வாள் வாள் () "(sword)" என்பது பொன்மத்தால் ஆகிய கூரிய விளிம்பு கொண்ட, நீளமான அலகுடைய வெட்டுவதற்கும், குத்துவதற்கும் பயன்படும் ஓர் ஆயுதம் ஆகும். இதன் துல்லியமான வரையறை கருதப்படும் காலத்தையும் வட்டாரத்தையும் பொறுத்தமைகிறது. இவ்வாயுதம் உலகின் பல நாகரிகங்களிலும் பல நூற்றாண்டுகளாகப் பயன்பட்டது. வாள் ஒரு நீண்ட அலகையும், ஒரு கைப்பிடியையும் கொண்டிருக்கும். இதன் அலகு நேராகவோ வளைவாகவோ அமையலாம். குத்தும் வாட்களின் அலகு முனை கூராகவும் வளையாமல் நேராகவும் அமையும்; வெட்டும் வாளின் அலகு ஒரு பக்கத்திலோ அல்லது இரு பக்கங்களிலுமோ கூரிய விளிம்புகளுடன் வளைந்தும் இருக்கும். வாளின் அலகு விளிம்புகள் வெட்டுவதற்கும், அலகின் கூர்முனை குத்துவதற்கும் ஏற்றவகையிலும் இருக்கும். பெரும்பாலும் வாட்கள் இந்த இருவகைப் பயன்பாட்டுக்கும் ஏற்ப வடிவமைக்கப்படுகின்றன. வாள் போரின் அடிப்படை நோக்கமும், அதன் வடிவமும் பல நூற்றாண்டுகளாகவே மாற்றங்கள் பெரிதும் இன்றி இருந்துள்ளன. எனினும் அதன் நுட்பங்கள், அது பயின்றுவந்த பண்பாடுகள், காலப்பகுதிகள் என்பவற்றைப் பொறுத்து வேறுபட்டுள்ளன. இது முதன்மையாக வாள் அலகின் வடிவமைப்பினதும், அதன் நோக்கத்தினதுமான வேறுபாடுகளால் ஏற்பட்டது ஆகும். தொன்மங்களிலும், இலக்கியத்திலும் வரலாற்றிலும் பல வாள்களுக்குக் கொடுக்கப்பட்ட பெயர்களில் இருந்து அவற்றுக்கிருந்த மதிப்பைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது. வரலாற்றியலாக, வாள் வெண்கலக் காலத்தில் குத்துவாளில் இருந்து தோன்றியது; மிகப் பழைய வெண்கலக்கால வாள் கி.மு 1600 அளவில் கிடைத்துள்ளது. பிந்தைய இரும்புக் கால வாள் மிகவும் குறுகியதாகவும் பிடியில் குறுக்குக் காப்பு இல்லாமல் அமைந்தது. வாளைப் பயன்படுத்தும் தேர்ச்சி வாள்போர்க் கலை எனப்பட்டது. தொடக்க புத்தியல் காலத்தில் மேலைநாட்டு வாள் வடிவமைப்பு குத்துவாள், போர்வாள் என இரண்டு வடிவங்களாகப் பிரிந்தது. உடைவாள் போன்ற குத்தும் கத்திகள் பின் குறுவாளாக மாறின. இவை இலக்கை வேகமாகவும் ஆழமான குத்துக்காயம் ஏற்படும்படியும் வடிவமைக்கப்பட்டன. இவற்றின் நேராக நீண்ட மெல்லிய சமனிலை வடிவமைப்பு இரட்டையர் போரில் அச்சமூட்டுவதக இருந்தது. ஆனால் வெட்டுவதிலும் தறிப்பதிலும் மிக பயனற்றதாக இருந்தது. குறிபார்த்து மேற்கொள்ளுக் குத்து போரை நொடிகளிலேயே முடிவுக்குக் கொண்டுவந்துவிடும். பட்டா(ள)க் கத்தியும் அகல்குறுவாளும் போன்ற வளைந்த அலகுகள் கொண்ட வாட்கள் போரிடுவதற்காக மிகவும் கூடுதலான எடையுடன் வடிவமைக்கப்பட்டன. இவை பல பகைவரைக் குதிரை மேலிருந்து வெட்டவும் தலைகளைச் சீவவும் ஏற்றவை. பட்டளக் கத்தியின் வளைந்த அலகின் முனைப்புற எடை போர்க்களத்தில் சமனிலையோடு அச்சமூட்டும் போர்நிகழ்த்த வழிவகுத்தன. இவை கூரிய முனையும் இருபுற வெட்டுவிளிம்பும் கொண்டவை. இவை காலாட்படையில் ஒவ்வொரு வீரராக்க் குடலை ஊடுறுவிச் சாய்க்க பொருத்தமாக அமைந்தன. எனவே இவை 20 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்து பயன்பாட்டில் விளங்கின. அமெரிக்க நாவாய்ப்படை இரண்டாம் உலகப்போர் வரை தன் படைக் கொட்டடையில் இவ்வகை அகல்குறு வாள்களைக் குவித்து வைத்திருந்தது. பின்னர் அவை காடுதிருத்த வழங்கப்பட்டன. ஐரோப்பாவுக்கு வெளியே வாள்களாக நடுவண்கிழக்குப் பகுதியின் சுசிமிதார் ச்னாவின் தாவோ யப்பானியக் கடானா அகியவை அமைகின்றன. சீனாவின் யியான் இருகூர் விளிம்பு வாளாகும். இது ஐரோப்பிய இரும்ப்புக் கால இருகூர்விளிம்பு கொண்ட வாளாகும். "வாள்கள்" எனக் கருதக்கூடிய ஆயுதங்கள் அல்லது கருவிகள் கி. மு 3300 அளவில் இருந்து கிடைக்கிறது. துருக்கியின் அர்சுலாந்தெப்பேயில் கிடைத்த வாட்கள் ஆர்செனிய வெண்கலத்தால் செய்யப்பட்டிருந்தன. இவை 60 செமீ நீளங்கொண்டவையாக அமைந்தன. இவற்றில் சில வெள்ளியாலாகிய அகட்டுடன் அமைகின்றன. வாள் கத்தி அல்லது குறுவாளில் இருந்து படிமலர்ந்த்தாகும். கத்தி ஒருபக்க வெட்டு விளிமபு கொண்ட்து; ஆனால் குறுவாள் இருபுற வெட்டு விளிம்பு கொண்ட்தாகும். நீளமான அலகுகளை செய்யமுடிந்ததும், கி.பி 3 ஆம் நூற்றாண்டின் இறுதிகாலப்பகுதியில் நடுவண் கிழக்குப் பகுதியில் ஆர்செனிய வெண்கலத்தாலான வாள்கள் தோன்றின. பின்னர், காரீய வெண்கல வாட்கள் உருவாகின. வெண்கலத்தின் இழுவலிமை ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளதால் 60 செமீ நீளத்தைவிட கூடுதலான நீளத்தில் அவை எளிதாக வளையும் என்பதால் செய்ய முடியவில்லை. குறுவாளில் இருந்து வாள் மிக மெதுவாகப் படிமலர்ந்த்து; வாளென ஐயமின்றி வகப்படுத்தப்பட்ட ஆயுதம் கி.பி 17 ஆம் நூஊற்றாண்டில் மினோவன் கிரீட்டில் கண்டெடுக்கப்பட்டது. இதன் நீளம் 100 செமீ அளவை விடக் கூடுதலாக அமைந்தது. இவை அயேகிய வெண்கலக் காலத்தின் முதல்வகை வாள்களாகும். மிக முதன்மையான நெடுநாள் நிலைத்திருந்த ஐரோப்பிய வெண்கல வாள் இரண்டாம் நௌவே வகையாகும் (இவ்வாளை யுலியசு நௌவே முதலில் விவரித்துள்ளதால் பெயரிடப்பட்டுள்ளது), மேலும் இது "Griffzungenschwert" எனும் "பிடிநாக்கு வாள்" எனவும் வழங்கப்படுகிறது. இவ்வகை கி.பி 13 ஆம் நூற்றாண்டில் தோன்றின. இவை வடக்கு இத்தாலியில் புதைதாழிப் பின்னணியில் கிடைக்கின்றன. இவை இரும்புக்காலம் வரை ஏழு நூற்றாண்டுகளுக்கு நீடித்து நிலைத்துள்ளன. இந்தக் கலகட்ட்த்துக்குள் வளாக்க பொன்மவியல் வெண்கலத்தில் இருந்து இரும்புக்குப் புடைபெயர்ந்தது. என்றாலும் வடிவமைப்பு மாறவில்லை. இரும்பு கி.பி 13 ஆம் நூற்றாண்டில் வழக்கில் பரவலானது. இதற்கு முன் வாளின் பயன்பாடு அருகியே இருந்தது. இரும்பு போதுமான கரிம அளவைக் கொண்டிருப்பினும் நீர்தெளித்து தணைக்கப்படுவதில்லை. இதுவும் சமட்டலால் வெண்கலத்தைப் போலவே வன்மைபடுத்தப்படுகிறது. இதனால், இரும்பு வாள் வெண்கல வாளைவிட ஒப்பீட்டளவில் சற்றே கூடுதலாக வலிவும் உறுதியும் கொண்டுள்ளது. இவை பயன்பாட்டில் வளைந்து பின் முந்தைய வடிவத்தைப் பெறவல்லவை. இரும்பு எளிதாக உருவாக்கப்படுவதாலும் மலைவான விலையில் ஏராளமாக இரும்பாக்கும் கச்சாப்பொருட்கள் கிடைப்பதாலும் படையில் உள்ள அனவருக்கும் வாள்களைத் தரமுடிந்தது. இருந்தாலும், வெண்கலக்கால எகிப்தியர்கள் வெண்கல வாட்களைக்கூட படையில் இருந்த ஆனைவருக்கும் தந்தனர். பண்டைய வாட்கள் இடுகாடுகளில் கிடைக்கின்றன. பிணத்துக்கு வலதே அவை வைக்கப்பட்டன. என்றாலும், இதற்கு விதிவிலக்கும் உண்டு. பல இடங்களில் வாள் பிணத்தின் மீதும் வைக்கப்பட்டுள்ளன. பல பிந்தைய இரும்புக் காலக் கல்லறைகளில், வாளும் கைப்பிடியும் 180 பாகைக் கோணத்தில் வளைத்து வைக்கப்பட்டுள்ளன. இம்மரபு வாளைக் கொல்லுதல் என வழங்கப்படுகிறது. இதில் இருந்து வாள் அவர்களால் வல்லமையும் திறனும் வாய்ந்த்தாக்க் கருதப்பட்டுள்ளது என்பது விளங்குகிறது. உலக முழுவதும் போரின்பொழுதும், அரச விழாக்களின் பொழுதும் வாளுக்கு முதன்மை வாய்ந்த பங்குண்டு. தரைப்படையிலும் நாவாய்ப்படையிலும் விழாக்காலங்களிலும் அரசு முடிசூட்டு விழாவிலும் தேசிய சிறப்பு நாட்களிலும் கீழ்நிலையில் தொடங்கி, உயர்மட்ட அளவில் உள்ள போர்வீரர் வரை, பதவிக்கேற்ப சீருடை அணிந்து வாளேந்தி, அணிவகுப்புகளை மேற்கொள்வர். அமெரிக்காவிலும் இந்த சடங்கு முறை உள்ளது. கடற்படை இணைத் தளபதி பதவியைவிட உயர்ந்த பதவி வகிப்பவர், அரச விழாக்களில் வாளேந்தி நிற்பர். பதவி மாற்றம் நிகழும்பொழுதும், வாளைப் பிடித்தபடி இருப்பர். படை அலுவலர் திருமணங்களிலும் சில வேளைகளில் திருச்சவை அல்லது பேராய விழாக்களிலும் கூட சீருடையில் வாள் பயன்படுவதுண்டு. வாளில் அலகும் கைப்பிடியும் அமைந்திருக்கும். "வாள் உறை" வாள் அலகைப் பயன்படுத்தாதபோது செருகிவைக்கும் உறையாகும். வாள் அலகுகளின் ஆக்கத்தில் பல்வேறு விரிவான வடிவமைப்புகள் உள்ளன. எதிர் விளக்கப்படத்தில் இடைக்கால ஐரோப்பிய வாள் காட்டப்பட்டுள்ளது. பொன்மவியல் தொழில்நுட்ப இயலாமையால், தொடக்கநிலை இரும்பு வாளின் நுனி புள்ளிவடிவில் அமைந்தது. எனினும், இவை மெல்லிய கவசம் அணிந்த எதிரிகளைக் குத்த விளைவுமிக்கதாக அமைகிறது. கவச வடிவமைப்பு மேம்பட்டதும் அலகுகள் வலிவாகவும் கூர்மையாகவும் கவசத்தை ஊடுருவிக் கிழிக்க வல்லபடி செய்யப்பட்டன. திறம்பட்ட வெட்டலகுகள் அகலமான முன்பட்டையாக காடிகளுடன் அமைந்திருக்கும். இவை வாள்காடிகள் எனப்படுகின்றன. இவை எடையைக் குறைக்கும் அதேவேளையில் உறுதியையும் குறைக்கும். வெட்டலகுகளின் விளிம்புகள் வாளுக்கு இணையாக அமையும். குத்தலகுகள் தடித்த அலகுடன் சிலவேளைகளில் நடுமுகட்டுடன் உறுதியாக அமைந்திருக்கும். இது நல்ல சரிடுடனும் கூரிய நுனியுடனும் அமைகின்றன. வெட்டும் வாளின் அலகு குறுங்கோணச் சரிவு விளிம்புடன் அமையும். இது போரில் சண்டiயிடும்போது, விரிகோணச் சரிவு விளிம்புள்ள அலகை விட வேகமாக வாளைத் தரமிழக்கச் செய்துவிடும். மேலும் குறுங்கோணச் சரிவு வாளைன் கூர்மைக்கு முதனமையான காரணி அன்று. அலகின் மொத்தல் மையத்துக்கும் நுனிக்கும் இடையில் உள்ள பகுதி "கருக்கு" எனப்படுகிறது. ஈர்ப்பு மையத்துக்கும் கைப்பிடிக்கும் இடையில் உள்ள அலகின் பகுதி "வன்கடை" எனப்படுகிறது . மொத்தல் மையத்துக்கும் ஈர்ப்பு மையத்துக்கும் இடையில் உள்ள அலகின் பகுதி "வாளிடை" எனப்படுகிறது. காப்புக்கு அடியில் தீட்டப்படாமல் உள்ள குறும்பகுதி "வாளின் தோள்" எனப்படுகிறது. பல வாட்களில் தோள் அமைவதில்லை. சில நீண்ட வாட்களில் தோள்பகுதி பொன்ம உறையோடு அமைந்திருக்கும். நெருங்கிய போரில் வாள்வீரர்கள் இப்பகுதியை உறுதியாக பிடித்துக்கொள்வர். வாளின் தோள்பகுதியில் தொழில்குறி/செய்பவர் குறி அமைந்திருக்கும். கைப்பிடியைச் செருகும் அலகின் நீட்சி செருகு அல்லது முளை எனப்படுகிறது. யப்பானிய அலகுகளில் தொழில்குறி பிடிக்கடிச் செருகில் அமைந்திருக்கும். வாளுடன் அமைந்த இணையமைப்புகளில் வாள் உறையும் வாள் கச்சும் அடங்கும். மேலே விளக்கியது போல, நீள்வாள், அகல்வாள், பெருவாள், காயெலிக் கிளேமோர் வாள் என்பன காலகட்டத்தைச் சார்ந்து ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட வாளின் வகையைக் குறிப்பனவாகும். பெருபாலான ஆசிய நாடுகளில், வாள் (ஜியான் (jian) 劍, ஜியோம் (geom.) (검), கென் (ken)/சுருகி (tsurugi) (剣), பெடாங் (pedang)) என்பது இரட்டை விளிம்பு நேரலகு ஆயுதமாகும்; கத்தி அல்லது பட்டாக் கத்தி (தாவோ (dāo) 刀, தோ (do) (도), தோ (to)/கடானா (katana) (刀), பியாசு (pisau), கோலக் (golok)) ஒற்றை விளிம்பு வாளையே குறிப்பிடும். சீக்கிய வரலாற்றில், வாளுக்கு உயர்வான மதிப்பு நிலவுகிறது. கிர்ப்பான் எனும் ஒற்றை விளிம்பு வாளும் காண்டா அல்லது தேகா எனும் இரட்டை விளிம்பு வாளும் பண்பாட்டுப் பெருமிதங்களாக கருதப்படுவனவாகும். தென்னிந்தியாவின் சுரிகை வாள் இரட்டை விளிம்பு வாளாகும். இது கேரளாவின் மரபு வாளாகக் கருதப்படுகிறது. இந்து சமயத்தில் வாள் வேட்டைக் கடவுளாகிய வேட்டக்கொருமகன் ஆயுதமாக வணங்கப்படுகிறது. ஒற்றை, இரட்டை விளிம்பு வாட்களுக்கு தனி மரபுப் பெயர்கள் உண்ட் என்றாலும் அனைத்தும் சேர்ந்து வாள் எனும் ஒருசொல்லாலேயே வழங்கப்படுகின்றன. எடுத்துகாட்டாக, பின்கூர்வாள் என்பது ஒற்றை விளிம்பு வாளாகும் என்றாலும் அதற்கு பால்சியன் எனும் சிறப்புப் பெயரும் உண்டு. இருகை வாள் என்பது அதைக் கையாள இருகைகளும் தேவைப்படும் வாளைக் குறிப்பிடும். என்றாலும் அதன் உண்மையான பொருளில் இது 16 ஆம் நூற்றாண்டில் வழக்கில் இருந்த மிகப் பெரிய வாளையே குறிக்கிறது. வரலாறு முழுவதும் பொதுவாக இருகை வாளை விட ஒருகை வாளே வழக்கில் இருந்தது. இதற்கு ஒரே விதிவிலக்கு யப்பானில் இருகஈ வாட்கள் பொதுவான வழக்கில் இருந்துள்ளன என்பதேயாகும். ஒன்றரைக் கைவாள் என்பது கொச்சையாக "சோரன் வாள் (bastard sword)" எனப்படுகிறது; இது ஒரு அல்லது இருகையால் கையாளக்கூடியதாக அமைந்த நீண்ட கைப்பிடியமைந்த வாளாகும். இந்த வாட்கள் இருகையாலும் முழுமையாக பிடிக்கப்படாவிட்டாலும் இரண்டாம் கையில் கேடயமோ அல்லது சுருட்குத்து வாளோ உடனமைந்திருக்கும்; அல்லது ஓங்கி அடிக்க இருகைகளும் பயன்படலாம். இதை நீண்ட வாள் அல்லது இருகை வாள் அல்லது கட்டாயமாக இருகைகளால் கையாளும் வாளோடு குழப்பிக்கொள்ளக்கூடாது. பெனிசிலின் பெனிசிலின் என்பது பக்டீரியாத் தொற்றைக் குணப்படுத்துவதற்காகப் பயன்படும் ஒரு தொகுதி பீட்டா-லாக்டம் நுண்ணுயிர்க் கொல்லிகளைக் குறிக்கும். இப் பெயர் பொது வழக்கில் இத் தொகுதியில் உள்ள பெனாம் (Penam) என்னும் குறிப்பிட்ட ஒரு நுண்ணுயிர்க் கொல்லியைக் குறிக்கவும் பயன்படுவதுண்டு. இதன் மூலக்கூற்றுச் சூத்திரம் R-CHNOS ஆகும். இதில் R மாறக்கூடிய பக்கச் சங்கிலியாகும். பெனிசிலினைக் கண்டுபிடித்தவர் ஸ்காட்லாந்தினரான சர் அலெக்சாண்டர் பிளெமிங் என்பவராவார். இக் கண்டுபிடிப்பு 1928 இல் இடம்பெற்றது. எனினும், இதை முதன்முதலில் ஒரு மருந்தாகப் பயன்படுத்தியவர் நோபல் பரிசு பெற்றவரும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவருமான ஹோவார்ட் வால்ட்டர் புளோரே (Howard Walter Florey) என்பவராவார். எனினும், பெனிசிலியத்தின் நுண்ணுயிர்ப் பெருக்கத் தடுப்பு இயல்பு பற்றிப் பலரும் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்த முதல் குறிப்பு 1875 ஆம் ஆண்டுக்குரியது. அப்போது ஜான் டிண்டால் (John Tyndall) என்பவர் இது பற்றி இலண்டனில் உள்ள அரச சங்கத்துக்கு (Royal Society) அறிவித்துள்ளார். ஏர்னெஸ்ட் டுச்செஸ்ட்னே என்பவர் 1897 ஆம் ஆண்டில் தனது ஆய்வுக் கட்டுரையில் இது பற்றிக் குறிப்பிட்டார். ஆனால் அவர் இளவயதினராக இருந்ததால் பாஸ்டர் நிறுவனம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. நுரையீரல் அழற்சி நுரையீரல் அழற்சி (pneumonitis) அல்லது நிமோனியா (Pneumonia) என்பது, நுரையீரலில் அழற்சி விளைவிக்கும் ஒரு நோய் ஆகும். இது நுரையீரல் புடைக்கலவிழைய / நுண்குழி அழற்சியும், நுரையீரல் நுண்குழிகள் நீர்மத்தால் நிரம்புதல் என்றும் விளக்கப்படுகின்றது. நுரையீரல் நுண்குழிகள் என்பன, நுண்ணிய வளி நிரம்பிய பைகள் ஆகும். இவை நுரையீரலில் ஒட்சிசனை உறிஞ்சுவதற்குப் பொறுப்பானவை. நுரையீரல் அழற்சி ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உண்டு. இவற்றுள் பாக்டீரியா, வைரசு, பங்கசுக்கள் அல்லது ஒட்டுண்ணிகளின் தொற்று; அல்லது நுரையீரலில் ஏற்படும் வேதியியல் காயங்கள் அல்லது உடற்காயங்கள் என்பன அடங்கும். இவ்வாறான நோய்க்காரணிகளால் ஏற்படும் தொற்றுநோய் இல்லாதவிடத்து, இதன் காரணம் அறியப்படவில்லை என்றும் அதிகாரபூர்வமாக விபரிக்கப்படக்கூடும். இதற்கான அறிகுறிகள், இருமல், நெஞ்சுவலி, காய்ச்சல், மூச்சுவிடக் கடினமாக இருத்தல் என்பவற்றை உள்ளடக்கும் . நோய் அறிவதற்கான முறைகளில் எக்ஸ்-கதிர் மற்றும் சளிப் பரிசோதனை என்பவை உள்ளடங்கும். இதற்கான சிகிச்சை நோயின் காரணத்தைப் பொறுத்தது. பக்டீரியாவினால் உண்டாகக்கூடிய நுரையீரல் அழற்சிக்கு நுண்ணுயிர்க் கொல்லிகள் மருந்தாகப் பயன்படுகின்றன. குறிப்பிட்ட வகை நுரையீரல் அழற்சி நோய்களைத் தடுக்கும் தடுப்பு மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. கைகழுவுதல் மற்றும் புகைப்பிடிக்காமை போன்றவை மற்ற தடுப்பு முறைகளாகும். இந்நோய்க்கான சிகிச்சை முறைகள் அந்நோய் தொற்றலுக்கான அடிப்படைக் காரணத்தைச் சார்ந்துள்ளது. பாக்ட்டீரியங்களால் ஏற்படக்கூடிய நுரையீரல் அழற்சியை நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளைக் கொண்டு குணப்படுத்தலாம். நோய்த்தாக்கம் கடுமையாக இருந்தால் பாதிக்கப்பட்டவர் பொதுவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார். ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருப்பின் செயற்கைசுவாச சிகிச்சை அளிக்கப்படலாம். . நுரையீரல் அழற்சி நோயால் உலகளவில் சுமார் 450 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் (அது உலக மக்கள்தொகையில் 7%) மற்றும் வருடத்திற்கு இந்நோய் தாக்கத்தால் சுமார் 4 மில்லியன் இறப்புக்கள் ஏற்படுகின்றன. நுரையீரல் அழற்சியானது “மனித இறப்புகளின் தலைவன்” என வில்லியம் ஓஸ்லர் என்பவரால் குறிப்பிடப்படுகிறது. 20 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்துகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளால் இறப்புகள் குறைந்துள்ளன. ஆயினும்கூட வளரும் நாடுகளில் மிக இளம் வயதினர் மற்றும் முதியவர்களுக்கும், தீராத நோய்த்தொற்றுள்ளவர்களுக்கும் நுரையீரல் அழற்சியானது மரணத்திற்கான முன்னணி காரணியாக இருக்கிறது. . நுரையீரல் அழற்சியானது நோய்தொற்றுக்குள்ளானவரை மரணத்திற்கு அருகே கொண்டுசெல்கிறது. இதற்கு “முதியவர்களின் நண்பன்” என்ற அடைமொழியும் உண்டு. தொடர்ச்சியான நீடித்த இருமல், நடுங்கும் குளிர் காய்ச்சல், குறுகிய மூச்சுவிடுதல், நெஞ்சகப் பகுதியில் குத்துவது போன்ற வலி மற்றும் மூச்சு வாங்குதல் ஆகியன நுரையீரல் அழற்சி நோய் அறிகுறியுடையவருக்குத் தோன்றும் அறிகுறிகளாகும். முதியவர்களிடம் இத்தகைய அறிகுறிகள் குழப்பமானதாக இருக்கக்கூடும். காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம் அல்லது மூச்சு வாங்குதல் போன்றவை ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளிடம் காணப்படும் பொதுவாக அறிகுறிகளாகும். காய்ச்சல் அறிகுறி மிகவும் குறிப்பிடத்தக்க அறிகுறி அல்ல ஏனெனில் பல பொதுவான நோய்களிலும் காய்ச்சல் இருக்கக்கூடும் கடுமையான நோய், ஊட்டச்சத்துக் குறைதல் அல்லது வயதான முதுமை நிலைகளில் காய்ச்சல் இல்லாமல் இருக்கலாம். மேலும் 2 மாதங்களுக்குக் குறைவான குழந்தைகளில் இருமல் அடிக்கடி காணப்படுவதில்லை. குழந்தைகளில் நீலத் தோல், அருந்துவதில் சிரமம், தொடர் வாந்தி, குறைந்த நனவு நிலை, மயக்கம் உள்ளிட்ட மிகக் கடுமையான அறிகுறிகள் காணப்படலாம். பாக்டீரியம் மற்றும் தீநுண்மங்களால் ஏற்படும் நுரையீரல் அழற்சியானது வழக்கமாக பொதுவான அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றன. படைநிமோவாக்கியால் ஏற்படும் நுரையீரல் அற்சியானது அடிவயிற்றில் வலி , பேதி அல்லது குழப்பநிலை ஆகியவை அறிகுறிகள் தென்படும். ஸ்டெப்ட்ரோகாக்கசு பாக்டீரியங்களால் ஏற்படும் நுரையீரல் அழற்சியானது துரு நிறத்திலான சளியும் கிளெப்செல்லாவால் ஏற்படும் நுரையிரல் அழற்சியினால் உலர்ந்த சிவப்பு நிற சளியும் வெளிப்படக்கூடும். இரத்தக் கசிவுடன் (இரத்தச்சளி அல்லது ஹீமோப்ட்டிசிஸ் என்று அறியப்படுகிறது) கூடிய இந்தச் சளி கிராம்-எதிர் நிமோனியா, நுரையீரல் சீழ்கட்டிகள் மற்றும் பொதுவாக கடுமையான மூச்சுக்குழாய் அழற்சி ஆகிய நோய்நிலைகளில் கானப்படுகிறது. மைக்கோப்ளாஸ்மா நுரையீரல் அழற்சியால் கழுத்துப் பகுதியில் நிணநீர் முடிச்சுகளின் வீக்கம் மற்றும் மூட்டு வலி அல்லது நடுச்செவியில் தொற்று ஆகிய பாதிப்புகள் ஏற்படக்கூடும். தீநுண்மத்தால் ஏற்படும் நுரையீரல் அழற்சியால் மூச்சிரைப்பு ஏற்படும். இந்த அறிகுறி பாக்டீரிய நுரையீரல் அழற்சியில் ஏற்படுவதில்லை. வரலாற்று ரீதியாக நுரையீரல் அழற்சியானது விளக்கக்காட்சி அடிப்படையிலும் நம்பிக்கையின் அடிப்படையிலும் "இயல்பு மாறா" மற்றும் "இயல்பற்ற" அல்லது "வகையிலி" என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. இருப்பினும், இந்த வேறுபாடுகளை பல சான்றுகள் ஆதரிக்கவில்லை இதனால் அவை வலியுறுத்தப்படுவதில்லை. நுரையீரல் அழற்சியானது பெரும்பாலும் பாக்டீரியா அல்லது தீ நுண்மங்கள் முதன்மைக் காரணியாக இருக்கின்றன. பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணிகள் போன்றவையும் இதற்கடுத்தாற்போல் நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துகின்றன. 100 க்கும் அதிகமான தொற்று நோய்க்காரணிகள் அடையாளம் காணப்பட்டாலும் அவற்றுள் சில மட்டுமே பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நோய்க்காரணியாக இருக்கின்றன. குழந்தைகளில் 45% நோய்த்தாக்கங்களும், பெரியவர்களில் 15% நோய்த்தாக்கமும் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் ஆகியவற்றின் கலப்பு பாதிப்புகளால் ஏற்படக்கூடியவையாகும். இந்நோய்க்கான பாதியளவு சோதனைகளில் கவனமுடன் நடத்தப்படும் சோதனைகளில் கூட நோய்க்கான முதன்மைக்காரணியைத் தனிமைப்படுத்தி அறியமுடிவதில்லை. நிமோனியா (pneumonia) என்ற ஆங்கிலச் சொல்லானது நுரையீரலின் அனேகப் பாதிப்புகளை (நோய் எதிர்ப்புக் குறை நோய் பாதிப்புகள், நிணநீர்க்குழாய் நோய்கள், இரசாயனப் பாதிப்புகள் அல்லது மருந்துகளால் ஏற்படம் எதிர்விளைவுகள் போன்றவை) விவரிக்க பரவலாக பயன்படுத்தப்பட்டாலும் முக்கியமாக நுரையீரல் அழற்சியைக் குறிக்கவே pneumonitis என்ற ஆங்கிலச் சொல் இன்றளவும் பயன்படுத்தப்படுகிறது. புகைப்பழக்கம், நோயெதிர்ப்புத் திறன் குறைபாடு, மதுபானப் பழக்கம், நாள்பட்ட நுரையீரல் சுவாச நோய், ஆஸ்துமா, நாள்பட்ட சிறுநீரக நோய் மற்றும் கல்லீரல் நோய்கள் போன்றவை நோய் நிலையையும் தீவிரத் தன்மையையும் நிர்ணயிக்கும் காரணிகளாக விளங்குகின்றன. நேர்மின் எக்கியொடுக்கி (proton-pump inhibitors) அல்லது H2 தடுப்பான்கள் (H2 blockers) போன்ற அமில-அடர்த்தி மருந்துகளின் பயன்பாடு நுரையீரல் அழற்சியின் அதிகரிப்பின் ஆபத்தோடு தொடர்புடையன ஆகும். முதுமை நிலையில் இடர் தன்மை கூடுதலாகக் காணப்படலாம் இந்திய ரிசர்வ் வங்கி இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) 1935இல் தொடங்கப்பட்ட இந்தியாவின் நடுவண் வங்கியாகும். 1949இல் நாட்டுடைமை ஆக்கப்பட்டது. இதுவே அரசின் கருவூலம் ஆகும். நாட்டின் செலாவணிக்குரிய நாணயத்தை வெளியிடுவதோடு, இவ்வங்கி நாட்டின் பல பொருளாதார நடவடிக்கைகளை இயக்கியும் வருகிறது. பொது மக்கள் மற்ற வங்கிகளைப் பயன்படுத்துவது போல ரிசர்வ் வங்கியைப் பயன்படுத்த முடியாது. ஆனால் தனது முகமை (ஏஜன்ட்) ஏற்றுச் செயலாற்ற பல வங்கிகளை இது அமைத்துள்ளது. அவ்வகையில் பாரத ஸ்டேட் வங்கி இதன் முகமை வங்கி ஆகும். ரிசர்வ் வங்கியைப் பொது மக்கள் நேரடியாகப் பயன்படுத்தாவிட்டாலும் பொது மக்கள் நடத்தும் மற்ற வங்கிகளோடு தொடர்பு கொண்டு அவற்றைக் கண்காணித்தும் வருகிறது. இந்திய நாட்டின் நாணய மதிப்பு(அந்நியச் செலாவணிக்கெதிரான இந்திய ரூபாயின் மதிப்பு) ரிசர்வ் வங்கி கையிருப்பில் வைத்திருக்கும் தங்கம், ரொக்கம் ஆகியவற்றைக் கொண்டே மதிப்பிடப்படுகிறது. முதலில் கொல்கத்தா நகரை தலைமையகமாக கொண்டு விளங்கிய இவ்வங்கி 1937-ஆம் ஆண்டு முதல் மும்பை நகரை தலைமையகமாக கொண்டுள்ளது. ரிசர்வ் வங்கிக்கு இந்தியா முழுவதும் 22 வட்டாரக் கிளைகள் உள்ளன. தனியாரால் துவங்கப்பட்ட இவ்வங்கியானது 1949 ஆம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது. தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுனர் சக்திகாந்த தாஸ் ஆவார். இந்திய ரிசர்வ் வங்கி , இந்தியாவின் மைய வங்கி நிறுவனம் ஆகும். இந்திய ரூபாய் மற்றும் கையிருப்பில் உள்ள 30,210 கோடி அமெரிக்க டாலர் (2011 ஆண்டு) தொடர்பான நாணயக் கொள்கைகளை தோற்றுவிக்கும் ஆணையமாகும். ரிசர்வ் வங்கி சட்டம், 1934 ரின் விதிகள் படி, பிரித்தானிய இந்தியாவில் ஏப்ரல் 1,1935 இல் நிறுவப்பட்டது. இதன் மூலதனம் முற்றிலும் தொடக்கத்தில் 100 ரூபாய் கொண்ட பங்குகளாகப் பிரிக்கப்பட்டு, தனியார் பங்குதாரர்களுக்குச் சொந்தமாக இருந்தது. இந்திய ரிசர்வ் வங்கி, அரசாங்கத்தின் வளர்ச்சியில் ஒரு முதன்மைப் பங்கினை வகிக்கிறது. இது ஆசிய தீர்வு ஒன்றியத்தின் உறுப்பினர் வங்கியாக உள்ளது . இந்திய ரிசர்வ் வங்கி, முதல் உலக போருக்குப் பின்னர் பொருளாதாரப் பிரச்சனைகளுக்குப் பதிலளிக்க 1935 இல் ஹில்டன்-யங் ஆணையத்தின் பரிந்துரைகளின்படி நிறுவப்பட்டது.. இந்த ஆணையம் 1926-இல் அதன் அறிக்கையை சமர்ப்பித்தது என்றாலும் அடுத்த ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகுதான் அமைப்புக்கு வந்தது. ரிசர்வ் வங்கியின் மத்திய அலுவலகம் ஆரம்பத்தில் கொல்கத்தாவில் நிறுவப்பட்டது, ஆனால் நிரந்தரமாக 1937 ஆம் ஆண்டு மும்பைக்கு மாற்றப்பட்டது. ரிசர்வ் வங்கி, பர்மாவின் நடுவண் வங்கியாக, ஜப்பானின் பர்மா ஆக்கிரமிப்பு வரை மற்றும் 1937-ல் பர்மா, இந்திய ஒன்றியத்திலிருந்து பிரிந்த பின்னரும், 1947 வரை மியான்மரின் தலைமை வங்கியாகச் செயற்பட்டது. இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்த பின்னர், பாகிஸ்தானின் தலைமை வங்கியாக 1948 வரைச் செயற்பட்டது. முதலில் ஒரு பங்குதாரர்கள் வங்கியாக அமைக்கப்பட்டது என்றாலும், இந்திய ரிசர்வ் வங்கி 1949 இல் தேசிய மயமாக்கப்பட்ட பின்னர், முழுமையாக இந்திய அரசாங்கத்துக்குச் சொந்தமானது. 1950 மற்றும் 1960 இடையில், இந்திய அரசாங்கம், ஒரு மையப்படுத்தப்பட்ட திட்டமிட்ட பொருளாதாரக் கொள்கையை உருவாக்கி விவசாயத் துறையில் கவனம் செலுத்தியது. நிர்வாகம், வர்த்தக வங்கிகளை தேசியமயமாக்கி, வங்கி நிறுவனங்கள் சட்டம்் 1949 னின் அடிப்படையில் (பின்னர் வங்கி ஒழுங்குமுறை சட்டம் என அழைக்கப்படுகிறது) மத்திய வங்கி ஒழுங்குமுறையை இந்திய ரிசர்வ் வங்கியின் ஒரு பகுதியாக நிறுவியது. மேலும், மத்திய வங்கியை, கடன்கள் மூலம் பொருளாதாரத்தை ஆதரிக்க உத்தரவிட்டது. வங்கிகள் திவாலானதன் விளைவாக, ரிசர்வ் வங்கி ,ஒரு வைப்புத்தொகை காப்புறுதி முறையை நிறுவ மற்றும் கண்காணிக்க பறிந்துரைக்கப்பட்டது. இது "தேசிய வங்கி அமைப்பு" இல் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்று 7 டிசம்பர் 1961 துவங்கப்பட்டது. இந்திய அரசாங்கம், பொருளாதாரத்தை ஊக்குவிக்க தேவையான நிதியை திரட்டி, "வளர்சியடையும் வங்கியியல்" என்ற கொள்கையைக் கடைப்பிடித்தது. இந்திய அரசு ,தேசிய வங்கி சந்தையை மறுசீரமைத்து மற்றும் பல நிறுவனங்களை தேசியமயமாக்கியது. இதன் விளைவாக, இந்திய ரிசர்வ் வங்கி,பொது வங்கி துறையின் மைய பகுதியாக விளங்கியது. 1969 மற்றும் 1980 இடையில், இந்திய அரசாங்கம் ,1969 ல் 14 முக்கிய வணிக வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதை தொடர்ந்து , இன்னும் 6 வணிக வங்கிகளை அரசுடைமையாக்கியது. ( இந்திய ரிசர்வ் வங்கி இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது). பொருளாதாரத்தின் கட்டுப்பாடு மற்றும் குறிப்பாக நிதி துறை வலுப்படுத்துதல் ஆகியவை இந்திய அரசால் 1970 மற்றும் 1980 களில் செயல்ப்படுத்தப்பட்டது.மத்திய வங்கி ,அதன் கொள்கைகளை, இருப்பு விகிதம் போன்ற பணிகளுக்காக அதிகரித்துக்கொண்டது . சிறந்த பொருளாதார வளர்ச்சி இலக்காக வைத்து இவை செய்யப்பட்டது.வங்கிகள் வேளாண் வணிகம் மற்றும் சிறிய வணிக நிறுவனங்கள் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளுக்கு கடன் அளிக்கிறது . 1973 இல் கச்சா எண்ணெய் நெருக்கடியின் போது, அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக இந்திய ரிசர்வ் வங்கி, விளைவுகளை குறைக்கும் நோக்கில் பணவியல் கொள்கைகளைக் கட்டுப்படுத்தியது. பலக் குழுக்கள், 1985 மற்றும் 1991 இடையில் இந்திய பொருளாதாரத்தை பகுப்பாய்வு செய்தது.அவைகளின் முடிவுகள் ரிசர்வ் வங்கியில் ஒரு தாக்கத்தை ஏற்ப்படுதியது.தொழில் மற்றும் நிதி புனரமைப்பு வாரியம், வளர்ச்சி ஆராய்ச்சி இந்திய பாதுகாப்பு மற்றும் பரிமாற்ற வாரியம், இந்திரா காந்தி நிறுவனம், ஒரு முழு தேசிய பொருளாதார ஆய்வை நடத்தி, மிகவும் சிறந்த, பயனுள்ள சந்தை முறைகள் மற்றும் முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு திட்டங்களை முன்மொழிந்தது .இந்திய நிதி சந்தை, "நிதி அடக்குமுறை"க்கு ஒரு முக்கிய உதாரணமாக திகழ்ந்தது.இந்திய தள்ளுபடி மற்றும் நிதி ஆணையம் , ஏப்ரல் 1988 ல் பண சந்தையில் அதன் நடவடிக்கைகளை தொடங்கியது. தேசிய வீடமைப்பு வங்கி, ஜூலை 1988 இல் நிறுவப்பட்டது. சொத்து சந்தையில் முதலீடு செய்தது மற்றும் ஒரு புதிய நிதி சட்டம் மூலம் , பல்துறைத்திறமையை நேரடி வைப்பு இன்னும் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் உயர்த்தியது. தேசிய பொருளாதாரம், ஜூலை 1991 இல் வீழ்ச்சியடைந்தது. ரூபாய், அமெரிக்க டாலர்க்கு எதிரான மதிப்பில் 18% இழந்தது. நரசிம்மஹன் குழு நிதித் துறையை மறுகட்டமைப்பு செய்ய ஆலோசனை வழங்கியது.புதிய வழிமுறைகள், தனியார் வங்கி துறையை நிறுவ, 1993 இல் வெளியிடப்பட்டது. இந்த முதல் கட்டம் வெற்றி பெற்றது.மத்திய அரசாங்கம் 1998 ல், உரிமையாளர் கட்டமைப்பை வேறுப்படுத்த,ஒரு வேற்றுமை தாராளமயம் கட்டாயத்தை உறுவாக்கியது. அன்னிய செலாவணி மேலாண்மை சட்டம்(1999) ஜூன் 2000 இல் அமலுக்கு வந்தது. இது, இந்தியாவில் சர்வதேச முதலீடுகள் மற்றும் அந்நிய செலாவணி சந்தையை மேம்படுத்த வேண்டும்.இந்திய ரிசர்வ் வங்கி, கடந்த ஆண்டுகளில் நிதி சந்தையின் வளர்ச்சியை ஊக்குவித்துள்ளது. 2001 ல் ஆன்லைன் வங்கி அனுமதி மற்றும் 2004-2005 ல் ஒரு புதிய கட்டணம் செலுத்தும் முறையை உருவாக்கப்பட்டது. (தேசிய மின்னணு நிதி மாற்றம்). ஒன்பது நிறுவனங்கள் ஒரு இணைப்பான, அச்சடித்தல் & மின்டிங் கழகம் ,இந்தியா லிமிடெட் 2006 இல் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் உற்பத்தி செய்ய நிறுவப்பட்டது. தேசிய பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் 2008-2009 கடைசி காலாண்டில் 5.8% கீழே வந்தது . மத்திய வங்கி, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.2014ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி நடந்த நிதிக்கொள்கை வெளியீட்டின் போது இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் சேமிப்புக்காணக்கிற்கான இருப்புத்தோகை குறைந்தால் அபராதம் வசூலிக்க கூடாது என்று உத்தரவு பிரப்பித்தது. வங்கியின் பொது கண்காணிப்பு மற்றும் இயக்கம் 20 உறுப்பினர்களைக் கொண்டது. அவர்கள் ஆளுநர் மற்றும் நான்கு துணை ஆளுநர்கள், மத்திய நிதி அமைச்சகத்தின் ஒரு அரசு அதிகாரி, நாட்டின் பொருளாதார உறுப்புகளை பிரதிநிதித்துவம் செய்ய பத்து அரசு இயக்குநர்கள், மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் புது தில்லி தலைமையகங்களின் பிரதிநிதியாக நான்கு மத்திய அரசு இயக்குநர்கள் ஆகியோராவர். உள்ளூர் வாரியங்கள் ஒவ்வொன்றுக்கும் , பிராந்திய மற்றும் பொருளாதார நலன்களையும் ,கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வங்கிகளின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவும், நான்கு ஆண்டுகளுக்கு, ஐந்து உறுப்பினர்கள் மத்திய அரசால் நியமிக்கப்படுவர். மத்திய இயக்குநர்கள் வாரியம், மத்திய வங்கியின் முக்கிய குழுவாகும். இந்திய அரசு, நான்கு ஆண்டு காலத்திற்கு இயக்குனர்களை நியமிக்கிறது. ஒரு ஆளுநர், நான்கு துணை ஆளுநர்கள், பிராந்தியக் கிளைகளை பிரதிநிதித்துவம் செய்ய பதினைந்து இயக்குநர்கள், நிதி அமைச்சகத்திலிருந்து ஒருவர், மற்றும் பல்வேறு துறைகளில் இருந்து இதர பத்து இயக்குனர்களையும் கொண்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் தற்போதைய ஆளுநராக சக்திகாந்த தாஸ் உள்ளார். இவர் இந்திய குடியரசுத் தலைவரால் 2018, டிசம்பர் மாதம் ஆளுநராக நியமிக்கப்பட்டார். தற்போது நான்கு துணை ஆளுநர்கள், கே.சி. சக்ரபர்தி, ஸுபிர் கொகர்ன், ஆனந்த் சின்ஹா ​​மற்றும் எச் ஆர் கான் உள்ளனர். மேற்கே மும்பை , கிழக்கில் கொல்கத்தா, தெற்கே சென்னை மற்றும் வடக்கில் புது தில்லி :என இந்திய ரிசர்வ் வங்கி நான்கு பிராந்திய பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ளது. பிரதிநிதித்துவம், மத்திய அரசாங்கத்தால் நான்கு ஆண்டு காலத்துக்கு நியமனம் செய்யப்படும் ஐந்து உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படுகிறது.. ரிசர்வ் வங்கி 22 வட்டார அலுவலகங்களைக் கொண்டுள்ளது. தாராபூர் குழு, இந்திய ரிசர்வ் வங்கியால் முன்னாள் ரிசர்வ் வங்கி துணை கவர்னர் எஸ் தாராபூர் நிர்வாக பொறுப்பின் கீழ் அமைத்தது. அந்த ஐந்து உறுப்பினர் குழு ,1999-2000 க்குள் இந்தியாவை மூலதன நாடாக மாற்ற மூன்று ஆண்டு கால அவகாசத்தை பரிந்துரைத்தது. ஜூலை 1,2007 அன்று வாடிக்கையாளர் சேவைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்திய ரிசர்வ் வங்கி புதிய வாடிக்கையாளர் சேவைத் துறையை உருவாக்கியது. இந்திய ரிசர்வ் வங்கி 4 மண்டல அலுவலகங்களைக் கொண்டுள்ளது .இது, மாநில தலைநகரங்கள் மற்றும் இந்தியாவின் முக்கிய நகரங்களில் 22 வட்டார அலுவலகங்களைக் கொண்டுள்ளது. அவற்றுள் சில அகமதாபாத், பெங்களூர், போபால், புவனேஸ்வர், சண்டிகர் சென்னை, தில்லி, கவுகாத்தி, ஹைதெராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு,கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர் பாட்னா, மற்றும் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளன. தவிர, அகர்தலா, டேராடூண், காங்டாக், கொச்சி, பனாஜி, ராய்ப்பூர், ராஞ்சி, சிம்லா மற்றும் ஸ்ரீநகரில் துணை அலுவலகங்களைக் கொண்டுள்ளது. வங்கி, அதன் அதிகாரிகளுக்கு இரண்டு பயிற்சி கல்லூரிகள், புனேவில் உள்ள விவசாய வங்கிக் கல்லூரி மற்றும் சென்னை ரிசர்வ் வங்கி பணியாளர் கல்லூரி. பெலாப்பூர், சென்னை, கொல்கத்தா மற்றும் புது தில்லியில் நான்கு மண்டல பயிற்சி மையங்களும் உள்ளன. ஆகியவற்றை வங்கியின் அடிப்படைச் செயல்பாடுகளாக ரிசர்வ் வங்கியின் அறிமுகவுரை முன்வைக்கிறது. இது ரிசர்வ் வங்கியின் ஒரு பிரிவாகும். நாணயங்களைப் பொது மக்கள் புழக்கத்திற்காக வங்கிகள் மற்றும் அரசாங்கக் கருவூலங்கள் வழியாக வெளியிடும் துறையாகும். முதலில், வெளியீடுத் துறையின் சொத்துக்கள், ஐந்தில் இரண்டு பங்குக்கு தங்க நாணயம், தங்கப் பொன் அல்லது ஸ்டெர்லிங் பத்திரங்களின் மதிப்புக்கு ₹ 40 கோடி (₹ 400 மில்லியன்) விட குறைவாக இருக்கக்கூடாது என்றும் மீதமுள்ள சொத்துக்கள் - ரூபாய், நாணயங்கள்ள்ள்ள், இந்திய ரூபாய் பத்திரங்கள், பரிமாற்றம் மற்றும் இந்தியாவில் செலுத்த வேண்டிய உறுதிமொழி நோட்டுகள் என வைத்துக்கொள்ளாம். இரண்டாம் உலக போர் மற்றும் பிந்தையப் போர் காலத்தில் தேவைகளை பூர்த்தி செய்யவும் காரணமாக, இந்த விதிகள் கணிசமாக திருத்தியமைக்கப்பட்டன. இந்திய ரிசர்வ் வங்கி, நாட்டின் முக்கிய பணவியல் ஆணையமாகும் மற்றும் மத்திய வங்கி தேசிய மற்றும் மாநில அரசாங்கங்கள் வங்கியாக செயல்படுகிறது. இது, உற்பத்தித் துறைகளில் போதுமான அளவு கடன் ஓட்டத்தை உறுதிப்படுத்ததுகிறது, அதே போல் பணவியல் கொள்கை கண்காணிக்கிறது. அதன் நோக்கங்கள், விலை நிலைத்தன்மையை பராமரிப்பது மற்றும் உற்பத்தி துறைகளில் போதுமான கடன் ஓட்டத்தை உறுதிப்படுதுவது. தேசிய பொருளாதாரம், பொதுத் துறையை சார்ந்தது ஆனால், மத்திய வங்கி, 1990 நிதி சந்தை சீர்திருத்தங்கள் முதல் தனியார் துறைக்கு தள்ள ஒரு பிரம்மாண்டமான பணவியல் கொள்கையை ஊக்குவிக்கிறது.செயல்படுத்தப்படுகிறது மற்றும் உற்பத்தி துறைகளில் கடன் போதுமான அளவு ஓட்டம் உறுதிப்படுத்த வேண்டும், அதே போல் பணவியல் கொள்கை கண்காணிக்கிறது. நோக்கங்கள் விலை நிலைத்தன்மையை பராமரிப்பது மற்றும் உற்பத்தி துறைகளில் கடன் போதுமான ஓட்டம் உறுதி. தேசிய பொருளாதாரம் பொது துறை சார்ந்தது மற்றும் மத்திய வங்கி 1990 நிதி சந்தை சீர்திருத்தங்கள் முதல் தனியார் துறை தள்ள ஒரு பிரம்மாண்டமான பணவியல் கொள்கை ஊக்குவிக்கிறது. அந்நிறுவனம், மேலும் நிதி அமைப்பின் சீராக்கி மற்றும் மேற்பார்வையாளராகவும் மற்றும் வங்கி நடவடிக்கைகளை ,செயல்ப்பாடுகளை பரந்த அளவுருக்கள் உரைக்கிறது.அதன் நோக்கங்கள், அமைப்பில் பொது நம்பிக்கையை தக்க வைப்பது, வைப்புத்தொகையாளர்களின் நலன்களைப் பாதுகாப்பது மற்றும் பொதுமக்களுக்கு செலவு குறைந்த வங்கிச் சேவைகளை வழங்குவது. வங்கி ஓம்புட்ஸ்மன் திட்டம், வங்கி வாடிக்கையாளர்களின் புகார்களுக்கு திறமையான தீர்வு கான வுருவாக்கப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கி, பணப் பரிமாற்றத்தைக் கட்டுப்படுத்தும், மொத்த உள்நாட்டு உற்பத்தி போன்ற பொருளாதார குறியீடுகளை கண்காணிக்கும்,மற்றும் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களின் வடிவமைப்பு தொடர்பான முடிவை எடுக்கும். மத்திய வங்கி, அன்னிய செலாவணி மேலாண்மை சட்டம், 1999 இலக்குகளை அடைய நிர்வகிக்கிறது. குறிக்கோள்: வெளிப்புற வர்த்தகம் மற்றும் பணம் செலுத்தும் வசதி மற்றும் இந்தியாவில் அந்நிய செலாவணி சந்தையின் ஒழுங்குமுறையில் மேம்பாடு மற்றும் பராமரிப்பு ஊக்குவிக்கம். வங்கி, பண உற்ப்பத்தி,பரிமாற்றங்கள் அல்லது புழக்கத்தில் இருக்க தகுதியற்ற பணத்தை அழிக்கும்.அதன் நோக்கங்கள், நல்ல தரமான நாணயங்களைப் பொது மக்களுக்கு வழங்குவது மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியை பராமரிக்க மற்றும் மேம்படுத்த வணிக வங்கிகளுக்கு கடன் வழங்கவது. ரிசர்வ் வங்கியின் அடிப்படை நோக்கங்கள், நாணயங்களை வழங்குதல்,நாட்டின் சிறந்த நன்மைக்காக நாட்டின் நாணயம் மற்றும் கடன் அமைப்பை பராமரித்தல் மற்றும் இருப்புக்களை தக்க வைத்துக்கொள்ளுதல். அது, விலை நிலைத்தன்மையை பராமரித்தல் ஆனால் அதே போல் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுதல் என்ற இரண்டு நோக்கங்களையும் அடைய இந்திய ரிசர்வ் வங்கி, நாட்டின் பொருளாதார அமைப்பை பராமரிக்கிறது. மத்திய வங்கி, தேசிய நோக்கங்கள் மற்றும் தொழில்களுக்கு ஆதரவு விளம்பரச் செயல்பாடுகளை பரவலாக செய்ய வேண்டும். இந்திய ரிசர்வ் வங்கி, இடையேயான துறை மற்றும் உள்ளூர் பணவீக்கம் தொடர்பான பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. இந்த பிரச்சினைகளுள் சில, பொதுத்துறை ஆதிக்கத்தால் ஏற்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி ,அரசாங்கத்திற்கு ஒரு வங்கியாளர் மற்றும் மத்திய மாநில அரசாங்கங்களுக்கு வணிக வங்கியாளராகவும் செயல்படுகிறது. தேசிய வீடமைப்பு வங்கி (என் எச் பி) தனியார் மனை வணிகத்தை (ரியல் எஸ்டேட்) மேம்படுத்துவதற்காக 1988 இல் நிறுவப்பட்டது.மேலும் அனைத்து வங்கிகளின் வங்கி கணக்குகளையும் பராமரிக்கிறது. பொது மக்கள் நடத்தும் வங்கிகளை மேல்பார்வையிடும் பொறுப்பும் இந்திய ரிசர்வ் வங்கிக்கு உண்டு. தகுதியானவை என்று தனக்குத் தோன்றும் வங்கிகளைத் தனது ஆட்சிக்கு உரியவையாக அமைத்துக் கொள்ளும். அவ்வாறு அமைத்துக் கொண்ட வங்கிகள் ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் அட்டவணையில் காணப்படும். அவையே அட்டவணை வங்கிகள் எனப்படுகின்றன. இந்திய ரிசர்வ் வங்கியின் சட்ட திட்டங்கள் இத்தகைய வங்கிகளைக் கட்டுப்படுத்தும். இந்திய ரிசர்வ் வங்கியின் அட்டவணையில் சேர்க்கப்படாத வங்கிகள் அட்டவணையில்லா வங்கிகள் ஆகும். இவை மக்களால் மதிக்கப்பட்டதாகவும் தகுதி மிக்கதாகவும் இருந்தாலும் இவை அட்டவணையில் சேர்க்கப்பட்ட பிறகே அட்டவணை வங்கிகள் பட்டியலில் இடம் பெறும். ரிசர்வ் வங்கியின் சட்டதிட்டங்கள் இவ்வங்கிகளையும் கட்டுப்படுத்தும். சனா சனா (அரபு மொழி: صنعاء, பலுக்கல்: [sˤanʕaːʔ]) யெமன் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2004 கணக்கெடுப்பின் படி 1,747,627 மக்கள் வசிக்கின்றனர். 2,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. வடி வடி அல்லது வடிகட்டி என்பது திண்மப் பொருட்களை நீர்மப் பொருட்களில் இருந்து பிரிக்கப் பயன்படும் ஒரு கருவி ஆகும். இது பெரும்பாலும், தொழிற்சாலைகள், ஆய்வுக் கூடங்கள், சமையலில் முதன்மையாக பயன்படுகிறது. சமையலில் தேனீர், கோப்பி, தேங்காய்ப்பால் முதலியவற்றை வடிக்க வடி பயன்படுகிறது. அரிதட்டு அரிதட்டு அல்லது மாவரி என்பது மாவில் குறுணிய சீரான தூள்களை பெரிய கட்டிகளில் இருந்து வேறுபடுத்த பயன்படும் ஒரு சமையல் உபகரணம் ஆகும். மா, ரவை, தூள், பொடி வகைகள் அரிக்கப்படுவதுண்டு. தகரவெட்டி தகரவெட்டி என்பது உலோக தகர (தகரக் குவளையின்) மூடியை வெட்டப் பயன்படும் ஒரு கருவி ஆகும். தகரங்கள் 1810 ஆண்டளவே பயன்பாட்டுக்கு வந்தாலும், மெல்லிய உலோக மூடி உள்ள தகரங்கள் 1950க்குப் பின்னரே பயன்பாட்டுக்கு வந்தன. எளிய தகரவெட்டிகள் சிறிய மனித வலுவுடன் தகரத்தை வெட்டக் கூடியவை. எந்த மனித வலுவும் இல்லாமல் வெட்டக் கூடிய மின் தகரவெட்டிகளும் உண்டு. மின் சோறுஆக்கி மின் சோறுஆக்கி அல்லது சோறு சமைப்பான் என்பது அரிசியை சமைத்து சோறாக ஆக்கி தரும் ஒரு சமையல் சாதனம் ஆகும். ஏற்ற அளவு அரிசி, தண்ணீர், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து இட்டால் மின் சோறுஆக்கி தானாக சோற்றை அவித்து, பதம் வந்த உடன் தானாக நின்றுவிடும். மரக்கறிகள், பருப்பு போன்றவற்றை சேர்த்து குழையல் சோறும் செய்யலாம். பொதுவாக இது ஜப்பானிய, சீனர், தமிழர் போன்ற சோறு முதன்மை உணவாக உண்ணுவோரின் வீடுகளில் இருக்கும். குப்பைத் தொட்டி குப்பைத் தொட்டி குப்பைகளைத் தற்காலிகமாக இட்டு வைக்கும் தொட்டி ஆகும். குப்பைகளை அங்கும் இங்கும் போடாமல் குப்பைத் தொட்டியில் போடுவது ஒரு நற்பழக்கம் ஆகும். இது குப்பைகளை சுத்தம் செய்வதை இலகுவாக்குகிறது. சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருகிறது. நோய்க்கிருமிகள் பரவுவதைத் தடுக்கிறது. தற்காலத்தில் நகரங்களில் குப்பைகளைப் பல்வேறு வகைகளாகப் பிரித்துப் போடுவதும் வழக்கம். பொதுவாக கரிம அல்லது உயிரி கழிவுகள் (மரக்கறித் தோல், இறைச்சியின் எலும்புகள் போன்ற) ஒரு வகையாகப் பிரிக்கப்படுகின்றன. மறுபயனீடு செய்ய கூடிய செய்தித் தாள்கள், உலோகங்கள் வேறு ஒரு வகையாக] பிரிக்கப்படுகின்றன. இலகுவாக மக்காத பொருட்கள் ஒரு வகையாக பிரிக்கப்படுகின்றன. இவை தவிர வேறு பிரிவுகளும் உண்டு. மறுபயனீடு ஒரு பொருளை ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகளை பயன்படுத்தல் மறுபயனீடு (Reuse) என்ப்படுகிறது. இதில் அப்பொருள் செய்யப்பட்ட நோக்கத்துக்காகவே மீண்டும் பயன்படுத்தலும், அப்பொருளை முதலில் கருதப்படாத ஒரு செயற்பாட்டுக்கு பயன்படுத்தலும் அடங்கும். மறுபயனீட்டுக்கு மாற்றாக மீளுருவாக்கத்தில் பொருட்கள் பொருட்கள் பதனிடப்பட்டு உற்பத்திச் செயற்பாட்டில் மூலப்பொருட்களாக பயன்படுத்தப்படுகின்றன. மறுபயனீடு பொருளாதார, சூழலியல் நன்மைகளைக் கொண்டுள்ளது. வளர்ந்துவரும் நாடுகளில் மறுபயனீட்டின் பொருளாதார நண்மைகள் காரணமாக மறுபயனீடு வெகுவாக நடைப்பெற்றுவருகின்றது. பெரிய வருவாய், கழிவகற்றும் வசதிகள் போன்றவைக் காரணமாக வளச்சிபெற்ற நாடுகளில் மறுபயனீடுச் செய்யக்கூடிய பொருட்களின் குறைவாக உள்ளது. தற்போது நிழவிவரும் சூழலியல் விழிப்புணர்வுக் காரணமாக மறுபயனீடு அதிகரித்து வருகின்றது. மறுபயனீடு தற்காலக் கழிவு மேலாண்மையின் மூன்று முக்கிய பகுதிகளில் ஒன்றாகும். கழிவு மீளுருவாக்கம் (Recycling), கட்டுப்படுத்தல் (Reduce) என்பன ஏனைய இரண்டு பகுதிகளாகும். குளிர்பான போத்தில்கள் சேகரிக்கப்பட்டு மீண்டும் அப்போத்தில்களில் குளிர்பாணம் அடைத்து விற்பனைச் செய்தல், டயர்களை புதுப்பித்து பயன்படுத்தல், பலதரப்பட்ட கழிவுகள் உரமாக வயலில் போடுதல் போன்றவை மறுபயனீட்டுக்கான எடுத்துக்காட்டுகளாகும். ஐவி லீக் ஐவி லீக் (Ivy League) என்பது அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் அமைந்த 8 மிகப் பழமையான பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட என்.சி.ஏ.ஏ. விளையாட்டுக் குழுமத்தை குறிக்கும். இந்த பல்கலைக்கழகங்களின் பழமையான கட்டிடங்கள் மேல் "ஐவி" செடி வளரும்; இதனால் "ஐவி லீக்" என்ற பெயர் 1930கள் முதல் பயன்பாட்டில் வந்தது. பொது மக்கள் எண்ணத்தில் இப்பல்கலைக்கழகங்கள் கல்வியில் மிகச்சிறந்தது. யூ.எசு. ஓப்பன் அமெரிக்க டென்னிசுத் திறந்த போட்டிகள் அல்லது யூ. எசு. ஓப்பன் (யூ. எஸ். ஓப்பன், "US Open"), ஆண்டுதோறும் நடைபெறுகின்ற, "கிராண்ட் சிலாம்" (Grand Slam) என்றழைக்கப்பட்ட, பெருவெற்றித் தொடர் டென்னிசு போட்டிகளில் ஒன்றாகும். 1881ஆம் ஆண்டு, முதலில் ஆண்கள் ஒற்றையர் போட்டியுடன் துவங்கிய, யூ.எசு.தேசிய சாதனையாளர் போட்டியின் தற்கால வடிவமே, இப்போட்டியாகையால் உலகின் மிகப் பழமையான டென்னிசுப் போட்டியாகக் கருதப்படுகிறது. 1987ஆம் ஆண்டிலிருந்து, பெருவெற்றித் தொடர் போட்டிகளில் ஒன்றாகக் கருதப்படும் இப்போட்டி, ஆண்டில் கடைசியிலும் நான்காவதாகவும் நடைபெறும் சாதனைப்போட்டியாக விளங்குகிறது. நியூயார்க் நகரில் குயீன்சு பகுதியில் அமைந்த பில்லி சீன் கிங் (Billie Jean King) தேசிய டென்னிசு மையத்தில் ஆண்டுதோறும் நடைபெறுகிற இப் பந்தய விளையாட்டில் குறைந்தது 600 ஆண்களும் பெண்களும் போட்டியிடுகின்றனர். ஆகத்து இறுதியிலும் செப்டம்பர் துவக்கத்திலும் இரண்டு வாரங்களில் நடைபெறும் இப்போட்டிகள் ஒற்றையர் (ஆண்), இரட்டையர் (ஆண்கள்), ஒற்றையர் (பெண்), இரட்டையர் (பெண்) , மற்றும் இருபாலர் இரட்டையர் பிரிவுகளில் நடைபெறுகின்றன. தொழில்நெறியர்களும் (professional), தனியார்வநெறியர்களும் (அமெச்சூர்களும்) கலந்துகொள்ள முடியுமாதலால் இது "திறந்த போட்டிகள்" என வழங்கப்படுகிறது. நான்கு பெருவெற்றித் தொடர் டென்னிசு போட்டிகளில், இங்கு மட்டுமே கடைசி ஆட்டத்தொகுப்பில் சமநிலைமுறிவுத் தீர்வு (final-set tiebreaks) கடைபிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்போட்டி தொடக்கக் காலத்தில், குமுகத்தில் (சமூகத்தில்) உயர் மட்டத்தில் இருப்பவர்களின் தனிப்பட்ட கேளிக்கை நிகழ்ச்சியாக இருந்தது. இப்போட்டி 1881 ம் ஆண்டு றோட் தீவிலுள்ள (Rhode Island) நியூப்போர்ட் நகரின் நியூப்போர்ட் காசினோவில் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் இங்கு ஆண்கள் ஒற்றையர் போட்டி மட்டுமே நடத்தப்பட்டது. முதல் ஆண்டு மட்டுமே அமெரிக்க டென்னிசுச் சங்கத்தின் உறுப்பு சங்கங்களின் உறுப்பினர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். 1884 முதல் 1911 வரை அறைகூவல் முறையை (challenge system) கடைபிடித்தது, அதன்படி நடப்பு வெற்றியாளர் அடுத்த ஆண்டு இறுதி போட்டிக்கு எப்போட்டியிலும் விளையாடாமலேயே தானாக தகுதி பெற்றவர் ஆகிடுவார். 1915ல் நியூயார்க்கின் பாரஃசுட்டு ஃகில் (Forrest Hill) பகுதியிலுள்ள மேற்கு பக்க டென்னிசு சங்கத்துக்கு இப்போட்டி நடக்குமிடம் நகர்த்தப்பட்டது. 1921 முதல் 1923 வரை இப்போட்டி பிலடெல்பியா நகரிலுள்ள செருமன்டவுன் கிரிக்கெட் சங்கத்தில் நடைபெற்றாது. பின் மீண்டும் 1924ம் ஆண்டு பாரஃசுட்டு ஃகில் பகுதிக்கு திரும்பியது. அமெரிக்க ஆண்களுக்கான தேசிய அளவிலான போட்டி நடத்தப்பட்டு ஆறு ஆண்டுகள் கழித்து 1887ம் ஆண்டு பிலடெல்பியா கிரிக்கெட் சங்கத்தில் அமெரிக்க பெண்களுக்கான தேசிய அளவிலான போட்டி நடத்தப்பட்டது, இரண்டு ஆண்டுகள் கழித்து 1889ல் பெண்களுக்கான இரட்டையர் போட்டி நடத்தப்பட்டது. அமெரிக்காவின் முதல் கலப்பு இரட்டையர் போட்டி பெண்களுக்கான ஒற்றையர், இரட்டையர் ஆட்டங்கள் நடக்கும் போது அதனுடன் நடத்தப்பட்டது. அமெரிக்க ஆண்களுக்கான தேசிய அளவிலான இரட்டையர் போட்டி 1900ம் ஆண்டு நடத்தப்பட்டது. இந்த பந்தயங்கள் அமெரிக்காவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் தனி தனியாக நடத்தப்பட்டு அவற்றில் வெற்றி பெற்ற அணிகளுக்கிடையே போட்டி வைக்கப்பட்டு தேசிய வாகையாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1968-இல் திறந்த போட்டிகள் காலம் தொடங்கியவுடன் 5 போட்டிகளும் அமெரிக்க டென்னிசுத் திறந்த போட்டிகளுடன் இணைக்கப்பட்டன. இப்பந்தயங்கள் பாரஃசுட்டு ஃகில் பகுதியிலுள்ள மேற்கு பக்க டென்னிசு சங்கத்தில் நடத்தப்பட்டன. 1968ல் இருந்து இப்போட்டியில் தொழில்நெறியாள ஆட்டக்காரர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். அந்த ஆண்டு 96 ஆண்களும் 63 பெண்களும் கலந்துகொண்டார்கள், அப்போட்டியில் அளிக்கப்பட்ட மொத்த பரிசுத்தொகை 100,000 அமெரிக்க டாலர்களாகும். 1970 ம் ஆண்டில் யூ.எசு. ஓப்பன் கிராண்ட் சிலாம் பந்தயங்களிலேயே முதல் முறையாக சமநிலைமுறிவுத் தீர்வு முறையைப் பயன்படுத்தியது. இப்போதும் யூ.எசு. ஓப்பனிலேயே இறுதித் தொகுப்பாட்டத்தில் ("செட்டில்", set) சமநிலைமுறிவுத் தீர்வு முறை பின்பற்றப்படுகிறது. மற்ற மூன்று கிராண்ட் சிலாம் பந்தயங்களில் இம்முறை இல்லை. அமெரிக்க டென்னிசுத் திறந்த போட்டிகள் புல் தரையிலேயே நடைபெற்றன, 1975ம் ஆண்டு களிமண் தரைக்கு ஆட்டம் நடக்கும் பாரஃசுட்டு ஃகில் விளையாட்டரங்கம் மாறியது. மூன்று ஆண்டுகள் கழித்து 1978ல் பாரஃசுட்டு ஃகில் பகுதியில் இருந்து தற்போது ஆட்டம் நடக்கும் பிளசிங் மெடோசுப் பகுதிக்கு விளையாட்டரங்கம் மாறியதும் இதன் செயற்கை தரையைப் பயன்படுத்தி ஆட்டம் நடைபெறுகிறது. சிம்மி கான்னர்சு (Jimmy Connors) என்பவரே யூ.எசு. ஓப்பனின் மூன்று ஆடுதளத்திலும் வெற்றிபெற்றவராவார். இரண்டு ஆடுதளங்களில் வெற்றி பெற்ற ஒரெ பெண் கிரிசு எவெர்ட் (Chris Evert) என்பவரே. 2006-இல் யூ.எசு. ஓப்பனில் கழுகுக் கண் என்ற கணினி கட்டமைப்பு மூலம் விளையாடுபவர் நடுவர் தீர்ப்புக்கெதிராக முறையிட்டால் அதனை உடனடி நிகழ்பட மீள்பார்வை ஆய்வுக்கு உட்படுத்தும் வசதி செய்யப்பட்டது. இதன் மூலம் ஒவ்வொரு ஆட்டக்காரரும் ஒர் ஆட்டத்தொகுப்பில் (set) மூன்று முறை மட்டும் நடுவர் தீர்ப்புக்கெதிராக முறையிடலாம். சமநிலைமுறிவுத் தீர்வில் ஒரு முறை முறையிடலாம். ஆட்டக்காரரின் முறையீடு சரி என்று தீர்ப்பானால் அந்த முறையீடு ஆட்டக்காரரின் கணக்கில் இருந்து எடுத்துக்கொள்ளப்படாது. ஆட்டக்காரரின் முறையீடு தவறு என்று தீர்ப்பானால், ஆட்டக்காரர் ஒரு முறையீட்டு உரிமையை இழந்துவிடுவார். 2009-க்கு முன்பு வரை உடனடி நிகழ்பட மீள்பார்வை ஆய்வுக்கு உட்படுத்தும் வசதி ஆர்தர் ஆசே மற்றும் ஆர்ம்சிட்ராங் தளங்களில் மட்டுமே இருந்தது. முறையீடு செய்யப்பட்டால் உடனடி நிகழ்பட மீள்பார்வை மூலம் திரையில் ஆட்டத்தை பார்க்கும் வசதி தற்போது ஆட்டக்காரர், நடுவர், ஆடுதளத்தில் இருக்கும் பார்வையாளர் மற்றும் தொலைக்காட்சி பார்வையாளர் ஆகிய யாவருக்கும் ஒரே நேரத்தில் கிடைக்கின்றது . 2006 யூ.எசு. ஓப்பனின் போது இந்த முறையின் கீழ் முறையீடு செய்த 30.5% ஆண்கள் 35.85% பெண்களின் முறையீடுகள் தவறென தீர்ப்பளிக்கப்பட்டது. பிளசிங் மெடோசில் உள்ள திடல்கள்களில் செயற்கைத்தரை பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் உராய்வு குறைவு என்பதால் மற்ற செயற்கைதரை ஆடுதளங்களை விட இதில் பந்து வேகமாகச் செல்கின்றது மட்டுமன்றி மேலெலும்பும் உயரமும் குறைவாக இருக்கும். இதன் முதன்மை திடலான ஆர்தர் ஆழ்சேயில் 22,547 இருக்கைகள் உள்ளன, இது 1997ல் திறக்கப்பட்டது. ஆர்ம்சிட்ராங் திடலில் 18,000 இருக்கைகள் இருந்தன, ஆர்தர் திடல் திறக்கப்பட்டதும் இதன் இருக்கைகளின் எண்ணிக்கை 5,000 ஆக குறைக்கப்பட்டது. ஆர்ம்சிட்ராங் திடல் 1978ல் திறக்கப்பட்டது, இதுவே 1978-96 வரை முதன்மைத் திடலாக இருந்தது. இங்குள்ள அனைத்து திடல்களும் ஒளியூட்டப்பட்டு உள்ளதால் வெளிச்சம் குறைவாக இருக்கும் நேரங்களிலும் இரவிலும் ஆடலாம். மாலையில் விளையாடும் வசதி உள்ளதால் தொலைக்காட்சிகளின் முதன்மை நேரமான மாலையில் இங்கு நடக்கும் விளையாட்டுகளை நேரடி ஒளிபரப்ப முடியும். தொலைக்காட்சியில் பந்து தெளிவாக தெரிவதற்காக 2005ல் இருந்து அனைத்து திடல்களின் உட்புறம் (விளையாடும் இடம்) நீல நிற பூச்சு பூசப்பட்டுள்ளது. வெளிப்புற திடல் பச்சை நிறமாகும். 2013 அமெரிக்க ஓபன் சாம்பியன் மொத்த பரிசு தொகை 2012 பருவத்தில் ஒப்பிடும்போது சுமார் பத்து மில்லியன் டாலர்கள் அதிகரிக்கிறது. இது $ 34,252,000 (அமெரிக்க டாலர்கள்) ஆகும். பரிசு பணத்தை பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.: ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் ("African National Congress", அல்லது ANC) என்பது தென்னாபிரிக்காவின் ஆளும் கட்சியாகும். மே 1994 ஆண்டு முதல் இது தென்னாபிரிக்கத் தொழிற்சங்கக் கூட்டணி, தென்னாபிரிக்க பொதுவுடமைக் கட்சி ஆகிய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அரசை அமைத்துள்ளது. "இடதுசாரிகளின் ஒழுங்குமுறை சார்ந்த படை" எனட் தம்மை அழைத்துக் கொள்கிறது. இவ்வமைப்பு முதன் முதலாக 1912 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் நாள் "தென்னாபிரிக்கப் பழங்குடியினரின் தேசிய காங்கிரஸ்" ("South African Native National Congress") என்ற பெயரில் தென்னாபிரிக்க கருப்பினர்களின் உரிமைகளை அதிகரிக்கவென ஆரம்பிக்கப்பட்டது. ஜோன் டூபே என்பவர் இக்கட்சியின் முதலாவது தலைவர். இவருடன் எழுத்தாளரும் கவிஞருமான சோல் பிளாட்ஜி இவ்வமைப்பின் தொடக்ககால உறுப்பினராவார். இவ்வமைப்பின் பெயர் 1923 ஆம் ஆண்டில் தற்போது வழங்கும் "ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்" என்று மாற்றப்பட்டது. இதன் இராணுவப் பிரிவு 1961 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. நிறவெறிக் கொள்கை 1994 ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்த நாளில் இருந்து இக்கட்சியே ஆட்சியில் உள்ளது. 1999 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத் தேர்தலிலும், அதன் பின்னர் 2004 ஆண்டில் இடம்பெற்ற பொதுத் தேர்தலிலும் இக்கட்சி தனது பெரும்பான்மைப் பலத்தை அதிகரித்து வந்துள்ளது. மூலம் (நோய்) மூலம், என்பது ஆசன வாயிலுள்ளும், வெளியிலும் தேவையற்ற சதைகள் வளர்ந்து குத வாயிலை அடைத்துத் துன்புறுத்துவக்கூடியது. மூல நோய் மலச் சிக்கலாலும், மரபு வழியாகவும் தோன்றக் கூடியது. மூல நோயை உள்மூலம், ( Internal piles ), வெளிமூலம் ( External piles ), பவுத்திர மூலம் ( Fistula ) மூன்று வகைகள் உள்ளது. அறுவை சிகிச்சையால் மட்டுமே மூல நோய்கள்களைக் குணப்படுத்த இயலும். மலத் துளையின் உட்பகுதியில் சவ்வு படர்ந்து, மலம் கழிக்கும்போது மலக் குழாயின் உட்புறம் உள்ள தசைகள் உப்பி வெளிப்புறம் நீண்டு வரும். இதனால் மலம் வெளிப்படுதல் சிக்கலாகி இரத்தம் வெளியேறும். மலத்துளையின் அருகில் சிறிது சதை வளர்ந்து தொங்கும். இப்பகுதியில் அடிக்கடி அரிப்பு ஏற்படுவதுடன், மலம் வெளியேறும்போது இரத்தமும் சிந்தும். உள் மூலம் முதிர்வதால் பவுத்திரம் தோண்றுகிறது. பவுத்திர நோய் தோன்றுகையில் மலத்துளையைச் சுற்றிக் கண்ணுக்குத் தெரியாத சிறி சிறு துளைகள் தோன்றி அதனின்று தூய்மையற்ற சீழ் வெளிவரும். தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் இன ஒதுக்கல் ஆங்கிலத்தில் (Apartheid) என அழைக்கப்படுகிறது. "அப்பர்தீட் " என்றால் "பிரித்து வைக்கப்பட்ட நிலை" என்று அர்த்தம். தென்னாபிரிக்க அரசால் 1948ல் இருந்து 1998 வரை இருந்த சட்டம் மூலமாக இன வேற்றுமை முறை செயல்பாட்டில் இருந்த காலத்திணை "இன ஒதுக்கல் காலம்" எனப்படுகிறது அல்லது ஆங்கிலத்தில் (Apartheid - Era ) என்றழைக்கப்படுகிறது. இனவொதுக்கல் என்பது, 1948 ஆம் ஆண்டுக்கும், 1990 ஆம் ஆண்டுக்கும் இடையில் தென்னாபிரிக்காவில் ஆட்சியில் இருந்த தேசியக் கட்சி அரசால் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட சட்ட அடிப்படையிலான இனவாரித் தனிமைப்படுத்தல் முறையைக் குறிக்கும். இனவொதுக்கலின் அடிப்படை குடியேற்றவாதத்தின் வரலாற்றிலிருந்து உருவானது. இதிலிருந்து, இன அடிப்படையில் மனிதர்களைப் பிரிக்கும் நடைமுறைகளும் கொள்கையும் உருவானதுடன் ஐரோப்பியக் குடியேற்றக்காரரதும் அவர்களது வழித்தோன்றல்களின் ஆதிக்கமும் நிலைபெறலாயிற்று. 1948 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் தேசியக்கட்சி வெற்றி பெற்றதும், அதன் இனவொதுக்கல் திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கியது. ஏற்கனவே இருந்த கொள்கைகளும், நடைமுறைகளும்; அமைப்பு முறையான இனவாதத்தையும், வெள்ளையின ஆதிக்கத்தையும் உட்படுத்தி, முறைப்படுத்தப்பட்டு விரிவாக்கப்பட்டது. பின்னர் பல ஆண்டுக்காலக் கறுப்பின மக்களின் போராட்டத்தை அடுத்துப் பணிய வேண்டிய நிலைக்கு வந்த வெள்ளையின அரசுக்கும், கறுப்பினத்தவர் கட்சிகளுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகளை அடுத்து 1990களின் முதற்பாதியில் நீக்கப்பட்டது. தொடர்ந்து 1994 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் முதன் முதலாக அனைத்து மக்கள் வாக்குரிமை அடிப்படையில் தேர்தல் இடம்பெற்றது. இனவொதுக்கல் சட்டம், குடிமக்களையும், நாட்டுக்கு வருகை தந்திருப்போரையும், கறுப்பர், வெள்ளையர், நிறத்தவர், இந்தியர், ஆசியர் எனப் பல்வேறு இனக்குழுக்களாகப் பாகுபடுத்தியது. தென்னாபிரிக்கக் கறுப்பினத்தவரின் குடியுரிமை நீக்கப்பட்டது. சட்டப்படி அவர்கள் பழங்குடி அடிப்படையில் அமைக்கப்பட்டதும், பெயரளவிலான தன்னாட்சி உரிமை வழங்கப்பட்டதுமான "பாண்டுஸ்தான்" எனப்பட்ட பத்துப் பழங்குடித் தாயகங்களில் ஒன்றின் குடிகள் ஆக்கப்பட்டனர். இவைகளுள் நான்கு பெயரளவில் தனி நாடுகள் ஆயின. இப் பழங்குடித் தாயகங்கள் பரப்பளவில் மிகச் சிறியனவாகவும், பொருளியல் அடிப்படையில் நாட்டின் வளமற்ற நிலப்பகுதிகளை உள்ளடக்கியனவுமாக இருந்தன. பெரும்பாலான கறுப்பினத் தென்னாபிரிக்கர் தமக்கென ஒதுக்கப்பட்ட தாயகங்களில் என்றுமே வசித்ததில்லை. தாயக முறை, வெள்ளை இனத்தவருக்கென எடுத்துக் கொள்ளப்பட்ட பகுதிகளில் வாழ்ந்த கறுப்பினத்தவரின் வாக்குரிமையை இல்லாமலாக்கியது. அரசு, கல்வி, மருத்துவ வசதி, பொதுச் சேவைகள், என்பவற்றில் பாகுபாட்டுக் கொள்கையைக் கடைப்பிடித்ததுடன், கறுப்பினத்தவருக்கு வெள்ளையரிலும் தரக் குறைவான வசதிகளையே வழங்கியது. கறுப்பினப் பாடசாலைகளின் கல்வி முறை அவர்களைக் கூலியாட்களாக உருவாக்குவதாகவே அமைந்தது. இந்த இனவொதுக்கல் முறை உள்நாட்டில் குறிப்பிடத்தக்க எதிர்ப்புக்களை உருவாக்கியது. தொடராக இடம்பெற்ற மக்கள் எழுச்சிகளையும், எதிர்ப்புக்களையும், காவல்துறையின் கொடூரமான அடக்குமுறை மூலம் அரசு ஒடுக்கியது. இதனால், மக்கள் மத்தியில் ஆயுதப் போராட்டத்துக்கு ஆதரவு பெருகியது. மக்கள் நேரடியாகவும், அரசியல் வழிமுறைகள் மூலமும் காட்டிய எதிர்ப்புக்களை, நீதி விசாரணை இன்றித் தடுத்து வைத்தல், சித்திரவதை, செய்தித் தணிக்கைகள், கட்சிகளைத் தடை செய்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் அரசு அடக்க முயன்றது. விடுதலை இயக்கங்களான ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரஸ், கறுப்பின உணர்வு இயக்கம், அசானிய மக்கள் அமைப்பு, பரந்த ஆபிரிக்க காங்கிரஸ், ஐக்கிய சனநாயக முன்னணி, போன்ற இயக்கங்கள் தடைசெய்யப்பட்டன. கடுமையான அடக்கு முறைகளுக்கு நடுவிலும், இவ்வியக்கங்கள் தமது இனவொதுக்கலுக்கு எதிரான போராட்டங்களுக்கு பெரும் மக்கள் ஆதரவினைப் பெற்று வந்தன. இவர்கள் பன்னாட்டு அளவிலும், பல்வேறு இனவொதுக்கலை எதிர்க்கும் அமைப்புக்களோடு தொடர்புகளைப் பேணி வந்தனர். வெள்ளையினத் தென்னாப்பிரிக்கா மேலும் மேலும் இராணுவமயமானது. ஐக்கிய அமெரிக்காவின் மறைமுகமான ஆதரவுடன், அங்கோலாவின் விடுதலைக்கான மக்கள் இயக்கத்தின் ஆயுதப் பிரிவான, அங்கோலாவின் விடுதலைக்கான மக்கள் ஆயுதப் படை போன்றவற்றுடன் "எல்லைப் போர்கள்" எனப்பட்ட போர்களிலும் ஈடுபட்டது. இனவொதுக்கல் எதிர்ப்பு அமைப்புக்கள், ஆப்பிரிக்காவின் பிற விடுதலை இயக்கங்களுடன் வலுவான தொடர்புகளைப் பேணி வந்ததுடன், தமது போராட்டம், முதலாளித்துவத்துக்கு எதிரான பரந்த சோசலிசப் போராட்டத்தின் ஒரு பகுதியாகவும் இருக்கும்படி பார்த்துக்கொண்டன. 1948-1990 காலப்பகுதியில் ஆப்பிரிக்கானரின் ஆதிக்கத்தில் இருந்த அரசாங்கமே இனவொதுக்கலுக்கான காரணம் எனப் பரவலாகக் கருதப்பட்டாலும், இனவொதுக்கல், பிரித்தானியக் குடியேற்றவாத அரசின் நடவடிக்கைகளின் விளைவாகும். பிரித்தானியரால் ஆளப்பட்டதும், வெள்ளையர்களும், பிற நிறத்தவரும் வாழ்ந்த பகுதிகளுக்கு, பழங்குடியினர் பகுதிகளிலிருந்து கறுப்பினத்தவர் வருவதைத் தடுப்பதற்காக கேப் குடியேற்றப் பகுதியிலும், நேட்டாலிலும் 19 ஆம் நூற்றாண்டில் உருவான அனுமதி அட்டை முறையே இதற்கான அடிப்படையாகும். 1892 ஆம் ஆண்டில் பிரித்தானியர், வாக்குரிமை மற்றும் தேர்தல் சட்டத்தை நிறைவேற்றினர். இது, நிதி, கல்வி ஆகியவற்றின் அடைப்படையில் கறுப்பினத்தவரின் வாக்குகளை மட்டுப்படுத்தியது. தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட, நேட்டால் சட்டசபைச் சட்டம் 1894, இந்தியர்களின் வாக்குரிமையைப் பறித்தது. 