உத்தவ கீதை உத்தவகீதை பதினெண் புராணங்களில் ஸ்ரீமத் பாகவத புராணத்தில் பதினோராவது ஸ்கந்தமாக அமைந்துள்ளது. இந்தப் பதினோராவது ஸ்கந்தத்தில் ஸ்ரீகிருஷ்ண பக்தரும், அமைச்சரும், சிற்றப்பா மகனுமாகிய உத்தவருக்கு, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அருளிய உபதேசம்தான் உத்தவ கீதை என அறியப்படுகிறது. உத்தவ கீதை, 1367 சுலோகங்களுடன், முப்பத்தி ஒன்று அத்தியாயங்கள் கொண்டுள்ளது. ஏழாவது அத்தியாயம், சுலோகம் 19 முதல் ஸ்ரீகிருஷ்ணர் உத்தவருக்கு அருளிய உபதேசம் தொடங்குகிறது. உத்தவ கீதை மூலம், ஸ்ரீகிருஷ்ணர் 125 ஆண்டுகள் வரை வாழ்ந்தார் என அத்தியாயம் ஆறு, சுலோகம் 25 மூலம் தெரியவருகிறது. யது குலத்தவர்களுக்கு முனிவர்கள் சாபம் இட்டதைப் பற்றி விளக்கப்படுகிறது. பூமியின் சுமையை குறைக்க வேண்டி பகவான் ஸ்ரீகிருஷ்ணர், விசுவாமித்திரர், கண்வர், துர்வாசர், பிருகு, ஆங்கிரசர், கசிபர், வாமதேவர், அத்ரி முதலிய முனிவர்களை கடற்கரை நகரான பிண்டாரகம் என்ற பிரபாச நகருக்கு அனுப்பி வைத்தார். பிரபாச நகரில் இருந்த யாதவகுல இளைஞர்கள் சிலர், ஸ்ரீகிருஷ்ணர் - ஜாம்பவதிக்கும் பிறந்த சாம்பனை, கர்ப்பம் தரித்த பெண் வேடமிட்டு முனிவர்களிடம் அழைத்துச் சென்று, இந்த பெண்னுக்கு என்ன குழந்தை பிறக்கும் என வேடிக்கையாக கேட்டனர். இளைஞர்களின் கபட நாடகத்தை அறிந்த முனிவர்கள், இவள் உங்கள் யாதவ குலத்தையே அழிக்கப்போகும் உலக்கையை பெற்றெடுக்கப் போகிறாள் என சாபம் இட்டனர். இதை அறிந்த யாதவ அரசன் உக்ரசேனர், அந்த உலக்கையை தூளாக்கி கடலில் வீசி எறிந்தார். சில நாட்களுக்குப் பின் உலக்கையின் இரும்புத்தூள்கள் கடற்கரையை அடைந்து நீண்ட மிக உறுதியான கோரைப் புற்களாக மாறின. கடலில் கரைத்த இரும்புத்துகள்களில் ஒன்று மீன் உண்டது. அந்த மீன், ஒரு மீனவன் வலையில் சிக்கியது. மீன் வயிற்றில் இருந்த இரும்புத் துண்டை மீனவனிடமிருந்து ஒரு வேடுவன் வாங்கிக் கொண்டு, அதை தன் அம்பு நுனியில் பொருத்திக் கொண்டான். நாரதருக்கும், மிதிலை மன்னர், நிமி மன்னர் மற்றும் ஒன்பது யோகிகளும் வசுதேவர் இல்லத்திற்கு வருகை புரிந்த நாரதரிடம், எதை அறிந்தால் எல்லாவித பயங்களிலிருந்து மனிதன் விடுபடுவானோ, அப்படிப்பட்ட தர்மத்தை அருள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பாகவத தர்மத்தைக் கேட்டாலும், படித்தாலும், கடைப்பிடிப்பதாலும், அந்த விநாடியிலேயே மனிதன் புனிதமாகி விடுகிறான் என்று நாரதர் கூறுகிறார். பின்பு ஒன்பது யோகிகள் கூறும் பாகவத தர்மங்களை விவரிக்கின்றனர். கிருஷ்ண அவதாரத்தின் நோக்கம் முடிந்து விட்டதால், பரமேசுவரன், நான்முக பிரம்மனும், இந்திரன் முதலான மற்ற தேவர்களும், ஸ்ரீகிருஷ்ணரை வைகுந்தத்திற்கு எழுந்தருள வேண்டிக்கொள்கிறார்கள். முனிவர்களின் சாபத்தால் இன்னும் ஏழு நாட்களில், யாதவ குலத்தினரின் அழிவையும், துவாரகை கடல் சீற்றத்தால் அழிவதை கண்டபின் வைகுண்டத்திற்கு எழுந்தருளுவேன் என்று கிருஷ்ணர் பதில் அளித்தார். யாதவகுல ஆண்கள் சோமநாதபுரம் கடற்கரையில் உள்ள பிரபாச நகருக்கு புறப்படுவதை அறிந்த உத்தவர் கிருஷ்ணரை தனியே பார்த்து வணங்கி, யது குலத்தவருக்கு முனிவர்களின் சாபத்தை நீக்கும் ஆற்றல் தங்களுக்கு இருந்தாலும், அவ்வாறு செய்யாமல், யது குலத்தினரை மாய்த்து விட்டு இவ்வுலகத்தை விட்டு வைகுணடத்திற்கு செல்வது உறுதியாகி விட்ட்து. ஆகவே என்னையும் தங்களுடன் தங்கள் இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று உத்தவர் பகவான் ஸ்ரீகிருஷ்ணரிடம் வேண்டினார். ஸ்ரீகிருஷ்ணர், உத்தவரை தனியே அழைத்துச் சென்று ஆத்ம உபதேசம் செய்தார். பிரம்மாவின் வேண்டுகோளின்படி, ("பூர்ணாவதாரம்" எடுத்த) நான், என்னுடைய அம்சாவதாரமான பலராமனுடன் இங்கே எதற்காக அவதாரம் எடுத்தேனோ, அதன்படி தேவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செயல்கள் குறையின்றி முடிக்கப்பட்டது. நான் இவ்வுலகை விட்டுச் சென்றபின் கலி புருஷனால் இப்பூமி வசப்படும். மனம், வாக்கு, கண்கள், செவி, முதலிய புலன்கள் மூலம் அனுபவிக்கப்படும் பொருள்கள் எல்லாம் அழியும் தன்மை உடையது என்று அறிந்து கொள். தெளிவற்ற மனநிலை உடையவர்களுக்கு மன மயக்கம், குண-தோசம் (விருப்பு-வெறுப்பு) உண்டாகிறது. செய்யவேண்டிய செயலை செய்தல், செய்யக்கூடாத செயலை செய்தல், செய்ய வேண்டிய செயலை செய்யாமல் இருந்த தவறு (கர்மம்-அகர்மம்-விகர்மம்) என்ற வரையறைகள் இவர்களுக்காக வகுக்கப்பட்டது. ஆகவே புலன்களையும், மனதையும் வசப்படுத்தி, இவ்வுலகம் முழுவதையும் உன்னில் காண்பாய். தலைவனான என்னிடம் உன் ஆத்மாவைப் பார்.(நான் இவ்வுலகமாக விளங்குவதை உணர்ந்து கொள்). அனைத்து உடலிலும் நான் ஆத்மாவாக இருப்பது நானே என்று உணர்ந்து கொள். நன்மை-தீமை என்ற இருமைக்கு அப்பால் சென்று விடு. மேலும் குணம்-தோசம் (விருப்பு-வெறுப்பு) என்பதை கடந்து விடு. பரமார்த்த தத்துவத்தில் உறுதியாக இருப்பவன், பிறப்பு-இறப்பு என்ற சூழலில் மீண்டும் சிக்குவதில்லை. மனிதனால் மட்டுமே, நான்கு வகையான பிரமாணங்களின் (கருவிகள்) மூலம் (சாத்திரம்), சத்துவ குணம், இராட்சத குணம், தாமச குணம் எனும் முக்குணங்கள் மனிதனின் புத்தியில் உள்ளவை, ஆனால் அது ஆத்மாவின் குணங்கள் அல்ல. சத்வ குணத்தின் மூலமாக மற்ற இரண்டு குணங்களையும் நீக்கி விட்டால், அதர்மம் அழிந்து விடும். சாத்திரம், தண்ணீர், சந்ததி, நாடு, காலம், கர்மம், பிறப்பு, தியானம், மந்திரம், வினைப் பதிவு (சம்ஸ்காரம்), என்ற பத்தும் முக்குணங்களாக அமைவதற்கு காரணங்கள் ஆகும். சத்வகுண வளர்ச்சிக்காக மனிதன் சாத்வீகமானவற்றில் மனதை செலுத்துவதால், அறத்தின் பால் நாட்டம் உண்டாகி, ஆத்ம வடிவான ஆத்ம ஞானம் எனும் மெய்யறிவு ஏற்படும். மெய்யறிவாளர்கள் கூட சில நேரங்களில், ரஜோ குணம் மற்றும் தமோ குணங்களால் புத்தி தடுமாறுகிறார்கள். செயல்களின் விளைவு துயரமே என்று உணர்கிறார்கள். எனவே அவர்கள் பெருமுயற்சி செய்து மனதை திருப்பி, செயல்களில் பற்று கொள்வதில்லை. மனதை எல்லா விசயங்களிலிருந்தும் திருப்பி, பகவானிடத்தில் மட்டும் மனதை நிலை பெறச் செய்கிறார்கள். சந்திர வம்சத்து மன்னன் நகுசனின்பேரனும், யயாதியின் மகனும் ஆன மன்னர் யது, ஒரு நாள் முற்றும் துறந்த இளவயது அவதூதரான தத்தாத்ரேயரை சந்தித்து, நீங்கள் எந்த செயலையும் செய்யாமலேயே மிகவும் ஆழமான தெளிந்த நல்லறிவு எப்படி கிடைத்தது, எதை ஆதாரமாகக் கொண்டு சிறந்த அறிவாளியான தாங்கள் ஒரு சிறுவனைப் போல் மகிழ்ச்சியாக உலகத்தில் திரிந்து கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, அவதூத சந்நியாசி தான், யார் யார் மூலம் அறிவு (ஞானம்) பெற்றதாக விவரிக்கிறார். பரம்பொருளை அறிய வேண்டும் என்ற விருப்பமுடையவன் பலன்களை அளிக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது. அகிம்சை, சத்தியம், திருடாமை, பிரம்மச்சரியம், பொருள் சேர்த்து வைக்காதிருத்தல் என்ற நியமங்கள் கைக்கொள்ளவேண்டும். குருவை அணுகி சேவை செய்ய வேண்டும். குருவிற்கு பணிவிடை செய்பவன் அகந்தை, பொறாமை, மமதை, பரபரப்பு, வெறுப்பு, வீண் பேச்சு, மனைவி-மக்கள்-மனை-நிலம்-உற்றார்-செல்வம் முதலியவற்றில் ஒட்டுதல் இல்லாதவனாகவும், அன்பு, வினைத்திட்பம், அனைவரின் நலனில் சம நோக்கு உடையவனாகவும் இருக்க வேண்டும். ஆத்மா சுயம் ஜோதி வடிவானது; அனைத்திற்கும் சாட்சியாக இருப்பது; சட-சூக்கும உடலிருந்து வேறானது; இந்த உடலை விளக்கமுறச் செய்யும் ஆத்மா, இந்த உடலிருந்து வேறானது. இந்த மனித உடல், மாயையின் முக்குணங்களின் சேர்க்கையால் ஆனது. அதனால் தான், மனிதன் உலகவாழ்க்கையுடன் பின்னிப் பிணைக்கப்பட்டு இருக்கிறான். அதாவது, தோற்றமும் அழிவற்ற ஆத்மாவின் மேல் பிறப்பு-இறப்பு ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. ஆத்மக்ஞானம் ஏற்பட்டுவிட்டால், இந்த மயக்கம் வேருடன் கிள்ளி ஏறியப்பட்டுவிடும். எனவே ஆத்மவிற்கு எதிரான அனாத்மாவான பொருட்கள் நிலையானது என்ற நினைப்பை விட்டொழித்து, மிக உயர்ந்ததும், தனிப்பெரும் பொருளானதும், தனக்குள் விளங்குவதுமான ஆத்மாவை கண்டறிய வேண்டும். புண்ணிய இருப்பு உள்ள வரையில் சுவர்க்கத்தில் இன்பங்களை அனுபவிக்கிறான். புண்ணியம் தீர்ந்ததும், அவன் விரும்பா விட்டாலும் கூட, காலம் அவனைக் கீழே தள்ளி விடுகிறது. அதர்மத்தில் நாட்டமுடையவன், தீயவர்களின் சேர்கையுடயவன், புலன்களை வசப்படுத்தாதவன், விருப்ப்ப்படி வாழ்பவன், கஞ்சன், பேராசைக்காரன், பெண்ணாசைப் பிடித்தவன், பூதப் பிரேத கணங்களை திருப்தி செய்ய முறை தவறி வேள்வி செய்து, விலங்குகளை பலி கொடுப்பவன் – இப்படிப்பட்ட சீவன், தீய சக்திகளின் பிடியில் அகப்பட்டு, கோரமான இருள் சூழ்ந்த நரகங்களை அடைகிறான். பிறகு, அவர்கள் துன்பங்களுக்கு காரணமான உடலைக் கொண்டு, செயல்கள் செய்து, அழிந்து போகும் தன்மையை உடைய உடல்களையே மீண்டும் மீண்டும் அடைகிறார்கள். முக்குணங்கள் கர்மாக்களைச் செய்ய தூண்டுகிறது; கர்மபலன், செயல் செய்பவனின் விருப்பத்திற்கேற்றபடி அமைகிறது. இந்த சீவன் முக்குணங்களுடன் கூடியிருப்பதால், கர்மபலன்களை அனுபவிக்கிறது. குணங்களுடன் சம்பந்தப்பட்டிருப்பதாலேயே ஒரே பரமாத்மாவான என்னை, காலம், ஆத்மா, உலகம், இயற்கை, தர்மம், என்று பலவிதமாக கூறுகிறார்கள். இவைகளில் எல்லாம் பகவானே இருக்கிறான் எனபதால், இவைகளில் பகவானையே பார்க்க வேண்மேயன்றி அந்தந்தப் பொருளாக அல்ல. கட்டுப்படுதல், விடுபடுதல் என்ற தன்மை ஆத்மாவிடம் இல்லை. ஆத்ம ஞானம் மற்றும் அக்ஞானம் இரண்டுமே அனாதி காலத்தில் பிரம்மத்தின் மாயா சக்தியால் தோற்றுவிக்கப் பட்டவை. உடல் எடுத்தவர் முக்தி (விடுபடுதல்) அடைவதற்கும், மீண்டும் பிறப்பதற்கும் (கட்டுப்படுவதற்கும்) முறையே ஞானத்தால் விதேக முக்தியும், அக்ஞானத்தால் பந்தமும் (கட்டுப்படல்) ஏற்படுகிறது. ஜீவாத்மா, பகவானின் அம்சமாதலால் என்னைப் போன்றவனே. ஒரே உடலில் உறைகின்ற சீவாத்மா, பரமாத்மா வேறு பட்ட துன்பம், இன்பம் என்ற வேறுபட்ட குணங்கள் உடையவர்கள். (பரமாத்மா, நித்யானந்த வடிவினர்; ஆள்பவர். சீவாத்மா சோக – மோகங்களில் சிக்கி துன்பமடைகிறவர், ஈசுவர ஆணைக்கு அடங்கி போகிறவர். ஞானமடைந்தவன் உலக விவகாரங்கள் எல்லாம் பொய் என்பதை உணர்கிறான். தெள்ளறிவு இல்லாதவன் (ஆத்மாவுக்கு உடல் – உருவம் இல்லை என்ற உண்மையை அறியாதவனாய்) கனவுகளில் தோன்றும் சுக – துக்கங்களை, உண்மையில் தானே அனுபவிப்பதாக நினைக்கிறான். பிரம்மத்தில் நிலைபெற்ற ஆத்ம ஞானி, ஆத்மா செயல்கள் அற்றது என்ற தத்துவத்தை உணர்ந்து கொண்டவன். ஆதலால் ’நான் எதுவும் செய்யவில்லை’ என்று நினைக்கிறான். இந்த உடல் பிரார்ரப்த கர்மவினைக்கேற்ப கிடைக்கப்பெற்றது. குணங்களின் தூண்டுதலினால் செயல்கள் நடக்கிறது. ஆனால் அறிவு மயங்கியவன், `நானே எல்லாச் செயல்களையும் செய்கிறேன் என்று அகங்காரம் கொள்கிறான். அதனால் வாழ்க்கை எனும் பெருங்கடலில் சிக்கி உழல்கிறான். ஞானி, செயல்கள் அனைத்தும் குண விகாரங்களின் வெளிப்பாடுகள் என்பதை உணர்ந்து கொண்டதால், அவன் இவ்வுலக விதிகளின்படி நடந்தாலும் அவைகளுடன் ஒட்டிக்கொள்வதில்லை. ஆகாயம், சூரியன், காற்றைப் போல. (இம்மூன்றும் நடைபெறும் செயல்களுக்கு சாட்சி மாத்திரமே அன்றி, கர்த்தா (செயல் செய்பவன்) அல்ல என்பதைப் போல எவனுடைய பிராணன், புலன்கள், மனம், புத்தி ஆகியவை சங்கல்பத்திலிருந்து விடுபட்டும், உலகாயத கருமங்களிலிருந்து தடைப்பட்டும் இருக்கின்றதோ, அந்த பிராணன் ஒரு உடலைத் தாங்கியிருந்தாலும், குணங்களிலிருந்து விடுபட்ட ஆத்மா ஆகிறார். குணங்களை கடந்தவன் குணாதீதன் ஆகிறார். ஞானிகள், பிறர் தரும் துன்பங்களையும், கௌரவங்களையும் பொருட்படுத்துவதில்லை. வேதங்களை நன்கு கற்றவனுக்கு, பிரம்ம ஞானம் ஏற்படவில்லை எனில் அந்த வேதப்படிப்பு பயனற்றதே ஆகும். பகவத் விசயமாக இல்லாமல் வெறும் உலகாயதப் பேச்சுகளால் துன்பத்தின் மேல் துன்பம் அடைகிறார்கள். மனதை உறுதியாக பிரம்மத்தில் நிலைநிறுத்த இயலவில்லை எனில், எல்லாச் செயல்களையும், பலனை எதிர்பார்க்காமல் இறைவன் பெயரால் செய்து வர வேண்டும். இறைவனையே அடைக்கலமாகக் கொண்டு அறம், பொருள், இன்பத்திற்கான செயல்களை செய்து வருபவர், தொடக்கமில்லாத பரமாத்மாவான ஸ்ரீ கிருஷ்ணரிடம் அசைக்க முடியாத பக்தியை பெறுகிறார். சான்றோர்களின் கூட்டுறவால் இறைவனிடம் பக்தி உண்டாகிறது. சான்றோர்களால் காட்டப்பட்ட வழியில் சென்று, விரைவில் உன்னத நிலையை அடைகிறார். உத்தவர், சாதுக்களின் இலக்கணம் என்ன என்று கேட்டதற்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீழ்கண்ட வாறு விடையளிக்கிறார். சாது எனும் ஞானி, அனைத்து சீவராசிகளிடம் தயை (கருணை) உடையவன்; நன்றி மறவாதவன்; உடல் துன்பங்களைப் பொறுத்துக் கொள்பவன்; மாசு படாத மனம் உடையவன்: அனைவரிடம் சமமாக இருப்பவன்; எல்லோருக்கும் உதவி செய்பவன்; வெறுப்பு - விருப்பங்கள் அற்றவன்; தூய்மை உடையவன்; நிலையான மதி கொண்டவன்; அளவாக உண்பவன்; புலன்களை கட்டுப்படுத்தியவன்; அமைதியுடன் இருப்பவன்; மனத் தடுமாற்றம் அடையாதவன்; கம்பீரமும், தைரியமும் உடையவன்; காமம், குரோதம், லோபம், மோகம், மதம், ஆச்சரியங்களை பொருட்படுத்தாதவன். பிறரை வாழ்த்துபவன்; திறமை, நட்பு, கருணை, தெள்ளிய ஞானம் உடையவன். எல்லாவிதமான தருமங்களை முற்றிலும் துறந்து, பகவானையே வழிபடுகிற பக்தன் மிகவும் உத்தமமானவன். என்னிடம் முழுமனதுடன், உறுதியாகப் பக்தி செலுத்துபவர்கள் மிக உயர்ந்த பக்தர்கள். கர்வம் கொள்ளலாகாது; பிறறை ஏமாற்றக்கூடாது; செய்த நற்செயல்களைப் பறைசாற்றிக் கொள்ளல் ஆகாது. சாதுக்களுக்கு பணிவிடை செய்வதால், பகவானின் நினைவு ஏற்படும். உத்தவரே, பக்தி யோகம், சத்சங்கம் ஆகிய வழிகளைத் தவிர, சம்சாரக்கடலைக் கடப்பதற்க்கான வேறு வழிகள் இல்லை என்பது என் முடிவான கருத்து. யோகம், சாங்கியம், தர்மம், சுவாத்யாயம், தவம், தியாகம், ஆசைகளை நிறைவேற்றி கொள்ளுதல், தட்சிணை, வேள்விகள், விரதங்கள், வேத மந்திரங்கள், புண்ணிய தீர்த்தங்கள், புலனடக்கம் – மனவடக்கம் முதலியவைகள், சத்சங்கத்தைப் போல என்னை வசப்படுத்த முடியாதவைகள். ஏன் எனில் சத்சங்கத்தால் எல்லாவிதப் பற்றுகள் மனிதனிடமிருந்து நீங்கி விடுகிறது. அசுர – இராக்கதர்கள், கந்தர்வ – அப்சரசுகள்,நாகர்கள், சித்தர்கள், கிம்புருசர்கள், கிண்ணரர்கள், வித்தியாதரர்கள் மற்றும் மனிதர்களில் இராட்சத குணம் – தாமச குணம் நிரம்பியவர்களும், பெண்டிரும் சத்சங்கத்தினால் பகவானை அடைந்திருக்கிறார்கள். இவர்களில் பலர் வேத, வேதாந்த சாத்திரங்களைப் படித்ததில்லை, மகான்களுக்குப் பணிவிடை செய்ததில்லை மற்றும் எந்த விரதமும், தவமும் செய்ததில்லை. சத்சங்கம் என்ற சான்றோர் கூட்டுறவு என்ற ஒரு சாதனையினால் மட்டுமே பக்வானை அடைந்துள்ளனர். மிகவும் முயற்சி செய்தாலும், யோகம்-சாங்கியம்-தானம்-விரதம்-தவம்-வேள்வி-வேதாத்யாயனம்-சுவாத்யாயம்-துறவு முதலிய சாதனைகளால் அடையப்பட முடியாது போனாலும், பகவானை சான்றோர்களின் சத்சங்கத்தால் எளிதல் அடைந்துவிட முடியும். பரமாத்மாதான், படைக்கப்பட்ட அண்டம் முழுவதுமாக விளங்குகிறார். சீவராசிகளின் மூலாதாரத்தில் நாதப்பிரம்மமாக, பரா என்ற பெயரில் நுழைகிறார். மனோமய மணிபூரக சக்கரத்தில் பஸ்யந்தி என்ற பெயரில் தோன்றுகிறார். கழத்துப் பகுதியில் உள்ள "விசுத்தி" என்ற சக்கரத்தில் மத்யமா என்ற பெயருடன் விளங்குகிறார். பின்னர் வாய் வழியாக வெளிப்படும் போது, மாத்ரை, சுவரம், வர்ணம், முதலிய தூல வடிவங்களை ஏற்று வைகரீ என்ற பெயரை பெறுகிறார். இவ்விதம் பரமாத்மா வாய் வழியாக சப்த பிரம்மமாக வெளிப்படுகிறார். உலக வாழ்க்கை எனும் மரத்துக்கு பாவம் – புண்ணியம் என இரு விதைகள்; மனப்பதிவுகள் – வாசனைகள் எனும் ஆயிரக்கணக்கான வேர்கள்; முக்குணங்களான சத்வம் – இராஜசம் – தாமசம் எனும் மூன்று தண்டுகள்; பஞ்சபூதங்கள் எனும் ஐந்து பெருங்கிளைகள், ஒலி, ஒளி, சுவை, தொடுவுணர்வு, நாற்றம் எனும் ஐவகை சாறுகள்; பத்து புலன்களுடன் மனம் என்பதும் சேர்த்து பதினொரு சிறு கிளைகள்; சீவன் – ஈசுவரன் என்ற இரு பறவைகளின் கூடுகள்; வாதம்-பித்தம்-கபம் என்ற மூன்று பட்டைகள்; சுகம் – துக்கம் என்ற இரண்டு பழங்கள். ஆகியபுலன்களின் கூட்டமான இந்த உடலுக்கு இன்பத்தை அளிக்கும் பொருள்களில் ஈடுபடும் பாமரர்கள், துக்கம் எனும் பழத்தை புசிக்கிறார்கள். பற்றில்லாத வாழ்க்கை நடத்துபவர்கள் சுகம் எனும் பழத்தை புசிக்கிறார்கள். ஆனால், பரமஹம்சர்களான சிலர் மட்டுமே, பற்பல வடிவங்களாகத் தோண்றும் பரமாத்மா ஒன்றுதான் என்று அறிகிறார்கள். இவ்வுலகம் நிலையற்றது - மாயை என்ற தத்துவத்தை அறிந்தவர்களே, வேதங்களின் உட்பொருளை அறிந்தவர்கள் ஆவர். உத்தவரே! இவ்விதம் குருவிடம் உபதேசம் பெற்று, மெய்ஞானம் என்ற கத்தியை கூர்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். நான் ஒரு சீவன் என்ற எண்ணத்தை தைரியமாக வெட்டி எறிந்து விட வேண்டும். பிரம்மத்தை அறிந்து கொண்டவுடன், ஞான வடிவான கத்தியை எறிந்து விட வேண்டும். பின்னர் எங்கும் நிறைந்த பிரம்மத்தில் கலந்து விடலாம். ஹிரண்யகர்பரான நான்முக பிரம்மாவின் மனதில் தோன்றிய மகன்களான சனகாதி முனிவர்களுக்கும் மற்றும் சனகருக்கும் , யோகத்தின் சூட்சுமம் மற்றும் அதன் எல்லைகள் குறித்து, ஸ்ரீகிருஷ்ணர், (அன்னப் பறவை) வடிவத்தில் ஆத்ம உபதேசம் செய்தார். இதையே ஹம்ச கீதை என்பர். பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசங்கள் பின்வருமாறு: பக்தி யோக மேம்பாட்டிற்கு எது சிறந்த முறை எனும் உத்தவரின் கேள்விக்கு, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் உத்தவருக்கு அருள்கிறார். முதலில் பிரம்மா வேதத்தை முதலில் தன் மகன் சுவாயம்பு மநுவுக்கு கூறினார். மனு மூலம் ஏழு ரிஷிகள் அதனை அறிந்தனர். அந்த ரிஷி குமாரர்களான தேவர்கள், தானவர்கள், குஹ்யர்கள், மனிதர்கள், சித்தர்கள், கந்தர்வர்கள், வித்யாதரர்கள், சாரணர்கள், கிந்தேவர்கள் (உடல் தளர்ச்சி, வியர்வை, இல்லாத்தால்,தேவர்களா இவர்கள் எனும் ஐயுறத்தக்க நிலையில் உள்ள மனிதர்கள்), கின்னரர்கள், நாகர்கள், அரக்கர்கள், கிம்புருடர்கள் ஆகிய சத்துவ குணம், இராட்சத குணம் மற்றும் தாமச குணம் எனும் குணாங்களால் உண்டானவர்கள் வேதத்தைப் பிரம்ம ரிஷிகளிடமிருந்து அறிந்து கொண்டார்கள். சான்றோரே! என்னிடத்தில் மனதைச் செலுத்தி, வேறு எதிலும் நாட்டம் இல்லாமல் ஆத்மாவான என்னிடமே மனதை லயித்து கொண்டிருப்பவர் அடையும் பேரானந்தத்தை, புலனுகர் போகங்களில் ஈடுபட்டுள்ளவன் அடைய முடியாது. எந்த விருப்பமும் இல்லாதவன், பொறிகளை அடக்கியவன், சாந்தமும், சமபுத்தியும் வாய்யக்கப் பெற்ற்வன்; என்னிடத்திலேயே மனதை நிலைநிறுத்தி நிறைவோடு இருப்பவன் எவனோ, அவனுக்கு எல்லாம் சுகமாகவே இருக்கும். என்னிடத்தில் மனதை செலுத்தியிருப்பவன், பிரம்ம பதவியோ, சுவர்க்கத்தின் இந்திர பதவியோ, பூமண்டல பதவியோ, அல்லது பாதாளம் உள்ளிட்ட கீழ் லோகங்களையும் கூட விரும்பாது, அவன் என்னை சரண் அடைந்து விட்டதால் என்னைத் தவிர வேறு எதனையும் விரும்ப மாட்டான். உத்தவரே, யோகம், சாங்கியம், தர்மானுஷ்டானம், வேதாத்யயனம், தவம், தியாகம், ஆகியவைகள், என்னிடத்தில் பக்தி செலுத்துவதால் கிடைக்கும் சுகத்தை விட ஈடானது அல்ல. நம்பிக்கையுடன் கூடிய பக்தியால் மட்டும் என்னை அடைய முடியும். நான் சான்றோர்களுக்குப் பிரியமானவன்; அவர்களின் ஆத்மாவாக இருப்பவன்; பிறப்பினால் சண்டாளனாக இருப்பினும் என்னிடத்தில் செலுத்தப்படும் உறுதியான பக்தியினால் புனிதமடைகிறான். சத்தியம், தயை, தவம், நற்கல்வி இவைகள் உடையவனாக இருப்பினும், என்னிடம் பக்தியற்றவன் மேற்கூறியவைகள் அவனை பரிசுத்தப்படுத்துவது இல்லை. என்னில் நிறைவான பக்தி சொல்லில் தடுமாற்றம் ஏற்படுகிறது. மனம் கசிந்து உருகுகிறது. சில நேரங்களில் அழுகிறான், சிரிக்கிறான், வெட்கத்தை விட்டு உரக்க பாடுகிறான். ஆடுகிற என் பக்தன் உலகத்தையே புனிதப்படுத்துகிறான். என்னிடம் பக்தி செலுத்துதல் என்ற பக்தியோகத்தால் கர்மவாசனையிலிருந்து நீங்கி, தன் இயல்பு வடிவான என்னை (பரமாத்மா) அடைகிறான். பொய்யான பொருள்களைப் பற்றிச் சிந்திப்பதை விட்டு, மெய்ப்பொருளான என்னைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும். மனதை என்னிடத்தில் நிலை நிறுத்த வேண்டும். ஆத்மசாதனை செய்கிறவன் பெண்ணாசை துறக்க வேண்டும். நல்ல சமமான ஆசனத்தில் அமர்ந்து, உடலை நேராக வைத்துக் கொண்டு, முதலில் பிராணாயாமம் செய்ய வேண்டும். இதயத்தில் தாமரைத் தண்டின் நூல் போல் நுட்பமான தொடர்ந்து வருவதுமான ஓங்காரத்தை சிந்தித்து, பிராணன் மூலமாக அதை மேலே ஏற்றி, அதில் பெரிய மணியின் ஒலி போன்ற நாதத்தை நிலை நிறுத்த வேண்டும். அந்த நாதத்தின் ஒலித் தொடர் அறுந்து போகாமல் இருக்க வேண்டும். இவ்விதம், நாள்தோறும் மூன்று முறை, ஓங்காரத்துடன் கூடிய பிராணாயாமத்தை பத்து முறை பயிற்சி செய்யவேண்டும். உத்தவர் கேட்டதற்கு இணங்க, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் யோக சித்திகளின் வகைப்பாடுகளையும் அதன் பலன்களையும் விளக்குகிறார். யோக சித்திகள் 20 வகைப்படும் என்று தாரணம் (மனதை நிலை நிறுத்துதல்) யோகத்தில், முழுமையாக நிலைபெற்ற யோகிகள் சொல்கின்றனர். இதில் பகவானிடத்தில் இயற்கையாக உள்ள சித்திகளை அஷ்ட மாசித்திகள் என்பர். மீதமுள்ள சித்திகளை, மனவடக்கம், புலனடக்கம், பொறுமை, அகிம்சை முதலிய குணங்களால் அடையத் தக்கது. சித்திகளை எக்காரணம் கொண்டும் சுயநலத்திற்காக பயன்படுத்தக்கூடாது. ஆனால் கர்ம யோகம், பக்தி யோகம் மற்றும் ஞான யோகம் போன்ற உயர்ந்த யோகங்களில் மனம் ஒன்றிப் போயிருப்பவர்களுக்கு, இந்த சித்திகள் எல்லாம் இடையூறுகள் என்று மேலோர்கள் சொல்கிறார்கள். ஏன் எனில் இவைகள் எல்லாம் பகவானை அடைவதை தாமதப்படுத்துகிறது. உத்தவர் கேட்டதற்கு இணங்க, பகவானும் தனது விபூதிகளை உத்தவருக்கு கூறத் தொடங்கினார். வர்ணங்கள் விராட் புருசனின் முகம், கை, தொடை மற்றும் கால்களிலிருந்து முறையே வேதியர், சத்திரியர், வணிகர் மற்றும் சூத்திரர் எனும் நால்வகை வர்ணத்தினர் தோன்றினர். நால்வகை ஆசிரமங்கள் விராட் புருசனின் இடுப்புக்குக்கு கீழுள்ள முன்புறப் பகுதியிலிருந்து இல்லறம் ஆசிரமமும், இருதயத்திலிருந்து பிரம்மச்சரியம் (மாணவப் பருவம்) ஆசிரமமும், மார்பிலிருந்து வனப் பிரஸ்த ஆசிரமமும், தலையிலிருந்து சந்நியாச ஆசிரமமும் தோன்றின. நால்வகை வர்ண இயல்புகள் மற்றும் கடமைகளும் வேதியர் இயல்புகள்:- புலனடக்கம், மன அடக்கம், விவேகம், வைராக்கியம், தவம், பொறுமை, நேர்மை, பக்தி, இரக்கம், அறிவு, தானம் பெறுதல், சத்தியம், தர்ம நெறிப்படி வாழ்தல் இவையே வேதியர் இயல்புகள். வேதியர் தர்மங்கள் (கடமைகள்) :- வேள்வி செய்தல்-செய்வித்தல், வேதம் ஓதுதல்-ஓதுவித்தல், தானம் பெறுதல். தவம் இயற்றுதல், மக்களுக்கும், நாட்டை ஆளும் அரசனுக்கும் தர்ம-கர்ம-மோட்ச விசயங்களில் அறிவுரை கூறுதல். வேதியர்கள், மீள முடியாத துன்ப காலங்கள் நீங்கும் வரை, உடல் உழைப்பு அதிகம் தேவைப்படாத பட்டு நூல் கொண்டு நெசவுத்தொழில் செய்தல் மற்றும் வைசியர்களின் (வணிகம் செய்தல்) தொழிலை மேற்கொள்ளலாம். பகை நாட்டவர்களிடமிருந்து தங்களை காத்துக் கொள்ள, உயிருக்கு ஆபத்தான காலங்களில் வாள் ஏந்தி சத்திரியர் தர்மத்தை பின்பற்றி உயிர் வாழலாம். ஆனால் எத்தகைய துயரக் காலத்திலும் பிறரிடம் கைகட்டி பணி செய்து வாழக் கூடாது. சத்திரியர் இயல்புகள் :- ஒளி மிக்க முகம், உடல் வலிமை, வீரம், துயரங்களைப் பொறுத்துக்கொள்ளும் தன்மை, கொடைத்திறன், விடாமுயற்சி, தளராத மன உறுதி, மக்களுக்குத் தலைமை தாங்கும் ஆளுமைத் திறன். சத்திரியர் தர்மங்கள் (கடமைகள்) :- மக்களை துயரங்களிலிருந்து காக்க வேண்டும். சத்திரியன் தனது தர்மங்களை கடைப் பிடிக்க முடியாத ஆபத்தான காலங்கள் நீங்கும் வரை, பஞ்சுநூல் கொண்டு நெசவுத்தொழில் மேற்கொள்தல், வைசிய தர்மத்தை கைக்கொண்டு வாணிபம் செய்யலாம் அல்லது வேதியர்களுக்குரிய வேலைகளைச் செய்யலாம். மேலும் வேட்டையாடி உயிர் பிழைத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு போதும் பிறரிடம் கைக்கட்டி வேலை செய்து பிழைக்கக் கூடாது. வைசியர் வர்ண இயல்புகள் :-வாணிபம் செய்தல், வள்ளல் தன்மை, ஏமாற்றாமை, கிடைத்த பொருளைக் கொண்டு மன நிறைவு அடையாதிருப்பது. வைசிய வர்ண தர்மங்கள் (கடமைகள்) :- வைசியர்கள் வாணிபம் நடத்த இயலாத ஆபத்தான காலங்கள் நீங்கும் வரை, நெசவுத் தொழில் செய்தல் மற்றும் வேளாளர்களின் கடமைகளைப் பின் பற்றி, பாய் முடைதல் போன்ற சிறு தொழில்கள் செய்து பிழைத்துக்கொள்ளலாம். வேளாளர்கள், மூன்று வர்ணத்தவர்களுக்கும், பசு மற்றும் தேவர்களுக்கு வஞ்சனையின்றி பணி செய்வதின் மூலம் கிடைக்கும் பொருளில் மன நிறைவடைதல். மனம்-மொழி-மெய்களால் பிறர்க்குத் தீங்கு செய்யாமை, வாய்மையில் உறுதியுடன் நிற்பது, திருடாமை, விருப்பு-வெறுப்பு, பேராசை, பழி தீர்க்கும் உணர்வு, கருமித்தனம் இன்றி வாழ்தல். பிரம்மச்சாரி குருவை சாதாரண மனிதராக பார்க்காமல், குருவிடம் குற்றம் குறைகள் கண்டு அலட்சியம் செய்யாது, இறைவனாக நினைக்க வேண்டும். ஏனெனில் குரு என்பவர் அனைத்து தெய்வ வடிவானவர். குருவின் மனம் விரும்பும்படி பணிவிடை செய்வதே ஒரு பிரம்மச்சாரிக்கு இலக்கணம். இல்லற சுக போகங்களில் ஈடுபடாது, குருவிடம் தன் உடல்-மனம் ஒப்படைத்து, தர்ம சாத்திர நூல்களை கற்றுத் தெளிய வேண்டும். பிரம்மச்சாரி, குருகுலக் கல்வி முடிக்கும் போது, கல்விக் கற்றுக் கொடுத்த குருவுக்கு குருதட்சணை வழங்கியபின் “சமாவர்த்தனம்” எனும் சடங்கு செய்து கொண்டு கிரகஸ்த ஆசிரமத்திற்கு (இல்லற வாழ்விற்கு) நுழையலாம். இல்லற வாழ்வில் ஈடுபடுபவன் அறவழியில் பணம் ஈட்டி, இல்லறத்தை நல்லறமாக நடத்த வேண்டும். இவர்கள் பஞ்ச மகாயக்ஞங்கள் செய்வது சிறந்தது என இந்து சமய வேத வேதாந்த சாத்திரங்கள் கூறுகிறது. யக்ஞம் ஐந்து வகைப்படும். 1. தேவ யக்ஞம்:- வேள்விகள் வளர்த்து தேவர்களை மகிழ்விப்பது. 2. ரிஷி யக்ஞம்:- உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை,இதிகாசங்கள், திருமுறை, திருக்குறள் போன்ற மகான்களின் தெய்வீக நூல்களை கேட்டல், படித்தல் மற்றும் அவைகளை சிந்தித்தலே ரிஷி யக்ஞம் ஆகும். 3. பித்ரு யக்ஞம்:- . நீத்தார் வழிபாட்டின் மூலம் நமது மூதாதைர்களுக்கு சிரார்த்தம், திதி, தர்ப்பணம் கொடுப்பதின் மூலம் இறந்த முன்னோர்களை மகிழ்விப்பது. 4. மனுஸ்ய யக்ஞம்:- வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு அமுது படைத்து விருந்தோம்புவது. 5. பூத யக்ஞம்:- பசு, காகம் முதலிய விலங்குகளுக்கு உணவு படைத்தல். இல்லற தர்மத்தில் இருந்தாலும், பக்தி யோகத்தில் செய்ய வேண்டும். படைக்கப்பட்ட பொருள்கள் எல்லாம் ஒரு காலாத்தில் அழியும் தன்மை உடையதோ அவ்வாறே கண்ணுக்குப் புலப்படாத சொர்க்கம் முதலிய லோகங்களும் அழியும் தன்மை உடையது என்று அறிந்து கொள்ள வேண்டும். உடல் மற்றும் வீடு போன்ற பொருட்களில் “ நான் - எனது ” (அகங்காரம் - மமகாரம்) என்ற கர்வம் இன்றி வாழ வேண்டும். பொறுப்புணர்வு பெற்ற மகன்களிடம், குடும்பப் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு, கிரகஸ்தன் (இல்லறத்தான்), தன் மனைவியை மகன்களிடம் ஒப்படைத்துவிட்டு அல்லது தன்னுடன் அழைத்துக் கொண்டு வனப் பிரஸ்த ஆசிரம (காட்டில் வாழ்தல்) தர்மத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். வானப்பிரஸ்த ஆசிரமவாசிகளின் முதன்மையான கடமைகள் தர்மம், தவம், இறைபக்தி மட்டுமே. வானப் பிரத்த தர்மத்தில் வாழ்பவர்கள், மரவுரி, இலைகள், புற்கள், மான் தோல் ஆகியவற்றை உடையாகக் கொண்டு, காட்டில் கிடைக்கும் கிழங்குகள்-வேர்கள்-பழங்கள் உண்டு வாழவேண்டும். தாடி, மீசை முடிகளை நீக்கக் கூடாது. தினமும் மூன்று முறை குளிக்க வேண்டும். தரையில் படுக்க வேண்டும். காட்டில் கிடைக்கும் நீவாரம் போன்ற சரு, புரோடாசம் முதலிய ’ஹவிஸ்’ (தேவர்களுக்கான உணவு) செய்து அந்தந்த காலத்திற்குரிய இஷ்டிகள் (யாகங்கள்) செய்ய வேண்டும். மேலும் அக்னி ஹோத்திரம், தர்சபூர்ணமாஸங்கள், சாதுர்மாஸ்யம் போன்ற விரதங்களை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு தவம் செய்வதால் அதன் பலனாக, அந்த வானப்பிரஸ்தன் மகர் லோகத்தை அடைந்து, பின்னர் இறைவனை அடைவான். கர்மங்களினால் (சாத்திரத்தில் கூறிய செயல்களால்) கிடைக்கும் நல்லுலகங்களும் கூட துயரத்தை தரும் என்ற பேருண்மையை உணர்ந்தவர்கள்,உடமைகள், உறவினர்கள் மற்றும் வைதீக கர்மங்களை துறந்து சந்நியாச தர்மத்தை ஏற்க வேண்டும். துறவி கௌபீனம் (கோவனம்) அணிந்து கொண்டு, கமண்டலம், தண்டம் கையில் வைத்து கொள்ளலாம். சத்தியமான சொற்களை பேச வேண்டும். மௌனம் வாக்கின் தண்டம்; பலனில் பற்றுள்ள செயல்களை செய்யாமல் இருப்பது, உடலின் தண்டம்; பிராணாயாமம் செய்வது, மனதின் தண்டம்: இந்த மூன்று தண்டங்களை (த்ரி தண்டி) கைக் கொள்ளாத துறவி, வெறும் மூங்கில் தடியை சுமப்பதால் மட்டும் சந்நியாசியாக மாட்டான். நான்கு வர்ணத்தவர்களின் ஏழு வீடுகளில் மட்டுமே சமைத்த உணவை பிட்சை எடுத்து, அதில் கிடைப்பதில் மகிழ்ச்சி கொள்ள வேண்டும். துறவிக்கு, உரிய காலத்தில் பிட்சை உணவு கிடைக்கா விட்டாலும் வருத்தப்பட மாட்டான். அதே போல், நல்ல உணவு கிடைத்தாலும் மகிழ்ச்சி அடைய மாட்டான். துறவி எதனிடத்திலும் பற்றுக் கொள்ளாமல், புலன்களை அடக்கி, ஆத்மாவுடன் விளையாடிக் கொண்டு (தன்னிலேயே மனநிறைவு அடைந்தவனாக), எல்லா சீவராசிகளையும் சமமாக பார்த்து, பூலகில் தொடர்ந்து ஒரிடத்தில் தங்காமல், நிலையின்றி தனியாக திரிந்து வாழவேண்டும். மோட்சத்தில் விருப்பு-வெறுப்பற்ற துறவி, ஆத்மாவில் நிலைகொண்டவன் (ஞானநிஷ்டன்), வைராக்கியம் அடைந்தவன், ஆசிரமம் நியமங்களுக்கு (விதிகள்) கட்டுப்பட்டவன் அல்லன். தர்ம சாத்திரங்களில் கூறப்பட்ட செய்யத் தக்கவை, தகாதவை என்ற விதிகளை கடந்து, சந்நியாசி (துறவி) சுதந்திரமாக உலகம் சுற்றலாம். துறவி அனைத்தையும் அறிந்தவனானாலும், சிறுவனைப் போல் விளையாடுவான்; ஆற்றல் உள்ளவனானாலும், ஏதும் அறியாதவன் போல் இருப்பான்; பண்டிதனானாலும் பைத்தியம் போல் பேசுவான்; வேதாந்தங்கள் கற்றறிந்தவனானாலும் ஆசார – ஆசிரம நியமங்களை கடைப்பிடிக்காதவனாக இருப்பான். துறவிக்கு வேதம் கூறியுள்ள அக்னி காரியம் கிடையாது; யார் தூற்றினாலும் பொறுத்துக் கொள்வான்; எவரையும் அவமதிக்க மாட்டான்; மற்றவர்களிடம் விரோதம் கொள்ள மாட்டான். ஆத்ம ஞானத்தில் நிலை பெற்ற துறவியிடம் இருமை எனும் இன்ப- துன்பம், மான-அவமானம், குளிர்-வெப்பம் போன்ற உணர்வுகள் காண முடியாது. எந்த துறவியிடம், ஞானமும் வைராக்கியமும் இல்லையோ, அவன் மூங்கில் தண்டத்தை சுமந்து வயிற்றை நிரப்பிக் கொள்பவனாக இருப்பானே தவிர, உண்மையான துறவியாக மாட்டான். துறவியின் முதன்மையான தர்மம் – அமைதியும், அகிம்சை ஆகும். சந்நியாசி தன்னுடைய தர்மங்களை கடைப்பிடிப்பதன் மூலம் அந்தக்கரணம் (மனம்) தூய்மை அடைந்து, பட்டறிவு-தெள்ளறிவு (ஞான-விஞ்ஞானம்) பெற்று இறுதியில் பிரம்மத்தை அடைகிறான். உத்தவரே, இல்லற ஆசிரமத்தில் மனநிறைவு அடைந்தவன், தன் மனைவியுடன் அல்லது தனியாக, மூன்றாம் ஆசிரமமான வனப் பிரஸ்த ஆசிரமத்தை கடை பிடிக்க, காட்டிற்கு செல்லாம். காட்டில் கிடைக்கும் கிழங்கு-காய்கனிகள் உண்டு, மரவுரி, இலைகள், மான்தோல் ஆகியவற்றை உடையாகக் கொண்டு, முடி, நகம், மீசை, தாடிகளை மழித்துக் கொள்ளாது, தவ வாழ்வு வாழவேண்டும். கோடைகாலாத்தில், நாற்புரம் தீ மூட்டி, கண்களால் சூரியனை பார்த்துக் கொண்டும், மழைக்காலத்தில், மழையில் நின்று கொண்டும், குளிர்காலத்தில், நீரில் நின்று கொண்டும் தவம் செய்ய வேண்டும். இவ்வாறு தவம் செய்து உடல் சுண்டிப்போனவன், முனிவர்கள் அடையும் மகர்லோகத்தை அடைந்து பின் இறைவனை அடைவான். கர்மபலனில் பற்றுக் கொண்டு கர்மாக்களைச் செய்பவனுக்கு சுவர்க்கம் கிடைப்பினும் கூட அது நரகம் போல் துக்கத்தை தருவன என்ற பெரும் உண்மையை உணர்ந்து நிறைவான வைராக்கியம் பெற்று, சந்நியாச ஆசிரமத்தை ஏற்க வேண்டும். சந்நியாசி கோவனத்தை ஆடையாக கொண்டு, கையில் கமண்டலம் மற்றும் தண்டு ஏந்தி அல்லது ஏந்தாமலும் இருக்கலாம். மௌனம் வாக்கின் தண்டம், பலனில் கர்மாக்களை விடுவது, உடலின் தண்ட்ம், பிராணாயாமம் செய்வது, மனதின் தண்டம், இந்த மூன்று தண்டங்களையும் சுமக்காதவன், வெறும் மூங்கில் தடியை சுமப்பதால் மட்டும் சந்நியாசியாக மாட்டான். துறவி தனக்கு கிடைக்கும் பிட்சையில் மனநிறைவுடன் உண்டு வாழ வேண்டும். எதனிடத்திலும் பற்று கொள்ளாமலும், புலன்களை அடக்கியவனாகவும், ஆத்மாவிலேயே மகிச்சியடைந்து, ஆத்மாவுடன் விளையாடிக் கொண்டு (தன்னிலேயே மனநிறைவு உடையவனாக இருந்து) அனைத்து சீவராசிகளிடம் சமமாக பார்த்து தனியொருவனாக உலகை வலம் வரவேண்டும். பிட்சைக்காக, துறவி நகரம், கிராமங்களுக்கு செல்லலாம். எவ்விடத்தையும் தனது இடம் என்று பற்று வைக்கக் கூடாது. ஆத்ம ஞானத்தில் நிலை பெற்ற சந்நியாசி (ஞானநிஷ்டன்), வைராக்கியம் அடைந்தவன், மோட்சத்தில் விருப்பம் உள்ளவன், வேறு எதிலும் பற்று இல்லாதவன், ஆசிரம நியமங்களுக்கு கட்டுப்பட்டவன் அல்ல. தர்ம சாத்திரங்களில் கூறப்பட்ட விதிமுறைகளைக் கடந்து சுதந்திரமாக உலகை வலம் வருவான். வேதத்தில் கூறப்பட்ட கர்ம காண்ட விளக்கத்தில் ஈடுபடமாட்டான். உத்தவரே இனி வைராக்கியம் அடைந்தவர்களைப் பற்றி கூறப்போகிறேன். மகிழ்ச்சியைத் தரும் பொறிநுகர் பொருட்கள், இறுதியில், துன்பத்திற்குகே காரணம் என்பதை உறுதியாக உணர்ந்து பொறிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள வைராகி, பிரம்மநிஷ்டராக, குருவை அடைந்து, குருவிடம் பக்தி மற்றும் நம்பிக்கை வைத்து, தனக்கு பிரம்ம ஞானம் அடையும் வரை, குருவை இறைவனாக உணர்ந்து பணிவிடைகள் செய்ய வேண்டும். எவன் ஒருவன் காமம் முதலான ஆறு எதிரிகளை அடக்காமலும், புலன்கள் எனும் குதிரைகளை புத்தி என்ற சாரதியால் அடக்கப்படாமலும் உள்ளானோ, எவனிடம் ஞானமும், வைராக்கியமும் இல்லையோ, அவன் மூங்கில் தண்டத்தை சுமந்து வயிற்றை நிரப்பிக் கொள்பவனாகவும், தன்னுள் இருக்கும் பரமாத்மாவாகிய என்னையும் (இறைவனை) ஏமாற்றுகிறான். அவனுடைய உடை மட்டும் காவி; அந்த போலித்துறவிக்கு மனத்தூய்மை இல்லாததால் இவ்வுலகிலும், அவ்வுலகிலும் நன்மை இல்லை. துறவியின் முதன்மையான தர்மம், அமைதியும் - அகிம்சையும்; வனப் பிரஸ்தனின் முதன்மையான தர்மம், தவம் - இறை பக்தியும்; இல்லறாத்தானின் முதன்மையான தர்மம், அனைத்து சீவராசிகளைக் காத்தலும் - அக்னி ஹோத்திரமுமே; மாணவனின் முதன்மை தர்மம், குருவுக்கு பணிவிடை செய்வதே. இவ்விதம் தங்களுக்குரிய ஆசிரமங்களை கடைப்பிடிப்பவர்களின் உள்மனம் தூய்மை அடைந்து, பட்டறிவு-தெள்ளறிவு (ஞான-விக்ஞானம்) பெற்று விரைவில் இறைவனை அடைகிறார்கள். உத்தவரே, உபநிடதங்கள் முதலிய வேதாந்த சாத்திரங்களை கேட்டு, சிரவணம், மனனம், நிதித்யாசனம் மூலம் சாத்திர ஞானமுடைய பிரும்ம நிஷ்டன், யுக்தி மற்றும் அனுமானங்கள் முதலியவற்றின் அடிப்படையில் நேரடியாக ஆத்மாவை (பிரம்மத்தை) தரிசித்து விட்டவன் ஆவான். அவன் இந்த உலகத்தையும் அதன் நிவிருத்திக்கான சாதனங்களை மாயை என்று உணர்ந்து, அவைகளை என்னில் ஐக்கியப்படுத்தி, அவைகள் இரண்டுமே என் மேல் ஏற்றி வைக்கப்பட்டவை என்ற ஞானத்தை அடைகிறான். ஏனெனில், ஞானிக்கு மிகவும் பிரியமான வஸ்து பிரம்மம் ஆகிய நான் தான்! ஞானியின் இலட்சியம், என்னைத் தவிர அன்றி தேவலோகம் போன்ற லோகங்களில் பிரியம் கொள்வதில்லை. தத்துவ ஞானத்தினால் மனதிற்கு ஏற்படும் புனிதம், தவம், தீர்த்தம், ஜெபம், தானம் மற்றும் பிற சாதனங்களால் தர இயலாது. சத்வ-ரஜஸ்-தமஸ் எனும் முக்குணங்களின் விகாரங்களின் கூட்டுறவுதான், இந்த உடல். இந்த உடல், மனம், ஆத்மா ஆகியவைகளை மாயை திரை போட்டு மறைத்துள்ளது. இந்த உடல் முதலில் இருந்ததில்லை; இறுதியிலும் இருக்கப்போவதும் இல்லை; இடைக்காலத்தில் மட்டுமே இருக்கிறது. இந்த உடலின் ஆறு வகையான இயல்புகள்- பிறப்பு, இருப்பு, வளர்ச்சி, மாற்றம், தேய்வு மற்றும் மறைவு. இவைகள் ஆத்மாவுடன் சம்பந்தப்பட்டவைகள் அல்ல. இந்த மாற்றங்கள் உடல் சம்பந்தப்பட்டவையும் அல்ல. ஏனென்றால், அதுவே ‘அஸத்’- உண்மையில் இல்லாதது. நானே அஸத்தான வஸ்து- துவக்கத்தில் இல்லை; முடிவாக இருக்கப் போவதும் இல்லை என்னும் போது, இடையில் மட்டும் எப்படி இருக்க முடியும்? பிரகிருதி, புருஷன், மஹத், அகங்காரம், ஐந்து தன்மாத்திரைகள் – இவை ஒன்பது; ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள், மனம் – இவை பதினொன்று; பஞ்சபூதங்கள், முக்குணங்கள் – இவை எட்டு: ஆக இந்த இருபத்தி எட்டு தத்துவங்களும் பிரம்மா முதல் புல் பூண்டு வரையிலான எல்லா சீவராசிகளிடம் காணப்படுவதாலும், அவற்றில் பரமாத்மா இருக்கிறார் என்று அறிவதுதான், பிரம்ம ஞானம் என்று உறுதியாக சொல்கிறேன். பலவகையான பொருட்களால் ஆனது இந்த உலகம் என்று கருதாமல், பரமாத்மா என்ற ஒன்றினால் மட்டுமே இந்த அண்ட சராசரங்கள் வியாபிக்கப்பட்டுள்ளது என்று உறுதியாக அறிந்து கொள்வது “விக்ஞானம்” எனப்படும். எனவே, படைப்பு, காத்தல், அழித்தல் இவற்றிக்கு உள்ளீடாக தொடர்ந்து இருப்பது எதுவோ, காரியங்கள் அழிந்து போனாலும், தான் அழியாமல் இருப்பது எதுவோ, அதுவே சத்தியமான வஸ்து (ஸத்) அல்லது ஆத்மா அல்லது பிரம்மம். இவ்வுலக வஸ்துக்கள் நிரந்தரமில்லாதவை என்பதாலும், மாறும் தன்மை உடையவை என்பதாலும், சத்தியமானவை அல்ல என்பது உறுதியாகும். எனவே, விவேகியானவன் உலகப் பொருட்களில் பற்று நீக்க வேண்டும். தானம், தவம், யாகம், யக்ஞங்களால் கிடைக்கும் சுவர்க்கம் மற்றும் பிரம்மலோகம் போன்ற மேலுகங்கள் கூட நிலையற்றவை என்பதை ஞானி அறிவான். தூயதான சத்வகுணம் பொருந்தி சாந்தமாக இருக்கும் சித்தத்தை எப்போது பகவானிடம் சமர்ப்பிக்கும் சாதகனுக்கு தர்மம், ஞானம், வைராக்கியம் மற்றும் சகல் ஐசுவர்யங்கள் தாமாகவே வந்தடைகின்றன. உத்தவரே, யமம் என்பது பன்னிரண்டு வகைப்படும்- அகிம்சை, சத்தியம், திருடாமை, அஸங்கம் (ஒரு கூட்டத்தில் இருந்தாலும், தனிமையாக இருத்தல்), நாணம், அபரிக்கிரகம் (தேவைக்கு அதிகமாக பொருட்கள் சேர்த்தல்), ஆஸ்திக்யம் (பகவானிட்த்தில் நம்பிக்கை), பிரம்மச்சரியம், மௌனம், தைர்யம், பொறுமை, அச்சமில்லாமல் இருப்பது. நியமம் என்பதும் பன்னிரண்டு வகைப்படும்; உடல் மற்றும் மனத்தூய்மை (சௌசம்), ஜெபம், தவம் (உண்டி சுருக்கல்), ஹோமம், சிரத்தை, விருந்தோம்பல், பகவானை பூஜிப்பது, புண்ணிய தீர்த்த யாத்திரை செல்வது, பிறர்க்கு உதவுவது, தெய்வாதீனமாக் கிடைப்பதைக் கொண்டு மகிழ்வுடன் வாழ்தல், குருவுக்கு பணிவிடை செய்தல், பலனில் பற்றுடன் அல்லது பற்று இல்லாதும் இவைகளை கடைப்பிடிக்கலாம். இந்த யமம் மற்றும் நியமங்களை கடைப்பிடிப்பவன் விரும்பியதை அடைகிறான். மனதை பகவானிடம் செலுத்துவது, ’சமம்’; புலனடக்கம் என்பது ’தமம்’; ’திதிக்ஷா’ என்பது துன்பங்களை சகித்துக் கொள்வது. நாக்கையும், பிறப்புறுப்பையும் வெற்றி கொள்வது, ’திருதி’ எனப்படும் தைரியம். தன்னை அண்டி வந்த சீவராசிகளுக்கு அடைக்கலம் அளிப்பது: தானம்; காமத்தை விட்டுவிடுதல்; தவம்; தீய இயல்புகளை அடக்குவது, சௌர்யம் எனும் சூரத்தனம்; அனைத்து சீவராசிகளை சமமாக (பிரம்மமாக) பார்த்தல்; சத்தியம்; உண்மையாகவும், இனிமையாகவும் பேசுவதையே மகாத்மாக்கள் ’ரிதம்’ என்பர். கர்மங்களில் பற்றில்லாமல் இருப்பது ’சௌசம்’. கர்மங்களை விட்டுவிடுவது ’சந்நியாசம்’. ஜீவாத்மா- ப்ரமாத்மாக்களிடையே பேத புத்தியை அழிக்கும் கல்வியே பிரம்மவித்யா ஆகும். விலக்கப்பட்ட செயல்களை செய்ய அஞ்சுவது, நாணம் (ஹரீ). எதற்கும் ஆசைபடாமலிருப்பது, உடலுக்கு அழகு (ஸ்ரீ); சுகத்தையும் துக்கத்தையும் கடந்து நிற்பது, சுகம்; மனம் மற்றும் உடலின்பங்களில் நாட்டம் கொள்வது, துக்கம்; கட்டு-விடுதலை (மோட்சம்) என்பவைகளை அறிந்தவன், ஞான் யோகி ஆவான். உடல் மற்றும் மனம் ஆகியவற்றில் ‘நான்’ என்று பற்றுக் கொள்பவன், மூர்க்கன்; சம்சாரச் சக்கரத்திலிருந்து விலகி, பகவானை நோக்கி செல்லும் பாதையே, நன்மார்க்கம்; வாழ்க்கை இன்பங்களில் ஈடுபடுவதே, தீய மார்க்கம் (குமார்க்கம்). சத்வ குணத்தின் வளர்ச்சியே, சுவர்க்கம்; தமோ குண வளர்ச்சியே, நரகம்; குருவே உண்மையான உறவினர்; நற்குணங்கள் நிரம்பியவனே செல்வந்தன். கிடைத்ததைக் கொண்டு எவன் மகிழ்ச்சி அடையவில்லையோ அவனே தரித்திரன் (ஏழை); புலன்களை கட்டுப்படுத்தாதவன், "கிருபணன்"; விஷயப் பற்றில்லாத சித்தம் உடையவன், ஈசன்; இதற்கு மாறாக விஷய போகங்களில் மனத்தைச் செலுத்துபவன், "அநீசன்" ஆவான். குறை-நிறைகளில் பார்வையை செலுத்து குற்றமாகும். இவ்விரண்டு பார்வையையும் கடந்து, தன் சுய ரூபத்தில் நிலைத்து நிற்பதே, சிறந்த குணமாகும். ஞான-கர்ம-பக்தி யோகங்கள் தவிர மனிதனின் ஆன்மிக மேம்பாட்டிற்கு வேறு வழிகளே இல்லை. கர்மாக்களிலும், கர்மபலன்களிலும் விரக்தி அடைந்து, அவற்றை கைவிட்டவர்களே ஞான யோகத்திற்கு தகுதியுள்ளவர்கள். மாறாக, கர்மாக்களிலும், கர்மபலனில் ஆசையை விடாதவர்கள், கர்ம யோகத்திற்கு தகுதியானவர்கள். முன் செய்த நல்வினையால் புண்ணியவசமாக பகவானின் கதைகளில் பெரும் ஈடுபாடு கொண்டவனுக்கு பக்தி யோகம் விரைவில் சித்தியைத் தரும். எதுவரையில் கர்மத்தின் பயனில் ‘போதும்’ என்ற நிறைவு தோண்றவில்லையோ, அதுவரையில் கர்மாக்களை செய்து கொண்டிருக்கவே வேண்டும். தன்னுடைய வர்ண-ஆசிரமங்களுக்கு உரிய தர்மங்களைச் செய்து கொண்டு, எவ்வித பற்றும், பலனில் ஆசையும் இன்றி பகவானை வழிபட வேண்டும். செய்யத் தகாதன என்று விலக்கப்பட்ட கர்மாக்களை விடுத்து, விதிக்கப்பட்ட கர்மாக்களையே செய்து வருபவர், சுவர்க்கத்துக்கோ, நரகத்துக்கோ போகமால், பகவானிடத்திலே இரண்டறக் கலந்து விடுகிறார். ஞானம்-பக்திக்கு, மனித உடல்தான் சாதனமாக உள்ளது. எனவே சுவர்க்கத்தில் மற்றும் நரகத்தில் உள்ளவர்களும் மனித உடலைத்தான் அடைய விரும்புவர். இந்த மனித உடல் அழியும் தன்மையுடையது என்றாலும் இந்த உடல் மூலமாகத்தான் பரமாத்மாவை அடைய முடியும். எனவே ஞானமுள்ளவன், இறப்புக்கு முன் ஆத்மசாதனை புரிந்து, அதனால் பிறப்பு-இறப்புச் சூழலிருந்து நிரந்தரமாக விடுதலை அடைய வழிகளைக் காணவேண்டும். உடல் மீது இல்லாத மனிதன், உடலை உதிர்த்த பின்பு மோட்சத்தை அடைகிறான். உடல் மீது பற்று உடையவன் துக்கத்தை அடைகிறான். ஒவ்வொரு விநாடியும் உடலின் ஆயுள் குறைந்து கொண்டே வருவதை நன்கு உணர்ந்தவன், உடலின் மீது பற்று கொள்ளாமல், பரமாத்ம தத்துவ ஞானத்தை அடைந்து, பிறப்பு-இறப்பு எனும் காலச் சக்கரத்திலிருந்து விடுபட்டு, ஆத்மாவிலேயே பேரமைதி பெறுகிறார். கர்மாக்கள் துக்கத்தையே தரக்கூடியது என்பதை ஞானத்தால் உணர்ந்து, கர்மாக்களின் மீதான பற்றினை விட்டு, புலன்களை வென்று, மனதை விஷயங்களில் செல்லாமல் தடுத்து, ஆத்மாவிலேயே நிலைத்திருக்கும்படி பயிற்சி செய்து ஸ்திரப்படுத்த வேண்டும். மனதை ஆத்மாவில் நிலைப்படுத்த முயலும் போது, அவ்வப்போது மனம் இங்குமங்கும் செல்லத் துடிக்கும். அப்போது விழிப்புடன் இருந்து மனதிற்கு அறிவுரை கூறி, மனதை திரும்பவும் தன் வசத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். புலன்களையும், பிராணனையும் தன் வசத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்; மனதை சுதந்திரமாக திரிய விடக்கூடாது. மனதின் போக்குப்படி செல்வதற்கு சில வேளைகளில் அனுமதித்துவிட்டுப் பின்னர், அடிக்கடி அறிவுரை கூறி, தன் வசத்தில் கொண்டு வரவேண்டும். ஆத்ம சொரூபத்தில் மனதை நிலைநிறுத்தி பயிற்சி செய்து வந்தால், உடலின் மீதான பற்றை துறந்துவிடலாம். புலனடக்கம்-மனவடக்கம் (யமம்-நியமம்)- அகிம்சை, தவம் முதலிய யோகமார்க்கத்தில் பகவானை தியானிக்கலாம். அல்லது, ஆத்மா-அனாத்மா, திருக்-திருஷ்யம், ஸத்-அஸத் போன்ற வேதாந்த தத்துவங்களை விசாரணை மேற்கொண்டு பகவானை தியானிக்கலாம். யோகி, தவறுதலாக நிந்திக்கத்தக்க செயலை செய்து விட்டால், அந்தப் பாவத்தைத் தன் யோகத் தீயினாலேயே அழித்துவிடலாம்; வேறு பிராயச்சித்த கர்மாக்கள் செய்ய வேண்டியதில்லை. கர்மா, தவம், ஜெபம், ஞானம், வைராக்கியம், யோகம், தானம், தர்மம் மற்றும் யாகம், யக்ஞம் செய்வதால் பிதுர் லோகம், சுவர்க்க லோகம், பிரம்ம லோகம் மற்றும் வைகுண்டம் கிடைக்குமோ, அதை எல்லாம் பகவானின் பக்தன் விரும்பினால் பக்தி யோகப் பிரவாகத்தால் எளிதாக அடைந்துவிடலாம். பகவானிடத்திலேயே மனதை நிலை நிறுத்தி, விருப்பு-வெறுப்பு அற்றவனாக, எல்லாச் சீவராசிகளை சமமான நோக்கில் பார்த்து, புத்தியைக் கடந்த பரமாத்மா தத்துவத்தை அறிந்தவர்களுக்கு, விதி விலக்குகளால் ஏற்படக்கூடிய புண்ணிய-பாவங்களோடு எந்த சம்பந்தமும் இல்லை. உத்தவரே, என்னால் விளக்கப்பட்ட பக்தி யோகம், ஞான யோகம், கர்ம யோகம் ஆகியவைகளை விட்டுவிட்டு, புலன்கள் தரும் சிற்றின்பங்களில் ஈடுபடுகிறவர்கள், மீண்டும் மீண்டும் பிறப்பு – இறப்பு எனும் வாழ்க்கை எனும் சக்கரத்தில் சுழன்று கொண்டே இருப்பார்கள். சீவர்கள் தங்களுடைய கர்மவாசனையின் விளைவாக செயல்படும் புலன்களின் தறிகெட்ட ஓட்டத்தைக் கட்டுப்படுத்தி, அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கு இலக்குகளை அடைய வேண்டும். எந்தெந்த பொருள்களிலிருந்து பற்று நீங்கி, மனநிறைவைப் பெறுகிறானோ, அவ்வவற்றின் தளையிலிருந்து மனிதன் விடுபடுகிறான். துயரம், மயக்கம், பயத்தைப் போக்கும் இந்த முறைதான் ஆன்மவிடுதலையைத் தரும் தர்ம வழியாகும். புலனுகர் பொருட்களில் உயர்வை ஏற்றி வைப்பதால், அவற்றினிடம் பற்றுதல் உண்டாகிறது; பற்றுதல் ஏற்பட்டதும் அவற்றை அடைய வேண்டும் என்ற பெருவிருப்பம் உண்டாகிறது. அப்பொருளை அடைய தடை ஏற்படின் கோபம், கலக்கம் உண்டாகிறது. இந்த கலக்கம், கோபத்தினால் நல்லது கெட்டது என்ற அறிவு அப்போது ஏற்படுவதில்லை. அறிவு கெட்டவுடன், மனிதனுடைய சிந்தனை சக்தி மறைந்து விடுகிறது. அறிவு கெட்டபின் மனிதனிடம் மனிதத்தன்மை நீங்கி, விலங்கின் தன்மை பற்றிக்கொள்கிறது. அவன் ஒரு சூன்யத்தை போல் ஆகி விடுகிறான். புலனுகர் பொருட்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பதால் மனிதனும் போகப் பொருளாகி விடுகிறான். உட்கொள்ள முடியாத கசப்பான மருந்துகளை, இனிப்பைத் தடவி கொடுப்பது போல், வேதங்களில் சுவர்க்கம் முதலிய லோகங்களை மனிதன் அடைய வேண்டிய இலக்காக முதலில் கூறினாலும், மனிதன் அடையத்தக்க உயர்ந்த இலக்காக விளக்கப்படவில்லை. புலனுகர் இன்பங்களில் ஈடுபாட்டைச் சுருக்கிக் கொண்டு, உள்மனதில் தூய்மை பெற்று, மோட்சத்தை அளிக்கும் செயல்களில் ஆர்வத்தை மேம்படுத்துவதே அதன் நோக்கம். பொருள் இன்பங்களில் சிக்கித் திணறும் அறிவிலிகள், அக்னியில் ஆஹிதி கொடுக்கும் யாக – யக்ஞங்களில் மனம் மகிழ்ந்து போகிறார்கள். அவர்கள் தற்காலிகமான தேவலோகம், பித்ரு லோகம் அடைகிறார்கள். ஆனால் நிலையான ஆத்ம லோகம் அடைவதில்லை. வேள்வியில் பசு போன்ற விலங்குகளை பலி இட வேண்டும் என்று கட்டாயமாக விதிக்கப்படவில்லை. இதனுடைய உட்கருத்தை உணராத மூடர்கள் புலன்களை திருப்தி செய்வதற்காக வேள்விகளில் பசு போன்ற விலங்குகளை பலியிட்டு தேவதைகள் – பிதுரர்கள் - பூதங்களைப் பூசிப்பதாக சொல்கிறார்கள். இலாபத்திற்கு பேராசைப்படும் வணிகன், மூலதனத்தை இழந்து விடுவது போல், பலனில் பற்றுக் கொண்டவர்கள், வேள்வி முதலியன செய்து, ஆத்மாவையே இழக்கிறார்கள். வேதங்களில் கூறப்பட்ட கர்ம – உபாசனை – ஞான காண்டங்களை ஆராய்ந்ததில், ஜீவாத்மாவும் – பரமாத்தாவும் ஒன்றே என்பதுதான். இதனை முனிவர்கள் நேரடியாக கூறாமல் மறைமுகமாக கூறியுள்ளனர். மனம் தூய்மை பெற்று, செயல்களை (கர்மாக்கள்) துறந்த தெள்ளறிவாளர்களுக்கே (ஞானிகளுக்கே) பிரம்மம் புலப்படும். வேத வேதாந்தகளின் மறைபொருள் அறிந்து கொள்வது கடினம். மரபு வழிவந்த வேதாந்திகளிடமிருந்து பிரம்மத்தைப் பற்றிய அறிவை கேட்டறிந்து கொள்ள வேண்டும். வேத வடிவாகவும், அமுதமயமாகவும் உள்ள நான், ஹிரண்யகர்பனாகவும் இருக்கிறேன். பிராணனை உபாதியாகக் (ஆதாரமாக) கொண்டு சூக்கும ஓங்கார வடிவிலிருக்கும் அநாஹத சப்தம் மூலமாக அது வெளிப்படுகிறது. சிலந்திப் பூச்சி தன் வாய் மூலமாக வலையைப் பின்னி, பின்னர் அதை தானே உள்ளூக்குள் இழத்துக் கொள்கிறது. அது போன்று ஈசுவரன் தான் படைத்த சீவராசிகள் உட்பட அனைத்து லோகங்களையும் காத்து பின்பு தன்னுள் இழத்துக் கொள்கிறான். ஞான காண்டத்தில் (வேதாந்தம்), சீவராசிகளும் உலகங்களும் பரமாத்மாவைக் காட்டிலும் வேறானது அல்ல என்று அனைத்து பொருட்களும், பிரம்மத்தின் மேல் ஏற்றி வைத்து, பின்பு அவைகளை நீக்குகிறது. பிரபஞ்சமே பிரம்ம மயமானது, பிரம்மத்தின் மீது வேற்றுமைகள் கற்பித்து, அவையெல்லாம் மாயை என்று ஒதுக்கி தள்ளிவிட்டு பிரம்மத்திடம் நிலையான அமைதி பெறுகிறது. (மரத்தின் வேரில் உள்ள நீரே மரத்தின் கிளைகளுக்கும் இலைகளுக்கும் பரவுதைப் போல், ஓங்காரப் பொருளாகிய பரப்பிரம்ம்மே, அந்த நாதத்திலிருந்து வெளிப்பட்டு எல்லையில்லாமல் விரிந்த வேதத்தின் உட்பொருள் என்பது கருத்து). தத்துவங்களின் எண்ணிக்கை பலவாறாக கூறப்பட்டிருந்தாலும், 3+9+11+5=28 என இருபத்தி எட்டு தத்துவங்கள் என்பதே சரியாகும். சத்துவ குணம், இராட்சத குணம், தாமச குணம் எனும் முக்குணங்கள் சேர்ந்த மூன்று தத்துவங்கள். புருஷன், பிரகிருதி, மஹத் தத்துவம், அகங்காரம், ஆகாயம், தேஜஸ், நீர், பூமி எனும் ஒன்பது தத்துவங்கள். ஐந்து ஞானேந்திரியங்களான, காது, தோல், கண், மூக்கு, நாக்கு, எனும் ஐந்துடன், ஐந்து கர்மேந்திரியங்களான, வாக்கு, கை, கால், மலத்துவாரம், சிறுநீர் குழாய் எனும் ஐந்து கர்மேந்திரியங்கள், இவற்றுடன் ’மனம்’ (மனதை ஞானேந்திரியமாகவும் அல்லது கர்மேந்திரியமாகவும் கொள்ளலாம்) சேர்த்தால் பதினொரு தத்துவங்கள். சப்தம் (கேட்கும் சக்தி), ஸ்பர்சம் (தொடு உணர்வு), ரூபம் (பார்க்கும் திறன்), இரஸம் (சுவைக்கும் உணர்வு) , கந்தம் (வாச்னை அறியும் சக்தி) எனும் ஞானேந்திரியங்களின் ஐந்து விசேஷ சேர்க்கைக் சேர்த்தால் ஐந்து தத்துவங்கள உத்தவரே, பிரகிருதி - புருஷன் (சீவன் – ஆத்மா) ஆகிய இரண்டும் முற்றிலும் மாறுபட்டவர்களே. பிரகிருதியின் காரியமாக உலகில் பிறப்பு – இறப்பு; மற்றும் வளர்ச்சி – தேய்வு – அழிவு முதலிய மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. இவைகள் குணங்களின் சேர்க்கையால் ஏற்பட்டதே. மாயை மூவகையானது. அது, தனது சத்வ-இரஜோ-தமோ எனும் முக்குணங்களைக் கொண்டு பலவித பேத புத்திகளான படைப்புக்களை மூன்று பகுதிகளாக – அத்யாத்மம், அதிதைவம், அதிபூதம் எனப் பிரித்துள்ளனர். உதாரணமாக கண் எனும் புலன் – அத்யாத்மம், அதனுடைய பார்க்கும் செயல் என்பது அதிபூதம், நேத்திரகோளத்திலிருக்கும் சூரியதேவனின் அம்சம் அதிதைவம். இம்மூன்றும் ஒன்றை ஒன்று சார்ந்து செயல்படுவது என்று உறுதியாகிறது. பிரகிருதியிலிருந்து (பிரதானம் என்ற தத்துவத்திலிருந்து) மஹத் தத்துவம் தோன்றுகிறது. மகத் தத்துவத்திலிருந்து அகங்காரம் தோன்றுகிறது. அதனால், அகங்காரமும் பிரகிருதியின் ஒரு விகாரமாகிறது. அகங்காரம் – வைகாரிகம், தாமசம், ஐந்திரியம், (சாத்விக-தாமச-ராஜசம்) என மூவகை குணமாக இருந்து மோகத்துக்கும், படைப்பின் பல்வகைக்கும் காரணமாகிறது. ஆத்மா ஞான வடிவானது. நிர்குணமானது. சத்தியமானது. அழிவற்றது. மனிதர்களின் மனம் என்பது, கர்ம – சம்ஸ்காரங்களின் ஒரு தொகுப்பு. சம்ஸ்காரங்களுக்கு ஏற்றபடி போகங்களை அனுபவிப்பதற்காக அதனுடன் இந்திரியங்கள் ஒட்டிக்கொண்டுள்ளது. இதற்கு ’லிங்க சரீரம்’ என்பர். அதுதான், நாம் செய்யும் நற்செயல்கள், தீயசெயல்களுக்கு ஏற்ப ஓர் உடலிருந்து இன்னோர் உடலுக்கும், ஓர் உலகத்திலிருந்து இன்னோர் உலகத்திற்கும் போய் வந்து கொண்டிருக்கிறது. ஆத்மா இந்த் லிங்க சரீரத்திலிருந்து வேறானது. அது போவதும் இல்லை, வருவதும் இல்லை. ஆனால் லிங்க சரீரத்தையே தானாக எண்ணி, அதில் அகங்காரத்தை அடையும்போது, அதுவும் போய் – வந்து கொண்டிருப்பதாக தோற்றம் அளிக்கிறது. சீவன் தான் செய்த கர்மங்களுக்கு ஏற்ப கிடைத்த உடலில் மிகவும் பற்று ஏற்பட்டு விடுகிறது. தன்னுடைய முந்தைய உடலின் நினைவு கூட இருப்பதில்லை. எதோ காரணத்தால், முற்றிலுமாக உடலை மறந்து விடுவது தான் மரணம் என்ப்படுகிறது. (உடல் அழிந்தாலும், அதன் ஆத்மா அழிவதில்லை என்பது கருத்து) சீவன், ஓர் உடலை தன்னிலும் வேறானது என்ற உண்மையை மறந்து, ’இது நான் தான்’ என்று பற்றுக் கொள்கிறதோ, அது பிறப்பு. ஆத்மா ஒன்றுதான்; இரண்டற்றது; முழுமையானது; அதற்கு உட்புறம்-வெளிப்புறம் என்ற பிரிவு இல்லை. மனம் தான், பிறப்பு – இறப்பு என்ற பேத புத்திக்கு காரணம். மனதின் ஆட்சியில் புலன்கள் இயங்குகிறது. மனம் தான் பலவித கற்பனைகளைச் செய்கிறது. மனம் தான், பிறப்பு – இறப்பு போன்ற நிலைகளை ஆத்மாவின் மேல் ஏற்றி வைக்கிறது (அத்யாரோபம்). உடலுக்கு ஒன்பது நிலைகள் - கர்ப்பதானம், கர்ப்பத்தின் வளர்ச்சி, பிறப்பு, குழந்தைப் பருவம், வாலிப பருவம், யெளவனம், நடு வயது, வயோதிகம், மரணம். கர்மவினைப்படி சீவன் வாழ்க்கைச் சக்கரத்தில் சுழல்கிறான். அப்போது சீவனுக்கு, சத்வகுணம் அதிகமாக இருந்தால் முனிவர்களாகவும், ராஜச குணம் அதிகமாக இருப்பின் மனிதர்களாகவும், அசுரர்களாகவும். தாமச குணம் அதிகமாக இருப்பின் பூதங்களாகவும், விலங்கினங்களாகவும் பிறக்கிறான். எவ்வளவு கொடுத்தாலும் திருப்தி அடையாத புலன்களைக் கொண்டு, பொருட்களில் இன்பம் துய்க்காதீர்கள். ஆத்மா பற்றிய அக்ஞானத்திலிருந்து தோன்றும் உலகப்பொருட்களின் பேதங்கள், வெறும் மனப்பிரமை என்று அறிந்து கொள்ள வேண்டும். 'மிகுந்த மான-அவமானத்திற்கும், துயரங்களுக்கும் உள்ளான மனிதனால் மனதை அமைதியாக வைத்துக்கொள்ளமுடியுமா? என்று கேட்ட உத்தவருக்கு, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் முடியும் என்கிறார். அதற்கு ஒரு கதையும் சொல்கிறார். அவந்தி நாட்டில் ஒரு அந்தணர் இருந்தார். விவசாயம், வாணிபம் செய்து செல்வச் செழிப்புடன் இருந்தாலும் ஈகை குணம் இல்லாத பேராசையும் கோபக்குணமும் உடையவன். தர்மம் செய்து புண்ணியம் ஈட்டாத காரணத்தால் பஞ்சமகா யக்ஞ தேவதைகள் அவனிடம் கோபம் கொண்டதால், அவனுடைய செல்வங்கள் அனைத்தும் வற்றச் செய்தது. செல்வங்கள் அனைத்தும் இழந்த அவனுக்கு வாழ்க்கையில் வெறுப்பும், திடமான வைராக்கியம் தோன்றின. பின்பு துறவற வாழ்க்கை மேற்கொண்டார். மனம், புலன்கள், பிராணன் முதலியவைகளை தன்னுள் வசப்படுத்தி, பிச்சை எடுத்து உலகத்தை சுற்றி வந்தார். பின்பு முதுமைக் காலத்தில், தீயவர்கள் அவரை கேவலப்படுத்தியும் அவமானப்படுத்தியும் வந்தாலும், அவர் தமது தர்மத்தில் உறுதியாக இருந்தார். இந்த உலகத்தில் மனிதனுக்கு யாரும் சுக-துக்கங்களை தருவதில்லை. சுக-துக்கம் என்பதே சித்தத்தின் பிரமை தான். இவ்வுலகமும், அதில் நண்பன்-விரோதி-உதாசீனன் என்ற வேறுபாடுகள் அக்ஞானத்தால் ஏற்பட்டவை. புத்தியால் மனதை வசப்படுத்தி, எல்லா எண்ணங்களையும் ஒடுக்கி பகவானில் ஆழ்ந்து நிலைத்திருக்க வேண்டும். இது தான் எல்லா யோகங்களின் சாரமான பிட்சு கீதை ஆகும். கபில முனிவர் ஆக்கிய சாங்கிய யோகத்தின் சிறப்புக்களை பகவான், உத்தவருக்கு விளக்குகிறர். உத்தவரே, என்னை அடைவதற்கான முக்கிய சாதனமான மனித உடலை அடைந்தவன், என்னிடம் உண்மையான பக்தி செலுத்தினால், அவனுடைய அந்தக்கரணத்திலுள்ள பரமானந்த சொரூபியான என்னை அடைந்து விடுவான். பெரும் புகழ் படைத்த மன்னன் பூரூரவசை, ஊர்வசி பிரிந்து சென்றதால் மனம் கலங்கிப் போனான். பின்னர், சோகம் குறைந்தவுடன் மனதில் வைராக்கியம் ஏற்பட்டது. மாபெரும் மன்ன்னாக இருந்த நான் ஒரு பெண்ணின் வலையில் வீழ்ந்து அவள் கைப்பாவை ஆகினேன். ஊர்வசி என்னிடம் வேத வாக்கியங்கள் மேற்கோள்களாக கூறியும், அவள் நற்போதனைகள் என் மனதில் பதியவில்லை. பாம்பை கயிற்றாக எண்ணியது எனது குற்றம் தானே. விவேகியாக இருப்பவர்கள், தீயவர் சேர்க்கையை விட்டுவிடவேண்டும். சாதுக்களை அண்டி, சேவை செய்து கொண்டு இருப்பவனுக்கு கர்மத்தளை என்ற அக்ஞான இருள் நீங்கி விடுகிறது. துயரக்கடலில் மூழ்கித் தத்தளிப்பவர்களுக்கு பிரம்மத்தை அறிந்த சித்தர்களான ஞானிகள், உறுதியான படகு போன்றவர்கள். ஆத்ம ஞானம் ஏற்பட்டவுடன் மன்னர் புரூரவஸ் என்ற இளநந்தன் உலகத்திடம் பற்று நீங்கிற்று. அவனுடைய பந்த-பாசங்கள் எல்லாம் அழிந்தன. அவர் ஆத்ம ஞானியாக பற்று-பாசமில்லாமல் மண்ணுலகில் சுற்றித் திரிந்தார். பகவான் ஸ்ரீகிருஷ்ணர், கிரியா யோகத்தின் வழிபாட்டு முறைகளை, உத்தவர் கேட்டுக் கொண்டபடி விளக்குகிறார். என்னை வழிபடுவதற்கு வைதிகம், தாந்திரிகம், மிச்ரம் (கலவை) எனும் மூன்று முறைகளில் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம். எனது உருவத்தை எட்டு வகையான பொருட்களில் செய்து வழிபடலாம்- கல், மரம், உலோகம், சந்தனம், சித்திரம், மண், இரத்தினம். (சந்தனக் குழம்பினால் வரி வடிவம் எழுதியும், மனத்தால் தியானித்தும் மூர்த்தியை கல்பிக்கலாம்) சூரியனில் தெய்வ வடிவத்தை தியானித்து வழிபடுவதால், அர்க்கயம் (தீர்த்தம்) அளித்தலும், உபஸ்தானமும் முக்கியம். தண்ணீரில் தெய்வத்தை உபாசிப்பதனால், தர்ப்பணம் முதலியவற்றால் செய்ய வேண்டும். ஒரு பக்தன், மிகுந்த பக்தியுடன், சாதாரணத் தண்ணீரையே அர்ப்பணம் செய்தாலும் அதை நான் அன்புடன் ஏற்றுக் கொள்கிறேன். என்னில் பக்தி உடையவன் சந்தனம், பூ, நறுமணப்புகை, தீபம் முதலியவற்றால் பூசித்தாலேயே நான் திருப்தி அடைவேன். என்னுடைய ஆசனத்துக்கு தர்ம்ம் முதலான எட்டு குணங்களே, கால்கள். (எட்டுகால்கள்:- கோணங்களில் தர்மம், ஞானம், வைராக்கியம், ஐசுவர்யம் எனும் நான்கு கால்களும், திசைகளில் அதர்மம், அக்ஞானம், அவைராக்கியம், அநைசுர்யம் என்று நான்கு பாதங்கள். அதன் மீது சத்வம், இரஜஸ், தமஸ் எனும் மூன்று பீடங்கள். அவற்றில் விமலா, உத்கர்ஷிணீ, ஞானம், கிரியை, யோகம், ப்ரஹ்வீ, சத்யா, ஈசானா, அனுக்ரஹா என்று ஒன்பது சக்திகள். இந்த ஆசனத்தின் மேல் எட்டு தளங்கள் கொண்ட ஒரு தாமரை; அதன் நடுவில் ஒளிமிக்க கர்ணிகையில் பொன்மயமான துகள்கள். ஆசனம், இவ்வாறு அமைந்திருப்பது போன்ற பாவனை செய்து, பாத்யம், ஆசமநீயம், அர்க்யம், முதலிய உபசாரங்கள் செய்ய வேண்டும். போகம், மோட்சம், (இக-பர சுகம்) கிடைக்க வேண்டி, வைதிக-தாந்திரிக முறைகளால் என்னை வழிபட வேண்டும். (வைதிகம்-மந்திரங்கள்; தாந்திரிகம்-முத்திரைகள்; நியாசங்க்ள்- பூதசுத்தி, ஆத்ம பிராண பிரதிட்டை முதலியன. சுதர்சன சக்கரம், பாஞ்சஜன்யம் (சங்கு), கௌமோதகீ எனும் கதாயுதம், கட்கம், (வாள்), பாணம் (அம்பு), சாரங்கம் எனும் வில், கலப்பை, முசலம், என்ற எட்டு ஆயுதங்களையும் எட்டு திக்கிலும் பூசிக்க வேண்டும். கௌஸ்துபமணி, வைஜயந்தி மாலை, ஸ்ரீவத்சம் என்ற மரு ஆகியவற்றை, மார்பில் பூசிக்க வேண்டும். நந்தன், சுநந்தன், பிரசண்டன், சண்டன், மகாபலன், பலன், குமுதன், குமுதேக்ஷ்ணன் ஆகிய பார்வசதர்களை எட்டு திக்குகளிலும், கருடனை எதிரிலும், துர்கை, விநாயகர், வியாசர், விஸ்வக்சேனர் முதலியோரை நான்கு கோணங்களிலும், குருவை இடது பக்கத்திலும், இந்திரன் முதலிய திக்பாலகர்களை அவரவர்க்குரிய திக்குகளிலும் நிலைநிறுத்தி, புரோச்சனம், அர்க்கயம், முதலிய செய்து பூசிக்க வேண்டும். பின் தோத்திரப் பாக்களால் தோத்தரித்து, பகவானே, எனக்கு அருள் புரிய வேண்டும்; என்னிடன் பிரசன்னமாயிருக்க வேண்டும். என்று பிரார்த்தனை செய்து, உடல் முழுவதும் தரையில் தோயும்படி விழுந்து சாஷ்டாங்கமாக வணங்க வேண்டும். பலனில் பற்றில்லாமல், கிரியா யோகத்தினால் என்னை பூசிப்பவன், பக்தியோகத்தை அடைந்து, நிறைவாக என்னையே அடைகிறான். உலக விவகார நோக்கில், படைப்பில், புருஷன், பிரகிருதி-பார்ப்பவன், பார்க்கப்படும் பொருள் என்ற வேற்றுமை தோண்றுகிறது. ஆனால் அந்தராத்மாவில் (உள்மனதில்) பார்க்கும் போது இப்படிப்பட்ட வேற்றுமைகள் கிடையாது. எல்லாம் பரமாத்ம வடிவமே. அதனால், ஒருவனின் சுபாவத்தையும், அதை ஒட்டிப் போகும் நடவடிககைகளையும் பார்த்து யாரையும் இகழவோ, புகழவோ கூடாது. பிறரின் இயல்புகளையும், செயல்களையும் விமர்சனம் செய்ப்வன் ஞானநிஷ்டையிலிருந்து நழுவி விடுகிறான். ஆத்மவின் தன்மை:- இவ்வுலகில் பார்க்கப்படும் பொருள்கள், பார்வைக்கு அகப்படாத பொருள்கள் ஆகிய எல்லாமே, பரமாத்மாதான். அவரே உலகத்தை படைக்கிறார், உலகமாகவும் ஆகிறார். உலகத்தைக் காப்பாற்றுகிறார், காப்பற்றப்படுபவராகவும் இருக்கிறார், அவரே உலகத்தை அழிக்கிறார், அழிக்கப்படும் பொருளாகவும் இருக்கிறார். (செய்பவரும், செய்யப்படும் பொருளும் அவரே; ஆத்மாவன்றி வேறோன்றில்லை. விவகார நோக்கில் பார்க்கையில் ஆத்மா, இவ்வுலகிலிருந்து வேறுபட்டது. ஆனால் ஆன்மநோக்கில் பார்த்தால் அதைத் தவிர வேறு பொருளே இல்லை. ஆத்மதத்துவத்தை வாயால் சொல்ல இயலாது (அனிர்வசநீயம்). படைப்பு-நடப்பு-துடைப்பு அல்லது அத்யாத்மம்-அதிதைவம்-அதிபூதம் என்று ஆத்மாவில் கற்பிக்கப்பட்டுள்ள நிலைகள் ஆதாரமற்றவை. இவைகள் இல்லை என்றாலும் இருப்பன போல் தோற்றமளிக்கிறது. இவை சாத்வீகம்-ராஜசம்-தாமஸ குணங்களால் தோண்றுவன. காண்பவன் - காட்சி - காணப்படும் பொருள் என்று மாயையின் மூன்று வகையான விளையாட்டுகள் இது. இந்த உலகம் தோற்றம் - அழிவு உடையதாக இருப்பதால், அநித்தியம் - அசத்தியம் என்பதை, பிரத்யக்ஷயம் - அனுமானம் - வேதாந்த சாத்திரங்கள், ஆப்த வாக்யம், சுய அனுபவம் மற்றும் குரு உபதேசம் எனும் பிரமாணங்களால் (கருவிகளால்) உறுதியாகிறது. எனவே உலகம் அநித்தியம் (நிலையற்றது), அசத்தியம் (பொய்யானது) என்பதை உணர்ந்து, எதனுடன் ஒட்டுதல் இன்றி வாழவேண்டும். (சங்கத்தில் நிஷ்சங்கமாக வாழவேண்டும்). சோகம், மகிழ்ச்சி, அச்சம், கோபம், லோபம், மோகம், வேட்கை, பிறப்பு-இறப்பு இவையெல்லாம் அகங்காரத்துக்கே அன்றி, ஆத்மாவுக்கு அல்ல.