேவை மணந்தார். காஸான்டேன் ஒரு அகேமியன் மற்றும் பர்னஸ்பிஸின் மகள். சைரஸ் மரணம் பற்றிய விவரங்கள் கணக்கில் வேறுபடுகின்றன. ஹீரோடோட்டஸின் வரலாறு அவரது வரலாற்றில் இருந்து இரண்டாவது மிக நீண்ட விவரங்களை அளிக்கிறது, அதில் சைரஸ் தனது தலைவிதியை மஸகெட்டேவுடனான கடுமையான போரில் சந்தித்தார்.மஸகெட்டே என்பது க்வாரெசும் மற்றும் கைஜில் கூம் பாலைவனங்களின் தெற்குப்பகுதியிலிருக்கும் பழங்குடியினமாகும். இப்பாலைவனம் இன்றைய கஜகஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் புல்வெளிப் பகுதிகளாகும் (steppe regions).இப்பழங்குடியினர்கள் குரோஸஸ் என்பவரின் அறிவுற்த்தலில் இப்போரினை நடத்தினர். மஸகெட்டே பழங்குடியினர் தங்கள் ஆடை மற்றும் வாழ்க்கை முறைகளில் ஸ்கைத்திய இனத்துடன் மிக நெருக்கமான தொடர்பினைக் கொண்டிருந்தனர். மஸகெட்டே பழங்குடியினர் ஆட்சியைப் பெறுவதற்காக, சைரஸ் முதலில் அவர்களது ஆட்சியாளரான பேரரசி டோமிரிஸை திருமணம் செய்து கொள்வதாக ஒரு வாய்ப்பளித்தார், ஆனால் பேரரசி டோமிரிஸ் அதை நிராகரித்தார். பின்னர் அவர் மஸகெட்டே பிரதேசத்தை பலவந்தமாக எடுத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டார் (ca. 529), பாலங்கள் மற்றும் அர்ப்பணிப்பு போர்க் படைகள், மஸகெட்டே பிரதேசத்தை மறு கரையில் கொண்டுள்ள ஜாகார்ட்ஸ் எனப்படும் சிர் தர்யா நதியினைக் கடக்க பயன்பட்டன. சைரஸது ஆக்கிரமிப்பை நிறுத்துவதற்கு ஒரு எச்சரிக்கையை அனுப்பினார் ராணி டோமிரீஸ், தனது படைகளை சந்திப்பதற்காக கௌரவ போரில் சைரஸை சந்தித்தார், அவருடன் இரு நாட்டினர் ஒருவரையொருவர் முறையாகப் போரிடுவதற்காக தனது நாட்டில் ஆற்றருகே உள்ள இடத்துக்கு அழைப்பு விடுத்தார்.அவர் தனது வாய்ப்பை சைரஸ் ஏற்றுக்கொண்டார், ஆனால் மஸகட்டே பழங்குடியினர் மது மற்றும் அதன் போதைப்பொருட்களைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்று தெரிந்து கொண்டார். அவர் முகாமிட்டு, முகாமுக்குள் மதுபானம் மற்றும் போதைப்பொருள்களை ஏராளமானவற்றை விட்டுவிட்டு, அவருடன் தனது சிறந்த வீரர்களைக் கொண்டுசென்று, குறைந்த திறன் கொண்டவர்களை விட்டுவிட்டு முகாமை விட்டு வெளியேறினார். ஸ்பேர்காபைஸ்யெஸ்ஸின்(அரசி டோமிரியின் இராணுவ ஜெனரல் மற்றும் அவரது மகன் ஆவார்) கீழ் உள்ள டோமிரியின் இராணுவம், சைரஸ் குழுவின் அங்கத்தினரைக் கொன்றதுடன், உணவு, மது ஆகியவற்றைக் கொண்டிருக்கும் முகாம்களை கண்டுபிடித்து,தங்களை அறியாமலேயே குடித்தனர்.தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் திறனைக் இழந்திருந்த ஸ்பேர்காபிஸ்யெஸ்ஸின் படையின் மீது ஒரு ஆச்சரியமான தாக்குதலை மேற்கொண்டார் மகா அரசர் சைரஸ். ஸ்பேர்காபைஸ்யெஸ் (Spargapises) மற்றும் அவரது இராணுவத்தினை வெற்றிகரமாக தோற்கடித்தது சைரஸ்ஸின் படை. அவர் கைதியாக இருந்தபோதிலும், போதை தெளிந்தப்பின், ஸ்பேர்காபைஸ்யெஸ் தற்கொலை செய்துகொண்டார். என்ன நடந்தது என்பதை அறிந்தபோது மகாராணி, சைரஸின் தந்திரோபாயங்களைக் கண்டித்து, பழிவாங்குவதாகக் பிரகடனம் செய்தார்.இராணுவத்தின் இரண்டாம் அலைவரிசையை முன்னெடுத்து வந்த மகாராணி இப்போது போரில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.மகா அரசர் சைரஸ் இறுதியில் கொல்லப்பட்டார், மற்றும் அவரது படைகள் மிகப்பெரிய இழப்புக்களை சந்தித்தன.ஹிரோடோட்டஸ் சைரஸ் மற்றும் பண்டைய உலகின் மிகப்பெரிய சண்டையாக இது குறிப்பிடுகிறார். சைரஸின் இரத்த வெறியிற்க்கும் அவரது மகன் மரணத்திற்கு பழிவாங்கும் ஒரு அடையாளமாகவும் சைரஸது தலையை துண்டித்துவிட்டு, இரத்தம் நிறைந்த பாத்திரத்தில் சைரஸின் தலையை முக்கினார் பேரரசி டோமிரீஸ்.இருப்பினும், சில அறிஞர்கள் இந்த பதிவை கேள்விக்குள்ளாக்குகின்றனர், ஏனென்றால் ஹிரோடோட்டஸ் சைரஸின் மரணத்தின் பல பதிப்புகளில் ஒன்றாகும் என்று நம்புவதால், நம்பகமான ஒரு ஆதாரத்திலிருந்து அவர் கேள்விப்பட்டார் என்று யாரும் சொல்லவில்லை. [[பகுப்பு:ஆக்கிமெனியப் பேரரசர்கள்]] [[பகுப்பு:ஈரான்]] [[பகுப்பு:பேரரசர்கள்]] [[பகுப்பு:ஈரானின் வரலாறு]] ஒக்குசாய் கட்சுசிக்கா ஒக்குசாய் "(Katsushika Hokusai)" என்பவர் அக்டோபர் 31, 1760– முதல் மே 10, 1849 வரை வாழ்ந்த எடோ காலத்தைச் சேர்ந்த ஒரு சப்பானிய ஓவியர் ஆவார். ஒக்குசாய் என்ற பெயரில் இவர் உக்கியோ-இ வகை ஓவியர், அச்சோவியர் என்று .பரவலாக அறியப்படுகிறார் . செச்சு டொயோவின் ஓவியங்களாலும், பிறவகை சீன ஓவிய பாணிகளாலும் பாதிக்கப்பட் ஒரு ஓவியராக கருதப்படுகிறார் . சப்பானில் சீன ஓவியங்களில் வல்லுனராக விளங்கிய இவர் சப்பானிலுள்ள எடோவில் (இன்றைய டோக்கியோ) பிறந்தார். பியூசி மலையின் முப்பத்தாறு காட்சிகள் என்னும் மர அச்சு ஓவியத் தொடரின் ஆக்குனராக ஒக்குசாயை பலரும் அறிவர். அனைத்துலக அளவில் புகழ்பெற்ற கனாகவாவின் பெரிய அலை பியூசி மலையின் முப்பத்தாறு காட்சிகள் தொடரில் உள்ளடங்கிய ஒரு ஓவியமாகும். உள்ளூர் சுற்றுப் பயண வளர்ச்சியினால் ஏற்பட்ட தேவையை நிறைவேற்றுவதற்காகவும், பியூசி மலையில் அவருக்கு இருந்த தனிப்பட்ட விருப்புக் காரணமாகவுமே ஒக்குசாய் இந்த முப்பத்தாறு காட்சிகளையும் வரைந்தார். இந்த ஓவியத் தொடரின் ஒரு பகுதியான குறிப்பாக பெரிய அலை, மெல்லிய காற்று, தெளிவான காலை ஆகிய ஓவியங்களே ஒக்குசாய்க்கு சப்பானிலும், வெளிநாடுகளிலும் பெரும்புகழைத் தேடிக் கொடுத்தன. உண்மையில் சப்பானிலும் வெளிநாடுகளிலும் ஒக்குசாயின் பெயரில் ஒரு ஓவியம் வரையப்படுமானால் அது ஒக்குசாயின் முப்பத்தாறு காட்சிகளின் நினைவுச்சின்ன அச்சு தொடராக மட்டுமே இருக்க முடியும் என்ற முடிவுக்கு வரலாம் என்று சரித்திர ஆசிரியரான ரிச்சார்ட் லேன் கூறுகிறார். இதற்கு முந்தைய ஒக்குசாயின் ஆக்கங்களும் முக்கியமானவையே ஆயினும், மேற்சொன்ன முப்பத்தாறு ஓவியங்களுக்குப் பின்னரே இவரது பிற ஓவியங்களும் கவனிப்புப் பெற்றன . ஒக்குசாயின் பிறந்த நாள் தெளிவாக அறியப்படவில்லை. ஆனால் ஒக்குசாய், ஓரெக்கி காலப்பகுதியின் பத்தாவது ஆண்டில், ஒன்பதாம் மாதம் (1760 அக்டோபர்-நவம்பர்) 23 ஆவது நாள், சப்பானின் ஏடோவின் கட்சுசிக்கா மாவட்டத்தில் ஒரு கைப்பணியாளர் குடும்பத்தில் பிறந்தார் எனப் பெரும்பாலும் கூறப்படுகிறது. ஒக்குசாயின் குழந்தை பருவ பெயர் டோக்கியோரோ ஆகும். இராணுவ சர்வாதிகாரி சோகனுக்காக கண்ணாடிகளை உருவாக்கிய கண்ணாடி தயாரிப்பாளர் நாககிமா இசே ஒக்குசாயின் தந்தையார் என்பதாக நம்பப்படுகிறது. ஒக்குசாயின் தந்தை ஒருபோதும் ஒக்குசாயை தன்னுடைய வாரிசாக அங்கீகரிக்கவில்லை. அதனால் அவரது தாயார் ஒரு காமக்கிழத்தியாக இருக்கலாம். தன்னுடைய ஆறாவது வயதிலிருந்தே ஒக்குசாய் ஓவியங்கள் வரையத் தொடங்கினார். இத்திறமை ஒருவேளை, கண்ணாடிகளின் மேல் கண்ணாடி வடிவமைப்புகளில் ஓவியம் வரையும் தொழில் புரிந்த இவருடைய தந்தையிடம் இருந்து கற்றுக் கொண்டதாக இருக்கலாம். ஒக்குசாய் தனது வாழ்நாளில் குறைந்தது முப்பது பெயர்களால் அறியப்படுகிறார். அக்காலத்து ஓவியர்களிடையே பல பெயர்களை வைத்துக்கொள்ளும் பழக்கம் நடைமுறையாக இருந்தது என்றாலும் ஒக்குசாய் வைத்துக்கொண்ட பெயர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம் ஆகும். இவர் அடிக்கடி பெயரை மாற்றிக்கொண்டார். இம் மாற்றங்கள் இவரது கலை உற்பத்தி பாணி என்பவற்றோடு தொடர்பு பட்டிருந்தது. இது, இவரது வாழ்க்கையை பல கட்டங்களாகப் பிரிப்பதற்கு வழிவகுத்தது. 12 ஆவது வயதில் ஒரு புத்தகக் கடை மற்றும் வாடகை நூலகத்தில் பணிபுரிவதற்காக ஒக்குசாயை அவருடைய தந்தை அனுப்பி வைத்தார். இத்தகைய வியாபார நிறுவனங்கள் சப்பானிய நகரங்களில் பிரபலமான நிறுவனங்களாக இருந்தன. மரப் பலகைகளில் வெட்டி உருவாக்கப்படும் புத்தகங்களை வாசிப்பது நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்களின் பிரபலமான பொழுதுபோக்காகும். 14 ஆவது வயதில் ஒக்குசாய் மரம் செதுக்கும் பயிற்சியாளராக பணிபுரியத் தொடங்கினார். 18 வயது வரை இதே பயிற்சியாளராக நீடித்த ஒக்குசாய் கட்சுகாவா சுங்சோவின் படப்பிடிப்பு வளாகத்தினுள் பிரவேசித்தார். கட்சுகாவா பள்ளியின் தலைவரான சுங்சோ ஓர் உக்கியோ-இ வகை ஓவியர் ஆவார். மரப்பலகைகளில் அச்சோவியம் செதுக்கும் இக்கலையில் ஒக்குசாய் பின்னாளில் வல்லவரானார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். சுங்சோ போன்ற உக்கியோ-இ கலைஞர்கள் அந்த சமயத்தில் சப்பான் நகரங்களில் பிரபலமான பணிப்பெண்கள் மற்றும் கபுக்கி நடிகர்களின் படங்களை முன்வைத்து ஓவியங்கள் வரைந்தனர். ஒரு வருடம் கழிந்த பின்னர் ஒக்குசாயின் பெயர் முதல் முறையாக மாற்றம் கண்டது. ஒக்குசாயின் முதலாளியால் சுன்ரோ என பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டார். 1779 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட கபுகி நடிகர்களின் தொடர்ச்சியான படங்களை இந்தப்பெயரிலேயே ஒக்குசாய் முதன்முதலாக அச்சேற்றினார். சுன்சோவின் படப்பிடிப்பு நிலையத்தில் பணிபுரிந்த பத்தாண்டுக் காலத்தில் ஒக்குசாய் தனது முதல் மனைவியை திருமணம் செய்து கொண்டார் . 1790 களின் முற்பகுதியில் அவர் இறந்துவிட்டார் என்பது மட்டுமல்லாமல் மிகக் குறைவாக அறியப்பட்டவராகவும் இருந்தார்.1797 ஆம் ஆண்டில் ஒக்குசாய் மறுபடியும் திருமணம் செய்து கொண்டார், ஆனால் இரண்டாவது மனைவியும் கூட சிறிது காலத்திற்கு பிறகு இறந்து போனார். இவ்விரு மனைவியர் மூலம் ஒக்குசாய் இரண்டு மகன்கள் மற்றும் மூன்று மகள்களுக்கு தந்தையானார். இவருடைய இளைய மகள் அய்யும் பின்னாளில் ஒரு ஓவியராக மலர்ந்தார் . 1793 ஆம் ஆண்டில் சுன்சோவின் இறப்பிற்குப் பிறகு, ஒக்குசாய் மற்ற பாணியிலான கலைகளை ஆராயத் தொடங்கினார். பிரெஞ்சு மற்றும் டச்சு பாணியிலான செம்பு செதுக்கல்கள், ஐரோப்பிய பாணி கலைகள் உள்ளிட்ட புதிய பானிகளை இவரால் பெற முடிந்தது. சுங்சோவின் தலைமை சீடரான சுங்கோவினால் கட்சுகாவா பள்ளியிலிருந்து ஒக்குசாய் விரைவில் வெளியேற்றப்பட்டார். சுங்கோவின் கைகளால் தான் தொல்லைக்குள்ளானது, தன் கலைத்துவ பாணி வளர்ச்சிக்கு ஒரு துண்டுதலாக அமைந்ததாக ஒக்குசாயே இந்நிகழ்வைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். ஒக்குசாய் தன்னுடைய படைப்புகளின் பொருளை மாற்றிக் கொண்டார். உக்கியோ-இ வகை பாரம்பரிய பொருள்களான அரசமங்கைகள் மற்றும் நடிகர்களின் உருவங்களில் இருந்து விலகிச் சென்றார். அதற்கு பதிலாக, இவரது வேலை பல்வேறு சமூக நிலைகளில் இருக்கும் சப்பானிய மக்களின் தினசரி வாழ்க்கை மற்றும் இயற்கை தொடர்பான படங்களில் கவனம் செலுத்தினார். இம்மாற்றம் உக்கியோ-இ வகை கலையிலும் ஒக்குசாயின் வாழ்க்கையிலும் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது. அடுத்த காலகட்டத்தில் ஒக்குசாயின் தவாரய பள்ளியுடனான தொடர்பால் இவருக்கு தவாரய சோரி என்ற பெயரைப் பெற்றுத் தந்தது. சுரிமோனோ என்ற பெயரிலான பல தூரிகை ஓவியங்களை இவர் தீட்டினார். மேலும் இக்கால கட்டத்தில் நகைச்ச்வைக் கவிதைகளுக்கான கையோகா இகான் விளக்கப்படங்களையும் இவர் வரைந்தார். 1798 ஆம் ஆண்டில், ஒக்குசாய் தன்னுடைய பெயரை ஒரு மாணவருக்கு சமர்ப்பித்துவிட்டு ஒரு சுதந்திர கலைஞனாக முதன்முறையாக ஒரு பாடசாலையிலிருந்து விடுவிக்கப்பட்டார், அப்போது ஒக்குசாய் தொமிசா என்ற புதிய பெயரைப் பெற்றார். 1800 ஆம் ஆண்டுகளில் ஒக்குசாய் உக்கியோ-இ வகைக் கலையை உருவப்படக்கலைக்குப் பயன்படுத்துவதைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தவில்லை. மேலும் இவர் பிறந்த ஊரான எடோவின் ஒரு பகுதியைக் குறிக்கும் கத்சுசிக்கா ஒக்குசாய் என்ற மிகவும் பிரபலமாக அறியப்பட்ட பெயர் பின்னர் வடக்கு படப்பிடிப்பகம் என்று அறியப்பட்ட பெயரையும் அவர் ஏற்றுக்கொண்டார், அந்த ஆண்டில் கிழக்கு தலைநகரம், எடோவின் எட்டு காட்சிகள் என்ற இரண்டு தொகுப்புகளை வெளியிட்டார். தனது சொந்த மாணவர்களை ஈர்த்த காரணத்தால் இறுதிக் காலத்தில் 50 மாணவர்களுக்கு ஓவியக் கலையைக் கற்பித்தார். அடுத்த பத்தாண்டுகளில் ஒக்குசாயின் கலை மற்றும் தன்னியக்க மேம்பாட்டுத் திறமை காரணமாக அவர் பெருமளவில் மேலும் புகழ்பெற்றார்.1804 ஆம் ஆண்டில் நடைபெற்ற டோக்கியோ திருவிழாவில், பெளத்த துறவி தருமாவின் 600 அடி (180 மீ) நீளம் கொண்ட உருவப்படத்தை துடப்பம் மற்றும் மையைக் கொண்டு உருவாக்கினார். ஒருமுறை சோகன்கன் ஐயனரியின் சபையில் மற்றொரு தூரிகை ஓவியக் கலைஞருடன் போட்டியிட ஒக்குசாய் அழைக்கப்பட்டார். சோகன் முன்னிலையில் ஒக்குசாயின் ஓவியம் உருவாக்கப்பட்டது. காகிதத்தில் ஒரு நீல வளைவை வரைந்து, அதன் குறுக்காக இரத்தம் சிந்திய கால்களுடன் ஒரு கோழி பின்தொடர்ந்து செல்வது போன்ற ஓவியத்தை வரைந்தார். தட்சுலா ஆற்றில் சிவப்பு நிற மேப்பிள் இலைகள் மிதந்து செல்கின்றன என அந்த ஓவியத்திற்கு உரிய விளக்கத்தை சோகனுக்கு அளித்து நடைபெற்ற போட்டியில் வென்றார். 1807 ஆம் ஆண்டு ஒக்குசாய் பிரபலமான நாவலாசிரியர் தக்கிசாவா பாகின் உடன் இணைந்து விளக்கப்பட புத்தகங்கள் வெளியீட்டு வரிசையில் ஒத்துழைத்தார். இருவருக்குமிடையில் தோன்றிய கலை வேறுபாடு காரணமாக இவர்களின் இணைப்பு ஒத்துழைப்பு அவர்களின் நான்காவது புத்தகத்தின் போதே முடிவுக்கு வந்தது. இந்த வெளியீட்டாளர், ஒக்குசாய் அல்லது பாகின் என்ற இருவரில் ஒருவரை மட்டுமே தக்கவைத்துக் கொள்ளமுடியும் என்ற நிலையில் புத்தக வெளியீட்டாளர் ஒக்குசாயையே தேந்தெடுத்தார். அந்த காலத்தில் அச்சிடப்பட்ட படைப்புகளில் விளக்கப் படங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவாக இந்நிகழ்ச்சி அமைந்தது. ஒக்குசாய் தனது படைப்புகளைக் கொண்டுள்ள புத்தகங்கள் தயாரிப்பதில் மிகுந்த கவனம் செலுத்தினார். சீனக் கவிதைத் தொகுப்பின் சப்பானிய பதிப்பான டோசிசென் எகோனின் என்ற புத்தகத்தின் ஒக்கோசாயின் வடிவமைப்புகள் தொடர்பாக வெளியீட்டாளர்களுக்கும் பலகை வடிவமைப்பாளர்களுக்கும் ஒக்குசாய் எழுதிய கடிதங்களின் இரண்டு நிகழ்வுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. புத்தகத்தில் ஒக்குசாயின் பாணியில் இருக்கவேண்டிய சில முகங்கள் வெட்டப்படுவதில் எகவா டோம்கிச்சி தவறாக வழிநடத்தியுள்ளதாக புத்தகத்தின் வெளியீட்டாளருக்கு ஒக்குசாய் ஒரு கடிதம் எழுதினார். ஒக்குசாய் எகவா டோம்கிச்சியுடன் இணைந்து பணியாற்றியவர் என்பது மட்டுமல்லாமல் ஒக்குசாய் பெரிதும் மதிக்கக் கூடிய ஒரு வடிவமைப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. புத்தக வடிவமைப்பில் ஈடுபட்டிருந்த மற்றொரு வடிவமைப்பாளர் சுகிதா கின்சியுக்கிற்கு ஒக்குசாய் நேரடியாக ஒரு கடிதம் எழுதினார். கின்சியு வடிவமைத்திருந்த ஓவியத்தின் கண்களும் மூக்கும் தான் விரும்பிய பாணியில் இல்லை என்றும் அவை திருத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். நூற்றுக்கணக்கான படிகளில் புத்தகம் தயாரிக்கப்பட்டு முடிந்த பிறகும் புத்தக வெளியீட்டாளர் ஒக்குசாயின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டு தேவையான திருத்தங்கள் செய்ய ஒப்புக்கொண்டார் என்பதே ஒக்குசாயின் வார்த்தைகளுக்கு இருந்த மதிப்பைக் காட்டுகிறது. சினான் சினான் என்று பரவலாக அறியப்படும் கோக்கா மிமார் சினான் ஆகா, ஓட்டோமான் காலத்துக் கட்டிடக் கலைஞரும், குடிசார் பொறியாளரும் ஆவார். இவர் முதலாம் சுலைமான், இரண்டாம் சலீம், மூன்றாம் முராட் ஆகிய சுல்தான்களின் கீழ் ஓட்டாமான் பேரரசின் தலைமைக் கட்டிடக் கலைஞராகவும் குடிசார் பொறியாளராகவும் பணிபுரிந்தார். ஏறத்தாழ ஐம்பது ஆண்டுக்காலம் ஓட்டோமான் பேரரசில் கட்டப்பட்ட ஒவ்வொரு முக்கியமான கட்டிடத்தினதும் கட்டுமானத்துக்கு அல்லது அதனை மேற்பார்வை செய்வதற்கு இவர் பொறுப்பாக இருந்தார். நடுத்தர அளவுள்ள கட்டிடங்களைத் தவிர்த்து முந்நூறுக்கு மேற்பட்ட முக்கிய கட்டிடங்களின் கட்டுமானங்களுக்கு இவர் பொறுப்பாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இவரது கட்டிடங்களுள் மிகப் புகழ் பெற்ற கட்டிடமாக விளங்குவது இசுத்தான்புல்லில் உள்ள சுலைமான் மசூதியே எனினும், இவரது மிகச் சிறந்த கட்டிடமாகக் கருதப்படுவது எடிர்னே என்னும் இடத்தில் அமைந்துள்ள செலிமியே மசூதி ஆகும். இவருக்குக் கீழ் மிக விரிவான ஒரு அரச திணைக்களம் இயங்கியது. இவரிடம் பணிபுரிந்த இவரது உதவியாளர்களில் பலர் பின்னர் புகழ் பெற்று விளங்கினர். இவர்களுள், சுல்தான் அகமது மசூதியின் கட்டிடக்கலைஞரான செடெஃபார் மெகுமெத் ஆகா போன்றவர்களும் அடங்குவர். ஓட்டோமான் கட்டிடக்கலையின் செந்நெறிக் காலத்தைச் சேர்ந்த மிகச் சிறந்த கட்டிடக்கலைஞராகக் கருதப்படும் சினான், மேற்குலகில் இவருக்குச் சமகாலத்தவரான மைக்கலாஞ்சலோவுடன் ஒப்பிட்டுக் கூறப்படுபவர். லூயிசு ஆம்சுட்ராங் லூயிசு ஆம்சுட்ராங் (ஆகஸ்ட் 4, 1901[2] – சூலை 6, 1971), எனப் பரவலாக அறியப்படும் லூயிசு டானியேல் ஆம்சுட்ராங் ஒரு அமெரிக்கப் பாடகரும் ஜாசு ஊதுகொம்பு இசைக் கலைஞரும் ஆவார். லூசியானாவில் உள்ள நியூ ஆர்லியன்சைச் சேர்ந்த இவரை "சாச்மோ", "பாப்சு" போன்ற பட்டப் பெயர்களாலும் அழைப்பதுண்டு. 