1905 ஆம் ஆண்டில் லக்டென் ஆணைக்குழு, பொது அனுமதி அட்டை ஒழுங்குவிதிகள் சட்டத்தை நிறைவேற்றியது. இது, கறுப்பினத்தவரின் வாக்குரிமையை முழுதாகவே பறித்துக்கொண்டு, அவர்களைக் குறித்த பகுதிகளுக்குள் அடக்கியதுடன், கண்டனத்துக்கு உள்ளான அனுமதிச் சீட்டு முறையையும் தொடங்கி வைத்தது. பின்னர் கொண்டுவரப்பட்ட ஆசியர் பதிவுச் சட்டமூலம் (1906) எல்லா இந்தியர்களும் தம்மைப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றும், அனுமதிச் சீட்டுக்களை எப்பொழுதும் வைத்திருக்க வேண்டும் என்றும் விதித்தது. தென்னாபிரிக்கச் சட்டமூலம் (1910) வெள்ளையருக்கு வாக்குரிமையை அளித்து எல்லா இனத்தவரையும் ஆளும் அரசியல் அதிகாரத்தை அவர்களுக்கு வழங்கியது. உள்ளூர் நிலச் சட்டம் (1913), கேப் பகுதியில் உள்ளவர்கள் தவிர்ந்த பிற கறுப்பு இனத்தவர் எவரும் தமக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு வெளியே நிலங்கள் வாங்குவதைத் தடை செய்தது. நகர்வாழ் தாயக மக்கள் சட்டம் (1918) குறிப்பிட்ட இடங்களுக்குக் கறுப்பு இனத்தவரைக் கட்டாயப்படுத்தி அனுப்புவதற்காக இயற்றப்பட்டது. நகரப் பகுதிகள் சட்டமூலம் (1923) தென்னாபிரிக்காவில் வாழிடப் பகுதிகளைப் பிரித்து அமைப்பதையும், வெள்ளையர் தொழில் முயற்சிகளுக்கு மலிவான தொழிலாளர்கள் கிடைப்பதற்கு வழி செய்வதையும் நோக்கமாகக் கொண்டது. நிறத் தடைச் சட்டம் (1926) திறமைகள் தேவைப்படும் தொழில்களில் கறூப்பு இனத்தவர் ஈடுபடுவதைத் தடை செய்தது. பிரித்தானியரால் இயற்றப்பட்ட கடைசி இனவொதுக்கல் சட்டம் ஆசிய நிலவுடைமைச் சட்டம் (1946) ஆகும். இது ஆசியர்களுக்கு நிலம் விற்பதைத் தடை செய்தது. கேப் குடியேற்றத்திலும், நேட்டாலிலும் கறுப்பினத்தவர், நகர வீதிகளில் இருட்டியபின் நடமாட அனுமதிக்கப்படவில்லை. அத்துடன் எப்போதும் அவர்கள் அனுமதிச் சீட்டுக்களையும் வைத்திருக்க வேண்டும். இளம் வழக்கறிஞராக இருந்த மோகன்தாஸ் காந்தி, நடுத்தர வகுப்பு இந்தியர்களைப் பாதித்த தடைகளுக்கு எதிராக வன்முறை சாராத எதிர்ப்புக்களை ஒழுங்கு செய்ததன் மூலம் தனது அரசியல் நடவடிக்கைகளை இக் காலத்தில்தான் தொடங்கினார். இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் ஜான் ஸ்மத்ஸ் (Jan Smuts) என்பவரின் ஐக்கியக் கட்சி அரசு, பிரிவினைச் சட்டங்களைக் கடைப்பிடிப்பதில் அதிக இறுக்கம் காட்டாமல் இருந்தது. இனங்களுக்கு இடையிலான தொடர்புகள் காலப்போக்கில் நாட்டில் இனக்கலப்பை உருவாக்கும் என்ற அடிப்படையில், ஐக்கியக் கட்சியின் கொள்கைகளின் விளைவுகளை ஆராய்வதற்காக ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. இனத் தொடர்புகள் எல்லா இனக் குழுக்களிலும் ஆளுமை இழப்புக்களை உருவாக்கும் என ஆணைக்குழு முடிவு வெளியிட்டது. பின்னர் கடைப்பிடிக்கப்பட்ட இனவொதுக்கல் கொள்கை முன்னைய அரசுகளின் இனங்களை வேறுபடுத்தி வைக்கும் கொள்கைகளின் அம்சங்கள் பலவற்றைக் கொண்டிருந்தது. பெண்களுக்கு அனுமதி அட்டை வழங்க எடுத்த முயற்சிகள் தீவிரமான எதிர்ப்புக்களைச் சந்தித்ததால், 1956 ஆம் ஆண்டுவரை அனுமதி அட்டை முறையில் இருந்து பெண்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. 1948 ஆம் ஆண்டின் தேர்தல் காலத்தில், புரட்டஸ்தாந்த மதகுருவான டானியேல் பிராங்கோயிஸ் மாலன் என்பவர் தலைமையிலான ஆப்பிரிக்கானர் தேசியவாதக் கட்சி, இனவொதுக்கல் கொள்கைகயை முன்வைத்துப் பரப்புரை செய்தது. தேர்தலில் ஸ்மத்சின் ஐக்கியக் கட்சியைத் தோற்கடித்த இக் கட்சி இன்னொரு ஆபிரிக்கானர் தேசியவாதக் கட்சியான ஆப்பிரிக்கானர் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி அரசொன்றை அமைத்தது. இக்கட்சிகள் பின்னர் தேசியக் கட்சி என்னும் பெயரில் ஒன்றிணைந்தன. மாலன் முதலாவது இனவொதுக்கல் பிரதமர் ஆனார். இக் கூட்டணி உடனடியாகவே இனவொதுக்கல் கொள்கைகளை நடைமுறைப்படுத்தத் தொடங்கியது. கலப்புத் திருமணங்களைத் தடைசெய்யும் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதுடன், மக்கள் இனங்களாகப் பாகுபடுத்தப்பட்டனர். இலக்குழுக்களைப் புவியியல் அடிப்படையில் பிரிப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட, 1950 ஆம் ஆண்டின் குழுப் பகுதிகள் சட்டம், இனவொதுக்கல் கொள்கையின் அடிப்படையாக விளங்கியது. 1953 ஆம் ஆண்டு வெவ்வேறான பொதுவசதிகள் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச் சட்டத்தில் கீழ் நகரங்களின் நிலங்கள் குறிப்பிட்ட இனங்களுக்காக மட்டும் ஒதுக்க முடியும். இதன்மூலம், தனித்தனியான கடற்கரைகள், பேருந்துகள், மருத்துவ நிலையங்கள், பாடசாலைகள், பல்கலைக் கழகங்கள் போன்றவை உருவாக்கப்பட்டன. "வெள்ளையருக்கு மட்டும்" எனக் குறிப்பிடும் அறிவிப்புப் பலகைகள் பொது இடங்களில் தாராளமாகக் காணப்பட்டன. விளையாட்டுக்களிலும், இனங்களுக்கு இடையிலான தொடர்புகள் விரும்பப்படவில்லை. எனினும் இதற்காகத் தனியான சட்டங்கள் எதுவும் இருக்கவில்லை. ஆனால், குழுப் பகுதிகள் சட்டம் போன்றவற்றைப் பயன்படுத்தி விளையாட்டுகளிலும் இனவொதுக்கலை அரசு நடைமுறைப்படுத்தி வந்தது. அரசு நடைமுறையில் இருந்த அனுமதி அட்டைச் சட்டங்களை மேலும் தீவிரமாக்கியது. கறுப்பினத்தவர் வெள்ளையர் பகுதிகளுக்குள் இடம்பெயர்வதைத் தடுப்பதற்காக அவர் கள் எப்போது, அடையாள ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என விதிக்கப்பட்டனர். நகரங்களில் பணிபுரியும் கறுப்பினத்தவர் அப்பகுதிகளில் வாழ்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். எனினும், அவர்களுடைய குடும்பத்தினருக்கு அனுமதி இல்லையாதலால், இத்தகைய பணியாட்கள் தமது மனைவி, மக்களைப் பிரிந்தே வாழ வேண்டியதாயிற்று. மாலனைத் தொடர்ந்து பிரதமரான ஜே. ஜி. ஸ்டிரிஜ்டம் (J.G. Strijdom), கேப் மாகாணத்தில் நிற இனத்தவரின் வாக்குரிமையைப் பறிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். முன்னைய அரசு 1951 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில், வாக்காளர் தனிப் பிரதிநிதித்துவச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது. எனினும், ஐக்கியக் கட்சியின் ஆதரவுடன் ஜி. ஹரிஸ், டபிள்யூ. டி. பிராங்ளின், டபிள்யூ. டி. கொலின்ஸ், எட்கார் டீனே ஆகிய நான்கு வாக்காளர்கள் அச் சட்டத்தின் செல்லுபடியாகும் தன்மை குறித்து வழக்கொன்றைத் தாக்கல் செய்தனர். கேப் உச்ச நீதிமன்றம் சட்டம் செல்லுபடியாகும் எனத் தீர்ப்புக் கூறியது. ஆனால், வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு வந்தபோது, அரசமைப்புச் சட்டத்தில் உள்ளவற்றை மாற்றுவதற்கு நாடாளுமன்றத்தின் இரண்டு சபைகளினதும் கூட்டு அமர்வில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்பதால் சட்டம் செல்லாது என அது தீர்ப்பு அளித்தது. இதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தின் தீர்ப்புக்களைப் புறக்கணிக்கும் உரிமையை நாடாளுமன்றத்துக்கு வழங்கும் சட்டமொன்றை அரசு நிறைவேற்றியது. கேப் உச்ச நீதிமன்றமும், மேன்முறையீட்டு நீதிமன்றமும் இதையும் செல்லாது எனத் தீர்ப்பு அளித்தன. இதனைத் தொடர்ந்து அரசு புதிய வழிமுறையொன்றைக் கையாண்டது. 1955 ஆம் ஆண்டில், அரசு, மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளின் தொகையை ஐந்திலிருந்து பதினொன்றாக உயர்த்தியது. புதிய இடங்கள் தேசியக் கட்சி சார்பானவர்களுக்கு வழங்கப்பட்டது. அதே ஆண்டில் நிறைவேற்றப்பட்ட "மேல்சபைச் சட்டத்தின்" மூலம் அச் சபையின் உறுப்பினர் எண்ணிக்கை 49 இலிருந்து 89 ஆகக் கூட்டப்பட்டது. இச் சபையில் தேசியக் கட்சிக்கு 77 இடங்கள் இருக்குமாறு செய்யப்பட்டதுடன், 1956 ஆம் ஆண்டில், நாடாளுமன்றத்தின் இரு சபைகளினதும் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டி மீண்டும் தனிப் பிரதிநிதித்துவ வாக்களர் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் கேப் மாகாணத்தில், நிற இனத்தவர்களின் பெயர்களைப் பொது வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு அவர்களுக்கெனத் தனியான வாக்களர் பட்டியல் ஒன்று உருவாக்கப்பட்டது. 1950கள் முதல் இனங்களை தனித்தனியாக வைத்திருப்பதற்கும், எதிர்ப்புக்களை ஒடுக்குவதற்குமான பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. தேசியக் கட்சியினர், தென்னாப்பிரிக்கா ஒரு நாட்டினத்தைக் கொண்டது அல்ல என்றும், இது வெள்ளையர், கறுப்பர், நிறத்தவர், இந்தியர் என நான்கு தனித்துவமான நாட்டினங்களைக் கொண்டது என்றும் வாதித்தனர். இவை மேலும் 13 நாட்டினங்கள் அல்லது இனக் கூட்டமைப்பு ஆகப் பிரிக்கப்பட்டன. வெள்ளையர்கள், ஆங்கிலேயர், ஆப்பிரிக்கானர் என்போரை உள்ளடக்கியது; கறுப்பினத்தவர், 10 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டனர். இனவொதுக்கல் பெரும்பாலும் "பெரும் இனவொதுக்கல்", "சிறு இனவொதுக்கல்" இரண்டு பிரிவுகளாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்படுவது வழக்கம். பெரும் இனவொதுக்கல் என்பது தென்னாப்பிரிக்காவைப் பல பிரிவுகளாகப் பிரிக்க எடுத்த முயற்சிகளையும், சிறு இனவொதுக்கல் என்பது இனங்களைத் தனித்தனியாகப் பிரித்து வைக்க எடுத்த முயற்சிகளையும் குறித்தது. தேசியக் கட்சி பெரும் இனவொதுக்கல் கொள்கையை 1990கள் வரை இறுக்கமாகப் பின்பற்றி வந்தது. அதே வேளை 1980களில் சிறு இனவொதுக்கல் கொள்கையைக் கைவிட்டுவிட்டது. 1948 ஆம் ஆண்டில் தேசியக் கட்சி பதவிக்கு வந்தபோது, அதன் முதன்மையான முயற்சி, வெள்ளையர் மேலாண்மையைக் கொண்ட கிறித்தவ நாடு ஒன்றை உருவாக்குவதும், இனங்களைப் பிரித்து வைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதும் ஆகும். இனங்களைத் தனிப்படுத்தலுக்கான முக்கியமான அடிப்படைகள் பின்வருமாறு: வெடிபொருள் வெடிபொருள் "(Explosive material)" என்பது எந்த ஒரு பொருள் அல்லது பொருட்களின் கலவை பேரளவு இயக்க ஆற்றலை தன்னுள் வைத்திருந்து, அதை வெப்படுத்தினாலோ அல்லது அதிரும்படி செய்தாலோ அளவுக்கு அதிகமான வேகத்தில் விரிவடைந்து வெடித்தலை நிகழ்த்தக் கூடியதோ அவ்வினைப்பொருள் வெடிப்பொருள் எனப்படுகிறது. ஆற்றல் உடனடியாக விடுவிக்கப்படுவதால் பேரளவு ஒளி, வெப்பம், ஒலி, அழுத்தம் ஆகியனவும் வெளிப்படுகின்றன. வெடிப்பு ஆற்றல் என்பது அளந்தறியக்கூடிய வெடிபொருளின் அளவால் கூறப்படுகிறது. இவ்வெடிபொருள் ஒரு உட்கூறோ அல்லது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உட்கூறுகளின் கலவையாகவோ இருக்கலாம். வெடிபொருளின் பொதிவாற்றல் கீழ்வரும் வகைகளில் ஏதேனும் ஒன்றாக அமையலாம்: வெடிபொருள்களை விரிவடையும் வேகத்தை வைத்து உயர்வேக வெடிபொருள்கள், தாழ்வேக வெடிபொருள்கள் எனப் பிரிக்கலாம். வெடிக்கும்போது வேதிவினை முகப்பின் வேகம் ஒலி வேகத்தை விட கூடுதலாக அமையும் பொருள்கள் உயர்வேக வெடிபொருள்களாகும், கொளுத்தினால் எரிய மட்டுமே செய்பவை தாழ்வேக வெடிபொருள்களாகும். இவற்ரை அவற்றின் வெடிதிறத்தை வைத்தும் பிரிக்கலாம். சிறிது வெப்பத்தாலோ அல்லது சிறிது அழுத்தத்தாலோ வெடிப்பவை முதன்மை வெடிபொருள்களாகும். ஓரளவு அவ்வளவு வேகமாக வெடிக்காதவை துணை வெடிபொருள்கள்/மூன்றாம்நிலை வெடிபொருள்கள் எனப்படுகின்றன. பலவகை வேதிமங்கள் வெடிக்கவல்லனவாக உள்ளன; இவற்றில் சில பொருட்கள் மட்டுமே வெடிபொருளாகச் செய்யப்படுகின்றன. பிற குறுகிய காலத்தில் சிதைவனவாகவோ அல்லது தரமிழப்பனவாகவோ அமைய, மற்றவை அச்சமூட்டும் வெடிதிறத்தோடும் நச்சுத்தன்மையுடன் நிலைப்பற்றவையாகவும் உள்ளன. மாறாக, சில பொருட்கள் கொளுத்தினால் வெடிக்காமல் எரியக் கூடியவையாக மட்டுமே அமைகின்றன. எனினும் இந்த வேறுபாடு கருக்காக அமைவதில்லை. இயல்பான நிலைமைகளில், சில தூசுகள், தூள்கள், வளிமங்கள், ஆவியாகும் கரிம வேதிமங்கள் ஆகியவை எரிய மட்டுமே செய்கின்றன. இவையே சில வேளைகளிலும் வடிவங்களிலும் வெடிக்கின்றன. எடுத்துகாட்டாக, தூசு விரவிய காற்றுமுகில்களும் உடனே விடுவிக்கும்போதோ அல்லது செறிக்கும்போதோ வளிமங்களும் வெடிக்கின்றன. கிரேக்கத் தீ போன்ற மிகப்பழைய தீ ஆயுதங்கள் பண்டைய காலத்திலேயே இருந்திருந்தாலும், போரிலும் சுருங்கையிலும் மிகப் பரவலாகப் பயனபடுத்திய வெடிபொருள் கருந்தூளே ஆகும். இது சீனாவில் ஒன்பதாம் நூற்றாண்டிலி சுபோ என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது நீருடன் வினைபுரிந்து கரும்புகையை ஏராளமாக வெளியிடக்கூடியது. இதைவிட வலிமைவாய்ந்த பயன்மிகுந்த வெடிபொருள் 1847 இல் உருவக்கப்பட்ட நiத்திரோகிளிசரின் ஆகும். நீர்ம வடிவத்தில்உள்ள இது மிகவும் நிலைப்பற்றதாகும். எனவேஇதை நைத்திரோ நாரிழையமான முந்நைத்திரோதொலுயீனும் கெலிகினைட்டும் 1867 இல் பதிலீடு செய்தது. இவை இரண்டும் நிலைப்பான, நுட்பமான நைத்திரொகிளிசரினின் மாற்று வடிவங்களேயன்றி மாற்று வேதிமங்கள் அல்ல. மேலும் இவை புகையற்ற வெடிபொருள்களாகும். இவை இரண்டுமே ஆல்பிரெடு நோபல் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டவையாகும்.முதல் உலகப் போரில் TNT (முந்நைத்திரோகிளிசரின்) பீரங்கி குண்டுகளில் பயன்பட்டன இரண்டாம் உலகப் போர் பல புதிய வலிமையான வெடிபொருள்களைப் பயன்படுத்தியது. மறுபடியும் இவையும் கூட மிகவும் வலிமைவாய்ந்த வெடிபொருள்களாகிய C-4, PETN ஆகியவற்றால் பதிலிடப்பட்டன. என்றாலும், C-4, PETN ஆகியவை பொன்மத்தோடு வினைபுரிந்து தீப்பற்ரிக்கொள்கின்றன. ஆனால், இவை நீர் எதிர்ப்பும் தகடாக்க வல்லவையும் ஆகும். வெடிபொருளின் மிகப் பரவலான பயன்பாடு சுருங்கையில் கணிம வெட்டும் பணியில் அமைகிறது. மேற்பரப்புச் சுருங்கையானாலும் அடியாழச் சுருங்கையானாலும், குறுகிய இடத்தின் பகுதியில் தாழ் அல்லது உயர்வெடிபொருளின் வெடிப்போ அல்லது எரிதலோ நொறுங்கியல்பு பொருளைக் கணிசமான அளவுக்கு பிரித்தெடுக்கும். சுருங்கைத் தொழிலகம் நட்டிரேட் சார்T வெடிபொருள்களைப் பயன்படுத்துகிறது. அவற்றுள் எரியெண்ணெய், அம்மோனியம் நைட்டிரேட்டு கரைசல்கள், அம்மோனியம் உர உருண்டைகளின் கலவை எரியெண்ணெய்(ANFO), அம்மோனியம் நைட்டிரேட்டு, எரிதகவு எரிமங்களின் பசைத் தொங்கல்கள் அல்லது குழம்புகள் ஆகியவை அடங்கும். பொருள் அறிவியலிலும் பொறியியலிலும் வெடிபொருள்கள் மேலுறையிடப் பயன்படுகின்றன. ஒரு தடித்தபொருளின்மேல் ஒரு மெல்லிய தகடுவைஇக்கப்படுகிறது. இரண்டு அடுக்குகளுமே பொன்மத்தாலானவையே. மெல்லிய அடுக்கின் மீது வெடிபொருள் வைக்கப்படுகிறது. வெடிபொருளின் ஒருமுனை களுத்திவிடப்படுகிறது. இரண்டு அடுக்குகளுமொன்றாக உயர்வெகத்திலும் பெருவிசையுடனும் இறுக்கப்படுகின்றன. வெடிப்பு பற்ரவைத்த முனையில் இருந்து வெடிபொருளின் முழுவதும் தொடரும். இது இரு அடுக்குகளிடையே பொன்மவியல் பிணைப்பை ஏற்படுத்துகிறது. எந்தவொரு புள்ளியிலும் அதிர்ச்சி அலை செலவிடும் நேரம் மிகச் சிறியதாகையால், ஆழத்தின் சிறுபகுதிவரை இரு பொன்மங்களும் கலந்திடுவதால் அவற்றின் மேற்பரப்பு வேதி இயல்புகளும் கலக்கின்றன. இவற்றின் ஒவ்வொரு மேற்பரப்பு அடுக்குகளிலும் ஒருபகுதி பொருள் வெளியேற்றப்படுவதால் வினை இறுதியில் உள்ள பற்றுவைத்த இரட்டை அடுக்கின் பொருண்மை, இரண்டின் தொடக்கநிலை அடுக்குகளின் பொருண்மையை விட குறைவாக இருக்கும். உயர்விரைவு எறிபடைகளை உருவாக்கும் அதிர்ச்சி அலை, நிலைமின்னியல் பயன்பாடுகளும் உள்ளன. போர் காலத்தில் வெடிபொருள்கள் அதிக அளவுகளில் பயன்படுத்தப்படுகின்றன. தாதுகளை உடைக்க, நிலக்கரியை உடைக்க, மலைகளைக் குடைய, அணைகள் கட்ட, எண்ணெய் கிணறுகள் தோண்ட சில விவசாயப் பணிகள் என வெடிபொருள்கள் ஆக்கப்பணியிலும் பயன்படுத்தப்படுகின்றன. முதன்மைக் கட்டுரை:வெடிபொருள் ஆயுதங்கள் காண்க, வெடிபொருள் பொறியியல் முதன்மைக் கட்டுரை:வெடிபொருள் பாதுகாப்பு வெடித்தல் என்பது தன்னியல்பு வேதிவினை ஆகும். எனவே, ஒருமுறை தொடங்கியதும், வினைபடுபொருள்களில் இருந்து விளைபொருள்களாக மாறுகையில், பேரளவு வெப்ப வெளியீடு (பேரளவு வெப்ப விடுவிப்பு), பேரளவு நேரியல் மாற்றம் இயல்வெப்ப மாற்றம் (பேரளவு வளிமங்கள் விடுவிப்பு)ஆகிய இரண்டாலும் இயக்கப்படுகிறது. எனவே, இது வெப்ப இயங்கியலாக விரும்பத்தகும் நிகழ்வாகவும்மிக வேகமாகப் பரவும் நிகழ்வாகவும் அமைகிறது. இவ்வாறு, வெடிபொருள்கள் வெதிப் பிணைப்புகளில் பேரளவு ஆற்றலைத் தேக்கிவைத்துள்ள பொருள்களாகும். ஆற்றல் மிகும் நிலைப்பு வாய்ந்த வளிம விளைபொருள்களும் அவற்றின் உருவாக்கமும் 1 MJ/mole அளவுக்கு வலிமையான இரட்டை, மும்மைப் பிணைப்புகள் கொண்ட கரிம ஓர் உயிரகி, கரிம ஈருயிரகி, இருகாலகம் ஆகியவற்றின் உருவாக்கத்தால் ஏற்படுகின்றன. எனவே, பெரும்பாலான வணிகை பயன் வெடிபொருள்கள் -NO, -ONO, -NHNO ஆகிய சேர்மக் குழுக்களைப் பெற்றுள்ளன. இவை வெடிக்கும்போது, மேலே கூறிய வளிமங்களை விடுவிக்கின்றன(எ. கா: நைட்ரோகிளிசரின், முந்நைத்திரோதொலூயின் (TNT), HMX, PETN, நைத்திரோ நாரிழையம்). வெடிபொருட்கள், தாழ் வெடிபொருட்கள், உயர் வெடிபொருட்கள் என அவற்றின் எரிதல் வீத அடிப்படையில் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. தாழ் வெடிபொருட்கள் விரைவாக எரியக்கூடியவை. உயர் வெடிபொருட்கள் வெடிக்கக் கூடியவை. இந்த வரைவிலக்கணங்கள் தெளிவாக இருப்பினும், விரைவான சிதைவைத் துல்லியமாக அளவிடுவது கடினமானது என்பதால் நடைமுறையில் வெடிபொருட்களை வகைபடுத்துவது அவ்வளவு எளிதல்ல. சிறிய அளவு வெப்பத்திற்கும் அதிர்ச்சிக்கும் கூட செயல்படக் கூடிய வெடிபொருள்கள் முதல்நிலை வெடிபொருள்கள் எனப்படும். இவை சிறிதளவு வெப்பத்தால் தீப்பற்ற வைத்தாலும், அதிர்ச்சியூட்டினாலும் உடனே வெடித்துச் சிதறும். உயர்தர வெடிபொருள்களின் செயல்பாட்டைத் தொடங்கவே இவற்றைப் பயன்படுத்தலாம் என்பதால் துவக்க வெடிபொருள்கள் என்றும் இவற்றை அழைக்கலாம். அதிக எச்சரிக்கையுடன் இவை கையாளப்பட வேண்டும். ஈய அசைடு, பாதரச பல்மினேட்டு, டெட்ரசீன், டையசோடைநைட்ரோபீனால் உள்ளிட்டவை இதற்கு எடுத்துக் காட்டுகளாகும். இவை எரியும். ஆனால் வெடிப்பதில்லை. இவை வலிமை குறைந்த வெடிபொருட்கள் ஆகும். இதனால் வெளியாகும் வாயுக்களின் கன அளவை கணக்கிடவும் கட்டுப்படுத்தவும் முடியும். பட்டாசுகள், இராக்கெட்டுகளில் உந்துப் பொருளாக இவற்றை பயன்படுத்துகிறார்கள். துப்பாக்கி ரவை, புகைபொடி உள்ளிட்டவை இதற்கு எடுத்துக் காட்டுகளாகும். முதல்நிலை வெடிபொருட்களைப் பயன்படுத்தி இவற்றை வெடிக்கச் செய்ய வேண்டும். திவைப்பதால் இவை வெடிப்பதில்லை. வெடிப்பதால் அதிக சிதறலும், அதிக வெப்ப வெளியீடும் இருக்கும். ஒரு பொருளாகவோ அல்லது பொருட்களின் கலவையாகவோ இவை இருக்கும். பிக்ரிக் அமிலம், அமோனியம் நைட்ரேட்டு போன்றவை இதற்கு சில எடுத்துக்காட்டுகளாகும். மரபான வெடிபொருள்களின் இயங்குமுறை, கரிமத்தையும் நீரகத்தையும் அதிர்ச்சு மூட்டும் உயிரகமேற்றம் வழியாக சார்ந்துள்ளது கரி ஈருயிரகியாகவும் கரி ஓருயிரகியாகவும் நீராவி வடிவிலான நீராகவும் மாற்ருவதே ஆகும். கரிம்ம், நீரகம் கலந்த எரிபொருளை எரிக்க தேவையான உயிரகத்தை நைட்டிரேட்டுகள் தருகின்றனஉயர்வெடிபொருள்கள் ஒரே கரிம மூலக்கூறில் கரிமம், நீரகம், உயிரகம் பெற்றுள்ளன. குறைந்த வெடிதிறப் பொருள்களான ANFO போன்றவை கரிம,நீரக எரிம எண்ணெயும் அம்மோனியம் நைட்டிரேட்டும் கலந்த சேர்மானங்களைக் கொண்டுள்ளன. அலுமினியத்தூள் போன்ற வெடிதிறமூட்டிகளை வெடிபொருளுக்கு வெடிப்பு ஆற்றலைக் கூட்டுவதற்காகச் சேர்க்கலாம். வெடித்ததுமே காலகப் பகுதி, காலக வளிமமாகவும் நச்சுள்ள காலக உயிரகியாகவும் மாறுகிறது. வெடிபொருளொன்று சிதைவடைவதற்கு ஆண்டுக் கணக்கிலோ, நாள் கணக்கிலோ, மணிக் கணக்கிலோ அல்லது ஒரு செக்கனில் ஒரு பகுதி நேரமோ எடுக்கக்கூடும். வேகம் குறைந்த சிதைவு, தேக்குதலின் போதே நடைபெறுவதுடன், இது வெடிபொருட்களின் நிலைப்பு தொடர்பிலேயே முக்கியமானது. வெடிபொருட்கள் என்றவகையில் அவற்றின் சிதைவு தவிர, சடுதியாக எரிதலும், வெடித்தலும் ஆகிய இரு வடிவங்கள் முதன்மை வாய்ந்தவையாகும். வெப்பப் பரிமாற்ற எரிதலில், வெடிபொருளின் சிதைவு ஒலிவேகத்தைவிட பொருளூடாக மெதுவாக நகரும் தணலின் முகப்பில் பரவுகிறது (வழக்கமாக 1000 மீ/நொ அள்வினும் குறைவானது) மாறாக, வெடித்தல் ஒலியின் வேகத்தைவிட பெருவேகத்தில் நகர்கிறது. வெப்பப் பரிமாற்ற எரிதல் தாழ்வெடிபொருள்களின் இயல்பாகும். வெடித்தல் என்பது பொருளூடாக ஒலிவேகத்தை விடக் கூடுதலான வேகத்தில் அதிர்ச்சி அலைகளால் சிதைவு பரவும் நிகழ்வாகும். அதிர்ச்சி முகப்பு உயர்வெடிபொருளூடாகப் பல்லாயிரம் மீ/நொ வேகத்தில் அதாவது மீயொலி வேகத்தில், பரவக் கூடியதாகும்.வெடிபொருட்கள் பொதுவாக பெட்ரோலியப் பொருட்களிலும் குறைவான அழுத்த ஆற்றல் கொண்டவை. ஆனால், அவற்றின் உயர்ந்த ஆற்றல் வெளிவிடும் வீதம் காரணமாக வெடிபொருட்கள் உயர்ந்த வெடிப்பு அழுத்தத்தை உருவாக்கக் கூடியவையாக உள்ளன. முந்நைத்திரோ தொலுயீன் (TNT) 6,940 மீ/நொ வெடிப்பு வேகம் கொண்டது. பென்டேன்-வளிக் கலவை 1,680 மீ/நொடியும், பெட்ரோல் வளியில் எரியும் போதான தணலின் வேகம் 0.34 மீ./நொடியுமாக உள்ளன. வெடிப்பு விசை வெடிபொருளின் மேற்பரப்புக்குச் செங்குத்துத் திசையில் வெளிப்படுகின்றது. மேற்பரப்பு வெட்டப்பட்டால், அல்லது ஏதாவது குறிப்பிட்ட வடிவில் அமைக்கப்பட்டால், வெடிக்கும் விசையைக் குறித்த ஓரிடத்தை நோக்கிக் குவிக்க முடியும். ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டிற்கான ஒரு வெடிப்பொருளின் பொருத்தத்தைத் தீர்மானிக்க அதன் இயற்பியல் பண்புகள் முதலில் அறியப்பட வேண்டும். வெடிபொருளின் பாதிக்கக்கூடிய பண்புகள் மற்றும் அவற்றால் பாதிக்கப்படும் காரணிகள் ஆகியவற்றை முழுமையாக புரிந்துகொள்ளுக் போதுதான் வெடிப்பொருளின் பயன் சிறக்கும். சில மிக முக்கியமான அம்சங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன: ஒரு வெடிபொருள் வெடிப்பதற்குத் தேவைப்படும் அதிர்ச்சி, உராய்வு அல்லது வெப்பத்தின் அளவு உணர்திறன் எனப்படுகிறது. உணர்திறனைத் தீர்மானிக்க சில சோதனை முறைகள் உள்ளன: தாக்கம்: – குறிப்பிட்ட எடையுள்ள ஒரு பொருள் குறிப்பிட்ட அளவு தொலைவில் இருந்து வெடிபொருளின் மீது எறியப்பட்டால் அது வெடிக்கும் என்பதைக் கூறுவதன் மூலம் உணர்திரனை அளவிடலாம். உராய்வு: எடையிடப்பட்ட ஊசல் ஒன்று வெடிபொருளின் மீது உராய்வதால் என்ன நிகழ்கிறது என்ன நிகழ்கிறது என்பதைப் பொறுத்து உணர்திறன் உணரப்படுகிறது. வெப்பம் – வெடிபொருள் வெடிப்பதற்குத் தேவையான வெப்பநிலையின் அடிப்படையில் உணர்திறன் அளவிடப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒரு வெடி பொருளைத் தெரிவு செய்வதில் உணர்திறன் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. ஒரு வெடிபொருளின் நிலைப்புத்தன்மையை அதிலுள்ள வேதிப்பொருள்களின் இயைபு, வெப்பநிலை, சூரிய ஒளியில் வெளிபடுதல், மின்சாரம் கடத்தப்படுதல் ஆகிய காரணிகள் நிணயிக்கின்றன. வேதியியல் வெடிபொருள்களைத் தவிர, பல புறம்புநிலை வெடிபொருள்களும் வெடிக்கவைப்பதற்கான சில புறம்புநிலைச் செயல்முறைகளும் உள்ளன. எடுத்துகாட்டாக, அணுக்கரு வெடிபொருள்களைக் கூறலாம். மேலும் ஒருங்கொளியாலோ அல்லது மின்வில்லாலோ உடனடியாக மின்ம நிலைக்குப் பொருளைச் சூடுபடுத்துதல் செயல்முறைகளைக் கூறலாம். அபாயமான சில வெடிதகவு சேர்மங்கள்: ஜெயம் கொண்டான் (திரைப்படம்) ஜெயம் கொண்டான் 2008 ம் ஆண்டில் வெளிவந்த தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகும். இத்திரைப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களாக வினய், பாவனா, லேகா, விவேக், நிழல்கள் இரவி, சந்தானம், கிசோர் எனபவர்கள் நடித்துள்ளனர். கண்ணன் இத்திரைப்படத்தினை இயக்கியுள்ளார், இது இவரது முதலாவது படமாகும். தந்தையின் மரணத்திற்கு வரமுடியாததால் மனம் வெறுத்த அவரின் ஒரே பிள்ளையான அர்ஜுன் இலண்டனில் தான் பார்த்த வேலையை உதறிவிட்டு இந்தியாவிலேயே நிரந்தரமாக தங்கி தொழில் செய்ய வருகிறார். தியாகராய நகரில் 3 கிரவுண்ட் நிலம் உள்ள வீட்டை வாங்க முடிவாகி அதற்கு முன்பணம் கொடுப்பதற்காக தன் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்க முடிவு செய்கிறார். ஆனால் அதில் பதினைந்தாயிரந்து சொச்சம் ரூபாய் மட்டுமே இருப்பதை அறிந்து அதிர்ச்சியாகிறார். அப்போது தன் தந்தைக்கு இன்னொரு மனைவி சந்தரிக்கா இருப்பதும் அங்கு அவருக்கு 21 வயது நிரம்பிய பெண் பிருந்தா இருப்பதும் தெரியவருகிறது. பிருந்தா அமெரிக்காவிலுள்ள மா.தொ.ப (MIT) இடம் கிடைத்திருப்பதால் பணத்திற்காக திருமங்கல வீட்டை விற்க முடிவெடுக்கிறார். அதை அர்ஜூன் தடுத்துவிடுகிறார். அர்ஜூன் அனுப்பிய பணத்தில் திருமங்கலத்தில் அவர் தந்தை பெரிய வீடு ஒன்றை வாங்கயிருப்பது தெரிய வருகிறது அந்த நிலத்தின் பத்திரம் தந்தையின் இன்னொரு குடும்பத்திடம் இருப்பது தெரியவருகிறது. அவ்வீட்டை விற்க அர்ஜுன் திருமங்கலம் வருகிறார் அவ்வீட்டிலுள்ள மிளகாய் மண்டி வியாபாரி துரை ராஜிடம் (நிழல்கள் இரவி) வீட்டை காலி பண்ண சொல்கிறார். அவ்வீட்டை விற்க பிருந்தா குணா மூலம் முயல்கிறார் அதை அர்ஜுன் தடுக்கும் போது குணாவின் மனைவி பூங்கொடி எதிர்பாரால் அச்சண்டையால் அங்கு இறக்கிறார். இதனால் குணாவிற்கு பயந்து அர்ஜுன் மற்றும் பிருந்தா சென்னைக்கு வந்துவிடுகிறார்கள். பூங்கொடி இறக்க காரணமான அர்ஜுனை தேடி குணா சென்னைக்கு வருகிறார். அர்ஜுனுக்கு அவர் அப்பாவையும் பிருந்தாவையும் வெறுக்க வேண்டாம் என்று கடிதம் அனுப்பிவிட்டு சத்திரிக்கா இறந்துவிடுகிறார். தன் வாடகை வீட்டை காலி செய்துவிட்டு பிருந்தாவின் வீட்டில் அர்ஜூன் தங்குகிறார். அர்ஜுனை தன் அண்ணன் என ஏற்க பிருந்தா மறுத்து விடுதோடு அவர் செய்யும் எந்த உதவியையும் ஏற்க மறுத்துவிடுகிறார். பிருந்தா அமெரிக்காவிற்கு படிக்க பண உதவியை அண்ணபூரனி மூலம் அர்ஜூன் செய்கிறார். அர்ஜூன் இலண்டன் செல்ல வானூர்தி நிலையம் செல்லும் போது குணாவின் ஆட்கள் பிருந்தாவை பிடித்துகொள்கிறார்கள். அர்ஜூன் குணாவின் ஆட்களிடமிருந்து பிருந்தாவை காப்பாற்றுகிறார். 3 சூன் 2008ம் ஆண்டு வெளியிடப்பட்ட இத்திரைப்படத்தின் பாடல்களுக்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். பாடல்களை வாலி, மற்றும் பா. விஜய் ஆகியோர் எழுதியுள்ளனர். திராட்சைப்பழம் திராட்சைப்பழம் அல்லது கொடிமுந்திரிப் பழம் என்பது இலையுதிர்க்கும் பல்லாண்டுக் கொடி வகையின் பழம் ஆகும். திராட்சையைத் தமிழில் கொடிமுந்திரி என்றும் அழைப்பர். இது விட்டிஸ் பேரினத்தைச் சேர்ந்தது. திராட்சையை பச்சையாகவோ ஜாம், பழரசம் முதலியன செய்தோ உண்ணலாம். இதிலிருந்து, வினிகர், வைன், திராட்சை விதைப் பிழிவு, திராட்சை விதை எண்ணெய் என்பனவும் செய்யப்படுகின்றன.திராட்சையில் பலவகைகள் இருப்பினும், பொதுவாகத் திராட்சையில் பெருமளவு நீரும் மாவுப் பொருளும், உப்புநீர் மற்றும் கொழுப்புச் சத்துகளும் உண்டு. திராட்சை கொடியினத்தைச் சேர்ந்த தாவரம். இது சிறிய உருண்டையான அல்லது முட்டை வடிவ கனிகளைத் தருகிறது. கனிகள் குலை குலையாகக் காய்க்கும். திராட்சை 6-லிருந்து 300 வரையான பழங்களைக் கொண்ட குலைகளாகக் காய்க்கின்றது. இது கறுப்பு, கருநீலம், மஞ்சள், பச்சை, இளஞ்சிவப்பு எனப் பல நிறங்களில் காணப்படுகின்றது. வெள்ளைத் திராட்சை எனப்படும் பச்சை நிறத் திராட்சைகள் கூர்ப்பு அடிப்படையில் சிவப்புத் திராட்சையில் இருந்து உருவானவை. வெள்ளைத் திராட்சையின் கட்டிப்படுத்தும் மரபணுக்கள் இரண்டில் ஏற்பட்ட சடுதியான மாற்றம் காரணமாக சிவப்புத் திராட்சையின் நிறத்துக்குக் காரணமான அந்தோசயனின் என்னும் பொருளின் உற்பத்தி நின்றுபோனது. இதனால் வெள்ளைத் திராட்சைகள் அவற்றின் இயல்பான சிவப்பு நிறத்தை இழந்துவிட்டன. பன்னீர் திராட்சை,அனாப்-சாகி, தாம்சன்(விதையில்லாதது‌‌),அர்காவதி,அர்கா சியாம்,அர்கா காஞ்சனா,அர்கா ஹான்ஸ்,மாணிக்சமான்,சோனாகா,சரத்(விதையில்லாதது‌‌). நல்ல வடிகால் வசதி உள்ள வண்டல் மண்பூமி ஏற்றதாகும். மண்ணின் காரஅமிலத்தன்மை 6.5 முதல் 7க்குள் இருக்க வேண்டும். மண்ணின் உப்பு அளவு 1க்கு மிகாமல் இருக்க வேண்டும். பொதுவாக பன்னீர் திராட்சை சாகுபடிக்கு உப்பு, உவர்மண் தவிர கரம்பை மண், செம்மண், வண்டல் மண் போன்றவை ஏற்றவை.தமிழ் நாட்டில் மலைப்பகுதியை தவிர அனைத்து இடங்களிலும் பயிர் செய்ய ஏற்றதாகும். பன்னீர் ரகங்களுக்கு குழிகளை 0.6 மீட்டர் அகலம், 0.6 மீட்டர் ஆழம், 3மீட்டர் இடைவெளியில் தோண்டவேண்டும். மற்ற ரகங்களுக்கு 1*1*! மீட்டர் அளவுள்ள குழிகளை தோண்டவேண்டும்.குழிகளை நன்கு மக்கிய தொழு உரம் அல்லது குப்பைகள் பசுந்தழை உரமிட்டு நிரப்ப வேண்டும். பின்பு ஜூன்-ஜூலை மாதத்தில் வேர் வந்த முற்றிய குச்சிகளை நடவு செய்ய வேண்டும். செடிகள் நட்ட உடனேயும்,மூன்றாவது நாளும் நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு வாரத்திற்கு ஒருமுறை நீர் காட்ட வேண்டும். கவாத்து செய்வதற்கு ௧௫நாள் முன்பும்,அறுவடைக்கு ௧௫நாள் முன்பும் நீரை நிறுத்த வேண்டும். நடவு செய்து வளரும் செடியை ஒரே தண்டாக பந்தல் உயரத்திற்கு கொண்டு வந்து பின்பு நுனியை கிள்ளி விடவேண்டும். பின்பு வளரும் பக்கக்கிளைகளை எதிர் எதிர் திசையில் வளரவிட்டு மென்மேலும் நுனிகளை கிள்ளி,கிளைகளை பந்தல் முழுவதும் படர செய்ய வேண்டும். பந்தல் முழுவதும் கொடிகள் நன்கு படர்ந்து வளர கொடிகளின் நுனியை வெட்டி விடுதல் மிக அவசியமாகும். தாய்க்கொடி மற்றும் பக்கவாட்டில் வளரும், கொடிகளின் நுனியை 12 முதல் 15 மொட்டுக்கள் விட்டு வெட்டிவிடவேண்டும். அதிகமாக திராட்சைக் குலைகள் உள்ளக்கொடியை பந்தலுடன் சேர்த்துக் கட்டவேண்டும். நெருக்கமாகு பழங்கள் உள்ள திராட்சைக் குலைகளில் 20 சதவீதம் பட்டாணி அளவு, இருக்கும் பொழுது நீக்கவேண்டும். இரண்டு அல்லது மூன்று முறை பாசலோன் 35 இசி மருந்தை ஒருலிட்டர் தண்ணீருக்கு 2மில்லி வீதம் கலந்து தெளிக்க வேண்டும். டைமித்யேட் 30 இசி மருந்தை ஒருலிட்டர் தண்ணீருக்கு 2மில்லி வீதம் கலந்து தெளிக்க வேண்டும். டைமித்யேட் 25 இசி அல்லது மானோகுரோட்டாபாஸ் 36wsc ஒருலிட்டர் தண்ணீருக்கு 2மில்லி வீதம் கலந்து தெளித்தோ கட்டுபடுத்தலாம்.மாவுப்பூச்சிகளை உணவாக உட்கொள்ளும் புள்ளி வண்டுகளை செடி ஒன்றுக்கு பத்து வீதம் விட்டு கட்டுபடுத்தலாம். இதைக் கட்டுபடுத்த கார்பரில் 50 சதம் நனையும் தூள் 0.1சதம் கலந்து தண்டு பகுதி முழுவதும் தடவி விடவேண்டும். ஒரு கொடிக்கு 60 கிராம் கார்போபியூரான் 3ஜி அல்லது 20 கிராம் ஆல்டிகார்ப் குருணைகள் அல்லது 200 கிராம் வேப்ப புண்ணாக்கு இட்டு பின்னர் நீர் பாய்ச்ச வேண்டும். மருந்து இட்டு 15 நாட்களுக்கு மண்ணை கிளறக்கூடாது. 0.4 சதம் நீர்த்த கந்தகம் தெளித்து அல்லது கந்தக் தூள் ஒரு எக்டரக்கு 6 முதல் 12 கிலோ அளவில் தூவி கட்டுப்படுத்தலாம். ஆந்ரகுனோஸ் மற்றும் அடிச்சாம்பல் நோய் : ஒரு சதவிகித போர்டோக் கலவை அல்லது ஏதாவது ஒரு காப்பர் பூஞ்சாணக்கொல்லி 0.25 சதவிகிதம் தெளித்து கட்டுப்படுத்தலாம். 1 சதவித போர்டோக் கலவை தயாரிக்கும் முறை: 400 கிராம் காப்பர் சல்பேட்டை 20 லிட்டர் நீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும். பின்பு 400 கிராம் சுண்ணாம்பை 20 லிட்டர் நீரில் தனியாகக் கரைத்து வைக்கவம். காப்பர் சல்பெட் கரைசலை சுண்ணாம்புக் கரைசலுடன் கலக்கவும். காப்பர் சல்பேட் கரைசலை சுண்ணாம்புக் கரைசலுக்குள் ஊற்றும் போது சுண்ணாம்புக் கரைசலைத் தொடர்ந்து கலக்கி விட்டுக் கொண்டே இருக்கவேண்டும். கரைசல்கள் தயாரிக்க மண் பாத்திரம் அல்லது மர வாளிகளைத் தான், உபயோகப்படுத்த வேண்டும். உலோக மண் பாத்திரங்கள் உபயோகப்படுத்தக்கூடாது. கரைசல் சரியான அளவில் உள்ளதா என்பதைக் கண்டறிய ஒரு சக்தியைக் கரைசலில் ஒரு நிமிடம் வைத்து எடுக்க வேண்டும். கத்தியில் செம்புழுப்புத் துகள்கள் காணப்பட்டால் மேலும் சுண்ணாம்பு இடவேண்டும். செம்பழுப்புத் துகள்கள் கத்தியில் படியாமல் இருக்கும் வரை சுண்ணாம்பு இடவேண்டும். பெரும்பான்மையான திராட்சை மதுபானங்கள் மத்திய மற்றும் மத்திய தரைகடல் பகுதியை சேர்ந்த ""விட்டிஸ் வினிஃபெரா"" வகையிலிருந்து தயார் செய்யப்படுகிறது.சிறிய அளவு மற்ற வகையிலிருந்து தயார் செய்யபடுகிறயது.அவை, வரலாறு காணாத காலத்திருந்தே திராட்சை மனிதனால் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. மத்தியத் தரைக்கடல் நாடுகளில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திராட்சை சாற்றிலிருந்து ஒயின் தயாரிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. பெரும்பாலான திராட்சைகள், ஐரோப்பியத் திராட்சைக் கொடிச் சிற்றினமான "விட்டிஸ் வினிபேரா" "(Vitis vinifera)" என்பதில் இருந்து கிடைக்கிறது. இது நடுநிலக்கடல் பகுதி மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது. அனைத்து வகை திராட்சைகளும் அப்படியே உண்ணத் தக்கவைதான். ஒரு சில வகைகள் உலர் திராட்சை செய்யவும். சாறு எடுக்கவும், பழக்கூழ் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பான்மையானவை ஒயின் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இதன் சக்கைகள் உரம், அசிட்டிக் அமிலம் எண்ணெய் மற்றும் பல பொருள்கள் தயாரிக்க உபயோகப்படுத்தப்படுகிறது. சிறிய அளவில் திராட்சைகளும், வைன்களும், "விட்டிஸ் லபுருஸ்கா" "(Vitis labrusca)", "விட்டிஸ் ரிப்பாரியா" "(Vitis riparia)", "விட்டிஸ் ரொட்டுண்டிபோலியா" "(Vitis rotundifolia)", "விட்டிஸ் அமுரென்சிஸ்" "(Vitis amurensis)" போன்ற சிற்றினங்களில் இருந்தும் கிடைக்கிறது. கிஸ்மிஸ் என்று பெர்சிய மொழியில் குறிப்பிடப்படுகிறது. திராட்சை வெப்பம் மிகுந்த பகுதிகளில் வளமான மணல் பரப்பில் அதிகம் விளைகிறது. பெரும்பாலான திராட்சை பதியன் மூலமும், விதை மூலமும் வளர்க்கப்படுகிறது. கொத்து கொத்தாக மலரும். இதன் பூக்கள் பச்சை நிறத்திலிருக்கும். உணவு வேளாண்மை அமைப்பின் தகவலின்படி, உலகில் 75,866 சதுர கிலோமீட்டர்களில் திராட்சை உற்பத்தி நடைபெறுகிறது. உலகின் மொத்த திராட்சை உற்பத்தியில் 71% வைன் தயாரிப்புக்காகப் பயன்படுகிறது, 27% நேரடியாகப் பழமாக உட்கொள்ளப்படுகிறது, 2% உலர் பழமாக்கப்படுகிறது. திராட்சைத் தோட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்கள் ஆண்டுக்கு 2% என்ற அளவில் அதிகரித்து வருகின்றன. கீழேயுள்ள அட்டவணை திராட்சை வைன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நாடுகளையும், அந் நாடுகளில் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலப்பரப்பின் அளவும் காட்டப்பட்டுள்ளது. வேறு நாடுகளில் உற்பத்தியாகும் திராட்சைகளைவிட ஆப்கனிஸ்தானின் திராட்சைகள் தரமானவை எனச் சொல்லப்படுகிறது. திராட்சையில் சர்க்கரைச் சத்து அதிகம். தவிர காபோவைதரேற்று, டெக்ஸ்ட்ரோஸ், ப்ரக்டோஸ், பெக்டின் முதலானவையும் பார்டாரிக் அமிலம், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் முதலான அமிலங்களும், புரதம், சுண்ணாம்பு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் முதலான உலோகச் சத்துக்களும் உள்ளன. தற்போது திராட்சை பயிரிடு முறையில் விதையில்லா திராட்சை உற்பத்தி முறையே பெரும்பங்கு வகிக்கிறது.திராட்சை பயிரானது அதன் கிளைகளை வெட்டி உடலவழி இனப்பெருக்கம் செய்யப்படுவதால், விதையிலா திராட்சை இனப்பெருக்கத்திற்கு எவ்வித சிக்கலை இருப்பதில்லை.திராட்சை தாவரத்தின் விதை வழி பயிரிடலிலும் அல்லது ஆரம்ப கட்ட கருவினை பத்திரமாக எடுத்து திசு வளர்ப்பு செய்து புதிய தாவரங்களை உருவாக்குவதிலும் விதை வழி பயிரிடும் விவசாயிகள் பெரும் சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர். விதையிலா திராட்சை பயிரிட பல ஆதாரங்கள் உள்ளன, மற்றும் அனைத்து வர்த்தக ரீதியாக திராட்சை பயிரிட பின்வரும் மூன்று ஆதாரங்களில் ஒன்றிலிருந்து பெறப்படுகிறது: மேற்கண்ட முன்று நிறுவனங்களும் விடிஸ் வினிபெரா ( Vitis vinifera) என்ற திாட்சை வகையின் உற்பத்தியாளர்களாவர். தற்போதைய நிலவரப்படி பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட விதையில்லா திராட்சை இனங்கள் உள்ளன. அவற்றுள் சில ஐன்செட் சீட்லெஸ் (Einset Seedless), பெஞ்சமின் கன்னல்சுவின் முதன்மை விதையிலா திராட்சை, ரிலையன்சு மற்றும் வீனசு போன்ற திராட்சை இனங்கள் வடகிழக்கு அமெரிக்கா மற்றும் தெற்கு ஒன்றாரியோ கடுமையான குளிர் காலநிலையை தாங்கி வளர்வதற்குரிய தகவமைப்பைப் பெற்ற சிறப்பு விதையில்லா திராட்சைத் தாவரங்களாகும். இதில் வைட்டமின் ‘பி’ மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. திராட்சையை நசுக்கிப் பிழிந்து திரவமாக மாற்றுவதன் மூலம் திராட்சைச் சாறு பெறப்படுகிறது. இச்சாறு நொதிக்கவைக்கப்பட்ட பின்னர் வைன், பிராந்தி என்ற மது வகைகளும் வினிகர் என்ற காடியும் உற்ப்பத்தி செய்யப்படுகின்றன. காய்ச்சி வடிக்கப்பட்ட திராட்சைச்சாற்றில் இயற்கையாக அதில் இருக்கும் ஈஸ்டு என்ற நொதியுயிரி நீக்கப்படுவதால் நொதித்தல் நடைபெறாது. மேலும் அச்சாற்றை உறையவைத்தால் சாராயம் (ஆல்கஹால்) இருப்பதில்லை. மதுத் தொழிற்ச்சாலையில் திராட்சை சாறானது 7 முதல் 23% திராட்சைப் பழக்கூழ் , தோல், தண்டு மற்றும் விதைகளைக் கொண்ட மஸ்த் (must) (நொதியேறாப் பழச்சாறு) என்ற கலைவை தயாரிக்கப்படுகிறது. வட அமெரிக்காவில் தயாரிக்கப்படும் திராட்சைச் சாறுகளில் கருஞ்சிவப்பு நிறத்திலுள்ள கன்கார்டு வகை திராட்சை சாறும், நைஜீரியா திராட்சை வகையிலிருந்து பெறப்படும் வெள்ளை திராட்சை சாறும் பொதுவான வகைகள் ஆகும்.இவை இரண்டும் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவைகளாகும். ஐரோப்பிய ஒயின் திராட்சை போன்ற வேறு இன வகைகளும் பயன்படுத்தப்படுகின்றன. கலிபோர்னியாவில் சுல்த்தானா (தாம்சன் சீட்லெஸ்) வகை திராட்சையிலிருந்து பெறப்படும் சாறு வெள்ளை நிறச் சாறு தயாரிப்பளவை உயர்த்துகின்றன 5 மாதங்களில் பழங்கள் பறிக்கத் தயாராகி விடும். அப்போது ஏழு முதல் எட்டு டன் வரை திராட்சை பழம் அறுவடை செய்ய முடியும். அதன் பின் 120 நாட்களுக்கு ஒருமுறை பழம் பறிக்கலாம். அப்போது நான்கு முதல் ஐந்து டன்வரை காய்ப்பு கிடைக்கும். இது 20 ஆண்டுகள் வரை தொடர்ந்து பலன் தரும். சராசரியாக ஒரு டன், ரூ. 30 ஆயிரம் வரை விலை போகிறது. ஆண்டுக்கு ரூ. 3.60 லட்சம் கிடைக்கும். செலவு போக எப்படிப் பார்த்தாலும் ஏக்கருக்கு ரூ.3 லட்சம் லாபம் கிடைக்கும். படைத்துறை தொழிற்துறை கூட்டுத்தொகுதி படைத்துறை தொழிற்துறை கூட்டுத்தொகுதி என்பது அரசு, படைத்துறை, தொழிற்துறை ஆகியவை எவ்வாறு ஒன்றிணைந்து ஒரு நாட்டின் அரசியல் ஆதரவை போர் ஆள் ஆயுத விருத்தி உற்பத்தி ஆய்வுக்கு குவியப்படுத்துகின்றன என்பதை விளக்கும் ஒரு கருத்துரு ஆகும். இந்த சொற்தொடர் ஆங்கிலச் சொல்லான military-industrial complex (MIC) தமிழாக்கம் ஆகும். இந்த சொற்தொடரை அமெரிக்க சனாதிபதி Dwight D. Eisenhower பயன்படுத்தினார். அவர் இந்த கூட்டுத்தொகுதி எவ்வாறு பொதுமக்கள் நலன்களுக்கு கேடு விளைவிக்க கூடிய வண்ணம் இயங்கலாம் என்றும் எச்சரிக்கை செய்தார். கூலிப்படை கூலிப்படை ("mercenary") என்பது பணத்துக்கு போர் புரியும் ஒரு படை ஆகும். பொதுவாக கூலிப்படைக்கு அவர்கள் சண்டை போடும் எதிரிக்கு எதிராக தனிப்பட்ட பகையை கொண்டிருப்பதில்லை. இவர்கள் பொதுவாக சட்டத்திற்குப் புறம்பான வன்முறைச் செயல்களைச் செய்வர். செய்யும் குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து கூலியாகப் பணத்தை பெறுகின்றனர். இவர்கள் கும்பலாக குற்றச் செயல்களைச் செய்பவர்கள். இவர்கள் பெரும்பாலும் அரசியலைச் சார்ந்தவர்களுடன் மறைமுகத் தொடர்பு கொண்டிருப்பர். இலங்கையில் இலங்கை இராணுவம் கூலிப்படைகளை ஈழப்போரில் பயன்படுத்தியது. இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் 2016 ஆம் ஆண்டு காலகட்டத்தில் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, மதுரை போன்ற மாவட்டங்களில் இவர்களின் ஆதிக்கம் அதிகமாகியுள்ளது. தனியார் போர்ப்படை நிறுவனம் தனியார் போர்ப்படை நிறுவனம் ("Private military company") அல்லது தனியார் ஒப்பந்த படை என்பது போரியல் நிபுணத்துவத்தை தமது விற்பனைப் பொருளாக கொண்ட இலாப நோக்குடைய வணிக நிறுவனம் ஆகும். மெய்ப்பாதுகாப்பு, பின் தள உதவி, வழங்கல், தள பராமரிப்பு போன்ற பல்வேறு வேலைகளை தனியார் போர்ப் படை நிறுவனங்கள் மேற்கொண்டன. முற்காலத்திலேயே கூலிப்படைகள் இருந்தன் என்றாலும், கொம்பனி மயப்படுத்தபட்ட தனியார் போர்ப்படை நிறுவனம் ஐக்கிய அமெரிக்காவில் வடிவம் கொண்டது. இலங்கையின் தமிழ் நாடகங்கள் 1948ம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்ததன் பின்னர்‚ இலங்கையின் தமிழ் நாடகங்களின் தோற்றம்‚ தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் மட்டுமல்லாமல் கொழும்பிலும் வளர்ச்சி பெற தொடங்கியது. இலங்கையின் தமிழ் நாடகங்கள் பிரதேசரீதியாக பிரிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம்‚ கொழும்பு‚ மட்டக்களப்பு‚ மன்னார் மற்றும் மலையகம் போன்ற பிரதேசங்களின் பாரம்பரிய அடையாளப்படுத்தல்களின் மூலம் இந்நாடகங்கள் வளர்ச்சியடைந்தன. தமிழ் மக்களின் வளர்ச்சிக்கு இலங்கையின் தமிழ் இலத்திரனியல் ஊடகங்கள் பெரும் பங்காற்றி உள்ளன. பாதுகாப்பு அச்சுறுத்தலானது இலங்கையின் தமிழ் நாடகங்களின் வளர்ச்சியை குன்றச் செய்துள்ளது. நாட்டில் நிலவும் யுத்த சூழ்நிலை காரணமாக பெரும்பாலான தமிழ் கலைஞர்கள் தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். சிலர் கொழும்பில் வாழ்கின்றனர். மேலும் சிலர் மேற்கு நாடுகளில் இடம்பெயர்ந்து வாழ்கின்றனர். இலங்கையின் தமிழ் நாடகங்களுக்கு கொழும்பே மத்திய நிலையமாக உள்ளது. ஜயதேவ உயன்கொட பேராசிரியர் ஜயதேவ உயன்கொட ("Jayadeva Uyangoda") இலங்கையின் ஒரு கல்விமானும், அரசறிவியல் துறைப் பேராசிரியரும் ஆவார். 1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடதுசாரி மாணவராக இருந்த இவர் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான உறுப்பினராக செயல்பட்டார். 1971ம் ஆணடு இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் இணைந்து கொண்டார். இதற்காக இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறிது காலத்தின் பின் விடுதலை செய்யப்பட்ட உயன்கொட தனது கலாநிதிப்பட்டப்படிப்பை மேற்கொள்ள ஐக்கிய அமெரிக்காவின் ஹவாய் பல்கலைக்கழகத்துக்குச் சென்றார். அங்கு அவர் "வங்காளதேசத்தின் தேசியவாதமும் அரச கட்டமைப்பும்" என்ற தலைப்பில் கீழ் முனைவர் பட்டத்திற்கான ஆய்வினை மேற்கொண்டார். இலங்கையின் முரண்பாடுகளும் இனப்பிரச்சினை தொடர்பாகவும் அதிகம் பேசப்படுகின்றார். காலஞ்சென்ற கலாநிதி நீலன் திருச்செல்வத்தோடு இணைந்து இலங்கைக்கான மாதிரி அரசியல் யாப்பொன்றினை 1999 ஆம் ஆண்டில் வரைந்தார். தற்போது இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான பீடத்தின் தலைவராக உள்ளார். அததுடன் மாற்றுக் கொள்கைக்கான நிலையத்தின் பணிப்பாளராகவும் பணியாற்றுகின்றார். இவர் இலங்கை மன்றத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். "பிரவத" என்ற இதழின் ஸ்தாபக ஆசிரியராகக் கடமையாற்றுகின்றார். ஆங்கில மொழியில் வெளிவரும் இச் சஞ்சிகையானது இலங்கை தெற்காசிய நாடுகள் தொடர்பிலான தகவல்களைத் தாங்கி வருகின்றது. சமாதனம் இன ஐக்கியம் முரண்பாடுக் கல்வி தொடர்பில் அரசியல் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வரும் இவர் கட்டுரைகளையும் எழுதிவருகின்றார். பிரித்தானியப் பேரரசு பிரித்தானியப் பேரரசு ("British Empire") உலக வரலாற்றில் இருந்த பேரரசுகள் அனைத்திலும் பெரியது ஆகும். ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உலகின் முதன்மையான வல்லரசாகத் திகழ்ந்தது. ஐரோப்பியக் குடியேற்றவாதப் பேரரசுகளைத் தோற்றுவித்த 15 ஆம் நூற்றாண்டின் புத்தாய்வுக் கடற் பயணங்களுடன் தொடங்கிய கண்டுபிடிப்புக் காலத்தின் விளைவாக இது உருவாகியது. 1921 ஆம் ஆண்டளவில் பிரித்தானியப் பேரரசு உலகின் 458 மில்லியன் மக்களை உள்ளடக்கியதாக இருந்தது. இது அக்காலத்தின் உலக மக்கள்தொகையின் காற்பங்கு ஆகும். 33 மில்லியன் சதுர கிலோமீட்டர் (13 மில்லியன் சதுர மைல்) பரப்பளவைக் கொண்டிருந்த இப்பேரரசு உலக மொத்த நிலப்பரப்பிலும் காற்பங்கைத் தன்னுள் அடக்கியிருந்தது. இதனால் இதன் மொழி மற்றும் பண்பாட்டுப் பரவல் உலகம் தழுவியதாக இருந்தது. இது உயர் நிலையில் இருந்தபோது, இதன் ஆட்சிப்பரப்பு புவிக் கோளத்தில் எல்லாப் பகுதிகளிலும் பரவி இருந்ததனால், "பிரித்தானியப் பேரரசில் சூரியன் மறைவதில்லை" என்று சொல்லப்பட்டது. இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து வந்த ஐந்து பத்தாண்டுகளில் இப் பேரரசுக்குள் அடங்கியிருந்த பல நாடுகள் விடுதலை அடைந்தன. இவற்றுட் பல விடுதலையடைந்த பிரித்தானியப் பேரரசு நாடுகளின் பொதுநலவாய நாடுகள் குழுவில் சேர்ந்து கொண்டன. சில நாடுகள் பிரித்தானியப் பேரரசர் / பேரரசியையே தமது நாடுகளின் தலைவராகவும் ஏற்றுக்கொண்டிருந்தன. பெரிய பிரித்தானியா வின் ஐக்கிய இராச்சியம் உருவாக முன்னரே பிரித்தானியப் பேரசுக்கான அடிப்படை அமைக்கப்பட்டுவிட்டது. அக்காலத்தில் இங்கிலாந்தும் ஸ்காட்லாந்தும் தனித்தனி அரசுகளாக இருந்தன. போர்த்துக்கீசரதும், ஸ்பானியர்களதும் கடல் கடந்த புத்தாய்வுப் பயணங்கள் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, 1496 ஆம் ஆண்டில், இங்கிலாந்தின் அரசரான ஏழாம் ஹென்றி, வட அத்திலாந்திக் வழியாக ஆசியாவுக்குச் செல்வதற்கான வழியைக் கண்டுபிடிப்பதற்காக ஜான் கபோ (John Cabot) என்பவரை அமர்த்தினார். 1497 இல் பயணத்தைத் தொடங்கிய கபோ, ஆசியா எனத் தவறாகக் கருதிக் கனடாவில் இறங்கினார். ஆனாலும், குடியேற்றங்களை உருவாக்கும் முயற்சி எதுவும் அப்போது மேற்கொள்ளப்படவில்லை. அடுத்த ஆண்டில் கபோ அமெரிக்காக்களுக்கான பயணத்தைத் தொடங்கினார் எனினும் அதன் பின்னர் அவரது கப்பல்களைப் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை. இதன் பின் 16 ஆம் நூற்றாண்டின் கடைசிப் பத்தாண்டுகளில், முதலாம் எலிசபெத்தின் ஆட்சி தொடங்கிப் பல காலங்களுக்குப் பின்வரை ஆங்கிலக் குடியேற்றங்களை அமைப்பதற்கான முயற்சிகள் எதுவும் நடைபெறவில்லை. ஆங்கில - ஸ்பானியப் போர்க் காலத்தில், ரோமன் கத்தோலிக்க ஸ்பெயினுக்கும், புரட்டஸ்தாந்திய இங்கிலாந்துக்கும் பகைமையும் போட்டியும் நிலவின. சர் ஜான் ஹோக்கின்ஸ், சர் பிரான்சிஸ் டிரேக் போன்ற தனியார் கடற்போராளிகள் அமெரிக்காக்களில் இருந்த ஸ்பானியத் துறைமுகங்களையும், புதிய உலகிலிருந்து பெருமளவு செல்வத்தைக் கொண்டுவரும் அவர்களின் கப்பல்களையும் தாக்கிக் கொள்ளையிட இங்கிலாந்து அனுமதி வழங்கியது. அவ்வேளையில், புகழ் பெற்ற எழுத்தாளர்களான ரிச்சார்ட் ஹக்லுயிட், ஜான் டீ ஆகியோர், ஸ்பெயினுக்கும், போர்த்துக்கலுக்கும் போட்டியாக இங்கிலாந்தும் தனது குடியேற்றங்களை உருவாக்கவேண்டும் எனக் கோரிவந்தனர். அப்போது, ஸ்பெயின் அமெரிக்காவில் உறுதியாக நிலைகொண்டிருந்தது. போர்த்துக்கல் நாடோ, ஆபிரிக்கா, பிரேசில், சீனா ஆகியவற்றின் கரைப்பகுதிகளில் வணிக நிலைகளை அமைத்திருந்தது. பிரான்ஸ் செயிண்ட் லாரன்ஸ் ஆற்றுப் பகுதியில் குடியேறத் தொடங்கியிருந்தது. கடல் கடந்த குடியேற்றங்களைப் பொறுத்த அளவில், ஸ்பெயின், போர்த்துக்கல் ஆகிய நாடுகளைக் காட்டிலும் இங்கிலாந்து ஒரு பிந்திய வரவாக இருந்தாலும் அயர்லாந்தில் அது ஒருவகையான உள்நாட்டுக் குடியேற்றத்தில் ஈடுபட்டிருந்தது. 16 ஆம் நூற்றாண்டில் அயர்லாந்தின் பெருந்தோட்டங்களை நடத்திவந்த ஆங்கிலக் குடியேற்றக்காரர்கள் பிரித்தானியப் பேரரசின் உருவாக்கத்துக்கு முன்னோடிகளாக இருந்தனர் எனலாம். இத்திட்டங்களில் ஈடுபட்டிருந்த பலருக்கு, குறிப்பாக, "மேற்கு நாட்டார்" (West Country men) என்று அழைக்கப்பட்டு வந்த ஒரு குழுவினருக்குத் தொடக்க கால வட அமெரிக்கக் குடியேற்றங்களிலும் ஈடுபாடு இருந்தது. சர் ஹம்பிரி கில்பர்ட், சர். வால்ட்டர் ராலி, சர். பிரான்சிஸ் டிரேக், சர். ஜான் ஹோக்கின்ஸ், ரிச்சார்ட் கிரென்வில், சர். ரால்ஃப் லேன் ஆகியோர் இவர்களுள் அடங்கியிருந்தனர். அயர்லாந்தைக் குரொம்வெல்லின் படைகள் ஆக்கிரமித்த பின்னர், பெரும்பான்மை ஐரியக் கத்தோலிக்கர் தமது நிலங்களை இழக்கவேண்டி ஏற்பட்டது. இங்கிலாந்தையும், ஸ்காட்லாந்தையும் சேர்ந்த புரட்டஸ்தாந்திய நில உரிமையாள வகுப்பினர் அவர்கள் நிலங்களை எடுத்துக்கொண்டனர். 1578 இல் சர் ஹம்பிரி கில்பர்ட்டுக்கு, நாடுகாண் பயணத்துக்கும் கண்டுபிடிப்புக்குமான உரிமம் முதலாம் எலிசபெத் அரசியால் வழங்கப்பட்டது. அவர் முதலில் மேற்கிந்தியத் தீவுகளை நோக்கிப் பயணமானார். முதலில் கடற் கொள்ளைகளில் ஈடுபடுவதும் பின்னர் திரும்பும் வழியில் வட அமெரிக்காவில் குடியேற்றம் ஒன்றை அமைப்பதும் அவரது நோக்கமாக இருந்தது. காலநிலை சரியாக இல்லாததால் பயணம் தொடக்கத்திலேயே தோல்வியில் முடிந்தது. 1583 ல் கில்பர்ட் மீண்டும் இரண்டாவது தடவையாக முயற்சியைத் தொடங்கினார். இந்தத் தடவை நியூபவுண்ட்லாந்துக்குச் சென்று அங்கிருந்த சென். ஜான்ஸ் துறைமுகத்தைக் கைப்பற்றினார். எனினும், அங்கே எவ்விதக் குடியேற்றமும் அமைக்கப்படவில்லை. கில்பர்ட் இங்கிலாந்துக்குத் திரும்பு முன்னரே காலமானார். இவரது அரைச் சகோதரரான வால்ட்டர் ராலி அவரது பணியைத் தொடர்ந்தார். ராலி இதற்கான சொந்த உரிமத்தை எலிசபெத் அரசியிடமிருந்து 1584 ல் பெற்றிருந்தார். அவர், இன்றைய வட கரோலினாவின் கரையில் இருந்த ரோனோக் என்னுமிடத்தில் குடியேற்றம் ஒன்றை நிறுவினார். போதிய உணவு முதலியன கிடைக்காமையால் இக் குடியேற்றம் தோல்வியில் முடிந்தது. 1603ல், ஸ்காட்லாந்தின் அரசனான ஆறாம் ஜேம்ஸ், இங்கிலாந்தின் அரசரானார். 1604 ஆம் ஆண்டில் இலண்டன் ஒப்பந்தத்தை உருவாக்கி ஸ்பெயினுடனான பகைமைக்கு ஒரு முடிவுகட்டினார். இங்கிலாந்தின் மிக முக்கியமான எதிரியுடன் அமைதி ஏற்பட்டதும், அது தனது நாடுபிடிக்கும் நடவடிக்கையில் கவனம் செலுத்த முடிந்தது. தொடக்கத்தில் இங்கிலாந்தின் முயற்சிகள் வெற்றி அடையாவிட்டாலும், 17 ஆம் நூற்றாண்டில் பிரித்தானியப் பேரரசு உருக்கொள்ளத் தொடங்கியது. வட அமெரிக்காவிலும், கரிபியத் தீவுகளிலும் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டதுடன், ஆசிய நாடுகளுடன் வணிகம் செய்வதற்காக ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பனி என்னும் தனியார் நிறுவனமும் தொடங்கப்பட்டது. இக் காலம் முதல், 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில், ஐக்கிய அமெரிக்க விடுதலை அறிவிப்புக்குப் பின் 13 குடியேற்றங்களை இழந்தது வரையான காலப்பகுதி பின்னர் "முதலாம் பிரித்தானியப் பேரரசு" என அழைக்கப்பட்டது. தொடக்கத்தில் பல தோல்விகளைச் சந்தித்த போதிலும், கரிபியத் தீவுகளின் குடியேற்றம் நல்ல வருமானம் கொடுக்கும் குடியேற்றமாக அமைந்தது. 1604 ஆம் ஆண்டில் கயானாவில் நிறுவப்பட்ட ஒரு குடியேற்றம் இரண்டு ஆண்டுகள் மற்றுமே நிலைத்திருந்ததுடன் அதன் முக்கிய நோக்கமான தங்கப் படிவுகளைத் தேடும் முயற்சியும் வெற்றி அளிக்கவில்லை. சென் லூசியா (1605), கிரெனடா (1609) ஆகிய தீவுகளில் அமைக்கப்பட்ட குடியேற்றங்கள் விரைவிலேயே கைவிடப்பட்டாலும், சென் கிட்ஸ் (1624), பார்படோஸ் (1627), நெவிஸ் (1628) ஆகிய தீவுகளில் அமைந்த குடியேற்றங்கள் வெற்றி பெற்றன. போர்த்துக்கேயரால், பிரேசிலில் தொடங்கப்பட்டது போல், இக் குடியேற்றங்களில் விரைவிலேயே கரும்புத் தோட்டங்கள் தொடங்கப்பட்டன. இத்தோட்டங்கள் வேலையாட்களுக்காக அடிமைகளிலேயே தங்கியிருந்தன. முதலில், டச்சுக் கப்பல்களே அடிமைகளை இப் பகுதிகளுக்கு விற்பனை செய்து பதிலுக்குச் சர்க்கரையை வாங்கிச் சென்றன. இவ்வணிகத்தில் பெருகி வந்த வருமானத்தை ஆங்கிலேயரின் கைகளிலேயே வைத்திருக்கும் நோக்குடன், ஆங்கிலக் குடியேற்றங்களுடன், ஆங்கிலக் கப்பல்கள் மட்டுமே வணிகம் செய்யலாம் என்னும் சட்டத்தை இங்கிலாந்து நாடாளுமன்றம் நிறைவேற்றியது. இது ஐக்கிய டச்சு மாகாணங்களுடன், ஆங்கில-டச்சுப் போர்கள் எனப்பட்ட தொடரான பல போர்கள் இடம்பெற்றன. இறுதியில் அமெரிக்காக்களில் இங்கிலாந்தின் நிலை உறுதிப்பட டச்சுக்காரரின் நிலை தாழ்ந்தது. 1655ல், ஸ்பெயினின் பிடியிலிருந்த ஜமேக்காவை இங்கிலாந்து தன்னுடன் இணைத்துக் கொண்டதுடன், 1666ல், பகமாசிலும் குடியேற்றங்களை நிறுவியது. இங்கிலாந்தின் முதலாவது நிரந்தரமான கடல்கடந்த குடியேற்றத்தை 1607ல் ஜேம்ஸ்டவுனில், கப்டன் ஜான் சிமித் என்பவர் நிறுவினார், வெர்ஜீனியாக் கம்பனி என்னும் நிறுவனம் இதனை நிர்வாகம் செய்தது. இந் நிறுவனத்தின் ஒரு கிளையே 1609ல் கண்டுபிடிக்கப்பட்ட பெர்முடாத் தீவில் ஒரு குடியேற்றத்தை நிறுவியது. இந் நிறுவனத்தின் உரிமைப் பட்டயம் 1624 ஆம் ஆண்டில் விலக்கிக் கொள்ளப்பட்டு இப் பகுதிகளை இங்கிலாந்து அரசு தனது நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, வெர்ஜீனியாக் குடியேற்றநாட்டை உருவாக்கியது. 1610ல், நியூபவுண்ட்லாந்தில் நிலையான குடியேற்றங்களை நிறுவுவதற்காக நியூபவுண்ட்லாந்து கம்பனி நிறுவப்பட்டது. எனினும் இது அதிக வெற்றியளிக்கவில்லை. 1620ல், பெரும்பாலும், தூய்மைவாத மதப் பிரிவினையாளர்களுக்கான பாதுகாப்பிடமாக பிளைமவுத் குடியேற்றம் உருவானது. மத வேறுபாடுகள் தொடர்பில் துன்புறுத்தப்படுவதில் இருந்து தப்புவதற்காகப் பல பிற்காலக் குடியேற்றக்காரர்கள் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு கடல்கடந்து சென்றனர். இவ்வாறு, மேரிலாந்து ரோமன் கத்தோலிக்கர்களுக்கும், ரோட் தீவு பல மதத்தவர்களுக்காகவும் உருவானவை. கரோலினா மாகாணம் 1663ல் உருவானது. இரண்டாம் ஆங்கில-டச்சுப் போரைத் தொடர்ந்து, 1664 ஆம் ஆண்டில் டச்சுக் குடியேற்றமாக இருந்த தற்போதைய நியூ யார்க்கான, நியூ ஆம்ஸ்டர்டாமைப் பேச்சுவார்த்தைகள் மூலம் இங்கிலாந்து தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. இதற்கு ஈடாக சுரினாமை இங்கிலாந்து டச்சுக்காரருக்கு விட்டுக்கொடுத்தது. 1681ல் பென்சில்வேனியாக் குடியேற்றம் வில்லியம் பென் என்பவரால் நிறுவப்பட்டது. 1695 ஆம் ஆண்டில், ஸ்காட்லாந்து நாடாளுமன்றம், "ஸ்காட்லாந்துக் கம்பனி" என்னும் நிறுவனத்துக்கு உரிமப் பட்டயம் ஒன்றை வழங்கியது. இதன் அடிப்படையில் இந்த நிறுவனம் 1698ல் பனாமாத் தொடுப்புப் பகுதிக்குச் சென்று அங்கே கால்வாய் ஒன்றை வெட்டும் நோக்குடன் குடியேற்றம் ஒன்றையும் அமைத்தது. எனினும் அயலில் இருந்த ஸ்பானியக் குடியேற்றக்காரரின் முற்றுகையாலும், மலேரியா நோயினாலும் இக் குடியேற்றம் இரண்டு ஆண்டுகளின் பின் கைவிடப்பட்டது. இத்திட்டம் ஸ்காட்லாந்துக்குப் பெரும் இழப்பாக முடிந்தது. ஸ்காட்லாந்தின் முதலீடுகளின் கால்பகுதி இத்திட்டத்தினால் இழக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஐக்கிய இராச்சியம் அமைப்பதற்கு ஸ்காட்லாந்து ஒத்துக்கொண்டதற்கான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்றெனக் கருதப்படுகிறது. தெற்கில் புகையிலை, பருத்தி, அரிசி போன்றவற்றையும், வடக்கில் கப்பல்களுக்கான பொருட்களையும், கம்பளிகளையும் வழங்கிய அமெரிக்கக் குடியேற்றங்கள், கரிபியக் குடியேற்றங்களைப்போல் கூடிய வருமானம் தருபவையாக இருக்கவில்லை. ஆனாலும், இப்பகுதிகளின் பெரிய செழிப்பான வேளாண்மை நிலங்களும், இப் பகுதிகளின் காலநிலையும் பெருமளவு ஆங்கிலக் குடியேற்றக்காரரைக் கவர்ந்தது. அமெரிக்கப் புரட்சி 1775 ஆம் ஆண்டில் அப்பகுதிகளில் 13 குடியேற்றங்களுக்கான சொந்த அரச நிர்வாகத்தை ஏற்படுத்தியது. 1776 ஆம் ஆண்டில் விடுதலை அறிவிப்புச் செய்து ஐக்கிய அமெரிக்க நாடுகள் உருவாக்கப்பட்டது. சுமார் 20 - 30% குடியேற்றக்காரர் பிரித்தானிய அரசருக்கு ஆதரவாக இருந்தனர். புதிய அரசு தனது விடுதலையைப் பாதுகாப்பதற்காகப் போரில் ஈடுபட்டது. இந்த அமெரிக்க விடுதலைப் போரின் முடிவில் விடுதலை ஏற்றுக்கொள்ளப்பட்டது. தொடக்கத்திலிருந்தே அடிமை முறையே மேற்கிந்தியத் தீவுகளில் பிரித்தானியப் பேரரசின் அடிப்படையாக இருந்தது. 1807 ஆம் ஆண்டில் இம்முறை ஒழிக்கப்படும்வரை இது நீடித்தது. ஆபிரிக்காவில் இருந்து சுமார் 35 இலட்சம் மக்கள் அடிமைகளாக அமெரிக்காக்களுக்குக் கொண்டுவரப்பட்டதற்குப் பிரித்தானிய அரசே பொறுப்பாகும். அடிமை வணிகருக்கு இத்தொழில் பெரும் வருமானத்தை ஈட்டிக் கொடுத்ததுடன், மேற்குப் பிரித்தானிய நகரங்களான பிரிஸ்டல், லிவர்பூல் போன்றவற்றின் முக்கிய நிதி ஆதாரமாகவும் விளங்கியது. முக்கோண வணிகம் என வழங்கப்பட்ட இவ் வணிகத்தில், ஆப்பிரிக்கா, அமெரிக்காக்கள் என்பவற்றுடன் மூன்றாவது புள்ளியாக இந்த நகரங்கள் விளங்கின. எனினும் அடிமைகள் கடத்திவரப்பட்ட கப்பல்களின் சுகாதாரக் குறைவினாலும், மோசமான உணவினாலும் பயணத்தின் போதே இடைவழியில் பலர் இறக்க நேரிட்டது. இந்த இறப்பு விகிதம் ஏழுபேருக்கு ஒருவர் என்ற அளவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. 16 ஆம் நூற்றாண்டின் இறுதியில், இங்கிலாந்தும், நெதர்லாந்தும், ஆசியாவுடனான வணிகத்தில் தனியுரிமை கொண்டிருந்த போர்த்துக்கல் நாட்டுக்குப் போட்டியாகப் புறப்பட்டன. பயணங்களுக்கு நிதி திரட்டுவதற்காக பங்கு நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. இக் கம்பனிகளுன் முக்கிய நோக்கம் அதிக வருமானம் தரக்கூடிய வாசனைப் பொருள்களின் வணிகத்தில் நுழைவதாகும். எனவே அக்கம்பனிகள், அப்பொருட்களின் மூலமான இந்தோனீசியத் தீவுக்கூட்டப் பகுதியிலும், வணிக வலையமைப்பில் முக்கிய இடமாக விளங்கிய இந்தியாவிலும் கவனம் செலுத்தலாயின. இலண்டனும், அம்ஸ்டர்டாமும் வட கடலுக்குக் குறுக்கே அண்மையில் அமைந்திருந்ததால், இரு நாட்டுக் கம்பனிகளுக்குமிடையே எதிர்ப்புணர்வும் போட்டியும் நிலவியது. இது பிணக்குகளுக்கு வழிவகுத்தது. நெதர்லாந்தினர் முன்னர் போர்த்துக்கீசரின் பலம்பொருந்திய இடமாக இருந்த மலூக்குப் பகுதியில் நெதர்லாந்து நாட்டினரது கை ஓங்கியிருந்தது. அதே வேளை, இந்தியாவில் பிரித்தானியருக்குப் பல வெற்றிகள் கிடைத்தன. இறுதியாக இங்கிலாந்து நெதர்லாந்தை வீழ்த்தி மிகப்பெரிய குடியேற்றவாத வல்லரசாகத் திகழ்ந்தபோதும், நெதர்லாந்தின் உயர்தர நிதிமுறைகள், 17 ஆம் நூற்றாண்டின் மூன்று ஆங்கில-டச்சுப் போர்கள் என்பவற்றால் ஒரு குறுகிய காலம் நெதர்லாந்து ஆசியாவில் அதிக செல்வாக்குடன் விளங்கியது. 1688ல் டச்சுக்காரரான ஆரெஞ்சின் வில்லியம் இங்கிலாந்தின் அரியணையில் ஏறியபோது இரு நாடுகளுக்கும் இடையிலான பகைமை தணிந்து இங்கிலாந்துக்கும், நெதர்லாந்துக்கும் இடையே அமைதி ஏற்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தப்படி இந்தோனீசியத் தீவுக்கூட்டங்களின் வாசனைப் பொருட்கள் வணிகத்தை நெதர்லாந்துக்கும், இந்தியப் புடவை வணிகம் இங்கிலாந்துக்கும் விடப்பட்டன. விரைவிலேயே, இலாப அடிப்படையில் புடவை வணிகம் வசனைப் பொருள் வணிகத்தை விஞ்சியது. 1720ல், விற்பனையில் ஆங்கிலக் கம்பனி, டச்சுக் கம்பனியை முந்தியது. ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பனி, தனது கவனத்தை வாசனைப் பொருள் வணிக வலையமைப்பின் முக்கிய இடமொன்றாக விளங்கிய சூரத்திலிருந்து, பின்னர் மதராஸ் எனப் பின்னர் அழைக்கப்பட்ட சென். ஜார்ஜ் கோட்டை, பம்பாய், சுத்தானுட்டி ஆகிய இடங்களை நோக்கித் திருப்பியது. பம்பாய் இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசுக்கு, கத்தரீன் டி பிரகன்சாவை அவர் திருமணம் செய்துகொண்டபோது போத்துக்கீசரால் சீதனமாக வழங்கப்பட்டது. சுத்தானுட்டி வேறும் இரு ஊர்களுடன் இணைந்து பின்னர் கல்கத்தா ஆனது. 1688ல் இங்கிலாந்துக்கும், நெதர்லாந்துக்கும் இடையே ஏற்பட்ட அமைதி இரண்டு நாடுகளும் கூட்டணியாக பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளுடன் ஐரோப்பாவிலும் கடல்கடந்த நாடுகளிலும் போர்களில் ஈடுபடுவதற்கு வழிவகுத்தது. இப் போர்களில் நெதர்லாந்து ஐரோப்பாவில் அது ஈடுபட்ட தரைப் போர்களில் அளவுக்கு அதிகமாகச் செலவு செய்ய வேண்டியிருந்ததால், கடல்கடந்த நாடுகளில் அதன் கவனம் குறையலாயிற்று. இதனால் 18 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து நெதர்லாந்தைவிட முக்கியமான குடியேற்றவாத வல்லரசு ஆகியது. 18 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து உலகின் முதன்மையான குடியேற்றவாத நாடாகியதுடன், பிரான்ஸ் அதன் முக்கிய போட்டி நாடாகவும் விளங்கியது. 1700ல் ஸ்பெயினின் இரண்டாம் சார்லஸ் இறந்தபின் ஸ்பெயினும், அதன் குடியேற்ற நாடுகளும் பிரான்ஸ் அரசனின் பேரனான அஞ்சுவின் பிலிப்பேயின் கைக்கு வந்தபோது, பிரான்சும், ஸ்பெயினும் அவற்றில் குடியேற்ற நாடுகளும் ஒன்றிணையக்கூடிய சாத்தியம் ஏற்பட்டது. இது, இங்கிலாந்துக்கும், ஐரோப்பாவிலுள்ள ஏனைய நாடுகளுக்கும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயமாக இருந்தது. 1701ல், பிரித்தானியா, போர்த்துக்கல், நெதர்லாந்து ஆகிய நாடுகள், புனித ரோமப் பேரரசுடன் சேர்ந்து கொண்டு, பிரான்சுக்கும், ஸ்பெயினுக்கும் எதிரான எசுப்பானிய வாரிசுரிமைப் போரில் ஈடுபட்டன. இது 1714 ஆம் ஆண்டுவரை நீடித்தது. போரின் இறுதியில் செய்துகொள்ளப்பட்ட உட்ரெக்ட் ஒப்பந்தம் என்னும் ஒப்பந்தப்படி, பிலிப் தனதும் தனது வாரிசுகளும் பிரான்சின் அரசுக்கு உரிமை கோருவதில்லை என ஏற்றுக்கொண்டார். அத்துடன், ஸ்பெயின் தனது ஐரோப்பியப் பேரரசையும் இழந்தது. 1718 முதல், பிரித்தானியாவில் பல்வேறு குற்றங்களுக்காகவும் சிறைப் பிடிக்கப்பட்டவர்கள் அமெரிக்கக் குடியேற்றங்களுக்கு அனுப்பப்பட்டனர். இவ்வாறு ஆண்டொன்றுக்கு ஆயிரத்திற்கும் அதிகமானோர் நாடு கடத்தப்பட்டனர். 