(சான்றாக, அகங்காரமில்லாத ஆழ்ந்த உறக்கத்தில், துயரங்கள்-குழப்பங்கள் ஏற்படுவதில்லை. சுக-துக்கங்கள் ஆத்மா சம்பந்தப்பட்டதாக இருந்தால், உறக்கத்திலும் அவை ஏற்பட வேண்டும். எனவே அவைகள் இந்த உடலின் தர்மங்கள் தவிர ஆத்மாவுடையதல்ல). உடல், ஞான கர்ம உறுப்புகள், பிராணன், மனம் ஆகியவற்றால் நிலைபெற்றுள்ள ஆத்மா, இவைகளில் பற்று கொண்டு, ’இவைகளே நான்’ என்று கருதும் போது, ஜீவாத்மா என்று அழைக்கப்படுகிறது. அதிநுட்பமான ஆத்மாவின் மூர்த்திதான் - குண கர்மங்களான லிங்க சரீரம், அல்லது சூத்ராத்மா, அல்லது மஹத் தத்துவம் என்பர். அவன் காலரூபியான பரமேசுவரனுக்கு அடங்கி சம்சாரச் சக்கரத்தில் சுழல்கிறான். விவேகியானவன், நல்ல குருவை அணுகி ஞானோபதேசம் பெறவேண்டும். மிகவும் கூர்மையாக தீட்டப்பட்ட ஞானம் எனும் வாளைக் கொண்டு அஞ்ஞானம் எனும் அகங்காரத்தை ஆணி வேருடன் வெட்டித்தள்ளி ஏகாத்மபாவம் எனும் உண்மை அடைந்தவன் உலகில் இரண்டற்றவனாக சுற்றித் திரியலாம். அந்த நிலையில் அவனிடம் எவ்வித பற்று-வெறுப்பு இருப்பதில்லை. எது ஞானம்:- எது இந்த உலகத்திற்கு காரணமாக இருக்கிறதோ, எதனால் இந்த உலகம், பிரகாசிக்கிறதோ, அந்த பிரம்ம வடிவாகவே உலகம் உள்ளதோ; உலகம், பிரம்மத்திலிருந்து வேறானதல்ல - என்ற முடிவு, பல்வேறு சாத்திரங்களால் நிலை நிறுத்தப்படுகிறது. இதுவே ஞானம். தங்கத்தால் வளையல், கடுக்கன், மோதிரம் போன்ற நகைகள் செய்யப்படுகிறது. ஆபரணமாக ஆவதற்கு முன்னும், அவை உருக்கப்பட்டு ஆபரணத்தின் தன்மையை இழந்துவிட்ட போதும், தங்கம்தான், இடைப்பட்ட காலத்தில், பெயரும், உருவமும் பலவாக கூறப்படுகிறது. அது போல, உலகத் தொடக்கம் - நடு - முடிவு எல்லாம் இறைவனே. பிரம்ம தத்துவம் :- மனதிற்கு விழிப்பு நிலை - கனவுநிலை - உறக்கநிலை உள்ளது. இந்த மூன்று நிலைகளுக்கும் முறையே சத்வம் - ரஜஸ் - தமஸ் என்பன காரணங்களாகும்; மேலும் அத்யாத்மம் (புலன்கள்), அதிபூதம் (மண், முதலிய பஞ்சபூதங்கள்), அதிதைவம் (கர்த்தா எனும் செயல் செய்பவன்) என்று மூன்று வகையான வேறுபாடுகள் உள்ளன. மும்மூன்றாக இருப்பனவெல்லாம் எவருடைய இருப்பில் உண்மை போல் காட்சியளிக்கின்றனவோ, சமாதி நிலையில் மூவகை வேறுபாடுகள் இல்லாத போதும் எது எப்போதும் இருந்து கொண்டு இருக்கிறதோ, அந்த நான்காவது தத்துவம் - பிரம்ம தத்துவம் - அதுவே சத்தியம். படைப்புக்கு முன் எது இருக்கவில்லையோ, பிரளயத்துக்குப் பின் எது இருக்கப் போவதில்லையோ, அது, அந்த இடைப்பட்ட காலத்திலும் இல்லை - என்றே கருதவேண்டும். ‘ உலகம் இருக்கிறது’ என்பது வெறும் கற்பனையே. ஒரு பொருள் எதனால் ஆக்கப்படுகிறதோ, எதனால் பிரகாசிக்கப்படுகிறதோ, அதுவே - அந்த காரணப் பொருளே - இதன் உண்மையான வடிவம் என்பது உறுதியான உண்மை. இதுவே முடிவான முடிவாகும். பற்பல மாறுதல்களை அடையும் இப்பிரபஞ்சம், உண்மையில் இல்லாத போதிலும், இருப்பதாகத் தோற்றமளிக்கிறது. இது சுயம்பிரகாசமான பிரம்மமே ஆனதால், புலன்கள், விஷயங்கள், மனம், பஞ்சபூதங்கள் என பல்வகை நாம-ரூபங்கள் உண்டோ, அவை அத்தனையிலும் பிரம்மமே விளங்குகிறது. "பிரம்ம ஞானத்தை அடைவதற்கான சாதனங்கள்" - வேதாந்த சாத்திரங்களை மரபு வழியாக வந்த குருவின் மூலம் கேட்டல், (சிரவணம்) கேட்டதில் சந்தேகங்களை நீக்கிக்கொள்ளுதல் (மனனம்), கேட்டதை மனதில் அசைபோடுதல், அடைந்த ஞானத்தில் நிலை பெறுதல், முதலிய சாதனங்கள் வழியாக ஆத்ம ஞானம் எனும் பிரம்ம ஞானத்தை அறிந்து கொள்ளமுடியும். ஆத்ம ஞானம் பெற்ற குருவின் மூலம் ஆத்மவிசாரம் செய்து பழகி, உடல் போன்ற அனாத்மா, ஆத்மாவிற்கு புறம்பாக பொருட்களைப் பற்றிய சந்தேகங்களை நீக்கிவிட வேண்டும். பின்னர் ஆனந்தமேயான ஆத்மாவில் மூழ்கி, பொருட்களில் பற்று இல்லாதவனாக ஆகிவிட வேண்டும். இது போன்ற அனாத்மா பொருட்களை எவ்வாறு ஒதுக்குவது எனில், இந்த உடல், உணவின் மாற்று உருவம் என்பதால் அது ஆத்மா இல்லை; புலன்கள், அவைகளின் அதிஷ்டான தேவதைகளான பிராணன், வாயு, நீர், அக்னி, மனம் ஆகிய எதுவும் ஆத்மா அல்ல. ஏன் எனில், இவைகளும் உடலைப் போல உணவின் மூலம் உண்டாகிறது. புத்தி, சித்தம், அகங்காரம், ஆகாயம், மண், சப்தம் முதலிய புலனுகர் விஷயங்கள் மற்றும் மூன்று குணங்களின் சாம்ய அவஸ்தையான பிரகிருதியும் ஆத்மா அல்ல. (ஆத்மாவிற்கு புறம்பான இந்த அனாத்மா வஸ்துகளை நேதி - நேதி (இதுவல்ல, இதுவல்ல) என்று ஒதுக்கிவிட்டு, ஆத்மா ஒன்று மட்டுமே சத்தியம் (உண்மை) என்று உறுதி கொள்ள வேண்டும்). ஆத்ம ஞானம் எனும் பிரம்ம ஞானத்தை அடைந்தவன், உலகாயத சுக-துக்கங்கள் பாதிப்பதில்லை. சுகம் வரும் போது அவன் மகிழ்வதில்லை. துயரம் வரும் போது வருந்துவதில்லை. ஆத்மானந்தத்தில் மூழ்கியிருப்பவனுக்கு, உலக விசயங்களினால் உண்டாகும் சுக-துக்கங்களால் பாதிக்கப்படுவதில்லை. ஆகாயத்தை, வாயுவால் உலர்த்தப்படுவதில்லை; நெருப்பினால் எரிக்க முடியாது; நீரினால் ஈரப்படுத்த முடியாது; பூமி தனது புழுதியால் மாசுபடுத்த இயலாது; காலங்களின் தன்மைகளான வெப்பம்-குளிர் ஆகியவாற்றால் பாதிக்கப்படுவதில்லை. காரணம், இந்தத் தன்மைகள் எல்லாம் சில நேரங்களில் மட்டுமே இருப்பவை. ஆனால் ஆகாயாமோ, இவைகள் எல்லாவற்றிக்கும் ஆதாரமாக இருப்பது. அதுபோலவே, சத்வ-ரஜஸ்-தமஸ் எனும் முக்குணங்களின் செயல்களும் கர்மாவும், அழிவில்லாத ஆத்மாவை தொடக்கூட முடியாது. ஆத்மா இவைகளுக்குக்கெல்லாம் அப்பாற்பட்டது. ஆனால் இவைகளில் அகங்காரம் கொண்டிருப்பவன் (இவைகள்தான் "நான்" என்று எண்ணிக் கொண்டிருப்பவன்) துயரக்கடலில் சிக்கித் திரிகிறான். பகவானிடம் பக்தி செலுத்துவதால் மட்டுமே, மனதின் தோஷமாகிய ரஜோகுணத்தைப் போக்கிக் கொள்ளும் வரை மாயையின் காரியமான குணங்களுடன் சம்பந்தத்தை தவிர்க்க வேண்டும். நன்கு ஆத்மக்ஞானத்தை அடையாதவனுக்கு மனதில் ஏற்பட்டுள்ள கர்மவாசனை-கர்ம பதிவுகள் அடிக்கடி தலைதூக்கி, அஞ்ஞானம் தலைதூக்கச் செய்து, யோகப்பிரஷ்டனாக்கிவிடும் (ஆத்மவித்தையை அடையாமல் ஒதுக்கி வைக்கப்படுவர்). ஞானப்பயிற்சி செய்து முன்னேறும் யோகிகளை, உறவினர்கள், நண்பர்கள் பந்தபாசத்தையோ அல்லது கவலையோ ஏற்படுத்தி விடுவார்கள். அதனால் அவர்கள் தன் நிலையில் இருந்து வழுக்கி விழுந்து விடுவார்கள். அப்படிபட்டவர்கள் அடுத்த பிறவியில், முன் பிறப்பில் விட்ட இடத்திலிருந்து ஞானயோகப் பயிற்சியை தொடங்குவார்கள். கர்மாக்களில் பற்று வைக்க மாட்டார்கள். ஞான யோகத்தை அடைந்து பண்டிதனாக விளங்குபவன், உலகத்தில் வாழ்ந்து கொண்டே கர்மவினைப்படி செயலாற்றிக் கொண்டிருந்தாலும், மகிழ்ச்சி-வருத்தம் முதலிய மன மாற்ற்ங்களை அடைவதில்லை. ஆத்மாவில் அறிவை நிலைநிறுத்திய ஞானி, இந்த உடல் செயல்படுகிறது என்பதையே அறிய மாட்டான். உடலிலும் உலகிலும் தான் மாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, ஆனால் ஆத்மா எப்போதும் ஒரேவிதமாக மாற்றமின்றி உள்ளது என்ற உண்மையை ஞானி அறிந்து கொள்கிறான். பகவானின் சாக்ஷாத்காரம் (உணர்வு) ஏற்பட்டதும், மனிதனின் மனதை மூடியிருந்த அக்ஞானம் விலகி, ஆத்ம சொரூபமாகி விடுகிறான். ஆத்மா, அது நம்மால் அடையப்பட்ட பொருள்; சுயம்பிரகாசமானது; பிறப்பில்லாதது; அளவிடமுடியாதது; எல்லா அனுபூதிகளும் அதிலே நிகழ்கிறது; எல்லா விபூதிகளையும் (பெருமைகளையும்) தன்னுள் கொண்டது; தனக்குச் சமமான இரண்டாவது வஸ்து (பொருள்) இல்லாத தனிப்பொருள்; மனம்-வாக்குகளுக்கு எட்டாதது; நிர்குணமானது; அருவமானது; வடிவம் அற்றது; குணதோசங்களை கடந்தது. இரண்டாவதற்ற அகண்ட ஆத்ம தத்துவத்தில், அறியாமை காரணமாக வேற்றுமை காண்பது, மனதின் மயக்கமே. சீவன், பிரகிருதியின் தொடர்பால் அகங்காரமடைந்து பேதத்தைக் கற்பிக்கிறது. மனமயக்கத்துக்கும், அக்ஞானத்துகும் தனித்துவமான இருப்பு இல்லை. வித்தியாசங்கள் காணப்படுகிறது எனில் அது ஆத்மாவை அதிஷ்டானமாகக் கொண்டுதான் காணப்படுகிறது. அதிக -முயற்சி இல்லாமல் பரமபதத்தை அடையும் எளிய வழியை கூறுங்கள் என்று உத்தவர், ஸ்ரீகிருஷ்ணரிடம் கேட்டார். அதற்கு பகவான் உபதேசிதார், எந்த செயல் செய்தாலும் அதை என்னுடைய பிரீதிக்காக செய்யவேண்டும்: மனதை என்னிடமே செலுத்தி, என் தர்மத்திலே லயித்து என்னிடம் அனன்ய "பக்தி" செலுத்த வேண்டும். எல்லா சீவராசிகளிடத்தில் நானே இருப்பதாகப் பாவனை செய்து கொண்டு இருப்பவனுக்கு, விரோதம்-பொறாமை-பொருட்படுத்தாமை, அகங்காரம் முதலியன விலகிப் போகிறது. எல்லாவற்றையும் ஈசுவர வடிவாக பார்ப்பவனுக்கு, அனைத்தும் பிரம்ம ஞானம் ஏற்பட்டவுடன், எல்லா அறியாமைகளில் விலகி, என்னை சாட்ச்சாத்தாகப் பார்த்து, பிரபஞ்சப் பார்வையை நீக்கி, மேலான அமைதியை அடைகிறான். மனம்-மொழி-மெய்களால் என்னைப் பார்ப்பதே, என்னை அடைவதற்கான சாதனங்களுக்குள் மேலானது. மனிதன் எல்லாக் கர்மங்களையும் எனக்கே அர்ப்பணம் செய்து விட்டு, என்னையே சரண் அடைந்து , எல்லாச் செயல்களையும் என் பொருட்டாக எவன் செய்கிறானோ, அவனுக்கு உதவ வேண்டும் என்ற பலமான ஆசை என்னுள் எழுகிறது. இப்படிப்பட்ட பக்தன் அமரத்தன்மை அடைந்து, என் வடிவமாகவே ஆகிவிடுகிறான். உத்தவரே! எனது ஆசிரமம் பத்ரியில் அருகில் உள்ளது. அங்கு செல்ல கட்டளையிட்டார். பகவான் கூறியபடி உத்தவர், பதரிகாசிரமத்தில் தவ வாழ்க்கையை மேற்கொண்டு, வாழ்நாள் முடிவில் வைகுண்டம் ஏகி பகவானை அடைந்தார். யது குலத்தவர்களின் அழிவுக்கு முனிவர்களின் சாபம் இன்னும் ஏழு நாட்களில் நிகழவிருப்பதை அறிந்த பகவான் ஸ்ரீகிருஷ்ணர், துவாரகையிலிருந்து பெண்டிர், சிறுவர்-சிறுமியர், முதியவர்களை "சங்கத்துவாரம்" என்ற இடத்திற்கு அனுப்பிவிட்டு, மற்ற யாதவர்களை, ஓடங்களில் பயணித்து கடலைக் கடந்து பின் ரதங்களில் ஏறி பிரபாச பட்டினம் எனும் கடற்கரை நகருக்கு செல்ல உத்தரவிட்டார். சாத்தியகி மற்றும் கிருதவர்மன் தலைமையில் பிரபாச பட்டினத்திற்கு சென்ற யாதவர்கள், அறிவை அழிக்கும் போதையைத் தரும் மைரேயம் என்ற மதுவை அளவுக்கு மீறி பருகியதன் விளைவாக மதி மயங்கி, கர்வம் மேலோங்கிய தாசர்ஹர்கள், விருஷ்ணிகள், விசர்ஜனர்கள், மாதுரர்கள், சூரசேனர்கள், போஜர்கள் மற்றும் குந்திகள் ஆகிய யது குலத்தவர்கள் தங்களுக்கிடையே இருந்த உறவை மறந்து ஒருவரையொருவர், இரும்புத் தடி போன்று வளர்ந்திருந்த வச்சிராயுதத்திற்கு நிகரான கோரைப்புற்களால் தாக்கிக் கொண்டு, முனிவர்களின் சாபத்தாலும், கிருஷ்ணனுடைய மாயையாலும், அகம்பாவம் நிறைந்த யது குலத்தவர்கள் முற்றிலும் அழிந்தனர். பூமிக்கு சுமையாக மிச்சம் மீதி இருந்த யாதவர்களின் அழிவை கண்ட கிருஷ்ணர் மனநிறைவடைந்தார். பலராமன், கடற்கரையில் அமர்ந்தபடி பரமாத்மாவைத் தியானித்து, தன்னுடைய ஆத்மாவை தன்னிலேயே நிலைப்படுத்தி மனித உடலை துறந்தார். கிருஷ்ணர் தாமரைப் போன்ற சிவந்த இடது காலை, வலது தொடையின் மேல் வைத்துக் கொண்டு தியானத்தில் அமர்ந்திருந்த நிலையில், "ஜரன்" என்ற வேடன் தூரத்திலுருந்து கிருஷ்ணரின் காலை, மானின் முகம் என தவறாக நினைத்து, இரும்பு உலக்கையின் ஒரு சிறு இரும்பு துண்டு சொருகப்பட்ட அம்பை குறிபார்த்து எய்தான். ஸ்ரீகிருஷ்ணன் காலில் அம்படிபட்டு, உயிர் நீக்கும் தருவாயில், தனது தேரோட்டியான "தாருகன்" என்பவனை அழைத்து, பிரபாச நகர் கடற்கரையில் யாதவர்கள் மது மயக்கத்தில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டு மடிந்ததையும், பலராமனும், நானும் வைகுந்தம் செல்ல இருப்பதையும், துவாரகை நகர் கடலில் மூழ்கப் போவதையும், துவாரகையில் மீதம் உள்ள யாதவர்கள் துவாரகையை விட்டு நீங்கி அருச்சுனனுடன் இந்திரப்பிரஸ்தம் நகருக்கு சென்று விடுங்கள் என துவாரகையில் உள்ளவர்களிடம் கூறிவிடு என்றார். அவ்வாறே துவாரகையில் மீதமிருந்த யாதவர்கள் இந்திரப்பிரஸ்தம் சென்றனர். பிரம்மா-பார்வதி-சிவன்-இந்திரன், முதலான தேவர்கள், சப்தரிஷிகள் , பிரஜாபதிகள், பித்ருக்கள், சித்தர்கள், கந்தர்வர்கள்-வித்தியாதரர்கள்-நாகர்கள்-சாரணர்கள் - யட்சர்கள்- யட்சினிகள் கின்னரர்கள்- கிம்புருசர்கள்-அப்சரசுகள்- வேதியர்கள் ஆகியோர் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் வைகுந்தத்திற்கு எழுந்தருளுவதை காணும் பேராவலுடன் குவிந்து, பக்தியுடன் பகவான் மீது பூமாரி பொழிந்து மகிழ்ந்தனர். பகவான் தன் திருமேனியுடன் வைகுந்தம் எழுந்தருளினார். பிலாச்க் (மென்பொருள்) பிலாச்க் ("Flask") ஒரு நுண்ணிய திறந்த மூல இணைய மென்பொருள் கட்டமைப்பு, பைத்தான் மொழியில் எழுதப்பட்டுள்ளது. பிலாச்க் சின்ட்டாராவின் தாக்கத்திற்குப் பின் உருவாக்கப்பட்டது. பிலாச்க் முதலில் அறிமுகமான போது நல்ல வரவேற்புக் கிடைத்தது. பிலாச்க் ஆர்மின் ரெனேக்கரால் உருவாக்கப்பட்டது. இது ஏப்ரல் முட்டாள் நாள் நகைச்சுவை மூலம் உருவானது.. from flask import Flask app = Flask(__name__) @app.route("/") def hello(): if __name__ == "__main__": தருக்க நூல்கள் தருக்க நூல்கள் சமயக் கருத்துகளை உயர்ந்தது தாழ்ந்தது எனக் காட்டி வாதிடும் நூல்கள். திருஞான சம்பந்தர் சமணரை வென்றார். அப்பர் சமணராக இருந்து சைவராக மாறினார். இவர்களுக்குப் பின்னர் சமணமும் பௌத்தமும் ஒடுங்கிக் கிடந்தன. அக்காலத்தில் அவர்கள் பல தருக்க நூல்களைச் செய்தனர். சிலப்பதிகாரம் சமண நூல். அதனோடு இணைந்துள்ள மணிமேகலை பௌத்த நூல். சிலப்பதிகாரம் முருகனையும் , திருமாலையும் , கொற்றவையையும் , கடல்-தெய்வத்தையும் போற்றிப் பாடுகிறது. மணிமேகலை அக்காலத்தில் நிலவிவந்த ஆறு சமவாதிகளின் கருத்துக்களோடு மோதிப் பௌத்தத்தை உயர்த்திக் கூறுகிறது. இவை கி. பி. 3 ஆம் நூற்றாண்டு நிலைமை. 7 ஆம் நூற்றாண்டில் தேவாரம், திவ்வியப் பிரபந்தம் முதலான நூல்கள் தோன்றிச் சைவத்தையும் வைணவத்தையும் தலைநிமிரச் செய்தன. இவற்றிற்குப் பின்னர், இந்தப் பின்னணியில் 8 முதல் 10 ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலத்தில் தோன்றியவையே சமண, பௌத்த தருக்க நூல்கள். குண்டலகேசி ஒரு பௌத்த நூல். இதன் கருத்துகளை மறுத்துச் சமணர் செய்த நூல் நீலகேசி. இவை இந்தத் தலைமுடியை உடைய பெண்ணை உணர்த்துகின்றன. யாப்பருங்கல விருத்தி உரையில் இந்த நூல்கள் கூறப்பட்டுள்ளன. மேலும், வக்கினக் கிராந்தம் வக்காணித்தல் என்பது வாதம் செய்தல். இந்த நூல் வக்காணிக் கிரந்தம் என்னும் நூலாக இருக்கலாம். தத்துவ தரிசனம் என்னும் நூல்களும் யாப்பருங்கல விருத்தி உரையில் கூறப்பட்டுள்ளன. தனியன் வியாக்கியானம் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் நூலில் தொகுக்கப்பட்டுள்ள பிரபந்தங்கள் 24. இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனித் தனியன் பாடல்கள் உள்ளன. இவை அப் பிரபந்தங்களுக்குச் சிறப்புப் பாயிரம் போல அமைந்துள்ளன. வைணவர்கள் இந்த்த் தனியன்களை ஓதிய பின்னரே பாசுரங்களை ஓதுவது வழக்கம். சில பிரபந்தங்களுக்கு வடமொழித் தனியன்களும் உள்ளன. தமிழிலுள்ள தனியன் பாடல்கள் மொத்தம் 34. இவற்றுள் இரண்டொரு பாடல்கள் நீங்கலாகச் சம்பிரதாயமாக வழங்கும் ஏனைய பாடல்களுக்குப் பிள்ளை லோகஞ்சீயர் விரிவுரை எழுதியிருக்கிறார். இவை பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தோடு சேர்த்துப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. மற்றும் பிரபந்தங்களுக்கு முற்சேர்க்கையாகவும் பதிப்பிக்கப்பட்டுள்ளன. தனி நூலாகப் பதிப்பிக்கப்படவில்லை. தனியன் பாடல்களின் பொருள் இவற்றில் விரித்துரைக்கப்பட்டுள்ளன. கொம்மடிக்கோட்டை வாலைகுருசுவாமி கோவில் வாலைகுருவின் வாலாம்பிகை: கலியுகத்தில் நல்ல குரு கிடைப்பது மிக அரிதிலும் அரிது. இதை அறிந்து தான் ஸ்ரீ வாலாம்பிகை ஸ்ரீ வாலை குருவையும் ஸ்ரீ காசியானந்தரையும் இந்த புண்ணிய பூமிக்கு சுமார் 800 வருடங்களுக்கு ( ஏறத்தாழ 1200வது வருடம்) முன் தன்னோடு அழைத்து வருகிறாள். தன் மனதில் இடம் பிடித்த ஸ்ரீ வாலை குருவையும் ஸ்ரீ காசியானந்தரையும் பிரதான படுத்தி ஆலயத்தையும் இவர்களுக்கு அவளே வரைபடம் தந்து, வடிவமைத்து தருகிறாள். சாதாரண மனிதர்களுக்கு ஸ்ரீ வாலைகுருவே பூலோகத்தின் கடவுளாவார். பூமியில் உள்ள அசையும் பொருள் , அசையாத பொருட்கள் போன்ற அனைத்து அவதாரங்களையும் குருவே ஞானப் பாதையில் அழைத்து சென்று அவரவர்கள் அவதார நோக்கத்தை அறியச் செய்கிறார்கள். இதைதான் திருமூலரும் “குரு பார்க்க கோடி தோஷம் நிவர்த்தி” என்கிறார் திருமந்திரத்தில். ஸ்ரீவித்யை (ஸ்ரீ பாலா) மார்க்கத்தை குரு முகமாகவே அடைய வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. ஸ்ரீ வாலை ஞான பூஜையின் மகத்துவத்தை போகர் அவருடைய குரு நந்திசரிடம் இருந்து அறிந்து கொண்டதாக சொல்கிறார். போகர் வாலையின் மகத்துவத்தை கொங்கணர்க்கு சொன்னதாகவும், கொங்கணரும் அவர்தம் சீடர்களுக்கு வாலை பூஜையை விளக்கியதாகவும் சொல்கிறார். அதாவது போகரின் குரு நந்திசர், கொங்கணரின் குரு போகர், கொங்கணிரின் சீடர்கள் பலர் என்று போகர் பாடல்மூலமாக குருவின் மகத்துவத்தை விளக்குகிறார். ஸ்ரீ வாலைகுரு சுவாமியின் சிடர் ஸ்ரீ காசியானந்தர். இவர்கள் எல்லோருடைய தெய்வமும் அன்னை ஸ்ரீ வாலைதான் ஆவாள். சித்தர்களின் மேலான தெய்வம் வாலைதான் என்பதையும் உறுதிபடுத்துகிறார்.. கொம்மடிக்கோட்டையில் கோவில் கொண்டுள்ள ஸ்ரீ வாலைகுருசுவாமியும் அவர்தம் சீடர் ஸ்ரீ காசியானந்தரும் வாலையை வழிபட்டு சித்தி பெற்று இங்கேயே ஜீவ சமாதி கொண்டுள்ளார்கள். தன் தாய் (வாலை) பெயரையே தன் பெயரில் பெற்றுள்ளார்கள். தான் உபாசித்த தாயை உலக மக்களும் உபாசித்து சுகம் பெற வேண்டி ஸ்ரீ வாலையம்பிகைக்கும் சன்னதி கண்டு மக்கள் அனைவரையுமே தன் தாயை(அன்னையை) வணங்க வைத்திருக்கிறார்கள். இந்த பாலா சேத்திரத்தில் ,ஸ்ரீ வாலையை பூஜை செய்வதற்கும் , வணங்குவதற்கும் குருவின் அனுக்கிரகம் கண்டிப்பாக வேண்டும். சித்தர்கள் அனைவரும் குருமுகமாகவே தீட்சை பெற்றே வாலையை அடைந்தனர். ஸ்ரீ வாலைகுருசாமியும் அவர் தம் சீடர் ஸ்ரீ காசியானந்தரும் ஒரே கருவரையில் இருந்து அருள்பாலிக்கிறார்கள். இவர்கள் இருவரையும் முழுமையாக சரண் அடைந்து, குருவின் அனுக்கிரகத்தை முதலில் பெற்று ஸ்ரீ வாலையை வணங்கினால் அனைத்து பாக்கியங்களையும் பெறுவது நிச்சயம். இது மகான்களின் தியான பூமி. உணர்வு பூர்வமாக வழிபடவும். மகான்களின் ஆசி உண்டு. அனைத்தும் செயல்வடிவம் பெறும். குருவின் தரிசனமும் ஸ்ரீ வாலாம்பிகையின் தரிசனமும் ஒரே இடத்தில் கிடைப்பது அற்புதத்திலும் அற்புதம். அன்பர்களுக்கெல்லாம் இரு பெரும் ஞானிகளை குருவாக தந்து, அவர்கள் அருகிலே தானும் அமர்ந்து அருள் பாலிப்பது ஸ்ரீ பாலாவின் லீலா வினோதம் தான். ’'வாலை" ( Valai ) சித்தர்கள் வணங்கிய தெய்வம், சக்தி மிக்க ’பாலா’ என்னும் தெய்வம். ‘பாலா’ ( Bala ) உபாசனை சித்தர்கள் செய்தது. சித்தர்கள் ’பாலா தேவியை’ ‘வாலை’ என்பார்கள். சமஸ்கிருதத்தில் ’பாலா’. தமிழில் ‘வாலை’ - வாலாம்பிகை. ‘வாலையடி சித்தருக்கு தெய்வம் தெய்வம்’ என்பது வழிவழியாய் வந்த மொழி. வாலையை வழிபடும் தெய்வமாக கொண்டு ‘ஐம் கிலிம் ஸெள’ என்ற பாலா மந்திர மூன்றெழுத்தின் துணை கொண்டுதான் மூவுலகினையும் நினைத்த போதே சென்றடைந்தனர் சித்தர்கள். ஸ்ரீவித்தையில் எளிதானது ’பாலா’ மந்திரம் என்னும் வாலை மந்திரம். - கொங்கணர் சித்தரின் வாலை கும்மி - தன்வந்திரி சித்தர் நிகண்டு பாலா பத்து வயதுள்ள தேவி என்பார் கருவூரார். வாலை சித்தருக்கெல்லாம் தாய். ‘சித்தனோடு சேர்ந்தாளே சித்தாத்தா’ என்பது மெய்யான போற்றுதல். சித்தர்கள் ‘வாலையை’ உயர்த்திப் பேசுவதில் தவறில்லை. உலகம் வாலையில் அடக்கம் என்பது அதைவிட உண்மை. வாலையை பூசிக்க முற்பிறவி நற்பலன் இருந்தால் தான் முடியும் என்பது உண்மை. வாலை’ பத்து வயது சிறு பெண் தோற்றம் கொண்டிருந்தாலும் அவளே நமது அன்னை. அவளை தியானித்து அனுபவிப்போருக்குத் தெரியும் எத்தனை அற்புத காட்சியெல்லாம் அவள் காட்டுவிப்பாள் என்பது. வாலையை வழிபடுவோர்க்கு சுகம், பரமசுகம் கிடைக்கும். அவள் நல்லவர்க்கு நடுவே விளையாடுவாள். வல்லவர்க்கெல்லாம் வல்லவளாய் ஆட்சி செய்வாள். அவளை விட அரியதான சூட்சமம் ஏது? என்கிறார் கருவூரார் சித்தர் பெருமானார். அவள் உன்னதமான சூட்சுமக்காரி. நாத தத்துவத்தையும், சுத்த மாயயையும் , ஒங்கார நிலையையும் அவள் தன் உபாசகனுக்கு உணர்த்துவாள். ‘ஓங்கார சொருபிணி’ என்று சித்தர் கூட்டம் அவளையே போற்றும். அம்பிகையை பல வடிவங்களில் பக்தர்கள் வழிபடுகின்றனர். அவற்றில் குழந்தை வடிவமாக பாலா திரிபுரசுந்தரியாக அருளும் வடிவத்தின் பெருமைகள் சொல்லில் அடங்காதவை. லலிதா பரமேஸ்வரியின் விளையாட்டின் ரூபமாக பண்டாசுர வதத்தின்போது தோன்றியவள் பாலாதேவி. பண்டாசுர வதம் நடந்தபோது பண்டாசுரனின் புதல்வர்கள் போருக்கு வந்ததும் அவர்களை வதம் செய்ய பாலாதேவி தோன்றினாள். லலிதையின் அங்கத்திலிருந்து தோன்றியவள். இப்போதும் ஒன்பது வயது தோற்றத்தோடு கூடியதால் ‘ஸதாநவவர்ஷா’ எனவும் (ஸதா - எப்போதும், நவவர்ஷா - ஒன்பது வயதினள்). லலிதாம்பிகையினுடய வில்லிலிருந்து தோன்றிய வெள்ளை அன்னங்கள் பூட்டிய கர்ணீ ரதத்தில் ஏறி பண்டனின் புதல்வர்கள் முப்பது பேரையும் அழித்ததால் ‘பண்டபுத்ர வதோத்யுக்த பாலா விக்ரம நந்திதா’ (74ம் நாமம்) மற்றும் ஸ்ரீபாலா லீலாவிநோதி நீ: (965ஆம் நாமம்) எனவும் லலிதா ஸஹஸ்ர நாமத்தில் வஸின்யாதி வாக்தேவதைகள் இத்தேவியைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். பாலாதேவியின் திருவருள் கிட்டினால் லலிதாம்பிகையின் திருவருளும் உடனே கிட்டும் என்பது உபாசனா ரகஸ்யம். இந்த பாலா மந்திரம் த்ரைலோக்ய வசகாரிணீ என்று மந்திர சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. இவள் தன் இடக்கரத்தில் புத்தகத்தை ஏந்தியிருப்பது சகல வித்யைகளையும் சாதகர்களுக்கு அருளவே. (பங்கய வாசனப் பாலைக் கமலைப் பராசக்தியே – கமலை பராசக்தி மாலை) இவள் மறு கரத்தில் கொண்டுள்ள ஜபமாலை, அம்பிகையின் நாமத்தை அனைவரும் உச்சரிக்க வேண்டும் என்பதை உணர்த்தவே. அபய வரத கரங்கள் பக்தர்களைக் காக்கவும் கேட்ட வரங்களைத் தரவும் தயாராக உள்ளன. நித்ய கல்யாண சீலையான இவள், (நிவஸதி ஹ்ருதி பாலா நித்ய கல்யாண சீலா- பாலா தியான சுலோகம்) சகல நலன்களையும் இம்மையில் தந்து, மறுமையில் வீடு பேற்றையும் அளிக்க வல்லவள். ஸ்ரீவராஹி அம்மன் சன்னதி ஸ்ரீ வாலாம்பிகை சன்னதியின் அருகிலே உள்ளது. ஸ்ரீ சுவர்ண ஆகார்ஸண பைரவர் சன்னதி கோவிலின் வெளி பிரகாரத்தில் வடகிழக்கு மூலையிலே தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கோவிலின் வெளி பிரகாரத்தில் மஞ்சணத்தி மரத்தடியில் ஸ்தலவிருட்ச வினாயகரும், உச்சிஸ்ட கணபதியும் பக்தர்களுக்கு அருள் பாலித்து கொண்டு இருக்கிறார்கள். ஸ்ரீ வாலைகுரு சுவாமியே நேரில் வந்து திருமாத்திரையை கொடுத்து பக்தர் ஒருவரை பெரும் பிணியில் இருந்து காத்தருளியதாக ஐதிகம். அன்றுமுதல் அன்பர்கள் திருக்கோவிலில் உள்ள வேப்பிலை ,மஞ்சணத்தி இலை, வில்வம் இலை, புளிய இலை , எலுமிச்சை பழ சாறு இவற்றுடன் திருநீறு மற்றும் திருமண் சேர்த்து , திருக்கோவிலின் பிரகாரத்தில் உள்ள அம்மிகளில் அவரவர்களே அரைத்து, இறைவனின் திருவடியில் வைத்து பின் அருந்தி வருகிறார்கள். திருமாத்திரை அக மற்றும் புற நோய்களுக்கு அரு மருந்தாகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை கோவிலின் பிரகாரத்தில் உள்ள மஞ்சணத்தி மரமே ஸ்தலவிருட்சம். இந்த விருட்சத்தின் நிழலிலேயே ஸ்ரீ வாலைகுருசுவாமியும் ஸ்ரீ காசியானந்தரும் ஸ்ரீ வாலை பூஜை செய்து வந்ததாக நம்பப்படுகிறது. இந்த மரத்தின் இலை திரு மாத்திரையாகவும் பயன்படுகிறது. ஆரம்ப காலத்தில் இருந்த மஞ்சணத்தின் வயது பல நூறு வருடங்களுக்கு மேல் இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன்னதாக அந்த மரம் பட்டுப் போனது. பக்தர்கள் மன கவலையுடன் இருந்தனர். புதிய மஞ்சணத்தி கன்றுகளை நடலாம் என யோசனை எழுந்தது. புதிய மரம் எதுவும் நட தேவையில்லை, ”பட்டமரம் துளிர்க்கும்” என இறைவனின் உத்தரவு கிடைத்தது. உத்தரவு கிடைத்து சில மாதங்களிலேயே அதே இடத்தில் மஞ்சணத்தி மரம் துளிர்த்து , மரமாகி பக்தர்களின் மனக்குறையை போக்கியது. இதுபோல் இன்னும் எத்தனையோ அற்புதங்கள் தினம் தினம் நடந்துகொண்டே இருக்கிறது.. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டத்தில் கொம்மடிக்கோட்டை எனும் சிற்றூரில் அமைந்துள்ளது. கொம்மடிக்கோட்டை கிராமம் திசையன்விளை, சாத்தான்குளம், உடன்குடி போன்ற ஊர்களில் இருந்து பேருந்து மார்க்கமாக 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. திருநெல்வேலி - 71 கி.மி , நான்குநேரி - 41 கி.மி , வள்ளியூர் - 46 கி.மி , திருச்செந்தூர் - 27 கி.மி ஸ்ரீ வாலைகுருசுவாமி திருக்கோவிலில் தினசரி நான்கு கால பூஜை சிறப்பாக நடைபெற்றுவருகிறது. பௌர்ணமி தோறும் கிழ்கண்ட நிகழ்ச்சி நிரலின்படி சிறப்பு பூஜைகள் நடைபெறும். பகல் 12.30 மணி : உச்சிகால பூஜை தொடர்ந்து அன்னதானம். ஸ்ரீ சுவர்ணாகர்சண பைரவருக்கு மாலை 06.00 மணிக்கு சிறப்பு அபிசேகம் தொடர்ந்து பூஜை. திரிபதார்த்த ரூபாதி தசகாரிய அகவல் திரிபதார்த்த ரூபாதி தசகாரிய அகவல் என்னும் நூல் 16 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. நூல் மூன்று ஆசிரியப்பாவால் ஆனது. அவை முறையே 56, 36, 46 அடிகள் கொண்டவை. ஞானப்பிரகாசர் அறிவித்தபடி இந்த நூல் செய்யப்பட்டதாக இந்த நூலின் இறுதியில் உள்ள அடிகள் குறிப்பிடுகின்றன. ஆசு ஆகமம் அறைந்தது இது எனத் தேசிக மாமணி தென் கமலாபுரி நாசம் இல் சீர்த்தி ஞானப்ரகாசன் அருளிய அட்டவணையின் அடைவே பெரிதும் பயனுறப் பேசினன் அறியே. – என்பன அந்த அடிகள். இவற்றுள் ஆன்மரூபம் முதலான சி நிலைகள் உமாபதியார் செய்த சிவப்பிரகாசத்தின் இறுதியில் கூறப்பட்டுள்ளன. உண்மைநெறி விளக்கம் என்னும் சித்தாந்த சாத்திரம் இப் பத்தையும் கூறுவதற்கென்றே எழுந்த தனி நூல். இதில் ஆறு பாடல்கள் உள்ளன. தத்துவப்பிரகாசம் என்னும் பெருநூல் இவற்றை விரிவாகச் சொல்கிறது. இந்த வரிசையில் 102 பாடல்களைக் கொண்டதாய் 15 ஆம் நூற்றாண்டில் களந்தை ஞானப்பிரகாசர் செய்த தசகாரியம் என்னும் நூல் விரிந்துள்ளது. இவை அன்றிச் சைவச் சிறுநூல்கள் பலவும் உள்ளன. தசகாரியத்தை மேலும் பிரித்துக் கூறும் நூல்களும் உள்ளன. அவற்றுள் ஒன்று தசக்கிரமக் கட்டளை. மு. அருணாசலம் எழுதி{ஃ ‘சித்தாந்தம்’ என்னும் இதழில் வெளிவந்துள்ளது. தத்துவப் பிரகாசம் நூலிலேயே இந்த விரிந்த முறை உள்ளது. தத்துவரூபம், ஆன்மரூபம், சிவரூபம் என்னும் படிநிலைகள் ஒவ்வொன்றும் உருவம், சொரூபம், சுபாவம், விசேடம், வியாத்தி, வியாபகம், குணம், வன்னம் – என்னும் எட்டாகப் பாகுபாடு செய்யப்பட்டுள்ளன. இவற்றை இந்த நூலில் இவை பத்தும் - சுபாவம், வியாத்தி, வியாபகம், குணம், விசேடம், ரூபகம், ரூபம், சொரூபம், தரிசனம், சுத்தி – என வரிசை மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. ‘வன்னம்’ என்பதை இந்த நூல் ‘ரூபம்’ எனக் குறிப்பிடுகிறது. ஆன்ம தசகாரியம் என வரும்போது ‘ஆன்மலாபம்’ என்பதைச் சேர்த்து 11 என இந்நூல் குறிப்பிடுகிறது. ஜூல்-தாம்சன் விளைவு வெப்பவியக்கவியலில், ஜூல்-தாம்சன் விளைவு ("Joule–Thomson effect") அல்லது ஜூல்-கெல்வின் விளைவு ("Joule–Kelvin effect") என்பது வளிமம் அல்லது நீர்மம் ஒன்று சிறு திறப்பு அல்லது நுண்துளை அடைப்பான் ஊடாகச் செலுத்தப்படும் போது, வெப்பம் எதுவும் சுற்றுச்சூழலுக்கு இழக்காமல் இருக்கும் போது அதன் வெப்பநிலை மாற்றம் அடைவதைக் குறிக்கும் விளைவு ஆகும். இது "வாயிலிறுக்குஞ்செய்கை" ("throttling process") என அழைக்கப்படும். அறை வெப்பநிலையில், நீரியம், ஈலியம், நியான் ஆகியவை தவிர்ந்த வளிமங்கள் ஜூல்-தாம்சன் விளைவினால் விரிவடையும் போது குளிர்மை அடைகின்றன. இவ்விளைவு ஜேம்ஸ் பிரிஸ்காட் ஜூல், வில்லியம் தாம்சன் ஆகியோரின் பெயரால் அழைக்கப்படுகின்றது. 1852 ஆம் ஆண்டில் இவர்கள் இதனைக் கண்டுபிடித்தனர். சிறு திறப்பு வழியாக ஒரு வளியானது விரிவடையும் போது பொதுவாக குளிர்ச்சி ஏற்படுகிறது. இது திறப்பின் இருபக்கமும் உள்ள வளியின் அழுத்த வேறுபாட்டைப் பொறுத்திருக்கிறது. இதற்குக் காரணம் வளி விரிவடையும் போது வளிமூலக்கூறுகள் தங்களுக்கு இடையேயுள்ள கவர்ச்சி விசைக்கு எதிராகச் செயல்படுவதாகும். இதற்குத் தேவையான ஆற்றல் அவ்வளியிலிருந்தே பெறப்படுகிறது. வெப்பநிலை மாற்றம், வளியானது பாயில் விதியிலிருந்து மாறுபடுவதாலும் தோன்றக்கூடும். இது குளிர்வதாகவோ அல்லது வெப்பநிலை கூடுவதாகவோ இருக்கும். இந்த விளைவிற்கு வளியின் முதல் வெப்பநிலையும் அழுத்த வேறுபாடுமே காரணங்கள். இவ்விரு விளைவுகளின் முடிவான பயன் ஜூல்-தாம்சன் விளைவாக இருக்கிறது. கொடுக்கப்பட்ட ஒரு சராசரி அழுத்தத்தில் , எந்த வெப்பநிலையில் இவ்விரு விளைவுகளும் சமநிலையில் இருக்கிறதோ அந்த வெப்பநிலை 'நிலைமாறு வெப்பநிலை' (Temperature of inversion) எனப்படும். இந்த வெப்பநிலைக்குக் கீழான வெப்பநிலையில் விரிவடையும் போது குளிர்ச்சியும் இல்லாவிடில் வெப்ப அதிகரிப்பும் தோன்றும். ஜூல்-தாம்சன் விளைவு ஒன்றில், மாறா வெப்ப அடக்கத்தில் formula_1, அழுத்தம் formula_2 உடன் வெப்பநிலை மாறுவீதம் formula_3 "ஜூல்-தாம்சன் (கெல்வின்) குணகம்" ("Joule–Thomson (Kelvin) coefficient" formula_4) எனப்படும். இக்குணகம் வளிமத்தின் கனவளவு formula_5, மாறா அழுத்தத்தில் அதன் வெப்பக் கொண்மை formula_6, அதன் வெப்பவிரிவுக்கெழு formula_7 ஆகியவற்றில் பின்வருமாறு தரப்படும்: formula_4 இன் மதிப்பு °C/பார் (SI அலகுகளில்: K/Pa) இல் தரப்படும். இது வளிமத்தின் வகையிலும், அது விரிவடைவதற்கு முன்னர் அதன் வெப்பநிலை, மற்றும் அழுத்தத்திலும் தங்கியிருக்கும். அனைத்து உண்மை வாயுக்களுக்கும் ஒரு நேர்மாற்றுப் புள்ளி ("inversion point") காணப்படும். இப்புள்ளியில் formula_4 இன் குறி மாறும். இப்புள்ளியில் வெப்பநிலை, "ஜூல்-தாம்சன் நேர்மாறு வெப்பநிலை", விரிவடைவதற்கு முன்னர் வளிமத்தின் அழுத்தத்தில் தங்கியிருக்கும். உண்மை வாயு ஒன்றை எப்போது ஜூல்-தாம்சன் விளைவு குளிர அல்லது சூடாக்கும் என்பதைப் பின்வரும் பட்டியல் தெரிவிக்கிறது: ஈலியம், நீரியம் ஆகியவற்றிற்கு ஒரு வளிமண்டல அமுக்கத்தில் ஜூல்-தாம்சன் நேர்மாறு வெப்பநிலை மிகக் குறைவு (உ-ம்: ஈலியத்திற்கு 51 K (−222 °C)). நைதரசன், ஆக்சிசன் ஆகியவற்றிற்கு, நேர்மாறு வெப்பநிலை முறையே 621 K (348 °C), 764 K (491 °C) ஆகும். இலட்சிய வாயு ஒன்றிற்கு, formula_4 எப்போதும் சுழியமாக இருக்கும். அர்த்தஸ்வஸ்திகம் அர்த்தஸ்வஸ்திகம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இதுவே இருபத்தியிரண்டாவது கரணமாகும். கால்களை ஸ்வதிஸ்மாக வைத்து,வலது கையைக் கரி ஹஸ்தமாக இடுப்பில் வைத்து, இடது கையைப் பாதி ஸ்வதிஸ்மாக மார்பின் மேல் வைத்து ஆடுவது அர்த்தஸ்வஸ்திகமாகும் விக்ஷிப்தாக்ஷிப்தம் விக்ஷிப்தாக்ஷிப்தம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இதுவே இருபத்தியோராவது கரணமாகும். வலது காலை வீசி நின்று,வலது கையை வீசி, இடது கை கால்களை முன் போல வைத்து ஆடுவது விக்ஷிப்தாக்ஷிப்தகமாகும். அஞ்சிதம் அஞ்சிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இதுவே இருபத்தி மூன்றாவது கரணமாகும். கால்களை மாறிவைத்து,வலது உள்ளங்கால் வெளியில் தெரியும் வண்ணம் வைத்து,இடது கையைச் சூசியாக மூக்கு நுனியை நோக்கி நீட்டி வலதுகையைக் குறுக்காக இடது பக்கம் நீட்டி நின்று ஆடுவது அஞ்சிதமாகும் புஜங்கத்ராசிதம் புஜங்கத்ராசிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இதுவே இருபத்திநான்காவது கரணமாகும். காலை வளைத்து உயரத்தூக்கி,முக்கோண வளைவாகத் தொடையை வளைத்து,இடுப்பு முழந்தாளையும் வளைத்து நின்று ஆடுவது. அதாவது பாம்பை கண்டு அஞ்சி ஓடுவது போன்ற நிலை. வலது கையைத் தோலஹஸ்தமாகவும் இடது கையைக் கடகாமுகமாகவும் வைத்து கொள்வது புஜங்கத்ராஸிதமாகும் ஊத்வஜானு ஊத்வஜானு என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இதுவே இருபத்தியைந்தாவது கரணமாகும். வலது முழந்தாளை மர்பினளவாக உயர்த்தி அதற்கேற்ப வலது கையையும் வீசி நின்று, இடது கையை இடது தோளுக்கு நேராகக் கடகாமுகமாகப் பிடித்து நின்று ஆடுவது ஊத்வஜானுவாகும். நிகுஞ்சிதம் நிகுஞ்சிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது இருபத்தியாராவது கரணமாகும். தேளின் கொடுக்குப் போலக் காலை வைத்து,கையைப் பக்கத்தில் தொங்க விட்டு,இடது கையை முக்கின் நேராகப் பிடித்து ஆடுவது நிகுஞ்சிதமாகும். மத்தல்லி மத்தல்லி என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது இருபத்தியேழாவது கரணமாகும். வலது கால் நுனியை ஊன்றி,இடதுக் காலைக் குறுக்காக அமைத்து வலது கையைக் தொடைக்கு மேல் வைத்து,இடது கையைக் கடக முகமாக மார்பிற் சேர்த்து மத்தளக்காரன் போல நின்று ஆடுவது மத்தல்லியாகும். அர்த்தமத்தல்லி அர்த்தமத்தல்லி என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது இருபத்தியெட்டாவது கரணமாகும். இடதுக் காலைக் குறுக்காக அமைத்து வலது கையைக் தொடைக்கு மேல் வைத்து,இடது கையை மட்டும் வீசி நின்று ஆடுவது அர்த்தமத்தல்லியாகும் ரேசித நிகுட்டம் ரேசித நிகுட்டம் அல்லது ரேசிதநிகுட்டிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது இருபத்தியொன்பதாவது கரணமாகும். வலது கையை வீசி,வலது காலை மடக்கி வாம ஹஸ்தத்தை தோலஹஸ்தமாகக் கொண்டு நின்று ஆடுவது ரேசிதநிகுட்டிதமாகும். பாதாபவித்தகம் பாதாபவித்தகம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது முப்பதாவது கரணமாகும். குதிகாலைத் தூக்கிக் கால் நுனியை ஊன்றி நின்று, நாபிக்கு நேரே கைகளை அமைத்து, இரண்டவதாகிய பாதத்தை அபவித்தகரணமாக வைத்து அதாவது தொடைகளால் சுழற்றி நடித்தல் பாதாபவித்தகமாகும் மூன்றாம் நிலை மூலம் மூன்றாம் நிலை மூலம் ("Tertiary source") என்பது முதல் நிலை மூலங்களையும் இரண்டாம் நிலை மூலங்களையும் பற்றிய தகவல்களை திரட்டித் தரும் மூலமாகும். இதற்கு உதாரணங்களாக காலக்கோடுகள், வழிகாட்டி கையேடுகள், கலைக்களஞ்சியங்கள் போன்றவற்றைக் கூறலாம். நிகழ்வுகள், கல்வெட்டுகள், இலக்கியப் பாடல்கள், எழுத்துப்பெயர்ப்புகள் (Transliteration) இவை எல்லாம் முதல் நிலை மூலங்கள் ஆகும். இவற்றில் அந்த துறை வல்லுநரின் பார்வையோ விமர்சனமோ இல்லாமல் மூலங்கள் அப்படியே கொடுக்கப்பட்டிருக்கும். முதல் நிலை மூலங்களான நிகழ்வுகள், கல்வெட்டுகள், இலக்கியப் பாடல்கள், மொழிபெயர்ப்புகள் போன்றவற்றை அத்துறை வல்லுநர்கள் ஆராய்ந்து அதை நூலாகவோ அல்லது வேறு ஊடகத்திலோ தன் கருத்துக்களையும் சேர்த்து வெளியிட்டிருந்தால் அவை இரண்டாம் நிலை மூலங்கள் எனக் கொள்ளலாம். பின்வரும் கருத்துகள் இரண்டாம் நிலை மூலங்களான வரலாற்று ஆய்வு நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை. மூன்றாம் நிலை மூலம் என்பது முதனிலை மூலங்களைக் குறித்த/ஆராய்ந்த இரண்டாம் நிலை மூலங்களின் தகவல்களைத் திரட்டித் தரும் மூலங்களாகும். உதாரணத்திற்கு ஒரு முதனிலை மூலமான ஒரு கல்வெட்டைப் பற்றி இரண்டாம் நிலைமூலங்களில் பல ஆய்வாளர்கள் பல பார்வையில் எழுதியிருக்கலாம். முதல் ஆய்வாளர் அதை ஒரு மொழி எழுத்து எனக் கூற மற்ற ஆய்வாளர்கள் அதை இன்னொரு மொழி எனக் கூறி இருப்பின் அந்த இரண்டு தகவல்களையும் நடுநிலையாகத் தருவதே மூன்றாம் நிலை மூலமாகும். கீழுள்ள எடுத்துக்காட்டு தமிழ் மொழிக் கல்வெட்டுகள் குறித்து பல்வேறு அறிஞர்களின் கறுத்துக்களை திரட்டித் தரும் மூன்றாம் நிலை தரவாகும். பெரும்பாலும் கலைக்களஞ்சியங்களில் இதைப் போன்ற நடையிலேயே தகவல்கள் திரட்டப்பட்டு தரப்படுகின்றன. லிட்ச்பீல்டு தேசிய பூங்கா லிட்ச்பீல்டு தேசிய பூங்கா ("Litchfield National Park"), ஆஸ்திரேலியாவின் வடபுலத்தில் அமைந்துள்ள ஒரு தேசிய பூங்காவும் சுற்றுலா மையமும் ஆகும். இது டார்வின் நகரின் தென்மேற்கே 100 கிமீ தூரத்தில் பாச்சிலர் என்ற நகருக்கு அண்மையில் அமைந்துள்ளாது. இதன் மொத்தப் பரப்பு கிட்டத்தட்ட 1500 கிமீ ஆகும். ஆண்டுதோறும் ஏறத்தாழ 260,000 சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து போகின்றனர். 1986 ஆம் ஆண்டில் இது தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது. 1864 இல் வட ஆட்புலத்தை ஆராய்ந்த பிரெடெரிக் என்றி லிட்ச்பீல்டு என்பவரின் நினைவாக இப்பூங்கா லிட்ச்பீல்டு தேசிய பூங்கா என அழைக்கப்பட்டது. இங்கே மிக அழகான பூங்கா, நீச்சல் குளம் மற்றும் அருவியும் அமைந்துள்ளது. மிகப் பெரிய கறையான் புற்றுகள் மலை போல் அமைந்துள்ளன. இந்த பூங்காவில் புலொரென்சு மற்றும் வாங்கி அருவி மிகவும் குறிப்பிடத்தக்கது. ஆண்டு முழுவதும் நீச்சல் செய்ய தகுந்தது. இந்தப் பூங்காவிலேயே 'தொலைந்த நகரம்' என்று ஒரு பகுதி பழமையான கலாசாரத்தை நினைவூட்டும் வகையில் இருக்கிறது. பூங்காவை சுற்றி நடக்கும்போது பல விலங்குகள் மற்றும் பறவைகளையும் காணலாம். ஆத்திரேலியப் பழங்குடிகள் இப்பகுதியில் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வந்தனர். பத்துநாள் விதி பத்துநாள் விதி (Ten day rule) கருவுறும் வாய்ப்புடைய தாய்மார்களிடம் அடிவயிற்றுப் பகுதியினை, மாதவிடாய் தோன்றிய முதல் பத்து நாட்களுக்குள் கதிர்ப்படம் எடுப்பதில் கேடில்லை என்பதைக் கூறுகிறது. பொதுவாக, கதிர் வீச்சு உடல் நலனைப் பாதிக்கும். கருவில் இருக்கும் குழந்தை மிகவும் கதிர் உணர்திறனுடையது. குறைந்த அளவு கதிர் ஏற்பளவும் கூட பிறக்க இருக்கும் குழந்தையிடம் பல தீய விளைவுகளைத் தோற்றுவிக்கும். குழந்தை இறந்தும் பிறக்கக்கூடும். எனினும் பத்து நாள் விதிப்படி, மாதவிடாய் தோன்றிய முதல் பத்து நாட்களில் கருவுறும் வாய்ப்பு மிகவும் குறைவு என்பதால் இந்தப் பத்து நாட்களில் கதிர்ப்படம் எடுக்கும்போது கதிர் வீச்சின் தீய விளைவுடன் குழந்தை பிறக்கக்கூடும் என்கின்ற அச்சம் இல்லை. அஷ்டாவக்ர கீதை அஷ்டாவக்ர கீதை ("Ashtavakra Gita") வேதாந்த விசயத்தில் சந்தேகங்கள் தீர்ந்து அனுபவத்தில் நிலை பெற முயலும் சாதகர்கள் (சாதகர்கள் என்பவர்கள் யோகம், தியானம், ஞானம் ஆகியவற்றில் பயிற்சி பெறுபவர்கள்) "பற்றற்று, பணியற்று, மாசற்று" அத்வைத உயர் நிலையிலுள்ள ஞானியாவதற்கு பெரிதும் துணைபுரியும் கேள்வி-பதில் வடிவில் அமைந்தது, சமக்கிருதத்தில் எழுதப்பட்டது. இருபது அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. இவற்றில் 1,3,5,8,10,11,15,16,17,18 ஆகிய அத்தியாயம் அஷ்டாவக்ரருடைய உபதேசமும், 2,4,6,7,12,13,14,19,20 ஆகிய அத்தியாயம் ஜனகனின் கேள்விகளாகும். கீதை பல அறியப்பட்டாலும், இராமாயண காலத்திற்கு முந்தியது ரிபு கீதை அடுத்து இராமாயண காலத்தில் அஷ்டாவக்ர கீதை, மகாபாரதத்தில் பகவத் கீதை மற்றும் பாகவத புராணத்தில் உத்தவ கீதை இன்று வரை பேசப்பட்டும், மேற்கோள்கள் காட்டப்பட்டும் வருகிறது. ஜனகன் தனது அரசவையின் தலைமை வித்வான் வேதாந்த நூல் ஒன்றில் சொல்லப்பட்ட தகவல் குறித்து உரையாடிக் கொண்டிருந்த போது, அந்த நூலில் பிரம ஞானம் பெறுவது குதிரை ஏறும் ஒரு மனிதன் குதிரையின் சேணத்தில், ஒரு காலை வைத்து மற்றொரு காலை எடுத்து வைக்கும் நேரத்திற்குள் பிரம்ம ஞானம் பெறலாம் என்றிருந்தது. ஜனகன் உரையாடலை நிறுத்தி "இந்த வாக்கியத்தின் உண்மையை இறுதி செய்யும் பொருட்டு ஒரு குதிரையைக் கொண்டுவரச் சொல்லவா?" எனக் கேட்டான். "ஞான அனுபவத்தை நிரூபிப்பது என்னால் இயலாது" என்று பின்வாங்கினார். இந்த வாக்கியத்தில் உள்ளதை நிரூபிப்பது என்னால் இயலவில்லை என்பதால், பொய்யென்று சொல்ல முடியாது" என்று கூறிய வித்வான்களை சிறையில் அடைத்தார் அரசன். அரசனி சந்தேகத்தை நீக்கும் பொருட்டு, உடல் எட்டு கோணலாக இருந்த அஷ்டவக்கிரன் எனும் இளைய முனிவரை, மக்கள் ஜனகனின் அரச சபைக்கு கூட்டிச்சென்றனர். அஷ்டாவக்ரரை நோக்கி "முனிவரே குதிரை கொண்டு வரச் சொல்லவா?" எனக் கேட்டார். அஷ்டாவகரர் அரசனிடம் "அரசே அவசரப்பட வேண்டாம் தாங்கள் கேட்ட சந்தேகத்தை போக்க தனி இடத்திற்கு செல்ல வேண்டும்" அதற்கு ஏற்பாடு செய்க என்றார். அரசன் கட்டளைப்படி அஷ்டாவகரர் பல்லக்கிலும் அரசன் படை பரிவாரங்களுடனும் அஷ்டாவக்ரரை தொடர்ந்து காட்டிற்கு சென்றனர். காடு நெறுங்கியதும் அஷ்டாவகரர் அரசனிடம் "அரசே உங்கள் படை பரிவாரங்கள் திரும்பிப் போகட்டும் நாம் இருவர் மட்டும் தனித்து இருப்பது" நல்லது என்று கூறினார். அரசனும் தனது படை பரிவாரங்களை திருப்பி அனுப்பியவுடன், குதிரை மீது இருந்த அரசன் முனிவரே நான் கீழே இறங்க உதவுங்கள் என வேண்டினான், அஷ்டாவகரர் அரசனிடம் "அரசே தங்கள் கூறும் நூலில் ஞானம் குருவினால் சீடனுக்கு அருளப்படுவது என உள்ளதே அந்த நிலையில் நாம் இருப்பது உண்மைதானா?" எனக் கேட்டார். அரசனும் அஷ்டாவகரரை வணங்கி "நான் தங்களுக்கு சீடனானேன் அருள் புரிக" என்றான், அஷ்டாவகரர் அரசனிடம் "ஜனகா உண்மையான சீடன் தன்னையும், தன்னுடையதையும் குருவுக்கு அர்ப்பணிக்க வேண்டும்" எனறார். அரசனும் "அவ்வாறே அர்பணம் செய்கிறேன்" என்றான். அஷ்டாவகரர் அரசனிடம் "அவ்வாறே" எனக்கூறி மறைந்து போனார். அரசனும் அந்த இடத்திலேயே சிலையைப் போல ஆடாமல் அசையாமல் நின்றுவிட்டான். பொழுது சாய்ந்து நீண்ட நேரமாகியும் மன்னன் திரும்பாததால் அமைச்சர் மற்றும் ஏனையோரும் மன்னனைத் தேடி காட்டிற்கு வந்தனர். மன்னன் சிலையென நிற்பதையும் அஷ்டாவகரர் அங்கு இல்லாத்தும் கண்டு அதிர்சியுற்றனர். மன்னன் இவர்கள் அனைவரும் அங்கு இருப்பதையே உணராமல் மயக்க நிலையிலேயே இருந்தான். அமைச்சரும் மற்றவர்களும் அரசனை ஒரு பல்லக்கில் படுக்க வைத்து அரண்மனைக்கு கொண்டு சென்றனர். மறுநாள் காலை வரை அரசனிடம் எந்த மாற்றமும் இல்லாதது கண்டு அஷ்டாவகரரை கண்டுபிடித்து வர படைகளை அனுப்பி வைத்தனர். மாலை நேரத்தில் சில படைவீர்ர்கள் அஷ்டாவகரரை கொண்டுவந்தனர், முதன் மந்திரிக்கு மிகுந்த கோபம் இருந்தாலும் அரசனின் நலனைக் கருதி அரசனை பழைய நிலைக்கு கொண்டுவரக் கேட்டுக்கொண்டார். அரசனின் இந்த நிலைக்கு அஷ்டாவகரரே காரணமென குற்றம் சுமத்தினர், அதற்கு அஷ்டாவகரர் அரசனிடம் இதை கேட்டுவிடலாம் என்று கூறி "ஜனகா "என அழைத்தார், அரசனும் "சுவாமி" என வணங்கினான். அஷ்டாவகரர் அரசனிடம் "ஜனகா நான் உன்னை மிகவும் பரிதாபகரமான நிலைக்கு கொண்டு வந்து விட்டதாக குற்றம் சாட்டுகிறார்கள்" என்றார். அரசன் கோபமுற்று "யார் அப்படிச் சொன்னது" என கேட்டான். மந்திரிகளும் மற்றவரும் பயந்து மன்னரை நல்ல நிலைக்குக் கொண்டுவர முனிவரை வேண்டினர். அஷ்டாவகரர் அரசனிடம் "ஜனகா நீ ஏன் இவ்வாறு இருக்கிறாய், உலக நடைமுறைக்கு மாறாக இருப்பதேன் எல்லோரையும் போல் இருப்பது தானே?" என்றார். "முனிவரே நான் உமது சீடன் உமது ஆணைப்படியே நடப்பேன்" என்றான், "உனக்கு ஞானத்தை போதிக்கவே உன்னை இவ்வாறு சோதித்தேன், உடை களைந்து உணவு உண்டுவா பின்னர் நாம் பேசலாம்" என்று அஷ்டாவகரர் அரசனிடம் கூறினார். அதன் பிறகு அஷ்டாவகரர் அரசனிடம் உபதேசித்த பிரம்ம ஞானமும் ஜனகர், அஷ்டாவகரரிடம் கேட்ட கேள்விகளுமே அஷ்டாவக்ர கீதை ஆகும். குசேலர் இந்து தொன்மவியலில் சுதாமா எனப் பெயர் கொண்ட குசேலர் கிருஷ்ணரின் இளமைக் கால நண்பர். உஜ்ஜையினில் உள்ள சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில் இருவரும் குருகுலக் கல்வி பயின்றவர்கள். குசேலர் இன்பங்களில் பற்று அற்றவர். புலனடக்கம் மிகுந்தவர். குருகுலக் கல்வி முடிந்தவுடன் இருவரும் பிரிந்து தத்தமது இருப்பிடங்களுக்கு சென்றனர். குசேலர் பரம ஏழை. குசேலர், தனது மனைவி மக்களுடன் பல நாட்கள் அன்னமின்றி பட்டினியாக வாழ்க்கை நடத்தினர். வீட்டின் பரிதாபமான நிலையை கணவருக்கு எடுத்துச் சொல்லி, துவாரகை நகரில் இருக்கும் ஸ்ரீகிருஷ்ணரை பார்த்து வாருங்கள் என்று வேண்டிக் கொண்டாள். பொருட்ச்செல்வத்திற்காக தன் நண்பரான கிருஷணரிடம் செல்ல முடியாது என்று குசேலர் மறுத்து விட்டார். ஆனால் குசேலரின் மனைவியோ, எனக்காக இல்லாவிட்டாலும், பசியால் வாடித் துடிக்கும் நமது குழந்தைகளின் பசிப்பிணியை நீக்குவதற்காகவது நீங்கள் அவசியம் கிருஷ்ணரை ஒரு முறையாவது பார்த்து விட்டு வாருங்கள் என்றாள். தயங்கிய குசேலர், இதைக் காரணமாகக் கொண்டு, கிருஷ்ணரின் பெறுதற்கரிய தரிசனம் கிடைக்குமே என்று துவாரகைக்குப் புறப்பட முடிவு செய்தார். வெறுங்கையுடன் எவ்வாறு கிருஷ்ணரை சந்திப்பது என்று கேட்டார் குசேலர். உடனே அவரது மனைவி பக்கத்து வீடுகளில் சென்று நான்கு பிடி அவல் பெற்றுக் கொண்டு வந்து அதை ஒரு கந்தல் துணியில் சிறு மூட்டையாகக் கட்டி, ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம் என்று கூறிக்கொண்டே குசேலரிடம் கொடுத்து அனுப்பினாள். குசேலர் துவாரகை நகருக்கு நடைபயணமாக சென்றார். அங்கு கிருஷ்ணரின் மாளிகையின் வாசலில் வந்து சேர்ந்தார். அரண்மனை வாயிற்காப்பாளர்கள் குசேலர் அரண்மனை வாயிலில் காத்திருக்கும் செய்தியை கிருஷ்ணரிடம் கூறினார்கள். ’குசேலர்’ என்ற பெயரைக் கேட்டவுடன் தம்மை மறந்த நிலையில் கீரிடம், பட்டுப்பீதாம்பரம், காலணிகள் கூட அணிய மறந்து, ஓடோடிச் சென்று குசேலரைக் காண அரண்மனை வாசலுக்கே வந்து குசேலரை வரவேற்று அரண்மனைக்கு உள்ளே அழைத்து சென்றார். ஸ்ரீகிருஷ்ணர் தனது நண்பர் குசேலரை உயர்ந்த ஆசனத்தில் அமர வைத்து, அவரது உடலில் நறும் மணம் கமழம் சந்தனம் பூசி, நெற்றியில் கஸ்தூரி குங்குமம் இட்டார். அகர்மணம் நிறைந்த தூபம் மற்றும் நெய் தீபம் காட்டிப் பூசை செய்தார். சிறப்பான விருந்து அளித்து, தாம்பூலம் வழங்கினார். கிருஷ்ணரின் மனைவி ருக்மணிதேவி தனது பணிப்பெண்களுடன் வந்து, இரத்தினம் பதித்த பிடி உடைய விசிறியை கையில் ஏந்தி குசேலருக்கு வீசி குளிர்ச்சி அடையச் செய்தாள். நண்பர் குசேலரை பார்த்து, எனக்கு அளிக்க எதாவது கொண்டு வந்திருப்பீரே என்று கிருஷ்ணர் கேட்டார். கிருஷ்ணரின் எல்லையற்ற செல்வத்தைப் பார்த்த குசேலர், அவருக்காக கொண்டு வந்த அவலைத் தரத் தயங்கினார். அப்போது எல்லோருடைய உள்ளங்களில் உள்ள விசயங்களை அறியும் கிருஷ்ணர், குசேலர் தம்மிடம் வந்த காரணத்தைத் தெரிந்து கொண்டார். குசேலர் தன்னுடைய நிஷ்காம்ய பக்தர். அன்புள்ள நண்பர். செல்வம் வேண்டி ஒரு நாளும் என்னை வழிபட்டவர் அல்ல. தன்னுடைய மனைவியின் தூண்டுதலின் பேரில் என்னிடம் வந்திருக்கிறார். ஆகவே, இவருக்கு அனைத்து செல்வங்களையும் தருவேன். முக்தியும் அளிப்பேன். தேவர்களுக்கும் கிட்டாத அருள்புரிவேன் என்று எண்ணினார் கிருஷ்ணர். நண்பரே, நீங்கள் எனக்கு அன்புடன் கொடுத்த அவல் என்னை மிகவும் மகிழச்செய்கிறது என்று கூறிக் கொண்டே ஆங்காங்கே சிதறிய அவலை பொறுக்கி எடுத்து கிருஷ்ணர் வாயில் போட்டுக் கொண்டு சுவைக்க ஆரம்பித்தார். பக்தன் அன்போடு கொண்டு வந்த காணிக்கையை இவ்விதம் சாப்பிட்டு கிருஷ்ணர் தமது ஒப்பற்ற அன்பை பக்தனிடம் காட்டினார். சில நாட்கள் மிகவும் ஆனந்தத்துடன் கிருஷ்ணரின் அரண்மனையில் தங்கிய குசேலர், ஸ்ரீகிருஷ்ணரிடம் பிரியா விடைப் பெற்றுக் கொண்டு வெறுங்கையுடன் தன் ஊரை நோக்கிப் புறப்பட்டார். கிருஷ்ணரின் லீலையால் தனது குடிசை வீடு தங்க மாளிகையாக காட்சி அளித்தது. மனைவி மக்கள் நல்லாடைகளுடன், உயர்ந்த நகைகளுடன் காட்சி அளித்தனர். தம் மனைவி மக்கள் உயர்ந்த உணவுகளை உண்டு வாழ்ந்த காட்சியைக் கண்ட சுதாமன் என்ற குசேலர் எல்லாம் கிருஷ்ணரின் செயல் என்று உணர்ந்தார். தனக்கு கிருஷ்ணர் இந்த செல்வங்கள் தராமல் இருந்திருந்தால் நன்மையாக இருந்திருக்கும். செல்வம் ஒரு மனிதனுக்கு கர்வத்தை கொடுத்து வீழ்ச்சி அடையச் செய்யும் என்று உணர்ந்த குசேலர் பற்று அற்ற மனப்பாங்குடன் கிருஷ்ணரை வழிபடுவதிலே தம் காலம் முழுவதும் கழித்தார். ஸ்ரீமத் பாகவதம் திரு அதிகைக் கலம்பகம் திரு அதிகைக் கலம்பகம் (திருவதிகைக் கலம்பகம்) என்னும் நூலின் பெயர் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நூல். இந்த நூல் கிடைக்கவில்லை. மு. இராகவையங்கார் பல்லவர், பாண்டியர், சோழர் கல்வெட்டுகளை ஆராய்ந்து சாசனத் தமிழ்க்கவி சரிதம் என்னும் நூலை உருவாக்கி வெளியிட்டுள்ளார். இதில் சங்ககாலம் முதல் 18 ஆம் நூற்றாண்டு வரையிலான புலவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள நூல்தான் இந்த்த் திருவதிகைக் கலம்பகம். இந்த நூல் ‘திருவதிகை வீரட்டானமுடைய தம்பிரானார்’ மீது பாடப்பட்ட நூல். உத்தண்ட வேலாயுதக் கவி என்பவர் இந்த நூலைப் பாடிய புலவர். இதனைப் பாடியமைக்காக இந்தப் புலவருக்குத் திருவதிகைக் கோட்டைக்குள் வீடும் நிலமும் வழங்கப்பட்ட செய்தி இக் கோயிலிலுள்ள 1536 ஆம் ஆண்டுக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. புலவர் திருவதிகையில் வாழ்ந்த அந்தணர். கௌண்டின்ய கோத்திரத்தவர். இவரது செந்த ஊர் தொண்டைநாட்டுச் சாலியூர்க் கோட்டத்துத் தனி ஊரான உத்திர மேரூரைச் சேர்ந்த ‘மகிபால குலகால கேசரி’. வீரவல்லி தேவராச பட்டர், காசிநாதர், குப்பையன் என்னும் பெயர்களும் இவருக்கு உண்டு. மார்க்கெசான் மொழி மார்க்கெசான் மொழி என்பது, மார்க்கெசக் குழுவில் உள்ள, கிழக்கு-நடுப் பொலினீசியக் கிளைமொழித் தொகுதியைச் சேர்ந்த ஒரு மொழியைக் குறிக்கும். இம் மொழிகள் பிரெஞ்சுப் பொலினீசியாவின் மார்க்கெசசுத் தீவுகளில் பேசப்படுகின்றன. இம்மொழிகளைப் புவியியல் அடிப்படையில் வடக்கு மார்க்கெச மொழிகள், தெற்கு மார்க்கெச மொழிகள் என இரண்டாக வகைப்படுத்துகின்றனர். வடக்கு மார்க்கெசக் கிளைமொழிகள், உவா பு, நுக்கு இவா ஆகிய தீவுகளிலும், தெற்கு மார்க்கெசக் கிளைமொழிகள் இவா ஓவா, தகுவாத்தா, பாத்து இவா ஆகிய தீவுகளிலும் வழக்கில் உள்ளன. உவா உக்கா தீவைச் சேர்ந்த கிளைமொழிகளைச் சிலர் வடக்கு மார்க்கெச மொழியாக வகைப்படுத்துவது உண்டு. ஆனாலும், இவை மாறுநிலை மொழிகளாகும். இத்தீவு வடக்கு மார்க்கெசசுப் பகுதிக்குள் அடங்கியிருந்தாலும், இங்கு பேசப்படும் கிளைமொழிகள் தெற்கு மார்க்கெச மொழிகளுடன் உருபனியல், ஒலியனியல் அடிப்படையிலான ஒற்றுமைகளைக் கொண்டனவாக உள்ளன. வேப்பெண்ணெய் வேப்பெண்ணெய் ("Neem oil") என்பது வேப்ப மரத்தின் பழ விதைகளில் (வேப்பங்கொட்டை) இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் ஆகும். கோடை காலத்தில் வேம்புகளில் பூக்கும் பூக்களிலிருந்து காய்கள் உருவாகி, பழங்களாக பழுக்கும். உதிர்ந்த பழங்களை பொறுக்கி எடுத்து வெயிலில் உலர்த்தி அதன் விதையை எடுப்பர். அவ்விதைகளை அரைக்க எண்ணெய் கிடைக்கும். ஒரு மணமும், கசப்புத்தன்மையும் உடைய இந்த எண்ணெய் மருத்துவக் குணமுடையது. விதைகளை அரைத்த பின் கிடைக்கும் சக்கை வேப்பம் புண்ணாக்கு எனப்படும் இது ஒரு சிறந்த மண்ணுக்கான உரமாகவும் பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுகிறது. வேப்பெண்ணெய் பொதுவாக குருதியைப் போன்று சிவப்பு நிறமுடையது. நிலக்கடலை, பூண்டு ஆகியவை இணைந்த ஒரு மணத்தை ஒத்தது. இது பெரும்பாலும் டிரைகிளிசரைடுகள், மற்றும் டிரிட்டர்பெனாய்டு ஆகியவற்றின் சேர்வைகளைக் கொண்டது. இவையே இதன் கசப்புத் தன்மைக்குக் காரணமாகும். வேப்பெண்ணெய் பொதுவாக சமையலில் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் இதிலுள்ள மருத்துவக் குணங்களின் காரணமாக, மருந்தாகவும், ஒப்பனைப் பொருட்களாகவும், சோப் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றது. அத்துடன் பீடைகொல்லிகள், பூச்சிகொல்லிகளாகப் பயன்படுத்தப்படுவதுடன், சேமிக்கப்பட்ட விதைகளை பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்கவும் உதவுகின்றது. வேப்ப எண்ணெய் முகப்பரு குறைக்கிறது சில ஆய்வுகள் வேப்பெண்ணெயால் எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லை எனக் கூறும் அதேவேளை, வேறு சில ஆய்வுகள் இதனால் ஏற்படக் கூடிய பக்கவிளைவுகளைக் குறிப்பிடுகின்றன. வேப்பெண்ணெயில் பலவிதமான பயனுள்ள இயல்புகள் இருப்பினும், செறிவு கூடிய நிலையில் பயன்படுத்தப்படும்போது, முக்கியமாக வாய்வழியாக உள்ளெடுக்கப்படும்போது, இதனால் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படலாம் எனச் சில ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. மைதிலி சிவராமன் மைதிலி சிவராமன் ஒரு இந்திய அரசியல்வாதியும் பெண் உரிமைச் செயல்பாட்டாளரும் ஆவார். தற்போது இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) இன் பெண்கள் பிரிவான அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவர்களுள் ஒருவராக உள்ளார். மைதிலி சிவராமன் 1966-68 காலகட்டத்தில் ஐநா சபைக்கான இந்திய நிரந்தர தூதுக்குழுவில் ஆய்வு உதவியாளராகப் பணியாற்றினார். மூன்றாம் உலக நாடுகளில் தன்னாட்சி அதிகாரம் இல்லாத பகுதிகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் காலனிமயமழிதல் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தார். ஐநா சபைப் பணிக்காலம் முடிந்த பின் இந்தியா திரும்பி இடதுசாரி இயக்கத்தில் இணைந்து செயல்பட்டார். தற்போது தொழிற்சங்கவாதியாகவும் பெண் உரிமைச் செய்ல்பாட்டாளராகவும் நன்கறியப்படுகிறார். கீழ்வெண்மணிப் படுகொலைகளை உலகின் கவனத்துக்கு கொண்டு வந்ததில் மைதிலியின் பங்கு குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வு குறித்து அவர் எழுதிய பத்திகளும் கட்டுரைகளும் “ஹாண்டட் பை ஃபையர்” ("Haunted by Fire") என்ற தலைப்பில் நூலாக வெளியாகியுள்ளன. வாச்சாத்தி வன்முறை நிகழ்வினால் பாதிக்கப்பட்டவர்களை நேர்கண்டு அதனைப் பற்றிய உண்மைகளை ஆவணப்படுத்தியுள்ளார். நிகழ்வு குறித்து இந்திய பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தோன்றி வாதிட்டார். நந்தி மித்ர நந்தி மித்ர காவன்தீசனின் பத்துத் தளபதிகளில் ஒருவனாவான்.இவன் உடல் வலிமையாலேயே முக்கியத்துவம் பெறுகின்றான். அனுராதபுரத்தை ஆட்சி செய்த எல்லாளனின் கீழ் மித்ர என்ற சிங்கள சேனாதிபதி இருந்தான். அவனது தங்கையின் மகனே நந்தி மித்ரா ஆவான்.குழந்தைப் பருவத்தில் இவனை தோல் பட்டியால் திரிகைக் கல்லுடன் கட்டிவிட்டுச்செல்வர். இவன் அக்கல்லை இழுத்துக் கொண்டு அங்கும்இங்கும் தவழ்ந்து செல்வான். ஒரு நாள் வீட்டிற்கு அருகிலிருந்த மூங்கில் மரத்தில் கட்டப்பட்ட சந்தர்ப்பத்தில் அதையும் இவன் கழற்றிவிட்டான். இவனது மாமாவின் பெயரால் "மித்ர" என்று அறிமுகமானதுடன்,இடுப்பில் தோல் பட்டியால் கட்டப்பட்டதால் நந்திமித்ர எனப்பட்டான். பிற்காலத்தில் இவன் காவன்தீசனின் படையில் சேர்க்கப்பட்டான்.துட்டகைமுனு, எல்லாளன் யுத்தத்தில் பெரும் பணியாற்றினான்.அரசன் பலத்தை பரிசோதிக்க அனுப்பிய யானையையும் தந்தங்களைப் பிடித்து அடக்கினான். ஆக்சிஜன் பயன் கூட்டு விகிதம் ஆக்சிஜன் பயன் கூட்டு விகிதம் (Oxygen enhancement ratio -OER).புற்றுநோய் தோன்றி வளரும் போது ,இரத்த சிரைகளிலிருந்து 200 மைக்ரான் தொலைவிற்கும் அதிகமான தொலைவில் இருக்கும் உயிரணுக்கள் போதிய ஆக்சிஜனைப் பெறுவதில்லை. இதனையே ஆக்சிஜன் அழுத்தம் குறைவாக இருக்கிறது என்கிறார்கள். இந்த நிலையில் கதிர் மருத்துவம் மேற்கொள்ளும் போது எதிர்பார்க்கும் வளைவுகள் ஏற்படுவதில்லை. அதாவது போதிய அளவு ஆக்சிஜனைப் பெறும் உயிரணுக்கள் அழிக்கப்படுவது போல் ஆக்சிஜன் அழுத்தம் குறைந்த நிலையில் , ஒரே அளவு கதிர்கள் ஏற்கப்பட்டாலும் புற்றுநோய் கண்ட உயிரணுக்கள் அழிக்கப்படுவதில்லை. ஆக்சிஜன் இருக்கும் நிலையில் கதிர்மருத்துவத்தின் பயன் அதிகமாக உள்ளது புலப்படும். இதுவே ஆக்சிஜன் விளைவு எனப்படும். மிகை அழுத்த ஆக்சிஜன் அறையுடன் (Hyperbaric oxygen chamber ) கதிர்மருத்துவம் கொடுக்கப்பபடும் போது ஏற்படும் விளைவிற்கும் சாதாரண நிலையில் மருத்துவம் மேற்கொள்ளும் போது ஏற்படும் விளைவிற்கும் உள்ள விகிதம் ஆக்சிஜன் பயன் கூட்டு விகிதம் (OER ) எனப்படும்.இதன் மதிப்பு 2 முதல் 3 வரையிலுள்ளது. மேலும் இது கதிரின் ஆற்றல், புற்றுத் திசுவின் வகை முதலியவற்றையும் பொறுத்திருக்கிறது. BARC NOTES மார்க்கெசசுத் தீவுகள் மார்க்கெசசுத் தீவுகள் ("Marquesas Islands", அல்லது "Archipel des Marquises" அல்லது "Marquises"; மார்க்கெசான்: "Te Henua (K)enana", பொருள்: "ஆண்களின் நிலம்") தெற்குப் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள, பிரான்சின் ஆட்சிப் பகுதியான பிரெஞ்சுப் பொலினீசியாவுக்குள் அடங்கிய எரிமலைத் தீவுக் கூட்டங்கள் ஆகும். மார்க்கெசசுத் தீவுகள் 9° 00தெ, 139° 30மே இல் அமைந்துள்ளன. இங்குள்ள மிக உயர்ந்த இடமாக உவா பு தீவில் காணப்படும் ஒவாவே மலை உச்சி உள்ளது. இதன் உயரம் கடல் மட்டத்தில் இருந்து 1,230 மீ (4,035 அடி). மார்க்கேசசுத் தீவுகள், பிரெஞ்சுப் பொலினீசியாவின் ஐந்து நிர்வாகப் பிரிவுகளுள் ஒன்றாக அமைகின்றன. இத்தீவுகளின் தலைமை இடமாக நுக்கு இவா தீவில் இருக்கும் தையோகாயே உள்ளது. 2007 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி மார்க்கேசசுத் தீவுகளின் மக்கள்தொகை 8,632. தற்போது கிடைக்கும் குறிப்புகளின்படி இத்தீவுகளில் முதல் குடியேறியோர் பொலினீசியர்கள் ஆவர். தொல்லியல் சான்றுகளின்படி இவர்கள் கிபி 100க்கு முன் இங்கு வந்ததாக நம்பப்படுகிறது. இனவியல், மொழியியல் ஆகியவை சார்ந்த சான்றுகளின் அடிப்படையில் இவர்கள் தொங்கா, சமோவா ஆகிய பகுதிகளில் இருந்து வந்திருக்கலாம் எனத் தெரிகிறது. 1595 ஆம் ஆண்டு யூலை 21 ஆம் தேதி இப்பகுதியை அடைந்த ஆல்வாரோ டி மென்டனா டெ நெய்ரா என்னும் எசுப்பானிய நாடுகண் பயணி இத்தீவுகளுக்குத் தற்போது வழங்கும் பெயர்களை இட்டார். அக்காலத்தில் பெருவின் வைசுராயாக இருந்த அவருடைய புரவலரான கனேட்டேயின் ஐந்தாம் மார்க்கிசு, கார்சியா உர்ட்டாடோ டெ மென்டோசாவின் பெயரைத் தழுவியே இப்பெயர்கள் வழங்கப்பட்டன. மென்டனா சாலமன் தீவுகளுக்குச் செல்வதற்கு முன் முதலில் பாத்து இவாவுக்கும், பின்னர் தகுவாத்தாவுக்கும் சென்றார். அமெரிக்கக் கடல் வணிகரான சோசேப் இங்கிரகாம், 1791ல் வடக்கு மார்கெசசுத் தீவுகளுக்கு வந்தபோது அதற்கு "வாசிங்டன் தீவுகள்" எனப் பெயர் சூட்டினார். 