ரூபாய் "இந்தக் கட்டுரை ஆசியாவில் பல நாடுகளிலும் புழக்கத்தில் உள்ள நாணயத்தைக் குறித்ததாகும்." உருபாய் அல்லது ரூபாய் (Rupee) (சுருக்கமாக ரூ.(Re. அல்லது Rs.)) என்பது இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், மொரீசியஸ் சீசெல்சு, மாலைத்தீவுகள் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்படும் "வெவ்வேறு மதிப்புடைய" நாணயங்களின் பொதுப்பெயராகும். முன்னதாக மியான்மர், ஆப்கானித்தான் நாணயங்களும் ரூபாய் என்றே அழைக்கப்பட்டு வந்தன. இந்தோனேசியாவில் பயன்படுத்தப்படும் நாணயம் ருபியா என்றும், மாலத்தீவில் பயன்படுத்தப்படும் நாணயம் ருஃபியா என்றும் அழைக்கப்படுகிறது. வரலாற்றுப்படி வட இந்தியாவில் சூர் பேரரசை நிறுவிய சேர் சா சூரி தான் முதன்முதலாக "ரூபாய்" என்ற நாணயத்தை 16ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தியதாக அறியப்படுகிறது. இது "வெள்ளிக் காசு" எனப்பொருள்படும் "ரூப்யா", என்ற சமசுகிருதச் சொல்லிலிருந்து அல்லது செங்கிருத ரூபா, அழகு,வடிவம் என்றச் சொல்லிலிருந்து உருவானது. இந்தியாவிலும் பாக்கித்தானிலும் நூறு புதிய பைசாக்கள் ஓர் இந்திய உரூபாய்க்கு (ரூபாய்க்கு)ச் சமமாகும். மொரீசியசின் ரூபாயும் இலங்கை ரூபாயும் நூறு சென்ட்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. நேபாளத்தின் ரூபாய் நூறு பைசாக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு மோகார்களாகவும் நான்கு சுக்காக்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. ஆப்கானித்தானில் 1925 வரை ரூபாய் என்றே அழைக்கப்பட்டு வந்தது; ஒவ்வொரு ஆப்கானித்தானிய ரூபாயும் 60 பைசாக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. 1891இல் ஆப்கன் ரூபாய் அறிமுகமாவதற்கு முன்னதாக அங்குள்ள சட்டபூர்வ நாணயம் காபூலி ரூபாய் எனப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் நடுவம் வரை திபெத்தின் அலுவல்முறை நாணயமும் திபெத்திய ரூபாய் என்றே அழைக்கப்பட்டது. 1959 வரை துபையிலும் கத்தாரிலும் இந்திய ரூபாயே அலுவல்முறை நாணயமாக இருந்தது. 1959இல் தங்கக் கடத்தலைத் தடுப்பதற்காக இந்தியா வளைகுடா ரூபாய் என்ற புதிய நாணயத்தை ("வெளிநாட்டு ரூபாய்" எனவும் அறியப்பட்டது) வெளியிட்டது. 1966 வரை புழக்கத்தில் இருந்த வளைகுடா ரூபாய் இந்திய ரூபாயின் மதிப்பிழப்பிற்குப் பின்னர் கைவிடப்பட்டு, புதிய கத்தாரி ரியால் நாணயம் உருவானது. 'வெள்ளி' எனப் பொருள் தரும் சமசுகிருத சொல்லான "ருப்யா"-விலிரிருந்து ரூபாய் என்ற சொல் பிறந்தது. (இன்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் "டாலர்" என்ற ஆங்கில நாணயப் பெயருக்கு இணையாக "வெள்ளி" என்ற தமிழ் சொல்லே பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது ). 1540 முதல் 1545 வரை ஆட்சியில் இருந்த ஷேர் ஷா சூரி அறிமுகப்படுத்திய நாணயத்தின் பெயர் "ருபியா" ஆகும். அந்த வெள்ளி நாணயம் 178 கிராம் எடை உடையதாய் இருந்தது. அன்று முதல், ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட காலம் வரை அந்த நாணயம் பயன்பாட்டில் இருந்தது. முன்னர், ஒரு ரூபாய் 16 அணாக்களாகவும், ஒரு அணா நான்கு பைசாக்கள் அல்லது 12 காசுகளாகவும் அல்லது பைகளாகவும் பிரிக்கப்பட்டு இருந்தது. ஒரு ரூபாய்க்கு குறைந்த நாணய மதிப்பை பதின்ம முறையில் நூற்றிலொரு பங்காக ஆக்கும் முறை இலங்கையில் 1869லும், இந்தியாவில் 1957லும் பாகித்தானில் 1961லும் நடைமுறைக்கு வந்தது. "ரூபாய்" ஆங்கிலக் குறிகளில் Re. (ஒருமை), Rs. (பன்மை) என்றும் வழங்கப்பட்டு வருகிறது. 2012இல் இந்திய ரூபாய்க்கு தேவநாகரி எழுத்தான र (ர)வையும் உரோமானிய தலையெழுத்தான Rஐயும் இணைத்து ₹ (இந்திய ரூபாய்க் குறியீடு) ஏற்படுத்தப்பட்டது. வெவ்வேறு மொழிகளும் 'ரூபாயை' பல்வேறாக வெளிப்படுத்துகின்றன: சேர் சா சூரியால் அறிமுகப்படுத்தப்பட்ட ரூபாய் வெள்ளியால் ஆனதாக இருந்தது. 178 கழஞ்சுகள் அல்லது 11.534 கி எடை உள்ளதாக இருந்தது. இந்த நாணயம் பிரித்தானிய இந்தியாவிலும் பயன்படுத்தப்பட்டு வந்தது. பிரித்தானியர்கள் ரூபாயின் மதிப்பை 11.66 கிராம் 0.917 தூய்மையான வெள்ளியாக வரையறுத்தனர். இது டிராய் அவுன்சில் 0.3437ஆக இருந்தது. நாணயத்திலுள்ள வெள்ளியின் மதிப்பைக்கொண்டு நாணயமாற்றுக்களைக் கணக்கிடுவது 19வது நூற்றாண்டில் மிகுந்த சிக்கல்களை உருவாக்கின. உலகின் பலநாடுகளும் தங்கமாற்று சீர்தரத்தைப் பின்பற்றத் தொடங்கியிருந்தன. ஐக்கிய அமெரிக்காவிலும் ஐரோப்பிய குடியேற்றங்களிலும் மிகுந்த வெள்ளி இருப்புக்கள் கண்டறியப்பட்ட நிலையில் தங்கத்திற்கு நிகராக வெள்ளியின் மதிப்பு வீழலாயிற்று. இதனால் பத்தொன்பதாவது நூற்றாண்டின் இறுதியில் இந்திய வெள்ளி ரூபாயின் மதிப்பு தங்கமாற்று சீர்தரத்துடன் இணைக்கப்பட்டு பிரித்தானிய நாணயமாற்றில் ஒரு ரூபாய் ஒரு சில்லிங்கும் நான்கு பென்சுக்கும் (அல்லது 1 ₤= 15 ரூபாய்கள்) சமமாக்கப்பட்டது. தமிழக மாவட்டங்கள் தமிழ்நாட்டில் 33 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு அவரது தலைமையில் மாவட்ட நிருவாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழகத்தில் மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன. இவற்றுள் விதிவிலக்காக, கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில், நீலகிரி மாவட்டத்தின் தலைநகர் உதகமண்டலம் என்றுள்ளன. தற்போதுள்ள மாவட்டங்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதமாக பெயர் மாற்றம் பெற்றுவந்துள்ளன. ஒரு சில காலகட்டங்களில் மாவட்டங்களின் பெயருடன் காலம் சென்ற தமிழக தலைவர்கள் பெயரும் இணைத்துப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வந்தன. தற்போது அப்பெயர்கள் நீக்கப்பட்டு, மாவட்டங்களின் பெயர்கள் மட்டும் நிலைத்து நிற்கின்றன. 1947 ஆகத்து மாதம் இந்திய விடுதலை பெற்ற பின்னர், பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணமானது சென்னை மாநிலம் என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. 1953 முதல் 1956 வரையிலான மாநில எல்லைகள் சீரமைப்புகளின் வாயிலாக தற்போதைய எல்லைகள் உருவாக்கப்பட்டன. சென்னை மாநிலமானது, 1969ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக தமிழ்நாடு என மறுபெயரிடப்பட்டது. முந்தைய சென்னை மாகாணமானது 13 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. அவையாவன: செங்கல்பட்டு, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, மெட்ராஸ், மதுரை, நீலகிரி, வட ஆற்காடு, இராமநாதபுரம், சேலம், தென் ஆற்காடு, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி ஆகியனவாகும். இம்மாவட்டங்கள் கீழ்க்காணும் வகையில் பிரிக்கப்பட்டு தற்போதைய புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. தமிழக மாவட்டங்களின் மக்கட் தொகை 2011 ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி 7,21,38,958 ஆகும். இதில் அதிக மக்கள்தொகை உள்ள மாவட்டமாக சென்னை மாவட்டம் உள்ளது. இங்கு அதிகபட்சமாக 46,81,087 பேர் வசித்து வருகின்றனர். இம்மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி சதுர கிலோ மீட்டருக்கு 26,903 ஆக இருக்கிறது. இதன்படி மாநிலத்தில் அதிக மக்கள் அடர்த்தி பெற்ற மாவட்டமாக சென்னை உள்ளது. மாநிலத்தின் மக்கள் அடர்த்தி மிகக் குறைவாக உள்ள மாநிலம் நீலகிரி ஆகும். நீலகிரி மாவட்டத்தின் மக்கள் அடர்த்தி சதுர கிலோ மீட்டருக்கு 288 பேர். கல்வியறிவில் கன்னியாகுமரி மாவட்டம் முதன்மையாக உள்ளது. இங்கு மாவட்டத்தின் 92.14 பேர் கல்வி அறிவு பெற்றவர்களாக உள்ளனர். கல்வியறிவில் 64.71 சதவிகிதத்துடன் தருமபுரி மாவட்டம் கடைசி நிலையில் உள்ளது. கீழே உள்ள அட்டவணையில் அனைத்து 32 மாவட்டங்களுக்கான புவியியல் மற்றும் மக்கட்தொகை அளவுருக்கள் பட்டியலிடப்படுகிறது. கனடா கனடா ("Canada") வட அமெரிக்க கண்டத்தில் உள்ள உலகின் இரண்டாவது பெரிய நாடு ஆகும். வடக்கே வட முனையும் கிழக்கே அட்லாண்டிக் பெருங்கடலும் தெற்கே அமெரிக்க ஒன்றியமும் மேற்கே பசிபிக் பெருங்கடலும் அமெரிக்க ஒன்றிய நாடுகளின் அலாஸ்கா மாநிலமும் எல்லைகளாக அமைகின்றன. கனடா பத்து மாகாணங்களையும் மூன்று ஆட்சி நிலப்பகுதிகளையும் கொண்ட கூட்டமைப்பு ஆகும். ஒட்டாவா கனடாவின் தலைநகரம் ஆகும். ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய இரண்டும் கனடாவின் ஆட்சி மொழிகளாக இருக்கின்றன. 1999ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட நுனாவுட் ஆட்சி நிலப்பகுதியில் இனுக்டிடூட் மொழியும் ஆட்சி மொழியாகும். கனடிய ஆதிக்குடிமக்கள் அரசியல் அமைப்புச்சட்டத்தில் பின்வரும் மூன்று வகைகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்: கனடிய செவ்விந்தியர்கள் (""Red Indians""), இனுவிட் ("Inuit"), மெயிரி ("Metis"). மூன்று பெரும்வகைகளாக அரசியல் சட்ட அடையாளங்களைக் கொண்டிருந்தாலும், இன, மொழி, பண்பாடு, வாழ்வியல், புவியில் கோணங்களில் கனடிய ஆதிக்குடிமக்கள் பலவகைப்படுவார்கள். செவ்விந்தியர் அல்லது இண்டியன்ஸ் என்ற சொல்லை இழிவானதாகக் கனடிய ஆதிக்குடிகள் கருதியதால், அவர்கள் தங்களை முதற் குடிகள் (First Nations) என்று அழைத்தார்கள். இம்மக்களின் வாழ்வியல், அவர்கள் வாழ்ந்த நிலப்பகுதிகளைப் பொறுத்து வேறுபடுகின்றது. வாழ்ந்த நிலப்பகுதிகளைக் கொண்டு முதற் குடிகளை ஆறு வகைகளாகப் பிரிக்கலாம். அவை பின்வருமாறு: கனடாவின் மிகக் குளிரான மேற்பகுதிகளில் வாழ்பவர்களே இனுவிட் ஆவார்கள். இவர்களை அழைக்க எஸ்கிமோ என்று தற்போது இழிவாகக் கருதப்படும் சொல்லும் பயன்படுத்தப்பட்டு வந்தது. கனடா என்றவுடன் விலங்குத்தோல் உடுப்புடன் பனிக்கட்டியினால் கட்டப்பட்ட அல்லது சூழப்பட்ட இருப்பிடங்களுக்கு பக்கத்தில் நிற்கும் இனுவிட் மக்களைச் சுட்டுவது ஒரு ஊடக மரபு. ஆதிக்குடிமக்கள் ஐரோப்பியர் கலந்த மரபினர் மெயிரி எனப்பட்டனர். பிரெஞ்சு மக்கள் 1605 ஆம் ஆண்டளவில் ரோயல் துறைமுகம் என்ற பகுதியிலும், அதனைத் தொடர்ந்து 1608ம் ஆண்டு கியூபெக்கிலும் முதன்முதலில் குடியமர்ந்தனர். ஆங்கிலக் குடியேறிகள் நியூ பவுண்ட்லாந்தில் 1610 ஆம் ஆண்டு குடியமர்ந்தனர். ஐரோப்பியரின் வருகை, வட அமெரிக்காவுக்கு புது நோய்களைக் கொண்டுவந்தது. இதனால், அப்புதிய நோய்களுக்கு உடலில் எதிர்ப்புத்திறனற்ற முதற்குடிமக்கள் பெரும்பான்மையானோர் இரையானார்கள். பிரிட்டனின் குடியிருப்புகளாக இருந்த ஒன்ராறியோ, கியூபெக், நியூ பிரன்ஸ்விக், நோவோ ஸ்கோஷியா British North American Act மூலம் 1867 ஆம் ஆண்டு கனடா கூட்டரசாக உருவானது. கனடாவின் பிற மாகாணங்கள் பின்னர் கூட்டரசில் சேர்ந்தன. New Foundland 1949 ஆண்டு கனடாவுடன் கடைசியாக இணைந்த மாகாணம் ஆகும். பிரெஞ்சு, ஆங்கிலேய குடிவரவாளர்களாலும் ஆதிக்குடிகளாலும் கனடா உருவாக்கப்பட்டது. கூட்டமைப்பின் போது ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களின்படி கனடாவை இணைக்கும் ஒரு தொடருந்துப் பாதை கட்டவேண்டிய தேவை இருந்தது. இதற்காக 1880களில் சீனர்கள் தொடருந்துப் பாதை கட்டமைப்பில் வேலை செய்வதற்காக வரவழைக்கப்பட்டனர். 1885 ஆம் ஆண்டு தொடருந்துப் பாதை கட்டிமுடிந்த பின்பு சீனர்கள் வரவு கட்டுப்படுத்தப்பட்டது. குறிப்பாக "Chinese Exclusion Act" 1923 ஆம் ஆண்டு நடப்புக்கு வந்தது. கறுப்பின மக்கள் வெவ்வேறு காலப்பகுதியில் கனடாவில் குடியேறினார்கள். தொடக்கத்திலேயே அவர்கள் அடிமைகளாகப் பிரெஞ்சு மக்களுடன் கனடாவுக்கு வந்தனர். எனினும் 1793 ஆம் ஆண்டில், மேல் கனடாவில் அடிமைகளுக்கு விடுதலை கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து பல கறுப்பின மக்கள் கனடாவுக்கு விடுதலை தேடிவந்தனர். இவர்கள் வந்த பாதை நிலத்தடி இருப்புப்பாதை (Underground railroad) என்று அழைக்கப்பட்டது. 1920 ஆண்டளவில், கனடா இன அடிப்படியிலான குடிவரவுக் கொள்கைகளைப் பின்பற்றத் தொடங்கியது. இதன் காரணமாக ஐரோப்பியர் தவிர்ந்த ஏனைய இன மக்கள் கனடாவுக்குள் வருவது கடினமாக்கப்பட்டது. இக்கொள்கை 1967 இல் நீக்கப்பட்டது. எனினும், இதற்கமையவே இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் பல்வேறு ஐரோப்பிய குடிவரவாளர்களை கனடா உள்வாங்கியது. வியட்நாம் போரின்போது அமெரிக்க draft dogers பலரையும் உள்வாங்கியது. 1971 ஆம் ஆண்டு, உலக நாடுகளிலேயே முதலாவதாக, கனடா பல்லினப் பண்பாட்டுக் கொள்கையை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது. அதனைத் தொடர்ந்து பன்னாட்டு மக்களும் கனடாவுக்கு குடிவருவது அதிகரித்தது. 1980களிலும் 1990களிலும் தமிழர்கள், பிற தெற்காசிய மக்கள், ஆபிரிக்கர்கள் புதிய குடிவரவாளர்களில் கணிசமான தொகையாக இருந்தனர். கனடா வட அமெரிக்காவின் தெற்கு 41% வீதத்தைத் தன்னகத்தே கொண்ட உலகின் இரண்டாவது பெரிய பரந்த நாடு ஆகும். வடக்கே வட முனையும், கிழக்கே அட்லாந்திக் பெருங்கடலும், தெற்கே அமெரிக்க ஒன்றியமும், மேற்கே பசிபிக் பெருங்கடலும் மற்றும் அமெரிக்க ஒன்றிய நாடுகளின் அலாஸ்கா மாநிலமும் எல்லைகளாக அமைகின்றன. கிறீன்லாந்து கனடாவின் வட கிழக்கு எல்லையில் அமைந்துள்ளது. கனடாவின் பரப்பளவு 9,984,670 கிமீ ஆகும். இதில் தரை 9,093,507 கிமீ, நீர் 991,163 கிமி ஆகும். கனடாவின் பரந்த பரப்பளவு காரணமாக அது பல்வேறு விதமான இயற்கையமைப்புகளையும் காலநிலைகளையும் கொண்டது. கனடாவில் வெவ்வேறு நிலப்பகுதிகளில் வெவ்வேறு தாவர வகைகள் வளர்கின்றன. மேற்குப் பகுதி மலையும் மலை சார்ந்த ஒரு நிலப்பகுதி ஆகும். இங்கு மழைக்காடு போன்ற காலநிலையும் அதே போன்று அடர்த்தியான காடுகளும் காணப்படுகின்றன. பிரெய்ரி தாழ்நிலப்பகுதியில் புல் வெளிகள் உண்டு. அதற்கு மேலே ஊசியிலைக் காட்டுத்தாவரங்களும், அதற்கு மேலே மிகக் குளிர் நிலப்பகுதியில் "thundra" ("low grasses", "shurbs", "mosses", "lichens") வும் காணப்படுகின்றன. தென் ஒன்ராறியோவிலும் கிழக்குப் பகுதிகளிலும் தூந்திரத் தாவரங்கள் ("deciduous trees") உண்டு. கனடா மத்திய கோட்டுக்கு மிக மேலே இருப்பதால் பெரும்பாலும் கடும் குளிரான காலநிலையை கொண்டது. இடத்துக்கு இடம் சராசரி காலநிலை மாறியமையும். மேற்கு கனடாவில் குளிர்காலத்தில் -15 செல்சியஸ் சராசரி வெப்பநிலையைக் கொண்டிருக்கும்; இது, -40 வரை தாழக்கூடியது. வடக்குப் பகுதிகளில் குளிர் மிக அதிகமாகவும், குளிர்காலம் 11 மாதங்கள் வரை நீடிக்கவல்லதாகவும் இருக்கும். தெற்குப் பகுதிகளில் ஏழு மாத காலம் வரை குளிர்காலம் இருக்கும். குளிர்காலத்தில் பனிமழை விழுவதும், இடங்கள் எல்லாம் விறைத்துக் காணப்படுவதும் இங்கு வழமை. கோடை காலத்தில் கிழக்கிலும் மேற்கிலும் 20 டிகிரி செல்சியஸ் சராசரி வெப்பநிலையையும், இடைப்பட்ட பகுதிகளில் 25 முதல் 30 டிகிரி செல்சியஸ் சராசரி வெப்பநிலையையும் கொண்டிருக்கும். விதிவிலக்காக, பசிபிக் பெருங்கடல் கடற்கரை கொண்டிருக்கும் பிரிற்ரிஸ் கொலம்பியா மிதவெப்பக் (temperate) காலநிலையுடன், மழை பெறும் நிலப்பகுதியாகவும் இருக்கின்றது. கனடா ஒரு வளர்ச்சியடைந்த நாடு ஆகும். பொதுவாக ஒரு நடுநிலை பொருளாதாரக் கொள்கையைக் கொண்டிருக்கின்றது. திறந்த சந்தை பொருளாதாரத்தை ஏற்றும் அதே வேளை பொருளாதாரத்தை வளப்படுத்துவதில், சமூக நீதியை பேணுவதில் அரசுக்கு முக்கியப் பங்கு உண்டு என்பதும் கனடாவின் அணுகுமுறையாக இருக்கின்றது. திறந்த சந்தையால் வழங்க முடியாத சேவைகளை வழங்குதல், பொதுநலனை பாதுகாத்தல், சமவாய்ப்புச் சூழலைப் பேணல், சுற்றுச்சூழலை பாதுகாத்தல் போன்ற செயல்பாடுகளில் அரசு முக்கியப் பங்கு வகிக்கின்றது. நிலம், நீர், காடு, மீன், எண்ணெய், கனிமங்கள் ஆகிய இயற்கை வளங்கள் கனடாவில் மிக்க உண்டு. பிரிட்டிஷ் கொலம்பியாவில் மரங்கள் பேண்தகுமுறையில் வெட்டப்பட்டு அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 1950 களில், அல்பேர்டாவில் எண்ணெய் கண்டறியப்பட்டது. அல்பேர்டா, இன்று செல்வம் மிக்க ஒரு மாகாணமாக வளர எண்ணெய் உற்பத்தி ஏதுவாக்கிற்று. கனடாவே அமெரிக்காவுக்கு அதிக விழுக்காடு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடு என்பது குறிப்படத்தக்கது. அட்லாண்டிக் மாகாணங்கள் மீன்பிடி வளம் மிக்கப் பகுதிகளாகும். எனினும் முந்தைய பேண்தகுமுறையற்ற மீன்பிடிப்பால் பல மீன்வளங்கள் அருகிப்போய்விட்டன. தற்சமயம் இந்த மாகாணங்களை அண்டிய கடற்பகுதியிலும் எண்ணெய் வளம் இருப்பது தெரியவந்து, அதை வெளிக்கொணர்வதில் கவனம் செலுத்தப்படுகின்றது. வட ஒன்ரோறியோவில் தங்கம், நிக்கல், யுரேனியம், காரீயம் ஆகிய கனிமச் சுரங்கங்கள் உண்டு. இவற்றின் உலக உற்பத்தி அளவில் கனடாவும் முக்கியப் பங்கு வகிக்கின்றது. கனடா இயற்கைவளம் மிக்க நாடு என்றாலும் கனடாவின் மொத்த தேசிய உற்பத்தியில் ("GDP") 6% மட்டுமே இத்துறையில் இருந்து வருகின்றது; 4% மக்களே இதில் பணியாற்றுகிறார்கள். வேளாண்மையும் அதனை சார்ந்த தொழிற்துறைகளும் மொத்த தேசிய உற்பத்தியில் 8.3 விழுக்காட்டை கொண்டு கனடிய பொருளாதாரத்தில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கின்றது (2003 கணிப்பீடு). கனடாவின் உள்கட்டுமானக் கூறுகளான போக்குவரத்து, தொலைத்தொடர்பு, தகவல் தொழில் நுட்பம் ஆகியவை உறுதியாகக் கட்டமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு, தேவைக்கேற்ப விரிவாக்கப்பட்டு வருகின்றன. வளர்ச்சி பெற்ற மனிதவளமும், இணக்கமான வினைத்திறன் மிக்க அரசியல் சூழலும் இதை ஏதுவாக்கின்றன. "முதன்மைக் கட்டுரை: கனடாவின் போக்குவரத்துக் கட்டமைப்பு" கனடாவின் விரிந்த நிலப்பரப்பு காரணமாக எல்லைக்கு எல்லை அதனை இணைக்கும் ஒரு சிறந்த போக்குவரத்து வழி அதன் இருப்பிற்கு முக்கியமாக அமைகின்றது. மனிதர்களையும் பொருட்களையும் ஏற்றி இறக்கும் வழிமுறைகள் சிறப்பாக அமைவது பொருளாதரத்திற்கு அவசியமாகவும், இதன் காரணமாக, அரசியலில் முக்கிய அம்சமாகவும் கனடாவில் இருக்கின்றது. ஆகையால், சாலைகள், தொடருந்துப் பாதைகள், வான்வழி, கடல்வழி மற்றும் குழாய்வழி போக்குவரத்துக்கள் விரிவாகக் கட்டமைக்கப்பட்டுள்ளன. தென் ஒன்ராறியோவில் வளர்ச்சி அடைந்த உற்பத்தித்துறை உண்டு. கூடிய அளவு கார்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. கியூபெக் மாகாணம் உலகின் ஆறாவது பெரிய விமான உற்பத்தி இடமாகும். இவற்றைத் தவிர பலதரப்பட்ட பொருட்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. கனடாவின் பொருளாதாரத்தில் பெரிய துறை சேவைத்துறையாகும். இத்துறை சில்லறை வணிகம், நிலம்/மனை வணிகம், நிதி, தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், கல்வி, மருத்துவம், கேளிக்கை மற்றும் சுற்றுலாத் துறைகளை உளளடக்கியது. இத்துறையிலேயே 75 விழுக்காடு மக்கள் வேலை செய்கின்றார்கள். கனடா, ஓர் உயர்ந்த, தொழில்மயமாக்கப்பட்ட, அறிவு அடிப்படை பொருளாதரக் கட்டமைப்பை உருவாக்கிப் பேண முயல்கின்றது. அதற்கு தேவையான தகவல், தொடர்பாடல் உள்கட்டமைப்பை ஏற்படுத்தி, கனடாவின் ஆராய்ச்சி வடிவமைப்புக் கட்டமைப்பையும் முனைப்புடன் வழிநடத்தி வருகின்றது. இயல் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சிக் கழகம் (Natural Sciences and Engineering Research Council) இப்பணியை மேற்கொண்டு வருகின்றது. CANDU reactor, Canada Arm, Maple (software) ஆகியவை கனடாவின் அறிவியல் தொழில்நுட்பத்துறையின் சிறப்புக்குச் சில எடுத்துகாட்டுக்கள் ஆகும். கனடாவின் ஏற்றுமதி / இறக்குமதியில் அமெரிக்கா முதன்மைப் பங்கு வகிக்கிறது. கனடாவின் 81% ஏற்றுமதியும் 67% இறக்குமதியும் அமெரிக்காவுடனே அமைந்திருக்கிறது. இது அமெரிக்காவின் 23% ஏற்றுமதியையும் 17% இறக்குமதியையும் சுட்டுகின்றது. கனடா அடிப்படையில் ஒரு மக்களாட்சிக் கூட்டரசு ஆகும். அத்தோடு, அரசியலைமைப்புச்சட்ட முடியாட்சியும் ஆகும். பெயரளவில், எலிசெபெத் II கனடாவின் அரசி ஆவார். நடைமுறையில் நாடாளுமன்ற மக்களாட்சியும் மரபுமே முக்கியத்துவம் பெறுகின்றன. கனடாவின் மிகு உயர் சட்ட அமைப்பு கனடா அரசியலமைப்பு சட்டம் ஆகும். இது அரசாளும் முறைகளையும் மக்களின் உரிமைகளையும் விபரிக்கின்றது. இது உரிமைகள் சுதந்திரங்களுக்கான கனடிய சாசனத்தை (Canadian Charter of Rights and Freedoms) உள்ளடக்கியது. இந்தச் சாசனத்தின் பகுதி 12 கனடாவின் பல்லினப்பண்பாடுக் கொள்கையை அதன் அரசியலமைப்புச் சட்டத்திலேயே உறுதி செய்கின்றது. உரிமைகள் சுதந்திரங்களுக்கான கனடிய சாசனத்தில் விவரிக்கப்பட்ட மனித உரிமைகள் பிற அரச சட்டங்களினால் மறுதலிக்கவோ முரண்படவோ முடியாதவையாகும். எனினும், கனடிய உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கான சாசனத்தில் தரப்பட்ட "notwithstanding clause", கொண்டு மத்திய அரசோ, மாகாண சட்டசபையோ இடைக்காலமாக ஐந்து வருடங்களுக்குக் கனடிய உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கான சாசனத்தின் சில அம்சங்களை மீறி ஆணை செய்யலாம். நடைமுறையில் "notwithstanding clause" மிக அரிதாக, கவனமாக, கடைசி வழிமுறையாகவே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. கனடா மூன்று நிலை அரசுகளைக் கொண்டது. அவை நடுவண் அரசு, மாகாண/ஆட்சிப் நிலப்பரப்பு அரசுகள், நகராட்சி/ஊர் அரசுகள் ஆகும். கனடாவின் நடுவண் அரசே கனடாவை நாடு என்ற வகையில் முன்னிறுத்துகின்றது. குறிப்பாகக் கூட்டரசு நிர்வாகம், பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை ஆகியவற்றை நடுவண் அரசு கவனிக்கின்றது. கனடாவின் மத்திய பாராளுமன்றம் ஆளுனர், மக்களவை, செனற் ஆகியவற்றால் ஆனது. கனாடவின் முடிக்குரியவரின் சார்பாக, மரபு ரீதியான சில முக்கிய கடமைகளை ஆளுனர் ஆற்றுவார். கனடா பிரதமரின் பரிந்துரைக்கமைய கனடாவின் முடியுரிமைக்குரியவரால் ஆளுனர் நியமிக்கப்படுகின்றார். மக்களால் தேர்தல் மூலம் நேரடியாகத் தெரிவு செய்யப்படும் 308 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையே கனடாப் பாராளுமன்றத்தின் முக்கிய பிரிவு ஆகும். ஒவ்வொரு உறுப்பினரும் கனடாவின் ஒரு தேர்தல் தொகுதிக்கும், அத்தொகுதியின் மக்களுக்கும் சார்பாகச் செயல்படுகின்றார். தேர்தல் குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற வேண்டும். செனட், 112 சார்பாளர்கள் வரை கொண்டிருக்கலாம். செனட் பிரதிநிதித்துவம் நிலப்பகுதி அடிப்படையில் அமைகின்றது. செனற் உறுப்பினர்கள் பிரதமரால் பரிந்துரைக்கப்பட்டு ஆளுனரால் நியமிக்கப்படுகின்றார்கள். கனடா அரசின் தலைவராகப் பிரதமர் விளங்குகின்றார். மக்களவையில் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெற்ற கட்சியின் தலைவர் பிரதமர் ஆகும் தகுதி பெறுகின்றார். பிரதமரையும் அவர் தெரிவு செய்யும் அமைச்சரவையையும் அதிகாரப்பூர்வமாக ஆளுனர் நியமிக்கின்றார். மரபுரீதியாக, அமைச்சரவை, பிரதமரின் கட்சியிலிருந்து பிரதமரால் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களால் ஆனது. அரச செயல் அதிகாரம் பிரதமராலும் அமைச்சரவையாலும் வெளிப்படுத்தப்படுகின்றது. முக்கிய நடுவண் அரசியல் கட்சிகள்: கனடாவின் அரசியலமைப்புச் சட்டம் அதன் நடுவண், மாகாண அரசுகளின் அதிகாரங்களையும் கடமைகளையும் வரையறை செய்து, சட்ட உருவாக்க வழிமுறைகளையும் விபரிக்கின்றது. மாகாண அரசுகள் உள்ளூர் அரசுகளின் அதிகாரங்களையும் கடமைகளையும் வரையறை செய்கின்றன. அரசுகள் தகுந்த வழிமுறைகளுக்கமைய சட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்துகின்றன. கனடாவின் நீதியமைப்பு சட்டங்களைப் புரிந்து நடைமுறைப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. அரசியல் அமைப்பு சட்டத்தை மீறும் சட்டங்களைச் செல்லுபடியாகாமல் செய்யும் அதிகாரம் நீதியமைப்புக்கு உண்டு. கனடாவின் உச்ச நீதி மன்றமே நீதிக் கட்டமைப்பின் அதி உயர் அதிகாரம் கொண்டது. கனடாவின் ஆட்சி நிர்வாகத் துறை அரசை நிர்வகித்தல், சட்டத்தை நடைமுறைப்படுத்துதல், மக்களுக்குச் சேவைகள் வழங்கல் என பல வழிகளில் முக்கியத்துவம் பெறுகின்றது. அரசியல் இடையூறுகளை மட்டுப்படுத்தி, ஊழலற்ற, வெளிப்படையான திறன் வாய்ந்த நிர்வாகத்தைத் தருவது வணிக நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கும் மக்களின் வாழ்க்கைக்கும் அவசியமாகின்றது. ஒப்பீட்டளவில் கனடாவின் நிர்வாகத்துறை சிறப்பாகச் செயல்படுகின்றது. 1960களில் கனடிய மக்கள் மருத்துவத் தேவைகளை ஒரு சமூகப் பொறுப்பாக உணர்ந்தார்கள். இந்தத் தேவையை, உணர்வை 1964 மருத்துவச் சேவைகளுக்கான அரச ஆணைய முடிவுகள் வெளிப்படுத்தியது. இந்த ஆணையம் செய்த பரிந்துரைகளுக்கு ஏற்ப மருத்துவக் கவனிப்புச் சட்டம் 1966ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கமைய தனிமனித மருத்துவச் செலவுகள் சமூகத்தால் பகிர்ந்து கொள்ளப்பட்டது. மருத்துவச் சேவைகள் அரசினால் வழங்கப்படலாயிற்று. அனைவருக்கும் ஒரே தரம் உள்ள சேவைகள் வழங்கப்பட வேண்டும் என்பதில் இச் சட்டம் மிகவும் அவதானமான உறுதியான வரையறைகளைக் கொண்டிருக்கின்றது. குறிப்பாகப் பணம் படைத்தோர் காத்திருப்பு வரிசை தாண்டிச் சேவைகளைப் பெறுவற்கு இச்சட்டம் இடம்கொடுக்கவில்லை. இன்று, அதிகரிக்கும் மருத்துவச் செலவுகளும், முதுமையடையும் சமூகத்தின் அதிகரிக்கும் மருத்துவ தேவைகளும், கனேடிய மத்திய மாகாண அரசுகளை இறுகிய நிலைக்கு இட்டுசென்றுள்ளன. தனியார் சேவைகள், பணம் உடையோர் தனியார் சேவைகள் பெறுவதற்கு அனுமதி, தனியார் அரச கூட்டு சேவையமைப்பு போன்ற கொள்கைகள் இன்று சிலரால் முன்னிறுத்தப்படுகின்றனர். எனினும் பெரும்பான்மையான கனடிய மக்கள் மருத்துவ சேவைகள் சமூகத்தின் பொறுபே என்றும் பிரதானமாக அரசே வளங்கவேண்டும் என்ற கருத்துடையவர்கள். கனடாவில் எழுதப் படிக்கத் தெரிந்தோர் 95%க்கும் கூடுதலாக உள்ளதாக மதிப்பிடப்படுகின்றது. இங்கு 42.5% மக்கள் மேல்நிலைக் கல்வியை (some form of post secondary education) பெற்றுள்ளார்கள். கனடாவில் கல்வியை என்று பிரிக்கலாம். அடிப்படைக்கல்வியும் உயர்கல்வியும் அரச, தனியார் துறைகளால் வழங்கப்படலாம். ஆனால், மேல்நிலைப் பல்கலைக்கழக படிப்புக்களை அரசே வடிவமைத்துச் செயல்படுத்துகின்றது. அடிப்படைக் கல்வியும் உயர் கல்வியும் அனைவருக்கும் பொது அரச பாடசாலைகளில் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றது. பெரும்பான்மையான மாணவர்கள் அரச பாடசாலைகளுக்கே செல்கின்றார்கள், தரமும் நன்றாக அமைகின்றது. உயர் பொருளாதார வசதி படைத்தோரும், சமய சார்பினர் சிலரும் தனியார் பாடசாலைகளை நடத்துக்கின்றார்கள். மேல்நிலைக் கல்வி அரசே நடத்தினாலும் மாணவர்களும் குறிப்பிடத்தக்க செலவைக் கல்விப் பயிற்சிக் கட்டணமாகப் பங்களிக்கவேண்டும். இவை தவிர நடுவண் அரசின் நேரடி நிர்வாகத்தில் பாதுகாப்பு துறைக்கென முற்றிலும் இலவசமான மேல்நிலைக் கல்விக்கூடங்கள் உண்டு. அரசு கல்வியை சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கும் நீதிக்கும் சமத்துவத்துக்கும் முக்கியமான ஒரு கருவியாகக் கருதி வழங்கி வருகின்றது. கனடாவின் வெளியுறவுக் கொள்கையில் அதன் அண்டை நாடான அமெரிக்காவுடனான உறவே அதிமுக்கியத்துவம் பெறுகின்றது. கனடாவும் அமெரிக்காவும் உலகின் நீண்ட மதில்கள் அற்ற எல்லையைக் கொண்டுள்ளன. இரண்டு நாடுகளும் ஒருவருக்கு ஒருவர் பெரிய அளவில் வணிக உறவு உள்ளவையாக இருக்கின்றன. மேலும், வடஅமெரிக்க திறந்த வணிக வலய ஒப்பந்தம் ஊடாகக் கனடா அமெரிக்கா மெச்சிக்கோ ஆகிய நாடுகளுடன் ஒரு நெருக்கமான நட்பான தொடர்பைப் பேணி வருகின்றது. கனடா தென் அமெரிக்காவுடன் மேலும் வலுவான உறவை விரும்புகின்றது. அமெரிக்க கொள்கைகளில் இருந்து விலகி கியூபாவுடன் கனடா நட்புறவு வைத்திருக்கின்றது. மேலும், அமெரிக்க நாடுகள் அமைப்பில் ("Organization of American States" – OAS) 1990ஆம் ஆண்டு கனடா இணைந்தது. ஜூன் 2000ல் விண்ட்சரில் அமெரிக்க நாடுகள் அமைப்பின் பொது அவைக் கூட்டத்தை நடத்தியது. கனடாவுக்கும் பிரட்டன் பிரான்ஸ் நாடுகளுக்குமிடையான வரலாற்றுப் பிணைப்பு இன்றும் வலுவாக நீடித்து வருகின்றது. கனடா, பொதுநலவாய நாடுகள் மற்றும் பிரான்கோபோனி உறுப்பு நாடாகும். மேலும், கனடாவுக்கும் ஐரோப்பாவுக்குமிடையான தொடர்பு NATO, G8 ஊடாக வலுவானது. கனடாவின் மேற்கு எல்லை பசிபிக் பெருங்கடல் ஆகும். அதனால் கனேடிய பசிபிக் நாடுகளுடான தொடர்பும் நீண்ட வரலாற்றைக் கொண்டது. கனடா ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு ஒரு உறுப்பு நாடாகும். கனடாவுக்கும் சீனாவுக்குமிடையான வணிகமும் அதிகரித்து வருகின்றது. இன்று, கனடாவின் பல்நாட்டு குடிவரவாளர்களின் உதவியுடன் தெற்கு ஆசிய, மத்திய ஆசிய, மேற்கு ஆசிய, ஆபிரிக்க நாடுகளுடான தொடர்பை மேம்படுத்த முனைகின்றது. ஆழிப் பேரலைக்கு உதவிய நாடுகளிலும், ஆபிரிக்காவுக்கும் உதவும் நாடுகளிலும் கனடா முன்னிற்பது குறிப்பிடத்தக்கது. கனடாவின் பாதுகாப்புப் படை தரை, கடல், வான், சிறப்புப் படையணிகளை கொண்டுள்ளது. இவையனைத்தும் ஒரு கூட்டுக் கட்டமைப்புக்குள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. படைகளின் அதி உயர் இராணுவ அதிகாரி பாதுகாப்புப் பணியாளர்களின் தளபதி ஆவார். இவர் பாதுகாப்பு அமைச்சருக்கும், பிரதம அமைச்சருக்கும் கட்டுப்பட்டவர். கனடா கூட்டமைப்பு பின்பு பொர் யுத்தம், முதலாம் உலகப்போர், இரண்டாம் உலகப்போர், கொரியப் போர், குவைத் போர் ஆகியவற்றில் பங்கெடுத்தது. 1960 களின் பின்பு கனேடியப் படைகள் பெரும்பாலும் அமைதிப் படைகளாகப் பல நாடுகளுடன் கூட்டமைப்புகளிலோ அல்லது ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடாகவோ பணியாற்றி வருகின்றன. தற்போது கனேடிய படையணிகள் கொசாவிலும் ஆப்கானிஸ்தானிலும் பணியாற்றி வருகின்றன. ஆப்கானிஸ்தானில் 35 கனேடிய வீரர்களுக்கு மேல் இதுவரை இறந்துள்ளார்கள். கனடா இரண்டாம் உலகப்போர் முடிவில் உலகின் வலு மிக்க படைகளின் ஒன்றாக இருந்தது. இன்று ஒப்பீட்டளவில் கனடாவின் பாதுகாப்புப் படை மிகவும் சிறியது. கனடா, அமெரிக்காவின் நட்புறவு நாடாக அதற்கு அருகாமையில் இருப்பதாலும், NATO NORAD ஆகியவற்றின் உறுப்பினராக இருப்பதாலும் அதன் பாதுகாப்புப் படை பெரிதாக இருக்கவேண்டிய தேவை இல்லை எனலாம். இன்று, கனடா பொதுவாகப் பல்நாட்டு கூட்டமைப்பின் அங்கமாகவே போரில் ஈடுபடும் கொள்கையைப் பெரும்பாலும் கொண்டிருக்கின்றது. எனினும் வியட்நாம் போரிலும் இராக் போரிலும் அமெரிக்க படைக் கூட்டமைப்பில் சேர மறுத்தது குறிப்பிடத்தக்கது. கனடா இரண்டாவது பெரிய நாடாக இருந்தாலும் ஒப்பீட்டளவில் சிறிய மக்கள் தொகையையே கொண்டது. கனடா புள்ளிவிபரத்திணைக்கள 2006 மக்கள் தொகைமதிப்பு அறிக்கையின் படி 31,612,897 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இத்தொகை 2001 கணிப்பீட்டில் இருந்து 5.4 வீதம் மக்கள் தொகை உயர்வைக் காட்டுகின்றது. மக்கள் தொகை எண்ணிக்கை குடிவரவாளர்களாலேயே கூடுகின்றது. கனேடிய சமூக அமைப்பின் கட்டமைப்பை நோக்கினால், ஆங்கிலேயர்களே (ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வந்தவர்கள்) பணவசதி, அரசியல் அதிகாரம், சமூக முன்னுரிமை கொண்டவர்களாக விளங்குகின்றார்கள். அவர்களுக்கு அடுத்து, பிற ஐரோப்பியர்களும், யூதமக்களும் விளங்குகின்றார்கள். கனடாவிற்கு குடியேறிய ஆங்கிலேயர்களில் குறிப்பிடத்தக்க விழுக்காட்டினர், அமெரிக்கர்களைப் போலன்றி இங்கிலாந்துக்குச் சார்பானவர்கள் (Loyalists) என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள், இங்கிலாந்துச் சமூக கட்டமைப்பின் மேல்வர்க்கம் எனலாம். மேலும், அமெரிக்கப் புரட்சியின் போது இங்கிலாந்துக்கு சார்பானோர் இங்கு வந்து குடியேறினர். தனியார் கல்விக்கூடங்கள், அரசு, வணிகங்கள் மற்றும் ஊடகங்களைத் தங்கள் ஆளுகைக்குள் உட்படுத்துவதன் மூலம் அதிகார வர்க்கத்தினர் தங்களை நிலை நிறுத்திக் கொள்கின்றார்கள். மிகச் சிறிய எண்ணிக்கையான குடும்பங்களே கனடாவின் பெரும்பான்மையான செல்வத்தைக் கொண்டிருக்கின்றார்கள். மேலும், கனடிய சமூகத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வு அமெரிக்காவில் இருக்கும் ஏற்றத்தாழ்வை விடப் பெரியது என்பதும் குறிப்பிடத்தக்கது. பொதுவாக, கனடாவிற்கு புதிதாகக் குடிவரும் சமூகம் அடிமட்ட பொருளாதார அடுக்கமைவில் இடம் வகிக்கும். நாளடைவில் பெரும்பாலானோர் பொது நீரோட்டத்தில் இணைவதற்கு வாய்ப்புகள் பல உண்டு. எனினும் சில சமூகங்கள் இதற்கு விதிவிலக்காக அமைவதும் உண்டு. கனேடிய தொல்குடிகள் மிகவும் பின் தங்கிய சமூகக் குழுக்களில் ஒன்று. தொல்குடிகள், ஐரோப்பியர் வருகையால் மிகவும் பாதிக்கப்பட்டு சுரண்டப்பட்டவர்கள் ஆவார்கள். இவர்களுக்குத் தற்போது பல சிறப்புச் சலுகைகள், உரிமைகள் இருந்தாலும் இவர்கள் இன்னும் ஒரு பின் தங்கிய நிலையிலேயே இருக்கின்றார்கள். கனடாவின் 80% மேற்பட்ட மக்கள் ஐரோப்பிய வெள்ளை இன மக்கள் ஆவார்கள். எனினும் இவர்களுக்குள் பல இனங்கள் உண்டு. ஆங்கிலேயர், பிரெஞ்சு, ஸ்கோற்ரிஸ், ஐரிஸ், ஜெர்மன், இத்தாலியன், உக்கிரேனியன் என பல இனங்களாக இவர்கள் தங்களை தனித்துவப்படுத்துவர். கனடாவில் 13.4 வீதத்தினர் அடையாளம் காணக்கூடிய சிறுபான்மையினர் ("visible minorities") என்றும், 3.4 வீதத்தினர் முதல் குடியினர் என்றும் மக்கள்தொகை கணிப்பீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. சீனர்கள், கறுப்பர்கள், தெற்காசிய சமூகத்தினர் ஆகியோர் அடையாளம் காணக்கூடிய சிறுபான்மையினர் என்ற வகைக்குள் அடங்குவர். ஏறக்குறைய 250 000 தமிழர்கள் கனடாவில் வசிப்பதாகப் பொது ஊடகங்கள் தெரிவிக்கின்றன, எனினும் தெளிவான ஒரு புள்ளி விபரம் இன்னும் கணக்கிடப்படவில்லை. பெரும்பாலான தமிழர்கள் ரொறன்ரோ நகரத்திலேயே வசிக்கின்றார்கள். பிறரும் மொன்றியால், வன்கூவர், கால்கரி போன்ற பெரும் நகரங்களிலேயே வாழ்கின்றார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் 80 களின் பின்பு ஈழப் போராட்டம் காரணமாக இங்கு அகதிகளாக வந்து குடியுரிமை பெற்ற ஈழத்தமிழர்கள் ஆவார்கள். கனடாவில் பல சமயத்தவர்கள் வாழ்கின்றார்கள். இவர்களில் 77.1 % கிறித்தவ சமயத்தவர்கள் ஆவார்கள். குறிப்பிடத்தக்க தொகையினர் 17% சமய சார்பு அற்றவர்கள். எஞ்சிய 6.3% மக்கள் வேறு சமயங்களைப் பின்பற்றுகின்றார்கள். ஆங்கிலம், பிரெஞ்சு இரண்டும் ஆட்சி மொழிகளாகும். பிரெஞ்சு மக்களின் மொழிப் போரின் பின்னரே ஜூலை 7, 1969 அலுவல் மொழிச் சட்டம் ஊடாகக் கனடா முழுவதும் ஆட்சி மொழியானது. இதன் பின்னரே கனடா இருமொழி நாடாக அறியப்படலாயிற்று. நூனாவுட் ஆட்சி நிலப்பகுதியில் இனுக்டிடூட் மொழி ஆட்சி மொழியாகும். இனுக்டிடூட் இனுவிற் முதற் குடிமக்களின் மொழியாகும். அம்மொழியை பேசும் மக்கள் 20 000 வரையில் இருந்தாலும், அவர்களுக்கும் அந்த மொழிக்கும் தரப்படும் மதிப்பும் அக்கறையும் குறிப்பிடத்தக்கதாகும். ஆங்கிலத்தை 59.7% மக்களும், பிரெஞ்சை 23.2% மக்களும் தங்கள் தாய்மொழியாகக் கொண்டுள்ளார்கள். கனடா ஒரு பல்பண்பாடு நாடாக இருந்தாலும் நாட்டின் ஒவ்வொரு குடிமையும் ஒரு ஆட்சி மொழியையாவது அறிந்திருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதனால், 98.5% மக்களுக்கு ஏதாவது ஒரு ஆட்சி மொழியிலாவது பேச முடியும். ஆட்சி மொழி அல்லாத மொழிகளுக்கும் தகுந்த முக்கியத்துவம், மதிப்பு, சுதந்திரம் வழங்கப்படுகின்றது. ஆட்சி மொழியற்ற ஒரு மொழியை 5,202,245 மக்கள் தங்கள் தாய் மொழியாகக் கொண்டுள்ளார்கள். எடுத்துக்காட்டாக, ஒரு குறிப்பிட்ட மக்கள் செறிந்து வாழும் ஒரு இடத்தில் அந்த மொழியில் சமூக சேவைகள் பெற, அந்த மொழியைக் கற்க, பாதுகாக்க உதவ அரசு முற்படுகின்றது. சீன, இத்தாலியன், ஜெர்மன், பஞ்சாபி மொழிகள் இவ்வகையில் குறிப்பிடத்தக்க மக்களால் பயன்படுத்தப்படுகின்றது. அடிப்படையில் கனடாவின் பண்பாடு மேற்கத்தைய பண்பாடே. குறிப்பாக ஆங்கில, பிரெஞ்சு, ஐரிஸ், ஸ்கொரிஸ் ஆகிய ஐரோப்பிய பண்பாட்டுக் கூறுகளால் ஆனது. இது தவிர முதற்குடிமக்களின் சில பண்பாட்டு கூறுகளையும் உள்வாங்கியது. 1960ன் பின்பு பல்வேறு நாடுகளில் இருந்து வரும் குடிவரவாளர்காளால் ம் ஆண்டு கனடா ஒரு பல்பண்பாட்டு நாடாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. பல்பண்பாட்டுக் கூறுகளை ஏற்று உள்வாங்கினாலும் popculture அமெரிக்க பண்பாட்டையே ஒத்து இருக்கின்றது. தொலைக்காட்சி, திரைப்படம், இலக்கியம், இசை, உணவு, விளையாட்டு என பொது வாழ்வியல் அம்சங்கள் அனைத்தும் அமெரிக்காவை ஒத்தே இருக்கின்றது. இது கனேடிய மக்களும், கனேடிய அரசின் பண்பாட்டு அமைச்சகமும் அடிக்கடி அலசும் ஒரு விடயம். இங்கு கனேடிய கலைஞர்கள் இசை, நகைச்சுவை போன்ற துறைகளில் அமெரிக்காவில் அதிகளவில் செல்வாக்கு செலுத்துவது குறிப்பிடத்தக்கது. கனேடிய பண்பாடு அமெரிக்காவை பலவழிகளில் ஒத்து இருந்தாலும் முக்கிய வழிகளில் வேறுபடுகின்றது. கனடாவின் குளிர் சூழல் மற்றும் பரந்த இயற்கையமைப்பு ஒரு வித தனித்துவமான பண்பாடு உருவாவதற்கு ஏதுவாகின்றது. கடும் குளிர், மக்கள் ஒவ்வொருவரும் மற்றவரில் தங்கியிருப்பதை உணர்த்தி ஒத்து போகும் போக்கை உருவாக்குகின்றது. மேலும், குளிர்கால விளையாட்டுக்களான பனி ஹாக்கி, பனிச் சறுக்கு (skiing) ஆகியவை கனேடிய வாழ்வியல் அடையாளத்தின் முக்கிய அம்சங்கள். அமெரிக்காவில் கணிசமானோர் தீவிர கிறிஸ்தவ சமய போக்கைப் பின்பற்றுகின்றார்கள். மாறாக, கனடாவில் சமயம் பொது வாழ்வியலில் முக்கியத்துவம் பெறுவதில்லை. புள்ளி விபரப்படி 17% கனேடியர்கள் சமய சார்பு அற்றவர்கள். கனடா பண்பாடு பெரும்பாலும் சமயச்சார்பற்ற தன்மையுடையது. மேலும், இங்கு ஒரே பால் திருமணங்கள் சட்ட ஏற்புடையவை; ஒரே பால் இணைகளுக்கும் அனைத்து உரிமைகளும் உண்டு. கனடாவில் விளையாட்டுக்களை மூன்று வகைப்படுத்தலாம். அவை குளிர்கால விளையாட்டுக்கள், கோடை கால விளையாட்டுக்கள், உள்ளக விளையாட்டுக்கள். குளிர்காலத்தில் விளையாடப்படும் பனி ஹாக்கி கனடாவின் குளிர்கால தேசிய விளையாட்டு ஆகும். வேறு எந்த விளையாட்டையும் விட இதுவே கனடிய அடையாளத்துடன் பண்பாட்டுடன் பின்னியிணைந்தது. இந்த விளையாட்டில் கனடியர்கள் உலகின் மிகச்சிறந்த விளையாட்டு வீரர்களாகத் திகழ்கின்றார்கள். கனடியர்கள் யார் என்பதை வரையறை செய்வதில் இந்த விளையாட்டு ஒரு முக்கிய களமாக இருக்கின்றது. இவை தவிர குளிர்கால விளையாட்டுக்களான "skating", "skiing", "skate boarding" போன்றவையும் பலரறி குளிர்கால விளையாட்டுக்களாகும். கோடைகாலத்தில் லக்ரோஸ் (எறிபந்து?), கனடிய கால்பந்து (Canadian football), baseball, கால்பந்து, துடுப்பாட்டம் ஆகிய விளையாட்டுக்கள் விளையாடப்படுகின்றன. லக்ரோஸ் கனடாவின் கோடைகால தேசிய விளையாட்டு ஆகும். கனடாவின் முதற்குடிமக்களின் விளையாட்டுக்களில் ஒன்று மிகவும் பிரபலமாகி வருகின்றது. கால்பந்து பரவலாக விளையாடப்படுகின்றது, ஆனால் மட்டைப்பந்து விளையாடப்படுவது வெகுகுறைவு. கூடைப்பந்து, curling உட்பட பலதரப்பட்ட வேறு விளையாட்டுக்களும் விளையாடப்படுகின்றன. கூடைப்பந்து கனடியர் ஒருவரால் உருவாக்கப்பட்டது என்பது குறிக்கத்தக்கது. கனடாவிலுள்ள ஒரு என். பி. ஏ. கூடைப்பந்து அணி, டொராண்டோ ராப்டர்ஸ், அமைந்துள்ளது. Curlingம் அடிப்படையிலேயே கனடிய விளையாட்டு ஆகும். பொதுவாக, கோடைகால ஒலிம்பிக் போட்டிகளைக் காட்டிலும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் கனடா கூடிய பதக்கங்களை வெல்லும். கனடா வளர்ச்சி பெற்ற ஊடத்துறையை கொண்டுள்ளது. ஆரோக்கியமான அரச ஓளி/ஒலி பரப்பு நிறுவனங்களையும், தனியார் துறையையும் கொண்டுள்ளது. கனடாவில் பல தொலைக்காட்சி, திரைப்படத் தயாரிப்புகள் நடை பெறுகின்றது. ஆனால் அவை பெரும்பாலும் அமெரிக்க பொது நுகர்வோருக்காகவே எடுக்கப்படுகின்றன. "The Globe and Mail", "National Post" என்ற இரு தேசிய இதழ்கள் உண்டு; எனினும் "The Toronto Star" அதிக வாசகர்களைக் கொண்டது. கனடா வளர்ச்சியடைந்த ஒரு நாடாக இருந்தாலும், அந்த நிலையைத் தக்க வைக்கவும் மேலும் வளரவும் பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றது. கனடாவில் முதற்குடிமக்களும் பல பிரச்சினைகளை எதிர் நோக்குகிறார்கள். ஓ கனடா! எங்கள் வீடும் நாடும் நீ உந்தன் மைந்தர்கள் உண்மை தேசபக்தர்கள். நேரிய வடக்காய் வலுவாய் இயல்பாய் நீ எழல் கண்டு உவப்போம் எங்கும் உள்ள நாம். ஓ கனடா! நின்னைப் போற்றி அணிவகுத்தோம். எம் நிலப் புகழை, சுதந்திரத்தை என்றும் இறைவன் காத்திடுக! ஓ கனடா! நாம் நின்னை போற்றி அணிவகுத்தோம். ஓ கனடா! நாம் நின்னைப் போற்றி அணிவகுத்தோம். 1980 க்கும் 2004 இடைப்பட்ட காலத்தில், மனித வளர்ச்சி சுட்டெண் அடிப்படையில், உலகில் வசிப்பதற்கு கனடா மிகச்சிறந்த நாடாக, ஐக்கிய நாடுகள் அவையால் 10 முறை அறிவிக்கப்பட்டது. மனித மேம்பாட்டுச் சுட்டெண் இலங்கை ரூபாய் இலங்கை ரூபாய் ("Sri Lankan Rupee") இலங்கையின் உத்தியோகபூர்வ நாணய அலகு ஆகும். இலங்கை மத்திய வங்கி அனேக நாடுகளிலுள்ளதை போன்றே நாணயங்களை வெளியிடும் ஏகபோக உரிமையை கொண்டது. இலங்கை ரூபாய் பொதுவாக ரூ எனறே குறிக்கப்படுவதுடன், இதன் சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனக் குறியீடு (ஐ.எசு.ஓ 4217) LKR ஆகும். இலங்கை ரூபாய் ஒன்று, 100 சதம் எனும் அலகுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. புழக்கத்துக்கு நாணயங்களை விடும்போது அவை, ரூபாய் 10க்கு கூடிய பெறுமானம் கொண்டவையாயின் தாள் நாணயங்களாகவும், ரூபாய் 10க்கு குறைந்த பெறுமானம் கொண்டவையாயின் உலோக நாணயங்களாகவும், ரூபாய் 10 பெறுமானம் கொண்டவையாயின், இரு விதமாகவும் தயாரித்து பாவனைக்காக விடப்படுகின்றன. உலோக நாணயங்கள் ஐக்கிய இராச்சிய நாணய வார்ப்பகத்தில் வார்க்கப்படுகின்றன. தாள் நாணயங்கள் வரையறுக்கப்பட்ட தோமஸ் டீ லா ரு கம்பனியால் அச்சிடப்படுகின்றன. தொடக்கத்தில் அளவில் பெரியதாக இருந்தாலும், இப்பொழுது அளவில் சிறியதாகவே அவை தயாரிக்கப்படுகின்றன. நாணய தயாரிப்பில் ஏற்படும் செலவை குறைக்கவே இவ்வாறு செய்யப்பட்டதாக அறியப்படுகிறது. ரூபாய் 500க்கு கூடிய பெறுமானம் கொண்ட தாள் நாணயங்கள் 1970 - 77 காலப்பகுதியில் பாவனையிலிருந்து நீக்கப்பட்டிருந்தது. உலோக நாணயங்களின் தலைப்பாகத்தில் நாட்டின் பெயர், அது வெளியிடப்பட்ட ஆண்டு, நாணயத்தின் பெறுமதி என்பனவும், பூப்பாகத்தில் இலங்கையின் தேசியச் சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளன. தாள் நாணயங்களின் மேற்படி விபரங்களுக்கு மேலதிகமாக இயற்கை அழகு, பண்பாடு, வரலாறு போன்றவற்றைக் குறிக்கும் சித்திரங்கள் இரு பாகத்திலும் காணப்படுவதுடன், பூப்பாகத்தில் மத்திய வங்கியின் பெயர், கொடுப்பனவு விபரம், நிதி அமைச்சர், மத்திய வங்கியின் ஆளுனர் ஆகியோரின் கையொப்பங்களும் காணப்படுகின்றன. இவற்றில் எண் குறியீடுகள் தவிர்ந்த ஏனையவை இலங்கையின் தேசிய மொழிகளான சிங்களம், தமிழ் ஆகியவற்றிலும், ஆங்கில மொழியிலும் இடம் பெற்றுள்ளன. புதிதாக வெளியிடப்படும் நாணயங்களில் கண்பார்வையற்றோரின் நன்மை கருதி பிரேல் முறையிலும் பெறுமானம் பொறிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உலோக நாணயங்கள் தற்போழுது 1, 2, 5, 10, 25, 50 ஆகிய பெறுமானம் கொண்ட சதங்களாகவும் 1, 2, 5, 10 ஆகிய பெறுமானம் கொண்ட ரூபாய்களாகவும் வார்க்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. இலங்கையின் 50வது விடுதலை நாளை நினைவு கூறும் வகையில் 1998-ம் ஆண்டில் 1000 ரூபாய் பெறுமானம் கொண்ட வெள்ளி நாணயங்களும், 5000 ரூபாய் பெறுமானம் கொண்ட தங்க நாணயங்களும் வெளியிடப்பட்டன. தற்காலத்தில் 1 சதம், 2 சதம், 5 சதம், 10 சதம், 25 சதம் ஆகியன மிக மிக அரிதாகவே புழக்கத்தில் உள்ளன. இலங்கையில் தற்போது புழக்கத்திலுள்ள உலோக நாணயங்களில் 2 சதம், 10 சதம் ஆகியவை அலை போன்ற விளிம்புடன் கூடிய வட்ட வடிவானவை. 5 சதம் வளைந்த விளிம்புடைய சதுர வடிவானது. மற்றைய சதங்களனைத்தும் வட்ட வடிவானவை. 1 ரூபாய், 2 ரூபாய், 10 ரூபாய் ஆகியவை வட்ட வடிவானவை. 5 ரூபாயும் வட்ட வடிவானபோதும், சில சமயங்களில் மட்டும் ஐங்கோண வடிவமுடையது. இலங்கை உலோக நாணயங்கள் தங்கம், வெள்ளி, நிக்கல், செம்பு, நிக்கல்-செம்பு, பித்தளை, நிக்கல்-பித்தளை, அலுமினியம், வெண்கலம், அலுமினிய-வெண்கலம் ஆகிய பல்வேறு உலோகங்களில் வார்க்கப்பட்டன. முன்னர் கால், அரை மற்றும் ஒரு சதம் போன்ற பெறுமதி குறைவான நாணயங்கள் செப்பு உலோகத்தில் வார்க்கப்பட்டன. 10 மற்றும் 20 சத பெறுமானம் கொணட நாணயங்கள் 1920களின் இறுதிவரையிலும், 50 சத நாணயங்கள் 1942 வரையும் வெள்ளியில் வார்க்கப்பட்டன. ஆனால் தற்பொழுது 5 ரூபாய், 10 ரூபாய் தவிர்ந்த அனைத்து நாணயங்களும் பெறுமதி குறைந்த அலுமினிய உலோகத்திலேயே வார்க்கப்படுகின்றன. 5 ரூபாய் செம்பிலும், 10 ரூபாய் செம்பு-வெண்கலத்திலும் வார்க்கப்படுகின்றன. இலங்கையில் தற்போது புழக்கத்திலுள்ள தாள் நாணயங்கள் 10, 20, 50, 100, 200, 500, 1000, 2000, 5000 ஆகிய பெறுமானங்களில் அச்சிடப்பட்டு வெளியிடப்படுகின்றன. இலங்கையில் வெளியிடப்படும் அனைத்து தாள் நாணயங்களும்(200 ரூபாய் தவிர்ந்த) விசேடமாக பண்படுத்தப்பட்டு இரும்பு நூல் கோர்த்த காதிதத்திலேயே அச்சிடப்பட்டுகின்றன. 200 ரூபாய் நாணயம் மட்டும் விசேட பிளாஸ்டிக் தாளில் அச்சிடப்பட்டுகின்றது. இந்த பிளாஸ்டிக் நாணயம் பல பாதுகாப்பு அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இலங்கை தாள் நாணயங்கள் பல வர்ணங்களிலும், தலைப்பாகம் அகலவாக்கிலும் அச்சிடப்படுவது தனித்துவமான விடயங்களாகும். பித்தளை பித்தளை () என்பது செப்பு, துத்தநாகம் ஆகிய உலோகங்கள் சேர்ந்த ஒரு கலப்புலோகம். வேலை செய்வதற்கு எளிதாகவும், கடுமையானதாகவும் இருப்பதால் பித்தளை ஒரு சிறந்த உற்பத்திக்குரிய பொருளாக இருக்கிறது. அல்பா பித்தளை எனப்படும் 40% க்குக் குறைவான துத்தநாகத்தைக் கொண்டுள்ள பித்தளை இளக்கத்தன்மை (malleable) காரணமாகக் குளிர் நிலையிலேயே வேலை செய்யக்கூடியதாக உள்ளது. கூடுதலான அளவு துத்தநாகத்தைக் கொண்ட பீட்டா பித்தளையைச் சூடாக்கி மட்டுமே வேலை செய்ய முடியும் எனினும் அது கடுமையானதும், உறுதியானதும் ஆகும். 45% க்கும் மேலான அளவு துத்தநாகத்தைக் கொண்ட வெண்பித்தளை இலகுவில் நொருங்கக் கூடியது என்பதால் பொதுவான பயன்பாட்டுக்கு உதவாது. அவற்றின் இயல்புகளை மேம்படுத்துவதற்காக சிலவகைப் பித்தளைகளில் வேறு உலோகங்களும் சேர்க்கப்படுவது உண்டு. பித்தளை ஓரளவுக்குத் தங்கத்தை ஒத்த மஞ்சள் நிறம் உடையது. இதன் காரணமாகப் பல்வேறு அலங்காரத் தேவைகளுக்கு இவ்வுலோகத்தைப் பயன்படுத்துகிறார்கள். இளக்கத்தன்மை மற்றும் அதன் ஒலியியல் இயல்புகள் காரணமாகப் பித்தளை பல்வேறு இசைக்கருவிகள் செய்வதற்கும் பயன் படுகின்றது. இந்தியாவிலும் பாத்திரங்கள், விளக்குகள், மற்றும் பல வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் உட்பட ஏராளமான பொருட்கள் பித்தளையில் செய்யப்படுகின்றன. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே பித்தளையை மனிதன் அறிந்திருந்தான். உண்மையில் துத்தநாகம் பற்றி அறிவதற்கு முன்னமே பித்தளை பற்றிய அறிவு மனிதனுக்கு இருந்தது. செப்பையும், கலமைன் எனப்படும் துத்தநாகத்தின் தாதுப்பொருளையும் சேர்த்து உருக்கிப் பித்தளை செய்யப்பட்டது. efwg கலப்புலோகம் கலப்புலோகம் () "(Alloy)" என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் சேர்ந்து உருவாகும் ஓர் உலோகக் கலவையாகும். உலோகப் பிணைப்பைக் கொண்டு கலப்புலோகங்களை விவரிக்கலாம் . ஓர் உலோகக் கலவையானது அதிலுள்ள உலோகத் தனிமங்களின் திண்மக் கரைசலாக இருக்கலாம் அல்லது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கரைசல்களின் கலவையாக இருக்கலாம். உலோகங்களிடை சேர்மங்களும் கலப்புலோகங்களாகும். நன்கு வரையறுக்கப்பட்ட விகிதவியல் அளவுகளில் உலோகங்கள் இதில் சேர்ந்திருக்கும். படிகக் கட்டமைப்பிலும் இவை உருவாகியிருக்கும். சிண்டில் கட்டத்தில் உள்ள தனிமங்களும் சில சமயங்களில் அவற்றிலுள்ள பிணைப்பு வகையை வைத்து உலோகக் கலவையாகக் கருதப்படுகின்றன. உலோகக்கலவைகள் பலவகையான நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன. சில நிகழ்வுகளில் உலோகங்கள் இணைவதால் ஒரு பொருளின் முக்கியமான பண்புகளைப் பாதுகாப்பதற்கான ஒட்டுமொத்த செலவும் குறைகிறது. சில நிகழ்வுகளில் உலோகங்களின் இணைப்பு அதிலுள்ள தனிமங்களுக்கு ஒருங்கியலுந்தன்மையை அளிக்கின்றன. எஃகு, பற்றாசு, வெண்கலம், டியூரலுமினியம், பித்தளை மற்றும் இரசக்கலவை போன்றவை உலோகக் கலவைகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும். உலோகக் கலவைகளின் பகுதிப்பொருட்கள் நடைமுறை பயன்பாடுகளுக்காக பொதுவாக நிறை சதவீதத்தில் அளக்கப்படுகின்றன. அடிப்படை அறிவியல் ஆய்வுகளுக்கு அணு பகுதிகளாக அளக்கப்படுகின்றன. அணுக்கள் அடுக்கப்பட்டுள்ள வடிவங்களின் அடிப்படையில் உலோகக் கலவைகள் வழக்கமாக பதிலீட்டு உலோகக் கலவை அல்லது சிற்றிடைவெளி உலோகக் கலவை என்று வகைப்படுத்தப்படுகின்றன. இவற்றை மேலும் ஒருபடித்தான உலோகக் கலவை, பலபடித்தான உலோகக் கலவை, உலோகமிடை உலோகக் கலவை என்று மேலும் வகைப்படுத்தப்படுகிறார்கள். ஒருபடித்தான வகையில் ஒரே தனிமம் கலந்திருக்கும். பலபடித்தான கலவையில் ஒன்றுக்கு மேற்பட்ட தனிமங்கள் கலந்திருக்கும். வேதித் தனிமங்களின் கலவை ஒர் உலோகக் கலவை ஆகிறது. இதில் உலோகம் ஒன்று உலோகத்தின் பண்புகளைத் தக்கவைத்துக் கொள்ளும் ஒரு தூய்மையற்ற பொருளை கலவையாக உருவாக்குகிறது. ஓர் உலோகக் கலவை என்பது ஒரு தூய்மையற்ற உலோகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது ஆகும். உலோகக் கலவையை உருவாக்க அதனுடன் சேர்க்கப்படும் தனிமங்கள் விரும்பத்தக்க பண்புகளைத் தயாரிக்க நன்கு கட்டுப்படுத்தப்படுகின்றன. ஆனால் அதே நேரத்தில் தயாரிக்கப்படும் தேனிரும்பு போன்ற தூய்மையற்ற உலோகங்கள் குறைவாக கட்டுப்படுத்தப்படுகின்றன, ஆனால் பெரும்பாலும் அவை பயனுள்ளதாக இருக்கும்.இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்களை இணைத்து உலோகக் கலவைகள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் ஒன்று கண்டிப்பாக உலோகமாக இருக்க வேண்டும். இந்த உலோகம் அந்த உலோகக் கலவையின் அடிப்படை உலோகமாகும். அந்த உலோகத்தின் பெயரே தயாரிக்கப்படும் உலோகக் கலவைக்கும் பெயராக அமையும். மற்ற பகுதிக் கூறுகள் உலோகம் அல்லது உலோகமல்லாமல் இருக்கலாம். உருகிய அடிப்படை உலோகத்துடன் கலந்தவுடன் அவை கலவையுடன் கரையக்கூடியதாகி கரைந்து விடும். கலப்புலோகங்களின் இயக்கக் குணங்கள் பெரும்பாலும் அதன் தனித்தனி அங்கத்தினர்களிடமிருந்து வேறுபடுகின்றன. மிகவும் மென்மையாக இருக்கும் அலுமினியம் போன்ற உலோகம் தாமிரத்துடன் கலக்கப்பட்டு அதிக வலிமையுடைய கலப்புலோகமாக மாறுகிறது. சேர்க்கப்படும் இரண்டு தனிமங்களும் மென்மையாகவும் நீளக்கூடியதாகவும் இருந்தாலும் கூட உருவாகும் அலுமினியம் கலப்புலோகம் அதிக வலிமையுடன் உருவாகிறது. அலோகமான கார்பனை சிறிய அளவில் இரும்புடன் கலப்பதால் அதிக நீட்சியடையும் தன்மையை இரும்பின் கலப்புலோகமான எஃகு பெறுகிறது. மிக அதிகமான வலிமை காரணமாக சூடுபடுத்தப்படுவதால் இதனுடைய வலிமையைக் குறைத்து தேவையான நீட்சிக்கு மாற்றிக் கொள்ள இயலும். நவீனகாலப் பயன்பாட்டில் எஃகு ஒரு முக்கியமான பயன்பாட்டுப் பொருளாக விளங்குகிறது. குரோமியத்தை எஃகுடன் சேர்ப்பதால் எஃகின் அரிப்புக்கு எதிரான தடை அதிகரிக்கிறது . துருவேறாத எஃகு உருவாகிறது. சிலிக்கன் சேர்க்கப்பட்டால் எஃகின் மின் கடத்தும் பண்புகள் மாற்றப்படுகின்றன. சிலிக்கன் எஃகு உருவாகிறது. உருகிய உலோகம் மற்றொரு தனிமத்துடன் எப்போதும் தண்ணீரும் எண்ணெயும் போலத்தான் கலந்திருக்கும். தூய இரும்பு எப்போதும் தாமிரத்துடன் கரைவதில்லை. ஒருவேளை பகுதிப்பொருட்கள் இரண்டும் கரையக்கூடியதாக இருந்தால் , வழக்கமாக ஒவ்வொன்றும் தனித்தனியாக செறிவுப்புள்ளியைக் கொண்டிருக்கும். அச்செறிவுப்புள்ளியைத் தாண்டி அக்கலப்புலோகத்துடன் பகுதிப்பொருள் எதையும் கூடுதலாகச் சேர்க்க இயலாது. உதாரணமாக இரும்புடன் அதிகபட்சமாக 6.67% கார்பனை மட்டுமே சேர்க்கமுடியும். கலப்புலோகத்தில் உள்ள தனிமங்கள் வழக்கமாக நீர்ம நிலையில் கண்டிப்பாகக் கரைய வேண்டும். ஆனால் திண்ம நிலையில் அவை எப்போதும் கரையவேண்டும் என்பது அவசியமில்லை. ஒருவேளை உலோகங்கள் திண்ம நிலையில் கரைகிறது என்றால் அக்கலப்பு உலோகம் திண்மக் கரைசலாக உருவாகிறது. சமபடிகங்களால் ஆன ஒருபடித்தான கட்டமைப்பாக உருவாகிறது. இதை ஒரு கட்டம் என்கிறார்கள். கலவை குளிர்ச்சி அடைந்தால் பகுதிப்பொருட்கள் கரையாத தன்மையை அடைகின்றன. அவை தனித்தனியாகப் பிரிந்து இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வகையான படிகங்களாக உருவாகின்றன. வெவ்வேறு கட்டங்கள் கொண்ட பல்லின நுண்கட்டமைப்பை உருவாக்குகின்றன. இருப்பினும் சில கலப்புலோகங்களில் கரையாத தனிமங்கள் படிகமாகல் தோன்றும் வரை பிரியாமல் இருக்கின்றன. ஒருவேளை விரைவாக குளிர்விக்கப்பட்டால் அவை முதலில் ஒருபடித்தான கட்டமாக படிகமாகின்றன. ஆனால் அவை இரண்டாம் நிலை பகுதிப்பொருளால் மீச்செறிவு அடைகின்றன. காலப்போக்கில் இந்த மீச்செறிவடைந்த கலப்புலோகங்கள் படிக அணிக்கோவையில் இருந்து தனியாகப் பிரிகின்றன. அதிக நிலைப்புத்தன்மையை பெற்று இடைவெளியில் உள்ள படிகங்களை வலுப்படுத்தும் இரண்டாவது கட்டத்தை உருவாக்குகின்றன. எலக்ட்ரம் போன்ற சில உலோகக் கலவைகள் இயற்கையில் தோன்றுகின்றன, வெள்ளி மற்றும் தங்கம் சேர்ந்த ஒரு கலப்புலோகம் எலக்ட்ரம் ஆகும். உருகுநிலை திண்மமொன்றின் உருகுநிலை (Melting Point) என்பது அப்பொருள் திண்ம நிலையிலிருந்து நீர்ம (திரவ) நிலைக்கு மாறும் போதுள்ள வெப்பநிலையைக் குறிக்கும். உருகுநிலையில் திண்ம, நீர்ம நிலைகள் சமநிலையில் காணப்படும். ஒரு பொருளின் உருகுநிலையானது அங்கிருக்கும் அழுத்தத்தில் (pressure) தங்கியிருக்கும். எனவே உருகுநிலையானது ஒரு குறிப்பிட்ட அழுத்தத்தில் வரையறுக்கப்படும். வெப்பம் ஏற்றப்படும் போது பொருளின் வெப்பநிலை உயர்ந்து கொண்டு செல்லும், எனினும் பொருள் உருகத் தொடங்கியதும் வெப்பநிலை மாற்றம் எதுவும் இல்லாது வெப்பம் உறிஞ்சப்படும். இது உருகல் மறைவெப்பம் எனப்படும். சில பொருட்கள் நீர்மநிலைக்கு (திரவநிலைக்கு) வராமலே வளிம (வாயு) நிலையை அடைவதுண்டு. இது பதங்கமாதல் என அழைக்கப் படுகின்றது. எதிர்மாறாக, நீர்மநிலையில் இருந்து திண்மநிலைக்கு மாறும்போதுள்ள வெப்பநிலையைக் குறிக்கும்போது இது உறைநிலை (Freezing Point) எனப்படும். பல பொருட்களுக்கு உருகுநிலையும், உறைநிலையும் ஒன்றாகவே இருக்கும். எடுத்துக்காடாக தனிமங்களில் ஒன்றான பாதரசத்தின் உருகுநிலை, உறைநிலை இரண்டுமே 234.32 கெல்வின் (−38.83 °C or −37.89 °F). ஆனாலும் சில பதார்த்தங்களுக்கு திண்ம-நீர்ம நிலைமாற்ற வெப்பநிலைகள் வேறுபடும். எடுத்துக்காட்டாக அகார் 85 °C (185 °F) யில் உருகும் ஆயினும், திண்மமாகும் வெப்பநிலை 31 °C - 40 °C (89.6 °F - 104 °F) ஆக இருக்கும். சில பொருட்கள் மீக்குளிர்வுக்கு உட்படுவதனால், உறைநிலையானது ஒரு தனிச் சிறப்புள்ள இயல்பாகக் கருதப்படுவதில்லை. எடுத்துக்காட்டாக பனிக்கட்டியின் உருகுநிலையானது 1 வளிமண்டல அழுத்தத்தில் 0 °C (32 °F, 273.15 K) ஆகும். நீரின் உறைநிலையும் அதுவேயாகும். ஆனாலும், உறைநிலைக்கு போகாமலே நீரானது சிலசமயம் மீக்குளிர்வுக்கு உட்பட்டு −42 °C (−43.6 °F, 231 K) ஐ அடையும். கொதிநிலையைப் போல உருகுநிலை அமுக்க மாற்றத்தால் குறிப்பிடத்தக்க வகையில் பாதிக்கப்படுவதில்லை. வளியமுக்க நிலையில் அறியப்பட்ட பொருட்களுள் மிகக்கூடிய உருகுநிலையைக் கொண்டது கரிமத்தின் ஒரு வடிவமான கிராபைட் ஆகும். இதன் உருகுநிலை 3948 கெல்வின்கள் ஆகும். பார்முலா 1 பார்முலா 1 (Formula 1 or F1) ஆண்டு தோறும் நடைபெறும் தானுந்து பந்தயத் தொடராகும். இப்பந்தயங்கள் ஐரோப்பிய நாடுகளில் அதிகமாக நடைபெற்றாலும் தற்போது உலகின் மற்ற பகுதிகளிலும் பிரபலமாகிக் கொண்டு வருகிறது. FIA (Fédération Internationale de l'Automobile) (அகில உலக தானுந்து கூட்டமைப்பு) எனப்படும் அமைப்பால் நடத்தப்பட்டு வருகிறது. வருடந்தோரும் சுமார் 11 அணிகள் இப்போட்டித் தொடரில் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியின் சார்பாகவும் இரண்டு ஓட்டுனர்கள் பங்கு கொள்வர். ஒவ்வொரு போட்டியிலும் ஒட்டுனர் பெறும் இடத்தைப் பொறுத்து அவருக்கு புள்ளிகள் வழங்கப்படும். தொடர் இறுதியில் அதிக புள்ளிகள் பெறும் ஓட்டுனருக்கு ஓட்டுனர் சாம்பியன்ஷிப் பட்டம் வழங்கப்படும். 2010ஆம் ஆண்டின் ஓட்டுனர் பட்டத்தை ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் கைப்பற்றினார். அணிக்கான வெற்றிப் பட்டத்தை ரெட் புல் (Red Bull Racing) அணி வென்றது. பார்முலா-1 தானுந்துகள் 360 கிமீ/மணி வேகத்தை அதிகபட்சமாக எட்டும். மேலும் அதன் எஞ்சின்கள் 18000 சுழற்சிகள்/நிமிடம் (அமைப்பால் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச சுழல் வேகம்) சுழல்வேகத்தை எட்டக்கூடியவை. போட்டியில் பங்குபெறும் தானுந்துகள் 5g அளவுக்கு பக்கவாட்டு முடுக்கத்தை எட்டக் கூடியவை. தானுந்துகளின் செயல்திறன் அவற்றின் காற்றியக்கவியல் அமைப்புகள், மின்னணுவியல், வட்டகை ஆகியவற்றைப் பொருத்ததாகும். பார்முலா-1 தானுந்து போட்டிகள் உலக அளவில் 600 மில்லியன் தொலைக்காடசி பார்வையாளர்களால் பார்க்கப்படுகின்றன. இப்போட்டிகளில் ஒவ்வொரு வருடமும் பல பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்படுகின்றன. இதன் வருடாந்திர செலவுப் பட்டியலும் நடத்தும் அமைப்பினுக்கான அரசியலும் ஊடகங்களால் பெருமளவு கவனிக்கப்படுகின்றன. இத்தகைய கவனிப்பும் இதன் புகழும் இப்போட்டிகளுக்கு முதலீடுகளை பெருமளவில் ஈர்க்கின்றன. 1920,1930-களில் நடைபெற்ற ஐரோப்பிய தானுந்து போட்டிகளே பார்முலா-1 போட்டிகளின் முன்னோடிகளாகும். இரண்டாம் உலகப் போரின் போது தானுந்து போட்டிகள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்தன. அதன் பின்னர் சில வருடங்கள் கிராண்ட் பிரி அல்லாத போட்டிகள் நடத்தப்பட்டன. உலக தானுந்து அமைப்பால் விதிமுறைகள் வகுக்கப்பட்டு 1950-இல் பார்முலா-1 போட்டிகள் முதல் முறையாக இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் சுற்றில் நடைபெற்றது. தானுந்தின் அமைப்பு விதிமுறைகள் வடிவமைப்பு விதிமுறைகள் பயன்படுத்தும் பொருட்கள் தொடர்பான விதிமுறைகள் ஆகியவற்றை உலக தானுந்து அமைப்பு ஒவ்வொரு வருடமும் வெளியிடுகிறது. இந்த போட்டிகள் உலகத்திலேயே தானுந்துகளுக்காக நடத்தப்படும் போட்டிகளில் சிறப்பு வாய்ந்தவை என்பதால் பார்முலா-1 என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. 1950-ல் முதல் பார்முலா 1 போட்டித் தொடரை இத்தாலியின் ஜிசப் பரின வென்றார். அவர் ஆல்பா ரோமியோ தானுந்தினை ஓட்டினார். முதல் தொடரில் அர்ஜெண்டினாவின் ஜுவான் மானுவேல் பேஞ்சியோ-வை வென்று கோப்பையைக் கைப்பற்றினார். எனினும் ஜுவான் மானுவேல் பேஞ்சியோ 1951, 1954, 1955, 1956 & 1957 ஆண்டுகளில் பார்முலா 1 வெற்றிக் கோப்பைகளைக் கைப்பற்றினார். (இவரது 5 பார்முலா 1 தொடர் வெற்றிகள் 45 ஆண்டுகள் சாதனையாக இருந்தது. இச்சாதனை 2003-ஆம் ஆண்டு மைக்கேல் சூமாக்கர் தனது 6-வது தொடர் வெற்றியின் மூலம் உடைத்தார்.) 1952, 1953-ஆம் ஆண்டுகளில் பெராரியின் ஆல்பர்டோ அஸ்காரி பார்முலா 1 தொடர் வெற்றியாளர் ஆனார். இக்காலகட்டத்தில் ஐக்கிய ராச்சியத்தின் ஸ்டிர்லிங் மோஸ் ஒவ்வொரு ஆண்டும் வெற்றியாளர்களுக்கு கடும் போட்டியைக் கொடுத்தார். ஆனால் ஒருமுறையும் தொடர் வெற்றியாளரை ஆனதில்லை. ஆகவே, தொடர் வெற்றியாளர் ஆகாத மிகச் சிறந்த ஓட்டுனராக அவர் கருதப்படுகிறார். பேஞ்சியோ போட்டித் தொடர்களின் தொடக்க காலகட்டத்தில் மிகச் சிறந்தவராக விளங்கினார். பலரால், பார்முலா 1 "மகா அதிபதி" என கருதப்படுகிறார். தொடக்க காலத்தில் பெருமளவு தானுந்து தயாரிப்பாளர்கள் பார்முலா 1-ல் பங்கேற்றனர். குறிப்பிடத்தக்கோர்- பெராரி, ஆல்பா ரோமியோ, மெர்சிடஸ் பென்ஸ், மாசராட்டி- இவர்கள் அனைவரும் உலகப் போருக்கு முன்னரும் இவ்வகைப் போட்டிகளில் பங்கேற்றோர் ஆவர். தொடக்க கால போட்டிகளில் உலகப் போருக்கு முந்தைய தானுந்து வடிவமைப்புகளே பயன்படுத்தப்பட்டன. எ-கா: ஆல்பா ரோமியோவின் 158. முன்பக்கத்தில் பொருத்தப்பட்ட எஞ்சினும் குறுகிய வட்டயங்களும் (டயர்கள்) பயன்படுத்தப்பட்டன. எஞ்சின்கள் மட்டின்றி அழுத்த மிகுதிப்படுத்தும் 1.5 லிட்டர் வடிவாகவோ, இயற்கையான காற்றை உறிஞ்சியிழுக்கும் 4.5 லிட்டர் வடிவாகவோ இருந்தன. 1952, 1953-ஆம் ஆண்டுகளில் பார்முலா 2 வகை தானுந்துகளே பயன்படுத்தப்பட்டன. ஏனெனில் அப்போது பார்முலா 1 தானுந்துகள் குறைவாகவே இருந்தன. அவை பார்முலா 1 தானுந்துகளை விட சிறியனவாகவும் ஆற்றலில் குறைந்தனவாகவும் இருந்தன. 1954-ஆம் ஆண்டு பார்முலா 1 விதிமுறைகளில் 2.5 லிட்டர் எஞ்சின் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. அப்போது மெர்சிடஸ் பென்ஸ் தனது மிகவும் மேம்பட்ட வடிவமைப்பான W196 என்ஜினை வெளியிட்டது. இந்த எஞ்சின் நேரடியான எரிபொருள் உள்ளீடு, டேச்மொட்ராமிக் ஊடிதழ் (desmodromic valve) மற்றும் மூடப்பட்ட சீரிசையோட்ட உடல் வடிவமைப்பு போன்றவற்றைக் கொண்டிருந்தது. மெர்சிடஸ் ஓட்டுனர்கள் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் வெற்றிக் கோப்பைகளைக் கைப்பற்றினர். ஆனால் 1955-ஆம் ஆண்டிறுதியில் அனைத்து வகைத் தானுந்து போட்டிகளிலிருந்தும் மெர்சிடஸ் வெளியேறியது. 1955-ஆம் ஆண்டு நிகழ்ந்த லே மான்ஸ் பேரிடர் இதன் காரணமாக கூறப்படுகிறது. இதுவரை தானுந்தில் பயன்படுத்தப்படும் பொறி (எஞ்சின்) 2.4 லிட்டருக்கு மிகாமல் இருக்கவேண்டும் என இருந்தது. 2014-ஆம் ஆண்டு முதல் அதிகபட்சமாக 1.6 லிட்டர் அதிரடி வேக சுழற்றி பொருத்தப்பட்ட பொறியாக இருக்கவேண்டும். இந்த தானுந்துகளில் பயன்படுத்தப்படும் எரிபொருள் பெரும்பாலும் சாதாரண மகிழுந்துகளில் பயன்படுத்தக்கூடிய எரிபொருளை சார்ந்தே இருக்கும். அதிகபட்ச நேர்கோட்டு வேகமான மணிக்கு 372.6 கி.