1783 இல் பதின்மூன்று குடியேற்றங்களை பிரித்தானியா இழந்ததை அடுத்து, உலகின் வேறு பகுதிகளில் குடியேறுவதற்கு பிரித்தானியர் தள்ளப்பட்டனர். பிரித்தானியாவின் பார்வை புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஆத்திரேலியா நோக்கி சென்றது. ஆத்திரேலியாவின் மேற்குக் கரை ஐரோப்பியர்களுக்காக இடச்சுப் பயணி வில்லெம் ஜான்சூன் என்பவரால் 1606 இல் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு பின்னர் புதிய ஒல்லாந்து ந்ன டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியால் பெயரிடப்பட்டது. ஆனாலும் இங்கு குடியேற்றங்களை ஆரம்பிக்க அவர்கள் முயற்சி செய்யவில்லை. 1770 இல் ஜேம்ஸ் குக் ஆத்திரேலியாவின் கிழக்குக் கரையை தென்பசிபிக் பெருங்கடலில் தனது அறிவியல் பயணம் மேற்கொண்டபோது கண்டுபிடித்தார். இதனை அவர் பிரித்தானியாவுக்காக உரிமை கோரி, நியூ சவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டார். 1778, இல் குக்கின் தாவரவியலாளர் யோசப் பேங்க்சு என்பவர் பிரித்தானிய அரசுக்கு பொட்டனி விரிகுடாவில் குற்றவாளிகளின் குடியேற்றத்தை ஆரம்பிப்பதற்கான சாத்தியங்களை அறிக்கையாக சமர்ப்பித்தார். 1787 இல் முதல் தொகுதிக் குற்றவாளிகளைக் கப்பல் புறப்பட்டு 1788 இல் கிழக்குக் கரையில் தரையிறங்கியது. 1840 வரை பிரித்தானியா குற்றவாளிகளை நியூ சவுத் வேல்சிற்குக் கொண்டு வந்தது. ஆத்திரேலியக் குடியேற்றங்கள் கம்பளி மற்றும் தங்க ஏற்றுமதிக்குப் பெயர் பெற்றதாக விளங்கியது. விக்டோரியா குடியேற்றத்தில் தங்கச் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் தலைநகர் மெல்பேர்ண் அக்காலத்தில் உலகின் மிகவும் பணக்கார நகரமாகவும், பிரித்தானிய இராச்சியத்தில் இலண்டனுக்கு அடுத்ததாக இரண்டாவது பெரிய நகரமாகவும் விளங்கியது. குக் தனது கடற்பயணத்தின் போது நியூசிலாந்துக்கும் சென்றார். இந்நாடு இடச்சுப் பயணி ஏபெல் டாஸ்மான் என்பவரால் 1642 இல் கண்டுபிடிக்கப்பட்டது. இத்தீவை ஜேம்ச் குக் வடக்கு, தெற்குத் தீவுகள் என பிரித்தானிய முடியாட்சிக்காக முறையே 1769 இலும் 1770 இலும் உரிமை கோரினார். ஆரம்பத்தில், அங்கிருந்த மாவோரி பழங்குடி மக்களுக்கும், ஐரோப்பியர்களுக்கும் இடையே வணிகம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருந்து வந்தது. ஐரோப்பியக் குடியேற்றம் 19-ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் அதிகரித்த அளவில் காணப்பட்டது. அங்கு பல வணிக மையங்கள் குறிப்பாக வடக்குத் தீவில் ஏற்படுத்தப்பட்டன. 1839 இல், நிஒயூசிலாந்து கம்பனி அங்கு பெருமளவு நிலங்களைக் குடியேற்றத்துக்காகக் கொள்வனவு செய்ய முடிவு செய்தது. 1840 பெப்ரவரி 6 இல் காப்டன் வில்லியம் ஒப்சன், மற்றும் 40 இற்கும் ஏற்பட்ட மாவோரி தலைவர்கள் வைத்தாங்கி ஒப்பந்தம் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதுவே நியூசிலாந்தின் தோற்ற ஆவணம் எனப் பலராலும் கருதப்படுகிறது. ஆனாலும், மாவோரி, ஆங்கில மொழி ஆவாணங்களில் சில மொழிபெயர்ப்புகள் வேறுபட்டுக் காணப்படுகின்றன. இதனால் இது எப்போதும் சர்ச்சைக்குரியதாகவே விளங்கி வந்தது. முதலாம் நெப்போலியனின் கீழிருந்த பிரான்சு பிரித்தானியாவுக்கு சவாலாகவே இருந்து வந்தது. முன்னர் இடம்பெற்ற போர்களைப் போலல்லாமல், நெப்போலியனுடனான போர் இரு நாடுகளுக்கும் இடையிலான சித்தாந்தங்களின் போட்டியை பிரதிநிதித்துவப்படுத்தியது. நெப்போலியனின் இராணுவத்தினர் ஐரோப்பாவின் ஏனைய நாடுகளைக் கைப்பற்றியது போல , நெப்போலியன் பிரித்தானியாவை ஆக்கிரமிக்க அச்சுறுத்தி வந்தான். நெப்போலியப் போர்களில் வெற்றியடைவதற்கு பிரித்தானியா பெருமளவு வளத்தை செலவளிக்க வேண்டி வந்தது. பிரெஞ்சுத் துறைமுகங்கள் அரச கடற்படையால் முற்றுகையிடப்பட்டன. இதன் மூலம் 1805 இல் திரஃபல்கார் சமரில் பிராங்கோ-எசுப்பானிய கப்பற்படையைத் தோற்கடித்து பெரும் வெற்றி பெற முடிந்தது. 1810 இல் கைப்பற்றப்பட்ட இடச்சுக் குடியேற்றங்கள் உட்பட பல வெளிநாட்டுக் குடியேற்றங்கள் தாக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டன. 1815 இல் ஐரோப்பிய இராணுவங்களின் கூட்டணியுடன் பிரான்சைத் தோற்கடிக்க முடிந்தது. பிரித்தானியா இதன் மூலம் மீண்டும் சமாதான உடன்படிக்கைகளில் பயனாளியாக இருந்தது: பிரான்சு இயோனியன் தீவுகள், மால்ட்டா (1797, 1798 இல் ஆக்கிரமித்திருந்தது), மொரிசியசு, செயிண்ட் லூசியா, தொபாகோ ஆகியவற்றைக் கொடுத்தது. எசுப்பானியா டிரினிடாட்வைக் கொடுத்தது. நெதர்லாந்து பிரித்தானிய கயானா, கேப் காலனி ஆகியவற்றைக் கொடுத்தது. பிரித்தானியா குவாதலூப்பு, மர்தினிக்கு, பிரெஞ்சு கயானா, ரீயூனியன் ஆகியவற்றை பிரான்சுக்கும், சாவா, சுரிநாம் ஆகியவற்றை நெதர்லாந்துக்கும், கொடுத்தது. இலங்கையைக் கைப்பற்றியது. தொழிற்புரட்சியின் கண்டுபிடிப்புடன், அடிமைகளின் மூலம் உற்பத்தியான பொருட்களுக்கு பிரித்தானியப் பொருளாதாரத்தில் முக்கியத்துவம் குன்றியது. வழக்கமான அடிமை கிளர்ச்சிகளை அடக்குவதற்கான செலவும் அதிகரித்தது. பிரித்தானியத் தடைவாத இயக்கங்களின் ஆதரவுடன், பிரித்தானிய நாடாளுமன்றம் 1807 இல் அடிமை வணிகச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது. இச்சட்டம் பிரித்தானியாவில் அடிமை வணிகத்தைத் தடை செய்தது. 1808இல் சியேரா லியோனி குடியேற்றம் பிரித்தானியாவின் அதிகாரபூர்வமான அடிமைகளற்ற குடியேற்றமாக அறிவிக்கப்பட்டது. 1832 நாடாளுமன்ற சீர்திருத்தம் மேற்கிந்தியக் குழுவின் வீழ்ச்சியைக் கண்டது. அடிமை ஒழிப்பு சட்டம் 1833 இல் கொண்டுவரப்பட்டது. பிரித்தானிய இராச்சியம் முழுக்க (செயிண்ட் எலனா, இலங்கை, மற்றும் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகள் விலகலாக) 1834 ஆகத்து 1 முதல் அடிமை வணிகம் ஒழிக்கப்பட்டது. பிரித்தானிய அரசு அடிமை வண்கம் செய்தோருக்கு நட்ட ஈடு வழங்கியது. [[File:List of countries gained independance from the UK 2.svg|900px]] [[பகுப்பு:பேரரசுவாதம்]] [[பகுப்பு:பிரித்தானியப் பேரரசு| ]] [[பகுப்பு:ஐக்கிய இராச்சியத்தின் வரலாறு]] [[பகுப்பு:முன்னாள் பேரரசுகள்]] [[பகுப்பு:ஐக்கிய இராச்சியம்]] நன் ஆறு நன் ஆறு தாய்லாந்தில் உள்ள ஓர் ஆறு. இது சாவோ பிரயா ஆற்றின் முதன்மையான துணையாறு. தாய்லாந்து நாட்டின் பண்டைய நாகரிகங்கள் இந்த ஆற்றின் கரையில் தோன்றி வளர்ந்தன. நன் ஆற்றின் முதன்மையான துணையாறு யோம் ஆறு. இவ் ஆற்றில் உள்ள பிட்சனுலோக் என்னும் பகுதி ஒன்றே தாய்லாந்தில் படகு வீடுகள் உள்ள இடமாகும். கொண்டோலா கொண்டோலா என்பது வெனிசு நகரத்தில் பயன்படுத்தப்படும் ஒரு படகு. இப்படகுகள் வெனிசில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்பாட்டில் உள்ளன. தற்காலத்தில் இவை பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகள் சென்று வர பயன்படுத்தப் படுகின்றன. யோம் ஆறு யோம் ஆறு நன் ஆற்றின் முதன்மையான துணையாறு. இந்த ஆறு பாயாவோ மாகாணத்தில் பாங் மாவட்டத்தில் பிறக்கிறது. பிரே, சுகோத்தாய் மாகாணங்களின் வழியாகப் பாயும் இவ் ஆறு பின்னர் நகோன் சவான் மாகாணத்தில் நன் ஆற்றுடன் கூடுகிறது. பெரும் பொருளியல் வீழ்ச்சி பெரும் பொருளியல் வீழ்ச்சி ("Great Depression") அல்லது பொருளாதாரப் பெருமந்தம் என்பது ஒரு உலகளாவிய பொருளாதார இறங்குமுக நிலையாகும். இது பெரும்பாலான இடங்களில் 1929 ஆம் ஆண்டில் தொடங்கி வெவ்வேறு நாடுகளில் 1930 களிலோ அல்லது 1940களின் தொடக்க ஆண்டுகளிலோ முடிவுக்கு வந்தது. முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்களுக்கிடையில் உலக நாடுகளிடையே ஏற்பட்ட முக்கிய நிகழ்வு இதுவாகும். தற்கால வரலாற்றில் மிகப்பெரியதும், முக்கியமானதுமான பொருளாதார வீழ்ச்சி இதுவே. 21 ஆம் நூற்றாண்டில், உலகப் பொருளாதாரம் எந்த அளவுக்கு வீழ்ச்சியடையலாம் என்பதைக் குறிப்பதற்கான ஒரு அடிப்படை அளவீடாக இது பயன்படுகின்றது. பெரும் பொருளியல் வீழ்ச்சி ஐக்கிய அமெரிக்காவில் தொடங்கி ஏறக்குறைய எல்லா ஐரோப்பிய நாடுகளையும் பாதித்தது. வரலாற்றாளர்களால், பங்குச்சந்தை பெரும் சரிவைக் கண்ட நாள் கறுப்புச் செவ்வாய் எனப்படும், 1929 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் நாளையே இதன் தொடக்கமாகக் கொள்வர். ஐக்கிய அமெரிக்காவில் இதன் முடிவு இரண்டாம் உலகப் போருடன் தொடர்பான போர்ப் பொருளாதார நிலைமையில் 1939 ஆம் ஆண்டளவில் ஏற்பட்டது. பொருளாதாரம் மந்த நிலையடைந்து வீழ்ச்சியை அடைந்தாலும், அது தானாகவே மீண்டு உச்ச நிலையினை எட்டிவிடும் என்பதே பொருளியல் குறித்த பழைமைவாதமாக இருந்தது. ஆனால் 1929 முதல் 1933 வரையில் நீடித்த உலகப் பெரும் பொருளியல் வீழ்ச்சியானது மிகவும் வேகமாகவும் நீடித்ததாகவும் பரந்துபட்டதாகவும் காணப்பட்டது. இப் பொருளியல் வீழ்ச்சி, வளர்ந்துவரும் நாடுகளிலும், வளர்ந்த நாடுகளிலும் பெரும் தாக்கங்களை உண்டுபண்ணியது. சிறப்பாக குடியேற்ற நாடுகளாக இருந்தவை பெரிதும் பாதிக்கப்பட்டன. உலக வணிகமும் அத்துடன் தனியார் வருமானம், வரி வருமானம், விலைகள், இலாபம் என்பனவும் ஆழமான பாதிப்புக்கு உள்ளாயின. உலகம் முழுவதிலும் இருந்த நகரங்கள், முக்கியமாக பாரிய தொழிற்சாலைகளில் தங்கியிருந்த நகரங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. கட்டுமானங்கள் பல நாடுகளிலும் முற்றாகவே நின்றுவிட்டன. வேளாண்மையும், நாட்டுப் புறங்களும், பயிர்களுக்கான விலைகள் 40 - 60% வரை வீழ்ச்சியடைந்ததனால் பெரும் தாக்கத்துக்கு உள்ளாயின. வீழ்ச்சி கண்டுகொண்டிருந்த தேவை (demand) நிலையாலும்; மாற்று வேலை வாய்ப்புகள் இல்லாமையாலும்; வேளாண்மை, சுரங்கத் தொழில், மரம் வெட்டல் போன்ற முதல்நிலைத் தொழில் சார்ந்த பகுதிகளே மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டன. அமெரிக்கப்பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவே பொருளாதாரப் பெருமந்தத்திற்குக் முதன்மைக் காரணமாகக் கருதப்படுகிறது. பங்குகளின் விலை உயரும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் மக்கள் கடன் வாங்கிப் பங்குச்சந்தையில் முதலீடு செய்தது இப்பெருமந்தத்தின் காரணமாகும். 1929 ஆம் ஆண்டு அமெரிக்க குடியரசுத் தலைவராகப் பொருப்பேற்ற ஹெர்பர்ட் ஹூவரின் காலத்தில் பங்கு வணிகம் உச்சகட்டத்தை அடைந்தது. பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வதில் அமெரிக்க மக்கள் பேரார்வத்துடன் ஈடுபட்டனர். சமுதாயத்தில் உள்ள அனைத்துத் தரப்பினரும் பங்குகள் தரும் பங்காதாயத்திற்கு மட்டுமன்றி அவற்றை மறுவிற்பனை செய்வதைன் மூலம் கிடைக்கும் இலாபத்திற்காகவும் பெருமளவில் பங்கு வணிகத்தில் முதலீடு செய்தனர். இதன் மூலம் வேகமாக செல்வந்தர்கள் ஆகலாம் என்ற எண்ணம் மக்களிடையே ஏற்பட்டது. 1929-ஆம் ஆண்டு அக்டோபர் 24-ஆம் நாள் பங்குகளில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டு, பங்குகளின் விலை சரியத் தொடங்கியது. இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால் மக்கள் விரைவாகத் தங்கள் பங்குகளை விற்க முற்பட்டனர். இதனால் பங்குகளில் விலை மேலும் வீழ்ச்சியடைந்தது. இதனைத் தொடர்ந்து வங்கிகள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது. வங்கிகளால் கடன் வழங்க இயலாததாலும் விவசாய உற்பத்தி, தொழில் வளர்ச்சி ஆகியவை வீழ்ச்சியடைந்ததன. ஹூவர் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்று பல்வேறு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். 1932-ஆம் ஆண்டு ஹூவரால் அமைக்கப்பட்ட புனரமைப்பு நிதி நிறுவனம், வங்கிகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் கடனுதவி அளிக்க முன்வந்தது. இம்முயற்சி உடனடியானத் தீர்வைத் தராத காரணத்தால் ஹூவரின் ஆட்சியின் மீது அமெரிக்க மக்கள் நம்பிக்கை இழந்தனர். 1932 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க நாடுகளில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் இப்பெரும் பொருளியல் வீழ்ச்சியை சரிசெய்வதாக உறுதியளித்தார். இதனால் தேர்தலில் வெற்றிபெற்று 1933, மார்ச்சு 4 ஆம் நாள் அமெரிக்க குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார். இச்சூழ்நிலையில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜான் மேனார்ட் கீன்ஸ் (John Maynard Keynes) என்னும் பொருளியல் அறிஞரின் ஆலோசனையை அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் நாடினார். கீன்ஸின் பொருளியல் சார்ந்த மீட்புக்கான பரிந்துரைகள் ஒவ்வொன்றாக ரூஸ்வெல்ட் நடைமுறைப்படுத்திட விழைந்தார். இதன் காரணமாக ஐக்கிய அமெரிக்க நாடானது பெரும் பொருளியல் வீழ்ச்சி சரிவிலிருந்து மீண்டது. பிற மேற்கத்திய நாடுகளும் அமெரிக்காவைப் போன்று செயல்பட்டு மீட்சிக் கண்டன. கீன்ஸ் இந்தப் பொருளியல் பிரச்சினையை முற்றிலும் புதிய கோணத்தில் அணுகி ஆராய்ந்தார். “ஒரு பொருளுக்கான தேவைகள் அதிகரிக்கும்போது, அதனை அதிகமாக உற்பத்தி செய்து சந்தைக்கு அனுப்ப வேண்டும்; தேவை குறைந்தால் உற்பத்தியைக் குறைத்துக் கொள்ள வேண்டும்” என்னும் பொருளியல் வழக்கத்தை கீன்ஸ் புறந்தள்ளினார். சந்தைக்கான பொருள் அளிப்பதை (Supply) பற்றிக் கவலைக் கொள்ளாமல் அதற்கான தேவையை (Demand) அதிகரிக்க வேண்டும் என்றார் கீன்ஸ். மேலும், ஒரு துறையின் வேலைக்கான ஊதியத்தின் மொத்தத் தொகையை (Wage Fund) நிர்ணயித்து வரையறுப்பதையும், தொழிலாளர்கள் எண்ணிக்கைக் கூடும்போது ஊதியத்தைக் குறைத்தும், எண்ணிக்கைக் குறைந்தால் ஊதியத்தை அதிகரித்து உற்பத்தியைத் தொடரும் போக்கைத் தவறு என்று கீன்ஸ் நிரூபித்தார். தொழிலாளர்களுக்கான ஊதியத்தை உயர்த்தித் தருவதன் மூலம் பொருளாதாரத்தை விரிவுபடுத்த முடியும் என்றார். தொழிலாளர்களும் நுகர்வோர்களே என்பதால், அவர்களுடைய ஊதியம் உயரும்போது நுகர்வுப் பண்பும் அதிகரித்து நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் மேம்படும் என்று வலியுறுத்தினார். இக்கருத்து நடைமுறையிலும் செயல்படுத்தப்பட்டு வெற்றிக் கண்டது. அமெரிக்காவின் ஃபோர்டு மகிழுந்து நிறுவனமானது தம்முடைய ஆலைத் தொழிலாளர்களுக்கு அதி நவீனப் பயிற்சி அளித்தது, அதிக ஊதியமும் வழங்கியது. அத்துடன் ஒவ்வொரு பணியாளரும் ஒரு மகிழுந்து வாங்க வேண்டுமென வலியுறுத்தியது. இதன் காரணமாக அண்டை அயலாரின் நுகர்வு அதிகரித்து விற்பனைக் கூடியது. தொழிலாளர்களின் சமூக மதிப்பும் போர்டு நிறுவனத்தின் வருவாயும் பெருகியது. பெரும் பொருளியல் வீழ்ச்சியை முடிவுக்குக் கொண்டுவர பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் புதிய பயனுரிமைக் கொள்கை(New Deal) என்ற புதிய சீரமைப்புக் கொள்கையை உருவாக்கினார். இது உதவி, மீட்பு, சீர்திருத்தம் என்ற மூன்று அம்சங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தது. புதிய பயனுரிமைச் சட்டத்தின் ஒரு சில திட்டங்களைத் தவிர மற்ற அனைத்தும் அமெரிக்கப் பொருளாதாரத்தை வலுவடையச் செய்தன. மக்களுக்கு அரசின் மீது நம்பிக்கை ஏற்படச் செய்தன. பொருளாதார மேன்மைக்கும் உற்பத்திப் பெருக்கத்திற்கும் உறுதியான அடித்தளம் அமைத்துக் கொடுத்தன. புதிய பயனுரிமைச் சட்டத்தின் சில திட்டங்களான முதலாளி தொழிலாளி கூட்டுப் பேச்சுவார்த்தை, பங்கு பரிவர்த்தனை முறைப்படுத்துதல் மற்றும் வேலை நேரக்கட்டுப்பாடுகள் முதலியன இன்றும் அமெரிக்கர்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாகத் திகழ்கின்றன. இந்தப் பயனுரிமைத் திட்டம் உலக நாடுகளின் சீர்திருத்தங்களுக்கு வழிகாட்டியாக உள்ளது. இதன் விளைவால் மீண்டும் 1940 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் பொருளாதாரம் இயல்பு நிலைக்குத் திரும்பியது. 1971 இல் வியட்நாம் போருக்குப் பிறகு, அமெரிக்க அரசு இனி தமது வணிகத்தில் அமெரிக்க அரசு தங்க மதிப்பை கணக்கில் கொள்ளாது. அமெரிக்காவோடு வணிகம் செய்யும் பிற நாடுகள் அமெரிக்க டாலர் மதிப்பை மட்டுமே பொது மதிப்பாக கொள்ள வேண்டும் என்று அறிவித்தது. அமெரிக்கப் பெரு முதலாளிகளின் மூலதனம், நவீன தொழில் நுட்பம், வெளி வாணிபம், அரசியல் மேலாதிக்கம் முதலானவற்றில் உலகின் பெரும்பாலான நாடுகள் அமெரிக்காவிடம் அகப்பட்டு இருந்த காரணத்தால், 1971 க்குப் பிறகு உலகப் பொது நாணயமாக அமெரிக்க டாலர் முன்மொழியப்பட்டுக் கோலோச்சத் தொடங்கியது. கொரியப் போர் கொரியப் போர் என்பது, 1950 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி முதல் 1953 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி வரை வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடம் பெற்ற போரைக் குறிக்கும். இரண்டு கொரியாக்களுமே தமது சொந்த அரசாங்கங்களின் கீழ் கொரியாவை ஒருமைப்படுத்த முயன்றன. இப் போரில் இரண்டு அரசாங்கங்களுக்குமே வெளிச் சக்திகளின் ஆதரவு இருந்தது. "கொரியப் போர்" என்பது முன்னர் குறிப்பிட்ட தீவிரமான போர்க்காலத்துக்கு முன்னும் பின்னும் நடந்த நிகழ்வுகளையும் சேர்த்துக் குறிக்கப் பயன்படுவது உண்டு. கொரியா முழுமைக்குமான தேர்தல் தொடர்பாக எழுந்த பிணக்குக்குப் பின்னரும், எல்லைப் பிரச்சினை தீவிரமானதைத் தொடர்ந்தும் 1950 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் நாள் வட கொரியப் படைகள் தென் கொரியாவைத் தாக்கின. பரந்த பனிப் போரின் ஒரு பகுதியாக ஐக்கிய அமெரிக்காவும், சோவியத் ஒன்றியமும் கொரியாவில் தலையிட்டதனால் இப் போர் மேலும் விரிவடைந்தது. இப் போர் தொடங்கிய நாளையொட்டி இதனைத் தென் கொரியாவில் "6-25 போர்" என்று அழைப்பர். ஆனாலும் முறைசார்ந்த வகையில் இது கொரியப் போர் என்றே குறிப்பிடப்படுகிறது. வட கொரியாவிலும் பொதுவாகக் கொரியப் போர் என்றே இது அழைக்கப்பட்டாலும், முறையாகக் குறிப்பிடும்போது இதனைத் "தந்தையர் நாட்டு விடுதலைப் போர்" என்பர். அமெரிக்காவில் இதனைக் காவல்துறை நடவடிக்கை - கொரியப் பிணக்கு - என்பர். போர் அறிவிப்பு ஒன்றை அமெரிக்க மேலவை வெளியிடவேண்டிய தேவையை இல்லாமல் செய்வதற்காகவே போர் என்று குறிப்பிடுவதை அமெரிக்கா தவிர்த்தது என்பர். சில சமயங்களில் இதனை "மறக்கப்பட்ட போர்" அல்லது "அறியப்படாத போர்" எனவும் குறிப்பிடுவது உண்டு. இது 20 ஆம் நூற்றாண்டின் முக்கியமானதொரு போராக இருந்தும், இரண்டாம் உலகப் போர், வியட்நாம் போர் போன்றவற்றிலும் மிகக் குறைந்த முக்கியத்துவமே இதற்குக் கொடுக்கப்பட்டதே இப் பெயர்களுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இப் போரில் பயன்படுத்தப்பட்ட நுட்பங்கள் முதலாம் உலகப் போரிலும், இரண்டாம் உலகப் போரிலும் பயன்படுத்தப்பட்ட நுட்பங்களின் தனித்துவமான கலவையாக இருந்தது. தொடக்கத்தில் விரைவான காலாட்படை முன்னேற்றமும் அதைத் தொடர்ந்து அமெரிக்காவினதும் அதன் கூட்டாளிகளினதும் விமானக் குண்டு வீச்சுக்களும் இடம்பெற்றன. எனினும் இரண்டு தரப்பினரும் தாம் கைப்பற்றிய பகுதிகளைத் தக்க வைக்கமுடியாமல் போனதால் ஜனவரி 1951 இல் இது முதலாம் உலகப் போர்ப் பாணியிலான பதுங்குகுழிச் சண்டையாக உருவானது. இறுதியில் ஒருவரும் வெற்றிபெற முடியாத நிலை ஏற்படும்வரை இது நீடித்தது. உருசியப் புரட்சி, 1917 உருசியப் புரட்சி 1917 என்பது, ரஷ்யாவில் 1917 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக நடைபெற்ற இரண்டு மக்கள் புரட்சிகளையும், அது தொடர்பான நிகழ்வுகளையும் குறிக்கும். இப்புரட்சிகள்உருசியப் பேரரசு சமூக இயல்புகளை மாற்றியதுடன், ரஷ்ய அரசையும் மாற்றியமைத்தன. சாரிய சர்வாதிகாரம் அகற்றப்பட்டு சோவியத் ஒன்றியம் அமைக்கப்பட்டது. இது பெட்ரோகிராட் நகரை மையமாகக் கொண்டு நிகழ்ந்தது. தற்போது இந்நகரம் லெனின்கிராட் என்று அழைக்கப்படுகிறது. உருசியப் புரட்சி, 1905 தான் பெப்ரவரிப் புரட்சி, 1917 ஆம் ஆண்டில் நடைபெறுவதற்குக் காரணியாக அமைந்தது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சோவியத் என்று அழைக்கப்படும் தொழிலாளர் குழு, இந்தக் குழப்பத்தை உருவாக்கியது. மேலும் கம்யூனிஸ்ட்களின் அரசுக்கு எதிராகப் போராடத் தொடங்கியது. உழவர்களின் அடிப்படைக் கோட்பாடாக நம்பப்பட்டது , உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்பதாகும். அதே சமயத்தில் உழவர்களின் வாழ்க்கை முறையானது தொடர்ந்து மாற்றம் பெற்றுக்கொண்டே இருக்கின்றன. இந்த வகையான மாற்றங்கள் ஏற்படுவதற்கு விவசாயிகள் பலர் கிராமங்களிலிருந்து புலம்பெயர்ந்து வருவதும் முக்கியக் காரணமாக அமைகின்றது. மேலும் நகர்ப்புறங்களில் உள்ள கலாச்சாரங்கள் கிராமங்களுக்கு ஊடகம், பொருட்கள் வாயிலாகச் சென்று சேர்ந்ததும் இதன் முக்கியக் காரணமாக அமைந்தது. மேலும் தொழிலாளர்களின் இந்த அதிருப்திக்குப் பல நியாயமான காரணங்களும் இருந்தன. 1917 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் முதலாளித்து‍வப் புரட்சி நடைபெற்றது‍. இதன் இறுதியில் டூமாவின் உறுப்பினர்கள் நாட்டின் கட்டுப்பாட்டைப் பொறுப்பேற்றுக் கொண்டு ரஷ்ய இடைக்கால அரசொன்றை அமைத்தனர். சாரின் படைத் தலைவர்கள் புரட்சியை அடக்குவதற்கான வழிகள் எதுவும் இல்லையென உணர்ந்து கொண்டனர். கடைசி சார் மன்னரான இரண்டாம் நிக்கலாஸ் தனது பதவியைத் துறந்தார். சோவியத்துக்கள் எனப்பட்ட தொழிலாளர் சபைகள், தீவிர சமூகவுடமைப் பிரிவினரால் வழிநடத்தப்பட்டது. இவர்கள் தொடக்கத்தில் புதிய அரசை ஏற்றுக்கொண்ட போதும், அரசில் செல்வாக்குச் செலுத்துவதற்கான சிறப்புரிமைகளைக் கோரி வந்தனர். இது இரட்டை அதிகார நிலையை உருவாக்கியது. இடைக்கால அரசு அரச அதிகாரத்தைக் கொண்டிருக்க, தேசிய அளவில் பெரிய வலையமைப்பைக் கொண்டிருந்த சோவியத்துக்கள் பொருளாதார நிலையில் தாழ்ந்த வகுப்பினரதும் இடதுசாரிகளினதும் ஆதரவைப் பெற்று வலுவுடன் இருந்தது. இடைக்கால அரசு போரைத் தொடர விரும்பியது. போல்செவிக்குகளும், இடதுசாரியினரும் போரைக் கைவிட விரும்பினர். போல்செவிக்குகள் தொழிலாளர் படையைச் செங்காவலராக மாற்றி அமைத்தனர். 1922 இல் சோவியத் ஒன்றியம் உருவானது. இது அக்டோபர் புரட்சி அல்லது 25 ஆம் நாள் எழுச்சி என்று குறிப்பிடப்பட்டது. இது நவம்பர் புரட்சி என்றும் அழைக்கப்படுகிறது. பெப்ரவரி மாத தொடக்கத்தில் , பெட்ரோகிராட் தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றில் ஈடுபட்டனர். மார்ச் 7 அன்று பெட்ரோகோவின் மிகப்பெரிய தொழிற்சாலையான புட்டில்லோவில் உள்ள தொழிலாளர்கள் ஒரு வேலைநிறுத்தத்தை அறிவித்தனர். அதற்கு அடுத்த நாள் பல்வேறு கூட்டங்கள் மற்றும் பேரணிகள் ஆகியவை அனைத்துலகப் பெண்கள் நாளுக்காகக் கூடினர். ஆனால் இது படிப்படியாக அரசியல் கூட்டமாக மாறியது . இந்த வேலை நிறுத்தத்தில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டனர். பெட்ரோகிராடில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் செயல்படாமல் இருந்தது. கீழே கொடுக்கப்பட்டுள்ள திகதிகள் யூலியன் நாட்காட்டி படி கொடுக்கப்பட்டுள்ளன, இஃது உருசியாவில் 1918 ஆம் ஆண்டு வரை பயன்படுத்தப்பட்டது. இது கிரெகொரியின் நாட்காட்டியில் இருந்து 12 நாட்கள் பின்தங்கியிருந்தது (19-ஆம் நூற்றாண்டு), 20-ஆம் நூற்றாண்டில் 13 நாட்கள் பின்தங்கியிருந்தது. உருசியா புரட்சி பல திரைப்படங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் அரசியல் பிரிவுகள் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் உள்ளடக்கில் இருக்கிற அரசியல் பிரிவுகள் ("US State") : மொத்தத்தில் அமெரிக்காவில் ஏறத்தாழ 85,000 அரசியல் பிரிவுகள் உள்ளன. தீண்டாமை தீண்டாமை ஒரு சமூகக் குழுவினரை ஏனைய சமூகக் குழுவினரோடு சம உரிமையோடு தொடர்புகளைப் பேணுவதைத் தடுக்கும் ஒரு சமூக முறைமையாகும். சமூகத்தின் பொது விதிகளுக்குள் வரையறுக்க முடியாதவர்கள் வழமையாக தீண்டாமைக்குட்படுத்தப்படுகின்றனர். எடுத்துக்காட்டாக வெளிநாட்டவர்கள், பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர்கள், குற்றவாளிகள், ஓரினச்சேர்கையாளர்கள், திருநங்கைகள், கழிவகற்றும் தொழில் செய்பவர்கள் போன்றவர்கள் தொடர்ச்சியாக தீண்டாமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தீண்டாமை சமூகத்தின் பொது விதிகளுக்கு அமையாதவர்களையும், விதிகளை மீறியவர்களையுன் தண்டித்து பொது சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கும் செயற்பாடகவும் பயன்பட்டுள்ளது. தீண்டாமை பரவலாக இந்தியா, இலங்கை, பர்மா, நேபாளம், பாகிஸ்தான், மற்றும் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் தலித் மக்கள் நடத்தப்படும் முறைமையைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. இந்திய விடுதலைக்குப் பின்னர் தீண்டாமை சட்டவிரோதமாதாகும். யேமனில் நிலவிவரும் அல்- அக்டாம் இனத்தவருக்கு எதிரான பாகுபாடும், யப்பானில் புரகுமின் மக்களுக்கு எதிரான பாகுபாடும், ஐரோப்பாவில் நாடோடிகளுக்கெதிரான பாகுபாடும் தீண்டாமைக்கான எடுத்துக்காட்டுகளாகும். டானியல் டெனற் டானியல் கிளமென்ற் டெனற் (டேனியல் கிளமென்ட் டென்னட்; "Daniel Clement Dennett", பி. மார்ச் 28, 1942, பாஸ்டன், மாசசூசெட்ஸ்) அமெரிக்காவின் ஒரு முக்கிய மெய்யியலாளர். டானியல் டெனற்றின் மனம் பற்றிய பொருள்முதல்வாத கருத்துக்களும் செயற்கை அறிவாண்மை பற்றிய புரிதல்களும் செல்வாக்கு மிக்கவை. இவர் அறிவியல், உயிரியல் சிறப்பாக படிவளர்ச்சி உயிரியல், நரம்பணுவியல் பற்றியும் மெய்யியல் நோக்கில் ஆய்பவர். இவர் ஒரு இறைமறுப்பாளர். இறைமறுப்புக்கு ஆதரவாகவும் செயற்படுபவர். புதிய இறைமறுப்பு இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். ரிச்சர்ட் டாக்கின்சு கிளின்டன் ரிச்சார்ட் டாக்கின்சு ("Clinton Richard Dawkins", பிறப்பு: மார்ச் 26, 1941) பரவலாக அறியப்பட்ட ஒரு படிவளர்ச்சி உயிரியலாளர். இவரது "செல்ஃபிஷ் ஜீன்" ("The Selfish Gene") (1976) நூல் படிவளர்ச்சி கொள்கை பற்றிய ஒரு பரந்த அறிதலுக்கு மிக்க உதவியது. இவர் உயிரியல் துறையிலும் முக்கிய பங்களிப்பு செய்துள்ளார். குமுக (சமூக) மானிடவியல் துறைக்கும் படிவளர்ச்சி மானிடவியல் துறைக்குமான உரையாடல்களில் இவரது கருத்துக்கள் படிவளர்ச்சி மானிடவியல் சார்ந்தே முன்வைக்கப்படுகின்றன. 2006 ஆம் ஆண்டில் டாக்கின்சு எழுதிய "தி காடு டில்யூசன்" (The God Delusion) என்ற நூல் பெரும் விவாதத்தை உருவாக்கியது. அதில் எப்படி உயிரியலில் மரபணு (Gene) என்பது அடிப்படைக் கூறாக உள்ளதோ அதுபோல பண்பாட்டுக்கு அவர் 'மீம்' (Meme) என்ற புதிய கருதுகோளை அறிமுகப்படுத்துகிறார். இதனைத் தலைமுறை தலைமுறையாக செலுத்தும் பண்பாட்டின் மரபணுக்கூறு (Unit of Cultural Transmission) என்று கூறுகின்றார். மரபணுக்களுக்கு ஈடாக- இன்னும் அதற்கு மேலாக- உருவகப்படுத்தப்பட்ட இக்கருதுகோள் தொடர்பான கருத்துரையாடல்கள் "அறிவுயிரிகள்" நடுவில் பல காலங்கள் தொடர்ந்தது. ஏற்கனவே உளவியல் வல்லுநர்களான யூங் (Young) போன்றோரால் கூறப்பட்ட மரபணுவியல் உளப்பகுப்பாய்வு என்னும் கருதுகோள் இதுசாரப்பட்டதே. இனம் சார் கருத்தியல்களும் மதம்சார் கருத்தியல்களும் இதனூடு கடத்தப்படுகின்றன என்பது இவரது வாதம். சமூக மானிடவியலாளர்களை மேவும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட கருதுகோளே "மீம்" என்ற கருத்து டாக்கின்சு பற்றிய விமர்சனங்களில் கூறப்படுகின்றது. டாக்கின்சு ஒரு இறைமறுப்பாளர். இறைமறுப்புக்கு ஆதரவாகவும் தீவிரமாக செயற்படுபவர். ரிச்சார்ட் டாக்கின்சு, கென்யாவில் உள்ள நைரோபியில் பிறந்தார். கென்யாவில் பிறந்திருந்தாலும், அவர் ஒரு பிரிட்டனின் குடிமகன் ஆவார். அவர் தந்தை இங்கிலாந்தின் குடியேற்ற ஆட்சியின் வேளாண் குடிமை அதிகாரியாகக் கென்யாவில் பணியாற்றினார். 1962 இல், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறையில் பட்டம் பெற்றார். நோபல் பரிசு வென்ற பண்பாள்மையிலாளர், நிக்கலாசு டின்பேர்கனின் மாணவராக பயின்றார். டாக்கின்சு தன்னை இறைமறுப்பாளர் என்று அறிவித்துக்கொண்டவர். சிறுவயதில் கிறித்தவத்தில் இருந்தாலும், டார்வினை அறிந்த பின், மத நம்பிக்கைகளை இழந்தார். பரிணாமத்தை புரிந்து கொண்டதே, இறைமறுப்புக்கு வித்திட்டது என்று தெரிவித்துள்ளார். மத நம்பிக்கைகள் ---- தரவுகள் ஏதுவும் இல்லாத மூடநம்பிக்கைகள்----உலகின் மிக மோசமான தீவினைகள் என்று குறிப்பிட்டுள்ளார். அயான் கேர்சி அலி அயான் கேர்சி அலி (அயான் ஹிர்சி அலி, ஆங்கிலம்: "Ayaan Hirsi Ali"; சோமாலி மொழி: "Ayaan Xirsi Cali"; பி. 13 நவம்பர், 1969, மொகடிசு, சோமாலியா) ஒரு பெண்ணியவாதி, அரசியல்வாதி, எழுத்தாளர். இவர் இசுலாமிய தீவிரவாதத்துக்கு எதிராகக் குரல் எழுப்பும் முன்னாள் முஸ்லீம்களில் மிகவும் அறியப்பட்டவர். இவர் ஆபிரிக்காவில் இருந்து 1992 -ஆம் ஆண்டு புலம் பெயர்ந்தார். அங்கு அவர் இஸ்லாமை விமர்சனம் செய்தார். அங்கு அவர் டச்சு இயக்குனர் தியோ வான் கோவுடன் இணைந்து அடிபணிதல் ("Submission) என்ற படத்தை எடுத்தார். அப்படத்தால் ஆத்திரமுற்ற ஒரு முஸ்லீமால் அந்த இயக்குநர் கொல்லப்பட்டார். அதன் பின் அயான் கேர்சி அலி தனது உயிருக்கு பயந்து டச்சு பாதுகாப்பில் இருந்தார். பின்னர் அவர் அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தார். 2005 இல் டைம் இதழ் இவரை உலகின் 100 செல்வாக்கு மிக்க மனிதர்களில் ஒருவராக அறிவித்தது. 2002-ஆம் ஆண்டு இவர் தன்னை ஒரு இறைமறுப்பாளர் என்று அறிவித்தார். சரவாக் சரவாக் ("Sarawak") போர்னியோ தீவில் உள்ள இரு மலேசிய மாநிலங்களில் ஒன்றாகும். சபா இன்னொரு மாநிலம் ஆகும். "பூமி கென்யாலாங்" என அழைக்கப்படும் சரவாக், போர்னியோ தீவில் வட மேற்கே அமைந்துள்ளது. மலேசியாவின் மிகப் பெரும் மாநிலம் இதுவாகும். இரண்டாவது பெரிய மாநிலமான சபா தீவின் வடகிழக்கே அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைநகரம் கூச்சிங். 2006 கணக்கெடுப்பின் படி அதன் மக்கள் தொகை 579,900 ஆகும். சரவாக் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 2,357,500. இங்குள்ள பெரும்பான்மையானோர் முஸ்லிம் அல்லாதோர் ஆவர். இங்கு மலாய் மக்கள் அல்லாத 30 பழங்குடி இனக் குழுக்கள் வாழ்கின்றனர். 16ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் போர்னியோ தீவின் கிழக்குக் கரையில் போர்த்துக்கீசியர் வந்திறங்கினர். ஆனாலும், அவர்களால் அங்கு குடியேற முயலவில்லை. 17ம் நூற்றாண்டில் சுல்தான் தெங்கா என்பவரால் ஆளப்பட்டாலும், இன்றைய சரவாக் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் புருணை சுல்தானகத்தினால் ஆளப்பட்டு வந்தது. 1841 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் புரூக் இங்கு வந்தார். இவர் வந்த காலத்தில் அங்கு டயாக் பழங்குடியினர் சுல்தானுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அவர்களின் கிளர்ச்சியை அடக்க சுல்தான் புரூக்கின் உதவியை நாடினார். புரூக் சூல்தானுடன் ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டார். அதன்படி சரவாக் ஜேம்ஸ் புரூக்கிடம் ஒப்படைக்கப்பட்டது. 1841, செப்டம்பர் 24 இல் சுல்தான், ஜேம்ஸ் புரூக்கை சரவாக்கின் ஆளுநராக ஆக்கினார். ஜேம்ஸ் புரூக் தன்னை "சரவாக்கின் ராஜா" என அறிவித்துக் கொண்டார். அதன் பின்னர் அங்கு வெள்ளை ராஜா வம்சத்தை ஏற்படுத்தினார். 1842, ஆகஸ்ட் 18 ஆம் நாள், ஜேம்ஸ் புரூக் சரவாக்கின் ராஜாவாக புருணை சுல்தானினால் அறிவிக்கப்பட்டார். 1868 இல் இறக்கும் வரையில் சரவாக்கை ஆட்சி செய்தார். அதன் பின்னர் அவருடைய மருமகன் சார்ல்ஸ் புரூக் 1917 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தார். அவர் இறந்த பின்னர் அவரது மகன் சார்ல்ஸ் வைனர் புரூக் ஆட்சி செய்தார். புரூக் வம்சாவளியினர் சரவாக்கை கிட்டத்தட்ட நூறு ஆண்டுகாலம் ஆட்சி செய்தனர். இவர்கள் வெள்ளை ராஜாக்கள் எனப் புகழ் பெற்றிருந்தனர். எனினும் பிரித்தானியாவின் ஏனைய கூடியேற்ற நாடுகளைப் போல் அல்லாமல் சரவாக் ராஜாக்கள் பழங்குடிகளின் உரிமைகளைப் பாதுகாத்து வந்தனர். சீன வர்த்தகர்களின் வருகையை ஊக்குவித்தாலும், அவர்களை பழங்குடியினர் வாழும் இடங்களில் குடியேற அனுமதிக்கவில்லை. டயாக் மக்களின் கலாச்சாரத்தில் சீனர்கள் கலப்பதை வெள்ளை இராசாக்கள் விரும்பவில்லை. புரூக் வம்சாவளியினர் சரவாக் அருங்காட்சியகம் ஒன்றை அமைத்தார்கள். இது போர்னியோவின் முதலாவது அருங்காட்சியகம் ஆகும். இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் சரவாக்கை முற்றுகையிட்டது. 1941 டிசம்பர் 16 இல் மிரி நகரையும், டிசம்பர் 24 இல் கூச்சிங் நகரையும் கைப்பற்றினர். போர்னியோ தீவு முழுவதையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். 1945 இல் ஆஸ்திரேலியப் படைகள் ஜப்பானியரிடம் இருந்து போர்னியோவைக் கைப்பற்றினர். ஜூலை 1, 1946 இல் ராஜா சரவாக்கின் அதிகாரத்தை பிரித்தானியாவிடம் ஒப்படைத்தார். பதிலாக ராஜா குடும்பத்துக்கு மிகப் பெறுமதியான ஓய்வூதியம் வழங்கப்பட்டது. ஆனாலும், ராஜாவின் மருமகன் அந்தோனி புரூக் சரவாக்கின் தீவிரவாதிகளுடன் இணைந்து ஆட்சிக்கு உரிமை கோரி வந்தார். உலகப் போரின் முடிவில் சரவாக்கில் இருந்து தப்பியோடினார். பதினேழு ஆண்டுகளுக்குப் பின்னர் சரவாக் மலேசியாவுடன் இணைக்கப்பட்ட போது இவர் நாட்டுக்குத் திரும்பிவர அனுமதிக்கப்பட்டார். மலாய் மக்கள் சரவாக்கைப் பிரித்தானியரிடம் ஒப்படைத்ததில் பலத்த எதிர்ப்பைக் காட்டினர். 1946 இல் சரவாக்கின் முதலாவது பிரித்தானிய ஆளுநர் சர் டுங்கன் ஜார்ஜ் ஸ்டீபர்ட் படுகொலை செய்யப்பட்டார். சரவாக் அதிகாரபூர்வமாக 1963, ஜூலை 22 இல் விடுதலை அடைந்து அதே ஆண்டு செப்டம்பர் 16 இல் மலேசியக் கூட்டமைப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. ராகுலன் ராகுலன் (பிறப்பு: கி மு: 534) சித்தார்த்த கவுதமருக்கும் - யசோதரைக்கும் பிறந்த ஒரே மகன். ராகுலன் பிறந்த நாளன்றே கௌதமர் அரண்மனையை விட்டு வெளியேறி விட்டார். பின்னர் ராகுலனை அவனது தாய் யசோதரையும் தாத்தா சுத்தோதனரும் வளர்த்தனர். ராகுலன் வளர்ந்த பின்னர் புத்தரின் முக்கிய பத்து சீடர்களில் ஒருவனாக விளங்கினார். ராகுலனுக்கு குருவாக பாடம் கற்றுக் கொடுத்தவர் இருந்தவர் மௌத்கல்யாயனர் ஆவார். யசோதரை யசோதரை கவுதம புத்தரின் மனைவி. இவர் சுப்பபுத்தருக்கும் பமிதாவுக்கும் மகளாகப் பிறந்தார். பமிதா சுத்தோதனரின் உடன் பிறந்தவள். சித்தார்த்தருக்கு சமவயதுடைய யசோதரைக்கு 16-ஆம் வயதில் திருமணம் நடந்தது. ராகுலன் இவர்களது ஒரே மகன் ஆவான். சுவேதாம்பரர் சுவேதாம்பரர் என்பது சமண சமயத்தின் இரு பெரும் பிரிவுகளில் ஒன்று. மற்றொரு பிரிவு திகம்பரர் எனப்படும். சுவேதாம்பரர் என்பதன் பொருள் 'வெள்ளை ஆடை உடுத்திய' என்பது. எனவே இப்பிரிவைப் பின்பற்றுபவர்கள் வெண்ணிற ஆடை உடுத்தியிருப்பர். மற்றொரு பிரிவான திகம்பரர் என்பது 'வெளியை உடுத்திய' என்னும் பொருள் தரும். பார்வோன் பார்வோன் ("Pharaoh", அரபுமொழி: ஃபிர்அவ்ன்) என்பது பண்டைய எகிப்தை ஆண்டு வந்த ஆட்சியாளர்களின் சிறப்புப் பெயர் ஆகும். இவர்கள் சிவப்பும் வெள்ளையும் கொண்ட மகுடத்தை அணிந்திருந்தனர். இதன் பொருள் இவர்கள் மேல் எகிப்தையும் கீழ் எகிப்தையும் ஆள்பவர்கள் என்பது ஆகும். இவர்களின் ஆட்சி அதிகாரம் காரணமாக இவர்களை பண்டைய எகிப்தியர்கள் 'கடவுள்களின் வழித்தோன்றலாக'க் கருதி வந்தனர். மாயா மாயா அல்லது மகா மாயா கவுதம புத்தரின் தாயார். இவரை மகாமாயா, மாயாதேவி என்ற பெயர்களாலும் அழைப்பர். இவர் பண்டைய நேபாளத்தின் "தேவதகா" வம்சத்தில் பிறந்தார். இவர் கபிலவத்துவின் மன்னனான சுத்தோதனரை மணந்தார். இவருக்கு லும்பினியில், கௌதமர் பிறந்த ஏழு நாட்களுக்குப் பின்னர் இறந்து விட்டார். கௌதம புத்தரை வளர்க்க, சுத்தோதனர், மாயாவின் தங்கையான மகாபிரஜாபதி கௌதமியை திருமணம் செய்து கொண்டார். சோக்துரி சோக்துரி ("chokturi") என்பது கொரியப் பெண்களால் தலையில் அணியப்படும் ஓர் அணிகலன். பண்பாட்டுச் சிறப்பு வாய்ந்த இந்தக் கிரீடம் போன்ற அணி திருமணம் போன்ற சிறப்பு நிகழ்வுகளின் போது அணியப்படுகிறது. இதன் வெளிப்புறம் கருப்புப் பட்டுத்துணியாலும் உட்புறம் பஞ்சு, கெட்டியான காகிதம் போன்றவற்றாலும் செய்யப்பட்டிருக்கும். சாவோ பிரயா ஆறு சாவோ பிரயா ஆறு தாய்லாந்தில் உள்ள ஒரு பெரிய ஆறு. பிங் ஆறும் நன் ஆறும் இணைந்து இந்த ஆறு பிறக்கிறது. பின்னர் இவ் ஆறு வடக்கில் இருந்து தெற்காக நடுத் தாய்லாந்து ஊடாக பேங்காக்கை நோக்கிப் பாய்ந்து பின் தாய்லாந்துக் குடாவில் கலக்கிறது. பேங்காக்கில் சாவோ பிரயா ஆற்றின் வழியாக குறிப்பிடத்தகுந்த அளவு நீர்வழிப் போக்குவரத்து நடைபெறுகிறது. கிம் கிம் என்பது கொரியாவில் மிகப் பரவலாகக் காணப்படும் ஒரு குடும்பப் பெயர். இது வட கொரியா, தென் கொரியா ஆகிய இரு நாடுகளிலுமே பரவலாக உள்ளது. இச்சொல்லுக்கான சீன எழுத்தான 金 என்பதன் பொருள் தங்கம் என்பதாகும். ஏறத்தாழ 21% கொரியர்கள் கிம் என்ற குடும்பப் பெயரைக் கொண்டுள்ளனர். பிட்ஸ்பர்க், பென்சில்வேனியா பிட்ஸ்பர்க், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள ஒரு பெரிய நகரமாகும். "எஃகு நகரம்" என்று அழைக்கப்பட்டது. பிட்ஸ்பர்க் வழியாக அலெகேனி, மொனொங்கஹேலா, ஒகையோ ஆகிய மூன்று ஆறுகள் ஓடுகின்றன. ஜாக்சன்வில், புளோரிடா ஜாக்சன்வில் (Jacksonville) அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் பரப்பளவின் படியும் மக்கள் தொகையின் படியும் மிகப்பெரிய நகரமாகும். தொடரும் அமெரிக்க மாநிலங்களிலேயே (அலாஸ்கா மற்றும் ஹவாய் தவிர அனைத்து மாநிலங்களில்) பரப்பளவின் படி மிகப்பெரிய நகரமாகும். புளோரிடாவின் வடகிழக்கு பகுதியில் டுவால் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இலங்கைத் திரைப்படத்துறை இலங்கைத் திரைப்படத்துறை 1947 இல் ஆரம்பித்திருக்கிறது. இலங்கைத் திரைப்படத்துறையின் ஆரம்பகாலம் முற்று முழுதாக இந்தியாவையே சார்ந்திருந்தது. இலங்கையில் திரைப்படத்துறை தொடங்கிய காலத்தில் இருந்து ஏறக்குறைய பத்து ஆண்டுகள் சிங்களத் திரைப்படங்கள் தென்னிந்திய படப்பிடிப்புக் கலையகங்களிலேயே உருப்பெற்றன. அங்கு உருவாக்கப்பட்ட சிங்களத் திரைப்படங்களின் இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள், தொழில் நுட்பவியலாளர்கள் எல்லோருமே தென்னிந்தியர்களாகவே இருந்ததினால் அந்தத் திரைப்படங்கள் சிங்கள பாரம்பரியங்களைச் சுட்டிக் காட்டுவனவாக இல்லாமல் பெரும்பாலும் தென்னிந்திய பாரம்பரியங்களைக் கூறுவனவாகவே அமைந்திருந்தன. திரைப்படத்தில் பேசிய மொழி சிங்களமாகவும், பங்கு பற்றிய நடிகர்கள் சிங்களவர்களாகவும் இருந்திருக்கிறார்களே தவிர கதைகள் வசன ஓட்டங்கள் எல்லாமே தென்னிந்திய திரைப்படங்களையே பிரதிபலித்திருந்தன. 1956 க்குப் பின்னரே இலங்கையில் சிங்களப்படங்கள் தயாரிக்கப்பட்டன. 1950 இல் இலங்கையில் தமிழ் திரைப்படத்தயாரிப்பு முயற்சிகள் ஆரம்பித்தன. முதல் முதலாக சிங்கள மொழி பேசும் திரைப்படம் ஜனவரி 21, 1947இல் திரையிடப் பட்டது. கடவுணு பொரன்டுவ (உடைந்த வாக்குறுதி) என்ற இந்தத் திரைப்படம் தென்னிந்திய படப்பிடிப்புக் கலையகத்திலேயே உருப்பெற்றிருந்தது. இந்தத் திரைப்படத்திற்கான இசையை ஆர். நாரயண ஐயர் வழங்கியிருந்தார். அவருக்கு உதவியாளராக இருந்து பணியாற்றியவர் முத்துக்குமாரசாமி ஆவார். இப்படத்தைத் தயாரித்து வழங்கியவர் எஸ். எம். நாயகம். இவர் ஒரு தமிழர். வி.கே.டி.பொன்னுசாமிபிள்ளை") இறைமறுப்பு வரலாறு இறை நம்பிக்கைகள் தோன்றிய காலம் தொட்டே, அத்தகைய நம்பிக்கைகளை கேள்விக்குட்படுத்திய, ஐயப்பட்ட, மறுத்த நிலைப்பாடுகளும் இருந்து வந்திருக்கிறன. இந்திய மெய்யியலில் பொருளியவாத, இறைமறுப்புக் கொள்கையை உலகாயதம் முன்னிறுத்தியது. மேற்குலக, கிரேக்க மெய்யியலில் Epicureanism, Sophisம் போன்று மெய்யியல்கள் இறைமறுப்பு கொள்கைகளைக் கொண்டிருந்தன. அறிவொளிக் காலத்தைத் தொடந்த அறிவியலின் வளர்ச்சி பல்வேறு வகைகளில் பொருளியவாத, இறைமறுப்புக் கோட்படுகளுகளுக்கு கூடிய ஆதாரங்களையும் வாதங்களையும் வழங்கி உள்ளது. இந்திய சிந்தனையில் வேதக் கடவுள்களை பெளத்தமும் சமணமும் மறுத்தன. எனினும் மறுபிறவி, பிறவி சுழற்சி போன்ற பல இந்து கொள்கைகளை ஏற்றுக் கொண்டன. இவற்றையும் மறுத்த மெய்யியல் உலகாயதம் ஆகும். சர்வாகம், நாத்திகம் ஆகியவையும் இறைமறுப்பு தத்துவங்கள் ஆகும். பண்டைத் தமிழர்கள் இயற்கை நம்பிக்கை அல்லது உலகாயுதக் கொள்கை உடையினர் என்பது சிலர் கருத்து. அக்காலத்தில் தமிழர் இன்பத்துக்கு முக்கியத்துவம் தந்து உலகில் வாழ்வதை முதன்மையாக கொண்டனர். சங்க காலப் பாடல்கள் பல காதல், வீரம், இன்பம் பற்றி அதிகம் கூறுவது இதற்கு ஒரு சான்றாக கொள்ளப்படுகிறது. இருப்பினும் பழங்காலத்திலேயே தமிழர் மத்தியில் இறை நம்பிக்கை இருந்தது. இந்து சமயம், பெளத்தம், சமணம் ஆகிய சமயங்கள் தமிழரிடையே வெவ்வேறு காலங்களில் செல்வாக்கு பெற்று இருந்தன, இருக்கின்றன. தமிழ்நாட்டில், ஈழத்தில் நடைபெற்ற இசுலாமிய, ஐரோப்பிய ஆட்சிகளின் போது குறிப்பிடத்தக்க தமிழர்களை இசுலாம், கிறித்தவ சமயங்களுக்கு மதம் மாறினார்கள். இருபதாம் நூற்றாண்டில் தமிழர் சிந்தனையில் இறைமறுப்பு மீண்டும் வலுப் பெற தொடங்கியது. மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பகுத்தறிவு, இறைமறுப்பு உட்பட திராவிட இயக்க கொள்கைகள் செல்வாக்கு பெற்றன. பெரியார், அண்ணாத்துரை, கருணானிதி ஆகிய தலைவர்கள் இறைமறுப்புக் கொள்கை முன்னெடுத்தனர். பண்டைய மனிதர் உலகம் பற்றி பல தகவல்களை அறியவில்லை. உலகின் இயல்புகள் பற்றி விரிவாக அறிவியல் நோக்கில் விளக்க பண்டைய மனிதரால் முடியவில்லை. அதனால் உலகின் பல விடயங்கள் பற்றி எளிய மீவியற்கை விளக்கங்களை மனிதர் வளங்கினர். இயற்கை நிகழ்வுகள் மீவியற்கை சக்திகளால் நிகழ்கின்றன என்று நம்பினார்கள். எடுத்துக்காட்டாக பண்டை கிரேக்க சமய கடவுள் சியுசு மின்னலை எறிவதாக பண்டை கிரேக்கர்கள் நம்பினார்கள். இன்று மின்னலுக்கு ஒரு அறிவியல் விளக்கம் உண்டு. மக்களுக்கு நோய்கள் ஏற்பட்ட போது பேய் பிடித்து விட்டது, அம்மன் கோபம் கொண்டு விட்டாள் என்று பல மூட நம்பிக்கைகள் இருந்தன. இன்றைய மருத்துவம் , மரபணுவியல் மற்றும் இதர இயற்கையான விளக்கங்களைத் தருகிறது. பியாஸ் ஆறு பியாஸ் ஆறு இமாச்சலப் பிரதேசத்தில் உற்பத்தியாகி 470 கிமீ தொலைவு ஓடி பஞ்சாப் மாநிலத்தை வளம் கொழிக்க செய்து சத்லஜ் ஆற்றுடன் கலக்கிறது. மணாலி இவ்வாற்றின் கரையில் உள்ள நகராகும். பியாஸ் என்ற பெயர் இந்து சமயத்தின் பெரும் காப்பியங்களில் ஒன்றான மகாபாரதத்தை எழுதிய வியாச முனிவரின் பெயரில் இருந்து தோன்றியதாக கருதப்படுகிறது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் இவ்வாற்றை "விபாசா" என்றும் அழைகின்றனர். மாவீரர் அலெக்சாண்டரின் இந்திய படையெடுப்பின் கிழக்கு எல்லையாக பியாஸ் ஆறு அமைந்திருந்தது. பியாஸ் ஆறு இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள ரோட்டங் பாஸ் என்ற இடத்தில் தோன்றி, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஹரிக்கே என்னும் இடத்தில் சத்லஜ் ஆற்றுடன் கலக்கிறது. பியாஸ் ஆற்றின் நீர் சிந்து நீர் ஒப்பந்தத்தின்படி இந்தியாவினால் பயன்படுத்தப்படுகிறது. பஞ்சாப் மாநிலத்தில் பாயும் பியாஸ் ஆறு குர்தாஸ்பூர்-ஹோசியர்பூர் மாவட்ட எல்லையாகவும், குர்தாஸ்பூர்-கபுர்தலா மாவட்ட எல்லையாகவும், அம்ரித்சர்-கபுர்தலா மாவட்ட எல்லையாகவும் உள்ளது. பியாஸ் ஆறு கலக்கும் ஹரிக்கே அம்ரித்சர் மாவட்டத்தின் தெற்கே பெரேஷ்பூர், அம்ரித்சர் மற்றும் கபுர்தலா மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ளது. பெரும் இன அழிப்பு பெரும் இன அழிப்பு என்பது இரண்டாம் உலகப் போர்க் காலத்தில், 6 மில்லியன் ஐரோப்பிய யூதர்கள் ஜெர்மனியில் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கப் பயன்படும் ஆங்கிலச் சொல்லான "ஹாலோகோஸ்ட்" (Holocaust) என்பதற்கு இணையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது, இதனை சோகா என்றும் குறிப்பர். இது அக்காலத்தில் ஜேர்மனியில் ஆட்சியில் இருந்த, அடொல்ஃப் ஹிட்லரின் தலைமையிலான தேசிய சோசலிச ஜேர்மன் தொழிலாளர் கட்சியின் (நாஸி) இன அழிப்புக் கொள்கையின் ஒரு பகுதியாக கீழ் இடம்பெற்றது. யூதர்கள் தவிர வேறும் பிற இனத்தவர்களும், பிரிவினரும் கூடப் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களுள், ஜிப்சிகள், சோவியத் ஒன்றியத்தவர் மற்றும் சோவியத் போர் கைதிகள், பொதுவுடமைவாதிகள், போல் இனத்தவர், பிற சிலாவிய மக்கள், ஊனமுற்றோர், தன்னினச் சேர்க்கையாளர், அரசியல் எதிரிகள், மாறுபட்ட சமயக்கருத்துக் கொண்டவர்கள், யூஹோவா சாட்சியாளர் என்போரும் அடங்குவர். பல அறிஞர்கள் "பெரும் இன அழிப்பு" என்னும் போது மேற்படி எல்லாப் பிரிவினரையும் சேர்த்துக் கொள்ளாமல் யூதர்களின் படுகொலையை மட்டுமே குறிப்பர். ஜேர்மன் அரசு இதனை "யூதர் பிரச்சினைக்கான இறுதித் தீர்வு" என வர்ணித்தது. நாஸி ஜேர்மனியில் இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட எல்லாப் பிரிவினரதும் மொத்தத் தொகை 9 தொடக்கம் 11 மில்லியன் வரை இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இத் தொல்லைகளும் படுகொலைகளும் ஜேர்மனியின் அரசினால் பல படிகளில் நிறைவேற்றப்பட்டன. யூதர்களைக் குடிமக்கள் சமூகத்திலிருந்து விலக்கும் சட்டம் இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு நீண்ட காலத்துக்கு முன்னரே இயற்றப்பட்டது. வதைமுகாம்கள் அமைக்கப்பட்டு, அங்கே கொண்டு வரப்படுபவர்கள் களைப்பாலும், நோயாலும் இறக்கும்வரை அடிமைகளாக வேலை வாங்கப்பட்டனர். கிழக்கு ஐரோப்பாவில் புதிய பகுதிகளைக் கைப்பற்றிய ஜெர்மனி, சிறப்புப் படையணிகள் மூலம், யூதர்களையும், அரசியல் எதிரிகளையும் கொன்று குவித்தது. யூதர்களும், ரோமாக்களும் நெருக்கடியான பகுதிகளில் அடைத்து வைக்கப்பட்டுப் பின்னர் அங்கிருந்து சரக்குத் தொடர்வண்டிகள் மூலம் நூற்றுக் கணக்கான மைல்கள் தொலைவில் இருந்த கொலை முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பலர் வழியிலேயே இறந்து போயினர். எஞ்சியோர் நச்சுவாயு அறைகளுள் அடைத்துக் கொல்லப்பட்டனர். அக்கால ஜேர்மனியின் அதிகார அமைப்பின் ஒவ்வொரு பிரிவும் இக் கொலை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன. ஜெர்மனி ஒரு இனப்படுகொலை அரசாக விளங்கியது என ஓர் அறிஞர் குறிப்பிட்டார். 1941 இலிருந்து 1945 வரை, யூதர்கள் ஒரு இனப்படுகொலை மூலம் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டனர்; இது ஐரோப்பாவின் பிற மக்களிடையே நடைபெற்ற அடக்குமுறை மற்றும் படுகொலை நிகழ்வுகளின் ஒரு பகுதியாக நிகழ்ந்தது. சுத்ஸ்டாப்பெல் ஒருங்கிணைப்பின் கீழ், நாட்சி கட்சியின் உயர் தலைமையின் வழிகாட்டல்கள் உடன், செருமனி அரசின் அதிகார மையத்தின் ஒவ்வொரு பகுதியும் செருமனி ஆக்கிரமிப்பு ஐரோப்பா முழுவதும் நடைபெற்ற பெரும் படுகொலைகளை நடத்துவதில் மற்றும் ஏற்பாடுகள் செய்வதில் ஈடுபட்டு வந்தது. இந்த நிகழ்வுகள் நாட்சி செருமனிக்குள், அதன் நேச நாடுகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பகுதிகளிலும் நிகழ்ந்தது. பெரும் மனித உரிமை மீறல்களை நிகழ்த்தும் நோக்குடன் 42,500க்கும் மேற்பட்ட தடுப்பு முகாம் வசதிகள் பயன்படுத்தப்பட்டன. பெரும் இன அழிப்பு செயலில் ஈடுபட்டவர்களாக 200,000க்கும் அதிகமான நபர்கள் கணக்கிடப்பட்டுள்ளனர். இந்த இன அழிப்பை நடைமுறைப்படுத்துவது ஒவ்வொரு படியாக, "யூதர்களின் கேள்விக்கு இறுதியான தீர்வு" என்று கூறப்பட்ட அழிப்புக் கொள்கையையின் படி நிகழ்ந்தது. இட்லர் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, செருமானிய அரசு யூதர்கள் குடிமைச் சமூகத்திலிருந்து வெளியேற்றுவதற்கான சட்டங்களை நிறைவேற்றியது, அதில் குறிப்பிடத்தக்கது நியூரம்பெர்க் சட்டம் 1935. 1933 இல் தொடங்கி நாட்சிகள் வதை முகாம் வலைப்பின்னல்களை அமைக்கத் தொடங்கினர். 1939 இல் போர் தொடங்கிய பிறகு செருமானிய மற்றும் வெளிநாட்டு யூதர்கள் போர்கால முகாம்களில் கூட்டம் கூட்டமாக அடைக்கப்பட்டனர். 1941 இல் செருமானி கிழக்கில் புதிய பகுதிகளைக் கைப்பற்றிய பிறகு எல்லா யூத எதிர்ப்பு செயல்களும் அதிகமாகியது. சிறப்பு துணை இராணுவப் படையினரான ஈன்சாட்சுகுரூப்பன் ஓராண்டிற்குள் 2 மில்லியன் யூதர்கள் வரை பெரும் துப்பாக்கிச் சூடுகள் மூலம் படுகொலை செய்தனர். 1942 இன் நடுப்பகுதியில், பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து சரக்கு தொடருந்துகள் மூலம் வதை முகாம்களுக்கு கடத்தப்பட்டனர். பயணத்தின் கொடுமையைத் தாங்கி உயிர் பிழைத்தவர்கள் புகை அரங்குகளில் திட்டமிட்டு கொல்லப்பட்டனர். இது ஐரோப்பால் 1945 ஏப்ரல் - மேயில் இரண்டாம் உலகப்போர் முடிவு வரை தொடர்ந்தது. யூத ஆயுதப் படைக் குழுக்கள் வரம்புடைய அளவில் இருந்தன. மிகக் குறிப்பிடத்தக்க விதிவிலக்கு 1943 இன் வார்சா முகாம் கிளர்ச்சி நிகழ்வாகும், அதில் ஆயிரக்கணக்கான குறைந்த ஆயுதங்களை கொண்ட யூத வீரர்கள் வாபன் சுத்ஸ்டாபலை கரையில் நான்கு வாரங்களுக்கு தடுத்து வைத்தனர். தோராயமாக 20,000 - 30,000 யூத பிரிவினைவாதிகள், கிழக்கு ஐரோப்பாவில் நாட்சி படைகளையும் அவர்களது கூட்டாளிகளையும் எதிர்த்து போரிட்டனர். பிரஞ்சு யூதர்கள், பிரஞ்சு எதிர்ப்பு நடவடிக்கைகளில் பங்கெடுத்து நாட்சி படைகள் மற்றும் விட்சி பிரஞ்சு அதிகாரத்திற்கெதிராக கொரில்லா போர் முறையில் போரிட்டனர். ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆயுதம் தாங்கிய யூத கிளர்ச்சி நடந்தன. ஹோலகோஸ்ட்டு (பெரும் இன அழிப்பு) என்ற சொல் கிரேக்க சொல்லான "ஓலக்கோசுட்டசு" என்ற சொல்லிலிருந்து வருகிறது, இது கடவுள்களுக்கு அழிக்கப்படும் விலங்கு படையலைக் குறிக்கிறது, அந்த நிகழ்வில் முழு விலங்கும் எரிக்கப்பட்டு கடவுளுக்கு படைக்கப்படுகிறது. பின்னர் இது பெரும் அளவில் மக்களை படுகொலை செய்யும் நிகழ்வுகளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. சோகா என்று சொல்லிற்கு, "பேரழிவு" என்பது பொருளாகும் இது 1940களில் ஆரம்பத்தில் பெரும் இன அழிப்பைக் குறிக்கும் ஈப்ரூ மொழிச் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஹோலகோஸ்ட்டு (பெரும் இன அழிப்பு) என்பது 1950களில் வரலாற்று ஆய்வாளர்களால் ஈப்ரூ மொழி சொல்லான "சோகோ" என்பதன் மொழிபெயர்ப்பாக யூத இனப்படுகொலையைக் குறிப்பாக சுட்டிக் காட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டது. ஹோலகோஸ்ட்டு என்ற பெயரிலான தொலைக்காட்சி தொடர் இச்சொல்லை யூத படுகொலையைக் குறிக்கும் பொதுவான சொல்லாக அமெரிக்க ஐக்கிய நாடுகள் முழுவதும் மாற்றியது என்று கூறப்படுகிறது. ஆனால் பாதிக்கப்பட்டவர்களில் நோக்குடன் பெரும் இன அழிப்பு என்பது யூதர்களைத் தவிர பல இன அழிவுகளையும் குறிக்கும் அதே வேளையில், "சோகோ" என்னும் சொல்லானது யூத இன அழிப்பைக் குறிப்பாக சுட்டிக் காட்டுகிறது. நாட்சி இனப்படுகொலையைக் குறிக்க "யூதர்களின் கேள்விக்கு இறுதித் தீர்வு" அல்லது "இறுதித் தீர்வு" என்ற சொற்றொடரைப் பயன்படுத்தினர். சிங் அரசமரபு சிங் அரசமரபு ("Qing Dynasty", சீன மொழி: 清朝 "சிங் சாவ்") அல்லது பெரும் சிங் (大清 "டா சிங்") என்பது, சீனாவை ஆண்ட இறுதி அரச மரபு ஆகும். 1644 தொடக்கம் 1912 ஆம் ஆண்டு வரை ஆட்சி நடத்திய இவ் அரசமரபுபை மாஞ்சு அரசமரபு எனவும் அழைப்பதுண்டு. இது, இன்றைய வடகிழக்குச் சீனாவைச் (மஞ்சூரியா) சேர்ந்த மாஞ்சு என்ற துங்குசிய இனக்குழுவான நுர்ஹாசியால் நிறுவப்பட்டது. 1644 இல் தொடங்கி சீனாவையும் அதைச் சூழ்ந்த பகுதிகளையும் உள்ளடக்கிய பேரரசானது. தொடக்கத்தில் பிந்திய ஜின் வம்சம் என்ற பெயரில் 1616 இல் உருவாகி 1636 இல் "சிங்" எனப் பெயர் மாற்றம் பெற்றது. 1644 இல் இந்த அரசமரபு பெய்ஜிங்கைக் கைப்பற்றியது. 1646 ஆம் ஆண்டளவில் இதன் ஆட்சி இன்றைய சீனாவின் பெரும் பகுதிகளுக்கு விரிவடைந்தது. எனினும் 1683 ஆம் ஆண்டிலேயே முழுச் சீனாவையும் இதன் ஆட்சிக்குள் கொண்டுவர முடிந்தது. இதன் ஆட்சிக்காலத்தில் சிங் அரசமரபு சீனக் கலாச்சாரத்துடன் ஒன்றிணைந்து விட்டது. இதன் படைபலம் 1800 களில் பெரிதும் குறைந்துவிட்டதுடன், வெளிநாட்டு அழுத்தங்கள், உள்நாட்டுக் குழப்பங்கள், போர்த் தோல்விகள் என்பவற்றை எதிர்கொள்ள வேண்டியும் ஏற்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதிக்குப் பின் சிங் வம்சம் சரியத் தொடங்கியது. சின்ஹாய்ப் புரட்சியைத் தொடர்ந்து, பேரரசர் புயியின் சார்பில் பேரரசி டொவேஜர் லோங்யு ஆட்சி உரிமையைக் கைவிட்டபோது சிங் அரசமரபு முடிவுக்கு வந்தது. எசுப்பானிய உள்நாட்டுப் போர் எசுப்பானிய உள்நாட்டுப் போர் என்பது, இரண்டாவது எசுப்பானியக் குடியரசு அரசுக்கு எதிராக அதன் படையினரில் ஒரு பகுதியினர் நடத்திய சதிப்புரட்சி முயற்சியின் விளைவாக எசுப்பெயினில் ஏற்பட்ட பெரிய உள்நாட்டுப் போரைக் குறிக்கும். இது 1936 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் நாள் தொடக்கம் 1939 ஏப்ரல் 1 ஆம் நாள் வரை எசுப்பெயின் நாட்டைச் சின்னாபின்னப் படுத்தியது. இது புரட்சியாளர் வெற்றி பெற்றதுடன் முடிவுக்கு வந்தது. பாசிஸ்ட் தளபதி பிரான்சிஸ்கோ பிராங்கோவின் தலைமையிலான சர்வாதிகார ஆட்சி நிறுவப்பட்டது. இப் போரில் தோல்வியடைந்த அரசு தரப்பினருக்கு சோவியத் ஒன்றியமும், மெக்சிக்கோவும் ஆதரவு அளித்தன. புரட்சியாளர்களுக்கு இத்தாலி, ஜேர்மனி, போர்த்துக்கல் ஆகிய ஐரோப்பிய நாடுகளின் ஆதரவு இருந்தது. இது இரண்டாம் உலகப் போருக்கு முந்திய பெரும் நெருக்கடி நிலையை உருவாக்கியிருந்தது. இது கம்யூனிச சோவியத் ஒன்றியத்துக்கும்; பாசிச இத்தாலி, நாசி ஜேர்மனி ஆகியவற்றுக்கும் இடையிலான மறைமுகப் போராகவே நடைபெற்றது. மக்கள் ஊடகங்களின் வருகையினால் இப்போர் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் உலகின் கவனத்தை ஈர்த்தது. இதன் மூலம், உலக அரசியல் பிரிவினைகளும், இது தரப்பாரும் நடத்திய அட்டூழியங்களும் வெளிச்சத்துக்கு வந்தன. எல்லா உள்நாட்டுப் போர்களையும் போலவே இதிலும், குடும்ப உறுப்பினர்களும், அயலவர்களும், நண்பர்களும் ஒருவருடன் ஒருவர் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. போராளிகள் மட்டுமன்றிப் பொது மக்களும் அவர்களது அரசியல், சமய நோக்குகள் காரணமாக இரு தரப்பினராலும் கொல்லப்பட்டனர். 1939 இல் போர் முடிவுக்கு வந்த பின்னரும் குடியரசு ஆதரவாளர்கள் வெற்றிபெற்ற தேசிய வாதிகளால் அவ்வப்போது துன்புறுத்தல்களுக்கு ஆளாயினர். புளிங்காடி புளிங்காடி ("Vinegar") என்பது எத்தனால் என்னும் நீர்மத்தை நொதிக்க வைப்பதின் மூலம் உருவாக்கப்படும் நீர்மப் பொருள். இதின் முக்கிய உட்பொருளான எத்தனாயிக் காடி (மற்றொரு பெயர் : அசிட்டிக் காடி), 4 முதல் 8 விழுக்காடு வரை நீர்த்த நிலையில் காணப்படுகிறது. பழச்சாறு அல்லது காய்கறிச்சாறு ஆகையவற்றை நொதிக்க விடுவதன் மூலமும் இது கிடைக்கும். ஊறுகாய் போன்றவற்றை கெடாமல் பாதுகாக்கப் பயன்படும் புளிங்காடியில் இக்காடி 18 சதவீதம் வரை காணப்படுகிறது. இயற்கை முறையில் தயாரிக்கப்படும் புளிங்காடியில் சிறிய அளவில் டார்ட்டாரிக் காடி (அமிலம்), நரந்தக் காடி (அமிலம்), மற்றும் வேறு சில காடிகளும் காணப்படுகின்றன. பண்டைய காலம் தொட்டே புளிங்காடி உலகம் முழுவதும் பயன்பாட்டில் இருந்து வருகின்றது. வெர்சாய் ஒப்பந்தம் வெர்சாய் ஒப்பந்தம் "(Treaty of Versailles)" முதலாம் உலகப்போரை முடிவுக்குக் கொண்டுவந்த சமாதான ஒப்பந்தங்களில் மிக முக்கியமான ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம் செருமனி மற்றும் அதனுடன் இணைந்த கூட்டணி சக்திகளுக்கு இடையேயான யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. ஆசுத்திரிய மன்னனின் மகனான பிரான்சு பேர்டினண்ட் படுகொலை செய்யப்பட்டு சரியாக ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், 1919 ஆம் ஆண்டு சூன் 28 அன்று பிரான்சிலுள்ள வெர்சாயில் இவ்வொப்பந்தம் கையெழுத்தானது. முதலாம் உலகப் போரில் செருமனிக்கு ஆதரவாகப் போரிட்ட மற்ற மைய சக்திகள் தனித்தனி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன .1918 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் நாள் ஏற்படுத்தப்பட்ட போர் ஓய்வு சமரச ஒப்பந்தம் உண்மையில் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது. ஆயினும், பாரிசு அமைதி மாநாட்டில் இடம்பெற்ற சமாதான பேச்சு வார்த்தைகள் முடிந்து அமைதி ஒப்பந்தம் முடிவு செய்யப்படுவதற்கு ஆறு மாதங்கள் பிடித்தன. உலகநாடுகள் கூட்டமைப்பின் தலைமைச் செயலகத்தால் 1919 ஆம் ஆண்டு அக்டோபர் 21 இல் இவ்வொப்பந்தம் பதிவு செய்யப்பட்டது. செருமனியும் அதன் கூட்டணியிலிருந்த நாடுகளும் போர்காலத்தில் ஏற்படுத்திய அனைத்து நட்டம் மற்றும் இழப்புகளுக்கு செருமனி முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஒப்பந்தத்தில் இடம்பெற்ற பல விதிமுறைகளில் மிகவும் முக்கியமானதும், சர்ச்சைக்கு உரியதுமான விதிமுறையாகும். மைய சக்தியில் இடம்பெற்றிருந்த பிற உறுப்பினர்கள் இதுபோன்ற விதிமுறைகள் அடங்கிய ஒப்பந்தத்தில் ஏற்கனவே கையொப்பமிட்டிருந்தனர். விதிப்பிரிவு 231 என்ற இச்சட்டப்பிரிவு பின்னாளில் போர் குற்ற உட்பிரிவு என்று அழைக்கப்பட்டது. செருமனி ஆயுதங்களைக் களைந்து நிராயுதபாணியாக வேண்டும் என்றும், சில நாடுகளுக்கு அவர்களுக்குரிய நிலப் பகுதிகளை விட்டுக்கொடுக்க வேண்டுமென்றும், நட்புறவு நாடுகளாக உருவான சில நாடுகளுக்கு இழப்பீட்டுத் தொகையும் வழங்கவேண்டும் என்றும் ஒப்பந்தம் செருமனியை வலியுறுத்தியது. 1921 ஆம் ஆண்டில் இந்த இழப்புக்களின் மொத்த செலவினத் தொகை 132 பில்லியன் மார்க்குகளுக்கு (அப்போதைய அமெரிக்கமதிப்பு $ 31.4 பில்லியன் அல்லது 6.6 பில்லியன் பவுண்டுகள் ஆகும். தற்போதைய மதிப்பு அமெரிக்க டாலர் 442 பில்லியன் அல்லது 2017 இல் இங்கிலாந்தின் 284 பில்லியன்) சமமானதாகும். ஒப்பந்தம் மிகவும் கடுமையான விதிமுறைகளைக் கொண்டதாக இருக்கிறது என்று அந்த நேரத்தில் இருந்த பொருளாதார வல்லுனர்கள், குறிப்பாக பாரிசு அமைதி மாநாட்டிற்காக நியமிக்கப்பட்ட பிரித்தானிய பிரதிநிதியான யான் மேனார்டு கெய்ன்சு கணித்துக் கூறினார். ஒப்பந்தம் வலியுறுத்தும் அமைதியை மிருகத்தனமான அமைதி என்று அவ்வல்லுநர்கள் கருதினர். மற்றும் கேட்கப்படும் இழப்பீட்டுத் தொகையின் மதிப்பு மிகவும் அதிகமானது என்றும் எதிர்பார்த்த அமைதிக்கு நேரெதிரான விளைவுகளை அளிக்கிறது என்றும் கூறினர். பல நாடுகளிலிருந்தும் சரித்திராசிரியர்களும் பொருளாதார நிபுணர்களும் தொடர்ந்து ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் ஈடுபட்டனர். மறுபுறம், பிரஞ்சு மார்சல் பெர்டினாண்ட் போச் போன்ற நேச நாடுகளின் முக்கிய பிரமுகர்கள் செர்மனியை மிகவும் மென்மையாக நடத்துவதாகக் கருதி உடன்படிக்கையை விமர்சித்தனர். இத்தகைய போட்டிகளின் முடிவில் சிலசமயங்களில் வெற்றி பெற்றவர்களிடையே காணப்படும் முரண்பாடான இலக்குகளால் எந்தவொரு உள்ளடக்கமும் இல்லாத ஒரு சமரசம் தோன்றியிருக்கும்:செருமனி சமாதானத்தையோ நட்பையோ விரும்பவில்லை ஆனால் அது நிரந்தரமாக பலவீனமடைந்தது. ஒப்பந்தத்தினால் எழுந்த பிரச்சினைகள் சுவிட்சர்லாந்தில் ஏற்படுத்தப்பட்ட லொகார்னோ உடன்படிக்கைகளுக்கு வழிவகுத்தன. இது செருமனிக்கும் மற்ற ஐரோப்பிய சக்திகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்த உதவியது. இழப்பீடுகள் தொடர்பாக மறுசீரமைப்பு செய்ய மறுபரிசீலனைக்காக டாவசு திட்டம் என்ற புதியதிட்டம் வகுக்கப்பட்டது. 1932 ஆம் ஆண்டு நடைபெற்ற லொசான் மாநாட்டில் இழப்பீடுகளை அளித்தல் காலவரையற்று தள்ளிவைக்கப்பட்டது. இது பெரும்பாலும் "வெர்சாயில் மாநாடு" என்று குறிப்பிடப்பட்டாலும், ஒப்பந்தத்தின் உண்மையான கையெழுத்திடல் மட்டுமே வரலாற்றுச் சிறப்புமிக்க அரண்மனையில் நடந்தது. பெரும்பாலான பேச்சுவார்த்தைகள் பாரிசில் அனைத்துலக மேம்பாடு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் பெரிய நான்கு கூட்டங்களாக நிகழ்ந்தன. 1914 முதல் 1918 வரை முதல் உலகப்போர் ஐரோப்பா, மத்தியக் கிழக்கு, ஆப்பிரிக்கா, ஆசியா ஆகிய கண்டப் பகுதிகளில் நடைபெற்றது. இப் போரில் நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரான்சு, உருசியா, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளும் மைய நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஆசுத்திரியா, அங்கேரி, செருமனி, இத்தாலி போன்ற நாடுகளும் எதிரெதிர்ப் பக்கங்களில் நின்று சண்டையிட்டன. போரின் அளவும், செறிவும் முன்னெப்பொழுதும் இல்லாத அளவு பெரிதாக இருந்த காரணத்தால் போர் வலயங்களுக்கு அப்பால் உள்ள நாடுகள் அனைத்துலக வர்த்தகம், நிதி மற்றும் இராசாங்க அழுத்தங்களால் பெரிதும் பாதிக்கப்பட்டன . 