1813ல் கொமடோர் டேவிட் போர்ட்டர், நுக்கு இவா ஐக்கிய அமெரிக்காவுக்கு உரியது என உரிமை கோரினார். எனினும், ஐக்கிய அமெரிக்கக் காங்கிரசு இதனை உறுதி செய்யவில்லை. பிரான்சின் உள்ளூர்த் தலைவர் ஒருவரின் சார்பாக நிகழ்ந்த வெற்றிகரமான படையெடுப்பு ஒன்றைத் தொடர்ந்து, அவர் தானே தகுவாத்தா தீவு முழுவதற்கும் அரசன் என உரிமை கோரினார். தொடர்ந்து, இப்பகுதி முழுவதையும் பிரான்சு கையேற்று நுக்கு இவாவில் ஒரு குடியேற்றத்தையும் உருவாக்கியது. இது 1859ல் கைவிடப்பட்டது. 1870ல் இப்பகுதியை மீளவும் பிரான்சு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, அதைப் பிரெஞ்சுப் பொலினீசிய ஆட்சிப்பகுதிக்குள் சேர்த்துக்கொண்டது. வெப்பப் பயன் கூட்டு விகிதம். வெப்பப் பயன் கூட்டு விகிதம்.(Thermal enhancement ratio-TER ) கதிர்மருத்துவத்தின் போது, மருத்துவம் தொடங்குமுன் அல்லது கதிர் வீச்சி முடிந்தவுடன் புற்றுத்திசுக்களை வெப்பமுறச் செய்தால் மருத்துவத்தின் பலன்,வெறும் கதிர்வீச்சினால் பெறப்படும் விளைவைவிடக. கூடுதலாக இருக்கக் காணப்படுகிறது.இவ்வாறு அதிகரித்துக் காணப்படும் இவ்விளைவே கதிர்மருதுவத்தில் வெப்பப் பயன் கூட்டு விகிதம் எனப்படுகிறது. இது 1 முதல் 1.6 வரையிலும் இருப்பதும் தெரிய வந்துள்ளது.இது ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளப்பட வேண்டும். BARC Notes மருத்துவ இயற்பியல் மருத்துவ இயற்பியல் ("Medical Physics") என்பது இயற்பியலின் கோட்பாடுகளும் தத்துவங்களும் மருத்துவத் துறையில் எவ்வாறெல்லாம் பயன்படுகிறது என்பதனை விரிவாக ஆராயும் அறிவியல் பகுதியாகும். நாடி பார்த்து நோயினை அறிதல், உடல் வெப்ப நிலையினைத் தொட்டு அறிதல், கண்களைப் பார்த்து நாக்கினைப் பார்த்து நோயினைத் தெரிந்து கொள்வது என்பன போன்ற பல நிகழ்வுகளும் இயற்பியலை அடிப்படையாகக கொண்டதே. இன்று எக்சு கதிர்கள், காமாக் கதிர்கள், கதிரியக்கம், காந்த ஒத்ததிர்வு படமுறை, மீயொலி போன்ற பல இயற்பியல் காரணிகள் மருத்துவத் துறையில் பயன்பாட்டில் உள்ளன. இவை யாவும் இயற்பியலை அடிப்படையாகக் கொண்டுள்ளன. கை, கால், தாடை இவைகளின் இயக்கமும் இயற்பியல் கோட்பாட்டால் விளக்கமுடியும். இத்துறை தனி அறிவியல் துறையாக இன்று வளர்ந்து இருக்கிறது. மிக நுட்பமான பல கருவிகள் PET, SPECT, CYBERKNIFE அனைத்தும் இயற்பியலும் தொழில்நுட்பமும் இணைந்து உருவாக்கிய கருவிகளாகும். ஏ. கே. சி. நடராஜன் ஏ. கே. சி. நடராஜன் தென்னிந்தியாவைச் சேர்ந்த கிளாரினெட் இசைக் கலைஞர் ஆவார். தன் தந்தையிடமும், ஆலத்தூர் வெங்கடேசய்யரிடமும் நடராஜன் இசை பயின்றார். ஐரோப்பிய வாத்தியமான கிளாரினெட்டை நாதசுவரம் போன்று குழைவுடனும் சங்கதிகளுடனும் வாசிக்கும் இசை மேதையென நேயர்கள் கருதுகின்றனர். லலிதா-பத்மினி-ராகினி சகோதரிகளில், நடிகை லலிதாவின் திருமணம் சென்னையில் நடந்தது; அத் திருமணத்தில் நடந்த ஏ. கே. சி. நடராஜனின் கிளாரினெட் இசை நிகழ்ச்சி, திருமணத்திற்கு வந்தோரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. குளுகோர் குளுகோர் ("Gelugor") என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில் உள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். இதன் அருகாமையில் ஜோர்ஜ் டவுன் மாநகரமும், வடக்கே குளுகோர் கிராமமும், ஜெலுத்தோங் புறநகர்ப் பகுதியும் உள்ளன. குளுகோர் என்பது "குளுகோர் குன்று" எனும் () சொல்லில் இருந்து உருவானதாகும். குளுகோர் புறநகர்ப் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்கள், வீடமைப்புப் பகுதிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு புக்கிட் குளுகோர் என்று இப்போது அழைக்கப்படுகிறது. புக்கிட் குளுகோர் என்பது ஒரு நாடாளுமன்றத் தொகுதியாகும். "ஜெலுத்தோங் புலி" என்று அழைக்கப்படும் கர்பால் சிங், 2004 ஆம் ஆண்டில் இருந்து, இந்தப் புக்கிட் குளுகோர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். குளுகோர் என்று பரவலாகப் பயன்படுத்தப்படும் இந்தச் சொல் Gu-Lu-Goq (சீனம்: "牛汝莪") எனும் சீனச் சொலில் இருந்து தருவிக்கப்பட்ட ஒரு சொல் ஆகும். குளுகோர் என்பது சீனர்கள் சமைக்கப் பயன்படுத்திய ஒரு வகையான புளி. இந்தப் புளி, குளுகோர் குன்றில் முன்பு அதிகம் காணப்பட்டன. அதில் இருந்து அந்தப் பகுதிக்கு குளுகோர் என்று பெயர் வைக்கப்பட்டது. குளுகோர் புறநகர்ப் பகுதியில் பல வீடமைப்புப் பகுதிகளும், வணிகத் தளங்களும் உள்ளன. ஐலண்ட் கேட்ஸ் "(Island Glades)," ஐலண்ட் பார்க் "(Island Park)," மிண்டென் அடுக்குமாடி வீடுகள் "(Minden Heights)," தாமான் துன் சார்டோன் "(Taman Tun Sardon)," தாமான் பிரவுன் "(Taman Brown)," புக்கிட் காம்பிர் "(Bukit Gambir)," புக்கிட் குளுகோர் "(Bukit Gelugor)," சுங்கை குளுகோர் "(Sungai Gelugor)" போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். மலேசியாவிலேயே மிகப் பழமையான மலாய்ப் பள்ளிக்கூடம் இங்குதான் உள்ளது. அதன் பெயர் சுங்கை குளுகோர் மலாய்த் தொடக்கப்பள்ளி. பினாங்குத் தீவின் மிகப் பழமையான வீடமைப்பு பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படும் குளுகோரில், முன்பு மலாயாவை ஆட்சி செய்த பிரித்தானியர்கள் கட்டிய ஆடம்பர மாளிகைகளையும் கட்டடங்களையும் இன்றும் காண முடியும். அந்தக் கட்டடங்கள் முறையாகப் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. மலாயாவை ஜப்பானியர்கள் ஆட்சி செய்த போது, இந்தக் குளுகோர் குன்றின் உச்சியிலும், குளுகோர் பொது இடங்களிலும் குற்றவாளிகளும் அரசியல் கைதிகளும் சிரச்சேதம் செய்யப்பட்டனர். அதனால், அங்கு இறந்தவர்களின் ஆவிகள் உலாவி வருவதாக அங்கு வாழ் மக்கள் இன்றும் நம்பி வருகின்றனர். சுங்கவரி கிராமம் "(Kampung Kastam)," புவா பாலா கிராமம் "(Kampung Buah Pala)" போன்ற கிராமங்களும் இந்தக் குளுகோர் புறநகர்ப் பகுதியில்தான் உள்ளன. 1812 ஆம் ஆண்டு, டேவிட் பிரவுன் எனும் பிரித்தானியர் முதன்முதலாகக் குளுகோரில் குடியேறினார். கம்போங் புவா பாலா அமைந்து இருக்கும் இடம் 200 ஆண்டுகளுக்கு முன், பிரித்தானிய காலனி ஆட்சியில் டேவிட் பிரவுன் நிலச்சுவான்தாரருக்குச் சொந்தமாக இருந்தது. அதைத் தவிர, புக்கிட் குளுகோர் பகுதியில் டேவிட் பிரவுனுக்கு ஏராளமான நிலங்கள் சொந்தமாக இருந்தன. அந்த நிலங்களில் அவர் தேங்காய், ஜாதிக்காய் முதலியன பயிரிட்டிருந்தார். இந்தத் தோட்டங்களில் ஏராளமான தமிழர்கள் வேலை செய்து வந்தார்கள். இந்தப் பகுதி முழுவதும் பிரவுன் எஸ்டேட் என்றே அழைக்கப்பட்டு வந்தது. இன்றும் அவர் பெயரில் ஓர் வீடமைப்பு பகுதியும் சில சாலைகளும் அந்தப் பகுதியில் இருக்கின்றன. கம்போங் புவா பாலாவிற்கு ஹாய் செப்பரல் எனும் மற்றொரு பெயரும் உண்டு. காலப் போக்கில் இந்தக் கிராமம் தமிழர்களின் மிகப் பழமையான பாரம்பரிய கிராமமானது. பினாங்கு மாநிலத்திலேயே தமிழர்களின் பாரம்பரியத்தைக் கடந்த 200 ஆண்டுகளாகப் பறைச்சாற்றி வந்த பழம்பெரும் கிராமமாகக் கருதப்பட்டது. வீடமைப்புத் திட்டங்களுக்காகக் கம்போங் புவா பாலா கிராமம் தேவைப்பட்டது. அதனால், 24 தமிழ்க் குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. அங்கு வாழ்ந்த தமிழர்களை வெளியேற்ற பல்வகையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பல பிரச்னைகளுக்குப் பிறகு, 2013 ஜனவரி மாதம், புவா பாலா கிராம மக்களுக்கு, நூஸ்மெட்ரோ மேம்பாட்டு நிறுவனம், பட்டர்வர்த், தெலுக் ஆயார் தாவாரில் இரட்டை மாடி வீடுகளைக் கட்டி கொடுத்தது. பினாங்கு மாநிலத்திலும், மலேசியாவிலும் பிரசித்தி பெற்ற மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் குளுகோர் பகுதியில்தான் அமைந்து உள்ளது. சிபென் அருவி சிபென் அருவி அல்லது சிபென் நீர்வீழ்ச்சி ("Shifen waterfall", சீனம்: 十分大瀑布) என்பது தாய்வானின் பிங்கி மாவட்டத்தில் கீலுங் ஆற்றுடன் இணைந்த ஓர் அருவி ஆகும். இந்த அருவியின் மொத்த உயரம் 20 மீட்டரும் (66 அடி) இதன் அகலம் 40 மீட்டரும் ஆகக் காணப்பட்டு தாய்வானின் அகலமாக அருவியாகக் காணப்படுகின்றது. இது அலையாக விழும் ஓர் அருவியாகும். குதிரைவால் அருவி, இயோசோமிட்டி குதிரைவால் அருவி அல்லது குதிரைவால் நீர்வீழ்ச்சி (ஆங்கிலம்:"Horsetail Fall", "கோஸ்டெயில் அருவி") என்பது கலிபோர்னியாவில் உள்ள இயோசோமிட்டி தேசிய பூங்காவில் அமைந்துள்ள, குளிர்கால மற்றும் முன் வசந்தகால அருவி ஆகும். பெப்ருவரியில் காலநிலை நன்றாக இருக்கும் பட்சத்தில் இவ்வருவி பாயும்போது, சூரிய ஒளியால் செம்மஞ்சல் சிவப்பு நிறங்கள் ஒளிரும். இந்த இயற்கையான நிகழ்வு "நெருப்பு வீழ்ச்சி" என அழைக்கப்படும். ஜெயந்தி (நடிகை) ஜெயந்தி என்ற கமலாகுமாரி 1945 ஆம் ஆண்டு ஜனவரி 6 இல் பிறந்தார் . இவர் ஒரு இந்திய நடிகை. [1] கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி மற்றும் மராத்தி மொழிகளில் உள்ளிட்ட படங்களில் 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கன்னடத் திரைப்படத் துறை ஜெயந்தியை அபினயா சாரதேஎன்ற அடைமொழியுடன் கௌரவித்தது. தமிழில் அபிநய சரஸ்வதி என்று சரோஜா தேவி என்ற கன்னட நடிகை அன்புடன் அழைக்கப்பட்டார் . கமலாகுமாரி பிரிட்டிஷ் இந்தியாவில் மெட்ராஸ் ராஜதானியில் பெல்லாரியில் 1945 ,அக்டோபர் 11 இல் பிறந்தார் . அவரது தந்தை பாலசுப்ரமணியம் பெங்களூரில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரியில் ஆங்கிலம் பேராசிரியராக பணிபுரிந்தார். அவரது தாயார் பெயர் சந்தான லட்சுமி . இவர்களுக்கு மூன்று பெண் பிள்ளைகளின் மூத்தவராய் கமலா குமாரி இருந்தார் . மிக சிறிய வயதில் தந்தையுடன் படப்பிடிப்பிற்கு சென்று என் .டி .ராமாராவின் மடிமேல் அமர்ந்து விளையாடிக்கொண்டிருந்தனர் கமலா குமாரிமூன்று மூத்த உடன்பிறந்த பெண்களில் மூத்தவர், இது போக இரண்டு இளைய சகோதரர்கள் இருந்தனர். கமலா குமாரியின் இளம் வயது வாழ்வு மிகவும் சிரமம் ஆக இருந்தது .தகப்பனார், தாயார் மற்றும் ஐந்து பிள்ளைகளையும் தவிக்கவிட்டு பிரிந்து சென்றார் .எனவே புது வாழ்க்கையை தேடி தாயார் சென்னைக்கு குடி பெயர்ந்தார். கமல குமாரி யின் தாயார் தன் மகளை ஒரு பாரத நாட்டிய நடனக் கலைஞராக ஆக்குவதில் ஆர்வம் கொண்டிருந்ததால் சந்திரகலா நடன பள்ளியில் சேர்ந்தார் .அப்போது கோபி சந்தா என்ற மாணவியை அங்கு சந்தித்தார் .அவர் பின்னாளில் மனோரமா என்ற பெயரில் சிரிப்பு நடிகை ஆனார் கமலகுமாரி சற்று பருமனாக இருந்ததால் அவருக்கு நடனம் ஆடுவதில் தேர்ச்சி பெறவில்லை . எனவே மனத்தளவில் நொறுங்கி போனார் . மிக சிறிய வயதில் தந்தையுடன் படப்பிடிப்பிற்கு சென்று என் .டி .ராமாராவின் மடிமேல் அமர்ந்து விளையாடிக்கொண்டிருந்தனர் .பின்னாளில் ஜெகதேகவீருணி கதா ,குலா கெளரவம் ,கொண்டவீதி சிம்மம் ,ஜஸ்டிஸ் சவுத்ரி படங்களில் கதாநாயகியாக நடிக்கும் சந்தர்ப்பமும் வாய்த்தது . இளம் பருவ வயதிலேயே சில தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனவே நடிப்பை நன்றாக கற்று தேர்ந்து மதிப்பிற்குரியவர் ஆனார் . கன்னட திரைப்படத் துறையில் கன்னட நடிகர் ராஜ்குமார் உடன் சுமார் முப்பது படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் . கன்னட இயக்குநரான ஒய் .ஆர். ஸ்வாமி அவரை ஓர் நடன ஒத்திகையில் கண்டார் .அவர் ஜெனு குடு படத்தில் அறிமுகம் செய்ததோடு கமல குமாரி என்ற பெயரை ஜெயந்தி என்று மாற்றினார் . ஜெயந்தி அன்றைய புகழ் பெற்ற நட்சத்திரங்கள் அனைவருடனும் நடித்துள்ளார் . கே .எஸ் .அஸ்வத் ,பண்டாரி பாய் ,ஜெயஸ்ரீ ,உதயகுமார் ,கல்யாண்குமார் மாறும் ராஜ்குமாருடன் மட்டும் 45 படங்கள் கதாநாயகியாக நடித்துள்ளார் . இவர் நடித்த படங்களில் மிஸ் லீலாவதி மிகவும் சிறப்பு வாய்ந்தது .இந்த படத்தில் சிறு வயது பெண்ணாக நடித்தார் .இது தேசிய விருது பெற்ற திரைப்படம் ஆகும் . மிஸ் லீலாவதி கன்னட திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக ஜெயந்தி (நடிகை), ஸ்கர்ட் , டி-ஷர்ட்ஸ் மற்றும் இரவு நேர உடைகளை அறிமுக படுத்தினார் .கன்னடத் திரையில் முதன்முதலாக நவீன காலணிகளை மிகவும் அறிமுகப்படுத்தியதற்காக அவர் பாராட்டப்பட்டார். அவர் தான் கன்னடத்தில் முதன் முதலாக நீச்சலுடைஅணிந்து நடித்தார் .தமிழ் சினிமாவில் பட்டினத்தில் பூதம் என்ற படத்தில் கே. ஆர். விஜயா முதன் முதலில் நீச்சல் உடையில் தோன்றினார் . இவர் இயக்குனர் கே .பாலசந்தரின் ஆஸ்தான கதாநாயகி ஆனார் .எதிர் நீச்சல் ,இரு கோடுகள் ,பாமாவிஜயம் ,புன்னகை, வெள்ளிவிழா ,கண்ணா நலமா போன்ற படங்களிலும் ,ம. கோ. இராமச்சந்திரன் உடன் படகோட்டி (திரைப்படம்) மற்றும் முகராசி யிலும் நடித்தார் .அதிக படங்களில் ஜெமினி கணேசன் உடனும் ,முத்துராமன் ,ஜெய்சங்கர் படத்திலும் நடித்துள்ளார் . இவரது முதல் கன்னட படம் ஜீனு கூடு .இந்த படத்தின் இயக்குனர் பெக்கெட்டி சிவராமை திருமணம் செய்து கொண்டார் . இவருக்கு கிருஷ்ணகுமார் என்ற ஒரு மகன் இருக்கிறார் மிஸ் லீலாவதி வெற்றி பெற்று ,டில்லியில் அதற்காக தேசிய விருது வாங்க சென்றார் . இந்திரா காந்தியின் கையால் அதனை பெற்று கொண்டார் . பரிசு வாங்கி செல்கையில் மறுபடியும் திரும்ப அழைத்து இவரது கன்னத்தில் முத்தம் கொடுத்தார் . சக்கரத்தாழ்வார் சக்கரத்தாழ்வார் என்பவர், திருமாலின் ஆயுதங்களில் ஒன்றான சக்கராயுதத்தின் உருவமாக கருதப்பெறுகிறார். இவர் சுதர்சனர், திருவாழியாழ்வான், சக்கரம், திகிரி என்றும் அறியப்பெறுகிறார். இவர் பதினாறு கைகளை கொண்டவராகவும், சில இடங்களில் முப்பத்திரண்டு கைகள் கொண்டவராகவும் அறியப்பெறுகிறார். திருமால் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்கென தனி சந்நிதி காணப்பெறுகிறது. சக்கரத்தாழ்வாரை சக்கரத்தான் என்றும் கூறுவர். ஆழ்வார்கள் இவரை திருவாழியாழ்வான் என்கின்றனர். பெரியாழ்வார் சக்கரத்தாழ்வாரை சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு என்று வாழ்த்துகிறார். சுவாமி தேசிகன் என்பவர் சக்கரத்தாழ்வரை "சக்ர ரூபஸ்ய சக்ரிண" என போற்றுகிறார். இதற்கு திருமாலுக்கு இணையானவர் என்று பொருளாகும். அத்துடன் சுவாமி தேசிகன் சுதர்ஸனாஷ்டகம் என்ற நூலினையும் சக்கரத்தாழ்வாரைப் போற்றி எழுதியுள்ளார். சக்கரத்தாழ்வார் தனது பதினாறு ஆயுதங்களை கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. புவா பாலா கிராமம் புவா பாலா கிராமம் அல்லது கம்போங் புவா பாலா () என்பது மலேசியா, பினாங்குத் தீவின் குளுகோர் பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும். மலாய் மொழியில் புவா பாலா என்பது ஜாதிக்காயைக் குறிக்கும். இந்த ஜாதிக்காய் பினாங்கின் பிரபல உணவுப் பொருள் ஆகும். இந்தக் காயைப் பல உருவங்களில் ஒரு நொறுங்கு தீனியாக ஆக்கி விற்கிறார்கள். உலர வைத்து உப்பில் ஊறவைத்து பல வகையான வண்ணப் பொட்டலங்களிலும் விற்கிறார்கள். பினாங்கு தீவிற்குச் சுற்றுலா வரும் பலரும் அவற்றை வாங்கிப் போவார்கள். கம்போங் புவா பாலாவிற்கு "ஹாய் செப்பரல்" எனும் மற்றொரு பெயரும் உண்டு. 1960களில் "ஹாய் செப்பரல்" () எனும் தொலைக்காட்சித் தொடர் மலேசியர்களிடையே மிகப் பிரபலமான நிகழ்ச்சியாக விளங்கியது. அந்தக் கறுப்பு வெள்ளைத் தொடரின் தாக்கத்தினால், புவா பாலா கிராமத்திற்கு "ஹாய் செப்பரல்" எனும் அடைமொழிப் பெயர் கிடைத்தது. இந்த புவா பாலா கிராமத்தில் இப்போது ஜாதிக்காய் விளைவது இல்லை. புவா பாலா எனும் பெயர் மட்டுமே மிஞ்சி இருக்கிறது. பினாங்கு வாழ் மக்களுக்கே முன்பு அதிகம் தெரிந்திராத இந்தக் கிராமம், அண்மையில் மலேசியாவில் மட்டும் அல்லாது உலகச் செய்திகளிலும் அதிகம் பேசப்பட்டது. இந்தக் கிராமம் மலேசியாவில் இந்தியர்களின் வாழ்க்கை நிலைமைக்கு ஒரு கேள்விக் குறியாக ஆகிவிட்டதுதான் அதற்குக் காரணமாக அமைகின்றது. புவா பாலா கிராமம், பினாங்கு மாநிலத்திலேயே தமிழர்களின் பாரம்பரியத்தைக் கடந்த 200 ஆண்டுகளாக பறைச்சாற்றி வந்த ஒரு பழம்பெரும் கிராமமாகக் கருதப்பட்டது. கம்போங் புவா பாலா நெருக்கடி மிக்க ஜார்ஜ் டவுன் நகரத்தின் தென்கிழக்கில் மிக விலையுள்ள நிலத்தில், நவீன குடியிருப்புக்களுக்கு மத்தியில் அமைந்து இருந்தது. அந்தக் கிராமத்தில் 45 இந்தியக் குடும்பங்களைச் சார்ந்தவர்கள் சாதாரண வேலைகளிலும், மாடு கன்றுகளை வைத்துப் பிழைப்பு நடத்தியும் வந்தனர். அங்கே இருந்தவை அனைத்தும் குடிசை வீடுகள்; மாட்டுத் தொழுவங்கள்; பால் விநியோகிப்பாளர்களின் தற்காலிக இருப்பிடங்கள். ஆண்டுக்கு ஒரு முறை அங்கே பொங்கல் விழா நடைபெறும். பினாங்குத் தீவின் மையத்தில், இப்படி காலம் தவறிப் போன ஓர் எளிய கிராமம். 2000 ஆம் ஆண்டுகளில் உயர் மேம்பாட்டு திட்டத்திற்காக கம்போங் புவா பாலா கிராமம் விற்கப்பட்டது. வரலாற்றுப் பூர்வமான அந்த கிராமம் உடைபடக்கூடாது என்பதற்காக கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். அந்த இடம் இடிக்கப்பட வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவினால் கிராம மக்கள் கட்டாயமான நிலையில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இப்போது அந்த இடத்தில் இரட்டை அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 1812 ஆம் ஆண்டு, டேவிட் பிரவுன் () எனும் பிரித்தானியர் முதன்முதலாகக் குளுகோரில் குடியேறினார் கம்போங் புவா பாலா அமைந்து இருக்கும் இடம் 200 ஆண்டுகளுக்கு முன் பிரித்தானிய காலனி ஆட்சியில் டேவிட் பிரவுன் எனும் நிலச்சுவான்தாரருக்குச் சொந்தமாக இருந்தது. புக்கிட் குளுகோர் பகுதியில் அவருக்கு ஏராளமான நிலங்கள் சொந்தமாக இருந்தன. அந்த நிலங்களில் தேங்காய், ஜாதிக்காய் போன்றவற்றைப் பயிரிட்டிருந்தார். இந்தத் தோட்டங்களில் ஏராளமான இந்தியர்கள் குறிப்பாகத் தமிழர்கள், அவரின் கீழ் வேலை செய்து வந்தார்கள். இந்தப் பகுதி முழுவதும் "பிரவுன் எஸ்டேட்" என்றே வழங்கப்பட்டு வந்தது. இன்றும் அவருடைய பெயரில் குளுகோரில் ஓர் வீடமைப்பு பகுதியும், சில சாலைகளின் பெயர்களும் இருக்கின்றன. அந்தக் காலத்தில், அதாவது 1800களில் புவா பாலா கிராமப்பகுதி அடர்ந்த காடுகளால் சூழ்ந்து இருந்தது. சாலை வசதிகள் எதுவும் இல்லை. பின்னர், 1930 களில் ஏறக்குறைய 60 - 70 இந்தியத் தொழிலாளர்கள், அங்கிருந்த தென்னந் தோப்புகளில் கள் பானம் இறக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். கம்போங் புவா பாலா நெருக்கடி மிக்க ஜார்ஜ்டவுனின் தென்கிழக்குப் பகுதியில் மிக விலை உயர்ந்த நிலத்தில், நவீன குடியிருப்புக்களுக்கு மத்தியில் அமைந்து இருந்தது. கிராமத்தில் குடியிருந்த அனைவரும் சாதாரண வேலைகளிலும், மாடு கன்றுகள் வைத்துப் பிழைப்பு நடத்தி வந்தார்கள். குடிசை வீடுகள்; மாட்டுத் தொழுவங்கள்; பால் விநியோகிப்பாளர்களின் குடிசைகள். செல்வ வளமிக்க ஒரு பெருநகரில் இப்படி ஓர் எளிய கிராமம் வீடமைப்புத் திட்டங்களுக்காகக் கம்போங் புவா பாலா கிராமம் தேவைப்பட்டது. அங்கு வாழ்ந்த தமிழர்களை வெளியேற்ற பல்வகையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 2000 ஆம் ஆண்டுகளில் உயர் மேம்பாட்டு திட்டத்திற்காக கம்போங் புவா பாலா கிராமம் விற்கப்பட்டது. வரலாற்றுப் பூர்வமான அந்த கிராமம் உடைபடக்கூடாது என்பதற்காக கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். அந்த இடம் இடிக்கப்பட வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவினால் கிராம மக்கள் கட்டாயமான நிலையில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். 2009 செப்டம்பர் 4 இல், கம்போங் புவா பாலா கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கியது. அங்குள்ள வீடுகளைத் தகர்க்கும் பணியை மேம்பாட்டு நிறுவனமான நூஸ்மெட்ரோ தொடங்கியது. வீடுகளை இடித்துத் தள்ளுவதற்காக அமர்த்தப்பட்டிருந்த தகர்ப்புக் குழுவினர் காவல்துறையினரின் உதவியுடன் அந்த கிராமத்திற்குள் நுழைந்தனர். ஏற்கனவே, வீடுகளை இடிப்பதற்கு சம்மதித்த சில குடியிருப்பாளர்களின் வீடுகளை தகர்ப்புக் குழு ஊழியர்கள் இடித்துத் தள்ளினர். மொத்தம் 24 குடும்பங்கள் கம்போங் புவா பாலாவில் இருந்தன. அவற்றில் 15 குடும்பங்கள் வெவ்வேறு இடங்களில் பினாங்கு அரசாங்கம் வழங்கிய வீடுகளைப் பெற்றுக் கொண்டன. ஆனால் எஞ்சியிருந்த 9 குடும்பங்கள் மட்டும் அவர்களின் உரிமைக்காக போராடின. அவர்களின் நிலம் மீண்டும் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தன. மூன்று வீடுகள் இடிக்கப்பட்டதும், கிராம மக்கள் தகர்ப்புப் பணியைத் தொடர விடாமல் தடுத்தனர். கிராம மக்களுக்கு ஆதரவாக ம.இ.கா இளையர் பிரிவினரும் போராட்டத்தில் இறங்கினர். ம.இ.கா ஆதரவாளர்களுடன் சேர்ந்து கொண்ட கம்போங் புவா பாலா கிராம மக்கள், வீடுகள் இடிக்கப்படுவதைத் தடுக்க முயன்றனர். தகர்ப்பு இயந்திரங்களைக் கிராமத்திற்குள் நுழைய விடாமல் தடுத்தனர். அதனால் குடியிருப்பாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டன. அப்போது நிகழ்ந்த கைகலப்பில் 18 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் நால்வர் பெண்கள் ஆகும். கம்போங் புவா பாலா கிராமப் பிரச்சினை பல மாதங்களாக நீடித்து வந்தது. அங்கிருந்த குடியிருப்பாளர்கள் வீடுகளைக் காலி செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், குடியிருப்பாளர்கள் அந்த உத்தரவை மறுத்து வந்தனர். கம்போங் புவா பாலா கிராமத்தை பினாங்கு மாநில அரசாங்கத்திடம் இருந்து விலைக்கு வாங்கிய நூஸ்மெட்ரோ மேம்பாட்டு நிறுவனம், அங்கு ஆடம்பர அடுக்குமாடி வீடுகளைக் கட்டியது. குடியிருப்பாளர்களுக்கு வேறு இடத்தில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்றும் அந்த நிறுவனம் அறிவித்தது. அதற்கு குடியிருப்பாளர்கள் முதலில் இணக்கம் தெரிவிக்கவில்லை. இந்தக் கட்டத்தில் கிராம மக்கள் வெளியேறுவதற்கான காலக்கெடு 2009 ஆகஸ்ட் 31 இல் முடிவடைந்தது. அதன் பின்னர், இரு தரப்பினரும் ஒரு சுமுகமான நிலையில் பிரச்னையைத் தீர்த்துக் கொண்டனர். இறுதியாக, இந்தப் பிரச்னையில் மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் தலையிட்டார். அதைத் தொடர்ந்து, பரிதவித்துக் கொண்டிருந்த ஒன்பது குடும்பங்களுக்கும் புதிய வீடுகள் வழங்கப்பட்டன. தற்காலிக நிலப்பட்டா வைத்திருந்தவர்களுக்கு வீடுகள் கொடுக்கப்பட்டன. அவர்களின் குடும்பங்களுக்கு மேலும் 9 வீடுகளும் வழங்கப்பட்டன. 2013 ஜனவரி மாதம், புவா பாலா கிராம மக்களுக்கு, நூஸ்மெட்ரோ மேம்பாட்டு நிறுவனம், பட்டர்வொர்த், தெலுக் ஆயேர் தாவாரில் இரட்டை மாடி வீடுகளைக் கட்டி கொடுத்தது. அவர்கள் 2013 ஜனவரி 19 இல் அங்கு தைப் பொங்கலைக் கொண்டாடினார்கள். அந்த நிகழ்ச்சிக்கு புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் கர்பால் சிங் தலைமை தாங்கினார். ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் நேதாஜி இராயரும் கலந்து கொண்டார். வீணை குப்பய்யர் வீணை குப்பய்யர் (1798–1860) தென்னிந்தியாவைச் சேர்ந்த வீணை இசைக் கலைஞரும், கருநாடக இசைப் பாடலாசிரியரும் ஆவார். இவர், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் மாணவர். குப்பய்யர் தனது பாடல்களை தெலுங்கு மொழியில் எழுதியுள்ளார். குப்பய்யர் 1798ஆம் ஆண்டு சென்னைக்கு அருகிலுள்ள திருவொற்றியூரில் பிறந்தார். இவரின் தந்தை 'வீணை சாம்பமூர்த்தி' என்பவராவார். வீணை வாசிப்பதில் வல்லவரான தனது தந்தையிடம் வீணை வாசிக்கவும், இசையையும் கற்றார் குப்பய்யர். தெலுங்கு, சமக்கிருத மொழிகளையும் கற்றார். தியாகராஜரிடம் மாணவராகச் சேர்ந்து கிருதிகளை கற்றார். தியாகராஜர் ஒருமுறை குப்பய்யரின் இல்லத்திற்கு வந்திருக்கிறார். இந்த வருகையை நினைவுகொள்ளும் விதமாக தனது 3 மகன்களில் ஒருவருக்கு 'தியாகராஜர்' எனப் பெயரிட்டார் குப்பய்யர். இந்தக் குழந்தையே பின்னாளில் ‘திருவொற்றியூர் தியாகையர்’ என்றழைக்கப்பட்டது. குப்பய்யர் 1860ஆம் ஆண்டு தனது 62ஆம் வயதில் காலமானார். தியாகராஜரால் ஊக்குவிக்கப்பட்டு தெலுங்கு மொழியில் வர்ணங்கள், கிருதிகள், கீர்த்தனைகளை எழுதியவர் குப்பய்யர். 'கோபாலதாச' என்பது இவரின் முத்திரையாகும். இவர் செய்துள்ள இசை வடிவங்கள்: இவரின் மாணவர்கள்: உட்குலத்தின் குறியெண் குலக் கோட்பாட்டில் "G" என்ற குலத்தின் உட்குலம் "H" இன் குறியெண் (Index) என்பது "G" இல் இருக்ககூடிய "H" இன் இணைக்கணங்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். "G" இல் "H" இன் குறியெண்ணின் குறியீடு: |"G" : "H"| அல்லது ["G" : "H"] அல்லது ("G":"H"). ஒரு உட்குலத்தின் குறியெண் முடிவுறு அல்லது முடிவுறா எண்ணாக அமையலாம். எடுத்துக்காட்டு: Z , முழு எண்களின் கணம் கூட்டல் செயலியைப் பொறுத்து ஒரு குலம். அதன் ஒரு உட்குலம் 2Z (இரட்டை முழு எண்களின் கணம்). Z இல் உட்குலம் 2Z க்கு இரண்டு இணைக்கணங்கள் உள்ளன. (ஒன்று இரட்டை முழு எண்கள் கணம். மற்றது ஒற்றை எண்களின் கணம்). எனவே Z இல் 2Z இன் குறியீடு: பொதுவாக, "N" என்பது குலம் "G" இன் இயல்நிலை உட்குலம் எனில், "G" இல் "N" இன் குறியெண் காரணி குலம் "G" / "N" இன் வரிசைக்குச் சமமாக இருக்கும். "G" ஒரு முடிவுறா குலம் எனில் அதன் ஒரு உட்குலம் "H" இன் குறியெண் ஒரு பூச்சியமில்லா முதல் எண் (cardinal number). மேலுள்ள எடுத்துக்காட்டிலுள்ளபடி அம் முதல் எண் ஒரு முடிவுறு எண்ணாகவும் இருக்கலாம். "G" , "H" இரண்டும் முடிவுறு குலங்கள் எனில் "G" இல் "H" இன் குறியெண்: இது லாக்ராஞ்சியின் தேற்றத்தின் முடிவாகும். இக்குறியெண் கண்டிப்பாக ஒரு நேர் முழுஎண். உட்குலத்தின் குறியெண்ணின் சில பண்புகள் கீழே தரப்பட்டுள்ளன. "H" ,"K" இரண்டும் "G" இன் உட்குலங்கள் எனில்: காஞ்சிபுரம் பவள வண்ணர் கோவில் திருப்பவள வண்ணம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் உள்ளது. காஞ்சிபுராணம் என்னும் நூலில் இத்தலம் பற்றிய வரலாறு பேசப்படுகிறது. பிரம்மனின் யாகத்தைக் கலைக்க சரஸ்வதி தொடர்ந்து எத்தனையோ முயற்சிகள் செய்ய அத்தனையும் பயனின்றிப்போக ஒரு கொடிய அரக்கர் கூட்டத்தைப் படைத்து அனுப்பினாள். நொடிப்பொழுதில் அந்த அரக்கர் கூட்டத்தை அழித்து பெருமாள் ரத்தம் தோய நின்றார். இவ்வாறு ரத்தம் தோய பிரவாளேச வண்ணராக நின்றதால் பிரவாளேசரானார் தூயதமிழில் பவள வண்ணமானார். இத்தலத்தின் இறைவன் பவள வண்ணர் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இறைவி பவள வல்லி என்ற பெயரில் தனிக்கோவில் கொண்டுள்ளார். இத்தலத் தீர்த்தம் சக்கர தீர்த்தம். விமானம் பிரவாள விமானம் என்ற அமைப்பைச் சேர்ந்தது. திருமங்கையாழ்வாரால் மட்டும் பாடல் பெற்றது இத்தலம். இறைவனின் நிறத்தைக்கொண்டு பாடல் பெற்ற தலம் இது ஒன்றுதான். காஞ்சியில் காலாண்டார் தெருவில் அமைந்துள்ள இந்தப் பவள வண்ணர் கோவிலுக்கு எதிரிலேயே கம்மாளர் தெருவில் பச்சை வண்ணர் (மரகத வண்ணர்) கோவில் அமைந்துள்ளது. இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று எதிர்த்திசையில் அமைந்துள்ளது. இவ்விரண்டு பெருமாள்களையும் கூர்ந்து நோக்கினால் வண்ண வேறுபாடுகளை உணரலாம். பச்சை வண்ணர் கோவில் பாடல் பெற்ற தலமல்ல. இங்கு வரும் பக்தர்கள் பவள வண்ணரை வழிபாடு செய்துவிட்டு பச்சை வண்ணரையும் வழிபட்டுச் செல்வதையே மரபு. அச்வினி தேவதைகள் இந்தத் தலத்தில் பெருமாளை வழிபட்டதாக நம்பிக்கை. திருப்பரமேச்சுர விண்ணகரம் திருப்பரமேச்சுர விண்ணகரம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தைப் பற்றிக் குறிப்பாக எந்தப் புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. ஆனால் புராண காலத்தில் இத்தலம் சர்ப்பச் சேத்திரம் என அழைக்கப்பட்டதாகவும், இறைவன் பரமபதநாதன் என்று ஆராதிக்கப்பட்டதாகவும் தல வரலாற்றின் மூலம் அறியமுடிகிறது. ஒரு காலத்தில் இக்கோயில் காசி யாத்திரை செல்வோர் தங்கிச் செல்லும் மடமாக இருந்தது. மிகச் சிறிய அளவினதாக இருந்த இத்தலம் பல்லவ மன்னன் முதலாம் பரமேஸ்வரவர்மன் (கி.பி. 669) காலத்தில்தான் இன்றுள்ள நிலையில் 3 அடுக்குகளாக கட்டப்பட்டது. பரமேஸ்வரவர்மன் இத்தலத்தின் இறைவனருளால் பிறந்ததாகவும் இதை நினைவு படுத்தும் முகமாக பரமேஸ்வரன் இக்கோவிலுக்கு 18 யானைகளைக் கொடுத்திருந்ததாகவும் கூறுவர். பரமேஸ்வர வர்மனுக்கு இப்பெருமான் 18 கலைகளை போதித்ததாகவும், அவைகளைச் சொல்வதற்காக எழுந்த நிலையில் நின்ற திருக்கோலத்திலும், சீடனுக்கு உபதேசித்தருள குருவாக அமர்ந்த திருக்கோலத்திலும், அவனுக்கு சேவை சாதிக்க கிடந்த திருக்கோலத்திலும் இருந்ததாகக் கூறுவர். இதனால் தான் பரமேஸ்வரவர்மன் இன்றுள்ள நிலையில் 3 அடுக்குகளாகக் கட்டி முதல் அடுக்கில் (கீழ் அடுக்கில்) பெருமாள் வீற்றிருந்த நிலையிலும், இரண்டாவது தளத்தில் அரங்கநாதனாக சயன திருக்கோலத்திலும், மூன்றாவது தளத்தில் நின்ற திருக்கோலத்திலும் இறைவனை எழுந்தருளச் செய்தார். மூன்றாவது அடுக்கில் நின்ற திருக்கோலத்தில் அமைக்கப்பட்ட சிலை ஒரு சமயம் மழையின் போது உண்டான பேரிடியின் காரணமாகச் சிதலமடைய பிறகு அவ்விடத்தில் சுதையால் செய்யப்பட்ட சிலை வைக்கப்பட்டது. இது தவிர மற்ற இரண்டு தளத்திலும் உள்ள சிலைகள் கற்களில் வடிக்கப்பட்டவையாகும். பரமபதநாதன், மேற்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இறைவி வைகுந்த வல்லி. இத்தலத்தின் தீர்த்தம் ஐரம்மத தீர்த்தம். விமானம் முகுந்த விமானம் என்ற வைகையைச் சேர்ந்தது. மாமல்லபுரத்தைப் போன்று கவினுறு சிற்பங்கள் இக்கோவிலின் உட்புறச் சுவற்றில் செதுக்கப்பட்டுள்ளது. பல்லவ மன்னர்களின் குடவரைக் கோவில் அமைப்பின்படி இத்தலத்தின் கருவறையும் அதைச் சுற்றியுள்ள பிரகாரம் மற்றும் தூண்கள் யாவும் ஒரே பாறையில் குடையப்பட்டதாகும். பல்லவ மன்னன் பரமேஸ்வரவர்மன் தனது அரசு சம்பந்தப்பட்ட அனைத்து அலுவல்களிலும், தான் போர் மேற் செல்வதற்கும், இப்பெருமாளையே வழிபட்டு வெற்றிமேல் வெற்றி கண்டான். இவன் பாண்டியனை வென்றதை திருமங்கையாழ்வார் தனது பாடலில். "தேர்மன்னு தென்னவனை முனையில் செறுவில் என்று குறிப்பிடுகிறார். திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களில் பாடல் பெற்றுள்ளது. பிள்ளைப் பெருமாளையங்கார், மணவாள மாமுனி, இராமானுஜர் ஆகியோரும் இத்தலத்திற்கு வருகை தந்துள்ளனர். பரமேசுவரவர்மனின் பிறப்பைச் சித்தரிக்கும் சிற்பங்கள், அவனுக்கு இறைவன் நீதிகளைப் போதித்த நிலையிலான சிற்பங்கள் போன்றன இத்தலத்தின் உட்பிரகாரத்தில் வெகு நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் மேல் மாடியில் இரணியனை வதம் செய்யும் நரசிம்மன், நரகாசுரனை வதம் செய்யும் கிருஷ்ணன், வாலியை வதம் செய்யும் இராமவதாரம் போன்ற காட்சிகள் அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள மூலவர் சன்னதிக்கும், முன் மண்டபத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் (இடைகழியில்) சுரங்கப் பாதை இருப்பதை அறிந்த வெள்ளையர்கள் அதனைத் தோண்டிக்காண முனைந்த போது, இவ்வூர் பொதுமக்களும், இப்பெருமான் மீது பேரன்பு கொண்ட இஸ்லாமிய பக்தர் அலி முகம்மதுகான் என்பவரும், இச்சுரங்கத்திற்கு கோவிலிலிருந்து செல்லக்கூடிய வழியினை மூடி அதன்மேல் படிக்கட்டுக்கள் அமைத்து மூலவர் சன்னதிக்கு நடந்து செல்லக் கூடிய பாதையாக மாற்றிவிட்டனர். இவ்வாறு மூடப்பட்டு கல்பாலம் இடப்பட்டுள்ளதை இன்றும் காணலாம். இங்கிருந்து மாமல்லைக்கும், கைலாச நாதரின் கோவிலுக்கும் பரமேஸ்வரவர்மனின் அரண்மனைக்கும் சுரங்கப்பாதை இருந்ததாக நம்பிக்கை. கிருஷ்ண தேவராயர் இத்தலத்திற்கு ஆற்றிய பெருந்தொண்டின் நினைவாக இங்கு அவருக்கும் சிலை வைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் நடன நிகழ்ச்சிகளை அரங்கேற்றம் செய்ய இரண்டு (ராஜ தர்பார்கள்) நடன சாலைகள் இருந்தன. அவைகள் இன்று சாதாரண மண்டபங்களாக விளங்குகின்றன. திருப்புட்குழி திருப்புட்குழி என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் பாலு செட்டி சத்திரம் என்ற ஊரிலிருந்து தெற்கே செல்லும் சென்னை - வேலூர் சாலையில் அமைந்துள்ளது. இராமாயணத்தில் ஜடாயு என்ற பறவைக்கு மோட்சமளித்து அதன் இறுதிச் சடங்குகளை இங்கு செய்ததால் திருப்புட்குழி (புள் (பறவை)+குழி) ஆனது என இதன் தலவரலாறு தெரிவிக்கின்றது. இதே தலவரலாறே புள்ளபூதங்குடிக்கும் கூறப்பட்டுள்ளது. நான்கு தோள்களுடன் கிழக்குநோக்கி வீற்றிருக்கும் திருக்கோலத்தில் இறைவன் விஜயராகவப் பெருமாள் என அழைக்கப்படுகிறார். இறைவி மரகதவல்லி. இவருக்குத் தனிக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இத்தலத் தீர்த்தம் ஜடாயு தீர்த்தம். விமானம் விஜயகோடி விமானம் என்ற அமைப்பைச் சேர்ந்தது. ஜடாயுவுக்கு மோட்சமளித்த ராமன் இங்கு ஜடாயு தீர்த்தத்தை உண்டாக்கினார் என்று சொல்லப்படுகிறது. இங்கு கோவிலுக்கு எதிர்ப்புறத்தில் ஜடாயுவுக்கு சன்னதியுள்ளது. மூலவர் தமது தொடையின் மீது ஜடாயுவை வைத்துக்கொண்டு சடங்குகள் செய்யும் பாவனையில் அமர்ந்துள்ளார். வலப்பக்கத்தே இருக்க வேண்டிய இறைவி இடப்பக்கத்தே இருப்பது இங்கும் திருவிடவெந்தையில் மட்டுமே. இறைவன் திருவீது உலா செல்லும் போதெல்லாம் ஜடாயுவுக்கு மரியாதை செய்யப்படுகிறது. இந்த ஊரில் உள்ள ஜடாயு தீர்த்தத்தில் நீராடி பெண்கள் இரவில் மடியில் வறுத்த பயறு கட்டிக்கொண்டு படுக்க மறுநாள் விடிந்தவுடன் அப்பயறு முளைத்திருக்குமாயின் அவர்கட்கு குழந்தைப்பேறு உண்டாகும் என்பது நம்பிக்கையாகும். எனவே இந்த இறைவி 'வறுத்த பயறு முளைவிக்கும் மரகதவல்லித் தாயார்' என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். இவ்வூரில் வாழ்ந்த யாதவப் பிரகாசர் என்பவரிடமே இராமானுஜர்அத்வைத பாடங்களைப் பயின்றார். இராமானுஜர் படித்த மண்டபம் இன்றும் உள்ளது. இராமானுஜர் கல்வி கற்றதை விளக்கும் சிற்பமும் இக்கோவிலில் உள்ளது. இக்கோவிலில் அதிக அளவிற்கு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இதன் மூலம் பாண்டிய மன்னர்களும் விஜயநகரப் பேரரசும் இத்தலத்திற்கு ஆற்றிய தொண்டினைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது. இங்குள்ள கல்வெட்டுக்கள் இக்கோவிலைப் ‘போரேற்றுப் பெருமாள் கோவில்’ என்றும் ‘சித்தன்னவேலி திருப்புட்குழி நாயனார் கோவில்’ என்றும் பலவாறு குறிப்பிடுகின்றன. இங்குள்ள குதிரை வாகனம் மிகவும் அதிசயமானதாகும். கல் குதிரை என வழங்கப்படும் இக்குதிரை உண்மையான குதிரை போலவே அசையும் உறுப்புக்களைக் கொண்டது. இதைச் செய்த தச்சன் இதுமாதிரி இனி யாருக்கும் செய்துகொடுப்பதில்லை என்று உறுதியோடு இருந்து உயிர் துறந்தானாம். இவனது உறுதியையும் பக்தியையும் போற்றும் வகையில் பெருமாள் 8ஆம் உத்சவத்தன்று அத்தச்சனது வீதிக்கு எழுந்தருளுகிறார். நைமிசாரண்யம் நைமிசாரண்யம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் இந்தியாவின் வட மாநிலங்களில் ஒன்றான உத்திரப் பிரதேசம் மாநிலத்தின் தலைநகரம் லக்னோவிலிருந்து எழுபது கி. மி., தொலைவில் சீதாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் தான் உக்கிரசிரவஸ் என்ற சூத பௌராணிகர், மகாபாரத இதிகாசத்தை குலபதி சௌனகர் தலைமையிலான முனிவர்களுக்கு எடுத்துரைத்தார். இந்துத் தொன்மத்தின்படி ஒரு சமயம் தவவலிமையில் சிறந்த முனிவர்கள் குலபதி சௌகனர் தலைமையில் ஒன்று கூடி 12 ஆண்டுகளில் செய்யக்கூடிய சத்திர வேள்வியைச் செய்ய விரும்பினர். அதற்குகந்த இடத்தை தெரிவு செய்து தருமாறு எல்லோரும் பிரம்மனிடம் வேண்டினர். பிரம்மன் ஒரு தருப்பைப் புல்லை எடுத்து அதை ஒரு வளையமாக வளைத்து கீழே உருட்டி அது எங்கு விழுகிறதோ அதுவே தவம் செய்ய சிறந்த இடம் என்று தெரிவித்தார். இந்த பாரத தேசத்தில் கோமதி ஆற்றங்கரையில் உள்ள இவ்விடத்தில் வந்து விழுந்தது. இவ்விடமே தமது சத்திர வேள்வியைச் செய்ய உகந்தது என்று முனிவர்கள் கண்டு தமது வேள்வியைத் தொடங்கினர். நேமி என்ற சொல்லுக்கு சக்கரம் அல்லது சக்கரவளையம் என்பது பொருள். நேமி சார்ந்த ஆரண்யம்(காடு) ஆனதால் நேமிச ஆரண்யமாகி நைமிசாரண்யம் ஆயிற்று. வேள்வியை இவ்விடத்தில் துவங்கிய முனிவர்கள் அதன் முழுப்பலனை திருமாலுக்கு வழங்க எண்ணினர். அவ்விதமே திருமால் குறித்து தவமியற்ற வேள்வியின் இறுதியில் அந்த வேள்வி குண்டத்திலேயே தோன்றி அவிர்ப்பாகம் ஏற்றுக்கொண்டு அம்முனிவர்கட்கெல்லாம் அருள்புரிந்தார் என்பது வரலாறு. இந்தக்கருத்தைப் பின்பற்றியே (அதாவது நைமிச ஆரண்யம் என்ற கருத்தை) இங்குள்ள மக்களும் இறைவன் இங்கு ஆரண்ய வடிவில் கொண்டு (காடுகளையே உருவமாய்) காட்டையே வணங்குகின்றனர். இத்தலத்தில் இறைவன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் தேவராஜன் (ஶ்ரீஹரி)என்ற பெயரில் காட்சி தருகிறார். இறைவியின் பெயர் ஶ்ரீஹரிலட்சுமி என்பதாகும். இத்தலத்தின் தீர்த்தம் சக்கர தீர்த்தம் மற்றும் கோமுகி நதி. விமானம் ஸ்ரீஹரி விமானம் என்ற அமைப்பினைச் சேர்ந்தது. லக்னோ இரயில் நிலையத்திலிருந்து வடக்கே 88 கி. மீ., தொலைவில், கோமதி ஆற்றாங்கரையில் அமைந்துள்ளது. இயற்கை வழிபாடு முறைப்படி எம்பெருமானை வன உருவத்தில் வழிபடும் முறை 108 திவ்ய தேசங்களில் இங்கு மட்டுமே காணப்படுகிறது. இறைவனுக்கு சக்ரநாராயணன் என்றொரு பெயரும் உண்டு. இந்த சக்கர நதிக்கரையில் சக்கரத்தாழ்வார் ராமர், லட்சுமணர், சீதை முதலியோருக்கும் கோவில்கள் உண்டு. சிறப்பாக இங்கு விநாயகருக்கும் தனி சன்னதி காணப்படுகிறது. இது வேறெந்த வைணவத் தலத்திலும் இல்லாததாகும். இங்கிருந்து கோமுகி {கோமடி} நதிக்குப் போகும் வழியில் வியாஸ கட்டி என்ற இடத்தில் வேதவியாசருக்கும் ஆலயம் உள்ளது. வியாச முனிவரும், சுகர் முனிவரும் இங்கிருந்து கொண்டுதான் பாரதம், பாகவதம் புராணங்கள் போன்றவற்றை இயற்றினார்கள் என்பர். இதே ஊரில் மற்றொரு புறத்தில் உள்ள குன்றின் மீது அமைந்துள்ள அனுமான் கட்டி என்றழைக்கப்படும் ஆலயத்தில் இராம, லட்சுமணர்களைத் தமது தோளில் தாங்கி எழுந்தருளியுள்ள அனுமார் சிலை ஒன்றும் உள்ளது. திருமங்கையாழ்வாரால் 10 பாசுரங்களால் இத்தலம் பாடல் பெற்றுள்ளது. சூத பௌராணிகர் உக்கிரசிரவஸ் என்ற சௌதி, குலபதி சௌனகர் தலைமையிலான முனிவர்களுக்கு, மகாபாரதம் மற்றும் புராணங்கள் எடுத்துக் கூறினார். இத்திருத்தலத்தில் அஹோபில மடமும், ஶ்ரீ ராமானுஜ மடமும் தங்க வசதியளிக்கின்றன சரபா சரபா அல்லது சரபம் என்பது ( ) இந்துதொன்மவியலில் பகுதி சிங்கமாகவும் பகுதி பயங்கர பறவையாகவும் உள்ள ஓர் விலங்கு. சில சமசுகிருத இலக்கியங்களில் இது எட்டு கால்களை உடைய, சிங்கம் மற்றும் யானையையும் கொல்லக்கூடிய வலுவுள்ள மிருகமாக சித்தரிக்கப்படுகிறது. மேலும் சில இலக்கியங்களில் எட்டு காலுடைய மானாகவும் விவரிக்கப்படுகிறது. சரபம் என்பது சிங்கத்தைக் கொல்லவல்லதாகக் கூறப்படும் எட்டுக்கால் பறவை (எண்காற்புள்) ஆகும். தமிழ் இலக்கியங்களில் இது சிம்புள் எனவும் போற்றப்பட்டுள்ளது. நான்கு காலும் பறக்கும் இறகுகளும் கொண்டு கோயில் சிற்பங்களில் காணப்படும். திருமால் நரசிங்க உருவம் தாங்கி இரணியனைக் கொன்றார். அதன் செருக்கால் உலகை அழிக்கலானார். தேவர்கள் சிவனிடம் முறையிட்டுக்கொண்டனர். சிவன் சரபம் என்னும் பறவை வடிவம் கொண்டு நரசிங்கத்தின் கொட்டத்தை அடக்கினார். இது வடநூல் புராணக் கதைகளில் இப்பறவை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கதை சரப புராணம் என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சரபா கருநாடக அரசின் சின்னமாகவும் மைசூர் பல்கலைக்கழகம் மற்றும் கருநாடகா அரசு சோப்பு தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றின் சின்னங்களிலும் இடம் பெற்றுள்ளது. சரபம் என்னும் பறவை செந்நிற ஆடையைப் போர்த்திக்கொண்டு மேல்மாடி முற்றத்தில் உறங்கிக்கொண்டிருந்த நிறைமாதக் கர்ப்பிணிப் பெண் மிருகாபதி என்பவளைப் புலராத தசைப்பிண்டம் எனக் கருதித் தூக்கிச் சென்றது. காட்டில் வைத்து உண்ணத் தொடங்குகையில் மிருகாபதி விழித்துக்கொண்டமையால் பெண் என அறிந்து உண்ணாமல் பறந்து போய்விட்டது. கண்டப்புள், கண்டபேரண்டம், கருடப் பறவை என்பன சரபப் பறவையின் வேறு பெயர்கள். சரபேசுவரர் சரபேசுவரர், அறுபத்து நான்கு சிவ உருவத்திருமேனிகளில் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகும். உத்திர காமிகாகமம் இந்த வடிவத்தினை ஆகாச பைரவர் என்று கூறுகிறது. தத்வநிதி சிற்பநூல் இவ்வடிவத்திற்கு 32 கைகள் இருப்பதாக கூறுகிறது. இக்கால்களில் ஒன்று துர்க்கையமம்னை அனைத்தவாறு இருக்கும். இந்த வடிவத்தின் சக்தி தேவி அரிப்ரணாசினி. வியாசர் இந்த மூர்த்தியை பரிகாரமற்ற துன்பத்திற்கும், நோய்களுக்கும், விஷபயம் மற்றும் பூத பிரேத உபாதைகள் ஆகியவற்றுக்கு வணங்கலாம் என்று கூறுகிறார். சரபேசுவரர் எட்டு கால்களும், இரண்டு முகங்களும், நான்கு கைகளும், மிகக்கூரிய நகங்களும், உடலின் இருபுறங்களில் இறக்கைகளும், சிங்கத்தினைப் போல் நீண்ட வாலும், கருடனைப் போன்ற மூக்கும், யானையைப் போன்ற கண்களும், கோரப் பற்களும், யாளியைப் போன்ற உருவமும் உடையவராக நம்பப்படுகிறார். காஞ்சிபுரம் அருகிலுள்ள தாமல் நகரில் லிங்க உருவத்தில் சரபேஸ்வரர் உள்ளார். வேறு எங்கும் இவ்வாறு லிங்க சரபேஸ்வர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரணியன் எனும் அசுரனைக் கொன்ற பின் நரசிம்மருக்குக் கோபம் தணியாமல் இருந்தது. அதைக் கண்டு நடுங்கிய தேவர்கள் தங்களைக் காக்கும்படி சிவனிடம் வேண்டிக் கொண்டார்கள். அவர்களை காக்க சிவன் எடுத்த அவதாரமே சரேபேஸ்வர வடிவமாகும். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருபுவனம் கம்பகரேசுவரர் கோவிலில் சரப மூர்த்திக்கென தனிசந்நிதி உள்ளது. இங்குள்ள மூலவர் கம்பகரேஸ்வர சுவாமி என்று அழைக்கப்படுகிறார். இதற்கு நடுக்கம் தீர்த்த சுவாமி என்று பொருளாகும். திரிபுவனச் சக்கரவர்த்தி எனச் சிறப்புப் பெற்றிருந்த மூன்றாம் குலோத்துங்கச் சோழன் கட்டிய சிறப்பு மிக்க கோயில் திரிபுவனம் கம்பேசுவரர் கோயில். கம்பேசுவரனைத் தேவர்களின் நடுக்கம் தீர்த்த பெருமான் என்று போற்றுவர். இக் கோயிலின் முதன்மையான மூர்த்தி சிலை சரபேசுவரர் ஆகும் இவன் கட்டிய துர்க்காச்சி கோயில், தில்லையில் அமைத்த அம்பலம் ஆகிய இடங்களிலும் சரபேசுவரர் திருவுருவங்கள் உள்ளன. இராசராசன் தேவி கட்டிய திரைலோக்கிய சுந்தர கோயிலிலும் ஒரு சரபேசுவரரை அமைத்தான். இந்த இடங்களிலெல்லாம் சரபேசுவரரைப் போற்றும் பாடல்களைப் பாடவும், பூசனை வழிபாடுகள் நிகழ்த்தவும் கி. பி. 13ஆம் நூற்றாண்டில் வழிவகை செய்தான். திருமலைநாதர் என்பவர் 14 ஆம் நூற்றாண்டில் சரபேஸ்வரர் குறித்து சரப புராணம் என்னும் தமிழ்நூலைப் பாடியுள்ளார். பனி உள்ளகம் பனிக்கட்டி உள்ளகம் (Ice Core) எனப்படுவது, பனியினுள் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் உள்ளீடுகளின் அடிப்படையில், கடந்து சென்ற மிக நீண்டகாலத்திற்கு, புவியில் ஏற்பட்ட காலநிலை மாற்றங்களையும், வளிமண்டலத்தில் இருந்த வளிமங்களின் அளவுகளைப் பற்றியும் அறிய உதவும், ஆற்றல்வாய்ந்த ஒரு அளவீட்டைக் கொடுக்கும் ஒரு முறையாகும். இம்முறையில் உருளை வடிவிலான கலன் ஒன்றைப் பயன்படுத்தி, பனிப்படுக்கை, பனிவிரிப்பு, பனியாறு கொண்ட இடங்களில் உறைபனியினூடாகத் துளையிட்டு, ஆழமான இடங்களிலிருந்து மாதிரி பெறப்படும். பொதுவாக இந்த பனி உள்ளகங்கள் அண்டார்டிக்கா மற்றும் கிரீன்லாந்தில் இருக்கும் பனிப்படுக்கைகள், பனிவிரிப்புக்கள் அல்லது வேறு இடங்களில் உயரமான மலைகளில் இருக்கும் பனியாறுகளில் இருந்து பெறப்படும். ஆண்டுதோறும் பெய்யும் பனியினால், ஒன்றன்மேல் ஒன்றாக பனிப் படலங்கள் அடுக்கப்பட்டு, மேலே உள்ள படலம் தற்போதைய ஆண்டுக்குரிய பனியையும், ஆழமாகச் செல்லச் செல்ல, காலம் கூடிய ஆண்டுகளுக்குரிய பனிப் படலங்களையும் கொண்டு இருக்கும். இதனால் பனிக்கட்டி உள்ளக மாதிரியானது பல ஆண்டுகளுக்கான உறைபனியையும், அதற்குள்ளாக பிடித்து வைக்கப்பட்டிருக்கும், பல காலநிலைத் தகவல்கள் அடங்கிய உள்ளீடுகளையும் கொண்டிருக்கும் படலங்களால் ஆனதாக இருக்கும். பனிக்கட்டியினதும், அதன் உள்ளீடுகளினது இயல்புகள் பல ஆய்வுகள் மூலம், பொதுவாக ஓரிடத்தான் பகுப்பாய்வுமூலம் ஆய்வு செய்யப்படும். இதனால், கடந்துபோன அபல ஆண்டுகளில் வளிமண்டலத்தில் இருந்த வெப்பநிலை, வளிமங்கள் போன்ற தகவல்களை உள்ளடக்கிய காலநிலை வரலாறு பதிவு செய்யப்படும். பனியினுள் பிடிபட்டிருக்கும் உள்ளீடுகளில் தூசு, சாம்பல், வளிமண்டல வளிமங்களின் குமிழ்கள், கதிரியக்கம் கொடுக்கவல்ல பொருட்கள் என்பன ஏராளமான சூழல் தொடர்பான தகவல்களைக் கொண்டிருக்கும். இந்த பனிக்கட்டி உள்ளகத்திலிருக்கும் கால்நிலைத் தகவல்கள், ஏனைய வயது கூடிய பெரிய மரங்களின் குறுக்கு வெட்டுமுகத் தோற்றத்தில் பெறப்படும் ஆண்டுவளையங்கள், படிவுப் படலங்கள் (Sediment Layers) போன்ற இயற்கை ஆவணங்களை விடவும் மிக அதிகமான தகவல்களைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. இதில், குறிப்பிட்ட காலங்களில் இருந்த வெப்பநிலை, கடல்நீரின் அளவு, மழை, நிலத்திற்கு அண்மையில் இருந்த வளிமண்டல வளிமங்களின் வேதியியல் இயல்புகள், எரிமலை வெடிப்பு நிகழ்வுகள், சூரியவெப்பத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், காட்டுத்தீ போன்ற பல தகவல்கள் அடங்கியிருக்கும். பனிக்கட்டி உள்ளகப் பதிவுகளின் காலம், துளையிடப்படும் ஆழத்தில் தங்கியிருக்கும். நீண்ட துளையிடப்படும்போது, பல ஆண்டு காலத்துக்கு முன்னரான பதிவுகளிலிருந்து, அண்மைய காலம் வரையான பதிவுகள் பெறப்படும். மிக நீண்ட பனிக்கட்டி உள்ளகம் 3 கி.மீ. நீளமானதாக உள்ளது. மிகப் பழைமையான காலத்துக்கானதும், தொடர்ச்சியானதுமான பனிக்கட்டி உள்ளகமானது, கிரீன்லாந்தில் 123,000 ஆண்டுகளுக்கும், அண்டார்ட்டிகாவில் 800,000 ஆண்டுகளுக்கும் பெறப்பட்டுள்ளது. அத்துடன் வெவ்வேறு காலங்களில் இருந்த பைங்குடில் வளிமங்களின் அளவுகள் அடங்கிய தகவல்களும் இதில் பெறப்பட்டது. விகாரமாகாதேவி விகாரமாகாதேவி என்பவள் துட்டகைமுனு (கி.மு. 161 முதல் கி.மு. 137 வரை) என்ற இலங்கை மன்னனின் தாயாவாள். காகவண்ண தீசன் (கி.மு. 205 முதல் கி.மு. 161 வரை) என்ற உருகுணை இராச்சிய மன்னனுக்கும் விகார மாதேவிக்கும் பிறந்தவனே துட்டகைமுனு. துட்டகைமுனு காகவன்ன திச்சனிடம் வடஇலங்கையை ஆண்ட தமிழ் மன்னனான எல்லாளன் என்பவன் மீது போர் தொடுக்க வற்புறுத்தினான். எல்லாளன் மீதுள்ள மக்கள் பலம் மற்றும் படை பலம் கருதி காகவன்ன திச்சன் எல்லாளன் மீது போர் தொடுக்க அச்சமுற்றான். இதை ஏளனப்படுத்தி பெண்களின் அணிகலன்களை தந்தைக்கு பரிசாக அனுப்பி வைத்தான் துட்டகை முனு. இந்த வருத்தத்தால் காகவண்ண திச்சன் இறந்தான். துட்டகைமுனுவிற்கு அவனது தந்தை எல்லாளன் (வட இலங்கை) மீது படை எடுக்க உதவாவிட்டாலும் அவளுடைய தாயான விகார மாதேவி உதவினாள். துட்டகைமுனு எல்லாளன் மீது போர் தொடுக்கையில் இரு தளபதிகளின் கோட்டைகளை அவனால் வெல்ல இயலவில்லை. மகேலனின் கோட்டையும், தித்தம்பன் என்பவனின் கீழ் இருந்த அம்பதித்தை கோட்டையும் நேரில் போர் செய்து வெல்ல இயலாதவை என்று கண்ட துட்டகைமுனு தன் தாயான விகார மாதேவியை மணந்து தருவதாக ஆசைக்காட்டியும், அவளது உடலழகைக் காட்டியும் தன் பக்கம் ஈர்த்தான். விகார மாதேவியை மணந்து கொள்வதால் அரசாட்சி கிடைக்கும் என கனவு கண்ட தளபதிகள் ஒழுங்கே போர் செய்யாததால் இரு கோட்டைகளும் விழுந்தன. இவ்வாறு துட்டகைமுனுவின் வெற்றி எளிதாக விகார மாதேவி இரண்டு முறை உதவியது குறிப்பிடத்தக்கது. அழிவுக் கதிர்வீச்சு அழிவுக் கதிர்வீச்சு ("annihilation radiation") என்பது காமா நிறமாலையியலில் பயன்படுத்தப்படும் ஒரு கருத்து ஆகும். துகள் ஒன்றும் அதன் எதிர்த் துகள் ஒன்றும் தமக்கிடையே மோதி அழிவதால் காமாக் கதிர் உருவாகின்றது. பொதுவாக, எதிர் மின்னூட்டம் கொண்ட ஒரு இலத்திரனும், நேர் மின்னூட்டம் கொண்ட ஒரு பாசிட்ரானும் (+positron) எதிர்படும் போது அவைகள் அழிந்து 511 கிலோ eV ஆற்றலுள்ள இரு காமாக் கதிர்களைக் கொடுக்கின்றன. இந்த காமாக் கதிர்கள் எதிரெதிர் திசையில் செல்கின்றன. புளோரின்-18 பாசிட்ரானை உமிழ்கிறது. இது அழிவு கதிர் வீச்சினைத் தோற்றுவிக்கும். இக் கதிர்கள் பாசிட்ரான் உமிழ்பு தளகதிர்படம் (Positron Emmision tomogram) பெற உதவுகிறது. PET CT துணையுடன் புற்று நோய் இடத்தினைத் துல்லியமாக தெரிந்து மருத்துவம் மேற்கொள்ள முடியும். உருகியுறைதல் உருகியுறைதல் ("Regelation") என்பது அழுத்தம் வழங்கப்படும் போது உருகுவதும் பின்னர் அந்த அழுத்தம் குறைக்கப்படும் போது மீண்டும் உறையும் நிகழ்வு ஆகும். எடுத்துக்காட்டாக இரு பனிக்கட்டித் துண்டுகளை இணைத்து அதிக அழுத்தம் கொடுத்து பின்னர் அந்த அழுத்தத்தை விடுவிக்க அவை இரண்டும் இணைந்து ஒரே பனிக்கட்டித் துண்டாகி விடுகிறது. அழுத்தம் அதிகரிக்கும் போது, உருகுநிலை குறைவதால் பனிக்கட்டி உருகுகிறது. அழுத்தம் குறையும் போது உருகுநிலை அதிகரிப்பதால் ஒன்றாக உறைந்து விடுகிறது. இதுவே உருகி உறைதல் எனப்படுகிறது, இதை உருகி இணைதல் எனவும் கூறலாம். உருகியுறைதல் பண்பைக் கண்டுபிடித்தவர் மைக்கேல் பரடே ஆவார். ஆயர்பாடி ஆயர்பாடி என்றும் ஆய்ப்பாடி என்றும் கோகுலம் என்றும் அழைக்கப்படும் இத்தலம் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார் ஆகிய மூவரால் பாடல்பெற்ற தலம் இதுவாகும். இந்த கோகுலம் என்னும் ஆய்ப்பாடி டெல்லியிலிருந்து ஆக்ரா செல்லும் ரயில் பாதையில் உள்ள மதுரா ரயில் நிலையத்திலிருந்து சுமார் 8 மைல் தொலைவில் உள்ளது. இத்தலம் பற்றியும், கோகுலம் பற்றியும் ஸ்ரீமத் பாகவதம் உட்பட எண்ணற்ற வடமொழி நூல்கள் எடுத்தியம்பியுள்ளன. இந்து தொன்மப்படி துவாபரயுகத்தில் திருமாலின் ஒரு அவதாரமான கண்ணனின் குழந்தைப்பருவ லீலைகள் நடந்த இடமே கோகுலம். கண்ணன் சின்னஞ்சிறுவனாக இருந்து இந்த ஆயர்பாடியில் செய்த லீலைகள் எல்லாம் எண்ணற்ற நூல்களில் வருணிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் வெண்ணெய் உண்டது, இளங்கன்னிமார்களை ஏய்த்தது, சிற்றில் சிதைத்தது. நந்த கோபாலனாக வளர்ந்தது, மாடு மேய்க்கப் போனது என்றிவ்வாறான பலவித லீலைகளை நடத்திய இந்த கோகுலம் முழுவதையும் ஆழ்வார்கள் தம் பாக்களில் பாடியுள்ளனர். இத்தலத்தில் இறைவன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் நவமோகன கிருஷ்ணன் என்ற பெயரில் காட்சி தருகிறார். இறைவி ருக்மணி தேவி, சத்திய பாமா ஆகியோர். இதன் விமானம் ஹேம கூட விமானம் எனும் அமைப்பினைச் சேர்ந்தது. இங்கு யமுனை நதி ஓடுகிறது. இங்கு கோகுல் என்று அழைக்கப்படும் இடத்திலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இடம் தான் உண்மையான கோகுலப் பகுதி என்று சொல்லப்படுகிறது. புராண்கோகுல் என்று அழைக்கப்படும் இந்தப் பழைய கோகுலத்தில் யமுனை நதிக்கரையில் ஒரு தலம் அமைந்துள்ளது. இங்கு நந்தகோபர், யசோதை, பலராமர், மற்றும் தொட்டில் கிருஷ்ணன் ஆகியோருக்கு மரத்தினால் செய்யப்பட்ட மூர்த்திகள் உள்ளன. சிறைச்சாலையில் தேவகி மைந்தனாகப் பிறந்த கண்ணன் இந்த ஆயர்பாடியில் உள்ள நந்த கோபர் வீட்டிற்கு வந்த நாளை ஆண்டுதோறும் இங்கு விழாவாக நந்தோற்சவம் என்ற பெயரில் இன்றும் கொண்டாடுகின்றனர். இன்றும் ஜன்மாஷ்டமியின் மறுநாள் (கோகுலாஷ்டமியின் மறுதினம்) இதே பெயரில் இந்த உற்சவம் வடநாட்டிலும், பிற முக்கிய தலங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள கௌடில்யா மடத்தில் இந்நிகழ்ச்சி ஆண்டுதோறும் மிக்க சிறப்புடன் தற்போதும் நடத்தப்பட்டு வருகிறது. தேவப்பிரயாகை தேவப்பிரயாகை (Devprayag) அல்லது திருக்கண்டமென்னும் கடிநகர் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். பெரியாழ்வாரால்பாடல் பெற்ற இத்தலம் உத்தராகண்டம் மாநிலத்தில் தெக்ரி கார்வால் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலம் ரிஷி கேசத்திலிருந்து பத்திரிநாத் செல்லும் வழியில் 45வது மைலில் கடல் மட்டத்திலிருந்து 1700 அடி உயரத்தில் அமைந்துள்ளது. தேவப்பிரயாகையின் சிறப்பை பற்றி பாத்மபுராணம், மத்ஸயபுராணம், கூர்மபுராணம் அக்னிபுராணம் ஆகிய புராணங்களில் கூறப்பட்டுள்ளன. மிகச் சிறந்த யாகத்தை பிரம்மன் இங்கு துவங்கியதால் இவ்விடத்திற்கு பிராயாகை என்னும் பெயராயிற்று. திருமாலையே தேவனாக கருதி இவ்விடத்தில் யாகம் செய்யப்பட்டதால் தேவப்பிராயாகை என்றாயிற்று. தேவேந்திரன் இந்த தேவப்பிரயாகையைப் பாதுகாக்கிறான். இங்குள்ள ஆலமரம் தான் ஊழிக் காலத்தில் அழியாமல் இருக்குமென்றும் அதன் இலையில்தான் பெருமாள் குழந்தையாக பள்ளிகொள்வார் என்றும் மத்ஸய புராணம் கூறுகிறது. இத்தலத்தில் வழிபாடியற்றுவதும் நீராடுவதும் ஒவ்வொரு இந்துவும் செய்ய வேண்டிய கடமையாகக் கருதப்படுகிறது. இத்தலத்தில் இறைவன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் நீலமேகப் பெருமாள் (புருஷோத்தமன்)எனவும் வேணி மாதவன் என்றும் அழைக்கப்படுகிறான். இறைவியின் பெயர் புண்டரீக வல்லி, விமலா என்பனவாகும். தீர்த்தம் மங்கள தீர்த்தம், கங்கை நதி, பிரயாகை ஆகியன. விமானம் மங்கள விமானம் எனும் அமைப்பைச் சேர்ந்தது. பெரியாழ்வாரால் 10 பாக்களால் பாடல் பெற்ற இத்தலத்தில் தான் கங்கை ஆறும் யமுனை ஆறும் கலக்கின்றன அளகநந்தா ஆறும் பாகிரதி ஆறும் சங்கமிக்கின்றன. மேலும் சரஸ்வதி ஆறும் இவ்விடத்தில் கலப்பதால் இது பஞ்சப் பிரயாகை என அழைக்கப்படுகிறாது எனவே இங்கு வெள்ளப் பெருக்கும் நீரின் விரைவும் இங்கு திடீரென உண்டாகும். இத்தலத்திற்கருகிலேயே ஆஞ்சநேயர், கால பைரவர், மகாதேவர், பத்ரிநாதர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன. புராண இதிகாசங்களின்படி பிரம்மன், பரத்வாஜர், தசரதன் ஆகியோருடன் இராமனும் இங்கு தவமியற்றினார்கள். ஆழ்வாரால் பாடல் பெற்ற பெருமாளை இங்கு ரகுநாத்ஜி என்று அழைக்கிறார்கள். கங்கை, யமுனை, சரஸ்வதி இம்மூன்றும் கூடுமிடம் திரிவேணியாகும். தளகதிர் படம் தளகதிர்படயியல் ("Tomography") என்பது ஒரு தளத்திலுள்ள உடலுறுப்புகளை தெளிவாக அதன் குறுக்கு வெட்டுத் தோற்றமாகக் காணத்துணை செய்யும் ஒரு புதுமையான கருவியாகும். கணினியின் துணையுடன் செயல் படுவதால் இது கணினிதுணையுடனான கதிர்படம் (Computer assisted tomogramm ) என அறியப்பட்டது.இன்று எளிமையாக கணினி தளகதிர்படம் என அறியப்படுகிறது.உடலினைக் குறுக்காக சிறு துண்டாக வெட்டினால் எவ்வாறு இருக்குமோ அப்படிப்பட்ட ஒரு துண்டின் படமாகும். பாசிட்ரான் உமிழ்வு தளக்கதிர் படமும் Positron emission tomogramm ) காந்த ஒத்ததிர்வு படமும் ( Magnetic resonance image) கூட தளகதிர் படங்களே. பொதுவாக முப்பரிமாணத்தில் உள்ள உறுப்புகளை இரு பரிமாணத்தில் எக்சு கதிர் படமாகப் பெறும்போது, வெவ்வேறு உறுப்புகளின் படிமங்கள் ஒன்றன் மேல் ஒன்று விழுவதால் படம் தெளிவில்லாமல் போய்விடுகிறது. இந்தச் சிக்கலைத் தவிர்க்க, உடலில் ஒரு தளத்தில் இருக்கும் உறுப்பை மட்டும் தெளிவாக படம் எடுக்கும் முறை தளகதிர் படவியல் ("Tomography") என்றும், படம் தளகதிர் படம் ("Tomogram") அழைக்கப்படுகிறது. இப்பொழுது இம்முறையைப் பயன்படுத்தும் கணினியுடன் செயல்படும் கருவிகள் (CT) உள்ளன. மேலும் காந்த ஒத்ததிர்வு படமுறை (Magnetic Resonance Imaging), மீயொலி (Ultrasound), பாசிட்ரான் உமிழ்வு தளபடமுறை (Positron emission tomography-PET), ஒற்றை ஒளியன் உமிழ்வு தளபடமுறை (Single photon emission tomography-SPECT ) என்று பல கருவிகள் உள்ளன. வேப்பந்தட்டை வேப்பந்தட்டை (Veppanthattai) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும். நிருத்தம் (பரதநாட்டியம்) நிருத்தம் என்பது பரதநாட்டியத்தில் சுத்த நடனம் ஆகும். இது உடல் அழகையும், உடலின் அழகிய அசைவுகளையும், தாளத்தின் மிக நுணுக்கமான அளவைகளையும், கைகள், விரல்களின் அழகான முத்திரைகளையும், பாதஜால வித்தைகளையும் இசை, அதன் தாள மெல்லின வல்லினங்களையும் உருவகப்படுத்தும் ஒரு கலையாகும். நிருத்தத்தில் தலையிலிருந்து பாதம் வரை உடலின் எல்லா உறுப்புக்களும் அழகுற இயங்குகின்றன. இக்கலை நாட்டியத்தின் ஒரு பெரும் பகுதியாக அமைந்துள்ளது. பரதநாட்டியத்தில் நிருத்தம் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். போர் புரிதல், தேரோட்டம் என்பன நிருத்தத்திலேயே அவதரிக்கப்பட்டன. நிருத்தம் பிரத்தியேக கருத்து ஒன்றும் வெளிப்படுத்தப்படாமல், கலாரசனைக்காக ஆடப்படுவதால் மிகவும் சுலபமாக எல்லோராலும் ரசிக்கப்படக் கூடியது. இந்நடனம் காண்பவர் மனதை கவர்வது மட்டுமல்லாது, நடனம் ஆடுவோரையும் மிக மென்மையான நிலைக்கு அழைத்துச் செல்லும் தன்மை வாய்ந்தது. நடனத்தில் சிருங்கார ரசம் நிறைந்த காட்சிகளில் நிருத்தம் இன்றியமையாத ஒரு அம்சமாகும். நாட்டியத்தின் ஆரம்பத்தில் ஆராதனை நிகழ்வதை பூர்வாங்கம் என்பர். இதன் விசேட நிகழ்ச்சி நிருத்தமாகும். தேவர்களையும், அசுரர்களையும், மூதாதையரின் ஆத்மாக்களையும் திருப்திப்படுத்த முதலில் நிருத்தம் நிகழ்த்தப்பட்டதாகக் கருதப்படுகிறது. மேரி கென்னத் கெல்லர் அருட்சகோதரி மேரி கென்னத் கெல்லர் (1914?–1985) கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் அமெரிக்க பெண்மணியாவார். 1965ஆம் ஆண்டு விஸ்கொன்சின் பல்கலைக்கழகத்தில் "Inductive Inference on Computer Generated Patterns." என்னும் தலைப்பின் கீழ் செய்த ஆய்வுக்காக முனைவர் பட்டம் பெற்றார். "அன்பின் சகோதரிகள்" என்னும் கத்தோலிக்கத் துறவற சபையில் இணைந்து 1940ஆம் ஆண்டு தனது துறவற வாக்குறுதியினை அளித்தார். அதன் பின்னர் கணித அறிவியலில் இளங்கலையும் (B.S. in Mathematics), மேலும் கணிதம் மற்றும் இயற்பியலில் முதுகலையும் (M.S. in Mathematics and Physics) தேபால் பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற்றார். டார்த்மவுன்ட் கல்லூரியில் பயிலும் போது, அக்காலத்தில் ஆண்கள் மட்டுமே செய்யக்கூடியதாகக் கருதப்பட்ட, கணினித் துறையில் பேசிக் நிரலாக்க மொழியினை உருவாக்க ஊதவினார். 1965ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்ற பின், ஐயோவா கிளார்க் கல்லூரியில் கணினி அறிவியல் துறையினை நிறுவி அதன் இயக்குநராக இருபது ஆண்டுகளுக்குப் பதவி வகித்தார். இந்த கிளார்க் கல்லூரியில் இப்போது "கெல்லர் கணினி மையம் மற்றும் தகவல் சேவை மையம்", இவர் பெயரால் நிறுவப்பட்டு கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்குக் கணினி மற்றும் தொலைத்தொடர்பு துறையில் பயிர்ச்சி அளிக்கின்றது. இக்கல்லூரியில் இவரின் பெயர் கொண்டு, "Mary Kenneth Keller Computer Science Scholarship" கல்வி ஊக்கத்தொகை மாணாக்கருக்கு வழங்கப்படுகின்றது. கணினி அறிவியல் பற்றி இவர் நான்கு புத்தகங்கள் எழுதியுள்ளார். பாஞ்சசன்யம் பாஞ்சசன்யம்" அல்லது பாஞ்சன்னிபம்"' என்பது திருமாலுடைய சங்கின் பெயராகும். இந்த சங்கானது கடலில் கிடைக்கும் வலம்புரி சங்கின் வகையைச் சார்ந்தாக கருதப்பெறுகிறது.