1920களில் ஒரு சிற்றூதுகொம்பு, ஊதுகொம்பு இசைக் கலைஞராக முன்னணிக்கு வந்த ஆம்சுட்ராங் ஜாசு இசை மீது தணியாத ஆர்வம் கொண்டிருந்தார். இவர் இவ்விசை வகையின் போக்கை திட்டமுறையற்ற குழுமுறையில் இருந்து ஒருவர் நிகழ்ச்சிகள் பக்கமும் திருப்பினார். தனித்துவமான குரல் வளம் கொண்ட இவர் மிகவும் செல்வாக்குள்ள பாடகராகவும் விளங்கினார். வெளிப்பாட்டுத் தேவைகளுக்காக பாடலின் சொற்களிலும், இசையிலும் சூழலுக்கு ஏற்ப உடனுக்குடன் மாற்றம் செய்யும் திறமை கொண்டவராகவும் இவர் இருந்தார். பாடல் வரிகளுக்குப் பதில் அசைகளைப் பயன்படுத்திப் பாடுவதிலும் இவர் வல்லவர். ஊதுகொம்பு இசைத்தலோடு, மேடைக்கேற்ற கவர்ச்சித் தோற்றத்துக்கும், உடனடியாகவே அடையாளம் காணத்தக்க அவரது ஆழமான குரலுக்கும் ஆம்சுட்ராங் பெயர் பெற்றிருந்தார். 60களில் இவரது இசை வாழ்வின் இறுதிக் காலத்தில் இவரது செல்வாக்கு ஜாசு இசையையும் தாண்டிப் பொதுவான மக்கள் இசைமீது தாக்கம் கொண்டதாக இருந்தது. திறனாய்வாளர் இசுட்டீவ் லெக்கெட் என்பார், 20 ஆம் நூற்றாண்டின் மிக முக்கியத்துவம் கொண்ட இசைக் கலைஞர் ஆம்சுட்ராங்காக இருக்கலாம் என்று கூறியிருந்தார். லூயிசு ஆம்சுட்ராங் ஜூலை 4, 1900 இல் பிறந்தார் என்று பல வாழ்க்கை வரலாறுகளில் அடிக்கடி குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் 1971 இல் இறந்த போதிலும், 1980 ஆம் ஆண்டுகளின் மத்தியகாலம் வரை அவரது உண்மையான பிறந்த தேதி கண்டிறியப்படாமல் இருந்தது. ஆகஸ்ட் 4, 1901, ஆராய்ச்சியாளர் டாட் ஜோன்ஸ் மூலமாக ஞானஸ்நானம் பெற்ற பதிவுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. ஜூலை 4 வது நாள் அவரது பிறந்த தேதியாக ஒரு கட்டுக்கதை என்று மற்றொரு வாழ்க்கை வரலாறு கூறுகிறது. ஆம்ஸ்ட்ராங் நியூ ஆர்லியன்ஸில் ஆகஸ்ட் 4, 1901 அன்று மேரி ஆல்பர்ட் மற்றும் வில்லியம் ஆம்ஸ்ட்ராங் ஆகியோருக்கு பிறந்தார்.மேரி ஆல்பர்ட் லூசியானாவிலுள்ள பட்டுடில் இருந்து வந்தார். அவர் பதினாறு வயதிலேயே ஜேன் ஆல்லேயில் பெர்டிடோ மற்றும் போயிட்ராஸில் லூயிசை பெற்றெடுத்தார். லூயிஸ் பிறந்த பிறகு விரைவில் வில்லியம் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தை கைவிட்டுவிட்டார். மேரி ஆல்பர்ட் தனது மகனைப் பராமரிக்க முடியும் வரையிலும், ஐந்து வயது வரை அவருடைய தாய்வழி பாட்டி அவரை வளர்த்தார். பின்னர் 1910 இல் ஒரு படகில் பணிபுரிந்த தாமஸ் லீ என்ற ஒரு மனிதருடன் தாய் மேரி ஆல்பர்ட் ஒரு குடும்பத்தை அவர் உருவாக்கினார். அவர் வறுமையிலேயே தனது இளமைப்பருவத்தை அண்டை வீட்டிலேயே கழித்தார். அது அவருக்கு ஒரு போராட்டக்களமாக இருந்தது. அவரது தந்தை, வில்லியம் ஆம்ஸ்ட்ராங் (1881-1933), லூயிஸ் ஒரு குழந்தையாக இருந்த போது மற்றொரு பெண்ணுடன் தனிக் குடும்பத்தை உருவாக்கிக்கொண்டார். பின்னர் அவரது தாயார், மேரி "மாயன்" ஆல்பர்ட் (1886-1927) லூயிஸ் மற்றும் அவரது இளைய சகோதரி, பீட்ரைஸ் ஆம்ஸ்ட்ராங் கோலின்ஸ் (1903-1987) ஆகியோரை அவரது பாட்டி ஜோசபைன் ஆம்ஸ்ட்ராங், மற்றும் சில நேரங்களில் அவரது மாமா ஐசக். பராமரிப்பில் விட்டிருந்தார். பின் ஐந்து வயதில், அவரது தாயார், அவரது உறவினர்கள் மற்றும் வளர்ப்புத்தந்தை படை ஆகியோருடன் அவர் வாழ்ந்து வந்தார். அவர் ஃபிஸ்ஸ்க் ஸ்கூல் ஃபார் பாய்ஸ்ஸில் (Fisk School for Boys) சேர்ச்து, அங்கு அவர் பெரும்பாலும் இசைக்கு வெளிப்படையாகத் தொடர்பு கொண்டிருந்தார். அவர் பத்திரிகைகளை விநியோகம், நிலக்கரி விநியோகித்தல், இரவில் தெருக்களில் பாடுவது, உணவுப்பொருட்களை அகற்றுவதற்கும், உணவுவிடுதிகளில் விற்பதன், மூலம் சிறு தொகையினை பெற்றார் இருந்த போதிலும் அத்தொகை அவரது தாயை விபச்சாரத்திலிருந்து விடுபட வைக்கப் போதுமானதாக இல்லை. அவர் வீட்டிற்கு அருகில் உள்ள நடன அரங்கங்களில் தொங்கிக் கொண்டிருந்தார், அங்கு அவர் எல்லாவற்றையும் உரிமையாக்கிக் கொண்ட நாவல்களில் இருந்து கண்டறிந்தார். கூடுதல் பணத்திற்காக அவர் ஸ்டோரிவில்லியிடம் நிலக்கரி இழுத்தார். மேலும் விபச்சார மற்றும் நடன அரங்கங்களில், குறிப்பாக "பீட்டர் லலா" ஜோ, "கிங்" ஆலிவர் மற்றும் ஜாம் நிகழ்ச்சிகளில் பிரபல இசைக்கலைஞர்கள் ஆகியோர் வாசிப்பதை விரும்பிக் கேட்கலானார். பதினோரு வயதில், மேரி ஆல்பர்ட், பெர்டிடோ தெருவில் மகள் லூயிஸ், மகள் லூசி மற்றும் அவரது பொதுச் சட்டக் கணவர் டாம் லீ ஆகியோருடன் ஒர் அறை வீட்டிற்கு குடிபெயர்ந்தார். அவளுடைய சகோதரர் ஈக்கிற்கும் அவருடைய இரண்டு மகன்களுக்கும் அடுத்தபடியாக அவர்கள் தங்கியிருந்தார்கள். 1912 ஆம் ஆண்டில் ஃபிஸ்க் ஸ்கூலில் இருந்து விலகியபின், ஆம்ஸ்ட்ராங் பணத்திற்காக தெருக்களில் பாடினார். அவர் ஒரு லித்துவேனியா-யூத குடியேறிய குடும்பத்திற்காக பணியாற்றினார், கர்னோஃப்ஸ்கிஸ், ஒரு மறுசுழற்சிப் பொருட்கள் வியாபாரத்தை கொண்டிருந்தார்,அங்கு அவருக்கு வேலைகளை அளித்தார். தந்தை இல்லாத காரணத்தால் தனது குடும்பத்தில் ஒருவராகவே லூயிசை பாவித்து அவரை ஆளாக்கினார். கென்ரோஃப்ஸ்கிஸ் உடன் தனது உறவு பற்றிய ஒரு நினைவுகளை "லூயிஸ் ஆம்ஸ்ட்ராங் + நியூ ஆர்லியன்ஸில் யூத குடும்பம் லா 1907" என்ற நினைவுக் குறிப்பாக எழுதியுள்ளார். ஆம்ஸ்ட்ராங் அவரது வாழ்நாள் முழுவதும் ஒரு டேவிட் நட்சத்திரப் பதக்கத்தை அணிந்து அவர் அவர்களிடம் இருந்து கற்றது என்ன என்பது பற்றி எழுதினார்: "எப்படி வாழ்வது-உண்மையான வாழ்க்கை மற்றும் உறுதிப்பாடு. கென்ரோஃப்ஸ்கியின் செல்வாக்கு கர்னோஃப்ஸ்கி திட்டத்தின் மூலம் நியூ ஆர்லியன்ஸில் நினைவுகூறப்படுகிறது. இலாப நோக்கமற்ற நிறுவனமான அது நன்கொடை செய்யப்பட்ட இசைக்கருவிகள் வாசித்தல் "ஒரு அற்புதமான கற்றல் அனுபவத்தில் மற்றபடி பங்கெடுக்காத ஆர்வமுள்ள ஒரு குழந்தையின் கைகளில் அவற்றை வைத்துக் கொள்ளுங்கள்" என்றார். அவரது மதம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போது தான் ஒரு பாப்டிஸ்ட் (கிறித்தவ சமயக் கிளைக்குழு வகையினர்) என்று பதிலளித்தார் தாவீதின் நட்சத்திரம் (யூத மத அடையாளம்) எப்போதும் அணிந்திருக்கும் அவர் பேராயரின் நண்பராகவும் இருந்தார். கர்ன்ஸ்ஃப்ஸ்கி குடும்பத்தை கௌரவப்படுத்தும் விதமாக தாவீதின் நட்சத்திரத்தை ஆம்ஸ்ட்ராங் அணிந்திருந்தார். அவரை குழந்தை பருவத்திலிருந்து ஆளாக்கி முதல் ஊதுகொம்மை வாங்க அவருக்கு பணம் கொடுத்தவரும் இவரே. லூயிஸ் ஆம்ஸ்ட்ராங் உண்மையில், நியூ ஆர்லியன்ஸில் உள்ள இயேசு தேவாலயத்தின் தூய இருதய கத்தோலிக்கராக ஞானஸ்நானம் பெற்றார். அவர் போப்புகள் பியஸ் XII மற்றும் பால் VI ஐ சந்தித்தார். ஆயினும் அவர் தன்னை கத்தோலிக்கராகக் கருதினார் என்பதற்கான சான்றுகள் இல்லை. ஆம்ஸ்ட்ராங் பல்வேறு மதங்களுக்கிடையே சகிப்புத்தன்மையுடன் இருப்பதாகத் தெரிகிறது மேலும் அவற்றில் நகைச்சுவை உணர்வுடையவராகவும் விளங்கினார். ஆம்ஸ்ட்ராங்கின் பதிவுகள் கிராமி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்றன இது 1973 இல் நிறுவப்பட்ட ஒரு சிறப்பு கிராமி விருது ஆகும். "தரமான அல்லது வரலாற்று முக்கியத்துவம்" கொண்ட குறைந்தபட்சம் 25 வருடத்திய பதிவுகளை மதிப்பிடுவதற்கும் இவ்விருது அளிக்கப்படுகிறது. விளாடிமிர் விசொட்சுக்கி விளாடிமிர் செமியனோவிச் விசொட்சுக்கி (, சனவரி 25 1938 – சூலை 25 1980) என்னும் முழுப் பெயர் கொண்ட விளாடிமிர் விசொட்சுக்கி புகழ் பெற்ற சோவியத், உருசியப் பாடகரும், பாடலாசிரியரும், கவிஞரும், நடிகரும் ஆவார். தனது கலை மூலம் உருசியப் பண்பாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இவர் ஒரு யூத, உருசியக் கலப்பு இனத்தவர். பல்துறைத் திறமைகளைக் கொண்ட இவரை உருசியாவில் "பார்ட்" என்னும் சொல்லால் குறித்தனர். இச் சொல் சோவியத் ஒன்றியத்தில் சிறப்புப் பொருளைக் கொண்டதாக விளங்கியது. சோவியத் ஒன்றிய அமைப்புக்கு வெளியே பாடல்களை எழுதிப் பாடுபவர்களையே பொதுவாக "பார்ட்" என அழைத்தனர். எனினும் விளாடிமிர் வைசொட்சுக்கி இப்பெயரையிட்டு உற்சாகம் அடையவில்லை. தான் ஒரு நடிகனும் எழுத்தாளனும் மட்டுமே என்று கூறிக்கொண்ட அவர் மக்கள் குறிப்பிடுவதைப் போன்ற வகைப்பாடுகளுக்குள் தான் அடங்கவில்லை எனவும் குறிப்பிட்டார். சோவியத் கலாச்சார அமைப்பு இவரைக் கண்டுகொள்ளாத போதிலும், இவர் தனது வாழ்க்கைக் காலத்திலேயே புகழுடன் விளங்கினார். அத்துடன் இன்றுவரை உருசியாவின் பல நடிகர்களும், இசைக்கலைஞர்களும் இவரது செல்வாக்குக்கு உட்பட்டவர்களாக இருக்கின்றனர். விளாடிமிர் வைசொட்சுக்கி, மாசுக்கோவில் பிறந்தார். இவரது தந்தையார் யூத இனத்தைச் சேர்ந்த ஒரு படைத்துறை அதிகாரியாகப் பணியாற்றிவந்தார். இவரது தாய் ஒரு உருசியர் செருமன் மொழி மொழிபெயர்ப்பாளராக இருந்தார். இவர் பிறந்து சிறிது காலத்துக்கு உள்ளாகவே இவரது தந்தையும் தாயும் மணமுறிவு செய்துகொண்டனர். இவர் தனது தந்தையுடனும் தந்தையின் இரண்டாவது மனைவியுடனும் வளர்ந்தார். இவரது சிற்றன்னை ஆர்மேனிய இனத்தவர். இவ்வாறு இரண்டு ஆண்டுகள் தனது தந்தையுடனும், சிற்றன்னையுடனும், இரண்டாம் உலகப் போருக்கு முந்திய செருமனியில் சோவியத் ஆக்கிரமித்திருந்த பகுதிக்குள் அடங்கியிருந்த எபர்சுவால்டே என்னும் இடத்திலிருந்த படைத்துறை முகாமில் வாழ்ந்தார். 1955 ஆம் ஆண்டில் இவர் மாசுக்கோ குடிசார் பொறியியல் நிறுவனத்தில் கல்வி கற்பதற்காகச் சேர்ந்து கொண்டார்.ஆனால், சில மாதங்களுக்கு உள்ளாகவே நடிப்புத் தொழிலை மேற்கொள்வதற்காக அதிலிருந்து விலகினார். 1959 ஆம் ஆண்டில் இவர் அலெக்சாண்டர் புசுக்கின் அரங்கில், பெரும்பாலும் சிறிய வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். 1964 ஆம் ஆண்டில், இயக்குனர் யூரி லியுபிமோவ் இவரைத் தகன்கா சதுக்கத்தில் அமைந்திருந்த நாடகத்துக்கும் நகைச்சுவைக்குமான மாசுக்கோ அரங்கில் சேருமாறு அழைத்தார். பிற்காலத்தில் யூரி லியுபிமோவ், விளாடிமிரின் நெருங்கிய தோழரும் ஆலோசகரும் ஆனார். இந்த அரங்கில் விளாடிமிர் முக்கிய பாகம் ஏற்று நடித்தார். சேக்சுப்பியரின் "அம்லெட்", பிரெக்ட்டின் "கலிலியோவின் வாழ்க்கை" போன்ற நாடகங்களில் இவர் முக்கிய பாத்திரங்களை ஏற்று நடித்துப் பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளிலும் இடம் பெறலானார். தகன்கா அரங்க நிறுவனம், அரசியல் விசுவாசமின்மை போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் அடிக்கடி விசாரணைகளுக்கு உள்ளானது. இக் காலப்பகுதியில் இவர் சில திரைப்படங்களிலும் நடித்திருந்ததுடன் அப்படங்கள் சிலவற்றில் இவரது பாடல்களும் இடம்பெற்றிருந்தன. மலையேறுதலைப் பற்றிய திரைப்படமான "த வேர்ட்டிக்கல்" இத்தமைய ஒரு படம் ஆகும். இக் காலத்திலிருந்து வைசோட்சுக்கியின் படைப்புக்கள் எதற்கும் அரச ஆதரவு கிடைக்காததோடு, தனியுரிமை கொண்ட சோவியத்தின் "மெலோடியா" என்னும் பாடல் பதிவுத்துறையும் இவருக்கு எந்த ஒப்பந்தமும் கொடுக்கவில்லை. எனினும் இவரது புகழ் நாட்டில் பெருகி வந்தது. அக்காலத்தில் நாடாப்பதிவுக் கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டதனால், இவரது பாடல்களை மக்கள் தாமாகவே பதிவு செய்து கேட்டு ரசித்தனர். கால்பந்து கூட்டமைப்பு பொதுவாக கால்பந்து அல்லது என்று அறியப்படும் சங்கக் கால்பந்து ("Association football") என்பது, பதினொரு வீரர்கள் கொண்ட இரண்டு அணிகளுக்கு இடையில் ஒரு கோள வடிவப் பந்தினைக் கொண்டு விளையாடப்படும் ஒரு அணி விளையாட்டு ஆகும். சங்கக் கால்பந்து என்பது உலகெங்கிலும் மிகப் பிரபலமாக இருக்கும் காற்பந்து விளையாட்டு வகையாகும். இது உலகிலேயே மிகவும் பிரபலமான விளையாட்டாகக் கருதப்படுகிறது. இந்த விளையாட்டு, செவ்வக வடிவ புல்தரை அல்லது செயற்கைப் புல்தரை ஆடுகளத்தில் விளையாடப்படுகிறது. இதில் குறுகிய பக்கங்கள் ஒவ்வொன்றின் மையத்திலும் ஓர் இலக்கு இருக்கும். விளையாட்டின் நோக்கம், பந்தினை எதிர் கோல்/இலக்குக் கம்பத்திற்கு உள்ளே தள்ளி எண்ணிக்கை பெறுவதாகும். சங்கக் கால்பந்து விளையாட்டில், கோல்கீப்பர்கள் மட்டுமே பந்தினை நகர்த்துவதற்கு தங்கள் கைகளைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்; அணியின் மற்ற உறுப்பினர்கள், பந்தினைக் கால்களால் அல்லது கைகளைத் தவிர்த்த மற்ற உடல் பாகங்களால் மட்டுமே நகர்த்த அனுமதிக்கப்படுவர். ஆட்டத்தின் முடிவில் அதிகமான கோல்களை எடுத்திருக்கும் அணி வெற்றிபெறுகிறது. இரு பாதிகளாக ஆடப்படும் ஆட்டத்தின் நிறைவில் இரு அணிகளும் பெற்ற கோல் எண்ணிக்கை சமமாக இருந்தால், ஆட்டம் "சமன்" என அறிவிக்கப்படுகிறது. அல்லது போட்டியின் வடிவத்தை சார்ந்து ஆட்டம் கூடுதல் நேரம் மற்றும்/அல்லது ஒரு சமன்நீக்கி மோதலுக்கு இட்டுச் செல்கிறது. நவீன கால்பந்து ஆட்டத்தின் விதிகள் இங்கிலாந்தில் கால்பந்துச் சங்கத்தினால் உருவாக்கப்பட்டது. இதன் 1863 காற்பந்தாட்டச் சட்டங்கள் தான் இன்று விளையாட்டு ஆடப்படும் முறைக்கு அடித்தளம் இட்டன. சர்வதேச ரீதியாக கால்பந்து விளையாட்டு பொதுவாக ஃபிஃபா (FIFA) என்கிற சுருக்கப் பெயரால் அறியப்படும் பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு மூலமாகக் கட்டுப்படுத்தப்படுகிறது. மிகவும் புகழ் வாய்ந்த சர்வதேச கால்பந்து போட்டி காற்பந்து உலகக்கோப்பையாகும். இது ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறையும் நடத்தப்படுகிறது. உலகளவில் மிகவும் பரந்த அளவில் பார்க்கப்படும் இந்த நிகழ்வு, கோடை ஒலிம்பிக் போட்டிகளை விடவும் இரு மடங்கு பார்வையாளர்களைக் கொண்டிருக்கும் பெருமையுடையது. ஒரு பந்தை அங்குமிங்கும் உதைத்து விளையாடும் ஆட்டங்கள் வரலாறு முழுவதும் ஆடப்பட்டிருக்கின்றன. ஃபிஃபாவின் கூற்றுப்படி, "இந்தத் திறமையான நுட்பத்தை துல்லியமாக பயின்றதற்கான அறிவியல் ஆதாரம் சீனாவின் கிமு 2வது மற்றும் 3வது நூற்றாண்டு காலம் வரை செல்கிறது (சுஜு விளையாட்டு)." மத்தியகால ஐரோப்பாவில் கால்பந்தின் பல்வேறு வகைகளும் விளையாடப்பட்டன; காலகட்டம் மற்றும் இடத்தைப் பொறுத்து ஆட்ட விதிகள் பெருமளவு மாறுபட்டன. இங்கிலாந்தில் 19-ஆம் நூற்றாண்டின் மத்தியில், பொதுப் பள்ளிகளில் விளையாடப்பட்ட கால்பந்தின் பரவலான வேறுபட்ட வகைகளை ஒருங்குபடுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் இருந்து கால்பந்து விளையாட்டின் நவீன விதிகள் வடிவம் பெற்றன. 1848 ஆம் ஆண்டில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதன் முதலில், கால்பந்து விளையாட்டுக்கான விதிகள் வரைவுபெற்றன. கேம்பிரிட்ஜ் விதிகள் என்றழைக்கப்பட்ட அவ்விதிகள், அடுத்து வந்த காலங்களில் வரையறுக்கப்பட்ட விதிகளின் உருவாக்கம் மற்றும் மேம்பாட்டில் செல்வாக்கு செலுத்தின. கேம்பிரிட்ஜ் விதிகள் டிரினிடி கல்லூரியில் நடந்த ஒரு கூட்டத்தில் இயற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில் எடன், ஹரோ, ரக்பி, வின்செஸ்டர் மற்றும் ஷ்ரூஸ்பெரி பள்ளிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த விதிகள் அனைவராலும் ஏற்றுக்கொண்டிருக்கப்படவில்லை. 