மி. 2005-ஆம் ஆண்டு மெக்லேரன் மெர்சிடஸ் தானுந்து பயன்படுத்தி ஜுவான் பப்லோ மோன்டோயா இத்தாலிய கிராண்ட் ப்ரிக்ஸ் போட்டியிலு நிகழ்த்தியுள்ளார் இந்தியாவில் பார்முலா 1 2011-ஆம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. 2011 முதல் 2013 வரை நடந்த மூன்று போட்டிகளிலும் ரெட் புல் அணியை சேர்ந்த செபாஸ்டியன் வெட்டல் வெற்றி பெற்றுள்ளார். 2014-ஆம் ஆண்டு மட்டும் இடைவெளி விட்டு மீண்டும் 2015-ஆம் ஆண்டு இந்தியாவில் போட்டிகள் நடைபெறுமென அகில உலக தானுந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது. மைய-எந்திர தானுந்து வடிவமைப்பை கூப்பர் நிறுவனம் மறு-அறிமுகம் செய்தது. இந்த வடிவமைப்பு 1950-களில் பார்முலா-3 தொடரில் வெற்றிகரமாக அந்நிறுவனத்தால் பயன்படுத்தப்பட்டதாகும். இத்திட்டம் மிகப் பெரிய அளவில் வெற்றியை ஈட்டித் தந்தது. ஆத்திரேலியரான ஜாக் பிரபாம் 1959, 1960 & 1966 ஆகிய ஆண்டுகளில் ஓட்டுனர் வெற்றிக் கோப்பையை வென்று, அவ்வித வடிவமைப்பின் தொழில்நுட்ப மேம்பாட்டை உறுதிப்படுத்தினார். ஆகையால் 1961 ஆண்டு வாக்கில் அனைத்து அணிகளும் மைய-எந்திர வடிவமைப்பில் தானுந்துகளை வடிவமைத்தன. 1958-ஆம் ஆண்டு ஃபெராரி அணியின் ஓட்டுநராயிருந்த "மைக் ஃகாத்தார்ன்" முதல் பிரிட்டிசு சாம்பியன் (வாகையாளர்) ஆனார். காலின் சாப்மேன் தானுந்து அடிச்சட்ட வடிவமைப்பாளராக பார்முலா 1-ல் நுழைந்ததும் பின்னர் லோட்டசு அணியை தோற்றுவித்ததும் பிரிட்டிசு ஓட்டுநர்களும் அணிகளும் பெருமளவில் வெற்றிபெற்றன. 1962-க்கும் 1973-க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் 12 உலக ஓட்டுநர் வாகைப்பட்டங்களை பிரிட்டிசு மற்றும் காமன்வெல்த் நாட்டு ஓட்டுநர்கள் கைப்பற்றினர். பார்முலா 1 இன் அதிகாரபூர்வ இணையதளம் மைக்கேல் சூமாக்கர் மைக்கேல் சூமாக்கர் ("Michael Schumacher" பி. ஜனவரி 3, 1969) ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த தலைசிறந்த பார்முலா 1 ஓட்டுனராவார். இவர் ஏழு முறை (1994, 1995, 2000, 2001, 2002, 2003, 2004 ஆகிய வருடங்கள்) உலக வாகையர் பட்டத்தை வென்றுள்ளார். எக்காலத்தும் மிகச் சிறந்த F1 ஓட்டுநராகக் கருதப்படுகிறார். பெராரி அணிக்காக போட்டியிடும் இவர், 84 பந்தயங்களை வென்று சாதனை படைத்தவர். பார்முலா 1 பந்தயங்களில் மிக கூடுதலான போட்டிகளில் வென்றமை, மிக விரைவான சுற்றுக்கள், மிகக் கூடுதலான முன்னணி நிலைகள், ஒரே பருவத்தில் பல போட்டிகளில் வென்றமை (2004ஆம் ஆண்டில் 13 போட்டிகளில் வென்றார்) என பல சாதனைகளுக்கு உரிமையாளர். 2002ஆம் ஆண்டில் அப்பருவத்தின் ஒவ்வொருப் போட்டியிலும் முதல் மூவர்களில் ஒருவராகத் திகழ்ந்தது பார்முலா 1 வரலாற்றிலேயே இதுவரை யாரும் நிகழ்த்தாததாகும். அடுத்தடுத்து வாகை சூடிய வகையிலும் சாதனை புரிந்துள்ளார். பார்முலா 1 வலைத்தளத்தின்படி "இந்த விளையாட்டில் புள்ளிவிவரப்படி கண்ட மிகச் சிறந்த ஓட்டுநர்" இவரேயாம். திசம்பர் 29, 2013 அன்று சூமாக்கர் தமது மகனுடன் பிரான்சில் உள்ள ஆல்ப்ஸ் மலைச்சரிவில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது விழுந்து கல்லில் தலை மோதியது. அப்போது அவர் பாதுகாப்பாக அறிவிக்கப்பட்ட பகுதியில் இல்லாது அதற்கு வெளியே இருந்தார். விபத்து நடந்த பதினைந்து நிமிடங்களுக்கு உள்ளாகவே இரு பனிச்சறுக்கு கண்காணிப்பாளர்களால் கவனிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வான்வழியே கொண்டுசெல்லப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கிரனோபிள் நகரில் மூளைக் காயங்களுக்கு சிறப்பு வைத்தியம் வழங்கும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சூமாக்கர் புறவழி மூளைக் காயத்தினால் மருந்துகளால் தூண்டப்பட்ட ஆழ்மயக்கத்தில் இருப்பதாகவும் பெருமூளை நசுங்கி இருப்பதை மருத்துவ வரைவிகள் காட்டியதால் மூளை அழுத்தத்தை குறைக்க அவசர மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதழாளர் சந்திப்பில் அவரது மருத்துவர்கள் அவர் தலைகவசம் அணிந்திருந்தமையாலேயே உயிர்தப்பினார் எனக் கூறினர். அறுவை சிகிச்சைக்குப் பின்னதான வரைவுகள் "பரவலான குருதிக்கசிவு கோளாறுகள்" மூளையின் இருபக்கத்திலும் காணப்படுவதாகக் கூறிய மருத்துவர்களுக்கு அதன் விளைவுகளை கூற இயலவில்லை. அவரது நெருங்கிய நண்பரும் மூளை மற்றும் தண்டுவட காய நிபுணருமான மருத்துவர் கெரார்டு சையாந்த் சிகிச்சை அளித்து வருகிறார். 1999இல் பிரித்தானிய கிராண்டு பிரீயில் சூமாக்கர் விபத்திற்குட்பட்டு கால் முறிவு பட்டபோது இவர்தான் சிகிச்சை அளித்துள்ளார். கணினி வலையமைப்பு கணினி வலையமைப்பு ("Computer network") என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கணினிகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து தகவல் அல்லது தரவுகளைப் பரிமாறிக் கொள்ள வகை செய்யும் ஒரு வலை அமைப்பு ஆகும். கணினி வலையமைப்பை கம்பி வலையமைப்பு (Wired Network) அல்லது கம்பியற்ற(மின்காந்த அலை) வலையமைப்பு(Wireless Network) என்று மேலோட்டமாக இரு வகையாகப் பிரிக்கலாம். வலையமைப்புகளை பல பிரிவுகளில் வகைப் படுத்தலாம். கீழே அந்த பிரிவுகளைக் காணலாம். கணிணி வலையமைப்பு தன்னிறைவு பெறுவதற்கு முன் தகவல்களை கணினி அல்லது கணக்கீடு எந்திரங்களின் இடையே பரிமாற்ற மனிதப்பயனர்களின் உதவி தேவையாய் இருந்தது. இன்று தகவல்களை கணினி அமைப்பின் இடையே பரிமாற்றம் செய்ய வலையமைப்பு பயன்பத்தப்படுகின்றது. கணினி வலையமைப்புக்களை செயல்படுத்த பலவகை நெறிமுறை அடுக்கு (Protocol Stack) கட்டமைப்புகளும், ஊடகங்களும் (Media) நடப்பில் உள்ளன. ஒரு கணினி வலையமைப்பை ஒன்று அல்லது பல ஊடகங்களையும், நெறிமுறை அடுக்குகளையும் இணைந்து செயல் படச் செய்து வடிவமைக்கலாம். உதாரணத்திற்குச் சில: பலவகை [இயக்க மென்பொருள் அமைப்பு]களும் (Operating Systems), வலையமைப்பிற்கான வன்பொருள் அமைப்புகளும் (Networking Hardware), நெறிமுறை அடுக்குகளும் பல்கிப் பெருகி விட்ட கணினி உலகில், கணினிகள் மற்றும் அவற்றில் இயங்கும் மென்பொருட்களை வடிவமைப்போர் சக கணினியுடன் இணைப்பு பெறும் முறை, அக் கணினியின் வன்பொருள் அமைப்பு, அதன் இயக்க மென்பொருட்களின் வடிவமைப்பு மற்றும் தனித்தன்மைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளத் தேவையில்லாமல் மென்பொருட்களை வடிவமைக்க வகை செய்யவே இந்தப் படிமம் வடிவமைக்கப் பட்டது. இந்தப் படிமத்தின் முக்கிய நோக்கங்கள்: இந்தப் படிமத்திலுள்ள ஏழு கட்டங்களாவன: யப்பான் யப்பான் (ஜப்பான்; "Japan") அல்லது சப்பான் என்பது ஆசியக் கண்டத்தில் உள்ள பல தீவுகளாலான நாடாகும். இது பசிபிக்குப் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் உள்ளது. இது சூரியன் உதிக்கும் நாடு என்றும் அழைக்கப்படுகிறது. தோக்கியோ இதன் தலைநகராகும். சப்பான் மொத்தம் 6852 தீவுகளை உள்ளடக்கியது. ஒக்கைடோ, ஒன்சூ, சிகொக்கு, கியூசூ ஆகியன சப்பானின் முக்கியமான, மற்றும் 97 சதவீத நிலப்பரப்பை உள்ளடக்கிய நான்கு பெரிய தீவுகளாகும்.மேலும் இது 12.6 கோடி மக்கட்தொகையுடன் உலகின் 10 வது இடத்தை பிடித்துள்ளது. மேலும் இது உலகின் நான்காவது மிகப்பெரிய பொருளாதார சக்தியாகவும் விளங்குகிறது.மற்றும் உலகின் அதிகபட்ச சராசரி வாழ்நாளை கொண்ட நாடாகவும் விளங்குகின்றது.மேலும் உலகத்தின் 5 வது அதிகபட்ச இராணுவ செலவை கொண்டுள்ளதெனினும் இது தன் தற்காப்புகென்றே பயன்படுத்துகின்றது. யப்பானிய மொழியில் அந்நாட்டின் பெயர் (日本国), "நிகோன் கொகு அல்லது "நிப்பொன் கொகு" என உச்சரிக்கப் பட்டது. இது சூரியன் எழும் நாடு என்ற பொருளாக சீனாவுக்கு கிழக்கே இருக்கிற நாடு என்றும், சூரியன் இருக்கிற மாதிரி வாழ்கின்ற நாடு என்றும் குறிப்பிடுகிறது. கி. பி. 645ஆம் ஆண்டு நிகோன் (日本) என்ற பெயர் முதலில் யப்பானின் பெயராக பயன்பட்டது. 734 ஆண்டு சட்டப்படி இது யப்பானின் பெயராக நிறுவப்பட்டது. யப்பானிய சட்டத்தில் வரையறுக்கப்பட்ட ஆங்கிலப் பெயர் ஜப்பான் (Japan) என்பாதாகும். இருப்பினும் அண்மைக்காலமாக நிப்பொன் என்ற பெயரும் அஞ்சல் தலைகளிலும், நாணயங்களிலும் காணக்கூடியதாக உள்ளது. சப்பான் என்ற ஆங்கில பெயரும், வேறு மொழியின் பொன் (பிரெஞ்சு மொழி), யாபன் ; (இடாய்ச்சு மொழி), ஜப்போனெ ; இத்தாலிய மொழி), ஹபொன் (Japón ; எசுப்பானிய மொழி), இபோனிய (Япония ; உருசிய மொழி), ஈபுன் (ญี๋ปุ่น ; தாய் மொழி) முதலிய பெயர்களும், முன்காலத்தில் சீனாவில் யப்பான் நாட்டுடைய கன் எழுத்துக்களான "日本国" ஆனது "ஜிபங்கு" அல்லது "ஜபங்கு" என்று உச்சரித்த வழக்கத்திலிருந்து தோன்றின என்பது பொதுவான கருத்தாகும். (சப்பானில் இராகனா, கட்டாகானா, காஞ்சி ஆகிய மூன்று எழுத்துருக்களை பயன்படுத்துகின்றனர்) இப்பொழுதும் சில நாடுகளில் யப்பான் நாட்டுடைய கன் எழுத்தை அவ்வவ் நாடுகளின் மொழி வழக்கிற்கேற்ப உச்சரிக்கப்படுகிறது. உதாரணமாக, ரீபென் (日本 ; சீன மொழி), இள்பொன் (일본 ; கொரிய மொழி), நியத்பான் (Nhật Bản ; வியட்னாம் மொழி) போன்றவற்றைக் குறிப்பிடலாம். சப்பானிய மொழிக்கும் தமிழ் மொழிக்கும் நிறைய தொடர்புகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன . இரண்டு மொழிகளும் ஒரே மாதிரி இலக்கண கட்டமைப்புகளை கொண்டுள்ளன என்று சொல்லப்படுகிறது. யமதொ (大和 ; やまと ), "அசிஅரனோ நகட்சு குனி" (葦原中国 ; あしはらのなかつくに ),சின்சூ (神州 ; しんしゅう),ஒன்ச்சோ(本朝 ; ほんちょう) என்ற பெயர்கள் யப்பானிய மொழியில் யப்பான் நாட்டை குறிக்கும் வெவ்வேறு சொற்களாகும். 1889 தொடக்கம் 1946 ஆம் ஆண்டு வரை "தைநிஹொன் தேகொகு" (大日本帝國 ; だいにほんていこく ; மா யப்பான் பேரரசு) என்ற பெயர் யப்பான் நாட்டின் சட்டப்படியான பெயராக இருந்தது. கி.மு. 30000 காலப்பகுதியில் காணப்பட்ட பழங்கற்காலப் பண்பாடு ஜப்பானின் அறியப்பட்ட முதலாவது குடியிருப்பைக் கொண்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஏறத்தாழ கிமு 14,000 ஆண்டுக் காலப் பகுதியில் இருந்து இடைக் கற்காலமும் பின்னர் வேடர்-உணவு சேகரிப்போர் பண்பாட்டைக் கொண்ட புதிய கற்காலமும் காணப்பட்டது. இப் பண்பாட்டினரில் தற்கால அய்னு மக்களினதும், யமாட்டோ மக்களதும் முன்னோர்களும் உள்ளடங்கி இருந்தனர். குழி வாழிடங்களும், திருத்தமற்ற வேளாண்மையும் இக்காலப் பண்பாட்டின் பண்புகள். இக்காலத்தைச் சேர்ந்த அலங்கரிக்கப்பட்ட மட்பாண்டங்களிற் சில உலகில் இன்று கிடைக்கும் மிகப் பழைய மட்பாண்டங்களுக்கு எடுத்துக் காட்டுகளாக உள்ளன. கிமு 300 ஆம் ஆண்டளவில் யயோய் மக்கள் யப்பானியத் தீவுகளுக்குள் வரத் தொடங்கி யோமொன் மக்களுடன் கலந்து வாழ்ந்தனர். கிமு 500 அளவில் தொடங்கிய யயோய் காலத்தில், ஈர-நெல் வேளாண்மை, ஒரு புதிய வகை மட்பாண்டம் என்பன அறிமுகமானதுடன், சீனாவிலிருந்தும் கொரியாவில் இருந்தும் உலோகவியலும் அறிமுகமானது. முதலாவது நிரந்தர தலைநகரம் நாராவில் கி.பி. 710ல் அமைக்கப்பட்டது. யப்பான் அதன் பேரரசருக்கு மிகவும் குறைவான அதிகாரங்களே வழங்கும் அரசியற்சட்ட முடியாட்சி ஆகும். சடங்குசார் தலைவர் என்ற அளவில், பேரரசர் என்பவர் "நாட்டினதும், மக்களுடைய ஒருமைப்பாட்டினதும் குறியீடு" என யப்பானின் அரசியல் சட்டம் வரைவிலக்கணம் கூறுகிறது. அதிகாரம் முக்கியமாகப் பிரதம அமைச்சரிடமும் பிற தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களிடமும் உள்ளது. அதேவேளை இறைமை மக்களிடம் உள்ளது. தற்போதைய பேரரசர் அக்கிகிட்டோ ஆவார். இவருக்கு அடுத்த நிலையில், முடிக்குரிய இளவரசராக நாருகிட்டோ உள்ளார். யப்பானின் சட்டவாக்க அமைப்பு, தேசிய டயெட் எனப்படும் இரு அவைகளைக் கொண்ட நாடாளுமன்றம் ஆகும். இது, 480 உறுப்பினர்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபையையும், 242 உறுப்பினர்களைக் கொண்ட கவுன்சிலர் அவையையும் உள்ளடக்கியது. பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தடவையும், கவுன்சிலர் அவை உறுப்பினர்கள் ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறையும் மக்களால் தெரிவு செய்யப்படுகின்றனர். 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வாக்குரிமை உண்டு. பிரதம அமைச்சரே அரசின் தலைவர் ஆவார். தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களிலிருந்து நாடாளுமன்றத்தினால் தெரிவு செய்யப்படும் ஒருவரைப் பிரதம அமைச்சராகப் பேரரசர் நியமிப்பார். பிரதம அமைச்சர் நாட்டின் அமைச்சர்களைத் தெரிவு செய்வதற்கும், பதவியில் இருந்து நீக்குவதற்குமான அதிகாரம் உடையவர். சப்பானின் மாவட்டங்கள் "டொ" "டோ" "ஃகூ" "கென்" என்ற நான்கு விதத்தின் பேரால் அழைக்கப்பட்டுள்ளன. "டொ" எனப்படுகிறது தோக்கியோடொ மட்டும், "டோ" எனப்படுகிறது ஒக்கைடோ மட்டும், "ஃகூ" எனப்படுகிறது ஓசகாகூவும் கியோத்தோகூவும், "கென்"எனப்படுகிறது மற்ற 43 மாவட்டங்கள் ஆகும். முக்கியமான தீவுகளும், அங்குள்ளே அல்லது அங்கு பக்கத்திலே இருக்கிற மாவட்டங்களும், கீழே காட்டப்பட்டுள்ள மாதிரி மாவட்டங்களுடைய இருப்பிடங்கள், பெயரின் முன்னே இருக்கிற எண்ணால் காட்டப்பட்டுள்ளன. யப்பான், பசிபிக் கடற்கரையில் இருந்து கிழக்காசியா வரை பரந்துள்ள 6,852 தீவுகளைத் தன்னுள் அடக்கியுள்ளது. இந்நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள எல்லாத் தீவுகளும் உட்பட்ட அனைத்துப் பகுதிகளும் அகலக்கோடுகள் 24° - 46°வ, நெடுங்கோடு 122° - 146°கி என்பவற்றுக்கு இடையே அமைந்துள்ளது. வடக்கில் இருந்து தெற்காக யப்பானின் முக்கியமான தீவுகள் ஒக்கைடோ, ஒன்சூ, சிக்கோக்கு, கியூசூ என்பன. ஒக்கினாவா தீவை உள்ளடக்கிய ரியூகியூ தீவுகள் கியூசூ தீவுக்குத் தெற்கே சங்கிலித் தொடராக அமைந்துள்ளன. இவை ஒருங்கே யப்பானியத் தீவுக்கூட்டங்கள் எனப் பெயர் பெறுகின்றன. ஏறத்தாழ யப்பானின் 73% நிலப்பகுதி காடாக அல்லது மலைப் பகுதிகளாக இருப்பதுடன், வேளாண்மை, தொழில் துறை, குடியிருப்பு ஆகிய தேவைகளுக்கு உதவாததாக உள்ளது. இதனால், மக்கள் வாழக்கூடிய கரையோரப் பகுதிகளின் மக்கள் தொகை அடர்த்தி மிகவும் கூடுதலாக உள்ளது. யப்பான், உலகின் மிகக் கூடிய மக்கள் அடர்த்தி கொண்ட நாடுகளில் ஒன்று. யப்பானியத் தீவுகள் பசிபிக் தீ வளையத்தில் உள்ள எரிமலை வலயத்தில் அமைந்துள்ளன. இத் தீவுகள் பெரும்பாலும், நடுச் சிலூரியக் காலம் முதல் பிளீசுட்டோசீன் காலம் வரையிலான பல நூறு மில்லியன் ஆண்டுகளாக இடம் பெற்ற பெரிய பெருங்கடல் நகர்வுகளின் விளைவாக உருவானவை. இந்நகர்வு, தெற்கே பிலிப்பைன் கடல் தட்டு அமூரியக் கண்டத்தட்டு, ஒக்கினாவாக் கண்டத்தட்டு ஆகியவற்றுக்குக் கீழ் நகர்ந்ததனாலும், வடக்கே பசிபிக் தட்டு ஒக்கோட்சுக்கு தட்டுக்குக் கீழ் நகர்ந்ததினாலும் ஏற்பட்டது. முன்னர் யப்பான் யூரேசியக் கண்டத்தின் கிழக்குக் கரையுடன் ஒட்டியிருந்தது. முற்கூறிய தட்டுக்களின் கீழ் நகர்வு, 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், இன்றைய யப்பான் நிலப் பகுதிகளைக் கிழக்குப் புறமாக இழுத்து இடையே யப்பான் கடலை உருவாக்கியது. யப்பானில் 108 செயற்படும் எரிமலைகள் உள்ளன. பெரும்பாலும் சுனாமியை உருவாக்கும் பேரழிவைத் தருகின்ற நிலநடுக்கங்கள் ஒவ்வொரு நூற்றாண்டிலும் பல தடவைகள் ஏற்படுகின்றன. 1923 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தோக்கியோ நிலநடுக்கத்தினால் 140,000 பேர் இறந்தனர். 1995 பெரும் ஆன்சின் நில நடுக்கமும், 2011 மார்ச்சு 11 ஆம் தேதி ஏற்பட்ட 9.0 அளவிலான 2011 தோகோக்கு நிலநடுக்கமும் அண்மைக் காலத்தில் இடம்பெற்றவை. 2011 ஆம் ஆண்டின் நிலநடுக்கத்தில் போது பெரிய சுனாமியும் உருவானது. 2012 மே 24 ஆம் தேதியும் 6.1 அளவிலான நிலநடுக்கம் வடகிழக்கு யப்பானின் கரையோரத்தைத் தாக்கியது. எனினும், இதோடு சுனாமி எதுவும் ஏற்படவில்லை. 2005-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சப்பானின் பாதி ஆற்றல் தேவை பெட்ரோலியத்தின் மூலமும் ஐந்தில் ஒரு பகுதி நிலக்கரி மூலமும் 14% இயற்கைவளி மூலமும் பெறப்படுகிறது. அணு மின்சாரம் நாட்டின் கால் பங்கு மின்தேவையை ஈடுசெய்கிறது. சப்பானில் சாலைப்போக்குவரத்து நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது. 1.2 மில்லியன் தொலைவிற்கான நல்ல சாலைகள் இடப்பட்டுள்ளன. சுங்கச்சாலைகளும் பயன்பாட்டில் உள்ளன. 12-க்கும் மேற்பட்ட தொடர்வண்டி நிறுவனங்கள் உள்ளூர், வெளியூர் தொடர்வண்டி வசதிகளை அளிக்கின்றன. பெருநகரங்களை சின்கான்சென் (=புல்லட் ரயில்) ரயில்கள் இணைக்கின்றன. சப்பானிய ரயில்கள் நேரந்தவறாமைக்குப் பெயர்பெற்றவை. சப்பானில் 173 வானூர்தி நிலையங்கள் உள்ளன. நகரிடைப் போக்குவரத்திற்கு வானூர்தி விரும்பப்படுகிறது. ஆசியாவின் சந்தடி மிக்க வானூர்தி நிலையமான அனீதா நிலையம் சப்பானிலேயே உள்ளது. யோக்கோகாமா, நகோயா துறைமுகங்கள் ஆகியன பெரிய துறைமுகங்கள் ஆகும். ஹனாமி (花見 ) என்றழைக்கப்படும் "பூப் பார்த்தல் " வழக்கத்தை சப்பானியர்கள் மிகவும் முக்கியமானதாக கருதுகிறார்கள். இளவேனிற்காலத்தின் ஆரம்பத்தில் செர்ரி என்ற ஒரு வகையான பூ சப்பானில் பூத்துக் குலுங்கும் . சப்பானின் பகுதிக்கு ஏற்றவாறு பூப் பூக்கும் காலம் மார்ச் கடைசி வாரத்தில் இருந்து மே முதல் வாரம் வரை மாறுபடும். ஊடகங்கள் பூப்பூக்கும் காலநிலையை கணித்துக் கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும் பூத்துக் குலுங்கும் இடம் பற்றிய விவரங்களையும் வெளியிடுகின்றனர்.இந்த பூக்கள் பூக்கும் பூங்கா பூத்திருக்கும் நேரங்களில் விடுமுறை நாட்களில் விழாக்கோலம் பூண்டிருப்பதால் பூங்காவில் அமர்வதற்கு இடம் கிடைக்க கடினம். ஆதலால் முந்திய நாள் இரவே சென்று நல்ல இடம் பார்த்து அமரும் விரிப்புகளை விரித்து போட்டு எல்லைக்கையிறு கட்டி விட்டு வருவர். நல்ல அமரும் இடம் கண்டுபிடித்து அடையாளக்குறியிட்டு வருவது குழுவில் உள்ள இளையோரின் பொறுப்பே ஆகும்.சப்பானியர்கள் நண்பர்களுடன் அல்லது உடன் வேலை பார்ப்பவர்களுடன் அல்லது குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக சென்று கண்டு கழிப்பர் . பூத்திருக்கும் மரங்களின் அடியில் கூட்டமாக அமர்ந்து கதை பேசி , இசை இசைத்து பாட்டுப் பாடி , நடனம் ஆடி , மது அருந்தி உணவு உண்டு பொழுது போக்குவர். பொதுவாக இது ஒரு முழு நாள் நிகழ்ச்சியாக கருதப்படுகிறது. இரவு நேரங்களிலும் கொண்டாடும் வழக்கமும் உள்ளது. இரவு நேரங்களிலும் கொண்டாடுவதற்கு ஏற்றவாறு பூங்கா முழுவதும் மின் விளக்குகள் வசதிகள் செய்யப்பட்டிருக்கும். பூங்காவில் பூப்பூத்திருக்கும் வேளைகளில் தின்பண்டங்கள் விற்கும் தற்காலிய கடைகள் நிறைய விரிக்கப்பட்டிருக்கும். ஆங்கில வருடத்தின் முதல் நாளன்று கோவிலுக்கு செல்லும் வழக்கம் பெரிதும் பின்பற்றப்படுகிறது . ஹத்சுமொடே ( 初詣 ) என்று இந்த வழக்கம் அழைக்கப்படுகிறது. சின்த்தோவும், புத்த மதமும் சப்பானின் முக்கிய மதங்களாகும். கிறித்துவ மதமும் சிறுபான்மையான மக்களால் பின்பற்றப்படுகிறது. பாரம்பரிய விளையாட்டான சுமோ சப்பானின் தேசிய விளையாட்டாக மதிக்கப்படுகிறது. தற்காப்புக் கலைகளாக சூடோ, கராத்தே போன்றவையும் வழமையில் உள்ளன. கோல்ப் விளையாட்டும் ஒரு புகழ்பெற்ற விளையாட்டாகும்.சப்பானிய மக்கள் கால்பந்து விளையாட்டை பெரிதும் ஈடுபாட்டுடன் விளையாடுகிறார்கள் . மன்மோகன் சிங் மன்மோகன் சிங் ("Manmohan Singh", , பிறப்பு: செப்டம்பர் 26, 1932) இந்தியாவின் பதினான்காவது பிரதமர் ஆவார். மன்மோகன் சிங், மேற்கு பஞ்சாபிலுள்ள கா என்னும் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) ஊரில் பிறந்தார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். மே 22, 2004 இல் இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார். சீக்கிய சமயத்தைச் சேர்ந்த இவர், இந்து சமயத்தை சாராத முதல் இந்தியப் பிரதமர் ஆவார். 1991 முதல் 1996 வரை பி. வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் மன்மோகன் சிங் நிதி அமைச்சராக பணியாற்றினார். கல்வியாலும், பயிற்சியாலும் தேர்ந்த பொருளாதாரவியல் வல்லுநரான அவர், இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் துவக்கத்தில் பெரும்பங்கு வகித்தார். மன்மோகன் சிங் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் மத்திய ரிசர்வ் வங்கியின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். அவர் நிதியமைச்சராகும் முன் பின்தங்கிய நிலையில் இருந்த இந்திய பொருளாதாரம், இவரின் கொள்கைகளால் முன்னேறத் துவங்கியது எனக் கருதப்படுகிறது. மக்களவை மூலம் தேர்ந்தெடுக்கப்படாத ஒரே பிரதமர் இவர் தான். 1999 தெற்கு டெல்லியில் போட்டியிட்ட இவர் பாஜக வேட்பாளரால் தோற்கடிக்கப்பட்டார். 1995 முதல் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து இந்திய மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001 மற்றும் 2007ல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மன்மோகன் சிங் கா, பஞ்சாப், பிரிட்டிஷ் இந்தியாவில் ஒரு சீக்கிய குடும்பத்தில் 26 செப்டம்பர் 1932 அன்று குர்முக் சிங் மற்றும் அம்ரித் கவுர் ஆகியோருக்குப் பிறந்தார். இவர் மிக இளம் வயதிலேயே தனது தாயை இழந்தார். இந்தியப் பிரிவினைக்குப் பிறகு, அவரது குடும்பம் அம்ரித்சர், இந்தியாவில் குடிப்பெயர்ந்தனர். இவர் அங்குள்ள இந்துக் கல்லூரியில் பயின்றார். இவருக்கு மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர். ஹெலன் கெல்லர் ஹெலன் கெல்லர் (Helen Keller) (ஜூன் 27, 1880- ஜூன் 1, 1968) புகழ்பெற்ற எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் விளங்கிய ஓர் அமெரிக்கப் பெண் ஆவார். இவர் இள வயதிலேயே கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தவராவார். இவரின் தந்தை அமெரிக்க உள்நாட்டு போரின் பொழுது ராணுவத்தில் வேலை பார்த்தவர். பருத்தி சார்ந்த தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்த நடுத்தர குடும்பம் அவர்களுடையது. ஆறு மாதத்திலேயே பேச ஆரம்பித்து விட்ட ஹெலன் கெல்லர் பதினெட்டு மாத சிறுமியாக இருக்கிற பொழுது மூளைக்காய்ச்சல் வந்தது. ஹெலன் கெல்லர், அமெரிக்காவின் அலபாமா மாநகரத்தில் உள்ள துஸ்கும்பியாவில் 1880ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் நாள் பிறந்தார். பிறக்கும் பொழுது ஆரோக்கியமாகவே பிறந்தார். அவர் பிறந்து 19 மாதங்களில் ஏற்பட்ட கடும் காய்ச்சல் காரணமாகக் கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தார். தனது உணர்ச்சிகளைச் சரியான முறையில் வெளிப்படுத்த முடியாமல் தவித்த ஹெலன் கெல்லர், முரட்டுத்தனமாக நடந்துகொண்டார். 1887ஆம் ஆண்டு, ஹெலன் கெல்லரின் பெற்றோர், அலெக்சாண்டர் கிரகாம் பெல்லை சந்தித்தனர். அலெக்சாண்டர், அவர்களைப் பார்வையற்றோருக்கான பெர்கின்ஸ் பள்ளிக்கு அனுப்பினார். கிரகாம்பெல் ஆன் சல்லிவன் என்ற ஆசிரியை ஹெலன் ஹெல்லருக்கு அறிமுகம் செய்து வைத்தார். ஆன் சல்லிவன், கெல்லரின் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அடுத்த 49 ஆண்டுகளைக் கெல்லரும் சல்லிவனும் ஒன்றாகவே கழித்தனர். பிறர் பேசும் பொழுது அவர் உதடுகளில் கை வைத்து அதிர்வுகள்மூலம் அவர் பேசுவதை புரிந்துகொள்ளும் கலையைக் கெல்லருக்கு சல்லிவன் கற்பித்தார். மேலும், கெல்லரின் உள்ளங்கைகளில் எழுதி, எழுத்துக்களைப் புரிந்து கொள்ள பழக்கினார். இப்படி ஒவ்வொரு பொருளையும் தொட்டு தொட்டுத் உணர்ந்து கற்றார் ஹெலன் கெல்லர். பிறகு சிறிது சிறிதாக எழுதக் கற்றுக்கொண்ட கெல்லர் கண் பார்வையற்றோருக்கோன பிரெயில் எழுத்து முறையைக் கற்றுக் கொண்டார். எதையும் விரைவாகக் கற்றுக்கொள்ளும் திறமை கெல்லருக்கு இயல்பாகவே இருந்தது. பத்து வயது நிறைவதற்கு முன் ஹெலன் கெல்லர், கண் பார்வை அற்றோருக்கான பிரெயில் முறையில் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், கிரேக்கம், லத்தீனம் ஆகிய மொழிகளைக் கற்றார். 1888 இல் ஹெலன் கெல்லர் பார்வையற்றோருக்கான பெர்கின்ஸ் பள்ளியில் சேர்ந்தார். 1904ஆம் வருடம், கெல்லர், சல்லிவனுடன் நியூயார்க் சென்று அங்கேயிருந்த காது கேளாதோருக்கான ரைட்-ஹுமாஸன் பள்ளியில் சேர்ந்தார். அங்கு கெல்லருக்கு பேசக் கற்றுத்தர சாராஃபுல்லர் என்ற ஆசிரியை உதவினார். தனது ஆசிரியை சாராஃபுல்லர் பேசும்போது அவரது வாய் உதடுகள் மற்றும் நாக்கின் அசைவுகளைத் தொட்டு தொட்டு உணர்ந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பேசக் கற்றுக்கொண்டார் ஹெலன் கெல்லர். தட்டுத் தடுமாறி பேசத் தொடங்கிய அவர் பல ஆண்டுகள் பயிற்சி செய்தார். கடைசிவரை அவரால் தெளிவாகப் பேச முடியவில்லை ஆனால் ஹெலன் கெல்லர் ஒருமுறைகூட மனம் தளரவில்லை. மகளிருக்கான கேம்பிரிட்சு பள்ளியில் இணைந்தார். தனியாகப் பாடங்களைக் கற்றுக்கொண்ட கெல்லர் பல்கலைக் கழகத்திற்கு செல்ல விரும்பினார். 1900 இல் ராட்கிளிஃப் பல்கலைக்கழகம் மிகுந்த தயக்கத்துடன் கெல்லரை சேர்த்துக்கொண்டது. ஆன் சல்லிவனை துணைக்கு வைத்துகொண்டு தொய்வின்றி உழைத்த கெல்லர் 1904 ஆம் ஆண்டு தன்து 24 ஆவது வயதில் இளங்கலை பட்டம் பெற்றார். கண்பார்வையின்றி காது கேளாமல் பல்கலைக் கழகத்தில் படித்துப் இளங்கலைப் பட்டம் பெற்ற முதற்பெண்மணி என்ற சிறப்பும் பெற்றார். ஆஸ்திரிய தத்துவவியலாளரான வில்லம் ஜெருசலம் என்பவர் ஹெலன் கெல்லருடைய எழுத்தார்வத்தை வெளிக்கொணர உதவினார். தனது கல்லூரி நாட்களிலேயே 1903 இல் 'தி ஸ்டோரி ஆஃப் மை லைப்’ என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதினார் கெல்லர். தன் வாழ்நாளில் மொத்தம் 12 நூல்களை எழுதியுள்ளார். கல்லூரி நாட்களில் வெளிப்பட்ட ஹெலனின் எழுத்தார்வம் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாய் அவரைத் தொடர்ந்திருந்தது. 'தி ஸ்டோரி ஆஃப் மை லைப்’ என்ற அவருடைய படைப்பு பெண்கள் இதழொன்றில் தொடராக வெளிவந்து பின் புத்தகமாகப் பதிப்பிக்கப்பட்டது. மராத்தி உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட உலகமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, ஹெலனின் படைப்புகளில் இன்றும் தலைசிறந்ததாகப் போற்றப்படுகிறது. தன்னம்பிக்கை - ஒரு கட்டுரை, நான் வாழும் உலகம், கற்சுவரின் கீதம், இருளிலிருந்து, என் மதம், மாலைக்காலத்து அமைதி, ஸ்காட்லாந்தில் ஹெலன் கெல்லர், ஹெலன் கெல்லரின் சஞ்சிகை, நம்பிக்கை கொள்வோம், ஆன் சல்லிவன் மேஸி - என் ஆசிரியை, திறந்த கதவு போன்றவை அவருடைய பிரசுரமான படைப்புகள் சில. இவைதவிர காது கேளாமை, பார்வையின்மை, சமூகவியல், சமூகம் சார்ந்த பிரச்சனைகள், பெண்ணுரிமை போன்றவை தொடர்பாகப் பல கட்டுரைகளையும், ஆக்கங்களையும் நாளிதழ்களுக்கும், வாராந்திர, மாதாந்திரப் பத்திரிகைகளுக்கும் பங்களித்தவண்ணமிருந்தார். அறிவாற்றலிலும் நெஞ்சுரத்திலும் சாதாரண மனிதர்களுக்குச் சற்றும் சளைக்காதவரான கெல்லர், சிறந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் உருவெடுத்தார். இவர் உழைப்பாளர் உரிமைகளையும், சோசியலிச தத்துவத்தையும் ஆதரித்துப் பல கட்டுரைகளும் புத்தகங்களும் எழுதினார். தன் பெயரிலேயே பார்வையற்றோர் நலனுக்காக லாப நோக்கற்ற அமைப்பை ஏற்படுத்தினார். ஹெலன் தன் வாழ்நாளைக் கண்ணிழந்தோர் மற்றும் காதுகேளாதோர்க்காகச் செலவிட்டார். அதற்காக, அல்லும் பகலும் அயராது உழைத்தார். அவர்களுக்கென பள்ளிகள் திறக்கச் செய்யும் பொருட்டு மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் உலக நாடுகள் பலவற்றுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஹெலன் கெல்லர், ஆன் சல்லிவனுடன் 39 நாடுகளுக்குச் சென்றுள்ளார். ஹெலன் கெல்லர் நிதி என்ற பெயரில் நிதி ஒன்றினைத் தொடங்கி, அதில் சேர்ந்த தொகையான ரூபாய் ஒன்றரை கோடியைப் பள்ளிகளுக்கு வழங்கினார். பார்வையற்றோர்க்கென தேசிய நூலகம் ஒன்றனை உருவாக்கி, உலகம் முழுவதிலும் இருந்து நூல்கள் வந்து குவிய ஏற்பாடு செய்தார். தன்னைப்போல அவர்களும் மீட்சி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் தன் எண்பத்தெட்டு வயது வரை அயராது உழைத்தார். ஆன் சல்லிவன் ஹெலன் கெல்லருக்கு ஆசிரியராகச் சேர்ந்தது முதல் நீண்ட நாள் அவருடனே தங்கினார். 1905 இல் அவர் ஜான் மேக்கி என்பவரை மணந்தார். ஆனால் 1914 இல் இருந்து சல்லிவனின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. எனவே பாலி தாம்சன் என்ற ஸ்காட்லாந்துநாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஹெலன் கெல்லருக்கு உதவியாளராகவும் மொழிபெயர்பாளராகவும் வந்து சேர்ந்தார். இவருக்குக் காது கேளாதோர் மற்றும் கண்பார்வையற்றோரை பராமரிப்பதற்கான முன்னனுபவம் ஏதும் இல்லாதவராவார். ஆனால் நாளடைவில் இவர் ஹெலன் கெல்லருடைய காரியதரிசியாகவும் ஒரு நல்ல கூட்டாளியாகவும் இறுதிவரை உடனிருந்து பணிபுரிந்தார். கெல்லர் குவீன்சிலுள்ள ஃபாரஸ்ட் ஹில் என்ற இடத்திற்கு ஜான், சல்லிவன் மற்றும் பாலி தாம்சனுடன் குடிபெயர்ந்தார். அங்கு தனது இல்லத்தைக் கண்பார்வையற்றோருக்கான அமெரிக்க நிறுவனமாக மாற்றினார்.ஹெலன் கெல்லர் வாஷிங்டன் நகரின் புகழ்பெற்ற பெண்மணியாகத் திகழ்ந்தார். 1936 ஆம் ஆண்டு நினைவு மீளா நிலையில் ஹெலன் கெல்லரின் கையைப் பிடித்தபடி ஆன் சல்லிவன் உயிர் துறந்தார். கெல்லர் தனது மொழிபெயர்ப்பாளர் பாலி தாம்சன் என்பவரின் உதவியுடன் வாழ்ந்துவரலானார்; இவர்கள் பின்னர் கன்னக்டிகட் நகருக்குக் குடிபெயர்ந்தனர். இருவரும் இணைந்து உலக நாடுகள் பலவற்றுக்கும் சுற்றுலா மேற்கொண்டு பார்வையற்றோருக்கான நிதி திரட்டினர். 1957 இல் பாலி தாம்சன் பக்கவாத நோயால் தாக்கப்பட்டார். ஆனால் இறுதிவரை அவர் மீள இயலவில்லை. 1960 இல் தாம்சனும் இறந்தார். அதன் பிறகு 1957 இல் பாலி தாம்சனுக்கு உதவிகள் புரிய வந்த வின்னி கார்பல்லி என்ற செவிலியர் ஹெலன் கெல்லரின் இறுதி வரை உடனிருந்தார். கெல்லர் ஒரு உலகப் புகழ் பெற்ற பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் திடழ்ந்தார். மாற்றுத் திறனாளிகளுக்கான ஒரு வழக்குரைஞராகவும் திகழ்ந்தார். அவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தந்ததில் ஹெலன் கெல்லரின் பங்களிப்புகள் அதிகமானது. உட்ரோ வில்சனின் எதிர்பாளராகவும் ஒரு சோசலிச வாதியாகவும் விளங்கினார். அமெரிக்க பிறப்புக் கட்டுப்பாடு சங்கத்தின் ஆதரவாளராகத் தீவிர அரசியலில் ஈடுபட்டார். 1915 ஆம் ஆண்டு அவர் ஜார்ஜ் கெஸ்லர் இன்பவருடன் இணைந்து 'ஹெலன் கெல்லர் சர்வதேச அமைப்பு'(HKI) ஒன்றைத் தொடங்கினார். இந்நிறுவனம் பார்வை, உடல் நலம் மற்றும் ஊட்டச்சத்து சார்ந்த ஆய்வுகளுக்காக நிறுவப்பட்டது 1920 ஆம் ஆண்டு அவர் அமெரிக்க உள்நாட்டு உரிமைகளுக்கான ஒன்றியம் (ACLU) ஒன்றைத் தொடங்கினார். 40 நாடுகளுக்கு ஆன் சல்லிவனுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கெல்லர் அடிக்கடி ஜப்பான் சென்று வந்ததால் ஜப்பான் மக்களின் மனங்கவர்ந்த பெண்மனியாக ஆனார். கெல்லர் குரோவர் கிளீவ்லேண்ட், லிண்டன் பி ஜான்சன் உள்ளிட்ட பல அமெரிக்க அதிபர்களைச் சந்தித்தார். புகழ்பெற்ற நபர்களான அலெக்சாண்டர் கிரகாம் பெல், சார்லி சாப்ளின், மார்க் டுவெயின் போன்றோருடன் தொடர்பில் இருந்தார். கெல்லர் மற்றும் ட்வைன் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கெல்லர் மற்றும் மார்க் டுவெயின் ஆகியோருடைய கருத்துகளால் இருவரும் தீவிரவாதிகளாகக் கருதப்பட்டனர். ஆனால் இருவருடைய மக்களுக்கான பொதுநலப் பணிகளே மேலோங்கியதால் இவர்களுடைய அரசியல் கருத்துகள் மறக்கப்பட்டன.கெல்லர் அமெரிக்க சோசலிசக் கட்சியின் உறுப்பினராகவும் ஆதரவாளராகவும் இருந்தார். ஹெலன் கெல்லர் 1961 இல் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் தனது இறுதி நாட்களில் வீட்டிலேயே முடங்கிக் கிடக்க வேண்டியதாயிற்று. 1964, செப்டம்பர் 14 இல் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அதிபர் லின்டண் பி. தாம்சன் அதிபருக்கான சுதந்திரப் பதக்கத்தை ஹெலன் கெல்லருக்கு வழங்கினார். இது அமெரிக்கக் குடியரசின் மிக உயர்ந்த இரு பதக்கங்களுள் ஒன்றாகும். 1965 இல் கெல்லர் நியூயார்க்கில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நாட்டின் மிகச்சிறந்த பெண்மணியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்னும் ஒரு வாரத்தில் தனது 88 ஆவது பிறந்தநாள் வரவிருக்கும் நிலையில் 1968, ஜூன் 1 ஆம் நாள் தூக்கத்திலேயே உயிர் துறந்தார். இவரது சேவையைக் கருதி இவரது உடல் வாஷிங்டன் டி. சியில் ஆன் சல்லிவன், பாலி தாம்சன் ஆகியோர்ரது உடலருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. ஹெலன் கெல்லருடைய வாழ்க்கை பலமுறை திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. 1919 இல் டெலிவரன்சு என்ற வசனமில்லாப்படமாக எடுக்கப்பட்டது. காத்ரின் கோர்னெல் என்பரால் ஹெலன் கெல்லரின் கதை என்ற பெயரில் குறும்படமாக எடுக்கப்பட்டது. மேலும் ஹார்ஸ்ட் கார்பொரேசன் என்ற அமெரிக்கத் தொலைக்காட்சி நிறுவனம் ஹெலனின் வாழ்க்கையை தொடராகவும் வெளியிட்டது. ஹெலன் கெல்லர் எழுதிய சுய வரலாற்று நூலான எனது கதை நாடகமாகவும் எடுக்கப்பட்டது. இது பின்னர் 1962 இல் திரைப்படமாக்கப்பட்டு ஆஸ்கார் விருது பெற்றது. 1979 மற்ரும் 2000 த்தில் மீண்டும் தொலைக்காட்சிக்காகத் தயாரிக்கப்பட்டது. 1984 இல் கெல்லருடைய வாழ்க்கை தொலைக்காட்சித் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது இப்படம் ஹெலன் கெல்லருடைய கல்லூரி மற்றும் அரசியல் வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டுவதாக இருந்தது. 2005 இல் கெல்லரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு 'பிளாக்' என்ற பாலிவுட் திரைப்படம் எடுக்கப்பட்டது. இதே ஆண்டுல் சுவேடன்பர்க் நிறுவனத்தால் கெல்லரைப் பற்றிய குறும்படம் ஒன்று தயாரிக்கப்பட்டது. இதில் கெல்லர் பார்வை, காது, வாய் என்ற முப்புலனும் பாதிக்கப்பட்ட கெல்லரின் நம்பிக்கை மற்ரும் மனவுறுதியின் காரணமாகப் பெற்ற வெற்றிகள் எடுத்துச் சொல்லப்பட்டன. மார்ச் 6, 2008 இல் நியூ இங்கிலாந்து வரலாற்றுக் கழகம் ஹெலன் கெல்லர் தனது ஆசியரான ஆன்சல்லிவனுடன் இருக்கும் படங்களையும் கெல்லர் தனது பொம்மையுடன் இருக்கும் படங்களையும் மறுபடியும் வெளியிட்டு உலகெங்கும் கவனத்தை ஈர்த்தது. 1999களில் கெல்லர் இருபதாம் நூற்றாண்டின் உலகின் மிகச் சிறப்புமிக்கப் பெண்மணியாக அறியப்பட்டார். 2003 இல் அலபாமா மாநிலம் அம்மாநிலத்தின் சிறப்புமிக்கக் குடிமகளாக அறிவித்தது. மேலும் அலபாமாவில் உள்ள செப்பீல்டு மருத்துவமனை ஹெலன் கெல்லர் மருத்துவமனையாக அர்ப்பணிக்கப்பட்டது. ஸ்பெயின், கடாபி, லாடு, இஸ்ரேல், போர்சுகல்,லிபெயின், பிரான்சு ஆகிய நாடுகளில் தெருக்களுக்கு ஹெலன் கெல்லருடைய பெயர் சூட்டப்பட்டது. இந்தியாவின் மைசூர் மாகாணத்தில் கே.கே. சீனிவாசன் என்பவரால் நிறுவப்பட்ட வாய்பேசாதோர் மற்ரும் காதுகேளாதோருக்கான முன்பருவப் பள்ளிக்கு ஹெலன் கெல்லருடைய பெயரால் மாற்றப்பட்டது. 2009, அக்டோபர் 7 இல் அலபாமா மாநிலத்தில் ஹெலன் கெல்லருடைய வெண்கலச் சிலை நிறுவப்பட்டது. மேலும் ஹெலன்கெல்லர் முதன் முதலாக ஏழு வயதான போது ஆன் சல்லிவனுடன் தண்ணீரைத் தொட்டுணர்ந்து தண்ணீர் என்பதற்கான பொருளை ஊணர்ந்த அக்காட்சி சிலையாக வடிக்கப்பட்டுள்ளது. அங்கு பிரெய்லி எழுத்துகளில் "உலகிலேயே எங்கும் காணமுடியாத தொட முடியாத இதயத்தால் உணரப்பட்ட அழகிய பொருள்." என்று பொறிக்கப்பட்டுள்ளது. முதன் முதலில் மாற்றுத் திறனாளிக்கு அதுவும் குழந்தைப் பருவத்தில் தலைநகரில் சிலை வைக்கப்பட்டது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். தக்காளி பேரினம் தக்காளி பேரினம் பல்வேறுபட்ட ஆண்டு, பல்லாண்டு நிலைத்திணை இனங்களைக் கொண்ட ஒரு பேரினம் ஆகும். இப்பேரினத்தைச் சேர்ந்த நிலைத்திணைகள் பூஞ்செடிகளாகவோ, கொடிகளாகவோ, பற்றைகளாகவோ, சிறிய மரங்களாகவோ காணப்படுகின்றன. கூடுதல் இனங்களில் கவர்ர்சிமிகு பழங்களும் பூக்களும் காணப்படுகின்றன. முன்னர் தனிப் பேரினங்களாக கணிக்கப்பட்ட சில பேரினங்களும் இங்கு இணைக்கப்பட்டமையால் இன்று இப்பேரினத்தில் 1500 தொடக்கம் 2000 இனங்கள் உள்ளன. இப்பேரினத்தின் கூடுதலான நிலைத்திணைகளின் பச்சை நிறப்பகுதிகளும், காய்களும் மாந்தருக்கு நச்சுத்தணைமையைக் கொண்டன. எனினும் சில நிலைத்திணைகளின் காய்கள், இலைகள், பழங்கள், கிழங்கள் மாந்தரின் உணவிற்கு ஏற்றதாக உள்ளது. உலகின் முக்கிய உணவுகள் இப்பேரினத்திலில் அடங்குகின்றன அவையாவன என்பனவாகும். அசாம் அசாம் என்பது இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலமாகும். இதன் தலைநகர் திஸ்பூர். குவகாத்தி இம்மாநிலத்தின் முக்கிய நகரம் ஆகும். அசாமிய மொழி, போடோ மொழி மற்றும் வங்காள மொழி ஆகியன அசாமின் அலுவல்முறை மொழிகளாகும். அசாம் மாநிலம் தெற்கு இமய மலையின் கிழக்குப் பகுதியில், பிரம்மபுத்திரா மற்றும் பாரக் ஆகிய ஆறுகளின் பாயும் பள்ளத்தாக்கையும், அதனை ஒட்டி அமைந்துள்ள மலைகளையும் கொண்டுள்ளது. இம்மாநிலத்தின் பரப்பளவு சுமார் 78,438 சதுர கிலோமீட்டர்கள். அசாம் மாநிலத்தை ஒட்டியுள்ள 6 மாநிலங்களையும், அசாம் மாநிலத்தையும் , "ஏழு சகோதரிகள்" என்று அழைப்பர். அவையாவன: அருணாச்சலப் பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா மற்றும் மேகாலயா. இவ்வேழு மாநிலங்களும் மற்ற இந்திய மாநிலங்களோடு மேற்கு வங்காளம் மாநிலத்தின் ஒரு சிறிய பகுதியின் மூலமாகவே நிலவழியாக இணைக்கப்படுகின்றன. இப்பகுதி சில்லிகுறி குறுவழி என்றும், கோழி கழுத்து என்றும் அழைக்கப்படுகிறது . அசாம் மாநிலம் பூட்டான் மற்றும் வங்காள தேசம் ஆகிய நாடுகளுடன் சர்வதேச எல்லைகளையும் கொண்டுள்ளது. அசாம் மாநிலம், 1826 ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் யாண்டபோ உடன்படிக்கையால் இந்தியாவின் அங்கமானது. தேயிலை உற்பத்தியில் சிறந்து விளங்கும் அசாம் மாநிலம், பெட்ரோலியம், பட்டு ஆகியவற்றின் உற்பத்தியிலும் சிறந்து விளங்குகிறது. உலகில் வேறெங்கிலும் காண கிடைக்காத பல அரிய விலங்கினங்களும், தாவர வகைகளும் அசாம் காடுகளில் காணப்படுகின்றன. உதாரணமாக, ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம், புலி, ஆசிய யானை ஆகிய அரியவகை விலங்குகள் இம்மாநிலக் காடுகளில் வாழுகின்றன. இதன் காரணமாக, இவ்விலங்கினங்களைக் காண உலகமெங்கிலும் இருந்து இயற்கை ஆர்வலர்களும், சுற்றுலாப் பயணிகளும் அசாம் மாநிலத்திற்கு வருகை தருகின்றனர். குறிப்பாக, காசிரங்கா பகுதியும், மணாஸ் பகுதியும் உலக பாரம்பரியக் களங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. முன்காலத்தில் அசாம் மாநிலம் அதன் காட்டு வளத்திற்கும், காட்டில் இருந்து கிடைக்கும் பொருள்களுக்கும் புகழ்பெற்றிருந்தது. தொடர்ச்சியான காட்டழிப்பால் இம்மாநிலத்தின் காடுகளின் நிலை பெரும் கேள்விக்குள்ளாகியுள்ளது. உலகின் அதிக மழைபெய்யும் இடங்களில் ஒன்றான அசாம் மாநிலம், மாபெரும் ஆறான பிரம்மபுத்திரா ஆற்றினால் வளம் பெறுகிறது அசாம் மகாபாரதத்தில் பிரகியோதிசா என்ற பெயரிலும், காமரூபா அரசு என்ற பெயரிலும் அழைக்கப் படுகிறது. அசாம் என்ற பெயர் இப்பகுதியை 1228 முதல் 1826 வரை ஆண்ட அகோம் அரசுகளால் சூட்டப்பட்டதாகத் தெரிகிறது.. ஆங்கிலேய ஆதிக்கத்தின்கீழ் 1838 ஆம் ஆண்டு வந்த அசாம் நிலப்பகுதி, அதே பெயரிலேயே அழைக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு பெப்பிரவரி மாதம் 27ஆம் தியதி இன்றைய அசாம் அரசு மாநிலத்தின் பெயரை "அசோம்" என மாற்றியமைத்தது. , . இம்மாற்றம் மக்களிடையே பரவலான எதிர்ப்பை உருவாக்கியது. பல புவியியல் ஆய்வுகளின் முடிவில் அசாம் மாநிலத்தின் வற்றாஆறான பிரம்மபுத்திரா ஆறு, இமயமலை தோன்றுவதற்கு முன்னரே தோன்றியதாகக் கண்டறிந்துள்ளனர். அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் மிகவேகமாக பாயும் பிரம்மபுத்திரா ஆறானது அசாம் மாநிலத்தில் வேகம் குறைந்து, பல கிளை ஆறுகளாக பிரிந்து, சுமார் 80 முதல் 100 கிலோமீட்டர் அகலமும், 1000 கிமீ நிளமும் கொண்ட பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கை வளம் செய்கிறது. அசாம் மாநிலத்தில் 27 மாவட்டங்கள் உள்ளன, அவை பின்வருமாறு, 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி அசாம் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 31,205,576 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 85.90% மக்களும்; நகர்புறங்களில் 4.10% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 17.07% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 15,939,443 ஆண்களும் மற்றும் 15,266,133 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 958 வீதம் உள்ளனர். 78,438 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 398 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 72.19 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 77.85 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 66.27 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4,638,130 ஆக உள்ளது. இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 19,180,759 (61.47 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 10,679,345 (34.22 %) ஆகவும், சீக்கிய சமயத்தவரின் மக்கள் தொகை 20,672 (0.07 %), சமண சமய மக்கள் தொகை 25,949 (0.08 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 1,165,867 (3.74 %) ஆகவும், , பௌத்த சமய மக்கள் தொகை 54,993 (0.18 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 27,118 (0.09 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 50,873 (0.16 %) ஆகவும் உள்ளது. இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான அசாமிய மொழியுடன் போடோ மொழி, இந்தி, வங்காளம் மற்றும் வட்டார மொழிகள் பேசப்படுகிறது. கௌஹாத்தி தொடருந்து நிலையம் நாட்டின் அனைத்து நகரங்களுடன் இருப்புப்பாதை]] மூலம் தொடருந்துகளால் இணைக்கப்பட்டுள்ளது. 1126 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலை 31 வடகிழக்கு இந்தியாவின் நுழைவாயிலாக உள்ளது. கௌஹாத்தி லோக்பிரியா கோபிநாத் பர்தலை சர்வதேச விமான நிலையம் நாட்டின் மற்றும் உலகின் பல நகரங்களுடன் இணைக்கிறது. கற்காலத்தில் அசாம் பகுதி ஒருகிணைந்த பகுதியாக இருந்து உள்ளது. இதணை அப்பொழுது வாழ்ந்த மக்களின் பரிமாற்ற பொருட்கள் விளக்குகிறது.ஆனால் இரும்பு மற்றும் வெண்கல காலத்தில் வணிகத்திற்கான காலச் சான்று எதுவும் இல்லை. முன்பு அசாம் பகுதியை தனவ அரச மரபை சேர்ந்த மஹிரங்க தனவரால் ஆட்சி செய்யப்பட்டது. இவர் ஆட்சியை நரகரால் அழிக்கப்பட்டது. நரக்கா மற்றும் அதன் ஆட்சியாளர்கள் கிருஷ்ண என்பவரால் கொல்லபட்டார்கள். பிறகு நரக்காவுடைய மகன் பகதட அரசனானார். சமுத்திர குப்தரின் 4வது நூற்றாண்டு கல்வெட்டுகள் கமருப(மேற்கு அசாம்) மற்றும் தேவாக(மத்திய அசாம்) பகுதினை குப்த பேரரசின் எல்லைகளாக குறிபிடுகின்றன. குசராத்து குஜராத்  (, , Gujarat) இந்தியாவின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலமாகும். இம்மாநிலத்தில் தற்போது 33 மாவட்டங்கள் உள்ளது. இது இந்தியாவில் மகாராட்டிரத்திற்கு அடுத்து நன்கு தொழில் வளர்ச்சி அடைந்த மாநிலமாகும். இதன் வடமேற்கில் பாகிஸ்தானும் வடக்கில் ராஜஸ்தானும் , மேற்கில் மத்திய பிரதேசம் மற்றும் தெற்கில் மகாராஷ்டிர எல்லைகளாக அமைந்துள்ளன. காந்தி நகர் இதன் தலைநகராகும். இது மாநிலத்தின் முன்னாள் தலைநகரும் பொருளாதாரத் தலைநகருமான அகமதாபாத்தின் அருகில் அமைந்துள்ளது. மகாத்மா காந்தி, சர்தார் வல்லப்பாய் படேல், கே. எம். முன்ஷி, மொரார்ஜி தேசாய், யு. என். தேபர் மற்றும் நரேந்திர மோடி ஆகியோர் இம்மாநிலத்தில் பிறந்தவர்களாவர். குஜராத் (குஜராத்து) என்னும் பெயர் மத்திய ஆசியாவில் இருந்து இன்றைய குஜராத்துக்கு குடிபெயர்ந்த குர்ஜ் இன மக்களிடம் இருந்து தோன்றியதாக வரலாறு. குர்ஜ் இன மக்கள் இன்றைய ஜார்ஜியா (பண்டைய காலத்தில் குர்ஜிஸ்தான் என்று அழைக்கப்பட்டது) நாட்டிலிருந்து கி.மு முதலாம் நூற்றாண்டு வாக்கில் குடிபெயர்ந்தனர். கி.பி 35 முதல் 405 வரை ஈரானிய சாகஸ் இன மக்களின் ஆட்சியின்கீழ் இருந்தது. பின்னர், சில காலம் இந்திய-கிரேக்க அரசாட்சியின் கீழ் இருந்தது. குஜராத்தின் துறைமுகங்கள் குப்த பேரரசாலும், மௌரிய பேரரசாலும் பெரிதும் பயன்படுத்தபட்டன. ஆறாம் நூற்றாண்டுவாக்கில், குப்தர்களின் வீழ்சசிக்குபின், குசராத்து தன்னாட்சி பெற்ற இந்து அரசாக விளங்கியது. குப்த பேரரசின் சேனாதிபதியான மைதிரேகாவின் குலவழிகள், ஆறாம் நூற்றாண்டு முதல் எட்டாம் நூற்றாண்டு வரை வல்லாபியை தலைநகராக கொண்டு குஜராத்தை அரசாண்டனர். கி பி 770களில் அரேபிய படையெடுப்பார்களின் முயற்சியால் வல்லாபி குல ஆட்சி முடிவுக்கு வந்தது. கிபி 775ல், பார்சி இன மக்கள் ஈரானிலிருந்து, குஜராத்தில் குடியேறத் துவங்கினர். பின்னர், எட்டாம் நூற்றாண்டில் பிரத்திகா குல அரசர்களாலும், ஒன்பதாம் நூற்றாண்டில் சோலன்கி குல அரசர்களாலும் அரசாளப்பட்டது. பல இஸ்லாமிய படையெடுப்புகளையும் தாண்டி சோலன்கி ஆட்சி 13ம் நூற்றாண்டின் கடைசி வரை தொடர்ந்தது. கி. பி. 1024-1025இல் கஜினி முகமது, சோமநாதபுரம் மீது படையெடுத்து, கோயில் செல்வங்களை கொள்ளையடித்துச் சென்றார். [[கி. பி 1297- 1298 ல் [[தில்லி சுல்தானகம்|தில்லி சுல்தான்]] [[அலாவுதீன் கில்சி]] அன்கில்வாரா நகரை அழித்து குஜராத்தை தில்லி சுல்தானகத்துடன் இணைத்தார். 14ம் நூற்றாண்டின் கடைசியில், தில்லி சுல்தானியம் பலவீனம் அடைந்த நிலையில், தில்லி சுல்தானியத்தின் மாநில ஆளுனராக நியமிக்கப்பட்டிருந்த ஜபர்கான் முசாப்பர் தன்னை குசராத்தின் முழு ஆட்சியாளராக அறிவித்துகொண்டார். அவனை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அவனது மகன் [[அகமது ஷா]], அகமதாபாத் நகரத்தை நிறுவி , அந்நகரை தன் தலைநகராய் கொண்டு கிபி 1411 முதல் 1442 வரை ஆட்சி செய்தார். குசராத்து சுல்தானிகம் கிபி 1576 ஆம் ஆண்டில் [[பேரரசர் அக்பர்|பேரரசர் அக்பரின்]] படையெடுப்பின் மூலம் முடிவுக்கு வந்தது. [[மொகலாயர்|மொகலாயர்களுக்கு]] பின் [[மராத்தியப் பேரரசு|மராத்திய மன்னர்களாலும்]], குறுநில மன்னர்களாலும் ஆட்சி செய்யப்பட்டது. [[பிரித்தானிய இந்தியா]] அரசின் கீழ் குஜராத்தில் [[பரோடா அரசு]], [[பவநகர் அரசு]], [[கட்ச் இராச்சியம்]], ஜாம்நகர் அரசு, ஜூனாகாத் அரசு, பாலன்பூர் அரசு, படான் அரசு, போர்பந்தர் அரசு, ராஜ்பிபாலா அரசு உள்ளிட்ட 49 [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சுதேச சமஸ்தானங்கள்]] இருந்தன. போர்த்துகீசர்கள் தமது ஏகாதிபத்தியத்தை குசராத்தின் துறைமுக நகர்களான [[தாமன், தியு]] ஆகிய இடங்களிலும் [[தாத்ரா மற்றும் நகர் ஹவேலி]] ஆகிய இடங்களிலும் நிறுவினர். பிரித்தானியாவின் [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்]], 1614ல், தனது முதல் தொழில்சாலையை [[சூரத்|சூரத்து]] நகரில் நிறுவியது. மராட்டிய அரசுகளுடன் நடந்த [[இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போர் |இரண்டாம் ஆங்கிலேய மராட்டிய போரின்]] முலம் பெரும்பான்மையான பகுதிகளை ஆங்கிலேயர் கைப்பற்றினர். குறுநில ஆட்சியாளர்களிடம் பல அமைதி ஓப்பந்தங்களை உருவாக்கி, அவர்களுக்கு குறைந்த சுயாட்சி வழங்கி, அனைத்து பகுதிகளையும் தம் ஆட்சியின்கீழ் கொண்டு வந்தனர். [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலைப் போராட்டத்]] தலைவர்களான [[மகாத்மா காந்தி]], [[சர்தார் வல்லபாய் பட்டேல்]], [[கே. எம். முன்ஷி]] [[மொரார்ஜி தேசாய்]], மற்றும் பாகிஸ்தானின் முதல் கவர்னர் செனரலான [[முகமது அலி ஜின்னா]] போன்றவர்கள் குசராத்தைச் சேர்ந்தவர்கள். [[இந்தியப் பிரிவினை|இந்திய விடுதலைக்குப்பின்]], 49 [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சுதேச சமஸ்தானங்களைக்]] கொண்டிருந்த குசராத்தை [[பம்பாய் மாகாணம்|பம்பாய் மாகாணத்துடன்]] இணைக்கப்பட்டது. 1 மே 1960 அன்று, பம்பாய் மாகாணத்தை மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டு [[மகாராட்டிரம்]] மற்றும் [[குசராத்து]] மாநிலங்கள் உருவானது. குசராத்து மாநிலத்தின் தலைநகராக [[அகமதாபாத்]] நகர் தேர்வு செய்யப்ப்ட்டது. பின், 1970ல் [[காந்திநகர்|காந்திநகருக்கு]] மாற்றப்பட்டது. [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி குஜராத் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 60,439,692 ஆக உள்ளது. நகர்புறங்களில் 42.60% மக்களும், கிராமப்புறங்களில் 57.40% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 19.28% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 31,491,260 ஆண்களும் மற்றும் 28,948,432 பெண்களும் உள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு 919 பெண்கள் வீதம் உள்ளனர். [[மக்கள் தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டரில் 308 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி [[படிப்பறிவு]] 78.03% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 85.75% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 69.68% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7,777,262 ஆக உள்ளது. இம்மாநிலத்தில் [[பில் மக்கள்|பில் பழங்குடி மக்கள்]] தொகை 34,41,945 ஆக உள்ளது. இம்மாநிலத்தில் [[இந்து|இந்து சமயத்தவரின்]] மக்கள் தொகை 53,533,988 (88.57%) ஆகவும், [[இசுலாம்| இசுலாமிய சமய]] மக்கள் தொகை 5,846,761 (9.67%) ஆகவும், [[கிறித்தவம்|கிறித்தவ]] சமயத்தினரின் மக்கள் தொகை 316,178 (0.52%) ஆகவும், [[சீக்கியம்|சீக்கிய சமய]] மக்கள் தொகை 58,246 (0.10%) ஆகவும், [[சமணம்|சமண சமய]] மக்கள் தொகை 579,654 (0.96%) ஆகவும், [[பௌத்தம்|பௌத்த சமய]] மக்கள் தொகை 30,483 (0.05%) ஆகவும், பிற [[சமயம்|சமயத்து]] மக்கள் தொகை 16,480 (0.03%) ஆகவும் மற்றும் [[சமயம்]] குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 57,902 (0.10%) ஆகவும் உள்ளது. இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான [[குஜராத்தி மொழி|குஜராத்தி]], உடன் [[இந்தி மொழி|இந்தி]], [[மராத்தி மொழி|மராத்தி]], [[உருது மொழி|உருது]] மொழிகள் பேசப்படுகிறது. மாநிலத்தின் முக்கிய வேளாண் பயிர்கள் பருத்தி, நிலக்கடலை, பருப்பு வகைகள், நவதாணியங்கள் மற்றும் பேரீச்சம் பழம் ஆகும். பால் மற்றும் பால் பொருட்கள் தயாரிப்பில் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. சிமெண்ட், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையங்கள், வைரங்களை பட்டை தீட்டும் தொழிற்கூடங்கள், துணி மற்றும் ஆடை உற்பத்தி ஆலைகள் மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு துணையாக உள்ளது. சூரிய மின்சக்தி கலங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு விற்பதன் மூலம் நிதி ஆதாரங்கள் பெருகி வருகிறது. இம்மாநிலத்தின் [[கண்ட்லா துறைமுகம்]] ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மூலம் வருவாய் ஈட்டுகிறது. [[அகமதாபாத் சந்திப்பு தொடருந்து நிலையம்|அகமதாபாத் தொடருந்து சந்திப்பு நிலையம்]] குஜராத் மற்றும் இந்தியாவின் பிற நகரங்களுடன் இணைக்கும் [[தொடருந்து]]கள் இருப்புப் பாதை வழியாக இணைக்கிறது. சர்தார் வல்லபாய்படேல் பன்னாட்டு விமான நிலையம் வான் வழியாக இந்தியா மற்றும் பன்னாட்டு நகரங்களை இணைக்கிறது. குஜராத் மாநிலம் வழியாக செல்லும் பதினோறு [[இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்| தேசிய நெடுஞ்சாலைகள்]], குஜராத்தை நாட்டின் பிற பகுதிகளை தரை வழியாக இணைக்கிறது. முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள்; [[தேசிய நெடுஞ்சாலை 6 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 6]], [[தேசிய நெடுஞ்சாலை 8 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 8]]. 2001 ம் ஆண்டு ஜனவரி 26ம் நாள் காலை 08:46 மணிக்கு நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கதிற்கு சுமார் 12,000 பேர் பலியாயினர். சுமார் 55,000 பேர் படுகாயமுற்றனர். குசராத்தில் குறிப்பாக மழை வளம் மிகக் குறைவாக உள்ள கத்தியவார் தீபகற்பத்தில், குடிநீர் பற்றாக்குறை நீக்க்வும் மற்றும் வேளாண்மை வளர்ச்சி மேம்படுத்தவும் பசுமை புரட்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வெற்றியும் அடைந்துள்ளது. ‡ குசராத் மாநிலத்தில் ஆசிய சிங்கங்களுக்கு பெயர்பெற்ற [[கிர் தேசியப் பூங்கா]] மற்றும் பிற விலங்குகள் மற்றும் பறவைகளுக்கான சரணாலயங்கள் உள்ளது.# கோத்ரா இரயில் நிலயத்தில், சபர்மதி விரைவு வண்டியில் பயணித்த பயணிகளுடன் இரயில் பெட்டியை எரித்த காரணத்தினால் அப்பாவி இந்து பயணிகள் 59 க்கும் மேற்பட்டவர்கள் பலியானர்கள், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த குற்றச் செயலுக்கான தீர்ப்பு 21.11.2011ல் குசராத் உயர்நீதிமன்றம் வெளியிட்டது↑. பிப்ரவரி 2002 ம் ஆண்டு இவ்வுணர்வு மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இதில், 790 முஸ்லிம்களும், 254 இந்துகளும் கொல்லப்பட்டனர். சுமார் 2500 பேர் காயம் அடைந்தனர். இவ்வன்முறை தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகளை மனித உரிமைகள் கழகம் கடுமையாக கண்டித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் பார்க்க வேண்டிய இடங்கள்; [[பகுப்பு:குசராத்து| ]] [[பகுப்பு:இந்திய மாநிலங்களும் பிரதேசங்களும்]] ஈரப்பசை ஈரப்பசை (Moisture) என்பது நுண்ணளவில் நீர் இருத்தலைக் குறிக்கும். இவ்வாறான ஈரப்பசை பல்வேறு பொருள்களில் பல்வேறு உருக்களில் இருக்கலாம். ஈரப்பசையின் விளைவாக மரத்தினால் ஆன பொருள்களிலும் பிற உயிர்சார் பொருள்களிலும் அழுகல் வினை (rot) ஏற்படலாம். தவிர உலோகங்களில் அரிப்பு ஏற்படவும் மின் இணைப்புகளில் பழுது ஏற்படவும் இது காரணமாகலாம். பிற மரங்களின் மீது வாழும் "வாண்டா" போன்ற "எபிபைட்டுகள்" காற்றில் உள்ள ஈரப்பசையை உட்கொண்டு வாழ்கின்றன. வாரணாசி காசி என்றும் பெனாரஸ் என்றும் அழைக்கப்படும் வாரணாசி ("Varanasi", ), இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் மாநகராட்சி மன்றத்துடன் கூடிய நகரமாகும். கங்கைக் கரையில் அமைந்த இந்நகர், இந்து சமயத்தினரின் ஆன்மிகத் தலைநகராகவும், அனைத்து இந்துக் கலைகளின் காப்பகமாகவும் விளங்குகிறது. முக்தி தரும் ஏழு நகரங்களில் வாரணாசியும் ஒன்று. இந்நகரம் கிமு 1800 ஆண்டுகளுக்கு மேல், மக்கள் தொடர்ந்து வாழும் பண்டைய நகரங்களில் ஒன்றாகும். இங்குள்ள காசி விசுவநாதர் ஆலயத்திலுள்ள லிங்கம், சைவ சமயத்தினரின் புகழ் பெற்ற பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களுள் ஒன்றாகும். பண்டைய காலங்களில் கல்விக்கூடங்கள் பல அமைந்து கல்வியிற் சிறந்த இடமாக விளங்கியது வாரணாசி. இங்கு தயாரிக்கப்படும் பெனாரஸ் பட்டுப் புடவைகள் மிகப் பிரபலமானவை. வாரணாசி பனாரசு இந்து பல்கலைக்கழகம் இந்தியாவில் புகழ்பெற்ற கல்வி மற்றும் தொழிற்கல்வி நிலையமாகும். வாரணாசி என்ற பெயர் இந்நகருக்கு சூட்ட காரணமாக "வருணா" ஆறும் மற்று "அசி" ஆறும் வடக்கிலிருந்தும், தெற்கிலிருந்தும் பாய்ந்து பின் இந்நகரில் கங்கை ஆற்றில் ஒன்று கூடுவதால் வாரணாசி என்ற பெயர் ஏற்பட்டது. ரிக் வேதத்தில் இந்நகரை அறிவு தரத்தக்க, ஒளி பொருந்திய நகரம் என்ற பொருளில் காசி என குறிப்பிட்டுள்ளது. ஸ்கந்த புராணத்தின் ஒரு சுலோகத்தில், மூவுலகும் என் ஒரு நகரான காசிக்கு இணையாகாது என சிவபெருமான் காசியின் பெருமையை கூறுகிறார். சமசுகிருத மொழியில் காசி எனில் "ஒளி பொருந்திய நகர்" என மொழிபெயர்ப்பு செய்யலாம். கங்கைச் சமவெளியில் அமைந்த வாரணாசி நகரம் இந்துக்களின் வேதங்கள் மற்றும் வேதாந்தம் ஆகியவற்றுக்கு 11வது நூற்றாண்டு முதல் இருப்பிடமாக அமைந்துள்ளது. வாரணாசி நகரில் மக்கள் வேதகாலத்திலிருந்து தொடர்ந்து பல்லாண்டுகளாக வசித்து வருகின்றனர் என்பதை வாரணாசிக்கு அருகில் உள்ள அக்தா (Aktha) மற்றும் ராம்நகரை ஆராய்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் இந்நகரில் மக்கள் கி.மு. 1800 ஆம் ஆண்டிலிருந்தே வாழ்ந்து வந்ததை உறுதிப்படுத்துகின்றனர். சமண சமயத்தவர்களுக்கும் வாரணாசி நகரம் புனித இடமாகும். கி. மு. எட்டாம் நூற்றாண்டில் பிறந்த சமண சமய 23வது தீர்த்தாங்கரரான பார்சுவநாதர் பிறந்த ஊர் வாரணாசியாகும். மஸ்லின் பருத்தி துணிகள், பட்டுத் துணிகள், வாசனை திரவியங்கள், யாணையின் தந்த சிற்பங்கள், சிற்பக்கலை ஆகியவற்றுக்கு புகழ் பெற்ற நகராகும் வாரணாசி. காசி நாட்டின் தலைநகராக விளங்கிய வராணாசியில் கௌதம புத்தர் பல ஆண்டுகள் கடும் தவமியற்றி, பின் ஞானம் அடைந்த பின், வாரணாசிக்கு அருகில் உள்ள சாரநாத்தில் தன் சீடர்களுக்கு தர்மத்தை போதித்தார். கி. மு., 635இல் வாரணாசி வந்த சீன யாத்திரிகரும் வரலாற்று அறிஞருமான் யுவான் சுவாங், கங்கைக் கரையில் 5 கி. மீட்டர் நீளத்தில் இருந்த வாரணாசியில் செழித்திருந்த சமயம் மற்றும் கலைநயங்கள் குறித்து பெருமையுடன் தனது பயண நூலில் குறித்துள்ளார். எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசங்கரர் வாரணாசியில் சிவவழிபாட்டை நிலைநாட்டினார். மகதப் பேரரசு காலத்தில் வாரணாசி நகரம் தட்சசீலம் மற்றும் படாலிபுத்திர நகருக்கும் சாலை வழி போக்குவரத்து இருந்தது. 1194ஆம் ஆண்டில் துருக்கிய இசுலாமிய ஆட்சியாளர், வாரணாசி நகரத்திலிருந்த ஆயிரக்கணக்கான கோயில்களை இடிக்க ஆணையிட்டார். இசுலாமியர் ஆட்சிக் காலத்தில் வாரணாசி நகரம் மூன்று நூற்றாண்டுகளாக பொழிவிழந்து காணப்பட்டது. இந்தியாவை ஆப்கானியர்கள் ஊடுருவிய காலத்தில் வாரணாசியில் இடிக்கப்பட்ட கோயில்கள் மீண்டும் எழுப்பப்பட்டது. 1376இல் பெரோஸ் ஷா என்ற இசுலாமிய மன்னர் வாரணாசியில் உள்ள கோயில்களை மீண்டும் இடிக்க ஆணையிட்டார். 1496இல் ஆப்கானிய ஆட்சியாளர் சிக்கந்தர் லோடி வாராணாசியில் உள்ள இந்துக்களை ஒடுக்கவும், கோயில்களை இடிக்கவும் ஆணையிட்டார். இருப்பினும் வாரணாசி தொடர்ந்து இந்துக்களின் ஆன்மிகம் மற்றும் கலைகளின் தாயகமாகவே விளங்கியது. கபீர்தாசர்மற்றும் 15ஆம் நூற்றாண்டின் கவிஞர், சமூக சீர்திருத்தவாதி சாது ரவி தாஸ் வாரணாசியில் பிறந்து வளர்ந்தவர்கள். சீக்கிய மத நிறுவனர் குருநானக் 1507இல் வாரணாசியில் சிவராத்திரி விழாவினை காண வந்தார். . துளசிதாசர் இங்கு வாழ்ந்தவர் மொகலாய மன்னர் அக்பர், வாரணாசியில் சிவன் மற்றும் விஷ்ணுவிற்கு இரண்டு கோயில்களை எழுப்பினார். புனே மன்னர் அன்னபூரணி கோயிலையும், அக்பரி பாலத்தையும் கட்டித்தந்தார். The earliest tourists began arriving in the city during the 16th century. 1656ஆம் ஆண்டில் அவுரங்கசீப் வாரணாசி காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் பல கோயில்களையும் இடிக்க உத்தரவிட்டார். ஔரங்கசீப், இந்துக்கள் காசி நகரில் நுழைவதற்கும் கங்கையில் நீராடுவதற்கும் ஜிஸியா என்ற வரி விதித்தார். ஒளரங்கசீப் மகன் மூரத் பட்டத்திற்கு வந்தபின் பணத்தேவைக்காக ’ஜிஸியா’ வரியை அதிகமாகப் பெறுவதற்காக, கங்கையில் நீராடும் ஒவ்வொரு முறையும் ’ஜிஸியா’ வரி கட்ட வேண்டும் என்று ஆணையிட்டார். ஔரங்கசீப் மறைவிற்குப் பின், வாரணாசியில் மராத்திய மன்னர்கள், 18ஆம் நூற்றாண்டில் மீண்டும் புதிய கோயில்களை கட்டினர். . மொகலாயர்கள் 1737முதல் காசி நாட்டை அலுவலக முறையில் அங்கீகாரம் அளித்தனர். பிரித்தானிய இந்திய அரசும் அவ்வங்கீகாரத்தை தொடர்ந்து ஏற்றுக் கொண்டது. நகர வளர்ச்சியின் பொருட்டு 1867இல் வாரணாசி நகராட்சி மன்றம் துவங்கியது. இந்திய விடுதலை இயக்கத்திற்கு வித்திட்டவர்களின் ஒருவரான குவாலியர் அரசின் இராணி இலட்சுமிபாய் வாரணாசி நகரில் பிறந்தவர். தச அஷ்வமேத படித்துறை அருகே காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் சிவலிங்கத்திற்கு கங்கை நீரால் அபிசேகம் செய்வது மிகவும் சிறப்பாகும். இக்கோயிலில் உள்ள அன்னபூரணி சன்னிதானம் சிறப்பு பெற்றது. இக்கோயில் 1785இல் இந்தூர் இராச்சியத்தின் ராணி அகல்யாபாயினால் புதிதாக கட்டப்பட்டது. இக்கோயிலின் உயரம் 51 அடியாகும்.1835ஆம் ஆண்டில் சீக்கிய மன்னர் ரஞ்சித் சிங் கோவில் கோபுரத்திற்கு தங்கத்தகடுகள் பொருத்த 1000 கிலோ தங்கத்தினை அளித்திருக்கிறார். இங்குள்ள சிவலிங்கம் புகழ் பெற்றது. சிவலிங்கத்திற்கு காலை, மாலை மற்றும் இரவு வேளைகளில் அபிசேகத்துடன் பூசைகள் நடத்தப்பெறுகின்றன. காசி விசுவநாதர் கோயிலுக்குச் செல்லும் வழியில் வலப்புறம் அன்னபூர்ணா கோயில் அமைந்துள்ளது. மோட்சம் தரும் எழு புனித நகரங்களில் வாரணாசியும் ஒன்று. மற்ற மோட்ச புரிகள் அயோத்தி, மதுரா, அரித்வார், காஞ்சி, உச்சையினி(அவந்தி), துவாரகை --- என "கருட புராணம்" XVI 1 இல் கூறப்பட்டுள்ளது.. சூரிய வம்சத்தில் தோன்றிய மன்னன் சகரன். அவன் அசுவமேத யாகம் செய்தான். இதனால் இந்திரன் தனது பதவி பறிபோய்விடும் எனப் பயந்து அசுவமேத யாகக் குதிரையைத் திருடி, இமாலயத்தில் கடும் தவமியற்றி வந்த கபிலர் என்ற மகாமுனியின் ஆசிரமத்தில் கட்டிவைத்து விட்டான். குதிரையைத் தேடிவந்த சகரனின் புதல்வர்கள் முனிவரைத் துன்புறுத்தினர். இதனால் கோபம் கொண்ட முனிவர், ராசகுமாரர்களையும் அவர்களுடன் வந்த அனைவரையும் தனது கோபப்பார்வையால் எரித்துச் சாம்பல் ஆக்கிவிட்டார். தனது பிள்ளைகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இறந்துவிட்டதனால் மனமுடைந்த சகர மன்னன் தனது பேரன் அம்சுமான் என்பவனுக்கு முடிசூட்டிவிட்டு கானகம் சென்று தவம் செய்து முத்தியடைந்தான். ஆனால் முனிவரின் கோபப்பார்வையால் இறந்த இளவரசர்கள் யாரும் முத்தி அடைய வில்லை. அம்சுமானின் அரண்மனைக்கு வந்த மகான்கள் அனைவரும் சகரனின் புத்திரர்கள் நற்கதி அடைய வேண்டுமானால் எரிந்து போன அவர்களின் சாம்பல் மீது தேவர்களின் உலகில் பாய்ந்து செல்லும் கங்கையின் நீரைத் தெளித்தால் மட்டுமே சாபவிமோசனம் பெற்று நற்கதி அடைய முடியும் என்று கருத்துத் தெரிவித்தார்கள். கங்கையை பூமிக்குக் கொண்டுவர அம்சுமானால் முடியவில்லை. அவனது மகன் அசமஞ்சனாலும் முடியவில்லை, ஆனால் அசமஞ்சனின் மைந்தன் பகீரதன் தனது முன்னோர்களின் ஆன்மாக்கள் முத்தியடையக் கங்கையைப் பூமிக்குக் கொண்டுவரவேண்டித் கடுந்தவம் செய்தான். அவனது தவத்தை ஏற்று கங்கா தேவியும் பூமிக்கு வரச் சம்மதித்தாள். சிவபெருமான் தனது திருமுடியில் கங்கையை விழச்செய்து பின் பூமியில் நதியாக ஓடச் செய்தார். இவ்வாறு ஓடிய கங்கை நதியில் பகீரதனின் முன்னோர்களின் அஸ்திகள் கரைக்கப்பட்டன, இதனால் அவர்கள் முத்தி பெற்றனர். அன்றிலிருந்து கங்கையில் அஸ்தியைக் கரைத்து முன்னோர்களின் ஆன்மாக்களை முத்தியடையச் செய்து வருகின்றனர். இதுவே காசியின் சிறப்பு ஆகும். காசியின் கங்கைக்கரையில், தினமும் சூரியன் மறைவுக்குப்பின் கங்கைக்கு ஆரத்தி வழிபாடு நடத்தப்பெறுவது கண்கொள்ளாக்காட்சியாகும். இந்நிகழ்வை கங்கா ஆரத்தி என்கின்றனர். வாரணாசியில் ஓடும் கங்கை ஆற்றில் 87க்கும் மேற்பட்ட படித்துறைகள் இருந்த போதும், பார்க்க வேண்டிய முக்கிய மூன்று படித்துறைகள்; இரயில்கள் பல முக்கிய இந்திய நகரங்களை வாரணாசி நகரம் இணைக்கிறது. சென்னையிலிருந்து ஆறு இரயில்கள் வாரணாசிக்கு செல்கிறது.. வாரணாசியிலிருந்து 19 கி.