ஆழ்வார்களில் ஒருவரான பொய்கையாழ்வார் இந்த சங்கின் அம்சமாக கருதப்பெறுகிறார். பாஞ்சசன்யம் சங்காயுதம் என்றும், பொதுவாக சங்கு என்ற பெயரிலும் அறியப்பெறுகிறது. பாஞ்சஜன்யம் சப்தப்ரம்ம வடிவம். இந்த சங்கு பாஞ்சன் என்ற அசுரனிடம் இருந்ததாகவும் திருமால் அவனை போரில் வென்று சங்கினை பெற்றுக்கொண்டதால் பாஞ்சசன்யம் என்று பெயர் வந்தது. பஞ்ச இந்திரியங்களை அடக்குவதைக் குறிக்கவும் இப்பெயர் வழங்கப்படலாயிற்று. தலைச்சங்காடு சிவத் தலத்தில் கடுந்தவம் புரிந்து திருமால் பாஞ்சசன்ய சங்கினை பெற்றதாக தலவரலாறு கூறுகிறது. இந்த சங்கானது உலக உயிர்களை காப்பதற்காக பெறப்பட்டதாகவும், திருமாலுக்கு சங்கினை வழங்கிய காரணத்தினால் சிவபெருமான் சங்காரண்யேஸ்வரர், சங்கவனநாதர் என்றும் அழைக்கப்பெறுகிறார். பெருக்க மரம் பெருக்க மரம் ("Baobab", பாவோபாப்) என்பது "அடன்சோனியா" ("Adansonia") எனப்படும் பேரினத்தைச் சேர்ந்த மரமாகும். பெருக்க மரத்தில் ஒன்பது இனங்கள் உள்ளன. அதில் ஆறு இனங்கள் மடகசுகருக்குச் சொந்தமானவை. இரண்டு இனங்கள் ஆப்பிரிக்காவுக்கும் அரேபிய தீபகற்பத்திற்கும், இன்னொன்று ஆத்திரேலியாவிற்கும் சொந்தமானதாகும். இது ஐந்து முதல் முப்பது மீட்டர் உயரத்திற்கு வளரக்கூடியது. ஏழு முதல் பதினோரு மீட்டர் விட்டம் கொண்டது. பெருக்க மரங்கள் தமது உடற்பகுதியில் சுமார் 120000 லீட்டர் நீரை சேமித்து வைக்கக்கூடியது. இந்த இசைவாக்கம் கடுமையான வறட்சியை தாங்குவதற்காகும். பாவோபாப் மரங்கள் அராபிய வணிகர்களால் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டன. இலங்கையில் இம்மரங்கள் இரண்டு உள்ளன. ஒன்று மன்னாரிலும், மற்றையது நெடுந்தீவிலும் உள்ளன. மரங்களில் ஓர் அதிசயம்! மத்தேயோ ரீச்சி மத்தேயோ ரீச்சி, சே.ச (; அக்டோபர் 6, 1552 – மே 11, 1610; ; மரியாதைப் பெயர்: ) என்பவர் இத்தாலிய இயேசு சபை குருவும், சீன இயேசு சபை மறைப்பணியைத்துவங்கிய தந்தையர்களுள் ஒருவராகவும் கருதப்படுபவர் ஆவார். இவருக்கு இப்போது இறை ஊழியர் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது. மத்தேயோ ரீச்சி 1552ஆம் ஆண்டு மசேரடா, திருத்தந்தை நாடுகளில் பிறந்தார். உரோமையில் இயேசு சபை பள்ளியில் இறையியலும் சட்டமும் பயின்ற இவர், அச்சபையில் 1571ஆம் ஆண்டு இணைந்தார். 1577இல் இந்தியாவுக்கு சென்று மறைப்பணியாற்ற விண்ணப்பித்தார். மார்ச் 1578இல் லிஸ்பன் நகரில் பயனத்தை துவங்கி கோவாவை செப்டம்பர் 1578இல் அடைந்தார். நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், இவர் சீனா அனுப்பப்பட்டார். ஆகஸ்ட் 1582இல் இவர் சீனாவில் மக்காவு வந்தடைந்தார். சீனர்களுக்கு சேவை செய்த இவர், அவர்களுக்கு சூரிய கிரகணத்தை துள்ளியமாக கணக்கிட்டு உதவியதால் வாளி பேரரசரால் அரசவைக்கு அழைக்கப்பட்டு அரச ஆலேசகராக நியமிக்கப்பட்டார். இவ்வாறு பேரரண் நகரத்துக்குள் நுழைந்த முதல் வெளிநாட்டவர் இவர் ஆவார். பெய்ஜிங்கில் உள்ள அமல உற்பவ அன்னை பேராலயத்தை கட்டியவர் இவரே. இவ்வாலயமே இன்நகரின் மிகப்பழைய கிறித்தவ ஆலயமாகும். இவரே சீனர்களுக்கு இயந்திர கடிகாரங்களை அறிமுகம் செய்தவர். சீன கெய்ஃபேங் யூதர்களை (Kaifeng Jews) முதன்முதலில் மேற்கத்தியருக்கு அறிமுகம் செய்தவர் இவரே. சீன நிலப்படத்தை முதன் முதலில் வரைந்தவர் இவரே. இவ்வேலை எவ்வளவு கடினமானதாயின் இவரின் இப்படைப்பு “Impossible Black Tulip” என அழைக்கப்படுகின்றது. கன்பூசிய படைப்புகளை இலத்தீனுக்கு சூ குவாங்குயி என்பவரருடைய துணையால் மொழிபெயர்த்தார். தனது 57ஆம் அகவையில் மே 11, 1610இல் இவர் இறந்தார். அக்காலத்தில் இறந்த வெளிநாட்டவர்களை மக்காவுவிலே அடக்கம் செய்யும் வழக்கம் இருந்தது. குறிப்பாக பேரரண் நகரத்துக்குள் அடக்கம் செய்யக்கூடாது என்னும் சட்டமும் இருந்தது. ஆயினும் ரீச்சி சீனர்களுக்கு செய்த சேவையினைப்பாராட்டி அவரை பேரரண் நகரத்துக்குள்ளே அடக்கம் செய்ய அரசர் அனுமதித்தார். இவ்வாறு பேரரண் நகரத்துக்குள் அடக்கப் செய்யப்பட்ட முதல் வெளிநாட்டவர் என்னும் பெருமையை இவர் அடைந்தார். ஸிங்காகர்ஷிதகம் சிங்காகர்சிதகம் அல்லது ஸிங்காகர்ஷிதகம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் தொண்ணூறாவது கரணமாகும். விருச்சிகபாதமாக நின்று,வலது கையை வளைத்து ஸ்வஸ்திகமாக அமைத்து, இடது கையைப் பதாகையாகத் தொடைக்கு நேரே தொங்கவிட்டு ஆடி,மீட்டும் இடது காலையும் அதற்கு ஏற்பக் கைகளையும் அமைத்து நின்று ஆடுவது ஸிங்காகர்ஷிதகமாகும் திருப்பிரிதி திருப்பிரிதி என்பது என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் இந்தியாவின் வட எல்லையான இமய மலையில் மானசரோவரம் என்ற ஏரியின் அருகில் அமைந்துள்ளது. திருமங்கையாழ்வார் தனது தொடக்கப் பாடலாக இத்தலத்தையேப் பாடுகிறார். இத்தலம் எங்கு அமைந்துள்ளது என்பதில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இத்தலம் ரிஷிகேசத்திலிருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் உள்ள ஜோஷி மடம் என்றும் கருதப்படுகிறது. இந்த இடத்தில் தற்போது கோவில்களும், சிலைகளும் உள்ளது. இன்னுமொருசாரர் நந்தப் பிரயாகை என்னுமிடமே திருப்பிரிதியாகுமெனவும் கூறுவர். இவ்விரண்டும் அல்லாமல் இமய மலைக்கு உட்புறம் அமைந்துள்ளது என்றொரு கருத்துமுண்டு. இத்தலத்தில் இறைவன் கிழக்கு நோக்கிய புஜங்க சயனக் கோலத்தில் பரம புருஷன் என அழைக்கப்படுகிறார். இறைவியின் பெயர் பரிமளவல்லி நாச்சியார் தீர்த்தம் இந்திர தீர்த்தம், கோவர்த்தன தீர்த்தம், மானசரோவரம் ஆகியன. விமானம் கோவர்த்தன விமானம் என்ற அமைப்பினைச் சார்ந்தது. திருமங்கையாழ்வார் முதன்முதலில் பாடல் செய்த தலம். இங்கிருந்துதான் இவர் தனது பயணத்தைத் தொடங்கினார். இங்கிருந்து தெற்கு நோக்கி வரும்போது வடநாட்டிலிருந்து தென்திசை வரும் வழியில் உள்ள தலங்களில் சிலவற்றை பாடிக் கொண்டே வந்து தென்னாட்டுத் தலங்களைப் பற்றிப் பாடுகிறார். திருமங்கையாழ்வார் இத்தலத்திற்கு 10 பாசுரங்கள் வழங்கியுள்ளார். நந்தகம் நந்தகம் என்பது திருமாலுடைய வாளின் பெயராகும். இந்த ஆயுதம் பஞ்ச ஆயுதங்களில் ஒன்றாக கருதப்பெறுகிறது. ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார் இந்த ஆயுதத்தின் அம்சமாகக் கருதப்பெறுகிறார். பத்தாந்திருமொழியில் பாடல் 111 ல் நாந்தக மேந்திய நம்பி சரணென்று என்ற வரி வருகிறது. இதற்கு நந்தகம் எனும் வடமொழிச்சொல்லே நாந்தகமாக நீண்டுகிடக்கிறது என ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரி தனது உரையில் குறிப்பிடுகிறார். ச‌‌த்‌தியபாமா‌ சத்தியபாமா திருமாலின் எட்டாவது அவதாரமான கிருஷ்ணரின் மனைவியருள் ஒருவர்.இவர் பூமாதேவியின் அம்சமாக கருதப்பெறுகிறார். ஒரு பெண்ணால்தான் மரணம் நேரவேண்டும் என்று நரகாசுரன் எனும் அரக்கன் வரம் பெற்றிருந்ததாகவும், அதனால் கிருஷ்ணருக்கும் நரகாசுரனுக்கும் நடந்த போரில் ச‌‌த்‌தியபாமா‌ கிருஷ்ணனின் தேரோட்டியாக சென்று நரகாசுரரை வதைபுரிந்ததாகவும் வைணவ நூல்கள் கூறுகின்றன. வரலாற்றில் இனப்படுகொலைகள் வரலாற்றில் இனப்படுகொலைகள் ("Genocide in history") என்பது இனம், சாதி, சமயம், பிரதேசம் போன்ற அடிப்படையில் அடையாளம் காட்டப்படுகின்ற ஒரு குழு முழுவதையுமோ அதன் ஒரு பகுதியையோ வேண்டுமென்றே திட்டமிட்டு அழிக்கின்ற செயல் மனித வரலாற்றுப் போக்கில் நிகழ்ந்துள்ளதைப் பதிவுசெய்து விமரிசித்தல் ஆகும். இனப்படுகொலை என்னும் சொல்லமைப்பு 1944இல் முதன்முறையாக இரபயேல் லெம்கின் (Raphael Lemkin) என்பவரால் உருவாக்கப்பட்டது. இனப்படுகொலைத் தடுப்பு ஒப்பந்தம் என்னும் ஐ.நா. ஆவணம் 1948இல் கையெழுத்தானது. எந்தவொரு மக்கள் குழுவையோ அவர்களது இனம், சாதி, சமயம், நாடு போன்ற காரணத்திற்காக அழித்துவிட மேற்கொள்ளப்படும் செயல் "இனப்படுகொலை" என்று அந்த ஐ.நா. ஆவணம் கூறுகிறது. இவ்வாறு அழிக்கும் செயல் அக்குழுவினரைக் கொலைசெய்வதிலோ, அவர்களுக்கு உடல் உளம் சார்ந்த கொடிய தீங்கு இழைப்பதிலோ, அக்குழுவை அழிக்கும் நோக்கத்தோடு அக்குழு உறுப்பினர்மீது ஒரு வாழ்க்கைச் சூழலைத் திணிப்பதிலோ, அக்குழுவினர் பலுக விடாமல் தடுப்பதிலோ, அக்குழுவினரின் குழந்தைகளை அவர்களிடமிருந்து அகற்றி வேறு குழுவினரிடம் ஒப்படைத்தலிலோ அடங்கும். அனைத்துநாட்டுச் சட்டத்தின் கீழ் இனப்படுகொலை என்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமும் பெரும்பாதகமும் ஆகும். அது ஐ.நா. மற்றும் நாகரிக உலகத்தின் அணுகுமுறைக்கும் எதிரானது. இனப்படுகொலைத் தடுப்பு ஒப்பந்தம் என்னும் ஐ.நா. ஆவணம் "மனித இனமானது வரலாற்றில் இனப்படுகொலை காரணமாகப் பேரிழப்பைச் சந்தித்துள்ளது" என்று கூறுகிறது. இக்கேள்விக்கு விடை தருவது அவ்வளவு எளிதல்ல. ஏதாவது ஒரு வரலாற்று நிகழ்வு இனப்படுகொலை என்று அழைக்கப்பட்ட உடனேயே அதற்கு எதிரான கருத்தும் தெரிவிக்கப்படுவது உண்டு. அந்தக் குறிப்பிட்ட நிகழ்வு தொடர்பான தகவல்கள், விளக்கங்கள் கேள்விக்கு உட்படுத்தப்படுவதும் உண்டு. எனவே "இனப்படுகொலை" என்னும் சொற்பயன்பாடு பற்றிய தெளிவு தேவைப்படுகிறது. அண்மைக்காலத்தில் நிகழ்ந்த சில போர்ச்செயல்கள் "இனப்படுகொலைகள்" என்று சித்தரிக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, "ருவாண்டா இனப்படுகொலையை" ("Rwanda genocide") காட்டலாம். சூடான் நாட்டில் டார்புர் பகுதியில் நிகழ்ந்த சண்டையை ஐக்கிய அமெரிக்க நாடுகள் "இனப்படுகொலை" என்று அழைத்துள்ளது. ஆனால் ஐ.நா. அச்சொல்லைப் பயன்படுத்தவில்லை. ஒரு குறிப்பிட்ட நாடு அல்லது அரசு தன் பகுதியில் நிகழும் போர்நிகழ்ச்சியை இனப்படுகொலை என்று அடையாளம் காண்கிறதா என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது. நிலம் தொடர்பான சர்ச்சை, இன ஒழிப்பு, இனப்படுகொலை ஆகியவற்றை எவ்வாறு துல்லியமாக வேறுபடுத்திப் பார்ப்பது, அதில் அடங்கியுள்ள அரசியல் அர்த்தங்கள் என்ன? எந்த அடிப்படையில் ஒரு நிகழ்ச்சி இனப்படுகொலை என்று அழைக்கப்படுகிறது? சட்டப்படி இனப்படுகொலை என்பது அனைத்துநாட்டு நீதிமன்றச் சட்ட வரையறைப்படி அமைய வேண்டுமா? இவை போன்ற பல கேள்விகள் எழுகின்றன. இனம், சாதி, சமயம், நாடு என்னும் அடிப்படைகள் தவிர, ஒரு குறிப்பிட்ட சமூகக் குழு, அரசியல் குழு போன்றவற்றைக் கூண்டோடு அழிக்கும் செயல் ஏன் "இனப்படுகொலை" என்னும் பெயரால் ஐ.நா. அமைப்பால் அழைக்கப்படவில்லை என்னும் கேள்வியை ஹசான் காக்கார் ("M. Hassan Kakkar") போன்ற அறிஞர்கள் எழுப்புகிறார்கள். அந்த அறிஞர்கள் கருத்துப்படி, அனைத்துலக நாடுகள் "இனப்படுகொலை" பற்றித் தருகின்ற வரையறை போதிய விரிவுகொண்டிருக்கவில்லை. இந்திய மலை அணில் இந்திய மலை அணில் அல்லது மலபார் மலை அணில் ("Ratufa indica") என்பது மரத்தின் மீது வாழும் மிகப்பெரிய அணில் வகையாகும். இவை பகலில் உணவருந்தும் பழக்கமும், தாவர உண்ணியாகவும், கிளைகளில் மீது வாழும் வகையாகவும் தெற்காசியாவில் உள்ளது. இது மகாராட்டிர மாநிலத்தின் மாநில விலங்காகவும் உள்ளது. பழுப்பு மலை அணில் பழுப்பு மலை அணில் ("Ratufa macroura") என்பது ஒரு மிகப்பெரிய மர அணில் வகையாகும். இவை இலங்கையின் மத்திய மற்றும் ஊவா பகுதிகளில் காணப்படுகின்றன. இவை தமிழ்நாடு மற்றும் கேரளத்தில், காவிரி நதிக்கரையிலுள்ள மலைக்காடுகளிலும் காணப்படுகின்றன. இவற்றின் பரம்பலின் காடுகள் ஆக்கிரமிப்பாலும் வேட்டையாடுதலாலும் இவற்றினை இயற்கையைப் பாதுகாப்பதற்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) அழியும் நிலைக்கருகிலிருக்கும் இனமாகப் பட்டியலிட்டுள்ளது. பின்வரும் அட்டவணை "Ratufa macroura"-வின் மூன்று துணையினங்களையும் அவற்றின் இணையான பெயர்களினையும் அளிக்கிறது. 88 ஆண்டு 88 (LXXXVIII ) என்பது பழைய ஜூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் தொடங்கும் ஒரு நெட்டாண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு "அகஸ்டசு மற்றும் ரூபுசு ஆகியோரின் ஆட்சி ஆண்டு" ("Year of the Consulship of Augustus and Rufus") எனவும், பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில் "ஆண்டு 841" எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 88 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவ பொது ஆண்டு முறையில் இது 88வது ஆண்டாகும். இதற்கு முந்தைய ஆண்டு கிபி 87 ஆகும். சயனைடு சயனைடு "(cyanide)" என்பது கார்பன், நைட்ரசன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து உருவாகும் ஒரு வேதிப்பொருளாகும். C≡N என்ற சயனோ வேதி வினைக்குழுவைக் கொண்ட சேர்மங்கள் யாவும் சயனைடுகள் எனப்படும். ஒரு கார்பன் அணு முப்பிணைப்பால் நைட்ரசன் அணுவுடன் இணைந்திருப்பது சயனோ குழுவாகும் . கனிம வேதியியல் சயனைடுகளில் சயனைடு தொகுதியானது (CN−) ஓர் எதிர்மின் அயனியாக காணப்படுகிறது. சோடியம் சயனைடு மற்றும் பொட்டாசியம் சயனைடு போன்ற உப்புகள் மிகவும் நச்சுத்தன்மை கொண்டவையாகும் . எளிதில் ஆவியாகக்கூடிய நீர்மமான ஐதரோசயனிக் அமிலம் என்று அறியப்படும் ஐதரசன் சயனைடு பேரளவில் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படுகிறது. சயனைடு உப்புகளை அமிலமாக்கல் வினை மூலம் இது தயாரிக்கப்படுகிறது. கரிம சயனைடுகள் பொதுவாக நைட்ரைல்கள் எனப்படுகின்றன.நைட்ரைல்களில் CN தொகுதியானது கார்பன் அணுவுடன் ஒரு சகப்பிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக அசிட்டோ நைட்ரைலில் சயனைடு தொகுதியானது மெத்தில் தொகுதியுடன் (CH3) பிணைந்துள்ளது. ஏனெனில் அவை சயனைடுகளை விடுவிப்பதில்லை. பொதுவாக சயனைடுகளைக் காட்டிலும் நைட்ரைல்கள் மிகக் குறைவான நச்சுத்தன்மை கொண்டவையாகும். இயற்கையாகத் தோன்றும் சயனோயைதரின் போன்ற சில நைட்ரைல்கள் ஐதரசன் சயனைடை விடுவிக்கின்றன. . மேலிருந்து: 1. இணைதிறன் பிணைப்பு கட்டமைப்பு 2. இடம் நிரப்பு மாதிரி 3. நிலை மின்னழுத்த மேற்பரப்பு 4. கார்பன் தனி இணை கரிமச்சேர்மங்களுக்கு பெயரிடப்படும் ஐயுபிஏசி முறை பெயரிடலில் C≡N வேதி வினைக்குழு இடம்பெற்றுள்ள சேர்மங்கள் நைட்ரைல்கள் எனப்படுகின்றன. எனவே நைட்ரைல்கள் எனப்படுபவை எல்லாம் கரிமச் சேர்மங்களாகும். அசிட்டோநைட்ரைல் (CH3CN) ஒரு நைட்ரைல் ஆகும். இது மெத்தில் சயனைடு என்றும் அழைக்கப்படுகிறது. நைட்ரைல்கள் பொதுவாக சயனைடு அயனிகளை விடுவிப்பதில்லை. ஒரே கார்பனுடன் ஒரு ஐதராக்சில் குழுவும் சயனைடும் பிணைக்கப் பட்டிருந்தால் அது சயனோ ஐதரின் எனப்படும். நைட்ரைல்களைப் போல இல்லாமல் சயனோ ஐதரின்கள் ஐதரசன் சயனைடை விடுவிக்கின்றன. கனிம வேதியியலில் C≡N− அயனியைக் கொண்டுள்ள உப்புகள் சயனைடுகள் எனப்படுகின்றன. அடர் நீலம் என்ற பொருள் கொண்ட கயனோசு என்ற கிரேக்க சொல்லிலிருந்து சயனைடு என்ற சொல் வருவிக்கப்பட்டுள்ளது. பிரசிய நீலம் என்ற நிறமியை சூடுபடுத்தும் போது முதன் முதலில் சயனைடு கண்டுபிடிக்கப்பட்டதன் விளைவாக சயனைடு என்ற பெயர் இதற்கு வைக்கப்பட்டது. கார்பனோராக்சைடு மற்றும் மூலக்கூற்று நைட்ரசனுடன் சயனைடு அயனி ஒத்த எலக்ட்ரான் எண்னிக்கையுடையதாக உள்ளது. சில வகை பாக்டீரியா, பூஞ்சை மற்றும் பாசி இனங்களில் சையனைடு இயற்கையில் தோன்றுகிறது. இவை தவிர பல தாவரங்களிலும் சயனைடு காணப்படுகிறது. சில விதைகள் மற்றும் பழங்களில் கணிசமான அளவு சயனைடுகள் காணப்படுகின்றன, எ.கா. கசப்பான பாதாம், ஆப்பிரிக்காட் எனப்படும் வாதுமை, ஆப்பிள் மற்றும் பீச் எனப்படும் குழிப்பேரி போன்றவை இதற்கு உதாரணங்களாகும் . தாவரங்களில், சயனைடுகள் வழக்கமாக சயனோசெனிக் கிளைக்கோசைடுகளின் வடிவில் சர்க்கரை மூலக்கூறுகளுடன் பிணைந்துள்ளன. மற்றும் தாவர உண்ணிகளிடமிருந்து தாவரத்தை பாதுகாக்கின்றன. உருளைக்கிழங்கு உணவு போன்ற மரவள்ளி கிழங்கும் சயனோசெனிக் கிளைக்கோசைடுகளைக் கொண்டுள்ளன . விண்மீனிடை விண்வெளியில் சயனைடு தனி உறுப்பு அடையாளம் காணப்பட்டுள்ளது. விண்மீனிடை வாயு மேகங்களின் வெப்பநிலையை அளவிட சயனைடு தனி உறுப்பு பயன்படுகிறது. சில பொருட்களை ஆக்சிசன் பற்றாக்குறை நிபந்தனையில் வெப்பச்சிதைவு அல்லது எரித்தல் வினை மூலம் ஐதரசன் சயனைடு உற்பத்தி செய்யப்படுகிறது. உதாரணமாக உள்ளெரி இயந்திரங்கள் வெளிவிடும் புகையில், புகையிலை புகையில், சிலவகை நெகிழிகள் எரியும்போது ஐதரசன் சயனைடு உருவாகிறது. பல இடைநிலைத் தனிமங்களுக்கு சயனைடு அயனி ஈந்தணைவியாக உள்ளது. இந்த எதிர்மின் அயனிக்கான உலோகங்களின் உயர் நாட்டம் அதன் எதிர்மின் சுமை, சிறிய அளவு மற்றும் π- பிணைப்பு ஆகியவை காரணமாக இருக்கலாம். நன்கு அறியப்பட்ட அனைவுகள் பின்வருமாறு: மிக முக்கியமான சயனைடு ஒருங்கிணைப்பு சேர்மங்கள் எல்லாம் எண்முக வடிவில் ஒருங்கிணைந்த சேர்மங்களாக உள்ளன. பொட்டாசியம் பெரோசயனைடு மற்றும் நிறமியான பிரசியன் நீலம் இரண்டும் நச்சுத்தன்மை அற்றவையாகும். மத்தியிலுள்ள இரும்பு அணுவுடன் சயனைடு இறுக்கமாகப் பினைக்கப்பட்டிருப்பதே இதற்குக் காரணமாகும் .பிரசியன் நீலத்திலிருந்து எதிர்பாரா விதமாக 1706 ஆம் ஆண்டு சயனைடு கண்டறியப்பட்டது. ஐதரசனேசு எனப்படும் நொதிகள் சயனைடைக் கொண்டுள்ளன. தூறல் நின்னு போச்சு தூறல் நின்னு போச்சு என்பது 1982 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். இப்படத்தில் பாக்யராஜ், சுலக்சனா, செந்தில், நம்பியார் ஆகியோர் நடித்திருந்தனர். குடும்பப் பாங்கான காதல் திரைப்படம். காளிங்க நர்த்தனம் காளிங்க நர்த்தனம் என்பது வைணவக் கடவுளான கிருஷ்ணன், யமுனை ஆற்றில் வாழ்ந்துவந்த காளிங்கன் எனும் நாகத்தின் மீது ஆடிய நடனத்தினைக் குறிப்பதாகும். காளிங்கன் யமுனை நதியில் தன் விஷத்தினைக் கக்கி அந்த ஆறு முழுமையும் விஷமாக ஆக்கியதென்றும், பூப்பந்து விளையாடிய கிருஷ்ணன் யமுனையில் விழுந்த பந்தினை எடுக்க சென்ற போது, காளிங்கனுடன் சண்டையிட்டு, அதன் மேல் நடனமாடியதாக நம்பப்படுகிறது. இந்த நர்த்தனத்தினை சிற்பமாக வைணவக் கோவில்களில் காணலாம். ஊத்துக்காடு ஸ்ரீ வெங்கடசுப்பையர் ஸ்ரீ கிருஷ்ணகானம் என்ற பாடல்களின் தொகுப்பில் இந்த காளிங்க நர்த்தனத்தினைப் பற்றி பாடல் இயற்றியுள்ளார். சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் என்பது வலையப்பேட்டை.ரா. கிருஷ்ணன் என்பவரால் எழுதப்பெற்ற நூலாகும். இது சக்தி விகடனில் தொடராக வெளிவந்து பின் விகடன் பதிப்பகத்தாரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. சிவ வடிவங்களையும், அவற்றிற்கான கதைகளையும் வழிபாட்டு முறைகளையும் விளக்கும் நூலாக இந்நூல் விளங்குகிறது. சைவ நெறி இலக்கியங்கள் நடராஜ வடிவம் தில்லைத் திருநடனம் நடராஜ வடிவம் தில்லைத் திருநடனம் என்பது விபுலாநந்த அடிகள் என்பவரால் எழுதப்பெற்ற நூலாகும். 1940 ம் ஆண்டு சென்னை ராமகிருஷ்ண மட தலைவரால் பிரசுகிக்கப்பட்ட இந்நூலானது, திருவாட்டி சண்முகம்பிள்ளை பொன்னம்மா அவர்களின் நினைவாகவும் வெளியிடப்பட்டுள்ளது. சிவாகமங்களின் முடிபு, உருவத்திருமேனியை காட்சியாற் காணுதல், உருவத்திருமேனி அருள்வடிவம், ஒன்பது சிவபேதங்கள் என பல சைவ நெறிக்கொள்கைகளை விளக்குகிறது. திரு ஆமாத்தூர்க் கலம்பகம் திரு ஆமத்தூர்க் கலம்பகம் (திருவாமத்தூர்க் கலம்பகம்) என்னும் நூல் இரட்டைப்புலவர்கள் பாடிய நூல்களில் ஒன்று. இது 14 ஆம் நூற்றாண்டு நூல். இந்த நூலைப் பாடியதால் இவர்களைக் “கண்பாவு கலம்பகத்திற்கு இரட்டையர்கள்” என்று பலராலும் பாராட்டப்படுகின்றனர். கலம்பக நூலின் உறுப்புகள் 18. இவற்றுடன் இவர்கள் இந்த நூலில் மேலும் சில உறுப்புகளையும் சேர்த்துப் பாடியுள்ளனர். நந்தி கலம்பகம், அளைடைய பிள்ளையார் கலம்பகம், திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம் ஆகியவை இவரது காலத்துக்கு முன் தோன்றிய கலம்பக நூல்கள். இந்த நூல்களில் காணப்படாத இடைச்சியார், கொற்றியார், குறத்தியார், பிச்சியார், யோகினியார், வலைச்சியார் உறுப்புப் பாடல்கள் இந்த நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. சொற்பொருள் நயம், மடக்கு, கற்பனை முதலானவை இந்த நூலில் மற்ற நூல்களில் காணப்படுவனவற்றைக் காட்டிலும் சிறப்பாக அமைந்துள்ளன. இவர்கள் இந்தக் கலம்பகம் பாடிய பிறகு ஆமத்தூரில் திசை மாறி மேற்குப் பக்கத்திலிருந்து கிழக்குப் பக்கமாக ஓடியதாம். இந்த நூலில் 101 பாடல்கள் உள்ளன. இவற்றில் காப்புச் செய்யுள் ஒன்று போக எஞ்சிய 100 பாடல்களும் அகப்பொருள் தரும் பாடல்கள். இவற்றில் சந்தப்பாடல்கள் மிகுதி. திருவிருத்தம் யாப்பிலக்கண வகையில் கட்டளைக் கலித்துறை எனக் கூறப்படும் பாடல் இறைவனைப் பற்றியதாக அமையும்போது திருவிருத்தம் எனப் போற்றப்படுவது மரபு. திருவிருத்தம் (திருநாவுக்கரசர்) திருநாவுகரசர் பாடிய தேவாரப் பாடல்களில் நான்காம் திருமுறையில் சரக்கறை என்னும் ஊரில் அமைந்துள்ள சிவபெருமான்மீது பாடிய பாடல்கள் சரக்கறைத் திருவிருத்தம் என்னும் பெயரைத் தாங்கியுள்ளன. யாப்பு நெறியில் கட்டளைக் கலித்துறை எனக் குறிப்பிடப்படும் பாடல்கள் இறைவனைப் பற்றியதாக அமையும்போது திருவிருத்தம் எனச் சிறப்பிக்கப்படுகின்றன. திருநாவுக்கரசர் பாடிய திருவிருத்தம் - எடுத்துக்காட்டு திருவிருத்தக் கட்டளைக்கலித்துறை இலக்கண நோக்கில் சீர் பிரிப்பு மேலே உள்ள பாடல் பொருள் உணரும் வகையில் பிரிக்கப்பட்டுள்ளது திரு ஆரூர்ப் புராணம் திரு ஆரூர் புராணம் (திருவாரூர் புராணம்) தமிழில் 16 ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல்களில் ஒன்று. இதன் ஆசிரியர் சம்பந்த முனிவர். இவர் நிரம்ப அழகிய தேசிகரின் மாணாக்கர். இவர் இந்த நூலை அரங்கேற்றிய காலம் கி. பி. 1592. இது பாயிரம் உட்பட 111 சருக்கங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. 2929 பாடல்களைக் கொண்டது. பல்வேறு தெய்வங்களுக்கு வணக்கம் சொல்லும் பாயிரப் பாடல்கள் மட்டுமே 35 உள்ளன. நூல் விருத்தப் பாடல்களால் ஆனது. நூலின் வரும் பாடல்களுக்கு இடையேயும் இவர் இறைவனைப் போற்றும் தோத்திரப் பாடல்கள் பலவற்றைச் சேர்த்துள்ளார். அவற்றுள் ஒன்று எடுத்துக்காட்டு; பாடல்கள் பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளன. கோக்குணச் சருக்கத்தில் சிவ பூசையைச் சிறப்பிக்கும் பாடல் ரெக்ஸ் (இயந்திர மனிதன்) ரெக்ஸ் (Rex)என்பது செயற்கை உடலுறுப்பு அமைப்பியல், மரபு வழிப்பண்பியல் இரண்டையும் இணைத்து உருவாக்கிய மனிதனுமல்லாத மனித இயந்திரமுமல்லாத சைபர்க் (Cyberg) எனும் வகையைச் சேர்ந்த ஒரு மனித இயந்திரம் ஆகும். இலண்டனிலுள்ள சமூக உளவியலாளர் மருத்துவர் பெர்டாய்ட் மேயர், ரிச்சர்டு வாக்கர், மேத்யூ காடென் ஆகியோர் கூட்டு முயற்சியால் புறச்சட்டக அமைப்பில் 6 அடி உயரமுள்ள இவ்வியந்திர மனிதனை உருவாக்கியுள்ளனர். மின்கலத்தில் இயங்கும் இதயம், மனிதனின் சாதாரண இயக்க அளவில் ஒரு டிகிரி குறைவான அசைவைக் கொண்ட கைகள், கண்கள், காதுகள், நெகிழியாலான குருதி, எடையைத் தாங்கும் வகையில் கால்கள், உணவுக்குழல், மண்ணீரல், கணையம், சிறுநீரகம் என ஒவ்வொன்றும் உலகிலுள்ள பல்வேறு பல்கலைக் கழகங்களால் உருவாக்கப்பட்டுள்ளன. மருத்துவர் பெர்ட்ராய்ட் மேயரின் முக வடிவமைப்பைக் கொண்டு இதன் முகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை உருவாக்க 10 இலட்சம் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டது. இது தற்போது இலண்டன் அறிவியல் அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. ந. சு. சிதம்பரம், "ரெக்ஸ் - புறச்சட்டக இயந்திர மனிதன்" -அறிவியல் ஒளி. மே 2013 இதழ். பக். 28,29 இல் வெளியான கட்டுரை. திரு ஆனைக்கா உலா திரு ஆனைக்கா உலா (திருவானைக்கா உலா) என்னும் நூல் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காளமேகப் புலவரால் பாடப்பட்ட நூல்களில் ஒன்று. வெண்ணாவல் மரத்தடியில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் உலா வருவதாகப் பாடும் பாடல் இது. இதில் 461 கண்ணிகளும் 2 வெண்பாக்களும் உள்ளன. இத்தலத்தில் வழிபட்டுப் பேறு பெற்றதை ஆசிரியர் காளமேகப் புலவர் தலச்சிறப்பு கூறும் பகுதியில் குறிப்பிடுகிறார். மகளிர் விளையாட்டுகள் சிலவற்றை இந்த நூல் பருவமங்கையரைக் கூறும் பகுதியில் தெரிவிக்கிறது. இமனால் இந்த விளையாட்டு இந்தப் பருவத்தில் நிகழும் என்பதை உணரமுடிகிறது. கழங்கு ஒண்ணாங்கல் விளையாட்டில் மகளிர் ஒன்று, இரண்டு என ஏழு வரை எண்ணிக்கொண்டே கழற்சிக் காய்களை மேலே தூக்கிப் போட்டுப் பிடிப்பர். இந்த நூல் அதனை உணர்த்தும் வகையில் கழங்காட்டப் பாடலில் இறைவன் புகழை எண்ணிக்கை காட்டிப் பாடுகிறது. அழகுக்கு ஆரும் ஒவ்வாதான், அனைத்துலகை ஆள்வான், என்னானைக் கன்று, செழுநீர்த்திரன், தேவர்குலக் கொழுந்து, பின்னிரக்கம் செய்வான் முதலான தொடர்களால் இவர் சிவபெருமானை இந்த நூலில் போற்றி மகிழ்கிறார். திருக்கயிலாய ஞான உலா, ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலை, சோழர் மூவர் உலா, தில்லை உலா, இரட்டையர் பாடிய தில்லை தெய்விக உலா ஆகிய உலா நூல்கள் இந்த நூலுக்கு முன்னோடி நூல்கள். நுழைவிசைவு விசா ( இலத்தீன் மொழியின் "சார்ட்டா விசா"விலிருந்து, பொருள்: "பார்க்கப்பட்ட தாள்") என்று பரவலாக அறியப்படும் நுழைவிசைவு அல்லது நுழைவாணை ஓர் குறிப்பிட்ட பகுதிக்கு ஒருவர் செல்வதையும் அல்லது அங்கிருந்து வெளியேறுவதையும் அனுமதிக்கும் ஆவணமாகும். இந்த அனுமதி ஒருவர் நுழைகையில் நுழைவெல்லையில் உள்ள குடியேற்ற அதிகாரியால் மேலும் கட்டுப்படுத்தப்படும். இந்த அனுமதி ஓர் ஆவணமாக இருக்கலாம்;ஆனால் பெரும்பாலான நேரங்களில் விண்ணப்பதாரரின் கடவுச்சீட்டில் (அல்லது கடவுச்சீட்டிற்கு மாற்றான ஆவணத்தில்) முத்திரையாகப் பதிக்கப்படுகிறது. சில நாடுகள் சிலருக்கு நுழைவிசைவு இன்றியே உள்ளே செல்ல அனுமதிக்கின்றன; இவை இருநாடுகளுக்கிடையேயான புரிந்துணர்வின் அடிப்படையில் இருக்கும். நுழைவிசைவை வழங்கும் நாடு பொதுவாக தங்குவதற்கு பல நிபந்தனைகளை இடலாம்; நுழைவிசைவு பெற்றவர் செல்லக்கூடிய நாட்டின் பகுதிகள் (அல்லது செல்லக்கூடாத பகுதிகள்), தங்கக்கூடிய நாட்கள், நுழைவிசைவின் காலக்கெடு, ஒருமுறை அல்லது பலமுறை சென்றுவர இசைவு ஆகியன குறிப்பிடப்பட்டிருக்கும். இதனை வழங்க ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டமைப்பின் செலவிற்காக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. விசா அல்லது நுழைவிசைவு குடிமக்கள் அல்லாத வெளிநாட்டினருக்கு ஒரு நாட்டினுள் செல்லவும் அங்கு குறிப்பிட்ட நாட்கள் தங்கவும் அனுமதிக்கிறது. நுழைவதற்கான காலக்கெடு, எவ்வளவு நாட்கள் தங்கலாம் மற்றும் அங்கு வேலை செய்ய அனுமதி அல்லது தடை ஆகியவற்றை இந்த ஆவணம் வரையறுக்கிறது. விசா கிடைக்கப்பெற்றது அந்நாட்டிற்குள் நுழைய உறுதி வழங்குவதில்லை; எந்நேரமும் வழங்கப்பட்ட இசைவு இரத்து செய்யப்படலாம். வருகைக்கு முன்னதான விசா விண்ணப்பம் அந்நாட்டு குடியேற்ற அதிகாரிகளுக்கு வருகையாளரின் நிதி நிலை, வருகைக்கான காரணம், அந்நாட்டிற்கு வந்த முந்தைய வரலாறு ஆகியவற்றை அறிந்துகொள்ள வழி செய்கிறது. நுழைகின்ற நாளன்று நிலவுகின்ற பல்வேறு அரசியல்/சமூக/தீவிரவாத நிகழ்வுகளுக்கேற்ப நுழைவிசைவு பெற்றிருந்தாலும் நுழைவு மறுக்கப்படலாம். இவற்றைத் தவிர வருகையாளர் எல்லையில் பாதுகாப்புச் சோதனைகளிலும் உடல்நலச் சோதனைகளிலும் தேர்வுற வேண்டும். சில நாடுகளில், காட்டாக சோவியத் ஒன்றியத்தில், அந்நாட்டு குடிமக்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் அந்நாட்டை விட்டு வெளியேற "வெளியேற்ற விசா" தேவைப்படுகிறது. சில நாடுகளில் அந்நாட்டில் நுழைகையிலேயே உட்புகும் துறையில் நுழைவிசைவு வழங்கப்படும். பொதுவாக அந்நாட்டு தூதரகம் அல்லது பேராளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். சில நேரங்களில் இப்பணி மூன்றாம்நிலை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும். தூதரகம் இல்லாதநிலையில் அஞ்சல் மூலமோ அல்லது தூதரகம் உள்ள வேறொரு நாட்டிலோ விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் எந்நாட்டுக் குடிமகன், தங்கும் நாட்கள், அங்கு ஆற்றவுள்ள பணிகளைக் கொண்டு ஒருவருக்கு நுழைவிசைவு தேவையா அல்லவா என்பது தீர்மானிக்கப்படுகிறது. இவை மேலும் பலவகை விசாக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வகை விசாவிற்கும் வெவ்வேறு வரைக்கட்டுக்கள் விதிக்கப்படுகின்றன. சில நாடுகள் தங்களுக்குள் ஒன்றுக்கொன்று எதுரெதிர் விசா முறைமைகளைக் கொண்டுள்ளன; ஏ என்ற நாட்டிற்கு செல்ல பி என்ற நாட்டு குடிமக்களுக்கு விசாத் தேவைப்படின் பி நாடும் ஏ நாட்டு குடிமக்களுக்கு விசா பெறுதலை தேவையாக்குகிறது. இதேபோல ஏ நாடு பி நாட்டு குடிகள் விசாவின்றி நுழைய அனுமதித்தால் பி நாடும் அத்தகைய சலுகையை ஏ நாட்டு குடிகளுக்கு வழங்குகிறது. இத்தகைய எதிரெதிர் விசா முறைமையைக் கொண்டுள்ள சிலவற்றின் எடுத்துக்காட்டுக்கள்: விசா வழங்குவதற்கு பொதுவாக கட்டணம் வசூலிக்கப்படும்; இதுவும் பொதுவாக எதிரெதிர் தன்மையுடையது. காட்டாக ஏ நாடு பி நாட்டு மக்களுக்கு 50 அமெரிக்க டாலர்கள் வசூலித்தால் பி நாடும் ஏ நாட்டு விசாக்களுக்கு அதே கட்டணத்தை வசூலிக்கும். மேலும் இந்தக் கட்டணத்தை நிர்ணயிப்பது ஒவ்வொரு தூதரகத்தின் விருப்புரிமை ஆகும். இதேபோல விசா செல்லுபடியாகும் காலம், எத்தனை முறை உட்புகுலாம் என்பதும் எதிரெதிர் நிலையில் அமைகின்றன. விசாவை விரைவாகப் பெற சில நாடுகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. வழமையான விசா வகைகள்: வழமையிலா விசா வகைகள்: அன்பின்நகரம் அன்பின்நகரம் (Anbinnagaram) என்பது தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம் முதலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிறிய கிராமப் பகுதியாகும். போதகர். சி. டி. இ. ரேனியஸ் அவர்களால் உருவாக்கப்பட்டது. இந்த ஊரில் நான்கு தெருக்கள் மட்டுமே இருக்கின்றன. இந்த ஊரில் வசிப்பவர்கள் அனைவரும் கிறித்தவ சமயத்தைச் சார்ந்தவர்கள். விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்ட இந்த ஊரின் கிழக்குப் பகுதியில் கருமேனி ஆற்று ஓடை உள்ளது. இந்த ஓடையில் மழைக்காலங்களில் மட்டுமே நீர் ஓடுகிறது. இவ்வூரின் ஆலய பிரதிஷ்டை பண்டிகை பெரிய வாரத்திலும், கோபுர பிரதிஷ்டை பண்டிகை மே மாத முதல் வாரத்திலும் நடைபெறும். திரு ஆனைக்காப் புராணம் திரு ஆனைக்காப் புராணம் (திருவானைக்காப் புராணம்) 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கமலை ஞானப்பிரகாசர் இயற்றிய இரண்டு புராணங்களில் ஒன்று. மற்றொன்று திருமழப்பாடிப் புராணம். இந்த இரண்டு புராணங்களில் மழபாடிப் புராணம் அச்சாகியுள்ளது. ஆனைக்காப் புராணம் அச்சாகவில்லை. திருவான்மியார் டாக்டர் சாமிநாதையர் நூலகத்தில் தந்திவனப் புராணம் என்னும் பெயரில் சுவடியாக உள்ளது. திருவானைக்காப் புராணம் 571 பாடல்களைக் கொண்டது. இவை 14 சருக்கங்களாய் அமைந்துள்ளன. மழுவை என்னும் மழபாடிப் புராணம் பாடும்படித் தூண்டிய உலகநாத முனிவரே ஊக்கம் தந்து இதனையும் பாடும்படி செய்தார். இதனை இப் புராணத்தின் இறுதிப் பாடல் குறிப்பிடுகிறது. இதனை இந்நூலின் பாடல் பாங்கிற்கும் ஓர் எடுத்துக்காட்டாக வைத்துக்கொள்ளலாம். திருவுந்தியார் உந்தி பறத்தல் மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. இரண்டு சிறுமியர் உந்திக்கொண்டு சுழன்று பறப்பர். பாடிக்கொண்டே பறப்பர். ஒருவர் பாடல் வினாவாக இருக்கும். மற்றொருவர் பாடல் விடையாக அமையும். மூச்சை மூலாதாரத்திலிருந்து உந்தி எழுப்பிச் சுழுமுனை வழியே துரியநிலைக்குப் பறத்தலாகிய 'உந்தி பறத்தல்' பற்றிச் சித்தாந்தத் திருவுந்தியார் நூல் குறிப்பிடுகிறது. மாண்புயர் (பாடல்) மாண்புயர் கீதம் அல்லது மாண்புயர் பாடல் என்பது மாண்புயர் இவ்வருட் சாதனத்தை எனத்துவங்கும் பாடுவாய் என் நாவே என்னும் பாடலின் கடைசி இரு பத்திகளாகும். இது தாமஸ் அக்குவைனசால் நடுக் காலத்தில் இலத்தீனில் எழுதப்பட்ட பாடலாகும். கத்தோலிக்க திருச்சபையில் நற்கருணை ஆசீரின் முன் இது படப்படுவது வழக்கம். இது பாடலாகப்பாட இயலாத இடத்தில் இறைவேண்டலாக செபிக்கப்பட அனுமத்தி உண்டு. பீபி நாச்சியார் பீபி நாச்சியார் என்பவர் மேல்கோட்டை செல்வநாராயணர் கோயில் உற்வசர் செல்வ நாராயணர் மேல் அன்பு கொண்ட இசுலாமிய பக்தையாவார். மேலக்கோட்டையில் தங்கியிருந்த இராமானுசர் கனவில் வந்த திருமால், தமது உற்சவர் சிலை இசுலாமிய அரசனால் கொள்ளையடிக்கப்பட்டு, தில்லியில் இருப்பதாகத் தெரிவித்தார். அதனை மீட்க இராமானுசர் தில்லி சென்று, இளவரசியின் அரண்மனையிலிருந்த விக்ரகத்தினை மீட்டுக் கொண்டுவந்தார். செல்வ நாராயணரை பிரிந்திருக்க இயலாமல் மொகலாய இளவரசியும் இராமானுசரை பின் தொடர்ந்தார். இசுலாமியப் பெண் என்பதால் கோவிலினுள் அனுமதி மறுத்தவர்கள், இராமானுசரின் வேண்டுகோளை ஏற்று அனுமதித்தனர். கோவிலுள் நுழைந்த இசுலாமிய இளவரசி திருமாலுடன் இணைந்ததாக நம்பப்படுகிறது. திருவுந்தியார் (மாணிக்கவாசகர்) மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம் நூலில் திருவுந்தியார் என்னும் தலைப்பில் 20 பாடல்கள் உள்ளன. யாப்பிலக்கண வகையில் இந்தப் பாடல்களைக் கலித்தாழிசை என்பர். இந்தப் பாடல்கள் தில்லையில் பாடப்பட்டவை. பாடல் - எடுத்துக்காட்டு விளக்கம் பாடுவாய் என் நாவே பாடுவாய் என் நாவே என்பது கத்தோலிக்க திருச்சபையில் "கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தம் பெருவிழாவின்" போது நற்கருணையின் புகழினைக் குறித்துப் பாடப்படும் பாடல் ஆகும். இது மிகவும் குறிப்பாக பெரிய வியாழனின் "நற்கருணை இடமாற்ற பவனியின்" போது பாடப்படும். இப்பாடலின் கடைசி இரு பத்திகள் நற்கருணை ஆசீரின் முன் மாண்புயர் கீதம் என்னும் பெயரில் படப்படுவது வழக்கம். இது புனித தாமசு அக்குவைனசுவினால் இயற்றப்பட்டதாகும். இப்பாடல் கத்தோலிக்க திருச்சபைக்கு நற்கருணையின் "உட்கருபொருள் மாற்றத்தில்" () உள்ள நம்பிக்கையை எடுத்தியம்புகின்றது. இப்பாடலுக்கு யோகான் செபாஸ்தியன் பாக், வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்ஸார்ட், பிராண்ஸ் சூபேர்ட் முதலிய பலர் இசையமைத்துள்ளனர். அரை மதிப்புத் தடிமன் அரை மதிப்புத் தடிமன் ("Half value layer" அல்லது "half-value thickness") என்பது அயனியாக்கும் பண்புடைய எக்சு மற்றும் காமாக் கதிர்கள் ஓர் ஊடகத்தின் வழியாகச் சென்று வெளிப்படும் போது, கதிர்களின் ஆரம்பச் செறிவினைப் பாதியாகக் குறைக்கும் ஊடகத்தின் தடிப்பு ஆகும். கதிர் மருத்துவத் துறையில் கோபால்ட் 60 கருவி, அதிக ஆற்றல் மிக்க அண்மைக்கதிர் (Brachytherapy unit) கருவி, நேர்கோட்டு வேகவளர்த்திக் கருவிகள் (Clinac, Linac) முதலிய கருவிகளின் அமைவிடம் போதிய பாதுகாப்பாக இருக்க வேண்டிய சுவர்கனம் கணக்கிட, இந்த அரை மதிப்புத் தடிமன் பயன்படுகிறது. அண்மைக் கதிர் மருத்துவத்துறையில் கதிர் மூலங்கள் இருக்கும் கலங்களின் காப்பான தடிமனளவு காணவும் இது உதவுகிறது. எந்த தடிமனளவு செறிவினை பத்தில் ஒரு பங்காக குறைக்கிறதோ அந்த தடிமனளவு, "பத்தில் ஒன்றாகக் குறைக்கும் தடிமனளவு" (tenth value layer) எனப்படும். திருப்பரமபதம் திருப்பரமபதம் அல்லது வைகுண்டம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். வைணவ அடியவர்கள் கடைசி நிலையாகிய வீடுபேறு அல்லது மோட்சம் அல்லது முக்தி என்ற நிலை எய்தி செல்லும் இடமாகும். 8 ஆழ்வார்களால் 36 பாசுரங்களில் பாடல் பெற்ற தலமாகும். வைணவ அடியார்கட்கு, இறைவனன்றி தமக்குப் புகலிடம் யாதுமில்லை என்றெண்ணி அடியவர்கட்கு மோட்சத்தை நல்கும் இந்தப் பரமபதமே வைணவர்களின் கடைசி இலக்காகும். இதனை "திருநாடு" என ஆழ்வார் பாசுரங்களில் குறிக்கின்றனர். திருநாட்டைப் பற்றிப் புராணங்களாலும் ஆழ்வார் பாசுரங்களாலும் உணரலாம். இராமானுஜர் இயற்றிய வேதாந்த சங்கிரஹம் என்னும் நூல் திருநாட்டைப் பற்றித் தெளிவாகவும், நேரில் பார்ப்பது போலவும் விளக்கிப் பேசுகிறது. இராமானுஜர் இயற்றிய கத்யத்ரயத்தில் ஒன்றான வைகுண்டகத்யத்தில் பரமபத வர்ணனை சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. இராமானுஜரின் வரலாற்றைப் பேசும் “ப்ரபந்நாம்ருத தர்ப்பணம்” என்னும் நூலில் பரமபதம் விளக்கப்பட்டுள்ளது. தெற்குநோக்கி வீற்றிருந்த திருக்கோலத்தில் இறைவன் பரமபதநாதன், வைகுண்டபதி என்று அழைக்கப்படுகிறான். இறைவி பெரியபிராட்டியார். தீர்த்தம் விரஜா நதி, அயிரமத புஷ்கரிணி வைணவ சித்தாந்தங்களின் படி இங்கு செல்லும் ஜீவாத்மாக்கள் நித்யசூரிகள் ஆகின்றன. அதாவது எப்போதும் அழிவற்ற சக்தியைப் பெறுகின்றன. இங்கு இறைவனைப் போலவே வடிவம் அவர்கட்கும் உண்டாகிறது. ஆயினும் இறைவனோடு இரண்டறக் கலக்காமல் உடனிருந்து தொண்டு செய்து கொண்டு எப்போதும் பல்லாண்டிசைத்துக் கொண்டிருப்பர். நித்ய சூரியாகி இங்கு சென்றுவிட்டால் படைப்புகளும், பிரபஞ்சங்களும் என்னவென்று தெளிவாகத் தெரிவதால் இதற்கு தெளிவிசும்புத் திருநாடு என்று பெயர்.இதற்குமேல் அறிவதற்கு ஒன்றுமில்லையாதலால் இதற்கு எல்லைநிலம் என்பது பொருள். இங்கு அடையும் இன்பத்திற்கும் நலத்திற்கும் முடிவே இல்லாததால் நலமந்தமில்லதோர் நாடு என்பதும் இதற்குப் பெயர். இங்கு கிடைக்கும் இன்பம் “அந்தமில் பேரின்பம்” என்று நம்மாழ்வார் பாடுகிறார். வாசுதேவன் வைகும்படியான (வாழும்படியான) இருப்பிடமாதலால் வைகுண்டம் என்றும் பெயருண்டு. கௌமோதகி கௌமோதகி என்பது திருமாலின் பஞ்சாயுதங்களில் ஒன்றான கதையின் பெயராகும். பூதத்தாழ்வார் இந்த ஆயுதத்தின் அம்சமாக கருதப்பெறுகிறார். இந்த ஆயுதம் தண்டாயுதம், கதாயுதம் என்றும் அறியப்பெறுகிறது. துவாமோட்டு மொழி துவாமோட்டு மொழி அல்லது பாவுமோட்டு மொழி என்பது ஒரு தகிட்டிய மொழி ஆகும். துவாமோட்டுத் தீவுகளில் வாழும் 6700 பேரும், தாகிட்டியில் வாழும் மேலும் 2000 பேரும் இம்மொழியைப் பேசுகின்றனர். இதற்கு, பராத்தா, வகித்து, மராகா, ஃபகாத்தாவு, தப்புகோவே, நப்புக்கா, மிகிரோ ஆகிய மொழியியல் பகுதிகளில் வழங்கும் ஏழு கிளைமொழிகள் உள்ளன. இம்மொழி, ஆசுத்திரோனீசிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பொலினீசிய மொழிப் பிரிவைச் சேர்ந்தது. இது, அவாய் மொழி, மாவோரி மொழி, குக் தீவு மாவோரி, ஈசுட்டர் தீவுகளில் பேசப்படும் ராப்பா நூயி மொழி ஆகியவற்றை உள்ளடக்கிய கிழக்குப் பொலினீசிய மொழிகளுடன் நெருங்கிய தொடர்புள்ளது. திருவாலவாயுடையார் திருவாலவாயுடையார் என்பவர் பதினோராம் திருமுறையின் முதற்பாடல் சீட்டுக்கவி என்னும் பிரபந்தை எழுதியவராவார். இவரை மதுரை மீனாட்சியின் கணவன் சுந்தரேஸ்வராகிய சிவபெருமான் என்று சைவர்கள் நம்புகிறார்கள். ஆனால் வரலாற்றறிஞர்கள் திருவாலவாயுடையார் எனும் பெயரில் எட்டாம் நூற்றாண்டில் ஒரு புலவர் வாழ்ந்திருக்ககூடுமென நம்புகிறார்கள். சீட்டுக்கவி பிரபந்தமாவது, பாணபுத்திரன் என்பவருக்கு பொருளுதவி செய்யுமாறு சேரமான் பெருமாள் நாயனாருக்கு திருவாலவாயுடையார் எழுதிய மடலாகும். தகிட்டிய மொழிகள் தகிட்டிய மொழிகள் என்பன, கிழக்குப் பொலினீசிய மொழிகளின் நடுக் கிழக்குக் கிளையைச் சேர்ந்த ஒரு மொழிக் குழுவுக்குள் அடங்கும் மொழிகளைக் குறிக்கும். ராப்பாத் தீவில் பேசப்படும் ராப்பா மொழிகளும், மார்க்கேசிய மொழிகளும் நடுக் கிழக்குக் கிளையைச் சேர்ந்த மற்ற இரண்டு மொழிக் குழுக்கள். தகிட்டியமும் நியூசிலாந்து மாவோரியும், பேசுவோர் தொகையின் அடிப்படையில், இக்குழுவில் உள்ள மிகவும் முக்கியமான மொழிகள். தகிட்டியம் சொசைட்டித் தீவுகளின் முதன்மை மொழியாக இருப்பதுடன், பிரெஞ்சுப் பொலினீசியாவின் பெரும் பகுதியின் பொது மொழியாகவும் விளங்குகிறது. மாவோரி மொழி நியூசிலாந்தின் குறிப்பிடத்தக்க சிறுபான்மை மொழியாகவும், ஆங்கிலத்தோடு இன்னொரு உத்தியோக மொழியாகவும் உள்ளது. இக்குழுவில் உள்ள பிற மொழிகள்: திருவுந்தியார் உரை திருவுந்தியார் என்னும் சித்தாந்த நூலுக்கு நல்லதோர் உரை எழுதப்பட்டுள்ளது. உரை எழுதியவரின் பெயர் தெரியவில்லை. உரை தெளிவாகப் பொருள் உணரும் வகையிலும், ஆங்காங்கே சில இலக்கணக் குறிப்புகளுடனும் அமைந்துள்ளது. 16 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. வெளிர் நீலப் புள்ளி வெளிர் நீலப் புள்ளி ("Pale Blue Dot") எனப்படுவது, 1990ம் ஆண்டு வொயேச்சர் 1 விண்கலம் மூலம் எடுக்கப்பட்ட பூமியின் பிரபல ஒளிப்படம் ஆகும். இது பூமியில் இருந்து ஆறு பில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் வைத்து, நமது சூரிய குடும்பத்தின் மொத்த கோள்களையும் படம் பிடிக்கும் திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டது. இதுவே ஆகக் கூடிய தொலைவில் எடுக்கப்பட்ட புவியின் ஒளிப்படம் ஆகும். இதில் புவியானது எல்லையற்ற வெளியின் ஊடாக ஒரு மிகச் சிரிய புள்ளியை போல் (0.12 படவணு அளவில்) காணக் கிடைக்கின்றது. இந்தப் படத்தின் பெயரான வெளிர் நீலப் புள்ளி என்பதை, பிரபல வானியல் எழுத்தாளர் கார்ல் சேகன் தனது புத்தகமான ""வெளிர் நீலப் புள்ளி: விண்வெளியில் மனிதனின் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு பார்வை"" என்பதன் தலைப்பாக வைத்திருக்கின்றார். வொயேகர் 1 என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 ஆம் ஆண்டில் சூரியக் குடும்பம் மற்றும் விண்மீன்களிடை ஊடகம் ஆகியவற்றை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணாய்வி ஆகும். 722 கிலோகிராம் எடையுள்ள இந்த விண்கலம் இன்று வரை 35 ஆண்டுகள், 8 மாதங்கள், 23 நாட்கள் ஐ விண்வெளியில் பூர்த்தி செய்துள்ளது. 2012 பெப்ரவரியில் இவ்விண்கலம் 120 வானியல் அலகு (1.8x1010 கிமீ) தூரத்தில் சென்று கொண்டிருந்தது. இதுவே பூமியில் இருந்து மிக அதிக தூரத்திற்குச் சென்ற மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு பொருள். இது தற்போது சூரியன்சூழ் வான்மண்டலத்தின் வெளிப்புறக் கடைசி அடுக்கில் உள்ளது. சூரியக் குடும்பத்தை விட்டு வெளியேறிச் செல்லவிருக்கும் முதலாவது விண்கலமாகவும் இது இருக்கும். நாசாவின் வொயேஜர் திட்டத்தின் ஒரு பகுதியாக வொயேகர் 2 என்ற சகோதர விண்கலத்துடன் சேர்ந்து வொயேஜர் 1 ஏவப்பட்டது. வொயேகர் 1 தனது சூரியக் குடும்ப ஆய்வை 1980 நவம்பர் 20 முடித்துக் கொண்டது. வியாழன் கோளை 1979 இலும், சனிக் கோளை 1980 இலும் இரு ஆய்வு செய்தது. இந்த இரண்டு பெரும் கோள்களினதும், அவற்றின் நிலாக்களினதும் முதலாவதும் விரிவானதுமான படங்களை பூமிக்கு அனுப்பிய முதலாவது விண்கலம் இதுவாகும். 1981ல் வொயேகர் 1 தனது ஆய்வுகளை சனிக் கோளில் முடித்துக்கொண்டு திரும்பும் வேளையில், கடைசியாக ஒரு முறை புவியின் ஒளிப்படத்தை எடுக்கும் யோசனையை கார்ல் சேகன் முன்வைத்தார். இவ்வாறு எடுக்கப்படும் புவியின் படம், அளவில் மிகவும் சிறியதாகவும், அறிவியல் நோக்கில் பயனற்றதாகவும் இருக்குமெனினும்., தொலைநோக்கில் புவியுன் அமைவு பற்றிய அண்டவியல் ஆய்வில் பயன்படக்கூடும் எனவும் அவர் வாதிட்டார். இவரது கூற்றுக்கு சில நாசா விஞ்ஞானிகள் ஆதரவு அளித்த போதிலும் சூரியனின் பின்னனியில் எடுக்கப்படும் புவிவின் ஒளிப்படும் வொயேகர் விண்கலத்தின் தகவல் தொடர்பை துண்டிக்கக் கூடும் எனவும் அச்சம் தெரிவிக்கப்படது. இறுதியில் நாசா தலைமை நிர்வாகி ரிச்சர்ட் ட்ரூலி ஒளிப்படம் எடுக்கப்பட்டதை உறுதி செய்தார்.வெளிர் நீலப் புள்ளி, குறுகிய கோணத்தில் எடுக்கப்பட்ட ஒளிப்படம் ஆகும். நாசாவின் கிழை மையமான தாரை உந்துகை ஆய்வகம் ("Jet Propulsion Laboratory") வெளியிட்ட மற்றொரு படம், இரண்டு அகண்ற கோண ஒளிப்படங்களின் கோர்வையாக உள்ளது. இது சூரியன், வெள்ளி மற்றும் பூமியின் இருப்பை ஒரே படத்தில் காட்டுகின்றது. இந்த புகைப்படத்தில் புவியானது நீல நிற புள்ளியாக தெரிவதன் காரனம், ஒளி முனைப்பாக்கம் மற்றும் ஒளிச்சிதறல் விளைவே ஆகும். முனைப்பாக்கத்தின் தாக்கம், புவியில் இருக்கும் மேகங்களின் பரப்பு, சூரிய ஒளியை பிரதிபலிக்கும் கடல், வனம், பாலைவனம் மற்றும் பனிப்படலம் ஆகியவற்றின் பரப்பை கொண்டு மாறுபடும். கித்வாய் நினைவு புற்றுநோய் நிலையம் கித்வாய் நினைவு புற்றுநோய் நிலையம் ("Kidwai memorial institute of oncology") கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் அமைந்துள்ள புற்றுநோய் மருத்துவ மற்றும் ஆராய்ச்சி நிலையமாகும். அடித்தட்டு புற்று நோயாளிகளுக்காக, மகாரட்டிர மாநில ஆளுநராக இருந்த "ரஃபி அகமத் கித்வாய்", பற்றுநோய் மருத்துவமனை அமைக்க 20 ஏக்கர் நிலமும் ஒரு இலட்சம் ரூபாயும் வழங்கினார். இந்த மருத்துவமனை மாரிகௌடா சாலையில் உள்ளது. இந்நிலையம் 1973 சூன் 2 அன்று, 50 படுக்கைகளுடன் ஆரம்பிக்கப்பட்டது. 1980 இல் தன்னாட்சி பெற்றது. வட்டாரப் புற்றுநோய் மையமாக (Reginal cancer center) அதே ஆண்டு தரமுயர்த்தப்பட்டது. இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் (ICMR) இதனைஆய்வு மையமாகவும் ஏற்றுள்ளது. ஏழை மக்களுக்காக தர்மசாலா மருத்துவமனை வளாகத்திலேயே உள்ளது. ஆண்டுச் செலவு சுமார் 20 கோடியாகும். பெரும் பகுதியை மைய, மாநில அரசுகள் வழங்குகின்றன. டாட்டா நினைவு மையம் டாட்டா நினைவு மையம் ("Tata memorial Centre") அல்லது டாட்டா புற்றுநோய் மருத்துவமனை 1941-ல் டாட்டா குழுமத்தினரால் மும்பை பெருநகரின் பரேல் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. இந்தியாவின் முதல் புற்றுநோய் ஆய்வு மையமாகும். அனைத்து வசதிகளையும் கொண்ட முதன்மை மருத்துவமனைகளில் ஒன்றாகவும் உள்ளது. இவர்களின் ஆய்வு புற்றுநோய் தடுப்புமுறையில் அதிக அக்கறை எடுத்துள்ளது. 1962 ஆம் ஆண்டு முதல் அணு ஆற்றல் துறையின் (DAE-Department of Atomic Energy) ஓர் உறுப்பாகவும் உள்ளது. நாடு முழுவதிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் நோயாளிகள் வருகை தருகிறார்கள். படிப்பு, ஆய்வு, மருத்துவம் எல்லாம் ஒரே நிலையத்தில் நடைபெறுகிறது. திருவொற்றியூர்ப் புராணம் திரு ஒற்றியூர்ப் புராணம் (திருவொற்றியூர்ப் புராணம்) என்னும் நூல் 16 ஆம் நூற்றாண்டில் திருவொற்றியூரில் வாழ்ந்த ஞானப்பிரகாசரால் கமலை ஞானப்பிரகாசர் என்பவர் வேறு செய்யப்பட்டது. சிவஞான சித்தியார் பரபக்க உரை, சங்கற்ப நிராகரண உரை ஆகியனவும் இவரால் செய்யப்பட்ட நூல்கள். வடமொழியிலுள்ள பதுமம், பிரமாண்டம் ஆகிய புராணங்களை இவர் தமது திருவாரூர்க் குருநாதரிடம் கற்று, அவர் சொன்னபடி திருவொற்றியூர்ப் புராணத்தைத் தமிழில் இயற்றியுள்ளார். இந்த நூல் பாயிரத்துடன் 16 சருக்கங்களாகப் பகுக்கப்பட்டு 599 விருத்தப் பாடல்களைக் கொண்டுள்ளது. இதில் சொல்லப்படும் செய்திகளில் சில பாடல் – எடுத்துக்காட்டு திரேதா யுகம் திரேதா யுகம் என்பது இந்துக் காலக் கணிப்பு முறைன் படி சதுர்யுகங்களில் ஒன்றாகும். இந்த யுகமானது, 12,96,000 ஆண்டுகளை கொண்டதாகும். இந்த யுகத்தின் தொடக்கநாள் அட்சய திருதியை என்று விழாவாகக் கொண்டாடப்படுகிறது. துவாபர யுகம் துவாபர யுகம் என்பது இந்து காலக் கணிப்பு முறையின் படி சதுர்யுகங்களுள் ஒன்றாகும். இந்த யுகமானது 8,64,000 (எட்டு லட்சத்து அறுபத்து நான்காயிரம்) ஆண்டுகள் கொண்டதாக கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த யுகமான கலியுகம் இந்த ஆண்டுகளின் எண்ணிக்கையில் பாதி அளவினை மட்டுமே கொண்டுள்ளது. திருக்களிற்றுப்படியார் உரை 12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய திருக்களிற்றுப்படியார் என்னும் என்னும் நூலுக்கு, 16 ஆம் நூற்றாண்டில் தோன்றிய உரைநூலே திருக்களிற்றுப்படியார் உரை என்னும் இந் நூல்.. இந்த உரையை எழுதியவர் யார் எனத் தெரியவில்லை. திருவுந்தியார் உரைநூலுக்கு உள்ள அத்துணைச் சிறப்புகளும் இந்த நூலுக்கும் உண்டு. தையல் வகைகள் ஆடை தயாரிப்புக் கலையில் ஒரு தையல் கட்டு எனப்படுவது ஒருதடவை நூல் துணியில் அல்லது ஆதாரத்தில் முடிச்சு அல்லது வளையம் இடுவதாகும். இயந்திரத் தையல் ஆயினும் கைத் தையல் ஆயினும் தயல் கட்டு என்பது தையலின் அடிப்படை ஆகும்.. சிறப்புடைய பல்வேறுபட்ட தையல் முறைகள் வேறுபட்ட நோக்கங்களுக்ககப் பயன்படுத்தப்படுகின்றன. தையல் ஊசி மூலம் இடப்படக் கூடிய இந்த தையல் வகைகள் அவை இடப்படும் ஊசிக் கண் அமைப்பில் மாறுபடும்: அடிப்படையில் தையல் இரு வகைப்படும். பொருத்துக்களை இணைப்பதற்கான அடிப்படைத் தையலாக சோம் தையல் பயன்படும். லேசு வகைகளைப் பொருத்தவும், அலங்கார வேலைகளுக்கும் இது பயன்படும். ஆடைகளில் உள்ள பொத்தலை மறைஇஅவும் இது பயனுடையது. இது சிறு நூலோடி, பெரு நூலோடி என இரு வகைப்படும். இவை தற்காலிக தையல் தேவைகளுக்கான முறைகளாகும். சிமோக்கிங் தையலுக்கு சுருக்கி எடுக்கவும் பெரு நூலோடி மடிப்புக் குலையாமல் இருத்தல் முதலான தையல்களுக்கும் பெரிதும் பயன்படும். எதிர்நீச்சல் (1968 திரைப்படம்) எதிர்நீச்சல் கை. பாலசந்தர் இயக்கி 1968 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ் திரைப்படம். இதில் நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன், ஜெயந்தி, சௌகார் ஜானகி, முத்துராமன், மேஜர் சுந்தர்ராஜன், எஸ். என். லட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர். எதிர்நீச்சல் படம் ஐந்து குடும்பங்கள் வசிக்கும் ஒரு ஒட்டுக் குடித்தன குடியிருப்பில் அனாதையான மாது (நாகேஷ்) மாடிப்படிக்கு கீழ் குடியிருந்து கொண்டு அங்கு வசிக்கும் குடித்தனக்காரர்கள் ஏவும் வேலையைச் செய்து, அவர்கள் தரும் உணவால் ஓரளவு தன் பசியாறி வாழ்வதையும் தனது வறுமையிலும் கல்லூரில் படித்து முன்னேறுவதையும் கதைக்களமாகக் கொண்டுள்ளது கை.பாலசந்தர் அவர்கள் எல்லரும் ஏதோ ஒன்றின் மேல் பைத்தியம் என்னும் கருத்தை நினைவூட்டுகிறார். சித்தர் மெய்யியல் சித்தர் மெய்யியல் என்பது சித்தர்கள் கூறிய அல்லது கடைபிடித்த வாழ்வியல் நெறியாகும். இது தாசமார்கம், சற்மார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கம் என்ற வகைப்படுத்தப்படுகிறது. சித்தர்கள் - இளமுனைவர் தமிழ்ப்பிரியன், அலமு புத்தக நிலையம் புராணம் பாடிய தென்காசிப் பாண்டியர் முகம்மதியர் படையெடுத்து மதுரையை அழித்தபோது அங்கிருந்த பாண்டியர் பல கிளையினராகப் பிரிந்து தெற்கு நோக்கி நகர்ந்து கொற்கை, கருவை எனப்படும் கரிவலம்வந்த நல்லூர், தென்காசி முதலான இடங்களில் இருந்துகொண்டு சிற்சில ஊர்களை ஆண்டுவந்தனர். இவர்களைப் பொது வகையால் தென்காசிப் பாண்டியர் எனக் குறிப்பிடுவது வழக்கம். இவர்களில் மூன்று பாண்டியர் சிறந்த தமிழ்ப் புலவர்களாகவும் விளங்கினர். இவர்களால் பாடப்பட்ட நூல்கள் இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத் தக்கவை. பாண்டியப் புலவர்கள் மூவர். இவர்கள் பராக்கிரம பாண்டியனின் மக்கள். நெல்வேலி மாறனின் தத்துப்பிள்ளைகள் கருவை அந்தாதிகள் கருவை அந்தாதி நூல்கள் மூன்று. இங்குக் கருவை என்பது கரிவலம்வந்த நல்லூரைக் குறிக்கும். வரதுங்க ராமன் என்னும் பாண்டிய மன்னன் கொக்கோகம், பிரமோத்தர காண்டம் என்னும் நூல்களையும் கருவை என்னும் கரிவலம்வந்த நல்லூர் சிவபெருமான்மீது மூன்று நூல்களையும் பாடியுள்ளார். காலம் 16 ஆம் நூற்றாண்டு. பத்துப் பாடல்களின் பத்து அடுக்குகளைக் கொண்ட நூல் பதிற்றுப்பத்து எனப்படும். சங்கநூல்களில் உள்ள பதிற்றுப்பத்து 10 புலவர்களால் பாடப்பட்ட பாடல்களைக் கொண்ட ஒரு தொகுப்பு நூல். இதில் நான்காம் பத்தில் உள்ள 10 பாடல்களும் அந்தாதியாக வருகின்றன. திருவாசகத்தில் உள்ள திருச்சதகம் பத்துப் பத்தாக அடுக்கப்படாமல் பத்துப்பத்து (நூறு) என்ற முறையில் அமைந்துள்ள முன்னோடி நூல். இதில் 100 பாடல்களும் அந்தாதித் தொடையில் அடுக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் அந்தாதியாகத் தொகுக்கப்பட்ட நூலே இந்தக் கருவை அந்தாதி நூல். இதனைக் 'குட்டித் திருவாசகம்' எனப் போற்றி வருகின்றனர். இதில் உள்ள சுவை மிக்க பாடல்கள் மூன்று எடுத்துக்காட்டாகத் தரப்படுகின்றன. 1 2 3 விநாயகரைப் போற்றும் காப்புச் செய்யுள் ஒன்றும், கட்டளைக் கலித்துறைப் பாடல்கள் நூறும் கொண்ட நூல் இது. பத்திச் சுவை சொட்டும் பாடல்களைக் கொண்ட இந்த நூலிலிருந்து எடுத்துக் காட்டுக்கு ஒரு பாடல்; காப்புச் செய்யுள் ஒன்று, மற்றும் அந்தாதியாய் அமைந்த 100 வெண்பாக்கள் என அமைந்துள்ள நூல் இது. எல்லாப் பாடல்களிலும் பத்திப் பெருக்கெடுத்த ஓட்டம். எடுத்துக்காட்டுப் பாடல் ஒன்று. காக்கத்தியர் காக்கத்தியர்கள் தெலுங்கு அரச வம்சத்தவர்கள். அவர்கள் அதிகப்படியான தெலுங்கு நிலங்களை, அதாவது இன்றைய நாட்களில் ஆந்திரப் பிரதேசம் என்றழைக்கப்படும் பகுதிகள் அனைத்தையும் கி.பி 1083ஆம் ஆண்டு முதல் 1323ஆம் ஆண்டு வரை ஆண்டவர்கள். அவர்களின் தலைநகரமாய் ஓருகல்லு என்னும் நகரம் விளங்கியது. இன்றைய நாட்களில் அந்நகரம் வாரங்கல் என அழைக்கப்படுகிறது. காகத்தியர்கள் ஆரம்பத்தில் சமண மதத்தைப் பின்பற்றியதாகவும் பின்பு காலப் போக்கில் இந்து மதத்தின் அங்கமான சைவ சமயத்திற்கு மாறியதாகவும் வரலாறு உள்ளது. டெல்லி சுல்தான்களின் படையெடுப்பிற்கு முன்பு வரை நிலைத்திருந்த பல தெலுங்கு அரச வம்சங்களுள் இதுவும் ஒன்று. பல கல்வெல்டுகள் காக்கத்தியர்களை தெலுங்கானாவைச் சேர்ந்த கம்மவர் இனத்திலுள்ள துர்ஜய வம்சத்தில், வல்லுட்டுல கோத்திரத்தில் தோன்றியவர்களாக கூறுகிறுது. பிராமணர்கள் எழுதிய அஷ்டதச புராணங்களுள் ஒன்றான துருவாச புராணத்தில் உள்ளதாவது, காக்கத்திய மாமன்னர் பிரதாப ருத்திரர் கம்ம மகராஜ வம்சத்தில் பிறந்த ஒரு கம்ம இளவரசன். சில வரலாற்று அறிஞர்கள் காக்கத்தியர்களை கம்மவார்கள் என ஒப்புக்கொள்கின்றனர். இந்த காக்கத்தியர்கள் ஆதிகாலத்தில் நத்தவாட்டில் உள்ள நந்திகாமா எனும் இடத்திற்கு அருகில் உள்ள மகல்லு எனும் கிராமத்தில் இருந்து வாராங்கல் எனும் இடத்திற்கு இடம்பெயர்ந்ததாக குறிப்புகள் உள்ளன. கி.பி. 956ஆம் வருடத்தைச் சேர்ந்த சாளுக்ய தனராணவுடு கல்வெட்டு இதைச் சுட்டுகிறது. காக்கத்தியர்கள் சில நேரங்களில் ராஷ்ட்ரகுட கிராம தலைவர்களாக பணியாற்றியுள்ளனர், பின்பு சாளுக்யர்களுக்கு சமந்தராஜாக்களாகவும் பணியாற்றி உள்ளனர். முசுனுரி நாயக்கர்களும் கம்ம இனத்தில் உள்ள முசுனுரி குலத்தில் பிறந்தவர்களே. ருத்திரமாதேவி கி.பி. 1259 முதல் 1295 வரை தக்காணத்தில் வாரங்கல்லை ஆண்ட காகதீய அரசியார் ஆவார். வாரங்கல்லை ஆண்ட கணபதிதேவரின் மகளான இவர், தம் தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து அரசியாக முடிசூட்டிக் கொண்டார். கிழக்குச் சாளுக்கியத்தில் நைதவோலுவின் இளவரசனான வீரபத்திரன் என்பவரை மணம் செய்துகொண்டார். இவரது தொடக்கக்கால ஆட்சியில் சிற்றரசர்கள் பலர் தொல்லை கொடுத்து வந்தனர். அரசிக்கு உறுதுணையாக இருந்த அம்பதேவர் உதவியுடன் அத்தொல்லைகளை அடக்கினார். யாதவத் தலைவர் மகாதேவர் இவரை எதிர்த்துப் போர்செய்து தோல்வி அடைந்தார். இப்போர்களில் ருத்திரமாதேவியின் பேரன் பிரதாபருத்திரன் வெற்றிவாகை சூடினான். ருத்திரமாதேவி கி.பி. 1280 - ஆம் ஆண்டு பிரதாபருத்திர தேவரை இளவரசராக நியமித்தார். எட்டாண்டுகளுக்கு பின் அம்பதேவர் ஒய்சாளர், யாதவர் ஆகியோரைத் துணைக்கு சேர்த்துக் கொண்டு, ருத்திரமாதேவிக்கு எதிராகப் போர் தொடுத்தார். 1291 - இல் பிரதாபருத்திரர் அதனை அடக்கி வெற்றிவாகை சூடினார். 1295 - இல் ருத்திரமாதேவி காலமானபோது பிரதாபருத்திரர் 'இரண்டாம் பிரதாபருத்திரர்' என்ற பெயருடன் முடிசூட்டிக் கொண்டார். தமிழ்க் காப்பியங்கள் (காலநிரல்) காப்பியம் என்பது தலைவனின் வரலாற்றைக் கூறும் இலக்கியம். காப்பியத் தலைவன் ஒருவனையோ, பலரையோ இது கொண்டிருக்கும். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருளும் பயப்பதாக இருக்கும். செய்யுள் வடிவில் அமைந்திருக்கும். வேறு மொழியிலுள்ள நூலைத் தழுவி உருவாக்கப்பட்ட காப்பியங்களும் தமிழில் உண்டு. சமயம் தழுவிய காப்பியங்கள் தமிழில் மிகுதி. உறந்தைவளர் நாட்டுவளப்பம் (நூல்) உறந்தைவளர் நாட்டுவளப்பம் என்பது முத்தையன் சேதிராயர் எழுதிய நூல். இவர் கல்லாதவர் எனவும் இவர் பாடிய பாடல்களை இவர் தம்பி குறித்து வைத்துக் கொண்டு, ஏட்டில் எழுதியதாகவும், பின்னர் அதைத் தாம் பிழைத் திருத்தி நூலாக வெளியிட்டதாகவும் நக்கீரர் கூறுகிறார். ஒரத்தநாடு வட்டத்தின் உள்ளூர் மக்களின் வாழ்வியல். வழிபாட்டு முறைகள், பண்பாடு, சாதிப் பிரிவுகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். முத்தையன் பாடிய சந்தம் கொண்ட பாடல்களுக்கு உரைநடையிலும் விளக்கியுள்ளார் நக்கீரர். சில தகவல்களுக்கு ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார். பிற நூலாசிரியர்களின் சான்றுகள் ஆங்காங்கே எடுத்தாளப்பட்டுள்ளன. இந்த சுற்றுப்புறத்து ஊர்களின் சென்ற நூற்றாண்டின் வாழ்வியலை அறிய முடிகிறது. துவார்த்தே பர்போசா துவார்தே பர்போசா ("Duarte Barbosa", 1480, லிஸ்பன், போர்த்துக்கல் - 1 மே 1521, பிலிப்பைன்ஸ்) போர்த்துகல்லைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் கடல்வழிப் பயணி ஆவார். கி.பி 1500 மற்றும் 1516-17 இடையே போர்த்துகீசியர் இந்தியாவில் (கேரள மாநிலத்தின் கண்ணூர்) நடத்திய தொழிற்சாலைகளில் எழுத்தராகவும், மலையாள மொழிபெயர்ப்பாளராகவும் பணிபுரிந்தார். தனது மைத்துனர் பெர்டினென்ட் மகெலன்]] தலைமையில் உலகைச் சுற்றிய முதல் கடல் பயணத்தில் இணைந்து கொண்டார். அவர் கி.பி 1516-ல் எழுதிய "துவார்த்தே பர்போசாவின் நூல்" (Livro De Duarte Barbosa) இந்தியப் பெருங்கடல் பயணம் குறித்த போர்த்துகீசியம் பயண இலக்கியம் நூல்களில் முன்னோடியாகும். கி.பி 1521-ல் பிலிப்பைன்ஸ் சென்ற பர்போசா, செபு தீவின் அரசர் ராஜா ஹுமாபான் (rajah Humabon) உடன் போர்த்துகீசியர் நடத்திய போரில் மகெலனுடன் பங்கு கொண்டார். போரில் வென்ற செபு அரசர் அளித்த விருந்தில் கலந்து கொண்ட பர்போசா, நஞ்சு கலந்த உணவின் மூலம் கொல்லப்பட்டார். உடையும் சித்திரங்கள் உடையும் சித்திரங்கள் என்னும் நூல் பேராசிரியர் முனைவர் சுப. வீரபாண்டியனால் எழுதப்பட்ட நூலாகும். இந்நூலில் உள்ள பத்துக் கட்டுரைகளும் அவரால் 2000ஆம் ஆண்டில் தலித் முரசு இதழில் எழுதப்பட்ட கட்டுரைகள் ஆகும். இந்நூலை 'தமிழ் முழக்கம்' பதிப்பகம் வெளியிட்டுள்ளது. யோக சித்திகள் யோக சித்திகள் ’தாரண (மனதை நிலை நிறுத்துதல்) யோகத்தில்’, முழுமையாக நிலைபெற்ற பதஞ்சலி பதினெட்டு வகைப்படும் என்பர். இதில் பகவானிடத்தில் இயற்கையாக உள்ள சித்திகளை ”"அஷ்ட மஹாசித்திகள்" ” என்பர். மீதமுள்ள சித்திகளை, மனவடக்கம், புலனடக்கம், பொறுமை, அகிம்சை, தியாகம் முதலிய நற்குணங்களால் அடையத் தக்கது. சித்திகளை எக்காரணம் கொண்டும் சுயநலத்திற்காக பயன்படுத்தக்கூடாது. திருக்களிற்றுப்படியார் அனுபூதி உரை திருக்களிற்றுப்படியார் அனுபூதி உரை என்னும் இந்த உரைநூல் 15 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. திருக்களிற்றுப்படியார் என்னும் நூல் 12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய சைவ சித்தாந்த நூல். தில்லை நடராசனின் அம்பலத்துக்கு ஏறும் படிக்கட்டு யானையின் துதிக்கையிலிருந்து யானையின் மத்தகமாகிய ஆள் ஏறியிருக்கும் பகுதிக்கு ஏறுவது போல அமைந்திருப்பதால் அதனைக் 'களிற்றுப்படி' எனக் குறிப்பிட்டு தில்லையம்பலவாணனின் பேறு அடைய வழிகாட்டும் நூல் திருக்களிற்றுப்படியார். இது தில்லைநாதனையும், நூலையும் அனுபவித்து எழுதிய உரை ஆதலால் 'அனுபூதி உரை' என்னும் பெயரினைப் பெற்றுள்ளது. 1962 ஆம் ஆண்டு அச்சாகி வெளிவந்துள்ள இந்த நூலில் இந்த உரைநூலை இயற்றியவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. எனினும் இந்த உரையில் கையாளப்பட்டுள்ள 'ஒழிவு', 'கழற்றி' என்னும் சொற்களை ஒப்புநோக்கி இதன் உரையாசிரியர் 'கண்ணுடைய வள்ளல்' என்னும் முடிவுக்கு அறிஞர் அருணாசலம் வருகிறார். இந்த உரையில் உரையாசிரியர் நூலாசிரியரை ஒரு பாடலைப் பாடிச் சேர்த்துப் போற்றியுள்ளார். அந்தப் பாடல்; ஜூலியஸ் ரிச்சர்டு பெட்ரி ஜூலியஸ் ரிச்சர்டு பெட்ரி ("Julius Richard Petri", மே 31, 1852 – திசம்பர் 20, 1921) ஓர் செருமானிய நுண்ணுயிரியலாளர் ஆவார். இவர் புகழ்பெற்ற பாக்டீரியா அறிவியலாளரான ராபர்ட் கோக்கின் உதவியாளராகப் பணியாற்றியபோது உயிரணுக்களை வளர்க்கப் பயன்படுத்தப்படும், "பெட்ரி டிஷ்" என அறியப்படும், கண்ணாடி கலனை முதன்முதலில் வடிவமைத்ததாகக் கருதப்படுகிறது. பெட்ரி முதலில் கைசர்-வில்ஹெம் படைத்துறை மருத்துவர்களுக்கான கழகத்தில் (1871–1875) மருத்துவம் கற்று 1876இல் பட்டம் பெற்றார். தமது படிப்பை பெர்லினில் உள்ள சாரிட்டீ மருத்துவமனையில் தொடர்ந்தார். 