1850களில், ஆங்கில உலகெங்கிலும் கால்பந்தின் பல்வேறு வடிவங்களை விளையாடுவதற்கு பள்ளிகள் அல்லது பல்கலைக்கழகங்களுடன் தொடர்பில்லாத பல கழகங்கள் உருவாகின. சில கழகங்கள் தங்களுக்கான பிரத்தியேக விதிகளை உருவாக்கின. அதில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது, 1857 ஆம் ஆண்டில் முன்னாள் பொதுப் பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்ட ஷெஃபீல்டு கால்பந்துக் கழகம் ஆகும். இது "ஷெஃபீல்டு கால்பந்துச் சங்கம்" உருவாக்கத்திற்கு வழிவகுத்தது; அச்சங்கம், தமக்கான கால்பந்து விதிமுறைகளை உருவாக்கியது. மேலும், 1862-ஆம் ஆண்டில் "உப்பிங்காம் பள்ளி"யைச் சேர்ந்த "ஜான் சார்லசு த்ரிங்" என்பவரும் மிகச் சிறப்பான, செல்வாக்கான காற்பந்து விதிமுறைகளை உருவாக்கினார். இவ்வாறான தொடர்ந்த முயற்சிகள் 1863-ஆம் ஆண்டில் கால்பந்துச் சங்கம் (FA) உருவாவதற்கு பங்களிப்பு செய்தன. இந்தச் சங்கம் லண்டன், கிரேட் குவீன் ஸ்ட்ரீட்டில் உள்ள ஃப்ரீமேசன்ஸ்' டேவர்ன் என்கிற இடத்தில் 26 அக்டோபர் 1863 அன்று தனது முதல் கூட்டத்தை நடத்தியது. அக்டோபருக்கும் டிசம்பருக்கும் இடையில், அவ்விடத்தில் மேலும் ஐந்து கூட்டங்கள் நடத்தப்பட்டன; இதன் விளைவாக, சங்கக் காற்பந்து விளையாட்டின் திறம்பட்ட விதிகளின் முதல் தொகுப்பு உருவாகியது. இறுதிக் கூட்டத்தில் பிளாக்ஹீத் கழகப் பிரதிநிதி, கால்பந்துச் சங்கத்துக்கான தனது கழகத்தின் ஆதரவை விலக்கிக் கொண்டார். முந்தைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட இரண்டு வரைவு விதிகள் அகற்றப்பட்ட காரணத்தால், விலகும் முடிவை அக்கழகம் எடுத்தது. முதலாவது, கையில் பந்து இருக்கும் நிலையில் ஓடுவது குறித்தது; இரண்டாவது, இப்படி ஓடுகையில் எதிரணி வீரரின் கால்களை தட்டி விடுவது மற்றும் பிடிப்பது ஆகியவை குறித்தது. இங்கிலாந்தின் பிற ரக்பி கால்பந்துக் கழகங்களும் இதனைப் பின்பற்றி கால்பந்துச் சங்கத்தில் சேரவில்லை அல்லது அதில் இருந்து விலகின. பின்னர், 1871-ஆம் ஆண்டில் ரக்பி கால்பந்து ஒன்றியம் உருவாக்கப்பட்டது. எஞ்சியிருந்த பதினொரு கால்பந்துக் கழகங்களும், "எபினேசர் கோப் மோர்லி"யின் தலைமையின் கீழ், ஆட்டத்தின் பதின்மூன்று மூல விதிகளையும் உறுதிப்படுத்தின. ஷெஃபீல்டு கால்பந்துக் கழகம் 1870-கள் வரை தன்னுடைய சொந்த விதிகளின் படி விளையாடியது. ஷெஃபீல்டு விதியைப் பின்பற்றும் ஆட்டங்களுக்கும், கால்பந்துச் சங்க விதிகளைப் பின்பற்றும் ஆட்டங்களுக்கும் வித்தியாசம் வெகு குறைவாக இருந்தவரை கால்பந்துச் சங்கம், ஷெஃபீல்டின் சில விதிகளை உள்ளீர்த்துக் கொண்டது. ஆட்டத்தின் விதிகள் தற்போது பன்னாட்டுக் கால்பந்துச் சங்க வாரியத்தின் (IFAB) மூலம் தீர்மானிக்கப்படுகிறது. கால்பந்துச் சங்கம், இசுக்கொட்லாந்து கால்பந்துச் சங்கம், வேல்சு கால்பந்துச் சங்கம், மற்றும் அயர்லாந்து கால்பந்துச் சங்கம் ஆகியவை பங்குபெற்ற மான்செஸ்டர் கூட்டத்திற்கு பிறகு 1886-ஆம் ஆண்டில் இந்த வாரியம் உருவாக்கப்பட்டது. உலகின் மிகவும் பழமையான கால்பந்துப் போட்டி கால்பந்துச் சங்கக் கோப்பையாகும். இது, 1872-ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தின் உள்நாட்டுக் கால்பந்துக் கழக அணிகளுக்கிடையே நடத்ததப்பட்டு வருவதாகும்; இது "சி.டபிள்யூ.அல்காக்" என்பவரின் முயற்சியில் முதலில் நடத்தப்பட்டது. உலகின் முதல் அதிகாரப்பூர்வ சர்வதேச கால்பந்து ஆட்டம், 1872-ஆம் ஆண்டில் ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கிளாஸ்கோவில் நடந்தது; இதுவும் "சி.டபிள்யூ.அல்காக்" என்பாரின் உந்துதலின் பேரிலேயே நடத்தப்பட்டது. உலகின் முதல் கால்பந்துக் கூட்டிணைவுப் போட்டிகளின் தாயகமாக இங்கிலாந்து விளங்குகிறது; இக்கால்பந்துக் கூட்டிணைவு 1888-ஆம் ஆண்டில் பெர்மிங்காமில் ஆரம்பிக்கப்பட்டது. தொடக்க காலங்களில், மத்திய இங்கிலாந்து மற்றும் வட இங்கிலாந்தில் இருந்து 12 கால்பந்துக் கழகங்கள் இக்கூட்டிணைவில் பங்கேற்றன. பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு (FIFA) பாரிஸில் 1904-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது; கால்பந்துச் சங்கத்தின் ஆட்ட விதிகளையே இது பின்பற்றும் என்றும் அறிவிக்கப்பட்டது. பன்னாட்டளவில் கால்பந்து ஆட்டமானது புகழ்பெற்றதைத் தொடரந்து, ஃபிஃபா-வின் பிரதிநிதிகள் பன்னாட்டுக் கால்பந்துச் சங்க வாரியத்தில் இணைய அனுமதிக்கப்பட்டனர். இப்போது இந்த வாரியத்தில் பிபாவில் இருந்து நான்கு பிரதிநிதிகளும் நான்கு பிரித்தானிய சங்கங்களில் இருந்து ஒவ்வொரு பிரதிநிதியுமாக மொத்தம் எட்டுப் பிரதிநிதிகள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இன்று கால்பந்து, உலகெங்கிலும் அனைத்து இடங்களிலும் தொழில்முறை மட்டத்தில் விளையாடப்பட்டு வருகிறது. இலட்சக்கணக்கான மக்கள் தங்களின் மனதைக் கவர்ந்த அணிகளின் ஆட்டத்தைக் காண கால்பந்து மைதானங்களுக்கு தொடர்ந்து செல்கிறார்கள். மேலும் கோடிக்கணக்கான மக்கள் இந்த ஆட்டத்தை தொலைக்காட்சியில் கண்டு களிக்கிறார்கள். மிகப்பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கால்பந்தினை விளையாடவும் செய்கிறார்கள்; 2001-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஃபிஃபா கணக்கெடுப்பு ஒன்றின் படி, 200க்கும் அதிகமான நாடுகளின் சுமார் 240 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொடர்ந்து கால்பந்து விளையாடுகிறார்கள். இதன் எளிய விதிகளும் குறைந்தபட்ச சாதன அவசியங்களும் சந்தேகமில்லாமல் அது பரவலாகப் பிரபலமடையவும் வளர்ச்சியடையவும் உதவியுள்ளது. காற்பந்தானது, உலகளவில் எந்தவொரு விளையாட்டையும் விட அதிக அளவிலான தொலைக்காட்சிப் பார்வையாளர்களைக் கொண்டிருக்கிறது. உலகின் பல பாகங்களில், கால்பந்து உணர்வுப்பூர்வமான பாத்திரத்தை ஏற்றுள்ளதோடு, ரசிகர்கள், உள்ளூர் சமுதாயங்கள், ஏன் நாடுகளின் வாழ்க்கையிலும் கூட ஒரு முக்கிய பாத்திரத்தை ஆற்றுகின்றன. ஐவரி கோஸ்ட் தேசிய காற்பந்து அணியானது 2005-ஆம் ஆண்டில் நாட்டின் உள்நாட்டு யுத்தத்தில் ஒரு போர்நிறுத்தத்திற்கு வழிவகுத்திருக்கிறது; போராளிகளின் இராணுவமும், தேசிய இராணுவமும் போராளிகளின் தலைநகரில் ஒரு கால்பந்துப் போட்டியில் ஆடினர். இவ்வாறாக, கால்பந்து "அமைதியின் தூது"வனாக இருந்திருக்கிறது. அதே வேளையில், சூன், 1969-இல் "எல் சால்வடார்" மற்றும் "ஹோன்டுராஸ்"க்கு இடையே நடந்த போருக்குக் காரணம் கால்பந்து விளையாட்டுதான் என்று பரவலாய்க் கருதப்படுகிறது. 1990-களில் யூகோசுலேவியப் போரின் துவக்கத்தில் பெருமளவில் பதற்றம் அதிகரித்ததற்கு, கால்பந்துப் போட்டியே காரணம் எனப்படுகிறது; மார்ச், 1990, அன்று "டினமோ சாக்ரெப்" மற்றும் "ரெட் ஸ்டார் பெல்கிரேடு" அணிகளுக்கு இடையிலான ஒரு போட்டி கலவரத்தில் முடிந்தது. கால்பந்து விதிகள் இங்கிலாந்தில் 1863 ஆம் ஆண்டில் கால்பந்துச் சங்கத்தால் உருவாக்கப்பட்டன. "சங்கக் கால்பந்து" (Association Football) என்கிற பெயரானது, அந்த சமயத்தில் விளையாடப்பட்ட கால்பந்தின் மற்ற வடிவங்களில் இருந்து, குறிப்பாக ரக்பி கால்பந்தில் இருந்து, பிரித்துக் காட்ட உருவாக்கப்பட்டது. "சாக்கர்" என்கிற வார்த்தை இங்கிலாந்தில் தான் உருவானது, இது 1880களில் "அசோசியேசன்" என்கிற ஆங்கில வார்த்தையின் கொச்சைமொழிச் சுருக்கமாக முதலில் தோன்றியது, பல சமயங்களில் முன்னாள் இங்கிலாந்து கேப்டனான "சார்லசு ரெபோர்ட்-பிரவுன்" தான் இப்பெயருக்கு காரணகர்த்தாகவாக கூறப்படுகிறார். இந்நாட்களில், அநேக நாடுகளில் இந்த விளையாட்டு "கால்பந்து" என்றே பொதுவாக அறியப்படுகிறது. கால்பந்தின் பிறவகை ஆட்டங்களும் பிரபலமாக இருக்கும் நாடுகளில், இந்த விளையாட்டு பொதுவாக "சாக்கர்" எனக் குறிப்பிடப்படுகிறது, அமெரிக்கா மற்றும் கனடாவின் கட்டுப்படுத்தும் அமைப்புகளின் அதிகாரப்பூர்வ பெயர்களில் இவ்வண்ணமே பயன்படுத்தப்படுகிறது. இந்த விளையாட்டின் உலக அளவிலான கட்டுப்படுத்தும் அமைப்பான ஃபிஃபா, இந்த விளையாட்டை தனது சட்டவிதிகளில் சங்கக் கால்பந்து என்றே வரையறை செய்கிறது. ஆனாலும், ஃபிஃபா மற்றும் பன்னாட்டு ஒலிம்பிக் குழு மிகவும் வழக்கமாகப் பயன்படுத்தும் வார்த்தை "கால்பந்து" என்பதாக இருக்கிறது. கால்பந்தானது ஆட்ட விதிகள் என்று அழைக்கப்படும் ஒரு விதிகளின் தொகுப்பின் படி விளையாடப்படுகிறது. "காற்பந்து" என்று அழைக்கப்படும் ஒற்றை கோளவடிவப் பந்து கொண்டு இந்த விளையாட்டு விளையாடப்படுகிறது. பதினொரு வீரர்கள் கொண்ட இரண்டு குழுக்கள் பந்தினை அடுத்த அணியின் கோல் கம்பங்களுக்கு உள்ளே செலுத்துவதற்கு போட்டியிடுகின்றனர். அப்படி செலுத்தி விட்டால் ஒரு கோல் எண்ணிக்கை பெறுகின்றனர். ஆட்டத்தின் முடிவில் அதிகமான கோல்களை ஈட்டியிருக்கும் அணி வெற்றி பெற்றதாகும்; இரண்டு அணிகளும் சம எண்ணிக்கையில் கோல்கள் எண்ணிக்கை கொண்டிருந்தால் ஆட்டம் டிரா. ஒவ்வொரு அணியும் ஒரு அணித்தலைவர் மூலம் வழிநடத்தப்படுகிறது. அடிப்படை விதியானது ஆட்டவீரர்கள் (கோல்கீப்பர்கள் தவிர) பந்தினை தங்கள் கைகள் அல்லது புஜங்கள் மூலம் கையாளக் கூடாது என்பதாகும் (ஆயினும் ஒரு உள்ளெறி மறுதுவக்க சமயத்தில் அவர்கள் கைகளைப் பயன்படுத்துகிறார்கள்). வீரர்கள் பொதுவாக பந்தினை நகர்த்த தங்கள் கால்களைத் தான் பயன்படுத்துகிறார்கள் எனினும், தங்களின் கைகள் அல்லது புஜங்கள் தவிர்த்து தங்கள் உடம்பின் எந்த பாகத்தையும் அவர்கள் பயன்படுத்தலாம். பொதுவான ஆட்டத்தில், அனைத்து வீரர்களும் பந்தினை எந்த திசையிலும் ஆடவும் ஆடுகளம் முழுவதும் நகரவும் சுதந்திரம் உண்டு. பொதுவான விளையாட்டில், வீரர்கள் கடைவது, பந்தினை அணி சகாவுக்கு கடத்துவது, கோலுக்கு பந்தை உதைப்பது ஆகிய தனிநபர் கட்டுப்பாடு மூலம் கோல் எண்ணிக்கை பெறும் வாய்ப்புகளை உருவாக்க முயற்சிக்கிறார்கள். அது எதிரணி கோல்கீப்பரால் தடுக்கப்படுகிறது. எதிரணி வீரர்கள் பந்தின் கட்டுப்பாட்டை மீண்டும் கைப்பற்றுவதற்காக ஒரு கடத்தப்பட்ட பந்தினை குறுக்கே சென்று எட்டப் பார்ப்பார்கள் அல்லது பந்தினை கால்வசம் கொண்டிருக்கும் எதிரணி வீரரின் அருகில் சென்று அதனை தட்டிப் பறிக்க முயல்வார்கள்; ஆயினும் எதிரணி வீரர்கள் இடையில் உடல் ரீதியான தொடல் இருக்கக் கூடாது. கால்பந்து பொதுவாக தடையின்றி செல்லும் ஒரு விளையாட்டாகும். பந்து ஆடுகளத்தை விட்டு வெளிச் சென்றாலோ அல்லது நடுவர் ஆட்டத்தை நிறுத்தினாலோ மட்டும் தான் ஆட்டம் நிற்கும். ஒரு இடைநிறுத்தத்திற்குப் பிறகு, குறிப்பிடப்படும் மறுதுவக்கத்துடன் ஆட்டம் மறுபடியும் தொடங்கும். தொழில்முறை விளையாட்டு மட்டத்தில், அநேக ஆட்டங்கள் பொதுவாக குறைந்த எண்ணிக்கையிலான கோல்கள் தான் பெறுவதாய் இருக்கும். கோல்கீப்பரைத் தவிர வேறு எந்த வீரருக்கும் இருக்குமிடத்தை ஆட்ட விதிகள் குறிப்பிடுவதில்லை. ஆனால் ஏராளமான சிறப்பு பாத்திரங்கள் உருவாகியுள்ளன. பரந்த வகையில், இது மூன்று முக்கிய வகைகளை அடக்கியிருக்கிறது: தாக்கு வீரர்கள், அல்லது முன்னணியினர்: இவர்களின் முக்கிய வேலை கோல்களுக்கு உதைப்பது; அரண் வீரர்கள்: இவர்களின் சிறப்பு பாத்திரம் எதிரணியினரை கோல் போட விடாமல் தடுப்பது; நடுக்கள வீரர்கள்: இவர்கள் எதிரணியிடம் இருந்து பந்தினை கைப்பற்றி தங்கள் அணி ஃபார்வர்டுகளுக்கு கடத்துவார்கள். இந்த நிலைகளில் இருப்பவர்கள் அவுட்பீல்டு வீரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த நிலைகள், அந்த வீரர் அநேக நேரத்தை களத்தின் எந்த பகுதியில் செலவிடுகிறார் என்பதைக் கொண்டு மேலும் துணைப்பிரிவுகளாக்கப்படுகின்றன. உதாரணமாக, சென்ட்ரல் டிஃபென்டர்கள், மற்றும் இடது மற்றும் வலது மிட்பீல்டர்கள் ஆகியோர் உள்ளனர். பத்து அவுட்பீல்டு வீரர்களும் எந்த கூட்டணியாகவும் ஒழுங்குபடுத்தப்படலாம். ஒவ்வொரு நிலையிலும் வீரர்களின் எண்ணிக்கையும் அணியின் ஆட்ட நடையைத் தீர்மானிக்கிறது; கூடுதலான ஃபார்வர்டுகளும் குறைவான டிஃபென்டர்களும் இருந்தால் ஒரு கூடுதல் மூர்க்கமான தாக்குதல் நோக்க ஆட்டமாக இருக்கும். இதற்கு நேரெதிராக இருந்தால் மெதுவான, கூடுதல் பாதுகாப்புடனான பாணியாக இருக்கும். வீரர்கள் ஆட்டத்தின் பெரும்பகுதியை ஒரு குறிப்பிட்ட நிலையில் தான் கழிக்கிறார்கள். வீரர் நகர்வில் குறைவான கட்டுப்பாடுகள் உள்ளன. வீரர்கள் எந்த சமயத்திலும் நிலைகளை மாற்றிக் கொள்ளலாம். அணி வீரர்களின் ஒரு வரைபடத் தோற்றம் "நிலை அணிவகுப்பு" எனப்படுகிறது. அணியின் நிலை அணிவகுப்பு திட்டப்படம் மற்றும் தந்திர உத்திகளை வரையறை செய்வது பெரும்பாலும் அணி மேலாளரின் முழுஉரிமையாக இருக்கிறது. அதிகாரப்பூர்வ ஆட்ட விதிகளில் பதினேழு விதிகள் உள்ளன. கால்பந்தின் அனைத்து நிலைகளுக்கும் ஒரே விதிகள் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தன. எனினும் இளையோர், மூத்தவர்கள் அல்லது பெண்கள் என தனித்தனிக் குழுக்களுக்கான சில மாறுதல்கள் அனுமதிக்கப்பட்டன. பதினேழு விதிகள் தவிர, கால்பந்து வாரியத்தின் முடிவுகளும் பிற வழிநடத்தல்களும் கால்பந்து விளையாட்டின் கட்டுப்பாட்டில் பங்களிப்பு செய்கின்றன. ஆட்ட விதிகள் பிபா மூலம் வெளியிடப்படுகின்றன. ஆனால் பராமரிப்பது பன்னாட்டுக் கால்பந்துச் சங்க வாரியம் தானே தவிர, பிபாவே அல்ல. ஒவ்வொரு அணியிலும் அதிகப்பட்சமாய் பதினொரு வீரர்கள் உள்ளனர் (பதிலீட்டு வீரர்கள் இல்லாமல்), இவர்களில் ஒருவர் கோல்கீப்பராய் இருப்பார். ஒரு அணியில் குறைந்தபட்சம் ஏழு வீரர்கள் இருக்க விதிகள் கோருகின்றன. கோல்கீப்பர்கள் மட்டும் தான் பந்தினை தங்களது கரங்கள் அல்லது புஜங்கள் கொண்டு கையாள அனுமதிக்கப்படும். அதுவும் தங்களது கோல் பகுதிக்கு முன்னதாக பெனால்டி பகுதிக்குள்ளாகத் தான் அவ்வாறு செய்ய முடியும். கோல்கீப்பரல்லாத வீரர்கள் ஒரு பயிற்சியாளரால் பல்வேறு நிலைகளில் நிறுத்தப்படலாம் எனினும், இந்த நிலைகள் விதிகளால் வரையறுக்கப்பட்டவையோ அல்லது கோரப்படுபவையோ அல்ல. வீரர்கள் அணிந்து கொள்ள அவசியமான அடிப்படை சாதனங்கள் அல்லது உடைவரிசைகளில் சட்டை, கால்சட்டை, சப்பாத்து, காலுறை மற்றும் தேவையான தாடை கவசங்கள் ஆகியவை அடங்கும். தலைக்கவசம் என்பது அடிப்படையான அவசிய சாதனம் இல்லை என்றாலும், இன்று வீரர்கள் தங்களை தலைக் காயங்களில் இருந்து காத்துக் கொள்ள அவற்றை அணிந்து கொள்ளலாம். நகைகள் அல்லது கடிகாரங்கள் போன்ற தங்களுக்கோ அல்லது பிற வீரர்களுக்கோ ஆபத்தை விளைவிக்கக் கூடிய எதனையும் அணிந்து கொள்வதில் இருந்து வீரர்கள் தடுக்கப்பட்டிருக்கின்றனர். கோல்கீப்பர் மற்ற வீரர்களிடம் இருந்தும் போட்டி அதிகாரிகளிடம் இருந்தும் எளிதில் பிரித்து அடையாளம் காணத்தக்க உடைகளை அணிய வேண்டும். ஆட்டத்தின் போது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வீரர்கள் பதிலீட்டு வீரர்கள் கொண்டு மாற்றப்படலாம். அநேக போட்டித்திறன் மிகுந்த சர்வதேச மற்றும் உள்நாட்டு லீக் போட்டிகளில் அனுமதிக்கப்படும் அதிகப்பட்ச பதிலீட்டு வீரர்களின் எண்ணிக்கை மூன்றாக இருக்கிறது. ஆயினும் அனுமதிக்கப்படும் எண்ணிக்கையானது பிற போட்டிகளில் அல்லது நட்புரீதியான ஆட்டங்களில் வேறுபடலாம். ஒரு பதிலீட்டு வீரரை களமிறக்குவதற்கான பொதுவான காரணங்கள் காயம், களைப்பு, திறன்படச் செயல்படாமை, தந்திர உத்தியான மாற்றம், அல்லது வெற்றி தோல்வி நிர்ணயிக்கக் கூடிய முக்கியமான கட்டத்தில் நேரத்தைக் கடத்துவது ஆகியவற்றில் ஒன்றாக இருக்கலாம். பதிலீடு செய்யப்பட்ட வீரர் அந்த ஆட்டத்தில் அதற்குப் பின் பொதுவாக பங்கேற்க மாட்டார். ஒரு ஆட்டம் நடுவரால் வழிநடத்தப்படுகிறது. அவருக்கு ஆட்ட விதிகளை அமல்படுத்துவதற்கான முழு அதிகாரம் (விதி 5) உள்ளது. இவரது முடிவுகளே இறுதியானவை. நடுவருக்கு உதவியாக இரண்டு உதவி நடுவர்கள் இருப்பார்கள். பல உயர்நிலை ஆட்டங்களில், நான்காவது அதிகாரி ஒருவரும் இருப்பார். இவர் நடுவருக்கு உதவியாக இருப்பதோடு, அவசியப்படும் நேரத்தில் வேறொரு அதிகாரியை இடம்பெயர்த்துவதற்கும் வழிவகையளிப்பார். விதிகள் ஆரம்பத்தில் இங்கிலாந்தில் நான்கு பிரித்தானிய கால்பந்து கழகங்களால் நிர்வகிக்கப்பட்டன என்பதால், ஒரு கால்பந்து ஆடுகளத்தின் நிர்ணயமான அளவுகள் ஆரம்பத்தில் இம்பீரியல் அலகுகளில் தான் குறிப்பிடப்பட்டன. இப்போதைய விதிகள் தோராயமான மெட்ரிக் இணை அளவுகளில் (மரபு அலகுகள் அடைப்புக்குறிக்குள் பின்தொடர) குறிப்பிடப்படுகின்றன. சர்வதேச வயதுவந்தோருக்கான போட்டிகளுக்கான ஆடுகளத்தின் நீளம் 100-110 மீ (110-120 யார்டு) மற்றும் அகலம் 64-75 மீ (70-80 யார்டு) என்கிற வரம்பில் இருக்கிறது. சர்வதேசப் போட்டிகள் அல்லாத ஆட்டங்களுக்கான களங்கள் 91-120 மீ (100-130 யார்டு) நீளம் மற்றும் 45-91 மீ (50-101 யார்டு) அகல வரம்பில் இருக்கலாம். ஆடுகளம் சதுரமாகி விடாத வகையில்.