1917 ஆம் ஆண்டு உருசிய பேரரசிற்குள் இரண்டு புரட்சிகள் நிகழ்ந்தன. உயர் அதிகாரம் கொண்ட பேரரசின் நிலைகுலைவுக்கு வழிவகுத்தது, விளாடிமிர் லெனின் தலைமையிலான போல்சிவிக் கட்சியின் எழுச்சிக்கு வழிவகுத்தது . பிரான்சு மற்றும் பிரிட்டனுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த அமெரிக்க வியாபார கப்பல்களுக்கு எதிராக செருமன் நீர்மூழ்கிக் கப்பல் போரிட்டது. இதனால் உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பலான ஆர்.எம்.எசு, லுசித்தானியாவும், 128 அமெரிக்கர்களும் நீரில் மூழ்கினர். அமெரிக்காவிற்கு எதிராக யுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி செருமானியப் பேரரசில் இருந்து மெக்சிகோவிற்கு அனுப்பப்பட்ட இரகசிய செய்தியும் இடைமறிக்கப்பட்டது. இத்தகைய காரணங்களால் 1917 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 அன்று அமெரிக்கா மத்திய சக்திகளுக்கு எதிரான போரில் நுழைந்தது. கூட்டணி சக்திகளுக்கிடையே இருந்த இரகசிய உடன்படிக்கைகளை போல்செவிக் வெளியிட்டதற்குப் பின்னர், தேசியவாத முரண்பாடுகள் மற்றும் இலட்சியம் ஆகியவற்றிலிருந்து போரை அகற்றுவது அமெரிக்காவின் போருக்கான நோக்கமாக இருந்தது. இந்த உடன்படிக்கைகளின் இருப்பு நேச நாடுகளின் கோரிக்கைகளை இழிவுபடுத்தும் போக்கில் இருப்பதாக உணர்த்தியது. செருமனி இதே விருப்பத்துடன் செயல்படும் ஒரே சக்தியாக இருந்தது என்றும் கருதப்பட்டது . 1918 ஆம் ஆண்டு சனவர் 8 இல், அமெரிக்க குடியரசுத் தலைவர் உட்ரோ வில்சன் பதினான்கு அம்சங்கள் என்று ஓர் அறிக்கையை வெளியிட்டார். சுதந்திர வர்த்தகம், வெளிப்படையான ஒப்பந்தங்கள், மக்களாட்சி மற்றும் சுயநிர்ணய கொள்கை ஆகியவற்றை இச்சொற்பொழிவு கோடிட்டுக் காட்டியது. மேலும், இது போர் நிறுத்தத்திற்கான அழைப்பையும் விடுத்தது. சர்வதேச அளவில் ஆயுதக் குறைப்பு, ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களிலிருந்து மத்திய சக்திகளை வெளியேற்றுதல், போலந்து நாட்டுக்கு சுதந்திரம் அளிப்பது, இனவாத எல்லைகளையும் கருத்திற்கொண்டு ஐரோப்பாவின் எல்லைகளை மறுபரிசீலனை செய்தல், மற்றும் நாடுகளின் தேசியக் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி அரசியல் சுதந்திரத்திற்கும் பிராந்திய ஒற்றுமைக்கும் பெரிய மற்றும் சிறிய நாடுகளுக்கு ஒரே மாதிரியான உத்தரவாதம் அளித்தல் போன்றவற்றை வலியுறுத்தியது . நவம்பர் 1917 இல் முன்வைக்கப்பட்ட அமைதிக்கான விளாடிமிர் லெனினின் கட்டளைக்கும் வில்சன் உரை பதிலளித்தது, போரில் இருந்து உருசியா உடனடியாக விலகவேண்டும் என முன்மொழிந்தது மற்றும் பிராந்திய இணைப்புகளால் சமரசமற்ற ஒரு நியாயமான மக்களாட்சிக்கும் அழைப்பு விடுத்தது. வெளிநாட்டு கொள்கை ஆலோசகரான எட்வர்ட் எம்.அவுசு தலைமையிலான 150 ஆலோசகர்களின் குழுவானது எதிர்பார்க்கப்பட்ட சமாதான மாநாட்டில் எழும் தலைப்புகள் பற்றிய புலனாய்வு ஆராய்ச்சியை பதினான்கு அம்சங்களும் அடிப்படையாகக் கொண்டிருந்தன. ஐரோப்பியர்கள் பொதுவாக வில்சனின் தலையீட்டை வரவேற்றனர், ஆனால் கூட்டணியின் கூட்டாளர்களான பிரான்சின் சியார்ச்சசு கிளெமெனுவோ, ஐக்கிய இராச்சியத்தின் டேவிட் லாய்டு சியார்ச்சு மற்றும் இத்தாலியின் விட்டோரியோ இமானுவேல் ஆர்லாண்டோ ஆகியோருக்கு வில்சனின் கருத்துகள் மீது சந்தேகம் ஏற்பட்டது . சோவியத் உருசியாவின் புதிய போல்செவிக் அரசாங்கத்திற்கும், செருமனி, ஆசுத்திரியா, அங்கேரி, பல்கேரியா மற்றும் ஓட்டோமான் பேரரசு போன்ற மைய சக்திகளுக்குமிடையே 1918 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 3 அன்று ஏற்பட்ட அமைதி ஒப்பந்தமே பிரெசுட்டு-லிட்டோவ்சுக் ஒப்பந்தம் எனப்படும். இதன்படி உருசியா முதலாம் உலகப் போரில் பங்கேற்பது முடிவுக்கு வந்தது . 1,30,000 சதுரமைல் பரப்பளவுள்ள பிராந்தியங்களும் 62 மில்லியன் மக்களும் உருசியாவிலிருந்து பிரிந்தன . உருசிய மக்களில் மூன்றில் ஒரு பங்கு, விளைச்சல் நிலப்பகுதியின் மூன்றில் ஒரு பகுதி, நாட்டின் நிலப்பரப்பில் கால்பகுதி, மூன்றில் ஒரு பங்கு நிலக்கரி மற்றும் இரும்புத் தொழிற்சாலைகள், இரயில் பாதையில் கால் பகுதி. போன்றவற்றுக்கு இந்த இழப்பு சமமாகும் . 1918 ஆம் ஆண்டின் இலையுதிர்காலத்தில், மைய சக்திகள் நிலைகுலைந்தன . செருமானிய இராணுவத்தினுள் கைவிடுதல் விகிதம் அதிகரிக்கத் தொடங்கியது, பொதுமக்களின் வேலைநிறுத்தங்கள் கடுமையாக யுத்ததளவாட உற்பத்தியை குறைத்தன . மேற்கத்திய முன்னணியில், கூட்டணி படைகள் நூறு நாட்கள் தாக்குதலை ஆரம்பித்தன மற்றும் செருமானிய மேற்கத்திய படைகளை உறுதியாகத் தோற்கடித்தன .உயர் அதிகாரம் கொண்ட செருமன் கடற்படை மாலுமிகள் கி்ளர்ச்சிகளைத் தூண்டி செருமன் புரட்சிக்கு வித்திட்டனர் , பதினான்கு அம்சக் குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு சமாதானத் தீர்வு பெற செருமன் அரசாங்கம் முயன்றதுடன் சரணடைந்தது. பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, கூட்டணி சக்திகளும் செருமனியும் நவம்பர் 11 ம் தேதி போர் ஓய்வுக்கு கையெழுத்திட்டன. செருமன் படைகள் பிரான்சிலும் பெல்கியத்திலும் நிலைத்திருந்தன . டாரோ ஆசோ டாரோ ஆசோ (麻生太郎, "Asō Tarō", பி. செப்டம்பர் 20, 1940) ஒரு ஜப்பானிய அரசியல்வாதி, அந்நாட்டின் 92ஆவது பிரதமர். ஜப்பானிய லிபரல் மக்களாட்சிக் கட்சியின் தலைவராகவும் பணியாற்றுகிறார். 1979 முதல் ஜப்பானிய பிரதிநிதியவையில் உறுப்பினராக இருக்கிறார். 2005 முதல் 2007 வரை ஜப்பானிய வெளியுறவு அமைச்சராக பணி புரிந்தார். 2008இல் செப்டம்பர் 24ஆம் தேதி ஜப்பானிய பிரதிநிதியவை இவரை பிரதமராக தேர்வு செய்துள்ளது. மொழிக் கொள்கை அனேக நாடுகள் அல்லது அரசுகள் மொழி தொடர்பாக ஒரு கொள்கையைக் கொண்டிருக்கின்றன. பல நாடுகளில் அரசமைப்புச் சட்டத்திலேயே மொழிப் பயன்பாடு தொடர்பான கூற்றுக்கள் உண்டு. மொழிக் கொள்கை தவறாக அமையும் பொழுது, அது பெரும் பிரச்சினைகளுக்கு இட்டுச் செல்லலாம். இந்தியாவில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டங்கள், இலங்கையில் வெடித்த ஈழப்போராட்டம் ஆகியவற்றுக்கு அந்த நாடுகளின் ஏற்றுக்கொள்ளப்படாத மொழிக் கொள்கைகள் காரணமாக அமைந்தன. இன்றைய காலகட்டத்தில் பல நாடுகள் பன்மொழிகளையும் பாதுகாக்கும் பண்புடேனேயே சட்டங்களை அமைக்க முனைக்கின்றன. ஒரு அரசின் மொழிக் கொள்கை அரச மொழியை தீர்மானிக்கிறது. அரச மொழி என்பது ஒரு அரசின் நாளாந்த அலுவல்கள் நடைபெறும் மொழி ஆகும். எடுத்துக்காட்டாக தமிழ்நாடு அரசு தமிழ் மொழியை அரச மொழியாக கொண்டுள்ளது. மொழிக் கொள்கை இணைப்பு மொழியையும் வரையறை செய்யலாம். இந்தியாவில் ஆங்கிலம் அல்லது இந்தி நடுவண் அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இணைப்பு மொழிகளாக இருக்கின்றன. மொழி மேலாதிக்கம் மொழி மேலாதிக்கம் என்பது ஒரு மக்கள் குழுவை புற மொழி ஒன்றை அல்லது புற மொழிச் செல்வாக்கை ஏற்க செய்வதாகும். இது அதிகாரத்தை நிலைநாட்ட அல்லது மேலாண்மையை எடுத்துக்காட்ட மேற்கொள்ளப்படுகிறது. பொதுவாக மொழி மேலாதிக்கம் பண்பாட்டு மேலாதிக்கத்தோடு இணைந்து நடைபெறுகிறது. சில வேளைகளில் அரசியல் சமூக பொருளாதார சூழ்நிலைகள் புற மொழியின் மேலாதிக்கத்தை ஏற்பதை தவிர்க்க முடியாமல் செய்து விடுகிறது. எடுத்துக்காட்டாக ஆபிரிக்க நாடுகள் பல வற்றில் காலனித்துவ மொழிகளே இன்று வழக்கத்தில் உள்ளன. பண்பாட்டு மேலாதிக்கம் பண்பாட்டு மேலாதிக்கம் என்பது ஒரு பன்முகப் பண்பாட்டை ஒர் ஆளும் வர்க்கம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது என்ற கருத்துரு ஆகும். ஆளும் வர்க்கம் ஒடுக்கப்படுபவர்களின் ஒத்துளைப்புடனும், நேரடி ஒடுக்கமுறை ஊடாகவும் தனது மேலாதிக்கைத்தை பேணுகிறது. நேரடி ஒடுக்குமுறை வெளிப்படையாக தெரிந்தாலும், ஒத்துளைப்போரின் பங்களிப்பும் முக்கியமானது. படைத்துறை, நீதித்துறை, சமயம், கல்வி என பல சமூக நிறுவனங்கள் ஊடாக இந்த மேலாதிக்கம், ஒடுக்குமுறை மேற்கொள்ளப்படுகிறது. இன்று திரைப்படம், தொலைக்காட்சி, இணையம், இசை, நடனம், நசைச்சுவை என எல்லா பண்பாட்டுத் துறைகளிலும், மற்றத் துறைகளிலும் அமெரிக்காவின் செல்வாக்கும் மேலாதிக்கமும் உள்ளது. இலங்கையில் பண்பாட்டு மேலாதிக்கம் அரசியல், சமயப் பெரும்பான்மையான சிங்களவர்களால் மேற்கொள்ளப்படுகிறது. தமிழர் தாயகப் பகுதிகளில் குடியேற்றம், இனப் படுகொலைகள், அரசியல் ஒடுக்குமுறை ஆகியவை வெளிப்படையாக நடத்தப்படும் மேலாதிக்கம் ஆகும். கோயில்களைக் கைப்பற்றல் (கதிர்காமம், நல்லூர்), புத்த சிலைகளை தமிழ் ஊர்களில் நிறுவுதல், வரலாற்றை திருத்துக் கற்பித்தல், பெம்மை தேர்தெடுக்கப்படாத தமிழ் ஆட்சியாளர்களை முன்னிறுத்தல் (சிவனேசத்துரை சந்திரகாந்தன்) போன்ற வழிமுறைகள், சமூக நிறுவனங்கள் ஊடாக பண்பாட்டு மேலாதிக்கத்தை இலங்கை அரசு மேற்கொள்கிறது. மைஸ்பேஸ் மைஸ்பேஸ் (MySpace) 2003இல் உருவாக்கப்பட்ட இணையவழி சமூக வலையமைப்பு நிறுவனமாகும். 2003இல் டாம் ஆன்டர்சனால் உருவாக்கப்பட்ட இந்நிறுவனம் ஏப்ரல் 2008 வரை அமெரிக்காவின் மிகப் பரவலமான இணையவழி சமூக சேவை வலைத்தளமாக இருந்தது. இந்நிறுவனத்தின் பயனர்களால் புதிய நட்புறவு வளர்க்க ஆரம்பித்து இன்று பல இசைக் கலைஞர்களும் மைஸ்பேஸில் வலைத்தளங்களை படைத்து அங்கே தனது பாடல்களை பதிவேற்றுகின்றனர். ஜூலை 2005இல் நியூஸ் கார்ப்பரேஷனின் துணை நிறுவனம் ஃபாக்ஸ் மைஸ்பேஸை 580 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து வாங்கியுள்ளது. நியூசு கார்ப்பரேசன் நியூசு கார்ப்பரேசன் ("News Corporation") உலகில் மிகப்பெரிய ஊடக கூட்ட நிறுவனங்களில் ஒன்றாகும். 1979இல் அடிலெய்ட், ஆஸ்திரேலியாவில் தற்போதைய அதிபர் ரூப்பர்ட் மர்டாக்கால் தொடங்கப்பட்டது. நியூயார்க் பங்கு சந்தையிலும் ஆஸ்திரேலிய பங்கு சந்தையிலும் வியாபாரம் செய்யப்படுகிறது. 2004இல் ஆஸ்திரேலியாவிலிருந்து ஐக்கிய அமெரிக்காவின் டெலவெயர் மாநிலத்திற்கு நகர்த்தப்பட்டது. ஜூன் 30, 2007 முடிந்த வணிக ஆண்டில் $28.655 பில்லியன் வருமானம் பெற்றது. செனாப் ஆறு செனாப் ஆறு இமாச்சலப்பிரதேசத்தில் தன்டி என்ற இடத்தில் சந்திரா, பாகா ஆகிய இரண்டு ஆறுகள் இணைவதால் உருவாகிறது. இது தொடங்கும் இடத்தில் இதை சந்திரபாகா என்று அழைக்கிறார்கள். செனாப் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு பகுதி வழியாக பாய்ந்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சமவெளிக்குள் நுழைகிறது. டிரிமு என்ற இடத்தில் செனாப்புடன் ஜீலம் ஆறு இணைகிறது. அகமதுபூர் சையல் என்னுமிடத்தில் ராவி ஆறு இணைகிறது. பின் செனாப் உச் செரிப் என்னுமிடத்தில் சத்லஜ் ஆற்றுடன் இணைந்து பஞ்சநாடு (ஐந்து ஆறுகள்) ஆறாக பெயர் பெற்று சிந்து ஆற்றுடன் இணைகிறது. பியாஸ் ஆறானது சத்லஜ் ஆற்றுடன் இந்திய பஞ்சாபில் இணைகிறது. இதன் நீளம் 960 கிமீ. செனாப் ஆற்றின் நீரானது சிந்து நீர் ஒப்பந்தப்படி பாகிஸ்தான் நாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முகநூல் முகநூல் ("Facebook", "பேஸ்புக்" ) 2004 இல் தொடங்கிய இணையவழி சமூக வலையமைப்பு நிறுவனமாகும். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவர் (மார்க் சக்கர்பர்க்) ஹார்வர்ட் மாணவர்களுக்கு ஆரம்பித்து பின்பு வேறு ஐவி லீக் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அனுமதி கிடைத்தது. இன்றைய முகநூலில் 13 வயதான நபர்கள் சேரலாம். அலெக்சா நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி இணைய முழுவதிலும் முகநூல்தான் இரண்டாவது மிகப் பரவலமான இணையத்தளமாகும். பேஸ்புக்கினை தமிழில் முகநூல் என்று அழைக்கின்றார்கள். இவ்வாறு அழைப்பது பரவலாக ஊடகங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பேஸ்புக் அல்லது முகநூல் என்பது 2004ல் தொடங்கப்பட்ட இணையவழி சமூக வலையமைப்பு. ஜுலை 2011 கணக்கெடுப்பின்படி இதில் 800 மில்லியன் உபயோகிப்பாளர்கள் உள்ளனர். 13 வயதிற்கு மேற்பட்டவர்கள் முகநூலில் தங்களின் பெயரைப் பதிவு செய்து கொண்டு முகநூலில் உள்ள மற்றவர்களை நண்பர்களாக்கிக் கொண்டு தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொள்வர். முகநூலை மார்க் சக்கர்பர்க் தன் நண்பர்களான எடுடாரோ சாவ்ரின், டஸ்டின் மாஸ்கோவிட் போன்ற ஹார்வர்ட் நண்பர்களுடன் தொடங்கினார். பிறகு ஐவி லீக், ஸ்டான்போர்டு பல்கலைக்கழக மாணவர்களும் முகநூலில் சேர்ந்தனர். பின்னர் ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் நிறுவன ஊழியர்களும் முகநூலில் சேர்ந்தனர். 2008ல்,முகநூலின் தலைமையகம் அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரில் தொடங்கப் பட்டது. 2010ல், முகநூலின் மதிப்பு 41 மில்லியன் டாலராக உயர்ந்து, கூகிள், அமேசானைத் தொடர்ந்து அமெரிக்காவின் மூன்றாவது பெரிய இணைய தள நிறுவனமாக உயர்ந்தது. 2011ல் முகநூலின் தலைமையகம் மென்லோ பார்க், கலிபோர்னியாவிற்கு மாற்றப்பட்டது. 13 வயதிற்கு மேற்பட்ட, சரியான மின்னஞ்சல் முகவரி உள்ள யாரும் முகநூலில் அங்கத்தினர் ஆகலாம். இந்தியாவில் இந்திய தகவல் தொழில் நுட்ப சட்டம் மற்றும் இந்திய ஒப்பந்த சட்டம் ஆகியவை 18 வயதுக்குட்பட்டவர்கள் பேஸ்புக் முதலான சமூக வலைத்தளங்களில் உறுப்பினராவதை ஏற்பதில்லை. இது சிறார் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஏற்படுத்தப்பட்ட ஒன்று. முகநூல் நிறுவனம் 2,000 ஊழியர்களுடன், 15 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இதன் நிறுவனர்கள், மற்றும் முன்னாள்,இன்னாள் ஊழியர்களும் இதில் பங்குதாரர்களாக உள்ளனர். இந்த இணையதளத்தின் வருமானம் விளம்பரங்களின் மூலமாகவே கிடைக்கிறது. மற்ற பெரிய இணையதளங்களை விட விளம்பரங்களைப் பார்க்கும் கட்டணம் இதில் குறைவு. ஏனென்றால் இந்த இணையதளத்தை உபயோகிப்போர் இளைஞர்களாக இருப்பதால் அவர்களுக்கு நண்பர்களுடன் கலந்துரையாடவே விருப்பம். விளம்பரங்களைப் பார்க்க அவர்கள் பெரும்பாலும் விரும்புவதில்லை. முகநூல் உபயோகிப்பாளர்கள் தங்களுடைய புகைப்படம், சொந்த விருப்பங்கள், தொடர்பு கொள்ளும் விபரம் போன்ற தகவல்களைக் கோப்புகளாக இத்தளத்தில் பதிவு செய்யலாம். தான் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட தகவல்களை யாரெல்லாம் அறிந்து கொண்டார்கள், யாரெல்லாம் தன்னைப் பற்றிய தகவல்களைத் தேடினார்கள் என்று அறிந்து கட்டுப்படுத்தலாம். இது மை ஸ்பேஸ் (என்னுடைய இடம்) என்ற இணையதளத்தை ஒத்து இருந்தாலும், முகநூலில் உண்மையான அடையாளங்கள் கேட்கப்படுகிறது. முகநூலில் நண்பர்களுடன் தகவல் பரிமாறும் சுவர், புகைப்படங்கள் பதிவு செய்யும் வசதி, நண்பர்களின் தற்போதைய நடவடிக்கை ஆகியவற்றை குறிப்பிடும் தனித்தனி வசதியும் உண்டு. 200 புகைப்படங்கள் வரை ஒரு ஆல்பத்தில் சேகரிக்கும் வசதியும் உண்டு. முகநூல் மூலம் நண்பர்களுக்கு 1 டாலர் செலவில் பரிசுகளை முக்கியத் தகவல்களுடன் அனுப்பலாம். சுமார் 60 நாடுகளில் உள்ள 150 மில்லியன் மக்கள் 200 கைபேசி ஆபரேட்டர்கள் மூலம் நவீனக் கைபேசியில் முகநூல் இணையதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஏப்ரல் 2011ல் முகநூலில் அரட்டை அடிப்பதை நேரடிக் குரல் அழைப்பு மூலம் உலகெங்கும் உள்ள நண்பர்களுடன் பேசும் முறை கொண்டு வரப்பட்டது. ஜூலை 2011ல், ஸ்கைப் என்ற நிறுவனத்தின் உதவியுடன் நேரடி ஒளிப்பதிவாக ஒருவருக்கொருவர் பேசுவதைப் பார்க்கும் முறையைக் கொண்டு வந்தனர். இந்த இணையதளம் 'உலகின் சிறந்த 100 இணையதளங்களுள்' ஒன்று என்ற விருதை பி.சி. நாளிதழ் மூலம் 2007ல் வென்றது. 2008ல் 'மக்கள் குரல் விருது' கிடைத்துள்ளது. நியூஜெர்சி மாணவர்களின் கருத்துப்படி இளங்கலை மாணவர்கள் விரும்பும் இணையதளங்களுள் முகநூல் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. 2010ல் சிலிக்கன் பள்ளத்தாக்கில் உள்ள நிறுவனங்களில் சிறந்த படைப்புக்கான விருதைப் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவின் உச்ச நீதிமன்றம் அனுப்பும் நீதிமன்ற சம்மன் அனுப்பக்கூடிய சிறந்த வழியாக முகநூலைத் தேர்ந்தெடுத்துள்ளது. ஆங்கில மொழி பேசும் கனடா,அமெரிக்கா ஐக்கிய ராஜ்ஜியம் ஆகிய நாடுகளிலும், வட அமெரிக்கா,மத்திய கிழக்கு நாடுகளிலும், ஐரோப்பா, ஆசிய பசிபிக் நாடுகளிலும் முகநூல் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அமெரிக்கா, இந்தோனேசியா, இந்தியா, ஐக்கிய ராஜ்ஜியம், துருக்கி, பிரேசில், மெக்ஸிகோ, பிலிப்பைன்ஸ், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் முகநூல் பயன்பாட்டில் முதல் 10 இடங்களைப் பெறுகின்றன. சீனா, வியட்நாம், ஈரான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான், சிரியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இந்த இணையதளம் இஸ்லாமியத்துக்கு எதிரானது, மத வேற்றுமையை ஏற்படுத்தக்கூடியது என்று தடை செய்துள்ளனர். 50% பிரிட்டிஷ் கம்பெனிகளில் வேலை நேரத்தில் முகநூல் இணையதளம் பார்ப்பதற்கு தடை விதித்துள்ளனர். அழையா விருந்தாளிகளால் சில அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டதால் ஜெர்மனியில் முகநூலைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. முகநூலில் 18 வயதுக்குட்பட்ட இளையோர் தங்கள் பதிவுகளை பொதுவெளியில் பகிர்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு அக்டோபர் , 2013 இல் தளர்த்தப்பட்டது. முக நூல் பக்கத்தில் சில சமூக விரோதிகளின் தொந்தரவுகளைத் தவிர்க்க என்ற உதவி பக்கத்தை நாடலாம். மற்றும் முக நூல் சம்பந்தமாக புகார் எதுவும் தெரிவிக்க என்ற பக்கத்திற்கு செல்லலாம். தமக்கு வேண்டாத நட்பை நீக்க ("Unfriend”) என குறிப்பிடலாம். மற்றும் எவரின் செய்தியும் வேண்டாம் என்றால் (block) என்ற விருப்ப பகுதியை கவனத்தில் கொண்டு தடை ஏற்படுத்த முடியும். 2012 ஆம் வருடம் அமெரிக்காவின் ஒரு பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு ஆய்விற்காக, முகநூலின் 700,000 பயனர்களுக்கு அவர்களுக்குத் தெரியாமலேயே சில குறிப்பிட்ட தகவல்கள் மற்றும் பதிவுகள் முகநூல் நிறுவனத்தாலேயே(Facebook) வழங்கப்பட்டு, பயனர்களின் எதிர்வினைகள் மற்றும் மனநிலை மாற்றங்கள் கண்காணிக்கப்பட்டன.கிட்டத்தட்ட 700,000 பயனர்கள் இவ்வாறு எதிர்மறையான தரவுகள் தந்து பரிசோதிக்கப்பட்டனர். தரப்படும் தரவுகள் மூலம் முகநூல் பயனர்களைக் தாங்கள் எதிர்பார்க்கும் விதத்தில் செயல்பட வைக்க முடிகிறதா என்ற இவ்வாய்வு அமெரிக்காவின் நேஷனல் அகாடமி ஆஃப் சைன்சஸ் (National Academy of Sciences) நடத்தியது. இந்த வகையான நடவடிக்கை (emotional manipulation) முகநூல் பயனர்களிடையே தங்கள் மனநிலையை உருவாக்கும் கட்டுப்பாடை ஏற்படுத்தும் நடவடிக்கை என்பதால் கோபத்தையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. கேம்பிரிஜ், மாசசூசெட்ஸ் கேம்பிரிஜ் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலத்தின் தலைநகரம் பாஸ்டனின் ஒரு முக்கிய புறநகரம். கேம்பிரிஜ் மற்றும் பாஸ்டன் இடையில் சார்ல்ஸ் ஆறு அமைந்துள்ளது. கேம்பிரிஜின் முக்கியத்துவத்தின் காரணம் இங்கே ஹார்வர்ட் மற்றும் எம்.ஐ.டி. ஆகிய இரண்டு மரியாதை பெற்ற பல்கலைக்கழகங்கள் அமைந்துள்ளன. நான்சி பெலோசி நான்சி பட்ரிசியா டிஅலெசான்ட்ரோ பெலோசி ("Nancy Patricia D'Alessandro Pelosi", பி. மார்ச் 26, 1940) ஓர் அமெரிக்க அரசியல்வாதி. மக்களாட்சி கட்சியை சேர்ந்த இவர் அமெரிக்கக் கீழவையின் சிறுபான்மைக் கட்சித் தலைவர் ஆவார். கலிபோர்னியா மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 1987 முதல் 1993 வரை கலிபோர்னியாவின் ஐந்தாம் தேர்தல் மாவட்டத்தையும் 1993 முதல் 2013 வரை எட்டாம் தேர்தல் மாவட்டத்தையும் 2013 முதல் பன்னிரண்டாம் தேர்தல் மாவட்டத்தையும் அமெரிக்கக் கீழவையில் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். கீழவைத் தலைவராக 2007 முதல் 2011 வரை இருந்த வேளையில் அமெரிக்க அரசியலமைப்பின் படி குடியரசுத் தலைவர் பணியிடத் தொடர்புப் பட்டியலில் இரண்டாம் நிலையில் இருந்தார். இதனால் அமெரிக்க வரலாற்றிலேயே மிக உயர்ந்த தர வரிசையில் இருந்த பெண் அரசியல்வாதியானார். பணியர் பணியர் தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் வாழும் பழங்குடி மக்கள். இவர்கள் தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் வட்டாரத்திலும், கேரளத்தில் பாலக்காடு, கண்ணனூர், வயநாடு ஆகிய பகுதிகளிலும் வாழ்கின்றனர். கருத்த நிறமும் சுருண்ட மயிரும் தடித்த உதடும் கொண்ட இம்மக்கள் நீக்ராயிட் இனத்தைச் சேர்ந்தவர்கள். கடும் உழைப்பாளிகளான இம்மக்களில் பெரும்பாலானோர் உழவு வேலை செய்கின்றனர். இவர்கள் தாங்கள் வாழும் குடிசையைச் சாலை எனவும் பல குடிசைகள் கொண்ட ஊரினை பாடி எனவும் அழைக்கின்றனர். பாடியின் தலைவன் கூட்டன் எனப்படுவான். இவர்கள் ஒரு காலத்தில் மரம் வெட்டியும், யானை பிடித்தும் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. ஆவி உலகக் கோட்பாட்டில் நம்பிக்கை உடையவர்கள். இவர்களது கோவில் தெய்யபிறை எனப்படுகிறது. இம்மக்கள் பேசும் மொழி மலையாளத்தின் கிளைமொழியாகும். இறந்த மக்களைப் புதைப்பது இவர்கள் வழக்கம். காணிக்காரர் காணிக்காரர் என்போர் தமிழக, கேரள மாநிலங்களின் தென்கோடியில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் பகிதியில் வாழும் பழங்குடி மக்கள் ஆவார்கள். இவர்கள் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் காணப்படுகின்றனர். இம்மக்கள் காணி, கணியன், காணிக்கர், வேலன்மார், மலையரசன் முதலிய பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றனர். காணிக்காரன் என்பதன் பொருள் நிலத்துக்குச் சொந்தக்காரன் என்பதாகும். இவர்கள் பேசும் மொழி காணிக்காரர் மொழி எனப்படுகிறது. இவ்வின மக்கள் குட்டையான உருவமும் சுருண்ட மயிரும் கருந்த நிறமும் கொண்டவர்கள். பச்சை குத்திக் கொள்ளுதலும் கடுக்கன் அணிந்து கொள்ளுதலும் இவர்தம் பழக்கங்களில் குறிப்பிடத் தகுந்தன. இவர்கள் தாங்கள் வாழுமிடத்தை "காணிக்குடி" என அழைப்பர். மணமாகாத ஆண்களுக்கு தனியாகக் குடியிருப்புகள் உண்டு. மணமாகோதோர் இரவில் அங்குதான் தங்கவேண்டும். காணிக்காரர்கள் மூன்றாண்டுக்கு ஒரு முறை தாங்கள் வாழுமிடத்தை மாற்றுகின்றனர். வேளாண்மை இவர்தம் முக்கியத்தொழில். மரவள்ளிக் கிழங்கு முக்கிய உணவு. இவர்களிடத்தில் கொக்கரை எனும் தனித்துவம் வாய்ந்த இசைக்கருவியும் உண்டு. இம்மக்களுக்கு ஆவி உலகக் கோட்பாட்டிலும் மறுபிறப்பிலும் நம்பிக்கை உண்டு. இறந்தவர்களை எரிக்கவோ புதைக்கவோ செய்கின்றனர். பிள்ளை உயிரியல் ரீதியாக, ஒரு பிள்ளை அல்லது பிள்ளைப் பருவம் என்பது மனிதனின் பிறப்புக்கும், பருவமடைந்த நிலைக்கும் இடையேயுள்ள ஒரு வளர்ச்சி நிலை ஆகும். இது ஆண், பெண் ஆகிய இரு பாலருக்கும் பொதுவானதாகும். இதனை, குழந்தைக்கும் (infant), பருவமடைந்த நிலைக்கும் இடையிலான வளர்ச்சி நிலை எனவும் குறிப்பிடலாம். குழந்தை, பிள்ளை ஆகிய இரு சொற்களும் சரியான வரயறையின்றிப் பயன்படுத்தப்படுகின்றன. பிள்ளைகள் தங்கள் பெற்றோருடன் எந்த வயதிலும் மகன்களாகவும் அல்லது மகள்களாகவும் வாழ்கின்றனர். இவர்கள், ஒரு குலத்திலோ, அல்லது ஒரு குழுவிலோ, அல்லது ஒரு இனத்திலோ, அல்லது ஒரு மதத்திலோ உறுப்பினராக இருப்பர். குழந்தை என்றால் பிறக்காத மற்றும் கரு நிலையில் உள்ள சிசுவையும் குறிப்பதாக சில ஆங்கில வரையறைகள் பதிவுசெய்கின்றன. ஐக்கிய நாடுகள் அவையினால் முற்படுத்தப்பட்ட குழந்தைகள் உரிமைகளுக்கான உடன்படிக்கையின்படி, குழந்தை எனப்படுவது, 18 வயதுக்குக் குறைவான ஒரு மனிதர் ஆகும். இக்கருத்து 194 நாடுகள் பங்கு கொண்ட மாநாட்டில், 192 நாடுகளால் ஏற்றுக்கொண்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழில் பிள்ளை என்ற சொல் தென்னை போன்ற இளம் தாவரங்களையும், கீரி போன்ற விலங்குகளின் குட்டிகளையும் குறிப்பிடப் பயன்படுத்தப்படுவதுண்டு. "இயற்கையின் குழந்தை" அல்லது "அறுபதுகளின் குழந்தை" போன்றவற்றில் குறிப்பிடப்படுவது போல் ஒரு குறிப்பிட்ட நேரம், இடம் அல்லது சூழ்நிலை ஆகியவற்றால் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவதாக அறியப்பட்டுள்ளது. பல சமூகப் பிரச்சினைகள் குழந்தைகளை பாதிக்கின்றன. அவற்றுள் சில: குழந்தைகளுக்கு ஆதரவாக உள்ள(வை)வர்கள்: ஒவ்வொரு குழந்தையும் சமூக வளர்ச்சியின் பல நிலைகளையும் கடந்து வளர்கிறது. ஒரு சிசு அல்லது குழந்தை தனியாக விளையாடுவதை மிகவும் சந்தோஷமாக அனுபவிக்கிறது. தன் பாதையில் மற்றொரு குழந்தை குறுக்கிட்டால், அக்குழந்தையை உடல் ரீதியாக தாக்கவோ அல்லது வெளியேற்றவோ முற்படுகிறது. பின்னர், மற்றொரு குழந்தைடன் விளையாடவும், படிப்படியாக பொருட்களைப் பகிர்ந்து கொள்ளவும், திருப்பங்களை ஏற்கவும் கற்றுக்கொள்கிறது. இறுதியில், இக்குழு மூன்று அல்லது நான்கு குழந்தைகள் என பெரியதாக வளர்கிறது. அக்குழந்தை மழலையர் பள்ளியில் நுழைகையில், தன் வயதொத்த குழந்தைகளுடன் எளிதாகச் சேரவும், குழு அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும் கற்றுக்கொள்கிறது. அவதானக் குறை மிகையியக்க குறைபாடு மற்றும் கற்றல் குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு சமூக திறன்களை வளர்த்துக்கொள்ள கூடுதல் உதவிகள் தேவைப்படலாம். அவதானக் குறை மிகையியக்க குறைபாடுள்ள குழந்தைகள், மனமுடைந்த நிலையில் தன் வயதொத்த குழ்ந்தைகளுடன் குறைவான பழகுதலையும், உறவுகளையும், புரிதல்களையும் பெற்றிருப்பர். எதிலும் குறைவான அளவு கவனத்தைச் செலுத்தும் குழந்தைகள் தங்கள் சூழலில் சமூக நல்லுறவுகளைப் பெற்றிருப்பதில்லை. அவர்களுக்கு அனுபவத்தின் மூலம் சமூக திறன்களைக் கற்றுக் கொள்வது கடினமாக உள்ளது. இது தவிர பிள்ளை என்பது தமிழ் நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் காணப்படும் ஒரு இனப் பெயராகவும் உள்ளது. சோழிய வெள்ளாளர், இசை வெள்ளாளர் போன்றோர் தங்கள் பெயருக்குப் பின் பிள்ளை என்ற பட்டத்தை சேர்த்துக் கொண்டுள்ளார்கள். இதை அவர்கள் மரியாதைக்குரியதாகக் கருதினர்கள். மற்றவர்கள், இவர்களின் பெயருடன் இனப் பெயரையும் சேர்த்து பிள்ளைவாள் என்றும் விளிப்பதுண்டு. பழங்கால இலக்கியங்களிலும், திரைப்படங்களிலும் கூட இந்த பிள்ளை என்ற பெயர் அதிகம் பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. பிள்ளைமார் என்றும் அழைப்பது உண்டு, நாமதாரி பிள்ளைமார், இல்லத்துப் பிள்ளைமார், கோட்டைப் பிள்ளைமார் என சில சமூகங்களும் இருக்கின்றன. இங்கிலாந்தில் 7 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகள் நான்கு வயதிற்கு முன்பே இறந்தன. குழந்தைகள் பெறுதல் மற்றும் பராமரிப்பில் போதிய விழிப்புணர்வு இல்லாதிருந்ததே இதற்குக் காரணம் ஆகும். இதனால், இங்கிலாந்தில் 7 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மனிதனின் சராசரி ஆயுட்காலம் சுமார் 35 ஆண்டுகளாக இருந்தது. ஆனால் தொழில் புரட்சியின் போது, குழந்தைகளின் ஆயுட்காலம் திடீரென்று அதிகரித்தது. மக்கள்தொகை மற்றும் சுகாதார வல்லுனர்களின் கருத்துப்படி 1990 களில் இருந்து குழந்தைகளின் இறப்பு விகிதம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. உலகளவில், 1990 ஆம் ஆண்டில் 12.6 மில்லியனுக்கும் குறைவான குழந்தைகளே இறந்துள்ளனர். 2012ல் 6.6 மில்லியன் குழந்தை இறப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது இறப்பு விகிதம் குறைந்துள்ளது. குழந்தை இறப்பு விகிதம் 1990ல் 1,000 பிறப்புக்களில் 90 இறப்புகளாக இருந்தது. 2012 இல் 1,000 பிறப்புக்களில் 48ஆக குறைந்துள்ளது. உலகின் சராசரி குழந்தை இறப்பு விகிதம் 1,000 பிறப்புக்களில் 48 இறப்புகள். ஆப்பிரிக்காவில் சஹாரா பகுதியில் சராசரி குழந்தை இறப்பு விகிதம் 1,000 பிறப்புக்களில் 98 இறப்புகள். இது உலகின் சராசரி குழந்தை இறப்பு விகிதத்தை விட மிக அதிகம். மூலக் கட்டூரை: கல்வி பொதுவாகக் கல்வி என்பது, அறிவு, பொது அறிவைப் பெறுதல், பகுத்தறிதல், காரணம் அறியும் திறனை வளர்த்தல், நடுநிலை வகித்தல், வாழ்வில் அறிவார்ந்த முதிர்ச்சியடைதல் போன்றவற்றில் ஒன்றைத் தனித்தோ அல்லது ஒன்றுக்கு மேலானவற்றின் தொகுப்பையோ குறிக்கும். முறையான கல்வி பெரும்பாலும் பள்ளிகள் மூலம் நடைபெறுகிறது. சில நாடுகளில் கல்விக்கான உரிமை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உலக அளவில், ஐக்கிய நாடுகள் சபையின் 1966 ஆம் ஆண்டின் சர்வதேச உடன்படிக்கையின்படி, பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் மீதான 13 வது சட்டப்பிரிவு, அனைவருக்கும் கல்விக்கான உரிமையை அங்கீகரிக்கிறது. பெரும்பாலான இடங்களில், கல்வி என்பது ஒரு குறிப்பிட்ட வயது வரை கட்டாயமாக இருக்கிறது, ஆனால் பள்ளிக்கு வருகை புரிவது கட்டாயமாக்கப்படவில்லை. மாறாக, வீட்டையே பள்ளிகளாகவோ அல்லது மின்-கற்றல் முறையில் கற்பதையோ சில அதிகார எல்லைகளில் ஏற்புடைய கல்வி முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. சில நாடுகளில் உள்ள குழந்தைகள் (குறிப்பாக ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில்) பெரும்பாலும் பள்ளியை விட்டு விலகுகின்றனர் அல்லது குறுகிய காலத்திற்கு மட்டுமே வகுப்பறை நிகழ்வுகளில் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்வு இடைநிற்றல் எனப்படுகிறது. 2011 ல் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் வெளிடிட்டுள்ள தரவுகளின்படி, 57 மில்லியன் குழந்தைகள் பள்ளியைவிட்டு விலகி இடைநிற்றல் பட்டியலில் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க குழந்தைகளில் 20% க்கும் அதிகமானவர்கள் ஆரம்பப்பள்ளியில் கலந்துகொள்ளாத பள்ளி செல்லாக் குழந்தைகளாகவும், இடைநின்றோராகவும் இருப்பதாக தரவுகள் கூறுகின்றன. உலகெங்கும் நடைபெற்று வரும் போர்முறைகளால் 28 மில்லியன் குழந்தைகளின் கல்வி தடை பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் அவையின் அறிக்கை தெரிவிக்கிறது. இதற்கு போர்க்காலங்களில் ஏற்படும் பாலியல் வன்முறைகள் மற்றும் பள்ளிகள் மீதான தாக்குதல்கள் ஆகியவை காரணங்களாகக் கருதப்படுகின்றன. குழந்தைகளின் பள்ளிசெல்லா நிலை மற்றும் இடைநிற்றல் போன்றவற்றிற்கான பிற பொதுக் காரணிகள்: 2017 ஆம் ஆண்டில் பேராசிரியர் ஆண்ட்ரே சிம்பியனின் (Andrei Cimpian) ஆய்வின்படி ஆறு வயதிற்குட்பட்ட பெண்கள் தாங்கள் "ஒரு மேதை" என்று நினைக்கின்றனர். இப்போக்கு ஆண்களிடம் குறைவாக உள்ளது. இந்த ஆய்வு பாலின மாதிரியான எழுச்சிகள் அதிகரிப்பதை உறுதிப்படுத்துகிறது. உலகெங்கிலும் வெவ்வேறு கலாச்சாரங்களில் குழந்தைகளுக்கு எதிரான சமூக மனப்பான்மைகள் வெவ்வேறு விதமாக மாறுபடுகின்றன. காலப்போக்கில், இந்த மனப்போக்குகள் சிறிது சிறிதாகக் குழந்தைகளுக்குச் சார்பான சமூக மனப்பான்மைகளாக மாறி வருகின்றன. 1988ம் ஆண்டு, மேற்கொள்ளப்பட்ட குழந்தைகளை மையப்படுத்தும் மனப்பான்மை பற்றிய ஐரோப்பிய ஆய்வு, இத்தாலியில் குழந்தைகளை மையப்படுத்தும் மனப்பான்மை அதிகமாக உள்ளதெனவும், நெதர்லாந்தில் குறைவாக உள்ளதெனவும், ஆஸ்திரியா, கிரேட் பிரிட்டன், அயர்லாந்து மற்றும் மேற்கு ஜேர்மனி போன்ற நாடுகளில் இடைநிலைத்தன்மையில் உள்ளதெனவும், குறிப்பிடுகிறது. மனித வரலாற்றில் குழந்தைத் திருமணம் என்பது பொதுவானது. தற்பொழுது குழந்தை திருமண விகிதம் நைஜரில் 75% மத்திய ஆபிரிக்க குடியரசு மற்றும் சாட் ஆகிய நாடுகளில் 68%, பங்களாதேஷில் 66%, மேலும் இந்தியாவில் 47% ஆகும். தற்காலத்தில், குழந்தைகள் மீது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் குழந்தைகளை இழித்தல் போன்றவற்றிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் ஒரு முக்கியமான இலக்காகக் கருதப்படுகிறது. பின்வரும் வன்கொடுமைகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம். இந்த தீய செயல்களிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாக்க பல சர்வதேச அமைப்புகளும், கருவிகளும், குழுமங்களும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை: இக்கட்டுரை இள வயது மனிதர் தொடர்பாக எழுதப்பட்டுள்ளது. சட்டப்படி, பராயம் அடைந்தவர்களாகக் கொள்ளப்படும், 18 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்கள் பிள்ளைகள் எனக் கணிக்கப்படுவார்கள். இச் சொல் ஒரு சிறுவன் அல்லது சிறுமியின் பெற்றோருடனான உறவுத் தொடர்பைக் குறிக்கவும் பயன்படுகின்றது. பலகணவர் மணம் பலகணவர் மணம் அல்லது "பல்கொழுநம்" (Polyandry) என்பது ஒரு பெண் ஒரே நேரத்தில் பல ஆண்களுடன் மணஉறவு கொண்டு வாழ்தல் ஆகும். இம்முறை திபெத், நேபாளம், பூட்டான் போன்ற இமயமலையை ஒட்டிய நாடுகளிலும் இந்தியாவின் பல பகுதிகளிலும் பின்பற்றப்பட்டது. இந்தியாவில் அருணாச்சலப் பிரதேசத்திலும் தென்னிந்தியாவில் தோடர் இனத்திலும் இப்பழக்கம் காணப்படுகிறது. சில சமூகங்களில் ஒரு பெண் ஒருவனை மணந்தால் அவனுக்கு மட்டுமன்றி அவனுடன் பிறந்தோர் அனைவருக்கும் மனைவியாகிறாள். நீலகிரி மலைப்பகுதியில் வாழும் தோடர் பழங்குடி மக்களிடையே இம்முறையே நிலவுகிறது. இலங்கையில் தற்போதும் நடைமுறையில் உள்ள கண்டிச் சிங்களவர் திருமணச் சட்டத்தில் ஒரு பெண் குடும்பத்தில் மூத்தவனை முறைப்படி திருமணம் செய்தாலும் அவள் அவனது சகோதரர் அனைவருக்கும் மனைவியாகிறாள். எனினும் அவ்வாறான சகோதரர் எவர் மூலமேனும் அவளுக்குக் குழந்தை பிறக்குமிடத்து, அக்குழந்தை மூத்தவனுடையதாகவே கருதப்படும். ஒரு குடும்பத்தின் சொத்துக்கள் அக்குடும்பத்திலேயே தொடர்ந்தும் பாதுகாக்கப்படும் நோக்கில் இது நடைமுறைப்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. பலகணவர் மணம் காணப்படும் இனங்களில் முற்காலத்தில் இருந்த குறைவான பெண்களின் எண்ணிக்கை இம்முறை தோன்றக் காரணமாயிருக்கலாம் என்றொரு கருத்து உள்ளது. வூ வூ ("Wu", எளிய சீனம்: 吴, மரபு சீனம்: 吳) என்பது ஒரு சீனக் குடும்பப் பெயர். இது சீனத்தில் மக்களுக்கு அதிகமாக இடப்படும் பெயர்களில் பத்தாவது இடத்தில் உள்ளது. ஹாங்காங்கைச் சேர்ந்த மக்கட் பெயர்களிலும் வூ என்ற பெயர் காணப்படுகிறது. மேலும் இது கொரியாவிலும் பரவலாகக் காணப்படும் ஒரு பெயராகும். மாண்டரின் வகையில் "வூ" என்று உச்சரிக்கப்பட்ட இப்பெயர் கான்டொனீஸ் வகையில் "ங்" என்று ஒலிக்கிறது. கொரிய மொழியில் "ஓ", வியட்நாம் மொழியில் "ஹோ" என்று உச்சரிக்கப்படுகிறது. மாண்டரினிலேயே பல்வேறு பெயர்கள் "வூ" என்றே உச்சரிக்கப்படுகின்றன, ஆனால் அந்த பெயர்களுக்கு வேறு தொனிகளும் பொருட்களும் உள்ளன. சுன் சுன் என்பது சீனாவில் பரவலாகக் காணப்படும் ஒரு குடும்பப் பெயர் ஆகும். வூ வம்சப் பேரரசர்கள் அனைவரும் சுன் என்ற குடும்பப் பெயரையே கொண்டிருந்தனர். நடத்தை நடத்தை ("behavior", அல்லது "behaviour") என்பது தனிநபர்கள், உயிரினங்கள், அவை சார்ந்திருக்கும் தொகுதிகள், செயற்கை நுண்ணறிவு கொண்ட இயந்திரங்கள் ஆகியவற்றின் அவற்றையும், அவை இருக்கும் சுற்றுச்சூழலையும் சார்ந்த செயல்கள் அல்லது பழக்க வழக்கங்கள் போன்றவற்றின் தொகுப்பு ஆகும். சுற்றுச்சூழலானது ஏனைய உயிரினங்கள், வேறு தொகுதிகள், மற்றும் இயற்பியல் சூழல் காரணிகள் அனைத்தையும் உள்ளடக்குகின்றது. சூழலில் இருந்து கிடைக்கும் பல்வேறுபட்ட உள்ளீடுகள் அல்லது தூண்டல்களுக்கேற்ப ஏற்படும் உட்புறமாகவோ அல்லது வெளிப்புறமாகவோ, உணர்வுபூர்வமானதாகவோ அல்லது ஆழ்மனதில் தோன்றுவதாகவோ, மறைவானதாகவோ அல்லது வெளிப்படையானதாகவோ, தன்னிச்சையாகவோ அல்லது தன்னிச்சையின்றியோ எதிவினைகள் எனலாம். அதாவது ஒரு செயல் அல்லது எதிர்ச் செயலைக் குறிக்கும் என எளிமையாகக் கூறலாம். ஒரு உயிரியல் சூழலில் நடத்தை எவ்வாறு துல்லியமாக வரையறுக்க வேண்டும் என்பதில் சில கருத்துவேறுபாடுகள் இருந்தபோதிலும், விஞ்ஞான இலக்கியத்தின் பகுப்பாய்வு அடிப்படையில், "நடத்தை என்பது முழுமையான உயிரினங்களின் உட்புற மற்றும் வெளிப்புற தூண்டுதலுக்கான செயல்கள் அல்லது செயலற்ற தன்மையாகும்" என்று ஒரு பொதுவான விளக்கம் வைக்கப்படுகிறது தாவரங்கள் மற்றும் பிற உயிரினங்களுக்கும் பொருந்தும் வகையில் ஒரு பரந்த விளக்கமானது கொடுக்கப்படுகையில், ஒரு தனியனின் வாழ்நாளின் போது, சூழலுக்கேற்ற இசைவாக்கமாக ஏற்படும் உடலியல் மற்றும் உயிர்வேதியியல் மாற்றங்களாகக் நடத்தையைக் கொள்ளலாம். அதனால் வேறு உயிர்வேதியியல், உடற்றொழிலியல் மற்றும் விருத்தி தொடர்பான மாற்றங்களிலிருந்து நடத்தை என்பது வேறுபடுகின்றது. அவற்றில் விருத்தி தவிர ஏனைய உயிர்வேதியியல், உடற்றொழிலியல் மாற்றங்கள் மிகவும் வேகமாக நிகழ்பவையாகும். நடத்தை உடன்பிறந்ததாகவோ, அல்லது கற்ருக்கொண்டதாகவோ இருக்கலாம். நடத்தை என்பது சூழலுடனான தொடர்புகளை மாற்றக்கூடிய ஒரு உயிரினத்தின் எந்த நடவடிக்கையாகவும் கருதப்படுகிறது. நடத்தை உயிரினத்திலிருந்து சுற்றுச்சூழலுக்கு வெளியீடுகளை வழங்குகிறது. விலங்குகளில் உயிரியல் நடத்தை அகச்சுரப்பித் தொகுதியினாலும் நரம்புத் தொகுதியினாலும் கட்டுப்படுத்தப்படுகிறது. ஒரு உயிரினத்தின் நடத்தையின் சிக்கல் தன்மை அதன் நரம்புத் தொகுதியின் சிக்கல் தன்மையில் தங்கியுள்ளது. பொதுவாக, சிக்கலான நரம்புத் தொகுதிகளுடன் கூடிய உயிரினங்கள், புதிய எதிர் வினைகளைக் கற்றுக்கொண்டு தமது நடத்தைகளை அதற்கேற்றாற்போல் மாற்றிக்கொள்ளும் தகுதி கொண்டவையாக இருக்கின்றன. நடத்தல், பேசுதல், உடை அணிதல் ஆகியவை வெளிப்படையாக அடையாளப்படுத்தக்கூடிய நடத்தைகள். சிந்தித்தல், பயமடைத்தல் போன்றவை இலகுவாக அவதானிக்க முடியாத தனிமை நடத்தைகள் ஆகும் பொதுவாக ஒரு செயல் சூழல் தொடர்பிலேயே ஏற்படுகிறது. நடத்தை, உணர்வு நிலையிலோ, உணர்வற்ற நிலையிலோ நடைபெறலாம். அத்துடன் இது வெளிப்படையாக அல்லது மறைவாக, விரும்பி அல்லது கட்டாயப்படுத்தப்பட்டும் கூட நடைபெறக்கூடும். மனித நடத்தை, நாளமில்லா அமைப்பு மற்றும் நரம்பு மண்டலத்தால் பாதிக்கப்படுவதாக நம்பப்படுகிறது. ஒரு உயிரினத்தின் நடத்தையில் சிக்கலானது அதன் நரம்பு மண்டலத்தின் சிக்கலான தன்மையுடன் தொடர்புடையது என்று பொதுவாக கூறப்படுகிறது . பொதுவாக, மிகவும் சிக்கலான நரம்பு மண்டலங்களுடன் கூடிய உயிரினங்கள் புதிய மறுமொழிகளைக் கற்றுக்கொள்வதற்கான அதிக திறன் கொண்டவை, இதனால் அவர்கள் நடத்தையை சரிசெய்யலாம். விலங்கு நடத்தை பற்றிய ஆய்வு,( ethology) மனிதப் பண்பியல் எனப்படும்,இது ஒரு பரந்த புலமாகும், இது இயல்பான மற்றும் கற்றல் நடத்தைகள் மற்றும் அசாதாரண நடத்தை ஆகியவற்றை உள்ளடக்கியது.மனிதர்கள் உட்பட அனைத்து விலங்குகளும், சில மிகவும் வித்தியாசமான மற்றும் வேடிக்கையான நடத்தைகளை கொண்டுள்ளது . விலங்குகளை படிப்பதில், அவற்றின் நடத்தைகளின் அடிப்படையில், அவற்றின் உடற்கூறுகளை விடவும் அதிகமானோ அல்லது அதற்கும் அதிகமானவற்றையோ அடிப்படையாகக் கொண்ட வேறுபாடுகளை வரையறுக்கிறோம். இது குறிப்பாக நடத்தைகளை பாதிக்கும் இயற்கை சூழலை வலியுறுத்துகிறது. ஒரு உள்நாட்டு நாய் மற்றும் ஒரு ஓநாய் இடையே நடத்தை வேறுபாடுகளை ஆராய்ந்தால் அவை மிகவும் நெருக்கமாக இருந்தாலும், அவைகளின் பொதுவான நடத்தைகள் மனித செல்வாக்கால் பிரிக்கப்படுகின்றன. பரிணாம உயிரியல், விவசாயம் மற்றும் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, சூழலியல், மற்றும் உளவியலின் துறைகளில் கால்நடை நடத்தையின் இயக்கவியல் புரிந்துகொள்ளுதலாக உள்ளது. நுகர்வோர் நடத்தை என்பது, நுகர்வோர் நடந்துகொள்கிற செயல்முறைகளையும், உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான அவர்களது எதிர்வினைகளையும் குறிக்கிறது. அவர்கள் பொருட்களையும் சேவைகளையும் வாங்குவதிலும், நுகர்வதிலும் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பது தொடர்பானதாக இந்த நுகர்வோர் நடத்தை அமையும். அவர்களது தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப, அவற்றை நிறைவு செய்துகொள்ளும் முகமாக அவர்களது நடத்தை அமையும். நுகர்வோர் நடத்தை என்பது அவர்கள் வாடிக்கையாளர்களாக நடந்துகொள்ளும் செயல்முறையாகும். இது வாங்கப்பட்ட பொருட்களின் வகைகள், செலவு செய்யப்படும் தொகை, கொள்முதல் அதிர்வெண் மற்றும் கொள்முதலைச் செய்வதா இல்லையா என்ற முடிவை எடுப்பதில் என்ன விடயங்கள் தாக்கம் செய்கின்றன என்பதில் தங்கியிருக்கும். உள்புற மற்றும் வெளிப்புற காரணிகள் பலவும் இவ்வாறான நுகர்வோர் நடத்தையில் செல்வாக்குச் செலுத்துகிறது. உட்புறக் காரணிகளாக மனோபாவங்கள், தேவைகள், நோக்கங்கள், முன்னுரிமைகள் மற்றும் புலனுணர்வு செயல்முறைகள் ஆகியவையும், வெளிப்புறக் காரணிகளாக சந்தைப்படுத்தல் நடவடிக்கைகள், சமூக மற்றும் பொருளாதார காரணிகள் மற்றும் கலாச்சார அம்சங்கள் போன்றவையும் அமையும். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் பேர்னர், உடல்சார்ந்த காரணிகளும் நுகர்வோர் நடத்தையைப் பாதிக்கும் என்கின்றார். எடுத்துக்காட்டாக ஒரு நுகர்வோர் பசியோடு இருந்தால், அந்த பசி உணர்வு உணவை வாங்குவதற்கு அவர்களைத் தூண்டும். இவ்வகையான நடத்தைகள் விருப்பு, வெறுப்பு போன்றவற்றுடன் தொடர்புள்ளதாக இருக்கும். மேலாளர்கள் பொதுவாக விரும்பத்தக்க விளைவுகளையே கவனிக்கிறார்கள். ஆனாலும் நடத்தை வடிவங்கள் இதனை மாற்றலாம். இந்த நடத்தைகளைக் கொண்டே, விரும்பிய விளைவுகள் எவ்வளவு தரம், அல்லது எவ்வளவு விரைவாக மீண்டும் மீண்டும் நிகழ்கிறது என அறியலாம். ஒரு நடத்தை நிகழ்வதற்கு முன்னர், அந்த நடத்தையைத் தூண்டக்கூடிய முன் நிகழ்ச்சிகள் கவனிக்கப்படும். நடத்தை நிகழ்ந்த பின்னர், அதற்கான பின்விளைவுகள் ஏற்படும். விரும்பிய நடத்தை உண்மையில் ஏற்படும் பொழுது விரும்பிய விளைவுகள் ஏற்படுகிறது. அதனால் பாராட்டுகள் கிடைக்கிறது. விரும்பாத நடத்தை நிகழ்வு ஏற்படும் பொழுது அதன் விளைவாக தண்டனைகள் கிடைக்கிறது. இவை அனைத்தும் உள்ளடக்கியது நிறுவன மேலாண்மை நடத்தைகள் ஆகும். ஒரே இனத்தில் உள்ள இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனியன்களுக்கிடையிலான நடத்தை சமூக நடத்தை (Social behavior) ஆகும். இவ்வகையான சமூக நடத்தை சில வகை பாக்டீரியாக்கள், பூச்சிகள், மனிதன் உட்பட பல்வேறு வகையான உயிரினங்களுக்கு இடையிலும் காணப்படுகின்றது. சமூக நடத்தை என்பது ஒரு நபர் வீட்டிற்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு ஏற்படுத்தும் தொந்தரவு, அச்சத்தை ஏற்படுத்துதல், துன்பம்விளைவித்தல் போன்றவைகளையும் உள்ளடக்கியுள்ளது. பல வெளிப்படையான குற்றங்கள், சட்டவிரோத நடவடிக்கைகள், முரண்படுதல், தாக்குதல், அச்சுறுத்தும் பிற நடத்தைகள் போன்றவையும் சமூக நடத்தைகளில் அடங்குபவையே. இங்கே குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான நடத்தைகள் மற்றும் செயல்கள் சமூகத்தின் நடத்தை என வகைப்படுத்தப்படுகின்றன, குற்றம் செய்பவர்களுக்கும் தீவிரமாக செயல்படுபவர்களுக்கும் இடையிலான தீவிரத்தன்மை. பொதுவாக, தனிநபர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நடவடிக்கைகளை சமுதாய நடத்தைகள்என்று கருதப்படுகிறது. தனிநபர் அல்லது குழுவினருக்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள், சொத்து சேதம் , அல்லது பொதுமக்கள் தொல்லை. இந்த நடவடிக்கைகள் வீட்டில் அல்லது சுற்றுப்புறத்தில், பணியிடத்தில், ஒரு பள்ளியில் அல்லது மற்ற பொது மன்றங்களில் உள்ள பல்வேறு வகையான அமைப்புகளில் ஏற்படலாம். சட்ட விரோதமான செயல்கள், மற்றவர்களைத் தொந்தரவு செய்வது, அக்கம் பக்கத்தின் அல்லது சமூகத்தின் சூழலை சீர்குலைத்தல் போன்ற பல்வேறு வகையான சமூக விரோத நடவடிக்கைகளில் அடங்கும். எந்தவொரு சரியான வரையறை அல்லது பட்டியலையும் பட்டியலிடவில்லை ஆனால், அனைத்து செயல்களும் எதிர்வாத சமூகமாக கருதப்பபட்டு பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன; மிரட்டல், அச்சுறுத்தல்கள், வாய்மொழி துஷ்பிரயோகம், மிரட்டுதல் மற்றும் விபத்து, தாக்குதல், இரைச்சல் மீறல்கள், பொது நச்சுத்தன்மையும், தொந்தரவும், எரிமலை, இனப்படுகொலை, கடைப்பிடித்தல், துரோகம் செய்தல், பொருட்களை ஆபத்தில் தள்ளி, விபச்சாரம் செய்தல். பெரும்பாலும் இந்த நடவடிக்கைகள் மற்றும் நடத்தைகள் ஒரு குறிப்பிட்ட நபரின் மீது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். இதனால், அவர்கள் சமூகத்தின் ஒட்டுமொத்த சமூக அம்சங்களைக் குறைக்கும். உடல் நலம் மற்றும் நல்வாழ்வைப் பற்றிய ஒரு நபரின் நம்பிக்கைகளையும் செயல்களையும் குறிப்பது சுகாதார நடத்தைகள் ஆகும். ஆரோக்கியமாக வாழும் முறையைப் பராமரிப்பதில் சுகாதார நடத்தைகள் நேரடிக் காரணிகளாக அமைகின்றன. உடல்நல நடத்தைகள் நாம் வாழும் மற்றும் வேலை செய்யும் சமூக, கலாச்சார மற்றும் உடல் சூழல்களால் பாதிக்கப்படுகின்றன. அவை தனிப்பட்ட தேர்வுகள் மற்றும் வெளிப்புற கட்டுப்பாடுகளால் வடிவமைக்கப்படுகின்றன. நேர்மறையான நடத்தைகள் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கவும், நோய்களைத் தடுக்கவும் உதவுகின்றன, அதே நேரத்தில் எதிர்மறையான நடத்தைகள் ஆபத்துகளை ஏற்படுத்தக் கூடியன. சுகாதார நடத்தைகள் மக்கள் தொகையின் ஆரோக்கியத்தின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கின்றன. சில நடத்தைகள் நிகழ்வதற்கும், நோய் வளர்ச்சிக்கும் இடையில் ஏற்படும் இடைவெளி காரணமாக, இந்த குறிகாட்டிகள் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அபாயங்கள் மற்றும் சுகாதார ஊக்குவிப்பு நடத்தைகளின் நன்மைகள் ஆகியவற்றை மறைத்துவிடலாம். சுகாதார நடத்தைகள் தனித்து நிகழாது, சமூக மற்றும் கலாச்சார நெறிமுறைகளால் தாக்கத்திற்குட்பட்டு அல்லது தடுக்கப்பட்டு நிகழ்கின்றன. பலவிதமான ஆய்வுகள், சுகாதார நடத்தைகள் மற்றும் உடல்நல விளைவுகளுக்கு இடையிலான உறவை ஆராய்ந்து, நோயுறும் வீதம் மற்றும் இறப்பு வீதம் ஆகியவற்றில் சுகாதார நடத்தைகளின் பங்கை நிரூபித்துள்ளன. இப்படியான ஆய்வுகள் நோயுறும் வீதத்தைக் குறைக்கவும், அதன் மூலம் நீண்ட காலம் வாழவும் ஏழு வாழும் முறைகளை கண்டறிந்தது. சுகாதார நடத்தைகள் தனிநபரின் வாழ்க்கை தரத்தில் செயல்விளைவை ஏற்படுத்துகின்றன. இதன்மூலம் தீவிரமான நோய்கள் வருவது தாமதப்படுத்தப்பட்டு, நீண்ட கால வாழ்க்கைக்காலம் கிடைக்கிறது. புகைபிடித்தல், மது அருந்துதல், சரியான உணவுப் பழக்கவழக்கமின்மை, முதன்மை பராமரிப்பு சேவைகளுக்கிடையில் இருக்கும் இடைவெளிகள் போன்றவை சுகாதாரத்தின் குறைபாட்டையே கொண்டிருக்கும். மேலும், இத்தகைய நடத்தைகளை மாற்றுவது மேம்பட்ட ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். உதாரணமாக, அமெரிக்காவின் சுகாதார மற்றும் மனித சேவைகள் நிறுவனம், உடல்நலம் முன்னேற்றமடைவதற்கும் நோய்த் தடுப்பிற்கும், புகையிலை, மதுபானம் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தாமை, அதிகரிக்கும் உடற்பயிற்சி, தரமான உணவு, என்பன முக்கிய காரணங்கள் எனக் கூறுகிறது. மனிதர் தொடர்பிலும், ஏனைய உயிரினங்கள், பொருள்கள் தொடர்பிலும், நடத்தைகளை வழமையானவை, வழமைக்கு மாறானவை, ஏற்றுக்கொள்ளத் தக்கவை, ஏற்றுக்கொள்ள முடியாதவை எனப் பிரித்துக் காண முடியும். மனிதர், நடத்தைகளின் ஏற்றுக்கொள்ளத்தக்க தன்மையை சமூக நெறிமுறைகளின் அடிப்படையில் தீர்மானிப்பதோடு, அந் நடத்தைகளைச் சமூகக் கட்டுப்பாடுகளினால் நெறிப்படுத்துகின்றனர். சமூகவியலில், நடத்தை மனிதனின் முக்கிய அடிப்படைச் செயலாகக் கருதப்படுகிறது. விலங்கின நடத்தைகளை, ஒப்பீட்டு உளவியல், நடத்தையியல், நடத்தைச் சூழலியல், சமூக உயிரியல் ஆகிய துறைகள் ஆய்வு செய்கின்றன. • What is behavior? Baby don’t ask me, don’t ask me, no more at Earthling Nature. • www.behaviorinformatics.org • Links to review articles by Eric Turkheimer and co-authors on behavior research கலேமா மொட்லாந்தே பெட்ரஸ் கலேமா மொட்லாந்தே ("Petrus Kgalema Motlanthe", பிறப்பு ஜூலை 19, 1949) தென்னாபிரிக்காவின் துணை குடியரசுத் தலைவர் ஆவார். ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் பதவியிலும் உள்ளார். 2008இல் செப்டம்பர் 25ஆம் தேதி தாபோ உம்பெக்கி விலகியதற்கு பிறகு இவர் சட்டமன்ற வாக்கெடுப்பின் படி மே 9, 2009 வரை இடைக்கால குடியரசு தலைவராக செயல்பட்டார். அரசியலுக்கு முன்பு தொழிற் சங்கத் தலைவராக பணியாற்றியுள்ளார். மாரிகாலம் மாரிகாலம் அல்லது மழைக்காலம் என்பது ஒரு பருவ காலம் ஆகும். குறிப்பிட்ட இடம் அல்லது ஒரு நாடு, ஒரு ஆண்டில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஒரு சில மாதங்கள், சராசரி மழைவீழ்ச்சியை பெறும் காலமே மாரிகாலம் என அழைக்கப்படுகின்றது. சிலரைப் பொறுத்த அளவில் மழைக்காலம் விரும்பத்தகாத காலமாக இருப்பதனால், தகுதிச் சொல்வழக்கின்படி, இக்காலத்தை பசுமைக்காலம் என்றும் அழைக்கலாம். மழைவீழ்ச்சியின் காரணமாக மரம், செடி, கொடிகள், மற்றும் பயிர்கள் பசுமையாக செழித்து வளர்வதனால், பசுமைக்காலம் என அழைக்கப்படலாம். இந்த மழைக்காலமானது, ஒவ்வொரு ஆண்டும், குறிப்பிட்ட காலங்களில் ஏற்படும் பருவப் பெயர்ச்சிக் காற்று மூலமாகவே ஏற்படுகின்றது. அக்காலங்கள் இடத்துக்கு இடம் வேறுபடும். இலங்கையில் இந்தியப் பெருங்கடல், மற்றும் வங்காள விரிகுடாவில் இருந்து வரும் பருவப் பெயர்ச்சிக் காற்று காரணமாகவே மழை பெய்கின்றது. இந்த மழைக்காலம் ஆண்டுக்கு ஆண்டு வேறுபாட்டைக் காட்டுகின்றது. ஒவ்வொரு ஆண்டும், இந்த மழைக்காலத்தை கருத்தில் கொண்டு நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றது. இதில் இரண்டு பருவமழை பெறும் காலமாகவும் (Monsoon), மற்றைய இரண்டும் மழைக்காலங்களுக்கு இடைப்பட்ட காலங்களாகவும் (Inter Monsoon) காணப்படுகின்றன.. மே நடுப்பகுதியில் இருந்து ஆகஸ்ட் -செப்டம்பர் -ஒக்டோபர் வரையான காலத்தில், இந்தியப் பெருங்கடலில் இருந்து பெறப்படும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சிக் காற்று மழையைக் கொண்டு வருகின்றது. இலங்கையின் நடுப்பகுதியில் இருக்கும் மலைப் பிரதேசங்களை இந்தக் காற்று கடக்க முயல்கையில், அங்கே பெரு மழைவீழ்ச்சியையும், தென்மேற்குப் பகுதிகளிலும் மழையையும் தரும். இக்காலத்தில் கிழக்கு, வடகிழக்குப் பகுதிகள் மிகக் குறைவான மழையைப் பெறும் அல்லது மழையற்ற வரண்ட காற்றைப் பெறும். இந்தக் காற்று தமிழில் கச்சான் காற்று என அழைக்கப்படும். இலங்கையின் உலர் வலயத்தில் பொதுவாக இந்தக் காலத்தில் மழை இருப்பதில்லை. பொதுவாக ஒக்டோபர், நவம்பர் இரு மழைக்காலங்களுக்கு இடைப்பட்ட காலமாகக் கருதப்படுகின்றது. இக்காலத்தில் பொதுவாக மழை குறைவாக, உலர் காலமாக இருக்கும். ஆனாலும் சில சமயம் திடீரெனத் தோன்றும் சூறாவளிக் காற்று, தீவின் தென்மேற்கு, வடகிழக்கு, கிழக்குப் பிரதேசங்களில் மழையைக் கொண்டு வரும். ஒக்டோபர் -நவம்பர் -டிசம்பரில் இருந்து பெப்ரவரி -மார்ச் வரையான காலத்தில், வங்காள விரிகுடாவில் இருந்து பெறப்படும் வடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்று மழையைத் தோற்றுவிக்கும். அங்கிருந்து வரும் ஈரக்காற்று நடுப்பகுதியில் உள்ள மலைகளில் மோதி, பெரிய மழையை வடக்கு, வடகிழக்கு, கிழக்குப் பிரதேசத்தில் ஏற்படுத்தும். மீண்டும் மார்ச் இலிருந்து ஏப்ரல் -மே நடுப்பகுதி வரையான காலம், இரு மழைக்காலப் பருவங்களுக்கு இடைப்பட்ட, பொதுவாக உலர் காலமாகக் கருதப்படும். இக்காலம் ஒளி அதிகம் இருக்கும் காலமாகவும், வேறுபட்ட காற்று வீசும் காலமாகவும், சில சமயம் இடியுடன் கூடிய மழையைப் பெறும் காலமாகவும் இருக்கும். இந்த இரு மழைக்காலங்களை ஒட்டியே, இலங்கையரின் முக்கிய உணவுக்கான நெல் பயிர்ச்செய்கை செய்யப்படும். வடகிழக்கு பருவப் பெயற்சிக் காற்றினால் கிடைக்கும் மழைக்காலம் மஹா பருவம் (Maha season) எனவும், தென்மேற்குப் பருவப் பெயற்சிக் காற்றினால் கிடைக்கும் மழைக்காலம் யல பருவம் (Yala season) எனவும் அழைக்கப்படும். இலங்கையில் உலர் வலயம் என அழைக்கப்படும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் நீண்ட மழைக்காலமான மஹா பருவத்திலேயே அதிக மழை பெறப்படுவதனால், அக்காலத்திலேயே அங்கே அதிகளவில் பயிர்ச்செய்கை செய்யப்படுகின்றது. ஈர வலயம் என அழைக்கப்படும் தெற்கு, மேற்கு பகுதிகளில் குறுகிய மழைக்காலமான யல பருவத்தில் அதிகளவில் பயிர்ச்செய்கை செய்யப்படுகின்றது. ஆனாலும், இலங்கையின் சில மாவட்டங்களில் இரு மழை பருவங்களிலுமே போதிய மழை பெறப்படுவதனால், இரு காலங்களிலும் பயிர் விளைச்சலைப் பெற முடிகின்றது தென் மேற்கு பருவக்காற்றால் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் தென் இந்தியா மழை பொழிவை அடையும், ஆனால் தமிழகம் வட கிழக்கு பருவக்காற்றால் அதிக மழை பொழிவை பெறும். தென் மேற்கு பருவக்காற்றால் தான் வட இந்தியாவும் அதிக மழை பொழிவை பெறும். பழைமைவாதம் பழைமைவாதம் ("conservatism") என்பது, மரபுகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசியல் கொள்கைகளைக் குறிக்கும் ஒரு சொல். இங்கே மரபு என்பது, பல்வேறு மத, பண்பாட்டு, அல்லது நம்பிக்கைகள், வழமைகள் போன்றவற்றைக் குறிக்கிறது. வெவ்வேறு பண்பாடுகளில் வெவ்வேறான சமூகப் பெறுமானங்கள் நிலைபெற்றிருப்பதன் காரணமாகப் பழைமைவாதம் என்பதைத் துல்லியமாக வரையறுப்பது கடினமாகும். சில பழைமைவாதிகள் அவ்வக்காலத்து நிலையைப் பேணிக்கொள்ளவோ அல்லது சீர்திருத்தங்களை மெதுவாகச் செய்யவோ விரும்புவர். வேறு சிலர் தமக்கு முந்திய காலப் பெறுமானங்களை மீள்விக்க விரும்புவர். ஒரு பண்பாட்டுக்கு உள்ளேயே பழைமைவாதம் என்றால் என்ன என்பது குறித்துக் கருத்து வேறுபாடுகள் காணப்படலாம். சாமுவேல் பிரான்சிசு என்பவர் பழைமைவாதம் என்பது, "குறிப்பிட்ட மக்களையும், அவர்களுடைய நிறுவனப்படுத்தப்பட்ட பண்பாட்டு வெளிப்பாடுகளையும் நிலைத்திருக்கச் செய்வதும் அவற்றை மேம்படுத்துவதும் ஆகும்" என்றார். உரோஜர் சுக்கிரட்டன் என்பவர் பழைமைவாதம் என்பதை "சமுதாயச் சூழ்நிலையைப் பேணுதல்" என்றும், "சமூகத்தின் வாழ்வையும், நலத்தையும் இருக்கும் நிலையிலேயே எவ்வளவு காலத்துக்கு முடியுமோ அவ்வளவு காலத்துக்குப் பேணும் நோக்குடனான தாமதப்படுத்தும் அரசியல்" என்றும் வரையறுத்தார். பழைமைவாத அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரே நோக்கங்களைக் கொண்டவையல்ல. அவை பெரிதும் வேறுபட்டுக் காணப்படுகின்றன. ஜப்பானின் தாராண்மைவாத மக்களாட்சிக் கட்சி, சிலியின் சுதந்திர மக்களாட்சிக் கட்சி, ஐக்கிய இராச்சியத்தின் பழைமைவாதக் கட்சி என்பன வெவ்வேறான நிலைப்பாடுகளைக் கொண்ட பழைமைவாதக் கட்சிகள். பழைமைவாதக் கட்சிகள் பொதுவாக வலதுசாரிக் கட்சிகள் என்னும் பிரிவுக்குள் அடக்கப்படுகின்றன. சர்வாதிகாரம் சர்வாதிகாரம் என்பது நினைத்தவாறு நடக்கும் ஒரு அரசு வடிவம் ஆகும். இதில் ஆட்சியாளர் ஒரு சர்வாதிகாரியாகச் செயல்படுவார். கிமு 2 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட ரோமச் சர்வாதிகாரிகள் தொடர்பில், சர்வாதிகாரி என்பதன் பொருள் சற்று வேறானது. அக்காலத்தில் ரோமச் சர்வாதிகாரி என்பது, ரோமக் குடியரசின் ஒரு அரசியல் பதவி. நெருக்கடிநிலைக் காலங்களில் மட்டுமே இவர்களுக்கு முழுமையான அதிகாரம் இருக்கும். பிற காலங்களில் இவர்களது அதிகாரம் தன்விருப்பிலானதோ அல்லது பொறுப்பற்றதோ அல்ல. இவர்கள் சட்டத்துக்குக் கட்டுப்பட்டவர்கள். எனினும், கிமு 2 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்துக்குப் பின் வந்த ரோமச் சக்கரவர்த்திகள் அதிகாரத்தைத் தனிப்பட்டமுறையில் பயன்படுத்தியதுடன் தன்விருப்பாகவும் செயல்பட்டனர். தற்காலப் பயன்பாட்டில் சர்வாதிகாரம் என்பது நினைத்தபடி செயலாற்றும் அதிகாரம் கொண்டதும், சட்டத்துக்கோ, அரசியலமைப்புக்கோ, நாட்டுக்குள் இருக்கும் வேறெந்த சமூக அரசியல் காரணிகளுக்கோ கட்டுப்படாததுமான தலைமையைக் கொண்டிருக்கும். சில அறிஞர்கள், சர்வாதிகாரம் என்பது ஆளப்படுபவர்களின் இசைவு இன்றி ஆளுவதற்கான அதிகாரம் கொண்ட ஒரு அரசு வடிவம் என வரைவிலக்கணம் கூறுகின்றனர். வேறு சிலரோ இதை, "மக்களின் பொது நடத்தைகளினதும், தனிப்பட்ட நடத்தைகளினதும் ஏறத்தாழ எல்லா அம்சங்களையும் நெறிப்படுத்துகின்ற ஒரு அரசு" என்கின்றனர். இரண்டு உலகப் போர்களுக்கு இடையில், நான்கு வகையான சர்வாதிகாரங்கள் விவரிக்கப்பட்டுள்ளன: அரசியலமைப்பு, கம்யூனிஸ்ட் ("பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கு" பெயரெடுத்தது), எதிர்புரட்சிகர மற்றும் பாசிசவாதிகள், பலரும் இந்த முன்மாதிரிகளுக்கு இடையேயான வேறுபாடுகளை வினவியிருக்கின்றனர். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மூன்றாம் உலக சர்வாதிகாரங்கள், தேவராஜ்ய அல்லது மத சர்வாதிகாரங்கள் மற்றும் வம்சம் அல்லது குடும்பத்தை அடிப்படையாகக் கொண்ட சர்வாதிகாரங்கள் உட்பட பரந்த அளவிலான சர்வாதிகாரங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவசர காலங்களில் ரோமானிய சர்வாதிகாரிகளுக்கு முழு அதிகாரத்தையும் ஒதுக்கினர். மரணதண்டனையில், அவர்களின் அதிகாரமானது முதலில் தன்னிச்சையான அல்லது அசாதாரணமானதல்லாதது, இது சட்டத்திற்கு உட்பட்டது மற்றும் மறுபரிசீலனையை நியாயப்படுத்துதல் தேவைப்படுகிறது. கி.மு. 2 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே அத்தகைய சர்வாதிகாரங்கள் எதுவும் இல்லை, பின்னர் சுல்லா மற்றும் ரோம பேரரசர்கள் போன்ற சர்வாதிகாரிகள் சக்திவாய்ந்த முறையில் தனிப்பட்ட முறையில் மற்றும் தன்னிச்சையாக செயல்பட்டனர். ரோம சாம்ராஜ்யம் ஒரு மன்னனாக இருந்த போதினும், பாரம்பரிய ரோம சமுதாயத்திற்கு இழிவான நிலைப்பாடு இருந்ததால், அந்த நிறுவாகம் ரோமாபுரி சாம்ராஜ்யத்திற்குள் கொண்டு செல்லப்படவில்லை. ஸ்பெயினின் காலனித்துவ ஆட்சியின் சரிவிற்குப்பின், பல சர்வாதிகாரிகள் பல நாடுகளில் அதிகாரத்திற்கு வந்தனர். மெக்ஸிகோவின் அன்டோனியோ லோப்சே டி சாண்டா அனா மற்றும் அர்ஜென்டீனாவின் ஜுவான் மானுவல் டி ரோஸாஸ் போன்ற உதாரணங்களுடன் ஒரு பிராந்தியத்தின் அரசியல் மற்றும் பொருளாதார சக்திகளைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த ஒரு தனியார் இராணுவத்தை, இந்த கவுடில்லோஸ்(Caudillos) அல்லது சுய-நியமிக்கப்பட்ட அரசியல்-இராணுவ தலைவர்கள் பெரும்பாலும் பலவீனமான தேசிய அரசாங்கங்களைத் தாக்கினர். அத்தகைய சர்வாதிகாரிகள் "மிகவும் தனிப்பட்ட மக்கள்" என்றும் குறிப்பிடப்படுகின்றனர். 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் ஸ்டாலினிசம் மற்றும் பாசிசம் சர்வாதிகாரங்கள் பலவிதமான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்ற நாடுகளில் தோன்றின. இவை லத்தீன் அமெரிக்காவின் சர்வாதிகாரங்களில் இருந்து வேறுபட்டுள்ளன, ஆபிரிக்கா மற்றும் ஆசியாவில் காலனித்துவ சர்வாதிகாரத்திற்கு முந்தியவை. நவீன சர்வாதிகார சர்வாதிகாரத்தின் முன்னணி எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு: இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், ஆபிரிக்கா மற்றும் ஆசியாவின் பல புதிய மாநிலங்களில், சர்வாதிகாரிகள் தங்களை காலனித்துவ அதிகாரங்களிலிருந்து பெறப்பட்ட அரசியலமைப்புச் செலவுகள் அல்லது இழப்புகளில் தங்களை நிறுவினர். இந்த அரசியலமைப்புகள் பெரும்பாலும் ஒரு வலுவான நடுத்தர வர்க்கம் இல்லாமல் அல்லது முன்னோடிருந்த சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக வேலை செய்யத் தவறிவிட்டன. சில தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிகள் மற்றும் பிரதம மந்திரிகள் எதிர்ப்பை ஒடுக்குவதன் மூலம், ஒரு கட்சி ஆட்சியை நிறுவ, மற்றவர்கள் இராணுவ சர்வாதிகாரத்தை உருவாக்க தங்கள் படைகளை வைத்து அதிகாரத்தை கைப்பற்றினர். அவர்களின் வடிவம் எதுவாக இருந்தாலும், இந்த சர்வாதிகாரங்கள் பொருளாதார வளர்ச்சியிலும், அரசியல் நிறுவனங்களின் தரத்திலும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியது.நீண்டகாலமாக பதவியில் இருந்த சர்வாதிகாரிகள், பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றுவதை மிகவும் கடினமாகக் கண்டனர். சர்வாதிகாரத்தை வரையறுக்கும் ஒரு பொதுவான சொல்தான் கொடுங்கோன்மையான ஆட்சி, இது ஒரு அரசின் வடிவம், இதில் ஒரு தனி நிர்வாகம் முழு அதிகாரத்துடன் நாட்டை ஆட்சி செய்கிறார். அந்த நிர்வாகம் ஒரு தன்னலக்குழுவில் ஒரு நபராக இருக்கலாம் அல்லது அது தன்னலக்குழுவில் ஒரு குழுவாக இருக்கலாம். சர்வாதிகாரம் என்பது கொடுங்கோன்மை அல்லது நிரந்தரவாதம் என்று அர்த்தம். சர்வாதிகாரம் என்பது ஒரு சர்வாதிகாரியாக அல்லது ஒரு சிறிய குலத்திலோ அல்லது ஒரு முழுமையான அதிகாரத்தை மையமாகக் கொண்டிருக்கும் ஒரு அரசாங்க அமைப்பாக அல்லது குழுவில் குவிமையப்படுத்தப்படும் அரசாங்கத்தின் ஒரு வடிவமாகும்,ஜனநாயகம் பெரும்பாலான மக்களால் அரசாங்கத்தின் ஒரு வடிவமாக வரையறுக்கப்படுகிறது, அங்கு அரசாங்கத்தை ஆட்சி நடத்துபவர்கள் போட்டியிடும் தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள். அடால்ஃப் ஹிட்லர் ஒரு ஜெர்மன் அரசியல்வாதியாக இருந்தார், அவர் நாசி கட்சியை உருவாக்கி அதன் தலைவராக இருந்தார். ஜெர்மனியின் வேந்தராக (chancellor of Germany) 1933 முதல் 1945 வரையும், மற்றும் 1934 முதல் 1945 வரை நாசி ஜெர்மனியின் "ஃபுயுரர்" ("Fuhrer"-"தலைவர்") ஆகவும் அவர் இருந்தார். ஒரு பெரிய சர்வாதிகாரி என்ற முறையில், செப்டம்பர் 1939 ல் போலந்து படையெடுப்புடன் ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரைத் தொடங்கினார். அது மட்டுமின்றி யூத இனப்படுகொலைக்கு அவரே அச்சாணியாக இருந்தார். இதில் அடோல்ப் ஹிட்லரின் நாசி ஜெர்மனியாலும் இரண்டாம் உலகப் போர் நாசிகளுடன் ஒத்துழைத்த மற்ற நாடுகளாலும், 6 மில்லியன் ஐரோப்பிய யூதர்கள் கொல்லப்பட்டனர். பெனிட்டோ முசோலினி இத்தாலிய அரசியல்வாதி, பத்திரிகையாளர், தேசிய பாசிஸ்ட் கட்சியின் தலைவர் 1922 முதல் 1943 வரை நாட்டின் பிரதமராக இருந்தார். அவர் 1925 வரை அரசியலமைப்பை ஆட்சி செய்தார், ஜனநாயகம் பற்றிய அனைத்து போலித்தனத்தையும் கைவிட்டு, ஒரு சட்டபூர்வ சர்வாதிகாரத்தை நிறுவினார். Il Duce (தலைவர்) என அழைக்கப்படும், முசோலினி இத்தாலிய பாசிசத்தின் நிறுவனர் ஆவார். ஒரு இராணுவ சர்வாதிகாரம் பல காரணங்களுக்காக பொதுமக்கள் சர்வாதிகாரத்தில் இருந்து வேறுபட்ட அரசாங்க வடிவமாகும்: அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான அவர்களின் நோக்கங்கள், அவர்கள் தங்கள் ஆட்சியை நிறுவும் வழிமுறைகள், மற்றும் அவர்கள் அதிகாரத்தை விட்டு செல்லும் வழிகள். ஊழல் மிக்க அல்லது கொலைகார குடிமக்கள், அரசியல்வாதிகளிடமிருந்து நாட்டை காப்பாற்றிக் கொள்ளும் விதமாக பெரும்பாலும் இராணுவம் சர்வாதிகாரத்தை நிலைநிறுத்தி தனது நடுநிலைப் படைப்பிரிவுகளுக்குள்ளேயே "நடுநிலையான அரசை உருவாக்குகிறது" என்று கூறுவதை நியாயப்படுத்துகிறது. அதாவது இராணுவம் இப்படிப்பட்ட தருணத்தில் ஆட்சியைக் கைப்பற்றி நடுநிலையான சர்வாதிகாரத்தை நிலைநாட்டுகிறது. ஆனால் பல நேரங்களில் இந்த இராணுவ சர்வாதிகாரம் நடுநிலையான சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவதில்லை. அதற்கு பதிலாக அடக்குமுறை ஆட்சியையே நிலைநாட்டுகிறது. இது பல நாடுகளில் பலமுறை அமல்படுத்தப்பட்ட சர்வாதிகார வகையாகும். மாநில அமைதி மற்றும் மேம்பாட்டுக் கவுன்சில் பர்மாவின் இராணுவ அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ பெயராகும் (இது மியான்மர் என்றும் அழைக்கப்படுகிறது), இது 1988 ஆம் ஆண்டில் சா மவுங் ஆட்சியின் கீழ் அதிகாரத்தை கைப்பற்றியது. மார்ச் 30, 2011 அன்று, மூத்த பொது மற்றும் சபை தலைவர் சன் ஷுவ் ஒரு ஆணையில் கையெழுத்திட்டதால் அதிகாரப்பூர்வமாக கவுன்சில் கலைக்கப்பட்டது. இந்த ஆட்சி மனித உரிமை மீறல்களுக்கு பரவலாக குற்றம் சாட்டப்பட்டது. இது 1990 தேர்தல் முடிவுகளை நிராகரித்தது மற்றும் ஆங் சன் சூ கியை 13 நவம்பர் 2010 அன்று விடுவிக்கும் வரை வீட்டுக் காவலில் வைத்திருந்தது. அதன் முன்னாள் உறுப்பினர் தீன் சீன் தலைமையிலான புதிதாக தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தின் திறப்பு விழாவைக் கொண்டுவந்து, மார்ச் 30, 2011 அன்று கவுன்சில் உத்தியோகபூர்வமாக கலைக்கப்பட்டது. தீன் சீன் மியான்மர்க்கு பிரதம மந்திரியாகவும் ஜனாதிபதியாகவும் பதவிவகித்துள்ளார். உருகுவேயின் குடிமை-இராணுவ சர்வாதிகாரம் "உருகுவேயின் சர்வாதிகாரம்" என அறியப்படுகிறது. 1973 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் நாள் (1973 ஆட்சி கவிழ்ப்புக்குப் பின்னர்) முதல் பிப்ரவரி 28, 1985 வரை உருகுவே இராணுவ சர்வாதிகார ஆட்சியின் கீழ் இருந்தது.மனித உரிமைகள் மீறல்கள், சித்திரவதைகளை பயன்படுத்துதல் மற்றும் பல உருகுவாயர்களின் விவரிக்க முடியாத காணாமற் போதல் ஆகியவற்றின் காரணமாக இந்த சர்வாதிகார ஆட்சி சர்ச்சைக்குரிய விடயமாகியது."குடிமை இராணுவம்" என்பது இராணுவ ஆட்சியின் தொடக்கத்தில் ஒரு ஒப்பீட்டளவில் அதிகாரமில்லாத சிவிலியன் ஜனாதிபதியை அரசின் தலைவராக பயன்படுத்தப்பட்டது, இது மற்ற தென் அமெரிக்க நாடுகளில் சர்வாதிகாரங்களில் இருந்து இதை வேறுபடுத்திக் காட்டியது. இதில் மூத்த இராணுவ அதிகாரிகள் உடனடியாக அதிகாரத்தை கைப்பற்றி நேரடியாக பணியாற்றினர். பாரம்பரிய அரசியல் கட்சிகள் உட்பட அனைத்து முன்னாள் அரசியல் நடவடிக்கைகளையும் அடக்கி ஒடுக்கியது. பலர் சிறையில் அடைக்கப்பட்டனர், சித்திரவதை செய்யப்பட்டனர், குறிப்பாக இடதுசாரி உறுப்பினர்கள். 1984 ல், சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மற்றும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக பெரும் போராட்டங்கள் நடந்தன. ஜனவரி 13, 1984 அன்று, 1973 முதல் முதல் 24 மணி நேரப் பொதுப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இராணுவ தலைமை மற்றும் பொதுமக்கள் அரசியல்வாதிகள் இடையே பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்தன.ஆகஸ்ட் 3, 1984 அன்று, கடற்படை கிளப் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு, 1967 ஆம் ஆண்டின் அரசியலமைப்பை மீளக் கட்டியெழுப்பியதுடன், பாதுகாப்பு அலுவலர்களுக்கும் மூத்த அதிகாரிகளின் நியமனங்களுக்கும் இராணுவம் அறிவுரை வழங்க அனுமதித்தது. 1984, நவம்பர் 25 ம் தேதி தேர்தல்கள் நடைபெற்றன. மார்ச் 1, 1985 அன்று கொலராடோ கட்சியின் வேட்பாளரான ஜூலியோ மரியா சங்குனிட்டி புதிய தலைவராக ஆனார். 2006 ஆம் ஆண்டில், ஆப்ரேஷன் கான்டாரின் பகுதியாக அர்ஜென்டினாவில் நான்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டதற்காக முன்னாள் சர்வாதிகார ஜனாதிபதி போர்டாபெரி கைது செய்யப்பட்டார். பிப்ரவரி 2010 இல், அவர் 1973 ஆட்சி சதியில் பங்கேற்றதன் மூலம் அரசியலமைப்பை மீறியதற்காக அவர்க்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஒரு கட்சி அரசு, ஒரு கட்சி அமைப்பு, ஒற்றைக் கட்சி முறை என்பது ஒரு அரசியலமைப்பின் அடிப்படையில் பொதுவாக ஒரே அரசியல் கட்சி மட்டுமே அரசாங்கத்தை அமைக்கும் எனும் உரிமையைக் கொண்ட அரசாங்கம்.ஏனைய அனைத்து கட்சிகளும் சட்டவிரோதமானவையாக கருதப்படும் அல்லது தேர்தல்களில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட கட்சியாக, சில இடங்களில் மட்டுமே போட்டியிட அனுமதிக்கப்படுகின்றன. சிலநேரங்களில் "நடைமுறையில் ஒரு கட்சி ஆட்சி" என்பது ஒரு ஆதிக்கக் கட்சி முறையை விவரிக்கப் பயன்படுகிறது, ஒரு கட்சி நிலை போலல்லாமல், (குறைந்தபட்சம் பெயரளவில்) ஜனநாயக பலதரப்பட்ட தேர்தல்களை அனுமதிக்கிறது, ஆனால் நடைமுறையில் இருக்கும் பழக்கவழக்கங்கள் அல்லது அரசியல் அதிகாரத்தின் சமநிலை திறம்பட எதிர்க்கட்சி தேர்தலை வெல்ல முடியாமல் தடுக்கிறது. ஐக்கிய முன்னணியின் கீழ் உள்ள சீன மக்கள் குடியரசு (People's Republic of China) ஒரு கட்சி நிலையின் எடுத்துக்காட்டுகள் ஆகும். சீன மக்கள் குடியரசில் ஐக்கிய முன்னணி என்பது கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான, நாட்டின் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட கட்சிகளின் ஒரு பிரபலமான முன்னணி ஆகும். ஙுயென் ஙுயென் (வியட்நாம் மொழி: Nguyễn) வியட்நாமில் மிகப் பரவலமான காணப்படும் குடும்பப் பெயர். அனைத்து வியட்நாம் மக்களில் ஏறத்தாழ 40 சதவீத மக்கள் இப்பெயரை கொண்டுள்ளனர். சீனத்தில் "ருஅன்" (阮) என்று உச்சரிக்கப்படுகிறது. வியட்நாமிலிருந்து வெளியேறிய மக்கள் காரணமாக ஆஸ்திரேலியா, ஐக்கிய அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலம், பிரான்ஸ் போன்ற இடங்களில் பரவலமான காணப்படுகிறது. அழகு அழகு "(Beauty)" என்பது ஒர் எண்ணம், விலங்கு பொருள், நபர் அல்லது இடம் இவற்றின் பண்பு சார்ந்த இன்பம் அல்லது திருப்தியை அளிக்கும் ஒரு புலனுணர்வு அனுபவம் ஆகும். அழகியல், கலாச்சாரம், சமூக உளவியல் மற்றும் சமூகவியல் ஆகியவற்றின் பகுதியாக அழகு ஆய்வு செய்யப்படுகிறது. ஒரு "சிறந்த அழகு" என்பது போற்றப்படக்கூடிய ஒரு பொருளைக் குறிக்கின்றது, அல்லது ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்தில் அழியாத தன்மை கொண்ட மிகச்சரியான அம்சங்களைக் கருத்தில் கொண்டுள்ளதாக அமைகிறது. அழகு என்னும் உணர்வின் அனுபவம் பெரும்பாலும் சில உறுப்படிகளின் பொருள் விளக்கமாகவும் இயற்கையுடன் இயைபும் சமநிலையும் கொண்டதாகவும் தொடர்புபடுத்தப்படுகிறது. கவர்ச்சி மற்றும் நலம் சார்ந்த உணர்வுகளுக்கு இந்நிலை வழிவகுக்கிறது. இவ்வுணர்வு ஒர் அகநிலை அனுபவமாக இருப்பதால், "இரசிப்பவரின் கண்களில் அழகு இருக்கிறது " என்று கூறப்படுகிறது". பொருட்கள், மனிதர்கள் மற்றும் நிலப்பரப்பு தொடர்பானவற்றின் அழகியல் சார்பான புலனுணர்வுகள் பரிணாம வளர்ச்சியடைந்துள்ளன என்பதற்கு ஏற்ற பொருத்தமான சான்றுகள் உள்ளன. மனித மரபணுக்களின் மேம்பட்ட வாழ்க்கைக்கான வாய்ப்புகளை இவை காணப்படும் அழகான இடங்களில் காணப்படுவதாகக் கருதப்படுகிறது. பண்டைய கிரேக்க பெயர் சொல்லான κάλλος, kallos, என்பதற்கும் பெயர் உரிச்சொல்லான καλός, kalos. என்பதற்கும் பொருத்தமான ஆங்கில மொழிபெயர்ப்புச் சொல் "beauty" அல்லது "beautiful" எனக் கருதப்பட்டது. இருப்பினும் kalos என்பதற்கு அழகு அல்லது மிகச் சிறந்த என்ற பொருளில் மொழிபெயர்க்கப்பட்டது. இப்போக்கால் உடலியல் அல்லது பொருளியல் அம்சங்களைத் தாண்டி விரிவான பொருளை இச்சொல் தனதாக்கிக் கொண்டது. இதேபோல kallos என்ற சொல்லும், பாலுணர்வை வெளிப்படுத்தும் ஆங்கிலச் சொல்லான பியூட்டியிலிருந்து மாறுபட்ட பொருளில் பயன்படுத்தப்பட்டது . இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தில் ஒன்றான கொயின் கிரேக்க மொழியில், ஆங்கிலச் சொல்லான பியூட்டிபுல் என்ற சொல்லுக்கு சமமான சொல்லாக ὡραῖος, hōraios என்ற சொல் கருதப்படுகிறது. ὥρα, hōra,என்ற சொல்லிலிருந்து சொற்பிறப்பியல் மூலமாக ஒரு பெயர் உரிச்சொல்லாக இது வருவிக்கப்படுகிறது. எனவே கொயின் கிரேக்க மொழியில் அழகு என்பது ஒன்றின் நேரத்துடன் தொடர்புடையதாக உள்ளது . எனவே இதன்படி ஒரு பழுத்த பழம் அந்நேரத்தில் அழகானதாகக் கருதப்பட்டது. முதிய பெண் ஒருவர் இளம் பெண்ணாகத் தோற்றமளிக்க முயற்சிப்பதும் அல்லது இளம் பெண் முதியவராகக் காட்சியளிக்க முயற்சிப்பதும் அழகு என்று கருதப்படுவதில்லை. தூய கிரேக்க மொழியில் இச்சொல் இளமை, பழுத்த அல்லது முதிய வயது உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டதாக உள்ளது. மேற்கத்திய தத்துவ மரபின் முக்கியமான சின்னமாகத் திகழ்பவர்களுள் ஒருவரரான சாக்கிரட்டீசுக்கு முந்தைய பித்தாகரசு போன்ற மெய்யியலார்களின் படைப்புகளில் அழகு தொடர்பான ஆரம்பகால மேற்கத்திய தத்துவக் கோட்பாடுகள் காணப்படுகின்றன. பித்தாகரசு சார்ந்த சிந்தனையாளர்கள், அழகுக்கும், கணிதத்துக்கும் வலுவான தொடர்பு இருப்பதாக நம்பினர். அதிலும் குறிப்பாக "தங்க விகிதம்" எனப்படும் விகிதவியல் அளவு கொண்ட பொருட்கள் கூடுதல் அழகுள்ளனவாக இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர் . பண்டைய கிரேக்க கட்டிடக்கலையும் சமச்சீர் மற்றும் விகிதாசாரப் பார்வையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அழகு குறித்த மற்ற எல்லா கருத்திற்கும் மேலாக எண்ணம் அழகாக இருப்பதே அழகு என்ற கோட்பாட்டை பிளேட்டோ முன்வைத்தார் . அழகுக்கும் நல்லொழுக்கத்திற்கும் இடையே தொடர்புள்ளது என்றும் அழகாக இருப்பதே நல்லொழுக்கத்தின் நோக்கம் என்றும் தன் வாதங்களை வெளிப்படுத்தினார். பண்டைய மெய்யியலும், கிரேக்க மெய்யியலாளர்களின் கோட்பாடுகளின்படி உருவாக்கப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களின் சிற்பங்களும் ஐரோப்பாவில் மறுமலர்ச்சியை உருவாக்கின. சிறப்பு மிக்க மனித அழகு குறித்த பார்வை பாரம்பரியத் தனிச்சிறப்புகளுடன் மீளுருவாக்கம் செய்யப்பட்டது. பெண்களின் அழகான தோற்றத்தினை உறுதி செய்யும் நிபந்தனைகளில் பாரம்பரிய அழகுக்கோட்பாடுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. கோதிக் காலத்தின்போது, அழகின் பாரம்பரிய அழகியல் நெறிமுறை பாவத்துடன் தொடர்புடையது என்று நிராகரிக்கப்பட்டது. பின்னர் மறுமலர்ச்சி மற்றும் மனிதநேய சிந்தனையாளர்கள் இந்தப் பார்வையை நிராகரித்தனர், மேலும் பகுத்தறிவு ஒழுங்கும் இணக்கங்களின் விகிதமும் சேர்ந்த ஒரு விளைபொருளாக அழகு கருதப்பட்டது. கியார்கியோ வசாரி போன்ற மறுமலர்ச்சிக் கலைஞர்களும், கட்டிடக் கலைஞர்களும் கோதிக் கால அழகியல் பார்வை பகுத்தறிவுக்கு ஒவ்வாதது என்றும் காட்டுமிராண்டித்தனமானது என்றும் விமர்சித்தனர். கோதிக் கலையின் பார்வையானது 19 ஆம் நூற்றாண்டில் கற்பனைவாதம் தொடங்கும் வரை நீடித்தது. மேற்கத்திய மெய்யியலும், பண்பாட்டுச் சிறப்புகளும், பகுத்தறிவும் ஆதிக்கம் செலுத்திய அறிவொளிக் காலத்தில் அழகு என்பதும் ஒரு தத்துவப்பொருளே என்ற கோட்பாடு வளர்ச்சி கண்டது. உதாரணமாக, இசுகாட்லாந்தைச் சேர்ந்த மெய்யியலாளர் பிரான்சிசு அட்ச்சன், ’ஒற்றுமையும் பன்முகமும்’ மற்றும் ’பன்முக ஒற்றுமை" என்பதே அழகு என்று வாதிட்டார் . யான் கீட்சு போன்ற ரோமானியக் கவிஞர்களும் இக்கோட்பாட்டை ஆதரித்தனர். அழகு என்பது உண்மை, உண்மையே அழகு,
அனைத்திலும்
பூமியில் அறிந்திருக்க வேண்டியதும் உண்மையே. புனைவியம் என்பது, 18 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஐரோப்பாவில் உருவாகி வளர்ந்த கலை, இலக்கிய, அறிவுசார் இயக்கம் ஆகும். உலகின் பெரும்பாலான பகுதிகளில் இது 1800 - 1850 காலகட்டத்தில் உச்சநிலையில் இருந்தது. காட்சிக் கலைகள், இசை, இலக்கியம், போன்ற துறைகளில் இக்காலம் மிகவும் வலுவானதாக இருந்ததுடன், வரலாற்றுவரைவியல், கல்வி, இயற்கை அறிவியல் ஆகிய துறைகளிலும் இக்காலம் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தியது. அழகியல் அனுபவத்தின் உண்மையான மூலங்களாக வலுவான உணர்வுகளை இக்காலலட்ட இயக்கம் முன்னிலைப்படுத்தியது. குறிப்பாகக் கட்டுப்படுத்தப்படாத இயற்கையையும், அதன் கவர்ச்சியான பண்புகளையும் எதிர்கொள்ளும்போது அனுபவிக்கும் அச்சம், திகில், பிரமிப்பு போன்ற உணர்வுகள்மீது புனைவியம் கூடிய அழுத்தம் கொடுத்தது. இது நாட்டுப்புறக் கலைகளுக்கு ஒரு கண்ணியமான இடத்தை வழங்கியதுடன், தன்னிச்சைத் தன்மையை ஒரு விரும்பத்தக்க இயல்பாகவும் ஆக்கியது. அழகின் பாரம்பரிய பொருளுக்கும் உன்னதமான மேம்பட்ட பொருளுக்கும் இடையிலான வேறுபாடுகளை புனைவியக் காலத்தைச் சேர்ந்த எட்மண்டு பர்க்கு முன்மொழிந்தார். 20 ஆம் நூற்றாண்டில் அழகியலுக்கு எதிரான பின்நவீனத்துவக் கலைஞர்களாலும், தத்துவஞானிகளாலும் அழகியல் நிரகாரிப்பு அதிகரித்து உச்சத்தில் இருந்தது. அவ்வாறு இருந்தபோதிலும் அழகு பின்நவீனத்துவத்தின் மையப்பொருளாக இருந்தது. பிரெடரிக் நீட்சே முயற்சியே அழகு என வாதிட்டார் .பின்நவீனத்துவத்தில் அழகினை நிராகரித்த சிந்தனையாளர்கள் மீண்டும் அழகுக்கு முக்கியத்துவம் அளித்தனர். அமெரிக்க பகுத்தறிவு மெய்யியலாளர் கை சர்கெல்லோ தனது புதிய அழகுக் கோட்பாட்டில் அழகு என்பது ஒரு முக்கியமான தத்துவ கருத்து என்பதை மீண்டும் உறுதிப்படுத்த முயற்சித்தார் . அழகு என்பது சமூகநீதியுடன் தொடர்புடையது என்று எலினை சுகரியும் வாதிட்டார். அழகு என்பது வெளி அழகுடன் சேர்ந்து ஆளுமை, கருணை, நேர்மை, மரியாதை, நேர்த்தி, இலட்சியம் போன்ற அக அழகுகளையும் உள்ளடக்கியது என்பது தனியர் அல்லது சமூக உடன்பாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பார்வையாகும். இந்த உளவியல் காரணிகளின் அடைப்படையில் உடலியல் பண்புகளும் மதிப்பிடப்படுவது இன்றைய அழகியல் கோட்பாடாகும். பண்பாட்டு மதிப்புகள் மாறுவதற்கேற்ப அழகுக்கான வரையறைகளும் காலப்போக்கில் மாறின. ஓவியங்கள் அழகுக்கான பல்வேறு தரங்களை வரலாற்று ரீதியாக,பரந்த அளவில் காட்டுகின்றன. இருப்பினும், ஒப்பீட்டளவில் மென்மையான தோல், பொருத்தமான உடல் கட்டமைப்பு மற்றும் வழக்கமான அம்சங்கள் ஆகியவை கொண்ட இளம் வயதினர் பாரம்பரியமாக வரலாற்றில் மிகவும் அழகானவர்களாக கருதப்படுகின்றனர். சராசரித்தனமே உடல் அழகை வெளிப்படுத்துகிற வலிமையான குறியீடாகக் கருதப்படுகிறது . சராசரி மனிதர்களின் பிம்பங்களை ஒன்றாக்கி கலவையான தொகுப்பு மனிதனை உருவாக்கும் போது அவன் படிப்படியாக அழகான மனித உருவத்தை நெருங்குகின்றான். அவனே பேரழகனாகவும் அறியப்படுகின்றான். சார்லசு டார்வினின் உறவினர் பிரான்சிசு கால்டன் 1883 ஆம் ஆண்டில் முதன்முதலில் இதை கவனித்திருக்கிறார். சைவ உணவுக்காரர்களின் முகங்களையும் குற்றவாளிகளின் முகங்களையும் ஒப்பிட்டு இவர்களுக்கென்று தனிப்பட்ட முகவொற்றுமைகள் உள்ளனவா என்று இவர் ஆராய்ந்து கொண்டிருந்தபோது கலப்பு முகங்கள் கவர்ச்சிகரமாக இருப்பதாக உணர்ந்தார். ஆராய்ச்சியாளர்கள் அதிக கட்டுப்பாட்டில் உள்ள நிலைமைகளிலும் இம்முடிவுகளின் விளைவை மீண்டும் அடைந்தனர். கணினி உருவாக்கிய தொடர் முகங்களின் கணித சராசரியானது தனிப்பட்ட முகங்களைக் காட்டிலும் மிகவும் சாதகமானதாக மதிப்பிடப்படுகிறது . பாலின உயிரினங்கள் பொதுவான தோற்றம் அல்லது சராசரி அம்சங்களைக் கொண்டுள்ள இணைகளால் ஈர்க்கப்படுகின்றன, ஏனென்றால் மரபணு அல்லது பெறப்பட்ட குறைபாடுகள் இல்லாத ஒரு நிலையை அளிக்கும் என நம்பப்படுகிறது. பாரம்பரியமாகவே இந்த நம்பிக்கை அனுகூலமாக இருந்துவருவதாகவும் விவாதிக்கப்படுகிறது . அழகான முகங்களை விரும்பும் போக்கு மழலைப் பருவத்திலேயே தோன்றிவிடுகிறது என்பதற்கான சான்றுகளும் உள்ளன. அனேகமாக மரபியல் ரீதியாகப் பெறப்பட்ட உள்ளுணர்வாகவும் இது இருக்கலாம் மற்றும் கவர்ச்சிக்காக நிறுவப்பட்ட விதிகள் வெவ்வேறு பாலினத்தினர் மற்றும் கலாச்சாரங்கள் முழுவதிலும் ஒத்திருக்கின்றன . அழகான பெண்களின் அம்சமாகக் கருதப்படும் குறுகிய இடுப்பளவு விகிதம் 0.70 என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இத்தகைய அழகிய உடல் கட்டமைப்புள்ள பெண்கள் மற்ற பெண்களைக் காட்டிலும் அதிக அழகுள்ளவர்களாக கருதப்படுவதாக உடலியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதிகப்படியான பெண்மை இயக்குநீர் சுரப்பு இதற்கு காரணாமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தங்கள் இணையைத் தேர்ந்தெடுப்பதில் ஆண்களின் ஆழ்மனதில் இத்தகைய மதிப்பீட்டு நிபந்தனைகள் இருப்பது உண்மையாகும் . அழகையும் அழகற்றதையும் தீர்மானிப்பதில் ஊடகங்களில் பார்க்கப்படும் படங்கள் மக்களின் மனதைப் பாதிக்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை. மிக மெல்லிய உடலமைப்புடன் உள்ள விளம்பர மாதிரிப்பெண்களால் சமூகத்திலுள்ள பெண்களிடம் உணவுக் குறைபாடுகள் தோன்றுவதாக சில பெண்ணியவாதிகளும், மருத்துவர்களும் தெரிவிக்கின்றனர் . திரைப்படங்களில் தோன்றும் வெண்மை நிறப்பெண்களின் ஆதிக்கத்தால் சமூகத்தில் உள்ள பெண்களிடம் ஐரோப்பியமைய்ய அழகுக் கோட்பாடும், தாழ்வுமனப்பான்மையும், இனவாதமும் தோன்றுவதற்குக் காரணமாகின்றன என்றும் சிலர் வாதிடுகின்றனர் and internalized racism.. கருப்பே அழகு என்ற கலாச்சார இயக்கம் இந்த கருத்தை அகற்ற முயன்றது . அழகு அனைத்து வடிவங்கள். நிறங்கள், அளவுகள் என்ற அனைத்து அம்சங்களில் இருந்தும் அழகு பிறக்கிறது என்று நிற எதிர்ப்பும் பன்முகத்தன்மையும் கொண்ட பாக்கித்தானிய வழக்கறிஞரான பாத்திமா லோதி கூறுகிறார் . ஆண்களின் அழகு என்பது சப்பானில் 'பிசோன்னென்' என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. பிசோன்னென் என்பதன் பொருள் தனித்தன்மை வாய்ந்த பெண்ணிய அம்சங்களைக் கொண்ட ஆண்கள் என்பதாகும். சப்பானில் அழகுக்கான தரநிலையை உருவாக்குகின்ற உடல் பண்புகள் மற்றும் பொதுவாக பாப் கலாச்சாரச் சிலைகளாக காட்சிக்கு வைக்கப்படுகின்றன. இந்த காரணத்திற்காகவே சப்பானில் அழகியல் தொழில் பல பில்லியன் டாலர் முதலீட்டுத் தொழிலாக வளர்ச்சியடைந்துள்ளது. அழகு ஒப்பீடு ஒரு தரத்தை அளிக்கிறது, மற்றும் அதை அடைய முடியாது போது கோபமும் அதிருப்தியும் ஏற்படுகின்றன. சிறந்த அழகு என்ற தரத்திற்குப் பொருந்தாதவர்கள் தங்கள் சமூகங்களுக்குள்ளிருந்து விலக்கி வைக்கப்படலாம். அக்ளி பெட்டி என்ற நகைச்சுவை தொலைக்காட்சி நாடகத்தில், கவர்ச்சியற்ற ஒரு பெண் எதிர்கொள்ளும் துன்பங்கள் சமுதாயத்தின் அசைக்கமுடியாத இம்மனப்பான்மையை வெளிப்படுத்துகின்றன. ஒரு நபர் அவரின் அழகு காரணமாக துன்புறுத்தலுக்கும் இலக்காகலாம். மலேனா என்ற இத்தாலியத் திரைப்படம், ஒரு இத்தாலியப் பெண்ணுக்கு அவளுடைய அழகு ஏற்படுத்தும் துன்பங்களையும், அவள் தான் வாழும் சமூகத்தால் எத்தகைய இன்னல்களை அனுபவிக்கிறாள் என்றும் சொல்கிறது. அழகாகக் கருதப்படும் பெண்களின் நேர்காணல்கள் மூலம் பெண்களுக்கான ஆசிகள், சாபங்கள் இரண்டையும் ’கண்களுக்குள் அழகின் தரிசனம்’ என்ற ஆவணப்படம்.ஆராய்கிறது. சாதாரணத் தோற்றம் கொண்ட மாணவர்களைவிட அழகிய தோற்றம் கொண்ட மாணவர்கள் ஆசிரியர்களிடம் அதிக மதிப்பெண்கள் பெறுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும், அழகுள்ளவர்கள் அதிகமாகப் பொருள் ஈட்டுவதாகவும், அழகற்றவர்கள் குற்றவாளிகளாகும் சதவீதம் அதிகமென்றும் சமூகத்தில் கருத்துகள் நிலவுகின்றன.
நன்னெறி நன்னெறி, நெறிமுறை அல்லது அறமுறைமை என்பது மெய்யியலின் முக்கியமான ஒரு பிரிவு. இது நடத்தை தொடர்பில் சரி பிழை ஆகிய கருத்துருக்களை முறைப்படுத்தி, பேணி, அவற்றைக் கைக்கொள்ளும்படி மக்களுக்குப் பரிந்துரை செய்வது. நன்னெறியின் முக்கியமான அம்சம் "நல்ல வாழ்வு" ஆகும். பயனுள்ளதும், திருப்தி அளிப்பதுமான வாழ்வே முக்கியமானது எனபதே பல மெய்யியலாளரது கருத்தாகும். மெய்யியலில், நெறிமுறை அழகியலின் நிரப்புக்கூறாகக் கருதப்படுகிறது. நெறிமுறை, மனிதர்களது நன்னடத்தை தொடர்பாகவும், ஒருவர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் ஆய்வு செய்கிறது. நெறிமுறை தொடர்பான ஆய்வுப் பரப்பை நான்காக வகுப்பது உண்டு. நெறிமுறை மனித ஒழுக்கம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண முயல்கிறது. நல்லது - கெட்டது, சரி - பிழை, நல்லொழுக்கம் - தீயொழுக்கம், நீதி - குற்றம் ஆகிய கருத்துருக்களுக்கான விளக்கங்களைக் காண்பது இதன் நோக்கம். பலர், சமூக வழக்கு, சமய நம்பிக்கை, சட்டம் ஆகியவற்றுக்கு ஏற்ப நடந்து கொள்வதையே நெறிமுறை எனக் கருதுகின்றனர் என்றும், இதை ஒரு தனியான கருத்துருவாகக் கொள்வது இல்லை என்றும் நுண்ணாய்வுச் சிந்தனைக்கான நிறுவனத்தைச் சேர்ந்த தாமசு பால், லின்டா எல்டர் ஆகியோர் கூறுகின்றனர். பகுத்தறிவு கொண்ட மனிதர்களுக்கு எத்தகைய நடத்தைகள் உதவுகின்றன எத்தகைய நடத்தைகள் அவர்களுக்கு தீங்கு விளைவிக்கின்றன என்பதைத் தீர்மானிப்பதற்கு வழிகாட்டும் ஒரு தொகுதி கருத்துருக்களும், கொள்கைகளுமே நெறிமுறைகள் என பாலும், எல்டரும் வரைவிலக்கணம் தருகின்றனர். பொதுவாக நெறிமுறை என்னும் சொல் ஒழுக்கம் என்பதற்கு இணையாகப் பயன்பட்டு வருகிறது என்றும், சில வேளைகளில், குறிப்பிட்ட ஒரு மரபு, குழு அல்லது தனியாள் சார்ந்த ஒழுக்கக் கொள்கைகளைக் குறிக்கும் குறுகிய பொருளில் இது பயன்படுவதாகவும் "மெய்யியலுக்கான கேம்பிரிட்ச்சு அகரமுதலி" கூறுகின்றது. "இயல்பறிவின் அடிப்படையில் எட்டப்படும் பகுத்தறிவுக்கு ஒத்த, அளவோடமைந்த, பொருத்தமான முடிவு" என்பதே "நெறிமுறை" என்பதற்கான பொதுவான பொருள். இதன்படி, வேண்டுமென்றே கெட்ட நோக்கத்துடன் செய்யாமல், தேவையின் பொருட்டு அழிவு ஏற்படுத்தும் நிலையும் நெறிமுறையின் பாற்பட்டதாகவே கொள்ளப்படுகிறது. எடுத்துக்காட்டாக, உடல்ரீதியான பாதிப்பு ஏற்படக்கூடிய பயமுறுத்தல் இருக்கும் நிலையில், அதைத் தடுப்பதற்கு வேறு வழிகள் இல்லாதபோது, தற்காப்புக்காக எதிராளிக்குத் தேவையான அளவு பாதிப்பை ஏற்படுத்தல் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாக உள்ளது. நெறிமுறை, ஒழுக்கத்தைப் போல் விதிமுறைகளை முன்வைப்பதில்லை. ஆனால், ஒழுக்க விழுமியங்களைத் தீர்மானிப்பதற்கான ஒரு வழிமுறையாக இதனைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். பின்னை நவீனத்துவம் (பின்நவீனத்துவம்) என்பது குறிப்பாக மேற்கு நாடுகளில் கலை இலக்கிய உலகில் நிலவும் ஒரு பொதுச்சிந்தனைப்போக்கு. நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தால் உருவான புதியசிந்தனைப்போக்கு நவீனத்துவம் (மாடர்னிசம்) என்று சொல்லப்படுகிறது. அந்தப்போக்கு காலாவதியாகிவிட்டது என்று மறுக்கும் போக்குக்கு பின்நவீனத்துவம் என்று பெயர். நவீன தொழில்நுட்பம் உலகை ஒன்றாக்கியது. அனைத்தையும் இணைத்தது. தொழிற்சாலை ,பள்ளி, நவீன போக்குவரத்து, உலகளாவிய ஊடகம் ஆகியவற்றை உருவாக்கியது. அதன் விளைவாக சில மனநிலைகள் உருவாகின. எல்லா கருத்துக்களையும் ஒட்டுமொத்த உலகவரலாற்று பின்னணியில் வைத்துப்பார்ப்பது, எல்லாவற்றுக்கும் சாராம்சம் தேடுவது, எல்லாவற்றையும் தர்க்கபூர்வமாக புரிந்துகொள்ள முயல்வது, எல்லாவற்றையும் முரண்இருமை (பைனரி) பார்ப்பது போன்றவை அதன் வழிகள். இதுவே நவீனத்துவம். உறுதிப்பாட்டுவாதம் (Stoicism) என்பது கிமு 3 ம் நூற்றாண்டளவில் கிரேக்கத்தில் தோற்றம் பெற்ற ஒரு மெய்யியல் ஆகும். இது வாழ்வை அல்லது உலகை அணுகுவதற்கான ஒரு மனநிலையை எடுத்துரைக்கிறது. ஒருவரின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பவை எவை, கட்டுப்பாட்டுக்குள் இல்லாதவை எவை என்பதைப் புரிந்துகொண்டு, உலகின் இயல்பைப் புரிந்து நடப்பதே சிறந்தது என்பது இவர்களின் பரிந்துரை ஆகும். அறவழி தன்முனைப்பாக்கம் என்பது ஒருவர் தனது நலத்துக்காக, நன்மைக்காக செயற்படுவதே அறமாகும் எனும் ஒரு மெய்யியல் நிலைப்பாடு ஆகும். ஒருவர் தனது இலாபத்துக்காகச் செயற்பட்டால், அவர் நல்வழியில் செயற்படுகிறார் என்றும், அந்த நடவடிக்கை சரியானது என்றும் இந்த கொள்கை கூறுகிறது. இன்பம் தருவதே நலம் என்றும், நல் வாழ்க்கை நலம், அதிகாரம் அறிவு அல்லது ஆத்மீக நலம் என்றும் தன்னலம் என்பது தொடர்பாக வெவ்வேறு கருத்துக்கள் உண்டு.அறவழி தன்முனைப்பாக்கம் ஒருவர் தாம் விரும்பவதையே எப்போதும் செய்ய வேண்டும் என்று கூறவில்லை. ஒருவருக்கு சொட்டுத் தேன் விருப்பமாக இருக்கலாம், ஆனால் அது அவர் உடல் நலனுக்கு கேடாக இருக்கும். ஒருவருக்கு காலை நித்திரை கொள்வது விருப்பமாக இருக்கலாம், அதனால் அவர் வேலை கெடலாம். பிறருக்கு ஒருபோது ஒத்துழைக்காமல் விட்டால், தேவைப்படும் போது அவர்கள் உங்களுக்கு உதவ மாட்டார்கள். எனவே குறுகிய காலத்தில் இன்பத்தை தேடி செயற்படுவது, ஒருவருடைய நெடுங்கால நலத்துக்கு தீங்காக அமையலாம். பயனெறிமுறைக் கோட்பாடு அல்லது பயனோக்கு கோட்பாடு ("Utilitarianism") என்பது ஒரு செயலின் ஒழுக்க மதிப்பு அதன் ஒட்டுமொத்த பயனுடைமையைப் பொருத்தே அமைகிறது என்ற அடிப்படையிலான மெய்யியல் கோட்பாடு ஆகும். இது ஒரு வகையான விளைவுநெறிமுறைக் கோட்பாடு ஆகும். இக்கோட்பாட்டின்படி "பயனுடைமை" என்பது பெருக்கப்பட வேண்டிய அடிப்படைப் பண்டமாகக் கருதப்படுகிறது. எது பயனுடைமை என்பதில் இக்கோட்பாட்டாளர்கள் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளனர். மகிழ்ச்சி மற்றும் இன்ப நலம் என்பதே நற்பயன் என்பது ஒரு சாராரின் எண்ணம். பீடர் சிங்கர் போன்ற விருப்பச்சார்பு பயனோக்காளர்கள் எது நற்பயன் என்பது கோட்பாட்டைப் பின்பற்றுபவர்களின் இயல்பான விருப்பத்தைப் பொருத்த வரையப்படுகிறது என்று கருதுகின்றனர். அதேபோல் பொதுவாக மக்கள் நலனை மையப்படுத்தியே நற்பயன் வரையறுக்கப்பட்டாலும் ஒட்டுமொத்த பயன் என்கிற பொழுது மாக்களையும் உட்படுத்தி புலனுணர்வு பெற்ற அனைத்து மெய்ம்மைகளின் நலனும் கருதப்பட வேண்டும் என்று ஒரு சாரார் எண்ணுகின்றனர். மேற்கத்திய மெய்யியல் வரலாற்றில் இக்கோட்பாட்டின் துவக்கங்கள் எபிகியூரஸ் என்ற கிரேக்க மெய்யியல் அறிஞரின் கருத்துக்களில் உள்ளதாகக் கருதப்படுகிறது. இருப்பினும் ஒரு கருதுமுறையாக, இதைத் துவக்கத்தில் ஜெரமி பெந்தாம்தான் வளர்த்தெடுத்ததாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அவரைப் பொருத்தமட்டில் வலியும் மகிழ்வுமே உலகில் அனைத்திலும் உள்ளார்ந்த மதிப்புடையவைகள் ஆவன. இத்தற்கோளிலிருந்து அவர் பயனுடைமையை வரையறுக்க விழைந்தார். அதன்படி மிகக்கூடுதலான நபர்களுக்கு மிகுதியான மகிழ்ச்சியை எது தருகிறதோ அதுவே பயன்தரும் பண்டமெனக் கொண்டார். பிற்பாடு இது இருவேறு திக்குகளில் இட்டுச்செல்லவல்ல வரையறை என்றுணர்ந்து "பெருமகிழ்ச்சிக் கோட்பாடு" என தனது கோட்பாட்டைத் திருத்திக் கொண்டார். பயன்படு நன்னெறி என்பது மருத்துவம், தொழில்நுட்பம், சட்டம் மற்றும் வணிகம் போன்ற பல துறைகளில் நெறிமுறைசார் கேள்விகளை நிர்வகிக்கும் ஒரு நெறிமுறைகள் துறை ஆகும். உயிரி நன்னெறி அல்லது உயிரி அறவியல் என்பது உயிரியல் மற்றும் மருத்துவத்தில் முன்னேற்றங்கள் மூலம் சர்ச்சைக்குரிய நெறிமுறைகள் பற்றிய ஆய்வு ஆகும். உயிரி அறிவியல், உயிரி தொழில்நுட்பம், மருத்துவம், அரசியல், சட்டம் மற்றும் தத்துவம் ஆகியவற்றுக்கிடையே உள்ள உறவுகளில் எழுகின்ற நன்னெறி கேள்விகளுக்கு உயிரி நன்னெறி கவனம் செலுத்துகிறது. முதன்மை பராமரிப்பு மற்றும் பிற மருந்துகளின் கிளைகளில் எழும் மதிப்புகளின் பொதுவான கேள்விகள் ("சாதாரண நெறிமுறை") பற்றிய ஆய்வு இதில் அடங்கும். உயிரி நன்னெறியின் வளர்ச்சியானது, வளர்ந்து வரும் உயிர் தொழில்நுட்ப நுட்பங்களின் வழிகாட்டுதலை எதிர்நோக்கியுள்ளது. இது அடிப்படை உயிரியல் மற்றும் எதிர்கால மனித குலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த வளர்ச்சி, படியெடுத்தல், மரபணு சிகிச்சை, மனித மரபியல் பொறியியல், விண்வெளி மற்றும் உயிர்களுக்கான வாழ்க்கை மற்றும் மாற்றியமைக்கப்பட்ட டி.என்.ஏ, ஆர்.என்.ஏ மற்றும் புரதங்கள் மூலம் அடிப்படை உயிரியல் கையாளுதல் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. உதாரணம் : மூன்று பெற்றோர் குழந்தை- குழந்தை உருவாகும் கருமுட்டையானது மரபணு அடிப்படையில் மாற்றம் செய்யப்படுகிறது. இதில் தொடர்புடைய மூவர், தாயிடமிருந்து டி.என்ஏ, தந்தை மந்றும் ஒரு பெண் நன்கொடையாளர் ஆகியோராவர். அதன்படி, புதிய உயிரி நன்னெறியானது அதன் மையத்தில் வாழ்வதற்கு அவசியம் தேவை. உதாரணமாக, உயிரியல் நெறிமுறைகள் கரிம மரபணு /புரத வாழ்வு தன்னை மதிப்பிடும் மற்றும் அதை வெளிப்படுத்தவும் முயல்கின்றன. இத்தகைய உயிர்-அடிப்படையான கொள்கைகள், நெறிமுறைகள் ஒரு அண்டவியல் எதிர்கால வாழ்வை பாதுகாக்கக் கூடும். வணிக நன்னெறி (பெருநிறுவன நெறிமுறைகள் எனவும் அறியப்படுகிறது) என்பது பயன்படு நன்னெறியின் ஒரு வடிவமாகும், இது வணிக சூழ்நிலைகளில் ஏற்படும் நெறிமுறைசார் கொள்கைகள் மற்றும் ஒழுக்கம் சார்ந்த அல்லது நெறிமுறைசார் சிக்கல்களை ஆராய்வதாகும். இது வணிக நடவடிக்கைகளின் அனைத்து அம்சங்களிலும் பயன்படுத்தப்படுகிறது, மேலும் இது முழுவதுமாக தனிநபர்கள் மற்றும் வணிக அமைப்புகளின் நடவடிக்கைகளுக்குப் பொருத்தமானதாக இருக்கிறது. 21 ஆம் நூற்றாண்டில் அதிகரித்துவரும் நேர்மையுணர்வில்-கவனம் செலுத்தப்பட்ட சந்தையிடங்களில், நெறிமுறைசார் வணிக செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளுக்கான (நெறிமுறையியல் எனப்படுகிறது) தேவை அதிகரித்துவருகிறது. அதேசமயம், புதிய பொது முனைப்புகள் மற்றும் சட்டங்கள் (எ.கா. அதிகப்படியான-புகையுமிழும் வாகனங்களுக்கு அதிக UK சாலை வரி விதிப்பு) வழியாக வணிக நெறிமுறைகளை மேம்படுத்துவதற்கு தொழில்துறையில் கட்டாயப்படுத்தப்படுகிறது. வணிகங்கள் பொதுவாக நெறிமுறையற்ற முறையில் செயல்படுவதால் குறைந்த-கால ஆதாயங்களை அடையமுடியும்; எனினும், இதுபோன்ற நடவடிக்கைகள் திடீரெனப் பொருளாதாரத்தை வீழ்த்துவதற்கு வழிவகுக்கலாம். ஆஸ்கர் ராபர்ட்சன் ஆஸ்கர் பாமர் ராபர்ட்சன் ("Oscar Palmer Robertson", பி. நவம்பர் 24, 1938) முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்தாட்டக்காரர் ஆவார். சின்சினாட்டி ராயல்ஸ் மற்றும் மில்வாக்கி பக்ஸ் அணிகளில் புள்ளிபெற்ற பின்காவல் மற்றும் சிறு முன்நிலை நிலைகளில் விளையாடியுள்ளார். 6'5" உயரம் 220 பவுண்ட் எடை கொண்ட ராபர்சன் 12 முறையாக என்.பி.ஏ. பல-நட்சத்திர அணியில் (All-Star team) தேர்ந்தெடுக்கப்பட்டார். என்.பி.ஏ. வரலாற்றிலேயே ஒரு முழு பருவத்தில் சராசரியாக ஒரு போட்டியில் "மும்மை-இரட்டை" (triple double) பெற்ற ஒரே வீரர் இவர்; அதாவது, மூன்று புள்ளியியல் பகுப்புகளில் குறைந்தது 10 சராசரியாக பெற்றார். 1980இல் கூடைப்பந்து புகழவை இவரை தேர்வு செய்துள்ளது. 1996இல் என்.பி.ஏ. வரலாற்றில் ஐம்பது உயர்ந்த வீரர்களின் பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1970இல் இவர் என்.பி.ஏ.க்கு எதிராக நடத்திய நீதி வழக்கின் காரணமாக என்.பி.ஏ. வீரர்கள் பல உரிமைகளும் உயர்ந்த அளவில் சம்பளம் பெற்றனர். கருத்தியல் கருத்தியல் () "(Ideology)" என்பது தனி ஒருவரோ, குழுவோ,சமூகமோ பெற்றிருக்கும் வரன்முறை நம்பிக்கைகள், நனவுள்ள, நனவிலி மன எண்ணக்கருக்கள் ஆகியவற்றின் நுண்ணிலைத் தொகுப்பாகும். கருத்தியல் என்பது உலகப் பார்வை, கற்பனை (சமூகவியல்), இருப்பியல் (மெய்யியல்) ஆகியவற்றை விடக் குறுகிய கருத்துப்படிமம் ஆகும். மார்க்சிய அல்லது உய்யநிலைக் கோட்பாடுகளின்படி, சமூகத்தின் ஆளும் வருக்கம் அல்லது உயரதிகாரக் குழுவால் அரசியற் கருத்தியல் முன்மொழியப்படுகிறது. பொதுவாழ்க்கையும் தனியார் வழ்க்கையும் பிரித்துணரப்படும் சமூகங்களில் ஒவ்வொரு அரசியல்போக்கும் பொருளியல் போக்கும் கருத்தியலைக் கொண்டுள்ளது. இது தெளிவான/வெளிப்படையான சிந்தனை வடிவமாக அமைய தேவையில்லை. அல்தூசரியக் கண்ணோட்டப்படி, கருத்தியல் என்பதுநிலவும் மெய்ந்நிலை நிலைமைகளினைச் சார்ந்த கற்பனை உணர்வாகும். கருத்தியல் என்பது, நம்பிக்கைகள், இலக்குகள், எண்ணக்கருக்கள் ஆகியவற்றின் ஒரு தொகுதி. பொதுவாக அரசியலில் இது பயன்படுத்தபடுகிறது. "கருத்தியல்" என்னும் சொல்லுக்குப் பதிலாக "கருத்துநிலை", "சித்தாந்தம்" போன்ற சொற்களும் வழக்கில் உள்ளன. சமூக ஊடாட்டம் வளர வளர மனிதர்கள் பொதுவான எண்ணக் கருத்துக்களையும், உலகம் பற்றியனவும், தமது சமூக வாழ்க்கை பற்றியனவும், தெய்வம், சொத்து, தர்மம், நீதி ஆகியவை பற்றியவையுமான நோக்குகளை வளர்த்துக் கொள்கிறார்கள். இவ்வாறாக இவை சமூகம், அரசியல், சட்டம், மதம், கலை, மெய்யியல் நோக்கு ஆகியவை தொடர்பான கருத்துநிலைப்பட்ட எண்ணங்களை உருவாக்கிக் கொள்கின்றனர். இவையே "கருத்துநிலை" என்று பெரும்பாலும் குறிப்பிடப்படுகின்றது." என ஜேம்ஸ் கிளக்மான் என்பவரை மேற்கோள் காட்டி சிவத்தம்பி எழுதியுள்ளார். கருத்தியலின் முக்கியமான நோக்கம் நெறி சார்ந்த சிந்தனைகள் ஊடாக மாற்றங்களை உண்டாக்குவதாகும். கருத்தியல்கள் பொது விடயங்களில் பயன்படுத்தப்படும் நுண்ணிலைச் சிந்தனை (abstract thought) முறைமைகள் எனலாம். இதனால் கருத்தியல் என்னும் கருத்துரு அரசியலில் சிறப்பிடம் பெறுகிறது. வெளிப்படையாகச் சொல்லப்பட்டாலும் சொல்லப்படாவிட்டாலும் எல்லா அரசியல் போக்குகளும் உள்ளார்ந்த நிலையில் ஒரு கருத்தியல் நிலையைக் கொண்டிருக்கின்றன. கருத்தியல் எனும் சொல் முதலில் பிரெஞ்சுப் புரட்சியில் உருவாகிப் பின்னர் பலவகைப் பொருள்மாற்றங்களை அடைந்துள்ளது. பிரெஞ்சுப் புரட்சியின்போது சிறையில் இருந்தபோது, இச்சொல்லும் அதனைச் சார்ந்த அனைத்து எண்னக் கருக்களும் 1796 இல் அந்தோய்ன் தெசுதத் தெ திரேசியால் உருவாக்கப்பட்டது. இச்சொல், "எண்ணக்கரு அல்லது கருத்து" எனும் ஜான் இலாக்கேவின் சொல்லுக்கு இணையான பண்டைய கிரேக்கச் சொற்களாகிய என்பதையும் "(-logy)" ( ) எனும் சொல்லையும் இணைத்து உருவாக்கப்பட்டது. மேக்சிமில்லியன் உரோபெசுபியேரை பதவியிறக்கிய அரசியல் கலகம் திரேசி தொடர்ந்து இப்பணியை மேற்கொள்ள வழிவகுத்தது. உணர்ச்சிவயப்பட்ட கும்பலின் உந்தல்கள் தனக்குப் பேரழிவை விளவித்ததால் புரட்சியின் அச்சுறுத்தக் கட்டத்துக்கு எதிர்வினையாற்ற, கும்பல் உணர்ச்சியைக் கட்டுபடுத்தக்கூடிய பகுத்தறிவார்ந்த எண்ணக்கருக்களின் அமைப்பை உருவாக்கப் பணிபுரிந்தார். எனவே, இவர் எண்ணக்கருக்களின் அறிவியலுக்கன சொல்லை உருவாக்க முனைந்தார். இது பின்வரும் இருபொருண்மைகளை ஆய்வுசெய்து ஒழுக்கநெறி, அரசியல் அறிவியல் புலங்களுக்கு உறுத்தியான அடித்தளத்தை உருவாக்குமென நம்பினார்: 1) பொருள் உலகுடனான மக்களின் ஊடாட்டம் அல்லது பட்டறிவுசார்ந்த உணர்திறங்கள், 2) இந்த உணர்திறங்கள் இவர்களது மனதில் ஏற்படுத்தும் எண்னக்கருக்கள். இவர் தாராளவாத சார்ந்த கருத்தியலை கருதினார். இது தனியரின் விடுதலைக்கும் சொத்துக்கும் விடுதலையான சந்தை முறைக்கும் தற்காப்பு தருவதோடு, அரசதிகாரத்துக்கான அரசியலமைப்பு சட்ட வரம்புக்கும் வழிவகுக்கும் என எதிர்பார்த்தார். இந்த அனைத்துக் கூறுபாடுகளையும் கருத்தியல் மட்டுமே தெளிவாகச் சுட்டும் என வாதிடுகிறார். இவர் கருத்தியல் எண்ணக்கருக்களின் அறிவியலாக உள்ளதோடு, அவற்றை வெளிப்படுத்தி விளக்கும் உரையாடலாகவும் விளங்குவதாக வாதிட்டார் திரேசிக்குப் பிறகான ஒரு நூற்றாண்டில் கருத்தியல் மாறிமாறி நேர்முக, எதிர்மறை கருத்து ஊடகமாக அமையலானது. கருத்தியலின் மிகச் சரியான பொருளைக் கிப்போலைட் தய்னேவின் தற்கால பிரான்சின் தோற்றம் எனும் நூலின் முதல் தொகுதியில் கானலாம். இவர் கருத்தியலை, சாக்ரட்டிசு முறைவழியாக மெய்யியலைப் பயிற்றுவிப்பது போல, பொது வாசகர் பெற்றுள்ள அறிவுக்கு அப்பால் தாண்டாமலும் அறிவியலுக்குத் தேவையானதுபோன்ற எடுத்துகாட்டுகலைக் கூறாமலும் விளக்குகிறார். தய்னே இக்கருத்துப்படிமத்தை திரேசியிடம் மட்டுமே பெற்றதாகக் கூறவில்லை; இவர் இக்கருத்துக்கான முன்னோடிகளாக திரேசியையும் அவரைச் சார்ந்த காண்டிலாக்கையும் இனங்காண்கிறார். (திரேசி பிரெஞ்சுப் புரட்சியினால் சிறையில் இருந்தபோது இலாக்கே, காண்டிலாக் இருவரது நூல்களையும் படித்தார்.)) கருத்தியல், தனது இழிவுபடுத்தும் கொட்டலைக் கைவிட்டு, பொதுச் சொல்லாக பல்வேறு அரசியல் கருத்துரைகளிலும் சமூகக் குழுக்களின் பார்வைகளிலும் மாற்றங் கண்டது. கார்ல் மார்க்சு இச்சொல்லை வகுப்புப் போராட்டத்தில் பயன்படுத்த, மற்றவர்கள் இதைச் சமூகக் கட்டமைப்புச் செயல்பாட்டின் பகுதியாகவும் சமூக ஒருங்கிணைப்பாகவும் நம்பினர். நிலவும் நம்பிக்கைகளுக்கே அறைகூவல்விடும் அறிவியற் கோட்பாடுகள் உருவாகியிருந்தாலும், சில ஓங்கலான சிந்தனைச் சட்டகமோ, மன அமைவோ வாய்ந்தவரை, சில அறைகூவல்களையும் கோட்பாடுகளையும் செய்முறைகளையும் தவிர்ப்பது எளிமையாகவே முடிகிறது. அறிவியல் ஏற்றுக்கொண்டுள்ள சிறப்புக் கருத்தியல், சூழலியல் சார்ந்த ஒன்றாகும்; இது புவியில் வாழும் உயிரியல் திணைகளுக்கு இடையில் அமையும் உறவுகளை ஆய்கிறது. புலன்காட்சிசார் உளவியலாளராகிய ஜேம்சு ஜே. கிப்சன், சூழலியல் உறவுகள் சார்ந்த மாந்தப் புலன்காட்சியே மாந்தனின் தன்னுணர்வு தோன்றுவதற்கும் அறிதல் நிகழ்வு தோன்றுவதற்கும் அடிப்படையாகும் என நம்புகிறார். மொழியியலாளர் ஜார்ஜ் இலேகாப் கணிதவியல்சார் அறிதல் முறையியலை வெளியிட்டுள்ளார். இதன்படி, அடிப்படை எண்ணியல் சார்ந்த கணிதவினைகள் பற்றிய எண்ணக்கருக்களே கூட மாந்தனின் சூழலியல்வழி படிமலர்ந்த புலன்காட்சியால் தான் உருவாகின எனக் கூறுகிறார். ஆழ்சூழலியலும் புதுச்சூழலியல் இயக்கமும் ஓரளவு பசுமைவாதிகளும் சூழல் அறிவியலைத் தங்களது நேர்மறையான கருத்தியலாக ஏற்றுக்கொண்டுள்ளனர். சூழல் அறிவியலின் கோட்பாடுளை அறிவியல் முறைமைகளால் நிறுவமுடிந்தாலும், சூழற் பொருளியலானது அறிவியல் கோட்பாட்டை அரசியற் பொருளியலாக மாற்றுவதால் சிலர் அதை எதிர்த்துக் குறைகூறுகின்றனர். இக்காலப் பசுமைப் பொருளியல் இரு அணுகுமுறைகளையும் இணைத்து அறிவியலாகவும் கருத்தியலாகவும் அமைகிறது. இது பொருளியல் கோட்பாடாக மட்டுமின்றி, கருத்தியலாகவும் வளர்கிறது; சில குறிப்பிடத் தகுந்த பொருளியல்சார்ந்த கருத்தியல்களாக, புது தாராளவாதம், பணவாதம், வணிகநிலைவாதம். கலப்புப் பொருளியல், சமூக டார்வினியம், பொதுவுடைமை, கட்டற்ற பொருளியல், கட்டற்ற தொழிவணிகம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். பாதுகாப்பான தொழில்வணிகம், நேர்மையான தொழில்வணிகம் பற்றிய நடப்புக் கோட்பாடுகளையும் கருத்தியல்களாகக் கருதலாம். உளவியல் ஆய்வு கருத்தியல், அரசியலுறுதிப்பாடுகள் எப்போதும் சிந்தனையையும் தற்சார்பு துணிபையும் உணர்த்தும் பார்வைக்கு மாறாக, நனவிலி உந்துதல் நிகழ்வுகளைப் பெரிதும் உணர்த்துவதாக கூறுகிறது. யோசுட்டு இலெட்ஜர்வுடும் ஆர்டீனும் 2009 இல் கருத்தியல்கள் விளக்கத்தின் முன்தொகுப்புகளாகச் செயல்பட்டு வேகமாக பரவலாம் என முன்மொழிந்தனர். இவை உலகைப் புரிந்துகோள்ளவும் சூழலில் நிலவும் அச்சுறுத்தலைத் தவிர்க்கவும் மதிப்பு வாய்ந்த தனியர் நடுவில் அமையும் உறவுகளைச் செழுமைப்படுத்தவும் உதவுகின்றன எனவும் உரைத்தனர். அமைப்பு சார்ந்த உலகப் பார்வைகளை ஏற்க இத்தகைய உந்துதல்கள் வழிவகுக்கலாம் என முடிவாகக் கூறுகின்றனர். உளவியலாளர்கள், ஆளுமைப் பண்புகளும் தனியரின் வேறுபட்ட மறிகளும் தேவைகளும் கருத்தியல் நம்பிக்கையுடன் ஓரிழையில் பின்னிப் பிணைந்துள்ளதாகக் பொதுவாக கண்டறிந்துள்ளனர். குறியியலாளரும் மொழியியலாளருமாகிய பாப் ஓட்கின் கண்னோட்டப்படி, கருத்தியல் " சமூக முகமைகளும் (குழுக்களும்) நிகழ்வுகளும் சார்ந்த சில சிக்கலான பொருண்மைக் கணங்கள் வாய்ந்த ஒற்றை நோக்கத்தை இனங்காண்கிறது". வேறு எந்தச் சொல்லும் இவ்வளவு பொருண்மை வய்ந்த்தாக அமைவதில்லை. மைக்கேல் பூக்கோவின் அறிதல் அலகும் குறுகிய நுண்பொருள் வாய்ந்த்தே; சமூகப் பொருளை உள்லடக்குவதும் இல்லை. அவர்து உரையாடல் வேகமாகமாகப் பரவியதே இது சில கருத்தியல் களங்களை மேலீடான சொல்லடலால் விளக்கியதாலேயே எனலாம். உலகப் பார்வை என்பதும் பரப்புரைச் சுமை வாய்ந்த மீவியற்பியல் (மெய்யியல்) சொல்லேயாகும். கருத்தியல் தன் அக முரண்பாடுகளால், இன்னமும் சமூகம், அரசியல் வாழ்க்கை சார்ந்த குறியியலில் பெரும்பாத்திரம் வகிக்கிறது." மைக்கெல் பிரீடன் போன்ற ஆசிரியர்கள் பொருண்மையியல் கண்ணோட்டத்தில் கருத்தியலைப் பகுப்பாய்வு செய்துள்ளனர். - சல்லி ஆசுலாங்கர் தாராளமயம் தாராளமயம் (Liberalism) என்பது, தனிப்பட்டவர்களின் சுதந்திரத்தை மிகவும் முக்கியமான அரசியல் இலக்காகக் கொண்ட அடிப்படையான கொள்கையாகும். இக் கொள்கை பரந்த எண்ணக்கருக்களையும், கோட்பாடுகளையும் தன்னுள் அடக்கியுள்ளது. தனிப்பட்டவர்களது சுதந்திரம் தாராளமயக் கொள்கைகளின் அடிப்படையாக இருப்பினும், பொருளியல் நல்ல நிலையில் உள்ளவர்கள் தமது வருமானத்தின் ஒரு பகுதியை அரசுக்குக் கொடுக்க வேண்டியது கடமையாகக் கருதப்படுகிறது. தாராளமயத்தின் மூலம் அறிவொளிக் காலத்தில் இருந்து வருகிறது. அரசர்களின் கடவுளுக்கு ஈடான உரிமை, தலைமுறை உரிமை, அரசு மதம், காப்பாண்மையியம் (protectionism) போன்ற முன்னைய அரசுக் கோட்பாடுகளின் அடிப்படை எடுகோள்கள் பலவற்றைத் தாராளமயம் ஏற்க மறுத்தது. ஆடம் சிமித் என்பவராலும் பிறராலும் உருவாக்கப்பட்ட பொருளியல் தாராளமயம், அமைதிக்கும், வளத்துக்குமான சிறந்த வழியாக கட்டற்ற சந்தை, கட்டற்ற வணிகம் என்பவற்றை ஏற்றுக்கொண்டது. தனியார் சொத்துரிமையும், தனிப்பட்ட ஒப்பந்தங்களுமே பொருளியல் தாராளமயத்தின் அடிப்படைகள். பண்பாட்டுத் தாராளமயம் என்பது, பாலியல் சுதந்திரம், மத சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரம், தனிப்பட்ட வாழ்வில் அரசின் தலையீட்டிலிருந்து பாதுகாப்பு என்பவை உள்ளிட்ட தனியார் சுதந்திரங்கள் தொடர்பில் அக்கறை கொண்டுள்ளது. வெவ்வேறு வடிவங்களிலான தாராளமயங்கள் வேறுபட்ட கொள்கைகளைக் கொண்டிருப்பினும், பல அடிப்படையான கொள்கைகளில் அவை ஒன்றுபட்டுள்ளன. சிந்தனைச் சுதந்திரமும் பேச்சுச் சுதந்திரமும், சட்டத்தின் ஆட்சி, சுதந்திரமாக எண்ணங்களைப் பகிர்தல், தனியார் சொத்துரிமை, கட்டற்ற சந்தை, வெளிப்படையான அரசு முறைமை என்பன இவற்றுள் அடங்கும். தாராளமாக , தாராளவாதி, தாராளமயம் போன்ற வார்த்தைகள் அனைத்தும், லத்தீன் மொழியின் 'லிபர்' என்னும் சொல்லில் இருந்து பெறப்பட்டது. அதற்கு அர்த்தம் 'இலவசம்' என்பதாகும். இந்த வார்த்தை முதன் முதலில் பதிவு செய்யப்பட்டது 1375ல், 'தாராளக் கலை' என்னும் வடிவத்தில். அனைத்து மனிதர்களுக்கும் இலவசக் கல்வி என்னும் கருத்தைக் கொண்டது. அன்றாட வாழ்வில் 'தாராளமயம்' என்பது பெருந்தன்மை, திறந்த மனம், பாரபட்சமின்றி போன்ற பொருள்களைக் குறிக்கும். வரலாற்றில், ஒவ்வொரு காலக் கட்டங்களிலும் தாராளமயத்திற்கு ஒவ்வொரு பொருள் உண்டு. 1387ல் தாராளம் என்றால் ' இலவசமாய் வழங்குதல்' எனப் பொருள், 1433ல் 'வரையறையில்லாமல் செய்தல்' எனப் பொருள், 1530ல் 'இலவச அனுமதி' என்றுப் பொருள். 16ம் மற்றும் 17ம் நூற்றாண்டில் 'கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை' என்ற பொருளைக் கொண்டிருந்தது. 16ம் நூற்றாண்டில், ஆங்கிலேயர்களிடையே தாராளம் என்பதற்கு எதிர்மறை அர்த்தத்திலும் நேர்மறை அர்த்தத்திலும் உபயோகப் படுத்தப்பட்டது. இதற்கான எடுத்துக்காட்டுகள், பிரபல எழுத்தாளர் சேக்ஸ்சிபியர் நாவல்களில் உள்ளன. அறிவொளிக் காலத்தில் இதனை விழிப்புணர்வுடன் நேர்மறை அர்த்தத்தில் மட்டுமே பயன்படுதத்ப்பட்டது. பின்னர், காலப் போக்கில், உலகின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு அர்த்தங்களை கொண்டது தாராளமயம் பல பகுதிகளில் பல கோட்பாடுகளை கொண்ட போதிலும், தனிமனித உரிமைகள் மற்றும் சமமான வாய்ப்புகளைப் பற்றி வலியுறுத்துகிறது. தாராண்மையியம், பல வகைகளாக இருந்தாலும், பேச்சுச் சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் போன்ற அடிப்படை கொள்கைகள் பொதுவானதே. தாராளமயம் தனிமனித உரிமைகளையே வலியுறுத்தம், எல்லா வித பொதுக்கூட்டுடைமைக்கும் எதிரானதே. தாராளமயம் , மேற்கத்திய கலாச்சாரத்தால் உருவான ஒரு உணர்வு. மேற்கத்திய மக்கள் எப்போதும் தனித்துவம் பெற்றவர்களாக திகழ்வார்கள். வரலாற்றை புரட்டிப் பார்த்தால், உலகின் மற்ற பகுதிகளில் தனிமனிதன் தனித்து திகழமாட்டான், ஒரு சாதியின் கீழையோ அல்லது ஒரு குலத்தின் கீழையோ அல்லது ஒரு இனத்தின் கீழையோ திகழ்ந்தான். இத்தகைய கூட்டமைப்புகள் மேற்கத்திய நாடுகளில் இல்லாதலால், இந்த தாராளமயம் தோன்றியது. தாராளமயம் என்னும் உணர்வு மேல்நாட்டுச் சிந்தனைகளில், பண்டைய கிரேக்கரர்களிடையே தனித்தனியெ தோன்ற ஆரம்பித்தது. 17ம் மற்றும் 18ம் நூற்றாண்டில் ஆங்கிலேய மற்றும் பிரஞ்சு சிந்தனையாளர்களிடையே, அறிவொளி காலகட்டத்தில், பெரிய அளவில் தோன்றியது. ஆங்காங்கே பல இடங்களில், தாராளமயம் பற்றிய சிந்தனைகளை சேகரித்து, அதற்கு ஒரு வடிவம் கொடுத்தவர், ஆங்கில தத்துவவாதி 'சான் லாக்கே' ஆவார் சான் லாக்கே, 'அரசாங்கம் இரண்டு ஆராய்ச்சி கட்டுரைகள்' என்னும் தலைப்பில் ஒரு படைப்பை 1689ம் ஆண்டில் எழுதினார். இந்த கட்டுரைகள் நிலைநாட்டிய இரண்டு முக்கிய கருத்துகள், பொருளாதார தாராளமயம் (அதாவது செல்வம் சேர்ப்பதுக்கான உரிமை) மற்றும் அறிவொளிச் சுதந்திரம். அவரது கோட்பாடான இயற்கை உரிமைகள், நவீன தாராளமயத்திற்கு அடிப்படையாக திகழ்ந்தது. அமெரிக்க புரட்சியிலும், பிரெஞ்சு புரட்சியிலும் இந்த இயற்கை உரிமையின் தாக்கமே அதன் தாராளமயத்தை வளரச் செய்தது. லாக்கே ஜனநாயகத்துக்கு எதிரானவர், தனிமனிதனின் செல்வம் சேர்க்கும் உரிமையே முக்கியம் எனக் கருதியவர். பிராஞ்சு நாட்டை சேர்ந்த பாரன் தி மாண்டிஸ்கே (1689 - 1755) புதிய சட்டத் திட்டங்களை பரிந்துரைத்தார். இந்த சட்டத் திட்டங்கள், அரசு குடுமபத்தினற்கு எதிராக அமைந்தது. பல பிராஞ்சு அறிஞர்கள் சேர்ந்து 'லேஸ்ஸேஸ் பிரேர்ஸ்"என்னும் பொருளாதார அமைப்பை வடிவமைத்தனர். அறிவொளி காலக்கட்டத்தின், எழுத்தாளர் மற்றும் சிந்தனையாளரான ஜீன் ஜாக்ஸ் ரோஸ்ஸே (1712 - 1778) , சில முக்கிய தாராளமயம் கொள்கைகளை வடிவமைத்தார். மக்கள் தங்களது சிறு உரிமைகளை விட்டுத்தர வேண்டும், அப்போது தான் சமூக ஒழுங்கு இருக்கும். ஸ்காட்டீஸ் அறிவொளி காலக்கட்ட சிந்தனையாளர்கள், டேவிட் ஹ்யூம்(1711 - 1776), ஆடம் ஸ்மித் (1723 - 1790) தாராளமயத்தின் சித்தாந்தத்திற்கு பங்களித்தனர். ஹ்யூமைப் பொருத்த வரையில், மனிதனின் அடிப்படை குணங்கள் கட்டுப்பாடுகளை இறுதியில் உடைத்து எரியும். தனிமனிதனால் தனது அறநெறிகளையும், பொருளாதாரத்தையும் தானே வடிவமைத்துக் கொள்ள முடியும் என ஆடம் ஸ்மித் விவரித்தார். தனி மனிதன் தனது முயற்சிகளை சுதந்திரமாக, அரசாங்கத்தின் கட்டுப்பாடின்றி மேற்கொண்டால் தான், நாட்டின் பொருளாதரம் வளரும். இயற்க்கையாகவோ அல்லது தேவையின் பொருட்டோ, தனிமனிதன் தன் வாழ்வாதாரத்தை தேர்ந்தெடுக்கும் போது தான், சமுதாயத்திற்கு நன்மை கிட்டும். 1776ம் ஆண்டில் படைத்த நாட்டின் வளமை என்னும் இவரது படைப்பு வலியுறுத்துவது, கட்டுப்பாடின்றி திகழும் சந்தைக்கு தாமாகவே தன்னைச் சீர் திருத்திக் கொள்ளும் ஆற்றல் கொண்டது. அமெரிக்க புரட்சியின் (1775 - 1783), அடிப்படைகளை கட்டமைத்தவர்கள், தாமஸ் பேயின் (1737 - 1809), தாமஸ் ஜெப்பர்சன் (1743 -1826) மற்றும் சான் ஆடம்ஸ் (1735 - 1826). இவர்கள் வாழ்க்கை தாராளமயத்தின் போராட்டம் பெயரில் கிளர்ச்சிகளை தூண்டிவிட்டனர். முக்கியமாக பேயினின் துண்டுப்பிரசுரங்களான 'பொது அறிவு' மற்றும் 'மனிதனின் உரிமை' மக்களிடையே மிகுந்த தாக்கங்களை ஏற்படுத்தியது. தாராளமயம் கொள்கைகளின் வரலாற்றில் மற்றொரு முக்கிய தாக்க, பிரஞ்சு புரட்சி (1789 - 1799). இதில் அமெரிக்க புரட்சியைக் காட்டிலும் கிளர்ச்சி மேலோங்கித் தென்ப்பட்டது. 19ம் நூற்றாண்டில், தனது படைப்பு தாராளமயம் (1859) மற்றும் பல படைப்புகள் மூலம், சான் சுடூவர்ட் மில்(1806-1873) பிரபலமாக்கினார். 19ம் நூற்றாண்டின் இறுதியில் இரண்டு பிரிவுகள் தென்பபட்டன. ஓரு பிரிவு அரசாங்கத்தை முற்றிலும் எதிர்த்து, மற்றொரு பிரிவின் கருத்து, பொருளாதாரம் பொருத்த வரையில் அரசாங்கத்தில் தலையீடு சிறிதளவில் தேவைப்பட்டது. 20ம் நூற்றாண்டில், வளர்ந்து வரும் பொருளாதார சமத்துவமின்மை காரணமாக சமூக(நவீன) தாராளமயம் உருவானது. இதனை ஆதரித்த பிரபலங்கள், சான் மேய்நார்ட் (1883 - 1946), "பிராங்கலின் ரூஸவெல்ட் (1882 - 1945) மற்றும் சான் கென்னத் கால்பிரேத்"' (1908 - 2006) சித்தாந்தங்களைப் பொருட்டு தாராளமயம் , இரண்டு வகைப்படும். பாரம்பரிய தாராளமயம் மற்றும் சமூக தாராளமயம் பாரம்பரிய தாராளமயத்தின் மிக முக்கிய சித்தாந்தம், கட்டாயப்படுத்துதலிருந்து விடுதலை. பொருளாதாரத்தில் அரசு தலையீடும் ஆற்றல் என்பது ஒரு வகையான கட்டாயப்படுத்துதலே. இது தனி மனித பொருளாதரத்தை வரையறைப் படுத்துகிறது. 'லேஸ்ஸேஸ் பிரேர்ஸ்' என்னும் பொருளாதார வழிப்பாட்டை ஆதரிக்கிறது. இது பிரஞ்ச் தொடர்மொழியாகும், தமிழில் இதன் பொருள், 'அவர்களையே செய்ய விடுங்கள்'. அதாவது பாரம்பரிய தாராளமயம் பொருத்த வரையில் தனியார் பரிவர்த்தனைகள் அரசின் கட்டுப்பாடுகளில் இருந்து விடுபட வேண்டும். அரசின் சுங்க வரிகள், ஒழுங்கு முறைகள், மாணியங்கள், சலுகைகள் ஆகியவை நீக்கப்பட வேண்டும். மேலும், இது அரசின் பொதுநல சேவைகளுக்கு எதிரானது. சமூக தாராளமயம், இதற்கு முற்றிலும் மாறுப்பட்டு, பொதுநல சேவைகளில் அரசின் பங்கு மிகவும் முக்கியம் என வழிமொழிகிறது. எப்போது குடிமக்கள் எல்லோரும் ஆரோக்கியமாகவும், படித்தவர்களாகவும் கொடிய ஏழ்மையிலிருந்து விடுப்பட்டவர்களாகவும் திகழ்கிறார்களோ, அன்றே முழுமையான தன்னுரிமைப் பெறுவார்கள். சமூக தாராளமையாளர்களின் நம்புவது என்னவென்றால், பொதுச் சேவைகளான கல்வியுரிமை, உடல்நலம் காப்பீடு, வாழ்க்கை ஊதியம், வேலைப் பாகுபாடுகளுக்கு எதிரான சட்டங்கள், சுற்றுச் சூழலுக்கு எதிரான சட்டங்கள் போன்றவற்றை நடைமுறைப்படுத்த, ஏறு வரி, சுங்க வரி ஆகியவற்றை ஒர் அரசு பொதுமக்களிடமிருந்து வசூல் செய்ய வேண்டும். மற்ற உலக சித்தாந்தங்களைப் போல தாராளமயத்தில் பல வேறுபாடுகள் உள்ளன தேசியவாதம் தேசியவாதம் என்பது நாட்டினம் ஒன்றின் மீது அக்கறை கொண்ட ஒரு கருத்தியல், உணர்வு, ஒரு பண்பாட்டு வடிவம் அல்லது சமூக இயக்கம் ஆகும். நாட்டினங்கள் என்பதன் வரலாற்று மூலம் குறித்துக் குறிப்பிடத் தக்க கருத்து வேறுபாடுகள் காணப்பட்டாலும், ஒரு கருத்தியல், ஒரு சமூக இயக்கம் என்ற வகையிலாவது, தேசியவாதம் என்பது ஐரோப்பாவில் உருவான ஒரு அண்மைக்காலத் தோற்றப்பாடு என்பதைப் பல அறிஞர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். இது எப்போது எங்கே தோன்றியது என்பதைத் துல்லியமாகச் சொல்ல முடியாவிட்டாலும், 18 ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சுப் புரட்சிக் காலத்தில் தோன்றிய மக்கள் இறைமைக்கான போராட்டங்கள் போன்றவற்றோடு இது நெருங்கிய தொடர்பு கொண்டது. அப்போதிருந்து, உலக வரலாற்றில் தேசியவாதம், குறிப்பிடத்தக்க அரசியல், சமூக சக்தியாக இருந்து வந்தது. முதலாம், இரண்டாம் உலகப் போர்கள் உருவானதற்காக முக்கிய காரணமாகவும் இது தொழிற்பட்டதைச் சிறப்பாகக் குறிப்பிடலாம். ஒரு கருத்தியல் என்ற வகையில், தேசியவாதம், மக்கள் இறைமைக் கொள்கையின்படி மக்கள் என்பது நாட்டினம் (nation) என்று கொள்கிறது. அத்துடன், இதன் விளைவாக நாட்டினத் தன்னாட்சி உரிமைக் கொள்கையின் அடிப்படையில் நிறுவப்பட்ட நாட்டின அரசுகளே ஏற்றுக்கொள்ளத் தக்கவை என்கிறது தேசியவாதம். பல நாடுகள் பல இனங்களைக் கொண்டிருக்கின்றன அல்லது நாட்டினத் தகுதி கோரும் ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்களைக் கொண்டவையாக இருக்கின்றன. இதனால், தேசியவாதம் பெரும்பாலும் முரண்பாடுகளைத் தோற்றுவிப்பதுடன், பேரரசுவாத ஆக்கிரமிப்பு, நாட்டின விடுதலை ஆகிய சூழல்களில் போர்கள், பிரிவினை, இனப்படுகொலை போன்றவற்றோடு தொடர்புடையதாக உள்ளது. தேசியவாதமானது தேசத்திற்கான பக்தி என்பதாகும். இது மக்கள் ஒன்றாக இணைக்கும் ஒரு உணர்வு ஆகும். தேசிய சின்னங்கள், தேசிய கொடிகள், தேசிய கீதங்கள், தேசிய மொழிகள், தேசிய தொன்மங்கள் மற்றும் தேசிய அடையாளத்தின் பிற சின்னங்கள் ஆகியவை தேசியவாதத்தில் மிக முக்கியமானவை. தேசியவாதம் என்பது ஒரு குறிப்பிட்ட நாடுகளின் நலன்களை மேம்படுத்துவதன் மூலம், குறிப்பாக சுய-ஆட்சி, அல்லது முழு இறையாண்மையை பெற்றுக்கொள்வதன் நோக்கம் கொண்ட குழுவினரின் தாய்நாட்டின் மீதுள்ள அரசியல், சமூக மற்றும் பொருளாதார அமைப்புகளின் ஒரு எல்லையாகும். தேசியவாதம் என்பது கலாச்சாரம், மொழி, இனம், மதம், அரசியல் இலக்குகள் அல்லது ஒரு பொதுவான மூதாதையர் உள்ள நம்பிக்கை போன்ற பகிரப்பட்ட குணாதிசயங்களை அடிப்படையாகக் கொண்ட தேசிய அடையாளத்தை உருவாக்குவதற்கும் பராமரிப்பதற்கும் நோக்குநிலை ஆகும். ஒரு நாட்டின் குடியிருப்பாளர்களைக் குறிக்கவும், பகிர்ந்து கொள்ளப்பட்ட வரலாறு, சட்டம், மொழி, அரசியல் உரிமைகள், மதம் மற்றும் மரபுகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் கூட்டு அடையாளங்களுடனான, நவீன கருத்தாக்கத்திற்கு மிகவும் ஒத்ததாக, வார்த்தை 1850 க்கு முன்னர் ஐரோப்பாவில் பயன்படுத்தப்பட்டது.தேசியவாத கருத்து பழையதாக இருந்தாலும், தேசியவாதம் (Nationalism) ஆங்கிலத்தில் ஒரு புதிய சொல் ஆகும். இது 1798 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 19 ஆம் நூற்றாண்டில் இந்த வார்த்தை மிக முக்கியமானதாக ஆனது. 1914 க்குப் பின்னர் இந்த வார்த்தை பெருமளவில் எதிர்மறையாக மாறியது. "இருபதாம் நூற்றாண்டு, தேசியவாதத்துடனான ஆழ்ந்த ஏமாற்றத்தின் நேரம், உலகமயமாதலின் மிகப்பெரிய யுகமும் ஆகும்" என்று கிளெண்டா ஸ்லூகா குறிப்பிடுகிறார். பல அரசியல் விஞ்ஞானிகள் நவீன தேசிய அரசு மற்றும் இறையாண்மை என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டனர். அரசியல் விஞ்ஞானியின் தேசியவாதத்தின் கருத்து இந்த தத்துவார்த்த அடித்தளங்களிலிருந்து வந்திருக்கிறது. மாகியேவெல்லி, லாக், ஹோப்ஸ் மற்றும் ரோஸ்ஸு போன்ற தத்துவவாதிகள் ஆட்சியாளர்களுக்கும் தனிநபர்களுக்கிடையில் ஒரு "சமூக ஒப்பந்தத்தின்" விளைவாக மாநிலத்தை கருத்தியல்ரீதியாக நடத்தினர். வெபர், மாநிலத்திற்கு மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படும் வரையறையை வழங்குகிறது, "ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் சட்டபூர்வமான உடல்ரீதியான வன்முறையின் ஏகபோக உரிமைக்கு வெற்றிகரமாக உள்ள மனித சமூகம்". ஒருங்கிணைந்த தேசியவாதம் உட்பட பல்வேறு வகையான தேசியவாதங்கள் உள்ளன. ஒரு தேசிய சுதந்திரம் அடைந்து ஒரு சுயாதீன அரசை நிறுவிய பின்னர் ஒருங்கிணைந்த தேசியவாதம் ஏற்படுகிறது.பாசிஸ்டு இத்தாலி மற்றும் நாஜி ஜெர்மனி, ஆல்ட்டர் மற்றும் பிரவுன் ஆகியவற்றின் கூற்றுப்படி, ஒருங்கிணைந்த தேசியவாதத்தின் எடுத்துக்காட்டுகள் ஆகும்.ஒருங்கிணைந்த தேசியவாதத்தை குணாதிசயப்படுத்துகின்ற சில குணாதிசயங்கள் தனிநபர் எதிர்ப்பு, ஸ்டாடிசம் (சில சித்தாந்தங்களால் திட்டமிடப்பட்டவை), தீவிர தீவிரவாதம் மற்றும் ஆக்கிரோஷ-விரிவாக்கவாத இராணுவவாதம் ஆகியவை ஆகும். ஒருங்கிணைந்த தேசியவாதம் என்பது பாசிசத்தோடு அடிக்கடி இணைகிறது, எனினும் பல இயற்கை கருத்து வேறுபாடுகள் உள்ளன. சுயாதீனத்தை அடைந்தவுடன் ஒரு வலுவான இராணுவ சகாப்தம் ஒரு வலுவான இராணுவ ஒழுக்கத்தை அடைந்த நாடுகளில் ஒருங்கிணைந்த தேசியவாதம் தோன்றுகிறது, ஒரு புதிய இராணுவத்தின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த ஒரு வலுவான இராணுவம் தேவை என்று நம்பப்படுகிறது. மேலும், அத்தகைய விடுதலை போராட்டத்தின் வெற்றி, தேசிய உயர்ந்த உணர்வின் விளைவாக, தீவிர தேசியவாதத்திற்கு வழிவகுக்கும். பொதுஜன தேசியவாதம் (தாராளவாத தேசியவாதம் என்றும் அழைக்கப்படுவது) தேசத்தைச் சேர்ந்தவர்களாகவும், சமமான மற்றும் பகிரப்பட்ட அரசியல் உரிமைகள் மற்றும் அதேபோன்ற அரசியல் நடைமுறைகளுக்கு விசுவாசம் உள்ளவர்களாக இருப்பதை அடையாளப்படுத்தும் ஒரு கூட்டாண்மை என தேசத்தை வரையறுக்கிறது.பொதுமக்களது தேசியவாத கொள்கைகளின் படி, தேசமானது பொதுவான இனப்பெருக்கம் சார்ந்ததாக இருக்கவில்லை, ஆனால் ஒரு முக்கிய அரசியல் தன்மை, இனக்குழு அல்ல. தேசியமயமாக்கல் மற்றும் அதேசமயம், ஒரு இனத்தையோ அல்லது நாட்டின்மீது மற்றவர்களுடைய மேன்மையை நம்புவதையோ நம்புவது இல்லை, சில தேசியவாதிகள் இனவெறி மேலாதிக்கத்தை அல்லது பாதுகாப்புவாதத்தை ஆதரிக்கின்றனர். மதம் சார்ந்த தேசியவாதம் ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கையின்மை, கொள்கை, அல்லது தேசிய ஒற்றுமை உணர்வு, பன்னாட்டு குடிமக்கள் மத்தியில் ஒரு பொதுப் பங்கினை பங்கிட்டுக் கொள்ளும் வகையில் பகிர்ந்து கொள்ளக்கூடிய மதத்திற்கு தேசியவாதத்தின் உறவு ஆகும். இந்துத்துவா, பாகிஸ்தானிய தேசியவாதம் (இரண்டு நாடுகள் கோட்பாடு), Religious Zionism எல்லாம் சில உதாரணங்கள். சில தேசியவாதிகள் சில குழுக்களை ஒதுக்கி விடுகின்றனர். சில தேசியவாதிகள் இன, மொழி, கலாச்சார, வரலாற்று அல்லது மத சொற்களில் (அல்லது இவற்றின் கலவையாக) தேசிய சமூகத்தை வரையறுக்கிறார்கள், பின்னர் அவர்கள் 'தேசிய சமூகத்தின்' பகுதியாக இல்லை என சில சிறுபான்மையினர் கருதுகின்றனர். . நாட்டினரால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பகுதியை விட தேசிய அடையாளத்திற்கு சில சமயங்களில் ஒரு தொன்மையான தாயகம் மிகவும் முக்கியமானது. இடது சாரி தேசியவாதம் (எப்போதாவது சோசலிச தேசியவாதம் என்று அழைக்கப்படுகிறது, தேசிய சோசலிசத்துடன் குழப்பப்படக்கூடாது), இடதுசாரி அரசியலை தேசியவாதத்துடன் இணைக்கும் எந்த அரசியல் இயக்கத்தையும் குறிக்கிறது.பல தேசியவாத இயக்கங்கள் தேசிய விடுதலைக்காக அர்ப்பணிக்கப்பட்டவை, அவற்றின் நாடுகள் பிற நாடுகளால் துன்புறுத்தப்பட்டு வருகின்றன என்பதோடு, குற்றவாளிகளிடமிருந்து தங்களை விடுவிப்பதன் மூலம் சுயநிர்ணயத்தைத் தூண்ட வேண்டும். எதிர்ப்பு திருத்தல்வாத மார்க்சிச-லெனினிசம் நெருக்கமாக இந்த சித்தாந்தத்துடன் இணைந்துள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறை உதாரணங்கள் ஸ்டாலினின் ஆரம்பகால வேலை மார்க்சிசமும், தேசிய வினாவும், ஒரு சோசலிசமும், ஒரு தேசிய அரசியலிலும் தேசியவாதத்தை இனவாத அல்லது மத பிளவுகள் இல்லாமல் தேசிய விடுதலைக்காக போராடும் ஒரு சர்வதேசிய சூழலில் பயன்படுத்த முடியும் என்று அறிவிக்கிறது, 1959 ஆம் ஆண்டு கியூபா புரட்சியை துவக்கிய ஃபிடல் காஸ்ட்ரோவின் 26 ஜூலை இயக்கம், அயர்லாந்தின் சின் ஃபெய்ன், வேல்ஸின் ப்ளைட் சைம்ரூ, பங்களாதேஷில் ஆவாமி லீக், தென்னாப்பிரிக்காவின் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் பல இயக்கங்கள். ஒரு குறிப்பிட்ட தேசத்தின் அனைத்து குடிமக்களும் தங்கள் நாட்டில் பிறந்த அல்லது தத்தெடுப்புக்கு கடமைப்பட்டிருப்பதாக பிராந்திய தேசியவாதிகள் கருதுகின்றனர். ஒரு புனிதமான தரமானது நாட்டில் தேடப்படும் மற்றும் பிரபலமான நினைவுகூறல்களில் எதிர்பார்க்கப்படுகிறது. குடியுரிமை தேசியவாதிகளால் சிறந்தது. ஒரு பிராந்திய தேசியவாதத்தின் ஒரு அளவுகோல் பொது மக்களின் பொதுவான மதிப்புகள், குறியீடுகள், மரபுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு பரந்த, பொது கலாச்சாரத்தை ஸ்தாபிப்பதாகும். போருக்குப் பிந்திய காலப்பகுதிகளை அகற்றுவதன் போது தேசியவாதத்தின் இந்த வடிவம் வந்தது. வெளிநாட்டு சக்திகளால் அடிபணியப்படுவதற்கு எதிராக ஆபிரிக்காவிலும் ஆசியாவிலும் இது ஒரு பிரதிபலிப்பாக இருந்தது. இது சோரிஸ்ட் பேரரசின் ரஷ்ய அல்லாத பகுதிகளிலும் பின்னர் சோவியத் யூனியனில் ரஷ்ய போல்ஷிவிக்கு ஆட்சியை புதுப்பித்த ரஷ்ய ஏகாதிபத்தியமாக ரஷ்ய போல்ஷிவிக் ஆட்சியை கண்டனம் செய்த யூ.