1882ஆம் ஆண்டுவரை படைத்துறை மருத்துவராகப் பணியாற்றினார். 1877 முதல் 1879 வரை பெர்லினின் இம்பீரியல் உடல்நல அலுவலகத்திற்கு () அனுப்பப்பட்டார். அங்கு நோபல் பரிசு பெற்ற இராபர்ட் கோக்கிற்கு உதவியாளராகப் பணியாற்றினார். தமது சக ஆய்வாளர் வால்த்தர் ஹெஸ்ஸின் நியூயார்க் நகரத்தில் பிறந்த மனைவி ஆஞ்செலினா ஹெஸ்ஸின் வழிகாட்டுதலில் அகார் தட்டுக்களில் கோக் ஆய்வகம் பாக்டீரியாக்களை வளர்க்கத் தொடங்கியது. அப்போது பெட்ரி கலனை உயிரணு வளர்ப்புக்கு உருவாக்கினார். இவரது மேம்படுத்தல்களால் நோய்களுக்கு காரணமான நுண்ணுயிரிகளை அடையாளம் காண்பது இயலக்கூடியதாயிற்று. கல்முனைக்குடி கல்முனைக்குடி கிழக்கிலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கல்முனை மாநகரத்தின் இதயமாகும். மட்டக்களப்பு நகரில் இருந்து தெற்கே 25 மைல் தூரத்தில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக வடக்கே பாண்டிருப்பு கிராம்மும், தெற்கே சாய்ந்தமருது கிராமமும், கிழக்கே வங்காள விரிகுடாவும், மேற்கே பசுமையான வயல் நிலங்களும் அமைந்துள்ளன. கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதி கல்முனைக்குடியினூடாகச் செல்கின்றது. கல்முனைக்குடியில் 99.99% முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இக்கிராமம் இலங்கையைக் கடைசியாக ஆட்சி செய்த கண்டி மன்னன் சிறி விக்கிரம இராசசிங்கனின் ஆட்சிக்காலத்திற்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உள்ளதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இங்கு பதினான்கு மசூதிகளும், இரண்டு ஜும்மா மசூதிகளும், பெரும் புகழ்பெற்ற கல்முனைக்குடி கடற்கரை நாகூர் ஆண்டகை தர்ஹாவும், ஐந்து பாடசாலைகளும் உள்ளன. கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையும், கல்முனைக்குடி முஹையத்தீன் ஜும்மா மசூதியும் ஊரின் மத்தியில் பிரதான வீதியில் அமைந்துள்ளன. கல்முனைக்குடியின் பழைய பெயர் கரவாகு என்பதாகும். இந்த ஊருக்கு குடியிருப்பு, கல்முனை, கைமுனை என்ற பல பெயர்கள் உள்ளன. கரவாகு என்னும் பெயர் புராதன காலம் தொட்டே இருந்து வருகின்றது என்பதற்கு கரவாகுப்பற்று என்னும் நிர்வாகப் பிரதேசம் இன்றும் இருக்கிறது என்பதே சான்றாகும். இப்பெயர் நாட்டார் பாடல்களிலும், வரலாற்றுக் குறிப்புகளிலும் காணப்படுகின்றது. இராசேந்திர சோழன் (1012-1044) அநுராதபுர இராசதானியைக் கைப்பற்றி ஆட்சி செய்த காலப்பகுதி 11 ஆம் நூற்றாண்டாகும். சோழன் ஆதம் முனைப் பகுதியைக் (திருக்கோவில் பிரதேசம்) கைப்பற்றிய காலகட்டத்தில், ஒரு இந்துப் பெண்மணி தனது மகனுடன் அங்கேயிருந்த தர்ஹாவிற்கு நேர்ச்சை செய்ய வந்தபோது அவள் கூறுவதாக அமைந்துள்ள, ""கரவாகுச் சோனாக்கள் மாடு கட்ட வருவார், பால் கறந்து தருவார், குடித்திடலாம் மகனே"", என்ற வசனம், கரவாகு 11 ஆம் நூற்றாண்டில் இருந்திருக்கின்றது என்பதற்கான ஆதாரங்களிலொன்றாகும். இந்த வசனம் " கரவாகுப்பரவணி " என்ற நூலில் இடம் பெற்றுள்ளது. 1. கரவாகுப் பரவணி 2. காசீம் ஜீ கண்ட கரவாகு வரலாறு உயிரியல் அரை-வாழ்வு கதிர் மருத்துவத்தில் பொருள் ஒன்றின் உயிரியல் அரை-வாழ்வு ("Biological half-life", அல்லது "elimination half-life") என்பது மருத்துவப் பாடத் தலைப்புகளின் வரைவிலக்கணத்தின் படி, பொருள் ஒன்று ( எடுத்துக்காட்டாக, மருந்து, கதிர்வீச்சு அணுக்கரு அல்லது வேறு பொருட்கள்) அவற்றின் மருந்தியல் சார்ந்த, உடற்செயலியல் சார்ந்த, அல்லது கதிரியக்கம் சார்ந்த அரைப்பங்கு இயல்புகளை இழக்க எடுக்கும் நேரத்தைக் குறிக்கும். உயிரியல் அரை-வாழ்வுக் காலம் மருந்தியக்கத் தாக்கியலில் ஒரு முக்கிய குணகம் ஆகும். இது பொதுவாக t. என்பதால் தரப்படும். கதிரியல் துறை, அணுக்கரு மருத்துவத் துறையில் கதிரியக்கப் பொருட்களை கையாளும் இடத்தில் பணிபுரிகிறவர்கள் தெரிந்தோ தெரியாமலோ சில சமயங்களில் கதிரியக்கப் பொருட்களை மூச்சு மூலம் அல்லது உணவு மூலம் உடலில் ஏற்க நேரிடுகிறது. ஆய்விற்காகவும் மருந்தாகவும் சில நேரங்களில் நோயாளிகளுக்குக் கொடுக்ககப்படுகிறது. இவ்வாறு உடலில் ஏற்கப்படும் பொருட்கள் சிறுநீர், வியர்வை, மூச்சுக் காற்று மற்றும் மலம் வழியாக வெளியேற்றுகிறது. ஏற்றுக்கொண்ட அளவில் பாதி அளவு, இம்முறைகளின் மூலம் குறையத் தேவைப்படும் கால அளவு உயிரியல் அரை வாழ்வு நேரம் ஆகும். முகம்மது இப்னு சக்கரியா அல்-ராசி ராசிஸ் என அறியப்பெற்ற முகம்மது இப்னு சக்காரியா அல்-ராசி ( "Abu Bakr Mohammad Bin Yahia Bin Zakaria Al-Razi")( "Mohammad-e Zakariā-ye Rāzi", ஆகத்து 26, 865 – 925), என்பவர் ஒரு பாரசிக வேதியியலாளர், மெய்யிலாளர், மருத்துவர், விமர்சகர், பல்துறை வித்தகர். அக் காலத்தில் வாழ்ந்த சிறந்த மருத்துவர்களில் ஒருவராக இவர் மதிக்கப்படுகிறார். சமயத்தையும், குறிப்பாக இசுலாமை நோக்கி இவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். இவர் வாழ்ந்த காலப்பகுதி உலக மருத்துவத்துறையின் பிரகாசமான காலம் என அழைக்கப்படுகிறது. ராஸெஸ் (Rhaazes) என்று ஐரோப்பாவில் அறிமுகமான இவர் ஈரானின் தெஹ்ரான் நகரில் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை உள்ளூரில் பெற்றுக்கொண்ட அவர் பக்தாத் நகரிலிருந்த வைத்தியசாலையின் பிரதம வைத்தியராகப் பொறுப்பேற்றார். அப்பாஸியக் கலிபா முக்தபீயின் காலத்தில் தேசிய வைத்திய அதிபராகப் பதவியுயர்வு பெற்றார். அல்ராஷி மருத்துவத்துறையில் மாத்திரமன்றி கணிதவியல், இரசாயனவியல், உளவியல், தத்துவவியல் போன்ற பல துறைகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். இத்துறைகளில் இருநூற்று இருபதுக்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். இவற்றுள் நூற்றிநாற்பது நூல்கள் மருத்துவம் பற்றியதாகும். அல்ஹாவி, அல்ஜூதரி வல் ஹஸ்பா, கிதாப் திப்பில் மன்சூர், கிதாபுல் அஸ்ரார் என்பன இவரது பிரசித்தம் பெற்ற நூல்களாகும். இருபது பாகங்களைக் கொண்ட மிகப் பெரிய மருத்துவ நூலான அல்ஹாவி நோய்களைப் பற்றியும், அவற்றுக்கான சிகிச்சை முறைகளைப் பற்றியும் விரிவாக ஆராய்கின்றது. இந்நூலின் பத்துப் பாகங்கள் இன்றும் கிடைக்கின்றன. கி.பி. 1279 ஆம் ஆண்டில் முதலாம் சார்ல்ஸ் மன்னனின் உத்தரவிற்கிணங்க இந்நூல் கொண்டினன்ஸ் (Continence) என்ற பெயரில் இலத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. பதினேழாம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் இது பாடநூலாக பயன்படுத்தப்பட்டதென்று ஐரோப்பிய ஆய்வாளர் ஜே.டி.பேர்ணாட் (J.D.Bernad) தனது "வரலாற்றில் விஞ்ஞானம்" என்ற நூலிலே குறிப்பிடுகின்றார். ஜேர்மனிய வரலாற்றாசிரியரான ஜோஸப் ஹெல் தனது "அரபு நாகரிகம்" என்ற நூலில் அல்ராஷி பத்துப்பாகங்களில் ஒரு மருத்துவ கலைக்களஞ்சியத்தையே உருவாக்கியுள்ளார் என்று பாராட்டியுள்ளார். அல்ஜூதரி வல் ஹஸ்பா (சின்னமுத்துவும் பெரியம்மையும்) என்னும் இவரது மற்றொரு நூல் அம்மை நோய்கள் பற்றி எழுதப்பட்ட முதல் ஆவணமாகக் கருதப்படுகின்றது. இந்நூல் பதினைந்தாம் நூற்றாண்டளவில் இலத்தீன், கிரேக்கம், பிரெஞ்சு, ஆங்கிலம், ஜேர்மன் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. இவரது மற்றொரு நூலான "கிதாப் திப்பில் மன்சூர்" கிரேக்கம், பிரெஞ்சு போன்ற ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. இத்தகைய மொழிபெயர்ப்பு முயற்சிகளே முஸ்லிம்களது மருத்துவ விஞ்ஞானம் ஐரோப்பாவுக்கு எடுத்துச் செல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்தது. இவரது மருத்துவ சாதனைகளை கெளரவப்படுத்தும் முகமாக இவரின் உருவப்படம் இன்று பாரிஸ் பல்கலைக்கழகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இவர் பொது மருத்துவத்துறையில் மாத்திரமன்றி பிரயோக மருத்துவத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தார். கண்மருத்துவம், சத்திரசிகிச்சைத்துறை ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருந்த இவர் சத்திரசிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் ஒருவித நூலிழையத்தை மிருகங்களின் குடலிலிருந்து கண்டுபிடித்தார். "வென்ரோஸா" என்னும் நோயை முதன்முதலாக அடையாளம் கண்டு, அதற்கு ஒட்டுண்ணி காரணம் எனக் கண்டுபிடித்தவரும் இவரே. மேகநோய் பற்றியும் உடல்நோய் பற்றியும் இவர் ஆராய்ந்து வெளியிட்ட கருத்துக்கள் அதிசயக்கத்தக்கன. குரல்வளைக்குள் குழாயினை உட்செலுத்தி சிகிச்சை செய்தல், கடின பிரசவத்தின் போது கையை உட்செலுத்தி குழந்தையைத் திருப்பி விடுதல், வயிற்றையும் கர்ப்பப்பையையும் பிளந்து குழந்தையை எடுத்தல் போன்ற முறைகளையும் அறிமுகம் செய்தார். வெளியில் உள்ள ஒளி கண்களில் ஊடுருவிச் செல்வதாலேயே கண்களால் பார்க்க முடிகிறது என்னும் தத்துவத்தை முதலில் நிறுவியவரும் இவரே. விபூதி யோகம் விபூதி என்றால் “மகிமை அல்லது பெருமை” என்று பொருள். பகவத் கீதையில் பத்தாவது அத்தியாயத்தில் கிருஷ்ணரிடம், அருச்சுனன் அவரது விபூதிகள் (பெருமைகள்) பற்றி கேட்டான். அதற்கு கிருஷ்ணர் தன் பெருமைகளை அருச்சுனனுக்கு விரிவாக கூறினார். அவைகள் பின்வருமாறு: பகவத் கீதை, அத்தியாயம் 10, விபூதி யோகம், சுலோகம் 20 முதல் 39 முடிய. நீட்டல் விரிவுக் குணகம் நீட்சிக் குணகம் அல்லது நீட்சிக் கெழு ("coefficient of linear expansion") என்பது ஓர் அலகு நீளமுள்ள ஒரு பொருளின் வெப்பநிலையை 1°செ அளவுக்கு உயர்த்தும் போது ஏற்படும் நீளத்தில் ஏற்படும் விரிவு நீட்சியாகும். தொடக்க நிலை நீளம் L1 என்று கொண்டால், அதன் வெப்ப நிலையினை T1 °C இல் இருந்து T2 °C ஆக உயர்த்தும்போது அதன் நீளம் L2 ஆக மாறுமானால் அதன் வெப்ப நீட்சிக் குணகம்: இதனை என்றும் எழுதலாம். இங்கு α என்பது நீட்சிக் கெழுவாகும். இந்தக் கெழு K (கெ) என்னும் பண்பலகு கொண்டது. இது எல்லா வெப்பநிலை வரம்புகளிலும் ஒன்றாக இராது. அளக்கப்படும் வெப்பநிலை நிலவும் மதிப்புக்கு ஏற்ப சற்றே மாறுபடும். இந்நீட்சிக் கெழு பெரும்பாலும் 20°செ வெப்பநிலையில் அளந்துக் குறிக்கப்படுகிறது. அளக்கப்படும் பொருளைச் சார்ந்து வெப்ப நீட்சிக் கெழு மாறும். பல்வேறு பொருள்களுக்கான வெப்ப நீட்சிக் கெழுவைக் கீழுள்ள அட்டவணையில் காணலாம். எடுத்துகாட்டாக, அலுமினியத்தின் வெப்பநீட்சிக் கெழு 23.1 என்றால் ஒரு மீட்டர் நீளமுள்ள அலுமினியம் ஒரு பாகை செல்சியசு வெப்பநிலை உயர்வுக்கு (20 °செ இல் அளக்கும்பொழுது) தன் நீளத்தில் 23.1 x 10 மீட்டர் அளவுக்கு நீளும். திருக்காளத்திப் புராணம் திருக்காளத்தி என்னும் ஊரில் குடிகொண்டுள்ள காளத்திநாதரைப் போற்றும் புராணங்கள் இரண்டு உள்ளன. ஒன்று தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் வீரை ஆனந்தக் கூத்தர் என்பவர் 16 ஆம் நூற்றாண்டில் திருக்காளத்திப் புராணம் என்னும் பெயரில் இயற்றியது. மற்றொன்று சிவப்பிரகாசரும் அவரது தம்பியும் சேர்ந்து 17 ஆம் நூற்றாண்டில் சீகாளத்தி புராணம் என்னும் பெயரில் இயற்றியது. இது பாயிரமும் 33 அத்தியாயங்களும் கொண்ட பெரிய நூல். இதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களில் சில: 1 போற்றிப் பாடல் 2 நல்லொழுக்கம் கூறும் பாடல் ஜக்மோகன் டால்மியா ஜக்மோகன் டால்மியா, ( "Jagmohan Dalmiya") மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த முன்னாள் இந்திய துடுப்பாட்ட நிர்வாகி ஆவார். மே 30, 1940இல் கொல்கத்தாவில் பிறந்த இவர் வங்காள துடுப்பாட்ட வாரியத்தின் தலைவராக பணியாற்றி வந்தார். துடுப்பாட்ட சூதாட்ட விவகாரங்களினால் நிர்வாகத்திலிருந்து விலகி இருக்கும் என். சிறீனிவாசனுக்கு மாற்றாக பிசிசிஐயின் இடைக்காலத் தலைவராக விளங்கி வந்தார்.. நாராயணசாமி சீனிவாசன் நா. சீனிவாசன் என்கிற நாராயணசாமி ஸ்ரீநிவாசன் ("Narayanaswami Srinivasan", பிறப்பு: சனவரி,3 ,1945) ஓர் இந்திய தொழிலதிபரும் தற்போதைய பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் (ஐசிசி) தலைவரும் ஆவார். தென்னிந்தியாவிலேயே மிகுதியான அளவில் சிமெண்ட் தயாரிக்கும் நிறுவனம் இந்தியா சிமெண்ட்ஸ். இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தை நிறுவியவர் இவரது தந்தையும் பிரபல தொழிலதிபருமான டி.எஸ்.நாராயணசாமி. சங்கர் சிமெண்ட், கோரமண்டல் சிமெண்ட், ராசி சிமெண்ட் என்ற வர்த்தகப் பெயர்களில் இந் நிறுவனத்தின் சிமெண்ட் விற்பனை ஆகிறது. இந்த இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராகப் பொறுப்பாற்றுகிறார். ஐசிசியின் தலைவராவப் பொறுப்பேற்பதற்கு முன்னர் பிசிசிஐ-ன் தலைவராகவும், தமிழ்நாடு துடுப்பாட்ட வாரியத்தின் தலைவராகவும் பொறுப்பிலிருந்தார். அமெரிக்காவிலுள்ள இல்லினாய்ஸ் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜியில், வேதிப்பொருள் பொறியியலில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். மாறன் இலக்கண நூல்கள் நம்மாழ்வாரை மாறன் என்பது வழக்கம். இந்த மாறன் பெயரால் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருக்குருகைப் பெருமாள் கவிராயர் என்பவர் தமிழ் இலக்கண நூல்களை இயற்றியுள்ளார். திருக்குருகைப் பெருமாள் கவிராயர் திருக்குருகைப் பெருமாள் கவிராயர் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். 9 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நம்மாழ்வார் பிறந்த ஆழ்வார்திருநகரி என்னும் ஊரில் பிறந்தவர். நம்மாழ்வாரை 'வேதம் தமிழ்ப்படுத்த மாறன்' எனப் போற்றுவது வழக்கம். இந்த முறையில் இந்த மாறன் பெயரில் திருக்குருகைப் பெருமாள் கவிராயர் சில நூல்களை இயற்றியுள்ளார். மாறன் அலங்காரம் , மாறன் அகப்பொருள் , மாறன் பாப்பாவினம், என்னும் இலக்கண நூல்களும், திருக்குருகை மான்மியம் என்னும் இலக்கியமும் இவரால் செய்யப்பட்டவை. நம்பெருமாள் மும்மணிக்கோவை என்னும் சிற்றிலக்கியமும் இவரால் பாடப்பட்டுள்ளது. குருகைப்பிரான் என்னும் பெயர் நம்மாழ்வாரைக் குறிக்கும். இவரது குருகைப் பெருமாள் என்னும் பெயர் குருகைப்பிரான் என்னும் பெயரோடு தொடர்புடையது. திருக்குருகை மான்மியம் திருக்குருகை மான்மியம் என்னும் நூல் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருக்குருகைப் பெருமாள் கவிராயரால்இயற்றப்பட்டது. வாழ்த்து, பதிகம் ஆகியவற்றை அடுத்து 28 சருக்கங்களை உடையதாக இந்த நூல் இருந்தது. பெருங்காப்பியங்களில் ஒன்றாகத் திகழும் எந்த நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. இந்த சூலைப் பற்றிய சில குறிப்புகள் பாடல் - எடுத்துக்காட்டு 1 2 3 பட்டினம் காத்தான் பட்டினம் காத்தான் (Pattinamkathan) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் வட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும். பன்றித் தட்டைப்புழு பன்றித் தட்டைப்புழு (இலத்தீன் பெயர் "தேனியா சோலியம்", "Taenia solium") என்பது பன்றிக்கு நோயுண்டாக்கி, பன்றிக்கறியைச் சரியாக சமைக்காது உண்ணும் மாந்தர்களுக்கும் நோய் உண்டாக்கும் ஒரு தட்டையான நாடா போன்ற வடிவம் கொண்ட தட்டைப்புழு. இதன் தாக்கம் ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, தென் ஐரோப்பாவின் சில பகுதிகள், வட அமெரிக்காவின் சில பகுதிகளில் காணப்படுகின்றது. மாந்தர்களுக்கு ஏற்படும் இந்தப் பன்றித் தட்டைப்புழு நோயை 3000 ஆண்டுகளுக்கு மேலாகவே வரலாற்றில் அறிந்து இருக்கின்றார்கள். முட்டைப்புழு ("குடம்பி") நிலையில் மாந்தர்களின் உடலில் இருக்க நேர்ந்தால் மாந்த உடலில் சில பகுதிகள் மரத்துப்போதல், வலிப்பு ஏற்படுதல்(காக்காய் வலிப்பு போன்று கைகால்கள் அதிர்தல் அல்லது வலிப்பு என்னும் இழுப்பு ஏற்படுதல்) ஆகியவை நிகழ்கின்றன. இந்தத் தட்டைப்புழு வெள்ளை நிறத்தில் காணப்படுகின்றன, இவற்றின் தலைப்பகுதியில் நான்கு உறிஞ்சுபகுதிகளும் (உறிஞ்சான்கள்), இரண்டு வரிசையாக அமைந்த கொக்கிகளும் உள்ளன. பன்றி தட்டைப்புழு வெள்ளை நிறத்தில் ஏறத்தாழ 6 மிமீ அகலமும் 2 முதல் 7 மீ நீளமும் கொண்டிருக்கும். ஏறத்தாழ 800 வரை இணைக்கப்பட்ட பகுதிகளும் (கணுக்களும்) உண்டு. மாட்டிறைச்சியில் காணப்படும் மாட்டுக்கறித் தட்டைப்புழு ("தேனியா சாச்சினாட்டா", "Taenia saginata") எனப்படும் தட்டைப்புழுவைப்போலவே இதுவும் இருக்கும் ஆனால் சற்றி நீளம் குறைவானதாகவும் தலைப்பகுதி சற்று வேறானதாகவும் இருக்கும். பன்றித் தட்டைப்புழுவின் உயிர்வளர்ச்சி நிலைகளும் ஏறத்தாழ மாட்டுக்கறித் தட்டைப்புழுவினதைப் போன்றவையே. முட்டை வடிவில் இருக்கும்பொழுது இவை இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளை அறிவது கடினம். இரண்டுவகைத் தட்டப்புழுக்களின் முட்டைகளுமே 31-43 மைக்குரோமீட்டர் விட்டமுள்ள கருவுள்ள முட்டைகளாகும். இந்தப் பன்றித் தட்டைப்புழு ("தேனியம் சோலியம்") உலகம் முழுவதும் பரவி உள்ளது. இந்தத் தட்டைப்புழுவின் இடைக்கால உறைவிடம் பன்றிகள்; ஆனால் இது முழு வளர்ச்சி அடைய மாந்தர்கள் பன்றிகளோடு சேர்ந்து வாழும் சூழல் தேவைப்படுகின்றது. பன்றியின் கறியைச் சரிவர சமைக்காது உண்டால் இப்புழு மாந்தர் உடலில் இடம்பற்றுகின்றது. போதிய தூய்மை பேணாவிட்டாலும், நீரில் கலந்தோ மண்னில் இருந்தோ உணவை அடைந்து நோயூட்டுகின்றது. அமெரிக்காவில் இந்நோய் தாக்கப்படுவது பற்றி ஆய்வு செய்ததில் இருந்து, மெக்சிக்கோ, நடு அமெரிக்கா, தென் அமெரிக்கா போன்ற பகுதிகளில் இருந்து தென்கிழக்கு ஆசியாவில் இருந்தும் வந்து குடியேறுபவர்கள் வாயிலாகப் பரவுவதாகக் கருதுகின்றனர். இந்தப் பன்றித் தட்டைப்புழு நோய் இசுலாமியரிடையேயும் இசுலாமிய நாடுகளிலும் மிகக் குறைவாக உள்ளது ஏனெனில் பன்றிக்கறி உண்பதில்லை. மாந்தர்களுக்கு ஏற்படும் இந்தப் பன்றித் தட்டைப்புழு நோய், மாந்தர்களின் மலக்கழிவில் இருக்கக்கூடிய தட்டைப்புழுவின் முட்டைகளை எவ்வாறோ பன்றிகளின் வழியாக உட்கொள்ள நேரும் பொழுது இந்நோய் உண்டாகின்றது. இப்புழுவின் உயிர் வளர்ச்சியில் பன்றியும், மாந்தர்களும் நெருங்கி வாழும் சூழல் தேவைப்படுகின்றது. 1990-1991 இல் நான்கு பழமரபு யூதர்களுக்கு வலிப்புகளும் (இழுப்புகளும்), மூளைத்தாக்கமும் ஏற்பட்டது, இவை இந்தப் பன்றித்தட்டைபுழுவால் என்றும் அறிந்தனர், ஆனால் அவர்கள் தங்கள் சமயப் பழக்கத்தின் படி பன்றிக்கறி உண்ணுவதில்லை, எனினும் இவர்கள் இந்நோய்க்கு எவ்வாறு உள்ளானார்கள் என்று காரணங்களை அலசிய பொழுது வீட்டில் வேலை செய்வதற்காக இலத்தீன் அமெரிக்காவை (தென் அமெரிக்காவை)ச் சேர்ந்த பணியாட்கள் வழி இந்நோய் உண்டாயிற்று என்று கண்டனர். இந்தப் பணியாட்களின் உடலில் பன்றித் தட்டைப்புழு நோயெதிர்ப்புப் பொருள்கள் இருப்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது, எனவே இதுவே காரணமாக இருக்க அதிக வாய்ப்புக்கூறுகள் உடையது எனக் கண்டனர். இத்தட்டைப் புழு உண்டாக்கும் மாந்த நோயைத் தீர்க்க பிராசிக்குவான்டெல் (Praziquantel) (PZQ)என்னும் வேதியியல் மருந்தைப் பயன்படுத்துகின்றார்கள்; சிலர் நைக்குளோசமைடு (niclosamide) என்னும் மருந்தை எல்லாத் தட்டைப்புழு நோய்களுக்கும் நல்ல தீர்வாகக் கருதுகின்றார்கள் நீர்மம்முட்டைவழி நோய்க்கு (cysticercosis) ஒரு இசுடெராய்டுடன் (steroid) சேர்ந்த ஆல்பெண்டாசோல் (albendazole) எடுத்துக்கொண்டால் அது அழற்சியைக் குறைக்கும் என்னும் கருத்துள்ளது. நடுவண் நரம்பு மண்டத்தைத் தாக்கி இருந்தால், அறுவைத் தீர்வு தேவை ஆகலாம். அல்பெண்டாசோல் மருந்து நரம்பியல்-நீர்மமுட்டைவழி நோய்க்கும் பாதுகாப்பான தீர்வாக அமையக்கூடும் என்று கருதப்படுகின்றது பரப்பு விரிவுக் குணகம் பரப்பு விரிவுக் குணகம் ("coefficient of areal or superficial expansion") என்பது ஓரலகு பரப்பினையடைய ஓரு பொருள் ஓரலகு வெப்பநிலை ஏற்றம் காணும் போது அதிகரிக்கும் பரப்பு ஆகும். பொருளின் மாறிய பரப்பளவு A2 என்றும் தொடக்கப் பரப்பளவு A1 என்றும் இந்த அளவீடுகளுக்கான வெப்பநிலை முறையே T2, T1 என்றும் கொண்டால் அப்பொருளின் பரப்பு விரிவுக் குணகம்: இதனை சிவசைலனூர் சிவசைலனுர் எனும் கிராமம் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 1000 மக்கள் வசிக்கின்றார்கள். பெரும்பான்மையான மக்கள் விவசாயமும் செங்கல் உற்பத்தியும் செய்கின்றனர். இக்கிராமம் மலைகளுக்கு அருகாமையில் அமைந்துள்ளது. இதனால் இயற்கையாகவே இங்கு நல்ல காலநிலை நிலவுகிறது. இந்த ஊரில் இரண்டு கிறிஸ்தவ ஆலயம் மற்றும் ஒரு தொடக்கப் பள்ளியும் உள்ளது. இந்த ஊரில் உள்ள தொடக்க பள்ளியானது சுமார் 1878ல் ஆங்கிலேயர்களால் ஆரம்பிக்கப்பட்டது. இந்தியாவின் இலங்கைத் தமிழர் இந்தியாவின் இலங்கைத் தமிழர் பொதுவாக இலங்கையில் பிறந்த, அல்லது பூர்வீகமாகக் கொண்ட இலங்கையில் வசிக்காத இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழரைக் குறிக்கும். இவர்கள் இலங்கையில் குடியுரிமை பறிக்கப்பட்டதனாலும், மற்றவர்கள் இலங்கை உள்நாட்டுப் போரினால் இடம்பெயர்ந்தவர்களாகவும், பிற காரணங்களுக்காக இந்தியாவிற்குக் குடியேறியோராயும் உள்ளனர். 1970-களின் முன் தாயகம் திரும்பியோர் பலரும் தமிழக மக்களோடு ஒன்றிணைந்துவிட்டனர். 1972-களின் பின் வந்தோர் பலர் இன்னமும் அகதி முகாம்களில் வசிக்கின்றனர். சமூக பொருளாதார அடிபப்டையில் பொதுவாக இவர்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்வோராய் உள்ளனர். ஆயினும், ஆரம்ப காலங்களில் குடியேறியோர் செல்வந்தராயும் தொழிலில் முன்னேறியோராயும் உள்ளனர். தமிழ்நாட்டில் இவர்கள் சிலோன் தமிழர் அல்லது யாழ்ப்பாணத் தமிழர் என அறியப்பட்டும், கேரளாவில் இவர்கள் தங்களை கேரள சாதியான ஈழவர் என்பதன் திரிபாக ஈழவர் என அழைக்கின்றனர். மார்ட்டின் லூதர் கிங் நினைவகம் மார்ட்டின் லூதர் கிங் நினைவகம் ("Martin Luther King, Jr. Memorial") என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளின் தலைநகரான வாஷிங்டன் நகரில், மேற்கு போட்டமாக் பூங்காவில் தேசிய விரிசாலை என்றழைக்கப்படுகின்ற பேரெல்லைக்குள் அமைந்துள்ள புகழ்பெற்ற நினைவு நிறுவனம் ஆகும். இந்த நினைவகம் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் பூங்காக்கள் அமைப்பின் 395ஆம் செயல்திட்டம் ஆகும். இந்த நினைவகம் வாஷிங்டன் நகரில், டைடல் பேசின் என்றழைக்கப்படும் ஏரிக்கரையின் வடகிழக்குப் பகுதில், பிராங்ளின் டேலனோ ரூசவெல்ட் நினைவகத்தின் அருகின் உள்ளது. அதிலிருந்து நோக்கினால் வடமேற்குப் பகுதில் லிங்கன் நினைவகமும், தென்கிழக்குப் பகுதியில் ஜெபர்சன் நினைவகமும் அமைந்துள்ளதைக் கண்டு இன்புறலாம். மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் நினைவகம் அமைந்துள்ள முகவரி 1964 இண்டிப்பெண்டன்சு சாலை என்பதாகும். 1963இல் டாக்டர் கிங் துப்பாக்கிக் குண்டுக்கு இரையானதைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டில் குடிமைசார் உரிமைகளுக்கான மசோதா சட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டாகிய 1964ஐ முகவரியாக வைத்துள்ளார்கள். மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் நினைவகம் அமைந்திருக்கும் பூங்கா நான்கு ஏக்கர் பரப்பளவு கொண்டது. சுமார் 20 ஆண்டுகள் தயாரிப்புக் காலத்திற்குப் பின்னரே இந்த நினைவகம் கட்டி எழுப்பப்பட்டது. இது பொதுமக்கள் பார்வைக்கு 2011ஆம் ஆண்டு, ஆகத்து 22ஆம் நாள் திறந்துவைக்கப்பட்டது. 1963ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 22ஆம் நாள், லிங்கன் நினைவகத்தின் படிக்கட்டின் மேல் நின்றுகொண்டு, பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் மார்ட்டின் லூதர் கிங் "கனவொன்று கண்டேன்" ("I Have a Dream") என்னும் புகழ்மிற்ற உரையை ஆற்றினார். அந்த உரையின் 48ஆம் ஆண்டு நினைவான 2011, ஆகத்து 22ஆம் நாள் அன்று அந்நினைவகத்தைத் திறந்துவைப்பதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அப்போது சுழற்காற்று ஐரீன் பெரும் சேதம் விளைவித்ததால் நினைவகத் திறப்பு விழா அக்டோபர் 16ஆம் நாளுக்குத் தள்ளிவைக்கப்பட்டது. ஆப்பிரிக்க-அமெரிக்க மக்களின் குடிமை உரிமைகளை நிலைநாட்டுவதற்கு ஆதரவாக 1995 அக்டோபர் 16ஆம் நாள் நடந்த "பத்து இலட்சம் மனிதர் உர்வலம்" ("Million Man March") என்னும் நிகழ்ச்சியின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் அது. அந்த நாளில் மார்ட்டின் லூதர் கிங் நினைவகம் திறந்துவைக்கப்பட்டது. கில்லட்டின் கில்லட்டின் அல்லது கில்லெட்டின் ("guillotine") மாந்தரின் தலையை வெட்டிக் கொன்று மரண தண்டனை நிறைவேற்றப் பயன்படும் எந்திரம். இதில் ஒரு உயரமான செங்குத்தான சட்டத்தில் ஒரு கூர்மையான கத்தி தொங்கிக் கொண்டிருக்கும். அதன் அடியில் உள்ள பலகையில் தண்டனை விதிக்கப்பட்டவரைக் கட்டி வைப்பர். அவரது கழுத்து கத்தி முனைக்கு நேர் கீழே இருக்கும். கத்தியை அவிழ்த்து விட்டால் வேகாகக் கீழிறங்கி அவரது கழுத்தில் பாய்ந்து தலையை உடனே துண்டித்து விடும். பிரெஞ்சுப் புரட்சியின் போது பிரான்சில் கில்லட்டினின் பயன்பாடு பரவலானது. விரைவாக மரண தண்டனையை நிறைவேற்றும் எந்திரமொன்று தேவைப்பட்டதால் கில்லட்டின் வடிவமைக்கப்பட்டது. புரட்சிகர பிரான்சில் மரண தண்டனை வழிமுறைகளை சீர் திருத்தில் ஜோசப்-இக்னேஸ் கில்லட்டின் எனும் மருத்துவரின் பெயரால் இவ்வியந்திரங்கள் “கில்லட்டின்” என்று அழைக்கப்பட்டன. கில்லட்டின்கள் வெகுஜன நினைவிலும் பரவலர் ஊடகங்களிலும் பிரெஞ்சுப் புரட்சி, பயங்கர ஆட்சி போன்றவற்றுடன் பெரிதும் தொடர்பு படுத்தப்படுகின்றன எனினும் பிரான்சில் 1981 மரண தண்டனை ஒழிக்கப்படும் வரை பயன்படுத்தப்பட்டு வந்தன. நல்ல வண்ணம் வாழலாம் (நூல்) நல்ல வண்ணம் வாழலாம் என்னும் நூல் சுகி. சிவம் என்பவரால் எழுதப்பட்டது. அவர் கல்கி இதழில் எழுதிய சமயக் கட்டுரைகள் பதினாறின் தொகுப்பே இந்நூல் ஆகும். இந்நூலிற்கு சிலம்பொலி சு. செல்லப்பன் அணிந்துரை வழங்கி இருக்கிறார். அவர் அவ்வணிந்துரையில், “சுகி. சிவத்தின் கட்டுரைகள் தம் உட்பொருளைத் தெளிவு வெளிப்படுத்துகின்ற மணிநீர்க் குளங்களாகும்” என இந்நூலில் உள்ள கட்டுரைகளைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். பஞ்ச வாத்தியம் பஞ்ச வாத்தியம் (Panchavadyam) இது கேரள மாநிலத்தின் கோயில்களில் ஐந்துவகை இசைக்கருவிகளால் வாசிக்கப்படும் இசை ஆகும். இது மரத்தினால் செய்யப்பட்டு தோலினால் கட்டப்பட்ட தோற்கருவியாகும். இது பாணி எனவும் அழைக்கப்படுகிறது. மணற்கடிகார வடிவில் இருக்கும் திமிலை இசைக்கருவியானது கேரளா மற்றும் தென்னிந்தியக் கோவில்களில் இசைக்கப்படுகிறது தோலக் எனப்படும் மத்தளம். நடுவில் பெரியதாகவும் கடைசியில் சிறியதாகவும் இருக்கும் இக்கருவி இரண்டு கைகளால் இசைக்கப்படுகிறது. இது இரண்டு தட்டு வடிவில் அமைந்த உலோகத்தால் செய்யப்பட்ட இதனை இரு கைகளில் பொருத்தி இசைக்கப்படுகிறது. தோல் இசைக்கருவியான இதைக் கைகளைக் கொண்டு இசைக்கலாம். உலோகத்தால் அல்லது மரத்தால் செய்யப்பட்ட இரு பக்கங்களும் விரிந்து இடை சிறுத்தும் இருக்கும், இக்கருவி இரண்டு கை விரல்களால் இசைக்கப்படுகிறது வளைந்த உலோகத்தால் செய்யப்பட்ட இதனை வாயினால் ஊதி இசைக்கப்படுகிறது. காரி இரத்தினக் கவிராயர் காரி இரத்தினக் கவிராயர் என்னும் உரைநூல் புலவர் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ஆழ்வார் திருநகரிக்கு அருகே மூன்று கல் தொலைவில் உள்ள தென் திருப்பேரை என்னும் ஊரில் பிறந்து வாழ்ந்தவர். திருக்குருகைப் பெருமாள் கவிராயரின் மாணாக்கர் இவர். இவரது பெயரில் உள்ள 'காரி' என்பது இவரது தந்தையின் பெயர். காயிலில் வாகனமாலை படிப்பதற்கு அக்காலத்தில் இவருக்கு மானியம் வழங்கப்பட்டிருந்தது. திருமாலை வழிபடும் குடும்பத்தைச் சேர்ந்தவர். எனினும், சைவ நூல்களையும் இவர் தமது உரையில் மேற்கோள் காட்டுகிறார். இவரது ஆசிரியர் திருக்குருகைப் பெருமாள் கவிராயர் 1540-1565 ஆண்டுகளில் வாழ்ந்தவர். எனவே இவரது காலம் 1550-1575 எனக் கொள்ளப்படுகிறது. திருக்குறள் நுண்பொருள்மாலை என்னும் பெயரில் குறிப்புரை ஒன்றை இவர் எழுதியுள்ளார். நயனப்பத்து, பயோதரப்பத்து என இவர் தமது உரையில் குறிப்பிடும் நூல்களைப் பற்றிய குறிப்பு வேறு எந்த நூலிலும் காணப்படவில்லை. பிரம்மன் கோயில்கள் இந்து சமயத்தில் படைக்கும் கடவுளான பிரம்மனுக்கு கோயில்கள் காண்பது அரிது. பிரம்மனுக்கு கோயில்கள் அரிதாகக் காணப்படுவதற்கு இந்து புராணங்களில் பின்வரும் காரணம் தரப்பட்டுள்ளது. படைக்கும் கடவுளாகிய நான்முக பிரம்மாவுக்கும், காக்கும் கடவுளாகிய திருமாலுக்கும், தங்களில் யார் பெரியவர் விவாதம் உண்டாகி, சிவபெருமானிடம் சென்று தம்மில் யார் பெரியவர் எனக் கேட்க, சிவபெருமான் தனது அடியை அல்லது முடியை உங்களில் யார் கண்டு வருகிறீர்களோ அவர் தான் பெரியவர் எனக் கூற திருமால் வராக அவதாரம் எடுத்து அடியைக்காண பூமியைக் குடைந்து சென்றார். அடியைக் காண இயலாமல் சோர்ந்து திரும்பினார். பிரம்மன் அன்னப் பறவையாக உருவெடுத்து சிவபெருமானது முடியைக் காண உயரப் பறந்து சென்றார். முடியைக் காண இயலாமல் தயங்கி பறக்கும்போது சிவன் தலை முடியில் இருந்து தாழம்பூ கீழே இறங்கி வந்ததை கண்டு, அதனிடம் பிரம்மன் முடியைக் காணும் முயற்சியை விடுத்து, தாழம்பூவிடம் ஒரு பொய் சாட்சி சொல்லும்படி கேட்டுக் கொண்டார். சிவனின் முடியை, பிரம்மன் கண்டதாக சாட்சி சொல்லும்படி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தாழம்பூ சாட்சி சொல்ல, பொய் சொன்ன பிரம்ம தேவனுக்கு பூலோகத்தில் ஆலயம் மற்றும் பூசைகள் அமையாதென்றும், பொய்ச்சாட்சி சொன்ன தாழம்பூ சிவ பூசைக்கு உதவாது என்றும் சாபமிட்டார். எனவே பிரம்மனுக்கு அரிதாகவே கோயில்கள் உள்ளன. பிரம்மாவுக்கு இந்தியாவில் பன்னிரண்டு கோயில்கள் உள்ளன. திருக்குறள் நுண்பொருள்மாலை திருக்குறள் நுண்பொருள்மாலை என்னும் நூல் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காரி இரத்தினக் கவிராயர் என்பவரால் எழுதப்பட்ட உரைநூல் குறிப்பு. இது திருக்குறள் பரிமேலழகர் உரைக்குத் தரும் சிறப்பு விளக்கமாக அமைந்துள்ளது. இது தனி நூலாக வெளிவரவில்லை. எனினும், 'திருக்குறள் உரைவளம்' என்னும் நூலில் இவரது உரை இணைக்கப்பட்டுள்ளது. திருக்குறள் நுண்பொருள்மாலையில் காணப்படும் குறிப்புகளில் சில சாங்கோ அன்செயின்டு சாங்கோ அன்செயின்டு (ஆங்கிலம்:Django Unchained) () 2012 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க மேற்கத்திய திரைப்படமாகும். இத்திரைப்படம் குவெண்டின் டேரண்டினோ ஆல் இயக்கப்பட்டது. ஜேமி ஃபாக்ஸ், கிறிஸ்டாஃப் வால்ட்ஸ், லியோனார்டோ டிகாப்ரியோ, கெர்ரி வாஷிங்டன், சாமுவேல் எல். ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் திசம்பர் 25, 2012 அன்று வட அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. இத்திரப்படம் மிகுந்த வரவேற்பினைப் பெற்றது. மேலும் ஐந்து அகாதமி விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. கிறிஸ்டாஃப் வால்ட்ஸ் தன் நடிப்பிற்காக பல விருதுகளைப் பெற்றார், சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது குறிப்பிடத்தக்கது. டேரண்டினோ சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருதினை வென்றார். இதே பகுப்பில் இது அவரது இரண்டாம் அகாதமி விருதாகும். முதல் அகாதமி விருது "பல்ப் ஃபிக்சன்"திரைப்பட திரை இயக்கத்திற்காக வாங்கினார். இத்திரைப்படம் $422 மில்லியன் வருவாயினை ஈட்டியது. 1850களில் கதை அமைந்துள்ளது. விடுதலையடைந்த அடிமை(ஃபாக்ஸ்) தன் மனைவியையினை அடிமையாளனிடமிருந்து மீட்க வால்ட்சுடன் சேர்ந்து போராடுகிறான். அறிவுக்கடல் அப்துற்-றகீம் (நூல்) அறிவுக் கடல் அப்துற்-றகீம் என்னும் நூல் தமிழ் முதன்முதலில் தன்முன்னேற்ற நூல்களை எழுதிய மு. றா. மு. அப்துற் றஹீம் என்னும் எழுத்தாளரைப் பற்றி எழுதப்பட்ட நினைவுக் குறிப்புகளின் தொகுப்பு ஆகும். இக்குறிப்புகளை அப்துற் றகீமின் அடியொற்றி தன்முன்னேற்ற நூல்களை எழுதும் மெர்வின் என்னும் எழுத்தாளர் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க இதழ்கள் – ஒரு பார்வை திராவிட இயக்க இதழ்கள் - ஒரு பார்வை என்னும் நூலை திராவிட இயக்க ஆய்வாளரான க. திருநாவுக்கரசு எழுதியிருக்கிறார். இந்நூலில் உள்ள கட்டுரைகள் சங்கொலி இதழில் தொடராக வெளிவந்தவை. அக்கட்டுரைகளைத் தொகுத்து, திராவிட இயக்கத்தைச் சார்ந்த இளைஞர்களின் பயன் கருதி வெளியிடுவதாக இந்நூலின் வெளியீட்டு நோக்கம் பதிப்புரையில் எடுத்துரைக்கப்பட்டு இருக்கிறது. சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ் இலக்கியத் துறை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், டாக்டர் மா. இராசமாணிக்கனார் இதழியல் ஆய்வு மையம் ஆகிய மூன்று அமைப்புகளும் சில திராவிட இயக்க இதழ்களையும் இதழாளர்களையும் தேர்வு செய்து சென்னைப் பல்கலைக் கழகத்தில் இரண்டு கருத்தரங்குகளை நடத்தினர். அவற்றுள் முதல் கருத்தரங்கம் 1998 பிப்ரவரி 6, 7 ஆம் நாள்களிலும் செப்டம்பர் 21, 22 ஆம் நாள்களிலும் நடைபெற்றது. இவ்விரு கருத்தரங்குகளிலும் 26 கட்டுரையாளர்கள் தத்தமது கருத்துரைகளை வழங்கினர். அக்கட்டுரைகளைப் பற்றி சங்கொலியில் க. திருநாவுக்கரசு திறனாய்வுக் கட்டுரைகள் எழுதினார். அவற்றின் தொகுப்பே இந்நூல் ஆகும். அக்னி தீர்த்தம் அக்னி தீர்த்தம் இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரத்திலுள்ளது. இது இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலில் அமைந்துள்ள 23 தீர்த்தங்களுள் ஒன்றாகும். இந்த தீர்த்தத்தில் ஆண்டுதோறும் இலட்சக்கணக்கானோர் நீராடுகின்றனர். சேது புராணம், ஸ்கந்த புராணம் மற்றும் நாரத புராணங்களில் அக்னி தீர்த்தத்தை குறித்துள்ளது. இராமநாதபுரத்திலிருந்து கிழக்கே 56 கி.மீ தொலைவிலும்,மதுரையிலிருந்து 168 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இராமேசுவரம் இராமநாத சுவாமி திருக்கோவிலின் நேர் கிழக்கே வங்காள விரிகுடா கடலினுள் அமைந்துள்ளது. இராமேசுவரம் தீவின் தென் கோடியான தனுசுகோடியின் கிழக்கு கடற்கரைப் பகுதியே புராணங்களில் அக்னி தீர்த்தமாக் கூறப்பட்டுள்ளது.இங்கு பித்ரு தர்ப்பணம் செய்வது புண்ணியமாக கருதப்படுகிறது.இங்கிருந்து நீரை எடுத்து ஆதி சங்கரர் தற்போதுள்ள அக்னி தீர்த்தத்தில் பிரதிட்டை செய்தார். தனுசுகோடியின் கிழக்கே வங்காளவிரிகுடாவில் மூன்று பக்கம் கடலால் சூழ்ப்பட்டும் ஒரு புறம் நிலமாகவும் அமைந்துள்ளது.இந்த இடம் அமைந்துள்ள இடம் சதுப்பு நிலமாக உள்ளது.சில நேரங்களிள் கடல் அலை அதிகமாகும் பொழுது இந்த நிலப்பரப்பு நீருக்குள் மூழ்கி விடுகிறது.இங்கிருந்து இலங்கை மிக அருகில் உள்ளது.கழுத்தளவு நீரில் இறங்கி நடந்தே இலங்கை சென்று விடலாம் என்று நம்பப்படுகிறது.1964ல் இங்கு ஏற்பட்ட புயலுக்குப் பின் இந்த கடல் பகுதி ஆபத்து நிறைந்த கடல் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செங்காட்டங்குடிப் புராணம் திருச்செங்காட்டங்குடி என்னும் ஊரில் குடிகொண்டுள்ள சிவபெருமான் மீது பாடப்பட்ட புராணம் திருச்செங்காட்டங்குடிப் புராணம். இது 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ எல்லப்ப நாவலர் பாடிய 6 புராண நூல்களில் ஒன்று. 392 பாடல்களைப் கொண்ட இந்த நூல் 11 சருக்கங்களாகப் பாகுபடுத்தப்பட்டுள்ளது. செங்காட்டங்குடி சிறுத்தொண்டர் வாழ்ந்த ஊர். நூலில் உள்ள பாடல் - எடுத்துக்காட்டு 1 2 திருச்செந்தூர் அகவல் திருச்செந்தூர் முருகனைப் பாட்டுடைத் தலைவனாக வைத்துப் பாடப்பட்ட நூல் திருச்செந்தூர் அகவல். . இதனைப் பாடியவர் சிற்றம்பல நாடிகள் என வழங்குகின்றனர். இதில் உள்ள சொல்லாட்சி, நடை, கருத்தோட்டம் முதலானவை 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிற்றம்பல நாடிகள் இதனைப் பாடினார் எனக் கொள்ள இடம் தரவில்லை. 16 ஆம் நூற்றாண்டினதாகக் கொள்ள வைக்கிறது. இந்த நூல் 426 அடிகள் கொண்ட ஆசிரியப்பாவால் ஆனது. 'முருகப் பெருமான் எனக்கு மெய்ஞ்ஞானம் புகட்டினார். உலகத்தீரே! நீங்களும் அவனை வழிபட்டுப் பெறுங்கள்' எனக் கூறுவதாக நூல் அமைந்துள்ளது. முதல் 24 அடிகள் அவனது திருவுருவ அழகைப் பாராட்டுகின்றன. மானுடச் சட்டை சாத்தி அருள் வழங்க வந்துள்ளான். 32 அறம் செய்க குண்டலி எழுப்பும் கொள்கை மும்மலமுடைய சகலன் நீ, உன் மலம் நீக்கி அருள மானுட வடிவில் வந்தோம் என முருகன் கூறுதல், - என்றெல்லாம் இந்த நூல் குறிப்பிட்டுச் செல்கிறது. பாடல் பகுதி - எடுத்துக்காட்டு சாத்திரமும், தோத்திரமும் குகை நமசிவாயர் குகை நமசிவாயர் 16 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் வாழ்ந்த சித்தர்களில் ஒருவராவார். இவர் ஆந்திரத்தின் பகுதியில் பிறந்தவர், அண்ணாமலையாரின் அழைப்பினை ஏற்று திருவண்ணாமலைக்கு வந்தார். அங்கு பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தினார். இவருடைய சீடர்களில் குரு நமச்சிவாயர் மற்றும் விருபாட்சித் தேவர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர் அண்ணாமலையில் பல்வேறு இடங்களில் மாறி மாறி தங்கியதாகவும், இறுதியாக அண்ணாமலையாரே தன்னுடைய மலையில் ஓர் குகையில் தங்கிக் கொள்ளுமாறு கூற, குகையில் தங்கியதால் குகை நமச்சிவாயர் என்று அழைக்கப்படுகிறார். இவருடைய ஜீவ சமாதி அண்ணாமலையில் உள்ளது. நமச்சிவாயர் ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் எனும் பகுதியில் பிறந்தவராவார். இவர் லிங்காயத்து எனும் பரம்பரையில், கன்னடத்தினை தாய்மொழியாக கொண்டிருந்தார். நமச்சிவாயரின் கனவில் அண்ணாமலையார் வந்து தென்திசைக்கு வரும்படி கோரினார். இதனால் நமச்சிவாயர் தன் முந்நூறு சீடர்களுடன் தெற்கு நோக்கி வந்தார். அவ்வாறு வரும் வழியில் திருமண வீட்டில் எரிந்த பொருளை மீட்டுதருதல், சிவனுக்கு சூட்டிய மலர் மாலையை தன் கழுத்தில் விழும் படி செய்தல் போன்ற பல்வேறு அற்புதங்களை செய்து வந்தார். திருவண்ணாமலைக்கு சீடர்களுடன் வந்த நமசிவாயர், அண்ணாமலையார் கோயிலிலுக்குள் சென்று அங்குள்ள அண்ணாமலையாரை வணங்காமல் இருந்தார். இதனைக் கண்டு சிவாக்கிர யோகி நமச்சிவாயரை பிரம்பால் அடித்தார். நமசிவாயர் சிவாக்கிர யோகியை தன் குருவாக ஏற்றுக் கொண்டு, அவரைக் காணும் பொழுதெல்லாம் அன்பை வெளிப்படுத்தினார். திருவண்ணாமலையில் ஒரு குகையில் நமச்சிவாயர் தங்கினார். இதனால் நமச்சிவாயரை, குகை நமச்சிவாயர் என்று மக்கள் அழைக்கத் தொடங்கினார்கள். தானும் தன் சீடர்களும் குளிக்க நான்கு குளங்களை நமச்சிவாயர் வெட்டினார். இதனை திருமுலைப்பால் தீர்த்தம், அருட்பால் தீர்த்தம், சங்கு தீர்த்தம், பாதத்தீர்த்தம் என்று அழைக்கிறார்கள். திருவண்ணாமலையிலிருந்த ஓர் ஆல மரத்தில் ஊஞ்சல் கட்டி இவர் தவம் இருந்தார் எனச் சிலர் கூறுகின்றனர். குகை நமச்சிவாயரின் அண்ணாமலையார் ஆலயத்தின் பின்புற கோபுரமான பேய் கோபுத்திற்கு அருகே, ஐந்து நிமிடத் தூரத்தில் மலையேறினால் குகை நமச்சிவாயரின் ஜீவ சமாதி ஆலயத்தினை அடையலாம். குகை நமச்சிவாயர் முந்நூறு சீடர்களை கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களில் விருபாட்சித் தேவர் மற்றும் குரு நமசிவாயர் ஆகியோர் மிக முக்கியமானவர்களாவார்கள். இவர் தமது சீடரான குரு நமச்சிவாயருக்கு பெயர் சூட்டித் தில்லையில் திருப்பணி செய்யுமாறு அனுப்பிவைத்தார். இவர் பல்வேறு நூல்களை எழுதியதாகவும், அவற்றில் பல சரிவர கிடைக்காமல் போனதாகவும் கூறப்படுகிறது. தற்போது குகை நமச்சிவாயர் எழுதியதாக கிடைத்திருக்கும் பட்டியல்கள் கீழே.. அருணகிரி அந்தாதி, தனிவெண்பாமாலை ஆகியவை திருவண்ணாமலைப் புராணமாகிய அருணாசல புராணம் நூலோடு சேர்த்து அச்சிடப்பட்டுப் பயிலப்படுகின்றன. வாழையிலைச் சோறு கறி வாழையிலையில் சோறையும், பல்வேறு கறிகளையும் பரிமாறி உண்பது வாழையிலைச் சோறு கறி அல்லது வாழையிலைச் சாப்பாடு ஆகும். இது தென்னிந்திய, ஈழத்து முதன்மை உணவு வகைகளில் ஒன்றாகும். விருந்துகளின் போது இவ்வாறு சிறப்பாகப் பரிமாறாப்படும். வாழையிலை உணவை இடுவதற்குப் பயன்படுத்தப்படுகிறதே தவிர அது உண்ணப்படுவதில்லை. தமிழர்களும், தென்னிந்தியர்களும் அதிகம் வாழும் மலேசியா, சிங்கப்பூர், கனடா, ஐக்கிய இராஜ்ஜியம், பிரான்சு போன்ற நாடுகளிலும் வாழையிலைச் சாப்பாடு தென்னிந்தியர்கள் அல்லாதவர்களிடமும் விரிவாகப் பரவி வருகிறது. மேற்குநாடுகளில் ஒப்பீட்டளவில் குறைந்த விலைக்கு பல் வகையான அதிக உணவு கிடைப்பதாலும் பலர் இதனை விரும்புகின்றனர். திருச்செந்தூர் நாழிக்கிணறு திருச்செந்தூர் நாழிக்கிணறு என்பது தமிழகத்திலுள்ள மிகவும் புண்ணியமான தீர்த்தம் ஆகும்.இது தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலுள்ளது.இது திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் அமைந்துள்ள தீர்த்தங்களுள் ஒன்றாகும்.இந்த தீர்த்தத்தில் ஆண்டுதோறும் இலட்சக்கணக்கானோர் நீராடுகின்றனர். தூத்துக்குடியிலிருந்து தெற்கே 37 கி.மீ தொலைவிலும்,மதுரையிலிருந்து 180 கி.மீ தொலைவிலும் திருநெல்வேலியிலிருந்து 60 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தெற்கே வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ளது. சூரபதுமன் என்ற அசுரனை அழிப்பதற்காக முருகப்பெருமான் தன் படைகளுடன் திருச்செந்தூரில் முகாமிட்டு இருந்தார்.அப்பொழுது படைவீரர்களின் தாகத்தினை தீர்ப்பதற்காக தன் வேலினால் இந்த கிணற்றை உருவாக்கியதாக புராணங்கள் கூறுகின்றன். இந்த தீர்த்தம் கடலுக்கு மிக அருகில் இருந்தாலும் இதன் நீர் இனிப்பு சுவை கொண்டுள்ளது.மேலும் இது அள்ள அள்ள குறையாத நீர்நிலையாகவும் திகழ்கிறது. கடற்கரையின் நிலப்பரப்பிற்கு அடியிலுள்ள நீர் கடல் மண்ணிணால் வடிகட்டப்பட்டு உவர்ப்பு நீங்கி இனிப்பு சுவையுடன் உருவெடுக்கிறது. திருவருணைத் தனிவெண்பா திருவருணைத் தனிவெண்பா என்றும் தனிவெண்பாமாலை என்றும் வழங்கப்படும் தமிழ் நூல் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குகை நமச்சிவாயர் இயற்றிய நூல்களில் ஒன்று. அருணை என்பது அண்ணாமலை என்னும் திருவண்ணாமலை. 1 இந்தப் பாடல் பிற்காலத்தில் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் பாடிய பாடலோடு ஒப்புநோக்கத் தக்கது. 2 குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் என்பது தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள சக்தி தலமாகும். இது திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுடன் இணைந்த கோவிலாகும். இந்த தலம் திருநெல்வேலியிலிருந்து 65 கி.மீ தொலைவிலும் தூத்துக்குடியிலிருந்து 55 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தத் திருவிழாவை வட்டார வழக்கில் தசரா என்று அழைக்கின்றனர். மகிசாசூரன் என்ற அசுரனை அன்னை பராசக்தி வதம் செய்து தேவர்களை காத்த நாளினையே தசராவாக கொண்டாடுகின்றனர். நவராத்திரியின் ஒன்பது நாளிலும் பக்தர்கள் விரதம் இருந்து அம்மனுக்கு மாலை சூடி வேடமணிந்து பரவசமாக ஆடியும் பாடியும் பக்தர்களிடம் காணிக்கை பெறுகின்றனர். பத்தாம் நாளில் சூரசம்காரம் வெகு விமரிசையாக நடைபெருகிறது. அத்துடன் பக்தர்கள் மாலையினை கழற்றி விரதத்தினை முடித்துக்கொள்கின்றனர். திருச்செந்தூரிலிருந்து கன்னியாகுமரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் திருச்செந்தூரிலிருந்து 23 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினி அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினி என்பவன் ஒரு சங்ககால அரசன். இவனை பற்றி ஆய்வாளர்களிடம் பல்வேறு பட்ட கருத்துகள் வழங்குகின்றன. சில ஆய்வாளர்கள் அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினியும் அதியமான் பொகுட்டெழினியும் ஒருவர் என்பர். சிலர் அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினி பொகுட்டெழினியின் தந்தையான அதியமான் நெடுமான் அஞ்சிக்கு முற்பட்டவன் என்றும் கூறுவர். பாட்டனின் பெயரையே பேரனுக்கும் வைக்கும் பழக்கம் தமிழருக்கு உண்டு என்பதால் "அதியமான் எழினியின் பேரனே அதியமான் பொகுட்டெழினி" என்பார் ஔவை துரைசாமி. இவர் கூறியுள்ள முறையின் படி பின்வருமாறு அதியமான் வம்சம் அமைகிறது. செழியன் தன்னிடம் தலையானங்கானத்தில் போரிட்ட எழுவரையும் அவர்களின் ஊரிற்கே விரட்டிச் சென்று போரிட்டு வென்றான் என்பது சங்கப்பாடல்கள் தரும் செய்தி. அந்த எழுவருள் எழினி என்பானும் ஒருவன். அதனால் அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினியும் இந்த எழினியும் ஒருவனே என்று முடிக்க துணிவர் சில ஆய்வாளர்கள். கள்ளர் வெட்டுத் திருவிழா கள்ளர் வெட்டுத் திருவிழா என்பது தென்தமிழகத்தின் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் புகழ் பெற்ற விழாவாகும். இந்த திருவிழாவைக் காண ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் தேரிக்குடியிருப்பு அருகேயுள்ள குதிரைமொழி கிராமத்திலுள்ள கற்குவேல் ஐயனார் கோவிலில் கூடுகிறார்கள். இந்தத் திருவிழாவானது தூத்துக்குடி மாவட்டம் குதிரைமொழியில், ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் முப்பதாவது நாள் நடைபெற்று வருகிறது. திருவிழா கார்த்திகை மாதம் முதல் நாள் தொடங்கி 28ம் நாள் திருநெல்வேலி பாளையங்க்கோட்டை இடையர் இனத்தைச் சேர்ந்த மாலையம்மன் ஐவராசா குடும்பத்தினா் நடத்தும் மாலையம்மன் ஐவராசா பூசையுடன் தொடங்கி கள்ளர் வெட்டு முடிந்த மறுநாள் திருநெல்வேலி தச்சநல்லுார் இடையர் இனத்தைச் சேர்ந்த முன்னடி பட்டறைதாரர் நடத்தும் படப்பூசையுடன் முடிவடைகிறது. கோயிலின் முன்னே உள்ள தேரிப்பகுதியில் மேல்புறம் சவுக்கு கட்டைகள் மூலம் பாதுகாப்பு அரண் அமைத்து அதில் கள்ளர் எனும் இளநீரை வைத்து நாலாபுறமும் பக்தர்களின் நடுவே வெட்டப்படும். பின்பு பக்தர்கள் அங்கிருந்து புனித மண் எடுத்துச் செல்கின்றனர். கமலா நேரு கமலா நேரு (ஆகஸ்ட் 1, 1899 - பிப்ரவரி 28, 1936) என்பவர், இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், இந்தியாவின் முதல் பிரதமருமான ஜவஹர்லால் நேருவின் மனைவியும், இந்தியாவின் முதல் பெண் பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் தாயாரும் ஆவார். இவர் மிகவும் உண்மையானவராகவும், தேசபக்தி மிக்கவராகவும், எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவராகவும் இருந்தார். கமலா நேரு ஆகஸ்ட் 1, 1899 அன்று பிறந்தார். அவர் பழைய டில்லியில் காஷ்மீர் பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர் ராஜ்பதி-ஜவஹர்மால் கௌர் ஆவர். இவர் தன் பெற்றோருக்கு மூத்த பிள்ளை ஆவார். இவரது சகோதரர்கள் சாந்த் பகதூர் கௌர் மற்றும் பயிரியலாளர் ஆன கைலாச் நாத் கௌர். இவரது சகோதரி ஸ்வரூப் கத்ஜு. இவர் தனது வீட்டிலிருந்து பண்டிட் மற்றும் மௌல்வியின் வழிக்காட்டுதலின் மூலம் கல்வி பெற்றார். இவருடைய பதினேழாம் வயதில் பண்டிட் ஜவஹர்லால் நேருவை மணந்தார். 1917 ஆம் ஆண்டில் இவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு இந்திரா பிரியதர்ஷினி எனப் பெயர் சூட்டப்பட்டது. 1924 ஆம் ஆண்டில் ஒரு ஆண் குழந்தை பிறந்து ஒரு வாரத்திலேயே இறந்துவிட்டது. கமலா நேரு சிறிது காலம் சபர்மதி ஆசிரமத்தில் தங்கியிருந்த போது அவருக்கு கஸ்தூரிபாய் காந்தியுடனும் பிரபாவதி தேவியுடனும் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. பிப்ரவரி 28, 1936 அன்று கமலா நேரு காச நோய் பாதிப்பால் சுவிட்சர்லாந்திலுள்ள லாசன்னில் காலமானார். லாசக்னா இடுகாட்டில் இவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இவருக்கு நினைவு செலுத்தும் வகையில் கமலா நேரு கல்லூரி, கமலா நேரு பூங்கா, கமலா நேரு தொழில்நுட்ப கழகம்(சுல்தான்பூர்), கமலா நேரு மருத்துவமனை ஆகியவற்றுக்குப் பெயரிடப்பட்டுள்ளன. ஓம் தத் சத் ஓம் தத் சத் என்பது ஒரு இந்து சமய மந்திரம் ஆகும். இம்மந்திரம் மூன்றுவிதமாக ஸத் சித் அனந்தமயமான பிரம்மத்தினுடைய பெயராக மொழியப்பட்டுள்ளது. "ஸத்" எனில் சத்தியம் அல்லது உண்மை, "ஸித்" எனில் மெய்யறிவு, "அனந்தம்" எனில் வரையறுக்கப்படாதது எனப் பொருள்படும்படியாக இறைவனை சச்சிதானந்தம் என்பர். ஓம் என்பது பிரணவ மந்திரம் ஆகும். வேள்வி, யக்ஞம், தானம், தவம் முதலிய செயல்களை, எப்பொழுதும் ‘ஓம்’ என்ற பரமாத்மாவின் திருப்பெயரை உச்சரித்துக் கொண்டே தொடங்கி, அச்செயலை முடிக்கும் போது "ஓம்" "தத்" "ஸத்" என்று கூறி முடிக்க வேண்டும். ‘ஓம்’ என்ற சொல்லை உச்சரிப்பதால் நாம் செய்யும் அனைத்து செயல்களில் ஏதேனும் செயற்குற்றங்கள் இருந்தால் அவைகள் நம்மை விட்டு அகல்கிறது. நாம் செய்யும் செயல்களினால் உண்டாகும் பலன்களை விரும்பாது, யாகம், தானம், தவம், யக்ஞம், முதலிய செயல்கள், வீடுபேறுஅடைய விரும்புபவர்களால் ``தத்`` எனும் மந்திரத்தை சொல்லிய பிறகே கடைப்பிடிக்கப்படுகிறது. உலகியலில், பெயருடனோ உருவமுடனோ காணப்படும் எல்லாவற்றிற்கும் ஆதார அடிப்படையாக மெய்ப்பொருள் ஒன்று உளது என்பது, எல்லா உபநிடதங்களின் கூற்று. அது "பெயர்" "உருவம்" என்ற வரையறுப்புகளை மீறியது. அதனால் அதை "அது" (வடமொழியில் "தத்") என்று மட்டுமே அல்லது ‘பிரம்மம்’ என்றே உபநிடதங்கள் குறிக்கின்றன. "ஸத்" எனில், "இருப்பது" என்ற பொருளிலும், "நல்லது" என்ற பொருளிலும் உச்சரிக்கப்படுகிறது. அவ்வாறே மங்களகரமான செயல்களிலும் `ஸத்` என்ற மந்திரம் பயன்படுத்தப்படுகிறது. யக்ஞத்திலும், தவத்திலும், தானத்திலும் நிலைத்த இருப்பை `ஸத்` எனப்படுகிறது. அதன் தொடர்பான செயல்களும் கூட `ஸத்` என்றே சொல்லப்படுகிறது. மாறுதலே இல்லாத முடிவான உண்மையை உறுதிப்படுத்த `ஸத்` என்பதை பரப்பிரம்மம் என்றும் கூறுவர். அங்கிங்காணாதபடி எங்கும் நிறைந்திருக்கும் இப்பரம்பொருள் ‘இருக்கிறது’ (ஸத்) என்பதைத்தவிர வேறு ஒன்றும் இல்லை. பிரம்மம் வெறுமனே இருக்கும்; அது பேசாது; பேசவொண்ணாதது; பார்க்காது, பார்க்கவொண்ணாதது; காரணிக்காதது, காரணத்தில் அடங்காதது; காரியம் செய்யாதது; காரியத்தினால் ஏற்படாதது. அந்த `ஸத்` முக்காலத்திலும் இருப்பதனால் அதை ‘இருப்பு’ என்று பொருள் கொண்ட ‘ஸத்’ என்ற ஒரே சொல்லால் வேதங்கள் சொல்கிறது. எனவே ‘ஸத்’ என்றால் நிலையான பிரம்மம் ஆகும். கனவு மெய்ப்படும் (நூல்) கனவு மெய்ப்படும் என்னும் நூலை எழுதியவர் சுகி. சிவம். பகவத் கீதையை பூர்வாங்கத் தகுதிகள் ஏதும் அற்றவரும் எளிமையாகப் புரிந்துகொள்ளும் நோக்கில் எழுதப்பட்ட பதினெட்டுக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல் ஆகும். இக்கட்டுரைகள் கல்கி இதழில் தொடராக வெளிவந்தவை. மீளாக்கம் (உயிரியல்) உயிரியலில் மீளாக்கம் அல்லது மீளுருவாக்கம் அல்லது புத்துயிர்ப்பு ("regeneration") என்பது உயிர்கள் தமது பாதிக்கப்பட்ட அல்லது துண்டிக்கப்பட்ட உறுப்புகளைத் தாமாகப் புதுப்பித்துக் கொள்ளும் நிகழ்வு ஆகும். பாக்டீரியா முதல் மனிதர்கள் வரை மீளுருவாக்கும் திறன் உள்ளது. பொதுவாக மீளாக்கத்தில் பாதிக்கப்பட்ட திசுக்களுக்கு மட்டும் புதிய திசுக்கள் உருவாகி முழுமையற்ற உறுப்பாக உருவாகிறது. ஒரு சில உயிரினங்களில் மட்டும் முழுமையான உறுப்புகளாகவே வளர்கின்றன. தொடக்க நிலையில் டிஎன்ஏ தொகுப்பின் மூலக்கூறு செயல் முறைகளால் மீளாக்கம் நடுநிலைப்படுத்தப்படுகிறது. பலமுனை வரைவி பலமுனை வரைவி ("polygraph") கருவி பொய்யைக் கண்டுபிடிக்கும் கருவிகளில் (Lie Detector) ஒன்றாகும்.பொய்யை கண்டறியும் கருவிகளில் உலகில் பெருமளவில் பயன்படுத்தப்படுவது பொலிகிராப்பே ஆகும்.பொலிகிராப் கருவி ஜோன் ஆகஸ்டஸ் லார்சன் என்பவரால் 1921 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது லார்சன் பெகேர்லி போலீஸ் பணியகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்ததுடன் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவனாகவும் விளங்கினார். சில நாடுகளில் நேர்முகப்பரீட்சைகளிலும் குற்றவாளிகளை விசாரிக்கும் போதும் பொய் சொல்வதை கண்டுபிடிக்க பலமுனை வரைவி பயன்படுத்தப்படுகின்றது. பலமுனை வரைவியின் உணரிகள் உடலின் குறித்த பாகங்களில் பொருத்தப்பட்டு இதயத்துடிப்பு, குருதியமுக்கம், தோலின் மின்கடத்துதிறன், சுவாச வீதம் என்பவற்றை அளவிடுகின்றன. நேர்முகத்தேர்வுகளிலோ அல்லது விசாரணையின் போதோ விடையளிக்கும் நபர் பொய்யுரைக்கும் சந்தர்ப்பத்தில் மேற்கூறிய இதயத்துடிப்பு,குருதியமுக்கம், தோலின் மின்கடத்துதிறன், சுவாச வீதம் என்பன மாற்றமடையும். இதன் மூலமாக பலமுனை வரைவி பொய் கூறியமையை கண்டுபிடிக்கும். இந்திய மருத்துவக் கழகம் இந்திய மருத்துவக் கழகம் என்பது இந்தியாவில் சீரான தரமிக்க மருத்துவக்கல்வியை வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும்.இந்த அமைப்பு இந்தியாவில் மருத்துவக்கல்வியை ஒழுங்கு படுத்துதல்,மருத்துவப்பல்கலைகழகங்களுக்கு அங்கீகாரம் அளித்தல்,மருத்துவ பட்டம் வழங்குதல்,மருத்துவர்களுக்கு அங்கீகாரம் அளித்தல்,மருத்துவ பணிகளை ஒழுங்கு படுத்துதல் முதலிய பணிகளை செய்து வருகிறது. இந்த அமைப்பானது மருத்துவக்கழக சட்டம் 1933ன் படி, 1934ல் நிறுவப்பட்ட தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாகும்.இந்த அமைப்பானது மருத்துவக்கழக சட்டம் 1956ன் படி, மறுவரையரை செய்யப்பட்டது. திருநரையூர் விநாயகர் திரு இரட்டைமணிமாலை திருநரையூர் விநாயகர் திரு இரட்டைமணிமாலை என்னும் நூல் நம்பியாண்டார் நம்பி பாடிய 10 சிற்றிலக்கிய நூல்களில் ஒன்று. நூல் தோன்றிய காலம் 11 ஆம் நூற்றாண்டு. நூலாசிரியர் நம்பி திருநரையூரில் பிறந்தவர். தனக்கு அருள் பாலித்தவர் என்று அவ்வூர் விநாயகப் பெருமான் மீது இரட்டைமணிமாலை பாடினார். வீரணக்குடி பெண் ஒருத்தி தவம் செய்து விநாயகப் பெருமானுக்குத் தங்கையாகவும், முருகனுக்கு அக்காவாகவும் பிறந்தாள் என்னும் புதிய செய்தி ஒன்று இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைக் குறிப்பிடும் பாடல். இந்த நூலிலுள்ள வெண்பாப் பாடல் ஒன்று - எடுத்துக்காட்டு மனித எலும்புக்கூடு மனிதர்கள் 270க்கும் கூடுதலான எலும்புகளுடன் பிறக்கிறார்கள்; சில நீளவாக்கில் இணைந்து தூக்கவெலும்புக்கூடு பிணைந்த அச்செலும்புக்கூடு உருவாகின்றன. ஓர் முதிய மனித உடலில் 206 எலும்புகள் உள்ளன. முள்ளந்தண்டு நிரல் (26), விலாக்கூடு (12 சோடி விலா எலும்புகளும் மார்பெலும்பும்), மற்றும் மண்டையோடு (22 எலும்புகளும் 7 இணைந்த எலும்புகளும்) ஆகியவை கொண்டு அச்சு எலும்புக்கூடு (80 எலும்புகள்) அமைகிறது. மனிதர்கள் நேராக இருக்கச்செலும்புக்கூடு வழி செய்கிறது. முள்ளந்தண்டில் உள்ள எலும்புகள் பல மூட்டிணைப்புத் தசைநார்களால் வலுப்படுத்தப்பட்டுள்ளன. முதுகெலும்பு நிமிர்த்தித் தசைகளும் சமநிலை பேசவும் நேராக நிற்கவும் துணை புரிகின்றன. தூக்கவெலும்புக்கூடு "மார்பு வளையம்" (4 எலும்புகள்), "புயம்/முன்புயம்" (6 எலும்புகள்), "கைகள்" (54 எலும்புகள்),"இடுப்பெலும்பு" (2 எலும்புகள்), "தொடையும் காலும்" (8 எலும்புகள்), "கால்கள் மற்றும் கணுக்கால்கள்" (52 எலும்புகள்) இவற்றைக் கொண்ட 126 என்புத்தொகுதியாகும். அச்செலும்புக் கூட்டைப் போல தூக்கவெலும்புக் கூட்டு எலும்புகள் ஒன்றாக பிணைக்கப்படவில்லை; இது அச்செலும்புக்கூடு நகர்வதற்கும் (கீழ் அங்கங்கள்) சூழ்ந்துள்ள பொருட்களை கையாளவும் (மேல் அங்கங்கள்) துணை செய்கின்றது. இந்த என்புத் தொகுதி மனிதரின் நடமாட்டத்திற்கு வழி செய்வதுடன் பொருட்களை கையாளவும் செரித்தல், கழுவகற்றல் மற்றும் இனப்பெருக்கத்திற்கான உறுப்புக்களைக் காக்கவும் துணை நிற்கிறது. எலும்புக்கூடு கீழ்காணும் ஆறு முதன்மை செயற்பாடுகளை ஆற்றுகின்றது. எலும்புக்கூடு உடலுக்கு ஆதரவளிக்கும் சட்டகத்தை அளிக்கிறது; உடலுக்கு ஓர் வடிவத்தையும் தருகிறது. இடுப்புக்கூடு, தொடர்புடைய தசைநார்கள் மற்றும் தசைகளுடன், இடுப்பு வளைய கட்டமைப்பிற்கு உதவுகிறது. விலாக்கூடு, விலாக்கசியிழையம், விலா எலும்புத்தசைகள் இன்றி நுரையீரல் அமையவே இயலாது. எலும்புகளுக்கிடையேயான மூட்டுகள் நகர்வையும் அசைவையும் இயலுமாறு செய்கின்றன. சில மிகக் கூடுதலான இயக்கத்திற்கும் சில குறைந்தளவிலான இயக்கத்திற்கும் வழி செய்கின்றன. காட்டாக, கழுத்திலுள்ள சுழற்சித்தான மூட்டை விட தோளிலுள்ள பந்துக்குழி மூட்டு கூடுதலான இயக்கத்தை ஏதுவாக்குகிறது. எலும்புக்கூட்டின் பல்வேறு இடங்களில் பிணைக்கப்பட்டுள்ள எலும்புத்தசைகள் இந்த இயக்கத்திற்கு காரணமாகின்றன. எலும்புகள், மூட்டுகள், தசைநார்கள் என்ற மூன்றும் நரம்பியல் தொகுதியால் ஒருங்கிணைக்கப்பட்டு முதன்மை இயக்கச்செயலிகளாக விளங்குகின்றன. எலும்புக்கூடு உடலின் பல இன்றியமையா உள்ளுறுப்புக்களுக்கு பாதுகாப்பாக உள்ளது: எலும்புக்கூட்டில்தான் குருதியாக்கம் நடைபெறுகிறது. எலும்பு மச்சைகளில் குருதிக் கலங்கள் உருவாகின்றன. எலும்புக்கூட்டுச் சட்டகம் கால்சியத்தை சேமிக்கக்கூடியதாகையால் சுண்ணக வளர்சிதை மாற்றத்தில் பங்கேற்கிறது. எலும்பு மச்சையில் இரும்பு சேமிக்கக்கூடியதாகையால் இரும்பு வளர்சிதை மாற்றத்தில் பங்கேற்கிறது. இருப்பினும், எலும்புகள் முழுமையாக கால்சியத்தினால் ஆனவை அன்று; கொன்ட்ராய்ட்டின் சல்பேட்டும் ஹைட்ரோக்சிலபாடைட்டும் சேர்ந்த கலவையாகும். எலும்புக் கலங்கள் "ஓஸ்டோகால்சின்" என்ற இயக்கநீரை சுரக்கின்றன; இது இரத்தச் சர்க்கரை (குளுக்கோசு) மற்றும் கொழுப்பு படிதல் கட்டுப்பாட்டில் பங்கேற்கிறது. ஓஸ்டோகால்சின் இன்சுலின் சுரத்தலையும் இன்சுலின் உணர்திறனையும் கூட்டுவதோடு இன்சுலின் தயாரிக்கின்ற பீட்டா கலங்களின் எண்ணிக்கையையும் மேலோங்கச் செய்கிறது; கொழுப்பு சேமித்தலைக் குறைக்கிறது. ஆணின் எலும்புக்கூட்டிற்கும் பெண்ணின் எலும்புக்கூட்டிற்கும் பல வேற்றுமைகள் உள்ளன. மிகவும் முக்கிய வேறுபாடு இடுப்புக்குழியில் உள்ளது. குழந்தை பிறப்புச் செயல்பாடுகளின் சிறப்புத் தன்மைகளுக்காக பெண்ணின் இடுப்புக்குழி தட்டையாகவும் கூடுதல் வளைவாகவும் குழந்தையின் தலை வெளிவருமாறு பெரிதாகவும் உள்ளது. ஆணின் இடுப்புக்குழி 90 பாகைகள் அல்லது அதற்கு குறைவாக இருக்கையில் பெண்ணினுடையது 100 பாகைக்களுக்கும் கூடுதலாக உள்ளது. பெண்ணின் காக்சியம் (வால் எலும்பு கீழ்ப்புறம் நோக்கி இருக்க ஆணின் காக்சியம் வெளிப்புறம் நோக்கி உள்ளது. இதுவும் குழந்தை பிறப்பின்போது கூடுதல் இடமளிக்குமாறு ஏற்பட்டுள்ளது. ஆண்களின் அவயங்களும் விரல்களும் நீளமானதாகவும் தடித்துமிருக்க பெண்களின் விலாக்கூடு குறுகியும், பற்கள் சிறியதாகவும், தாடையெலும்புகள் குறுகிய கோணத்திலும் உள்ளன. பெண்களின் முகக்கூறுகளும் ஆண்களுடையதைவிட வேறுபாட்டுடன் உள்ளன. பெண்களின் தோள்கள் மேலும் வளைவாக உள்ளன. பல எலும்புக்கூட்டுக் கோளாறுகள் உள்ளன. இவற்றில் முக்கியமான ஒன்றாக எலும்புப்புரை கோளாறு உள்ளது. மற்றொரு பரவலான கோளாறாக ஸ்கோலியோசிஸ் என்ற முதுகுத்தண்டு வளைவுக் கோளாறு உள்ளது. ஓர் எக்சு கதிர் ஒளிப்படத்தில் காணும்போது ஆங்கில "C" அல்லது "S" எழுத்துரு போன்று முள்ளந்தண்டு நிரல் வளைந்திருப்பதைக் காணலாம். இது பொதுவாக வளரிளமைப் பருவத்தில், பெரும்பாலும் பெண்களிடத்தில், காண்கிறது. அச்செலும்புக்கூடு அச்செலும்புக் கூடு ("Axial skeleton") மனித உடலின் மத்திய அச்சில் உள்ள 80 எலும்புகளாகும். இதனை ஆறு பாகங்களாகப் பிரிக்கலாம்; மனித மண்டையோடு, மத்திய செவியில் உள்ள நுண்ணத்திகள், தொண்டை எலும்பு, விலாக்கூடு, மார்பெலும்பு மற்றும் முள்ளந்தண்டு நிரல். அச்செலும்புக்கூடும் தூக்கவெலும்புக்கூடும் இணைந்து முழுமையான எலும்புக்கூடாக அமைகின்றன. தூக்கவெலும்புக்கூடு தூக்கவெலும்புக் கூடு ("appendicular skeleton") மனித உடலில் 126 எலும்புகளைக் கொண்டதாகும். இதனை ஆங்கிலத்தில் பிற்சேர்க்கை எனப்பொருள்படும் அப்பென்டிகுலர் எலும்புத் தொகுதியாக குறிக்கின்றனர். ஓர் பெரிய தொகுதியுடன் இணையும் அங்கமாக தூக்கவெலும்புக்கூடு உள்ளது. இது அச்செலும்புக்கூடு நகர்வதற்கும் (கீழ் அங்கங்கள்) சூழ்ந்துள்ள பொருட்களை கையாளவும் (மேல் அங்கங்கள்) துணை செய்கின்றது. தூக்கவெலும்புத் தொகுதி குருத்தெலும்புகளிலிருந்து குறுத்தெலும்பக அத்தியாக்கம் என்ற செயல்முறையில் உருவாகின்றன. தூக்கவெலும்புத் தொகுதியை ஆறு முதன்மை மண்டலங்களாகப் பிரிக்கலாம்: 1) மார்பு வளையம் (4 எலும்புகள்) - இடது, வலது காறை எலும்புகள் (2) மற்றும் தோள்பட்டை எலும்பு (2). 2) புயம்/முன்புயம் (6 எலும்புகள்) - இடது, வலது புயவெலும்பு(2) (புயம்), முழங்கை எலும்பு (2) மற்றும் முன்னங்கை எலும்பு (2) (முன்புயம்). 3) கைகள் (54 எலும்புகள்) - இடது, வலது மணிக்கட்டு எலும்புகள் (16) (மணிக்கட்டு), அனுமணிக்கட்டு எலும்புகள் (10), கீழ் விரல் எலும்புகள் (10), நடு விரல் எலும்புகள் (8), வெளி விரல் எலும்புகள் (10). 4) இடுப்பெலும்பு (2 எலும்புகள்) - இடது, வலது இடுப்பெலும்பு (2) (புடைதாங்கி). 5) தொடையும் காலும் (8 எலும்புகள்) - தொடையெலும்பு (2) (தொடை), கீழ்க்கால் உள்ளெலும்பு (2), முழங்காற்சில்லு (2) (முழங்கால்), மற்றும் கீழ்க்கால் வெளியெலும்பு (2) (கால்). 6) காலடி மற்றும் கணுக்கால் (52 எலும்புகள்) - கணுக்கால் எலும்பு (14) (கணுக்கால்), அனுகணுக்கால் எலும்புகள் (10), கீழ் விரல் எலும்புகள் (10), நடு விரல் எலும்புகள் (8), வெளி விரல் எலும்புகள் (10). உடற்கூற்றியல் வேறுபாடுகளால் எலும்புக்கூட்டில் பல கூடுதல் எலும்புகள் இருக்கக்கூடிய வாய்ப்புள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தூக்கவெலும்புக் கூட்டின் 126 எலும்புகளும் அச்செலும்புக் கூட்டின் 80 எலும்புகளும் இணைந்து மனித எலும்புக்கூட்டில் 206 எலும்புகள் உள்ளன. அச்செலும்புக் கூட்டைப் போல தூக்கவெலும்புக் கூட்டு எலும்புகள் ஒன்றாக பிணைக்கப்படவில்லை; இதனால் இந்த எலும்புகளை நகர்வுகளுக்கு கையாள்வது எளிதாக உள்ளது. கூனாண்டியூர் கூனாண்டியூர் என்பது ஓர் ஊராட்சி. இது சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மேலும், மேச்சேரியில் இருந்து சுமார் 11 கீ.மீ தொலைவில் அமைதுள்ளது. இந்த கிராமம் இரண்டு பக்கம் (மேட்டூர் அணை நீர் தேக்க) நீராலும், இரண்டு பக்கம் மலையாலும் சூழப்பட்டுள்ளது.மே லும் இயற்கை அழகு நிரம்பப்பட்டுள்ளது. காவிரி நீர் ஒகேனக்கல் நீர் வீழ்ச்சியில் இருந்து மேட்டூர் அணையில் கலக்கும் இடம் கூனாண்டியூர். இது சேலம் மாவட்டத்தின் கடைக்கோடி ஊராட்சி. இங்கு மீன் பிடித்தல் முக்கிய தொழில் ஆகும். கூனாண்டியூர் தொழில் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் மேட்டூர் அணை மீன். =இணைப்புகள்= கூனாண்டியூர் வில்மா ருடோல்ஃப் வில்மா க்லோடியன் ருடோல்ஃப் ("Wilma Glodean Rudolph", 23 ஜுன் 1940 - 12 நவம்பர் 1994) ஒரு அமெரிக்க தடகள வீராங்கனை ஆவார். 1960ஆம் ஆண்டின் உலகத்தின் வேகமான பெண்ணாக கருதப்பட்டார். இவர் 1956, 1960 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த ஒலிம்பிக் போட்டிகளில் போட்டியிட்டார். 1960 ரோம் நகரில் நிகழ்ந்த கோடைக்கால ஒலிம்பிக்கில் ஓட்டப் பந்தயத்தில் 3 தங்கப் பதக்கத்தை வென்றார். இவரை "கருப்பு முத்து" என்றழைத்தனர். வில்மா ருடோல்ஃப் ஒரு குறைமாதக் குழந்தையாக 22 பிள்ளைகளில் 20ஆவதாகப் பிறந்தார். இவர் தந்தை எட் ஒரு ரயில்வே போர்ட்டர். தாய் பிலான்ஷ். தம் 4ஆம் வயதில் இளம்பிள்ளை வாத நோயால் பாதிக்கப்பட்டார். தன் 9ஆம் வயது வரை தனது இடது காலில் பிரேஸ் அணிந்திருந்தார். பின்பு ஆர்த்தோபீடியாட்ரிக் காலணியை இரு ஆன்டுகள் அணிந்திருந்தார். 12ஆம் வயதில் ஸ்கார்லெட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இவரது அக்கா கூடைப்பந்து அணியில் வீராங்கனை ஆவார். வில்மாவும் விளையாட விரும்பினார். இவர் டென்னசி பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். எட் டெம்பிள் என்பவர் இவரது பயிற்சியாளராக இருந்தார். 1956ஆம் ஆண்டில் மெல்பேர்ன் ஒலிம்பிக் விளையாட்டில் 4*100 மீட்டர் ரிலே போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். 1960 கோடைக்கால ரோம் லிம்பிக்கில் இவர் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ரிலே என மூன்று தங்கப் பதக்கங்களை வென்றார். வில்மா 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 11 விநாடியில் ஓடினார். 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 23.2 விநாடியில் வென்று ஒரு புதிய சாதனையை உருவாக்கினார். இந்த வெற்றிக்குப் பின் இவரை "வரலாற்றில் வேகமான பெண்" என்று உலகமே போற்றினர். கடைசியில் 11 செப்டம்பர் 1960 இல் மார்தா ஹட்சன், லூசின்டா வில்லியம்ஸ் மற்றும் பார்பரா ஜோன்ஸ் குழுவினருடன் இணைந்து 400 மீட்டர் ரெலேயில் 44.5 நொடியில் ஓடி உலக சாதனையை படைத்தார். அவர் சிறுவயதில் பயின்ற பள்ளியிலே ஆசிரியராக பணிபுரிந்தார். 1960ஆம் ஆண்டில் "யுனைடெட் பிரெஸ் அத்லெட் ஆஃப் தி இயர்" என்ற விருதும், ஜேம்ஸ் ஈ.சுல்லிவன் விருதும் பெற்றார். அவர் 1973 இல் ஆஃப் ஃபேம் நேஷனல் பிளாக் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு ஹால் வாக்களித்தனர். அவர், 1993 ஆம் ஆண்டு தேசிய விளையாட்டு விருது, மற்றும் 1994 இல் ஆஃப் ஃபேம் தேசிய மகளிர் ஹால் சேர்த்துக்கொள்ளப்பட்டார். 1994 இல், சிவப்பு நதி (Lynnwood-Tarpley) கிராஃப்ட் தெரு சந்திப்பில் அருகே பாலம் என்று CLARKSVILLE உள்ள மாநிலங்களுக்கு இடையிலான 24 வெளியேறவும் 4 இடையே CLARKSVILLE, டென்னசி அமெரிக்க பாதை 79 பகுதி வில்மா ருடால்ப் புகழ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1963ஆம் ஆண்டில் டென்னசி மாநிலப் பல்கலைக்கழகத்தில் புலமைப்பரிசில் பெற்று இளநிலை பட்டத்தை முடித்தார். காப் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார். 1963ஆம் ஆண்டில் ராபர்ட் எல்ட்ரிஜ் என்பவரை மணந்தார். இவரது பிள்ளைகள்: யோலான்டா (1958), ஜுவான்னா (1964), ராபர்ட் (1965), சர்ரி (1971). பின்பு இருவரும் விவாகரத்து செய்துக்கொண்டனர். ஜூலை 1994 இல் வில்மாவின் தாயார் இறந்த பிறகு இவர் மூளைக்கட்டியினால் பாதிக்கப்பட்டார். 12 நவம்பர் 1994யில் 54ஆம் வயதில் தொண்டைப் புற்றுநோயால் காலமானார்.1997 ஆம் ஆண்டு, டென்னஸி ஆளுநர் டான் சன்ட்குவிஸ்ட் ஜூன் 23 "வில்மா ருடால்ப் தினம்" என்று அழைக்கப்படும் என்று அறிவித்தார். நீர்மநிலை உலோகம் நீர்மநிலை தனிமங்கள் ("liquid elements") அறை வெப்பநிலையிலும் அதனை அடுத்த வெப்பநிலையிலும் நீர்மநிலையில் உள்ள உலோகங்கள் ஆகும். பொதுவாக பெரும்பாலான உலோகங்கள் அறைவெப்பநிலையில் திண்ம நிலையிலேயே காணப்படுகின்றன. விதிவிலக்காக சில தனிமங்கள் அறைவெப்ப நிலையில் நீர்மநிலையில் உள்ளன. அவையாவன, புரோமினும் பாதரசமும் அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ளன. மற்றவை அறை வெப்பநிலையினை அடுத்த வெப்பநிலையில் நீர்மமாக உள்ளன. கம்பன் நேற்று – இன்று - நாளை (நூல்) கம்பன் நேற்று – இன்று – நாளை என்னும் நூல் சுகி. சிவம் என்பவர் சென்னை கம்பன் கழகத்தில் அமரர் ஏவி. எம். அறக்கட்டளை நினைவுச் சொற்பொழிவுத் தொடரின் பதினெட்டாவது சொற்பொழிவாக 2001 சூலை 28 ஆம் நாள் நிகழ்த்திய சொற்பொழிவின் எழுத்து வடிவம் ஆகும். இச்சொற்பொழிவு சென்னை கம்பன் கழகத்தின் தலைவராகவும் நீதியரசராகவும் பணியாற்றிய டாக்டர் மு. மு. இஸ்மாயில் தலைமையில் சென்னை ஏவி. எம். இராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நிகழ்த்தப்பட்டது. கம்பன் நேற்று – இன்று – நாளை என்னும் பொதுத்தலைப்பின் கீழ் பதினொறு துணைத் தலைப்புகளில் இச்சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. அவ்வாறு இந்நூலிலும் பதினொறு கட்டுரைகள் இடம்பெற்று உள்ளன. ஒவ்வொரு துணைத் தலைப்பிலும் அத்தலைப்பின் நுவல்பொருள் கம்பன் கழகங்களில் கடந்த காலத்தில் எந்நிலையில் இருந்தது; தற்காலத்தில் எந்நிலையில் இருக்கிறது; எதிர்காலத்தில் எந்நிலையில் இருக்க வேண்டும் எனச் சுட்டுபவைகளாக இப்பொழிவுகள் அமைந்திருக்கின்றன. அத்துணைத் தலைப்புகள் பின்வருமாறு: கல்முனைக்குடி நாகூர் ஆண்டகை தர்ஹா நாகூர் ஆண்டகை தர்ஹா என்பது இலங்கையின் கிழக்கே கல்முனைக்குடி கிராமத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஆகும். இது வங்காள விரிகுடாக் கடலோரத்தில் அமைந்துள்ளதினால் இது கடற்கரைப் பள்ளிவாசல் என்றும் அழைக்கப்படுகின்றது. ஏழு அடுக்குகளைக் கொண்ட பிரமாண்டமான மினாரும், மூன்று அடுக்குகளைக் கொண்ட சிறிய மினாரும் இப்பள்ளிவாசலில் அமைக்கப்பட்டுள்ளன. கரவாகு (கல்முனைக்குடி) மக்களுக்கு மட்டுமல்லாது, அதை அண்டியுள்ள அனைத்து கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கும் கல்முனைக்குடி நாகூர் ஆண்டகை தர்கா புனிதமானதொன்றாகும். இதன் அண்மையிலேயே கல்முனைக் குடாக்கடல் உள்ளது. குடாக்கடல் துறைமுகத்திற்கு ஆதிகாலம் தொட்டே கப்பல்கள் வந்திருக்கின்றன. கடல் வர்த்தகத்தைத் தொழிலாகக் கொண்டிருந்த அரேபிய மற்றும் அண்மைய நாடுகளிலிருந்த முஸ்லிம்கள் துறைமுகங்களில் குடியேறி அங்கு திருமணம் முடித்து வாழ்ந்திருந்தனர். அதே போல் கல்முனையிலும் முஸ்லிம்களின் குடியேற்றம் ஏற்பட்டு, அவர்கள் " முனைக்குடியினர் " என்றுஅழைக்கப்படலாயினர். துறைமுகங்களில் குடியேறி வாழ்ந்திருந்த முஸ்லிம்களின் வர்த்தகம் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆகியோரினால் தடுக்கப்பட்டபோது அவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டனர். நாகூர் ஆண்டகை அவர்கள் கல்முனைக்குடிக்கு எந்தக் காலகட்டத்தில் வந்து சென்றார்கள் என்பது தெளிவாக இல்லாத போதும் கி.பி. 1637ம் ஆண்டு ஒல்லாந்தர் கல்முனைக் குடாக் கடற்கரையை அடைந்தபோது, அங்கு வெண்ணிற ஆடை அணிந்த முஸ்லிம்கள் இருந்ததாக ஒல்லாந்தரின் குறிப்பொன்று கூறுகின்றது. இது கி.பி. 1637ம் ஆண்டுக்கு முன்பிருந்தே கல்முனையில் முஸ்லிம்கள் வாழ்ந்ததைக் காட்டுகிறது. நாகூர் ஆண்டகை அவர்கள் கல்முனைக்குடிக்கு வந்து சென்றதன் அரை நூற்றாண்டுக்குப் பின்னர் டச்சுத்தளபதி வில்லியம் ஜாக்கபஸ் கோஸ்டர் நான்கு கப்பல்களுடன் கல்முனையில் வந்து இறங்கினான். அப்போது கண்டி அரசனாக இருந்த இரண்டாவது இராசசிங்கன் 28.03.1638 ஆம் திகதி 'கொணறுவ' என்ற இடத்தில் போர்த்துக்கேயரை தோற்கடித்து அழித்தான் என்னும் செய்தியை அறிந்து அவன் கல்முனையிலிருந்து மட்டக்களப்புக்குச் சென்றான். இந்தக் குறிப்பு A History of Ceylon என்னும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கடற்கரைப் பள்ளிவாசல் ஏறத்தாள 400 வருடங்களுக்கு முன்னரே நாகூர் ஆண்டகை அவர்களால் அமைக்கப்பட்டிருந்தது. அப்பள்ளிவாசல் கடற்கோளினால் காவு கொள்ளப்பட்டதன் பின்பு கி.பி. 1806 ஆம் ஆண்டு தற்போதுள்ள இடத்தில் பெரியார் முகம்மதுத் தம்பிலெவ்வை அவர்களால் தற்போதிருக்கும் தர்ஹா அமைக்கப்பட்டது. இந்தத் தர்ஹா பல முறை புனருத்தானம் செய்யப்பட்டு தற்போதைய தோற்றத்தைப் பெற்றுள்ளது. கல்முனைக்குடி நாகூர் ஆண்டகை தர்காவில் ஆண்டு தோறும் ஜமாதுல் ஆகிர் மாதம் பிறை 01ல் கொடியேற்றப்பட்டு 12 நாட்கள் நாகூர் ஆண்டகை அவர்களின் புகழ்பாடி விழா கொண்டாடப்படுகின்றது. =மேற்கோள்கள்= ஹம்ச கீதை ஹம்ஸ கீதை:- ஹிரண்யகர்பரான நான்முக பிரம்மாவின் மனதில் தோன்றிய மகன்களான சனகர், சனந்தனர், சனாதனர் மற்றும் சனத்குமாரர் ஆகிய நால்வர்களுக்கும், யோகத்தின் சூட்சுமம் மற்றும் அதன் எல்லைகள் குறித்து, ஸ்ரீகிருஷ்ணர் ஹம்ஸப் (அன்னப் பறவை) பட்சி வடிவத்தில் உபதேசம் செய்தார். இதையே ஹம்ச கீதை என்பர். படிக்க ஜெயிக்க! (நூல்) படிக்க ஜெயிக்க! என்னும் நூல் சுகி. சிவம் என்பவரால் மாணவர்கள் தேர்விலும் வாழ்விலும் வெற்றி பெறும் வழிகள் என்னும் அறிமுகத்துடன் எழுதப்பட்ட நூலாகும். ஆவிச்சி மெய்யப்பன் ஆவிச்சி மெய்யப்பச் செட்டியார், (ஏவிஎம், ஏ. வி. மெய்யப்பன்) (28 சூலை 1907–12 ஆகத்து 1979), ஓர் இந்தியத் திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனரும், நன்கறியப்பட்ட சமூகத் தொண்டாற்றியவரும் ஆவார். இவர் வடபழனியில் உள்ள ஏவிஎம் புரொடக்சன்சு என்ற நிறுவனத்தை நிறுவியவர். தமிழ்த் திரைப்படத்துறையின் முன்னோடியாகக் கருதப்படுகிறார். தென்னிந்தியத் திரைத்துறையின் மும்மூர்த்திகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். (மற்ற இருவர் எஸ். எஸ். வாசனும் எல். வி. பிரசாத்தும்). தமிழ்த் திரையுலகில் ஐம்பது ஆண்டுகளாக மூன்று தலைமுறையினரால் வெற்றிகரமாக இயங்கிய ஒரே நிறுவனம் ஏவிஎம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இறக்கும் முன்னர் 167 திரைப்படங்களைத் தயாரித்திருந்தார். இவரது தயாரிப்பில் வெளியான திரைப்படங்களில் சில வாழ்க்கை, நாம் இருவர், சர்வர் சுந்தரம், மேஜர் சந்திரகாந்த், சிறீ வள்ளி, களத்தூர் கண்ணம்மா ஆகியன. மெய்யப்பர் காரைக்குடியில் வாழும் நகரத்துச் செட்டியார் குடும்பத்தில், ஆவிச்சி செட்டியார்-இலக்குமி ஆச்சி இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவர் பிறந்த நாள் யூலை, 28, 1907. ஆவிச்சி செட்டியார் திரைத்துறை தொடர்பான பொருட்களை (கிராமபோன் இசைத்தட்டுக்கள்) விற்பனை செய்தார். இவரது குடும்பத்தினர் வாணிபம் செய்து நற்பெயர் பெற்றவர்கள் ஆவர். தன் இளம்வயதிலேயே ஒலிப்பதிவுகளை விற்பதைவிட தயாரிப்பதில் அதிக லாபம் கிடைக்கும் என்றறிந்தார் மெய்யப்பர். தன் நண்பருடன் சென்னை வந்து சரசுவதி சுடோர்சு என்ற நிறுவனத்தைத் 1932 ஆம் ஆண்டு, செப்டம்பர் 9 ஆம் தேதியன்று தொடங்கி ஒலிப்பதிவுகளை விற்பதோடல்லாமல் தயாரிக்கவும் செய்தார்.தொடக்கக் காலத்தில் இவர்கள் விற்ற பதிவுகள் புராணக்கதைகளைக் கொண்டிருந்தன. டாக்கிஸ் எனப்படும் பேசும் படங்களின் வரவைத் தொடர்ந்து, சரசுவதி சவுண்டு புரொடக்சன்சு என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். 1935 ஆம் ஆண்டு, ஏவிஎம் தயாரித்து வெளியிட்ட முதல் திரைப்படமான "அல்லி அருச்சுனா" என்ற திரைப்படம் வெற்றியடையவில்லை. பிரகதி பிக்சர்சு என்ற நிறுவனத்தை செயந்திலால் என்ற திரையரங்க முதலாளியுடன் இணைந்து தொடங்கினார். 1938 ஆம் ஆண்டில், கிருட்டிணனின் இளம்பருவத்தைக் காட்டும் மராத்தியத் திரைப்படத்தைத் தமிழில் வெளியிடும் உரிமையைப் பெற்றார். "நந்தக் குமார்" என்ற இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம் என்ற இளைஞனை இளவயது கண்ணனாக அறிமுகப்படுத்தினார். இவர் பின்னாளில் பல பாடல்கள் பாடியுள்ளார். லலிதா வெங்கடராமன் என்னும் பாடகி தேவகி கதாபாத்திரத்திற்குப் பாடினார். பின்னணிப் பாடல்கள் இடம்பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம் இதுவே. 1940 ஆம் ஆண்டில் சொந்தமாக பிரகதி ஸ்டியோசை ஆரம்பித்தார். அதே ஆண்டில், "பூகைலாசு" என்ற தெலுங்குத் திரைப்படத்தைத் தயாரித்து வெளியிட்டனர். திரைப்படம் தெலுங்கில் வெளியானாலும் நடித்தவர்கள் கன்னட மொழி நடிகர்கள். ஏவிஎம் வெளியிட்ட "சபாபதி", "போலி பாஞ்சாலி", "என் மனைவி" ஆகிய நகைச்சுவைத் திரைப்படங்கள் பெருவெற்றியடைந்தன. பின்னர் 1943 ஆம் ஆண்டில், வாய்மை தவறாத அரசனான அரிச்சந்திரன் பற்றிய கன்னட திரைப்படத்தையும் அடுத்த ஆண்டில் அதன் தமிழ்ப் பதிப்பையும் வெளியிட்டார். இந்தத் திரைப்படம் தான் இந்தியாவிலேயே பிற மொழியிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படம் ஆகும். பெரியநாயகி என்ற பாடகி சிறீவள்ளி என்ற திரைப்படத்திற்குப் பாடினார். இது பின்னணிப் பாடல் அமைந்த இரண்டாவது திரைப்படம் ஆகும். நவம்பர் 14, 1945 ஆம் நாளில், தன் திரைப்படங்களின் வெற்றியைத் தொடந்து, மெய்யப்பர் தன் புதிய நிறுவனத்தை (ஏவிஎம் புரொடக்சன்சு) சென்னையின் சாந்தோமில் நிறுவினார். கோடம்பாக்கத்தில் இதை நிறுவ விரும்பினார். ஆனால், போதிய மின்வசதி இல்லாததால் சாந்தோமில் நிறுவ வேண்டியதாயிற்று. வேறுவழியின்றி தன் கலைரங்கத்தை காரைக்குடியில் அமைத்தார். இந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த முதல் தமிழ்த் திரைப்படம் வேதாள உலகம் ஆகும். 1947 ஆம் ஆண்டில் சகசிரநாமம் என்பவரின் நாடகத்தைத் தழுவி, "நாம் இருவர்" என்ற அதே பெயரில் திரைப்படத்தைத் தயாரித்தார். இந்தியா விடுதலை அடைந்ததும், இப்படம் பெருவெற்றி அடைந்தது. இதைத் தொடர்ந்து வெளியான வேதாள உலகம், வாழ்க்கை ஆகிய திரைப்படங்களும் பெருவெற்றியடைந்தன. பரவலாக அறியபப்டும் வைஜெயந்திமாலாவின் முதல் திரைப்படம் வாழ்க்கை. பின்னாளில் வைஜெயந்திமாலா புகழ்பெற்ற முன்னணி நடிகையாக விளங்கினார். 25 வாரங்கள் தொடர்ந்து வெளியான இத்திரைப்படம் "ஜீவிதம்" என்ற பெயரில் தெலுங்கிலும், "பகர்" என்ற பெயரில் இந்தியிலும் வெளியானது. வாழ்க்கை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழில் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், வங்காளம், சிங்களத்திலும் திரைப்படங்களைத் தயாரித்தனர். இந்திய விடுதலைக்குப் பின், ஏவிஎம் நிறுவனம் கோடம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டது. 1950கள் ஏவிஎம் நிறுவனத்தின் வெற்றியாண்டுகளாகத் திகழ்ந்தன. 1952 ஆம் ஆண்டில், ஏவிஎம் நிறுவனம் பராசக்தி (திரைப்படம்)பராசக்தி திரைப்படத்தை வெளியிட்டது. இத்திரைப்படம் சென்னை முழுவதும் வெளியாகி வெற்றித் திரைப்படமாகியது. மு. கருணாநிதியால் எழுதப்பட்ட வசனங்கள் சமூகப் புரட்சியை ஏற்படுத்தின. புதியவரான சிவாஜி கணேசன் இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து சில ஆண்டுகளில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக விளங்கினார். ஏவிஎம் வெளியிட்ட அந்த நாள் என்ற திரைப்படத்திலும் நடித்தார். இத்திரைப்படத்தில் பாடல்கள் இடம்பெறவில்லை என்பதும் இவ்வகையில் இப்படம் இந்தியத் திரைப்படங்களிலேயே முதலாவது என்பதும் குறிப்பிடத்தக்கன. இதில் இரண்டாம் உலகப் போரின்போது ஊடுருவிய யப்பானியருடன் சேர நினைக்கும் பொறியாளர் தன் மனைவியால் கொல்லப்படுகிறார்.இத்திரைப்படத்தின் கதை சொல்லப்பட்டவிதம், அகிரா குரோசவாவின் "ரசோமோன்" என்ற கதையினைப் போன்றே அமைந்திருந்தது. 1953 ஆம் ஆண்டில், "சடகபாலா" என்ற கன்னடத் திரைப்படத்தையும், அதன் தமிழ் மற்றும் தெலுங்குப் பதிப்புகளான "சடகபாலம்" என்ற திரைப்படங்களையும் தயாரித்து வெளியிட்டது. 1958 ஆம் ஆண்டில், தெலுங்கில் "பூகைலாசு" என்ற திரைப்படம் வெளியானது. இது தெலுங்குத் திரையுலகின் பொற்காலம் என்று வர்ணிக்கப்பட்டது. இதை "பக்த ராவணா" எனத் தமிழிலும், "பக்தி மகிமா" என இந்தியிலும் வெளியிட்டனர். 1961 ஆம் ஆண்டில், பாவ விமோசனம் என்ற திரைப்படத்தையும் அதன் தெலுங்குப் பதிப்பான பாப பரிகாரம் என்ற திரைப்படத்தையும் வெளியிட்டனர். இத்திரைப்படத்தில் சிவாசி கணேசன், செமினி கணேசன், தேவிகா ஆகியோர் நடித்துள்ளனர். 1960 ஆம் ஆண்டில் வெளியான களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் கமலஃகாசன் அனாதைச் சிறுவனாக நடித்தார். அதைத் தொடர்ந்து சர்வர் சுந்தரம் (1964) திரைப்படத்தில் நாகேசும், தொடர்ந்து வெளியான மேசர் சுந்தரராசன் திரைப்படமும் வெற்றியடைந்தன. மேசர் சந்திரகாந்து திரைப்படத்தில் நடித்த சுந்தரராசன் தன் பெயரை மேசர் சுந்தரராசன் என் மாற்றிக் கொண்டார். ஏவியெம் நிறுவனம் வெளியிட்ட பவித்ர பிரேமா, பெஞ்சின பிரேமா, நாடி ஆட சன்மே, சிட்டி செல்லுலு, லேத மனசுல, மூக நோமு ஆகிய தெலுங்குத் திரைப்படங்களும் வெற்றியடைந்தன. இருப்பினும் ஏவியெம்மின் பெரிய வெற்றியைத் தந்தது பக்த பிரகலாதா என்னும் திரைப்படமே. இது தமிழிலும் இந்தியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டும் வெளியிடப்பட்டது. வைணவர்களின் புராண நாயகரான நரசிம்மரை பற்றிய கதை இது. சித்திரப்பு நாராயண மூர்த்தி இயக்கத்தில், கிரணியகசிபுவக ரங்கா ராவும், பிரகலாதனாக குழந்தை ரோசாமணியும் நடித்தனர். இதை முன்பு கருப்பு வெள்ளைத் திரையில் எடுத்து வெளியிட்டார். திரைப்படம் தோல்வியடைந்தது. பிரகலாதனைப் பற்றி வெளியான திரைப்படங்களில் இதுவே அதிகம் அறியப்படுகிறது. சரோஜா தேவி, நாகேசு, எம். ஜி. ஆர் நடித்து வெளியான அன்பே வா என்ற திரைப்படமும் வெற்றி பெற்றது. திரைத்துறையில் இணைந்ததிலிருந்து பல வட இந்திய இயக்குனர்களுடனும் தயாரிப்பாளர்களுடனும் தொடர்பு கொண்டிருந்தார். 1938 இல் வெளியான நந்தகுமார் என்னும் திரைப்படம் மராத்தி மொழியிலிருந்து மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. 1951 ஆம் ஆண்டில் இந்தித் திரைத்துறையில் நுழைந்தார். பகார் என்னும் திரைப்படத்தை வெளியிட்டார். இதில் வைசெயந்திமாலா, கரன் திவான், பண்டரி பாய், பிரான், ஓம் பிரகாசு, டபசும் நடித்திருந்தனர். இது மூன்று ஆண்டுகளுக்கு முன் வெளியான வாழ்க்கை என்னும் திரைப்படத்தைத் தழுவி வெளியானது. இது வைசெயந்திமாலாவின் முதல் தமிழ்த் திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1954 ஆம் ஆண்டில், வைசெயந்தி மாலாவின் நடிப்பில் லட்கி என்னும் இந்தித் திரைப்படத்தைத் தயாரித்தார். இவ்விரண்டு திரைப்படங்களும் ஓரளவு வெற்றி பெற்றன. 1957 ஆம் ஆண்டில், அம் பஞ்சி ஏக் தால் கி என்னும் திரைப்படத்தை வெளியிட்டார். இது தேசிய ஒருமைப்பாட்டை வளர்ப்பதாக இருந்ததால், பிரதமர் தங்கப் பதக்கம் வழங்கிக் கவுரவித்தார். தமிழ்த் திரைப்படமான மிச்சியம்மா இந்தியில் பாய் பாய் என்று வெளியானது. இது மேரா நாம் அப்துல் ரகுமான் என்ற பாடலுக்காக நன்கு அறியப்படுகிறது. பாபி என்னும் திரைப்படத்தில் ஜக்தீப், பண்டரி பாய், பால்ராஜ் சஹ்னி, நந்தா ஆகியோரும் நடித்தனர். இந்தித் திரைப்படங்களான மிஸ் மேரி, பக்தி மகிமா, பக்த் பிரக்லாத் ஆகிய திரைப்படங்கள் தமிழ், தெலுங்குத் திரைப்படங்களை மொழிமாற்றி எடுக்கப்பட்டவை. 1961 ஆம் ஆண்டில் நிருபா ராய்க்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது. ஏவியெம் தயாரித்த பிற இந்தித் திரைப்படங்களுள் சில: மன் மௌஜி, மெயின் சூப் ரகுங்கி, பூஜா கே பூல், மெக்ர்பான். மெய்யப்பரின் கடைசி இந்தித் திரைப்படமான ஜைசே கோ தைசா, 1973 ஆம் ஆண்டு கிருசுணா- பஞ்சு ஆகியோரால் தயாரிக்கப்பட்டது மெய்யப்பர் திரைத்துறையில் ஈடுபட்டது மட்டுமின்றி, பல நற்பணிகளும் செய்துள்ளார். இதற்கென ஏவி.எம் அறக்கட்டளை என்னும் அமைப்பை உருவாக்கினார். அது சென்னையின் மயிலாப்பூரில் இயங்குகிறது. இது முதியோர் இல்லம் கட்டவும், சமுதாய நலக்கூடங்கள் கட்டவும் நிலம் வழங்கியது. அறக்கட்டளைக்குச் சொந்தமான திருமண மண்டபமும் உள்ளது. சிவாஜி திரைப்படத்தின் வெற்றியை அடுத்து, நான்கில் ஒரு பங்கை சமூக நிதிக்காக வழங்குவதாக அறிவித்தனர் அறக்கட்டளைக்குழுவினர். இக்குழும சென்னையின் பல பகுதிகளிலும் கல்வி நிறுவனங்களை நிர்வகித்து வருகின்றனர். விருகம்பாக்கத்தில் ஆவிச்சி மேல்நிலைப் பள்ளியை நிறுவி, ஏழைகளுக்கு கல்வி வழங்கினர். இக்குழுமத்தின் கல்வி நிறுவனங்கள் சென்னையின் தலைசிறந்த கல்வியகங்களாக விளங்குகின்றன. 1984 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோராண்டும் மெய்யப்பர் பிறந்த சூலை 28ஆம் நாள் சென்னை கம்பன் கழகத்தின் சார்பில் கம்பராமாயண ஆராய்ச்சிச் சொற்பொழிவு, அமரர் ஏவி. எம். அறக்கட்டளை நினைவுச் சொற்பொழிவு என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது. இது சென்னை ஏவி. எம். இராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. கம்பராமாயணத்தை ஆராய்ந்து வல்லுநர் ஒருவர் இந்நாளில் சொற்பொழிவாற்றுவார். அச்சொற்பொழிவு வானதி பதிப்பகத்தால் நூலாக்கப்பட்டு ஆகத்து மாத நடுவில் நடைபெறும் சென்னை கம்பன் கழக விழாவில் வெளியிடப்படும். அவ்வகையில் இதுவரை ஆற்றப்பட்ட சொற்பொழிவுகள்: மெய்யப்பரின் உடல்நலம் குன்றியதால் திரைப்படத் தயாரிப்புகள் குறைந்தன. 1970களில் குறைவான திரைப்படங்களே வெளியாயின. மேலும், இவரது குடும்பத்தினர் சமூகத் தொண்டில் ஈடுபட்டனர். இவ்வாண்டுகளில் நான்கு திரைப்படங்களை வெளியிட்டனர். பொம்ம பொருசா, தில் கா ராசா, அக்கா தமுடு, சைசே கோ தைசா ஆகிய திரைப்படங்களில் பொம்ம பொருசா, தில் கா ராசா ஆகியன ஓரளவு வெற்றியடைந்தன. கிருசுணன் - பஞ்சு ஆகியோரின் கூட்டுத் தயாரிப்பில் அக்கா தமுடு என்ற வெற்றித் திரைப்படமும் வெளியானது. ஏவியெம் இயக்கி செயலலிதா நடித்த ஒரே தெலுங்குத் திரைப்படம் இதுவே. 1973 இல் மெய்யப்பர் தன் கடைசித் திரைப்படத்தை சிதேந்திரா என்றவரின் முன்னணி நடிப்பில் வெளியான சைசே கோ தைசா என்ற இந்தித் திரைப்படத்தை வெளியிட்டார். பின்னர் தன் சமூகத் தொண்டையும் வியாபாரங்களையும் கவனித்துக் கொண்டார். மெய்யப்பர் தன் 72 ஆவது அகவையில் ஆகத்து 12, 1979 அன்று இறந்தார். இவரது கடைசி விருப்பத்திற்கேற்ப, இவரது மகனின் பெயரில் ஏவியெம் நிறுவனம் திரைப்படங்களை வெளியிட்டது. இவரது நாற்பது ஆண்டு காலத் திரை வரலாற்றில் 167 திரைப்படங்களைத் தயாரித்திருந்தார். இவற்றில் சிலவற்றை இயக்கியும் இருக்கிறார். தமிழ்த் திரையுலகின் முதல் பின்னணிப் பாடகர்களை அறிமுகப்படுத்திவர், இந்தியாவின் முதல் மொழிமாற்றத் திரைப்படத்தைத் தயாரித்தவர் போன்ற பெருமைகளைப் பெற்றவர். தமிழ்நாட்டின் ஐந்து முதல்வர்களுடனும் திரைத்துறையில் பணியாற்றிய பெருமையும் இவரையே சாரும். நாம் இருவர் திரைப்படத்திற்கு அண்ணாதுரை கதை எழுதினார். பராசக்தி திரைப்படத்திற்கு கருணாநிதி வசனம் எழுதினார். அன்பே வா திரைப்படத்தில் எம். ஜி. ஆரும், மேசர் சந்திரகாந்து திரைப்படத்தில் செயலலிதாவும் நடித்திருந்தனர். இவரது திரைத்துறைப் பணிக்காலத்தில் டி.ஆர். மகாலிங்கம், வைஜெயந்திமாலா, சிவாஜி கணேசன், கமல்காசன், மேஜர் சந்திரகாந்து ஆகியோரை அறிமுகப்படுத்தியவரும் இவரே. இவரது வெற்றிகளிலேயே பெரியது இவரது பெரிய தொழிற்கூடங்கள் தான். திரையரங்குகள், கல்வி நிறுவனங்கள், தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றை நிர்வகித்து சாதனை புரிந்துள்ளார். ஏவியெம் நிறுவனம் மூன்று தலைமுறைகளாக வெற்றித் திரைப்படங்களை வழங்குகிறது. மெய்யப்பரின் இறப்புக்குப் பிறகு, அவரது மகன்களான பாலசுப்பிரமணியம், சரவணன் ஆகியோர் இந்நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். புன்னாமி நாகு (சிரஞ்சீவி நடித்த முதல் திரைப்படம்), முரட்டுக் காளை (ரசினிகாந்திற்கு வெற்றியளித்த திரைப்படம்), சம்சாரம் அது மின்சாரம், மின்சாரக் கனவு, ஜெமினி, பேரழகன் ஆகியன குறிப்பிடத் தகுந்த திரைப்படங்கள். மெய்யப்பரின் நூற்றாண்டு நிறைவு ஆண்டில் சிவாஜி திரைப்படம் வெளியானது. ஏறத்தாழ 77 கோடியில் உருவான இத்திரைப்படமே தமிழ்த் திரைத்துறையின் அதிக செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படம். தற்காலத்தில் அதிக தொலைக்காட்சித் தொடர்களைத் தயாரிப்பதிலேயே முனைப்பு காட்டுகின்றனர். சரவணின் மகன் குகன், பாலசுப்பிரமணியத்தின் மகன் குருநாத் ஆகியோரும் திரைத்துறையில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகின்றனர். 1955 இல், அம் பஞ்சி ஏக் தல் கே திரைப்படத்தில் நடித்ததற்காக பிரதமர் மெய்யப்பருக்கு தங்கப் பதக்கம் வழங்கினார். 2006 ஆம் ஆண்டில், இந்திய அரசு இவர் நினைவாக அஞ்சல்தலை வெளியிட்டு பெருமைப்படுத்தியது. மெய்யப்பரின் 24 ஆம் ஆண்டு நிறைவு விழாவில், இவர் நினைவாக குறுவட்டுகள் வெளியிட்டது. அவரது இளமைக்காலத்தில் தொடங்கி, திரைத்துறை வரலாறு முழுமையும் குறுவட்டில் பதிவு செய்யப்பட்டிருந்தன. 2006, யூலை 30 இல், மெய்யப்பரின் நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக, தென்னிந்தியத் திரைத்துறை வளாகத்தில், அன்றைய முதல்வர் மு. கருணாநிதி, மெய்யப்பரின் சிலையைத் திறந்துவைத்தார். எரிமலை வெடிப்பு எரிமலை வெடிப்பு அல்லது எரிமலைச்சீற்றம் என்பது பேரழிவை ஏற்படுத்தும் ஒரு வகை இயற்கைச் செயல்பாடாகும்.இந்த நிகழ்வில் பூமிக்கு அடியிலிருந்து பாறைத்துகள்களும்,அதீத வெப்பமுடைய நீரும்,கூழ்ம நிலையிலுள்ள பாறைகளும் அதிக அழுத்தத்துடனும்,அதீத விசையுடனும் பூமிக்கு மேற்பரப்பில் தூக்கி வீசப்படுகிறது.இவற்றுடன் தீப்பிழம்பும்,கரியமில வாயுவும்,கரும்புகையும் சேர்ந்து பேரழிவை ஏற்படுத்துகிறது. பேரழிவை ஏற்படுத்தும் எரிமலைகள் சாதாரண மலைகளைப் போன்றே இருக்கும்.இந்த நிலையினை தூங்கு நிலை என்று அழைப்பர்.இந்த நிலையில் இம்மலைகள் பேரழிவை ஏற்படுத்தாது. பல நூறு ஆண்டுகள் ஏன் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் கூட இந்த மலைகள் தூங்கு நிலையில் இருக்க வல்லவை.பின்பு பூமியின் அடிப்பாக செயல்பாட்டினால் பூமிக்கு அடியில் அழுத்தம் அதிகமாகி பூமியின் மேற்பறப்பில் விரிசல் ஏற்பட்டு எரிமலை இயங்கு நிலை அடைகிறது. இயங்கு நிலையில் இம்மலைகள் கட்டுக்கடங்காத பேரழிவை ஏற்படுத்துகிறது. இயங்கு நிலையில் பூமிக்கு அடியிலிருந்து பாறைத்துகள்களும்,அதீத வெப்பமுடைய நீரும்,கூழ்ம நிலையிலுள்ள பாறைகளும் அதிக அழுத்தத்துடனும்,அதீத விசையுடனும் பூமிக்கு மேற்பரப்பில் தூக்கி வீசப்படுகிறது.இவற்றுடன் தீப்பிழம்பும்,கரியமில வாயுவும்,கரும்புகையும் சேர்ந்து பேரழிவை ஏற்படுத்துகிறது. சூத்திர நாடு சூத்திர நாடு (Sudra Kingdom), பண்டைய பரத கண்ட நாடுகளில் ஒன்றாகும். மகாபாரத காவியத்தில் இந்நாடு குறித்து விளக்கப்பட்டுள்ளது. சூத்திர நாட்டவர்களுடன், பிற இன மக்களான தார் பாலைவனத்தால் வற்றிய சரசுவதி ஆற்றின் கரையில் வாழ்ந்த ஆபீரர்களுடன் ஒப்பிட்டுக் கூறப்படுகிறது. பீஷ்ம பருவம், அத்தியாயம் ஒன்பதில், பரத கண்டத்தின் பஞ்சாப் பகுதியின் ஆபீரர்கள், தராதரர்கள், காஷ்மீரர்கள், பட்டிகள், ஐதரேயர்கள், கிராதர்கள், தோமரர்கள், கரமஞ்சர்கள், சுரர்கள் ஆகிய இன மக்களையும் மகாபாரதம் சூத்திரர்கள் எனக் குறிப்பிடுகிறது. (மகாபாரதம் 6. 9) இராசசூய வேள்விக்கு நிதி திரட்ட நகுலன், மேற்கு பரத கண்ட நாடுகளின் மீது படையெடுத்துச் செல்கையில், சிந்து ஆறு கடலில் கலக்கும் பகுதியில் இருந்த அசுரர்களையும், சரசுவதி ஆற்றின் பகுதிகளில் இருந்த மீன்பிடித் தொழில் செய்து கொண்டிருந்த சூத்திரர்களான ஆபிரர்களையும் வென்று திறை வசூலித்தாக மகாபாரதத்தின் சபா பருவம், அத்தியாயம் 31-இல் கூறப்பட்டுள்ளது. தருமராசன் நடத்திய இராசசூய வேள்வியில் பங்கு கொண்ட பரத கண்டத்தின் மேற்குக் கடற்கரை பகுதியில் வாழ்ந்த சூத்திர நாட்டவர்களான சூர மன்னர்கள், தருமருக்கு தங்க அணி கலன்களையும், கலைமான்களையும் பரிசுப் பொருட்களாக வழங்கினர் (2:50). குருச்சேத்திரப் போரில், சூத்திர நாட்டுப் படைகள் கௌரவர் அணியின் சார்பாக நின்று, பாண்டவர்களுக்கு எதிராகப் போரிட்டனர் (7: 7) & (7:20). சூத்திரர்களும் அபிரர்களும் வசித்த இடத்தில் சரஸ்வதி வற்றிப் போயிருந்தது. பலராமன் அந்த இடத்தைச் சென்று பார்த்தார். அவர் வசித்த பகுதியில் சரஸ்வதி வற்றிப் போனதால் அந்த இடத்திற்கு வினாசனா என்ற பெயரும் வழங்கப்பெற்றது (மஹா 9:37) இந்தியாவில் இலங்கையர் இந்தியாவில் இலங்கையர் என்பது பொதுவாக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இலங்கையில் வசிக்காது இந்தியாவில் வசிக்கும் இலங்கையரைக் குறிக்கும். இவர்களில் இந்தியாவிற்குக் குடியேறியவர்களின் சந்ததியினர் மற்றும் இலங்கை உள்நாட்டுப் போரினால் இடம்பெயர்ந்தவர்கள் ஆகியவர்கள் உள்ளடக்கப்படுகின்றனர். இவர்களில் ஒர் குறிப்பிட்ட அளவு சிங்களவர்கள் கிட்டத்தட்ட 3,500 பேர் தில்லியிலும் தமிழ்நாட்டிலும் காணப்படுகின்றனர். கொடித்தோடை கொடித்தோடை (தாட்பூட்பழம்) ("Passion fruit", "Passiflora edulis") என்பது தாட்பூட்டின் கொடி இனப் பழமாகும். இது பிரேசில், பரகுவே, உருகுவே மற்றும் தென் ஆர்ஜெந்தீனா ஆகிய நாடுகளைத் தாயகமாகக் கொண்டது. வெப்ப வலயம் நாடுகளில் வர்த்தகத்திற்காக வளர்க்கப்படும் இது தென் அமெரிக்கா, நடு அமெரிக்கா, கரிபியன், ஆப்பிரிக்கா, தெற்கு ஆசியா, வியட்நாம், இசுரேல், ஆத்திரேலியா, தென் கொரியா, ஹவாய், அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய இடங்களில் வளர்கிறது. கொடித்தோடைப் பழங்கள் வௌளரீயம், சாறு நிறைந்த பழமாகும். இது உருண்டையாகவும், நீள் வடிவமாகவும் காணப்படுவதோடு, பழுத்த பழங்கள் மஞ்சள், ஊதா ஆகிய நிறங்களில் உள்ளது. சீமைப் பனிச்சை சீமைப் பனிச்சை ("Persimmon") என்பது உண்ணத்தக்க பழமாகும். பழுத்த பழம் செம்மஞ்சள் அல்லது இளம் பொன்னிறத்திலிருந்து கரும் செம்மஞ்சள் நிறம் வரை அதன் வகை மற்றும் இனத்திற்கேற்பக் காணப்படும். இது 1.5 முதல் 9 செ.மீ வரையான (0.5 to 4 அங்குலம்) விட்டத்தில் காணப்படும். அதன் வடிவம் கோளம் வடிவான அல்லது பரங்கிக்காய் வடிவில் காணப்படும். விழுதி விழுதி அல்லது விளச்சி ("lychee", "Litchi chinensis") () என்பது விளாச்சி வகையைச் சேர்ந்த தாவரம் ஆகும். இது தென் சீனா, தாய்வான், வங்காளதேசம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட ஓர் வெப்பமண்டல மற்றும் வெப்பமண்டலம் சார்ந்த மரமாகும். தற்போது இது உலகில் பல பகுதிகளிலும் பயிரிடப்படுகின்றது. இம்மரப்பழம் சுவைமிக்க வெண் சதைப் பகுதியைக் கொண்டதும், பூப் போன்ற நறுமணமுடையது. ஆயினும் இதன் நறுமணம் சந்தைப்படுத்தலுக்கு அடைந்து வைப்பதனால் இல்லது போகின்றது. பொதுவாக இப்பழம் உடனேயே வெறுமனே உண்ணப்படும். மு. மு. இஸ்மாயில் மு. மு. இஸ்மாயில் (1921 பிப்ரவரி 21 – 2005 சனவரி 17) நீதியரசர்; தமிழறிஞர்; எழுத்தாளர்; சென்னை கம்பன் கழகத்தின் நிறுவுகைத் தலைவர்; கம்ப இராமாயண ஆய்வாளர். மு. மு. இஸ்மாயில் நாகபட்டணம் மாவட்டத்தில் உள்ள நாகூரில் 1921, பிப்ரவரி 8ஆம் நாள் பிறந்தார். ஒன்பது வயதில் தாயையும், பதிமூன்று வயதில் தந்தையையும் இழந்த அவரை உறவினர்கள் வளர்த்தார்கள். இஸ்மாயில் நாகூரில் பள்ளிப் படிப்பை நிறைவுசெய்தார். பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை (சிறப்பு) பட்டம் (Bachelor of Arts - Honours)பெற்றார். தொடர்ந்து சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று 1945 ஆம் ஆண்டில் சட்ட இளவர் (Bachelor of Law) பட்டம் பெற்றார். கல்லூரியில் தன் பேராசிரியர் கே. சுவாமிநாதனுடன் ஏற்பட்ட உறவால், இஸ்மாயிலுக்கு காந்தியத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. தன்னுடைய ஆரம்ப காலத்தில் சென்னை விவேகானந்த கல்லூரியில் பகுதி நேர விரிவுரையாளராகப் பணியாற்றினார். இஸ்மாயில் சட்டக் கல்வியில் பட்டம் பெற்றதும் சென்னை வழக்குரைஞர் சங்கத்தில் பதிவு செய்துகொண்டார். 1946 ஆம் ஆண்டு முதல் 1959 ஆம் ஆண்டு வரை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகத் தொழில் புரிந்தார். 1959 ஆம் ஆண்டு முதல் 1967 சனவரி வரை தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞராகப் பணியாற்றினார். இஸ்மாயில் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக தொழில் புரிந்தபொழுதே பகுதி நேர சட்ட விரிவுரையாளராக 1946 ஆம் ஆண்டு முதல் 1951ஆம் ஆண்டு வரை சென்னை விவேகானந்தர் கல்லூரியிலும் 1951ஆம் ஆண்டு முதல் 1959ஆம் ஆண்டு வரை சென்னை சட்டக் கல்லூரியிலும் பணியாற்றினார். இஸ்மாயில் 1967 பிப்ரவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை தில்லி உயர்நீதி மன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு பணியாற்றினார். 1967 நவம்பர் முதல் 1979 நவம்பர் 5 வரை சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றினார். இஸ்மாயில் 1979 நவம்பர் 6 ஆம் சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1981 ஆம் ஆண்டும் சூலை மாதத்தில் மு. மு. இஸ்மாயிலைக் கலந்தாலோசிக்காமலேயே வேறு மாநிலத்திற்கு மாற்றினார். அதனைக் கண்டித்து 1981 சூலை 8 ஆம் நாள் தன் பதவியைத் துறந்தார். 1980 அக்டோபர் 27 ஆம் நாள் முதல் நவம்பர் 4 ஆம் நாள் வரை இஸ்மாயில் தமிழ்நாட்டின் தற்காலிக ஆளுநராகப் பணியாற்றினார். 2005 ஆம் ஆண்டில் சட்டக் கமிசன் தலைவராகப் பணியாற்றினார். மு. மு. இஸ்மாயிலுக்கு இளமையிலிருந்தே கம்பராமாயணத்தில் ஈடுபாடு இருந்தது. நாளடைவில் அவ்வீடுபாடு புலமையாக மலர்ந்தது. அதன் விளைவாக 1975 ஆம் ஆண்டில் "தினமணி" முன்னாள் ஆசிரியர் ஏ. என். சிவராமன், கம்பன் அடிப்பொடி சா. கணேசன், பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் சி. எம். அழகர்சாமி, பழ. பழனியப்பன் ஆகிய நண்பர்களின் துணையோடு சென்னையில் கம்பன் கழகத்தை உருவாக்கினார். தொடக்க நாள் முதல் தனது மரணம் வரை அவ்வமைப்பின் தலைவராகப் பொறுப்பு வகித்தார். சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் பொது நிகழ்ச்சிகளில் பலமுறை ஸ்ரீராமகிஷ்ணர், சுவாமி விவேகானந்தர் பற்றி சொற்பொழிவு செய்திருக்கிறார்.அண்ணா சுப்ரமண்யம் மொழிபெயர்த்த உபநிஷத நூல்கள் இவருக்குப் பிடித்தவை. வேதாந்த கேசரி மற்றும் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் பத்திரிக்கைகளின் ஆயுள் சந்தாதாரராக இருந்தவர். இஸ்மாயில் ஹாங்காங் நாட்டின் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் அழைப்பின்பேரில் 1970 ஆம் ஆண்டு ஹாங்காங் சென்று வந்தார். மு. மு. இஸ்மாயிலுக்கு அவரது தமிழ்த் தொண்டினை பாராட்டி பல்வேறு அமைப்புகள் பட்டங்களையும் விருதுகளையும் வழங்கினர். அவை வருமாறு: மு. மு. இஸ்மாயில் 2005 சனவரி 17ஆம் நாள் திங்கட் கிழமை சென்னையில் காலமானார். உத்தவர் உத்தவர், பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் பரம பக்தரும், மதியமைச்சரும், சிற்றப்பா மகனும் ஆவார். பகவான் தான் எடுத்த கிருஷ்ண அவதாரத்தின் நோக்கம் முடிந்து விட்ட காராணத்தினால், வைகுண்டத்திற்கு எழுந்தருள நினைக்கையில் உத்தவர், பகவானிடம் தன்னையும் வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டினார். அதற்கு கிருஷ்ணர், உத்தவரிடம், மீதி உள்ள யதுகுலத்தவரை நீ வழி நடத்தச் செல்ல வேண்டி இருப்பதால், உன் ஆயுட்காலம் முடிந்த பின் வைகுண்டத்திற்கு வரலாம் என்றும், அதுவரை ”பத்ரிகாசிரமம்” சென்று தங்கி தவ வாழ்ககை மேற்கொள்ள உத்தவருக்கு ஆணையிட்டார். அப்போது உத்தவர், அருச்சுனனுக்கு, (பகவத் கீதை) உபதேசம் செய்தது போன்று தனக்கும் ஆத்ம உபதேசம் செய்ய பகவானிடம் வேண்டுகிறார். பகவான் ஸ்ரீகிருஷ்ணரும் (31 அத்தியாயங்கள் கொண்ட 1367 சுலோகங்கள்) ஆத்ம உபதேசத்தை உத்தவருக்கு அருளினார். உத்தவருக்கு பகவான் கிருஷ்ணர் அருளிய உத்தவ கீதை, பாகவத புராணத்தில், இறுதி ஸ்கந்தமான, பதினோராவது ஸ்கந்தத்தில் (நூல்) உத்தவ கீதை அமைந்துள்ளது. உத்தவருக்கு அருளிய கீதை 1367 சுலோகங்களும், முப்பத்தி ஒன்று அத்தியாயங்களும் கொண்டது. திருநெறி விளக்கம் திருநெறி விளக்கம் என்னும் இந்த நூல் 15 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. எனவே இவரைத் 'திருநெறிவிளக்கமுடையார்' என்கின்றனர். 'திருநெறி' என்னும் பெயரால் இந்த நூல் சிவப்பிரகாசம் என்னும் நூலைக் குறிப்பிடுகிறது. சிவப்பிரகாசம் என்னும் நூலிலுள்ள 100 பாடல்களையும் இந்த நூல் எடுத்துக்கொண்டு, அந்தந்தப் பாடலிலுள்ள சொற்களையும், தொடர்களையும் அப்படியே அமைத்து, சிவப்பிரகாசப் பாடல்களுக்கு விளக்கம் கூறுவதாக இந்த நூல் அமைந்துள்ளது. முத்திக்கான திருநெறி விளக்கம் என்பது இந்நூலுக்கு ஆசிரியர் சூட்டியுள்ள முழுப்பெயர். இந்த நூலுல் 117 விருத்தப் பாடல்கள் உள்ளன. முதல் இரண்டு பாடல்கள் எண்சீர் விருத்தங்கள். ஏனையவை அறுசீர் விருத்தங்கள். இது சைவசித்தாந்த நூல். தமிழ்வழி மருத்துவக் கல்வி தமிழில் மருத்துவக் கல்வி என்பது தமிழ் மொழியின் ஊடாக மருத்துத் தகுதிக்கான படிப்பினைக் குறிக்கிறது. தமிழில் சித்த மருத்துவக் கல்வி நெடுங்காலமாக இருந்து வருகிறது. இன்றும் இலங்கையிலும் இந்தியாவிலும் சித்த மருத்துவக் கல்வியை தமிழில் கற்கலாம். தற்கால மருத்துவக் கல்வியை யாழ்பாணத்தில் 1855 இல் சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் முயற்சியால் தொடங்கப்பட்டது. அமெரிக்க மிசனரியான இவர் தமிழில் மருத்துவக் கல்விக்குத் தேவையான பல நூல்களை மொழிபெயர்த்தார். தமிழ்மொழி மூலம் 33 வைத்தியரைக் கற்பித்த பின்பே, அவர் அமெரிக்கா திரும்பினார். எனினும், அங்கிருந்தும் தமிழ் நூல்களை வெளியிடும் பணியைத் தொடர்ந்தார். நவீன மருத்துவக் கல்வி பாடத் திட்டங்கள் முழுவதும் தமிழ்வழியில் அமைப்பதற்காக டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ தமிழ் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. உதகை பொன்னழகன் உதகை பொன்னழகன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர் மற்றும் கவிஞர். திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், நாகணம்பட்டி எனும் ஊரில் பிறந்தவர். இவரது பெற்றோர் கலைஞர் கே. அங்கப்பா, சின்னம்மாள். நீலகிரி மாவட்டம், அருவங்காடு எனும் ஊரில் வசித்து வரும் இவருடைய படைப்புகள் தமிழில் வெளியாகும் பல அச்சிதழ்களில் வெளியாகியிருக்கின்றன. இவர் இரண்டு மேடை நாடகங்களை எழுதி அவை மேடைகளில் அரங்கேற்றம் பெற்றுள்ளன. இவர் எழுதிய அறுபதுக்கும் அதிகமான வானொலி நாடகங்கள் வானொலியில் ஒலிபரப்பப்பட்டுள்ளன. இவர் பல்வேறு இலக்கிய அமைப்புகளில் பெறுப்பேற்று செயல்பட்டிருக்கிறார். இலங்கை மக்கள் கட்சி இலங்கை மக்கள் கட்சி ("Sri Lanka Mahajana Pakshaya", "Sri Lanka People's Party") என்பது இலங்கையின் ஓர் அரசியல் கட்சி ஆகும். இது 1984 ஆம் ஆண்டில் அரசியல்வாதியும், நடிகருமான விஜய குமாரணதுங்கவினால் ஆரம்பிக்கப்பட்டது. 1988 ஆம் ஆண்டில் அவர் சுட்டுக் கொல்லப்படும் வரை அதன் தலைவராக இருந்து செயல்பட்டார். அவரது இறப்பின் பின்னர் அவரது மனைவி சந்திரிக்கா குமாரதுங்க இக்கட்சியின் தலைவராக சிறிது காலம் பணியாற்றினார். அதன் பின்னர் ஒசி அபேகுணசேகரா தலைவராகச் செயல்பட்டார். இவரும் 1994 ஆம் ஆண்டில் தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். 1988-1989 காலப்பகுதியில் இடம்பெற்ற சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சியின் போது இக்கட்சியின் 114 உறுப்பினர்கள் உயிரிழந்தனர். ஒசி அபேகுணசேகரா 1988 அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டு 235,719 (4.63%) வாக்குகளைப் பெற்றார். இலங்கை நாடாளுமன்றத்துக்கான 2004 தேர்தலில் இக்கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டது. அரிய உலோகம் அரிய உலோகம் என்பது, மிகவும் அரிதாகக் கிடைப்பதும், இயற்கையில் காணப்படுவதும், உயர்ந்த பொருளியற் பெறுமதி கொண்டதுமான ஒரு உலோக வேதியியல் தனிமம். இவை பொதுவாகக் கம்பியாக நீட்டத்தக்க தன்மையும், உயர் மினுக்கமும் கொண்டவை. முன்னர் அரிய உலோகங்கள் நாணயமாகப் பயன்பட்டன. தற்காலத்தில் இவை முதலீடாகவும், தொழிற்றுறைப் பண்டங்களாகவுமே பயன்படுகின்றன. பொன், வெள்ளி, பிளாட்டினம், பல்லேடியம் என்பன அரிய உலோக வகையைச் சேர்ந்தவை. நாணய உலோகங்களான பொன்னும் வெள்ளியும் அனைவராலும் மிகவும் அறியப்பட்ட அரிய உலோகங்களாகும். தொழில்து‍றையிலும் இவற்றுக்குப் பயன்பாடு இருந்தபோதும், கலைப் பொருட்கள், நகை, நாணயங்கள் ஆகியவை தொடர்பிலேயே மக்கள் இவற்றைப் பெரிதும் அறிந்துள்ளனர். பிளாட்டினக் கூட்டத்தைச் சேர்ந்த ருத்தேனியம், ரோடியம், பல்லேடியம், ஓசுமியம், இரிடியம், பிளாட்டினம் ஆகியவையும் அரிய உலோகங்களே. இவற்றுள் பிளாட்டினம் மிகப் பரவலான விற்பனைப் பண்டமாக உள்ளது. அரிய உலோகங்களுக்கான கேள்வி, அவற்றின் பயன்பாட்டுத் தேவையினால் மட்டுமன்றி, ஒரு முதலீடாகவும், மதிப்பின் நிலைக்களனாகவும் அவை வகிக்கும் பங்கினாலும் தீர்மானிக்கப்படுகிறது. நீண்ட காலமாகவே அரிய உலோகங்கள் பொதுவான தொழிற்றுறை உலோகங்களைவிட விலை கூடியனவாக உள்ளன. அரிதாகக் கிடைப்பதனாலேயே உரு உலோகம் "அரிய உலோகம்" ஆகிறது. மேற்படி உலோகங்களின் புதிய மூலங்களைக் கண்டுபிடிப்பதனாலும், அவற்றை அகழ்வதிலும், பிரித்தெடுப்பதிலும் மேம்பட்ட முறைகளைப் பயன்படுத்துவதாலும், அரிய உலோகங்களின் பெறுமதி குறையக்கூடும். அரிய உலோகத் தகுதியானது குறித்த உலோகத்துக்கான உயர்ந்த கோள்வியினாலும், சந்தைப் பெறுமதியினாலும் எற்படக்கூடும். அரிய உலோகங்களைத் தொகையாகக் கையாளும் நிலையில் அவற்றைப் "பாளகம்" (bullion) எனலாம். இவை பண்டச் சந்தைகளில் வணிகம் செய்யப்படுகின்றன. இவை பின்னர் குற்றிகளாகவும், நாணய வடிவிலும் வார்க்கப்படுகின்றன. பாளகத்தின் மதிப்பை அதன் திணிவையும், தூய்மையையும் வைத்தே முடிவு செய்கின்றனர். தூய்மையின் அளவு வெளியீடுகளைப் பொறுத்து வேறுபடுகின்றது. 99.9% தூய்மையே பொதுவாகக் காணப்படுவது. பெருமளவில் உற்பத்தி செய்யப்படுபவற்றுள் "கனேடிய தங்க மேப்பிள் லீஃப்" தொடரில் உள்ள காசுகளே ஆகக் கூடிய அளவாக 99.999% தூய்மை கொண்டவை. அகழ்ந்தெடுத்துத் தூய்மையாக்கும் வழிமுறைகளில் முழுமையான தூய்மையை அடைவது அணுகற்கோட்டு அடிப்படையிலேயே (asymptotically) ஆதலால், 100% தூய்மை சாத்தியம் அற்றது. காசுகள் கலப்புலோகத்தின் குறித்த ஒரு நிறையையும், உள்நாட்டுத் தரநிலைக்கேற்ற தூய்மை அளவையும் கொண்டிருந்தன. "குறுகெரான்ட்" காசுகளே தூய பொன்னின் அடிப்படையில் அளக்கப்பட்ட, தற்காலத்தின் முதல் எடுத்துக்காட்டு. இது 12/11 அவுன்சுகள் நிறை கொண்ட 11/12 தூய பொன்னைக் கொண்டிருக்க வேண்டும். "பிரித்தானிய சவரின்" போன்ற பாளகக் காசுகள் சிலவற்றில் அவற்றின் தூய்மை அளவோ, அவற்றில் உள்ள தூய பொன்னின் அளவோ குறிக்கப்படுவது இல்லை. ஆனாலும், அவற்றின் உள்ளீடுகள் ஒருமாதிரியாகவே இருக்கும் என்று கொள்ளப்படுகிறது. பல நாணயங்களில் ஒரு பணப் பெறுமானம் குறிக்கப்படுவது வழக்கம். அமெரிக்காவின் "இரட்டைக் கழுகு" இதற்கு எடுத்துக்காட்டு. பல நாடுகள் அரிய உலோகக் காசுகளை அச்சிடுகின்றன. பெயரளவில் இவற்றைச் சட்டமுறைச் செலவாணியாக வெளியிட்டாலும், இவற்றில் குறிக்கப்படும் பெறுமதி இவற்றின் உண்மையாக பெறுமதியிலும் மிகமிகக் குறைவானதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, கனடா வெளியிட்ட, ஒரு டிரோய் அவுன்சு (31.1035 கிராம்) நிறை கொண்ட ஒரு பொற்காசின் (கோல்ட் மேப்பிள் லீஃப்) முகப்புப் பெறுமானம் 50 டாலர்கள். ஆனால் இதன் சந்தைப் பெறுமானம் (மே 2011) ஏறத்தாழ 1,500 டாலர்கள். அரசுகள் அச்சடிக்கும் அரிய உலோகக் காசுகளுக்கு அவற்றின் உலோகப் பெறுமானத்துக்கு மேலாக ஓரளவு நாணயவியல் பெறுமானமும், அதன் தூய்மைக்கான சான்றுப் பெறுமதியும் இருப்பது உண்டு. உலகின் மிகப்பெரிய அரிய உலோகக் காசுகளில் ஒன்று ஆசுத்திரேலியாவில் அச்சிடப்பட்ட 10,000 டாலர் ஆசுத்திரேலிய பொற்கட்டிக் (Australian Gold Nugget) காசு ஆகும். இது ஒரு கிலோகிராம் நிறை கொண்ட 99.9% தூய்மை கொண்ட பொன்னால் ஆனது. குறைந்த எண்ணிக்கையிலான இதைவிடப் பெரிய காசுகளும் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றைக் கையாள்வது நடைமுறைச் சாத்தியமாக இல்லாததால் இவற்றைப் பெருமளவில் அச்சிடுவது இல்லை. 260 டிரோய் அவுன்சுக்கும் (8 கிகி) கூடுதலான நிறை கொண்ட பொற்காசுகளை சீனா வெளியிட்டது. 20க்கும் குறைவான காசுகளே அச்சிடப்பட்டன. 2004ல், 100,000 யூரோ முகப்புப் பெறுமானம் கொண்ட பொற்காசுகளை (வியன்னா பிலார்மோனிக் காசு - Vienna Philharmonic Coin) ஆசுத்திரியா வெளியிட்டது. இது 31 கிலோகிராம் பொன்னால் ஆனது. 99.999% தூய்மையான ஒரு அவுன்சு "கனேடிய கோல்ட் மேப்பிள் லீஃப்" காசுகளைப் பிரபலப்படுத்துவதற்கான ஒரு விளம்பர உத்தியாக 100 கிலோகிராம் 99.999% தூய பொன்னால் ஆன காசு ஒன்றை 2007 ஆம் ஆண்டில் கனடா வெளியிட்டது. இதன் முகப்புப் பெறுமானம் 1 மில்லியன் டாலர்கள். தற்போது கேட்பவர்களுக்கு இது அச்சிட்டுக் கொடுக்கப்படுகிறது. இதற்கு, இதில் அடங்கிய பொன்னின் சந்தை விலைக்கும் கணிசமான அளவு கூடுதலாக விலை குறிக்கப்படுகிறது. பொன், வெள்ளி ஆகிய உலோகங்களும், சில வேளைகளில் பிற அரிய உலோகங்களும், பணவீக்கம், பொருளாதார வீழ்ச்சி ஆகிய சூழ்நிலைகளில் பாதுகாப்பான முதலீடுகளாகக் கருதப்படுகின்றன. விலை ஒப்பீட்டளவில் கட்டுப்படியாகக் கூடியதாக இருப்பதாலும், சந்தையைப் பொறுத்து விலை தீர்மானிக்கப்படும் பொன், பிளாட்டினம் ஆகியவற்றாலான காசுகளைப் போலன்றி வெள்ளிக்காசுகள் சேகரிப்புப் பொருள்களாகக் கருதப்பட்டுச் சந்தை விலையிலும் கூடிய பெறுமதி உடையனவாக மதிக்கப்படுவதாலும், வெள்ளிக் காசுகள், சேகரிப்பாளரால் கூடுதலாக விரும்பப்படுகிறது. ஒரு காலத்தில் அரிய உலோகமாக இருந்து பின்னர் சாதாரண உலோகமானது அலுமினியம். இது, புவியின் மேலோட்டில் மிகப் பொதுவாகக் காணப்படும் தனிமங்களில் ஒன்றாக இருந்த போதிலும், அதன் தாதுப் பொருட்களில் இருந்து அதனைப் பிரித்து எடுப்பது ஒரு காலத்தில் கடினமானதாக இருந்தது. இதனால் கூடிய செலவுடன் பிரித்து எடுக்கப்பட்ட குறைந்த அளவான அலுமினியம், பொன்னிலும் கூடிய பெறுமதி கொண்டதாக இருந்தது. 1855 ஆம் ஆண்டில் பிரான்சில் இடம்பெற்ற பன்னாட்டுக் கண்காட்சியில், பிரான்சின் அரச அணிகளுடன் அலுமினியக் கட்டிகளும் வைக்கப்படிருந்தன. மூன்றாம் நெப்போலியனின் மிக முக்கியமான விருந்தினர் உணவருந்துவதற்கு அலுமினியத்தினால் செய்யப்பட்ட கரண்டி முதலியன கொடுக்கப்பட்ட அதேவேளை, குறைவான முக்கியத்துவம் உடையவர்களுக்கு வெள்ளிக் கரண்டி முதலியன வழங்கப்பட்டன. அத்துடன், வாசிங்டன் நினைவுச்சின்னத்தின் பட்டைக் கூம்பு வடிவ உச்சி 100 அவுன்சு எடை கொண்ட அலுமினியத்தால் செய்யப்பட்டது. இந்த நினைவுச் சின்னம் கட்டப்பட்ட காலத்தில், அலுமினியத்தின் விலை வெள்ளியின் விலையை ஒத்திருந்தது. 1886 ஆம் ஆண்டில் அலுமினியத்தைப் பிரித்து எடுப்பதற்கான புதிய முறையைக் கண்டுபிடித்த பின்னர் அலுமினியத்தின் விலை நிரந்தரமாகவே வீழ்ச்சியடைந்துவிட்டது. பிசுமத், தெல்லூரியம் ஆகிய இரு உலோகங்களே புவிமேலோட்டில் மிகக் குறைந்த அளவில் காணப்படும் உலோகங்கள். இவற்றின் தனிம மிகுதி அளவு 10-8 திணிவுப் பகுதி (கி/கி) இலும் குறைவானது. ஆனால், இப்போது அவ்வுலோகங்களுக்குக் கூடிய பொருளியல் பெறுமதி கிடையாது. ஒசி அபேகுணசேகரா ஒசி அபேகுணசேகரா ("Ossie Abeyagunasekera", 7 ஆகத்து 1950 - 9 நவம்பர் 1994) இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை மக்கள் கட்சியின் தலைவரும் ஆவார். இவர் 1994 அரசுத்தலைவர் தேர்தலில் காமினி திசாநாயக்காவை ஆதரித்து கொழும்பில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இவர் கொழும்பு ஆனந்தா கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார். 1986 ஆம் ஆண்டில் ஒசி அபேகுணசேகரா விஜய குமாரணதுங்கவுடன் இணைந்து விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு போர்க்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த இலங்கை இராணுவத்தினரை விடுவித்தார். விஜய குமாரதுங்க 1988 ஆம் ஆண்டில் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து குமாரதுங்க ஆரம்பித்த இலங்கை மக்கள் கட்சியின் தலைவரானார். ஒசி அபேகுணசேகரா ஐக்கிய சோசலிசக் கூட்டமைப்பு என்ற அரசியல் கூட்டணியை நிறுவி 1988 அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டு 235,719 (4.63%) வாக்குகளைப் பெற்றார். ஒசி அபேகுணசேகராவின் தந்தை ஏ. டபிள்யூ. ஏ. அபேகுணசேகரா என்பவரும் ஓர் அரசியல்வாதி ஆவார். துறைமுக ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றியவர். 1960களில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பீட்டர் கெனமனை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இவர் மும்பையில் இடம்பெற்ற ஒரு விமான விபத்தில் கொல்லப்பட்டார். திருப்பாதிரிப்புலியூர் திருப்பாதிரிப்புலியூர் கடலூர் மாவட்டதின் ஒரு பகுதி. திருப்பாதிரிப்புலியூர் பாடலேசுவரர் கோயில் இங்கு உள்ளது. திருப்பாதிரிப்புலியூர் புகை வண்டி நிலையம் உள்ளது. பாடலிக என்னும் பெயர் பாடலிகபுரம் என்று மாறிப் பின்னர் திருப்பாதிரிப்புலியூர் ஆனது எனக் கூறப்படுகிறது. சிவபுரி உச்சிநாதர் கோயில் சிவபுரி உச்சிநாதர் கோயில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிவத்தலமாகும். இந்தக் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 3வது தலம் ஆகும். அகத்திய முனிவருக்கு சிவபெருமான் காட்சியளித்த தலமாகும். திருஞான சம்பந்தரும், அவருடன் அறுபத்து மூன்று சைவ அடியார்களும் இத்தலத்திற்கு வரும்பொழுது, உச்சிகாலமானது. அந்நேரம் மிகுந்த பசியோடு இருந்தவர்களுக்கு, இறைவன் கோவில் பணியாளர் வடிவில் வந்து உணவளித்தமையால் உச்சிநாதர் என்ற பெயர்பெற்றார். இக்கோயிலின் அம்பிகை பெயர் கனகாம்பிகை என்பதால் இக்கோயிலை இவ்வூர் மக்கள் "கனகாம்பிகை கோயில்" எனவும் வழங்குகின்றனர். சிதம்பரம் நகருக்கு உட்பட்ட பிரதேசத்தின் ஒரு பகுதியில் நெல் வயல்கள் அதிகம் இருந்தன. அப்பகுதியே முற்காலத்தில் "திருநெல்வாயில்' என அழைக்கப்பட்டது. திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் கோயில் திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் கோயில் கடலூர் மாவட்டத்தல் உள்ள சிவத்தலமாகும். இக்கோவில் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் இது 4வது தலம் ஆகும். கபிலமுனிவர் ஒவ்வொரு சிவத்தலங்களாக தரிசித்து வரும் போது, வில்வ வனமாக இருந்த இப்பகுதியில் தங்கி சிவபூஜை செய்ய நினைத்தார். இப்பகுதியில் பசுக்கள் தானாக பால்சுரந்து வந்த காரணத்தினால் மணல் முழுவதும் வெண்ணிறமாக காட்சியளித்தது. முனிவர் இந்த வெண்ணிற மணலை எடுத்து லிங்கம் அமைத்து வழிபாடு செய்தார். ஒருமுறை அந்த வழியாக வந்த மன்னனது குதிரையின் கால் குளம்பு, மணல் லிங்கத்தின்மீது பட்டு லிங்கம் பிளந்து விடுகிறது. வருந்திய முனிவர் பிளவுபட்ட லிங்கத்தை எடுத்துவிட்டு வேறு லிங்கம் பிரதிஷ்டை செய்ய நினைத்த போது, இறைவன் பார்வதி சமேதராக காட்சி தந்து,"முனிவரே! பசுவின் பால் கலந்த வெண்ணிற மணலில் செய்த லிங்கம் பிளவு பட்டிருந்தாலும் அதை அப்படியே பிரதிஷ்டை செய்து விடுங்கள். காமதேனுவே பசுவடிவில் இங்கு வந்து பால்சொறிந்துள்ளது. எனவே இந்த லிங்கத்தை வழிபடுபவர்கள் சகல செல்வங்களும் அடைவார்கள்" என்றார் இறைவன். இன்றும் கூட இக்கோயிலின் லிங்கம் வெண்ணிறமாகவே உள்ளது என்பது சிறப்பம்சமாகும். அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோயில் - தினமலர் கோவில்கள் திருவட்டத்துறை தீர்த்தபுரீசுவரர் கோயில் திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் கோயில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிவாலயமாகும். இக் கோவில் அப்பர், சம்பந்தர், சுந்தரர், ஆதிசங்கரர், குகை நமச்சிவாயர், ராமலிங்க அடிகள் ஆகியோரால் பாடல்பெற்றது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். இவ்வூர் திருநெல்வாயில் அரத்துறை என்றும், திருவரத்துறை என்றும், திருவட்டுறை என்றும் அழைக்கப்படுகிறது. கோயிலானது தொழுதூர் விருத்தாச்சலம் பேருந்து சாலையில் தொழுதூரிலிருந்து 20 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் ஆனந்தீசுவரர் என்றும் தீர்த்த புரீசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி ஆனந்தநாயகி, திரிபுரசுந்தரி, அரத்துறைநாயகி என்று அழைக்கப்படுகிறார். திருப்பதிக் கோவை திருத்தொண்டர் புராணச் சாரம், திருப்பதிக்கோவை, திருப்பதிகக்கோவை என்னும் மூன்று நூல்களும் சேக்கிழாரால் பாடப்பட்ட நூல்கள். இவற்றை உமாபதி சிவாசாரியார் பாடியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர் சிலர் கருதுவது பொருந்தாது என்பது அறிஞர் மு. அருணாசலம் கருத்து. இவற்றுள் திருப்பதிக்கோவை என்பது திருப்பதி மலை பற்றியது அன்று. சிவன் கோயில் இருக்கும் திருப்பதிகள். ஈழ தேசிய சனநாயக விடுதலை முன்னணி ஈழ தேசிய சனநாயக விடுதலை முன்னணி ("Eelam National Democratic Liberation Front", ENDLF) என்பது இலங்கையில் இந்தியாவின் ஆதரவுடன் இயங்கிய ஈழ இயக்கங்களில் ஒன்றாகும். இவ்வியக்கம் 1987 ஆம் ஆண்டில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழீழ விடுதலை இயக்கம் ஆகிய இயக்கங்களில் இருந்து பிரிந்து சென்றவர்களால் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் தற்போது இலங்கை அரசு ஆதரவில் இயங்கும் ஒரு துணை இராணுவப் படையும், அரசியல் கட்சியும் ஆகும். 2011 ஆகத்து மாதத்தில் இக்கட்சி தேர்தல் ஆணையத்தின் பதிவில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. புளொட் அமைப்பின் ஒரு உறுப்பினராக செயல்பட்ட ஞானப்பிரகாசம் ஞானசேகரன் (பரந்தன் ராஜன்) அவ்வியக்கத்தில் இருந்து பிரிந்து, டெலோ, ஈபிஆர்எல்எஃப் இயக்கங்களில் இருந்து பிரிந்த சிலருடன் இணைந்து "மூன்று நட்சத்திரங்கள்"' என்ற பெயரில் ஓர் இயக்கத்தை ஆரம்பித்தார். 1987 ஆம் ஆண்டில் இவ்வியக்கம் புளொட்டில் இருந்து பிரிந்த ஜோதீசுவரன் (கண்ணன்) தலைமையிலான குழுவினருடனும், ஈபிஆர்எல்எஃப் இலிருந்து பிரிந்த டக்ளஸ் தேவானந்தாவுடனும் இணைந்து ஈழ தேசிய சனநாயக விடுதலை முன்னணி என்ற பெயரில் புதிய இயக்கத்தை இந்தியப் புலனாய்வுத்துறை ரோவின் ஆதரவுடன் ஆரம்பித்தனர். இலங்கை இந்திய ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து டக்லசு தேவானந்தா இவ்வியக்கத்தில் இருந்து விலகி ஈபிடிபி என்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை ஆரம்பித்தார். 1987 முதல் 1990 வரையான காலப்பகுதியில் இந்திய அமைதி காக்கும் படை இலங்கையில் தங்கியிருந்த காலத்தில் இவ்வியக்கம் சுறுசுறுப்புடன் இயங்கி வந்தது. 1988 வடகிழக்கு மாகாணசபைத் தேர்தல், 1989 நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் போட்டியிட்டது. 1990 இல் இந்திய அமைதிப்படையினர் இலங்கையை விட்டு வெளியேறிய போது இக்கட்சியினரும், தமது செயற்பாடுகளைக் கைவிட்டு இந்தியா சென்றனர். 