நீண்டிருக்கும் எல்லைக் கோடுகள் "தொடு கோடுகள்" அல்லது "பக்கவாட்டுக் கோடுகளாகவும்" , குறுகிய எல்லைக்கோடுகள் (இவற்றில் தான் கோல்கள் உள்ளன) "கோல் கோடு" களாகவும் உள்ளன. ஒவ்வொரு கோல் கோட்டின் நடுவிலும் ஒரு செவ்வகக் கோல் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. செங்குத்தான கோல் கம்பங்களின் உள் விளிம்புகள் 7.3 மீ (8 யார்டு) இடைவெளியில் இருக்க வேண்டும். கோல் கம்பங்களின் ஆதரவின் மேலிருக்கும் கிடைமட்ட கம்பியின் கீழ் விளிம்பு தரைக்கு மேல் 2.44 மீ (8 அடி) உயரத்தில் இருக்க வேண்டும். கோலுக்குப் பின்னால் பொதுவாக வலைகள் அமைக்கப்படுகின்றன, என்றாலும் இது விதிகள் கட்டாயமாகக் கோருவன அல்ல. ஒவ்வொரு கோலுக்கும் முன்னதாக பெனால்டி பகுதி என்னும் ஒரு பகுதி உள்ளது. இந்த பகுதி கோல் கோட்டினால் குறிக்கப்பட்டுள்ளது. இந்த கோடுகள் கோல் கோட்டில் தொடங்கி கோல்கம்பங்களில் இருந்து 16.5 மீ (18 யார்டு) சென்று கோல் கோட்டிற்கு செங்குத்தாக ஆடுகளத்திற்குள் 16.5 மீ (18 யார்டு) வரை நீட்டிக்கப்படும். ஒரு கோடு அவற்றை இணைக்கும். இந்த பகுதிக்கு நிறைய செயல்பாடுகள் உள்ளன. இதில் மிக முக்கியமானது கோல்கீப்பர் பந்தினை எங்கு கையாளலாம் என்பதைக் குறிப்பதற்கும், எங்கு தடுத்தாடும் அணியின் ஒரு உறுப்பினரால் செய்யப்படும் பெனால்டி மீறல் ஒரு பெனால்டி கிக் மூலம் தண்டிக்கப்படத்தக்கதாய் ஆகிறது என்பதைக் குறிப்பதற்கும் அவசியமாகிறது. வயதுவந்தோர்க்கான கால்பந்து ஆட்டம் ஒரு பாதிக்கு 45 நிமிடங்கள் கொண்ட இரண்டு பாதிகள் கொண்டிருக்கும். ஒவ்வொரு பாதியும் நில்லாது நடக்கும், அதாவது பந்து ஆடுகளத்தை விட்டு வெளியில் சென்றாலும் கடிகாரம் நிறுத்தப்படாது. இரண்டு பாதிகளுக்கும் இடையில் பொதுவாக பாதிநேர இடைவேளையாக 15-நிமிடங்கள் இருக்கும். ஆட்டத்தின் நிறைவு முழுமை-நேரம் (ஃபுல்-டைம்) என்று அழைக்கப்படுகிறது. நடுவர் தான் ஆட்டத்தின் அதிகாரப்பூர்வ நேரக்காப்பாளர் ஆவார். வீரர்கள் பதிலீடு, வீரர்கள் காயத்தின் போது செலவான நேரம், அல்லது பிற நிறுத்தங்களின் இழந்த நேரத்திற்கு இழப்பீடு செய்ய அவர் கூடுதல் நேரம் ஒதுக்கலாம். இந்த கூடுதல் நேரம் பொதுவாக "நிறுத்த நேரம்" அல்லது "காய நேரம்" என்று அழைக்கப்படுகிறது. முழுமையாக இது நடுவரின் முடிவுக்குட்பட்டதாகும். நடுவர் மட்டுமே ஆட்டத்தின் முடிவை அறிவிக்க முடியும். ஒரு நான்காவது அதிகாரி நியமிக்கப்படும் ஆட்டங்களில், பாதி நிறைவை நெருங்கும் சமயத்தில், நடுவர் தான் எவ்வளவு நிமிடங்கள் நிறுத்த நேர ஒதுக்கீடு அளிக்க எண்ணுகிறார் என்பதை சுட்டிக் காட்டுகிறார். நான்காவது அதிகாரி அதனை வீரர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு அந்த எண்ணிக்கையை காட்டும் ஒரு பலகையைக் காட்டுவதன் மூலம் தெரிவிக்கிறார்.குறிப்பிடப்படும் நிறுத்த நேரம் நடுவரால் மேலும் நீட்டிக்கப்பட முடியும். ஸ்டோக் மற்றும் ஆஸ்டன் வில்லா ஆகிய இரு அணிகளுக்கு இடையில் 1891 ஆம் ஆண்டில் நடந்த ஆட்டம் ஒன்றின் போது நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியின் காரணமாகவே இந்த கூடுதல் நேரம் அறிமுகப்படுத்தப்பட்டது. 1-0 என பின்தங்கியிருக்க, ஆட்டம் முடிய இரண்டு நிமிடங்களே இருந்த நிலையில், ஸ்டோக்கு அணிக்கு ஒரு பெனால்டி வழங்கப்பட்டது. வில்லாவின் கோல்கீப்பர் அதனை மைதானத்திற்கு வெளியே செல்லும்படி உதைத்தார். பந்து திரும்பவும் கொண்டு வரப்படுவதற்குள், மொத்த ஆட்ட நேரமான 90 நிமிடங்கள் முடிந்து போய் ஆட்டம் முடிந்து விட்டது. சுற்றுப் போட்டிகளில், ஆட்டங்கள் டிராவில் முடியலாம். ஆனால் தோற்றால் வெளியேறும் சுற்றுப் போட்டிகளில் வழக்கமான நேரத்தின் முடிவில் சம எண்ணிக்கையிலான கோல்களுடன் ஆட்டம் இருந்தால், கூடுதல் நேரத்திற்கு ஆட்டம் நீளும். இது இரண்டு 15 நிமிட காலங்களைப் பெற்றிருக்கும். கூடுதல் நேரத்திற்குப் பின்னும் கோல் எண்ணிக்கை சமமாய் இருந்தால், எந்த அணி போட்டிகளின் அடுத்த சுற்றுக்கு முன்னேறுகிறது என்பதைத் தீர்மானிக்க சில போட்டிகளில் பெனால்டி ஷூட் அவுட்கள் பயன்படுத்துவது அனுமதிக்கப்படுகிறது. கூடுதல் நேர காலத்தில் போடப்படும் கோல்கள் ஆட்டத்தின் இறுதி கோல் எண்ணிக்கையில் சேரும். ஆனால் ஆட்ட முடிவு தீர்மானிப்புக்காக நடத்தப்படும் பெனால்டி ஷூட் அவுட் கோல்கள் எந்த அணி போட்டிகளின் அடுத்த சுற்றுக்கு முன்னேறுகிறது என்பதைத் தீர்மானிக்க மட்டுமே பயன்படும். அவை இறுதிக் கோல் பட்டியலில் சேராது. இரு-கால் ஆட்டங்கள் கொண்ட போட்டிகளில், ஒவ்வொரு அணியும் தங்கள் தாயகத்தில் ஒருமுறை போட்டியிடுகிறது. இரண்டு ஆட்டங்களில் இருந்துமான கோல்களின் கூட்டு எண்ணிக்கை முன்னேறும் அணியைத் தீர்மானிக்கும். கூட்டு எண்ணிக்கை சமமாக இருக்கும் சமயத்தில், அவே கோல்கள் விதி வெற்றிபெறும் அணியைத் தீர்மானிக்க பயன்படலாம். அந்த சமயத்தில் தாயகத்தில் இருந்து வெளிமண்ணில் விளையாடிய ஆட்டத்தில் அதிக கோல்களை பெற்ற அணியே வென்றதாகக் கருதப்படும். அப்படியும் முடிவு சமமாக இருக்குமாயின், பெனால்டி ஷுட் அவுட் முறை பொதுவாக அவசியப்படும். சில போட்டிகளில் ஆட்டம் வெற்றிதோல்வியின்றி முடிந்தால் மறுஆட்டம் நடத்தப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. 1990களின் இறுதியிலும் 2000களின் ஆரம்பத்திலும், ஒரு பெனால்டி ஷூட் அவுட் இல்லாமலே வெற்றியாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிகளை சர்வதேச கால்பந்து வாரியம் பரிசோதித்தது. கூடுதல் நேரத்தில் முதல் கோல் போடப்பட்ட உடனேயோ ("தங்க கோல்" ), அல்லது கூடுதல் நேரத்தின் முதல் காலத்தின் நிறைவில் முன்னணி கொண்டிருக்கும் ("வெள்ளி கோல்" ) சமயத்திலோ முடித்து விடும் வழி முயற்சிக்கப்பட்டது. தங்க கோல் 1998 மற்றும் 2002 உலகக் கோப்பையில் பயன்படுத்தப்பட்டது. ஒரு தங்க கோல் மூலம் தீர்மானிக்கப்பட்ட முதல் உலகக் கோப்பை ஆட்டம் 1998 ஆம் ஆண்டில் பராகுவே அணியை பிரான்ஸ் அணி வென்ற போட்டியாகும். ஒரு பெரிய போட்டியில் தங்க கோல் போட்ட முதல் நாடு ஜெர்மனியாகும். இது யூரோ 1996 போட்டி இறுதியில் செக் குடியரசை வீழ்த்தியது. வெள்ளி கோல் முறை யூரோ 2004 போட்டிகளில் பயன்படுத்தப்பட்டது. இந்த இரண்டு பரிசோதனைகளுமே பின்பு சர்வதேச கால்பந்து வாரியத்தால் கைவிடப்பட்டிருக்கின்றன. விதிகளின் படி, ஒரு ஆட்டத்தின் போதான இரண்டு அடிப்படை ஆட்ட நிலைகளாக "பந்து ஆடப்படும் நிலை" மற்றும் "பந்து ஆடப்படாத நிலை" ஆகியவை இருக்கின்றன. பந்து ஆடுகளத்தை விட்டு வெளியில் செல்லும் போதோ, அல்லது நடுவரால் ஆட்டம் நிறுத்தப்படும்போதோ தவிர ஆட்ட நேரம் தொடங்கியதில் இருந்து ஆட்ட நேரம் முடியும் வரையிலும், பந்தானது எல்லா சமயங்களிலும் ஆடப்படும் நிலையில் இருக்கிறது. பந்து ஆடப்படாமல் போகும் போது, ஆட்டம் ஏன் ஆடப்படாமல் போனது என்பதைப் பொறுத்து எட்டு வகை மறுதுவக்க முறைகளில் ஒன்றின் மூலம் ஆட்டம் மறுதுவக்கம் செய்யப்படுகிறது. பந்து ஆட்டத்தில் இருக்கையில் ஆட்ட விதிகளில் பட்டியலிடப்பட்ட ஒரு தவறை ஒரு வீரர் புரியும் போது ஒரு மீறல் நிகழ்கிறது. ஒரு மீறலாகக் கருதப்படக் கூடிய தவறுகள் 12 ஆம் விதியில் பட்டியலிடப்பட்டுள்ளது. வேண்டுமென்றே பந்தை கைகளில் தொடுவது, எதிரணி வீரரை இடறி விடுவது, அல்லது எதிரணி வீரரை பிடித்துத் தள்ளுவது ஆகியவை "தண்டனைக்குரிய மீறல்களுக்கு" உதாரணங்களாகும். இந்த தவறு எங்கு நிகழ்த்தப்பட்டது என்பதைப் பொருத்து ஒரு டைரக்ட் ஃப்ரீ கிக் மூலமோ அல்லது பெனால்டி கிக் மூலமோ தண்டிக்கப்படுகிறது. மற்ற மீறல்கள் இன்டைரக்ட் ஃப்ரீ கிக் மூலமாக தண்டிக்கப்படுகின்றன. ஒரு வீரர் அல்லது பதிலீட்டு வீரரின் துர்நடத்தைக்கு ஒரு எச்சரிக்கை (மஞ்சள் அட்டை) அல்லது வெளியேற்றத்தின் (சிவப்பு அட்டை) மூலமாக நடுவர் தண்டிக்கலாம். அதே ஆட்டத்தில் இரண்டாம் முறையாக மஞ்சள் அட்டை காண்பிக்கப் பெற்றால் அது சிவப்பு அட்டைக்கு சமமாகிறது, எனவே அது வீரர் வெளியேற்றத்திற்கு இட்டுச் செல்கிறது. மஞ்சள் அட்டை காண்பிக்கப் பெறும் வீரரின் பெயரை நடுவர் அதிகாரப்பூர்வ குறிப்பேட்டில் எழுதிக் கொள்கிறார். ஒரு வீரர் வெளியேற்றப்பட்டால், அவரது இடத்தில் பதிலீட்டு வீரர் ஒருவரை களமிறக்க முடியாது. துர்நடத்தை என்று வகுக்கப்படுகிற தவறுகள் பட்டியலிடப்பட்டுள்ளன என்றாலும் வரையறைகள் பரந்தவையாக இருக்கின்றன. குறிப்பாக "விளையாட்டுநலன் கெடுக்கும் நடத்தை" என்பதானது ஆட்டத்தின் நோக்கத்தை மீறும் அநேக நிகழ்வுகளைக் கையாள பயன்படுத்தப்பட முடியும். ஒரு வீரர் அல்லது பதிலீட்டு வீரருக்கு ஒரு மஞ்சள் அல்லது சிவப்பு அட்டையை நடுவர் காண்பிக்க முடியும். மேலாளர்கள் மற்றும் உதவி ஆட்கள் போன்ற வீரர்கள் அல்லாதவர்களுக்கு மஞ்சள் அல்லது சிவப்பு அட்டை காண்பிக்க முடியாது. ஆனால் பொறுப்பான முறையில் அவர்கள் நடந்து கொள்ளத் தவறும் பட்சத்தில் அவர்கள் தொழில்நுட்பப் பகுதியில் இருந்து வெளியேற்றப்படலாம். தவறு எந்த அணிக்கு எதிராக நிகழ்த்தப்பட்டதோ அந்த அணிக்கு அனுகூலமளிக்கலாம் என்கிற நிலையில் ஆட்டத்தை நிறுத்துவதற்குப் பதிலாக, ஆட்டத்தை தொடர்வதற்கு நடுவர் அனுமதிக்கலாம். இது "அனுகூலத்தை ஆடுவது" என்று அழைக்கப்படுகிறது. அனுகூலம் ஆடப்படுவதால் ஒரு தவறு தண்டிக்கப்பட முடியாதிருக்கும் சூழலிலும், ஆட்டம் அடுத்து நிற்கும் சமயத்தில் தவறிழைத்தவருக்கு துர்நடத்தைக்கான தண்டனை அளிக்கப்படலாம். கால்பந்து (மற்றும் தொடர்புள்ள கடற்கரை கால்பந்து, ஐவர் கால்பந்து, மகளிர் கால்பந்து போன்ற விளையாட்டுகள்) விளையாட்டின் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச கட்டுப்படுத்தும் அமைப்பு பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு (FIFA) ஆகும். ஃபிஃபா-வின் தலைமையகம் ஜூரிச்சில் அமைந்துள்ளது. பிபாவுடன் ஆறு பிராந்திய கூட்டமைப்புகள் இணைந்துள்ளன; அவையாவன: தேசியக் கால்பந்துச் சங்கங்கள், நாடுகளுக்குள் கால்பந்து விளையாட்டினை மேலாண்மை செய்கின்றன. இவை ஃபிஃபா மற்றும் தங்கள் கண்ட கூட்டமைப்புகளுடன் இணைந்துள்ளன. சங்கக் கால்பந்து விளையாட்டில் மிகப்பெரிய சர்வதேசப் போட்டி உலகக்கோப்பை காற்பந்துப் போட்டியாகும். இது ஃபிஃபா-வினால் நடத்தப்படுகிறது. இப்போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இறுதிச் சுற்றில் இடம்பிடிப்பதற்காக தகுதிச் சுற்று போட்டிகளில் 190க்கும் அதிகமான தேசிய காற்பந்து அணிகள், கண்ட கூட்டமைப்புகளின் எல்லைக்குள் போட்டியிடுகின்றன. ஒவ்வொரு நான்காண்டுகளுக்கும் ஒருமுறை நடைபெறுவதான இறுதிப் போட்டித் தொடரில் 32 தேசிய அணிகள் பங்குபெறுகின்றன. 2006 உலகக்கோப்பை கால்பந்து செருமனியில் நடந்தது; 2010 உலகக்கோப்பை கால்பந்து தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. 2014 உலகக்கோப்பை கால்பந்து பிரேசிலில் நடைபெற இருக்கிறது. 1900 ஆம் ஆண்டு முதல் (லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த 1932 விளையாட்டுப் போட்டிகளைத் தவிர்த்த) ஒவ்வொரு கோடை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளிலும் ஒரு கால்பந்துப் போட்டி நடக்கிறது. உலகக் கோப்பைப் போட்டிகள் தொடங்கப்படுவதற்கு முன்னதாக, ஒலிம்பிக் போட்டிகளில் நடத்தப்படும் கால்பந்துப் போட்டிகள், உலகக் கோப்பை போன்றதொரு அந்தஸ்தை வென்றிருந்தது (குறிப்பாக 1920களின் சமயத்தில்). ஆரம்ப காலகட்டத்தில், இந்த நிகழ்வு தொழில்முறையற்ற காற்பந்து விளையாட்டு வீரர்களுக்கு மட்டும் என்பதாக இருந்தது, ஆனால், 1984 கோடை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் முதல் சில நிபந்தனைகளுடன் தொழில்முறை வீரர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். தற்போது, ஒலிம்பிக்கில் ஆண்கள் காற்பந்துப் போட்டி 23 வயதுக்குட்பட்டோருக்குத்தான் நடத்தப்படுகிறது. கடந்த காலத்தில், 23 வயதை மீறிய குறிப்பிட்ட எண்ணிக்கை வீரர்கள் விளையாட ஒலிம்பிக் சங்கம் அனுமதித்திருந்தது; ஆனால் அந்த நடைமுறை 2008-ஆம் ஆண்டில் இல்லாமல் போனது. பொதுவாக ஒலிம்பிக் கால்பந்துப் போட்டி, உலகக்கோப்பை காற்பந்து போன்ற அதே சர்வதேச முக்கியத்துவம் மற்றும் கவுரவத்தைக் கொண்டிருப்பதில்லை. பெண்களுக்கான போட்டித் தொடர் 1996-ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டது; ஆண்கள் போட்டிக்கு மாறாக, வயது கட்டுப்பாடுகள் இல்லாது, முழுமையான சர்வதேச அணிகள் மகளிர் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடுகின்றன. ஆகையால் இது ஃபிஃபா மகளிர் உலகக் கோப்பையுடன் ஒப்பிடத்தக்க அளவுக்கு சர்வதேச அந்தஸ்தைக் கொண்டிருக்கிறது. உலகக்கோப்பைக்கு அடுத்தபடியாக, மிக முக்கியமான சர்வதேச கால்பந்து போட்டிகளாக இருப்பவை கண்டவாரியான கோப்பைப் போட்டிகளாகும். ஒவ்வொரு கண்ட கூட்டமைப்பினால் நடத்தப்படும் இக்கோப்பைப் போட்டித்தொடர்களில், அந்தந்த கண்ட கூட்டமைப்புக்களைச் சேர்ந்த தேசிய அணிகள் போட்டியிடுகின்றன. ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி(யூரோ) (UEFA), கோப்பா அமெரிக்கா (CONMEBOL), ஆப்பிரிக்க நாடுகளின் கோப்பை (CAF), ஆசியக் கோப்பை (AFC), வட அமெரிக்க தங்கக் கோப்பை (கால்பந்து) (CONCACAF) மற்றும் ஓசியானியா நாடுகளின் கோப்பை ஆகியவை இவ்வகையில் வருகின்றன. ஒவ்வொரு கண்ட போட்டியின் வெற்றியாளர்களும் பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டியில் மோதுகின்றனர். ஒவ்வொரு நாட்டின் கால்பந்துக் கட்டுப்பாட்டு அமைப்புகளும் கூட்டிணைவு அமைப்புகளை நடத்துகின்றன. இவை பெரும்பாலும் பல்வேறு படி-நிலைகளை அடக்கியதாக இருக்கும். பருவம் முழுவதும் அணிகள் பெறும் புள்ளிகளைப் பொறுத்து, கூட்டிணைவு அட்டவணையில் வரிசைப்படுத்தப்படும். வழமையாக, ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு அணியும் தனது கூட்டிணைவில் இருக்கும் மற்ற ஒவ்வொரு அணியுடனும் தொடர் சுழல்முறைப் போட்டி முறையில் தன்னக மற்றும் வெளியக சுற்றுக்களில் விளையாடும். பருவத்தின் முடிவில், கூட்டிணைவு அட்டவணையில் முதலிடம் பெறும் அணி வெற்றி பெற்றதாய் அறிவிக்கப்படும். முன்னணி இடங்களைப் பிடிக்கும் சில அணிகள், உயர்நிலைக் கூட்டிணைவுகளுக்கு உயர்த்தப்படலாம்; கீழிடத்தைப் பிடிக்கும் சில அணிகள் கீழ்நிலைக் கூட்டிணைவுகளுக்கு இறக்கப்படலாம். மேலும், ஒரு நாட்டின் உயர்ந்தபட்ச கூட்டிணைவில் சிறப்பான இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்து வரும் பருவத்தில் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கும் தகுதி பெறலாம். இந்த அமைப்பு இலத்தீன் அமெரிக்க நாடுகளைத் தவிர்த்த நாடுகளில் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகிறது; அங்கு,"அபெர்ச்சுரா மற்றும் குளோசுரா" (தொடக்கம் மற்றும் நிறைவு) என்ற இருநிலைகளில் கூட்டிணைவுகள் நடத்தப்பட்டு - இரண்டுக்கும் வாகையர் பட்டங்கள் தனித்தனியே அளிக்கப்படும். அநேக நாடுகள் கூட்டிணைவு அமைப்புடன் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கோப்பைப் போட்டிகளையும் நடத்துகின்றன; இப்போட்டிகள் ஒற்றை வெளியேற்றப் போட்டி முறையில் நடத்தப்படும் - வெல்வோர் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறுவர்; தோற்போர் வெளியேறுவர். சில நாடுகளின் முன்னணி கூட்டிணைவுகள் மிக உயர்ந்த அளவு ஊதியம் வழங்கப்படும் நட்சத்திர வீரர்களைக் கொண்டிருக்கின்றன; சிறு நாடுகளிலும் கீழ் கூட்டிணைவுகளிலும் விளையாடும் வீரர்கள் பகுதி நேர ஆட்டக்காரர்களாகவோ அல்லது தொழில்முறையற்ற வீரர்களாகவோ இருப்பர். ஐரோப்பாவின் ஐந்து முன்னணி கூட்டிணைவுகள் - தி பிரீமியர் லீக் (இங்கிலாந்து), சீரீ ஆ (இத்தாலி), லா லீகா (எசுப்பானியா), புன்டசுலீகா (செருமனி) மற்றும் லீக் 1 (பிரான்சு) - ஆகியவை உலகின் மிகச் சிறந்த வீரர்களை ஈர்ப்பவையாக இருக்கின்றன. இந்தக் கூட்டிணைவின் அணிகளின் மொத்த சம்பள செலவு £600 மில்லியனுக்கும் (€763 மில்லியன் அல்லது 1.185 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) அதிகமாகும். ராஜீவ் காந்தி கேல் ரத்னா ராஜீவ் காந்தி கேல் ரத்னா இந்திய விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தோருக்கு வழங்கப்படும் உயரிய விருதாகும். இந்தி மொழியில் "கேல் ரத்னா" என்பது விளையாட்டில் இரத்தினக்கல் போன்றவர் என பொருள்படும். முன்னாள் இந்தியப் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தி நினைவாக இவ்விருது பெயரிடப்பட்டுள்ளது. இவ்விருது ஓர் பதக்கம், அங்கீகார சுருள் மற்றும் பணமுடிப்பைக் கொண்டது. 2004-05 ஆண்டில் கடைசியாக வழங்கப்பட்டபோது, இது இந்திய ரூபாய் 500,000/- மதிப்பு கொண்டதாக இருந்தது. பின்னர் 750,000க்கு கூட்டப்பட்டது. 