எஸ்.எஸ்.ஆர். இந்தியத் துணைக்கண்டத்தில் மகாத்மா காந்தி தலைமையிலான அமைதியான செயலூக்கமான எதிர்த்தரப்பு இயக்கம் உள்பட பல தேசியவாதிகள் இந்தப் போக்கைக் கைப்பற்றினர். பெனடிக்ட் ஆண்டர்சன், காலனித்துவ எதிர்ப்பு தேசியவாதம், எழுத்தறிவு மற்றும் இருமொழி சுதேச புத்திஜீவிகளின் அனுபவத்தில் ஏகாதிபத்திய சக்தியின் மொழியில் சரளமாக உள்ளார் என்று வாதிட்டார் , அதன் "தேசிய" வரலாற்றில் பாடப்படும், மற்றும் காலனித்துவ நிர்வாக அதிகாரிகளை பணியமர்த்துதல் ஆனால் அதன் உயர்ந்த மட்டங்களை உள்ளடக்கியது அல்ல. காலனித்துவ தேசிய அரசாங்கங்கள் முந்தைய ஏகாதிபத்திய நிர்வாகத்தின் உள்நாட்டு வடிவங்களாக இருந்தன. பான்-தேசியவாதம் என்பது ஒரு பெரிய பரப்பளவை உள்ளடக்கியது. பான்-தேசியவாதம் இனக்குழுக்களின் "கொத்தாக" அதிக கவனம் செலுத்துகிறது. பான்-ஸ்லாவியம் பான்-தேசியவாதத்தின் ஒரு எடுத்துக்காட்டு ஆகும். ஒரு நாடு அனைத்து ஸ்லாவிக் மக்களையும் ஐக்கியப்படுத்துவதே ஆகும். 1918 ஆம் ஆண்டில் யூகோஸ்லாவியாவில் பல தென் ஸ்லேவிக் மக்களை ஐக்கியப்படுத்துவதன் மூலம் அவர்கள் வெற்றியடைந்தனர். பயங்கரவாதம் பயங்கரவாதம் ("Terrorism") என்பது ஒரு மரபுசாராப் போர்முறையும், உளவியற் போர்முறையும் ஆகும். இச்சொல் அரசியலோடும் உணர்வுகளோடும் தொடர்புபட்டிருப்பதால் இதனைச் சரியாக வரையறுப்பது கடினமானது. 1988 ஆம் ஆண்டில், ஐக்கிய அமெரிக்கப் படைத்துறை நடத்திய ஓர் ஆய்வின்படி பயங்கரவாதத்துக்கு நூற்றுக்கு மேற்பட்ட வரைவிலக்கணங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. பயங்கரவாதத்தில் ஈடுபடும் ஒருவர் "பயங்கரவாதி" எனப்படுவார். பயங்கரவாதத்தைப் பல வகையான அரசியல் இயக்கங்கள் தமது நோக்கங்களை அடைவதற்காகப் பயன்படுத்துகின்றன. இவற்றுள் இடதுசாரி, வலதுசாரி இயக்கங்கள், மதக் குழுக்கள், புரட்சியாளர்கள், ஆளும் அரசுகள் போன்ற பலவும் அடங்கும். அரசு அல்லாத குழுக்கள் பரவலான ஆயுதப் போராட்டங்களில் ஈடுபட்டிருப்பது போர்ச் சட்டங்களைப் பயன்படுத்துவதில் பல சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது. பயங்கரவாதம், தீவிரவாதம் ("Extremism") மற்றும் அடிப்படைவாதம் ("Fundamentalism") ஆகியன ஒன்றோடு ஒன்று தொடர்புடையன. அடிப்படைவாதம் தமது கருத்தை பிறர் அடியொற்றி பின்பற்ற வேண்டுமெனும் நோக்கில் வன்முறை சார்ந்தோ அல்லது அதிகாரத்தின் வழியோ மேற்கொள்வது. தீவிரவாதம் எனப்படுவது அச்சமூட்டும் வன்முறை நடவடிக்கை. தீவிரவாதம் மென்பயங்கரவாதத்தின் குழந்தையாகும். மென் பயங்கரவாதம் அதிகரிக்கும் போது அதை எதிர் கொள்ள வேறு வழியின்றி நாடும் செயல். பயங்கரவாதம் என்பது யாருக்காகவோ அப்பாவிகள் பாதிக்கப்படுவர் என தெரிந்தே, முறையான அல்லது முறையற்ற அமைப்பாக இணைந்தோ தனித்தோ, மேற்கொள்ளும் கொடும் செயல் அல்லது நடவடிக்கை. பயங்கரவாத தாக்கம் வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ இருக்கலாம். ஆயுதங்களைக் கொண்டு மேற்க்கொள்ளும் நடவடிக்கைகளில் பாதிப்புகள் வெளிப்படையானது. அதோடு அவை அப்பாவிகளின் உயிருக்கோ அல்லது உடைமைக்கோ உயிருடைமைக்கோ பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கோடு செயல்படுத்தப்படுவது. எனவே, பயங்கரவாத தாக்கம் வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ இருக்கலாம். வெளிப்படையாக தெரியும் வகையில் அமைந்த நடவடிக்கைகளை "வன் பயங்கரவாதம்" ("Hard-Terrorism") என அழைக்கலாம். இவை பெரும்பாலும் ஆயுத குழுக்களால் மேற்கொள்ளப்படுகிறது. அதே வேளையில், பயங்கரவாத தாக்கம் வெளியே தெரியாத வண்ணம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை "மென் பயங்கரவாதம்" ("Soft-Terrorism") என அழைக்கலாம். இவை அதிக அளவில் பதவி மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களாலேயே மேற்கொள்ளப்படுகிறது. வன் பயங்கரவாதம் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தும் வகையில் குண்டு வெடிப்பு, துப்பாக்கிச் சூடு, விமானக் கடத்தல் போன்ற செயல் வடிவமாக வெளிப்படுகிறது. இதன் பாதிப்பை அனைவரும் அறிய இயலும். இது, பொருண்மைக் கருவிகளைக் (ஆயுதங்களைக்) கொண்டு தனி நபராலோ அல்லது குழுக்களாலோ செய்யப்படுகிறது. மென் பயங்கரவாதம் அதிகார மீறல், ஊழல், பாகுபடுத்தல், ஒருசார்பாய் நடத்தல், மதம், மொழி, கலாச்சாரம் போன்றவற்றைத் தாக்குதல், பொருளாதார அழிவுகளை ஏற்படுத்துதல் போன்ற செயல் வடிவமாக வெளிப்படுகிறது. இதன் பாதிப்பை அனுபவப்பட்டவரனறி பிறர் அறிய இயலாது வெளிப்படையாகத் தெரியாது. இது, பணம், அதிகாரம், பதவி, ஆசை எனும் கருவி கொண்டு, பொருண்மை கருவி துணையுடனோ அல்லது துணையின்றியோ, செயல் படுத்தப்படுகிறது. இவ்வுலகில் அனைத்து உயிரினங்களும் தங்களால் தாங்கும் நிலைக்கு பொறுத்துப் போகின்றன. பொறுமை காப்பதனால் பலன் இல்லை எனும் நிலையில் அனைத்து உயிரினங்களுமே போரட துணிகின்றன. ஏனெனில், அவை போரடாவிட்டல் வாழ்க்கை என்பதே இல்லாது உணரப்படுகிறது. சமத்துவமின்மை நிலவும் போது இது பயங்கரவாதமாகவோ அல்லது தீவிரவாதமாகவோ வெளிப்படுகிறது. பயங்கரவாதம் என்பது, சிறப்பாகக் கட்டாயப்படுத்தும் நோக்கில் ஒழுங்கமைந்த முறையில் அச்சமூட்டலைப் பயன்படுத்துவது ஆகும். இதற்கு, உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரைவிலக்கணம் கிடையாது. பயங்கரவாதத்தின் மிகப் பொதுவான வரைவிலக்கணங்கள், கருத்தியல் சார்ந்த இலக்கொன்றை அடைவதற்காகப் பயத்தை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடல், போரில் ஈடுபடாதவர்களை வேண்டுமென்றே இலக்குவைத்தல் அல்லது அவர்களது பாதுகாப்பைப் பொருட்படுத்தாது விடுதல் போன்றவற்றை உள்ளடக்குகின்றன. சில வரைவிலக்கணங்கள், சட்டத்துக்குப் புறம்பான வன்முறை, போர்கள் என்பவற்றையும் சேர்த்துக்கொள்கின்றன. பல நாடுகளும் இயக்கங்களும், தாம் அல்லது தமது கூட்டாளிகள் இதே நடவடிக்கைகளில் ஈடுபடும்போது அதை வேறுபெயர்கள் சொல்லி அழைத்து நியாயப்படுத்துவதும், அதனை ஊக்குவிப்பதும் தமக்கு வேண்டாதவர்கள் செய்யும்போது அதைப் பயங்கரவாதம் என்பதும் உலக நடைமுறையாக உள்ளது. ஒரு குறிப்பிட்ட நம்பிக்கைகளை அமலாக்கவும், மத நம்பிக்கைகளை பரப்பவும் மத பயங்கரவாதம் உலகளவில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக செப்டம்பர் 11 தாக்குதலுக்கு முன்பு வரை உலக அளவில் தேசியவாதத்தை முன்னிறுத்திய தீவிரவாத குழுக்களே அதிக வன்முறைகளில் ஈடுபட்டன. ஆனால் செப்டம்பர் தாக்குதலுக்கு பிறகு மத தீவிரவாத தாக்குதல்கள் 5 மடங்காக பெருகின. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் போகோ ஹரம்,  ஐஎஸ்ஐஎஸ், அல்-காய்தா, தாலிபான் போன்ற அமைப்புகள் உலக அளவில் மத தீவிரவாத போக்கிற்கு வழிவகுத்தன.  இந்த தீவிரவாத குழுக்கள் குறிப்பாக ஈராக், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நைஜீரியா, சிரியா போன்ற நாடுகளில் மிக தீவிரமாக செயல்படுகின்றனர். தீவிரவாதத்தில் உயிரிழந்தவர்களில் 80 சதவீதம் பேர் மேலே குறிப்பிட்ட ஏதோ ஒரு நாட்டை சேர்ந்தவராகவே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் 11, 2001 அன்று அமெரிக்காவின் உலக வர்த்த மைய கட்டிடம், ராணுவ தலைமையகம் (பென்டகன்) ஆகியவற்றின் மீது அல் கைடா அமைப்பு விமானத்தை மோதி தற்கொலைபடை தாக்குதல் நடத்தியது. இதில் 3000 பேர்வரை உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பின்பு பயங்கரவாதத்துக்கு எதிரான உலக நாடுகளின் செயல்பாடுகளில் பெரியளவில் மாற்றங்கள் ஏற்பட்டன. அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது போர்தொடுத்ததும், சில ஆண்டுகளுக்கு பிறகு  அல் கைடா தலைவர் ஒசாமா பின்லேடன் சுட்டுகொல்லப்பட்டதும் தீவிரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் புதிய நிலைப்பாட்டை உறுதிசெய்தன.  1970 வதுகளில் பயங்கரவாதிகளின் இலக்கு பொதுவாக காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகள் தான். ஆனால் சமீப காலங்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பயங்கரவாத தாக்குதலுக்கு அதிகம் இலக்காகின்றனர். லூக் ஹோவெய் என்பவர் பயங்கரவாதத்தை பற்றி குறிப்பிடும் பொழுது, பயங்கரவாதிகளின் குறிக்கோள் ஒட்டுமொத்த நாகரீகத்தையும் அழிப்பதல்ல, தங்கள் செயல்பாடுகள் மூலம் ஒரு வித பய உணர்வை பரப்பி தங்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள செய்வதேயாகும்.  பயங்கரவாதிகளின் குறிக்கோள் மக்களின் கவனத்தை ஈர்ப்பதும் தான் என்பதால் வெளிநாட்டு பயணிகள் குறிவைக்கப்படுகின்றனர். காரணம் ஊடங்கள் வெளிநாட்டு பயணிகள் மீதான தாக்குதல்களுக்கு பெரிய முக்கியத்துவம் தருகின்றன.  பயங்கரவாதிகள் பல நேரங்களில் அரசாங்களாலேயே ஊக்குவிக்கப்படுகின்றனர். உதாரணமாக பாலஸ்தீன விடுதலை இயக்கம் போன்றவை சோவியத் போன்ற நாடுகளால் நிதி உதவி செய்யப்படுகின்றன. பொதுவாக பயங்கரவாதிகள் தங்களுக்கான நிதியை சிறு சிறு தொகைகளாகவே பெறுவதால் அவற்றை கண்காணிப்பதும் உலக நாடுகளுக்கு பெரிய சவாலாக உள்ளது.தீவிரவாத குழுக்கள் பல நேரங்களில் போதைப்பொருள் கடத்தல், ஆட்களை கடத்தி பணம்பெறுதல், ஹவாலா பரிமாற்றம் போன்றவற்றில் ஈடுபட்டும் நிதியை பெறுகின்றனர். . இன்று உலகை அச்சுறுத்தும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் தங்கள் நிதிதேவைக்காக சிரியா மற்றும் ஈராக்கில் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளில் உள்ள பழங்கால கலை பொருட்களை கடத்தி உலக சந்தைகளில் கள்ளத்தனமாக விற்க துவங்கினர். அல் காயிதா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி வழங்குவதாக கூறி அமெரிக்கா, சவுதி, பஹரைன், யுஏஈ போன்ற நாடுகள் கத்தார் நாட்டுடனான ராஜாங்க உறவை 2017 ஜூன் மாதத்தில் துண்டித்தன. பயங்கரவாத தாக்குதல்கள் பொதுவாக மக்களிடம் பய உணர்வை ஏற்படுத்தவே நடைபெறுகிறது. பயங்கரவாதிகள் பொதுவாக வெடிகுண்டுகள் அல்லது விஷம் போன்றவற்றை தாக்குதலுக்கு பயன்படுத்துகின்றனர். பயங்கரவாத தாக்குதல்கள் பலநேரங்களில் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்ட தீவிரவாதிகளை கொண்டே நடத்தப்படுகிறது.  பயங்கரவாதிகள் தங்கள் தகவல் தொடர்புக்கு இன்றைய நவீன கால வாட்ஸாப் முதல் பழமையான கூரியர் வரை அனைத்தையும் பயன்படுத்துகின்றனர். அரசு படைகளுடன் நேரடி யுத்தத்தில் வெற்றிபெற முடியாது என்பதால் பொதுவாக சமச்சீரற்ற போர் முறையே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.  பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்கள், நாடுகடத்தல், போலீஸ் துறை நவீனமயமாக்கல், முன்னெச்சரிக்கை ராணுவ நடவடிக்கைகள், மேம்பட்ட உளவு நடவடிக்கைகள் போன்றவை பயங்கரவாதத்தை எதிர்கொள்ள உலக நாடுகளால் செயல்படத்தப்படும் நடவடிக்கைகளாகும்.  செப்டம்பர் தாக்குதலுக்கு பிறகு அமெரிக்கா பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை உலகளவில் முடுக்கிவிட்டது. குறிப்பாக இஸ்லாத்திய பயங்கரவாதத்தை எதிர்கொள்ள அமெரிக்காவின் இரண்டு கட்சிகளான குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயக கட்சிகளிடையே கருத்துவேறுபாடுகள் உள்ளன. குடியரசு கட்சி புஷ் கோட்பாடு அதாவது மத்திய கிழக்கு நாடுகளில் ராணுவ நடவடிக்கை மூலம் ஜனநாயகத்தை உருவாக்கி தீவிரவாதத்தை வீழ்த்துவது என்ற கொள்கையை ஆதரிக்கிறது. ஆனால் ஜனநாயக கட்சி சட்ட அமலாக்கத்தின் மூலம் பிறநாடுகளுடன் நல்லுறவை பேணிவது மற்றும் உள்நாட்டு பாதுகாப்பை மேம்படுத்துவது என்ற கொள்கையை கொண்டுள்ளன.  பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத தடுப்பு என்பது கல்வித்துறையில் பெரிய ஆராய்ச்சி தலைப்புகளாக உள்ளன. இத்தகைய ஆராய்ச்சிகளின் நோக்கம் பயங்கரவாதத்தின் காரணத்தை புரிந்துகொள்வது, அவற்றை தடுப்பது மற்றும் பயங்கரவாதத்தின் விளைவுகளை புரிந்து கொள்வது போன்றவையாகும். பயங்கரவாத ஆராய்ச்சிகள் சிவில் மற்றும் ராணுவ சூழலில் நடத்தப்படுகின்றது. இன்டர்நேஷனல் சென்டர் பார் கவுன்டர் டேரரிசம் (ICCT) போன்றவை இத்தகைய ஆராய்ச்சி நிலையங்களாகும்.  ஆராய்ச்சி முடிவுகளின் படி 1968 முதல் 2006 ஆம் ஆண்டுவரை 648 தீவிரவாத குழுக்கள் செயல்பாட்டில் இருந்தன. 2006க்கு பிறகு அவற்றில் 136 மேலும் பல குழுக்களாக பிரிந்தும் 244 செயல்பாட்டிலும் இருப்பதாக கண்டறியப்பட்டது.  செயல்பாடு அற்ற நிலையில் இருந்த தீவிரவாத குழுக்களில் 43 சதவீதம் குழுக்கள் வன்முறையை கைவிட்டனர், 40 சதவீதம் குழுக்கள் சட்டத்தின் மூலம் அடக்கப்பட்டன, 10 சதவீதம் வெற்றிபெற்றன, 7 சதவீதம் ராணுவ நடவடிக்கை மூலம் ஒழிக்கப்பட்டுள்ளன.  ஒரு தீவிரவாத குழுவின் நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவர ஆறு முக்கிய வழிமுறைகள் அறியப்பட்டுள்ளன.  அரசியலமைப்புச் சட்டம் யாப்பு அல்லது அரசியலமைப்புச் சட்டம் ("constitution") என்பது, ஒரு தன்னாட்சி உரிமை கொண்ட ஒரு அரசியல் அலகுக்கான, சட்ட விதிகள், கொள்கைகள் போன்றவற்றை விளக்கும் எழுத்துமூல ஆவணம் ஆகும். இது ஒரு அரசின் முறைமைகளை விளக்குகிறது. நாடுகளைப் பொறுத்தவரை இச் சொல், அரசின் அடிப்படை அரசியல் கொள்கைகள், அமைப்பு, செயல்முறைகள், அதிகாரம், கடமைகள் என்பவற்றை வரையறுக்கும் தேசிய அரசியல் சட்டத்தைக் குறிக்கின்றது. பல நாடுகளின் அரசியல் சட்டங்கள் மக்களுக்கான உரிமைகள் சிலவற்றுக்கான உறுதிகளையும் வழங்குகின்றன. தற்காலப் பாணியிலான எழுதித் தொகுக்கப்பட்ட அரசியற்சட்டங்கள் உருவாவதற்கு முன்னர், அரசு செயல்படுவதற்கான எந்தச் சட்டத்தையும் இச் சொல் குறித்தது. அரசியலமைப்புச் சட்டங்கள் பலவகையான அரசியல் அமைப்புக்கள் தொடர்பானவையாக உள்ளன. இவை, பன்னாட்டு அளவிலும், கூட்டாட்சி, மாநிலம் அல்லது மாகாணம் ஆகிய மட்டங்களிலும் காணப்படுகின்றன. இந்திய அரசியலமைப்புச் சட்டம் தான் உலகில் உள்ள எந்தவொரு இறையாண்மை நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை விட மிக நீண்ட நெடியதாக எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டமாகும். இதில் 444 கட்டுரைகளை உள்ளடக்கி, containing 444 articles in 22 parts, 22 பாகங்கள், 12 அட்டவணைகளும், 118 திருத்தங்களும், அதன் ஆங்கில மொழி பதிப்பில் 146,385 வார்த்தைகள் in its English-language version, உள்ளது. மொனாக்கோவின் அரசியலமைப்புச் சட்டம் தான் உலகில் மிகச்சிறியதாக எழுதப்பட்டதாகும். இதில் 97 கட்டுரைகள் கொண்ட 10 அத்தியாயங்களும், மொத்தம் 3,814 வார்த்தைகளும் உள்ளன. " அரசியலமைப்பு (constitution)" என்பது பிரெஞ்சு இலத்தீன் வார்த்தை " constitutio " இலிருந்து வந்தது. இது, ஏகாதிபத்திய சட்டங்கள் (" அரசியலமைப்புச் சட்டங்கள் ") ("constitutiones principis": edicta, mandata, decreta, rescripta) இருந்து உருவானது. பின்னர், பிரங்கி சட்டத்தில் ஒரு முக்கிய தீர்மானத்திற்குப் பயன்படுத்தப்பட்டது, குறிப்பாக திருத்தந்தை அரசியலமைப்பு என இப்போது குறிப்பிடப்படும் போப் வெளியிட்ட ஒரு ஆணை. பொதுவாக, ஒவ்வொரு நவீன எழுதப்பட்ட அரசியலமைப்பும், குறிப்பிட்ட அரசியலமைப்பின் வரம்புகளுக்கு உட்பட்ட முதன்மை நிலைமைக்கு ஏற்ப அமைக்கப்பட்ட ஒரு அமைப்பு அல்லது நிறுவன நிறுவனத்திற்கு குறிப்பிட்ட அதிகாரங்களை வழங்கியுள்ளது. 'கட்டுப்பாட்டு மாநிலம்: பண்டைய ஏதென்ஸில் இருந்து இன்று வரை அரசியல் கட்டுப்பாட்டுவாதம்' என்ற எழுத்தாளர் ஸ்காட் கோர்டன் கருத்துப்படி, ஒரு அரசியல் அமைப்பானது, அரசியலமைப்பிற்குள்ளேயே, "நிறுவனம் சிறுபான்மையினர் உட்பட, குடிமகனின் நலன்களும், சுதந்திரமும். பற்றி கூறுகிறது " பழங்குடி மக்கள் முதலில் நகரங்களில் வசிக்க ஆரம்பித்த பிறகு, தேசங்களை ஸ்தாபிக்க ஆரம்பித்தார்கள், பலவற்றில் எழுதப்படாத பழக்கவழக்கங்களின்படி செயல்பட்டனர், சிலர் ஆளுநராகவும், கொடுங்கோல் ஆட்சியாளர்களாகவும் இருந்தனர், அவர்கள் ஆளுநர்களால் நியமிக்கப்பட்டனர் அல்லது வெறுமனே தனிப்பட்ட யதார்த்தமாக இருந்தனர்.அத்தகைய ஆட்சி சில சிந்தனையாளர்கள் பொறுத்தவரை அரசாங்க நிறுவனங்கள் நடவடிக்கைகளின் வடிவமைப்பு அல்ல என்ற நிலைப்பாட்டை எடுத்தார்கள். "தத்துவவாதி-அரசர்களால்" ஆட்சியைக் கோரிய பிளேட்டோவில் இந்த கருத்து காணப்படுகிறது. பின்னர், அரிஸ்டாட்டில், சிசரோ மற்றும் ப்ளுடார்ச் போன்ற எழுத்தாளர்கள் அரசாங்கத்திற்கான சட்டபூர்வ மற்றும் வரலாற்று நிலைப்பாட்டிலிருந்து வடிவமைப்புகளை ஆராய்ந்தனர். மறுமலர்ச்சி அரசியலமைப்புத் தத்துவவாதிகளை ஒரு தொடர்ச்சியான அரசியல் மெய்யியலாளர்களை கொண்டுவந்தது, அவர்கள் பேரரசர்களின் நடைமுறைகளை விமர்சித்தார்கள் மற்றும் அரசியலமைப்பு வடிவமைப்பின் கொள்கைகளை அடையாளம் காண முயன்றார்க்ள், மேலும் அது அவர்களின் பார்வையிலிருந்து மிகவும் பயனுள்ள மற்றும் நல்ல நிர்வாகத்தை வழங்குவதற்கு வாய்ப்புள்ளது. இது ரோமானியர்களின் தேசத்தின் சட்டம் கருத்தியல் மறுமலர்ச்சியுடன் தொடங்கியது, தேசங்களுக்கிடையிலான உறவுகளுக்கு அதன் பயன்பாடு, மற்றும் வழக்கமாக "போர் மற்றும் சமாதான விதிமுறைகளை நிறுவ முற்பட்டது. மேலும் போர்களை அடியோடு ஒலிப்ப்து அல்லது குறைப்பது இது அதிகாரம் முடியாட்சிகள் அல்லது பிற அதிகாரிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை, மற்றும் அந்த அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதற்கான நிவாரணங்களைக் கொண்டிருக்கும் எந்தவொரு அதிகாரமும் இல்லை". ஆங்கில உள்நாட்டுப் போர் (உள்நாட்டுப் போர்), க்ரோமவெலியன் காப்பரசு, தாமஸ் ஹோப்ஸ் ஜுவல் மில்டன் மற்றும் ஜேம்ஸ் ஹாரிங்டன், ராபர்ட் ஃபிலிமர் ஒரு பக்கத்தில் விவாதத்திற்கு இட்டுச் சென்றது, மற்றும் ஒரு பக்கத்தில், ஹென்றி நெவில்லே, ஜேம்ஸ் டைரெல், அல்கர்சன் சிட்னி , மற்றும் ஜான் லாக். பிந்தையது என்னவென்றால், முதலாவதாக, இயற்கை சட்டங்களால் நிர்வகிக்கப்படும் இயற்கையின் நிலை, பின்னர் ஒரு சமூக ஒப்பந்தம் அல்லது கச்சிதமாக உருவாக்கப்பட்ட சமூகத்தின் நிலை, இயற்கை அல்லது சமூக சட்டங்களுக்கு முன் அரசாங்கங்கள் அவை மீது அடித்தளமாக அமைக்கப்பட்டன. அரசாங்கத்தின் வடிவமைப்பு ஒரு அரசர் தலைமையில் இருந்தாலும்கூட, அரசாங்க வடிவமைப்பு எவ்வாறு முக்கியமானது என்பதை பல எழுத்தாளர்கள் ஆராந்தனர்.அரசாங்க வடிவமைப்புகளின் பல்வேறு வரலாற்று முன்மாதிரிகள், பொதுவாக ஜனநாயகம், உயர்குணங்கள், அல்லது முடியாட்சிகள் ஆகியவற்றில், மேலும் ஒவ்வொருவரின் திறமையும், ஏன், எப்படி ஒவ்வொன்றின் சிக்கல்களும், சமநிலையான போட்டியிடும் போக்குகளை வடிவமைத்தல். Montesquieu போன்ற சில, அரசாங்கத்தின் செயல்பாடுகள், சட்டமன்றம், நிர்வாகி மற்றும் நீதித்துறை போன்றவை எவ்வாறு கிளைகளாக பிரிக்கப்படலாம் என்பதை ஆய்வு செய்தது. இந்த எழுத்தாளர்களிடையே நிலவும் கருத்துக்கள், அரசியலமைப்பு வடிவமைப்பு முற்றிலும் தன்னிச்சையான அல்லது சுவைக்குரிய விஷயம் அல்ல. ஒவ்வொரு அரசியலமைப்பிற்கும் அல்லது அமைப்பிற்கும் உள்ள அனைத்து அரசியலமைப்பையும் கட்டுப்படுத்தும் வடிவமைப்பின் அடிப்படைக் கோட்பாடுகள் உள்ளன என்று அவை பொதுவாகக் கொண்டிருந்தன.அந்த நியமங்கள் என்னவென்பதைப் பொறுத்தவரையில் ஒவ்வொருவரும் கருத்துக்களை வைத்து கட்டியெழுப்பினர். ஓரெஸ்டெஸ் பிரவுன்சன் தனது எழுத்துக்களில் அரசியலமைப்பு வடிவமைப்பாளர்கள் என்ன செய்ய முயற்சித்தார்கள் என்பதை விளக்க முயற்சிக்கிறார். பிரவுண்ஸ்சனின் கூற்றுப்படி, ஒரு அர்த்தத்தில், மூன்று "அரசியலமைப்புகள்" இருப்பதாக பின்வருமாறு கூறுகிறார். ஒவ்வொரு அரசியலமைப்பினதும் நிலைத்தன்மையுடன் இருக்க வேண்டும், அதற்கு முன் உள்ளவர்களிடமிருந்தும், அதன் மூலம் சமூகத்தின் உருவாக்கம் அல்லது அரசியலமைப்பு ஒப்புதலுடனான ஒரு வரலாற்றுச் செயலிலிருந்தும் அதன் அதிகாரம் பெறப்பட வேண்டும்.மாநில (அரசியலமைப்பு) ஒரு நன்கு வரையறுக்கப்பட்ட பிரதேசத்தின் மீது ஒரு சிறந்த சமுதாயமாக உள்ள ஒரு சமுதாயம், அந்த பிராந்தியத்தின் முன்னிலையிலிருந்து அரசாங்கத்தின் நன்கு வடிவமைக்கப்பட்ட அரசியலமைப்பின் ஒப்புதல், இயற்கையின் அல்லது சமுதாயத்தின் அரசியலமைப்புக்களுடன் பொருத்தமற்றதாக இருந்தால், எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தின் விதிமுறைகள் பொருந்தக்கூடியதாக இருக்க வேண்டும் என்று பிரௌன்ஸன் வாதிட்டார். அரசியலமைப்புச் சட்டத்தை மீறுகின்ற எந்தவொரு அரசியலமைப்பையும், அதற்கேற்ப பொருந்தக்கூடிய, சட்டபூர்வமான சட்டங்களை இயற்றுவதற்கும், அரசியலமைப்பை மீறுவதற்கும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை அறிவிக்க வேண்டும். ஜெர்மனியைப் போன்ற சில நாடுகளில், இந்த செயல்பாடு ஒரு பிரத்யேக அரசியலமைப்பு நீதிமன்றத்தால் நடத்தப்படுகிறது (இது மட்டுமே). அயர்லாந்து போன்ற மற்ற நாடுகளில், சாதாரண நீதிமன்றங்கள் தங்கள் பிற பொறுப்புகளுக்கு கூடுதலாக இந்தச் செயலைச் செய்யலாம்.ஐக்கிய இராச்சியத்தில், அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கூறும் அல்லது அறிவிக்கும் சட்டம் இல்லை. ஒரு அரசியலமைப்பு மீறல் என்பது அரசியலமைப்புக்கு எதிரானது என்று ஒரு அரசியலமைப்பு நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட ஒரு நடவடிக்கை அல்லது சட்டப்பூர்வ நடவடிக்கை ஆகும், அதாவது அரசியலமைப்பிற்கு எதிரானது. நிர்வாகத்தால் அரசியலமைப்பு மீறல் ஒரு உதாரணம், ஒரு அரசியலமைப்பின் மூலம் அந்த அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு வெளியே செயல்படும் ஒரு பொது அலுவலக அதிகாரியாக இருக்கலாம். சட்டமன்றத்தால் அரசியலமைப்பு மீறல் ஒரு உதாரணம், அரசியலமைப்புக்கு முரணாக இருக்கும் ஒரு சட்டத்தை நிறைவேற்றும் முயற்சியாகும். சில நாடுகளில், குறிப்பாக சட்டவிரோதமாக்கப்பட்ட அரசியலமைப்பினருடன், அத்தகைய நீதிமன்றங்கள் எதுவும் இல்லை. உதாரணமாக, ஐக்கிய இராச்சியத்தில் பாரம்பரியமாக பாராளுமன்ற இறையாண்மை கொள்கையின் கீழ் இயக்கப்படுகிறது, இதன் கீழ் ஐக்கிய இராச்சிய பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டங்கள் நீதிமன்றங்களால் விசாரிக்கப்பட முடியாது. பொதுவாக பல யாப்புகளும், ஒரு அரசாங்கமானது விதிவிலக்கான சில நெருக்கடி நிலைமையை எதிர்கொள்ள நேர்கையில், அவசரகாலச் சட்டங்களைப் பிரகடனப்படுத்த அனுமதியளிக்கிறது. அப்படியான நிலைமைகளில் சில உரிமைகள் மறுக்கப்படுவதுடன், அரசாங்கத்திற்கு உண்டான பொறுப்புக்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. ஆனால் இது சிலசமயம் அரசாங்கம் மனித உரிமை மீறல் செய்வதற்கும் வழிவகுக்கிறது. அரபு நாடுகள் கூட்டமைப்பு அரபு லீக் எனவும் அழைக்கப்படும் அரபு நாடுகள் கூட்டமைப்பு என்பது, தென்மேற்கு ஆசியா, வடக்கு ஆபிரிக்கா, வடமேற்கு ஆபிரிக்கா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த அரபு நாடுகளின் கூட்டமைப்பு ஆகும். 1945 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் தேதி கெய்ரோவில் இது அமைக்கப்பட்டது. தொடக்கத்தில் எகிப்து, ஈராக், டிரான்ஸ்ஜோர்தான் (1946 க்குப் பின் ஜோர்தான் எனப் பெயர் மாற்றப்பட்டது), லெபனான், சவூதி அரேபியா, சிரியா ஆகிய நாடுகள் இக் கூட்டமைப்பில் உறுப்பினராக இருந்தன. 1945 மே 5 ஆம் நாள் யேமன் இதில் இணைந்தது. தற்போது இக் கூட்டமைப்பில் 22 நாடுகள் உள்ளன. இக் கூட்டமைப்பின் முக்கிய நோக்கம் பிவருமாறு: அரபு லீக், அதன் உறுப்பு நாடுகளின் நலன்களை மேம்படுத்தும் நோக்கில், அரசியல், பொருளாதார, பண்பாட்டு, சமூகத் திட்டங்களை ஏற்படுத்தியுள்ளது. தமது கொள்கை நிலைகளில் ஒருமைப்பாடு காண்பதற்கும், பொதுவான பிரச்சினைகள் பற்றி ஆராய்வதற்கும், அரபு நாடுகள் இடையேயான பிணக்குகளைத் தீர்ப்பதற்கும், முரண்பாடுகளைக் குறைப்பதற்குமான ஒரு களமாகச் செயல்படுகிறது. 1944 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியா நெறிமுறை பின்பற்றப்பட்டதன் பின்னர், அரபு கூட்டமைப்பு 22 மார்ச் 1945 இல் நிறுவப்பட்டது. இது பொருளாதாரத்தை மேம்படுத்துவதையும், சிக்கல்களை தீர்ப்பதையும், அரசியல் நோக்கங்களை ஒருங்கிணைப்பதிலும் கவனம் செலுத்தும் அரபு நாடுகளின் பிராந்திய அமைப்பாக உருவானது.பிற நாடுகள் அமைப்பில் பின்னர் இணைந்தன.ஒவ்வொரு நாட்டிற்கும் சபையில் ஒரு வாக்கு வழங்கப்பட்டது. 1948 ல் வெளிவந்த பெரும்பான்மை அரபு மக்கள் சார்பில் (அரபு நாடுகளில் மக்கள் எதிர்ப்பை எதிர்கொண்டு) உருவாகியுள்ளதாக கூறப்படும் கூட்டு நடவடிக்கைக்கு இது முதன்மையான முக்கிய நடவடிக்கையாக இருந்தது, ஆனால் இதில் ஒரு முக்கிய பங்கு வகித்தது தலையீடு, டிரான்ஸ்ஜார்டன், ஐ.நா பொதுச் சபை முன்மொழியப்பட்ட அரபு பாலஸ்தீனிய மாநிலத்தை பிரிக்க இஸ்ரேலுடன் உடன்பட்டது, மற்றும் எகிப்து தன்னுடைய போட்டியை நிறைவேற்றுவதில் இருந்து முதன்மையாக தலையிடுவதை தடுக்க முற்பட்டது.இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பரஸ்பர பாதுகாப்பு உடன்படிக்கையை உருவாக்கியது. ஒரு பொதுவான சந்தை 1965 இல் நிறுவப்பட்டது. அரபு கூட்டமைப்பு உறுப்பு நாடுகள் மற்றும் இரண்டு கண்டங்களைத் தொடர்கின்றன: ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா. இப்பகுதி பெரும்பாலும் சஹாரா போன்ற வறண்ட பாலைவகைகளைக் கொண்டுள்ளது. ஆயினும்கூட நைல் பள்ளத்தாக்கு, ஜுப்லா பள்ளத்தாக்கு மற்றும் ஷெபெல் பள்ளத்தாக்கு போன்ற பல வளமான நிலங்களும், ஹார்ன் ஆஃப் ஆப்பிரிக்கா, அட்லஸ் மலைகள் மெக்ரெப் மற்றும் மெசொப்பொத்தேமியா மற்றும் லெவந்த் ஆகியவற்றை நீட்டித்திருக்கும் மகசூல். இப்பகுதியில் தெற்கில் அரேபியா மற்றும் உலகின் நீளமான ஆற்றின் பகுதிகள், நைல் பகுதிகளில் ஆழமான காடுகள் உள்ளன. அரேபிய கூட்டமைப்பின் சார்பாக அரபு நாடுகளின் கூட்டமைப்பு உடன்படிக்கை என்று அழைக்கப்படுவது அரபு கூட்டமைப்பின் ஸ்தாபக ஒப்பந்தமாகும். 1945 ல் ஏற்றுக் கொள்ளப்பட்ட, "இந்த உடன்படிக்கை கையெழுத்திட்ட சுதந்திர அரபு நாடுகளின் சங்கம் அமைந்திருக்கும் என்று அது உறுதிப்படுத்துகிறது. " 1945 இல் ஆறு உறுப்பினர்களைத் கொண்டு தொடங்கிய அரபு கூட்டமைப்பு இப்போது 14 மில்லியன் சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது மற்றும் 22 உறுப்பினர்கள் மற்றும் 4 பார்வையாளர் எண்ணிக்கையை கொண்டுள்ளது. இன்று 22 உறுப்பினர்களில் மிகப்பெரிய ஆபிரிக்க நாடுகளில் மூன்று நாடுகள் உறுப்பினராக உள்ளனர். அவை (சூடான், அல்ஜீரியா மற்றும் லிபியா), மற்றும் மத்திய கிழக்கில் மிகப்பெரிய நாடு சவுதி அரேபியா உறுப்பினராக உள்ளது. 20 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் தொடர்ச்சியாக அரபு கூட்டமைப்பில் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்தது வந்துள்ளது, கூடுதலாக 15 அரபு நாடுகள் உறுப்பினராக ஒப்புக் கொண்டன. 2011 ஆம் ஆண்டு எழுச்சியை தொடர்ந்து சிரியா இடைநீக்கம் செய்யப்பட்டது. 2016 ஆம் ஆண்டின் படி மொத்தம் 22 உறுப்பு நாடுகள் உள்ளன. அரபு கூட்டமைப்பு உறுப்பு நாடுகள் பின்வருமாறு: மற்றும் 4 பார்வையாளர் நாடுகள் பின்வருமாறு: 2011 பெப்ரவரி 22 அன்று, 2011 லிபிய உள்நாட்டுப் போர் மற்றும் பொதுமக்கள் மீது இராணுவப் படையின் பயன்பாடு ஆகிய காரணத்தால், அரபு கூட்டமைப்பு செயலாளர்-ஜெனரல் அமர் மௌஸா, லிபியாவை அரபு கூட்டமைப்பு உறுப்பினரில் இருந்து இடைநீக்கம் செய்தார்: "மேலும் அனைத்து அரபு கூட்டமைப்பு அமர்வுகளிலிருந்தும் லிபிய பிரதிநிதிகள் பங்கு பெறுவதை நிறுத்துவதாகவும் முடிவெடுக்கப்பட்டது." அரபு கூட்டமைப்பு வரலாற்றில், இரண்டாவது நாடாக லிபியா கூட்டமைப்பில் இருந்து வெளியேறியது. லிபிய தலைவர் [Muammar Gaddafi]] அரபு கூட்டமைப்பு சட்டவிரோதமானது என்று அறிவித்தார்: மேலும் "அரபு கூட்டமைப்பு முடிந்தது, அரபு கூட்டமைப்பு போன்ற ஒன்று இல்லை." என்றும் அறிவித்தார். லிபியாவின் பகுதியாக அங்கீகாரம் பெற்ற இடைக்கால அரசாங்கம் தேசிய இடைக்கால குழு, ஆகஸ்ட் 17 அன்று அரபு கூட்டமைப்பு கூட்டத்தில் அமர்ந்து ஒரு பிரதிநிதியை அனுப்பியது. ,25 ஆகஸ்ட் 2011 இல், செயலாளர் நாயகம் Nabil Elaraby லிபியாவின் முழு உறுப்புரிமை நிலை மீளமைக்கப்பட்டதாக அறிவித்தார். அரபு நாடுகளின் சிரியா மற்றும் யேமன் உறுப்பினர்கள் 2011 செப்டம்பர் 20 இல் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று அரபு நாடாளுமன்றம் பரிந்துரைத்தது.12 நவம்பர் வாக்கில் வாக்கெடுப்பு முடிந்த நான்கு நாட்களுக்கு சிரியா மீது முறையான இடைநீக்கம் செய்ய ஒப்புக்கொண்டது, அசாத் இடைநீக்கம் செய்யப்படுவதற்கு ஒரு கடைசி வாய்ப்பு அளித்தது. சிரியா, லெபனான் மற்றும் யேமன் இயக்கத்திற்கு எதிராக வாக்களித்தனர், ஈராக் வாக்கெடுப்பில்லிருந்து விலகினர்.டிசம்பர் 2011 இல் ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிட்டபோது அரபு கூட்டமைப்பு ஒரு "கண்காணிப்பு விசாரனை கமிஷன்" அனுப்பப்பட்டபோது ஒரு பெரிய அளவு குறைகூறல் இருந்தது. ஒமர் அல்-பஷீர் இராணுவ உளவுத்துறையின் தலைவராக பணியாற்றிய மொஹமட் அஹ்மத் முஸ்தபா அல்-தாபி தலைமையிலான விசாரனை கமிஷன் மீது, போர்க்குற்றம் உட்பட, இனப்படுகொலை உட்பட, அவரது கண்காணிப்பில் கூறப்பட்டது.மார்ச் 6, 2013 இல் அரபு கூட்டமைப்பு, அரபு கூட்டமைப்பில் சிரியா தேசிய கூட்டணிக்கு இடம் (உறுப்பினராக) வழங்கப்பட்டது.2014 மார்ச் 9 ம் தேதி பான்-அரபு குழுவின் செயலாளர் நாயகம் [Nabil al-Arabi] அரபு கூட்டமைப்பில் சிரியாவின் உறுப்பினர் பதிவியானது எதிர்த்தரப்பு அதன் நிறுவனங்களை தோற்றுவிக்கும் வரை காலியாக இருக்கும் என்று கூறினார். விடுதலை பெற்ற நாடுகளின் பொதுநலவாயம் விடுதலைபெற்ற நாடுகளின் பொதுநலவாயம் ) (உருசியப் பொதுநலவாயம் என்றும் அழைக்கப்படுகின்றது) என்பது முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற்ற நாடுகள் அடங்கிய ஒரு பிராந்திய அமைப்பு ஆகும். விடுதலை பெற்ற நாடுகளின் பொதுநலவாயம் அரசுகளின் ஒரு தளர்வான கூட்டமைப்பு ஆகும். இருப்பினும் விடுதலை பெற்ற நாடுகளின் பொதுநலவாயத்திற்கு நாட்டிற்கும் அப்பாற்பட்ட சில் அதிகாரங்கள் இருக்கின்றன. முற்றிலும் அடையாள அமைப்பாக இருப்பதற்கு மேலாக பெயரளவில் வைத்திருக்கும் ஒருங்கிணைக்கும் அதிகாரங்களை வர்த்தகம், நிதி, சட்டம் இயற்றல் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் செயற்படுத்துவதே இக் கூட்டமைப்பின் நோக்கமாகும். இக் கூட்டமைப்பு எல்லை தாண்டிய குற்றங்களைத் தடுப்பதற்கான ஒத்துழைப்பையும் வழங்குகின்றது. விடுதலை பெற்ற நாடுகளின் பொதுநலவாயத்தின் சில அங்கத்துவ நாடுகள் முழுமைபெற்ற பொதுச் சந்தையை உருவாக்கும் நோக்குடன் இயூரேசிய பொருளாதார சமூகத்தை நிறுவின. இவ்வமைப்பு 1991 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் திகதி பெலாரஸ், ரஷ்யா, உக்ரேன் ஆகிய நாடுகளால் நிறுவப்பட்டது. மேற் காட்டிய திகதியில் இம் மூன்று நாடுகளின் தலைவர்களும் பெலாரஸின் பிரெஸ்சிற்கு வடக்கில் 50 கிலோமீற்றர் தொலைவில் அமைந்திருந்த பெலொவெல்ஸ்கயா புஷ்கா இயற்கைப் பூங்காவில் சந்தித்து, சோவியத் ஒன்றியத்தைக் கலைத்து, அதனிடத்தில் விடுதலைபெற்ற நாடுகளின் பொதுநலவாயத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டனர். 1991 டிசம்பர் 21 இல், ஆர்மேனியா, அசர்பைஜான், கசாக்ஸ்தான், கிர்கிஸ்தான், மால்டோவா, துர்க்மெனிஸ்தான், தாஜிக்ஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய மேலும் எட்டு நாடுகள் இவ்வமைப்பில் இணைந்தன. ஜார்ஜியா இரண்டு ஆண்டுகள் கழித்து இதில் இணைந்து கொண்டது. 1993 டிசம்பர் நிலைப்படி 15 முன்னாள் சோவியத் குடியரசுகளில் 12 இவ்வமைப்பின் உறுப்பு நாடுகள் ஆகிவிட்டன. ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு விருப்பம் கொண்டிருந்ததால் எஞ்சிய மூன்று பால்ட்டிக் நாடுகளான எஸ்தோனியா, லத்வியா, லித்துவேனியா என்பன இவ்வமைப்பில் இணைவது இல்லை என முடிவு செய்திருந்தன. விடுதலை பெற்ற நாடுகளின் பொதுநலவாயத்தில் ஒன்பது முழு அங்கத்துவ நாடுகள் உள்ளன. அதன் தொடக்கத்திலிருந்து, புதிதாக சுயாதீன மாநிலங்களின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியுடன் தொடர்புடைய விவகாரங்களைப் பற்றி விவாதிக்க CIS இன் முதன்மை இலக்குகளில் ஒன்று உள்ளது. இந்த இலக்கை அடைய உறுப்பு நாடுகள் மனித உரிமைகளை மேம்படுத்தி பாதுகாக்க ஒப்புக்கொண்டன. தொடக்கத்தில், இந்த இலக்கை அடைவதற்கான முயற்சிகள் மட்டுமே நல்ல விருப்பத்தின் அறிக்கைகளை உள்ளடக்கியிருந்தன, ஆனால் 1995 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதி மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரம் குறித்த ஒரு பொதுநலவாய நாடுகளின் பொதுநலவாய அமைப்பை CIS ஏற்றுக்கொண்டது. 1995 ஆம் ஆண்டு மனித உரிமைகள் உடன்படிக்கை க்கு முன்பே, 1991 ஆம் ஆண்டில், CIS இன் சாசனம், 33 வது கட்டுரையில், பெனாரஸ், மிஸ்ஸ்கில் மனித உரிமைகள் ஆணையம் உருவாக்கப்பட்டது. இது 1993 ஆம் ஆண்டு CIS மாநிலங்களின் தலைவர்கள் கவுன்சில் முடிவு மூலம் உறுதி செய்யப்பட்டது. 1995 இல், CIS மனித உரிமைகள் ஒப்பந்தத்தை சிவில் மற்றும் அரசியல் மற்றும் சமூக மற்றும் பொருளாதார மனித உரிமைகள் உள்ளடக்கியது. இந்த ஒப்பந்தம் 1998 இல் நடைமுறைக்கு வந்தது. CIS ஒப்பந்தம் மனித உரிமைகளின் ஐரோப்பிய உடன்படிக்கையில் மாதிரியாக இருக்கிறது, ஆனால் பிந்தையவரின் வலுவான செயல்பாட்டு வழிமுறைகளைக் கொண்டிருக்கவில்லை. CIS ஒப்பந்தத்தில், மனித உரிமைகள் ஆணையம் மிகவும் தெளிவற்ற அதிகாரத்தை கொண்டுள்ளது. எவ்வாறிருந்த போதினும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்டமானது CIS உறுப்பினர் உறுப்பு நாடுகளின் ஒரு முடிவாக ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஆணையம், மாநில மற்றும் தனிப்பட்ட தகவல்தொடர்புகளை பெறும் உரிமையை வழங்குகிறது. CIS உறுப்பினர்கள், குறிப்பாக மத்திய ஆசியாவில்,உலகின் மிக ஏழ்மையான மனித உரிமைகள் பதிவுகள் தொடர்கின்றன.உஸ்பெகிஸ்தானில் 2005 ஆண்டிஜியன் படுகொலை அல்லது துர்க்மேனிஸ்தானின் ஜனாதிபதி குர்பாங்கலி பெர்டிமுஹம்டோ சுற்றியுள்ள ஆளுமைச் சித்திரத்தை சுட்டிக்காட்டியுள்ளனர் (மனித உரிமைகள் ஆணையம் உறுப்பினர் அல்ல என்றாலும்), மனித உரிமைகள் மீது எந்த முன்னேற்றமும் இல்லை. மத்திய ஆசியாவில் சோவியத் ஒன்றியத்தின் பிறிவின் பின்னர், ஜனாதிபதி விளாதிமிர் பூட்டின் ஆல் அதிகாரத்தை ஒருங்கிணைப்பதன் மூலம் ரஷ்யாவில் முந்தைய ஆண்டுகளின் மிதமான முன்னேற்றத்தில் நிலையான சரிவு ஏற்பட்டுள்ளது. சுதந்திர சர்வதேச பொதுநலவாய நாடுகளும் கூட அடிப்படை சர்வதேச தரங்களைச் சந்திப்பதில் கடுமையான சவால்களை எதிர்கொள்கின்றன. CIS உறுப்பு நாடுகளின் இராணுவ ஒத்துழைப்பை ஒருங்கிணைப்பதற்கான பணியைக் கொண்டிருக்கும் CIS சாசனம் பாதுகாப்பு அமைச்சகத்தை உருவாக்குகிறது.இந்த முடிவிற்கு, CIS உறுப்பு நாடுகளின் இராணுவ மற்றும் பாதுகாப்பு கொள்கையின் கேள்விகளுக்கு கருத்தாய்வு அணுகுமுறைகள் உருவாகின்றன; உறுப்பு நாடுகளின் பிராந்தியத்தில் அல்லது அவர்களது பங்கேற்புடன் ஆயுத மோதல்களைத் தடுக்க நோக்கமாக இருக்கும் திட்டங்களை உருவாக்குகிறது;பாதுகாப்பு மற்றும் இராணுவ அபிவிருத்திகளின் பிரச்சினைகள் தொடர்பான வரைவு ஒப்பந்தங்கள் மற்றும் ஒப்பந்தங்களில் நிபுணர் கருத்துக்களை அளிக்கிறது; மாநில தலைவர்கள் CIS சபையின் கவனத்திற்கு பரிந்துரைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பான பாதுகாப்பு மற்றும் இராணுவ வளர்ச்சியின் பரப்பளவில் சட்ட நடவடிக்கைகளை இவையெல்லாம் சபையின் முக்கிய பணியாகும். CIS உறுப்பு நாடுகளின் இராணுவ மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புப் பகுதியில் ஒருங்கிணைப்பு செயல்முறைகளின் முக்கிய வெளிப்பாடானது, 1995 ஆம் ஆண்டில், கூட்டு CIS வான் பாதுகாப்பு அமைப்பின் உருவாக்கம் ஆகும். பல ஆண்டுகளாக, CIS விமானத்தின் மேற்கு, ஐரோப்பிய எல்லையிலும், அதன் தெற்கு எல்லைகளில் 1.5 மடங்கிலும், கூட்டு CIS வான் பாதுகாப்பு அமைப்பு இராணுவ வீரர்கள் இரண்டு மடங்காக வளர்ந்தனர். மே 7, 1992 இல் போரிஸ் யெல்ட்சின் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சராக ஆனபோது, CIS ஆயுதப்படைகளின் தளபதியாக நியமிக்கப்பட்டவர், அவருடைய ஊழியரும்,லெனின்கிராட்ஸி ப்ராஸ்பெக்ட், வார்சா உடன்படிக்கை தலைமையகத்தில் உள்ள MOD மற்றும் ரஷ்ய கூட்டமைப்பின் பொதுப் படைகளின் பொதுப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பணியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். on the northern outskirts of Moscow.1993 ஆம் ஆண்டு ஷாப்போஸ்நிகோவ் ராஜினாமா செய்தார். டிசம்பர் 1993 இல், CIS ஆயுதப் படைகளின் தலைமையகம் அகற்றப்பட்டது.அதற்கு பதிலாக, 'பாதுகாப்பு அமைச்சர்களின் CIS சபை மாஸ்கோவில் ஒரு CIS இராணுவ ஒத்துழைப்பு ஒருங்கிணைப்பு தலைமையகம் (MCCH) உருவாக்கப்பட்டது, இதில் 50% நிதியுதவி ரஷ்யா வழங்கியது. ஜெனரல் விக்டர் சாம்சோவ் பணியாளரின் தலைமைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். தலைமையகம் இப்பொழுது 101000, மாஸ்கோ, சர்பாக், 3/2, மற்றும் 41 லெனின்கிராஸ்ட் ப்ரோஸ்பெக், இப்போது மற்றொரு ரஷ்ய MOD நிறுவனம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. CIS பொது ஊழியர்களின் தலைவர்கள் தங்கள் தேசிய ஆயுதப்படைகளை ஒருங்கிணைப்பதற்காக ஆதரவாக பேசியுள்ளனர். 1994 இல், CIS நாடுகள் ஒரு சுதந்திர வணிகப் பகுதி உருவாக்க உடன்பட்டது, ஆனால் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படவில்லை. 1994 ஒப்பந்தம் துருக்மெனிஸ்தான் தவிர அனைத்து பன்னிரெண்டு CIS உறுப்பினர்களையும் உள்ளடக்கியிருக்கும். 2009 ஆம் ஆண்டில், ஒரு புதிய ஒப்பந்தம் FTA, CISFTA உருவாக்கத் தொடங்கியது. அக்டோபர் 2011 ல், புதிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கை பதினோரு CIS பிரதம உருப்பினர்களில் எட்டு உருப்பினர்கள் கையெழுத்திட்டன்ர்; செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கிலுள்ள ஒரு கூட்டத்தில் ஆர்மீனியா, பெலாரஸ், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், மால்டோவா, ரஷ்யா, தஜிகிஸ்தான் மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளிலும். 2013 ஆம் ஆண்டுக்குள், உக்ரைன், ரஷ்யா, பெலாரஸ், மால்டோவா மற்றும் ஆர்மீனியா ஆகியவற்றால் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, மற்றும் அந்த மாநிலங்களுக்கு இடையே மட்டுமே நடைமுறை உள்ளது. சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் பல பொருட்களின் மீது ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கடமைகளை நீக்குகிறது, ஆனால் இறுதியில் விலக்களிக்கப்படும் பல விதிகள் படிப்படியாக விலக்கப்பட உள்ளன.2011 அக்டோபர் கூட்டத்தில் CIS இன் நாணய ஒழுங்குமுறை மற்றும் நாணய கட்டுப்பாடுகளின் அடிப்படைக் கொள்கைகளில் கையெழுத்திட்டது. CIS நாடுகளில் வர்த்தகத்தில் ஊழல் மற்றும் அதிகாரத்துவம் ஆகியவை கடுமையான பிரச்சினைகளாக உள்ளது. முகமது நஜிபுல்லா நஜிபுல்லா ("Najibullah", பாஷ்தூ: نجيب الله; பெப்ரவரி, 1947 - செப்டம்பர் 27, 1996) கம்யூனிச ஆப்கானிஸ்தானின் நான்காவதும் கடைசி அதிபராகவும் இருந்தவர். முகமது ஓமார் தலைமையிலான தலிபான் தீவிரவாதிகள் 1996 இல் காபூல் நகரைக் கைப்பற்றிய போது நஜிபுல்லா மக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார். ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் பாஷ்டன் இனத்தில் பிறந்தவர். காபூல் பல்கலைக்கழகத்தில் 1975 இல் மருத்துவத் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். 1965 இல் நஜிபுல்லா கம்யூனிச ஆப்கானித்தான் மக்கள் ஜனநாயகக் கட்சியில் இணைந்து 1977 இல் அதன் மத்திய குழுவில் உறுப்பினரானார். 1978 இல் ஆப்கானிஸ்தானில் இவரது கட்சி ஆட்சியைப் பிடித்தது. எனினும் கட்சிக்குள் ஏற்பட்டிருந்த பிளவு காரணமாக இவர் ஐரோப்பாவுக்கு நாடுகடத்தப்பட்டார். 1979 இல் நாட்டை சோவியத் ஒன்றியம் முற்றுகையிட்டு கைப்பற்றியதை அடுத்து காபூல் திரும்பினார். 1980 இல் இரகசிய காவற்துறையின் தலைவரானார். இவரது பதவிக்காலத்தில் பல்லாயிரக்கணக்கான ஆப்கானியர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக பன்னாட்டு மன்னிப்பு அவை குற்றஞ்சாட்டியது. 1981 இல் கட்சியின் மத்திய குழுவில் உறுப்பினரானார். மே 4, 1986 இல் பப்ராக் கர்மால் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகவே, நஜிபுல்லா பொதுச் செயலாளரானார். கர்மால் நாட்டின் சனாதிபதியாக மேலும் சில காலம் இருந்தாலும், அதிகாரம் முழுக்க நஜிபுல்லாவுக்கு கைமாறியது. நவம்பர் 1986 இல் நாட்டின் அதிபரானார். அத்துடன் புதிய அரசமைப்புச் சட்டத்தையும் அறிமுகப்படுத்தினார். அதன்படி பல-கட்சி அரசியல், பேச்சுச் சுதந்திரம், போன்றவற்றை அறிமுகப்படுத்தப்பட்டது. இவரது ஆட்சிக் காலத்தில் முஜாஹுதீன் படைகளுக்கெதிராக சோவியத் படைகள் பலத்த தாக்குதலை 1985-86 காலப்பகுதியில் நடத்தியிருந்தது. பனிப்போர் முடிவடைந்ததை அடுத்து 1987 ஜூலை 20 இல் சோவியத் ஒன்றியம் தனது படைகளை வெளியேற்றுவதாக அறிவித்தது. நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரை அடுத்து, ஏப்ரல் 16, 1992 இல் அதிபர் பதவியில் இருந்து விலகினார். இஸ்லாமியத் தீவிரவாதிகள் நாட்டின் முக்கிய விமானப் படைத்தளத்தையும் சாரிக்கார் நகரையும் கைப்பற்றியிருந்தனர். ஏப்ரல் 17 இல் காபூலில் உள்ள ஐநா அலுவலகத்தில் பாதுகாப்புக் கருதி தங்கியிருந்தார். 1992 முதல் நஜிபுல்லாவின் மனைவியும் மூன்று மகள்களும் நாடுகடந்த நிலையில் புது தில்லியில் வாழ்ந்து வந்தனர். தாலிபான் தீவிரவாதிகள் காபூலைக் கைப்பற்றியதை அடுத்து நஜிபுல்லாவும் அவரது சகோதரரும் மக்கள் முன்னிலையில் செப்டம்பர் 27, 1996 இல் தூக்கிலிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். சிலுவைப் போர்கள் சிலுவைப்போர்கள் நடுக்காலத்தில் இலத்தீன் திருச்சபையின் அனுசரணையுடன் இடம்பெற்ற மதம் சார்ந்த போர்களின் தொடராகும். கீழை நடுநிலப்பகுதியில் ஜெருசலேம் உள்ளிட்ட புனித நிலத்தை இஸ்லாமியரிடமிருந்து மீட்பதற்காக இடம்பெற்ற சிலுவைப்போர் இதில் முக்கியமானதாகும். பாகனிய நெறிகளை ஒடுக்குதல், மதநிந்தனையை இல்லாதாக்குதல், உரோமன் கத்தோலிக்க சமயக்குழுக்களிடையேயான போட்டிநிலைமைக்குத் தீர்வு காணுதல் என்பன சிலுவைப்போர்களின் நோக்கங்களில் சிலவாகக் காணப்பட்டன. புனித நிலத்தில் இடம்பெற்ற சிலுவைப்போர்கள், 1095-99இல் இடம்பெற்ற முதலாம் சிலுவைப்போரிலிருந்து, 1271 -72 வரை இடம்பெற்ற ஒன்பதாம் சிலுவைப்போர் வரை, பொதுவாக ஒன்பது என்றே இனங்காணப்பட்டிருக்கின்றன. போர்களை முன்னின்று நடத்தியவரைக் கருதி, இத்தொடர்களை ஏழாகவும் குறைத்து நோக்கலாம். சிலுவைப்போர் இடம்பெற்ற காலத்தில் இப்பெயர் வழக்கில் இருக்கவில்லை. பன்னிரண்டாம் நூற்றாண்டிலேயே சிலுவையைத் தரித்தோர் என்ற பொருளில் "crucesignatus" எனும் சொல்லாடல் அறிமுகப்படுத்தப்பட்டது. சிலுவைப்போர் என்பதற்கான ஆங்கிலப்பதம் "Croisade" என்ற வடிவில் முதலில் 1575இல் புழக்கத்துக்கு வந்ததாகத் தெரிகின்றது. மத்தியகால இஸ்லாமிய வரலாற்றாளர்கள், சிலுவைப்போர்களை "பிராங்கியப் போர்கள்" என்று அழைத்தார்கள். "சிலுவைப்போர்" என்ற சொல்லாடலானது, அதைப் பயன்படுத்துவோரின் நோக்கம் கருதி நான்காகப் பிரித்துப்பார்க்கப்படலாம். மரபுவாதிகள் ஜெருசலேமையும் திருக்கல்லறையையும் மீட்பதற்காக 1095 முதல் 1291 வரை இடம்பெற்ற கிறிஸ்தவ புனிதப்போர்கள் என்கின்றார்கள். பன்மைத்துவவாதிகள், அப்போது ஆண்ட பாப்பரசரின் அனுசரணையில் இடம்பெற்ற எந்தவொரு இராணுவ நடவடிக்கையும் சிலுவைப்போரே என்கின்றார்கள். பொதுவியலாளர்களின் பார்வையில், இலத்தீன் திருச்சபையுட்ன் தொடர்புடைய அனைத்துப் புனிதப்போர்களும் சிலுவைப்போர்களே. பரப்பியவாதிகள், பொதுமக்களால் நடத்தப்பட்டது என்றவகையில் முதலாம் சிலுவைப்போரை மாத்திரமே அப்பெயர் கொண்டு அழைக்கலாம் என வாதிடுவர். சிலுவைப் போர்களின் பங்கேற்றவர்கள் தங்களை புனித பேதுருவின் ஊழியர்கள் ("fideles Sancti Petri") அல்லது கிறிஸ்துவின் போர் வீரர்கள் ("milites Christi") என்றே அழைத்தனர். திருப்பயணிகளாகவே இவர்கள் தங்களை தாங்களே கருதினர். 1638இல் வெளியான "L'Histoire des Croisades" என்னும் புத்தகத்திலேயே முதன்முதலில் "சிலுவைப் போர்கள்" என்னும் பதம் பயன்படுத்தப்பட்டது. 1750க்குள் இப்பதம் பல வகைகளில் ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் செருமாணியம் ஆகிய மொழிகளில் இடம்பெற்றது. மற்ற திருப்பயணிகள் போலவே சிலுவைப் போர் வீரர்களும் புனித திருநாட்டை அடைந்ததும் செய்வதற்காக வேண்டுதல்களை பயணத்துக்கு முன் உறுதிமொழி எடுத்தனர். இத்தகையோர் தங்களின் மேலாடையில் சிலுவையினை சேர்க்க அனுமதிக்கப்பட்டனர். இச்சிலுவையினாலேயே இப்போர் சிலுவைப் போர்கள் என வழங்கலாயிற்று. நபியவர்களால் தோற்றுவிக்கப்பட்ட இஸ்லாமானது, 632இல் அவர் மரிக்கும் போது, அரபுத் தீபகற்பத்தின் பெரும்பகுதியை ஒரே ஆட்சியின் கீழ் கொண்டுவந்திருந்தது. இதன்பின்னர் ஏழாம் எட்டாம் நூற்றாண்டுகளில் பெரும் போர்களின் மூலம், அரேபிய ஆதிக்கமானது, இந்தியத் துணைக்கண்டம், நடு ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள் என்று பெரும்பகுதிகளுக்கும் பரவியதுடன், 637இல் இடம்பெற்ற எருசலேம் முற்றுகை மூலம், புனிதபூமியையும் பைசாந்தியப் பேரரசிடமிருந்து கைப்பற்றிக்கொண்டது. இதையடுத்து கிறித்துவ நாடுகளுக்கும் அரபுலகுக்கும் இடையிலான வணிகம், சகிப்புமை, அரசியல் உறவுகள் அத்தனையும் தளம்பல் நிலையைக் காணத்தொடங்கியது. உதாரணமாக, யெருசலேம் திருக்கல்லறையை பாத்திமிய கலீபாவான அல் ஹாகிம் பினமிர் அல்லாஹ் இடித்ததும், அவனை அடுத்து வந்த கலீபா, அதை மீண்டும் பைசாந்தியப்பேரரசு கட்டிக்கொள்ள அனுமதித்ததையும் குறிப்பிடலாம்.. 10ஆம் நூற்றாண்டின் இறுதியில், பைசாந்தியப் பேரரசானது, அப்பகுதியை மீண்டும் தன்வசப்படுத்திக் கொண்டது. இக்காலத்தில் அரேபிய, கிறித்துவ உறவுகள் ஓரளவு சுமுகமாக இருந்தாலும், யெருசலேம், சிரியத்துறை என்பவற்றில் தாம் திருப்திகரமாக வாழமுடியவில்லை என்று கிறிஸ்தவ யாத்திரிகர்கள், வணிகர்கள் முறையிடத்தொடங்கி இருந்தார்கள். இதே காலத்தில் ஐரோப்பாவிலும் பெரும் நெருக்கடியான நிலைமை தோன்றியிருந்தது. 1054இல் இடம்பெற்ற, பெரும் சமயப்பிளவு என்று அறியப்படும், இலத்தீன் திருச்சபையின் கிழக்குப் பேரரசிலிருந்தான வெளியேற்றம், அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று. மேலும் உரோம அரசா அல்லது கத்தோலிக்கத் திருச்சபையா, ஊழியர்களை நியமிப்பதற்கான அதிகாரங்களைக் கொண்டது என்ற விடயம் தொடர்பில், பணியமர்த்தல் சர்ச்சையும் சென்றுகொண்டிருந்தது. இத்தகைய திருச்சபை விடயங்கள் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்தைத் தூண்டியிருந்த பின்னணியிலேயே முஸ்லீம்களிடமிருந்து பலஸ்தீனத்தை மீட்கும் புனிதப்போருக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் பங்குகொள்வது, பாவத்தை நீக்கும் ஒரு பரிகாரம் என்ற நம்பிக்கையும் மக்கள் மத்தியில் வளர்ந்தது. 1095இல் பைசாந்தியப் பேரரசன் முதலாம் அலெக்சியஸ் கொம்னெனோஸ், திருத்தந்தை இரண்டாம் அர்பனிடம் தனக்கு படையுதவி செய்யுமாற் கோரினான். அனத்தோலியாவின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருந்த துருக்கியரை அகற்றுவது அவனது கோரிக்கைக்கான முக்கியமான காரணமாக இருந்தது. ஓராண்டுக்குப் பிறகு புனிதப்போர் ஒன்றுக்கான தேவையைப் பற்றி, அர்பன் மீண்டும் பிரசங்கம் செய்தார். கிழக்குத் திருச்சபைக்கு உதவுவதன் மூலம், பிளவுண்டிருக்கும் இரு திருச்சபைகளையும் இணைக்கமுடியும் என்ற நம்பிக்கை அர்பனிடம் இருந்ததாலேயே, இந்த உதவிக்கு அவர் உடன்பட்டிருக்கிறார் என்கின்றனர் வரலாற்றாய்வாளர்கள். இதேவேளையில் பேதுருவானவர், பெருமளவு ஏழை கிறித்துவர்களிடம் புனிதப்போரொன்றின் தேவைப்பாடு பற்றி, போதனை செய்துகொண்டிருந்தார். புனிதப்போர் வெடித்தது. யெருசலேத்தில் பெரும்பாலானோர், 'சொர்க்கத்தை அடைந்தார்கள்'. ஐரோப்பாவின் முதலாவது யூத எதிர்ப்புக் கொள்கையின் விளைவு என்று வரலாற்றாய்வாளர் வருணிக்கும் ரைன்லாந்துப் படுகொலை மூலம் யேர்மனியில் யூதர்கள் கொன்றொழிக்கப்பட்டனர். அலெக்சியோவின் கோரிக்கையை மீறி நைசியாப் பகுதியைக் கைப்பற்றச் சென்ற புனிதப்போர் படையினர், துருக்கியரிடம் பெருந்தோல்வி அடைந்தனர். இருபதினாயிரம் புனிதப்போராளிகளில், மூவாயிரம் பேர் மாத்திரமே எஞ்சமுடிந்தது. பிரான்சின் முதலாம் பிலிப்பும், உரோமனின் நான்காம் ஹென்ரி மன்னனும், அர்பனுடன் முரண்பட்டு, சிலுவைப்போரில் பங்குபெற்ற மறுத்தனர். எனினும் பிரான்சு, மேற்கு யேர்மனி, இத்தாலி, கீழ்நாடுகளில் சிலுவைப்போருக்கு அரசவை பிரமுகர்கள் மத்தியிலும் கீழ்த்தட்டு மக்கள் மத்தியிலும் இருந்த வரவேற்பை அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை. இத்தகையோரின் ஆதரவுடன், சுமார் ஒரு இலட்சம் படைவீரர்களுடன் கிளம்பிய படை, பேரரசனின் பலத்த வரவேற்பின் மத்தியில் பைசாந்தியத்தை அடைந்தது. ரம் சுல்தானகத்தின் தலைமையகமாகம் முதலாம் கில்ஜி அர்ஸ்லான் பிரகடனம்செய்திருந்த நைசியாவை மீட்பது, அவர்களது முக்கிய நோக்கமாக இருந்தது. ஏற்கனவே நடந்த போரில் வென்ற ஆணவத்தில், ஏனைய இஸ்லாமிய அரசுகளின் எச்சரிக்கையையும் மீறி களமிறங்கிய சுல்தான், 1097இல் நைசியாவை சிலுவைப்போராளிகளிடம் பறிகொடுத்தான். அந்தியோக்கியாவைக் கைப்பற்றிய சிலுவைப்போராளிகள், துருக்கியருக்கு பேரழிவை நிகழ்த்தினர். பாக்தாத் சுல்தானகத்தின் சுல்தான், நிலைமையைப் புரிந்துகொண்டு, அந்நகரை மீட்பதற்காக பெரும்படையை அனுப்பினான். ஏற்கனவே பைசாந்திய்ப் பேரரசின் உதவிகளை இழந்து, பஞ்சத்தாலும் பட்டினியாலும் அந்நகரில் வாழ்ந்துகொண்டிருந்த சிலுவைப்போராளிகள், பாக்தாத் படையிடம் சரணடைய அனுமதி கேட்டனர். அதை மறுத்த பாக்தாத் படையினரிடம் வேறுவழியின்றி மோதிய சிலுவைப்போராளிகள், முற்றுகையை விடுத்து பாக்தாத் படையினரை புறமுதுகிட்டு ஓடச்செய்தனர். இயேசுபிரானின் உடலைத்துளைத்த புனிதவேலை அங்கு தான் கண்டதாக பேதுரு பர்த்தமேலோ கூறியதே அங்கிருந்த போராளிகளுக்கு உற்சாகமூட்டி, பாக்தாத் படையினரை எதிர்த்தோட வைக்கத் தூண்டியதாகச் சொல்லப்படுகின்றது. துருக்கியரிடமிருந்து எருசலேமை பாத்திம எகிப்தியர்கள் பறித்துக்கொண்டதை அறிந்த சிலுவைப்போராளிகளின் ஒரு குழுவினர், அந்தியோக்கியாவை விட்டு, தெற்கே பயணமாயினர். போதுமான தகவல்கள் கிடைக்காமையால், சிலுவைப்ப்போராளிகளின் முதலாவது தாக்குதல் தோல்வியில் முடிந்தது. அவர்களது விடாமுயற்சியில் இரண்டு முற்றுகைக்குழுக்கள் பிரிந்தன. அவற்றில் ஒன்று 1099 யூலை 15 அன்று நகரின் சுவர்களைத் தகர்த்தது. குடியிருப்பாளர்கள் கொன்றுவீசப்பட்டு, நகரம் போராளிகளின் வசமானது. பின்பு வந்த எகிப்திய விடுதலைப்படையை தோற்கடித்தான் போராளிக்குழுக்களின் ஒரு தளபதியான கோட்பிரே. தம் புனிதப்பயணம் வெற்றிபெற்றதென்று கருதிய பெருமளவு போராளிகள் ஐரோப்பா திரும்பினர். கோட்பிரேயுடன் பாதுகாப்புக்காக 300 வீரர்களும் 2,000 போராளிகளும் மாத்திரம் விட்டுச்சென்றனர். இஸ்லாமியரின் சிலுவைப்போர் தோல்வியானது, ஓரளவு அரபு ஆவணங்களில் கிடைத்தாலும், இது பற்றி போதுமான தரவுகள் கிடைப்பதாயில்லை. அரேபிய வரலாற்றாசிரியர்கள், சிலுவைப்போராளிகளை மதம் சார்ந்த போராளிகளாக அன்றி, பைசாந்தியப் பேரரசின் கூலிப்படையினராகவே கணித்தமை இதற்கொரு காரணம் ஆகலாம். சிரியாவில் சன்னிகளாகவும், எகிப்திய பாத்திம சியாக்களாகவும், துருக்கியில் டமாஸ்கஸ், அலெப்போ ஆகிய ஆட்சியாளர்களிடையேயும் இஸ்லாமிய உலகம் பிரிந்து நின்றமையாலேயே முதலாம் சிலுவைப்போரில் அவர்கள் தோற்றனர் என்று சொல்லப்படுகின்றது. 12ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், சிலுவைப்போராளிகள், சிறுசிறு குழுக்களாக கீழை நடுநிலத்துக்குப் பயணஞ்செய்வதும், முஸ்லீம்களுடன் போரிடுவதுமாக இருந்தார்கள். அதன் மூன்றாம் பத்தாண்டில் அஞ்சோவின் ஐந்தாம் பல்க்கும், வெனட்டிய சிலுவைப்போராளிகளும், யேர்மனியின் மூன்றாம் கொன்ராட்டும் இணைந்து தேவாலய புனித வீரர்கள் அமைப்பை தோற்றுவித்தனர். 1128இல் அலெப்போ வீழ்ந்தபோதும், 1144இல் மோசுல் ஆளுநர் இமாட் அட்டின் செங்கியின் வசம் உர்பா நகர் வீழ்ந்ததும், இரண்டாம் சிலுவைப்போரை ஆரம்பிப்பதற்கான காரணங்களாக அமைந்தன. பெரிய வெற்றி கிடைக்கவில்லை எனினும் ஏழாம் லூயிஸ் மன்னனும், மூன்றாம் கொண்ராட்டும், சிலுவைப்போராளிகளை பிரான்சு, யேர்மனியிலிருந்து யெருசலேம் மற்றும் டமாஸ்கசுக்கு அனுப்பிக்கொண்டிருந்தனர். எனினும் ஐபேரிய தீபகற்பத்தில், கிறித்துவர்களுக்கு தொடர்ச்சியான வெற்றி கிடைத்து வந்தது. 1148இல் போர்த்துக்கேய மன்னன் முதலாம் அபொன்சோ லிஸ்பனைக் கைப்பற்றியதுடன், பார்சிலோனிய நான்காம் ரேய்மண்ட் தோர்தோசா நகரைக் கைப்பற்றியதும் இவற்றில் குறிப்பிடத்தக்கவை. எகிப்தானது, சன்னி முஸ்லீம்களின் பாக்தாத்திலிருந்த அப்பாசியக் கலீபகத்துக்கு வெளியே, சியா பிரிவைச் சேர்ந்த பாத்திமக் கலீபகத்தால் ஆளப்பட்டுக்கொண்டிருந்தது. அரசியல் சதிகளால் 1121இலிருந்து பாத்திமக் கலீபகம் ஆட்டம் காண்த்தொடங்கியது. இது எருசலேத்தின் மூன்றாம் பால்ட்வின்னை எகிப்து மூலம் படையெடுக்கத் தூண்டியதுடன், பலத்த சிரமங்களுக்கு மத்தியில் 160,000 பொன் தினார்களை திறையாகச் செலுத்தி, எகிப்து தன்னை தற்காத்துக்கொண்டது. அப்போது மோசுல் மன்னனாக இருந்த செங்கியின் மகன் நூர் அல்தீன் படைகளை அனுப்பி எகிப்தை மீட்டுக்கொடுத்தான். 1174இல் இறந்த நூர் அல்தீன், சிலுவைப்போர் காலகட்டத்தில் அலெப்போவையும் டமாஸ்கசையும் ஒன்றிணைத்து ஆண்ட முதல் இஸ்லாமிய மன்னனாகக் கருதப்படுகின்றான். நூர் அல்தீனால் எகிப்துக்கு அனுப்பப்பட்ட சலாகுத்தீன், கீழை நடுநிலத்தின் சக்திவாய்ந்த தன்னாட்சி அமைப்பாக எகிப்தை வளர்த்தெடுத்தான். சிரியாவின் பெரும்பகுதியையும் டமாஸ்கசையும் கைப்பற்றிக்கொண்ட சலாகுத்தீன், இலத்தீன் கிறித்துவர்களுடனான முதலாவது மோதலில் தோற்றாலும், அவர்களுடன் மோதி வெல்வதை ஒரு பெருங்கனவாகவே கொண்டிருந்தான். பிரெஞ்சின் லுசிக்னன் கை மன்னன், எருசலேம் வரலாற்றிலேயே மிகப்பெரிய படை ஒன்றை அனுப்பியிருந்தான். சலாகுத்தீனோ, தந்திரத்துடன் நீர்- உணவுப்பஞ்சம் ஏற்படக்கூடிய இடமொன்றுக்கு அப்படையை அறைகூவியிருந்தான். அப்போரில் பெருந்தோல்வியுற்ற கிறித்துவர்களிடம், இஸ்லாமிய ஆட்சியின் கீழ் அமைதியாக வாழ்வது, அல்லது 40 நாட்களுக்குள் வெளியேறுவதற்கான பொதுமன்னிப்பு - இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யும்படி கூறினான். விளைவாக, வெறூம் ஐந்து நாட்களுக்குள் கிறித்துவரின் 1187 அம்முற்றுகை தோல்வியடைந்து, பலஸ்தீனத்தின் பெரும்பகுதி சலாகுத்தீன் வசமானது. திருத்தந்தை மூன்றாம் அர்பன் இத்தோல்வியைத் தாங்கிக்கொள்ளமுடியாமல் நோயுற்று இறந்ததாகத் தெரிகிறது. அவரை அடுத்து வந்த திருத்தந்தையான எட்டாம் கிரகோரி, எருசலேத்தைக் கைப்பற்றுவதற்கான மூன்றாம் சிலுவைப்போருக்கு அடிப்படையாக அமைந்த திருத்தந்தையின் ஆணை ஓலையை 1189இல் விடுத்தார். ஏக்கர் நகரில் முன்யோசனையின்றி எருசலேமின் கை மன்னனின் படையும், சலாகுத்தீனின் படையும் முற்றுகையிட்டபோது, இருபடைகளுக்குமே உணவு, நீருக்கு பெரும் இக்கட்டான நிலை ஏற்பட்டது. இதன்போதே சிலுவைப்போரின் மாபெரும் துயர்களில் ஒன்றான, நரமாமிசம் உண்ணவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. ஆனால் கீழை நடுநிலத்துக்கான புனிதப்பயணம் பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது. 1212இல் இடம்பெற்ற நான்காம் சிலுவைப்போருக்கு சிறுவரை அனுப்பும் வினோதமான வழக்கம் ஒன்று, மிகப்பரவலாகக் காணப்பட்டது. மூத்தவர்கள் தோற்கும்போது, சிலுவைப்போரில் சிறுவரின் அப்பாவித்தனம் வெல்லும் என்று நம்பப்பட்டது. இதையடுத்து சலாகுத்தீனின் கொடிவழியில் வந்த எகிப்திய, சிரிய மன்னர்களுக்கு எதிரான ஐந்தாம் சிலுவைப்போர் 1217இல் இடம்பெற்றது.எருசலேமின் இரண்டாம் இசபெல்லாவை மணந்துகொண்ட உரோமானியப் பேரரசன் இரண்டாம் பிரடெரிக், , அவனது புகழ்பெற்ற யுத்த தந்திரோபாயங்களுடன் எருசலேம் மீது படையெடுத்து, ஆறாம் சிலுவைப்போரில் வெற்றிபெற்றான். எனினும் சிலுவைப்போர் தொடர்பில் பாப்பரசருடன் முரண்பட்ட அவன், சமூகத்திலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டான். 1244இல் டமாஸ்கசு மன்னனுக்கு பணியாற்றச் சென்ற குவாரெசுமேனியன் கூலிப்படை, கிறித்துவ சிரியக் கூட்டுப்படையை வீழ்த்தி எருசலேமைக் கைப்பற்றியது. அதற்குப் பதிலாக பிரெஞ்சு மன்னன் ஒன்பதாம் லூயிஸ் அனுப்பிய படை ஏழாம் சிலுவைப்போரை நிகழ்த்தியது எனினும், அதில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு பரவலாக நேட்டோ ("NATO") என அறியப்படும் வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு ("North Atlantic Treaty Organization") என்பது, 1949 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் நாள் வட அத்திலாந்திய ஒப்பந்தம் கையெழுத்தானதன் மூலம் உருவான ஒரு இராணுவக் கூட்டணி ஆகும். இதன் தலைமையகம் பெல்ஜியத்தின் தலைநகரமான பிரசல்சில் உள்ளது. வெளியார் தாக்குதலுக்கு எதிராக பரஸ்பர பாதுகாப்பு உதவி வழங்குவதற்கு இதிலுள்ள உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றும் இணங்கியதன் மூலம் இவ்வமைப்பு ஒரு கூட்டுப் பாதுகாப்பு முறையைக் கொண்டுள்ளது. இதன் முதல் சில ஆண்டுகள் இது ஒரு அரசியல் கூட்டணியாகவே செயல்பட்டது. ஆனாலும், கொரியப் போர் இதன் உறுப்பு நாடுகளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து இரண்டு ஐக்கிய அமெரிக்கத் தளபதிகளின் கீழ் ஒன்றிணைந்த படைக் கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. இக் கூட்டணியின் முதல் செயலாளர் நாயகமான லார்ட் இஸ்மே என்பவரின் புகழ் பெற்ற கூற்றின்படி, இவ்வமைப்பின் நோக்கம், ரஷ்யர்களை வெளியிலும், அமெரிக்கர்களை உள்ளேயும், ஜேர்மானியர்களைக் கீழேயும் வைத்திருப்பதாகும். பனிப்போர்க் காலம் முழுவதும், ஐக்கிய அமெரிக்காவினதும், ஐரோப்பிய நாடுகளினதும் தொடர்புகளின் பலம் குறித்த ஐயம் நிலவி வந்ததுடன், சோவியத் ஒன்றியத்தின் தாக்குதலுக்கு எதிராக "நாட்டோ" கூட்டணியினர் வழங்கக்கூடிய பாதுகாப்புக் குறித்த கவலைகளும் இருந்தன. இது பிரான்சின் அணுவாயுதத் திட்டத்தின் உருவாக்கத்துக்கும், 1966 இல் பிரான்ஸ் நாட்டோவின் இராணுவக் கட்டமைப்பிலிருந்து விலகுவதற்கும் வழிகோலியது. ஐக்கிய அமெரிக்க பொருளாதார நெருக்கடி, 2008 ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதாரம் பல்வேறு நெருக்கடிகளுக்கு 2008 ஆம் ஆண்டும் உட்பட்டுள்ளது. வீட்டுச் சந்தை நெருக்கடி, உற்பத்தித்துறை வீழ்ச்சி, எரிபொருள் விலை உயர்வு ஆகிய காரணங்கள் ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதரத்தை நெருக்கடிக்கு இட்டுச் சென்றுள்ளன. இதனால் பல வங்கிகள், வணிக நிறுவனங்கள் ஓட்டாண்டி ஆகிவிட்டன. மேலும் பல ஐக்கிய அமெரிக்க அரசால் கடனுதவி செய்யப்பட்ட தேசியமயமாக்கப்பட்டுள்ளன. ஐக்கிய அமெரிக்கா தாரண்மைவாத அல்லது முதலாளித்துவ கொள்கையை தீவரமாக வலியுறுத்தும் நாடு ஆகும். மற்ற நாடுகளின் தேசிய நிறுவனங்களை தனியார் மயப்படுத்த வேண்டும் என்று வறுபுறுத்து அரசு ஆகும். மற்ற நாடுகளின் கட்டுப்பாடுகளை (Regulations) குறைக்கும் படி அமெரிக்கா வற்புறுத்துவதுண்டு. ஆனால் இந்த நெருக்கடி அரசு சந்தையை தகுந்தவாறு கட்டுப்படுத்த தவறியதால்தான் நிகழ்ந்தது என்ற கருத்து உண்டு. மேலும் இதை தீர்க்க AIG போன்ற பல நிறுவங்களின் பெரும்பான்மை பங்குகளை அரசு வாங்கி தேசியமயப்படுத்தியுள்ளது. இதுவும் இதன் வழமையான கொள்கைக்கு முற்றிலும் முரணான செயலாகும். இந்த நெருக்கடின் அமெரிக்கா முன்னிறுத்தும் தீவர முதலாளித்துவ கொள்கைக்கு ஒரு தோல்வியாக பார்க்கப்படுகிறது. நெருக்கடிக்கு உள்ளான பல்வேறு தனியார் வணிக நிறுவங்களை மீட்க ஐக்கிய அமெரிக்கா $700 பில்லியன் டாலர் திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளது. பல்வேறு மற்ற உதவித் தொகைகளை கூட்டி இத்தொகை 1 ரில்லியன் டாலர்களுக்கு மேலாக வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் GDP 2007 ம் ஆண்டுக்கு $13.8 ரில்லியன் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. உலக வணிக அமைப்பு உலக வணிக அமைப்பு (WTO ) என்பது ஒரு சர்வதேச நிறுவனமாகும், சர்வதேச மூலதன வணிகத்தினைத் தாராளமயமாக்கி அதை மேற்பார்வையிடும் நோக்குடன் இந்த அமைப்பு நிறுவப்பட்டது. 1947 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வந்த ஜிஏடிடி என்ற (General Agreements on Tariffs and Trade (GATT)) வணிகம் மற்றும் கட்டண விகிதத்திற்கான பொது உடன்பாட்டு அமைப்பிற்குப் பதிலாக ஜனவரி 1, 1995 ஆம் ஆண்டு முதல் இந்த அமைப்பு அதிகாரபூர்வமாக, மர்ரகேஷ் ஒப்பந்தத்தின்கீழ் செயல்படத் துவங்கியது. உலக வணிக அமைப்பானது அதில் பங்குபெறும் நாடுகளிடையே நிலவும் வணிகத்தை ஒழுங்குமுறைப்படுத்துகிறது; பேச்சுவார்த்தைகள் மூலம் வணிக உடன்பாடுகள் செய்து முடிவு காண்பதற்கு ஒரு நிலையான கட்டமைப்பை அது வழங்குகிறது. இந்த அமைப்பு இரு நாடுகளுக்கிடையே எழும் தகராறுகளுக்கு, உலக வணிக அமைப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் சுமுகமான தீர்வுகாண வழிவகுக்கிறது, இந்த ஒப்பந்தங்களைப் பங்கு பெறும் நாடுகளின் அரசைச் சார்ந்த பிரதிநிதிகள் கையொப்பமிட்டு, அவற்றை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஏற்புறுதி செய்ய வேண்டும். இது வரையில் உலக வணிக அமைப்பின் (WTO) கவனத்தை ஈர்த்த மிகையான விவகாரங்கள் இதற்கு முனனால் நடந்த முடிவுறாத வணிகப் பேச்சு வார்த்தைகளாகும், அவற்றிலும் குறிப்பாக உருகுவே சுற்றை (1986-1994) சார்ந்தவையாகும். இந்த அமைப்பானது, தற்போது 2001 ஆம் ஆண்டில் துவங்கிய தோகா மேம்பாட்டுக் கூட்டப்பொருள் (அல்லது தோகா சுற்று) என்ற வணிகமுறைப் பேச்சுவார்த்தைகளில் எடுத்த முடிவுகளைச் செயல்படுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இது உலக மக்கள் தொகையில் மிகுதியாக உள்ள நலிந்த நாடுகளின் பங்கேற்பினைச் செழுமைப்படுத்திச் சம நிலையில் வாதம்புரிந்து பங்கேற்பதற்கான பெரும் முயற்சியாகும். இருந்தாலும், "வேளாண் பொருட்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகள் மற்றும் எண்ணற்ற ஏழ்மையில் வாடும் குடியானவர்கள் கொண்ட நாடுகளிடையே நடந்து வரும் பேச்சுவார்த்தைகளில், அதிகமாக இறக்குமதி செய்யும் காலகட்டங்களில், ஏழைக்குடியானவர்களுக்குத் 'தனி பாதுகாப்பு கவசம்' அளிப்பது பற்றிய துல்லியமான செயல்பாட்டிற்கு ஒவ்வாமை இருப்பதனால் வாக்குவாதங்கள் நீண்டு கொண்டே போகின்றன. தற்போது, தோகா சுற்றின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது." இப்போது உலக வணிக அமைப்பில் 153 உறுப்பினர்கள் உள்ளனர், இது உலக அளவிலான வணிகத்தின் மொத்த அளவின் 95% ஆகும். இந்த அமைப்பில் தற்பொழுது 30 பார்வையாளர்களும் உள்ளனர், அவர்களும் உறுப்பினர் ஆவதற்கு முனைந்து வருகின்றனர். இந்த உலக வணிக அமைப்பு, அதன் செயல்பாடுகளை, அலுவலகப்பணித் தொகுதி கூட்டங்களை அவ்வப்போது செயல்படுத்தி முறைப்படுத்தி வருகிறது. இரண்டாண்டுகளில் ஒருமுறை அவர்கள் கூடுவார்கள். இந்த அமைப்பின் உறுப்பினர்களின் ஒரு பொதுக்குழு, கூட்டத்தில் எடுத்த கொள்கை அளவிலான முடிவுகளை செயல்படுத்தி நிர்வாகத்திற்கான பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்கு தலைமை தாங்க, அலுவலகப்பணித் தொகுதி கூட்டத்தால் தெரிவு செய்த ஓர் உயரதிகாரி, நியமிக்கப்படுவார். உலக வணிக அமைப்பின் (WTO) தலைமைச் செயலகம் செண்டர் வில்லியம் ரப்பர்ட், ஜெனீவா, சுவிட்சர்லாந்தில் உள்ளது. இரண்டாவது உலகப் போர் நடந்த பிறகு சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த பலவகையான நிறுவனங்கள் - குறிப்பாக பிரெட்டன் வூட்டின் நிறுவனங்கள், உலக வங்கி மற்றும் அனைத்துலக நாணய நிதியம் போன்ற நிறுவனங்களுடன் உலக வணிக அமைப்பின் முன்னோடியான ஜேஏடிடி (GATT) என்ற அமைப்பை நிறுவியது. வணிகம் செய்வதற்காக, அதே அளவிற்கு ஒப்பிடக்கூடிய ஒரு நிறுவனத்தை, சர்வதேச வணிக அமைப்பு என்ற பெயரில், பேச்சுவார்த்தைகள் மூலம் வெற்றிகரமாக செயல்படுத்த முடிவானது. சர்வதேச வர்த்தக அமைப்பானது, ஐக்கிய நாடுகளின் (United Nations) தனிச்சிறப்பு பெற்ற அமைப்பாக, வியாபாரத்தில் ஏற்படும் தடைகளை நீக்குவதோடல்லாமல், வியாபாரத்துடன் மறைமுகமாக தொடர்புகொண்ட இதர பிரச்சினைகளான வேலைவாய்ப்பு, முதலீடுகள், குறுகிய நோட்டத்துடன் தொழில் செய்வது, பயன்படு பொருள்களுக்கான ஒப்பந்தங்கள் போன்றவைகளையும் மேற்பார்வையிட வல்லதாகும். ஆனால் இந்த சர்வதேச வர்த்தக அமைப்பிறகான ஒப்பந்தத்தை அமேரிக்கா மற்றும் சில இதர நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை, அதனால் அவை நிறைவேற்றப்படவில்லை. வர்த்தகத்திற்கான ஒரு சர்வதேச அமைப்பு இல்லாது போனதால், ஜி ஏ டி டி (GATT) இன்னும் சில வருட "நடைமுறையில்" ஒரு சர்வதேச நிறுவனமாக 'தன்னைத் தானே' மாற்றியமைத்துக்கொள்ளும். 1948 ஆண்டு தொடங்கி, 1995 ஆம் ஆண்டில் உலக வணிக அமைப்பு நிறுவியதுவரை, சர்வதேச வாணிபத்தை முறைப்படுத்திய ஒரே ஒரு பலதரப்பட்ட சாதனமாக ஜிஏடிடி (GATT) விளங்கியது. 1950 மற்றும் 1960 ஆண்டுகளுக்கிடையில், சர்வதேச வர்த்தகத்திற்காக ஒரு விதமான நிறுவன இயக்கமுறையை செயல்படுத்த முயன்ற போதிலும், ஜிஏடிடி (GATT) தொடர்ந்து அரை நூற்றாண்டிற்கும் மேல், ஒரு தற்காலிக அடிப்படையில், ஒரு பலவகை ஒப்பந்த ஆட்சிபுரியும் பங்களவு நிறுவனமாக செயல்பட்டுவந்தது. ஜிஏடிடி (GATT) யின் கீழ் ஏழு சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. முதல் சுற்று ஜிஏடிடி (GATT) பேச்சு வார்த்தைகள் கட்டணங்களை மேலும் குறைப்பதை நோக்கமாக கொண்டது. அப்புறம், அறுபதுக்கிடையில் நடந்த கென்னடி சுற்றில் ஜிஏடிடி (GATT) கொட்டுதலுக்கு தடை விதிக்கும் ஒப்பந்தத்துடன் வணிக மேம்பாட்டிற்காக ஒரு பிரிவை நிறைவேற்றியது. எழுபதுகளில் நடந்த டோக்கியோ சுற்றுகளில் கட்டணங்கள் அல்லாத இதர வணிகத்தடைகளை நீக்குவதற்கும் செய்முறைகளை மேம்படுத்துவதற்கும் முதல் பெரிய முயற்சி நடைபெற்றது, தொடர்ச்சியாக கட்டணங்கள் அல்லாத தடைகள் நீக்கும் பல ஒப்பந்தங்கள் ஏற்றுக்கொண்டது, சில நிகழ்வுகளில் ஜிஏடிடி (GATT) யில் நிலவிய புழக்கத்தில் இருக்கும் முறைகளை ஏற்றுக்கொண்டது, மேலும் சில இதர நிகழ்வுகள் முற்றிலும் புதிய பிரிவுகளுக்கு வழிவகுத்தது. இவ்வகையான பலதரப்பு ஒப்பந்தங்களில் சில ஜிஏடிடி (GATT)யின் அனைத்து உறுப்பினர்களாலும் ஏற்றுக்கொள்ளப் படாததால், அவை அடிக்கடி இயல்பாக "குறிகள்" என வழங்கின. இவற்றில் பல குறிகள் உருகுவே சுற்றில் மாற்றியமைந்தன, மேலும் அவை அனைத்து உலக வணிக அமைப்பு உறுப்பினர்கள் ஒப்புக்கொண்ட பலவகையான நிற்பந்தங்களாக (கடமை / உத்தரவு) திரிந்தன. அவற்றில் நாலு மட்டுமே பலவகையானதாக எஞ்சியது (அரசு கொள்முதல் செய்வது, மாட்டிறைச்சி, குடியியல் வானூர்தி மற்றும் பால்பண்ணை சார்ந்த பொருட்கள்), ஆனால் 1997 ஆம் ஆண்டில் உலக வணிக அமைப்பு உறுப்பினர்கள் மாட்டிறைச்சி மற்றும் பால்பண்ணை சார்ந்த ஒப்பந்தங்களை நீக்க முடிவுசெய்தனர், அதனால் எஞ்சியது இரண்டு மட்டுமே. ஜிஏடிடி (GATT) யின் நாற்பதாவது ஆண்டுவிழாவிற்கு முன்னதாகவே, அதன் உறுப்பினர்கள் ஜிஏடிடி (GATT) யின் முறைகளால் புதிய உலகளவில் விரிந்துவரும் உலக பொருளாதாரத்துடன் தாக்குப்பிடித்து ஒத்துவர இயலவில்லை என்பதை உணர்ந்தனர். 1982 ஆம் ஆண்டில் அலுவலகப்பணித் தொகுதி கூட்ட சாற்றுரையில் அடையாளம் காட்டிய குறைகளை நிவர்த்தி செய்வதற்காக (அமைப்பிற்குரிய குறைபாடுகள், உலக வணிகத்தைப்பற்றிய சில நாடுகளின் கொள்கைகளால் ஏற்பட்ட நிரம்பி வழிந்த தாக்கங்களால் ஏற்பட்ட நிலைகுலைவு ஜிஏடிடி (GATT) யால் நிர்வாகம் செய்ய இயலாமல் போனது போன்றவை), எட்டாவது ஜிஏடிடி (GATT) சுற்று, உருகுவே சுற்று என்று அறியப்படுவது- உருகுவேயில் உள்ள புண்டா டெல் ஈஸ்டேயில் 1986 செப்டம்பரில் துவங்கியது. இதுவரை எங்கும் நடைபெறாத வணிகம் சார்ந்த மற்றும் ஒப்புமை கொண்ட மிகப்பெரிய உரிமைக்கட்டளை அதுவேயாகும்: பேச்சுவார்த்தைகள் வணிக முறைகளையும் தாண்டியது மற்றும் பல புதிய துறைகளை சீண்டியது, குறிப்பாக சேவைகள் புரிவதற்கான வணிகம் மற்றும் அறிவுத்திறனுடையார் சொத்துடமை, மேலும் வேளாண் மற்றும் நெசவுத்தொழில் போன்ற உணர்ச்சிவசப்படக்கூடிய துறைகளில் வணிக செய்முறைகளில் சீர்திருத்தங்கள்; அனைத்து அசல் ஜிஏடிடியின் உடன்பாடு விதிகள் திரும்பவும் பரிசீலிக்கப்பெற்றது.. ஏப்ரல், 1994 ஆம் ஆண்டில் நடந்த அலுவலகப்பணித் தொகுதி கூட்டம், மோரோகொவில் உள்ள மர்ரகேஷில் நடைபெற்றது, அத்துடன் உருகுவே சுற்றின் பேச்சுவார்த்தைகள் முடிவுற்று அதிகார பூர்வமாக உலக வணிக அமைப்பின் ஆட்சியை நிறுவியதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது, அதனால் இது மர்ரகேஷ் ஒப்பந்தம் என அறியப்படுகிறது. ஜிஏடிடி (GATT) இன்றும் உலக வணிக அமைப்பின் பொருட்களுக்கான வணிகத்தின் குடை ஒப்பந்தமாக இருந்துவருகிறது, உருகுவே சுற்று பேச்சுவார்த்தைகளின் காரணமாக அவை நிகழ்நிலைப்பட்டுள்ளன.(ஆவணங்களான "ஜிஏடிடி (GATT) 1994", நிகழ்நிலை ஜிஏடிடி (GATT) பாகங்கள், மற்றும் "GATT 1947", வேறுபடுத்திய பின்னர் அசலான "GATT 1947" ஒப்பந்தக்குறிப்பு, இன்னும் GATT 1994 இன் இதயமாக திகழ்கிறது). ஜிஏடிடி 1994 (GATT) ஒப்பந்தம் கூடாமல் மற்றும் மர்ரகேஷ் இறுதி கூட்டத்தில் இதர ஒப்பந்தங்களும் சட்ட ரீதியாக அனுமதி பெற்றுள்ளன; 60 ஒப்பந்தங்கள், இணைப்புகள், முடிவுகள், மற்றும் ஏற்றுக்கொண்டவை போன்ற நீண்ட பட்டியலில் அவை பதிவாகியுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் ஆறு முதன்மை பாகங்களுடன் கூடிய அமைப்பாக கட்டமைத்துள்ளது: தொடக்க விழா அலுவலகப்பணித் தொகுதி கூட்டம் சிங்கப்பூரில் 1994 ஆண்டில் நடந்தது. இந்த கூட்டத்தில், முதல் முறையாக விவாதத்திற்கு கொண்டுவந்த நான்கு விவகாரங்களில், மிகையாக மேம்பாடடைந்த நாடுகள் மற்றும் மேம்பாடடைந்த மற்றும் மேம்பட்டு வரும் பொருளாதாரங்களில் கருத்து வேறுபாடுகள் எழுந்தன, அதன் காரணமாக அவை நான்கையும் சுட்டிக்காட்டும் வகையில் அவற்றை "சிங்கப்பூர் விவகாரங்கள்" என அழைத்தனர். இக்கூட்டம் ஜெனீவா சுவிட்சர்லாந்தில் நடந்தேறியது. சீயாட்டில், வாஷிங்டனில் நடந்த மூன்றாவது கூட்டம் தோல்வியில் முடிவுற்றது, பெரிய அளவில் மக்கள் கூட்டம் ஆர்ப்பாட்டம் செய்தார்கள் மேலும் காவல் துறையினர் மற்றும் தேசீய பாதுகாவலர்களுடைய மக்கள் கூட்டத்தை சமாளிக்கும் முறை உலகளவில் சர்ச்சைக்குள்ளாயிற்று. இது பாரசீக வளைகுடாவில் உள்ள நாடான கட்டாரில் உள்ள தோஹவில் நடைபெற்றது தொஹ மேம்பாட்டு சுற்று இந்த கூட்டத்தில் தொடங்கியது. இந்தக்கூட்டத்தில் சீனா உறுப்பினராக சேர்வதையும் அனுமதித்தது, அந்நாடு 143 ஆவது உறுப்பினர் நாடாகும். இந்த அலுவலகப்பணித் தொகுதி கூட்டம் கான்கன் , மெக்ஸிகோ வில் நடைபெற்றது, தொஹ சுற்று ஒப்பந்தத்தை நிறைவேற்றும் நோக்குடன் அது நடந்தது. 22 தெற்கு நாடுகள் கொண்ட ஒரு கூட்டு, G20 மேம்பாடடையும் நாடுகள், இந்தியா, சீனா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளின் தலைமையில், வடக்கு நாடுகளுடைய சிங்கப்பூர் விவகாரங்கள் குறித்த கோரிக்கைகளை ஏற்க மறுத்தனர் மேலும் அவர்கள் வேளாண் தொழிலுக்கு ஐக்கிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க நாடுகள் அளித்துவரும் மானியத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பேச்சு வார்த்தைகள் அத்துடன் முறிந்தன மேலும் அவை முன்னேறவில்லை. ஆறாவது உலக வணிக அமைப்பு சார்ந்த அலுவலகப்பணித் தொகுதி கூட்டம் ஹாங் காங் இல் 13 டிசம்பர் முதல் 18 டிசம்பர், 1995 வரை நடந்தது. நான்கு ஆண்டுகள் பழமையான தோஹ மேம்பாட்டு நிகழ்ச்சி நிரல் பேச்சுவார்த்தைகளுக்கு தீர்வு காண்பதை முக்கியமாகவும் மற்றும் அந்த சுற்றை 2006 ஆம் ஆண்டுக்குள் முடிக்க வேண்டும் என்ற நோக்குடனும் நடந்தது. இந்த கூட்டத்தில், நாடுகள் வேளாண் ஏற்றுமதி தொழிலுக்கு வழங்கிவரும் மானியத்தை படிப்படியாக 2013 ஆண்டின் முடிவுக்குள்ளும் மேலும் பஞ்சு ஏற்றுமதிக்கான மானியத்தை 2006 ஆண்டுக்குள்ளும் முடிவுக்கு கொண்டுவர இசைந்தனர். மேம்பாடு அடைந்து வரும் நாடுகளுக்கு அளித்த இதர சலுகைகளில் வரியில்லாத, கட்டணமில்லாத சரக்குகளை மிகவும் குறைந்த அளவிற்கு மேம்பட்ட நாடுகளில் இருந்து பெறுவதற்கான உடன்பாடு, அது ஐரோப்பிய ஒன்றியத்தின் "அனைத்தும் ஆனால் படைக்கலம் மட்டும் இல்லாமல்" (Everything But Arms) என்ற முனைப்பை ஆதாரமாக கொண்டதாகும். மேலும் 3% வரையிலான கட்டண வரிகள் விலக்கு அளிக்காததாக இருக்கும். இதர பெரிய விவகாரங்களை பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 2010 ஆண்டுக்குள் முடிக்க முடிவு செய்தது. உலக வணிக அமைப்பின் பொதுக்குழு, 26 மே 2009 அன்று, ஏழாவது உலக வணிக அமைப்பு (WTO) அலுவலகப்பணித் தொகுதி கூட்டத்தை ஜெனீவாவில் 30 நவம்பர் முதல் டிசம்பர் 2009 வரை நடத்த முடிவுசெய்தனர். தலைவர் அம்ப விடுத்த ஒரு குறிப்பு மரியோ மடுஸ் கூறியதாவது இரு வருடங்களுக்கு ஒரு முறை சந்திக்கும் நடைமுறையில் இருக்கும் குறைபாடுகளை நீக்குதல் வேண்டும், அதுவே 2005 தொஹ சுற்று, முடிவில் காலம் கடந்து தோல்வி கண்டது, மேலும் நடக்கவிருக்கும் 'அளவு குறைந்த' கூட்டமானது பேரம் பேசும் பேச்சுவார்த்தைகள் கொண்டதாக இருக்காது, ஆனால் "சிறு குழுக்கள் கொண்ட பேரம் பேசும் அமைப்பாக அல்லாமல் மற்றும் இயல்பான பேச்சுவார்த்தை நடத்தும் கட்டமைப்பாக இல்லாமல், ஒளிவு மறைவில்லாமல் மற்றும் வெளிப்படையாக பேச்சுவார்த்தைகள் நடக்கும் சூழ்நிலைகளை வலியுறுத்தும்". உலக வணிக அமைப்பு தற்போதைய பேச்சுவார்த்தைகளுக்கான சுற்றை, தோகா மேம்பாட்டு நிகழ்ச்சிநிரல் என அறியப்படுவது, அதன் நான்காம் அலுவலகப்பணித்தொகுதி கூட்டத்தில், நவம்பர் 2001 முதல் தோகா, கத்தாரில் துவங்கியது. தோகா சுற்று மிகவும் எதிர்பார்ப்புகளுடன் கூடிய, உலகமயமாக்குவதற்கான எண்ணத்தை கருத்தில் கொண்டு, மேலும் உலகத்தில் வாழும் மிகவும் ஏழையான மக்களுக்கு உதவி புரியும் நோக்குடன், குறிப்பாக வேளாண் தொழில் தடைகள் மற்றும் மானியத்தொகை விவகாரங்களை அகற்றுவதற்கான ஒரு வெளிப்படை முயற்சியாகும். அதன் துவக்க நிகழ்ச்சிநிரல் வணிக குறைகளை மேலும் தளையகற்றி விடுவித்து, தற்காலத்துக்கேற்ற புதிய விதிமுறைகளை அமுல்படுத்தி, மேம்பாடு அடையும் நாடுகளுக்கு ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி அமைப்பை வலுவூட்டுவதே. பல முறை பேச்சுவார்த்தைகள், அலுவலகப்பணித் தொகுதி கூட்டங்கள் மற்றும் இதர கூட்டங்கள் நடந்தாலும், பேச்சுவார்த்தைகள் மிகவும் காரசாரமாக இருந்ததோடல்லாமல் எந்த முடிவுக்கும் ஒப்புதல் கிடைக்கவில்லை. பல முக்கிய விவகாரங்களில், வேளாண் மானியம் போன்றவையும் அடங்கும், கருத்து வேறுபாடுகள் தொடர்ந்துகொண்டே இருந்தன. உலக வணிக அமைப்பின் பல்வேறுபணிகளில், கீழே கொடுக்கப்பட்டவை மிகவும் முக்கியமானதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்: உலக அரங்கில் அனைத்து நாடுகளும் பங்கேற்று வாணிபம் புரிந்திடும் நோக்குடன் வணிகத்திற்கான கொள்கைகளை வரையறுத்து உலக வர்த்தக அமைப்பு என்ற ஒரு கட்டமைப்பிற்கு ஒரு வடிவத்தை கொடுத்துள்ளார்கள். இந்த அமைப்பு விளைவுகளை வரையறுக்கவோ அல்லது குறிப்பிடவோ இல்லை. அதாவது, வணிக கொள்கைகளுக்கான விளையாட்டுகளுக்கான விதிமுறைகளை இந்த அமைப்பு மேற்கொள்கிறது. 1994 ஆண்டிற்கு முந்தைய ஜிஏடிடி அமைப்பு (pre-1994 ஜிஏடிடி (GATT)) மற்றும் உலக வணிக அமைப்பினை பற்றி தெரிந்துகொள்ள ஐந்து விதிமுறைகள் முக்கியமாகும்: இவை இரண்டும், சரக்குகள், சேவைகள் மற்றும் அறிவுத்திறனுடையார் சொத்துடமை உலக வணிக அமைப்பின் விதிமுறைகளில் வரையறுத்துள்ளது, ஆனால் அவற்றின் துல்லியமான நோக்கம் மற்றும் இயல்பு ஒவ்வொரு வகைக்கும் வேறுபடும். இந்த மிகவும் வேண்டிய நாடு MFN விதிமுறைகளின் படி உலக வணிக அமைப்பு உறுப்பினர் ஒரே மாதிரியான நியமங்களை இதர உலக வணிக அமைப்பின் உறுப்பினருடைய அனைத்து வணிக விவகாரங்களுக்கும் அமைக்க வேண்டும், அதாவது ஒரு உலக வணிக அமைப்பு உறுப்பினர் ஒரு குறிப்பிட்ட பொருளுக்காக வணிகம் செய்யும் போது அதற்காக அளிக்க விரும்பும் மிகவும் உன்னதமான நிலவரங்களை மற்ற இதர உறுப்பினர்களுக்கும் பாகுபாடில்லாமல் அளிக்க முன்வரவேண்டும். "யாராவது ஒருவருக்கு சில சலுகைகளை அளித்தால், அச்சலுகைகளை எஞ்சி இருக்கும் அனைத்து உலக வணிக அமைப்பு உறுப்பினர்களுக்கும் அளிக்க வேண்டும்." தேசிய நடத்துகை என்றால் இறக்குமதி சரக்குகள் மற்றும் உள்நாட்டில் தயாரித்த சரக்குகள் இரண்டும் பாகுபாடில்லாமல் ஒரே முறையில் சீராக பார்க்க வேண்டும் (குறைந்தது வெளிநாட்டு சரக்குகள் சந்தையில் வந்த பிறகாவது) மேலும் இந்த விதிமுறைகள் வணிகம் செய்வதில் கட்டணம் இல்லாத தடைகளை அகற்றுவதற்காகவே ஏற்பட்டன. (எடுத்துக்காட்டு:தொழில்நுட்ப தரங்கள், பாதுகாப்பு தரங்கள் போன்றவை இறக்குமதி சரக்குகளுக்கு எதிராக பாகுபடுவது). எம்எப்என் கொள்கைகளுக்கு விதிவிலக்கானவை மேம்பாடடைந்து வரும் நாடுகளுக்கு அளிக்கும் சலுகைகள், தடையிலா வணிகம் புரிவதற்கான இடங்கள் மற்றும் சுங்க ஒன்றியங்கள். சரக்கு மன்ற அமைப்பில் 11 வகை குழுக்கள் உள்ளன, ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட பணியை செயல்படுத்துகின்றன. உலக வணிக அமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் குழுக்களில் பங்கேற்கின்றனர். நெசவுத்தொழில் கண்காணிப்புக்குழு மற்ற குழுக்களில் இருந்து வேறுபட்டதாக இருந்தாலும், அதுவும் சரக்கு மன்றத்திற்குள் அடங்கியதே. இந்த அமைப்பிற்கு அதனுடைய தனித் தலைவர் உண்டு மேலும் அது 10 உறுப்பினர்கள் கொண்டது. நெசவுத்தொழில் சார்ந்த பல குழுக்களுடன் இந்த அமைப்பிற்கு தொடர்பு உள்ளது. உலக வணிக அமைப்பிலுள்ள அறிவுசார் சொத்துக்களுக்கான தகவல்கள், செய்திகள் மற்றும் TRIPS குழுமத்தின் (TRIPS Council) அலுவலகக்குறிப்புகள், மற்றும் இத்துறையில் உலக வணிக அமைப்பு இதர சர்வதேச நிறுவனங்களுடன் மேற்கொண்ட பணிகள் பொதுக்குழுவின் அமைப்பின் வழிகாட்டுதலுடன் சேவைகள் புரிவதற்கான குழுமம் செயல் படுகிறது மேலும் அக்குழு சேவைகள் அளிப்பதற்கான வணிகத்திற்கான பொது ஒப்பந்தங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பது அதன் பொறுப்பாகும் (GATS) இந்த குழுமம் உலக வணிக அமைப்பு உறுப்பினர்கள் எல்லோருக்கும் திறந்து வைத்ததாகும், மேலும் தேவைகளுக்கேற்றபடி துணைக்குழுமங்களையும் ஏற்படுத்திக்கொள்ளலாம். சேவைக் குழுவிற்கு மூன்று துணைக்குழுக்கள் உள்ளன: நிதி சேவைகள், வீட்டுக்குரிய ஒழுங்கு முறைகள், GATS விதிமுறைகள் மற்றும் தனிப்பட்ட கடமைகள். பொதுக் குழுவில் பலவகை குழுக்கள், பணிக்குழுக்கள் மற்றும் பணி புரியும் கட்சிகள் உள்ளன. குழுக்களின் விவரம் பணிகள் செய்யும் கட்சிகள் பணிக் குழுக்கள் வணிக ஒப்பந்த உடன்பாட்டுக் குழு (TNC) தற்போது வணிக சுற்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவருகிறது. அதன் தலைவர் உலக வணிக அமைப்பின் உயரதிகாரியாகும். இக்குழு தற்போது தோகா மேம்பாட்டு சுற்றின் பேச்சுவார்த்தைகளில் சமரசம் காண முயன்று வருகிறது. உலக வணிக அமைப்பு "ஒரு நாடு, ஒரு வோட்டு" முறையில் செயல்படுகிறது, ஆனால் இது வரை வோட்டு எடுப்பதற்கான சூழ்நிலைகள் எழவில்லை. பொதுவாக கருத்து ஒருமைப்பாட்டுடன் கூடிய முடிவுகள் எடுப்பதே முறையாகும், மற்றும் ஒப்புநோக்கத்துடைய சந்தையின் அளவே அவர்களுக்கு பேரம் பேசுவதற்கான வலிமையை அளிப்பதாகும். கருத்து ஒருமைப்பாட்டுடன் கூடிய முடிவுகளால் உள்ள நன்மையானது அதன் மூலமாக மிகவும் பரவலாக பங்கேற்பவர்கள் அனைவரும் ஒப்புக்கொள்ளும் வகையிலான முடிவுகளை ஏற்பதாகும். கருத்தொருமை கொண்ட முடிவுகள் எடுப்பதில் உள்ள குறைபாடுகளில் முடிவெடுப்ப்பதற்குண்டான நீண்ட நேரம் மற்றும் பல சுற்றுகள் கொண்ட பேச்சுவார்த்தைகளாகும். இறுதி முடிவுகளுக்கான ஒப்பந்தங்களில் கருத்தொருமை பெறாத பொருட்களுக்கு தெளிவற்ற இருசொல்படும் வார்த்தைகள் பயன்பாட்டினால் விளையக்கூடிய எதிர்கால குழப்பங் களும் அடங்கும். உண்மை நிலவரம் என்ன என்றால், உலக வணிக அமைப்பு ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் அனைத்து உறுப்பினர்களின் கருத்தொருமையுடன் நடப்பதில்லை, ஆனால் நாடுகளின் சிறு சிறு குழுக்கள் நடத்தும் இயல்பான பேச்சுவார்த்தைகள் மூலமாக நடைபெறுகின்றன. இவ்வகை பேச்சுவார்த்தைகளை "பச்சை அறை" (Green Room) பேச்சுவார்த்தைகள் என அழைக்கப்படுகிறது, (ஜெனீவாவிலுள்ள உலக வணிக அமைப்பு மேலதிகாரியின் அலுவலக அறையின் வண்ணம்), அல்லது "சிறு -அமைச்சுகள்", இதர நாடுகளில் அவற்றை மேற்கொள்ளும் போது. இவ்வகை செயல்முறைகளை உலக வணிக அமைப்பின் மேம்பாடடைந்த் நாடுகளின் உறுப்பினர்கள் மிகவும் விமரிசனம் செய்துள்ளனர், ஏன் என்றால் அவர்கள் இந்த பேச்சுவார்த்தைகளில் இருந்து விலக்கி வைத்திருப்பதாகும். ரிச்சர்ட் ஹரோல்ட் ச்டீன்பேர்க் (2002) கூறுவது என்னவென்றால், உலக வணிக அமைப்பின் கருத்தொருமை கொண்ட ஆட்சி மாதிரி சட்டத்திற்குட்பட்ட துவக்க பேச்சுவார்த்தைகளுக்கு வழி வகுத்தாலும், இறுதி சுற்றுகளில் அவை ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளின் சக்தி வாய்ந்த பேரங்கள் காரணம் அவை அந்நாடுகளுக்கு சாதகமாக அமைகின்றன, அதனால் அது சம நிலையிலான மேம்பாடாக கருத இயலாது. 1994 ஆம் ஆண்டில், உலக வணிக அமைப்பு உறுப்பினர்கள் மர்ரகேஷ் ஒப்பந்தத்தில் கையிட்ட "இறுதி சட்டம்" என்ற தலைப்பின் கீழ் வழங்கிய தகராறுகளுக்கு தீர்வு காணல் (DSU) விதிமுறைகள் மற்றும் செயல் முறைகளை பற்றி நன்கு புரிந்து கொண்டதாக தெரிவித்தனர் மற்றும் அதை செயல்படுத்தவும் ஒப்புக்கொண்டனர். தகராறுகளுக்கு தீர்வு காண்பது என்பதை உலக வணிக அமைப்பின் பல வகை வணிகமுறைகளை தாங்கிப்பிடிக்கும் நடுவிலமைந்த தூணாக கருதுகின்றனர், மற்றும் "உலக பொருளாதார வளர்ச்சிக்கான அவர்களுடைய தனி பங்களிப்பாக அதை போற்றுகின்றனர்." மேலும், உலக வணிக அமைப்பு உறுப்பினர்கள், அவர்களுடைய கூட்டு சார்ந்த உறுப்பினர்களில் யாரேனும் விதிமுறைகளை மீறியதாக நினைத்தால், அவர்களே நேரிடையாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், வணிக அமைப்பின் பலவகை தகராறுகளை தீர்வு காணும் முறையை பின்பற்றி அனுசரிப்பதாக வாக்களித்துள்ளனர். உலக வணிக அமைப்பின் தகராறுகளை தீர்க்கும் வழிமுறைகளை செயல்படுத்த, அதற்கான தனி DSB குழுக்கள், மேல்முறையீட்டு ஆணைக்குழு, உலக வணிக அமைப்பு செயலகம், நடுவர்கள், பிறர் சார்பற்ற வல்லுனர்கள் மற்றும் பல தனி நிறுவனங்கள் போன்றவை தேவைப்படும். நடைமுறையில் உலக வணிக அமைப்பின் உறுப்பினராக ஆவதென்பது ஒவ்வொரு நாட்டிற்கும் தனிப்பட்டதாகும், மேலும் அவ்வமைப்புடன் இணைவதற்கு நாட்டின் பொருளாதார மேம்பட்டு நிலை மற்றும் தற்போதைய வணிக செயல்பாட்டின் நிலைமையை பொறுத்திருக்கிறது. இந்த நடவடிக்கை சுமார் ஐந்து ஆண்டுகள் எடுக்கலாம், சராசரியாக, ஆனால் அதற்கும் மேலும் ஆகலாம், அந்நாடு முழுதுமாக ஒத்திசைவு செய்யவில்லை என்றால் மற்றும் அரசியல் காரணங்கள் இடைஞ்சலாக இருந்தால். உலக வணிக அமைப்பின் தனிப்பட்ட செயல்முறையாக, இணைவதற்கு ஆர்வம் காட்டும் பிரிவினருக்கிடையே கருத்தொருமை இருந்தால் மட்டுமே அதற்கான ஒப்புதல் வழங்கப்படும். உலக வணிக அமைப்புடன் இணைவதற்கு விருப்பம் கொண்ட நாடுகள் முதலில் அதற்கான விண்ணப்பத்தை பொதுக்குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும், உலக வணிக அமைப்பின் ஒப்பந்தங்கள் சார்ந்த மற்றும் தொடர்புள்ள அந்நாட்டின் அனைத்து வணிக விவகாரங்களையும் மற்றும் பொருளாதார கொள்கைகளைப் பற்றியும் குறிப்பிட்டு விளக்க வேண்டும். உலக வணிக அமைப்பிறகு அளிக்கும் விண்ணப்பம் ஒரு நிகழ்ச்சிப்பதிவுக் குறிப்பாக இருக்க வேண்டும், மேலும் அதனை அதில் ஈடுபாடுள்ள அனைத்து உலக வணிக அமைப்பு அங்கத்தினரும் கொண்ட செயற்குழு ஆராய்ந்து பார்க்கலாம். பின்னணி தகவல்களனைத்தையும் பெற்றுக்கொண்ட பிறகு, செயற்குழுவானது விண்ணப்பத்தில் அளித்த தகவல் மற்றும் உலக வணிக அமைப்பு விதிமுறைகளுக்கிடையே விளங்கும் வேறுபாடுகள் மீதுகவனம் செலுத்தும், மேலும் விண்ணப்பதாரரின் சர்வதேச மற்றும் உள்நாட்டு வணிக கொள்கைகள் மற்றும் சட்டங்களை கூர்ந்து ஆராயும். இந்த செயற்குழு, உலக வணிக அமைப்புடன் விண்ணப்பித்த நாடு இணைவதற்கான நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளை பரிந்துரைக்கும், மேலும் உலக வணிக அமைப்பின் விதிமுறைகளுடன் ஒத்திசைந்து செயல்படுவதற்கான கால அவகாசமும் நல்கும். இணக்கத்திற்கான இறுதி கட்டங்களில் விண்ணப்பமளித்த நாடு மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கிடையே இருதரப்பு விவாதங்கள் மேற்கொள்ளப்படும் மற்றும் அதில் சலுகைகள் மற்றும் கட்டண அளவிற்கான விதிமுறைகள் மற்றும் சரக்குகள் மற்றும் சேவைகள் அளிப்பதற்கான சந்தையுடன் இணைவதற்கான கட்டுப்பாடுகள் குறித்து விளக்கப்படும். இரு தரப்பினரிடையே மட்டும் பேச்சுவார்த்தைகள் நடந்திருந்தாலும், புதிய அங்கத்தினரின் கடமைகள் பொதுவான பாகுபாட்டின்மை விதிமுறைகளின் படி, ஒரேபோல மற்றும் சமமாக மற்ற இதர உலக வணிக அமைப்பு உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இரு தரப்பினர்களுக்கிடையே ஆன பேச்சுவார்த்தைகள் முடிவுற்றதும், செயற்குழு பொதுக்குழுவிற்கு அல்லது அலுவலகப்பணித் தொகுதி கூட்டத்திற்கு ஒரு இணைப்பிற்கான தொகுப்பினை அளிக்கும், அதில் செயற்குழுவுடன் நடந்த அனைத்து கூட்டங்களைப் பற்றிய தொகுப்பு, இணைவதற்கான நெறிமுறை (அங்கத்தினருக்கான உறுப்பாண்மை ஒப்பந்த படிவத்தின் வடிவம்), மற்றும் பட்டியல்கள் ("கால அட்டவணை") உறுப்பினராகப்போகும் நாட்டின் கடமைகள். ஒரு முறை பொதுக்குழு அல்லது அலுவலகப்பணித் தொகுதி கூட்டம் இணைவதற்கான நிபந்தனைகளை ஒப்புக்கொண்டு விட்டால், விண்ணப்பித்த நாடு அதனுடைய பாராளுமன்றத்தில் இணைப்பிற்கான தொகுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டும், அதற்குப்பிறகே அந்நாடு உறுப்பினராக சேர இயலும். உலக வணிக அமைப்பு 153 உறுப்பினர்களை கொண்டது. (உருகுவே சுற்றில் கலந்து கொண்ட 123 நாடுகளும் நிறுவிய நாள் அன்றே உறுப்பினராவதற்கு கையொப்பமிட்டனர், பின்னர் வந்தவர்கள் எல்லோரும் பிறகே உறுப்பினர்களாயினர்). ஐரோப்பிய ஒன்றியத்தை சார்ந்த 27 நாடுகளும் ஐரோப்பிய சமுதாய பிரதிநிதிகள் என அறியப்பட்டனர். உலக வணிக அமைப்பு உறுப்பினர்கள் ஒரு இறையாண்மை வாய்ந்த நாட்டின் அங்கத்தினர்களாக இருக்கவேண்டும் என்பதில்லை. அதற்கு பதிலாக, அவை வெளிநாடுகளுடன் வர்த்தக உறவுகள் புரியும் மற்றும் சுங்கவரி வசூலிக்கும் ஒரு முழு சுயாட்சி கொண்ட தனி இடமாகவும் இருக்கலாம். இப்படித்தான் ஹாங் காங் (அதாவது "ஹாங் காங், சீனா" 1997) ஜிஏடிடி (GATT) அமைப்பில் ஒரு ஒப்பந்த நாடாக சேர்ந்தது, மற்றும் ரிபப்ளிக் ஒப் சீனா (ROC) (பொதுவாக தைவான் என அறியப்படுவது, அதன் சுயாட்சி நிலவரத்தை சீனா ஒத்துக்கொண்டதில்லை) உலக வணிக அமைப்பில் 2002 ஆம் ஆண்டில் "தனி சுங்கவரி விதிக்கும் தைவான், பெங்கு, கின்மேன் மற்றும் மட்சு நாடுகள் கூடிய" (சைனீஸ் தைபெய்) யாக அங்கம் வகிக்கின்றது. உறுப்பினர்கள் அல்லாத பலர் (30) பார்வையாளர்களாக உலக வணிக அமைப்பில் உள்ளனர் மேலும் அவர்களையும் அங்கத்தினர் ஆக்கும் நடவடிக்கைகள் தற்போது நடந்துவருகிறது. ஈரான், ஈராக், மற்றும் ரஷ்ய நாடுகள் பார்வையாளர்களாகவே உள்ளனர் மேலும் அவர்கள் இன்னும் அங்கத்தினர்களாகவில்லை. ஹோலி சி என்ற இடத்தை தவிர, இதர நாடுகள் பார்வையாளர்கள் ஆனதிலிருந்து ஐந்து வருடங்களுக்குள் பேச்சுவார்த்தைகள் புரிந்து இணக்கம் செய்துகொள்ள வேண்டும். சில சர்வதேச அரசுகளுக்கிடையேயான நிறுவனங்களும் உலக வணிக அமைப்பின் பார்வையாளர்களாக அனுமதி பெற்றுள்ளனர். இது வரை 14 நாடுகள் மற்றும் 2 வட்டாரங்கள் உலக வணிக அமைப்புடன் அதிகாரபூர்வமான தொடர்புகளை வைத்துக்கொள்ளவில்லை. உலக வணிக அமைப்பு தற்போது சுமார் 60 வேறுபட்ட ஒப்பந்தங்களை மேற்பார்வையிட்டு வருகிறது, ஒவ்வொன்றும் சர்வதேச சட்ட உரை நிலை கொண்டவையாகும். இணக்கத்திற்கான ஒப்புதல் கிடைத்தவுடன் உறுப்பினர் நாடுகள் உலக வணிக அமைப்பின் அனைத்து ஒப்பந்தங்களிலும் கையொப்பமிட்டு அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். சில முக்கியமான ஒப்பந்தங்களைப்பற்றிய சிறிய குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வேளாண் தொழிலுக்கான ஒப்பந்தம் (AoA) 1995 ஆம் ஆண்டில் உலக வணிக அமைப்பு தொடக்கத்திலேயே செயல்படுத்தியது. இந்த ஒப்பந்தம் மூன்று மையக்கருத்துகளை கொண்டது, அல்லது "தூண்கள்": உள்நாட்டு ஆதாரம், சந்தையுடன் தொடர்பு மற்றும் ஏற்றுமதிக்கான மானியங்கள். ஜிஏடிடி (GATT) அதாவது சரக்குகளில் வணிகம் செய்வதற்காக உருவாக்கிய கட்டணம் மற்றும் வணிக (முறைகளுக்கான) பொது ஒப்பந்தத்தை போலவே ஒரு உடன்பாட்டை சேவைகள் புரியும் தொழில்துறைக்கும் நீட்டுவதற்காகவே, சேவைகள் புரியும் வணிகத்திற்கான பொது ஒப்பந்த முறை (GATS) உருவானது. இந்த ஒப்பந்தம் ஜனவரி 1995 முதல் அமுலில் உள்ளது. அறிவுசார் சொத்துரிமைக்கான வணிகம் சார்ந்த நோக்கங்களுக்கான ஒப்பந்தம் (TRIPs) பலவகை அறிவுசார் சொத்துரிமைக்கான (IP) குறைந்த அளிவிலான தர கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதைப்பற்றிய பேர நடவடிக்கைகள் 1994 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜிஏடிடி (GATT) பேச்சுவார்த்தைகளுடன் உருகுவே சுற்றின் இறுதியில் மேற்கொண்டது. துப்புரவு சார்ந்த மற்றும் தாவர-துப்புரவு சார்ந்த ஒப்பந்தத்தை பயன் படுத்துவது குறித்தான - SPS ஒப்பந்தம் எனவும் அறியப்படுவது - உருகுவே சுற்றில் ஜிஏடிடி யின் பொது ஒப்பந்தத்தை பற்றிய பேரப் பேச்சுவார்த்தைகளின் போது நிகழ்ந்தது, மேலும் 1995 ஆம் ஆண்டில் உலக வணிக அமைப்பு நிறுவியதில் இருந்து செயலாக்கத்தில் உள்ளது. SPS ஒப்பந்தத்தின் கீழ், உலக வணிக அமைப்பு உணவுப் பொருட்களின் பாதுகாப்புடன் கூடிய பயன்பாட்டிற்கான தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கான எல்லைகளை தெளிவு செய்யும் கொள்கைகளை வெளியிட்டது (நுண்மை தீங்குயிரிகள், உயிர்கொல்லிகள், சோதனை செய்தல் மற்றும் விவரச்சீட்டுகளை பொருந்துதல்) மேலும் விலங்குகள் மற்றும் தாவர உடல்நலம் (இறக்குமதி செய்த பூச்சிகள் மற்றும் வியாதிகள்). வணிகத்தில் தொழில்நுட்ப தடைகள் குறித்த ஒப்பந்தம் (TBT) என்பது உலக வணிக அமைப்பின் ஒரு சர்வதேச உடன்பாடாகும். உருகுவே சுற்றில் ஜிஏடிடி யின் பொது ஒப்பந்தத்தை பற்றிய பேரப்பேச்சுவார்த்தைகளின் போது அது நிகழ்ந்தது, மேலும் 1994 ஆம் ஆண்டிறுதியில் உலக வணிக அமைப்பு நிறுவிய போதிலிருந்து செயலாக்கத்தில் இருந்து வருகிறது. தொழில்நுட்ப பேச்சுவார்த்தைகள், தரக்கட்டுப்பாடுகள் மற்றும் சோதனை மேற்கொள்வது மற்றும் சான்றிதழ்கள் வழங்குவது போன்ற காரணங்களால் வணிகத்திற்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் நோக்குடன் இவை செயல்படுகின்றன". உலக வணிக அமைப்பின் குறிக்கோளானது தடைகள் இல்லா வணிகத்தை மேம்படுத்தி பொருளாதார வளர்ச்சியை தூண்டுவதேயாகும். தடையிலா வணிகத்தைப்பற்றி திறனாய்வாளர்கள் கூறுவது என்னவென்றால் அதனால் பணக்கார மற்றும் ஏழை நாடுகளுக்கிடையே வருவாய் அளவுகள் ஒருங்குவதற்கு பதிலாக திசை விரிந்து செல்வதே (அதாவது பணக்காரன் மேலும் பணக்காரனாவான் ஆனால் ஏழை இன்னும் ஏழ்மையில் தவிப்பான்). மார்டின் க்ஹோர், தேர்ட் வோர்ல்ட் நெட்வர்க் என்ற நிறுவனத்தின் இயக்குனர், சொல்வது என்னவென்றால் உலக வணிக அமைப்பு உலகப்போருளாதாரத்தை பாகுபாடில்லாமல் நிர்வாகம் புரிய தவறிவிட்டது என்றும் அதன் செயல்பாடுகள் பணக்கார நாடுகள் மற்றும் பல்நாட்டு நிறுவனங்களுக்கு சாதகமாக வளைந்து கொடுப்பதாகவும், மேலும் அதனால் சிறிய நாடுகளிடம் பேரம் பேசுவதற்கான ஆற்றல் குறைவாக உள்ளதனால் அவர்கள் அவதிக்கு உள்ளாகிறார்கள் என்றும் கூறுகிறார். உருகுவே சுற்றில் உலக வணிக அமைப்புடன் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் காரணமாக மேம்பாடடையும் நாடுகளுக்கு ஒரு பயனும் இல்லை என்றும், அதற்கான காரணங்களாக, தொழில்களுக்கான சந்தை நிலவரத்தில் முன்னேற்றம் காணவில்லை என்றும்; நெசவுத்தொழில்களுக்கு வழங்கிய பத்தியமுறையை கொஞ்சம் கொஞ்சமாக பின்வாங்கியதால் அவர்களுக்கு மெச்சும் படியாக எதுவும் நடக்கவில்லை என்றும்; கட்டணமில்லா தடைகள் அதாவது குவிப்பதற்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன என்றும்; மற்றும் உள்நாட்டு ஆதாரம் மற்றும் வேளாண் ஏற்றுமதிக்கான மானியங்கள் பணக்கார நாடுகளில் இப்போதும் மிகையாக உள்ளதாகவும் கூறுகிறார். இருந்தாலும் ஜகதீஷ் பகவதி உறுதியாக கூறுவதென்ன வென்றால், ஏழையர் நாடுகளில் தயாரிப்பாளர்களுக்கு கட்டணப் பாதுகாப்பு மிகையாக உள்ளதாகவும், மேலும் அந்நாடுகளும் பணக்கார நாடுகளை விட அதிகமாக குவித்தல் அல்லது கொட்டிவைத்தலுக்கு எதிராக நிறைய எண்களில் தாக்கலிடுவதாகவும் கூறுகிறார். இதர திறனாய்வாளர்கள் தொழிலாளர் உறவுகள் மற்றும் சூழல் சார்ந்த பிரச்சினைகளை மறந்தேபோய்விட்டனர் என்று சொல்கிறார்கள். ஸ்டீவ் சார்நோவித்ஸ், (Steve Charnovitz) குளோபல் என்வைரன்மென்ட் அண்ட் ட்ரேட் ஸ்டடி (Global Environment and Trade Study)(GETS) என்ற நிறுவனத்தின் இயக்குனர், உலக வணிக அமைப்பு "வணிகம் மற்றும் தொழிலாளர்கள் மற்றும் சூழல்களுக்கு இடையிலேயான கவலைகளுக்கு தீர்வு காணவேண்டும்" என்று நினைக்கிறார். மேலும், தொழிற் சங்கங்கள் மேம்பட்ட நாடுகளின் தொழில் உரிமைகள் சார்ந்த குறிப்புகளை ஏளனம் செய்கிறார், மேலும் அவர் கூறுவது என்ன என்றால், உலக வணிக அமைப்பு உலகமயமாக்கும் கொள்கையை எவ்வளவுக்கு எவ்வளவு முன்னுக்கு கொண்டு போகின்றதோ, அவ்வளவுக்கு அவ்வளவு சுற்று சூழலும் தொழிலாளர் உரிமைகளும் பின்னுக்கு தங்கி விடும் என்று. இன்னொரு பக்கம், க்ஹோர் பதிலளிப்பது என்ன என்றால், "சூழல் மற்றும் தொழிற்சங்கங்கள் உலக வணிக அமைப்பு முறைகளில் நுழைந்தால், [...] கொள்கையளவில் சமூக மற்றும் பண்பாடு சார்ந்த விவகாரங்களுக்கும் இடம் அளிக்கலாமே" பகவதியும் "பணக்கார நாடுகளின் புறக்கூட்டங்கள் அவர்களுக்கு சம்பந்தமில்லாத நிகழ்ச்சிநிரல்களை வணிக உடன்பாடுகளில் திணிப்பது அட்டூழியமாகும்" என்று விமர்சிக்கிறார். அதனால், கொலம்பியா பல்கலைக்கழகத்தை சார்ந்த பகவதி மற்றும் அரவிந்த் பணகரியா ஆகிய இருவரும், TRIPs என்ற செயல்பாட்டை உலக வணிக அமைப்பில் அறிமுகப்படுத்தியதை குறை கூறுகிறார்கள், இது போன்ற வணிகம் சாரா நிகழ்ச்சி நிரல்கள் ஒரு நாள் கட்டுக்கடங்காமல் போகலாம் மற்றும் அமைப்பை செயலிழக்க செய்யலாம் என்று ஆதங்கம் கொள்கின்றனர். இதர திறனாய்வாளர்கள் உலக வணிக அமைப்பின் முடிவுகள் எடுக்கும் முறையானது சிக்கலானதாகவும், பலனில்லாததாகவும், நிறுவனத்துடன் தொடர்பில்லாதது போலவும், மற்றும் உள்ளடங்காமல் இருப்பதாகவும், மேலும் அவர்கள் ஒரு சிறிய, இயல்பான வழிநடத்தி செல்லும் செயற்குழுவினை (ஒரு "ஆலோசனை மன்றம்") அமைத்து, அதன் மூலமாக உறுப்பினர் நாடுகளிடையே வணிக சம்பந்தப்பட்ட விவகாரங்களுக்கு சுமுகமாக கருத்தொரிமை ஏற்றெடுக்கும் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைக்கலாம் என அறிவுறுத்துகின்றனர். தேர்ட் வேர்ல்ட் நெட்வொர்க் உலக வணிக அமைப்பு "மிகவும் ஒளிவு மறைவுடன் கூடிய சர்வதேச நிறுவனமாகும்" என அழைத்துள்ளது, ஏன் என்றால் "உலக வணிக அமைப்பு செயல்பாட்டு முறைகளில் பெரும்பான்மையினராக இருக்கும் மேம்பாடடைந்துவரும் நாடுகளுக்கு உண்மையாக தங்கள் அதிகாரத்தை பயன்படுத்த ஒரு வழிமுறையும் இல்லை"; நெட்வொர்க் மேலும் அழுத்திக் கூறுகிறது "குடியியல் சமூக குழுக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அவர்களுடைய எண்ணங்களை வெளிப்படுத்த வாய்ப்புகள் அளிக்க வேண்டும் என்றும் மற்றும் அவற்றின் அடிப்படையில் கொள்கைகள் மற்றும் முடிவுகள் எடுக்கப் படவேண்டும் என வலியுறுத்துகிறது." சில அரசு சாரா நிறுவனங்கள், வேர்ல்ட் பெதரலிஸ்ட் மூவ்மென்ட், உலக வணிக அமைப்பு மக்களாட்சியில் உள்ளது போல ஒரு பாராளுமன்றத்தை அமைத்து செயல் புரிவது நன்றாக இருக்கும் என்று வாதாடுகிறது, ஆனால் இதற்கு இதர திறனாய்வாளர்கள் செவி சாய்க்கவில்லை. சில விடுதலை விரும்பிகள் மற்றும் சிற்றரசுகள், லுட்விக் வான் மிசெஸ் இன்ஸ்டிட்யூட் போன்ற ஆலோசகர்கள், உலக வணிக அமைப்பிணை எதிர்க்கின்றனர், அது ஒரு அதிகாரச் செருக்குள்ள மற்றும் முதலீட்டிற்கு எதிரான நிறுவனமாகும் என்றும், அது தடையில்லா வணிகத்திற்கு பதிலாக அரசியல் குறுக்கீடுகளுக்கு பெயர் போவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். லுட்விக் வான் மிசெஸ் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தின் தலைவர், லேவேல்லின் எச் ரோக்வேல் சிறியவர், கூறுவது ". . . உலக வணிக அமைப்பு என்ன சொல்கிறது என்றால் அமேரிக்கா அந்நாட்டு ஏற்றுமதி செய்வோரை வெளி நாடுகளில் கிளை அலுவலகங்களை அமைப்பதை தடுக்க வேண்டும், அப்படி அவர்கள் செய்வதால் அவர்கள் அரசிற்கு கட்டவேண்டிய வருமான வரியில் 30% அளவிற்கு சேமித்து விதி விலக்கு பெறுகிறார்கள். " "இப்போது அமெரிக்க வரிவிகிதத்தை ஏற்றவேண்டும் மற்றும் இதர குறைபாடுகளை நீக்க வேண்டும் இல்லா விட்டால் பெரிய அளவில் மேலும் புதிதாக மானியங்களை அளிக்கும் நிலைமை ஏற்பட்டு அது நமது நாட்டின் ஏறுமதித்துறையை பெரிதும் பாதித்துவிடும். " "[...] " "சமீப காலமாக வெளிநாட்டினர் நமது நாட்டின் வளமை மற்றும் நாகரீகத்தை வெறுப்பவர்களைப்பற்றி நிறைய பேச்சுக்கள் அடிபடுகின்றன, மேலும் அவர்கள் பழிக்குப் பழியாக ஏதாவது ஒரு வழியில் நமக்கு பாதகம் விளைவிக்க பார்க்கிறார்கள். " "சொல்லப்போனால், இங்கே இன்னொரு வழங்குமுறை சுட்டிக்காட்டத்தக்கது, இவற்றில் இஸ்லாமிய தீவிரவாதிகள் ஈடுபடவில்லை; அவர்கள் தூதர்கள் மற்றும் ராஜதந்திரிகள் ஆவார், மற்றும் அவர்கள் சந்தேகப்படும் பட்டியலில் காணப்படும் பேர்வழிகள் அல்ல." கிரேக்க எழுத்துக்கள் கிரேக்க எழுத்துக்கள் என்பன கிரேக்க மொழியை எழுதப் பயன்பட்ட 24 எழுத்துக்களைக் கொண்ட ஒரு தொகுதி ஆகும். இது கிமு 9 ஆம் அல்லது 8 ஆம் நூற்றாண்டிலிருந்து பயன்படுத்தப்பட்டது. ஒவ்வொரு உயிரெழுத்துக்கும், மெய்யெழுத்துக்கும் தனித்தனி எழுத்துக்களைப் பயன்படுத்தும் எழுத்து முறை என்ற அளவில் இதுவே உலகின் மிகப் பழமையான எழுத்து முறையாகும். இது இன்றுவரை பயன்பாட்டில் உள்ளது. கிமு இரண்டாம் நூற்றாண்டில் இருந்து கிரேக்க எண்களைக் குறிக்கவும் எழுத்துக்கள் பயன்பட்டன. கிரேக்க எழுத்துக்கள் கி.மு ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலோ அல்லது கி.மு எட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலோ வெளிவந்தன. இக் கிரேக்க எழுத்துக்கள் போனீசியன் எழுத்துக்களிலிருந்து வந்தவை எனக் கூறப்படுகின்றது. கொள்கை கொள்கை என்பது ஒரு இலக்கை அடைவதற்குப் பின்பற்றப்படும் வழிமுறையையும் ஒழுக்க விதிகளையும் குறிக்கும். இந்தச் சொல் அரசு, நிறுவனங்கள், குழுக்கள், தனியாள்கள் என வெவ்வேறு நிலைகளில் பயன்படுகிறது. தமிழ்நாடு அரசின் உயிர்த்தொழினுட்ப கொள்கை, தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கைகள், காந்தியின் அகிம்சைக் கொள்கை ஆகியவை கொள்கைகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும். ஆங்கிலத்தில் Policy, Principle ஆகிய இரு சொற்களுக்கும் இணையாகத் தமிழில் கொள்கையைப் பயன்படுத்தப்படுவதுண்டு. சென்ஷோ 7 சென்ஷோ 7 ("Shenzhou 7") என்பது சீனாவின் விண்வெளிவீரர்களை ஏற்றிச் சென்ற மூன்றாவது விண்கலம் ஆகும். சீன விண்வெளி வீரர் விண்கலத்தை விட்டு விண்வெளியில் நடப்பதன் மூலம், விண்வெளியில் செயல்படுவது பற்றிய தொழில் நுட்பத்தைக் கைப்பற்றுவது, சென்ஷோ 7 விண்கலத்தின் முக்கிய கடமையாகும். தவிர, ஒரு செயற்கைக்கோளும் விண்கலத்துடன் விண்ணில் பறக்கும். செயற்கைக்கோள் மூலம் தரைக்கு தரவுகள் அனுப்பப்படும். திட்டப்படி, சென் ஷோ 7 விண்கலம் பூமிக்கு மேலே சுமார் 343 கிலோமீட்டர் உயரத்திலான சுற்றுவட்டப் பாதையில் பறக்கும். சீன விண்வெளிப்பயணத் திட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கையாக இவ்விண்கலம் ஏவப்பட்டது. மூன்று விண்வெளி வீரர்களுடன் இது 2008, செப்டம்பர் 25 இல் ஊள்ளூர் நேரப்படி இரவு 9:10 மணிக்கு வடமேற்கு சீனாவிலுள்ள சியு சுவான் செயற்கைக்கோள் ஏவு மையத்திலிருந்து செலுத்தப்பட்டது.. திட்டப்படி, சென்ஷோ 7 விண்வெளி வீரரான "சாய் சிகாங்" செப்டம்பர் 27 ஆம் நாள் பிற்பகல் 4.30 மணியளவில், விண்கலத்திலிருந்து வெளியே சென்று விண்வெளியில் ஏறக்குறைய 20 நிமிடத்தில் நடக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவம் மருத்துவம் என்பது நோய்களைக் குணப்படுத்துவதற்கான கலையும், அறிவியலும் ஆகும். இதனை நோய்களைக் கண்டுபிடிக்கவும், அவற்றை குணப்படுத்தவும், அவை வராமல் தடுக்கவும் உதவும் அறிவியல் அல்லது செயல்பாடு எனலாம். இவ்வகைச் செயல்பாடுகள் மூலம் மனிதர்களின் உடல் நலத்தைப் பேணுதல், மீள்வித்தல் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்ட பல்வேறு உடல்நலம் பேணற் செயல்முறைகளை உள்ளடக்கும். தற்கால மருத்துவம், காயங்களையும் நோய்களையும் கண்டறிந்து குணப்படுத்துவதற்கு, உடல்நல அறிவியல், உயிர்மருத்துவ ஆய்வுகள், மருத்துவத் தொழில்நுட்பம் போன்றவற்றைப் பயன்படுத்துகிறது. இவ்வாறான குணப்படுத்தல் பெரும்பாலும், மருந்துகள், அறுவை மருத்துவம் மற்றும் பிற சிகிச்சைகள் மூலம் செய்யப்படுகிறது. தற்கால மருத்துவத்துக்கு மருத்துவத் தொழில்நுட்பமும், நிபுணத்துவமும் இன்றியமையாதவை எனினும், நோயாளிகளின் உண்மையான துன்பத்தைக் குறைப்பதற்கு, மனித உணர்வுகளைப் புரிந்து கொள்ளலும், கருணையும் தொடர்ந்தும் தேவைகளாகவே உள்ளன. "முதன்மைக் கட்டுரை: மருத்துவத்துறையின் வரலாறு" வரலாற்றுக்கு முந்திய கால மருத்துவத்தில் தாவரங்கள், விலங்கு உறுப்புக்கள், கனிமங்கள் அடங்கியிருந்தன. பல வேளைகளில் இவை சடங்குகளோடு மந்திர சக்தி வாய்ந்த பொருள்களாகப் பயன்படுத்தப்பட்டன. பெயர் பெற்ற ஆன்மீக முறைகளில், ஆன்மவாதம் (animism), ஆன்மீகவாதம் (spiritualism), ஆவித்தொடர்பு (shamanism), குறிசொல்லல் (divination) என்பவை அடங்கும். மருத்துவ மானிடவியல் பல்வேறு வரலாற்றுக்கு முந்திய மருத்துவ முறைகள் குறித்தும் அவற்றுக்குச் சமூகத்துடன் இருந்த தொடர்புகள் பற்றியும் ஆய்வு செய்கிறது. மருத்துவம் குறித்த பழைய பதிவுகள், இந்தியத் துணைக்கண்டத்தின் சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், பண்டைய எகிப்திய மருத்துவம், மரபுவழிச் சீன மருத்துவம், பண்டைக் கிரேக்க மருத்துவம், பண்டைய அமெரிக்க குடிகளால் (மாயன்கள், செவ்விந்தியர்கள்) வழங்கிய மருத்துவ முறைகள், என்பவை தொடர்பில் கிடைத்துள்ளன. பழங்காலக் கிரேக்க மருத்துவர்களான இப்போக்கிரட்டீசு, காலென் ஆகியோர் பிற்கால மருத்துவம் பகுத்தறிவு சார்ந்த முறையில் வளர்வதற்கு அடித்தளமிட்டனர். ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், இஸ்லாமிய மருத்துவர்கள் இத்துறையில் முக்கியமான கண்டுபிடிப்புக்களை நிகழ்த்தினர். ஹிபோக்கிரட்டீசினதும், காலெனினதும் நூல்களின் அரபி மொழி மொழிபெயர்ப்புக்கள் அவர்களுக்கு உதவியாக அமைந்தன. தற்கால மருத்துவத்தின் தந்தை எனப்படும் பொலிமத் அவிசென்னா, அறுவை மருத்துவத்தின் தந்தை எனப்படும் அபுல்காசிஸ், சோதனை அறுவை மருத்துவத்தின் தந்தை எனப்படும் அவென் சோவார், சுற்றோட்ட உடற்றொழிலியலின் தந்தை என வழங்கப்படும் இபின் அல் நாபிஸ், அவெரோஸ் என்போர் இஸ்லாமிய மருத்துவத்தின் முன்னோடிகள் ஆவர். குழந்தை மருத்துவத்தின் தந்தை எனப்படும் ரேசஸ் என்பார், மேல் நாட்டு மத்தியகால மருத்துவத்தில் செல்வாக்குடன் விளங்கிய உடல்நீர்மவியம் (humorism) என்னும் கிரேக்க மருத்துவக் கோட்பாட்டை முதன் முதலில் பிழை எனக் காட்டினார். அறிவியல் மருத்துவத்திற்கு முந்தைய காலத்தில் பயன்படுத்திய முறைகள் தற்போதும் அறிவியல் மருத்துவத்துடன் சேர்த்தோ, அல்லது அவற்றுக்கு மாற்றீடாகவோ பயன்படுத்தப்படுகின்றன. அவை பாரம்பரிய அல்லது மரபுவழி மருத்துவம் என்றோ, மாற்று மருத்துவம் என்றோ அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக அக்கு பங்சர் எனும் குத்தூசி மருத்துவத்திற்கான வினைத்திறன் நிலையற்றதாகவும், ஒவ்வாத தன்மை கொண்டும் காணப்படுகின்றது. ஆனால் தகுதியுள்ள, பயிற்சிபெற்ற ஒருவரால் செய்யப்படும்போது ஆபத்தற்றதாக இருக்கிறது. ஆனால் இத்தகைய மருத்துவ முறைகள் பாதுகாப்பு, கிடைக்கக்கூடிய எதிர்வினைகள் என்ற எல்லையைத் தாண்டும்போது, மோசடி மருத்துவம் எனப்படுகிறது. மருத்துவ நெறிமுறைகள் என்பது மருத்துவ பயிற்சியை மேற்கொள்ளும்போது மேற்கொள்ளவேண்டிய நெறிமுறைகள் ஆகும்.இதில் வரலாறு, தத்துவம், இறையியல், மற்றும் சமூகவியல் சார்ந்த மருத்துவ கல்வியியல் துறை சார்ந்த கொள்கைகளை உள்ளடக்கியது.பொதுவான மருத்துவ நெறிமுறைகள் ஆறு ஆகும்.அவை: மருத்துவ கல்வி மற்றும் பயிற்சி உலகெங்கிலும் வேறுபடுகிறது. இது பொதுவாக ஒரு பல்கலைக்கழக மருத்துவ பள்ளியில் கற்பிக்கபடுகிறது. இதைத் தொடர்ந்து முதுகலை தொழில் பயிற்சியாக மருத்துவ கல்வி கற்பிக்கபடுகிறது. கனடா மற்றும் ஐக்கிய அமெரிக்காவில் முதுகலை மருத்துவ பட்டம், பெரும்பாலும் Doctor of Medicine சுருக்கமாக MD(எம்.டி) எனப்படும். மருத்துவ தொழில்நுட்பம் ஒரு விரைவான விகிதத்தில் வளர்வதற்கு ஏற்ப தொடர்ந்து மருத்துவ கல்வியில் பல திருத்தங்கள் செய்யப்பட்டுவருகின்றன. மேலும் மருத்துவர்கள் தங்கள் மருத்துவ அறிவை மேம்படுத்த மருத்துவப் பத்திரிகைகள், கருத்தரங்குகள், மாநாடுகள் மற்றும் தவிர மற்றவர்களிடம் இணையவழிக் கல்வி மூலம் வளர்த்துக்கொள்கின்றனர். மருத்துவ பயிற்சியாளர்களைத் தவிர குறிப்பிட்ட துறையில் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் இணைந்து சிறந்த மருத்துவ வசதியை தருகின்றனர். பல துறைகள் மருத்துவ துறையில் இருந்தாலும் பன்முறை மருத்துவமும் ஒரு தனித் துறையாக கருதப்படுகிறது. மருத்துவத்தில் உள்ள முக்கிய உட்பிரிவுகள் அடிப்படை அறிவியல் பிரிவுகள் மேலும் நுண்ணிய முறையில் நோய்க்காரணிகளை ஆய்வு செய்யவும், நோயினைக் குணப்படுத்தவும் உதவுகின்றன. நாளும் மாறிவரும் மருந்துகளின் எதிர்ப்புத்திறன், புதிய ஆய்வுகளின் இற்றைப்படுத்தல் சிறப்பு மருத்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. அடிப்படை மருத்துவ கல்விக்கு பிறகு மேற்படிப்பாக சிறப்பு மருத்துவம் பயிற்சி மருத்துவர்களால் பயிலப்படுகிறது. பொதுநல மருத்துவமல்லாது, சிறப்பு மருத்துவம் & அறுவை சிகிச்சை சார்ந்த மருத்துவப்பிரிவுகளுள்ளன. இச்சிறப்பு மருத்துவ வகைகளை பயிற்சி மருத்துவர்கள் இன்னும் ஆழமாகக் கற்க வேண்டியுள்ளது. அறுவை சிகிச்சையானது சிறப்பு சிகிச்சை என்று அளக்கப்படுகிறது. மேலும் அறுவை சிகிச்சை தேவை என்ற போது பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. அறுவை சிகிச்சை தேவையா, இல்லையா என்பதன் முக்கியத்துவத்தை மருத்துவரே முடிவு செய்ய வேண்டும். அறுவை சிகிச்சையின் துணைபிரிவுகளாவன : எனினும் உணர்வகற்றுதல் (மயக்கமளித்தல்), அறுவை சிகிச்சையின் ஒரு பகுதியாக உள்ளது. மரபுவழி பலத் தலைமுறைகளாக அறிவு, திறன், நம்பிக்கை, அனுபவம், பண்பாடு மூலம் தொடரும் மருத்துவ அறிவியல். மரபு வழி மருத்துவத்தில் சித்தர்களால் தமிழில் வழங்கப்பட்ட மருத்துவ முறை சித்த மருத்துவம். அகத்தியர் ஆசானாக பதினெண் சித்தர்கள் தொகுத்து வழங்கிய தமிழ் மருத்துவ முறை ஆகும். தோசங்கள் மூன்றாக வாத, பித்த, கப முறை கொண்டு ஆராயப்படுகின்றன. முத்தோசங்களில் ஏற்படும் மாற்றங்களே நோயாகக் கணிக்கப்படுகிறது. சித்த மருந்துகளின் வகைப்பாடு : இயற்கை வைத்தியம் (அ) பாட்டி வைத்தியம் (அ) வீட்டு மருத்துவம் - சமையற் சார்ந்த, உணவுப் பொருட்களைக் கொண்டு செய்யப்படும் தற்காலிக நிவாரண முறைகள். தமிழினத்தில் வழிவழியாக பெண்பால் உறவுகளுக்கு கற்பிக்கப்பட்டது. பல் மருத்துவம் பல்மருத்துவம் ("dentistry") என்பது, பல் உள்ளிட்ட, வாய்ப்புறம் சார்ந்த நலன் மற்றும் நோய்கள், உடல் நலனுக்கும், வாய்ப்பகுதிக்குமான இத்தகைய தொடர்புகள் பற்றிய மருத்துவ அறிவியலாகும். இது பற்கள், பல்தாங்கு பகுதிகள், தாடை மற்றும் உள்ள பிற மென்திசுக்களின் பிரச்சனைகளைத் தவிர்க்கவும், சிகிச்சை அளிக்கவும் செய்கிறது. பல்மருத்துவத் தொழிலை மேற்கொண்டு உள்ளவர்கள் பல்மருத்துவர் எனப்படுவர். பல்மருத்துவம், வாய்க்குழி தொடர்பாகப் பல செயல்முறைகளை உள்ளடக்கியுள்ளது. பொதுவான மருத்துவ முறைகள் பற்சொத்தைக்கான சிகிச்சையாகப் பற்கள் மீதான அறுவை மருத்துவத்தை உள்ளடக்குகிறது. சிதைவடைந்த பற்கள், பல் உலோகப்பூச்சு, பல் கூட்டுப்பொருள், பல் போசலின் என்பவற்றுள் ஒன்றால் நிரப்பப்படுகின்றன. வாய் மற்றும் முகஎலும்பு அறுவை மருத்துவம் பல் அறுவை மருத்துவத்தின் சிறப்பு வடிவமாகும். பல் மருத்துவர்கள் மருந்துகள், எக்ஸ்-கதிர்ச் சிகிச்சை போன்றவற்றை நோயாளருக்குக் கொடுக்க முடியும். பல பல் நோய்களும் வழக்கத்துக்கு மாறான தன்மைகளும், பிற தொகுதிகள், நரம்பு போன்றவற்றில் இருக்கக்கூடிய நோய்களைக் குறிப்பனவாகவும் இருக்கக்கூடும். பல்மருத்துவம் பற்றிய குறிப்புகள் வரலாற்றுக்கு முந்தய காலத்தில் இருந்தே பல நாகரிங்களில் இடம்பெற்றுள்ளது. கி.மு.5௦௦௦ ஆண்டு சமயத்தில் பல்புழு பற்றி சுமேரிய நாகரிகக் குறிப்புகள் தெரிவிகின்றன. கி.மு.26௦௦ காலத்தில் வாழ்ந்த ஹெசி ரே என்பவர் இதுவரை அறியப்பட்ட முதல் பல்மருத்துவராக உள்ளார். அகழ்வாய்வில் கண்டறியப்பட்ட அவரது கல்லறையில் ‘பல் மற்றும் மருத்துவம் செய்தவர்களில் மிகச் சிறந்தவர்’ என்ற வாசகம் உள்ளது. கி.மு.1700-1550 காலத்திய எகிப்தியரான எபர்ஸ் பேப்பிராஸ் என்பவர் பல் நோய்கள் மற்றும் அதற்கான சிகிச்சைகள் பற்றிய குறிப்புகளை எழுதிஉள்ளார். கி.மு.1௦௦-இல் ரோமைச் சேர்ந்த செல்சஸ் என்பவர் பல்மருத்துவ சிகிச்சை பற்றிய விரிவான குறிப்புகளை எழுதி உள்ளார். சீனர்களின் குறிப்புகள் வெள்ளிக்கலவை பல்அடைக்கப் பயன்பட்டதை உணர்த்துகின்றன. ஐரோப்பாவில் ரோமானிய ஆட்சிக் காலத்திற்குப் பிறகு அனைத்து மருத்துவம் மற்றும் அறுவைசிகிச்சைகளும் தேவாலயங்களில் உள்ள பாதிரியார்களால் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன. அவர்களுக்கு முகச்சவரம் செய்ய வந்தவர்கள் அவர்களுக்கு இச்செயல்பாடுகளில் துணை செய்தனர். கி.பி.1163 இல் வெளியிடப்பட்ட தேவாலயக் குழும அறிக்கையானது, தேவாலயங்களில் ரத்தம் சிந்துவதை தடை செய்யும் பொருட்டு, அறுவைசிகிச்சைகளை தேவாலயங்களில் மேற்கொள்வதை தடை செய்தது. இறுதியில் அறுவைசிகிச்சை பற்றிய சிறிதேனும் அறிவு கொண்ட சவரம் செய்பவர்களால் அது மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் காலப்போக்கில் தங்களை அறுவைசிகிச்சைமருத்துவராக வெளிப்படுத்திக் கொண்டார்கள். இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி அறுவைசிகிச்சை மேற்கொள்வதற்கான ஆணையைப் பிறப்பித்தார். இதன் விளைவாக ‘ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்ஸ்’ உருவானது. 153௦ ஆம் ஆண்டு ஆர்ட்ஷ்னி புச்லெய்ன் என்பவர் ஜெர்மானிய மொழியில் ‘அனைத்து வகை பல் நோய் மற்றும் நலக்குறைவுக்கான சிறிய மருத்துவப் புத்தகம்’ ஒன்றை வெளியிட்டார். அறுவைமருத்துவத்தின் தந்தையாக அறியப்படும் ஆம்ப்ரோஸ் பார், தனது நூலில் பல்நீக்கம், தாடை முறிவு ஆகியவற்றைப் பற்றி பல குறிப்புகளைக் கூறியுள்ளார். 16 ஆம் நூற்றாண்டில் நவீன பல்மருத்துவத்தின் தந்தையாக அறியப்படும் பிரான்சைச் சார்ந்த பியேரே பௌச்சர்ட் பல்மருத்துவத்தின் அனைத்து மருத்துவ முறைகளையும் உள்ளடக்கிய ஒரு நூலினை வெளியிட்டார். இது பல்மருத்துவ சிகிச்சைகளை அதுவரை இணைந்திருந்த அறுவைமருத்துவதிலிருந்து பிரித்து வெளியிடப்பட்டிருந்தது. 1771 இல் நவீன அறுவைமருத்துவத்தின் தந்தை என அறியப்படும் ஜான் ஹன்டர், தனது ‘மனித பல்லின் இயற்கை வரலாறு’ என்ற நூலில் பல்லின் கூறமைப்புகளை விளக்கயுள்ளார். இவர் பற்களை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மாற்றுப்பதிப்பதில் (transplantation) முன்னோடியாகத் திகழ்ந்தார். இது வெற்றி பெறாத சூழலிலும், இதுவே ஒரு மனிதத் திசுவை மற்றொரு மனிதனுக்குப் பதிக்கும் முதல் முன்னோடி சிகிச்சை முறையாக இருந்தது. 16 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்காவில் கைவினைஞர்களால் பல்மருத்துவம் பின்பற்றப்பட்டது. இவர்களில் ஒருவரான ஐசக் கிரீன்வுட் அமெரிக்காவில் பிறந்த முதல் பல்மருத்துவராகக் கருதப்படுகிறார். இவரது மகன்களில் ஒருவரான ஜான் க்ரீன்வுட், ஜார்ஜ் வாஷிங்டனின் பல் மருத்துவராக இருந்துள்ளார். இவர் காலால் சுழலும் உளியினை, பற்சிதைவினை நீக்க முதலில் வடிவமைத்தார். ஜேம்ஸ் மோரிசன் இவ்வகை காலால் சுழலும் உளிக்கு முதலில் காப்புரிமை பெற்று அதனை வர்த்தக அளவில் கொண்டு வந்தார். 1844 இல் அமெரிக்காவின் பல் மருத்துவரான ஹோர்ஸ் வெல்ஸ் என்பவர் நைட்ரஸ் ஆக்சைடின் மயக்கநிலைப் பண்புகள் பற்றி முதலில் கண்டறிந்தார். இருப்பினும் பல் நீக்கத்தின் அவரது சோதனை, பொதுமக்கள் முன் நிகழ்த்தப்படும் போது தோல்வியைத் தழுவியது. இதனைத் தொடர்ந்து வில்லியம் தாமஸ் கிரீன் மார்டன் என்பவர் ஈதர்-ன் மயக்கப்பண்புகள் பற்றி 1846 இல் வெளிப்படுத்தினார். இருப்பினும் முதல் மயக்கமருந்தினைக் கண்டறிந்ததற்கான அங்கீகாரம் ஹோர்ஸ் வெல்லுக்கே பின்னர் வழங்கப்பட்டது. போன்சி என்பவர் முதல் வெண்மண் பாகைகளை (porcelain crown) உருவாக்கினார். இது அதுவரை புழக்கத்தில் இருந்த பல்மருத்துவதில் புதிய அழகுணர்வைச் சேர்த்தது. சாமுவேல் ஸ்டாக்சன் இதனை வர்த்தக அளவில் பிரபலப்படுத்தினார். அமெரிக்காவின் மில்லர், பற்சிதைவானது பாக்டீரியாக்களின் செயலினால் உருவாகிறது எனக் கண்டறிந்தார். அதுவரையிலும் இது புழுக்களாலும், உடலின் திரவச் சீரின்மையாலும் நிகழ்கிறது என பல நம்பிக்கைகள் இருந்தன. 184௦ ல் உலகின் முதல் பல்மருத்துவக்கல்லூரியான பல்டிமோர் கல்லூரி உருவாக்கப்பட்டது. 1895 ல் ரான்ட்ஜென் கண்டுபிடித்த x கதிர் மருத்துவத்துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. எட்மண்ட் கேல்ஸ் என்பவர் 1896 ல் முதல் பல் ஊடுகதிர் படத்தை எடுத்தார். பல் சீரமைப்புத் துறைக்குப் பெரும் பங்காற்றிய ஆங்ள், அத்துறையை பல் மருத்துவத்தின் முதல் தனிப்பிரிவாக உருவாக்கினார். அவர் முதல் பல் சீரமைப்புக்கான கல்லூரியை 19௦௦ ல் நிறுவினார். முதல் பல்சீரமைப்பிறகான தனி இதழையும் (அமெரிக்கன் ஆர்தொடாண்டிஸ்ட், 1907) நிறுவினார். 188௦ களில் பிதுக்கு குழாய்கள் அறிமுகத்திற்குப் பிறகு அதுவரை திரவமாகவும், பொடியாகவும் இருந்தவை, பற்பசைகளாக வெளிவர ஆரம்பித்தன. இதனைத் தொடர்ந்து 1938 ல் அறிமுகமான நைலான் தூரிகைகளும் பல் சுகாதாரத்தை பெரிதும் மேம்படுத்தின. 1. பொது பல் சுகாதாரம் ("Dental public health") :- வாய்வழி சுகாதார தொடர்புடைய நோய் தொற்று மற்றும் சமூக சுகாதார கொள்கைகளை ஆய்வு 2. பல் காப்பு மருத்துவம் ("Conservative dentistry and endodontics") :- பல் மற்றும் வேர் கால்வாயை பாதிக்காதவாறு, பல் வடிவம் மற்றும் செயல்பாட்டை மீண்டும் உருவாக்கும் விதமாக பற்களைப் பாதிக்கக்கூடிய பல்சொத்தை மற்றும் பல்சொத்தை அல்லாத சிராய்ப்பு புண்களை குணப்படுத்தி பற்களை பழைய நிலைக்கு கொண்டு வருதல். இந்த சிறப்பு பட்டம் இந்தியாவில் வழங்கப்படுகிறது. 3பற்கூழ் நோய் மருத்துவம் ("Endodontics") (also called "endodontology") :- வேர் கால்வாய் சிகிச்சை மற்றும் பல் கூழ் மற்றும் நீர், சீழ்கட்டித் திசுக்களின் நோய்களைப் பற்றிய ஆய்வு 4பல் தடய ஆய்வியல் ("Forensic odontology"):- சட்டத்தில் பல் ஆதாரங்களை சேகரித்து பயன்படுத்துதல். இந்த துறையில் அனுபவம் அல்லது பயிற்சியுடன் எந்த பல்மருத்துவரும் இதை செய்யலாம். தடய பல்மருத்துவரின் செயல்பாடு முதன்மையாக ஆவணங்கள் மற்றும் அடையாளத்தின் சரிபார்த்தல் ஆகும் 5 முதியோர் பல் மருத்துவம் ("Geriatric dentistry or Geriodontics") :- வயது முதிர்வின் காரணமாக முதியவர்களுக்கு ஏற்படும் வயது தொடர்பான நோய்களுக்கான நோயறிதல், தடுப்பு மற்றும் சிகிச்சைகளை பிற சுகாதார நிபுணர்களுடன் சேர்ந்து சம்பந்தப்பட்ட முதியருக்கு பல் பராமரிப்பு சிகிச்சை அளித்தல் 6 முக வாய் எலும்பு நோய்க்குறியியல் ("Oral and maxillofacial pathology"):- ஆய்வு நோய் கண்டறிதல், வாய் மற்றும் முக வாய் எலும்பு நோய்களுக்கான சிகிச்சை 7 வாய் எலும்பு கதிரியக்கவியல் ("Oral and maxillofacial radiology") :- கதிரியக்கம் மூலமாக வாய் மற்றும் முக எலும்புகளில் நோய்களின் ஆய்வு 8 வாய் எலும்பு அறுவை சிகிட்சை ("Oral and maxillofacial surgery"):- தாடை, வாய் மற்றும் முக மாற்று அறுவை ,நீக்குதல் மற்றும் கிசிச்சை அளித்தல் 9 வாய் சார்ந்த உயிரியல் ("oral Biology"):- மண்டைமுகத் தசை மற்றும் வாய் உயிரியல் ஆராய்ச்சி 10 பல் மாற்று அருவை சிகிச்சை ("Oral Implantology"):- பல் நீக்க சிகிச்சை, நீக்கப்பட்ட பல்லை மாற்றும் கலை 11 வாய் மருத்துவம் ("Oral medicine"):- வாய்வழி சளி நோய்களின் நோயறிதல் மற்றும் மருத்துவ மதிப்பீடு 12 பற்கள் சீரமைப்பு இயல் ("Orthodontics and dentofacial orthopedics"):- பல் வரிசை சீராக்கம் மற்றும் முக சீரமைப்பு சிகிச்சை 13 குழந்தை பல் மருத்துவம் ("Pediatric dentistry"):- குழந்தைகளின் பற்களுக்கான சிறப்பு மருத்துவம் 14 பல்லைச் சுற்றிய திசு ஆய்வு ("Periodontology"):- பல்சூழ் திசுக்களைப் பற்றியும் அவற்றுக்கான சிகிச்சை முறைகள் மற்றும் பல் மாற்று அறுவைசிகிச்சைகளின் போது இத்திசுக்களுக்கான பராமரிப்பு. 15 செயற்கைபல் இயல் ("prosthondontics"):- பொய்ப்பல், செயற்கைப்பல் நடுதல். காதுகள், கண்கள், மூக்கு போன்ற விடுபட்ட முக உறுப்புகளை ஒழுங்குபடுத்துதல் 16 சிறப்புத் தேவையுடையோருக்கான பல் மருத்துவம் ("Special needs dentistry"):- வளர்ச்சி மற்றும் பெறப்பட்ட குறைபாடுகள் உள்ளவர்களுக்கு பல்மருத்துவம். 17 கால்நடைப்பல் மருத்துவம் ("Veterinary dentistry"):- கால்நடை விலங்குகளின் பல் சிகிச்சைகள் மற்றும் பராமரிப்பு 1. வெட்டுப்பல் (Incisor) 2. சிங்கப்பல் (Canine) 3. முன்கடைப்பல் (Premolar) 4. கடைப்பல் (Molar) a) சிக்மான்டி பாமர் முறை b) எப் டி ஐ முறை c) பொது முறை a) பால் பல் - 6 மாதம் முதல் 3 வயது வரை b) நிலைப்பல்- 6 வயது முதல் 13 வயது வரை. (ஞானப்பல் மட்டும் 18 வயதுக்கு மேல் முளைக்கும்) A. பாகை (Crown) B. வேர் (Root) 1. வெண்ணடுக்கு (Enamel) 2. மஞ்சள் அடுக்கு (Dentin) 3. உட்திசு (Pulp) a) ஈறு (Gingiva) b) பற்சூழ் மென்திசு (Periodontal ligament) c) துளை எழும்பு (Alveolar bone) a) நாக்கு (Tongue) b) தாடை (Jaw) c) அன்னம் (Palate) d) டான்சில் (Tonsil) e) உதடு மற்றும் கன்னம் (Lip & Buccal mucosa) a) வாய்நோய் கண்டறிதல் (Oral diagnosis) b) பல் துப்புரவு (Scaling) c) ஆழ் துப்புரவு (Root planning) d) பல் அடைப்பு (Tooth restoration) e) ஈறு அறுவை சிகிச்சை* (Gingival flap surgery) f) ப்ளுரைட் பூச்சு (Fluoride application) g) வேர் சிகிச்சை* (Root canal treatment) h) பாகை பொருத்தல் (Crown placement) i) பல் வெளுத்தல் (Dental bleaching) j) செயற்கைப்பல் பொருத்துதல் (Prosthetic replacement) k) பல் மற்றும் தாடை சீரமைப்பு* (Orthodontic treatment) l) பல் நீக்கம் (Tooth extraction) m) எலும்புஊடு பல் நீக்கம்* (Trans-alveolar extraction) n) தடுப்பு ரெசின் நிரவுதல் (Preventive resin restoration) o) அன்னம் மற்றும் தாடை அறுவை சிகிச்சை* (Orthognathic surgery, Cleft lip & Palate repair, Cyst & Tumor removal, Fracture reduction & fixation) 1. வாய்நோயறிதல் பிரிவு (Oral medicine & Radiodiagnosis) 2. குழந்தைகள் பல்நோய் பிரிவு (Pedodontics) 3. திசு ஆய்வு துறை (Oral & Maxillofacial pathology) 4. சமூக வாய்நோய் தடுப்பு துறை (Preventive & Community dentistry) 5. ஈறுநோய் பிரிவு (Periodontics) 6. செயற்கை பல் மற்றும் முக அமைப்பு துறை (Oral & Maxillofacial prosthodontics) 7. முகம் மற்றும் தாடை அறுவைசிகிச்சை துறை (Oral & Maxillofacial surgery) 8. வேர் சிகிச்சைப் பிரிவு (Endodontics & Conservative dentistry) 9. பல் மற்றும் தாடை சீரமைப்புப் பிரிவு (Orthodontics & Dentofacial orthopaedics) வில்லெம் ஜான்சூன் வில்லெம் ஜான்சூன் ("Willem Janszoon", அண். 