2004 ஆம் ஆண்டு வரை இவ்வியக்கத்தினர் செயலிழந்திருந்தனர். விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்குத் தளபதி கருணா புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேறியதை அடுத்து கருணா ஈழ தேசிய சனநாயக விடுதலை முன்னணியில் இணைந்து அதன் தலைவரானார். இதனை அடுத்து இவ்வியக்கம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தது. கருணா பின்னர் இவ்வியக்கத்தில் இருந்து விலகினாலும், அரச-ஆதரவு இயக்கமாகத் தொடர்ந்து இயங்கி வருகிறது. சமானப் பகுதி கணிதத்தில் ஒரு கணமும் அக்கணத்தில் வரையறுக்கப்பட்ட ஒரு சமான உறவும் தரப்பட்டால், அக்கணத்தின் ஏதேனும் ஒரு உறுப்பு "a" இன் சமானப் பகுதி ("Equivalence class")என்பது அக்கணத்தில் "a" -க்குச் சமானமான உறுப்புகள் அனைத்தையும் கொண்ட உட்கணமாகும். ஒரு கணம் "X" இன் மீது வரையறுக்கப்பட்ட சமான உறவு ~ எனில் அக்கணத்தின் ஏதேனுமொரு உறுப்பு "a" இன் சமானப் பகுதி formula_1 எனக் குறிக்கப்படுகிறது. "a" உடன் இச்சமான உறவால் இணைப்புடைய "X" கணத்தின் உறுப்புகள் அடங்கிய கணம் "a" இன் சமானப் பகுதியென வரையறுக்கப்படுகிறது. இது "X" இன் உட்கணமாக இருக்கும். "a" இன் சமானப் பகுதி: "a" இன் சமானப் பகுதி formula_3 எனவும் குறிக்கப்படுகிறது. இங்கு R என்பது சமான உறவு. இது "a" இன் R-சமானப்பகுதி. ~ சமான உறவைப் பொறுத்து, கணம் X இன் அனைத்து சமானப் பகுதிகளையும் அடக்கிய கணமானது, X இன் "காரணி கணம்" அல்லது "ஈவு கணம்" (quotient set) என அழைக்கப்படுகிறது. இதன் குறியீடு: கணத்தின் ஒவ்வொரு உறுப்பையும் அதன் சமானப் பகுதியுடன் இணைக்கும் "நியமன வீழல் கோப்பு"' ("canonical projection map") ஒன்று ஒவ்வொரு சமான உறவுக்கும் உண்டு. அக்கோப்பு (π) X இலிருந்து "X"/~ -க்கு வரையறுக்கப்பட்ட ஒரு முழுக்கோப்பாகும்: இப்பொழுது வரிசைச் சோடி (a,b) இன் சமானப் பகுதி விகிதமுறு எண் formula_9. இந்த சமான உறவையும் சமானப் பகுதியையும் கொண்டு விகிதமுறு எண்களின் கணத்தை வரையறுக்கலாம். "X" கணத்தின் ஒவ்வொரு உறுப்பு "x" -ம் அதன் சமானப்பகுதி ["x"] இன் ஒரு உறுப்பாகும். "X" கணத்தின் எந்த இரு சமானப் பகுதிகளும் ஒன்று சமமாக இருக்கும் அல்லது சேர்ப்பில்லாக் கணங்களாக இருக்கும். "X" கணத்தின் அனைத்து சமானப் பகுதிகளும் சேர்ந்து "X" இன் பிரிவினையாக அமையும்: "X" இன் ஒவ்வொரு உறுப்பும் ஒரேயொரு சமானப் பகுதியில் மட்டுமே இருக்கும். மறுதலையாக "X" இன் ஒவ்வொரு பிரிவும் ஒரு சமான உறவின் மூலம் கிடைக்கிறது. எனவே: "x" , "y" எனும் இரு உறுப்புகள் கணத்தின் ஒரே பிரிவைச் சேர்ந்ததாக இருந்தால், இருந்தால் மட்டுமே "x" ~ "y" ஆக இருக்க முடியும். அதாவது: கணம் "X" இன் மீது வரையறுக்கப்பட்ட சமான உறவு ~ , "x" , "y" கணத்தின் இரு உறுப்புகள் எனில் பின்வரும் மூன்று கூற்றுகளும் சமானமானவை: திருப்பல்லாண்டு வியாக்கியானம் திருப்பலலாண்டு வியாக்கியானம் என்பது பெரியாழ்வார் திருமொழி முதல் நான்கு பத்துக்கும் எழுதப்பட்ட விரிவுரை ஆகும். பெரியவாச்சான் பிள்ளை நாலாயிர திவ்வியப் பிரபந்தம் நூல் முழுமைக்கும் மணிப்பிரவாள நடையில் வியாக்கியானம் எழுதினார். அவற்றில் பெரியாழ்வார் திருமொழி முதல் நான்கு பத்துக்கும் எழுதப்பட்ட உரை கிடைக்கவில்லை. இந்தப் பகுதிக்கு மட்டும் மணவாள மாமுனிகள் வியாக்கியானம் எழுதியிருக்கிறார். இந்த உரை மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டிருப்பினும் சில இடங்களில் நல்ல தமிழ்நடையும் இதில் அமைந்துள்ளது. எடுத்துக்காட்டு திருப்பாலைப்பந்தல் உலா திருப்பாலைப்பந்தல் உலா என்னும் நூல் அரங்கேற்றப்பட்டது குறித்துத் திருப்பாலை ஊரில் உள்ள கல்வெட்டு குறிப்பிடுகிறது. சைவ எல்லப்ப நாவலர் சோழநாட்டிலிருந்து தொண்டை நாட்டுக்குச் சென்றபோது திருப்பாலைப்பந்தல் ஊர் வழியாகச் சென்றார். இவ்வூர் மக்கள் தம் ஊரிலுள்ள பெருமான்மீது ஓர் உலாநூல் பாடித்தர வேண்டும் என வேண்டினர். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க எல்லப்ப நாவலர் இந்த நூலைப் பாடி அரங்கேற்றினார். அதனைப் பாராட்டி இவருக்கு மனையும், நிலமும் வழங்கிச் சிறப்பு செய்தது பற்றியும், அத்துடன் சாமி நிவேதனத்தில் ஒரு பகுதி நாள்தோறும் வழங்கப்பட்டது பற்றியும் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. இக் கல்வெட்டில் இந்த ஆசிரியரின் பெயர் 'உண்ணாமுலை நயினார் புதல்வரான காலிங்கராய எல்லப்ப நயினார்' எனக் குறிக்கப்பபட்டுள்ளது. திருப்பாவை மூவாயிரப்படி திருப்பாவை மூவாயிரப்படி என்னும் நூல் ஆண்டாள் திருப்பாவை நூலுக்கு எழுதப்பட்ட விரிவுரை. மணவாள மாமுனிகள் இதனை 13 ஆம் நூற்றாண்டில் எழுதினார். இந்த நூல் மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டாலும் நல்ல தமிழ்நடை ஓட்டத்தையும் இதில் காணமுடிகிறது. திருப்பாவை 16 ஆம் பாடல் "நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய கோயில் காப்பானே. கொடி தோன்றும் தோரண வாயில் காப்பானே" என்று தொடங்குகிறது. இதற்கு இந்த நூலில் உள்ள வியாக்கினப் பகுதி. திருப்பிரவாசிரியர் தூக்கியல் திருப்பிரவாசிரியர் தூக்கியல் என்னும் நூல் ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய இலக்கண நூல். தொல்காப்பியம் காட்டும் 26 செய்யுள் உறுப்புகளில் ஒன்று தூக்கு. இந்த உறுப்பினை விளக்கும் தனி நூல் இது ஆகையால் தூக்கியல் என்னும் பெயரினைப் பெற்றுள்ளது. இதன் ஆசிரியர் பெயரைத் 'திருப்பிரவாசிரியர்' என இந்த நூலைக் குறிப்பிடும் உரைநூல்கள் குறிப்பிடுகின்றன. இந்தப் பெயரின் பொருள் விளங்கவில்லை. திருப்பெயர் ஆசிரியர் என்பதன் பிறழ்ச்சியாக இருக்கலாம் என மு. அருணாசலம் கருதுகிறார். தன் கருத்துக்கு உறுதுணையாகச் சில சான்றுகளையும் காட்டுகிறார். . இந்த நூல் கல்லாடரின் பாட்டியல் நூலுக்குக் காலத்தால் முந்தியது. 1 2 3 பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை அல்லது பாளையங்கோட்டை சிறை என்பது தமிழ்நாட்டின் திருநெல்வேலி நகரிலுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க மத்திய சிறைச்சாலை ஆகும்.இந்த சிறையானது தற்பொழுது தமிழ்நாடு சிறைத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ளது. இந்த சிறைச்சாலை 1880ல் கட்டப்பட்டது. 1929 வரை மாவட்டச்சிறையாக செயல்பட்டு வந்தது. 1929 முதல் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியாக மாற்றப்பட்டது. பின் அங்கிருந்து சிறுவர் சீர் திருத்தப்பள்ளி புதுக்கோட்டைக்கு மாற்றப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் ஏப்ரல் 1, 1968 முதல் மத்திய சிறைச்சாலையாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பழைமையான சிறைச்சாலை இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் விடுதலைக்காக போராடும் வீரர்களை அடைத்து வைக்கப் பயன்படுத்தப்பட்டது. சுப்ரமணிய பாரதியார், சுப்பிரமணிய சிவா, வ.உ.சிதம்பரனார் போன்றோர் இந்த சிறையில் அடைக்கப்பட்டனர். தமிழகத்திலுள்ள பெரிய சிறைச்சாலைகளில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு கொடுங்குற்றம் புரிந்தோர், அரசியல் கைதிகள் போன்றோரை அடைத்து வைக்கின்றனர். இதனால் இங்கு பாதுகாப்பு கெடுபிடிகள் தீவிரமாக கடைபிடிக்கப்படுகிறது. சிறை வளாகத்தைச் சுற்றிலும் உயர்ந்த கோட்டை மதில்களும், அதன் மேல் மின்னூட்டப்பட்ட இரும்புக்கம்பி வளையங்களும், 24 மணி நேர கண்காணிப்புக் கோபுரங்களும் உள்ளன. வளாகச்சுவரைச் சுற்றிலும் 10அடிக்கு ஒரு காவலர் வீதம் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த சிறை வளாகம் 117.75 ஏக்கரில் அமைந்துள்ளது.1332 கைதிகளை அடைத்து வைக்கும் திறன் கொண்டது. துணை உலோக ஆக்சைடு குறைகடத்தி துணை உலோக ஆக்சைடு குறைகடத்தி ("complementary metal oxide semiconductor", CMOS) என்பது ஒருங்கிணைந்த சுற்றுகளைத் தயாரிப்பதற்குப் பயன்படும் ஒரு தொழில்நுட்பம் ஆகும். துணை உலோக ஆக்சைடு குறைகடத்தித் தொழில்நுட்பம் (CMOS technology) நுண்செயலிகள், நுண்கட்டுப்படுத்திகள், மாறாநிலைத் தற்காலிக நினைவகங்கள், இலக்க ஏரணச் சுற்றுகள் போன்றவைகளில் பயன்படுகிறது. அதுமட்டுமின்றி இத்தொழில்நுட்பம் தொடரிசைச் சுற்றுகளான படிம உணரிகள் (CMOS sensor), தரவு மாற்றிகள், மிகவும் ஒருங்கிணைக்கப்பட்ட செலுத்தி வாங்கிகள் போன்றவைகளிலும் பயன்படுகிறது. இக்குறைகடத்தித் தொழில்நுட்பத்தை முதன்முறையாக 1967இல் பிராங்க் வான்லாஸ் என்பவர் காப்புரிமை பெற்றார். அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா) அழகர் ஆற்றில் இறங்குதல் அல்லது கள்ளழகர் ஆற்றில் இறங்குதல் என்பது தமிழ்நாட்டின் பழைமை வாய்ந்த மதுரை மாநகரில் சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும் சைவ வைணவ ஒற்றுமைத் திருவிழாகும். இது மதுரை மாநகரில் வீற்றிருக்கும் அன்னை மீனாட்சியின் திருக்கல்யாணத் திருவிழாவுடன் இணைத்துக் கொண்டாடப் பெறுகிறது. தமிழ்நாட்டில் பொதுவாக தமிழில் முதல் மாதமான சித்திரை மாதப் பிறப்பை சித்திரைத் திருவிழாவாகக் கொண்டாடுகின்றனர். சித்திரைத் திருவிழா மதுரையில் தமிழ் வருடப்பிறப்பான சித்திரை மாதத்தில் பௌர்ணமிக்கு முன்னதாக பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. பத்தாம் நாளில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மதுரையின் திருமாலிருஞ்சோலையில் வீற்றிருக்கும் கள்ளழகர் தம் தங்கை மீனாட்சியின் திருமணத்திற்குத் தாமதமாக வருகிறார். அதற்குள் மீனாட்சியின் திருமணம் முடிவடைந்து விடுகிறது. இதனால் கோபமடைந்த அழகர் வைகை ஆற்றில் நீராடிவிட்டு தங்கையைக் காணாமலே வீடு திரும்புகிறார். இந்த நிகழ்ச்சியே திருவிழாவாகக் கொண்டாடப் பெறுகிறது. இந்து சமயத்தில் பல்வேறு சமயப் பிரிவுகள் இருந்தாலும் சைவம், வைணவம் என இரு பிரிவுகளுக்கிடையில் பெரும் கருத்து வேறுபாடுகளும், ஒற்றுமையின்மையும் இருந்து வந்தது. சைவத் திருவிழா, வைணவத் திருவிழா என சமயங்கள் தொடர்புடையனவாக மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் விளங்குகின்றன. இரு சமயங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கோடு மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் இரு விழாக்களையும் ஒன்றாக இணைத்து ஒரே விழாவாக ஆக்கினார். இதனால் தேனூரில் வைகை ஆற்றில் இறங்கி வந்த அழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கும்படியாக விழா மாற்றியமைக்கப்பட்டது. மதுரை மீனாட்சியின் அண்ணனான அழகர் தங்கையின் திருமணத்திற்கு வருவதாகவும், தான் வருவதற்குள் திருமணம் முடிந்துவிடவே ஆற்றிலிருந்து அப்படியே திரும்பிவிடுவதாகவும் புதிய கதையும் புனையப்பட்டது. ஆனால், மண்டூக மகரிசிக்கு சாபவிமோசனம் தரவே அழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார் என்பதே பழைய புராணக்கதையாகும் இயக்கம் தூண்டப்பட்ட பார்வையின்மை இயக்கம் தூண்டப்பட்ட பார்வையின்மை (Motion Induced Blindness) என்பது செயன்முறை கூடத்தில் நோக்கப்படும் ஒரு காட்சி மறைவு அல்லது பார்வைப் புலனுணர்வுப் போலித்தோற்ற நிகழ்வு ஆகும். ஒரு பார்வையாளர் கண்களுக்கு நகரும் அல்லது இயங்கும் பிற்புறத் தோற்றத்தின் பின்னணியில் நிலையான பார்வைத் தூண்டல்கள் மறைந்து போவது இந்நிகழ்வில் நடைபெறுகின்றது. இயக்கம் தூண்டப்பட்ட பார்வையின்மை முதன்முதலில் 1991 ஆம் ஆண்டில் ராமச்சந்திரன் மற்றும் கிரிகோரி என்பவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் போனே, கூபெர்மான், சாகி ஆகியோர் 2001இல் மீண்டும் வெளிக்கொண்டு வந்ததை அடுத்து இதற்கு முக்கியத்துவமும் பெயரும் வழங்கப்பட்டது. பண்டச் சந்தை பண்டச் சந்தை என்பது நேரடியாக அல்லது இணையவழியாக மூல அல்லது முதன்மைப் பண்டங்கள் தொடர்பான வாங்கல், விற்றலைக் குறிக்கும். கோதுமை, காப்பி, கொக்கோ, சர்க்கரை, சோளம், சோயா, பழங்கள் போன்ற உற்பத்தியாக அறுவடை செய்யப்படும் பண்டங்கள் பொதுவாக மென்பண்டங்கள் எனப்படுகின்றன. பிரித்தெடுக்கப்படும் பொன், இரப்பர், பெட்ரோலியம் போன்றவை வன்பண்டங்கள். ஒழுங்குபடுத்தும் நோக்கத்துக்காகப் பண்டங்களை, சக்தி, கால்நடைகளை உள்ளடக்கிய வேளாண்மைப் பண்டங்கள், தொழிற்றுறை உலோகங்கள், அரிய உலோகங்கள் போன்ற பல குழுக்களாகப் பிரிப்பது உண்டு. இவற்றையும் ஏறத்தாழ 100 வகையான முதன்மைப் பண்டங்களாகப் பிரித்துள்ளனர். முதலீட்டாளர்கள் உலக அளவில் ஏறத்தாழ 50 முக்கியமான பண்டச் சந்தைகளை அணுகுகின்றனர். நேரடி வணிகத்துக்கு மாற்றாக இணையவழி விற்று வாங்கும் வசதிகளினால், வணிகமும் அதிகரித்து வருகின்றது. களமர் களமர் என்போர் வயல்வெளிக் களத்தில் போரடித்து வாழும் உழவர் பெருமக்கள். இவர்கள் களத்திலேயே வீடு கட்டிக்கொண்டு வாழ்வர். வேங்கைப் பூவைத் தலையில் சூடிக்கொள்வர். அரித்த கள்ளை அருந்துவர் நெல் தூற்றுவர். இவர்கள் கரும்பு வெட்டும்போதும், நெல் அறுக்கும்போதும் இசையுடன் பாடுவர். சேற்று நிலத்தில் உழும்போதும், எருதுகளை ஓட்டும்போதும், இசைகூட்டிப் பாடுவர். களப்பாளர் களப்பாளர் என்போர் தமிழ்க்குடி மக்கள். தமிழைத் தாய்மொழியாக உடையவர். அச்சுத களப்பாளர் என்பவர் ஒரு சிவனடியார். களப்பாளர், களமர் என்னும் சொற்கள் களம் என்னும் சொல்லிலிருந்து தோன்றியவை. இங்குக் களம் என்பது நெல்லடிக்கும் களம். போரடிக்கும் களம். களப்பாளர் தான் களப்பிரர் என்றும் களப்பாளர் களப்பிரர் வேறு வேறென்றும் ஆய்வாளர்கள் மத்தியில் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. தமிழகத்தின் வடக்கில் வேங்கடப்பகுதியில் வாழ்ந்த "களவர்" என்னும் இனத்தவரே "களப்பாளர்" எனச் சிலர் எண்ணுகிறார்கள். ஆனால் இருவரும் வேறு என்று கூறுவோரும் உள்ளனர். அதற்கு அவர்கள் பின்வரும் சான்றுகளையும் காட்டுகின்றனர். நெற்குன்றவாணர் நெற்குன்றவாணர் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வள்ளல். களப்பாளர் மரபில் தோன்றிய சிற்றரசர். நெற்குன்றங்கிழார், களப்பாளராயர், களப்பாளராசர் என்னும் பெயர்களாலும் இவர் குறிப்பிடப்படுகிறார். முதல் குலோத்துங்க சோழனுக்குத் திறை செலுத்திவந்தவர். திருப்புகலூர் அந்தாதி என்னும் நூலைப் பாடிய புலவர். இவரது வரலாற்றில் வரும் நிகழ்வுகளைத் தொண்டைமண்டல சதகம் குறிப்பிடுகிறது. நாடு வறண்டுபோயிருந்த ஒரு சமயம் இவரால் திறை செலுத்த இயலவில்லை. சோழன் இவரைச் சிறையிலிருமாறு ஆணையிட்டான். காவலர் வந்தனர். புலவர் இறைவனை வணங்கிவிட்டு வருவதாகத் திருப்புகலூர் கோயிலுக்குள் சென்றார். அங்கிருந்த பிள்ளையாரை வழிபட்டு ஒரு பாடலைப் பாடினார். அக் கோயிலிலிருந்த புலமை மிக்க தளிப்பெண் ஒருத்தி "இப்பாடல் ஓர் அந்தாதியின் காப்புச் செய்யுளாக அமையலாமே" என்றாள். கேட்ட புலவர் "பாடல் அந்தாதிக்குக் காப்பு ஆனால் அரசு இறைக்குப் பொருள் ஆகுமா" என்றார். இதனைக் கேட்ட தளிப்பெண் நெற்குன்றவாணரின் நிலைமையை அறிந்துகொண்டு சோழனுக்குச் சேரவேண்டிய திறையைத் தானே செலுத்திப் புலவரை விடுவித்தார். பின்னர் இந்த வாணர் "பூக்கமலம்" எனத் தொடங்கி திருப்புகலூர் அந்தாதி பாடினார். புலவர் புராணம் பாடிய தண்டபாணி தேசிகர் இந்த நெற்குன்றவாணரின் புராணத்தை 30 பாடல்களில் பாடிழிருக்கிறார். இவர் குறிப்பிடும் ஒரு செய்தி. வாணர்மீது பொறாமை கொண்ட அம்பிகாளி என்னும் கயவன் ஒருவன் "ஒரு நாளேனும் உன்னை என் அடிமை ஆக்குகிறேன்" என்றானாம். ஒருநாள் ஒரு புலவர் வாணரிடம் வந்து வாணரைப் போற்றிப் பாடானாராம். புலவருக்குத் தர வாணரிடம் பொருள் இல்லை. வாணர் தன்னை அம்பிகாளியிடம் விற்றுப் புலவர்க்குப் பரிசில் வழங்கினார். பின் வாணர் மனைவி வாணருக்கு உணவிட்டபோது அவர் உணவு கொள்ள மறுத்து, "அம்பிகாளிக்கு இன்று நான் விலை ஆனேன்" என்றாராம். பின் இருவரும் தொண்டை நாட்டை விட்டு அகன்று சோழநாடு சென்று அங்குள்ள திருப்புகலூர் இறைவன்மீது அந்தாதி பாடினாராம். இதனை அறிந்த சோழன் நெற்குன்றவாணரைத் தன் அவைக்களப் புலவராக வைத்துக்கொண்டானாம். புலமை இல்லாத இளம்புலவர்களின் காதை ஒட்டக்கூத்தர் அறுத்த கதை உண்டு. நெற்குன்றவாணர் ஒரு பாடல் பாடி ஒட்டக்கூத்தரைத் திருத்தியிருக்கிறார். திருப்புகலூர் அந்தாதி திருப்புகலூர் அந்தாதி 12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல். இதனை இயற்றியவர் நெற்குன்றவாணர். இரண்டு பாயிரப் பாடல்களும், கட்டளைக் கலித்துறையாலான நூறு அந்தாதிப் பாடல்களும் இதில் உள்ளன. பதினோராம் திருமுறையில் காணப்படும் அந்தாதிப் பாடல்களுக்குப் பின்னர் தோன்றிய அந்தாதிச் சிற்றிலக்கியம் இது. பொற்குன்று அனைய முலை உமை பங்கர்க்குப் புண்ணியற்குச் சிற்குன்று அனைய திருப்புகலூரற்குச் செந்தமுழால் நெற்குன்றவாணன் உரைத்த அந்தாதியை நீள் நிலத்தில் கற்கின்றது அன்றிக் கவி பாட யாவர்க்கும் கற்பு அல்லவே. இந்த நூல் 1875-ல் முதலில் வெளிவந்த பின்னர் பல முறை பலரால் பதிப்பிக்கப்பட்டுள்ளது. திருப்புகழ்ப் புராணம் திருப்புகழ் புராணம் என்னும் நூல் 16 ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல்களில் ஒன்று. சூடாமணி நிகண்டு இயற்றிய மண்டல புருடர் இந்த நூலை இயற்றினார். இது சமண சமய நூல். இங்குள்ள திருப்புகழ் என்னும் சொல் அருணகிரி நாதர் இயற்றிய திருப்புகழைக் குறிக்காது. அருகனுடைய வழியில் வந்த தீர்த்தங்கரர் ஒருவரின் புகழ் என்பதனைக் குறிக்கும் தொடரே இந் நூலிலுள்ள 'திருப்புகழ்'. 'திரு' என்னும் சொல் சமண நெறியில் சமண மதத்தைக் குறிக்கும். இந்த நூலுக்கு முன்னர் தோன்றிய திருநூற்றந்தாதி, திருக்கலம்பகம் என்னும் நூலின் பெயர்களால் இதனை அறியலாம். என்பன இந் நூலில் வரும் தொடர்ச்செய்திகள். சேர்ப்பில்லாக் கணங்கள் கணிதத்தில் ஒன்றுக்கொன்று பொதுவான உறுப்புகளற்ற இரு கணங்கள் இணைப்பில்லாக் கணங்கள் அல்லது சேர்ப்பில்லாக் கணங்கள் அல்லது சேராக் கணங்கள் ("disjoint sets") என அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, {1, 2, 3}, {4, 5, 6} இரண்டும் சேர்ப்பில்லாக் கணங்கள். "A" , "B" இரண்டும் சேர்ப்பில்லா கணங்களெனில் அவற்றின் வெட்டு வெற்றுக் கணம் ஆகும்: "I" குறியீட்டுக் கணம்; "I" இல் உள்ள ஒவ்வொரு "i" க்கும் மேலும் இதில் அனைத்து உறுப்புக்கணங்களின் வெட்டுக்கணம் வெற்றுக் கணமாக இருக்கும்: எடுத்துக்காட்டு: கணங்களடங்கிய ஒரு கணத்தில், அதிலுள்ள அனைத்து உறுப்புக்கணங்களும் ஒன்றுக்கொன்று சேர்ப்பில்லாக் கணங்களாக இருக்கும்போது அனைத்து உறுப்புக்கணங்களின் வெட்டுக்கணமும் வெற்றுக் கணமாக இருக்கும் என்ற கூற்றின் மறுதலை உண்மை இல்லை. எடுத்துக்காட்டு: ஆனால் இம்மூன்று கணங்களும் ஒன்றுக்கொன்று சேர்ப்பில்லாக் கணங்கள் அல்ல. சித்தமெல்லாம் சிவமயம் (நூல்) சித்தமெல்லாம் சிவமயம் என்பது உமா சம்பத் அவர்களால் எழுதப்பெற்ற நூலாகும். பதினெட்டு சித்தர்களின் வரலாற்றினை கதை வடிவில் இந்நூல் விளக்குகிறது. வரம் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நூலானது அரங்க.ஜோதி அவர்களின் குரலில் ஒலிப்புத்தகமாகவும் வெளியிடப்பட்டுள்ளது. சித்தர்கள் பட்டினத்துச் சித்தர் வாழ்வும் வாக்கும் பட்டினத்துச் சித்தர் வாழ்வும் வாக்கும் என்பது ஜெகாதா அவர்களால் எழுதப்பெற்ற நூலாகும். இந்நூல் பட்டினத்தார் எனும் சித்தரின் வாழ்க்கை வரலாற்றினை எடுத்துரைக்கும் நூலாகும். இந்நூலை செண்பகா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சித்தர்கள் கூடு விட்டு கூடு பாய்தல் "கூடு விட்டு கூடு பாய்தல்" என்பது ஒரு உடலினைவிட்டு மறு உடலுக்கு தனது உயிரினை கொண்டு செலுத்தும் கலையாகும். இக்கலைக்கு பரகாயா பிரவேசம் என்ற மற்றொரு பெயருமுண்டு. இதனை சித்தர்கள் அறிந்திருந்தனர் என்றும், திருமூலர் போன்ற சித்தர்கள் இக்கலையை பயன்படுத்தினர் என்றும் சித்தரியல் நூல்கள் தெரிவிக்கின்றனர். கூடுவிட்டு கூடு பாய்தல் கலை அறிந்தவரான திருமூலர் தன்னுடைய வாழ்வில் மூன்று முறை இக்கலையை பயன்படுத்தி வேறு உடலுக்குள் தன்னுடைய செலுத்தியதாக திருமூலர் வரலாறு கூறுகிறது. அச்சம் தவிர் (நூல்) அச்சம் தவிர் என்னும் நூல் சுகி. சிவம் என்பவர் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதி இல்லத்தில் நடைபெற்ற பாரதி விழாவில் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பாகும். இப்பொழிவுகள், அச்சம் எப்படித் தோன்றியது என்பது தொடங்கி அதிலிருந்து எப்படி விடுதலை பெறுவது என்பது வரை சி. சுப்பிரமணிய பாரதியாரின் நோக்கில் ஆய்வு செய்கின்றன. என் கேள்விக்கு என்ன பதில்? – பகுதி 1 (நூல்) என் கேள்விக்கு என்ன பதில்? என்னும் நூல் சுகி. சிவம் என்பவர் சக்தி விகடன் இதழுக்கு ஆசிரியராகப் பணியாற்றிய பொழுது, வாசகர் கேட்ட வினாக்களும் அவற்றிற்கு அவர் இறுத்த விடைகளும் இணைந்த தொகுப்பாகும். இந்நூலுக்கு குன்றக்குடி ஆதினத்தின் தலைவரான தவத்திரு பொன்னம்பல அடிகள் அணிந்துரை வழங்கியிருக்கிறார். இந்நூலில் ஆன்மீகம், சோதிடம், தன் முன்னேற்றம், யோகாசனம், உலக நடப்பு, நம்பிக்கைகள், விழுமியங்கள் ஆகியன உள்ளிட்ட பல்வேறு பொருள்களைப் பற்றிய வினாக்களும் விடைகளும் இடம் பெற்றிருக்கின்றன. இவற்றுள் சமயம், நம்பிக்கை ஆகியவை பற்றிய வினாகளும் விடைகளும் அதிகளவில் இடம் பெற்றிருக்கின்றன. சைவர் சைவர் என்பவர் சிவபெருமானை முழுமுதற்கடவுளாக வழிபடுகின்றவர்கள் ஆவர். இவர்கள் தங்களுடைய சைவ நெறிக் கொள்கைக்கு தக்கவாறு சித்தாந்த சைவர், வீர சைவர் எனவும் அழைக்கப்பெறுகின்றார்கள். இவர்கள் சாம்பல் எனும் திருநீறு அணிந்தும், உத்திராட்சம் அணிந்தும் தங்களை அடையாளப்படுத்துகிறார்கள். இவற்றை அணியாத சைவர்களும் உண்டு. ஸ்ரீபுரம் பொற்கோயில் ஸ்ரீபுரம் பொற்கோயில் (Golden Temple Sripuram) இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் வேலூர் அருகே திருமலைக்கோடி எனும் ஸ்ரீபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமி நாராயணி பொற்கோயில் ஆகும். இக்கோயில் முழுவதும் 1,500 கிலோ தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளது. இக்கோயில் 100 ஏக்கர் பரப்பளவுள்ள அழகிய பூஞ்சோலைகளின் நடுவில் ஸ்ரீசக்கரத்தில் உள்ள நட்சத்திர அமைப்பில் உள்ளது தங்கக் கோயிலை சுற்றியுள்ள அலங்கார வளைவுகள், மண்டபங்கள், முகப்புகள் ஆகியவை இரவு நேரத்தில் வேலூரின் முக்கிய சாலையில் செல்வோரைக் கவரும் வகையில் நவீன விளக்கு ஒளியில் பிரகாசிப்பது இதன் சிறப்பாகும். தற்போது ஸ்ரீலட்சுமி நாராயணி அம்மனுக்கு மட்டும் சந்நிதி உள்ளதால் பெருமாளுக்கு தனி கற்கோயில் உருவாக்கப்படுகின்றது சேய் தனிமம் சேய் தனிமம் ("Daughter element") என்பது கதிரியக்கம் காரணமாகப் புதிதாகத் தோன்றும் தனிமத்தினைக் குறிக்கும். இத்தனிமம் தோன்றக் காரணமான தனிமம் தாய்தனிமம் எனப்படும். எடுத்துக்காட்டிற்காக இங்கு ரேடியம் தாய் தனிமமாகும்; ரேடான் சேய் தனிமமாகும். இங்கு கோபால்ட் தாய் தனிமம் ஆகும்; நிக்கல் சேய் தனிமமாகும். தொகுசுற்று ஒரு தொகுப்புச் சுற்று அல்லது ஒருங்கிணை சுற்று அல்லது ஒற்றைக்கல் ஒருங்கிணப்புச் சுற்று(monolithic integrated circuit) என்பது மண்ணியம் போன்ற குறைக்கடத்திப் பொருளாலான ஒரு சிறிய தகடில் அமைக்கப்பட்ட பல செயல்திறனுள்ள மற்றும் செயல்திறனற்ற உறுப்புகளும் அவற்றின் இணைப்புச் சுற்றுகளும் சேர்ந்த கூட்டமைப்பு ஆகும். இது நுண் சில்லு(microchip அல்லது IC) என்றும் அழைக்கப்படுகிறது. இவற்றைச் சார்பிலி உறுப்புளால் அமைக்கப்படும் பிரிநிலைச் சுற்றுகளைக் காட்டிலும் சிறியதாகத் தயாரிக்கலாம். கிட்டத்தட்ட அனைத்து மின்னணுக் கருவிகளிலும் ஒருங்கிணைச் சுற்றுகள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன. இவை மின்னணுவியலில் ஒரு புதிய புரட்சியை உருவாக்கிவிட்டிருக்கின்றன. நவீன சமூகத்தின் அமைப்பில் பிரிக்கவியலாத உறுப்புளாகத் தற்போது விளங்கும் கணினிகள், செல்லிடத்துப் பேசிகள், மற்றும் பிற இலக்கமுறை வீட்டு உபகரணங்கள் போன்றவற்றைச் சாத்தியப்படுத்தியது தொகுப்புச் சுற்றுகளின் மிகக் குறைந்த உற்பத்திச் செலவே ஆகும். தொகுப்புச்சுற்றுகள் அவை செயல்படும் விதத்தைப் பொருத்து இரு வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை: இதைப்போலவே தொகுப்புச்சுற்றுகள் அவை தயாரிக்கப்படும் விதத்தைப் பொருத்தும் இரு வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை: கதிரியக்கச் சமநிலை அணுக்கரு இயற்பியலில், கதிரியக்கம் காரணமாக ஒரு தனிமம் வேறு ஒரு தனிமமாக மாறும் போது புதிதாகத் தோன்றும் தனிமமும் கதிரியக்கம் உடையதாக இருக்கக் கூடும். எந்த வீதத்தில் தாய் தனிமம் அழிந்து சேய்தனிமம் தோற்றுவிக்கப்படுகறதோ அதே வீதத்தில் சேய்தனிமமும் அழியுமானால் அங்கு ஒரு சமநிலை ஏற்படுகிறது. இதுவே கதிரியக்கச் சமநிலை ("radioactive equlibrium" அல்லது "secular equilibrium") எனப்படுகிறது. இங்கு தாய் தனிமத்தின் அழிவும், அதாவது சேய்தனிமத்தின் ஆக்கமும் அது அழியும் வீதமும் சமமாக இருக்கிறது. இந்துமத சீர்திருத்த இயக்கங்கள் இந்துமத சீர்திருத்த இயக்கங்கள் என்பவை இந்து மதத்தில் காலத்தால் மறைந்து போன பழக்க வழக்கங்களை மீண்டும் அறிமுகம் செய்யவும், மீளுருவாக்கம் செய்யவும் தோற்றுவிக்கப்பெற்ற இயக்கங்களாகும். இந்த இயக்கங்கள் பண்டைய இந்து மதத்தின் சமத்துவ வடிவங்களை மீண்டும் அறிமுகம் செய்தன. மக்களிடையே நிலவும் பாகுபாடுகளையும், சாதி அமைப்புகளையும் கலைந்து சமத்துவம் ஏற்படுத்த பாடுபட்டன. இந்து சமய விழாக்களின் பட்டியல் இது இந்து சமய விழாக்களை பட்டியலிடும் கட்டுரையாகும். சங்ககால மூவேந்தர் மூவேந்தர் என்போர் சேர சோழ பாண்டியர். சங்க காலத்தில் தமிழகத்தை ஆண்ட சேர சோழ பாண்டியர்களின் பெயர்களைப் புறநானூற்றையும் பத்துப்பாட்டையும் தொகுத்தவர்களும், பதிற்றுப்பத்தைத் தொகுத்துப் பதிகம் பாடியவரும் குறிப்பிடுகின்றனர். பாடல்களுக்குள்ளேயும் இவர்களின் பெயர்கள் வருகின்றன. அரசர்களின் பெயர்களில் உள்ள அடைமொழிகளை ஓரளவு பின் தள்ளி அகரவரிசையில் தொகுத்து வரலாற்றுக் குறிப்பு தரப்பட்டுள்ளது. இது வரலாற்றினை ஒப்புநோக்கி அறிய உதவியாக இருக்கும் குறியீட்டுக் கணம் கணிதத்தில் எந்தவொரு கணத்திலும் அதன் அனைத்து உறுப்புகளுக்கும் குறியீடுகள் தரலாம். அவ்விதம் தரப்படும் குறியீடுகளைக் கொண்ட கணம், தரப்பட்ட கணத்தின் குறியீட்டுக் கணம் ("Index set") எனப்படும். "A" என்ற கணத்தின் உறுப்புகளுக்கு இடப்பட்ட குறியீடுகளைக் கொண்ட கணம் "J" எனில் "J" குறியீட்டுக் கணம் என அழைக்கப்படும். குறியிடல் "J" லிருந்து "A" க்கு வரையறுக்கப்படும் ஒரு முழுக்கோப்பாக அமையும். குறியிடப்பட்டவை "குறியிடப்பட்ட குடும்பம் (indexed family)" ஆகும். குறியிடப்பட்ட குடும்பம் பின்வருமாறு எழுதப்படுகிறது: இயல் எண்கள் கணம் formula_5. கிராம்-எதிர் பாக்டீரியா கிராம்-எதிர் பாக்டீரியா (Gram-Negative bacteria) எனப்படுவது, கிராம் சாயமேற்றலின்போது முதன்மைச் சாயத்தை இழந்து, அதற்கு முரணான இரண்டாவது சாயத்தின் (பொதுவாக Safranin எனப்படும் சாயம்) இளஞ்சிவப்பு நிறத்தைப் பெறும் பாக்டீரியா வகையாகும். ஹான்ஸ் கிரிஸ்டியன் கிராம் என்ற டென்மார்க் நாட்டு அறிவியலாளர் பாக்டீரியாக்களை வகைப்படுத்தும் பொருட்டு உருவாக்கிய ஒரு சாயமேற்றல் முறையே கிராம் சாயமேற்றல் என அழைக்கப்படுகின்றது. இது கிராம்-நேர் பாக்டீரியா வகைக்கு எதிரானதாகும். கிராம்-எதிர் பாக்டீரியாக்கள், இழையங்களின் அடிப்படையில் ஆய்வு செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் படிக ஊதா (Crystal violet) என்ற இழையவியலில் பயன்படுத்தும் சாயத்தைத் தமது உயிரணுக்களில் தக்க வைத்துக் கொள்ள முடியாதவையாக இருக்கின்றன. இவை இந்த நிறத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமைக்குக் காரணம் இவற்றின் கலச்சுவரைச் சுற்றி இருக்கும் ஒரு வெளி மென்சவ்வானது சாயத்தை உட்புக விடாததாக இருக்கும். அத்துடன் குறிப்பிட்ட சாயத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் தன்மை கொண்ட பெப்டிடோகிளைக்கன் (Peptidoglycan) இங்கு மெல்லிய படலமாக மட்டுமே இருக்கும். எனவே நிறமகற்றும் அசிட்டோன் போன்ற பதார்த்தங்களில் இது நிறமகற்றப்பட்டு விடும். பின்னர் முரண் சாயமேற்றப்படும்போது, அந்த இரண்டாவது சாயத்தின் நிறமான இளஞ்சிவப்பு நிறத்தைப் பெறும். கிராம் சாயமேற்றல் கிராம் சாயமேற்றல் (Gram Staining) என்பது பாக்டீரியாக்களை இரு பெரும் வகைகளாகப் பிரிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு சாயமேற்றல் முறையாகும். இந்தப் பெயரானது, இம்முறையைக் கண்டுபிடித்த ஹான்ஸ் கிரிஸ்டியன் கிராம் என்ற டென்மார்க் நாட்டு அறிவியலாளரின் பெயரைக் கொண்டு ஏற்படுத்தப்பட்டதாகும். இந்தச் சாயமேற்றல் முறை மூலம் பக்டீரியாக்கள் கிராம்-நேர் பாக்டீரியாக்கள், கிராம்-எதிர் பாக்டீரியாக்கள் என இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. பக்டீரியாக்களின் அமைப்பைப் பொறுத்து, சாயமேற்றலின்போது இவை வெவ்வேறு நிறங்களைப் பெறுகின்றமையால், இவற்றை வேறுபடுத்த முடிகின்றது. முக்கியமாக இவற்றின் கலச்சுவரில் இருக்கும் வேறுபாடே இவற்றை வேறுபடுத்த உதவுகின்றது. பக்டீரியாக்கள் பற்றிய ஆராய்ச்சிகளில் பக்டீரியாக்களைக் கண்டறிய ஈடுபடுத்தப்படும் முதல் முறை கிராம் சாயமேற்றலாகும். எனினும் இது சில வகை பக்டீரியாக்களில் ஒழுங்காக வேலை செய்யாது- அதாவது அவற்றில் இடைப்பட்ட முடிவுகளைத் தரலாம். எனவே தற்காலத்தில் பக்டீரியாக்களை இனங்காண்பதற்காக இச்சாயமேற்றலுக்கு அடுத்த படியாக மரபணுப் பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகின்றது. கிராம் சாயமேற்றல் முறையை பேர்லின் மருத்துவமனையில் வேலை செய்து கொண்டிருந்த ஹான்ஸ் கிரிஸ்டியன் கிராம் (1853–1938) என்ற டென்மார்க் நாட்டு விஞ்ஞானி 1884ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். நுணுக்குக்காட்டியில் பக்டீரியாக்களை இலகுவாகப் பார்வையிடுவதற்காகவே இவர் இம்முறையை விருத்தி செய்தார். எனினும் இம்முறை தற்போது பக்டீரியாக்களைப் பிரித்தறிவதற்காகவே பயன்படுத்தப்படுகின்றது. இச்சாயமேற்றல் முறை மூலம் பக்டீரியாக்களை கிராம்-நேர் மற்றும் கிராம்-எதிர் பக்டீரியாக்கள் என இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்க முடிகின்றது. பக்டீரியாக்களின் கலச்சுவர் பெப்டிடோகிளைக்கன் எனும் பல்சக்கரைட்டு மற்றும் இணைக்கப்பட்ட அமினோ அமிலங்களாலானது. கிராம் நேர் பக்டீரியாக்களின் கலச்சுவர் அதிக தடிப்புடையது என்பதால் கிராம் சாயமேற்றலின் போது இடப்படும் பளிங்கு ஊதா சாயத்தை ஏற்கின்றன. இதனால் கிராம்-நேர் பக்டீரியாக்களை கிராம் சாயமேற்றலின் பின்னர் நுணுக்குக்காட்டியினால் அவதானித்தால் அவை ஊதா நிறத்தில் காட்சியளிக்கின்றன. எனினும் கிராம்-எதிர் பக்டீரியாக்களில் கலச்சுவரின் பெப்டிடோகிளைக்கன் படை மிகவும் தடிப்புக் குறைவாக இருப்பதால் இவை ஏற்கும் பளிங்கு ஊதா சாயம் அற்கஹோலால் கழுவப்படும் போது அகற்றப்பட்டு விடுகின்றது. இதனால் பின்னர் இடப்படும் குங்குமச் சாயத்தையே இவை ஏற்கின்றன. இதனால் கிராம்-எதிர் பக்டீரியாக்கள் கிராம் சாயமேற்றலின் பின்னர் குங்குமத்துக்குரிய இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கின்றன. பக்டீரியாக்களைப் போல ஆர்க்கியா பெப்டிடோகிளைக்கனாலான கலச்சுவரைக் கொண்டிராமையால் இவற்றை கிராம் சாயமேற்றலின் மூலம் பிரித்தறிய முடியாது. கிராம் சாயமேற்றலில் பிரதானமாக நான்கு படிகள் உள்ளன: பளிங்கு ஊதாச் சாயத்தை (Crystal Violet- CV) நீரில் கரைக்கும் போது அது CV மற்றும் Cl அயன்களாகப் பிரிகையடையும். இந்த இரண்டு அயன்களும் கிராம்-நேர் மற்றும் கிராம்-எதிர் ஆகிய இரு வகை பக்டீரியாக்களின் கலச்சுவரினூடாகவும் ஊடுருவும். CV அயன் பக்டீரியக் கலங்களிலுள்ள மறையேற்றமுள்ள அயன்களுடன் தாக்கமடைந்து சாயமேற்றப்பட்ட பக்டீரியாக்களை ஊதா நிறமாக மாற்றுகின்றது. பின்னர் இடப்படும் அயோடின் (I அல்லது I) கலங்களிலுள்ள CV உடன் தாக்கமடைந்து கல்த்தினுள்ளும் கலச்சுவரிலும் பளிங்கு ஊதா-அயோடீன் சிக்கல்களை (CV-I) உருவாக்குகின்றது. இச்சிக்கல்கள் ஊதா நிறத்தை நிலைப்படுத்துகின்றன. எனவே இந்நிலையில் நுணுக்குக்காட்டியூடாக அவதானித்தால் கிராம்-நேர் மற்றும் கிராம்-எதிர் ஆகிய இரு வகைகளும் ஒரே மாதிரியாக ஊதா நிறத்திலேயே தோற்றமளிக்கும். கிராம் சாயமேற்றலின் முக்கியமான படிமுறை நிறநீக்கல் பதார்த்தங்களான அற்கஹோல் அல்லது அசிட்டோன் ஆகியவற்றை இடுதலாகும். கிராம்-எதிர் பக்டீரியாக்கள் மெல்லிய பெப்டிடோகிளைக்கன் கலச்சுவருக்கு வெளிப்புறமாக ஒரு இலிப்போ-பல்சக்கரைட்டு மென்சவ்வைக் கொண்டிருக்கின்றன. கிராம்-நேர் பக்டீரியாக்கள் பிரதான பொஸ்போ-இலிப்பிட்டு மென்சவ்வுக்கு வெளிப்புறமாக பல அடுக்குகளைக் கொண்ட தடித்த பெப்டிடோகிளைக்கனாலான கலச்சுவரைக் கொண்டுள்ளன. அற்கஹோல் கிராம்-எதிர் பக்டீரியாக்களின் இலிப்போ-பல்சக்கரைட்டு மென்சவ்வுடன் தாக்கமடைந்து அம்மென்சவ்வை அகற்றி விடுகின்றது. அம்மென்சவ்வுடன் சேர்த்து CV-I ஊதா நிறச் சாயமும் அகற்றப்பட்டு விடும். ஆனால் கிராம்-நேர் பக்டீரியாக்களில் நிறப்பொருள் அகற்றப்படுவதில்லை. அற்கஹோல் கிராம்-நேர் பக்டீரிய கலத்தில் நீரிழப்பைத் தூண்டுவதால் பளிங்கு ஊதாச்சாயம் கலத்துள் சிக்கப்பட்டு கலத்தின் ஊதா நிறம் தொடர்ந்தும் பேணப்படுகின்றது. எனினும் இப்படிமுறை அவதானமாகச் செய்தல் அவசியமாகும். நிறநீக்கியான அற்கஹோலை சில நொடிகளுக்கு மேல் வழுக்கியில் பேணக் கூடாது. நீண்ட நேரம் அற்கஹோல் பேணப்பட்டால் கிராம்-நேர் பக்டீரியாக்களிலுள்ள ஊதா நிறமும் அகற்றப்பட்டு விடலாம். கிராம்-நேர் பக்டீரியாக்கள் பொதுவாக கலத்தைச் சூழ ஒரு பொஸ்போ-இலிப்பிட்டு மென்சவ்வையும், அதனைச் சூழ தடிப்பான பெப்டிடோகிளைக்கன் கலச்சுவரையும் கொண்டுள்ளன. "Firmicutes" மற்றும் "Actinobacteria" வகைகளைச் சேர்ந்த பக்டீரியாக்கள் இவ்வாறு உள்ளன. இவற்றின் கலக்கட்டமைப்பு சற்று வித்தியாசமானது. கலத்தைச் சூழ முதலில் ஒரு பொஸ்போ-இலிப்பிட்டு மென்சவ்வையும், அதனை அடுத்ததாக மெல்லிய தனிப் படையாலான பெப்டிடோகிளைக்கன் கலச்சுவரையும், அதனை அடுத்ததாக இலிப்போ-பல்சக்கரைட்டாலான இரண்டாவது மென்சவ்வையும் கொண்டுள்ளன. இதுவரை அறியப்பட்ட பக்டீரியாக்களில் அதிகமானவை கிராம்-எதிர் பக்டீரியாக்களாகும். சயனோ பக்டீரியா, ஸ்பைரோகீட்சுக்கள், பச்சை-சல்பர் பக்டீரியாக்கள், அனேகமான புரோட்டியோ பக்டீரியா, எசுச்சீரீச்சியா கொலி ஆகியன கிராம்-எதிர் பக்டீரியாக்களாகும். தொடர்புப் பொறியியல் தொலைத்தொடர்புப் பொறியியல் "(Telecommunications engineering)" அல்லது தொடர்புப் பொறியியல் என்பது மின்பொறியியலையும் கணினிப் பொறியியலையும் சார்ந்த தொலைத்தொடர்பு அமைப்புகளை மேம்படுத்தும் பொறியியல் புலமாகும். இந்தப் பொறியியலின் பணி சுற்றதர் வடிவமைப்பு முதல் பெருந்திரல் வளர்ச்சிக்கான அடுக்கு செயல்நெறிமுறையை வகுப்பது வரை அமைகிறது. தொலைத்தொடர்புப் பொறியாளர் தொலைத்தொடர்புக் கருவிகளையும் ஏந்துகளையும் வடிவமைத்து, நிறுவி மேற்பார்வை செய்தலுக்குப் பொறுப்பாவார் இவ்வகை ஏந்துகளில் சிக்கலான மின்னனியல் நிலைமாற்ற அமைப்புகள், எளிய பழைய தொலைபேசி அமைப்புகள், கண்ணாடியிழை வடங்கள், IP வலையமைப்புகள், நுண்ணலைச் செலுத்த அமைப்புகள் ஆகியன அடங்கும். தொலைத்தொடர்புப் பொறியியல் ஒலிபரப்பு பொறியியலுடன் உறவுடைய பொறியியலாகும். தொலைத்தொடர்புப் பொறியியல் மின்னன் பொரியியல், குடிசார் பொறியியல், அமைப்புப் பொறியியல் ஆகிய துறைகள் இணைந்த பொறியியல் புலமாகும். அருதியாக, தொலைத்தொடர்புப் பொறியாளர்கள் உயர்வேகத் தகவல் செலுத்தப் பணிகளுக்குப் பொறுப்பாவர். இவர்கள் தொலைத்தொடர்னு வலையமைப்பு அக்க்கட்டமைப்புகளை வடிவமைக்க பல்வேறு கருவிகளையும் போக்குவரத்து ஊடகங்களையும் பயன்படுத்துகின்றனர்; மிகப் பரவலான தொலைத்தொடர்பு ஊடகங்களாக முறுக்கிய இணைகம்பிகள், அச்சொன்றிய வடங்கள், கண்ணாடி நாரிழை வடங்கள் ஆகியன அமைகின்றன. இவர்கள் கம்பியில்லா தொடர்பு முறைமைக்கும் தகவல் பரிமாற்றத்துக்கும் பொறுப்பாவர். அதாவது கம்பியில்லா தொலைபேசி அமைப்புகள், வானொலி, செயற்கைக்கோள் தொடர்புகள், இணையம், தொலைக்காட்சித் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றுக்கும் பொறுப்பாவர். தகவல்தொடர்பியல் தகவலை பகிர்ந்துகொள்ளுவதில் மனிதனின் வாழ்வில் பெரும்பங்கு வகுக்கிறது. ஒவ்வொரு உயிரினமும் தம் கருத்தை தமது ஒத்த உயிரினத்திற்கு வெளிப்படுத்துகிறது. இதுவே தகவல் தொடர்பின் தொடக்க நிலையாகும். முந்தைய காலங்களில் மனிதன் தம் கருத்தினை சைகை மூலம் பிறர்க்கு அறிவித்தான். பின் ஓசைகள் மூலமாகவும், பின் படங்கள் மூலமாகவும் தம் கருத்தினை பிறர்க்கு அறிவித்தான். பின்னர் தகவல்களை நீண்ட தொலைவுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது. அதற்கு புறாவினையும், ஒற்றர்களையும் பயன்படுத்தினான். பின்னர் செய்திகளை நீண்ட தொலைவிற்கு குறைந்த நேரத்தில் வேகமாகக் கொண்டு சேர்க்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இதற்கு ஒலி, ஒளிக்கருவிகள் பயன்படுத்தப்பட்டன. அயலவர் படையெடுப்பை மன்னனிடம் தெரிவிக்க ஊர் எல்லையிலேயே ஒரு குறிப்பிட்ட மரத்தை தீயிட்டு கொளுத்தி அறிவித்துள்ளனர். பின்பு இரும்புக் கோபுரங்களில் கம்பிகளை வெவ்வேறு நிலைகளிலும் வடிவங்களிலும் அடுக்கி செய்திகளையும் தகவல்களையும் மிக விரைவாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு சேர்த்துள்ளனர். சில இடங்களில் தொடர்ச்சியாக அமைக்கப்பட்ட மணிக்கூண்டுகளின் மூலம் தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சேர்த்துள்ளனர். தொலைத்தொடர்பு அமைப்புகளைத் தொலைத்தொடர்புப் பொறியாளர்கள் வடிவமைக்கின்றனர், இத்தொழில்நுட்பம் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதித் தொலைவரித் தொழில்நுட்ப மேம்பாடுகளாலும் 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கநிலை வானொலி, தொலைபேசி தொழில்துறை வளர்ச்சிகளாலும் தோன்றிய துறையாகும். இன்று தொலைக்காட்சி, வானொலி, தொலைபேசி ஆகிய கருவிகளும் செயல்முறைகளும் உலகெங்கிலும் பொதுவழக்கில் உள்ள தொலைத்தொடர்பு ஏந்துகளாகும். இவற்ரைப் பல வலையமைப்புகள் இணைக்கின்றன. இவற்ரில், கணினி வலையமைப்புகள், பொது நிலைமாற்ரத் தொலைபேசி வலையமைப்புகள் (PSTN), வானொலி வலையமைப்புகள், தொலைக்காட்சி வலையமைப்புகள் ஆகியன அடங்கும்.இணைய வாயிலாக நடக்கும் கணினித் தொடர்புகள் பலவகைத் தொலைத்தொடர்பு அமைப்புகளில் ஒன்றாகும். இந்தத் தொழில்துறையின் வருவாய், தொகு உலகவிளைபொருளில் 3% ஆக அமைவதால், பொருளியலில் இது பெரும்பாத்திரம் வகிக்கிறது. தகவல் தொடர்பு என்பது தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பிழையில்லாமல் பாதுகாப்பாக கொண்டு சேர்க்கும் செயலாகும். இந்த முறையில் ஒப்புமைத் தகவல் முதலில் இலக்கவியல் தகவலாக மாற்றப்படுகிறது. பின் பல வாயில்களிலிருந்து இதுபோல் வரும் இலக்கவியல் தகவல்கள் குறிமுறையேற்றப்படுகின்றன. பின்னர் அந்த தகவல்கள் கரவாக்கம் செய்யப்படுகிறது. பின்னர் அந்த தகவல்கள் குறியேற்றம் செய்யப்படுகிறது. பின்னர் ஊடகம் அல்லது தகவல் ஊடகம் வழியாக சேரவேண்டிய இடத்திற்கு கொண்டுசேர்க்கப்படுகிறது. இந்த அமைப்பில் தகவல்பிழை கண்டுபிடிக்கும் முறையும் அமைக்கப்பட்டு பிழைகள் திருத்தப்படுகின்றன. பெறும் அமைப்பு அனுப்பும் அமைப்புக்கு நேர் எதிரான செயல்முறைகளைச் செய்கிறது. குறியேற்றத்துக்குப் பதிலாக குறியிறக்கமும், கரவாக்கத்துகுப் பதிலாக வெளிப்படையாக்கமும், குறிமுறையேற்றத்துக்குப் பதிலாக குறிமுறையிறக்கமும் செய்கிறது. மேலும் இறுதியில் தேவையெனில் இலக்கவியல் குறிகைகளை ஒப்புமைக் குறிகைகளாகவும் மாற்றப்படுகிறது. அலைபரப்பி அல்லது அலைசெலுத்தி எனும் தகவல் வாயில், தகவலைப் பரப்ப முடிந்த குறிகையாக மாற்றுகிறது. மின்னணுவியலிலும் தொலைத்தொடர்புகளிலும் அலைபரப்பி என்பது ஒரு மின்னனியல் கருவியாகும். இது உணர்கம்பி வழியாக வானொலி அலைகளை உருவாக்குகிறது. இது ஒலிபரப்பலில் மட்டுமல்லாமல் வானொலித் தொடர்பைப் பயன்படுத்தும் கலப்பேசிகளிலும் பயன்படுகிறது, குறிகை பரப்பும் ஊடகம் அலைபரப்பும் ஊடகம் எனப்ப்டுகிறது. எடுத்துகாட்டாக, ஒலிக்கான அலைபரப்பும் ஊடகமாக காற்று பயன்படுகிறது. ஆனால், நீர்மமோ திண்மமோ கூட ஒலி அலையைப் பரப்ப வல்லன. தொடர்பு ஊடகமாக பல ஊடகங்கள் பயன்படுகின்றன. மிகப் பொதுவான ஊடகங்களில் ஒன்றாக செம்புக் கம்பி பயன்படுகிறது. இது குறைந்த மிந்திறனில் குறிகைகளை நெடுந்தொலைவுக்குக் கொண்டுசெல்கிறது. மற்றொரு புறநிலை ஊடகமாக கண்ணாடி நாரிழை பயன்படுகிறது. இது மிகவும் நெடுந்தொலைவுத் தொஅர்புகளுக்கு அலைபரப்பும் ஊடகமாக உருவாகியது. கண்ணாடி நாரிழை மெல்லிய கண்ணாடிப் புரியாகும் இது ஒளியை தன்கம்பி வழியாக பரப்புகிறது. ஒளி அலைகள், வானொலி அலைகள் போன்ற மின்காந்த அலைகளுக்குப் பொருள் ஊடகம் ஏதும் இல்லதபோது வெற்றிடமே அலைபரப்பு ஊடகமாக அமைகிறது. அலைவாங்கி எனும் தகவல் பெறுமிடம் குறிகையை வாங்கி தேவப்படும் தகவல் வடிவத்துக்கு மாற்றுகிறது. வானொலித் தொடர்புமுறையில, வானொலி அலைவாங்கி என்பது ஒரு மின்னனியல் கருவியாகௌம். இது உணர்கம்பிவழி வரும் வானொலி அலைகளை வாங்கி அவை தாங்கிவரும் தகவலைப் பிரித்து பயன்படும் வடிவில் மீட்கிறது. அலைவாங்கியின் தகவல் ஒலியாகவோ படமாகவோ காணொலியாகவோ இலக்கவியல் தரவுகளாகவோ அமையலாம். கம்பிவழித் தொடர்பியலில் துத்தநாக கம்பிகள்,கண்ணாடி இழைகள்,திருக்கப்பட்ட இரட்டைக் கம்பிகள்,அலை கடத்திகள் ஆகியவற்றின் வழியாகத் தகவல் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. கம்பிவழித் தொடர்புமுறைகள் புதைவடங்களைப் பெரிதும் பயன்படுத்துகிறது; சிலவேளைகளில் மேனிலைக் கம்பித் தொடர்களைப் பயன்படுத்துகிறது, இவற்றின் இணைப்பு வடங்களில் குறிப்பிட்ட புள்ளிகளில் மின்னனியல் குறிகை மிகைப்பிகளும் முனையப் புள்ளியில் ஈற்றுக் கருவிகளும் இணைக்கப்பட்டுள்ளன. கம்பியில்லா தொடர்புமுறையில் தகவல் கம்பிகளோ வடங்களோ அல்லது மின்கடத்திகளோ இல்லாமலே நெடுந்தொலைவுக்குப் பரப்பப்படுகிறது. கம்பிவழித் தொடர்புமுறையில் இயலாத நெடுந்தொலைவு தொடர்புகள் கம்பியில்லா முறையில் அனுப்பமுடிகிறது. கம்பிகள் இன்றி வானொலி அலைகள் வழியாகவும் ஒலியாற்றல் வழியாகவும் அலைபரப்பிகளையும் அலைவாங்கிகளையும் தொலைவிடக் கட்டுபாடுகளையும் பயன்படுத்தித் தகவல் பரப்புதலை நிறைவேற்றும் தொடர்புமுறையே தொலைத்தொடர்புத் தொழில்துறையில் பயன்படுகிறது. Information is transferred in this manner over both short and long distances. சித்தரியல் பரிபாசைகள் சித்தரியல் பரிபாசை என்பது சித்தர்களின் இலக்கியங்களில் இடம் பெறுகின்ற சில சொற்கள் நேரடி அர்த்தமில்லாமல், மறை அர்த்ததினை தருவனவாகும். இச் சொற்களுக்கான பொருள் சித்தர்களுக்கும், சித்தரியலில் பரிச்சயம் பெற்றவர்களுக்கு மட்டுமே தெரியும். உதாரணம் சரஞானம் சரஞானம் என்பது காற்றினை அடக்குகின்ற பயிற்சியாகும். இந்த கலையை சித்தர்கள் அறிந்து வைத்திருந்தாக நம்பிக்கையுள்ளது. இந்த கலையானது இடக்கலை, பிங்கலை, சுழுமுனை என்ற மூன்று பிரிவுகளை உள்ளடக்கியதாகும். சதுர்மார்க்கம் சதுர்மார்க்கம் என்பது சித்தர்கள் இறைவனை வழிபட கடைபிடித்த நான்கு நெறிகளாகும். அவையாவன. இந்த வழிபாட்டு முறைகளைப் பற்றி திருமூலர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். கன்னிசேரி புதூர் கன்னிசேரி புதூர் என்பது விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றூராகும். மகாலிங்க மலையில் தோன்றி வங்கக் கடலில் கலக்கும் அர்ஜுனா நதியின் கரையில் அமைந்த இக்கிராமத்திற்கு கிழக்கே ஆர் ஆர் நகரும், மேற்கே முதலிபட்டியும், வடக்கே சின்னயாபுரமும், தெற்கே அர்ஜுனா நதியும் எல்லையாக உள்ளன. இங்கு ஆடு மற்றும் மாடுகளின் விற்பனைக்கான கால்நடைச் சந்தை சிறிய அளவில் நடைபெறுகிறது. முதலீடு முதலீடு ("Investment") என்பது, நிதியியல், பொருளியல் ஆகிய துறைகளில் இருவேறு விதமான பொருள்களைத் தருகிறது. பொருளியலில் இது, சேமிப்பு, நுகர்வைக் குறைத்தல் போன்றவற்றோடு தொடர்புடையது. நிதியியலைப் பொறுத்தவரை, முதலீடு என்பது, இலாபத்தை எதிர்பார்த்துப் பணத்தை ஏதாவதொரு பொருளாதார முயற்சியில் போடுவதைக் குறிக்கும். இது பொதுவாக ஒரு நீண்ட கால அடிப்படையிலானது. பெரும்பாலான முதலீடுகள் தீவாய்ப்புக்களோடு (risk) கூடியவை. பங்குகள், சொத்து, நிலையான வட்டியுடனான கடனீடுகள் போன்றவற்றிலான முதலீடுகள் இத்தகையவை. நிலையான வட்டியுடனான கடனீடுகளிலான முதலீடுகளுக்குப் பணவீக்கத் தீவாய்ப்பு உண்டு. இதற்குப் புறம்பாக குறுகிய கால இலாபத்தை எதிர்பார்த்துப் பணத்தை ஏதாவது ஒரு முயற்சியில் ஈடுபடுத்துவது சூதாட்டம், அல்லது ஊக வணிகம் ஆகும். பணம் நீண்டகால வைப்பில் இல்லாமல், அதிக தீவாய்ப்புக் கூறுகளோடு கூடிய பணப் பயன்பாடுகளும், குதிரைகளில் பந்தயம் கட்டுதல் போன்றனவும் இவ்வகையுள் அடங்குவன. நீண்டகாலம் வைத்திருக்கும் நோக்கம் இல்லாமல் குறுகியகால இலாபத்தை எதிர்பார்த்து நிறுவனப் பங்குகளை வாங்குவதும் இத்தகையதே. செயற்றிறச் சந்தைக் கருதுகோளின் அடிப்படையில், ஒரேயளவு தீவாய்ப்புக்களோடு கூடிய முதலீடுகளில் இருந்து ஒரேயளவு வருமான வீதத்தையே எதிர்பார்க்கலாம். அதாவது தீவாய்ப்புக் கூடிச் செல்லும்போது, எதிர்பார்க்கும் வருமான வீதமும் கூடிச் செல்லும். இந்தத் தொடர்பிலிருந்து பயன்பெறும் நோக்கத்துடன், நீண்டகால அடிப்படையில் முதலீடுகளைச் செய்வதும் சாத்தியமே. ஊகவணிகத்தையும் முதலீடாகக் கொள்ளும் பொதுவான போக்கு, நடைமுறையில் பல்வேறு தாக்கங்களை உண்டாக்குகிறது. இது ஊகவணிகத்தை முதலீட்டில் இருந்து பிரித்தறியக்கூடிய முதலீட்டாளரின் திறனைக் குறைக்கிறது. ஊகவணிகத்தோடு தொடர்பான தீவாய்ப்புக்கள் குறித்த விழிப்புணர்வைக் குறைக்கிறது. ஊகவணிகத்துக்குக் கிடைக்கக்கூடிய பணத்தின் அளவைக் கூட்டி, முதலீட்டுக்கான பணத்தின் அளவைக் குறைக்கிறது. பொருளியல் கோட்பாடு, பருப்பொருளியலில் ஆகியவை தொடர்பில், முதலீடு என்பது, ஓரலகு காலத்தில், நுகர்வுக்காக அன்றி, எதிர்கால உற்பத்திக்காக வாங்கப்பட்ட பண்டங்களின் அளவைக் குறிக்கிறது. தொடர்வண்டிப் பாதைகளை அமைத்தல், தொழிற்சாலைகளைக் கட்டுதல் என்பன இத்தகைய முதலீடுகளுக்கு எடுத்துக்காட்டுகள். மேலதிக கல்விக்கான செலவு, சேவைக்காலப் பயிற்சிகள் போன்றவை மனித வளத்தின் மீதான முதலீடுகள். இருப்பு முதலீடு என்பது, பண்டங்களின் இருப்பின் திரள்வு ஆகும். இது நேரளவாக அல்லது எதிரளவாக அமையலாம் என்பதுடன், கருதிச் செய்யப்பட்டதாகவோ, கருதாமல் ஏற்பட்டதாகவோ அமையலாம். தேசிய வருமானம், வெளியீடுகள் என்பவற்றில் அளவீடுகளில், "I" எனும் மாறியால் குறிக்கப்படும் "மொத்த முதலீடு", மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒரு கூறாக அமைகின்றது. இது, GDP = C + I + G + NX என்னும் தொடர்பில் அமைகிறது. இங்கே, C நுகர்வு, G அரசாங்கச் செலவினம், NX என்பது, X − M என்பதால் தரப்படும் நிகர ஏற்றுமதி. இதன்படி முதலீடு என்பது, மொத்தச் செலவில் இருந்து, நுகர்வு, அரசாங்கச் செலவினம், நிகர ஏற்றுமதி ஆகியவற்றக் கழித்தபின் எஞ்சுவது ஆகும். (அதாவது, I = GDP − C − G − NX). "I" வாழிடமல்லாத நிலைத்த முதலீடுகள் (புதிய தொழிற்சாலைகள் முதலியன.), வாழிட நிலைத்த முதலீடுகள் (புதிய வீடுகள்), இருப்பு முதலீடுகள் ஆகியவற்றின் சேர்க்கை ஆகும். மொத்த முதலீட்டில் இருந்து தேய்மானத்தைக் கழிப்பதால் "நிகர முதலீடு" பெறப்படுகிறது. ஓராண்டில் அதிகரித்த முதல் இருப்பின் பெறுமானம் நிகர நிலைத்த முதலீடு ஆகும். முதலீடு என்பது, பெரும்பாலும் வருமானம், வட்டி வீதம் ஆகியவற்றின் அடிப்படையில், I = f(Y, r) என்னும் தொடர்பின் மூலம் தரப்படுகிறது. வருமான அதிகரிப்பு, முதலீட்டை ஊக்குவிக்கிறது. அதேவேளை, பணத்தைப் பெற்றுக்கொள்வதற்கான செலவு அதிகரிப்பதால், அதிகரித்த வட்டி வீதம் முதலீட்டைக் குறைக்கிறது. ஒரு நிறுவனம், முதலீட்டுக்காகத் தனது சொந்த நிதியைப் பயன்படுத்தினாலும் கூட, அதை வெளியே வட்டிக்குக் கொடுக்காமல் முதலிடுவது என்ற அளவில் அது ஒரு பிறவாய்ப்புச் செலவாக அமைகிறது. நிதியியலில் முதலீடு என்பது, அது வருமானத்தை உருவாக்கும் அல்லது அதன் பெறுமதி அதிகரித்து அதனைக் கூடிய விலைக்கு விற்கலாம் என்ற எண்ணத்தில், ஒரு சொத்தையோ பொருளையோ வாங்குவது ஆகும். இது பொதுவாக வங்கிகளில் அல்லது அதுபோன்ற பிற நிறுவனங்களில் பணம் வைப்பில் இடுவதை உள்ளடக்குவதில்லை. நீண்ட கால நோக்கில் குறிப்பிடும் போதே பொதுவாக முதலீடு என்னும் சொல் பயன்படுகிறது. சித்தர் கோலம் சித்தர்களின் கோலம் உலகியலிலிருந்து சற்றே மாறுபட்டது. சித்தர்கள் உலகியலைத் துறந்தவர்கள். அவர்களது பாடல்களும் உலகியலைக் கடந்தனவாக இருந்தன. ஓடே கலன். உண்பது ஊரிடு பிச்சை எனப் பெரும்பாலோர் வாழ்ந்தனர். அவர்கள் அணிந்திருந்த உடைகளும் மாறுபட்டிருந்தன. சட்டைமுனி் என்னும் சித்தர் சட்டை அணிந்துகொண்டே இருந்தார். அதனால் இவரைச் சட்டைமுனி என்றும், சட்டமுனி என்றும் வழங்கினர். கம்பளிச்சட்டைமுனி எனவும் இவரைக் குறிப்பிட்டனர். பட்டினத்தார் துறவு பூண்ட பின்னர் கோவணம் மட்டுமே உடுத்திக்கொண்டிருந்தார். சிற்றம்பல நாடிகளும், அவரது மாணாக்கர்களும் பழுதையைக் கட்டிக்கொண்டே வாழ்ந்தனர். வள்ளலார் தலையில் எப்போதும் முக்காடு போட்டுக்கொண்டே வாழ்ந்தார். திருமந்திரம் சட்டைமுனி கயிலாயசித்தர் உரை சட்டைமுனி கயிலாய சித்தர் 16 ஆம் நூற்றாண்டில் வாழந்த ஒரு துறவி. இவர் எப்போதும் சட்டை அணிந்துகொண்டே இருந்ததால் சட்டைமுனி, சட்டமுனி என்றெல்லாம் வழங்கப்பட்டார். அவரது சட்டை கம்பளியாக இருந்தபடியால் கம்பளிச்சட்டைமுனி எனவும் இவரைக் கூறினர். இவர் திருமந்திரம் நூலிலுள்ள 113 பாடல்களை மட்டும் தொகுத்து உரை எழுதியுள்ளார். இந்த 113-ல் 10 பாடல்களுக்கு உரை இல்லை. திருமந்திரம் நூலில் இல்லாத 27 பாடல்களும் இதில் இடம்பெற்றுள்ளன. இவர் எடுத்துக்கொண்ட திருமந்திரப் பாடல்கள் திருமந்திரம் நூலிலுள்ள வரிசை முறையைப் பின்பற்றவில்லை. தமக்கு ஏற்ற முறையில் அடுக்கிக்கொண்டு உரை எழுதுகிறார். இவரது உரையில் வரும் 'மூலன் உரை செய்த முப்பது உபதேசம்' என்னும் பகுதி திருமந்திரத்தில் சேர்க்கப்பட்டுள்ள இடைச்செருகல் பாடலைச் சுட்டுகிறது. திருமூலம் நூலிலுள்ள குழூஉக்குறிகளுக்கும், தெகைக்குறிப்புகளுக்கும் இவரது உரையில் விளக்கங்கள் உள்ளன. திருமந்திரப் பாடல் இப்பாடலுக்கு இவர் தரும் உரை விளக்கம் ஆளுநர் ஆளுநர் ("Governor") என்றால் ஆட்சி செய்பவர் என்ற பொருள் ஆகும். ஆளுநர் என்ற சொல் gouverneur (of French language) என்ற பிரெஞ்சு மொழிச் சொல்லிலிருந்து பிறந்த governor என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லாகும். பொதுவாக ஆளுநர் என்பவர் இறையாண்மைக்கு உட்படாத அரசு ஒன்றின் அதன் அரசுத்தலைவருக்குக் கீழ் செயல்படும் நிருவாக அதிகாரி ஆவார். கூட்டமைப்பு அரசொன்றில் ஆளுநர் ஒருவர் அரசினால் நியமிக்கப்படலாம் அல்லது மக்களால் அல்லது அரசு உறுப்பினர்களால் தெர்ந்தெடுக்கப்படலாம். இந்தியத் தலைமை ஆளுநர் (Governor-General of India), அல்லது 1858 முதல் 1947 வரை விடுதலைக்கு முந்தைய பிரித்தானிய இந்தியாவில் இந்தியத் தலைமை ஆளுநர் (Viceroy and Governor-General of India) இந்தியாவில் பிரித்தானிய நிருவாகத்தின் சார்பாளராகவும் அரசுத் தலைவராகவும் செயல்பட்டார். இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்திய அரசரின் சார்பாளராகவும் பணிவழிப்படி நாட்டுத் தலைவராகவும் விளங்கினார். இப்பதவி 1773-இல் கொல்கத்தாவிலிருந்த வில்லியம் கோட்டையின் பிரித்தானிய மாநில தலைமை ஆளுநராக உருவாக்கப்பட்டது. துவக்கத்தில் வில்லியம் கோட்டைக்கு மட்டுமே ஆட்சியுரிமை பெற்ற தலைமை ஆளுநர் பின்னர் மற்ற கிழக்கிந்திய நிறுவன அதிகாரிகளை மேற்பார்வையிடும் அதிகாரம் பெற்றார். அனைத்து பிரித்தானிய இந்தியாவிற்குமான முழுமையான அதிகாரம் 1833-ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட பின்னர் இந்தியத் தலைமை ஆளுநர் என அறியப்பட்டார். இந்திய அரசியலில் ஆளுநர் என்ற சொல், இந்தியக் குடியரசுத் தலைவரைப் போல் மாநில அளவில் உள்ள ஒரு ஆட்சி செய்பவரைக் குறிக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்ட விதி 153-ன் படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஆளுநர் இருப்பார். இந்த விதி, ஒரே ஒரு நபர் இரண்டு அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஆளுநராக இருக்க முடியும் என்பதைக் கட்டுப்படுத்தாது. இந்தியாவில் உள்ள மாநிலங்களில், பொதுவாக, நடுவண் அரசு எடுக்கும் முடிவின் படி இந்தியக் குடியரசுத் தலைவரால் பணியமர்த்தப்படும் இந்த ஆளுநரே அந்தந்த மாநிலங்களின் தலைவர் ஆவார். ஆளுநருக்கு, அவர் பதவி ஏற்கும் மாநிலத்தில் உள்ள உயர் நீதி மன்றத் தலைமை நீதிபதி பதவிப்பொறுப்பு செய்து வைப்பார். அவர் இல்லாத போது அவருக்கு அடுத்த நிலையில் உள்ள அல்லது மாநிலத்தில் உள்ள மூத்த நீதிபதி பதவிப்பொறுப்பு செய்து வைப்பார். இந்திய மாநில ஆளுநர் இந்தியாவின் மாநிலங்களில் ஆளுநர்களும், இந்தியாவின் ஆட்சிப்பகுதிகளில் துணை ஆளுநர்களும் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பெற்றுப் பணியாற்றுகின்றனர். ஆளுநர்கள் மற்றும் துணை ஆளுநர்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுகின்றனர். இந்தியத் தலைமை ஆளுநர் அல்லது வைசிராய் என்பவர் 1858 முதல் 1947 வரை இந்தியாவில் பிரித்தானிய நிருவாகத்தின் சார்பாளராகவும் அரசுத் தலைவராகவும் செயல்பட்டார். இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்திய அரசரின் சார்பாளராகவும் பணிவழிப்படி நாட்டுத் தலைவராகவும் விளங்கினார். இப்பதவி 1773-இல் கொல்கத்தாவிலிருந்த வில்லியம் கோட்டையின் பிரித்தானிய மாநிலத்தின் தலைமை ஆளுநராக உருவாக்கப்பட்டது. துவக்கத்தில் வில்லியம் கோட்டைக்கு மட்டுமே ஆட்சியுரிமை பெற்ற தலைமை ஆளுநர் பின்னர் மற்ற கிழக்கிந்திய நிறுவன அதிகாரிகளை மேற்பார்வையிடும் அதிகாரம் பெற்றார். அனைத்து பிரித்தானிய இந்தியாவிற்குமான முழுமையான அதிகாரம் 1833-ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட பின்னர் இந்தியத் தலைமை ஆளுநர் என அறியப்பட்டார். இந்திய அரசியலில் ஆளுநர் என்ற சொல், நடுவணரசில் இந்தியக் குடியரசுத் தலைவரைப் போல் மாநிலவளவில் உள்ள ஒரு ஆட்சி செய்பவரைக் குறிக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்ட விதி 153-ன் படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஆளுநர் இருப்பார். இந்த விதி, ஒரே ஒரு நபர் இரண்டு அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஆளுநராக இருக்க முடியும் என்பதைக் கட்டுப்படுத்தாது. பொதுவாக, நடுவண் அரசு எடுக்கும் முடிவின் படி இந்தியக் குடியரசுத் தலைவரால் பணியமர்த்தப்படும் ஆளுநரே அந்தந்த மாநிலங்களின் அரசுத் தலைவர் ஆவார். ஆளுநருக்கு, அவர் பதவி ஏற்கும் மாநிலத்தில் உள்ள உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவிப்பொறுப்பு செய்து வைப்பார். அவர் இல்லாதபோது அவருக்கு அடுத்த நிலையில் உள்ள அல்லது மாநிலத்தில் உள்ள மூத்த நீதிபதி பதவிப்பொறுப்பு செய்து வைப்பார். ஆளுநருக்கு உதவ, மாநில அளவில் ஒரு முதல் அமைச்சர் அல்லது முதல்வர், தன் தலைமையின் கீழ் இயங்கும் அமைச்சரவையுடன் செயல்படுகிறார். ஆளுநரின் பதவிகள் மாநில அளவில் சம்பிரதாயப் பதவிகளாகவே கருதப்படுகின்றது. ஆட்சியில் ஆளுநரோ துணை ஆளுநரோ பங்கெடுப்பதில்லை. மாறாக அம்மாநில முதலைமச்சர் மற்றும் அவரது அமைச்சரவையைச் சேர்ந்த அமைச்சர்களிடமே அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் ஆட்சிப் பிரதேசங்களில் துணை நிலை ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தில்லி, அந்தமான் மற்றும் நிக்கோபார்த் தீவுகள் மற்றும் புதுவை ஆகிய பகுதிகளில் துணை நிலை ஆளுநர்கள் பதவி வகிக்கின்றனர். துணை ஆளுநர்கள் மாநில ஆளுநர்களைப் போன்ற படிநிலையைக் கொண்டவர்கள். இந்தியாவிலுள்ள ஆட்சிப் பிரதேசங்களில் தில்லி, அந்தமான் மற்றும் நிக்கோபார்த் தீவுகள் மற்றும் புதுவை தவிர பிற இடங்களில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் ஆட்சிப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகின்றார். புருவநடு புருவநடு என்பது சித்தரியலில் குறிப்பிடப்பெறும் ஆறு ஆதாரங்களில் இறுதியானதாகும். இது ஆக்ஞேயம் என்றும் அழைக்கப்பெறுகிறது. இந்த ஆதாரம் மிடறு என்று அழைக்கப்பெறும் விசுத்தத்திற்கு மேல் அமைந்துள்ளது. சித்தர்கள் - இளமுனைவர் தமிழப்பிரியன் - வரம் பதிப்பகம் மூலம் (ஆதாரம்) மூலம் (Sanskrit: मूलाधार, மூலாதாரம்) என்பது சித்தரியலில் இடம்பெறுகின்ற ஆறு ஆதாரங்களில் முதன்மையானதாகும். இது மூலாதாரம் என்று வழங்கப்பெறுகிறது. இதன் பொருள் உடலுக்கு முதல் ஆதாரம் என்பதாகும். சித்தர்கள் - இளமுனைவர் தமிழப்பிரியன் திருமந்திரார்த்த அரும்பத விளக்கம் திருமந்திரம் என்பது இங்கு வைணவ மந்திரத்தைக் குறிக்கும். இந்த மந்திர வியாக்கியானத்துக்கு 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிள்ளை லோகஞ்சீயர், தொட்டாசிரியர் ஆகியோர் எழுதிய அரும்பத விளக்கங்களே இந்த நூல். வைணவத்தில் மூன்று மந்திரங்களை மந்திரத்திரையம் என்பர். அவற்றுள் முதலாவது திருமந்திரம் ஓம் நமோ நாராயணாய என்பது. இதனை அஷ்டாஷரம் என்பர். இதற்கு அரும்பத விளக்கம் கூறுவதே திருமந்திரார்த்த அரும்பத விளக்கம் என்னும் நூல். திருமங்கை ஆழ்வார் "நான் கண்டுகொண்டேன்" எனப் பாடுவது இதனையே. இதன் பொருளை விளக்கிப் பிள்ளை லோகாசாரியார் முமுட்சுகப்படி என்று எழுதினார். இது இவர் எழுதிய அட்ட தச ரகசியங்களில் ஒன்று. முதல் திருமந்திரார்த்த பகுதிக்கு இந்தப் பிள்ளை லோகாசாரியரின் தம்பி 'அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்' வியாக்கியானம் எழுதியிருக்கிறார். இந்த வியாக்கியானத்துக்கு 'பிள்ளை லோகம் சீயர்' சுருக்கமாகவும், சுத்தமாகவும் தொட்டாசிரியர் சற்று விரிவாகவும், அரும்பத விளக்கம் எழுதியிருக்கிறார்கள். பின்னர் எம்பாவையங்கார் பின்னர் மிக விரிவான மற்றொரு வியாக்கியானம் எழுதினார். இவை யாவும் ஒரு நூலாக அச்சிடப்பட்டுள்ளன. பல கதைகளை எழுதிச் சேர்த்த பிள்ளை லோகஞ்சீயர் இத் திருமந்திரம் உபதேசிக்கப்பட்ட கதையையும் இவ்வுரையில் கூறியிருக்கிறார். இந்த அரும்பதவுரை சுருக்கமாகவும், சுவையாகவும் உள்ளது. சுவாதிட்டானம் சுவாதிட்டானம் என்பது சித்தரியலில் இடம்பெறுகின்றன ஆறு ஆதாரங்களில் இரண்டாவது ஆதாரமாகும். இந்த ஆதாரம் மூலாதாரத்திற்கு மேலே அமைந்துள்ளது. ஸ்வாதிட்டானம் என்பதிலுள்ள - ஸ்வ என்கிற சொல்லானது பரமானலிங்கம் என்பதை குறிக்கிறது. சித்தர்கள் (நூல்) - இளமுனைவர் தமிழ்ப்பிரியன் - வரம் பதிக்கப்பகம் மணிப்பூரகம் மணிபூரகம் என்பது சித்தரியல் விளக்கப்பெற்றுள்ள ஆறு ஆதாரங்களில் மூன்றாவதாகும். இந்த ஆதாரம் சுவாதிட்டத்திற்கு மேல் அமைந்துள்ளது. இந்த ஆதாரம் இரத்தினம் போல் ஒளிரும் தன்மையுடையது என்பதால் மணிபூரகம் என்ற பெயரைப் பெற்றது. சித்தர்கள் - இளமுனைவர் தமிழ்ப்பிரியன் மிடறு மிடறு என்பது சித்தரியலில் இடம்பெற்றுள்ள ஆறு ஆதரங்களில் ஐந்தாவதாகும். இந்த ஆதாரம் விசுத்தம் என்றும் அழைக்கப்பெறுகிறது. ஜீவான்மாவிற்கு இன்பம் தரக்கூடியது என்பதால் விசித்தம் என்ற பெயர்பெற்றது. சித்தர்கள் - இளமுனைவர் தமிழ்ப்பிரியன் நேர்ப்பின்னூட்டம் நேர்ப்பின்னூட்டம் ("Positive feedback") என்பது ஓர் அமைப்பில் சிறு சலனம் ஏற்படும் வேளையில் உண்டாகும் விளைவு அச்சலனத்தைப் பன்மடங்கு பெரிதாக்கிக் காட்டுகின்ற செயல்முறையைக் குறிக்கிறது. "அகரம் ஆகாரத்தை அதிகரிக்கும்போது ஆகாரம் அகரத்தை மேலும் அதிகரிக்கும்" ("A produces more of B which in turn produces more of A") என்னும் தத்துவச் சுழலாக நேர்ப்பின்னூட்டம் அமைகிறது. அதற்கு மாறாக, எதிர்ப்பின்னூட்டம் ஏற்படும்போது ஓர் அமைப்பு குறைவடையவோ தாக்கப்படவோ செய்கிறது. கணிதத் துறையில் நேர்ப்பின்னூட்டம் என்பது பின்னூட்டம் என்னும் கொளுவியின்மீது நேர்த்தாக்கம் என்னும் கொளுவி சுற்றுவதைக் குறிக்கும். அதாவது, நேர்ப்பின்னூட்டத்தின் வழியாக உள்ளிடுகையின் அளவு அதிகரிக்கிறது. நேர்ப்பின்னூட்டம் நிகழும்போது ஓர் அமைப்பு தனது அசையாநிலையிலிருந்து அசையத்தொடங்குகிறது. கொளுவி ஈட்டு நேர்முறையாகவும் ஒன்றுக்கு மேலாகவும் அமைந்தால் பல்குவளர்ச்சி ("exponential growth") ஏற்பட்டு, நடுநிலையிலிருந்து சலனம் உண்டாகி அசைவும் மாற்றமும் அதிகரிக்கும் அமைப்பு அளவைகள் மிதமிஞ்சிய நிலைக்குப் போய், அமைப்பைச் சேதப்படுத்தவோ அழிக்கவோ செய்யக்கூடும்; அல்லது அமைப்பைப் பாதித்து அதை ஒரு புதிய நடுநிலைக்குக் கொணரக்கூடும். நேர்ப்பின்னூட்டத்தைக் கட்டுப்படுத்தும் கூறுகள் இவை: அமைப்பில் உள்ள குறிகள் வடிகட்டப்படுதல், மிதமாக்கப்படுதல், குறைக்கப்படுதல், அல்லது எதிர்ப்பின்னூட்டத்தால் நீக்கப்படுதல்/குறைக்கப்படுதல். நேர்ப்பின்னூட்டம் வழியாக மனித உடலில் நிகழும் செயல்பாடு நிறுத்தம் பெறுவதற்கான செயலும் உடலிலேயே நிகழ்கிறது. எடுத்துக்காட்டாக, குழந்தைப் பிறப்பு வேளையில் தாயின் கருப்பை சுருங்கி இறுகும் நேர்ப்பின்னூட்டம் குழந்தை பிறந்ததும் நின்றுவிடும். நேர்ப்பின்னூட்டம் வழியாக இரத்தம் உறைந்த பின்னர் சில வேதிப்பொருள்கள் இரத்த உறைவு நிறுத்தப்பட காரணிகளாகின்றன. அதுபோலவே, தாயின் முலைநுனியைச் சொதப்பிப் பாலுண்ணும் குழந்தை தாயின் மார்பகத்திலிருந்து வாயை அகற்றியதும் பால்சுரப்பது நின்றுவிடும். அறிவுத்திறன் மிக்க மாணவர்கள் தாம் ஒரு குறிப்பிட்ட பொருள் பற்றிய அறிவைப் பெறவேண்டும் என்று குறிக்கோள் வைத்து, அக்குறிக்கோளை அடைந்ததும் அதனால் ஏற்படும் நிறைவால் மகிழ்ந்து, மீண்டும் உயர்ந்த குறிக்கோளை முன்வைத்துச் செயல்பட்டு முன்னேறுவதில் நேர்ப்பின்னூட்டத் தத்துவம் துலங்குகிறது என்று வின்னர் என்னும் அறிஞர் விளக்குகிறார். அவர் இச்செயல்பாட்டை "வெற்றி வெறி" ("rage to master") என்று அழைக்கிறார். சிறுவயதிலேயே பெரியவர்களுக்குரிய அறிவும் திறமையும் கொண்டோராய் விளங்கும் சிறுமுது அறிஞர் என்னும் நிகழ்வையும் நேர்ப்பின்னூட்டத்தின் வழி விளக்கலாம் என்று வாண்டெர்வெர்ட் என்னும் அறிஞர் கூறுகிறார். அக்கருத்தின்படி, செயல்பாட்டு நினைவுத்திறன் ("working memory") சிந்தனை/செயல் வழியாக அதிகமதிகம் வெளிப்பட்டு, அது சிறுமூளைக்கு கொண்டுசெல்லப்பட்டு, அங்கு சீரொழுக்காக முறைப்படுத்தப்படுகிறது. அது மறுபடியும் செயல்பாட்டு நினைவுத்திறனுக்கு ஊட்டம் தருகிறது. இவ்வாறு மீண்டும் மீண்டும் நிகழ்வதால் சில குழந்தைகள் அதிசயமான விதத்தில் தங்கள் வயதைப் பெரிதும் தாண்டிய அறிவும் திறமையும் கொண்டவர்களாகத் திகழ்கின்றனர். மொழியைக் கையாளுவதில் திறமை பெறுவதிலும் இத்தகைய நேர்ப்பின்னூட்டம் நிகழ்வதாக வாண்டெர்வெர்ட் கருதுகிறார். பொருளியியலில் நோபல் பரிசு பெற்ற அறிஞர் கன்னர் மிர்டால் ("Gunnar Myrdal") என்பவர் பொருளாதார சமனின்மைக்கும் வறுமைக்கும் இடையே நேர்ப்பின்னூட்டம் இருப்பதைக் காட்டியுள்ளார். அதாவது பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும்போது ஏழைகளுக்கும் செல்வர்களுக்கும் இடையே இடைவெளி அதிகரிக்கிறது. அந்த அதிகரிப்பு வறுமையை வளர்க்கிறது. அதனால் பொருளாதார ஏற்றத்தாழ்வு மேலும் அதிகரிக்கிறது. இது ஒரு தீச்சுழல் போல ("vicious cycle") செயல்படுகிறது. கன்னர் மிர்டால் என்னும் அதே அறிஞர் ஐக்கிய அமெரிக்காவின் இனப்பிரச்சினையையும் நேர்ப்பின்னூட்டம் வழி விளக்கியுள்ளார். வெள்ளையர்கள் கருப்பர்களை அறிவிலும் நடத்தையிலும் தாழ்ந்தவர்களாகக் கருதுவதால் கருப்பர்கள் தாங்கள் உண்மையாகவே அப்படித்தான் இருப்பதாக நம்பத் தொடங்குகின்றனர். அதனால் அவர்கள் தம் தாழ்நிலையிலிருந்து மேலே எழ முடியாமற்போகிறது. அந்நிலையைச் சுட்டிக்காட்டி வெள்ளையர்கள் தங்கள் இனமே உயர்ந்தது என்னும் முற்சார்வுப் போக்கில் மீண்டும் உறுதிகொள்கின்றனர். இது ஒரு சுழல்செயலாக மாறிவிடுகிறது. ஒரு செயல் மற்றதற்குக் காரணமாகவும் விளைவாகவும் மாறுகிறது. இதே தத்துவம் உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி என்னும் வேறுபாடுகள் மாறாமல் வளர்ந்துகொண்டே போவதிலும் வெளிப்படுவதாக மிர்டால் காட்டுகிறார். ஆப்பு வடிகட்டி ஆப்பு வடிகட்டி அல்லது சரிவுக் கதிர்வீச்சு வடிப்பான் ("Wedge filter") என்பது கதிர் மருத்துவத்தின் போது, கதிர்வீச்சிப் புலத்தினை தேவையின் பொருட்டு மாற்றியமைக்க பயன் படுத்தப்படும் ஆப்பு வடிவிலான வடிகட்டிகளாகும். புலத்தினை மாற்றியமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதுண்டு. கதிர்புலத்தில், கதிர்வீச்சினை ஏற்றுக் கொள்ளும் பொருட்களை அமைத்து மாற்றுவது ஒரு முறையாகும். இது போன்ற ஆப்பு வடிவிலான ஈயத் தகடுகளை வைத்து, நோயாளியின் மீது விழும் கதிர் வீச்சின் அளவை மாற்றி அமைப்பது நடைமுறையிலுள்ளது. இந்த உலோகத் தகடுகளின் அமைப்பைக் கொண்டு இவைகள் ஆப்பு (Wedge) என்றே அறியப்படுகின்றன. அலுமினியம், காரீயம், செம்பு முதலிய உலோகங்கள் பயன்படுகின்றன. ஆப்புகள், கதிர் வீச்சுக் கற்றையில் வைக்கப்படும் போது, அதன் தடிப்பு மாறுபடுவதால் அதனை ஊடுருவிச் செல்லும் கற்றையின் செறிவு, மெல்லிய பகுதியில் அதிகமாகவும் தடித்தப்பகுதியில் குறைவாகவும் இருக்கும். ஆப்புகள் இவ்வாறு கதிர் வீச்சினை பகுத்து கடத்துவதால் அவைகள் ஆப்பு வடிகட்டிகள் எனப்படுகின்றன. ஆப்பு இல்லாத நிலையில் கதிர்வீச்சுப் புலம் சீராக இருக்கும். புலத்தின் செறிவு அதன் விளிம்புகளில் சற்றுக் குறைவாக இருப்பினும் பொதுவாக சீராகவே கணப்படும். ஆப்பினைக் கதிர்வீச்சுக் கற்றையில் வைக்கும் போது கதிர்புலம் மாறுபடுகிறது. இவ்வாறு ஆப்பு உள்ளபோது பெறப்படும் கதிர்வீச்சுப் புலம் ஆப்புப் புலம் ("Wedge field") எனப்படும். ஆப்புக் காரணி ("Wedge factor") என்பது கதிர்வீச்சுப் புலத்தில் மைய அச்சுக் கோட்டில் ஒருகுறிப்பிட்ட தொலைவில், ஆப்பு உள்ளபோது பெறப்படும் கதிர்வீச்சளவிற்கும், அதேதொலைவில் ஆப்பு இல்லாத நிலையில் பெறப்படும் கதிர்வீச்சளவிற்கும் உள்ள விகிதமே ஆப்புக் காரணி எனப்படும். ஆப்புக் கோணம் ("Wedge angle") என்பது உண்மையில் பயன்படுத்தப்படும் ஆப்பின் கோணமன்று. மாறாக ஒரு குறிப்பிட்ட ஆழத்தில், கிடைமட்டத்திலுள்ள ஓரளவுக் கோடு, ஆப்பின் பயன்பாடு காரணமாக எவ்வளவு பாகை (கோணம்) விலக்கமுறுகிறது என்னும் கோணலளவாகும். சைதாபேட்டை நகராட்சி சைதாபேட்டை நகராட்சி 1946 இல் புனித ஜார்ஜ் டவுன் நகராட்சி ( மதராசு நகராட்சி) உடன் இணைக்க பெற்றது. இதன் பின்னரே மாதரசு நகராட்சி , மாநகராட்சி ஆக உயர்வு பெற்றது . மேலும் சைதாபேட்டை ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பழைய செங்கல்பட்டு ஜில்லா விற்கு தலையகம் ஆக இருந்து உள்ளது (1801-1904). சைதாபேட்டை நகராட்சி உள் அடக்கிய புகுதிகள் ஆவன , அடையாறு, மாம்பலம், தேனாம்பேட்டை , கிண்டி , புலியூர் , ஆகியன ஆகும் . இவையும் சைதாபேட்டை உடன் 1946 இல் மாதரசு நகராட்சி உடன் இணைக்க பெற்றன . இன்றைய தி. நகர் சைதாப்பேட்டை நகரின் சந்தை பகுதி ஆகும் . செம்பியம் - அயனாவரம் நகராட்சி செம்பியம் - அயனாவரம் நகராட்சி செம்பியம் - அயனாவரம் நகராட்சி 1946 இல் புனித ஜார்ஜ் டவுன் நகராட்சியுடன் இணைக்கப்பெற்ற ஒரு இறந்த நகராட்சி ஆகும். மேலும் செம்பியம் , பழைய செங்கல்பட்டு மாவட்டத்தின் சைதாப்பேட்டை வட்டத்தில்ல் இருந்த ஒரு துணைவட்டம் ஆகும். வட மதராசு பகுதியும் முக்கிய வர்த்தகப் பகுதியுமான அயனாவரம், செம்பியம் நகராட்சியின் ஒரு அங்கம் ஆகும் . சிறுவல்லூர் , பெரவள்ளூர் , சின்ன செம்மரம்பாக்கம் ஆகியன செம்பியம் நகராட்சியின் அங்கங்களே ஆகும். செம்பியம் ஊராட்சியின் இணைப்புக்குப் பிறகே புனித ஜார்ஜ் டவுன் நகராட்சி மதராசு மாநகராட்சியாக உயர்வு பெற்றது . நெவின்ஸ் செல்வதுரை நெவின்ஸ் செல்வதுரை ("Nevins Selvadurai", 15 அக்டோபர் 1863 – 28 ஏப்ரல் 1938) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், ஆசிரியரும் ஆவார். இலங்கை அரசாங்க சபையின் ஊர்காவற்துறை உறுப்பினரராகவும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபராகவும் இருந்தவர். செல்வதுரை 1863 அக்டோபர் 15 இல் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய வில்லியம் நெவின்ஸ் சிதம்பரப்பிள்ளை என்பவருக்குப் பிறந்தார். வட்டுக்கோட்டை ஆரம்பப் பாடசாலையிலும், பின்னர் யாழ்ப்பாணம் உவெசுலியன் மத்திய கல்லூரியிலும் கல்வி கற்றார். 