1991-92 ஆண்டில் நிறுவப்பட்ட இவ்விருது தேசிய அளவில் விளையாட்டுத்துறையில் உயர்ந்த அங்கீகாரம் பெற்ற விருது இல்லாமையை நீக்கியது. இதனை அடுத்துள்ள அருச்சுனா விருது துறை சார்ந்த விருதாக இருக்கிறது. மாற்றாக இவ்விருது அனைத்து விளையாட்டுத் துறைகளுக்கும் பொதுவான சீரிய விருதாக மிகச்சிறந்த சாதனையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. நடுவண் அரசின் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுகள் அமைச்சகம் விளையாட்டுத்துறை வல்லுனர்களைக் கொண்டு தேர்வுக்குழு அமைக்கிறது. பொதுவாக ஏப்ரல் 1 முதல் அடுத்த ஆண்டின் மார்ச் 31 வரையிலான காலத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறது.ஒலிம்பிக் விளையாட்டுக்கள்,ஆசிய விளையாட்டுகள் அல்லது பொதுநலவாய நாடுகள் விளையாட்டுகள் போட்டிகளில் இடம் பெற்றுள்ள விளையாட்டொன்றில் அந்த நபரோ குழுவோ பங்கெடுத்திருக்க வேண்டும்.விளையாட்டையே பணிவாழ்வாகக் கொண்ட பில்லியர்ட்ஸ்,சுனூக்கர் மற்றும் சதுரங்க வீரர்களும் தேர்வுக்கு உரியவர்கள்.இவ்விருதை ஒருவர் தம் வாழ்நாளில் ஒருமுறையே பெற இயலும்.தேர்வுக்கு நாடாளுமன்ற உறுப்பினர், மாநில அரசு, இந்திய விளையாட்டு ஆணையம் அல்லது தேசிய விளையாட்டு கூட்டமைப்புகள் ஒன்றால் பரிந்துரைக்கப்பட்டிருக்க வேண்டும். தேர்வுக்குழு தனது பரிந்துரையை அரசிற்கு அனுப்பியபின், அரசின் பல மட்டங்களில் ஆய்வு செய்யப்பட்ட பின், குடியரசுத் தலைவரால் விருது வழங்கப்படுகிறது.ஒவ்வொரு ஆண்டும் ஒருவருக்கே வழங்கப்படல் வழக்கம் என்றபோதிலும் விலக்குகள் உள்ளன. எந்த விளையாட்டு வீரருமே வேண்டிய தகுதிகளைப் பெறவில்லையாயின் விருது அந்த ஆண்டிற்கு கொடுக்கப்படாது இருக்கலாம். 2017. - தேவேந்திர ஜஜாரியா(PARA) 2017. - சர்தார்சிங் வெள்ளிநிலா வெள்ளிநிலா என்பது காயல்பட்டினம் மக்களுக்காக வெளிவந்து கொண்டிருக்கும் தமிழ் மாத இதழ். இரண்டாயிரம் பிரதிகளை கொண்டு மாதம் தோறும் வெளிவரும் இந்த பத்திரிகையில் அரசியல், சமூகம், விளையாட்டு, பொது அறிவு, இலக்கியம் சார்ந்த விசயங்களுடன், காயல்பட்டி மக்களின் கல்வி குறித்த விழிப்புணர்வுக்காக என்று பல கட்டுரைகளுடன் வெளிவருகிறது. இதன் பதிப்பாசிரியராக நிசார் அகமது, ஆசிரியராக சர்புதீன் ஆகியோரும் பணியாற்றி வருகிறார்கள். காயல்பட்டின மக்களை மட்டும் ஏறக்குறைய 800 மக்களை சந்தாதாரர்களாக கொண்டுள்ள வெள்ளிநிலா, கோயம்புத்தூர், சென்னை போன்ற பெரு நகரங்களில் உள்ள இசுலாமிய மக்களையும் சந்தாதாரர்களாக கொண்டுள்ளது. அரங்க முருகையன் அரங்க முருகையன் (அக்டோபர் 1, 1932 - செப்டம்பர் 13, 2009) இலண்டனில் வாழ்ந்த தமிழ்ப் பேராசிரியர், எழுத்தாளர். ஏராளமான சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகம் எழுதியவர். இதழாசிரியர். "தமிழ்மணி" என்று போற்றப்படுபவர். தமிழ்நாடு கும்பகோணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அரங்க முருகையன் தனது உயர்நிலை மற்றும் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பினை தமிழகத்திலும் சிங்கப்பூரிலும் பெற்றுக்கொண்டார். இவரது துணைவியார் சுசீலா (சுசேதா) அம்மையாரும் இந்திய விடுதலைப்போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட ஒரு போராளியின் மகளாவார். அரங்க முருகையன் தமிழகத்தில் சிலகாலம் ஆசிரியராகப் பணியாற்றிய பின்னர் சிங்கப்பூருக்கு வந்து அங்கு வெளிவந்த "மலாயா நண்பன்" நாளிதழில் சில காலம் துணை ஆசிரியராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார். பின்னாளில் பிரித்தானிய வான்படையின் எழுதுவினைஞராக (Clerk) தேர்வுபெற்று சுமார் இருபது ஆண்டுகள் சிறப்புடன் பணியாற்றித் தரம் உயர்ந்து பின்னாளில் தலைமை எழுதுவினைஞராகவிருந்து 1972 இல் பிரித்தானிய படைக்கலைப்பின்போது தனது பணியிலிருந்து ஓய்வுபெற்றார். அதன் பின்னர் தமிழகத்திற்குத் திரும்பிச்சென்று சிலகாலம் வணிகத்துறையில் ஈடுபட்டுவந்தார். இக்காலப்பகுதியில் "நித்திலம்" என்னும் தனித்தமிழ் மாத இதழொன்றைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தினார். சிறிது காலத்தின் பின்னர் அதனை பண்ணாய்வாளர் குடந்தை ப.சுந்தரேசனாரிடம் ஒப்படைத்துவிட்டு குடும்பத்தினருடன் மீண்டும் ஐரோப்பிய மண்ணில் வந்து வாழத்தொடங்கினார். மீண்டும் லண்டன் வந்த அரங்க முரகையன் அங்கு விமான நிலைய பண்டகசாலைப் பொறுப்பாளராகப் (Store Keeper) பணியாற்றினார். தமிழ் அபிமானம் காரணமாக லண்டனில் வெளிவந்துகொண்டிருந்த லண்டன் முரசு, தமிழன் குரல் ஆகிய பத்திரிகைகளில் சிறப்பாசிரியராகவும் இவர் பணியாற்றித் தமிழ் வளர்த்தார். அரங்க முருகையன் செந்தமிழைப் பேச்சுவழக்கிலும் பாவிக்கவேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தவர். முடிந்தவரையில் தனது தொடர்பாடல்களில் செந்தமிழைக் கலப்பில்லாது பேசும் ஆற்றல் கொண்டவர். ஆரம்பகாலத்தில் லண்டன் திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியின் தேர்வாளராகவும் பணியாற்றிய அரங்க முருகையன் பின்னாளில் 1978 இல் லண்டன் கிறீன்போர்ட் என்னுமிடத்தில் இயங்கிவரும் மேற்கு லண்டன் தமிழ்ப்பள்ளியின் மொழித்துறைத் தலைவராகவும் மேனிலைப் பயிற்றாசிரியராகவும் நீண்டகாலம் பணியாற்றியவர். உலகத் தமிழ்க் கழகத்தின் பிரித்தானியக் கிளையின் தலைவராகவும் இவர் சேவையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அரங்க முருகையன் அவர்கள் தமிழ் மாணவர்களுக்கென பல நூல்களை எழுதியிருக்கின்றார். இவற்றில் ஆறுமுக நாவலரின் தமிழ் இலக்கணச் சுருக்கம் விதந்து கூறப்படுகின்றது. ஆறுமுகநாவலர் எழுதிய இந்நூலை எளிய தமிழில் பலரும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் அரங்க முருகையன் ஆக்கியுள்ளார். புகலிடச் சிறார்களின் நன்மை கருதி "இலண்டன் தமிழ் வாசகம்" என்ற பள்ளிப் பாடநூலை 3 பகுதிகளாக வெளியிட்டிருந்தார். பிரித்தானியப் பள்ளிகளின் ஒன்றியப் பாடநூல் வரிசையில் தமிழறிவு என்ற நூல் 1முதல் 7ஆவது தரம் வரை இவரால் எழுதப்பட்டன. இவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிய பல நூறு கதை, கவிதை, கட்டுரைகள் பரவலாகத் தமிழகத்திலும் தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் உள்ள ஊடகங்களில் வெளியாகியுள்ளன. அரங்க முருகையன் எழுதிய மூன்று நாடகங்கள் சிங்கப்பூர் வானொலியிலும் ஒலிபரப்பப்பட்டுள்ளன. "இருபத்தொன்றாம் நூற்றாண்டில் கோயில்களின் பணியும் வழிபாட்டு முறையும்" என்ற இவரது நூல் "சைவ உலகம்" என்ற காலாண்டிதழில் வெளிவந்த கட்டுரையொன்றின் நூலுருவாகும். மேலைத்தேய வாழ்வியலில் கோயில்களின் பணிகள் பற்றிய தமிழ்மணி அரங்க முருகையனின் கருத்துக்கள் இந்நூலில் பதிவாகியுள்ளன. அரங்க முருகையனின் நாவலான "தொடர்வண்டித் தூது" ஒரு தூயதமிழ் புதினம் ஆகும். சிக்கலற்ற ஒரு காதல் கதையின் பின்னணியில் இலண்டன் வாழ்க்கையை நூலாசிரியர் அரங்க முருகையன் அவர்கள் இனிய தமிழில் இந்நாவலில் கூறியிருக்கின்றார். மேலை நாடு ஒன்றுக்குரிய இயல்பான மேற்கத்தைய கலாச்சாரத்திலே வாழ்ந்தபோதிலும் தமது பாரம்பரியங்களைப் பேணி வாழ்கின்ற இரு தமிழ்க் குடும்பங்களினால் சீரிய முறையிலே வளர்க்கப்பட்ட இரண்டு இளம் நெஞ்சங்களை ஓர் தொடர்வண்டிப் பயணம் இணைத்துவிடுகிறது. மெல்ல அரும்பும் காதல் வேட்கை வளர்ந்து இரண்டு உள்ளங்களையும் பற்றிக்கொண்டு விடுகின்றது. ஆனால் வெறியிலும் நெறி என்பது போலக் கண்ணியத்தின் வரம்புகளுக்குட்பட்டு எவ்வாறு அந்த இரண்டு நெஞ்சங்களும் காதலில் வெற்றி பெறுகின்றன என்பதோடு தத்தம் குடும்பத்தவரின் ஆசியுடன் கடிமணம் புரிந்து கொள்கின்றன என்பதுதான் இந்த நெடுங்கதையின் கருவாகும். இலண்டனில் உள்ள ஈழத்தமிழருடன் மிக நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருந்த அரங்க முருகையன் "தமிழீழம் கோரி ஐக்கிய நாடுகள் பொது மன்றத்தில் முழக்கம்" என்ற தலைப்பில் இவர் 1980 இல் கும்பகோணத்தில் நூல் ஒன்றை எழுதி வெளியிட்டார். "சோழர் வெற்றி" என்ற இவரது மற்றொரு நூலும் தமிழரின் வரலாற்றின் செழுமைமிகு காலகட்டத்தினைப் பதிவுக்கு உள்ளாக்கியுள்ளது. அரங்க முருகையன் எழுதி வெளியாகிய இறுதி நூல் "பழந்தமிழரின் வியத்தகு நிலத்திணை உயிர் நுண்ணறிவு". மரம் செடி கொடிகள் பற்றிய தமிழரின் மூலிகை அறிவினை விதந்து கூறுவதாக இந்நூல் அமைந்துள்ளது. அரங்க முருகையன் 13 செப்டெம்பர் 2009 அன்று முடக்குவாத நோயினால் (arthritis) பாதிக்கப்பட்டு இலண்டனில் காலமானார். அருச்சுனா விருது அருச்சுனா விருது 1961ஆம் ஆண்டு இந்திய அரசினால் தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனைகளைப் படைக்கும் வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் நிறுவப்பட்டது. இவ்விருது பெற்றோருக்கு தொன்மவியலில் வில்விளையாட்டில் சிறப்பாக கருதப்படும் அருச்சுனனின் வெங்கலச்சிலையோடு, இந்திய ரூபாய்கள் 500,000 மற்றும் பாராட்டுச் சுருள் கொடுக்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் இவ்விருதின் செயல்வீச்சு அருச்சுனா விருது துவங்கப்பட்ட காலத்திற்கு முற்பட்ட விளையாட்டு வீரர்களுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது. தவிர, விருது வழங்கப்படும் துறைகளும் விரிவாக்கப்பட்டு இந்திய பரம்பரை விளையாட்டுகளும் உடல் நலிவடைந்தோருக்குமான விளையாட்டுகளும் சேர்க்கப்பட்டன. 2001ஆம் ஆண்டிலிருந்து இந்த விருது கீழ்கண்ட வகைகளில் பல்வேறு துறைகளுக்கு வழங்கப்படுகின்றன: சீன சோதிடம் சீன சோதிடம் ("Chinese Astrology") என்பது 12 விலங்குகளை அடிப்படையாக கொண்டு, சீன வருடங்கள் அல்லது பிறப்புகளின்படி கணிக்கப்படும் ஒரு சோதிட முறை ஆகும். இதில் ஒவ்வொரு வருடமும் ஒரு விலங்கின் பெயரால் அழைக்கப்படுகிறது. இவ்வாறு 12 வருடங்கள், 5 மூலகங்கள் மற்றும் யின்-யான் எனப்படும் சீனத் தத்துவம் ஆகியவை சேர்த்து 60 வருடங்கள் கொண்ட ஒரு சக்கர வடிவில் சீன சோதிடம் உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு மனிதனின் பிறந்த வருடம், மாதம் மற்றும் நேரம் ஆகியவற்றைக் கொண்டு அவர்களின் எதிர்காலம் கணிக்கப்படுகின்றது. புத்தர் தனது இறுதி நாட்களில் இந்த சோதிட முறையை உருவாக்கியதாக சீன மக்கள் நம்புகின்றனர். கி.மு 2600 -ல் பேரரசர் குவாங் தீ காலத்தில் விலங்குச் சக்கரம் அறிமுகப்படுத்தப்பட்டு எளிதாக்கப்பட்ட பின்பு, கான் பேரரசின் காலத்தில் இது மிகுந்த வளச்சியுற்றது. சீனாவில் இது சாதாரன சோதிடக் கலையாக மட்டும் இல்லாமல், சீனத் தத்துவங்களின் பிரதிபலிப்பாகவும் உள்ளது. இந்த சோதிடக் கலையின் அடிப்படையிலேயே சீனப் புத்தாண்டுகள் ஒவ்வொன்றும் ஒரு மிருகத்தின் பெயரில் கொண்டாடப்பட்டு வருகின்றன. சீன சோதிடம் அடிப்படையில் 10 தேவலோக தண்டுகளையும், 12 துருவக் கிளைகளையும் கொண்ட தேவமரமாக உருவகப்படுத்தப்பட்டது. பின்பு இதை கணிப்பதில் இருந்த கடினத் தன்மையை முன்னிட்டு, 12 கிளைகளுக்கு பதில் 12 விலங்குச் சின்னங்களைக் கொண்டு குறிப்பிடப்பட்டது. 10 தண்டுகள் என்பன யின்-யான் முறையில் பிரிக்கப்பட்ட ஐந்து மூலகங்கள் ஆகும். ஆக மொத்தம் 12 விலங்குகள் மற்றும் ஐந்து மூலங்கள் சேர்ந்து 60 ஆண்டுகள் கொண்ட வருடச் சக்கரம் அமைக்கப்பட்டது. இந்த வருடச் சக்கரத்தின் அடிப்படையிலேயே சீன சோதிடம் கணிக்கப்படுகிறது. புத்தர் முக்தி அடைந்து, இந்த உலகத்தை விட்டுச் செல்லும் போது, உலகிலுள்ள அனைத்து விலங்குகளிடமும் விடை பெற்றுச் செல்ல வேண்டி, சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்தார். அவர் அழைப்பை ஏற்று வந்தவை பன்னிரண்டே. எனவே அவ்வாறு வந்த விலங்குகளுக்கு மதிப்பு தரும் வகையில், அவை வந்த வரிசையின் அடிப்படையில், ஒவ்வொரு விலங்கின் பெயரையும் பன்னிரண்டு சீன ஆண்டுகளுக்கும் வைத்தார். மேலே கூறப்பட்ட கதையின் அடிப்படையிலேயே சீன ஆண்டுகள் விலங்குகளின் பெயரால் அழைக்கப்படுகின்றன. அவை, 1. எலி 2. எருது 3. புலி 4. முயல் 5. டிராகன் 6. பாம்பு 7. குதிரை 8. ஆடு 9. குரங்கு 10.சேவல் 11.நாய் 12.பன்றி சீன ஆண்டுகள் சந்திரனை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகின்றன.எனவே இவை நடைமுறையில் உள்ள ஆங்கில நாள்காட்டியுடன் சரியாக ஒத்துப் போவதில்லை. சனவரி அல்லது பெப்ரவரி மாதத்தில் வரும் முழு நிலவு நாளில் இருந்து புது வருடம் கணக்கிடப்படுகின்றன. சீன சோதிடத்தில் மொத்தம் ஐந்து மூலகங்கள் உள்ளன. மரம், நெருப்பு, உலோகம், நீர் மற்றும் பூமி ஆகிய இவை அனைத்தும் தனியே அன்றி யின்-யான் சக்திகளுடன் சேர்த்தே குறிப்பிடப்படுகின்றன. ஒவ்வொரு மூலகமும் ஒவ்வொரு குறிகளின் தன்மைகளை ஆளும் சக்தி கொண்டவையாக கருதப்படுகின்றன. யின் மற்றும் யான் எனப்படுபவை இந்த உலகத்தை ஆளும் இரு வேறு நேர் எதிர் சக்திகள் என சீனத் தத்துவம் கூறுகின்றது. இரவு-பகல், ஆண்மை-பெண்மை என்று இவ்வாறான நேர் எதிர் யின்-யான் சக்திகளே போட்டி போட்டுக் கொண்டு இந்த உலகத்தை இயக்குவதாக சீன சோதிடம் கூறுகின்றது. இவ்விரு சக்திகளின் ஆளுமை ஒரு மனிதனின் நடவடிக்கைகளை மாற்ற வல்லது என சீன சோதிடம் குறிப்பிடுகின்றது. எதிர்மறை சக்தி, கருப்பு, அடிமைத்தனம், நீர், உலோகம் மற்றும் பூமி ஆகியவை யின் கூறுகள் ஆகும். இவை இரவு, பள்ளத்தாக்கு, நதிகள் மற்றும் ஓடைகள் ஆகியவற்றைச் சார்ந்தது. நேர்மறை சக்தி, ஆளுமை, நெருப்பு, மரம் மற்றும் காற்று ஆகியவை யான் கூறுகள் ஆகும். இவை பகல், மலைகல் மற்றும் குன்றுகள் ஆகியவற்றைச் சார்ந்தது யின் யான் ஆகியவை மரம், நெருப்பு, பூமி, உலோகம், நீர் ஆகிய ஐந்து மூலகங்களுடன் சேர்த்து கணிக்கப்படுகின்றது. இவை பத்து வருடங்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வருகின்றன. எனவே வருட முடிவு எண்ணைக் கொண்டே இதை சுலபமாக கணிக்கலாம். மாதங்கள் போல அல்லாமல் சீன வருடங்கள் ஆங்கில வருடங்களை ஒத்து வருவதால் இதைக் கணிக்க ஆங்கில ஆண்டு முறையையே பயன்படுத்தலாம். சீன சோதிடத்தில் அதன் வருடங்கள் மொத்தம் பன்னிரெண்டாக பிரிக்கப்பட்டு, அவைகளுக்கு பன்னிரெண்டு விலங்குகளின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளது போலவே, அதன் மாதங்களும் பன்னிரெண்டாக பிரிக்கப்பட்டு அவற்றிர்கும் அதே விலங்குகளின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் இருக்கும் நாள்களும் இரண்டு மணிகளுக்கு ஒரு காலம் என்ற விகிதத்தில் மேலும் பன்னிரண்டு பிரிவுகளாகப் பகுக்கப்பட்டுள்ளன. இவையே சீன சோதிடத்தின் உள்குறிகள் என அழைக்கப்படுகின்றன. இந்த உள்குறிகள் ஒரு மனிதனின் குணாதிசயங்களை நுணுக்கமாக அறியப் பயன்படுத்தப்படுகின்றன. சீன சோதிடம் ஒருவர் பிறந்த வருடத்தைக் கொண்டு அவரின் பொதுவான குணங்கள் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை கூறுகின்றது. அதோடு அவரின் உள்குறிகளைக் கொண்டு நுணுக்கமான அளவிலும் அறிய முடிகின்றது. இந்த உள்குறிகள் பின்வருமாறு கணிக்கப்படுகின்றன. "1980 ஆம் வருடம், மார்ச் மாதம் 26 ஆம் திகதி, காலை 7.45 மணிக்கு பிறந்த ஒருவரின் உள்குறிகள்," ஹாஃபீசு ஹாஃபீசு என்னும் புனை பெயரால் பரவலாக அறியப்படும் கவாசா சம்சுத்தீன் முகம்மத் ஹாஃபீசு சீராசீ (1345 - 1390) என்பவர், பாரசீகத்தின் மிகவும் புகழ்பெற்ற கவிஞர் ஆவார். இவரைக் கவிஞர்களின் கவிஞர் என்றும் குறிப்பிடுவது உண்டு. பல ஈரானியர் இல்லங்களில் இவரது பாடல்களை மனப்பாடம் செய்வதும், இவரது வரிகளைப் பழமொழிகளாகப் பயன்படுத்துவதும் இன்றும் கூட நிகழ்ந்து வருகின்றது. இவரது வாழ்க்கையையும், பாடல்களையும் பெருமளவிலானோர் ஆய்வு செய்துள்ளதுடன், இவற்றுக்குப் பல விளக்கங்களும், விரிவுரைகளும் எழுதியுள்ளனர். இவரது படைப்புக்கள் பதினான்காம் நூற்றாண்டுக்குப் பிந்திய பாரசீகப் பாடல்களில் மற்றெவரினது பாடல்களைக் காட்டிலும் கூடிய செல்வாக்குச் செலுத்தின. காதல், மதுவைப் புகழ்தல் என்பவற்றோடு தங்களை அறத்தின் காவலர்களாகவும், நீதிமான்களாகவும், எடுத்துக்காட்டுகளாகவும் பிறரை நம்பச்செய்து பாசாங்கு செய்பவர்களுடைய நடவடிக்கைகளை வெளிச்சம் போட்டுக்காட்டுவதும் இவரது கசல்களின் முக்கிய கருப்பொருள்களாக இருந்தன. கஃபீசு-வாசித்தல்; பாரசீக மரபுவழி இசை, காட்சிக் கலைகள், வனப்பெழுத்து ஆகியவற்றில் இவரது பாடல்கள் அடிக்கடி பயன்படுதல் என்பன ஈரானியச் சமூகத்தில் இவர் இன்றும் நிலைத்திருப்பதற்கான எடுத்துக்காட்டுகள் ஆகும். இவருடைய சமாதிக் கட்டிடம் ஈரானியக் கட்டிடக்கலையின் தலை சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். சுற்றுலாப் பயணிகளும் இதனைப் பார்க்கச் செல்கின்றனர். பாரசீக மாக்களின் வாழ்க்கையிலும் பாரசீகப் பண்பாட்டிலும் முக்கியமான ஒருவராக விளங்கியபோதும், இவரது செல்வாக்கும், புகழும் நீண்டகாலமாக நிலைத்திருக்கின்ற போதும் இவரது வாழ்க்கை பற்றிய தகவல்கள் அரிதாகவே உள்ளன. கிடைக்கும் தகவல்களில் பலவும் பழங்கதைப் பாணியிலான துணுக்குகளாகவே உள்ளன. இவரது வாழ்க்கை பற்றிக் கூறுகின்ற சில பழைய வரலாறுகள் நம்ப முடியாதவையாக அல்லது கற்பனை சார்ந்தவையாகவே உள்ளன. இவருடைய பிறந்த தேதி, இறந்த தேதி என்பவை குறித்தும் பல வேறுபாடான கருத்துக்கள் அறிஞர்களிடையே நிலவுகின்றன. தற்கால அறிஞர்களுட் பலர், எம். மோயின் என்பவர் முன்வைத்த 1315 என்பதைப் பிறந்த ஆண்டாக ஏற்றுக்கொள்கின்றனர். இறந்த ஆண்டாக ஜாமி என்பவர் வெளியிட்ட 1360 என்பதும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இவருடைய கவிதைகளிலிருந்து இவர் நல்ல கல்வியைப் பெற்றவராக அல்லது தானே கற்றுக்கொள்வதற்கான வசதிகளைப் பெற்றவராக இருந்திருக்கவேண்டும் எனத் தெரிகிறது. துரோணாச்சார்யா விருது துரோணாச்சார்யா விருது ("Dronacharya Award") 1985ஆம் ஆண்டு இந்திய அரசினால் தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் வீரர்களின் முழு விளையாட்டுத் திறனை வெளிக்கொணரும் சிறந்த விளையாட்டு பயிற்றுனர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் நிறுவப்பட்டது. இவ்விருது பெற்றவருக்கு தொன்மவியலில் போர்க்கலைகளில் கற்று தேர்ந்து சிறப்பான ஆசானாக கருதப்படும் துரோணரின் வெண்கலச்சிலையோடு, இந்திய ரூபாய்கள் 300,000 மற்றும் பாராட்டுச் சுருள் கொடுக்கப்படுகிறது. எடித் பியாஃப் எடித் கியோவன்னா காசியன் என்னும் இயற்பெயர் கொண்ட எடித் பியாஃப் ("Édith Piaf") ஒரு பிரான்சியப் பாடகரும், பண்பாட்டுச் சின்னமும் ஆவார். பிரான்சின் மக்களாதரவு பெற்ற மிகச் சிறந்த பாடகர் இவர் எனப் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இவர் பாடிய பாடல்கள் இவரது வாழ்க்கையைக் காட்டுவதாக அமைந்தன. "பல்லாட்" என்ற வகைப் பாடல்களே இவருக்கு மிகவும் கைவந்த பாடல்வகையாகும். பலர் இவரது வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ள போதும், இவரது வாழ்க்கையின் பெரும்பகுதி தெளிவாக அறியப்படாததாகவே உள்ளது. இவர் பாரிசில் பெருமளவில் புலம்பெயர்ந்து வந்தவர்கள் வசித்த பெல்லேவில் என்னும் இடத்தில் பிறந்தார். சில கதைகள் இவர் ரூ டி பெல்லவில் என்னும் பகுதியில் உள்ள நடைபாதை ஒன்றில் பிறந்ததாகக் கூறுகின்றன. எனினும், இவரது பிறப்புச் சாட்சிப் பத்திரம் பெல்லேவில்லையும் உள்ளடக்கிய 20ஆவது அரொன்டைசுமென்ட் எனப்படும் இடத்திலுள்ள மருத்துவ மனையில் பிறந்ததாகக் கூறுகின்றது. தரையிலான் குருவி தரையிலான் குருவி ("Apus apus", "Common swift") என்பது சிறிய கால்களை உடைய வெகுதொலைவு பறக்கும் குருவி ஆகும். இது தானாக விரும்பி நிலத்தில் அமர்வதே இல்லை. மிக அரிதாக சில மரக்கிளைகளில் அமர்ந்திருக்கும். மேலும் இப்பறவையால் பறந்து கொண்டே தூங்கவும் இனப்பெருக்கம் செய்யவும் இயலும். இது ஓய்வின்றிப் பத்து மாதங்கள் தொடர்த்து பறக்க வல்லது. கோ-கோ கோ கோ ("Kho kho") ஓர் இந்திய விளையாட்டாகும். களத்தில் உள்ள 9 பேர்களையும் தொட்டு புறம் போக்குவதே எதிரணி ஆட்டக்காரரின் நோக்கமாகும். எதிரணி ஆட்டக்காரர் தொட்டு விடாமல் தப்பித்து ஓடுவது ஆட்டக்காரரின் நோக்கமாகும். இந்தியத் துணைக் கண்டத்தில் விளையாடப்படும் இரண்டு பாரம்பரிய விளையாட்டுகளில் கோகோ-வும் ஒன்றாகும். மற்றையது கபடி ஆகும். இந்தியத் துணைக்கண்டத்தைத் தவிர தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்திய சமூகத்தவராலும் இவ்விளையாட்டு விளையாடப்படுகிறது. சடுகுடு விளையாட்டைப் போன்றது எனினும் இது அதனிலும் வேறுபட்டது. களத்தில் ஓர் அணியின் வீரர்கள் ஓர் வரிசையில்,அடுத்தடுத்தவர்கள் எதிர்திசையை நோக்கியவாறு அமர்ந்திருப்பர். எதிரணி இரண்டு அல்லது மூன்று வீரர்களை களத்தில் இறக்குவர்.அமர்ந்திருக்கும் அணியின் நோக்கம் எதிரணியின் போட்டியாளரை துரத்தி தொட்டு வெளியேற்றுவது ஆகும். ஆனால் அவர்கள் ஒரே திசையில்தான் ஓட வேண்டும்;அமர்ந்திருப்பவர்களுக்கிடையே "குறுக்கே" புக முடியாது.மாற்றாக ஓடும் எதிரணியினர் அவ்வாறு குறுக்கே செல்லலாம். துரத்துபவர்கள் வரிசையின் கடைசி வரை ஓடி அதன் பின்னரே மற்ற திசையில் ஓட முடியும்.துரத்தும் பணியை தனக்கு முதுகு காட்டி அமர்ந்து கொண்டிருக்கும் நபரிடம் மாற்றி விடலாம். அப்போது கோ என ஒலி எழுப்புவர்.இது துரத்துபவர் மாறுவதைக் குறிக்கும். எந்த அணி குறைந்த நேரத்தில் எதிரணியின் அனைத்து வீரர்களையும் வெளியேற்றுகிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்கள். கா. நமச்சிவாயம் கா. நமச்சிவாயம் (பெப்ரவரி 20, 1876 - மார்ச் 13, 1936) தமிழகத்தின் சிறந்த புலவராக, தமிழறிஞராக விளங்கியவர். தமிழ்ப் பேராசிரியர். தமிழ்நாடு வட ஆற்காடு மாவட்டம் காவேரிப்பாக்கம் என்ற ஊரில் ராமசாமி முதலியார்-அகிலாண்டவல்லி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். தந்தை ராமசாமி முதலியார் காவேரிப்பாக்கத்தில் நடத்தி வந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில் நமச்சிவாயர் தம் இளமைக்கால கல்வியைக் கற்றார். நல்வழி, நன்னெறி, நீதிநெறி விளக்கம், விவேக சிந்தாமணி முதலிய நூல்களைக் கற்றுத் தேர்ந்த இவர், தமது பதினாறாவது அகவையில், காவேரிப்பாக்கத்தை விட்டு நீங்கி, சென்னை தண்டையார்பேட்டையில் தங்கி, அங்கிருந்த ஒரு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியேற்றார். 1906-ஆம் ஆண்டு சுந்தரம் என்னும் அம்மையாரை நமச்சிவாயர் மணந்து ஆண்மக்கள் இருவரையும் பெண் மக்கள் இருவரையும் பெற்றெடுத்தார். தொண்டை மண்டல துளுவ வேளாளர் பள்ளியில் தமிழ்ப் புலவராகப் பணியாற்றி வந்த மகாவித்துவான் மயிலை சண்முகம் பிள்ளையிடம் மாணாக்கராக இருந்து தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். பன்னிரண்டு ஆண்டுகள், தண்டையார்பேட்டையிலிருந்து மயிலாப்பூருக்கு ஞாயிறுதோறும் நடந்தே சென்று பாடம் கேட்டுவந்தார் நமச்சிவாயர். மகப்பேறு இல்லாத மகாவித்துவான், நமச்சிவாயரைத் தமது மகனாகவே கருதி தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுத்தந்தார். நமச்சிவாயர் திருத்தணிகை முருகன் பக்தர். மாதந்தோறும் கிருத்திகையன்று திருத்தணிகை சென்று தணிகைவேலனை வழிபடும் வழக்கம் கொண்டவர். நமச்சிவாயரின் மூத்த மகன் தணிகைவேல் சென்னை மாநிலக் கல்லூரியில் டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலுவின் வகுப்புத் தோழர். ஒரே வகுப்பில் படித்தவர். தமிழாசிரியராகப் பணியாற்ற விரும்பிய நமச்சிவாயருக்குத் தொடக்க காலத்தில் அப்பணி எளிதில் கிட்டவில்லை. 1895-இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு சிறிய வேலையில் சேர்ந்தார். ஓராண்டுக்குப் பிறகு அதிலிருந்து நீங்கி, சென்னை செயிண்ட் சேவியர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் பணியில் சேர்ந்தார். பின்னர், ராயபுரத்தில் இருந்த "நார்த்விக்' மகளிர் பாடசாலையிலும் அதன்பிறகு "சிங்கிலர்' கல்லூரியிலும் தமிழ்ப் பணியாற்றினார். 1902 முதல் 1914 வரை சென்னை வேப்பேரியில் இருந்த எஸ்.பி.ஜி. உயர்நிலைப் பள்ளியில் (தற்போது புனித பால்ஸ் பள்ளியில்) தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். 1914-ஆம் ஆண்டில் பெண்களுக்கென அரசினரால் தொடங்கப்பட்ட ராணிமேரி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக ஆண்கள் எவரும் பணியாற்ற முன்வராத நிலையில், துணிவோடு அப்பணியை ஏற்றுச் சிறப்பித்தார் நமச்சிவாயர். இறுதியாக, ராஜதானிக் கல்லூரி (மாநிலக் கல்லூரி) யில் தமிழ்ப் பேராசிரியர் பணி இவரைத்தேடி வந்தது. உ.வே.சாமிநாதய்யர், மறைமலை அடிகளார், திரு.வி.க., ஆகியோர் நமச்சிவாயர் காலத்து வாழ்ந்த சான்றோர்களாவர். சென்னைப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் நெ.து.சுந்தரவடிவேலு, சென்னை விவேகானந்தா கல்லூரி தமிழ்த்துறை மேனாள் தலைவர் சி.ஜெகந்நாதாசாரியார், உச்ச நீதிமன்ற மேனாள் நீதியரசர் பி.எஸ்.கைலாசம், மேனாள் மத்திய அமைச்சர் ஓ.வி.அளகேசன்,நீதிபதி அழகிரிசாமி,முன்னாள் சென்னை மாநகராட்சி மேயர் எஸ்.ராமசாமி ஆகிய பெருமக்கள் பேராசிரியர் கா.நமச்சிவாயரிடம் பயின்ற மாணாக்கர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். 1917-ஆம் ஆண்டில் அப்போதிருந்த தமிழ்க் கழகத்தின், தலைமைத் தேர்வாளராக நமச்சிவாயரை அன்றைய ஆங்கிலேய அரசு நியமித்தது. 1918-ஆம் ஆண்டில் தமிழ்க்கல்வி அரசாங்க சங்கத்தில் உறுப்பினர் பதவியை ஏற்றார். 1920-இல் இச்சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1934 வரை இப்பதவியில் தொடர்ந்தார். அந்நாளில் வித்துவான் பட்டங்கள் வடமொழி கற்றவருக்கே வழங்கப்பட்டன. "தமிழ்க்கல்வி அரசாங்க சங்க'த்தின் தலைவரான நமச்சிவாயர், அத்தடையை அகற்றி, தமிழ் மொழியில் இலக்கண, இலக்கியங்களைக் கற்றவர்களுக்கும் "வித்துவான்' பட்டம் அளிக்க அரசுக்குப் பரிந்துரை செய்தார். அரசும் இவர் கருத்தை ஏற்றுக்கொண்டது. தமிழ் மட்டுமே படித்தவர்களும் வித்துவான் பட்டம் பெற வழிவகுத்த பெருமை கா.நமச்சிவாயரையே சாரும். தைத் திங்கள் முதல்நாளைத் தமிழ்த் திருநாளாகக் கொண்டாட வழி செய்தார். திருவள்ளுவருக்கு முன் - திருவள்ளுவருக்குப் பின் என தமிழகத்துக்கு ஒரு சகாப்தகால அளவு கிடைக்க வழிவகுத்தவரும் இவரே. இதற்கு உற்ற துணையாக உ.வே.சாமிநாதய்யரும், மறைமலை அடிகளாரும் இருந்தனர். நமச்சிவாயரது தமிழ்ப்பணி அனைத்துக்கும் பனகல் அரசர், தமிழவேள் சர் பி.டி.இராஜன், டாக்டர் ஏ.எல்.முதலியார், ராஜா சர் அண்ணாமலை செட்டியார் ஆகியோர் பெரும் பங்களிப்புச் செய்துள்ளனர். 1905 வரை மாணாக்கர் தமிழ்ப் பாடங்களைப் படிக்க ஆங்கில அறிஞர்கள் எழுதிய பாடநூல்களையே படிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அக்குறையைப் போக்க நமச்சிவாயரே தமிழ்ப்பாட நூல்களை எழுதத் தொடங்கினார். எஸ்.எஸ்.எல்.சி, இன்டர் மீடியட், பி.ஏ., ஆகிய வகுப்புகளில் இவரது பாட நூல்களே இடம்பெற்றன. அச்சமயம் பள்ளிப்பாட நூல்கள் அரசுடமை ஆகவில்லை. நமச்சிவாயரின் நூல்களைப் பல பள்ளிகள் விரும்பிப் பயன்படுத்த ஆரம்பித்தன. ஏற்கனவே தமிழ்ப்பாடநூல்கள் எழுதிப் பிழைத்து வந்த ஆங்கிலேயர், நமச்சிவாயர் எழுதிய பாடநூல்களை ’பாடநூல் குழு’ ஏற்காதபடிச் செய்ய நெருக்கடி தந்தார்.ஆனால் பாடநூல் குழு நமச்சிவாயரின் நூல்களை ஒப்புக்கொண்டது. மேலும் அந்த ஆங்கிலேயர், நமச்சிவாயர் பணிபுரிந்த புனித பவுல் உயர்நிலைப் பள்ளி நிர்வாகத்திற்கு நெருக்கடி தந்து நமச்சிவாயரை பள்ளியிலிருந்து வேலைநீக்கம் செய்யச் சொன்னார். அதைத் தொடர்ந்து, பள்ளிநிர்வாகம் அடுத்த கல்வியாண்டிலிருந்து நமச்சிவாயரின் பணி தேவையில்லை என்று அவருக்கு அறிவித்தது. இச்செய்தி மாணவர்களுக்கு எட்டவே மாணவர்கள் தாமாகவே வேலைநிறுத்தம் செய்தனர். நிர்வாகமும் தொடர்ந்து பணியாற்ற நமச்சிவாயருக்கு ஆணை வழங்கியது. பிருதிவிராசன், கீசகன், தேசிங்குராசன், சனகன் என்ற தலைப்புகளில் நாடக நூல்களையும் இவர் எழுதியுள்ளார். மேலும் நாடகமஞ்சரி என்ற பெயரில் பத்து நாடகங்கள் இவரால் எழுதப்பட்டு, மேடைகளில் அரங்கேறின. சிறந்த குழந்தைக் கவிஞராகவும் திகழ்ந்த நமச்சிவாயர், ஆத்திசூடி, வாக்குண்டாம், நல்வழி முதலான நீதி நூல்களுக்கும் உரை எழுதியுள்ளார். "நன்னூல் காண்டிகை' என்னும் இலக்கண நூலுக்கும் உரை கண்டார். "தமிழ்க்கடல்' என்ற பெயரில் அச்சகம் ஒன்றை நிறுவி, தணிகை புராணம், தஞ்சைவாணன் கோவை, இறையனார் களவியல், கல்லாடம் முதலான நூல்களைப் பதிப்பித்தார். "நல்லாசிரியன்' என்ற பெயரில் செய்தித்தாள் ஒன்றை, பதினைந்து ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். "ஜனவிநோதினி' என்ற மாத இதழில் சிறந்த கட்டுரைகளையும் எழுதிவந்தார் நமச்சிவாயர். இவரது நினைவைப் போற்றும் வகையில் சென்னை மண்ணடி பவழக்காரத் தெருவில் இயங்கும் ஏ.ஆர்.சி.மகளிர் பள்ளியில் நக்கீரர் கழகம் - திருவள்ளுவர் தமிழ்க் கல்லூரியின் காப்பாளர், சிறுவை மோகனசுந்தரம் என்ற அருந்தொண்டர், ஆண்டுதோறும் பல தமிழ் அறிஞர்களை ஒன்றுதிரட்டி, "நமச்சிவாய நினைவுச் சொற்பொழிவு நிகழ்ச்சியை 1988 வரை நடத்தி பேராசிரியருக்குப் பெருமை சேர்த்தார் என்பதும், நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் இவர் பெயரால் அமைந்த "நமச்சிவாயபுரம்" என்றும் குடியிருப்புப் பகுதியும் இவரது தமிழ்த்தொண்டுக்குப் பெருமை சேர்க்கின்றன. மந்தநிலை பொருளாதாரத்தில் மந்தநிலை என்பது பொருளாதார நடவடிக்கைகளில் தொடர்ந்து சில காலம் நிகழும், பொதுவானதொரு வேகக்குறைவு.அல்லது வர்த்தகச் சுழற்சியில் தாழ்வுநிலை என்று வரையறுக்கப்படுகிறது.[2] [4] மந்தநிலையின் போது பல பொருளாதார குறியீடுகளும் அதே முறையில் மாறுகின்றன உற்பத்தி என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தி, வேலை வாய்ப்பு, முதலீட்டு செலவினம், கொள்ளளவு உபயோகம், வீட்டு வருமானம், வியாபார லாபம் ஆகிய அனைத்தையும் கருத்தில் கொண்டு மதிப்பீடு செய்வதாகும். இவை அனைத்தும் மந்தநிலையின் பொழுது பெருமளவில் வீழ்ச்சி அடைகின்றன. நாட்டு மக்கள் பரவலாக செய்வதறியாமல் தங்கள் செலவுகளை குறைக்கும் எண்ணத்துடன் தொடர்ந்து செயல் படும் பொழுது மந்த நிலை ஏற்பட்டதாக கொள்ளப்படுகிறது. இதில் இருந்து விடுபடுவதற்கு, பொதுவாக அரசுகள் பேரினப் பொருளியல் திட்டங்களை வகுக்கின்றனர், அவற்றில் பணப்புழக்கத்தை அதிகரிப்பது, அரசின் செலவீனங்களை அதிகரிப்பது, வரிகளை குறைப்பது போன்றவை அதில் அடங்கும். 1975 ஆம் ஆண்டில் நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் வெளிவந்த கட்டுரையில் பொருளாதார புள்ளிவிவரவியல் நிபுணர் சுலயுஸ் ஷிச்கின் மந்த நிலையை அடையாளம் காண்பதற்கான பல எளிதான விதிமுறைகளை முன்வைத்தார். அதில் ஒன்று தான் ஜிடிபி இரண்டு காலாண்டுகளுக்கு மேல் குறைவது[7] காலப்போக்கில் மற்ற விதிகள் நினைவில் நிற்காமல் போனாலும் இந்த விதி முறை மட்டும் மனதில் நிலைத்தது.[9] தற்பொழுது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரு காலாண்டுகளுக்கு மேலான கால அளவுக்கு தொடர்ச்சியாக வீழ்ச்சி அடைந்தால் மந்தநிலை என்று வரையறுகிறது [11][13] சில பொருளாதார நிபுணர்கள் பன்னிரண்டு மாதத்திற்க்குள் வேலைவாய்பின்மை ஒன்றரை சதவிகிதம் அதிகரிப்பதையே மந்தநிலை என குறிப்பிட விரும்புகிறார்கள். அமெரிக்காவில் மந்தநிலையை கணக்கிடும் அதிகாரம் தேசிய பொருளாதார ஆராய்ச்சிக் கழகத்தின் வர்த்தக சுழற்சி கணக்கீட்டுக் குழுவிடம் உள்ளது. மந்தநிலை என்பதை நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளில் குறிப்பாக ஜிடிபி வளர்ச்சி, உண்மையானதனிநபர் வருமானம், வேலைவாய்ப்பு (உழவு சாரா) தொழில் உற்பத்தி, மொத்த சில்லரை வியாபாரத்தில் குறிப்பிடத்தகுந்த வீழ்ச்சி சில மாதங்களுக்கு மேல் நீடித்தல் என்று என்.பி.ஈ.ஆர். வரையறுக்கிறது[௧௬] கல்வியாளர்கள்ள, பொருளாதார நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள், வர்த்தகர்கள் என்று கிட்டத்தட்ட அனைவரும் மந்தநிலையின் சரியான தொடக்க மற்றும் முடிவு தேதிகளைக் கணித்து என்.பி.ஈ.ஆர். ஐ வழங்கிய முடிவுகளில் இருந்து வேறுபடுகின்றனர். மந்தநிலை ஒரே நேரத்தில் நிகழக்கூடிய பல பண்புகளை உள்ளடக்கியது. அவற்றுள் வேலைவாய்ப்பு, முதலீடு மற்றும் நிறுவன லாபங்கள் ஆகியவற்றுள் ஏற்படும் குறைவுகளும் அடங்கும். மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கும் மேல் மந்த நிலை நீடித்தால், அது நீண்ட மற்றும் கடுமையான மந்தநிலை அல்லது பொருளாதார தாழ்வுநிலை எனப்படுகிறது, எனினும் சிலர் பொருளாதார தாழ்வுநிலைக்கான காரணங்களும், மந்தநிலைக்கான காரணங்களும் வெவ்வேறாகும் என வாதாடுபவர்களும் உண்டு.. முற்றிலும் நம்பகமான அறிகுறிகள் எதுவும் இல்லை எனினும், கீழ் காணும் சிலவற்றை சாத்தியக்கூறுகளாய் எடுத்துக்கொள்ளலாம். பெரும்பாலான முன்னணி பொருளாதார நிபுணர்கள் மொத்த தேவையில் ஏற்ப்படும் குறைபாடுகளே மந்தநிலையை உருவாக்குவதாக கருதுகிறார்கள். அவர்கள் விரிவாக்கக் கொள்கைகளை மந்தநிலையின் போது ஆதிரிக்கிறார்கள். பொருளதாரத்தை மீட்பதற்க்கான திட்டங்கள் கொள்கை வகுப்பவர்களை பொறுத்து வேறுபடும் பணவாதிகள் விரிவாக்க திட்டங்களை ஆதரிக்கும் போது, கீனேஸியன் கொள்கையாளர்கள் அரசு செலவினங்களை அதிகரிப்பதை விரும்புகிறார்கள். உற்பத்தித்துறையைச் சார்ந்தவர்கள்,வர்த்தக முதலீட்டை அதிகரிக்க வரி குறைப்பு செய்ய வேண்டும் என்று பரிந்துறைக்கிறார்கள்.லைசே-ஃபேரே வேறு சிலர் (லைசே-ஃபேரே),அரசு எந்த குறுக்கீடும் செய்யாமலிருப்பதே நலம் என்று நினைக்கிறார்கள். பங்குச் சந்தையில் சரிவு ஏற்படும் பொழுதெல்லாம் மந்த நிலை தொடரலாம் என்ற அச்சம் காலம் காலமாக இருந்து வருகிறது. நீண்ட காலங்களுக்கு உட்பட்ட பங்குச் சந்தை வீழ்ச்சிகளில், 1948 ஆம் ஆண்டிலிருந்து இது வரை பத்து தடவை பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டதாகவும், 0 முதல் 13 மாதங்கள் கரு வளர் காலமாகக் கொண்டு மந்த நிலை நிகழ்வுகள் தொடர்ந்த தாகவும், சராசரியான கரு வளர் காலம் 5.7 மாதங்களாக இருந்ததாகவும் சேகல் எனும் ஆராய்ச்சியாளர் குறிப்பிடுகிறார். ஆயினும், 10% விழுக்காட்டுக்கும் மேலாக பங்குகள் வீழ்ச்சி அடைந்த 10 நிகழ்வுகளுக்குப் பிறகு, மந்த நிலை தொடரவில்லை என்றும் அவர் குறிப்பிடுகிறார்.[31]. அதே போல, ஒரு மந்த நிலை ஏற்படுவதற்கு சற்று முன் நில உட்மைக்கான சந்தையிலும் சரிவு ஏற்படுகிறது.[33] ஆனாலும், மந்தநிலையை விட பல நாட்கள் ரியல் எஸ்டேட் வீழ்ச்சிகள் நீடிக்கின்றன. வர்த்தக சுழற்சிக்கான கால அளவுகளை மதிப்பிட இயலாததால், முன்னறிவது மிகக் கடினமாகும், அதனால் பங்கு சந்தையில் மிகவும் சாதகமான சூழ்நிலையை கண்டறிந்து சந்தையில் நுழைவது என்பது நடைமுறைக்கு ஒவ்வாத செயலாகும் என்று சீகல் தெரிவிக்கிறார்.தேசிய பொருளாதார ஆராய்ச்சிக் கழகம் கூட உயர்நிலை, அல்லது தாழ்வுநிலையை கண்டறிய பல மாதங்களை எடுத்துக் கொள்கிறது.[36] பொருளாதார வீழ்ச்சியின் போது, அதிக லாபம் ஈட்டக்கூடிய பங்குகளான துரித நகர்வு நுகர்வு பொருட்கள், மருந்து உற்பத்தி, புகையிலை ஆகியன நன்றாக செயல்படுகின்றன [37]. இருந்தாலும், பொருளாதாரம் தாழ்வுநிலையை விட்டு மீளும்போது (அட்டவணைகளில் எம்.ஏ.சி.டி. என்று சில சமயம் அடையாளம் காணப்படுகிறது.) வளர்ச்சித் துறை பங்குகள் வேகமாக வளர்ச்சி பெறுகின்றன. மருத்துவம் மற்றும் அவசியப் பொருட்கள் உற்பத்தி ஆகிய துறைகள் மீளும் விதம் குறித்து பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன [39]. பன்னாட்டு பங்குகளின் முதலீடு செய்வது பாதுகாப்பாயினும் அமெரிக்க பொருளாதாரத்துடன் நெருங்கிய தொடர்புடைய நாடுகளின் பொருளாதாரங்களும், அமெரிக்காவில் ஏற்படும் வீழ்ச்சியால் பாதிக்கப்படுகின்றன. "பாதிவழிவிதி" என்று முதலீட்டாளர்களிடம் ஒரு கருத்து உண்டு [41]. அதன்படி முதலீட்டாளர்கள் பொருளாதாரம் மந்தநிலையின் பாதிவழியில் மீளத்தொடங்குவதாக எண்ணினர். 1919 ஆம் ஆண்டில் இருந்து அமெரிக்காவில் நடைபெற்ற 16 மந்தநிலைகளின், சராசரி காலம் 13 மாதங்கள், ஆயினும், சமீபத்தியவை சிறிய கால அளவை உடையவனாகி இருந்தன. அதன்படி, 2008 ஆம் ஆண்டில் இருந்த மந்தநிலை சராசரியைப் பின்பற்றினால், பங்குச்சந்தை வீழ்ச்சி அதன் மிக மோசமான நிலையை நவம்பரில் எட்டியிருக்கும். அமெரிக்காவில் அந்த முறை மந்த நிலை மிகவும் மோசமாக வீழ்ச்சி அடைந்தது மார்ச் மாதம் 2009 ஆம் ஆண்டிலாகும். போதுவாக ஒரு அரசு, அதன் ஆட்ச்சிக்காலத்தில் அவர்களுடைய நிருவாகத் திறமையைப் பொறுத்து பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கங்களின் அடிப்படையில் புகழ்ச்சி அல்லது இகழ்ச்சிக்கு ஆளாக நேரிடுகிறது.[42] இதனால், மந்தநிலை எப்போது தொடங்கியது என்பது குறித்து கருத்து வேறுபாடுகள் எழுகின்றன. விரிவான வளர்ச்சியின் ஒரு கால கட்டத்தில் தக்க வைக்க இயலாத ஒரு நிலமையை அடையும் பொழுது திருத்தங்களை மேற்கொள்வதால் ஒரு சிறு பின்னடைவு ஏற்படுகிறது, அது மந்த நிலைக்கு எடுத்துச் செல்லலாம். அதனால், பொருளாதார சுழற்சியின் ஒவ்வொரு கட்டத்திற்குமான காரணங்களைத் தனிமைப்படுத்துவது எளிதானதல்ல. 1981 ஆம் ஆண்டின் மந்தநிலை ரொனால்டு ரீகன் பதவி ஏற்பதற்கு முன், மத்திய ரிசர்வ் அமைப்பின் தலைவர் பால் வோல்கர் என்பவரது சிக்கனக் கொள்கைகளால் ஏற்பட்டதாகக் கருதுகின்றனர். ரீகன் அந்தக் கொள்கையை ஆதரித்தார். 1960 ஆம் ஆண்டுகளில் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவராக இருந்த பொருளாதார வல்லுநர் வால்டர் ஹெல்லர் என்பவர், அந்த மந்தநிலையை ரீகன்-வொல்கர்-கார்ட்டர் மந்தநிலை என்றழைத்தார்.[44] ரீகன் அரசின் கீழ், மந்தநிலையை எதிர்க்க எடுத்த நடவடிக்கைகள், அபரிதமான வளர்ச்சிக்கு வழிவகுத்தது. பொதுவான நம்பிக்கையின்படி [45] , மந்தநிலை அல்லது அதன் கடுமையின் மீது அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதிக்கம் உண்டு[46] மந்தநிலை தவிர்க்க முடியாதது என்றும் அது ஏற்படுவதற்கான காரணங்கள் புரிந்து கொள்ள முடியாதது என்றும் பொருளாதார வல்லுனர்கள் கற்றுத் தருகிறார்கள். அதன் காரணமாக, நவீன அரசமைப்புகள் மந்தநிலையின் கடுமையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கின்றன. மந்தநிலையைத் தடுப்பதில் அவை பெரும்பாலும் தோல்வியடைகின்றன. அரசின் நடவடிக்கைகள் மந்தநிலையின் கடுமையைக் குறைத்ததா அல்லது அதிகரித்ததா என்பதை நிரூபிப்பது கடினம்.[47] உலகளாவிய மந்தநிலை என்பதை பொதுவாக ஏற்றுக் கொள்ளக்கூடிய விளக்கங்கள் இல்லை. உலகளாவிய வளர்ச்சி விகிதம் மூன்று சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ள கால அளவுகளை மந்தநிலைகளாக அனைத்துலக நாணய நிதியம் கருதுகிறது.[48] எட்டு முதல் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மந்தநிலை ஏற்படுவதாக அனைத்துலக நாணய நிதியம் மதிப்பிடுகிறது. கடந்த முப்பது ஆண்டுகளில் நிகழ்ந்த மூன்று மந்தநிலைகளாக அனைத்துலக நாணய நிதியம் கணக்கிடும் காலங்களில் உலகளாவிய தனிநபர் உற்பத்தி வளர்ச்சி விகிதம் பூஜ்யம் அல்லது எதிர்மறையாக இருந்த்து. அனைத்துலக நாணய நிதியத்தில் (ஐ.எம்.எப்) உள்ள பொருளாதார வல்லுநர்கள் மந்திநிலை என்பது உலகளாவிய வளர்ச்சி விகிதம் 3 சதவிகிதத்திற்கு கீழ் குறைவது என்று கருதுகிறார்கள். அதன்படி 1985 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை நான்கு கால அளவுகள் (அதாவது, 1990-1993, 1998, 2001-2002, 2008-2009) மந்தநிலை என்று குறிப்பிடத் தகுதியுடையன. அண்மையில் ஐக்கியப் பேரரசு நாடுகளை பாதித்த மந்தநிலை 2000 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்தவையாகும். பொருளாதார வல்லுநர்களின் கருத்துப்படி, 1854 ஆம் ஆண்டில் இருந்து, அமெரிக்கா வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி சுழற்சியை 32 முறை கண்டுள்ளது. இவற்றில் சராசரியாக 17 மாதங்கள் வீழ்ச்சியும், 38 மாதங்கள் வளர்ச்சியும் கண்டுள்ளன.[52] ஆயினும், 1980 ஆம் ஆண்டில் இருந்து ஒரு காலாண்டுக்கு மேலாக வளர்ச்சி விகிதம் குறைவது எட்டு முறைகளுக்கு மட்டுமே நிகழ்ந்துள்ளன,[53]. அவற்றுள் நான்கு மந்தநிலை என்று கருதப்படுகின்றன. 2015 ஆம் ஆண்டு அமெரிக்காவில் அமைந்துள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஓர் நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி சீனாவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார மந்தநிலை இந்தியாவின் பொருளாதாரத்தைப் பாதிக்காது என்று கூறினார். ஆனால் [[இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் [[ரகுராம் கோவிந்தராஜன்|ரகுராம் ராஜன்]] [[சீனா]]வில் கூட்டம் ஒன்றில் பேசியபோது, இந்திய நிறுவனக்கள் சீனாவிற்க்கு பொருட்களை சேற்றுமதி செய்வதைவிட உலக நாடுகள் இந்தியாவிடம் கச்சா பொருட்களை வாங்கி சீனாவிற்க்கு ஏற்றுமதி செய்கின்றன. அதனால் சீனாவின் பொருளாதர மந்த நிலை இந்தியாவைப்பாதிக்கும் என்று தெரிவித்தார். கடந்த மூன்று மந்தநிலைகளின் போதும், என்.பி.இ.ஆர் முடிவு. தொடர்ந்து இரு காலாண்டுகள் வீழ்ச்சி கண்டால் அது மந்தநிலை என்ற வரையறையுடன் ஒத்துப் போனது. 2001 ஆம் ஆண்டுகளின் மந்தநிலை இந்த வகையில் படவில்லை என்றாலும் ,முன்னதாக இரு காலாண்டுகள் வீழ்ச்சியும், குறைவான வளர்ச்சியும் மாறிமாறி நிகழ்ந்தன 2009ஆம் ஆண்டின் தொடக்கத்தில் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையிலான நாடுகள் மந்தநிலையை அனுபவிப்பதாக அதிகாரப்பூர்வ பொருளாதார விவரங்கள் தெரிவிக்கின்றன.2007ஆம் ஆண்டின் இறுதியில்அமெரிக்கா மந்தநிலையை அடைந்தது [58]. அதை தொடர்ந்து, 2008ஆம் ஆண்டில் பல நாடுகளுக்கும் அதே நிலை ஏற்பட்டது. [[அமெரிக்க வீட்டுச் சந்தை திருத்தம்|அமெரிக்க வீட்டு சந்தை திருத்தம்]], ([[அமெரிக்க வீட்டுச் சந்தை குமிழி|அமெரிக்க வீட்டு சந்தை குமிழி]]யின் மற்றும் [[சப்பிரைம் அடமான நெருக்கடி|சப் பிரைம் கடன் நெருக்கடி]]யின்ஒரு விளைவு) மந்தநிலை உருவானதற்க்கு ஒரு முக்கியமான காரணம் 2008/2009 ஆம் ஆண்டுகளின் மந்தநிலையின் போது 20 ஆண்டுகளில் முதன்முறையாக தனிநபர் நுகர்வு வீழ்ச்சி அடைந்தது. இது தற்போதைய மந்தநிலையின் ஆழத்தையும், கடுமையையும் உணர்த்துகிறது. நுகர்வோரது நம்பிக்கை மிகவும் குறைவாக இருப்பதால், பொருளாதாரத்தை மீட்பதற்கு நீண்ட காலம் தேவைப்படும். நுகர்வோர்கள் இந்த மந்தநிலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது வீடுகளின் மதிப்பு குறைந்தும் ஓய்வூதிய சேமிப்புகளின் மதிப்பு பங்கு சந்தையால் வீழ்ச்சி அடைந்ததும் அவர்களை துன்புறுத்துகின்றன. நுகர்வோர்கள் தங்கள் சொத்துக்கள் அழிந்து வருவதை காண்பதுடன், வேலைவாய்பின்மை பெருகி வருவதால் தங்களுக்கு வேலையிழப்பு நேரிடுமோ என்றும் அச்சப்படுகிறார்கள். நுகர்வோர்கள், அவர்களின் வளம் குறைவதை மட்டும் காணாமல்-வேலைவாய்ப்பின்மை அதிகரித்தலைக் கண்டு தங்களின் வேலை பறிபோய்விடுமோ என்று அஞ்சுகிறார்கள். அமெரிக்க முதலாளிகள் 63,000 வேலைகளை பிப்ரவரி 2008 ஆம் ஆண்டில்[60]குறைத்தனர். இது ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவாகும். "மத்திய ரிசர்வ் அமைப்பின் முன்னால் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பான் என்பவர் ஏப்ரல் 6, 2008 அன்று "அமெரிக்கா மந்தநிலைக்கு செல்ல 50 சதவிகித வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.[61]. அக்டோபர் 1ஆம் தேதி, பொருளாதார ஆராய்ச்சிக் கழகம் மேலும் 1,56,000 வேலையிழப்புகள் செப்டம்பரில் ஏற்பட்டதாக தெரிவித்தது. ஏப்ரல் 29, 2008 ஆம் ஆண்டில் 9 அமெரிக்க மாகாணங்கள் மந்தநிலையில் இருப்பதாக [[மூடி]] அறிவித்தார். நவம்பர் 2008 ஆம் ஆண்டில் தொழில் உரிமையாளர்கள் 5,33,000 வேலைகளைக் குறைத்தார்கள். 34 வருடங்களில் மிகப்பெரிய வேலையிழப்பு ஏற்பட்ட மாதமாக அது விளங்கியது.[62]. 2008 ஆம் ஆண்டில் மொத்தம் இருபத்தி ஐந்து இலட்சம் வேலையிழப்புகள் ஏற்பட்டன.` மார்ச் 2009 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 8.5 சதவீதமாக அதிகரித்தது http://www.wealthalchemist.com/Blog/2009/04/reality-check-job-loss-2009-control/. டீசம்பர் 2007 ஆம் ஆண்டில் இருந்து மார்ச் 2009 வரை 51 லட்சம் வேலையிழப்புகள் ஏற்பட்டன. அதாவது, முந்தைய ஆண்டை விட 50 லட்சம் அதிகம் பேர் வேலையின்றி தவித்தனர்.http://www.bls.gov/news.release/empsit.nr0.htm. 1940 ஆம் ஆண்டுகளில் இருந்து மிகவும் அதிகமானவர்கள் வேலையின்றி இருந்தது இந்த முறை தான்http://money.cnn.com/2009/01/09/news/economy/jobs_december/index.htm. முதல் காலாண்டில் அமெரிக்கப் பொருளாதாரம் 1 சதவிகிதம் உயர்ந்தாலும்,[64] [65] நீடித்த கடன் நெருக்கடி, அத்தியாவசியப் பொருட்களான எண்ணெய், உணவு, இரும்பு ஆகியவற்றின் விலையேற்றத்தால் ஏற்பட்ட கடுமையான பணவீக்கம் ஆகிய காரணங்களால் ஜூன் மாத அளவில் மந்தநிலை ஏற்பட்டது.66 [[பகுப்பு:மந்தநிலைகள்]] [[பகுப்பு:மொத்த பொருளாதாரம்]] [[பகுப்பு:சந்தை போக்குகள்]] [[பகுப்பு:வியாபாரச் சுற்று]] [[பகுப்பு:பொருளாதாரப் பிரச்சினைகள்]] [[பகுப்பு:அமெரிக்க வீட்டுச் சந்தை குமிழியின் தத்துவங்களும்,விதிகளும்]] [[de:Konjunktur#Rezession]] [[fr:Récession économique]] [[pl:Recesja (ekonomia)]] 1855 1855 (MDCCCLV) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். இருசொற் பெயரீடு உயிரியலில் இருசொற் பெயரீடு ("Binomial nomenclature") எவ்வாறு உயிரினங்கள் பெயரிடப்படுகின்றன என்பதை வரையறுக்கிறது. பெயரில் விளங்குவது போன்று ஒவ்வொரு உயிரினமும் இரு சொற்களால் பெயரிடப்படுகின்றன: முதல் சொல் குறிப்பிட்ட உயிரினத்தின் பேரினத்தையும், இரண்டாம் சொல் குறிப்பிட்ட உயிரினத்தின் இனத்தையும் குறிக்கின்றன. இவை இலத்தீன் மொழிச்சொற்களாக இருப்பதால் "இலத்தீன் பெயர்" எனவும் "அறிவியல் பெயர்" எனவும் அறியப்படுகின்றன. எடுத்துக்காட்டாக மனித இனம் ஹோமோ சாபியன்ஸ் ("Homo sapiens") என அறியப்படுகிறது. இதில் முதற்சொல் ஹோமோ மனிதர் சார்ந்திருக்கும் பேரினத்தையும் இரண்டாம் சொல் இனத்தையும் குறிக்கின்றன. இலத்தீனில் எழுதும்போது முதற்சொல்லின் முதலெழுத்து மேலெழுத்தாக இருக்க வேண்டும்; இரண்டாம் சொல்லின் முதலெழுத்து, அது பெயர்ச்சொல்லாக இருப்பினும் மேலெழுத்தாக எழுதப்படக் கூடாது. தற்போது அவை அச்சுக்களில் வரும்போது சாய்ந்த எழுத்துக்களைக் கொண்டிருத்தல் வேண்டும். இம்முறையை பயன்படுத்த பல்வேறு விதிமுறைகள் உள்ளன; பல புத்தகங்கள் எவ்வாறு இச்சொற்கள் அமைக்கப்பட வேண்டும் என விளக்குகின்றன. அவற்றில் சில: முனைக்கூறு முனைக்கூறு அல்லது டெலோமியர் (telomere) என்பது டி. என். ஏ. இழைகள் சுருள்சுருளாக (சுருளியாக) அடக்கியமைக்கப்பட்ட நிறப்புரியானது எளிதில் அவிழ்ந்து விடாமல் காக்க நிறப்புரியின் முனைகளில் (இறுதிப்பகுதிகளில்) உள்ள ஒரு அமந்து ஒரு அமைப்பு ஆகும். இதனை நிறப்புரியின் இறுதிக்கூறு என்றும் கூறலாம். அலெக்ஃசை ஒலொவினிக்கோவ் என்னும் உருசிய கருத்தியல் அறிஞர், நிறப்புரிகள் அவிழ்ந்துவிடாமல் எவ்வாறு இறுதி முனையுட்பட படியெடுக்கின்றன என்றும் அப்படி நிகழ்வதில் ஏற்படக்கூடிய இடர்ப்பாடுகள் கருத்துச் சிக்கல்கள் பற்றியும் முதன்முதலாக 1971 இல் கருத்து தெரிவித்தார். கலென் 'கலென் (ஆங்கிலம்|Galen) என்ற பெயரில் பரவலாக அறிபப்பட்ட ஏலியசு கலெனசு அல்லது குளோடியசு கலெனசு ஒரு கிரேக்க மருத்துவரும், மெய்யியலாளரும் ஆவார். இவர் உரோமர் காலத்தின் மிகத் திறமை வாய்ந்த மருத்துவ ஆய்வாளர் எனக் கருதப்படக்கூடியவர். இவரது கோட்பாடுகள், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மேற்கத்திய மருத்துவ அறிவியலில் முன்னணியில் இருந்ததுடன், அதன் மீது பெரும் செல்வாக்கும் செலுத்திவந்தது. இவரது காலத்தில் மனித உடலை அறுப்பது ஏற்றுக்கொள்ளப்படாததாக இருந்தமையால் மருத்துவ உடற்கூற்றியல் தொடர்பான இவரது விளக்கங்கள் குரங்குகளை அடிப்படையாகக் கொண்டிருந்தன. எனினும், 1543 ஆம் ஆண்டில், அன்ட்ரியாசு வெசேலியசு என்பார் வெளியிட்ட மனித உள்ளுறுப்புக்கள் பற்றிய அச்சிடப்பட்ட விளக்கங்கள் வெளிவரும்வரை இவரது இவ்விளக்கங்களே உடற்கூற்றியலில் முன்னிலை வகித்தன. இப்னு கல்தூன் இப்னு கல்தூன் என அழைக்கப்பட்ட அபு சைத் அப்துர் ரகுமான் இப்னு முகம்மது இப்னு கல்தூன் அல்-ஹள்ரமீ (, , (மே 27, கிபி 1332 /732 AH – மார்ச் 19, கிபி 1406 /808 AH)), ஒரு வட ஆப்பிரிக்கப் பல்துறையாளர் ஆவார். வட ஆப்பிரிக்காவிலுள்ள இன்றைய தூனிசியப் பகுதியில் பிறந்த இவர் வானியல், பொருளியல், வரலாறு, இசுலாம், இசுலாமிய இறையியல், நீதித்துறை, சட்டம், கணிதம், படைத்துறை உத்திகள், மெய்யியல், சமூக அறிவியல், அரசியல் ஆகிய துறைகளில் வல்லவராக இருந்தார். இவர் ஒரு அராபிய அல்லது பர்பர் இனத்தைச் சேர்ந்தவர். இவர், மக்கட் பரம்பலியல், பண்பாட்டு வரலாறு, வரலாற்றுவரைவியல், வரலாற்று மெய்யியல், சமூகவியல் போன்ற பல சமூக அறிவியல் துறைகளின் முன்னோடியாக கருதப்படுகிறார். இந்திய அறிஞரும், மெய்யியலாளருமான சாணக்கியருடன் இவரும் தற்காலப் பொருளியலின் முன்னோடியாகக் கருதப்படுகின்றனர். பலர் இவரை இத்தகைய பல சமூக அறிவியல் துறைகளினதும், பொதுவாகச் சமூக அறிவியலினது தந்தையாகவும், மனித வரலாற்றை அறிவியல் ரீதியாகப் பகுப்பாய்வு செய்த வரலாற்று மேதையாகவும், வரலாற்றுத் தத்துவத்தை தோற்றுவித்த மாபெரும் அறிஞராகவும் கருதுகிறார்கள். Russeo, Locke, Hobbes போன்ற மேற்கத்தேய சிந்தனையாளர்கள் கல்தூணுக்கு இணையானவர்கள் அல்ல என்பது ஒரு புறமிருக்க, அவரோடு இணைத்துப் பேசுவதற்குக்கூட தகுதியற்றவர்கள் என்று ரொபட்(Robert) என்ற அறிஞர் தனது ' வரலாற்றுத் தத்துவங்கள் ' நூலில் குறிப்பிடுகின்றார். இப்னு கல்தூண் உருவாக்கிய வரலாற்றுத் தத்துவம் "முதத்திமா" என்னும் நூலில் விளக்கப்பட்டுள்ளது. முதத்திமா என்பது அவரது பெரும் நூலான நான்கு பாகங்களைக்கொண்ட "கிதாபுல் இபர்" என்ற நூலின் நீண்ட முகவுரையாகும். இந்த முகவுரையில் சமூகவியல், வரலாற்றுத் தத்துவங்களை எடுத்துக் கூறும் இவர், அதன் அடுத்த பகுதியில் இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னர் வாழ்ந்த மனித இனங்களின் வரலாறுகளை ஆய்வு செய்துள்ளார். இவர் சமூகங்கள், நாகரீகங்களின் தோற்றம், வளர்ச்சி மற்றும் அவைகளின் வீழ்ச்சி போன்றவற்றின் பின்னாலுள்ள வரலாற்று விதிகளை சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளார். அது மட்டுமன்றி பூமியின் சுவாத்திய நிலைமைகள், புவியியல் அம்சங்கள், தார்மீக, ஆத்மீக சக்திகள் என்பன மனித வரலாற்றில் ஏற்படுத்தும் தாக்கங்களை ஆராய்ந்து எழுதினார். இவ்வாறு புராணங்களாகவும், கர்ண பரம்பரைக்கதைகளாகவும் இருந்த வரலாற்றுத் துறையை ஆதாரபூர்வமான ஒரு அறிவியல் துறையாக மாற்றியமைத்தார்.19ஆம் நூற்றாண்டின் ஐரோப்பிய அறிஞர்கள் இப்னு கல்தூனையும்,அவரது முக்கியமான புத்தகத்தையும் கருத்தில் கொண்டு இப்னு கல்தூன், முஸ்லிம் உலகிலிருந்து வந்த மிகச்சிறந்த மெய்யியலாளர் என ஒப்புக்கொள்கின்றனர். இப்னு கல்தூன் எழுதிய அவரது சுயசரிதை நூல்(التعريف بابن خلدون ورحلته غربا وشرقا, "அத்தரீப் பி இப்ன் கல்தூன் வ ரிஹ்லது கர்பன் வஜர்கன்")) மூலம் அவரது வாழ்க்கை வரலாறு ஒப்பீட்டளவில் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.