மீ., தொலைவில் உள்ள முக்கிய இரயில் நிலையமான முகல்சராய் வழியாக வாரணாசிக்கு கூடுதலான இரயில்கள் செல்கிறது. வாரணாசியிலிருந்து 12 கி. மீ., தொலைவில் உள்ள பாபத்பூர் (Babatpur) விமான நிலையம் , இந்தியாவின் முக்கிய நகரங்களான தில்லி, சென்னை, பெங்களூரு, கொச்சி, கோவா, கோழிக்கோடு, கோவை, லக்னோ, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, அகமதாபாத், புனே, இந்தூர், ஜெய்ப்பூர், நாக்பூர், ஜம்மு, கௌஹாத்தியை வான் வழியாக இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை எண் 7, மற்றும் எண் 56 மற்றும் 29 கன்னியாகுமரி, லக்னோ மற்றும் கோரக்பூர் நகரங்களுடன் இணைக்கிறது. வாரணாசி காசி விஸ்வநாதர் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் பேரூந்துகள் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், வாடகை கார்கள், ஆட்டோ ரிக்சா மற்றும் கைரிக்‌ஷாக்கள் உள்ளூர் போக்குவரத்திற்கு எளிதாக கிடைக்கிறது. வாரணாசி நகர நிர்வாகம் வாரணாசி மாநகராட்சி மற்றும் வாரணாசி வளர்ச்சி ஆணையத்தின் கீழ் உள்ளது. வாரணாசி நாடாளுமன்ற தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வாரணாசியில் கோடைக் காலத்தில் கடுமையான் வெப்பமும், குளிர்காலத்தில் கடுங்குளிரும் நிலவுகிறது. 2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, வாரணாசி மக்கள் தொகை 1,435,113 ஆகும். அதில் ஆண்கள் 761,060 மற்றும் பெண்கள் 674,053 ஆகும்.. 1000 ஆண்களுக்கு 883 பெண்கள் என்ற அளவில் பாலினவிகிதம் உள்ளது. எழுத்தறிவு விகிதம் 77%ஆக உள்ளது. வாரணாசியில் இந்துக்கள், இசுலாமியர்கள், சமணர்கள் அதிகம் வாழ்கின்றனர். புடவை புடைவை, புடவை, அல்லது சேலை (அ) "'சீலை'" ("sari") என்பது, தெற்காசியப் பெண்கள் உடுத்தும் மரபுவழி ஆடையாகும். இந்த ஆடை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம் முதலிய நாடுகளின் பெண்களால் விரும்பி அணியப்படுகின்றது. இது பல மொழிகளிலும் பல்வேறு பெயர்களில் அறியப்படுகின்றது. தமிழில் "சேலை" அல்லது "புடவை" என்றும், ஹிந்தி, குஜராத்தி, மராட்டி ஆகிய மொழிகளில் "சாடி" என்றும், கன்னடத்திலும், தெலுங்கிலும் முறையே "சீரே", "சீரா" என்றும் அழைக்கப்படுகின்றது. சேலை கட்டும்போது இடை ஆடைகளாக பாவாடையும், பிளவுஸ்ம் அணியப்படுகிறது. பொதுவாக இதன் நீளம் 4 - 5 யார் வரை இருக்கும். சில புடவைகள் 9 யார்கள் வரை இருப்பதுண்டு. பல நிறங்களிலும், பலவகையான வடிவுருக்களைத் தாங்கியும் வரும் புடவைகள், செவ்வக வடிவம் கொண்ட தைக்கப்படாத உடையாகும்.மடிப்புகளுடன் உடலை சுற்றியவாறு கிரேக்க பாணியில் உடுதபடுகிறது.பருத்தி நூல், பட்டு நூல், மற்றும் பலவிதமான செயற்கை இழைகளையும் கொண்டு நெய்யப்படுகின்ற புடவைகள், தங்கம், வெள்ளி ஆகிய உலோகங்களின் மெல்லிய இழைகளைப் பயன்படுத்தி அழகூட்டப்படுவதுண்டு. உடலைச் சுற்றிக் கட்டுகின்ற தைக்கப்படாத ஆடைகள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பயன்பாட்டில் இருந்ததற்கான ஆதாரங்கள் உண்டு. இந்தியாவில் இவற்றின் தொடக்கம் பற்றி முடிவு செய்யக்கூடிய சான்றுகள் இல்லை. இந்தியாவில் மட்டுமன்றி உலகின் பண்டைக்கால நாகரிகம் நிலவிய பல இடங்களிலும் இத்தகைய ஆடைகள் இருந்திருக்கின்றன. இவ்வகையைச் சேர்ந்த புடவையின் தோற்றம் பற்றியும் இதே நிலைதான். இது பண்டைக் கிரேக்கத்திலிருந்து இந்தியாவுக்கு வந்திருக்கக்கூடும் எனச் சிலர் கருதுகிறார்கள். ஆனால் இது இந்தியாவிலேயே உருவானதென்பது வேறு சிலரின் கருத்து. கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த இலக்கியங்களிலேயே புடவைகள் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. மகாபாரதத்தில் வரும் திரௌபதியின் புடவை களையும் நிகழ்வு குறிப்பிடத்தக்கது. கி.மு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்ததெனக் கருதப்படும், உடலைச் சுற்றி இறுக்கமாக கற்சட்டைபோல் புடவை உடுத்திய களிமண் உருவ பொம்மையொன்று வட இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பிற்காலங்களைச் சேர்ந்த பலவிதமாகப் புடவை கட்டிய பெண்களின் உருவச் சிலைகள் இந்தியா முழுவதும் காணப்படுகின்றன. கிட்டத்தட்ட கி.பி 3000ம் ஆண்டளவில் சிந்துசமவெளி நாகரிக காலப்பகுதியில் முதன் முதலில் சேலை ஒரு ஆடையாகப் பயன்படுத்தப்பட்டது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. சேலைகளைப் பட்டு நூலால் தயாரிக்கும் பாரம்பரியம் தென்னிந்தியாவிலேயே தோற்றம் பெற்றது என்று நம்பப்படுகின்றது. இந்தியாவிலே பட்டின் இராசதானிகளாக கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களுரும் மைசூரும் விளங்குகின்றன. பருத்தி கலக்கப்படாத துய்மையான "சாறி" என்ற பட்டுநூல் சூரத்தில் மட்டுமே கிடைக்கின்றது. இந்தப் பெயரே ஆங்கிலத்தில் சேலைக்கு "சாறி" என்ற பெயர் வரக் காரணமாயிற்று. சேலையைப் போல உடல் முழுவதையும் சுற்றி அணியும் ஆடை பற்றிய முதல் குறிப்புகளை கிமு 100 அளவில் காணமுடிகிறது. சுங்க ஆட்சிக் காலத்திற்குரிய (கிமு 200-50) ஒரு வட இந்திய சுடு மண்கலத்தில் ஒரு பெண் கச்சா பாணியில் உடல் முழுவதும் சேலையை இறுக்கமாகச் சுற்றியுள்ள காட்சி காணப்படுகிறது. இந்திய காந்தார நாகரிகத்தில் (கிமு50-கிபி300) பல்வேறுபட்ட வகைகளில் சேலை சுற்றி அணியப்படும் முறை காணப்பட்டது. கிபி 5ம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த மேற்கு மகாராஷ்ரத்தில் உள்ள அஜந்தா குகை ஓவியங்களில் பெண் தெய்வங்களும் அசுரப் பெண்களும் உடல் முழுவதையும் சுற்றி சேலை அணிந்துள்ளதைக் காணலாம். ஊசிகளால் துளைக்கப்பட்ட ஆடைகள், அதாவது தைக்கப்பட்ட ஆடைகள் தூய்மை அற்றவை எனப் பண்டைக்கால இந்துக்கள் கருதினர் இதனால் சேலைகளே அக்காலத்தில் புனிதமான ஆடைகளாகக் கருதப்பட்டிருக்கக்கூடும். முஸ்லிம்களின் வருகையுடனேயே இந்தியாவில் தைக்கப்பட்ட ஆடைகளின் செல்வாக்கு ஏற்பட்டது. மேலும், தற்காலத்தில் புடவையுடன் அணியப்படுகின்ற உள்பாவாடை மற்றும் ரவிக்கை போன்ற தனிப்பட்டவருக்கு ஏற்றவாறு தைக்கப்படும் ஆடைகள் பிரித்தானியரின் வருகைக்குப் பின்னரே பெருமளவில் புழக்கத்துக்கு வந்ததாகக் கூறப்படுகின்றது. சேலை பண்பாட்டு ரீதியாக பல்வேறு மாநிலங்களில் வாழும் இந்தியப் பெண்களையும் இலங்கைப் பெண்களையும் இணைக்கிறது. அணியும் முறைகள் மாறுபட்ட போதும் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் வாழும் பெண்களும் இலங்கைத் தமிழ், சிங்களப் பெண்களும் பொதுவாகச் சேலையே அணிந்து வருகின்றனர். பணக்காரராயினும், ஏழையாயினும், கட்டையானவராயினும், நீண்டவராயினும், மெலிந்தவராயினும், மொத்தமானவராயினும் சேலை என்பது அணிபவர்களுக்கு ஒரே மாதிரியான அனுபவத்தை அளிக்கிறது. இந்திய இலங்கைப் பெண்கள் உலகம் பூராவும் பரந்து வாழ்வதால் இன்று உலகம் முழுவதும் சேலை அணியும் பெண்களைக் காண முடிகிறது.யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான பெண்கள் தினமும் சேலையையே வீட்டிலும் வெளiயிலும் அணிந்து வந்தனர். இது பழக்கத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும், இது ஒரே உடையாகவே கருதப்பட்டு வந்தாலும்,இதை கட்டும் முறைகளில் பெருமளவு வேறுபாடுகள் காணப்படுகின்றன. பொதுவாக சேலை 5 1/2 மீட்டர் நீளமுடையதாக இருக்கும். சேலை கட்டும்போது முந்தானைக்கு நேரெதிர் முனையில் ஒரு முடிச்சு போட்டு இடுப்பில் வலதுபுறம் சொருகிக் கொள்ள வேண்டும். பின்னர் இடதுபுறத்திலிருந்து வலது புறமாக ஒரு சுற்று சுற்றி, நான்கு விரலையும் சற்று விரித்து வைத்துக்கொண்டு 4 அல்லது 5 மடிப்புகள் மடித்து இடுப்பில் சொருகிக் கொள்ள வேண்டும். இந்த மடிப்புகள் `முன்கொசுவம்’ என்று அழைக்கபடும். பின்பு மறுபடியும் இடதுபுறத்திலிருந்து வலதுபுறமாக ஒரு சுற்று சுற்றி பெரிய மடிப்பாக 3 அல்லது 4 மடிப்புகள் மடித்து இடது தோளில் போட்டுக் கொள்ள வேண்டும். இது `முந்தி’ அல்லது `முந்தானை’ என்று அழைக்கபடும். இதுவே நிவி பாணி ("nivi") என்று அழைக்கப்படுகிறது. எனினும், இந்தியாவிலும், ஏனைய நாடுகளிலும் புடவை அணியும் முறைகளில் பல பிரிவுகளும், துணைப் பிரிவுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. பண்பாட்டு மானிடவியலாளரும், புடவை ஆய்வாளருமாகிய சந்தல் பொலங்கெர் () என்பார் புடவைகளை அவை கட்டப்படும் முறைகளையொட்டிப் பின்வரும் பாணிகளாகப் பிரித்துள்ளார். இந்தியர்கள் பலர் பல நாடுகளுக்கு குடி பெயர்வதால் புடவையை நவீன முறைகளில் பெண்கள் உடுத்துகின்றனர்.தற்போதைய உலகமயமாக்குதல் காரணமாக புடவை அடக்கத்தை பிரதிபலிக்கும் உடையிலிருந்து பாலுணர்வை தூண்டும் கவர்ச்சி உடையாக மாறியுள்ளது. இவ்வகை புடவை முறை பாலிவுட் மற்றும் தமிழ் சினிமா நடிகைகளால் பிரபலப்படுத்தப்பட்டது. இவ்வகை புடவை முறைகளை வசதிபடைத்த செல்வந்தர் குடும்பம் மற்றும் உயர்நிலை வகுப்பை சேர்ந்த பெண்கள் உடுத்துகின்றனர். லோ ஹிப் ("low-hip") எனப்படும் தொப்புளுக்கு கீழ் உடுத்தும் முறை மிக பிரபலமாகியுள்ளது. இம்முறையில் உடுத்தும்போது தொப்புளும் இடையும் வெளிக்காட்டி இருக்கும். தொப்புளுக்கு கீழ் கட்டும்போது எப்பொழுதும் தொப்புள் வெளிகாட்டபடுவதில்லை. தொப்புளுக்கு கீழ் கட்டியபின் முந்தானையால் தொப்புளை மறைத்தும் லோ ஹிப் புடவைகள் உடுத்தப்படுகிறது. அலுவலகம் செல்லும் பெண்கள் தொப்புளை வெளிகாட்டாமல் புடவை கட்டவேண்டும் என்று சில அலுவலகங்களில் கட்டுப்பாடுகள் உள்ளன. புடவையை நவீனப்படுத்தும் நோக்கில் உருவானது தான் ஒளிபுகு புடவை ("Transparent Sari"). ஒளிபுகு பொருட்களான மென்பட்டு(chiffon), வலை (net) போன்றவற்றை பயன்படுத்தி நெய்யப்படும் புடவையே ஒளிபுகு புடவை எனப்படும். பெண்கள் தங்களது உடல் அழகையும் உருவத்தையும் வெளிக்காட்டும் நோக்கில் இவ்வகை புடவைகளை உடுத்துகின்றனர். ஒளிபுகு புடவைகளில் தொப்புள் மட்டுமின்றி முழு இடையும் முந்தானை வழியாக வெளிக்காட்டப்படும். புடவைகளுக்கு ஏற்றாற்போல் நகைகள் அணிந்து ஒரு கவர்ச்சி தோற்றத்தை அடையவே ஒளிபுகு புடவை பயன்படுகிறது. கிராமப்புறங்களில் இன்றும் பெண்கள் தொடர்ந்து சேலையையே அணிந்து வருகின்றனர். ஆயினும் நகரங்களில் இந்நிலை பெரிதும் மாறி வருகிறது. அங்கு வாழும் பெண்கள் பல்வேறு துறைகளில் படித்து வேலை செய்வதுடன் பல வெளி வேலைகளையும் கையாளும் வல்லமை பெற்று வருகின்றனர். இதனால் வீட்டிலிருக்கும் பெண்கள் போல சேலை அணிவது சிறிது சிரமமான காரியமாய் இருக்கிறது. இதனால் முஸ்லிம்களின் செல்வாக்கால் காஷ்மீர், பஞ்சாப் மாநிலப் பெண்களின் மரபுரீதியான ஆடையாக மாறிய சல்வார்-கமீஸ், சுரிதார் குர்த்தா (churidar-kurta) என்பன தமிழ்ப் பெண்கள் மத்தியிலும் இன்று பெரும் செல்வாக்குப் பெற்று வருகின்றது. ஆயினும் வேலைக்குச் சேலை அணிந்து செல்லும் பெண்களுக்கும் குறைவில்லை. இலங்கையிலும் இந்தியாவிலும் (பாகிஸ்தான், வங்காளதேசம்) இன்றும் பெண்கள் வேலைக்குச் செல்வதற்கு சேலையே அணிந்து செல்கின்றனர். புலம்பெயர்ந்த பின்னர் பெரும்பான்மையான இந்திய, இலங்கைப் பெண்கள் சேலையணிவதை சிறப்பு நிகழ்ச்சிகளுக்கென்று ஒதுக்கி வைத்துள்ளனர். இளம் பெண்களின் உடைகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டது. சேலை கட்டுவது மறைந்து சுரிதார் முதன்மை பெற்றுள்ளது.நகரங்களில் கல்லூரிக்குச் செல்லும் பெண்களில் சேலை கட்டிச் செல்பவர் அநாகரிகமானவராகினர்.சேலை சிறைக்கைதிகள் போன்ற உடை, பஸ்களுக்கு ஓட முடியாது. ஸ்கூட்டர், சயுக்கிள் ஓட்டுவதற்கும் ஒத்துவராது என்பதை அனுபவத்தில் கண்டனர்.இளம் பெண்கள் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு சல்வார்-கமீஸ், சுரிதார்-குர்த்தா போன்றவற்றையும் ராஜஸ்தான் குஜராத் மாநிலப் பெண்களின் மரபார்ந்த ஆடையான காக்ரா-சோளியையும் (ghagra-choli) அணிந்தும் சாதாரண நேரங்களில் மேற்கத்தைய ஆடைகளையும் அணிந்து வருகின்றனர். விலை மலிவானது; ஏறத்தாழ்வு காட்டாதது; விரவாக நடக்கக் கூடியது; இளமையாகக் காட்டுவது; இடையக் காட்டி தேவையற்ற கவர்ச்சியை ஏற்படுத்த வேண்டியதில்லை எனப் பல காரணங்களே தென்நாட்டு சேலை பின்னடைய, வடநாட்டு சுரிதார் உடை நவீனமாக்கியது. உத்தரப் பிரதேசம் உத்தரப் பிரதேசம் ("Uttar Pradesh") இந்தியாவின் மாநிலங்களுள் ஒன்றாகும். இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் இதுவே. லக்னோ இம்மாநிலத்தின் தலைநகராகும். அலகாபாத், கான்பூர், வாரணாசி, ஆக்ரா ஆகியவை மற்ற முக்கிய நகரங்கள். இந்தி, உருது ஆகியவை இம்மாநிலத்தில் பெரும்பான்மையாக பேசப்படும் மொழிகள். இந்தியாவின் ஆறு பிரதமர்கள் (ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, வி. பி. சிங், சந்திரசேகர், சரண் சிங், லால் பகதூர் சாஸ்திரி இம்மாநிலத்தில் பிறந்தவர்கள். இந்தியாவின் வட பகுதியில் அமைந்த மாநிலமான உத்தரப் பிரதேசம், இந்தியாவில் அதிக பரப்பளவு கொண்ட மாநிலங்களில் ஐந்தாம் இடம் வகிக்கிறது. உத்தரப் பிரதேசத்தின் அண்மையில் அமைந்த மாநிலங்கள் உத்தராகண்டம், இமாசலப் பிரதேசம், அரியானா, தில்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர், ஜார்க்கண்ட், மற்றும் பீகார் ஆகியவை. உத்திரப் பிரதேசத்தின் வடக்கில் நேபாள நாடு அமைந்துள்ளது. கங்கை, யமுனை, கோமதி ஆறு ஆகிய பெரு நதிகள் உத்தரப் பிரதேசத்தின் வழியாக ஓடுவதால் இம்மாநிலம் செழிப்பாக உள்ளது. 2000ஆம் ஆண்டு உத்தராகண்டம் மாநிலம், உத்தரப் பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்டது. மாநிலத்தின் தெற்கு பகுதிகளில் புந்தேலி மொழி பேசும் வறண்ட வானிலை கொண்ட புந்தேல்கண்ட் மேட்டு நிலங்கள் அமைந்துள்ளது. வேத காலத்தில் உத்தரப் பிரதேசம் குரு நாடு, பாஞ்சாலம் மற்றும் கோசல நாடு என மூன்று பகுதிகளாக இருந்தது. வரலாற்றுக் காலத்தில் உத்தரப் பிரதேசம் புந்தேல்கண்ட், அவத், ரோகில்கண்ட், பூர்வாஞ்சல் மேல், நடு மற்றும் கீழ் தோப் பகுதிகள் என ஐந்து பகுதிகளாக உள்ளது. பண்டைய வேத காலத்தில் உத்தரப் பிரதேசப் பகுதிகளை குருக்கள், பாஞ்சாலர்கள் மற்றும் கோசலர்கள் என மூன்று அரச குலங்கள் ஆண்டனர். வரலாற்றுக் காலத்தில் இம்மாநிலத்தின் வளமான அவத், தோவாப், பூர்வாஞ்சல், புந்தேல்கண்ட் மற்றும் ரோகில்கண்ட் பகுதிகளை தில்லி சுல்தானகம் மற்றும் மொகலாயர்களாலும்; பின்னர் பாரசீக சியா இசுலாமிய நவாப்புகள் மற்றும் ஆப்கானிய பஷ்தூன் அரச குலம் 1719 முதல் 1858 முடிய தனியுரிமையுடனும்; பின்னர் சிப்பாய்க் கிளர்ச்சிக்குப் பின்னர் 1858 முதல் 1947 முடிய ஆங்கிலேயர்களுக்கு கட்டுப்பட்டு, ஆண்டுதோறும் கப்பம் செலுத்தி சுதேச சமஸ்தான மன்னர்களாக ஆட்சி செய்தனர். பின்னர் இந்திய விடுதலைக்குப் பின்னர் 1948-ஆம் ஆண்டில் அவத் இராச்சியம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. அவத் பகுதிகளில் சமசுகிருதம் - பாரசீகம் கலந்த அவதி மொழி பேசப்படுகிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத். 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 199,812,341 ஆக உள்ளது. நகர்புறங்களில் 22.27% மக்களும், கிராமப்புறங்களில் 77.73% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 20.23% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 104,480,510 ஆண்களும் மற்றும் 95,331,831 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 912 வீதம் உள்ளனர். 240,928 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 829 ஆக உள்ளது. இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 67.68 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 77.28 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 57.18 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 30,791,331 ஆக உள்ளது. இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 159,312,654 (79.73 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 38,483,967 (19.26 %)ஆகவும், சீக்கிய சமயத்தவரின் மக்கள் தொகை 643,500 (0.32 %) ஆகவும் கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 356,448 (0.18 %)ஆகவும், சமண சமய மக்கள் தொகை 213,267 (0.11 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 206,285 (0.10 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 13,598 (0.01 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 582,622 (0.29 %) ஆகவும் உள்ளது. இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது, பஞ்சாபி மற்றும் வட்டார மொழிகளும் பேசப்படுகிறது. உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் பதினெட்டு நிர்வாகக் கோட்டங்களின் கீழ், எழுபது வருவாய் மாவட்டங்கள் அமைந்துள்ளன. அவைகள் பின்வருமாறு; உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களும், ஆன்மிக வழிபாட்டுத் தலங்களும்; தாஜ்மகால், பத்தேப்பூர் சிக்ரி , ஆக்ரா, பிரயாகை, வாரணாசி, அயோத்தி, ராம ஜென்மபூமி, மதுரா, பிருந்தாவனம், கிருஷ்ண ஜென்மபூமி, கயை, புத்தகயா, சாரநாத் மற்றும் குசிநகர் ஆகும். இந்திய தொழில்நுட்பக் கழகம் கான்பூர், பனாரசு இந்து பல்கலைக்கழகம், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம், அலகாபாத் பல்கலைக்கழகம், இந்திய மேலாண்மை கழகம் லக்னோ, இராஜிவ் காந்தி பெட்ரேலிய தொழில் நுட்ப நிறுவனம் மற்றும் மோதிலால் நேரு தேசிய தொழில் நுட்பக் கழகம் ஆகும். மாநிலத்தின் பொருளாதாரம் வேளாண்மைத் தொழிலையே சார்ந்து உள்ளது. முக்கிய விளைபொருட்கள் கோதுமை, நெல், கரும்பு ஆகும். புதிய நொய்டா பெருநகர் ஆசியாவில் மிக விரைவாக வளர்ந்துவரும் தொழில் நகரங்களில் ஒன்றாக உள்ளது. ஆக்ரா ஆக்ரா என்பது இந்தியாவின் உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஒரு நகராகும். இது யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது முகலாய ஆட்சியின் போது சிறப்புப் பெற்றிருந்தது (1526-1658). அக்கால கட்டத்தில் பல சிறப்பு மிக்க கட்டிடங்கள் கட்டப்பட்டன. இங்கு அக்பரால் கட்டப்பட்ட கோட்டையும் அதனுள் ஷாஜகானால் கட்டப்பட்ட அரண்மனை மற்றும் முத்து மசூதி ஆகியனவும் அமைந்துள்ளன. மேலும் உலகப் புகழ் பெற்ற தாஜ் மஹால் அமைந்துள்ளது. இது ஷாஜஹானால் தனது மனைவியின் நினைவாகக் கட்டப்பட்ட கல்லறை ஆகும். இது யுனெசுகோவால் பண்பாட்டு சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. யமுனை ஆறு யமுனை ஆறு வட இந்தியாவின் முக்கியமான ஆறுகளுள் ஒன்றாகும். உத்தராஞ்சல் மாநிலத்தில் இமய மலையில் அமைந்துள்ள யமுனோத்ரி தொடங்கும் இந்த ஆறு, தில்லி, ஹரியானா ஆகிய மாநிலங்கள் வழியாக ஓடி, உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் நகரில் கங்கை ஆற்றுடன் கலக்கிறது. யமுனோத்ரியிலிருந்து அலகாபாத் வரை 1370 கிமீ இவ்வாறு ஓடுகிறது. தில்லி, மதுரா, ஆக்ரா ஆகிய நகரங்கள் யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளன. உலகப் பாரம்பரியச் சின்னங்களுள் ஒன்றான தாஜ் மஹால் யமுனையின் கரையில் அமைந்துள்ளது. யமுனை சிலநேரங்களில் ஜமுனா அல்லது ஜம்னா என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு நீளமான நதி ஆகும். இது கங்கை நதியின் இரண்டாவது பொிய கிளை நதியாகும். இக் கிளை நதியானது யமுனோத்ரி என்ற பனிக்கட்டி மலையிலிருந்து உருவாகிறது. இந்நதி இந்தியாவில் உத்ரகாண்ட் ம மாநிலத்தில் கீழ் இமாச்சல மலைப் பகுதியில் உள்ள தென்மேற்கு சாிவில் உள்ள பாந்தர்பூஞ்ச் சிகரத்தில் இருந்து 6387 மீட்டர் உயரத்திலிருந்து உருவாகிறது. இந்த நதியின் மொத்தப் பயணத் தொலைவு 1,376 கிலோ மீட்டர் ஆகும். கங்கை ஆற்றுப் படுகையில் 40.02% நிலப்பகுதியில் இந்நதி பாய்கிறது. இது கங்கை ஆற்றுடன் அலகாபாத்தில் திாிவேணி என்ற இடத்தில் கலப்பதற்கு முன்னதாக கங்கையும் யமுனையும் கலக்கும் இடமான திாிவேணி சங்கமத்தில் 12 வருடத்திற்கு ஒரு முறை கும்பமேளா நடைபெறுகிறது. இந்த நதிதான் இந்தியாவிலேயே மிக நீளமான நதியாகக் கருதப்படுகிறது. ஆனால் இது நோிடையாக கடலில் கலப்பதில்லை. இது உத்ரகாண்ட், இமாச்சலப்பிரதேசம், ஹாியானா மற்றும் உத்தரப்பிரதேசம் போன்ற பல மாநிலங்களைக் கடந்து செல்கிறது. முதலில் உத்ரகாண்ட் அதன் பிறகு டெல்லியைக் கடந்து, அதன் பொிய கிளை நதியான டானுடன் கலக்கிறது. சாம்பல் நதி யமுனையின் மிக நீளமான கிளை நதியாகும். இந்நதி சிந்து, பெட்வா, கென் போன்ற ஆற்றுப் படுகையைக் கொண்டிருக்கிறது. கங்கை - யமுனை சமவெளிப் பகுதிக்கும், இந்திய - கங்கைச் சமவெளிப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் இந்நதி மிக செழிப்பான, வளமான பகுதியை உருவாக்குகிறது. 57 மில்லியன் மக்கள் யமுனை நதியால் பயன்பெறுகிறார்கள். இந்த நதி வருடத்திற்கு 10000 கன சதுர இலக்கங்கோடி மீட்டர் தூரம் பயணம் செய்கிறது. இந்த நதி பாசனத்திற்காக 96% பயன்படுத்தப்படுகிறது. டெல்லியின் 70% தண்ணீர்த் தேவை யமனை நதி நீரால் தீர்க்கப்படுகிறது. இந்து மதத்தில் கங்கையைப் போலவே யமுனை நதியும் போற்றி வணங்கப்படுகிறது. இந்து புராணக் கதைகளின்படி யமுனை நதி சூாிய கடவுளின் மகளாகவும், மரணத்தை அளிக்கும் கடவுள் யமனின் தங்கையாகவும் கருதப்படுகிறது. புராணக் கதைகளின்படி யமுனை யாமினாட் எனவும் கருதப்படுகிறது. யமுனை நதியில் நீராடினால் ஒருவர் மரணத்தின் பிடியிலிருந்து விடுபடலாம் என்று நம்பப்படுகிறது. இமாச்சலத்திலிருந்து டெல்லியில் உள்ள விசிராபாத் என்ற இடம் வரை யமுனையின் நீரானது சுத்தமாகவுள்ளது. விசிராபாத் அணைக்கட்டிற்கும் ஓக்லா அணைக்கட்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் 15 இடங்களில் வடிகால் வாயிலாக கழிவு நீ்ர் ஆற்றில் கலந்து ஆற்றை அசுத்தமாக்குகின்றன. வீட்டுக் கழிவுகள், நகராட்சி கழிவுகள் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் ஆகிய மூன்று முக்கியக் கழிவுகளால் யமுனை நதி அசுத்தப்படுத்தப்படுகிறது. யமுனை நதியின் மூலமானது யமுனோத்திரி என்ற பனிக்கட்டி மலையிலிருந்து உருவாகிறது. அரித்துவார்ன் வடக்கில் உத்ரகாண்ட் மாநிலத்தில், உத்ரகாசி மாவட்டத்தில் கீழ் இமாலயத்தின் தென்கிழக்குச் சாிவில் பாந்தர்பூஞ்ச் சிகரத்திலிருந்து 6387 மீ உயரத்திலிருந்து இது உருவாகிறது. யமுனை நதி கடவுளாகக் கருதப்படுவதால் யமுனைக்கு அர்ப்பணிப்பதற்காக யமுனோத்ரி கோயில் கட்டப்பட்டது. இந்து மதத்தில் யமுனோத்ரி கோயில், புனிதத் தளமாக கருதப்படுகிறது. இக்கோயிலை ஒட்டி 13 கி.மீ. தூரத்திற்கு நடைபாதை உள்ளது. இப்பாதை ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்துள்ள "மார்க்கண்டேய" தீர்த்தத்துக்கு செல்கிறது. இங்குதான் முனிவர் மார்க்கண்டேயர், மார்க்கண்டேய புராணத்தை எழுதினார். இவ்விடத்தில் இருந்து யமுனை தெற்கில் பாய்கிறது. கீழ் இமாச்சலம் மற்றும் சிவாலிக் மலைத் தொடர் வழியாக 200 கி.மீ. தூரத்திற்கு தெற்கு நோக்கி பாய்கிறது. இந்த ஆற்றுப் படுகையில் மண்ணியல் அமைப்புகளான செங்குத்தான பாறைகளில், பள்ளத்தாக்குப் பகுதிகள் மற்றும் ஓடைகள் அமைந்துள்ளன. இந்நதியின் நீர் பாயும் மொத்தப் பரப்பளவு 2320 சதுர கி.மீ. ஆகும். இப்பகுதி இமாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. யமுனையின் முக்கியக் கிளை நதிகளான டான்ஸ், ஹாி-கி-துன் பள்ளத்தாக்கிலிருந்து உருவாகிறது. இது டேராடூனில் கால்சி நதியுடன் இணைந்த பிறகு இதன் கொள்ளளவு யமுனை நதியை விட அதிகமாகும். இந்நதியின் வடிகால் பகுதிகள் இமாச்சலத்தில் உள்ள கிாி-சட்லெஜ் நீ்ர்ப்பிடிப்புப் பகுதிகளும், கார்வாலில் உள்ள யமுனை - பிலிங்னா நீர்ப்பிடிப்புப் பகுதிக்கும் இடையில் அமைந்துள்ளது. சிம்லாவின் தெற்குப் பகுதியும் இந்நதி நீர் பாயும் பகுதியில் அடங்கும். யமுனை நதிப் பள்ளத்தாக்கில் மிக உயரமான பகுதி காலாநாக், இது 6387 மீட்டர் உயரமுடையது. யமுனையின் மற்ற கிளை நதிகளான கிாி, ரிஷிகங்கா, ஹனுமன் கங்கா மற்றும் பாட்டா ஆகியவை யமுனை நதி பள்ளத்தாக்கின் மேல்நீர்ப்பிடிப்புப் பகுதியில் பாய்கின்றன. இங்கிருந்து யமனை நதி டேராடூனின் அருகில் உள்ள டாக் பாதாில் உள்ள டூன் பள்ளத்தாக்குப் பகுதியில் கீழ்நோக்கிப் பாய்கிறது. டாக் பாதர் அணைக்கட்டிலிருந்து நீர், மின்சாரம் எடுப்பதற்காக கால்வாய்க்கு பிாித்து விடப்படுகிறது. சீக்கிய புனித யாத்திரை நகரான போயன்டா சாகிப்பை கடந்து சென்ற பிறகு, ஹாியானாவில் உள்ள யமுனா மாவட்டத்தில் உள்ள தேஜ்வாலாவை அடைகிறது. இங்கு 1873-ல் ஒரு அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து இரண்டு முக்கிய கால்வாய்களான மேற்கு யமுனைக்கால்வாய், கிழக்கு யமுனைக் கால்வாய், கிழக்கு யமுனைக் கால்வாய் உருவாகின்றன. உத்திரபிரதேசம் மற்றும் ஹாியானா ஆகிய இரு மாநிலங்களுக்கு் இக்கால்வாய் யமுனா நகர், கார்னல் மற்று பானிபட் ஆகிய நகரங்களைக் கடந்து கைதர்பூர் சுத்திகாிப்பு ஆலையை அடைகிறது. இங்கிருந்து டெல்லிக்கு நீர் எடுத்துச் செல்லப்படுகிறது. யமுனா நகர் மற்றும் பானிபட் ஆகிய நகரங்களில் இருந்து கழிவு நீர் இக்கால்வாயில் கலக்கிறது. 224 கிலோ மீட்டர் கடந்து பல்லா கிராமத்தை அடைந்தபிறகு யமுனை நதியில் சிறு ஓடைகளில் அவ்வப்போது வருகின்ற நீர் கலக்கிறது. வறட்சிக் காலங்களில் இந்த நதி தேஷ்வா முதல் டெல்லி வரை வறண்டு இருக்கும். யமுனை நதி இமாச்சலப்பிரதேசம், உத்ரகாண்ட் மற்றும் அாியானா, டெல்லி, உத்தரபிரதேசம் ஆகியமாநிலங்களுக்கு இடையே எல்லையாக உள்ளது. இந்நதி கங்கை நதிக்கு இணையாக இந்து - கங்கைச் சமவெளி வரை பாய்கிறது. உலகிலேயே மிகப் பொிய வளமான பகுதியான இந்து - கங்கை சமவெளிப் பகுதிக்குப் பிறகு இரு நதிகளும் இணையாகப் பாய்கின்றன. கங்கை - யமுனை சமவெளிப்பகுதி 69,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை உள்ளடக்கியது. இந்தச் சமவெளிப் பகுதியில் மூன்றில் ஒரு பங்கு விவசாயத்திற்கு பெயர் பெற்றது. பேட்வா ஆறு, மத்தியப் பிரதேச மாநிலம் ஓசங்காபாதுக்கு வடக்கில் உருவாகி, வட கிழக்காகப் பாய்ந்து, மால்வா பீடபூமி வழியாக உத்தரப்பிரதேச மாநிலம் அமீர்பூர் அருகில் யமுனையில் கலக்கிறது. கென் ஆறு, மத்தியப் பிரதேசம், ஜபல்பூர் அருகில் உருவாகி உத்தரப் பிரதேசத்தின் பதேபூர் அருகில் யமுனையில் கலக்கிறது. கங்கை ஆறு கங்கை () ( ), () என்பது இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளின் வழியாக பாய்கின்ற ஒரு ஆறாகும். இது இந்தியாவின் முக்கிய ஆறு . கங்கை இந்தியாவின் தேசிய நதி ஆகும். இமய மலையில் உத்தராகண்டம் மாநிலத்திலுள்ள கங்கோத்ரியில் தொடங்கும் பாகிரதி நதியானது, தேவப்பிரயாக் எனுமிடத்தில் அலக்நந்தா ஆற்றுடன் கலந்து கங்கையாகிறது. பிறகு உத்தரப் பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்கள் வழியாகச் சென்று, ஹூக்லி, பத்மா என இரு ஆறுகளாக பிரிந்து முறையே மேற்கு வங்காளம், வங்கதேசம் வழியாகச் சென்று மிகப்பெரிய வளமான கழிமுகத்தை உருவாக்கி வங்காள விரிகுடாவில் கலக்கிறது. கங்கை ஆறு மொத்தம் 2525 கி.மீ ஓடுகிறது. ரிஷிகேஷ், ஹரித்வார், அலகாபாத், வாரணாசி, பட்னா, கொல்கத்தா ஆகியவை இவ்வாற்றின் கரையில் அமைந்த முக்கிய நகரங்களாகும். வங்கதேசத்தில் கங்கை ஆறு பத்மா ஆறு என அழைக்கப்படுகிறது. கங்கை இந்துகளின் புனித நதியாக திகழ்கிறது. இது இந்து மதக் கடவுள் கங்காதேவி எனவும் அழைக்கப்பட்டு வணங்கப்படுகிறது.   மில்லியன் கணக்கான இந்தியர்கள் தங்கள் வாழ்நாளில் தங்கள் அன்றாட தேவைகளுக்கு இந்த ஆற்றைச் சார்ந்து வாழ்கின்றனர். இந்த நதியினை சார்ந்து மனிதர்கள் மட்டுமல்லாது பல்லாயிரக்கணக்கான உயிர்கள் வாழ்கின்றன. இதன் வடிநிலத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இராச்சியங்கள் அல்லது பேரரசுகளின் தலைநகர்கள் ( கன்னோசி, காம்பில்யா, கரா, பிரயாகை அல்லத் அலகாபாத், காசி, பாடலிபுத்திரம் அல்லது பாட்னா, ஹாஜிப்பூர், முன்கிர், பாகல்பூர், முர்சிதாபாத், பாரம்பூர், நபதிவீப், சப்தகிராம், கொல்கத்தா, தாக்கா போன்ற ) போன்றவை அமைந்துள்ளன. இந்தியாவின் பெருமைமிகு புனித நதிகளில் ஒன்றான கங்கை ஆறும், அதன் பிறப்பிடமான இமயமலையின் பனிமுகடும் "உயிருள்ள நபர்கள்" என்று இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கங்கை ஆறு 2007 ஆம் ஆண்டில் உலகின் ஐந்தாவது மிக மாசுபடுத்தப்பட்ட நதி என மதிப்பிடப்பட்டது.  இந்த மாசுபாடானது மனிதர்களை மட்டுமல்லாமல், 140 க்கும் மேற்பட்ட மீன் வகைகள், 90 நிலநீர் வாழி வகைகள், கங்கை டால்பின்கள் ஆகியவற்றையும் அச்சுறுத்துகிறது. வாரணாசி அருகில் கங்கை ஆற்று நீரில் கலக்கும் மனித கழிவுகளிலின் மாசின் அளவானது இந்திய அரசின் அதிகாரப்பூர்வ வரம்பைவிட 100 பங்கு அதிகமாகும். கங்கை ஆற்றைத் தூய்மைப் படுத்த வகுக்கப்பட்ட சுற்றுச்சூழல் முயற்சியான "கங்கை செயல் திட்டம்" என்ற திட்டமானது,   ஊழல், தொழில்நுட்ப நிபுணத்துவம் இல்லாதது,  மோசமான சுற்றுச்சூழல் திட்டமிடல், மற்றும் சமயத் தலைவர்களின் ஆதரவு இல்லாதது போன்ற காரணங்களினால் இதுவரை பெரிய தோல்வியிலேயே முடிந்தது. கங்கையின் முதன்மை நீரோட்டமானது, உத்தரகண்ட் மாநிலத்தின் கர்வால் பகுதியிலுள்ள தேவ்பிரயாக் நகரில் பாகீரதி ஆறு மற்றும் அலக்நந்தா ஆறுகளின் சங்கமத்தில் துவங்குகிறது. இந்து பண்பாடு மற்றும் புராணங்களில் பாகீரதி ஆதாரமாகக் கருதப்படுகிறது, இருப்பினும் அலக்நந்தா ஆறு, என நீரியல் ஆதாரம் கூறுகிறது. அலக்நத்தா ஆற்றின் நீராதாரமானது நந்தா தேவி, திரிசுல் மற்றும் கமேட் போன்ற சிகரங்களிலின் பனிமுகடுகளில் இருந்து உருவாகின்றது. பாகீரதியானது 3,892 மீ (12,769 அடி) உயரத்தில் உள்ள கங்கோத்ரி பனிப்பாறைகளின் அடியில் உள்ள கோமுகியில் இருந்து தோற்றம்பெறுகிறது. குறுகிய இமயமலை பள்ளத்தாக்கு வழியாக 250 கிமீ (160 மைல்) பாய்ந்த பிறகு, கங்கை ரிஷிகேஷில் உள்ள மலைகளிலிருந்து வெளிவருகிறது, பின்னர் புனித யாதிதிரைத் தலமான[[அரித்துவார்|அரித்துவாரில்] கங்கை சமவெளிக்குள் முதல் முறையாக நுழைகிறது. அரித்வாரில் ஒரு அணையானது, கங்கையில் இருந்து கொஞ்ச நீரை கால்வாய் வழியாக திசைதிருப்பி, உத்திரபிரதேச மாநிலத்தின் டூப் பிராந்தியத்தில் பாசனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது, ஆற்றின் வடகிழக்கு சமவெளிகளில் தென்கிழக்குப்பகுதிக்கு இப்போது தெற்கே ஓடும் ஆற்றின் குறுக்கே நதி இருக்கிறது.   இந்த கட்டம் வரை தெற்கே பாயக்கூடிய ஆறு, இதற்கு்கு மேல் தென் கிழக்கு நோக்கி திரும்பி வட இந்திய சமவெளிகளை வளமாக்குகிறது. கங்கை 800 கிமீ (500 மைல்) தொலைவுக்கு [[கன்னோசி]], ஃபருகஹாபாத், [[கான்பூர்]] ஆகிய நகரங்களை கடந்து பாய்கிறது.   வழியில் இதனுடன் ராம்கங்கா இணைந்து, சுமார் . சராசரியான வருட ஓட்டத்தை அளிக்கிறது. இந்து மதத்தில் புனித சங்கமமான அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில் கங்கையுடன் [[யமுனை ஆறு]] இணைக்கிறது. இந்த சங்கமத்தில் யமுனை கங்கை விட பெரியதாக,  , 2,950 m3 / s (104,000 cu ft / s), அல்லது ஒருங்கிணைந்த ஓட்டத்தில் 58.5% பங்களிப்பை யமுனை அளிக்கிறது. இப்போது கிழக்கே ஓடுகிம் ஆற்றோடு,  [[தமசா ஆறு]] இணைந்து, கெய்மீர் மலைத்தொடரிலிருந்து வடக்கே பாய்கிறது மேலும் சுமார் சராசரியான நீரோட்டத்தை அளிக்கிறது. தாம்சவுக்கு பிறகு [[கோமதி ஆறு]] இணைகிறது, இதன் பிறகு இமயமலையிலிருந்து தெற்கு நோக்கி செல்கிறது. கோமதி சராசரியாக வருடாந்த நீரோட்டமாக அளிக்கிறது. நேபாளத்தின் இமயமலைகளிலிருந்து தெற்கே பாயும் [[காக்ரா ஆறு]] (கர்னலி நதி) கங்கையுடன் இணைகிறது. காக்ரா ஆறு (கர்னலி), சுமார் சராசரி வருடாந்த நீரோட்டம் உடைய, கங்கையின் மிகப் பெரிய கிளை ஆறு ஆகும். காக்ராவுடன் (கர்னலி) சங்கமித்த பிறகு கங்கை தெற்கில் [[சோன் ஆறு|சோன் ஆற்றுடன்]] இணைகிறது, இது நீரை வழங்குகிறது. நேபாளிலிருந்து வடகிழக்கு பாயும் [[கண்டகி ஆறு, நேபாளம்|கண்டகி ஆறு]] பிறகு [[கோசி ஆறு]] ஆகியவை முறையே மற்றும் நீரை அளிக்கின்றன. காக்ரா ஆறு (கர்னலி) மற்றும் யமுனைக்கு அடுத்து கங்கையின் மூன்றாவது பெரிய துணை ஆறாக கோசி ஆறு உள்ளது. கங்கையாறு அலகாபாத் மற்றும் மால்காவிற்கும் இடையே பாய்ந்து, மேற்குவங்கத்தை நோக்கிச் செல்லும்போது கங்கை சுனார், [[மிர்சாபூர்]], [[வாரணாசி]], காசிபூர், [[பாட்னா]], [[ஹாஜீபூர், [[சப்ரா]], [[பாகல்பூர்]], பிலியா, பக்ஸார், சிமரியா, சுல்தங்கான்ஜ் மற்றும் சைட்புர் ஆகிய நகரங்களை கடந்து செல்கிறது. பாகல்பூரில், ஆறானது தெற்கு-தென்கிழக்கு திசையை நோக்கி திரும்பி பாகூரில் ஓடுகிறது. இதன்பிறகு ஆறானது அதன் ஓட்டத்தில் முதன் முதலில் [[கிளை ஆறு|கிளை ஆறாக]] [[ஊக்லி ஆறு]] பிரிகிறது, [[வங்காளதேசம்|வங்காளதேச]] எல்லைக்கு அருகில் கங்கையின் குறுக்கே [[ஃபராக்கா அணை]] கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து சில வாய்கால்கள் வழியான ஹகிஹ்லி ஆறு இணைக்கப்பட்டுள்ளது. ஹகிஹ்லி ஆறானது பக்கிரிதி நதி மற்றும் [[ஜலாங்கி ஆறு]] ஆகியவற்றின் சங்கமத்தினால் உருவானது, மேலும் ஹூக்ளி பல துணை ஆறுகளைக் கொண்டுள்ளது. 541 கிமீ (336 மைல்) நீளமுடைய தாமோதர் ஆறு, வடிகாலைக் கொண்டது. ஹூக்ளி ஆறு சாகர் தீவுக்கு அருகில் வங்காள விரிகுடாவில் நுழைகிறது. மால்டா மற்றும் வங்காள விரிகுடாவிற்கு இடையே, ஹூக்ளி ஆற்றானது முர்ஷிதாபாத், நாட்ப்விப், கொல்கத்தா ஹௌரா பொன்ற ஊர்களையும் நகரங்களையும் கடந்து செல்கின்றது. வங்கதேசத்தில் நுழைந்த பிறகு, கங்கையின் முதன்மைக் கிளை பத்மா என்று அழைக்கப்படுகிறது. பிரம்மபுத்திராவின் மிகப்பெரிய கிளை ஆறான ஜமுனா ஆறு பத்மாவுடன் இணைகிறது. மேலும் கீழே, பத்மா பிரம்மபுத்திராவின் இரண்டாவது மிகப்பெரிய கிளை ஆறான மேகனா ஆற்றுடன் சேர்ந்து, அது மேகானா என்ற பெயரைப் பெற்று, வங்காள விரிகுடாவில் கலக்கிறது. கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆறுகள் பாயும் பெரிய, வண்டல் நிறைந்த கங்கை வடிநிலம் உலகின் மிகப்பெரிய வடிநிலமாகும், இது சுமார் பரப்பளவு கொண்டது ஆகும். இது வங்காள விரிகுடாவில் நீண்டு செல்கிறது. சூரிய குலத்துத் தோன்றலாகிய திலீபன் என்பவனின் மகன் [[பகீரதன்]]. தன் மூதாதையர்கள் சாபத்தால் இறந்த செய்தியை [[வசிட்டர்]] வாயிலாகக் கேட்டு, அவர்கள் நற்கதி அடையப் [[பிரம்மா|பிரம்மனை]] நோக்கி 10,000 ஆண்டுகள் தவம் புரிந்தான். பிரம்மனோ "நீ கங்கையையும் [[சிவன்|சிவனையும்]] நோக்கித் [[தவம்]] செய்து கங்கையைக் கொண்டு அவர்களின் சாம்பலை நனைத்தால் அவர்களுக்கு நற்கதி கிடைக்கும்" என்று கூற அவ்வாறே செய்தான். கங்கை சிவன் முன் தோன்றி, "நான் வருவதற்குத் தடையொன்றும் இல்லை, என் வேகத்தைத் தாங்கிக் கொள்வார் உண்டாயின்" என்றாள். பிரம்மன் கட்டளைப்படி சிவனாரை நோக்கித் தவம் புரிந்தான். சிவனாரும் கங்கையின் வேகத்தைத் தாங்கிக் கொள்வதாகக் கூற, பின் [[சிவன்]] வேண்டுகோளின்படி கங்கை வானுலகினின்று பூலோகம் வருகையில் சிவனாரால் கங்கை தாங்கப் பெற்றுப் பூமி பொறுக்கும் அளவுக்குப் பூமியில் விடப்பட்டாள். கங்கையை இறந்தோர் சாம்பலில் பாய வைத்து நற்கதி பெறச் செய்தவன். இவனால் கங்கை கௌரவம் பெற்றதால் கங்கைக்குப் பாகீரதி எனப் பெயர் வந்தது. இதனால் சிவபெருமான் [[கங்காதரன்]] என்று அழைக்கப்படுகிறார். [[வாரணாசி|வாரணாசியில்]] கங்கைக்கரையில் தினமும் கங்கை ஆற்றுக்கு ஆர்த்தி வழிபாடு நடத்தப்படுகிறது. இந்நிகழ்வை [[கங்கா ஆர்த்தி]] என்கின்றனர். கங்கை ஆற்றின் [[துணை ஆறு]]கள்: [[பகுப்பு:இந்திய ஆறுகள்]] [[பகுப்பு:இந்து தொன்மவியல் ஆறுகள்]] கங்கை கங்கை () (கங்கா) என்ற தலைப்பில் உள்ள கட்டுரைகள்: மேற்கு வங்காளம் மேற்கு வங்காளம் (West Bengal) என்பது இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலமாகும். இது மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் 4வது பெரிய மாநிலமாகும். இது கிழக்கில் வங்காளதேசத்தையும் மேற்கில் நேபாளம் மற்றும் பூடான் ஆகிய நாடுகளையும் தன் எல்லைகளாகக் கொண்டுள்ளது. இந்தியாவின் 7வது பெரிய நகரமான கொல்கத்தா, இம்மாநிலத்தின் தலைநகராக உள்ளது. வங்காள மொழியே இங்கு பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழி. சுந்தரவனக் காடுகள் மற்றும் வங்காளப் புலிகள், இரும்பு மற்றும் நிலக்கரி சுரங்கங்களுக்கு பெயர் பெற்ற மாநிலம். 1947ஆம் வருடம் அன்றைய வங்காளம், இந்துக்கள் பெரும்பான்மையினராக இருந்த பகுதி மேற்கு வங்காளம் என்றும், இஸ்லாமியரின் பகுதி கிழக்கு வங்காளம் என்றும் பிரிக்கப்பட்டது. இன்றைய வங்கதேசமே அந்த கிழக்கு வங்காளமாகும். 88,752 சதுர கிலோ மீட்டர் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மேற்கு வங்காள மாநிலத்தின் அண்டைய பகுதிகள் பின்வருவன மேற்கு வங்காள மாநிலம் 20 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 1948 முதல் 1977 வரை மேற்கு வங்காளத்தை இந்திய தேசிய காங்கிரஸ் தொடர்ச்சியாக இருபத்து ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தது. 1977ஆம் ஆண்டிலிருந்து 2011 ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 34 ஆண்டுகள் மேற்கு வங்காளம் இடது சாரி கட்சிகளால் ஆளப்பட்டு வந்தது. 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரசு வெற்றி பெற்றதை அடுத்து மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்றார். மேற்கு வங்காளம் 294 சட்டமன்ற தொகுதிகளும், 42 மக்களவை தொகுதிகளையும் கொண்டது. 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 91,276,115 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 46,809,027 மற்றும் பெண்கள் 44,467,088 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 950 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 1,028 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 76.26 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 81.69 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 70.54 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 10,581,466 ஆக உள்ளது. பத்தாண்டு மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 13.84% ஆக உள்ளது. நகர்புற மக்கள் தொகை 38.13% ஆகவும், கிராமப்புற மக்கள் தொகை 31.87% ஆகவும் உள்ளது. இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள்தொகை 64,385,546 (70.54 %) ஆகவும், இசுலாமியர் மக்கள்தொகை 24,654,825 (27.01 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள்தொகை (658,618) (0.72 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள்தொகை 63,523 (0.07 %) ஆகவும், சமண சமய மக்கள்தொகை 60,141 (0.07 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 282,898 (0.31 %) ஆகவும், பிற சமயத்து மக்கள்தொகை 942,297 (1.03 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள்தொகை 228,267 (0.25 %) ஆகவும் உள்ளது. இருபது மாவட்டங்களைக் கொண்ட மேற்கு வங்காள மாநிலத்தின் நிர்வாக வசதிக்காக இராஜதானி கோட்டம், வர்தமான் கோட்டம் மற்றும் ஜல்பைகுரி கோட்டம் என மூன்று கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மூன்று கோட்டங்களில் 23 மாவட்டங்கள் கொண்டுள்ளது. இராஜதானி கோட்டத்தில் கொல்கத்தா மாவட்டம், ஹவுரா மாவட்டம், முர்சிதாபாத் மாவட்டம், நதியா மாவட்டம் வடக்கு 24 பர்கனா மாவட்டம், தெற்கு 24 பர்கனா மாவட்டம் மற்றும் ஜார்கிராம் மாவட்டம் என 7 மாவட்டங்களை கொண்டுள்ளது. வர்தமான் கோட்டத்தில் பாங்குரா மாவட்டம், கிழக்கு மிட்னாபூர் மாவட்டம், மேற்கு மிட்னாபூர் மாவட்டம், பிர்பூம் மாவட்டம், கிழக்கு வர்த்தமான் மாவட்டம், மேற்கு வர்த்தமான் மாவட்டம், ஹூக்லி மாவட்டம் மற்றும் புருலியா மாவட்டம் என 8 மாவட்டங்களை கொண்டுள்ளது. ஜல்பைகுரி கோட்டத்தில் ஜல்பாய்குரி மாவட்டம், டார்ஜிலிங் மாவட்டம், அலிப்பூர்துவார் மாவட்டம், கூச் பெகர் மாவட்டம், தெற்கு தினஜ்பூர் மாவட்டம், மால்டா மாவட்டம், உத்தர தினஜ்பூர் மாவட்டம் மற்றும் காளிம்பொங் மாவட்டம் என 8 மாவட்டங்கள் கொண்டுள்ளது. துர்காபூர் மற்றும் ஆசான்சோல் இரும்பு, நிலக்கரி மற்றும் அலுமினிய சுரங்கங்கள் மூலம் எஃகு, இரும்பாலைகள், மின்சார மற்றும் மின்னனு கருவிகள், மின் கம்பிகள், தோல், துணி நெசவு, நகையணிகள், மோட்டார் கார் உதிரிபாகங்கள், தொடருந்து பயனிகள் பெட்டிகள், தொடருந்து சரக்கு பெட்டிகள், தொடருந்து என்ஜின்கள், தேயிலை, சர்க்கரை, வேதியல் மூலப் பொருட்கள், சணல் மற்றும் சணலால் ஆன பொருட்கள் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி ஆதாரமாக உள்ளது. டையமண்ட் துறைமுகம், மாநில பொருளாதரத்திற்கு உறுதுணையாக உள்ளது. வேளாண்மைத் தொழில் மேற்கு வங்காளத்தின் பொருளாதாரத்தின் முக்கிய ஆதாரம் ஆகும். நெல் முதன்மை வேளாண்மை பயிராகும். அரிசி, உருளைக்கிழங்கு, சணல், கரும்பு, தேயிலை மற்றும் கோதுமை முக்கிய விளைபொருட்கள் ஆகும். 2011-ஆம் ஆண்டு முடிய மேற்கு வங்காளத்தில் மாநில நெடுஞ்சாலைகளின் நீளம் கொண்டது. மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் கொண்டது. மாநில அரசின் பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் மக்களின் தரை வழி போக்குவரத்திற்கு உதவுகிறது. மேற்கு வங்காளத்தில் தொடருந்து இருப்புப் பாதைகளின் நீளம் 4481 கிலோ மீட்டர் ஆகும். தென்கிழக்கு இரயில்வே, கிழக்கு இரயில்வே மற்றும் கொல்கத்தா மெட்ரோ இயில்வேயின் மண்டலத் தலைமையகங்கள் கொல்கத்தாவில் அமைந்துள்ளது. நேதாஜி சுபாசு சந்திர போசு பன்னாட்டு வானூர்தி நிலையம் மாநிலத்தின் பெரிய வானூர்தி நிலையம் ஆகும். கிழக்கு இந்தியாவில் உள்ளூர் ஆற்று நீர் வழிப் போக்குவரத்தில் கொல்கத்தா ஆற்றுத் துறைமுகம் சிறப்பிடம் வகிக்கிறது. கொல்கத்தா மற்றும் ஹால்டியா துறைமுகங்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பணிகளுக்கு சிறப்பிடமாக உள்ளது. அந்தமான் நிக்கோபர் தீவுகளுக்கு கொல்கத்தாவிலிருந்து பயணிகள் மற்றும் சரக்குக் கப்பல்கள் செல்கிறது. சுந்தரவனக் காடுகளில் பயணிக்க பெரிய இயந்திரப் படகுகள் உதவுகிறது. இம்மாநிலத்தின் பெயரை பஸ்ச்சிம் பங்கா என மாற்ற அம்மாநில அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதலுக்குப் பின்னர் மேற்கு வங்காளம் "பஸ்ச்சிம் பங்கா" என அழைக்கப்படுவது அதிகாரபூர்வமாக நடைமுறைக்கு வரும். ஆகியோர் இம்மாநிலத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற மனிதர்களாவர். நேபாளம் நேபாளம் () இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு தனி நாடாகும். தெற்காசியாவில் உள்ள இந்நாட்டின் வடக்கில் மக்கள் சீன குடியரசும் தெற்கு, மேற்கு மற்றும் கிழக்குத் திசைகளில் இந்தியாவும் அமைந்துள்ளன. நேபாளம் பொதுவாக "இமாலய இராச்சியம்" என்று அழைக்கப்படுகிறது. கௌதம புத்தர் பிறந்த லும்பினி நகரம் நேபாள-இந்தியா எல்லையில் உள்ளது. காத்மாண்டு சமவெளியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட நியோலிதிக் காலப்பகுதியை சேர்ந்த ஆயுதங்களின் மூலம் 9,000 ஆண்டுகளுக்கு முன்னரே இப்பிரதேசங்களில் மக்கள் குடியிருப்புகள் இருந்ததை காட்டுகிறது. திபேத்திய-மியான்மார் இன மக்கள் 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு வசித்ததாக கருதப்படுகிறது. இந்தோ-ஆரிய மக்கள் சுமார் கிமு 1500 அளவில் இங்கு வந்தனர், மேலும் சுமார் கிமு 1000 அளவில் பல சிற்றரசுகள் தோன்றின. இவ்வாறான ஒரு சிற்றசான சாக்கியர் இளவரசனான கௌத்தம் சித்தார்த்தன் (கிமு 563-483) என்பவர் தமது அரசை துறந்து மெய்ஞானம் பெற்று பின்னர் புத்தர் என அழைக்கப்பட்டார். கிமு 250 அளவில் இப்பிரதேசம் வட இந்தியாவின் மௌரியப் பேரரசுடைய ஆதிக்கத்துக்கு உட்பட்டது, பின்னர் கிபி 4ஆவது நூற்றாண்டளவின் குப்த பேரரசுடைய ஆட்சியின் கீழான அரசாக செயற்பட்டது. கிபி 5வது நூற்றாண்டுக்குப் பின்னர் லிச்சாவி இனமக்கள் காத்மாண்டு சமவெளியை ஆட்சி செய்தனர். இவர்களது ஆட்சி கிபி 5ஆவது நூற்றாண்டின் பிற்காலம் வரை நீடித்தது. லிச்சாவி அரசவம்சத்துக்கு பின்னர் நேவாரிகள் காலம் தொடங்கிற்று 879 தொடக்கம் இவ்வரசவம்சம் நேபாளத்தை ஆண்டது எனினும் அவர்களில் ஆட்சியின் எல்லைகள குறித்த தகவல்கள் இல்லை. கிபி 11வது நூற்றாண்டில், தெற்கு நேபாளம் தென்னிந்தியாவின் சாளுக்கிய பேரரசின் ஆட்சிகுட்பட்டது. இவ்வாட்சியின் கீழ் நேபாளத்தின் மத கட்டமைப்புகள் மாற்றம் பெற்றது அரசர் இந்து சமயத்தை ஆதரித்த காரணத்தால் அங்கு ஏற்கனவே நிலவிய பௌத்த மதம் இந்து சமயத்தால் பிரதீயீடு செய்யப்பட்டது. மல்ல வம்சத்தவர்கள் காத்மாண்டு சமவெளியில் பதான் நகரப் பரப்பை மேலும் விரிவு படுத்தினர். மல்ல வம்ச மன்னர் வீரதேவன் என்பவர் லலித்பூர் எனும் பதான் நகரத்தை நிறுவினார். மல்லர்கள் காத்மாண்டு சமவெளியை கி பி 1201 முதல் 1768 முடிய ஆண்டனர். 14வது நூற்றாண்டில் நாடு, காட்மாண்டூ, பதான், பக்தபூர் என மூன்றாக பிளவுபட்டது. இவை பல நூற்றாண்டுகளுக்கு பகைமை பாராட்டி வந்தன. 1768-இல் ஷா வம்சத்தின் கோர்க்கா நாட்டு மன்னர் பிரிதிவி நாராயணன் ஷா என்பவர் கீர்த்திப்பூர் போர், காட்மாண்டுப் போர் மற்றும் பக்தபூர் போர்களில் காத்மாண்டு சமவெளியின் மூன்று நகரங்களைக் கைபப்ற்றி, ஒன்றினைத்த நேபாள இராச்சியத்தை நிறுவினார். ஷா வம்ச மன்னர்களின் பரம்பரை தலைமை அமைச்சர் மற்றும் தலைமைப் படைத்தலைவர்களாக இருந்தவர்களான ராணா வம்சத்தின் ஜங் பகதூர் ராணா என்பவர் 1846ல் நேபாள இராச்சியத்தின் ஷா வம்ச மன்னர்களின் ஆட்சி அதிகாராங்களை கைப்பற்றி, பெயரளவில் ஷா வம்ச மன்னர்களை கைப்பாவை மன்னர்களாக வைத்துக் கொண்டு, அவரும், அவரது பரம்பரையினரும் 1951 முடிய ஆட்சி செலுத்தினார். 1951ல் மீண்டும் ஷா வம்ச மன்னர்கள் நேபாளத்தை 1951 முதல் 2008 முடிய ஆண்டனர். 1815-1816ல நடைபெற்ற ஆங்கிலேய-நேபாளப் போரின் முடிவில், ஷா வம்சத்தின் நேபாள இராச்சியத்தினர் கைப்பற்றியிருந்த, கார்வால், சிர்மூர், குமாவுன், சிக்கிம் மற்றும் டார்ஜிலிங் பகுதிகள் கிழக்கிந்திய கம்பெனியினருக்கு வழங்கப்பட்டது. 1846இல் ஆதிகாரம் செலுத்திவந்த ஜங் பகதூர் ராணா என்ற தளபதியை பதவி கவிழ்க்க எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இதன் போது அரசருக்கு சார்பானவர்களுக்கும் பகதூருக்கு சார்பானவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் பகதூர் வெற்றிப் பெற்று தன்னை பரம்பரை தலைமை பிரதமராக்கிக் கொண்டு அரசரின் அதிகாரங்களை தன்கையில் எடுத்துக் கொண்டார். மேலும் இவர் ராணா வம்சத்திற்கு வித்திட்டார். ராணா வம்சத்தார் பிரித்தானிய ஆதரவு கொள்கையை கடைப்பிடித்தனர். 1923 இல் ஐக்கிய இராச்சியத்துடன் உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது, இதன் மூலம் ஐக்கிய இராச்சியம் நேபாளத்தை சுதந்திர நாடாக ஏற்றுக் கொண்டது. 1940களின் இறுதியில் சனநாயக இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் ராணா வம்ச அதிகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதேவேலை 1950இல் சீனா திபேத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது, இதன் காரணமாக நேபாளத்தின் அரசியலில் இந்தியா ஆர்வம் கொண்டது. இதன் போது இந்தியாவில் தங்கியிருந்த ஷா வம்ச மன்னர் திரிபுவன் வீர விக்ரம் ஷா என்பவரை நேபாளாத்தின் அரசரானார். பல வருடங்களாக அரசுக்கும் அரசருக்கும் ஏற்பட்ட அதிகார பிரச்சினைகளின் பிறகு, 1959 இல் அமைச்சரவையை பதவி விலக்கினார். கட்சியற்ற பஞ்சாயத்து ஆட்சி முறையொன்று ஏற்படுத்தப்பட்டது. 1989 இல் ஏற்பட்ட மக்கள் போராட்டங்கள் காரணமாக அரசர், 1991 மேயில் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி பல கட்சி முறைய ஏற்படுத்தினார். முதலாவது சனநாயக தேர்தலில் நேபாள காங்கிரசு வெற்றிப் பெற்று கிரிஜா பிரசாத் கொய்ராலா பிரதமராக பதவியேற்றார். 2001]] [[ஜூன் 1|யூன் 1 இல் முடிக்குறிய இளவரசன் [[திபெந்திரா]] அரன்மனையில் தனது பெற்றோருடன் தனது மணப்பெண் தொடர்பில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக கொலைவெறியாடியதில் அவரது பெற்றோர் கொல்லப்பட்டனர் மேலும் மூன்று நாட்களில் அவரும் இறந்தார். பின்னர் [[பிரேந்திரா]]வின் சகோதரனான [[ஞானேந்திரா]] மன்னராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையற்ற அரசுகளை பயன்படுத்திக் கொண்ட மாவோயிசவாதிகள் 2004 ஆகஸ்டில் காட்மாண்டூ பள்ளத்தாக்கை கைப்பற்றினார்கள், இதனால் மக்களிடையே மன்னராட்சி மீதான நல்லெண்ணம் குன்றியது. [[2005]] [[பிப்ரவரி 1]] இல்,மாவோயிச போராளிகளை அடக்குதல் என்ற பெயரால், கயனேந்திரா மன்னர் அரசை பதவி விலக்கிவிட்டு, முழு ஆட்சி அதிகாரத்தையும் தன் கையில் எடுத்தார். செப்டம்பர் 2005 இல் மாவோயிச போராளிகள் மூன்று மாத ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்தமொன்றை அறிவித்த போதும் அரசு போர் மூலமாக போராளிகளை அடக்குவதாக பிடிவாதமாக இருந்தது. சில வாரங்களில் 2007 இல் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அரசு அறிவித்தது. அதற்குப்பிறகு மாவோயிசவாதிகளின் ஆதரவுடன் ஏழு பாராளுமன்ற கட்சிகள் அரசரின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவுக்கும் வகையில் பாரிய எதிர்ப்பார்பாட்டங்களை நடத்தின. எவ்வாறாயினும் இவ்வார்ப்பாட்டங்களை பல பொய் காரணங்களை காட்டி மன்னர் அடக்கினார். வேலையின்மை பாதுகாப்பின்மை போன்றவற்றால் வெறுப்படைந்த மக்கள் மென்மேலும் இவ்வார்ப்பாட்டங்களில் இணைந்தனர். ஆனால் அரசரோ மேலும் மூர்க்கத்தனமாக இவ்வார்ப்பாட்டங்களை அடக்கினார். உணவு பற்றாக்குறையும் நாட்டில் ஏற்படத்தொடங்கியது இதனால் மக்கள் அரண்மனையைச் சூழ்ந்து ஆர்பாட்டம் செய்ய திட்டமிட்டனர். இதன் போது பாதுகாப்புப் படைகள் மேலும் கொடூரமாக செயல் பட தொடங்கினார்கள். விளைவாக 21 பேர் இறந்ததோடு மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் காயப்பட்டனர். [[படிமம்:Demonstration 01, Kathmandu Nepal, April 2004.jpg|thumb|350px|left|2004 ஏப்ரலில் காட்மாண்டூவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்]] அதிகரித்துவந்த வெளிநாட்டு அழுத்தங்களின் முன்னிலையில் கயனேந்திரா மன்னர் [[ஏப்ரல் 21]] 2006 இல் தான் தனது அதிகாரங்களை கைவிடுவதாகவும் அது மக்களுக்கே மீண்டும் வழங்கப்படுவதாகவும் அறிவித்தார். மன்னர் 7 கட்சி கூட்டணியிடம் ஒரு தற்காலிக பிரதமரை நியமிக்குமாறும் தேர்தல்கள் விரைவில் நடத்தப்படும் எனவும் அறிவித்தார். இருப்பினும் பலர் தொடர்ந்து ஆர்பாட்டங்களில் ஈடுபட்டு மன்னராட்சி முற்றாக இல்லாதொழிக்கப் படவேண்டும் எனக் கோரினார்கள். கடைசியாக 19 நாள் ஆர்பாட்டங்களுக்குப் பிறகு [[ஏப்ரல் 24]] மத்திய இரவில் ஏப்ரல் 28 ஆம் நாள் பாராளுமன்றத்தை கூடும் படி கேட்டுக் கொண்டார். இதன்படி ஒன்றுகூடிய பாராளுமன்றம் அரசரின் இராணுவம் மீதான அதிகாரங்களை அகற்றி மன்னர் [[இந்து சமயம்|இந்து]] கடவுளின் வாரிசு என்ற பட்டத்தையும் நீக்கியது மேலும் மன்னர் வரிச் செலுத்தவேண்டும் எனவும் கேட்கப்பட்டது. பல அரச அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. "மேதகு மன்னரின் அரசு" என்ற பெயர் நீக்கப்பட்டு நேபாள ஜனநாயக அரசு என அரசின் பெயர் மாற்றப்பட்டது. புதிய அரசியலமைப்புச் சட்டத்தை ஆக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டவாக்க சபையொன்றுக்கான தேர்தல்கள் விரைவில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. நாட்டின் [[மக்கள் தொகை]]யின் 80% [[இந்து சமயம்|இந்து]] [[மதம்|மதத்தை]] பின்பற்றுபவர்களாவார்கள். தெற்கே வெப்பமான [[தெராய்]]யும் வடக்கே குளிரான [[இமய மலை|இமாலயம்]] கொண்ட நேபாளத்தின் புவியமைப்பு பெரிய வேறுபாடுகளை காட்டுகிறது. சிறிய தூரத்துக்குள் சமவெளியில் இருந்து உலகிலேயே மிக உயரமான இமயம் வரை நிலம் மிக விரைவாக உயர்வடைகிறது. [[மக்கள் சீன குடியரசு|சினா]]வுடனான எல்லையில் உள்ள [[எவரெஸ்ட்]] உட்பட, உலகில் முதல் பத்து உயரமான மலைகளில் எட்டு நேபளத்தில் காணப்படுகிறது. நேபாளத்தின் தலைநகரமும் அதன் பெரிய நகரமுமாக [[காட்மாண்டூ]] விளங்குகிறது. நேபாளத்தின் பெயரின் ஆரம்பம் குறித்த தெளிவான கருத்துக்கள் இல்லாத போதும் "நே" (புனித) "பாள்" (குகை) என்பது பொதுவான கருத்தாகும். பல்வேறு அரசர்களின் கீழ், நீண்ட பசுமையான வரலாற்றை கொண்டிருந்த நேபாளம் [[1990]]இல் [[அரசியலமைப்பு சட்ட முடியாட்சி]]யாக மாறியது. எவ்வாறெனினும் மன்னர் முக்கியமான மற்றும் நன்கு வரையறுக்கப்படாத அதிகாரங்களை தம் வசம் வைத்துக் கொண்டார். இது ஆட்சி நிலையின்மைக்கும் மேலும் [[1996]] முதல் [[நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)|மாவோயிசவாதிகளால்]] போரட்டம் ஒன்றை ஆரம்பிக்கவும் வித்திட்டது. முதல் நிலை [[அரசியல் கட்சி]]களால் தனிமைப்படுத்தப்பட்ட மாவோயிசவாதிகள் தலைமறைவாகி அரசுக்கெதிராகவும் அரசருக்கு எதிராகவும் கரில்லா யுத்தம் ஒன்றை ஆரம்பித்தார்கள். இவர்கள் அரசரையும் அரசையும் கவிழ்த்துவிட்டு [[குடியரசு]] ஒன்றை உருவாக்கும் நோக்கத்தை கொண்டுள்ளார்கள். இதன் காரணமாக ஏற்பட்டுள்ள [[நேபாள உள்நாட்டு யுத்தம்|நேபாள உள்நாட்டு யுத்தத்தினால்]] இது வரை சுமார் 13,000 பேர் வரையில் இறந்திருப்பதாக கருதப்படுகிறது. நாட்டின் 60%த்தை ஆட்சி செய்யும் மாவோயிசவாதிகளை அடக்குவதாக கூறி [[2002]]இல் மன்னர் தேர்தல் மூலம் தெரிவான பிரதமரை பதவிநீக்கி அவர் அவரது அரசையும் கலைத்தார். 2005 இல் தன்னிச்சையாக [[அவசரகால சட்டம்|அவசரகால சட்டத்தை]] பிறப்பித்தார். அரசருக்கெதிராக தொடர்ந்து நடைப்பெற்ற பேரணிகள் எதிர்பார்பாட்டங்கள் காரணமாக மன்னர் [[2006]] [[ஏப்ரல் 24]]ஆம் நாள் முன்பு தன்னால் கலைக்கப் பட்ட பாராளுமன்றத்துக்கு மீண்டும் ஆட்சியை கையளிக்க ஒப்புக் கொண்டார். புதிதாகக் கூடிய பாராளுமன்றம் அரசரின் அதிகாரங்களை அகற்றுவதற்கான சட்டமூலத்தை ஏக மனதாக நிறைவேற்றியது. மேலும் நேபாளம் மதசார்பற்ற, ஜனநாயக நாடாக அறிவிக்கப்பட்டது. [[நேபாள அரசியலமைப்பு சட்டம், 2015]], 20 செப்டம்பர் 2015 அன்று முதல் நடைமுறைக்கு வந்ததது. புதிய அரசியல் சாசனம் 20 செப்டம்பர் 2015 அன்று நடைமுறைக்கு வருவதை குறிக்கும் வகையில், நாட்டின் அதிபர் [[ராம் பரன் யாதவ்]] புதிய அரசியல் சாசனத்தில் கையெழுத்திட்டார். நேபாள அரசியலமைப்புச் சட்டம், 8 பகுதிகளாகவும், 305 தொகுப்புகளாகவும், 9 பட்டியல்களாகவும் இயற்றப்பட்டுள்ளது. [[நேபாளம்|நேபாளத்தை]] சமயசார்பற்ற, ஜனநாயகக் கூட்டாட்சி குடியரசு நாடு என அறிவிக்கப்பட்டது. நேபாளத்தை ஏழு [[நேபாள மாநிலங்கள்|மாநிலங்களாகவும்]], 75 [[நேபாளத்தின் மாவட்டங்கள்|மாவட்டங்களாகவும்]] பிரித்தது. [[படிமம்:Provinces of Nepal 2015.png|250px|thumb|right|2015ல் புதிதாக அமைக்கப்பட்ட ஏழு [[நேபாள மாநிலங்கள்]]]] 20 செப்டம்பர் 2015 அன்று புதிதாக வரையறுக்கப்பட்ட [[நேபாள அரசியலமைப்பு சட்டம், 2015| நேபாள அரசியல் அமைப்புச் சட்டத்தின்]] பட்டியல் எண் 4-இன் படி, கூட்டாட்சியை அடிப்படையாக் கொண்டு, [[நேபாளத்தின் மாவட்டங்கள்|77 மாவட்டங்களைக்]] கொண்டு, [[நேபாள மாநிலங்கள்|7 மாநிலங்கள்]] உருவாக்கப்பட்டுள்ளது. [[ஈரவை முறைமை]]யுடன் 334 உறுப்பினர்களுடன் கூடிய [[நேபாள நாடாளுமன்றம்]], 275 உறுப்பினர்கள் கொண்ட [[நேபாள பிரதிநிதிகள் சபை|பிரதிநிதிகள் சபை]] எனும் [[கீழவை]]யும் மற்றும் 59 உறுப்பினர்கள் கொண்ட [[நேபாள தேசிய சட்டமன்றம்|தேசிய சட்டமன்றம்]] எனும் [[மேலவை]]யும் கொண்டதாக இருக்கும். [[நேபாள மாநிலங்கள்|மாநிலங்களின்]] சட்டமன்றங்கள் ஓரவையுடனும் செயல்படும். 275 உறுப்பினர்கள் கொண்ட [[நேபாள பிரதிநிதிகள் சபை]]யின் 165 உறுப்பினர்கள் வாக்காளர்களால் நேரடியாகவும், 110 உறுப்பினர்கள் [[விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை]]யில், அரசியல் கட்சிகள் பெற்ற மொத்த வாக்கு சதவீதத்தின் படி மறைமுகமாகவும் தேர்ந்தெடுக்கப்படுவர். 59 உறுப்பினர்கள் கொண்ட [[நேபாள தேசிய சபை]]யின் 56 உறுப்பினர்களை [[நேபாள மாநிலங்கள்|நேபாள சட்டமன்றங்களின்]] உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களால் தேர்தெடுக்கப்படுவர். மீதமுள்ள 3 உறுப்பினர்களை நேபாளக் குடியரசுத் தலைவர் நியமிப்பர். நேபாள உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பு ஆனையத்தின் அறிக்கையின் படி, மார்ச் 2017ல், [[நேபாள நகரங்கள்|நகர்புறப் பகுதிகளை]] 6 மாநகராட்சிகளாகவும்; 11 துணை-மாநகராட்சிகளாகவும்; 246 நகர்புற நகராட்சிகளாகவும், 481 [[நேபாள கிராமிய நகராட்சிகள்|கிராமிய நகராட்சிகளாகவும்]] பிரிக்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, நேபாளத்தின் மொத்த மக்கள் தொகை 2,64,94,504 (இரண்டு கோடியே அறுபத்தி நான்கு இலட்சத்து தொன்னூற்றி நாலாயிரத்தி ஐந்நூற்றி நான்கு) அதிக மக்கள் தொகை கொண்ட [[மத்திய வளர்ச்சி பிராந்தியம், நேபாளம்|மத்திய வளர்ச்சி பிராந்தியத்தின்]] மக்கட்தொகை 9,656,985 ஆகவும், 2,552,517 அளவில் குறைந்த மக்கட்தொகை கொண்ட பிராந்தியமாக [[தூரமேற்கு வளர்ச்சி பிராந்தியம், நேபாளம்|தூரமேற்கு வளர்ச்சி பிராந்தியம்]] உள்ளது. நேபாளத்தின் மலைப் பகுதிகளில் மக்கட்தொகை 6.73% ஆகவும், குன்றுப் பகுதிகளில்: 43.00% ஆகவும், [[தராய்|சமவெளிகளில்]] 50.27% ஆகவும் உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் (2001–2011) மக்கள் தொகை வளர்ச்சி 3,343,081 உயர்ந்து, சராசரி மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1.35% ஆக உள்ளது. நேபாள மக்களில் [[இந்து]]க்கள் 81.3% ஆகவும், [[பௌத்தம்|பௌத்தர்கள்]] 9% ஆகவும், இசுலாமியர்கள் 4.4% ஆகவும், [[கிராந்தி மக்கள்]] 3% ஆகவும், கிறித்தவர்கள் 1.4% ஆகவும், 1% மக்கள் இதர சமயங்களையும் மற்றும் சமயம் அற்றவர்களாகவும் உள்ளனர். நேபாளத்தில் பெரும்பான்மையின மக்கள் [[இந்திய-ஆரிய மொழிகள்|இந்திய-ஆரிய மொழிகளான]] [[நேபாளி மொழி]], [[நேவார் மக்கள்|நேவார் மொழி]], [[மைதிலி மொழி]], [[அவத்|அவதி]] மொழி, [[போஜ்புரி மொழி]], [[தாரு மக்கள்|தாரு மொழி]], [[நேபால் பாசா]]வும், [[திபெத்திய-பர்மிய மொழிகள்|திபெத்திய-பர்மிய மொழிகளான]] [[தாமாங் மொழி]] மற்றும் குரூங் மொழிகளையும் மற்றும் உள்ளூர் மொழிகளான தன்வர், குரூங் மற்றும் [[கிராதர்கள்|கிராதி]] மொழிகள் பேசுகின்றனர். [[படிமம்:Nepal topo en.jpg|thumb|300px|left|நேபாள தரைத்தோற்றப் படம்]] நேபாளம் 650 கிமீ நீளமும் 200 கிமீ அகலமும் கொண்ட அண்ணளவான ஒரு செவ்வக வடிவையுடைய நாடாகும். நேபாளம் பொதுவாக மூன்று தரைத்தோற்ற பிரிவுகளாக பிரித்து நோக்கப்படுகிறது: மலைப்பிரதேசம், குன்றுப் பிரதேசம் மற்றும் [[தராய்]] பிரதேசம். இவ்வலயங்கள் கிழக்கு மேற்காக நீண்டு காணப்படுகின்றன. இவை நேபாளத்தின் ஆற்றுத்தொகுதியால் ஊடறுத்து செல்லப்படுகிறது. இந்திய எல்லையில் காணப்படும் தராய் சமவெளிகள் இந்திய-கங்கை சமவெளியின் வட பகுதியாகும். இப்பிரதேசம் மூன்று முதன்மையான ஆறுகளால் வளமாக்கப்படுகின்றது அவையாவன: கோசி, நாராயனி, கர்னாலி என்பனவாகும். இப்பிரதேசம் வெப்பமான ஈரப்பதன் கூடிய காலநிலையைக் கொண்டுள்ளது. குன்றுப் பிரதேசத்தில் 1000 தொடக்கம் 4000 மீட்டர் வரையான நிலப்பகுதி அடங்கும். இங்கு, சிவாலிக், மகாபாரத் லெக் என்ற இரண்டு தாழ் மலைத்தொடர்கள் முக்கியமாக காணப்படுகின்றது. இப்பிரதேசம் நாட்டின் வளமான மற்றும் கூடுதலாக நகரமயமாக்கப்பட்ட காட்மாண்டூ பள்ளத்தாக்கையும் உள்ளடக்குகிறது. இப்பிரதேசம் புவியியல் தன்மைக்காரணமாக தனிமைப் படுத்தப்பட்டிருந்தாலும் நாட்டின் பொருளாதார அரசியல் மையமாக விளங்கி வந்துள்ளது. இங்கு 2500 மீட்டருக்கு மேற்பட்ட பிரதேசங்களில் மக்கள் குடியிருப்புகள் அரிதாகவே காணப்படுகின்றது. [[படிமம்:KaliGandaki.jpg|thumb|250px|right|காளி கண்டகி பள்ளத்தாக்கு]] மலைப் பிரதேசமானது உலகிலேயே உயரமான மலைகளைக் கொண்டுள்ளது. உலகில் உயரமான மலையான [[எவரெஸ்ட்]] திபெத்துடனான எல்லையில் காணப்படுகிறது. மேலும் உலகின் முதல் பத்து உயரமான மலைகளில் எட்டு நேபாளத்தில் அமைந்துள்ளது. உலகில் மூன்றாவது உயரமான மலையான [[கஞ்சன்சுங்கா மலை]] கிழக்கு [[சிக்கிம்|சிக்கிமுடனான]] எல்லையில் அமைந்துள்ளது. காடழிப்பு இப்பிரதேசத்தில் காணப்படும் முக்கிய பிரச்சினையாகும். நேபாளம் ஐந்து காலநிலை வலயங்களைக் கொண்டுள்ளது. 