15 வயதில் சென்னை, மாநிலக் கல்லூரியில் சேர்ந்து அறிவியலில் சிறப்புப் பட்டம் பெற்றார். முத்துசுவாமி வாட்சன் என்பவரின் மகள் மார்கரெட் அன்னி பாப்பம்மா என்பவரை 1889 இல் திருமணம் புரிந்தார். இவர்களுக்குப் பல பிள்ளைகள் இருந்தனர். பட்டம் பெற்றுத் திரும்பிய பின்னர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஆசிரியப் பணியைத் தொடங்கினார். 1892 முதல் 1926 வரை இல் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபராகப் பணியாற்றினார். பின்னர் சிறிது காலம் கண்டி திரித்துவக் கல்லூரியில் அதிபராகப் பணியாற்றினார். 1923 சூன் மாதத்தில் கல்வியில் இவரது சேவைக்காக பிரித்தானிய இராச்சியத்தின் ஆணை விருது (Order of the British Empire) வழங்கப்பட்டது ஆசிரியப் பணியில் இருந்து இளைப்பாறிய பின்னர், கல்வி வாரியன், பல்கலைக்கழகக் கல்லூரிப் பேரவை போன்ற பல அமைப்புகளில் உறுப்பினராக இருந்து சேவையாற்றினார். 1934 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்க சபைக்கு ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அதன் உறுப்பினரானார். 1936 தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு அருணாசலம் மகாதேவாவிடம் தோற்றார். அமைந்தகரை நகராட்சி அமைந்தகரை நகராட்சி 1946 இல் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பெற்ற ஒரு இறந்த நகராட்சி ஆகும். அரும்பாக்கம், சூளைமேடு, பெரியமேடு , கூவக்காடு (இன்றைய அண்ணா நகர்) ஆகியவை அமிஞ்சிகரையுடனும் சென்னை நகராட்சியுடனும் இணைந்து சென்னை மாநகரமாக வழி வகுத்தன. தாமரைக்குளம் நகராட்சி (திருவண்ணாமலை ) தாமரைக்குளம் நகராட்சி 1992 இல் திருவண்ணாமலை நகராட்சியுடன் இணைந்த ஒரு இரண்டாம் நிலை நகராட்சி ஆகும். 1991 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி தாமரைகுளம் நகரத்தின் மக்கள் தொகை 34 , 789 ஆகும் . இன்று இது திருவண்ணாமலை நகரத்தில் தாமரை நகர் என்று அறியப்பட்டு வருகிறது. ஆயினும் இது இன்னும் சட்டபூர்வமாக திருவண்ணாமலை நகராட்சியுடன் இணைக்கப்படவில்லை . இது மட்டும் திருவண்ணாமலை நகரத்துடன் இணைந்தால் திருவண்ணாமலை மாநகராட்சியாக வழி வகுக்கும் . ஆயினும் நகராட்சி அந்தசுது (அந்தஸ்து) வில் இருந்து நீக்கப்பட்ட இது தற்போது "நகரியம்" ஆக செயல்ப்பட்டு வருகிறது . 2011 ஆண்டு தகவலின் படி இங்கு 1,02,678 மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இரமணாசுரமம் நகராட்சி இரமணாசுரமம் நகராட்சி 1992 இல் திருவருணை ( திருவண்ணாமலை ) நகராட்சியுடன் இணைந்த ஒரு மூன்றாம் நிலை நகராட்சி ஆகும் . இங்கு புகழ் பெற்ற இரமண மகரிசியின் இராமனாசுரமம் உள்ளது . அனால் மாறிவிட்ட அரசாங்கம் காரணமாக இது நகராட்சி நிலையில் இருந்து அகர்ரபட்டலும் அருணை நகருடன் இணையாமல் "நகரியம்" ஆக தாமரைக்குளம் போலவே செயல் பட்டு வருகிறது. 1991 இல் 31,938 இருந்த இதன் மக்கட்தொகை 2001 இல் 79,925 ஆக உயர்ந்து உள்ளது . மேலும் 2011 இல் வெளியிட்ட கணக்கெடுப்பில் இதன் மக்கள் தொகை 1,01,617 ஆக அதிகரித்து உள்ளது . இந்திய வரலாற்றில் பெண்மை (நூல்) இந்திய வரலாற்றில் பெண்மை என்னும் நூல் எழுத்தாளர் இராஜம் கிருஷ்ணனால் எழுதப்பட்டது. இந்நூலில் பன்னிரண்டு கட்டுரைகள் உள்ளன. ஆதிகாலம் தொடங்கி தற்காலம் வரையிலான பெண்களின் நிலை விளக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக புராணங்களும் திரிக்கப்பட்ட கதைகளும் பெண்ணடிமைத்தனத்தின் வேர்களாக இருந்தமை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டுள்ளது. தாய்வழிச் சமூகமே மாந்த குல வரலாற்றின் தொட்டக்க அமைப்பாகும். அந்நாளில் தாயே சமூகக் குழுவின் தலைவராக இருந்தார். தடையற்ற பாலுறவு நிலவியது. குழந்தைகள் சமூகத்தின் பொறுப்பில் இருந்தனர். ஆண்கள் சமூகத்தின் பங்களிப்பாளர்களாக இருந்தனர். திருமணச் சடங்கால் பெண்கள் தாய்வீட்டிலிருந்து பிரிக்கப்பட்டனர். பெண்களும் அவர்களது பொருள்களும் ஆண்களுக்குரியன எனும் நிலை உருவாகியது. இல்லறத்தின் முக்கிய பண்பாடாக விருந்தோம்பல் கருதப்பட்டது. அதனை வழங்குபவர்களாகப் பெண்கள் ஆக்கப்பட்டனர். அதன் நீட்சியாக பெண்கள் விருந்தினருக்கும் வேண்டப்பட்டவருக்கும் நுகர்பொருள் ஆயினர். ஆண்கள் நாகரிகம் அடைந்தவர்கள்; பெண்கள் தீமையின் அடையாளங்கள் என புராண இதிகாச கதைகள் எழுந்தன. அக்கதைகளில் பெண்கள் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டனர். தந்தையாதிக்கக் கொடூரக் கொலைகளின் எச்ச வடிவங்களாக மாதங்கி வழிபாடு, எல்லம்ம வழிபாடு, ரேணுகா தேவி வழிபாடுகள் தோன்றின. நிலவுடைமைச் சமுதாயம் வேர்பிடித்தது. பெண்கள் மீதான ஆதிக்கமும் இறுகியது. இந்து சமய நூல்களின் பட்டியல் இக்கட்டுரை இந்து சமய நூல்களின் பட்டியல் கட்டுரையாகும். சென்சூ 1 சென்சூ 1 ("Shenzhou 1") 1 நவம்பர் 19, 1999, அன்று விண்வெளியில் ஏவப்பட்டது. இதுவே முதல் மனிதர் ஏற்றிச்செல்லாத சீன விண்வெளிக்கலம். இந்த விண்வெளிக்கலத்தில் உயிருக்கு தேவையான சாதனங்களும், அவசரகால வெளியேற்ற முறைகளையும் கொண்டிருக்கவில்லை. பூமியை 14 முறை சுற்றி வந்த பின், நமிபியக் கரையில் 18:49 உலக நேரத்தின் படி, விண்வெளிக்கலத்தை கவனித்து வந்த யுவான்வாங் 3 கலத்தின் ஆணைப்படி பூமிக்குத் திருப்பிவிடப்பட்டது. பூமிக்கு வெற்றிகரமாக நுழைந்ததும்,அதை அனுப்பிவைக்கப்பட்ட தளத்திலிருந்து 415 கி.மீ. கிழக்கில், மத்திய மங்கோலியாவில் 110 கி.மீ வடமேற்கில் உள்ள ஊஹாய்யில் தரை இறங்கியது. அரசு நிலம் பொதுநலவாய அமைப்பின் கொள்கைகளின் படி ஒரு அரசரால் ஆளப்படகூடிய அல்லது ஆளப்பட்ட பகுதி முடியாட்சி பகுதி (கிரௌன் லேன்ட்) எனப்படும். வேறுவார்த்தைகளில் இதை ஒரு நாட்டின் அரசாங்கத்திற்கு சொந்தமான நிலங்களையும் குறிக்கிறது. திராவிட நாட்டின் தமிழக மாநிலத்தில் மொத்த பரப்பளவில் 0.12 % சதவீத நிலம் அரசின் கையில் உள்ளது. இங்கிலாந்தின் நடுநிலங்கள் இங்கிலாந்தின் நடுநிலங்கள் (அ) இங்கிலாந்தின் நடுப் பகுதிகள் ("The Midlands") என்பது இங்கிலாந்தின் நடுப் பகுதியைக் குறிக்கிறது. இது பண்டைய மெர்சியா இராச்சியத்தின் பகுதியாகும். இப்பகுதி தெற்கு இங்கிலாந்து, வடக்கு இங்கிலாந்து, கிழக்கு ஆங்கிலியா, வேல்சு ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. பர்மிங்காம் இதன் மிகப் பெரிய நகரம் ஆகும். 18 மற்றும் 19-ம் நூற்றாண்டின் தொழிற்புரட்சியின் போது இப்பகுதி பெரும் பங்காற்றி உள்ளது. பத்தும் பதிகம் பத்தும் பதிகம் என்பது ஒரு திரட்டு நூல். சைன சமயத் தோத்திரப் பாடல்களைக் கொண்டது. 'பல ஜினதாசர்களாற் செய்தருளிய பத்தும் பதிகத் தோத்திரத் திரட்டு' என்னும் தலைப்பில் இது வெளிவந்துள்ளது. இதில் 26 பதிகங்களும், 280 பாடல்களும் உள்ளன. யாவும் நாலடி விருத்தங்களும் கொச்சகக் கலிப்பாவுமே. ஆசிரியப்பாவோ, பிற பாவோ, பாவினங்களோ இல்லை. யாவும் பதிக அமைப்பினைக் கொண்டவை. இவற்றில் 16 ஆம் நூற்றாண்டில் பாடப்பட்டவை. நான்கு. தசதர்மம் என்பது சைன சமய அறநெறி நூல். இதில் 26 கலி விருத்தங்கள் உள்ளன. அந்த அறநெறிகளைக் கடைப்பிடிப்பதால் விளையும் நன்மைகளும், கடைப்பிடிக்காவிட்டால் விளையும் தீமைகளும் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. நூல் பற்றிய குறிப்புகள் இந்த நூலில் வரும் பாடல் ஒன்று: எடுத்துக்காட்டு மான் தோலில் இடப்பட்ட மானிடர் தம் மகவு ஆகிப் பேன் தூங்கும் மயிரினராய்ப் பேய் போலச் சுழல்வதுவும் ஈன்றவளே கான்று இகழ்ந்து உரைக்கும் நிலைமையும் தேன் உவந்து முன் உண்ட தீவினையின் பயன் ஆகும். திருநறுங்கொண்டைமாலைப் பதிகம் பாடியவர் பெயர் தெரியவில்லை. பாடல் ஒன்று - எடுத்துக்காட்டு இது மயிலாப்பூரில் எழுந்தருளியுள்ள அருகனைப் பத்துப் பாடல்களில் போற்றுகிறது. ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழி இணைக்கப்பட்டு எளிமையாகப் பொருள் உணரும் வண்ணம் இது அமைந்துள்ளது. பாடல் - எடுத்துக்காட்டு இது இந்தத் தொகுப்பு நூலில் எட்டாம் பதிகமாக உள்ளது. ஒவ்வொரு பாடலும் "சீவர்த்தமானன் எனும் தீர்த்தன் நீயே" என்னும் தொடரைக் கொண்டு முடிகிறது. இதன் பாடல்கள் நாககுமார காவியம் என்னும் நூலில் தோத்திரப் பாடல்களாக வைக்கப்பட்டுள்ளன. திருமழுவாடிப் புராணம் திருமழுவாடிப் புராணம் என்னும் நூல் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கமலை ஞானப்பிரகாசரால் இயற்றப்பட்டது. திருமழபாடியில் குடிகொண்டுள்ள சிவபெருமானைப் பற்றிய புராணம் இது. மார்க்கண்டேயனுக்காகச் சிவபெருமான் மழுவைத் தாங்கி ஆடிய இடம் ஆதலால் இவ்வூர் மழுவாடி என்னும் பெயரைப் பெற்றுள்ளது. இதன் மருவிய பெயர் மழுவை. இறைவன் பெயர் வயிரத்தூணர். கமலை ஞானப்பிரகாசர் இவ்வூரில் மாசித் திருவிழா கண்டுகொண்டிருந்தபோது அவ்வூர்ப் பெருமகன் உலகநாதன் என்பவர் வேண்டிக்கொண்டபடி இப் புராணம் பாடப்பட்டதாக இந்த நூலிலுள்ள பாயிரப் பாடல் ஒன்று தெரிவிக்கிறது. நூல் எட்டுச் சருக்கங்களில் 571 பாடல்களைக் கொண்டுள்ளது. பாடல் - எடுத்துக்காட்டு 1 2 பெங்களூர் தமிழர்கள் கண்டோன்மென்ட் பகுதிகள் தமிழருக்கும் ,பேட்ட என்று முடியும் பகுதிகள் கன்னடருக்கும் ஆங்கிலேய அரசால் பிரித்து கொடுக்கப்பட்டது .அதனால் பெங்களூர் இரட்டை நகரம் என்று அழைக்கப்பட்டது . பெங்களூர் நகரம் தமிழ் பேசும் சோழர்களுக்கும் கன்னடம் பேசும் சாளுக்கியர்களுக்கும் ஒரு இணைப்பு பாலமாக இருந்தது என்பது வரலாற்று புத்தக பதிவின் மூலம் அறிய முடிகின்றது .சோழர்களின் ஆளுகைக்கு முன்பே தமிழ் குடிகள் தற்போதைய பெங்களூரின் பூர்வ குடிகள் என்ற கூற்றும் உண்டு . சோழ மன்னன் இராஜராஜன் மற்றும் அவன் மகன் ராஜேந்திர சோழன் கட்டிய சிவ,வைணவ வழிபாட்டு தளங்கள் அவர்கள் காலத்தை கட்டியம் கூறும் பலருக்கு தெரியாத முக்கிய வரலாற்று ஆவணங்கள் ஆகும் .பெங்களூர் நகர பகுதிகள் ,புற நகர பகுதிகள் ,புறநகர எல்லைக்கு உட்பட்ட பெரும்பான்மையான கிராமங்களிலும் சோழர் கால கலை நயத்துடன் கூடிய சிறிய மற்றும் பெரிய கோவில்களை இன்றும் காணமுடியும் . தற்போது டொம்லூர் அழைக்கப்படும் இடத்தில உள்ள பத்தாம் நூற்றாண்டு சொக்க பெருமாள் கோயில் கல்வெட்டுகள் மூலம் பல அறிய தகவல்கள் அறிய முடிகின்றது. இன்று டொம்லுரு என்று அழைக்கப்படும் இடம் சோழர்காலத்தில் தேசிமாணிக்க பட்டினத்தின் தோம்பலூர் என்று இருந்ததாக அறிய முடிகின்றது .தோம்பை என்னும் பூ வழிபாட்டுக்கு பயன்பட்டதன் மூலம் இவ்வாறு அழைக்கப்பட்டதாக கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகின்றது . தற்போது இலஹங்க என்று அழைக்கப்படும் இடம் கங்கை கொண்ட சோழனின் ராஜேந்திர சோழவள நாட்டின் இளைபாக்க நாடு என்று அறிய முடிகின்றது .இன்னும் பல கோவில் தகவல்கள் அறிய முடிகின்றது . திருப்பாவை இங்கு பாடப்படும் மாதம் முழுதும் பாடபடுகின்றது. சோழர் கால மற்றொரு ஆலயம் சோமேஸ்வர ஆலயம் .இது நகரின் மடிவாலா என்னும் பகுதியில் அமைத்துள்ளது பனிரெண்டாம் நூற்றாண்டின் அளவில் இருந்து பதிவு குறிப்புக்கள் கிடைகின்றது .இது கோவில் சுற்று சுவர் முழுவதும் தமிழ் மற்றும் கிரந்த எழுத்துகளால் விரவி காணப்பட்டது . ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு செய்த கோவில் புதுமை படுத்தும் பணிகள் மூலம் பெரும்பான்மை அழிக்கபட்டுவிட்டது என்பது அறியமுடிகின்றது .கோவில் அர்த்த மண்டப நுழைவாயில் இடது புறம் இன்று சற்று ஆறுதலாக சில தமிழ் கல்வெட்டுகளை பார்க்க முடிகின்றது .அர்த்த மண்டபமும் கருவறையும் மட்டுமே இன்றும் பழமையை பறைசாற்றி கொண்டிருகின்றன .மற்றவை நவீன புனரமைப்புகளாகும். தமிழில் தாமரை கீரை என்றால் தாமரை குளம் என்று பொருள்படும் என்று கன்னட இதிகாச அகதெமி செயலாளர் H.s.கோபால ராவ் மூலம் அறியமுடிகின்றது .தாமரை கீரையே என்று நாம் அழைக்கும் தாவரேகரே என்று அவர் குறிப்பிடுகின்றார் . இன்றைய பேகூர் அன்றைய வேங்கலூர் என்று கல்வெட்டு குறிப்புக்கள் மூலம் காண முடிகின்றது . 1960 களில் திரைத்துறை ,செய்தி ,ஊடகத்துறை ,வர்த்தகம் அனைத்திலும் தமிழே கோலோச்சியிருந்தது .இதனால் கன்னட மொழி இயக்கங்களை சேர்ந்தவர்கள் அரசின் துணைகொண்டு நகரின் முழுதும் தெருக்களின் பெயரை கன்னடத்தில் மொழிமாற்றம் செய்தார்கள் என்பதை நூல்களின் மூலம் அறியமுடிகின்றது. இன்றைக்கு கண்டோன்மென்ட் பகுதிகளான பகுதிகள் அல்சூர் ,சிவாஜி நகர் ,பென்சன் டவுன் ,ஆஸ்டின் டவுன் ,ரிச்சர்ட் டவுன் , பிரேசர் டவுன் ,ஆஸ்டின் டவுன் .ரிக்மாண்டு டவுன் .காக்ஸ் டவுன் ,மர்பி டவுன் போன்ற இடங்களில் மிக செறிந்து தமிழர்கள் காணபடுகின்றனர்.மேலும் நகரின் பகுதியிலும் புறநகர் பகுதியிலும் மிக அதிக அளவில் காணமுடிகின்றது. திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா தொகுப்பில் உள்ள பாடல்கள் 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமாளிகைத் தேவரால் பாடப்பட்டது. பன்னிரு திருமுறைகளில் ஒன்பதாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளது திருவிசைப்பா.. இதில் ஒன்பது பேர் பாடிய பாடல்கள் உள்ளன. இத் தொகுப்பில் முதல் இடம் பெற்றுள்ள பாடல்கள் திருமாளிகைத் தேவரின் திருவிசைப் பாக்கள். இவரது 45 பாடல்கள் இதில் இடம்பெற்றுள்ளன. பாடல் - எடுத்துக்காட்டு திருமுருகாற்றுப்படை உரைநூல்கள் திருமுருகாற்றுப்படை நூலுக்கு எழுதப்பட்டுள்ள பழமையான உரைநூல்கள் நெல்லை புத்தகத் திருவிழா நெல்லை புத்தகத் திருவிழா என்பது தமிழ்நாட்டின் திருநெல்வேலியில் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் நடத்தப்பெறும் ஓர் புத்தகக் கண்காட்சியாகும். திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், புத்தகப் பதிப்பாளர் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கம், நேஷனல் புக் டிரஸ்ட் இணைந்த தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டு மையம் ஆகியவை இணைந்து இப்புத்தகத் திருவிழாவை நடத்துகிறது. இப்புத்தகக் கண்காட்சியில் தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுடன், இந்தியாவின் முக்கிய பதிப்பகங்கள் சிலவும் கலந்து கொள்கின்றன. இப்புத்தகக் கண்காட்சி நெல்லை புத்தகக் கண்காட்சி எனும் பெயரிலும் அழைக்கப்படுகிறது. இக்கண்காட்சியில் பதிப்பகங்கள் அல்லது விற்பனையாளர்களுக்குத் தனித்தனியாக கடைகள் அமைக்கப்படுகின்றன. இந்தக் கடைகளில் புத்தகங்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்படுகின்றன. பத்து நாட்கள் நடத்தப்படும் இக்கண்காட்சி காலை 11 மணிக்குத் தொடங்கி இரவு 10 மணி வரை செயல்படுகிறது. இக்கண்காட்சியில் மாலை 5. 00 மணிக்கு தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் சிலர் பங்கேற்கும் சொற்பொழிவுகள் மற்றும் பல்வேறு தலைப்புகளில் இலக்கிய நிகழ்ச்சிகள், விசாரணை அரங்கம், சுழலும் சொல்லரங்கம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் போன்றவையும் இடம் பெறுகின்றன. இந்து மதம் எங்கே போகிறது (நூல்) இந்து மதம் எங்கே போகிறது என்பது அக்னிஹோத்திரம் இராமானுச தாத்தாச்சாரியார் என்பவரால் எழுதப்பெற்ற நூலாகும். இந்நூலில் இந்து மதம் தோற்றம் மற்றும் அதன் தத்துவ வளர்ச்சி, இந்து சமய பெரியோர்களைப் பற்றி விவரிக்கப்பெற்றுள்ளது. இந்த நூலை நக்கீரன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இப்புத்தகத்தின் இரண்டாவது பாகம் சடங்குகளின் கதை என்று வெளிவந்துள்ளது. இணையத்தில் புத்தகத்தின் பகுதிகள் - தாத்தாச்சாரியார் வலைதளம் வல்பெய்ரசோவ் வல்பெய்ரசோவ் என்பது சிலி நாட்டின் மூன்றாவது பெரிய நகரம் ஆகும். மேலும் தென்பசுபிக் பகுதியின் முக்கிய கலாச்சார நகரமும் இதுவே ஆகும். சந்தியாகோ தான் சிலியின் தலைநகரம் என்ற போதும், சிலியின் தேசிய காங்கிரசு, மீன்வளத்துறை அமைச்சகம், இராணுவ அமைச்சகம் ஆகியவற்றின் கூட்டங்கள் இங்கு தான் கூடுகின்றன. நூக் நூக் (கொட்தப் ) என்பது கிரீன்லாந்தின் தலைநகரமும் பெரிய நகரமும் ஆகும். அத்துடன் நாட்டின் கலாச்சார, பொருளாதார மையமும் இதுவே ஆகும். இதன் மக்கட்தொகை ஏறத்தாழ 15,000மே ஆகும். ஆதலால் இது உலகில் மக்கட்தொகை குறைந்த தலைநகரங்களில் ஒன்றாகும். இதற்கு அருகிலுள்ள பேரிய நகரங்களாவன, கனடாவில்லுள்ள இக்காலுயிட், செயின்ட் ஜான்ஸ் போன்றவயும் அயர்லாந்து இல் உள்ள ரெய்க்யவிக்கும் ஆகும். 2013 ஆம் ஆண்டு சனவரி 01 ஆம் திகதியன்று நூக்கின் சனத்தொகை 16, 454 ஆகும். நூக் எனும் சொல்லுக்கு கிரீன்லாந்து மொழியில் "கடலில் ஊடுருவும் நிலமுனை" (cape) எனப்படுகின்றது. கோலப்புறை பட்டர்வொர்த் மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் செபராங் பிறை பகுதியில் உள்ள ஒரு பழமை வாய்ந்த நகர் ஆகும். இது கோலப்புறை என்று முன்பு அழைக்கபட்டது. இங்கு இராசராசசோழன் கட்டிய ஒரு சிவன் கோவிலும் , மகா மாரியம்மன் தேவசுதானமும் உள்ளது.பினாங்கு படகு சேவை பட்டர்வொர்த் நகரை பினாங்கு தலைநகர் ஜோர்ஜ் டவுன்னுடன் இனைக்கிறது. இந்நகரில் சுமார் 107.591 பேர் வசிக்கிரார்கள். பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி 1798 ல் செபாராங் பிறை மாகாணத்வாங்கிய போது பட்டர்வொர்த் நகரம் உருவாக்கப்பட்டது. இந்த நகரம் பெயர் பிரிட்டிஷ் கேர்னல் வில்லியம் ஜான் பட்டர்வொர்த்திலிறுந்து உருவானது. The name of this town is derived from British Colonel William John Butterworth.தைப்பிங்இல், இருந்து தகரம் போக்குவரத்துக்கு பட்டர்வொர்த்ல் ரயில் நிலையம்.கட்டப்பட்டது. இந்த ரயில் நிலையம் இப்போதும் போக்குவத்துக்காக செயல்படுகிறது.1957 ஆம் ஆண்டு மலாயா சுதந்திரம் அடைந்த பிறகு, 1960 களில் இறக்குமதி பதிலீட்டு தொழில்கள் வாதிடுகின்ற முயற்சியின் ஒரு பகுதியாக பினாங்கு மாநில அரசு பினாங்கின் முதல் தொழில்பேட்டையாக மாக் மண்டின் தொழில்பேட்டை என உருவாக்கப்பட்டது.1953 ஆம் ஆண்டில் , பட்டர்வொர்த் டவுன் வாரியம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுடன் நகராட்சியாக உயர்த்தப்பட்டது. பின் 1976 ஆம் ஆண்டில் செபாராங் பிறை நகராட்சியாக மாற்றம் செய்யப்பட்டது. மலேசிய விமானப்படை தலைமையகம் பட்டர்வொர்த், நகரத்தில் அமைந்துள்ளது. பினாங்கு சென்டிரல் அதாவது ஒருங்கிணைக்க இரயில், படகு மற்றும் பஸ் போக்குவரத்து மையம் இங்குதான் கட்டபட உள்ளது . இந்த தமிழ்ப்பள்ளி பட்டர்வொர்த் நகரில் அமைந்து உள்ளது. கம்போங் பங்காளி தமிழ்ப்பள்ளி, இந்தியர் சங்கத் தமிழ்ப்பள்ளி என்று இருந்த இரு தமிழ்ப்பள்ளிகள் ஒன்றிணைக்கப் பட்டு, மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி என்று ஒரு புதிய கூட்டுப்பள்ளி உருவானது. பட்டர்வொர்த் நகரில் இருக்கும் மாக் மண்டின் தொழில்பேட்டையில் இப்பள்ளி அமைந்து இருப்பதால் அப்பெயரிலேயே மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி என்றும் அழைக்கப் பட்டு வருகின்றது. லிம் குவான் எங் பிறப்பு: டிசம்பர் 8, 1960) பினாங்கு மாநிலத்தின் நான்காவது முதலமைச்சர் மற்றும் பட்டர்வொர்த் நகரிண் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். நகரம் மையத்தில் இந்த திடலில் தேசிய தின அணிவகுப்பு மற்றும் முக்கிய நிகழ்வுகள் நடைப்பெரும். உள்ளூர் மக்களால் பிரபலமான சுற்றுலா தலமாக இருக்கிறது . இங்கு 300 க்கும் மேற்பட்ட பறவைகள், மீன் , உடும்புகள் உள்ள பூங்கா. ஒரு பெரிய தாவோயிஸ்ட் கோவில் இராசராசசோழன் கட்டிய இந்த கோவில் நகரம் மையத்தில் உள்ளது. வேங்கிக்கால் வேங்கிக்கால் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை மாநகர் வட்டம், திருவண்ணாமலை வடக்கு ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கணக்கெடுப்பில் உள்ள நகரம் ஆகும். இதன் எல்லை அண்ணா நுழைவு வாயிலில் இருந்து ஆரம்பமாகிறது. இதை திருவண்ணாமலை நகராட்சியுடன் இணைக்க 2008 இல் கொண்டுவரப்பட்ட திட்டம் அரசால் நிலுவையில் உள்ளது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இங்குள்ளது. அரசு திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரியும் வேங்கிகாலில் தான் உள்ளது . ஆவூர் (திருவண்ணாமலை) ஆவூர் திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை வட்டத்துக்குட்பட்ட வருவாய் கிராமம்.. இவ்வூர் திருவண்ணாமலை நகருக்கு தென் கிழக்கே 10 கல் தொலைவில் உள்ளது. மேலும் வேட்டவலத்திற்கு முன்னதாக அமைந்து இருக்கிறது. வேட்டவலம் வரை நீட்டிக்கப்பட்டுள்ள "திருவண்ணாமலை நகர விரிவாக்கம்" திட்டத்திற்குள்ளே வருகிறது. ஆடையூர் ஆடையூர் திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை வட்டத்துக்கு உட்பட்ட வருவாய் கிராமம்.. இவ்வூர் திருவண்ணாமலை நகருக்கு வட மேற்கே ஒரு கல் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு தான் சேலத்திற்கு அடுத்தபடியாக அதிக அளவில் இரும்பு தாதுகள் உள்ளன. துரிஞ்சாபுரம் துரிஞ்சாபுரம் தமிழ்நாட்டில், திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத் தலைமையிடமாக உள்ள கிராமம். இவ்வூர் கலசபாகத்திற்கு தென் கிழக்கில் 5 கல் தொலைவில் உள்ளது. இங்கு ஒரு ரயில் நிலையம் உள்ளது . திருமுருகாற்றுப்படை பரிமேலழகர் உரை பரிமேலழகர் 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் திருக்குறள், பரிபாடல் ஆகிய நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். திருமுருகாற்றுப்படை பரிமேலழகர் உரை என்னும் பெயரில் ஒரு நூல் வெளிவந்துள்ளது. இந்த நூலைத் திருபனந்தாள் காசி மடம் வெளியிட்டுள்ளது. பரிமேலழகர் வைணவர் ஆதலால் திருமுருகாற்றுப்படைக்கு நச்சினார்க்கினியர் உரையே சிறந்தது என்னும் குறிப்பு அதில் உள்ளது. திருக்குறள் பொதுநூல் ஆதலால் உரை செய்தார். பரிபாடலில் திருமாலைப் பற்றிய பாடல்கள் உள்ளன. அதனால் அதற்கு உரை செய்தார். எனவே பரிபாடலில் உள்ள வைகை, மதுரை, செவ்வேள் பற்றிய பாடல்களுக்கும் உரை செய்யவேண்டியதாயிற்று. திருமுருகாற்றுப்படை முருகனைப் பற்றி மட்டுமே பாடும் தனி நூல். எனவே இதற்கு இவர் உரை செய்திருக்க மாட்டார் என்னும் கருத்து நிலவிவருகிறது. பரிபாடலில் முருகனைப் பற்றிய பாடல்களுக்கு உரை கண்ட பரிமேலழகர் அவன்பால் ஈடுபாடு கொண்டு திருமுருகாற்றுப்படைக்கு உரை எழுதினார் எனக் கொள்வாரும் உளர். இது இவரது உரையில் காணப்படும் சிறப்புப் பாயிரம் உரைப்பாங்கு எனினும் இவரது திருக்குறள் உரையோடு ஒப்புநோக்குகையில் இவ்வுரை அத்துணைச் சிற்றப்புடையதாக அமையவில்லை என அறிஞர்கள் கருதுகின்றனர். திருமுருகாற்றுப்படை பரிதியார் உரை திருமுருகாற்றுப்படை பரிதியார் உரை 15 ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல். திருமுருகாற்றுப்படைக்கு நச்சினார்க்கினியர், பரிமேலழகர், உரையாசிரியர், கவிப்பெருமாள் , பரிதியார் முதலான பலர். 'திருமுருகாற்றுப்படை உரைக்கொத்து' என்னும் பெயரில் ஒரு நூல் வெளிவந்துள்ளது. வேலம்பாளையம் வித்துவான் வே. ரா. தெய்வசிகாமணிக் கவுண்டருக்குக் கிடைத்த ஏட்டின் துணை கொண்டு காசிமடத்தார் இதனை வெளியிட்டுள்ளனர். இதில் காணப்படும் பரிதியார் உரையின் நடையையும், தன்மையையும் நோக்கும்போது இந்த உரை திருக்குறளுக்கு உரை எழுதிய பரிதியார் எழுதிய உரையே எனக் கொள்வதற்குத் தடை ஏதும் இல்லை. பரிதியாரின் திருமுருகாற்றுப்படை உரை நூலில் உள்ள சிறப்புப் பாயிரம் நக்கீரர் செய்த நன் முருகாற்றுப்படைக்குத் தக்க உரை சொன்ன தகுதியான் - மிக்கு உலகில் பன்னூல் அறிந்த பரிதி மறைப் புலவன் தொன்னூல் அறிவால் துணிந்து. குளோரைடு குளோரைடு அயனி "(Chloride ion)" என்பது எதிர்மின் சுமை கொண்ட ஓர் அயனியாகும் (Cl−). உப்பீனியான குளோரின் தனிமம் ஓர் எலக்ட்ரான் பெறும் போது அல்லது ஐதரசன் குளோரைடு போன்ற சேர்மம் நீர் அல்லது முனைவுக் கரைப்பான்களில் கரையும் போது இக்குளோரைடு அயனி உருவாகிறது. சோடியம் குளோரைடு போன்ற குளோரைடு உப்புகள் நீரில் நன்கு கரைகின்றன. உடல் திரவங்கள் அனைத்திலும் இடம்பெற்று உடலின் அமில காரச் சமநிலையை பராமரிப்பதற்குத் தேவையான ஓர் அத்தியாவசியமான மின்பகுளியாகவும், நரம்பு தூண்டுதல்களை கடத்தவும் செல்களுக்கு உள்ளேயும் வெளியேயும் உடல் திரவங்களை முறைப்படுத்தவும் குளோரைடு அயனி பொறுப்பாகிறது. மேலும் குளோரைடு என்ற சொல் அரிதாக பொதுப்பெயரான வேதியியல் சேர்மங்கள் என்பதைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய சேர்மங்களில் கூடுதலாக ஓர் குளோரின் அணு சகப்பிணைப்பு மூலம் பிணைக்கப்படுகிறது. உதாரணமாக மெத்தில் குளோரைடு எனப்படும் குளோரோமெத்தேன் C−Cl சகப்பிணைப்பு கொண்ட ஒரு கரிமச் சேர்மமாகும். குளோரின் அயனியாக இல்லாத சேர்மத்திற்கு இது எடுத்துக்காட்டாகும். ஒரு குளோரைடு அயனியானது குளோரின் அணுவைக்காட்டிலும் பெரியது ஆகும். இவற்றின் அளவுகள் முறையே 167 மற்றும் 99 பைக்கோ மீட்டர்கள் என்பதைக் கொண்டு இதை ஒப்பிட்டு அறியலாம். குளோரின் அயனி நிறமற்றதாகவும் அபரகாந்தப்பண்புடனும் காணப்படுகிறது. நீரிய கரைசலில் பெரும்பாலான குளோரைடுகள் நன்கு கரைகின்றன. இருப்பினும் வெள்ளி குளோரைடு, ஈய (II) குளோரைடு மற்றும் பாதரசம் (I) குளோரைடு போன்ற சில குளோரைடு உப்புகள் தண்ணீரில் சிறிதளவே கரையக்கூடியவையாக உள்ளன . நீரிய கரைசலில் குளோரைடு அயனி நீர் மூலக்கூறின் புரோட்டான் இருக்கும் முனையுடன் பிணைக்கப்பட்டுள்ளது. கடல் நீரில் 1.94% குளோரைடு உள்ளது. குளோரைடுகளைக் கொண்ட சில கனிமங்களில் சோடியத்தின் குளோரைடுகள் காணப்படுகின்றன. ஆலைட்டு அல்லது சோடியம் குளோரைடு இதற்கு எடுத்துக்காட்டாகும். சில்வைட்டு அல்லது பொட்டாசியம் குளோரைடு கனிமத்தில் பொட்டாசியமும், பிசுக்கோபைட்டு, நீரேற்ற மக்னீசியம் குளோரைடில் மக்னீசியமும் காணப்படுகின்றன. இரத்தத்தில் உள்ள குளோரைடின் செறிவு சீரம் குளோரைடு என்று அழைக்கப்படுகிறது, இந்த செறிவு சிறுநீரகங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. குளோரைடு அயனி என்பது சில புரோட்டீன்களின் கட்டமைப்புப் பகுதிப்பொருளாகவும் உள்ளது. எடுத்துக்காட்டாக இது அமைலேசு என்ற நொதியில் உள்ளது. குளோர்-ஆல்கலி செயல்முறையில் சோடியம் குளோரைடு மின்னாற்பகுப்பு செய்யப்பட்டு குளோரினும் சோடியம் ஐதராக்சைடும் தயாரிக்கப்படுகின்றன. இவற்றிலிருந்து பல வேதிப்பொருட்களும் வேறு பிற பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. இச்செயல்முறையில் இரண்டு இணை வினைகள் நிகழ்கின்றன. குளோரைடுடன் தொடர்புடைய மற்றொரு பிரதான பயன்பாடு நீரிலிருந்து உப்பை அகற்றுதலாகும். இம்முறை குளோரைடு உப்புகளின் ஆற்றல் தீவிரமாக அகற்றப்பட்டு குடிக்கத்தக்க தண்ணீரை அளிக்கிறது. பெட்ரோலியம் தொழிற்சாலைகளிலும் சேற்றில் உள்ள குளோரைடின் செறிவு அளவு கண்காணிக்கப்படுகிறது. உயர் அழுத்த உப்பு நீர் உருவாக்கம் தொடர்பான முன்னறிவிப்பாக குளோரைடு அதிகரிப்பு அங்கு பார்க்கப்படுகிறது. ஆற்று / நிலத்தடி நீர் மாசுபடுதலை தெரிவிக்கும் ஒரு பயனுள்ள மற்றும் நம்பகமான இரசாயன அடையாளமாக குளோரைடு திகழ்கிறது. உலகெங்கிலும் உள்ள பல நீர் ஒழுங்குபடுத்தும் நிறுவனங்கள் ஆறுகள் மற்றும் குடிக்கக்கூடிய நீர் ஆதாரங்கள் மாசடைவதை சரிபார்க்க குளோரைடைப் பயன்படுத்துகின்றன. வீடுகளில் சோடியம் குளோரைடு போன்ற உப்புகள் உணவுப்பொருள்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படுகின்றன. கடல்நீரில் உள்ள குளோரைடுகளால் துவேறா இரும்பு முதல் பல மாழைகள் (உலோகங்கள்) சில வகையான புள்ளிபோன்ற சிறு அரிப்புகள் உறுவதை மிகைப்படுத்துகின்றன. இந்த புள்ளி போன்ற சிறுகுழி அரிப்புகள் பல்வேறு தூண்டு வினைகளால் ஏற்படுவன. குளோரைடுகளை ஆக்சிசனேற்றம் செய்ய முடியும். ஆனால் ஒடுக்கமடையச் செய்ய இயலாது. குளோர் ஆல்கலி செயல் முறையில் மேற்கொள்ளப்படும் முதலாவது ஆக்சிசனேற்ற வினையில் குளோரின் உருவாக்கப்படுகிறது. இக்குளோரின் மேலும் ஆக்சிசனேற்றப்பட்டு பிற ஆக்சைடுகள் மற்றும் ஆக்சி எதிர்மின் அயனிகள் உருவாக்கப்படுகின்றன. ஐப்போகுளோரைட்டு, குளோரின் டையாக்சைடு, குளோரேட்டு, பெர்குளோரேட்டு என்பன அவற்றில் சிலவாகும். அமிலக் காரப் பண்புகளைப் பொறுத்தவரை குளோரைடு ஒரு வலிமை குறைந்த காரமாகும். உணவைப் பாதுகாக்க சோடியம் குளோரைடு பயன்படுகின்றது, இது சமையலில் பயன்படும் உப்புதான். கால்சியம் குளோரைடு, மக்னீசியம் குளோரைடு, பொட்டாசியம் குளோரைடு போன்றவை மருத்துவப் பயன்பாடு முதல் பைஞ்சுதை (சிமென்ட்டு) உருவாவது வரை பல பயன்பாடுகளுக்கு உதவுகின்றன. கரிமமல்லாத பகிர்பிணைப்பு கொண்ட குளோரைடுகள் (covalently bonded chlorides) வேதிவினைப்பொருள்களாகப் பயன்படுவன: மாவுப்பொருளை இனிப்பியங்களாக மாற்றும் அமிலேசு (amylase) என்னும் நொதியத்தின் முன்னுந்திக் கூறாக இருப்பது ஒரு குளோரைடு மின்மமூலக்க்குறே. கால்சியம் குளோரைடு (CaCl) என்பது அறையில் இருக்கும் ஈரத்தன்மையை நீக்கப் பயன்படும் ஒரு பொருள் இது பனியின் உருகுவெப்பநிலையை குறைப்பதால், பனியை நீக்கப் பயன்படுகின்றது (பனி நிறைந்த பகுதிகளில் வானூர்திகளின் இறக்கையின் மீதுள்ள பனியை நீக்கப்பயன்படும் பனி-நீக்கியாகப் பயன்படுகின்றது. லீப் எரிக்சன் லீஃப் எரிக்சன் (Leif Ericson, or ; இசுலேன்சுக: "Leifur Eiríksson"; நோர்வே மொழி: "Leiv Eiriksson" c. 970 – c. 1020) ஓர் வைக்கிங்நாடுகாண் பயணி ஆவார். கிறீன்லாந்து நீங்கலான வட அமெரிக்காவில் கொலம்பசிற்கு 500 ஆண்டுகளுக்கு முன்னதாக கால்பதித்த முதல் ஐரோப்பியராக இவர் கருதப்படுகிறார். ஐசுலாந்திய வரலாற்றின்படி இவர் வின்லாந்து என்றவிடத்தில் நோர்சு குடியிருப்பு ஒன்றை நிறுவினார்; இது தற்போதைய கனடாவில் நியூபவுண்ட்லாந்தின் வடமுனையில் உள்ள "லான்சு ஆக்சு மெடோசு" நோர்சு குடியிருப்பாக அடையாளம் காணபட்டுள்ளது. மேற்கு நோர்வேயிலிருந்து நாடுகடத்தப்பட்டவரும் நாடுகாண் பயணியுமாகிய எரிக் ரெட் மற்றும் தியோதில்டிற்கு 970களில் ஐசுலாந்தில் பிறந்ததாக நம்பப்படுகிறது. எரிக் கிறீன்லாந்தில் முதல் நோர்விய குடியிருப்புக்களை நிறுவினார்; கிழக்கு குடியிருப்பு எனப்பட்ட பகுதியில் குடும்ப நிலவளாகமான பிரட்டாலியோவில் வாழ்ந்து வந்தார்; அங்குதான் லீப் எரிக்சன் தனது இளமைக்காலத்தைக் கழித்தார். லீபிற்கு இரு மகன்கள் இருந்தனர்; தோர்குனா என்ற குலமகளுக்குப் பிறந்த தோர்கில்சு; மற்றொருவரான தோர்கெல் கிறீன்லாந்து குடியிருப்பின் லீப்பிற்கு அடுத்த தலைவராக பொறுப்பேற்றார். லீப் எரிக் த ரெட் மற்றும் தியோதில்டின் மகனும் போர்வால்தர் அசுவால்த்சன்னின் பெயரனும் ஆவார். இவரது பிறப்பாண்டு பெரும்பான்மையாக 970 என்று அல்லது 980 என்று கொடுக்கப்படுகிறது. இவரது பிறப்பிடம் குறித்து ஐசுலாந்து வரலாற்றுகளில் கூறப்படாவிடினும் இவரது பெற்றோர்கள் சந்தித்த ஐசுலாந்தில் இவர் பிறந்திருக்கலாம் லீபிற்கு இரு சகோதரர்களும் ஒரு சகோதரியும் இருந்தனர். கொலைக்குற்றத்திற்காக நோர்வேயிலிருந்து நாடுகடத்தப்பட்ட போர்வால்தர் அசுவால்த்சன் தனது மகனான இளம் எரிக்குடன் ஐசுலாந்து சென்றார். ஐசுலாந்திலிருந்து எரிக் வெளியேற்றப்பட்டபோது மேலும் தொலைவிலிருந்த பகுதியை அடைந்து அதற்கு கிறீன்லாந்துஎனப் பெயரிட்டார்; அங்கு நோர்விய முதல் குடியிருப்பை 986இல் நிறுவினார். தன்னிடம் அடிமையாக இருந்த "டைர்கர்" என்பவரிடம் எரிக் தனது மக்களை வளர்க்கும் பொறுப்பை ஒப்படைத்தார். பின்னாட்களில் லீப் இவரைத் தமது "வளர்ப்புத் தந்தை" எனக் குறிப்பிடுகிறார். லீபும் அவரது குழுவினரும் 999ஆம் ஆண்டு கிறீன்லாந்திலிருந்து நோர்வேக்குப் பயணித்தனர். எப்ரீடிசிற்கு வழிமாறிச் சென்று அங்கு கோடைக்காலத்தைக் கழித்தார். பின்னர் நோர்வே எட்டிய லீப் நோர்வேயின் மன்னர் ஓலாஃப் டிரிக்வாசனுக்கு மெய்க்காவலராகப் பணியிலமர்ந்தார். கிறித்தவத்திற்கு மாறிய லீப் கிறீன்லாந்தில் அச்சமயத்தைப் பரப்பிட அனுப்பப்பட்டார். 1200களில் எழுதப்பட்டதாக கருதப்படும் "எரிக் த ரெட்டின் வரலாற்றுக்கதை"களிலும் "ஐசுலாந்தியர்களின் வரலாற்றுக் கதை"களிலும் "வின்லாந்து" சென்ற பயணங்கள் வெவ்வேறாக உள்ளன. "வின்லாந்து" என்றவிடத்தின் இரண்டு நன்கு அறியப்பட்ட வரலாற்றுச் சான்றுகளை 1075ஆம் ஆண்டின் பிரெமனின் ஆதாம் என்ற நூலிலும் 1122இல் அரி த வைசு என்பவரால் தொகுக்கப்பட்ட ஐசுலாந்தியர்களின் நூல் என்ற நூலிலும் காண்கிறோம். "எரிக் த ரெட் வரலாற்றுக்கதைகளின்படி", கிறீன்லாந்துக்கு கிறித்தவ சமயத்தைப் பரப்ப சென்ற லீப் கடல்வழி மாறி முதன்முதலாக "வின்லாந்தை" கண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுக்கதைகளை மொழிபெயர்த்து எழுதப்பட்ட ஐனார் ஹௌகனின் "வின்லாந்திற்கானப் பயணங்கள்" என்ற நூற்கூற்றுப்படி லீப் எரிக்சன் அமெரிக்காவைக் கண்ட முதல் ஐரோப்பியருமல்லர்; அங்கு கால் பதித்த முதல் முதல் ஐரோப்பியருமல்லர். யார்னி ஹெர்யோல்சன் என்ற வணிகர் வழிதவறி கிறீன்லாந்திற்கு மேற்கே நிலப்பகுதிகள் இருப்பதை கண்டதாக லீப் எரிக்சன் கேள்விப்பட்டார். இருப்பினும் யார்னி ஹெர்யோல்சன் அங்கு இறங்கவில்லை. பின்னர் நோர்வேயிலிருந்து கிறீன்லாந்து செல்லும் வழியில் கடல்வழிமாறி லீபும் தாம் எதிர்நோக்காத நிலப்பகுதியில் "தானே-விளைந்த கோதுமை வயல்களையும் திராட்சைத் தோட்டங்களையும்" கண்டுள்ளார். மேலும் இங்கு கப்பல் உடைந்து சிக்கியிருந்த இருவரைக் காப்பாற்றி தமது கப்பலில் ஏற்றி க்கொண்டு கிறீன்லாந்து சென்றடைந்துள்ளார். (அங்கிருந்த மக்களை கிறித்தவத்திற்கு மதமாற்றமும் செய்தார்.) இக்கூற்றுக்களின்படி, யார்னி ஹெர்யோல்சனே அமெரிக்காவைக் கண்ட முதல் ஐரோப்பியராகவும் கப்பல் உடைந்ததால் அங்கு சிக்கியிருந்த பெயரறியா இருவருமே முதலில் அமெரிக்காவில் தரையிறங்கிய ஐரோப்பியர்களாகவும் கொள்ளப்படவேண்டும். லீஃப் யார்னியை அணுகி அவரது கப்பலை விலைக்கு வாங்கிக்கொண்டு முப்பதைந்து மனிதர்களுடன் யார்னி விவரித்த நிலப்பகுதிக்கு பயணம் மேற்கொண்டார். அவருடன் தந்தை எரிக்கும் கலந்து கொள்வதாக இருந்தது; ஆனால் கிளம்புவதற்கு முன்னால் குதிரையிலிருந்து கீழே விழுந்ததால் அதனை கெட்ட சகுனமாகக் கருதி அவர் கலந்து கொள்ளவில்லை. லீப் யார்னி சென்ற வழிக்கு எதிர்சுற்றாகச் சென்று முதலில் கற்கள் நிறைந்த யாருமற்ற நிலப்பகுதியை அடைந்தார்; இப்பகுதிக்கு "ஹெல்லுலாந்து" (தட்டைக்கற்கள் நிலம், தற்போதைய பாஃபின் தீவாக இருக்கலாம்) எனப் பெயரிட்டார். மேலும் கடலில் பயணித்து இரண்டாவதாக "மார்க்லாந்து" (காட்டு நிலம், லாப்ரடாராக இருக்கலாம்) என அவர் பெயரிட்டப் பகுதியை அடைந்தார். இறுதியாக மேலும் இருநாட்கள் கடலில் பயணித்து "வின்லாந்து" (பெரும்பாலும் வைன்லாந்து என மொழிபெயர்க்கப்பட்டாலும் சரியான மொழிபெயர்ப்பு "பெரும் புல்வெளிகளையுடைய நிலப்பகுதி" ஆகும்) என அவர் பெயரிட்டப் பகுதியை அடைந்தார். அங்கு, லீபும் அவரது குழுவினரும் சிறு குடியிருப்பை ஏற்படுத்தினர். இவை பின்னாட்களில் கிறீன்லாந்திலிருந்து வந்தப் பயணிகளால் "லீப்சுபுதிர்" (லீஃபின் சவுக்கைகள்) என்றழைக்கப்பட்டன. குளிர்காலத்தை அங்கு கழித்த லீப் அங்கிருந்து திராட்சைகளுடனும் வெட்டுமரங்களுடனும் இளவேனிற் காலத்தில் கிறீன்லாந்து திரும்பினார். ஒரே ஏற்பளவுக் கோடுகள் ஒரே ஏற்பளவுக் கோடுகள் ("ISODOSE CURVES" ) என்பன மாதிரிப் பொருளில் (Phantom) அளவீடுகளை எடுக்கும்போது ஒரே ஏற்பளவு கொண்ட புள்ளிகளை இணைத்து பெறப்படும் கோடுகளாகும். ஒவ்வொரு கதிர் புலத்திற்கும் தனித்தனியாக ஒரே ஏற்பளவுக் கோடுகள் உள்ளன. இவை ஒரே ஏற்பளவு அட்டவணைகள் (Isodose charts) எனப்படும். இவற்றின் துணையுடன் புற்றுத் திசுக்களில் ஏற்பளவினைக் கணிக்கமுடியும். இன்று இக்கோடுகளைப் பெற கதிர்வீச்சு புல ஆய்கருவி (Radiation field analyser ) உள்ளது. திருமுறை கண்ட புராணம் திருமுறை கண்ட புராணம் என்னும் நூல் 14 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. இந்த நூலை உமாபதி சிவாசாரியார் செய்தார் என்னும் கருத்து நெடுங்காலமாக நிலவிவருகிறது. இதனைச் சரி என ஏற்பதற்கோ, தவறு எனத் தள்ளுவதற்கோ போதிய சான்றுகள் இல்லை. இந்தப் புராணம் 46 பாடல்களைக் கொண்டுள்ளது. திருநரையூரில் பிறந்த நம்பியாண்டார் நம்பி மன்னன் இராசராசன் வேண்டுகோளுக்கு இணங்கித் தில்லைச் சபையின் மேற்குப் பக்கத்தில் காப்பிடப்பட்டிருந்த திருமுறைகளை வெளிப்படுத்தி, இறைவன் கட்டளைப்படி அவற்றிற்குப் பண் வகுத்த வரலாற்றை இந்த நூல் கூறுகிறது. இந்த நூலின் கடைசிப் பாடல் மந்திரத்திரையம் மந்திரத் திரையம் (மந்திர திரயம்) என்பது வைணவத்தின் மூன்று மந்திரங்களைக் குறிக்கும். பிள்ளை லோகம் சீயர், தொட்டாசிரியர் ஆகியோர் எழுதிய திருமந்திரார்த்த அரும்பத விளக்கம் என்னும் நூல் முதல் மந்திரத்தை விளக்குகிறது. மந்திரத் திரையத்தை முமுட்சுகப்படி என்பர். படி என்னும் சொல் வைணவத்தில் எழுத்தைக் குறிக்கும். மும் உள் சுகம் படி = திருமாலின் மூன்று உள்ளிருப்புகளில் சுகம் பெறும் எழுத்துக்கள் என்று பொருள்படுவது முமுட்சுகப்படி என்னும் தொடர். பிள்ளை உலகாசாரியார் 'முமுக்ஷுப்படி' , தத்வத்ரயம், ஸ்ரீ வசன பூஷணம் என்னும் மூன்று நூல்கள் எழுதியுள்ளார். பெரிய திருமந்திரம் எனப் போற்றப்படும் 'ஓம் நமோ நாராயணாய' என்னும் மந்திரம். நாராயணன் ஆசிரியரும், மாணவரும் தானேயாக இருந்து இதனை ஓதினார் என்பர். திருமங்கை ஆழ்வார் இதனை "நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்" எனப் பாடி மகிழ்கிறார். வாடினேன் வாடிவருந்தினேன் மனத்தால் பெருந்துயரிடும்பையில் பிறந்து, கூடினேன் கூடியிளையவர்த்தம்மோடு அவர்த்தரும் கலவியேகருதி, ஓடினேன் ஓடியுய்வதோர்ப் பொருளால் உணர்வெனும் பெரும் பதம் திரிந்து, நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா வென்னும் நாமம்.(நாலாயிர திவ்வியப் பிரபந்தம் 948) இது 'துவய' மந்திரம் எனப்படும். பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் ஸ்ரீமன் நாராயணன் சொல்ல அவரது நெஞ்சில் குடிகொண்டுள்ள திருமகள் கேட்டார். பகவானே அடைவிக்கிறவன் , அடையத் தக்கவன் என்று சொல்லி நெறிவாசலைக் காட்டினான். கண்ணனையே சரண்டையும் நினைவு மந்திரம் இது. இதனைக் கண்ணன் சொல்ல அருச்சுணன் கேட்டான். திருமழிசை ஆழ்வார் இதனை இவ்வாறு பாடுகிறார். இரந்து உரைப்பது உண்டு வாழி ஏமம் நீர் திறத்தமா, வரர் தரும் திருக் குறிப்பில் வைத்ததாகில் மன்னுசீர், பரந்தசிந்தை ஒன்றி நின்று நின்ன பாத பங்கயம், நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே.(நாலாயிர திவ்வியப் பிரபந்தம் 852) கருத்த மனம் ஒன்றும் வேண்டா, கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை (நம்மாழ்வார்) கண்ணன் கழல் இணை நண்ணும் மனமுடையீர் எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே (நம்மாழ்வார்) பெர்சே பேரணிகள் பெர்சே பேரணிகள் மலேசிய எதிர்க்கட்சிகளும் அரசு சார்பற்ற அமைப்புகளும் இணைந்து நாட்டின் தேர்தல் முறைமையை சீர்திருத்துவதற்காக நடத்திய பேரணிகளைக் குறிக்கிறது. பெர்சே என்பதற்கு மலாய் மொழியில் "தூய்மை" எனப் பொருள்படுவதாகும். குறிப்பாக இந்தக் கூட்டணி கோரும் சீர்திருத்தங்கள்: இதன் தற்போதைய தலைவராக முன்னாள் வழக்கறிஞர் கழக தலைவர் அம்பிகா சீனிவாசன் இயங்கி வருகிறார். பெர்சே 1.0 பேரணி, மலேசிய நாடாளுமன்ற வளாகத்தில் 2006 ஆம் ஆண்டு, நவம்பர் 23 ஆம் திகதி நடைபெற்றது. அந்தப் பேரணிக்கு டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், சிவராசா ராசய்யா, லிம் குவான் எங், திரேசா கோக், எஸ். அருட்செல்வன், சையட் ஷாரிர், மரியா சின், யாப் சுவீ செங் போன்றவர்கள் முக்கியத் தலைவர்களாகத் தலைமை தாங்கினார்கள். நவம்பர் 10, 2007 இல், பெர்சே ஒரு பேரணியை கோலாலம்பூரின் டாத்தாரான் மெர்டெக்கா எனும் விடுதலை சதுக்கத்திலும், இஸ்தானா நெகாரா எனும் தேசிய அரண்மனையிலும் அனுமதியின்றி நடத்தியது. ஏறக்குறைய 50,000 பேர் அந்தப் பேரணியில் கலந்து கொண்டனர். இதற்கு அம்பிகா சீனிவாசன் தலைமை தாங்கினார். இந்தப் பேரணியில் அண்டிரூ சியூ, கா. ஆறுமுகம், பாருக் மூசா, மரியா சின், ஹாரிஸ் இப்ராஹிம், வோங் சின் ஹுவாட், ரிச்சர்ட் இயோ, சாயிட் காமாருடின் போன்றவர்கள் முக்கிய பங்கு வகித்தனர். இந்தச் சட்ட விரோதப் பேரணியில் கலந்து கொண்டவர்களை, மலேசியக் காவல் துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி விரட்டி அடித்தனர். இரு பெண்கள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர். தனது முதல் பேரணியை அடுத்து தேர்தல் ஆணையராக இருந்த அப்துல் ரசீத் அப்துல் ரகுமானின் பதவியை அரசு நீட்டித்தால் மீண்டும் தெருப்போராட்டங்களில் ஈடுபடுவோமென பெர்சி அறிவித்தது. நவம்பர் 20, 2007 அன்று பிரதமரின் துறை அமைச்சர் நசிரி அசீஸ் தேர்தல் ஆணைய உறுப்பினர்களின் ஓய்வு வயதை 65இலிருந்து 66ஆக மாற்றும் அரசியலமைப்பு திருத்தம் சட்டவரைவை கொண்டு வந்தார். இதனை நாடாளுமன்றம் திசம்பர் 11 அன்று நிறைவேற்றியது. இதனால் 2012ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள மலேசிய தேசியத் தேர்தல்களுக்கு முன்னதாக பெர்சி தனது தெருப் போராட்டத்தை சூலை 9, 2011க்கு திட்டமிட்டது. இந்தத் திட்டங்களை அரசு மற்றும் அரசு சார்பு அமைப்புகள் கடுமையாக விமர்சித்தன; இந்த நிகழ்வுக்கு முன்னதாகவே பல பெர்சி ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். மன்னருடன் இது குறித்து உரையாட அனுமதி கிடைத்த பின்னர், பெர்சி தெருக்களில் பேரணி நடத்துவதற்கு மாற்றாக உள்ளரங்கம் ஒன்றில் நடத்த சூலை 5, 2011 அன்று உடன்பட்டது. மெர்டெகா விளையாட்டரங்கத்தில் நடந்த பேரணியில் 10,000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். ஆயினும் இவர்கள் விளையாட்டரங்கினுள் கூட காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. பல பெர்சி மற்றும் எதிர்கட்சித் தலைவர்கள், அம்பிகா உட்பட, கைது செய்யப்பட்டனர். காவல்துறையினர் 1400க்கும் கூடுதலானவர்களை கைது செய்துள்ளது. பெர்சே 3.0 பேரணி 2012ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி நடைபெற்றது. இது ஒரு குந்தியிருப்பு போராட்டம் ஆகும். 250,000 பேர் கலந்து கொண்டனர். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று அந்த நிகழ்ச்சி நடைபெற்றது. பொது மக்கள் அம்பிகா சீனிவாசன் தலைமையில் அணிவகுத்து நின்றனர். அகழ்ப்போர் அகழ்ப்போர் ("Battle of Trench", அல்லது "Battle of the Confederates") என்பது கிபி 627 ஆம் ஆண்டு (ஹிஜ்ரி 4) மதீனா நகர முஸ்லிம்கள் மீது அன்றைய யூதர்கள் உள்பட அனைத்து அரபுக் குலத்தாரும் ஒன்று திரண்டு வந்து தொடுத்த போர். அப்போது நகருக்குள் எதிரிகளை நுழைய விடாமல் தடுப்பதற்காக மதீனாவைச் சுற்றிலும் அகழ் ஒன்று தோண்டப்பட்டது. இதனாலேயே அது அகழ்ப்போர் என வழங்கப்படலாயிற்று. யூதர்களுடன் கைகோர்த்துக்கொண்டு அனைத்து அரபுக் குலத்தாரும் அணிதிரண்டு வந்ததால் அல்-அஹ்சாப் (கூட்டுப்படை) போர் என்றும் வழங்கப்படுகிறது. கூட்டுப்படையில் ஏறத்தாழ 10,000 ஆண்கள் பங்குபற்றினர். இவர்களுடன் 600 குதிரைகள், சில ஒட்டகங்கள் பங்குபற்றின. இவர்களை எதிர்த்து 3,000 மதீனாக்கள் பங்குபற்றினர். கிபி 627 ஆம் ஆண்டு மார்ச் 31 இல் போர் ஆரம்பமானது. ஜிஸ்யா இசுலாமியச் சட்டத்தில், ஜிஸ்யா ("jizya" அல்லது "jizyah" ) என்பது இசுலாமிய அரசின் கீழ் வாழ்ந்த முஸ்லிமல்லாத குடிமக்கள் மீது நபர் ஒருவருக்கு விதிக்கப்பட்ட வரியைக் குறிக்கும் அரபுச் சொல் ஆகும். இவ்விதம் வரி செலுத்திய முஸ்லிமல்லா ஒருவர் இசுலாமிய அரசின் கீழ் பாதுகாப்புப் பெற்று ஏனைய முஸ்லிம் குடிகளுக்குள்ள அனைத்து உரிமைகளும் பெறுவார். ஆனால், ஜிஸ்யா வழங்கிடும் ஒருவர் போர்களில் பங்கேற்க வேண்டியதில்லை. அதனால் அவர்கள் அமைதியாக வாழவும் முன்னேறவும் வழியேற்பட்டது. இந்த வரியைப் பெண்களும், ஏழைகளும், சிறார்களும் செலுத்த வேண்டியதில்லை. ஜிஸ்யா வரி செலுத்தியவர், நாட்டைப் பாதுகாக்கப் போர்ப்படையில் சேர்ந்து பணியாற்றினால், அவர் ஜிஸ்யா செலுத்த வேண்டியதில்லை. இந்த வரியைக் காப்புவரி என்றும் வழங்குவர். நினைப்பதும் நடப்பதும் (நூல்) நினைப்பதும் நடப்பதும் என்னும் நூல் சுகி. சிவம் என்பவரால் சமயச்சீர்திருத்த நோக்கில் எழுதப்பட்ட 40 கட்டுரைகளின் தொகுப்பாகும். “மதத்தின் பெயரால் நடக்கும் மடத்தனத்தை எதிர்க்கிறேன். மதங்களின் பகைமையை எதிர்த்து முடிவுகட்ட நினைக்கிறேன். ‘தமிழ் தெய்வ மொழி அல்ல’ என்பவர்களின் மண்டையில் குட்டி இருக்கிறேன். சமயப் பிரச்சாரம் என்ற பெயரில் உளறுபவர்களை வாய்மூட வைத்திருக்கிறேன். வீட்டில் இருந்து வெளியேறி ஆசிரமங்களுக்குப் போய்விட்டால் ஆன்மிகவாதியாகி விடலாம் என்று ஏமாறுகிற (ஏமாற்றுகிற) அசடுகளை நன்றாக அடையாளம் காட்டி இருக்கிறேன். ‘மதம் வேறு, ஆன்மிகம் வேறு’ என்று ஓங்கி உரைத்திருக்கிறேன். சில நேரம் புரட்சி, சில நேரம் மலர்ச்சி, சில நேரம் வளர்ச்சி, சில நேரம் பயிற்சி என்று புத்தகம் முழுவதும் விதவிதமான விஷயங்களை விதைத்திருக்கிறேன். என் பேனா முனை, ஒரு சிற்பியின் உளிபோல மேலான தனிமனிதனைச் செதுக்கவும் புதியதோர் உலகம் புதுக்கவும் எழுதுகிறது என்பதனை என் எல்லாப் புத்தகங்களையும் போல இந்தப் புத்தகமும் நிரூபிக்கும். கருமலை மீது ஜொலிக்கும் கார்த்திகை தீபம் போல காகிதமலை மீது வைத்த கருத்து தீபமே இந்நூல்” என இந்நூலைப் பற்றி அதன் பின்னட்டையில் சுகி. சிவம் அறிமுகம் செய்கிறார். “காவியுடைக் காரல் மார்க்ஸ், திரும்பி வந்த திருவள்ளுவர். பட்டி மண்டபங்களைப் பதவி உயர்த்தி பல்கலைக் கழகப் பட்டறையாக்கிய பேச்சுலக பாரதி – என் சிந்தனைகளின் செவிலித்தாய் தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் தமிழ் சமூக அக்கறைக்கு இந்நூல் சமர்ப்பணம்” என்னும் உரையோடு இந்நூல் குன்றக்குடி ஆதினம் தெய்வசிகாமணி அடிகளாரின் தமிழ்ச் சமூக அக்கறைக்கு காணிக்கை ஆக்கப்பட்டு இருக்கிறது. இந்த நாள் இனிய நாள் – முதல் தொகுதி (நூல்) இந்த நாள் இனிய நாள் – முதல் தொகுதி என்னும் நூல் சுகி. சிவம் சன் தொலைக்காட்சியில் இந்த நாள் இனிய நாள் என்னும் தலைப்பில் கிழமைதோறும் சனியும் ஞாயிறும் ஆற்றிய சொற்பொழிவுத் தொடரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 24 சொற்பொழிவுகளின் தொகுப்பு ஆகும். இந்நூல் சுகி. சிவத்துக்குத் தந்தையும் எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் விளங்கிய அரசு அலுவலர் சுகி. சுப்பிரமணியத்துக்கு காணிக்கை ஆக்கப்பட்டு இருக்கிறது. குருவிக்கரம்பை வேலு குருவிக்கரம்பை வேலு (நவம்பர் 26, 1930 - மார்ச் 3, 2010) சுயமரியாதை இயக்கத் தலைவர்களில் ஒருவர். தீவிர நாத்திகர். குத்தூசி குருசாமி வாழ்க்கை வரலாற்றை எழுதியவர். சிந்து முதல் குமரி வரை, இதுதான் வேதம், இவர் தான் புத்தர், நாத்திகம் பேசும் சூத்திரச்சியே ஆகிய நூல்களையும் இன்னும் பல நூல்களையும் எழுதியவர். இவர் 3-3-2010ல் இறந்தார். இவரது உடல் 4-3-2010 அன்று சென்னை ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்( மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆய்வுப் பணிக்காக) அவருடைய குடும்பத்தினரால் ஒப்படைக்கப்பட்டது. திருமுறைத் திரட்டு மூவர் தேவாரப் பாடல்களை 'அடங்கன்முறை' என்பர். திருமுறை எனவும் சிறப்பு வகையால் இதனை வழங்குவர். இந்தத் திருமுறைப் பாடல்களிலிருந்து சில பாடல்களைத் தெரிந்தெடுத்துத் தொகுத்துத் திருமுறைத் திரட்டு என்னும் பெயரில் வெளியிட்டுள்ளனர். இப்படி வெளிவந்த திரட்டுகளில் குறிப்பிடத் தக்கவை இரண்டு. முதலாவது திரட்டு உமாபதி சிவாசாரியர் திரட்டியது. மற்றொன்று 'அகத்தியர் திரட்டு' என்னும் பெயருடன் வெளிவந்துள்ளது. முதலாவது திருமுறைத் திரட்டு 99 திருப்பாசுரங்களைக் கொண்டது. இதில் சம்பந்தர் பாடல்கள் 26, அப்பர் பாடல்கள் 63, சுந்தரர் பாடல்கள் 10 தொகுக்கப்பட்டிள்ளன. களுவாஞ்சிக்குடி களுவாஞ்சிக்குடி இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரம். மட்டக்களப்பு நகரில் இருந்து தென்கிழக்கில் 27 கி.மீ. தூரத்தில் உள்ளது. களுவாஞ்சிக்குடிப் பிரதேசத்தில் களுவாஞ்சிக்குடி தெற்கு, களுவாஞ்சிக்குடி வடக்கு, களுவாஞ்சிக்குடி வடக்கு 1 என 3 கிராம சேவையாளர் பிரிவுகள் காணப்படுகின்றன. இங்குள்ள மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 1,814 ஆகும். களுவாஞ்சிக்குடிப் பிரதேசத்திற்கான அஞ்சல் குறியீட்டு இலக்கம் 32000 ஆகும். மாகோன் காலத்தில் மட்டக்களப்பில் இருந்த ஏழு குடிகளுள் ஒன்றாகிய கவுத்தன்குடி இங்கு குடியேறியதாக மட்டக்களப்புத் தமிழகம் குறிப்பிடுகின்றது. வாகரை வாகரை மட்டக்களப்புக்கு தென்மேற்கில் 65 கி.மி. அமைந்துள்ள இடமாகும். தமிழர்கள் அதிகம் காணப்படும் இது கோறளைப் பற்று வடக்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்கு உட்பட்டது. கிட்டத்தட்ட 21,000 பேர் வசிக்கின்றனர். இங்குள்ளோர் மீன்பிடி மற்றும் விவசாயம் செய்பவர்களாவர். வாகரை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தந்திரோபாயமிக்க இடமாக விளங்கியது. 1985 இலிருந்து இப்பகுதி பாரிய சண்டைக்களமாகவும் அரச படைகள், இந்தியப்படைகள், விடுதலைப் புலிகள் என மாறிமாறி கைப்பற்றிக் கொள்ளும் இடமாகவும் இருந்து வந்தது. 2007 இல் விடுதலைப் புலிகள் இங்கிருந்து அகற்றப்பட்டனர்ர். வெல்லாவெளி வெல்லாவெளி மட்டக்களப்பிலிருந்து தெற்கில் 30 கி.மி. தூரத்தில் அமைந்துள்ளது. வெல்லாவெளி 5 கிராமங்கள் 1155 சனத்தொகையுடன் காணப்படுகின்றது. இப்பகுதி ஆரம்பகால குடியிருப்புப் பகுதிகளில் ஒன்றாகும். இங்கு ஆரம்ப கால பிராமிச் சாசனங்களும், வாழ்விட தடயங்களும், பெருங்கற் பண்பாட்டுச் சின்னங்களும் காணப்படுகின்றன. கிரான் "கிரான்", மட்டக்களப்பு நகரத்தின் வடமேற்கே, 26 கி.மி தொலைவில் அமைந்துள்ளது. கிரான் கிழக்கு, கிரான் மேற்கு என இந்துக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் காணப்படுகின்றன. இக்கிராமத்தில் கிறிஸ்தவர்களும் உள்ளனர். இக்கிராமத்தின் வடக்கே "கும்புறுமூலை" யும் தெற்கே "கோரகல்லிமடு" வும் அமைந்துள்ளன. சனத்தொகை 5,200 ஆகும். ஒரு கணத்தின் பிரிவினை கணிதத்தில் ஒரு கணத்தின் பிரிவினை ("partition of a set") என்பது அக்கணத்தை ஒன்றுக்கொன்று மேற்படிதல் இல்லாத வெற்றில்லா சிறுசிறு உட்கணங்களாகப் பிரிப்பதாகும். இவ்வாறு பிரிக்கப்பட்ட உட்கணங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்தால் மூலகணமானது கிடைக்கும். மேலும் அச் சிறு உட்கணங்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று பொது உறுப்புகள் இல்லாதவையாகவும் இருக்கும். "X" என்ற கணத்தின் பிரிவினை என்பது "X" இன் ஒவ்வொரு உறுப்பு "x" ம் ஒரேயொரு உட்கணத்தில் மட்டும் உள்ளவாறு பிரிக்கப்பட்ட "X" இன் வெற்றில்லா உட்கணங்களின் கணமாகும். பின்வரும் நிபந்தனைகளை நிறைவு செய்தால், செய்தால் மட்டுமே "P" என்ற கணம் "X" இன் பிரிவினையாக இருக்க முடியும்: கணிதக் குறியீட்டில் இந்நிபந்தனைகள்: இங்கு formula_4 -வெற்றுக் கணம். "P" இன் உறுப்புகள் பிரிவினையின் "தொகுதிகள்", "பகுதிகள்" அல்லது "சிற்றறைகள்" என அழைக்கப்படுகின்றன. "P" இன் தரம் |"X"| − |"P"| ("X" முடிவுறு கணமாக இருந்தால்). கணம் "X" இல் வரையறுக்கப்பட்ட சமான உறவைப் பொறுத்த சமானப் பகுதிகளின் கணம் "X" பிரிவினையாக அமையும். மறுதலையாக "P" of "X" இன் ஒரு பிரிவு "P" லிருந்து "X" இல் ஒரு சமான உறவை வரையறுக்கலாம்: