த ஆழ்சிலி புக் ஆவ் நாட்சு த ஆழ்ச்லி புக் ஆவ் நாட்சு (The Ashley Book of Knots) என்பது முடிச்சுகள் பற்றிய ஒரு கலைக்களஞ்சியம். இந்நூலை 11 ஆண்டுகளாக கருத்துகள் சேகரித்து 1944 ஆம் ஆண்டு கிளிப்வோர்டு ஆழ்ச்லி (Clifford Ashley) என்பவர் வெளியிட்டார். இதில் 2000 உக்கும் கூடுதலான, பல்வேறு முடிச்சுகள் பற்றி 3854 தலைப்புகளில் ஏறத்தாழ 7000 படங்களுடன் குறிப்புகள் உள்ளன. முடிச்சுகளை எவ்வாறு முடிவது, அவற்றின் பயன்கள் யாவை, அவை எவ்வகையான பகுப்பில் அடங்கும் என்றும், அவற்றுள் சிலவற்றின் வரலாறுகள் என்ன வென்றும் இந்நூல் குறிப்பிடுகின்றது. இன்றளவும் முடிச்சுகளைப் பற்றிய நூல்களில் இது முன்னணி நூலாக உள்ளது. எவை எவை நல்ல முடிச்சுகள், எவை எவை குறையுள்ள முடிச்சுகள் என்பனவற்றை இந்நூல் குறிக்கின்றது. இந்நூல் பரவலாக கிடைப்பதாலும், இதில் விரிவாக செய்திகள் இருப்பதாலும் முடிச்சுகள் பற்றிய துறையில் இது ஒரு தரமான உசாத்துணைப் பார்வை நூலாக பயன்படுகின்றது. ஒவ்வொரு முடிச்சுக்கும் ஆழ்ச்லி தந்த எண்களை குழப்பம் இன்றி குறிக்கப் பயன்படுத்தப் படுகின்றது. நெடுங்காலமாக முடிச்சுகள் பற்றிய அறிவு வளர்ந்து வந்திருப்பதாலும், பலரும் பல பெயர்கள் இட்டு அழைப்பதாலும், குழப்பங்களைத் தவிர்க்க ஆழ்ச்லி தந்த எண் குறியீடு பயனுடையதாகும். ஆழ்ச்லியின் புத்தகத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட முடிச்சின் பெயரைக் குறிப்பிட "இறுக்கு முடிச்சு (), ABOK #1249", அல்லது சூழல் தெளிவாக இருந்தால், இன்னும் சுருக்கமாக, "#1249" என்றும் குறிப்பிடுவதுண்டு. இப் புத்தகத்தின் தலைப்பை கீழ்க்காணும் எழுத்ட்துகளாலும் சுருக்கிச் சொல்வதுண்டு:TABOK, TABoK, அல்லது ABoK. சில முடிச்சுகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட ஆழ்ச்லி எண்கள் இருப்பதையும் நினைவில் கொள்ளவேண்டும், ஏனெனில் சில முடிச்சுகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பயன்படுகளும் வடிவங்களும் உண்டு. எடுத்துக்காட்டாக #1249 என்ன்னும் முதன்மைத் தலைப்பில் உள்ள முடிச்சு பிணைக்கும் முடிச்சுகள் (binding knots) என்னும் உட்பிரிவில் உள்ளது, ஆனால் இது தொழில் முடிச்சுகள் என்னும் உட்பிரிவில் #176 என்று குறிப்பிடப்படுகின்றது. ஆழ்ச்லியின் முடிச்சுகள் பற்றிய நூல், தேங்காய் நார் போன்ற இயற்கைப் பொருட்களால் ஆன உராய்வுப் பிடிப்பு மிக்க கயிறுகளுக்கான முடிச்சுகள் பற்றியது. இவை தற்காலத்தில் வழுக்கும் தன்மைகொண்ட செயற்கை பொருள்களால் (நைலான் போன்ற பொருட்களால்) ஆன நார்களால் ஆன கயிறுகளைக் கொண்டு முடியும் பொழுது தேவையான பாதுகாப்பு இல்லாமல் இருக்கலாம். அனைத்துலக முடிச்சுகள் வல்லுனர்கள் குழுமம் (International Guild of Knot Tyers) இவற்றை மீள்பார்வையிட்டு சில திருத்தங்கள் பரிந்துரைத்துள்ளது. குறிப்பாக ஒரு முடிச்சை வேட்டையாளர் தொடுப்பு அல்லது ரிக்கெரின் தொடுப்பு (Hunter's bend or Rigger's bend) (#1425A) enpathai 1979 இல் சேர்த்துள்ளது. தீயணைப்பாளர் இருக்கை முடிச்சு தீயணைப்பாளர் இருக்கை முடிச்சு என்பது கயிற்றின் இடைப்பகுதியில் போடப்படும் இரண்டு தடங்களைக் கொண்ட முடிச்சு ஆகும். இத் தடங்கள் சீராக்கத் தக்கவையும், அசையாமல் இறுக்கி வைக்கக் கூடியவையும் ஆகும். இது ஒரு கைவிலங்கு முடிச்சையும் ஒவ்வொரு தடத்தையும் சுற்றிப் போடப்படும் அரைக் கண்ணி முடிச்சையும் கொண்டது.. அரைக்கண்ணிகளை இறுக்கும் வரை தடங்கள் சீராக்கத்தக்க நிலையில் இருக்கும். பயிற்சி பெற்றவர்களால் சரியான முறையில் போடப்பட்டால் இது மீட்புப் பணிகளில் பயன்படுத்தக்கூடியது. ஒரு மனிதனைக் கட்டித் தூக்குவதற்கு இது உகந்தது. எரத்ன எரத்ன ("Eratna") அல்லது எரத்னகொடை இலங்கையின் சபரகமுவா மாகாணம், இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்கள் குடியிருப்பாகும்.ஏ-4 நெடுஞ்சாலையில் குருவிட்டைநகரை அடைந்து அங்கிருந்து கிழக்குப் பக்கமாக பிரிந்துச் செல்லும் சிறுவீதியூடாக எரத்னவை அடையலாம். 25,000 ஆண்டு வரலாற்றைக் கொண்ட பட்டதொட குகை, பட்டதொம்ப குகை ஆகிய இரண்டு குகைகள் இங்கு அமைந்துள்ளன. சிவனொளிபாத மலைக்கு செல்லும் ஒரு பாதை எரத்ன வழியாகச் செல்கிறது. செந்நாய் செந்நாய் (Dhole, "Cuon alpinus"), நாய்க்குடும்பத்தைச் சேர்ந்த ஓர் உள்ளினம் ஆகும். இது ஆசியக் காட்டு நாய், இந்தியக் காட்டு நாய், காட்டு நாய் எனப் பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. ஜவ்வாது மலைவாழ் மக்கள் இந்த விலங்கை "வேட்டைக்காரன்" என்று குறிப்பிடுகிறார்கள். செந்நாய், கடைசி உறைபனிக் காலத்தில் தப்பிப்பிழைத்த நாய்க் குடும்பத்தைச் சேர்ந்த விலங்காகும். உறைபனி காலத்தில் செந்நாய்கள் மிகப்பரந்த நிலப்பரப்பை உள்ளடக்கிய யூரேசியா, வட அமெரிக்காக் கண்டங்களில் வாழ்ந்தன. செந்நாய் 'லூப்பசு' என்ற மூதாதைய நாய்க் குடும்ப உறுப்பினரிடம் இருந்து ஏறத்தாழ இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து படிவளர்ச்சி அடைந்ததாக இழைமணிகளின் டி ஆக்சி-ரைபோநியூக்லியிக் காடி கொண்டு ஆராய்ந்த தரவுகள் தெரிவிக்கின்றன. செந்நாய் உடல் அமைப்பில் ஆப்பிரிக்கக் காட்டு நாயையும், தென்னமெரிக்காவின் புதர் நாயையும் ஒத்து இருக்கும். இவ்வினங்கள் அனைத்திலும் ஒன்றுபோல் இருக்கும் நறுக்கும் கடைவாய்ப் பல் இவற்றின் மூதாதையத் தொடர்பை உறுதிப்படுத்துகிறது. என்றாலும் பல்வேறு அறிஞர்கள் இவ்வினங்களின் படிவளர்ச்சி தொடர்புகள் பற்றிய ஐயங்களை எழுப்பியுள்ளனர் வகைப்பாட்டியலில் பொதுவில் ஏற்கப்பட்ட மூன்று உள்ளினங்கள் செந்நாயில் உள்ளன. ஆனால், பல ஆராய்ச்சியாளர்கள் பல உள்ளினங்களை உருவம், நிறம் அடிப்படையில் விவரித்துள்ளனர். செந்நாயின் சில உள்ளினங்களும் அவற்றின் வாழிடங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது முற்காலத்தில் செந்நாய்கள் ஆசியாவின் தெற்கு, கிழக்கு, தென் கிழக்குப் பகுதிகளில் வாழ்ந்து வந்தன. இவை ஆசியாவின் வடக்கில் தியன்-சான் (Tian-Shan), ஆல்டை மலைகளில் (Altai mountains) இருந்து சோவியத்து நாட்டின் மாரிடைம் மாகாணப் பகுதி வரையிலும், தெற்கில் மங்கோலியா, கொரியா, சீனா, திபெத், நேபாளம், இந்தியா, மியான்மர், கம்போடியா, வியட்நாம், லாயொசு, தாய்லாந்து, மலேசியத் தீபகற்பம், ஜாவா-சுமத்திராத்தீவுகளில் வாழ்ந்தன.. தற்போது செந்நாயின் இருப்பு கீழ்க்காணும் இடங்களில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஏறத்தாழ 12 முதல் 20 கிலோ கிராம் வரையிலான எடையில் இருக்கும் செந்நாய் 90 செ.மீ. நீளமும் 50 செ. மீ. தோல் பட்டை உயரமும் கொண்டது. வாலின் நீளம் 4 முதல் 14 செ மீ வரை இருக்கும். ஆண் , பெண் செந்நாய்களிடையே மிகமிகக் குறைந்த பாலியல் இருவத்தோற்றம் காணப்படுகிறது. உடலின் புற அமைப்பிலும் உடற்கூறியல் அமைப்புகளிலும் பாலியல் இருவத்தோற்றம் குறிப்பிடத்தக்க அளவில் காணப்படுவதில்லை. செந்நாயின் உடல் மயிர்ப் போர்வை சிகப்பு முதல் பழுப்பு நிறத்தையும், முன் கழுத்து, நெஞ்சு, அடிப்பகுதிகள் வெள்ளை நிறத்தையும் கொண்டவை. உலகில் செந்நாய் காணப்படும் பகுதிகளில் தென் பகுதிகளில் வாழும் செந்நாயின் மென்மயிர்கள் மிகவும் குட்டையானவை; சிகப்பு நிறத்தினாலானவை. ஆனால், வடபகுதிகளில் வாழும் செந்நாய்கள் நீளமான மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தினால் ஆன மென்மயிர்களைக் கொண்டவையாகும். செந்நாய்கள் நாய் குடும்பத்திலேயே மிகவும் தனித்தன்மை வாய்ந்த பல்லமைப்பைக் கொண்டவை, செந்நாயின் உடல் அமைப்பில் உள்ள சில குறிப்பிடத்தக்க பண்புகள்: செந்நாய்கள் பல்வேறு வகை காடுகளில் வாழும் தன்மை உடையன. இவை வெப்பமண்டலத்தில் பசுமை மாறா காடுகள், மித பசுமை மாறாக் காடுகள், முற்புதர் காடுகள், வறண்ட இலையுதிர் காடுகளிலும், மிதவெப்ப மண்டலத்தில் கடல் மட்டத்தில் இருந்து 3000 மீட்டருக்கும் உயரமான உயர் மலைப் புல்வெளிகளிலும் காணப்படுகின்றன. இவை பாலைவனத்தில் வாழ்வதற்கானச் சான்றுகள் ஏதும் இல்லை. இந்தியாவில் செந்நாய்கள் வெப்பமண்டல, வறண்ட, ஈரப்பதமுள்ள, இலையுதிர் காடுகளில் வாழ்கின்றன. இவற்றின் உயிர்தொகையின் அளவு இவற்றின் இரையான குளம்பிகளின் உயிர் தொகையும், மனித நடமாட்டம், இனப்பெருக்கத்துக்குத் தகுந்த இடம, நீர் நிலை முதலிய காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது. பிறந்த ஒரு ஆண்டுக்குப் பிறகு ஆண், பெண் இரண்டும் இனப்பெருக்கத்துக்குத் தயாராகும். பெண் விலங்குகள் பல்லிருது பண்புடையவை. இவை 4 முதல் 6 வாரத்திற்கு ஒரு முறை சினைப்பருவம் அடையும். ஒரு குழுவில் உள்ள எந்த ஒரு உறுப்பினரும் இனப்பெருக்கத்தில் ஈடுபடலாம். இச்செயல் குழுவின் மற்ற உறுப்பினர்களால் தடை செய்யப்படுவதில்லை. இவ்விலங்கின் சூல்கொள்ளல் காலம் 60 - 62 நாட்கள் ஆகும். பெண் செந்நாய் சுமார் 5 முதல் 10 குட்டிகளை குகைகள், மண் வளைகளுக்குள் ஈனும். பிறந்த குட்டிகள் 200 முதல் 350 கிராம்கள் வரையிலான எடையில் இருக்கும். பிறந்த பத்து நாட்களில் குட்டிகள் பிறந்தபொழுது இருந்த எடையை விட இரண்டு மடங்காகும். பிறந்த மூன்று வாரங்களில் தாய் நன்கு மென்ற இறைச்சியை குட்டிகளுக்கு உணவாக அளிக்கும். குட்டி தன் இரையைத் தானாக உண்ணும் வரை அதன் தாயோ அக்குழுவில் இருக்கும் வேறு சில உறுப்பினர்களோ குட்டிகளுக்கு உணவளிக்கும். செந்நாய் குழுவாக வாழும் ஒரு விலங்கு. இவை தம் குழுவில் வாழும் உறுப்பினர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். மிகவும் கட்டுக்கோப்பான 5 முதல் 12 உறுப்பினர்களை கொண்ட குழுக்களாக வாழும் தன்மையை உடையவை. சில நேரங்களில் ஒரு குழு மற்றொரு குழுவுடன் இரு குழுக்களின் நன்மைகளுக்காக நட்பு பேணும். சூழ்நிலைக் காரணங்களே குழுக்களின் எண்ணிக்கையைத் தீர்மானிக்கின்றது. மிகவும் அதிகப்படியாக 40 செந்நாய்களைக் கொண்ட குழுக்கள் காணப்பட்டுள்ளது. இவை இரண்டு அல்லது மூன்று குழுக்கள் சேர்ந்து இருந்ததிருக்கலாம் என ஊகிக்கப்பட்டுள்ளது. வயது முதிர்ந்த (7-8 வயது) செந்நாய்கள் குழுக்களில் இருந்து சில காலம் விலகி இருப்பதும் உண்டு. ஒரு குழுக்குள் வாழும் உறுப்பினர்களிடையே சண்டைகள் வருவதில்லை. ஏனெனில், ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒவ்வொரு பணி இருக்கும். ஒவ்வொரு குழுவிலும் மிகுந்த ஆதிக்கம் செலுத்தும் ஒரு ஆண், பெண் செந்நாய் இருக்கும். பெரும்பாலும் அவை மட்டுமே இனப்பெருக்கத்தில் ஈடுபடும். ஓய்வு நேரங்களில் குழுவில் உள்ள செந்நாய்கள் அனைத்தும் விளையாடும். குழுவில் இருந்து விலகும் ஒரு பெண் உறுப்பினரால் ஒரு குழு இரண்டாகப் பிரிகின்றது. குழுவில் வாழும் ஒவ்வொரு உறுப்பினரும் அக்குழுவின் வாழ் எல்லைக்குள் குறிப்பிட்ட ஒரு இடத்தைக் கழிப்பிடமாகப் பயன்படுத்தும். இக்கழிப்பிடம் ஒரு குழுவின் வாழ் எல்லை மற்றொரு குழுவுக்கு உணர்த்தவும் உதவுகிறது. ஊனுண்ணி விலங்கான செந்நாயின் உணவு பலதரப்பட்ட முதுகெலும்புள்ள, முதுகெலுப்பில்லாத விலங்குகளால் ஆனவை. இவற்றின் உணவு வண்டுகள், கொறிணிகள், பறவைகள், குளம்பிகள் போன்ற விலங்குகள் ஆகும். மற்ற கொன்றுண்ணி விலங்குகளைப் போல செந்நாயும் சில நேரங்களில் புற்களையும் இதர தாவரங்களையும் அரிதாக உட்கொள்கிறது. இவை பெரும்பாலும் 40 முதல் 50 கிலோ எடையுள்ள குளம்பிகளான புள்ளி மான், கடத்தி மான் போன்றவற்றை வேட்டையாடி உண்கின்றன. இவை சில வேளைகளில் இறந்த விலங்குகளின் உடல்களையும் உண்பதுண்டு. முதுமலை காட்டு விலங்கு உய்விடத்தில் செந்நாயின் எச்சங்களை ஆய்வு செய்த பொழுது கண்டுபிடிக்கப்பட்ட விலங்குகளும் அவற்றின் விழுக்காடும் செந்நாய்கள் 10 முதல் 30 உறுப்பினர்கள் கொண்ட குழுவாகச் சேர்ந்து வேட்டையாடும். குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் வேட்டையாடும் பொழுது ஒரு குறிப்பிட்ட இடமும் வேலையும் தரப்படுகிறது. அவை இரையை பின்புறம் இருந்து துரத்துதல், பக்கவாட்டில் துரத்துதல், இரையின் மேல் பாய்தல் போன்றவையாகும். இவை பெரும்பாலும் வேட்டையாடி உண்டாலும் சில சமயம் வேறு விலங்கு வேட்டையாடிய இரையைத் திருடுவதும் உண்டு. செந்நாய்ப் பரவியுள்ள அனைத்து நாடுகளிலும் இதன் உயிர்த்தொகைக் குன்றி வருகிறது. அதற்கு மிக முக்கியமான காரணங்களாகக் கருதப்படுவை: பல்வேறு அரசுகளும், பன்னாட்டு அமைப்புகளும் இவ்விலங்கை வேட்டையாடுவதையோ தொந்தரவு செய்வதையோ சட்டத்துக்குப் புறம்பானதாக அறிவித்துள்ளது. தமிழ் இலக்கியங்களில் பாலை நிலத்திற்குரிய கருப்பொருள்களுள் செந்நாயும் ஒன்று இதனைப் பற்றி தமிழிலக்கியங்கள் குறித்துள்ளன. பாலை நிலத்தில் வேட்டையாடித் திரியும் செந்நாய், மணலைக்கிளறி தண்ணீர் குடித்து விட்டு போகும் என குறுந்தொகை கூறுகிறது. குறுந்தொகையில் 141:6 பாடலும் மலைபடுகடாம் 338ஆம் பாடலிலும் கலித்தொகையில் 83:1.என வரும் வரிகளிலும் இதனை அறியலாம். பெருமாள் முருகன் தன் "பூனாச்சி" புதினத்தில் இதை "காட்டு நாய்" என்று குறிப்பிடுகிறார். முன்பு இவை காட்டில் பெருமளவில் இருந்ததை, அவரது கதைமாந்தர்கள் நினைவுகூர்கிறார்கள். மைசூரைச் சேர்ந்த கிருபாகர், சேனானி என்ற காட்டுயிரில் ஆர்வளர்களான இரு இளைஞர்கள், 2006இல் செந்நாய்களைப் பற்றி ‘The Pack’ என்ற தலைப்புடைய 50 நிமிட ஆவணப்படம் ஒன்றைத் தயாரித்தார்கள். இந்த ஆவணப்படமானது பந்திப்பூர் காடுகளில் படமாக்கப்பட்டது. இந்தப் படம் 2008இல் ‘கிரீன் ஆஸ்கர்’ என்று சொல்லப்படும் காட்டுயிர்ப் படங்களுக்கான பரிசை பிரிட்டனில் பெற்றது. இரட்டை மீனவர் முடிச்சு இரட்டை மீனவர் முடிச்சு அல்லது இரட்டை ஆங்கிலேயர் முடிச்சு என்பது உண்மையில் இரண்டு கயிறுகளைத் இணைப்பதற்குப் பயன்படும் ஒரு தொடுப்பு ஆகும். இந்த முடிச்சும், மும் மீனவர் முடிச்சும் பாறை ஏறுவதில் அதிகமாகப் பயன்படும் முடிச்சுக்களாகும். இவை தவிர, மீட்பு வேலைகளிலும், தேடுதல் நடவடிக்கைகளிலும் இம் முடிச்சைப் பயன்படுத்துகின்றனர். பாறை ஏறுபவர்களின் பாதுகாப்புத் தொகுதியின் பல்வேறு பகுதிகளை இணைப்பதற்கான உயர் வலிமை கொண்ட நாண்களை உருவாக்குவதே பாறையேற்றத்தில் இந்த முடிச்சின் முதன்மைப் பயனாகும். இம் முடிச்சின் இன்னொரு பயன்பாடு முக்கியமான வேறு முடிச்சுக்களுக்குப் பின்பலமாக இருப்பதாகும். கழுத்தணிகளைக் கட்டுவதற்கும் இந்த முடிச்சைப் பயன்படுத்துவது உண்டு. இதில் இரண்டு கயிறுகளுக்குப் பதில் ஒரே கயிற்றின் இரண்டு முனைகளை முடிகின்றனர். இந்த முடிச்சைப் பயன்படுத்துவது மூலம் கயிற்றை அறுக்காமல் கழுத்தணியின் அளவைச் சுருக்கவோ விரிவாக்கவோ முடிகிறது. முடிச்சுக் கணிதம் கணிதவியலில் முடிச்சுக் கணிதம் அல்லது முடிச்சுக் கருத்தியம் அல்லது முடிச்சியல் என்பது ஒரு இடவியல் துறையின் ஒரு பகுதியாகும். அன்றாடம் கயிறுகளில் இடும் முடிச்சுகளால் உந்தப்பட்டு எழுந்தாலும், "கணிதவியல் முடிச்சு" என்பது சற்று வேறானது. கணித முடிச்சியலில் நுனிகள் இரண்டும் இணைந்தே இருக்கும். எனவே முடிச்சு என்பது கணிதவியலில் கயிறால் செய்த, மூன்று செங்குத்தான திசைகளில் நெளியக்கூடிய, (சிக்குண்ட) வளையம் அல்லது "வட்டம்" போன்றது. கணிதவியலில் முடிச்சு என்பதை உள்பதிவமைப்பு (உள்பதிந்த கணித அமைப்பு (embedding or imbedding)) கொண்ட முத்திரட்சி யூக்ளீடிய வெளி (முப்பரிமாண வெளி) R "வட்டம்" என்பர். இருதிசை வெளியில் (2-dimensional) அமைந்த கணித முடிச்சு ஒன்றை வேறொன்றாக முத்திசை வெளி வழி அதனையே மாற்றி அமைக்க முடியும் எனில் அவை ஈடானவை (சமமானவை). இதனை சூழல் ஓருரு (ambient isotopy, ஆம்பியன்ட் ஐசோடோப்பி) என்பர். முடிச்சியல் தோற்றியவர்களின் முன்னிருந்த நோக்கம், முடிச்சுகளின் பல்வேறு வகைகளைப் பற்றி விரிவான அட்டவணை உருவாக்கலாம் என இருந்தது. 19 ஆவது நூற்றாண்டில் துவங்கி தற்பொழுது ஆறு பில்லியன்களுக்கும் மேலான முடிச்சுகள் அட்டவணைப் படுத்தப் பட்டுள்ளன. முடிச்சுகளைப் பற்றி வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய காலங்களிலேயே பதிவுகள் இருப்பதைத் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். பல்வேறு குறிப்புகளை நினைவில் கொள்ளவும், அழகுக்காகவும், மெய்யியல் மதம் சார்ந்த பயன்பாடுகளுக்காகவும் முடிச்சுகளைப் பயன்படுத்தியுள்ளனர். சீனாவில் கலை வேலைப்பாடுகளில் முடிச்சுகள் கி.மு பல நூற்றாண்டுகள் காலப்பகுதியில் காணப்படுகின்றன. நுனி இல்லாத முடிச்சுகள் திபெத்திய புத்தமதத்தில் கானப்படுகின்றன. போரோமியன் வளையங்கள் (Borromean rings) பல பண்பாடுகளில் காணப்படுகின்றன. இவை ஒற்றுமையை வலியுறுத்தும் கருத்தாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. கெல்டிக் மக்கள் பல்வேறு முடிச்சுகள் பற்றி நூல்களில் காட்டியுள்ளனர். கணித முடிச்சியல் பற்றிய கருத்துகளின் துவக்கம், 19 ஆவது நூற்றாண்டில் கார்ல் பிரெடரிக் கவுசு அவர்களின் தொடுப்பு தொகைக்கணிதக் கருத்துகள்(linking integral) , 1860களில் லார்டு கெல்வினின் அணுக்கள் முடிச்சுகள் என்னும் கருத்து, பீட்டர் குத்ரீ டேய்ட் (Peter Guthrie Tait) அவர்களின் முடிச்சுகள் அட்டவணை போன்றவற்றில் அடங்கும். ஆனால் கணித முடிச்சியல் என்பது இடவியலின் ஒரு பகுதி என 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலேதான் உணரப்பட்டது. மாசு டேன் (Max Dehn), சே. டபிள்யூ. அலெக்சாண்டர் (J. W. Alexander) முதலானோர்களின் ஆய்வுகள் முன்னோடியாக அமைந்தன. 20 ஆம் நூற்றாண்டின் கடைசி சில பத்தாண்டுகளில் டிஎன்ஏ மடிப்புகள் முதலானவற்றில் முடிச்சு பற்றிய அறிவு பயன்படுவதை உணர்ந்து இத்துறையை மேலும் வளர்த்தெடுத்தனர். முடிச்சியல் (முடீச்சு கருத்தியம்) பற்றிய அறிமுக நூலகள் பல ஆங்கிலத்தில் உள்ளன. 1976 இல் வெளிவந்த ரால்ஃவ்சென் (Rolfsen) எழுதிய மேற்பட்டப்படிப்பு அல்லது மேலாண்டுகளில் பட்டப்படிப்பு மாணவர்களுக்கான நூல் புகழ்பெற்றது. லிக்கொரிழ்ச் (Lickorish) (1997), ஆடம்சு ( Adams) (2001) ஆகியவற்றையும் குறிப்பிடலாம். வல்லநாடு வெளிமான் காப்பகம் வல்லநாடு வெளிமான் காப்பகம் தமிழ் நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு காட்டு விலங்கு உய்விடம் ஆகும். இந்த காப்பகம் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் வெளிமான் இனத்தைக் காப்பதற்காக அமைக்கப்பட்டதாகும். மேலும் இந்திய துணைக் கண்டத்தில் தென்கோடியில் அமைந்திருக்கும் புல்வாயின் இயற்கை உயிர்த்தொகை இக்காப்பகத்தில் இருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். பிமினி முறுக்கு பிமினி முறுக்கு என்பது கரைக்கு அப்பால் கடலில் மீன்பிடிக்கும் இழுவைப் படகுகளிலும் விளையாடுக்குரிய படகுகளிலும் பயன்படுகின்றது. "பிமினி முறுக்கு" ஒரு கயிற்றின் முனையில் தடம் ஒன்றை உருவாக்குகிறது. இந்தத் தடம், கட்டும் முறையினால் உருவாக்கப்படும் நீண்ட கயிற்றுச் சுருளினால் இறுக்கமாகக் கட்டப்படுகிறது. பிமினி முறுக்குத் தடம் அது அமைந்திருக்கும் கயிற்றிலும் கூடிய வலிமை கொண்டது. தான் கட்டப்பட்டுள்ள கயிற்றின் வலிமையைக் குறைக்காத மிகச் சில முடிச்சுக்களுள் இதுவும் ஒன்று. சுற்றுக்கள் அதிகமாகும்போது முடிச்சின் வலிமை அதிகமாகிறது என்று முற்காலத்தில் பலர் நம்பினர். தனியொரு கயிற்றில் 20-30 சுற்றுக்களும், பின்னப்பட்ட கயிற்றில் 60 அல்லது அதற்கு மேற்பட்ட சுற்றுக்களும் மிகக்கூடிய வலிமை தொட்டவை எனவும் சொல்லப்பட்டது ஆனால் , இறுக்கு முடிச்சு இறுக்கு முடிச்சு (Strangle knot)ஒர் எளிய பிணைப்பு முடிச்சு. இது ஏறத்தாழ இடுக்கி முடிச்சு (constrictor knot) போன்றது. இம்முடிச்சு ஒரு சுற்றுத் திருப்பத்துக்கு அடியே மிக எளிய நுனிமுடிச்சும் கொண்டுள்ளது. ஆனால் இதன் நுனிகள் இடுக்கி முடிச்சில் உள்ளது போல் சுற்றுத் திருப்பத்துக்கு இடையே வராமல் வெளிப்புறமாக வருகின்றது. இறுக்கு முடிச்சு இரட்டை நுனி முடிச்சின் மாற்றி அமைக்கப்பட்ட வேறு ஓருரு. இது இரட்டை மீனவர் முடிச்சின் ஒரு பாதியாகும். படி முடிச்சு படி முடிச்சு அல்லது ரீஃவ் முடிச்சு (reef knot) என்பது ஒரே தடிப்புள்ள இரண்டு கயிறுகளைப் பிணைக்க பரவலாகப் பயன்படுத்தும் ஓர் எளிய முடிச்சு. ஆனால் கவனமாக இடவேண்டிய முடிச்சு. படி முடிச்சு போட இடப்புறம் உள்ள கயிற்றில் ஒரு நுனி முடிச்சும், வலப்புறம் உள்ள கயிற்றில் ஒரு நுனி முடிச்சும் இடவேண்டும். இடப்புறம் உள்ள கயிற்றின் நுனியும் (செயல் முனையும்), நிலை முனையும் ஆகிய "இரண்டும்" கண்ணியின் ஒரே பக்கத்தில் இருந்து வெளிப்பட வேண்டும். வலப்புறம் உள்ள கயிற்றின் நுனியும் (செயல் முனையும்), நிலை முனையும் ஆகிய "இரண்டும்" கண்ணியின் ஒரே பக்கத்தில் இருந்து வெளிப்பட வேண்டும் ஆனால் அது இடப்புற கயிற்றுக்கு எதிர்த் திசையில் (மேல்-கீழ்) இருக்க வேண்டும். படத்தில் சிவப்பு முனைகள் நீலக் கண்ணிக்கு மேல் புறமாகவும், நீல கயிற்றின் முனைகள் சிவப்புக் கண்ணிக்குக் கீழ்ப்புறமாகவும் இருப்பதைப் பார்க்கலாம். இம் முடிச்சில் இரண்டு நுனிகளும் (செயல் முனைகளும்) ஒரே பக்கமாக இல்லாவில் இது திருடன் முடிச்சு என்னும் வேறொரு முடிச்சாகிவிடும். படிமுடிச்சு ஒரே தடிமன் உள்ள இரண்டு கயிறுகளை இணைக்கப் பயன்படும் ஒரு முடிச்சு. இம்முடிச்சை சரியாக இட்டால், முடிச்சு பெரும்பாலும் நகராது. இம் முடிச்சை துணி போன்றவற்றில் இடும்பொழுது தட்டையாக படிந்து இருக்கும். இம் முடிச்சை காயம் பட்ட புண்களுக்கு இடும் கட்டுகளுக்கு மிக நெடுங்காலமாகப் பயன்பட்டு வந்திருகின்றது. காலணிகளின் பூட்டுக்கயிறுகளைப் பிணைக்கவும், அழகுபடுத்து முகமாகவும் இடும் முடிச்சுகளிலும் இது பயன்படுகின்றது. ஆங்கிலப் பெயர் ரீஃவ் (Reef) என்பது பாய்மரப் படகுகளில் பாயை திருப்பி காற்றுத் தடுப்பைக் குறைக்கும் செயலுக்குக் ரீஃவ் என்று பெயர். அச் செயலுக்கு இம் முடிச்சுப் பயன்படுவதால் ரீஃவ் முடிச்சு என்று பெயர் பெற்றது. இம்முடிச்சு பரவலாக அறியப்ப்ட்டாலும், பார்ப்பதற்கும் கட்டுவதற்கு எளிதாக இருந்தாலும், வலுவான பாதுகாப்பான முடிச்சு அல்ல. உலகெங்கும் உள்ல சாரணர்களுக்கும் பரவலாக கற்பிக்கப்படுகின்றது. அனைத்துலக உறுப்பினர் பட்டையத்திலும் காணப்படுகின்றது. ஆனால் இரண்டு கயிறுகளை இணைக்க இம் முடிச்சைப் பயன்படுத்தக் கூடாது என்று அனைத்துலக முடிச்சுகள் குழுமம் பரிந்துரைக்கின்றது. இதற்கு மாறாக இரண்டு கயிறுகளை இணைக்க இரட்டை மீனவர் முடிச்சைப் பயன்படுத்த வேண்டும். இந்த படி முடிச்சை தவறாகப் பயன்படுத்தியதால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் காயங்களின் எண்ணிக்கை மற்ற எல்லா முடிச்சுகளாலும் ஏற்பட்டதை விடக் கூடுதலானது என்று சில முடிச்சுகள் பற்றிய வழிகாட்டு நூல்கள் கூறுகின்றன மேலும் இந்த முடிச்சை பாதுகாப்பு இல்லாத பாட்டி முடிச்சு என்னும் முடிச்சோடும் குழப்பிக்கொள்ளவும் வாய்ப்பு அதிகம். எச்1.என்1 சளிக்காய்ச்சல் எச்1.என்1 சளிக்காய்ச்சல் அல்லது பன்றிக் காய்ச்சல் என்பது "ஆர்த்தோமிக்சோவிரிடே" (Orthomyxoviridae) குடும்பத்தை சேர்ந்த தீநுண்மத்தினால் வரும் ஒரு உயிரழிக்கும் நோயாகும். இந்நோய் இன்புலியன்சா A, இன்புலியன்சா B, மற்றும் இன்புலியன்சா C என்னும் மூன்று வகையான தீநுண்மத்தினால் ஏற்படுகிறது. இதில் இன்புலியன்சா A வினால் மிக அதிகமான அளவிலும், இன்புலியன்சா C னால் மிக அரிதாகவும் தொற்றுதல் ஏற்படுகிறது. இந்நோயை பரப்பும் தீ நுண்மம் மிகவும் அரிதான மரபு அணு தொகுதியை பெற்று இருப்பதால், இதை கண்டு ஆராய்ச்சியாளர்கள் வியப்படைந்துள்ளார்கள் இந்நோய் பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. இந்நோய் பெரும்பாலும் பன்றிப் பண்ணைகளில் வேலை செய்பவர்களைத் தாக்குகிறது. ஒரு மனிதரை தாக்கியபின், மனிதரின் உடலுக்குள் இத்தீநுண்மம் மரபணு சடுதி மாற்றம் பெற்று பின் மனிதனிடம் இருந்து வேறு ஒரு மனிதனைத் தாக்குகிறது.மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 149 பேர் பலியாகியுள்ளனர். தற்போது அமெரிக்காவில் இருந்து இந்த நோய் ஐரோப்பாவிற்கும் பரவியுள்ளது. வட அமெரிக்கா முழுவதும் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அங்கு மெக்சிகோ நாட்டில் முதலில் பன்றி காய்ச்சல் பரவி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த காய்ச்சல் காரணமாக மெக்சிகோவில் 1,614 பேர் அவதிப்பட்டு வருவதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இந்த காய்ச்சலுக்கு மெக்சிகோவில் இதுவரை இந்த காய்ச்சலுக்கு சுமார் 149 பேர் பலியாகி இருக்கின்றனர். அமெரிக்காவில் 20 பேரும், கனடாவில் 6 பேரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சந்தேகத்திற்கு உரிய நோய் பரவல் பிரேசில், இசுரேல், ஆசுத்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் இருப்பதாக கருதப்படுகிறது. 74 நாடுகளில் இந்நோயினால் 30,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இந்தியாவிலும் இந்நோய் பரவி வருகிறது. இதுவரை (11 ஆகஸ்ட்,2009) நாடு முழுவதும் 959 பேர் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பன்றிக் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. மகாராட்டிர மாநிலம், புனே நகரம் பன்றிக் காய்ச்சலால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மகாராட்டிரத்தில் தாணே மாவட்டம், தமிழ்நாடு, தில்லி, கர்நாடகம், மேற்கு வங்கம் ஆகியவற்றிலும் பன்றிக் காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அறிகுறிகள் வழமையான பருவகால சளிக்காய்ச்சலின் அறிகுறிகளைப் போன்றவை. அவற்றுள் பின்வருவன அடங்கும்: காய்ச்சல், விறைப்பு, இருமல், தொண்டை அழற்சி, தலைவலி, தசைநார் வலி, களைப்பு, பலவீனம். குறிப்பாக உடல் சூடாதல் - சுரம் (100. F க்கு மேல்), தலைவலி, தசைவலி , உடல் பலவீனம், தொண்டைப் புண், இருமல், பசியின்மை, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை இக்காய்ச்சலின் அறிகுறிகள் ஆகும். அவற்றுடன் குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு என்பன சேரக்கூடும். பின்வரும் சிக்கல்கள் காணப்பட்டால் உடனடியாக மருத்துவ நிபுணரை அணுக வேண்டும்: சிறுவர்/குழந்தைகளுக்கு: பன்றிக் காய்ச்சல் நோய் தாக்கியவர்களுக்கு டமி ·ப்ளூ மற்றும் ரிலின்ஸா என்ற மருந்துகள் அளிக்கப்படுகிறது. பன்றிக் காய்ச்சல் தாக்கி 48 மணி நேரத்திற்குள் இந்த மருந்துகளை எடுத்துக் கொள்வது நல்லது. பன்றிக் காய்ச்சல் நோய் அறிகுறிகள் தென்பட்டவுடனேயே இந்த மருந்துகளை எடுத்துக் கொண்டால் ஒன்று அல்லது இரண்டு நாட்களல் மருந்தின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம். இந்த மருந்து ஒருவருக்கு 5 முதல் 7 நாட்கள் வரை கொடுக்கலாம். டமி ஃப்ளு மாத்திரைகள் ஒரு வயது ஆனவர்கள் மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அளிக்கலாம். ரிலின்ஸா என்ற மாத்திரையை 7 வயது ஆனவர்கள் மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு அளிக்கலாம். இதனை தடுப்பு மருந்தாக 5 வயது ஆனவர்கள் மற்றும் 5 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அளிக்கலாம். இந்த மருந்துகள் அனைத்தும் மருத்துவர்களால் மட்டுமே பரிந்துரைக்கப்பட வேண்டும். இந்த காய்ச்சலிருந்து மக்களை காப்பதற்கான தடுப்பு ஊசி இதுவரை எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கான முயற்சியில் பல நாட்டு மருந்து நிறுவனங்களும் இறங்கியுள்ளன. இதற்காக அவை பாதிக்கப்பட்டவர்களின் இரத்தங்களை கேட்டுள்ளனர். அதிலிருக்கும் தீ நுண்மத்தை ஆராய்ந்து விரைவில் மருந்து தயாரிக்க முடியும் என அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. நோய் தாக்கப்பட்ட நபர்களிடம் இருந்து விலகி இருப்பது அல்லது தவிர்க்க முடியாத காரணத்திற்காக அருகில் செல்லும் போது நுகர்மூடி அணிந்துகொள்வது மற்றும் வாழுமிடத்தை மிகத் தூய்மையாக வைத்துகொள்ளது நோய் பரவலை தற்போதைக்கு தடுக்கும் முறைகள் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. பின்வருவன கனடா நலத்துறை விபர மடலில் கூறப்பட்டுள்ளன. சளிக்காய்ச்சல் பரவாது தடுப்பதற்கு உங்கள் கைகளைக் கழுவுவதே ஒரேயொரு சிறந்த வழி. நோய் பரவாது தடுப்பதற்கு ஆசிரியர்களும் மாணவர்களும் பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்;: ஜூன் 11 அன்று உலக சுகாதார நிறுவனம் பன்றிக் காய்ச்சலை கொள்ளை நோயாக அறிவித்துள்ளது. பன்றிக் காய்ச்சல் வருமுன் தடுக்கவும், வந்தபின் நீக்கவும் நிலவேம்பு, கண்டுபாரங்கி என்று அழைக்கப்படும் சிறுதேக்கு, சுக்கு, திப்பிலி, லவங்கம், ஆடாதொடை வேர், கற்பூரவள்ளி, சீந்தில், கோரைக்கிழங்கு, கோஷ்டம், அக்ரஹாரம் ஆகிய மூலிகைகளை சம அளவில் எடுத்து கபசுரக் குடிநீரை கஷாயமாக காய்ச்சிக் குடித்தால் நோய் நீங்கும். நான்கு தேக்கரண்டி தூளை, 200 மில்லி லிட்டர் நீரில் கலந்து கொதிக்க வைத்து, வடிகட்டுவதன் மூலம் கிடைக்கும் 60 மில்லி லிட்டர் கஷாயத்தை காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 3 நாள்கள் குடித்தால் பன்றிக் காய்ச்சல் நோய் நீங்கும். பன்றிக்காய்ச்சலை உருவாக்கும் எச்1என்1 வகைத் தீநுண்மம், 1918இல் பரவிய, ஏறக்குறைய 50 லட்சம் மனித உயிர்கள் இறப்பதற்குக் காரணமாயிருந்த, எசுப்பானிய ஃப்ளூ என்றழைக்கப்படும் உலகம்-தொற்றிய 1918 ஃப்ளூ கொள்ளை நோயின் பரம்பரையில் வரும் ஒரு வகைத் தீநுண்மமே ஆகும் ஆனால் தற்போது பரவி வரும் பன்றிக்காய்ச்சலை உருவாக்குவது ஒரு புதிய எச்1என்1 தீநுண்மம் ஆகும். இது இன்ஃப்ளுயென்சா ஏ வகைத் தீநுண்மத்தின் துணைப்பிரிவான எச்1என்1 வகையிலுள்ள நான்கு திரிபுறுக்களில் ஏற்பட்ட சடுதி மாற்றங்களால் தோன்றியது எனக் கருதப்படுகிறது. இந்திய வங்கிகள் குறைதீர்ப்பாளர் திட்டம், 2006 இந்திய வங்கிகள் குறைதீர்ப்பாளர் திட்டம், 2006 (ஆங்கிலம்-"Banking Ombudsman Scheme, 2006") இந்தியாவின் வங்கிகளின் (மக்கள்) சேவை சார்ந்த புகார்கள் குறித்து உறுதியான தீர்வெடுப்பதற்கும் அவற்றைக் களைவதற்கும் ஏற்படுத்தபெற்ற திட்டமாகும். இத்திட்டம் 1995ல் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது, பின்ன்ர் 2002ல் திருத்தப்பட்டது. இத்திட்டம் ஜனவரி 1, 2006 முதல் இந்தியாவில் அமலுக்கு வந்த்து. இது ஏற்கனவே இருந்த வங்கிகள் குறை தீர்ப்பாளர் திட்டம், 2002 இன் மாற்று வடிவமாகும். இச்சட்டத்தின் மூலம் உருவாக்கப்பெற்ற ஆணையம் வங்கிகள் குறைதீர்ப்பாணையம் என் அழைக்கப்படுகின்றது. இவ்வாணையத்தில் இந்திய ரிசர்வ் வங்கியால் நியமிக்கபெற்ற தீர்ப்பாளரே, இந்தியாவில் உள்ள வங்கிகளின் வாடிக்கையாளர் சேவைக் குறித்த புகார்களை விசாரித்து நடவடிக்கை மேற்கொள்பவர். இத்திட்டத்தின்படி அமைக்கபெற்ற தீர்வாணையங்கள் இன்றைய நாள் வரை 15 தீர்வாணையங்கள் இந்தியா முழுமையிலும் அந்தந்த மாநிலத் தலைநகரங்களில் இயங்குகின்றன. இவற்றின் அதிகாரங்கள் பகுதியளவு நீதிமன்றத்திற்கு இணையானது. வங்கிகளுக்கும் வாடிக்கையாளர்க்கும் ஆணைகள் பிறப்பிக்கவும் நடுநிலையாளர்கள் மூலம் புகார்களைத் தீர்க்கவும் இதற்கு சட்டரீதியான அதிகாரமுண்டு. இத்திட்டத்தின் கீழ்வரும் வங்கிகளாக அனைத்து பட்டியலிடப்பட்ட தொடக்கநிலை கூட்டுறவு வங்கிகளும் அடங்கும். இந்திய வங்கிகள் குறைதீர்ப்பாளர் திட்டம், 2002 இலிருந்து பலவிடயங்கள் வேறுபடுகின்றன . புதிய 2006 திட்டத்தின் கீழ் இதன் பரப்பெல்லைகள் விரிவுபடுத்தப்பட்டு புகார்கள் கணிணிவழியாகப் பெற்ப்பட்டு தீர்வுகாணப்படுகின்ளன. தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் வகையில் மேல்மூறையீட்டு ஏற்றாய்வு அலுவலர் (அதிகாரி) நியமிக்கப்பட்டு அவரின் வழிகாட்டுதலின்படி மேல்மூறையீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. வங்கிச்சேவை குறைபாடு குறித்த பின்வரும் புகார்களை வங்கிகள் குறைதீர்ப்பாணையம் ஏற்று கவனிக்கலாம். இந்திய வங்கிகள் குறைதீர்ப்பாணையம் இந்திய வங்கிகள் குறைதீர்ப்பாணையம் (ஆங்கிலம்"பேங்கிங் ஒம்பட்ஸ்மேன்") இந்திய வங்கிகள் குறைதீர்ப்பாளர் திட்டம், 2006 இன் படி அமைக்கப்பட்ட ஆணையம் இந்திய வங்கிகள் குறைதீர்ப்பாளர் ஆணையமாகும். வங்கிகளின் சேவை குறித்த குறைபாடுகளையும் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளினால் ஏற்படும் குறைபாடுகள் மற்றும் சச்சரவுகளை தீர்க்கும் பொருட்டு இவ்வாணையம் இந்திய ரிசர்வ் வங்கியால் ஆரம்பிக்கப்பட்டு செயல் பட்டு வருகின்றது. அனைத்து வங்கி வாடிக்கையாளரின் புகார்களுக்கும் விரைவான தீர்வுகாணும் ஒரு முறைமையாக, ரிசர்வ் வங்கி வங்கிகள் குறைதீர்ப்புத்திட்டத்தை வடிவமைத்துத் தந்துள்ளது. அந்த திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல வகையான வங்கிச்சேவை குறித்த வாடிக்கையாளர் புகார்களைத்தீர்த்திட நிறுவன மற்றும் சட்டரீதியான அமைப்பினை இது அமைத்துத் தந்துள்ளது. வங்கிகள் விதி கூட்டம் 1949, சட்டப்பிரிவு 35-A கீழ் வெளியிடப்பட்ட கட்டளையின் வாயிலாக இத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. அதனின் மேம்பட்ட செயல்திறனுக்கான, ரிசர்வ் வங்கி பணமுதலீடு செய்யும். மேலும் தன்னிடம் பணி புரியும் உயர் அதிகாரிகளை நியமிக்கும். குறிப்பிட்ட வங்கி, புகார்தாரரின் முறையீட்டைப்பெற்றுக் கொண்ட ஒரு மாதத்திற்குள் பதில் தராவிட்டாலோ, புகாரை மறுத்தாலோ, திருப்திகரமாக பதிலளிக்காவிட்டாலோ, குறைதீர்ப்பானையத்திடம் தமது புகாரை வாடிக்கையாளர் சமர்ப்பிக்கலாம். குறைதீர்ப்பாயத்திடம் புகார் அளிப்பதற்கு முன்பாக, புகாரில் குறிப்பிடப்படும் வங்கியிடமிருந்தே நேரடியாக எழுத்துவடிவிலான வேண்டுகோள் மூலம் முயற்சித்து ஒரு திருப்திகரமான் தீர்வினைப் பெற முதலில் முயல்வது அவசியம் – ஆயினும் புகாருக்குரிய நிகழ்விற்கு ஒரு வருடத்திற்குள்ளாக அந்தப்புகார் அளிக்கப்பட வேண்டும். புகார் வெள்ளைத்தாளில் எழுத்துமூலமோ அல்லது மின்னஞ்சலிலோ, இணையத்திலோ அனுப்பலம் அல்லது பதிவு செய்யலாம். அல்லது அதிகாரம் பெற்ற வேறோரு நபரின் மூலம் அவர் வழக்குரைஞராக இருக்கவேண்டும் என்பதில்லை அல்லது அஞ்சலிலோ அளிக்கலாம். ஆங்கிலத்திலோ 8வது அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி அந்தந்த மாநில மொழிகளில் புகார் அளிக்கலாம். புகாரில் குறிப்பிட வேண்டுவன-; இடைப்பகுதி பௌலைன் இடைப்பகுதி பௌலைன் என்பது கயிறு ஒன்றின் இடைப்பகுதியில் இரண்டு நிலையான அளவு கொண்ட தடங்களை உருவாக்குவதற்கான முடிச்சு ஆகும். தடங்கள் வழுக்காமல் இருப்பதும், சுமையேற்றிய பின்பும் அவிழ்ப்பதற்கு இலகுவாக இருப்பதும் இம் முடிச்சின் நன்மைகள் ஆகும். கயிற்றின் இடைப்பகுதியில் வழமையான முறையில் பௌலைன் முடிச்சு இடப்படும் (இடது பக்கப் படம்). ஆனாலும், மடிப்புப்பகுதியை நிலை முனையைச் சுற்றி எடுத்து மீண்டும் அதற்கு அருகிலேயே செருகி முடிக்கப்படுவது இல்லை. அதற்குப் பதிலாக, மடிப்புப் பகுதியை விரித்து முழு முடிச்சுமே அதனூடாகச் செலுத்தப்படும் (வலது பக்கப் படம்). முடிச்சை இறுக்கும்போது மடிப்புப்பகுதி இரண்டு நிலை முனைகளையும் சுற்றி அமையும் (மேலுள்ள படம்). பௌவென் முடிச்சு பௌவென் முடிச்சு என்பது உண்மையில் ஒரு உண்மையான முடிச்சு அல்ல. சில வேளைகளில் மரபுச் சின்ன வடிவமைப்புக்களில் பயன்படுத்தப்படும் ஒரு மரபுச்சின்னம் சார்ந்த முடிச்சு ஆகும். இது தொடர்ச்சியான தட வடிவில் அமைந்த ஒரு கயிறு ஆகும். சதுர வடிவில் அமைந்த இதன் ஒவ்வொரு மூலையிலும் ஒரு தடம் அமைந்திருக்கும் (மேலுள்ள படம்). கயிறு உண்மையில் முடிச்சிடப்படாததால் இடவியலில் இது ஒரு முடிச்சிலி எனச் சொல்லப்படுகிறது. "கோண போவென் முடிச்சு" என்பது வளைவான பக்கங்களைக் கொண்டிராத இதே போன்ற ஒரு முடிச்சு ஆகும். இது ஐந்து சதுரங்களினால் ஆன வடிவமாகத் தோற்றமளிக்கும். புனித ஜானின் வரையெல்லை (நிரலாக்கம்) வரையெல்லை என்பது மாறிகளும் கோவைகளும் வரையறை செய்யப்பட்ட ஒரு வெளி. ஒரு குறிப்பிட்ட வரையெல்லைக்குள் ஒரு மாறி வரையறை செய்யப்பட்டால், அந்த வரையெல்லைக்குள் மாத்திரமே அதைப் பயன்படுத்த முடியும். வேறு ஒரு வெளியில் இருந்து பயன்படுத்துவது என்றால் அந்த வரையெல்லையை சிறப்பாக குறிப்பிட்டு அழைக்க வேண்டும். வெவ்வேறு நிரல் மொழிகளில் வரையெல்லைகள் வெவ்வேறு மாதிரி நிறைவேற்றப்படும். நுனி முடிச்சு நுனி முடிச்சு என்பது மிக அடிப்படையான எளிய ஒரு முடிச்சு. ஒரு கண்ணி (வளையம்) போல் செய்து உள்ளே நுழைத்து வெளியே இழுத்தால் இம்முடிச்சு உருவாகும். இம் முடிச்சு எளிய சுருக்கு முடிச்சு, தூண்டிலர் தடம், விரல்சுழற்றுத் தடம், மீனவர் முடிச்சு, நாடா முடிச்சு போன்ற பல முடிச்சுகளுக்கு அடிப்படையானது. இம்முடிச்சு பாதுகாப்பானது ஆனால் சிக்கும். அவிழ்க்காமல் நிலையாக இருக்கும் முடிப்பானால் இது நல்ல முடிச்சு. ஒரு கயிற்றின் நுனி நழுவிவிடாமல் இருக்க இம் முடிச்சு நுனியில் பரவலாக இடப்படும். இம்முடிச்சைப் பலவாறு இடலாம். கணித முடிச்சியலில் இதற்கு இணையான வடிவம் மூவிலை (கணித) முடிச்சு. பிளேக்கின் கண்ணிமுடிச்சு பிளேக்கின் கண்ணிமுடிச்சு (Blake's hitch) என்பது ஒரு மரவளர்ப்பியலாளர்கள், மரம் ஏறுபவர்கள் போன்றோரால், மரங்களில் ஏறுவதற்காகப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு உராய்வுக் கண்ணிமுடிச்சு ஆகும். இது ஒரு உறுதியான முடிச்சாக இருந்தபோதும், வழமையாக எட்டு வடிவ முடிச்சுப் போன்ற ஒரு தடை முடிச்சால் பாதுகாக்கப்படுவது உண்டு. மரங்களில் ஏறுதல் இறங்குதல் ஆகிய இரண்டுக்கும் பயன்படும் இந்த முடிச்சையே பிற முடிச்சுக்களிலும் கூடுதலாக மரவளர்ப்பாளர்கள் விரும்புகின்றனர். இம் முடிச்சுப் பற்றி எயின்சு புரோகாசுக்கா (Heinz Prohaska) என்பவரால் ஆசுத்திரிய வழிகாட்டிகளின் சஞ்சிகை ஒன்றில் 1981 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட விபரங்களே இம் முடிச்சுப்பற்றி முதலில் வெளிவந்த விபரங்கள் ஆகும். தனியாக யேசன் பிளேக் (Jason Blake) என்பவரும் இம்முடிச்சைக் கண்டுபிடித்து "ஆபர் ஏஜ்" என்னும் மரவளர்ப்பியலாளர்களின் சஞ்சிகைக்கு எழுதிய கடிதம் மூலம் அறிமுகப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து மரவளர்ப்பியலாளர்களால் மிகவும் ஆர்வமாக இதைப் பயன்படுத்தத் தொடங்கியதால் இம்முடிச்சு இதை அறிமுகப்படுத்தியவரின் பெயரைத் தழுவி "பிளேக்கின் கண்ணிமுடிச்சு" என இது அழைக்கப்பட்டது. குருதி முடிச்சு குருதி முடிச்சு அல்லது உருளைக்கலன் முடிச்சு என்பது நைலோனால் ஆன ஒரிழைக் கயிற்றுத் துண்டுகளை இணைப்பதில் சிறப்பாகப் பயன்படத்தக்க ஒரு முடிச்சு ஆகும். இத் தேவைக்காகப் பயன்படுத்தப்படும் பிற முடிச்சுக்கள் கயிற்றின் வலிமையைக் குறிப்பிடத்தக்க அளவு குறைப்பதைப் போலன்றி, இம் முடிச்சு கயிற்றின் பெரும்பகுதி வலிமையைத் தக்க வைத்துக்கொள்ள உதவுகிறது. இது வீச்சுக் கயிற்று மீன்பிடித்தலில் பரவலாகப் பயன்பட்டு வருகிறது. குருதி முடிச்சை முடியும்போது, தொடுக்கவேண்டிய இரண்டு கயிறுகளையும் 6-8 சதம மீட்டருக்கு ஒன்றின் மீதொன்றாகப் பொருந்தியிருக்கும்படி எதிரெதிர்த் திசையில் வைக்கப்படும். ஒரு கயிற்றின் குட்டை முனை மறு கயிற்றைச் சுற்றி 4-6 சுற்றுக்கள் சுற்றப்படும். எஞ்சிய பகுதியின் முனையைத் திருப்பிக் கொண்டுவந்து சுற்றுத் தொடங்கிய இடத்துக்கு முன் இரு கயிறுகளுக்கும் இடையே செருகப்படும். இதைபோலவே மற்றக் கயிற்றின் குட்டை முனையையும் முதல் கயிற்றில் 4-6 தடவைகள் சுற்றி எஞ்சிய முனையைப் பின்னால் கொண்டுவந்து முன்னர் செருகிய முனைக்குப் பக்கத்திலேயே எதிர்த்திசையில் செருகப்படும். கயிறுகள் ஈரமாக்கப்பட்டு இரண்டு கயிறுகளினதும் நீளமான முனைகளைப் பிடித்து இழுப்பதன் மூலம் இறுக்கப்படும். பசுக் கண்ணிமுடிச்சு பசுக் கண்ணிமுடிச்சு (Cow hitch) என்பது கண்ணிமுடிச்சு (hitch) வகையைச் சேர்ந்த ஒரு முடிச்சு ஆகும். இதில் இரண்டு அரைக் கண்ணிமுடிச்சுக்கள் எதிரெதிர்த் திசையில் அமைந்துள்ளன. இவாறான அரைக் கண்ணிமுடிச்சுக்கள் ஒரே திசையில் அமைந்தால் அது கராம்புக் கண்ணிமுடிச்சு எனப்படும். கட்டுவதற்குக் கயிற்றின் இரு முனைகளையும் பயன்படுத்த முடியுமானால், பின்வரும் முறையில் இம் முடிச்சைப் போட முடியும். ஒரு வளையத்தில் இம்முடிச்சைப் பயன்படுத்திக் கயிற்றைக் கட்டும் முறை இந்து தரப்படுகிறது: இதுவே பசுக் கண்ணிமுடிச்சுப் போடும் முறையாகும். ஒருங்கிணை விருத்திச் சூழல் ஒருங்கிணை விருத்திச் சூழல் என்பது மென்பொருளை விருத்தி செய்வதற்கு பயன்படுத்தப்படும் மென்பொருள் ஆகும். ஆங்கிலத்தில், இதை Integrated Development Environment, அஃகு பெயராக ஐ.டி.இ(IDE) என்றழைக்கப் படுகிறது. ஒரு நிரலர், தனது நோக்கநிரலை வளர்த்தெடுப்பதற்க்கு, பல்வேறு பணிச்சூழல்களில் செயல்பட வேண்டியுள்ளது. எனவே, அவர் இவ்வாறு வேறுபட்ட பணிச்சூழல்களிடையே மாறிமாறி செயல்படுவதைத் தவிர்க்க ஐ.டி.இ.சூழல், ஒரு நிரலருக்கு பல்வேறு வழிகளில் உதவுகிறது. பெரும்பாலும் ஐ.டி.இ., ஒரு குறிப்பிட்ட கணினிமொழிக்குரியப் பணிச்சூழலைக் கையாளுகிறது. இருப்பினும், பல்வேறு கணினிமொழிகளைக் கையாளுகின்ற, ஐ.டி.இ-கள், உருவாகி வருகின்றன. தொடரியல் (நிரலாக்கம்) ஒரு நிரல் மொழியின் தொடரியல் (syntax of language) அல்லது தொடரமைப்பு என்பது அந்த மொழியின் நிரல்களின் குறியீடுகளின் கூட்டு ஒழுங்கமைப்பு சரியென தீர்மானிக்கும் விதிமுறைகள் ஆகும். ஒரு மொழியின் தொடரியல் அந்த மொழியின் மேல் நிலை வடிவமைப்பை வரையறை செய்கிறது. உரை வடிவ நிரல் மொழிகளில் (எ.கா. எழில் நிரலாக்கல் மொழி) எழுத்துக்கள் அல்லது குறியீடுகள் வரிசையமைப்பாகவும், அவை எந்த முறையில் அமையலாம் என்றும் தொடரியல் வரையறை செய்கிறது. காட்சி நிரல் மொழிகளில் குறியீடுகளின் இட நிலைகளும் தொடர்புகளும் எவ்வாறு அமைய வேண்டும் என்று தொடரியல் வரையறை செய்கிறது. சுற்றுப்பாதை வேகம் சுற்றுப்பாதை வேகம் ("orbital speed") என்பது இரண்டு பொருள்கள் அடங்கிய அமைப்பில், அதிக நிறை கொண்ட பொருளைச் சுற்றிக் குறைந்த நிறை கொண்ட பொருள் ஒரு பொது நிறை மையத்தை பொறுத்து சுற்றி வரும் வேகம் ஆகும். எ.கா. சூரியனைச் சுற்றி ஒரு கோளோ, கோளைச் சுற்றி ஒரு இயற்கை நிலவோ அல்லது துணைக்கோளோ சுற்றி வரும் வேகம். இது இரண்டு வகைப்படும்: பொது நிறை மையம் இயற்பியலில், பொருளொன்று அது கட்டமைக்கப்பட்ட துணிக்கைகளின் திணிவு காரணமாக கீழ் நோக்கிய நிறையைக் கொள்கிறது. இந்நிறை பொருளின் குறித்தவொரு புள்ளியில் தாக்குகிறது. இப்புள்ளியே பொது நிறை மையம் ("center of mass") அல்லது புவியீர்ப்பு மையம் ("center of gravity") எனப்படுகிறது. பொருளொன்றின் விளைவு விசை (நிறை) தொழிற்படும் புள்ளி புவியீர்ப்பு மையம் ஆகும். வானியலில் பொது நிறை மையம் ("barycenter" அல்லது "common center of mass") சுற்றியக்கத்தில் உள்ள, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருள்கள் அடங்கிய தொகுதியின், பொதுவான நிறையின் மையம். உருளைக்கலன் கண்ணிமுடிச்சு உருளைக்கலன் கண்ணிமுடிச்சு அல்லது உருளைக்கலன் தாங்குகயிறு என்பது கப்பலில் ஏற்றியிறக்கும்போது பொருட்களை உயர்த்துவதற்குப் பயன்படும் ஒருவகை முடிச்சாகும். இப் பயன்பாடு காரணமாகவே இதற்கு இப்பெயர் ஏற்பட்டது. பொருட்கள் நிலைக்குத்தாக இருக்கும்படி வைத்துத் தூக்குவதற்கும் இது எளிமையானதும், திறம்பட்டதுமான ஒரு முறையாகும். தூக்கவேண்டிய பொருளைச் சுற்றி ஒரு தாங்கு கயிற்றை உருவாக்குவதன் மூலம் இது செயற்படுகிறது. இது அப்பொருளைப் பக்கங்களிலும் அடியிலும் தாங்குகிறது. உருளைக்கலன் கண்ணிமுடிச்சு மூலம் கட்டித்தூக்கும்போது அது அசைந்தாடினாலும் பொருள் நிலைக்குத்தாக நிற்கும். ஆனால், வலுவான குலுக்கம் ஏற்பட்டால் முடிச்சுக் குலைந்துவிடக்கூடும். அச்சாணி முடிச்சு அச்சாணி முடிச்சு (Arbor knot) என்பது பொதுவான மீனவர் முடிச்சு ஆகும். இதன் முதன்மைப் பயன் தூண்டில் கயிற்றை மீன்பிடிச் சுழலியில் கட்டுவது ஆகும். இது சுழலியொன்றின் அச்சைச் சுற்றிப் போடப்படும் முடிச்சு ஆகும். செயல் முனையைப் பயன்படுத்தி நிலை முனையைச் சுற்றி பெருவிரல் முடிச்சுப் போடப்படும் கடைசியாகச் செயல் முனையில் இன்னொரு பெருவிரல் முடிச்சு இடப்படும். இறுக்கும்போது செயல்முனையில் இடப்பட்ட முடிச்சும், நிலைமுனையைச் சுற்றி இடப்பட்ட முடிச்சும் ஒன்றுடன் ஒன்று இறுகும். மாதிரி-காட்சி-கட்டுப்பாட்டகம் மாதிரி-காட்சி-கட்டுப்பாட்டகம் ("Model–view–controller", MVC) என்பது ஒரு மென்பொருள் கட்டமைப்புக் கோலம். மாதிரி தரவையும் அவற்றைக் கையாழுவது தொடர்பான வணிக விதிகளையும், காட்சி செயலியின் இடைமுகத்தையும், கட்டுப்பாடு மாதிரிக்கும் இடைமுகத்துக்கும் இடையேயான பரிமாறியாகவும் செயற்படுகிறது. அதாவது கட்டுப்பாடு இடைமுகத்தில் இருந்து கட்டளைகளைப் பெற்று மாதிரிக்கு ஏற்றவாறு அனுப்பதலையும், அடுத்த காட்சிகளைத் தெரிவு செய்து இடைமுகத்து அனுப்பதலையும் செய்கிறது. இவ்வாறு பிரித்து வடிவமைப்பதன் மூலம் ஒவ்வொன்றும் மற்றதை தங்கியிருக்கும் தன்மை குறைந்து வடிவமைப்பது, பாரமரிப்பது, மாற்றங்களை ஏற்படுத்துவது இலகுவாகிறது. ஒரு order processing ஒருங்கியத்தைக் கருத்தில் கொள்க. இங்கு இதற்கு தேவையான பட்டியல்கள் அல்லது தரவு வடிவமைப்பும் அவற்றுக்கிடையேயான தொடர்பும் மாதிரி ஆகும். இந்த தரவுகளை பெறவும் கையாளவும் பயன்படும் API கட்டுப்பாட்டகம் ஆகும். பயனர் ஊடாடும் இடைமுகம் காட்சி ஆகும்.. லாம்டா நுண்கணிதம் லாம்டா நுண்கணிதம் ("Lambda calculus") என்பது செயலிகளையும் ஆயும் கணிதத்துறை ஆகும். கணிதத்தில், கணினியியலில் சார்பு அல்லது செயலிகள் ஒரு அடிப்படை கூறாகும். மீள்வோட (recursive) செயலிகள் பற்றியும், எது கணிக்கப்படக் கூடியது என்பது பற்றியும், கணிதத்தின் அடித்தளங்கள் பற்றியும் ஆய லம்டா நுண்கணிதம் உதவுகிறது. யேசண் யேசண் என்பது தரவுகளை பரிமாறுவதற்குரிய ஒரு குறியீட்டு முறை ஆகும். ஆங்கிலத்தில் இதை JSON என்று, அதாவது Javascript Object Notation (யாவாசிகிரிப்டு பொருள் குறியீடு) என்பர். இது எஜக்சு வலை செயலிகள் வடிவமைப்பில், தரவுகளை எளிய முறையில் பரிமாற பயன்படுகிறது. குறியாக்கத்தை, குறிவிலக்களை நேரடியாக நிரல் மூலமாகவோ, நிரலகங்களைப் பயன்படுத்தியோ செய்யலாம். போவா முடிச்சு போவா முடிச்சு (Boa knot) என்பது ஒரு தற்கால, பிணைப்பு முடிச்சு ஆகும். நெசவாளரான பீட்டர் கொலின்வூட் என்பவர் இதனை 1996 ஆம் ஆண்டில் கண்டு பிடித்தார். பிணைத்துக் கட்டப்படும் பொருட்கள் முடிச்சுக்கு மிக அருகில் வெட்டப்பட்டாலும் அவற்றை உறுதியாகப் பிடித்திருக்கக் கூடியதான முடிச்சொன்றை உருவாக்குவதே அவரது நோக்கமாக இருந்தது. போவா முடிச்சு, இறுக்கு முடிச்சுடனும், இரட்டை இடுக்கி முடிச்சுடனும் தொடர்புள்ளது. இது மேலே சொல்லப்பட்ட இரண்டு முடிச்சுக்களினதும் அமைப்பையும் இயல்புகளையும் ஒருங்கே தன்னகத்துக் கொண்டுள்ளது. உருளை வடிவப் பொருட்களைச் சேர்த்துக் கட்டுவதற்கு இம் முடிச்சு பெரிதும் உகந்தது. ஆசிலியின் தொடுப்பு ஆசிலியின் தொடுப்பு (Ashley's bend) என்பது இரண்டு கயிறுகளின் முனைகளைத் தொடுத்துக் கட்டுவதற்கான ஒரு தொடுப்பு வகை முடிச்சு ஆகும். இது பாதுகாப்பானதும் குறிப்பிடத்தக்க அளவு இழுவையையும், அசைவுகளையும் தாங்கக்கூடியது. இது செப்பெலின் முடிச்சை ஒத்தது. இம் முடிச்சு வழுக்கும் தன்மை உடையதல்ல எனினும், சுமையேற்றப்பட்ட பின் அவிழ்ப்பதற்குக் கடினமானது. இது ஆசிலியின் நூலில் காட்டப்பட்டிருந்தாலும் இதற்குப் பெயர் எதுவும் கொடுக்கப்படவில்லை. ஆசிலி இதுபற்றிச் சாதகமான கருத்துக் கொண்டிருந்தாரா என்பதும் தெளிவில்லை. இடுக்கி முடிச்சு இடுக்கி முடிச்சு (Constrictor knot) என்பது, மிகத் திறம்பட்ட பிணைப்பு முடிச்சுக்களுள் ஒன்று. எளிமையானதும் பாதுகாப்பானதுமான இந்த முடிச்சு இறுகிய பின்னர் அவிழ்ப்பதற்குக் கடினமானது. இது பிரிநிலைக் கண்ணிமுடிச்சைப் போன்றது ஆயினும் சில வேறுபாடுகள் உண்டு. முதன் முதலாக 1944 ஆம் ஆண்டில் கிளிபர்ட் ஆசிலியின் நூலில் இது வெளியிடப்பட்டது ஆயினும் இது இதற்குப் பல காலம் முந்தியது எனக் கருதப்படுகிறது. தானே இதனை 25 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடித்ததாக ஆசிலி கருதியதாகத் தெரிகிறது. ஆனால், ஆய்வுகள் இவர் இதனைக் கண்டுபிடித்திருக்க முடியாது என்கின்றன. இதன் தோற்றம் எவ்வாறிருப்பினும் இதனைப் பரவலாக அறிமுகப்படுத்தி அதனை இன்றைய நிலைமைக்குக் கொண்டுவந்தவர் ஆசிலியே என்பதில் ஐயம் இல்லை. கீழே காட்டப்பட்டிருப்பதே இம் முடிச்சைப் போடுவதற்கான அடிப்படையான முறை ஆகும். எனினும், இதனை இடைக் கயிற்றிலும் போட முடியும். இடுக்கி முடிச்சு, தற்காலிகமான அல்லது ஓரளவு நிரந்தரமான கட்டுப் போடவேண்டிய இடங்களில் பயன்படுத்துவதற்கு உகந்தது. இதன் பிணைப்பு விசை சிறிய பகுதியில் இருப்பதால் சிறிய பொருட்களைக் கட்டுவதற்குப் பொருத்தமாக உள்ளது. மென்மையான, பைகளின் வாய்கள் போன்றவற்றை இம்முடிச்சைப் பயன்படுத்திக் கட்டலாம். இவ்வேளைகளில் விறைப்புத் தன்மை கொண்ட கயிற்றைப் பயன்படுத்தலாம். கடினமான பொருட்களைக் கட்டுவதாயின் மென்மையான இழுபடக்கூடிய கயிறுகளைப் பயன்படுத்தலாம். இம்முடிச்சு கட்டப்பட்ட பொருட்களை அதிகமாக நெருக்குவதனால் அப்பொருட்களின் மேற்பரப்புக்களிலோ அல்லது வடிவத்திலோ பழுதுகளை ஏற்படுத்தக்கூடும். வெட்டப்பட்ட பல்லிழைக் கயிறுகளின் முனை குலைந்துவிடாமல் இருப்பதற்காக தற்காலிகமாக அம்முனைகளைச் சுற்றிக் கட்டுவதற்கு இந்த முடிச்சுப் பயன்படுவது உண்டு. இரட்டை இடுக்கி முடிச்சு இரட்டை இடுக்கி முடிச்சு (Double constrictor knot) என்பது மிகத்திறம் வாய்ந்த பிணைப்பு முடிச்சுக்களுள் ஒன்று. இது, பொதுவான "இடுக்கி முடிச்சிலும்" வலிமையானதும், பாதுகாப்பானதும் ஆகும். அடிப்படையான இடுக்கி முடிச்சுக்கு இன்னொரு திருப்பம் ஒன்றைச் சேர்ப்பதன் மூலம் இந்த முடிச்சு இடப்படுகின்றது. மெழுகு பூசப்பட்ட கயிறுகள் போன்ற வழுக்கக்கூடிய கயிறுகளைப் பயன்படுத்தும்போது இம்முடிச்சுப் பெரிதும் பயனுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட திருப்பங்களை மேலதிகமாக இட்டால் இதன் பாதுகாப்புக் கூடுவதில்லை என்பதுடன், முடிச்சைச் சீராக இறுக்குவதும் கடினமாகி விடும். முடிச்சில் உள்ள இழுவிசையைச் ஒரேதன்மைத்து ஆக்குவதற்காக முடிச்சைக் கவனமாகச் சீராக்க வேண்டும். முடைச்சை ஓரளவு இறுக்கியபின் முனைகளை இழுத்து உறுதிப்படுத்த வேண்டும். பிரிநிலைக் கண்ணிமுடிச்சு பிரிநிலைக் கண்ணிமுடிச்சு (Clove hitch) என்பது ஒருவகைக் கண்ணிமுடிச்சு ஆகும். பௌலைன், பாய்மரக் கயிற்றுத் தொடுப்பு என்பவற்றுடன் இதுவும் ஒரு மிகவும் இன்றியமையாத முடிச்சுக்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இது ஒன்றன்பின் ஒன்றாகக் கட்டப்படும் இரண்டு ஒத்த அரைக் கண்ணிமுடிச்சுக்களை உள்ளடக்கியது. குறுக்கு முடிச்சாகப் பயன்படும்போது இது சிறப்பாகச் செயல்பட வல்லது. இதனைப் பிணைப்பு முடிஆச்சாகவும் பயன்படுத்தலாம் ஆயினும், இவ்வகைத் தேவைக்கு இம்முடிச்சு அவ்வளவு பாதுகாப்பானது அல்ல. கயிறொன்றின் நிலைத்தபகுதியில் போடப்படும் பிரிநிலைக் கண்ணிமுடிச்சு, அரைக் கண்ணிமுடிச்சு கட்டப்பட்ட பொருளை நோக்கிச் செல்கிறதா அல்லது எதிர்ப்புறமாகச் செல்கிறதா என்பதைப் பொறுத்து இரண்டு வகைப்படும். இவை, இரண்டு அரைக் கண்ணிமுடிச்சு (Two half-hitches), பாய்க்கயிற்றுக் கண்ணிமுடிச்சு (Buntline hitch) என்பனவாகும். வழமையான முறையில் ஒரு முனையில் மட்டும் சுமையேற்றும்போது பிரிநிலைக் கண்ணிமுடிச்சு வழுகிவிடக்கூடியது. குறுக்கு முடிச்சில் பயன்படுவதுபோல இரு முனைகளிலும் சுமையேற்றும்போதே இது திறம்படச் செயல்படும். மெல்லிய அல்லது வழுக்கும் தன்மை கொண்ட கயிறுகளைப் பயன்படுத்தும்போது இம் முடிச்சு அதிகம் நம்பத்தகுந்ததாக இராது. சிறப்பாக, அசைந்தாடும் அல்லது சுற்றுகின்ற பொருட்களைக் கட்டும்போது இலகுவாக அவிழ்ந்துவிடும். இதனாலேயே, செயல்முனையின் நீளத்தைச் சீராக்க வேண்டிய தேவைகள் உள்ள வேளையில் இதனைப் பயன்படுத்துகின்றனர். சில வேளைகளில் இம் முடிச்சு அவிழ்ப்பதற்குக் கடினமாக இருக்கும் வகையில் இறுகி விடுவதும் உண்டு. கழியொன்றைச் சுற்றிப் பிரிநிலைக் கண்ணிமுடிச்சு இடுவதற்கு முதலில் செயல்முனை மேலாக இருக்கும்படி வைத்து அக் கழியைச் சுற்றித் தடம் ஒன்றைப் போடவேண்டும். செயல்முனையை இன்னும் ஒருமுறை கழியைச் சுற்றி எடுத்துக் கயிறு குறுக்காக வெட்டும் இடத்துக்குக் கொண்டுவர வேண்டும். பின்னர் செயல்முனையைக் கயிற்றுச் சந்திப்புக்குக் கீழாக எடுத்து இறுக்கிக்கொள்ள வேண்டும். இம் முடிச்சைக் கயிற்றின் இடைப்பகுதியிலும் போட்டுக்கொள்ள முடியும். இவ்வாறு போடும்போது கயிற்றின் இரண்டு முனைகளுமே இல்லாமல் போட்டுக்கொள்ளலாம். ஆனால் இதற்குக் கட்டப்படும் ஒருமுனையாவது கயிற்றுத் தடத்தின் ஊடாக அதனைச் செலுத்தும் வகையில் இருக்கவேண்டும். இதற்கு கயிற்றின் இடைப்பகுதியில் ஒன்றுக்கொன்று எதிரெதிராக இருக்கும்படி இரண்டு தடங்களைப் போட்டுக்கொள்ள வேண்டும். பின்னர் தடங்களை ஒன்றன்மீது ஒன்று வைத்து அதனூடாகக் கழியின் ஒரு முனையைச் செலுத்தி வேண்டிய இடத்துக்குக் கொண்டுவந்து இறுக்கிக் கொள்ளலாம். படத்தில் காட்டியபடி ஒரு வளையத்தில் இம்முடிச்சைப் போடுவதற்கும் இறுதியாக விளக்கிய முறை பயன்படும். பாய்க்கயிற்றுக் கண்ணிமுடிச்சு பாய்க்கயிற்றுக் கண்ணிமுடிச்சு (Buntline hitch) கயிறொன்றை ஒரு பொருளுடன் இணைப்பதற்குப் பயன்படும் ஒரு முடிச்சு ஆகும். பாதுகாப்பானதும், இலகுவாகப் போடத்தக்கதுமான இம் முடிச்சு கூடிய சுமையைத் தாங்கியபின்னர் இறுகிவிடக்கூடும். இதனால், இம் முடிச்சைப் பயன்படுத்த வேண்டி ஏற்படும்போது சிலவேளைகளில் இதனை உருவி அவிழ்க்கக் கூடிய வடிவில் போடுவது வழக்கம். இம் முடிச்சை முடிவதற்கு முதலில் இரண்டாம் அரைக் கண்ணிமுடிச்சு கட்டவேண்டிய பொருளை நோக்கி இருக்கும்படி, கயிற்றின் நிலைத்த பகுதியைச் சுற்றி ஒரு பிரிநிலைக் கண்ணிமுடிச்சைப் போட்டுக் கொள்வர். மிகவும் எளிமையானதும், பயன்பாட்டுத்திறம் கொண்டதுமான இந்த முடிச்சுப் பழங்காலத்திலேயே புழக்கத்தில் இருந்திருக்க வேண்டும் எனக் கருதப்படுகின்றது. பாய்மரக் கப்பல்களின் காலத்தில், குறுக்குப் பாய்மரக் கயிறமைப்புக் கொண்ட கப்பல்களில் பாய்மரக் கயிறுகளைப் பாய்களின் அடிப்பகுதியில் கட்டுவதற்கு இம் முடிச்சையே பயன்படுத்தினர். இத்தேவைக்கு இம் முடிச்சு விரும்பப்பட்டமை அதன் பாதுகாப்பையும், நம்பகத் தன்மையையும் காட்டுகிறது. இம் முடிச்சு உறுதிப்பட்டதும், குலுக்கல்கள் முதலியன முடிச்சை மேலும் இறுக்குவதேயன்றித் தளர்வடையச் செய்யா. தற்காலத்து வழுக்கும் தன்மை கொண்ட செயற்கைக் கயிறுகளிலும் இம்முடிச்சு திறம்படச் செயல்படுவதால் அண்மைக்காலத்தில் இம் முடிச்சின் பயன்பாடு கூடியுள்ளது. பாய்க்கயிற்றுக் கண்ணிமுடிச்சு, கயிறுகளை, வளையங்கள், துளைகள், தூண்கள், கழிகள் போன்றவற்றுடன் இணைப்பதற்கு சிறிய அளவினதும், பாதுகாப்பானதுமான முடிச்சுத் தேவைப்படும் இடங்களில் பயன்படுகின்றது. வழுக்கு முடிச்சல்லாத வடிவம் இடைத்தரமான சுமைகளுக்கும், அவிழ்க்கப்படவேண்டிய தேவையற்ற வேளைகளிலும் பயன்படுத்த உகந்தது. கூடிய சுமைகள் தொடர்புபடும்போது இம் முடிச்சுக்கள் அவிழ்க்க முடியாதவாறு இறுகிவிடுகின்றன. இதன் வழுக்கு முடிச்சு வடிவம் பாதுகாப்பானதும் தற்காலிகமானதுமான கண்ணிமுடிச்சுத் தேவைப்படும்போது வசதியானது. எடுத்துக்காட்டாக வண்டிகளில் சுமைகளை வைத்துக் கட்டும்போது ஒரு பக்கத்தில் நிரந்தரமான சுமையுந்துக் கண்ணி முடிச்சையும் அடுத்த பக்கத்தில் பாய்க்கயிற்றுக் கண்ணிமுடிச்சின் வழுக்கு வடிவத்தையும் பயன்படுத்தலாம். கொசு உள்ளான் கொசு உள்ளான் (Little Stint) என்பது கரைப்பறவைகள் (shore birds or waders) வகையைச் சார்ந்த ஒரு சிறிய பறவை. இது சிறிய, கூரான, கருமை நிறஅலகினையும் நடுத்தரமான நீளங்கொண்ட கருங்கால்களையும் உடையது; வேகமாக இயங்கக்கூடியது. ஆர்க்டிக் ஐரோப்பியப் பகுதிகளிலும் ஆசியாவின் சில பகுதிகளிலும் இவை இனப்பெருக்கம் செய்கின்றன. இவை பனிக்காலங்களில் நெடுந்தொலைவு வலசை போகின்றன (migrate); பெரும்பாலும் ஆப்பிரிக்காவிற்கும் தெற்காசியப் பகுதிகளுக்கும் தான் இவை குடிபெயர்கின்றன. நுனித் தொடுப்பு நுனித் தொடுப்பு என்பது இரண்டு கயிறுகளைத் தொடுப்பதற்குப் பயன்படும் எளிமையான தொடுப்பு முடிச்சு ஆகும். ஒருபக்க நுனித் தொடுப்பு, ஐரோப்பிய இறப்பு முடிச்சு போன்ற பெயர்களாலும் இம் முடிச்சு அழைக்கப்படுகிறது. முடிச்சு கயிறுகளின் திசையில் அல்லாமல் ஒரு பக்கமாக விலகி இருப்பதால் "ஒருபக்க நுனித் தொடுப்பு" என்னும் பெயரும், ஐரோப்பாவில் மலையேறும் முயற்சிகளில் இம் முடிச்சுக் காரணமாக ஏற்பட்ட தீநேர்ச்சிகளைக் குறித்து "ஐரோப்பிய இறப்பு முடிச்சு" என்னும் பெயரும் ஏற்பட்டது. 1. இரண்டு கயிறுகளினதும் ஒவ்வொரு முனைகளை ஒன்றுக்கொன்று இணையாக வைக்கவேண்டும்.
2. இரண்டையும் சேர்த்து ஒரு தடம் ஆக்கிக்கொள்ள வேண்டும்.
3. இரண்டு செயல்முனைகளையும் ஒருங்கே சேர்த்துத் தடத்தினூடாகச் செலுத்த வேண்டும்.
4. செயல்முனைகளையும், நிலைமுனைகளையும் இழுத்து இறுக்கிக்கொள்ள வேண்டும். கயிறுகள் வெவ்வேறு அளவான விட்டங்கள் கொண்டவையாக இருந்தால், மெல்லிய அல்லது இழுபடக்கூடிய கயிறு படத்தில் காட்டிய பச்சைக் கயிறு இருக்கும் இடத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அத்தோடு பாதுகாப்பு நுனி முடிச்சையும் இந்தக் கயிற்றைக்கொண்டே முடியவேண்டும். மலையேறுவோர் செங்குத்தான பாறைகளில் இறங்கும் முயற்சிகளின்போது இதனைப் பயன்படுத்துவது உண்டு. இறங்கவேண்டிய தூரம் வழமையான 50-60 மீட்டர் கயிறுகளின் நீளத்திலும் அதிகமாகும்போது கயிறுகளைத் தொடுப்பதற்கு இந்தத் தொடுப்பைப் பயன்படுத்துவர். இந்த முடிச்சின் பெரும்பகுதி கயிற்றுக்கு வெளியில் இருப்பதால், கயிறு இலகுவாக மலைச் சரிவுகளில் வழுக்குவதற்கு உதவியாக உள்ளது. அத்துடன் இம் முடிச்சின் அளவு சிறியதாக உள்ளதால், கயிற்றை இழுத்து எடுக்கும்போது பாறை இடுக்குகளில் சிக்கிக்கொள்ளாமல் வருவதற்கான வாய்ப்புக்களும் அதிகம். மேற்படி காரணங்களும் இத் தொடுப்பை இலகுவாக முடியத்தக்கதாக இருப்பதும் மலையேறுவோர் இதனைப் பரவலாகப் பயன்படுத்துகின்றனர்.
புடைப்புச் சிற்பம் புடைப்புச் சிற்பம் ("relief") என்பது பின்னணியில் இருந்து உருவங்கள் புடைத்து இருக்கும்படி அமைக்கப்படும் ஒரு சிற்பவகை ஆகும். இச் சிற்பங்களில் செதுக்கப்படும் உருவங்கள் பின்னணியோடு ஒட்டியே இருக்கும். இதனால் இச் சிற்பங்களில் ஓரளவு முப்பரிமாணத் தன்மை காணப்பட்டாலும், உருவங்களின் ஒரு பக்கம் மட்டுமே தெரியக் கூடியதாக அமைந்திருக்கும். தனித்து நிற்கும் முழு உருவச் சிற்பங்களைப் போல் எல்லாப் பக்கங்களையும் பார்க்க முடியாது. எனினும் புடைப்புச் சிற்பங்களின் புடைப்பின் அளவு பல்வேறாக அமைந்திருப்பது உண்டு. மிகச் சிறிய அளவே புடைத்துக் காணப்படும் சிற்பங்களும், உருவங்களின் பெரும் பகுதிகள் தெரியக் கூடியவாறு அமைந்த சிற்பங்களுக்கும் எடுத்துக் காட்டுகள் ஏராளமாக உண்டு. "புடைப்புச் சிற்பம்" என்னும் சொல் சிற்பங்களை உருவாக்கும் ஒரு குறிப்பிட்ட முறையையே குறிக்கிறது. இந்த முறையைப் பயன்படுத்திப் பல்வேறு நாகரிகக் காலங்களிலும், இடங்களிலும் உருவாக்கப்பட்ட சிற்பங்கள் அந்தந்த நாகரிகங்களுக்குரிய கலைப் பாணிகளைத் தழுவி வேறுபட்டு அமைகின்றன. எடுத்துக்காட்டாக கிரேக்க, ரோமப் புடைப்புச் சிற்பங்கள் அவர்களுடைய ஏனைய சிற்ப ஓவிய வடிவங்களைப் போன்றே உலகில் காணும் உருவங்களை காண்கின்றவாறே உருவாக்கினர். ஆனால் இந்தியப் புடைப்புச் சிற்பங்களில், ஓரளவு குறியீட்டுத் தன்மை காணப்படுகின்றது. புடைத்திருக்கும் அளவை அடிப்படையாகக் கொண்டு புடைப்புச் சிற்பங்கள் "தாழ் புடைப்புச் சிற்பங்கள்", "உயர் புடைப்புச் சிற்பங்கள்" என இருவகையாக உள்ளன. எனினும், இவற்றுக்கு இடையேயான எல்லை தெளிவானது அல்ல. எவ்வளவு புடைத்திருந்தால் அது உயர் புடைப்புச் சிற்பம் என்று தெளிவான வரையறை கிடையாது. ஒரே சிற்பத்திலேயே இரண்டு வகைகளும் காணப்படுவது உண்டு. முன்னணியில் இருக்கும் முக்கியமான உருவங்கள் கூடிய அளவுக்குப் புடைத்திருக்க, பின்னணிக் காட்சிகள் தாழ் புடைப்புச் சிற்பங்களாக அமைந்திருப்பதைக் காண முடியும். தொடக்ககாலப் புடைப்புச் சிற்பங்கள் தாழ் புடைப்புச் சிற்பங்களாகவே அமைந்திருக்கக் கூடும். புடைப்புச் சிற்பங்கள் கல், மரம், உலோகம் முதலிய பல்வேறு பொருட்களில் உருவாக்கப்பட்டு உள்ளன. மரத்தில் செதுக்கு வேலைகளைச் செய்வது இலகுவாக இருப்பதால் காலத்தால் முந்திய புடைப்புச் சிற்பங்கள் மரத்தால் ஆனவையாகவே இருந்திருக்கும். ஆனாலும், மரச் சிற்பங்கள் நீண்டகாலம் நிலைத்திருக்கும் வாய்ப்புக் கிடையாது ஆகையால் நமக்குக் கிடைக்கக் கூடிய மிகப் பழைய புடைப்புச் சிற்பங்கள் கல்லில் செதுக்கப்பட்டவையாக உள்ளன. மரம், கல் முதலிய பொருட்களில் செதுக்குவதன் மூலம் பகுதிகளை அகற்றிப் புடைப்புச் சிற்பங்கள் உருவாக்கப்படும் வேளை, உலோகத்தாலான புடைப்புச் சிற்பங்கள் அச்சுகளில் உருக்கி வார்க்கப்படுவதன் மூலமோ, உலோகத் தகடுகளைப் பின்புறம் அடிப்பதன் மூலமோ உருவாக்கப்படுகின்றன. புடைப்புச் சிற்பங்கள் பண்டைக் காலம் முதலே பல்வேறு நாடுகளின் சிற்பக்கலையின் ஒரு அம்சமாக இருந்து வந்துள்ளன. பண்டைக்கால எகிப்து, பபிலோனியா போன்ற இடங்களில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புடைப்புச் சிற்ப முறையிலான சிற்பங்கள் இருந்தன. இவற்றின் அழிபாடுகளை இன்றும் நாம் காணமுடிகின்றது. மேற்கு நாடுகளில் கிரேக்க, ரோம நாகரிகக் காலத்திலும் புடைப்புச் சிற்பங்கள் உருவாக்கப்பட்டன. இவை கட்டிடங்களின் பகுதிகளாகவும், தனியாகவும் செதுக்கப்படன. இந்தியாவிலும் புடைப்புச் சிற்பங்கள் மிகப் பழைய காலம் தொட்டே இருந்து வருவதற்கான சான்றுகள் உண்டு. சிந்துவெளி நாகரிகக் காலத்தைச் சேர்ந்தனவாக, மொகெஞ்சதாரோ, அரப்பா போன்ற இடங்களில் ஏராளமாகக் கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு உருவங்களைக் கொண்ட முத்திரைகள் புடைப்புச் சிற்பங்களின் கருத்துருவின் அடிப்படையைக் கொண்டவை. எனினும் இவை செதுக்கப்பட்டவை அல்ல. அச்சுக்களில் அழுத்தி உருவாக்கப்பட்டவை. சிந்துவெளி நாகரிகக் காலத்துக்குப் பின்னர் இந்தியாவில் உருவான பல நாகரிகக் காலங்களுக்கு உரிய கட்டிடங்களில் புடைப்புச் சிற்பங்கள் சிறப்பிடம் பெற்றுள்ளன. இந்து, பௌத்த, சமணக் கட்டிடங்கள் அனைத்திலுமே இவை காணப்படுகின்றன. தமிழ் நாட்டில் கல்லில் செதுக்கப்பட்ட புடைப்புச் சிற்பங்கள் பல்லவர் ஆட்சிக்காலத்துடனேயே தொடங்குகின்றன எனலாம். கோயில்களைக் குடைவரைகளாகக் கல்லில் உருவாக்கியது பல்லவர் காலத்திலேயேயாம். இக் காலக் குடைவரை கோயில்கள் பலவற்றில் புடைப்புச் சிற்பங்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. மாமல்லபுரம் குடைவரைகளில் காணப்படும் புடைப்புச் சிற்பங்கள் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. பின்னர் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட கற்றளிகளிலும் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டன. குடைவரைகள், கற்றளிகள் என்பவற்றைத் தவிர்த்து, பல்லவர் காலத்து நடுகற்களிலும் தமிழகத்தில் முதன் முதலாகப் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டன. இதற்கு முந்தியகால நடுகற்களில் கீறல் உருவங்களே வரையப்பட்டிருந்தன. மருத்துவர் முடிச்சு மருத்துவர் முடிச்சு (Surgeon's knot) என்பது பாய்ச்சுருக்கு முடிச்சுக்கு (reef knot) எளிமையான திருத்தம் செய்து உருவாக்கப்பட்டது. இதில் முதல் தடம் போடும்போது கூடுதலாக இன்னொரு முறுக்குச் சேர்க்கப்படுவதன்மூலம் இரட்டை நுனி முடிச்சு ஏற்படுத்தப்படுகிறது. இதனால் உராய்வு கூடுதலாக்கப்பட்டு முடிச்சின் பாதுகாப்பு மேம்படுத்தப்படுகிறது. வெட்டுமிடங்களில் தையல் போடும்போது கூடுதலாக இடுவை தேவைப்பட்டால், அறுவை மருத்துவர்கள் இம் முடிச்சைப் பயன்படுத்துவர். இதனாலேயே இம் முடிச்சுக்கு இப்பெயர் ஏற்பட்டது. மருத்துவத்தில் மட்டுமன்றி வீச்சுத் தூண்டில் மீன்பிடித்தலிலும் இந்த முடிச்சுப் பயன்படுகின்றது. "மருத்துவர் முடிச்சு" ஒரு தொடுப்பு முடிச்சாகவும் பயன்படும் என்பதால் இதனை ஒரு [[தொடுப்பு (முடிச்சு)|தொடுப்பு முடிச்சாகச் சிலர் வகைப்படுத்துகின்றனர். [[அணிகலன்]]களின் உற்பத்தியில் இதனைத் தொடுப்பு முடிச்சாகப் பயன்படுத்துகின்றனர். [[பகுப்பு:முடிச்சுகள்]] தில் தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தரணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விக்ரம், லைலா, விவேக் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இரட்டை பௌலைன் இரட்டை பௌலைன் (Double bowline) அல்லது வட்டத் திருப்ப பௌலைன் (round turn bowline) என்பது ஒரு தடவகை முடிச்சு ஆகும். பொதுவான பௌலைனின் ஒற்றைத் திருப்பத்துக்குப் பதிலாக இரட்டை பௌலைனில் வட்டத் திருப்பம் பயன்படுகிறது. இது பொதுவான பௌலைனிலும் கூடுதலான பாதுகாப்பான தடத்தை உருவாக்க உதவுகிறது. கிளிபர்ட் ஆசிலி இதனை "இரட்டை பௌலைன்" என்று குறிப்பிட்டாலும், இப்பெயர் இன்னொரு முடிச்சான இடைப்பகுதி பௌலைன் என்பதற்கும் பொருத்தமாக அமையும். இதனால் சிலர் இம்முடிச்சுக்கு மேலே தரப்பட்டுள்ள மாற்றுப் பெயர்களில் ஒன்றைப் பயன்படுத்துகின்றனர். இன்னொரு மூலத்தில், இரட்டை பௌலைன் என்னும் பெயர் நடுக்கயிற்றில் பொதுவான பௌலைன் முடிச்சிட்டுக் கட்டப்படும் தடத்தைக் குறிப்பிடப் பயன்பட்டுள்ளது. "இரட்டை பௌலைன்" மலையேறுவோர் அதிகமாகப் பயன்படுத்தும் இரண்டு முடிச்சுக்களில் ஒன்று. மற்றது எட்டு வடிவ முடிச்சு. விழுவதினால் முடிச்சில் அதிக சுமை சுமத்தப்பட்டாலும், இரட்டை பௌலைனை சுலபமாக அவிழ்த்துவிடலாம். எட்டு வடிவ முடிச்சில் இது கடினமானது என்பதால் இரட்டை பௌலைனுக்கு இது ஒரு சாதகமான இயல்பு ஆகும். ஆயினும் இம் முடிச்சு எட்டு வடிவ முடிச்சிலும் பாதுகாப்புக் குறைவானது. மருத்துவர் தடம் மருத்துவர் தடம் (Surgeon's loop) மருத்துவர் முடிச்சுப் போலவே கட்டப்படுகிறது. ஆனால் இந்த முடிச்சுக்கு இரண்டாக மடிக்கப்பட்ட நூல் பயன்படுகிறது. இதனால் பிற தடங்களை விட இதற்குக் கூடுதலான நீளம் கொண்ட நூல் தேவைப்படும். அத்துடன் இதன் அளவும் பெரியது. எனினும், விரைவாக வலிமையான தடங்களை உருவாக்குவதற்கு இந்த முடிச்சுச் சிறப்பானது என்பதுடன், பிற தடங்களுடன் இணைப்பதற்கும் இது உகந்தது. சுக்கிரீவன் சுக்கிரீவன் (சமசுக்கிருதம்: : सुग्रीव, "Sugrīva") இராமாயணத்தில் இடம்பெறும் ஒரு கதை மாந்தர். வானரர்களின் அரசனும் வாலியின் சகோதரனும் ஆவான். சீதையைத் தேடி அலைந்த இராமனுக்கும், இலட்சுமணனுக்கும் வானரர்களின் அரசனான சுக்கிரீவனின் நட்புக் கிடைத்தது. சுக்கிரீவனின் அமைச்சராக ஜாம்பவான், அனுமான் ஆகியோர் இருந்தனர். இராமன் சுக்கிரிவனுக்கு அவனது கொடிய அண்ணனான வாலியிடமிருந்து கிஷ்கிந்தையை மீட்டுக் கொடுத்து அவனை கிஷ்கிந்தையின் அரசனாக்கினான். பின்னர் சுக்கிரவன் சீதையைத் தேடுவதற்கு உதவி புரிந்தான். இராமன் சீதையை இராவணனிடம் இருந்து மீட்பதற்க்கு புரிந்த போரில் சுக்கிரீவன் தனது வானரப் படையுடன் உதவி புரிந்தான். சூர்ப்பனகை சூர்ப்பனகை என்பவள் இராமாயணத்தில் இடம்பெறும் ஒரு பாத்திரம். இவள் அரக்கர் குலத்தைச் சேர்ந்த இலங்கை அரசன் இராவணனின் தங்கை. இவளது ஏனைய சகோதரர்கள் கும்பகர்ணன், விபீடணன், கரன் மற்றும் தூஷணன் ஆவார். 14 ஆண்டு வன வாசத்தின் போது இராமன், சீதை மற்றும் இலட்சுமணன் ஆகியோர் தண்டகாரண்யம் காட்டில் வாழ்ந்து வந்தபோது, சூர்ப்பனகை இராமன் மீது ஆசை கொண்டாள். சூர்பனகை ராமனை டையும் பொருட்டு சீதை கொலை செய்ய முயலகையில் அது தடுக்கப்பட்டு இலட்சுமணன்அவளது மார்பகங்களையும், மூக்கையும், காதுகளையும் வெட்டித் துரத்திவிட்டான். இதனால் கோபமடைந்த சூர்ப்பனகை தனது அண்ணன் இராவணனிடம் முறையிட்டாள். தனது தங்கைக்கு நேர்ந்த நிலையையிட்டுச் சினம் கொண்ட இராவணன், இராமனைப் பழிவாங்க எண்ணிச் சீதையைக் கவர்ந்து கொண்டு வந்து இலங்கையின், அசோகவனத்தில் சிறை வைத்தான். சூர்ப்பனகை ஒரு அழகான மங்கை என்பது பல இடங்களில் மறைக்கப்படுகிற ஒரு நிகழ்வு.பொதுவாக அவள் அழகில்லாத பெண்ணாகவே கம்பராமாயணத்தில் சித்தரிக்கப்படுகிறாள். அவள் எத்தகைய அழகு மங்கை என்பதை கம்பன் இராமன் வாயிலாகவே வெளிப்படுத்துகிறார். பிறக்கும்போதே அவள் தன் தாய் கேசி மற்றும் பாட்டி தாடகை ஆகியவர்களையும் அழகில் விஞ்சியிருந்தாள். அவள் கண்களின் அழகை முன்னிட்டு மீனாட்சி என்றும் அழைக்கப்பட்டாள். பொருள்: சிவந்த கயல் மீன் போன்று பிறழும் கரிய நீண்ட கண்கள் கொண்டவள். தேன் ஊறும் தாமரை வசம் செய்யும் திருமகள் இலட்சுமி இவளே என்று இராமன் இயம்புகிறான். கம்பராமாயணத்தில் மேற்படி இருந்தாலும், வால்மீகியில் அவ்வாறு இல்லை. அவள் ராமனைக் கண்டு மோகிக்கும்போது, கிழப்பருவம் எய்திய ஒரு ராட்சசியாகவே வர்ணிக்கப்படுகிறாள். அதன் காரணமாகவே ராமன் அவளைக் கிண்டல் செய்கிறான். அந்தக் கிண்டல் வினையாகிப் போக, அவள் சீதையைக் கொல்ல எத்தனிக்கிறாள். அச்சந்தர்ப்பத்தில் ராமன் அவளை இடைமறித்து, இலக்குவனிடம், அவளை அங்க ஈனப்படுத்த உத்தரவிடுகிறான். கம்பராமாயணத்தில், காதுகளையும், மூக்கையும், முலையையையும் அரியும் லட்சுமணன், மூலகதையான வால்மீகியில் காதுகளையும் மூக்கையும் மட்டுமே அரிகிறான். மூல இராமாயணம் / இடதுசாரிகளின் ராமயாண விமர்சனம் - ஒரு சிறு ஒப்பாய்வு கும்பகருணன் கும்பகருணன் அல்லது கும்பகர்ணன் என்பவன் இராமாயணத்தில் இடம்பெறும் ஒரு கதை மாந்தர். இவன் தமிழர் குலத்தைச் சேர்ந்த இலங்கை அரசன் இராவணனின் தம்பி. பிரம்மனிடம் தவறுதலாக நித்திரை என்னும் வரத்தை கேட்டு பெற்றான். அதனால் அவனது வாழ்வில் பல காலம் தூக்கத்தில் கழிந்தது. இராவணனுக்கு எதிராக செயற்படுவது தெரிந்தும், இராமன் சீதையை மீட்க இராவணனுடன் புரிந்த போரில், இராவணனுக்கு உதவினான். இப்போரில் அவன் இறந்தான். விபீடணன் விபீடணன் (விபீஷணன்), விபீசணன் அல்லது வீடணன் இராமாயணத்தில் இடம்பெறும் ஒரு ஒரு கதை மாந்தர். இவரது மகள் திரிசடை ஆவார். இவன் இராவணனின் தம்பி ஆவான். நீதி நியாயத்தின் படி வாழ்ந்து வந்தான். சீதையை இராவணன் கடத்தி வந்த போது அநியாயம் என்று எடுத்து உரைத்தான். சீதையை விட்டுவிடுமாறு பல ஆலோசனைகள் கூறினான். ஆனால் இராவணன் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டான். நியாயத்துக்கு எதிராக இராவணனுக்கு உதவ விரும்பாத விபீடணன் இராமனிடம் அடைக்கலம் அடைந்து அவனுக்கு உதவினான். இராவணனுக்கு எதிராக இராமன் நடத்திய போரில் இராவணனும், அவனது கூட்டத்தினரும் மாண்டனர். இராமன் விபீடணனை இலங்கை அரசனாக முடி சூட்டினான். கோதண்டராமர் கோயிலின் கருவறைச் சுவர்களில் வரைந்துள்ள இராமாயண நிகழ்வுகளில், வீடணன் குறித்தான சித்திரங்கள். ஆஜில் மென்பொருள் விருத்தி அஜில் மென்பொருள் விருத்தி என்பது ஒரு மென்பொருள் விருத்தி முறையியல் ஆகும். இது கூட்டாக, தாமாக ஒழுங்கு செய்து, மடக்கு முறையில் விருத்திப் பணிகளை செய்யும் முறையாகும். அதிக நேரம் ஆவணப்படுத்தலிலும் வடிவமைப்பிலும் செலுத்தாமல், வேகமாக வேலை செய்யும் பகுதிகளை உருவாக்கி, ஒருங்கிணைத்து, இலக்கை நோக்கி முன்னேறுவது அஜில் முறையின் பண்பாகும். மடக்கு முறையில் விருத்திப் பணிகள் நடைபெறுவதால் மாற்றங்களை செய்வது இலகுவாகிறது. அஜில் மென்பொருள் விருத்தி என்பது பல தரப்பட்ட கூறுகளைக் கொண்டது. 2001 வெளியிடப்பட்ட ஆவணம் இந்த முறையின் கொள்கைகள் பலவற்றை எடுத்துரைப்பதில் ஒரு முக்கியமானதாகும். அருவி மாதிரி அருவி மாதிரி அல்லது அருவி முறையியல் என்பது 'மென்பொருள் மேம்பாட்டு முறையியல்' ஆகும். இது ஒவ்வொரு படிநிலையையும் வரிசையாக கடப்பதை வலியுறுத்துகிறது. இது திட்டமிடுவதற்கும், வடிவமைப்பதற்கும் கவனம் தரும் முறையாகும். மென்பொருள் கட்டமைப்பு பணிகள் சீராக, தொடர்ச்சியாக ஒன்றில் இருந்து ஒன்றுக்கு போவதால் அருவி மாதிரி என்று பெயர் வந்தது. இது புரிந்துகொள்வதற்கு எளிமையானதாகும். எனவே, மென்பொருள் தொடர்பான அடிப்படை நூல்களில் அருவி மாதிரியைப் பற்றிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஏனைய மாதிரிகளை ஒப்பிடும்பொழுது, இது பழைமையானதாகும். மென்பொருளுக்கு என்னென்ன தேவை என்ற தெளிவு கிடைக்கக்கூடிய திட்டங்களுக்கு, அருவி மாதிரியை பயன்படுத்தலாம். சில வாடிக்கையாளர்கள் மென்பொருளுக்கான தங்கள் தேவைகளை அடிக்கடி மாற்றக் கூடும். அத்தகைய திட்டங்களுக்கு அருவி மாதிரி ஏற்றதல்ல. ஏனெனில், தேவைக்குறிப்புகளை முழுமையாக சேகரித்துவிட்டே பிற படிநிலைகளுக்கு செல்ல வேண்டும். அப்படி சென்ற பின்னர், மீண்டும் தேவைக்குறிப்புகளை மாற்றினால், திட்டத்தை முதலில் இருந்து தொடங்க வேண்டியிருக்கும். வின்ஸ்டன் டபிள்யூ. ராய்ஸ் அவர்கள் அறிமுகப்படுத்திய மூல அருவி மாதிரியில், ஒரு மென்பொருளானது பின்வரும் கட்டங்களை வரிசையாக கடந்து உருவாக்கப்படும். இந்த மாதிரியின்படி, 'ஒரு கட்டத்தின் பணிகள் முடிவடைந்தால் மட்டுமே, அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும்' என்கிற நிபந்தனை உள்ளது. எனினும், ராய்ஸ் மாதிரியின் இறுதி வடிவம் உட்பட இதன் திருத்தப்பட்ட மாதிரிகளும் உள்ளன. அவற்றின் நிகழ்முறைகளில் சிறிய, பெரிய வேறுபாடுகள் சேர்க்கப்பட்டிருப்பதை காண முடிகிறது. பெருஞ்சிவப்புப் பிரதேசம் பெருஞ்சிவப்புப் பிரதேசம் அல்லது பெருஞ்சிவப்புப் பகுதி ("Great Red Spot") என்பது சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோளான வியாழனில், தொடர்ந்து அடித்துக்கொண்டிருக்கும் மாபெரும் புயல் மேகத்தைக் குறிக்கும். 300 ஆண்டுகளுக்கு மேலாக இது தொடர்ந்து அவதானிக்கப்பட்டு வருகிறது. இது வியாழனுக்கு ஒரு மிகப்பெரிய சிவப்புக்கண் உள்ளது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. 26,000 கிமீ நீளமும் 12,000 கிமீ அகலமும் உடைய இந்த பெருஞ்சிவப்புப் பகுதியில் இரண்டு பூமிகளை வைக்கலாம்! இதன் சிவப்பு நிறம் கருங்கல் சிவப்பிலிருந்து பழுப்பு வரை மாறிக்கொண்டே இருக்கும். பெரும் சிவப்புப் புள்ளியை 1664 ஆம் ஆண்டில் இராபர்ட் ஊக் ("Robert Hooke") என்ற பிரித்தானிய அறிவியலாளர் முதன் முதலில் அவதானித்தார். பசிபிக் தீவுகளின் ஒன்றியம் பசிபிக் தீவுகளின் ஒன்றியம் அல்லது பசிபிக் தீவுகளின் பொது மன்றம் ("Pacific Islands Forum") என்பது பசிபிக் பெருங்கடலில் அமைந்திருக்கும் இறைமையுள்ள நாடுகளுக்கிடையேயான கூட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் அந்நாடுகளின் அரச மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு ஒன்றியம் ஆகும். இவ்வமைப்பு 1971 ஆண்டில் தென் பசிபிக் ஒன்றியம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. இது பின்னர் வடக்கு மற்றும் தெற்கு பசிபிக் தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியா அடங்கிய பரந்த ஓசியானியா நாடுகளை உள்ளடக்குவதற்காக "பசிபிக் தீவுகளின் ஒன்றியம்" எனப் பெயர் மாற்றப்பட்டது. இவ்வமைப்பின் உறுப்பு நாட்டுகளாவன: ஆஸ்திரேலியா, குக் தீவுகள், மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள், பிஜி, கிரிபட்டி, மார்ஷல் தீவுகள், நவூரு, நியூசிலாந்து, நியுவே, பலாவு, பப்புவா நியூ கினி, சமோவா, சொலமன் தீவுகள், தொங்கா, துவாலு, வனுவாட்டு ஆகியன. 2006 ஆம் ஆண்டில் இருந்து, நியூ கலிடோனியா, மற்றும் பிரெஞ்சு பொலினீசியா ஆகியன துணை உறுப்பு ஆட்சிப்பகுதிகளாக இவ்வொன்றியத்தில் இணைக்கப்பட்டன. 2009 ஆம் ஆண்டில் பிஜியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அந்நாடு காலவரையறையின்றி இவ்வொன்றியத்தில் இருந்து விலக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு அரிமா சங்கங்கள் பன்னாட்டு அரிமா சங்கங்கள் ("Lions Clubs International", LCI) உலகளாவிய ரீதியில் நலிந்தோர்க்கான நலதிட்டங்களை செய்துவருகிறது. மொத்தம் 203 நாடுகளில் 44,500 சங்கங்களில் 1.4 மில்லியன் உறுப்பினர்களுடன் இவ்வியக்கம் செயற்பட்டு வருகிறது. 1879 ஆம் ஆண்டு 13ம் நாள் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அரிசோனா மாநிலத்தில் சிலா ஆற்றின் கரையில் அமைக்கப்ட்டிருந்த ராணுவ முகாம் ஒன்றில் பிறந்த மெல்வின் ஜோன்ஸ் என்பவரால் 1917ம் ஆண்டு இந்த "அரிமா சங்கம்" என்ற அமைப்பு தொடங்கப் பட்டது. பின்னர் அது பல்வேறு கட்டங்களைத் தாண்டி இன்று உலகளாவிய அமைப்பாக 203 நாடுகளில் பரவி உள்ள இவ்வமைப்பு, உலகம் முழுவதும் நலிந்தோர்க்கான நலதிட்டங்களை செய்துவருகிறது. தன்னுடைய ஒன்னரை வயதிலேயே பார்வையும் கேட்கும் திறனையும் இழந்த ஹெலன் கெல்லர் என்ற அம்மையார் 1925ம் ஆண்டு நடைபெற்ற அரிமா சங்க பன்னாடு கூட்டத்தில் பார்வைத் திறனை காப்பதற்கும்,பார்வையற்றோர்க்கு தொண்டு செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்தார். உங்களால் பார்க்கமுடிகிறது, உங்களால் கேட்க முடிகிறது,நீங்கள் இரக்கமுள்ளவர்களாகவும் திகழ்கிறீர்கள். குருட்டுத் தண்மைகெதிரான புனித வீரர்களாக நீங்கள் தொடர்ந்து விளங்கமாட்டீர்களா? என்று வினவினார். அரிமாக்கள் அதை ஏற்று "பார்வைத்திறன் காத்தல், மற்றும் பார்வையிழந்தோர்க்கு பாடுபடுதல்"என்பதை தங்கள் முக்கிய செயல் திட்டமாக ஏற்றுக் கொண்டனர். பெப்ரவரி 3, 1956 ஆம் ஆண்டு மும்பையில் நோசிர் என். பண்டோல் என்பவரைத் தலைவராக கொண்ட புதிய சங்கம் தொடங்கப்பட்டது. 1957ம் ஆண்டு அரிமா மாவட்டம் 304 தொடங்கப்பட்டு, பண்டோல் முதல் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 23.7.1957ல் தென்னகத்தில் முதன் முதலாக பெங்களூரிலும், பின்னர் 21.9.1957இல் சென்னையிலும் தொடங்கப்பட்டது. இந்திய தேசத்தை முழுவதும் உள்ளடக்கிய 304, கூட்டுமாவட்டம் 1973-74ல் 321,322,323,324 என்று பிரிக்கப்பட்டது. வருவாய் மாவட்டங்கள் சென்னை,செங்கற்பட்டு,வட ஆற்காடு, தென் ஆற்காடு, தஞ்சை, திருச்சி ஆகியவை 324A மாவட்டம் என்றும் தமிழகத்தின் மீதமுள்ள மாவட்டங்கள் 324B என்றும், ஆந்திரமாநில சங்கங்கள் 324C என்றும், கர்நாடக மாநில சங்கங்கள் 324D என்றும், கேரள மாநில சங்கங்கள் 324E எனவும் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன. ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர் மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளடக்கியது இந்த அரிமா மாவட்டம் 324B2. 1817 1817 (MDCCCXVII) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமானது. முதனிலைத் திராவிட மொழி முதனிலைத் திராவிட மொழி அல்லது தொல்திராவிடம் (தொன்மத்தமிழ்/Proto-Dravidian) என்பது, திராவிட மொழிகளுக்கான முதனிலை மொழி ஆகும். முதனிலை மொழிகள் என்பன கருதுகோள் அடிப்படையிலான மொழிகள். இவை மொழியியலாளர்களாற் செய்யப்படுகின்ற மீளுருவாக்கங்கள். அவற்றுக்கு வரலாற்றுப் பதிவுகள் ஏதும் இருப்பதில்லை. இதனால் முதல் நிலைத் திராவிட மொழியும் ஒரு கருதுகோள் அடிப்படையிலானதும், பயன்பாட்டிலுள்ள திராவிட மொழிகளை ஆய்வு செய்து அவற்றின் அடிப்படையில் மீளுருவாக்கம் செய்யபட்டதுமான ஒரு மொழியாகும். இம்முதனிலைத் திராவிட மொழி, கிமு 1500 அளவில் முதனிலை வட திராவிடம், முதனிலை நடுத் திராவிடம், முதனிலைத் தென் திராவிடம் எனப் பிரிந்ததாகச் சிலர் கூறுகின்றனர். வேறு சில மொழியியலாளர்கள், திராவிட மொழிகளின் துணைக் குடும்பங்களிடையே காணப்படும் வேறுபாடுகளின் அளவைப் பார்க்கும்போது இப் பிரிவு இன்னும் முன்னதாகவே ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதுகின்றனர். எல்லாத் திராவிட மொழிகளையும் உள்ளடக்கி, முதனிலைத் திராவிட மொழி வடிவங்களைக் காட்டும் ஒரே நூல், திராவிடச் சொற்பிறப்பியல் அகரமுதலி ஆகும். இதுவும், அதிக விளக்கங்கள் எதுவும் கொடாமல் தொடர்புள்ள சொற்களின் பட்டியலை மட்டுமே தருகிறது. செங்குந்தர் செங்குந்தர் அல்லது கைக்கோளர் எனும் தமிழ் சாதி இந்திய மாநிலமான தமிழ் நாடு மற்றும் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியில் இருக்கும் சாதியினரைக் குறிக்கும். இவர்கள் கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகத்தின் சில பகுதிகளிலும் அண்மை நாடான இலங்கையின் வட மாகாணத்திலும் வாழ்கின்றனர். இச்சமூக மக்கள் "கைக்கோள முதலியார்" என்கிற பெயராலும் அழைக்கப்படுவர். செங்குந்தர் முதலியார் எனும் பட்டத்தைத் தம் பெயருக்குப் பின்னால் போடுவர். செங்குந்தர் முருகனின் தாயான பார்வதியின் சிலம்பில் இருந்த ஒன்பது இரத்தினங்களிலிருந்து பிறந்தவர் என்பதால், திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தின் பொழுது ஒன்பது செங்குந்த வீரர்களாய் உடையணிந்து வீரவாகுவின் தளபதிகளுடன் குமரன் சூரனை வதம் செய்வது இன்றும் நடைமுறையில் உண்டு. திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெறும் மாசித்திருவிழாவில் பன்னிரண்டாம் நாள் திருவிழா செங்குந்தர் குலத்தவரின் மண்டகப்படியாக இன்றும் நடைபெறுகிறது. "தெரிஞ்ச கைக்கோளப்படை" என்பது சோழர்களின் படைப்பிரிவில் ஒன்று என்று கல்வெட்டாய்வுகள் தெரிவிக்கின்றன. செங்குந்தர்களை பற்றி பல்வேறு புலவர்கள் பல காலகட்டங்களில் பாடியதை தொகுத்து செங்குந்தர் பிரபந்தத் திரட்டு என்று நூலாக பதிக்கப்பெற்றுள்ளது. இடைக்காலச் சோழர்களுக்கு முன்னரே கைக்கோளர்களை பற்றிய செய்திகள் பல சமணர் கல்வெட்டுகளிலும் கண்டறியப்பட்டுள்ளன. பிற்காலச் சோழர் காலத்திற்கு பிறகு (13ஆம் நூற்றாண்டுக்குப்) பின்னர் முழுமையாக நெசவுத் தொழிலுக்கு மாறினர். நெசவுத் தொழிலோடு, நிலக் கிழார்களாகவும், விவாசாயிகளாகவும், வணிகர்களாகவும் கூட உருவெடுத்தனர். திருப்பதி, திருவரங்கம் போன்ற ஆலயங்களை நிர்வகிக்கும் பொறுப்பிலும் திருவண்ணாமலையில் பல்வேறு சடங்குகளை நடத்தவும் உரிமைபெற்றிருந்தனர். மேலும் பல ஆலயங்களுக்கு நிலம், நடை உள்ளிட்ட பல்வேறு நிவந்தங்களை இவர்கள் அளித்திருக்கின்றனர். திவாரக நிகண்டு, என்ற சூத்திரத்தின் மூலம் அகம்படிகளான கைக்கோளர் சேனாதிபதி பதவியை அடையலாம் என்பதை அறிய முடிகின்றது.மேலும் கைக்கோளர் குறிஞ்சி நாட்டார் எனக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுவதால் இவர்கள் குறிஞ்சி நில அகம்படிகளாகலாம் செங்குந்தர்கள் சிறந்த வீரர்கள் என்பது "சண்முகன்றன் சேனாபதிகளும் சேனையும் ஆனவர் செங்குந்தரே" "சிங்களமாதிய பல்தேயம் வென்றவர் செங்குந்தரே" என்ற, பழைய நூல்களில் வரும் அடிகளால் விளங்கும். காங்கேயன் 12 ஆம் நூற்றாண்டில் வாழந்தவன். புலவர் ஒட்டக்கூத்தரைப் பேணியவன். இரண்டாம் குலோத்துங்கன் ஆட்சிக்கு உட்பட்டு ஆண்டுவந்த சிற்றரசன். இவனது தலைநகர் காஞ்சிபுரம். போர் மறவர்களாக விளங்கிய செங்குந்தர் மரபினன். புலவர் ஒட்டக்கூத்தர் இவனைப் போற்றிய நூல் காங்கேயன் நாலாயிரக் கோவை. செங்குந்தர் குலங்களின் வரிசை இம்மக்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் குறிப்பாக அரியலூர்,நல்லாம்பாளையம்,உஞ்சினி,பழூர்,ஆண்டிமடம்,ஜெயம்கொண்டம்,மீன்சுருட்டி,வேலூர், வந்தவாசி,குடியாத்தம்,திருவண்ணாமலை,செய்யாறு,காஞ்சிபுரம்,உத்திரமேரூர்,செஞ்சி,செங்கல்பட்டு, திருவள்ளூர்,திருத்தணி,செங்குன்றம்,போரூர்,கும்மிடிப்பூண்டி,நகரி,மன்னடி,மணலி,வடபழனி,புதுச்சேரி, சாலிகிராமம்,விருகம்பாக்கம்,வளசரவாக்கம்,விழுப்புரம்,திருக்கோவிலூர்,மயிலம்,உளுந்தூர்பேட்டை,சேலம்,மேட்டூர்,திருச்செங்கோடு,வெப்படை,சங்ககிரி,நாமக்கல்,ஈரோடு,திருப்பூர்,பொள்ளாச்சி,கோவை,தருமபுரி, பாலக்கோடு,தஞ்சை,திருநாகேஸ்வரம்,நச்சியார்கோயில்,செம்மனார்கோயில்,பிள்ளையாம்பேட்டை, ஓரத்தூர்,மாப்பிள்ளைக்குப்பம்,நாகப்பட்டினம்,திண்டுக்கல்,பழனி,கடலூர், மேல்பட்டாம்பாக்கம்,புறுகீஸ்பேட்டை,வண்டிப்பாளயம், வடலூர்,நெய்வேலி,சிதம்பரம்,குறிஞ்சிப்பாடி,பெருமாத்தூர்,புவனகிரி,மதுரை,திருமங்கலம்,கோவில்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர்,திருப்பரங்குன்றம்,திருநெல்வேலி,சங்கரன்கோவில்,புளியங்குடி,தி.நா.புதுக்குடி, சிந்தாமணி, வள்ளியூர்,திருச்செந்தூர்,திருத்துறைப்பூண்டி ஆகிய பகுதிகளில் மிகுதியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் தொழில் நெசவாக இருந்தாலும், ஏராளமானோர் நூல் மற்றும் ஆடை சார்ந்த வணிகத்திலும் பிற தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். நீர் முடிச்சு நீர் முடிச்சு (Water knot) என்பது, தட்டையான நாடாக்களின் இரு முனைகளைத் தொடுப்பதற்குப் பயன்படும் ஒரு முடிச்சாகும். இதை, நாடா முடிச்சு (tape knot), புல் முடிச்சு (grass knot), ஊடுதொடர் நுனிமுடிச்சு (overhand follow-through) போன்ற வேறு பெயர்களாலும் குறிப்பிடுவது உண்டு. மலையேறுதலில் தாங்கு கயிறுகளை உருவாக்கும்போது இதனைப் பயன்படுத்துவர். முதலில் ஒரு நாடாவின் முனையில் நுனி முடிச்சு ஒன்று போடப்படும். பின்னர் அடுத்த நாடாவின் முனையை எதிர்த் திசையில் இருந்து முடிச்சினுள் செலுத்தி முதல் நாடாவை தொடர்ந்து செல்லவேண்டும். முனைகள் 3 அங்குலமாவது நீண்டிருக்குமாறு விட்டு முழு உடல் நிறையையும் பயன்படுத்தி முடிச்சை இறுக்கிக் கொள்ளவேண்டும். மீண்டும் வழுக்கிக்கொண்டு வெளியில் வராமல் இருக்க, முனைகளை ஒட்டு நாடாக்களினால் அருகில் உள்ள நிலைப்பகுதியோடு ஒட்டிவிடலாம் அல்லது தைத்து விடலாம். பெரும் பூநாரை பெரும் பூநாரை ("Greater Flamingo") என்பது நாரைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இதன் அறிவியல் பெயர் பீனிகாப்டெரசு ரோசசு என்பதாகும். நம் வீடுகளில் வளரும் வாத்தின் பருமனுடைய இப்பறவைக்கு நீண்ட முடியற்ற சிவந்த கால்களும், நீண்டு வளைந்த கழுத்தும், குறுகிய வளைந்த அலகும் இருக்கும். கால் விரல்கள் வாத்துக்கு இருப்பது போலவே சவ்வினால் இணைந்திருக்கும். நிமிர்ந்து நின்றால் 1 1/2 மீட்டர் உயரம் இருக்கும். இப்பறவைகள் செந்நிறம் கலந்த வெள்ளையுடலும் கரு நிறமான இறக்கை ஓரமும் கொண்டவை. நிலத்திலும் அதிக உப்புத்தன்மை அதிகமுள்ள ஏரிகளில் கடும் வெப்பத்தையும் தாங்கி வாழும் பூநாரை, தமிழகத்திலுள்ள கோடியக்கரை வனவுயிரினங்கள், பறவைகள் உய்விடம் புகலிடத்திற்கு வரும் எண்ணற்ற பறவைகளில் மிகவும் அழகான ஒன்று. இப்பறவைகள் கூட்டம் கூட்டமாகப் பறந்து உயரச் செல்லும் காட்சி மனதைக் கவரும் தன்மை உடையது. பூநாரைகள் எளிதில் நீந்தக் கூடியன. சற்று ஆழமான நீரில் இடை தேடும்போது இதன் வால் மட்டும் நீருக்கு வெளியேயும், உடல் முழுவது நீருக்குள்ளும் இருக்கும். இந்த முக்குளித்த நிலையிலேயே புழுக்களை அரித்து உண்ணும். செங்கால் நாரைகள் வாத்து பறப்பது போன்ற அமைப்பிலோ அலையலையான நீண்ட சாய்வுக் கோடுகளாகவோ வேகமாகச் சிறகுகளை அடித்துப் பறந்து செல்லும். ஒடுங்கிய கழுத்தை நீட்டிப் பறக்கும்போது சிவந்த கால்களையும் சேர்த்துப் பின்னால் நீட்டிக் கொள்ளும். இவை சபதமிடுவதில்லை. ஆனாலும் சில சமயங்களில் வாத்துகள் போன்று ஒலி எழுப்பக்கூடியவை. இரை மேயும்போது கூட்டத்தில் உள்ள அனைத்துப் பறவைகளும் தொடர்ச்சியாகப் பிதற்றிக் கொண்டிருப்பது போல் தோன்றும். ஆழமற்ற நீரில் இறங்கி வரிசையாக நின்று, தலையை நீருக்குள் ஆழ்த்தித் தனக்கே உரிய விந்தையான மேல் அலகைத் தரையில் படும்படி கவிழ்த்து வைத்து முன்னே இழுத்துக் கொண்டு சேற்றைக் கலக்கிய வண்னம் நடக்கும். இந்நிலையில் இதன் மேல் அலகு கிண்ணம் போல் அமைந்து, சேற்று நீர் அதில் சேகரிக்கப்படுகிறது. சதைப் பற்றுள்ள நாக்கு இந்நீரினுள் ஒரு மத்துப் போல கடைந்தவாறு, புழு புச்சிகளை அலசும். இதன் சீப்பு போன்ற அலகு ஓரங்களில் உள்ள இடைவெளிகள் வழியே நீர் வெளியேறி பூச்சிகள் அலகிலேயே தங்கிவிடும். இதன் அலகு ஒரு வடிகட்டி போல செயல்படும். சிறு நண்டு, கூனிறால்கள், பூச்சிகள், புழுக்கள், நிலபுழுக்கள், நீர்த்தாவரங்களின் விதைகள், அழுகிப் படிந்த பொருட்கள் இவை பூநாரையின் முக்கிய உணவுப் பொருள்களாகும். பூநாரைகள் சேறு படிந்த கடற்கரை மேடுகளிலும், உப்புக் க்லப்புள்ள அகன்ற நீர்த் தேக்கங்களிலும் ஆழமிலாக் குளங்களிலும் கூட்டம் கூட்டமாக வாழும் இயல்புடையவை. பூநாரைகள் இந்தியாவின் பல பகுதிகளில் இடம்பெயராமல் வாழ்பவை. என்றாலும் சிறிதளவு உள்நாட்டுக்குள்ளேயே இடப்பெயர்வு செய்கின்றன. இவை சிறு சிறு கூட்டங்களாகவோ பெருங் கும்பல்களாகவோ வாழும். சில கூட்டங்களில் ஆயரத்துக்கு மேற்பட்ட பறவைகளும் இருக்கலாம். இந்தியாவில் குஜராத்தின் கச்சு (Rann of Kutch) வளைகுடாப் பகுதியில் இவை அதிக அளவில் காணப்படுகின்றன. அக்டோபரிலிருந்து மார்ச்சு மாதம் வரை ஏராளமான பறவைகள் இங்கு கூடுகின்றன. அப்பொழுது நீரின் தன்மையும் இவற்றுக்கு ஏற்றதாக உள்ளது. இக்காலத்தில் சுமார் ஒன்றரை இலட்சம் பறவைகள் இங்கு கூடுகின்றன. இக்காலங்களில் குஞ்சு பொரிக்கும் கூட்டங்களில் இது தான் மிகப் பெரியதாகும். பல்லாயிரம் பூநாரைகள் ஒன்றாக கூடி இருப்பது இவற்றின் தனித்தன்மை - இதுவே இவற்றுக்கு பாதுகாப்பும் அளிக்கின்றது. நீண்ட கால்களையும் நீண்ட கழுத்தையும் நீட்டியபடி பூநாரைகள் கூட்டம் கூட்டமாக பறந்து செல்வது ஒரு கண்கொள்ளாக் காட்சியாகும். பூநாரைகள் கூடுகட்டி, முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. இவற்றின் கூடு சேற்று மண்ணைக் குவித்து ஏற்படுத்தப்படுகின்றது.பூநாரை ஈரமான களிமண்னால் கூடு கட்டும். ஈரமான களிமண்ணைக் உயரமாகக் கூப்பி வைக்கப்பட்ட கிண்ணம்போல் இதன் கூடு இருக்கும். சூரிய வெப்பத்தால் உலந்து கெட்டியாக இதன் கூடு அடுப்பில் வைத்து சுட்டது போலவே நேர்த்தியாக இருக்கும் இது சுமார் 30 செ.மீ உயரமிருக்கும். இனச்சேர்க்கை முடிந்து, இதன் உச்சியிலுள்ள குழிவில் சராசரியாக ஒன்று அல்லது இரண்டு முட்டைகள் இடப்படும். முட்டையிட்டபின் ஆண், பெண் பூநாரைகள் இரண்டுமே ஒன்று மாற்றி ஒன்று அடை காக்கும். அடைகாக்கும் நாரை இதன்மேல் காலை மடக்கிக் கொண்டு தான் உட்கார்ந்து அடைகாக்கும். பூநாரைகள் உண்ணும் கூனி போன்ற ஒரு வகை கிரத்தேசிய உயிரினம் தான் இவற்றின் இளஞ்சிவப்பு நிறத்துக்கு காரணமாகும். பறவைகள் காப்பகத்தில் வைத்து பராமரிக்கப்படும் பூநாரைகள் இந்நிறமற்று காட்சியளிப்பது நாம் அறிந்ததே. மாறிவரும் இயற்கை சமநிலை காலமாக இப்பறவையினம் குறைந்து கொண்டே வருகிறது. மகிழ்வூட்டும் இப்பறவைகளின் கோடியக்கரை வரத்து வருடாவருடம் குறைந்து கொண்டே வருகிறது. கரிமமற்ற காடி கரிமமற்ற காடி (Mineral acid) என்பது கரிமமற்ற (inorganic) வேதியியல் சேர்மங்களால் ஆன காடியாகும். பெயருக்கு ஏற்றாற்போல இவ்வகைக் காடிகளில் கரிம அணுக்கள் இருக்காது. கனிம அமிலங்கள் என்ற பெயராலும் இதை அழைக்கலாம். மற்ற காடிகளைப் போலவே கரிமமற்ற காடிகளும் நீரில் கரைந்து இருக்கும் பொழுது ஐதரச மின்மவணுக்களை (ion) விடுகின்றன. பரவலாகவும் பொதுவாகவும் பயன்படுத்தப்படும் கரிமமற்ற காடிகள் கந்தகக் காடி, ஐதரோகுளோரிக் காடி, நைட்ரிக் காடி ஆகையவை ஆகும். கரிமமற்ற காடிகளில் மிகவும் வலிமை மிக்கக் காடிகள் (எ.கா. கந்தகக் காடி) முதல் மிக மென்மையான காடிகள் (எ.கா. போரிக் காடி) வரை உள்ளன. கரிமமற்ற காடிகள் நீரில் நன்றாகக் கரைவனவாகவும், கரிமக் கரைப்பான்களில் கரையாதனவாகவும் உள்ளன. கரிமமற்ற காடிகள் பற்பல வேதியியல் தொழிலகங்களில் பல்வேறு வேதியியல் பொருட்களை உருவாக்கிப் படைக்க முதற்பொருளாகப் பயன்படுகின்றன. இக் காடிகள், குறிப்பாகக் கந்தகக் காடி, நைட்ரிக் காடி, ஐதரோகுளோரிக் காடி போன்றவை, பெரிய அளவிலே ஆக்கப்படுகின்றன. கரிமமற்ற காடிகள், அவற்றின் அரிப்புத் தன்மைக்காகவும் பயன்படுத்தப் படுகின்றன. எடுத்துக் காட்டாக நீர்த்த ஐதரோகுளோரிக் காடி கொதிகலன்களின் உட்பகுதியில் படிந்திருக்கும் படிவுகளை அரித்தெடுக்கப் பயன்படுகின்றது. இதனை படிவு-நீக்கல் (de-scaling) என்பர். பாசுபாரிக் காடி பாசுபாரிக் காடி (phosphoric acid) என்றும் "ஆர்த்தோபாசுபாரிக் காடி" (Orthophosphoric acid)என்றும் "பாசுபாரிக் (V) காடி" என்றும் அழைக்கப்படும் பாசுபரசு உள்ள ஒரு கரிமமற்ற காடி. இக்காடியில் மூன்று ஐதராக்சைல் (-OH) குழுக்கள் உள்ளன. பாசுபாரிக் காடி ஐதரச அணுக்களும் நான்கு ஆக்சிசன் அணுக்களும் ஒரு பாசுபரசு அணுவும் சேர்ந்த சேர்மங்களால் ஆனது. இதன் வேதியியல் வாய்பாடு HPO. மூன்று நீர் (HO). மூலக்கூறுகளுடன் ஒரு பாசுபரசு பென்ட்டாக்சைடு (PO) மூலக்கூற்றை சேர்த்தால் இரண்டு பாசுபரசுக் காடி மூலக்கூறுகள் கிட்டும். ஆர்த்தோபாசுபாரிக் காடி மூலக்கூறுகள் பலவும் தன்னுடனே சேர்ந்து பல்வேறு வேதியியல் சேர்மங்களாகக்கூடும். இவையும் பாசுபாரிக் காடிகள் என்று கூறப்படுகின்றன. பாசுபாரிக் காடிகள் பெரும்பாலும் வேளாண்மைத் தொழிலில் உரம் செய்யப் பயன்படுகின்றது. இது தவிர இரும்புத் துருவை நீக்கவும், பூச்சிக் கொல்லிகளிலும், பல் மருத்துவத்திலும், சிலிக்கான் நுண்மின்சுற்றுகள் (தொகுசுற்றுகள்) உருவாக்குவதில் அலுமினியத்தை அரித்தெடுக்கவும், புளிப்பு சுவை தருவதால் சில கோலா குடிநீர்மங்களிலும் பயன்படுத்தபடுகின்றது. நீர் கலக்கா (நீரற்ற) தூய பாசுபாரிக் காடி ஓர் வெண்மையான திண்மம். இது 42.35 °C வெப்பநிலையில் உருகி நிறமற்ற பிசுப்புமையான நீர்மமாக மாறுகின்றது இக் காடியின் "ஆர்த்தோ" என்னும் முன்னொட்டு பாலி பாசுபாரிக் காடிகள் என்று அழைக்கப்படும் மற்றவற்றில் இருந்து பிரித்துக் காட்டவே. ஆர்த்தோபாசுபாரிக் காடி நச்சுத்தனமையற்ற, கரிமமற்ற, வலிமைகுறைந்த (மென்மையான), மூன்று ஐதரச (முப்புரோட்டிக்) காடி. இது அறை வெப்ப, அழுத்த நிலைகளில் திண்மநிலையில் உள்ளது. ஆர்த்தோபாசுபாரிக் காடி முனைத்தன்மை கொண்ட மூலக்கூறு ஆகையால நீரில் எளிதில் கரையும். ஆர்த்தோ மற்றும் பிற பாசுபாரிக் காடிகளின் ஆக்சிசனாக்க நிலை +5; எல்லா ஆக்சிசன் அணுக்களின் ஆக்சிசனாக்கு நிலை -2, ஐதரசனின் நிலை +1. ஆர்த்தோபாசுபாரிக் காடி, மூன்று ஐதரசக்காடி என்பதால் மின்மமாக்கப்பட்ட ஐதரச அணுவை H மூன்று மடங்கு நீரில் பிரியச் செய்ய இயலும். இது நீர் மூலக்கூறுடன் இணைந்து கீழ்க்காணும் வேதியியல் வினைகளுக்கு உட்படும். செயலாக்கம் (கணினியியல்) செயலாக்கம் என்பது நிறைவேற்றப்படும் ஒரு கணினி நிரல் தொகுதியாகும். ஒரு நிரல் பல செயலாக்கங்களைக் கொண்டிருக்கலாம். ஒவ்வொரு செயலாகத்துக்கும் இடையே தரவுப் பரிமாற்றம் தேவைப்படலாம். செயலாக்கத்தை இயக்குதளம் விபரித்து, கால அட்டவணைப்படுத்தி நிறைவேற்றி, கட்டுப்படுத்துகிறது. வியாபாரிமூலை வியாபாரிமூலை என்பது இலங்கையின் வடமுனையில் வடமராட்சிப் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஊர். பருத்தித்துறையில் இருந்து மேற்காக காங்கேசன்துறை நோக்கி நீளும் கடற்கரையோர வீதியில் ஒரு கிலோமீற்றர் தூரம் சென்று மாலிசந்தி நோக்கி கிளைவிடும் தார்வீதியில் திரும்ப வியாபாரிமூலை கிராமம் வருகிறது. வியாபாரிமூலையின் ஒவ்வொரு குறிச்சியும் தனித்துவமான பெயர்களைக்கொண்டது. வெள்ளையற்றணி, சிப்பிமணலடி, பெயர்ந்த ஆலடி, விராவளை, சின்னக்கிளானை, பெரியகிளானை, வாரியார்வளவு, கம்பளியப்பான், பலாப்பத்தை என்று காரணப் பெயர்களுடன் குறிச்சிகளின் பெயர்கள் உள்ளன. இக்கிராமத்தில் வணிகர்கள் நிறைந்திருந்ததால் இதற்கு வியாபாரிமூலையென்று பெயர் வந்தது என்பர். சூழல் மாறி சூழல் மாறிகள் என்பது ஓரு குறிப்பிட்ட கணினியியில் ஒரு நிரலின் செயலாக்கங்கள் எவ்வாறு நிறைவேறும் என்பதை தீர்மானிக்க கூடிய பெறுமானங்கள் ஆகும். நிரல் எங்கிருந்து ஏவப்படுகிறது, யார் ஏவுகிறார்கள், ஏவும் கணினியின் அல்லது வழங்கியின் பெயர் என்ன, ஏவப்படும் திகதி நேரம் என்ன என பலதரப்பட்ட தகவல்கள் சூழல் மாறிகள் ஆகும். செயலாக்கம் குறிப்புரை (நிரலாக்கம்) நிரலாக்கத்தில் குறிப்புரை அல்லது குறிப்பு ("Comment") என்பது நிரல் மொழியில் ஒரு கூறு ஆகும். ஒரு நிரலில் சேக்கப்படும் அந்த நிரலின் வடிவமைப்பு, ஏரணம், செயற்ப்பாடுகள் பற்றிய குறிப்புகளே குறிப்புரை ஆகும். இவை பொதுவாக நிரல்மொழிமாற்றிகளால் இவை கணித்தலில் பொருப்படுத்தப்படாது. வெவ்வேறு மொழிகளில் குறிப்புரைக்கான குறியீடு மாறுபடுகிறது. நிரல் மொழி ஆங்கிலத்தில் அமைந்தாலும், குறிப்புரைகள் தமிழ் உட்பட எந்த மொழியிலும் அமையலாம். குறிப்புரைகள் நிரலாளரோ, வேறு ஒருவரோ நிரலை வாசிக்க, திருத்த உதவுகின்றன. நிரலாளர் என்ன செய்ய முயல்கிறார் என்பதை அவருக்கும் பிறருக்கு உணர்த்த இது உதவுகிறது. பலர் நிரல் எழுத தொடங்க முதல் என்ன செய்யப்பட வேண்டும் என்று விபரித்து குறிப்புரை எழுதவர். பின்னர் நிரல் எழுதும் போது எப்படிச் செய்யப்படுகிறது என்று விபரிப்பர். செய்யப்படும் திருத்தங்கள் பற்றியும் குறிப்புரைகள் எழுதப்படும். இந்த வகையில் குறிப்புரை ஆவணப்படுத்தலில் ஒரு அங்கமாகும். நிரலாக்கத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் நிரலை விபரித்து குறிப்புரை எழுதுவது ஒரு நல் ஒழுக்கமாக கருதப்படுகிறது. குறிப்பாக ஒவ்வொரு வகுப்புகள், செயலிகளின் செயற்பாடுகள், உள்ளீடுகள், வெளியீடுகள் பற்றி குறிப்புகள் அவசியமாக கருதப்படுகின்றன. சிலர் ஒவ்வொரு 5 வரிக்கும் இடையே தகுந்த குறிப்புரை தேவை என கருதுகிறார்கள். போர்ட்ரான் போர்ட்ரான் அல்லது ஃபோர்ட்ரான் (Fortran, முன்னர் FORTRAN என்று தலைப்பெழுத்தில் இருந்தது) என்பது பொதுப்பயன்பாட்டுக்கான படிமுறையாக, ஆணைக்கோவைகளை நிரலாக எழுதி இயக்கப்படும் உயர்நிலைக் கணிமொழி. இது எண்கணிப்பாகத் தீர்வு காணவேண்டிய பணிகளுக்கு மிகச்சிறந்த மொழியாக நெடுங்காலமாகக் கருதப்பட்ட மொழி. ஃபோர்ட்ரான் மொழி ஐபிஎம் நிறுவனத்தின் கலிப்போர்னியாவில் உள்ள சான்ஃகொசே (San Jose) கிளையகத்தில் 1950களில் அறிவியல் பொறியியல் பயன்பாட்டிற்காக வளர்த்தெடுக்கப்பட்டு, அத்துறைகளின் முதன்மையான மொழியாக அரை நூற்றாண்டுக்கு மேலாக இருந்து வந்த மொழி. இன்றும் செறிவாக எண்கணிப்புகள் செய்ய வேண்டிய பயன்பாடுகளுக்கு (எ.கா. வானிலை முற்கூறல் பணிகள், பாய்மவியல் கணிமை, வேதியியல் கணிமை போன்ற துறைகள்) இது விருப்பமான தேர்வாக உள்ளது. உயர்திறன் கணிமைகளுக்கு மிகவும் பரவலாக இன்றும் இது தேர்வாகும் மொழி. உலகின் முவரிசை மீவிரைவுக் கணினிகளின் திறனை அளவீடு செய்யும் அளவலகு நிலைகளை (benchmarks) நிறுவி, வரிசைப்படுத்துவதிலும் இம்மொழி பயன்படுகின்றது. ஃபோர்ட்ரான் (FORTRAN - FORmula TRANslator) மொழி 1957 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஐபிஎம் நிறுவனத்தைச் சார்த யோன் பேக்கசு என்பவர் இதை ஆக்கினார். ஃபோர்ட்ரான் மொழி பலவடிவங்களில் வளர்ந்து வந்துள்ளது. எழுத்துகளை அதிகமாகப் பயம்படுத்து பணிகளின் தேவைகளை நிறைவு செய்ய ஃபோர்ட்ரான் 77 (FORTRAN 77) என்னும் நிரல்மொழியும், பின்னர் வரிசையடுக்குகள் மொழியும் (array programming), தனித்துப் பொருத்தப்படவல்ல மாடுலர் நிரல் மொழியும், ஆப்சக்டு-ஓரியன்டடு மொழி எனப்படும் செயப்பாட்டுப் பொருள் அடிப்படை நிரல்மொழியும், பின்னர் ஃபோர்ட்ரான் 95 என்னும் மொழியும், இன்னும் பின்னர் பொதுமைக்கூறு நிரல்மொழியும் (ஃபோர்ட்ரான் 2003) என பல தற்காலக் கூறுகளைக் கொண்டு விரிவடைந்து வந்துள்ளது. இடையினத் திருமணம் இடையினத் திருமணம் அல்லது இனக்கலப்புத் திருமணம் என்பது வெவ்வேறு இனத்தைச் சார்ந்தோர் திருமணம் செய்வது ஆகும். இவர்கள் குழந்தைகள் பெற்றால், இக் குழந்தைகள் பல்வேறு இனங்களின் மரபைக் கொண்டிருக்கும். எ.கா கறுப்பர் வெள்ளையர் ஆகியோருக்கு இடையே நடக்கும் திருமணம், தமிழர் பறங்கிகள் திருமணம் போன்றவை ஆகும். மிகவும் வேறுபட்ட இனங்களைச் சார்ந்தவர்களுக்கு இடையே திருமணம் அதிகம் நடைபெறுவது ஐக்கிய அமெரிக்காவில் ஆகும். திருமணம் செய்பவர்களில் 3 மில்லியனுக்கும் மேற்பட்டோர் இவ்வகையை சேர்ந்தவர்களே. இரட்டை நுனி முடிச்சு இரட்டை நுனி முடிச்சு (Double overhand knot) என்பது வழமையான நுனி முடிச்சின் ஒரு விரிவாக்கம் ஆகும். நுனி முடிச்சின் தடத்தில் இன்னொரு சுற்றுப் போடுவதன் மூலம் "இரட்டை நுனி முடிச்சு" முடியப்படுகிறது. இதனால் இம்முடிச்சுச் சற்றுப் பெரிதாக இருப்பதுடன் இறுகிய பின்னர் அவிழ்ப்பதற்குக் கடினமானதாகவும் இருக்கிறது. இம்முடிச்சு, மருத்துவர் முடிச்சின் முதல் பகுதியாகவும், இரட்டை மீனவர் முடிச்சின் இரு பகுதிகளாகவும் அமைகின்றது. இறுக்கு முடிச்சு என்பதும், பொருளொன்றைச் சுற்றி அமைக்கப்படும் இரட்டை நுனி முடிச்சின் மாற்றியமைக்கப்பட்ட ஒரு வடிவமாகும். இது ஒரு சிறந்த தடை முடிச்சு. முறைப்படி முடியும் போது இது ஒரு சீர்மையான முடிச்சாக அமையும். பொதுவான நுனி முடிச்சொன்றைப் போட்டபின் செயல் நுனியைத் தடத்துக்குள் செலுத்தி இன்னொரு முறை சுற்றினால் இரட்டை நுனி முடிச்சுக் கிடைக்கும். பார்த்து இதன் அமைப்பைப் புரிந்து கொள்வதும், இதனைக் கட்டுவதும் மிகவும் இலகுவானது. (இடப்புறம் உள்ள படத்தைப் பார்க்கவும்). இதனை வேறு வழிகளிலும் முடிய முடியும். கயிற்றின் நுனைகளில் போடப்படும் தடை முடிச்சாகப் பயன்படும் அதே வேளை இது, பிற முடிச்சுகளின் ஒரு பகுதியாகவும், பிற முடிச்சுக்களுக்குக் கூடுதலான பாதுகாப்பை வழங்குவதற்கும் பயன்படுத்தப்படுகின்றது. முளைக் கண்ணிமுடிச்சு முளைக் கண்ணிமுடிச்சு (pile hitch) என்பது, கயிறு ஒன்றைக் கழி அல்லது வேறு பொருட்களுடன் கட்டுவதற்குப் பயன்படும் ஒருவகைக் கண்ணிமுடிச்சு ஆகும். இது முடிவதற்கு மிகவும் இலகுவானது. இரண்டு முனைகளும் இல்லாவிட்டாலும், கயிற்றின் இடைப்பகுதியில் இதனை முடிய முடியும். இதனால் இது பல வேளைகளில் ஒரு பெறுமதியான முடிச்சாக அமைகிறது. இதனை முடிவதற்கு, கயிற்றின் இடைப்பகுதியில் ஒரு தடத்தைப் போடவேண்டும். கழியொன்றின் முனைக்கு அருகில் தடத்தின் இரண்டு பகுதிகளையும் சுற்றவேண்டும். அதனைக் கயிற்றைச் சுற்றி அதன் கீழாக எடுக்கவேண்டும். பின்னர் அந்தத் தடத்தின் நுனியை எடுத்துக் கழியின் முனையூடாக மாட்டவேண்டும். இரட்டை முளைக் கண்ணிமுடிச்சு இரட்டை முளைக் கண்ணிமுடிச்சு என்பது கழி அல்லது அது போன்ற வேறு பொருட்களுடன் கயிறொன்றைக் கட்டுவதற்குப் பயன்படும் ஒரு கண்ணி முடிச்சாகும். இது, முளைக் கண்ணிமுடிச்சு முடியும்போது கூடுதலாக ஒரு சுற்றுச் சுற்றுவதன் மூலம் பெறப்படுகின்றது. இது படகுத் துறைகளில் படகுகளை முளைகளில் கட்டிவைப்பதற்குப் பயன்படுகின்றது. இது முகாமிடும் போது கூடாரங்களின் விளிம்புகளை முளைகளுடன் கயிறு மூலம் கட்டுவதற்கும் பயன்படுவதுண்டு. இலகுவாக முடியத்தக்க பாதுகாப்பான முடிச்சான இதனை, இலகுவாக அவிழ்த்தும் விடலாம். கே. பாலாஜி கே. பாலாஜி (இறப்பு: மே 2, 2009) பழம்பெரும் திரைப்பட நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். கதைத் தலைவனாக, எதிரியாக, குணச்சித்திர நடிகராக தமிழ் திரையுலகில் கால் நூற்றாண்டுக்கு மேலாக நடித்து வந்தவர். படித்தால் மட்டும் போதுமா, பலே பாண்டியா உட்பட ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்தவர். பல திரைப்படங்களை தயாரித்தும் இருக்கிறார். பாலாஜியின் பூர்வீகம் கேரளா. தொடக்க காலத்தில் அவர் சென்னை கிண்டியில் இருந்த நரசுஸ் ஸ்டூடியோவில், தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றினார். 1953 ஆம் ஆண்டில் வெளிவந்த ஔவையார் என்ற படத்தில் முதன் முதலாக நடித்தார். அதைத்தொடர்ந்து, சகோதரி, பலே பாண்டியா, படித்தால் மட்டும் போதுமா ஆகிய படங்களில் துணை நடிகராக நடித்துப் பிரபலமானார். மனமுள்ள மறுதாரம் (1958) படத்தில் கதைத் தலைவனாக நடித்தார். பாலாஜி தனது சுஜாதா சினி ஆர்ட்ஸ் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களைத் தயாரித்தார். ஜெமினி கணேசன் கதைத் தலைவனாக நடித்த அண்ணாவின் ஆசை என்ற படத்தை முதன் முதலாக சொந்தமாக தயாரித்தார். அதன்பிறகு சிவாஜி கணேசனை வைத்து, ராஜா, நீதி உள்பட 17 திரைப்படங்களை தயாரித்தார். சிவாஜியை வைத்து தொடர்ந்து அதிக படங்கள் தயாரித்த பட அதிபர் இவர்தான். இந்தி, தெலுங்கு, மலையாள படங்களை இவர் மறு தயாரிப்பு செய்து பல வெற்றிப் படங்களைக் கண்டவர். கமல், ரஜினிகாந்த் ஆகியோரை நடிக்க வைத்தும் வெற்றிப் படங்களை அளித்துள்ளார் பாலாஜி. மிகச் சிறந்த வகையில் குறித்த காலத்தில் படத்தை எடுத்து வெளியிடும் திறன் கொண்ட படத் தயாரிப்பாளராகவும் பாலாஜி திகழ்ந்தார் பாலாஜியின் மனைவி பெயர் ஆனந்தவல்லி. இவர்களுக்கு சுரேஷ் பாலாஜி (கிரீடம் திரைப்படத்தைத் தயாரித்தவர்) என்ற மகனும், சுஜாதா, சுசித்ரா என்ற 2 மகள்களும் இருக்கிறார்கள். சுசித்ராவை பிரபல மலையாள நடிகர் மோகன்லால் மணந்து இருக்கிறார். 2009, மே 2 மாலை 5 மணிக்கு உடல்நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் பாலாஜி இறந்தார். இறக்கும் போது அவருக்கு வயது 74. கற்றது தமிழ் கற்றது தமிழ் (முன்பு "தமிழ் எம்.ஏ." எனப் பெயரிடப்பட்டது) 2007 ஆம் ஆண்டு ராம் இயக்கத்தில், சிவப்பிரசாத் மற்றும் சல்மரா மொகம்மது ஷெரீஃப் தயாரிப்பில் வெளியான திரைப்படம் ஆகும். இதில் ஜீவா மற்றும் அஞ்சலி நடித்திருந்தனர். வர்த்தக ரீதியில் பெரிய வெற்றியை பெற்றிருக்காவிடினும் சிறந்த விமர்சனங்க‌ளை பெற்ற, சர்ச்சைக்குரிய சமூக கருத்துக்களை தாங்கிய இப்படம் தமிழ் திரைவரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க படைப்பாகும். இணுவில் கந்தசுவாமி கோயில் இலங்கை, யாழ்ப்பாணத்திலுள்ள இணுவிலில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்களிலே இணுவில் கந்தசுவாமி கோயில் முக்கியமான ஒன்று. இது காங்கேசன்துறை வீதியின் மேற்க்கு புறமாக இணுவில் மானிப்பாய் வீதியில் (கோயில் வாசல்) அமைந்துள்ளது. உலகப்பெருமஞ்சம் அமைந்துள்ளது இவ் ஆலயத்தின் சிறப்பாகும். யாழ்ப்பாண இராச்சியத்தின் தொடக்க காலத்தில் இணுவில் பகுதியின் ஆட்சியாளனாகப் பேராயிரவன் என்பவன் நியமிக்கப்பட்டதாக யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. இவனது வழி வந்த கனகராச முதலி என்பவன் பிற்காலத்தில் இப்பகுதியில் ஆட்சித் தலைவனாக விளங்கினான். இவன் காலத்திலேயே இணுவில் கந்தசாமி கோயில் தோற்றம் பெற்றதாகச் செவிவழிக் கதைகள் தெரிவிக்கின்றன. இவ்விடத்தில் முருக வழிபாடு தோன்றியது குறித்த கதை ஒன்று மக்களிடையே நிலவி வருகிறது. ""ஒரு நாள் இரவு ஓர் ஒளிப்பிழம்பு தெரிவதை மக்கள் கண்டனர். அதனைக் கண்ணுற்றவர்கள் ஒளிப்பிளம்பு தெரியும் இடம் முதலியார் வீடு இருந்த திசையே என்பதை உணர்ந்து முதலியார் வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெற்போர் தீப்பிடித்து விட்டது எனக்கருதி நாற்புறத்தில் இருந்தும் அவரது வீடு நோக்கி ஓடி வந்தனர். முதலியார் வீட்டு முற்றத்தை அடைந்த மக்கள் அங்கு எவ்வித அனர்த்தங்களும் இன்றி யாவும் வழமைபோல் இருப்பதைக் கண்டு அதிசயித்தனர். முதலியாரிடம் தாம் வந்த காரணத்தை விளக்கினர். அதற்கு முதலியார் தாம் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் இரு பிராமணச் சிறுவர்கள் தன்னை அணுகி தாம் காஞ்சியில் இருந்து வந்ததாகவும் தம்மை ஆதரிக்குமாறும் கூறி மறைந்து விட்டனர் என்று கூறினார். தனது குலதெய்வமாகிய காஞ்சியம்பதி குமரகோட்டக் கந்தப்பெருமானே தனக்கும் தன் குடிமக்களுக்கும் நல்லருள்பாலிக்கும் பொருட்டுக் காட்சி கொடுத்துள்ளாரென மனம் நெகிழ்ந்து இறைவனின் திருவருளை வியந்து ஆனந்தத்தில் சிலிர்த்தார். திருவருள் சித்தத்திற்கிணங்க முருகப் பெருமானையும், வைரவப் பெருமானையும் தன் இல்லத்தில் குடிலமைத்து அமைத்து வழிபட்டு வந்தாரென ..."" தற்போது இக்கோயிலுக்கு முன்னால் உள்ள முதலியாரடி எனப்படும் சிறு கோயில், மேற்சொன்ன கனகராச முதலியின் நினைவாக மக்கள் நடுகல் நாட்டி வழிபட்ட இடம் எனக் கருதப்படுகிறது. 1620 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் போத்துக்கேயரிடம் வீழ்ச்சியடைந்த பின்னர் யாழ்ப்பாணத்துக் கோயில்கள் அனைத்தையும் இடித்து அழித்ததுடன், இந்துசமய வழிபாட்டுக்கும் தடை விதித்தனர். இதனால் கனகராச முதலியால் அமைக்கப்பட்ட கோயிலும் அழிந்து போனது. 1661 ஆம் ஆண்டில் வேலாயுதர் என்பவர் இதே இடத்தில் முருகனை வைத்து வணங்கி வந்ததார் என்று தெரிகிறது. இது தொடர்பிலும் ஒரு கதை உண்டு. ""அக்காலத்தில் வாழ்ந்த குழந்தையர் வேலாயுதர் என்பவரது கனவில் கந்தக் கடவுள் தோன்றித் தன்னை ஆதரிக்கும்படியும், தான் காஞ்சியில் இருந்து வந்ததாகவும் கூறி "உனது வெற்றிலைத் தோட்டத்தில் நாட்டப்பட்டுள்ள நொச்சிமரத்தடியில் காலால் மிதித்து அடையாளம் இட்டிருப்பேன்". அவ்விடமே எனது இருப்பிடம் எனக்கூறி மறைந்தார். அதிகாலை எழுந்த வேலாயுதர் தான் கண்ட கனவை எண்ணியவாறு வெற்றிலைத் தோட்டத்துக்குச் சென்றார். இது என்ன அதிசயம் கண்டது கனவல்ல நனவுதான் என உணர்ந்தார். பெருமான் உரைத்ததற்கு இணங்கப் புதிதாக ஒரு நொச்சிமரம் நாட்டப்பட்டு அருகில் பாதச் சுவடும் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினார். அவ்விடத்திற் குடிலமைத்து வேற்பெருமானை வணங்கி வந்தார்."" அதற்கமைய ஆலயம் அமைந்துள்ள காணியின் பெயர் நொச்சியொல்லை மிதியன் என வழங்கப்படுவதுடன் இன்று கருவறைக்கு அருகில் இருப்பது மேற்சொன்ன நொச்சி மரமே என்றும் கருதப்படுகிறது. ஊரவரும், அயலூர்களைச் சேர்ந்தவர்களும் இக்கோயிலுக்கு வந்து வணங்கினர். வேலாயுதரின் மகன் அருணாசலம் என்பவர் கோயிலில் வாக்குச் சொல்லி வந்ததால் அடியவர்களின் தொகையும் கூடிக்கொண்டே சென்றது. குடிலாக இருந்த கோயில் செங்கற் கட்டிடமாகக் கட்டப்பட்டுக் குடமுழுக்கும் செய்து வைக்கப்பட்டது. பூசைகளும், புராண படனம் போன்ற பல்வேறு சமய நிகழ்வுகளும் இக்காலத்தில் ஒழுங்காக நடைபெற்று வந்ததாகத் தெரிகிறது. 1840 ஆம் ஆண்டளவில் கோயில் வெள்ளைப் பொழி கற்களினால் கட்டி முடிக்கப்பட்டது. 1891 ஆம் ஆண்டளவில் பெரிய சந்நியாசியார் என அழைக்கப்பட்ட ஆறுமுகம் சந்நியாசியார் இக் கோயில் திருப்பணிகளில் ஈடுபடலானார். இவரது முயற்சியினால், இக்கோயிலுக்காக மஞ்ச வாகனம் ஒன்றைச் செய்யும் பணிகள் 1910 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன. இந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்ட சிற்ப வல்லுனர்கள் இப் பணியில் ஈடுபட்டனர். உலகப் பெருமஞ்சம் என ஊரவர்களால் குறிப்பிடப்படும் இப் புகழ் பெற்ற மஞ்சம் 1912 ஆம் ஆண்டில் வெள்ளோட்டம் விடப்பட்டது. வேறு அடியவர்களின் முயற்சியினால் 1905-1909 காலப்பகுதியில் கோயிலுக்காக மூன்று தளங்களைக் கொண்ட கோபுரமும் அமைக்கப்பட்டது. 1946 ஆம் ஆண்டளவில் மணிக்கோபுரங்களையும் கட்டினர். 1967ல் கருவறைக்கு இரண்டு தளங்களைக் கொண்ட விமானம் அமைக்கப்பட்டது. 1976 ஆம் ஆண்டில் ஒரு புதிய சித்திரத் தேரும், 1977ல் புதிய சப்பறமும் இக் கோயிலுக்காக உருவாயின. 1953 ஆம் ஆண்டில் நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றையடுத்து இக் கோயில் பொதுக் கோயிலாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் பொது மக்களால் தெரிவு செய்யப்படும் குழுவினர் கோயிலின் நிர்வாகத்துக்குப் பொறுப்பாக இருந்து வருகின்றனர். இக்கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை 25 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பெருந் திருவிழா இடம் பெறுகிறது. இதன் ஒரு பகுதியாக ஆனி அமாவாசைத் தினத்தில் தீர்த்தத் திருவிழா இடம்பெறும். கொடியேற்றத்துடன் தொடங்கும் இப்பெருந் திருவிழா 25 ஆம் நாளில் தீர்த்தத் திருவிழாவுடன் நிறைவடையும். ஒவ்வொரு நாளிலும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளிகளை வீதியுலாவாக எடுத்து வருவர். சில முக்கிய திருவிழாக்களினதும் அவை கொண்டாடப்படும் நாட்களினதும் விபரங்களைக் கீழே காண்க. இது தவிரக் கந்தசஷ்டிக் காலத்தில் ஆறு நாட்களும் திருவிழாக்கள் இடம்பெறுகின்றன. இந் நாட்களில் புராண படனம் இடம்பெறும். கந்தபுராணத்தின் சூரபன்மன் வதைப் படலத்தை ஒருவர் வாசிக்க இன்னொருவர் அதற்கு பொருள் சொல்லிவருவார். இறுதி நாளில், முருகன் சூரனுடன் போர்புரிந்து அவனைக் கொல்லும் கதை நிகழ்த்திக் காட்டப்படும். இது சூரன்போர்த் திருவிழா எனப்படும். இணுவில் முருகன் மீது பலர் நூல்களை இயற்றியுள்ளனர். இவர்களுள் இணுவிலைச் சேர்ந்தவர்களும் அயலூரவரும் அடங்குவர். இவற்றுட் சில பதிப்பித்து வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறான நூல்களுட் சில: இலிங்கோத்பவர் இலிங்கோத்பவர் அல்லது இலிங்கோற்பவர் எனப்படுவது சிவபெருமானது உருவத்திருமேனிகளில் ஒன்றாகும்.இலிங்கோத்பவ மூர்த்தம் சிவாலயங்களின் கருவறையின் பின்புறச் சுவரில் மேற்கு நோக்கியவண்ணம் காணப்படும்.சிவன் ஆதியும் அந்தமும் இல்லா பெருஞ்சோதியன் என்பதனை விளக்கும் வண்ணம் அமையப்பெற்ற இவ் மூர்த்தம் மகா சிவராத்திரி விழாவுடன் தொடர்புடையது சிவாலயங்களின் கருவறையின் பின்புறம் நின்ற திருக்கோலத்தில் சோதிப்பிழம்பாக அடியும் முடியும் காணவொண்ணாதவாறு இருக்கும் இச் சிவமூர்தததின் அடியில் பன்றி வடிவத்தில் திருமாலும் முடியில் அன்னபட்சி வடிவில் நான்முகனும் காணப்படுவர். சிவராத்திரி தினத்தன்று இவ்மூர்த்ததிற்கு சிறப்பு பூசணைகள் இடம்பெறும். மாலும் நான்முகன் தானும் வார்கழற் சீல மும்முடி தேட நீண்டெரி போலும் மேனியன் பூம்பு கலியுட் பால தாடிய பண்பன் நல்லனே. பொருள் - திருமால் நான்முகன் ஆகியோர் நீண்ட திருவடிப் பெருமையையும், திருமுடியையும் தேட எரிபோலும் மேனியனாய் நீண்டவனும், அழகிய புகலியுள் பால் முதலியவற்றை ஆடி உறைபவனும் ஆகிய பண்பினன் நமக்கு நன்மைகள் செய்பவன். -இராமலிங்க அடிகள் சிவனது இலிங்கோத்பவ வடிவிற்கும் சிவராத்திரிக்கும் மிகு தொடர்புள்ளது.இலிங்க புராணத்தின் படி ஒருமுறை திருமாலுக்கும் நான்முகனுக்கும் தம்முள் யார் உயர்ந்தவர் என வாதம் உண்டாயிற்று இதனை தீர்க்க சிவனிடத்தே சென்று முறையிட்டனர்.அப்பொழுதே சிவன் இலிங்கோத்பவர் உருக்கொண்டு இதன் அடியையோ முடியையோ எவர் முதலில் காண்பவரோ அவரே உயர்தவராவார் என கூற திருமால் பன்றி உருகொண்டு அடியினையும் நான்முகன் அன்ன உருகொண்டு முடியினையும் காண துணிந்தனர். ஈற்றில் இருவரும் அடியினையோ முடியினையோ காணவொண்ணாது தம் தோல்விய்ற்று சிவனே உயர்ந்தவன் என உணர்ந்தனர். இந்நாளே சிவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகின்றது.சிவராத்திரி தினத்தன்று 3ம் சாமப்பூசணை காலம் இலிங்கோற்பவ காலம் என குறிப்பிடப்பட்டு இவ்வேளை இலிங்கோற்பவருக்கு சிறப்பு முழுக்குகள் இடம்பெறும். இந்த திருவுருவ மேனி த்த்துவத்தை உணர்த்துவதே அண்ணாமலை கோவில். அக்னியின் ரூபமாக லிங்கோத்பவர் நின்ற இடம். இங்கு வருடம் தேறும் நடைபெரும் "அண்ணாமலை ஜோதி" விழா, இதை நினைவு கூறுகிறது. தமிழகத்தில் முதன்முதலில் இராசசிம்ம பல்லவனாலே(கி.பி.700-730) காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் இலிங்கோத்பவர் சிற்பம் அமைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.இதன் பின்னர் முதலாம் பராந்தக சோழன்(கி.பி 907-953)காலத்திலே சிவாலயங்களின் கருவறையின் பின்புறம் அதுவரைக்கும் அமைக்கப்பட்டிருந்த அர்த்தநாரீசுவரர் படிமத்திற்கு பதிலாக இலிங்கோத்பவர் அமைக்கப்படுவது தொடங்கலாயிற்று இதன் தொடர்ச்சியாக பிற்கால சோழர்களாலும் இம்முறை கைகொள்ளப்பட்டு இற்றைவரையும் பேணப்படுகின்றது.(1) 1.திருகோடிக்காவல் இலிங்கோத்பவ மூர்த்தி சிற்பம் ஒர் ஆய்வு கட்டுரை - முனைவர் மு.கலா வாழ்வியல் சுரங்கம்,கலைஞன் பதிப்பகம். யார் படைப்பாளி , யார் படைப்பு சிறு முடிச்சு சிறு முடிச்சு (Small knot) அல்லது கீழைத்தேச முடிச்சு (Oriental knot) என்பது ஆண்களுடைய கழுத்துப்பட்டி கட்டுவதற்கான மிக எளிமையான முறையாகும். இது எளிமையான முடிச்சாக இருந்தும் இது பெருமளவுக்கு அறியப்பட்ட முடிச்சு அல்ல. இலகுவாக அவிழ்க்க முடியாமையே இதற்குக் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. சுலபமாக அவிழ்க்கப்படக்கூடிய முடிச்சுக்களுடன் பழக்கப்பட்டவர்களுக்கு இந்த முடிச்சை அவிழ்ப்பது சினம் ஊட்டியிருக்கலாம். அத்துடன் கழுத்துப்பட்டியின் அகலப் பகுதிக்குப் பின்னே மறையும் மெல்லிய முனை வெளியே தெரிய வந்தாலும் அதன் பின்புறம் தெரியும் வகையில் இருப்பது பொதுவாக விரும்பப்படுவதில்லை. ஆனால், சிறு முடிச்சில் இவ்வாறு இருப்பதும் இது விரும்பப்படாமைக்கு ஒரு காரணமாக இருக்கலாம். "கழுத்துப்பட்டி கட்டுவதற்கான 85 வழிகள்" என்னும் நூலின் காணப்படும் குறியீட்டு முறையின்படி இந்த முடிச்சை Lo Ri Co T என்னும் குறியீட்டினால் குறிப்பிடுவர். பிரிட்டன் சென்னைப் புறநகரக் காவல் சென்னைப் புறநகரக் காவல் இந்தியாவின் தமிழக மாநிலத்தின் சென்னை மாவட்டத்தை ஒட்டிய புறநகர்ப் பகுதிகளில் பாதுகாக்கும் பணிக்காக ஜூலை 23, 2008இந்து நாளிதழ் செய்தி (23-7-2008)இணையம்பார்த்துப் பரணிடப்பட்ட நாள் 05-05-2009 ஆம் ஆண்டு சென்னை மாநகரக் காவல் (புதன்கிழமை) ஆணையரகத்தினிலிருந்து பிரிந்து தனித்த ஆணையரகமாக சென்னைப் புறநகர் ஆணையரகத்தின் கீழ் இயங்குகின்றது. இந்த ஆணையரகம் (செயின்ட் தாமஸ் மவுண்ட்) புனித தாமஸ் மவுண்ட்டைத் தலைமையகமாகக் கொண்டு அதனடுத்து வரும் இரண்டு காவல்துறை மாவட்டங்களாக மாதவரம் மற்றும் அம்பத்தூர் ஆகிய மூன்று காவல்துறை மாவட்டங்களை உள்ளடக்கிய ஆணையரகமாக செயல்படுகின்றது. இதன் கீழ் 39 காவல் நிலையங்களும், 8 அனைத்து மகளிர் காவல் நிலையங்களும் செயல்படுகின்றன. இந்த ஆணையரகத்துக்குத் துணை புரிபவர்களாக "இரு துணை ஆணையர்கள், 14 உதவி ஆணையர்கள், 36 ஆய்வாளர்கள், 42 உதவி ஆய்வாளர்கள் (துணை ஆய்வாளர்கள்) மற்றும் பிற படிநிலையில் உள்ளவர்கள் 287 பேர்களும் அடங்குவர்." இந்த ஆணையரகத்தின் முதல் ஆணையராக திரு எஸ்.ஆர். ஜாங்கிட் ஆணையரகம் துவங்கியது முதல் (சென்னை மாநகரக் காவல் ஆணையரகத்தில் கூடுதல் ஆணையராகப் பணி புரிந்தவர்) தற்பொழுது வரை பொறுப்பு வகித்து வருகின்றார். செங்கை கிழக்கு மாவட்டத்தின் 41 நிலையங்கள் சென்னை மாநகரக் காவல் துறையோடு ஏற்கனவே இணைக்கப்பெற்றதினால், சென்னை காவல் துறைக்கு கூடுதல் சுமையானதின் காரணமாகவும், எதிர்பார்த்த பலன் கிட்டாததினாலும் இப்புதிய ஆணையரகம் உருவாக்கப்பட்டது. இவ்வாணைய நிர்மாணிப்பிற்காகவும், கூடுதல் மனிதத்திறனைப் பயன்படுத்துவதற்காகவும் அரசு 8.44 கோடி ரூபாய் ஒதுக்கியது.  பல்லடுக்கு கட்டமைப்பு நிரலாக்கத்தில் பல்லடுக்கு கட்டமைப்பு என்பது தரவு மேலாண்மை, செயலாக்கம், காட்சிப்படுத்தல் ஆகியவை ஏரண முறையில் பிரித்து அமைக்கப்பட்ட மென்பொருள் வடிவமைப்பு ஆகும். இவ்வாறு அக்கறைகளை பிரித்து கட்டமைப்பதன் மூலம் ஒன்றை யொன்று தங்கி இருப்பது குறைக்கப்படுகிறது. அங்கங்கள் modules ஆக நிறைவேற்றப்பட்ட ஒருங்கிணக்கப்படலாம். இத்தகைய நிரல்களை மாற்றம் செய்வது, பராமரிப்பது, வழுக் கண்டுபிடிப்பது இலகு. இது மாதிரி-காட்சி-கட்டுப்பாட்டகம் முறையை ஒத்தது ஆகும். சுழல் கணிதத்திலும், கணினியியலிலும் சுழல் என்பது ஒரு பின்வரும் பண்புள்ள செயலியை வரையறை செய்யும் முறை. ஒரு செயலியின் வரையறையில் அதே செயலி பயன்படுமானல் அதை சுழல் செயலி (recursive function) என்பர். சுழலீடு, மீளீடு, தொடரீடு என்றும் குறிக்கலாம். பொதுவாக மீண்டும் மீண்டும் தம்மை மாதிரி தோற்றம் தரும் செயலாக்கத்துக்கும் சுழல் என்பர். தமிழகச் சிறைத் துறை தமிழக சிறைத் துறை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சமூகத்தில் உள்ளவர்களை சட்டமுறைக்கு எதிரானவர்களிடம் இருந்து பாதுகாக்கும் பொருட்டும், சட்டமுறைக்கு எதிரான செயல்களினால் சிறை வாசத் தண்டனைக்குள்ளானவர்களை மனிதநேயத்துடன் நல்வழிப்படுத்தும் பொருட்டும், சிறைவாசத்துக்குப்பின் விடுதலையின் பொழுது முழுமையான, சமுதாயத்துக்கு உகந்தவராக, அவர் விடுதலை பெறவேண்டும் என்ற நோக்கத்திறகாக உருவாக்கப்பட்டதாகும். தமிழக சிறைத் துறை, இந்தியக் காவல் பணி, பயிற்சி பெற்ற தமிழக சிறைத் தலைமை இயக்குநரின் மேற்பார்வையில் இயங்குகின்றது. சிறைச்சாலை (பிரிசன்) அ சிறை என்பது சிறைக்கூடம்(ஜெயில்)அல்லது பிராயசித்தம் அல்லது தவறுக்காக வருந்துகின்ற (பெனிடென்டியரி) என்ற பொருளை கொண்ட அல்லது உணர்த்துவற்கான செயல் முறைகள் நடைபெறுகின்ற இடம் ஆகும். சட்டமுறைமைகளுக்கு எதிரான செயல்களினால் தண்டணை பெற்றோர் மற்றும் சட்டவிசாரணையின் தீர்ப்புக்காக காத்திருப்போர் பாதுகாப்புடன் தங்கியிருக்கும் இடம் என்றப் பொருளை உணர்த்துவது ஆகும். முந்தைய சுல்தான்களின் ஆட்சி காலத்தில் சரியான சிறைச்சாலைகள் பராமரிக்கப்படவில்லை. அன்றைய காலகட்டங்களில் பெரிய கோட்டைகளைய்யும், சிறிய அரண்மணைகளையும் சிறைச்சாலைகளாகப் பயன்படுத்தி வந்தனர். அக்பர் காலத்தில் இரண்டு வகையான சிறைச்சாலைகள் உருவாக்கப்பட்டன. ஒன்று மிகக் கொடூரமான குற்ற செயல் புரிந்தவர்களை அடைப்பதற்காகவும், மற்றொன்று சாதரணை குற்றக் கைதிகளை அடைப்பதற்காகவும் உருவாக்கிப் பயன்படுத்தி வந்தனர். முக்கிய பிரமுகர்கள், இளவரசர்கள், அரசர்கள், இராசத் துரோகம் (இராஜத்துரோகம்) புரிந்தவர்கள், கிளர்ச்சியாளர்கள் (கலகக்காரர்கள்) போன்றவர்களை நாட்டின் பல் இடங்களில் எற்படுத்தபெற்ற படையரண்களில் (போர்ட்ரஸ்) அடைத்து வந்தன்ர். சிறைக்கென்று முறையாக அமைப்பை, கட்டடத்தை உருவாக்க எத்தனித்தவர்கள் பிரித்தானியர்கள் (பிரிட்டிஷார்) மட்டுமே. அவர்கள் அரசுக் காலத்தில்தான் இதற்கு வடிவம் கொடுக்கப்பட்டது. இந்திய சட்ட ஆணையத்தின் உறுப்பினராக இருந்த கோமகன் மெக்கௌலே (லார்ட் மெக்கௌலே) என்பவரின் தலையீட்டால் சிறைச்சாலை மறு சீரமைவு திட்டம் என்ற திட்டம் முதன் முதலில் 1835 இல் கொண்டுவரப்பட்டு, இந்திய சிறைச்சாலை, 1894,சட்டம், என்ற சிறைச்சாலை ஒழுங்குமுறை சட்ட வடிவமாக நாட்டிற்கு அறிமுகம் செய்யப்பட்டது. அக்காலத்தில் குடிமையியல் (சிவில்) 43, குற்றவியல் (கிரிமினல்) 75, இதர வழக்குகள் 68 என்ற வகையில் சிறைக்கூடங்கள் அமைந்திருந்தன. அந்த சிறைக்கூடங்கள் மாவட்ட நடுவரின் (டிஸ்டிரிக்ட் மாஜிஸ்டிரேட்) கட்டுப்பாட்டில் இயங்கி வந்தன. பெண்களுக்கான இராஜதானி சிறைக்கூடமாக வேலூரில் 1830 இல் அமைக்கப்பட்டிருரந்த சிறைக்கூடமே பெண்களுக்காக தமிழகத்தில் அமைக்கப்பட்ட முதல் சிறைக்கூடம். சென்னை இராஜதானியாக (மெட்ராஸ் பிரசிடன்சி) தமிழகம் இருந்த காலத்தில் அமைக்கப்பட்டதாகும். 1837 ம்ற்றும் அதற்குப் பின் படிப்படியாக பல் சிறைக்கூடங்கள் 1872 வரை பிரித்தானியரால் (பிரிட்டீஷாரால)(எழுப்பப்ட்டன) கட்டப்பட்டன. இந்திய சுதந்திரத்திற்குப் பின் (எழுப்ப்பட்ட) கட்டப்பட்ட ஒரே (மத்திய சிறைச்சாலை) மைய சிறைச் சாலை 1981 இல் கட்டப்பட்ட சென்னைப் புழல் சிறைச்சாலை மட்டுமே. ஏனையச் சிறைச்சாலைகளின் வயது 150 ஆண்டுகளுக்கு மேற்பட்டவைகளாகும். சிறைச்சாலைகள் குற்றவியல் நீதிமுறைமைகளின் நிருவாகத்தில் முக்கியப் பங்கு வகிப்பனவாகவும், அவற்றால் வழங்கப்படும் உச்சபட்ச தீர்ப்புகளை (மரண தண்டணை) செயல்படுத்துவனவாகவும் இயங்குகின்றது. தமிழச் சிறைத்துறை காவல் துறை இயக்குநர் படிநிலையில் உள்ளவரால், சிறைத் தலைமை இயக்குநர் என்ற பொறுப்பின் பெயரால் இயக்கப்படுகின்றது. இவருக்குத் துணைபுரிபவர்கள் மற்றும் அமைப்பு விவரம்-; ஒவ்வொரு மையச் சிறைச் சாலையும் அதன் கீழ் அமைந்துள்ள சிறைகளான கிளைச் சிறைகளின் (சப் ஜெயில்) மீது அதிகாரம் கொண்டுள்ளன. ஒவ்வொரு கிளைச் சிறையும் சிறைக்கண்காணிப்பாளர் படி நிலைக் கொண்ட உதவி சிறை கண்காணிப்பாளரின் (அசிஸ்டன்ட் ஜெயிலர்) மேற்பார்வையில் இயங்குகின்றன. தண்டனைக் குற்றவாளிகளுக்குச் சிறைச் சீருடை சிறைச்சாலையில் வழங்கப்படுகின்றது. ஏனைய சிறைவாசிகளுக்கு அவர்களிடைய சொந்த உடைகளை உடுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுகின்றது. தமிழக சிறைகளின் நன்னைடத்தைப் பிரிவு தலைமை நன்னடத்தை கண்காணிப்பாளரால், குற்றவாளிகளுக்கு நன்னடத்தையை பயிற்றுவிக்கும் பொருட்டு குற்றவாளிகள் நன்னடத்தைச் சட்டம் ,1958, சட்டத்தின்படி அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பொருட்டு செயல்படுத்தப்படுகின்றது. இவருக்குத் துணைபுரிபவர்களாக 12 மண்டல நன்னடத்தை அலுவலர்கள் , கிளைகளில் 96 நன்னடத்தை அலுவலர்கள் செயல்படுகின்றனர். குற்றவாளிகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பது, அவர்களின் வாழ்வியல் சூழலை விசாரணை செய்வது, அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சம்ர்பிப்பது. (நீதிமன்றம் அழைக்கின்ற பொழுது நன்னடத்தை அலுவலர் முன்னிலையாதல்(ஆஜர் ஆக) வேண்டும் , நீதிமன்றம் நன்னடத்தை அலுவலரின் மேற்பார்வையின் கீழ் குற்றவாளி இருக்கவேண்டும் என்றத் தீர்ப்பின் அடிப்படையிலும் பின்பற்றபடுகின்றது) மேலும் நன்னடத்தை அலுவலர்க்ள குற்றவாளிகள் நன்னடத்தையின் பெயரால் அல்லது பிணையத்தின் பெயரால் முன்கூட்டியே சீர்திருத்தப் பள்ளியிலிருந்து விடுதலை பெறும் சிறைவாசிகள், மற்றும் இளஞ்சிறைவாசிகளைக் கண்காணிக்கின்றனர். நன்னடத்தையின் பெயரால் விடுதலைபெறும் சிறைவாசிகளின் மறுவாழ்விற்காக நிதியுதவிகளை தேசிய வங்கிகள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் மூலம் விடுதலையடையும் சிறைவாசிகளுக்கு வழங்கி அவர்கள் வாழ்வை மேம்படுத்த உதவுகின்றது. தமிழக மாநிலமே நன்னடத்தைச் சட்டத்தை முதன் முதலில் மெட்ராஸ் குற்றவாளிகள் நன்னடத்தைச் சட்டம், 1936.என்ற சட்டத்தின் கீழ் அமல் படுத்திய மாநிலமாக விளங்குகின்றது. சிறையில் இருக்கும் சிறைவாசிகளை பார்வையாளர்கள் சந்திக்க சிறை கண்காணிப்பாளருக்கு அதற்கென அச்சிடப்பட்ட விண்ணப்பத்தில் விண்ணப்பிக்க, தினமும் காலை 8 மணி முதல் 1 மணி வரை சிறைவாசிகளின் பார்வையாளர்கள் சிறை வாயில் அருகே இலவசமாக அனுமதிக்கப்படுகின்றனர். மனுக்கள் பின் தனியாக பெட்டியில் வைத்து கோப்புகாளாக பராமரிக்கப்படுகின்றன. கல்வியறிவு அற்ற பார்வையாளர்களின் வசதிக்காக மனுக்களை பூர்த்தி செய்ய அரசு சாரா தொண்டு நிறுவன அலுவலர்கள் இலவசமாக நியமித்துக் கொள்ள பார்வையாளர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் பின் சிறைவாசிகளை சந்திக்க வார நாட்களில் அரசு விடுமுறை நாட்களைத் தவிர காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஒவ்வொரு பார்வையாளருக்கும் 30 நிமிடங்கள் வரை சந்திக்க அனுமதிக்கப்படுகின்றனர். சந்திப்பின் போது சிறைவாசிகளுக்கு அளிக்க பழங்கள், வழுவைகள் (சோப்), வீட்டில் அணியும் உடைகள் போன்றவைகளை பெற்றுக்கொள்ள அனைத்து வகை சிறைவாசிகளுக்கும் பி வகுப்பு தண்டணை குற்றவாளிகளைத் தவிர பொதுவாக அனுமதிக்கப்படுகின்றது. சந்திப்பின் பொழுது பார்வையாளர்கள் சிறை ஊழியர்களால் சோதித்தப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். பெண்பார்வையாளர்களை பெண் சிறை ஊழியர்கள் பரிசோதனை செய்கின்றனர். சிறைவாசிகள் பிணையின் மூலம் அனைத்து நாட்களிலும், சிறை விடுமுறைநாட்களிலும் விடுவிக்கப்படுகின்றனர். பிணைவிடுவிப்பு ஆணை தினமும் மாலை 5 மணி அளவில் நீதிமன்றத் தூதுவரின் மூலம் பெறப்பட்டு அன்றைய நாளிலேயே விடுவிக்கப்படுகின்றனர். 5 மணிக்குப் பிறகுப் பெறப்படும் ஆணைகளுக்கு மறுநாள் காலையில் விடுவிக்கப்படுகின்றனர். சிறைவாசிகளின் தண்டனைகள் அவர்களின் நன்னடத்தை காரணமாகக் குறைக்கப்பட்டு தண்டனைக் காலம் முடிவடைவதற்கு முன்னரே விடுவிக்கப்படுவர். இந்த முறை கடுங்காவல் தண்டணைப் பெற்ற சிறைவாசிகளுக்கும் 90 நாட்களுக்கு மேற்பட்ட சிறைவாசத் தண்டணைக்கு உள்ளானவர்களுக்கும், சிறப்புச் சலுகையாக அளிக்கப்படுகின்றது. நன்னடத்தைகளை அவர்களின் சிறைவாசத்தின்பொழுது கடைப்பிடிக்கும் ஒழுக்கமுறைகளையும், தொழில் செயல்பாட்டுத் திறனை வைத்தும், இரத்ததானம், தூய்மை போன்ற சிறை விதிகளுக்குட்பட்ட காரணங்களை வைத்தும் நிர்ணயிக்கப்படுகின்றது. தொழில் ஈடுபாடு, நேர்த்தியாக ஆடை அணியும் தன்மை, சிறை நிருவாகத்திற்குத் துணை புரிதல் போன்ற காரணங்களுக்காகச் சிறை கண்காணிப்பாளர், கூடுதல் சிறைத்துறை இயக்குநரின் பரிந்துரையில் விடுவிக்கப்படுகின்றனர். மேலும் அரசு கருணை அடிப்படையில் தலைவர்களின் பிறந்தநாளில் அறிவிக்கும் சிறப்பு சலுகையின் படி தண்டனை குறைக்கப்பட்டு விடுவிக்கப்படுகின்றனர். புதிய மையச் சிறையான புழல் மையச் சிறைச்சாலை தமிழக முதல்வர் மு.கருணாநிதியால் (26.11.2006) நவம்பர் 26, 2006அன்று புழல் நகரத்தில் துவக்கி வைக்கப்பட்டது. இச்சிறைச்சாலை மூன்று சிறைச்சாலைகளை உள்ளடக்கியது. இச்சிறை வளாகம் சுமார் 212 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமானப் பணியினை தமிழ்நாடு காவல்துறை வீட்டுவசதி வாரியத்தினால் (டமில்நாடு போலிஸ் அவுசிங் கார்பரேசன் லிமிடட்) மேற்கொண்டு முடிக்கப்பட்டது. ஒளிப்பேழை கலந்தாய்வு (வீடியோ கான்பிரன்சிங்) முறை இச்சிறையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒளிப்பேழை கலந்தாய்வு முறையில் 62 நீதிமன்ற வளாகங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் 273 நீதிமன்றங்களுடன், 16 மையங்களில் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடியும். மையச் சிறைச்சாலையின் அனைத்து சிறைப்பிரிவினருக்கும் இப்பயன்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த முறை (01.07.2004) ஜூலை 1, 2004அன்று அமல் படுத்தப்பட்டது. சிறைவாசிகள் பல நீதிமன்றங்களில் ஒளிப்பேழை கலந்தாய்வு முறையில் காவல் நீட்டிப்பு ஆணைகளை பெற்றுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது. வின்ட்சர் முடிச்சு வின்ட்சர் முடிச்சு (Windsor knot) என்பது ஆண்களுக்கான கழுத்துப்பட்டிகளைக் கட்டுவதற்குப் பயன்படும் ஒரு முடிச்சு ஆகும். அரை வின்ட்சர் முடிச்சிலிருந்து வேறுபடுத்துவதற்காக இதனை முழு வின்ட்சர் முடிச்சு என்றும் குறிப்பிடுவது உண்டு. கழுத்துப்பட்டிகளுக்கான பிற முடிச்சுகளுடன் ஒப்பிடும்போது இது அதிக அகலம் கொண்ட முக்கோண வடிவமாகக் காணப்படும். இதன் பெயர் வின்ட்சரின் டியூக்கான முடிதுறந்த மன்னர் எட்டாம் எட்வார்டின் பெயரைத் தழுவி ஏற்பட்டதாகக் கருதப்பட்டது ஆனால் உண்மையில் இப்பெயர் அவரது பாட்டனான ஏழாம் எட்வார்டின் பெயரைத் தழுவி ஏற்பட்டதாகும். இந்த டியூக் அகலமான முடிச்சுடன் கழுத்துப்பட்டி கட்டுவதையே விரும்பினார். அதனால், இவர் தனது கழுத்துப் பட்டிகளை தடிப்புக்கூடிய துணிகளைப் பயன்படுத்தித் தைப்பித்ததாகக் கூறப்படுகின்றது. பினாங்கு தைப்பூசம் பினாங்கு தைப்பூசம் என்பது மலேசியாவின் ஜோர்ஜ் டவுன் பினாங்கு மாநகரில் உள்ள தண்ணீர் மலை அருள்மிகு பாலதண்டாயுதபாணி கோயிலில் இடம்பெறும் தைப்பூசத் திருவிழாவைக் குறிக்கும். தமிழர் மட்டும் அன்றி சீனர்களும் சேர்ந்து வணங்கும் கடவுள் தண்ணீர்மலை முருகன். சீனர்களும் ஒவ்வொரு ஆண்டும் அன்னதானத்திற்கு மூட்டை மூட்டையாய் அரிசி, காய்கறிகள், பழங்கள், அவன் பவனிவரும் பாதையெல்லாம் கோபுரம்போல் குவித்த ஆயிரக்கணக்கான தேங்காய்கள் என உடைக்கிறார்கள். பினாங்கில் தைப்பூசத் திருவிழாவின் முதல்நாளை 'செட்டி (நகரத்தார்) பூசம்' எனச் சொல்வார்கள். பூசத்திற்கு இரண்டு நாள் முன் பினாங்கு வீதியில் உள்ள கோவில் (கிட்டங்கி) வீட்டில் நகரத்தார்களின் மயில் காவடிகளுக்கும், முருகனின் பூசைகள் செய்து வணங்கி வழிபட்டு, அடுத்த நாள் (பூசத்திற்கு முதல் நாள்) கோவில் வீட்டில் இருந்து அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ நகரத்தார்களின் காவடிகள் முன் செல்ல வெள்ளிரதத்தில் முருகப் பெருமானின் ஊர்வலம் புறப்படும். வழி நெடுகிலும் மக்கள் (ஏராளமான சீனர்களும்) அர்ச்சனைகள் செய்து பல்லாயிரக் கணக்கில் தேங்காய்கள் உடைக்க அங்கங்கே நின்று அவையெல்லாவற்றையும் அன்புடன் ஏற்று மெதுவாக வரும் ஊர்வலம் மதியம் 'காமாட்சியம்மன்' ஆலயம் வந்தடைந்து அன்னையின் ஆசி பெற்று அடுத்து, பக்கத்திலேயே எதிர்புறத்தில்'சிவன்' கோவில் வந்தடைந்து அய்யனின் ஆசியையும் பெற்று- அங்கு சிறிது நேரம் இளைப்பாற்றி மீண்டும் அங்கிருந்து தண்ணீர்மலைக்கோவிலை நோக்கி தன் ஊர்வலத்தை தொடருவார். மதியம் ரதத்தின் கூடவே நடக்கும் பக்தர்களுக்கு (வெயிலில்) கால் சுடாமல் 'பினாங்கு நகராட்சி' சாலை நடுவே தண்ணீர் ஊற்றிக் கொண்டே செல்லும். அந்த சூடுபறக்கும் சாலையில் காலணி அணியாமல் நடந்து கொண்டிருப்பவர்களுக்கு மிகவும் இதமாயிருக்கும். ஊர்வலம் போகும் வழியெங்கும் தனியார் மற்றும், அரசாங்க நிறுவனங்களும் தண்ணீர்ப் பந்தல் அமைத்து நீர், மோர், பழச்சாறு, காப்பி, தேநீர் உள்பட அன்னதான(மு)ம் வழங்குவார்கள். ஒவ்வொரு தண்ணீர்ப் பந்தல் வாசலிலும் சிறு சிறு செயற்கை நீரூற்றுகளும் அதன் மேல் விநாயகர், முருகர், அம்பாள், சிவன் என்று விதவிதமான தெய்வச் சிலைகளை வைத்திருப்பார்கள்; சில தெய்வங்களுக்கு, பால் அபிஷேகம் நடைபெறும். சாலையில் வண்ண வண்ணமாக, பெரிய பெரிய ரங்கோலியிட்டிருப்பார்கள். அன்று இரவு வெள்ளிரதம் தண்டாயுதபாணி கோவில் வந்தடைவதற்கு இரவு பத்தரை ஆகிவிடும். அதன்பின் சாமி இறக்கி ஆலயத்தின் உள்நடையில் நிறுத்தி பக்தர்கள் 'இருவர் பாமரம் வீச, பெரியவர் ஒருவர் கட்டியம் கூறி முருகனின்மேல் பாடுவார். இரண்டாம் நாளான பூசத்தன்று காலையில் நான்கு மணியில் இருந்தே காவடிகள் வர ஆரம்பிக்கும். பினாங்கு சிவன் கோவிலில் இருந்து பால் குடங்கள் புறப்பட்டு கால் நடையாக தண்டாயுதபாணி கோவிலுக்கு வந்து பால் குடங்களைச் செலுத்துவார்கள். அன்று முருகப் பெருமானுக்கு மகேசுவர பூஜை அபிசேக ஆராதனைகள் நடந்து கொண்டிருக்கும் போது இன்னொரு புறம் குழந்தைகளுக்கு முடி இறக்கித் தொட்டிகட்டுதல் இடம்பெறும். இரண்டு கரும்புகளை ஒன்றுசேர்த்து இருபுறமும் இருவர் பிடித்துக்கொள்ள பட்டுப் புடவைகளைக் கொண்டு அதில் தொட்டில் கட்டி, புடவையின் மேல் அழகாக பூச்சரங்கள் தொங்கவிட்டு, தொட்டிலுக்குள் குழந்தைகளைப் படுக்கவைத்து அவரவர் சுற்றத்தார் சுற்றிலும் வர மேள தாளத்துடன் வரிசையாக கரும்புத் தொட்டில்கள் முருகனின் சன்னிதியைப் பிரகாரமாய் வந்து வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். பகல் பன்னிரண்டு மணிக்கு ஆராதனையின் உச்சக்கட்டமாக முருகனுக்கு தீபமாகி அதன் பின் அன்னத்திற்கும், மற்றும் சமைத்து வைத்திருக்கும் பாயசம், சாம்பார், ரசம், காய்கறிகள் வகைகளுக்கும் தீபம் காண்பிப்பார்கள். அன்னதீபம் காட்டியபிறகுதான் சாப்பாடு, கோவிலுக்குள் (சொக்கட்டான் வடிவத்தில் அமைந்துள்ள இடத்தில்) நாலாபுறமும் இலை போட்டு வந்திருக்கும் அவ்வளவு கூட்டத்திற்கும் மதியம் ஒரு மணிக்கு ஆரம்பிக்கும் சாப்பாட்டுப் பந்தி மாலை நான்கு வரை தொடர்ந்து நடக்கும். காவடிப் பிள்ளைகள் யாவரும் கலந்து கொண்டு உற்சாகமாக சளைக்காமல் பரிமாறுவார்கள். நாள் முழுதும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் காவடிகள். கடைசிக் காவடி இரவு பன்னிரண்டு மணிக்கு வந்து அதனுடன் பூர்த்தியடையும் அன்றைய பொழுது. மூன்றாம் நாள் காலை ('நகரத்தார்கள் பூசத்திற்கு முதல் நாள் இரவு தண்டாயுதபாணி ஆலயத்தில இறக்கி வைத்த) காவடிகளுக்கு 'காவடிப் பாட்டுகள்' பஜனைகள் செய்து நல்ல நேரம் பார்த்து காவடி தூக்கி ஆலயத்தின் அருகில் எதிர்ப்புற சாலையில் அமர்ந்திருக்கும் முனீசுவரரின் சன்னிதியின் முன் சாலையில் சிறிது நேரம் (காவடி) ஆடி அதன் பிறகு தண்டாயுதபாணி ஆலயத்தின் முன்புறம் ஆடுவார்கள்; அதன் பின் உள்ளே பிரகாரத்தில் நான்கு மூலையிலும் சிறிது சிறிது நேரம், அப்படியே பிரகாரமாய் வேலின் முன் வந்து வரிசையாக சன்னிதிக்குச் சென்று காவடியை தண்டாயுதபாணிக்குச் செலுத்துவார்கள். பூசத்திற்கு முதல் நாள் இரவு கோவிலுக்குள் வந்த காவடிப் பிள்ளைகள் மூன்றாம் நாள் காவடி செலுத்திய பின்தான் வெளியில் வருவார்கள். அதன் பிறகு தான் அவர்கள் எல்லோரும் குடும்பாத்தாருடன் மலைக்குச்சென்று எந்த இடையூறும் இல்லாமல் நல்லபடியாக காவடி தூக்கிவர துணை நின்ற பால தண்டாயுதபாணிக்கு அபிசேக ஆராதனைகள் செய்து சிதறு தேங்காய் உடைத்து நன்றி தெரிவித்து தரிசனம் பார்த்தும் திரும்புவார்கள். அன்று இரவு ஏழு மணிக்கு ஆலயத்தில் இருந்து முருகப் பெருமான் வெள்ளி ரதத்தில் புறப்பட்டு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடவர இரவு முழுதும் கோலாகலமாக வழியெங்கும் தேங்காய்கள் உடைத்து அர்ச்சனைகள் செய்து (நான்காம் நாள்) காலை ஏழு மணிக்கு மீண்டும் பினாங்கு வீதியில் உள்ள கோவில் வீட்டை வந்து சேரும். அதன் பின் ரதத்தில் இருந்து சாமி இறக்கி வீட்டினுள் வைத்து தீப தூபங்கள் காட்டி அதனுடன் இனிதே தைப்பூச உற்சவம் முற்றுப்பெறும். ஆனைக்கோட்டை முத்திரை ஆனைக்கோட்டை முத்திரை ("Anaicoddai Seal") என்பது இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஆனைக்கோட்டை என்னும் இடத்தில், 1980 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இடம் பெற்ற அகழ்வாய்வு ஒன்றின்போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு முத்திரை ஆகும். கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த ஒரு அடக்கக் குழி ஒன்றினுள் கண்டுபிடிக்கப்பட்ட இம் முத்திரை ஒரு மோதிரத்தின் முன் பகுதியாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இந்த முத்திரை எதனால் செய்யப்பட்டது என்பது தொடர்பாக ஆய்வாளர்கள் மத்தியில் முரண்பட்ட கருத்துக்களே இருந்து வருகின்றன. பேராசிரியர் கா. இந்திரபாலா இந்த முத்திரையானது உலோக முத்திரை எனத் தமிழக இந்து பத்திரிகையில் 1981 இல் எழுதிய கட்டுரையில் கூறியிருந்தார். ஆனால், அவர் எந்த உலோகத்தால் செய்யப்பட்டது என்பதைக் குறிப்பாகக் குறிப்பிடவில்லை. பொ. இரகுபதி (1987) இந்த முத்திரையானது வெண்கலத்தினால் (Bronze) செய்யப்பட்டது என்றுள்ளார். ஐராவதம் மகாதேவனும் (2003), பேராசிரியர் சி. பத்மநாதனும் (2006), அது உலோகத்தால் ஆனது என்றுள்ளபோதும், அது எந்த உலோகத்தினால், அல்லது உலோகக் கலவையால் ஆனது என்பதைக் குறிப்பாகக் கூறவில்லை. எதுவிதத்திலும் க. இந்திரபாலா 2006ஆம் ஆண்டில் எழுதியிருந்த நூலில், அது Steatite (Soapstone) ஆல் ஆனது என்றுள்ளார். முத்திரையின் கீழ் வரிசையில் மூன்று பிராமி எழுத்துக்களும், மேல் வரிசையில் மூன்று அடையாளங்களும் காணப்படுகின்றன. மேல் வரிசையிலுள்ள மூன்று அடையாளங்களுள் ஒன்று ரோம எழுத்தான C போன்ற அடையாளத்தின் வளைவு உச்சிப்புள்ளியில் ஒரு குற்றும் காணப்படுகிறது. மற்றைய இரண்டு அடையாளங்களும், ஒரேமாதிரியாகத் தோற்றமளிக்கின்றன. பொ. இரகுபதியின் முனைவர் பட்ட ஆய்வுக்காக யாழ்ப்பாண மாவட்டத்தில் 1980களின் தொடக்க ஆண்டுகளில் நடத்தப்பட்ட மேற்பரப்பு ஆய்வுகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் களங்களில் ஆனைக்கோட்டை தொல்லியல் களமும் ஒன்று. இங்கே காணப்பட்ட பெருங்கற்காலத் திட்டுக்கள் பல அயலில் உள்ள தாழ்வான பகுதிகளை நிரப்பி வீடமைக்கும் திட்டத்துக்காக மண் அள்ளப் பட்டதனால் குழப்பப்பட்டு இருந்தது. பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தினால் வழங்கப்பட்ட ஆய்வுக்கொடை மூலம், அப் பல்கலைக் கழகத்தின் வராலாற்றுத் துறையினர் ஆனைக்கோட்டையில் அகழ்வாய்வுகளை மேற்கொண்டனர். பேராசிரியர். கா. இந்திரபாலா, பேராசிரியர். எஸ். கே. சிற்றம்பலம், முனைவர். பொ. இரகுபதி ஆகியோர் பல்கலைக் கழக மாணவர்களின் உதவியுடன் இந்த ஆய்வுகளை நடத்தினர். இங்கே ஒரு அடக்கக் குழியும் பல தொல் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டன. அடக்கக் குழிக்குள் காணப்பட்ட எலும்புக்கூட்டின் மண்டையோட்டுக்கு அருகில் காணப்பட்ட மட்பாண்டம் ஒன்றில் காணப்பட்ட பொருட்களுள் "ஆனைக்கோட்டை முத்திரையும்" ஒன்று. இந்த அகழ்வாய்வின் போது கிடைத்த பொருட்களுள் ஆர்வத்தை மிகவும் தூண்டிய பொருளும் இதுவே. இதனை வாசித்த பேராசிரியர் கா. இந்திரபாலா இம் முத்திரையில் கீழ் வரியில் அடங்கியுள்ள மூன்று எழுத்துக்களையும் இடப்பக்கத்தில் காணப்படும் எழுத்துக்கு மேலுள்ள புள்ளியையும் பிராமிப் பகுதியாகக் கொண்டுள்ளார். இதில் இடப்பக்கமிருந்து பார்க்கும்போது முதலாவது எழுத்து "கோ", இரண்டாவது "வே", மூன்றாவது "த". இது முத்திரையிடப் பயன்படுத்தும் அச்சு ஆதலால் இடப்படும் முத்திரையில் இடம் வலமாக மாறிவிடும் ஆதலால் எழுத்து வரிசை "கோ" "வே" "த" என்று அமையும். "த" வின் மேலுள்ள புள்ளியை அனுஸ்வரமாகக் கொண்டால் இச் சொல்லை "கோவேந்த" அல்லது "கோவேதன்" என இருவிதமாக வாசிக்கமுடியும் என இந்திரபாலா கூறுகிறார். இரண்டுமே திராவிடப் பெயராகவும், ஒரே பொருள் தருவனவாகவும் உள்ளன. "கோவேந்த" என்பதை "கோ" + "வேந்த" என இரண்டாகப் பிரிக்கலாம். இரண்டு பகுதிகளுமே தமிழிலும் வேறு சில திராவிட மொழிகளிலும் மன்னன், அரசன் என்னும் பொருள்படுவனவே. சொல்லைக் கோவேதன் என்று எடுத்துக்கொண்டாலும் கூட இது போலவே அமையும். மேல் வரிசையில் சூல வடிவக் குறியீடு அடுத்தடுத்து இருமுறை இடம் பெற்றுள்ளது. இக் குறியீடுகள் ஒலிப்பையன்றிப் பொருளையே சுட்டுவனவாதலால் "கோ" என்பதைக் குறித்த சூல வடிவமே, அதே பொருள் கொண்ட "வேந்த" அல்லது "வேதன்" என்னும் சொல்லையும் குறித்தது. பொ. இரகுபதி இதனைச் சற்று வேறுவிதமாக வாசித்துள்ளார். இவர், இந்திரபாலாவால் அனுஸ்வரமாகக் கொள்ளப்பட்டு பிராமியுடன் சேர்த்து வாசிக்கப்பட்ட புள்ளியை முதல் வரியின் ஒரு பகுதியாகக் கொண்டுள்ளார். இவர், கீழ் வரி "கோ" "வே" "த" என்பது "கோ" + "வேத்" + "அ" எனப் பிரிந்து "கோவேதனுடைய" என்னும் பொருள் கொடுக்கும் என்றும் இதற்கு இணையாக இரண்டு சூலக் குறியீடுகள் "கோ" "வேத்" என்பவற்றைக் குறிக்க, புள்ளி "உடைய" என்னும் பொருள்கொண்ட "அ" என்னும் உருபைக் குறித்தது என்கிறார். முனைவர் ஆர். மதிவாணன் பிராமிப் பகுதியை அந்த முத்திரையில் காணப்பட்டவாறே இடமிருந்து வலமாக "தி" "வு" "கோ" என வாசித்து, அது தீவின் அரசன் என்னும் பொருள் தரும் என்றார். தேவயானி தேவயானி அசுர மன்னன் விருபசேனனின் ராஜகுருவான சுக்கிராச்சாரியாரின் மகள். சுக்கிராச்சாரியிடம் சஞ்சீவனி மந்திரம் கற்க சீடனாக வந்த பிரகஸ்பதியின் மகன் கசன் மீது ஒரு தலைக்காதல் கொண்டாள். ஆனால் கசன் குருவின் மகள், சகோதரிக்கு சமம் என்று கூறி தேவயானியின் காதலை ஏற்க மறுத்தான். அதனால் ஆத்திரம் அடைந்த தேவயானி கசனை தன் தந்தை சுக்கிராச்சாரியிடம் கற்ற மந்திர வித்தை பலிக்காமல் போகக்கடவது என சாபமிட்டாள். பதிலுக்கு கசன், உன்னை ஒரு அந்தணர் திருமணம் செய்யாது, ஒரு சத்திரியன் திருமணம் செய்து கொள்வான் என்று சாபமிட்டான். கசனின் சாபப்படி, தேவயானி சந்திர குல மன்னன் யயாதியை மணந்தாள். தேவயானிக்கு யது, துர்வசு ஆகிய இரண்டு மகன்கள் பிறக்கின்றனர். தேவயானியின் தோழியும், பணிப்பெண்ணுமாகிய சர்மிஷ்டையை இரகசியமாக திருமணம் செய்து கொள்கிறான் யயாதி. அவள் மூலம் யயாதிக்கு மூன்று குழந்தைகள் பிறக்கிறது. இந்த விசயம் அறிந்த தேவயானி தன் தந்தையிடம் முறையிட, சுக்கிராச்சாரியர் யயாதிக்கு கிழட்டுத்தன்மையை அடையும்படி சாபம் இடுகிறார். தவறை உணர்ந்த யயாதி, சாபவிமோசனம் கேட்கிறான். அதற்கு சுக்கிராச்சாரியார், உனது கிழட்டுத்தன்மையை உனது மகன்கள் ஏற்றால் உனது கிழட்டுத்தன்மை நீங்கும் எனக் கூறுகிறார். யயாதியின் இரண்டாம் மனைவியான சர்மிஷ்டையின் இளைய மகன் புரு தனது தந்தையின் கிழட்டுத்தன்மையை பெற்று, தனது இளமையை தனது தந்தையான யயாதிக்கு அளிக்கிறான். பின்னர் பல ஆண்டுகளுக்குப் பின், யயாதி மீண்டும் தனது இளமையை தன் மகன் புருவிற்கு திருப்பி அளித்து, தனது கிழட்டுத்தனத்தை திரும்பப் பெற்றுக் கொள்கிறான். இந்த புருவின் வழித்தோன்றல்களே சந்திர குலத்தில் பிறந்த சாந்தனு, பீஷ்மர், பாண்டவர் மற்றும் கௌரவர் ஆவர். யயாதி-தேவயானிக்கு பிறந்த மூத்த மகன் யதுவின் வழித்தோன்றல்களே யாதவகுலத்தினர் ஆவர். ஸ்ரீகிருஷ்ணரும் பலராமரும் யதுவின் குலத்தவர் என்று நம்புகின்றனர். யயாதி யயாதி அத்தினாபுரத்தை தலைநகராக கொண்டு குரு நாட்டை ஆண்ட மன்னன். இவன் சந்திர குல அரசன். இவனது தந்தை நகுசன், நூறு அசுவமேத வேள்விகளை செய்து முடித்தமையால் தேவ உலக இந்திர பதவியை அடைந்தவன். யயாதியின் கதை மகாபாரதம், பாகவத புராணம் மற்றும் பதினெண் புராணங்களில் மிகவும் சிறப்பாக சொல்லப்படுகிறது. யயாதிக்கும்-தேவயானிக்கும் பிறந்த மூத்த மகன் யதுவின் வழித்தோன்றல்கள் யாதவர்கள் என்றும்; இரண்டாவது மகன் துர்வசுவின் வழித்தோன்றல்கள் சேர, சோழ, பாண்டியர்கள், மேலும் இவர்களின் ஒரு கிளையினர் ஒழுக்கங்குன்றி அரேபிய தேசம் அடைந்து யவனர்கள் ஆயினர் என்றும்; யயாதி-சர்மித்தைக்கு பிறந்த மூன்றாவது மகன் திரஹ்யுவின் வழித்தோன்றல்கள் போஜர்கள் என்றும், நான்காவது மகன், அனுவின் வழித்தோன்றல்கள் மிலேச்சர்கள் என்றும், ஐந்தாவது மகன் புரு வின் வழித்தோன்றல்கள் பௌரவர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். அசுர மன்னரின் குருவான சுக்கிராச்சாரியின் மகள் தேவயானியை யயாதி திருமணம் செய்து கொள்கிறான். யயாதி -தேவயானி மூலம் "யது", "துர்வசு" என இரண்டு ஆண் குழந்தைகள் பிறக்கிறது. அசுர மன்னன் விருசபர்வன் மகளும் தேவயானியின் நெருங்கிய தோழியும் சர்மிஷ்டையை யயாதி இரகசியமாக இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறான். சர்மித்தைக்கு யயாதி மூலமாக "துருயு", "அனு" மற்றும் " புரு" எனும் மூன்று ஆண் குழந்தைகள் பிறக்கின்றனர். இச்செய்தி கேட்ட தேவயானி, யயாதி மீது கடும் கோபம் கொண்டு , தன் தந்தையும் அசுர குருவான சுக்கிராச்சாரியிடம் தனக்கு தன் கணவன் யயாதி இழைத்த அநீதி குறித்து முறையிட்டாள். செய்தி அறிந்த சுக்கிராச்சாரி, தன் மகள் மீது கொண்ட அதிக அன்பின் காரணமாக, மன்னன் யயாதிக்கு கிழட்டுத்தன்மை அடைய சாபமிட்டார். யயாதியும் அடுத்த நொடியிலே இளமை நீங்கி கிழட்டுத் தன்மை அடைந்தான். கிழட்டுத்தன்மை அடைந்த யயாதி தனது மாமனாரும், அசுர குருவும் ஆன சுக்கிராச்சாரியாரிடம் மன்னிப்பு கேட்டு, தான் அடைந்த கிழட்டுத் தன்மை நீங்க வழி கேட்டான். அதற்கு அவர், உனது கிழத்தன்மையை உனது மகன்களில் ஒருவனுக்கு அளித்து அவனின் இளமையை நீ அடைவாய் என்று கூறினார். பின்னர் யயாதி தனது முதல் மனைவியான தேவயானியின் மூத்த மகன் யதுவிடம், தனது மூப்பை ஏற்று இளமையை கேட்டான். யது, தந்தை யயாதியின் வேண்டுகோளை மறுக்கவே, யயாதி தனது மூத்த மகன் யதுவுக்கு, இனி உனக்கும் உன் தலைமுறையினரும் அத்தினாபுரத்து அரச மணிமகுடம் சூட்டிக்கொள்ளத் தகுதி இல்லாமல் போகக்கடவது என்று சாபம் இட்டார். பின்னர் மற்ற மகன்களான துர்வசு, துருயு, அனு ஆகியோரும் தந்தை யயாதியின் கோரிக்கையை மறுத்து விட்டனர். இரண்டாம் மனைவி சர்மிஷ்டைக்கு பிறந்த கடைசி மகனான புரு மட்டுமே யயாதியின் முதுமையை ஏற்றுக்கொண்டு, தனது இளமையை கொடுத்தான். அடுத்த நொடியிலே யயாதி முதுமை நீங்கி இளமை அடைந்து ஆயிரம் ஆண்டுகள் தன் இரு மனைவிகளுடன் இன்பம் துய்த்தான். ஒரு நாள், தனக்கு இளமை வழங்கி, தன் முதுமையை ஏற்றுக் கொண்ட தனது கடைசி மகன் புருவின் நினைவு வரவே, புருவை அழைத்து, அவனின் இளமையை அவனிடமே திரும்ப அளித்து, தனது முதுமையை ஏற்றுக்கொண்டு, புருவை அத்தினாபுரத்து மன்னனாக முடி சூட்டிய பின் தனது மனைவியருடன் கானகம் ஏகி நற்றவம் செய்து தேவலோகம் அடைந்தான். தேவயானியின் முதல் மகனான யதுவின் வழித்தோன்றல்களே யாதவர்கள். ஸ்ரீகிருஷ்ணர் இந்த யாதவ குலத்தில்தான் தோன்றினார். யதுவின் வழித்தோன்றல்கள் வடமதுரை, விதர்ப்பம், சேதி, குந்திபோஜம், துவாரகை, சூரசேனம், மகதம் போன்ற நாட்டை ஆண்ட சிற்றரசர்களான யாதவர்கள். கம்சன், கண்ணன், பலராமர், சிசுபாலன், ஜராசந்தன், குந்தி, கிருதவர்மன், சாத்தியகி, உத்தவர் ஆகியோர் யது குலத்தில் பிறந்தவர்களில் சிலர். சர்மித்தையின் இளைய மகன் புருவின் வழித்தோன்றல்களே பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் ஆவார். வி. ச. காண்டேகர் என்பவர் யயாதியின் புராணக் கதையை, மராத்திய மொழியில் நாவலாக எழுதியுள்ளார். இதனை கா. ஸ்ரீ. ஸ்ரீ என்பவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய யயாதி எனும் நாடகம், 1938ல் யயாதி திரைப்படமாக வெளியானது. ஏகன் (திரைப்படம்) ஏகன் ராஜூ சுந்தரத்தின் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்தப் படத்தை ஜங்கரன் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்தது. அஜித் குமார், நயன்தாரா, நவ்தீப், பியா, நாசர், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர். அஜீத் ஒரு அதிரடி போலீஸ் அதிகாரி. ஒன்மேன் ஆர்மி என்று தந்தை நாசரே வர்ணிக்கும் அளவுக்கு தனியாளாக அடித்துத் துவம்சம் செய்யும் போலீஸ் இவர். வில்லன் சுமனுடைய பழைய கூட்டாளி தேவன் போலீஸ் அப்ரூவராக மாறிவிட, அவரைக் கொன்று விடத் துடிக்கிறார் சுமன். இதனால் மறைந்து வாழ்கிறார் தேவன். அவருக்கு ஒரே ஒரு மகள் (பியா). ஊட்டியில் ஒரு கல்லூரியில் படிக்கிறார். பியாவின் உயிருக்கு சுமனால் ஆபத்து வரும் எனக் கருதும் போலீஸ், அவரைப் பாதுகாக்கும் பொறுப்பை அஜீத்திடம் விடுகிறது. போலீஸ் என்று தெரியாமல் ஒரு மாணவரைப் போல மாறுவேடத்தில் போய் இதைச் செய்ய வேண்டும், அதே நேரம் பியாவின் தந்தை தேவனணையும் கண்டுபிடிக்க வேண்டும். இந்த பணியில் அஜீத் எப்படி தன் திறமையைக் காட்டி ஏகனாக உலா வருகிறார் என்பது மீதிக்கதை. இப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். சரம் (கணினியியல்) கணினியியலில், சரம் அல்லது சொற்தொடர் என்பது தொடர்வரிசை குறியீடுகள் ஆகும். இது ஒரு அடிப்படை தரவு இனம் ஆகும். எத்தகைய சரங்கள் ஏற்புடயவை என்பதை நிரலின் எழுதுக் குறியேற்றம் தீர்மானிக்கிறது. கணினிக் கோப்பு கணினிக் கோப்பு ("Computer File") என்பது கணினியில் சேமிக்கப்பட்ட ஒரு தகவல் தொகுப்பாகும். கோப்பு(இலத்தீன்: "filum") ஒன்றின் தகவல் தொகுப்பை, அதன் கோப்புநீட்சிப் பெயரைக் கொண்டு, மீட்டெத்து கையாளலாம். இன்றைய கணினிகள் அனைத்திலும் தரவுகள் நிரல்கள் உட்பட அனைத்து தகவல்களும் கோப்புக்களாகவே சேமிக்கப்படுகின்றன. தகவலின் தன்மையைப் பொறுத்து கோப்புக்களின் வகை மாறும். இதை கோப்புப் பெயரின் நீட்சியைக் (extension) கண்டு அறியலாம். எடுத்துக்காட்டாக, .txtஎன்ற கோப்புநீட்சியானது, உரைக்கோப்பினைக் குறிக்கிறது. அதுபோலவே, .csv என்ற நீட்சி இருந்தால், அது அணித்தரவுக்கோப்பினையும், .ods என்ற நீட்சியை ஒரு கோப்புப் பெற்றிருந்தால், அது கட்டற்ற விரிதாள் என்பதையும் குறிக்கிறது. பெயர் மாற்றம் பெயர் மாற்றம் ("name change") என்பது அடிப்படையில் ஒருவருக்கு பிறப்பின் போது இட்ட பெயரை பின்னாளில் மாற்றத்திற்குள்ளாக்கும் அல்லது வேறு பெயரைப் பதிவு செய்யும் உத்தியாகும். பெயர் மாற்றம் செய்யும் அடிப்படைச் சட்டம் பொதுவாக அனைத்து நாடுகளின் சட்ட முறைமைகளில் ஒருவர் தன் பெயரை சட்டப்பூரவமாக மாற்றிக்கொள்ள வழங்கப்பட்ட அனுமதியாகும். இவர் பிறப்பின் பொழுது, திருமணத்தின் பொழுது, தத்துஎடுத்தலின் பொழுது கொடுக்கப்பட்ட பெயரிலிருந்து தன் பெயரை மாற்றிக்கொள்ள வழி வகுக்கின்றது. அவர் வாழிடம் சார்ந்த இடங்களில் இந்த மாற்றங்கள் நடைபெறுவதற்கு ஏதுவான இடமாகும். பொதுச் சட்டத்தில் இதற்கான நீதிமுறைமை, வரைமுறைகள் இலகுவாக்கப்பட்டுள்ளன. ஆனல் உரிமையியல் சட்டத்தில் இதன் நீதிமுறைமை வரையரைகள் சற்று கட்டுப்பாடுகள் கொண்டவை. பொதுவாக பெயர் மாற்றத்தில் உரிமையியல் சட்டம் பின்பற்றுகின்ற நாட்டில் பொதுச்சட்டத்தை பின்பற்றுகின்ற நாடுகளைப் போல் அல்லாமல் இதன் நீதிமுறைமைகள் வேறுபட்டிருக்கின்றன. பெயர் மாற்றத்தின் பொழுது அரசின் ஒப்புகை கோரப்படுகின்றது. அப்படி கோரப்பட்டாலும் ஏப்பொழுதாவது அனுமதி வழங்கப்படுகின்றது. இந்த முறை பின்பற்றுவதற்கான காரணம் பொதுமக்களின் நன்மைக் கருதி அவர்கள் தனிச்சிறப்புடன் அடையாளம் காணக்கூடியப் பெயர்கள் உதாரணமாக அரசாங்கப் பதிவேடுகள், அவர்களை அடையாளப்படுத்தக்கூடிய வருகைப்பதிவேடுகள், தனி அடையாள எண்கள், நியாயமான, விவேகமான புணராலோசணைத் தேவைக்காக இம்முறை பின்பற்றப்படுகின்றது. சு. வித்தியானந்தன் சு. வித்தியானந்தன் (மே 8, 1924 - சனவரி 21, 1989) ஈழத்தின் ஒரு சிறந்த கல்வியாளரும், ஆய்வாளரும், தமிழறிஞரும் ஆவார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத்தலைவராகவும், பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணிபுரிந்தவர். நண்பர்களாலும் அவரது மாணவர்களாலும் 'வித்தி' என அழைக்கப்பட்ட பேராசிரியர், யாழ்ப்பாண மாவட்டத்தின் தெல்லிப்பழையில் வழக்கறிஞரான சுப்பிரமணியத்தின் மகனாகப் பிறந்தார். தாயார் பெயர் முத்தம்மா. வீமன்காமம் அவரை வளர்த்தெடுத்த ஊர். அவரது குடும்ப முன்னோடிகள் ஆறுமுக நாவலரின் செல்வாக்குக்குட்பட்டு கல்விக் கூடங்களையும் நிறுவியுள்ளார்கள். வித்தியானந்தனின் பேரன் சின்னத்தம்பியால் தொடங்கப்பட்டு தந்தையால் வளர்ந்த வீமன்காமம் தமிழ் பாடசாலையில் தொடக்கக் கல்வியைக் கற்றார். பின்னர் தெல்லிப்பளை ஒன்றியக் கல்லூரி, பரி. யோவான் கல்லூரி, யாழ். இந்துக்கல்லூரி, இலங்கைப் பல்கலைக்கழகம், இலண்டன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கற்றுத் தேர்ந்தவர் வித்தி. இலங்கைப் பல்கலைக்கழக்தில் சுவாமி விபுலானந்த அடிகள், பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை ஆகியோர் இவரது ஆசிரியர்களாகத் திகழ்ந்தனர். இங்கு தமிழைச் சிறப்புப் பாடமாகக் கற்று கலைமாணி, முதுகலைமாணி ஆகிய பட்டங்களைப் பெற்ற முதலாமவர் வித்தி. தனது 26வது வயதில் இலண்டனில் முனைவர் பட்டம் பெற்றார். முனைவர் பட்டப் பேற்றுக்காக பதிற்றுப்பத்தை ஆய்வுப் பொருளாக எடுத்தவர் அதனை ஆங்கில வடிவில் முடங்கிப்போக விடாமல் , "தமிழர் சால்பு' எனும் தலை சிறந்த தமிழ் நூலாக மறுவரைவு செய்து தந்தார். இந்நூல், தமிழர் வரலாற்றின் தொடக்க காலப் பண்பாட்டைத் தெளிவாக ஆய்வு செய்து வெளிப்படுத்தியது. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றிய வித்தியானந்தன் தனது மாணவியாக அறிமுகமான நுணாவிலைச் சேர்ந்த கமலாதேவி நாகலிங்கம் மீது காதல் கொண்டு 1957 இல் மனைவியாக்கிக் கொண்டார். இவர்களுக்கு மூன்று மகன்கள், இரு மகள்கள். அருள்நம்பி, மகிழ்நங்கை, அன்புச்செல்வி, இன்பச்செல்வன், சிவமைந்தன் என்பன இவரின் பிள்ளைகளின் பெயர்கள். மனைவி கமலாதேவி அவர் நோயுற்று 1977 இல் மறைந்தார். ஆகஸ்ட் 1977 இல் யாழ்ப்பாண வளாகத்தின் தலைவரானார். அதன் பின்னர் ஜனவரி 1979 இல் அவ்வளாகம் பல்கலைக்கழகமான போது அதன் முதலாவது துணைவேந்தரானார். தன்னால் இயன்றளவில் யாழ்ப்பாண வளாகமாக இருந்த ஒன்றினை முழுமையான பல்கலைக்கழகம் ஆக்குவதற்கு அரும்பாடுபட்டு உழைத்தார். பல்கலைக்கழக மாணவர்களது தேவைகளை நிறைவு செய்யக்கூடியதாக அவ்வவ்போது எழுதிய கட்டுரைகள் பின்னர் தொகுக்கப்பட்டுத் தனி நூல்களாயின. கா. சிவத்தம்பி, க. கைலாசபதி, பொ. பூலோகசிங்கம், ஆ. வேலுப்பிள்ளை போன்ற தமிழறிஞர்கள் இவரது மாணவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். 1970 ஆம் ஆண்டில் பேராசிரியர் ஜீன் பிலியோசா பாரிசிலே மூன்றாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டினை நடத்தினார். இம்மாநாட்டிற்கு இலங்கையில் இருந்து பேராசிரியர் வித்தியானந்தன் கலந்து கொண்டார். 1974 ஆம் ஆண்டில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்திலே நடைபெறுவதற்கு முன்னின்று உழைத்தவர்களில் ஒருவர் பேராசிரியர் வித்தியானந்தன். ஈழத்தமிழ்த் தேசியத்தின் அடியாதாரமாக அமையத்தக்க நாட்டார் இலக்கியத்தையும் நாட்டுப்புறக் கலையையும் தேடித்தொகுத்துத் தேசியப் பண்பு சார்ந்து வடிவப்படுத்தலானார். தனது குருவான பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் நாடகச் செயற்பாடுகளின் பரிணமிப்பாக நாட்டுக் கூத்துகளை நவீன வாழ்முறைக்கு உகந்த வகையில் நவீனப்படுத்தினார். அரங்காற்றுகை மட்டுமன்றி, பல நாட்டுக்கூத்துப் பிரதிகளை அச்சேற்றினார். யாழ்ப்பாண வளாகத் தலைவராகவும் தொடர்ந்து மும்முறை யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் செயலாற்றிய பேராசிரியருக்கு நான்காம் முறையும் அப்பதவி அளிக்கப்பட்டபோது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தோடு முரணுறும் துயரையும் சந்தித்தார். இது அவரை அவதிக்குள்ளாக்கியதால் அவர் கொழும்பிலே தங்கத் தொடங்கினார். அந்த மனச்சுமையோடு 1989 இல் அவர் மறைந்தார். அவரது நினைவாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகம் "பேராசிரியர் சு.வித்தியானந்தன் நூலகம்' என்று பெயரிடப்பட்டது. இலங்கைத் அஞ்சல் திணைக்களம் 1997 நவம்பர் 11 அன்று வித்தியானந்தனின் அஞ்சல் தலையை வெளியிட்டது. மனிதநேய மக்கள் கட்சி மனிதநேய மக்கள் கட்சி தமிழ்நாடு மாநில அரசியல் கட்சியாகும். இது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவாக பிப்ரவரி 2009 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. கட்சி ஆரம்பித்த 3 மாதங்களில், 2009 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் மமக 4 தொகுதியில் கூட்டணியின்றி தனித்து நின்று கணிசமான வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தது. வேட்பாளர்கள் விபரம்:- 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சேப்பாக்கம், இராமநாதபுரம், ஆம்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் ஆம்பூரில் அஸ்லம் பாஷாவும், இராமநாதபுரத்தில் பேரா. எம். எச். ஜவாஹிருல்லாவும் வெற்றிப்பெற்று இக்கட்சியின் முதல் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது. ஆனைக்கோட்டை ஆனைக்கோட்டை என்பது இலங்கையின் வடமாகாணத்தின் ஒரு பகுதியாக உள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில் வலிகாமம் தென்மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு ஊராகும். இது யாழ்ப்பாண நகரத்தில் இருந்து மானிப்பாய் செல்லும் வீதியில், நகரத்தில் இருந்து சுமார் மூன்று மைல் தொலைவில் அமைந்துள்ளது. இதன் அயலில் மானிப்பாய், நவாலி, தாவடி, வண்ணார்பண்ணை ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன. இது யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது குடியிருப்பு மையம் என கூறப்படுகிறது. இதற்கு ஆதாரமாக அங்கு கண்டுபிடிக்கப்பட்ட பிராமி எழுத்துப் பொறித்த முத்திரை, உரோம மட்கலன்கள், லட்சுமி நாணயம் ஆகியவையைக் கொள்ளலாம். இவை 2300 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக கருதப்படுகின்றன. ஈலாம் ஈலாம் (Elam) இன்றைய தென் மேற்கு ஈரானில் செழித்திருந்த பண்டைக்கால நாகரிகம் ஒன்றைக் குறிக்கும். இன்றைய ஈரானின் தூர மேற்கு, தென்மேற்கு ஈரான் ஆகியவற்றை மையப்படுத்தி அமைந்திருந்த இது, குசெசுத்தான், ஈலம் மாகாணம் ஆகியவற்றின் தாழ்நிலப் பகுதிகளிலிருந்து கெர்மான் மாகாணத்தில் உள்ள சிரோஃப்ட் (Jiroft), எரிந்த நகரமான சபோல் (Zabol) என்னும் இடங்கள் வரை பரந்திருந்ததுடன், தென் ஈராக்கின் சிறிய பகுதியொன்றையும் உள்ளடக்கி இருந்தது. பண்டைய அண்மைக் கிழக்குப் பகுதியின் முதன்மையான் அரசியல் சக்திகளில் ஒன்றாக ஈல அரசுகள் விளங்கின. பண்டைய மெசொப்பொத்தேமியாவுக்குச் சற்றுக் கிழக்கே அமைந்திருந்த இந்தப் பகுதி அக்கால நகராக்கத்தின் ஒரு பகுதியாகவும் அமைந்தது. கிமு 3000 ஆண்டளவில் தொடங்கிய எழுத்துப் பதிவுகளும் மெசொப்பொத்தேமிய வரலாற்றுக்கு இணையாகவே அமைந்தன. நடு வெண்கலக் கால ஈலம் அன்சானை (Anshan) மையமாகக் கொண்டு ஈரானியச் சமவெளியிலும், பின்னர் கிமு இரண்டாவது ஆயிரவாண்டில் இருந்து குசெசுத்தான் தாழ்நிலப் பகுதியில் இருந்த சூசாவை மையமாகக் கொண்டும் அமைந்திருந்தது. இதன் பண்பாடு, குட்டியப் பேரரசில், சிறப்பாக ஆக்கிமெனிட் வம்சக் காலத்தில், முக்கிய பங்காற்றியது. அக்காலத்தில் ஈல மொழி பேரரசின் அலுவல் மொழிகளில் ஒன்றாக இருந்தது. ஈல மொழிக்கு வேறு எந்த மொழியுடனும் உறவு உள்ளதாக நிறுவப்படவில்லை. சுமேரிய மொழியைப் போல் இதுவும் ஒரு தனி மொழியாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. எனினும் சில ஆய்வாளர்கள், ஈல-திராவிடம் என்னும் ஒரு பெரும் மொழிக் குடும்பம் ஒன்று பற்றி கருத்துத் தெரிவித்து உள்ளனர். ஈல மக்கள் தமது நாட்டை "ஹல்தம்தி" "(Haltamti)" என அழைத்தனர். சுமேரியர்களும், அக்காடியர்களும் இந்நாட்டைக் குறிப்பிட முறையே "ஈலம்", "ஈலமு" ஆகிய பெயர்களைப் பயன்படுத்தினர். ஈப்ரூக்களின் பைபிளிலும் இது "ஈலம்" என்றே குறிப்பிடப்படுகிறது. உயர்நிலம் சார்ந்த நாடான ஈலம், பின்னாளில், தாழ்நிலப் பகுதியில் அமைந்திருந்த அதன் தலைநகரான "சூசா"வின் பெயரினால் அடையாளம் காணப்படும் நிலைமை உருவானது. தொலமிக்குப் பிற்பட்ட புவியியலாளர்கள் இதனை "சூசியானா" என்று அழைத்தனர். ஈல நாகரிகம் முதலில், இன்று குசெசுத்தான் என்று அழைக்கப்படும் மாகாணத்தை மையமாகக் கொண்டு அமைந்திருந்தது. இது வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே "ஃபார்சு" என்னும் மாகாணத்தையும் உள்ளடக்கி விரிவடைந்தது. குசெசுத்தான் என்னும் தற்காலப் பெயர் பாரசீக மொழியிலிருந்து பெறப்பட்டது. பழைய பாரசீக மொழியில், "ஹூஜியா" எனப்பட்ட இவ்விடம், நடுப் பாரசீக மொழியில் "ஹூஸ்" எனப்பட்டது. இது "சுசியானா" என்பதோடு தொடர்புடையது. இதுவே புதிய பாரசீக மொழியில் "க்சுஸ்" "(Xuz)" ஆனது. இது பின்னர் புதிய பாரசீக மொழியில் இடப்பெயர்களுக்கு அமையும் "ஸ்தான்" என்னும் பின்னொட்டுடன் சேர்ந்து "குசெசுத்தான்" என்ற பெயரைப் பெற்றது. ஈலத்தின் வரலாறு துண்டு துண்டாகவே கிடைக்கிறது. சுமேரிய, அக்காடிய, பபிலோனிய மூலங்களில் இருந்தே பெரும்பாலும் இதன் வரலாறு மீளுருவாக்கம் செய்யப்படுகிறது. இரண்டு ஆயிரவாண்டுகளை உள்ளடக்கிய ஈலத்தின் வரலாறு வழக்கமாக மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது. இந்தக் காலப் பகுதிகளுக்கும் முன்னுள்ள காலம், முதனிலை ஈலக் காலம் எனப்படுகிறது. முதனிலை ஈல நாகரிகம் டைகிரிசு, இயூபிரட்டீசு ஆற்றுப் பள்ளத்தாக்குகளுக்குக் கிழக்கே உருவாகி வளர்ந்தது. இது தாழ்ந்த நிலத்தையும் அருகிலேயே வடக்கிலும், கிழக்கிலும் மேட்டு நிலங்களையும் உள்ளடக்கிய பகுதியாகும். குறைந்தது மூன்று முதனிலை ஈல அரசுகள் இணைந்தே ஈலம் உருவானதாகத் தெரிகிறது. இவை அன்சான், அவான், சிமாசுக்கி என்பன. இவற்றுள் "அன்சான்", தற்கால "ஃபார்சு" பகுதியிலும், "சிமாசுக்கி" தற்காலக் கேர்மனிலும் அமைந்திருந்தன. "அவான்" தற்கால லுரிசுத்தான் ஆக இருக்கலாம் எனக் கருதுகின்றனர். அவானைப் பற்றிய குறிப்புக்கள் பொதுவாக அன்சானைப் பற்றிய குறிப்புக்களிலும் பழமையானவை. இவ்விரு அரசுகளுமே ஒரே பகுதியில் வெவ்வேறு காலப் பகுதியில் இருந்திருக்கக்கூடும் என்பது சில ஆய்வாளர்களது கருத்து. இந்த மையப் பகுதியுடன், இன்றைய "குசெசுத்தான்" ஆன "சுசியானா" அவ்வப்போது இணைந்தும் பிரிந்தும் இருந்ததாகத் தெரிகிறது. இவற்றுடன் இப் பகுதிக்கு வெளியிலும் ஈரானியச் சமவெளிகளில் முதனிலை ஈலக் களங்கள் உள்ளன. இவற்றுள் வாராக்சே, இன்றைய காசான் நகரின் புறநகர்ப் பகுதியான சியால்க், கெர்மான் மாகாணத்தில் உள்ள சிரோஃப்ட் என்பன அடங்கும். பழைய ஈலக் காலத்தில், சுமேரியரின் படையெடுப்புகளுக்கு எதிராகவே சிறிய அரசுகள் இணைந்து ஈல அரசு உருவானது. இவ்வரசுக்குள் அடங்கிய பல்வேறு பகுதிகளிலும் காணப்பட்ட வளங்களை திறமையான முறையில் பகிர்ந்து கொள்வதற்கு வசதியை வழங்கக்கூடிய ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு அரசின் கீழ் இப்பகுதிகள் அனைத்தையும் ஒன்றாக வைத்திருப்பதற்கான வல்லமையே ஈலவர்களின் வலிமையாக இருந்தது. ஒரு கூட்டாட்சி அரச அமைப்பின் அடிப்படையிலேயே இதை அவர்கள் செய்ய முடிந்தது. யாக்கோபு சூமா யாக்கோபு சூமா ("Jacob Gedleyihlekisa Zuma", பிறப்பு: ஏப்ரல் 12, 1942) தென்னாபிரிக்காவின் குடியரசுத் தலைவர். இவர் 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் தலைவரானார். இவர் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். 2007, டிசம்பர் 18 இல் காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாட்டில் இவர் அக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தென்னாபிரிக்கப் பொதுவுடமைக் கட்சியின் உறுப்பினராகவும் இருக்கிறார். சூமா அரசியல் ஊழல், பாலியல் குற்றங்களுக்காகப் பல வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளார். பாலியல் குற்றத்தில் இருந்து இவர் பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார். 2009, ஏப்ரல் 6 இல் இவர் அனைத்துக் குற்றங்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டார். உலகில் நடக்கும் போர்கள் பட்டியல் உலகில் நடக்கும் போர்கள் பட்டியல். The conflicts in the following list have caused at least 10,000 direct violent deaths in current or past calendar year. The conflicts in the following list have caused at least 1,000 and fewer than 10,000 direct violent deaths in current or past calendar year.Conflicts causing at least 1,000 deaths in one calendar year are considered wars by the Uppsala Conflict Data Program. The conflicts in the following list have caused at least 100 and fewer than 1,000 direct violent deaths in current or past calendar year. The conflicts in the following list have caused at least 1 and fewer than 100 direct violent deaths in current or past calendar year. This section details armed conflict-related fatalities by country. ஒட்டுநிலை மொழி ஒட்டுநிலை மொழி (Agglutinative language) என்பது, உருபன்களை ஒன்றுடன் ஒன்று ஒட்டுவதன் மூலம் உருவான சொற்களைப் பெருமளவில் கொண்ட மொழியைக் குறிக்கும். 1836 ஆம் ஆண்டில் உருபனியல் நோக்கில் மொழிகளை வகைப்பாடு செய்ய முயன்றபோது வில்கெல்ம் ஃபொன் கும்போல்டு (Wilhelm von Humboldt) என்பார் இந்தக் கருத்துருவை உருவாக்கினார். ஒட்டுநிலை மொழி, ஒருவகைப் பிணைப்புநிலை மொழி (synthetic language) ஆகும். பிணைப்புநிலை மொழிகளில் ஒவ்வொரு ஒட்டும் பொதுவாக எண், இடம், காலம் போன்றவற்றைக் காட்டும் ஒரு பொருள் அலகைக் குறிக்கிறது. அத்துடன், இதன் முக்கியமான ஒரு இயல்பாக, ஒட்டுநிலை மொழிகளில் ஒட்டுக்கள் பிற ஒட்டுக்களுடன் இரண்டறக் கலந்து விடுவதில்லை என்பதுடன், பிற ஒட்டுக்களின் தாக்கத்தால் தமது வடிவத்தையும் மாற்றிக்கொள்வதில்லை. ஒட்டுநிலை மொழிகள் அல்லாத பிற பிணைப்புநிலை மொழிகள், இணைவுநிலை மொழிகள் (fusional languages)எனப்படுகின்றன. மே 10, 2009 ரொறன்ரோ மறியல் போராட்டம் கார்டினர் மறியல் போராட்டம் என்பது மே 10, 2009 அன்று ரொறன்ரோவின் முக்கிய நெடுஞ்சாலை சந்தியான கார்டினரை மறித்து, கனடிய சட்டத்தை மீறி செய்யப்பட்ட எதிர்ப்புப் போராட்டம் ஆகும். ஈழப்போரின் இறுதி கட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கை அரசால் கொலை படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, தொடர்ச்சியான எதிர்ப்புப் போராட்டத்தில் இருந்த தமிழர்கள் இப்போராட்டத்தை முன்னெடுத்தனர். சில நூறு தமிழர்களும், சில பத்து பல்லினத்தவரும் நடத்திய இப்போராட்டம் சுமார் 7 மணி நேரம் வரை நீடித்து, போக்குவரத்தை தடுத்தது பல்லாயிரக்கணக்கானா பயணிகளை இடைஞ்சல் செய்தது. கனடிய எதிர்கட்சித் தலைவர் இந்த விடயதை நாடாளுமன்றத்தில் எடுத்துரைப்பதாக வாக்குறுதி தந்த பின்பு இச் சாலையை விட்டு தமிழர்கள் விலகினார்கள். ஒரு முக்கிய நெடுஞ்சாலையை மறித்துப் போராட்டம் செய்வது சட்டத்தை மீறும் செயலாகும். பயணிகளின் வாகனங்களை மறித்து சூழ்ந்து கொண்டதும் சட்டத்துக்கு புறம்பான செயலாகும். இதில் சில பயணிகள் தமது வாகனங்களை விட்டு விட்டு கால் நடையாக சென்றனர். இப்போராட்டத்தில் ஏற்பட்ட கைகலப்பில் மூன்று தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். சட்டத்தை மீறுவது உட்பட இப் போராட்டம் பல்வேறு விமர்சனங்களை எதிர்நோக்கியது. இப் போராட்டம் ரொறன்ரோ பொது மக்களை இடருக்கு ஈடுபத்தியதால், இது பொதுமக்கள் தமிழ் மக்களின் பிரச்சினை நோக்கி ஒரு நல்ல நிலையை எடுப்பதற்கு தடையாக இருக்கும் என்ப்படுகிறது. பெரும்பான்மை மைய ஊடகங்கள், குறிப்பாக வலது சாரி ஊடகங்கள் இப்போராட்டத்தை மிகவும் விமர்சித்து செய்திகள் வெளியிட்டன. குழ்ந்தைகளை ஈடுபடுத்தியது குறிப்பாக விமர்சிக்கப்பட்டது. இதில் ஈடுபட்ட இளையோர் போராட்டத்தின் உண்மையான இலக்கை அறியாமல், கைக்கலப்பில் ஈடுபடுவதில் அக்கறை காட்டியதாக விமர்சிக்கப்பட்டது. போராட்டக்காரர்கள் என்ன எதிர்பாக்கிறார்கள் என்றும் கேள்வி முன்வைக்கப்பட்டது. புலிகளை சரணடைய செய்யுமாறு போராட்டம் நடத்தினால் பொது மக்கள் படுகொலைகள் தடுக்கப்படலாம் என்றும் பரிந்துரைகளை சிலர் முன்வைத்தனர். மே 11, 2009 இலண்டன் மறியல் போராட்டம் மே 11, 2009 இலண்டன் மறியல் போராட்டம் என்பது மே 11, 2009 அன்று இலண்டனில் நாடுமன்றம் சதுர்க்க சாலையின் இரு பக்கத்திலும் தமிழர்கள் இருந்து மறியல் போராட்டம் நடத்தினர். கடந்த சில நாட்களில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கை அரசால் கொலை படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, தொடர்ச்சியான எதிப்புப் போராட்டத்தில் இருந்த தமிழர்கள் இப் போராட்டத்தை முன்னெடுத்தனர். சட்டத்துக்கு புறம்பான இந்த நடவடிக்கையை தொடர்ந்து சுமார் 36 வரையிலான தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். நோர்வேத் தமிழர்களின் ஈழம் வாக்கெடுப்பு நோர்வேத் தமிழர்களின் ஈழம் வாக்கெடுப்பு என்பது நோர்வேயில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் தமிழீழம் தனிநாடாக அமைக்கப்படுவதை விரும்புகிறார்களா எனபதைக் கணிக்க நோர்வே ஊடகம் ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு ஆகும். இதில் பெரும்பான்மை நோர்வேத் தமிழர்கள் ஈழம் அமைவதை விரும்புவது தெரியவந்தது. இங்கு 18 வயதுக்கு மேற்பட்ட 8.797 இலங்கையர்கள் வசிக்கின்றனர். இதில் 300 வரையானோர் சிங்களவர்கள். இந்த வாக்கெடுப்பில் 5,633 பேர் கலந்து கொண்டர். இதில் 5.574 பேர் சார்பாக வாக்களித்தர். 50 பேர் எதிர்த்து வாக்களித்தனர். 9 வாக்குகள் செல்லுபடியாகவில்லை. வணிக செயலாக்கம் வணிக செயலாக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட சேவையை அல்லது பொருளை உற்பத்தி செய்ய, கட்டமைத்து, தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளைக் குறிக்கிறது. எப்படி ஒரு செயல் செய்யப்பட வேண்டும் என்பதின் செயலாக்கத்தை ஆய்ந்து, அதை திறமையாக செய்வது வணிக செயலாக்க மேலாண்மையின் நோக்கம் ஆகும். வணிக செயலாக்கத்தை செயல்வழிப் படம் மூலம் தொடர் செயற்பாடுகளின் தொகுப்பாக காட்சிப்படுத்தலாம். தமிழ்நாடு வனத்துறை தமிழ்நாடு வனத்துறை தமிழக மாநிலத்திற்குட்பட்ட காட்டுப்பகுதிகளின் பராமரிப்பையும் பாதுகாப்பையும் மேற்கொண்டு அவற்றின் வளர்ச்சியில் பங்கு கொள்கிறது. தமிழ்நாட்டின் வனப்பகுதி சுமார் 22,877 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டது. இது தமிழ்நாட்டுப் புவிப்பரப்பளவில் 17.59% ஆகும். "தேசிய வனக் கொள்கை, 1988" இன் படி மாநிலமொன்றின் புவிப்பரவளவில் 33.33% வனங்களாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மாறுபட்ட தட்பவெப்ப நிலை, இடவியல்பு, மண் (அ) நிலவியல்பு, நீராதாரம், உயர்நிலை மற்றும் உயிரினங்களின் ஆதாரங்கள் இவற்றை வைத்து பல்வேறுபட்ட சமூகக் காடுகள் அல்லது சமூதாய வனங்களை உருவாக்கும் காரணிகளாக செயல்படுகின்றன. பொதுவாக இவைகள் வனங்களின் வகைகள் எனப்படுகின்றன. மாநில அரசு வனப்பகுப்பாக, நிறப்பிரிகையாக வனத் தாவர வளர்ச்சியை ஈரப்பதமுள்ள பசுமை மாறாக் காடுகள் முதல் குறை ஈரப்பதமுள்ள இலையுதிர் காடுகள் வரை தனது கவனத்தை செலுத்துகின்றது. மதிப்பிடற்கரிய மரங்களாக சந்தனம், தேக்கு மற்றும் கருங்காலி மரம் மற்றும் காட்டு விலங்குகளான புலி, யானை, சோலைமந்தி (சிங்க வால் குரங்கு), சாம்பல் நிற அணில் மற்றும் அரிய வகை உட்பிரதேசத்திற்குரிய விலங்கினங்கள் மற்றும் எண்ணிலடங்கா இனங்களான முக்கிய மருத்துவத் தாவரங்களை உள்ளடக்கிய ஒரு பிரதேசத்திற்குரிய தாவரங்கள்) இவற்றின் பாதுகாப்பு வளர்ச்சியில் தனிக் கவனம் செலுத்துகின்றது. தமிழ்நாடு மாநில வனச் சட்டம், 1882, வனவுயிரினப் பாதுகாப்புச் சட்டம் 1972, வனப் பாதுகாத்தல் சட்டம், 1980 மற்றும் அதன் துணை விதிகள் இச்சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு இவ்வனங்கள் வனத்துறையினரால் பாதுகாக்கப்படுகின்றது. இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் வனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. வனங்களின் தட்பவெப்பநிலையை, சீராக வைப்பதுடன், மழைபெய்ய வைக்க முக்கிய காரணங்களாகவும் அமைகின்றது. ஆறுகளின் பிறப்பிடமாக, ஆயிரக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரமாக ஆபத்திலிருந்து பாதுகாக்கும் அலையாத்திக் காடுகளாக வனங்கள் திகழ்கின்றன. பல்லுயிர் பெருக்கத்தின் புகலிடமாக விளங்கும் காடுகள் வனவிலங்குகளுக்கு உய்விடமாகவும், அரிய வகை மூலிகைகளுக்கு உறைவிடமாகவும், மலைவாழ் மக்களுக்கு அரணாகவும் விளங்குகின்றன. மண் அரிமானத்தை தடுத்து வேளாண்மையின் வளர்ப்புத் தாயாகவும் காடுகள் விளங்குகின்றன. நச்சு வாயுக்களின் தாக்கத்தினால் ஏற்படும் விளைவுகள் குறைந்து வரும் வேளாண்மை உற்பத்தி திறன் தண்ணீர் பற்றாக்குறை ம்ற்றும் அதிகரித்து வரும் வாயு மாசுக்கள் போன்ற முக்கிய காரணங்களினால் வனங்களின் முக்கியத்துவம் முன்பை விட தற்பொழுது உணரப்படுகின்றது. காப்பு வனப்பகுதிகளும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளும் பல்லுயிர் களஞ்சியமாக திகழ்கின்றன. தமிழ்நாட்டில் தாவரவளம் தட்பவெப்பம், நிலத்தன்மை, கடல்மட்டத்திலிருந்து உயரம் போன்ற பல்வேறு காரணங்களினால் மாறுபட்டு காணப்படுகின்றது. இவை நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.-; தமிழகத்தின் வனக்கொள்கை மற்றும் வனத்துறையின் செயல்பாடுகள், தேசிய வனக் கொள்கையைச் சார்ந்து அமைந்துள்ளன.1988 இல் வகுக்கப்பட்ட தேசிய வனக் கொள்கையில் காடுகளை பராமரிக்கவும் அவற்றின் மேலாண்மைக்கு பின்பற்ற வேண்டிய அணுகுமுறைகளையும், கோட்பாடுகளையும் விவரித்து குறிப்பிடப்பட்டுள்ளது. வனக்கொள்கையின் முதன்மையான குறிக்கோள் வனக்கொள்கையை நடைமுறைப்படுத்த ஏற்படுத்தப்பட்ட சட்டங்கள். மலேசியா வாசுதேவன் மலேசியா வாசுதேவன் (சூன் 15, 1944 - பெப்ரவரி 20, 2011) ஒரு தென்னிந்தியத் திரைப்படப் பாடகரும் நடிகரும் ஆவார். எட்டாயிரத்திற்கும் அதிகமான தமிழ்த் திரைப்பாடல்களைப் பாடியவர். கேரளத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட மலேசியாவைச் சேர்ந்த சத்து நாயர் - அம்மாளு தம்பதியருக்கு எட்டாவது மகனாகப் பிறந்தார் வாசுதேவன். மலேசியாவில் தமிழர் இசைக் குழு ஒன்றில் முக்கிய பாடகராக விளங்கினார் மலேசியாவில் பல நாடகங்களில் நடித்த அனுபவத்தை நம்பிக்கையாகக் கொண்டு சென்னை வந்தார். திரைப்பட வாய்ப்புகளைத் தேடினார். மலேசியத் தமிழர்கள் கூட்டாகத் தயாரித்த "இரத்தப் பேய்" என்ற தமிழ்ப் படத்தில் முதல் முறையாக நடிகனாக அறிமுகமானார். 1970களில் விளம்பர நிறுவனங்களுக்காக 45 ஆவணப் படங்களில் நடித்துள்ளார். இளையராஜாவின் "பாவலர் பிரதர்ஸ்" குழுவில் பல மேடைக் கச்சேரிகளில் பாடி வந்தார். மலேசியா வாசுதேவன் அன்னப்பூரணி (உஷா வாசுதேவன்) ௭ன்ற பெண்ணை 26 சனவரி மாதம் 1976-இல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மூன்று பிள்ளைகள்: யுகேந்திரன், பிரசாந்தினி மற்றும் பவித்ரா. இவருடைய மகன் தமிழ்த் திரைப் படங்களிலும் மற்ற மொழி திரைப் படங்களிலும் நடித்துள்ளார். மேலும் பின்னணிப் பாடகராகவும் திகழ்கிறார். இவருடைய மகள் பிரசாந்தினி ஒரு பின்னணிப் பாடகி. வாரணம் ஆயிரம், ஆடுகளம் போன்ற பல திரைப் படங்களில் பாடல் பாடியுள்ளார். ஜி. கே. வெங்கடேஷ் இசையமைப்பில் "பொல்லாத உலகில் ஒரு போராட்டம்" என்ற படத்தில் "பாலு விக்கிற பத்தம்மா..." என்ற பாடல் மூலம் திரையுலகில் பாடகராக அறிமுகமானார். பாரதிராஜா இயக்கத்தில் 16 வயதினிலே படத்தில் கமல்ஹாசனுக்காக "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு..." என்ற அவர் பாடிய பாடல் பெரும் புகழ் பெற்றது. அதன் பிறகு ஏராளமான படங்களில் புகழ்பெற்ற பாடல்களைப் பாடினார். கோடைகாலக் காற்றே, அள்ளித் தந்த பூமி, அடியாடு பூங்கொடியே, தங்கச் சங்கிலி எனப் பல பாடல்கள் புகழ் பெற்றன. ஒரு கைதியின் டைரி படத்தில் வில்லனாக நடித்தார். அதன் பின்னர் பல படங்களில் நடிக்கவும் தொடங்கினார். 85 திரைப்படங்களில் நடித்துள்ளார். முதல் வசந்தம், ஊர்க்காவலன், ஜல்லிக்கட்டு என வெற்றிப் படங்கள் பலவற்றில் வில்லனாகவும் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார். சன் தொலைக்காட்சியில் "சிலந்தி வலை" உட்பட ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். ஆனந்த் என்பவர் இயக்கிய "மலர்களிலே அவள் மல்லிகை" என்ற படத்திற்கு கதை, வசனம் எழுதியிருக்கிறார். மலேசியா வாசுதேவன் ௭ண்பதுகளில் ஒரு சில தமிழ்த் திரைப் படங்களுக்கு இசையமைத்து உள்ளார். குறிப்பாக சாமந்தி பூ, பாக்கு வெத்தலை மற்றும் ஆயிரம் கைகள் போன்ற திரைப் படங்களுக்கு இசையமைத்தார். தமிழக அரசின் கலைமாமணி விருது இவருக்குக் கிடைத்தது. சில ஆண்டுகளாகப் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட வாசுதேவன் 2011 பெப்ரவரி 20 ஞாயிற்றுக்கிழமை பகல் 1 மணிக்கு காலமானார். இவர் நடித்த சில திரைப்படங்கள் பாவை விளக்கு சீராக்கத்தக்க தொடுப்பு சீராக்கத்தக்க தொடுப்பு (Adjustable bend) என்பது இரண்டு கயிறுகளின் முனைகளைத் தொடுப்பதற்குப் பயன்படும் ஒரு முடிச்சு ஆகும். இதில் ஒரு கயிற்றின் முனையைப் பயன்படுத்தி மற்றக் கயிற்றின் நிலைப்பகுதியில் ஒரு உருட்டுக் கண்ணிமுடிச்சும், அடுத்த கயிற்றின் முனையைப் பயன்படுத்தி முதற் கயிற்றின் நிலைப் பகுதியில் இன்னொரு உருட்டுக் கண்ணிமுடிச்சும் இடுவதன் மூலம் இத்தொடுப்பு முடிச்சு முடியப்படுகின்றது. இதனைப் பயன்படுத்திக் கயிற்றின் நீளத்தை இலகுவாகக் கூட்டிக் குறைக்க முடியும். உருட்டுக் கண்ணிமுடிச்சு உருட்டுக் கண்ணிமுடிச்சு (Rolling hitch) என்பது ஒரு கயிற்றை தண்டு, கழி அல்லது இன்னொரு கயிறு போன்றவற்றுடன் இணைப்பதற்குப் பயன்படும் ஒரு முடிச்சு ஆகும். ஒரு எளிமையான உராய்வுக் கண்ணிமுடிச்சான இது பொருட்களின் நீளத் திசையில் இழுவையைக் கொடுப்பதற்குப் பயன்படுகிறது. பாய்க் கப்பல்களில் பாய்மரக் கயிறுகளில் ஏற்படக்கூடிய சிக்குகளைப் போக்கும் நோக்கில் அக் கயிறுகளின் குறிப்பிட்ட பகுதியை இழுவிசையில் இருந்து விடுவிப்பதற்குப் பயன்படுகின்றது. 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்த முடிச்சை மக்னசுக் கண்ணிமுடிச்சு என அழைத்தனர். உருட்டு முடிச்சில் சிறிது வேறுபாடுகளைக் கொண்ட இரண்டு வகைகள் உள்ளன. ஆசிலியின் நூலில் இவை உருட்டுக் கண்ணி முடிச்சு(1), உருட்டுக் கண்ணிமுடிச்சு(2) எனப் பெயரிட்டுக் காட்டப்பட்டுள்ளன. இந்நூலில் இவை முறையே #1734, #1735 என்னும் எண்களால் குறிப்பிடப்படுகின்றன. இவற்றைவிட ஆசிலியின் நூலில் #1736 எண்ணால் குறிப்பிடப்படும் முடிச்சுக்கு மக்னசுக் கண்ணிமுடிச்சு எனப் பெயர் கொடுத்துள்ளார். சீராக்கத்தக்க கண்ணிமுடிச்சு சீராக்கத்தக்க கண்ணிமுடிச்சு என்பது ஒரு தடத்தின் அளவைக் கூட்டிக் குறைக்கக்கூடியதாக அமைந்த ஒரு தட முடிச்சு ஆகும். இது இழுவை நிலையிலுள்ள ஒரு கயிற்றில் பயன்படுத்தக்கூடியது. ஒரு பொருளைச் சுற்றி எடுத்தபின் கயிற்றின் நிலைப்பகுதியில் செயல்முனையினால் உருட்டுக் கண்ணிமுடிச்சு ஒன்று முடியப்படும். தடத்தின் அளவைக் கூட்டிக் குறைப்பதன் மூலம் கயிற்றின் இழுவை பேணப்படுகின்றது. கூடாரங்கள் அமைக்கும்போது கூடாரக் கயிற்றை இழுத்துக் கட்டுதல், மரவியலாளர்கள் மரங்களில் ஏறுதல், வ்ண்டிகளில் சுமைகளை ஏற்றிக் கட்டுதல் போன்றவற்றுக்கு இம் முடிச்சுப் பயன்படுகின்றது. பல சிறப்புக்களைக் கொண்ட இம் முடிச்சு, ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியைப் பழுது பார்ப்பது தொடர்பான இரண்டாவது பயணத்தில் விண்வெளி வீரர்கள் இதனைப் பயன்படுத்தினர். அச்சாணிக் கண்ணிமுடிச்சு அச்சாணிக் கண்ணிமுடிச்சு (Axle hitch) என்பது அணுகுவதற்குக் கடினமான இடங்களில் முடிவதற்கு அல்லது ஊடுதலான பாதுகாப்புத் தேவைப்படும் இடங்களில் பயன்படும் ஒரு கண்ணிமுடிச்சு ஆகும். இம் முடிச்சு பௌலைன் முடிச்சு அல்லது அதுபோன்ற வேறு முடிச்சுக்கள் இடுவதன் மூலம் முடிக்கப்பட வேண்டும். முடிச்சுக்களின் பட்டியல் இந்திய இயற்பியலாளர்கள் சிசிர் குமார் மித்ரா சிசிர் குமார் மித்ரா ("Sisir Kumar Mitra", அக்டோபர் 24, 1890 - ஆகசுட் 13 1963) ஒரு இந்திய இயற்பியலாளர். இவர் கொல்கத்தாவின் ஊக்ளி மாவட்டத்திலுள்ள கொன்னாகர் என்ற இடத்தில் பிறந்தார். ஜாய்கிருஷ்ண மித்ரா, சரத்குமாரி தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார் சிசிர் குமார்.சிசிருக்கு 9 அல்லது 10 வயது நிரம்பியிருந்த நிலையில், ராம் சந்திர சாட்டர்ஜி என்ற ஒருவர் கொல்கத்தா மைதானிலிருந்து பசீர்காட் வரையிலான 15 கி.மீ. தொலைவிற்கு ஒரு பெரிய பலூனைப் பறக்கவிட்டுக் காட்டினாராம்; உடன் தன் அண்ணண் சதீஷ் குமாரிடம் துருவித்துருவி ஆராய்ந்து அந்த பலூன் எவ்வாறு பறந்தது என்று தெரிந்து கொண்டாராம் சிசிர். பகல்பூர் டீ.என்.ஜே. கல்லூரியில் எப்.ஏ. படிப்பில் சேர்ந்தார் சிசிர். சில காலம் கழித்து அவரது அண்ணன்கள் இருவரும் இறந்தனர்; அத்துயரம் தாங்காது அவர் தந்தையும் காலமானார். குடும்பப் பொறுப்பு முழுவதையும் சிசிரின் தாயார் மனம் கலங்காமல் ஏற்றுக்கொண்டார். சிசிரை கொல்கத்தா அனுப்பினார்; அங்கு பிரெசிடென்சி கல்லூரியில் அறிவியலில் இளங்கலை, முதுகலைப் பட்டங்கள் பெற்றார் மித்ரா. அங்கிருந்த போது சர்.பீ.சீ. ரே, சகதீசு சந்திர போசு ஆகியோரின் வகுப்புகளை கவனிப்பதுண்டு; அவர்களது அறிவியல் ஆளுமையால் கவரப்பட்டார். முதுகலைப் பட்டம் பெற்றவுடன் பிரெசிடென்சி கல்லூரியிலேயே சகதீசு சந்திர போசுக்கு உதவியாக ஆய்வுப்பணியில் சில காலம் ஈடுபட்டார் சிசிர் குமார். குடும்பச்சூழல் காரணமாக வேலைக்குச் செல்ல நேரிட்டதால் அவரால் இப்பணியைத் தொடர இயலவில்லை. கொல்கத்தா அறிவியலுக்கான பல்கலைக்கழகக் கல்லூரியில் ஆய்வறிஞராக சேர்ந்தார். ஒளியின் விளிம்பு விளைவு, குறுக்கீட்டு விளைவு ஆகியவை குறித்த ஆய்வுகளை சர்.சி.வி.ராமன் பார்வையில் மேற்கொண்டு , 1919-ல் ஒளி ஊடுபுகுதலும் சிதறலும் (The interference and diffraction of light) என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து டி.எஸ்சி பட்டம் பெற்றார். பின்னர் பாரிஸ் சென்று 1923-இல் PhD பட்டம் பெற்றார். சகதீசு சந்திர போசின் (ரேடியோ) அலைகள் பற்றிய ஆய்வுகளால் உந்தப்பட்டு மித்ராவும் தொலைத்தொடர்பு அறிவியலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அவரது அயராத உழைப்பால் அரிங்கடா அயனிமண்டல கள நிலையம் (Harringhata Ionosphere Field Station), வானொலி இயற்பியல் மற்றும் மின்னணுவியல் நிலையம் (Institute of Radio Physics and Electronics, Calcutta) ஆகிய முக்கிய ஆராய்ச்சி நிலையங்கள் தோற்றுவிக்கப்பட்டன. இவர் வெளியிட்ட உயர் வளிமண்டலம் (The Upper Atmosphere) என்ற ஆய்வுக்கட்டுரை உலக அளவில் பாராட்டைப் பெற்றது. சகதீசு சந்திர போசிடம் பணிபுரிந்த பிறகு, தான் எப்.ஏ. படிப்பு படித்த டீ.என்.ஜே. கல்லூரியிலேயே ஆசிரியராக பணியில் சேர்ந்தார் சிசிர் குமார். பின்னர் ஒரு கிருத்தவக் கல்லூரியில் பணிபுரிந்தார்; அவரது பாணி, பரிசோதனைகளைச் செய்து காட்டியபடியே வகுப்புகள் எடுப்பது. மேலும் வெகுசன அறிவியல் கட்டுரைகளையும் அதிகளவில் எழுதி வந்தார். அறிவியல் தத்துவங்களை தெளிவாகவும் துல்லியமாகவும் எடுத்துரைப்பதில் வல்லவர் என்ற பெயர் அவருக்கு வாய்த்து. லீலாதிலகம் லீலாதிலகம், 14 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், கேரளத்தில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் ஓர் இலக்கண நூல். இந்நூலில் படி ஒன்று 1908 இல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நூல் கேரளத்தில் பாட்டு மரபுக்கும், மணிப்பிரவாளத்துக்கும் இடையிலுள்ள தொடர்புகளை வரையறுப்பதுடன், இசைவாகக் கலக்கக்கூடிய உள்ளூர் மற்றும் சமசுக்கிருதச் சொல் வகைகளைப் பற்றியும் எடுத்துரைக்கின்றது. இம்மணிப்பிரவாளப் பாடல்களில் சமசுக்கிருத இலக்கணமே பின்பற்றப்படவேண்டும் என்றும் இந்நூல் குறிப்பிடுகின்றது. இது, சேரநாட்டுத் தமிழில் மணிப்பிரவாளம் மூலம் சமசுக்கிருதம் எவ்வாறு படிப்படியாக ஆதிக்கம் செலுத்தியது என்பதை விளக்குகிறது. இது போன்றே கேரளத்தில் மணிப்பிரவாள நடையில் எழுதப்பெற்று, இன்றும் கிடைக்கக்கூடிய மிகப் பழம்பெரும் நூல் வைசிக தந்திரம் என்பதாகும். தமிழ் எழுத்து அபுகிடா அபுகிடா என்பது ஒரு வகை எழுத்து முறை ஆகும். இது உயிர்மெய்யெழுத்துகளை அடிப்படையாகக் கொண்டது. அபுகிடா எழுத்து முறையில் மெய்யெழுத்து உயிரெழுத்தைத் தன்னுள் கொண்டே வரும். ஏற்ற குறியிடுவதன் மூலம் அம்மெய்யெழுத்திலுள்ள உயிரெழுத்தின் ஒலியை மாற்றி அமைக்கலாம். எ-டு 'க'வுடன் துணைக்கால் சேர்த்தால் 'கா'ஆகிறது. இது அபுகிடாவின் ஒரு இயல்பாகும். உலகில் புழக்கத்தில் உள்ள எழுத்து முறைகளில் அரைப்பங்கு அளவான எழுத்து முறைகள் அபுகிடா வகையைச் சேர்ந்தவையே. இவற்றுள், தெற்காசியாவிலும், தென்கிழக்காசியாவிலும் புழக்கத்திலுள்ள பிராமியக் குடும்ப எழுத்து முறைகளான நகரி, தேவநாகரி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், சிங்களம் போன்ற எழுத்துக்களும் இவ்வபுகிடா இனத்தையே சாரும். பொதுவாக, அபுகிடா முறையைச் சேர்ந்த ஒரு முழு எழுத்து ஒரு மெய்யெழுத்தைக் குறிக்கிறது. இவ்வெழுத்துக்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஒரு குறிப்பிட்ட திசையில் எழுதப்பட்டு வருகின்றன. உயிரொலிகள் மெய்யெழுத்துக்களில் தங்கியுள்ளன. தனியான அடையாளக் குறிகளை மெய்யெழுத்துக்களுடன் சேர்ப்பதன் மூலம் அல்லது மெய்யெழுத்திலேயே சிறிய மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் மெய்யெழுத்துக்கு உயிரொலிகள் சேர்க்கப்படுகின்றன. தனியான அடையாளக் குறிகளைச் சேர்ப்பதற்கு எடுத்துக்காட்டாக "கா", "கி" போன்ற எழுத்துக்களையும், மெய்யெழுத்து மாறுதலடைவதற்கு எடுத்துக்காட்டாக "கு" போன்ற எழுத்துக்களையும் கொள்ளலாம். அடையாளக் குறிகளை மெய்யெழுத்துக்களுடன் சேர்க்கும்போது குறியீடுகள் மெய்யெழுத்தைத் தொடர்ந்து எழுதும் திசையிலேயே எழுத்தப்படும் என்பதில்லை. சில வேளைகளில் மெய்யெழுத்துக்கு முன்னாலோ, மேலேயோ அல்லது கீழேயோ உயிரொலிக் குறியீடு வருவது உண்டு. எடுத்துக்காட்டாக "கே", "யூ" போன்ற எழுத்துக்களைக் குறிப்பிடலாம். மெய்யொலி தொடர்புபடாத உயிரொலிகளைக் குறிப்பதற்கு அபுகிடா முறையில் இரண்டு வழிகள் கையாளப்படுகின்றன. உயிரொலித் தொடர்பற்ற மெய்யொலிகள் பின்வரும் முறைகளில் ஒன்றால் வெளிப்படுகின்றன. அபிகுடா எழுத்து முறையில் ஓரளவுக்கு வேறுபாடாகச் செயற்படும் மூன்று வகைகள் உள்ளன. மீயுரை பரிமாற்ற நெறிமுறை மீயுரை பரிமாற்ற நெறிமுறை என்பது இணையத்தில் எவ்வாறு உலாவிகள், வலைத்தள வழங்கிகள், மற்றும் இதர வலை ஒருங்கியங்கள் தமக்கிடையேயான தகவல் பரிமாற்றத்தை வரையறை செய்யும் நெறிமுறை ஆகும். இதன் மூலமே உலகளாவிய வலை செயற்படுகிறது. ஆங்கிலத்தில் இது Hypertext Transfer Protocol (HTTP) எச்.டி.டி.பி என அறியப்படுகிறது. நமது வங்கிக் கணக்கு, மின்சாரக் கட்டணம், தொலைபேசிக் கட்டணம், பயண முன்பதிவு போன்றவைகளை நாம் இணையதளங்கள் மூலம் செய்யும் போது நம்முடைய வங்கிக் கணக்கு எண், கடவுச் சொல் போன்றவைகளை யாரும் திருடி விடாமலும் இவைகளை எந்த இடத்திலும் சேமிக்காமலும் இருக்க https (hyper text transfer protocol secure)மீயுரை பரிமாற்ற நெறிமுறை பாதுகாப்பு உதவுகிறது. சத்தியேந்திர நாத் போசு சத்தியேந்திர நாத் போசு ("Satyendra Nath Bose", வங்காளம்: সত্যেন্দ্র নাথ বসু, ஜனவரி 1, 1894 - பெப்ரவரி 4, 1974) இந்திய இயற்பியலாளர் ஆவார். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இவர் கணித இயற்பியலில் சிறப்புப் பயிற்சி பெற்றவர். இவர் 1920களில் குவாண்டம் பொறிமுறையில் மேற்கொண்ட ஆய்விற்காகவும் அதன் மூலம் போசு-ஐன்ஸ்டைன் செறிபொருள், போசு-ஐன்ஸ்டைன் புள்ளியியல் போன்ற தத்துவங்களுக்காகவும் அறியப்படுகிறார். இயற்பியலில் நோபல் பரிசு பெற்றவரான பால் டிராக் என்பவரால் போசான் வளிமத்திற்கு இவரது நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டது. அறிவியலில் இவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசன் இந்திய அரசால் 1954ல் வழங்கப்பட்டது. மட்டுவ இயற்பியல் (குவாண்டம் இயற்பியல்) உருவாகக் காரணமாயிருந்த பிளாங்கின் 'தெர்மோடைனமிக் உண்ட் வாமஸ்டிராலங்' என்ற புத்தகத்தில் ஊகத்தின் அடிப்படையில் பிளாங்கு ஒரு சமன்பாட்டை எழுதியிருந்தார். "உனக்கு ஐயத்திற்கிடமின்றி ஏற்புடையதாக இல்லாத வரையில் எந்த ஒரு கருத்தையும் ஒப்புக்கொள்ளாதே" என்ற குறிக்கோள் கொண்டிருந்த சத்யேந்திரநாத்தால் பிளாங்கின் வழிமுறையை ஏற்க முடியவில்லை. உடனே அதை வேறு வழிமுறையைக் கையாண்டு திருத்தம் செய்கையில் பிறந்தது தான் போசு-ஐன்ஸ்டைன் புள்ளியியல். இதைச் செய்தபோது போசுக்கு வயது முப்பது. 1916ல் சத்யேந்திரநாத் 'அறிவியல் பல்கலைக்கல்லூரி'யில் ஆசிரியராக சேர்ந்தபோது அவருடன் ஆசிரியப்பணியில் சேர்ந்தவர் மேக்நாத் சாகா. அங்கு பணிபுரிந்த ஆசிரியர்களும் விரிவுரையாளர்களும் பழைய இயற்பியலையே கற்பித்துக் கொண்டிருந்த நிலையில் இவ்விருவரும் நடப்பு இயற்பியலில் ஏற்பட்டுக் கொண்டிருந்த புரட்சிகரமான புதிய தத்துவங்களைப் பற்றி அறிவதிலும் அவற்றைக் கற்பிப்பதிலும் ஆர்வம் செலுத்தினர். ஐன்ஸ்டைனின் சார்பியல் தத்துவம் அடங்கிய ஆய்வுக்கட்டுரையை பெரும் சிரமத்திற்குப் பின்னர் பெற்றனர் சத்யேந்திரநாத்தும் சாகாவும். (முதல் உலகப்போர் நடந்து கொண்டிருந்த காலம் அல்லவா!) பின்னர் தான் தெரிந்தது, கட்டுரை செர்மன் மொழியில் இருந்தது என்று. போசு மனம் தளராதவர் அல்லவா! தானும் கற்று, சாகாவிற்கும் செர்மன் மொழியைக் கற்றுத்தந்து, பின்னர் அந்த ஆய்வுக்கட்டுரையை இருவரும் படித்தனர்!! அதை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தனர். ஐன்ஸ்டைனின் சிறப்புச் சார்புக் கோட்பாடு ஆய்வுக்கட்டுரையை முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்கள் என்ற பெருமையை அடைந்தனர். எழுத்தின் வரலாறு எழுத்தின் வரலாறு என்பது, வரி வடிவங்களின் மூலம் மொழியைக் குறிக்கும் முறை பல்வேறு நாகரிகங்களிலும் தோற்றம்பெற்று வளர்ந்த வரலாற்றைக் குறிக்கும். உண்மையான எழுத்துமுறை மெசொப்பொத்தேமியா, சீனா, எகிப்து, நடு அமெரிக்கா ஆகிய நாகரிகப் பகுதிகளில் தனித்தனியாகத் தோன்றி வளர்ந்ததாகத் தெரிகிறது. எனினும், எகிப்து, எழுத்துமுறையின் கருத்துருவையாவது சுமேரியர்களிடம் இருந்து பெற்றிருக்கக் கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சீனாவினதும், மெசொப்பொத்தேமியாவினதும் எழுத்து முறைகள் இன்றைய உலகில் புழக்கத்தில் உள்ள எழுத்து முறைகளின் வளர்ச்சியில் பெருமளவு செல்வாக்கைக் கொண்டிருந்தன. மிகவும் பிற்காலத்தில் ஏறத்தாழ கிமு 900 ஆவது ஆண்டளவில் தோன்றிய நடு அமெரிக்க எழுத்து முறையைத் தவிர்த்து, ஏனைய எழுத்து முறைகள் புதிய கற்காலத்தின் எழுத்துக்கு முற்பட்ட குறியீடுகளில் இருந்து, கிமு 4ஆவது ஆயிரவாண்டு காலப் பகுதியில் நிலவிய தொடக்க வெண்கலக் காலத்தில் வளர்ச்சியடைந்தவையாகும். கிமு 4ஆம் ஆயிரவாண்டில் வளர்ந்த எழுத்து முறைகளைத் திடீர்க் கண்டுபிடிப்புக்களாகக் கருத முடியாது. இவை இவற்றுக்கு முந்திய காலத்திலிருந்த குறியீட்டு முறைகளிலிருந்து தோன்றியவையாகும். இக் குறியீட்டு முறைகள் முறையான எழுத்து முறைகள் அல்லாவிட்டாலும், அவை எழுத்துகளுக்கு உரிய சில சிறப்பம்சங்களைத் தம்மகத்தே கொண்டிருந்தன. இவை பொருட்குறிப்பு வரிவடிவங்களையோ அல்லது நினைவுக் குறியீடுகளையோ தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்குப் பயன்படுத்தின. எனினும் இவை நேரடியான மொழி சார்ந்த உள்ளீடுகளைக் கொண்டிருக்கவில்லை. இந்த முறைகள் தொடக்கப் புதிய கற்காலத்தில் கிமு 7 ஆவது ஆயிரவாண்டு காலப் பகுதியில் உருவாகின. குறிப்பாக, வின்கா குறியீடுகள் (Vinča signs) கிமு 7 ஆம் ஆயிரவாண்டில் எளிமையான குறியீடுகளில் இருந்து தொடங்கி, கிமு 6 ஆவது ஆயிரவாண்டு முழுதும் படிப்படியாகச் சிக்கல்தன்மை பெற்று கிமு 5 ஆம் ஆயிரவாண்டு அளவில் தார்த்தாரியா வில்லைகளில் காணப்படும் வடிவங்களாக வளர்ச்சியடைந்ததைக் காட்டுகின்றன. தார்த்தாரியா வில்லைகளில் குறியீடுகள், எழுத்துக்கள் எழுதப்படுவது போன்று ஒழுங்கான வரிசையில் எழுதப்பட்டிருப்பதைக் காணமுடியும். ஆறாம் ஆயிரவாண்டுக்கு உரியதாகக் கருதப்படும் டிசுப்பிலியோ வில்லையும் இதைப் போன்றதே. எகிப்து, சுமேரியா ஆகிய பண்டைய அண்மைக் கிழக்குப் பகுதிகளின் ஆப்பெழுத்துக்கு முந்திய பட எழுத்துக்கள் இவ்வாறான குறியீடுகளில் இருந்து வளர்ந்தவையே. இதனால் எக் காலத்தில் முறையான எழுத்து முறை தோற்றம் பெற்றது என்பதைக் குறிப்பாகக் கூற முடியாது. பழைய குறியீடுகள் குறிக்கும் பொருள் என்ன என்பதும் தெரியாமல் இருப்பதால் இவ்வாறு அறிந்து கொள்வது மேலும் கடினமாகிறது. 2003 ஆம் ஆண்டில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஆமையோடுகளில் சியாகு எழுத்துக்கள் (Jiahu Script) செதுக்கப்பட்டிருந்தன. கதிரியக்கக் கரிமக் காலக்கணிப்பு முறையைப் பயன்படுத்தி இது கிமு ஆறாம் ஆயிரவாண்டைச் சேர்ந்தது என அறியப்பட்டுள்ளது. இந்த ஆமையோடுகள், வட சீனாவில் உள்ள ஹெனான் மாகாணத்தில் சியாகு என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 24 புதை குழிகளுள் கண்டுபிடிக்கப்பட்டன. சில தொல்லியலாளர்கள் இது கிமு 2 ஆவது ஆயிரவாண்டைச் சேர்ந்த ஒராக்கிள் எலும்பு எழுத்துக்களோடு (Oracle bone script) ஒத்திருப்பதாகக் கருதினர். எனினும் பல பிற ஆய்வாளர்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. கிமு 4 ஆவது தொடக்கம் 3 ஆவது ஆயிரவாண்டு காலப்பகுதியைச் சேர்ந்த சிந்துவெளி முத்திரைகளில் காணப்படும் குறியீடுகளும் இவ்வாறான எழுத்துக்கு முந்திய காலக் குறியீடுகளாக இருக்கக் கூடும் எனச் சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர். வெண்கலக் காலத்தில் உலகின் பண்பாடுகள் பலவற்றில் எழுதும் வழக்கம் உருவானது. தொடக்ககால சுமேரிய எழுத்துமுறை, பண்டங்களைக் குறிக்கப் பயன்பட்ட களிமண்ணால் செய்யப்பட்ட அடையாள வில்லைகளில் இருந்து தொடங்கியது. கிமு 4 ஆவது ஆயிரவாண்டின் முடிவில் இது கணக்கு வைக்கும் ஒரு முறையாக மாற்றம் பெற்றது. இம்முறையில் ஒரு வட்ட முனை கொண்ட எழுத்தாணியால் ஈரமான களிமண் வில்லைகளில் அழுத்தி எண்களைக் குறிப்பிட்டு வந்தனர். இம் முறையில் ஏற்பட்ட வளர்ச்சியைத் தொடர்ந்து, படிப்படியாக, எண்களுடன் எண்ணப்பட்ட பொருள் என்ன என்பதைக் குறித்துக்காட்ட அப்பொருளின் படத்தையும் வரைந்தனர். இப் படம் கூரிய எழுத்தாணியால் அக் களிமண் தகட்டில் வரையப்பட்டது. இது பட எழுத்தாக உருவானது. கிமு 2700 - 2500 காலப்பகுதியில் வட்ட முனை எழுத்தாணியும் கூரிய எழுத்தாணியும் கைவிடப்பட்டு ஆப்புவடிவ எழுத்தாணி புழக்கத்துக்கு வந்தது. இதனால் இவ்வாறு எழுதப்பட்ட எழுத்து முறை ஆப்பெழுத்து என அழைக்கப்பட்டது. தொடக்கத்தில் உருபனெழுத்துக்களை (logogram) மட்டுமே எழுதப் பயன்பட்ட இம் முறை பின்னர் ஒலியன் கூறுகளையும் குறிக்கப் பயன்பட்டது. கிமு 2600 ஆம் ஆண்டளவில் சுமேரிய மொழியின் அசைகளையும் குறிக்கத் தொடங்கிய ஆப்பெழுத்து முறை இறுதியாக உருபனெழுத்துக்கள், அசைகள், எண்கள் என்பவற்றுக்கான பொது எழுத்துமுறையாக ஆனது. கிமு 26 ஆம் நூற்றாண்டு தொடக்கம் இந்த எழுத்து முறையை அக்காடிய மொழியை எழுதுவதற்கும் பயன்படுத்தினர். அங்கிருந்து இவ்வெழுத்து முறை உர்ரிய மொழி (Hurrian), இட்டைட்டு (Hittite) ஆகிய மொழிகளுக்கும் பரவியது. உகாரிட்டிய மொழி, பழம் பாரசீகம் ஆகிய மொழிகளும் ஆப்பெழுத்துப் போன்ற தோற்றம் கொண்ட ஒரு முறையையே பயன்படுத்தின. எகிப்தியப் பேரரசைப் பேணிக் காப்பதற்கு எழுத்து இன்றியமையாததாக இருந்தது. எழுத்தறிவு கல்விகற்ற எழுதுவோர் என்னும் ஒரு பிரிவினரிடையே மட்டும் நிலவியது. குறிப்பிட்ட பின்னணியைக் கொண்டோரே எழுதப் பயின்று கோவில்கள், அரச மற்றும் படைத்துறைச் சேவைகளில் சேர்ந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். "புனிதஎழுத்து" (hieroglyph) எனப்பட்ட இம்முறை கற்பதற்கு மிகவும் கடினமானது. பிந்திய நூற்றாண்டுகளில், எழுதுவோரின் நிலையைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வேண்டுமென்றே இதனை மேலும் கடுமையாக்கினர். சுமேரிய எழுத்து முறைக்குப் பின்னரே எகிப்திய எழுத்துமுறை புழக்கத்துக்கு வந்ததாகவும், சுமேரிய எழுத்துக்களின் செல்வாக்கினாலேயே எகிப்திலும் இம்முறை உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வேறு சிலர் அத்தகைய செல்வாக்குக்கான சான்றுகள் குறைவே என்றும், எகிப்திய எழுத்து முறை சுமேரியத் தொடர்பின்றித் தனியாகவே உருவாகியிருக்கலாம் எனவும் கூறுகின்றனர். சீனாவில் பழைய அரச வம்சங்கள் பற்றிய தகவல்கள் பல அவர்கள் விட்டுச் சென்ற எழுத்து ஆவணங்கள் மூலமே தெரிய வந்துள்ளன. சாங் வம்சக் காலத்தில் இருந்து, இத்தகைய எழுத்துக்கள் எலும்பு, வெண்களம் ஆகியவற்றினாலான கருவிகளில் காணப்படுகின்றன. ஆமையோடுகளில் எழுதப்பட்டவற்றின் காலம் கரிமக் காலக்கணிப்பின் மூலம் கிமு 1500 என அறியப்பட்டுள்ளது. எழுதுவதற்குப் பயன்பட்ட பொருள் என்ன என்பதைப் பொறுத்து அது என்ன வகையான ஆவணம் என்பதையும் எவ்வாறு பயன்பட்டது என்பதையும் கண்டுகொள்ள முடியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அண்மைக் காலக் கண்டுபிடிப்புக்கள் சீன எழுத்து முறைகளின் காலத்தை கிமு 6000 ஆண்டுக் காலப்பகுதி வரை கொண்டு செல்வதாகக் கருதப்படுகின்றது. இந்த ஆமையோடுகளில் உள்ள சியாகு எழுத்து, பன்போ எழுத்து ஆகிய எழுத்துக்கள் உண்மையான எழுத்துக்கள் எனக் கருதுவதற்கான சிக்கல்தன்மை கொண்டவைதானா என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. உண்மையான எழுத்துக்களாக இருப்பின், இவை உலகின் முதல் எழுத்து முறை எனக் கருதப்படும் மெசொப்பொத்தேமிய ஆப்பெழுத்துக்களுக்கு 2000 ஆண்டுகள் முந்தியவையாக இருக்கும். எனினும் பெரும்பாலும் இவை ஐரோப்பிய வின்சா எழுத்துக்களை ஒத்த எழுத்துக்கு முந்திய குறியீடுகளாகவே இருக்கக்கூடும் எனக் கருதப்படுகின்றது. இதுவரை வாசித்துப் புரிந்துகொள்ளப்படாத முந்திய ஈலமிய எழுத்துக்கள் கிமு 3200 ஆண்டுக் காலப்பகுதியிலிருந்து காணப்படுகின்றன. இது 3 ஆவது ஆயிரவாண்டுக் காலப் பகுதியில் நீள் ஈலமியமாக மாறியது. இது பின்னர் அக்காடிய மொழியில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட ஆப்பெழுத்து முறையினால் மாற்றீடு செய்யப்பட்டது. அனத்தோலிய எழுத்துமுறை மேற்கு அனத்தோலியாவில் உருவானது. முதன் முதலாக கிமு 20 ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியில் இருந்து லூவிய அரச முத்திரைகளில் காணப்படுகின்றன. இவ்வெழுத்து முறை லூவிய மொழியை எழுதப் பயன்பட்டது. தார்த்தாரியா வில்லைகள் தார்த்தாரியா வில்லைகள் என்பன ருமேனியாவில் உள்ள தார்த்தாரியா என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று களிமண் வில்லைகளைக் குறிக்கும். இவ் வில்லைகளில் காணப்படும் குறியீடுகள் தொல்லியலாளர்கள் மத்தியில் சர்ச்சைகளை உருவாக்கின. சிலர் இவ் வில்லைகளில் காணப்படுபவை முறையான எழுத்துக்களே என்றும் அவையே உலகில் தோன்றிய முதல் எழுத்துக்கள் என்றும் கூறுகின்றனர் சிலர் அதை மறுக்கின்றனர். இவ்வில்லைகள் 1961 ஆம் ஆண்டில் பெயர்பெற்ற அல்பா லூலியா என்னும் நகரிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. குளூச் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த நிக்கோலே விலாசா (Nicolae Vlassa) என்பவர் அகழ்வாய்வு ஒன்றின்போது இந்தச் சுடப்படாத களிமண் வில்லைகளைக் கண்டெடுத்தார். இவற்றுடன், கல், களிமண் ஆகியவற்றால் செய்யப்பட்ட சிறிய உருவங்களும், ஒரு கையணியும், வளர்ந்த ஆண் ஒருவருடைய எரிந்து உடைந்த எலும்புகளும் கிடைத்தன. இரண்டு வில்லைகள் செவ்வக வடிவம் கொண்டவை, ஒன்று வட்ட வடிவமானது. இவை அனைத்தும் மிகவும் சிறிய அளவு கொண்டவை. வட்ட வில்லை 6 சதமமீட்டர் விட்டம் கொண்டது. இவற்றுள் வட்ட வில்லையிலும், செவ்வக வில்லை ஒன்றிலுமாக இரண்டு வில்லைகளில் துளைகள் இடப்பட்டுள்ளன. மூன்று வில்லைகளிலுமே அவற்றின் ஒரு பக்கத்தில் குறியீடுகள் காணப்படுகின்றன. இவற்றில் உள்ளது போன்ற குறியீடுகள் சேர்பியாவில் உள்ள வின்கா என்னுமிடத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்ட மட்பாண்டங்களிலும் தெற்கு பால்க்கன் பகுதிகளில் உள்ள வேறு பல இடங்களிலும் எடுக்கப்பட்ட பொருட்களிலும் காணப்படுகின்றன. துளையிடப்படாத வில்லையில் கொம்புள்ள ஒரு விலங்கும், இன்னொரு உருவமும், ஒரு மரக் கிளையும் உள்ளன. மற்ற வில்லைகளில் பலவிதமான பண்பியல் (abstract) குறியீடுகள் காணப்படுகின்றன. புதைப்பின் காரணம் என்னவெனத் திளிவாகத் தெரியவில்லை, ஆனால், புதைக்கப்பட்ட உடல் ஒரு ஆவியேறிப் பேசுபவருடையதாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகின்றது. ஜூன்கோ டபெய் ஜப்பானில் பிறந்த ஜூன்கோ டாபி (Junko Tabei) 10வயதாக இருக்கும் போதே மலையேறும் பயிற்சியில் சேர்ந்தார். ஜப்பானில் உள்ள நாசுமலை சிகரத்தில் ஏறுவதற்கு பயிற்சி பெற்றார். டோக்கியோ அருகில் உள்ள ஷோவா பெண்கள் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கிய பட்டம் பெற்றார். படிக்கும் போதே மலையேறும் கிளப் ஒன்றில் உறுப்பினராக சேர்ந்தார். 1969ம் ஆண்டில் பெண்கள் மலையேறும் கிளப் தொடங்கினார். இதற்கு ஜப்பான் பெண்கள் மலையேறும் கிளப் என்று பெயரிட்டார். திருமணத்துக்கு பின்னர் கணவருடன் இணைந்து பல சிகரங்களில் மலையேறும் பயிற்சிகளை மேற்கொண்டார். ஜப்பானில் உள்ள புஜி மலை உள்ளிட்ட சில உயரமான சிகரங்களில் ஏறி பயிற்சி பெற்றார். சுவிஸ் ஆல்ப் மலை சிகரங்களில் உள்ள மாட்டர்ஹார்னிலும் மலையேறும் பயிற்சி பெற்றார். பல பயிற்சிகளின் காரணமாக 1972ம் ஆண்டு ஜப்பானின் மிகச்சிறந்த மலையேறும் பெண் பயிற்சியாளர் என்ற பெயரை பெற்றார். இதையடுத்து ஜப்பானில் இருந்து வெளிவரும் யோமியுரி நாளிதழ் மற்றும் நிகான் தொலை காட்சி ஆகியவை இணைந்து ஜப்பானில் உள்ள பெண்கள் மலையேறும் குழுவை எவரஸ்ட் சிகரத்துக்கு அனுப்ப முடிவு செய்தன. ஜூன்கோ டாபி உட்பட 15 பெண்களை தேர்வு செய்தனர். இதற்காக அவர்களுக்கு கடுமையான பயிற்சிகள் அளிக்கப் பட்டன. 1975ம் ஆண்டின் தொடக்கத்தில் காத்மாண்டுவுக்கு அனுப்பப்பட்டனர். அங்கு உள்ளூரை சேர்ந்த 9 பேரை வழிகாட்டிகளாக அழைத்துக்கொண்டனர். 1953ஆம் ஆண்டு எவரஸ்ட் சிகரத்தை அடைந்த எட்மண்ட் இல்லரி, டென்சிங் நோர்கே ஆகியோர் சென்ற வழியில் பெண்கள் குழுவினர் எவரஸ்ட் சிகரத்தை நோக்கி சென்றனர். மே மாதம் எவரஸ்ட் சிகரத்தில் 6 ஆயிரத்து 300 மீட்டர் உயரத்தை அடைந்து அந்த பகுதியில் கூடாரம் அமைத்து தங்கியிருந்தனர். அப்போது அந்த பகுதியில் தீடீரென பனிப்பாறைகள் சரிந்தன. எல்லா பெண்களும் பனிப்பாறைக்கு அடியில் புதைந்து போயினர். ஜூன்கோ டாபியும் சுயநினைவை இழந்து விட்டார். அந்த சமயத்தில் ஒரு வழிகாட்டி ஜூன்கோ டாபி உள்ளிட்ட பெண்களை மீட்டார். அதன் பின்னர் 12 நாள் கழித்து ஜூன்கோ டாபி மட்டும் 1975ம் ஆண்டு இதே நாளில் எவரஸட் சிகரத்தை அடைந்தார். இதைதொடர்ந்து மேலும் பல சாதனைகளை செய்தார். இப்போது 61வயதாகும் இவர் வயதுகாரணமாக மலையேறும் சாதனைகளை குறைத்துக்கொண்டார். அல்பா லூலியா அல்பா லூலியா என்பது, ருமேனியாவின் டிரான்சில்வேனியாவில், அல்பா கவுண்டியில் உள்ள ஒரு நகரம் ஆகும். 66,747 மக்கள்தொகை கொண்ட இந் நகரம் மூரெசு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. 1541 முதல் 1690 வரையில் டிரான்சில்வேனியாவின் தலை நகரமாக இது இருந்தது. இந்த நகரம், ருமேனியர், ஹங்கேரியர் ஆகிய இரு பகுதியினருக்குமே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நகரமாக விளங்குகிறது. வின்கா குறியீடுகள் "வின்கா எழுத்துக்கள்", "பழைய ஐரோப்பிய எழுத்து" போன்ற பெயர்களாலும் குறிக்கப்படும் வின்கா குறியீடுகள் என்பன தென்கிழக்கு ஐரோப்பாவில் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுக்கு முந்தியகாலத் தொல்பொருட்களில் காணப்படும் குறியீடுகளைக் குறிக்கும். சில ஆய்வாளர்கள், கிமி 6000-4000 ஆண்டுக் காலப் பகுதியில் இப் பகுதியில் வாழ்ந்த வின்கா பண்பாட்டினரின் மொழிக்குரிய எழுத்துக்களாக இவை இருக்கலாம் எனக் கருதுகின்றனர். எனினும் பலர் இது குறித்து ஐயம் தெரிவிக்கின்றனர். மிகவும் சுருக்கமான குறியீடுகளையும், திரும்பத்திரும்ப வரும் குறியீடுகள் குறைவாக இருப்பதையும் சான்றாகக் காட்டி இது ஒரு எழுத்துமுறையைச் சார்ந்த எழுத்துக்களாக இருக்க முடியாது என இவர்கள் கூறுகின்றனர். இதுவரையில் கிமு 3000 ஆண்டுக் காலப்பகுதியில் உருவான சுமேரிய ஆப்பெழுத்துக்களே உலகின் முதல் எழுத்து முறையாகப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது. எனவே வின்கா குறியீடுகள் ஒருவகை எழுத்துக்கு முந்திய குறியீடுகளாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இக் குறியீடுகள் பொருள் குறித்திருக்கக் கூடும் எனினும் மொழியொன்றை எழுதப் பயன்பட்டிருக்க முடியாது எனப்படுகின்றது. திடீர் நினைவகம் திடீர் நினைவகம் ("flash memory") என்பது ஒரு வகை படிப்பு நினைவகம் (ROM). ஒரு பதிமுறைமையில் திடீர் நினைவகத்தில் தொடக்க நிரற்றொடரை (bootup code) பதிந்துக் கொள்ளப்படுகிறது. இவ்வகை நினைவகங்கள் புகைப்படக்கருவிகள், அலைபேசிகள், சலவைப்பெட்டிகள், சீருந்து பதிமின்னணுவில் (car embedded electronics), பொதுவாக அனைத்து பதிபயனகங்களில் (embedded applications) பிரபலமாகிவிட்டது. இரண்டு வகைகளான திடீர்நினைவகச் சாதனங்கள் தயாரிக்கப்படுகின்றன. முதல் வகை இல்லல்லது திடீர்நினைவகம். முதல் வகை இல்லல்லது திடீர்நினைவகம் (NOR flash). இதில் நிரற்றொடர் செயற்பாடு (code execution) விரைவானது. ஆனால் அழிப்பு மந்தமானது. கடந்த ஆண்டுகளாக இந்த வகை திடீர் நினைவகம் பிரபலமாக இருந்து வந்தது. அண்மைக் காலங்களாக இல்லும்மை திடீர்நினைவகம் (NAND) மிகவும் புழக்கத்தில் பயன்பட்டு வருகிறது. இவ்வகை திடீர்நினைவகம் இல்லும்மை வகையை விட அதிகக் கொள்ளளவில் கிடைக்கிறது. டாக்டர் Fujio Masuoka 1980ஆம் ஆண்டு தோஷிபாவில் வேலை செய்யும் போது திடீர் நினைவகம் (இல்லல்லது திடீர்நினைவகம் மற்றும் இல்லும்மை திடீர்நினைவகம்) கண்டுபிடிக்கப்பட்டது. திடீர் நினைவகம் பன் வழி முறையில் திட்டமிடப்பட்ட ஒரு பைட்டை பயில முடியும் ஆனால் ஒரு பிட்டை அழிக்க முழு பகுதியை அழிக்க வேண்டியுள்ளது. அழிவுபட்டபின் முழு பகுதியும் எண் ஒன்றால் அக்ரமிப்பு செய்யப்படுகிறது ,இதன் பிறகு திட்டமிடல் செய்துகொள்ளமுடிகிறது.ஒருபொழுது ஒரு பிட்டை ஒன்றனால் மறுபடியும் அதை புஜியம் ஆக மாற்ற ழூழு பகுதியையும் அழிக்கவேண்டியுள்ளது. மற்றொரு வரையறை என்னவென்றால் கட்டுப்பாடான நிரல் அழித்தல் சுழற்சி, அதாவது 1,00,000 முறை மட்டுமே அழிக்கும் திறன் மிகுந்தால் நினைவக உடைகள் எற்படும். இன்று இது 10 லட்சமாக உயர்வு கண்டுள்ளது. காற்பந்தாட்டங்கள் காற்பந்தாடங்கள்: இரக்பி இரக்பி ("Rugby") என்ற தலைப்பில் உள்ள கட்டுரைகள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. ஆங்கில இலக்கணம் ஆங்கிலம் எனப்படுவது ஒரு மேற்கு செருமானிய மொழி. இலக்கணம் என்பது ஒரு மொழியைப் பிழையின்றி பேசவும் எழுதவும் ஏற்படுத்தப்பட்ட - உதவுகிற - ஒரு நெறி. ஆகையால், ஆங்கிலம் பிழையின்றி பேசவும் எழுதவும் ஆங்கில இலக்கணம் இன்றியமையாததாக உள்ளது. தமிழில் சொல், பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நான்குவகைப்படுவது போல ஆங்கிலத்தில் அது எட்டு வகைப்படுகிறது. அவை, பெயர்ச்சொல்(1.Noun, 2.Pronoun), வினைச்சொல்(3.Verb), உரிச்சொல்(4.Adjective, 5.Adverb), இடைச்சொல்(6.Preposition, 7.Conjunction, 8.Interjection). இதனை Parts of speech (சொற்களின் வகை) என்பர். ஆங்கிலத்தில் சொற்களின் வகை(Parts of speech) 8 ஆகும். அவை, பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும். இவ்வகைப் பெயர்ச்சொல், ஒரு பொருளையோ அல்லது ஒரு பெயரையோ குறிக்கவே உதவுகின்றது. (எ-டு) மரம், குமார், குழந்தை, கை, அவனுடைய, அவளுடைய. இவை, பொதுவாக ஒரு பொருளையோ, ஒரு மனிதனையோ, ஒரு இடத்தையோ அல்லது ஒரு எண்ணத்தையோ ஒருவர் மற்றவரிடம் கூறவோ அல்லது பகிர்ந்துகொள்ளவோ உதவுகிறது. 1.Proper Nouns 2.Common Nouns 3.Abstract Nouns 4.Collective Nouns 5.Countable Noun 6.Uncountable Nouns ஆங்கிலத்தில் a, an, the என மூன்று ஆர்டிகல்கள் உள்ளன. ஆங்கிலத்தில் the definite article, the indefinite article என article இருவகைப்படும். The எனப்படும் ஆங்கிலச் சொல் Definite Article என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு பொருளைக் குறிப்பிட்டு கூறும் பொழுதே உபயோகிக்கப் படுகிறது. A, an என்கிற இவ்விரண்டும் Indefinite Article எனப்படும். இவை எந்த ஒரு பொருளையும் குறிப்பிட்டு சொல்ல பயன்பதுத்தப்பட மாட்டாது. தமிழைப் போலவே ஆங்கிலத்திலும் இரண்டு எண்கள் உள்ளன. அவை, ௧.ஒருமைப் பெயர்ச்சொல்(Singular Noun) ௨.பன்மைப் பெயர்ச்சொல்(Plural Noun) ஆங்கிலத்தில் மூன்று பால்கள் உள்ளன. அவை, masculine gender(ஆண்பால்), feminine gender(பெண்பால்) மற்றும் neuter gender(ஒன்றன் பால்). ஆண்களைக் குறிக்கும் சொல் ஆண்பால்(Masculine gender) எனப்படும். பெண்களைக் குறிக்கும் சொல் பெண்பால்(Feminine gender) எனப்படும். ஆண்பாலையும் பெண்பாலையும் ஒன்றி வராத மற்ற அஃறிணை சொற்கள் ஒன்றன் பால்(Neuter gender) எனப்படும். ஆங்கிலத்தில் மூன்று வேற்றுமைகள் உள்ளன. அவை, முதலாம் வேற்றுமை(nominative case), இரண்டாம் வேற்றுமை(accusative case), நான்காம் வேற்றுமை(dative case) என்பனவாகும். ஆனால், தமிழுக்குள்ளது போல் ஆங்கில வேற்றுமைகளுக்கு உருபு கிடையாது. (அதாவது, ஆங்கில வேற்றுமைகள் வேற்றுமை உருபுகளைக் கொள்வதில்லை.) (i.e. Cases in English do not have any noun inflections.) பெயர்ச்சொற்களுக்கு பதிலாக பெயர்ச்சொற்களைக் குறிக்க உபயோகப்படுத்தப்படும் சொல்லே ஆங்கிலத்தில் pronoun என்றழைக்கப்படுகிறது. இவ்வகை பெயர்ச்சொற்கள் ஒரு மனிதனையோ அல்லது ஒரு பொருளையோ மட்டுமே குறிக்க உதவுகிறது. (எ-டு) நான், அவன், இவன், அது, இது. இது தன்னிலை, முன்னிலை, படர்க்கை என மூன்று இடங்களில் வரும். வினையைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும். வினை என்பது ஒருவர் செய்யும் செயலாகும். ஆகையால், செயல்களைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும். ஒருவர் செய்யும் செயலைக்குரிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும். இது எப்பொழுதும் பெயர்ச்சொல்லைத் தழுவியே, அதனுடன் ஒன்றி வரும். Transitive வினை, "எதை", "யாரை" என்ற கேள்விகளுக்குப் பதில் கூறும். உரிச்சொல் என்பது பல்வேறு வகைப்பட்ட பண்புகளையும், குணங்களையும், வடிவங்களையும் உணர்த்தும் சொல்லாகும். இது, பெயர்ச் சொற்களையும் வினைச் சொற்களையும் விட்டு நீங்காதனவாய் வரும். ஆங்கிலத்தில் உரிச்சொல் இரு வகைப்படும். அவை, ஒரு பெயர்ச்சொல்லின் தன்மையை விளக்கும் சொல் adjective எனப்படும். (எ-டு) my house(என்னுடைய வீடு), our house(எங்களுடைய வீடு), your house(உன்னுடைய வீடு, உங்களுடைய வீடு), his house(அவனுடைய வீடு), her house(அவளுடைய வீடு), their house(அவர்களுடைய வீடு). my, our, your, his, her, their போன்றவை உடைமைப் பெயர் உரிச்சொற்கள்(Possessive adjective) ஆகும். ஒரு வினைச்சொல்லின் தன்மையை விளக்கும் சொல் adverb(வினை உரிச்சொல்) எனப்படும். இடைச்சொல் என்பது தனித்து நில்லாமல் பெயரையாவது வினையையாவது சார்ந்து வரும். இரண்டு வாக்கியங்களை ஒன்றாக இணைக்கும் சொற்களை ஆங்கிலத்தில் conjunctions என்று அழைப்பர். முன்விபக்தி(Prepositions) எனப்படுவது ஒரு சொற்றொடரில் எழுவய்க்கும் மற்றொரு சொல்லுக்கும் இடையில் வந்து அச்சொற்களின் தொடர்பை விளக்கும் வார்த்தைகள். பொதுவாக அவைகள் எழுவாய்க்கு முன்னே எழுதப்படுகின்றன. வியப்பிடைச்சொல்(Interjection) எனப்படுவது பொதுவாக தமிழில் விளி வேற்றுமையின் கீழுள்ள சொற்களைக் குறிக்கும். அதுமட்டுமின்றி, Hi!, Hello!, Good morning! போன்ற வாழ்த்துவதற்கு பயன்படும் சில வார்த்தைகளும் இதன் கீழ் வரும். இது தன்மை, முன்னிலை, படர்க்கை என மூன்று இடங்களில் வரும். மையக் கட்டுரை: ஆங்கில வினை வாக்கியங்கள் ஒரு செயலை எழுவாயின் கண்ணோட்டத்தில் இருந்து சொல்வது செய்வினை வாக்கியம் ஆகும். ஒரு செயலைச் செய்யப்படும் பொருளின் கண்ணோட்டத்தில் இருந்து சொல்வது செயப்பாட்டுவினை வாக்கியம் ஆகும். ஆங்கிலத்தில் "The classic MIDDLE voice"உடன் தொடர்புடைய நடுவினை வாக்கியம்(middle voice) எனப்படும் மூன்றாவது voiceசும் உள்ளது. இதில், எழுவாய் passive voiceசிலும் செய்யப்படு பொருள் active voiceசிலும் இருக்கும். மேலும், அந்த வாக்கியத்திலுள்ள மொத்த அமைப்பும் ஒரு adverbialலைச் சார்ந்து வரும். ஆங்கில வினைகளின் காலங்களை இக்கீழ்காணும் பட்டியலில் கண்டுகொள்ளலாம். ஆங்கிலத்தில் Prior, Complete, Incomplete என மூன்று Aspect-கள் உள்ளன. இப்பட்டியல் முக்காலங்களிலும் நடக்கும் உண்மைச்சம்பவங்கலையே பிரதிபலிக்கிறது. "Would"ஐ கொண்டு வரும் unreal conditionalகள் உண்மையற்றதால், அவை இங்கு குறிப்பிடப்படவில்லை. தமிழைப் போலவே ஆங்கில வினைச்சொற்களும் இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என முக்காலத்தையும் குறிக்கும். ஆனால், ஆங்கிலத்தில் 16 வித்தியாசமான காலங்கள் (tenses) உள்ளன. அவை, ஆகையால், ஆங்கிலத்தில் காலத்தை இவ்வாறும் வகைப்படுத்தலாம்: வரிவடிவம் வரிவடிவம் (grapheme) என்பது எழுத்து மொழியின் அடிப்படை அலகு ஆகும். இது, எழுத்துக்கள்; எண்கள்; முற்றுப்புள்ளி, காற்புள்ளி முதலிய குறியீடுகள் போன்ற உலக எழுத்து மொழியில் உள்ள எல்லாத் தனித்தனிக் குறிகளையும் உள்ளடக்கும். ஒலியன் எழுத்தமைவு (phonemic orthography) முறையில் வரிவடிவங்கள் ஒலியன்களோடு ஒத்து அமைகின்றன. ஒலியன்களோடு முழுமையாக ஒத்துவராத எழுத்துக் கூட்டல் முறைகளைக் கொண்ட ஆங்கிலத்தைப் போன்ற எழுத்து முறைகளில் ஒரு ஒலியனுக்குப் பல வரிவடிவங்கள் இருப்பதுண்டு. இத்தகையவை இருகூட்டெழுத்து (digraph), முக்கூட்டெழுத்து (trigraph) என அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக "ship" என்னும் சொல்லில் "s", "h", "i", "p" என்னும் நான்கு வரிவடிவங்கள் உள்ளன எனினும், "s", "h" ஆகிய வரிவடிவங்கள் ஒருமித்து "sh" என்னும் ஒரு ஒலியனையே குறிப்பதனால் மூன்று ஒலியன்களே உள்ளன. "sh" ஒரு "இருகூட்டெழுத்து" ஆகும். சில வேளைகளில் ஒரு வரிவடிவம் இரண்டு ஒலியன்களை ஒருமித்துக் குறிப்பதும் உண்டு. எடுத்துக்காட்டாக, ஆங்கிலச் சொல்லான box (பாக்ஸ்) என்பதில் "x" என்னும் வரிவடிவம் "க்" "ஸ்" என்னும் இரண்டு ஒலியன்களைக் குறிக்கிறது. ஒரு வரிவடிவம் ஒன்றுக்கு மேற்பட்ட மாற்று வரிவடிவங்களால் குறிக்கப்படக்கூடும். எடுத்துக் காட்டாக ஆங்கில மொழியில் "A", "a" போன்றவற்றைக் குறிப்பிடலாம். எழுத்துமுறைகளின் பட்டியல் இந்த எழுத்துமுறைகளின் பட்டியல் எழுத்துமுறைகளை அவற்றின் சில தனித்துவமான அம்சங்களின் அடிப்படையில் வகைப்படுத்தித் தருகிறது. எழுத்துமுறையின் பெயர் தடித்த எழுத்துக்களாலும், அவற்றைப் பயன்படுத்தி எழுதிய மொழிகளின் பெயர்கள் அருகே அடைப்புக் குறிக்குள் தரப்பட்டுள்ள தமிழ்ச் சொற்களாலும் குறிக்கப்படுகின்றன. அடைப்புக் குறிக்குள் தரப்பட்டுள்ள ஆங்கிலச் சொற்கள் எழுத்து முறைகளின் ஆங்கிலப் பெயர்களைக் குறிக்கின்றன. மொழி தவிர்ந்த பிறவற்றைக் குறிப்பதற்கான குறியீட்டு முறைகள் சிலவும் உண்டு. அவற்றுட் சில: In a couple abugidas, the vowels are basic, and the consonants secondary. If no consonant is written in Pahawh Hmong, it is understood to be /k/; consonants are written after the vowel they precede in speech. In Japanese Braille, the vowels but not the consonants have independent status, and it is the vowels which are modified when the consonant is "y" or "w". அசுட்டெக் எழுத்துக்கள் அசுட்டெக் எழுத்துக்கள் (Aztec writing) அல்லது நகுவாட்டில் எழுத்துமுறை என்பது நடு மெக்சிக்கோவில் வாழ்ந்த நகுவா மக்களால் பயன்படுத்தப்பட்ட எழுத்து முறை ஆகும். இது படவெழுத்து, கருத்தெழுத்து ஆகிய முறைகளைத் தழுவியது. எசுப்பானிய ஆக்கிரமிப்பாளர் நடு அமெரிக்காவைக் கைப்பற்றியபோது பெரும்பாலான அசுட்டெக் நூல்களை எரித்துவிட்டனர். மெண்டோசா நூல், போர்போனிக்கசு நூல், ஒசுனா நூல் போன்ற சில நூல்களே எஞ்சின. அசுட்டெக் எழுத்துக்கள் சொற்களைக் குறிக்காமல் சில கருத்துக்களையே குறிப்பதனால் இதனை ஒரு உண்மையான எழுத்துமுறையாகக் கொள்ள முடியாது. பலர் இதனை ஒரு தொடக்க எழுத்துமுறையாகவே கொள்கின்றனர். தீவி தீவுகள் தீவி தீவுகள் ("Tiwi Islands", ) ஆஸ்திரேலியாவின் வட மண்டலத்தின் தலைநகர் டார்வின் நகரில் இருந்து 880 கிமீ வடக்கே, அரபூரா கடலுக்கும் திமோர் கடலுக்கும் இடையில் அமைந்துள்ளன. இத்தீவுக் கூட்டத்தில் கிழக்கே மெல்வில் தீவு, மேற்கே பாத்தர்ஸ்ட் தீவு ஆகிய தீவுகள் ஆப்சிலி நீரிணையினால் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்தப் பரப்பளவு 8,320 சதுர கிமீ (3,212 சதுர மைல்கள்) ஆகும். மெல்வில் தீவின் பரப்பளவு 5.786 சதுர கிமீ ஆகும். இது டாஸ்மானியாவுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய தீவாகும். இத்தீவுகளில் பழங்குடிகளான தீவி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் ஐரோப்பியக் குடியேற்றத்துக்கு முன்னர் இருந்தே இங்கு வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் பண்பாடு மற்றும் மொழி ஆஸ்திரேலியப் பெரும் பகுதியில் வாழ்ந்து வரும் பழங்குடி மக்களினதையும் விட வித்தியாசமானவை. கிட்டத்தட்ட 2,500 டிவி மக்கள் இங்கு வருகின்றனர். 1996 ஆம் ஆண்டில் இத்தீவுகளின் மொத்த மக்கள்தொகை 2,033 ஆக இருந்தது. இவர்களில் 93.8 விழுக்காட்டினர் பழங்குடிகள். இவர்களில் பெரும்பாலானோரின் முதல் மொழி டிவி, இரண்டாவது மொழி ஆங்கிலம் ஆகும். 1912 ஆம் ஆண்டில் இத்தீவுகள் பழங்குடியினரின் சிறப்பு நிலமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு, 1980 ஆம் ஆண்டில் இத்தீவுகளின் உரிமை தீவி பழங்குடிகளின் நில அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது. 2001 ஜூலை 12 இல் இங்கு உள்ளூராட்சி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. டோங்பா எழுத்துக்கள் டோங்பா எழுத்துக்கள் (Dongba script), தென் சீனாவில் நாக்சி மக்கள் நடுவே புழக்கத்தில் இருந்த படவெழுத்து முறையாகும். நாக்சி மொழியில் இவ்வெழுத்து முறையை "மரப் பதிவுகள்" அல்லது "கற்பதிவுகள்" என்னும் பொருள்படும் சொற்களால் அழைத்தனர். கெபா அசையெழுத்து முறை, இலத்தீன் எழுத்து ஆகியவற்றுடன் இதுவும் நாக்சி மொழியை எழுதுவதற்கான ஒரு எழுத்துமுறையாக இருந்தது. இது ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. உருவங்கள் அற்ற பண்பியற் சொற்களைக் குறிப்பதற்கு வரியுருக்களை (glyphs) ஒலிக்குறிகளாகப் (rebuses) பயன்படுத்த முடியும். இவ்வெழுத்து முறையைப் பெரும்பாலும் ஒரு நினைவுக் குறியீடாகவே இருந்தது. இதனால் இக் குறியீடுகளை நாக்சி மொழியை எழுத்தில் வடிப்பதற்கான ஒரு நேரடியான முறையாகக் கொள்ள முடியாது. வெவ்வேறு நபர்கள் இவ் வரியுருக்களை வெவ்வேறு பொருள் குறிக்கும்படி பயன்படுத்தலாம். இதற்கு முற்பட்ட எழுத்து முறைகள் இருந்த சூழலில் உருவானாலும், டோங்பா எழுத்துமுறை ஒரு தனியான பண்டைய எழுத்து முறையாகத் தெரிகிறது. டோங்பா சமயக் கதைகளின்படி போன் சமயத்தை நிறுவிய தொன்பா சென்ராப் என்பவரே இந்த எழுத்துமுறையை உருவாக்கியதாகச் சொல்லப்படுகின்றது. சீன வரலாற்று ஆவணங்களின்படி டோங்பா கிபி ஏழாம் நூற்றாண்டில் தாங் வம்சத் தொடக்க காலத்திலேயே புழக்கத்தில் இருந்ததாகத் தெரிகிறது. 10 ஆம் நூற்றாண்டில் சோங் வம்சக் காலத்தில் டோங்பா நாக்சி மக்களிடையே பரவலாகப் புழங்கிவந்தது. 1949 ஆண்டு சீனாவில் இடம்பெற்ற கம்யூனிசப் புரட்சிக்குப் பின்னர் டோங்பாவின் பயன்பாட்டுக்கு ஆதரவு இருக்கவில்லை. சீனாவின் கலாச்சாரப் புரட்சிக் காலத்தில் பல எழுத்துப் படிகள் அழிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இன்று தப்பியுள்ள டோங்பா எழுத்துப்படிகளில் அரைப்பங்கு சீனாவிலிருந்து, ஐக்கிய அமெரிக்கா, செருமனி, [எசுப்பெயின்]] போன்ற நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டவையாகும். 1957 ஆம் ஆண்டில் சீன அரசு நாக்சி மொழிக்கு இலத்தீன் எழுத்து முறையைத் தழுவிய ஒலியன் எழுத்துமுறை ஒன்றை உருவாக்கியது. இன்று டோங்கா அழியும் நிலையில் உள்ளது. நாக்சிப் பண்பாட்டைப் பாதுகாக்கும் முயற்சியில் சீன அரசு இன்று டோங்கா அழிவதைத் தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. மெல்வில் தீவு, ஆஸ்திரேலியா மெல்வில் தீவு ("Melville Island") ஆஸ்திரேலியாவின் வட மண்டலத்தில் கிழக்குத் திமோர் கடலில் அமைந்துள்ளது. இத்தீவின் பெரிய நகரம் மிலிகபிட்டி, இதன் மக்கள் தொகை 559 பேர். இரண்டாவது பெரிய நகரம் பிலான்கிம்பி, இங்கு 440 பேர் வசிக்கிறார்கள். இவர்களை கிட்டத்தட்ட 30 பேர் வெவ்வேறு இடங்களில் வசிக்கிறார்கள். மெல்வில் தீவு டாஸ்மானியாவுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய தீவாகும். இதன் பரப்பு 2,234 மைல்² (5,786 கிமீ²). டிவி மொழியில் இது யெர்மால்னர் என அழைக்கப்படுகிறது. இத்தீவின் தென் முனையில் 55 மீட்டர்கள் தொலைவில் இரிட்டிட்டு தீவு உள்ளது. இதன் பரப்பளவு 1.7 கிமீ². மெல்வில் தீவும், பாத்தர்ஸ்ட் தீவும் இணைந்து டிவி தீவுகள் என அழைக்கப்படுகின்றது. 1644 ஆம் ஆண்டு இத்தீவைக் கண்டுபிடித்த ஐரோப்பியர் ஏபெல் டாஸ்மான் எனக் கருதப்படுகிறது. இதன் காலநிலை வெப்பவலயத்தைச் சேர்ந்தது. டெக்னாலச்சி ரிவ்யூ டெக்னாலச்சி ரிவ்யூ ("Technology Review") என்பது மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலையத்தால் வெளியிடப்படும் அறிவியல் தொழில்நுட்ப இதழ். இது 1899 ம் ஆண்டில் இருந்து வெளிவருகிறது. அறிவியல் தொழில்நுட்பத் துறைகளின் உயர் சிந்தனைகளையும் தகவல்களையும் வெளியிடுவதில் இது ஒரு முன்னணி இதழ். இந்த இதழ் ஒவ்வொரு ஆண்டும் 100 சிறந்த புத்தாக்கர்கள் பற்றிய ஒரு பட்டியலையும் 1999 ஆம் ஆண்டில் இருந்து வெளியிட்டு வருகிறது. பாப்புலர் மெக்கானிக்ஃசு பாப்புலர் மெக்கானிக்ஃசு என்பது ஒரு அறிவியல் தொழிநுட்ப இதழ். இந்த இதழ் 1902 ஆண்டில் இருந்து ஐக்கிய அமெரிக்காவில் இருந்து வெளிவருகிறது. இதில் வெளிவரும் கட்டுரைகள் துறைசாரினையும், பொது வாசகர்களையும் கவரும் வண்ணம் எழுதப்படுகிறது. பில் கேட்சு அவர்கள் இந்த இதழில் 1977 வெளிவந்த கணினி பற்றிய கட்டுரையை படித்தே, கணினிக்கு மென்பொருளுக்கான தேவையை உணர்ந்தார். வயர்ட் வயர்ட் என்பது ஐக்கிய அமெரிக்காவில் வெளிவரும் ஒரு ஆங்கில இதழ். தகவல் தொழில்நுட்பம் பற்றியும், அதன் சமூகத் தாக்கங்கள் பற்றியும் செய்திகளையும் கட்டுரைகளையும் இது முதன்மையாக வெளியிடுகிறது. 1993 ஆம் தொடங்கிய இந்த இதழ், இணைய யுகத்தின் ஒரு முக்கிய இதழாக பலரால் கருதப்படுகிறது. மாதமொரு முறை வெளிவரும் இந்த இதழ் சனவரி 2017-ஆம் ஆண்டுக் கணக்கின்படி 870,101 படிகள் விற்றது. அனத்தோலியப் படவரியுருக்கள் அனத்தோலியப் படவரியுருக்கள் (Anatolian hieroglyphs) என்பன நடு அனத்தோலியாவில் தோன்றி வளர்ந்த உள்நாட்டுக்குரிய உருபனெழுத்து முறை ஆகும். இம்முறையில் ஏறத்தாழ 500 குறியீடுகள் காணப்படுகின்றன. இவை ஒருகாலத்தில் இட்டைட்டு படவரியுருக்கள் (Hittite hieroglyphs) என அழைக்கப்பட்டுவந்தன. எனினும் இது இட்டைட்டு மொழிக்கன்றி லூவிய மொழிக்காகவே உருவானவை. இதனால் ஆங்கில நூல்களில் இவை லூவியப் படவரியுருக்கள் எனவும் குறிக்கப்பட்டன. எழுத்து அமைப்பியல் அடிப்படையில் இது எகிப்தியப் படவரியுருக்களை ஒத்தது. ஆனால், அனத்தோலியப் படவரியுருக்கள், எகிப்தினதைப் போல் புனிதத்தன்மை கொண்டவையாகக் கருதப்படவில்லை. அத்துடன் இட்டைட்டு ஆப்பெழுத்துக்களுடனும் இதற்குத் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. அனத்தோலியப் படவரியுருக்கள் கிமு மூன்றாவது ஆயிரவாண்டு, இரண்டாவது ஆயிரவாண்டுக் காலப் பகுதிகளில் அனத்தோலியாவிலும், தற்கால சிரியப் பகுதிகளிலும் பரவியிருந்ததற்கான சான்றுகள் உள்ளன. இவற்றின் மிக முந்திய எடுத்துக்காட்டுகள், தனிப்பட்டவர்களின் முத்திரைகளிலேயே காணப்படுகின்றன. இவற்றில் உள்ள குறிகள் பெயர்கள், பதவிகள், மங்கலக் குறியீடுகள் போன்றவையே எனக் கருதப்படுகின்றது. அத்துடன், இவை ஒரு மொழிக்கு உரியனவா என்பதும் உறுதியாகத் தெரியவில்லை. பெரும்பாலான உண்மை எழுத்துக்கள் கல்வெட்டுக்களாகவே காணப்படுகின்றன. சில ஈயத் தகடுகளில் எழுதப்பட்டவைகளும் உண்டு. லூவிய மொழிக்கு உரியதாக உறுதிப்படுத்தப்பட்ட முதல் கல்வெட்டு கிமு 14 தொடக்கம் 13 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதி சார்ந்த பிந்திய வெண்கலக் காலத்தைச் சேர்ந்தது. பின்னர் இரண்டு நூற்றாண்டுகள் மிகவும் அரிதாகவே இது பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால், கிமு 10 தொடக்கம் 8 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியான தொடக்க இரும்புக் காலத்தில் இப்படவரியுருக்கள் மீண்டும் காணப்படுகின்றன. கிமு 7 ஆம் நூற்றாண்டளவில் லூவியப் படவரியுருக்கள் மறைந்துவிட்டன. டப்ரின் குரூவ் பூங்கா டப்ரின் குரூவ் பூங்கா என்பது ரொறன்ரோவில் உள்ள ஒரு பூங்கா ஆகும். இது டப்ரின் வீதிக்கு கிழக்காவும், மேற்கு புளோர் வீதிக்கு தெற்காகவும் அமைந்துள்ளது. இரண்டு நகர கட்டங்கள் மட்டுமே நீளமுடைய இந்த பூங்கா பெரிய பல மரங்களைக் கொண்டுள்ளது. இளைப்பாற, விளையாட இங்கு மக்கள் வருவர். அலன் தோட்டம் அலன் தோட்டம் என்பது ஒரு பூங்காவும், அதனோடு இணைந்த உள்ளக தாவரவியல் தோட்டமும் ஆகும். இதன் மேற்கு எல்லை யார்விசு வீதியாகவும், கிழக்கு எல்லை சேர்போன் வீதியாகவும், வடக்கு எல்லை கார்ல்ட்டன் வீதியாகவும், தெற்கு எல்லை யெராட் எல்லையாகவும் உள்ளன. ஐ பூங்கா ஐ பூங்கா (High Park) என்பது ரொறன்ரோ நகத்தில் உள்ள மிகப் பெரிய பூங்கா ஆகும். இது 1.61 கிமீ சதுர பரப்பளவைக் கொண்டது. இயற்கை அமைப்போடு சிறுவர்கள் விளையாடும் இடங்கள், கல்வி பண்பாட்டு வசதிகள், தோட்டங்கள் போன்றவையும் இங்கே உண்டு. இது ரொரறோவின் மேற்குப் பகுதியில், புளோர் வீதிக்கு தெற்கிலும், குயீன்சுவேக்கு மேற்குப் பகுதியில் உள்ளது. ரிவர்டேல் பூங்கா ரிவர்டேல் பூங்கா ரொறன்ரோ நகரத்தின் மையத்தில் உள்ள ஒரு பூங்கா ஆகும். இது கபேச்டவுனுக்கும் புரோட்வியூ அவனியூவுக்கும் இடையில் அமைந்துள்ளது. இங்கு காற்பந்தாட்டம், அடிபந்தாட்டம், துடுப்பாட்டம் ஆகிய விளையாட்டுகள் ஆடுவதற்குரிய வசதிகள் உண்டு. இதனோடு சேர்ந்து ரிவர்டேல் பண்ணை உண்டு. இங்கு குதிரை, மாடு, பன்றி, ஆமை, கோழி, வாத்து போன்ற விலங்குகளையும் பறவைகளையும் பார்க்கலாம். ரூச் பூங்கா ரூச் பூங்கா என்பது என்பது கனடாவில் ரொறன்ரோ நகரத்துக்கு அருகாமையில் இருக்கும் மிகப் பெரிய இயற்கை சூழல் கொண்ட பூங்கா ஆகும். ரூச் ஆற்றையும், பல்வேறு நீர் ஓட்டங்களையும், காடுகளையும், வயல்வெளிகளையும் இந்த நிலப்பரப்புக் கொண்டுள்ளது. இங்கேயே ரொறன்ரோ உயிரினக்காட்சிச்சாலை அமைந்துள்ளது. மொர்னிங்சைட் பூங்கா (ரொறன்ரோ) மொர்னிங்சைட் பூங்கா என்பது ரொறன்ரோ, இசுக்கார்பரோ நகரில் அமைந்துள்ள மிகப் பெரும் பூங்காக்களில் ஒன்று. இப் பூங்கா மொர்னிங்சைட் அவனியு வீதியில், கிங்சரன் வீதிக்கும், எல்சுமெயர் வீதிக்கும் இடையே அமைந்துள்ளது. இதன் பரப்பளவு சுமார் 416.7 ஏக்கர்கள் ஆகும். இதனோடாக ஐலேண்ட் கிரீக் ஓடுகிறது. தானுந்துடன் நெடுந்தூரம் உள்ளே சென்று தரித்து, பின்னர் கால்நடையில் ஒற்றையடிப் பாதையில் பயணிக்கலாம். ரக்கூன், செந்நரி, உட்பட பல விலங்குகளும் பல்வேறு பறவைகள் இங்கு உண்டு. ஆபத்தனா மிருகங்கள் இங்கு இல்லை. இந்தப் பூங்காவில் தமிழர்களின் பல ஒன்றுகூடல்கள் நடைபெறுவதுண்டு. தானே செய்தல் தானே செய்தல் என்பது பல பணிகளை வேலையாள் வைத்து செய்யாமல் தானே செய்வதைக் குறிக்கிறது. சமைத்தல், தைத்தல், துப்பரவாக்கல், திருத்துதல், கைவேலை, தளபாடங்கள் செய்தல், ஓவியம் இசை போன்ற கலைகள், வலைத்தளம் என பல தரப்பட்ட செயற்பாடுகளை தாமே செய்வதைக் இது குறிக்கிறது. இது மேற்குநாடுகளில் Do It Yourself (DIY) என அறியப்படும் ஒரு சமூக இயக்கமாக வளர்ந்து வருகிறது. பல வேலைகளை தாமே செய்வதால் அதற்கு ஒருவருக்கு கொடுக்கும் ஊதியம் சேமிப்பாகிறது. தாமே பல பணிகளை செய்ய முயற்சி செய்கையில் அந்தப் பணிகளுக்கு தேவையான திறங்கள் விருத்தி செய்யப்படுகிறது. பலர் செயற்பாடுகள் ஆவற்றின் விளைவில் மட்டும் அல்லாமல், செயற்பாட்டிலும் நிறைவைத் தருவனதாக அமைகின்றன. வேலைகள் சிறப்புத் தகுதி பெற்றறோர் மட்டுமே செய்ய முடியும் என்ற சூழ்நிலைக்கு எதிரான ஒரு போக்கை தானே செய்தல் என்ற இந்த நிலைப்பாடு முன் நிறுத்துகிறது. கம்பனிகள் தொழிலை கலைகளை தனிநபர்கள், அல்லது தொழிலாளர்களிடம் இருந்து பிரித்து சுரண்டுவதற்கு எதிரான ஒரு நிலைப்பாடக இது கொள்ளப்படுகிறது. பாத்தர்ஸ்ட் தீவு, ஆஸ்திரேலியா பாத்தர்ஸ்ட் தீவு ("Bathurst Island", 2,600 சதுர கிமீ அல்லது 1,000 சதுர மைல், ) ஆஸ்திரேலியாவின் வட மண்டலத்தில் வடக்கே அமைந்துள்ள டிவி தீவுகளில் ஒன்றாகும். பாத்தர்ஸ்ட் பிரபு என்றி பாத்தர்ஸ்ட் என்பவரின் நினைவாக இத்தீவிற்கு பாத்தர்ஸ்ட் தீவு எனப் பெயரிடப்பட்டது. (கனடாவில் உள்ள பாத்தர்ஸ்ட் தீவும் இவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது). இங்கு பழங்குடிகளான டிவி மக்கள் வாழ்கின்றனர். 1910 முதல் 1938 வரையான காலப்பகுதியில் இங்கு ரோமன் கத்தோலிக்க மிசனறியான பிரான்சிஸ் சேவியர் கிசெல் என்பவர் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர் "150 மனைவிகளின் ஆயர்" என அழைக்கப்படுகிறார். இவர் இங்கு தங்கியிருந்த காலப்பகுதியில் பழங்குடியினரின் வழக்கப்படி முதியவர்களுக்கு வாழ்க்கைத்துணையாகக் காத்திருந்த இளம் பெண்களை விலைக்கு வாங்கி அவர்களை ஒத்த வயது ஆண்களுக்குத் திருமணம் செய்வித்தார். பாத்தர்ஸ்ட் தீவின் மிகப்பெரும் குடியேற்றப்பகுதி "நியூ" ("Nguiu"). இங்கு 1,450 பேர் வசிக்கின்றனர். இது இத்தீவின் தென்கிழக்கு முனையில் டார்வின் நகரில் இருந்து 70 கிமீ வடக்கே அமைந்துள்ளது. இரண்டாவது பெரும் நகரம் "வுரக்கூவு". இங்கு 50 பேர் வாழ்கின்றனர். இதற்கு அடுத்தபடியாக "4 மைல் முகாம்" என்ற இடத்தில் ஒரு குடும்பம் வாழ்கிறது. சயன்சுபுளோக்சு சயன்சுபுளோக்சு (அறிவியல் வலைப்பதிவுகள்) என்பது 75 வரையான துறைசாரினரின் வலைப்பதிவுவலைப்பின்னலும், ஒரு இணையச் சமூகமும் ஆகும். இந்த வலைப்பதிவுக் குழுவில் அழைப்பின் பேரிலேயே பதிவர்கள் சேரமுடியும். பரவலாக வாசிக்கப்படும் வலைப்பதிவுச் சமூகங்களில் இதுவும் ஒன்று. அறிவியல் தொழில்நுட்ப ஊடகங்கள் பட்டியல் (ஆங்கிலம்) மட்டுவில் மட்டுவில் ("Madduvil") இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஒரு விவசாய கிராமம். மட்டுவில் சாவகச்சேரி நகரில் இருந்து கிட்டத்தட்ட 3 மைல் தொலைவில் உள்ள வரலாற்றுப் பழைமை கொண்ட ஓர் இடம். இங்கு மிகவும் புகழ் பெற்ற பன்றித்தலைச்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. தமிழ்ப் பழமொழிகள் (நூல்) தமிழ்ப் பழமொழிகள் என்னும் நூல் நான்கு தொகுதிகள் கொண்டது. இந்நூலில் ஆசிரியர் கி. வா. சகந்நாதன் ஏறத்தாழ 25,000 பழமொழிகளைத் தொகுத்து எழுதியுள்ளார். இதனை செனரல் பப்ளிசர்சு எனும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. விக்கிரம் சாராபாய் விக்கிரம் அம்பாலால் சாராபாய் ("Vikram Ambalal Sarabhai", ஆகஸ்ட் 12, 1919 – டிசம்பர் 30, 1971) இந்திய இயற்பியலாளர். இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை எனக் கருதப்படுகிறார். 1969ம் ஆண்டு சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது பெற்றார். 1919ஆம் ஆண்டு ஆகசுது 12 அன்று ஆமதாபாதில் ஒரு செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தார். அவர் எண்ணியிருந்தால் ஒரு தொழிலதிபராக உருவாகியிருக்கலாம். ஆனால் அவரது நாட்டம் எல்லாம் கணிதத்திலும் இயற்பியலிலும் தான் இருந்தது. இங்கிலாந்தில் Ph.D. ஆராய்ச்சியை முடித்துத் திரும்பிய சாராபாயி, ஆமதாபாதில் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தை (Physical Research Laboratory) 11 நவம்பர 1947இல் நிறுவினார். 1955ல் காசுமீரம் குலுமார்கில் அதன் கிளை ஒன்றையும் நிறுவினார். பின்னர், திருவனந்தபுரம், கோடைக்கானல் ஆகிய இடங்களிலும் ஆய்வகங்களை நிறுவினார். இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டாவின் விண்ணேவுதலுக்கு முழுமுதல் காரணமானவர் விகிரம். SITE எனப்படும் ‘செயற்கைக்கோள் உதவியுடன் தொலைக்காட்சியில் பயிற்றுவிக்கும் முயற்சி’ மூலம் 2,4000 இந்திய கிராமங்களிலுள்ள 50 லட்சம் மக்களுக்கு கல்வியை எடுத்துச்செல்ல உதவினார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை (ISRO) விரிவாக்கினார். விண்வெளித்திட்டங்கள் தவிர, பஞ்சாலைத் தொழில், மேலாண்மைப்பயிற்று நிலையம் ஆகியவற்றையும் தொடங்கினார். வேற்றுமையுருபு வேற்றுமையுருபு - தமிழில் எட்டு வகையான வேற்றுமைகள் உள்ளன. அவை, முதலாம் வேற்றுமைக்கு உருபு கிடையாது. இரண்டாம் வேற்றுமையின் உருபு 'ஐ' ஆகும். மூன்றாம் வேற்றுமையின் உருபு 'ஆல்' ஆகும். நான்காம் வேற்றுமையின் உருபு 'கு' ஆகும். ஐந்தாம் வேற்றுமையின் உருபு 'இன்' ஆகும். ஆறாம் வேற்றுமையின் உருபு 'அது' ஆகும். ஏழாம் வேற்றுமையின் உருபு 'கண்' ஆகும். எட்டாம் வேற்றுமைக்கும் உருபு கிடையாது. இது, 'ஐயோ', 'ஆகா' போன்ற விளிச் சொற்களையே கொண்டு வரும். பண்டாரவன்னியன் (கூத்து) பாயும் புலி பண்டாரவன்னியன் என்பது வெள்ளையர்களுக்கெதிராக கடைசி வரை தைரியமாக நின்று வன்னி நிலப்பரப்பில் அரசாண்ட ஒரு குறுநில மன்னனின் காவியம் ஆகும். இது கலைஞர் மு. கருணாநிதி அவர்களால் எழுதப்பட்டது. இக்காவியம் தென்மோடிக் கூத்து வடிவத்தில் முல்லைமணி வே. சுப்பிரமணியத்தினால் வடிவமைக்கப்பட்டு மேடையேற்றப்பட்டது. இது முள்ளியவளையில் வழங்கி வரும் கோவலன் கூத்தை ஒத்த மெட்டிலேயே பாடப்பட்டும் அதே பாணியிலேயே ஆடப்பட்டும் வருகிறது. இவை வடமோடி, தென்மோடி வரையறைகளில் அடங்காமல் பிரத்தியேகமான 'முல்லைமோடி' என்றழைக்க கூடிய தனிப்பாணியில் இருப்பதாக பேராசிரியர் சு. வித்தியானந்தன் கூறியுள்ளார். பண்டாரவன்னியன் முல்லைத்தீவிலிருந்து வற்றாப்பளை அம்மன் கோயில் வரையிலுள்ள 2000 சதுரமைல் நிலபரப்பை ஆட்சி செய்து வந்தான். அமைச்சராக தனது தம்பி கயிலாய வன்னியனையும், தளபதியாக கடைசி சகோதரன் பெரிய மைனரையும் கொண்ட குழுவையும் அமைத்து அரசமைப்பை பேணி வந்தான். அவனது ஒரே சகோதரி பெயர் நல்லநாச்சாள். அவளுக்கு கலைகள் கற்பிக்கும் அவைப் புலவன் அவள் மீது காதல் கொண்டான். அதே நேரத்தில் வன்னி நிலத்தில் ஆண்டு வந்த இன்னொரு குறுநில மன்னனான காக்கைவன்னியன் அவளை மணம் புரிய ஆசைப்பட்டான். அதற்காக பலமுறை பண்டார வன்னியனிடம் ஓலை அனுப்பிய போதும் அவன் அதற்கு சம்மதிக்கவில்லை. ஒரு முறை நந்தவனத்ததில் நாச்சியாள் புலவரிடம் காதல் கொண்டிருக்கக் கண்ட காக்கைவன்னியன் புலவரிடம் சண்டைக்கு போக புலவர் வாள் சண்டையிட்டு நையப்புடைத்து அனுப்புகிறான். இந்தச் சம்பவத்தால் புலவன் அரச பரம்பரையில் வந்தவனென்பதை மன்னன் அறிந்து அவர்களின் காதலுக்கு சம்மதிக்கிறான். வன்னியில் பண்டாரவன்னியன் திறை செலுத்த மறுத்த காரணத்தினால் படையெடுத்து வந்து வெற்றி காண முடியாமால் வெள்ளையர்கள் புறமுதுகாட்டிப் பின் வாங்கினர். தனிப்பட்ட காரணத்தினால் பண்டரவன்னியன் மேல் ஆத்திரம் கொண்ட காக்கைவன்னியன் வெள்ளை தேசாதிபதியுடன் கூட்டு சேர்கிறான். பல முறை படையெடுத்து வெள்ளையர் தோல்வி அடைகின்றனர். அத்தருணத்தில் காக்கைவன்னியன் பண்டரவன்னியனை தந்திரமாகத்தான் வெல்லலாமென்று ஆலோசனை கூறுகிறான். அந்த திட்டத்தின் ஒரு அங்கமாக, தான் திருந்தி விட்டதாக நாடகமாடி பண்டராவன்னியனிடம் வருகிறான். தம்பிமார்களான மந்திரியும் தளபதியும் காக்கைவன்னியனை சேர்க் கவேண்டாமென்ற ஆலோசனையையும் மீறி "மறப்போம் மன்னிப்போம்" என்ற அடிப்படையில் அவனை சேர்த்துக் கொள்கிறான். மன்னனைத் தனிய கூட்டிவந்து ஒட் சுட்டான் என்னுமிடத்தில் வைத்து வெள்ளையரின் படைகளிடம் தந்திரமாக அகப்படவைக்கிறான் காக்கைவன்னியன். இன்றும் நம்பி துரோகம் செய்பவர்களை "நீ காக்கை வன்னியன் பரம்பரையோ" என்று ஈழத்தில் கேட்கும் வழக்கு உள்ளது. காட்டலான் மொழி காட்டலான் ("Catalan language") என்பது ஒரு உரோமானிய மொழி. இது அந்தோராவின் தேசிய மொழியும் ஆட்சி மொழியும் ஆகும். மேலும் பாலேயாரிக் தீவுகளிலும் காட்டலோனியாவிலும் இணை ஆட்சி மொழியாகவும் உள்ளது. காட்டலான் மொழி வல்கர் இலத்தீனிலிருந்து பைரெனி மலைத்தொடர்களின் கிழக்கு பகுதியிலிருந்து பேசப்படத் துவங்கியது. இது கால்லோ-உரோமானியம், ஐபெரோ-உரோமானியம் மற்றும் கால்லோ-இத்தாலியம் போன்ற மொழிகளை ஒத்தது. காட்டலான் பேசப்படும் இடங்கள்: மேற்கண்ட எண்கள் காட்டலான் மொழியைத் தாய்மொழியைக் கொண்டவர்களை மட்டுமின்றி அதை பேசக்கூடிய அனைவரையும் குறிக்கிறது. மேற்கண்ட எண்கள் காட்டலான் மொழியைத் தாய்மொழியைக் கொண்டவர்களை மட்டுமின்றி அதை பேசக்கூடிய அனைவரையும் குறிக்கிறது. மேற்கண்ட எண்கள் காட்டலான் மொழியைத் தாய்மொழியைக் கொண்டவர்களை மட்டுமின்றி அதை பேசக்கூடிய அனைவரையும் குறிக்கிறது. மையக் கட்டுரை: காட்டலான் எழுத்து மையக் கட்டுரை: காட்டலான் இலக்கணம் காட்டலான் பெயரிடும் வழக்கங்கள் எசுபானியாவிலுள்ள பெயரிடும் வழக்கங்களைத் தழுவியே வரும். ஒரு நபருக்கு இரண்டு இறுதிப்பெயர்கள் வைக்கப்படுகிறது. அந்நபரின் தந்தையினுடைய பெயர் ஒன்று, தாயினுடைய பெயர் மற்றொன்று. அவ்விரு இறுதிப்பெயர்கலும் "i" (பொருள்: மற்றும்) என்ற எழுத்தால் பிரித்தெழுதப்படுகிறது. (எசுப்பானியத்தில் இதற்கு இணையான எழுத்து "y" ஆகும். ஆனால், அநேகநேரங்களில் இது எழுதப்படுவதில்லை; தவிர்க்கப்படுகிறது.) காட்டலோனியாவில் பொதுவாக பேசப்படும் சில வார்த்தைகள் (மத்திய வட்டார மொழி வழக்கின்படியான உச்சரிப்பு - பார்செலோனிய (Barcelona) மற்றும் புறநகரம்). சில உபயோகமான வாலேன்சிய வாக்கியங்கள். (ஸ்டாண்டர்டு வாலேன்சியன் உச்சரிப்பு.) ஆங்கிலப் பெயர்ச்சொல் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும். இவ்வகைப் பெயர்ச்சொல், ஒரு பொருளையோ, ஒரு இடத்தையோ, ஒரு தொழிலையோ, ஒரு காலத்தையோ அல்லது ஒரு பெயரையோ குறிக்க உதவுகின்றது. இதை ஆங்கிலத்தில் Noun என்பர். (எ-டு) மரம், குமார், குழந்தை, கை, அவனுடைய, அவளுடைய. இவை, பொதுவாக ஒரு பொருளையோ, ஒரு மனிதனையோ, ஒரு இடத்தையோ அல்லது ஒரு எண்ணத்தையோ ஒருவர் மற்றவரிடம் கூறவோ அல்லது பகிர்ந்துகொள்ளவோ உதவுகிறது. ஒரு மனிதரினுடைய பெயரையோ அல்லது ஒரு இடத்தினுடைய பெயரையோ தனியாகக் குறிப்பிட்டு சொல்லும் பெயர்ச்சொல்லின் பெயர் ஆகும். ஆங்கிலத்தில் a, an, the என மூன்று ஆர்டிகல்கள் உள்ளன. ஆங்கிலத்தில் the definite article, the indefinite article என article இருவகைப்படும். The எனப்படும் ஆங்கிலச் சொல் Definite Article என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு பொருளைக் குறிப்பிட்டு கூறும் பொழுதே உபயோகிக்கப் படுகிறது. A, an என்கிற இவ்விரண்டும் Indefinite Article எனப்படும். இவை எந்த ஒரு பொருளையும் குறிப்பிட்டு சொல்ல பயன்படுத்தப்பட மாட்டாது. தமிழைப் போலவே ஆங்கிலத்திலும் இரண்டு எண்கள் உள்ளன. அவை, ஒருமை(singular) மற்றும் பன்மை(plural) ஆகும். ஆங்கிலத்தில் மூன்று பால்கள் உள்ளன. அவை, masculine gender (ஆண்பால்), feminine gender (பெண்பால்) மற்றும் neuter gender(ஒன்றன் பால்). ஆண்களைக் குறிக்கும் சொல் ஆண்பால்(Masculine gender) எனப்படும். பெண்களைக் குறிக்கும் சொல் பெண்பால்(Feminine gender) எனப்படும். ஆண்பாலையும் பெண்பாலையும் ஒன்றி வராத மற்ற அஃறிணை சொற்கள் ஒன்றன் பால் (Neuter gender) எனப்படும். ஆங்கிலத்தில் மூன்று வேற்றுமைகள் உள்ளன. அவை, nominative case, accusative case, dative case என்பனவாகும். ஆனால், தமிழுக்குள்ளது போல் ஆங்கில வேற்றுமைகளுக்கு உருபு கிடையாது. (அதாவது, ஆங்கில வேற்றுமைகள் வேற்றுமை உருபுகளைக் கொள்வதில்லை.) (i.e. Cases in English do not have any noun inflections.) Nominative case எனப்படுவது தமிழிலுள்ள முதல் வேற்றுமையே (எழுவாய் வேற்றுமையே) ஆகும். Accusative case எனப்படுவது தமிழிலுள்ள இரண்டாம் வேற்றுமையே ஆகும். Dative case என்பது தமிழிலுள்ள நான்காம் வேற்றுமையே ஆகும். இன்றைய அளவில் ஆங்கிலத்தில் இவ்வேற்றுமை அதிகமாக பயன்படுத்தப்படுவதில்லை. இது, இன்று பயன்படுத்தப்படும் my/mine(என்னுடையது), your/yours (உன்னுடையது), our/ours (நம்முடையது) என்பன போன்ற சொற்களிலேயே காணப்படுகிறது. இதைத்தவிர்த்து வேறு எங்கும் காணப்படுவதில்லை. ஆங்கில இடப் பெயர்ச்சொல் பெயர்ச்சொற்களுக்கு பதிலாக அவற்றைக் குறிக்க உபயோகப்படுத்தப்படும் சொல்லே ஆங்கிலத்தில் pronoun என்றழைக்கப்படுகிறது. இவ்வகை பெயர்ச்சொற்கள் ஒரு மனிதனையோ அல்லது ஒரு பொருளையோ மட்டுமே குறிக்க உதவுகிறது. (எ-டு) நான், அவன், இவன், அது, இது. இது தன்னிலை, முன்னிலை, படர்க்கை என மூன்று இடங்களில் வரும். அல்கேரோ நகரம் அல்கேரோ ("Alghero", காட்டலான்: "l'Alguer") என்பது இத்தாலியிலுள்ள குடிமக்களைக் கொண்ட ஒரு நகரம். இது வட மேற்கு சார்தீனியாவிலுள்ள சசாரி என்னும் பகுதியில் உள்ளது. இதன் மக்கள்தொகை கிட்டத்தட்ட 42,000. காட்டலான் மொழி ஆங்கில ஒப்பீட்டு வாக்கியம் ஆங்கிலத்தில் மூன்று வகையில் ஒப்பிடலாம். அவை, positive degree, comparative degree மற்றும் superlative degree எனப்படும். ஒரு பொருளை மட்டுமே குறிப்பிட்டுச் சொல்வதே ஒரு பொருள் ஒப்பீட்டு வாக்கியம் (positive degree) ஆகும். ஒரு பொருளை மற்றொரு பொருளுடனோ அல்லது மற்ற பல பொருட்களுடனோ ஒப்பிடுவதே இரு பொருள்/பல பொருள் ஒப்பீட்டு வாக்கியம் (comparative degree) எனப்படும். ===[[ஆங்கிலச் சொற்றொடர் அமைத்தல்/கட்டுதல்|வாக்கிய அம ஒரு பொருளை மற்ற எல்லா பொருட்களோடும் ஒப்பிட்டுப் பேசுவதே அனைத்துப் பொருட்களின் ஒப்பீட்டு வாக்கியம் (superlative degree) ஆகும். [[பகுப்பு:ஆங்கில இலக்கணம்]] டார்வினியசு மசில்லே டார்வினியசு மசில்லே என்பது முதனிகள் வரிசையில் 47 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இருந்த இயோசீன் ஊழிக் காலத்தில் வாழ்ந்திருந்த தொல் அடிக்கிளை (basal, stem group) இனம். இவ் விலங்கின் தொல்லுயிர் எச்சப் படிவை 2009 ஆம் ஆண்டு பெயர் சூட்டினர். 2009 ஆண்டு சார்லசு டார்வினின் 200 ஆவது பிறந்த ஆண்டு நிறைவு என்பதால் அவர் பெயரைச் சூட்டியும், செருமனியில், மெசெல் குழி (Messel Pit) என்னும் இடத்தில் கண்டு பிடிக்கப்பட்டதால், அதனையும் சேர்த்து இதன் அறிவியற் பெயர் "டார்வினியசு மசில்லே" என சூட்டப்பட்டது. இவ்விலங்கின் தொல்லுயிர் எச்சம் ஒன்றே ஒன்று மட்டும்தான் கண்டுபிடிக்கப்பட்டது. 1983 இல் கண்டு பிடித்த இத் தொல்லுயிர் எச்சம்மிகவும் நல்ல நிலையில் இருக்கின்றது. இதனை இடா அல்லது ஐடா (Ida) என பெயரிட்டு அழைக்கிறார்கள். இத் தொல்லுயிர் எச்சத்தின் பகுதிகள் விற்கப்பட்டு இருந்ததன. இவற்றை 2006 இல்தான் மீண்டும் பொருத்தி முழு உரு ஆக்கினார்கள். பாலசிங்கம் நடேசன் பாலசிங்கம் நடேசன் (இறப்பு: மே 18, 2009) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளர். இவர் முல்லைத்தீவில் முள்ளிவாய்க்கால் என்ற இடத்தில் இலங்கை இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடன் சேர்ந்து அவரது மனைவி, புலிகளின் அமைதிச் செயலகப் பொறுப்பாளர் சீ. புலித்தேவன் ஆகியோரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். நடேசன் முன்னர் இலங்கைக் காவற்துறையில் பணிபுரிந்தவர். தலைநகர் கொழும்பில் உள்ள நாரகேன்பிட்டி காவல்துறை நிலையத்தில் பணிபுரிந்த காலத்தில் அங்கு பணிபுரிந்த விசித்திரா என்ற சிங்களப் பெண்ணைக் காதலித்து திருமணம் புரிந்து கொண்டார். விசித்திரா, சிறிலங்காவின் தென்பகுதி மாவட்டமான மாத்தறையைச் சேர்ந்தவர். 1983 ஆம் ஆண்டு ஜூலை மாத தமிழர் இனப் படுகொலைத் தாக்குதலை அடுத்து கொழும்பில் இருந்து வெளியேறி யாழ்ப்பாணம் சென்ற நடேசனும் அவரது மனைவியும் அங்கேயே வசித்து வந்தனர். அந்தக்காலப் பகுதியில் விடுதலைப் புலிகளுடன் இணைந்துகொண்ட நடேசன், தமிழ்நாட்டில் தங்கியிருந்து 1987 வரை அரசியல் பணிகள் செய்து வந்தார். 1990 இல் இந்தியப் படை வெளியேறிய பின்பு தொடர்ந்தும் அரசியல் பணிகளில் ஈடுபட்ட நடேசன் அவர்கள், 1991 இல் தமிழீழ காவல்துறையை விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் தொடங்கிய போது அதன் உருவாக்கப்-பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். 2007, நவம்பர் 2 ஆம் நாள் அரசியற்துறைப் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வனின் இறப்பை அடுத்து நடேசன் அரசியல் துறைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் சிங்களப் படையினரின் முற்றுகைத் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்து உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்த பொதுமக்களையும் போராளிகளையும் பாதுகாக்குமாறு நடேசன், புலித்தேவன் ஆகிய இருவரும் மே 18 (2009) அதிகாலை 5:45 மணி வரை வரை உலக சமூகம் மற்றும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புக்களிடமும் கோரிக்கை விடுத்திருந்ததாக புலிகளின் பேச்சாளர் செல்லப்பா பத்மநாதன் தெரிவித்தார். ஐநா பொதுச் செயலரின் உயரதிகாரி விஜய் நம்பியார், மற்றும் ஜனாதிபதி ஆகியோர் உறுதியளித்தன் பேரில் நடேசன், புலித்தேவன், மற்றும் நடேசனின் மனைவி உட்பட பொதுமக்கள் சிலர் வெள்ளைக் கொடியைத் தாங்கி சரணடைய வெளியே வந்த போது அவர்கள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவை அனைத்தும் நடைபெற்று ஒரு சில மணி நேரத்தில் நடேசன், புலித்தேவன் உட்பட 18 மூத்த விடுதலைப் புலி உறுப்பினர்களது உடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் செய்தி வெளியாகியிருந்தது. மிரா அல்பாசா மிரா அல்பாசா (Mirra Alfassa) (பெப்ரவரி 21, 1878 – நவம்பர் 17 1973) என்பவர் ஒரு ஆன்மிகவாதி ஆவார். இவரை நேசிப்பவர்களால் அன்னை (மதர்) எனவும் அழைக்கப்படுகிறார். இவர் சிறீ அரவிந்தருடன் இணைந்து ஆன்மிகத்தில் ஈடுபட்டார். அரவிந்தர் இவரை அம்மா என்ற பெயரிலேயே அழைத்தார். இவர் ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தினை புதுச்சேரியில் நிறுவினார். மேலும் ஆரோவில் எனும் நகரத்தினைத் தோற்றுவித்தார். இதன் மூலம் ஒருங்கிணைந்த யோகாவினைப் பற்றி எழுத்தாளர்கள் மற்றும் குருக்கள் போன்றவர்கள் தெரிந்துகொள்வதற்கான உத்வேகத்தினையும், ஆர்வத்தினையும் இவர் ஏற்படுத்தினார்.. இவர் 1878 ஆம் ஆண்டில் பாரிசு மாநகரில் பிறந்தார். இவர் அறிய இயலா இயக்கம் பற்றி மேக்சு தியானிடம் கற்பதற்காக அல்சீரியா நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டார். இவரின் பெற்றோர்கள் துருக்கி, எகிப்து நாட்டினர். இவர் சிறீ அரவிந்தரை மார்ச் 20, 1914ல் புதுச்சேரியில் ஆர்யா என்னும் பத்திரிகையில் பணி புரியவும், தொகுப்புப் பணி செய்யவும் சந்தித்தார். பின் முதலாம் உலகப்போர் காரணமாக புதுச்சேரியை விட்டு ஜப்பான் நாட்டிற்குச் சென்று சில ஆண்டுகள் வாழ்ந்தார். யப்பானில்ஸ்ரீ ரவீந்திரநாத் தாகூரை சந்தித்தார். 1920ல் அவர் மீண்டும் புதுச்சேரிக்கு வந்து வசித்தார். அதன் பின் நாடு திரும்பிய இவர் உலகில் உள்ள பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். இறுதியில் அரவிந்தர் மற்றும் அவரை பின்பற்றுபவர்களுடன் தங்கினார் இந்தியாவில் உள்ள புதுச்சேரியில். இவரைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகமானதால் அங்கே இருந்த குடியிருப்பானது சில ஆண்டுகளில் ஆசிரமம் ஆனது. அங்கு அரவிந்தருடன் ஒருங்கிணைந்த யோகாவினைப் பற்றி மக்களுக்குப் போதனை செய்தனர். அரவிந்தரின் இறப்பிற்குப் பின் ஆசிரமத்தில் பள்ளிக்கூடம் ஒன்றைத் துவங்கினார். மேலும் சோதனை அடிப்படையில் ஆரோவில் எனும் தன்னாட்சி நகரத்தினைத் தோற்றுவித்தார். இந்த நகரத்தின் முக்கிய நோக்கம் இங்கு உள்ள மக்கள் தேசியம், மொழி, சமயம்,சாதி ஆகிய எந்த வேறுபாடுகளும் இன்றி இருப்பதை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. இவர் நவம்பர் 17, 1973 இல் புதுச்சேரியில் இறந்தார். அல்பாசாவின் கடந்த முப்பது ஆண்டுகால வாக்கையினை பதின்மூன்று தொகுதிகளாக தொகுத்து தெ அஜண்டா எனும் நூலை இவரைப் பின்பற்றுபவரான சாட்பிரேம் என்பவர் எழுதியுள்ளார். மிரா அல்பாசா 1878 ஆம் ஆண்டில் பாரிஸ் நகரத்தில் பிறந்தார். இவரின் தந்தை மோயிஸ் மாரிஸ் அல்பாசா. இவர் ஒரு துருக்கி யூதர் ஆவார். இவரின் தாய் எகிப்து யூதர் ஆவார். இவர் பிளான்சே ரச்சேல் மிரா அல்பாசா என அழைக்கப்பட்டார். இவருக்கு மேட்டொ மேத்தியூ முரிஸ் அல்பாசார் எனும் மூத்த சகோதரர் உள்ளார். இவர் பிறந்ததற்கு முந்தைய ஆண்டு இவரின் குடும்பம் பிரான்சுக்கு இடம் பெயர்ந்தனர். மிரா இசுலாமும் என்ற தனது பாட்டியுடன் அன்பாக இருந்தார். இவர் தான் எகிப்தை விட்டு வெளிநாடு சென்ற முதல் பெண்மனியாவார். தனது எழாவது வயதிலேயே வாசிக்கத் துவங்கினார். ஆனாலும் இவரின் ஒன்பதாவது வயதில் தான் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டார். இவர் கலை, டென்னிசு, பாடல் பாடுவது போன்ற பலவற்றில் ஆர்வம் செலுத்தினார். ஆனால் இவரது தாயார் இவர் எந்த ஒரு விடயங்களிலும் இவர் முழுமையாக கவனம் செலுத்துவதில்லை எனக் கவலையடைந்தார். தனது பதினான்காம் வயதில் ஒரு நல்ல வாசகராக ஆனார். தனது தந்தை சேகரித்து வைத்திருந்த அனைத்து நூல்களையும் படித்ததன் மூலம் பிரெஞ்சு மொழியில் புலமை பெற்றவரானார். இவருடைய வாழ்க்கை வரலாற்று நூலை எழுதியவரான விரேகம் என்பவர் , அல்பாசா தனது இளம்வயதில் அறிய இயலா இயக்கத்தில் அனுபவம் வாய்ந்தவராக இருந்தார் என்றும் ஆனால் இவரின் கல்வி தொடர்பாக அவர் போதுமானதாக அறிந்திருக்கவில்லை எனவும் கூறியிருந்தார். தனது பள்ளிப்படிப்பை முடித்த பிறகு 1893ஆம் ஆண்டில் பாரிஸ் நகரில் உள்ள ஜுலியன் அகாதமி கலைப்பள்ளில் சேர்ந்தார். இவரது பாட்டி, ஹென்றி மோரிசெத் என்பவரை இவருக்கு அறிமுகம் செய்துவைத்தார். இவர் ஜுலியன் அகாதமியின் முன்னாள் மாணவர் ஆவார். ஹென்றியும், மிரா அல்பாசாவும் அக்டோபர் 13 1897 இல் திருமணம் செய்தனர்.இருவரும் இணைந்தே தங்களின் கலைப்பயணத்தை மேற்கொண்டனர். 19ஆம் நூற்றாண்டு உணர்வுப்பதிவுவாதம் யுகத்தில் இவர்கள் கலைஞர்களாக சுமார் பத்து ஆண்டுகள் பணிபுரிந்தனர். ஆகஸ்டு 23 ,1988 இல் இவர்களுக்கு ஆண்ரு எனும் குழந்தை பிறந்தது. அல்பாசாவின் படைப்புகள் 1903, 1904, 1905 ஆகிய ஆண்டுகளில் காட்சிப்படுத்தப்பட்டன. பகவத் கீதையின் பிரெஞ்சு மொழிப் பதிப்பை வாசிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அல்பாசா எழுதிய நூல்கள் புதுச்சேரி அரசு புதுச்சேரி அரசு-(புதுவை அரசு) இந்திய அரசின் நேரடி ஆளுமைக்குட்பட்ட ஒன்றிய ஆட்சிப் பகுதியான புதுச்சேரி மற்றும் அதன் பிராந்தியப் பகுதிகளான காரைக்கால், மாஹே, ஏனாம் போன்ற பிராந்தியப் பகுதிகளை உள்ளடக்கிய அரசாக புதுச்சேரியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகின்றது. இவ்வரசு நடுவண் அரசால் நியமிக்கப்பெற்ற துணை நிலை ஆளுநரின் மேற்பார்வையில் ஒன்றிய ஆட்சிப் பகுதி வாழ் மக்களால் சட்டப்பேரைத் தேர்தலில் வாக்களிக்கபெற்று தேர்ந்தெடுக்கபெற்ற முதல்வர் மற்றும் அவரது அமைச்சரவையின் ஆளுமையின் கீழ் செயல்படுகின்றது. துணை நிலை ஆளுநர் மேற்பார்வையின் கீழ் இவ்வரசு இயங்கினாலும் ஆட்சி அதிகாரங்களில் பங்கெடுப்பவர் முதல்வரும் அவரது அமைச்சரவை மட்டுமே. புதுச்சேரி ஒன்றிய ஆட்சி பரப்பில் 30 சட்டமன்றத் தொகுதிகளும் மற்றும் 3 நியமன உறுப்பினர் தேர்தல் , 1 மக்களவைத் தொகுதி மற்றும் 1 மாநிலங்களவைத் தொகுதிக்கும் தேர்தல் நடைபெறுகின்றது. 30 சட்டமன்றம் மற்றும் 1 மக்களவைத் தொகுதி இவையிரண்டும் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் வகையிலும், 1 மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் மறைமுகத் தேர்தலாகவும் நடைபெறுகின்றது. இதனுடன் நியமன உறுப்பினர்கள் 3 பேர் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இத்தேர்தலில் பங்கெடுக்கும் பதிவுபெற்ற மொத்த வாக்காளார்களாக 6,36,045 பேர் 20.01.2004 நிலவரப்படி உள்ளனர். (ஆண் வாக்காளரகள் 3,10,289- பெண் வாக்காளர்கள் 3,25,756). மக்களவைக்கு முதல் முதலாக தேர்தல் நடைபெற்றது 1963 ஆம் ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரித் தேர்தல்கள் புதுச்சேரித் தேர்தல்கள் புதுச்சேரி ஒன்றிய ஆட்சி பரப்பில் 30 சட்டமன்றத் தொகுதிகளும் மற்றும் 3 நியமன உறுப்பினர் தேர்தல் , 1 மக்களவைத் தொகுதி மற்றும் 1 மாநிலங்களவைத் தொகுதிக்கும் தேர்தல் நடைபெறுகின்றது. 30 சட்டமன்றம் மற்றும் 1 மக்களவைத் தொகுதி இவையிரண்டும் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் வகையிலும், 1 மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் மறைமுகத் தேர்தலாகவும் நடைபெறுகின்றது. இதனுடன் நியமன உறுப்பினர்கள் 3 பேர் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இத்தேர்தலில் பங்கெடுக்கும் பதிவுபெற்ற மொத்த வாக்காளார்களாக 6,36,045 பேர் 20.01.2004 நிலவரப்படி உள்ளனர். (ஆண் வாக்காளரகள் 3,10,289- பெண் வாக்காளர்கள் 3,25,756). மக்களவைக்கு முதல் முதலாக தேர்தல் நடைபெற்றது 1963 ஆம் ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது. நவதானியம் நவதானியங்கள் ஆவன நெல், கோதுமை, பாசிப்பயறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து, கடலை என்பனவாம். இந்து சமய நம்பிக்கையுடையோர் புதிதாக வீடு கட்டுதல், திருமணம் மற்றும் சுப நிகழ்வுகளுக்காக வீடுகளின் முன்பு பந்தல் அமைத்தல் போன்ற நிகழ்வுகளுக்கான சில வழிபாடுகளின் போது நவதானியத்தை வழிபாட்டுப் பொருளாக வைத்து வழிபடும் வழக்கம் இருக்கிறது. புதுச்சேரி அரசியல் புதுச்சேரி அரசியல் புதுச்சேரி அரசியலில் பின்வரும் அரசியல்கட்சிகள் பெரும் பங்கு வகிக்கின்றன. இவ்வரசியல் கட்சிகளில் பெரும்பான்மை இடங்களைப் சட்டமன்றத் தேர்தலில் பெரும் கட்சியே ஆட்சியில் பங்கு வகிக்கின்றது. பெரும்பாலும் புதுச்சேரி அரசியலில் கூட்டணி அரசியலே ஆட்சியைத் தீர்மானிக்கின்றன. 2006ஆம் ஆண்டில் காங்கிரஸ், திமுக, பாமக இவைகளின் கூட்டணியில் வெற்றிப்பெற்று காங்கிரஸ் தலைமையில் ஆட்சி செய்தது. திமுக மற்றும் பாமக வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கப்பட்டது. 2011ஆம் ஆண்டில் காங்கிரசு கட்சியில் இருந்து பிரிந்த ரங்கசாமி தொடங்கிய என். ஆர். காங்கிரஸ் கட்சியானது அதிமுகவுடன் கூட்டணிப் பெற்று நா. ரங்கசாமி தலைமையில் ஆட்சி செய்தது. 2016ஆம் ஆண்டில் காங்கிரஸ், திமுக ஆகிய கூட்டணிகள் வெற்றிப்பெற்று காங்கிரஸ் தலைமையில் தற்போது ஆட்சி செய்து வருகிறது. தற்போது முதல்வராக வி. நாராயணசாமி பொறுப்பு வகிக்கின்றார். புதுச்சேரி அரசியல் கட்சிகள் புதுவை துணை நிலை ஆளுநர் புதுவை துணை நிலை ஆளுநர் (அ) புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தென் இந்தியாவின் ஒன்றிய ஆட்சிப் பகுதியான புதுச்சேரியில் இந்தியக் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்பெற்ற துணை நிலை ஆளுநர் புதுச்சேரியின் அரசயலமைப்புத் தலைவராக அவரின் பிரதிநிதியாக செயல்படுபவர். இவரே ஆட்சிப் பகுதியின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பவர். புதுச்சேரியின் தற்பொழுதய துணை நிலை ஆளுநாராக மேதகு சுர்ஜித் சிங் பர்னாலா கூடுதலாக பொறுப்பு வகிக்கின்றார். இவர் தமிழகத்தின் ஆளுநர் என்பது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரி அமைச்சரவை புதுச்சேரி அமைச்சரவை (அ) புதுவை அமைச்சரவை புதுவை அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் செயலாட்சியர்கள். முதலைமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழுவை அமைச்சரவை எனப்படும். இவ்வமைச்சர்கள் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றியக் கட்சியை துணை நிலை ஆளுநரால் அழைக்கபெற்று அதன்படி அவர்களால் அமைக்கப்பட்டக் குழுவின் தலைவருக்கு முதலைமச்சர் பதவி பிராமணமும் இரகசிய காப்பு பிராமாணமும் செய்யபெற்று, அத்தலைவரால் (முதலமைச்சரால்) வழங்கப்பட்ட பட்டியிலின்படி இதர இலாக்கா அமைச்சர்களுக்கும் அதே போன்றே துணை நிலை ஆளுநரால் பதவி பிரமானம் செய்யப்பெற்றதற்குப் பின ஆட்சி நிர்வாகத்தில் பங்கு கொள்கின்றனர். புதுச்சேரி சட்டப் பேரவை புதுச்சேரி சட்டப் பேரவை அல்லது புதுவை சட்டமன்றம் என்பது இந்தியாவின் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியில் சட்டம் இயற்றும் அவை ஆகும். இதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 30. இவர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவர்களது பதவிக்காலம் ஐந்தாண்டுகள் ஆகும். இந்திய ஒன்றிய ஆட்சிப்பகுதி சட்டம், 1963இன் படி இ்ந்த நடைமுறை பின்பற்றப்படுகின்றது. இப்பேரவை 16 குழுக்களை உள்ளடக்கியது. புதுச்சேரி ஒன்றியப் பகுதியில் உள்ள மொத்த சட்டப் பேரவைத் தொகுதிகள் - 30 புதுச்சேரித் தலைமைத் தேர்தல் அலுவலர் புதுச்சேரித் தலைமைத் தேர்தல் அலுவலர் (அ) புதுவைத் தலைமைத் தேர்தல் அலுவலர் இந்திய ஒன்றிய ஆட்சிப் பகுதி பொதுத் தேர்தலாகிய நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களை தனது மேற்பார்வையில் நடத்துவதற்காக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தால் இந்திய அரசியலமைப்பின் விதி 324 ன்படி மேலும் நாடாளுமன்றத்தில் 1950 ல் ஏற்படுத்தப்பெற்ற மக்கள் பிரநிதித்துவச் சட்டம், 1951, குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் சட்டம், 1952 ஏற்படுத்தப் பெற்றதாகும். தலைமைத் தேர்தல் அலுவலர் அ அதிகாரி (சி.இ.ஒ.- மா.த.தே.அ) இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தால், ஆணையரால் நியமிக்கப்படுகின்றார். இவர்களின் பணி ஆட்சிப் பகுதியில் நடைபெற்கின்றத் தேர்தலை மேற்பார்வையிடுவது, வழிகாட்டுவது, கண்காணிப்பது மற்றும் கட்டுபடுத்துவது. புதுச்சேரியிலும் இவ்வலுவலரால் இப்பணி மேற்கொள்ளப்படுகின்றது. தலைமைத் தேர்தல் அலுவலர் பொதுவாக இந்திய ஆட்சிப் பணிப் பட்டயம் பெற்றவர்களே அலுவலர்களாக நியமிக்கப்படுவர். புதுச்சேரியின் தலைமைத் தேர்தல் அலுவலராக திரு. எஸ். குமாராசாமி இ.ஆ.ப தற்பொழுது பொறுப்பு வகிக்கின்றார். புதுவை சட்டப் பேரவைத் தலைவர் புதுவை சட்டப் பேரவைத் தலைவர் இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மாநில மற்றும் ஆட்சிப்பகுதி அரசின் சட்டமன்றத்திற்கும் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட சட்டமன்றத் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களில் இருந்து சட்டப்பேரவைத் தலைவர் ஒருவர் தேர்வு செய்யப்படுகிறார். இவர் சட்டமன்றக் கூட்டத்திற்குத் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பதுடன் கூட்டங்களின் போது உறுப்பினர்களின் கருத்துக்களை பதிவேடுகளில் சேர்க்கவும் தேவையற்ற கருத்துக்களை நீக்கவும் அதிகாரம் பெற்றவராக இருக்கிறார். இதுபோல் உறுப்பினர்கள் மீது கொண்டு வரப்படும் முறையீடுகளின் அடிப்படையில் உறுப்பினர்களை தற்காலிகமாகவோ கூட்டத் தொடர் முழுமைக்குமோ கலந்து கொள்ளத் தடைவிதிக்கும் அதிகாரமுடையவராகவும் இருக்கிறார். மேலும் அரசியல் கட்சி சார்பாகப் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த போதிலும் சட்டமன்றத்திலும், வெளியிடங்களிலும் பதவிக்காலம் முடியும் வரை கட்சி சார்பற்றவராகவே நடந்து கொள்ளவேண்டும் என்கிற விதிமுறையையும் இவர் கடைப்பிடிக்க வேண்டியவராயிருக்கின்றார். ஜுபைல் ஜுபைல் ("Jubail", அரபு: "الجبيل") சவுதி அரேபியாவின் கிழக்கு மகாணத்தில், அரபிக்கடலோரம் அமைந்துள்ள மிகப்பெரிய தொழில் நகராகும். இங்கு இருபதுக்கும் மேற்பட்ட கனரக இரசாயனத் தொழிற்கூடங்கள் உள்ளன. இந்த தொழிற் நகரின் அடிப்படை உள்கட்ட வசதிகளை " Royal Commission for Jubail & Yanbu" செய்து தருகிறது. இதன் மக்கள் தொகை கிட்டத்தட்ட 179,544. புதுச்சேரி முதலமைச்சர்களின் பட்டியல் புதுச்சேரி முதலமைச்சர் அல்லது புதுவை முதல்வர்- இந்தியாவின் புதுச்சேரி ஒன்றிய ஆட்சிப் பகுதி அமைச்சரவையின் தலைமை அமைச்சர் ஆவார். இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பெறும் சட்டமன்றப் பொதுத் தேர்தலில் புதுவை மக்களின் வாக்குகளால் வெற்றி பெறும் உறுப்பினர்களின் பெரும்பான்மையைச் சார்ந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்வு செய்யப்பெற்று அவர்களின் பரிந்துரையின் படி புதுச்சேரியின் துணை நிலை ஆளுநரால் ஆளுமை புரிய அழைப்பதின் பேரில் புதுவையின் முதல்வராக ஐந்து ஆண்டுகள் ஆளுமை புரிய கடமைபட்டவராவார். இவரே புதுச்சேரியின் முதன்மை செயலாட்சியர் ஆவார். இவருக்கென்று தனியான துறைகள் ஒதுக்கப்படவில்லை, இருப்பினும் சிறப்புத் துறைகளை இவர் கவனிப்பவர். ஆட்சிப் பகுதியின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் அரசு ஆணைகள், செயல் அலுவலர்களின் பணி மாற்றம் போன்ற அனைத்தும் நிருவாக செயல்திட்டங்களும் இவரால் மேற்கொள்ளப்படும். இவரின் அலுவலகம் மற்றும் இவரது அமைச்சரவையின் அலுவலகமும் புதுச்சேரியில் இடம்பெற்றுள்ளத் தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ளது. இவருக்கு துணை புரிய எற்படுத்தபெற்ற அமைச்சரவைக்கென ஒதுக்கப்பெற்ற தனி துறைகளின் அமைச்சர்கள் அந்த துறைகளில் ஆளுமை புரிவர். இவர்கள் துறைகளின் முதன்மை செயலாட்சியர்களாக இருப்பர். புதுச்சேரியின் தற்பொழுதய முதலமைச்சர் வி. நாராயணசாமி ஆவார். புதுச்சேரி துணைநிலை ஆளுநர்களின் பட்டியல் புதுச்சேரி துணைநிலை ஆளுநர்களின் பட்டியல் புதுச்சேரி இந்தியாவின் ஒன்றிய ஆட்சிப் பகுதி (ஆட்சிப் பரப்பு) ஆகும் ஆனால் தனி மாநிலம் அல்ல. புதுதில்லியின் நேரடி குடியரசுத் தலைவரின் ஆளுமைக்குட்பட்டதாகும். புதுதில்லியை போன்று இங்கும் சிறப்பு திருத்த அரசியலமைப்பின்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைக்கப்பெற்ற சட்டப்பேரவை, முதல்வர் மற்றும் அவரது அமைச்சரவை போன்ற அமைப்புகள் இப்பகுதியின் ஆளுமையில் பங்குபெறுகின்றன. குடியரசுத்தலைவரின் பிரதிநிதியாக புதுச்சேரி ஆட்சிப்பகுதியின் மேற்பார்வையாளர்களாக செயல்படுவர் துணைநிலை ஆளுநர் ஆவார். புதுவை துணை நிலை ஆளுநர் (அ) புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தென் இந்தியாவின் ஒன்றிய ஆட்சிப் பகுதியான புதுச்சேரியில் இந்தியக் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்பெற்ற துணை நிலை ஆளுநர் புதுச்சேரியின் அரசியலமைப்புத் தலைவராக அவரின் பிரதிநிதியாக செயல்படுபவர். இவரே ஆட்சிப் பகுதியின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பவர். இவரது இல்லம் புதுச்சேரி நேரு பூங்காவில் உள்ள முன்னாள் பிரஞ்சு ஆளுநர் அரண்மணையான ராஜ் நிவாஸ் ஆகும். நடுவண் அரசு நேரிடையாக இவ்வரசிற்குத் தேவையான நிதிவளத்தை வழங்குகின்றது. நீரின் மின்கடத்துமை நீரின் மின் கடத்துதிறன் அல்லது தற்கடத்துதிறன் என்பது நீரில் உள்ள தாதுப் பொருள்களினால் கடத்தப்படும் மின்னோட்டம் ஆகும்.நீரில் கலந்துள்ள உப்பின் அளவை பொருத்து மின் கடத்துதிறன் மாறுபடுகிறது உப்பின் அளவு அதிகரிக்கும்போது மின்கடத்து திறனானது அதிக்கிறது.மேலும் உப்பின் அளவு குறையும் போது மின்கடத்து திறனும் குறைகிறது வொல்பிராம் அல்பா வொல்பிராம் அல்பா (Wolfram|Alpha) என்பது ஒரு கேள்விகளுக்குப் பதிலளிக்கும் இயந்திரம். இது மதமட்டிக்கா மென்பொருளை உருவாக்கிய வொல்பிராம் ஆய்வு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. கேள்விகள் இலக்கணப் பகுப்பாய்வு செய்யப்பட்டு, கணிக்கூடியவாறு ஒழுங்கமைக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு விடைகள் தருவிக்கப்படுகின்றன. துறைசார் கேள்விகளுக்கு இது துல்லியமான பதில்களைத் தரக்கூடியது. பயனாளர்களால் அனுப்பப்படும் கேள்விகள், பிரயோகங்கள் மற்றும் கணிப்பீடுகளுக்கான வேண்டுகோள்களைப் பெற்று ஒழுங்கமைக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு முடிவுகளைத் தரும். இந்தியாவின் ஆட்சிப்பகுதியிலுள்ள துணை நிலை ஆளுநர்கள் இந்தியாவின் ஆட்சிப்பகுதியிலுள்ள துணை நிலை ஆளுநர்கள் அடிப்படையில் மாநிலங்களின் உள்ள முதலலைமச்சர்களின் ஒத்த அதிகாரங்களை கொண்டவர்களாக இந்திய ஒன்றிய ஆட்சிப் பகுதிகளில் விளங்குகின்றனர். இந்தியாவில் 3 ஆட்சிபகுதிகளில் துணைநிலை ஆளுநர்கள் ஆளுநர்களின் அதிகாரங்களை கொண்டே செயல்படுகின்றனர். அதாவது இந்தியாவின் தலைநகராமான புதுதில்லி, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் இந்த ஆட்சிப் பகுதிகளில் துணை நிலை ஆளுநர்களின் ஆளுமையில் இயங்குகின்றன. புதுதில்லி, புதுச்சேரி ஆட்சிப பகுதிகளில் சுயாட்சித் தன்மையுடைய அரசாக, மாநிலங்களின் முதலைமைச்சர்களின் அதிகாரங்களை கொண்ட ஆட்சிப் பகுதியாக, ச்ட்டப் பேரவைகளை கொண்டனவாக விளங்குகின்றது. இவ்விடங்களில் துணைநிலை ஆளுநர் மாநில ஆளுநருக்குள்ள அதிகாரங்களுக்கு இணையான அதிகாரங்களைக் கொண்டு செயல்படுகின்றார். ஏனைய 4 ஆட்சிப்பகுதிகளுக்கும் ஆட்சிப் பொறுப்பாளராக இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் நியமிக்கப்படுகின்றனர். இந்தியாவின் ஆட்சிப்பகுதியிலுள்ள ஆட்சிப் பொறுப்பாளர்கள் இந்தியாவின் ஆட்சிப்பகுதியிலுள்ள ஆட்சிப் பொறுப்பாளர்கள் இந்தியாவின் ஒன்றிய ஆட்சிப்பகுதிகளிக்கு துணைநிலை ஆளுநர்கள் 3 இடங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏனைய 4 பகுதிகளுக்கும் இந்திய ஆட்சிப் பணி பட்டயம் பெற்றவர்கள் ஆட்சிப் பொறுப்பாளர்களாக இருந்து அவ்வாட்சிப்பகுதிகளின் செயல்பாடுகளை மேற்கொள்கின்றனர். ஆந்திரப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல் ஆந்திரப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல் ஆந்திரப் பிரதேச ஆளுநர்கள் 1953 ஆம் ஆண்டு முதல் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இவர்கள் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர். இவரின் இருப்பிடம் ஐதராபாத்தில் உள்ள ராஜ்பவன் (ஆந்திரப் பிரதேசம்) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது ஈக்காடு சீனிவாசன் இலட்சுமி நரசிம்மன் என்பவர் ஆளுநராக உள்ளார். அருணாச்சலப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல் அருணாச்சலப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல் அருணாச்சலப் பிரதேச ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் இட்டாநகரில் உள்ள ராஜ்பவன் (அருணாச்சலப் பிரதேசம்) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது பி. டி. மிஸ்ரா என்பவர் ஆளுநராக உள்ளார். சிக்கிம் ஆளுநர்களின் பட்டியல் சிக்கிம் ஆளுநர் பதவி 1975 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இவர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் கேங்டாங்கில் உள்ள ராஜ்பவன் (சிக்கிம்) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது கங்கா பிரசாத் என்பவர் ஆளுநராக உள்ளார். சிக்கிம் ஆளுனராகப் பதவி வகித்தவர்களின் பெயர்களும், அவர்களின் பதவிக் காலங்களும் பின்வருமாறு: பீகார் ஆளுநர்களின் பட்டியல் பீகார் ஆளுநர்களின் பட்டியல் பீகார் ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் பாட்னாவில் உள்ள ராஜ்பவன் (அருணாச்சலப் பிரதேசம்) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது லால்ஜி தாண்டன் என்பவர் ஆளுநராக உள்ளார். சட்டீஸ்கர் ஆளுநர்களின் பட்டியல் சட்டீஸ்கர் ஆளுநர்களின் பட்டியல் சட்டீஸ்கர் ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் ராய்ப்பூர் உள்ள ராஜ்பவன் (சட்டீஸ்கர்) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது ஆனந்திபென் படேல் என்பவர் ஆளுநராக உள்ளார். மத்தியப் பிரதேச ஆளுநரான இவர், இம்மாநிலத்தின் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிக்கின்றார். கோவா ஆளுநர்களின் பட்டியல் கோவா ஆளுநர்களின் பட்டியல் கோவா ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் பனஜியில் உள்ள ராஜ்பவன் (கோவா) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது கோவாவின் ஆளுநராக மிருதுளா சின்கா 26 ஆகத்து, 2014 முதல் பொறுப்பு வகிக்கின்றார். கோவா 30 ஜூலை, 1987-க்கு முன்புவரை இந்தியாவின் ஒன்றிய ஆட்சிப்பகுதியாக இருந்து வந்தது. அதன் பின் மாநிலமாக மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆளுநரின் அதிகாரங்கள் பல வகைகளில் மாநிலங்களில் செயல்படுத்தப்படுகின்றன. முதல் போர்ச்சுகீசியத் தலைமை ஆளுநராக (கவர்னர் ஜெனரல்) 1505 ஆம் ஆண்டு பிரான்சிஸ்கோ டி அல்மீதா வும் கடைசித் தலைமை ஆளுநராக மனுவல் அன்டோனியோ ஒசலோ இ சில்வா 1961 வரை பொறுப்ப வகித்தனர். கோவாவில் மொத்தம் 163 தலைமை ஆளுநர்கள் பொறுப்பு வகித்துள்ளனர். மொத்தப்பட்டியலைக் காண இத்தளத்தை தொடர்பு கொள்ளவும்; ராஜ்பவன் கோவா அரசு இணையம். கோவா, தாமன் டையூவுடன் இணைந்து இந்தியாவின் ஆட்சிப்பகுதியாக 30 மே, 1987 வரை செயல்பட்டது. அதுவரை அப்பகுதியை துணைநிலை ஆளுநர்களே கோவாவின் அட்சி பொறுப்பை ஏற்றிருந்தனர். கோவா 1987 முதல் ஆட்சிப்பகுதியிலுருந்து மாநிலமாக அறிவிக்கப்பட்டது அதுமுதல் பொறுப்பேற்ற மாநில ஆளுநர்கள்; குஜராத் ஆளுநர்களின் பட்டியல் குஜராத் மாநில ஆளுநர் மாநிலத்தின் தலைமை பொறுப்பை 5 ஆண்டுகளுக்கு நிருவகிக்க இந்தியக் குடியரசுத் தலைவரால் அவரின் பிரதிநிதியாக செயல்பட 5 ஆண்டுகளுக்கொருமுறை நியமனம் செய்யப்படுகின்றனர். தற்பொழுதய குஜராத் மாநிலத்தின் ஆளுநராக மேதகு ஓம் பிரகாஷ் கோலி 16 ஜூலை 2014 முதல் பொறுப்பு வகிக்கின்றார். ஆளுநரின் அதிகாரங்கள் பல வகைகளில் மாநிலங்களில் செயல்படுத்தப்படுகின்றன. அரியானா ஆளுநர்களின் பட்டியல் அரியானா ஆளுநர்களின் பட்டியல் அரியான ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் சண்டிகரில் உள்ள ராஜ்பவன் (அரியானா) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது சத்யதேவ் நாராயணன் ஆர்யா என்பவர் ஆளுநராக உள்ளார். அரியானா மாநிலம், பஞ்சாப் மாநிலத்திலிருந்து 1 நவம்பர், 1966 முதல் தனி மாநிலமாக பிரிந்து செயல்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இமாச்சலப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல் இமாச்சலப் பிரதேசம் ஆளுநர்களின் பட்டியல் இமாச்சலப் பிரதேச ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் சிம்லாவில் உள்ள ராஜ்பவன் (இமாச்சலப் பிரதேசம்) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது ஆச்சாரியா தேவ் விராட் என்பவர் ஆளுநராக உள்ளார். இமாச்சலப் பிரதேசம் 1950 இந்தியாவின் ஒன்றிய ஆட்சிப்பகுதியாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் 1971 இல் இமாச்சலப் பிரதேச சட்டம், 1971இன் படி, இந்தியாவின் 18 வது மாநிலமாக அறிவிக்கப்பட்டது. ஜார்க்கண்ட் ஆளுநர்களின் பட்டியல் ஜார்க்கண்ட் ஆளுநர்களின் பட்டியல் ஜார்க்கண்ட் ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் ராஞ்சியில் உள்ள ராஜ்பவன் (ஜார்க்கண்ட்) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது திரௌபதி மர்மு என்பவர் ஆளுநராக உள்ளார். ஜம்மு காஷ்மீர் ஆளுநர்களின் பட்டியல் இந்தியா விடுதலையடைந்தபின் ஜம்மு காஷ்மீர் மகாராஜாவாக ஹரி சிங் ஆட்சி பொறுப்பின் கீழ் காஷ்மீர் 17 நவம்பர் 1952 வரையில் இருந்தது. மேலும் அதுவரை அவர் மகன் கரண் சிங் 20 ஜூன், 1949 முதல் தற்காலிகமாக ஆட்சிக் காவலாராகப் பொறுப்பேற்றிருந்தார். அதன்பின் 17 நவம்பர், 1952 முதல் 30 மார்ச், 1965 வரை மாநிலத்தின் தலைமை பொறுப்பையும் கரன் சிங்கே 'சத்ரிரியாசத்' என்ற பதவியின் மூலம் பொறுப்பேற்றிருந்தார். செல்வராசா பத்மநாதன் செல்வராசா பத்மநாதன் அல்லது குமரன் பத்மநாதன் (கேபி) விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர். விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பள்ளி நண்பரான இவர், பிரபாகரனுடன் 30 ஆண்டுகளுக்கு மேலாக இணைந்து செயற்பட்டார். இவரை பிரபாகரன் குமரன் பத்மநாதன் என்று அழைத்தார். 2009 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் புலிகளின் பன்னாட்டுத் தொடர்பாளராக இவர் நியமிக்கப்பட்டார். இவரே "எமது ஆயுதங்களை ஓய்வு அளிக்கிறோம்" என்று அறிக்கை விட்டவர் ஆவார். விடுதலைப் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டார் என்பதையும் உறுதி செய்தார். விடுதலைப் புலிகளின் படைத்துறை வீழ்ச்சியைத் தொடர்ந்து, புலிகள் வன்முறை போராட்ட வழிமுறையைக் கைவிட்டு விட்டதாகவும், மக்களாட்சி வழியில் போராடப் போவதாகவும் அறிவித்தார். கருநாடக ஆளுநர்களின் பட்டியல் கருநாடக ஆளுநர்களின் பட்டியல் கருநாடக ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் பெங்களூரில் உள்ள ராஜ்பவன் (கருநாடகம்) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது வாஜுபாய் வாலா என்பவர் ஆளுநராக உள்ளார். கேரள ஆளுநர்களின் பட்டியல் கேரள ஆளுநர்களின் பட்டியல் கேரள ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் திருவனந்தபுரத்தில் உள்ள ராஜ்பவன் (கேரளா) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது ப. சதாசிவம் என்பவர் ஆளுநராக உள்ளார். மத்தியப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல் மத்தியப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல் மத்தியப் பிரதேச ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் போபாலில் உள்ள ராஜ்பவன் (மத்தியப் பிரதேசம்) ஆகும். இவர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது ஆனந்திபென் படேல் என்பவர் ஆளுநராக உள்ளார். இவர் சட்டீஸ்கர் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மணிப்பூர் ஆளுநர்களின் பட்டியல் மணிப்பூர் ஆளுநர்களின் பட்டியல் மணிப்பூர் ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் இம்பாலில் உள்ள ராஜ்பவன் (மணிப்பூர்) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது நச்மா எப்துல்லா என்பவர் ஆளுநராக உள்ளார். மேகாலயா ஆளுநர்களின் பட்டியல் மேகாலயா ஆளுநர்களின் பட்டியல் மேகாலயா ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் சில்லாங்கில் உள்ள ராஜ்பவன் (மேகாலயா) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது ததகதா ராய் என்பவர் ஆளுநராக உள்ளார். மிசோரம் ஆளுநர்களின் பட்டியல் மிசோரம் ஆளுநர்களின் பட்டியல் மிசோரம் ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் அய்சாலில் உள்ள ராஜ்பவன் (மிசோரம்) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது குமனம் இராஜசேகரன் என்பவர் ஆளுநராக உள்ளார். எஸ். ஜே. தாஸ் என்பவர் தலைமை ஆணையராக மிசோரத்தில், 21 சனவரி 1972 முதல் 23 ஏப்ரல் 1972 வரை பொறுப்பு வகித்தார். அவரைத் தொடர்ந்து பின் வரும் துணைநிலை ஆளுநர்கள் ஆட்சிப் பகுதிக்கு பொறுப்பு வகித்தனர். உத்தராகண்ட் ஆளுநர்களின் பட்டியல் இந்தியாவின், உத்தர்காண்ட் மாநிலத்தின் ஆளுநரின் அலுவலக இருப்பிடம் தேராதூனில் உள்ள ராஜ்பவன் (உத்தராகண்ட) ஆகும். தற்போது பேபி இராணி மவுரியா என்பவர் ஆளுநராக உள்ளார். நாகாலாந்து ஆளுநர்களின் பட்டியல் நாகாலாந்து ஆளுநர்களின் பட்டியல் நாகாலாந்து ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் கோகிமாவில் உள்ள ராஜ்பவன் (நாகாலாந்து) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது பத்மநாப ஆச்சாரியா என்பவர் ஆளுநராக உள்ளார். திரிபுரா ஆளுநர்களின் பட்டியல் திரிபுரா ஆளுநர்களின் பட்டியல் திரிபுரா ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் அகர்தலாவில் உள்ள ராஜ்பவன் (திரிபுரா) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது கப்டன் சிங் சோளங்கி என்பவர் ஆளுநராக உள்ளார். உத்திரப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல் உத்திரப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல் உத்திரப் பிரதேச ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் இலக்னோவில் உள்ள ராஜ்பவன் (உத்திரப் பிரதேசம்) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது இராம் நாயக் என்பவர் ஆளுநராக உள்ளார். இந்தியாவின் 1947 விடுதலைக்குப்பின் உத்திரப் பிரதேசத்தின் ஆளுநர்களாக பொறுப்பு வகித்தவர்களின் பட்டியல். டாமன் டையூ ஆட்சிப் பொறுப்பாளர்கள் பட்டியல் டாமன் டையூ ஆட்சிப் பொறுப்பாளர்கள் பட்டியல் இந்தியாவின் ஆட்சிப் பகுதியான டாமன் டையூ மற்றும் தாத்ரா நாகர் அவேலியில் ஆட்சிப் பொறுப்பாளர்கள் இரு ஆட்சிப்பகுதிகளையும் இணைத்து 30 மே 1987 முதல் கவனிக்கின்றனர். துறவி துறவி என்பது உலக இன்பங்களில் மனத்தைச் செலுத்தாது, ஆன்மீக ஈடேற்றத்தை நோக்கமாகக் கொண்டவர், ஆசையை விட்டவரை சந்நியாசி என்பர். துறவிகள் பெரும்பாலும் காவி அணிவது வழக்கம். இந்து சமயம் "மனிதனின் வாழ்க்கையை நான்கு வகையாக பிரித்தது. அவை பிரம்மச்சர்யம் (மாணவப் பருவம்), கிரகஸ்தம் (இல்லறம்), வனப்பிரஸ்தம் மற்றும் சந்நியாசம் (துறவறம்) என்று கூறப்படுகின்றன. அவற்றில் பிரம்மச்சரியம் என்பது கிரகஸ்தம் ஆவதற்கு முன்பு கடைபிடிக்கும் சாதகர் நிலை (பயிற்சி நிலை) எனவும், வனப்பிரஸ்தம் என்பது துறவறம் மேற்கொள்வதற்கான சாதகர் நிலை எனவும் கொள்ளலாம். இந்த அடிப்படையில் மனிதனின் வாழ்க்கை பிறந்ததிலிருந்து பதினாறு வயது வரை பாலபருவம் எனவும் ,அந்த சமயம் அவனை எந்த நியதிகளும் கட்டுபடுத்துவதில்லை. அடிப்படைக் கல்வி மட்டுமே கட்டுபடுத்தும். பதினாறு வயதிலிருந்து இருபத்துநான்கு வயது வரை அவன் பிரம்மச்சாரி, அந்த சமயம் வாழ்க்கைகல்வியை கிரகஸ்தனாக இருப்பதற்கு வேண்டிய சகல விதமான விஷயங்களையும் படிப்பறிவாக அறிந்து கொள்கிறான். இருபத்து நான்கு வயதில் பிரம்மச்சரிய நிலையை முடித்து தான் கற்ற கல்வியை தனக்கென்று இறைவனால் உருவாக்கப்பட்ட மனைவியுடன் சேர்ந்து கிர்கஸ்தனாகி அனுபவ நிலைக்கு கொண்டு வருகின்றான். அந்த நிலை ஐம்பத்தாறு வயது வரை நீடிக்கிறது. ஐம்பத்தாறு வயதிலிருந்து மனிதன் வனப்பிரஸ்த நிலைக்கு சென்றுவிடவேண்டும். அதாவது எதிலும் பொதுவான நோக்கம் கொண்டு துறவு நிலைப்பற்றி முழுமையாக படிப்பறிவாக அறிய வேண்டும். அதிகபட்சமாக அவன் எழுபத்திரண்டு வயதுக்கு மேல் வாழ்ந்தால் முற்றிலும் துறவியாகி விடவேண்டும்." என்று மனிதன் வாழ்க்கையை நான்காகப் பிரித்துத் துறவும் வாழ்க்கையின் ஒரு பகுதி என்கிறது கிறித்தவத்தில் துறவி எனப்படுவோர் துறவற சபையில் சேர்ந்து, அச்சபையின் சட்டங்களுக்கு கீழ்படிந்து, கற்பு, ஏழ்மை, கேழ்படிதல் என்னும் வார்த்தை பாடுகளை எடுத்துக் கொண்டோரைக் குறிக்கும். கிறித்தவ துறவிகளுக்கும் குருக்களுக்கும் வேறுபாடு உள்ளது. எல்லா குருக்களும் துறவிகள் அல்லர். ஆதி திருச்சபைகளில் வனத்து சின்னப்பரை போல் துறவிகள் தனியே வாழ்க்கை நடத்தினர். பிற்காலத்தில் இத்தகையோர் ஒருங்கே கூடி ஒரு குழுமமாக செப வாழ்வில் இடுபட்டனர். இத்தகையோரை ஒழுங்கு படுத்த புனித ஆசிர்வாதப்பர் பல சட்டங்களை இயற்றினார். இவையே இன்றளவும் பல இடங்களில் உள்ளது. இசுலாம் மதத்தைப் பொறுத்தவரை துறவுக்கு அனுமதியில்லாத நிலையே உள்ளது. இது குறித்து இசுலாம் தத்துவ நூல்களில் பல கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. “இளைஞர்களே உங்களில் திருமணத்துக்கு சக்தி பெற்றவர் மணமுடித்துக் கொள்ளட்டும்! இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும்! ஏனெனில் நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) புஹ்காரி (5065), முஸ்லிம் (2710) இலட்சத்தீவுகளின் ஆட்சிப் பொறுப்பாளர்கள் பட்டியல் இந்தியாவின் ஆட்சிப் பகுதியான இலட்சத்தீவுகளில் இந்திய ஆட்சிப் பணி பொறுப்பாளர்கள் அந்தப் பகுதிகளின் ஆட்சித் தலைமை பொறுப்பை மேற்கொள்கின்றனர். அவரே இலட்சத்தீஙுகளின் வளர்ச்சிக் குழு கூட்டத் தலைவராக (chairman). சுற்றுலா மற்றும் விளையாட்டு வளர்ச்சிக் குழுத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கின்றார். அலுவல்நிலை (ex-officio) அதிகாரத்தின்படி இலட்சத்தீவுகளின் காவல்துறைத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கின்றார். சண்டிகரின் ஆட்சிப் பொறுப்பாளர்கள் பட்டியல் 1985 முதல் பஞ்சாப் ஆளுநரே சண்டிகரின் ஆட்சிப் பொறுப்பையும் கூடுதலாக பொறுப்பேற்றிருப்பவர். அவரின் அலுவலக இருப்பிடமான பஞ்சாப் ராஜ்பவன் சண்டிகரில் அமைந்துள்ளது. தத்ரா நகர் அவேலி ஆட்சிப் பொறுப்பாளர்கள் பட்டியல் தத்ரா நகர் அவேலி (அ) தத்ரா மற்றும் நகர் அவேலி என்ற இரு பகுதிகளும் 1954 இல் இந்திய தேசியவாதிகளால் விடுவிக்கப்பட்டது ஆனால் 1961 வரை ஆட்சிப்பகுதியாக அறிவிக்கப்படவில்லை. 1961 றக்குப் பிறகே இந்திய ஒன்றியத்தில் இணைந்தது. தில்லி துணைநிலை ஆளுநர்களின் பட்டியல் இந்தியாவின் தேசிய தலைநகராமான தில்லி இந்தியாவின் ஒன்றிய ஆட்சிப் பகுதியாகும். தற்பொழுதய துணைநிலை ஆளுநராக தில்லி ஆட்சிப் பகுதியில் பொறுப்புவிக்ப்பவர் தேஜேந்திர கண்ணா. அவரின் அலுவலகப்பூர்வ இருப்பிடம் தில்லி ராஜ்நிவாஸ் இல் அமைந்துள்ளது. பேன் பேன்கள் ("Phthiraptera", ஆங்கிலம்: "Lice" அல்லது "fly babies") எள்ளின் அளவு உள்ள ஒரு ஒட்டுண்ணியாகும். இதில் பழுப்பு நிறப் பேன்களும், கருமையான பேன்களும் அடங்கும். இவை உயிர் வாழ்வதற்காக ஒரு சிறு துளி இரத்தத்தையே மனிதனிலிருந்து உறிஞ்ச வேண்டியிருக்கும். இவை பெரும்பாலும் தலையின் பிடறிப் பகுதி, மற்றும் காதோரங்களிலும் உள்ள முடியில் முட்டை(ஈர்) இடும். தலையோடு தலை முட்டும் நெருக்கமான உறவுகளின் போது இலகுவில் ஒருவரிலிருந்து மற்றவருக்குத் தொற்றும்.ஆயினும் சீப்பு, தொப்பி, தலையணை போன்றவற்றிலும் பரவலாம், பேன்கள் பறக்கவோ தத்தவோ முடியாதவை. ஊர்ந்தே செல்பவை. எனவே ஒருவருக்கு அருகில் இருப்பதால் தொற்ற மாட்டாது. ஒரு பேன் தொற்றியவுடன் வெளிப்படையாக எந்த அறிகுறியும் தெரியமாட்டாது. பேன் பெருகிக் கடிக்கும் போது ஏற்படும் அரிப்பு சினமூட்டும். ஈர் அதிகரிக்கும்போது முடி ஓரங்களில் பொடுகு படிந்ததுபோல அருவருப்பூட்டும் புற ஒட்டுண்ணி வகையைச் சேர்ந்த பேன்கள் இரண்டு வகையாக உள்ளன. மனிதனின் தலையில் வாழும் பேன்கள் தலைப் பேன் எனப்படுகிறது. இன்னொன்று உடைகளின் மடிப்புகளில் வசிக்கின்றன. இவை சீலைப்பேன் எனப்படுகிறது. இவை மனிதனுடைய தலை மயிரில் வசிக்கின்றன. இவை ஈர்கள் எனப்படும் முட்டைகளை தலைமயிரில் ஒட்ட வைத்து விடுகின்றன. இவை மனிதனின் உடைகளின் மடிப்புகளில் வசிப்பதுடன் அங்கேயே தங்கள் முட்டைகளை வைத்துவிடுகின்றன. முட்டைகளில் இருந்து வரும் லார்வாக்கள் முதிர்ந்த தலைப் பேன்களைப் போல் இருக்கின்றன. பேன்கள் மிக விரைவாக இனப்பெருக்கம் செய்யக் கூடியவை. ஒரு மாதத்தில் ஒரு பெண் பேன் சிலமுந்நூறு குஞ்சுகளை உற்பத்தி செய்துவிடக் கூடியவை. இவற்றின் கால்களில் உள்ள உகிர்களால் இறுகப் பற்றிக் கொள்ளக் கூடியது. இதனால் பேன்கள் தலை மயிர்களையும், உடைகளின் துணிகளையும் இறுக்கமாகப் பற்றிக் கொள்கின்றன. பேன்களின் உறிஞ்சு குழல்கள் முனையில் சிறு கொக்கிகள் இருக்கின்றன. இதன் மூலம் மனிதனின் இரத்தத்தை உறிஞ்சுவதற்கு மனிதனின் தோலுடன் ஒட்டிக் கொள்கிறது. பேன்களுக்கு இறகுகள் எதுவுமில்லை. பேன்கள் தொற்றிக் கொள்வதைத் தடுப்பதற்கு, உடலையும் தலை மயிரையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். உள்ளாடைகளை அடிக்கடி மாற்றிக் கொள்ளுதல், அவற்றின் மடிப்புகளைச் சூடான இஸ்திரி பெட்டியால் தேய்த்தல் சீலைப் பேன்கள் வராமல் பாதுகாக்கும். இராஜஸ்தான் ஆளுநர்களின் பட்டியல் இராஜஸ்தான் ஆளுநர்களின் பட்டியல் இராஜஸ்தான் ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் செய்ப்பூரில் உள்ள ராஜ்பவன் (இராஜஸ்தான்) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது கல்யாண் சிங் என்பவர் ஆளுநராக உள்ளார். சிறு முக்குளிப்பான் முக்குளிப்பான் ("Tachybaptus ruficollis") என்பது முக்குளிப்பான் என்ற பேரினத்தைச் சார்ந்த குட்டைச் சிறகுடைய வாலில்லாத நீர்ப்பறவை ஆகும். இதன் கால்கள் உடலில் பின்னால் தள்ளி இருக்கும். முன் விரல்கள் மூன்றும் தரமாக வளர்ந்திருக்கும். விரல்களின் இரு புறமும் தட்டையான இலை போன்று அகன்ற பாகங்கள் உண்டு. இவையே இது நீந்த உதவுகின்றன, எனவே விரல் இலையின் நடு நரம்பு போல அமைந்துள்ளது, முக்குளிப்பான் குடிபெயராத/புலம்பெயராத சுமார் 23 செ.மீ அளவுடைய ஒரு இந்திய வாத்தாகும். ஊரல், குளிவை, குளுப்பை ஆகியவை இதன் வேறு பெயர்கள். பழுப்பு நிறம் கொண்ட உருண்டு திரண்டிருக்கும் நீர்ப் பறவை இது. இதன் அடிப்பாகம் பட்டுப் போல் இருக்கும். குட்டையான, கூரான அலகு உண்டு. வாலற்ற இந்தப் பறவை ஏரிகளிலும் (வேடந்தாங்கல்) குளங்களிலும் இணையாகவோ கூட்டமாகவோ காணப்படும்.முட்டையிடும் காலத்தில் தலையும் கழுத்தும், அடர்ந்த மாநிறமாக மாறும். வாயின் அடிப்பாகம் மஞ்சள் நிறமாக மாறும். குளம் குட்டை போன்ற நீர்நிலைகளில் வாழும். இந்தியத் துணைக்கண்டம் முழுவதிலும் சமவெளியிலிருந்து 2500 மீ உயரம் வரை காணப்படும். முக்குளிப்பான் நன்றாக நீந்தவல்லது; அடிக்கடி நீரில் மூழ்கி சற்று தூரத்திற்கப்பால் எழுந்திருக்கும். சிறு குட்டைகளில் இரண்டு அல்லது மூன்றாகச் சேர்ந்து காணப்படும். பெரிய குளங்களில் ஐம்பதுக்கும் மேலாகச் சேர்ந்து திரியும். தேர்ந்த மூழ்கி. சிறு அலை கூட எழுப்பாமல் மிகவும் வேகமாக மூழ்கும் திறனுடையது. சிறு துப்பாக்கியால் இதனைச் சுடும்போது தோட்டா இதனைத் தொடும் முன் பறவை நீருக்குள் மூழ்கி மறைந்து விடும். இதனை விரட்டினாலும் தண்ணீரை விட்டு வெளியேறாமல் அங்குமிங்கும் ஓடியும், மூழ்கியும் தப்பவே பார்க்கும். குட்டையான சிறகு இருப்பினும் முக்குளிப்பான் நன்றாகப் பறக்கக்கூடியது.பொதுவாக அதிக இயக்கம் இல்லாது இருந்தாலும் தேவைப்படும் போது அதிக தூரம் பறக்கவல்லது. குளத்தில் நீர் வற்றி விட்டால் வெகு தூரத்திலுள்ள மற்றொரு குளத்திற்கு பறந்து செல்லும். மாலை வேலைகளில் தண்ணீரின் பரப்பில் ஒன்றையொன்று விரட்டிக் கொண்டு 'கிச் கிச்' என்ற ஒலி எழுப்பும். நீர்ப்பூச்சிகள், அவற்றின் நுண்புழுக்கள், தலைப்பிரட்டைகள், தவளைகள், நத்தைகள், சிறுமீன்கள் ஆகியவையே இதன் உணவுகள் ஆகும். மிதக்கும் தாவரங்களுக்கிடையே உள்ள இதன் உணவையும் இது விடாது கொத்தித் திண்ணும். சிறு மீன்களைச் சில சமயங்களில் நீருக்கடியில் விரட்டியும் பிடிக்கும். முக்குளிப்பான் பறவையின் கூடு கசங்கிய புல்லாலும் செடிகளாலும், தண்ணீருக்கடியில் மூழ்கி நிற்கும் செடிகளின் மேல் கட்டப்படும். இப்பறவைகள் மூன்று முதல் ஐந்து முட்டைகள் இடும். இடும்போது வெண்மையாக இருக்கும் முட்டைகள் சில நாட்களில் அழுக்கடைந்தது போல் நிறம் மாறிவிடும். முக்குளிப்பான் இரை தேடவோ வேறு காரணங்களுக்காகவோ கூட்டை விட்டு வெளியே செல்லும்போது அழுக்குப் புற்களால் முட்டைகளை மூடிவிட்டுச் செல்லும் அதனாலேயே இதன் முட்டைகள் நிறம் மாறுகின்றன. இதன் குஞ்சுகள் வரிகளை உடைய உடலைப் பெற்றிருக்கும். அவை தாய்ப்பறவையின் முதுகில் ஏறி சவாரி செய்யும். தாய் அவற்றுடன் நீரில் மிதந்து செல்லும் சூறாவளி ஐலா சூறாவளி ஐலா ("Cyclone Aila") என்பது 2009 ஆம் ஆண்டில் வடக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஏற்பட்ட இரண்டாவது வெப்பவலயச் சூறாவளி ஆகும். இது இந்தியாவின் கொல்கத்தாவின் தெற்கே 950 கிலோமீட்டர்கள் (590 மைல்கள்) தொலைவில் 2009 மே 21 ஆம் நாள் உருவாகியது. அடுத்த இரு நாட்களில் மே 23 இல் அது வெப்பவலயச் சூறாவளியாக உருக்கொண்டது. மே 25 ஆம் நாள் வரை மொத்தம் 212 பேர் உயிரிழந்து ஐநூறிற்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். 650,000 பேர் தமது இருப்பிடங்களை இழந்துள்ளனர். இந்தியாவில் குறைந்தது 82 பேர் கொல்லப்பட்டு. மேலும் பலர் மழை, வெள்ளம் காரணமாக வீடுகளை இழந்துள்ளனர். இந்தியாவின் எல்லைக்கருகிலுள்ள ஹில்னா என்னும் கரையோர மாவட்டமே இச் சூறாவளியினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இங்கிருந்த கிட்டத்தட்ட 50 ஆயிரம் குடிசைகளும் மண் வீடுகளும் கடல்அலையில் அடித்துச் செல்லப்பட்டன. மணித்தியாலத்திற்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய இச் சூறாவளியினால் கொய்ரா மாவட்டத்தில் 20,000 வீடுகள் முற்றாக அழிவடைந்துள்ளன. மாதவ் குமார் நேபாள் மாதவ் குமார் நேபாள் ("Madhav Kumar Nepal", நேபாளம்: माधवकुमार नेपाल, பிறப்பு: மார்ச் 12, 1953) நேபாளத்தின் அரசியல்வாதி. இவர் 2009 மே 25 இல் நேபாளப் பிரதமராகப் பதவியேற்றார். இவர் முன்னர் 15 ஆண்டுகளாக நேபாள கம்யுனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராகப் பணியாற்றினார். பிரதமர் பிரசந்தா, இராணுவத் தளபதியைப் பதவி நீக்கியது தொடர்பாக பிரசந்தாவிற்கும் அதிபர் ராம் பரனிற்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரசந்தா தமது பதவியைத் துறந்ததை அடுத்து மாதவ் குமார் நேபாளத்தின் புதிய பிரதமராக மே 25 2009 இல் பதவியேற்றார். ஒடிசா ஆளுநர்களின் பட்டியல் ஒடிசா ஆளுநர்களின் பட்டியல் ஒடிசா ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் புவனேசுவரத்தில் உள்ள ராஜ்பவன் (ஒடிசா) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது கணேசி லால் என்பவர் ஆளுநராக உள்ளார். மேற்கு வங்காள ஆளுநர்களின் பட்டியல் பஞ்சாப் ஆளுநர்களின் பட்டியல் (இந்தியா) 1985 முதல் பஞ்சாப்பின் ஆளுநர் சண்டிகரின் ஆட்சிப் பொறுப்பாளராக கூடுதல் பொறுப்பு வகித்து வருகின்றார். மகாராஷ்டிரா ஆளுநர்களின் பட்டியல் மகாராஷ்டிரா ஆளுநர்களின் பட்டியல் மகாராஷ்டிரா ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் மும்பையில் உள்ள ராஜ்பவன் (மகாராட்டிரம்) ஆகும். மற்றும் நாக்பூர் புனே, மஹாபலீஸ்வர் ஆகிய நகரங்களிலும் கூடுதல் இருப்பிடம் உள்ளன. இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது சி. வித்தியாசாகர் ராவ் என்பவர் ஆளுநராக உள்ளார். சாம்பல் தலை வானம்பாடி வானம்பாடி ("ashy-crowned sparrow-lark ", "Eremopterix grisea") சுமார் 12 செ.மீ அளவுடைய ஒரு குருவியாகும். இதற்கு மண்ணாம் வானம்பாடி என்றும் நெல் குருவி என்றும் பெயர்களுண்டு. அசாம் ஆளுநர்களின் பட்டியல் அசாம் ஆளுநர்களின் பட்டியல் அசாம் ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் குவகாத்தியில் உள்ள ராஜ்பவன் (அசாம்) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது ஜகதீஷ் முகீ என்பவர் ஆளுநராக உள்ளார். இந்திய விடுதலைக்குப்பின் அசாம் ஆளுநர்கள் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்பட்டனர். அந்தமான் நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர்கள் பட்டியல் ஆசியக் குயில் ஆசியக் குயில் ("Eudynamys scolopacea") இது சுமார் 36-46 செ.மீ அளவு வரை இருக்கும்.. இது காளகண்டம் என்றும் அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் பழங்கள், நெல்லி போன்ற சிறு கனிகள்; சமயங்களில் கம்பளிப்புழுக்களும் பூச்சிகளும். மற்ற பறவைகளைப் போல குயிலுக்கு கூடு கட்டிக் குடும்பம் நடத்தத் தெரியாது. அது இனப் பெருக்கம் செய்ய வேண்டிய நாட்களில் பெரும்பாலும் ஒரு காகத்தின் கூட்டினைத் தேடிச் சென்று அக்கூட்டிலிருந்து ஆண் குயில் ஒரு முட்டையினைத் திருடிச் செல்லும். காகம் ஆண் பறவையினைத் துரத்திச் செல்லும் போது பெண் குயில் காகத்தின் கூட்டில் தன் முட்டையினை இட்டுவிடும். சில சமயம் காகத்தின் கூடு கிடைக்காத போது சிறு பறவைகளின் கூடு கிடைத்தால் அதில் கூட முட்டை இட்டு விடும். குயிலின் முட்டையினையும் சேர்த்து அடைகாத்துப் பின் குஞ்சுகள் வெளி வந்ததும் குயிலின் குஞ்சுக்கும் சேர்த்து இரை கொடுக்கும். நன்கு வளர்ந்த குயிலின் குஞ்சு சில நாட்கள் வளர்ப்புத் தாய் தந்தைகளிடம் இருந்தே உணவு உண்ணும். அப்பொதெல்லாம் குயில் குஞ்சு காகத்தின் குஞ்சுபோலத்தன் கத்தும் கட்டைக் குரலில். கொஞ்சம் கொஞ்சமாக அதன் குரல் தேறி சில நாட்களில் குரலுக்கே இலக்கணமான குயிலின் குரலைப் பெற்று விடும். கசன் கசன் {சமசுகிருதம்|कच}, Kaca) தேவர்களின் குருவான பிரகஸ்பதியின் மகன். கசனைப் பற்றிய விவரம் மகாபாரதம் மச்சபுராணம் மற்றும் அக்னி புரணாங்களில் உள்ளது. அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியிடமிருந்து இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவினி மந்திரத்தை கற்றுக் கொண்டு வர பிரகஸ்பதியால் அனுப்பப்படுகிறான். காரணம் இந்த மந்திரத்தைக் கொண்டு தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடக்கும் போரில் மரிக்கும் தேவர்களை மீண்டும் உயிர் பிழைக்க வைக்கலாம் என்பதே. சுக்கிராச்சாரியாரின் குருகுலத்தில் கசன் சேர்ந்து குருகுலக் கல்வியை தொடங்கினான். அந்நிலையில் சுக்கிராச்சாரியின் மகளான தேவயானி கசன் மீது ஒருதலைக் காதல் கொண்டாள். தங்கள் குலகுரு சுக்கிராச்சாரியாரிடம் கசன் சஞ்சீவினி மந்திரத்தை கற்க வந்ததை அறிந்த அசுரர்கள், கசனை பலமுறை கொல்ல முயன்றனர். ஒவ்வொரு முறையும் தேவயானி தலையிட்டு கசனை அசுரர்களிடமிருந்து சுக்கிராச்சாரியார் மூலம் உயிருடன் மீட்டாள். இறுதியாக அசுரர்கள் கசனை கொன்று எரித்து, கசனின் பிணத்தின் சாம்பலை சோம பானத்தில் கரைத்து அதை தங்கள் குலகுரு சுக்கிராச்சாரியாருக்கு வழங்கினர்கள். அவரும் அதைக் குடித்து மகிழ்ந்தார். பின் அவர் கசன் காணாது தேடினார். தனது ஞானப்பார்வையால் கசன் தன் வயிற்றில் சாம்பலாக உள்ளான் என்ற விஷயம் அறிந்தார். தேவயானியின் வேண்டுதலால் சுக்கிராச்சாரி, கசனை சஞ்சீவினி மந்திரத்தால் உயிர்ப்பித்து, கசனுக்கு சஞ்சீவினி மந்திரத்தையும் சொல்லிக் கொடுத்தார். பின் கசன் சுக்கிராச்சாரியின் வயிற்றை கிழித்து வெளியே வந்து, இறந்த போன சுக்கிராச்சாரியை, அவர் உபதேசித்த சஞ்சீவினி மந்திரத்தால் உயிர்ப்பித்தான். கசனின் குருகுலக் கல்வி முடியும் நிலையில் தேவயானி கசனை அனுகி தன்னை மண்ந்து கொள்ளும்படி வேண்டினாள். தேவயானி தனது குருவின் மகள் என்பதலாலும் மேலும் தான் குருவின் வயிற்றிலிருந்து மீண்டும் வெளிப்பட்டதாலும் தேவயானி தனக்கு சகோதரிமுறை ஆவதால் கசன் தேவயானியை மணக்க மறுத்தான். இதனால் ஆத்திரம் கொண்ட தேவயானி, தனது தந்தையான சுக்கிராச்சாரியிடம் கற்ற சஞ்சீவினி மந்திரத்தை கசன் பயனபடுத்த முடியாதபடி சாபமிட்டாள். அதற்கு கசன், நான் பயன்படுத்தா விட்டாலும் மற்ற தேவர்களுக்கு இம்மந்திரத்தை கற்றுக் கொடுப்பேன் என்று கூறினான். பதிலுக்கு கசன், தேவயானியை நோக்கி உன்னை உன் குலத்தவன் திருமணம் செய்து கொள்ளமாட்டான் எனச் சாபமிட்டான். பின் சுக்கிராச்சாரியாரிடம் விடைபெற்று சஞ்சீவினி மந்திரத்துடன் தேவலோகத்தில் உள்ள பிரகஸ்பதியை அடைந்தான். பின்னாளில் தேவயானி சந்திரகுல மன்னன் யயாதியை மணக்கிறாள். மேகநாத சாஃகா மேகநாத சாஃகா ("Megh Nad Saha", மேக்நாத் சாஹா, வங்காளம்:মেঘনাদ সাহা, தேவநாகரி: मेघनाद साहा, அக்டோபர் 6, 1893 – பெப்ரவரி 16, 1956) இந்திய வானியற்பியலாளர். சாஃகா அயனியாக்க சமன்பாடு என்ற புகழ்பெற்ற சமன்பாட்டைத் தருவித்தவர் இவரே. இந்தச் சமன்பாடு விண்மீன்களின் புறநிலை மற்றும் வேதி இயல்புகளைப் பற்றி அறிய உதவுகிறது. இந்தியாவின் அறிவியல் ஆராய்ச்சித் துறையில் இவர் அமைத்த அடித்தளம் முக்கியமானது. மேகநாத சாஃகா அக்டோபர் 6, 1893 ஆம் ஆண்டு இன்றைய வங்கதேசத்திலுள்ள சியோரடலி எனும் ஊரில் சகன்னாத் சாஃகா என்ற சிறு மளிகை வியாபாரியின் ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். வறுமை காரணமாக சாஃகாவை சிறு வயதிலேயே வேலைக்கு அனுப்ப நினைத்தார் அவர் தந்தை. சாஃகாவின் பள்ளி ஆசிரியர்கள் அவரைத் தடுத்து சாஃகாவை பள்ளியில் தொடரச் செய்தனர். புகழ்பெற்ற இயற்பியலாளராக அறியப்பட்டாலும் சாஃகா தீவிர சமுதாய நல நோக்குடைய சமூக ஆர்வலராகவே சிறு வயது முதல் இருந்துள்ளார். 1905 ஆம் ஆண்டு வங்கத்தை கிழக்கு, மேற்கு என இரண்டாகப் பிரித்தது ஆங்கில அரசு. மக்கள் வெகுண்டெழுந்தனர். சாகாவுக்கு வயது பன்னிரண்டு. தன்னால் போராட்டங்களில் கலந்து கொள்ள இயலவில்லையே என்று வருந்தினார் சாஃகா. வங்கத்தின் கவர்னர் பள்ளிக்கு வந்த அன்று தன் நண்பர்களை அழைத்துப்பேசி, வகுப்புகளைப் புறக்கணித்தார் சாகா. பள்ளி நிருவாகம் இச்செயலை வன்மையாக கண்டித்தது. சாகாவுக்கு அளிக்கப்பட்டு வந்த உதவித்தொகை நிறுத்தப்பட்டது. வேறு வழியின்றி சிறிய பள்ளி ஒன்றுக்கு மாற்றப்பட்டார் சாகா. இருப்பினும் மனந்தளராத சாகா, பள்ளி இறுதித்தேர்வில் முதல் மாணவராகத் திகழ்ந்தார். உதவித்தொகையை மீண்டும் பெற்று பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். பிரசிடென்சி கல்லூரியில் சாஃகா வுடன் சத்தியேந்திர நாத் போசு மற்றும் மகலனோபிசு ஆகியோர் இணைந்தனர்; இவர்களும் பின்னாளில் முக்கியமான இயற்பியலாளர்களாக வளர்ந்தெழுந்தனர். கல்லூரியில் பிரபுல்ல சந்திர ரே, சகதீசு சந்திர போசு ஆகிய மகத்தான இயற்பியலாளர்கள் சாஃகாவின் ஆசிரியர்களாக இருந்தனர். இயற்பியல் முதுகலைப் பட்டப்படிப்பில் பல்கலையிலேயே இரண்டாவதாக வந்த சாஃகா (முதலிடம் சத்தியேந்திர நாத் போசுக்கு!) இந்திய நிதிப்பணியில் சேர்ந்து வறுமையிலிருக்கும் தன் குடும்பத்தைக் கரையேற்ற நினைத்தார். ஆனால் அவர் பள்ளியில் செய்த வகுப்புப் புறக்கணிப்பு, சுபாசு சந்திர போசு, இராசேந்திர பிரசாத் ஆகிய விடுதலை வீரர்களுடனான தொடர்பு ஆகிய காரணங்களால் அவருக்கு I.F.S. வேலை நிராகரிக்கப்பட்டது. அதுவே இயற்பியலுக்கு நன்மை ஆகிப்போனது -- அவரது முதல் காதலான இயற்பியலின் பக்கம் சாஃகாவின் நாட்டம் சென்றது. ஆன்சு கிறிட்டியன் கிராம் ஆன்சு கிறிட்டியன் யோக்கிம் கிராம் ("Hans Christian Joachim Gram", செப்டம்பர் 13, 1853 - நவம்பர் 14, 1938) டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பாக்டீரியாவியல் (நுண்ணுயிரியியல்) வல்லுநர். இவரின் தந்தையார் பெடரிக் டெர்க்கெல் யூலியசு கிராம் என்னும் சட்டவியல் பேராசிரியர், தாயார் லூயிசு கிறிட்டியன் ரூலுண்டு. ஆன்சு கிறிட்டியன் கிராம், கோப்பனேகன் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் (நிலைத்திணையியல்) படித்தார். உயிரியலாளர் யபேட்டசு இசுட்டீன்சுட்ரப் (Japetus Steenstrup) என்பாரின் தாவரவியல் உதவியாளரரக இருந்தார். தாவரவியல் அறிமுகத்தால், மருந்தியல், நுண்ணோக்கியின் பயன்பாடு ஆகியவற்றைப் பற்றி அறிந்தார் இவர் 1878 இல் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து 1883 இல் பட்டம் பெற்றார். 1878 முதல் 1885 வரை ஐரோப்பாவில் பல இடங்களுக்குச் செலவு (பயணம்) செய்தார். 1884 இல் பெர்லினில் இருந்தபொழுது பாக்டீரியாக்களில் உள்ள இரு பெரும் வகைகளைப் பிரித்தறிய ஒரு புது முறையைக் கண்டுபிடித்தார். இன்னுட்பத்திற்கு கிராம் நிறச்சாயம் முறை என்று பெயர். அதாவது ஒருசில வகையான பாக்டீரியாக்கள் அவற்றின் செல் அல்லது உயிரணுவின் சுவரில் உள்ள பொருளால் குறிப்பிட்ட நிறச்சாயம் ஏற்றும் பொழுது நீலம் சார்ந்த நிறம் அடைகின்றது. மற்ற வகை பாக்டீரியாக்களில் இவ்வகை நிறம் தங்குவதில்லை. ஆகவே நீல நிறம் ஏற்கும் பாக்டீரியாக்கள் "நேர்வகை கிராம்" (கிராம் பாசிட்டிவ்)பாக்டீரியாக்கள் என்றும், நீல நிறம் ஏற்காமல் இளஞ்சிவப்பு நிறம் காட்டும் பாக்டீரியாக்களை "எதிர்வகை கிராம்" (கிராம் நெகட்டிவ்) பாக்டீரியாக்கள் என்றும் கூறுவர். இந்நுட்பம் இன்றளவும் மருத்துவத் துறை பாக்டீரியாவியலில் சீர்வழக்கமான முறையாக பயன்பாட்டில் உள்ளது. 1891 இல் கிராம் கோப்பனேகன் பல்கலைக்கழகத்தில் மருந்தியலில் விரிவுரையாளராக இருந்து பின்னர் அவ்வாண்டில் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார். 1900 இல் மருந்தியல் தன் பேராசிரியர் பதவியைத் துறந்து மருத்துவப் பேராசிரியரானார். மருத்துவப் பேராசிரியராக ஆன பின்பு மருத்துவ நோய்நாடும் கலைகள் பற்றி நான்கு தொகுதிகள் கொண்ட புத்தகத்தை வெளியிட்டார். இவை டென்மார்க்கில் பரவலாகப் பயன்பட்டன. இவர் 1923 இல் ஓய்வு பெற்றார். ) மாநிலங்களவை உறுப்பினர்கள் (தமிழ்நாடு) மாநிலங்களவை உறுப்பினர்கள் (தமிழ்நாடு) மாநிலங்களவை (அ) ராஜ்யசபை (மாநிலங்களின் மன்றம்) இந்திய நாடாளுமன்றத்தின் மேலவை ஆகும். தமிழ்நாடு சார்பில் இம்மன்றத்தில் பங்குபெற 18 உறுப்பினர்கள் மறைமுகத் தேர்தலின் மூலம் சட்டமன்ற உறப்பினர்களால் தேர்வு பெற்று பங்குபெறுகின்றனர். இதற்கான இருக்கைகள் (தொகுதிகள்) ஒதுக்கப்படுவது அந்தந்த கட்சிகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கையின்படி பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளரை களத்தில் நிறுத்துகின்றனர். தேர்தல் அந்த மாநிலத்தின் சட்டமன்ற எல்லைக்குள் ஒரு முறை மாற்றத்தக்க வாக்களிப்பு முறையில் சரிசம பிரதிநித்துவத்தின்படி வாக்களித்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஆதாரம்: இந்திய நாடாளுமன்றம் (மாநிலங்களவை) ஆதாரம்: இந்திய அரசு (மாநிலங்களவை) இணையத்தளம் ஆங்கில முன்னிடைச் சொல் முன்விபக்தி(Preposition) எனப்படுவது ஒரு சொற்றொடரில் எழுவய்க்கும் மற்றொரு சொல்லுக்கும் இடையில் வந்து அச்சொற்களின் தொடர்பை விளக்கும் வார்த்தைகள். பொதுவாக அவைகள் பயனிலைக்கு முன்னே எழுதப்படுகின்றன. கிழே சில ஆங்கில முன்விபக்தி சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. He sat on a wall.(அவன் ஒரு சுவர் மீது அமர்ந்தான்.) He is standing in front of me.(அவன் என் முன்னே நிற்கிறான்.) I live with my parents.(நான் என் பெற்றோருடன் வசிக்கிறேன்.) முன்னிடைச் சொல் முன்விபக்தி(Preposition) எனப்படுவது ஒரு சொற்றொடரில் எழுவாய்க்கும் மற்றொரு சொல்லுக்கும் இடையில் வந்து அச்சொற்களின் தொடர்பை விளக்கும் வார்த்தைகள். பொதுவாக அவைகள் பயனிலைக்கு முன்னே எழுதப்படுகின்றன. (எ-டு) மேலே, கீழே, முன்னே, பின்னே. இடைச்சொல் வேற்றுமை விபக்தி(Adposition) எனப்படுவது, ஒரு சொற்றொடரில் அமைந்து அந்த சொற்றொடரின் சுற்றுப்புரத்திர்கேற்ப பொருள் விளங்கச்செய்யும் ஒரு சொல். விபக்தி மூன்று வகைப்படும். அவை, பின்னிடைச் சொல் பின்விபக்தி(Postposition) என்பது, தமிழில் இடைச்சொல்லின் கீழ் வரும் ஆனால், மற்றும், எனினும் போன்ற சில சொற்களைக் குறிக்கும். அவை பொதுவாக பயனிலையை தொடர்ந்தே வரும். வியப்பிடைச்சொல் வியப்பிடைச்சொல்(Interjection) எனப்படுவது பொதுவாக தமிழில் விளி வேற்றுமையின் கீழுள்ள சொற்களைக் குறிக்கும். அதுமட்டுமின்றி, Hi!, Hello!, Good morning! போன்ற வாழ்த்துவதற்கு பயன்படும் சில வார்த்தைகளும் இதன் கீழ் வரும். சொற்களின் வகை சொற்களின் வகை என்பது ஒரு சொற்றொடரில் வரும் சொற்களை வகைப்படுத்துவதாகும். தமிழில் சொற்களின் வகை நான்கு வகைப்படும். அவை, ஆங்கிலத்திலும், பிரெஞ்சு மொழியிலும் சொற்களின் வகை எட்டு ஆகும். அவை, குறிப்பெயர் (ஆங்கிலம்) ஆங்கில இலக்கணத்தில் பெயர்களைக் குறிப்பிட்டுக் காட்டும் சொற்கள் உண்டு. அவற்றைத் தமிழில் குறிப்பெயர் எனலாம். இந்தக் குறியீட்டு மொழியியல் நெறி பிறமொழிகளிலும் உண்டு. ஆங்கித்தில் இதனை language Article அல்லது Grammar Article என்பர். ஒரு, ஓர், சில, பல, எல்லாம், இல்லாமை, முழுமை போன்ற சொற்கூறுகளைக் கொண்டு பெயரைக் குறிப்பிட்டுக் காட்டுவர். அந்த இந்த, உந்த என வரும் சொற்களைத் தமிழ் சுட்டெழுத்துச் சொல் எனக் குறிப்பிடுகிறது. அதுபோல எந்த, யார் என்னும் சொற்களையும் வினா-எழுத்துச் சொல் எனக் குறிப்பிடுகிறது. குறிப்பெயர்கள் பெயர்ச்சொல்லுடன் ஒன்றி அதை மேலும் தெளிவாக விவரிக்கும் ஒரு சொல். அது சில நேரங்களில் பெயர்ச்சொல்லின் எண்ணையும் கொள்ளளவையும் கூட உணர்த்திவரும். எ-கா: "the", "a", "an", "some" போன்றவை. குறிப்பிடும் பெயரின் உறுதித் தன்மை அல்லது இன்மையை உணர்த்தும் வழக்கம் உண்டு. பிற இடங்களில் சூழற்பொருள் கொண்டு புரிந்து கொள்ளப்படும் என்பர். ஆங்கிலத்தில் குறிப்பெயர்களை நான்கு வகையாக்கிக் காட்டுவர். ஆ. ராசா ஆ. ராசா ("Andimuthu Raja", பிறப்பு: 10 மே 1963) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பெரம்பலூர் மாவட்டம், வேலூர் கிராமத்தில் பிறந்தார். 15 ஆவது இந்திய மக்களவையின் முன்னாள் உறுப்பினர். நீலகிரி மக்களவைத் தொகுதியில் இருந்து தி.மு.க சார்பில் போட்டியிட்டவர் ஆவார். இறுதியாக 15 ஆவது மக்களவை அமைச்சரவையில் தகவல் மற்றும் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக 16 நவம்பர், 2010 வரை பொறுப்பு வகித்தார். மக்களவைக்கு நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார். 14 ஆவது மக்களவை அமைச்சரவையில் தகவல் தொலைத்தொடர்பு அமைச்சராக அங்கம் வகித்த இவர் 17 அக்டோபர், 2008 அன்று பின்தேதியிட்ட அமைச்சரவை பொறுப்பு விலகல் கடிதத்தை திராவிட முன்னைற்றக் கழகத் தலைவர் திரு. மு. கருணாநிதியிடம் இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவதை இந்திய அரசாங்கம் தடுத்து நிறுத்தக் கோரி சமர்ப்பித்தார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அங்கம் வகித்த திமுக அமைச்சர்கள் அனைவரும் இலங்கைத் தமிழரின் படுகொலையைக் கண்டித்து பொறுப்பு விலகல் கடிதம் கொடுத்தவர்களில் இவரும் ஒருவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைசெயல்திட்டக்குழுவில் உறுப்பினராக உள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப்பரப்புச் செயலாளராகவும் உள்ளார். 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளிவந்த நடுவண் தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் "2 ஆம் தலைமுறை அலைவரிசை" ஓதுக்கீடு செய்ததில் பிரதமர், சட்ட அமைச்சகம், நிதி அமைச்சகம் ஆகியவற்றின் அறிவுரைகள் மீறப்பட்டுள்ளன என்றும் பகிரங்கமாக ஏலம் விடாததால் நடுவண் அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இத்தகைய மிகப்பெரும் முறைகேடு வெளியான பின்னும் இவருக்கு தி.மு.கவின் தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதியின் ஆதரவு பெருமளவு உள்ளது, இதனால் அமைச்சர் பதவியில் இருந்து விலக மறுத்தார். இந்த அறிக்கையை ஆ. ராசா மறுத்தாலும், எதிர்க்கட்சிகளின் தீவிர முயற்சியால் இவர் அமைச்சர் பதவியில் இருந்து விலக நேரிட்டது சிபிஐ விசாரணைக்குப் பின் 2011, பெப்ரவரி 2, அன்று சிபிஐ இவரைக் கைது செய்தது இந்த வழக்கானது உச்சநீதி மன்ற மேற்பார்வையில் டெல்லியில் உள்ள நடுவண் புலனாய்வு செயலகத்தின் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி விசாரித்து வந்தார். இந்த வழக்கின் தீர்ப்பானது திசம்பர் 21, 2017 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டதால் கனிமொழி, ஆ. ராசா உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி ஓ.பி.சைனி தீர்ப்பு கூறினார். வருமானத்துக்கு பொருந்தாத வகையில் ரூ. 27.92 கோடி அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக ஆ. ராசா மீது சிபிஐ 20 ஆகஸ்டு 2015 அன்று தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்ற வழக்கு பதிவு செய்துள்ளது. சேலம் ராசகணபதி கோயில் சேலம் அருள்மிகு ராசகணபதி திருக்கோயில் சேலம் மாநகராட்சியின் நடுப்பகுதியில் அமைத்துள்ள ஒரு சிறிய கோயில். மிகவும் புகழ் பெற்றது. இதன் மூலவர் அருள்மிகு ராஜகணபதி எனும் பெயர் கொண்டுள்ளார். ராஜகணபதி கோயில், சேலத்தின் முக்கியமான பகுதியான கடைவீதியில் அமைந்துள்ளது. ஆகவே எப்போதும் ராஜகணபதியை தரிசனம் செய்ய மக்கள் கூட்டம் இருக்கும். சேலத்தின் இரு பழம் பெருமை வாய்ந்த கோவில்களின் திருத்தேர்கள் இங்கு நிலை கொண்டுள்ளன. ஆகவே இப்பகுதிக்கு, தேர் முட்டி என்ற பெயரும் உண்டு. சேலம் சுகவனேசுவர் கோயில் சேலம் அருள்மிகு சுகவனேஸ்வர் திருக்கோயில் சேலம்மாவட்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. சுகவன முனிவர் கிளியின் உருவத்தில் இங்கு உள்ள மூர்த்தியை வழிபட்டதால் இக்கோயிலின் இறைவன் சுகவனேசுவர பெருமான் என அழைக்கப்படுகிறார். மேலும் இந்த கோவில் நான்கு யுகங்களாக உள்ளது. இங்குள்ள முருகனை அருணகிரிநாதர் பாடியுள்ளார். அம்பிகையின் பெயர் சொர்ணாம்பிகை. இக்கோயில் குடி கொண்டிருக்கும் தாயார் சொர்ணாம்பிகை ஆவார். இக்கோயிலில் கணபதிக்கு ஸ்ரீ மதவடி விநாயகர், ஸ்ரீ வலம்புரி விநாயகர், ஸ்ரீ சுகவன கணபதி, ஸ்ரீக்ஷிப்த கணபதி,ஸ்ரீ ந்ருத கணபதி, ஸ்ரீ விகடசக்ர கணபதி என பல கணபதி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு கணபதிக்கும் தனிச் சிறப்பு. முருகனுக்கு தனிச்சன்னதி உள்ளது. அறுபடை வீடுகளில் உள்ள அனைத்து முருகப்பெருமான் அவதாரங்களும் சிற்பமாய் செதுக்கப்பட்டுள்ளது. இக்கோயில் தீர்த்தம் அமண்டுக தீர்த்தம் என்று அழைக்கப்படுகின்றது. இடாய்ச்சு முன்னிடைச் சொல் இடாய்ச்சு மொழியில் வழங்கப்பெற்று வரும் சில முன்விபக்திகள்(Prepositions). கீழ்காணும் பட்டியலில் இடாய்ச்சு மொழியிலுள்ள சில முன்விபக்திகளும் அதற்கு இணையான தமிழ் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன. சில முன்விபக்திகள் பெயர்ச்சொற்குறிகளுடன் சேர்ந்து சுருக்கப்பெருவதுண்டு. அவற்றுள் சிலவற்றை காண்போம். an + das = ans in + das = ins auf + das = aufs um + das = ums durch + das = durchs für + das = fürs gegen + das = gegens hinter + das = hinters neben + das = nebens über + das = übers unter + das = unters vor + das = vors an + dem = am bei + dem = beim in + dem = im von + dem = vom zu + dem = zum zu + der = zur 20 கேள்விகள் 20 கேள்விகள் என்பது ஒரு எளிய பேச்சு விளையாட்டு. ஒருவரை ஒரு பொருளைப் பற்றி சிந்திக்க சொல்லி, அது என்ன என்று 20 ஆம்-இல்லை என்ற பதில்களை மட்டும் கொண்ட கேள்விகளைக் கொண்டு கண்டுபிடிப்பதே இந்த விளையாட்டு ஆகும். இந்த அடிப்படையைக் கொண்டு பல விளையாட்டுக்கள் உண்டு. தமிழில் பேசுதல் (விளையாட்டு) தமிழில் பேசுதல் என்பது ஒரு மொழி விளையாட்டு ஆகும். பிற மொழிகளைக் கலக்காமல், வேகமாக தமிழில் உரையாடுவதே இந்த விளையாட்டின் அடிப்படை. சில இடங்களில் ஆம், இல்லை என்று கூற முடியாது, ஒரே பதிலை அல்லது சொல்லை மூன்று முறை பயன்படுத்த முடியாது போன்ற விதிகளும் இருக்கும். ஒருவர் கேள்வி கேப்பவராகவும், மற்றவர் பதில் கூறுபவராகவும் இந்த விளையாட்டு அமையும். பதிலளிப்பவர் விதிகளுக்கு கட்டுப்பட்டு 3 நிமிடங்கள், அல்லது அதற்கு மேல் உரையாடினால் அவர் வெற்றி பெற்றவராக கருதப்படுவார். கோலி கோலி அல்ல போளை எனப்படுவது ஒருவகை கண்ணாடியால் ஆக்கப்பட்ட சிறிய வர்ணம் பூசப்பட்ட பந்து. பொதுவாக இவை 1.25 அல்லது 0.635 விட்டத்தைக் கொண்டிருக்கும். இவை சிறுவர்களால் பல்வேறு விளையாட்டுக்களில் பயன்படுத்தப்படுகின்றன. கோலிக்குண்டு தமிழக நாட்டுப்புற விளையாட்டுகளில் ஒன்று. இதனைச் சிறுவர்கள் மட்டுமே விளையாடுவர். குழி போட்டும், கோடு போட்டும் இருவேறு வகைகளில் அரங்கு அமைக்கப்படும். குழி குதிக்காலால் திருகிக் குண்டு தங்கும் ஆழத்துக்கு அமைக்கப்படும். உருண்டையான கூழாங்கற்களையும், செங்கலை உடைத்து, உரைத்துச் செய்த கூழாங்கற்களையும் கோலிக்குண்டாகப் பயன்படுத்துவர். வண்ண வண்ணக் கண்ணாடிக் குண்டுகள் விற்பனைக்கு வந்த பிறகு அதனையும் பயன்படுத்தலாயினர். கட்டை-விரலை நிலத்தில் ஊன்றி, நடுவிரல் விசையால், மற்றொரு கை பிடித்திருக்கும் கோலிக்குண்டை அடிக்கும் முறையைப் படத்தில் காணலாம். 100 மீ ஓட்டம் திறந்தவெளி தடகளப் போட்டிகளில் மிகக்குறைந்த தொலைவுக்கான விரைவோட்டம் 100மீ ஓட்டமாகும். தடகளப்போட்டிகளில் மிகவும் மதிப்புமிக்க போட்டியாக அனைவராலும் கருதப்படுகிறது. ஆண்கள் பிரிவில் 200மீ ஓட்டத்தின் உலக சாதனையின் சராசரி வேகத்தைவிட பெரும்பாலும் குறைவாக இருந்தாலும் 100மீ ஓட்டத்தில் வெற்றி பெற்றவரே உலகத்தின் வேகமான ஆண்/பெண் என்று புகழப்படுகிறார். "12 செப்டம்பர் 2013 அன்று இற்றைப்படுத்தப்பட்டது" "12 செப்டம்பர் 2013 அன்று இற்றைப்படுத்தப்பட்டது." பெயர்ச்சொற்குறி (ஆங்கில இலக்கணம்) பெயர்ச்சொற்குறி என்பது, ஒரு பெயர்ச்சொல்லுடன் ஒன்றி வந்து, அதை சார்ந்த பெயர்ச்சொல்லைக் குறித்து எண், அளவு, குறிப்பு போன்ற சற்று பயனுள்ள விபரங்களை உணர்த்தும். ஆங்கிலப் பெயர்ச்சொற்குறி ("article") என்பது, ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் பெயர்ச்சொற்குறிகளை குறிக்கும். ஆங்கிலத்தில் இரண்டு வகையான பெயர்ச்சொற்குறிகள் உண்டு. அவை, நிச்சய பெயர்ச்சொற்குறி ("definite article") என்பது, முன்பே அறியப்பட்ட ஒரு பொருளையோ அல்லது அறியப்படாத ஒரு பொருளை குறிப்பிட்டு சொல்லவுமே பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலத்தில், "The" என்னும் ஒரே ஒரு நிச்சய பெயர்ச்சொற்குறி தான் உள்ளது. நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறி ("definite article") என்பது, எந்த ஒரு பொருளையும் குறிப்பிடாமல், பொதுவாக சொல்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலத்தில், "A", "An" என இரண்டு நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறிகள் உண்டு. "A" என்னும் நிச்சயமற்ற பெயச்சொற்குறி மெய்யெழுத்தில் ஆரம்பிக்கும் ஒரு வார்த்தைக்கு முன்னும், "An" என்னும் நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறி உயிரெழுத்தில் ஆரம்பிக்கும் ஒரு வார்த்தைக்கு முன்னும் உபயோகபடுத்தப்படுகின்றன. ஓமி பாபா ஓமி யெகாங்கிர் பாபா ("Homi Jehangir Bhabha", , அக்டோபர் 30, 1909 – சனவரி 24, 1966), பார்சி சமூகத் இந்திய அணு ஆற்றல் திட்டத்தில் முக்கிய பங்களித்த ஒரு அணுக்கரு இயற்பியலாளர். இவர் இந்திய அணுக்கருவியலின் தந்தை என்றும் அழைக்கப்பட்டார். இவர் பார்சி சமூகத்தினர் ஆவார். 1909 அக்டோபர் 30 அன்று மும்பையைச் சேர்ந்த வசதியான பார்சி குடும்பத்தில் பிறந்தார். சிறு வயதிலேயே அவர் வீட்டு நூலகத்திருந்த அனைத்து அறிவியல் புத்தகங்களையும் படித்து முடித்தார். பாபாவின் தந்தை அவரை ஒரு பொறியாளராக ஆக்க வேண்டும் என்று முனைந்து அவரை இங்கிலாந்திற்கு அனுப்பினார். தந்தையின் விருப்பத்திற்கு இணங்க பொறியியல் படிப்பில் சேர 1927-ல் கேம்பிரிட்ஜ் புறப்பட்டார்.1930-ல் பாபா எந்திரவியல் படிப்பில் முதல் வகுப்பில் தேறியதையொட்டி, கோட்பாட்டு இயற்பியல் துறையில் ஆராய்ச்சிப் பிரிவு மாணவராகச் சேர்ந்தார்.அவர் என்ரிகோ ஃபெருமி, வூல்வுகாங் பவுலி ஆகிய தலைசிறந்த இயற்பியலாளர்களுடன் பணியாற்றினார். 1933-ல் “காமா கதிர்களை உட்கிரகிப்பதில் எலெக்ட்ரான் பொழிவுகளின் பங்கு” பற்றி அவர் சமர்ப்பித்த அறிவியல் கட்டுரைக்கு ஐசக் நியூட்டன் படிப்புதவி கிடைத்தது. 1934-ல் டாக்டர் பட்டம் பெற்றார்.1937ஆம் ஆண்டு ஓமியும் ஹைட்லர் என்ற செருமானிய இயற்பியலாளரும் இணைந்து செய்த அண்டக்கதிர்-பற்றிய ஆராய்ச்சி அவர்களுக்கு உலகப்புகழைத் தந்தது.அத்தோடு நில்லாமல், மேலும் செய்த ஆய்வுகளால் மீசான் எனப்படும் அடிப்படைத் துகள் ஒன்று அண்டக்கதிர்களில் இருந்ததைக் கண்டறிந்தார். ஐன்ஸ்டைனின் சார்பியல் தத்துவத்திற்கான ஆய்வுச்சான்றையும் மீசானின் இயக்கத்தை ஆய்வு செய்ததன் மூலம் காட்டினார். இந்த மீசான் ஆய்வுச்சான்று மிகவும் புகழ் வாய்ந்தது. 1966ஆம் ஆண்டு ஜனவரி 24 அன்று ஒரு சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்று கொண்டிருந்தபோது அவர் பயணித்த விமானம் விழுந்து நொறுங்கியதில் 56 வயதே ஆன பாபா அகால மரணமடைந்தார். மீரா குமார் மீரா குமார் (பிறப்பு;மார்ச் 31, 1945) இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினரும் ஆவார். மீரா குமாரின் தந்தை முன்னாள் துணைப் பிரதமரும் தலித் மக்களின் தலைவருமான ஜெகசீவன்ராம் ஆவார். இவருடைய தாயார் இந்திய விடுதலைப் போராட்ட வீரரான இந்திராணி தேவி ஆவார். இவரின் கணவர் மஞ்சுல் குமார் உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணிபுரிபவர். இவர்களுக்கு அன்சூல், சுவாதி மற்றும் தேவங்னா ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். அனைவரும் திருமணம் ஆனவர்கள். இவர் பீகாரில் உள்ள சசார் தொகுதியில் இருந்து இந்திய மக்களவைக்கு 2009 மே மாதம் நடைபெற்றத் தேர்தலின் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009 - 2014 காலகட்டத்தில் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைத் தலைவராக பொறுப்பு வகித்தார். இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைத் தலைவராக பொறுப்பு வகித்த முதல் (தலித்) பெண் இவராவார். 2014ஆம் ஆண்டு பிஹாரின் சாசாராம் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, பா.ஜ.காவின் சேகடி பஸ்வானிடம் தோற்றார். 2017 ஆம் ஆண்டில் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (இந்தியா) வின் சார்பில் போட்டியிட்டுத் தோற்றார் முகம்மது அமீத் அன்சாரி முகம்மது அமீத் அன்சாரி (பிறப்பு: ஏப்ரல் 1, 1934) இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராக 11 ஆகத்து 2007 முதல் 11 ஆகத்து 2017 வரை இருந்தார். தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் முன்னாள் கூட்டக்குழுத் தலைவராக பணிபுரிந்தவர். அரசியல் நிபுணராகவும், கலைக்கழக உறுப்பினராக அலிகார் இசுலாமியப் பல்கலைக்கழத்தில்ர முன்னாளில் பொறுப்புவகித்த அனுபவமும் கொண்டவர். இந்தியாவின் 12 குடியரசுத் துணைத் தலைவராக ஆகஸ்டு 11 ஆகஸ்டு, 2007 அன்று தேர்ந்தெடுக்கப்பெற்ற அன்சாரி 7 ஆகஸ்டு, 2012 இல் மீண்டும் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு அப்பொறுப்பில் நீடித்தார். ஈரவை முறைமை ஈரவை (Bicameralism) இருமன்றங்களை அல்லது இரு அவைகளை கொண்ட நாடு. ஒரு நாடு தனது அரசின் சட்டங்களை இயற்ற அல்லது நிறைவேற்ற அந்நாட்டின் நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றம் ஆகியவற்றில் கீழவை மற்றும் மேலவை என்ற இரு தனித்தனி மன்றங்களை கொண்டு செயல்படுமாயின் அந்நாட்டின் நாடாளுமன்றம் ஈரவைகள் கொண்ட நாடாளுமன்ற அரசாக கூறப்படும். கீழவை கீழவை ("lower house") என்பது ஈரவை சட்டவாக்க அவைகளைக் கொண்ட ஒரு நாட்டின் ஓர் அவையைக் குறிக்கும். மற்றையது மேலவை அல்லது செனட் சபை எனப்படும். அதிகாரபூர்வமாக இது மேலவையின் "கீழே" அமைந்திருந்தாலும், பெரும்பாலான நாடுகளில் கீழவைகளே அதிக செல்வாக்கு மிகுந்த சட்டவாக்க அவையாக செயல்படுகின்றன. ஓரவை மட்டுமே கொண்ட சட்டவாக்க அவை ஓரவை முறைமை கொண்ட நாடு எனப்படுகிறது. பெரும்பாலான கீழவைகள் நாடாளுமன்ற அவை, பிரதிநிதிகள் அவை, அல்லது பொது அவை என அழைக்கப்படுகின்றன. சில நாடுகளில் கீழவைகள் தனித்துவமான பெயர்களால் அழைக்கப்படுகின்றன: மேலவை மேலவை (Upper house) ஈரவை அல்லது இரு மன்றங்கள் கொண்ட நாட்டின் நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றங்களில் இரண்டாவது அவையாகும். சட்டங்கள் அல்லது நிறைவேற்றல்கள் இரு அவைகளாலும் மேற்கொள்ளப்படுகின்றன. ஈரவைகளைக் கொண்ட நாடுகளில் ஒன்று கீழவை மற்றது மேலவை. மேலவை, கீழவையிலும் வேறுபட்டது. இவ்வேறுபாடுகள் பின்வரும் வகைகளில் அமையக்கூடும்: அதிகாரம்: ஒகாடன் வேலமரம் ஒகாடன் வேலமரம் (அறிவியற் பெயர்: "அக்கேசியா ஃவுமோசா", "Acacia fumosa") கிழக்கு ஆப்பிரிக்காவில் எத்தியோப்பியா நாட்டின் கிழக்கு எல்லைப்பகுதியிலும் [சோமாலியா]] நாட்டுக்கு மேற்கேயும் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள ஒகாடன் என்னும் இடத்தில் பரவலாகக் காணப்படும் ஒருவகையான வேலமரம். இம்மரத்தின் பூக்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் நீண்ட கொத்தாக உள்ளன. இம்மரத்தைப் பற்றி அறிவியல் உலகம் மிக அண்மைக் காலம் வரை ஏதும் அறியாது இருந்தது. இம் மரத்தை சுவிட்சர்லாந்ததைச் சேர்ந்த தாவரவியலாளர் மாட்ஃசு தூலின் (Mats Thulin) என்பார் மே 2006, பிப்ரவரி 2007 ஆகிய காலப்பகுதியில் ஆய்வு செய்தபொழுது கண்டுபிடித்து நோர்டிக் தாவரவியல் ஆய்விதழில் 2008 இல் ஆய்வுக்கட்டுரையாக வெளியிட்டார். இதனை சயன்சு (Sceince) என்னும் அறிவியல் ஆய்விதழ் முதன் முறையாக தன் ஏப்ரல் 24, 2009 பதிப்பித்தது . ஏறத்தாழ 8000 சதுர கிலோமீட்டர் பரப்பில் மிகப் பரவலாக வளரும் ஒரு பொது மரம் அறிவியலில் விளக்கப்படாது இருந்தது வியப்பானது என்று அறிவியலர் கருதுகிறார்கள். இப்பகுதியில் மக்களிடையே சண்டைகள் அவ்வப்பொழுது நடக்கின்றன என்பதையும் குறிக்கிறார்கள். இம்மரம் ஏறத்தாழ 6 மீட்டர் உயரம் வளர்கின்றது, இம்மரத்தின் இளஞ்சிவப்பு நிறப் பூக்கள் டுக்காக நீண்ட ஓர் அச்சில் உருளை வடிவில் அமைந்துள்ளன. குடை வேலமரம் போல் தலைப்பகுதி விரிந்து உள்ளது. இம்மரம் சமூக புத்தாக்கம் சமூக புத்தாக்கம் என்பது சமூக தேவைகளைக் குறித்த சிந்தனைகள், கருத்துருக்கள், முலோபாயங்கள், தொழில்நுட்பங்கள், கட்டமைப்புகள் தொடர்பான புத்தாங்களைக் குறிக்கிறது. அடிப்படைத் தேவைகள் (உணவு, நீர், உறையுள்), கல்வி, மருத்துவம், பொருளாதார வளர்ச்சி, மனித உரிமைகள் என பல தரப்பட்ட முனைகளில் சமூக புத்தாக்கங்கள் நிகழலாம். இச் சொல் புத்தாக்க செயலாக்கத்தின் சமூக பண்பை விளக்கவும் பயன்படுத்தப்படுவதுண்டு. கிராமக் கோயில்கள் கிராமக் கோயில்களில் பல காவல் தெய்வங்களாகவே இருக்கின்றன. இந்த காவல் தெய்வங்களுக்கு மது, சுருட்டு போன்ற போதைப் பொருட்கள் படையலாக வைத்து வணங்குகின்றனர். இக்கோயில்களில் ஆடு, கோழி போன்ற உயிரினங்களைப் பலியிட்டு அதை அசைவ உணவுகளாக்கி அந்த உணவையும் சேர்த்துப் படைத்து வணங்குகின்றனர். வரலாற்றுப் பூர்வமான பெருங்கோயில்களில் இருக்கும் வழக்கம் கிராமக் கோயில்களில் இருப்பது இல்லை. இந்தக் கிராமக் கோயில்களில் அந்த கோவிலை அமைத்தவர்களில் ஒருவரே பூசாரிகளாகவும் இருந்து வருகிறார்கள். மில்வினா டீன் மில்வினா டீன் ("Millvina Dean", பெப்ரவரி 2, 1912 - மே 31, 2009) என்பவர் 1915, ஏப்ரல் 15 ஆம் நாளில் அத்திலாந்திக் பெருங்கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் பயணம் செய்தவர்களில் உயிருடன் இருந்த கடைசி பயணியாவார். அத்துடன் இரண்டு மாதக் குழந்தையாக இக்கப்பலில் பயணித்த வயதில் குறைந்த பயணியும் இவராவார். மில்வினா டீன் இலண்டனில் பிறந்தவர். டீனின் பெற்றோர் இங்கிலாந்தை விட்டு ஐக்கிய அமெரிக்காவின் கான்சசில் குடியேறத் தீர்மானித்து குடும்பத்துடன் புறப்பட்டனர். முதலில் வேறொரு கப்பலில் பயணத்தை ஆரம்பித்த டீன் குடும்பம் நிலக்கரித் தொழிலாளர் வேலை நிறுத்தம் காரணமாக டைட்டானிக் கப்பலில் பயணத்தைத் தொடர்ந்தனர். அங்கு அவர்கள் மூன்றாம் வகுப்பில் பயணித்தனர். மில்வினாவிற்கு அப்போது வயது இரண்டு மாதங்களே. 1912 ஏப்ரல் 14 ஆம் நாளில் கப்பல் பனிப்பாறை ஒன்றுடன் மோதியதை அடுத்து டீன் குடும்பம் அவசரகாலப் படகு மூலம் வேறு சிலருடன் வெளியேற்றப்பட்டார்கள். ஆனாலும் அவர்களது தந்தை இறந்து விட்டார். அவரது உடலும் அடையாளம் காணப்படவில்லை. தந்தை இறந்து விடவே இரண்டு பிள்ளைகளுடன் தனித்து அமெரிக்கா செல்ல விரும்பாமல் தாயார் இங்கிலாந்து திரும்ப முடிவு செய்து "ஏட்ரியாட்டிக்" என்ற கப்பலில் இங்கிலாந்து திரும்பினர். திருமண பந்தத்தில் இணையாமல் தனிமையில் வாழ்ந்து வந்த மில்வினா கடைசி காலத்தில் வறுமையில் வாடினார். இதையடுத்து இவர் தனது வீட்டு பொருட்களை ஏலத்துக்கு விட்டு வாழ்க்கை நடத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். இதை கேள்விப்பட்ட டைட்டானிக் திரைப்பட நாயகன் டீ கேப்ரியோ, நாயகி கேட் வின்ஸ்லெட் மற்றும் இயக்குனர் ஜேம்ஸ் காம்ரூன் ஆகியோர் அவருக்கு ரூ. 17 லட்சம் உதவி செய்தனர். மேலும் அவர் வறுமை காரணமாக ஏலத்தில் விட்ட அவரது பொருட்கள் அனைத்தும் அவரிடமே மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் 97 வயதான மில்வினா 2009 மே 31 இல் வயது முதிர்வு மற்றும் நிமோனியா காய்ச்சல் காரணமாக இங்கிலாந்து மருத்துவமனையில் இறந்தார். டி. டி. சக்கரவர்த்தி டி. டி. சக்கரவர்த்தி தமிழ்நாட்டிலேயே கண்பார்வையற்ற முதலாவது நீதிபதி ஆவார். வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள திமிரி என்ற ஊரைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவர் தனது நான்காவது அகவையில் அம்மை நோய் காரணமாக தனது கண்பார்வையை இழந்தார். வழக்குரைஞர் பட்டம் பெற்ற இவர் துவக்கத்தில் மாவட்ட நீதிமன்றத்தில் (அறமன்றத்தில்) வழக்குரைஞராக பயிற்சி பெற்றார். பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பல ஆண்டுகள் பயிற்சி பெற்றார். தமிழக அரசின் மாவட்ட நீதிபதிப் (அறநடுவர்) பயிற்சிக்கு தேர்வு பெற்றார். 2008-ல் நடந்த தமிழக அரசின் தேர்வாணைய நீதிபதிகள் தேர்வுக்கான தேர்வில் 13-வது இடம் பெற்றார். தமிழ்நாடு மாவட்ட ஜூடிசியல் அகாடமியில் 2 மாதங்கள் பயிற்சி பெற்றார். வால்பாறை நீதிமன்றத்திலும் பயிற்சி நீதிபதியாக இருந்தார். ஜூன் 2009 இல் கோவை மாவட்ட 3-வது கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் சக்கரவர்த்தி நீதிபதியாக (அறநடுவராக) நியமிக்கப்பட்டார். சோம்நாத் சட்டர்ஜி சோம்நாத் சட்டர்ஜி (பெங்காளி) (சூலை 25, 1929 -ஆகத்து 13, 2018) இந்திய அரசியல்வாதியும் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் ஆவார். 14 ஆவது மக்களவையின் தலைவராக ஐந்தாண்டுகள் 2004 முதல் 2009 மே மாதம் வரை பொறுப்பு வகித்தவர். இவர் அந்த காலகட்டத்தில், அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். சோம்நாத் சட்டர்ஜியின் தந்தை நிர்மல் சந்திராவும் ஒரு அரசியல்வாதியாவார். சோம்நாத் சட்டர்ஜி 1929இல், அசாம் மாநிலம் தேஜ்பூரில் பிறந்தவர். இவர் பள்ளிக் கல்வி, கல்லூரி, பல்கலைக்கழகப் படிப்பு போன்றவற்றை கொல்கத்தாவில் முடித்தார். பிரிட்டனில் சட்டம் பயின்று வந்தார். அரசியலில் நுழைவதற்கு முன்னர், கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணிபுரிந்தார். 1968இல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த சோம்நாத் சாட்டர்ஜி, அரசியலில் அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவராக இருந்தார். இவர் மக்களவைக்கு 10 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். 14 ஆவது மக்களவையின் தலைவராக அனைத்து கட்சிகளின் ஆதரவோடு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009 சூலையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை இடதுசாரிக் கட்சிகள் விலக்கிக்கொண்டதைத் தொடர்ந்து, கட்சி கட்டளையிட்டும் மக்களவைத் தலைவர் பதவியிலிருந்து விலக மறுத்துவிட்டார். இதையடுத்து, மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ அவரைக் கட்சியிலிருந்து வெளியேற்றியது. "கீப்பிங் தி ஃபெயித்: மெமரீஸ் ஆஃப் எ பார்லிமெண் டேரியன்" என்ற பெயரில் அவர் தனை சுயசரிதையை எழுதியுள்ளார். லான்சு ஆம்ஸ்டிராங் லான்சு ஆம்ஸ்டிராங் (பிறப்பு: செப்டம்பர் 18, 1971), முன்னாள் அமெரிக்கத் தொழில்முறை மிதிவண்டி வீரர். இவர் "டூவ தே பிரான்சு" ("Tour de France") என்ற உலகப்புகழ் பெற்ற மிதிவண்டி சாலைப் போட்டியை 1999 முதல் 2005 வரை தொடர்ந்து ஏழு முறை வென்றார், ஆனாலும் இவர் ஊக்க மருந்து உள்ள போதைப் பொறுட்களைப் பயன்படுத்தியதாலும் அப்பொருட்களை சக வீரர்களுக்கு அளித்து அவர்களை பயன்படுத்த தூண்டியதாலும், ஆகத்து 1998 முதல் இவர் வென்ற எல்லா பட்டங்களும் பரிக்கப்பட்டு, இவர் வாழ்நாள் முழுதும் மிதிவண்டி போட்டிகளில் பங்குபெற தடை விதிக்கப்பட்டது. இம்முடிவுக்கு இவர் மேல் முறையீடு செய்யவில்லை. 1996இல் இவருக்கு வந்த விறைப் புற்றுநோய் தீவிரமடைந்து மூளை, நுரையீரல் ஆகிய உறுப்புகளுக்கு பரவிற்று. மிதிவண்டி ஓட்டுதல் என்பதே சிரமம் என்ற நிலையிலிருந்த லான்சு, தீவிர கீமோ சிகிச்சை எடுத்துக்கொண்டு மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பினார். மூன்று ஆண்டு ஓய்வுக்குப் பின் 2009 டூவ ட பிரான்சில் கலந்து கொண்ட லான்சு மூன்றாவது இடத்தைக் கைப்பற்றினார். ஆல்ப்சு மலை-ஏற்றங்களிலும் கால-ஓட்டங்களிலும் அவரால் சிறப்பாக சோபிக்க இயலாததும் அவரது அணியின் [அஸ்டானா] முன்னணி வீரரான ஆல்பர்ட்டோ காண்டடாரின் வெற்றிக்கு வழிவகுக்கும் வகையில் ஓட்டியதுமே இவர் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டதற்கான காரணங்களாக கூறப்படுகிறன. அமெரிக்க போதை மருந்து தடுப்பு துறை இவர் போதை மருந்து உட்கொண்டதாலயே ஏழுமுறை டூவ ட பிரான்சின் வெற்றியாளராக முடிந்தது என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதை எதிர்த்து இவர் வாதாட மறுத்து விட்டதால் இவரின் ஏழு வெற்றிகளும் செல்லாது என அமெரிக்க போதை மருந்து தடுப்பு துறை அறிவித்துள்ளது. இவர் சைக்கிள் போட்டிகளில் பங்கெடுக்கவும் வாழ்நாள் தடை விதித்துள்ளது. பன்னாட்டு சைக்கிள் சம்மேளனம் இத்தடை தொடர்பாக எந்த முடிவையும் எடுக்கவில்லை. வழக்கு தொடுத்தாலும் இவர் தான் எப்போதும் போதை மருந்து உட்கொண்டதில்லை என்றும் வழக்கை எதிர்த்து வழக்காட தனக்கு இனிமேலும் சக்தியில்லை என்றும் கூறியுள்ளார். அக்டோபர் 22, 2012 அன்று இந்த விளையாட்டை ஒழுங்குபடுத்தும் அமைப்பான மிதிவண்டி ஓட்டிகள் பன்னாட்டுச் சங்கம் (UCI) அமெரிக்க போதை மருந்து தடுப்பு துறையின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு வாழ்நாள் தடையையும் முன்பு பெற்ற விருதுகளை பறித்ததையும் உறுதி செய்தது. சனவரி 4, 2013 அன்று ஓப்ரா வின்ஃப்ரேயுடனான நேர்காணலில் இவர் போதை மருந்து உட்கொண்டதாலயே ஏழுமுறை டூர் தே பிரான்சின் வெற்றி அடைந்ததை முதன்முறை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். ஜனதா தளம் ஜனதா தளம் (Janata Dal) இது ஒரு இந்திய அரசியல் கட்சியாகும், இக்கட்சி ஜனதா கட்சி மற்றும் பாரதிய லோக் தளம் என்ற இரு இந்திய அரசியல் கட்சிகளை இணைத்து உருவாக்கப்பட்டதாகும். (வி. பி. சிங் இந்தியத் தேசிய காங்கிரசில் இருந்து பிரிந்து வந்த பொழுது துவக்கப்பட்ட கட்சியாகும்). ஜனதா தளம் 1989 இந்திய தேசிய காங்கிரசின் தலைவரும் இந்தியப் பிரதமருமான ராஜிவ் காந்தி போபர்ஸ் ஊழல் குற்றசாட்டினால் தேர்தலில் தோல்வி கண்டதினால் இந்திய அரசின் ஆட்சிக்கு வந்தது. தேசிய முன்னணி என்ற கூட்டணி அரசாக பாரதீய ஜனதா கட்சி வெளியில் இருந்து ஆதரவு தந்த நிலையில் ஆட்சியில் பங்கு கொண்டது. வி. பி. சிங் இந்தியாவின் பிரதமராக இந்தியாவின் ஆட்சியில் பங்கு கொண்டார். 1990 இல் கூட்டணியின் பிளவால் புதிய அரசு சந்திரசேகர் தலைமையில் இந்திய தேசிய காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி நடத்தியது. சந்திரசேகர் ஜனதா தள மூத்த தலைவர்களில் ஒருவராவர். ஜனதா தளம் கட்சி வி. பி. சிங் தலைமையில் இயங்கியது. ஆனால் குறுகிய காலமே ஆட்சியில் பங்கு பெற்றது. கூட்டணி விரிசலினால் விரைவிலேயே தேர்தலை சந்திக்க நேர்ந்து காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும் சூழல் உருவானது. ஜனதா கட்சி நெருக்கடி நிலை (இந்தியா) நெருக்கடி நிலை - அவசரகால பிரகடனம் (Indian Emergency - 25 ஜூன் 1975 – 21 மார்ச் 1977) இந்தியாவில் 21- மாத காலத்திற்கு இந்த நிலை இந்தியக் குடியரசுத் தலைவர்பக்ருதின் அலி அகமது வால், அப்போதைய இந்தியப் பிரதமர்இந்திரா காந்தியின் ஆலோசனை மற்றும் அறிவுறித்தலின் பேரில் இந்திய அரசியலமைப்பு விதி 352ன் படி பிரகடனப் படுத்தப்பட்டது. இது இந்திராகாந்தியின் செல்வாக்கை உயர்த்துவதற்காகவும், அவருக்கு எதிரான நிலையை மக்கள் எடுக்காத நிலையை உருவாக்குதற்காகவும், நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் தேர்தலை சந்திக்க விரும்பாததால் தேர்தலை தள்ளிப்போடும் நோக்கத்திலும், மக்களின் அடிப்படை குடியுரிமை உரிமைகளை பறிக்கும் விதத்திலும், அமல்படுத்தபட்டதாக கூறப்படுகின்றது. இந்தியக் குடியரசு வரலாற்றில் இக்காலம் சர்ச்சை மிகுந்த காலமாக வர்ணிக்கப்படுகின்றது. இந்திரா காந்தி கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 1971 இன் பொதுத்தேர்தலை சந்திக்க துணிவில்லாமல் செய்த பெரும் தேர்தல் மோசடி என்று எதிர்கட்சிகளால் வர்ணிக்கப்பட்டது. காந்திய சோசலிச வாதியான ஜெய பிரகாஷ் நாராயண் இதை எதிர்த்து பெரும் கிளர்ச்சியை பீகாரில் நடத்தினார். இந்திரா காந்தியின் மைய அரசை எதிர்த்து சத்யாகிரகம் நடத்தினார். இதில் மாணவர்கள்,விவசாயிகள் மற்றும் தொழிலாளர் அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஜனதா கட்சி (மக்கள் கட்சி) என்ற அழைப்பு கட்சிகளின் கூட்டணி மூலம் குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது.மேலும் அனைத்து கட்சிகளும் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்திரா காந்தியால் பாராளுமன்ற தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட ராஜ் நரேன் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இந்திராகாந்தி மீது தேர்தல் நோக்கங்களுக்காக மாநில இயந்திரங்களை பயன்படுத்தியதாக தேர்தல் மோசடி வழக்கு தாக்கல் செய்தார். 12 ஜூன் 1975 , அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஜக்மோகன்லால் சின்ஹா ​இந்த வழக்கில் இந்திராகாந்தியை குற்றவாளியாக அறிவித்தது.மேலும் நீதிமன்றம் அத்தொகுதியில் அவரது வெற்றி செல்லாது எனவும் அவர் மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீ்க்கப்படவேண்டும் என அறிவித்தார். மேலும் ஆறு ஆண்டுகளுக்கு எந்தத் தேர்தலிலும் போட்டியிடக் கூடாதெனத் தடை விதித்தார். எனினும், லஞ்சம், அரசு அதிகாரிகளை பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தியது, மற்றும் அரசின் மின்சாரத்தை பயன்படுத்தியது போன்ற வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்த நிகழ்வை டைம்ஸ் நாளிதழ் போக்குவரத்து பயணசீட்டுக்காக பிரதமர் பதவிநீக்கம் செய்யப்பட்டார் என விமர்சித்தது. எனினும் தொழிலாளர் மற்றும் தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள் மற்றும் அரசாங்க தொழிற்சங்கங்கள் நாடுதழுவிய அளவில் வேலைநிறுத்தம் நடத்தினர். ஜே. பி. நாராயண், ராஜ் நரேன், சத்யேந்திர நாராயண் சின்ஹா ​​மற்றும் மொரார்ஜி தேசாய் தலைமையிலான மக்கள் தில்லி தெருக்களில் வெள்ளமாக போராடினர் இதனை அடுத்து பாராளுமன்ற கட்டிடம், பிரதமர் வீடு போன்றவை மூடப்பட்டன.இதுவே பின்னர் இந்திராகாந்தி அவசர நிலை பிரகடனத்தை அமல்படுத்த முக்கிய காரணமாக இருந்தது. அச்சமயத்தில் முடிவடைந்த பாகிஸ்தானிய போர், எண்ணெய் நெருக்கடி போன்ற காரணங்களினால் நாடு பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும் இந்தச் சமயத்தில் அரசு பணியாளர்களின் போராட்டங்கள் ஜனநாயகத்தை நிலை குலைய வைக்கும். எனவே, நெருக்கடி நிலைமையை அமல் படுத்துமாறு குடியரசு தலைவருக்கு இந்திரா காந்தி கடிதம் ஒன்றை எழுதினார். இதனை அடுத்து இந்தியக் குடியரசுத்தலைவர் பக்ருதின் அலி அகமத் அவர்கள், இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின்,ஆலோசனையின் பேரில் ஜூன் 25, 1975 அன்று நாட்டின் நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தினார். அவருடைய (இந்திரா காந்தி) வார்த்தையில் கூறுகையில் "ஜனநாயகத்தின் பேரிறைச்சலை" நிறுத்தினார் என்று குறிப்பிட்டார். இந்திய அரசியலமைப்பின் தேவைக்கேற்ப இந்திரா காந்தியின் ஆலோசனை மற்றும் இந்தியக் குடியரசுத்தலைவரின் ஒப்புதலின்படி இந்த நெருக்கடி நிலை ஒவ்வொரு 6 மாதக் காலத்திற்குப் பிறகு நீட்டிக்கப்பட்டு 1977 இல் தேர்தலை சந்திக்கும் வரை தொடர்ந்தது. நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மாநில அரசுகளின் செயலாட்சிகள் தள்ளிவைக்கப்பட்டன. இந்திய அரசியலைமைப்பு சட்ட விதி 352 ஐ கொணர்வது மூலம், இந்திரா காந்தி தனக்கென கூடுதலான சிறப்பு அதிகாரங்களைப் பெற்றார். மற்றும் குடியுரிமைகளை முடக்கினார்; எதிர்க்கட்சிகளை ஒடுக்கினார். அரசு இந்தியா - பாகிஸ்தான் யுத்தத்தின் மூலம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுருத்தலை வரவழைத்துக்கொண்டது. வேலைநிறுத்தங்கள், கலவரங்கள், கிளர்ச்சிகள் மற்றும் எதிர்ப்புகள் அதிகமாகின; இவைகளினால் அரசுக்கு மிக அதிகமான பொருளாதார நெருக்கடி உருவாகியது. எதிர்க்கட்சிகளின் அளவில்லாத எதிர்ப்புகளை நாடுமுழுவதும் சந்திக்க நேர்ந்தது. இந்திரா காந்தி தனக்கு நெருக்காமானவர்கள் கூறிய ஆலோசனைகளையும் பொருட்படுத்தவில்லை; அவரின் நெருக்கமான ஆலோசகராக கருதப்படும் இரண்டாவது மகன் சஞ்சய் காந்தியும் நெருக்கடி நிலை சம்பந்தமாக மற்றவர்கள் தெரிவித்த எதிர் கருத்துகளையும்,ஆலோசனைகளையும் தவிர்த்தார். அரசு எந்திரம் தவறாக பயன்படுத்தப்பட்டது. பல்லாயிரக்கணக்கானோர் நாடுமுழுவதும் காவல் துறையினரால் கைது செய்யபட்டனர். பல முக்கிய அரசியல் தலைவர்களான ஜெய பிரகாஷ் நாராயண், ராஜ் நாராயண், மொரார்ஜி தேசாய், சரண் சிங், ஜிவத்ராம் கிருபாலனி, அடல் பிகாரி வாஜ்பாய், லால் கிருஷ்ண அத்வானி,பல பொதுவுடமைவாதிகள், பொதுவுடமைக் கட்சித் தலைவர்கள், இன்னும் இதர கிளர்ச்சியாளர்கள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் என் கருதப்பட்டவர்களும் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அரசியல் கட்சி சார அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ் போன்ற எதிர் வாத கருத்துக்களுடைய அமைப்புகளும் தடை செய்யபட்டன. அவசர காலங்களில் பல்வேறு குற்றசாட்டுகள் அரசின் மீது சுமத்தப்பட்டன. அவை.. கேரளத்தின் ’ராஜன் வழக்கு’ (Rajan case) எனும் குடும்பத்திற்கு தெரியப்படுத்தாமல் அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர் என்னவானார் என்பதைக் குறித்து ராஜனின் தந்தையால் தொடுக்கப்பட்ட வழக்கு இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த வழக்காகக் கருதப்பட்டது. ஜனவரி 23, 1977 புதியத் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டார். மார்ச் மாதம் புதிய தேர்தல் நடைபெறும் என அறிவித்தார், மேலும் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்தார். நெருக்கடி நிலை அதிகாரப்பூர்வமாக மார்ச் 23, 1977 அன்று முடிவுற்றது.இத்தேர்தலை மக்கள் ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்க்கும் இடைப்பட்ட நிலையாக கருதினர்.இதில் காங்கிரஸ் கட்சி பல இடங்களில் தோல்வி அடைந்தது.இந்திர காந்தி மற்றும் சஞ்சய் காந்தி ஆகியோரும் தோல்வி அடைந்தனர். ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி (Jammu & Kashmir National Conference) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அரசியல கட்சி. 1947 இல் இந்திய விடுதலையின் பொழுது ஷேக் அப்துல்லா ஆவர்க்ள இக்கட்சியின் தலைமையேற்றிருந்தார். அம்மாநிலத்தின் தேர்தல் முக்கயத்துவம் கொண்ட கட்சியாக பல ஆண்டுகள் செயல்பட்டு வரு கின்றது. அதன் பின் அவர் மகன் பரூக் அப்துல்லாவின் தலைமையிலும், தற்பொழுது அவரது (பரூக் அப்துல்லாவின்) மகன் உமர் அப்துல்லாவின் தலைமையில் இயங்கி வருகின்றது. 2014 சட்டமன்ற தேர்தலில் இக்கட்சி 15 உறுப்பினர்களை பெற்றது. இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (Indian Union Muslim League) இந்தியாவின் முஸ்லிம் தேசியவாத அரசியல் கட்சி. இக்கட்சி வடக்கு மற்றும் தெற்கு கேரளாவின் பகுதிகளில் செல்வாக்கு பெற்றுள்ள கட்சியாகும். இந்தியாவில் முஸ்லிம் மக்களுக்காக 1906-ல் நவாப் சலீம் முல்லாகான் "அகில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்'கை ஆரம்பித்தார். அவருக்கு பின்னர் முகமது அலி ஜின்னா , அதனை நடத்தி வந்தார். பாகிஸ்தான் பிரிவினைக்குப்பின், இதன் தலைவரானார் காயிதே மில்லத். இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின் போது அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்குப் போகாமல் இந்தியாவில் தங்கிவிட்டதால், அவர்களுக்காக கட்சி பெயரில் இருந்த "அகில' என்பதை நீக்கிவிட்டு 1949-ல் "இந்திய யூனியன் முஸ்லிம் லீக்" என்று மாற்றினார் காயிதே மில்லத். இதன் முதல் மாநாடு சென்னையில் உள்ள ராஜாஜி ஹாலில் நடந்தது., பெரும்பாலும் இசுலாமியர்கள் பங்கு வகிக்கும் இந்திய அரசியல் கட்சியாகும். தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களில் அதிக முனைப்புடன் செயல்படுகிறது. காயிதே மில்லத்துக்கு பின்னர் இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் அகில இந்தியத் தலைவராக இப்ராஹிம் சுலைமான் சேட், பனாத்வாலா, முன்னாள் மத்திய இரயில்வே துறை இணை அமைச்சர் ஈ. அகமது ஆகியோர் பணியாற்றினர். தற்போது கே. எம். காதர் மொகிதீன் அகில இந்தியத் தலைவராக உள்ளார். தமிழகத்தில் அப்துல்சமது, அப்துல் லத்தீப், கே. எம். காதர் மொகிதீன் ஆகியோர் தமிழக தலைவராக பணியாற்றினர். 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து வாணியம்பாடி, கடையநல்லூர், விழுப்புரம்,பூம்புகார், மணப்பாறை ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் கடையநல்லூரில் முகமது அபுபக்கர் வெற்றிபெற்று இக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016,கேரளா சட்டமன்றத் தேர்தலில் இக்கட்சி ஐக்கிய ஜனநாயக முன்னணியுடன் கூட்டணி அமைத்து 24 தொகுதிகளில் போட்டியிட்டது.இதில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேசிய முன்னணி (இந்தியா) தேசிய முன்னணி (National Front) இந்திய அரசியல் கட்சிகளான வட இந்தியாவின் ஜனதா தளம், ஆந்திராவின் தெலுங்கு தேசம், அசாம் கன பரிசத், தமிழ்நாட்டின் திமுக ஆகிய கட்சிகளின் கூட்டணி அமைப்பாக நடுவண் அரசில் (1989-1991) பங்குபெற்ற கூட்டணி ஆகும். இக்கூட்டணியின் தலைவராக என். டி. ராமராவ் பொறுப்பேற்றிருந்தார் ஆனால் அவர் பிரதமர் பதவி ஏற்க விரும்பவில்லை. கூட்டணியினரால் தேர்வு செய்யப்பட்ட பிரதமர் வி. பி. சிங் இந்தியப் பிரதமராக பொறுப்பேற்றார். இக்கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவளித்த கட்சிகளாக பாரதீய ஜனதாவும், இடது முன்னணியினரும் இருந்தனர். அசாம் கன பரிசத் அசோம் கன பரிசத்- அசாம் கன பரிஷத் (Asom Gana Parishad-Assam Peoples Association-அசாம் மக்கள் கூட்டமைப்பு) இந்தியாவின் அசாம் மாநில அரசியல் கட்சியாகும். 1985 அசாம் உடன்பாட்டுக்குப்பின் நடைபெற்றத் தேர்தலில் பிரபுல்லகுமார் மகந்தா அசாம் மாநில இளவயது முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அசாம் கன பரிசத் கட்சி இரு முறை ஆடசி அமைத்த்து 1985 முதல் 1989 மற்றும் 1996 முதல் 2001 வரை. பிரபுல்ல குமார் மகந்தா பிரபுல்ல குமார் மகந்தா (Prafulla Kumar Mahanta) (பிறப்பு 1952) அசாம் இயக்கித்தின் தலைவரும் முன்னாள் அசாம் மாநில முதலமைச்சராக இரு முறை பொறுப்பு வகித்தவரும், இந்தியாவின் தலைசிறந்த அரசியல் தலைவரும் ஆவார். தற்பொழுது அசாம் கன பரிசத்(மு) கட்சித்தலைவராக பொறுப்பு வகிக்கின்றார். அசாமில் இரு முறை முதலமைச்சராக , (1985-1990) மற்றும் (1996-2001), மேலும் நாட்டிலேயே இளவயதில் முதலமைச்சர் பொற்ப்பேற்ற முதல் தலைவராவார். அசாம் மாணவர் அணியின் முன்னாள் தலைவராக 1979 முதல் 1985 வரையிலுள்ள காலத்தில் பொறுப்பிலிருந்தவர். ஆகஸ்டு 2005 இல் கட்சியில் ஏற்பட்ட குழப்பத்தினால் அசாம் கன பரிசத் கட்சியிலுருந்து நீக்கப்பட்டதினால் புதிய கட்சியாக அசோம் கன பரிசத் (முன்னேற்றம்) என்ற பெயரில் துவக்கப்பட்டு அதன் தலைவராக செப்டம்பர் 15, 2005 முதல் இருக்கின்றார். பிரபுல்ல குமார் மகந்தா உள்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்த பொழுது உல்பா உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை கொன்றதில் அசாம் அரசின் உள்துறை அமைச்சர் சம்பந்தப்பட்டிருப்பதாக சைக்கியா ஆணையம் குற்றம்சாட்டியது. இந்நிகழ்வு 1998 முதல் 2001 வரையுள்ள இடைபட்ட காலத்தில் நிகழ்ந்த்தாகும். இந்த குற்றச்சாட்டு அவரின் அரசியல் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியது. அசோம் கன பரிசத் (பிரகதிசெல்) அசோம் கன பரிசத் (பிரகதிசெல்) -அசோம் கன பரிசத் (முன்னேற்றம்) (Asom Gana Parishad (Pragatishel-Asom Gana Parishad (Progressive)- AGP(P)))இந்தியாவின் அசாம் மாநிலத்தின் பிராந்திய அரசியல் கட்சியாகும். இக்கட்சி முன்னாள் அசாம் முதல்வர் பிரபுல்லகுமார் மகந்தாவால் அசாம் கன பரிசத் கட்சியிலுருந்து கட்சி கட்டுபாட்டை மீறியதிற்காக 2005 இல் நீக்கப்பட்டதிற்குப் பின் துவக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இக்கட்சி வென்றது பிரபுல்ல குமார் மகந்தா நின்ற ஒரு தொகுதி மட்டுமே. மந்தரை மந்தரை மகாராணி கைகேயியின் பணிப்பெண்களில் ஒருத்தி. இவளை கூனி என்றும் அழைப்பார்கள். இவள் இராமன் மீது வெறுப்புற்றிந்தாள். இராமன் அரசனாவதை அவள் விரும்பவில்லை. கைகேயியின் மகன் பரதன் அரசனாக வேண்டும் என்றே விரும்பினாள். அதனால், கைகேயியைத் தூண்டி விட்டு இராமன் அரசனாவதைத் தடுக்க எண்ணினாள். கைகேயியும் கூனியின் ஆலோசனைப்படி இராமன் பதினான்கு ஆண்டுகள் காட்டில் வாழவேண்டும் என்றும் தனது மகனான பரதன் அரசனாக வேண்டும் என்றும் தசரத மன்னனிடம் வரம் கேட்டுப் பெற்றாள். மிதிலை சனகன் என்னும் அரசன் ஆட்சி செய்ததாக இராமாயணம் எனும் நூல் கூறும் விதேக நாட்டின் தலைநகரம் மிதிலையாகும். இங்கு குழந்தையாயிருந்த சீதையைப் பூமியில் புதைந்திருந்த பெட்டியிலிருந்து கண்டெடுத்து மன்னன் சனகன் அவளை வளர்த்ததாக இராமாயணம் கூறுகிறது. சீதையின் சுயம்வரம் இங்கு நடந்தது. சனகன் அரசன் ஏர் ஊழுது கொண்டிருக்கும் பொழுது அவருடைய நிலத்தில் ஒரு பெண் குழந்தையைக் கண்டெடுத்தார் அக்குழந்தைக்கு சீதை என்று பெயரிட்டார். மிதிலை நாட்டில் சிவன் வரமாக கொடுத்த வில் ஒன்று இருந்தது, அவ்வில்லை யார் எடுத்து நாந் ஏற்றுகிறார்களோ அவர்களுக்கே சீதையுடன் சுயம்வரம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது, ஆனால் எந்த இளவரசனாலும் அப்போட்டியில் வெல்ல முடியவில்லை, இறுதியாக இராமன் அப்போட்டியில் வென்று சீதையை திருமணம் செய்துகொண்டார். மன்னர் சனகனின் இளைய சகோதரனின் மூன்று புதல்விகளை முறையே, இலக்குவன், பரதன் மற்றும் சத்ருக்கனன் மணந்து கொண்டனர். இரஜாஜி எழுதிய இராமாயணம். வால்மிகி எழுதிய இராமாயணம் போசு-ஐன்ஸ்டைன் செறிபொருள் போசு-ஐன்ஸ்டைன் செறிபொருள் ("Bose–Einstein condensate") என்பது 1924 ஆம் ஆண்டில் இந்திய இயற்பியலாளரான சத்தியேந்திர நாத் போசு மற்றும் ஐன்ஸ்டைன் ஆகியோரால் முன்னுரைக்கப்பட்ட போசு-ஐன்ஸ்டைன் செறிவொடுக்கம் என்ற குவாண்டம் விளைவினால் உருவாக்கப்படும் ஒரு நிலை. திண்மம், திரவம், வளிமம் மற்றும் பிளாஸ்மா ஆகிய பொருள்களின் நான்கு நிலைகளுக்கு அடுத்து ஐந்தாவது நிலையாகக் கருதப்படுகிறது இந்த போசு-ஐன்ஸ்டைன் செறிபொருள். 1995-இல் முதன் முதலில் இந்த போசு செறிபொருளை உருவாக்கியதற்காக கார்னெல், வெய்மேன், கெட்டர்லே ஆகிய இயற்பியலாளர்களுக்கு நோபல் பரிசு 2001-இல் வழங்கப்பட்டது. போசு செறிபொருளில் உள்ள அணுக்களின் டீ பிராய் ("de Broglie") அலைநீளமானது சராசரி அணுவிடைத்தொலைவிற்கு "சமமாக" இருப்பதால் அனைத்து அணுக்களும் ஒரே குவாண்டம் அடிநிலையை அடைகின்றன. எனவே அனைத்து அணுக்களும் ஒரே குவாண்டம் அலைச்சார்புகளைப் பெறுகின்றன. இதுவே போசு-ஐன்ஸ்டைன் செறிவொடுக்கம் ஆகும். பாரூக் அப்துல்லா பாரூக் அப்துல்லா (Farooq Abdullah) (உருது: فاروق عبدالله), பிறப்பு 21 அக்டோபர், 1936 சௌரா, ஜம்மு காஷ்மீர், இந்தியா), ஷேக் அப்துல்லா வின் மகனும் மருத்துவரும் ஆவார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சராக 1982 முதல் பொறுப்பு பல காலகட்டங்களில் வகித்தவர். இவர் அரசியல் வாழ்க்கை சர்ச்சைக்குரியதாக கருதப்படுகின்றது. குறிப்பாக மாநில சுயாட்சி, இந்தியா, பாக்கிஸ்தான் எல்லை பிரச்சினைகளில் இவருடைய தாக்கம் அதிகமிருந்த்து. அப்துல்லா ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கிறார். தற்போது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். மேற்கத்திய இசை மேற்கத்திய இசை என்பது, மேற்கத்திய உலகத்திலிருந்து (ஐரோப்பாவும் ஐரோப்பாவின் பிடியிலிருந்த இடங்களும்) உருவாகிய இசை வகைகளைக் குறிக்கும். மேற்கத்திய இசையிலுள்ள இசை வகைகள்: மேற்கத்திய இசை கலைஞர்களின் பட்டியல்கள்: நிலவு மோதல் சலாகை நிலவு மோதல் சலாகை (Moon Impact Probe (MIP) ஒன்று. இது சந்திராயன் - I கலத்தால் எடுத்துச்செல்லப்படும் ஒரு செயற்கைக்கோள். கலமானது நிலவைச் சுற்றிய 100 கி.மீ சுற்றுப்பாதையை அடைந்ததும் இச்செயற்கைக்கோள் வெளித்தள்ளப்பட்டு நிலவின்மீது மோதவிடப்படும். MIP ஆனது அதிக துல்லியத்துடன்கூடிய நிறை நிறமாலைமானி, எஸ்-பட்டை உயர அளவி, கண்ணுரு படமாக்கக் கருவி ஆகியவற்றைக் கொண்டிருக்கும் . பதின்மூன்றாவது மக்களவை இந்திய நாடாளுமன்றத்தின் பதின்மூன்றாவது மக்களவை 1999 இல் செப்டம்பர்- அக்டோபர் மாதங்களில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத்தின் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்களால் கட்டமைக்கப்பட்டது; ஜூன் 2004 வரை தொடர்ந்த்து. இதல் பெரும்பான்மை பெற்ற அணியினரான தேசிய ஜனநாயக கூட்டணி அணியினரால் ஆட்சியமைக்கப்பட்டது. இந்த அணியின் முன்னணி கட்சியாக பாரதீய ஜனதா கட்சி செயல்பட்டது. இதன் தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது. இவ்வாட்சி 2004 தேர்தல் வரை தொடர்ந்தது. ஜகதீஷ் சந்திர போஸ் சர் ஜகதீஷ் சந்திர போஸ் ("Jagadish Chandra Bose") (1858-1937) தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர். போசு வானொலி அறிவியலின் முன்னோடிகளில் ஒருவர் என ஐஇஇஇ அதிகாரப்பூர்வமாக நூறு வருடங்கள் கழித்து அறிவித்தது. போஸ் என்ற பெயரால் நன்கு அறிமுகமான அவர் 1859ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் நாள் இன்றைய பங்களாதேஷில், டாக்கா நகருக்கு அருகில் ஃபரீத்பூர் மாவட்டத்தை சேர்ந்த மைமென்சிங் என்ற ஊரில் பிறந்தார். போஸ் தமது துவக்கக் கல்வியைத் தூய சேவியர் உயர்நிலைப் பள்ளியில் பெற்றார். பின்னர் தமது கல்வியைக் கொல்கத்தா, கேம்பிரிட்ஜ, லண்டன் ஆகிய இடங்களில் தொடர்ந்தார். 1885இல் கொல்கத்தா மாநிலக்கல்லூரியில் இயற்பியல் துறையில் துணைப் பேராசிரியராகச் சேர்ந்தார்; தமது பெரும்பாலான கண்டுபிடிப்புகளுக்கான ஆய்வுகளை, போஸ் இக்கல்லூரியில் தான் மேற்கொண்டார். இவரது மனைவி பிரபல சமூக சேவகி அபலா போஸ் போஸ் அவர்களின் தந்தையார் பகவான் சந்திர போஸ், அப்போது இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசில் உயர் அலுவலராகப் பணிபுரிந்து வந்தவர்; ஆனாலும் தேசப்பற்று மிக்கவராக விளங்கினார். மாணவர்கள் தொழில் கல்வி கற்பதற்காகப் பல தொழில்நுட்பப் பள்ளிகளை அவர் உருவாக்கினார். எனவே மகன் ஜகதீஷ் சந்திர போசுக்கும் நாட்டுப்பற்று, சுற்றுப்புறத்தைக் கூர்ந்து நோக்கும் திறன் மற்றும் ஆவல், தொழிநுட்பத் துறைகளில் ஆர்வம் ஆகியன இயற்கையாகவே அமைந்ததில் வியப்பில்லை. மேலும் தந்தையாரின் வழிகாட்டுதலும், ஒத்துழைப்பும் மகனுக்குப் பெரும் பக்கபலமாக அமைந்து ஊக்குவித்தன. போஸின் தந்தையார் விரும்பியிருந்தால் மகனை மேல்தட்டு பிள்ளைகள் படிக்கும் மிகச் சிறந்த துவக்கப் பள்ளிகளில் சேர்த்திருக்க முடியும்; ஆனால் அவ்வாறின்றி சாதாரண ஏழை, எளிய மக்களின் பிள்ளைகள் கல்வி கற்கும் பள்ளியிலேயே மகனைச் சேர்த்தார். இதனால் சாதி சமய, ஏழை-பணக்காரர், உயர்ந்தவர்-தாழ்ந்தவர், என்ற வேறுபாடு ஏதுமின்றி, எல்லோருடனும் சமமாகப் பழகும் வாய்ப்பு போஸுக்குக் கிடைத்தது. மீனவர், உழைப்பாளர்கள், பல்வேறு தொழில் செய்வோர் ஆகியோரின் பிள்ளைகளோடு சமமாக எத்தகைய வேறுபாடுமின்றி அவர் தமது துவக்கக் கல்வியைக் கற்றார். இதனால் தமது சுற்றுப்புறத்தை நன்கு உணர்ந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. மேலும் போஸின் தாயாரும் சிறந்த இந்தியப் பெண்மணியாக விளங்கியவர்; மகனுக்கு முக்கியமான சில அடிப்படை வாழ்வியல் உண்மைகளையும், இந்தியப் பண்பாட்டையும், விழுமியங்களையும் இலக்கியங்கள், கதைகள், பாடல்கள் வாயிலாகக் கற்பித்தார். தந்தையின் வழிகாட்டுதலும், தாயின் அன்பு அரவணைப்பும் மகன் கட்டுப்பாட்டுடனும், ஒழுக்கமாகவும் வளர்வதற்குத் துணை புரிந்தன. அறிவியல் அறிஞர்களுக்கே உரிய ஈடுபாடு, துணிச்சல், சோர்வின்மை ஆகிய உயர் குணங்களோடு எதிர்காலத்தில் சிறந்த விஞ்ஞானியாக விளங்குவதற்கான அடித்தளம் போஸுக்கு இளவயதிலேயே அமைத்துத் தரப்பட்டது. மகாபாரதத்தில் வரும் கர்ணன் அவரைப் பெரிதும் கவர்ந்த பாத்திரம். உண்மையான வெற்றி, தோல்வியிலிருந்துதான் கிடைக்கிறது என்பது போஸின் நம்பிக்கை. போஸ் தமது 19ஆவது வயதிலேயே பட்டப் படிப்பை முடித்துவிட்டார்; பின்னர் கேம்பிரிட்ஜ் சென்று அங்கு தமது கல்வியை 1884ஆம் ஆண்டு நிறைவு செய்தார். போஸ் தாம் ஐ.சி.எஸ். முடித்துவிட்டு அரசில் உயர் அதிகாரியாக வரவேண்டுமென்று விரும்பினார். தந்தைக்கும் அதில் விருப்பம் இருந்தாலும், மகன் உயர் படிப்பு முடித்துச் சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் பயன்படும் வகையில் ஆசிரியராகப் பணியாற்ற வேண்டுமென்று விரும்பினார். லண்டனில் இருக்கும்போது போஸ் தாவரவியல், விலங்கியல் ஆகியவற்றில் ஆர்வம் காட்டினார்; ஆனால் அவர் பி.எஸ்சி இல் அறிவியலும், மருத்துவமும் படித்து வந்தார். இந்நிலையில் லண்டனில் லார்ட் ரிலே (Lore Rele) என்ற அறிவியல் அறிஞரின் தொடர்பு போஸுக்குக் கிடைத்தது. அவருடைய தூண்டுதல் மற்றும் வழிகாட்டுதலின் துணையோடு தாவரங்களைப் பற்றி அறிந்து கொள்வதில் போஸ் பெரும் ஆர்வம் காட்டினார். கொல்கத்தா மாநிலக்கல்லூரியில் ஜகதீஷ் சந்திர போஸுக்கு இயற்பியல் துறையில் விரிவுரையாளர் வேலை கிடைத்தது; ஆனால் ஊதியத்தைப் பொறுத்தவரை ஆங்கிலேயர்களுக்குக் கொடுப்பதில் 2/3 பங்கு மட்டுமே கொடுக்கப்பட்டது. இந்தியர்கள் அறிவியல் துறையில் பின்தங்கியவர்கள், அதனால் அவர்கள் முழு ஊதியம் பெறத் தகுதியற்றவர்கள் என்று அப்போது காரணம் கூறப்பட்டது. ஆனால் போஸ் தமது அறிவுக்கூர்மையால் கல்லுரி நிர்வாகத்தினர் போற்றிப் பாராட்டும்படிப் பணியாற்றினார்; திருப்தியடைந்த கல்லூரி நிர்வாகம் போஸுக்கும் முழு ஊதியம் வழங்க ஆணையிட்டதோடு, ஏற்கனவே பணியாற்றிய காலத்திற்குத் தரவேண்டிய நிலுவைத் தொகையையும் வழங்க ஆணையிட்டது. அவ்வாறு தரப்பட்ட நிலுவைத் தொகையைக் கொண்டு போஸ் ஓர் அறிவியல் ஆய்வுக்கூடத்தை நிறுவினார்; அங்கு தாவரவியல், இயற்பியல் துறைகளில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். அடிப்படையில் இயற்பியல் அறிஞரான அவர் ரேடியோ அலைகளில் மிகுதியும் ஆய்வு நடத்தினார். மார்க்கோனிக்கு முன்னரே கம்பியில்லா ஒலிபரப்பு அமைப்பினை போஸ் கண்டுபிடித்தார்; இருப்பினும் அஃது அறிவியல் உலகினரால் கவனிக்கப் படாமல் போய்விட்டது. 22 மி.மி. முதல் 5 மி.மி. வரையான அலைநீளம் கொண்ட மின்காந்த அலைகளை (electromagnetic waves) உருவாக்கவும் அவற்றின் பகுதி-ஒளித் (quasi-optical) தன்மைகளைக் கண்டறியக்கூடியதுமான ஒரு கருவியைப் போஸ் கண்டுபிடித்தார். அனைத்து வகையான தூண்டல்களுக்குமான (stimuli) பொதுவான மின் துலங்கல்களையும் (responses) கண்டறிந்தார். மிகக் குறைந்த அலை நீளமுடைய நுண்ணலைகளை உருவாக்கும் ஓர் எந்திரத்தை இவ்வுலகில் முதன் முதலில் வடிவமைத்த பெருமை போஸ் அவர்களையே சாரும். மூலக்கூறுகளின் பண்புகளில் மேற்கொண்ட ஆய்வின் மூலம் புதியதோர் ஒளிப்படக் கோட்பாட்டை (photographic theory) அவர் உருவாக்கினார். கணிப்பொறி அறிவியலின் துவக்க கால ஆய்வாளர்களில் போஸும் அடங்குவார். உலகின் மிகச் சிறந்த அறிவியல் ஆய்வாளர்களில்/சிந்தனையாளர்களில் போஸ் அவர்களுக்கு ஓரு சிறப்பான இடம் உண்டு. போஸ் மிகச் சிறந்த இரு நூல்களை இயற்றி உலகப்புகழ் பெற்றார். உயிரினங்களின் மற்றும் உயிரற்றவைகளின் துலங்கல் தன்மை (Response in the Living and Non-Living) என்பது ஒரு நூல்; தாவரங்களின் நரம்புச் செயலமைவு (The Nervous Mechanism of Plants) என்பது மற்றொரு நூல். இவ்விரு நூல்களின் வாயிலாக வெப்பம், குளிர், ஒலி, ஒளி ஆகிய புறத்தூண்டுதல்கள் மனிதர்களையும், பிற விலங்கினங்களையும் எவ்வாறு பாதிக்கின்றனவோ அவ்வாறே தாவரங்களையும் பாதிக்கின்றன என்பதை நிரூபித்தார். மேலும் பரிசோதனை ஒன்றையும் போஸ் செய்து காட்டினார். புரோமைட் (Bromide) என்ற நச்சுத் தனிமத்தை எலி ஒன்றுக்கு ஊசி மூலம் செலுத்தப்பட்டது; தாவரம் ஒன்றுக்கும் ஊசி மூலம் செலுத்தப்பட்டது; எலி, தாவரம் ஆகிய இரண்டும் சாவின் விளிம்பில் போராடியதைக் கண்டு அறிவியல் உலகம் போஸ் அவர்களின் ஆராய்ச்சியை ஆரவாரத்துடன் கைதட்டிப் பாராட்டியது. 1915ஆம் ஆண்டு லண்டன் ராயல் கழகத்தில் போஸ் அவர்கள் “புறத்தூண்டுதல்களுக்குத் தாவரங்கள் எவ்வாறு பொறுமையுடன் நடந்து கொள்ளுகின்றன” என்பதைப் பற்றி ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினார். தாமே வடிவமைத்துத் தயாரித்த இந்தியக் கருவிகளின் துணைகொண்டு பல்வகையான செயல்முறை விளக்கங்களைச் செய்து காட்டினார். 1920ஆம் ஆண்டு லண்டன் ராயல் கழகத்தின் உயர்நிலை உறுப்பினர் பதவியைப் பெற்றதன் மூலம் போஸ் அவர்கள் இந்திய அறிவியலுக்குப் பெருமை தேடித் தந்தார். தாவரங்களும் நம்மைப் போன்றே உணவு உண்டு செறிக்கின்றன; அவைகளும் மனிதர்களைப்போல் இரவில் உறங்கி, காலையில் விழிக்கின்றன; அவையும் பிறக்கின்றன, இறக்கின்றன; அவைகட்கும் நம்மைப் போன்றே மகிழ்ச்சி, துன்பம் ஆகிய உணர்ச்சிகள் உண்டு என்ற உண்மைகளைக் கண்டறிந்தார். ஜகதீஷ் சந்திர போஸ் ஒரு சிறந்த அறிவியல் மேதை மட்டுமல்ல; கலை, இலக்கியங்களைப் பெரிதும் நேசித்தவர். நோபல் பரிசு பெற்ற இந்திய இலக்கியச் சிற்பி இரவீந்திரநாத் தாகூருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். சுவாமி விவேகானந்தரின் சிஷ்யையான சகோதரி நிவேதிதை இவரது நண்பர். கொல்கத்தாவில் போஸ் நிறுவனம் என்ற ஆய்வுக்கூடத்தை நிறுவி பல்வேறு அறிவியல் ஆராய்ச்சிகளையும் மேற்கொள்வதற்கான வசதிகளை அங்கு செய்து தந்தார். போஸின் பல்வேறு அறிவியல் சாதனைகளையும், ஆய்வுகளையும், கண்டுபிடிப்புகளையும், குறிப்பாகத் தாவர இனங்களில் அவருக்கிருந்த ஆர்வத்தையும் பாராட்டி கல்கத்தா மக்கள் கழகம் அவருக்கு 1928ஆம் ஆண்டு ஒரு பாராட்டு விழா நடத்தியது. அப்போது அவர் பின்வருமாறு கூறினார்: "“எல்லா உயிரினங்களுக்கும் உள்ள உயிர் ஒன்றே; மனித உயிரும் அத்தகையதே; எனவே அனைத்து உயிரினங்களும் பொறுமை, ஒற்றுமை, இணைந்து வாழ்தல் ஆகியவற்றைக் கடைபிடிக்க வேண்டும். இதில் மனிதர்களின் பங்கு மகத்தானது. எல்லா நாட்டு மக்களும் ஒருவர் மீது ஒருவர் பகைமை பாராட்டாமல், அவநம்பிக்கை கொள்ளாமல் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.”" இத்தகு சிறப்பு வாய்ந்த போஸ் அவர்கள் 1937ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் நாள் இயற்கையுடன் இணைந்தார். மனவுறுதி, துணிச்சல், நாட்டுப்பற்று, தன்னம்பிக்கை, பொறுமை ஆகியவைகட்கு உறைவிடமாய் விளங்கிய ஜகதீஷ் சந்திர போஸ் தாம் மேற்கொண்ட அனைத்து அறிவியல் ஆராய்ச்சிகளிலும் பெரு வெற்றியும், பெரும் புகழும் ஈட்டியதன் வாயிலாக இந்தியாவின் புகழை உலகில் மிளிரச் செய்தார் எனில் அதில் மிகையேதுமில்லை. பதினான்காவது மக்களவை இந்திய நாடாளுமன்றத்தின் பதினான்காவது மக்களவை இந்தியப் பொதுத் தேர்தல், 2004க்குப்பின் அமைக்கப்பட்டது. இத்தேர்தல் 20 ஏப்ரல் முதல் 10 மே 2004 வரை நான்கு கட்டமாக நடத்தப்பட்டது. இத்தேர்தலுக்குப்பின் வெற்றிபெற்ற கூட்டணியான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, மன்மோகன் சிங் தலைமையில் ஆட்சி அமைத்தது. இவ்வாட்சி 2009 தேர்தலை சந்திக்கும் வரை வெற்றிகரமாகத் தொடர்ந்தது. பதினைந்தாவது மக்களவை இரா. திருமுருகன் முனைவர் இரா. திருமுருகன் (மார்ச் 16, 1929 - ஜூன் 3, 2009) இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தமிழறிஞர்களில் குறிப்பிடத்தக்கவர். இயற்றமிழும் இசைத்தமிழும் வல்ல அறிஞர். குழல் இசைப்பதிலும், வாய்ப்பாட்டிலும் தேர்ந்தவர். புதுச்சேரி அரசுப் பள்ளியில் பல காலம் ஆசிரியராக இருந்து தமிழ்ப்பணியாற்றியவர். தமிழக்கணத்திலும் இசைத்தமிழிலும் ஆர்வமுடைய இவர் இலக்கண ஆய்வு தொடர்பாக 21 நூல்களையும் இலக்கிய ஆய்வு தொடர்பாக 3 நூல்களையும் இசைத்தமிழ் தொடர்பாக 4 நூல்களையும் பாடல் நூல்கள் நான்கினையும் இடப்பெயராய்வு நூல் ஒன்றையும் 17 தமிழ்ப்பாடநூல்களையும் இயற்றியிருக்கிறார். திருமுருகனார் புதுச்சேரி மாநிலத்தில் கூனிச்சம்பட்டு என்னும் ஊரில் அ. இராசு, இரா.அரங்கநாயகி ஆகியோருக்கு மகனாக 1929 மார்ச் 16ஆம் நாள் பிறந்தார். இயற்பெயர் சுப்பிரமணியன் என்பதாகும். தனித்தமிழ் ஆர்வம் காரணமாக தம் பெயரைத் திருமுருகன் என மாற்றிக்கொண்டார். இவர் பண்டிதம் (1951), கருநாடக இசை - குழல் மேனிலை (1958), பிரெஞ்சு மொழிப்பட்டயம் (1973), கலைமுதுவர், கல்வியியல் முதுவர், மொழியியல் சான்றிதழ் (1983), முனைவர் (1990) உள்ளிட்ட பல பட்டங்கள் சான்றுகளைப் பெற்றவர். இரா. திருமுருகன் பின்வரும் பொறுப்புகளை வகித்தார். இரா. திருமுருகன் தனது கல்விப்பட்டங்களுக்கு அப்பால் பின்வரும் சிறப்புப் பட்டங்களைப் பெற்றிருக்கிறார். இவர் பின்வரும் அமைப்புகளை நிறுவியுள்ளார்: முனைவர் இரா. திருமுருகனார் ஜூன் 3, 2009 அதிகாலை 1 மணிக்குப் புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார். இந்தியாவின் நிதியமைச்சர் இந்தியாவின் நிதி அமைச்சர் ("Minister of Finance of India") இந்திய அரசின் நிதி அமைச்சின் தலைவர் ஆவார். அமைச்சரவையின் மூத்த அலுவலகம் ஒன்றின் தலைவரான நிதி அமைச்சர் அரசின் நிதிக்கொள்கைக்குப் பொறுப்பானவர் ஆவார். அத்துடன் இந்தியாவின் வரவு செலவுத் திட்டம் மற்றும் பொது வரவு செலவுத் திட்டங்களின் வரைவாளரும் ஆவார். வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக, பல்வேறு அமைச்சரவைகளுக்கும், அரசு நிறுவனங்களுக்குமான நிதி ஒதுக்கீடுகளை இவரே தீர்மானிக்கிறார். இவருக்கு உதவியாக நிதி இராசாங்க அமைச்சர், துணை நிதி அமைச்சர் ஆகியோர் செயல்படுகின்றனர். விடுதலை பெற்ற இந்தியாவின் முதலாவது நிதி அமைச்சராக ஆர். கே. சண்முகம் செட்டியார் இருந்துள்ளார். இவரே இந்தியாவின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். தற்பொழுதைய நிதியமைச்சராக அருண் ஜெட்லி பொறுப்பில் உள்ளார். மேல் கூறப்பட்ட ஐவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய நடுவண்அரசின் நிதிஅமைச்சராவர். இந்தியாவின் உள்துறை அமைச்சர் உள்துறை அமைச்சர் -(உள்விவகார அமைச்சர்) இந்தியாவின் உள்துறை அமைச்சகத்தின்ஆய அமைச்சராவார். பிரதமருக்கு அடுத்த நிலையில் அதிக முக்கியத்துவம் மற்றும் பொறுப்புகள் வாய்ந்த அமைச்சர் பொறுப்பாகும். மாநில அளவிலும் இவ்வமைச்சகங்கள் பொறுப்பு வாயந்தனவாக கருதப்படுகின்றன. உள்நாட்டு பாதுகாப்புக்கு இவ்வமைச்சகங்களே பொறுப்பு ஏற்கின்றன. முன்னால் மற்றும் இந்நாள் அமைச்சர்கள் உள்துறை அமைச்சரின் முக்கிய பொறுப்புகளாவன; யஷ்வந்த் சின்கா யஷ்வந்த் சின்கா (Yashwant Sinha) (பிறப்பு: நவம்பர் 6, 1937, பாட்னா) இந்திய அரசியல்வாதியும் முன்னாள் இந்திய நிதியமைச்சராக 1990 முதல் 1991 வரை பிரதமர் சந்திரசேகர் அமைச்சரவையிலும், மார்ச் 1998 முதல் சூலை 2002 வரை பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையிலும் பொறுப்பு வகித்தவர். மேலும் வெளியுறவு அமைச்சர் ஆக (சூலை 2002 - மே 2004) அடல் பிகாரி வாஜ்பாய் இன் அமைச்சரவையில் பொறுப்பு வகித்தார். தற்பொழுது பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கின்றார். இவர் இந்திய ஆட்சிப் பணியில் 1960 முதல் 1984 வரை இருந்து விருப்பஓய்வு பெற்று அரசியலுக்கு வந்தார். இவர் இந்திய நாடாளுமன்றத்திற்கு மாநிலங்களவை உறுப்பினராக 1989 மற்றும் 2004 ல் இருமுறையும், மக்களவை உறுப்பினராக சார்க்கண்ட் மாநிலம் ஹஜாரியாபாக் மக்களவைத் தொகுதியிலிருந்து 1998,1999 மற்றும் 2009 ல் மூன்று முறையும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெபம் ஜெபம் செய்வது என்பது மந்திரத்தை திரும்பத் திரும்ப உச்சரிப்பதாகும். நமக்குப் பிடித்த ஏதாவது ஒரு தெய்வத்தின் பெயரை மந்திரமாக தேர்ந்த்தெடுத்துக்கொள்ளலாம். கை விரல் அல்லது ஏதாவது ஒரு மாலையின் உதவியுடன் ஜெபம் செய்யலாம். ஜெபம் செய்வதால் உடல் நலம் மன நலம் ஆகியன கிடைக்கின்றன. டென்சன் குறைகின்றன. முதன் முதலில் ஆரம்பிப்பவர்கள் சிறிது சிறிதாக செய்து வருவது நல்லது. யோகா தியானம் போன்றவற்றைச் செய்ய நேரம் காலம் ஆகியன கவனித்துதான் செய்ய வேண்டும் ஆனால் ஜெபம் செய்ய எந்த விதக் கட்டுப்பாடும் தேவையில்லை. இதை தாங்களே அனுபவத்தில் உணரலாம். ஜெபம் செய்பவர்களின் நம்பிக்கை ஜெபத்தினால் பலன்கள் கிடைப்பது எ.கா: நோயாளிகள் குணமடைவது, பிரயாண நலம். ஜஸ்வந்த் சிங் ஜஸ்வந்த் சிங் (Jaswant Singh) (பிறப்பு: ஜனவரி 3 1938) இந்திய அரசியல்வாதியும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான இவர் டார்ஜிலிங் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவராவார். இராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவரான இவர் மயோ கல்லூரி பழைய மாணவன் மற்றும் கதக்வாலாவில் உள்ள தேசிய பாதுகாப்பு பயிற்சி பள்ளியில் கல்வி பயின்றவர். இந்திய இராணுவத்தில் அலுவலராக 1960 களில் பணியாற்றியவர். பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இன் குறைந்த கால ஆட்சி காலமான மே 16, 1996 முதல் ஜூன் 1, 1996 வரையுள்ள இடைப்பட்ட காலத்தில், அவரது அமைச்சரவையில் ஆய அமைச்சராக இந்திய நிதியமைச்சர் பொறுப்பிலும், அதன் பின் அமைந்த வாஜ்பாயின் அமைச்சரவையில் இரண்டு வருடங்களுக்குப்பின் வெளியுறவுத்துறை அமைச்சராக டிசம்பர் 5, 1998 முதல் ஜூலை 1, 2002 வரையுள்ள காலத்தில் பொறுப்பிலுருந்தார். 2002 க்கு பிறகு மீண்டும் நிதியமைச்சராக பொறுப்பேற்று அக்கட்சி தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு பதவியிறங்கும் காலமான 2004 வரை பொறுப்பிலிருந்தார். இவருடைய சாத்வீகமான அரசியல் போக்கு அனைவரையும் கவர்ந்ததாகும். பாரதீய ஜனதா கட்சி பெரும்பாலும் வலதுசாரி தேசியவாதிகள் அமைப்பு என்று வர்ணிக்கப்பட்டாலும் இவர் அவைகளிலிருந்து மாறுபட்டு சுதந்திரமான மக்களாட்சியை (ஜனநாயகத்தை) வலியுறுத்துபவராக விளங்கியதின் விளைவாக சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்ற விருதினை 2001 இல் பெற்றார். இடாய்ச்சு பெயர்ச்சொற்குறி இடாய்ச்சு மொழியில் பயன்படுத்தப்படும் பெயர்ச்சொற்குறிகளை இடாய்ச்சு பெயர்ச்சொற்குறி என்னும் இக்கட்டுரையில் காண்போம். இடாய்ச்சு பெயர்ச்சொற்குறிகள், எண், வேற்றுமை, பால் போன்றவைகளை ஒன்றி வரும். அதை, அவைகளின் உருபை (உருபு) கொண்டு அறியலாம். இடாய்ச்சு மொழியில் இரண்டு வகையான பெயர்ச்சொற்குறிகள் உள்ளன. அவை, நிச்சய பெயர்ச்சொற்குறி உருபு நிச்சய பெயர்ச்சொற்குறி நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறி உருபு நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறி எதிர்மறை நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறி குறிப்பு: நிச்சய பெயர்ச்சொற்குறியின் உருபும் நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறியின் உருபும் முதலாம் வேற்றுமை மற்றும் இரண்டாம் வேற்றுமைகளின் ஒன்றன் பாலில் மட்டுமே மாறுபடுகின்றன. நிச்சய உடைமை (Definite possessive) [of the-அதனுடைய] வினா உடைமை (Interrogative possessive) [of what-எதனுடைய] எசுப்பானிய பெயர்ச்சொற்குறி எசுப்பானிய பெயர்ச்சொற்குறி என்பது, எசுப்பானிய மொழியில் பயன்படுத்தப்படும் பெயர்ச்சொற்குறி ஆகும். நிச்சய பெயர்ச்சொற்குறி நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறி சுறுக்கப்பெற்ற பெயர்ச்சொற்குறிகள் சில பெயர்ச்சொற்குறிகள் குறிப்பிட்ட சில முன்விபக்திகளுடன் இணைவதுண்டு. அப்பெயர்ச்சொற்குறிகளை சுறுக்கப்பெற்ற பெயர்ச்சொற்குறி என்பர். எசுப்பானிய மொழியில் இரண்டு முன்விபக்திகள் அவ்வாறு இணைகின்றன. அவை, de (from, of/-இலிரிந்து, -உடைய)) மற்றும் a (to/வரை, -இற்கு) ஆகும். போர்த்துகீசிய பெயர்ச்சொற்குறி போர்த்துகீசிய பெயர்ச்சொற்குறி எனப்படுவது, போர்த்துகீசிய மொழியில் பயன்படுத்தப்படும் பெயர்ச்சொற்குறி ஆகும். போர்த்துகீசிய மொழியிலும் இரண்டு வகையான பெயர்ச்சொற்குறிகளே உள்ளன. அவை, நிச்சய பெயர்ச்சொற்குறி நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறி சுறுக்கப்பெற்ற பெயர்ச்சொற்குறிகள் சில பெயர்ச்சொற்குறிகள் குறிப்பிட்ட சில முன்விபக்திகளுடன் இணைவதுண்டு. அப்பெயர்ச்சொற்குறிகளை சுறுக்கப்பெற்ற பெயர்ச்சொற்குறி என்பர். அவைகளுள் சிலவற்றை கீழ் கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் காணலாம். வலது சாரி அரசியல் வலது சாரி அரசியல் (right-wing, political right, rightist, the right) வலது சாரி அரசியலின் வலது வலதுசாரிகள் என்று அரசியலில் கூறப்படும் அமைப்பினர் அரசியலில் அவர்கள் நோக்கும் பார்வையினை அல்லது வழிவழியாக (மரபு வழியாக) நேர்நோக்கு முகமாக நிலைநிறுத்தும் அரசியல் கோட்பாட்டினை கொண்டு செயற்படுபவர்களையும், சமய கோட்பாட்டினை அதன் குருமார்கள் வழிநின்று செயற்படும் அரசியல்வாதிகளையும் அழைக்கப் பயன்படும் சொல்லாகும். வலது சாரி, வலது சார்புடையவர் என்ற சொல் பிரஞ்சு புரட்சியின் பொழுது அறிமுகப்படுத்தப்பட்டதாகும். அன்றைய காலகட்டத்தில் நாடாளுமன்றத்தில் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகள் அரசரின் முடியாட்சி மற்றும் உயர்குல மரபினரின் கூட்டம் மற்றும் கிருத்துவ ஆலயங்களில் பக்கச்சார்புடையவர்களாக கருதி அவ்விடங்களின் வலதுபுறம் ஒதுக்கப்பட்டது. ராணி துர்காவதி ராணி துர்காவதி (அக்டோபர் 5, 1524 - ஜூன் 24, 1564) அன்றைய கோண்ட்வானா தேசத்தை (இன்றைய மத்தியப் பிரதேசம்) ஆண்டவர். கோண்ட்வானாவை ஆண்ட தல்பத் ஷா 1548 ஆம் வருடம் இறந்த பிறகு, அவரது சிறு குழந்தை பீர் நாராயண் ஆட்சிக்கு அமர்த்தப்பட்டார். ராணி துர்காவதி, தனது மகனுக்குத் துணையாக 1548 முதல் 1564 வரை பதினாறு வருடங்கள் மிகவும் சாமர்த்தியத்துடன் ஆட்சியை நடத்தினார். ஆனால், 1564 ஆம் வருடம் முகலாய மன்னர் அக்பரின் படையெடுப்பிற்குப் பலியாகி விட்டது கோண்ட்வானா நாடு. அக்பர், தனது தளபதி அஸஃப் கானை கோண்ட்வானா நாட்டுக்கு அதிபதியாக்கினார். படையெடுத்து வரும் முகலாய வீரர்களுக்கு எதிராக ராணி துர்காவதி தனது படை வீரர்களை வழி நடத்திச் சென்றார். எத்தனையோ சாதுரியமாகப் போர் புரிந்தும், தனது தோல்வி நிச்சயம் என்பது ராணி துர்காவதிக்குத் தெரிய வந்தது. எதிரியின் கையால் சாவதைவிட தன் உயிரை மாய்த்துக் கொள்வதே மேல் என்ற முடிவுக்கு வந்த ராணி துர்காவதி, ஒரு கத்தியால் தன்னைத் தானே குத்திக் கொண்டு இறந்தார்.. ராணி அவந்திபாய் ராணி அவந்திபாய் (இறப்பு : மார்ச் 20, 1858 ) ராம்கட் நாட்டின் ராஜா விக்ரமாதித்ய சிங், தனது மனைவி அவந்தி பாய் அவர்களை நிர்கதியாக விட்டுவிட்டு இறந்தார். இவர் மத்தியபிரதேசத்தில் இளவரசியாக இருந்தார் லோதீ என்னும் வகுப்பை சேர்ந்தவர். ஆட்சியில் அடுத்து அமர்வதற்கு ஒரு வாரிசும் இல்லாத நிலையில், ஆங்கிலேய அரசு அவர்களது நாட்டை சட்டத்தின் பாதுகாப்பின் கீழ் வைத்தது. தனது நாட்டை ஆங்கிலேயர்களிடமிருந்து மீட்க உறுதி பூண்டார் அவந்திபாய். நான்காயிரம் வீரர்களைத் திரட்டிக் கொண்டு 1857 ஆம் வருடம், ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் படையெடுத்துப் புறப்பட்டார் அவந்திபாய். மிகவும் தைரியமாகப் போர் புரிந்தும் கூட ஆங்கிலேயர்களின் பெரும் படைக்கு முன் அவந்திபாயால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. தனது தோல்வியைத் தெரிந்து கொண்ட ராணி அவந்திபாய், 1858 ஆம் வருடம், மார்ச் மாதம் 20 ஆம் தேதி,தனது வாளைக் கொண்டு தன்னைத் தானே மாய்த்துக் கொண்டு வீரமரணமடைந்தார். பிரெஞ்சு பெயர்ச்சொற்குறி பிரெஞ்சு பெயர்ச்சொற்குறி எனப்படுவது, பிரெஞ்சு மொழியில் பயன்படுத்தப்படும் பெயர்ச்சொற்குறி ஆகும். பிரெஞ்சு மொழியில் மூன்று வகையான பெயர்ச்சொற்குறிகள் உள்ளன. அவை, ௧. நிச்சய பெயர்ச்சொற்குறி ௨. நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறி ௩. பலனுள்-ஒன்று பெயர்ச்சொற்குறி நிச்சய பெயர்ச்சொற்குறி (L'article défini) நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறி (L'article indéfini) பலனுள்-ஒன்று பெயர்ச்சொற்குறி (L'article partitif) சுறுக்கப்பெற்ற பெயர்ச்சொற்குறிகள் (L'article contracte) சில பெயர்ச்சொற்குறிகள் குறிப்பிட்ட சில முன்விபக்திகளுடன் இணைவதுண்டு. அப்பெயர்ச்சொற்குறிகளை சுறுக்கப்பெற்ற பெயர்ச்சொற்குறி என்பர். பிரெஞ்சு மொழியிலுள்ள "de" மற்றும் "á" என்னும் இரண்டு முன்விபக்திகள் இவ்வாறு பெயர்ச்சொற்குறிகளுடன் சேர்த்து சுருக்கப்பெருகின்றன. குறிப்பு: மேற்கண்ட பிரெஞ்சு பெயர்ச்சொற்குறி களின் உச்சரிப்பு தமிழில் அதன் அருகில் கொடுக்கப்பட்டுள்ளது. ஜல்காரிபாய் ஜல்காரிபாய் ("Jhalkaribai", ஹிந்தி: "झलकारीबाई", நவம்பர் 22, 1830-1890) 1857 இந்தியக் கிளர்ச்சியின்போது ஜான்சிப் போரில் முக்கிய பங்கு வகித்த ஓர் இந்தியச் சுதந்திரப் போராட்ட வீராங்கனை ஆவார். இவர் ஜான்சியின் ராணி லட்சுமிபாயினுடைய பெண்கள் படையில் சேர்ந்திருந்தார். வறிய குடும்பமொன்றில் பிறந்த ஜல்காரிபாய், ராணி லட்சுமிபாயின் பெண்கள் படையில் ஒரு சாதாரண படை வீராங்கனையாக இணைந்தாலும் பின்னர், மிக முக்கியமான முடிவுகளை எடுப்பதில் ராணி லட்சுமிபாயுடன் பங்குபற்றவும் அவருக்கு அறிவுரை கூறவும் கூடிய நிலைக்கு உயர்ந்தார். இந்தியக் கிளர்ச்சியின்போது ஜான்சிப் போரின் உச்சகட்டத்திலே, ஜல்காரிபாய் ஆங்கிலேய அரசை ஏமாற்றும் நோக்கத்தில் ராணி லட்சுமிபாயைப் போல் உடை அணிந்து கொண்டு படைக்குத் தலைமை தாங்கி, ராணி லட்சுமிபாய் கோட்டையை விட்டுப் பாதுகாப்பாக வெளியே செல்வதற்கு உதவி செய்தார். ஜல்காரிபாயின் வீர வரலாறு பல நூற்றாண்டுகள் கடந்த பின்னரும் கூடப் புந்தேல்கண்டில் நினைவுகூரப்பட்டு வருகின்றது. புந்தேல்கண்ட் பகுதியைச் சேர்ந்தவர்கள் பாடும் நாட்டுப்புறப் பாடல்கள் எல்லாம் ஜல்காரிபாயின் வாழ்க்கை வரலாற்றையும் பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் படையை எதிர்த்துப் போரிட்ட வீரத்தையும் சொல்கின்றன. விவசாயிகளான சடோபா சிங்-ஜமுனா தேவி தம்பதியினருக்குப் பிறந்தவர் ஜல்காரிபாய். இவர் 1830ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் திகதி ஜான்சிக்கு அருகிலுள்ள போஜ்லா எனும் கிராமத்தில் பிறந்தார். சிறு வயதிலேயே இவரின் தாயான ஜமுனா தேவி இறந்து போனார். அதன் பின்னர், சடோபா சிங் இவரை ஓர் ஆணைப் போல் வளர்த்தார். ஜல்காரிபாய் குதிரையேற்றத்தையும் ஆயுதங்களைக் கையாளும் விதத்தையும் அறிந்து கொண்டார். அக்கால சமூக நிலைமையின்படி, ஜல்காரிபாய் முறையான கல்வியைப் பெறவில்லை. ஆயினும் விரைவிலேயே நன்றாகப் பயிற்றப்பட்ட வீராங்கனையாக வந்தார். காட்டிலே ஒரு புலியால் தாக்கப்பட்டப் போது, தனது கோடரியைப் பயன்படுத்திப் புலியைக் கொன்றதிலிருந்து புந்தேல்கண்டில் ஜல்காரிபாயின் புகழ் பரவத் தொடங்கியது. இன்னெர்ரு சந்தர்ப்பத்தில் செல்வர் ஒருவரின் வீட்டில் கொள்ளையிட வந்த ஆயததாரிகளிடம் சவால் விட்டு, அவர்களைப் பின்வாங்கச் செய்தார். ஜல்காரிபாய், தோற்றத்தில் ராணி லட்சுமிபாய் போலவே இருந்தார். இச்சந்தர்ப்பத்திலே, ராணி லட்சுமிபாயின் பீரங்கிப் படையைச் சேர்ந்த பூரண் சிங்கை ஜல்காரிபாய் திருமணம் செய்து கொண்டார். பூரண் சிங், ஜல்காரிபாயை ராணி லட்சுமிபாயிடம் அறிமுகம் செய்து வைத்தார். இதன் பின்னர், ஜல்காரிபாய் ராணி லட்சுமிபாயின் பெண்கள் படையில் இணைந்து கொண்டார். ஜான்சியின் படையில் இணைந்ததிலிருந்து போர் முறைகளின் அனைத்துப் பிரிவுகளிலும் மேலும் நிபுணத்துவத்தைப் பெற்றுக் கொண்டார் ஜல்காரிபாய். துப்பாக்கி சுடுவதிலும் பீரங்கிகளை இயக்குவதிலும் தனது திறமையை வளர்த்துக் கொண்டார். பார்ப்பதற்குத் தன்னைப் போல் இருப்பதால் ராணி லட்சுமிபாய்க்கு ஜல்காரிபாயின் மேல் ஒரு கரிசனம் உண்டாகியது. ராணி லட்சுமிபாய்க்கு மிகவும் பிடித்த போர் வீராங்கனையாக விளங்கினார் ஜல்காரிபாய். 1857-58ஆம் வருடங்களில் ஜான்சிக் கோட்டையின் மீது ஆங்கிலேய அரசு பல முறை படை எடுத்தது. ஒவ்வொரு முறையும் ராணி லட்சுமிபாய் அந்தப் படையெடுப்புக்களைச் சாமர்த்தியமாக எதிர்கொண்டு முறியடித்தார். 1857 இந்தியக் கிளர்ச்சியின்போது, 1858ஆம் ஆண்டு ஏப்பிரல் 3ஆம் திகதி ஹீ ரோஸ் பாரிய படையுடன் வந்து ஜான்சியை முற்றுகையிட்டார். ராணி லட்சுமிபாய் பாரிய படையை எதிர்த்துப் போர் புரியக்கூடிய நிலையில் இருக்கவில்லை. அவர் கல்பியிலுள்ள ஏனைய புரட்சிப் படைகளுடன் இணைவதாகவே திட்டம் போட்டிருந்தார். இதனையடுத்து, ஜல்காரிபாய் தான் ஜான்சி ராணி போல் முன்னின்று போர் புரிவதாகவும் அச்சந்தர்ப்பத்தில் ராணி லட்சுமிபாய் கோட்டையை விட்டுத் தப்பிச் செல்ல முடியும் என்று ஒரு வேண்டுகோளை ராணி லட்சுமிபாயிடம் முன்வைத்தார். ஜல்காரி பாயும் பெண் படையைச் சேர்ந்த சிலரும் ராணி லட்சுமிபாயை மிகுந்த பிரயாசைக்குப் பிறகு தப்பிச் செல்ல வைத்தார்கள். ஏப்பிரல் 4ஆம் திகதி இரவில் ராணி லட்சுமிபாய் கோட்டையிலிருந்து தப்பித்துக் கல்பிக்கு விரைந்து சென்றார். அதே சமயத்தில், ஜல்காரிபாய் ராணி லட்சுமிபாயைப் போல் உடை அணிந்து கொண்டு, படைக்குத் தலைமை தாங்கியபடி ஹீ ரோசின் முகாமுக்குச் சென்றார். ஜல்காரிபாய் மிகுந்த பராக்கிரமத்துடன் ஆங்கிலேயப் படையுடன் சண்டையிட்டார். ஆனால், கடைசியில் அவர்களிடம் பிடிபட்டார். ஆங்கிலேய அதிகாரிகள், தாம் ராணி லட்சுமிபாயை உயிருடன் பிடித்ததாக எண்ணி ஜல்காரிபாயிடம் அவரை என்ன செய்ய வேண்டும் என்று கேட்டனர். ஜல்காரிபாய் துணிச்சலுடன் "தூக்கிலிடுங்கள்!" என்று கூறினார். ஆனாலும் ஆங்கிலேயர்கள் உண்மையைச் சிறிது தாமதமாக அறிந்து கொண்டனர். ஆனால், அதற்குள் ராணி லட்சுமிபாய் நீண்ட தூரம் சென்றிருந்தார். ஆங்கிலேய அதிகாரிக்கு ஜல்காரிபாயின் வீரமும் எசமான விச்வாசமும் மிகவும் பிடித்துப் போயிற்று. ஆகவே, அவர் ஜல்காரிபாயை மிகுந்த மரியாதையாக நடத்தி விடுதலையும் செய்தார். ஜல்காரிபாயின் பிற்கால வாழ்க்கை பற்றிய மூலாதாரங்கள் சிலவே கிடைத்துள்ளன. ஜான்சிப் போரில் ஜல்காரிபாய் இறந்ததாகச் சில ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. ஆனாலும் சில ஆதாரங்கள் ஜல்காரிபாய் ரோசால் விடுதலை செய்யப்பட்டு 1890 வரை வாழ்ந்ததாகக் குறிப்பிடுகின்றன. ராணி சென்னம்மா ராணி சென்னம்மா இந்திய நாட்டில் 1778 ஆம் வருடம் பிறந்தார். தனது சிறு வயதிலேயே சென்னம்மா குதிரையேற்றம், வாள் வீச்சு, வில்வித்தை போன்றவற்றில் தேர்ச்சி பெற்றார். கர்நாடக மாநிலத்தில், பெல்காம் என்ற ராஜ்ஜியத்தில், கித்தூர் என்ற ஊரின் அரசரான முல்லசர்ஜா என்பவருடன் சென்னம்மாவுக்குத் திருமணம் நடந்தது. அவரது கணவர் 1816இல் இறந்து விட்டார். அவர்களது ஒரே மகனும் 1824இல் இறந்து விடவே, சென்னம்மா சிவலிங்கப்பா என்பவரைத் தன் மகனாக தத்து எடுத்துக் கொண்டு, அவருக்கே முடிசூட்டினார். ஆங்கிலேயர்களுக்கு இது பிடிக்கவில்லை. ஆகவே, அவர்கள் சிவலிங்கப்பாவை நாடு கடத்த ஆணையிட்டார்கள். ராணி சென்னம்மா இந்த ஆணையை மதிக்கவில்லை. ஒரு மிகப்பெரிய போர் மூண்டது. ஆங்கிலேயர்களை மிகவும் துணிச்சலுடனும், தைரியத்துடனும், பெரும் ஆற்றலுடனும் எதிர்த்துப் போரிட்டாள், சென்னம்மா. ஆனால், அவர்களை எதிர்த்து அதிக நேரம் தாக்குப் பிடிக்க முடியாமல், அவர்களால் சிறைப்பிடிக்கப்பட்டு பைல்ஹோங்கல் கோட்டையில் கைதியாக வைக்கப்பட்டாள். அங்கு 1829 ஆம் வருடம், பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி சென்னம்மாவின் மரணம் நேர்ந்தது. ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டு வீரமரணம் அடைந்த சென்னம்மா கர்நாடக மாநிலத்தில் ஒரு பெரும் வீராங்கனையாக இன்றும் போற்றப் படுகிறார். தாதாபாய் நௌரோஜி தாதாபாய் நௌரோஜி (செப்டம்பர் 4, 1825 – ஜூன் 30, 1917) இந்தியாவின் அரசியல் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். 1886, 1893, 1906 ஆகிய காலக் கட்டங்களில் இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகச் செயல்பட்டார். 1892 முதல் 1895 வரை ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவரது "பிரிட்டிஷ் கொடுங்கோல் ஆட்சியும், இந்தியாவின் வறுமையும்" (Poverty and Un-British Rule in India) என்கிற நூல் பிரித்தானிய அரசின் கொடுங்கோன்மையைப் பற்றிய உண்மைகளை உலகிற்கு உணர்த்தியது. தாதாபாய் நௌரோஜியின் "பிரிட்டிஷ் கொடுங்கோல் ஆட்சியும், இந்தியாவின் வறுமையும்" (Poverty and Un British Rule in India) என்ற நூல் விளக்கும் கருத்துக்கள் பெருந்தலைவர்களாகப் போற்றப்பட்ட பால கங்காதர திலகர், காந்தி உட்பட முன்னணித் தலைவர்கள் பலர் தங்களுக்கு வழிகாட்டியாக தாதாபாய் நௌரோஜியை குறிப்பிட்டுள்ளனர். காரணம், தாதாபாய் நௌரோஜியின் பொருளாதாரக் கருத்துகள் இன்றளவும் எண்ணிப் போற்றுகின்ற அளவிற்கு மிகவும் ஆழமான, அறிவு செறிந்த அணுகுமுறைகளைக் கொண்ட கருத்துகளாகும். இந்தியாவின் வள ஆதாரங்களையும், வரிவிதிப்பு, கடன் போன்ற முக்கிய நிதியியல் ஆதாரங்களையும், வெள்ளையர்கள் கொள்ளை கொண்டதைப் புள்ளியியல் ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டினார் தாதாபாய். 1870 ஆம் ஆண்டு இந்தியாவின் தலா வருமானத்தைக் கணக்கிட்டு ரூ.20தான் என்று சுட்டினார். இந்தியாவிற்குள் இருவிதமான பொருளாதார அமைப்புகள் இயங்கி வருவதாகக் குறிப்பிட்டார். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், இராணுவத்தினர், முதலாளிகள், வணிகர்கள் ஆகியோர் தங்களுடைய மூலதனம், ஊதிய வருமானம், வரி வருவாய், இலாபம், வட்டி, ஓய்வூதியத் தொகை ஆகியவற்றை இங்கிலாந்திற்கு எடுத்துச் சென்று செல்வத்தைக் குவிக்கிறார்கள் என்றும் கூறினார். இந்தியாவின் பொருளாதார வள ஆதாரங்கள் சுரண்டப்படுகின்றன என்று முதன் முதலில் பட்டியலிட்டார். இந்தியாவின் பொருளாதாரத்தின் மற்றொரு பிரிவில் ஏழைகள், விவசாயிகள் என்று சுரண்டப்பட்ட பெரும்பான்மை மக்கள் பெரும் துன்பத்திலும், வறுமையிலும் வாழ்கிறார்கள் என்று குறிப்பிட்டார். காங்கிரஸ் பேரியக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய பெருந்தலைவர் பால கங்காதர திலகர், தாதாபாய்தான் தனக்குத் தலைவர் என்றும் வழிகாட்டி என்றும் குறிப்பிட்டார். தாதாபாய் நௌரோஜி காலத்திலிருந்து நேரு காலம் வரை காங்கிரஸ் பேரியக்கத்தில் தீவிரவாத, மிதவாத மற்றும் பொதுவுடைமை இயக்கத் தலைவர்கள் ஈடுபட்டுப் பல்வேறு மாறுபட்ட கொள்கை, அணுகுமுறை வேறுபாடுகளுக்கு இடையிலும் இந்தியா விடுதலை அடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு பல்வேறு தியாகங்களைப் புரிந்தனர். நீண்ட இந்திய விடுதலைப் போராட்டத்தின் விளைவாகத்தான் இந்தியாவின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அந்நிய நாடுகளின் கட்டுப்பாடுகளுக்கு உட்படாத ஒரு சுயசார்பான பொருளாதாரம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்து அனைவர் மத்தியிலும் உருவாயிற்று. தாதாபாய் நௌரோஜி 1825- ஆம் ஆண்டு செப்டம்பர் 4-ஆம் நாள் மும்பையில் பார்சி குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தையார் நௌரோஜி பலஞ்சி டோர்ஜி ஆவார். அவர் சொராஷ்டிர சமய பூஜாரி ஆவார். இவர்கள் பார்சி இனத்தைச் சேர்ந்தவர்கள். அவரது தாயார் மேனக் பாய். அவரது இளம் வயதிலேயே தந்தை இறந்துவிட்டதால் அவரை அவரது தாயார் வளர்த்தார். அவரது 11-ஆம் வயதில் அவருக்கு குல்பாய் என்ற சிறுமியுடன் திருமணம் செய்து வைத்தனர். அவர் மும்பை எல்பின்ஸ்டன் கல்வி நிலையத்தில் தனது படிப்பை முடித்தார். அவர் தனது 25வயதில் 1850-ல் எல்பின்ஸ்டன் கல்லூரியில் கணிதம் மற்றும் இயற்கைத் தத்துவ உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். 1851-ல் அவர் ஜொராஸ்ற்றியன் மதத்தைப் புனிதப்படுத்த ஒரு சபையை ஏற்படுத்தினார். 1854-ல் Truth Teller என்ற மாதமிருமுறை இதழையும் ஆரம்பித்தார். மும்பையில் ஞானப்பிரச்சார சபை, அறிவியல் மற்றும் இலக்கிய சங்கம், பார்ஸி உடற்பயிற்சிப் பள்ளி, விதவையர் சங்கம் போன்றவற்றை ஏற்படுத்தினார். 1855-ல் அவர் பிரிட்டனில் ஆரம்பிக்கப்பட்ட முதல் இந்தியக் கம்பனியான காமா&கோவின் பங்குதாரராக லண்டன் சென்றார். மூன்று ஆண்டுகள் கழித்து அந்த கம்பெனியைவிட்டு விலகினார். பின்னர் நௌரோஜி&கோ என்ற சொந்தக் கம்பெனி துவக்கினார். லண்டன் பல்கலைக்கழகத்தில் குஜராத்தி பேராசிரியராகப் பணிபுரிந்தார். 1866-ல் லண்டனில் கிழக்கு இந்திய சங்கம் தோற்றுவித்தார். அதில் இந்தியாவைச் சேர்ந்த உயர் உத்தியோகஸ்தர்கள் உறுப்பினர்களாக இருந்தனர். அவர் ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் இந்தியர்களின் துயரத்தை லண்டனில் வெளிப்படுத்தினார். 1873-ல் பரோடா அரசரின் திவானாகப் பொறுப்பேற்றார். பின்னர் அந்தப் பதவியில் இருந்து விலகி மீண்டும் லண்டன் சென்றார். கல்கத்தாவில் இந்திய தேசிய காங்கிரஸின் முன்னோடியான இந்திய தேசிய சங்கத்தை சுரேந்திர நாத் பானர்ஜியுடன் சேர்ந்துஉருவாக்கினார். தாதாபாய் நௌரோஜி, 1885-ல் ஆலன் ஆக்டவியன் ஹியூம் மற்றும் உமேஷ் சந்திர பானர்ஜியுடன் சேர்ந்துஇந்திய தேசிய காங்கிரஸை உருவாக்கினார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியை உருவாக்கினர். 1886, 1893, 1906 ஆகிய மூன்று ஆண்டுகளில் நடத்தப்பட்ட கூட்டங்களில் இந்திய தேசிய காங்கிரசிற்கு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1885-ல் இருந்து 1888 வரை மும்பை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். 1892-ல் பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தலில் ஃபின்ஸ்புரியில் இருந்து லிபரல் கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஆசியர் இவரே. 1895 வரை உறுப்பினராக இருந்தார். அவர் கிறிஸ்தவராக இல்லாததால் பைபிள் மீது சத்தியப் பிரமாணம் செய்யவில்லை. ஜொராஸ்ற்றியன் மதத்தினரின் வேதமான 'அவெஸ்டா' என்ற நூலின் மீது சத்தியப் பிரமாணம் செய்ய அனுமதிக்கப்பட்டார். அவர் பிரிட்டன் பாராளுமன்றத்தில் இந்தியர்களின் துயரத்தை வெளிப்படுத்தினார். அவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கும் பணியாற்றுவதற்கும் முகம்மது அலி ஜின்னா உதவினார். முகம்மது அலி ஜின்னா பின்னர் இந்தியப் பிரிவினைக்குக் காரணமாக இருந்தார். 1907-ல் காங்கிரஸ் மிதவாதிகள், அமிதவாதிகள் என்று இரண்டு பிரிவாகப் பிரிந்தபோது மிதவாதிகள் பக்கம் இருந்தார். அன்னிபெசண்ட் அம்மையாரின் ஹோம் ரூல் இயக்கத்தில் ஆர்வமுடையவராக இருந்தார். தாதாபாய் நௌரோஜி 1917- ஆம் ஆண்டு ஜூன் 30- ஆம் நாள் தனது 92-ஆவது வயதில் மும்பையில் இப்பூவுலக வாழ்வை நீத்தார். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக மும்பை, கராச்சி(பாகிஸ்தான்), ஃபின்ஸ்புரி(லண்டன்) ஆகிய இடங்களில் முக்கிய சாலைகளுக்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. தெற்கு டெல்லியில் உள்ள ஒரு மத்திய அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புப் பகுதிக்கு நௌரொஜி நகர் என்று பெயரிடப்பட்டுள்ளது. டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை (Dr. Ambedkar Government Law College, Chennai) இந்தியாவின், சென்னை மாவட்டத்தில் இயங்கும் ஓர் அரசு சட்டக் கல்லூரி. இக்கல்லூரி 1891-இல் துவக்கப்பட்டது. முதலில் "மெட்ராஸ் சட்டக் கல்லூரி" எனப் பெயரில் இயங்கிய இக்கல்லூரியானது, இந்திய சுதந்திரப் போரட்ட வீரரும், தலித் தீண்டாமையை எதிர்த்து போராடியவரும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்தவருமான பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் நினைவைப் போற்றும் வகையில் 1990-இல் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி, சென்னை (DAGLC) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தியாவின் மிகப்பழமையான சட்டக் கல்லூரி இதுவேயாகும். 115 ஆண்டு கால பழமை வாயந்தது. இக்கல்லூரி தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரி ஆகும். இக்கல்லூரியில் சமீபத்தில் சில விரும்பத்தாகாத நிகழ்வுகள் இருமாணவக் குழுக்களிடையே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இக்கல்லூரியானது திரு. ஜார்ஜ் நியூட்டன் என்பவருடைய யோசனையால் ஆரம்பிக்கப்பட்டது. அவர் சென்னைக்கென தனியாக ஒரு சட்டக் கல்லூரி வேண்டும் என யோசனை கூறினார். மேலும் அப்போது சென்னை பிரெசிடென்சி கல்லூரியில் ஒரே ஒரு பேராசிரியரால் தான் சட்ட கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது. மாநிலக் கல்லூரி, சென்னை சென்னை மாநிலக் கல்லூரி ("Presidency College") தமிழ்நாட்டில் சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கல்லூரி சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னோடி என்ப்படுகின்றது. இக்கல்லூரி ஹயர் பர்டன் பவல் எனும் கணிதவியல் பேராசிரியரால் 1840 இல் திறக்கப்பட்டது. இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரி இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரி (Ramakrisna Mission Vivekananda College), பகுத்தவறிவாளர் விவேகானந்தரின் பெயரால் இக்கல்லூரி 21 ஜூன், 1946 இல் இந்தியக் குடியரசுத் தலைவரும், பேராசிரியரும், தத்துவஞானியுமான சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களால் துவக்கிவைக்கப்பட்டது. இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, சென்னை மாவட்டத்தின் மயிலாப்பூரில் 20 ஏக்கர் (81000 ச.மீ) பரப்பளவில் அமைந்துள்ள தன்னாட்சி பெற்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரி ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் மூலம் நடத்தப்படும் கல்லூரி. போர்பந்தர் போர்பந்தர் (Porbandar-குஜராத்தி: પોરબંદર-) இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் கடற்கரை நகரமாகும். இந்தியாவின் தேசத் தந்தையாக போற்றப்படும் மகாத்மா காந்தி பிறந்த நகரம் (ஊர்) இதுவென அனைவராலும் அறியப்படுகின்ற நகரமாகும். குஜராத் மாநிலத்தின் முக்கிய மாவட்டமான போர்பந்தர் மாவட்டத்தின் முக்கிய நகரமாகும். போர்பந்தர் எனும் பெயர் இரு வாரத்தைகளின் கூட்டு சொல்லாக வந்தது. போரை என்னும் சொல் தேவதையையும் மற்றும் பந்தர் என்னும் சொல் துறைமுகம் என்று பொருளைக்குறிக்கும் சொற்களை கொண்டு உருவானது ஆகும். மேற்கு இந்தியாவில் அனைத்து காலநிலைகளுக்கும் ஏற்றவாறு அமைந்திருக்கும் துறைமுக நகாரமான் இந்நகரம் 1,50,000 மக்கள் தொகையை 2001 மக்களதொகை கணக்கெடுப்பின்படி கொண்டாதாகும். காந்தி பிறந்த நகராமான இந்நகரம் அவரின் நினைவைப் போற்றும் வகையில் விளங்குகின்றது. விமானத் தளம் மற்றும் தொடர்வண்டி நிலையத்துடன் கூடிய மிகச்சிறந்த சுற்றுலாத் தளமாக தற்பொழுது இந்நகரம் தோற்றமளிக்கின்றது. ஆழமான துறைமுக கட்டுமானம் 20 நூற்றாண்டின் கால் இறுதியில் கட்டி முடிக்கப்பட்டது. தாட்டு தாட்டு என்பது இந்துத்தானி இசையிலுள்ள மேளங்களைக் குறிக்கும். தாட்டுகள் எப்பொழுதும் ஏழு சுரங்களைக் கொண்டே வரும். இதுவே, இராகங்களை வகைப்படுத்த உதவுகின்றது. கிதார் வகைகள் கிதார் வகைகள்: பரவலாக்கம் பரவலாக்கம் அல்லது பல்முனைப்படுத்தல் என்பது முடிவு செய்தலை ஒர் அதிகார மையத்தில் குவியப்படுத்தாமல், ஒரு நிறுவனத்தின் பல முனைகளில் செயற்படுத்தல் ஆகும். பல சூழ்நிலைகளில் பரவலாக்கம் என்ற கருத்துரு பயன்படுகிறது. அரசியல், வணிக நிறுவன நிர்வாகம், எதிர்ப்புப் போராட்ட ஒழுங்கமைப்பு, நுட்ப ஒருங்கியங்கள் என பல இடங்களில் பரவலாக்கம் பயன்படுகிறது. பரவலாக்கத்துக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இணையம் ஆகும். இணையம் ஒரு சில கணினிகள் செயலிழந்தாலும், தொடர்ந்து செயற்படும் வண்ணம் பரவலாக்கி கட்டமைக்கப்பட்டது. தமன்னா (நடிகை) தமன்னா ("Tamanna Bhatia", பிறப்பு டிசம்பர் 21, 1989) ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். 2005ல் "சாந்த் சே ரோசன் செகரா" என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார். தமிழ் திரைப்பட உலகில் கேடி படம் மூலம் அறிமுகமானார். கல்லூரி திரைப்படம் தமனாவுக்கு சிறப்பு அங்கீகாரம் கொடுத்தது. இதையடுத்து நடிகர் தனுசுடன் படிக்காதவன், சூர்யாவுடன் அயன் ஆகிய படங்களில் நடித்தார். கண்டேன் காதலை, ஆனந்த தாண்டவம், பையா முதலிய படங்களிலும் நடித்துள்ளார். இவர் சிந்தி இனத்தைச் சேர்ந்தவர். தமன்னா 1989 ம் ஆண்டு டிசம்பர் 21 ம் தேதி சந்தோஷ் மற்றும் ரஜனி பாட்டியா ஆகியோருக்கு மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் பிறந்தார். அவருக்கு ஆனந்த் என்கிற ஒரு அண்ணன் உள்ளார். அவரது தந்தை ஒரு வைர வியாபாரி ஆவார். இவர் சிந்தி வம்சா வழியைச் சேர்ந்தவர் ஆவார். அவர் மும்பையில் உள்ள மனேக்ஜி கூப்பர் கல்வி அறக்கட்டளை பள்ளி இல் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பிறகு எண்கணித காரணங்களுக்காக அவரது திரைப் பெயர் மாற்றப்பட்டது (Tamannaah). சாரைப்பாம்பு சாரைப்பாம்பு ("Ptyas mucosus", "Indian Ratsnake", அல்லது "Oriental Ratsnake") எனப்படுவது தெற்கு மற்றும் தென்கிழக்காசியப் பகுதிகளில் பரவலாகக் காணப்படும் ஒரு நச்சுத் தன்மையற்ற பாம்பு. இவ்வகைப் பாம்புகள் நாகப்பாம்புகளுடன் உடலுறவு கொள்ளும் என்ற பரவலான நம்பிக்கை முற்றிலும் தவறானது. தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதிலும் காணப்படுகிறது -- கடல் மட்டத்திலிருந்து 4000 மீ உயரம் வரை. விமான தரவு பதிவி விமான தரவு பதிவி(Flight data recorder(FDR)/Accident Data Recorder(ADR)) என்பது விமானத்தின் செயல்களையும் மற்றும் விமானம் பறக்கும்பொழுது விமானம் மற்றும் அதை சுற்றியுருக்கும் சூழலின் குணாதிசயங்களாகிய வேகம், பறக்கும் உயரம், வெப்பநிலை, காற்றழுத்தம் போன்ற 400க்கும் மேற்பட்ட குணாதிசயங்களை கணித்து அதை பதிவு செய்து வைத்துக்கொள்ளும் கருவியாகும். இக்கருவி விமானத்தின் கருப்புப் பெட்டிக்குள் இருக்கும். இரு பகுதிகளைக் கொண்ட கருப்புப் பெட்டிக்குள், ஒன்று விமானியறை குரல் பதிவி மற்றொரு பகுதி விமான தரவு பதிவி ஆகும். கருப்புப் பெட்டி விமானத்தின் வால் பகுதியில் இது பொறுத்தப்பட்டிருக்கும். விமானம் விபத்துக்குள்ளானால் அதிலிருந்து தொடர்ந்து சமிக்ஞைகள் வந்து கொண்டிருக்கும். கிட்டத்தட்ட 30 நாட்கள் வரை இந்த சமிக்ஞைகள் வரும், இந்த சமிக்ஞைகளை வைத்து இதன் இருப்பிடத்தை அறிந்து கொள்ளமுடியம். இதில் பதிவாகியுள்ள தரவுகளை வைத்து விமான விபத்திற்கான காரணங்களை அறிந்து கொள்ளமுடியும். மேற்கத்திய மொழிகளின் இலக்கணக் குறியீடுகளுக்கு நேரான தமிழ்ச் சொற்கள் தமிழ் இலக்கணக் குறியீடுகளுக்கு நேரான ஆங்கிலச் சொற்கள் மீட்டுக்கட்டை (இசை) மீட்டுக்கட்டை ("Plectrum") என்பது சிறிய, தட்டையான நரம்பிசைக் கருவிகளை இசைக்கப் பயன்படுத்தப்படும் கருவியாகும். கையில் வைத்து இயக்கக்கூடிய கருவிகளான கிதார் போன்றவற்றை மீட்ட அல்லது வாசிக்க உதவும் ஒரு கருவி ஆகும். இது சுருக்கமான ஆங்கில உச்சரிப்பில் "பிக்" (pick) என அழைக்கப்படும். ஆய்வும் விருத்தியும் ஆராய்ச்சியும் விருத்தியும் (R&D --- Research and Development) என்பது திட்டமிட்ட முறையில் அறிவை, தொழில்நுட்பத்தை பெற்று பயன்படுத்துவதற்கான ஓர் அடிப்படைச் செயற்பாடு. வணிக நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், நாடுகள், சமூக நிறுவனங்கள் என பல தரப்பட்ட அமைப்புகள் ஆராய்ச்சியையும் விருத்தியையும் மேற்கொள்கின்றன. உலகில் ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், சீனா, யப்பான் ஆகிய நாடுகள் ஆராய்ச்சி விருத்தியில் முன்நிற்கின்றன. ஒரு அமைப்பின் ஆராய்ச்சி-விருத்தி பயன்பாடு அது எத்தனை புத்தாக்கங்களை செய்தது (patents), அல்லது எத்தனை புதிய பொருட்களை வெற்றிகரமாக சந்தைக்கு அறிமுகப்படுத்தியது, எத்தனை பெறுமானம் மிக்க ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டது போன்றவற்றை வைத்து அளவிடப்படுகிறது. எஸ். எஸ். பழனிமாணிக்கம் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் (ஆங்கிலம்:S.S. Palanimanickam) (பிறப்பு 15 ஆகஸ்டு, 1950) இந்தியாவின் 15 வது மக்களவைக்காக நடத்தபெற்ற 2009 இந்திய பொதுத் தேர்தலில் தஞ்சைத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களவையில் உறுப்பினராக பணியாற்றியுள்ளார். இந்தியக் குடியரசின் அமைச்சரவையில் நடுவண் அரசு இணை அமைச்சராக பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் பொறுப்புவகித்தார். தஞ்சாவூர் மாவட்டதி.மு.க செயலாளராக பொறுப்புவகித்துள்ளார். ராஜமார்த்தாண்டன் ராஜமார்த்தாண்டன் (இறப்பு: யூன் 6, 2009) தமிழகத்தைச் சேர்ந்த விமர்சகர், இதழாளர், கவிஞர். அவரது சொந்த ஊர் கன்னியாகுமரி அருகே உள்ள சந்தையடி. அவரது "கொங்குதேர் வாழ்க்கை" என்னும் பெயரிலான தொகுப்பு நூல்கள் குறிப்பிடத்தக்கவை. ராஜமார்த்தாண்டன் "தினமணி" உதவியாசிரியராக பணியாற்றியவர்; "கொல்லிப்பாவை" என்னும் சிற்றிதழை நடத்தியவர். தனது இறுதிக் காலத்தில் காலச்சுவட்டில் பணியாற்றினார். நிறைய கவிதைகள் எழுதியிருந்தாலும், ராஜமார்த்தாண்டன் ஒரு சிறந்த கவிதை விமர்சகராகவும், திறனாய்வாளராகவும் முன்வைக்கப்படுகிறார். இவர் எழுதிய ""ராஜமார்த்தாண்டன் கவிதைகள்"" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதுக்கவிதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. 61 ஆவது வயதில் சாலை விபத்தில் காலமானார். இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். செயல்வல்லமை அணுகுமுறை செயல்வல்லமை அணுகுமுறை (Capability approach) என்பது ஒரு சமூகத்தை விருத்தி செய்ய பயன்படும் ஒர் அணுகுமுறை ஆகும். இது ஒரு பூரண அணுகுமுறையாக இந்திய பொருளியலாளர் அமார்த்ய சென் அவர்களாலும், அவரோடு இணைந்து பணியாற்றியோராலும் அறிமுகப்படுத்தப்பட்டது. சிக்கல்களை மட்டுமே கருத்தில் கொள்ளாமல், ஒருவரிடையே இருக்கக்கூடிய வளங்களையும் திறங்களையும் கருத்தில் கொண்டு, பொருளாதார விருத்தியை மட்டும் கருத்தில் கொள்ளாமல் ஒருவருக்கு தேவையான உண்மையான சுதந்திரங்களையும், வாழ்வின் இறுதி நோக்கங்களையும் கருத்தில் கொண்டு இந்த அணுகுமுறை வளர்ச்சி பெற்றது. இன்றைய பொருளாதார வளர்ச்சியல் திட்டங்களில் இது ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. வைசர் ஏர்த் வைசர் ஏர்த் (அறிவுபெற்ற உலகம்) என்பது சமூக இயக்கங்களை இணைக்கும் ஒர் இணைய சமூகம். வறுமை, பசி, நீர், சமூக நீதி, மனித உரிமைகள், சூழலியல் என பல சிக்கல்கள் தொடர்பாக இது தகவல்களைப் பகிர்கிறது. இதன் வலைத்தளத்தில் இவை தொடர்பாக இயங்கு அமைப்புகள், நபர்கள், குழுக்கள், வளங்கள், நிகழ்வுகள், தீர்வுகள், அக்கறைகள் பற்றிய தகவல்களைப் பகிர்கிறது. இதுவரை 110 000 நிறுவனங்கள் பற்றிய தகவல்கள், 26,500 பதிவு செய்த பயனர்கள், 1,300 குழுக்கள், 46 அக்கறைகள் ஆகியவற்றை இது கொண்டிருக்கிறது. உலகைமாற்றும் வேர்ல்ட்சேஞ்சிங் (உலகைமாற்றும்) என்பது பேண்தகுவியல், சமூக புத்தாக்கம் தொடர்பான ஒர் இணைய இதழ், சமூகம். உலகின் பல சிக்கல்களுக்கான தீருவுகள் பற்றிய கவனத்தோடு இதன் உள்ளடக்கம் அமைகிறது. உலகைமாற்றும் நோக்கம் உரையில் பின்வருமாறு கூறப்படுகிறது. வி டைகர் வி டைகர் என்பது ஒரு திறந்த மூலநிரல் வாடிக்கையாளர் உறவு மேலாண்மை மென்பொருள். வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மை வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மை (CRM ) என்பது ஒரு நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுடன் மற்றும் வாடிக்கையாளராகும் சாத்தியமுடையவர்களுடன் தகவல் பரிவர்த்தனைகளை நிர்வகித்துக் கொள்வதற்கும் வளர்ப்பதற்கும் பயன்படுத்தும் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட, பரந்த முறையில் செயல்படுத்தப்படும் ஒரு உத்தி ஆகும். வர்த்தக நடைமுறைகளை (விற்பனை தொடர்பான நடவடிக்கைகள் தான் பிரதானமானவை என்றாலும், சந்தைப்படுத்தல், வாடிக்கையாளர் சேவை, மற்றும் தொழில்நுட்ப உதவி ஆகியவையும் சேரலாம்) ஒழுங்குபடுத்துவதற்கும், தானியங்குவகையாக்குவதற்கும், மற்றும் ஒத்திசைவுக்குட்படுத்துவதற்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை இது உள்ளடக்கி இருக்கிறது. ஒட்டு மொத்த இலக்குகளாய் இருப்பவை புதிய வாடிக்கையாளர்களை கண்டறிவது, ஈர்ப்பது மற்றும் அவர்களை வென்றெடுப்பது, நிறுவனம் ஏற்கனவே கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துவது மற்றும் அவர்களை தக்க வைத்திருப்பது, முந்தைய வாடிக்கையாளர்களை மீண்டும் உள்ளே கொண்டு வருவது, மற்றும் மார்க்கெட்டிங் மற்றும் வாடிக்கையாளர் சேவைக்கான செலவுகளைக் குறைப்பது ஆகியவை ஆகும். உயர் வரிசை வருவாய்களை வளர்த்தெடுக்கவும், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தவும், வாடிக்கையாளரை எதிர்கொள்ளும் பணியாளர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதால், 2010 வாக்கில் வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மை துறைக்கு செலவிடப்படும் தொகை வருடத்திற்கு $11 பில்லியனை எட்டும் என்று ஃபாரஸ்டர் ரிசர்ச் நிறுவனம் கூறுகிறது. ஒருகாலத்தில் மென்பொருள் கருவிகளுக்கான ஒரு துணைப் பெயராக மட்டும் இருந்த CRM, வருடங்கள் செல்லச் செல்ல ஒரு தத்துவமாக முதிர்ச்சியுற்று விரிவுற்றிருக்கிறது. இன்று, வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மை என்பது பொதுவாக வாடிக்கையாளரை எதிர்கொள்ளும் அனைத்து துறைகளையும் தழுவிய மற்றும் அதனையும் தாண்டியதான ஒரு நிறுவனரீதியான உத்தியைக் குறிக்கிறது. திறம்பட செயல்படுத்தப்படும்போது, மனித வளம், செயல்முறைகள், மற்றும் தொழில்நுட்பம் மூன்றும் ஒத்திசைந்து செயலாற்றி உறவுகள் வளர்க்கப்பட மற்றும் உறுதிப்படுத்தப்படவும், லாபமீட்டும் தன்மை அதிகரிக்கவும், செயல்பாட்டு செலவுகள் குறையவும் உதவுகிறது. வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மை கருவிகள் நிறுவனங்களுக்கு அவர்களின் இலக்குகளை எட்ட உதவுகின்றன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது: கருவிகளும் பணிப்பாய்வுகளும் குறிப்பாக பெரிய நிறுவனங்களுக்கு அமலாக்க சிக்கலானதாய் இருக்கலாம். சில நிறுவனங்கள் பெரும் வெற்றியை ஈட்டியதாகத் தெரிவிக்கின்றன எனினும் சில முன்முயற்சிகள் தோல்வியைத் தழுவவும் செய்திருக்கின்றன. மோசமான திட்டமிடல், மென்பொருள் கருவிகளுக்கும் நிறுவனத் தேவைகளுக்கும் பொருத்தமின்மை, துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பிலான தடைகள், ஊழியர்கள் வழிகாட்டலை ஏற்றுக் கொள்ளாதிருப்பது ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாய் உள்ளன. முன்னதாக இந்த கருவிகள் பொதுவாக வாடிக்கையாளர்களுடனான பரிவர்த்தனைகள் மற்றும் தகவல் தொடர்புகளைக் கண்காணிப்பது மற்றும் பதிவு செய்வது ஆகிய தொடர்பு மேலாண்மைக்கு மட்டும் வரம்புபட்டதாக இருந்தன. அதன்பின் ஒப்பந்தங்களை பின்தொடர்தல், கணக்குகள், பிராந்தியங்கள் மற்றும் வாய்ப்புகளை நிர்வகித்தல், மற்றும் நிர்வாக மட்டத்தில், விற்பனை வரிசையையே கூட தழுவிக் கொள்ளும் அளவிற்கு மென்பொருள் தீர்வுகள் விரிவுபடுத்தப்பட்டன. அதன்பின், கீழே விவரிக்கப்பட்டுள்ளது போல, வாடிக்கையாளரை எதிர்கொள்ளும் மற்ற வர்த்தக செயல்பாடுகளுக்கும் ஏராளமான கருவிகள் வந்தன. இன்னும் இதில் மிகக் குறிப்பிடத்தக்க போக்கு என்னவென்றால் வலை வழியே விநியோகிக்கப்பட்ட கருவிகளின் வளர்ச்சியாகும், கூட்ட கணியாக்கம் மற்றும் ஒரு சேவையாக மென்பொருள் (SaaS) என்று இவை அழைக்கப்பட்டன. மரபுவழியாக பயன்பாட்டு இடத்தில் பயன்படுத்தப்பட்ட மென்பொருளுக்கு மாறாய், கூட்ட கணியாக்க பயன்பாடுகள் சந்தா அடிப்படையில் விற்கப்படுகின்றன; ஒரு பாதுகாப்பான இணைய இணைப்பின் வழி அணுகப்படுகின்றன; ஒரு வலை உலாவியில் காண்பிக்கப் பெறுகின்றன. நிறுவனங்களுக்கு மென்பொருளை வாங்க வேண்டிய ஆரம்பகட்ட மூலதனச் செலவினம் இல்லை; அத்துடன் அதனை இயக்குவதற்கான கணினி வன்பொருட்களையும் அவர்கள் வாங்க வேண்டியதோ பராமரிக்க வேண்டியதோ இல்லை. இத்தகைய மற்றும் பிற காரணங்களால், SaaS தெரிவு ஈர்ப்பு மிகுந்ததாய் நிரூபணம் ஆகியிருப்பதோடு, SaaS பயன்பாடுகள் சந்தைப் பங்களிப்பில் பெரும் பகுதியை வளைத்துக் கொண்டிருக்கின்றன. இவை இப்போது மிகத் துரித வளர்ச்சியுறும் ஒரு பிரிவாக உள்ளன. இதனை வாங்கி விற்கும் நிறுவனங்களில் Salesforce.com, RightNow, மற்றும் SugarCRM ஆகிய நிறுவனங்கள் உள்ளன. CRM தொழில்நுட்பம் இன்னும் பயன்பாட்டு இடத்திலேயே நிறுவிக் கொள்ளத்தக்க மென்பொருளாக வழங்கப்பட்டு வருகிறது, நிறுவனங்கள் வாங்கி தங்களது சொந்த கணினி வன்பொருள் கட்டமைப்பில் இயக்கிக் கொள்ளலாம். இதனை வாங்கி விற்கும் நிறுவனங்களில் ஆரக்கிள் கார்பரேஷன், SAP AG, மற்றும் ஆம்டாக்ஸ் ஆகிய நிறுவனங்கள் அடங்கும். 2009 ஆம் ஆண்டில், ஒட்டுமொத்த வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மை செலவினத்தில் SaaS சுமார் 20% பங்களிப்பைக் கொண்டிருந்தது. அத்துடன் பயன்பாட்டு தளத்தில் நிறுவிக் கொள்ளும் மென்பொருளின் விற்பனையை 3-1 என்ற விகிதத்தில் கடந்து சென்று கொண்டிருந்தது. இதன் பெயர் சுட்டிக் காட்டுவதைப் போல, ஒரு விற்பனைப் பிரிவின் தன்னியக்கமாக்கல் (SFA) என்பது விற்பனை நிகழ்முறையின் அனைத்து கட்டங்களையும் ஒருமுகப்படுத்துகிற ஏராளமான செயல்திறன்களைக் கொண்டிருக்கிறது. அத்துடன் தரவு உள்ளீடு மற்றும் நிர்வாகத்தில் விற்பனைப் பிரதிநிதிகள் செலவிட அவசியமாயிருக்கும் நேரத்தையும் குறைக்கிறது. இதனால், முன்னர் சாத்தியமானதை விட அதிகமாய், குறுகியதொரு காலத்தில் அதிகமான வாடிக்கையாளர்களை எதிர்கொள்ள அவர்களுக்கு இயலும். ஒவ்வொரு சாத்தியமான வாடிக்கையாளருக்கும், அவரை ஆரம்பத்தில் தொடர்பு கொள்வதில் இருந்து இறுதியில் வெளியேறுவது வரையான விற்பனை நிகழ்முறையின் ஒவ்வொரு கட்டத்தையும் பின்தொடர்வது மற்றும் பதிவு செய்வதற்கான ஒரு தொடர்பு மேலாண்மை அமைப்பு தான் இந்த SFA செயல்பாட்டின் இருதயத்தானத்தில் அமைந்திருப்பதாகும். வாய்ப்பு மேலாண்மை, பிராந்திய மேலாண்மை, விற்பனை அளவு கணிப்பு , பணிப்பாய்வு தன்னியக்கமாக்கல், ஒப்பந்தப் புள்ளி உருவாக்கம், மற்றும் தயாரிப்புப் பொருள் அறிவு ஆகியவற்றுக்கான அம்சங்களையும் பல SFA பயன்பாடுகள் கொண்டிருக்கின்றன. இணையவணிகத்திற்கான வெப் 2.0 மற்றும் விலைநிர்ணய மேலாண்மை ஆகியவற்றுக்கான நிரல்கூறுகள்தான் புதிதாக எழுந்திருக்கும் முன்னுரிமைகளாகும். சந்தைப்படுத்தலுக்கான அமைப்புகள் (சந்தைப்படுத்தல் தன்னியக்கமாக்கல் என்றும் அழைக்கப்படுகிறது) நிறுவனம் தனது சிறந்த வாடிக்கையாளர்களை அடையாளம் காணவும் அவர்களை இலக்காய் கொள்ளவும் உதவுவதோடு விற்பனை பிரிவுக்கு தரமான திசைகளையும் உருவாக்குகிறது. பலவழி பரப்புரைகளை நிர்வகிப்பதும் அளவிடுவதும் ஒரு முக்கியமான சந்தைப்படுத்தல் செயல்திறன் ஆகும், மின்னஞ்சல், தேடல், சமூக ஊடகங்கள், மற்றும் நேரடி அஞ்சல் ஆகியவை இதில் அடக்கம். கண்காணிக்கப்படும் அளவீடுகளில் கிளிக்குகள், மறுமொழிகள், திசைவழிநடத்தல்கள், மற்றும் வருவாய் ஆகியவை அடங்கும். வாடிக்கையாளர் விசுவாசம், பட்டியல்கள், பிணைந்த மற்றும் உள்முக சந்தைப்படுத்தல் ஆதாரங்களை நிர்வகிக்கும் திறன்களையும் சந்தைப்படுத்தல் தன்னியக்கமாக்கல் தனது எல்லைக்குள் கொண்டிருக்கிறது. சந்தைப்படுத்தல் துறைகள் வருவாயில் தங்களது தாக்கத்தை விளக்க வேண்டிய கடமை அதிகரித்துக் கொண்டு செல்வதால், இன்றைய அமைப்புகள் பரப்புரைகளினால் விளையும் முதலீட்டின் மீதான வருவாய்தனை (ROI) அளவிடுவதற்கான செயல்திறன் மேலாண்மை அம்சங்களையும் கொண்டிருக்கின்றன. வாடிக்கையாளர் சேவை ஒரு முக்கியமான வித்தியாசத்தை ஏற்படுத்தத்தக்கது என்பதை அறிந்திருப்பதால், நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தவும், அதேசமயத்தில் செயல்திறனை அதிகரித்து செலவுகளைக் கட்டுப்படுத்தவும் அதிகமாக தொழில்நுட்ப வசதிகளின் பக்கம் திரும்புகின்றன. அப்படியிருந்தும் கூட, 2009 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு, 39% பெருநிறுவன நிர்வாகிகள் மட்டும் தான் தங்களது ஊழியர்கள் வாடிக்கையாளர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான சரியான கருவிகளையும் அதிகாரத்தையும் கொண்டிருக்கிறார்கள் என்று நம்புவதாக, கூறியிருக்கிறது. வாடிக்கையாளர் சேவையின் மையத்தானமாக அமைந்திருந்ததும் அமைந்திருப்பதும் திறம்பட்டதொரு அழைப்பு மைய நிர்வாகம் ஆகும். புத்திக்கூர்மையுடனான அழைப்பு வழிநடத்தல், கணினி தொலைபேசி ஒருங்கிணைப்பு (CTI), மற்றும் மேல்நகர்த்து செயல்திறன்கள் போன்ற அம்சங்களை அது உள்ளடக்கியிருக்கும். சமீபத்தில் இணையவலை சுயசேவை, அறிவு மேலாண்மை, மின்னஞ்சல் மறுமொழி மேலாண்மை, வலை உரையாடல், கூட்டிணைந்த உலாவல் மற்றும் மெய்நிகர் உதவியாளர்கள் ஆகிய இணைய சேவை செயல்திறன்களின் முக்கியத்துவம் பெருகி வருகின்றன. வாடிக்கையாளர் சேவையில் SaaS தளங்கள் பிரபலமுற்று வருவதும் இன்னுமொரு முக்கிய போக்காக இருக்கிறது, அவற்றைத் துரிதமாய் நிலைநிறுத்த முடிவது, குறைந்த ஆரம்ப செலவு, மற்றும் பெரிய சிக்கல் வாய்ந்த தொடர்பு மையங்களுக்கும் சமீப-நிறுவலின் பயனையும் அளிப்பது ஆகியவையே இதற்குக் காரணம். பொருத்தமான பகுப்பாய்வு திறன்கள் பெரும்பாலும் விற்பனை, சந்தைப்படுத்தல், மற்றும் வாடிக்கையாளர் சேவைக்கான பயன்பாடுகளில் உள்பிணைக்கப்பட்டதாய் உள்ளன. பகுப்பாய்வு மற்றும் வர்த்தக புத்திக்கூர்மைக்கென தனியாக, நோக்கமறிந்து-உருவாக்கப்பட்ட பயன்பாடுகளுக்கான இணைப்புகள் இந்த அம்சங்களுக்கு துணைபுரிவதாயும் மெருகேற்றுவதாயும் உள்ளன. விற்பனை பகுப்பாய்வானது விற்பனை அளவு முன்கணிப்பு, தரவுத் தர மேலாண்மை, மற்றும் முக்கிய செயல்திறன் காட்டிகளை (KPI) வரைபடத்தில் காட்டும் கட்டுப்பாட்டகம் ஆகியவற்றின் துணையுடன் நிறுவனங்கள் வாடிக்கையாளர் செயல்பாடுகளையும் தெரிவுகளையும் கண்காணிக்கவும் புரிந்துகொள்ளவும் உதவுகிறது. சந்தைப்படுத்தல் பயன்பாடுகள் பொதுவாக, வாடிக்கையாளர் பகுப்பு மற்றும் இலக்கு நிர்ணயம் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையிலான முன்கணிப்பு பகுப்பாய்வுடனும், இணைப்புற்ற நிலை, , இணைப்பற்ற நிலை, மற்றும் தேடல் சந்தைப்படுத்தல் பரப்புரைகளின் பயனீட்டு அளவை அளவிடுவதற்கான அம்சங்களுடனும் வருகின்றன. வெறுமனே இணையத் தளங்களில் சுட்டி கிளிக்குகளை பின்தொடர்வது என்கிற தனது ஆரம்ப கட்டத்தில் இருந்து வலைப் பகுப்பாய்வு என்பது குறிப்பிடத்தக்க அளவு பரிணாம வளர்ச்சியுற்றுள்ளது. வாடிக்கையாளர்களின் “வாங்கும் சமிக்ஞைகளை” மதிப்பீடு செய்வதன் மூலம், யார் அநேகமாய் வர்த்தக பரிவர்த்தனையில் இறங்குவார்கள், யார் விற்பனை நிகழ்முறையில் மனம் சோர்ந்து உதவி அவசியப்படும் நிலையில் இருக்கிறார்கள் என்பதை எல்லாம் சந்தைப்படுத்துபவர்கள் காண முடியும். பல அம்ச திட்டங்களின் ஒட்டுமொத்த மதிப்பை மதிப்பிடுவதற்கும் சந்தைப்படுத்தல் மற்றும் நிதித் துறையினரும் பகுப்பாய்வுகளைப் பயன்படுத்துகின்றனர். வாடிக்கையாளர் சேவை பகுப்பாய்வுகள் அதிகமாய் பிரபலமுற்று வருகின்றன. ஏனெனில் பிரச்சினைகளை அவை வாடிக்கையாளர் திருப்தி அளவுகளைப் பாதிக்கும் முன்னதாக சரிசெய்ய வேண்டும் என்பதற்காக அழைப்பு மையங்கள் மற்றும் பிற உதவி வழிகளில் பெரும் புலப்பாட்டை நிறுவனங்கள் கோருகின்றன. உதவியில் கவனம் குவிக்கும் பயன்பாடுகள் பொதுவாக விற்பனை பயன்பாடுகளில் இருப்பதைப் போன்ற கட்டுப்பாட்டகங்களுடன் சேர்த்து, மறுமொழி நேரங்கள், சேவை தரம், முகவர் செயல்திறன் மற்றும் பல்வேறு வாடிக்கையாளர் பிரச்சினைகளின் தோற்றஇடைவெளி ஆகியவற்றை அளவிடுவது மற்றும் பகுப்பாய்வதற்கான செயல்திறன்களையும் கொண்டிருக்கும். நிறுவனங்களுக்குள், குறிப்பாக பெரிய நிறுவனங்களுக்குள், இருக்கும் துறைகள் தங்களுக்கான சொந்த உலகத்தில் செயல்படத் தலைப்படுகின்றன. துறைகளுக்கு இடையிலான பரிவர்த்தனையும் கூட்டுப் பணிபுரிதலும் பல சமயங்களில் இல்லாது போய் விடுகிறது என்பதும் போட்டி உணர்வுகளையும் கூட காண முடியும் என்பதும் வாழையடி வாழையாய் காணக் கூடிய விஷயமாய் இருந்திருக்கிறது. சமீபத்தில், கருவிகள் மற்றும் சேவைகளின் உருவாக்கமும் தழுவலும் விற்பனை, வாடிக்கையாளர் சேவை, மற்றும் சந்தைப்படுத்தல் துறைகளுக்கு இடையே அதிகரித்த இணக்கத்தையும் ஒத்துழைப்பையும் உருவாக்கியிருக்கிறது. துறைகளுக்கு இடையே பாலம் அமைக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் கூட்டுப்பணி வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மை என்கிற கருத்தாக்கத்தில் இது வெளிப்பாடு காண்கிறது. வாடிக்கையாளர் சேவையின் தரத்தை மேம்படுத்த அனைத்து திசைகளில் இருந்தும் வரும் தகவல்களை பகிர்ந்து கொள்வது மற்றும் அவற்றை மெருகேற்றுவது, மற்றும் இதன் விளைவாய் வாடிக்கையாளர் திருப்தி மற்றும் விசுவாச த்தை அதிகப்படுத்துவது ஆகியவையே இதன் நோக்கமாகும். உதாரணமாக, ஒரு தொழில்நுட்ப உதவி மையத்தில் இருந்து கிட்டக்கூடிய விபரம், வாடிக்கையாளர்கள் விரும்பும் குறிப்பிட்ட சேவைகள் மற்றும் தயாரிப்பு அம்சங்கள் குறித்து சந்தைப்படுத்துபவர்களுக்கு விழிப்பூட்ட முடியும். இதேபோல், தேவை உருவாக்கும் உத்திகள் உரிய கட்டமைப்பு கொண்ட விற்பனை செயல்முறைகளுடன் பிணைக்கப்பட வேண்டும் - அதாவது, ஒரு பரப்புரை மூலம் வழிநடத்தப்பட்டு வரும் விசாரிப்புகள் துரிதமாகவும் திறம்பட்ட வகையிலும் விற்பனையாக மாற்றப்பட வேண்டும். அதேபோல், விற்பனைப் பிரதிநிதிகளும், தகவல்களையும் தொடர்பு தரவுகளையும் ஒரு தனியான SFA அமைப்பில் மறு உள்ளீடு செய்வதில் நேரத்தை வீணடிக்காமல், தங்களுக்கான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும். திருப்பிப் பார்த்தால், ஒருங்கிணைப்பு குறைவாய் இருந்தால் எதிர் விளைவுகளுக்கு இட்டுச் செல்லும்: ஒரு விற்பனைப் பிரிவு தன்னியக்கம் அல்லது வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மை அமைப்பு கைக்கொள்ளப்படாமல் அனைத்து துறைகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இன்றி இருந்தால், ஒரே நோக்கத்திற்காக பல்வேறு துறை ஆதாரங்களும் அதே வாடிக்கையாளர்களையே தொடர்பு கொள்ள நேரிடலாம். இவை மற்றும் இவை தொடர்பான காரணிகளின் காரணத்தால், பல உயர் தரம் வாய்ந்த மற்றும் மிகப் பிரபலமுற்ற தயாரிப்புகளும் ஒருங்கிணைந்த தொகுப்புகளாகவே வருகின்றன. இவை எல்லாம் இருந்தாலும் கூட, நிறுவனம் மற்றும் அதன் வாடிக்கையாளர்கள் இரு தரப்புக்கும் சிறந்த சேவையாற்றும் வகையில் சந்தைப்படுத்தல், விற்பனை, மற்றும் சேவை ஆகியவற்றை ஒருமுகப்படுத்த இந்த கருவிகள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்துவதில் பல நிறுவனங்கள் முழுத் திறம்பட்டவையாக இன்னும் ஆகவில்லை. பல சமயங்களில் அமலாக்கம் துண்டுதுண்டாக, தனித்தனி துறைகள் தங்களது சொந்த தேவைகளை நிவர்த்தி செய்ய எடுக்கப்படும் தனிமைப்பட்ட முன்முயற்சிகளாய் உள்ளது. ஒருங்கிணைப்பின்றி துவங்கும் அமைப்புகள் பொதுவாக இவ்வகையில் தான் அமைகின்றன: தாழ்ந்த சிந்தனை மற்றும் முடிவெடுக்கும் நிகழ்முறைகள் பல சமயங்களில் தனித்தனியான இணக்கமற்ற அமைப்புகளுக்கும், முழுமையற்ற வாடிக்கையாளர் கண்ணோட்டத்திற்கும், செயல்பாடிழந்த நிகழ்முறைகளுக்கும் இட்டுச் செல்கின்றன. அடிப்படை வாடிக்கையாளர் மேலாண்மை ஒரு தொடர்பு மேலாண்மை அமைப்பைக் கொண்டே சாதிக்கப்பட முடியும். மின்னஞ்சல்கள், கோப்புகள், வேலைகள், தொலைநகல்கள், காலஅட்டவணைகள் மற்றும் இன்ன பிற வாடிக்கையாளர் மற்றும் வழங்குநர் பரிவர்த்தனைகளை திறம்பட பின்தொடர்வதற்கும் பதிவு செய்வதற்கும் நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும் உதவும் ஒரு ஒருங்கிணைந்த தீர்வாகும் இது. வெகு சிறிய வர்த்தகங்களிலும் கூட இந்த வகை தீர்வு அதிக பயனுள்ளதாய் இருக்கிறது. ஏனெனில் வெவ்வேறு துண்டு துண்டான மென்பொருட்கள், ஒவ்வொன்றும் தனது சொந்த தரவு சேகரிப்பு அமைப்பைக் கொண்டிருப்பதை விட ஒரு மையப்பட்ட பயன்பாடு மூலமாக வாடிக்கையாளர் தொடர்பை கையாளுவது எளிமையாக இருப்பதோடு நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது. தொடர்பு மேலாளர்களின் செயல்பாட்டிற்கு மாறுபட்ட விதமாக, நன் மதிப்பு வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மை கருவிகள் பொதுவாக தனிநபர் தொடர்புகளை விடவும் கணக்குகளின் மீது கவனம் குவிக்கின்றன. அத்துடன் பொதுவாக அவை, விற்பனை வருவழிகளைப் பின்தொடரும் வாய்ப்பு மேலாண்மை, அத்துடன் சேர்த்து சந்தைப்படுத்தல் மற்றும் வாடிக்கையாளர் சேவைக்கான மேற்சேர்ந்த செயல்பாடு ஆகியவற்றையும் அடக்கியிருக்கின்றன. பெரு நிறுவனங்கள் போலவே, சிறு வர்த்தகங்களும் குறிப்பாக நகரும் மற்றும் தொலைநிலை ஊழியர்களுக்கு இணைய இணைப்பிலுற்ற மேலாண்மை தீர்வுகளை மதிப்புமிக்கதாகக் கருதுகின்றன. ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்கள் சந்தையில் வாடிக்கையாளர் குரலை ஓங்கி ஒலிப்பவையாக ஆகியிருக்கின்றன. நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர் உறவுகளை நிர்வகிக்கும் வழிகளில் இவை ஆழமான தொலைகால விளைவுகளை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. இதற்குக் காரணம், வாடிக்கையாளர்கள் நிறுவனங்கள், தயாரிப்புகள், மற்றும் சேவைகள் மீதான தங்கள் கருத்துகள் மற்றும் அனுபவங்களை இந்த சமூக ஊடக தளங்களில் தான் பகிர்ந்து கொள்கிறார்கள். சமூக ஊடக தளங்கள் பொதுவாக கட்டுப்படுத்தப்படுவதோ தணிக்கை செய்யப்படுவதோ இல்லை என்பதால், தனிநபர்கள் ஒரு நிறுவனத்தைப் பற்றி சாதகமாகவோ பாதகமாகவோ என்ன வேண்டுமானாலும் கூற முடியும். நிறுவனங்கள் இந்த உரையாடல்களில் அணுகல் பெறவும், அதில் பங்கேற்கவும் தலைப்படுவது அதிகரித்துக் கொண்டு செல்கிறது. சில அமைப்புகளுக்கும் அதிகமாக இப்போது சமூக வலைப்பின்னல் தளங்களுடன் ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கின்றன. சமூக ஊடகங்களை ஆதரிப்பவர்கள் ஏராளமான வர்த்தக அனுகூலங்களைச் சுட்டிக் காட்டுகின்றனர். இணைய சமுதாயங்கள் உயர் தர பரிந்துரைகளுக்கான ஒரு ஆதாரமாகி இருக்கின்றன மற்றும் வாடிக்கையாளர்-உதவி தீர்வுகளுக்கு கூட்ட ஆதார தீர்வுகளுக்கான ஒரு வாகனமாக ஆகியிருக்கின்றன என்பதும் அதில் ஒன்று. அத்துடன் வாடிக்கையாளர்கள் தங்கள் பழக்கங்கள் மற்றும் தெரிவுகள் என்று குறிப்பிடுவனவற்றைக் கொண்டு நிறுவனங்கள் தங்கள் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தகவல்தொடர்புகளின் ”மிகத்துல்லிய இலக்கினை” நிர்ணயிக்க முடியும். வர்த்தகம்-வர்த்தகம் சந்தைதாரர்கள் தங்களது வர்த்தக செயல்முறைகளுக்குள் சமூக ஊடகங்களைப் பிணைக்கும் சமயத்தில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று சில ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். வாடிக்கையாளருடன் தகவல் பரிவர்த்தனைகள், விற்பனை, மற்றும் உதவி ஆகியவற்றில் எப்போது இவை அளவிடத்தக்க அனுகூலங்களை வழங்குகின்றன என்பதை சந்தை ஆராய்ச்சியில் கண்டறிந்து பின் ஈடுபட வேண்டும் என்று இவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஒரு அமைப்பை தெரிவு செய்வது மற்றும் அமலாக்குவது ஒரு பெரிய காரியம் ஆகும். எந்த அளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும், இந்த முன்முயற்சியை வெற்றிகரமாக ஆக்குவதற்கு அவசியமான நிதியாதாரம், வள ஆதாரங்கள், மற்றும் நிறுவன அளவிலான ஆதரவு ஆகியவை கிட்டுவதற்கு ஒரு முழுமையான மற்றும் விரிவான திட்டம் அவசியமாகும். மூன்று பொதுவான பிரிவுகளில் அனுகூலங்கள் வரையறை செய்யப்பட வேண்டும்; அபாயங்கள் மதிப்பீடு செய்யப்பட வேண்டும்; செலவு அளவிடப்பட வேண்டும்: பல நிறுவனங்களும் வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மையில் இருந்து பெரும் அனுகூலத்தைத் தருவிக்கின்றன: வருவாயில் பெரும் அதிகரிப்பு, வாடிக்கையாளர் திருப்தியின் உயர் விகிதங்கள், மற்றும் செயல்பாட்டு செலவினங்களில் குறிப்பிடத்தக்க சேமிப்புகள் ஆகியவை. ஆயினும், மற்ற நிறுவனங்களைப் பொறுத்தவரை அனுகூலங்கள் வரம்புபட்டதாகவும் ஏமாற்றமளிப்பவையாகவும் உள்ளன. எதிர்பார்த்த செயல்திறன் அளிக்காமல் ஏமாற்றமளிப்பது 2000களின் ஆரம்பத்தில் உச்சத்தை எட்டியது. அச்சமயத்தில் ஏராளமான நிறுவனங்கள் வா.தொ.மே.வுக்காக பெரும் தொகையைச் செலவிட்டும் எதிர்பார்த்த முடிவுகளை அடைவதில் தோல்வியுற்றன. கவனமான உத்திரீதியான மற்றும் செயல்பாட்டு திட்டமிடலின் பொருளில் மட்டுமே தொழில்நுட்ப அமலாக்கம் இருக்க வேண்டும் என்று ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர். கீழ்வரும் பரிந்துரைகளில் ஒன்று அல்லது கூடுதலான அம்சங்கள் உதாசீனப்படுத்தப்படும்போது, அமலாக்கங்கள் தவறாமல் இலக்கை எட்டுவதில் தோற்கின்றன: வரலாற்றுரீதியாக, குறைந்த தழுவல் விகிதங்களே எல்லா இடங்களிலும் சிதறிக் காணப்படுகின்றன. 2003 ஆம் ஆண்டில், பயன்படுத்தப்படாமல் விட்ட மென்பொருட்களில் செலவிட்ட தொகை 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாய் இருக்கலாம் என கார்ட்னர் மதிப்பிட்டது. சமகாலத்து AMR ஆய்வு ஒன்று 80 பெரும் வாடிக்கையாளர்களிடம் கணக்கெடுப்பை நடத்தியது, அதில் 47% இறுதிப் பயனர் தழுவலில் சிக்கல் கண்டு அந்த திட்டத்தைக் கைவிடுவதற்கோ அல்லது மென்பொருள் நிரல்கூறுகள் பயன்படுத்தப்படாமல் போவதற்கோ இட்டுச் சென்றதாக கண்டறியப்பட்டது. இந்த பிரச்சினை, கடுமை குறைந்தது தான் என்றாலும், தீர்க்கப்படுவதற்கு வெகு தொலைவில் இருக்கிறது என்றே சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. CSO இன்சைட்ஸ் நிறுவனம் மேற்கொண்ட கணக்கெடுப்பு ஒன்றின் படி, பங்கேற்ற 1,275 நிறுவனங்களில் 40 சதவீதத்திற்கும் குறைவாகத் தான் 90%க்கு அதிகமான இறுதிப் பயனர் தழுவல் விகிதங்களைக் கொண்டிருந்தன. 2007 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், மூத்த நிர்வாக அதிகாரிகளில் ஐந்தில் நான்கு பேர் தாங்கள் நிறுவிய வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மை அமைப்புகளுக்கு தங்களது ஊழியர்களை பழக்கப்படுத்துவது தங்களின் மிகப் பெரிய சவாலாக இருப்பதாகக் கூறியிருந்தனர். மேலும் பதிலளித்தவர்களில் 43% பேர், நடப்பு அமைப்பின் செயல்பாட்டுத் திறன்களில் பாதிக்கும் குறைவாகத் தான் தாங்கள் பயன்படுத்துவதாகத் தெரிவித்தனர்; செயல்பாட்டுத்திறனை விட பயன்படுத்த எளிதாய் இருப்பதையே தாங்கள் விரும்புவதாக 72 சதவீதம் பேர் தெரிவித்தனர்; தரவு ஒத்திசைவு தான் ஒரு பெரிய பிரச்சினை என 51 சதவீத பேர் கூறினர்; 67 சதவீதம் பேர் இந்த அமைப்புகளை மதிப்பீடு செய்வதற்கு நேரத்தைக் காண்பதே ஒரு பெரிய பிரச்சினை எனத் தெரிவித்தனர். செலவினங்கள் 2010 ஆம் ஆண்டில் 11 பில்லியன் டாலரைத் தாண்டி விடும் என்கிற நிலையில், தொடர்ந்த தழுவல் பிரச்சினைகளை நிறுவனங்கள் நிவர்த்தி செய்வது அவசியமாய் இருக்கிறது. தழுவல் விகிதங்களை அதிகரிக்கவும், இந்த கருவிகளை தங்களது அன்றாட பணிப்பாய்வில் சேர்த்துக் கொள்ள பயனர்களை ஊக்குவிக்கவும் நிபுணர்கள் கீழ்க்கண்டவாறான பரிந்துரைகளை வழங்குகின்றனர்: தொடர்ந்த ஆதரவை வழங்குங்கள். உடனடியான, நிபுணத்துவம் வாய்ந்த, எப்போதும் அணுகத்தக்கதான தொழில்நுட்ப உதவி கிட்டச் செய்வதென்பது ஒரு புதிய அமைப்பை பயன்படுத்துவது மற்றும் அதன் மீது நம்பிக்கையூட்டுவதில் வெகுபயனளிப்பதாய் இருக்கிறது. CRM மென்பொருளின் முதன்மையான செயல்பாடுகளில் ஒன்று வாடிக்கையாளர்கள் குறித்த விபரங்களை சேகரிப்பதாகும். ஒரு வா.தொ.மே. தீர்வின் பகுதியாக தரவைச் சேகரிக்கையில், வாடிக்கையாளர் தனது ரகசியம் பாதுகாக்கப்படுவது மற்றும் தரவுப் பாதுகாப்பு குறித்து கொள்ளும் கவலைக்கும், அத்துடன் சட்டப்பூர்வ மற்றும் கலாச்சார நிர்ணயங்களுக்கும் ஒரு நிறுவனம் மதிப்பளிக்க வேண்டும். தங்களது சம்மதம் இல்லாமல் தங்களது தரவுகள் மூன்றாம் தரப்பு எதனுடன் பகிர்ந்து கொள்ளப்படாது, அத்துடன் அத்தரவுகள் மூன்றாம் தரப்பினர் எவரும் சட்டவிரோதமாய் அணுகுவதில் இருந்து போதுமான வகையில் பாதுகாக்கப் பெற்றுள்ளது என்கிற உறுதிமொழிகளைப் பெற சில வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர். பின்வரும் அட்டவணை கார்ட்னர் ஆய்வுகளில் வெளியான 2006-2008 இன் முன்னனி வா.தொ.மே. மென்பொருள் விநியோக நிறுவனங்களைப் பட்டியலிடுகிறது (அளவுகள் மில்லியன் அமெரிக்க டாலர்களில்). 2007 கார்ட்னர் ஆய்வின் படி, வெளியிலிருந்தான ஆலோசகர்கள் மற்றும் அமைப்பு ஒருங்கமைப்பாளர்களைப் பயன்படுத்தி 2006 ஆம் ஆண்டில் நிறைவு செய்யப்பட்ட வா.தொ.மே திட்டப்பணிகளுக்கான முன்னணி மென்பொருள் விநியோக நிறுவனங்களை பின்வரும் அட்டவணை பட்டியலிடுகிறது. 2007 ஆம் ஆண்டின் டேட்டாமானிட்டர் அறிக்கை ஆரக்கிள் (சைபெல் உட்பட) மற்றும் SAP நிறுவனங்களை உயர் வா.தொ.மே விநியோக நிறுவனங்களாக பட்டியலிடுகிறது. கோர்டியண்ட், இன்ஃபார், மற்றும் சேல்ஸ்ஃபோர்ஸ்.காம் ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்த சிறிய விநியோக நிறுவனங்களாகப் பட்டியலிடப்பட்டன. செர்கய் புப்கா செர்கய் புப்கா ("Sergey Nazarovich Bubka", உருசிய மொழி: "Сергей Назарович Бубка"; உக்ரைனிய மொழி: "Сергій Назарович Бубка", பிறப்பு - டிசம்பர் 4, 1963 ), ஓய்வுபெற்ற உக்ரைனிய கம்பம் தாண்டுதல் ("pole vault") வீரர். உலகின் சிறந்த தடகள வீரர் பட்டத்தை பல முறை வென்றவர். அனைத்துலக தடகள விளையாட்டுக்கழகங்களின் கூட்டமைப்பு நடத்தும் உலகப்போட்டிகளில் ஆறு முறை வெற்றி பெற்று உலக வாகையர் பட்டம் பெற்றவர். ஒரு முறை ஒலிம்பிக் தங்கம் வென்றவர். உயரம் தாண்டுதல் போட்டிகளில் 35 முறை உலக சாதனையை முறியடித்தவர். 6.0 மீ உயரத்தை முதன்முதலில் கடந்தவர் இவரே. இவர் அதிகபட்சமாக தாண்டிய 6.14 மீ உலக சாதனை 15 பெப்ரவரி 2014 அன்று முறியடிக்கப்பட்டது. குசுத்தாவ் கிர்க்காஃப் குசுத்தாவ் ராபர்ட் கிர்க்காஃப் அல்லது குஸ்தாவ் ராபர்ட் கிர்க்காஃப் ("Gustav Robert Kirchhoff" ( குசுத்தாச் ராபர்ட் கிர்ச்சாஃப்), மார்ச் 12, 1824 - அக்டோபர் 17, 1887) என்பவர் செருமானிய (இடாய்ச்சுலாந்திய)இயற்பியலாளர். மின்சுற்றுக்கள், நிறமாலையியல், மற்றும் கரும்பொருள் கதிர்வீச்சல் போன்ற பல துறைகளில் இவரது பங்களிப்புகள் புகழ் பெற்றவை. 1862 ஆம் ஆண்டில் கரும்பொருள் கதிர்வீசல் குறித்து ஆய்வுகளை வெளியிட்டார். அத்துடன் மின்சுற்று மற்றும் வெப்பக் கதிர்வீசல் பற்றிய விதிகள் கிர்க்காஃபின் விதிகள் என இவரது நினைவாகப் பெயரிடப்பட்டன. கிர்க்காஃப் கிழக்கு புருசியாவில் பிறந்தவர். தந்தை பிரீடிரிக் கிர்க்காஃப் ஒரு வழக்குரைஞர். 1847 இல் கோன்ஸ்பேர்க் பல்கலைக்கழகத்தில் கணித-இயற்பியலில் பட்டம் பெற்றார். கிளேரா என்பவரை மணந்து, பெர்லின் நகருக்குக் குடி பெயர்ந்தார். 1845 ஆம் ஆண்டில் இவர் மாணவனாக இருக்கும் போதே தனது புகழ் பெற்ற கிர்க்காஃபின் மின்சுற்று விதிகளை வெளியிட்டார். 1859 இல் தனது வெப்பக்கதிர்வீச்சல் விதிகளை முன்வைத்தார். இவ்விதிகளை அவர் 1861 இல் நிறுவிக் காட்டினார். 1854 ஆம் ஆண்டில் இவர் ஐடல்பேர்க் பல்கலைக்கழகத்திற்கு நிறமாலையியல் குறித்து ராபர்ட் பேர்னர்என்பவருடன் இணைந்து ஆய்வுகள் மேற்கொள்ளுவதற்காக அழைக்கப்பட்டார். அதே ஆண்டில் இருவரும் இணைந்து சீசியம், ருபீடியம் ஆகியவற்றைக் கண்டுபிடித்தனர். மாத்தேயோ கார்காசி மாத்தேயோ கார்காசி 1792ஆம் ஆண்டில் இத்தாலியிலுள்ள புலோரென்சு(Florence) நகரத்தில் பிறந்தார். இவர் ஒரு புகழ்பெற்ற இத்தாலிய கிதார் இசை கலைஞரும் இயற்பாளருமாக(Composer) திகழ்ந்தார். கார்காசி முதலில் பியானோ கற்க ஆரம்பித்தார். ஆனால், பின்போ, இவரது கவனம் கிதார் பக்கம் திரும்பியது. இவர் சிறுவயதிலேயே கிதார் கற்று முடித்தார். விரைவிலேயே கிதார் வாசிப்பதில் வல்லவர் என்று புகழ்பெற்றார். 1810ஆம் ஆண்டில் இவர் செருமனிக்கு சென்றார். அங்கும் இவருக்கு விரைவிலேயே வெற்றி கிடைத்தது. 1815ஆம் ஆண்டில் இவர் பாரிசு நகரத்தில் ஆசிரியராக பணியாற்றி, பியானோவையும் கிதாரையும் கற்பித்தார். 1819ஆம் ஆண்டில் செருமனியில் இவரது நண்பர் அன்தோயின் மெசொனியெரை (Antoine Meissonnier) முதல் முறையாக சந்தித்தார். பிரபலமான கிதார் கலைஞரான மெசொனியெர், பாரிசு நகரத்திலிருந்த அவரது பதிப்பகத்தில் கார்காசியின் படைப்புகள் பலவற்றை பதிப்பித்தார். 1820ஆம் ஆண்டிலிருந்து, கார்காசி தன்னுடைய பெரும்பாலான நேரத்தை பாரிசு நகரத்திலேயே செலவிட்டார். 1822ஆம் ஆண்டில் இலண்டன் மாநகரில் தொடர்ச்சியாக அரங்கங்களில் வாசித்து பெரும் வாத்திய கலைஞராகவும் ஆசிரியராகவும் பேரும் புகழும் பெற்றார். ஆனால், பாரிசிலோ, இவரது திறமைகள் தெளிவாக புரிந்துகொள்ளப்பட நெடுங்காலம் ஆயிற்று. இதற்கு பெர்தினாந்தோ காருலி(Ferdinando Carulli) அங்கிருந்தும் ஒரு குறிப்பிடத்தக்க காரணம். ஏனெனில், காருலியின் இரசிகர்கள் அவரை மிகவும் நேசித்தனர். 1824ஆம் ஆண்டில் கார்காசி மீண்டும் செருமனி சென்றார். பின்பு, அவர் இலண்டனுக்கு சென்றார். இறுதியாக, அவர் பாரிசு நகரத்திற்கு திரும்பினார். பல வருடங்களாக இவர் இங்கிருந்து இலண்டன் முதற்கொண்டு ஐரோப்பாவிலுள்ள முக்கிய நகரங்களுக்கு சென்று வாசித்தார். 1836ஆம் ஆண்டில் மீண்டும் அரங்கங்களில் வாசிக்க துவங்கிய இவர், 1840ஆம் ஆண்டில் நிறுத்திவிட்டார். இவர், 1853ஆம் ஆண்டில் உயிர் நீத்தார். கார்காசி, இன்றைக்கும் விளைமதிப்பற்றதாக கருதப்படும் கிதார் வாசிக்கும் முறையினை விளக்கும் பொருட்டு ஒரு நூல் இயற்றினார். இவரது முக்கிய படைப்புகள் 25 Etudes op. 60யில் உள்ளன. இவைகளில், வாத்தியதிரனையும் அருமையான இசையையும் ஒன்றாக இணைத்துள்ளார், இவர். இவரது இசை இன்றைக்கும் பெரும்பாலான செம்மிசை கிதார் கலைஞர்கள் வாசிப்பதற்கு இதுவே முக்கிய காரணம் ஆகும். இவருடைய படைப்புகள், பல புகழ்பெற்ற கலைஞர்களாலும் பதிப்பிக்கப்பட்டுள்ளது; இசைக்கப்பட்டு பதிவுசெய்யப்பட்டும் உள்ளது. இழைமணியப் பழையோள் இழைமணியப் பழையோள் அல்லது இழைமணிய முதற்றாய் என்பது வாழும் மாந்தரின் தாய்வழி மூதாதையர்கள் அனைவருக்கும் பொதுவாக இருந்ததாகக் கருத இடம் தரும் ஒரு பெண் தொன்முது தாயைக் (மூதாயைக்) குறிக்கும் சொற்றொடர். இப்பெண்ணின் இழைமணி மரபுப்பொருளின் (மைட்டோக்கோன்றிய டி.என்.ஏ யின்) ஒரு படியுருதான் வழிவழியாக ஒவ்வொறு தாயிடமிருந்தும் குழந்தைகளுக்குச் சென்று இன்று வாழும் மனிதர்களின் கண்ணறைகளின் உள்ளுறுப்புகளானன இழைமணிகளுக்குள் இருக்கின்றன. பைபிள் கதையில் வரும் ஏவாளின் பெயரைக் கொண்டு இம்மூதாதையப் பெண்ணை "Mitochondrial Eve" (இழைமணி ஏவாள்) என்றும் ஆங்கிலத்தில் அழைப்பர். இருந்தாலும் இப்பெண் மாந்தரினத்தின் முதற்பெண்ணல்ல. மாறாக, தொடர்ச்சியாக வந்த மரபுவழியில் இன்றும் தாய்வழி வழித்தோன்றல்களைக் கொண்ட "கடைசிப்" பெண் மட்டுமே. இப்பெண்ணின் தாயும் பிற மூதாதையர்களும் வாழ்ந்துள்ளனர். தவிர, இப்பழையோள் வாழ்ந்த நாட்களில் இருந்த மற்ற பெண்களின் வழித்தோன்றல்கள் ஆண் வழியில் வந்து இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், ஏதோ ஒரு தலைமுறையில் அவர்களின் வழித்தோன்றல்கள் அனைவரும் ஆண்களாக இருக்கும்போது அவர்களுடைய இழைமணிய மரபுப்பொருள் அதற்குமேல் கடக்க முடியாமல் போய்விடுகிறது. எடுத்துக்காட்டாக, வலப்புறம் உள்ள படத்தில் உரோசாப்பூ நிறங்கொண்ட பெண்ணும் நீலநிறம் கொண்ட பழையோளின் தலைமுறையைச் சேர்ந்தவர்தான். ஆனால், அவருக்கு இரண்டு ஆண் மகன்கள் மட்டுமே பிறந்ததால் அவரது இழைமணிய மரபுப்பொருள் இன்று இல்லை, மற்ற வழக்கமான மரபுப்பொருள் இன்றும் இருக்கும். இழைமணியப் பழையோள் எனும் தொன்முது தாய் ஏறத்தாழ 170,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, அல்லது ஏறத்தாழ 8,000 தலைமுறைக்கு முன்பு வாழ்ந்த ஒரு பெண்மணி. இக் காலப்பகுதியானது, ஆப்பிரிக்காவை விட்டு மாந்தர்கள் புலம் பெயர்ந்து சென்றதாக கருதப்படும் 60,000 ஆண்டுகள் என்னும் காலக்கணக்குக்கும் முற்பட்ட காலம். இந்த இழைமணி முதல்தாய் படியுரு ஆணின் ஒய்-நிறப்புரிக்கு (ஒய்-குரோமோசோம்)க்கு இணையான பெண் படிவம். ஆனால் தந்தை வழி வரும் பொது ஆண் படியுரு வேறு காலத்தது (பிற்காலத்தது). கண்ணாடி விரியன் கண்ணாடி விரியன் () (Russel's Viper, "Daboia russelii") என்பது நச்சுத் தன்மை கொண்ட பாம்பு. இவை ஆசியாவில் குறிப்பாக இந்தியத் துணைக்கண்டம் முழுவதிலும், தென்கிழக்காசியா, சீனாவின் தெற்குப் பகுதி, தாய்வான் ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன. இது பெரும் நான்கு எனப்படும் நான்கு பாம்புகளில் ஒன்று. இந்தியாவில் பாம்புக்கடியினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ஏறக்குறைய இவை நான்கே காரணம். விரியன் பாம்பின் நச்சு குருதிச் சிதைப்பானாகும். ஆகவே மருத்துவர்கள் இரத்தம் உறையும் நேரம் மற்றும் இரத்தம் வழியும் நேரம் ஆகியவற்றை மணிக்கொரு முறைச் சோதிப்பர். பிலோ இருதயநாத் பிலோ இருதயநாத் இந்தியாவில் உள்ள பல்வேறு ஆதிவாசிகளையும் நாடோடிகளையும் நேரில் சென்று சந்தித்து அவர்கள் வாழ்க்கை முறை பற்றி அறிந்து கொண்டு அதை தமிழ் இலக்கியங்களுடன் ஒப்பிட்டு கட்டுரைகள் எழுதியவர் ஆவார். இவர் மைசூரில் பிறந்து சென்னையில் வளர்ந்தவர். சென்னையில் ஒரு பள்ளியில் தமிழ் ஆசிரியராக இருபத்தைந்து ஆண்டுகாலம் பணி செய்திருக்கிறார். இந்தியா முழுவதும் மிதிவண்டியில் சுற்றியலைந்தவர் என்பது இவரது தனிச்சிறப்பு. பயண நாட்களில் மிதிவண்டியை மரத்தின் ஒரத்தில் நிறுத்தி மிதிவண்டியின் சுமைதளத்தை (கேரியரை) மரத்தோடு இணைக்கும் பலகையை போட்டு படுத்து உறங்குவார் . இவர் இந்தியாவில் மானுடவியல் ஆய்வுகளின் முன்னோடி ஆவார். பிலோ இருதயநாத் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகளை அறுபதிற்கும் மேற்பட்ட இதழ்களில் எழுதியுள்ளார். இவர் 29 புத்தகங்களையும் எழுதியிருக்கிறார், இதில் சில இவர் 1986ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். ஜனனி ஜனநாயகம் ஜனனி (ஜான்) ஜனநாயகம் என்பவர் பிரித்தானியத் தமிழரும், வங்கித் தொழில் நெறிஞரும், மனித உரிமைச் செயற்பாட்டாளரும், அரசியல்வாதியும் ஆவர். இவர் 2009 இல் இடம்பெற்ற ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் லண்டன் பகுதியில் இருந்து சுயேட்சையாகப் போட்டியிட்டார். இவர் புலம்பெயர் ஈழத்தமிழர்களின் ஆதரவில் போட்டியிட்டார். 2009, ஜூன் 8 இல் நடந்த தேர்தலில் இவர் 50,000 வாக்குகளைப் பெற்றிருந்தும், வெற்றி பெறத் தவறினார். இலங்கையின் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜனனி, தனது பெரும்பாலான இளமைக் காலத்தை நைஜீரியாவிலும், சாம்பியாவிலும் கழித்தார். இவரின் பெற்றோர் அங்கு ஆசிரியத் தொழிலாற்றி வந்தனர். பின்னர் பெற்றோருடன் ஐக்கிய இராச்சியத்திற்கு குடிபெயர்ந்தார். மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று கணினியியலில் சிறப்புப் பட்டத்தைப் பெற்றார். பின்னர் லண்டன் இம்பீரியல் கல்லூரியில் பிரயோக கணிதத்தில் முதுமாணிப் பட்டத்தையும், இன்சீட் வர்த்தகக் கல்லூரியில் வர்த்தக முகாமைத்துவத்தில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றார். கணினித் துறையில் சிலகாலம் ஆய்வு மற்றும் வளர்ச்சியில் ஈடுபட்டிருந்த ஜனனி, பின்னர் வங்கி முகாமைத்துவத்தில் நாட்டம் கொண்டார். தற்போது இவர் முன்னணி இத்தாலிய வங்கியொன்றின் திட்ட முகாமையாளராக லண்டனிலும், ஜெர்மனியிலும் பணிபுரிகிறார். 1995ஆம் ஆண்டில் HURT என்ற பெயரில் மனித உரிமை இயக்கம் ஒன்றை ஆரம்பித்தார். அத்துடன் இனவழிப்புக்கு எதிரான தமிழர் என்ற அமைப்பின் முக்கிய உறுப்பினராகவும் செயற்படுகிறார். 2009இல் ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கான தேர்தல்களில் ஜனனி லண்டன் நகர சுயேட்சை வேட்பாளராக நின்றார். பின்வரும் முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இவர் தேர்தல் களத்தில் இறங்கினார்: இவருக்கு பெரும்பாலான புலம் பெயர்ந்த தமிழர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். பிரபல பாடகி மாதங்கி அருள்பிரகாசம் (எம்.ஐ.ஏ.) ஆதரவு தெரிவித்திருந்தார். அத்துடன் ஜனனிக்கு ஆதரவாக அவர் ஒரு ஒன்லைன் பிரச்சாரத்தையும் தொடங்கி பாடல் ஒன்றையும் பாடியிருந்தார். போட்டியிட்ட 19 கட்சிகள் மற்றும் சுயேட்சை உறுப்பினர்களில், ஜனனி 50,014 வாக்குகள் (2..86%) பெற்று 8வதாக வந்தார். ஆனாலும் ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கு இவர் தெரிவாகவில்லை. ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றிலேயே, ஒரு சுயேச்சை வேட்பாளருக்கு இவ்வளவு வாக்குகள் இதுவரை கிடைத்ததில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் அனைத்து சுயேச்சை வேட்பாளர்களும் மொத்தமாக பெற்ற வாக்குகளை விட 2 மடங்கு அதிக வாக்குகளையும் ஜனனி பெற்றுள்ளார். லண்டன் பகுதியில் எட்டு எம்.பி. இடங்கள் உள்ளன. இதில், 3 இடங்களை கன்சர்வேட்டிவ் கட்சியும், ஆளும் தொழிற் கட்சி 2 இடங்களையும் பெற்றன. லிபரல் மக்களாட்சிக் கட்சி, பசுமைக் கட்சி, இங்கிலாந்து சுயேச்சைக் கட்சி ஆகியோருக்கு தலா ஓர் இடம் கிடைத்தது. ஒவ்வொரு லண்டன் லண்டன் தன்னாட்சி நகரங்களில் ("London borough") ஜனனி பெற்ற வாக்குகள்: இனவழிப்புக்கு எதிரான தமிழர் இனவழிப்புக்கு எதிரான தமிழர் ("Tamils Against Genocide") என்பது ஒரு அரச-சார்பற்ற நிறுவனம். இது ஐக்கிய அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தில் கொலம்பியா நகரில் இயங்குகின்றது. 2009 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவன்ம் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் இலங்கைத் தமிழர் இனப்படுகொலைக்கு எதிராகவும் ஈழப்போருக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறது. இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழரை ஈழப்போரின் போது படுகொலை செய்ததாக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி இரண்டு இலங்கை அதிகாரிகளுக்கு எதிராக இவ்வமைப்பு அமெரிக்காவில் வழக்குத் தொடுத்துள்ளது. இவர்களது வழக்குரைஞராக அமெரிக்காவின் புகழ் பெற்ற வழக்கறிஞர் புரூஸ் பெயின் அமர்த்தப்பட்டுள்ளார். சுயேச்சை (அரசியல்) அரசியலில், சுயேச்சை ("independent") எனப்படுபவர் எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாராத ஒரு அரசியல்வாதி. இவர்கள் பொதுவாக ஒரு நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளுக்கிடையேயான கொள்கை வேறுபாடுகளுக்கு நடுவில் நிற்பவர்களாக இருப்பர். அல்லது அரசியல் கட்சிகள் முக்கியமாகக் கருதாத சில பிரச்சனைகளை முன்னெடுத்து தேர்தலில் போட்டியிடுவார்கள். வேறு சிலர் அரசியல் கட்சி ஒன்றுடன் இணைந்தவர்களாக, ஆனால் அக்கட்சியின் சின்னங்களுக்குக் கீழே போட்டியிட விரும்பாதவர்களாக இருப்பார்கள். இன்னும் சில சுயேச்சை வேட்பாளர்கள் ஒரு பொது அமைப்பில் அங்கம் வகிப்பதற்காக அரசியல் கட்சி ஒன்றைத் தோற்றுவித்து சுயேச்சைக் குழுவாகப் போட்டியிடுவர். அலால் அலால் அல்லது ஹலால் (அரபி:حلال‎, ஆங்கிலம்:Halal ) அரபு மொழிச் சொல், சரியத் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட எந்தவொரு பொருள் அல்லது செயல் போன்றவற்றை குறிப்பதாகும்.இதன் எதிர்ச்சொல் ஹராம் ஆகும். இச்சொல் மிகப்பரவலாக இசுலாமியரின் சரியத் சட்டத்திற்குட்பட்ட உணவுப் பொருள் பயன்பாட்டில் பயன்படுத்தப்படுவதாகும். (الشريعة الإسلامية). உலகளவில் 70% இசுலாமிய பெருமக்கள் இந்த அலால் முறையில் செய்யப்பட்ட உணவு வகைகளை உட்கொள்கின்றனர். மற்றும் உலகளாவிய நடப்பு அலால் வணிகம் $580 பில்லியன் தொழிற்துறைகளைக்க் கொண்டுள்ளன. இச் சொல் அரபி பேசும் மக்கள் மற்றும் அரபி பேசா மக்கள் என இருவரிடமும் வேறு பட்டு பயன்படுத்தபடுகின்றது. அரபு மொழி பேசும் நாடுகளில் இச்சொல் இசுலாமியச் சட்டப்படி "அனுமதிக்கப்பட்ட எந்தவொரு பொருளும்" என்ற பொருள் கொண்ட சொல்லாக வழங்குவதாகவும் ஹராம் என்ற சட்டத்திற்கு நேர்பொருளைக் கொண்டதாகவும் அழைக்கப்படுகின்றது. இச்சட்டம் தனி மனித ஒழுக்கம், பேச்சுத் தொடர்பு, உடையணிதல், நன்னடத்தை, வழக்கமரபு மற்றும் உணவுப் பழக்க விதிமுறைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. அரபு பேசா நாடுகளில், பொதுவாக இச்சொல் குறுகிய பொருளுடைய "இசுலாம் உணவு முறை விதி"யை உணர்த்தும் சொல்லாக, குறிப்பாக "இறைச்சி" மற்றும்" கோழியிறைச்சி" உணவு வகைகளை குறிப்பதற்காக பொதுவாகப் பயன்படுத்தபடுகின்றது. இசுலாம் சட்டம் எந்த உணவு உட்கொள்ளத் தக்கவை மற்றும் எவை உட்கொள்ளத் தகாதவை என்று வகுத்துள்ளது. உணவுக்காக கொல்லப்படும் விலங்குகளின் கொல்லும் முறையினையும் வகுத்துள்ளது. அம்முறை தபிகா எனப்படுகின்றது. இஸ்லாமிய சட்டப்படி ஹலால் உணவை மட்டுமே சாப்பிட வேண்டும். அதை விடுத்து பன்றி இறைச்சியையோ அல்லது தபிஹாஹ் செய்யப்படாத இறைச்சியை சாப்பிடுவதோ மிகவும் பாவகரமான செயல் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. அனால் தவிர்கமுடியாத சூழலில் ஒருவர் வற்புறுத்தலினாலோ அல்லது வேறு உணவு இல்லாத நிலையிலோ ஹலால் அல்லாத உணவை உட்கொள்ளலாம் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது. சுராஹ் 2 .173 மனிதர்களுக்கு ஊறுவிளைவிக்கக்கூடிய (அராம்) பரவலான பண்டங்களை உண்பது, குரானில் கூறப்பட்ட வாசகங்களின்படித் தடைசெய்யப்பட்டவையாகும். தபிகா சமயச்சடங்கின்படி இசுலாமியச் சட்டப்படி மீன் மற்றும் பெரும்பாலான கடல்வாழ் உயிரினங்களைத் தவிர ஏனைய அனைத்து விலங்குகளை வெட்டப்படும் முறையாகும். இம்முறையில் விலங்குகளை வெட்டப்படுவது விரைவானது, ஆழமாக வெட்டக்கூடியது, கூறிய முனையுடன் கூடிய கத்தியைக் கொண்டு கழுத்துப் பகுதியை வெட்டுவது, சுகுலார் சிரையை (jugular vein- கழுத்து பெருநாளங்களுள் ஒன்று) வெட்டுவது மற்றும் சிரசுத் தமனியை (சிரசு நாடி-carotid artery) இருபக்கமும் தண்டுவடத்தை (முண்ணான்-spinal cord))தவிர (அதைச்சுற்றி) வெட்டுவது. தபிகா அலால் மற்றும் கசரத் வெட்டுச் சட்டங்களில் நிறைய ஒற்றுமை, வேற்றுமைகள் உள்ளன. இசுலாமல்லாதார் கசரத் முறையை அலால் முறைக்கு மாற்றாகப் பய்னபடுத்தபடவேண்டும் என்று கூறப்படுகின்றது. இருப்பினும் இது இன்றுவரை சர்ச்சைக்குரியனவாக, தனிநபர் விவாதத்துக்குரியனவாக கருதப்படுகின்றது. அதேசமயம் சில இசுலாம் அலால் குழுக்கள் இக்கருத்தை அதாவது கோசர் இறைச்சியை அலால் இறைச்சியாக ஏற்றுக்கொண்டுள்ளன. யூதர்களின் கோசர் குழுக்கள் அலால் இறைச்சியை கோசர் இறைச்சியாக ஏற்றுக்கொள்ளாத நிலையிலும் வேறுபட்டத் தேவைக்களுக்கேற்ப இசுலாமிய குழுக்கள் மட்டும் ஏற்றுக்கொண்டுள்ளன. டியர்பான், மிச்சிகன், அமெரிக்கா, போன்ற நாடுகளிலும் துரித உணவகங்களிலும் அலால் முறை பின்பற்றப்படுகின்றது. கனடாவில் அலால் முறை மிகுதியாக பின்பற்றப்படுகின்றது. இலங்கையில் அலால் முறை, இசுலாமிய நடைமுறைகளை இசுலாமியர்கள் அல்லாதவர்களுக்கு பலாத்காரமாகத் திணிப்பதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்ததால், இலங்கை அரசு இசுலாமியருக்கு மாத்திரம் அலால் முறையிலான உணவினை விற்கலாம் என இலங்கை அரசு அறிவித்தது. மான்செஸ்டர் பல்கலைக்கழகம் மான்செஸ்டர் பல்கலைக்கழகம் ("The University of Manchester") இங்கிலாந்தின் மான்செஸ்டர் மாநகரத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகம். இப்பல்கலைக்கழகம் 2004 ஆம் ஆண்சு அக்டோபர் 1 ஆம் நாள் மான்செஸ்டர் நகரில் இருந்த இரண்டு பல்கலைக்கழகங்களை இணைத்து தோற்றுவிக்கப்பட்டது. அவை மான்செஸ்டர் விக்டோரியா பல்கலைக்கழகம் (தோற்றம் 1851), மான்செஸ்டர் அறிவியல் தொழில்நுட்பக் கல்லூரி (தோற்றம் 1824) என்பனவாகும். இப்பல்கலைக்கழகத்திலும் அதன் முன்னைய இணைப்புப் பல்கலைக்கழகத்தும் மொத்தம் 23 நோபல் விருதாளர்கள் மாணவர்களாகவும், ஆசிரியர்களாகவும் இருந்திருக்கிறார்கள். ஐக்கிய இராச்சியத்தில் ஒக்ஸ்போர்ட், மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களுக்கு அடுத்தபடியாக மிக அதிகமான நோபல் பரிசாளர்களை உருவாக்கியது மான்செஸ்டர் பகலைக்கழகம். 2007/08 காலப்பகுதியில் இப்பல்கலைக்கழகத்தில் 40,000 மாணவர்கள் கிட்டத்தட்ட 500 பாடத்திட்டங்களில் கல்வி பயின்றனர். 10,000 இற்கும் அதிகமான ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். ஆசிரிய-மாணவர் விகிதாசாரத்தின் படி, இது ஐக்கிய இராச்சியத்திலேயே மிகப்பெரும் தனிப்பட்ட பல்கலைக்கழகமாகத் திகழ்கிறது. ஏனைய பல்கலைக்கழகங்களிலும் பார்க்க அதிக எண்ணிக்கையான மாணவர்கள் இங்கு கல்வி பயில விண்ணப்பிக்கிறார்கள். ஆண்டு தோறும் 60,000 இற்கும் அதிகமானோர் பட்டப்படிப்புக்காக மட்டும் விண்ணப்பிக்கிறார்கள். 2007 ஆம் ஆண்டில் இதன் நிகர வருமானம் £637 மில்லியன்.. சுருட்டைவிரியன் புல் விரியன், என்று அழைக்கப்படும் இந்த சிறு விரியன் [Saw-scaled viper ("Echis carinatus")] நச்சுப்பாம்புக் குடும்பத்தைச் சேர்ந்த ஓர் உயிரினம். இலத்தீன் அடிப்படையில் நச்சுப்பாம்புக் குடும்பத்தை வைப்பெரிடீ (viperidae) என்பர்நச்சுத்தன்மையுடைய பாம்பு. பெரும் நான்கு இந்தியப் பாம்புகளுள் ஒன்றான இது குழிவற்ற விரியன் ( pitless viper ) வகையைச் சார்ந்தது. பெரும் நான்கு (இந்தியப் பாம்புகள்) நாவரசு கொலை வழக்கு நாவரசுக் கொலை வழக்கு இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின், சிதம்பரம் மாவட்டத்திலுள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்வி முதலமாண்டு மாணவரான பொன்.நாவரசு 1996 ஆம் ஆண்டு நவம்பர் 6 அன்று அதே கல்லூரியில் பயிலும் இரண்டாமாண்டு முதுநிலை மாணவரான ஜான்டேவிட்டின் பகடிவதைக்கு இணங்க மறுத்ததால் கொலை செய்யப்பட்டார். அவர் உடல் உறுப்புகளை துண்டு துண்டாக வெட்டியெடுத்து ஆற்றில் வீசியெறிந்தார் ஜான் டேவிட். இக்கொலைச்சம்பவத்திற்காக ஜான் டேவிட்டுக்கு கடலூர் நீதிமன்றம் 1998, மார்ச் 11 அன்று இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது. பின் மேல்முறையிட்டீன் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தால் அக்டோபர் 8, 2001 அன்று விடுதலை செயல்பட்டார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வழக்கு தமிழக காவல் துறையின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஏப்ரல் 2011இல் உச்ச நீதிமன்றம் ஜான் டேவிடுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தது. ஆனால் விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை அடுத்தடுத்து அனுபவிக்காமல், ஒரே நேரத்தில் அனுபவிக்கவேண்டுமென்றும் தீர்ப்பளித்தது. தீர்ப்பைத் தொடர்ந்து காவல் துறையிடம் சரணடைந்த ஜான் டேவிட் தற்போது சிறையில் உள்ளார். கொலை செய்யபட்ட மாணவர் நாவரசுவின் தந்தை சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரான முனைவர் ப.க.பொன்னுசாமி என்பவர் ஆவார். தங்களின் ஒரே மகனை இழந்த நாவரசுவின் பெற்றோர் வருங்காலத் தலைமுறையினரை நல்லவர்களாக ஆக்கும் பொருட்டு பொன் நாவரசு அறக்கட்டளை என்ற அமைப்பை 1997 ஆம் ஆண்டு மார்ச் 19 இல் துவக்கினர். இக்கொலை வழக்கின் பாதிப்புகளால், தமிழ்நாடு பகடிவதை தடைச் சட்டத்தை ("Tamil Nadu Prohibition of Ragging Act") 1997இல் தமிழ்நாடு அரசு இயற்றியது. பொன் நாவரசு அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் தி டேக்கிங் ஆஃப் பெல்காம் 123 நியூயார்க் நகர் சப்வே 6 ரயிலைக் கடத்துகிறார், பெர்னார்ட் ரைடர் (ஜான் டிரவோல்டா). அந்த ரயிலின் பயணிகளை பிணைக் கைதிகளாக வைத்துக் கொண்டு, 10 மில்லியன் டாலர் கேட்டு மிரட்டுகிறார். அவருக்கும், உளவு அதிகாரி வால்டர் கார்பெருக்கும் (டேன்ஸல் வாஷிங்டன்) இடையே நடக்கும் போராட்டமே இப்படத்தின் கதைக் கருவாகும். டோனி ஸ்காட் இயக்கி, தயாரித்துள்ள இப்படம், ஜோன் கோடே-யின் த்ரில்லர் வகையறா நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட அதிரடித் திரைப்படமாகும். இதில், ஜான் டிரவோல்டாவுக்கும் டேன்ஸல் வாஷிங்டனுக்கும் சரிநிகர் வலுவான கதாப்பாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்ம எண் எதிர்ம எண், அல்லது குறை எண், மறை எண் என்பது சுழியத்துக்கு குறைவான மெய்யெண். எ.கா −2, −45.33 போன்றவை. நேர்ம மெய்யெண்களுக்கு ஏற்புடைய கணித செயற்பாடுகள் அனைத்து எதிர்ம எண்களுக்கும் ஏற்புடையவை. எதிர்ம எண்கள் முத முதலில் சீன, இந்திய கணிதவியலாளர்களால் பயன்படுத்தப்பட்டது. எனினும் பல காலமாக கணக்குகளுக்கான மறை எண் விடைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. 17 ம் நூற்றாண்டில் இருந்து எதிர்ம எண்கள் நடைமுறைக் கணிதத்தில் பரந்த பயன்பாட்டுக்கு வந்தன. ஒரு சிறிய எண்ணிலிருந்து ஒரு பெரிய எண்ணைக் கழிக்கும்போது கிடைக்கும் விடையாக எதிரெண்ணாகும். எடுத்துக்காட்டாக, பூச்சியத்திலிருந்து மூன்றைக் கழிக்கக் கிடைப்பது -3: பொதுவாக ஒரு சிறிய எண்ணிலிருந்து ஒரு பெரிய எண்ணைக் கழிக்கும்போது கிடைக்கும் விடை ஒரு எதிர்ம எண்ணாகவும், அந்த எதிர்ம எண்ணின் அளவு கழிக்கப்ப்பட்ட இரு எண்களின் வித்தியாசமாவும் அமையும். எடுத்துக்காட்டு: நேர்ம எண்கள், எதிர்ம எண்கள், பூச்சியம் ஆகிய மூன்றுக்கும் இடையேயுள்ள தொடர்பு, ஒரு எண் கோட்டின் மூலம் காட்டப்படுகிறது. எண் கோட்டின் நடுவில் பூச்சியமும், அதற்கு வலப்புறம் நேர்ம எண்களும், இடப்புறம் எதிர்ம எண்களும் இடம்பெற்றுள்ளன. பெரிய எண்ணளவு கொண்டுள்ள எதிர்ம எண், அதைவிடச் சிறிய எண்ணளவுள்ள எதிர்ம எண்ணைவிடச் சிறியதாக இருக்கும். எடுத்துக்காட்டு: நேர்ம எண்களில், ஆனது ஐ விடப் பெரியது ஆனால் எதிர்ம எண்களில், எந்தவொரு எதிர்ம எண்ணும் எந்தவொரு நேர்ம எண்ணையும்விடச் சிறியதாகும். நேர்ம எண்கள், பூச்சியத்தை விடப் பெரியவை; எதிர்ம எண்கள் பூச்சியத்தை விடச் சிறிய எண்கள். எனவே பூச்சியத்தைத் தவிர மற்ற மெய்யெண்கள் எல்லாம், ஒன்று நேர்ம எண்ணாகவோ அல்லது எதிர்ம எண்ணாகவோ இருக்க வேண்டும். நேர்ம எண்கள் என்பதைக் காட்ட அந்த எண்களுக்கு முன் கூட்டல் குறியும் (), எதிர்மம் என்பதைக் காட்ட அந்தந்த எண்களுக்கு முன் கழித்தல் குறியும் () இடப்படுகின்றன. பொதுவாக, நேர்ம எண்களை அவற்றுக்கு முன் கூட்டல் குறியின்றி எழுதுவது கணித வழமையாகும். பூச்சியத்திற்கு குறி இல்லை. பூச்சியமானது, நேர்ம எண்ணோ அல்லது எதிர்ம எண்ணோ இல்லையென்பதால், ஒரு எண் பூச்சியமாகவோ அல்லது நேர்ம எண்ணாகவோ இருக்கும் என்பதைக் காட்டுவதற்கு, அந்த எண் ”எதிர்மமற்ற எண்” என்று குறிப்பிடப்படும். அதேபோல, ஒரு எண் பூச்சியமாகவோ அல்லது எதுர்ம எண்ணாகவோ இருக்கும் என்பதைக் காட்டுவதற்கு, அந்த எண் ”நேர்மமற்ற எண்” என்று குறிப்பிடப்படும் உள்தள் பாணி நிரலாக்கத்தில், உள்தள் பாணி என்பது நிரல் கட்டங்கள் எவ்வாறு உள்தள்ளப்படவேண்டும் என்பது பற்றிய ஒழுங்குமுறை ஆகும். எல்லோரும் பயன்படுத்த்தும் ஒரு பாணி இல்லையென்றாலும், சில பரவலாக பயன்படுத்தப்படும் பாணிகள் உண்டு. எந்தப் பாணியைப் பயன்படுத்தினாலும், ஒத்திசையாவாக பயன்படுத்துதல் பலரால் கடைப்பிடிக்கப்படும் ஓர் ஒழுக்கம் ஆகும். இன்று பல பாணிகள் பயன்பாட்டில் இருந்தாலும், கே & ஆர் அடைப்புக்குறி பாணி, மற்றும் நீட்டப்பட்ட அடைப்புக்குறி (Extended Brace Style) பாணிகள் பரந்த பயன்பாட்டில் உள்ளன. திடியன் திடியன் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஊர். இது மதுரையிலிருந்து 33 கிமீ தொலைவில் தேனி நெடுஞ்சாலையில் உள்ள செல்லம்பட்டி என்ற கிராமத்திலிருந்து 5 கிமீ தொலைவில் தெற்கே அமைந்துள்ளது. இங்கு நன்செய் விவசாயம் - நெல், கரும்பு போனறவைகள் விளைகின்றன. இவ்வூரில் இருக்கும் திடியன் மலையின் மீது அமைந்திருக்கும் ராமர் கோவில் மற்றும் அடிவாரத்தில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்தி கோவிலும் மிக சிறப்பு பெற்றதாகும். மேலும் இங்குள்ள நல்லூத்து பெரியகருப்பண்ண சுவாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இவ்வூருக்கு மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து 55B, 55G, 55H பேருந்துகள் செல்லும். சிறுகண் காலிலி சிறுகண் காலிலி ("Caecilian") காலிலி குடும்பத்தை சேர்ந்த ஒரு நிலநீர் வாழ்வன ஆகும். இது மூன்று நீலநீர் வாழ் குடும்பங்களில் ஒன்றாகும், மற்ற இரண்டு குடும்பங்கள் தவளை, / தேரை குடும்பம் மற்றும் நிலநீர் வாலுயிரி குடும்பமாகும். இவை மண் புழு அல்லது பாம்புகளின் உருவத்தை ஒத்திருக்கும். இவை மண்ணுக்கடியில் வாழ்வதால் இவ்வுயிரினங்களைப் பற்றிய தகவல்கள் மிகவும் குறைவாகும். கார்லோசு கார்சியா கெசாடா கார்லோசு கார்சியா குயேசாடா (Carlos García Quesada) (பிறப்பு ஏப்ரல்18, 1978 லாசுபியா) முன்னாள் எசுப்பானிய சாலை மிதிவண்டி ஒட்ட வீரர் ஆவார். 2002 ஆம் ஆண்டு கெல்மே அணியில் பங்குபற்றியதன் மூலம் இவர் தொழில்முறை வீரர் ஆனார். 2005 ஆம் ஆண்டு முடிவு வரை கெல்மே அணியில் தொடர்ந்த கார்லோசு 2006 ஆம் ஆண்டு யுனிபெட்.காம் அணிக்கு மாறினார். இருந்தாலும், 2006 ஆம் ஆண்டு வெளிச்சத்துக்கு வந்த போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் (Operación Puerto doping case) இவரது பெயரும் இணைக்கப்படவே கார்லோசு அணியிலிருநது ஓரங்கட்டப்பட்டார். 2007 ஆண்டின் தொடக்கத்தில் காலோசு யுனிபெட்.காம் அணியுடன் உடன்பாட்டிற்கு வந்து அணியிலிருந்து விலகிக் கொண்டார். ஈயுபீட்ஸ் ஈயுபீட்ஸ் (Eufeeds.eu) ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஐரோப்பிய பத்திரிகைகள், செய்தி நிறுவனங்கள், சஞ்சிகைகள் போன்றவற்றின் உள்ளடக்கங்களை ஆர்.எஸ்.எஸ். முறையில் சேகரித்து வழங்கும் இணையத்தளமாகும். இது ஒவ்வொரு 20 நிமிடமும் இயற்படுத்தப்படுவதுடன் 27 ஐரோப்பிய ஒன்றியநாடுகளின் பிரபலமான நாளேடுகள், பிராந்திய மற்றும் உள்ளூர் பத்திரிகைகள் போன்றவற்றை சேகரிக்கின்றது. ஐரோப்பா பற்றிய தகவல்களுக்காக தனியாக தருவதற்காக ஒரு சிறப்புப் பக்கம் உள்ளது. ஈயுபீட்ஸ் இணையத்தளம் மாசுட்டிரிச் (Maastricht) நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய இதழியல் மையத்தினால் 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடல்சார் தொல்லியல் கடல்சார் தொல்லியல்(Maritime archaeology) என்பது கடற்பகுதியோடு தொடர்புடைய தொல்லியல் ஆகும். இது, பழங்காலத்துக் கடற்கலங்கள், கடல்சார் கரையோர வசதிகள், கடல்வழிச் சரக்குகள், கடலுள் அமிழ்ந்த நிலத்தோற்றங்கள் என்பவற்றூடாக கடலுக்கும் மனிதனுக்கும் இடையிலான ஊடு தொடர்புகளை ஆய்வு செய்யும் துறைகளுள் ஒன்று. கடலில் மட்டுமன்றி ஏரிகள், ஆறுகள் முதலியவற்றிலும் கப்பல் போக்குவரத்துகள் இடம் பெறுவதால், இவை எல்லாவற்றுடனும் தொடர்புடைய மனித நடவடிக்கைகளின் வரலாற்றை ஆய்வு செய்யும் துறை நீரடித் தொல்லியல் (underwater archaeology) என அழைக்கப்படுவதுண்டு. இதன் ஒரு பிரிவாகக் கடற் பயணங்களுக்குப் பயன்பட்ட கலங்களின் அமைப்புத் தொழில்நுட்பம், கடல் பயணங்கள் என்பன தொடர்பான ஆய்வுத்துறை கடற்செலவுத் தொல்லியல் (nautical archaeology) எனப்படுகின்றது. பொதுவாகக் கடல்சார் தொல்லியல் களங்கள் கடலுள் அமிழ்ந்த துறைமுகப் பகுதிகள், மூழ்கிய கப்பல்கள் போன்றவற்றை உள்ளடக்குவனவாக உள்ளன. கடலுக்குள் அல்லது பிற நீர்ச் சூழல்களில் காணப்படும் தொல்பொருட்கள், நிலப்பகுதிகளில் காணப்படும் தொல்பொருட்கள் தொடர்பில் காணப்படுவதிலும் வேறுபட்ட காரணிகளின் தாக்கத்துக்கு உள்ளாகின்றன. ஒரு நோக்கில், கடல்சார் தொல்லியல் நிலப்பகுதித் தொல்லியலில் காணப்படாத பிரச்சினைகளைக் கொண்டதும், நீரில் மூழ்குதல் போன்ற பல்வேறு சிறப்புத் திறமைகள் தேவைப்படுவதுமான தனியான துறையாகக் கருதப்படும் அதே வேளை, கடல்சார் நடவடிக்கைகள், நிலப்பகுதிகளின் பொருளியல் மற்றும் சமூக நிலைமைகளோடு நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதனால் இன்னொரு நோக்கில், இது நிலஞ்சார் தொல்லியலுடன் ஒன்றிணைவான ஒன்றாகக் கருதப்படுகின்றது. இன்னொசென்டிவ் இன்னொசென்டிவ் (InnoCentive) என்பது திறந்த புத்தாக்க வழிமுறையைக் கொண்டு ஆராய்ச்சியையும் விருத்தியையும் முன்னெடுக்கும் ஒரு நிறுவனம் ஆகும். பல்வேறு உயர் தொழில்நுட்ப துறைகளைச் சார்ந்த சிக்கல்களை திறந்த நிலையில் இணையத்தில் முன்வைக்கப்படுகிறது. அதை தகுதி வாய்ந்த யாரும் தீர்க்க முன்வரலாம். சிறந்த தீர்வுகளுக்கு பணம் வழங்கப்படுகிறது. கிளாவேசீன் கிளாவேசீன் (பிரெஞ்சு: "Clavecin" (க்லாவேசாங்), ஆங்கிலம்: "Harpsichord" (ஹார்ப்சிகார்ட்), இத்தாலியம்: "Clavicembalo" (க்லாவிசெம்பாலோ)) என்பது வதிப்பலகையால் (Keyboard) வாசிக்கப்படும் ஒரு இசைக்கருவி. ஒரு வதியை (Key) அழுத்தும் பொழுது ஒரு கம்பியை மீட்டுவதன் மூலம் ஒலியை உண்டுபண்ணுகிறது. இது பரோக்கு இசையில் (Baroque music) பெரிதாகப் பயன்படுத்தப்பட்டது. பியானோவின் கண்டுபிடிப்பிற்கு பின்னர் இதன் புகழ் குறையத் துவங்கியது. ஆனால், இதன் தனித்தன்மையுள்ள ஓசை இன்றும் நவீன இசையில் (Contemporary music) பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிளாந்தம் பிளாந்தம் (ஆங்கிலம்: Flanders, பிரெஞ்சு: Flandre(s), எசுப்பானியம்: Flandes, இடாய்ச்சு: Flandern) என்பது, இன்றைய பெல்சியம், பிரான்சு மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள ஒரு இடம். காலப்போக்கில் பிளாந்தம் எனப்பட்ட இடத்தின் பரப்பளவு மாற்றம் அடைந்துள்ளது. அன்னாசி செந்தாழை என்பது ஒரு பழம் மற்றும் அதன் மரத்தின் பெயராகும். இதன் மற்றொரு பெயர் அன்னாசி ஆகும். இது பிரேசில் நாட்டின் தென்பகுதி, பராகுவே ஆகிய இடங்களைத் தாயகமாகக் கொண்டது. அன்னாசி () என்ற பெயர் போர்த்துகீசிய மொழியில் இருந்து பெறப்பட்டது. இது பிரமிலசே இனத்தைச்சேர்ந்த தாவரம் ஆகும். மாலதி மைத்திரி மாலதி மைத்ரி (பி. 1968) ஒரு தமிழ்க் கவிஞர், எழுத்தாளர். பெண்ணியத்தை கருபொருளாகக் கொண்ட கவிதைகளுக்காக அறியப்பட்டவர்.விளிம்பு நிலை அரசியல், மனித உரிமை அரசியல் செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபடுபவர். 'அணங்கு' எனும் பெண்ணிய இலக்கிய இதழினை நடத்திவருகிறார். சங்கராபரணி (2001), நீரின்றி அமையாது உலகு (2003), நீலி (2005) என்பவை இவரது கவிதைத் தொகுதிகள். விடுதலையை எழுதுதல் (2004), நம் தந்தையரைக் கொல்வதெப்படி (2008) என்பவை இவரது கட்டுரை நூல்கள். தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் தாரமங்கலம் கைலாசநாதர் கோயில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் உள்ளது. இக்கோயில் சிற்ப கலைக்கு மிகவும் புகழ் பெற்றது. இங்குள்ள சிங்கத்தின் வாயில் உருளும் கல், இராமன் வாலியை வதைக்கும் சிற்பம் ஆகியவை வியப்புக்குரியவை. இது ஒரே நேரத்தில் கட்டப்பட்ட கோயில் அல்ல. 10 ஆம் நூற்றாண்டிலேயே இதன் சில பகுதிகள் இருந்தன. 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கெட்டி முதலி அரச பரம்பரையினர் இந்தக் கோயிலை விரிவுபடுத்திக் கட்டியுள்ளனர். பிற்காலத்தில் மும்முடிச் சோழனும், சீயாழி மன்னனும் இந்தக் கோயிலைப் புதுப்பித்து திருவிழாக்களைக் கொண்டாடி வந்துள்ளனர். வணங்காமுடி மன்னர் காலத்தில்தான், இந்தக் கோயில் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலைச் சுற்றி 306 து164 அடி அளவுக்கு மிகப்பெரிய கல்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இது 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஆலயத்தின் முன்கோபுரம் 90 அடி உயரத்தில் ஐந்து அடுக்குகளைக் கொண்டது. ஒரு பெரிய தேரைக் குதிரைகளும் யானைகளும் இழுத்துச் செல்வதைப் போன்ற தோற்றத்தில் இந்தக் கோபுரம் அமைந்துள்ளது. மாசி 9,10,11 ஆகிய தேதிகளில் சூரிய ஒளி நந்தியின் கொம்பு வழியே சென்று சிவலிங்கத்தின் மீது மூன்றாம் பிறை போல் விழுகிறது. இதைக்காண அன்றைய தேதிகளில் அடியவர்கள் ஏராளமானோர் வருகின்றனர். இரதி சிலையிலிருந்து பார்த்தால் மன்மதன் தெரியாத வகையிலும், மன்மதன் சிலையிலிருந்து பார்த்தால் இரதி தெரியும்படியும் அமைந்த சிற்பம் சிறப்பானது. இத்தலத்தில் உள்ள கல் சங்கிலி, கல் தாமரை, சிங்கம் ஆகியவை சிற்பகலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் பவளக்கல் கோயிலின் நுழைவாயிலில் படிக்கல்லாக உள்ளது. தாரமங்கலம் கோயில் முன்மண்டபத் தூண்களில் ஒன்றில் இராமன் உருவமும், மற்றொரு தூணில் வாலி உருவமும் செதுக்கப்பட்டுள்ளது. வாலி சிலையில் நம் கண்களை வைத்துக்கொண்டு பார்த்தால் இராமன் உருவம் தெரியாது. இராமன் சிலையில் நம் கண்களை வைத்துக்கொண்டு பார்ந்தால் வாலி உருவம் தெரியும். இப்படிப்பட்ட கதைச் செய்தி கலைநூட்பத்துடன் வடிக்கப்பட்டுள்ளது. இத்தலத்திலேயே வெகு சிறப்பான சன்னதி இது. தலத்தின் கீழ்பகுதியில் ஒரு காற்று புக முடியாத அறைக்குள் இருக்கும் இந்த பாதாள லிங்கத்திற்கு பச்சை கற்பூரம் வைத்து செவ்வாய்க் கிழமை தோறும் வழிபாடு செய்தால் திருமணம், பிள்ளைப்பேறு மற்றும் தொழில் மேம்பாடு ஆகியவை கைகூடுவதாக நம்பப்படுகிறது. இத்தலத்தில் உள்ள சுரகேசுவரர் 3 தலை, 3 கால்களோடு இருப்பது சிறப்பு. இவருக்கு மிளகு ரசம் வைத்து சாதம் படைத்து, வடைமாலை சாற்றி வழிபாடு செய்தால் காய்ச்சல் மற்றும் தீராத நோய்கள் குணமடைவதாக நம்பப்படுகிறது. துணை முதலமைச்சர் துணை முதலமைச்சர் (Deputy chief minister): முதலமைச்சர் பொறுப்பு வரையறுக்கப்பட்டிருக்கும் வேளையில், துணை முதலமைச்சர் பொறுப்பு அவ்வப்பொழுது ஏற்படும் அரசியல் சூழலுக்கேற்ப ஏற்படுத்தப்படும் விருப்பப்பொறுப்பு (பதவி) ஆகும். இந்தியாவில் இம்முறையிலேயே இப்பொறுப்பை பல்வேறு மாநிலங்களில் வகிக்கின்றனர். கட்டாயமாக இப்பொறுப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற விதிகள் இந்தியாவின் மாநிலங்களில் பின்பற்றப்படுவதில்லை. பெரும்பாலும் கூட்டணி ஆட்சிகள் அமைகின்ற மாநில ஆட்சிகளில் அக்கூட்டணியில் பங்குபெற்றுள்ள முக்கிய கட்சியினரின் பங்கும், ஆதரவும் இருக்கவேண்டும் என்ற காரணத்தினால் ஒரு சில துறைகளுடன் அக்கட்சிக்கு இந்த பொறுப்பு வழங்கப் பெற்று அதன்மூலம் ஆட்சியில் பங்கு வகிக்கின்றனர். முதல்வரின் பணிச்சுமை காரணமாகவும் துறைகள் பிரித்து கொடுப்பதற்காகவும் இப்பொறுப்பு முதல்வரால் சில சமயங்களில் ஏற்படுத்தப்படும். நாமக்கல் நரசிம்மர் திருக்கோயில் நாமக்கல் நரசிம்மர் கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் நகரில் 200 அடி உயரமுள்ள குன்றின்மீது அமைந்துள்ள குடைவரைக் கோயிலாகும். இக்கோயிலின் மூலவர் நரசிம்மர் ஆவார். தாயார் நாமகிரித்தாயார் ஆவார். நாமக்கல் மலையும் அதன்மீது உள்ள கோட்டையும் மகாவிஷ்ணுவின் கோட்டையாக உள்ளது. மலையின் கீழ்ப்புறம் ரங்கநாதராகவும் மலைமேல் கோட்டையின் உள்ளே வரதராகவும் மலையின் மேலே நரசிம்மராகவும் மூன்று அவதாரங்களில் எழுந்தருளியுள்ளார். இப்படி மூன்று அவதாரம் பெற்றிருப்பினும், நரசிம்மரே இங்கு பிரதானம். முதலில் கோயிலுக்கு முன்னே அனுமார் கிழக்குத் திசை நோக்கியவராக 18 அடி உயரத்தில் காட்சி தருகிறார். அடுத்து நரசிம்மர் நாமகிரித் தாயாருடன் உள்ள சந்நிதி. நரசிம்மர் மிகவும் கம்பீரமாக பெரிய சிம்மாசனம் ஒன்றின் மீது அமர்ந்து உள்ளார். நரசிம்மர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக உள்ளார். திரிவிக்கிரமர், வராகர், வாமனர், அனந்தநாராயணர் ஆகியோர் நரசிம்மரின் இரு பக்கங்களில் இடம் பெற்றுள்ளனர். நாமகிரித் தாயார் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். நரசிம்மருக்கு நேரே உள்ள சுவரில் ஒரு சாளரத்தின் வழியே அனுமாரைக் காணலாம். ஆனால் அனுமன் கண்கள் நரசிம்மரது பாதங்களைப் பார்த்து இருப்பதுபோல் அமைந்துள்ளது. கோட்டையின் மேற்குபுறம் அரங்கநாதரைத் தரிசிக்கலாம். அரங்கநாதர் கார்கோடகன் மேல் தெற்கே தலையும் வடக்கே காலும் நீட்டிச் சயனித்திருப்பதைக் காணலாம். காலடியில் சங்கரநாராயணரைக் காணலாம். சற்றுப் பின்னால் அரங்கநாயகி தாயாரைக் காணலாம்.கீழே இறங்கி வந்தால் கமலாலயம். அது அனுமனுக்குத் தாகம் தீர்த்தது. அடுத்து மலையேறினால் வரதராஜரைத் தரிசிக்கலாம். இரண்யனை வதம் செய்த நரசிம்மர் யாரும் நெருங்க இயலாதபடி உக்கிரம் பொங்கக் காட்சி தந்ததைக் கண்டு பிரகலாதன் வேண்டுதலுக்கு இணங்க சாந்தமூர்த்தியாகி சாளக்கிராம வடிவில் கண்டகி நதிக்கரையில் அமர, திருமகள் தனது நாயகனைப் பிரிந்ததால் இந்தக் கமலாலயத்தில் தவம் புரிய, சஞ்சீவி மலையைச் சுமந்து வந்த அனுமன் கண்டகி நதிக்கரையில் இருந்த சாளக்கிராம நரசிம்மரையும் எடுத்துக் கொண்டு வர, இந்தக் கமலாலயத்தைக் கண்டதும் தனது தாகம் தீர்த்துக் கொள்ள நினைத்து நரசிம்மரை கையிலிருந்து கீழே வைக்க, தாகம் தீர்ந்ததும் நரசிம்மரைத் தூக்கினால் நரசிம்மர் வரவில்லை. எவ்வளவு முயன்றும் அனுமனால் முடியவில்லை. இங்கே தான் நரசிம்மரை நினைத்து லட்சுமியும் தவம் புரியவே, அவளுக்கு நரசிம்மர் அருள் புரியவே இங்கே தங்கி விட்டதாகக் கூறுவர். அற்புதச் சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்ட நாமக்கல் நரசிம்மர் வரம் தரும் விஷ்ணுவாகக் கருதப்படுகிறார். நரசிம்மரை கூப்பிய கரங்களுடன் சேவித்தவாறு அருள்மிகு ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தவண்ணம் எழுந்து அருள்கின்றார். இந்தத் தலத்துக் கோயில்கள் குடைவரைக் கோயில்கள். 1300 ஆண்டுகளுக்குமுன் மகேந்திரவர்மன் குடைந்து அமைத்தவை. அதியேந்திர விஷ்ணு கிரகம் என்று இத்தலத்தைப் பற்றிக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. நரசிம்ம ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி ஆகியவை இங்கு நடைபெறுகின்ற விழாக்களில் குறிப்பிடத்தக்கவையாகும். ராமானுஜம் இத்திருக்கோயிலின் நாமகிரி தாயாரின் பக்தர்.கணித மேதை ராமானுஜம் அவர்களுக்கு கனவில் கணித சூத்திரங்களுக்கு நாமகிரி தாயார் விடை தந்துள்ளார். கடினமான கணக்குகளுக்கு கனவில் விடை கண்டு, உடனே எழுந்து அவற்றின் வழிமுறைகளை எழுதுவது கணித மேதை ராமானுஜத்தின் வழக்கம். தாக்கோ தாக்கோ ("ஆங்கிலம்": Taco, "பிரெஞ்சு": Taco, "எசுப்பானியம்": Taco) என்பது சோள அல்லது கோதுமை தார்த்தியாவை கொண்டு ஒரு கலவையை(Filling) சுற்றி மடித்தோ அல்லது நீள வாக்கில் உருட்டியோ செய்யப்படும் ஒரு பாரம்பரிய மெக்சிக்க உணவு. தாக்கோ மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, கேசம்(Cheese) மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பலவகை கலவைகளால் செய்யப்படுகிறது. தாக்கோவில் பல பாரம்பரிய வகைகள் உள்ளன: பிரான்செஸ் லிவைன் பிரான்செஸ் லிவைன் ("Frances Lewine", சனவரி 20, 1921 – சனவரி 19, 2008) ஒரு அமெரிக்க ஊடகவியலாளர் மற்றும் வெள்ளை மாளிகை செய்தியாளர். நியூயோர்க் நகரத்தில் பிரான்சிஸ் லிவைன் பிறந்தார். ஹன்டர் கல்லூரியில் இவர் கல்வி கற்றதுடன் அங்கே அவர் கல்லூரி பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்தார். அசோசியேட்டட் பிரசில் இணையும் முன்பு இவர் கூரியர்-நியூசில் பணிபுரிந்தார். 1956 இல் இவர் அசோசியேட்டட் பிரஸ் வெள்ளை மாளிகை செய்தியாளராக இணைந்தார். அங்கு 1977 வரை பணிபுரிந்தார். இக்காலப்பகுதியில் சுமார் ஆறு அமெரிக்கக் குடியரசுத் தலைவர்களின் நிர்வாகம் பற்றி செய்திகளைத் தொகுத்தார். அசோசியேட்டட் பிரசில் இருந்து விலகியதும் இவர் ஜிம்மி காட்டரின் நிர்வாகத்தில் போக்குவரத்து திணைக்களத்தின் பொது அலுவலராகப் பணிபுரிந்தார். 1981 இல், இவர் சின்என்என் நிறுவனத்தில் பணிபுரிந்தார். பெண்களுக்கான தேசிய ஊடகக் கழகத்தின் தலைவராக லிவைன் இருந்தார். அத்துடன் பெண் ஊடகவியலாளரின் சம உரிமைக்காகப் போராடினார். வெள்ளை மாளிகை செயற்படுத்திய அவரது செயற்றிட்டங்களில் தனக்கு திருப்தி இல்லை என்று லிவைன் அறிவித்தார். ஜனவரி 2008 இல் வலிப்பு காரணமாக இவர் உயிரிழந்தார். தார்த்தியா தார்த்தியா அல்லது தார்த்தியம் ("ஆங்கிலம்": Tortilla, "எசுப்பானியம்": Tortilla, "போர்த்துகீசியம்": Tortilla) எனப்படுவது சோளம் அல்லது கோதுமையிலிருந்து செய்யப்படும் ஒரு மெலிந்த உரொட்டி. எசுப்பான் நாட்டிய நாடுகாண் பயணிகள் முதன்முதலாக எசுடெக் இனத்தவர்கள் சுட்ட உரொட்டியைக் கண்டபோது அதனை தார்த்தியா என அழைத்தனர். தார்த்தியா மெக்சிகோவில் கூடுதலாக பாவனையிலில் இருந்துவந்த தார்த்தியா இப்போது வேறு இடங்களிலும் பரவத் தொடங்கியுள்ளது. நாச்சோ நாச்சோ ("ஆங்கிலம்": Nachos, "பிரெஞ்சு": Nachos, "எசுப்பானியம்": Nachos) என்பது மெக்சிக்கோவில் தோன்றிய சோளத்தை அடிப்படையாகக் கொண்ட விரைவாக சமைக்கக்கூடிய ஓர் புகழ்பெற்ற சிறுதீனி ஆகும். இதில் நிரம்ப சேர்பொருட்களைக் கூட்டி முழுமையான உணவாகவும் கொள்ளலாம். இவற்றின் மிக எளிய தயாரிப்பில் தார்த்தியா தட்டைகளில் உருக்கிய பாலாடைக் கட்டியையும் "சல்சா" எனப்படும் தக்காளிச் சட்னியையும் (sauce) ஊற்றி செய்வதாகும்.1943ஆம் ஆண்டு இக்னேசியோ "நாச்சோ" அனயாவால் தயாரிக்கப்பட்ட முதல் நாச்சோக்களில் சுட்ட சோளத் தார்த்தியாவின் மேல் செத்தர் பாலாடைக்கட்டியை உருக்கி ஊற்றி சிவந்த ஜலபெனோ மிளகாய் ஊறுகாயுடன் வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ஆம் நாள் பன்னாட்டு நாச்சோ தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1990களில் ஐக்கிய அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் 1943ஆம் ஆண்டு இந்நாளில் இருநாடுகளின் எல்லைப்புறத்தில் அமைந்த பீதரஸ் நெக்ரஸ் நகரின் எல் மோடர்னோ உணவகத்தில் இக்னேசியோ அனயா தயாரித்ததை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்பட்டது. இந்த நகரத்தில் அக்டோபர் 13 மற்றும் 15க்கு இடைப்பட்ட நாட்களில் பன்னாட்டு நாச்சோ விழாவும் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு முறையும் பாலாடைக்கட்டியை உருக்கி அதனுடன் காரமான சட்னிகளை கூட்டுவதற்கு பதிலாக பெரியளவில் தயாரிக்கக்கூடிய சமையற்கூடங்களில், காட்டாக பள்ளிகள், திரையரங்குகள், விளையாட்டரங்குகள், உடனடியாக பயன்படுத்தக்கூடிய வகையில் இவ்வாறு பதப்படுத்தப்பட்ட பாலாடைக்கட்டி தயாரிக்கப்படுகிறது. இது ஐக்கிய அமெரிக்காவில் "நாச்சோ சீஸ்" என்று அறியப்படுகிறது. துவக்கத்தில் நாச்சோக்களுக்கு மட்டுமே தயாரிக்கப்பட்ட இந்த சீஸ் மிகவும் புகழ்பெற்று பிற தொட்டுக்கொள்ளும் உணவுப்பண்டங்களுக்கும் பயன்படுத்தலாயிற்று. அமெரிக்காவின் பல மளிகை அங்காடிகளிலும் ரிகோஸ், ஃபிரிட்டோ லே, டோகோ பெல் வணிகப்பெயர்களிலும் அல்லாதும் விற்கப்படுகின்றன. டா-ரொன்ஸ் அலென் டா-ரொன்ஸ் அலென் (பிறப்பு பிப்ரவரி 2, 1960 லாஸ் ஏன்ஜல்ஸ், கலிபோர்னியா) ஒரு அமெரிக்க நடிகையாவார். அலென் 1970களில் தனது விடலைப் பருவத்தில் நடித்த தொலைக்காட்சி தொடர்களுக்காக முக்கியமாக அறியப்படுகின்றார். சி.பி.எஸ். தொலைக்காட்சியின் "குட் டைம்ஸ்" என்ற சிட்கொம் தொலைக்காட்சி தொடரின் பல அங்கங்களில் இவர் மைக்கல் ஈவானின் காதலியான யுவொன்னி (Yvonne) எனும் பாத்திரத்தில் நடித்தார். அலென் தற்போது கலிபோர்னியாவின் லான்காஸ்டர் நகரில் வசித்து வருகின்றார்.1970 களில் என்.பீ.சீ. தொலைக்காட்சியில் ஒளிஒலிபரப்பான நகைச்சுவைத் தொடரான "சன்போர்ட் அன் சண்" இல் வரும் "அங்கில் வீட்ரோ" (Uncle Woodrow) என்றப் பாத்திரத்தை நடித்த ரேமன்ட் அலனின் புதல்வியே இவராவார். 1972 ஆம் ஆண்டு வெளியான "ஹிக்கி & பொக்ஸ்" என்ற குடும்பத் திரைப்படத்தில் பில் கொஸ்பி, றொபர்ட் கல்ப் ஆகிய நடிகர்களுடன் அலனும் நடித்தார். இட்ஸ் எ ஒன்டர்புல் லைப் இட்ஸ் எ ஒன்டர்புல் லைப் ("It's a Wonderful Life") 1946-ல் வெளியான ஆங்கிலத் திரைப்படம், உலகின் சிறந்த 10 படங்களில் ஒன்றாகும். பிலிப்வாரன் டோர்ன் என்ற எழுத்தாளரின் சிறுகதையை பிராங் காப்ரா இயக்கி தயாரித்தார். ஜார்ஜ் பெய்லி என்ற தொழிலதிபர் வேடத்தில் ஜேம்ஸ் ஸ்டூவர்ட் நடித்திருந்தார். கடன் சுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்ய தொழிலதிபர் ஜார்ஜ் முடிவு செய்து, ஆற்றுப் பாலம் ஒன்றின் மேல் ஏறி நிற்கிறான். இதை வானுலகில் உள்ள தேவதைகளில் இரண்டு வேடிக்கை பார்க்கின்றன. மனிதர்கள் ஏன் இப்படி வாழ்க்கையைப் புரிந்துகொள்ளாமல் சாக முடிவு எடுக்கிறார்கள் என்று அனுதாபம் கொண்டு ஒடு தேவதை ஜார்ஜைக் காப்பாற்றுகிறது. ஜார்ஜ், "நான் உயிர்வாழ்வதில் அர்த்தமே இல்லை. தன்னால் யாருக்கும் பயன் இல்லை. எல்லோருக்கும் தான் தேவையற்றவன்" என்று புலம்புகிறான். "இல்லை... உன் வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கிறது" என்ற தேவதை, "நீ பிறக்காமல் இருந்தால், உன் வீடு, மனைவி என்னவாகி இருப்பார்கள் என்பதை நீ இப்போது பார்ப்பாய்" என்று தேவதை ஒரு வரம் தருகிறது.தன் வாழ்நாளில் ஒவ்வொரு செயலும் யாரோ ஒருவருக்குப் பயன்பட்டிருக்கிறது என்று உணர்ந்து, பின் குடும்பத்துடன் சேர்கிறான். ஹாவேர்ட் பி. ட்ரூ ஹாவேர்ட் பி. ட்ரூ (Howard P. Drew) ரத்த தானத்தில் உலகிலேயே முதல் இடத்தில் இருப்பவர். அமெரிக்காவைச் சேர்ந்த இவர் இதுவரை 106 லிட்டர் ரத்தம் தந்திருக்கிறார். இவர் அதிக ரத்த தானம் செய்து கின்னசு சாதனை படத்தவர் ஆவார். ராணுவ வீரரான இவர் 1943 இரண்டாவது உலக யுத்தத்தின்போது காயம் அடைந்த சிப்பாய்க்கு முதன்முறையாக ரத்தம் தந்தார். ஹாய்லி கெப்ரசிலாசி கெப்ரசிலாசி, ( " Haile Gebrselassie " ) 18 ஏப்ரல், 1973 பிறந்த எத்தியோப்பிய நாட்டு நீண்ட-தொலைவு தடகள ஓடுநர் ஆவார். உலகிலேயே தலைசிறந்த தொலைதூர ஓடுநர் என்று அனைவராலும் ஒருமனதாக போற்றப்படுபவர். மைய எத்தியோப்பியாவிலுள்ள ஆர்சி கோட்டத்தில் பிறந்தவர் ஹய்லி. ஏற்கனவே "டுலு" (Derartu Tulu), "ரோபா" (Fatuma Roba) போன்ற சிறந்த நீண்ட-தொலைவு தடகள ஓடுநர்களைத் தன் மண்ணில் பிறக்க வைத்த இடம் தான் ஆர்சி. கெப்ரசிலாசி சிறுவனாக இருந்த போது 10 கி.மீ தொலைவில் இருந்த பள்ளிக்கு ஓடியே சென்று மீண்டும் ஓடியபடியே திரும்புவாராம் -- கையில் புத்தகக்கட்டோடு!. அதனால்தான் ஓடுகளத்தில் ஓடும்போதுகூட அவரது இடது கை கோணி வளைந்து "புத்தகக்கட்டை சுமந்தபடியே" இருந்தது!