1570 - 1630), டச்சு கடற்பயணியும் குடியேற்ற ஆளுநரும் ஆவார். இவரே ஆஸ்திரேலியாவின் கரையை முதன் முதலில் கண்ட ஐரோப்பியர் ஆவார். இவர் வில்லெம் ஜான்ஸ் எனவும் அழைக்கப்படுகிறார். இவர் அனேகமாக நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் பிறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இவரது ஆரம்ப கால வாழ்க்கை குறித்த தகவல்கள் ஏதும் அறியப்படவில்லை. டச்சு கிழக்கிந்தியக் கம்பனி ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் இருந்த ஔட் கம்பனி ("Oude compagnie") என்ற நிறுவனத்தின் "ஒல்லாந்தியா" என்ற கப்பலில் டச்சு கிழக்கிந்திய நாடுகளுக்குச் செல்ல இவர் பணிக்கப்பட்டார். 1601, மே 5 இல் ஜான்ஸ் மீண்டும் கிழக்கிந்தியத் தீவுகளுக்குச் சென்றார். மூன்றாம் தடவையாக 1603, டிசம்பர் 18 இல் நெதர்லாந்தில் இருந்து கிழக்கிந்தியாவுக்கு தனது பயணத்தை "டுயிஃப்க்கன்" என்ற கப்பல் கப்டனாக சென்றார். 1605, நவம்பர் 18 இல் ஜாவாவின் பான்டமில் இருந்து புறப்பட்டு மேற்கு நியூ கினி நோக்கிச் சென்றார். அதன் பின்னர் அவர் அரபூரா கடலின் கிழ்க்கெல்லையைக் கடந்து டொரெஸ் நீரிணையைக் காணாமல் 1606 பெப்ரவரி 26 இல் குயின்ஸ்லாந்தின் கேப் யோர்க் கரையை இவர் அடைந்த நிகழ்வு ஆஸ்திரேலியாக் கண்டத்தைக் கண்ட முதலாவது ஐரோப்பியராக பதியப்பட்டது. ஜான்சூன் மேலும் கிட்டத்தட்ட 320 கிமீ தூரம் கரையார வழியே சென்றார். இவரது கரையோரக் கடற்பயணங்களில் அங்குள்ள பழங்குடியினரால் இவரது 10 மாலுமிகள் வரை கொல்லப்பட்டனர். கடைசியாக ஜூன் 1606 இல் மீண்டும் பான்டம் நகரை அடைந்தார். இவர் தாம் கண்ட நிலத்திற்கு "சீலண்ட்" என்ற டச்சு மாகாணத்தின் நினைவாக "நியூ சீலண்ட்" ("Nieu Zelandt") எனப் பெயரிட்டார். ஆனாலும் இப்பெயர் ஏபல் டாஸ்மான் அவர்களினால் நியூசிலாந்து நாட்டிற்கு பெயரிடுவதற்குப் பயன்பட்டது. மாற்றுத்திறன் ஊனம் என்பது, மற்றவர்களுடன் ஒப்பிடும்போது இயலாத்தன்மை இருப்பதைக் குறிக்கும். இது, உடற் குறைபாடு, புலன் குறைபாடு, அறிதிறன் அல்லது அறிவுத்திறன் குறைபாடு, உளவியல் குறைபாடு, பிற நோய்கள் தொடர்பான குறைபாடு என்பவை தொடர்புடையதாக இருக்கலாம். ஊனம் ஒருவருடைய வாழ்க்கைக் காலத்தில் ஏற்படலாம் அல்லது பிறப்பிலேயே இருக்கலாம். ஊனம் என்பது தனிப்பட்டவரோடு மட்டுமே தொடர்புடையதாகக் கருதக்கூடும். இதனால், அத் தனிப்பட்டவரை எவ்வாறு சிறப்பாகச் செயல்படவைக்க முடியும் என்பது குறித்துக் கவனம் செலுத்தப்படுகிறது. இந்த நோக்கு ஊனத்துக்கான மருத்துவ மாதிரி என்பதுடன் தொடர்புபட்டது. மாற்றாக, ஊனம் தொடர்பில் மக்களுக்கும், அவர்களுடைய சூழல், சமூகம் என்பவற்றுக்குமான தொடர்புகளுக்கு முதன்மை அளிக்கக்கூடும். இது, மனப்பாங்கினாலும், தேவைகளை அடைவதற்கு வேண்டிய தர அளவுகளை ஊனமற்ற பெரும்பான்மையினருக்குச் சார்பாக வைத்திருப்பதனாலும் ஊனமுற்றோருக்கு இயலாமையை ஏற்படுத்திக்கொண்டு அல்லது அதனைப் பேணிக்கொண்டு அவர்களை இயலாதவர்கள் என்று முத்திரை குத்தும் சமூகத்தின் பங்கு குறித்துக் கவனம் செலுத்தவேண்டிய தேவையை ஏற்படுத்துகிறது. இந்த நோக்கு, மனித உரிமைகள் அல்லது ஊனத்துக்கான சமூக மாதிரி என்பதோடு தொடர்புடையது.மாற்றுத் திறனாளிகளை உலகின் மிகப் பெரிய சிறுபான்மையினர் என்று குறிப்பிடுகிறது உலக சுகாதார நிறுவனம். "மாற்றுத்திறனாளி" என்பவர் உடலிலோ அல்லது மனதிலோ ஏற்ப்பட்ட மாற்றத்தின் காரணமாக அவரால் சில செயல்களை செய்யமுடியாமல் போய்விடுகிற காரணத்தினால் அவர்களை நாம் அவ்வாறு அழைக்கிறோம். அது பின்வரும் வழிகளில் வகைப்படுத்தபடுகிறது: மூட்டுகள், நுண்ணிய எலும்புகள் அல்லது மொத்த மோட்டார் திறன் வலுக்குறை கொண்டு பாதிக்கப்படும்போது அது உடல் ஊனம் எனப்படுகிறது. ஏதேனும் ஒரு புலனின் வலுக்குறை புலன் குறைபாடு ஆகிறது. இது பொதுவாக பார்வை மற்றும் காது கேளாமை குறைபாடுகளை கொண்டிருக்கிறது, ஆனால் வேறு சில புலன்களும் குறைபடலாம். வழக்கமான வழிமுறையாகளை கொண்டு சரி செய்ய இயலாத பார்வை வலுக்குறைகளை இருக்கும் ஒரு நபருக்கும் இருக்கும் பார்வை செயளிலப்புக்களை நாம் பார்வை குறைபாடு எனக் கூறலாம். கேள்விக் குறைபாடு என்பது பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ ஒலியை உணரும் அல்லது புரிந்து கொள்ளும் வல்லமையை இழத்தல் ஆகும். பல வகையான உயிரியல் காரணங்களினாலும் சூழல் காரணங்களினாலும் ஏற்படக்கூடிய இக் குறைபாடு ஒலியை உணரும் தன்மை கொண்ட எல்லா உயிரினங்களிலும் ஏற்படலாம். நுகர்ச்சி மற்றும் சுவைசார் புலன் குறைபாடுகள் பொதுவாக வயது முதிர்ச்சியின் காரணமாக வருவதுண்டு. ஆனால் இளைய வயதினருக்கும் இது போன்று வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மனவளர்ச்சிக் குறைபாடு என்றால் அறிவு வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடு. 1838-ஆம் ஆண்டு எஸ்கிரால் என்பவர் மனவளர்ச்சிக் குறையைப் பற்றி விளக்கும்போது ”மனவளர்ச்சிக் குறை என்பது ஒரு நோயல்ல; வளர்ச்சி நின்றுவிடும் நிலை” என்று விளக்கினார். டிரட்கோல்ட் என்பவர் ”முழுமையான அல்லது சாதாரண வளர்ச்சி அடையத்தவறிய மனதின் நிலையே மனவளர்ச்சிக் குறை” என்று கூறினார். மனவளர்ச்சிக் குறைவை பலரும் மன நோய் எனத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் மனவளர்ச்சிக் குறைவு வேறு; மன நோய் வேறு. உளப் பிறழ்ச்சி (Mental disorder) அல்லது உள நோய் அல்லது மன நோய் என்பது தனிப்பட்ட மனிதரில் உண்டாவதும், வழமையான பண்பாட்டு வளர்ச்சியில் எதிர்பார்க்கப்படாத துன்பத்தை அல்லது இயலாமையை உண்டாக்கும் உளவியல் அல்லது நடத்தைக் கோலம் ஆகும். உளப் பிறழ்ச்சியை அடையாளம் காணலும், அது தொடர்பான புரிதலும் காலத்துக்குக் காலமும், பண்பாட்டுக்குப் பண்பாடும் மாற்றமடைந்து வந்திருக்கிறது. உளப் பிறழ்ச்சி என்பதன் வரைவிலக்கணம், மதிப்பீடு, வகைப்பாடு என்பன மாறுபட்டாலும் நோய்களுக்கும், நலக்கேடுகளுக்குமான அனைத்துலக புள்ளியியல் வகைப்பாடு, உளப்பிறழ்ச்சி தொடர்பான நோயறிதல் மற்றும் புள்ளியியல் கையேடு போன்றவற்றிலும் இவை போன்ற பிற கையேடுகளிலும் தரப்படும் வழிகாட்டல்கள் உளநல வல்லுனர்களால் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப் படுகின்றன. இந்தியாவில் மட்டும் 7 கோடிக்கும் அதிகமானோர் மாற்றுத் திறனாளிகளாக உள்ளனர்.வளர்ந்த நாடுகளைவிட இந்தியா போன்ற ஏழை மற்றும் வளரும் நாடுகளில் மாற்றுத்திறனாளிகள் கூடுதல் எண்ணிக்கையில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனமும் உலக வங்கியும் இணைந்து தயாரித்த 2011 ஆண்டின் மாற்றுத் திறனாளிகளைப் பற்றிய முதல் உலக அறிக்கை குறிப்பிடுகிறது.2006 ஆம் ஆண்டு ஊனமுற்றோருக்கான ஐ.நா. சாசனம் விதிகளை இந்தியாவும் கையொப்ப மிட்டு ஏற்றுள்ளதோடு, தற்போது அது அமலிலும் உள்ளது.“மாற்றுத் திறனாளிகளின் தேவைகளை கருணை அடிப்படையில் பார்க்கக்கூடாது என்பதும் உரிமைகளின் அடிப்படையில் பார்க்க வேண்டும் என்பதும், அவர்களுக்கு எதிரான பாரபட்சங்களுக்கு முடிவு கட்ட வேண்டும்” என்பதும் ஐ.நா. சாசன விதிகளாகும். ஊனமுற்றோர் (சம வாய்ப்பு, உரிமைகள் பாதுகாப்பு மற்றும் முழு பங்கேற்பு) சட்டம் 1955 நிறைவேற்றப்பட்டது.நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு 1996-இல்தான் நடைமுறைக்கு வந்தது.இச் சட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தக் கோரி தேசிய பார்வையற்றோர் கழகம் தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. உயர்நீதிமன்றமும் மனுதாரரின் கோரிக்கையை ஏற்று அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் மத்திய அரசு , நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக, மத்திய சட்ட அமைச்சகம், அந்த உத்தரவை எதிர்த்து மாற்றுத் திறனாளிகளுக்கு சமவாய்ப்பு, உரிமைகள் பாதுகாப்பு மற்றும் முழுப் பங்கேற்பு அளிக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் இருக்க உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது . உச்சநீதிமன்றம் மத்திய அரசின் கோரிக்கைக்கு செவி சாய்க்க வில்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம் சென்னை கோவளம் முட்டுக்காடு அருகே கிழக்கு கடற்கரை சாலையில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு , சேவையாற்றி வருகிறது.இங்கு, மறுவாழ்வு மருத்துவம் , மறுவாழ்வு உளவியல் , ஊனமுற்றோருக்கான தொழில் பயிற்சி , பேச்சு, கேட்டல் மற்றும் தொடர்புப் பயிற்சி , சிறப்புக் கல்வி , கண் பார்வையின்மையோடு இணைந்த காது கேளாமை, இயன்முறை மருத்துவம் மற்றும் செயல்முறை மருத்துவம், 0-3 வயதில் தொடக்கக் கால பயிற்சி , செயற்கை அவயங்கள் மற்றும் முடநீக்கு சாதனங்கள் பொருத்துதல் , உணர்வு உறுப்புகள் குறைபாட்டுக்கான ஒருங்கிணைப்புப் பயிற்சி , சமுதாயம் சார்ந்த மறுவாழ்வு பணிகள் ஆகிய சேவைகள் வழங்கப்படுகின்றன. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 64.8 சதவீதம்பேர் கல்வி கற்றவர்களாக உள்ள நிலையில், வெறும் 49 சதம் மாற்றுத்திறனாளிகளே கற்றவர்களாக உள்ளனர். 44 சதவீத பள்ளிகள் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த முடியாதவைகளாக உள்ளதாக அரசு தகவல்கள் உள்ளன. பார்வையற் றோருக்கான பிரெயில் வடிவிலான ஆவணங்களும் காதுகேளாத வாய் பேசாதோருக்கான செய்கைமொழி பெயர்ப்பாளர்களும், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான அரசு பள்ளிகள் மற்றும் சிறப்பாசிரியர்கள் போதிய அளவில் இல்லாததும் இவர்களின் கல்விக்குத் தடைகளாக உள்ளன. வேலைவாய்ப்பில்லாமல் அவதியுறும் ஊனமுற்றோரின் எண்ணிக்கை 66 சதவீத மாக உள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு இன்னின்ன வேலைகள் ஒதுக்கப்படலாம் என்று இனம் காணும்படி சட்டம் வழிகாட்டுகிறது.அரசுத்துறைகளில் உள்ள C மற்றும் D பிரிவு ஊழியர் நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கும் முறை 1977 ஆம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தப்பட்டு 1996 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்த சமவாய்ப்புச் சட்டத்திலும் வழிவகை செய்யப்பட்டது. அரசோ, வெறும் நூறு வேலைகளை மட்டும் பட்டியலிட்டுள்ளது .தேசிய ஊனமுற்றோர் வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மையத்தின் புள்ளிவிவரப்படி, அரசு வேலைவாய்ப்பில் 0.5 விழுக்காடும், தேசிய அளவில் எடுத்துக்கொண்டால் 0.4 விழுக்காடும்தான் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. ஒவ்வொறு ஆண்டும் டிசம்பர் 3-ந்தேதி சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. அப்போது அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் துறைகளில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஊதியத்துடன் கூடிய சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கி அரசு ஆணைப்பிறப்பித்துள்ளது. நூல்கள் ஊடகங்கள் தலைவலி தலைவலி அல்லது தலையிடி (இலங்கை வழக்கு) என்பது தலையில் வலி இருக்கும் நிலையாகும். சில வேளைகளில், கழுத்து அல்லது மேல் முதுகுப் பகுதிகளில் ஏற்படும் வலியையும் தலைவலியாகக் கூறுவது உண்டு. குறிப்பிட்ட பகுதியில் மட்டும் வரும் வலிகளில் மிகப் பொதுவானதாகிய தலைவலி, பலருக்கு அடிக்கடி வரக்கூடும். மிகப் பெரும்பாலான தலையிடிகள் தீங்கற்றவையும், தானாகவே குணமாகக் கூடியவையும் ஆகும். சிக்கலற்ற தலைவலிகளுக்கு மருந்துக் கடைகளில் இலகுவாக வாங்கக்கூடிய ஆஸ்பிரின், பரசித்தமோல், இபுபுரோபின் போன்ற வலிநீக்கிகளே போதுமானதாக இருக்கக்கூடும். ஆனால், சில குறிப்ட்பிட வகைத் தலையிடிகளுக்கு வேறு பொருத்தமான மருத்துவ முறைகள் தேவைப்படக்கூடும். ஏற்படும் தலைவலியை, மன அழுத்தம், சிலவகை உணவுகள் போன்று ஏதாவது ஒரு காரணியுடன் தொடர்புபடுத்திக் காணமுடியுமானால் அதனைத் தவிர்க்கமுடியும். மூளையில் வலியுணரிகள் இல்லாததால், மூளை வலியை உணராது. தலைப் பகுதியில் அமைந்த சில நரம்புத் தொகுதியின் பகுதிகள், தொண்டை, முகம், வாய் போன்ற பகுதிகளில் காணும் சில நரம்புகள் என்பன காயப்படக் கூடியவை. மூளையுறை, குருதிக் கலங்கள் என்பன வலியை உணரக்கூடியவை. தலைவலிகள் பெரும்பாலும், மூளையுறையில் அல்லது குருதிக்கலங்களில் ஏற்படக்கூடிய இழுவை அல்லது உறுத்தல் காரணமாக உண்டாகின்றன. தலையில் காணப்படும் தசைநார்களும் வலியை உணரக்கூடியவை. உலக சுகாதார அமைப்பு 2016, ஏப்ரலில் கொடுத்த அறிக்கையின்படி, சனத்தொகையின் அரைவாசியினராவது ஆண்டில் ஒருமுறையேனும் தலைவலிக்கு உட்பட்டிருக்கிறார்கள். அழுத்தங்களால் ஏற்படும் தலைவலியே மிகவும் பொதுவானதாகவும், கிட்டத்தட்ட 1.6 பில்லியன் மனிதர்கள் (மொத்த சனத்தொகையின் 21.8%), அதைத் தொடர்ந்து அடுத்த நிலையில் ஒற்றைத் தலைவலியும், கிட்டத்தட்ட 848 மில்லியன் (மொத்த சனத்தொகையின்11.7%) காணப்படுகின்றன.. தலைவலியால் அவதிப்படுபவர்கள் அந்த தலைவலி ஆபத்தற்றது என்பதை உறுதிப்படுத்தவும், சிகிச்சை பெறவும் மருத்துவரின் உதவியை நாடுதலே நன்று. தலைவலிக்கான பொதுவான காரணங்களாக, மன அழுத்தம், ஒற்றைத் தலைவலி, விழிக்களைப்பு, உடல்வரட்சி, குருதியில் சர்க்கரை குறைதல், நெற்றியெலும்புப்புழை அழற்சி (sinusitis) என்பவற்றைக் குறிப்பிடலாம். உயிராபத்தை விளைவிக்கக்கூடிய நிலைமைகளான மூளையுறை அழற்சி (meningitis), மூளையழற்சி (encephalitis), மிக உயர் இரத்த அழுத்தம், மூளைக்கட்டிகள் போன்றவற்றினால் வரும் தலைவலிகள் மிகக் குறைவே. தலைக் காயங்களுடன் தலைவலி ஏற்படும்போது காரணம் வெளிப்படையானது. பெண்களிடையே காணப்படும் மிகப் பெரும்பாலான தலைவலிகளுக்கு, மாதவிலக்கு ஆரம்பித்த நாட்களில் (மாதவிலக்குக்கு முன்னர் அல்லது பின்னர்) இருக்கும் இயக்குநீர் அளவுகளில் ஏற்படும் ஏற்ற இறக்கம் காரணமாகும். 40 வயதிற்குப் பிறகே பெரும்பாலும் தாக்கக் கூடியது. ஆண்களைவிட பெண்களுக்கே அதிகம் வர வாய்ப்பு உண்டு. மின் அதிர்வுப் போல வலி இருக்கும். கண்ணைச் சுற்றியுள்ள பகுதியில் ஒரு பக்கமாக வலிக்கும். ஒற்றைத் தலைவலியைப் போல மெல்லுதல், பேசுதல், விழுங்குதல், குளிர்நீரில் முகம் கழுவுதல், பல் துலக்குதல் போன்ற எது வேண்டுமானாலும் வலியைத் தூண்டலாம். ஒளி விலகல், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண் சிவத்தல், பார்வை குறைபாடு கண்ணில் காயம் ஆகியவற்றால் கண்ணில் மட்டுமின்றி தலைவலியும் ஏற்படலாம். இரத்தக் கொதிப்பால் மூளையின் ரத்தக் குழாய் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் தமனி வெடித்துவிட வாய்ப்பு உள்ளது. இதனால், ரத்தக் கசிவு ஏற்படலாம். அப்போது மூளை வீங்கத் தொடங்கும். மூளை வீங்கும்போது மூளையின் உறை இழுபடும். இதனால் கடுமையான தலைவலி ஏற்படும். இது காதின் மையப்பகுதியின் நரம்புகளில் ஏற்படும் ஒழுங்கின்மையால் ஏற்படும் நோய். நோயாளிகளுக்குக் கழுத்து மற்றும் தலைவலியை ஏற்படுத்தும். தலைச்சுற்றலுடன் வாந்தியும் இருக்கும். மனச்சோர்வு, பதட்டம், தற்கொலை செய்யும் எண்ணம் ஆகியவை ஒற்றைத் தலைவலி நோயாளி களுக்கு அவ்வப்போது வந்து போகும். கண்களுக்கு கீழே உள்ள எலும்பறைகளில் காற்றுக்குப் பதிலாக நீர் கோர்த்துக் கொண்டு தலை வலி ஏற்படும். பல்லில் அடிபட்டாலும், நோய்த் தொற்று ஏற்பட்டாலும், தலைவலி ஏற்படலாம். குளிர்ந்த அல்லது சூடான பானம், பல்லில் படும்போது வலி தீவிரமாகும். மிகக் கடுமையான தலைவலியை ஏற்படுத்தும். தைராய்டு ஹார்மோன் சுரப்பு குறையும்போது தலைவலி வரலாம். சரியான ஹார்மோன் சிகிச்சை அளித்த பிறகு வலி போய்வடும். பெரும்பாலான தலைவலிகள் ஆபத்து அற்றவை ஆயினும், சில சந்தர்ப்பங்களில் ஏற்படுகின்ற தலைவலி ஆபத்தானதாக அமைகின்றது. இவ்வாறான ஆபத்தான தலைவலிகளுக்குக் காரணங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். மேற்கூறிய காரணிகளால் ஏற்படுத்தப்படும் தலைவலிக்கு சிறப்பு சிகிச்சைகள் அவசியமாகின்றன. ஏனெனில் மேற்கூறிய காரணங்கள் பெரும் விளைவுகளைத் தரவல்லன. சில உயிராபத்தையே விளைவிக்கக்கூடியன! புதிதாக, திடீரென்று தீவிரமான தலை வலி ஏற்பட்டால், முன் எப்போதும் எதிர்நோக்காத அல்லது உணராத, முற்றிலும் வேறுபட்ட தீவிரமான தலைவலி ஏற்பட்டால், தன்னுணர்வில் மாற்றம் ஏற்பட்டால் (Altered Consciousness), தீவிர காய்ச்சல், வாந்தி இருப்பின், ஒரு பக்கம் வாதம் ஏற்பட்டு உணர்வற்றிருப்பின், காலையில் எழும் போதே தலையிடி இருப்பதுடன், இருமும் போதோ அல்லது தும்மும் போதோ தலைவலி அதிகரிப்பின், பார்வையில் மாற்றம் ஏற்படின் (குனியும் போது /வளையும் போது /இருமும் போது) உடனடி மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும். பொதுவாக நாற்பது வயதிற்குட்டபட்டவர்களிலே ஏற்படுகின்ற தலைவலியாகும். இது தீவிரமான தலைவலியை ஏற்படுத்தும். இடிப்பது போன்ற உணர்வு ஏற்படுத்தும் தலைவலியாகும். இதனுடன் சேர்ந்து வயிற்றுப்பிரட்டல், வாந்தி என்பன காணப்படலாம். இவ் வகைத் தலைவலி உடையோர் வழமையான வேலைகளில் ஈடுபடமுடியாது அவதியுறுவர். இருபக்கத் தலையிலும் உணரப்படுகின்ற மந்தமான ஒரு தலைவலியாகக் காணப்படும். சிலரில் கண்களுக்கு பின்னால் அழுத்துவது போன்று காணப்படும். சிலர் தலையுச்சியில் அமுக்குவது போன்று உணர்வர். இவ்வகைத் தலைவலி அதிக மன அழுத்தம், வேலைப்பளு உள்ளவர்களிலேயே பொதுவாக ஏற்படுகின்றது. இவர்களுக்கு தளர்வுப் பயிற்சிகள் பரிந்துரைக்கபடுகின்றது. சிலருக்கு வலி நிவாரணிகள் தேவைப்படலாம். இருபதுக்கும், நாற்பதுக்குமிடையிலான வயதுடைய ஆண்களில் ஏற்படவவல்ல ஒரு வகைத் தலைவலியாக இது காணப்படுகின்றது. மிகத் தீவிரமான தாங்கமுடியாத தலைவலியாகக் காணப்படும். ஒரு பக்கத் தலைப்பகுதியிலேயே ஏற்படும். கண்ணின் பின்னாக உருவெடுக்கும் இத் தலைவலியுடன் கண்ணீர் சுரத்தல், மூக்கடைப்பு, கண் செந்நிறமாதல், தற்காலிகமாகக் கண்ணை இறுக்கி மூடமுடியாதிருத்தல் போன்றனவும் காணப்படலாம். மருத்துவரிடம் காண்பித்து முறையான சிகிச்சை பெறுதல் மூலம் தலைவலியில் இருந்து குணமடையலாம். தலைவலிக்கு அடிப்படை மன அழுத்தம் . தேவையற்ற கோபம், விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கும் போது உங்கள் மனதை தளர்வாக்கும் சிகிச்சை உள்ளது. அதிக குளிர்ச்சி, அதிக வெப்பம் இல்லாத அறையில் அமர்ந்து சிகிச்சை பெறவேண்டும் . அங்கு நல்ல காற்றோட்டம் இருக்கவேண்டும். கட்டில் அல்லது தரையில் படுத்துக் கொள்ளலாம். மூச்சை ஆழமாக இழுத்து விடவும். பின்னர் கண்களை இறுக்கமாக இல்லாமல் இலகுவாக மூடிக் கொள்ளவும். கோபம் வரும் போது சிலர் புருவங்களை சுருக்கிக் கொள்வர். முகம் இறுக்கமாக இருக்கும். இந்த சமயத்தில் தசை இறுகும். இதைத் தவிர்க்க புருவத்தையும், முகத்தசைகள் இறுகுவதையும் தவிர்த்து சாதாரணமாக வைத்துக் கொள்ளலாம். மனதுக்குப் பிடித்த வேலை மூலம் மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளலாம் . மனம் அமைதி அடைந்த பின்னர் நிதானமாக யோசித்தால் பிரச்னைக்கான தீர்வை எளிதில் கண்டறிய முடியும். இதன் மூலம் தலைவலிக்கு விடை கொடுக்கலாம். அருகம்புல், ஆலமர இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து உச்சந்தலையில் பற்றுப் போட்டால் தலைவலி உடனடியாக குணமாகும். அவரை இலையை அவித்துத் தலையில் பூசிக் குளித்தால் நாள்பட்ட தலைவலி குணமாகும். ஆதொண்டை வேரை இடித்து நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்து குளித்து வந்தால் மண்டைக் குடைச்சல் குணமாகும். இஞ்சியைத் தோல் நீக்கி தேன் சேர்த்து வதக்கி தண்ணீர் (50) மிலி விட்டு கொதிக்க வைத்து தினமும் ஒரு ஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டால் நாள்பட்ட தலைவலி குணமாகும். இஞ்சியைக் காயவைத்து பொடி செய்து தண்ணீரில் குழைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைபாரம் குறையும். இஞ்சிச்சாற்றில் நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி தலைக்கு தேய்த்தால் தலைவலிக்கு நிவாரணம் கிடைக்கும். இஞ்சிசாற்றில் வெங்காயத்தை அரைத்து நெற்றியில் பற்றுப் போடலாம். இரட்டைப் பேய் மருட்டி இலையை தண்ணீரில் போட்டு ஓமம் சேர்த்துக் கொதிக்க வைத்து, நீராவி பிடித்தால் அதிக வியர்வை வெளியேறி தலைவலி குறையும். எருக்கம் பாலில் வெள்ளை எள்ளை அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும். எலுமிச்சம்பழச் சாறை காபியில் கலந்து குடிப்பதன் மூலம் தலைவலி நீங்கும். எலுமிச்சம்பழத் தோலை அரைத்து நெற்றியில் பற்றுப்போடலாம். எலுமிச்சம்பழச் சாறுடன் மிளகை சேர்த்து அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும். கடுகை தண்ணீரில் ஊற வைத்து முளைக்கட்டவும், பின்னர் அதனை அரைத்து தலையில் தேய்த்துக் குளித்தால் நாள்பட்ட தலைவலிக்கு நிவாரணம் கிடைக்கும். தலையின் முன்பக்கம், பின்பக்கம் விடாத அல்லது அடிக்கடி தலைவலி, ஒற்றைத் தலைவலி (மைக்ரேன்) போன்றவை குணமடைய குத்தூசி மருத்துவமும் செய்யப்படுகிறது. கை கட்டை விரலின் மேல்பகுதியின் முன்பக்கம், பின்பக்கம் என கட்டைவிரலை சுற்றி ஒரு சில நிமிடங்கள் அழுத்தம் கொடுத்தல் இம்முறையில் செய்யப்படுகிறது. குத்தூசி மருத்துவ முறையானது எந்தவிதமான பாதிப்பும், பக்கவிளைவுகளும் இல்லாத எளிய முறையாகும். 1928 1928 (MCMXXIII) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். நிக்காட்டீன் நிக்கோட்டின் "(Nicotine)" எனப்படுவது C10H14N2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதை நிக்காட்டீன் என்றும் அழைக்கிறார்கள். சில தாவர வகைகளில், சிறப்பாகப் புகையிலையிலும், சிறிய அளவில் தக்காளி, உருளைக்கிழங்கு, கத்தரி, பச்சை மிளகு போன்றவற்றிலும் இது காணப்படுகின்றது. இதனை, கோகேயின் என்னும் பொருளுடன் சேர்த்து கொக்கோ தாவரத்தின் இலைகளிலும் காணலாம். புகையிலையின் உலர் நிறையில் 0.6 - 3.0% நிக்காட்டீன் உள்ளது. இது புகையிலைச் செடியின் வேரில் உருவாக்கப்பட்டு இலையில் சேமிக்கப்படுகிறது. நிக்கோட்டின் ஒரு தாவர உண்ணி எதிர்ப்பு வேதிப்பொருள் ஆகும். இதனால் நிக்காட்டினை பூச்சிக்கொல்லிகளில் பயன்படுத்தினார்கள் . இதனையொத்த இமிடாகுளோப்பிரிட்டு சேர்மம் இன்னும் பரவலாகப் பயன்பாட்டில் உள்ளது. முதலில் பச்சைப் புகையிலையை நசுக்கி நீர் கொண்டு சாறு இறக்குகிறார்கள். கரைசலுடன் சிறிதளவு அமிலம் சேர்த்து பின்னர் ஈதர் கொண்டு அதிலுள்ள ஐதரோகார்பன்கள் நீக்கப்படுகின்றன. எஞ்சியிருக்கும் கரைசலுடன் காரம் சேர்க்கப்படுகிறது. பின்னர் ஈதர் ஆவியாக்கப்பட்டு நிக்கோட்டின் தயாரிக்கப்படுகிறது. 1828 ஆம் ஆண்டில் கிறிசுட்டியன் வில்லெம் போசெல்ட்டு மற்றும் செருமனியைச் சேர்ந்த காரல் லுட்விக் ரீமான் ஆகியோர் முதன் முதலில் புகையிலையில் இருந்து நிக்கோட்டினைப் பிரித்தெடுத்தனர். இதன் அனுபவ வாய்ப்பாட்டை மெல்சென்சு விவரித்தார். புகையிலை தாவரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் இதற்கு நிக்கோட்டின் என்று பெயர் வைக்கப்பட்டது. புகையிலைக்கு நிகோட்டினா டபாக்கம் என்பது பெயராகும். போர்த்துகீசியத்திற்கான பிரெஞ்சு தூதர் யீன் நிக்கோட் டி வில்லிமெயின் நினைவாகவும் இப்பெயர் சூட்டப்பட்டது. ஏனெனில் இவர் 1560 ஆம் ஆண்டில் பாரிசு மன்னருக்குப் பரிசாக புகையிலை மற்றும் விதைகளை அனுப்பிவைத்தார் . இதனுடைய மருத்துவப் பயன்பாடுகளை எடுத்துரைத்தார். சுரம் போன்ற நோயை நீக்குவதற்கு, குறிப்பாக பிளேக் நோயிலிருந்து விடுபடுவதற்கு புகைபிடித்தல் சிறந்த மருந்து என அக்காலத்தில் நம்பப்பட்டது. புகையிலை 1559 ஆம் ஆண்டில் ஐரோப்பாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது, 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இது புகைபிடிப்பிற்காகவும் பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுத்தப்பட்டது. உலக அளவில் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு 2,500 டன் நிகோட்டின் பூச்சிக்கொல்லியாக பயன்படுத்தப்பட்டது. ஆனால் 1980 களில் நிகோட்டின் பூச்சிக்கொல்லி பயன்பாடு 200 டன்னாக குறைந்தது. . மற்ற பூச்சிக்கொல்லிகள் மலிவாக கிடைத்ததும் அவை பாலூட்டிகளுக்கு குறைந்த அளவு தீங்கு விளைவிப்பதன் காரணமாகவும் இக்குறைவு உண்டானது. நிகோட்டினை தூசி வடிவில் கூட பூச்சிக் கொல்லியாகப் பயன்படுத்துவதை அமெரிக்காவின் கரிம வேளாண்மைக்கான அமைப்பு தடை செய்துள்ளது. அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை 2008 இல் நிக்கோட்டின் பூச்சிக்கொல்லியை இரத்து செய்யக் கோரும் கோரிக்கையைப் பெற்றுள்ளது. இக்கோரிக்கை ஏற்கப்பட்டு சனவர் 2014 முதல் நிக்கோட்டின் பூச்சிக் கொல்லியை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டது. நிக்கோட்டின் நீருறிஞ்சும் தன்மை கொண்டது ஆகும். நிறமற்றதாகவும் பச்சை, பழுப்பு வண்ணங்களிலும் எண்ணெய் போன்ற திரவமாகவும் இது காணப்படுகிறது. ஆல்ககால், ஈதர் அல்லது பெட்ரோலியம் போன்ற கரைப்பான்களில் எளிதில் கரையக்கூடியதாக உள்ளது. 60 ° செல்சியசு வெப்பநிலைக்கும் 210 ° செல்சியசுக்கும் இடைப்பட்ட வெப்பநிலையில் நீருடன் கலக்கிறது. நிக்கோட்டினை ஆக்சிசனேற்றம் செய்தால் நிக்கோட்டினிக் அமிலம் கிடைக்கிறது. நிக்கோட்டின் அமிகங்களுடன் சேர்ந்து உப்புகளை உருவாக்குகிறது. இவைதிண்மமாகவும் நீரில் கரையக் கூடியனவாகவும் உள்ளன. 95° செல்சியசு வெப்பநிலையில் இது தீப்பற்றி எரிகிறது. நிக்கோட்டின் எளிதில் ஆவியாகிறது. இதன் ஆவி அழுத்தம் 25 பாகை செல்சியசு வெப்பநிலையில் 5.5 பாசுக்கல் ஆகும். நிக்கோட்டின் உடலில் நுழைந்தவுடன் அது இரத்த ஓட்டத்தில் கலந்து விரைவாக விநியோகிக்கப்படுகிறது. மூச்சுடன் உள்ளிழுக்கப்பட்ட 10-20 வினாடிகளுக்குள் மூளைக்கு சென்று சேர்கிறது. உடலுக்குள் சென்ற நிகோட்டின் அங்கிருந்து நீக்கப்படும் அரை வாழ்வு நேரம் சுமார் இரண்டு மணி நேரம் ஆகும். புகைபிடிப்பவரின் உடலில் உறிஞ்சப்படும் நிகோட்டின் அளவு புகையிலையின் வகைகளை உள்ளடக்கிய பல காரணிகளைச் சார்ந்தது ஆகும். புகை நேரடியாக எடுக்கப்படுகிரதா அல்லது வடிகட்டி எடுக்கப்படுகிறதா என்பதும் கருத்திற்கொள்ளப்படுகிறது. நிக்கோடின் புகைப்பவர்களை எளிமையாக அடிமைப்படுத்திக் கொள்ளும். சராசரியாக ஒரு சிகரெட்டில் 2 மி.கி. நிக்கோடின் உறிஞ்சப்படுகிறது. இது பாலூட்டிகளில் தூண்டலை ஏற்படுத்துகிறது. நிக்கோட்டின் அளவு 50 மி.கி முதல் 100 மி.கி அளவை எட்டும்போது மிகவும் அபாயகரமான தீங்குகளை விளைவிக்கிறது. பொருளியல் தலைப்புகள் பட்டியல் அடிப்படைவாதம் அடிப்படைவாதம் "(Fundamentalism)" என்பது வழக்கமாக சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் மீது வைக்கும் அசைவிலாத பற்றுறுதியைக் குறிக்கும். என்றாலும், இது சில சமயக் குழுக்களின் விவிலிய இலக்கியத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்கும் போக்கை, அதாவது அதில் குறிப்பிட்டுள்ள வேதாகம உரைகளையும் வறட்டுவாய்பாடுகளையும் கருத்தியல்களையும் பின்பற்றும் நடைமுறைப் போக்கையும் அதன் உட்குழு புறக்குழு பாகுபாட்டை பற்றிகொண்டு ஒழுகுதலையும் குறிக்கிறது. இது குறிப்பிட்ட சமய உறுப்பினர்கள் பிறழ்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றும்போது, தூய்மைவாத நிலையில் முந்தைய கருத்தியல்களுக்கு மீட்பதில் உறுதிப்பாட்டையும் விருப்பார்வத்தையும் முன்வைக்கும் போக்காகும். இதனால், இந்நிறுவப்பட்ட மறைசார் அடிப்படைகளில் நின்று, இவ்வடிப்படைகள் சார்ந்தெழும் பன்முகக் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு குழுவுள்ளே அனைவராலும் ஏற்கப்பட்ட பொது கருத்தேற்பாக அடிப்படைவாதம் உருவாக்குகிறது. சூழலைச் சார்ந்து, அடிப்படைவாதம் ஒருபுறம் சாய்வதாக அல்லது கோடியதாக அமையுமே ஒழிய நொதுமல்/பொதுநிலையை ஏற்பதில்லை. இது, இடதுசாரி, வலதுசாரி அரசியல் கண்ணோட்டங்களைச் சிலர், எதிர்மறையாக நோக்குவதைப் போல, எதிர்மறை விளைவுகளைத் தருகிறது. குறிப்பாக விளக்க, அடிப்படைவாதம் என்பது, ஒரு நம்பிக்கை மீது ஆழமானதும், முழுமையானதுமான ஈடுபாடு கொண்டிருத்தல், சில அடிப்படைக் கொள்கைகளைக் கடுமையாகக் கடைப்பிடித்தல், தற்கால சமூக, அரசியல் வாழ்க்கை முறைகளுக்காக கொள்கைகளுக்காக விட்டுக்கொடுப்பதற்கு எதிரான துலங்கல் போன்றவற்றைக் குறிக்கும். அடிப்படைவாதம் என்பது முதலில் 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் ஐக்கிய அமெரிக்காவில், புரட்டஸ்தாந்த கிறிஸ்தவ மதப் பிரிவினரில் ஒரு பகுதியினரிடையே உருவான ஒரு தொகுதி நம்பிக்கைகளைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டது. இதன் மூலத்தை அக்காலத்தில் எழுந்த அடிப்படைவாதம், நவீனம் தொடர்பான சர்ச்சைகளிலே காணமுடியும். அடிப்படைவாத வழிமுறைகளைக் கைக்கொள்ளும் ஒருவர் அடிப்படைவாதி எனப்பட்டார். பிற்காலத்தில் இச் சொல் பொதுமைப்படுத்தப்பட்டு எந்த ஒரு தொகுதி நம்பிக்கைகளையும் இறுக்கமாகப் பின்பற்றுபவர்களைக் குறித்தது. எனினும், மதம் தொடர்பான நம்பிக்கைகள் தொடர்பிலேயே இதன் பயன்பாடு இருந்தது. இச் சொல்லைக் கிறிஸ்தவம் தொடர்பில் மட்டுமே பயன்படுத்த வேண்டுமென விரும்பிய கிறிஸ்தவர்கள் சிலர் பிற மதத்தினரையும் இச் சொல்லால் பொதுவாகக் குறிப்பதை விரும்பவில்லை. புத்தமத அடிப்படைவாதம் மயன்மாரில் நடந்ததைப் போல, பிற சமய, இனக்குழுக்களை இலக்காகக் கொண்டு தாக்கிவருகிறது. புத்தமத ஆதிக்க நாடாக, மயன்மார் புத்தமதப் பெரும்பான்மையினருக்கும் முசுலின் சிறுபான்மையினருக்கும் இடையில் 2013 பர்மிய முசுலிம் எதிர்ப்புக் கலவரத்தில், 969 இயக்கத்தின் அடிப்படைவாதக் குழுக்களால் வன்முறை தூண்டிவிடப்பட்டது. புத்தமதக் கிளைகளாகிய தேரவாதம், மகாயாணம், வச்சிரயாணம் ஒவ்வொன்றிலும் அடிப்படைவாதம் தலையெடுத்த வரலாற்றுக் கால, நிகழ்காலச் சான்றுகள் பலவுண்டு. கிறித்தவ அடிப்படைவாதம் குறிப்பிட்ட இறையியல் நெறிமுறைகளைக் கண்டிப்பாக பின்பற்றுவதற்கான கோரலாகஜார்ஜ் மாசுடன் அவர்களால் வரையறுக்கப்பட்டுள்ளது. இது, அடிப்படைவாத-புத்திய முரண்பாட்டால், புத்தியல் இறையியலுக்கான எதிர்வினையாக உருவாகியது. இந்தச் சொல் முதலில் அதன் ஆதரவாளர்களால் உருவாக்கப்பட்டது. இவர்கள் கிறித்தவத்தின் ஐந்து குறிப்பிட்ட ஐந்து அடிப்படை செவ்வியல்கால இறையியல் நம்பிக்கைகளாக கோரும் நெறிமுறைகள், கிறித்தவ அடிப்படைவாதத்தை ஐக்கிய அமெரிக்கப் புராட்டஸ்தாந்தச் சமூகத்தில் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் உருவாக்கியது. அடிப்படைவாதம் எனும் இயக்கம் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஐக்கிய அமெரிக்காவில் பிரின்சுடன் இறையியல் மடத்தில் இருந்த பழைமைவாத பிரெசுபைட்டேரிய இறையியலாளர்களிடையே எழுச்சி கண்டது. இது வேகமாக கிறித்துவத்தின் பிற பழைமைவாதப் பாதிரிகளிடையே 1910 முதல் 1920 கால அளவில் பரவி ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. இந்த இயக்கத்தின் நோக்கமாக இறையியல் அடிப்படைகளை மீள உறுதிப்படுத்திக் காப்பாற்றுவதோடு, தாராளவாத கிறித்துவம், உயர் அறிதிறத் திறனாய்வு ஆகியவை எழுப்பிய அறைகூவல்களை எதிர்கொள்வதாகும். அரசியலாக முனைப்போடு செயல்படும் பல இந்துத்துவ இயக்கங்களை அறிஞர்கள் இந்துத்துவ அடிப்படைவாதத்தின் பகுதியாக இனங்கண்டுள்ளனர். இசுலாமியத்துக்குள்ளான தீவிரவாதம் 7 ஆம் நூற்றாண்டு காரிசைட்டுகள் காலத்திலேயே தோன்றிவிட்டது. அவர்களது அடிப்படை அரசியல் நிலைப்பாட்டில் இருந்து, அவர்கள் முனைப்பான கடும்நெறிமுறைகளைச் சுன்னி, சியா முசுலிம்களின் முதன்மைப் போக்குகளில் இருந்து விலகி உருவாக்கினர். காரிசைட்டுகள், குறிப்பாக, தக்ஃபிர் சார்ந்த முனைப்பான அணுகுமுறையைப் பின்பற்றினர்; இதன்ல் இவர்கள் மற்ற முசுலிம்களை நம்பிக்கையற்றவர்களாகக் கருதி சாவடிக்கப்பட வேண்டியவர்களாக அறிவித்தனர். யூத அடிப்படைவாதம் முனைப்பான சீயோனியச் சமய ப் பான்மையைச் சுட்டுகிறது; இது சூடாயிசத்தின் அழ்சுகென்னாசி, செப்பார்டிய வகைமைகளை உள்ளடக்குகிறது. இயான் எசு. உலுசுதிக் யூத அடிப்படைவாதத்தை தேசம்கடந்த, ஏரணமற்ற, வெற்றுக் கருத்தியலாக வரியறுக்கிறார்." "அடிப்படைவாதி" எனும் சொல் இழிவுபடுத்துகிற அல்லது கொச்சைப்படுத்துகிற முறையில், "தமதுதான் ஒரே புறநிலை உண்மையின் வாயிலாக அமைகிறதெனக் காணும் அல்லது கருதும் மெய்யியல்களை", அவை சமயம் என்ற நிலையில் இல்லாவிடினும், குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துகாட்டாக, வேல்சின் முதன்மைப் பேராயர் "நாத்திக அடிப்படைவாதத்தை" விரிவாகத் திறனாய்வுக்கு ஆட்படுத்துவதைக் கூறலாம். மேலும் அவர் அடிப்படைவாதம், விவிலியமோ அல்லது நாத்திகமோ அல்லது இசுலாமியமோ, அது எந்த வடிவத்தில் அமைந்தாலும் அச்சமூட்டுவதே என வாதிடுகிறார். மேலும் அவர் கூறுகிறார்: "நமது காலத்துப் புதிய அடிப்படைவாதம் ... விலக்குதல், பிரித்துணர்தல், ஒருமுனைப்படுத்தல், முனைப்போடு இயங்கல் மொழியை உருவாக்குகிறது; மேலும் அது கடவுள் ஒருபக்கம் உணர்ப்படும்போது மறுபக்கம் இல்லையென அது வாதிடுகிறது." ஆங்கிலேயரான வேல்சு முதன்மைப் பேராயராகிய பாரி மார்கன் 2007 திசம்பரில் நாத்திக அடிப்படைவாதமாக அவர் கருதிய சிந்தனை முறைமை, சமயம் என்பதில் பொருளேதும் இல்லை எனவும் கடவுள் நம்பிக்கை என்பதில் விழுமியம் ஏதும் இல்லை எனவும் இவை பொருளற்ற மூடநம்பிக்கைகளே எனவும் கருதியதால். அதக் கடுமையாகத் தாக்கித் திறனாய்வு செய்தார்." தெக்சு சாம்பிள் என்பார் ஒரு தனி முசுலிமையோ யூதரையோ கிறித்தவரையோ அல்லது எந்தவொரு சமயம் சார்ந்தவரையோ அடிப்படைவாதி எனப் பொதுப்படக் கூறுதல் பிழையானது என உறுதிபடக் கூறுகிறார். மாறாக, ஓர் அடிப்படைவாதிக்கு மற்ற காரனிகளோ நம்பிக்கிச் சார்போ ஒரு பொருட்டன்று; அவரது அடிப்படைவாதமே அவருக்கு முதன்மையானதாகும். மிகுந்த தாக்கம் விளைவித்த அடிப்படைவாத்த் திறனாய்வுகளாக விவிலிய அறிஞர் ஜேம்சு பார் அவர்களின் கிறித்துவ அடிப்படைவாதம் சார்ந்த நூல்களும் இசுலாமிய அடிப்படைவதம் குறித்த பாசாம் திபி அவர்களின் பகுப்பாய்வும் அமைகின்றன. அடிப்படைவாதம் என்ற அரசியல் நோக்கப் பயன்பாடும் திறனாய்வுக்கு உட்படுத்தபட்டுள்ளது. அரசியல் குழுக்கள் அடிப்படைவாதம் எனும் சொல்லைத் தம் எதிரிகளைத் தாக்கவே, தமது அரசியல் ஆர்வங்களை வெளிப்படுத்தும் நெகிழ்வான சொற்களால் விளக்கிப் பயன்படுத்துகின்றனர். சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் ஆசிய ஆய்வு நிறுவனப் பேராசிரியர் ஜூடித் நகாத்தாவின் கூற்றின்படி, 1980 களில் சோவியத்துடன் பகைமையோடு போரிட்ட "ஆப்கான் "முசாகிதீன்"கள், அமெரிக்க ஆதரவாளர்களால் விடுதலைப் போறாளிகளாக அப்போது பாராட்டப்பட்டனர்; ஆனால், இப்போது தாலிபான் இயக்கம், அனைத்துக்கும் அப்பால், அமெரிக்க பகைவனான ஒசாமா பின் இலேடனைக் காக்கும் பாதுகாவல் அமைப்பாகவே பார்க்கப்படுகிறது; எனவே இவை இரண்டுமே அடிப்படைவாதமே ஆகும். எடின்பர்கு பல்கலைக்கழகம், ஓராய்வில் சமயம் சார்ந்த ஆறு மட்டங்களில் அடிமட்ட அறிதிறனாளிகளே உயர்மட்ட அடிப்படைவாதிகளாக விளங்குகின்றனர் எனக் கூறுகிறது. அசோசியேட்டெடு அச்சகத்தின் "ஏபி (AP) நடைநூலில்" தம்மை அடிப்படைவாதியாக ஏற்க விரும்பாத எந்தக் குழுவையும் குறிக்க இந்தச் சொல்லைப் பயன்படுத்தக் கூடாது எனப் பரிந்துரைக்கிறது. பல அறிஞர்கள் இந்த நிலைப்பாட்டை அல்லது இதையொத்த கண்ணோட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர். என்றாலும் மற்ற அறிஞர்கள், விரிவான பொருளில் இந்தச் சொல்லை பல சமய மரபுகளைச் சார்ந்த பலகுழுக்களை. இச்சொல்லால் தம்மைக் குறிப்பிட அறவே ஏற்றுக்கொள்ளாத குழுக்களையும் குறிக்க பயன்படுத்துகின்றனர். எம். வி. வெங்கட்ராம் எம்.வி.வெங்கட்ராம் (மே 18, 1920 - ஜனவரி 14, 2000) தமிழ் சிறுகதை இலக்கிய வளர்ச்சிக்கு பங்களிப்பு நல்கிய தமிழக எழுத்தாளர். 16வது வயதில் முதன் முதலில் இவர் எழுதிய "சிட்டுக்குருவி" என்ற சிறுகதை மணிக்கொடியில் வெளியானது. 1993 ஆம் ஆண்டில் இவர் எழுதிய "காதுகள்" என்ற புதினத்திற்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. "விக்ரஹவிநாசன்' என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதியுள்ளார். 1920 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் சௌராஷ்டிரக் குடும்பத்தில் வீரய்யர்-சீதை அம்மாள் தம்பதிக்குப் பிறந்தார் வெங்கட்ராம். ஐந்தாம் வயதில் தாய்மாமன் வெங்கடாசலம்-சரஸ்வதி குடும்பத்தினர் இவரைத் தத்து எடுத்துக் கொண்டனர். பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் எடுத்தவர். தொடக்கத்தில் பட்டுச் சரிகை வணிகம் செய்து கொண்டு மணிக்கொடியில் சிறுகதைகள் எழுதினார். 1941-1946 காலப்பகுதியில், கலாமோகினி, கிராம ஊழியன், சிவாஜி ஆகிய இதழ்களிலும் அடிக்கடி எழுதி வந்தார். 1965-1970 காலகட்டத்தில் தனது பட்டுச்சரிகை வணிகத்தைக் கைவிட்டு முழுநேர எழுத்தாளர் ஆனார். ஆங்கிலத்தில் இருந்து தமிழில் நிறைய மொழிபெயர்த்திருக்கிறார். 1948 இல் "தேனீ" என்ற இலக்கிய இதழைச் சில காலம் நடத்தினார். 'தேனீ ' இதழில் மௌனி போன்ற எழுத்தாளர்களின் சிறுகதைகளைப் பதிப்பித்திருக்கிறார். அவரது வீடு இலக்கியவாதிகளின் சந்திப்புவெளியாக எப்போதும் இருந்து வந்தது. இவரது சிறுகதைகள் முழுத்தொகுப்பாக எம்.வி.வெங்கட்ராம் கதைகள் என்ற பெயரில் வெளியாகியிருக்கின்றன. பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனத்துக்காக அறுபது சிறுநூல்களை எழுதினார். நாட்டுக்கு உழைத்த நல்லவர் என்ற வரிசையில் தேசபதர்களைப்பற்றிய பள்ளிமாணவர்களுக்கான் நூல்கள் இவை. மொத்தக்கூலிக்காக இவற்றை எம்.வி.வெங்கட்ராம் எழுதினார். இப்போது நாற்பதுக்கும் மேற்பட்ட பதிப்புகள் வந்துள்ளன மனைவி ருக்மணி அம்மாள், 4 மகன்கள், 3 மகள்களுடன் பெரிய குடும்பம் இவரது. 1952-53-களில் கவுன்சில் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.2000-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி அவர் மறைந்தார் ஆனந்த விகடனில் 1970களில் "நஞ்சு" என்ற தொடர் நாவலை எழுதினார். "பாலம்" என்ற இதழின் கௌரவ ஆசிரியராக இருந்தபோது அதில் அதில் "காதுகள்' நாவலை எழுதினார். 1993-ஆம் ஆண்டு "காதுகள்' புதினத்துக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. "வேள்வித்தீ" என்ற புதினம் சௌராட்டிர நெசவாளர்களின் வாழ்க்கையைப் பிரதிபலித்தது. பெரியாரியல் பெரியாரியல் என்பது பெரியாரின் பேச்சு, எழுத்து, செயற்பாடு ஆகிவற்றின் அடிப்படையில் அமைந்த கருத்தாக்கங்கள் ஆகும். பெரியார் 20 ஆம் நூற்றாண்டின் தமிழ்ச் சமூகத்தின் செல்வாக்கு மிக்க சிந்தனையாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி என பின்னர் வந்த அனேக தலைவர்கள் அவரின் சிந்தனையின் பல கூறுகளை ஏற்றுக்கொண்டவர்கள். பெரியார் தமிழ்ச் சமூகத்தில் புரட்சிகர மாற்றங்களைச் செயற்படுத்தியவர். சாதிய கட்டமைப்பு, மூடநம்பிக்கைகள், ஆண் ஆதிக்கம், படிப்பறிவின்மை, ஏழ்மை மிகுந்து இருந்த காலத்தில் அவரது சிந்தனைகள் தமிழ்ச் சமூகத்தை முன்னேற்ற வழியில் செலுத்தின. அவரது சிந்தனைகளில் பகுத்தறிவு, பெண்ணுரிமை, சமத்துவம், சமூக முன்னேற்றம், இறைமறுப்பு ஆகிய கொள்கைகள் முக்கிய இடம் வகிக்கின்றன. கேப் யோர்க் தீபகற்பம் கேப் யோர்க் தீபகற்பம் ("Cape York Peninsula") என்பது ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் தூர வடக்கில் அமைந்துள்ள ஒரு தீபகற்பம் ஆகும். தனிமைப்படுத்தப்ப்பட்ட இத்தீபகற்பம் பூமியில் எஞ்சியுள்ள ஒருசில காட்டுப்பிரதேசங்களில் ஒன்றாகும். இதன் மாசடையா வெப்பவலய மழைக்காட்டுகள் உலக காலநிலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. உலக பாரம்பரியக் களமாக இதனை அறிவிக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது. கேப் யோர் தீபகற்பம் கிட்டத்தட்ட 137,000 கிமீ² பரப்பளவைக் கொண்டது. இதன் மக்கள் தொகை 18,000 ஆகும். இவர்களில் 60 விழுக்காட்டினர் ஆஸ்திரேலிய பழங்குடிகளும், டொரெஸ் நீரிணைத் தீவு மக்களும் ஆவர். இத்தீபகற்பத்தின் மிக உயரமான இடம் "கேப் யோர்க்" ஆகும். கப்டன் ஜேம்ஸ் குக் இப்பெயரை இவ்விடத்திற்கு 1770 ஆம் ஆண்டில் சூட்டினார். மிக உயரமான இடத்தில் இருந்து 160 கிமீ தூரத்தில் டொரெஸ் நீரிணையை அடுத்து நியூ கினி அமைந்துள்ளது. இதன் மேற்குப்புற எல்லையில் கார்ப்பெண்டாரியா குடாவும், கிழக்கே கோரல் கடலும் அமைந்துள்ளன. ஆஸ்திரேலியா நாள் ஆஸ்திரேலியா நாள் ("Australia Day"), என்பது ஆண்டு தோறும் ஜனவரி 26 ஆம் நாளன்று ஆஸ்திரேலியா முழுவதும் தேசிய ரீதியாகக் கொண்டாடப்படும் நிகழ்வாகும். இது ஆஸ்திரேலியாவில் முதன் முதலாக பிரித்தானியக் குடியேறிகள் வந்திறங்கிய நாளை நினைவு கூரும் முகமாக கொண்டாடப்படுகிறது. 1788 இல் இந்நாளில் நியூ சவுத் வேல்ஸ், ஜாக்சன் துறையில் ஆளுநர் ஆர்தர் பிலிப் என்பவரால் முதலாவது குடியேற்ற நாடு அமைக்கப்பட்டது. ஆஸ்திரேலியா நாள் நாடு முழுவதும் ஒரு பொது விடுமுறை நாளாகும். முதலாவது ஆஸ்திரேலியா நாள் 1808 ஆம் ஆண்டில் கொண்டாடப்படட்து. அப்போது ஆளுநராக இருந்த லக்லான் மக்குவாரி இவ்விழாவை அதிகாரபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். 2004 ஆண்டில், கிட்டத்தட்ட 7.5 மில்லியன் மக்கள் நாடெங்கும் நிகழ்ந்த வைபவங்களில் கலந்து கொண்டனர். வான் டீமனின் நிலம் வான் டீமனின் நிலம் ("Van Diemen's Land") என்பது ஆஸ்திரேலியாவின் தற்போதைய மாநிலமான தாஸ்மானியா தீவிற்கு ஆரம்பத்தில் ஐரோப்பியர்கள் வைத்த பெயராகும். டச்சு நாடுகாண் பயணி ஏபல் டாஸ்மான் தாஸ்மானியாவில் காலடி வைத்த முதலாவது ஐரோப்பியர் ஆவர். டச்சு கிழக்கிந்தியக் கம்பனியின் ஆளுநரான அந்தனி வான் டீமனின் நினைவாக டாஸ்மான் இத்தீவிற்கு "வான் டீமனின் நிலம்" எனப் பெயரிட்டார். 1803 இல் இத்தீவு பிரித்தானியரினால் குற்றவாளிகளின் குடியேற்றமாக மாற்றப்பட்ட போது இது பிரித்தானியக் குடியேற்ற நாடான நியூ சவுத் வேல்சின் பகுதியாக "வான் டீமனின் நிலம்" என்ற பெயரில் இணைக்கப்பட்டது. 1824 ஆம் ஆண்டில் இத்தீவு நியூ சவுத் வேல்சில் இருந்து பிரிக்கப்பட்டு தனியான குடியேற்றப் பிரதேசமாக மாற்றப்பட்டது. 1856 ஆம் ஆண்டில் இப்பிரதேசம் சுயாட்சி கொண்ட தனியான நாடாளுமன்றதைக் கொண்ட நாடாக ஆக்கப்பட்டு அதற்கு தாஸ்மானியா என்ற பெயரும் இடப்பட்டது. 1830களில் இருந்து 1853 ஆம் ஆண்டில் குற்றவாளிகள் அனுப்பப்படுவது நிறுத்தப்படும் வரையில் வான் டீமனின் நிலமே ஆஸ்திரேலியாவின் முக்கிய குடியேற்ற நாடாக இருந்தது. மொத்தமாக 75,000 குற்றவாளிகள் இத்தீவிற்கு அனுப்பப்பட்டனர். இது ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்ட குற்றவாளிகளின் 40 விழுக்காடு ஆகும். ஆண் குற்றவாளிகள் பல்வேறு தொழில்களிலும் நியமிக்கப்பட்டனர். கடுமையான குற்றவாளிகள் டாஸ்மான் தீபகற்பத்தில் உள்ள சிறையில் (போர்ட் ஆர்தர்) வைக்கப்பட்டனர். பெண்கள் ஏனைய விடுதலை பெற்ற குடியேறிகளின் வீடுகளில் வேலைக்காக அனுப்பப்பட்டனர். அல்லது பெண்களுக்கான தொழிற்சாலைகளில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். வான் டீமனின் நிலத்தில் மொத்தம் ஐந்து பெண்கள் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. விடுதலை பெற்ற பலர் தீவை விட்டு விலகி விக்டோரியாவில் குடியேறினர். இதனால் விக்டோரியாவில் ஏற்கனவே குடியேறியிருந்த குடியேற்றவாசிகளுக்கும் வான் டீமனில் இருந்து வந்தவர்களுக்கும் இடையில் அடிக்கடி கலகங்கள் ஏற்படலாயின. 1770 1770 (MDCCLXX) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமானது. சமூகம் சமூகம் "(Society)" என்பது ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவைக் குறிக்கும், ஒரேமாதிரியான புவியியல் நிலப்பகுதியில் வாழ்கின்ற ஒரு பெரிய மக்கள் குழுவையும் சமூகம் எனலாம். அல்லது ஒரே மாதிரியான அரசியல் அதிகாரத்திற்கு உட்பட்ட சமூகப் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் குழுவையும் சமூகம் எனலாம். இக்குழுவில் உள்ளவர்களிடையே தொடர்ச்சியான சமூக உறவுகள் காணப்படும். இவ்வகையான குழுக்களில் இருப்பவர்கள் மேலாதிக்க கலாச்சார எதிர்பார்ப்புகளுக்கு உட்பட்டிருப்பர். தனித்துவமான பண்பாடு, நிறுவனம் சார்ந்த தொடர்புகள் இத்தகைய குழுவினரின் அடிப்படையாக அமைந்திருக்கும். விரிந்த அளவில் நோக்கும்போது சமூகம் என்பதை பல்வேறுபட்ட மக்கள் அல்லது மக்கள் கூட்டத்தை உள்ளடக்கிய பொருளியல், சமூக மற்றும் தொழில்துறை உட்கட்டமைப்பு எனலாம். பொதுவாக சமூகம் என்பது "தமிழர்" என்பது போல ஒரு குறிப்பிட்ட மக்களையோ, "இலங்கை" என்பதுபோல ஒரு நாட்டையோ அல்லது "மேல்நாட்டுச் சமூகம்" என்பதுபோல ஒரு பரந்த பண்பாட்டுக் குழுவையோ குறிப்பதாகக் கொள்ளலாம் . இக்குழுக்கள் ஏதொவொரு வகையில் கூட்டுறவாக இயங்குவதால் அக்குழு சார்ந்த சமூகத்திற்கும், சமூக உறுப்பினர்களுக்கும் நன்மைகள் உண்டாகின்றன. கூட்டுறவு மனப்பான்மை இல்லாவிடில் இத்தகைய நன்மைகள் தனிநபர்களுக்கு கிடைப்பது இயலாததாகிவிடுகின்றது. தனிப்பட்ட மற்றும் சமூகத்திற்கு கிடைக்கின்ற பொதுவான நன்மைகள் வேறுபடுகின்றன. பல சந்தர்ப்பங்களில் இவை ஒன்றுடன் ஒன்றாய் சேர்ந்து இரண்டுக்கும் பொதுவாக்கின்றன. தனியர்கள் தங்கள் சொந்த நெறிகள் மற்றும் மதிப்புகளை கடைபிடித்துக் கொண்டு மேலாதிக்கம் கொண்ட பெரிய சமுதாயத்திற்குள்ளும் அங்கத்தினர்களாக வாழமுடியும். சில சமயங்களில் இத்தகைய ஒரே சிந்தனை கொண்ட மக்கள் குழு துணைக்குழு என்று குறிப்பிடப்படுகிறது, இச்சொல்லாடல் குற்றவியல் கோட்பாட்டிற்குள் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. அரசறிவியலில், சமூகம் என்பது மனிதத் தொடர்புகள் முழுமையையும் குறிக்கப் பயன்படுகிறது. சமூகவியல் போன்ற சமூக அறிவியல் துறைகளில், சமூகம் என்பது ஓரளவு மூடிய சமூக முறைமையை உருவாக்கும் மக்கள் கூட்டத்தைக் குறிக்கும். இதில், பெரும்பாலான ஊடுதொடர்புகள் அதே கூட்டத்தைச் சேர்ந்தவர்களுடனேயே இடம்பெறுகின்றன. சமூகம் என்பது சில வேலைகளில் பண்பாடு என்பதிலிருந்து முரண்பட்டதாகக் கருதப்படுகிறது. எடுத்துக்காட்டாக, கிளிபர்ட் கீர்ட்ஸ் என்பவர், "சமூகம்" என்பது சமூகத் தொடர்புகளின் உண்மையான ஒழுங்கமைவு என்றும், "பண்பாடு" என்பது நம்பிக்கைகளாலும், குறியீட்டு வடிவங்களாலும் ஆனது என்றும் குறிப்பிட்டார். ரிச்சார்ட் யெங்கின்சு என்னும் சமூகவியலாளர், சமூகம் என்பது மனிதர் எதிர்கொள்ளும் பல்வேறு இருப்பியல் பிரச்சினைகளைக் கையாளுகிறது என்கிறார். "சமுதாயம்" என்பது லத்தீன் வார்த்தையான societas, என்ற சொல்லில் இருந்து வந்துள்ளது. இதுவும் தோழர், நண்பன், நட்பு என்ற பொருள் கொண்ட socius என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகும். படைப்பு ஏதும் இல்லாத நிலையில் சமூகம் என்பது முழுமையான மனிதத்தைக் குறிப்பதாகப் பார்க்கப்படுகிறது. சமூகத்தின் கட்டுபாடுகளுக்கு மதிப்பளிக்காதவர்கள் சமூக எதிர்ப்பாளர்களாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், இசுக்காட்லாந்தின் பொருளாதார வல்லுனரான ஆடம் சிமித் இவ்வாறு கூறுகிறார். "வெவ்வேறு வணிகர்களிடையே வேறு எந்தவொரு பரசுபர அன்பும் பாசமும் இல்லாமல் இல்லாமல் நிலவும் உறவு முறையே சமூகம் என்கிறார். ஒரு சமுதாயம் என்ற பொருளில் பயன்படுத்தப்படும்போது, சமுதாயம் என்பது செயல்பாட்டு உறவுகளின் எல்லைகளால் வரையறுக்கப்பட்ட தனிநபர்களால் உருவாக்கப்படும் ஒரு அமைப்பாகும். தேசிய அல்லது கலாச்சார அடையாளங்கள், சமூக ஒற்றுமை, மொழி, அல்லது படிநிலை அமைப்பு போன்ற சிறப்பியல்புகளை இவ்வமைப்பு கொண்டிருக்கும். உற்பத்தி சாதனங்கள் மற்றும் கருவிகள் அனைத்தும் சமூகத்தின் பொது சொத்தாக இருந்தது. கல் ஆயுதங்கள் முதல் வில் அம்பு வரை பொதுவிலிருந்தது. ஆந்த ஆதி மனிதர்கள் இயற்கையையும், காட்டு மிருகங்களையும் எதிர்த்து போராடி வாழ்ந்தார்கள். எனவே கூட்டு வாழ்வு, கூட்டு உழைப்பு, உற்பத்தி பலனை பொதுவில் அனுபவிப்பது நடைமுறையாக இருந்தது. சுரண்டலற்ற, வர்க்கங்களற்ற சமூக அமைப்பாக அது இருந்தது. இதில் உற்பத்திச் சாதனங்கள் அடிமை எஜமானர்களுக்கு (ஆண்டை) சொந்தம். அடிமையும், ஆண்டையின் உடமைதான். அடிமைகளை மிருகங்கள் போல வாங்கலாம், விற்கலாம். கல் ஆயுதங்களுக்கு பதில் இரும்பு, செம்பு போன்ற உலோக ஆயுதங்கள் வந்தன. விவசாயம், கைத்தொழில் வளர்ந்தது. ஏராளமான வேலைப் பிரிவினைகள் ஏற்பட்டன. அடிமைகளின் எலும்புக் கூடுகளால் உருவான சமூகம் இது. அடிமைகளின் உழைப்பை நிர்பந்தமாய் சுரண்டி ஆண்டைகள் கொழுத்தனர். தனியுடமை, அரசு, குடும்பம் தோன்றின. உற்பத்திச் சாதனங்களனைத்தும் இதில் நிலப்பிரபுவுக்கு சொந்தம். ஆனால் உழைப்பாளி நிலப்பிரபுவின் அடிமையல்ல. அவனை முன்பு போல் மிருகம் போல வாங்கி விற்பது, கொலை செய்வது முடியாது. கருவிகளில் பெரும் வளர்ச்சி ஏற்பட்டது. இரும்பை உருக்கி கருவிகள, கலப்பைகள், தறிகள் என்று கைத்தொழில் வளர்ச்சியடைந்தது. முன்பு அடிமையாக இருந்தோர் தற்போது சொந்த வேளாண்மை, கைத்தொழில் செய்யலாம். ஆனால் நிலப்பிரபுவுக்காக உழைக்க வேண்டும். சாகுபடி செய்து அறுவடையில் பங்குதர வேண்டும். இந்த முறையில் சுரண்டல் கொடுமை நெடுங்காலம் நீடித்தது. இதில் உற்பத்திச் சாதனங்களான தொழிற்சாலைகளும், கருவிகளும் முதலாளிக்கு சொந்தம். உற்பத்தி கருவிகள் உழைப்பாளிகளிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது. தொழிலாளி தனது உழைப்பை விற்று வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. கைத்தொழில்கள் சிதைந்து எந்திர உற்பத்தி பெருமளவில் வளர்ச்சியடைந்தது. நிலங்கள் முதலாளித்துவ விவசாய பண்ணைகளாய் உருமாறின. விஞ்ஞானம், தொழில்நுட்பம் இவற்றால் பிரம்மாண்டமான வளர்ச்சி ஏற்பட்டது. முதலாளித்துவ முரண்பாடுகளாலும், உற்பத்தியின் சமூக தன்மைக்கு உற்பத்திச் சாதனங்கள் தனியுடைமை விரோதமானதாக ஆகிறது. இதனால் புரட்சியின் மூலம் முதலாளித்துவ சமூகம் வீழ்ந்து பொதுவுடைமை சமூகம் பிறக்கிறது. இச்சமூகத்தில் உற்பத்திச் சாதனங்களும், கருவிகளும் சமுதாய உடைமையாகின்றன. உழைப்புக்கேற்ற பங்கீடு கிடைக்கும். உழைக்காதவனுக்கு சோறில்லை. இச்சமூகத்தில் உற்பத்தி சக்திகளுக்கு முற்றிலும் பொருத்தமான உற்பத்தி உறவுகள் நிலவுகின்றன. நிலப்பிரபுத்துவ சமூகத்தில் நிலத்தின் உரிமையை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தின் ஒரு வடிவமாகும். இன்றைய விவசாயிகள் போலல்லாமல், நிலப்பிரபுத்துவத்தின் கீழ் சிற்றரசர்களாக இருப்பவர்கள் தங்கள் கடவுளின் தேசத்தில் வேளாண்மை செய்து வருவர். பிரபுக்கள், நில உரிமையாளர்கள் உணவு, பயிர்கள், கைவினை, அஞ்சலி, மற்றும் பிற சேவைகளை விவசாயிகளுக்கு சாதகமாக வழங்குவர். நிலப்பிரபுத்துவ உலகினில் விவசாயிகள் தங்கள் தலைமுறைக்காக கடவுளின் நிலத்தினில் வேளாண்மை செய்து வந்தனர். தொழிற்புரட்சிக்கு முந்தைய சமுதாயத்தில் மனித மற்றும் விலங்கு உழைப்பின் மூலம் உணவு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது ஒரு முக்கியமான பொருளாதார நடவடிக்கை ஆகும். இந்த சமுதாயங்கள் அவற்றின் தொழில்நுட்பத்தின் நிலை மற்றும் உணவு தயாரிக்கும் முறை ஆகியவற்றின் அடிப்படையில் மேலும் பிரிக்கப்பட்டன. வேட்டையாடுதல் மற்றும் சேகரிப்பது, மேய்ச்சல், தோட்டக்கலை, வேளாண்மை, மற்றும் நிலப்பிரபுத்துவ சமுதாயம் என்பன அத்துணைப்பிரிவுகள் ஆகும். . 15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஒரு புதிய பொருளாதார முறை, என்று நிலப்பிரபுத்துவ பதிலாக தொடங்கியதே தொழில்துறை சமூகங்கள் . தொழிலாளர்கள் தங்கள் முதலாளிகளுக்கு உழைத்து ஊதியங்கள் வாங்குபவை நடைமுறைக்கு வந்தன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இம்முறை பெரிதும் பயன்படுத்தப்பட்டன. தொழிற்துறை சமுதாயங்களுக்குப் பிந்தைய சமூதாயங்கள் பொருட்கள் உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்பம் ஆகியவற்றால் ஆதிக்கம் செலுத்தும் சமுதாயங்களாக உள்ளன. மேம்பட்ட தொழிற்துறை சங்கங்கள் தற்போது தயாரிப்பு மற்றும் உற்பத்தித் துறையில் சேவைத் துறையின் அதிகரிப்புக்கான ஒரு மாற்றத்தை எதிர்நோக்குகின்றன. சேவை தொழில்களில் பணியாற்றும் அதன் பணியாளர்களில் பாதிக்கும் மேலாக அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. சேவை தொழில்கள் அரசாங்கம், ஆராய்ச்சி, கல்வி, சுகாதாரம், விற்பனை, சட்டம், மற்றும் வங்கி ஆகியவை அடங்கிய சேவைத் துறைகளில் தங்கள் பணியாளர்களை ஈடுபடுத்துவதில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. சமூகங்கள் அரசியல் ரீதியாகவும் கட்டமைக்கப்படலாம். இந்தச் சமூகங்களின் அளவு மற்றும் கூட்டுறவை அதிகரிக்கும் பொருட்டு, இனப்பட்டைகள், பழங்குடிகள், மாநிலச் சங்கங்கள் ஆகியவை தோற்றம் பெருகின்றன. இந்த சமுதாயங்களின் கலாச்சார, புவியியல், மற்றும் வரலாற்று சூழல்களின் அடிப்படையில் இவற்றின் கட்டமைப்புகள் பல்வேறு அரசியல் அதிகாரங்களைக் கொண்டிருக்கின்றன. பிற சமூகங்கள் போல அதே அளவிலான தொழில்நுட்பத்தையும் கலாச்சாரத்தையும் கொண்டு தனிமைப்படுத்தப்பட்ட சமுதாயம் தொடர்ந்து நிலைத்திருக்கிறது. இப்பண்புகள் ஒரு சமூகத்தில் அதிகரிக்கும்போதும் குறையும் போதும் போட்டிகள் உண்டாகின்றன. கலாச்சாரம், அரசியலமைப்பு, கருத்துக்கள் ஆகியவற்றில் வளர்ந்து வரும் கருத்தாக்கங்களைக் கொண்டு வந்துள்ள சமூகம் மேற்கத்திய சமூகம் எனப்படுகிறது. புவியியல் ரீதியாக, இது மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆத்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் இச்சமூகத்தில் அடங்குகின்றன. சில சந்தர்ப்பங்களில் கிழக்கு ஐரோப்பா, தென் அமெரிக்கா, மற்றும் இசுரேல் ஆகிய நாடுகளும் இதில் சேர்த்துக் கொள்ளப்படுவதுண்டு. . அனைத்து கலாச்சாரங்களும், வாழ்க்கை முறையும் மேற்கு ஐரோப்பாவின் வேர்கள் என்று கருதப்படுகின்றன. அவர்கள் எல்லோரும் வலுவான பொருளாதார நிலையையும் நிலையான அரசாங்கங்களையும் அனுபவித்து வருகின்றனர். , மத சுதந்திரம் அங்கு அனுமதிக்கப்படுகிறது. குடியரசு முறை ஆட்சியின் வடிவமாகவும் அதேவேளையில் முதலாளித்துவத்திற்கு ஆதரவானதாகவும், சர்வதேச வர்த்தகத்திற்கு ஆதரவளிப்பதாகவும் உள்ளது. கிறித்துவ மத நம்பிக்கைகளும் சில வகையான அரசியல் மற்றும் இராணுவ கூட்டு அல்லது ஒத்துழைப்பும் இங்கு ஆதிக்கம் செலுத்துகின்றன.தகவல் தொழில்நுட்ப சமூகம், அறிவுச்சமூகம் போன்ற சமூகங்களும் இன்று விரிவடைந்து வருகின்றன. அரசின்மை அரசின்மை அல்லது அராசகம் (Anarchism) என்பது அரசு, சமயம், நிறுவனம் போன்ற அதிகார மையங்களுக்கு எதிரான ஒரு அரசியல் கோட்பாடு ஆகும். மனித செயற்பாடுகளில் அரசை அல்லது அதிகாரத்தை மட்டுப்படுத்துவதை அல்லது இல்லாமல் செய்வதை இது நோக்கக் கொண்டது. படிநிலை அரசமைப்பின்றி தனியான முழுச் சுதந்திர அமைப்பான நிறுவனக் கொள்கையாக பல எழுத்தாளர்கள் இதனை வரையறுக்கிறார்கள். அரசின்மை விரும்பத்தக்கதன்று, தேவையற்றது மற்றும் தீங்கு விளைவிக்கக்கூடியது என்ற கருத்தும் உள்ளது. பல்வேறு விவகாரங்களில் அரசின் தலையீட்டினை எதிர்ப்பதே அரசின்மையின் அடிப்படை ஆகும். அராஜகவாதத்தின் சில கூடங்கள், மனித உறவுகளின் நடத்தைகளின் மீது தொடுக்கப்படும் வேறுவிதமான அதிகாரங்களை எதிர்க்கின்றன.அரசின்மை அல்லது அராஜகவாதம் பல்வேறு பொருளாதார அமைப்புகளுடன் இணக்கமாக உள்ளது. அவை முதலாளித்துவ, புவிசார், பரஸ்பர மற்றும் சமத்துவ வடிவங்களாக உள்ளன. அராஜகவாத பொருளாதாரம் மற்றும் அராஜகவாத சட்ட தத்துவம் ஆகியவை கம்யூனிச எதிர்ப்பு, பொதுக்கூட்டுடைமை, கூட்டோச்சற் கொள்கை, பரஸ்பரவாதம் அல்லது பங்களிப்பு பொருளாதாரம் ஆகியவற்றில் எதிரொலிக்கின்றன. அராஜகவாதம் ஒரு தனித்துவமான உலகக் கண்ணோட்டத்தில் இருந்து ஒரு நிலையான கோட்பாட்டை வழங்காது, அதற்கு பதிலாக ஒரு தத்துவமாக நெகிழும் அல்லது பாயும் தன்மையைக் கொண்டுள்ளது. பல வகையான அரசின்மை மரபுகள் இருப்பினும் அவைகளுள் அனைத்தும் ஒத்த தனித்துவம் கொண்டதல்ல. சிந்தனையின் அராஜகவாத பள்ளிகள் அடிப்படையிலேயே வித்தியாசமாக வேறுபடுகின்றன, தீவிர தனிநபர்வாதத்திலிருந்து எந்தவொரு ஆதரவையும் கூட்டுவாதத்தை நிறைவு செய்ய உதவுகின்றன. அராஜகவாதத்தின் விகாரங்கள் பெரும்பாலும் சமூக மற்றும் தனிநபர் அராஜகவாதம் அல்லது இதேபோன்ற இரட்டை வகைப்பாடு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அராஜகவாதம் பொதுவாக ஒரு தீவிர இடது சிந்தனையாகக் கருதப்படுகிறது இதன் கருத்துருவுக்கான சொல் முதலில் "ஆட்சியாளர் இன்றி" எனப் பொருள்படும் கிரேக்கமொழியில் உருவாகி அதே பொருளுடன் வேறு மொழிகளுக்கும் பரவியது. அராஜகம் என்பது இதே பொருள் கொண்ட சமசுகிருதச் சொல்லாகும். அரசியலுக்கான சுருக்க ஆக்சுபோர்ட் அகரமுதலியில் (The Concise Oxford Dictionary of Politics) கொடுத்துள்ளபடி, அராஜகம் என்பது, இறுக்கமான அரசு இல்லாமல் ஒரு சமூகத்தை ஒழுங்கமைக்க முடியும் என்றும், ஒழுங்கமைக்க வேண்டும் என்றும் கருதும் ஒரு நோக்கு ஆகும். எனினும் பல்வேறு கருத்துநிலைகள் அரசின்மை கோட்பாட்டில் உள்ளன. ஆரம்பகால அரசின்மைக் கருப்பொருள்கள் கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் தாவோயிஸ்டு தத்துவவாதி லொஜோவின் படைப்புகளில் காணலாம், நூற்றாண்டுகளுக்குப் பின்னர் ஜுவாங்சி மற்றும் பாவ் ஜிகியான் ஆகியோரும் இதனை முன்னெடுத்தனர். ஜுவாங்சியின் தத்துவத்தை அரசின்மையாளர்களின் பல்வேறு ஆதாரங்கள் இதனை விவரிக்கின்றன. ஜுவாங்சி "ஒரு சிறு திருடன் சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார். ஒரு பெரிய மலைக் கள்ளன் ஒரு தேசத்தின் ஆட்சியாளராவார்" இவ்வாறு எழுதியுள்ளார். சினோப்பின் தியோஜெனெஸ் மற்றும் சைனிக்ஸும், உறுதிப்பாட்டுவாதத்தை தோற்றுவித்த நிறுவனர் சிட்டியத்தின் சமகாலத்திய ஜெனோவும் இதே போன்ற தலைப்பை அறிமுகப்படுத்தினர். கிறிஸ்துவ அராஜகவாத பாரம்பரியத்தில் முதல் அராஜகவாதியாக இயேசு சில சமயங்களில் கருதப்படுகிறார். ஜார்ஜ் லெகார்டியர் இவ்வாறு எழுதினார்: "அராஜகத்தின் உண்மையான தோற்றவர் இயேசு கிறிஸ்துவே... முதல் அராஜகவாத சமுதாயத்தினர் அப்போஸ்தலர்களே." ஆரம்பகால இஸ்லாமிய வரலாற்றில் அரசின்மை சிந்தனையின் சில வெளிப்பாடுகள் கலிபக இஸ்லாமிய உள்நாட்டுப் போரில் காணப்படுகின்றன இஸ்லாமிய சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் இமாம் என்பது ஒரு உரிமை என்று போரினால் பாதிக்கப்பட்ட ஹரிஜித்கள் வலியுறுத்தினார். பல்வேறு இடதுசாரிகளும் அரசின்மைக் கோட்பாட்டாளர்களும் இணைந்து 1864 இல் முதலாம் தொழிலாளர் ஒன்றியத்தை அமைத்தனர். சில ஆண்டுகளிலேயே மார்க்சிய, சமவுடமை இடதுசாரியினருக்கும் அரசின்மைக் கொள்கையாளர்களுக்கும் இடையே வேறுபாடு வளர்ந்தது. எல்லா அதிகாரத்தையும், அரசுக் கட்டமைப்பையும் எதிர்த்தல் என்ற அரசின்மைக் கொள்கைக்கு மார்கிய கொள்கையாளர்கள் உடன்படவில்லை. அவர்கள் அதிகாரத்தை தொழிலாளர்கள் கைப்பற்ற வேண்டும் என்று கருதினர். அரசின்மைக் கொள்கையாளர்களுக்கு (Bakunin) அதிகாரம் புரட்சிவாதிகளையும், எல்லோரயும் மாசுபடுத்தும் என்றும், யார் அரசுக்கு வந்தாலும் அவர் சர்வதிகாரத்தை நோக்கி நகர்வார் என்றும் கூறினர். இந்த முக்கிய வேறுபாட்டால் அரசின்மையாளர்கள் 1872 இல் விலகினார்கள். அரசின்மை கோபாடு பல கருத்து நிலைப்பாடுகளைக் கொண்டது. எந்த சட்டத்தையும், கொள்கையையும் பேணாமால் எல்லா அதிகாரத்தையும் எந்த வழியாலும் அழி என்ற நிலைப்பாடு Nechayev போன்றோரின் அரசின்மை. லியோ ரொல்சுரோய், Fernand Pelloutier போன்றோர் வன்முறை அற்ற வழிமுறைகளைக் கொண்டு ஒடுக்குமுறைகளை எதிர்க்க முயன்றனர். மக்சு இசுரேனர் போன்றோரின் அரசின்மை தனிமனிதரை முதன்மைப்படுத்தியது. அரசு, சமயம், மற்றும் மற்றையை அதிகார மையங்ள், பொருளாதார சட்ட முறைமைகள் மனிதர்களின் சுதந்திரத்தை ஒடுக்கும், சுரண்டும் கருவிகளாக அரசின்மை அணுகியது. அவற்றை எதிர்ப்பதுற்கு, அவை இன்றி வாழ்வதற்கு தீர்வுகளைத் தர அரசின்மை முயற்சி செய்கிறது. ஒடுக்குமுறைகளை எதிர்க்க மார்க்சிய சிந்தனை அரசை தொழிலாளர்கள் கைப்பற்ற வேண்டும் என்று கூறியது. அரசை யார் வைத்திருந்தாலும், அது ஒடுக்குமுறைக் கருவியாக மாறும் என்று கருதிய அரசின்மையாளர்கள் அதற்கு மாற்றாக சிறிய குமுகங்களைப் பரிந்துரைத்தார்கள். சிறிய குமுகங்களில் அதிகார அடுக்கமைவு இல்லாமல் செய்யலாம் எனப்பட்டது. சமூக அதிகார அடுக்கமைவால் மிகவும் பாதிக்கப்பட்ட தலித் சிந்தனையாளர்கள் பலர் அரசின்மை கருத்துக்களை கொண்டுள்ளனர் . இவர்களின் "எதிர்க்கிறோம் ஆதலால் இருக்கிறோம்", "அடங்கமறு, அத்துமீறு" போன்ற பிடிவரிகள் இதற்கு எடுத்துக்காட்டு. ஈழத்தில் சிங்களப் பேரினவாத அரசாலும், இயக்கங்களாலும் பாதிக்கப்பட்ட சிலரும் அரசின்மை கொள்கையாளாராக உள்ளனர்.