1200 மீட்டருக்கு கீழான பகுதிகளில் வெப்ப வலய காலநிலையும் 1200 தொடக்கம் 2400 மீட்டர் வரையான பிரதேசம் மிதமான காலநிலையையும் 2400 தொடக்கம் 3600 மீட்டர் வரையான பிரதேசம் குளிர் வலய காலநிலையையும் 3600 தொடக்கம் 4400 மீட்டர் வரையான பிதேசம் உப ஆர்டிக் காலநிலையையும் 4400 மீட்டருக்கு மேலான பிரதேசம் ஆர்டிக் காலநிலையையும் கொண்டுள்ளது. மேலும் நேபாளத்தில், கோடை, பருவக்காற்றுகள், இலையுதிர்காலம், கோடை, இளவேனில் என ஐந்து பருவங்கள் காணப்படுகின்றன. இமாலயம் பருவக்காற்றுகள் செல்லும் வட எல்லையையாகவும் கோடையில் மத்திய ஆசியாவில் இருந்துவரும் குளிர்காற்றுகள் செல்லும் தெற்கு எல்லையாகவும் செயற்படுகின்றது. நேபாளமும் [[வங்காளதேசம்|வங்காளதேசமும்]] சுமார் 21 கிமீ மட்டுமே அகலமான இந்தியாவுக்குச் சொந்தமான சிலிகுரி பாதை நிலப்பரப்பால் பிரிக்கப்பட்டுள்ளன. இப்பிரதேசம் [[சிலிகுரி பாதை]] என அழைக்கப்படுகிறது. நேபாளம் நிலநடுக்க மையத்தில் அமைந்துள்ள பகுதிகளில் ஒன்றாகும். 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி காலை ஏற்பட்ட [[2015 நேபாள நிலநடுக்கம்|சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில்]] 7,250 மக்கள் பலியானார்கள். இதன் அதிர்வு ரிக்டர் அளவில் 7.9 பதிவாகியுள்ளது. நேபாளம் உலகில் மிக ஏழையானதும் அபிவிருத்தி குன்றியதுமான நாடுகளில் ஒன்றாகும். மக்கள் தொகையில் 38 சதவீதமானோர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்கிறார்கள். அதன் மூலதனச் சந்தை ஆரம்ப நிலையில் காணப்படுகிறது. மேலும் மிக அண்மையிலேயே பங்குச் சந்தை தகவல்கள் இணையத்தில் சேர்க்கப்பட்டுள்ளன வேளாண்மை மற்றும் சுற்றுலாத் துறையே நேபாளத்தின் முக்கிய வருவாயாக உள்ளது. நேபாளத்தில் எட்டு கலாச்சார பண்பாட்டு உலகப்பாரம்பரியக் களங்களும், இரண்டு இயற்கை உலகப்பராம்பரியக் களங்களும் அமைந்துள்ளது.. இந்துக்களின் ஆன்மிகத் தலமாக புகழ் பெற்ற [[பசுபதிநாத் கோவில்]], [[சங்கு நாராயணன் கோயில்]] மற்றும் [[முக்திநாத்]] விளங்குகிறது. பௌத்தர்களின் புனித தலங்களாக [[லும்பினி]], [[பௌத்தநாத்து]] மற்றும் [[கபிலவஸ்து]] உள்ளது. [[எவரெஸ்ட் சிகரம்]], [[கஞ்சன்சுங்கா மலை]], [[அன்னபூர்ணா 1|அன்னபூர்ணா]] மற்றும் [[தவளகிரி]] மலைகள் மற்றும் மலையேற்ற வீரர்களையும், [[சித்வான் தேசியப் பூங்கா]], [[சாகர்மாதா தேசியப் பூங்கா]] சுற்றுலாப் பயணிகளையும் மிகவும் ஈர்க்கும் இடங்கள் ஆகும். 2017 நவம்பர் - டிசம்பர் மாதங்களில நடைபெற்ற நேபாள நாடாளுமன்றத் தேர்தல்களில் [[நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்)|நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)]] மற்றும் [[நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)]] தலைமையிலான இடதுசாரி கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. [[நேபாளி காங்கிரஸ்]] தலைமையிலான வலதுசாரி கூட்டணி இரண்டாம் இடம் பெற்றது. சனவரி, 2018க்குள் புதிய நாடாளுமன்றம் அமைக்கப்படும். நேபாள நாடாளுமன்றத் தேர்தலுடன் நடைபெற்ற ஏழு [[நேபாள மாநிலங்கள்|நேபாள மாநிலங்களின்]] சட்டமன்றத் தேர்தல்களில், [[நேபாள மாநில எண் 2|மாநில எண் 2]] தவிர, பிற ஆறு மாநில சட்டமன்றத் தேர்தல்களில் [[நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்)|நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)]] மற்றும் [[நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)]] தலைமையிலான இடதுசாரி கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. [[பகுப்பு:நேபாளம்|*]] [[பகுப்பு:தெற்காசிய நாடுகள்]] [[பகுப்பு:நிலம்சூழ் நாடுகள்]] [[பகுப்பு:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்]] [[பகுப்பு:சார்க் உறுப்பினர்கள்]] [[பகுப்பு:ஆசிய நாடுகள்]] பீகார் பிகார் அல்லது பீகார் ("Bihar") இந்திய நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலம். இம்மாநிலத்தின் தலைநகர் பாட்னா. வரலாற்றுச் சிறப்பு மிகுந்த பகுதியில் இம்மாநிலம் அமைந்துள்ளது. 2000-ஆம் ஆண்டில் பீகார் மாநிலத்தின் கனிம வளங்கள் நிறைந்த பகுதிகளை பிரித்து ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப் பட்டது. பிகார் முற்காலத்தில் மகத நாடு என்றழைக்கப்பட்டது. இதன் தலைநகரம் பாடலிபுத்திரம் தற்போது பாட்னா என்றழைக்கப்படுகிறது. புத்த மதமும் சமண மதமும் இங்குதான் தோன்றின. பண்டைய பிகார் கல்வியில் சிறந்து விளங்கியது. அப்போது நாளந்தா, விக்கிரமசீலா போன்ற பல்கலைக்கழகங்கள் இங்குதான் இருந்தன. ஆனால் தற்காலத்தில் கல்வியில் பீகார் மிகவும் பின்தங்கியிருக்கிறது. 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 94,163 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பிகார் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 104,099,452 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 88.71% மக்களும், நகரப்புறங்களில் 11.29% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 25.42% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 54,278,157 ஆண்களும் மற்றும் 49,821,295 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 918 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 1,106 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 61.80 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 71.20 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 51.50% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 19,133,964 ஆக உள்ளது. இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 86,078,686 (82.69 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 17,557,809 (16.87 % ) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 129,247 (0.12 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 23,779 ( 0.02 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 18,914 ( 0.02 % ) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 25,453 (0.02 % ) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 13,437 ( 0.01 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 252,127 ( 0.24 %) ஆகவும் உள்ளது. இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தியுடன், உருது, மைதிலி மற்றும் பல வட்டார மொழிகளும் பேசப்படுகிறது. கங்கை ஆறு மற்றும் அதன் துணை ஆறுகளும் பாயும் கங்கைச் சமவெளியில் பிகார் அமைந்துள்ளதால் வேளாண்மைத் தொழில் சிறப்பாக உள்ளது. கோதுமை, நெல் மற்றும் கரும்பு முக்கிய விளைபயிர்களாகும். பிகார் மாநிலம் நிர்வாக வசதிக்காக ஒன்பது கோட்டங்களாகவும், முப்பத்து எட்டு வருவாய் மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்கள் விவரம்; கயை, நாலந்தா பல்கலைக்கழகம், புத்தகயா, மகாபோதி கோயில், கேசரியா, ராஜகிரகம் மற்றும் வைசாலி ஆகும். கிழக்கு இந்தியா, மேற்கு இந்தியா மற்றும் வடக்கு இந்தியாவை இணைக்கும் இருப்புப்பாதைகள் அனைத்தும் பட்னா சந்திப்பு தொடருந்து நிலையம் வழியாக செல்கிறது. பாட்னாவில் உள்ள லோகநாயகன் ஜெயப்பிரகாஷ் நாராயணன் பன்னாட்டு விமான நிலையம் இந்தியாவின் நகரங்களுடனும் மற்றும் பன்னாட்டு நகரங்களுடனும் இணைக்கிறது. புதுதில்லி - கொல்கத்தா நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 2 பாட்னா வழியாக செல்கிறது. வங்காள விரிகுடா வங்காள விரிகுடா ("Bay of Bengal") இந்தியப் பெருங்கடலில் அடங்கிய கடலாகும். முக்கோண வடிவில் உள்ள இக்கடலின் கிழக்கில் மலேய தீபகற்பமும், வடக்கில் மேற்கு வங்காளம், மற்றும் வங்கதேசமும், மேற்கில் இந்திய துணைக்கண்டமும் அமைந்துள்ளன. இலங்கை, அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகியவை இக்கடலில் உள்ள தீவுகளாகும். கங்கை, பிரம்மபுத்ரா, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, மெக்னா, ஐராவதி ஆகியவை வங்காள விரிகுடாவில் கலக்கும் முக்கிய நதிகளாகும். இக்கடலின் கரையில் அமைந்துள்ள சில முக்கிய நகரங்கள் சென்னை, விசாகப்பட்டிணம், கொல்கத்தா, பாண்டிச்சேரி ஆகியவை. திசம்பர் 26, 2004ம் ஆண்டில் காலை 6.29 மணிக்கு இந்தோனேஷியாவின், சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவில் ஆழிப்பேரலையாக உருவெடுத்து பல்வேறு பகுதிகளை அழித்தது. தமிழ்நாடு, அந்தமான், நிகோபார் தீவுகள் மற்றும் இலங்கை, இந்தோனேஷியா நாடுகளில் லட்சக்கணக்கான உயிர்கள் பலியாயின. உலகின் 11 நாடுகளில் பாதிப்பை உண்டாக்கிய இந்த பயங்கர நில நடுக்கம், ரிக்டர் அளவில் 9 ஆக பதிவானது. இந்தியாவில் 9571, இந்தோனேஷியாவில் 94,100, இலங்கையில் 30,196, தாய்லாந்தில் 5,187, மியான்மரில் 90 பேரும், மாலத்தீவில் 75 பேரும், மலேசியாவில் 68 பேரும், சோமாலியாவில் 176 பேரும், தான்சானியாவில் 10 பேரும், கென்யாவில் ஒருவரும் ஆழிப்பேரலைக்கு பலியாயினர். பி. வி. நரசிம்ம ராவ் பி. வி. நரசிம்ம ராவ் (ஜூன் 28, 1921 -டிசம்பர் 23, 2004) இந்தியாவின் ஒன்பதாவது பிரதமராக பணியாற்றியவர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர். தென் இந்தியாவைச் சேர்ந்த முதல் இந்தியப் பிரதமர் இவராவார். இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான ராவ், 1962 முதல் 1971 வரை மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்ததுடன் 1971 முதல் 1973 வரை ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராகவும் பதவி வகித்தார். பின்னர் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து மத்திய அமைச்சராக இருந்தார். 1991இல் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவ்வாண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, ராவ் பிரதமரானார். ஐந்து ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தார். 1996 ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததால் இவர் பதவி இழக்க நேர்ந்தது. டிசம்பர் 2004 இல், தனது 83 ஆம் வயதில் ராவ் மாரடைப்பால் காலமானார். அடல் பிகாரி வாச்பாய் அடல் பிகாரி வாச்பாய் (Atal Bihari Vajpayee, திசம்பர் 25, 1924 - ஆகத்து 16, 2018) 1996ம் ஆண்டு சில காலமும், 1998ல் இருந்து 2004 வரையிலும் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர். இவர் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் பிறந்த இவர் திருமணம் செய்து கொள்ளாதவர். 50 வருட பாராளுமன்ற உறுப்பினரான இவர் மக்களவைக்கு 9 முறையும் மாநிலங்களவைக்கு 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 4 முறை வெவ்வேறு மாநிலங்களில் (உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், டெல்லி) இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே உறுப்பினர் ஆவார். மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில், வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இவர் பணியாற்றியுள்ளார். வாஜ்பாய் கிருஷ்ணா தேவி மற்றும் கிருஷ்ணா பிஹாரி வாஜ்பாயிக்கு திசம்பர் 25, 1924 அன்று குவாலியரில் பிறந்தார். அவரது தாத்தா, பண்டிட் ஷியாம் லால் வாஜ்பாய், உத்தரப்பிரதேசத்தின் பாதேஷ்வர் என்ற அவரது பூர்வீக கிராமத்திலிருந்து குவாலியருக்கு குடியேறினார். அவரது தந்தை, கிருஷ்ணா பிஹாரி வாஜ்பாயி, தனது சொந்த ஊரில்  ஒரு கவிஞரும் பள்ளிக்கூட ஆசிரியருமாவார். வாஜ்பாயி சரஸ்வதி ஷிஷு மந்திர், கோர்கி, பரா, குவாலியரில் தனது ஆரம்ப பள்ளி படிப்பை முடித்தார். வாஜ்பாய் குவாலியரின் விக்டோரியா கல்லூரியில் (தற்போது லக்ஷ்மி பாய் கல்லூரி) சேர்ந்தார். மேலும் இந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் தனி தகுதியுடன் பட்டம் பெற்றார். கான்பூரில் உள்ள டி.ஏ.ஏ. கல்லூரியில் எம்.ஏ., அரசியல் அறிவியல் துறையில் முதல் வகுப்பு பட்டம் பெற்றார். ஆர்வ சமாஜின் இளைஞர் பிரிவான ஆர்யா குமாரின் ஆர்யா குமார் சபாவுடன் 1944ல் பொதுச் செயலாளராகப் பணியாற்றினார். 1939ல் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) ஒரு ஸ்வேயெம்சேவாவில் இணைந்தார். பாபா சாஹேப் ஆப்டி அவர்கள் மீதான ஈடுபாடு காரணமாக 1940-44ல் ஆர்.எஸ்.எஸ் அதிகாரிகளின் பயிற்சி முகாமுக்குச் சென்று 1947 ஆம் ஆண்டில் ஒரு முழுநேர ஊழியர் ஆனார். பிரிவினை கலவரம் காரணமாக சட்ட படிப்பினை அவரால் தொடர இயலவில்லை. உத்தரபிரதேசத்திற்கு ஒரு விஸ்டாராக (probationary pracharak) அனுப்பப்பட்டார். விரைவில் டீன்யல் உபாடியாயா, ராஷ்டிரதர்மம் (இந்தி மாதத்தில்), பஞ்சஜானியா (ஒரு இந்தி வார இதழ்) மற்றும் நாவல்கள் ஸ்வாதேஷ் மற்றும் வீர் அர்ஜூன் ஆகியோரின் பத்திரிகைகளில் பணிபுரியத் தொடங்கினார். இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை, இவருடைய முழு வாழ்வும் இந்த இந்திய தேசத்திற்கு அர்ப்பணித்தார். இவர் இரண்டாவது முறையாகப் பிரதமராகப் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் நாடு பல கோணங்களில் முன்னேறியது. குறிப்பாகத் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறைகள் போன்றவையாகும். இந்தியாவின் உயரிய பாரத் ரத்னா விருதினை, 27 மார்ச் 2015 அன்று இந்தியக் குடியரசுத் தலைவரும் மற்றும் இந்தியப் பிரதமரும், வாஜ்பாயின் இல்லம் சென்று வழங்கி கௌரவித்தனர். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமான 16 ஆகஸ்டு 2018ல் மறைந்தார் அடல் பிகார் வாஜ்பாய். அவரது பூத உடலுக்கு, இந்திய அரசு இராணுவ மரியாதையுடன், ராஜ்காட் அருகே உள்ள தேசிய நினைவிடத்தில் (இராஷ்டிரிய ஸ்மிரிதி ஸ்தல்) வைத்து, அவரது வளர்ப்பு மகள் நமிதா பட்டாச்சாரியா கொள்ளி வைத்தார். மொகெஞ்சதாரோ மொகெஞ்சதாரோ ("Mohenjo-daro", "மொஹெஞ்சதாரோ") என்பது சிந்துவெளிப் பண்பாட்டுப் பகுதியில் அமைந்திருந்த முக்கிய நகரங்களுள் ஒன்று. ஏறத்தாழ கிமு 26 ஆம் நூற்றாண்டளவில் உருவாகியிருக்கக்கூடும் எனக் கருதப்படுகின்ற இது இன்றைய பாகிஸ்தானின் சிந்துப் பகுதியில் உள்ள சுக்கூர் என்ற ஊருக்கு தென்மேற்கே 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சிந்துவெளியில் அமைந்திருந்த நகரங்களில் மிகவும் பெரியது எனப்படும் இந்நகரம், அக்காலத்தில் தெற்காசியாவின் முக்கியமான நகரமாகவும் விளங்கியது. இது சிந்துவெளியின் இன்னொரு முக்கிய நகரமான ஹரப்பாவை விட நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளது. இது ஹரப்பாவில் இருந்து 400 மைல் தொலைவில் உள்ள இந்நகரம் கி.மு. 1700-இல் சிந்துநதியின் தடம் மாறியதால் அழிந்திருக்கலாம் எனச் சிலர் நம்புகிறார்கள். மொஹெஞ்சதாரோவின் அழிபாடுகள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் முதன் முதலில் 1920களில் கண்டறியப்பட்டது. எனினும் ஆழமான ஆய்வு முயற்சிகள் 1960 ஆம் ஆண்டுகளுக்குப் பின்னரே நடைபெற்றது. இது யுனெஸ்கோவின் உலகப் பண்பாட்டுச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் இடம்பெற்று வருகின்ற அண்மைக் காலத்திய விரிவான நடவடிக்கைகள், பாகிஸ்தானின் தொல்லியல் மற்றும் அருங்காட்சியகத் திணைக்களத்தினதும், பிற ஆலோசகர்களினதும் உதவியுடன் யுனெஸ்கோ மேற்கொண்டுவரும் காப்பாண்மை (conservation) நடவடிக்கைகளை மையப்படுத்தியுள்ளது. இப்பகுதியில் ஏறத்தாழ 500 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டிருந்த காப்பு வேலைகள், நிதிப் பற்றாக்குறையினால், 1997 ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது. எனினும் ஏப்ரல் 1997 ஆம் ஆண்டில், யுனெஸ்கோவின் ஆதரவில், மொஹெஞ்சதாரோ அழிபாடுகளை வெள்ளத்திலிருந்து பாதுகாப்பதற்கான திட்டம் ஒன்று தொடங்கப்பட்டது. இரண்டு பத்தாண்டுகளில் நிறைவேற்றப்பட இருக்கும் இந்தத் திட்டத்திற்காக யுனெஸ்கோ நிறுவனம் பத்து மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியுள்ளது. மொஹெஞ்சதாரோ கி.மு 2600 அளவில் உருவாகி கி.மு. 1700 அளவில் அழிந்துபோனதாகச் சொல்லப்படுகின்றது. சர் ஜான் மார்ஷல் என்பவர் தலைமையிலான தொல்லியலாளர்கள் இதனை 1920 இல் கண்டுபிடித்தனர். இவர் நினைவாக இவர் பயன்படுத்திய மோட்டார் வண்டி இன்றும் மொஹெஞ்சதாரோ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. 1945 ஆம் ஆண்டில், அஹ்மத் ஹசன் தானி (Ahmad Hasan Dani) என்பவரும் மோர்ட்டிமர் வீலர் (Mortimer Wheeler) என்பவரும் மேலும் அகழ்வாவுகளை இப்பகுதியில் நடத்தினர். கோயம்புத்தூர் கோயம்புத்தூர் ("Coimbatore") தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்த இரண்டாவது பெரிய நகரமாகும். இதே பெயரைக் கொண்ட மாவட்டத்தின் தலைமையிடமான இது தொழில் வளர்ச்சியிலும் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியிலும் மேம்பட்ட நிலையில் உள்ள நகரமாகும். தொழில் முனைவோர் கூடுதலாக உள்ள நெசவு மற்றும் பொறியியல் தொழிலகங்களின் மையமாக விளங்குகிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், அவிநாசிலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக் கழகங்களும் கோவை மாநகரை மையமாகக் கொண்டு இயங்குகின்றன. தொன்மையான கொங்குநாடு பகுதியைச் சேர்ந்த இந்த நகரம் இங்குள்ள ஆலைகளின் எண்ணிக்கையால் "தென்னிந்திய மான்செஸ்டர்" என்றும் அழைக்கப்படுகிறது. நகரத்திலும் புறநகர்ப்பகுதிகளும் 2.1 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.கோவையில் இருந்து காமநாயக்கன் பாளையம் 38 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.இதுவே இம்மாவட்ட எல்லை பேரூராட்சி ஆகும். இப்பகுதி சங்க காலத்தில் கோசர் குலத்தவர்கள் தங்கி உருவாக்கியதால் கோசர்புத்தூர் -> கோசம்புத்தூர் -> கோயமுத்தூர் என பெயர் வந்ததிருக்கலாம் . கோவை, வடவள்ளிக்கு மேற்கே இருந்த 'கோனன்' என்ற வேட்டுவர் தலைவனுக்கு இரண்டு மகள்கள் இருந்ததாகவும், ஒருவர் பெயர் கோணி, இனொருவர் பெயர் முத்தா என்று இருந்ததாகவும், அவர்களுக்கு அளிக்கப்பட்ட நிலப்பகுதியை 'கோணி முத்து ஊர் -> கோணமுத்தூர் -> கோயமுத்தூர்' என மருவி இருக்கலாம். அவர்கள் நிறுவியதே கோனியம்மன் கோவில். "கோவன்" எனும் இருளர் தலைவன் இருந்ததாகவும், அவன் பெயரிலே உண்டான ஊரே கோவன்புத்தூர் -> கோனியம்மன் புத்தூர் -> கோணம்புத்தூர் -> கோயமுத்தூர் என மாறிருக்கலாம் என செவி வழி செய்திகள் கூறுகின்றன. "கவையன்புத்தூரில் இருக்கும் வெள்ளாளன் மலையரில் கேசன் கோன் ஆன தமிழ வேள்" என்று வருகிறது. பல வெள்ளாளர்கள் புது ஊர்களைத் தோற்றிவித்து இருக்கிறார்கள். இவர்களில் பலர் கோவன் என்ற பெயர் கொண்டவராக இருந்தனர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட புத்தூர் தான் கோவன் புத்தூர் என்பது. இப்பொழுது கோயன்புத்தூரென அழைக்கப்படும் மாநகரம் ஆகும். 9ஆம் நூற்றாண்டின் இடையில் எழுந்த பிற்கால சோழர் ஆட்சி கோயம்புத்தூரைத் தன்னாட்சியின் கீழ் கொணர்ந்தது. அவர்கள் கோனியம்மன் கோவிலை மையமாகக் கொண்டு முறையான நகரமைப்பை ஏற்படுத்தினர். இப்பகுதியைப் பழங்குடி மக்கள், குறிப்பாகக் கோசர்கள் ஆண்டு வந்தனர். கோசன்புத்தூர் என்றிருந்ததே கோயம்புத்தூரென மருவியது. கோவன் என்பவன் இங்கு வசித்ததால் இதன் பெயரான கோவன் புதூர் என்பது மருவிக் கோயம்புத்தூர் என்றானது. கொங்கு மண்டலத்தின் முதன்மை நகரமாக விளங்கியது கோயம்புத்தூர். உரோமர்களின் வணிகத்திற்கும் கோயம்புத்தூர் மையமாக இருந்ததாகத் தெரிகிறது. 14ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தில்லி சுல்தான்களின் கீழான மதுரையைச் சேர்ந்த இசுலாமியர் ஆட்சிப் புரிந்தனர். இவர்களது ஆட்சி விசயநகரப் பேரரசினால் முடிவுக்கு வந்தது. அவர்களது ஆட்சிக்காலத்தில் இப்பகுதியில் ஆந்திர, கர்நாடக மக்கள் குடிபெயர்ந்தனர். 1550களில் மதுரையில் விசயநகரப் பேரரசின் தளபதிகளாக இருந்த தெலுங்கு பேசும் நாயக்கர்கள் கோயம்புத்தூர் உள்ளிட்டப் பகுதிகளின் ஆட்சியாளர்களாக, பேரரசின் அழிவின் பின்னணியில், உருவெடுத்தனர். 1700களில் மதுரை நாயக்கர்களுக்கும் மைசூர் மன்னர்களுக்குமிடையே கோயம்புத்தூரில் சண்டைகள் நடைபெற்றன. அப்போது 3000 பேர் வாழ்ந்த கோயம்புத்தூரின் ஆட்சி மைசூர் மன்னர்களின் கீழ் வந்தது. 1760களில் மைசூரின் சிங்காதனத்தை ஹைதர் அலி கைப்பற்றினார்.அவர் பிரித்தானியருக்கு எதிராகச் செயல்பட்டார். ஆற்காடு நவாப் தோழமையில் பிரித்தானியர் இப்பகுதியில் வேரூன்றுவதைத் தடுத்தார். இதனை அவர்தம் வாரிசான திப்பு சுல்தான் தொடர்ந்தார். 1799ஆம் ஆண்டு அவரது மறைவு வரை திப்பு சுல்தான் பிரித்தானியருடன் பல போர்களை நடத்தினார். திப்பு சுல்தானின் மறைவிற்குப் பிறகு மைசூர் முந்தைய ஆட்சியாளர்களிடமே ஒப்படைக்கப்பட்டது. அந்த நேரத்தில் கோயம்புத்தூரை பிரித்தானியர் தங்களின் மதராசு மாகாணத்தில் இணைத்துக் கொண்டனர். 1801ஆம் ஆண்டு கொங்குநாட்டு பாளையக்காரரான தீரன் சின்னமலை மலபார் மற்றும் மைசூர் படைகளின் ஆதரவுடன் பிரித்தானியருடன் போர் புரிந்தார். இப்போரின் முடிவில் 1804ஆம் ஆண்டு கோயம்புத்தூர் புதியதாக நிறுவப்பட்ட கோயம்புத்தூர் மாவட்டத்தின் தலைநகராக்கப்பட்டது. 1848ஆம் ஆண்டு நகராட்சித் தகுதி வழங்கப்பட்டது. பிரித்தானிய வணிகரும் வள்ளலுமான சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் என்பவர் முதல் நகரவைத் தலைவரானார். அவரால் 1862ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஸ்டேன்ஸ் பள்ளி இன்றும் கோவை நகரின் முதன்மையான கல்விக்கூடங்களில் ஒன்றாக விளங்குகிறது. 1981ஆம் ஆண்டு அருகாமையிலிருந்த சிங்காநல்லூர் நகராட்சியை இணைத்து மாநகராட்சியாக உயர்வு பெற்றது. கோவை மாவட்டத்தின் வடக்கில் கர்நாடக மாநிலமும் தெற்கில் கேரளமாநிலமும் எல்லைகளாக உள்ளன. கிழக்கில் ஈரோடு மாவட்டமும், மேற்கில் நீலகிரி மாவட்டமும் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையும், நீலமலையும் ஒரு மதில்போல் இம்மாவட்டத்தை வளைத்துள்ளன. கோவை மாவட்டத்தில் உள்ள காடுகளின் பரப்பு - 1,69,720 ஹெக்டேர். சாலைகளின் நீளம் - 7434.8 கி.மீ. பதிவு பெற்ற வாகனங்கள் 2,57,042, வங்கிகள் 328, காவல்நிலையங்கள் - 60, காவலர்கள் 5910, தந்தி அலுவலகங்கள் 260, தந்தி அஞ்சலகங்கள் 172, பொதுத் தொலைபேசிகள் - 1134. கோவை மாவட்டத்தின் தலைநகரம் கோயமுத்தூர். இதன் பரப்பு 6623.97 ச.கி.மீ, மக்கள் தொகை 35,08.374 பேர். இதில் ஆண்கள் 17,97,189, பெண்கள் 17,11,185 பேர். எழுத்தறிவு உள்ளோர் 20,75,023 பேர், மக்கள் நெருக்கம் ச.கி.மீ. 473 பேர். மேட்டுப்பாளையம், அவிநாசி, தொண்டாமுத்தூர், சிங்காநல்லுர், கோயம்புத்தூர் மேற்கு, கோயம்புத்தூர் கிழக்கு, பேரூர் (தொகுதி சீரமைப்பின்படி பேரூர் தொகுதி தற்போது நீக்கப்பட்டுள்ளது), கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலைப்பேட்டை, தர்மாபுரம், பொங்கலுர், பல்லடம், (கோயம்புத்தூர் உடன் இருந்த திருப்பூர் தனி மாவட்டமாக தமிழக அரசு அறிவித்தன) திருப்பூர். கோயம்புத்தூர் தமிழகத்தின் மேற்கு ஓரத்தில் கேரள மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ளது. இதனைச் சுற்றி மேற்கில் மேற்குத் தொடர்ச்சி மலையும் வடக்கில் நீலகிரி பல்லுயிர் வலயமும் பாதுகாக்கப்பட்டக் காடுகளும் உள்ளன. கிழக்குப் பகுதி வறண்ட நிலமாக உள்ளது. மேற்கில் உள்ள பாலக்காட்டு கணவாய் கேரளத்தின் வாயிலாக உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையினை அடுத்து உள்ளதால் இம்மாவட்டத்தில் பல விலங்கு வகைகள் காணக்கிடைக்கின்றன. பல ஏரிகளும் குளங்களும் அந்நாட்களில் வெட்டப்பட்டிருக்கின்றன. கோவை நகரில் ஒன்பது ஏரிகள் உள்ளன. சில: சிங்காநல்லூர் (குளம்) ஏரி, குறிச்சி (குளம்) ஏரி, வாலாங்குளம் (குளம்) ஏரி, கிருஷ்ணாம்பதி (குளம்) ஏரி, முத்தண்ணன் (குளம்) ஏரி, செல்வசிந்தாமணி (குளம்) ஏரி, பெரியகுளம் (இது உக்கடம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ளது). இந்த நீர்நிலைகள் நொய்யல் ஆற்றிலிருந்து நீர் பெறுகின்றன. பறவைகள், விலங்குகள், ஊர்வன, நிலநீர் வாழிகள், மீன்கள் எனப் பல்லுயிர் ஓம்பலுக்கு நகரமைப்பின் ஆதாரமாக இந்த நீரிடங்கள் அமைகின்றன. கோவையின் இந்த நீர்நிலைகள் 125 வகையான பறவைகளின் இருப்பிடமாக உள்ளன. நாடோடிப் பறவைகள் மிகவும் கூடுதலாக ஆகத்து - அக்டோபர் மாதங்களில் வருகின்றன. கூழைக்கடா, நீர்க்காகம், பாம்புத்தாரா, நீலவண்ண தாழைக்கோழி, நாமக்கோழி முதலிய பறவைகளை இந்த ஏரிகளில் காணலாம். தவிர, காட்டு யானைகள், காட்டுப் பன்றிகள், சிறுத்தைகள், புலிகள், எருமைகள், பலவகை மான்கள் போன்ற விலங்குகளைக் காணலாம். சுற்றியுள்ள வனப்பகுதிகளில் தேக்கு, சந்தனமரம், ரோசுவுட் மரம், மூங்கில்கள் முதலியன வளர்கின்றன. நகரில் பல பூங்காக்கள் உள்ளன. வ. உ. சி. பூங்கா இவற்றில் முதன்மையானதொன்றாகும். குறிப்பிடத்தக்க பிற பூங்காக்கள்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் தாவரவியல் பூங்கா, பந்தய சாலை பூங்கா, பாரதி பூங்கா, காந்தி பூங்கா, இராமாயணப் பூங்கா, விவேகானந்தர் பூங்கா. கோயம்புத்தூரின் வானிலை மிகவும் புகழ் பெற்றது. உடலுக்கு இதமான, குளிர்ச்சியான, பிற தென்னிந்திய நகரங்களைப் போன்று கூடுதல் வெப்பமில்லாத வானிலையாகும். மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்நகரம் கடல்மட்டத்திற்கு 398 மீட்டர் உயரத்தில் உள்ளது. வேனிற்காலத்திலும் குளிர்காலத்திலும் வெப்பநிலை 35°C முதல் 18°வரை உள்ளது. மிகக் கூடுதலாகப் பதியப்பட்ட வெப்பநிலை 41 °C மற்றும் மிகக்குறைந்த அளவு வெப்பம் 12 °C. பாலக்காட்டுக் கணவாயின் பயனாக மாவட்டத்தின் பெரும்பகுதி சூன் முதல் ஆகத்து வரை தென்மேற்குப் பருவ மழையைப் பெறுகிறது. சற்றே வெப்பமான செப்டம்பரை அடுத்து அக்டோபரில் வடகிழக்குப் பருவமழை துவங்குகிறது. இதனால் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இம்மாவட்டம் மழை பெறுகிறது. ஆண்டுக்கு ஏறத்தாழ 700 மி.மீ மழை பெறுகிறது. நகரின் ஆண்டுமுழுவதற்குமான நீர்த்தேவைகளை எதிர்கொள்ள இந்த மழையளவு போதுமானதாக இல்லாதிருப்பினும், சிறுவாணி, அத்திக்கடவு போன்ற குடிநீர்த் திட்டங்கள் நகரின் குடிநீத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. பெரும்பாலும் இம்மாவட்டத்தின் பெரும்பகுதி கரிசல் மண்ணாக இருப்பதால் பருத்தி விளைச்சலுக்கு மிகவும் ஏற்றதாக விளங்குகிறது. கோவை 1900ஆம் ஆண்டு ரிக்டர் அளவில் 6.0 கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் நிலநடுக்க வகைப்படுத்தலில் III/IV வகுப்பில் உள்ளது. கோவை மாவட்டத்தில் ஆனைக்கட்டியில் சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கையியல் மையம் அமைந்துள்ளது. 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, கோவை நகராட்சி எல்லைக்குள் மக்கள்தொகை 1,850,721. அண்மைய மதிப்பீடுகள் 15 இலக்கமாக (1.5 மில்லியன்) மதிப்பிடுகின்றன. ஆண்கள் 52% பெண்கள் 48% உள்ளனர். கல்வியறிவு பெற்றோர் 78% ஆகத் தேசிய சராசரி 59.5% ஐவிடக் கூடுதலாக உள்ளது. ஆண்களின் கல்வியறிவு விழுக்காடு 81% ஆகவும் பெண்களின் விழுக்காடு 74% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குக் குறைந்தவர் தொகை 11% ஆகும். இங்கு பேசப்படும் தமிழ் கொங்குத் தமிழ் என்ற தொன்மையான வழக்கு மொழியாகும். நகரின் பெரும்பான்மை மதத்தினராக இந்துக்கள் உள்ளனர். குறிப்பிடத்தக்க தொகையில் இசுலாமியரும் கிறித்தவர்களும் உள்ளனர். குறைந்த அளவில் சமணரும் சீக்கியரும் அண்மைக்காலத்தில் குடிபெயர்ந்துள்ளனர்.கொங்கு வேளாளர் கவுண்டர்கள்,நாயக்கர்கள் பெரும்பான்மையான இனத்தவர் ஆகும். பிற இனத்தவர்களில் விஜயநகரப் பேரரசு காலத்தில் குடிபெயர்ந்த நாயக்கர்கள் (நாயுடுக்கள்), செட்டியார்கள் முக்கியமானவர்களாவர். கேரளத்தின் பாலக்காடு மாவட்ட மலையாளிகளும் வட இந்திய மார்வாரிகளும் கணிசமான அளவில் வாழ்கின்றனர். கோவை ஓர் மாநகராட்சியாகும். தவிர, மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். மாநகராட்சிக்கு மேயர் எனப்படும் மாநகரத்தந்தை தலைமை ஏற்கிறார். இவருக்குத் துணையாக மாநகர்மன்ற உறுப்பினர்களும் துணை மாநகரத்தந்தையும் உள்ளனர். இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தவிர அரசுப்பணி சேவையைச் சேர்ந்த மாநகராட்சி ஆணையர் வழக்கமான ஆட்சிப்பணியை மாநகராட்சிமன்ற அவையின் வழிகாட்டுதலின்படி நடத்துகிறார். மாவட்ட நிர்வாகத்தை மாவட்ட ஆட்சியர் ஏற்கிறார். மாவட்ட நீதிமன்றம் கோயம்புத்தூரின் நீதி நிருவாகத்தை மேற்பார்வையிடுகிறது. மாநிலத்திலேயே மிகக் கூடுதலான வருவாயை ஈட்டிக் கொடுத்தாலும் நகரத்தின் கட்டுமானத் தேவைகளுக்கான நிதி மாநில அரசிடமிருந்து போதுமான அளவு கிடைப்பதில்லை என்ற குறை உள்ளது. அமைதியான தொழில் வணிக நகரான கோவையில் 1984ஆம் ஆண்டு இந்திரா காந்தி படுகொலையை யடுத்து பெருமளவு கடையுடைப்புகளும் கொள்ளைகளும் நிகழ்ந்தன. ஒற்றுமையாக வாழ்ந்த இந்துக்களுக்கும் இசுலாமியருக்கும் இடையே 1980களில் புகையத் தொடங்கிய பகை 1990களில் கோயம்புத்தூரின் மேற்குப்பகுதியில் பெரும் கலவரமாக வெடித்தது. 1998ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்புகள் இப்பகையை மேலும் வளர்த்தன. ஆயினும் தமிழகக் காவல்துறையின் தீவிர கண்காணிப்பை அடுத்து தற்போது குற்றங்கள் வெகுவாகக் குறைந்துள்ளன. நகரத்தில் ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன: கோயம்புத்தூர் கிழக்கு,கோயம்புத்தூர் மேற்கு, சிங்காநல்லூர், பேரூர் (தொகுதி சீரமைப்பின்படி பேரூர் தொகுதி தற்போது நீக்கப்பட்டு தற்போது தொண்டாமுத்தூர் தொகுதியாக மாறிவிட்டது), கவுண்டன்பாளையம். நகரத்தின் வடக்கே 20% பகுதி நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ளது. கோவை மேற்கு, கோவை கிழக்கு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளடக்கியது கோவை நாடாளுமன்றத் தொகுதி ஆகும். 10% நகரப்பகுதி பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியிலும் உள்ளது. கோயம்புத்தூர் நகரத்திற்கு இரு வானூர்தி நிலையங்கள் உள்ளன: நகரிலிருந்து 11 கி.மீ. தொலைவில் பீளமேட்டில் உள்ள கோவை பன்னாட்டு வானூர்தி நிலையம் மற்றும் 15 கி.மீ. தொலைவில் உள்ள இந்திய வான்படையின் சூலூர் வான்தளம். கோவை பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து இந்தியாவின் முதன்மையான நகரங்களுக்கு உள்நாட்டு சேவைகளும் சார்ஜா, சிங்கப்பூர் போன்ற நகரங்களுக்கு வெளிநாட்டுச் சேவைகளும் இயக்கப்படுகின்றன. கோவை வானூர்தி நிலையத்தின் ஓடுபாதை விரிவாக்கப்பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இதன் நீளம் 747 SP, A 330, 747-300B, 747-300 ER, 747-400 மற்றும் 747-200 போன்ற ""வயிறு அகல" பெரிய ஜெட் இரக விமானங்களை இயக்க வசதி அளிக்கும். கோயம்புத்தூருக்குத் தொடர்வண்டி சேவை 1872ஆம் ஆண்டில் தொடங்கியது. அப்போது போத்தனூர் – சென்னை இருப்புப் பாதை போடப்பட்டது. அகலப்பாதை தொடர்வண்டிகள் கோவையைத் தமிழ்நாட்டின் பல நகரங்கள் மற்றும் இந்தியாவின் முதன்மை நகரங்களுடன் இணைக்கிறது. போத்தனூருக்கும் திண்டுக்கல்லுக்கும் இடையே இருந்த மீட்டர்பாதை இருப்புப் பாதை மே 2009 முதல் மூடப்பட்டு பாட்டை மாற்றப்படுகிறது. தென்னக இரயில்வேயின் மிகக் கூடுதலான வருவாய் ஈட்டும் தொடர்வண்டி நிலையமாகக் கோயம்புத்தூர் சந்திப்பு உள்ளது. சேலம் கோட்டத்தின் வருவாயில் 42.17% இந்த நிலையம் பங்களிக்கிறது. கோவை வடக்கு சந்திப்பு மற்றும் இருகூர் பிற முக்கிய தொடர்வண்டிச் சந்திப்புகளாகும். நகரில் ஆறு பிரதான சாலைகளும் மூன்று தேசிய நெடுஞ்சாலைகளும் உள்ளன லார்சன் & டூப்ரோ நிறுவனத்தால் 1998ஆம் ஆண்டு கட்டப்பட்ட புதிய புறவழிச்சாலை நகரில் போக்குவரத்தை சீர்செய்யப் பெரிதும் உதவியுள்ளது. கோவையில் உள்ள முதன்மை பேருந்து நிறுத்தங்கள்: நகரில் மக்கள்தொகைக்கும் வாகனத்தொகைக்கும் உள்ள வீதம் மிகக் கூடுதலானது. 1921ஆம் ஆண்டு நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டன. நகரின் பெரும்பான்மையான இடங்களுக்கும் புறநகரில் உள்ள கிராமங்களுக்கும் இச்சேவைகள் மிகுந்த பயனளிக்கின்றன. மாநிலப் போக்குவரத்தின் கோவை கோட்டத்தின் உள்ளூர்ப் பேருந்துகள் 500 பேருந்துகளைக் கொண்டு 119 வழித்தடங்களில் சேவை வழங்குகின்றன. 800 நகரப்பேருந்துகள் 228 வழித்தடங்களில் சேவை புரிகின்றன. கோவை நகரில் மூன்று சக்கர தானிக்கள் சேவை புரிகின்றன. ஆனால் அளவுக்கருவியினை இயக்காது பயணிகளை ஏமாற்றுவதாக இவர்களுக்குக் கெட்டபெயர் உண்டு. புதிதாக இயக்கப்படும் விளி வாடகையுந்துகள் இதனால் பரவலாக விரும்பப்படுகின்றன. சத்தியமங்கலம், திருச்சிராப்பள்ளி, மேட்டுப்பாளையம் சாலைகளை இணைக்கும் அரைவட்ட சாலை அமைக்கப்படும் என்றும், வண்டிகளுக்காகப் பல்லடுக்கு நிறுத்தும் வசதியைக் காந்திபுரம், டவுன் ஹால் அடங்களான மூன்று இடங்களில் 80 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் என்றும், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் வெள்ளளூரில் 125 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படுமென முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.மேலும் கோவை மாநகராட்சியில் மொத்தம் 12 பேருந்து நிலையங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. நகரின் முதன்மையான தொழில்துறைகள் பொறியியலும் நெசவும் ஆகும். தமிழ்நாட்டிலேயே மிகக் கூடுதலாக வருவாய் ஈட்டும் மாவட்டமாகக் கோவை உள்ளது. சுற்றுப்புற பருத்தி வேளாண்மையை ஒட்டி இங்கு அமைந்துள்ள நெசவாலைகளின் கூடுதலான எண்ணிக்கை இதற்குத் "தென்னிந்தியாவின் மான்செஸ்டர்" என்ற சுட்டுப்பெயரினைப் பெற்றுத் தந்திருக்கிறது. இம்மாவட்டத்தில் பல பின்னலாடைத் தறிகளும் கோழிப்பண்ணைகளும் கூடுதலாக உள்ளன. பெரும்பாலான தொழிற்சாலைகளைக் குடும்ப நிதி அல்லது சமூக ஒருங்கிணைப்பு உதவியுடன் சிறு தொழில்முனைவோர் நடத்துகின்றனர். 1920களில் துவங்கிய தொழில் துறை, இந்திய விடுதலைக்குப் பின்னர் வளர்ச்சி கண்டு அரசு அரவணைப்போ பெரும் வணிகக் குழாம்களின் வரவோ இன்றி தன்னிறைவுடன் ஏற்றம் கண்டுள்ளது. தமிழ்நாட்டின் முன்னணித் தொழிலதிபர்களின் பட்டியலில் பெரும்பான்மையான முதலிடங்களை கோவைத் தொழில்முனைவோர் பிடித்துள்ளனர். தற்போது தகவல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பிறநாட்டு உள்ளலுவலகப் பணிகளை மேலாண்மையிடும் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. பிரித்தானியர் கோயம்புத்தூரை ஆண்டபோது இதனை மலபார் கரையிலிருந்தத் துறைமுகங்களுடன் இணைத்தனர். பின்னர் பிரித்தானியர் 1862ஆம் ஆண்டு தொடர்வண்டி இணைப்புகள் ஏற்படுத்தியபோது போத்தனூர் வழியாகக் கொச்சிக்கு இருப்புப் பாதைப் போடப்பட்டது. இது இங்கிலாந்திற்கு கச்சாப்பொருள்களைக் கொண்டுசெல்ல அவர்களுக்கு உதவியது.நங்கூரம் நங்கூரம் நங்கூரம் நங்கூரம் நங்கூரம் நங்கூரம் நங்கூரம். 1888 ஆம் ஆண்டு, சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் இன்று ஸ்டேன்ஸ் மில் என்று பரவலாக அறியப்படும் "கோயம்புத்தூர் நூற்றல் மற்றும் நெய்தல் ஆலையை" நகரின் வடக்குப் பகுதியில் துவக்கினார். கூடவே ஓர் குளம்பி சீராக்கப் பட்டறையையும் (coffee curing factory) திருச்சிச் சாலையில் நிறுவினார். இதுவே கோவையில் பெருமளவு நெசவாலைகள் வருவதற்கு அடிக்கோளிட்டது. மேலும் பலர் தங்கள் நிறுவனங்களை நிறுவிட சர் ராபர்ட் மிகவும் உதவி புரிந்தார். கோவைக்கு இவராற்றிய இந்தச் சேவைகளுக்காக கைசர்-இ-இந்த் தங்கப்பதக்கத்தையும் பின்னர் 1920ஆம் ஆண்டு 'சர்' பட்டத்தையும் கொடுத்துக் கௌரவிக்கப்பட்டார். 1910ஆம் ஆண்டு காளீசுவரா மில்லும் சோமசுந்தரா மில்லும் நிறுவப்பட்டன. பாப்பநாயக்கன்பாளையத்தில் 1911ஆம் ஆண்டு இலட்சுமி மில் இயங்கத் தொடங்கியது. 1930களில் பைக்காரா மின்னாக்கத் திட்டத்திலிருந்து குறைந்த கட்டணத்தில் மின்சக்தி கிடைத்ததையொட்டி மேலும் பல துணியாலைகள் நிறுவப்பட்டன. 1900ஆம் ஆண்டு சாமிக்கண்ணு வின்சென்ட் என்ற இரயில்வே பொறியாளர் தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக வெரைட்டி ஹால் (தற்போது டிலைட் திரையரங்கம்) என்னும் திரையரங்கத்தைக் கட்டினார் அவரது மகன் பால் வின்சென்ட் பேசும் திரைப்படங்களைத் தென்னிந்தியாவில் அறிமுகம் செய்தார். 1922ஆம் ஆண்டு நாராயணசாமி நாயுடு கரும்பு நசுக்கும் மற்றும் பருத்தி சுத்தப்படுத்தும் பொறிகளை நிறுவினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தண்டாயுதபாணி தொழிற்சாலையை நிறுவினார். அதே காலகட்டத்தில் ஜி.டி.நாயுடு அவரது தன்னிகரில்லா பேருந்து சேவையைத் துவக்கினார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மின்னோடிக்கான பெருமையும் அவருக்குடையது. 1931ஆம் ஆண்டு பொள்ளாச்சி நாச்சிமுத்துக் கவுண்டர் துவக்கிய பேருந்து சேவையும் பலதுறைகளில் விரிந்து இன்று பலகோடி ரூபாய் மதிப்புள்ள குழுமமாக வளர்ந்துள்ளது. 1940களில் ஆவாரம்பாளையத்தைச் சேர்ந்த டி.பாலசுந்தரம் நாயுடு செஃப்பீல்ட் பல்கலைக்கழகத்தில் படித்து வந்து நெசவுத் தொழில்நுட்பக் கருவிகளைத் தாமே வடிவமைத்துத் தயாரிக்கும் விதமாக டெக்ஸ்டூல் நிறுவனத்தைத் துவக்கினார். கோவை 1930களிலும் 1940களிலும் திரைப்படத் தயாரிப்பிலும் முதன்மை பெற்றிருந்தது; இங்கிருந்த சென்ட்ரல் ஸ்டூடியோஸ் மற்றும் பட்சிராஜா ஸ்டூடியோஸ் அரங்குகளில் பல முன்னணி திரைக்கலைஞர்கள் தங்கள் கலைவாழ்வைத் துவங்கியுள்ளனர். கோவையின் தொழில்வளர்ச்சிக்கு கோவை மாவட்ட சிறுதொழிலதிபர்கள் சங்கம் (Coimbatore District Small Industries Association - CODISSIA) முக்கியப் பங்காற்றி வருகிறது. இச்சங்கத்தின் தொழிற்கண்காட்சிக்கூடம் கொடிசியா வளாகம் பல பன்னாட்டு வணிகக் கண்காட்சிகளை நடத்த வழிவகுத்துக் கோவையின் சிறு தொழிலதிபர்களுக்குப் பன்னாட்டு வணிகம் நடத்த உதவி புரிந்து வருகிறது. இதனை நாட்டின் தூண்கள் இல்லாத மிகப்பெரும் காட்சிக்கூடமாக லிம்கா சாதனைகள் புத்தகம் குறிப்பிடுகிறது. கோவையில் சிறுதும் பெரிதுமாகப் பல துணி தயாரிப்பு ஆலைகள் உள்ளன. இவற்றின் மேம்பாட்டினை வழிநடத்த மத்திய பருத்தி ஆய்வு மையம் மற்றும் தென்னிந்திய துணித்துறை தொழில்முனைவோர் சங்க ஆய்வகம் (SITRA) போன்றவை உள்ளன. அண்மை நகரான திருப்பூர் ஆண்டுக்கு ரூ.50,000 மில்லியன் மதிப்பளவு ஏற்றுமதியுடன் ஆசியாவிலேயே மிகப்பரந்த பின்னலாடை ஏற்றுமதி மையமாகப் விளங்குகிறது. தமிழ்நாட்டில் மென்பொருள் ஏற்றுமதியில் சென்னைக்கு அடுத்தபடியாகக் கோவை உள்ளது. கோவையில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா ஒன்று கோவை மருத்துவக் கல்லூரி அருகே அமைக்கப்பட்டுள்ளது. கோவை வணிகச் செயலாக்க அயலாக்கமையமாகவும் வளர்ந்து வருகிறது. உலகளவில் அயலாக்க நகரங்களில் 17ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. பூ.சா.கோ. தொழிலகங்கள், சக்தி குழுமம் ஆகியன கோவையின் தயாரிப்புத் தொழில் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவின. தற்போது மூடப்பட்டுள்ள சௌத் இந்தியா விசுகோசு வேலை வாய்ப்புகளைக் கூடுதலாக்குவதில் பங்கு வகித்தது. லார்சன் டூப்ரோ நிறுவனத்திற்கு 300 ஏக்கரா பரப்பளவுள்ள வளாகம் கோவையின் அடுத்துள்ள மலுமிச்சம்பட்டியில் உள்ளது. இங்கு அந்நிறுவனம் 2009ஆம் ஆண்டு வார்ப்படம் தயாரிக்கும் அமைப்பை இயக்கத்திற்கு கொண்டு வந்துள்ளது. இலட்சுமி மெசின் வொர்க்ஸ், பிரீமியர் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் (PRICOL),எல்ஜி எக்யுப்மென்ட்ஸ், சாந்தி கியர்ஸ், ரூட்ஸ் ஆகியன இங்கு இயங்கும் மேலும் சில தொழிலகங்கள். டெக்ஸ்டூல் இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்திய அரசின் இராணுவத்திற்கு துப்பாக்கிகளின் முன்வடிவை அளித்திருந்தது. அவர்கள் 1960களில் முதல் உள்நாட்டிலேயே வடிவமைத்த தானுந்தியை தயாரித்தாலும் அப்போது நிலவிய அரசுக் கட்டுப்பாடுகளால் வெளிக்கொணர முடியாது போயிற்று. 1990 வரை பல முன்வரைவுகளை மேம்படுத்தினர். 1972ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முறையாக உள்நாட்டுத் தயாரிப்பாகத் தானுந்து தீசல் இயந்திரத்தினை வடிவமைத்தனர். 1982ஆம் ஆண்டு தங்களுக்கான எண்ணிம கட்டுப்பாட்டு இயந்திரங்களையும் லேத்துகளையும் தாங்களே தயாரித்துக் கொண்டனர். அவர்களிடமிருந்து பிரிந்த ஜெயம் ஆட்டோமோடிவ்ஸ் இன்று மகிந்திரா, டாட்டா மோட்டார்ஸ், இந்துஸ்தான் மோட்டார்ஸ் ஆகிய தானுந்து தொழிலகங்களுக்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் சேவைகளைக் கொடுத்து வருகிறது. மாருதி சுசூக்கி மற்றும் டாட்டா மோட்டார்ஸ் கோவையிலிருந்தே அவர்களின் தேவைகளில் 30% தானுந்து பாகங்களைப் பெறுகின்றன. நகரத்தில் பல நகை ஏற்றுமதியில் ஈடுபடும் நகை தயாரிப்பாளர்களும் உள்ளனர். காற்றாலை மின் உற்பத்தியில் பெயர்பெற்ற சுசுலான் நிறுவனம் இங்கு தனது வார்ப்பாலை மற்றும் பட்டறையை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. கூடவே, காற்றாலைகளுக்கான பற்சக்கர மாற்றியைத் தயாரிக்கும் பெல்ஜிய நிறுவனம் ஹான்சென் டிரான்ஸ்மிசன் ரூ.940 கோடி திட்டச் செலவில் தனது தயாரிப்பு வசதியைக் கட்டமைக்கத் திட்டமிட்டுள்ளது. கோவை நகரில் 700 ஈரமாவு அரவைப்பொறி தயாரிப்பாளர்கள் மாதமொன்றிற்கு (மார்ச்,2005 படி) 75,000 பொறிகளைத் தயாரித்து வருகின்றனர். 2006ஆம் ஆண்டு கோவையிலும் அடுத்துள்ள ஈரோட்டிலும் தயாராகும் அரவைப்பொறிகளுக்கு கோயம்புத்தூர் ஈரரவைப்பொறி என்ற புவியியல் அடையாளம் வழங்கப்பட்டது. இங்கு அரவைப்பொறி தயாரிப்பாளர்களுக்கான பொது கட்டமைப்பும் உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் 60 சதவீத நீரேற்றிகள் கோவைப் பகுதியிலேயேத் தயாரிக்கப்படுகின்றன. நகரத்தில் ஏராளமான சிறுதொழில் முனைவோர் முனைப்பில் நீரேற்றிகள் தயாரிக்கப்படுகின்றன. ஈரமாவு அரவைப்பொறி தயாரிப்பில் கிட்டத்தட்ட முழுநிறை உரிமை கொண்டுள்ளது. நாட்டின் பிற பகுதிகளைப் போலவே வேளாண்மை மாவட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பொது வணிகம் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும் பலரை கவர்கிறது.கோவை நகரின் முதன்மை நீரேற்றி தயாரிப்பாளர்கள் சிலர்: ஷார்ப் தொழிலகங்கள், சிஆர்ஐ பம்ப்ஸ், டெக்ஸ்மோ தொழிலகங்கள், டெக்கன் பம்ப்ஸ், கேஎஸ்பி பம்ப்ஸ். தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியில் கோவையின் பங்கு முக்கியமானது. 1867ஆம் ஆண்டு நடந்த முதல் தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி இறுதித் தேர்வில்( SSLC) கோவை மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இங்குள்ள அரசு கலைக்கல்லூரி மிகப் பழமையான (1875–76) கல்லூரிகளில் ஒன்றாகும். இன்று கோயம்புத்தூரில் 24க்கும் மேலான பொறியியல் கல்லூரிகள், இரு மருத்துவக் கல்லூரிகள், வான்படை நிர்வாகக் கல்லூரி, 75க்கும் மேலான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், ஆறு பல்கலைக்கழகங்கள் 41,000க்கும் கூடுதலான மாணவர்களைக் கொண்டியங்குகின்றன. மிகப் பழமையான பள்ளிகளாகத் தென்னிந்தியத் திருச்சபை (C.S.I.) ஆண்கள் உயர்நிலைப்பள்ளி (1831), ஸ்டேன்ஸ் உயர்நிலைப்பள்ளி (1862), புனித பிரான்சிஸ் ஆங்கிலோ இந்தியப் பெண்கள் உயர்நிலைப்பள்ளி (1880), பீளமேடு சர்வஜன உயர்நிலைப்பள்ளி (1910), சபர்பன் உயர்நிலைப்பள்ளி (1917) ஆகியவை உள்ளன. வேளாண் துறையில் நாட்டில் அமைந்த முதல் ஒருசில கல்விக்கூடங்களில் கோவை வேளாண் கல்லூரி ஒன்று. அதன் வளர்ச்சி இன்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமாகப் பரிணமித்துள்ளது. உடன் கரும்பு ("Sugarcane Breeding Institute") மற்றும் பருத்தி ("Central Institute of Cotton Research") ஆராய்ச்சி நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன. பொறியியல் கல்வியிலும் 1945ஆம் ஆண்டு ஜி. டி. நாயுடு முதல் பொறியியல் கல்வி வழங்கும் ஹோப் கல்லூரியைத் துவக்கினார். இதுவே பின்னாளில் அரசினர் தொழிற்நுட்ப கல்லூரியாக உருவெடுத்தது. 1950களில் நிறுவப்பட்ட பூசாகோ தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் கோவை தொழிற்நுட்பக் கழகம் (C.I.T) முன்னோடிகளாக அமைந்து இப்பகுதியின் தொழில் வளர்ச்சிக்கும் தமிழக/இந்திய தொழில் முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக உள்ளன. 1986ஆம் ஆண்டு காருண்யா பல்கலைக்கழகம் துவக்கப்பட்டது. தி.சு.அவிநாசிலிங்கம் மற்றும் இராசம்மாள் தேவதாஸ் கூட்டணியில் மகளிர் மேற்கல்விக்கு கல்லூரி நிறுவப்பட்டு இன்று நிகர்நிலைப் பல்கலைக் கழகமாக வளர்ந்துள்ளது. மனையியல் பாடம் ஆரம்பிக்கப்பட்ட ஆரம்பக்கால வெகுசில கல்லூரிகளில் இதுவும் ஒன்று. 1978ஆம் ஆண்டு அரசினர் சட்டக் கல்லூரி நிறுவப்பட்டு சுற்றுவட்டாரத்தின் சட்டக்கல்வித் தேவைகளை நிறைவு செய்தது. மருத்துவக்கல்வி வழங்கக் கோவை மருத்துவக்கல்லூரி 1966ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 1987ஆம் ஆண்டு தனியார் துறையில் பூ.சா.கோ மருத்துவ அறிவியல் மற்றும் ஆய்வுக் கழகம் நிறுவப்பட்டது. கோவையில் பல புகழ் பெற்ற பள்ளிகள், கல்லூரிகள் உள்ளன. அவற்றில் சில பட்டியலிடப்பட்டுள்ளன: தானுந்து விளையாட்டுக்கள் நகரத்தின் முதன்மை இடம்பெற்ற விளையாட்டாக விளங்குகிறது. கோவையை இந்தியாவின் தானுந்து விளையாட்டுப்போட்டித் தலைநகரம் என்றும் இந்திய தானுந்துவிளையாட்டு புறக்கடை என்றும் விளிப்பர். கோவையின் தொழிலதிபர்கள் சிலர்,கரிவரதன் போன்றோர், தங்கள் தானுந்து வடிவமைப்பை மாற்றுவதில் ஈடுபாடு கொண்டு பின்னர் தானுந்துப் பந்தயங்களில் பங்கெடுத்தனர். அவர்களது ஆர்வத்தினால் கோவையை நாட்டின் தானுந்துப் பந்தய மையமாக ஆக்கினர். நகரத்தில் ஃபார்முலா 3 பகுப்பைச் சேர்ந்த பந்தயச்சாலையும் மூன்று கோகார்ட் பந்தயச் சாலைகளும் உள்ளன. பார்முலா பந்தயம், விசையுந்துப் பந்தயம், கார்ட்டு பந்தயம் ஆகியவற்றிற்குத் தேசியச் சாதனைப் பந்தயங்கள் இங்குள்ள கரி தானுந்து விரைவுச்சாலையில் நடைபெறுகின்றன. நெடுஞ்சாலைப் பந்தயங்களிலும் கோவை அணிகள் முதன்மை வகிக்கின்றன. ஃபார்முலா ஒன்று பந்தயத்தில் 2005ஆம் ஆண்டு பங்கெடுத்த கோவையின் நாராயண் கார்த்திகேயன் இவ்விளையாட்டில் பங்கெடுத்த முதல் இந்தியர். தொன்மையான தானுந்துகளைச் சேகரிப்பதும் கோவை தொழிலதிபர்களின் பொழுதுபோக்காகும். நேரு விளையாட்டரங்கம் கால்பந்து போட்டிகளுக்காகக் கட்டப்பட்ட போதும் இங்கு தடகள விளையாட்டுகளும் நடத்தப்படுகின்றன. தற்போது செயற்கை தடங்களுடன் நடுவில் கொரிய புல்தளம் அமைக்கப்பட்டுள்ளது. தவிர பல விளையாட்டு மன்றங்களும் உள்ளன. புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனை நிருபமா வைத்தியநாதன் கோவையைச் சேர்ந்தவர். கோயம்புத்தூர் குழிப்பந்தாட்ட மன்றம் ஒர் 18 குழிகள் கொண்ட மைதானத்தைக் கொண்டுள்ளது. நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயம்புத்தூர் காஸ்மாபாலிட்டன் மன்றம், இந்தியர்களுக்கு மட்டுமே உறுப்பினராக உரிமை வழங்கியது. சுபாஷ் சந்திர போஸ் நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் ("Subhash Chandra Bose", சனவரி 23, 1897 – இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகத்து 18, 1945) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர். இவர் 1945 ஆகத்து 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாகவும், உருசியாவிற்கு சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு துறவியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985 இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன. 1945 ஆகத்து 14 முதல் செப்டம்பர் 20 வரை எந்த விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது போஸ் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்திற்கு வலுவூட்டியுள்ளது. இந்திய அரசால் நியமிக்கப்பட்டு இதைப்பற்றி விசாரித்த முகர்ஜி கமிஷன், நேதாஜி அவ்விமான விபத்தில் இறக்கவில்லை எனத் தெரிவித்து விட்டது. இந்தியாவில் ஒரிசா (இன்றைய ஒடிசா) மாநிலத்தில் கட்டாக் எனும் இடத்தில் 1897 ஆம் ஆண்டு சனவரி 23 ஆம் நாள் வங்காள இந்து குடும்பத்தில் காயஸ்தாவில் சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தார். இவரது தந்தையின் குடும்பம் 27 தலைமுறையாக வங்க மன்னர்களின் படைத்தலைவர்களாகவும் நிதி மற்றும் போர் அமைச்சர்களாகவும் பணியாற்றி வந்த பெருமைமிக்க மரபுவழியை உடையது. இவரது தாயார் பிரபாவதிதேவி "தத்" எனும் பிரபுக்குலத்திலிருந்து வந்தவர். 8 ஆண் பிள்ளைகளையும் 6 பெண் பிள்ளைகளையும் கொண்ட இக்குடும்பத்தில் ஒன்பதாவது பிள்ளையாக சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தார். சிறு வயது முதலே பல பிள்ளைகளுடன் வளர்ந்த படியால் சந்திரபோஸ் தன் சிறு வயதில் தாய் தந்தையரை விட தன்னைக் கவனித்து வந்த தாதியான சாரதா என்பவருடன் பெரிதும் இருந்தார். ஐந்து வயதான போது கட்டாக்கிலுள்ள பாப்டிஸ்ட் மிஷன் ஆரம்பப் பள்ளியில் இணைந்த சுபாஷ் ஏழு ஆண்டுகள் அங்கு கல்வி பயின்றார். பின்னர் தன் உயர் கல்வியை கொல்கத்தா ரேவன்ஷா கல்லூரியில் தொடங்கிய சந்திர போஸ் 1913 ஆம் ஆண்டுத் தேர்வில் கொல்கத்தா பல்கலைக்கழக எல்லைக்குள் 2 ஆவது மாணவராகத் தேறினார். இவரது தாயார் மிகுந்த தெய்வ பக்தி மிக்கவர். அதனால் சுபாஷும் சிறு வயது முதலே விவேகானந்தர் போன்ற ஆன்மிக பெரியார்களின் பால் ஈடுபாடுடையவராயும் அவர்களின் அறிவுரைகளைப் படித்து வருபவராயும் இருந்தார். இதனால் ஞான மார்க்கத்தின் பால் ஈடுபாடு கொண்டார்; துறவறத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பினார். எதிலுமே பற்றற்று இருந்ததுடன் தனது 16 ஆவது வயதில் வீட்டை விட்டு வெளியேறிய சுபாஷ் சந்திரபோஸ் தன் ஞானவழிக்கான ஆசானைத் தேடி இரண்டு மாதங்கள் அலைந்தார். அப்போது வாரணாசியில் ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த சுவாமி பிரம்மானந்தரைச் சந்தித்தார். இவருக்கு சுபாஷின் தந்தையையும், குடும்பத்தையும் நன்கு தெரியும். இந்த சந்திப்பு குறித்து பின்னாளில் தனது நண்பரான திலீப் குமார் ராயிடம், ""யாருக்கெல்லாம் சுவாமி பிரம்மானந்தரது அருள் கிடைக்கிறதோ அவர்கள் வாழ்வே மாறிவிடுகிறது. எனக்கும் அவரது அருளில் ஒரு சிறு துளி கிட்டியது. அதனால் தான் என் வாழ்க்கையைத் தேசத்திற்கு அர்ப்பணித்து அதன் பலனைப் பெற விரும்புகிறேன்.இன்னொன்றும் சொல்லிவிடுகிறேன்: அதே ராக்கால் மகராஜ் (சுவாமி பிரம்மானந்தர்) வாரணாசியிலிருந்து என்னை வரச் சொல்லி, என்னைத் தேசத்துக்காக அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்."" என்று குறிப்பிட்டுள்ளார். தன் மானசீக ஆசானாக விவேகானந்தரையே ஏற்று வீடு திரும்பினார். துறவறப் பாதையில் செல்ல விரும்பிய சுபாஸ் சந்திரபோஸ் ஞான மார்க்கத்திற்கு ஏற்ற குரு கிடைக்காததால் தந்தையாரின் வேண்டுகோளிற்கு இணங்கி 1915 ஆம் ஆண்டு கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். அக்காலத்தில் ஆங்கில இனவெறி மிக்க வரலாற்று ஆசிரியரான சி. எப். ஓட்டன் என்ற ஆசிரியர் அங்கு கற்பித்தார். அவர் கல்வி கற்பிக்கும் நேரங்களில் பெரும்பாலும் இந்தியர்களை அவமதித்து வந்தார். இவருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக சுபாஸ் சந்திர போஸும் அவரது நண்பர்களும் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டதுடன் இரண்டு ஆண்டுகள் வேறெந்த கல்லூரிகளிலும் படிப்பை தொடரமுடியாது செய்யப்பட்டனர். இதனால் தன் கல்வியை ஓராண்டுகாலம் தொடர முடியாதிருந்த சுபாஷ், சி. ஆர். தாஸ் என்று அறியப்பட்ட சித்தரஞ்சன் தாஸ் மற்றும் சிலரின் உதவியுடன் 1917 ஆம் ஆண்டு ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு 1919 ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேறியதுடன் மாணவர்களுக்குரிய படைப் பயிற்சியிலும் சிறப்பாகத் தேறினார். அக்காலத்தில் நாட்டுச் சூழ்நிலை பற்றி அடிக்கடி வீட்டில் விவாதங்களில் ஈடுபட்ட சுபாசைப் பார்த்த அவரது தந்தையார் இவரை அரசியலில் ஈடுபடுத்த விரும்பாது லண்டனுக்கு ஐ.சி.எஸ் தேர்வுக்குப் படிக்க அனுப்பி வைத்தார். தன் படிப்பை தொடர்ந்த போஸ் லண்டனில் நடந்த 1920 இல் இந்திய மக்கள் சேவை படிப்புக்கான ("இந்தியக் குடிமைப் பணி" எனப்படும் ஐசிஎஸ் தேர்வு) நுழைவுத்தேர்வில் பங்கேற்ற அவர் இந்தியாவிலேயே நான்காவதாகத் தேர்ச்சி பெற்றிருந்தார். ஆனால் தன் நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயனிடம் வேலை செய்யக் கூடாது எனக் கருதி, தான் முயற்சியுடன் படித்துப் பெற்ற தனது பதவியை லண்டனிலேயே பணித்துறப்பு செய்தார். வழக்குரைஞரான சி. ஆர். தாஸ் தன் தொழிலை விட்டுவிட்டு ஒத்துழையாமை இயக்கத்திற்குத் தலைமை தாங்கி தேசப் பணியாற்றிக் கொண்டிருந்தார். சுபாஷ் கடிதம் மூலம் சி.ஆர்.தாசிடம் தான் தாய் நாடு திரும்பியதும் இந்திய சுதந்திரப் போரில் பங்கேற்க ஆலோசனை கேட்டிருந்தார். அதை ஏற்று சுபாஷ் சந்திர போஸ் வருவதாயிருந்தால் தான் ஏற்றுகொள்வதாகவும் பதவி துறந்ததைப் பாராட்டியும் சி. ஆர். தாஸும் மறுகடிதம் அனுப்பினார். இக்காலகட்டத்தில் தான் தென்னாபிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியிருந்த காந்தியும் இந்திய அரசியலில் ஈடுபட்டார். இந்திய மக்களும் காங்கிரசின் தலைமையின் கீழ் சுதந்திர எழுச்சி பெற்றிருந்தனர். 1921 ஆம் ஆண்டு மும்பை துறைமுகத்தில் வந்திறங்கிய சுபாஷ் சந்திரபோஸ் மும்பையில் அப்போது தங்கியிருந்த காந்தியையும் சந்தித்து சுமார் ஒரு மணிநேரம் கலந்தாலோசித்தார். போஸ் சித்தரஞ்சன்தாஸின் கீழ் தொண்டாற்றவே விரும்பினார். போசை ஏற்று கொண்ட சி.ஆர்.தாஸும் அவரின் திறமையை நன்கு அறிந்திருந்ததுடன் திறமைமிக்க அவரது குடும்ப பின்னணியையும் அறிந்திருந்தார். இதனால் சி.ஆர்.தாஸ் தான் நிறுவிய "தேசியக் கல்லூரியின்" தலைவராக 25 வயதே நிரம்பிய போஸை நியமித்திருந்தார். லண்டனில் கேம்பிரிட்ஜில் படிக்கும் போது மேல்நாட்டு விடுதலைப் போர் வரலாறுகளையும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிகளையும் நன்கு அறிந்து கற்றிருந்த சந்திரபோஸ் தன் கல்லூரியில் மாணவர்களுக்கு விடுதலை உணர்ச்சி பொங்கும் வண்ணம் சொற்பொழிவு ஆற்றியதுடன் பாடமும் கற்பித்தார். 1922 இல் வேல்ஸ் எனும் இளவரசரை இந்தியாவுக்கு அனுப்ப பிரித்தானிய அரசு தீர்மானித்து இருந்தது. இந்தியாவிலிருந்த பிரித்தானிய ஆதிக்கக்காரர்களும் வேல்ஸ் இளவரசரை வரவேற்க நாடு முழுதும் சிறப்பான ஏற்பாடு மேற்கொண்டிருந்தனர். ஆனால் சுயாட்சி அதிகாரத்தைத் தரமறுத்த பிரித்தானிய இளவரசரின் வருகையை இந்திய மக்களும் காங்கிரசும் புறக்கணிக்க முடிவு செய்திருந்தனர். மும்பை துறைமுகத்தை வேல்ஸ் இளவரசர் வந்தடையும் போது நாடு முழுதும் எதிர்க்க காந்தி அழைப்பு விடுத்தார். இதனால் சினமுற்ற ஆங்கில அரசாங்கம் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் போன்றவற்றுக்குத் தடை விதித்தது. இவ்வாறு பொதுகூட்டங்களுக்கு அரசாங்கம் தடை விதித்திருந்த போதும் வேல்ஸ் இளவரசர் கொல்கத்தாவுக்கு வருகை தரும் போது கல்கத்தாவில் மறியல் நடத்த காங்கிரசு கட்சி முடிவு செய்திருந்து. கொல்கத்தா தொண்டர் படையின் தலைவராக சந்திரபோஸை நியமித்திருந்தது. தீவிரத்தை அறிந்திருந்த ஆங்கில அரசு போஸின் தலைமையிலான தொண்டர் படையை சட்ட விரோதமானது என அறிவித்து, போஸையும் சில காங்கிரஸ் தொண்டர்களையும் கைது செய்தது. மேலும் அவருக்கு 6 மாத காலச் சிறைத்தண்டனையும் கிடைத்தது. சில நாட்களின் பின்னர் ஜவகர்லால் நேரு, சித்தரஞ்சன் தாஸ் போன்றோரும் கைதானார்கள். இவ்வாறு அரசியல் கட்சி தலைவர்கள் கைதானதால் மக்கள் மட்டத்தில் இருந்து பெரும் எதிர்ப்பலைகள் கிளம்பின. மேலும் தலைவர்கள் யாரும் இல்லாத போதும் கொல்கத்தாவில் மறியல் சிறப்புற மக்களால் நடக்கப் பெற்றது. ஆறு மாதம் கழித்து போஸ் 1922 ஆம் ஆண்டு அக்டோபரில் விடுதலையானபோது காந்தியும் ஒத்துழையாமை இயக்கத்தையும், வரிகொடா இயக்கத்தையும் விரிவுபடுத்தியிருந்தார். இடையில் சில காரணங்களுக்காக போராட்டத்தை நிறுத்தியதால் காந்திக்கு எதிராக பல கண்டனங்கள் எழுந்தன. 1922 ஆம் ஆண்டு சிறையிலிருந்து வெளியான சித்தரஞ்சன் தாஸ் கயையில் கூடிய காங்கிரஸ் மகாசபைக்குத் தலைமை தாங்கினார். சட்ட சபைத் தேர்தல்களில் இந்தியர்கள் போட்டியிட்டு சட்டசபைகளை கைப்பற்றுவதன் மூலம் தான் இந்திய சுதந்திரத்தை விரைவில் பெறமுடியும் என சி.ஆர்.தாஸும் மோதிலால் நேருவும் கருதினர். ஆனால் இதை காந்தி ஆதரவாளர்கள் எதிர்த்தனர். தாஸுக்கும் காந்திக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. காந்தியின் வழிமுறைகளை தாஸ் கண்டித்தார். காங்கிரஸில் இருந்தபடி சுயாட்சிக் கட்சி என்ற அமைப்பை தாஸ் தொடங்கினார். காந்திக்கு பதிலடி தர "சுயராஜ்யா" என்னும் பத்திரிகையை ஆரம்பித்து ஆசிரியர் பொறுப்பை போஸிடம் ஒப்படைத்தார். ஜாலியன்வாலா பாக் படுகொலைக்குத் தலைமை ஏற்று நடத்திய ஜெனரல் டயரைச் சுட்டுக் கொன்றார் உத்தம் சிங். அதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார் காந்தி. ஆனால், உத்தம் சிங்கைப் பாராட்டி கடிதம் அனுப்பினார் போஸ், காந்திக்கும் போஸுக்கும் இடையிலான உரசலை இந்தச் சம்பவம் அதிகரித்தது. 1928 இல் கொல்கத்தாவில் காங்கிரஸ் பேரியக்கத்தின் மாநாடு காந்தி தலைமையில் கூடியது. சுயாட்சிக்கு எதிர்ப்பு காட்டிய காந்தியின் முடிவை எதிர்த்துப் பேச காங்கிரஸ் தலைவர்கள் தயங்கினர். கொல்கத்தா மாகாண தலைவரான போஸ் எழுந்தார் காந்தியின் முடிவு தவறு என எதிர்த்தார். காந்தி-போஸ் மோதல் ஆரம்பமானது. போஸின் முடிவை நேரு ஆதரித்தார். இதனால் இருவரும் இணைந்து காங்கிரஸில் இருந்தபடி விடுதலைச் சங்கம் என்ற பெயரில் இயக்கம் ஒன்றை நடத்தினர். காந்தியின் பல முடிவுகளை நேரடியாகவே எதிர்த்தார் போஸ். இதனால் திட்டமிட்டே காரிய கமிட்டியில் இருந்து போஸ் நீக்கப்பட்டார். அவரைப்போல் சென்னை மாகாணத்தை சேர்ந்த சீனிவாச அய்யரும் நீக்கப்பட்டார். உடனே போஸ், காங்கிரஸ் மிதவாதிகள் கைக்கு போய்விட்டது; அங்கு எங்களுக்கு வேலையில்லை எனக் கட்சியிலிருந்து விலகி, சீனுவாச அய்யரைத் தலைவராகக் கொண்டு 'காங்கிரஸ் ஜனநாயக கட்சி'யைத் தொடங்கினார். 1939 இல் சுபாஷ் சந்திர போஸ் இரண்டாவது முறையாகக் காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். போஸின் செல்வாக்கு உயர்ந்து வருவதை அறிந்து காந்தி, அவருக்கு எதிராக ராஜேந்திரப் பிரசாத்தையும், ஜவஹர்லால் நேருவையும் போட்டியிடுமாறு வற்புறுத்தினார். அவர்கள் மறுக்கவே, பட்டாபி சீதாராமையாவை நிறுத்தினார். போஸ் 1,580 வாக்குகளுடன் வெற்றிபெற்றார். சீதாராமையாவின் தோல்வி தனக்குப் பெரிய இழப்பு என்று வெளிப்படையாகவே காந்தி தெரிவித்து உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். அதனால், அவரைச் சமாதானப்படுத்த போஸ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். 1939 இல் அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியை தொடங்கினார், அதன் அகில இந்திய தலைவராக நேதாஜியும், தமிழக தலைவராக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உம் பதவியேற்று கொண்டனர். காங்கிரஸ் ஜனநாயக கட்சியின் "பார்வட் " எனும் ஆங்கில இதழில் ஆசிரியாரான நேதாஜி உணர்ச்சி ததும்பும் பல கட்டுரைகளை எழுதினார். இதைத் தொடர்ந்து தேர்தல்களில் மத்திய மாகாணசபைக்கும்,கல்கத்தா மாநகராட்சிக்கும் நடைபெற்ற தேர்தலில் சுயராஜ்ஜியக் கட்சி வெற்றிபெற்றது. 1924-ல் மாகாண சபைக்கு மேயராக சி.ஆர்.தாஸும் மாநகராட்சி நிர்வாக அதிகாரியாக போஸும் தெரிந்தெடுக்கப்பட்டனர். கொல்கத்தா நகரில் பல சீர்திருத்தங்கள் மேற்கொண்டதுடன் மக்கள் ஆதரவையும் பெற்றனர். இதனைக் கண்ட அரசு, நேதாஜியை ஓர் அவசரச்சட்டத்தின் மூலம் 1924 ஆம் ஆண்டு ஐப்பசி 25 ஆம் நாள் கைது செய்து கொல்கத்தா மத்திய சிறையில் அடைத்தது. மேலும் வங்கத்தில் பிரித்தானிய ஆட்சியை கவிழ்க்க சதிகார இயக்கம் ஓன்று தோன்றி இருப்பதையும் அதில் சிலரையே கைது செய்திருப்பதாயும் போலி அறிக்கையை வெளியிட்டது. நேதாஜிக்கு ஆதராவாய் மக்களும் பல தலைவர்களும் நாடு முழுதும் முழங்கினர். கொல்கத்தா விரைந்த காந்தி உட்பட பல தலைவர்களும் நேதாஜிக்கு ஆதரவை தெரிவித்தனர். இச்சமயத்தில் தான் சுயராஜ்ஜியக் கட்சி சட்டசபைகளில் வெற்றி பெற்று ஆற்றி வந்த சீர்திருத்தங்களையும் பணிகளையும் கண்ணுற்ற காந்திஜி 'சட்டசபை வெளியேற்றம்' எனும் கொள்கையைக் கைவிட்டு சுயராஜ்ஜியக் கட்சியின் கொள்கையே காங்கிரசின் கொள்கை எனக் கூறி இரு கட்சிகளின் கருத்து வேறுபாடுகளை முடித்து வைத்தார். போஸிற்கு ஆதரவான போராட்டங்கள் வலுப்பதை கண்ணுற்ற பிரிட்டிஷ் அரசும் அவரை கடல் கடந்து மாண்டலே சிறைக்கு மாற்றியது. அங்கு காலநிலைகளுடன் நேதாஜியின் உடல்நிலை ஒத்து வராததால் அவர் காசநோய்க்கு ஆளாக நேர்ந்தது. நோயின் தீவிரம் அதிகரித்ததால் சுபாஷும் படுத்த படுக்கையானார். ஆனால் அரசு மருத்துவ பரிசோதனைக்குகூட அவரை அனுமதிக்கவில்லை. இதனால் காங்கிரசு அவரை வெளிக்கொணர ஒரே வழி 1926 ஆம் ஆண்டு தேர்தலில் நேதாஜியை சட்டமன்ற வேட்பாளராய் அறிவிப்பதுதான் என்று முடிவு செய்தது நேதாஜியும் தன் சேவையைக் கருதி அதற்கு உடன் பட்டார். இதனால் சிறையிலிருந்தவாறே வேட்பாளர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அனால் அரசு அவ்வறிக்கையை வெளியிட மறுத்துவிட்டது. வேட்பாளரும், வேட்பாளர் தேர்தல் அறிக்கையும் வெளிவரவில்லை. ஆனால் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் நேதாஜி வெற்றி பெற்றார். துளியும் அசைந்து கொடுக்காத அரசோ நேதாஜியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு "கொல்கத்தா வராமல் சிகிச்சைக்காக ஐரோப்பா சென்று விடவேண்டும் 1930 வரை அவர் அங்கேயே இருக்க வேண்டும்" என்றும் இதற்கு போஸ் சம்மதித்தால் விடுதலை செய்ய தயார் என அறிக்கை விட்டது. ஆனால் ஆங்கிலேயர்களின் கட்டளைக்கு கீழ்ப்படிய விரும்பாத நேதாஜி இதற்கு முற்றிலும் மறுத்துவிட்டார். இதனால் சிறையிலேயே இருந்ததால் நோய் அதிகரித்து நேதாஜியைப் படுக்கையில் தள்ளியது. இச்செய்தி வெளியில் பரவி "சுபாஷ் பிழைப்பதே அரிது" என்றும் "அவர் சிறையிலேயே மரணித்து விட்டார் " என்றும் வதந்திகள் பரவின. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட அரசாங்கம் அல்மோரா சிறைக்கு சந்திரபோஸை கொணர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்க சம்மதித்தது. ஆனால் நேதாஜியின் உடல் நிலையின் மோசம் கருதி அவர் இனி பிழைக்கப் போவதில்லை எனத் தீர்மானித்த அரசாங்கம் அவரை நிபந்தனை இன்றி விடுதலை செய்தது. கல்கத்தா திரும்பியதும் படுக்கையிலேயே தன்னை வெற்றியடைய வைத்த மக்களுக்கு நன்றி கூறி ஓர் அறிக்கை விடுத்தார் நேதாஜி. சிறையில் இருந்து வெளிவந்ததும் 1930 சுபாஷ் சந்திர போஸ் ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்தார். அங்கு முசோலினி போன்றோரைச் சந்தித்தார். 1938-ல் காங்கிரசின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இரண்டாவது உலகப்போர் மூண்டதும், இந்திய மக்களின் ஒத்துழைப்பைப் பிரித்தானிய அரசு கோரியது. ஆனால், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுவதில் ஈடுபட்டார். இதன் காரணமாக 1940 ஜுலையில் நேதாஜியை அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்தது. உலகப்போரின் ஆரம்பத்தில், பிரித்தானிய படைகளுக்கு தோல்வியே ஏற்பட்டது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, பிரிட்டனின் எதிரி நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்தியாவை விடுவிக்கவேண்டும் என்று நேதாஜி எண்ணினார். அதற்கு சிறையில் இருந்து வெளியே வரவேண்டும் என்று கருதினார். 1940 நவம்பரில், சிறையில் உண்ணாவிரதம் தொடங்கினார். சுபாஷ் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், பெரும் விளைவுகள் ஏற்படும் என்பதைப் பிரித்தானிய அரசு அறிந்திருந்தது. எனவே, உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி அவரிடம் அதிகாரிகள் கெஞ்சினார்கள். ஆனால் சுபாஷ் இணங்கவில்லை. உண்ணாவிரதம் தொடங்கி ஒரு வாரம் ஆயிற்று. நேதாஜியின் உடல் நிலை மோசம் அடைந்தது. வேறு வழியின்றி நேதாஜியை அரசாங்கம் விடுதலை செய்தது. ஆனால் அவர் வீட்டைச்சுற்றி ரகசியக் காவலர்கள் சாதாரண உடையில் 24 மணி நேரமும் கண்காணித்தபடி இருந்தனர். எப்படியும் இந்தியாவிலிருந்து வெளியேறிவிடவேண்டும் என்று நேதாஜி தீர்மானித்தார். வெளிநாடு செல்ல உதவுவதாக, அவருடைய நண்பர்கள் சிலர் வாக்களித்தனர். 26 சனவரி, 1941 அன்று இரவிலிருந்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவருடைய அறையில் காணப்படவில்லை என்றும் இருப்பிடம் பற்றி இதுவரை தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்றும் தகவல் வெளியிடப்பட்டது. 1941 ஆம் ஆண்டு சனவரி 15 ஆம் நாள் நேதாஜி ஒரு முஸ்லிம் போல் தாடி வைத்துக்கொண்டு, மாறு வேடத்தில் தப்பிச்சென்றார். ஒரு காரில், கொல்கத்தாவிலிருந்து தொடர்வண்டியில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்தார். பெசாவர் நகரை (தற்போது இது பாகிஸ்தானில் உள்ளது) அடைந்து இந்தியாவின் எல்லையைக் கடந்தனர். பின்னர் ஆப்கானிஸ்தான் சென்றார். அங்கு இத்தாலி நாட்டு தூதரக அதிகாரிகளுடன் நேதாஜி தொடர்பு கொண்டு இத்தாலிக்குச் செல்ல அனுமதி வாங்கினார். ரஷ்யா வழியாக இத்தாலிக்குச் செல்ல வேண்டும் என்பது நேதாஜியின் திட்டம். ஆனால் எதிர்பாராதவிதமாக ஜெர்மனிக்கு வருமாறு ஹிட்லரிடமிருந்து அழைப்பு வந்தது. அதை ஏற்ற நேதாஜி, தொடர்வண்டி மூலம் மாஸ்கோ சென்று அங்கிருந்து ஜெர்மன் தலைநகரான பெர்லினுக்குப் போய்ச்சேர்ந்தார். அவர் ஜெர்மனி வந்து சேர்ந்த செய்தியை மார்ச் 28-ந்தேதி ஜெர்மனி பத்திரிகைகள் வெளியிட்டன. அப்போதுதான், அவர் இந்தியாவில் இருந்து மாறுவேடத்தில் தப்பிச் சென்ற விடயமே பிரித்தானிய அரசுக்குத் தெரிந்தது. ஜெர்மனியில் நேதாஜிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹிட்லரை நேதாஜி சந்தித்துப்பேசினார். இந்தியாவின் விடுதலைக்கு முழு ஆதரவு தருவதாக ஹிட்லர் உறுதி அளித்தார். 1941 இல் "சுதந்திர இந்திய மையம்" என்ற அமைப்பை தொடங்கி "ஆசாத்ஹிந்த்" என்ற ரேடியோவையும் உருவாக்கி சுதந்திர தாகத்தை அங்கிருந்த இந்திய மக்களிடம் விதைத்தார். நாட்டுக்கு எனத் தனிக் கொடியை உருவாக்கி "ஜனகனமன" பாடலை தேசிய கீதமாக அறிவித்தார். ஜெர்மனி, இத்தாலியின் உதவி கிடைக்காது என தெரிந்தபின் ஜப்பான் செல்ல முடிவு செய்து, போர் காலத்தில் நீர்மூழ்கிக் கப்பல் மூலம் ஜப்பான் சென்று ராணுவ ஜெனரல் டோஜோவை சந்தித்து உதவி கேட்டார். உதவிகள் தயாரானது. பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ராஷ் பிஹாரி போஸால் உருவாக்கப்பட்டு செயல்படாமல் இருந்த இந்திய தேசிய ராணுவத்தை மீள் உருவாக்கம் செய்து அதன் தலைவரானார் சுபாஷ். சுதந்திரத்திற்கு போராடி நாட்டிற்காக உயிர் தர இளைஞர்கள் வேண்டுமென ஆட்கள் திரட்டி பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தியாவில் அனைவரும் காந்தியின் அகிம்சை வழி போராட்டத்தில் விரும்பிசெ சென்றமையால் இராணுவத்திற்கு சிலரே செல்ல நேர்ந்தது, தமிழகத்தில் முத்துராமலிங்க தேவரால் சுமார் 600 க்கும் மேற்பட்ட தமிழர்கள் ராணுவத்தில் இணைந்தனர். 1943 அக்டோபர் 21ல் சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில் போஸ், சுதந்திர அரசு பிரகடனத்தை வெளியிட்டார். டிசம்பர் 29 ஆம் தேதி அரசின் தலைவராகத் தேசியக் கொடியை ஏற்றினார். அவற்றை ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, சீனா உட்பட 9 நாடுகள் ஆதரித்தன. பர்மாவில் இருந்தபடி தேசியப் படையை இந்தியாவை நோக்கி நகர்த்தினார். ஆனால் பிரித்தானியப் படைகள் முன் தாக்கு பிடிக்க முடியாமல் இப்படை தவித்தது. மனம் தளராமல் இந்தியாவின் எல்லைக்கோடு வரை வந்தவர்களை கொத்துக் கொத்தாக கொன்று குவித்தது பிரித்தானியப் படை. இந்திய தேசிய படை தோல்வியைத் தழுவியது. அது மட்டுமல்ல ஜப்பான் இரண்டாம் உலக போரில் சரணடைந்தது எனவே போரை முன்னெடுத்து செல்ல முடியாத நிலைக்கு சுபாஷ் சந்திர போஸ் ஆளானார். கல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.வி.சக்ரபர்த்தி எழுதிய கடிதத்திலிருந்து எடுக்கப்பட்ட பகுதி பின்வருமாறு: சட்டமறுப்பு இயக்கம் நேரடியாகவே இந்திய சுதந்திரத்தை வழிநடத்தியது என்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை. காந்தியின் பிரச்சாரங்கள்...இந்தியா சுதந்திரத்தை அடைவதற்கு கிட்டத்தட்ட பதினான்கு வருடங்களுக்கு முன்பே நீர்த்துப்போய்விட்டது...முதலாம் உலகப்போரின்போது ஆயுதக் கிளர்ச்சிகளின் மூலம் நாட்டை விடுதலை செய்வதற்கு போர்த்தளவாடங்கள் வடிவத்தில் ஜெர்மானியர்களின் அனுகூலத்தை இந்திய புரட்சியாளர்கள் கோரினர். ஆனால் இந்த முயற்சி வெற்றிபெறவில்லை. இரண்டாம் உலகப்போரின்போது சுபாஷ் போஸ் இதே முறையைப் பின்பற்றி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார். அற்புதமான திட்டமிடல் மற்றும் துவக்கநிலை வெற்றிகள் இருந்தபோதிலும் சுபாஷ் போஸின் வன்முறைப் பிரச்சாரம் தோற்றுப்போனது...இந்திய சுதந்திரத்திற்கான போர் ஐரோப்பாவில் ஹிட்லராலும், ஆசியாவில் ஜப்பானும் மறைமுகவாகவேனும் பிரிட்டனுக்கு எதிராக போர்புரிவதாக இருந்தது. இவை எதுவும் நேரடியாக வெற்றிபெறவில்லை, ஆனால் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுத்தந்த மற்ற மூன்றின் ஒட்டுமொத்த விளைவுதான் இது என்பதை ஒருசிலர் மறுக்கின்றனர். குறிப்பாக, இந்திய தேசிய ராணுவத்தின் விசாரணையின்போது வெளிப்பட்டவை, அது இந்தியாவில் உருவாக்கிய எதிர்வினையானது ஏற்கனவே போரினால் வலுவிழந்திருந்த பிரிட்டிஷாரின் வெளியேறுவது என்ற திட்டத்தை உருவாக்கியது, இந்தியாவில் தங்கள் அதிகாரத்தைப் பாதுகாத்திடுவதற்கு சிப்பாய்களின் விதுவாத்தை இனிமேனும் சார்ந்திருக்க முடியாது என்பதும் காரணமாகும். இதுதான் அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவது என்ற இறுதி முடிவிற்கு பெரும் தூண்டுதலாக இருந்திருக்க முடியும். 13 பிப்ரவரி 1933ல் உடல் நிலை சரியில்லை என வியன்னா சென்றவர் அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளான செக்கோசிலோவாக்கியா, போலந்து, ஹங்கேரி, இத்தாலி, ஜெர்மனி என பயணம் மேற்கொண்டு அந்த நாடுகளில் இருந்த இந்திய இளைஞர்களை சந்தித்து நாட்டின் விடுதலையை பற்றி பேசி ஒத்துழைப்பு கேட்டார். ஐரோப்பாவின் அரசியல்வாதிகளையும், ஆட்சியாளர்களையும் சந்தித்து விடுதலைக்கு உதவும்படி கேட்டார். 1935ல் முசோலினியை சந்தித்து ஆதரவு கேட்டார். பயணத்தில் ஆஸ்திரியாவை சேர்ந்த எமிலியின் அறிமுகம் கிடைத்தது. அவரை தனது உதவியாளராக்கிக்கொண்டார். உடல் நலம் தேறியது. அதற்கு எமிலியும் ஒரு காரணம். இருவருக்குள்ளும் காதல் அரும்பியது. 1937 டிசம்பர் 27 இல் எமிலியை போஸ் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நவம்பர் 29, 1942-ல் அனிதா போஸ் என்ற ஒரு மகள் வியன்னாவில் பிறந்தார். போஸ் இந்தியாவுக்கு நிபந்தனையற்ற முழுவிடுதலை வேண்டும் என்ற உறுதியுடன் அதற்கான பரப்புரையைச் செய்தார். அதே நேரத்தில் இந்திய காங்கிரஸ் சபை படிப்படியாக விடுதலை பெறுவதை ஆதரித்தது. மேலும் முழு விடுதலைக்குப் பதில் பிரித்தானியாவின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக இந்தியா இருக்க விரும்பியது. லாகூரில் நடைபெற்ற காங்கிரசு கருத்தரங்கில் முழுவிடுதலை பெறுவதைத் தன் குறிக்கோளாக ஏற்றுக்கொண்டது. போசு இரு முறை தொடர்ச்சியாகக் காங்கிரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். காந்தியுடன் ஏற்பட்ட கொள்கை வேறுபாடு காரணமாக தலைவர் பதவியில் இருந்து விலகினார். விலகியதும் கட்டுப்பாடுகள் தகர்ந்ததால் காங்கிரசின் வெளிநாட்டு, உள்நாட்டு கொள்கைகள் தவறானவை எனக் கண்டித்தார். காந்தியின் அறவழிப் போராட்டத்தால் இந்தியாவிற்கு விடுதலை வாங்கி தரமுடியாது என்றும் பிரித்தானியருக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடுவதே விடுதலைக்கான வழி என்றும் கருதினார். இவர் பார்வட் பிளாக் என்ற அரசியல் கட்சியைத் தோற்றுவித்தார். இரத்தத்தை தாருங்கள் உங்களுக்கு விடுதலையைப் பெற்று தருகிறேன் என்பதே இவரின் புகழ்பெற்ற சூளுரையாக இருந்தது. இரண்டாம் உலகப்போரின் போதும் இவர் தன் நிலையை மாற்றிக் கொள்ளவில்லை. அப்போது பிரித்தானியாவின் பலவீனத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்து சோவியத் ஒன்றியம், நாட்சி ஜெர்மனி, நிப்பான் போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்து இந்தியாவில் பிரித்தானியரைத் தோற்கடிக்க உதவி வேண்டினார். நிப்பானியர்களின் துணையுடன் தென்கிழக்கு ஆசியாவில் இருந்த இந்திய தொழிலாளர்களைக் கொண்டும் நிப்பான் பிடித்து வைத்திருந்த பிரித்தானியப் படையில் இருந்த இந்திய போர்க்கைதிகளைக் கொண்டும் இந்திய தேசிய இராணுவத்தை மறுசீரமைத்து வழிநடத்தினார். சுபாஷ் சந்திர போஸ் பிரித்தானியாவிற்கெதிரான போராட்டத்திற்கான பெரும் தூண்டுதல் மூலமாக பகவத் கீதையைக் கருதினார். அவரது சொந்த சாமான்கள் கொண்ட சிறு பையொன்றில் மிகச்சிறிய பகவத் கீதை புத்தகத்தையும், துளசி மாலையையும் மூக்குக் கண்ணாடியையும் மட்டுமே வைத்திருந்தார். சுவாமி விவேகானந்தரின் சர்வமயவாதம் பற்றிய கற்பித்தலும் தேசியவாத, சமூக சிந்தனையும் சீரமைப்பு எண்ணங்களும் சிறு வயதிலேயே இவரிடம் தாக்கத்தை ஏற்படுத்தின. இந்து சமய ஆன்மீக் கருத்துக்களே இவரின் பின்னாளைய அரசியல், சமூக எண்ணங்களுக்கு வித்திட்டதாக பல அறிஞர்கள் கருதுகிறார்கள். இந்து ஆன்மீகத்தின் தாக்கம் இருந்தாலும் இவரிடம் மதவெறியோ பழைமைவாதமோ இருக்கவில்லை . சுபாஷ் தன்னை சமதர்மவாதி என அழைத்துக்கொண்டார். இந்தியாவில் சமதர்மக் கொள்கையின் முன்னோடி சுவாமி விவேகானந்தர் என நம்பினார். இவர் தன் இந்திய தேசிய ராணுவத்தில் பெண்களுக்கென தனிப் பிரிவான ஜான்சி ராணி படையை தொடங்கியவர். ஒரு முறை ஜான்சி ராணி படை கூடாரப் பகுதிக்குள் இவர் நுழைந்ததை வேறு யாரோ என்று எண்ணி கோவிந்தம்மாள் என்னும் பெண் அதிகாரி அவரைத் தடுத்து நிறுத்தினார். அதைப் பொருட்படுத்தாமல் அவருக்கே அப்படையின் உயரிய விருதான "லாண்ட்சு நாயக்" விருதை வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.. இரண்டாம் உலகப்போரில் செர்மனி, இத்தாலி தோற்கடிக்கப்பட்டு அச்சு நாடுகள் சார்பில் நிப்பான் மட்டுமே போரில் இருந்தது. நிப்பான் ஆதிக்கத்தின் கீழ் இருந்த மஞ்சூரியா மேல் ருசியா படையெடுத்து அதை ஆகத்து 9-20, 1945 வரை நடந்த போரில் முழுமையாக கைப்பற்றிக்கொண்டது. பாங்காகில் இருந்த நிப்பானிய தொடர்பு அதிகாரி நேதாஜி பாங்காக்கில் இருந்து டோக்கியோ வழியாக மஞ்சூரியாவை அடைந்து அங்கிருந்து இருசியாவை அடைய ஒத்துக்கொண்டார். நேதாஜியின் கடைசி புகைப்படம் சைகோன் (தற்போதைய கோ சு மிங் ஆகத்து 17, 1945) நகரில் எடுக்கப்பட்டதாகும் . ஆகத்து 23, 1945 அன்று நிப்பானிய செய்தி நிறுவனம் ஆகத்து 18, 1945 அன்று தாய்பெயில் வானூர்தி தளத்தில் நடந்த விபத்தில் போஸ் இறந்ததாக அறிவித்தது . ஆனால் தைவான் நாடு அப்படி ஒரு வானூர்தி விபத்து நடக்கவில்லை எனக் கூறி மறுத்தது. இந்தச்செய்தி, இந்திய மக்களை நிலைகுலையச் செய்தது. நேதாஜி இறந்துவிட்டார் என்பதைப் பலர் நம்பவில்லை. “நேதாஜி இறந்து விட்டார் என்றால், அவர் உடலை ஏன் இந்திய மக்களிடம் ஒப்படைக்கவில்லை?” என்று கேட்டனர். ஆயினும் நேதாஜியுடன் பயணம் செய்து, படுகாயத்துடன் தப்பிய ஹபிப்-வுர்-ரகிமான், “நேதாஜியின் உடல் தகனம் செய்யப்பட்டதை என் கண்ணால் பார்த்தேன்” என்று கூறினார். ஆயினும்,பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் முதன்முதலாக மற்றும் பல தலைவர்கள், “நேதாஜி உயிருடன் இருக்கிறார்” என்றே கூறி வந்தனர். சிலர் அவர் துறவி வேடத்தில் இந்தியாவில் வசிப்பதாகவும் சிலர் அவர் சோவியத் ஒன்றியத்துக்குத் தப்பி சென்று விட்டதாகவும் நம்புகின்றனர். இந்தியா சுதந்திரம் அடைந்த பின், 1956 ஏப்ரல் மாதம், முன்னாள் பிரதமர் நேரு ஆட்சியின் போது நேதாஜி பற்றிய உண்மைகளைக் கண்டறிய மூவர் கொண்ட ஷாநவாஸ் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் டோக்கியோ, சைகோன், பாங்காக் உள்பட பல இடங்களுக்குச் சென்று விசாரணை நடத்தியது. இறுதியில், ஆணையத்தின் மூன்று உறுப்பினர்களில் இரண்டு பேர், வானூர்தி விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை, டோக்கியோவில் உள்ள புத்தர் கோவிலில் இருப்பது அவருடைய அஸ்திதான் என்று அறிக்கை கொடுத்தனர். மூன்றாவது உறுப்பினர் சுரேஷ் சந்திரபோஸ் (நேதாஜியின் அண்ணன்) இதை ஏற்க மறுத்து தனி அறிக்கை கொடுத்தார். அதன்படி 1970-ம் ஆண்டு ஜுலை மாதம் முன்னாள் பிரதமர் இந்திரா ஆட்சியின் போது ஓய்வு பெற்ற பஞ்சாப் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜி. டி. கோசலாவைக் கொண்ட “ஒரு நபர் விசாரணை ஆணையம்” அமைக்கப்பட்டது. அவர் நிப்பான், தைவான் உள்பட பல நாடுகளுக்குச் சென்று விசாரணை நடத்தி, “வானூர்தி விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை” என்று உறுதி செய்து அறிக்கை தந்தார். 1999-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியின் போது , 'முகர்ஜி ஆணையம்', என மூன்று ஆணையங்கள் நியமிக்கப்பட்டது. இதில் முகர்ஜி ஆணைய அறிக்கை 2006-ம் ஆண்டு மே 17-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஜஸ்டிஸ் முகர்ஜி கமிஷன் சமர்ப்பித்த அறிக்கையில் நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை என்றும் சோவியத் ரஷ்யாவிற்குத் தப்பிச் சென்று இருக்கலாம் என்றும் கூறியது. அதனாலும் நேதாஜி மரணம் குறித்து தெளிவான முடிவுக்கு வரவில்லை. உத்திரப் பிரதேசத்தில் 1985 வரை வாழ்ந்த இந்துத் துறவி பகவான்ஜி அல்லது 'கும்னமி பாபா' என்பது சுபாஷ் சந்திர போஸ் என சிலர் நம்புகின்றனர். நான்கு சம்பவங்கள் அத்துறவி போஸ்தான் என நம்பக் காரணமாகின. அத்துறவியின் மரணத்தின் பின், அவரது உடமைகள் நீதிமன்ற உத்தரவின்படி உடமையாக்கப்பட்டன. இது பின்பு முகர்ஜி ஆணையத்தினால் சோதனைக்குட்படுத்தப்பட்டன. துறவி மரணமானதும், முகம் அமிலம் மூலம் சிதைக்கப்பட்டு எரியூட்டப்பட்ட சம்பவம் ஐயப்பாட்டிற்குக் காரணமாகியது. கையெழுத்தியல் நிபுணர் பி. லால் வாக்குமூலத்தில் பகவான்ஜி மற்றும் போஸின் கையெழுத்துக்கள் ஒத்துப் போயின என்றார். ஆயினும், முகர்ஜி ஆணையம் மேலதிக சான்று வேண்டுமென அதனை நிராகரித்த அதேவேளை, இந்திய அரசின் போஸின் இறப்பு 1945ம் ஆண்டில் நடைபெற்றது என்ற பார்வையையும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகவே, பகவான்ஜிதான் போஸ் என்ற நம்பிக்கை மேலும் வலுப்பட்டது. இந்திய தேசிய ராணுவம் நெருக்கடியான நிலையில் இருந்த போது ஆகத்து 15, 1945ல் அவர் இறுதியாக அறிக்கை வெளியிட்டார். அதன்படி இந்தியா, 1992-இல் சுபாஷ் சந்திரபோசுக்கு, இறப்புக்குப் பின்னான இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. ஆனால் விருது வழங்கும் குழுவால் சுபாஷ் சந்திர போஸின் இறப்பு குறித்த ஆதாரங்களைத் தர முடியவில்லை எனவே உச்சநீதிமன்ற ஆணையின்படி இவ்விருது திரும்ப வாங்கப்பட்டது. சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான இரகசிய ஆவணங்களை மேற்கு வங்காள அரசு 17 செப்டம்பர் 2015 அன்று வெளியிட்டது. ஷா நவாஸ் கான், ஜெனரல் தீபாவளி தீபாவளி அல்லது தீப ஒளித்திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற, பண்டிகையாகும். இப்பண்டிகை இந்தியா உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை ஐப்பசி மாதத்தில் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை மற்றும் அதற்கடுத்த சுக்கிலப்பிரதமை, பௌ-பீஜ் ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் சில ஆண்டுகளில் ஐப்பசி அமாவாசை முன்தினம் நரக சதுர்த்தசி அன்று கொண்டாடுகிறார்கள். பெரும்பாலான ஆண்டுகளில் தீபாவளி ஐப்பசி அமாவாசை நாளன்று வரும்.கிரகொரியின் நாட்காட்டி படி அக்டோபர் மாத 17லிருந்து நவம்பர் மாத 15-ம்தேதி வரையான நாட்களில் தீபாவளி வருகிறது. இந்தியா, நேபாளம், இலங்கை, மியான்மர், சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிஜி போன்ற நாடுகளில் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர். மலேசியா, சிங்கையில் வாழும் இந்தியர்கள் தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர். தீபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர். தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர். எண்ணெய்க் குளியல் (கங்கா குளியல்) செய்வர். மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர்.இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர். தீபஒளித் திருநாளன்று பட்டாசு, மத்தாப்பூ கொளுத்துவது மக்களின் வாடிக்கை. மேற்குநாடுகளில் தீபாவளிக்கு முக்கியத்துவம் உண்டு. மற்றபல இந்து விழாக்கள் போல் அல்லாமல் அனைத்து இந்துக்களும் எதோ ஒரு வழியில் தீபாவளியை கொண்டாடுவதாலும், இந்துக்களுக்கு இப்பண்டிகை அதிமுக்கியத்துவம் கொண்டதாக அமைவதாலும் தீபாவளி சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இங்கு இது "Festival of Lights" என்று அறியப்படுகின்றது. தீபாவளி பல்லினப் பண்பாட்டின் கொண்டாட்டங்களில் ஒன்றாக மருவி வருகின்றது. இனுக்ரிருற் மொழி கனடாவின் நுனுவற் (Nunavut-"எங்கள் தேசம்") பிரதேசம், 1999 ஆம் ஆண்டு தனி அலகாக்கப்பட்டது. இப்பகுதியில் வாழும் கனடாவின் மூத்த குடிமக்களாகிய இனுவிற் (Inuit) மக்களின் மொழியே இனுக்ரிருற் (Inuktitut). நுனுவற்றில் வாழும் 20,000 மக்களால் இம்மொழி பேசப்படுகின்றது. கிறீன்லாந்திலும் (Greenland) 40,000 மக்களால் பாவிக்கப்படுகின்றது, ஆனால் எழுத்து முறை வேறு. இனுக்ரிருற் இன்று அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரு மொழி. பல விதமான அரசியல், சமூக, கலாச்சார, பொருளாதார பிரச்சினைகளால் வாட்டப்படும் மூத்த குடிமக்களின் மொழி. 1894-இல் தான் இம்மொழியின் எழுத்துருவம் உருவாக்கப்பட்டது. அதிலும் மாயன் தழுவிய முறை, ரோமன் எழுத்து தழுவிய முறை என்று தரப்படுத்தல் சிக்கல் கொண்ட மொழி; இன்னும் தரமான அகராதி கொண்டிராத ஒரு மொழி. இப்படி பல தடைகள் தாண்டியும், அம்மக்கள் தங்களை மொழி ரீதியாக தக்கவைத்து கொள்ள பல வகையிலும் முயன்று வருகின்றனர். 1999 ஆம் ஆண்டு அம்மொழி நுனுவிற்றின் ஆட்சி மொழியாக்கப்பட்டது. புது வேகத்துடன் இனுக்ரிருற் கணணியை, இணையத்தை தன் வளர்ச்சிக்கு பயன்படுத்துகின்றது. அண்மையில்தான் கணனிக்கான எழுத்துரு உருவாக்கப்பட்டது. இணையத்தில் இனுக்ரிருற் அகராதி உருவாகி வருகின்றது. இனுக்ரிருற் இதழ் இம்மொழியின் முக்கிய இதழ் ஆகும். இனுக்ரிருற் (இரு எழுத்து முறைகளிலும்), ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வெளிவருகின்றது. பொங்கல் பொங்கல், கீழ்க்காண்பவைகளில் ஒன்றை குறிக்கலாம். உத்தராகண்டம் உத்தராகண்டம் ("Uttarakhand", இந்தி: "उत्तराखण्ड", முன்னாளில் உத்தராஞ்சல் ("Uttaranchal"), இந்தியாவின் வட பகுதியில் அமைந்த மாநிலங்களுள் ஒன்று. இம்மாநிலம், 9 நவம்பர் 2000-இல் உத்தரப் பிரதேசத்திலிருந்து பிரித்தெடுக்கப் பட்டது. 2000 லிருந்து 2006 வரைக்கும் உத்தராஞ்சல் என அழைக்கப்பட்டது. இம்மாநிலத்தின் நிலப்பரப்பு முழுவதும் இமயமலையில் அமைந்துள்ளது. தேஹ்ராதுன் உத்தராஞ்சல் மாநிலத்தின் தலைநகராகும். எனினும், இம்மாநிலத்தின் உயர்நீதிமன்றம் நைனிடால் நகரில் உள்ளது. முசோரி, அல்மோரா, ராணிக்கெட், ரூர்க்கி ஆகியவை பிற முக்கிய ஊர்களாகும். இந்து சமயத் திருத்தலங்களான ரிஷிகேஷ், ஹரித்வார், கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்திரி, யமுனோத்திரி ஆகியவையும் உத்தர்காண்ட் மாநிலத்திலேயே அமைந்துள்ளன. 53,483 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட உத்தராகண்டம் மாநிலம் கார்வால் கோட்டம் மற்றும் குமாவுன் கோட்டம் என இரண்டு கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் கார்வால் கோட்டம் ஏழு மாவட்டங்களும்; குமாவுன் கோட்டம் ஆறு மாவட்டங்களும் கொண்டுள்ளது. அவைகள்; இந்த மாநிலத்தில் மொத்தமாக 78 வட்டங்களும், 95 மண்டலங்களும், 7541 ஊராட்சிகளும் உள்ளன. இந்த மாநிலத்தில் 16,826 கிராமங்களும், 86 நகரங்களும் உள்ளன. இவற்றில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவை ஐந்து நகரங்கள்: மட்டுமே. இந்த மாநிலத்தில் 5 மக்களவைத் தொகுதிகளும், 70 சட்டமன்றத் தொகுதிகளும் உள்ளன. 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 10,086,292 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 5,137,773 மற்றும் பெண்கள் 4,948,519 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 963 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 189 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 78.82 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 87.40 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 70.01 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 1,355,814 ஆக உள்ளது. மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் பத்தாண்டுகளில் 18.81% ஆக உள்ளது. இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள்தொகை 8,368,636 ஆகவும், இசுலாமியர் மக்கள்தொகை 1,406,825 ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள்தொகை 37,781 ஆகவும், சீக்கியர்களின் மக்கள்தொகை 236,340 ஆகவும், பௌத்த சமய மக்கள்தொகை 14,926 ஆகவும், சமண சமய மக்கள்தொகை 9,183 ஆகவும், சமயம் குறிப்பிடாதவர்கள் 11,608 ஆகவும், பிற சமயத்து மக்கள்தொகை 993 ஆக உள்ளது. சூன் மாதம், 2013ஆம் ஆண்டில் இம்மாநிலத்தில் பெய்த தொடர் பெருமழையால் இம்மாநில ஆறுகளில் வரலாறு காணாத அளவில் வெள்ள நீர் கரை புரண்டு ஓடியதால், ஆயிரக்கணக்கான உள்ளூர் மக்களும், ருத்ரபிரயாக்,பத்ரிநாத் மற்றும் கேதார்நாத், கங்கோத்திரி மற்றும் யமுனோத்திரி போன்ற புனித இடங்களில் இருந்த பக்தர்களில் பலரும் இறந்தனர். மேலும் கேதார்நாத்துக் கோயில் முக்கிய கோயில் தவிர அதன் சுற்றுபுறக் கட்டிடங்கள் மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது. நான்கு புனித இடங்கள் என்று சொல்லக்கூடிய பத்ரிநாத் கோயில், கேதார்நாத்துக் கோயில், கங்கோத்திரி மற்றும் யமுனோத்ரி ஆகிய இடங்களுக்கு செல்லும் தரைவழிச் சாலைகள் நிலச்சரிவுகளால் முற்றிலும் சேதம் அடைந்திருப்பதால், இனி பக்தர்கள் இப்புனித கோயில்களுக்கு சென்று இறைவனை வழிபட செய்ய இன்னும் மூன்று ஆண்டு காலம் ஆகும் என உத்தர்காண்ட் மாநில அரசு நிர்வாகம் அறிவித்தது. கேதார்நாத் சிவபெருமான் கோயில் சீரமைக்கப்பட்டு பக்தர்கள் வழிபாட்டிற்கு, 2014 மே மாதத்தில் திறக்கப்பட்டது.. இந்திய அரசின் பேரிடர் மேலாண்மைக் குழு, ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் பேலூர் மடத்தை வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள கேட்டுக்கொண்டது. தலைமை மடத்தின் வழிகாட்டுதலுடன் ராமகிருஷ்ண மிஷன் சேவாசிரமம், கங்கல் (ஹரித்வார்) பரந்த நிவாரணப் பணிகளை ஜூன் 21 லிருந்து, ஆகஸ்டு 4 வரை மேற்கொண்டது. சிந்து ஆறு சிந்து ஆறு (; Hindi:सिंधु; ) என்பது தெற்காசியாவில் தெற்கே பாய்ந்து செல்லும் ஒரு பெரிய ஆறு, இது சிந்து அல்லது அபாசியின் என்றும் அழைக்கப்படுகிறது. பாரதியின் சிந்து நதி மீதினிலே என்ற பாடலால் சிந்து நதி என்று பரவலாக அறியப்படுகிறது. இந்த ஆற்றின் மொத்த நீளம் 3,610 கிமீ (1,988 மைல்) ஆகும், இது ஆசியாவின் நீண்ட ஆறுகளில் ஒன்றாகவும், பாகிஸ்தானில் பாயும் முக்கியமான ஆறாகவும் உள்ளது. இவ்வாறு இமய மலைத் தொடரில் கயிலை மலையில் மானசரோவர் அருகே திபெத்தின் மேற்குப் பகுதியில் தோன்றும் இந்த ஆறு, லடாக் வழியாக பாய்ந்து, காஷ்மீர், மற்றும் பாகிஸ்தானின் வடக்கு நிலங்கள், வடமேற்கு எல்லைப்புற மாகாணம் வழியாகவும் பின் பஞ்சாப்பில் பாய்ந்து சென்று இறுதியில் சிந்து பகுதியின் தட்டா நகரத்திற்கு அருகில் அரபிக் கடலில் கலக்கிறது. இது பாக்கிஸ்தானின் மிக நீண்ட ஆறு மற்றும் தேசிய நதி ஆகும். இந்த ஆற்றின் மொத்த நீர் வடிகால் பகுதி ஆகும். இதன் மதிப்பிடப்பட்ட வருடாந்தர வெள்ள ஓட்டம் சுமார் , இது நைல் நதியின் ஆண்டு வெள்ளத்தில் இருமடங்காகவும், டைகிரிஸ் மற்றும் யூபிரிடிஸ் ஆறுகள் ஆகியவற்றின் நீரில் மூன்று பங்கு கூடுதலாகவும் உள்ளது. இதில் ஆண்டுதோறும் பாயும் நீரின் அளவில் உலகில் இருபத்தோராவது பெரிய ஆறாக உள்ளது. ஜாதகர் என்பது லடாக்கில் அதன் இடது கிளை ஆறு ஆகும். சமவெளிப்பகுதிகளில், அதன் இடது கிளைதான் செனாப் ஆறு ஆகும், அவற்றில் நான்கு முக்கிய துணை நதிகள் உள்ளன அவை, ஜீலம், ரவி, பியாஸ், சட்லஜ் ஆகும். சிந்து ஆற்றின் வலது துணை ஆறுகளில் முதன்மையானவை ஷிக் ஆறு, கில்கிட் ஆறு, காபூல் ஆறு, கோமல் ஆறு, குராம் ஆறு ஆகியவை ஆகும். இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் மற்றும் ஆறுகள் கொண்ட மலையுச்சியிலிருந்து துவங்கி, இந்த ஆறு காடுகள், சமவெளிகள், வறண்ட கிராமப்புறங்களில் சூழல் மண்டலத்தை வளப்படுத்துகிறது. சப்த சிந்து என்று ரிக்வேதத்தில் குறிப்பிடப்பட்ட இன்றைய பாகிஸ்தானின் சிந்து வடிநிலத்தை சிந்து ஆறு உருவாக்குகிறது மற்றும் ஈரானின் செயிண்ட் அவெத்தா ஹிப்தா சிந்து (இரண்டு சொற்களின் பொருளும் "ஏழு ஆறுகள்") என அழைத்தது. சிந்து சமவெளி நாகரிகம் இவ்வாற்றுப் படுக்கையிலே தோன்றி வளர்ந்த பழம் பண்பாடு. சிந்து ஆற்றின் அமைவிடத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வாற்றின் கிழக்குப் பகுதியின் பெருநிலத்தை இந்தியா என்றும், அப்பகுதி மக்களை இந்து என்றும் பண்டைய ஐரோப்பியர் அழைத்ததே இன்றைய இந்தியாவின் பெயர்க் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. (இந்துகுஷ் மலையில் இருந்து வந்ததாகவும் கூறுவர்) இந்த ஆறு பண்டைய ஈரானியர்களுக்கு அவெஸ்தாவில் குறிப்பிடப்பட்டுள்ளது, சமஸ்கிருதத்தில் சிந்து என்றும், அசிரியர்கள் (கி.மு.7 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில்) சிந்தா என்றும், பாரசீகர்கள் அப்-இ-சிந்த் என்றும், கிரேக்கர்கள்   இந்தோஸ் எனவும், ரோமானியர்கள் சிந்து என்றும், பஷ்தூன் அபாசிந்த் எனவும், அரேபியர்கள் அல்-சிந்து என்றும், சீனர்கள் சின்டோவை என்றும், ஜாவா மக்கள் சாத்ரி என்றும், பாளியில், சிந்து என்றால் "ஆறு, ஓடை" எனவும் குறிப்பாக சிந்து ஆற்றையும் குறிக்கிறது. சிந்து ஆற்றைக் குறிக்க ஆங்கிலத்தில் பயன்படுத்தும் சொல்லான இண்டஸ் (Indus) என்ற சொல் பண்டைய கிரேக்க ச்சொல்லான "Indós" (Ἰνδός) என்ற சொல்லின் உரோமானியமயமாக்களின் வடிவமாகும், இது பழைய பாரசீக வார்த்தையான "ஹிந்துஷ்" என்பதிலிருந்து கடன் பெறப்பட்டது, இது சமஸ்கிருத வார்த்தையான "சிந்து" விலிருந்து கடன் வாங்கப்பட்டது. மெகஸ்தினேசின் நூலான "இண்டிகா" என்ற பெயர், "Indós" (Ἰνδός) என்ற கிரேக்க சொல்லில் இருந்து வந்தது, மேலும் இதில்  அலெக்சாந்தரின் படைகள் பெருவெள்ளம் கொண்ட இந்த ஆற்றை எவ்வாறு கடந்து சென்றது என்பது குறித்த சமகால வரலாற்றை விவரிக்கிறது. பண்டைய கிரேக்கர்கள் இந்தியர்களை (இன்றைய வடமேற்கு இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் மக்கள்) "Indói" (Ἰνδοί), என குறிப்பிட்டனர் இதற்கு "சிந்து மக்கள்" என்று பொருள். இந்தியா மற்றும் பாக்கிஸ்தானின் சிந்து மாகாணமும் தங்கள் பெயரை இந்த ஆற்றின் பெயரிலிருந்தே பெற்றன. ரிக்வேதம் பல புராண ஆறுகளை விவரிக்கிறது, அதில் ஒன்று "சிந்து". ரிக்வேதத்தில் குறிப்பிப்பட்டுள்ள "சிந்து" என்பது இன்றைய சிந்து ஆறு என்று கருதப்படுகிறது, மேலும் அந்த நூலில் 176 முறை குறிப்பிடப்பட்டுள்ளது-பன்மையில் 95 முறை பன்மடங்கான அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. ரிக்வேதத்தில், குறிப்பிடத்தக்க பாடல்களில், நாடிஸ்டு சுக்மாவின் பாடலில் உள்ள ஆறுகளின் பட்டியலில், சிந்து ஆறு குறிப்பிடப்படுகிறது. ரிக்வேத பாடல்களில் குறிப்பிடப்பட்ட அனைத்து நதிகளுக்கும் பெண் பாலில் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் "சிந்து" ஆற்றை ஆண்பாலாக குறிக்கிறது. சிந்து ஆறு ஒரு வலுவான வீரனாக கருதப்பட்டு   மற்ற ஆறுகள் தேவதைகளாக பார்க்கப்பட்டும் பால், வெண்ணெய் ஆகியவற்றை விளைவிக்கும் பசுக்களுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள பிற மொழிகளில் இந்த ஆறானது, सिन्धु नद (சிந்த் நதி) என இந்தி மற்றும் நேபாளி மொழிகளிலும், سنڌو (சிந்து) சிந்தி மொழியிலும், سندھ (சிந்து) சாமுகி பஞ்சாபி, ਸਿੰਧ ਨਦੀ (சிந்த் நதி) குர்முகி பஞ்சாபி, اباسين (அபசின் லிட்டர் "ஆறுகளின் தந்தை") பஷ்தூ மொழியில், نهر السند (நஹார் அல்-சிந்து) அரபு மொழியில், སེང་གེ་གཙང་པོ། (சீங் ஜி கிட்சங் போ லிட். இதன் பொருள் "சிங்க ஆறு") திபெத்திய மொழி, 印度 (யிங்டு) சீன மொழியில், நிலாப் (Nilab) துருக்கிய மொழியில் என பல்வேறு மொழிகளில் அழைக்கப்படுகிறது. சிந்து ஆறு பாக்கிஸ்தானின் பொருளாதாரத்துக்கு முதன்மையான நீர் ஆதாரங்களை வழங்குகிறது - குறிப்பாக நாட்டின் உணவுக் களஞ்சியமான பஞ்சாப் மாகாணத்தின் பெரும்பாலான விவசாய உற்பத்தியானது சிந்து ஆற்றை நம்பியுள்ளது. பஞ்சாப் என்ற சொல்லின் பொருள் "ஐந்து ஆறுகள் நிலம்" என்பதாகும், அந்த ஐந்து ஆறுகள் ஜீலம், செனாப், ராவி, பியாஸ், சத்லஜ் என்றும் அழைக்கப்படுகின்றன, இவை அனைத்தும் சிந்துவுடன் சேறுகின்றன. சிந்து ஆறானது பல கனரக தொழிற்சாலைகளுக்கு உதவியாக உள்ளது மற்றும் பாக்கிஸ்தானின் முதன்மை குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. சிந்துவின் முதன்மையான நீர் ஆதாரம் திபெத்தில் உள்ளது; திபெத்தில் தோன்றிய சிந்து ஆறு, பின்னர் லடாக் மற்றும் பால்டிஸ்த் வழியாக வடமேற்குப் பகுதியில் காரகோரம் மலைக்கு தெற்கே கில்கித் நோக்கி செல்கிறது. ஷியோக், ஷிகார், கில்கிட் ஆகிய ஆறுகள் ஆறுகள் பனி ஆறுகளோடு முதன்மை ஆற்றில் வந்து சேர்கின்றன. பின்னர் இது பெஷாவர் மற்றும் ராவல்பிண்டிக்கு இடையே உள்ள மலைகளில் இருந்து தெற்கே வளைந்து செல்கிறது. நங்க பர்வதத்துக்கு அருகே ஆழமான பள்ளத்தாக்குகளை சிந்து ஆறு 4,500-5,200 மீட்டர் (15,000-17,000 அடி) ஆழத்தில் கடந்து செல்கிறது. இது ஹசாரா முழுவதும் விரைவாக ஓடுகிறது, மற்றும் டார்பெலா அணையால் இதன் நீர் கட்டுப்படுத்தப்படுகிறது. காபுல் ஆறு அட்டாக் அருகே இதனுடன் இணைகிறது. கடலுக்கு செல்லும் மீதமுள்ள பாதையில் எஞ்சியுள்ள பஞ்சாப் மற்றும் சிந்து பகுதிகளில், நதியின் ஓட்டம் மெதுவாகவும், பல கால்வாய்களாக பிரிந்ததாகவும் இருக்கும். இது மித்தன்கோட் பகுதியில் பஞ்ச்நாத் ஆறு இணைகிறது. இச்சங்கமத்துக்கு அப்பால், இந்த ஆறு காபூல் நதி, சிந்து நதி, பஞ்சாப் ஆறுகள் ஆகியவற்றின் நீரை எடுத்துச் செல்வதால்,   சத்நாத் நதி (சாத்தி = "ஏழு", நடி = "நதி") என்ற பெரைப் பெறுகிறது.   ஜாம்ஷோராவாலைக் கடந்து, இது தட்டாவுக்கு அருகில் கடலில் சேர்கிறது. உலகின் சில நதிகளில் மட்டுமே காணப்படும் ஒன்றான கழிமுக அலைஏற்றம் சிந்து ஆற்றில் காணப்படுகிறது. இதன் நீராதாரமானது திபெத், இந்திய ஆளுகைக்கு உட்பட்ட ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேசம் மற்றும் பாக்கிஸ்தானின் வடக்கு நிலங்கள் ஆகியபகுதிகளிலும், இமயமலை காரகோரம், இந்து குஷ் ஆகிய மலைகளில் உள்ள பனிக்கட்டி மற்றும் பனிப்பாறைகளால் இருந்து கிடைக்கிறது. ஆற்றின் நீர்பெருக்கானது பருவ காலத்துக்கு ஏற்ப்ப மாறுபடுகிறது - குளிர்காலத்தில் நீர் பெரிதும் குறைந்து காணப்படும், சூலை முதல் செப்டம்பர் வரையிலான பருவ மழைக்காலத்தில் வெள்ளம் மிகுந்து காணப்படும். வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் இருந்து ஆற்றின் போக்கில் நிலையான மாற்றங்கள் ஏற்பட்டதற்கான சான்றுகள் உள்ளன - கட்ச் பாலைவனம் மற்றும் பன்னி புல்வெளிகளுக்கு அருகில் இருந்து மேற்கு நோக்கி திசைதிரும்பியது. கோனார் தமிழ் உரை கோனார் தமிழ் உரை என்பது தமிழ்நாட்டுப் பாட நூல் கழகம் வெளியிடும் தமிழ் பாட நூல்களைப் புரிந்து கொள்ள உதவும் வகையில், தனியார் நிறுவனம் ஒன்று வெளியிடும் வழிகாட்டிக் கையேடு ஆகும். வேறு பல நிறுவனங்கள் வெளியிடும் கையேடுகளும் புழக்கத்தில் இருந்தாலும், அதிகமானவர்கள் அறிந்த வழிகாட்டி உரை நூலாக "கோனார் தமிழ் உரை" விளங்குகிறது. இதனால் சிலர், எந்த ஒரு தமிழ் உரை நூலையும் "கோனார் உரை" என்று பேச்சு வழக்கில் குறிப்பிடுவதுண்டு. திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த ஐயம்பெருமாள் கோனார் பள்ளிப் பாடநூல்களில் தமிழ்ப் பாடநூல்களுக்கான கையேடுகளை உருவாக்கி வெளியிட்டு வந்தார். இந்த கையேடுகளைக் கோனார் தமிழ் உரை என்ற பெயரில் சென்னை, பழனியப்பா பிரதர்ஸ் நூல் வெளியீட்டு நிறுவனம் இன்றும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனத்தின் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்திற்கு இன்றும் "கோனார் மாளிகை" என்றுதான் பெயர். கத்தோலிக்க திருச்சபை கத்தோலிக்க திருச்சபை அல்லது உரோமன் கத்தோலிக்க திருச்சபை ("Roman Catholic Church") மிகப்பெரிய கிறிஸ்தவ மதப்பிரிவாகும். டிசம்பர் 31, 2008 ஆம் ஆண்டு கணக்கின் படி 1,166,000,000 (ஒரு பில்லியன், 166 மில்லியன்) இறைமக்களை கொண்டதாக இப்பிரிவு இருக்கிறது. இவ்வடிப்படையில் கத்தோலிக்கமே உலகில் மிகப்பெரிய சமயப்பிரிவாகும். ஏனைய கிறிஸ்தவ மத பிரிவுகளைப்போலவே கத்தோலிக்கரும் இயேசுவை தங்களது கடவுளாகவும், தமத்திரித்துவத்தின் இரண்டாம் ஆளாகவும் ஏற்றுக்கொள்கின்றார்கள். திருத்தந்தை கத்தோலிக்கரின் உலகத்தலைவராவார். கத்தோலிக்க திருச்சபையின் சுயவரைவிலக்கணத்தின் படி கத்தோலிக்க திருச்சபை எனப்படுவது, இயேசுவின் தலைமைச்சீடரான பேதுருவின் வழிவருபவரின் தலைமையின் கீழ் ஏனைய ஆயர்களாலும் குருக்களாலும் வழிநடத்தப்படும் சமயமாகும். இங்கு இராயப்பரின் வழிவருபவராக திருத்தந்தை ஏற்றுக் கொள்ளப்படுகிறார். தற்போது பிரான்சிஸ் திருத்தந்தையாக கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்துகிறார். இவர் 266 ஆவது திருத்தந்தையாவார். இத்திருச்சபை ஒரே, புனித, கத்தோலிக்க, திருத்தூதர் வழிவருகின்ற (அப்போஸ்தலிக்க) சபையாக உள்ளது என்பது (திருச்சபையின் நான்கு அடையாளங்கள்) கத்தோலிக்க திருச்சபையின் நிலைப்பாடு ஆகும். "கத்தோலிக்க" (καθολικός, "katholikos") என்ற பதம் கிரேக்க மொழியிலிருந்து எடுத்துப் பயன்படுத்தப்படுகிறது. இச்சொல்லின் மூலப்பொருள் "உலகளாவிய" அல்லது "அனைவருக்கும் பொதுவான" என்பதாகும். இதன்படி "கத்தோலிக்க திருச்சபை" என்பது, இயேசு கிறிஸ்துவால் "உலகம் முழுவதற்கும் நிறுவப்பட்ட திருச்சபை" என்ற கருத்தைத் தருகிறது. இப்பெயர் திருச்சபையால் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து பயன்படுத்தப்படுகிறது. திருத்தூதர் யோவானின் சீடரான அந்தியோக்கு இஞ்ஞாசியார் என்பவரே, கிறிஸ்தவ சமூகத்தை முதன்முதலில் கத்தோலிக்க திருச்சபை என்று அழைத்தார். புனித பேதுருவின் வழிவருகின்ற திருத்தந்தைக்கு உலகளாவிய திருச்சபை மீது ஆட்சி அதிகாரம் உண்டு என்று ஏற்கும் கிறிஸ்தவ இறைமக்கள் சமூகமே, "கத்தோலிக்க திருச்சபை" என்று வரலாற்றில் அறியப்படுகிறது. ஆயினும், மரபுவழி கிறித்தவ சபைகளில் சிலவும், புரடஸ்தாந்து சபைகளில் சிலவும் "கத்தோலிக்க" என்னும் அடைமொழியால் தம்மை அடையாளப்படுத்துகின்றன. "கத்தோலிக்க" என்னும் அடைமொழிக்கு எல்லாக் கிறித்தவ சபைகளும் ஒரே பொருள் கொடுப்பதில்லை. பல கிறித்தவ சபைகள் அந்த அடைமொழியைப் பயன்படுத்தி தம்மை பழமையான அல்லது உலகளாவிய திருச்சபையாக அடையாளம் காட்ட விரும்புகின்றன. கத்தோலிக்க திருச்சபை இயேசு மற்றும் அவரது பன்னிரண்டு சீடர் வழிவருவதாகும். இதில் முதன்மைச் சீடர் இராயப்பர் முக்கிய இடம் பெறுகிறார். இயேசுவால் தனக்கு பின்னர் தனது விசிவாசிகளை வழிநடத்தும்படி இராயப்பர் பணிக்கப்பட்டார். இயேசுவின் பின்னர்,புனித விவிலியத்தில் கூறப்பட்டுள்ளதன் படி, வேறுபட்ட போதனைகளுககு தமது விசுவாசத்தை விட்டுக்கொடுக்காது இராயப்பரதும் அவர் வழிவந்த பாப்பரசர்களதும் போதனைபடி வாழ்ந்த உண்மையான இயேசுவின் விசுவாசிகளே காத்தோலிக்க திருச்சபையின் மூல விசுவாசிகளாவார்கள். 'கத்தோலிக்க திருச்சபை' என்ற பெயர் ஆன்டியொக்கின் ஆயர் இக்னேசிய அவர்களால் எழுதப்பட்ட மடலொன்றில் முதன்முறையாக பாவிக்கப்பட்டதாக அறிஞர்கள் கருதுகிறர்கள். ஆரம்பத்தில் திருச்சபை பல நெருக்கடிகளுக்கு உள்ளானது. கி.பி. 4ம் நூற்றாண்டில் கிறிஸ்தவம் உரோமையில் சட்டபூர்வமாக்கப்பட்டது. கி.பி. 313 ஆம் ஆண்டு ரோமப் பேரரசன் கான்ஸ்டாண்டைன் வெளியிட்ட மிலான் ஏற்புகள் மூலம் உரோமை அரசு சமயங்கள் தொடர்பில் நடுவுநிலைமை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டது. அத்தோடு உரோமையில் கிறிஸ்தவர் அனுபவித்த அடக்குமுறைகள் முடிவுக்கு வந்தன. மேலும் கொண்ஸ்டன்டைன் நைசியா மன்றத்தைக் கூட்டி(Council of Nicea) அப்போது திருசசபயில் தோன்றியிருந்த ஆரியவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். இக்கூட்டத்தில் பின்னர் வெளியிடப்பட்ட 'நைசின் விசுவாச அறிக்கை' (Nicene Creed) இன்றும் கத்தோலிக்க, கீழ் மரபு வழாத திருச்சபைகளால் ஏற்றுகொள்ளப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. கான்ஸ்டாண்டைன்குப் பின்னர், தியோடியஸ் எனும் மற்றொரு பேரரசர் கிறித்தவராக ஞானஸ்னானம் செய்யப்பட்டு, கி.பி. 380 ஆம் ஆண்டு தொடக்கம் கிறிஸ்தவம் உரோமையின் அரச சமயமாக உயர்ந்தது. 11 ஆம் நூற்றாண்டில் திருச்சபை பெரும் கருத்து முரண்பாட்டை (Great Schism) எதிர்நோக்கியது. பொதுவாக 1054 ஆம் ஆண்டு இது தோன்றியதாக கூறப்பட்டாலும், இது பல தாசப்த்தங்களாக காணப்பட்ட கருத்து வேறுபாடுகளின் விளைவாகும். இதன் போது கத்தோலிக்க திருச்சபைக்கும் கீழ் மரபு வழாத திருச்சபைக்குமிடயே சபை முகாமை,சமயபோதனைகள் (liturgical), சமய கோட்பாடுகள் (doctrine) தொடர்பில் கருத்து வேறுபாடுகள் தோன்றியது. முக்கியமாக பாப்பரசரின் தலைமை மற்றும் இயேசு மற்றும் பரிசுத்த ஆவி தொடர்பான சமய போதனை வேறுபாடு முக்கிய இடம் வகித்தது. இறுதியில் இவ்விரு திருச்சபைக்களும் பிரிந்தன. இரண்டாம் இலியோன்ஸ் மன்றம், 1274 மற்றும் பசெல் மன்றம், 1439 இவ்விரு திருச்சபைகளையும் இணைக்க முயன்றது எனினும் இன்று வரை இத்திருச்சபைககள் பிரிந்தே செயற்படுகின்றன. இவ்விரு திருச்சபைகளும் நைசின் விசுவாச அறிக்கையில் கூறப்பட்ட ஓரே,புனித,கத்தோலிக்க,அப்போஸ்தலிக திருச்சபை தாமே என உரிமை கோறிவருகின்றன. அது முதல் சில கீழ் மரபு வழாத திருச்சபைகள் பாப்பரசரின் தலைமையை எற்று கத்தோலிக்க திருச்சபையுடன் இணைந்துள்ளன. திருச்சபையின் இரண்டாவது பெரிய பிரிவினை சமய சீர்த்திருத்தவாதத்தால் ஏற்பட்டது. இதில் பாப்பரின் தலைமை, திருச்சபையின் சமய கோட்பாடுகள், மேலும் சபையில் அப்போதிருந்த நடைமுறைகள் என்பவற்றை பிழையென கருதிய பல குழுக்கள் திருச்சபையிலிருந்து பிரிந்து சென்றன. இது கத்தோலிக்க திருச்சபைக்குள் சீர் திருத்தத்துக்கு வழிகோலியது. இந்நோக்கத்துக்காக டெரன்ட் மன்றம் 1545, கூட்டப்பட்டு கத்தோலிக்க திருச்சபையின் பல கோட்பாடுகளையும் கொள்கைகளையும் சீர்த்திருத்தியது. டெரன்ட் மன்றத்துக்குப் பிறகான மூன்று நூற்றாண்டுகள் இம்மன்றத்தின் சீர்த்திருத்தங்களை அமுல்படுத்துவதிலும் கிறிஸ்தவ கல்வியிலும் மற்றும் மறைப்பரப்பு பயணங்களிலும் திருச்சபை முக்கிய கவனமெடுத்துக்கொண்டது. இப்பணிகளில் 'இயேசு சபை' குருக்களும் 'பிரன்சிஸ்கன்' குருக்களும் முன்னின்று செயற்பட்டனர். 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் சமய சீர்த்திருத்தவாதிகளால் மட்டுமல்லாது விஞ்ஞான வளர்ச்சி, கைத்தொழில் புரட்சி போன்ற வற்றாலும் திருச்சபை பல சவால்களை எதிர்நோக்கியது. முதலாம் வத்திக்கான் சங்கம் (1869–1870), இரண்டாம் வத்திக்கான் சங்கம் (1962–1965) போன்ற மன்றங்கள் அவ்வப்போதிருந்த பாப்பரசர்களால் கூட்டப்பட்டு கத்தோலிக்க திருச்சபை காலத்துகேற்றவாரு புதுப்பிக்கப்பட்டது. இரண்டாம் வத்திக்கான் சங்கம் ரோம் நகரில் 1962 முதல் 1965 வரை ஒவ்வொரு ஆண்டும் இலையுதிர் காலத்தில் நடைபெற்றது. பாப்பரசர் அருளப்பர் XXIII முதலாவது ஆண்டில் தலைமை வகித்தார். பின்னர் பாப்பரசர் ஆறாம் சின்னப்பர் கூட்டங்களை தொடர்ந்து நிறைவு செய்தார். கத்தோலிக்க திருச்சபையை புதுப்பித்தலும் கிறிஸ்தவ மறுஒன்றிப்புமே இச்சங்கத்தின் முக்கிய குறிக்கோள்கள். இச்சங்கம் உருவாக்கிய இரண்டு முக்கிய ஏடுகள் - சமய சுதந்திரம் (Dignitatis Humanae) மற்றும் நவீன உலகில் திருச்சபையின் மேய்ப்புப்பணி அமைப்பு (Gaudium et Spes) ஆகியனவாகும். சங்கத்தின் பரிந்துரைப்படி கத்தோலிக்க சபை வழிபாடுகள் பெருமளவில் மாற்றப்பட்டன. லத்தீன் மொழி பலிப்பூசை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, புதிய பலிப்பூசை அவரவர் சொந்த மொழியில் நிறைவேற்ற ஆவன செய்யப்பட்டது. இதைத் தவிர வழிபாடுகளில் குரு (Priest) விரும்பினால் உள்ளூர் கலாச்சாரப்படி சில மாற்றங்கள் செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் பரப்பப் பட்டது. இதனை 'இரண்டாம் வத்திக்கான் சங்க ஒளி' யில் செய்வதாக அவ்வாறு செய்பவர்கள் கூறிக்கொள்கின்றனர். (சங்க 'ஒளி' எனப்படுவது சங்க ஏடுகளில் எழுதி பிரகடனப்படுத்தப்பட்ட கொள்கைகள் அல்ல. மாறாக, அவற்றில் இருந்து தர்க்க ரீதியாக பெறப்பட்டதாக சொல்லப்படும் சார்பு கொள்கைகள். ஆனால், கத்தோலிக்க குருமாரிடையே இவை பற்றிய ஒருமித்த கருத்து இன்றளவும் இல்லை). எம்மதமும் சம்மதம் என்ற கொள்கையும் இச்சங்க 'ஒளி' யில் காணப்படுவதாக சிலர் கூறுகின்றனர். லத்தீன் மொழி பலிப்பூசையை பல விசுவாசிகள் விரும்பியதால் தற்போதய திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், இறை மக்கள் விரும்பினால் லத்தீன் மொழி பலிப்பூசையை வழங்கலாம் என்று அண்மையில் உத்தரவிட்டுள்ளார். இச்சங்க கோட்பாடுகளைப் விரும்பாதவர்கள், பல்வேறு புராதன கத்தோலிக்க சபைகளை உருவாக்கியுள்ளனர். பேராயர் லெபபர் (Archbishop Marcel) உருவாக்கிய பத்தாம் பத்திநாதர் சபை இவற்றில் முக்கியமானது. இன்னும் சில கத்தோலிக்க பொதுமக்கள் கத்தோலிக்க வழிபாடுகளில் பக்தி குறைந்து விட்டது என்று பெந்தெகோஸ்தே சபைகளுக்கு தங்களை மாற்றிக்கொண்டனர். திருமறைச் சுவடி என்பது கத்தோலிக்க கிறித்தவ சபையினர் நம்பி ஏற்கின்ற கொள்கைத் தொகுப்பின் சுருக்கம் ஆகும். ஆங்கிலத்தில் Catechism என்று அழைக்கப்படுகின்ற இத்தொகுப்பு சின்னக் குறிப்பிடம் என்றும் அறியப்பட்டது. கடந்த 450 ஆண்டுகளாகத் தமிழகத்தில் வழங்கப்பட்ட இச்சிறு நூல் திருத்திய பதிப்பாக 2007ஆம் ஆண்டு திருமறைச் சுவடி (புதிய குறிப்பிடம்) என்னும் பெயரில் வெளிவந்தது. இது வினா-விடை வடிவில் அமைந்தது. இந்நூலுக்கு முன்னோடியாக 1578இல் அச்சேறிய முதல் தமிழ் நூலாகிய தம்பிரான் வணக்கம் என்னும் ஏட்டையும், தத்துவபோதகர் எனும் சிறப்புப் பெயர் பெற்ற இராபர்ட் தெ நோபிலி (தமிழகத்தில்: 1606–1656) எழுதியதாகக் கருதப்படும் சின்னக் குறிப்பிடம் ஏட்டையும் கருதலாம். தந்தை/மகன்/தூய ஆவியின் பெயராலே ஆமென் விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல, மண்ணுலகிலும் நிறைவேறுக! எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும். / ஆமென் அருள் நிறைந்த மரியே வாழ்க!ஆண்டவர் உம்முடனே.பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே.உம்முடைய திருவயிற்றின் கனியாகியஇயேசுவும் ஆசி பெற்றவரே.தூய மரியே,இறைவனின் தாயே,பாவிகளாய் இருக்கிற எங்களுக்காகஇப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும்வேண்டிக்கொள்ளும். - ஆமென். தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவிக்கும் மகிமை உண்டாவதாக./ தொடக்கத்தில் இருந்தது போல/ இப்போதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென் ஆண்டவருடைய தூதர் மரியாளுக்கு தூதுரைத்தார். தூய ஆவியால் அவள் கருத்தாங்கினாள். - அருள் நிறை... இதோ ஆண்டவரின் அடிமை. உமது சொற்படியே எனக்கு ஆகட்டும். - அருள் நிறை... வாக்கு மனிதனானார். நம்மிடையே குடிகொண்டார். - அருள் நிறை... கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படி இறைவனின் தூய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். செபிப்போமாக இறைவா/ உம் திருமகன் மனிதனானதை / உம்முடைய வானதூதை வழியாக அறிந்து இருக்கின்றோம். அவருடைய பாடுகளினாலும் மரணத்தினாலும் நாங்கள் உயிர்ப்ப்பின் மகிமை பெற உமது அருளைப் பொழிவீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.- ஆமென். என் இறைவனாகிய தந்தையே! நீர் நன்மை நிறைந்தவர். எனவே எல்லாவற்றிற்கும் மேலாக / உம்மை நான் அன்பு செய்கின்றேன். என் பாவங்களால் உமது அன்பை மறந்ததற்காக/ மனம் வருந்துகிறேன். உமது அருளுதவியால் இனிமேல் பாவம் செய்வதில்லை என்று உறுதிகூறுகிறேன். - என் இறைவா, உமது திருச்சபை விசுவசித்துப் படிப்பிக்க உண்மைகளை எல்லாம் / நீரே அறிவித்திருப்பதால், அவைகளை எல்லாம் / நான் உறுதியாக ஏற்றுக்கொள்கிறேன். என் இறைவா/ நீர் தந்த வாக்குறுதிகளை / நான் ஏற்றுக் கொள்கிறேன். எங்கள் ஆண்டவர் இயேசுவைன் இரத்தத்தால் என் பாவங்களைப் பொறுத்து எனக்கு உமதி அருளையும் வானக வாழ்வையும் அளிப்பீர் என்று உறுதியாக நம்புகிறேன். ஆமென். என் இறைவா! நீர் அளவில்லாத அன்புக்கு உரியவர் என்பதால் அனைத்திற்கும் மேலாக, உம்மை நான் முழுமனதோடு அன்பு செய்கின்றேன்.அவ்வாறே என்னை நான் நேசிப்பது போல் எல்லோரையும் நேசிக்கிறேன். இரக்கம் மிகுந்த தாயே/ உன் அடைக்கலம் நாடி உதவியைத் தேடி தமக்காய் பரிந்து பேச மன்றாடி வந்த எவரும் ஏமாந்தார் என உலகில் என்றுமே கேட்டதில்லை. அம்மா இதனை நினைத்தருள்வாயே. கன்னியருள் உயர் கன்னியே/ தாயே / இப்பெரும் நம்பிக்கையால் உந்தப்பட்ட நான் உன்னிடம் ஓடிவருகிறேன். பாவி நான். உன் தாள் விழுகிறேன். வார்த்தையின் தாயே/ தள்ளிவிடாதே/ என் மன்றாடைத் தயவாய் கேட்டருளும். அந்துருண்டை அந்துருண்டை (Mothball) என்பது பூச்சிகளிடமிருந்தும் பூஞ்சைகளிடமிருந்தும் உடுப்புகளை பாதுகாக்கப் பயன்படும் ஒரு வேதிப் பூச்சிக்கொல்லியும் வாசனைத் திரவியமும் ஆகும். வழக்கமாக சிறிய வெண்ணிற உருண்டைகளாக விற்கப்படும் இவை, நாப்தலீன் அல்லது பாராடைகுளோரோ பென்சீனால் ஆனவை. சித்தார் சித்தார் ("sitar") நரம்பு இசைக்கருவிகளுள் ஒன்று. இந்துஸ்தானி இசையைச் சிறப்பாக இசைப்பதற்கு இக்கருவி ஏற்றது. குடம் என்ற இதன் பகுதியை மரம் அல்லது சுரைக்காயினால் செய்வர். வீணைக்கும் சித்தாருக்கும் சில வேறுபாடுகள் உள்ளன. வீணையில் மெட்டுகள் மெழுகின் மேல் நிலையாகப் பதிக்கப்பட்டிருக்கும். சித்தாரில் மெட்டுகளை நகர்த்திக் கொள்ளலாம். மெட்டுகள் சற்று வளைவாகவும் இருக்கும். சித்தாரில் ஏழு உலோகத் தந்திகள் உள்ளன. வலக்கை விரல்களால் மீட்டி, இடக்கை ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் தந்தியில் வைத்து வாசிப்பர்கள். மயமதம் மயமதம் என்பது மிகப் பழைய காலத்தில் மயன் என்பவரால் எழுதப்பட்ட சிற்பசாஸ்திர நூலாகும். இது தென்னிந்தியாவிலேயே ஆக்கப்பட்டதாகக் கருதப்படினும், இது எழுதப்பட்ட மொழி வட மொழியாகிய சமஸ்கிருதமாகும். இது மனிதனுக்கான வீடுகள் முதல் இறைவனுக்காக அமைக்கப்படும் பெரிய கோயில்கள் வரையிலான பலவித கட்டிடங்களின் அமைப்பு முறைகள் பற்றி விவரிப்பதுடன், ஊர்கள், நகரங்கள் ஆகியவற்றின் அமைப்புகள் பற்றிய விபரங்களையும் தன்னுள் அடக்கியுள்ளது. கட்டிடங்கள் கட்டுவதற்கான நிலத்தைத் தெரிவு செய்வது முதற் கொண்டு, கட்டிடங்கள் நோக்கவேண்டிய திசை, அதன் அளவுகள், பொருத்தமான கட்டிடப்பொருள்கள் என்பன பற்றியும் மயமதம் விரிவாக எடுத்துரைப்பதுடன், விக்கிரகக் கலையும் இதன் உள்ளடக்கத்துள் அடங்குகிறது. என். எஸ். கிருஷ்ணன் "கலைவாணர்" என்.எஸ். கிருஷ்ணன் (நவம்பர் 29, 1908 - ஆகஸ்ட் 30, 1957) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரும் பாடகரும் ஆவார். நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் 1908ம் ஆண்டு நவம்பர் 29 ஆம் நாள் கலைவாணர் பிறந்தார். நாடகக் கொட்டகைகளில் சோடா விற்கும் பையனாக ஏழ்மை வாழ்க்கை இவரது இளமைப் பருவம். பின் சாதாரண வில்லுப்பாட்டுக் கலைஞராக தனது கலையுலக வாழ்வை துவங்கினார். பின்னர் நாடக துறையில் நுழைந்தார். சொந்தமாக நாடக கம்பெனியையும் நடத்தினார். அப்போது தமிழகத்தில் திரைப்படத்துறை பிரபலமடைந்தது. அதிலும் நுழைந்து தமிழ் திரைப்படத்துறையில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். திரைப்படத் துறையில் இவர் அறிமுகமான திரைப்படம் 1936களில் வெளிவந்த சதிலீலாவதி ஆகும். பெரும்பாலும் சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி அதையே நாடகத்திலும், திரைப்படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நகைச்சுவை மூலமாக கருத்துகளை பரப்பினார். ஏறத்தாழ 150 படங்களில் நடித்தார். இவரது மனைவி மதுரமும் பிரபலமான நடிகை என்பதால் இருவரும் இணைந்தே பல படங்களில் நடித்தனர். நகைச்சுவையை சினிமா காட்சிகளாக மட்டுமின்றி பாடல்களாகவும் அமைக்க முடியும் என நிரூபித்தவர். சொந்த குரலில் பல பாடல்களை பாடியுள்ளார். பழங்கலைகளின் பண்பு கெடாமல் அவற்றைப் புதுமைப்படுத்தி மக்கள் மன்றத்திற்குத் தந்தவர். அவர் நடத்திய கிந்தனார் கதாகாலட்சேபமும், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்றவைகளும் இதற்குச் சான்று. அறிவியல் கருத்துக்கள் நாட்டில் பரவ வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர். ஏறத்தாழ 150 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர் சீர்திருத்தக் கருத்துக்களை திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர். கலையுலகில் கருத்துக்களை வழங்கியது போல் தமது வாழ்க்கையிலும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு பணத்தை வாரி வழங்கியவர். காந்தியடிகளிடமும், காந்திய வழிகளிலும் பற்று கொண்டவர். காந்தியடிகளின் மறைவுக்குப் பின்னர், அவரது நினைவைப் போற்றும் வகையில், ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் தமது சொந்தப் பணத்தைச் செலவிட்டு தனது ஊரில் காந்தியடிகளுக்கு நினைவுத்தூண் எழுப்பினார். அப்போது புகழ்பெற்ற கதாநாயகனாக இருந்த தியாகராஜ பாகவதருடன் இலட்சுமி காந்தன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். இது இவரது கலைப் பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்தியா விடுதலை பெறுவதற்குச் சில மாதங்களுக்கு முன் தான் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்டார். ஏறத்தாழ 30 மாதங்கள் சிறைவாழ்க்கைக்குப் பின்னர் விடுதலை பெற்ற கலைவாணர் மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கினார். எனினும் வழக்குகளிலேயே அவரது சொத்தில் பெரும்பகுதி கரைந்திருந்தது. கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் 1957 ஆகத்து 30 அன்று தனது 49வது வயதில் காலமானார். கிருஷ்ணன்-மதுரம் தம்பதிகளுக்கு 18-2-1948 இரவு 10.50 மணிக்கு பெண்மகவு ஒன்று பிறந்தது. கலைச்செல்வி எனப் பெயரிடப்பட்ட அக்குழந்தை 1948 மே 18 அன்று காலமானாது. மனைவி டி. ஏ. மதுரம் 1974 இல் காலமானார். தமிழ்நாடு அரசு கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் நினைவாக சென்னையில் உள்ள அரசு அரங்கத்திற்கு கலைவாணர் அரங்கம் என பெயர் சூட்டியுள்ளது. இந்த கலைவாணர் அரங்கம் 1035 இருக்கைகளுடன் குளிர் சாதன வசதியுடன் அரங்கம் விழாக்களுக்கும், பொது நிகழ்ச்சிகளுக்கும் வாடகைக்கு விடப்படுகின்றது. வாஸ்து புருஷன் வாஸ்து புருஷன் பற்றிய எண்ணக்கரு வாஸ்து சாஸ்திரத்தின் முக்கியமான ஒரு அம்சமாகும். இந்துக்களின் நம்பிக்கைகளின் அடிப்படையில் கட்டிடத்துக்குரிய நிலம் அல்லது மனை ஒரு சடப் பொருளாக அன்றி உயிர்ப்புச் சக்தி கொண்ட ஒன்றாகவே கருதப்படுகின்றது. இவ்வாறு ஒரு கட்டிட நிலத்தின் உயிர்ப்புச் சக்தியே வாஸ்து புருஷனாக குறியீடாக உருவகப் படுத்தப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகின்றது. இக்குறியீடு வாஸ்து புருஷனை ஆண் பால், மனித உருவம் கொண்டவனாகச் சித்தரிக்கின்றது. வாஸ்து புருஷ மண்டலத்தில் முழு இடத்தையும் பிடித்துக்கொண்டு, வடகிழக்கில் தலையையும், தென்மேற்கில் காலையும் வைத்துக்கொண்டு வாஸ்து புருஷன் குப்புறக் கிடப்பதாகச் சொல்லப்படுகின்றது (படிமம் 1). வாஸ்து புருஷனுடைய தோற்றம் பற்றிக் கூறும் பழங்கதை ஒன்று வாஸ்து நூல்களிலே காணப்படுகின்றது. இதன்படி, பூமியையும், வான் வெளியும் தன்னுடைய உடம்பினால் வியாபித்துக்கொண்டு பூதமொன்று உருவானது. இதனைக் கண்ட பிரம்மா முதலிய தேவர்கள் பயந்து, எல்லோரும் கூடி அப் பூதத்தை முகம் குப்புறப் படுத்த நிலையில் அழுத்திப் பிடித்துக் கொண்டார்கள். இவ்வாறு செய்யும்போது எந்தெந்தத் தேவர்கள் அப் பூதத்தின் எப் பகுதியைப் பிடித்துக் கொண்டார்களோ அவர்களே உடலின் அப்பகுதிக்கு அதிபதிகளாகக் கருதப்படுகிறார்கள். இக்கதை, வாஸ்து புருஷ மண்டலத்தில் பல்வேறு கட்டங்கள் 45 தேவர்களுக்கு அதிபதித் தானங்களாகக் கருதப்படுவதற்கான காரணத் தொடர்பையும் விளக்குகிறது. கட்டிட நிலம் அல்லது மனைக்கும், வாஸ்து புருஷனுக்கும் இடையே உள்ள தொடர்பைக் கூறும் சிற்பநூல்கள், ஒவ்வொரு மாதத்திலும் வெவ்வேறு திசைகளில் தலையை வைத்துக்கொண்டு, இடது கை மேலாகவும், வலது கை கீழேயும் இருக்கப் படுத்து இருப்பதாக உருவகப்படுத்துகின்றன. இந்து சமய நம்பிக்கையுடையோர் புதிதாக வீடு கட்டும் பொழுது வாஸ்து பார்த்து அந்த வாஸ்து நேரத்தில் கட்டிடப் பணிகளைத் தொடங்குகின்றனர். வாஸ்து புருசன் இடது கையைக் கீழேயும், வலது கையை மேலாகவும் வைத்துப் படுத்திருப்பார். ஒவ்வொரு மாதமும் விழிப்பது இல்லை. குறிப்பிட்ட எட்டு மாதங்களில் விழித்திருப்பார். அந்த நாட்களிலும் 3 3/4 நாழிகைதான் (1 1/2 மணி நேரம்) விழித்திருப்பார். அதில் 2 1/4 நாழிகைக்கு மேல் 3 3/4 நாழிகையில்தான் (36 நிமிடம்) வாஸ்து செய்வது சிறந்தது என்கிறார்கள். வாஸ்து புருசன் விழித்திருக்கும் நேரங்களில் அவர் செய்யக்கூடிய பணிகள் இதில் கடைசி 36 நிமிடங்களில் வாஸ்து செய்தால் வீடு சிறப்புடன் நிலைத்து நிற்கும் வாஸ்து வருடத்தில் எட்டு மாதங்களில் கீழ்காணும் அட்டவணைப்படி உள்ள நாள், நேரத்தில் வாஸ்து புருசன் விழித்திருக்கும் நேரம் வாஸ்து நேரம் எனப்படுகிறது. விஸ்வநாத தாஸ் எஸ். எஸ். விஸ்வநாத தாஸ் (சூன் 16, 1886 - திசம்பர் 31, 1940) ஓர் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், நாடக கலைஞரும் ஆவார். விஸ்வநாத தாஸ் சூன் 16, 1886 ஆம் ஆண்டு சுப்ரமணியம் - ஞானாம்பாள் தம்பதிக்கு மூத்த மகனாக சிவகாசியில் பிறந்தார். குரல் வளமும், கலை ஆர்வமும் கொண்டிருந்ததால், மேடை நாடகத்தின்பால் ஈர்க்கப்பட்டார். ஆரம்ப காலங்களில் புராண நாடகங்களில் பக்திப்பாடல்களை மட்டுமே பாடி வந்த இவர் தூத்துக்குடியில் அண்ணல் காந்தியடிகளைச் சந்தித்த பின்னர் காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்தார். தெய்வ பக்தியோடு தேசபக்தியும் ஓங்கும் பாடல்களை இடை இடையே பாடினார். "கதர்கப்பல் தோணுதே', "கரும்புத்தோட்டத்தில் போலீஸ் புலிக்கூட்டம், நம் மீது போட்டு வருது கண்ணோட்டம்” என்பனவும் இவர் மேடையில் பாடிய தேசப்பற்றுப் பாடல்கள். "வெள்ளைக்கொக்கு பறக்குதடி பாப்பா... அதை கோபமின்றி கூப்பிடடி பாப்பா என்ற பாடல் வரிகள் தியாகி விசுவநாததாசை என்றும் நினைவு படுத்துபவை. அவரது பாடல்கள், காங்கிரஸ் கட்சியின் விடுதலை போராட்டங்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டன. ஜாலியன் வாலாபாக் சம்பவத்தையடுத்து அவர் எழுதிய, ‘பஞ்சாப் படுகொலை பாரில் கொடியது’ என்ற பாடல் விடுதலை போராட்டத்தில் முக்கிய இடம் பிடித்தது. புராண நாடகங்களின் வாயிலாக விடுதலை அரசியலை புகுத்தியது இவரது சிறப்பம்சம் என்று ஆய்வாளர்களால் பாராட்டப்படுகிறது. இவரின் நாடகங்களுக்கு அரசு விதித்த தடையை மீறி சிறைத் தண்டனைப் பெற்றவர். ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டு சிறைவாசம் சென்றவர். இவர் திருமங்கலம் வட்ட காங்கிரஸ் கமிட்டியிலும், மதுரை ஜில்லா போர்டிலும், காங்கிரஸின் சார்பில் உறுப்பினராக இருந்தவர். வேடம் தரிப்பதற்கான உடைகளையும், கதர்த் துணியிலேயே தயாரித்து அணிந்து நடந்தவர். 1940 ஆம் ஆண்டு திசம்பர் 31 ஆம் தியதி, தனது 54ஆவது வயதில், முருகன் வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது மேடையிலேயே விஸ்வநாத தாஸ் உயிர்நீத்தார். மயில் மீதமர்ந்த முருக வேடத்திலேயே இவரது இறுதி ஊர்வலம் நடைபெற்றது. சுதந்திர போராட்ட தியாகியும், மேடை நாடகக் கலைஞருமான எஸ்.எஸ்.விஸ்வநாத தாஸின் பிறந்த தினம் சூன் 16 அன்று கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு அரசு தியாகி விஸ்வநாததாஸ் வாழ்ந்த மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள இல்லத்தை தியாகி விஸ்வநாததாஸ் நினைவு இல்லம் - நூலகம் அமைத்துள்ளது. இங்கு தியாகி விஸ்வநாததாஸின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. நூலகம் மற்றும் கண்காட்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 1000 பேர் அமரக்கூடிய அளவில் திருமண மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் குமரன் திருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 – சனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, 1932 சனவரி 10 ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு தடியடிபட்டு மண்டை பிளந்து கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சனவரி 11 இல் உயிர் துறந்தார். இதனால் இவர் கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார். ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகிலுள்ள செ.மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் 1904 அக்டோபர் 4ம் தேதி, நாச்சிமுத்து - கருப்பாயி தம்பதியினருக்கு முதல் மகனாகப் பிறந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப் படிப்பை ஆரம்ப பள்ளியிலேயே முடித்துக் கொண்டார். கைத்தறி நெசவுத் தொழிலை செய்து வந்த குமரன், 1923ல் தனது 19வது வயதில், 14 வயது ராமாயியை மணம் முடித்தார். கைத்தறி நெசவுத் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால், மாற்றுத் தொழில் தேடி திருப்பூர் சென்று, ஈஞ்ஞையூர் கந்தசாமி கவுண்டர் நடத்திய மில்லில் எடைபோடும் பணியில் சேர்ந்தார். காந்தி கொள்கையில் அதிக ஈடுபாடு கொண்ட குமரன், நாட்டு விடுதலைக்காக காந்தி அறிவித்த போராட்டங்களில் எல்லாம் கலந்து கொண்டார். போராட்டத்தில் கலந்து கொண்ட போது, ஆங்கில அரசின் காவல்த் துறையால் தடியடிக்கு உள்ளானார். மண்டை உடைந்து இரத்தம் கொட்டிய போதும், “வந்தே மாதரம் ! பாரத் மாதாகி ஜெய் ! மஹாத்மா காந்திக்கு ஜெய் !” என்ற கோஷங்களை எழுப்பியவாறே கீழே விழுந்தார். கீழே விழுந்த பின்னரும், அவர் தன் கையில் இருந்த, அக்காலத்தில் சுதந்திரத்தின் அடையாளமாகக் கருதப்பட்ட காங்கிரஸ் கொடியை விடாமல் உயர்த்திப் பிடித்தவாறே கிடந்தார். ஜனவரி 10 இல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட திருப்பூர் குமரன் 11 இல் மருத்துவமனையில் அதிகாலையில் உயிரிழந்தார். பொதுமக்கள் அவரது இறுதி ஊர்வலத்தில் பங்குகொண்டனர். முதலில் அவரது தம்பி ஆறுமுகமும், பின்னர் குமரன் தேசத்தின் பொதுச்சொத்து என்று கூறி ராஜ கோபால அய்யர், மாணிக்கம் செட்டியார், வெங்கடாசலம் பிள்ளை என பலரும் இறுதிச் சடங்கான கொள்ளி வைத்தனர். குமரன் மறைந்த ஒரு மாதத்திற்குள் திருப்பூர் வந்த மகாத்மா காந்தி, அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். காமராஜர் உயிருடன் இருந்தவரை குமரன் குடும்பத்தினருடன் அவ்வப்போது தொடர்பு கொண்டு விசாரிப்பார். இவரது துணைவியார் ராமாயி அம்மாள் 1998 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உயிர் நீத்தார். தமிழ்நாடு அரசு திருப்பூர் குமரன் தியாகத்தைப் போற்றும் வகையில் திருப்பூரில் திருப்பூர் குமரன் நினைவகம் ஒன்றை அமைத்துள்ளது. இங்கு தற்காலிக நூல் நிலையம் உள்ளது. படிப்பகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. மேலும் இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்கள் வரைந்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இவரது நூறாவது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில், அக்டோபர் 2004 இல் சிறப்பு நினைவுத் தபால் தலை இந்திய அரசால் வெளியிடப்பட்டது. ப. ஜீவானந்தம் ப. ஜீவானந்தம் (ஆகஸ்ட் 21, 1907 - ஜனவரி 18, 1963) ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர் ஆவார். ஏறத்தாழ பத்து ஆண்டுகளை சிறையில் கழித்தவர். காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவராக படிப்படியாக உயர்ந்தவர். தம்மை நாத்திகராக அறிவித்துக் கொண்டவர். கலை இலக்கிய உணர்வுள்ள ஜீவா பெரும் இலக்கியவாதியாகவும், பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்தவர். குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, ஜனசக்தி, தாமரை ஆகிய பத்திரிகைகளில் கவிதைகளும் ஆய்வுக்கட்டுரைகளும் எழுதியுள்ளார். பாரதியின் பாதையைப் பின்பற்றி பாமரர்களை எழுச்சி பெறச் செய்த பாடல்கள் பலவற்றைப் பாடியவர். பொதுவுடைமை கட்சிக் கூட்டங்களில் முதல் முறையாகத் தமிழ் இலக்கியப் பெருமைகளை பேசி, தமிழ்க் கலாச்சாரத்தோடு, கட்சியை வளர்த்தவர். வைக்கம் சத்தியாக்கிரகம், சுசீந்திரம் தீண்டாமை இயக்கம், சுயமரியாதை இயக்கம் போன்றவைகளில் தனிப் பங்கேற்றவர். 1952ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். நாகர்கோயிலை அடுத்த பூதப்பாண்டி என்ற ஊரில் கிராமத்தில் 1907ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி, பட்டத்தார் பிள்ளை - உமையம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். பெற்றோர் இட்டபெயர் சொரிமுத்து. ஐயனார் என்ற கிராம தெய்வத்தின் பெயர்தான் சொரிமுத்து. இளம் வயதில் அவரைக் கவர்ந்தது மகாத்மா காந்தியின் கொள்கைகள். அந்த நாளில் நாடகம் நடத்திவந்த அஞ்சாநெஞ்சன் விஸ்வநாத தாஸ் என்பவரோடு ஜீவா நெருங்கிப் பழகினார். சில நாடகங்களையும் அவருக்காக எழுதிக் கொடுத்தார். நாடகம் எழுதித் தயாரிக்கும் ஆற்றலுடன் ஒன்பதாவது படிக்கும்போதே முதல் கவிதையை எழுதினார். அந்தக் கவிதை காந்தியையும், கதரையும் பற்றியது. பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது "சுகுணராஜன் அல்லது சுதந்தரவீரன்" என்ற நாவலை எழுதினார். "ஞானபாஸ்கரன்" என்ற நாடகத்தை அவரே எழுதித் தயாரித்து அரங்கேற்றினார். அந்த நாடகத்தில் நடிக்கவும் செய்தார். காந்திய வெளியீடுகளைப் படித்தார். ஜீவானந்தம், அரசியலில் எதிரணியில் இருந்த காமராசரால் பெரிதும் மதிக்கப்பட்டவர். இந்திய சுதந்திரத்திற்குப் பிற்காலங்களில் உடுத்த மாற்றுடை இல்லாத வறுமை நிலையிலும் வாழ்ந்தவர். காந்தியிடமிருந்து ஒத்துழையாமை இயக்க அழைப்பு வந்தது. காந்திஜியின் கட்டளைப்படி அன்னியத் துணிகள் அணிவதை ஒழித்தல் என்ற திட்டத்தின் கீழ், திட்டுவிளை கிராமத்தில் தேசபக்தர் திருகூடசுந்தரம் பிள்ளையின் அன்னியத் துணி எதிர்ப்புப் பிராசாரக் கூட்டம் நடைபெற்றது. அவருடைய பேச்சு ஜீவாவைக் கவர்ந்தது. அது முதல் அவர் கதர் அணியத் தொடங்கினார். பகத் சிங் தூக்கிலிடப்பட்ட காலம் அது. வன்முறையில் நம்பிக்கையற்றவராயிருப்பினும் பகத் சிங்குக்கு அளிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை அவரால் ஏற்க முடியவில்லை. ஜீவா சீறி எழுந்தார். அனல் கக்கும் அவர் பேச்சு இளைஞர்களைக் கவர்ந்தது. சிறையிலிருந்து பகத் சிங் தன் தந்தைக்கு எழுதிய "நான் ஏன் நாத்திகனானேன்?" என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார் ஜீவா. ஈ.வெ.ரா. பெரியார் அதை வெளியிட்டார். அதற்காக ஜீவாவைக் கைதுசெய்து, கை - கால்களில் சங்கிலியிட்டு வீதி வீதியாக இழுத்துச் சென்று திருச்சி சிறையில் அடைத்தனர். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஜீவா முழுக்க முழுக்க சோசலிசக் கொள்கையால் ஈர்க்கப்பட்டார். ஜீவாவின் தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கை அவரது ஊர் மக்களுக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது. மகன் போக்கிற்கு தந்தையை எதிர்த்தனர். ஜீவாவின் சார்பில் தந்தை மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். அதற்கு ஜீவா ஒப்புதல் தரவில்லை. இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தன் கொள்கையைத் துறக்க ஜீவா இசையவில்லை. இறுதியில் அவர் குடும்பத்தைத் துறந்து வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது அவருக்கு வயது 17. வ.வே.சு. ஐயர் நடத்திய தேசிய குருகுலத்தில் இளம் வயதிலேயே ஜீவானந்தம் ஆசிரியர் பணி ஏற்றிருந்தார். ஐயரின் தீண்டாமைக் கொள்கையை ஏற்கவில்லை. அந்த ஆசிரமம் மூடப்பட்ட பிறகு காரைக்குடிக்கு அருகில், சிராவயல் என்ற ஊரில் காந்தி ஆசிரமத்தை உருவாக்கினார். கடலூர் சட்டமன்றத் தொகுதி ஹரிஜன வகுப்பைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. மகள் கண்ணம்மாவைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், அந்த அம்மையார் குமுதா என்ற பெண் மகவைப் பெற்றெடுத்த சில நாள்களில் காலமானார். அதன்பிறகு 1948ஆம் ஆண்டு பத்மாவதி என்னும் பெண்ணை கலப்புத் திருமணம் செய்துகொண்டார். உஷா, உமா என்ற இரு பெண் குழந்தைகளும் மணிக்குமார் என்ற மகனும் பிறந்தனர். ஜீவாவின் இறுதிக்காலச் செயல்பாடுகளில் முதன்மையாகக் கருதத்தக்கது அவரது ‘கலை இலக்கியப் பெருமன்றம்’ உருவாக்கம் என்று கூறமுடியும் (1961). கொள்கையைப் பரப்ப "ஜனசக்தி" நாளிதழைத் தொடங்கிய ஜீவா, "தாமரை" என்ற இலக்கிய இதழை 1959 இல் தொடங்கினார். அதில், பொதுவுடமைக் கொள்கைக் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் "தமிழ் மணம் பரப்ப" என்று பாராட்டி கவிதைகள் எழுதினார். 1933 இல் ஜீவா எழுதிய "பெண்ணுரிமை கீதாஞ்சலி" என்ற கவிதை நூல் வெளிவந்தது. இதுதான் ஜீவா எழுதிய முதல் நூல். அப்போதிலிருந்து இந்த நாடு விடுதலை அடையும்வரை பல்வேறு சூழ்நிலைகளில் தொழிலாளர்கள் போராட்டங்களில் ஜீவா எழுதிய பாடல்கள், தொழிலாளர்களை எழுச்சி பெறச்செய்தன. ஜீவா பொதுவுடமைவாதியாகச் செயல்படுவதற்கு அடிப்படையாக அமைந்த காலச்சூழல் 1935-39 ஆகும். இக்காலங்களில்தான் ‘ஜனசக்தி’ இதழ் உருவாக்கப்பட்டது (1937). ‘தொழிலாளர் பாதுகாப்புக் கழகம்’ எனும் பெயரில் கம்யூனிஸ்டுகள் உருவாக்கிய அமைப்பின் மூலம் பல்வேறு தொழிற்சங்க அமைப்புகள் உருவாயின. இவற்றின் மூலம் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடினர். இரண்டாம் உலகப்போர் உருவாவதற்கான ‘பெரும் அழுத்தம்’ உருவாகும் சூழலில் கம்யூனிஸ்டுகளால் முன்னெடுக்கப்பட்ட தொழிலாளர், விவசாய இயக்கங்களின் எழுச்சி பிரித்தானிய அரசு எந்திரத்தைத் தூக்கியெறிவதற்கான அடிப்படைகளை உருவாக்கிற்று. இதனை அடி மட்டத்தில் சாத்தியப்படுத்தியவர்களாகக் கம்யூனிஸ்டுகள் இருந்தார்கள். ஜீவா 1930களில் தன்னை சுயமரியாதை இயக்கத்தவனாகவும் அடையாளப்படுத்திக் கொண்டார். இந்தியக் காங்கிரஸ் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு 1932 இல் சிறையில் அடைக்கப்பட்டார். மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கம்யூனிஸ்ட் தோழர்கள் பலர் சிறையில் இருந்தனர். சிறை ஜீவாவின் சிந்தனைப்போக்குகளை மாற்றியது. ‘சிறையிலிருந்து நான் வெளிவரும்போது, கம்யூனிசக் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டவனாகவே வெளியே வந்தேன்’ என்று ஜீவா எழுதுகிறார். கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பதவி வகித்த ஜீவா, சீனப் படையெடுப்பை எதிர்த்துக் கடும் பிரசாரம் செய்தார். சீன சோஷலிச அரசு இந்தியாவில் ஆக்கிரமிப்பு செய்ததை ஜீவா ஏற்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றுவதில் ஜீவா முக்கிய பங்கேற்றார். கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலங்களில் (1939-42) பம்பாயிலும் சிறையிலும் தனது பெரும்பகுதியான நாள்களை ஜீவா கழித்தார். இக்காலங்களில், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியிலிருந்து கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டுவதற்கான செயல்பாடுகளில் தோழர்களோடு இணைந்து தீவிரமாகச் செயல்பட்டார். 1948 இல் கம்யூனிஸ்ட் கட்சித்தடை செய்யப்பட்டபோது இலங்கைக்குச் சென்று செயல்பட்டார். இக்காலங்களில் மார்க்சியக் கல்வி பயிலுவதை முதன்மைப்படுத்திக் கொண்டார். சோசலிசச் சரித்திரம், சோசலிசத் தத்துவம் சார்ந்த மூல நூல்களை வாசித்த அனுபவம் சார்ந்து, தமிழில் அப்பொருண்மை குறித்து எழுதினார். மார்க்சிய கருத்துகளைத் தமிழில் சொல்வதற்கு ஜீவா பல புதிய சொல்லாட்சிகளை உருவாக்கியுள்ளார். 1940 களின் இறுதி ஐம்பதுகளின் தொடக்கத்தில் ஜீவா எழுதிய ‘சோசலிசச் சரித்திரம்’ மற்றும் ‘சோசலிசத் தத்துவம்’ எனும் சிறு நூல்களைத் தொடர்ந்து அத்துறை சார்ந்த சோவியத் நூல்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டன. காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி, மற்றும் அதன் தொழிலாளர் பாதுகாப்புக் கழகம், சுயமரியாதை சமதர்மக்கட்சி ஆகியவற்றில் தலைமைப் பொறுப்பேற்க வேண்டிய சூழல் ஜீவாவிற்கு உருவானது. ‘சமதர்மம்’, ‘அறிவு’, ‘ஜனசக்தி’ ஆகிய இதழ்களின் ஆசிரியர் பொறுப்பையும் இக்காலங்களில் ஏற்றிருந்தார். ஈ.வெ.ராவோடு கருத்துமுரண் ஏற்பட்ட சூழலில் தோழர்கள் அ. ராகவன், நீலாவதி, இராமநாதன் உள்ளிட்டவர்களோடு இணைந்து ‘சுயமரியாதைச் சமதர்மக் கட்சி’யை உருவாக்கினார். அவ்வியக்கத்தின் இதழ்களாகவே ‘சமதர்மம்’ மற்றும் ‘அறிவு’ ஆகியவை செயல்பட்டன. அக்கட்சியின் முதல் மாநாடு திருச்சியில் நடைபெற்றது (1936), டாங்கே அம்மாநாட்டின் தலைமையுரையை நிகழ்த்தினார். இவ்வகையில் காங்கிரசிலிருந்து வெளியே வந்து, சோசலிசக் கருத்தாக்கம் சார்ந்த சுயமரியாதை இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று ஜீவா விரும்பினார். இதற்கு முரணாக ஈ.வெ.ரா. செயல்படுவதாகக் கருதினார். குறிப்பாக அக்காலங்களில் நடைபெற்ற தேர்தலில், நீதிக்கட்சியுடன் ஈ.வெ.ரா. கொண்டிருந்த தொடர்பை, ஜீவா ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு எதிராகச் செயல்பட்டு காங்கிரஸ் தேர்தலில் வெற்றிபெற காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்காரராகச் செயல்பட்டார். இந்தப் பின்புலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம், காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் பெயரில் ஜனசக்தியை வார இதழாக வெளிக்கொண்டு வந்தது (1937). சென்னை வண்ணாரப்பேட்டைத் தொகுதியிலிருந்து வென்று சட்டமன்றத்திற்கு சென்றார் ஜீவா. 1952 முதல் 1957 வரை அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.1957, 1962 சட்டமன்ற தேர்தல்களில் மீண்டும் போட்டியிட்டாலும் வெற்றிப்பெற முடியவில்லை. 1952 ஜூலையில் மதுவிலக்கு பற்றிய விவாதம் சபையில் நடந்தது. மது அருந்தக் கூடாது என்று காந்திஜி கூறினார் என்றார்கள் காங்கிரஸ்காரர்கள். ஜீவாவோ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவர் கூறியிருக்கிறார் என்றார். நஞ்சுண்பார்கள் உண்பவர் என்கிற குறளைக் கையாண்டார். அதே நேரத்தில், பிரச்சனையை தர்க்க ரீதியாகவும், நடைமுறை சார்ந்தும் அலசினார். பல நூற்றாண்டுகளாக இப்படி மதுவிலக்கு வற்புறுத்தப்பட்டும் ஏன் அதை ஒழிக்க முடியவில்லை என்கிற கேள்வியை எழுப்பினார். இவ்வளவு காலமாக முடியாதது ஒரு சட்டத்தால் மட்டும் முடிந்து விடுமா என்றார். முடியவில்லை என்பதற்கு அரசு தரப்பில் தரப்பட்டிருந்த புள்ளி விபரங்களைச் சுட்டிக் காட்டினார். மதுவிலக்கு சட்டத்தை மீறுவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கூடி வருவதை எடுத்துக் காட்டினார். ராஜாஜி ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் பஞ்சம் தலைவிரித்தாடியது, பிச்சைக்காரர்கள் பெருகிப் போனார்கள். இது பற்றி சட்டமன்றத்தில் காரசாரமான விவாதம் நடைபெற்றது. அப்போது தலையிட்டு பேசிய ராஜாஜி தனது ஆட்சிக்கு முன்பு ஊரில் பிச்சைக்காரர்களே இல்லையோ என்று கேலியாகக் கேட்டார். அதற்கு ஜீவா கூறியது - குலக் கல்வித் திட்டத்துக்கு ஏற்பட்ட எதிர்ப்பைத் தொடர்ந்து ராஜாஜி பதவி விலக, 1954 ஏப்ரலில் காமராஜர் முதலமைச்சர் ஆனார். அந்த ஆண்டு இறுதியில் நாடகங்களை நெறிப்படுத்துவதாகச் சொல்லி அரசு ஒரு மசோதாவைச் சபையில் தாக்கல் செய்தது. குறிப்பாக நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நாடகங்களைத் தடை செய்வதற்காகவே இப்படியொரு மசோதாவைக் கொண்டு வந்தார்கள். புனிதமானவர்கள் என்றும், தெய்வாம்சம் என்றும் பலரால் நெடுங்காலமாகப் போற்றப்பட்ட புராணப் பாத்திரங்களை அவமதிப்பதை மத உணர்ச்சியைப் புண்படுத்துவதைத் தடுப்பதே மசோதாவின் நோக்கம்என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. இதற்கு ஜீவா தந்த பதிலடி மிக நுணுக்கமானது . "நான் ஒரு நாத்திகன்" - ஜீவா தமிழ்நாடு அரசு ப.ஜீவானந்தம் நினைவைப் போற்றும் வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் பொதுவுடைமை வீரர் ப.ஜீவானந்தம் மணிமண்டபம் அமைத்துள்ளது. இங்கு ப.ஜீவானந்தம் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்ப்பட்டுள்ளது. இவரின் பெயரால் புதுச்சேரியில் "ஜீவானந்தம் அரசு மேனிலைப் பள்ளி" பெயரிடப்பட்டுள்ளது. எம். பக்தவத்சலம் 1960ஆம் ஆண்டு சோவியத் நாட்டின் அழைப்பை ஏற்று அந்நாட்டிற்குச் சென்று வந்த அவர், ‘இன்னும் இரு ஐந்தாண்டுத் திட்டங்களை நாம் நிறைவேற்றி விட்டால் நாமும் அவர்களது நிலையை அடைந்துவிடலாம், என்று அப்போதே நம்பிக்கையுடன் குறிப்பிட்டவர். அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் ஒரு மனிதாபிமான உணர்வோடு, மனிதநேய உணர்வோடு வாழ்ந்து காட்டியவர். தமிழ்நாடு அரசு எம்.பக்தவத்சலம் நினைவைப் போற்றும் வகையில் சென்னை கிண்டியில் அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவருக்கு நினைவிடம் அமைத்து, எம்.பக்தவத்சலம் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசம் இமாசலப் பிரதேசம் இந்தியாவில் உள்ள மாநிலங்களுள் ஒன்று. 1948 முதல் இந்தியாவின் ஒரு ஆட்சிப் பிரதேசமாக விளங்கி வந்த இமாசலப் பிரதேசம், இந்தியாவின் 18ஆவது மாநிலமாக 25 ஜனவரி 1971ல் அறிவிக்கப் பட்டது. இந்த மாநிலத்தின் தலைநகர் சிம்லா. குல்லு, மனாலி, தர்மசாலா ஆகியவை மற்ற பெரிய ஊர்கள். காங்கிரி, பஹாரி, பஞ்சாபி, ஹிந்தி, மண்டியாலி ஆகிய மொழிகள் இம்மாநிலத்தில் பேசப்படுகிறது. இந்து சமயம், புத்த சமயம், சீக்கியம் ஆகிய மதங்கள் பெரும்பான்மையாக பின்பற்றப் படுகிறது. தலாய் லாமாவும் மற்ற திபேத்திய அகதிகளும் இமாசலப் பிரதேசத்திலுள்ள தர்மசாலாவில் வசிக்கின்றனர். இமாசல பிரதேசம் இமய மலையில் அமைந்துள்ளதால் இம்மாநிலம் மலையும் மலை சார்ந்த பகுதிகளாகவுமே காணப்படுகிறது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், உத்தராஞ்சல் ஆகியவை இமாசலப் பிரதேசத்தின் அண்மையில் அமைந்த மாநிலங்கள். இமாசலப் பிரதேசத்தின் கிழக்கில் திபெத் உள்ளது. கக்கர், சட்லெஜ், பீஸ் ஆகியவை இங்கு பாயும் நதிகளாகும். இமாசலப் பிரதேசத்தின் மொத்த நிலப்பரப்பு 55658 சதுர கி.மீ. இமாசலப் பிரதேசம் 12 மாவட்டங்களாக பிரிக்கப் பட்டுள்ளது. அவைகள்; நஹான், நைனா தேவி, பிலாஸ்பூர், மணாலி, சிம்லா, டல்ஹவுசி மற்றும் தர்மசாலா ஆகும். 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இமாசலப் பிரதேசம் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 6,864,602 ஆக உள்ளது. நகர்புறங்களில் 10.03% மக்களும், கிராமப்புறங்களில் 89.97% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 12.94% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் ஆண்களும் 3,481,873 மற்றும் 3,382,729 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 972 பெண்கள் வீதம் உள்ளனர். 55,673 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 123 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 82.80 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 89.53 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 75.93 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 777,898 ஆக உள்ளது. இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 6,532,765 (95.17 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 149,881 (2.18 %)ஆகவும், சீக்கிய சமயத்தவரின் மக்கள் தொகை 79,896 (1.16 %) ஆகவும் கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 12,646 (0.18 %)ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 79,896 ஆகவும் (1.16 %), சமண சமய மக்கள் தொகை 1,805 (0.03 %)ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 78,659 (1.15 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 856 (0.01 %)ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 1,805 (0.03 %) ஆகவும் உள்ளது. இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், திபெத்திய மொழி மற்றும் வட்டார மொழிகளும் பேசப்படுகிறது. மத்தியப் பிரதேசம் மத்தியப் பிரதேசம் என்பது இந்தியாவில் உள்ள ஒரு மாநிலமாகும். இதன் தலைநகர் போபால். இந்தூர், உஜ்ஜயினி, குவாலியர் ஆகியவை மற்ற முக்கிய நகரங்கள். இந்தி மொழி இங்கு பெரும்பான்மையாக பேசப்படும் மொழி ஆகும். இந்தியாவின் மத்தியப் பகுதியில் அமைந்ததால் இம்மாநிலம் மத்தியப் பிரதேசம் எனப் பெயர் பெற்றது. மத்தியப் பிரதேசம் இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமாக விளங்கி வந்தது. 2000ஆம் ஆண்டில் சட்டிஸ்கர் இம்மாநிலத்திலிருந்து பிரித்தெடுக்கப் பட்டதால் இச்சிறப்பை இழந்தது. மத்தியப் பிரதேசத்தின் அண்மையில் அமைந்த மாநிலங்கள் குஜராத், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், சட்டிஸ்கர், மகாராஷ்டிரம் ஆகியவை. விந்திய மலைத்தொடர் மற்றும் சத்புரா மலைத்தொடர்கள் வட இந்தியாவையும் தென் இந்தியாவையும் பிரிக்கிறது. நர்மதை நதி மத்தியப் பிரதேசத்தின் வழியாகப் பாய்கிறது. கி மு 6ஆம் நூற்றாண்டில் பண்டைய உஜ்ஜைன் பெரு நகரம், மால்வா எனப்படும் அவந்தி நாட்டின் தலைநகராக விளங்கியது. அவந்தி நாட்டின் வடக்கில் சேதி நாடு இருந்தது. சந்திரகுப்த மௌரியர் ஆட்சிக் காலத்தில் மகதப் பேரரசின் கீழ் மத்தியப் பிரதேசம் சென்றது. கி மு 3ஆம் நூற்றாண்டில் சகர்களும், குசானர்களும், உள்ளூர் ஆட்சியாளர்களும் மத்தியப் பிரதேசத்தை ஆண்டனர். கி பி 1 முதல் 3ஆம் நூற்றாண்டு வரை, வடக்கு தக்கானத்தின் சாதவாகனப் பேரரசு மற்றும் சகர் குல மேற்கு சத்ரபதிகள் மத்தியப் பிரதேசத்தை கைப்பற்றி ஆளும் போரில் ஈடுபட்டனர். கி பி இரண்டம் நூற்றாண்டில் தென்னிந்தியாவின் சாதவாகனர் குல மன்னர் கௌதமிபுத்ர சதகர்ணி என்பவர், மத்தியப் பிரதேசத்தின் மால்வா மற்றும் தற்கால குசராத்து பகுதிகளை ஆண்டு கொண்டிருந்த சகர்களை வெற்றி கொண்டார். கி பி 4 மற்றும் 5ஆம் நூற்றாண்டுகளில் குப்தப் பேரரசு காலத்தில் மத்தியப் பிரதேசம் குப்தர்கள் ஆட்சியின் கீழ் சென்றது. கி பி 5ஆம் நூற்றாண்டு முடிய தக்கானத்தின் வடக்கில், குப்தப் பேரரசின் அருகில் அமைந்த வாகாடகப் பேரரசு வங்காள விரிகுடா முதல் அரபுக் கடல் வரை பரந்திருந்தது. மத்தியப் பிரதேசமும் வாகாடகப் பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்தது. தானேசுவரம் நகரத்தை தலைநகராகக் கொண்ட ஹர்ஷவர்தனர், தான் 647இல் இறக்கும் முன்னர், மத்தியப் பிரதேசத்தை உள்ளடக்கிய வட இந்தியா முழுவதையும் ஹர்சப் பேரரசில் கொண்டு வந்தார். கி பி 8 முதல் 10 நூற்றாண்டு முடிய, மத்தியப் பிரதேசத்தின் மால்வா எனும் அவந்தி பகுதிகளைக் கைப்பற்றி, தென்னிந்தியாவின் இராஷ்டிரகூடர்கள் ஆண்டனர். மத்திய காலத்தில் இராஜபுதனத்தின் இராசபுத்திர குலத்தின் பரமாரப் பேரரசு மத்திய இந்தியாவின் அவந்தி பகுதியிலும், புந்தேல்கண்ட் பகுதியில் சந்தேலர்களும் கைப்பற்றி ஆண்டனர். சந்தேலர்கள், கஜுராஹோ கோயில்களை கட்டினர். விந்திய மலைத் தொடரில் உள்ள கோண்டுவானா இராச்சியமும், மகாகோசல இராச்சியமும் உருவெடுத்தது. 13ஆம் நூற்றாண்டில் வடக்கு மத்தியப் பிரதேசம் தில்லி சுல்தான்களால் கைப்பற்றப்பட்டது. அக்பர் (1556 – 1605) ஆட்சிக் காலத்தில் மத்தியப் பிரதேசத்தின் ஏறக்குறைய அனைத்துப் பகுதிகளும் முகலாயப் பேரரசில் வீழ்ந்தது. 1707இல் அவுரங்கசீப்பின் மறைவுக்குப் பின்னர் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த முகலாயப் பேரரசை, மராத்தியர்களும், இராசபுத்திரர்களும் கடுமையாக தாக்கி நலிவுறச் செய்தனர். கி பி 1720 – 1760 இடைப்பட்ட காலத்தில், மராத்தியர்கள் மத்தியப் பிரதேசத்தின் பெரும் பகுதிகளை பேஷ்வாக்கள் எனப்படும் மராத்தியப் படைத் தலைவர்கள் கைப்பற்றி பிரித்துக் கொண்டு ஆண்டனர். 1761இல் நடந்த மூன்றாம் பானிபட் போருக்குப் பின்னர், மராத்தியப் பேரரசின் விரிவாக்கம் நின்று விட்டது. மத்தியப் பிரதேசதம், பிரித்தானிய இந்தியா அரசின் நேரடி ஆட்சியின் வந்தது. 1853இல் மத்தியப் பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதி, மற்றும் மகாரஷ்டிராவின் கிழக்குப் பகுதிகள், மற்றும் சத்தீஸ்கர்|சத்தீஸ்கரின்]] பெரும் பகுதிகளை கொண்டிருந்த நாக்பூர் சுதேச சமஸ்தானத்தை ஆங்கிலேயர்கள் தங்களின் நேரடி ஆட்சியில் கொண்டு வந்தனர். இந்தியப் பிரிவினைக்கு பிறகு 1950இல் நாக்பூரை தலைநகராகக் கொண்ட மத்திய இந்தியா முகமையின் பகுதிகள், புந்தேல்கண்ட், சத்தீஸ்கர், போபால் சமஸ்தானம், விதர்பா என்ற பேரர் சமஸ்தானம் ஆகிய பகுதிகளைக் கொண்டு மத்திய பாரதம், விந்தியப் பிரதேசம் உருவானது. பின்னர் 1956இல் மத்திய பாரதம், விந்திய பிரதேசம் மற்றும் போபால் சமஸ்தானங்களை உள்ளடக்கிய பகுதிகளை இணைத்து மத்தியப் பிரதேச மாநிலம் உருவாக்கப்பட்டது. நவம்பர் 2000ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதிகளைக் கொண்டு, சத்தீஸ்கர் எனும் புதிய மாநிலம் துவக்கப்பட்டது. மத்தியப் பிரதேச மாநிலத்தை நிர்வாக வசதிக்காக போபால் கோட்டம், சம்பல் கோட்டம், குவாலியர் கோட்டம், இந்தூர் கோட்டம், ஜபல்பூர் கோட்டம், நர்மதாபுரம் கோட்டம், ரேவா கோட்டம், சாகர் கோட்டம், ஷாடோல் கோட்டம் மற்றும் உச்சையினி கோட்டம் எனப் பத்து கோட்டங்களில் பின் வரும் ஐம்பத்து ஒன்று மாவட்டங்களை இணைத்துள்ளனர். 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 72,626,809 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 72.37% மக்களும், நகரப்புறங்களில் 27.63% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 20.35% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 37,612,306 ஆண்களும் மற்றும் 35,014,503 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 931 பெண்கள் வீதம் உள்ளனர். 308,252 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 236 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 69.32 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 78.73 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 59.24 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 10,809,395 ஆக உள்ளது. இம்மாநில மக்கள் தொகையில் பில் பழங்குடி மக்கள் தொகை 46,19,068 ஆக உள்ளது. இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 66,007,121 (90.89 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 4,774,695 (6.57 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 213,282 (0.29 %) ஆகவும் சீக்கிய சமயத்தவரின் மக்கள் தொகை 151,412 (0.21 %) ஆகவும் சமண சமய மக்கள் தொகை 567,028 (0.78 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 216,052 (0.30 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 599,594 (0.83 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 97,625 (0.13 %) ஆகவும் உள்ளது. இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் பழங்குடி மக்களால் வட்டார மொழிகளும் பேசப்படுகிறது. மத்தியப் பிரதேச மாநிலம் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்டச் சாலைகள் மாநிலத்தின் மற்றும் நாட்டின் அனைத்து பகுதிகளையும் தரைவழியாக இணைக்கிறது. அகில்யாபாய் பன்னாட்டு விமான நிலையம் நாட்டின் மற்றும் பன்னாட்டு நகரங்களை வான் வழியாக இணைக்கிறது. ஜபல்பூர், குவாலியர், கஜுரஹோ, ரட்லம், உஜ்ஜைன், சட்னா மற்றும் ரேவாவில் உள்ள உள்நாட்டு விமான நிலையங்கள் இந்தியாவின் பிற நகரங்களை இணைக்கிறது. போபால் தொடருந்து நிலையம் நாட்டின் அனைத்து நகரங்களுடன் இருப்புப்பாதை வழியாக இணைக்கிறது. தனியார், இந்திய அரசு மற்றும் மத்தியப் பிரதேச அரசுகள், அனல் மின் நிலையங்கள், புனல் மின் நிலையங்கள், அணுமின் நிலையங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 16678.67 மெகாவாட் (செப்டம்பர் 2015) மின்சாரம் உற்பத்தி செய்யும் நிறுவனங்களை கொண்டுள்ளது. இம்மாநிலம் 230 சட்டமன்றத் தொகுதிகளும், இருபத்து ஒன்பது நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளும் கொண்டது. இம்மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2013-2014-ஆம் ஆண்டில் 4,509 பில்லியனாக இருந்தது. 2013-2014-ஆம் ஆண்டில் தனிநபர் வருவாய் ஆண்டிற்கு 871.45 அமெரிக்க டாலராக இருந்தது. இம்மாநிலத்தின் பொருளாதாரம் வேளாண்மைத் துறையே சார்ந்துள்ளது. இங்கு கோதுமை, சோயாபீன்ஸ், பருப்பு வகைகள், கரும்பு, நெல், நவதானியங்கள், பருத்தி, ஆமணக்கு, கடுகு, சோளம் பயிரிடப்படுகிறது. மேலும் காடுகளில் கிடைக்கும் மூலிகைச் செடி கொடிகள், பீடி இலைகள், எண்ணெய் வித்துக்கள், தேக்கு மர விதைகள் மற்றும் மரக்கட்டைகள் பழங்குடி மக்களின் மற்றும் கிராமியப் பொருளாதாரத்திற்கு வழு சேர்க்கிறது. இம்மாநிலம் ஐந்து சிறப்பு பொருளாதா மண்டலங்களைக் கொண்டுள்ளது. அதில் இந்தூர் மற்றும் குவாலியரில் செயல்படும் மூன்று தகவல் தொழில் நுட்ப நிலையங்களும், ஜபல்பூரில் ஒரு கனிம வள தொழில் நுட்ப நிறுவனமும் மற்றும் ஒரு வேளாண்மை சார்ந்த தொழில் நுட்ப நிறுவனமும் அடங்கும். இந்தூர் மாநிலத்தின் மிகப்பெரிய வணிகச் சந்தையாக உள்ளது. செம்பு மற்றும் வைர உற்பத்தியில் நாட்டில் முதன்மை மாநிலமாக உள்ளது. நிலக்கரி, மீத்தேன் எரிவாயு, மங்கனீசு, தோலமைட் போன்ற கனிம வளங்கள் கொண்ட மாநிலம். இம்மாநிலத்தின் ஜபல்பூர் மற்றும் கட்னி மாவட்டங்களில் ஆறு இராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளது. உலகப் பாரம்பரியக் களங்களான சாஞ்சி, பீம்பேட்கா பாறை வாழிடங்கள் மற்றும் கஜுராஹோ இம்மாநிலத்தில் அமைந்துள்ளது. 12 ஜோதிர் லிங்க தலங்களில் ஒன்றான உஜ்ஜைன் மகாகாலேஸ்வரர் கோயில் மற்றும் ஓங்காரேஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்திபெற்றது. ஓர்ச்சா குனோ வனவிலங்கு சரணாலயம் மற்றும் கன்ஹா தேசியப் பூங்கா பார்க்க வேண்டியவைகளாகும். ஒடிசா ஒடிசா ("Odisha", பழைய பெயர் ஒரிசா ("Orissa")) , இந்தியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும்.. ஒடிசா, தாதுவளம் நிறைந்த மாநிலமாகும். இங்கு இரும்புத்தாது கிடைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஒடிசாவின் தலைநகர் புவனேசுவரம். கட்டக், கொனார்க் சூரியன் கோயில், புரி ஆகியவை மற்ற நகரங்கள். புரியிலுள்ள ஜகன்னாத் புரி கோவில் மிகவும் புகழ் பெற்றது. இங்கு பேசப்படும் மொழி ஒடியா. ஒடிசாவின் வடக்கில் சார்க்கண்ட் மாநிலமும், வடகிழக்கில் மேற்கு வங்காளமும், கிழக்கு, தென்கிழக்கில் வங்காள விரிகுடாவும், தெற்கில் ஆந்திரப் பிரதேசமும், மேற்கில் சத்தீசுகர் மாநிலமும் அமைந்துள்ளன. ஒரிசா 31 வருவாய் மாவட்டங்களை கொண்டது. அவைகள்; 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 41,974,218 ஆக உள்ளது. நகர்புறங்களில் 16.69% மக்களும்; கிராமப்புறங்களில் 83.31% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 14.05% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 21,212,136 ஆண்களும் மற்றும் 20,762,082 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 979 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 270 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 72.87 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 81.59 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 64.01 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5,273,194 ஆக உள்ளது. இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 39,300,341 (93.63 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 911,670 (2.17 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 1,161,708 (2.77 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 21,991 (0.05 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 9,420 (0.02 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 13,852 (0.03 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 478,317 (1.14 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 76,919 (0.18 %) ஆகவும் உள்ளது. இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான ஒரியா மொழியுடன், வங்காளம், தெலுங்கு, இந்தி மற்றும் உருது மொழிகளும் பேசப்படுகிறது. ஒரிசாவில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்; கொனார்க் சூரியக் கோயில், புரி ஜெகன்நாதர் கோயில் மற்றும் லிங்கராஜர் கோயில் ஒரிசாவின் புரி நகரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் நடைபெறும் புரி ஜெகன்நாதர் தேரோட்டம் புகழ் வாய்ந்தது. ஒரிசா மாநிலத்தின் சிறப்பான நடனம் ஒடிசி ஆகும். சத்தீசுகர் சத்தீஸ்கர் ("Chhattisgarh") இந்தியாவின் மாநிலங்களில் ஒன்று. 1 நவம்பர் 2000 அன்று மத்தியப் பிரதேச மாநிலத்தின் பதினாறு தென்கிழக்கு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப் பட்டது. ராய்ப்பூர் இம்மாநிலத்தின் தலைநகர். மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ஆந்திரப் பிரதேசம், ஒரிசா, ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம் ஆகியவை சத்தீஸ்கரின் அண்மையில் உள்ள மாநிலங்கள். பண்டைய காலங்களில், இந்த பகுதியில் தட்சிண கோசலம் (தென் கோசலை) என அறியப்பட்டது. மேலும் இப்பகுதி மேலும் இராமாயணம், மகாபாரதம் போன்றவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆறாவது மற்றும் பன்னிரண்டாம் நூற்றாண்டுகளுக்கு இடையில் இப்பகுதியில் ஷரப்புரியர், பாண்டுவன்சி, சோமவன்சி, கலாச்சூரி, நாகவன்சி போன்ற ஆட்சியாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். 11 ஆம் நூற்றாண்டில் சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியின் மீது சோழப் பேரரசின் முதலாம் ராஜேந்திர சோழன் மற்றும் முதலாம் குலோத்துங்க சோழன் ஆகியோர் படையெடுத்தனர். சத்தீஸ்கர் மராத்தா ஆட்சியாளரின்கீழ் (நாக்பூர் பான்லே) கி.பி. 1741 முதல் 1845 வரை இருந்தது. பின்னர் 1845 முதல் 1947 வரை பிரித்தானியரின் ஆட்சியின்கீழ் மத்திய மாகாணத்தின் சத்தீஸ்கர் பிரிவாக இருந்தது. 1905 ஆம் ஆண்டில், சம்பல்பூர் மாவட்டம் ஒடிசாவுடன் இணைக்கப்பட்டது மேலும் சுர்குஜா பாளையம் வங்கத்திடமிருந்து சட்டீஸ்கருக்கு மாற்றப்பட்டது. இந்தப் பகுதி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி 1 நவம்பர் 1956 அன்று புதிய மாநிலத்துடன் இணைக்கப்பட்டது, இதன்பிறகு ஒரு மாநிலத்தின் பகுதியாக 44 ஆண்டுகள் இருந்தது. இப்பகுதி மத்தியப் பிரதேசம் என்ற புதிய மாநிலத்தின் ஒரு பகுதியாக ஆவதற்கு முன்னர், நாக்பூரைத் தலைநகராக கொண்ட, பழைய மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அதற்கு முன்னர், பிரித்தானிய ஆட்சியின்கீழ் மத்திய மாகாணம் மற்றும் பெராரின் (மமா மற்றும் பெரார்) பகுதியாக இருந்தது. சத்தீஸ்கர் அரசு சம்பந்தப்பட்ட பகுதிகளில் பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்த சில சுதேச அரசுகளும் இருந்தன, ஆனால் பின்னர் அவை மத்தியப் பிரதேசத்துடன் இணைக்கப்பட்டன. தற்போதைய சத்தீசுகர் மாநிலம் 2000 நவம்பர் அன்று மத்தியப் பிரதேசத்தில் இருந்து தனியாகப் பிரிக்கப்பட்டது, என்றாலும் தனி மாநிலக் கோரிக்கை 1920களிலேயே எழுப்பப்பட்டது. இந்தக் கோரிக்கை தொடர்ந்து வைக்கப்பட்டு வந்தது என்றாலும், தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி ஒழுங்கமைக்கப்பட்ட இயக்கம் தொடங்கப்பட்டாமல் இருந்தது. அனைத்துக் கட்சிக் கூட்டங்கள் கூடி மனுக்கள் அளிப்பது, பொதுக் கூட்டங்கள், கருத்தரங்குகள், பேரணிகள், வேலை நிறுத்தங்கள் போன்றவை நடத்தப்பட்டன. தனி சத்தீஸ்கர் ஒரு தேவை குறித்து 1924 இல் ராய்ப்பூர் காங்கிரஸ் அலகு மூலம் எழுப்பப்பட்டது. மேலும் திரிபுராவில் நடந்த இந்திய காங்கிரஸின் வருடாந்திர கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. விவாதத்தின் முடிவில் சத்தீஸ்கர் பிராந்திய காங்கிரஸ் அமைப்பு உருவாக்கப்பட்டது. 1954 ஆண்டு மாநில மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கப்பட்ட போது, தனி சத்தீஸ்கர் மாநிலத்தின் தேவை என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது, ஆனால் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 1955 ஆம் ஆண்டு, தனி மாநில கோரிக்கை நாக்பூரில் உள்ள மத்திய பாரதத்தின் மாநில சட்டமன்றத்தில் எழுப்பப்பட்டது. 1990களில் புதிய மாநிலத்தின் தேவைக்கான செயல்பாடுகள் அதிகரித்தன, இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் தழுவிய அரசியல் அமைப்புகள் உருவாக்கம் பெற்றன. குறிப்பாக சத்தீஸ்கர் ராஜ்ஜிய நிர்மாண் மன்ச் நிறுவப்பட்டது. சந்துலால் சந்திரகர் என்பவர் கோரிக்கைக்கான இயக்கத்துக்கு தலைமை வகித்தார் இந்த இயக்கத்தின் தலைமையில், பல வெற்றிகரமான பிராந்தியம் தழுவிய வேலை நிறுத்தங்கள், பேரணிகள் நடத்தப்பட்டன. இதற்கு இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி உட்பட அனைத்து முக்கிய அரசியல் கட்சிகள் ஆதரவும் இருந்தது, தில்லியில் புதியதாக பதவியேற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசாங்கத்தால், மத்தியப் பிரதேச சட்டசபை ஒப்புதலுக்கான தனி சத்தீஸ்கர் மாநில மசோதா அனுப்பப்பட்டது. அங்கு அது மீண்டும் ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. பின்னர் அது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து சத்தீஸ்கரில் தனி மாநிலம் உருவாக்க வழி வகுத்து, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்திய சனாதிபதி ஆகஸ்ட் 2000 26 இல் மத்தியப் பிரதேச மறுசீரமைப்பு சட்டம் 2000 க்கு தனது ஒப்புதலை வழங்கினார். 2000 நவம்பர் 1 அன்று மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு சத்தீஸ்கர் மாநிலம் உருவானது, 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 25,545,198 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 12,832,895 மற்றும் பெண்கள் 12,712,303 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 991 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 189 பேர் வீதம் வாழ்கின்றனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3,661,689 ஆக உள்ளது. இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 70.28% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 80.27% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 60.24% ஆகவும் உள்ளது. மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 2.11% ஆக உள்ளது. இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள்தொகை 23,819,789 (93.25%) ஆகவும், இசுலாமியர் மக்கள்தொகை 514,998 (2.02 %)ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள்தொகை 490,542 (1.92 %) ஆகவும், பௌத்த சமயத்தவர்களின் மக்கள் தொகை 70,467 (0.28 %) ஆகவும், சமண சமயத்தவரின் மக்கள் தொகை 61,510 (0.24 %), சீக்கிய சமய மக்கள்தொகை 70,036 (0.27 %) ஆகவும் 61,510 0.24 % சமயம் குறிப்பிடாதவர்கள் 23,262 (0.09 %) ஆகவும், பிற சமயத்து மக்கள்தொகை 494,594 (1.94 %) ஆக உள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தின் 2010-ஆம் வருடத்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி 60,079 கோடி ரூபாய் ஆகும். 2009 - 2010 ஆம் ஆண்டில் மாநில உள்நாட்டு உற்பத்தி 11.49% உயர்ந்தற்கு வேளாண்மைத் தொழிலும், தொழில் வளர்ச்சியுமே முக்கிய காரணிகள் ஆகும். வேளாண்மைத் தொழில் மாநிலத்தின் 4.828 ஹெக்டர் பரப்பளவு கொண்டது. மாநிலத்தின் 80% மக்கள் வேளாண்மை மற்றும் வேளாணமைச் சார்ந்த சிறு தொழிலையே நம்பியுள்ளனர். நெல், நவதாணியங்கள், எண்ணைய் வித்துக்கள் முக்கிய வேளாண்மைப் பயிர்கள் ஆகும். மாநிலத்தின் மொத்த பரப்பில் 41.33% பகுதிகள் வளமிக்க காட்டுப் பகுதிகள் கொண்டது. இரும்பு ஆலைகள், மின்சாரம் உற்பத்தி தொழிற்சாலைகள், உருக்கு ஆலைகள், அலுமினியம், இரும்பு, சுண்ணாம்பு, தோலமைட், பாக்சைட், படிகக்கற்கள், பளிங்கு கற்கள் போன்ற கனிம வளங்கள் நிறைந்த மாநிலம். இந்தியாவின் சிமெண்ட் உற்பத்தியில் 20% சத்தீஸ்கர் மாநிலம் கொண்டுள்ளது. ராய்ப்பூர் தொடருந்து நிலையம் மாநிலத்தின் மற்றும் இந்தியாவின் அனைத்து நகரங்களையும் இருப்புப்பாதையால் இணைக்கிறது. ராய்ப்பூர் விமான நிலையம் இந்தியாவின் முக்கிய நகரங்களை வானூர்தி மூலம் இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகள் சத்தீஸ்கர் மாநிலத்தின் பகுதிகளையும் மற்றும் மாநிலங்களையும் தரை வழியாக இணைக்கிறது. சத்தீஸ்கர் மாநிலம் நிர்வாக வசதிக்காக 5 கோட்டங்களாகவும், 27 மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. பிருஹத் சம்ஹிதை பிருஹத் சம்ஹிதை என்பது வராஹமிஹிரரால் எழுதப்பட்ட சோதிட நூலாகும். கி.பி 505 ல் உருவானதாகக் கருதப்படும் இந்த நூல், சோதிடத்துடன் பல்வேறு விடயங்கள் பற்றியும் எடுத்துக்கூறுகின்றது. கோள்களின் இயக்கம், கிரகணங்கள், நில நடுக்கம், மழை, வாஸ்து சாஸ்திரம் என்பன போன்ற விடயங்களையும் இந் நூல் விரிவாக எடுத்தாளுகின்றது. இந்நூலில் நூற்றியாறு (106) அத்தியாயங்கள் உள்ளன. பொதுவுடைமை அரசறிவியல் மற்றும் சமூக அறிவியல் ரீதியில், பொதுவுடைமை (இலத்தீன் மொழியில் "communis", "பொது, உலகளாவிய") ஒரு உளவியல் - சமூகவியல் - அரசியல் - பொருளாதாரக் கருத்தியல் ஆகும். இவ்வியக்கம், சமூகபொருளாதார ரீதியில் அனைவருக்கும் பொதுவாக உற்பத்திப்பொருளைப் பகிர்தலையும், அரசு, பணம் மற்றும் வகுப்புவாதத்தை இல்லாதொழித்தலையும் முக்கிய கோட்பாடுகளாகக் கொண்டது. பொதுவுடைமையானது, மார்க்சியம், அரசிலாவாதம் முதலான பல்வேறு சிந்தனைகளை உள்ளடக்கியது. இவ்வெல்லாச் சிந்தனைகளும், சமகாலச் சமூகத்தின் பொருளாதார மையமானது, முதலாளித்துவத்தை மையமாகக் கொண்டிருப்பதை ஆராய்கின்றன. முதலாளித்துவத்தில் இரு சமூகவகுப்புகள் உள்ளன. ஒன்று, பாட்டாளி வர்க்கம் - வாழ்வதற்காக உழைத்தே ஆகவேண்டிய கட்டாயத்திலுள்ளவர்களும் சமூகமொன்றில் பெரும்பாலான எண்ணிக்கையைக் கொண்டிருப்பவர்களும். அடுத்தது, முதலாளி வர்க்கம் - பாட்டாளி வர்க்கத்தின் உழைப்பை - உற்பத்தியை தனிப்பட்ட ரீதியில் உரிமைகோரி, அதன்மூலம் இலாபமீட்டும் சமூகத்தின் சிறுபான்மையினர். இவ்விரு தரப்பினருக்கும் இடையிலான முரண், புரட்சியைத் தோற்றுவிக்கலாம். கிடைக்கின்ற உற்பத்தியை சமூகத்தின் பொதுவுடைமை ஆக்குவதை, இம்முரணுக்கான தீர்வாக, இச்சித்தாந்தம் முன்வைக்கின்றது. "பொதுவுடைமை" எனும் சொல்லாடலானது, பிரெஞ்சு அறிஞரும் எழுத்தாளருமான "விக்டர் டி ஹுபே"யால் (Victor d'Hupay) 1777ஆமாண்டு எழுதப்பட்ட நூலொன்றில் முன்மொழியப்பட்டது. இந்நூலில் தான் விரும்புகின்ற வாழ்க்கைமுறையை "பொதுமை" (Communal) என்று முன்மொழிகின்ற விக்டர், பொருளாதார மற்றும் பௌதிக உற்பத்திகளை பொதுமைச் சமூகத்தின் சகல அங்கத்தவர்களிடையும் பகிரவேண்டும் என்றும் இதனால், ஒவ்வொருவரின் உழைப்பின் மூலமும் கிடைக்கும் பலனை சமமாகப் பகிர்ந்துகொள்ளலாம் என்றும் அவர் மேலும் கூறுகின்றார். வகுப்புவாதங்களில்லாத சமத்துவமான சமூகம் பற்றிய சிந்தனை பழங்கிரேக்கத்திலேயே உதித்ததாக நம்பப்படுகின்றது. பொ.பி 5ஆம் நூற்றாண்டில், பிரபு குலங்களும் மதகுருக்களும் தமக்கென்று கையகப்படுத்தி வைத்திருந்த சலுகைகளுக்கு எதிராக பாரசீகத்தில் (ஈரான்) முன்னெடுக்கப்பட்ட மஸ்தாக்கு இயக்கமும் பொதுவுடைமை சார்ந்ததாகச் சொல்லப்படுகின்றது. சமய புனித நூல்களின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட சிறிய பொதுவுடைமைச் சமூகங்கள் வரலாறெங்கணும் அவதானிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, சில நடுக்கால கிறித்துவ திருச்சபைகளில் அவற்றின் நிலமும், சொத்துக்களும் மக்களிடையே பகிர்ந்தளிக்கப்பட்டதைச் சொல்லலாம். ஆங்கில எழுத்தாளர் தாமஸ் மோர், 1516இல் எழுதிய உதோப்பியா எனும் நூலில், ஆட்சியாளர்களின் சொத்துக்கள் பொதுவுடைமையாக இருக்கவேண்டும் என்ற பொதுவுடைமைக் கருத்து காணப்படுகின்றது. பொ.பி 17ஆம் நூற்றாண்டில் "தோண்டுநர்" ("Diggers") எனப்பட்ட ஒரு தூய்மைவாத புரட்டஸ்தாந்து குழுவினர் நிலங்களைத் தனியார் உரித்துடன் வைத்திருப்பதை எதிர்த்து வாதாடினர். பதினெட்டாம் நூற்றாண்டின் அறிவொளிக்காலத்திலும் பிரெஞ்சின் இழான் இழாக்கு உரூசோ முதலான அறிஞர்கள், சொத்துக்களை தனியார் வைத்திருத்தல் முதலான சிந்தனைகள் மீதான விமர்சனங்களைத் தொடர்ந்தனர். அதே நூற்றாண்டில் பிரெஞ்சுப் புரட்சி உச்சம் கண்டதை அடுத்து, பொதுவுடைமை ஒரு அரசியல் கோட்பாடாக எழுச்சி பெறலாயிற்று. பத்தொன்பதாம் நூற்றாண்டில், பல்வேறு சமூக மறுமலர்ச்சியாளர்கள், பொது உரிமைகோரலை அடிப்படையாகக் கொண்ட சமுதாயங்களை நிறுவினர். எனினும் அது முந்தைய பொதுவுடைமை சமூகங்கள் போலன்றி, பகுத்தறிவு மற்றும் பன்முகத்தன்மையுடனான பார்வையில் சமயத்தின் முக்கியத்துவத்தை மாற்றீடு செய்தனர். அவர்களில், இந்தியானாவில் 1825இல் நியூ ஹார்மனி அமைப்பை உருவாக்கிய இராபர்ட்டு ஓவன் மற்றும் அமெரிக்காவில் சில குறிப்பிடத்தக்க பொதுமை குடியிருப்புகள் உருவாகக் காரணமான சார்லஸ் பௌரியர் ஆகிய இருவரும் குறிப்பிடத்தக்கவர்கள். ஐரோப்பாவில், தன் நவீன வடிவில், பொதுவுடைமையானது சமூகவுடைமை இயக்கங்களுக்கு வெளியேயும் வளர்ந்தது. தொழிற்புரட்சியைத் தொடர்ந்து, மார்க்ஸ் மற்றும் எங்கல்சு முதலான சமூகவுடைமை விமர்சகர்கள், தொழிற்சாலை ஆலைகளில், ஆபத்தான பொருட்களுடன் தொழில்புரியவேண்டி நிர்ப்பந்திக்கப்பட்ட பாட்டாளி வர்க்கத்துக்கு முதலாளித்துவம் கொடுமையிழைப்பதாக குற்றம் சாட்டினர். அவர்களால் 1848இல் வெளியிடப்பட்ட "பொதுவுடைமை அறிக்கையில்" பொதுவுடைமைக்கு ஒரு புதிய வரைவிலக்கணம் வழங்கப்பட்டது. 1917இல் இரசியாவில் இடம்பெற்ற அக்டோபர் புரட்சி, விளாதிமிர் லெனின் தலைமையிலான போல்செவிக் கட்சி, எழுச்சியடையும் வாய்ப்பை உருவாக்கியது. இதுவே பகிரங்கமாக பொதுவுடைமைக் கட்சியொன்று, பெரும் அரசியல் இடத்தைப் பெற்றுக்கொண்ட முதலாவது சம்பவமாகக் கருதப்படுகின்றது. இச்சம்பவம், மார்க்கசிய இயக்கம் மீது, நடைமுறை சார்ந்த மற்றும் கருத்துச் சார்ந்த உரையாடல்கள் நிகழக் காரணமானது. முன்னேறிய முதலாளித்துவ அபிவிருத்திகளின் அடிப்படையில் சமூகவுடைமையும் பொதுவுடைமையும் கட்டியெழுப்பப்படலாம் என்பதைஇ மார்க்ஸ் முன்மொழிந்தார். எவ்வாறெனினும் உருசியாவானது, பெரும் எண்ணிக்கையிலான படிப்பறிவற்றவர்களையும் சிறுபான்மை தொழில்துறைப் பணியாளர்களையும் கொண்ட வறியநாடாக அப்போது விளங்கியது. உருசியாவால் முதலாளித்துவ ஆட்சியை இலகுவாகக் கவிழ்க்கமுடியும் என்று மார்க்ஸ் குறிப்பிட்டிருந்தார். லெனினின் போல்செவிக் கட்சியின் பொதுவுடைமைப் புரட்சிக்கான திட்டத்தை, மிதவாதப் போக்குடைய சிறுபான்மை மென்செவிக் கட்சி எதிர்த்தது. "நிம்மதி, உணவு, நிலம்" என்ற கோஷங்களுடன் ஆதிக்கசக்தியாக வளர்ந்த போல்செவிக், முதலாம் உலகப்போரில் இருசியாவின் பங்களிப்பை நிறுத்துவதற்கான பொதுமக்களின் பெருவிருப்பை தடைபோட்டதுடன், குடிமக்களின் நிலச்சீர்திருத்தம் மற்றும் சோவியத் சபைகளுக்கான ஆதரவைப் பெற்றுக்கொண்டது. லெனினின் சனநாயக மையவாதத்துக்கமைய, லெனினியக் கட்சிகள், ஒரு படிநிலை அமைப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன. பொதுவுடைமைக் கட்சிக்குள் எழுந்த எதிர்ப்புகள், 1937 முதல் 1938 வரை இசுடாலினால் மேற்கொள்ளப்பட்ட "பெரும் துப்புரவாக்கம்" மூலம் முடிவுக்குக் கொணரப்பட்டன. இருசியப் புரட்சியில் பெரும்பங்காற்றிய முக்கிய புள்ளிகள் உட்பட்ட பலர், அச்செயற்பாட்டின் போது, குற்றம் சுமத்தப்படு மரணதண்டனை விதிக்கப்பட்டனர். இரண்டாம் உலகப்போரில் சோவியத் ஒன்றியம், கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில பாகங்கள் மீது செலுத்திய ஆதிக்கம், அதை வல்லரசாக உயர்த்தியது. ஐரோப்பாவும் சப்பானியப் பேரரசும் சிதைந்துபோனதுடன், பொதுவுடைமைக் கட்சிகள் விடுதலை இயக்கங்களை முன்னின்று நடத்தலாயினர். சோவியத் ஒன்றியத்தை முன்மாதிரியாகக் கொண்டு, மார்க்கசிய, லெனினிய அரசாங்கங்கள், பல்காரியா, செக்கோசிலோவாக்கியா, இடாய்ச்சு மக்களாட்சிக் குடியரசு, போலந்து, அங்கேரி, உருமேனியா, அல்பேனியா முதலான நாடுகளில் ஆட்சிக்கு வந்தன. யுகோசுலாவியாவிலும் யோசேப்பு தித்தோ தலைமையில் ஒரு மார்க்கசிய - லெனினிய அரசு உருவானது. எனினும், தித்தோவின் விடுதலைக் கொள்கைகள், யொகோசுலாவியாவை பொதுவுடைமை நாடுகளின் ஒன்றிணைப்பிலிருந்து அந்நாட்டை விலகச்செய்ததுடன், தித்தோவின் கொள்கைகள், பொதுவுடைமையாளர்களால், வழுவுடையவை என்று வர்ணிக்கப்பட்டன. இருபதாம் நூற்றாண்டிலிருந்து அமெரிக்காவின் முதலாளித்துவத்திற்கு போட்டியாகவும் எதிர்த்தரப்பாகவும் பொதுவுடைமை, அறிஞர்களால் நோக்கப்படலாயிற்று. சோவியத் ஒன்றியத்தின் அதியுயர் சட்டமன்றத்தின் பிரகடனத்தின் கீழ், சோவியத் ஒன்றியம் 1991 டிசம்பர் 26இல் கலைக்கப்பட்டது. இப்பிரகடனமானது, முந்தைய சோவியத் குடியரசுகளின் விடுதலையை உறுதிசெய்ததுடன், விடுதலை பெற்ற நாடுகளின் பொதுநலவாயம் (CIS) உருவாகவும் காரணமானது. , எட்டாவது மற்றும் இறுதியான சோவியத் ஒன்றியத் தலைவராக விளங்கிய மிக்கைல் கொர்பச்சோவ், சோவியத் ஒன்றியம் கலைவதற்கு முந்திய நாள் பதவிவிலகியதுடன், சோவியத்தின் அணுசக்தி ஏவுகணைத் தளங்கள் உள்ளிட்ட எல்லா அதிகாரங்களையும் உருசியத் தலைவர் போரிஸ் யெல்ட்சினிடம் ஒப்படைத்தார். அன்று மாலை, கிரெம்லின் மாளிகையில் ஏற்றப்பட்டிருந்த சோவியத் கொடி இறக்கப்பட்டதுடன், புரட்சிக்கு முந்தைய உருசியக் கொடி ஏற்றப்பட்டது. ஒன்றியம் கலைக்கப்படுவதற்கு சில மாதங்கள் முன்பிருந்தே, சோவியத்தில் இருந்த உருசியா உள்ளிட்ட எல்லாக் குடியரசுகளும் தனித்தனியே பிரிந்துவிட்டிருந்தன. ஒன்றியத்தின் உத்தியோகபூர்வமான கலைப்புக்கு ஒரு வாரம் முன்பு, விடுதலை பெற்ற நாடுகளின் சமவாயத்துக்காக, பதினொரு குடியரசுகள் ஒப்பமிட்டு, சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது என்பதை மறைமுகமாக அறிவித்தன. சமகாலத்தில், சீனா, கியூபா, லாவோஸ், வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் பொதுவுடைமை நாடுகளாக விளங்குகின்றன. வடகொரியா தன்னை, மார்க்கசிய - லெனினியத்தின் அடுத்தபடி என்று சொல்லிக்கொள்கின்ற "யுச்சே"யை தனது அரசியல் கோட்பாடாக ம்முன்வைக்கின்றது. பொதுவுடைமைக் கட்சிகள், இன்றும் பெரும்பாலான நாடுகளில் குறிப்பிடத்தக்க அதிகாரத்தோடு உள்ளனர். ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் அரசின் பங்காளியாக விளங்கும் பொதுவுடைமைக் கட்சி, தென்னாபிரிக்காவில் ஆட்சியில் பங்குவகிக்கின்றது.இந்தியாவில், அதன் மூன்று ஆட்சிப்பகுதிகளில், பொதுவுடைமைக் கட்சிகள் ஆட்சிசெலுத்துகின்றன. நேபாளம், பொதுவுடைமைவாதிகளைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடாளுமன்றத்தைக் கொண்டது. பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி, அந்நாட்டின் சனநாயக சமூகவுடைமைத் தொழிலாளர் கட்சியுடன் இணைந்து கூட்டாட்சியில் பங்கேற்கிறது. சீன மக்கள் குடியரசானது, மாவோயியக் கொள்கைகளின் பல அம்சங்களை மறுபரிசீலனைக்குட்படுத்தி இருக்கின்றது. லாவோஸ்,வியட்நாம் முதலான நாடுகளைப் போலவே, மத்திய ஆட்சி அதிகாரத்தைப் பரவலாக்கி, பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை ஏற்படுத்துவதில் முயன்றுவருகிறது. டங் சியாவுபிங்கின் ஆட்சியில் 1978இல் ஆரம்பமான சீன பொருளாதார சீராக்கங்கள், மாவோ காலத்தில் 53% ஆக இருந்த வறுமையை, 2001இல் வெறும் 6% ஆகக் குறைப்பதில் பெரும் பங்கு வகித்திருக்கின்றன. காரல் மார்க்சு மற்றும் பிரெட்ரிக் எங்கெல்சு ஆகியோரால் முன்மொழியப்பட்ட மார்க்சியம், பொதுவுடைமைக் கோட்பாடுகளில் முக்கியமான ஒன்றாகும். மார்க்கசியம் தன்னை, அறிவியல்பூர்வமான சமூகவுடைமையாக இனங்காண்கின்றது. அறிவுய்திகள் முன்வைக்கும் இலட்சியவாத சமூகம் ஒன்றைக் கருத்திற்கொள்ளாமல், சமூக வரலாற்றுக் காரணிகளைப் புரிந்துகொண்ட எதார்த்தபூர்வமான கோட்பாடாக மார்க்கசியம் விளங்குகின்றது. மார்க்கசியம் பொதுவுடைமையை, "நிறுவப்படவேண்டிய அரசியல் விவகாரங்கள்"என்ற கண்ணோட்டத்தில் காணாமல், வெற்று அறிவுபூர்வம் சாராத நடைமுறைச்சாத்தியமான சமூகம் சார்ந்த வெளிப்பாடாகவே கருதுகின்றது. எனவே மார்க்கசியம், பொதுவுடைமைச் சமூகத்தின் எதிர்காலத் திட்டமிடல் கோட்பாடாக அமையாமல், அக்கோட்பாட்டை செயலாக்கும் மற்றும் அடிப்படை இயல்புகளை நடைமுறை வாழ்க்கையைக் கொண்டு கண்டறிய உதவும் அரசியல் சித்தாந்தமாகவே விளங்குகின்றது. வரலாற்றுப் பொருள்முதல் வாதம் என்று முன்பு அறியப்பட்ட மார்க்சியப் பொருள்முதல் வாதம், மார்க்கசியத்தின் வேராகத் திகழ்கின்றது. பொருளாதாரத் தொகுதிகளின் அடிப்படை இயல்புகளை, உற்பத்திமுறை, வகுப்புவாதச் சிக்கல்கள் என்பவற்றின் வழியே வரலாற்றினூடாக அது புரிந்துகொள்ளமுயல்கின்றது. இப்பகுப்பாய்வு மூலம் தொழிற்புரட்சி உலகுக்கு புதிய உற்பத்திமுறையொன்றை அறிமுகம் செய்தது. அதுவே முதலாளித்துவம். முதலாளித்துவத்துக்கு முன்பு, தொழில்சார்ந்த வகுப்புகள், உற்பத்தியில் பயன்பட்ட உபகரணங்களுக்கு உரித்தானவர்கலாக இருந்தனர். ஆனால் இயந்திரங்கள் அவ்வுபகரணங்களின் இடத்தைப் பெற்றுக்கொண்ட சமகாலத்தில், அவை பயனற்றுப்போயின. தொழிலாலர் படையானது, அதன் பின்னர் தன் உழைப்பை விற்பதன் மூலம், அல்லது வேறொருவரின் இயந்திரத்தில் தங்கியிருப்பதன் மூலம் மட்டுமே ஆதாயத்தை ஈட்டி வாழமுடிந்தது.இதனால், உலகம் பாட்டாளி - முதலாளி எனும் இருபெரும் வகுப்புகளாக பிளவுண்டது. இவை ஒன்றுக்கொன்று எதிரானவை. உற்பத்திகளில் முதலாளிகள் தனியார் உரிமம் கோரி இலாபமீட்டிய அதேவேளை, உற்பத்தியில் உரிமைகோர முடியாத பாட்டாளிகள், முதலாளிகளுக்கு அவற்றை விற்பது தவிர வேறு வழியில்லாதவர்கள் ஆயினர். இவ்வாறு செல்லும் வரலாற்றுப் பொருள்முதல் வாதம், முதலாளிகள் நிலக்கிழாரியம் மூலம் வளர்ந்து அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டு, ஆளும் வர்க்கமாக வளர்ந்தனர் என்கின்றது. இந்நிலையில் பாட்டாளிகள், அரச அதிகாரத்தைப் பெற்று தனியார் உரிமத்துக்கெதிராக பொதுவுரிமத்தை நிலைநாட்டும்போதே, பாட்டாளி - முதலாளி எனும் பேதத்தை ஒழிக்கமுடிவதுடன், உலகை பொதுவுடைமை எனும் கோட்பாட்டின் கீழ் கொணரமுடியும். முதலாளித்துவத்திற்கும் பொதுவுடைமைக்கும் இடையிலேயே தொழிலாளர் சர்வாதிகாரம் இருக்கின்றது. இதன்மூலமே பொது வாக்குரிமை மூலம் பொது அதிகாரம் தெரிவுசெய்யப்பட்டு மீளளிக்கப்படுகின்றது. இது முதலாளிகளைத் தோற்கடித்தாலும், முதலாளித்துவத்தைத் தோற்கடிக்காது. எனவே அதன்பிறகு சாத்தியமான ஒரே உற்பத்திமுறை முதலாளித்துவ உற்பத்திமுறையாகவே காணப்படும். மார்க்கசியத்தின் கோட்பாட்டின் படி, தேசியமயமாதல் என்பது, செழிப்பை அரச உடைமை ஆக்குதல். ஆனால் சமூகமயமாதல் என்பது, சமூகமே அவ்வுடைமையின் உண்மையான மேலாண்மையாக விளங்குதல். தேசியமயமாதலை கவனமாகக் கையாளவேண்டிய சிக்கலாகக் கொண்ட மார்க்கசியம், அரசுடைமையில் தொடர்ந்தும் முதலாளித்துவ உற்பத்திமுறை விளங்குவதை பரிந்துரைக்கிறது. இந்த யுக்தியால், சில மார்க்கசிய குழுமங்களை ஒன்றிணைத்து, சோவியத் ஒன்றியம் முதலான தேசியமயப்படுத்தப்பட்ட பேரரசுகள் உருவாக வழிகோலப்பட்டது. லெனினியம் என்பது, விளாடிமிர் லெனினால் முன்னெடுக்கப்பட்ட, உருசியப் புரட்சியில் முன்வைக்கப்பட்ட அரசியல் சித்தாந்தம் ஆகும். பொதுவுடைமையிலிருந்து நீட்சிபெற்ற லெனினியம், சமூகவுடைமையின் நிலைநிறுத்தலுக்காக ஒரு குடியரசு அமைப்பு நிறுவுதலையும், பாட்டாளிகளின் சர்வாதிகாரத்தையும் முன்வைத்தது. ஐந்து ஆண்டுகளாக மார்க்கசியத்தின் நடைமுறைப் பிரயோகமாக விளங்கிய லெனினியம், 1917இல் போல்செவிக் கட்சியின் கீழ் உழைக்கும் வர்க்கம் அதிகாரம் பெற்று சோவியத் ஒன்றியம் உருவாகக் காரணமானது. மார்க்கசியமும் லெனினியமும் தொடர்ச்சியான உரையாடல்கள் மூலம், ஜோசப் ஸ்டாலின் மூலம் மார்க்கசிய -லெனினியமாக முன்வைக்கப்பட்டன. சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி மூலம் சோவியத் ஒன்றியத்தில் இவற்றை செயன்முறைப்படுத்திய ஸ்டாலின், பொதுவுடைமை அனைத்துலகம் என்ற அமைப்பின் கீழ், பரவலான உலகக் கவனத்தைப் பெற்றுக்கொண்டார். மார்க்கசு மற்றும் லெனினின் கோட்பாடுகளை ஸ்டாலின் உண்மையிலேயே கைக்கொண்டாரா என்பதில் இன்றும் அறிஞர் மத்தியில் வாதப்பிரதிவாதங்கள் நிகழ்கின்றன. மார்க்கசிய - லெனினியம் ஸ்டாலினின் கொள்கையாகவும், இசுடாலினியம் அவரது நடைமுறையாகவும் கொள்ளப்படுகின்றது. மார்க்கசிய - லெனினியத்தில் இல்லாத தனிமனித வழிபாடு, அரச ஒடுக்குமுறை என்பன இசுடாலினியத்தில் காணப்பட்டன. சீனத்தலைவர் மா சே துங்கின் ஆட்சிக்கொள்கையான மாவோவியம், மார்க்கசிய - லினினியத்தின் இன்னொரு வடிவமாகக் கொள்ளப்படுகின்றது. மார்க்கசிய- லெனினிய இணைவான இசுடாலினியம், மாவோயியம் முதலானவை சமூகவுடைமையை நிறுவுவதற்குப் பதில், அரச முதலாளித்துவத்தையே நிறுவியதாக, ஏனைய பொதுவுடைமை - மார்க்கசியர்கள் விமர்சித்தனர். தம்மை மார்க்கசிய - லெனினியத்தின் நீட்சிகள் என்று உரிமைகோரிய இன்னும் பல பொதுவுடைமைக் கோட்பாடுகள் உலக அரங்கில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டன. ஸ்டாலினுக்கு எதிராக அதிகாரத்துக்குப் போட்டியிட்ட லியோன் திரொட்ஸ்கியும் அவரது ஆதரவாளர்களும், மார்க்கசிய - லெனினியத்துக்கு எதிராக "திரொட்ஸ்கியியம்" எனும் சித்தாந்தத்தை முன்மொழிந்தனர். நான்காம் அனைத்துலகம் அமைப்பு, ஸ்டாலினின் பொதுவுடைமை அனைத்துலகம் அமைப்புக்கு எதிராக 1938இல் திரொட்ஸ்கியால் நிறுவப்பட்டது. இன்னும் கட்டுப்பாடில்லா மார்க்கசியம் ("Libertarian Marxism"), மன்றுசார் பொதுவுடைமை ("Council communism"), இடது பொதுவுடைமை, முதலான பல்வேறு பொதுவுடைமைக் கோட்பாடுகள் முன்மொழியப்பட்டன. மார்க்கசியத்துக்கு எதிராக,அரசிலாப் பொதுவுடைமை, கிறித்துவப் பொதுவுடைமை என்பன அதேகாலத்தில் உருவாகின. பொதுவுடைமை மீதான விமர்சனம் இருவகைப்படும். ஒன்று, இருபதாம் நூற்றாண்டு பொதுவுடைமை அரசுகளின் செயன்முறை அம்சங்களோடு கருத்தில் கொள்ளப்படுபவை. அடுத்தது, பொதுவுடைமைக் கோட்பாடுகள் மற்றும் கொள்கைகளோடு தொடர்பானவை. பொதுவுடைமைக் கொள்கைகளுள் ஒன்றான மார்க்சியப் பொருள்முதல் வாதம், தாராண்மை மக்களாட்சியின் உரிமைகளை நசுக்கும் ஒன்றாக நோக்கப்படுகின்றது. மார்க்சிய மறுமலர்ச்சியாளரும், சமூகவியலாளரும் ஆன எட்வர்டு பெர்ன்சுடைன் முந்தைய மார்க்சிய கொள்கையை உருவாக்கிய கார்ல் மார்க்சும் பிரெட்ரிக் ஏங்கல்சும் கொள்கையின் ஆரம்பக்கட்டத்தின் போது இளையவர்களாய் இருந்ததால் அக்கொள்கை வன்முறைப் பாதையை தூண்டுவதாக சாடி இருக்கிறார். மேலும் அது முதிர்ச்சி அடையாத கொள்கை எனவும் இவரால் கூறப்பட்டது. ஆனால் பிற்கால மார்க்கியக் கொள்கையில் கார்ல் மார்க்சு சமூக புரட்சியின் மூலமாக காண முடியும் எனக் கூறியதால் பிற்கால மார்க்சிய கொள்கை முதிர்ச்சி அடைந்த கொள்கை என்று வழிமொழிந்தும் இருப்பது குறிப்பிடத்தக்கது. நடைமுறையில் பொதுவுடமைக் கொள்கைகள் பல நாடுகளில் சர்வதிகார அரசுக்கும், மந்தையான பொருளாதாரத்துக்கும் வழிகோலியுள்ளன. (எ. கா) சோவியத் யூனியன், வட கொரியா. பொதுவுடமைப் பொருளாதார முறையில் அனைத்தும் அரசே முடிவெடுப்பதால் தனிமனிதத் தொழில் முனைவுகள், முயற்சிகள், உந்தல்கள் மழுங்கடிக்கப்படுவதாகக் கருதப்படுகின்றது. பொதுவுடைமைக் கொள்கைகளை கொண்டிருக்கும் நாடுகளான சோவியத் யூனியன், சீனா போன்ற நாடுகளில் பொது மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த முடியாத வகையில் ஊடக முடக்கம் செய்யப்பட்டுள்ளன. சீனா போன்ற நாடுகளின் நடக்கும் பல்வேறு அநியாயங்கள் வெளியுலகுக்கு தெரியாமல் திட்டமிடப்பட்டு மறைக்கப்படுகின்றன. மனிதவுரிமைகள் தொடர்பான மக்கள் புரிதலுக்கோ தேடலுக்கோ கூட வழிகள் இல்லை. இணையத்திலும் கூட மனிதவுரிமைகள் தொடர்பான உள்ளடக்கங்கள் மக்களுக்கு எட்டாத வகையில் முடக்கப்பட்டுள்ளன. உசாத்துணை பாசிசம் பாசிசம் ("fascism") என்பது ஒரு சமுதாயத்தின் அதிகார வர்க்கத்தால் சர்வாதிகார முறையில் பொருளாதார மற்றும் மற்றைய விஷயங்கள் தீர்மானிக்கப்படுவதையே குறிக்கும். முதலாளிகள் இவ்வதிகார வர்க்கத்திற்குள் அடங்குவர். ஆரம்ப கட்டங்களிலே அடிமட்ட மக்களின் ஆதரவும் இவ்வதிகார வர்க்கத்திற்கு கிடைக்கும். முசோலினியின் இத்தாலி, இட்லரின் ஜெர்மனி பாசிசத்திற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். தனிமனித உரிமைகளை நாட்டு நலனுக்காக, வல்லமைக்காக எனக் கூறி மதிக்காமல் அரசுக்கு எதிராகக் கேள்வி கேட்பவர்களை அடக்குமுறைகள் மற்றும் வன்முறை மூலம் நசுக்குகின்ற அரசியல் நடைமுறையே பாசிசம் எனப்படும். தனியுரிமை முதலாளித்துவத்தின் தேய்ந்த நிலையே பாசிசம் என மார்க்சியவாதிகள் அதனைக் கண்டிப்பதுண்டு. மார்க்சியவாதிகளின் இந்தக் கண்டனத்திலே உண்மை அதிகம் இருந்தபோதிலும், சில முக்கியமான விடயங்களைக் கருத்திலே கொள்ளாதிருக்கின்றது. தனியுரிமை, முதலாளித்துவம் கையாலாகாத நிலையில் பாசிசத்தைச் சரணடைகின்றது என்பது உண்மையே. அரசின் மகிமைக்காகத் தன்னுடைய எல்லாவற்றையும் அதற்கு அர்ப்பணம் செய்ய வேண்டுமென்ற அடிப்படையிலே தான் பாசிச இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. பாசிசம் முதலாம் உலக மகா யுத்தத்தின் போது இத்தாலியில் தோன்றியது.பாசிஸ் என்பது ரோமானியப்பேரரசின் நீதிபதிகள் உருட்டுக் கட்டைகளுக்கு நடுவே கோடாரி சொருகப்பட்டிருக்கும் ஒரு ஆயுதம் வைத்திருப்பார்கள். இந்த ஆயுதத்திற்குப் பெயர் பாசிஸ் எனப்படும். போர், சமுதாயம், அரசு மற்றும் தொழில்நுட்பத்தின் இயல்பில் புரட்சிகர மாற்றங்களை கொண்டு வரும் பாசிசவாதிகள், ஒட்டுமொத்த போர் மற்றும் மக்கள் அணிதிரட்டல் ஆகியவற்றின் வருகையின் காரணமாக பொதுமக்கள் மற்றும் போர் வீரர்களிடையே உள்ள வேறுபாட்டை உடைத்துவிட்டனர். போர் முயற்சி, பொருளாதார உற்பத்தி, இதனால் "குடிமக்கள் குடியுரிமை" உருவானது, அதனால் அனைத்து குடிமக்களும் போரின்போது இராணுவத்தில் ஈடுபட்டுள்ளனர். தாராளவாத ஜனநாயகம் முற்றுமுழுதாக இருக்காது என்று பாசிஸ்டுகள் நம்புகின்றனர், மற்றும் ஆயுத சண்டையில் ஒரு தேசத்தை உருவாக்கவும், பொருளாதார சிக்கல்களுக்கு திறம்பட பதிலளிப்பதற்காகவும், சமுதாயத்தை ஒரு சர்வாதிகாரமான ஒரு கட்சி அரசின் கீழ் முழுமையாக அணிதிரட்டுவதே சரி என்று அவர்கள் கருதுகின்றனர். அத்தகைய அரசு ஒரு வலுவான தலைவரால் வழிநடத்தப்பட வேண்டும்.ஒரு சர்வாதிகாரி மற்றும் ஆளும் பாசிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட ஒரு இராணுவ அரசாங்கம் தேசிய ஒற்றுமையை உருவாக்குவதற்கும், ஒரு நிலையான மற்றும் ஒழுங்கான சமுதாயத்தை பராமரிப்பதற்கும் தேவை. வன்முறை தானாக இயற்கையில் எதிர்மறையானது என்று வலியுறுத்துவதை பாசிசம் நிராகரிக்கிறது. அரசியல் வன்முறை, போர் மற்றும் ஏகாதிபத்தியம் போன்ற கருத்துக்களைக் கொண்டு தேசிய மறுசீரமைப்பை அடைய முடியும் என்று பாசிசம் நம்புகிறது. ஆகஸ்ட் 1914 ல் முதலாம் உலகப் போர் வெடித்தபோது, இத்தாலிய அரசியல் இடதுகள் போரில் அதன் நிலைப்பாட்டை கடுமையாக பிரித்தனர். இத்தாலிய சோசலிஸ்ட் கட்சி (PSI) போரை எதிர்த்தது, ஆனால் பல இத்தாலிய புரட்சிகர சிண்டிகலிஸ்டுகள் ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியா-ஹங்கேரி ஆகியோருக்கு எதிராக போருக்கு ஆதரவு கொடுத்தனர். அவர்கள் பிற்போக்குத்தன ஆட்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் சோசலிசத்தின் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் விரும்பினர். ஏஞ்சலோ ஒலிவியேரோ ஒலிவேட்டி அக்டோபர் 1914 ல் சர்வதேச இத்தாலிய காம்பாட் படைகள் என்றழைக்கப்படும் ஒரு சார்பு-தலையீடு குழுவை அமைத்துள்ளார். பெனிட்டோ முசோலினியின் ஜேர்மனிய எதிர்ப்பு நிலைப்பாட்டின் காரணமாக PSI இன் பத்திரிகையான அவந்தியின் தலைமை ஆசிரியர் பணியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார்."பாசிசம்" என்ற வார்த்தை முதன் முதலில் 1915 இல் முசோலினியின் இயக்கமான சர்வதேச இத்தாலிய காம்பாட் படைகள் உறுப்பினர்களால் பயன்படுத்தப்பட்டது.1917 அக்டோபர் புரட்சி, விளாடிமிர் லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கம்யூனிஸ்டுகள் ரஷ்யாவில் அதிகாரத்தை கைப்பற்றினர். இது பாசிசத்தின் வளர்ச்சியை பெரிதும் அதிகரித்தது.1917 ல், முசோலினி, புரட்சிகர நடவடிக்கை பாசிச தலைவர், அக்டோபர் புரட்சியை பாராட்டினார். ஆனால் பின்னர் அவர் லெனினுடன் ஒத்துப் போகவில்லை, அவரை ஜார் நிக்கோலஸின் ஒரு புதிய பதிப்பாக மட்டுமே கருதினார். 1919 ஆம் ஆண்டில், அல்கெஸ்ட் டி ஆம்பிரீஸ் மற்றும் ஃபுயூச்சரிஸ்ட் இயக்க தலைவர் ஃபிலிப்போ டோமாசோ மரினெட்டி ஆகியோரால் இத்தாலிய காம்பாட் படையின் அறிக்கை (பாசிச அறிக்கை) உருவாக்கப்பட்டது.இந்த அறிக்கையானது ஜூன் 6, 1919 அன்று பாசிச செய்தித்தாள் Il Popolo d'Italia இல் வழங்கப்பட்டது. ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு பிராந்திய அடிப்படையில் விகிதாசார பிரதிநிதித்துவத்திற்கான உலகளாவிய வாக்குரிமை உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்தை இந்த அறிக்கை ஆதரித்தது;தொழில், போக்குவரத்து, பொது சுகாதாரம், தகவல்தொடர்புகள் போன்றவை உட்பட, அந்தந்த பகுதிகளில் சட்டமியற்றும் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும், நடத்துவதற்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிபுணர்களாலும் வர்த்தகர்களிடமிருந்தும் தேர்வு செய்யப்பட்ட நிபுணர்களின் "தேசிய கவுன்சில்களின்" ஒரு கூட்டு நிறுவன அமைப்பு மூலம் அரசாங்க பிரதிநிதித்துவம்; மற்றும் இத்தாலிய செனட்டின் ஒழிப்பு ஆகியவற்றை இந்த அறிக்கை ஆதரித்தது. 1920 ல், தொழில்துறைத் தொழிலாளர்கள் மேற்கொண்ட போர்க்குணமிக்க வேலைநிறுத்தம் இத்தாலியில் உச்சத்தை அடைந்தது; 1919 மற்றும் 1920 ஆகியவை "சிவப்பு ஆண்டுகள்" என்று அறியப்பட்டன. முசோலினி மற்றும் பாசிஸ்டுகள் ஆகியோர் நிலைமைகளைப் பயன்படுத்தி தொழிற்துறை தொழிலதிபர்களுடன் இணைந்து, தொழிலாளர்களையும் விவசாயிகளையும் இத்தாலியில் உள்ள ஒழுங்கு மற்றும் உள்நாட்டு சமாதானத்தை காப்பாற்றுவதாகக்கோரி தாக்கினர். முதலாம் உலகப் போரில் தலையிட்டதை எதிர்த்த இடதுசாரிகளின் பெரும்பான்மையான சோசியலிஸ்டுகளை பாசிசவாதிகள் தங்கள் முக்கிய எதிரிகளாக அடையாளம் கண்டனர்.பாசிஸ்டுகளும் இத்தாலிய அரசியல் உரிமையும் பொதுவான நிலையைக் கொண்டிருந்தன: இருவரும் மார்க்சிசத்தை அவமதித்தனர், வர்க்க நனவை கருத்தில் கொள்ளவில்லை மற்றும் பிரமுகர்களின் ஆட்சியில் நம்பிக்கை கொண்டிருந்தனர். இத்தாலியின் பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர், முசோலினி ஒரு கூட்டணி அரசாங்கத்தை உருவாக்க வேண்டியிருந்தது, ஏனென்றால் பாசிஸ்ட்டுகள் இத்தாலிய பாராளுமன்றத்தில் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை.முசோலினியின் கூட்டணி அரசாங்கம் ஆரம்பத்தில் பொருளாதாரத் தாராளவாத கொள்கைகளை பொருளாதார மந்திரி அல்பர்ட்டோ டி ஸ்டீபனி (மையக் கட்சியின் உறுப்பினர்) தலைமையின் கீழ் தொடர்ந்து கொண்டது. இதில் பட்ஜெட் சமநிலைப்படுத்தப்பட்டது உட்பட உள்நாட்டுச் சேவைக்கு ஆழமான வெட்டுக்கள் இருந்தன. ஆரம்பத்தில், அரசாங்க கொள்கைகளில் கடுமையான மாற்றம் ஏற்பட்டது, அடக்குமுறையான போலிஸ் நடவடிக்கைகள் குறைவாக இருந்தன. பாசிஸ்டுகள் இத்தாலியில் பாசிசத்தை ஏசர்போ சட்டத்துடன் இணைத்துக்கொள்ளும் முயற்சியைத் தொடங்கினர், இது நாடாளுமன்றத்தில் எந்தவொரு கட்சி அல்லது கூட்டணி பட்டியலில் 25% அல்லது அதற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்றது என்று வாக்குறுதி அளித்தது. கணிசமான பாசிச வன்முறை மற்றும் அச்சுறுத்தல் மூலம், பெரும்பாலான வாக்குகள் பாசிஸ்டுகளுக்கு செல்வதற்கு பல இடங்களை அனுமதித்தன.3 ஜனவரி 1925 அன்று, முசோலினி பாசிச மேலாதிக்க இத்தாலிய பாராளுமன்றத்தில் உரையாற்றினார் மற்றும் அவர் என்ன நடந்தது என்பதை தனிப்பட்ட முறையில் பொறுப்பாளராக அறிவித்தார், ஆனால் அவர் தவறு எதுவும் செய்யாததாக வலியுறுத்தினார். அவர் தன்னை சர்வாதிகாரியாக பிரகடனப்படுத்தினார். அரசாங்கத்தின் மீது முழு பொறுப்பையும், நாடாளுமன்றத்தை பதவி நீக்கம் செய்வதையும் அறிவித்தார். 1925 முதல் 1929 வரை, பாசிசம் சீராக வளர்ந்தது: எதிர்க்கட்சி பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது, தணிக்கை அறிமுகப்படுத்தப்பட்டது. 1920 களில் பாசிச இத்தாலி கடுமையான வெளியுறவுக் கொள்கையைத் தொடர்ந்தது, இது கிரேக்கத் தீவான கோர்ஃபூ மீதான தாக்குதலை உள்ளடக்கியத. பாசிஸ்டுகள் பால்கன் பகுதியில் இத்தாலிய எல்லையை விரிவுபடுத்த நோக்கம் கொண்டனர், துருக்கி மற்றும் யூகோஸ்லாவியாவிற்கு எதிரான போரை நடத்துவதற்கான திட்டம் தீட்டினர், யூகோஸ்லாவியாவை உள்நாட்டு யுத்தத்திற்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் எடுத்தனர், மற்றும் இத்தாலியின் தலையீட்டை சட்டபூர்வமாக்குவதற்கு மாசிடோனிய பிரிவினைவாதிகள் மற்றும் அல்பேனியாவை இத்தாலியின் ஒரு உண்மையான பாதுகாப்பாளராக உருவாக்கி, 1927 வாக்கில் இராஜதந்திர வழிமுறைகளால் இவை அனைத்தையும் வெற்றிகரமாக செய்துமுடித்தனர். லிபியாவின் எழுச்சிக்கு பதிலிறுப்பாக (லிபியா, அந்த காலப்பகுதியில் ஒரு இத்தாலிய காலனி நாடு) பாசிச இத்தாலி, லிபிய உள்ளூர் தலைவர்களுடன் ஒத்துழைக்கும் முந்தைய தாராளவாத காலனித்துவக் கொள்கையை கைவிட்டது. அதற்கு பதிலாக, இத்தாலியர்கள் ஆப்பிரிக்க இனங்களை விடவும் ஒரு உயர்ந்த இனம் என்று கூறியது மற்றுமின்றி இதனால் இத்தாலியர்கள் "தாழ்ந்த இனமான" ஆபிரிக்கர்களை கைப்பற்றுவதற்கும் ஆட்சி செய்வதற்கும் உரிமையுண்டு என்றனர். அதற்கு ஏற்ப லிபியாவில் 10 முதல் 15 மில்லியன் இத்தாலியர்கள் குடியேற முற்பட்டனர். இது லிபியாவில் உள்ள பூர்வீக மக்களுக்கு எதிரான லிபிய இனப்படுகொலை என்று அழைக்கப்படும் ஒரு தீவிரமான இராணுவ நடவடிக்கையில் விளைந்தது. இதில் வெகுஜனக் கொலைகள், சித்திரவதை முகாம்களின் பயன்பாடு மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் கட்டாயப்படுத்தப்பட்ட பட்டினியும் அடங்கும். பாசிச இத்தாலி மற்றும் நாஜி ஜேர்மனியில் முசோலினி மற்றும் ஹிட்லர் இருவரும் 1930 - 1940 களில் பிராந்திய விரிவாக்க மற்றும் வெளியுறவு கொள்கை தலையீட்டுவாத நிகழ்ச்சித் திட்டங்களைத் தொடர்ந்தனர். இத்திட்டங்களின் மூலம் இரண்டாம் உலகப்போர் உச்சக்கட்டத்தை அடைந்தது. முசோலினி இத்தாலிய கோரிக்கைகள் மீட்கப்பட வேண்டும், மத்தியதரைக் கடலின் இத்தாலிய மேலாதிக்கத்தை நிறுவுதல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு இத்தாலிய அணுகலைப் பெறுதல், மத்தியதரைக் கடல் மற்றும் செங்கடலில் உள்ள இத்தாலிய ஸ்பேசியோ வைடால் ("முக்கிய இடம்") ஆகியவற்றை உருவாக்க வேண்டும் என்று கோரினார்.சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளான ஜேர்மனியர்களால் காலனித்துவப்படுத்தப்படும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஜேர்மன் லெபென்ஸ்ராம் ("வாழும் இடம்") உருவாக்கப்பட வேண்டும் என்று ஹிட்லர் கோரினார். 1935 முதல் 1939 வரையான காலப்பகுதியில், ஜேர்மனி மற்றும் இத்தாலி நாடுகள் தங்கள் கோரிக்கைகளை பிராந்திய கூற்றுக்கள் மற்றும் உலக விவகாரங்களில் பெரும் தாக்கத்தை அதிகப்படுத்தியது. 1936 இல் ஜெர்மனி தொழில்துறை ரைன்லேண்ட் மறுமதிப்பீடு செய்யப்பட்டது; வெர்சாய் உடன்படிக்கையால் இந்த பிராந்தியத்தை தளர்த்தப்பட்டது. 1938 ம் ஆண்டு ஜெர்மனியை சுடபென்லாந்துக்கு வழங்கிய முனிச் ஒப்பந்தத்தை ஏற்பாடு செய்ததன் மூலம் செக்கோஸ்லோவாக்கியா மீது பிரிட்டன் மற்றும் பிரான்சுக்கு இடையேயான இராஜதந்திர நெருக்கடியை தீர்ப்பதில் ஜேர்மனிக்கு உதவிய ஆஸ்திரியா மற்றும் இத்தாலி ஆகியவை ஜேர்மனிக்கு உதவியதுடன், அந்த நேரத்தில் ஒரு ஐரோப்பிய போரைத் தடுத்தது.இரண்டாம் உலகப் போரின் போது, நாசி ஜெர்மனியின் தலைமையில் ஐரோப்பாவில் உள்ள ஆக்சஸ் அதிகாரங்கள் மில்லியன் கணக்கான போலந்து, யூதர்கள், ஜிப்சீஸ் மற்றும் இதர இனப்படுகொலைகள் ஹோலோகாஸ்ட் என்று அழைக்கப்பட்டன. 1942 க்குப் பிறகு, அச்சுப் படைகள் புதையுண்டன. இத்தாலியில் பல இராணுவத் தோல்விகளை எதிர்கொண்டபின்னர், இத்தாலியின் நேச நாடுகள் படையெடுப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய சர்வதேச அவமானம், முசோலினி அரசாங்கத்தின் தலைவராக அகற்றப்பட்டு, கிங் விக்டர் இம்மானுவல் III இன் கட்டளையால் கைது செய்யப்பட்டார், அவர் பாசிச அரசை அகற்றுவதற்காகவும், கூட்டணி படைக்கு விசுவாசத்தை நிலைநிறுத்தியது. முசோலினி கைது செய்யப்பட்டு ஜேர்மன் படைகளால் காப்பாற்றப்பட்டு 1943 முதல் 1945 வரை ஜேர்மனிய அரசான இத்தாலிய சமூகக் குடியரசை வழிநடத்தினார். 1943 முதல் 1945 வரை நாஜி ஜேர்மனி பல இழப்புக்கள் மற்றும் நிலையான சோவியத் மற்றும் மேற்கத்திய நட்புரீதியான தாக்குதல்களை எதிர்கொண்டது.ஏப்ரல் 28, 1945 அன்று, முசோலினி இத்தாலிய கம்யூனிஸ்ட் பிரிவினைவாதிகளால் கைப்பற்றப்பட்டு மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். 30 ஏப்ரல் 1945 அன்று ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார். ஜன கண மன சன கண மன... இந்திய நாட்டுப்பண் ஆகும். இப்பாடல் வங்காள மொழியில் இரவீந்திரநாத் தாகூர் இயற்றிய கவிதை ஒன்றின் தொடக்க வரிகளாகும். இந்த கீதத்தை முழுவதாக பாடுவதற்கு 52 விநாடிகள் ஆகும். "சன கண மன அதிநாயக செய கே" "பாரத பாக்கிய விதாதா". "பஞ்சாப சிந்து குசராத்த மராட்டா" "திராவிட உத்கல வங்கா". "விந்திய இமாச்சல யமுனா கங்கா" "உச்சல சலதி தரங்கா". "தவ சுப நாமே சாகே", "தவ சுப ஆசிச மாகே", "காகே தவ செய காதா". "சன கண மங்கள தாயக செயகே" "பாரத பாக்கிய விதாதா". "செய கே, செய கே, செய கே," "செய செய செய, செய கே." தமிழக அரசின் அதிகாரப்பூர்வ மொழி பெயர்ப்பான இது அரசு பாடநூல்களில் பயன்படுத்தப்படுகின்றது: இந்தியத் தாயே! மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற நின் திருப்பெயர் பஞ்சாபையும், சிந்துவையும், கூர்ச்சரத்தையும் நின் திருப்பெயர் விந்திய, இமய மலைத் தொடர்களில் அவை நின்னருளை வேண்டுகின்றன; நின் புகழைப் பரப்புகின்றன. இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தாயே. உனக்கு 1911-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதிதான் முதன்முதலாக கல்கத்தா நகரில் இந்திய தேசிய காங்கிரசு மாநாடு நடக்கும்போது இப் பாடல் பாடப்பட்டது. தாகூரின் உறவினரான சரளாதேவி சௌதுராணி இந்தப் பாடலைப் பாடினார். 1950-ம் ஆண்டு சனவரியில்தான் "சன கன மண' இந்தியாவின் தேசிய கீதமாகவும் "வந்தேமாதரம்' தேசியப் பாடலாகவும் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் இராசேந்திர பிரசாத்தால் அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் சகல விதமான அரசு நிகழ்ச்சிகளின் இறுதியில் இப்பாடல் பாடப்பெற்று இந்தியர்கள் அனைவரும் எழுந்து நின்று அசையாமல் மரியாதை செலுத்தும் வழக்கம் உள்ளது. தேசிய கீதம் அறிமுகமான காலத்தில் அனைத்திந்திய வானொலியின் அன்றாட நிகழ்ச்சிகளின் இறுதியில் இப்பாடல் ஒலிபரப்பட்டது. திரையரங்குகளில் திரைப்படத்தின் முடிவில் தேசியக்கொடி திரையிலும், தேசிய கீதம் ஒலியிலும் வந்தன. திரையரங்கில் உள்ள மக்கள் எழுந்து நின்று மரியாதை செய்தனர். தற்காலத்தில் இந்நடைமுறை இல்லை. தோசை தோசை என்பது உளுந்து மற்றும் அரிசி கொண்டு தயாரிக்கப்படும் தட்டையான வட்டவடிவான உணவுப் பதார்த்தம் ஆகும். தென் இந்தியா மற்றும் இலங்கைத் தமிழர்களிடையே பல பகுதிகளில் மிகவும் புகழ்பெற்ற உணவு. இது பொதுவாகத் தட்டையான தாள் போன்ற வட்ட வடிவம் கொண்டதெனினும் ஒரு சில விடுதிகளில் தட்டையான வடிவில் நெய்த்தோசையைச் சுட்டுவிட்டுப் பின்னர் கூம்பி வடிவிலும் பரிமாறுவர். மஞ்சள் சேர்க்கப்படாத தோசை பொதுவாக வெண்மையான நிறத்தில் இருக்கும். வெந்தயம் - தோசை மாவில் வெந்தயம் சிறிது அளவு சேர்த்து அரைக்கப்படும் அதனால் தோசைக்கு சற்று சிவந்த நிறம் ஏற்படும். இது சேர்ப்பதால் உடலுக்கும் நல்லது குளிர்ச்சியை தரும் . தோய்தல் என்றால் மாப்புளித்தல்; தோய் என்பது தோயை என்றாகி பின்னர் தோசை என்றாகியது. தோசைக்கல்லில் வட்டமாகத் தேய்த்து செய்யப்படும் உணவுப்பண்டமாதலால் தேய்+செய் என்ற சொற்களே மாறி தோசை என்றாகியது என்போரும் உள்ளனர். தோசையினை உட்கொள்வதற்கும், சுவையினைக் கூட்டுவதற்கும் இந்த பதார்த்தங்கள் உபயோகப்படுகின்றன. தோசையில் பலவிதமான வகைகள் உண்டு. அவற்றில் சில: தேவையான பொருட்கள் : பருத்தித்துறைத் தோசை பெரும்பாலான ஈழத்தவர்களால் பேசப்படும், விரும்பி உண்ணப்படும் தோசையாகும். இத்தோசை உளுந்து, அரிசி, கோதுமை மாவு என்பன கலந்து செய்யப்படும். இத் தோசைக்கு வெந்தயம் கண்டிப்பாகச் சேர்க்கப்படும். இதற்கான கலவை தென்னங்கள்ளோ அன்றி பனங்கள்ளோ விட்டுப் புளிக்க விடப்படும். பருத்தித்துறையில் இருக்கும் ஓடக்கரை வீதிகளில் விற்கப்படும் இத் தோசைக்கு மவுசு அதிகம். பல்வேறு நகரங்களில் இருந்தும் பலர் இத்தோசைக்காகவே பருத்தித்துறைக்கு வந்து சாப்பிட்டுப் போவார்கள். தேவையான பொருட்கள் செய்யும் முறை தொட்டுக்கொள்ள தோசை பல்வேறு பெயர்களில் தென்னிந்திய மொழிகளில் அழைக்கப்படுகின்றது. அதன் ஒலிபெயர்ப்பும், உச்சரிப்பும் பின்வருமாறு: ஆண்டாள் ஆண்டாள் தமிழத்தில் 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார். வைணவ சமய நூல்கள் கூறும் இவரது வரலாறு இறைவன் மீது இவர் கொண்டிருந்த காதலை விளக்கும் வித்தியாசமான ஒரு வரலாறாகும். ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அவதாரமாய் கருதப்படுகிறார். ஒரு குழந்தையாக ஆண்டாள் துளசிச் செடியின் கீழ் கிடந்தபோது மதுரைக்கு அண்மையிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஊரில் வசித்துவந்த விஷ்ணுசித்தர் (பெரியாழ்வார்) என்னும் அந்தணர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டாள். இவ்வந்தணர் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு மலர்கள் கொய்து கொடுப்பதைத் தமது கடமையாகக் கொண்டவர். தனக்கெனக் குடும்பம் எதுவும் இல்லாதிருந்த நிலையிலும் குழந்தை தனக்கு இறைவனால் வழங்கப்பட்ட கொடை எனக் கருதி வளர்த்து வரலானார். ஆயர் குல பெருமை அறிந்த பெரியாழ்வார் அக்குழந்தைக்கு இட்ட பெயர் கோதை. இளம் வயதிலேயே சமயம், தமிழ் என்பன தொடர்பில் தனக்குத் தெரிந்த அனைத்தையுமே விஷ்ணுசித்தர் கோதைக்குச் சொல்லிக் கொடுத்தார். இதனால் கோதை இளம் வயதிலேயே கண்ணன் மீது மிகுந்த பக்தியுணர்வு கொண்டவராயும் தமிழில் நல்ல திறமை கொண்டவராகவும் இருந்தார். சிறு வயதிலேயே கண்ணன் மீதிருந்த அளவற்ற அன்பு காரணமாக அவனையே மணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணத்தையும் வளர்த்துக்கொண்டார். தன்னைக் கண்ணனின் மணப்பெண்ணாக நினைத்துப் பாவனை செய்துவந்தார். கோயிலில் இறைவனுக்கு அணிவிப்பதற்காக விஷ்ணுசித்தர் தொடுத்து வைத்திருக்கும் மாலைகளை ஒவ்வொரு நாளும் அவருக்குத் தெரியாமல் தான் அணிந்து கண்ணனுக்கு ஏற்றவளாக தானிருக்கிறோமா என்று கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்து பின்னர் திரும்பவும் கொண்டுபோய் வைத்துவந்தார். இதனால் கோதை சூடிய மாலைகளே இறைவனுக்கும் சூடப்பட்டன. ஒருநாள் இதனை அறிந்து கொண்ட விஷ்ணுசித்தர் கோதையைக் கடிந்துகொண்டார். அவள் சூடிய மாலையை ஒதுக்கிவிட்டுப் புதிய மாலை தொடுத்து இறைவனுக்கு அணிவித்தார். அன்றிரவு இறைவன் அவரது கனவில் தோன்றி கோதை அணிந்த மாலைகளே தனக்குப் உகப்பானவை எனவும் அவற்றையே தனக்குச் சூடவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். இதனாலேயே "சூடிக்கொடுத்த சுடர்க்கொடி" என்றும் "இறைவனையே ஆண்டவள்" என்ற பொருளில் ஆண்டாள் என்றும் போற்றப்படுகிறார். கோதை மண வயதடைந்த பின்னர் அவளுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட திருமண ஏற்பாடுகளை மறுத்து, திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) கோயிலில் உறையும் இறைவனையே மணப்பதென்று பிடிவாதமாக இருந்தார். என்ன செய்வதென்று அறியாது கவலையுடனிருந்த விஷ்ணுசித்தருடைய கனவில் தோன்றிய இறைவன், கோதையை மணப்பெண்ணாக அலங்கரித்து திருவரங்கம் கோயிலுக்கு அழைத்துவருமாறு பணித்தார். குறித்த நாளன்று கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோதை, கோயில் கருவறைக்குள் சென்று இறைவனுடன் கலந்துவிட்டாள் என்பது ஆண்டாள் வரலாறு. ஆண்டாள் தனது 15ஆம் வயதில் இறைவனுடன் இரண்டறக் கலப்பதற்கு முன் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு நூல்களை இயற்றியுள்ளார். இவ்விரு நூல்களும் அதன் இலக்கிய செழுமைக்கும் தத்துவம், பக்தி ஆகியவற்றிக்காக மிகுந்து போற்றப்படுகின்றது. இவரது முதல் படைப்பான திருப்பாவை 30 பாடல்களைக் கொண்டுள்ளது. இத் திருப்பாவை ஆண்டாள் தன்னை ஆயர்பாடியில் வாழும் கோபிகையாக நினைத்துக் கொண்டு பாடப்பெற்ற பாட்டுகளின் தொகுப்பாகும். இவரது இரண்டாவது படைப்பான நாச்சியார் திருமொழி 143 பாடல்களைக் கொண்டுள்ளது. இறைவனை நினைத்துருகிப்பாடும் காதல்ரசம் மிகு பாடல்களின் தொகுப்பாக காணப்படுகின்றது. இது வடமொழியில் எழுதப்பட்ட ஜெயதேவரின் கீத கோவிந்தம் எனும் நூலினை ஒத்ததன்மை உடையதாக காணப்படுகின்றது. கண்ணனை மணமுடிப்பதாக ஆண்டாள் பாடியுள்ள நாச்சியார் திருமொழியில் உள்ள ’வாரணமாயிரம்’ புகழ் பெற்றது ஆண்டாளின் இவ்விரு படைப்புகளும் குறிப்பாக திருப்பாவை நாட்டின் (தென்கலை மற்றும் வடகலை பின்பற்றும்) அனைத்து வைணவதலங்களிலும் வைணவர்களின் இல்லங்களிலும் தினந்தோறும் ஓதப்பட்டு வருகின்றது. மேலும் வைணவதலங்களில் நடைபெறும் முக்கிய விழாக்களிலாயினும் வைணவர்களின் இல்லவிழாவாயினும் வடமொழி மறைகளுக்கு நிகராக தவறாமல் ஓதப்படுகின்றது. 360டிகிரி கோணத்தில் ஆண்டாள் கோயில் தரிசனம் தினமலர் மில்லியன் மேற்கத்திய எண்முறையில் மில்லியன் என்பது ஆயிரம் ஆயிரத்தைக் (1000 X 1000) குறிக்கும். இந்திய எண்முறைப்படி 10 இலட்சம் ஒரு மில்லியனுக்குச் சமமானது. ஓரளவு பெரிய கணியங்களின் அளவீடுகள் மில்லியன் கணக்கிலேயே குறிப்பிடப்படுகின்றன. SI அளவை முறையில் "மெகா" என்னும் முன்னடைவு மில்லியனைக் குறிக்கப் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு மில்லியன் வாட்டுகள் ஒரு மெகா வாட்டுகள் (Mega Watts) என்றும், ஒரு மில்லியன் பிக்சல்கள் மெகா பிக்சல்கள் (Mega Pixels) என்றும் அழைக்கப்படுகின்றன. ஒரு மில்லியன் 1,000,000 (10,00,000 இந்திய எண்முறைப்படி)என எழுதப்படுகிறது. அறிவியல் முறையில் எழுதும்போது, ஒரு மில்லியன் 10 என எழுதப்படும். இப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட எண்களை மேல்வாய் எண்கள் என்றும், ஒன்றுக்கும் குறைவாக உள்ள அரை, கால், அரைக்கால், வீசம் போன்ற பிள்வ எண்களைக் (பின்ன எண்களைக்), கீழ்வாய் எண்கள் என்றும் கூறுவர். நிலநடுக்கம் நிலநடுக்கம் (அல்லது பூகம்பம், அல்லது பூமியதிர்ச்சி, ஆங்கிலம்:"earthquake") என்பது பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி அதனால் சக்தி வெளியேற்றப்பட்டு, தளத்தட்டுகள் (Plates) நகர்வதனால் இடம்பெறும் அதிர்வைக் குறிக்கும். இந்த அதிர்வு நிலநடுக்கமானியினால் ("seismometer") ரிக்டர் அளவை மூலம் அளக்கப்படுகிறது. 3 ரிக்டருக்கும் குறைவான நிலநடுக்கங்களை உணர்வது கடினமாகும். அதேவேளை 7 ரிக்டருக்கும் கூடுதலான அதிர்வுகள் பலத்த சேதத்தை ஏற்படுத்த வல்லன. பூமியின் மேற்பரப்பு ("Lithosphere") பெரும் பாளங்களாக அமைந்துள்ளது. இவை நகரும் பிளேட்டுகளாக இருக்கிறது. நிலப்பரப்பிலும், நீரின் அடியிலுமாக உள்ள இவற்றில் ஏழு பிளேட்டுகள் மிகப் பெரியதாகவும், குறைந்தது ஒரு டஜன் சிறிய பிளேட்டுகளும் உள்ளன. இந்த ஏழு பெரும் பிளேட்டுகளில் ஐந்து கண்டங்களும் பசிபிக் முதலிய சமுத்திரப் பகுதிகளும் அடக்கம். இந்தப் பிளேட்டுகள் சுமார் 80 கி.மீ. வரை தடிமன் கொண்டதாக இருக்கிறது. இதனடியில் பாறைகள் கொதிக்கும் குழம்பாக இருப்பதாலும், பூமியின் சுழற்சி வேகத்தில் இந்தப் பாறைக் குழம்பு நகர்வதாலும், மேலே இருக்கும் பிளேட்டுகள் ஒன்றுடன் ஒன்று உராய்வதுடன் நகர்ந்தும் செல்கிறது. இந்தப் பிளேட்டுகள் ஒரு வருடத்திற்கு ஒரு செ.மீ. முதல் சுமார் 13 செ.மீ. வரை நகர்கிறது. இது நமது உலக வேகத்திற்கு மிக நுண்ணியதாக இருந்தாலும் இந்த பிளேட்களின் லேசான உராய்வும் கூட பெரும் பூகம்பம் ஏற்படுத்தக் கூடியவை. ஒரு நிலநடுக்கம் நிலச்சரிவுகளையும் சிலசமயம் எரிமலை செயல்பாட்டையும் அதிகரிக்க செய்யும். ஒரு நிலநடுக்கத்தின் அளவுக்கு வரையறை ஏதுமில்லை என்றாலும் வரலாற்றில் பதிவான மிக பெரிய நிலநடுக்கங்கள், 9.0 ரிக்டருக்கும் கூடுதலானவை பெரும் பாதிப்பை ஏற்படுத்துவன ஆகும். இத்தகைய மிக அன்மையின் நிகழ்ந்த நிலநடுக்கமானது 2011ஆம் ஆண்டு செண்டாய், சப்பானில் நிகழ்ந்த நிலநடுக்கமாகும். பதிவு செய்யப்பட்ட நிலநடுக்கங்களுல் சப்பானில் பதிவான வலுவான நிலநடுக்கம் இதுவாகும். ஆழமற்ற நிலநடுக்கங்களே அதிக ஆபத்தை விளைவிக்கக்கூடியவை ஆகும். ஐரோப்பாவும் ஆசியாவும் இணைந்த நிலப்பரப்பாக காணப்பட்டாலும் இரண்டும் தனித்தனி தட்டுகளில் அமைந்துள்ளது. இந்தியா உள்ளிட்ட தெற்காசியப் பகுதி ஆசிய தட்டில் இல்லாமல் தனித்தட்டாக அமைந்துள்ளது. இதனாலேயே இது இந்தியத் துணைக் கண்டம் என்றழைக்கப்படுகிறது. மேலும் இந்திய பிளேட், ஆசிய பிளேட் ஆகிய இரண்டும் வடக்கு நோக்கி நகர்கின்றன. இதில் ஆசிய தட்டை விட இந்திய தட்டு வேகமாக நகர்வதால், இந்திய தட்டு ஆசிய தட்டை மோதி அந்த அழுத்தத்தில் உருவானதே இமயமலைப் பிரதேசம். இமயமலை இன்னும் வளர்ந்து கொண்டிருப்பதன் காரணமும் இது தான். இரு பிளேட்களின் அழுத்தத்தால் இமயமலைப் பகுதி வளரும் பொழுது உராயும் பாறைகள் அசைந்து கொடுப்பதால் இப்பகுதி நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்புள்ள பகுதியாக கருதப்படுகிறது. பல கோடி வருடங்களுக்கு முன்பு ஆசியாவும் ஐரோப்பாவும் இணைந்து இருந்தது. இது யூரேசியா என்று அறிவியலாளர்களால் கூறப்படுகிறது. ஒரு பெரிய பூகம்பதால் தான் ஆசியாவும் ஐரோப்பாவும் தனித்தனி கண்டங்களாக பிரிந்ததாக கூறப்படுகிறது. எனினும் இதற்கான தெளிவான ஆதாரங்கள் இல்லை. நிலநடுக்கம் மூன்று வகையான புவித்தட்டு அசைவுகளால் ஏற்படும். சாதாரண முறை, மேற்தள்ளல் முறை மற்றும் சமாந்தர அசைவு என்பனவே அவையாகும். சாதாரண மற்றும் மேற்தள்ளல் முறைகளில் ஒரு புவித்தட்டு மேல் நோக்கியும் மற்றையது கீழ்நோக்கியும் அசையும். சமாந்தர அசைவில் இரண்டு புவித்தட்டுக்கள் சமாந்தரமாக உராய்வுடன் செல்லும். இவ் அனைத்து புவித்தட்டு அசைவுகளும் புவியின் மேலோட்டுக்ளுக்குக் கீழுள்ள உருகிய பாறைக் குழம்பின் அசைவுகளாலேயாகும். புதிதாக புவி மேலோடு உருவாகும் இடங்களான புவித்தட்டு விலகற் பிரதேசங்களில் சாதாரண முறை அசைவு இடம்பெறும். இம்முறையில் ஏற்படும் நிலநடுக்கம் பொதுவாக 7 ரிச்டரைத் தாண்டாது. மேலெழும்பல் அசைவு முறையால் ஏற்படும் நிலநடுக்கங்களே அதிக ரிச்டர் அளவோடு அதிக அழிவையும் ஏற்படுத்துவனவாகும். புவித்தட்டு அசைவுகளைத் தவிர பாறைகளின் அசைவுகளால் சிற்சிறு நிலநடுக்கங்கள் ஏற்படும். ஒவ்வொரு வருடமும் 5,00,000 நிலநடுக்கங்கள் புவியில் ஏற்படுகின்றன. இவற்றில் 1,00,000 நிலநடுக்கங்கள் மக்களால் உணரப்படுகின்றன. புவியின் அனைத்துப் பகுதிகளிலும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. எனினும் பேரழிவை ஏற்படுத்தும் நிலநடுக்கங்கள் அரிதாகவே ஏற்படுகின்றன. உலகின் 90%இற்கும் அதிகமான பூகம்பங்கள் பசுபிக் சமுத்திரத்தை அண்டிய பகுதிகளிலேயே உருவாகின்றன. நிலநடுக்கத்தின் வீரியத்தை நிலநடுக்கப் பதிவுக் கருவி மூலம் அளவிடலாம். இதில் ரிக்டர் அளவீடு பயன்படும். இதுவே நிலநடுக்கத்தின் பிரதான விளைவாகும். இதனால் கட்டடங்களும் ஏனைய பல செயற்கையான அமைப்புகளும் அழிவுக்குள்ளாகும். இதன் தாக்கமானது நிலநடுக்கத்தின் அளவு, மையத்திலிருந்துள்ள தூரம் மற்றும் பிரதேசத்தின் புவியியல் தோற்றப்பாடு போன்ற காரணிகளால் வேறுபடக்கூடியது. நிலநடுக்கத்துடன் கூடிய கடும் புயல், எரிமலை வெடிப்பு, சுனாமி, காட்டுத்தீ போன்ற இயற்கை அனர்த்தங்களால் நிலத்தினதும் பனிப்பாறைகளினதும் உறுதித்தன்மை பாதிக்கப்படுவதால் மண்சரிவோ குளிர் காலநிலையுடைய இடங்களில் பனிச்சரிவோ ஏற்படலாம். நிலநடுக்கத்தின் போது வாயு வழங்கல் குழாய்களும், மின்சாரக் கம்பிகளும் பாதிக்கப்படுவதால் பாரிய தீ அனர்த்தம் ஏற்படும் வாய்ப்புள்ளது. 1906 ஆம் ஆண்டில் சான் பிரான்ஸிஸ்கோ நகரில் ஏற்பட்ட பூகம்பத்தில் அதிகமான இறப்புகளுக்கு தீயே காரணமாகும். நிலநடுக்கத்தின் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் விளைவே சுனாமியாகும்.பொதுவாக கடலடியில் ஏற்படும் 7.5 க்கும் குறைவான ரிக்டர் அளவு நிலநடுக்கங்கள் ஆழிப்பேரலைகள் உருவாவதில்லை. ஆனால் ரிக்டரில் 7.5 க்கும் அதிகமான நிலநடுக்கங்களே ஆழிப்பேரலை உருவாவதற்கும் அதனால் ஏற்படும் பெருஞ்சேதங்களுக்கும் காரணங்களாக அமைகின்றன. உதாரணமாக 2004 இல் ஏற்பட்ட பூகம்பம் சுனாமியை உருவாக்கியமையாலேயே அது உலகில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய நிலநடுக்கமாகக் கருதப்படுகின்றது. நீர்நிலைகளிலிருந்து அதிகப்படியான தண்ணீர் பெருக்கெடுத்து நிலத்தை அடைவது வெள்ளம் எனப்படுகிறது . நீர்நிலைகளான ஆறு, குளம், போன்றவற்றின் மொத்த கொள்ளளவைத் தாண்டி நிரம்பும் போது நீர் வெளியேறி வழக்கமாக வெள்ளம் ஏற்படுகிறது. ஆனால் பூகம்பம் அல்லது நிலநடுக்கத்தின் போது நீர் நிலைகளின் தடுப்பணைகள் உடைந்து சேதமுறுவதால் அதிகப்படியான நீர் வெளியேறி பெருத்த சேதத்தை உண்டாக்கலாம்.நிலநடுக்கத்தின் போது அணைகள் உடைந்து வெள்ளம் ஏற்படுவது இரண்டாம் நிலை பாதிப்பாகும். சில நேரங்களில் நிலநடுக்கம் ஏற்படும் போது உண்டாகும் நிலச்சரிவுகள் ஆற்றின் குறுக்கே விழுந்து தற்காலிக நீர்த்தேக்கம் உருவாகி பின்னர் அது வலுவிழந்து உடைந்து தண்ணீர் வெளியேறினாலும் வெள்ளம் உண்டாகக்கூடும் தஜிகிஸ்தான் நாட்டின் சரெசு ஏரிக்கு கீழே உள்ள நிலப்பகுதி பெருங்கேடு விளைவிக்கும் வெள்ளத்தால் பாதிக்கும் நிலையில் உள்ளது. இப்பகுதியில் பாயும் ஆற்றுக்கு குறுக்கே நிலச்சரிவினால் உருவாகிய உசோய் அணை உள்ளது. எதிர்காலத்தில் ஏதேனும் நிலநடுக்கம் ஏற்பட்டால் இந்த வலுவற்ற அணை உடைந்து பெருவெள்ளம் ஏற்படும் என்றும் அதனால் சுமார் 5 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என கணிக்கப்படுகிறது. நிலநடுக்கத்தின் போது ஏற்படும் காயங்கள் மற்றும் உறுப்பு சேதங்கள் மரணத்தை ஏற்ப்படுத்துகின்றன. அதுமட்டுமல்லாமல் சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுச் சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்கள் அடிந்து நாசமாகின்றன அல்லது பெருஞ்சேதமுறுகின்றன (பொதுவாக நிலநடுக்கத்தால் கட்டிடங்களுக்கு ஏற்படும் சேதங்கள் இடிந்து விழுவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளன). அதுமட்டுமல்லாமல் நிலநடுக்கத்தால் நோய்களும் அடிப்படைத் தேவை குறைபாடுகளும் ஏற்படும் அபாயங்கள் உள்ளன. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பீதி, உயிர் பிழைத்தவர்களுக்கு மன அழுத்தம் , மற்றும் அதிக காப்பீட்டு சந்தா போன்ற சிக்கல்கள் ஏற்படக்கூடும். தற்போதைய நவீன கருவிகளைக் கொண்டு கண்டுபிடிக்கப்படக்கூடிய நிலநடுக்கங்கள் ஒவ்வொரு ஆண்டும் 500,000 ஏற்படுகின்றன என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றுள் 100,000 மனிதர்களால் உணரக்கூடியவையாகும். சிறு நிலநடுக்கங்கள் உலகம் முழுவதும், குறிப்பாக அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிபோர்னியா மற்றும் அலாஸ்கா, மெக்சிக்கோ, குவாத்தமாலா, சிலி, பெரு, இந்தோனேசியா, ஈரான், பாக்கித்தான், போர்த்துகலின் சில பகுதிகள், துருக்கி, நியூசிலாந்து, கிரேக்கம், இத்தாலி, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகியவற்றில் கிட்டத்தட்ட தொடர்ந்து ஏற்படுக்கொண்டே இருக்கின்றன. ஆனாலும் நிலநடுக்கங்கள் நியூயார்க் நகரம், இலண்டன் மற்றும் ஆஸ்திரேலியா உட்பட, கிட்டத்தட்ட உலகில் எங்கும் ஏற்படலாம். . உலகின் நிலநடுக்கங்கள் (90% முதல் 81% வரையான பெரிய நிலநடுக்கங்கள் அடிக்கடி பசிபிக் பெருங்கடலைச் சுற்றி அமைந்துள்ள எரிமலை வளையம் என்ற பகுதியில் அமைந்துள்ளன. இமய மலையின் அடிவாரத்திலும் அதிக அளவு நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. நிலநடுக்க பாதிப்பு (seismic risk) அதிகம் உள்ள இடங்களில் மெக்சிகோ நகரம், தோக்கியோ மற்றும் தெஹ்ரான் போன்ற பெரு நகரங்களின் தோற்றமும் வளர்ச்சியால், ஒரே நிலநடுக்கத்தில் 3 மில்லியன் மக்கள் கொல்லப்பட வாய்ப்புள்ளதாக அறிஞர்கள் எச்சரித்துள்ளனர். நிலநடுக்க அளவீடு "நில நடுக்க "அதிர்வுகளின் வலுவை பலவகையான அளவீடுகளால் அறிகிறார்கள். அவற்றுள் "ரிக்டர் அளவீடு" (Richter Scale) என்ற மடிமை (லாகரிதமிக்) அளவீட்டால் அளக்கப்படுவது பரவலாக அறியப்படும் ஒரு அளவீடு. ஒவ்வொரு நாளும் உலகம் முழுதும் நூற்றுக்கணக்கில் நில அதிர்வுகள் பல்வேறு வலுவுடன் ஏற்படுவதாக நிலநடுக்க அளவீடு மூலம் அறியப்படுகிறது. இவை பெரும்பாலும் மிகச் சிறிய அதிர்வுகளாக இருப்பதால் நம்மால் அறிய முடிவதில்லை. எனவே நில உருண்டையின் மேல் ஓடானது (டெக்டானிக் தகடுகள்) தொடர்ந்து அதிர்ந்து கொண்டும் நகர்ந்து கொண்டும் இருக்கும் . நில அதிர்வுகளை அறிந்து கொள்ள உலகம் முழுவதும் ஆயிரத்திற்கு மேற்பட்ட நிலநடுக்கவியல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு நிலநடுக்கம் அல்லது பூகம்பம் ஏற்படும் போது பல்வேறு நிலையங்களில் பதிவான அளவுகளைக் கொண்டு அந்த நிலநடுக்கத்தின் (பூகம்பத்தின்) நிலநடுக்க மையம் (epicenter.) எங்கு உள்ளது என்பதையும், நிலநடுக்கத்தின் வலு அளவையும் கணிப்பார்கள். பூமிக்குள் எந்த இடத்தில் பாறைப் படிமங்களின் உரசல் ஏற்பட்டதால் பூகம்பம் உண்டானதோ அது குவியம் ("Focus") எனப்படும். அந்த இடத்திற்கு நேராக மேலே உள்ள பூமியின் மேற்பரப்பு புவி அதிர்ச்சி வெளிமையம் என்று அழைக்கப்படும். ஒரு நிலநடுக்கத்தின் குவியம் தரையிலிருந்து 70 கி.மீ. ஆழத்திற்குள் இருந்தால் அதனை ஆழமற்ற குவியம் ("Shallow focus") என்பார்கள். இதனால் பூமியின் பரப்பில் ஏற்படும் பாதிப்புகள் அதிகம். 70 கி.மீ.க்கு மேல் 700 கி.மீ ஆழத்திற்குள் பூகம்பம் உருவானால் ஆழமான குவியம் (Deep focus) என்று கருதப்படும். நிலநடுக்க அதிர்வுகளின் வலுவை வகைப்படுத்த 1780களில் டொமினிக்கோ பின்யாட்டாரோ (Domenico Pignataro) என்பார் ஏற்படுத்திய எளிய முறையை முதலில் பயன்படுத்தினர். பின்னர் நிலநடுக்க வலுவை, தற்கால புரிதலின் படி அளவிட 1828ல் பி.என்.ஜி ஈகன் (P.N.G. Egen) அவர்களால் உருவாக்கப்பட்ட அளவீடே முதன்முதல் பலராலும் அறியப்பட்ட அளவீடாகும். 19 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ராஸ்ஸி-ஃவோரெல் (Rossi-Forel scale) அளவீட்டு முறையே முதன்முதல் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையாகும்.. அதன் பின்னர் பல வகையான நிலநடுக்க வீச்சு, வலு அளவீடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஐக்கிய அமெரிக்காவில் MM என்று குறிப்பிடப்படும் "மாற்றம் செய்யப்பட்ட மெர்க்காலி அளவீடு" (Modified Mercalli scale (MM) பயன்படுத்தப்படுகின்றது. ஐரோப்பாவில் ஐரோப்பிய மாக்ரோசைஸ்மிக் அளவீடு (European Macroseismic Scale) என்னும் முறைவழி அலவிடுகிறார்கள். யப்பானில்(ஜப்பான்) ஷிண்ட்டோ அளவீடு என்னும் முறையைக் கையாளுகிறார்கள். இந்தியா, இசுரேல், ரஷ்யா ஆகிய நாடுகளில் MSK-64 என்னும் அளவுமுறையைப் பயன்படுத்துகிறார்கள். இவ்வளவீடுகளில் பெரும்பாலானவை நிலநடுக்க வலுவைக் குறிக்க சற்றேறக்குறைய 12-படி அளவுநிலைகளைக் கொண்டுள்ளது. குறைந்தது மூன்று நிலநடுக்கவியல் நிலையங்களில் பதிவான தகவல்களைக் கொண்டு நிலநடுக்க மையம் கண்டுபிடிக்கப்படும். கணிப்பின் துல்லியம் அதிர் மையத்திற்கு 10கி.மீ. அளவிற்குள்ளும், பூமியின் அடியில் உள்ள குவியம் 10 - 20 கி.மீ அளவிற்குள்ளும் அறியப்படுகிறது. நிலநடுக்கங்கள் ஏற்படும் என்று கணிக்கப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள சிறப்பு நிலஅதிர்வியல் நிலையங்களால் நிலநடுக்க மையத்தை மேலும் துல்லியமாக கணிக்க இயலும். ரிக்டர் அளவு ரிக்டர் அளவு ("Richter magnitude scale") என்பது நில அதிர்வுகளை அளவிடப் பயன்படுத்தப்படும் ஓர் அளவுத்திட்டம் ஆகும். அமெரிக்க நிலஅதிர்வுவியலாளர் சார்லஸ் ரிக்டர் 1935 ஆம் ஆண்டில் முதன்முதலாக நில அதிர்வுகளுக்கு நில அளவுகளை வரையறுத்தார். இது தரையில் ஏற்படும் நில அதிர்வின் அலை உயரத்தைக் கணிக்கும். இதன் ஓர் அலகு அதற்கு முந்தைய அலகு அளவை விடப் பத்து மடங்கு அதிக அதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும். நில அதிர்வுகள் ஒரு மில்லிமீட்டருக்கும் குறைவான அளவிலிருந்து பல மீட்டர்கள் வரை மிக அதிக மாறுபாடுகளைக் கொண்டதாக இருப்பதால், அவர் அளவுகளை இவ்வாறு வரையறுக்க வேண்டியிருந்தது. ஆகவே ரிக்டர் அளவில் 5 என்ற அளவு நான்கை விட பத்து மடங்கு அதிக அதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும். மூன்றை விட 10x10 அல்லது 100 மடங்கு அதிக அதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும். ரிக்டர் அளவில் 2.0க்கு குறைவானவற்றை சாதாரண மனிதர்களால் அறிய முடியாது. இவை மைக்ரோ நிலநடுக்கம் எனப்படும். இவை சாதாரணமாகத் தொடர்ந்து நடைபெறும். 6.0 க்கு மேல் பதிவாகும் நிலநடுக்கங்கள் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. ரிக்டர் அளவை உருவான பிறகு அதிகபட்சமாக 8.9 வரை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் நில அதிர்வு நிகழும் இடத்தைப் பொறுத்து ஒரே ரிக்டர் அளவைக்கு மாறுபட்ட பாதிப்புகள் ஏற்படலாம். மக்கள் நெருக்கியடித்து வாழும் நகரின் மையத்தில் நிகழும் நில அதிர்வு அளவிட முடியாத நாசத்தையும், உயிர் சேதத்தையும் ஏற்படுத்தலாம். ஆனால் அதே அளவு நில அதிர்வு ஒரு தட்டையான வனப்பிரதேசத்தில் ஏற்பட்டால் அங்குள்ள வனவிலங்குகளைச் சற்று சிதறி ஓடுவதைத் தவிர வேறு பாதிப்புகளை உண்டாக்காமலும் இருக்க முடியும். அணு அணு () ("atom") என்பது தனிமத்தின் இயல்புகளைக் கொண்ட இயல்பான பொருள் ஒன்றின் மிகச் சிறிய அலகுப் பொருட்கூறு ஆகும். ஒவ்வொரு திண்மம், நீர்மம், வளிமம், பிளாசுமாவும் நொதுமல்நிலை அல்லது மின்னூட்டமுடைய அணுக்களைக் கொண்டுள்ளது. அணுக்கள் மிகவும் சிறியவை; கட்டாக அவை அளவில் மீட்டரின் 10 பில்லியனில் ஒரு பங்காகும். அதாவது ஆயிரம்கோடியில் ஒரு பங்காகும். என்றாலும் அணுக்களுக்கு நன்கு வரையறுத்த எல்லைகள் கிடையாது. அவற்றின் உருவளவை வரையறுக்கப் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அவை வேறுபட்ட மதிப்புகளைத் தந்தாலும் மிக நெருக்கமான மதிப்புகளாக அமைகின்றன . அணுக்கள் மிகச் சிறியவையாக உள்ளதால் செவ்வியற்கால இயற்பியல் சரியற்ற முடிவுகளையே தந்தது. இயற்பியல் வளர வளர, நன்கு விளக்கி முன்கணிக்கும் குவைய நெறிமுறைகள் உருவாகின. ஒவ்வொரு அணுவிலும் ஒரு மைய அணுக்கருவும் அதோடு கட்டுண்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எதிர்மின்னிகளும் அமைந்துள்ளன. அணுக்கருவில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நேர்மின்னிகளும் அதையொத்த எண்ணிக்கையில் நொதுமிகளும் உள்ளன. நேர்மின்னிகளும் எதிர்மின்னிகளும் அணுக்கருனி எனப்படுகின்றன. ஏறக்குறைய 99.94% பொருண்மை அணுக்கருவிலேயே (nucleus) அமைந்துள்ளது. நேர்மின்னிகள் நேர்மின்னூட்டம் கொண்டுள்ளன. எதிர்மின்னிகள் எதிர்மின்னூட்டம் கொண்டுள்ளன. நொதுமிகள் மின்னூட்டம் அற்றவை. நேர்மின்னிகளும், எதிர்மின்னிகளுன் எண்ணிக்கையில் சம்மாக இருந்தால் அணு மின்னியலாக நொதுமல்நிலையில் அமையும். ஒரு அணுவில் நேர்மின்னிகளைவிட எதிர்மின்னிகளின் அளவு கூடினாலும் குறைந்தாலும் அணுவின் ஒட்டுமொத்த மின்னூட்டம் நேர் அல்லது எதிர்மின்னூட்டத்துடன் இருக்கும். இத்தகைய அணுக்கள் அயனிகள் எனப்படும். எதிர்மின்னிகள் அணுக்கருவில் உள்ள நேர்மின்னிகளால் மின்காந்த விசையால் ஈர்க்கப்படுகின்றன. அணுக்கருவில் உள்ள நேர்மின்னிகளும் நொதுமிகளும் ஒன்றோடொன்று வேறுவகைப்பட்ட அணுக்கரு விசையால் ஈர்க்கப்படுகின்றன. இது மின்காந்த விசையைவிட வலிமையானது. இது நேர்மின்னூட்டம் உள்ள நேர்மின்னிகளை நெருங்கிவிடாமல் பிரித்து விலக்குகிறது. சிலவேளைகளில் விலக்கும் இயல்புள்ள மின்காந்த விசை அணுக்கரு விசையைவிட வலிமையுற்று அணுக்கருவில் இருந்து அணுக்கருவன்களை வெளியேற்றும். இவ்வகை அணுக்கருச் சிதைவு, தனிம மாற்றத்தால் வேறுபட்ட தனிமத்தை மிஞ்சவைக்கும். அணுக்கருவில் உள்ள நேர்மின்னிகளின் எண்ணிக்கை அவ்வணு எந்த வேதித் தனிமத்தைச் சார்ந்த்து என்பதை முடிவு செய்கிறது: எடுத்துக்காட்டாக, அனைத்து செப்பு அணுக்களிளும் 29 நேர்மின்னிகளைக் கொண்டுள்ளன. நொதிமிகளின் எண்ணிக்கை அத்தனிமத்தின் ஓரிடத்தானை வரையறுக்கின்றன. எதிர்மின்னிகளின் எண்ணிக்கை அணுவின் காந்த இயல்புகளை முடிவு செய்கிறது. அணுக்கள் வேதியியற் பிணைப்புகளால் ஒன்றோடொன்று இணைந்து மூலக்கூறு எனும் வேதிச் சேர்மத்தை உருவாக்கலாம். அணுவின் பிணையும் அல்லது பிரியும் திறமே நாம் இயற்கையில் பார்க்கும் இயற்பியல்/புரநிலை மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இது வேதியியலால் ஆயப்படுகிறது. புடவியின் அனைத்துப் பொருண்மமும் அணுக்களால் அமைவதில்லை. புடவியின் பெரும்பகுதி பொருண்மத்தைவிட (வானியல்)கரும்பொருளாலேயே அமைந்துள்ளது. அதாவது அணுக்களால் அமையாமல் நம்மால் இதுவரை அறியப்படாத துகள்களாலேயே அமைந்துள்ளது. பொருண்மம் தனித்த அலகுப் பொருட்கூறுகளால் ஆயது எனும் எண்ணக்கரு மிகமிகப் பழையதாகும். இது இந்திய, கிரேக்கச் சிந்தனைகளில் பழம்பெரும் பண்பாடுகளில் உருவாகியதாகும். உண்மையில் "atom" என்ற சொல் கிரேக்க மெய்யியலாளர்களால் உருவாக்கப்பட்டது. என்றாலும் இந்த எண்ணக்கரு மெய்யியல் அல்லது இறையியல் கருத்தோட்டங்களல் உருவாக்கப்பட்டதே தவிர சான்றாலும் செய்முறையாலும் நிறுவப்படவில்லை. எனவே அவர்களது அணுக்காட்சியும் இயக்கமும் சரியற்றனவே. மேலும் இக்கருத்தை அனைவராலும் ஏற்கவைக்க அவர்களால் முடியவில்லை. இதனால் பொருண்மம் பற்றிய பல்வேறு கோட்பாடுகளில் ஒன்றாகவே அணுக் கோட்பாடு அக்காலத்தில் நிலவியது. 19ஆம் நூற்றாண்டின் வேதியியல் கண்டுபிடிப்புகளுக்குப் பிறகே, இக்கருத்து ஏற்கப்பட்டு அறிவியலாளர்களால் வளர்த்தெடுக்கவும் நன்கு விளக்கவும் முடிந்தது. ஜான் டால்டன் 1800களில் அணு எனும் கருத்துப் படிமத்தை வேதித் தனிமங்கள் ஏன் குறிப்பிட்ட சிற்றெண் விகிதங்களில் வினைபுரிகின்றன என்பதை விளக்கப் பயன்படுத்தினார் (பன்மை விகிதங்கள் விதி). எடுத்துகாட்டாக, நடப்பில் இருவகை காரீய ஆக்சைடுகள் உள்ளன: ஒன்றில் 88.1% காரீயமும் 11.9% உயிரகமும் (oxygen) உள்ளன. மற்றொன்றில் 78.7% காரீயமும் 21.3% உயிரகமும் (oxygen) உள்ளன. இதன் பொருள் 100கி காரீயம் ஒன்று 13.5கி அல்லது 27கி உயிரகத்துடன் வினைபுரிகிறது. அதாவது 1:2 விகிதத்தில், ஒரு சிற்றெண் விகிதத்தில் வினைபுரிகிறது. வேதியியலின் இந்த பொது நடைமுறை தனிமங்கள் தன் தனி அலகுகளின் (அதாவது அணுக்களின்) முழு எண்ணிக்கைகளின் பன்மடங்கில் வினைபுரிகின்றன என்ற முடிவுக்கு வர வழிவகுத்தது. இந்த எடுத்துகாட்டில் ஒரு காரீய அணு ஒன்று அல்லது இரண்டு உயிரக அணுக்களோடு வினைபுரிகிறது. டால்டன் தண்ணீர் ஏன் பல்வேறு வளிமங்களை பல்வேறு விகிதங்களில் உறிஞ்சுகிறது என்பதையும் அணுக்கோட்பாட்டால் விளக்கமுடியும் என நம்பினார். எடுத்துகாட்டாக, தண்ணீர் கரிம ஈராக்சைடு வளிமத்தை காலக (nitrogen)வளிமத்தைவிட நன்றாக உறிஞ்சுவதைக் கண்டறிந்தார். இதற்குக் காரணம் அந்த வளிம மூலக்கூறுகளின் பொருண்மையும் சிக்கல்நிலையும் வேறுபடுவதே என டால்டன் விளக்கினார். உண்மையில் கரிம ஈராக்சைடு(CO) காலக மூலக்கூறைவிட(N) பெரியதும் எடைமிக்கதும் ஆகும். (N). இராபர்ட் பிரவுன் 1827இல் தண்ணிரில் மிதக்கும்/தவழும் தூசி மணிகளை நுண்ணோகி வழியாகப் பார்வையிட்டுள்ளார். அவை கண்டபடி தன்னியல்பில் இயங்குவதைக் கண்டுள்ளார். இப்போது இவ்வியடக்கம் "பிரவுனிய இயக்கம்" என அவரது பெயரால் வழஙப்படுகிறது. இது தண்ணீர் மூலக்கூறுகளால் தூசி மணிகள் தாக்கப்படுவதால் ஏற்படுவதாகக் கருதப்பட்டது. ஆல்பர்ட் அய்ன்சுடைன் 1905இல் முதன்முதலாகப் பிரவுனிய இயக்கத்தைக் கணிதவியலாக பகுப்பாய்வு செய்தார். பிரெஞ்சு இயற்பியலாளர்ழீன் பெரின் அய்ன்சுட்டீனின் ஆய்வைப் பயன்படுத்தி அணுக்களின் பொருண்மையையும் உருவளவையும் கண்டறிந்து அணுக் கோட்பாட்டை செய்முறை வழியாக உறுதிபட நிறுவினார். நேர்மின் தன்மை கொண்டது. அணுவின் மையத்தில் இருக்கும். எடை 1.0073 amu. இதன் இயல்புகள்: எதிர்மின் தன்மை கொண்டது. அணு மையத்தைச் சுற்றி சுழன்று வரும். புரோட்டானுக்கு சமமான மின்சக்தி இருந்தாலும், புரோட்டானை விட இரண்டாயிரம் மடங்கு எடை குறைவானது. எடை 0.000549 amu. இதன் இயல்புகள்: நேர்மின்னியும் , எலக்ட்ரானும் இணைந்தது. அதனால் மின்சக்தி சமனப்பட்டு சக்தியை வெளிப்படுத்தாமல் இருக்கும். கிட்டத்தட்ட நியூட்ரானின் எடை 1.0087amu. இது இல்லாமல் புரோட்டான், எலக்ட்ரான் மட்டும் கொண்ட அணு உண்டு. ஒரு எலக்ட்ரான், ஒரு புரோட்டான் மட்டும் கொண்ட மிகச்சிறிய அணுவான ஹைட்ரஜன் அணுவின் விட்டம் formula_1.... உருவகப்படுத்தி பார்க்க வேண்டுமானால் 2 கோடி ஹைட்ரஜன் அணுக்களை ஒரு நேர்க்கோட்டில் வைத்தால் ஒரு மில்லிமீட்டர் நீளம் வரும். 0 டிகிரி செல்சியசிலும் ஒரு வளிமண்டல அழுத்ததிலும் எல்லா வளிமங்களும் 22.4136 லிட்டர் கன அளவில் ஒரே எண்ணிக்கையில் அணுக்களையோ மூலக்கூறுகளையோ கொண்டிருக்கும். இவ்வெண் அவகாட்ரோ எண் எனப்படும்.18 கிராம் நீரின் கன அளவு 18 கன செனடி மீட்டராகும். இந்த கன அளவில் formula_2( அவகாட்ரோ எண்) நீர் மூலக்கூறுகள் உள்ளன. நீரின் மூலக்கூறுகள் சரியான செவ்வக வடிவம் கொண்டவை என எடுத்துக் கொண்டால் ,அவைகளை சீராக அடுக்கும் போது மூலக்கூறுகளுக்கிடையே வெற்றிடம் இருக்க வாய்ப்பில்லை. எனவே ஒரு தனி மூலக்கூறின் பருமனளவு formula_3சி.சி என்று கொளலாம். இதற்குக் காரணம் கோளங்களை அடுத்தடுத்து வைக்கும் போது சிறு வெற்றிடம் அவைகளுக்கிடையே உள்ளது என்பது தான். கோளத்தின் பருமனளவு 4/3 π r சி.சி ஆகும்.இதிலிருந்து நீர் மூலக்கூற்றின் ஆரம் formula_4 செ.மீ. என்று கொள்ளலாம்.அணுவின் ஆரம் எந்த அளவு இருக்கக்கூடும் என்பதனைக் காட்டுகிறது. சில அணுக்களின் ஆரம், ஐட்ரசன் .053 நானோ மீட்டர். ஆக்சிஜன் .074 ; கரி .077 ;; ஆர்சனிக் .12 ; ; தகரம் .14 ; ; அலுமினியம் .145 ;; ஈயம் .175 ;; சோடியம் .19 ;; பொட்டாசியம் .0225 ;; என்று கணித்திருக்கிறார்கள். அணுவில் உள்ள நேர்மின்னிகளின் எண்ணிக்கை அணு எண் எனப்படுகிறது. இதுவே அணுக்களை வரிசைப்படுத்த உதவும் குணமாகும். ஒரு தனிமத்தின் அணுக்கள் அனைத்தும் ஒரே அணு எண்ணைக் கொண்டிருக்கும். ஒரே அளவான நேர்மின்னிகளைக் கொண்ட அணுக்களின் கூட்டம் தனிமம் எனப்படும். உதாரணமாக தூய ஐதரசன் வாயு மாதிரியொன்றில் ஒரு நேர்மின்னியைக் கொண்ட அணுக்களே காணப்படும். ஒரே அளவான நேர்மின்னிகளைக் கொண்ட அணுக்கள் ஒரே விதமான இரசாயன இயல்பைக் காட்டுவதே இதற்குக் காரணமாகும். எனவே ஒரு அணுக்கூட்டத்தில் வெவ்வேறு எண்ணிக்கையில் நியூத்திரன்கள் காணப்பட்டாலும் ஒரே எண்ணிக்கையில் நேர்மின்னிகள் காணப்படின் அவை ஒரே தனிம வகையைச் சேர்ந்தவையாகும். வெவ்வேறு நியூத்திரன் எண்ணிக்கையைக் கொண்ட ஒரே தனிம வகையைச் சேர்ந்த அணுக்கள் சமதானிகள்/ ஓரிடத்தான்கள் எனப்படும். உதாரணமாக ஐதரசனில் முறையே 0,1,2 என நியூத்திரன் எண்ணிக்கையுடைய புரோட்டியம், டியூத்திரியம், டிரைடியம் என்ற சமதானிகள் உள்ளன (இவை அனைத்திலும் ஒரு அணுவுக்கு ஒரு நேர்மின்னியே உள்ளது). இதுவரை ஐதரசனிலிருந்து அன்அன்ஆக்டியம் வரையான 118 தனிமங்கள் அறியப்பட்டுள்ளன. இவற்றில் அணு எண் 82க்கு மேற்பட்ட அணுக்கள் கதிரியக்கம் உடையவை. புவியில் ஏறத்தாழ 339 இயற்கையான அணுக்கருக்கள் உள்ளன. இவற்றில் 254 அணுக்கருக்களில் கதிரியக்கம் அவதானிக்கப்படவில்லை. எனவே இவை நிலையான அணுக்கருக்கள் எனப்படுகின்றன. கதிரியக்கம் உள்ளவற்றில் 34 அணுக்கருக்கள் சிறிதளவான கதிரியக்கத்தையே உடையவை. அணுக்களின் மொத்தத் திணிவில் பெரும் பங்கை நேர்மின்னிகளும் நொதுமிகளுமே (நியூத்திரன்) ஆக்கின்றன. எனவே ஒரு அணுவில் நேர்மின்னிகள் மற்றும் நொதுமிகளின் மொத்த எண்ணிக்கை திணிவெண் எனப்படுகின்றது. உதாரணமாக கார்பன்-14 இல் திணிவெண் 14 ஆகும் (6நேர்மின்னி+8நொதுமி). சாதாரண அலகுகளில் அணுவின் திணிவு மிகச் சிறியதாகும். எனவே அணுவின் திணிவு அணுத் திணிவலகு (u) அல்லது டால்டன்களில் (Da) அளவிடப்படுகின்றது. ஒரு அணுத்திணிவலகு கார்பன்-12 சமதானியின் பன்னிரண்டில் ஒரு பங்கு திணிவாகும். இது கிட்டத்தட்ட 1.66×10 kg (கிட்டத்தட்ட ஒரு ஐதரசன் அணுவின் திணிவு) ஆகும். எனவே கணிப்புகளின் போது கடினத்தன்மை குறைக்கப்படுகின்றது. உதாரணமாக ஈயத்தின் திணிவு அணுத் திணிவலகில் 207.9766521 u (கிட்டத்தட்ட 208 u) ஆகும். விஞ்ஞானத்தில் பரிசோதனைகளை இலகுவாக்க மூல் எனும் அலகு பயன்படுகின்றது. 6.022×10 எண்ணிக்கையான அணுக்களின் திணிவே மூல் எனப்படும். உதாரணமாக 12u திணிவுடைய 6.022×10 கார்பன் அணுக்களின் ஒரு மூல் 12 g ஆகும். வானொலி அலைகள் நமக்கு கிடைக்கும் வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இந்த வானொலி அலைகள் தான் தாங்கி வருகின்றன. இவை மின்காந்த அலைகள் ஆகும். அதாவது இந்த மின்காந்த அலை என்பது ஒரு தளத்தில் மின்புல வேறுபாடுகளும் அதற்குச் செங்குத்தான தளத்தில் காந்தப்புலத்தின் வேறுபாடுகளும் அமைந்து இவ்விரு தளங்களும் விரியும் திசைகளுக்குச் செங்குத்தான திசையில் பரவும் அலை ஆகும். இம்மின்காந்த அலைகள் நூற்றுக்கணக்கான மீட்டர்கள் நீளம் முதல் 30 சென்ட்டி மீட்டர் நீளம் வரை அலைநீளம் உடையவை. மிக நெடுந்தொலைவு செல்லக் கூடியவை. மிகத் தொலைவிலுள்ள நட்சத்திரங்கள், அண்டங்கள் சிலவும் இவ்வகை அலைகளை வெளிவிடுகின்றன. அவைப பற்றி வானொலி தொலைக்கருவி் மூலமாகவே அறிகிறோம். அலை வீச்சில் ஒலியலைகளுக்கு ஏற்றார்போல மாற்றம் ஏற்படுத்தி அலைபரப்பப் படும் AM வானொலி நிலையத்தின் அலைவரிசை 750 Mega Hertz என்றால் அந்த அலைகள் 400மீட்டர் அலைநீளம் கொண்டதாக இருக்கும். இங்கு அலைவரிசை என்பது அதிர்வெண் ஆகும். ஒரு எளிய சமன்பாடு இந்த அலைநீளத்திற்கும், அதிர்வெண்ணுக்கும் இடையேயான தொடர்பைக் காட்டும். அதாவது, அதிர்வெண் x அலைநீளம் = மின்காந்த அலை பரவும் விரைவு ஆகும். மின்காந்த அலைகள் ஒளியின் விரைவில் நகரும். ஒளியின் வேகம் சுமார் 3 மீட்டர். இதே போல 100 Mega Hertz அலைவரிசை FM நிலையமானால் இதன் அலைநீளம் 3 மீட்டராக இருக்கும். இதனால் தான் FM நிலையங்கள் அதிக சக்தியுடன் தெளிவாக இருந்தாலும் AM நிலையங்களைப் போல நீண்ட தூரத்திற்கு எடுப்பதில்லை. FM என்பது ஒலியலைகளுக்கு ஏற்றார்போல அதிர்வெண் மாறும் அலைகளாகும். நுண்ணலை நுண்ணலைகள் ("microwaves") என்பவை மின்காந்த அலைகள் ஆகும். இவை அதிகபட்சம் 1 மீட்டரிலிருந்து ஒரு மில்லி மீட்டர் அலை நீளம் வரை இருக்கும். இவ்வலைகளின் அலைவு எண் 300 மெகா ஹெர்ட்ஸ் (300 MHz அல்லது 0.3 GHz) முதல் 300 கிகா ஹெர்ட்ஸ் (300 GHz) வரை ஆகும். இவ்வலைகள் நெடுந்தொலைவுத் தொலைப்பேசி இணைப்புகளுக்கும், நுண்ணலை அடுப்புகள் மூலம் உணவு சமைக்கவும் பயன்படுகின்றன. அகச்சிவப்புக் கதிர் அகச்சிவப்பு கதிர் "(Infrared rays)" என்பது அதிக அலைநீளம் கொண்ட மின்காந்த அலையாகும். அலைநீளம் அதிகம் என்பதால் இக்கதிர்கள் கண்களுக்குப் புலப்படுவதில்லை. ஒளியலைகளின் அலைநீளம் குறைவு என்பதால் ஒளி கண்களுக்குப் புலனாகிறது. அகச்சிவப்பு கதிர்கள் சில சந்தர்ப்பங்களில் அகச்சிவப்பு ஒளிக்கதிர் என்றும் அழைக்கப்படுகின்றன. வெள்ளொளியான சூரிய ஒளி ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என்ற ஏழு நிறங்களைக் கொண்டது. இவற்றில் அலைநீளம் அதிகம் கொண்ட சிவப்பு நிறப்பகுதிக்கு அப்பால் கண்ணுக்குப் புலனாகாத சில கதிர்கள் உள்ளன. இவற்றிற்கு 'அகச்சிவப்புக் கதிர்கள்' என்று பெயர். ஒளியலைகள் ஏறத்தாழ 400-700 நா.மீ அலைநீளம் கொண்டவையாகும். அகச்சிவப்புக் கதிர்கள், கண்ணுக்குப் புலனாகும் ஒளியலைகளை விடக் கூடுதலான அலை நீளம் கொண்டவை. அகச்சிவப்பு கதிர்களின் அதிர்வெண் நானூற்று முப்பது (430 THz) டெராகெர்ட்சு ஆகும் . 700 நா.மீ.(nm) முதல் 100 மை.மீ (µm) அலைநீளம் வரை கொண்ட, மின்காந்த அலைகள் கண்ணுக்குப் புலனாகாத அகச்சிவப்புக் கதிர்கள் ஆகும். சில பரிசோதனைகள் வழியாக நம்மால் அகச்சிவப்புக் கதிர்களையும் காணவியலும்). ஒரு பொருளில் உள்ள மூலக்கூறுகள் நகரும் போது அப்பொருள் அகச்சிவப்பு கதிர்களை உள்வாங்கவோ அல்லது வெளியிடவோ செய்யும். அறைவெப்பநிலைக்கு அருகில் உள்ள பெரும்பாலான பொருட்கள் வெளியிடும் வெப்பக் கதிர்வீச்சு அகச்சிவப்புக் கதிர்களேயாகும். மின்காந்த அலைகளைப் போலவே அகச்சிவப்புக் கதிர்களும் மின்காந்த ஆற்றலை சுமக்கின்றன. ஓர் அலை மற்றும் ஓர் ஒளியணு ஆகிய இரண்டின் பண்புகளையும் அகச்சிவப்புக் கதிர்கள் வெளிப்படுத்துகின்றன. நுண்ணலை(Microwave)களைவிட அகச் சிவப்புக் கதிர்களின் அலை நீளம் குறைவு. கண்ணுக்கு புலனாகும் ஒளி அலைகளில் மிக அதிக அலைநீளம் உடையது சிவப்பு நிறம். ஆனால், சிவப்பு அலை ஒளிக்கதிர்கள் தாங்கியுள்ள ஆற்றல், நீல ஒளிக்கதிர்கள் தாங்கி இருக்கும் ஆற்றலைவிடக் குறைவானது. கண்ணுக்குப் புலனாகா அகச்சிவப்புக் கதிர்கள் சிவப்பு ஒளியலைகளைவிடவும் குறைந்த ஆற்றல் தாங்கி இருப்பதால் அவை அகச்சிவப்புக் கதிர்கள் எனக் குறிக்கப்பெறுகின்றன.இக்கதிர் வீச்சுகளின் அலை நீளம் 10 மீ முதல் 10 மீ.வரை உள்ளது. இக்கதிர்வீச்சுகள் அண்மைக் அகச்சிவப்புப் பகுதி (Near infrared) சேய்மை அகச்சிவப்புப் பகுதி (Far infrared) என இரு வகைப்படும். முதல் வகை 3*10 மீ முதல் 25*10 மீ.வரை உள்ளது. சேய்மை அகச்சிவப்பு 25*10 மீ முதல் 10 மீ.வரை உள்ளது. 1800 ஆம் ஆண்டில் வானியல் நிபுணர் சர் வில்லியம் எர்செல் அகச்சிவப்புக் கதிர்களைக் கண்டறிந்தார். ஒரு வெப்பநிலைமானியின் மீது உணரப்பட்ட கதிர்நிரலில் சிவப்பு ஒளியை விட ஆற்றல் குறைவாக உள்ள கண்ணுக்கு தெரியாத கதிர்வீச்சின் வகையை இவர் கண்டுபிடித்தார். சூரியனிலிருந்து வரும் மொத்த ஆற்றலில் பாதிக்கும் சற்று அதிகமாக அளவு ஆற்றல் அகச்சிவப்புக் கதிர் வடிவில் பூமிக்கு வருவது கண்டுபிடிக்கப்பட்டது. உறிஞ்சப்பட்ட மற்றும் உமிழப்படும் அகச்சிவப்பு கதிர்வீச்சிற்கும் இடையே உள்ள சமநிலை பூமியின் காலநிலையில் ஒரு முக்கியமான விளைவைக் கொண்டிருக்கிறது. மூலக்கூறுகள் அவற்றின் சுழற்சி-அதிர்வு இயக்கங்களை மாற்றிக் கொள்ளும்போது அகச்சிவப்புக் கதிர் அவற்றால் உறிஞ்சப்படுகிறது அல்லது உமிழப்படுகிறது. இருமுனைத் திருப்புத்திறனை மாற்றுவதன் மூலம் இது ஒரு மூலக்கூறின் அதிர்வு முறைகளைத் தூண்டுகிறது. முறையான சமச்சீர் மூலக்கூறுகளின் ஆற்றல் நிலைகளை ஆய்வு செய்வதற்கான பயனுள்ள அதிர்வெண் வரம்பையும் இது உருவாக்குகிறது. அகச்சிவப்பு வரம்பில் ஒளியணுக்களை உறிஞ்சுதல் மற்றும் பரப்புதல் ஆகியவற்றை அகச்சிவப்பு நிறமாளையியல் ஆய்வு செய்கிறது. தொழில்துறை, அறிவியல் மற்றும் மருத்துவ பயன்பாடுகளில் அகச்சிவப்பு கதிர்வீச்சு பயன்படுத்தப்படுகிறது. இரவுநேர பார்வை சாதனங்களில் அகச்சிவப்புக்கு அருகிலுள்ள வெளிச்சத்தை பயன்படுத்தி யார் பார்வையிடுகிறார்கள் என்பதை உணர்த்தாமலேயே மக்கள் அல்லது விலங்குகளைக் கவனிக்க முடியும். அகச்சிவப்பு வானியலில் பிரபஞ்சத்தின் தொடக்கக் கால மூலக்கூறு மேகங்கள், விண்மீன்கள் போன்ற பொருட்களை தூசுகளை ஊடுறுவி கண்டறிவதற்கு உணரிகள் பொருத்தப்பட்ட தொலைநோக்கிகள் பயன்படுத்துகின்றன .அகச்சிவப்பு வெப்ப-படமெடுக்கும் புகைப்படக் கருவிகளைக் கொண்டு காப்பிடப்பட்ட பொருள்களின் வெப்ப இழப்பு, தோலில் மாறுபடும் இரத்த ஓட்டம், மின்சாதனங்கள் அதிகமாக சூடுபடுத்தப்படுவது போன்றவற்றை கண்டறிய பயன்படுகிறது. வெப்ப-அகச்சிவப்பு படமெடுத்தல் இராணுவம் மற்றும் குடிமைசார் நோக்கங்களுக்காகப் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இலக்கு சேகரிப்பு, கண்காணிப்பு, இரவுநேர கவனிப்பு, இலக்கை நோக்கி முன்னேறுதல், மற்றும் தடங்கண்காணிப்பு போன்ற இராணுவ நடவடிக்கைகளில் இம்முறை மிகவும் பயனாகிறது. சாதாரண உடல் வெப்பநிலையில் மனிதர்கள் பெரும்பாலும் 10 மை.மீ (மைக்ரோமீட்டர்கள்) அலைவரிசைகளில் அகச்சிவப்பு கதிர்வீச்சை வெளியிடுகிறார்கள். வெப்ப திறன் பகுப்பாய்வு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, தொழில்துறை வசதி ஆய்வுகள், தொலை வெப்பநிலை உணர்வு, குறுகிய கம்பியில்லா தொடர்பு, நிறமாலை, மற்றும் வானிலை முன்னறிவிப்பு போன்ற செயல்பாடுகள் குடிமைசார் பயன்பாடுகளில் அடங்கும். அக்ச்சிவப்புக்கதிர்கள் இயற்கையில் சூரியனால் பெறப்படுகின்றன. செயற்கையில் நெர்ன்ஸ்ட் விளக்கு, குளோபார் விளக்கு, கார்பன் வில் விளக்கு, 1000 கெ. முதல் 1500 கெ. வரை சூடேற்றப்பட்ட திண்மங்கள் முதலியவை அகச்சிவப்புக் கதிர் வீச்சுகளை உண்டாக்கும் மூலங்கள் ஆகும். சூரியனில் இருந்து 5780 கெல்வின் ஆற்றல் வெளியெருகிறது. ஒரு சதுர கிலோமீட்டருக்கு ஒரு கிலோ வாட் என்று பரவியிருக்கும் சூரிய ஒளியில் 527 வாட் அகச்சிவப்பு கதிர்களும் , 445 வாட் புலப்படும் ஒளியும் , 32 வாட் புற ஊதா கதிர்களும் இருக்கும். சூரியனில் இருந்து பூமிக்கு வரும் ஆற்றலில் அரை சதவீதத்திற்கு மேல் அகச்சிவப்பு கதிர்களாகவே பூமியை வந்து அடைகின்றன. எனவே பூமியின் தட்பவெட்ப மாறுபாடுகளிலும் , பருவ காலங்களின் மாறுபாடுகளிலும் அகச்சிவப்பு கதிர்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. பூமியின் மேற்பரப்பு மற்றும் மேகங்கள் , சூரியனில் இருந்து வரும் புலப்படும் மற்றும் கண்ணுக்கு தெரியாத கதிர்வீச்சுகளை உறிஞ்சும்.வின்வெளியில் தரையில் இருந்து வரும் அகச்சிவப்பு கதிர்களின் ஒளி உறிஞ்சுதல் நடைபெறுகிறது. இதனால் விண்வெளியில் பூமியின் வெப்பம் தப்பிக்க தாமதப்படுகிறது. எனவே பூமியின் வெப்பம் அதிகரிக்கின்றது. அகச்சிவப்புக் கதிர்கள் கண்ணுக்குப் புலனாகாதிருப்பினும், பொருள்களுக்குச் சூடேற்றுகின்றன. நெருப்பு போன்ற அதிக வெப்பம் வெளியிடுவனவற்றிலிருந்து அகச்சிவப்புக் கதிர்கள் அதிக அளவில் வெளியாகும். நாம் சற்று நேரம் அமர்ந்து எழுந்து போனபின், இருக்கையில் நமது உடல் வெப்பத்தினால் ஏற்பட்ட அகச்சிகப்புக் கதிர்கள் கொஞ்ச நேரத்திற்கு மிச்சமிருக்கும். சிறப்பு கருவிகளைக்கொண்டு அகச் சிவுப்புக் கதிர்களை அவதானிக்கலாம். இச் சூடேற்றும் பண்பினை அடிப்படையாகக் கொண்டு வெற்றிடத்தில் செயல்படும் மின்னிரட்டை, போலோமீட்டர் ஆகிய உணர்விகள் மூலம் அகச்சிவப்புக் கதிர்கள் உணரப்படுகின்றன. அகச் சிவப்பு ஒளியை ஆராய இந்துப்பு போன்ற பொருளினால் செய்யப்பட்ட ஒளியியற் கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். அருகே உள்ள அகச்சிவப்பு கதிர்களின் அலை நீளம் 0.75 மைக்ரோ மீட்டர் முதல் 1.4 மைக்ரோ மீட்டர் வரை ஆகும்.குறுகிய அகச்சிவப்பு கதிர்களின் அலை நீளம் 1.4 மைக்ரோ மீட்டர் முதல் 3.0 மைக்ரோ மீட்டர் வரை ஆகும்.மத்திய அகச்சிவப்பு கதிர்களின் அலை நீளம் 3.0 மைக்ரோ மீட்டர் முதல் 8.0 மைக்ரோ மீட்டர் வரை ஆகும்.நீண்ட தூர அகச்சிவப்பு கதிர்களின் அலை நீளம் 8.0 மைக்ரோ மீட்டர் முதல் 15.0 மைக்ரோ மீட்டர் வரை ஆகும்.தூரமான அகச்சிவப்பு கதிர்களின் அலை நீளம் 15.0 மைக்ரோ மீட்டர் முதல் 1000 மைக்ரோ மீட்டர் வரை ஆகும். அகச்சிவப்பு நிறமாலை ஸ்பெக்ட்ரத்தில் உள்ள அகச்சிவப்பு பகுதியை மட்டும் ஆராய உதவும்.அகச்சிவப்பு நிறப்பிரிகை கருவியின் மூலமாக அகச்சிவப்பு ஆற்றல் வரம்பில் நடக்கும் உறிஞ்சுதல் மற்றும் ஒளித்துகள்களின் பரிமாற்றம் ஆகியவற்றை ஆராயலாம். அறிவியல் ஒளி, ஜனவரி 2011 இதழ். ஆங்கில விக்கி தளத்தின் மொழிப்பெயர்ப்பு. காம்மா கதிர் காம்மா அலைகள் (Gamma Rays) மின்காந்த அலை வரிசையில் மிகவும் ஆற்றல் வாய்ந்த பகுதியாகும். அலைநீளம் மிகவும் குறுகியது. ஒரு மீட்டரில் 10 டிரில்லியனில் ஒரு பங்கை விட குறைவான அலைநீளத்தை உடையது. எக்ஸ்-ரே கதிர்களை விட அதிக ஆற்றலோடு ஊடுருவக் கூடியது. அணுக்களின் கதிரியக்கத்திலும், அணுக்கரு பிளவுபடும் போதும் இது வெளிப்படும். எக்ஸ்-ரே படங்களை விட நுணுக்கமாக உடல் கூற்றை அறியப் பயன்படுத்தப் படுகிறது. அண்ட வெளியில் நட்சத்திரங்களின் பிறப்பு மற்றும் இறப்பு பற்றிய நுட்பச்செய்திகளை அறிந்து கொள்ளவும் உதவுகிறது. ஆட்டோமேட்டிக் கூலிங்கிளாஸ்கள் ஆட்டோமேட்டிக் கூலிங்கிளாஸ்கள் (Photochromatic lens) கண் கண்ணாடிகளில், லென்ஸ் உள்ள கண்ணாடிகளில் கூட இந்த ஆட்டோமேட்டிக் கண்ணாடிகள் மிகவும் சாதாரணமாகி விட்டன. போட்டோ க்ரோமாடிக் கிளாஸ்கள் என்ற பெயர் கொண்ட வெயிலில் நிறம் மாறும் கண்ணாடிகள் கண் கண்ணாடிகள் மட்டுமல்லாது சில கார்களின் 'சன் ரூஃப்' எனும் 'கூரைக் கண்ணாடிகளில்' கூட உபயோகப்படுத்தப்படுகிறது. இது நிறம் மாற ஒரு சில நிமிடங்களே எடுத்துக்கொண்டாலும் அந்த வேகம் போதாது என்பதாலும் கண்ணாடியின் கருமை அளவைத் தேவைக்கேற்ப கட்டுப்படுத்த இயலாது என்பதாலும் கார்களின் பக்கக் கண்ணாடிகளில் உபயோகத்திற்கு வரவில்லை. 'கார்னிங் க்ளாஸ் ஒர்க்ஸ்' நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்டான்லி ஸ்டூக்கி என்பவர் அறுபதுகளில் உருவாக்கிய கண்ணாடி செய்முறை இது. இவருடைய இந்த கண்டுபிடிப்புக்காக அமெரிக்க தேசிய தொழில்நுட்ப பதக்கம் 1986ம் ஆண்டு வழங்கப்பட்டது. கண்ணாடிக் குழம்பில் 0.01 முதல் 0.1 சதவீதம் வரை சில்வர் க்ளோரைட் சேர்க்கப்படும். சிறு அளவு காப்பர் (I) க்ளோரைடும் சேர்க்கப்படும். இது மிகச் சிறிய சில்வர் க்ளோரைட் க்றிஸ்டல்களாக கண்ணாடிக்குள் அமையுமாறு குளிர்விக்கப்படுகின்றன. இந்தக் க்றிஸ்டல்கள் மிகச் சிறியதாக இருப்பதால் பார்வைக்குத் தெரியாது. அதே சமயம் குறுகிய அலைநீளமுள்ள அல்ட்ரா வயலட் கதிர்களை ஈர்த்துக் கொள்ளும். சில்வர் க்ளோரைட் க்றிஸ்டல்கள் பாஸிடிவ் சார்ஜ் கொண்ட சில்வர் அயான்களாலும் (Ag+) நெகடிவ் சார்ஜ் கொண்ட க்ளோரைட் அயான்களாலும் (Cl-) இணைந்தவை. புற ஊதாக் (Ultra Violet) கதிர்கள் இந்தக் க்றிஸ்டல்களைப் பிரித்து சார்ஜ் இல்லாத சில்வர் (Ag0) மற்றும் க்ளோரைட் (Cl0) அணுக்களாக மாற்றுகிறது. (போட்டோக்ராபிக் தாள்களிலும் இதே தான் நடக்கிறது). Cl- + UV light --> Cl0 + e- Ag+ + e- --> Ag0 சார்ஜ் இல்லாத சில்வர் அணுக்களின் இணைந்த தோற்றம் கண்ணாடியின் ஒளி ஊடுருவலைத் தடுக்காத அளவில் இருந்து கொண்டு கண்ணாடியை சாம்பல் அல்லது ப்ரௌன் நிறமாக காட்டுகிறது. லென்ஸ் கண்ணாடிகளில் மிகுந்த தூரப்பார்வை உடையவர்களுக்கு இந்த போட்டோக் கண்ணாடிகள் ஒத்து வராது. இவர்களுடைய கண்ணாடியில் லென்ஸ் நடுவில் தடிமனாக இருப்பதால் போட்டோ கண்ணாடி உபயோகித்தால் அங்கு மட்டும் மிகக் கருமையாகவும் ஒளி குறைவாக புகுமாறும் இருக்கும். சூரிய ஒளி குறையும் போது தான் கண்ணாடியில் சிறிதளவு சேர்த்த காப்பர் (I) க்ளோரைடுக்கு வேலை. புற ஊதாக் கதிர்கள் குறையும் போது காப்பர் (I) அயான்கள் (Cu+) சார்ஜ் இல்லாத க்ளோரின் அணுக்களை க்ளோரைட் அயான்களாக மாற்றுகிறது. அதே சமயம் அதுவும் காப்பர் (II) அயான்களாக (Cu++) மாறுகிறது. இது பின்னர் சில்வர் அணுக்களை ஆக்ஸிடைஸ் செய்து சில்வர் அயான்களாக மாற்றிவிடுகிறது. Cl0 + Cu+ --> Cl- + Cu++ Cu++ + Ag0 --> Ag+ + Cu+ பாசிட்டிவ் சார்ஜ் கொண்ட சில்வர் அயான்கள் க்ளோரைட் அயான்களுடன் கூட்டுச் சேர்ந்து பழையபடி சில்வர் க்ளோரைட் க்றிஸ்டல்களாக மாறுகிறது. கண்ணாடியும் கருமை நீங்கி தெளிவாகிறது. காடி ஓர் அமிலம் அல்லது காடி அல்லது புளிமம் "(Acid)"என்பது ஒரு புரோட்டானைக் கொடையாக வழங்கக்கூடிய மூலக்கூறு அல்லது அயனியைக் குறிப்பிடுகிறது. புரோட்டான் என்பது ஐதரான் அல்லது ஐதரச மின்மவணு H+ ஆகும் மாறாக, எலக்ட்ரான் இணையுடன் சேர்ந்து (இலூயிக் அமிலம்) சக பிணைப்பாக உருவாகும் திறன் கொண்டவற்றையும் காடி அல்லது அமிலம் எனலாம். புரோட்டான் வழங்கிகள் அல்லது புரோன்சிட்டெடு அமிலங்கள் முதலாவது வகை அமிலங்கள் எனப்படுகின்றன. நீர்த்த கரைசல்கள் எனப்படும் சிறப்பு சூழல்களில், புரோட்டான் வழங்கிகள் ஐதரோனியம் அயனிகளாக (H3O+) உருவாகின்றன. இவற்றை அறீனியசு அமிலங்கள் என்கிறோம். புரோன்சிட்டெடு மற்றும் மார்ட்டின் லோரி ஆகியோர் நீரியமில்லாத கரைப்பான்களுக்கும் அறீனியசு கோட்பாடு பொருந்தும் வகையில் கோட்பாட்டை பொதுமைப்படுத்தினர். ஒரு புரோன்சிட்டெடு அல்லது அறீனியசு அமிலம் வழக்கமாக வேதிக்கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட ஒரு ஐதரசன் அணுவைக் கொண்டிருக்கும். இந்த ஐதரசன் அணுவை இழந்தபிறகும் வேதிக்கட்டமைப்பானது ஆற்றல் மிக்கதாகவே பிணைக்கப்பட்டிருக்கும். நீரிய அறீனியசு அமிலங்கள் அவற்றுக்கான தனிச்சிறப்பு மிக்க பண்புகள் சிலவற்றைப் பெற்றுள்ளன. இப்பண்புகள் ஓர் அமிலம் குறித்த நடைமுறை விளக்கத்தை வழங்குகின்றன . அமிலங்கள் புளிப்புச் சுவையுடன் நீர்த்த கரைசல்களாக உருவாகின்றன. நீல லிட்மசு தாளை சிவப்பு லிட்மசு தாளாக மாற்றுகின்றன. காரங்களுடனும் கால்சியம் போன்ற உலோகங்களுடனும் வினைபுரிந்து உப்புகளை உருவாக்குகின்றன. இலத்தீன் மொழியில் புளிப்புச் சுவைக்கு அசிடசு/அசெர் என்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதிலிருந்துதான் அமிலம் என்ற சொல் உருவானது. ஓர் அமிலத்தின் நிர்த்த கரைசல் காரகாடித்தன்மை சுட்டெண் மதிப்பு (pH) 7 க்கும் குறைவாக உள்ளது. காரகாடித்தன்மைச் சுட்டெண் 0 வில் இருந்து 14 வரை கணக்கிடப்படுகிறது. சுத்தமான நீரின் அமிலக்காரதன்மை 25 ° செ இல் 7.0 ஆகும், இதை நடுநிலை நீர்மம் என்று அழைக்கிறார்கள். காரகாடித்தன்மை சுட்டெண் 7.0 க்கும் கீழ் இருந்தால் அக்கரைசலை அமிலம் என்றும் காரகாடித்தன்மை சுட்டெண் 7.0 க்கும் மேல் அதிகமாக இருந்தால் அக்கரைசல் காரமாகவும் கருதப்படுகிறது. காரகாடித்தன்மை சுட்டெண் மதிப்பு குறைவு எனில் அக்கரைசலின் அமிலத்தன்மை அதிகம் என்றும் அதில் அதிக அடர்த்தியில் ஐதரசன் நேர்மின் அயனிகள் உள்ளன என்பது பொருளாகும். வேதிப்பொருட்கள் அல்லது பொருள்கள் அமிலங்கள் என்று அழைக்கப்பட்டால் அவை அமிலத்தன்மையுடன் காணப்படுகின்றன என்பதும் அதன் பொருளாகும். ஐதரோகுளோரிக் அமிலம், அசிட்டிக் அமிலம், கந்தக அமிலம், சிட்ரிக் அமிலம் போன்றவை அமிலங்களுக்கு எளிய பொதுவான எடுத்துக்காட்டுகளாகும். இரைப்பை நீரில் காணப்படுவதும், செரிமானத்தை செயலூக்குவதும் ஐதரசன் குளோரைடின் கரைசலான ஐதரோகுளோரிக் அமிலமேயாகும். கரிம அமிலமான அசிட்டிக் அமிலம் வினீகர் என்றும் அழைக்கப்படுகிறது. கந்தக அமிலம் கார்களின் மின்கல அடுக்குகளில் பயன்படுத்தப்படுகிறது. சிட்ரிக் அமிலம் எலுமிச்சை போன்ற சிட்ரசு வகைப் பழங்களில் காணப்படுகிறது. இங்கு கூறப்பட்ட அனைத்து அமிலங்களுமே திட, திரவ, வாயு நிலைகளில் காணப்படும் தூய்மையான பொருட்களின் கரைசல்களில் இருந்து தருவிக்கப்பட்ட கரைசல்கள் ஆகும். வலிமையான அமிலங்களும். அடர்த்தி மிகுந்த ஆனால் வலிமை குறைந்த சில அமிலங்களும் அரிப்புத்தன்மை கொண்டுள்ளன. இப்பண்பிற்கு கார்போரேன்களும் போரிக் அமிலமும் விதிவிலக்குகளாகும். இலூயிக் அமிலங்கள் இரண்டாவது வகை அமிலங்களாக வகைப்படுத்தப்படுகின்றன. இவை எலக்ட்ரான் இணைகளுடன் சேர்ந்து சகப்பிணைப்பாக உருவாகின்றன. போரான் முப்புளோரைடு இலூயிக் அமிலத்திற்கு எடுத்துக்காட்டாகும். இதிலுள்ள போரான் அணுவில் ஒரு காலியான ஆர்பிட்டால் உள்ளது. இந்த ஆர்பிட்டால் காரத்திலுள்ள அணுவின் தனி இணை எலக்ட்ரான்களுடன் காலியிடத்தைப் பகிர்ந்து கொண்டு சகப்பிணைப்பாக உருவாகின்றது. அமோனியாவில் உள்ள நைட்ரசன் காரத்திலுள்ள அணுவுக்கு உதாரணமாகும். புரோன்சிட்டெடு வரையறையை பொதுமைப்படுத்துதலின் ஒரு பகுதியாக இலூயிசு கருதினார். இதன்படி ஓர் அமிலமென்பது எலக்ட்ரான் இணைகளை நேரடியாக ஏற்றுக் கொள்ளும் அல்லது புரோட்டான்களை கரைசலில் வெளியிட்டு பின்னர் எலக்ட்ரான் இணைகளை ஏற்றுக்கொள்ளும் ஒரு வேதிப்பொருள் என பொருள் கொள்ளப்படுகிறது. எனினும், ஐதரசன் குளோரைடு, அசிட்டிக் அமிலம் மற்றும் பெரும்பாலான அமிலங்கள் போன்ற புரோன்சிட்டெடு அமிலங்கள் எலக்ட்ரான் இணைகளுடன் சேர்ந்து சகப்பிணைப்புகளாக உருவாவதில்லை. எனவே இவை இலூயிக் அமிலங்களாகக் கருதப்படுவதில்லை. மறுதலையாக, பல இலூயிக் அமிலங்கள் அறீனியசு அல்லது புரோன்சிட்டெடு லோரி அமிலங்களாக இருப்பதில்லை. நவீன சொல்லியலில் ஓர் அமிலம் என்பது முழுமைபெறாத புரோசிடெட்டு அமிலம் என்றும் மற்றும் இலூயிக் அமிலமாக இல்லாதது என்றும் கருதப்படுகிறது. எனவே வேதியியலர்கள் எப்போதும் இலூயிக் அமிலத்தை திட்டவட்டமாக இலூயிக் அமிலம் என்றே அழைக்கின்றனர். காடிகள் எதிர்மின்னிகளை ஏற்றுக்கொள்ளும் தன்மை படைத்தவை. காடிகள் நீரில் கரையும் போது ஐதரசன் மின்மவணுக்களை (அயனிகளை (H+)) உருவாக்குகிறது. அதாவது தன்னிடமுள்ள ஐதரசனின் எதிர்மின்னியை ஈர்த்துக் கொண்டு நேர்மின்னியை (புரோடானை) தனியாக விட்டுவிடுகிறது. (ஐதரசன் ஒரேயொரு நேர்மின்னியும் எதிர்மின்னியும் கொண்ட எளிய அணு. ஓர் எதிர்மின்னி பிரிந்தால் H+ என்னும் ஐதரசன மின்மவணுவாக மாறிவிடுகின்றது. இதனால் காடி - 'கரைசலில் நேர்மின்னியை உருவாக்கும்' என்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கமான போதிலும், ஐதரசன் இல்லாத காடிகளும் உண்டென்பதால், மேற்ச் சொன்ன விளக்கமே பொதுவான விளக்கமாகிறது. அமிலங்கள் தொடர்பான நவீன வரையறைகள் அனைத்தும், அனைத்து அமிலங்களுக்கும் பொதுவான அடிப்படை இரசாயன வேதிவினைகளில் அக்கறை செலுத்துகின்றன. பெரும்பாலான அமிலங்கள் யாவும் அன்றாட வாழ்வில் நீர்த்த கரைசல்களாக அல்லது தண்ணீரில் கரைந்த கரைசல்களாக பயன்படுத்த வேண்டியுள்ளது. எனவே, அறீனியசு மற்றும் புரோன்சிடெட்டு லோரி வரையறைகள் மிகப்பொருத்தமானவையாக உள்ளன. அதிலும் குறிப்பாக புரோன்சிடெட்டு லோரி வரையறை மிகப்பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. வேறுவகையில் சிறப்பாக எதுவும் குறிப்பிடப்படாத வரையில், அமில கார வினைகள் என்பவை அமிலத்திலிருந்து காரத்திற்கு புரோட்டானை மாற்றுகின்ற ஒரு வேதிவினை என்றே அவை கருதப்படுகின்றன. மேலே குறிப்பிடப்பட்ட மூன்று வகையான வரையரைகளிலும் ஐதரோனியம் அயனிதான் அமிலம் என்ற கருத்து வலுப்பெறுகிறது. ஆல்ககால்களும் அமீன்களும் கூட புரோன்சிடெட்டு லோரி வரையறைகளின்படி அமிலங்களாக இருக்க முடியும் என்பது ஆர்வமூட்டும் செய்தியாகும். ஆக்சிசன் மற்றும் நைட்ரசன் அணுக்கள் மீதுள்ள தனி இணை எலக்ட்ரான்களால் இவை இலூயிசு காரங்களாகவும் செயல்பட இயலும். சுவீடன் நாட்டு வேதியியலாளர் சுவாந்தே அறீனியசு 1884 இல் ஐதரசன் அயனிகளின் அல்லது புரோட்டான்களின் அமிலத்தன்மை இயற் பண்புகளை அறிவித்தார். தண்ணீரில் H+ அயனிகளின் அடர்த்தியை அதிகரிக்கும் பொருளே ஓர் அறீனியசு அமிலம் எனப்படுகிறது . அமிலக்கார வினைகளைக் குறித்து விவரிக்கும்போது வேதியியலர்கள் பெரும்பாலும் H+(நீர்) என்று எழுதுவது வழக்கமென்பதை கவனத்திற் கொள்ள வேண்டும். ஆனால் தனி ஐதரசன் உட்கரு, அதாவது புரோட்டான் தண்ணிரில் தனியாக இருக்காது என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். பெரும்பாலும் இது H3O+அயனியாகவே இருக்கும். எனவே அறீனியசு அமிலம் என்பதற்கான வரையறையை, எந்தப்பொருளை தண்ணீருடன் சேர்க்கும் பொழுது, ஐதரோனியம் அயனிகளின் அடர்த்தி அதிகரிக்கிறதோ அப்பொருளை அறீனியசு அமிலம் என்றும் கூறலாம். மூலக்கூற்று சேர்மங்களான ஐதரோகுளோரிக் அமிலம் மற்றும் அசிட்டிக் அமிலம் ஆகியனவற்றை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். எந்தப்பொருளை தண்ணீருடன் சேர்க்கும் பொழுது, ஐதராக்சைடு அயனிகளின் (OH−) அடர்த்தி அதிகரிக்கிறதோ அப்பொருளை அறீனியசு காரம் என்று கூறலாம். இதனால் ஐதரோனியம் அயனிகளின் அடர்த்தி குறையும். ஏனெனில் அவை ஐதராக்சைடு எதிர்மின் அயனிகளுடன் வினைபுரிந்து நீர் மூலக்கூற்றை உருவாக்குகின்றன. H3O+(aq) + OH−(aq) ⇌ H2O(l) + H2O(l) சமநிலையின் காரணமாக, ஐதரோனியம் அயனியின் அடர்த்தி எப்பொழுதெல்லாம் அதிகரிக்கின்றதோ அப்போதெல்லாம அதற்கிணையாக ஐதராக்சைடு அயனியின் அடர்த்தி குறைகிறது என்றும் பொருளாகும். இதனால், ஒர் அறீனியசு அமிலத்தால் குறைக்கப்படும் ஐதராக்சைடு அயனியின் அடர்த்தியானது ஓர் அறீனியசு காரத்தால் உயர்த்தப்படுகிறது என்பதை அறியலாம். அமிலக்கரைசல்களில் ஐதரோனியம் அயனிகளின் அடர்த்தி லிட்டருக்கு 10−7 மோல்கள் அதிகமாகும். ஏனெனில் காரக்காடித்தன்மை சுட்டெண் (pH) ஐதரோனியம் அயனிகளின் அடர்த்தியின் கழித்தல் மடக்கை அடிப்படையிலானது ஆகும். எனவேதான் அமிலக் கரைசல்களின் காரக்காடித்தன்மை சுட்டெண் மதிப்பு 7 க்கு குறைவாகக் காணப்படுகிறது. அறீனியசு கோட்பாடு பல வேதி வினைகளைப் பற்றி விவரிக்கப் பயன்பட்டது என்றாலும் அதன் எல்லைகள் சுருக்கப்பட்டிருந்தன. அமிலக்கார வினைகள் என்பவை புரோட்டான் பரிமாற்றத்தால் நிகழக்கூடியவை என்பதை 1923 ஆம் ஆண்டில் இயோஃகானசு நிக்கோலசு புரோன்சிட்டெடு , மார்ட்டின் லோரி என்னும் வேதியியலாளர்கள் தனித்தனியாக அடையாளம் கண்டறிருந்திருந்தனர். ஒரு புரோன்சிட்டெடு லோரி அமிலம் (சுருக்கமாக புரோன்சிட்டெடு அமிலம்) என்பது ஒரு புரோன்சிட்டெடு லோரி காரத்திற்கு புரோட்டானை வழங்கக்கூடிய ஓரினமாகும் புரோன்சிட்டெடு லோரி அமிலக்காரக் கொள்கையானது அறீனியசு கோட்பாட்டைக் காட்டிலும் கூடுதலான அனுகூலங்களைக் கொண்டுள்ளது. அசிட்டிக் அமிலத்தின் பின்வரும் வினையைக் கருதுவோம். இந்தக்கரிம அமிலம் வினீகரை அதன் தனிச்சிறப்பு சுவையாகக் கொண்டுள்ளது. CH3COOH + H2O ⇌ CH3COO− + H3O+ CH3COOH + NH3 ⇌ CH3COO− + NH+4 இரண்டு கோட்பாடுகளும் முதல் வினையை எளிதாக விவரிக்கின்றன. CH3COOH அறீனியசு அமிலமாகச் செயல்படுகிறது. ஏனெனில் இது தண்ணிரில் கரைந்து H3O+ அயனிக்கு ஆதார மூலமாகச் செயல்படுகிறது. மற்றும் இது ஒரு புரோட்டானை கொடையளிப்பதன் மூலம் ஒரு புரோன்சிட்டெடு அமிலமாக செயல்படுகிறது. இரண்டாவது உதாரணத்தில் CH3COOH இதே மாற்றத்தைக் காண்கிறது. இந்நிகழ்வில் புரோட்டானை அமோனியாவுக்கு (NH3) கொடையளிக்கிறது. ஆனால் இவ்வினையில் ஐதரோனியம் அயனி உற்பத்தி இல்லை என்பதால் அமிலம் என்பதற்கான அறீனியசு வரையறையுடன் தொடர்பு இல்லை. எப்படி இருப்பினும், CH3COOH ஒரு அறீனியசு மற்றும் புரோன்சிட்டெடு-லோரி அமிலம் ஆகும். நீரியமில்லா கரைசல்களில் அல்லது வாயுநிலையில் மூலக்கூற்று சேர்மங்களின் வினைகளை விளக்க புரோன்சிட்டெடு- லோரி கோட்பாடு பயன்படுகிறது. ஐதரசன் குளோரைடும் அமோனியாவும் பல்வேரு நிபந்தனைகளுக்கு உட்பட்டு அமோனியம் குளோரைடாக (NH4Cl) உருவாகின்றன. நீரியக் கரைசலில் ஐதரசன் குளோரைடு வாயு ஐதரோகுளோரிக் அமிலமாக செயல்படுகிறது. மேலும் ஐதரோனியம் மற்றும் குளோரைடு அயனிகளாகவும் இங்கு காணப்படுகிறது. அறீனியசு வரையறையின் எல்லைகளை பின்வரும் வினைகள் காட்டுகின்றன. அசிட்டிக் அமிலத்தின் வினைகளைப் போலவே, இரு வரையறைகளும் முதலாவது வினைக்கே பொருந்துகின்றன. இங்கு நீர் ஒரு கரைப்பானாகவும் ஐதரோனியம் அயனி HCl கரைபொருளினாலும் உருவாகிறது. அடுத்த இரண்டு வினைகளிலும் அயனிகள் உருவாக்கம் நிகழ்வதில்லை. ஆனால் அவை புரோட்டான்-பரிமாற்ற வினைகளாக உள்ளன. இரண்டாவது வினையில் ஐதரசன் குளோரைடு மற்றும் அமோனியா (பென்சீனில் கரைந்தது) இரண்டும் வினைபுரிந்து பென்சீன் கரைப்பானில் உள்ள திண்ம அமோனியம் குளோரைடு உருவாகிறது. மூன்றாவது வினையில் ஐதரசன் குளோரைடு வாயுவும் அமோனியாவும் இணைந்து திடப்பொருளாக உருவாகின்றன. புரோட்டான் பரிமாற்றம் இல்லாத அமிலக்கார பண்புகள் கொண்ட வினைகளை உள்ளடக்கிய சற்றே தொடர்பான மூன்றாவது கோட்பாட்டை கில்பர்ட் என் இலூயிசு 1923-ம் ஆண்டு முன்மொழிந்தார். ஓர் இனத்திலிருந்து ஒரு சோடி இனை எலக்ட்ரான்களைப் பெற்றுக் கொள்ளும் மற்றொரு இனம் இலூயிசு அமிலம் எனப்படுகிறது. சுருங்கச் சொல்வதென்றால் இதுவொரு எலக்ட்ரான் இணை ஏற்பி எனலாம் புரோன்சிட்டெடு அமிலக்கார வினைகள் எல்லாம் புரோட்டான் பரிமாற்ற வினைகள் என்பது போல இலூயிசு அமிலக்கார வினைகள் எல்லாம் எலக்ட்ரான் இணை பரிமாற்ற வினைகளாகும். பல இலூயிசு அமிலங்கள் புரோன்சிட்டெடு லோரி அமிலங்களாக இருப்பதில்லை. மாறாக, அமிலக்கார வேதியியல் அடிப்படையில் பின்வரும் வினைகள் எப்படி விவரிக்கப்படுகிறது என்பதைக் காணலாம். முதல் வினையில் ஒரு புளோரைடு அயனி F− ஓர் எலக்ட்ரான் இணையை போரான் முப்புளோரைடுக்குக் கொடையளித்து விளைபொருளாக டெட்ராபுளோரோபோரேட்டு உருவாகிறது. புளோரைடு ஒரு சோடி இணைதிறன் எலக்ட்ரான்களை இழக்கிறது. ஏனெனில் B—F பிணைப்பில் பகிர்ந்து கொள்ளப்படும் எலக்ட்ரான்கள் இரண்டு அணுக்களின் உட்கருக்களுக்கிடையில் இடம்பெற்றுள்ளன. எனவே, அவை இருக்கும் தனி புளோரைடு அயனியில் இருப்பதைக் காட்டிலும் புளோரைடு உட்கருவிலிருந்து அதிக தொலைவில் உள்ளன. BF3 ஒர் இலூயிசு அமிலமாகும். ஏனெனில் இது புளோரைடிலிருந்து எலக்ட்ரான் இணைகளைப் பெற்றுக் கொள்கிறது. புரோட்டான் பரிமாற்றம் ஏதுமில்லாததால், இவ்வினையை புரொன்சிட்டெடு கோட்பாடு மூலம் விளக்க இயலாது. இரண்டாவது வினையை இரண்டு கோட்பாடுகளாலும் விளக்க முடியும். குறிப்பிட்டு சொல்லப்படாத புரோன்சிட்டெடு அமிலத்திலிருந்து புரோன்சிட்டெடு காரமான அமோனியாவுக்கு ஒரு புரோட்டான் பரிமாறப்படுகிறது. மாற்றாக அமோனியா ஒரு இலூயிசு காரமாகச் செயல்பட்டு தனி இணை எலக்ட்ரான்களை ஐதரசன் அயனிக்குப் பரிமாற்றம் செய்து பிணைப்பை உருவாக்குகிறது. எலக்ட்ரான் இணைகளைப் பெற்றுக் கொள்ளும் இனம் இலூயிசு அமிலமாக கருதப்படுகிறது. உதாரணமாக, ஐதரோனியம் அயனியிலுள்ள (H3O+) ஆக்சிசன் ஒரு சோடி எலக்ட்ரான்களைப் பெற்றுக்கொள்கிறது. H—O பிணைப்புகளில் ஒன்று உடையும்பொழுது அதில் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ள எலக்ட்ரான்கள் ஆக்சிசனுக்குள் உள்ளடங்குகின்றன. சூழலைப்பொறுத்தும் இலூயிசு அமிலத்தை ஒர் ஆக்சிசனேற்றி அல்லது ஒரு மின்னணுகவரியாகவும் விவரிக்கமுடியும். கரிம புரோசிட்டெடு அமிலங்களான அசிட்டிக் அமிலம், சிட்ரிக் அமிலம், அல்லது ஆக்சாலிக் அமிலம் போன்றவை இலூயிசு அமிலங்கள் அல்ல . அவை தண்ணிரில் பிரிகையடைந்து இலூயிசு அமிலத்தை உற்பத்தி செய்கின்றன.(H+). ஆனால் அதே சமயத்தில் அதற்கு இணையான அளவுக்கு இலூயிசு காரத்தையும் (அசிட்டேட்டு, சிட்ரேட்டு அல்லது ஆக்சலேட்டு) உருவாக்குகின்றன. அமிலங்களின் வினைகள் யாவற்றையும் HA ⇌ H+ + A− என்ற சமன்பாட்டால் பொதுமைப்படுத்தலாம். இங்குள்ள HA அமிலத்தைக் குறிக்கிறது. அமிலத்திற்கு இணையான இணை காரத்தை A− குறிக்கிறது. புரோட்டான்பகுப்பு என்ற பெயரால் இவ்வினை அழைக்கப்படுகிறது. புரோட்டானேற்ற வடிவம் (HA) பெற்ற ஓர் அமிலம் சில சமயங்களில் தனி அமிலம் என்றும் அழைக்கப்படுகிறது. அமிலத்தன்மை அளிக்கும் புரோட்டானை மட்டுமே கொண்ட அமிலம் அல்லது ஆக்சிசன் இடம்பெறாத அமிலம் தனி அமிலம் எனப்படுகிறது. அமிலக்கார இணை இரட்டைகள் ஒரு புரோட்டானால் வேறுபடுகின்றன. இவற்றை புரோட்டானேற்றம் மற்றும் புரோட்டான் நீக்கம் செய்வதன் மூலமாக ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாற்றமுடியும். அமிலம் மின்சுமை ஏற்ற இனமாகவும் அதனுடைய இணை காரம் நடுநிலைமையுடனும் இருப்பதை HA+ ⇌ H+ + A. என்று பொதுமைப்படுத்திய சமன்பாடாக எழுதலாம். கரைசலில் அமிலத்திற்கும் அதன் இணை காரத்திற்கும் இடையில் ஒரு சமநிலை நிலவுகிறது. கரைசலில் உள்ள அயனிகள் அல்லது மூலக்கூறுகளின் அடர்த்திச் சமநிலையை சமநிலை மாறிலி K வால் அறியலாம். அடைப்புக்குறிகள் அடர்த்தியைக் குறிக்கின்றன. அதாவது [H2O] என்று குறிப்பிடப்பட்டால், தண்ணிரின் அடர்த்தி என்பது இதன் பொருள் ஆகும். அமிலக்கார வினைச்சூழலில் பொதுவாக காடித்தன்மை எண் அல்லது அமிலத்தன்மை எண்ணைக் குறிக்க Ka என்ற குறியீட்டைப் பயன்படுத்துவர். Ka மாறிலியின் எண்ணியல் மதிப்பை காணவேண்டுமென்றால், விளைபொருட்களின் அடர்த்திகளின் பெருக்கற்தொகையை வினையில் ஈடுபட்ட வினைபடு பொருளின் அடர்த்தியால் வகுத்துப் பெற வேண்டும். இங்கு வினைபடு பொருள் (HA) மற்றும் வினை விளைபொருட்கள் இணைகாரமும், புரோட்டானும் (H+) ஆகும். இரண்டு அமிலங்களில் Ka மதிப்பு எதற்கு அதிகமாக உள்ளதோ அந்த அமிலமே வலிமையான அமிலமாகும். வலிமையான அமிலங்களே புரோட்டானை இழப்பதில் அதிக நாட்டமுள்ள போக்கைக் கொண்டிருப்பதால் ஐதரசன் அயனிக்கும் அமிலத்திற்குமான விகிதம் வலிமையான அமிலங்களில் உயர்ந்த அளவாக இருக்கும். இந்த விகிதம் பல பதின்ம அடுக்குகளுக்கு ஏற்றவாறு மாறும் என்பதால் Ka மதிப்புகளை மடக்கை அளவில் குறிப்பது வழக்கம். மடக்கை காடித்தன்மை எண், pKa என்பது −log10 Ka என்பதற்கு ஈடாகும். வலிமையான அமிலங்கள் வலிமை குறைந்த அமிலங்களைக் காட்டிலும் pKa மதிப்பை குறைவாகக் கொண்டிருக்கும். மரபார்ந்த பெயரிடல் முறையில் எதிர்மின் அயனிகளின் அடிப்படையில் அமிலங்களுக்குப் பெயரிடப்பட்டது. பின்னர் அயனி பின்னொட்டுகள் கைவிடப்பட்டு கீழுள்ள அட்டவணையில் உள்ள ஒட்டுகள் பின்னொட்டாக சேர்க்கப்பட்டு பெயரிடப்பட்டன. சில சமயங்களில் முன்னொட்டாகவும் இவை சேர்த்துக் கொள்ளப்பட்டன. உதாரணமாக HCl இல் குளோரைடு என்பது எதிர்மின் அயனியாகும். எனவே ஐடு என்ற பின்னொட்டை ஐயுபிஏசி பெயரிடும் முறையில் ஐதரோகுளோரிக் அமிலம் எனப் பெயரிட்டார்கள். மரபார்ந்த பெயரிடல் முறை: ஒரு புரோட்டானை இழக்கும் திறன் அடிப்படையில் ஓர் அமிலத்தின் வலிமை அளவிடப்படுகிறது. தண்ணீரில் முழுமையாகப் பிரிகையடைக்கூடிய அமிலம் வலிமையான் அமிலம் எனக் கருதப்படுகிறது. ஒரு மோல் அளவுள்ள வலிமையான அமிலம் HA தண்ணிரில் கரைந்து ஒரு மோல் அளவுள்ள H+ மற்றும் ஒரு மோல் அளவுள்ள இணை காரம் A− மற்றும் சிறிதளவும் புரோட்டானேற்றம் பெற்ற HA இல்லாமல் போவது என்றும் அமிலத்தின் வலிமையைக் குறிப்பிடலாம். மாறாக வலிமை குன்றிய ஓர் அமிலத்தில் பகுதியாக பிரிகை நிகழ்ந்து, கரைசலில் அமிலமும் இணை காரமும் சமநிலையில் இருப்பதை குறைந்த வலிமை என்ற சொல் விளக்குகிறது. ஐதரோகுளொரிக் அமிலம் (HCl), ஐதரோ அயோடிக் அமிலம் (HI), ஐதரோ புரோமிக் அமிலம் (HBr), பெர்குளோரிக் அமிலம் (HClO4), நைட்ரிக் அமிலம் (HNO3), கந்தக அமிலம் (H2SO4) போன்றவை வலிமையான அமிலங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும். தண்ணிரில் இவை ஒவ்வொன்றும் 100 சதவீதம் அளவுக்கு அயனியாகின்றன. எளிமையாக புரோட்டானை இழக்கும் பொருள் வலிமையான அமிலம் என்று கருதப்படுகிறது. H—A பிணைப்பின் முனைவுப் பண்பும், A அணுவின் உருவ அளவும் இரண்டு முக்கிய காரணிகளாக புரோட்டான் நீக்கத்தை கட்டுப்படுத்துகின்றன. இவையே H—A பிணைப்பின் வலிமையையும் உறுதிப்படுத்துகின்றன. இணை காரத்தினுடைய நிலைப்புத்தன்மையும் கூட அமிலங்களின் வலிமையை சிலநேரங்களில் நிர்ணயிக்கின்றன. வலிமையான அமிலங்கள் உயர் Ka மதிப்பும் வலிமை குன்றிய அமிலங்களைக் காட்டிலும் குறைவான pKa மதிப்பும் கொண்டிருக்கும். கரிம ஆக்சி அமிலங்களான சல்போனிக் அமிலங்கள் வலிமையான அமிலங்கள் என்ற வகையில் பகுக்கப்பட்டுள்ளன. தொலுயீன்சல்போனிக் அமிலம் இதற்கு எடுத்துக்காட்டாகும். கந்தக அமிலத்தைப் போலன்றி சல்போனிக் அமிலங்கள் திண்மங்களாகும். உண்மையில் பாலிசிடைரின் செயல்சார்புடைய பாலிசிடைரின் சல்போனெட்டு வலிமையான அமிலத்தன்மை கொண்ட வடித்தலுக்குட்பட்ட நெகிழி ஒரு திண்மமாகும் மீவீரிய அமிலங்கள் 100% கந்தக அமிலத்தைக் காட்டிலும் வலிமையானவையாகும். புளோரோ ஆண்டிமோனிக் அமிலம், மந்திர அமிலம், பெர்குளோரிக் அமிலம் போன்றவை மீவீரிய அமிலங்களுக்கு உதாரணங்களாகும். மீவீரிய அமிலங்களால் நிரந்தரமாக தண்ணீரை புரோட்டானேற்றம் செய்து படிகநிலை ஐதரோனியம் உப்புகளை தரமுடியும். அமிலச் சேர்மத்தின் வலிமையை Ka அளவுகள் தெரிவிப்பது போல நீரிய அமிலங்களின் வலிமையை pH, அளவுகள் தெரிவிக்கின்றன. பிரிகைச் செயல்முறையின் போது ஓர் அமில மூலக்கூற்று அலகுக்கு ஒரு புரோட்டானை மட்டும் கொடையளிக்க வல்ல அமிலங்கள் ஒற்றை புரோட்டிக் அமிலங்கள் எனப்படும். HA என்ற குறியீடு இதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. HA(நீரிய) + H2O(நீர்மம்l) ⇌ H3O+(நீரிய) + A−(நீரிய) Ka கனிம அமிலங்களில் ஐதரோகுளோரிக் அமிலமும் (HCl), நைட்ரிக் அமிலமும் (HNO3) ஒற்றை புரோட்டிக் அமிலங்களுக்குப் பொதுவான எடுத்துக்காட்டுகளாகும். கரிம அமிலங்களைப் பொறுத்தவரையில் ஒரு கார்பாக்சிலிக் குழு இடம்பெற்ற அமிலங்கள் ஒற்றை புரோட்டிக் அமிலங்கள் என்ற பொருளில் அழைக்கப்படுகின்றன. பொதுவாக இவை மோனோ கார்பாக்சிலிக் அமிலங்கள் அல்லது ஒற்றை கார்பாக்சிலிக் அமிலங்கள் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன. பார்மிக் அமிலம் (HCOOH), அசிட்டிக் அமிலம் (CH3COOH), பென்சாயிக் அமிலம் (C6H5COOH) உள்ளிட்ட அமிலங்கள் இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். ஓர் அமில மூலக்கூற்று அலகுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட புரோட்டான்களை கொடையளிக்க வல்ல அமிலங்களை பாலிபுரோட்டிக் அமிலங்கள் என்கிறார்கள். மேலும் இவற்றை பாலிக்கார அமிலங்கள் என்றும் அழைக்கிறார்கள். தனிச்சிறப்பு மிக்க பாலிபுரோட்டிக் அமிலங்கள் கூடுதலாக டைபுரோட்டிக் அமிலங்கள்ம் டிரைபுரோட்டிக் அமிலங்கள் போன்ற சிறப்புப் பெயர்களைக் கொண்டுள்ளன. இங்கு H2A என்ற குறியீட்டால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளடைபுரோட்டிக் அமிலம் அதனுடைய pH தன்மையைப் பொறுத்து ஒரு முறை அல்லது இருமுறை பிரிகை அடைகிறது. ஒவ்வொரு பிரிகைக்கும் தனித்தனியான பிரிகை மாறிலிகள் உண்டு. முதலாவது பிரிகை மாறிலி குறிப்பாக இரண்டாவது பிரிகை மாறிலியைக் காட்டிலும் அதிக மதிப்பைக் கொண்டது. ( Ka1 > Ka2). உதாரணமாக கந்தக அமிலம் (H2SO4) பைசல்பேட்டு எதிரயனி (HSO−4) உருவாக ஒரு புரோட்டானை கொடையளிக்க முடியும். இதற்கான Ka1 மதிப்பு அதிகமாகும்; பின்னர் இது (SO2−4) எதிரயனியை உருவாக்க இரண்டாவது புரோட்டானை கொடையளிக்கிறது. இங்கு இதற்கான Ka2 மதிப்பு இடைநிலை வலிமை கொண்டது. உயர் Ka1 மதிப்பு கொண்ட முதலாவது பிரிகை கந்தக அமிலத்தை வலிமையான அமிலமாக அடையாளப்படுத்துகிறது. இதேபோல வலிமை குறைந்த நிலையற்ற கார்பானிக் அமிலம் (H2CO3) ஒரு புரோட்டானை இழந்து பைகார்பனேட்டு எதிரயனியையும் (HCO−3), இரண்டாவது புரோட்டானை இழந்து கார்பனேட்டு எதிரயனியையும் (CO2−3) கொடுக்கிறது. இரண்டுமே Ka மதிப்புகள் குறைவு என்றாலும் Ka1 > Ka2 ஆக கருதப்படுகிறது. ஒரு டிரைபுரோட்டிக் அமிலத்தால் (H3A) ஒன்று, இரண்டு அல்லது மூன்று பிரிகைகள் அடைய முடியும். இவற்றுக்கான மூன்று பிரிகை மாறிலிகளும் இதற்கு உண்டு. இங்கு இவற்றின் மதிப்பு Ka1 > Ka2 > Ka3.ஆகும். கனிம அமிலங்களின் டிரைபுரோட்டிக் அமிலத்திற்கு ஆர்த்தோபாசுபாரிக் அமிலத்தை (H3PO4), உதாரணமாகக் கூறலாம். வழக்கமாக இது பாசுபாரிக் அமிலம் என்ற பெயராலேயே அழைக்கப்படுகிறது. மூன்று புரோட்டான்களும் அடுத்தடுத்து இழக்கப்பட்டு H2PO−4, பின்னர் HPO2−4, மற்றும் இறுதியாக ஆர்த்தோபாசுப்பேட்டு அயனி PO3−4,உருவாகிறது. வழக்கமாக இதை பாசுப்பேட்டு என்றே அழைக்கின்றனர். பாசுபாரிக் அமில மூலக்கூறில் மூன்று புரோட்டான்களின் அமைவிடங்களும் சமமாக இருந்தாலும் அடுத்தடுத்த Ka மதிப்புகள் வேறுபடுகின்றன. கரிம வேதியியலில் டிரைபுரோட்டிக் அமிலத்திற்கு எடுத்துக்காட்டாக சிட்ரிக் அமிலம் இதேபோல மூன்று புரோட்டான்களை இழந்து சிட்ரேட்டு அயனியாக உருவாகிறது. ஒவ்வொரு ஐதரசன் அயனியாக தொடர்ந்து இழப்பதற்கு குறைந்த சாத்தியம் என்றாலும், அனைத்து இணை காரங்களும் கரைசலில் உள்ளன. உதாரணமாக ஒரு டைபுரோட்டிக் அமிலத்தால் கரைசலில் H2A, HA-, மற்றும் A2-: என்ற மூன்று இனங்களை உருவாக்க முடியும். ஒவ்வொரு இனத்திற்குமான பின்ன செறிவுகளை α (ஆல்பா), இங்குள்ளவாறு கணக்கிட இயலும். pH மதிப்பும் இணைகாரங்களின் செறிவும் கொடுக்கப்பட்டால், கொடுக்கப்பட்ட "K" and "K" pH மதிப்பிற்கு எதிரான பின்னச் செறிவுகளை இத்திட்டத்தின் மூலம் கணக்கிட முடியும். இத்திட்டம் பெய்றம் திட்டம் எனப்படுகிறது. இத்திட்டத்தின் பாங்கை அவதானித்து பொதுவாக "n" புரோட்டிக் அமிலத்திற்கான "i" முறைகள் பிரிகை கணக்கீட்டிற்காக இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. \alpha_{\ce H_{n-i} A^{i-} }= சுவர்ப்பந்து சுவர்ப்பந்து ("Squash") என்பது ஒரு மட்டையைக் கொண்டு நான்கு சுவர்களுக்குள் ஆடப்படும் ஆட்டம். இரண்டு ஆட்டக்காரர்களும் ஒரே சுவற்றை நோக்கி நின்று ஆடுவார்கள். எதிர் சுவற்றில் பட்டுத் திரும்பும் பந்தை தரையில் ஒரு முறைக்கு மேல் படுவதற்குள் எதிராளி பந்தை அடிக்க வேண்டும். எதிர் சுவற்றின் அடிப்பாகத்தில் 48செ.மீ. உயரத்திற்கு "போர்ட்" (Board) எனப்படும் தகரத் தடுப்பு அமைக்கப்பட்டிருக்கும். அடிக்கும் போது எதிர் சுவற்றில் இந்த போர்டில் படாமல் அடிக்க வேண்டும். எதிர் சுவரில் முதலில் பட்ட பின் பக்கவாட்டுச் சுவர்களில் பந்து படலாம். இதன் மூலம் எதிராளியை திணறடிப்பார்கள். இவ்வாறு சுவற்றில் பட்டு நேரடியாகவோ அதன் பின் தரையில் ஒரு முறை பட்டோ வரும் பந்தை மற்ற ஆட்டக்காரர் எதிர் சுவற்றை நோக்கி அடிக்க வேண்டும். எதிராளி அடிப்பதற்குள் பந்து இரு முறை தரையில் பட்டால் பந்தை அடித்தவருக்கு புள்ளிகள் வழங்கப்படும். பந்தை அடித்தவர் அந்த முறை சர்வ் (serve) செய்தவராக இருந்தால் மட்டுமே புள்ளிகள் கிடைக்கும், இல்லாவிட்டால் எதிராளிக்கு அடுத்த சர்வ் வழங்கப்படும். ஒன்பது புள்ளிகள் பெற்றால் ஒரு ஆட்டத்தில் வெற்றி பெறலாம். ஒரு போட்டியின் வெற்றி / தோல்வி, மூன்று அல்லது ஐந்து ஆட்டங்களைக் கொண்டு முடிவு செய்யப்படும். பந்து 40 – 41 மில்லிமீட்டர் விட்டம் உடையதாக இருக்கும். பந்தின் இயல்பு வேகத்தை அதன் மேல் உள்ள வண்ணப்புள்ளியைக் கொண்டு அறியலாம். புதிதாக ஆடுபவர்கள் வேகப் பந்துகளை பயன்படுத்துவார்கள். தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ஆட்டங்களில் ஒளிரும் பந்துகளை பயன்படுத்துவதுண்டு. அடிபந்தாட்டம் பேஸ்பால் என்பது துடுப்பு மற்றும் பந்தைப் பயன்படுத்தி விளையாடப்படும் குழு விளையாட்டு. விளையாடும் ஒவ்வொரு அணியிலும் 09 வீரர்கள் இருப்பர். வட அமெரிக்காவில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் அடிப்பந்தாட்டம்(Baseball) அல்லது பேஸ்போல் விளையாட்டு உருவானது. ஐக்கிய அமெரிக்காவின் (USA) தேசிய விளையாட்டான இது ஹாலிவுட் படங்களினாலும், தொலைக்காட்சியினாலும் மற்றவர்களுக்கு சற்றேனும் அறிமுகமானதாக இருக்கிறது. பந்துவீச்சு மற்றும் பேட்டிங் நடக்கும் இடம் இன்பீல்ட் என்பர். அது சற்று கூர் உருளை (கூம்பு) வடிவிலிருக்கும். பந்துவீசும் இடம், பிட்சர் தட்டு என்பர். இதன் குறுக்களவு சுமார் 18' இருக்கும். இந்த பிட்சர் தட்டை மையப்பகுதியாக கொண்டு, டைமண்ட் வடிவிலான சதுரம் அமைந்திருக்கும். இந்த சதுரங்கத்தின் ஒரு மூலையில் பேட்டிங் செய்யுப்படும், இதனை வீட்டுத் தட்டு என்பர். வீட்டுத் தட்டுக்கும், பிட்சர் தட்டுக்கும் இடையே உள்ள சுமார் 60' தூரமிருக்கும். மற்ற முலைகளை, வீட்டுத் தட்டிலிருந்து இடஞ்சுழி முறையே 1ம் அடித்தளம், 2ம் அடித்தளம் மற்றும் 3ம் அடித்தளம் என்பார்கள். வீட்டுத் தட்டின் இருபுரத்திலும் இடதுக்கை மற்றும் வலதுக்கை மட்டையாளர்கள் நிற்பதற்கான செவ்வகங்கள் இருக்கும். வீட்டு தட்டிற்குப் பின் கேட்சர் சதுரம் அமைந்திருக்கும். வீட்டுத் தட்டிலிருந்து விரிந்து செல்லும் முக்கோணத்தின் இருபக்க கோடுகளை பிழைக் கோடுகள் என்பனர். இன்பீல்ட்டுக்கு அப்பார்பட்டு, பிழை கோடுகளுக்குள்ளே இருக்கும் ஆடுகளத்தை அவுட்பீல்ட் என்பர். வீட்டுத் தட்டிலிருந்து அவுட்பீல்டின் எல்லை, சுமார் 290' முதல் 400' வரை இருக்கும். எல்லாப் போட்டிகளும், ஏதாவது ஒரு அணியின் சொந்த ஊரிலிருக்கும் ஆடுகளத்தில் நடக்கும். அவுட்பீல்டின் பரிமாணங்கள் நிலையானதாய் இல்லாததால், எல்லா ஆடுகளங்களும் தனித்தன்மை வாய்ந்ததாக திகழும். ஒரு போட்டியில் இரு அணிகள் பங்குப்பெறும். ஒவ்வொரு அணியிலும் 9 வீரர்கள் அந்தப் போட்டியில் விளையாடுவார்கள். ஒரு போட்டியில் 9 ஆட்டங்கள் நடைப்பெறும், ஒரு ஆட்டத்திற்கு இரு அணிகளும் மாறி மாறி, பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ஈடுப்படும். சொந்த ஊரில் விளையாடும் அணி பெரும்பாலும் முதலில் பந்துவீச்சில் ஈடுப்படும்.இரு அணியின் மேலாளர்களும், இந்த போட்டியில் விளையாடும் தங்கள் அணியின் வீரர்களின் பட்டியிலை எதிர் அணியிடமும் நடுவர்களிடமும் தர வேண்டும். இந்தப் பட்டியலில் மாற்று வீரர்களின் பெயர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். மட்டையாடும் அணி அதிக ஓட்டங்களை எடுக்க முற்படுவர். பந்துவீசும் அணி அதை தடுக்க முற்படுவர். இரு அணிகளுக்கும் 9 வாய்ப்புகள், மட்டையாடுவதிலும் பந்துவீச்சிலும் தரப்படும். இந்த விளையாட்டின் குறிக்கோள், 9 ஆட்டங்களின் முடிவில் எதிரணியை விட அதிக பட்ச ஓட்டங்களை எடுத்திருக்க வேண்டும். அடிபந்தாட்டத்தில் பல வகையான புள்ளி விபரங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை காணலாம் மட்டையாடும் போது ஏற்படும் புள்ளி விபரங்கள் கீழ் காணுங்கள் ஆடிகளத்தில் பந்தை மட்டையாளர்கள் அடித்தப்பின், பந்தை பிடித்து அடித்தளத்திற்கு வீசி, எதிரணி வீரர்களை வெளியேற்றும் வீரர்களே, தடுப்பாளர்கள். கைப்பந்தாட்டம் கைப்பந்தாட்டம் "(volleyball)" என்பது ஓர் அணிக்கு ஆறு வீரர்கள் வீதம் உருவாக்கப்பட்ட இரண்டு அணி வீரர்கள் ஒரு வலையால் பிரிக்கப்பட்டு கைகளால் பந்தை அடித்து ஆடுகின்ற ஒரு குழு ஆட்டமாகும். ஒவ்வோர் அணியும் தங்கள் பகுதிக்கு அனுப்பப்பட்ட பந்தை அது தரையை தொடுவதற்கு முன் கைகளால் வாங்கி, தட்டி பின்னர் எதிர்ப்பக்கத்தினரின் பகுதியில் தரையைத் தொடும்படி அனுப்புகின்ற விளையாட்டு ஆகும். எதிர்ப்பக்கத்திற்கு பந்தை அனுப்ப ஒவ்வோர் அணியும் மூன்று தட்டுதல்கள் எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு அனுப்பப்படும் பந்தை எதிரணியினரால் மூன்றே தட்டுதல்களில் திருப்பி அனுப்ப இயலவில்லை என்றாலோ, பந்து அவர்கள் பகுதிக்குள் தரையில் விழுந்தாலோ, மற்றைய அணிக்கு ஒரு புள்ளி வழங்கப்படும். கைப்பந்தாட்ட விளையாட்டிற்கென பல்வேறு விதிகள் வகுக்கப்பட்டுள்ளன . கைப்பந்தாட்டத்தை கையுந்து பந்தாட்டம் அல்லது வாலிபால் என்ற பெயர்களால் அழைக்கிறார்கள். கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு விளையாட்டாக கைப்பந்தாட்டம் 1964 ஆம் ஆண்டு முதல் விளையாடப்பட்டு வருகிறது. கைப்பந்தாட்டத்திற்காக வகுக்கப்பட்டுள்ள முழுமையான விதிகள் விரிவானவையாகும். ஆனால் ஆட்டம் எளிமையாக பின்வருமாறு விளையாடப்படுகிறது. ஆட்டத்தைத் தொடங்குகின்ற அணியிலிருக்கும் ஒரு வீரர் அவர் பக்க ஆடுகளத்திற்கு வெளியே நின்று பந்தை கைகளால் அடித்து வலைக்கு மேலாக அடுத்த அணியினரின் ஆடுகளப் பகுதிக்கு அனுப்புகிறார். பந்தைப் பெறுகின்ற எதிரணியினர் பந்தை அவர்கள் பக்க ஆடுகளத்தின் தரையில் விழவிடாமல் பார்த்துக் கொள்கிறார்கள். இதற்காக அவர்கள் அணியில் உள்ள மூன்று வீரர்கள் பந்தை மூன்று முறை தட்டுகிறார்கள். ஒரே வீரர் அடுத்தடுத்து இரண்டு முறைகள் பந்தைத் தட்டக்கூடாது என்ற விதி இங்கு பின்பற்றப்படுகிறது. எதிரணியினரால் அனுப்பப்படும் பந்தை பெறும் முதல் வீரர் கீழ்க்கையால் அல்லது தலைக்கு மேலேயே விரல்களால் பந்தைப் பெற்று பந்து வந்தவேகத்தைக் கட்டுப்படுத்தி இரண்டாவது வீரருக்கு அனுப்புகிறார். மூன்றாவது வீரர் பந்தை விசையுடன் அடித்து அனுப்புவதற்கு தோதுவாக இரண்டாவது வீரர் பந்தை தலைக்கு மேலே உயர்த்தி நிறுத்துகிறார். தாக்குதலுடன் அனுப்பப்பட்ட பந்தை எதிரணியினர் தங்கள் பகுதிக்குள் வரவிடாமல் தடுக்கின்றனர். அல்லது முதல் அணியினர் பந்தை அனுப்பியது போல இவர்களும் பந்தைப் பெற்று , தலைக்கு மேல் நிறுத்தி, விசையுடன் அடித்து விளையாட்டைத் தொடர்கின்றனர். எதிரணியினரின் ஆடுகளத்தில் பந்து தரையைத் தொடும் ஒவ்வொரு முறைக்கும் ஒரு புள்ளி வழங்கப்படுகிறது. அடித்தெறியும்போது தவறு செய்தாலும், வலையைத் தொட்டுவிடுதல் போன்ற மற்ற தவறுகள் இழைத்தாலும் எதிர் அணிக்கு புள்ளி வழங்கப்படுகிறது. அடித்தெறியப்பட்ட பந்தை திரும்ப எதிர் அணிக்கு திருப்ப முடியாமல் போனாலும் எதிர் அணிக்குப் புள்ளிவழங்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட 25 புள்ளிகளை எந்த அணியினர் முதலில் ஈட்டுகின்றனரோ அந்த அணி வெற்றி பெற்ற அணியாக தேர்ந்தெடுக்கப்படுகிறது. ஆடுகளத்திற்கு வெளியே இருந்து ஓரணியின் வீரரால் அடித்தெறியப்படும் பந்து, இரண்டு அணி வீரர்களாலும் மூன்று மூன்று தட்டல்களில் திருப்பி அனுப்பப்படும் தொடர் நிகழ்வு ராலி எனப்படும். ஓர் அணியின் ஆடுகளப்பகுதியில் பந்து தரையைத் தொடும்வரை, அல்லது மூன்று தட்டல்களால் அடுத்த பகுதிக்கு பந்தை அனுப்பமுடியாத நிலை தோன்றும் வரை இந்த ராலி தொடரும். அடித்தெறியும் அணி ராலியை வெற்றி பெற்று புள்ளிகள் ஈட்டினால் அந்த அணிக்கு மீண்டும் அடித்தெறியும் வாய்ப்பு வழங்கப்பட்டு மீண்டும் ராலி தொடரும். பொதுவாக கைப்பந்தாட்ட விளையாட்டின் போது பின்வரும் தவறுகள் வீரரகளால் இழைக்கப்படுகின்றன. •எதிரணியினரின் ஆடுகளத்திற்கு வெளியே தரையைத் தொடுமாறு பந்தை அடித்து விடுதல் •எதிரணியினரின் ஆடுகளத்திற்கு செல்ல முடியாதவாறு பந்தை வலையில் அடித்து விடுதல் •பந்தை கைகளால் பிடித்து விடுதல் •உந்தி தள்ளுவதற்குப் பதிலாக பந்தை பிடித்து எறிந்து விடுதல் •ஒரே வீரர் அடுத்தடுத்து இரண்டு முறை பந்தை தட்டிவிடுதல் •ஒரே அணியினர் நான்கு முறை பந்தை தட்டி அனுப்புதல் •ராலியின்போது அணி வீரர்கள் வலையை கைகளால் தொட்டு விடுதல் •தொடக்கத்தில் அடித்தெறியும் போது வீரரின் பாதம் ஆடுகளத்தின் எல்லையை தாண்டி விடுதல் போன்றவை தவறுகளாகக் கருதப்படுகின்றன. பொதுவாக கைகளால் ஆடப்படும் இவ்விளையாட்டில் வீரர்களின் பிற உடல் பாகங்களில் பந்து படுவதும் தவறாகக் கருதப்படுகிறது. கைப்பந்தாட்ட விளையாட்டில் பல்வேறு தேர்ந்த நுணுக்கங்கள் வளர்ச்சியடைந்துள்ளன. வலைக்கு மேல் பந்தை நிறுத்தி மேலெழும்பி தாக்கி அடித்தல், மேலெழும்பி வலைக்கு மேலேயே பந்தை தடுத்து திருப்பி அனுப்புதல், அடுத்தவருக்கு பந்தைக் கடத்துதல், தாக்குவதற்கு தோதாக பந்தை தலைக்கு மேலே உயர்த்திக் கொடுத்தல், தனிச்சிறப்பு ஆட்டக்காரருக்கு ஏற்றபடி இடம் அமைத்துக் கொடுத்தல், போன்ற ஆட்ட நுணுக்கங்கள் சிறப்பான முறையில் வளர்ந்து வருகின்றன. 1895 ஆம் ஆண்டின் மழைக்காலம் ஒன்றில் அமெரிக்காவின் மாசாச்சுசெட்சு மாநிலத்தின் ஓலியோக் நகரில் உடற்கல்வி இயக்குநராக இருந்த வில்லியம் கி. மார்கன் என்பவர் மிண்டோநெட்டி என்ற புதிய விளையாட்டை உருவாக்கினார். இப்பெயர் பேட்மிண்டன் என்ற ஆங்கிலச் சொல்லில் இருந்து பெறப்பட்டது. உள்ளரங்க விளையாட்டாகவும் பலர் விளையாடும் விளையாட்டாகவும் இது உருவாக்கப்பட்டது. எறிபந்தாட்டம் மற்றும் டென்னிசு பந்தாட்டம் ஆகிய ஆட்டங்களின் சில கூறுகள் இவ்விளையாட்டுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர்தான் கூடைப்பந்து என்ற ஒரு புதிய விளையாட்டும் இந்நகருக்கு சில கிலோமீட்டர் தொலைவில் இருந்த சிபிரிங்பீல்டு நகரில் உருவாக்கப்பட்டிருந்தது. நடுத்தர வயது ஆட்டக்காரர்களை மையமாக வைத்து இவ்விளையாட்டு உருவாக்கப்பட்டது. கூடைப்பந்து விளையாட்டைக் காட்டிலும் மென்மையான விளையாட்டாக இது கருதப்பட்டது. சிறிதளவு தடகள முயற்சிகள் தேவைப்படும் இவ்விளையாட்டு உள்ளரங்கு விளையாட்டாகவே உருவாக்கப்பட்டது. கைப்பந்தாட்டத்திற்கான தொடக்கக்கால விதிகளை வில்லியம் கி. மார்கன் உருவாக்கி எழுதினார். குறுக்கே கட்டப்படும் வலையின் உயரம் 6 அடி உயரம் எனவும் ஆடுகளத்தின் நீளம் 50 அடியாகவும் அகலம் 25 அடியாகவும் இருக்க வேண்டும் என்று அவர் விதி செய்தார். ஓர் ஆட்டம் என்பது ஒன்பது இன்னிங்சு கொண்டதாக இருந்தது. ஒரு இன்னிங்சிற்கு ஒவ்வொரு அணிக்கும் மூன்று அடித்தெறிதல் அனுமதிக்கப்பட்டது. எதிரணியின் பக்கத்திற்கு பந்தை திருப்பி அனுப்புவதற்காக பந்தை தட்டும் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படவில்லை. அடித்தெறியும் போது தவறிழைக்கப்பட்டால் மறு வாய்ப்பு வழங்கப்பட்டது. பந்தை வலையில் அடிப்பது தவறாகக் கருதப்பட்டது. முதல்முறையாக அடித்தெறியும் போது தவறிழைத்தல் தவிர பின்னர் நிகழும் தவறுகளுக்கு புள்ளி இழப்பும் பக்க மாற்றமும் கொடுக்கப்பட்டது. 1896 ஆம் ஆண்டு சிபிரிங் பீல்டு கல்லூரியில் இவ்விளையாட்டு ஒரு காட்சிப் போட்டியாக அனைவருக்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு வலைக்கு மேல் பந்து அங்குமிங்குமாக அனுப்ப்படுவதைக் கண்ட ஆல்பிரட் ஆல்சிடட்டு என்பவர் இவ்விளையாட்டை வாலிபால் என்று அழைத்தார். அன்றிலிருந்து இவ்விளையாட்டின் பெயர் வாலிபால் என்றானது. விதிகள் சிறிதளவு மாற்றப்பட்டன. பின்னர் இவ்விளையாட்டு பல்வேறு நாடுகளுக்கும் பரவியது இவ்விலையாட்டுக்காகப் பயன்படுத்தப்பட்ட அலுவல்முறையாக அங்கீகரிக்கப்பட்ட பந்து தொடர்பான அறிக்கைகள் விவாதத்திற்கு உட்பட்டவையாக உள்ளன. 1986 ஆம் ஆண்டில் அலுவல்முறையாக அங்கீகரிக்கப்பட்ட பந்து தயாரிக்கப்பட்டது என்று சிலரும் 1900 ஆம் ஆண்டில்தான் அலுவல்முறையாக அங்கீகரிக்கப்பட்ட பந்து தயாரிக்கப்பட்டது என்று சிலரும் வாதிடுகிறார்கள் . காலப்போக்கில் கைப்பந்தாட்டத்திற்கான விதிகளில் மாற்றங்கள் தோன்றின. வெற்றிக்குப் புள்ளிகளை ஈட்ட வேண்டும் என்ற விதி 1900 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. 21 புள்ளிகள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற விதி 1917 ஆம் ஆண்டு 15 புள்ளிகள் எடுத்தால் வெற்றி என்று மாற்றப்பட்டது. ஒரு குழுவிற்கு ஆறு ஆட்டக்காரர்கள் விளையாடலாம் என்ற விதி 2016 ஆம் ஆண்டில் வகுக்கப்பட்டது. ஒரு குழு பந்தை மூன்று முறை தட்டி விளையாடலாம் என்ற விதி 1922 ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்டது. 1919 ஆம் ஆண்டு அமெரிக்காவில் 16000 கைப்பந்துகள் அந்நாட்டுப் படையினருக்கும் கூட்டணிப் படையினருக்கும் வழங்கப்பட்டன. இதனால் பல புதிய நாடுகளுக்கு இவ்விளையாட்டு பரவியது . 1900 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் கைப்பந்து விளையாடத் தொடங்கிய பிறகு கனடாவில்தான் இவ்விளையாட்டு முதன்முதலில் விளையாடப்பட்டது. சர்வதேச பைப்பந்து கூட்டமைப்பு 1947 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது, 1949 இல் ஆண்களுக்கான முதல் உலகக் கோப்பைப் போட்டி நடைபெற்றது. பெண்களுக்கான உலகக் கோப்பைப் போட்டி 1952 ஆம் ஆண்டு நடைபெற்றது. தற்போது இந்த விளையாட்டானது பிரேசிலில் பிரபலமாக விளையாடப்படுகிறது. ஐரோப்பாவில் குறிப்பாக இத்தாலி, நெதர்லாந்து, மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நாடுகள், உருசியா, சீனா மற்றும் ஆசியாவின் பிற நாடுகளிலும் இவ்விளையாட்டு விளையாடப்படுகிறது. வழக்கமாக விளையாடப்படும் கைபந்தாட்டம் சில மாறுதல்களுடன் கடற்கரை கைப்பந்து என்ற பெயரில் ஆடப்படுகிறது. மணலில் விளையாடப்படும் இவ்விளையாட்டில் ஒரு அணிக்கு இரண்டு வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. 1996 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் கடற்கரை கைப்பந்து விளையாட்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டது. மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகளிலும் கைப்பந்து போட்டிகள் இடம்பெறுகின்றன. 1920 களின் பிற்பகுதியில் நிர்வாண உடையில் இயங்கும் இயற்கைவாதிகள் இவ்விளையாட்டை ஏற்றுக் கொண்டு விளையாடத் தொடங்கினர். அவர்களி சங்கம் மற்றும் கழக அமைப்புகளில் கைப்பந்து விளையாட்டுத் திடல் உருவாக்கப்பட்டது . 1960 களில் இத்தகைய அமைப்பின் அனைத்து சங்கங்களிலும் கைப்பந்து திடல் கண்டிப்பாக உருவாக்கப்பட்டுள்ளது . சமதளம், பெரும்பாலும் உள் அரங்கில் விளக்குகள் ஒளியில் ஆடப்படும் விளையாட்டு. களத்தின் நடுவில் வலையும், அதன் இரு புறமும் 3 அடியில் ஒரு கோடும் போடப்பட்டிருக்கும். எந்த வீரரும் அந்தக் கோட்டைத் தாண்டி வலையருகில் கால் வைத்தாலோ, வலையில் உடலின் எந்தப் பகுதியாவது பட்டாலோ, தப்பாட்டமாக (Foul) கருதப்படும். வலையின் மேல்மட்ட உயரம் ஆண்களுக்கு 2.43 மீட்டராகவும், பெண்களுக்கு 2.24 மீட்டராகவும் இருக்கும். மேசைப்பந்தாட்டம் 19ம் நூற்றாண்டின் இறுதியில் பிங்-பாங் என்று அறியப்பட்ட மேசைப்பந்தாட்டம் ("table tennis", டேபிள் டென்னிஸ்) தற்போது உலகம் முழுதும் பரவி ஏற்றுக்கொள்ளப்பட்டுளது. 1988ல் ஒலிம்பிக்சில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. ஒரு மேசையின் இருபுறமும் நின்று, சிறிய கைப்பிடியுள்ள வட்டமான மட்டையைக் கொண்டு மிக இலேசாக தக்கைபோல் உள்ள (பிளாஸ்டிக்) பந்தை எதிராளி தடுத்து அடிக்கமுடியாமல் முன்னும் பின்னுமாய் அடித்து ஆடும் விளையாட்டு. சரியாக மேசையின் நடுவில், உயரம் குறைவாக, சிறிய வலை ஒன்று கட்டப்பட்டிருக்கும். ஆடுநர் பந்தை இவ்வலையைத் தாண்டி எதிராளியின் மேசைப்பகுதியில் விழுமாறு அடித்தல் வேண்டும். எதிராளியின் மேசையின் சரியான பகுதியில் பட்டு குதிக்கும் பந்தை, எதிராளி அவருக்கு எதிர்ப்புற மேசையில் படுமாறு திருப்பி அடிக்கத் தவறினால் அந்த பந்துக்கான புள்ளிக் கணக்கை இழப்பார். இப்படி எதிரெதிராக பந்தை இருவர் தனக்கு எதிராக இருப்பவர் பக்கம் பந்தை அடிக்கும் பொழுது பந்து ஒருமுறைதான் வேறு எங்கும் படாமல் எதிராளி மேசைமீது விழுந்து குதிக்க வேண்டும். எதிராளி மேசையின் மீது இருமுறையோ அதற்கு மேலோ குதிக்க விட்டுவிட்டால் எதிராளி புள்ளியிழப்பார். அதாவது யாரால் முறையாக விழுந்த பந்தை எதிர்ப்புற மேசையில் விழுமாறு திருப்பி அடிக்க முடியவில்லையோ அவர் புள்ளியிழப்பார். வலையில் தொட்டு எதிராளி மேசைப்புறம் விழுந்தாலும் அப்பந்து முறையாக விழுந்த பந்தாகும். ஒரு புதிய புள்ளிக்கான ஆட்டத்துவக்கத்தில் மட்டும் முதலாகப் பந்தை எதிராளிப்பக்கம் அடிப்பவர், தன்பகுதி் மேசை மீது பட்டுப் பின்னர் எதிராளியின் மேசை மீது விழுமாறும், நீளவாட்டில் மேசைமீது உள்ள நடுக்கோட்டுக்கு எதிராளியின் மேசையின் மாற்றுப்புறதில் (இட வலமாக அல்லது வல-இடமாக) பந்து விழுமாறும் அடிக்க வேண்டும். இல்லாவிடில், மீண்டும் ஒரேயொரு முறை முதல்பந்தடிக்கலாம். இருமுறையும் தவறு நிகழ்ந்தால் முதற்பந்தடிப்பவர் புள்ளியிழப்பார். மேசை பரப்பு பச்சை அல்லது நீல நிறத்திலும், கோடுகள் வெள்ளை நிறத்திலும் இருக்கும். மேசை நடுவே நீளவாக்கில் போடப்பட்ட வெள்ளைக் கோடு இருவர் ஆட்டத்திற்கானது. ஒரு புள்ளிக்கான முதற்பந்து அடிப்பவர் மாற்றுப்புறத்தில் விழுமாறு அடிப்பதற்கும் பயன்படுவது. ஒரு ஆட்டத்திற்கு 21 புள்ளிகள் (Points). வெற்றி பெறுபவர், மற்றவரை விட இரு புள்ளிகள் கூடுதல் பெற வேண்டும். ஆண்கள் போட்டிகளில் 5 ஆட்டங்களில் அதிக வெற்றிகள் பெற்றவரையும், பெண்கள் போட்டிகளில் 3 ஆட்டங்களில் அதிக வெற்றிகள் பெற்றவரையும், வெற்றியாளர் என அறிவிக்கப்படும். ஆண்கள் அணி உலக சாம்பியன் போட்டி, ஸ்வாதிலிங் கோப்பை (Swathyling Cup) எனவும், பெண்கள் அணி உலக சாம்பியன் போட்டி, கார்பில்லோன் கோப்பை (Corbillon Cup) எனவும் வழங்கப்படும். மட்டையின் பரப்பில் சொரசொரப்பான 2மி.மீ உருண்டைகள் கொண்ட இறப்பர் தாள் ஒட்டப்பட்டிருக்கும். புள்ளி துவக்கத்தில் சர்வ் செய்யும் போது பந்தை கையிலிருந்து உயரே தூக்கிப் போட்டு மட்டையால் நமது மேசை பகுதியில் முதலில் பட்டு எதிராளி பகுதிக்கு செல்லுமாறு அடிக்க வேண்டும். குழிப்பந்தாட்டம் குழிப்பந்தாட்டம் அல்லது கோல்ஃப் (Golf) விளையாட்டு சுமார் 500 வருடங்களுக்கு முன் இசுக்காட்லாந்திலிருந்து தொடங்கியது. கோல்ஃப் மட்டை 'க்ளப்' (Club) எனப்படும், இந்த அடிகோல் (கிளப்) கொண்டு வெண்பந்தை மைதானத்திலுள்ள இடர்களில் மாட்டிக் கொள்ளாமல் சிறிய குழிக்குள் தள்ளுவதே ஆட்டம். பொதுவாக நன்கு பராமரிக்கப்படும், கவனத்துடன் உருவாக்கப்பட்ட 9 அல்லது 18 குழிகள் கொண்டது ஒரு ஆட்டமைதானம் (கோர்சு). இந்தக் குழிகளில் ஒவ்வொன்றாக மிகக் குறைந்த எண்ணிக்கையிலான தட்டுகள் அல்லது அடிகள் (Stroke) மூலம் பந்தை விழச் செய்பவரே வெற்றி பெற்றவர். ஒவ்வொரு குழிக்கும் ஒரு "பார்" அல்லது "சமம்" மதிப்பு உண்டு. இது 3 இலிருந்து 5 வரை இருக்கும். 18 குழிகளுள்ள ஒரு ஆட்டமைதானத்திற்கு 72 அடிகள் "சமம்" ஆகும். இந்த எண்ணிக்கையில் ஆடுபவருக்கு "குறை" (ஹண்டிகேப்) 0 ஆகும். ஒருவர் 75 அடிகளில் அனைத்துக்குழிகளிலும் பந்தை இட்டால் அவரது "குறை" 3 ஆகும். கோல்ஃப் மைதானங்கள் மிகப் பெரியவையாக இருப்பதால், வீரர்கள் சில சமயம் சிறு மின்கல ஊர்திகளில் குழிகளுக்கிடையே பயணம் செய்வதும் உண்டு. இது வணிக உலகில் மிக மதிப்பு பெற்ற விளையாட்டாக இருப்பதால், இப்போட்டிகளில் பரிசுத் தொகையும், புகழும் அதிகம். நவீன குழிப்பந்தாட்டமானது 15-ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் ஸ்காட்லாந்தில் தோன்றியது. ஆனால் இதன் தொடக்க கால வரலாறானது தற்போது வரை தெளிவாக வரைவிலக்கணம் செய்ய இயலாத. விவாதத்திற்குரிய ஒன்றாகவும் உள்ளது. சில வரலாற்று ஆசிரியர்கள் உரோம் நாட்டில் இருந்த பகானிகா எனும் விளையாட்டின் மறுவடிவமாக உள்ளதாகக் கருதினர். ஏனெனில் இந்த விளையாட்டிலும் குனிந்துகொண்டு ஒரு குச்சியின் மூலமாக தோல்பந்தினை அடிப்பர்.கிமு 1-ஆம் நூற்றாண்டில் ரோமப் பேரரசு உலகின் பெரும் பகுதிகளை வென்றதால் இந்த விளையாட்டானது ஐரோப்பாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் வென்றிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. மற்ற சிலர் ச்சூயிவன் என்றும் இதனை கருதினர். ("chui" என்றால் அடித்தல் மற்றும் "wan" என்றால் சிறிய பந்து ) சீன மூதாதையர்கள் சிலர் இந்த விளையாட்டினை 8-ஆம் நூற்றாண்டு முதல் 14-ஆம் நூற்றாண்டு வரை விளையாடினர். குழிப்பந்தாட்டத்தில் பார் (PAR) என்பது பந்தானது குழிக்குள் செல்வதற்காக அடிக்கப்படும் எண்ணிக்கைகளைக் குறிக்கும். பெரும்பாலான குழிப்பந்தாட்ட பயிற்சி வகுப்புகள் -3, -4, மற்றும் -5 குழிகள் கொண்டதாக இருக்கும். சில -6 கொண்டதாக இருக்கும். யப்பானில் -7 குழிகள் கொண்டதாக மட்டுமே உள்ளது. வழக்கமாக தொடக்கப் பகுதியிலிருந்து இருக்கும் குழிகளின் தூரங்கள் பின்வருமாறு ஆண்கள் பெண்கள் குழிப்பந்தாட்டம் விளையாடுவதெற்கென சில பொதுவான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதனை மீறுபவர்களுக்கு அபராதங்களும் விதிக்கப்படும். அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் மெக்சிக்கோ நாடுகளைத் தவிர ஏனைய நாடுகளின் குழிப்பந்தாட்ட விதிமுறைகளை வகுப்பதும், நிர்வகிப்பது போன்றவைகளை ஆர் அண்ட் ஏ R&A அமைப்பின் பணியாகும். அந்த இரு நாடுகளுக்கும் யு எஸ் ஜி ஏ (USGA) இந்த பணியினை மேற்கொள்ளும். குழிப்பந்தாட்டத்திற்கான ஒரு பொதுவான விதிமுறைகள் வருவதற்கு முன்னர் குழிப்பந்தாட்டக் கழகங்கள் தங்களுக்கென தாங்களே சில விதிமுறைகளை வகுத்துக் கொண்டனர். அவர்களுக்குத் தேவையான சில விதிகளை தளர்வும் செய்தனர். உ.ம்: இலைகள் ,சிறிய கற்கள். 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புனித.ஆண்ட்ரூஸ் குழிப்பந்தாட்ட சங்கம் (பின்னர் R&A என்று அழைக்கப்பட்டது) லீத் ஜென்டில்மேன் குழிப்பந்தாட்ட சங்கம் (பின்னர் எடின்பர்க் குழிப்பந்தாட்ட வீரர்கள் சங்கம்) ஆகியவை தாங்களாகவே இணைத்துக் கொண்டன. மார்ச் 7 , 1744 இல் லீத் ஜென்டில்மேன் குழிப்பந்தாட்ட சங்கம் (பின்னர் எடின்பர்க் குழிப்பந்தாட்ட வீரர்கள் சங்கம்) குழிப்பந்தாட்டம் விளையாடுவதில் உள்ள விதிகள் மற்றும் நிபந்தனைகள் என்ற தலைப்பில் பதின்மூன்று விதிகள் காணப்பட்டன. இதனுடைய கையெழுத்துப் பிரதி இசுக்கொட்லாந்தின் தேசிய நூலகத்தில் உள்ளது. புட்டர் (Putter) என்று மூன்று வகை மட்டைகள் உபயோகப்படுத்தப்படும். இவற்றிலும் மட்டை நுனியின் தடிமன் மற்றும் கணம் பல வேறுபாடுகள் உண்டு. ஆட்டவீரர்கள் ஓர் ஆட்டத்தில் 14 மட்டைகள் வரை பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்படுவர். மரம் - இவ்வகை மட்டைகளைப் பயன்படுத்தி முதல் சில த்ட்டுகளை அல்லது அடிகளை ஆடுவார்கள். இது பந்தை நீண்ட தொலைவு அடிக்க பயன்படுத்தப்படும். சாதாரணமாக 220 மீட்டர் முதல் 180 மீட்டர் வரை பந்தை செலுத்த இதனைப் பயன்படுத்தலாம். இரும்பு - இது 1 முதல் 10 வரை எண் கொண்ட வேறுபட்ட எடை கொண்டது. 175 மீட்டர் தூரம் முதல் குழி உள்ள பசுந்தரை (Putting Green) வரை பந்தைச் செலுத்த இரும்பு அடிகோல்களைப் (கிளப்-களை) பயன்படுத்தலாம். புட்டர் - குழி அமைந்துள்ள பசுந்தரையை (Putting Green) அடைந்த பின்னர் இவ்வகை மட்டையைக் கொண்டு பந்தின் மிக அருகில் நின்று மெதுவாக தட்டி பந்தை குழியை நோக்கி உருட்டுவார்கள். பந்தை நீண்ட தொலைவு செல்லுமாறு அடிப்பதற்கு, அருமையான மட்டை வீச்சு முறையை பயில்வது மிக முக்கியம். பந்தை முதலில் அடிக்கும் போது டீ (Tee) எனும் ஒரு சிறிய ஆணியைத் தரையில் பொருத்தி அதன் மீது பந்தை வைத்து அடிக்க வேண்டும். அப்பொழுது அதன் பின்னரும் நமது வீச்சின் முழு வேகமும் பந்தை செலுத்த, அந்த வீச்சு தரையிலோ அல்லது ஆணியிலோ படாமல் பந்தின் மீது மட்டும் பட வேண்டும். சிறந்த வீரர்கள் அருமையான வீச்சு உடையவர்களாக இருப்பார்கள். குழிப்பந்தாட்டத்தில் வழங்கப்படும் புள்ளிகளானது குழிக்குள் பந்தினை செலுத்த ஒவ்வொரு வீரர்கள் எடுத்துக் கொள்ளும் பாரினைப் (par) பொறுத்து வழங்கப்படும். வீரர் ஒருவர் தன்னுடைய முதல் வாய்ப்பிலேயே பந்தினை குழிக்குள் செலுத்தினால் அது ஏஸ் எனப்படும். இதே போன்று மற்ற புள்ளிகளுக்கும் பெயர்கள் உண்டு. 2005 ஆம் ஆண்டில் கோல்ஃப் டைஜஸ்ட் -ன் அறிக்கையின் படி எந்தெந்த நாடுகளில் அதிகப்படியான குழிப்பந்தாட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன என் கூறியுள்ளது. அவைகள் பின்வருமாறு இசுக்கெட்லாந்து, நியூசிலாந்து, ஆத்திரேலியா, அயர்லாந்து, கனடா, வேல்ஸ், அமெரிக்கா, ஸ்வீடன், இங்கிலாந்து. மற்ற பிராந்தியங்களிலும் குழிப்பந்தாட்டத்திற்கான பயிற்சி வகுப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சீனாவில் பயிற்சிவகுப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளதே இதற்கு ஒரு உதாரணம் ஆகும். 1984 ஆம் ஆண்டில் முதன் முதலாக சீனாவில் குழிப்பந்தாட்ட பய்யிற்சி வகுப்பு துவங்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டின் முடிவில் 600 பேர் இருந்தனர். 21-ஆம் நூற்றாண்டில் சீனாவில் குழிப்பந்தாட்டம் அதிகாரப்பூர்வமாக தடை செய்யப்பட்டது. ஆனால் 2004 - 2009 ஆம் ஆண்டிற்கான இடைப்பட்ட கால கட்டத்தில் இந்த எண்ணிக்க்கையானது மூன்று மடங்கு அதிகரித்தது. பின்பு மறைமுகமாக இந்த தடையினை சீன அரசாங்கம் தடைகளை விலக்கிக் கொண்டது. மின்காந்தக் கதிர்வீச்சு இயற்பியலில், மின்காந்தக் கதிர்வீச்சு ("electromagnetic radiation") என்பது மின்காந்த புலத்தின் அலைகளை (அல்லது அவற்றின் குவாண்டம், அல்லது ஒளியணுக்களைக்) குறிக்கிறது. இவை மின்காந்தக் கதிரியக்க ஆற்றலாக வெறும் வெளியினூடாகப் பயணிக்கக் கூடியவை ஆகும். மின்காந்தக் கதிர்வீச்சு வானொலி அலைகள், நுண்ணலைகள், அகச்சிவப்புக் கதிர், (காணக்கூடிய) ஒளி, புற ஊதாக் கதிர், எக்சு-, காம்மா கதிர்கள் ஆகியவைகளாக இருக்கலாம். அலைகள் இருவகைப்படும்: இயக்க அலைகள் (mechanical waves), மின்காந்த அலைகள் (electromagnetic waves). நீர் அலைகள், சத்த அலைகள், கயிற்லைகள் ஆகியவை இயக்க அலைகள். ஒளி அலைகள், எஸ் கதிர் அலைகள், மின்சத்தி அலைகள் போன்றவை மின் காந்த அலைகள். இயக்க அலைகளுக்கு அதிர்வு மூலம் (source of disturbance), ஊடகம் (medium), சடப்பொருள் தொடர்பு (physical connection) தேவை. மின்காந்த அலைகளுக்கு ஊடகம், சடப்பொருள் தொடர்பு தேவையில்லை. அவை வெறும் வெளியின் ஊடாக பயணிக்க கூடியவை. அலைகள் பற்றி எண்ணுகையில் கடல் அலைதான் கண் முன் நிற்கும். கடல் அலையை எளிமைப்படுத்தினால் படத்தில் உள்ளது போன்ற sine wave வெளிப்படும். இவ் வரைபடத்தில் சில தகவல்கள் குறிப்பிடதக்கவை. அவையானவை: 1. அதிர்வின் வீச்சு (amplitude) 2. முகடு (crest) 3. அகடு (trough) 4. அலைநீளம் (wavelength) மேலும், கிடைகோடு காலத்தையும் நிகழ்கோடு அதிர்வின் வீச்சையும் குறித்து நிற்பதையும் காணலாம். இச் சமயத்தில் ஒரு முக்கிய சமன் பாட்டையையும் குறித்து கொள்ளுதல் வேண்டும். அலை வேகம் = அதிர்வெண் X அலை நீளம் formula_1 அதிர்வெண், அலை நீளம், வீச்சு ஆகிய தகவல்களே அலை பற்றிய ஆழமான ஆய்வுக்கும் விளக்கங்களுக்கும் அடிப்படை. கணித ரீதியாக அலையை பின்வருமாறு விபரிக்கலாம். formula_2 formula_3 உச்ச வீச்சு formula_4 அலையின் வடிவத்தை விபரிக்கும் சார்பு (function)formula_5 பரிமான திசை formula_6 அலையின் கோண அதிர்வெண் formula_7 நேரம் formula_8 பரப்புகை மாறிலி-propagation constant அலைகளின் முக்கியத்துவம், வகைகள், அடிப்படை கூறுகள், கணித ரீதியிலான விபரிப்பு ஆகியவற்றை மேலே ஆராயப்பட்டது. இனி மின்காந்த அலை என்றால் என்ன என ஆராயப்படும். மின்காந்த அலை மூலம் மின்காந்த சக்தி பயணிக்கின்றது. பொதுவாக மின்காந்த சக்தியை மின் சக்தி என்றே கூறுவர். வீச்சு, அதிர்வு எண் மாற்றுவதன் மூலம் மின்காந்த அலைமூலம் தகவலையும் பரிமாறலாம். அதாவது தகவல் மின்காந்த அலையின் வடிவத்தில் உள்ளீடு செய்யப்பட்டு பரிமாறப்படும். பொதுவாக அலையை விபரிப்பது போலவே, மின்காந்த அலையையும் கணித சார்புகள் கொண்டு விபரிக்கலாம். மின்காந்த அலையின் வெளி அல்லது இடநிலை (space or position), காலம் (time) ஆகியவற்றில் தங்கி இருக்கின்றது. பொதுவான மின்காந்த அலையின் சார்பு: formula_9, இவ் அலை எத்திசையிலும் செல்லலாம். ஆயினும், நாம் ஒரு பரிமாணத்தில் ஆராய்வதே இலகு, அப்படிப்பட்ட அலையின் சார்பு: formula_10. இயற்கையில் மின்காந்த அலை என்ற ஒன்றே உண்டு. மின் அலை மற்றும் காந்த அலை மின்காந்த அலையின் கூறுகளே (components). மின் மற்றும் காந்தப் புலங்கள் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைவதை பின்வரும் மக்ஸ் வெல் சமன்பாடுகள் விளக்குகின்றன. காந்த சத்தியிலிருந்து மின் சக்தி: formula_11 மின் சக்தியிலிருந்து காந்த சக்தி: formula_12 மேலும் இரு சமன்பாடுகளை குறித்துக்கொள்க: formula_13 formula_14 மேலே தரப்பட்ட நான்கு சமன்பாடுகளுமே மின் காந்த இயல்புகளை விபரிக்கும் முக்கிய நான்கு மாக்ஸ்வெல் சமன்பாடுகள் ஆகும். இச் சமன்பாடுகளின் அடிப்படையிலேயே மின் காந்த தொழில் நுட்பங்கள் கட்டமைக்கப்படுகின்றன. இயல்பியலின் பெரும் பகுதி இந் நான்கு சமன்பாடுகளின் விளக்கமே எனலாம். (மேலே உள்ள சமன்பாடுகளை எப்படி விளக்கி கொள்வது? இதற்கு ஆழமான கணித அறிவும், தரப்பட்டுள்ள கருதுகோள்களின் பரிச்சியமும் அவசியம். எனவே சில அடிப்படை கணித அறிவை நினைவு மீட்டிகொள்ளுதல் வேண்டும். formula_25டெல் இயக்கி என்பர். இவ் இயக்கி ஒரு புலம் எப்படி மாறுகின்றது என்பதை குறிக்கும். ) மின்காந்த புலம் இடத்திலும் காலத்திலும் தங்கியிருக்கும் ஒரு காவி புலம் (vector field) ஆகும். மின்காந்த புலம் எப்படி உருவாகுகின்றது அல்லது உருவாக்கலாம் என்பதை நோக்குக. எங்கு அசையும் மின்னூட்டுங்கள் (moving charges) இருக்கின்றதோ அங்கெல்லாம் மின்காந்த புலம் இருக்கும். மின்னூட்டம் அசைவின்றி (static/with out motion) இருக்குமானால் மின் புலம் மட்டுமே இருக்கும் எனலாம். மின் புலத்துக்கும் மின் பாயத்துக்கும் இருக்கும் தொடர்பு என்ன? அதேபோல், காந்த புலத்துக்கும் காந்த பாயத்துக்கும் இருக்கும் தொடர்பு என்ன? மின் புலச் செறிவு, மின் பாய அடர்த்தி எப்படி வரையறை செய்யப்பட்டு பின் கணித்தலுக்கு பயன்படுத்தப்படுகின்றன என்பதிலேயே தங்கியுள்ளது. மின்னூட்டுங்கள் மின் புலத்தை தோற்றுவிக்கின்றன அல்லது மின்னூட்டுக்களின் இயல்பாக மின் புலம் இருக்கின்றது. மின் புலத்தின் பலம் ஒரு இடத்தில் எவ்வளவு என்பதை மின்புலச் செறிவுத் தரவின் மூலம் அறியலாம். மின் பாயமும் மின்னூட்டங்களின் அதே இயல்பைத்தான் சுட்டுகின்றன, ஆனால் அவை வேறு ஒரு விதமாக வரையறை செய்கின்றன. மின் பாயத்தை மின்னூட்டுங்கள் தோற்றுவிக்கும் கோடுகள் அல்லது வரிகள் (flux lines) மூலமாக விபரிக்கலாம். மின் பாய அடர்த்தி அப்படி எத்தனை மின் பாய கோடுகள் ஒரு குறிப்பிட்ட தளப்பரப்பளவு (surface area)ஊடாக செங்குத்தாக (orthogonally) செல்கின்றது என்பதை குறித்து நிற்கும். பொதுவாக, மின் புலச் செறிவுக்கும் மின் பாய அடர்த்திக்கும் இருக்கும் தொடர்பை பின்வரும் சமன்பாடு கொண்டு விளங்கலாம்: formula_26 அதேபோல் காந்தப் புலச் செறிவுக்கும் காந்தப் பாய அடர்த்திக்கும் இருக்கும் தொடர்பு: formula_27 இங்கே, formula_28மின்உட்புகுதிறன் (permittivity) ஆகும், மற்றும் formula_29காந்தவிடுதிறன் (permeability) ஆகும். மேலே, மின்காந்த அலைகளை விபரிக்கும் மக்ஸ் வெலின் கணித செயல் கூறுகள் தரப்பட்டன. இனி மின்காந்த அலைகள் எப்படி பயணிக்கின்றன, வெவ்வேறு ஊடகங்கள் அல்லது இடங்கள் ஊடாக பயணிக்கும் பொழுது அதன் இயல்புகள் எப்படி மாறுகின்றன என்பது பற்றி அலசப்படும். ஊடகங்கள் அனைத்தையும் நான்காக வகைப்படுத்தலாம். எந்த ஒரு ஊடகத்தையும் மூன்று காரணிகள் வருணிக்கின்றன. அவை, கடத்துதிறன், மின் உட்புகுதிறன், காந்த உட்புகுதிறன் ஆகும். ஊடகங்களும் அவற்றை விபரிக்கும் காரணிகளும் பின்வருமாறு: 1. வெற்றிடம் (formula_30) 2. இழப்பு இல்லா மின் கடவாபொருள் (formula_31) 3. இழப்புடைய மின் கடவாபொருள் (formula_32) 4. நல்ல கடத்திகள் (formula_33) மின்காந்த அலைகள் பயணிக்கும் பொழுது கவனிக்கப்படவேண்டியது, அது எவ்வாறு எல்லையில் இயங்கும் என்பதை நோக்கித்தான். எல்லையில் மின்காந்த அலைகள் எப்படி இயங்கும் என்பதை நான்கு சமன்பாடுகள் சுட்டும். (இங்கே மின்காந்த அலையின் மின் அலை கூறு வேறாகவும், காந்த அலை கூறு வேறாகவும் விபரிக்கப்படுவதை குறிக்க.) மின் அலையின் சமந்தர கூறுகள் ஊடகம் 1, ஊடகம் 2 இடையான பயணத்தில் ஒரே பெறுமதி கொண்டிருக்கும், அதாவது formula_38. அப்படியானால், செங்குத்தான கூறுகளின் கதி என்ன? இரண்டாவது சமன்பாட்டை நோக்குக. எல்லையில், வேறு மின்னூட்டுக்கள் இல்லை எனில், அதாவது formula_39, பிரதேசம் 2ல் இருந்து பிரதேசம் 1 நோக்கி செல்லும் மின் அலையின் செங்குத்து கூறு formula_40 காரணியால் சமன்படும், அதாவது: காந்த அலைகளின் இயல்பு எப்படி இருக்கும்? மேலே தரப்பட்ட மூன்றாவது சமன்பாடை நோக்குக, எல்லையில் பிற புறபரப்பளவு மின்னூட்டு அடர்த்திகளின் தாக்கம் இல்லாவின், அதாவது formula_44, சமன்பாடு இவ்வாறு மருவும் formula_45. மேலும், காந்த அலைகளின் செங்குத்தான கூற்றின் இயல்பை பின்வருமாறும் சமன்படுத்தலாம் formula_46. மின்காந்த அலைகள் மூலம் மின்காந்த சத்தி பரவுகின்றது. மின்காந்த சத்தியின் அளவை, மின்காந்த வலுவை மின் புல செறிவு, காந்த புல செறிவு, பொயின்ரிங் நெறியம் துணைகொண்டு விபரிக்கலாம். பொயின்ரிங் நெறியம் பின்வருமாறு வரையறுக்கப்படும். formula_47 (W/m) மேலே தரப்பட்டது வரைவிலக்கணமே, சமன்பாடு அல்ல என்பதை குறிக்க. பொயின்ர்ங் நெறியம் மின்காந்த வலு எத்திசையில் பாய்கின்றது என்பதை சுட்டி நிற்கும். மின் புலமும், காந்த புலமும் ஒரே அலைவரிசையில் அல்லது ஒரே மாதிரி மாறும் அலைவரிசையில் இருந்தால் மேல் தரப்பட்ட வரைவிலக்கணம் பின்வருமாறு மருவும்: complexformula_48 (W/m) மின்காந்த அலை பரவும் திசை (direction of propagation) மின்காந்த சக்தி எங்கே செல்கின்றது என்பதை சுட்டி நிற்க்கும். எப்பொழுதும் மின்காந்த அலையின் பரிமாணிக்கும் திசை அவ்வலையை விபரிக்கும் மின் புலம் பரவும் தளத்துக்கும், காந்த புலம் பரவும் தளத்துக்கும் செங்குத்தாகவே அமையும். உதாரணத்துக்கு, மின் புலம் x-அச்சிலும் காந்த புலம் y-அச்சிலும் பாயுமாறு விபரிக்கப்பட்டால் மின்காந்த அலை z-அச்சின் திசையில் பரவும். இத் திசை நோக்கியே பொயின்ரிங் நெறியம் சுட்டும். மின்காந்த அலையின் மின் புலத்தின் திசையை அலையின் முனைப்பாக்கம் எனப்படும். மின் புல முனைப்பாக்கத்தை கொண்டே மின்காந்த அலையின் முனைப்பாக்க தளத்தை (plane of polarization) விபரிப்பர். மின்காந்த அலையின் முனைப்பாக்க தளம் மின் புலத்தின் திசைக் கோட்டினாலும், மின்காந்த அலையின் பரவு திசைக் கோட்டினாலும் கட்டமைக்கப்பட்ட தளத்தை குறிக்கும். இத் தளம் இட கால காரணிகளின் ஒரு செயல்கூறு ஆகும். மிகவும் எளிய உதாரணம்: மின் புலம் x-அச்சு திசையிலும் மின்காந்த அலையின் பரவு திசை z-அச்சு திசையிலும் இருந்தால் அம் மின்காந்த அலையின் முனைப்பாக்க தளம் x-z தளம் ஆகும். அலை பரவும் திசையும் அலையின் அதிர்வுகளும்/அசைவுகளும் செங்குத்தாக இருக்குமானால் அவ் வலைகள் குறுக்கலைகள் எனப்படும். மின்காந்த அலையின் அதிர்வும் அது பரவும் திசையும் செங்குத்தாக இருப்பதால் மின்காந்த அலைகள் குறுக்கலைகள் ஆகும். மின் புலம் ஒரு திசையில் மட்டுமே பயணிக்குமாய் இருந்தால், அதற்கு செங்குத்தாக காந்த புலமும், இவை இரண்டுக்கும் செங்குத்தாக மின்காந்த அலையின் பரவு திசையும் அமையுமாக இருந்தால், இம் மின் காந்த அலை சீரான சமதள முனைப்பாங்குடன் பயணிக்கும். மாறக, மின் புலத்தின் திசை மாறி மாறி அமைந்தும், அதற்கு அமைய காந்த புலமும், மின்காந்த அலையின் பரவு திசையும் அமையுமாக இருந்தால் அம் மின் காந்த அலை சீரான சமதள முனைப்பாங்குடன் பயணிக்க மாட்டாது. மின்காந்த அலையை அலை எண்ணை கொண்டு பல வேறாக வகைப்படுத்தலாம். அவ்வாறு வகைப்படுத்தும் மின்காந்த அலைகள் வெவ்வேறு தன்மைகளை கொண்டிருக்கும். இந்த அலைகள் ரேடியோ மற்றும் தொலைக்காட்சி செய்தித் தொடர்புக்குப் பயன்படுகிறது. 530 MHz முதல் 1710 MHz வரையுள்ள அலைகள் AM வரிசையிலும், 54 MHz வரையுள்ள அதிக அதிர்வெண் அலைகள் குறைந்த அலை வரிசையிலும் பயன்படுகின்றன. தொலைக்காட்சி அலையின் நெடுக்கம் 54 MHz முதல் 890 MHz வரையிலும் FM வரிசையில் 88 MHz முதல் 108 MHz வரையிலும் செல்போன்களில் மிக உயர் அதிர்வெண் (ultra high frequency) வரிசையிலும் ரேடியோ அலைகள் பயன்படுகின்றன. மிகக் குறைந்த அலைநீளம் உள்ளதால் இந்த அலைகள் கதிரலைக் கும்பா மற்றும் செய்தித் தொடர்புக்குப் பயன்படுகின்றன. வீட்டு உபயோகப் பொருளான மைக்ரோ அலை சமையல்கலன்கள், இந்த அலைகளின் சிறந்த பயன்பாடு ஆகும். பொருள்களிலிருந்து உமிழப்படும் அல்லது எதிரோளிக்கப்படும் கண்ணுறு ஒளியைக் கொண்டு நம்மைச் சுற்றி நடைபெறுவனவற்றை பார்க்கவும் அறியவும் முடிகிறது. இதன் அலைநீள நெடுக்கம் 4000 A முதல் 8000 A உள்ளது