இதன் பல ஆவணங்கள், அவரது வாழ்வை வார்த்தைக்கு வார்த்தை மேற்கோள் காட்டுகின்றது.எனினும் இச்சுயசரிதை ,அவரது சொந்த வாழ்வைப் பற்றி சிறியளவு தகவல்களையே வழங்கியுள்ளது.இதனால், அவரது குடும்பப் பின்னணி பற்றி குறைந்தளவே அறிந்துகொள்ள முடிந்துள்ளது. இவர் பொதுவாக "இப்னு கல்தூன்" என அறியப்படுபவர்.இவர் கி.பி.1332(732 ஹி.வ.) தூனிஸில் "பனூ கல்தூன்" என்ற அராபிய வம்சவாளி உயர்தர அந்தலூசிய( Andalusian) குடும்பமொன்றில் பிறந்தார்.இவரது குடும்பத்தினர் அந்லூசியயாவில் உயர் அலுவலகங்களில் இருந்தனர். இவர்கள் செவீயா நகரம் ஸ்பானியர்களின் கட்டுப்பாட்டுக்கள் கி.பி.1248ல் மீளவந்ததன் பின்னர் தூனிஸுக்கு இடம்பெயர்நதனர்.தூனிஸில், ஹாபிஸ் வம்ச ஆட்சியில் இவரின் குடும்பத்தினர் சில அரசியல் அலுவலகங்களில் இருந்தனர்.இப்னுகல்தூனின் தந்தையும், பாட்டனும் அரசியல் வாழ்விலிருந்து விலக்கி ஆன்மீக பாதையில் சேர்ந்துகொண்டனர்.அவரது சகோதரர் யஹ்யா இக்னு கல்தூன் ஒரு வரலாற்றாசிரியராக இருந்ததுடன், அப்துல்வதித்(Abdalwadid) வமிசத்தைப் பற்றி எழுதினார், இவர் நீதிமன்றத்தில் வரலாற்றாசிரியராக நியமணத்தின் போட்டித்தன்மையின் காரணமாக கொலைசெய்யப்பட்டார். இப்னு கல்தூனின் ஒரு உயர்நிலை குடும்பத்தில் பிறந்திருந்ததால், அவருக்கு மக்ஹ்ரேபில்(Maghreb)இருந்த சிறந்த ஆசியரியர்களிடம் கல்விகற்பதற்கு இயலுமாகக் காணப்பட்டது.இவர் பாரம்பரிய இஸ்லாமிய கல்வியைப் பெற்றார்.குர்ஆனை முழுமையாக மனனம் செய்ததன் மூலம் படித்தார்.அரபு மொழியியல்,குர்ஆனை விளங்குவதற்கான அடிப்படை,ஹதீஸ்,ஷரீஆ(சட்டம்)மற்றும் பிக்ஹ் (சட்டம் பற்றிய இயல்) ஆகிய கல்விகளையும் பெற்றார்.இக்கல்விகளுக்கான இஜாஸாவையும்(சான்றிதழ்) பெற்றுக்கொண்டார். டெல்மசனை(Tlemcen) சேர்ந்த கணிதவியலாலர் மற்றும் தத்துவஞானி ,அல்-அபிலீ அவருக்கு கணிதம்,தர்க்கம் மற்றும் மெய்யியல் என்பவற்றை அறிமுகப்படுத்தியதுடன் இப்னு றுஷ்து, இப்னு சீனா,பக்ர் அல்தீன் ராசி மற்றும் தூஸி போன்றவர்களின் நூல்களையும் அல்-அபிலீயிடம் கற்றார். குடும்ப பாரம்பரியத்தை தொடர்ந்தவராக,இப்னு கல்தூன் ஒரு அரசியல் வாழ்க்கைக்கு முயற்சித்தார். இப்னு கல்தூனின் சுயசரிதை ஒரு சாகசக் கதையாகும்.இதில், அவர் சிறைச்சாலையில் கழித்தகாலம், உயர் பதவிகளை அடைந்தது மற்றும் நாட்டைவிட்டு வெளியேறியது என்பன குறிப்பிடப்பட்டுள்ளது. இப்னு கல்தூன் அவரது உலக வரலாறு "அல்கிதாபுல் இபர்"என்ற நூலை தவிர சில படைப்புக்களையே விட்டுச் சென்றுள்ளார்.சில வேறு மூலங்களின் மூலம் அவரது ஏனைய படைப்புக்களை எங்களுக்க அறிந்து கொள்ளலாம், இவை பிரதானமாக அவர் வட ஆபிரிக்கா மற்றும் அந்தலூசியாவில் வாழ்ந்த காலப்பகுதயில் எழுதப்பட்டன.அவரது முதலாவது புத்தகம் "லுபாபுல் முஹஸ்சால்" என்பதாகும், இது பக்ர் அல்தீன் ராசியின் இஸ்லாமிய இறையியல் நூலுக்கு எழுதப்பட்ட ஓர் விளக்கவுரையாகும்.இந்நூல் அவரது 19ஆம் வயதில்,தூனிஸைச் சேர்ந்த அவரது ஆசிரியர் அல்-அபிலியின் மேற்பார்வையின்கீழ் எழுதப்பட்டது. சூபிசம் பற்றிய "ஸிபாஉல் ஸாலி" என்ற நூல் 1373இல் மொரோக்கோவின் பெஸ் நகரில் எழுதப்பட்டது.அதேநேரம்,கிரனடாவின் சுல்தான் ஐந்தாம் முகம்மதுவின் நீதிமன்றத்தில், இப்னு கல்தூன் "அல்லாகா லில்சுல்தான்" என்ற இஸ்லாமிய தர்க்கவியல் நூலை எழுதினார். 1697 ஆம் ஆண்டில் அபு சைத் அப்துர் ரகுமான் இப்னு முகம்மது இப்னு கல்தூன் அல்-ஹள்ரமீ உலகின் மேற்கு நாடுகளில் வாழ்ந்த பல்லோராலும் ஈர்க்கப்பட்டார். அப்போது பார்தெலேமி டி ஹெர்பலொட் டி மோலினில்வில்லின் பிபிளொத்தோக் ஓரியெண்டல் (Barthélemy d'Herbelot de Molainville's "Bibliothèque Orientale") என்ற பதிப்பில் அவரைப் பற்றிய ஒரு வாழ்க்கை வரலாறு வெளிவந்தது. 1806 ஆம் ஆண்டு, முக்கதிமாஹ் தொகுப்பின் ("Muqaddimah") பகுதிகளில் ஒன்றாக பீடிகைகள் எனப்படும் புரோலெகோமென ("Prolegomena") என்ற தலைப்பில், சில்வெஸ்டேர் டி சேஸியின் கிறெஸ்தோமாத்திய ஆரேபே (Silvestre de Sacy's "Chrestomathie Arabe") என்பவர், இப்ன் கால்டுனின் வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டார். அதன் பின் இப்ன் கால்டுன் மீது அனைவர் கவனமும் ஈர்க்கப்பட்டது. 1816 ஆம் ஆண்டில், டி சாய் மீண்டும் புரோலெகோமென பற்றிய விரிவான விளக்கத்துடன் கூடிய ஒரு சுயசரிதையை வெளியிட்டார். 1857 ஆம் ஆண்டில் புரோலெகோமெனவின் முழு அரபுமொழிப் பதிப்பும் வெளிவரும் வரை அதைப் பற்றிய விவரங்கள் பகுதி மொழிபெயர்ப்புகளாக வெளிப்பட்டன. அப்போதிருந்து, இபின் கால்டுனின் பணிகள் மேற்கத்திய நாடுகளால், சிறப்பான ஆர்வத்துடன் விரிவாக ஆய்வு செய்யப்பட்டன. பிரிட்டிஷ் வரலாற்று ஆசிரியரான ஆர்னால்ட் ஜே. டோய்ன்பீ (Arnold J. Toynbee), முக்கதிமாஹ்வைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்: "இது வரலாற்றின் ஒரு மெய்யியல். சந்தேகத்திற்கு இடமின்றி மிகப் பெரும் தொகுப்பு. இதைப் போன்று ஒரு தொகுப்பு வேறு எவராலும், எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் எந்தவிதமான மனநிலையிலும் இதுவரை உருவாக்கப்படவில்லை."" பிரிட்டிஷ் தத்துவவாதி, ராபர்ட் ஃப்ளிண்ட் (Robert Flint) பின்வருமாறு எழுதியுள்ளார்: "மூன்று நூறு ஆண்டுகள் கழித்து, விகோ (Vico) தோன்றும் வரையில், எந்த வயதிலும், எந்த நாட்டிலும், இவருக்கு சமமான வரலாற்று தத்துவவாதி எவரும் இல்லை. பிளாட்டோ, அரிஸ்டாட்டில், மற்றும் அகஸ்டின் அவரது சகவர்கள் அல்லர். எல்லாருமே அவருடன் சேர்ந்து குறிப்பிடப் படுவதற்கு தகுதியற்றவர்கள் " அப்டெரஹ்மனெ லக்சஸி (Abderrahmane Lakhsassi) கூற்றுப்படி, "பெர்பர்களிடமிருந்து எந்த வரலாற்றையும் குறிப்பிடாமல், எந்த மக்ரெப் (Maghreb)வரலாற்றாளரும், தம் வரலாற்று பங்களிப்பைக் கொடுக்க முடியாது. பிரிட்டிஷ் தத்துவவாதியும், மானுடவியலாளருமான எர்னெஸ்ட் கெல்னர் (Ernest Gellner), இப்னு கல்தூனின் அரசாங்கம் பற்றிய, (அரசியல் தத்துவ வரலாற்றில் சிறந்த) வரையறை: "இது தன்னைத்தானே தவிர அநீதியைத் தடுக்கின்ற ஒரு நிறுவனம்" எகான் ஒரொவன் (Egon Orowan) என்பவர், 'சமூக இயக்கமுறைகள்' சார்ந்த கருத்துக்கள், சமூக பரிணாமத்தின் மீது இபின் கல்தூனின் வழங்கியுள்ள கருத்துக்கள், மற்ற கருத்துக்களின் மீது செல்வாக்கு தாக்க வசம் பெற்றுள்ளன. ஆர்தர் லாஃபர் என்பவரின் பெயரால் வரையப்பட்ட லாஃபர் வளைவரைவில், பலரது கருத்துக்களை ஒப்பிடும்போது இபின் கல்தூனின் கருத்துக்களை, அவரது கருத்துக்களே முந்துகின்றன. 2004 ஆம் ஆண்டில் துனிசியாவின் சமூக மையம் முதன்முதலாக இபின் கல்குன் விருது வழங்க தீர்மானித்தது. இபின் கால்டுன் பிணைப்பு மற்றும் ஒற்றுமை குறித்த கருத்துக்களை பிரதிபலிக்கும் சிறந்த துனிசிய / அமெரிக்க உயர்மட்ட சாதனையாளர்களை அங்கீகரிப்பதற்காக, இவ்விருது ஏற்பாடு செய்யப்பட்டது. அமைப்பாண்மை குறிக்கோள்கள், திட்டங்கள், மற்றும் செயல்பாடுகளை ஆய்ந்து அறிந்தபின், இபின் கால்டுன், உலக அளவில், சமூகவியல் தந்தையாக ஒப்புக்கொள்ளப்பட்டார். எனவே, இந்த விருது அவர் பெயரால் இபின் கால்டன் விருது எனப்னு பெயரிடப்பட்டது. 2006 ஆம் ஆண்டில், அட்லஸ் பொருளாதார ஆராய்ச்சி  நிறுவன அறக்கட்டளை (Atlas Economic Research Foundation) இபின் கால்டுன் பெயரில் மாணவர்களுக்கான ஆண்டு கட்டுரை போட்டி[https://web.archive.org/web/20080912062823/http://www.atlasusa.org/V2/main/page.php?page_id=741 [1]]  ஒன்றை அறிமுகப்படுத்தியது. போட்டிக்கான கரு: இஸ்லாமிய போதனைகள் மற்றும் மரபுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, சுதந்திரமான சந்தை, குடிமக்களின் வளர்ச்சி வாழ்வாதாரம், அரசாங்க கொள்கைகள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு, தனிநபர்கள், பொதுக் கொள்கைகளை உருவாக்கும் கருத்தூற்றுக்களங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில் முனைவோர் ஆகியோர் எவ்வாறு தங்களின் பங்களிப்பைக் கொடுக்க இயலும். 2006 இல், ஸ்பெயின் இபின் கால்டுன் இறந்த 600 வது ஆண்டு நிறைவு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.[http://www.middle-east-online.com/?id=38199 [2]] சிறப்புப்பெயர் சிறப்புப்பெயர் (சில நேரங்களில் "செல்லப் பெயர்") என்பது ஓர் இடத்தின்,நபரின் அல்லது பொருளின் அலுவல்முறை பெயருக்கு மாற்றாகவோ அல்லது ஒட்டாகவோ கொடுக்கப்படும் விவரிப்புப் பெயர். அது விளிக்க வசதியாக பெயரின் பழக்கமான அல்லது குறுக்கப்பட்ட சொல்லாக இருக்கலாம். (காட்டாக, "இராபர்ட்" என்ற ஆங்கிலப்பெயர் "பாப்","பாபி","ராப்","ராபி" அல்லது "பெர்ட்" என விளிக்கபடுதல்). சில நேரங்களில் அன்பின் காரணமாக அணுக்கத்தினை வெளிப்படுத்தும் விதமாக "கண்ணே", "கரும்பே" (சில நேரங்களில் "நாயே","கழுதை" என்பதும் உண்டு) என விளித்தல் "செல்லப் பெயர்" எனப்படும். சிறுவர்களைக் குறிக்க பெயருடன் "குட்டி", "பொண்ணு","பையன்" முதலிய ஒட்டுக்களும் சேர்ப்பதுண்டு. இது புனைப்பெயர் மற்றும் மேடைப்பெயர் இவற்றிலிருந்து பொதுவாக வேறுபட்டது. சிறப்புப் பெயர்களை புனைப்பெயராகக் கொள்வதும் உண்டு. பலநேரங்களில் சிறப்புப்பெயர்கள் விரும்பப்பட்டாலும்,சில நேரங்களில் அவை கேலி செய்வதாகவும் அமைந்து விடும். பல புவியிடங்களுக்கு ஏனையவர் எளிதில் அடையாளம் காணும் வகையில் சிறப்புப்பெயர்கள் கொடுக்கப்படுகின்றன. இவை அங்குள்ளவர்களின் குடிப்பெருமையை வளர்க்கவும் ஒன்றிணைக்கவும் பயன்படுகின்றன. இவை பொருளியல் ஆதாயத்தையும் கொண்டு வருகின்றன. இடங்களுக்கு கொடுக்கப்படும் சிறப்புப்பட்டங்களுடன் சிறப்புப்பெயர்களை குழப்பிக்கொள்ளக்கூடும். காட்டாக ஊட்டி "மலைவாழ் இடங்களின் ராணி" என்பது அந்நகருக்குக் கொடுக்கப் பட்டுள்ள பட்டப்பெயராகும். கோவையை "பருத்திநகரம்" என்பது அந்நகரின் சிறப்பினைக் கூறும் சிறப்புப்பெயராகும். பிரிவு (உயிரியல்) தற்கால உயிரிய வகைப்பாட்டியல் முறைகள் பல இருப்பினும, அவற்றுள் ஏழு படிநிலை அலகுகளைக் கொண்ட முறை குறிப்பிடத் தக்கது ஆகும்.அவற்றுள் பிரிவு (ஆங்கிலம்: division) என்பதும் ஒரு அலகாகும்.இவ்வலகு தாவரவியலில் மட்டும் பயன்படுத்தப் படும் அலகு ஆகும்.விலங்கியலில் இவ்வலகுக்குச் சமமாக, தொகுதி என்ற மற்றொரு அலகு பயன்படுத்தப்படுகிறது. பிரிவு என்ற சொல் பயன்படுத்தப் படுவதில்லை. இதற்கு முன்னால் உயிரித்திணை என்ற உயிரின வகைப்பாட்டியல் அலகும், பின்னால் வகுப்பு என்ற உயிரின வகைப்பாட்டியல் அலகும் அமைந்துள்ளது. இந்த அலகு இலின்னேயசு பின்பற்றிய, ஐந்து படிநிலை அலகுகளில் இல்லை. இந்த சொல் அமைப்பு முறை 19ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. மு. சி. பூரணலிங்கம் பிள்ளை மு. சி. பூரணலிங்கம் பிள்ளை (மே 25, 1866 - சூன் 6, 1947) தமிழறிஞர். தமிழ் மொழியின் தொன்மையையும், உயர்வையும் பிற மொழியினரும் அறியும் வண்ணம் செய்தவர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள "முந்நீர்ப்பள்ளம்" என்னும் ஊரில் 1866 இல் பிறந்தார். இவ்வூரில் எழுந்தருளியுள்ள சிவனது திருப்பெயராகிய "பூரணலிங்கம்" என்னும் பெயரே இவருக்குச் சூட்டப்பட்டது. இவருடைய பாட்டனார் பெயரும் பூரணலிங்கம் தான். முந்நீர்ப்பள்ளத்தைச் சேர்ந்த சைவர்கள் "பூரணம்" என்று பெயர் வைத்துக் கொள்வது இயல்பு. பள்ளிப் படிப்பை முடித்தவுடன் பரமக்குடி நீதிமன்றத்தில் எழுத்தராகப் பணியாற்றினார். பின் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் மேற்படிப்பை முடித்தார். கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன், பாளையங்கோட்டை இந்துக் கல்லூரி, சென்னை கிறிஸ்தவக் கல்லூரி, கோயம்புத்தூர் புனித மைக்கேல் கல்லூரி, மதுரை அமெரிக்கன் கல்லூரி, திருச்சி எஸ்.பி.ஜி. கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றினார். ஆங்கிலப் பேராசிரியராக இருந்த பூரணலிங்கம் பிள்ளை, தமிழ்ப் பற்றும், தமிழ் இன உணர்வும் கொண்டு வாழ்ந்ததுடன் தமிழுக்குப் பெரும் பணியும் ஆற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பணியாற்றியபோது "ஞான போதினி" என்ற மாதப் பத்திரிகையை நடத்தினார். பின்னர், நீதிக் கட்சியினரின் "நீதி" என்ற ஆங்கிலப் பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பணியாற்றி சமூக நீதிக்காகக் குரல் கொடுத்தார். பிற்காலத்தில், மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை, பரிதிமாற்கலைஞர், கோவை சிவக்கவிமணி, சுப்பிரமணிய முதலியார் ஆகியோரின் நட்பைப் பெற்றார். பூரணலிங்கம் பிள்ளை, தமிழில் 18 நூல்களையும், ஆங்கிலத்தில் 32 நூல்களையும் மற்றும், சட்ட நூல்களையும் எழுதியுள்ளார். இவரது படைப்புகளில், சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், குழந்தை இலக்கியம், ஆய்வுக் கட்டுரைகள், மொழிபெயர்ப்பு, மற்றும் சொற்பொழிவு எனப் பல வீச்சுகளைக் காண முடிகிறது. தமிழ் மொழியின் உயர் சிந்தனைகளைப் பிற மொழியாளரும் அறிந்து கொள்ளும் வகையில் பல நூல்களை ஆங்கிலத்தில் எழுதினார். திருக்குறள் முழுவதையும் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்து பன்னிரண்டு பக்கங்களில் ஆராய்ச்சி முன்னுரையும் எழுதினார். திருக்குறள் குறித்துத் திறனாய்வு நூல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். "தமிழ் இந்தியா" என்ற ஆங்கில நூலில் தமிழ் மொழியின் தொன்மையையும், தமிழரின் உயர்ந்த அறிவியல் சிந்தனைகளையும், பண்பாட்டையும், வரலாற்று ஆதாரங்களோடு சுட்டிக் காட்டியுள்ளார். திராவிட நாகரிகமே இந்தியா முழுவதும் பரந்து விளங்கியது என்பதை இந்நூல் தெளிவுபடுத்துகிறது. முதுகலைத் தமிழ் பயிலும் மாணவர்களுக்காக "தமிழ் இலக்கிய வரலாறு" என்ற ஆங்கில நூலை எழுதினார். "பத்துத் தமிழ் முனிவர்கள்" என்ற நூலில் மாணிக்கவாசகர் முதல் பட்டினத்தடிகள் வரை உள்ள சமயச் சான்றோர் பதின்மர் வரலாற்றையும், அவர்களுடைய தத்துவங்களையும் விளக்கியுள்ளார். இவர் எழுதிய, இராவணப் பெரியோன், சூரபதுமன் வரலாறு ஆகியன இலக்கியத் திறனாய்வு நூல்களுள் புதிய நோக்கில் அமைந்தவை. ஒரு நூலின் அணிந்துரை எத்தகைய கூறுகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதற்கு இவர் முந்நீர்ப்பள்ளம் ஈஸ்வரமூர்த்தியா பிள்ளை நூலுக்கு அளித்துள்ள அணிந்துரை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். ஆசிரியர் பணியிலிருந்து 1926இல் ஓய்வு பெற்று முந்நீர்ப்பள்ளத்திற்குத் திரும்பி வந்த பின் பல்வேறு கட்டங்களில் இலக்கியச் சொற்பொழிவாற்றி வந்தார். திருநெல்வேலியில் இயங்கி வந்த சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத்தின் பன்னிரண்டாவது மாநாட்டிற்குத் தலைமை தாங்கி (1940) வழி நடத்தினார். பூர்ணலிங்கம் பிள்ளையின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளது.